ஸ்ரீ சோழ சிம்மபுரம் என்பது மருவிச் சோளிங்கபுரம் என ஆயிற்று.
நாளடைவில் ஸ்ரீ சோளிங்கபுரம் என்பது பேச்சுவழக்கில் மருவி சோளிங்கர் என்றாகிவிட்டது.
1. கீழேயுள்ள கோவில் – உற்சவர் மட்டும்.
உற்சவர் : பக்தவச்சலப் பெருமாள், தக்கான்.
2. பெரிய மலை மீதுள்ள கோவில் – கடிகாசலம்
பெருமாள் : யோக நரசிம்மர், அக்காரக்கனி
திருநிலை : வீற்றிருந்த திருக்கோலம்
திருமுக மண்டலம் : கிழக்கு நோக்கியது
தாயார் : அமிர்தவல்லித் தாயார்
விமானம் : சிம்மகோஷ்டாக்ருதி விமானம்
தீர்த்தம் : அமிர்த தீர்த்தம், தக்கான்குளம்
3. சிறிய மலை மீதுள்ள கோவில்
மூலவர் : யோக ஆஞ்சநேயர்-இவர் நான்கு திருக்கரத்தோடு கையில் சங்கு சக்கரத்தோடும் நரசிம்மரை நோக்கியவாறும் எழுந்தருளியுள்ளார். இங்கு ரங்கநாதர், சீதாராம லட்சுமணர் சந்நிதிகள் உள்ளன.
———
அனைத்து திருமால் ஆலயங்களிலும் காணப்படும் சடாரி இத்தலத்தில் ஆதிசேஷன் வடிவில் இருப்பது குறிப்பிட வேண்டிய சிறப்பு.
வலப்புறத்தில் ஐம்பொன்னாலான கிருஷ்ண விக்ரகத்தையும் மற்றொருபுறம் சிறிய வடிவிலான வரதராஜப் பெருமாளையும் தரிசிக்கிறோம். தொட்டாச்சார்யார் எனும் பக்தர் வருடந்தோறும் காஞ்சி வரதராஜரின் கருட சேவையை தரிசிப்பது வழக்கம்.
வயது முதிர்ந்த நிலையில் அவரால் காஞ்சிக்குச் செல்ல முடியாதபோது பெருமாளே தக்கான் குளத்தில் அவருக்கு கருட சேவையை காட்டியருளியதாக ஐதீகம்.
அதை நினைவுறுத்தும் வண்ணம் இங்கு கொலுவிருக்கும் வரதராஜப் பெருமாளை அருளாளர் என்றும் பேரருளாளர் என்றும் அழைக்கின்றனர். கருவறையை வலம் வரும்போது ஆண்டாள் சந்நதியை தரிசிக்கலாம். எதிரில் ஆழ்வார்களும் ஆச்சார்யார்களும் அருள்கின்றனர்.
ஆண்டு முழுவதும் பல்வேறு விதமான திருவிழாக்கள் இத்தலத்தில் நடைபெறுகின்றன.
தலபுராணம் :
பக்த பிரகலாதனுக் காக காட்சி கொடுத்த நரசிம்மரின் அவதாரத்தை தாங்களும் தரிசிக்க வேண்டுமென வாமதேவர், வசிஷ்டர், கத்யபர், அத்திரி, ஜமத்கனி, கவுதமர், பரத்வாஜர் ஆகிய சப்தரிஷிகளும் இங்கு வந்து தவமிருந்தனர். விஸ்வாமித்திரர் இத் தலத்தில் சிறிது நேரம் நரசிம்மனை வழிபட்டு வரம் பெற்றாராம். அதே போல் தங்களுக்கும் பெருமாளின் தரிசனம் கிடைக்க வேண்டும் எனும் ஆவல் கொண்டு அவர்கள் இங்கு தவமிருந்தனர்.
ராமாவதாரம் முடிந்ததும் ஸ்ரீராமன் ஆஞ்சநேயரிடம், “இந்த மலையில் தவம் செய்யும் ரிஷிகளுக்கு அரக்கர்களால் இடைஞ்சல் ஏற்படுகிறது. அதைப் போக்கி வை’’ என்றார். அதன்படி ஆஞ்சநேயர் இங்கு வந்து காலன், கேயன் என்னும் இரு அரக்கர்களுடன் சண்டை செய்ய, அது முடியாமல் போனதால் ஸ்ரீராமனை வழிபட்டு அவரிடமிருந்து சங்கு, சக்கரங்களை பெற்று அதன் மூலம் அரக்கர்களை அழித்து ரிஷிகளை காப்பாற்றினார்” என்கிறது ஸ்தல புராணம்.
கடைசியில் ரிஷிகளின் தவத்தினை மெச்சிய பெருமாள் அவர்களது விருப்பப்படி நரசிம்ம மூர்த்தியாக காட்சி கொடுத்தார். இந்த அவதாரத்தை தரிசித்துப் பூரித்த ஆஞ்ச நேயரிடம், ‘நீ எனக்கு முன்பாக கையில் சங்கு சக்கரத்துடன் யோகத்தில் அமர்ந்து என் பக்தர்களின் குறைகளை போக்கி அருள்வாயாக!’ என அருளினார்! அதன்படி நரசிம்மர் கோயில் உள்ள மலைக்கு அருகில் உள்ள சிறிய மலையலில் யோக ஆஞ்சநேயராக சங்கு சக்கரத்துடன் அருள்பாலித்து வருகிறார்.
கார்த்திகை மாதம் மட்டும் அபிஷேக நேரம் மாறும் :
சோளிங்கர் தலத்தில் நரசிம்மர், அமிர்த வல்லிதாயார் மற்றும் ஆஞ்சநேயருக்கு நடத்தப்படும் அபிஷேகங்கள் விசேஷமானதாக கருதப்படுகிறது. இந்த அபிஷேக ஆராதனையை நேரில் கண்டு தரிசிப்பது மிகுந்த புண்ணியத்தைத் தர வல்லது.
நரசிம்மருக்கும், அமிர்தவல்லி தாயாருக்கும் பால், பஞ்சாமிர்தம், தயிர், இளநீர், தேன் உள்பட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது. மற்ற மாத வெள்ளிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் 11 மணி வரை அபிஷேகம் நடத்துவார்கள். ஆனால் கார்த்திகை மாதம் வெள்ளிக்கிழமைகளில் இந்த அபிஷேகம் காலை 7 மணி முதல் 9 மணி வரை நடத்தப்படும் என்று ஆலய தலைமை அர்ச்சகர் ஸ்ரீதர் பட்டாச்சார்யார் தெரிவித்தார்.
கார்த்திகையில் நடைதிறக்கும் நேரம் :
கார்த்திகை மாதம் வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை 5 மணிக்கு நடைதிறந்து சுப்ரபாதம் பூஜை நடைபெறும். அது முடிந்ததும் தர்ம தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். காலை 7மணி வரை தர்ம தரிசனத்துக்கு அனுமதி உண்டு.
காலை 7 மணி முதல் 9 மணி வரை அபிஷேகம் ஆராதனைகள் நடைபெறும். காலை 10 மணி முதல் பிற்பகல் 7 மணி வரை தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
அதன் பிறகு பிரார்த்தனை உற்சவம் நடைபெறும்.
ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருக்கும் என்பதால் சனிக்கிழமை இரவு 2 மணிக்கே பெரியமலை கோவில் நடையைத்திறந்து விடுவார்கள். ஞாயிற்றுகிழமை மாலை 6.30 மணி வரை சாமி தரிசனம் செய்யலாம்.
சிறிய மலையில் உள்ள ஆஞ்சநேயரை கார்த்திகை வெள்ளிக்கிழமைகளில் காலை 6 மணி வரை தரிசிக்கலாம். சனிக்கிழமைகளில் காலை 7 மணி முதல் மாலை 6.30 மணி வரை தரிசிக்கலாம்.
ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
விசேஷ உற்சவங்கள் விபரம் :
சோளிங்கர் தலத்தில் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் உற்சவ விழாக்கள் விபரம் வருமாறு:-
1. சித்திரை மாதம்:
1.சித்திரை பெருந்திருவிழா, பத்து நாட்கள் நடைபெறும். தங்க கருட சேவை திருத்தேர். 2.இராமானுஜர் விழா 10 நாட்கள்.
2.வைகாசி மாதம்:
1.நரசிம்ம ஜெயந்தி, 2.வசந்த உற்சவம், 3.வைகாசி கருட சேவை தொட்டாசார் சவை, 4.நம்மாழ்வார் விழா 10 நாட்கள்.
3.ஆனி மாதம்
1.கோடைத்திருநாள் (3நாட்கள்),2.பரதத்துவ நிர்ணயம் கருட சேவை,3.ஆதிகேசவப்பெருமாளுக்கு வருஷ திருநட்சத்திரமான திருவோண விழா.
4.ஆடி மாதம்
1.ஆண்டாள் திருவாடிப்பூர விழா 10 நாட்கள் திருவாடிப் பூரத்தன்று திருக்கல்யாண புறப்பாடு. 2.ஆடி பவுர்ணமி கஜேந்திர மோட்சம் கருடசேவை. 3.ஜேஷ்டாபிஷேகம்(கவசம் களைந்து திரு அபிஷேகம் நடந்து பின் கவசம் அணிதல்).
5.ஆவணி மாதம்
1.திருப்பவித்ரோற்சவம்-7நாட்கள். பெரியமலையில் நடை பெறும்.2, ஸ்ரீஜெயந்தி- மறுநாள் உரியடி கண்ணனுக்கும் பெரு மாளுக்கும் நான்கு வீதி புறப்பாடு.
6.புரட்டாசி மாதம்
1.நவராத்திரி உற்சவம் 10-நாட்கள் பெருமாள், தாயார் இரு வருக்கும். 2. விஜயதசமி, குதிரை வாகனம்.
7.ஐப்பசி மாதம்
1.டோலோற்சவம் எனும் ஊஞ்சல் திருவிழா 5 நாள் நடை பெறும். 2.மணவாள மாமுனிகள் 10 நாள் உற்சவம்.3,கடை வெள்ளிக்கிழமை. 4,தீபாவளி ஆஸ்தானம். 5,வனபோஜனம்.
8.கார்த்திகை மாதம்
1. பெரியமலையில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் சிறியமலையில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் உற்சவ புறப்பாடு. திருமஞ்சனம் முதலிய விசேஷம். 2.கார்த்திகை தீபத் திருவிழா- சொக்கப்பனை கொளுத்துதல்.3, திருமங்கையாழ்வார் 10 நாள் உற்சவம்.4, அனுமன் ஜெயந்தி சின்னமலையில் ஸ்ரீஆஞ்ச நேயருக்கு விசேஷ உற்சவம்.
9. மார்கழி மாதம்:
1. பகல் பத்து திருநாள், 2. வைகுண்ட ஏகாதசி, 3. முக்கோடி துவாதசி தீர்த்தவாரி உற்சவம், 4. இராப்பத்து திருநாள். இறுதி நாளில் நம்மாழ்வார் பரமபதம் புகும் திருவடி தொழும் விழா, 5. ஆண்டாள் மார்கழி நீராட்டம் 3 நாள் நடைபெறும். 6. ஜனவரி முதல் தேதி திருப்படித் திருவிழா
10. தை மாதம்:
1. பொங்கல்-சங்கராந்தி ஆண்டாள் திருக்கல்யாணம், 2. கனுப்பாரி (பரி) வேட்டை, 3. கிரி பிரதசட்னம், 4. தைப்பூசம், 5. தை அமாவாசை தொடங்கி தெப்பல் உற்சவம் 3 நாள் நடைபெறும்.
11. மாசி மாதம்:
1. தவன உற்சவம், 3 நாள், 2. மாசி உத்திரரடத் திருநாள் 10 நாள். (சுவாமி தொட்டாசார்- அவதார உற்சவம்), 3. மாசி மகம்- தெப்பல் உற்சவம் 3 நாள்.
12 பங்குனி மாதம்:
1. யுகாதி (அ) தெலுங்கு வருடப்பிறப்பு உற்சவம். பஞ்சாங்க சிரவணம், 2. பெரியமலையில் பங்குனி உத்திரத் திருக்கல்யாணம்.
சோளிங்கர் தலமானது வேலூர் மாவட்டத்தில் உள்ளது. திருத்தணி-சித்தூர் நெடுஞ்சாலையில் திருத்தணிக்கு 32 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு செல்ல அரக்கோணத்தில் இருந்து பேருந்து வசதி உண்டு.
ஆலயத்தை தொடர்பு கொள்ள…
சோளிங்கர் நரசிம்மர் ஆலய முகவரி:-
உதவி ஆணையர் / செயல் அலுவலர்,
அருள்மிகு லட்சுமி (யோக)
நரசிம்ம சுவாமி திருக்கோவில்,
சோளிங்கர்-631 102. வேலூர் மாவட்டம்.
போன் : 04172- 262225, 263515.
———————-
ஸ்ரீ காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் பிரம்மோற்சவத்தின்போது கருடசேவை உற்சவம் சிறப்பு வாய்ந்தது.
அப்போது வேலூர் மாவட்டம், ஸ்ரீ சோளிங்கரில் உள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலிலும் கருடசேவை நடைபெறுவது வழக்கம்.
ஸ்ரீ சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலை அனுமானித்த தொட்டாச்சாரியார் என்பவர் காஞ்சிபுரத்தில் ஆண்டுதோறும் நடக்கும் கருடசேவைக்கு சென்று பெருமாளை தரிசித்து வந்தார்.
ஆனால் ஒருமுறை உடல் நலக்குறைவு காரணமாக காஞ்சிபுரம் செல்ல முடியாமல் தவித்த அவர், ஸ்ரீ சோளிங்கர் தக்கான் குளக்கரையில் அமர்ந்து சுவாமியை தரிசிக்க முடியாமல் மனமுருகி வேண்டினார்.
இதையறிந்த ஸ்ரீ காஞ்சி வரதராஜர் கருட சேவையில் இருந்து ஒரு நிமிடம் மறைந்து ஸ்ரீ சோளிங்கர் தக்கான் குளக்கரையில் இருந்த ஸ்ரீ தொட்டாச்சாரியாருக்கு காட்சி கொடுத்ததாகவும், அதனை மெய்ப்பிக்கும் வகையில் காஞ்சிபுரத்தில் ஆண்டுதோறும் நடக்கும் வைகாசி மாத கருடசேவையின்போது சுவாமி கோபுர வாசல் வந்ததும் சுவாமியை குடைகளால் மறைக்கப்படும்,
அப்போது ஸ்ரீ வரதராஜபெருமாள் சோளிங்கரில் உள்ள தொட்டாச்சாரியாருக்கு காட்சி அளிப்பதாக ஐதீகம்.
இந்நிலையில் காஞ்சிபுரத்தில் பிரம்மோற்சவ கருடசேவை நடப்பதையொட்டி ஸ்ரீ சோளிங்கர் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலிலும் வைகாசி மாத கருடசேவை உற்சவம் நடக்கும்
இதையொட்டி அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்து. பின்னர் தங்க கருட வாகனத்தில் உற்சவர் ஸ்ரீ பக்தோசித பெருமாள் அலங்கரிக்கப்பட்ட 4 மாட வீதிகளில் வலம் வருவார்
———-
‘பண்டு எல்லாம், வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்
கொண்டு அங்கு உறைவார்க்கு கோயில்போல்
வண்டு வளம் கிளரும் நீள் சோலை வண் பூங்கடிகை
இளங்குமரன் தன் விண்ணகர்
மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்
புக்கானை புகழ்சேர் பொல்கின்ற பொன்மலையைத்
தக்கானை கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த
அக்காரக் கனியை அடைந்து உய்ந்து போனேனே!
‘‘சீரருளால் நம்மை திருத்தி நாம் முன்னறியாக்
கூரறியும் தந்தடிமை கொண்டதற்கே
நேரே ஒருகடிகையும் மனமே உள்ளுகிலாய்
முத்தி தரு கடிகை மாணவனைத்தான்.’’–நூற்று எட்டு திருப்பதி அந்தாதி
சுமார் ஒரு கடிகை 24 நிமிடம் இங்கு தங்கினாலே மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம். கடிகை என்றால் நாழிகை என்று அர்த்தம். அசலம் என்றால் மலை. அதனால்தான் இந்த சோளிங்கர் கடிகாசலம் என்று புராணங்களால் அழைக்கப்பட்டு வருகிறது.
சோழன் கரிகால் பெருவளத்தான் தன்னுடைய நாட்டை 48 மண்டலங்களாகப் பிரித்தபோது இப்பகுதியை கடிகைக் கோட்டம் என்ற பெயராலேயே அழைத்தான் என்கிற செய்தி பட்டினப்பாலை நூலில் இடம் பெற்றிருக்கிறது
இங்குள்ள பெரியமலையில் யோக நரசிம்மர் எழுந்தருளி உள்ளார். சுமார் 750 அடி உயரமுள்ள 1305 படிகள், ஏழு மண்டபங்கள் உள்ள கடிகாசலம் என்ற பெரியமலை இது. இங்கு நரசிம்மர் சாளக்ராம மாலை அணிந்து, யோகநிலையில், கிழக்கு நோக்கி தரிசனம் தருகிறார். இந்த ஆலயம் வடக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் இரண்டு திருச்சுற்றுகள் கொண்டுள்ளது.
இங்கு கார்த்திகை மாதம் நரசிம்மர் கண் திறப்பதால் வெள்ளி, மற்றும் ஞாயிற்று கிழமைகளில் திருவிழா போல் விசேஷங்கள் நடைபெறும். எங்கும் மக்கள் அலை போல் இருக்கும். சித்திரை ப்ரம்மோத்ஸவம் மிக சிறப்பாக நடைபெறுகிறது. வைகாசி மாதம், நரசிம்ம ஜெயந்தி திருவிழாவாகவும், காஞ்சி கருட சேவை உற்சவமும் கொண்டாடப் படுகிறது. ஆடியில் திருவாடிப்பூரமும், ஆவணியில் பவித்ரோத்ஸத்வமும் புரட்டாசியில் நவராத்திரியும் மார்கழியில் வைகுந்த ஏகாதசியும், மாசியில் தொட்டாச்சார்யார் திருவிழாவும் சிறப்பாக நடைபெறுகின்றன.
பெரிய மலையில் உள்ள நரசிம்மரை தரிசித்துவிட்டுத் தான் சிறிய மலையில் எழுந்தருளியுள்ள ஆஞ்சநேயரை தரிசிக்க வேண்டும். சிறிய மலையில் இருந்து பார்த்தால் யோக ஆஞ்சேநேயரின் கண்கள் நேரடியாக யோக நரசிம்மரின் திருவடிகளை நோக்கி அமைந்துள்ளது. சிறிய மலை சுமார் 350 அடிஉயரம் உள்ளது, 400 படிகள் ஏறி சேவிக்க வேண்டும்.
ஆஞ்சநேயருக்கு சங்கு சக்கரம் கொடுத்தருள இராமன் இங்கு எழுந்து அருளினார். இராமனின் ஆராதனை பெருமாள் ரங்கநாதர் ஆவார். அதனால் அவரும் சின்னமலையில் காட்சி அளிக்கிறார். மிகவும் அழகான சிறிய வடிவில் உள்ள (பால) ரங்கநாதர் ஆகும். இவரை தரிசிக்கும் போது, ஸ்ரீ திரு சிறு புலியூர் நினைவுக்கு வருவது ஆச்சர்யம் இல்லை.
உற்சவர் பக்தோசித பெருமாள், சுதாவல்லி, அமிர்தவல்லி எனும் தனது இருதேவியருடன், மலை அடிவாரத்திலிருந்து 2 கி.மீ- தொலைவில் தனிக்கோவில் கொண்டுள்ளார். அமிர்த தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் ஆகியவை பக்தோசித பெருமாள் கோவில் அருகில் உள்ளன. உசிதம் என்றால் விருப்பம் எனப்படும். பக்தர்கள் விருப்பப்படி அருளவல்லவராதலால் பக்தோசிதப்பெருமாள் எனவும் அழைக்கப்படுகிறார். அருளுவதில் தக்கவராக இருப்பதால் தக்கான் எனவும் அழைக்கப்படுகிறார்.
சப்தரிஷிகளும், (அத்ரி, காஷ்யபர், வசிஷ்டர், ஜமதக்னி, கௌதமர், பரத்வாஜர், விஸ்வாமித்ரர்) வாமதேவர் என்ற முனிவரும் பிரஹ்லாதனுக்காக எம்பெருமான் எடுத்த நரசிம்ம அவதாரத்தைக் காண வேண்டும் என்ற ஆசையினால் இம்மலையில் வந்து தவம் செய்யத் தொடங்கினர். முன்னொரு காலத்தில் விசுவாமித்திரர் இம்மலையில் ஒரு கடிகை நேரத்தில் (ஒரு நாழிகை நேரத்தில்) நரசிம்மனைக் குறித்து துதித்து பிரம்மரிஷி என்ற பட்டம் பெற்றதால், தாங்களும் ஒரு நாழிகை நேரத்தில் நரசிம்ம மூர்த்தியை தரிசிக்கலாம் என்ற நம்பிக்கையில் இம்மலையைத் தெரிவு செய்து இங்கே வந்து தவம் இருந்தனர்.
இது இவ்வாறு இருக்க இராமவதாரம் முடிந்ததும் ஸ்ரீராமன் வைகுண்டத்திற்கு எழுந்தருளும் தருவாயில், கடிகாசலத்தில் என்னைக் குறித்து தவம் செய்யும் ஸப்த ரிஷிகட்கு, உண்டாகும், இன்னல்களைக் களைந்து அதன்பின் வைகுந்தம் வருவாயாக என்று ஆஞ்சநேயரிடம் கூற, அவரும் அவ்விதமே இந்த மலைக்கு வந்து சேர்ந்தார். காலன், கேயன் என்னும் இரு அரக்கர்கள் இம்மலையில் நாராயணன் குறித்து தவஞ்செய்யும் ரிஷிகளுக்கு பெருத்த இடையூறு விளைவிக்க அவர்களோடு போர் புரிந்த ஆஞ்சநேயர் ஸ்ரீராமனைத் துதித்து நிற்க, ஸ்ரீராமன் அனுமனுக்கு காட்சி தந்து சங்கு சக்கரங்களை வழங்க, அவற்றால் இரு அரக்கர்களின் தலையைக் கொய்து ரிஷிகளின் தவம் தடை இல்லாமல் தொடர அருள் புரிகிறார். இறுதியில் ரிஷிகளின் தவத்தை மெச்சிய நாராயணன் நரசிம்ம மூர்த்தியாக அவர்களுக்கு காட்சி கொடுத்து நின்றான்.
நரசிம்ம அவதாரத்தைக் கண்டு களித்த ஆஞ்சநேயரிடம் “நீ நமது முன்பு அமர்ந்து யோக ஆஞ்சநேயராக மக்களுக்கு தீராத பிணிகளை தீர்த்து, எம்மை வந்தடைவாயாக என்று அருளி மறைந்தார். இதனால் தான் யோக நிலையில் (சங்கு சக்கரத்துடன்) ஆஞ்சநேயருக்கும் தனிச்சன்னதி உள்ளது. கலியுகம் முடியும் வரை அனுமனும் வாழ்வதாக ஐதீஹம். எனவேதான் பக்தி ரசத்தோடு இராமாயணம் படிக்கும் இடம் தோறும் அனுமன் அருவமாகவோ உருவமாகவோ பிரத்யட்சம் ஆவதாய் ஐதீஹம். இந்த உலகத்திலேயே எங்கெல்லாம் ஸ்ரீராம நாமம் ஒலிக்கிறதோ, அங்கெல்லாம் பக்திப் பரவசத்துடன் கண்களில் நீர் மல்கக் காட்சி தந்துகொண்டு இருக்கிறார் என்பதை கீழ் கண்ட ஸ்லோகத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம் தத்ர தத்ர க்ருதமஸ்த காஞ்சலிம், பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம், மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்
ஒரு சமயம் துர்வாச முனிவர் இத்தலத்தை அடைந்து நரசிம்மனை வணங்கி அவரின் திருத்துழாய் மாலையைப் பெற்று அதைக் கழுத்திலும், தலையிலும் சூடி ஆனந்தக் கூத்தாடினார். அப்போது அங்கே நிரம்பியிருந்த சாதுக்கள் கூட்டத்தில் நின்ற நவக்கிரகங்களில் ஒருவனான புதன் துர்வாசரின் இச்செயலைக் கண்டு ஏளனத் தொனியில் சிரித்துக் கேலி செய்ய, துர்வாசரால் சபிக்கப்பட்ட புதன், இந்த கடிகாசலத்தில் பாண்டவ தீர்த்தத்தில் நீராடி அங்கு ஆடியும் பாடியும் வரும் முனிவர்களுக்குத் தொண்டு செய்து தன் சாபம் தீர்ந்து மீண்டும் உயர்நிலை பெற்றான் என்று புராணம் கூறுகிறது.
———————————
சோளசிம்மபுரம் தொட்டாசார்யர் ஸ்வாமிகள்
முதலியாண்டான் ஸ்வாமியின் திருவம்சத்தில், 12 ஆவது தலைமுறையில் மாசி உத்திராடம் நட்சத்திரத்தில் அவதரித்தவர்.
இவர் திருவேங்கடவரின் அம்சமாக அவதரித்ததால், “ஸ்ரீநிவாஸ மஹாகுரு””மஹார்யர்” என்று போற்றப்படுகிறார்.
ஒண்ணான தொட்டாச்சார்யார் ஸ்வாமி பஞ்ச விஜய கிரந்தங்கள் பண்ணி அருளினார்
———————
உதீஸீ ரெங்கம் ஸூ மனச ஸூ கத்தி நித்ய அபிவிருத்தி யசஸ் ஸே -அக்காரக்கனி
பாரி வேட்டை கனு அன்று எறும்புக்கு -எழுந்து அருளுகிறார் தக்கான் பெருமாள் இன்றும் -திருப்பாவை சாத்துமுறை மா முனிகள் செய்தாராம்
வட திருவரங்கம் -எறும்பி கிராமத்துக்கு திரு நாமம் சாத்தினார் மா முனிகள்
பெரிய அப்பன் சிறிய அப்பன்
ஸ்ரீ நிவாஸ தாசர்கள்-தொட்டாச்சார்யார் வம்சம் –
12 தலைமுறை இவர் முதலி ஆண்டான் இருந்து
முதலியாண்டான் திருக்கோஷ்டியூர் நம்பி இடம் சரம ஸ்லோகார்த்தம் கேட்டு ஸ்ரீ வைஷ்ணவ தாஸன் திரு நாமம் சாதிக்க
இதே பெயர் முன்பு
தொட்டாச்சார்யார் தொடங்கி ஸ்ரீ நிவாஸ தாசன் பெயர் வைக்க ஸ்ரீ நிவாசனே ஸ்வப்னம் சாதித்தாராம்
1543-சுப க்ருத வருஷம் -480 வருஷங்கள் முன்பு -இந்த வருஷம் மாசி – கும்ப த்ரயோதசி வியாழக் கிழமை மீன லக்கினம் வேத ப்ரதா -உத்திராடம்-மஹா குரு -தொட்டா -பெரிய என்றவாறு
தக்கான் -பக்தலோசனன் – உத்சவர் முன்பு எறும்பி கிராமத்திலே எழுந்து அருளி இருந்தாராம்
அச்யுத தேவராயர் அரசன் உதவியால் நிர்மாணித்தார் உள்ளூரில் திருக்கோவில்
ஸர்வதாரி வருஷம் –45 திரு நஷத்ரம் இவருக்கு பிரதிஷ்டை செய்தாராம் –
அச்சுத தேவ ராயன் (கி.பி. 1529-1542) அல்லது அச்சுத ராயன் விஜயநகரப் பேரரசின் அரசன்.
இவனது தமையனான கிருஷ்ணதேவராயன் இறந்த பின்னர் அரசனாக முடிசூட்டிக் கொண்டான்.
இவன் விஜயநகர அரச மரபின் மூன்றாவது மரபான துளுவ மரபைச் சேர்ந்தவன்
இவர் திருமாளிகை ஸ்வாமிகள் பரம பதம் எழுந்து அருளிய 13 நாள் இயல் கோஷ்ட்டி – திருமாளிகைக்கு எழுந்து அருளுகிறார் தக்கானே இன்றும் கூட –
காஞ்சி கருட சேவை அன்று தாக்கானுக்கும் கருட சேவை உண்டே -ஒண்னான தொட்டாச்சார்யார் ஸ்வாமிக்காக –
பஞ்ச விஜய கிரந்தங்கள் பண்ணி அருளினார்
எட்டாவது தலைமுறை கோயில் அண்ணன் என்னும் -வரத நாராயண குரு-கோயில் அப்பன் என்னும் -ஸ்ரீ நிவாஸ குரு -தேவராஜ தோழப்பருக்கு திருக் குமாரர்கள்
—————————
சுவாமி முதலியாண்டான் திருவம்சத்தில் கந்தாடைநாயனுக்கு 1.2.1543ல் ஸ்வாமி தொட்டையாச்சார்யார் – தேவராஜகுரு என்கிற தோழப்பரப்பை என திருவவதாரம் செய்தார்.
சில நூறாண்டுகள் முன்பு நம் ஸ்வாமி தொட்டாச்சார்யார் அக்காரக்கனியாக (இனிப்புச் சுவையுடைய பழம் போன்ற) போற்றப்படும் ஸ்ரீ யோகநரசிம்மருக்குப் பூஜைகள் செய்துவந்தார்.
பெருமாளிடம் பக்தி கொண்ட அவர் ஆண்டுதோறும் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவத்திற்குச் சென்று பெருமாளைத் தரிசிப்பது வழக்கம். ஒரு முறை அவரால் பிரம்மோற்சவத்திற்குச் செல்ல இயலவில்லை.
மூன்றாம் நாள் கருட சேவை உற்சவத்தன்று ஸ்வாமி தொட்டாச்சார்யார் சோளசிம்மபுரம் என்ற தற்போதைய சோளிங்கரில் இருந்தவாறே ‘ஸ்ரீ தேவராஜ பஞ்சகம்’ எனும் ஐந்து ஸ்லோகங்களைப் பாடினார்.
இதே நேரத்தில் காஞ்சியில் வரதராஜப் பெருமாள் கருட வாகனரூபமாகத் திருவீதி உலா செல்வதற்காகக் கோயில் வாயிலுக்கு வந்தார்.
சோளிங்கரில் இந்த ஐந்து சுலோகங்களைப் பாடி முடிக்கவும், காஞ்சியில் கோயில் வாயிற் கதவு மூடிக்கொள்ளவும் சரியாக இருந்தது. மூடிய கதவுகளுக்குப் பின்னால் கருட சேவையில் இருந்த பெருமாள் அப்படியே சோளசிம்மபுரத்துக்கு எழுந்தருளி தொட்டாச்சார்யாருக்குக் காட்சி கொடுத்தார்.
இன்றும் இது **ஸ்வாமி தொட்டாச்சார்யார் சேவை** என்று காஞ்சியில் வழங்கப்படுகிறது.
சோளிங்கபுரத்தில் காட்சி அளித்த பெருமாள், தக்கான் குளக்கரையில் கருட சேவையிலேயே கோவில் கொண்டுள்ளார்.
சுவாமி வேதாந்தாச்சார் அருளிய சததூழனிக்கு சண்டமாருதம் என்ற வியாக்கியானம் அருளிச்செய்தார்.
‘சண்டமாருதம்’ என்றால் புயல் காற்றில் கூட அணையாத விளக்கு என்று பொருள்.
அப்பய்ய தீக்ஷிதர் என்ற சிவாத்வவைதியை சோழசிம்மபுரம் திருதேரடி மண்டபத்தில் 7 நாட்கள் வாதப்போர் செய்து வென்றவர்.
நமது சம்பிரதாயத்தின் தூண் ஸ்ரீ உ.வே. கோயில் கந்தாடை சண்டமாருதம் சுவாமி என்கிற பெரிய ஸ்வாமி தொட்டையாச்சார் (ஸ்ரீ மஹாசார்யர்) 1-2-1543ம் ஆண்டு அவதரித்தார்.
சோளஸிம்ஹபுரம் எனும் திருக்கடிகை; தில்லை திருச்சித்திரகூடம் போன்ற பல திவ்யதேசங்களில் கைங்கர்யம் செய்து, நிர்மாண புணருத்தாரணங்கள் செய்வித்தார்.
நம் ஒண்ணான ஸ்வாமியின் தனியன் :
வாதூல ஸ்ரீனிவாஸார்ய தனயன் வினயாதிகம்
ப்ரஜ்ஞாநிதிம் ப்ரபத்யேஹம் ஸ்ரீனிவாச மஹாகுரும் !!
நம் ஸ்வாமி வயோதிகத்தில் ஸ்ரீமுஷ்ணத்தில் கைங்கர்யங்கள் சிறப்பாக செய்து வந்த சமயம், பரமபத பிராப்தி வருவதை உணர்ந்து ஸ்ரீமுஷ்ணம் நித்ய புஷ்கரிணீ கரையில் தனது சிஷ்யர்களுடன் எழுந்தருளி, ஆபத்சந்நியாஸம் தாமாகவே ஏற்று 3.10.1607 எம்பெருமான் திருவடி நிலை அடைந்தார்.
திருமாளிகை சிஷ்யர்கள், அவரை அங்கேயே திருப்பள்ளிப்படுத்தி திருவரசு நிர்மாணித்தனர்.
கர வருஷம் திருமாசி உத்திராட நன்னாளில் (19.2.2012) நம் சுவாமி ஸ்ரீ உ.வே. கோயில் கந்தாடை சண்டமாருதம் வேதாந்தச்சார் சுவாமி இவ்விடத்தை புனருத்தாரணம் பண்ணி சிறக்க வைத்தார்.
ஸ்ரீமத்வாதூல குலவாரிதி பூர்ணசந்த்ரம்* ஸ்ரீமந்மஹார்ய சரணாம்புஜ சஞ்சரீகம் |
ஸ்ரீசிங்கரார்ய கருணாப்த ஸமஸ்தபோதம்* பக்த்யாச யோகந்ருஸிம்ஹ குரும்ச்ரயாமி||
———————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அம்ருத வல்லித் தாயார் ஸமேத பக்த வத்சலப் பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் ..
Leave a Reply