ஸ்ரீ சோளிங்கர் திவ்ய தேசம் —ஒண்ணான ஸ்ரீ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் –

சுவாமி முதலியாண்டான் திருவம்சத்தில் கந்தாடைநாயனுக்கு 1.2.1543ல் ஸ்வாமி தொட்டையாச்சார்யார் – தேவராஜகுரு என்கிற தோழப்பரப்பை என திருவவதாரம் செய்தார்.

சில நூறாண்டுகள்  முன்பு நம்  ஸ்வாமி தொட்டாச்சார்யார்  அக்காரக்கனியாக (இனிப்புச் சுவையுடைய பழம் போன்ற) போற்றப்படும் ஸ்ரீ யோகநரசிம்மருக்குப் பூஜைகள் செய்துவந்தார்.

பெருமாளிடம் பக்தி கொண்ட அவர் ஆண்டுதோறும் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவத்திற்குச் சென்று பெருமாளைத் தரிசிப்பது வழக்கம். ஒரு முறை அவரால்  பிரம்மோற்சவத்திற்குச் செல்ல இயலவில்லை.

மூன்றாம் நாள் கருட சேவை உற்சவத்தன்று ஸ்வாமி தொட்டாச்சார்யார் சோளசிம்மபுரம் என்ற தற்போதைய சோளிங்கரில் இருந்தவாறே  ‘ஸ்ரீ தேவராஜ  பஞ்சகம்’ எனும்  ஐந்து ஸ்லோகங்களைப் பாடினார்.

இதே நேரத்தில் காஞ்சியில் வரதராஜப் பெருமாள் கருட வாகனரூபமாகத் திருவீதி உலா செல்வதற்காகக் கோயில் வாயிலுக்கு வந்தார்.

சோளிங்கரில் இந்த ஐந்து சுலோகங்களைப் பாடி முடிக்கவும், காஞ்சியில் கோயில் வாயிற் கதவு மூடிக்கொள்ளவும் சரியாக இருந்தது. மூடிய கதவுகளுக்குப் பின்னால் கருட சேவையில் இருந்த பெருமாள் அப்படியே சோளசிம்மபுரத்துக்கு  எழுந்தருளி தொட்டாச்சார்யாருக்குக் காட்சி கொடுத்தார்.

இன்றும் இது  **ஸ்வாமி தொட்டாச்சார்யார் சேவை** என்று காஞ்சியில் வழங்கப்படுகிறது.

சோளிங்கபுரத்தில் காட்சி அளித்த பெருமாள், தக்கான் குளக்கரையில் கருட சேவையிலேயே கோவில் கொண்டுள்ளார்.

சுவாமி வேதாந்தாச்சார் அருளிய சததூழனிக்கு சண்டமாருதம் என்ற வியாக்கியானம் அருளிச்செய்தார்.

‘சண்டமாருதம்’ என்றால் புயல் காற்றில் கூட அணையாத விளக்கு என்று பொருள்.

அப்பய்ய தீக்ஷிதர் என்ற சிவாத்வவைதியை  சோழசிம்மபுரம் திருதேரடி மண்டபத்தில் 7 நாட்கள் வாதப்போர் செய்து வென்றவர்.

நமது சம்பிரதாயத்தின் தூண் ஸ்ரீ உ.வே. கோயில் கந்தாடை சண்டமாருதம் சுவாமி என்கிற பெரிய ஸ்வாமி தொட்டையாச்சார்  (ஸ்ரீ மஹாசார்யர்) 1-2-1543ம் ஆண்டு அவதரித்தார்.

சோளஸிம்ஹபுரம் எனும் திருக்கடிகை; தில்லை திருச்சித்திரகூடம் போன்ற பல திவ்யதேசங்களில் கைங்கர்யம் செய்து, நிர்மாண புணருத்தாரணங்கள் செய்வித்தார்.

நம் ஒண்ணான ஸ்வாமியின் தனியன் :

வாதூல ஸ்ரீனிவாஸார்ய தனயன் வினயாதிகம்

ப்ரஜ்ஞாநிதிம் ப்ரபத்யேஹம் ஸ்ரீனிவாச மஹாகுரும் !!

நம் ஸ்வாமி வயோதிகத்தில் ஸ்ரீமுஷ்ணத்தில் கைங்கர்யங்கள் சிறப்பாக செய்து வந்த சமயம், பரமபத பிராப்தி வருவதை உணர்ந்து ஸ்ரீமுஷ்ணம் நித்ய புஷ்கரிணீ கரையில் தனது சிஷ்யர்களுடன் எழுந்தருளி, ஆபத்சந்நியாஸம் தாமாகவே ஏற்று 3.10.1607 எம்பெருமான் திருவடி நிலை அடைந்தார்.

திருமாளிகை சிஷ்யர்கள், அவரை அங்கேயே திருப்பள்ளிப்படுத்தி திருவரசு நிர்மாணித்தனர்.

கர வருஷம் திருமாசி உத்திராட நன்னாளில் (19.2.2012) நம் சுவாமி  ஸ்ரீ உ.வே. கோயில் கந்தாடை  சண்டமாருதம் வேதாந்தச்சார் சுவாமி இவ்விடத்தை புனருத்தாரணம் பண்ணி சிறக்க வைத்தார்.

ஸ்ரீமத்வாதூல குலவாரிதி பூர்ணசந்த்ரம்*  ஸ்ரீமந்மஹார்ய சரணாம்புஜ சஞ்சரீகம் |

ஸ்ரீசிங்கரார்ய கருணாப்த ஸமஸ்தபோதம்*  பக்த்யாச யோகந்ருஸிம்ஹ குரும்ச்ரயாமி||

———————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அம்ருத வல்லித் தாயார் ஸமேத பக்த வத்சலப் பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் ..

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading