ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஸ்லோகம்

ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஸ்லோகம்

ஸத்ய வ்ரத க்ஷேத்ரவாஸீ ஸத்யஸ் ஸஜ்ஜன போஷக:

ஸர்கஸ்தித்யுபஸம்ஹார காரீஸுகுணவாரிதி:
வரதாபயஹஸ்தாப்ஜ: வனமாலாவிராஜித:
ஸங்க சக்ரலஸத்பாணி: ஸரணாகத ரக்ஷக: – ஸ்ரீ வரதராஜ ஸ்தோத்திரம்.

சத்ய விரதம் என்று போற்றப்படும் காஞ்சிபுரத்தில் அருளும் வரதராஜப் பெருமாளே நமஸ்காரம்.

அப்பாவிகளைக் கரையேற்றும் ஆபத்பாந்தவரே நமஸ்காரம். படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய

முத்தொழில்களையும் மேற்கொண்டிருப்பவரே,

ஒரு சமுத்திரம் போல சீரிய கல்யாண குணங்களைக் கொண்டு அருள் மழை பொழிபவரே நமஸ்காரம்.

தாமரை போன்ற கரங்களில் அபய-வரத முத்திரைகளைத் தாங்கியிருப்பவரே,

வனமாலையினால் பிரகாசிக்கின்றவரே, நமஸ்காரம்.

சங்கம், சக்கரம் தாங்கியவரே, சரணடைந்தோரைக் காப்பவரே, நானும் சரணடைகிறேன், என்னையும் காத்தருளுங்கள்.

————-
வரதராஜப் பெருமாளைக் குறித்து வரதராஜ பஞ்சாசத் என்ற ஐம்பது ஸ்லோகங்கள் இயற்றினார் வேதாந்த தேசிகன்.
அதன் நான்காவது ஸ்லோகத்தில்,
“கிம் வ்யாஹராமி வரத ஸ்துதயே கதம் வா
கத்யோதவத் ப்ரலகுஸங்குசித ப்ரகாச:
தன்மே ஸமர்ப்பய மதிம் ச ஸரஸ்வதீம் ச
த்வாம் அஞ்ஜஸா ஸ்துதிபதைர்யதஹம் தினோமி”

“வரதா! உன்னைத் துதிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு விட்டேன்.

ஆனால் என்னால் உன்னை எப்படித் துதிக்க இயலும்?
நீயே உனது கருணையால் எனக்கு அறிவையும் வார்த்தைகளையும் தந்தாயாகில்,
நீ தந்தவற்றைக் கொண்டு உன்னையே துதிசெய்வேன்!” என்கிறார்.

இக்கருத்தையே சுருக்கமாக “ஆறும் அவனே, பேறும் அவனே” என்று சொல்வார்கள்

இதைக் கடோபநிஷத் “ஸா காஷ்டா ஸா பரா கதி:” என்கிறது.
காஷ்டா என்றால் இலக்கு, கதி என்றால் வழி.
இறைவனை அடைய இறைவனே வழி என்று உணர்வது தான் சரணாகதி.
அதை உணர்த்திய வரதராஜப் பெருமாளின் திருவடிகளிலே தாம் சரணாகதி செய்தமையை,
அடைக்கலப்பத்து என்ற பத்துப் பாடல்களாலே தெரிவிக்கிறார்
—————

திருக்கச்சி அல்லது காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் என்பது பெருமாள் கோயில் என்று வைணவர்களால் போற்றப்படுகிறது.

வைணவ பாரம்பரியத்தில் திருவரங்கம் மற்றும் திருவேங்கடம் ஆகிய தலங்களுக்கு அடுத்ததாக முக்கியத்துவம் வாய்ந்த தலம். இது சென்னைக்கு அடுத்த காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள முப்பதோராவது திவ்ய தேசமாகும்.

இக்கோயிலில் பாஞ்சராத்திரம் ஆகமப்படி பூஜைகள் நடைபெறுகின்றன.

கோயில் அமைப்பும் உட்சன்னதிகளும்

மலைமீது காட்சி தருவதால மூலவருக்கு மலையாளன் என்ற பெயரும் உண்டு.

மேலும் அவர் வரதராஜர், பேரருளாளன், தேவாதிராஜன், தேவப்பெருமாள், அத்தியூரான் என்ற பல திருப்பெயர்களைக் கொண்டுள்ளார்.

மேற்கே நோக்கிய நிலையில் நின்ற கோலத்தில் உள்ளார்.

இரண்டாவது மாடியான மேல் மாடி வரதராஜப்பெருமாள் சன்னதியான அத்திகிரி என்றழைக்கப்படுகிறது.

பெருந்தேவித் தாயாருக்கு தனி சன்னதி உள்ளது.

வாரணகிரி என்ற முதல் மாடியில் நரசிம்மன் சன்னதி உள்ளது.

இரண்டாவது திருச்சுற்றில் 24ஆவது படிக்கு எதிராக தங்கத்தினாலும், வெள்ளியாலும் ஆன இரண்டு பல்லிகள் உள்ளன.

கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இவற்றைத் தொட்டு, பெருமாளை வணங்கினால் நோயிலிருந்து விடுபடுவதாக நம்பிக்கை உள்ளது.

இராஜகோபுரம் 96 அடி உயரமுள்ளது. திருக்குளத்தின் கிழக்குத்திசையில் சக்கரத்தாழ்வார் என பேசப்படுகின்ற

சுதர்சன ஆழ்வார் சந்நிதி அமைந்துள்ளது. தமிழகத்தில் எங்கும் காணமுடியாத அளவில் 16 கைகளுடன் உள்ளார்.

இவரைச் சுற்றியுள்ள அலங்கார வளைவில் 12 சக்கரத்தாழ்வார் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

அத்தி வரதர் எனப்படும் அத்தி மரத்தால் செய்யப்பட்ட பெருமாள், அனந்தசரஸ் திருக்குளத்தில் பள்ளி கொண்டிருக்கிறார்.

முழுதும் அத்திமரத்தால் ஆன பள்ளிகொண்ட பெருமாள் நீண்ட நெடிய உருவம். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை,

குளத்து நீரை முழுவதும் வெளியேற்றி ஸ்ரீ அத்தி வரதரின் திருவுருவச் சிலையை வெளியே எழுந்தருளச் செய்து,

கோயிலின் வசந்த மண்டபத்தில் வைப்பர். அவர் 48 நாட்கள் பொது மக்களுக்கு சேவை சாதிப்பார்.

இதில் முதல் 24 நாட்கள் சயன திருக்கோலம், அடுத்த 24 நாட்கள் நின்ற திருக்கோலம் என சேவை சாதித்து

ஒரு மண்டல காலத்துக்கு பிறகு மறுபடியும் அனந்தசரஸ் திருக்குளத்தில் எழுந்தருளச் செய்வார்கள்.

கடைசியாக, அவர் 2019ல் எடுக்கப்பட்டு, பக்தர்கள் அனைவருக்கும் தனது அருளை கொடுத்தார்.

மறுபடியும் இவரது சேவை 2059ல் கிடைக்கும்.

பிரம்மாவால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மர சிலையானது “ஸ்ரீ ஆதி ஹஸ்திகிரி நாதர்” என்று அழைக்கப்பட்டார்.

பிரம்மாவின் கட்டளைப்படி இந்த சிலையை தேவ லோக சிர்பி – விஸ்வகர்மா வடிவமைத்தார்.

——————–

என்னெஞ்சம் மேயான் என் சென்னியான், தானவனை-

வன்னெஞ்சம் கீண்ட மணிவண்ணன், முன்னம்சேய்-

ஊழியான் ஊழி பெயர்த்தான், உலகேத்தும்-

ஆழியான் அத்தியூரான்.

————–

அத்தியூரான் புள்ளை ஊர்வான், அணிமணியின்-

துத்திசேர் நாகத்தின் மேல்துயில்வான், – மூத்தீ-

மறையாவான் மாகடல் நஞ்சுண்டான் தனக்கும்

இறையாவான் எங்கள் பிரான்.

அயோத்தி, மதுரா, மாயா (ஹரித்வார்), காசி (வாரணாசி), காஞ்சி (காஞ்சிபுரம்), அவந்திகா (உஜ்ஜைன்) மற்றும் துவாரவதி (துவாரகா);

இந்த புனித ஷேத்ரங்களை ஒரு ஸ்லோகம் மூலம் கூறலாம்:

“அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகா த்வராவதி சைவ ஸப்தைத மோக்ஷ தாயகா::”

—————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading