ஸ்ரீ மதுர கவி ஆழ்வார் வைபவம்🙏–ஸ்ரீ ஸ்வாமி அநந்தாழ்வான் வைபவம்🙏 — ஸ்ரீ யதுகிரி ஸ்ரீ ராம் ஸ்வாமிகள் —

இன்று ஸ்ரீ மதுர கவி ஆழ்வார் அவதார திருநக்ஷத்திரமான சித்திரையில் சித்திரை….. 🙏

ஸ்ரீமந் நாதமுனிகள் அருளிச் செய்த தனியன்கள்….

அவிதித விஷயாந்தரஸ் ஶடாரேர்
உபநிஷதாம் உபகான மாத்ர போக:/
அபி ச குண வசாத் ததேக ஶேஷி
மதுரகவிர் ஹ்ருதயே மமாவிரஸ்து//.. 🙏

வேறொன்றும் நானறியேன் வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன் வண்குருகூர் ஏறு எங்கள் மதுரகவியார்
எம்மை யாள்வார் அவரேயரண்… 🙏

மதுரகவியாழ்வார் ஆழ்வார்கள் வரிசையில் 5வது ஆழ்வார் ஆவர்.
இவர் தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார் திருநகரிக்கு அருகில் உள்ள திருக்கோளூர் என்னும் திவ்ய தேசத்தில் அவதரித்தார்.

மாதம் – சித்திரை
நட்சத்திரம் – சித்திரை
திவ்விய ப்ரபந்தம் – கண்ணிநுண்சிறுத்தாம்பு என்று தொடங்கும் பதினோரு பாசுரங்கள்.
மதுரகவி ஆழ்வார்
மதுரகவி ஆழ்வார்
மதுரகவியாழ்வார் திருமாலின் வாகனமான கருடனின் அம்சமாக அவதரித்தார்.

இவரது காலம் 9ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியாகும்.

இவர் வேத சாத்திரங்களை நன்குக் கற்றவர். இவர் வடநாட்டு யாத்திரை மேற்கொண்டு இருந்தார்.

ஒருநாள் இரவு அயோத்தியில் பேரொளியைக் கண்டு வியப்படைந்தார்.அவ்வொளியை மறுநாளும் அவர் கண்டார்.

அவ்வொளி எங்கிருந்து வருகிறது என்பதை அறிவதற்காக தெற்கு நோக்கி நடக்கத் தொடங்கினார்.

பூரி, அஹோபிலம், திருவேங்கடம் ஆகிய தேசங்களை தாண்டியும் அவ்வொளித் தெரிந்தது.

மீண்டும் தெற்கு நோக்கி நடக்கத் தொடங்கினார்.கடைசியாக அந்த ஒளி, திருக்குருகூரில் மறைந்தது.

ஆழ்வாரும் அவ்வூர் மக்களிடம், இவ்வூரில் ஏதேனும் அதிசயம் உள்ளதா என்று வினவ,

அவ்வூர் மக்களும் இங்கு நம்மாழ்வார், ஒரு புளிய மரத்தடியில், யோக நிலையில் இருப்பதாகக் கூறினார்.

மதுரகவியாழ்வார் நம்மாழ்வர்க்கு உயிர் இருக்கிறதா என்று சோதிக்க அவர் மேல் ஓர் கல்லை எறிந்தார்.

நம்மாழ்வார் முதன்முறையாக கண் திறந்துப் பார்த்தார். மதுரகவிகளும் இவர்க்கு உயிர் இருக்கிறது

என்பதை புரிந்துக் கொண்டு, இவரால் பேச முடியுமா என்று பரிசோதிக்க-

செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தை தின்று எங்கே கிடக்கும்? என்று கேட்டார்

அதற்கு நம்மாழ்வார், அத்தைத் தின்று அங்கே கிடக்கும் என்றார்.

பதிலின் உள்ளர்த்தத்தைப் புரிந்துகொண்ட மதுரகவிகள், நம்மாழ்வாரின் மேதா விலாசத்தை புரிந்துக்கொண்டு அவரின் சீடரானார்.

இந்த வினா விடையில் இரு தத்துவம் புதைந்துள்ளது.

செத்ததின்,
அதாவது உயிர் இல்லாத இவ்வுடம்பில், ஜீவன் என்னும் சிறியது பிறந்தால்,

பாவ புண்ணியங்களின் பயன்களை நுகர்வதே அதற்கு வாழ்க்கையாக இருக்கும்.

தன்னை பற்றிய அறிவு, பரமாத்வான திருமாலை பற்றிய அறிவற்ற ஜீவனுக்கு, பரமாத்மாவை பற்றிய அறிவு ஏற்பட்டால்,

அதைக்கொண்டே பக்தி வளரும்.
மதுரகவியாழ்வார் தன்னுடையப் பாசுரங்களில் திருமாலைத் தெய்வமாகப் பாடாது,

நம்மாழ்வாரை தெய்வமாகப் பாடினார்.இவரது பாசுரங்கள் ஆச்சார்ய பக்திக்கு எடுத்துக்காட்டாகும்.

மதுரகவியாழ்வார் நம்மாழ்வாரின் பாசுரங்களை பட்டோலைப் படுத்தினார்.

நம்மாழ்வார் திருவைகுண்டத்திற்கு சென்ற பிறகு தங்கத்தால் ஆன நம்மாழ்வாரின் விக்ரகம் கிடைத்தது.

அவ்விக்ரகத்தை எழுதருளப்பண்ணிகொண்டு மதுரகவியாழ்வார் பல ஊர்களுக்கு சென்று

நம்மாழ்வாரின் பெருமையை எடுத்துச்சொல்ல முடிவுசெய்தார்.

“வேதம் தமிழ்செய்த பெருமாள் வந்தார்,

திருவாய்மொழிப்பெருமாள் வந்தார்,

திருநகரிப்பெருமாள் வந்தார்,

திருவழுதிவளநாடர் வந்தார்,

திருக்குருகூர்நகர்நம்பி வந்தார்,

காரிமாறர் வந்தார்,

சடகோபர் வந்தார்,

பராங்குசர் வந்தார்” என்று நம்மாழ்வாரின் பலவிருதுகளைப் பாடிக்கொண்டே மதுரகவியாழ்வார் மதுரையுள் சென்றார்.

அங்கே இருந்த சங்ககாலப் புலவர்கள், நம்மாழ்வாரின் பாடல்களை சங்கப்பலகையில் ஏற்றாமல்,

விருதுகளைப் பாடக்கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்தனர். அக்காலத்தில், சங்க பலகையில் பாடலை எற்றுவர்.

பலகை அப்பாடலை கிழே தள்ளிவிட்டால், புலவர்கள் அப்பாடலை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

நம்மாழ்வார் எட்டு வரி, நான்கு வரி கொண்ட பாடல்கள் நிறையப் பாடியுள்ளார். அவற்றை விட்டு, இரண்டே வரியுள்ள,

கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர்
என்னும் திருநாமம் திண்ணம் நாரணமே! (திருவாய்மொழி 10.5.1)
(கண்ணனின் திருவடிகளில் ஆசை உடையவர்கள், கண்ணின் திருநாமத்தை உச்சரித்துக்கொண்டே இருங்கள்,

அது கண்ணனையே காட்டும்.இது திண்ணம்) என்ற பாடலை பலகையில் மதுரகவியாழ்வார் ஏற்றினார்.

பலகை அப்பாடலைத் தள்ளாமல் ஏற்றுக்கொண்டது. நம்மாழ்வாரின் பெருமையை புரிந்துக்கொண்ட சங்ககாலப் புலவர்களும்

தாம் செய்த தவற்றின் பரிகாரமாக நம்மாழ்வாரின் பெருமையை தாம் பாடலாக இயற்றினர்.

ஈயடுவதோ கருடற்கெதிரே!!இரவிக்கெதிர் மின்மினி ஆடுவதோ!!
நாயாடுவதோ உறுமும்புலிமுன்!!
நரி கேசரிமுன் நடையாடுவதோ!!
பேயடுவதோ ஊர்வசிக்குமுன்!!*பெருமானடிசேர் வகுளாபரணன்
ஓராயிரமாமறையின் தமிழிற்ஒருசொற்பொறுமோ* !
இவ்வுலகிற்கவியே!!!!
(இவ்வுலகில் உள்ள கவிகளே, பெரிய சிறகுகளை உடைய கருடன் முன் சிறிய ஈ ஆடுவதும்

இரவியின் முன் மின்மினி பூச்சிகள் ஆடுவதும் உறுமுகின்ற புலிமுன் நாய் ஆடுவதும்

சிங்கத்தின் முன் நரி ஆடுவதும் அழகிற்சிறந்த ஊர்வசிமுன் பேயாடுவதும்

வகுளமாலையத் தரிந்த நம்மாழ்வாரின் பாசுரங்கள் முன் தமிழில் உள்ள ஒரு சொல் சமமாகுமா! என்பது பொருள்)

இதில் வியப்பு என்ன வென்றால், அங்குக் கூடியிருந்த அனைத்து புலவர்களும் மேற்சொன்ன ஒரேப் பாடலை எழுதினர்

இவ்வாறு மதுரகவியாழ்வார் மேலும் சிலகாலம் நம்மாழ்வாரின் பெருமையை எடுத்துச்சொல்லி

அவரும் தம் பெரியவரான நம்மாழ்வாரின் திருவடியைச் சென்று சேர்த்தார்.

மதுரகவியாழ்வார் ஆச்சார்ய பக்தியின் பெருமையை எடுத்துச்சொல்ல அவதரித்தவர்

அதாவது, ஆச்சார்ய பக்தியும், பெருமானிடத்தில் உள்ள பக்தியும் படிக்கட்டுகளாக் கருதினால்
,பெருமான் மீது கொண்ட பக்தி என்பது முதல் படியாகும்

ஆச்சார்ய பக்தி இரண்டாவதுப் படியாகும் ஒருவேளை பெருமானிடத்தில் உள்ள பக்தி குறைந்து

அப் படிக்கட்டில் இருந்து தவறினால், சம்சாரம் என்னும் கடலில் விழுந்து விடுவோம்.

ஆச்சார்ய பக்தி என்னும் படியில் இருந்து தவறினால், அடுத்தப்படியான பெருமானின் மீது கொண்ட பக்தி காப்பாற்றிவிடும் என்று பொருள்… 🙏

 

அமுதனார் தாம் இயற்றிய ராமாநுச நூற்றந்தாதியில், மதுரகவி ஆழ்வாரைப்பற்றிப் பாடும் போது,

ராமானுசருக்கும் மதுரகவி ஆழ்வாருக்கும்  உள்ள தொடர்பைக் கொண்டாடுகிறார்.

“எய்தற்கரிய மறைகளை ஆயிரம் இன்தமிழால்

செய்தற்கு உலகில் வரும் சடகோபனை -சிந்தையுள்ளே

பெய்தற்கு இசையும் “பெரியவர்” சீரை உயிர்களெல்லாம்

உய்தற்கு உதவும் ராமாநுசன் எம் உறுதுணையே!-என்று பாடுகிறார்.

இதில் மதுரகவி ஆழ்வாரை,“பெரியவர்” என்று கொண்டாடுகிறார்.பெரியவர் என்னும் பதத்தை,

மதுரகவி ஆழ்வார் ஒருவருக்கு மட்டுமே பயன்படுத்தியுள்ளார்.

மதுரகவியாழ்வரை பெரியவர் என்று எதனால்  அமுதனார் சொல்கின்றார் என்பதற்கு ஒரு சுவையான விளக்கம்.

நம்மாழ்வாருக்கும்  பகவானுக்கும் யார் பெரியவன் என்ற விவாதம் நடக்கிறது.நம்மாழ்வார்,

“பகவானே உன்னை விட நான் பெரியவன். காரணம், நீ இரண்டு உலகங்களையும் (விண், மண்) உன்னிடம்  வைத்திருக்கிறாய்.

அப்படி வைத்திருக்கும் உன்னையே நான் என்னுள் வைத்திருப்பதால் நானே பெரியவன் என்பதை ஒப்புக்கொள்” என்று பாடிய பாடல் இது.

புவியும் இருவிசும்பும் நின்னகத்த நீ என்

செவிவழி உள்புகுந்து என்னுள்ளாய்  அவிவின்றி

யான் பெரியன் நீ பெரியை என்பதனை ஆர் அறிவார்

ஊன்பருகு நேமியாய் உள்ளு.”

பெருமானை விட நம்மாழ்வார் பெரியவர் என்றால்,

அவரை தன்  உள்ளத்தில் வைத்திருக்கும் மதுகவியாழ்வார் பெரியவருக்கு பெரியவரல்லவா.

இதைத்தான் ராமானுஜ நூற்றந்தாதியில் பாடுகிறார்.

தனக்கு ஸ்வாமியான நம்மாழ்வாரையே உபாயமாகவும், உபேயமாகவும் கொண்டு, அவருக்கு அடிமைப்பட்டிருந்தவர் மதுரகவிகள்.

அப்படித் தான் அனுஷ்டித்துக் காட்டியதைத்தான், தன்னுடைய திவ்யப் பிரபந்தத்தில் (கண்ணிநுண் சிறுத்தாம்பு) அருளிச்செய்தார்.

பாசுரம் 26இல், மதுரகவி ஆழ்வாரின் மகிமைகளையும், அவர் அருளிச்செய்துள்ள

பிரபந்தத்தின் (“கண்ணிநுண் சிறுத்தாம்பு”) பெருமையையும் உரைக்கின்றார் மாமுனிகள்:

உபதேசரத்தினமாலை யில்
ஸ்வாமி மணவாள மாமுனிகள்……

ஏரார் மதுரகவி இவ்வுலகில் வந்துதித்த
சீராரும் சித்திரையில் சித்திரைநாள் பாருலகில்

மற்றுள்ள ஆழ்வார்கள் வந்துதித்த நாள்களிலும்
உற்றது எமக்கென்று நெஞ்சே ஓர்….

பாசுரம் 26..

வாய்த்த திருமந்திரத்தின் மத்திமமாம் பதம்போல்
சீர்த்த மதுரகவி செய்கலையை *ஆர்த்தபுகழ்
ஆரியர்கள் தாங்கள் அருளிச்செயல் நடுவே*
சேர்வித்தார் தாற்பரியம் தேர்ந்து….

பிள்ளைலோகம் ஜீயர் இந்தப் பாசுரத்திற்கு வியாக்யானம் அருளிச்செய்கையில்,

கண்ணிநுண் சிறுத்தாம்பு பிரபந்தத்தை, அஷ்டாக்ஷர மந்திரத்தின் (திருமந்திரம்)

மத்திய பதமாக அமைந்துள்ள “நம:” ஶப்தத்திற்கு ஈடாகக் காட்டியுள்ளார்.

திருமந்திரமானது, இந்த ஜீவாத்மாவிற்குப் பேறானது ஆத்மாவால்” என்று உபதேசிக்கின்றது.

ஆத்மாவை பகவானுக்கு உரியதாகக் கொண்டு, அவனுக்கு அடிமைப்பட்டிருப்பதே

அதற்கு (ஆத்மாவிற்கு) உண்டான லக்ஷணமாகும் என்பதே திருமந்திரத்தால் உணரப்படவேண்டிய ஞானமாகும்.

இதில் நம: பதமே முக்கியமானதாகும் – இது ஜீவாத்மாவுக்கு தன்னைக் காத்துக்கொள்ளும் ( ரக்ஷித்துக் கொள்ளும்) சுதந்திரம் (உரிமை) கிடையாது;

நம்மை ரக்ஷிக்கும் பொறுப்பு எம்பெருமான் ஒருவனுக்கே உள்ளது என்று தெளிவிக்கிறது .

ஆனால், இதற்கு சற்றே மாறாக, *இந்த ஆத்மாவானது, எம்பெருமானுக்கு ஆட்பட்டு இருப்பதைக் காட்டிலும்

ஆசார்யனுக்கு உரியது என்று கொண்டு, அவருக்கு ஆட்பட்டு, அதோடு, அவரே நமக்கு ரக்ஷகர் ஆவார் என்று

உரைக்கும் பிரபந்தமாகும் மதுரகவிகள் அருளியுள்ள கண்ணிநுண் சிறுத்தாம்பு. ஆகையாலேயே,

சாஸ்திரங்களில் ரஸமாக இருக்கும் ஆசார்ய நிஷ்டையை உரைக்கும் இவரது பிரபந்தத்தை,

மற்ற ஆழ்வார்கள் அருளிச்செய்துள்ள நாலாயிர திவ்யப் பிரபந்தங்களில் நடுநாயகமாகச்
சேர்த்து, மதுரகவி ஆழ்வாருக்கு ஏற்றத்தை அளித்துள்ளார்கள் நம் பூர்வாசார்யர்கள்.

*இவ்வாழ்வார்
திருவவதரித்த* நக்ஷத்திரமான சித்திரையும்
27 நக்ஷத்திரங்களில் மத்யமாக அமைந்தது போல இவர் அருளிச்செய்துள்ள கண்ணிநுண் சிறுத்தாம்பு

திவ்யப் பிரபந்தமானது 4000 திவ்விய பிரபந்த ரத்தின ஹாரத்தின் நடு நாயகக் கல்லாக

இவர் அருளிச்செய்துள்ள பிரபந்தமும் அமைந்துள்ளது என்பது இவருடைய பிரபந்தத்திற்கும் உள்ள பெருமை ஆகும்…..
மதுரகவிகளின் வாழி திருநாமம்:

சித்திரையிற் சித்திரைநாள் சிறக்கவந்தோன் வாழியே🙏
திருக்கோளூரவதரித்த செல்வனார் வாழியே🙏
உத்தரகங்காதீரத் துயர்தவத்தோன் வாழியே🙏
ஒளிகதிரோன் தெற்குதிக்கவுகந்துவந்தோன் வாழியே🙏
பத்தியொடு பதினொன்றும் பாடினான் வாழியே🙏
பராங்குசனே பரனென்று பற்றினான் வாழியே🙏
மத்திமமாம் பதப்பொருளை வாழ்வித்தான் வாழியே🙏
மதுரகவி திருவடிகள் வாழிவாழி வாழியே🙏🙏🙏🙏

——————-

அகிலாத்ம குணாவாஸம் அஜ்ஞான திமிராபஹம்
ஆச்ரிதாநாம் ஸுஸசரணம் வந்தே நந்தார்ய தேசிகம்🙏
ஸ்ரீமத் ராமாநுஜாசார்ய ஸ்ரீபாதாம் போருஹத்வயம்
ஸதுத்தமாங்கஸந்தார்யம் அனந்தார்ய மஹம்பஜே !🙏

ஸ்வாமி அநந்தாழ்வான் வைபவம்🙏
அநந்தாசார்யார் மற்றும் அநந்தஸூரி என்று அழைக்கப்பட்டவர்
எம்பெருமானாரின் பெருமைகளைக் கேள்வி பட்டு
எச்சான்,
தொண்டனுர் நம்பி,
மருதூர் நம்பி ஆகியோருடன் அவரை நாடிச் சென்றார்.

எம்பெருமானாரின் திருவடித்தாமரைகளில் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து
அவருடைய நிழலில் இருக்க ஆசைப் பட்டார்.
அந்தச் சமயத்தில் தான் எம்பெருமானார் யஞ்ய மூர்த்தி என்பவரைத் திருத்திப் பணிகொண்டு
அவரை
அருளாளப் பெருமாள் எம்பெருமானார் என்று திருநாமமிட்டு ஸ்தாபித்திருந்தார்.
எனவே, தன்னை நாடிய அநந்தாழ்வானையும் மற்றவர்களையும்
அருளாளப் பெருமாள் எம்பெருமானாருக்கு சிஷ்யர் ஆக்கினார்
அனைவரும் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டனர்.
அவர்கள் என்னதான் தன்னுடைய சிஷ்யர்களாக இருந்தாலும் எல்லோருமே
எம்பெருமானாரின் திருவடித் தாமரைகளிலேயே ஆச்ரயித்து இருக்க வேணுமென்று
அருளாளப் பெருமாள் எம்பெருமானார் கேட்டுக்கொண்டார்.
திருமலையில் எம்பெருமானாரின் திருவடி நிலைகளுக்கு அநந்தாழ்வான் என்றே பெயர்.🙏🙏🙏

காவிரிக்கரையில் உள்ள ஸ்ரீரங்கம் மடத்தில் ஒரு நாள் ஸ்ரீ ராமானுஜர் தன் சீடர்களுக்குத்
திருவாய்மொழிப் பாசுரங்களுக்கு விளக்கம் அளித்துக்கொண்டிருந்தார்.
அதில் ஒரு பாடலில் சிந்து பூ மகிழும் திருவேங்கடத்து என்னும் தொடர் இடம் பெற்றிருந்தது.
பூக்கள் உதிர்ந்து கிடக்கும் திருப்பதி மலை என்பது இதன் பொருள்.
இதைச் சொல்லும் போதே ராமானுஜருக்கு கண்ணீர் பெருகியது.
பதறிய சீடர்கள் காரணம் கேட்டபோது திருப்பதியில் பூக்கும் மலர்கள் பெருமானின் திருவடியைச் சேராமல்
கீழே பயனற்று கிடக்கிறதே என விளக்கம் அளித்தார் .
சீடர்களில் ஒருவரான அனந்தன் எழுந்து
“ஆசார்யா!..தாங்கள் உத்தரவிட்டால் இப்ப்போதே திருமலைக்குச் சென்று தொண்டு செய்கிறேன் என்றார்.

நீரோ ஆண் பிள்ளை!!என்று சொல்லி அணைத்தார் ராமானுஜர்.
அதன் பின் அனந்தாண் பிள்ளை என பெயர் பெற்றார்.
திருப்பதி மலையில் பெருமாளுக்கு சேவை செய்வதை குறிக்கோளாக கொண்டார்.
நந்தவனம் அமைத்து துளசி  மல்லிகை என பூச்செடிகளை வளர்த்தார்.
தினமும் மாலை தொடுத்து பெருமாளுக்குச் சாத்துவார்.
கிணறு ஒன்றை வெட்டி அதற்கு ராமானுஜ புஷ்கரணி என்ற பெயரையே சூட்டினார்.. 🙏🙏

கர்நாடக மாநிலத்தில், மைசூர் பகுதியில் காவேரி நதிக்கரையில் உள்ள சிறுபுத்தூர் இவருடைய அவதார ஸ்தலம்.
அனந்தாழ்வானின் திருத்தகப்பனார் கேசவாச்சார்யார். யஜுர் வேதி. பரத்வாஜ கோத்திரர்.
அனந்தாழ்வான் கி.பி. 1053 விஜய நாம ஆண்டு சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தார்.
சிறு பருவத்தி லிருந்தே இவர் பகவத் சிந்தனையில் முழ்கியவர்.

அனந்தாழ்வான் திருவனந்தாழ்வான் அம்சம் என்றும் குறிப்பிடுவர்.
அனந்தாழ்வானுக்கு மதுரகவி தாசன் என்றும் பெயருண்டு.

திருமலையில் புஷ்ப கைங்கர்யம்:
எம்பெருமானாரின் கட்டளைக்கிணங்க தன் துணைவியருடன் திருமலைக்கு பயணமானார் அனந்தாழ்வான்.
புஷ்ப கைங்கர்யம் செய்வதற்காக எம்பெருமானின் திருக்கோயிலுக்கு அருகாமையில் ஒரு ஏரியையும்.
நந்தவனத்தையும் அமைக்க திட்டமிட்டார். உதவி புரிய அந்நேரம் அங்கு யாரும் இல்லை.
ஆனால் பிறருடைய உதவியைப் பெறுவதும் ஆசார்யனின் கட்டளைக்கு களங்கம் ஏற்படும் என்று எண்ணினார்.
இதையறிந்த அனந்தாழ்வானின் தர்மபத்தினி தானிருக்கிறேன் என்று கூறினார்.
நிறைமாத கர்ப்பினி எனினும் எம்பெருமான் மேல் பக்தியினால் ஆணுக்கு ஈடாக மண் கூடையை சுமந்தாள்.
அனந்தாழ்வானின் ஆனந்தத் திற்கு எல்லையே இல்லை. தான் ஒரு கடப்பாறையை கையில் ஏந்தி நின்றார்.

சகல லோகநாதனை ஸ்மரித்தார். கடப்பாரையால் மண்ணை தோண்டினார். தோண்டிய மண்ணை கூடையில் போட்டார்.
அம்மண் கூடையை அனந்தாழ்வான் தர்ம பத்தினி தலைமேல் வைத்துக் கொண்டு சிறிது தொலைவில் சென்று
கொட்டிவிட்டு மறுபடியும் வந்தார். இதையெல்லாம் கண்டறிந்த திருவேங்கடவன் ஒரு சிறுவன் வடிவத்தில் வந்து,
அவருடைய கையில் இருந்த மண்கூடையை வாங்க முயன்றான்.
அனந்தாழ்வான் உனக்கு வேண்டுமானால் நீயும் இன்னொரு கைங்கர்யத்தைச் செய்துகொள்.
ஆசார்யன் எனக்கு நியமித்த கைங்கர்யத்தில் பங்கு கேட்காதே. இந்த கடப்பாரையினாலே அடிப்பேன் என்றார்.

அச்சிறுவன் அனந்தாழ்வானின் தர்மபத்னியிடம் சென்று அம்மா! நீங்கள் மிகவும் சோர்ந்து போயுள்ளீர்கள்.
சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொள்ளம்மா. நான் உதவி புரிகிறேன் என்றான்.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த தர்மபத்னி மெய்மறந்து தன்னையும் அறியாமலேயே மண் கூடையை கொடுத்து விட்டாள்.
அச்சிறுவன் இக்கைங்கர்யத்தில் ஈடுபட்டதைக் கண்ட அனந்தாழ்வான் சினம் கொண்டு அவனை அடிப்பதற்காகத் துரத்தி கொண்டு ஓடினார்.
ஓடுகின்ற சிறுவன் மீது அனந்தாழ்வான் தன் கையில் இருந்த கடப்பாரையை வீசி எறிந்தார்.
அது அச்சிறுவனின் திருமோவாய் மீது பட்டது. இரத்தம் சலசலவென கொட்டியது.

அச்சிறுவன் கோயிலுக்குள் சென்று மறைந்து விட்டான். மறுநாள் காலை அர்ச்சக ஸ்வாமிகள் கோயிலுக்குள் சென்று
பார்க்கையில் திருவேங்கடவன். திருமோவாயில் இரத்தம் பெருகிக் கொண்டிருந்தது.
அதை அறிந்த அனந்தாழ்வான் சிறுவனாக வந்தவன் அவனே என்றுணர்ந்தார்.
எம்பெருமானிடம் அவசரபட்டோமே என்று மனம் கலங்கினார். இரத்தப் பெருக்கை நிறுத்த என்ன செய்வதென்று திகைத்த போது.
திருவேங்கடவன் அவருடைய பாதத்தூளியைத் தன்னுடைய மோவாயில் வைத்து அழுத்துமாறு கூறினார்.
அப்படியே அனந்தாழ்வான் செய்ய இரத்தப்பெருக்கு நின்று விட்டன. அனந்தாழ்வான் நிம்மதி அடைந்தார்.
அப்போது எம்பெருமான் அனந்தா நீ வருந்தாதே கடப்பாரையை என் மீது வீசினாயல்லவா.
இரத்தம் வந்த இடத்தில் வடு மோவாயில் நிரந்தரமாக இருந்து விடும்.

இதனால் தான் இன்றும் திருவேங்கடவனுக்கு திருமோவாயில் பச்சைக் கற்பூரம் சாற்றப்படுகிறது.
அது பாதரேணு (திருவடிப்பொடி) என்று கூறப்படுகிறது. கோயில் முஹதுவாரத்தின் சுவற்றின் மேல் நிரந்தரமாக வைக்கப்பட்டுள்ளது.
இன்றளவும் திருமலையில் கோபுர நுழைவு வாயிலில் வடக்கே மதில் மேல் கடப்பாரை (யை) காணலாம்*.
பிறகு அனந்தாழ்வான் நந்த வனத்தை அமைத்து முடித்து அதில் பூக்கின்ற புஷ்பங்களை மாலைகளாகத் தொடுத்து
அதை நித்தியமும் திருவேங்கடவனுக்குச் சமர்ப்பித்து ஸ்ரீமத்ராமானுஜரின் நியமனப்படி
புஷ்ப கைங்கர்யத்தை செய்து கொண்டு வந்தார்.🙏🙏🙏🙏

இராமனுசர் திருமலையில் தரிசிக்க வந்தபோது, அனந்தாழ்வான் நிறுவிய மலர் தோட்டத்திலிருந்த

மல்லிகை, முல்லை, இருவாட்சி, ரோஜா, அல்லி, அளரிச் செடிகளையும் தவனம், மரு, மகிழ,

வகூல, படால, புன்னாக, செண்பக மரங்களையும் கண்டு மனமகிழ்ந்து, அனந்தனை நோக்கி,

“அனந்தார்யா, உன்னைச் சீடனாகப் பெற்றதின் பலனை இன்று அடைந்தேன்” என்று கூறினார்.

முதன்முதலில் அத்தோட்டத்தில் பூப்பூத்த மகிழ மரத்தின் மேல் அனந்தனுக்கு தனிப்பற்று!
இன்றும் உத்சவரான மலையப்ப சுவாமி, வனபோஜன உற்சவத்தின்போது இந்த மகிழ மரம் முன் எழுந்தருளுகிறார்!

அந்த மகிழ மரத்துக்கே அனந்தன் நினைவாகப் பரிவட்ட மரியாதையும் தரப்படுகிறது.

அத்தோட்டம், இப்போது ‘அனந்தாழ்வான்’ தோட்டம் என்றே அழைக்கப்படுகிறது.

கிட்டதட்ட 900 ஆண்டுகளுக்கு முன்னர் பெருமாளுக்கு தினமும் மாலை சாத்தும் பாக்கியத்தைப் பெற்றவர்

ஸ்ரீராமாநுஜரின் பிரியத்துக்கு உரிய சீடர் அனந்தாழ்வான்.
திருமலை திருப்பதியில் இதையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

தினந்தோறும் திருமலை நந்தவனத்தில் மலர்களைக் கொய்து, தானே அதை மாலையாகக் கட்டி பெருமாளுக்கு அணிவித்து, மகிழ்ந்து வந்தார்.

ஒருநாள், திருமலையில் தான் அமைத்த நந்தவனத்தில் பெருமாளுக்காக மலர்களைப் பறித்துக்கொண்டிருந்தார் அனந்தாழ்வான்.

அப்போது அந்த வனத்திலிருந்த பாம்பு ஒன்று அவரைத் தீண்டிவிட்டு அங்கிருந்து ஓடியது.

ஆனாலும், அதைப் பற்றி பெரிதாக எடுத்துக்கொள்ளாமலும் சற்றும் பதற்றம் அடையாமல் பூக்களைச் சேகரித்துக்கொண்டிருந்தார்.

அவருடன் பூக்களைப் பறித்துக்கொண்டிருந்த அவரின் நண்பர்கள் பதறிப்போய்,

”பாம்பின் விஷக்கடிக்கு பச்சிலை மருந்து வைத்துக் கட்டினால்தானே விஷமிறங்கும்.

அதைவிடுத்து நீங்கள் இப்படி செய்யலாமா?” எனக் கேட்டனர்.

அதற்கு, அனந்தாழ்வான் சிறிதும் பதற்றமின்றி, ”கடித்த பாம்பு வலிமையற்றதாக இருந்தால்,

திருக்கோனேரியில் தீர்த்தமாடி, திருவேங்கடமுடையானை தரிசிப்பேன்.

வலிமையுள்ளதாக இருந்தால், விரஜா நதியில் நீராடி, வைகுண்ட வாசனை சேவிப்பேன்” என பதில் சொன்னார்.

அவரின் பதிலைக் கேட்டு, நண்பர்களும் உறவினர்களும் மிகவும் ஆச்சர்யப்பட்டுப் போனார்கள்.

அவர் கூறியதுபோலவே, பாம்பின் விஷம் வைராக்கியவாதியான அனந்தாழ்வானை எதுவும் செய்ய வில்லை.

எத்தனை வைராக்கியமான பக்தி!🙏🙏🙏🙏

அனந்தாழ்வான்:🙏
கர்நாடக மாநிலத்தில், மைசூர் பகுதியில் காவேரி நதிக்கரையில் உள்ள சிறுபுத்தூர் இவருடைய அவதார ஸ்தலம்.

அனந்தாழ்வானின் திருத்தகப்பனார் கேசவாச்சார்யார். யஜுர் வேதி. பரத்வாஜ கோத்திரர்.

அனந்தாழ்வான் கி.பி. 1053 விஜய நாம ஆண்டு சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தார்.

சிறு பருவத்தி லிருந்தே இவர் பகவத் சிந்தனையில் முழ்கியவர்.

அனந்தாழ்வான் திருவனந்தாழ்வான் அம்சம் என்றும் குறிப்பிடுவர். அனந்தாழ்வானுக்கு மதுரகவி தாசன் என்றும் பெயருண்டு.

திருமலையில் புஷ்ப கைங்கர்யம்: எம்பெருமானாரின் கட்டளைக்கிணங்க தன் துணைவியருடன் திருமலைக்கு பயணமானார் அனந்தாழ்வான்.

புஷ்ப கைங்கர்யம் செய்வதற்காக எம்பெருமானின் திருக்கோயிலுக்கு அருகாமையில் ஒரு ஏரியையும். நந்தவனத்தையும் அமைக்க திட்டமிட்டார்.

உதவி புரிய அந்நேரம் அங்கு யாரும் இல்லை.

ஆனால் பிறருடைய உதவியைப் பெறுவதும் ஆசார்யனின் கட்டளைக்கு களங்கம் ஏற்படும் என்று எண்ணினார்.

இதையறிந்த அனந்தாழ்வானின் தர்மபத்தினி தானிருக்கிறேன் என்று கூறினார்.

நிறைமாத கர்ப்பினி எனினும் எம்பெருமான் மேல் பக்தியினால் ஆணுக்கு ஈடாக மண் கூடையை சுமந்தாள்.

அனந்தாழ்வானின் ஆனந்தத் திற்கு எல்லையே இல்லை. தான் ஒரு கடப்பாறையை கையில் ஏந்தி நின்றார்.

சகல லோகநாதனை ஸ்மரித்தார். கடப்பாரையால் மண்ணை தோண்டினார். தோண்டிய மண்ணை கூடையில் போட்டார். அம்மண் கூடையை அனந்தாழ்வான் தர்ம பத்தினி தலைமேல் வைத்துக் கொண்டு சிறிது தொலைவில் சென்று கொட்டிவிட்டு மறுபடியும் வந்தார்.

இதையெல்லாம் கண்டறிந்த திருவேங்கடவன் ஒரு சிறுவன் வடிவத்தில் வந்து, அவருடைய கையில் இருந்த மண்கூடையை வாங்க முயன்றான்.

அனந்தாழ்வான் உனக்கு வேண்டுமானால் நீயும் இன்னொரு கைங்கர்யத்தைச் செய்துகொள்.

ஆசார்யன் எனக்கு நியமித்த கைங்கர்யத்தில் பங்கு கேட்காதே. இந்த கடப்பாரையினாலே அடிப்பேன் என்றார்.

அச்சிறுவன் அனந்தாழ்வானின் தர்மபத்னியிடம் சென்று அம்மா! நீங்கள் மிகவும் சோர்ந்து போயுள்ளீர்கள்.

சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொள்ளம்மா. நான் உதவி புரிகிறேன் என்றான்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த தர்மபத்னி மெய்மறந்து தன்னையும் அறியாமலேயே மண் கூடையை கொடுத்து விட்டாள்.

அச்சிறுவன் இக்கைங்கர்யத்தில் ஈடுபட்டதைக் கண்ட அனந்தாழ்வான் சினம் கொண்டு அவனை அடிப்பதற்காகத் துரத்தி கொண்டு ஓடினார்.

ஓடுகின்ற சிறுவன் மீது அனந்தாழ்வான் தன் கையில் இருந்த கடப்பாரையை வீசி எறிந்தார்.

அது அச்சிறுவனின் திருமோவாய் மீது பட்டது. இரத்தம் சலசலவென கொட்டியது.

அச்சிறுவன் கோயிலுக்குள் சென்று மறைந்து விட்டான்.

மறுநாள் காலை அர்ச்சக ஸ்வாமிகள் கோயிலுக்குள் சென்று பார்க்கையில் திருவேங்கடவன். திருமோவாயில் இரத்தம் பெருகிக் கொண்டிருந்தது.

அதை அறிந்த அனந்தாழ்வான் சிறுவனாக வந்தவன் அவனே என்றுணர்ந்தார்.
எம்பெருமானிடம் அவசரபட்டோமே என்று மனம் கலங்கினார்.

இரத்தப் பெருக்கை நிறுத்த என்ன செய்வதென்று திகைத்த போது. திருவேங்கடவன்

அவருடைய பாதத்தூளியைத் தன்னுடைய மோவாயில் வைத்து அழுத்துமாறு கூறினார்.

அப்படியே அனந்தாழ்வான் செய்ய இரத்தப்பெருக்கு நின்று விட்டன. அனந்தாழ்வான் நிம்மதி அடைந்தார்.

அப்போது எம்பெருமான் அனந்தா நீ வருந்தாதே கடப்பாரையை என் மீது வீசினாயல்லவா.

இரத்தம் வந்த இடத்தில் வடு மோவாயில் நிரந்தரமாக இருந்து விடும்.
இதனால் தான் இன்றும் திருவேங்கடவனுக்கு திருமோவாயில் பச்சைக் கற்பூரம் சாற்றப்படுகிறது.

அது பாதரேணு (திருவடிப்பொடி) என்று கூறப்படுகிறது.

கோயில் முஹதுவாரத்தின் சுவற்றின் மேல் நிரந்தரமாக வைக்கப்பட்டுள்ளது.
இன்றளவும் திருமலையில் கோபுர நுழைவு வாயிலில் வடக்கே மதில் மேல் கடப்பாரை (யை) காணலாம்*.

பிறகு அனந்தாழ்வான் நந்த வனத்தை அமைத்து முடித்து அதில் பூக்கின்ற புஷ்பங்களை மாலைகளாகத் தொடுத்து அதை நித்தியமும் திருவேங்கடவனுக்குச் சமர்ப்பித்து ஸ்ரீமத்ராமானுஜரின் நியமனப்படி புஷ்ப கைங்கர்யத்தை செய்து கொண்டு வந்தார்.🙏🙏🙏🙏

அனந்தாழ்வானின் கூரிய ஞானத்தை விளக்கும் நிகழ்வு……

ஒரு சமயம், ஸ்ரீரங்கத்து பட்டர் (ராமானுஜரின் சீடர்) தனது சீடனை, அனந்தாழ்வானிடம் அனுப்பி,

‘உண்மையான ஸ்ரீவைஷ்ணவன்’ யாரென்று அறிந்து வரச் சொன்னார்.

அனந்தாழ்வான் சீடனிடம், ” உண்மையான ஸ்ரீவைஷ்ணவன் என்பவன்,

ஒரு கொக்கைப் போல், ஒரு கோழியைப் போல, உப்பைப் போல, உன்னைப் போல இருப்பவன்” என்று கூறினார்!!!

பொருள் விளங்காத அந்த சீடனுக்கு, பின்னாளில் பட்டர் அந்த வாக்கியத்தின் உட்பொருளை விவரித்தது சுவையானது.

‘கொக்கைப் போன்றவன்’ என்பதற்கு, உண்மையான ஞானத்தைக் கொண்ட ஆச்சார்யனை சரணடைய காத்திருப்பவனாகவும், ‘

கோழியைப் போன்றவன்’ என்பதற்கு, வேதங்களின் சாரமான திருவாய்மொழியை நான்கு வேதங்களிலிருந்தும் சிறந்ததாக பிரித்தெடுக்க வல்ல திறமை மிக்கவனாகவும்,

‘உப்பைப் போன்றவன்’ என்பதற்கு, பகவத், பாகவத, ஆச்சார்ய கைங்கர்யங்களில் கரைபவனாகவும், ‘

உன்னைப் போன்றவன்’ என்பதற்கு, அகந்தையும், ஆணவமும் இல்லாதிருப்பவனாகவும் உட்பொருள் அமைந்திருப்பதை,

பட்டர் அந்த சீடனுக்கு விளக்கமாக எடுத்துரைத்தார்.

அனந்தாழ்வானுக்குத்
தனியன் அருளிச் செய்த திருவேங்கடவன்……

ஒரு முறை, அடியார்கள் சிலர், திருவேங்கடமுடையானை தரிசிக்க திருமலையில் ஏறிக் கொண்டிருந்தனர்.

அவர்கள் மிகவும் களைப்புடனும், பசியுடனும், தாகத்துடனும் இருந்தபோது, பெருமாள் ஒரு பிரம்மச்சாரி வடிவில்

அவர்கள் முன் தோன்றி, பிரசாதமும், நீரும் வழங்க முற்பட்டார்.

அடியார்களோ, பெருமாளிடம் அவர் யாரென்றும், அவரின் ஆச்சார்யன் பற்றியும் அறியாமல்,

தாங்கள் அவர் தருவனவற்றை ஏற்க இயலாதென்று கூற, பெருமாள் தான் அனந்தாழ்வானின் சிஷ்யன் என்றும்,

அவர் தான் தன்னை உதவ அனுப்பியதாகவும் கூறினார் !!! அடியார்கள் நம்ப மறுத்து,

பெருமாளிடம் அவரது ‘ஆச்சார்ய தனியனை’ கூறுமாறு பணித்தனர்.

உடனே, பிரம்மச்சாரி வடிவில் வந்த பெருமாளே, பிரசித்தி பெற்ற இந்த தனியனின் முதல் பாகத்தை இயற்றினார்:

அகிலாத்ம குணாவாஸம் அஜ்ஞான திமிராபஹம்

ஆச்ரிதாநாம் ஸ¤சரணம் வந்தே நந்தார்ய தேசிகம்

அடியார்கள், ராமநுசரின் (உடையவரின்) சம்பந்தம் தெளிவாகக் கூறப்படவில்லை என்று ஐயப்பட்டபோது,

பெருமாள் தனியனின் இரண்டாவது பாகத்தை எடுத்துரைத்தார் !

ஸ்ரீமத் ராமாநுஜாசார்ய ஸ்ரீபாதாம் போருஹத்வயம்

ஸதுத்தமாங்கஸந்தார்யம் அனந்தார்ய மஹம்பஜே !

தனியனை ஏற்றுக் கொண்ட அடியார்கள், பெருமாள் தந்த பிரசாதத்தையும், நீரையும் ஏற்றுக் கொண்டனர்.

தமிழில், “ஏய்ந்தபெருங் கீர்த்தி” என்ற திருவாய்மொழித் தனியன் பாடல் அனந்தன் எழுதியதே. ‘

வேங்கடாசல இதிகாசமாலா’ என்ற வடமொழி நூல் திருவரங்கத்தின் ‘கோயில் ஒழுகு’க்கு இணையானதாகப் போற்றப்படுகிறது.

அவர் இயற்றிய ‘ராமானுஜ சௌத்ஸ்லோகி’ என்ற நூலில், திருமலை, காஞ்சி, மேல்கோட்டை மற்றும் ஸ்ரீரங்கம் ஆகிய

நான்கு புண்ணியத் தலங்களும் தனது ஆச்சார்யனான இராமனுஜரின் இதயத்துக்கு அருகே உள்ளவையாக விவரிக்கிறார்.

அது போலவே, ‘கோதா சௌத்ஸ்லோகி’ என்ற நூலில், ஆண்டாளின் பெருமையை, மிக அழகாக, உணர்வு பூர்வமாக,

வாசிப்பவரை ஈர்க்கும் வண்ணம் சொல்லியிருகிறார்!

புண்ணிய மூவரான, இராமனுஜர், பெரிய திருமலை நம்பி, அனந்தாழ்வான் ஆகியோர் சேர்ந்து,வைகான்ஸ ஆகம வழிப்பாட்டை

திருமலையில் நிலைப்படுத்த வேண்டி, ‘பெத்த ஜீயங்கார் மடத்தை’ நிறுவினர்.

தனது ஆச்சார்யனான இராமனுஜர் மீது அளவு கடந்த பக்தியும், பாசமும் கொண்டவராக விளங்கினார் அனந்தாழ்வான்,

குருவின் வாக்கே வேதவாக்கு என்பதற்கும் எடுத்துக்காட்டாக விளங்கினார்!

உடையவர் இராமனுசரின் சன்னிதியை திருமலையில் அனந்தன் நிறுவினார்.

அங்குள்ள விக்ரகம், ஸ்ரீபெரும்புதூர், ஸ்ரீரங்கம் மற்றும் திருநாராயணபுரத்தில் உள்ள உடையவர் மூர்த்திகளை விட தொன்மையானது என்று அறியப்படுகிறது. இராமனுஜர் சன்னிதியில் உள்ள சடாரி, ‘அனந்தாழ்வான்’ என்றே அழைக்கப்படுகிறது.

ஆச்சார்ய பக்திக்கு உன்னதமான எடுத்துக்காட்டாக வாழ்ந்த அனந்தாழ்வான் புண்ணிய திருவாடிப் பூரத்து நாளில்,

ஆச்சார்யன் திருவடி அடைந்தார்.🙏🙏

—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அனந்தாண்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading