ஸ்ரீ திருஎழுகூற்றிருக்கை (சித்திரக்கவி வடிவம்) – மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர் இயற்றியது

ஸ்ரீ திருஎழுகூற்றிருக்கை (சித்திரக்கவி வடிவம்) – மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர் இயற்றியது

ஸ்ரீ திருஎழுகூற்றிருக்கை
இலக்கணம்:-
எழுகூற்றிருக்கை என்பது சித்திரக் கவிகளுள் ஒருவகை. இஃது இரத பந்தத்தில் (தேர் உருவில்) அமைக்கப்பெறும்.
தேரின் உருவம் போன்று கட்டங்கள் அமைத்து அவற்றில் எண் முறையை
ஒன்று முதல் ஏழுவரை குறைந்தும் கூடியும் வருமாறு வைத்துப் பாடுவது எழு கூற்றிருக்கை.
எழு+ கூறு+ இருக்கை எனப்பிரிந்து நின்று பொருள் தரும்.

கோதி லேழறை யாக்கிக் குறு மக்கண்
முன்னின்றும் புக்கும் போந்தும் விளையாடும்
பெற்றியால் வழு வாமை யொன்று
முதலாக வேழீ றாய்முறை யானே
இயம்புவ தெழுகூற் றிருக்கை யாகும் – முத்துவீரியம் 1123

பூரியே முரையாக்கி குறுமக்கண் முன்னின்று
புக்கு போந்துங்கேளியும்
புகழின்வழு வாமையா லொன்றுமுத லேழிறுதி
புகலெழு கூற்றிருக்கை- பிரபந்ததீபிகை – 30

எழு கூற்றிருக்கை ஏழு அறை கீறிக்
குறுமக்கள் முன்னர்க் குறுகியும் மறுகியும்
விளையாடும் பெற்றி விளம்புதல் என்ப- பிரபந்த தீபம் – 20

எம்பெருமான் பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்கள் என்னும் அருட்பெருஞ்சோதித் தனிப்பெரும்
கருணையரின் திருவருட் பெரும் புகழை திரு எழுகூற்றிருக்கை என்னும் சித்திரக் கவியான் விதந்தோதுதல் இப்பனுவலின் நோக்கம்.

திருஎழுகூற்றிருக்கை

காப்பு
தொழுதெழுந்தேன் துய்யமலர்ப் பொற்பாதம் சீரார்
எழுகூற்றிருக்கைதனைப் பாட – முழுமுதல்வர்
மெய்வழிதெய் வத்தருளார் வான்கருணை தான்வையம்
உய்ந்திடநற் காப்பாகும் காண்.

நூல்
நிலைமண்டில ஆசிரியப்பா

ஒருதனி முதல்வ! மெய்வழி அருள்தரும்
ஒருதிரு இறையே! இருவினை தீர்க்கும்
ஒருபெருந் தகையே! திருவடி சரணம்
ஒருதிரு வுருவாய் இருபத முளரிகள்
திருவுள மிரங்கி முத்தி வழங்கும் ⁠(5)

திருவுயர் புவியில் அருள்நடம் புரிய
இகபர மிரண்டின் செல்வம் ஒருங்குற
ஓர்எழில் மறைநா உயிர்உடல் இரண்டும்
முப்பதிச் சோபனம் நாற்பதம் பெறவே
முத்தா பங்கள் தீர்ந்திட இரண்டாம் ⁠(10)

மறுபிறப் பெய்தினம் மலரடி ஒன்றி
குருவருள் பெறவே ஒருமெய் வழியில்
இருங்குணப் பழமையர் மூவா முதல்வர்
நாற்கா ரணரெனும் ஐவகைப் பொறுப்பினர்
நாற்கவி ராஜர் முத்தமிழ் வித்தகர் ⁠(15)

வையகம் வானகம் இரண்டும் ஈடிலா
ஒருபெரும் தவத்துறை ஓங்கு சிறப்பினர்
ஒருங்கெமைக் கூட்டி இரண்டறக் கலந்து
முச்சுடர் காட்டி நாற்கரம் அருளி
ஐம்மணிப் பொதிகை ஆற்றினில் இருத்தி ⁠(20)

ஐம்புலன் அடக்கும் ஆற்றலும் அருளி
நாற்சிற குடைய பிரணவப் பட்சி
ஆசனத் திருத்தி அழகிய மும்மணி
இருள்மனத் தொளிசெய் ஒருபெருங் கருணையே
ஒன்றே குலமென உரம்பெற நிறுவி ⁠(25)

இரண்டிலை இறைவர் எனவே உறுதிசெய்
முக்குண இயல்பில் சத்துவம் ஓங்க
நான்மறை தெளிய ஐந்திரம் சிறக்க
அறுபுரிக் கோட்டை ஏழ்நிலை மாடம்
அங்கதில் ஏற்றி அறுபுரி நூலை ⁠(30)

அணிவித் தைங்கரர் நால்வாய்த் தகையர்
முப்பழம் மோதகம் திருமுனர் படைக்க
இருகரம் அருளினீர் ஏழையேன் ஒருவன்
ஒன்றினேன் உயர்திரு இருமலர்ப் பதத்தில்
உடல்பொருள் ஆவி மூன்றும் சாற்றி ⁠(35)

அறம்பொருள் இன்பம் வீடெனும் நான்குற
ஐவண நாதர் ஆறங்கம் தெளிவித்(து)|r}}
ஏழ்வகை அமானிதம் என்னென விளக்கி
அறுவகை வேகம் அதுபின் னடையவே
ஐவழி தீங்கில் செல்லா திருத்தி ⁠(40)

நாற்கரம் தந்துமுத் தோடம் விலகிட
இருவழி யன்று ஒருவழி மெய்வழி
என்றுநன் குணர்த்தி அருள்தரும் தெய்வமே
ஒன்றாய்க் காண்பது காட்சி என்று
நன்றாய்த் தெளிவது நன்னிலை ஏற்றம் ⁠(45)

இரண்டிலை ஏகன்அ னேகன் என்பதை
மன்பதை மாந்தர் அறிந்து முப்பாலுக்(கு)|r}}
அப்பால் ஆக்கிய அருட்பெருஞ் சோதி
நால்வகை வருண மேல்வகை அனந்தர்
ஐவகை நுகர்வில் அழுந்தா துய்ய ⁠(50)

அறுவகைக் குற்றம் அகன்ற மாண்பினர்
செம்புலத் தாழ்க ஐம்புல நுகர்வு
நானிலம் தன்னின் மேனிலம் சாலை
மூவகைப் பண்பில் முதலது சத்துவம்
அத்தகு சத்துவத்(து) தாழ்ந்திட எங்கோன் ⁠(55)

இரண்டெனும் வாசியில் ஏகும் தரம்தெரி
ஒருபெரும் மெய்வழி உய்வழி செப்பினர்
ஓருயிர்க் கலையே உய்கதி நிலையே
சீருயர் தவத்தோர் தங்கிரு தயமே
முந்நீர் ஆழ்ந்த மகிதல மிசைவரு ⁠(60)

நாற்பத மேஅருள் நாதநா தாந்தா
அஞ்சேல் என்றெமக் கடைக்கலம் அருளி
நால்வரு ணத்தின் மேல்வரு ணத்தோன்
என்றெனை ஆக்கிய இன்னுயிர்த் துணையே
மும்மலம் கருகு முறையருள் முதல்வா ⁠(65)

இருநிதிக் கரசே எனைஒரு பொருளென
ஏன்றமெய்த் தயவே எம்பெரு மானே
ஆன்றசற் குருவே அளக்கரும் புகழோய்
ஒருகற் பகமே உயர்நிலை ஏற்றி
இருயிங் கெனவே எளியனை யமர்த்தி ⁠(70)

முத்தமிழ்க் கடலுள் மூழ்கிடச் செய்த
அத்தனே நான்மறைக் கரசே போற்றி
முப்பா டியற்றி முதுகலை பயிற்றி
செப்பரும் தவத்துறை திறமருள் இறையே
தங்கமா கிடுநெறி தனிலிரு வென்ற ⁠(75)

துங்கமா மணியே தொல்புவிச் செல்வமே
எங்கெவர்க் கும்ஓர் இணையிலாத் துணையே
சங்கத் தமிழே தனிச்சீ தனமே
ஒருதனித் தலைமை உதயமே! இதயமே!
இருமை வகைதரு திரிமூர்த் தியரே ⁠(80)

பெருமை தருகும் சீரடி ஈரடி
ஓரடி யாலே உலகளந் தோயே
சேரடி என்றெனைச் சேர்த்தணைத் தாயே!
ஒரடி என்றெனை ஈரியல் பறிவால்
ஒருமை வகைபுரி ஓங்கிடு தவத்தமர் ⁠(85)

ஒருவரே மெய்வழி தெய்வமே வாழிய! ⁠(86)

குறிப்பு:-

இருவினை : பிறப்பு, இறப்பு (நல்வினை, தீவினை யன்று)
பதம் : திருவடி
முளரி : தாமரை
முத்தி : மோட்சம்
முத்தீ : ஆகவனீயம், தட்சிணாக்கினியம், காருகபத்தியம்
சோபனம் : அழகு, வாழ்த்து
முத்தாபம் : ரோகத்தரித்திரியம், ஜெகமிருக அபாயபயம், திண்டாடும் இறுதியின் நாள் துன்பம்
நாற்காரணம் : தூங்காமை, கல்வி, துணிவுடைமை, நீங்காநிலம்
நாற்கவி : ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம்
முத்தமிழ் : இயல், இசை, நாடகம்
முச்சுடர் : சூரியன், சந்திரன், அக்கினி
ஐம்மணிப்பொதிகை : பஞ்சாட்சரம்
மும்மணி : சூக்குமதேகம்
முக்குணம் : சத்துவம், ராஜஸம், தாமஸம்
ஐந்திரம் : நித்தியம் பெறும் யோகம்
முப்பழம் : மா, பலா, வாழை
ஏழ்வகை அமானிதம் : காலம், நியதி, கலை, வித்தை, ராகம், புருஷன், சுத்தமாயை(என்னும் வித்தியாதத்துவங்கள்)
அறுவகை வேகம் : சரகதி, சர்ப்பகதி, மயூரகதி, இடிகதி, மின்கதி, மனோகதி (கதி = வேகம்)
ஐவழி : ஐம்பொறிகளால் உணரப்படும் உணர்வுகள்(கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்றறிதல்)
முத்தோஷம் : நினைவால் செய்வது தோஷம்; சொல்லால் வருவது குற்றம்; செய்கையால் வருவது பாவம்
அறுவகைக் குற்றம் : காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாற்சரியம்
மூவகைப் பண்பு : சத்துவம், ராஜஸம், தாமஸம்
முந்நீர் : ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர்(கடல் எனவும் பொருள் பெறும்)
மகிதலம் : உலகு
நாற்பதம் : சாலோகம்,சாமீபம், சாரூபம்,சாயுச்சியம்
மும்மலம் : ஆணவம், கன்மம், மாயை
இருமை : இம்மை, மறுமை
முப்பாடு : மனம், மொழி, மெய்களால் பாடுபடுதல்
தூயது : தங்கம்

திருஎழுகூற்றிருக்கை இனிது நிறைவு பெற்றது.

குரு வாழ்க! குருவே துணை!

எல்லாம் ஆண்டவர்கள் தயவு!

——————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading