ஸ்ரீ திரு மாலை-14-வண்டினம் முரலும் சோலை -ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

வண்டின முரலும் சோலை மயிலினம் ஆலும் சோலை
கொண்டல் மீதணவும் சோலை குயிலினம் கூவும் சோலை
அண்டர் கோனமரும் சோலை அணி திரு வரங்க மென்னா
மிண்டர் பாய்ந் துண்ணும் சோற்றை விலக்கி நாய்க் கிடுமி னீரே.

பதவுரை

வண்டு இனம் முரலும் சோலை–வண்டுகளின் கூட்டங்களானவை காநம் செய்யா நிற்கப் பெற்ற சோலைகளை யுடையதும்,
மயில் இனம் ஆலும் சோலை–மயில்களின் கூட்டங்களானவை கூத்தாடா நிற்கப் பெற்ற சோலைகளை யுடையதும்
கொண்டல் மீது அணவும் சோலை–மேகங்களானவை மேலே வந்து படியா நிற்கப் பெற்ற சோலைகளை யுடையதும்
குயில் இனம் கூவும் சோலை–குயில்களின் கூட்டங்கள் ஒன்றையொன்று அழையா நிற்கப் பெற்ற சோலைகளை யுடையதும்,
அண்டர் கோன் அமரும் சோலை–தேவர்கட்குத் தலைவனான ஸ்ரீரங்கனாதன் நித்ய வாஸம் பண்ணப் பெற்ற சோலைகளை
அணி–ஆபரணமாக வுடையதுமான
திரு அரங்கம் என்னா–ஸ்ரீரங்கம் என்று சொல்ல மாட்டாத
மிண்டர்-நன்றி யறிவில்லாத மூர்க்கர்கள்
பாய்ந்து உண்ணும் சோற்றை–மேல் விழுந்து உண்ணுகிற சோற்றை
விலக்கி –(அவர்கள் உண்ணக் கூடாதபடி) தடுத்து
நீர் நாய்க்கு இடுமின்–நீங்கள் (அந்தச்சோற்றை) நாய்க்கு இடுங்கள்.

விளக்க உரை

இதுவரை பகவத் விஷய விரோதிகளான பாவிகளை நினைத்ததற்கும்
அவர்களோடு ஸம்பாசனை செய்ததற்கும் ப்ராயஸ்சித்தமாக
“வண்டினமுரலுஞ் சோலை” இத்யாதியைப் பரம போக்யமாகத் தாம் அநுஸந்திக்கச் செய்தேயும்,
மீண்டும் “திருவரங்கமென்னாமிண்டர்”என்று அப்பாவிகளையே நினைக்கிறார்.
அவர்களையொழிய இவர்க்கு ஒரு க்ஷணமும் செல்லாதுபோலே.

ஸம்ஸாரத்திலேயே நெடுநாள் ஊன்றினவன் கொண்ட பெண்டிர் மக்களுற்றார் சுற்றத்தவரோடுண்டான
பற்றை அறுத்துக் கொண்டு பகவத் விஷய சிந்தையினாலேயே போது போக்குவேணுமென்று பெரு முயற்சி செய்தாலும்
பழையதான வாஸநையின் கணத்தினால் அந்த ஸம்ஸாரப்பற்றை விரைவில் அறுத்துக்கொள்ள முடியாமல்
“அங்குற்றேனல்லே னிங்குற்றேனல்லேன்” என்றாற்போல
இருகரையனாய்த் தடுமாறுமாபோலே
பராங்முகரையும் சீர்திருத்தி மங்களாபாஸநத்துக்கு ஆளாக்கிக் கொள்வதற்காகப் பாடுபடுகையாகிற
ஒரு விலக்ஷண ஸம்ஸாரத்திலே நெடுநாளாக ஊன்றின இவ்வாழ்வார்,
மநோரதம் நிறைவேறப்பெறாத வருத்தத்தினால் அப்பாவிகளின் பற்றை அறுத்துக் கொள்ள வேணுமென்று
பெருக்க முயன்றாலும் அது இவர்க்கு விரைவில் கைகூடுகிறதில்லை.
மங்களாபாஸணத்திற்கு ஆள்சேர்க்கப் படுகிறபாட்டின் உறைப்பு என்னே.

திருவரங்கமென்னாமிண்டர்-
அவன் தங்களுக்காக வந்து கிடவா நிற்க,
அவனுடைய தேசத்தை வாயாலே சொல்லவுங்கூ டமாட்டாத மூர்க்கர்.

நரகவாஸம், கர்ப்பவாஸம் முதலானவை பிடரியைப் பிடித்துக் கொண்டு நிற்க,
கேவலம் தேக போஷணத்திலேயே ஊன்றிக் கிடக்கிறவர்களுக்கு மேற்பட்ட மூர்க்கரும் உண்டோ?

(“மிண்டர் பாய்ந்துண்ணுஞ் சோற்றைவிலக்கி நாய்க்கிடுமிளீரே.”)
“நேமிசேர் தடங்கையினானை நினைப்பிலாவலி நெஞ்சுடைப்,
பூமிபாரங்களுண்ணுஞ் சோற்றினை வாங்கிப் புல்லைத் திணிமினே” என்றார் பெரியாழ்வார்;
இவர் நாய்க்கிடுங்களென்கிறார்.
தங்களை உத்தேசித்து வந்து கண்வளர்ந்தருளுகிற அந்த உபகாரத்தை அறியாத க்ருதக்னர்
ஜீவிக்கிற ஜீவனத்தை விலக்கி,
ஒருநாள் ஒருபிடி சோறிட்டவன் வாசலைப் பற்றிக் கிடக்குமத்தனை நன்றி யறிவுடைய நாய்க்கிடுங்களென்கை.

நாய் நன்றியறிவுடையதென்பது உண்மையே;
அதற்கு சோறிடவேணுமானால் தனக்கு உரிய சோற்றை இடட்டும்;
பிறர் உண்கிற சோற்றைப் பிடுங்கி நாய்க்கு இடுவதற்கு என்ன அதிகாரமுண்டு? என்று மங்கிக்க வேண்டாயோ

அஸாதுப்யோர்த்த மாதாய ஸாதுப்பயஸ் ஸம்ப்ரயச்சதி-கல்பகோடி கைஸ்ராணி ஸ யாதி ச்ரேயஸாம் பதம்” என்று
அஸத்துக்களின் பொருளைப் பறித்து ஸத்துக்களுக்கு இடும்படி ப்ரஸ்த்ரம் விதித்திரா நின்றதிறே;
இவ்வர்த்தத்தை உண்மையாக அறிந்து அநுஸ்டாந பர்யந்தம் வெளிக் காட்டியவர் திருமங்கையாழ்வாரென்க.

அண்டர்–
இடையர்க்கும்
தேவர்க்கும் பெயர்.

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading