ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய- திரு நூற்று எட்டு திருப்பதி அந்தாதி –தொண்டை நாட்டுத் திருப்பதிகள் -74-95—/வட நாட்டுத் திருப்பதிகள் -96-107/ திரு நாட்டுத் திருப்பதி –108-

தொண்டை நாட்டுத் திருப்பதிகள்–22-

74-திருக்கச்சி -அத்திகிரி-

பொருள் ஆசை மண் ஆசை பூங்குழலார் போகத்து
இருள் ஆசை சிந்தித்து இராதே அருளாளன்
கச்சித் திருப்பதி ஆம் அத்தியூர்க் கண்ணன் தாள்
இச்சித் திருப்பது யாம் என்று –74–

(இ – ள்.) பொருள் ஆசை – செல்வத்தினிடத்து ஆசையையும்,
மண் ஆசை – பூமியினிடத்தி லாசையையும்,
பூ குழலார் போகத்து இருள் ஆசை – மலரையணிந்த கூந்தலையுடைய மகளிரது இன்பத்திலே வைக்கின்ற
மனம் மேன்மேலும் இருளுவதற்குக்காரணமான பெண்ணாசையையும்,
சிந்தித்துஇராதே – மனத்திற்கொண்டிடாமல், –
அருள் ஆளன் – பேரருளாளனாகிய,
கச்சி திருப்பதி ஆம் அத்தியூர் கண்ணன் – காஞ்சீபுரத்திலுள்ள திவ்விய தலமாகிய திருவத்தியூரில் எழுந்தருளியிருக்கும் திருமாலினது,
தாள் – திருவடிகளை, யாம் -,
இச்சித்து இருப்பது – உபாயமும் உபேயமுமாக விரும்பிச் சிந்தையற்றிருப்பது,
என்று – எந்நாளோ? (எ – று.)

மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை யெனப்படுகின்ற ஈஷணா த்ரயங்களும் ஒழிந்து எம்பெருமான் திருவடிகளையே
உபாயமும் உபேயமுமாகப் பற்றிக் கவலையற்றிருக்கும் நாள் எப்பொழுது அடியேனுக்கு நேருமோ? என்று பேற்றில்
த்வரையால் அந்நாளை ஐயங்கார்எதிர்நோக்குகின்றனரென்க.
“திணரார்சார்ங்கத்துனபாதம் சேர்வ தடியே னெந்நாளே” என்றார் ஆழ்வாரும்.
ஈஷணாத்ரயத்தினுள்ளும் பெண்ணாசை மிகக்கொடியதென்பதைத் தெரிவித்தற்கு, “பூங்குழலார் போகத்திருளாசை’ என்றார்.

கச்சி = காஞ்சீ என்னும் வடசொல்லின் சிதைவு; பிரமனாற் பூசிக்கப்பட்ட தலம் என்பது, பொருள்;
இனி, பூமியாகிய பெண்ணுக்கு அரையில் அணியும் அரைநூல்மாலைத் தானத்தி லுள்ளதுபற்றி வந்த பெயரென்று கூறுவாருமுளர்.
அத்தியூர் = ஹஸ்திகிரி; ‘கோயில் திருமலை பெருமாள் கோயில்’ என்று சிறப்பாக எடுத்துக்
கூறப்படுகின்ற மூன்று தலங்களில் ஈற்றுத்தலம், இது; இது, தியாகமண்டபம் எனப்படும்.
நெடுநாள் தவஞ்செய்தும் மனத்தூய்மைபெறாத பிரமதேவன் ஆகாயவாணிகூறியபடி பூலோகத்தில் புண்ணிய
க்ஷேத்திரங்களெல்லாவற்றுள்ளும் உத்தமமானதும் ஒன்று ஆயிரமாகப் பயன்தருவதுமாகிய சத்திய விரத
க்ஷேத்திரத்தை யடைந்து, அங்கு அநந்தஸரஸின்கரையிலுள்ள ஹஸ்திகிரியை உத்தரவேதியாகக் கொண்டு
யாகசாலையையமைப்பித்து, அசுவமேதயாகஞ்செய்து அதனால் ஸ்ரீமந்நாராயணனை யாராதிக்க,
அந்தயாகாக்கினியினின்று எழுந்த புண்ணிய கோடிவிமானத்தில் தேவராஜனான திருமால் பிரசன்னனாயின னென்றும்,
அந்த வரதராஜஸ்வாமியைப் பின்பு கஜேந்திராழ்வான் பூசித்து முதலையினாலாகிய துயர்தீர்ந்து மேன்மைபெற்ற தென்றும்,
தைவத்தச்சரிலொருவனான மயன் பிரமன் கட்டளையால் அங்கு எம்பெருமானுக்குத் திருக்கோயில் கட்டியமைத்தன னென்றும் அறிக.
இந்திரனது யானையாகிய ஐராவதம் நெடுநாள் தவஞ்செய்து மலைவடிவங்கொண்டு எம்பெருமானைத் தரித்தலால்,
அம்மலைக்கு ‘ஹஸ்திகிரி’ என்று பெயர்;
கஜேந்திராழ்வான் பூஜித்துப் பேறுபெற்ற தலமாதலால், இப்பெயர்நிகழ்ந்த தென்றலு முண்டு.
இங்கு, மலையடிவாரத்திலுள்ள அழகியசிங்கப்பெருமானே ஆழ்வாரதுமங்களாசாசனம் பெற்றவரென்பது, பலரது கொள்கை.

———

75-திருவட்ட புயங்கம் –

என்றும் துயர் உழக்கும் ஏழை காள் நீங்கள் இளங்
கன்று போல் துள்ளிக் களித்து இரீர் அன்று நடம்
இட்ட புயங்கத்து இரு சரணமே சரண் என்று
அட்ட புயங்கத் தாற்கு ஆள் ஆய் –75-

(இ – ள்.) என்றும் – எப்போதும்,
துயர் உழக்கும் – (தாபத்திரயங்களி லடிபட்டு) வருந்துகின்ற,
ஏழைகாள் – அறிவில்லாத ஜநங்களே! – நீங்கள் -,
‘அன்று – முற்காலத்தில் (கிருஷ்ணாவதாரத்தில்),
புயங்கத்து நடம் இட்ட – (காளியனென்னுஞ்) சர்ப்பராசன்மீது கூத்தாடிய,
ஒரு சரணமே – (எம் பெருமானது) இரண்டுதிருவடிகளே,
சரண் – தஞ்சமாகும்,’ என்று – என்று உறுதிகொண்டு,
அட்டபுயங்கத்தற்கு ஆள் ஆய் – திருவட்டபுயங்கம் என்னுந் திருப்பதியி லெழுந்தருளியுள்ள திருமாலுக்கு அடிமைப்பட்டு, –
இளங் கன்றுபோல் துள்ளி களித்து இரீர் – இளங்கன்றுபோல (ப் பயமறியாமல்) துள்ளிக் குதித்து அகமகிழ்ந்திருங்கள்; (எ – று.)

அட்டபுயத்தி லெழுந்தருளியுள்ள பெருமானுக்கு ஆட்பட்டு, பிறவித் துன்பங்கள்யாவும் ஒழிய இளங்கன்று
போலப் பயமறியாது துள்ளிக் களித்து வாழுங்களென, உலகத்து ஸாம்ஸாரிகதாபத்தால் வருந்துஞ் சேத நர்க்கு
அறிவுறுத்தியவாறு. அட்டபுயங்கத்தர்க்குஆளாய்க் களித்திரீர்என்க.

இத்தலத்து எம்பெருமானுக்கு எட்டுத்திருக்கைகள் உள்ளதுபற்றி ‘அஷ்டபுஜம்’ என்று திருப்பெயராக,
அச்சொல் ‘க’ப்ரத்யயம்பெற்று ‘அஷ்டபுஜகம்’ என்று ஆகி, தமிழில் அட்டபுயங்கம் எனத் திரிந்தது.
இனி, இத்திருப்பதி அட்டபுயகரம் என்று வழங்கப்பெறுதலுமுண்டு;
அஷ்டபுஜன் எழுந்தருளியிருக்கின்ற கரம் (கிருகம்) ஆதல்பற்றி, இப்பெயர் வந்தது போலும்: அட்டபுயவகரம் என்பதன் மரூஉ வென்பாரு முளர்.

————-

76-திருத் தண் கா -பிரிந்து ஆற்றாளாய தலைவி தலைவன் இடம் தனக்கு உள்ள அன்புறுதியைத் தோழிக்கு கூறுதல் –

ஆட்பட்டேன் ஐம் பொறியால் ஆசைப் பட்டேன் அறிவும்
கோட்பாட்டு நாணும் குறை பட்டேன் சேண் பட்ட
வண் காவை வண் துவரை வைத்த விளக்கு ஒளிக்கு
தண் காவைச் சேர்ந்தான் தனக்கு –76–

(இ – ள்.) சேண் பட்ட – தேவலோகத்திலுள்ள,
வள் காவை – வளப்ப மான சோலைபோலத்தழைத்த பாரிஜாதவிருக்ஷத்தை,
வள் துவரை – செழிப் பான (தனது) துவாரகாபுரியில்,
வைத்த – கொண்டுவந்துநாட்டிய,
தண்காவை சேர்ந்தான்தனக்கு -திருத்தண்காவென்னுந் திவ்வியதேசத்தி லெழுந் தருளியிருப்பவனாகிய,
விளக்கொளிக்கு – தீபப்ரகாசனென்னும் எம்பெருமான் திறத்தில்,
ஆள் பட்டேன் – அடிமைப்பட்டேன்;
ஐம் பொறியால் ஆசைப்பட்டேன் – (எனது) பஞ்சேந்திரியங்களாலும் (அப்பெருமானையநுப விக்கும்படி) ஆசைகொண்டேன்;
அறிவும் கோள்பட்டு – எனது அறிவும் அப் பெருமானாற் கவரப்பட்டு,
நாணும் குறைபட்டேன் – (மகளிர்க்குச் சிறந்த) நாணமென்னுங் குணமும் குறைந்துவிடப்பெற்றேன்; (எ – று.)

திருமாலாகிய தலைமகனைக் கலந்துபிரிந்த தலைமகள் தான் அவன்பக்கற்கொண்ட காதலின் மிகுதியைத்
தோழிக்கு எடுத்துக்கூறியது, இது. இவ்வாறு தன்காதலைத் தோழிக்கு எடுத்துக்கூறுவது –
அவள்மூலமாகச் செவிலிக்கும், அவள்மூலமாக நற்றாய்க்கும், அவள்மூலமாகத் தந்தைக்கும் மற்றும் பெரியோர்க்குந் தெரிவித்து,
விரைவில் தன்னை அவனுக்கு மணஞ்செய்து வைக்கும்படி செய்துகொள்ள விரும்பியதனா லாகும்.
தன்னிலையைக் கரந்து வைக்கமுடியாது வாய்கொண்டு சொல்லவேண்டும்படி ஆற்றாமை விஞ்சுதலால், ‘நாணுங்குறைபட்டேன்’ என்றாள்.
ஐம்பொறியாலாசைப்படுதலாவது – மெய் வாய் கண் மூக்குச் செவி யென்னும் பஞ்சேந்திரியங்களுள்,
கண் எம்பெருமானையே தரிசிப்பதும், செவி அப்பெருமானது வைபவங்களையே கேட்பதும்,
வாய் அவனையேதுதிப்பதும், மூக்கு அவன்சாத்தியமாலையின் திவ்வியபரிமளத்தையே மோப்பதும்,
கை கால் தலை முதலிய உறுப்புக்களை யுடைய மெய் அவனைத்தொழுதல் வணங்குதல் பரிசித்தல் முதலியன செய்வதுமாக,
இங்ஙனம் எல்லாப்பொறிகளும் அத்தலைவனது விஷயமான செயலைப் பெறவிரும்புதல்.
திருத்தண்காவில் எம்பெருமான் தண்காக்கொணர்ந் தானெனச் சமத்காரமாகக் கூறினார்.

நெஞ்சென்னும் உட்கண்ணால் எம்பெருமானைத் தரிசித்த ஐயங்கார் அவன்பக்கல் தமக்குஉண்டான
வியாமோகத்தைத் தமக்குப்புருஷகாரராக நிற்கும் ஆசாரியரிடத்து உரைக்கவேண்டி, தம்மோடொத்த ஞானிகளான
நண்பர்க்கு எடுத்து உரைத்தல், இதற்கு உள்ளுறைபொருள்.
ஐம்பொறியாலாசைப்பட்டேன் – “உண்ணுஞ்சோறு பருகுநீர் தின்னும்வெற்றிலையுமெல் லாங்கண்ணன்,’
‘வாஸுதேவஸ் ஸர்வம்” என்றபடி தாரகபோஷக போக்யங்களெல்லாம் அவனேயாம்படி என்னுள்ளத்துக்கொண்டே னென்றபடி.

திருத்தண்கா என்பது – குளிர்ந்தசோலைகளை யுடைமைபற்றி வந்த பெயர்போலும். இத்தலத்து எம்பெருமான் திருநாமம் – விளக்கொளி.

————

77-திரு வேளுக்கை –

தனக்கு உரியனாய் அமைந்த தானவர் கோன் கெட்டான்
உனக்கு உரியன் ஆய மைந்தன் உய்ந்தான் நினைக்கும் கால்
வேளுக்கை ஆள் அரியே வேறு உதவி உண்டோ உன்
தாளுக்கு ஆள் ஆகா தவர்க்கு –77–

(இ – ள்.) வேளுக்கை ஆள் அரியே – திருவேளுக்கையென்னுந் திவ்விய தலத்திலெழுந்தருளிய நரசிங்கமூர்த்தியே! –
தனக்குஉரியன் ஆய்அமைந்த – (உனக்குஆட்படாமல்) தனக்குத்தானே ஸ்வதந்த்ரனென்று இருந்த (தானே தெய்வமென்று செருக்கியிருந்த),
தானவர்கோன் – அசுரராசனாகிய இரணியன்,
கெட்டான் – அழிந்தொழிந்தான்;
உனக்கு உரியன் ஆய மைந்தன் – (செருக்குக்கொள்ளாது) உனக்கே அடிமையாகப்பொருந்திய (அவனது) குமாரனாகிய பிரகலாதாழ்வான்,
உய்ந்தான் – நல்வாழ்வுபெற்று ஈடேறினான்; (ஆதலால்),
நினைக்கும் கால் – ஆலோசிக்குமிடத்து, –
உன் தாளுக்கு ஆள் ஆகாதவர்க்கு – உனதுதிருவடிகட்கு அடிமைப்படாதவர்க்கு,
வேறு உதவி உண்டோ – (ஆபத்துக்காலத்தில் பாதுகாத்தற்குஉரிய) துணை வேறு உளதோ? (இல்லை யென்றபடி); (எ – று.)

ஸர்வேஸ்வரனது திருவடிகளை வணங்காமல் தானே ஸர்வேஸ்வர னென்று சொன்ன இரணியனை
அப்பெருமான் நிக்கிரகித்ததையும் ஸர்வேஸ்வரனுக்கு அடிமையென்று தன்னையெண்ணின இரணியபுத்திரனான
பிரகலாதாழ்வானை அப்பெருமான் அநுக்கிரகித்ததையும் ஆலோசிக்குமிடத்து, எம்பெருமானது திருவடிகளிடத்து
ஆட்படாதார்க்கு ஆபத்துக்காலத்தில் ஒருதுணையுமின்றி அழியவேண்டிவரு மென்பது பெறப்படு மென்பதாம்.
“ஆளென்று தன்னையெண்ணாத் தானவனாகநினைந்திருப்பார்க் கென்றுந் தானவனே” என்பர் திருவேங்கடத்தந்தாதியிலும்.
‘தனக்குரியனாயமைந்த தானவர்கோன் கெட்டான்’ என்ற சிறப்புப்பொருளை
‘உன்தாளுக்கு ஆளாகாதவர்க்கு வேறு உதவியுண்டோ’ என்ற பொதுப்பொருள்கொண்டு சமர்த்தித்தது – வேற்றுப்பொருள்வைப்பணியாம்.
ஆள் அரி – நரங்கலந்த சிங்கம்; இத்தலத்து எம்பெருமான்திருநாமம் – ஆளழகியசிங்கர்.

————

78-திருப்பாடகம் –

தவம் புரிந்த சேதனரை சந்திரன் ஆதித்தன்
சிவன் பிரமன் இந்திரனாச் செய்கை உவந்து
திருப் பாடகம் மருவும் செங்கண் மால் தன் மார்பு
இருப்பாள் தகவு உரையாலே –78–

(இ – ள்.) உவந்து – திருவுள்ளத்தில் மகிழ்ந்து,
திருப்பாடகம் மருவும் – திருப்பாடகமென்னுந்திவ்வியதலத்தில் நித்தியவாசஞ்செய்கின்ற,
செங்கண் மால் – சிவந்தகண்களையுடைய திருமால், –
தவம் புரிந்த சேதநரை – (சந்திரன் ஆதித்தன் முதலிய பட்டம்பெறுமாறு தன்னைநோக்கித்) தவஞ்செய்த ஆன்மாக்களை,
(அவரவர்கள் விருப்பத்தின்படியே),
சந்திரன் – சந்திரனும்,
ஆதித்தன் – சூரியனும்,
சிவன் – உருத்திரனும்,
பிரமன் – பிரமதேவனும்,
இந்திரன் – தேவேந்திரனும்,
ஆ – ஆக,

செய்கை – செய்வது, – தன் மற்பு இருப்பாள் – தனதுவலத்திருமார்பில் வீற்றிருப்பவளான திருமகளினது,
தகவு உரையாலே – புருஷகாரவார்த்தையாலேயாகும்; (எ – று.)

எம்பெருமான் பிராட்டியினது புருஷகாரத்தால்தான் தன்னைக்குறித்துத் தவம்புரியும் அடியார்கட்கு அதன்பயனாக
மறுமையில் சந்திரன் சூரியன் முதலான தேவர்களின் பதவிகளை ஈந்தருளுவ னென்பதாம்.
சேதநர் மறுமையில் எவ்வகையான நற்கதிபெறவேணுமென்று விரும்பினாலும்
அவற் றையெல்லாம் அளிக்கத்தக்கவன் திருமாலே யென்பதும், அவ்வாறு திருமால் அளிக்குமிடத்துத்
திருமகளின்புருஷகாரம் அவசியமென்பதும், இங்கு விளக்கப்பட்டன. திருப்பாடகம் – பாண்டவதூதர் சந்நிதி.

————-

79-திரு நீரகம் –

ஆலத்து இலை சேர்ந்து அழி உலகை உட்புகுந்த
காலத்தில் எவ்வகை நீ காட்டினாய் ஞாலத்துள்
நீரகத்தாய் நின் அடியேன் நெஞ்சகத்தாய் நீள் மறையின்
வேரகத்தாய் வேதியற்கு மீண்டு –79–

(இ – ள்.) ஞாலத்துள் – இந்தப்பூமியிலே,
நீரகத்தாய் – திருநீரகமென்னுந் திவ்வியதலத்தி லெழுந்தருளியிருப்பவனே!
நின் அடியேன் நெஞ்சு அகத்தாய் – நினக்கு ஆட்பட்ட அடியேனது மனத்தி லெழுந்தருளியிருப்பவனே!
நீள் மறையின் வேர் அகத்தாய் – நீண்ட வேதங்களாற் பிரதிபாதிக்கப்படுகிற மூலப்பொருளாயுள்ளவனே! –
வேதியற்கு – (பிரளயக்காட்சியைக் காணவேணுமென்று விரும்பிய) வேதம்வல்லவனான மார்க்கண்டேயனுக்கு,
நீ -, உள் புகுந்த காலத்தில் – (அம்முனிவன் உனது) திருவயிற்றினுள்ளே பிரவேசித்த காலத்தில்,
ஆலத்து இலை சேர்ந்து – நீ ஆலிலையின்மீது பள்ளி கொண்டு, –
அழி உலகை – (பிரளயகாலத்தில்) அழிந்துபோன லோகங்களை,
ஏ வகை – எவ்வாறு,
மீண்டு – மறுபடியும்,
காட்டினாய் – காட்டியருளினாய்? (இது என்ன வியப்போ!) (எ – று.)

என்றும்பதினாறாக நெடிதூழிவாழும்படி நீண்டஆயுள்பெற்ற மார்க் கண்டேயமுனிவன் பத்திரநதிக்கரையில் தவம்புரிந்து
பிரளயக்காட்சியைக் காணுமாறு நரநாராயணர்களால் அநுக்கிரகிக்கப்பெற்று, பின்பு மாயவன் மாயையால் மகாபிரளயம் தோன்ற,
அப்பிரளயப்பெருங்கடலிற் பலவாறு அலைப்புண்டு வருந்திய அம்மார்க்கண்டேயமுனிவனுக்கு அவ்வெள்ளத்தில்
ஆலிலையின்மீது ஒருகுழந்தைவடிவமாய் அறிதுயிலமர்ந்த நீ முன்பே அழிந்த உலகங்களையும் எல்லாச்சராசரங்களையும்
உனது திருவயிற்றினுட் காட்டியது என்னஆச்சரியமென்று எம்பெருமானது திவ்வியகுணத்தி லீடுபட்டு ஐயங்கார் கூறின ரென்க.
“எய்த்தமார்க்கண்டன் கண்டிட வமலைக்குமுல கழியாதுள்ளிருந்த தென்னே” என்பர் திருவரங்கத்தந்தாதியிலும்.
மூன்று நான்காமடிகளில், முற்றுமோனை காண்க.

————

80-திரு நிலாத் திங்கள் துண்டம் –

மீண்டும் தெளியார்கள் மேதினியோர் நின் அடிப் பூப்
பாண்டரங்க மாடிப் படர் சடை மேல் தீண்டி
கலாத் திங்கள் துண்டத்தின் மீது இருப்பக் கண்டும்
நிலாத் திங்கள் துண்டத் தானே –80–

(இ – ள்.) நிலாத்திங்கள் துண்டத்தானே – திருநிலாத்திங்கள்துண்ட மென்னுந் திவ்வியதேசத்தி லிருப்பவனே! –
நின் அடி பூ – (பதின்மூன்றாம் போர்நாளிரவில் அருச்சுனன் கைலாசயாத்திரையில்) உனதுதிருவடிகளிற் சாத்திய புஷ்பங்கள்,
பாண்டரங்கமாடி – பாண்டரங்கக்கூத்தாடிய சிவபெருமானது,
படர் சடைமேல் – பரந்த சடையின்மீது,
தீண்டி – பொருந்தி,
கலா திங்கள் துண்டத்தின்மீது – (அச்சடையின்மேல் சிவபிரானணிந்துள்ள) இளம்பிறைச்சந்திரனுக்கும் மேலே,
இருப்ப – இருக்க,
கண்டும் – அதனைப் பார்த்திருந்தும், –
மேதினியோர் – இப்பூமியிலுள்ளவர்கள்,
மீண்டும் – மறுபடியும்,
தெளியார்கள் – (நீயே பரம்பொருளென்ற உண்மையை) அறியாதொழிகின்றனர்; (இது என்ன பேதைமை?) (எ – று.)

அருச்சுனன் கண்ணனது திருவடிகளி லிட்டு அருச்சித்த மலர்கள் சிவபிரானது முடிமேலிருத்தலைக் கண்டபிறகும்
திருமாலே பரம்பொருளென்றஉறுதியான உணர்ச்சி கொள்ளாமல் தடுமாறுவது என்ன பேதைமையோ? என்று
உலகத்தோரது அறியாமையை வியந்தவாறு.
“தீர்த்தனுலகளந்த சேவடிமேற் பூந்தாமஞ், சேர்த்தியவையே சிவன்முடிமேல் தான்கண்டு,
பார்த்தன் தெளிந்தொழிந்த பைந்துழாயான் பெருமை, பேர்த்து மொருவராற் பேசக்கிடந்ததே” என்று நம்மாழ்வார்
இச்சரித்திரத்தில் ஈடுபட்டுக் கூறியமை காண்க.
மேதினியோர் கண்ணபிரானடிப்பூவைச் சிவபிரான்சடை மேற் காண்பது – ஆகமபிரமாணத்தினா லென்க.

பாண்டரங்கம் – பதினோராடலு ளொன்று: அது – பூமிதேவியாகிய தேரில் முன்னின்ற பிரமன் காணும்படி
பைரவ வடிவாகிய பரமசிவன் திரி பாசங்காரகாலத்தில் வெண்ணீற்றையணிந்து ஆடியது.
“தேர்முனின்ற திசைமுகன்காணப், பாரதியாடிய வியன்பாண்டரங்கம்,”
“பாண்டரங்க முக்கணானாடிற்று,”
“மண்டமர்பலகடந்து மதுகையானீறணிந்து, பண்ட ரங்கமாடுங்கால்,”
“ஏறமர்கடவுள் மூவெயிலெய்வுழிக், கூறுகூறாக் கொடியொடும் படையொடும்,
வேறுவேறுருவின் விண்மிசைப் பரந்தன, ரவ்வழி யொளியொடு
முருவொடுந்தோன்றித், தேர்முனின்று திசைதலைபனிப்பச், சுவையுங்
குறிப்பு மொழிவில தோன்றி, யவையவை யவ்வழி யாடின னாட,
மைந்தருமகளிருந் தந்நிலையழிய, மெய்ப்படுசுவையொடு கைப்படைமறப்பக்,
கடியகாலக்காற்றென வேற்றவன், படிநிலைதிரியாப் பாண்டரங்கம்மே” என்பவற்றா லுணர்க.

———–

81-திரு ஊரகம் —

நேசத்தால் அன்று உலகை நீர் வார்க்க வைத்து அளந்த
வாசத்தாள் என் தலை மேல் வைத்திலையேல் நாசத்தால்
பாரகத்துள் அன்றி யான் பாழ் நரகில் வீழ்ந்து என் கொல்
ஊரகத்துள் நின்றாய் உரை –81–

(இ – ள்.) ஊரகத்துள் நின்றாய் – திருவூரகமென்னுந் திருப்பதியி லெழுந்தருளியிருப்பவனே! –
நீர் வார்க்க – (நீ வாமனனாய்ச்சென்று இரந்தபோது தான்கொடுத்ததற்கு அறிகுறியாக உனதுகையில் மகாபலி) நீரை வார்த்தபோது,
அன்று – முன்னாளில் (திரிவிக்கிரமாவதார காலத்தில்),
நேசத்தால் – (உயிர்களினிடத்துக்) கருணையினால்,
உலகை – மூவுலகங்களையும்,
வைத்து அளந்த – (அளவுகருவியாகக்) கொண்டு அளந்த,
வாசம் தாள் – நறுமணமுடைய தாமரைமலர்போன்ற திருவடிகளை,
என் தலைமேல் – எனது தலையின்மீது,
வைத்திலை ஏல் – பொறித்துவைத்திடாயானால், – நான் -,
பார் அகத்துள் அன்றி – இப்பூமியில் வாழ்தலு மில்லாமல்,
நாசத் தால் – நாசமடைந்து,
பாழ் நரகில் வீழ்ந்து என்கொல் – பாழான நரகத்தில் வீழ்ந்தால்தான் என்ன?
உரை – நீகூறுவாய்; (எ – று.)

திரிவிக்கிரமாவதாரகாலத்தில் உயிர்கள் அறியாதிருக்கையிலும் தான் அறிந்த தொடர்பே பற்றாசுஆகக் கொண்டு
அவ்வுயிர்களிடத்துக் காரண மின்றியெழுந்த பெருங்கருணையினால் அவற்றை ஆட்கொள்ளவேண்டி
மகாபலிசக்கரவர்த்தி தந்த புவியை யளத்த லென்ற ஒருவியாஜத்தைக்கொண்டு உலகத்திலுள்ள எல்லாவுயிர்களின்
தலைமீதும் நினது திருவடிகளை வைத்தது போலவே,
“பீதகவாடைப்பிரானார் பிரமகுருவாகிவந்து, போதிற் கமலவன் னெஞ்சம் புகுந்தும் என்சென்னித்திடரில்,
பாதவிலச்சினைவைத்தான்” என்றபடி உனதுதிருவடிகளை எனதுதலையின்மீது பொறித்து என்னை ஆட்கொள்ளாது
உபேக்ஷித்தனையாயின், யான் ஈடேறுதலின்றிக் கொடுநரகத்தில் வீழ்வது திண்ணம்;
அவ்வாறு உபேட்சித்தல் நினக்குத் தகுதியோ? என்று தமது ஆற்றாமையை அறிவுறுத்தியவாறு.
திரிவிக்கிரமாவதாரத்தில் திருவடிகள் வைக்கப்பெற்றும் உயிர்கள்யாவும் உய்வுபெறாதது – அவைகட்கு எம்பெருமானது
திருவடி நமதுதலையின்மீது வைக்கப்படுகின்றது என்னும் அறிவு இன்மையாலாகும்;
அவ்வாறன்றி உனதுநல்லருளால் சிறிது அறிவு பெற்ற எனது முடியின்மீது நினதுதிருவடிகளைப் பொறித்தால் நான் உய்வு பெறுவேன்;
அறிவின்றியிருந்த உயிர்களின்மீது திருவடிகளை வைத்தருளிய நீ, அறிவுபெற்ற என்தலைமீது அத்திருவடிகளைப் பொறித்த லாகாதோ?
வேண்டற்பாடில்லாத உயிர்களின் தலைமீது திருவடியைப் பொறித்த நீ, வேண்டற்பாடுடைய எனது தலைமீது
அவற்றைப் பொறித்த லாகாதோ? நீயறிந்த சம்பந்தங்கொண்டுமாத்திரந்தானோ திருவடிகளைப்பொறிப்பது?
யான் அறிந்த சம்பந்தம் உளதாயின் திருவடிகளைப் பொறித்த லாகாதோ? என்ற கருத்துக்கள் இச்செய்யுளில் தோன்றும்.

வாசத்தாள் – மெய்யடியார்கள் அருச்சித்த திருத்துழாய் முதலியவற்றின் சம்பந்தத்தால் நறுமணம் வீசப்பெற்ற திருவடி.
பூமியையளப்பதுஎன்று ஒருவியாஜம்; உலகத்தார்க்குத் திருவடிகளைக் காட்டியருளவேணுமென்பதே உட்கருத்து என்பார்
‘நேசத்தால் உலகையளந்த’ என்றார்;
“பாரளப்பான் போல் எவர்க்குங் கஞ்சவடிகாட்டினான்” என்ற திருவேங்கடமாலையையுங்காண்க.
நேசத்தால் நீர்வார்க்க என்று இயைத்து – கொடுக்கலாகாது என்று தடுத்த சுக்கிரனது உபதேசத்தையும் உபேக்ஷித்து
வாமனரூபியாய்வந்த திருமாலினிடத்து அன்போடு தாரைவார்த்துக்கொடுத்த என்று பொருள் கூறினுமாம்.

இத்தலத்தில் திருமால் உரகரூபியாய்ச் சேவைசாதிப்பதுபற்றி, இத் திருப்பதிக்கு ‘ஊரகம்’ என்று திருநாமம்போலும்; உரகம் – பாம்பு.

————

82-திரு வெக்கா-

உரை கலந்த நூல் எல்லாம் ஓதி உணர்ந்தாலும்
பிரை கலந்த பால் போல் பிறிதாம் தரையில்
திரு வெக்கா மாயனுக்கே சீர் உறவு ஆம் தங்கள்
உரு வெக்கா உள்ளத்தினோர்க்கு –82–

(இ – ள்.) தரையில் – இப்பூமியில்,
திருவெஃகா – திருவெஃகாவென் னுந் திவ்வியதலத்திலெழுந்தருளிய,
மாயனுக்கே – சொன்னவண்ணஞ்செய்த பெருமாளுக்கே,
சீர் உறவு ஆம் – சிறந்த (ஒருபோதும் நீங்காத) சம்பந்தம்பெற்ற,
தங்கள் உரு – தமது ஸ்வரூபத்தை,
வெஃகா -விரும்பியறியாத,
உள்ளத்தினோர்க்கு – மனத்தையுடையவர்க்கு, –
உரை கலந்த நூல் எல்லாம் – உரையோடுகூடிய சாஸ்திரங்களெல்லாவற்றையும்,
ஓதி உணர்ந்தாலும் – கற்று அறிந்திருந்தாலும்,
பிரை கலந்த பால்போல் – பிரைசேர்ந்த பாலைப்போல,
பிறிது ஆம் – (அவ்வறிவு) திரியுந்தன்மையதாய்விடும்; (எ – று.)

“கற்றதனாலாய பய னென்கொல் வாலறிவன், நற்றா டொழாஅ ரெனின்,”
“கற்க கசடறக் கற்பவை கற்றபின், நிற்க வதற்குத் தக” என்றபடி கற்றற்குஉரிய உறுதிநூல்களைக் கற்றவர்கள்,
அக்கல்வியறிவின்பயனாக அந்நூல்களிற் கூறியபடி “எம்பெருமானுக்கு அடிமைப்பொருள் இவ்வுயிர்’ என்னும்
உண்மையுணர்வு மனத்திற் பதிந்தால்தான் கருமம் ஒழிய வீடுபெறுவரே யன்றி, அநுஷ்டாநமில்லாத வெறுங்கல்வியறிவு,
பிரையால்திரிந்த பால் ஒன்றுக்கும் உதவாததுபோலப் பயனற்றதாகு மென்பதாம்.
உரை கலந்த நூல் – பாஷ்யத்தோடுகூடிய சாஸ்திரம் என்றபடி. ‘பிரைகலந்த’ என்ற சொல்லாற்றலால்,
பாலைப்பருகவேண்டுமென்னும் எண்ணத்துடன் காய்ச்சுகையில் காய்ச்சுபவர்க்குத்தெரியாமலே
அப்பாலைத் திரிக்கும்படி பிரைப்பொருள் கலந்தமை பெறப்படும்.

“பிதாச ரக்ஷகஸ் ஸேஷீ பர்த்தா ஜ்ஞேயோ ரமாபதி: – ஸ்வாம் யாதாரோ மமாத்மாச போக்தாசாயமநூதித;” என்கிறபடி
கடவுளுக்கும் ஆத்மாவுக்கும் – பிதாபுத்ர ஸம்பந்தமும், ரக்ஷ்யரக்ஷகஸம்பந்தமும், ஸேஷ ஸேஷிஸம்பந்தமும்,
பர்த்ருபார்யாஸம்பந்தமும், ஜ்ஞாத்ருஜ்ஞேயஸம்பந்தமும், ஸ்வஸ்வாமிஸம்பந்தமும், ஆதாரஆதேயஸம்பந்தமும்,
ஸரீரஸரீரி ஸம்பந்தமும், போக்த்ருபோக்ய ஸம்பந்தமும் ஆக ஒன்பதுவகையான ஸம்பந்தம் உள்ளதனால்,
‘மாயனுக்கே உறவாந் தங்களுரு’ என்றார். இதன் விவரத்தை ‘நவவிதஸம்பந்தம்’ என்ற நூலிற் பரக்கக்காணலாம்.
உலகத்தில் ஒரு ஆத்மாவுக்கும் மற்றொரு ஆத்மாவுக்கும் கர்மசம்பந்தத்தினால் நேர்கிற பிதாபுத்ராதி ஸம்பந்தங்கள்
அக்கருமத்தின்தொடர்பு நீங்கும்போதெல்லாம் மாறிவிடுதல்போல நீங்குதலில்லாமல், பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாவுக்குமுள்ள
இந்தஒன்பதுவகைத்தொடர்பும் “உன்தன்னோடுறவேல் நமக்கு இங்கு ஒழிக்க வொழியாது” என்றபடி
என்றும் அழியாதிருத்தலால், ‘சீருறவு’ எனப்பட்டது.

திருவெஃகாவிலெம்பெருமான் பிரமதேவன்செய்த வேள்வியை யழிக்க வந்த வேகவதிநதியைத் தடுத்தற் பொருட்டு
அதற்கு அணையாகக் குறுக்கிற் பள்ளிகொண்டருளினவ னாதலால், அப்பிரானுக்கு வடமொழியில் ‘வேகாஸேது’ என்று பெயர்;
அது, தமிழில் ‘வேகவணை’ என்று மொழிபெயர்ந்து, அது பின்பு (நாகவணையென்பது நாகணையென்று விகாரப்படுதல்போல)
‘வேகணை’ என விகாரப்பட்டு, அது பின்னர் ‘வெஃகணை’ எனத் திரிந்து, தானியாகுபெயராய்த் தலத்தைக் குறித்து,
அது, பின்பு “வெஃகா’ என மருவி வழங்கிற்றென நுண்ணிதின் உணர்க.

————–

83-திருக்காரகம் –

ஓராதார் கல்வி உடையேம் குலம் உடையேம்
ஆராதனம் உடையேம் யாம் என்று சீர் ஆயன்
பூங்காரகம் காணப் போதுவார் தாள் தலை மேல்
தாங்கார் அகங்காரத் தால் –83-

(இ – ள்.) ஓராதார் – விவேகமில்லாதவர்கள், –
‘யாம்-, கல்வி உடையேம் – நிரம்பக் கற்றிருக்கின்றோம்;
குலம் உடையேம் – உயர்குடியிற் பிறந்துள்ளோம்;
ஆராதனம் உடையேம் – (நாடோறுந் தவறாது) திருவாராதநஞ் செய்கின்றோம்,’
என்று – என்றுகருதி, –
அகங்காரத்தால் – செருக்கினால்,
சீர் ஆயன் – சிறப்புப்பொருந்திய ஆயர்குலத்தினில் வந்துதோன்றிய திருமாலினது,
பூ காரகம் – அழகிய திருக்காரகமென்னுந் திவ்வியதலத்தை,
காண – சேவிக்குமாறு,
போதுவார் – யாத்திரைசெய்கின்ற அடியார்களது,
தாள் – திருவடிகளை,
தலைமேல் தாங்கார் – தமது முடிக்கு அலங்காரமாகச் சூடமாட்டார்கள்; (எ – று.)

ஆராய்ச்சியில்லாத சிலர் – வித்யாமதம் குலமதம் முதலியவற்றினால் தம்மினும்மிக்கவர் இல்லையென்றுகொண்டு,
ஸர்வவேதஸாரதமமான திருமந்திரத்தின்கருத்து
“உற்றதுமுன்னடியார்க்கடிமை, மற்றெல்லாம்பேசிலு நின்திருவெட்டெழுத்துங்,
கற்று நான் கண்ணபுரத்துறை யம்மானே” என்றபடி பாகவத ஸேஷத்வமாயிருக்கவும் அவ்வுண்மையையறிந்து
“எம்பெருமான்தாள் தொழுவார் காண்மின் என்தலைமேலாரே,”
“வாழ்த்துவார் தம்மலரடி என்சென்னிக்கு மலர்ந்தபூவே” என்றபடி அந்தப்பாகவதர்களின் திருவடிகளைத் தமது
சென்னிக்கு மலர்ந்தபூவாகக் கொள்ளவேண்டியதாக விருக்க அவ்வாறு கருதாமல்,
தம்மினும் மிக்கவர் வேறொருவரும் இல்லையென்றுகருதி அகங்காரப்பட்டு அழிவரென்பதாம்.
பாகவத சேஷத்வமில்லாதவர்க்குக் கேவலமான கல்வி குலம் முதலியன இருந்தும் பயன்படாஎன்பது, கருத்து.
“அஜ்ஞர் ப்ரமிக்கிற வர்ண ஆஸ்ரம வித்யா வ்ருத்தங்களை – கர்த்தபஜந்மம் ஸ்வபசாதமம் ஸில்பநைபுணம்
பஸ்மாஹுதி ஸவவிதவாலங்காரம் என்று கழிப்பர்கள்” என்பது, ஆசார்யஹ்ருதயம்
‘பூங்காரகங்காணப் போதுவார்’ என்று பொதுப்படக் கூறியதனால், அவர்களது ஜந்மவித்யா வ்ருத்தங்கள்
முதலியவற்றைக் கருதவேண்டா என்பது பெறப்படும்.

————

84-திருக் கார் வானம் –

தாலேலோ என்று ஆய்ச்சி தாலாட்டி தன் முலைப்பா
லாலே எவ்வாறு பசி ஆற்றினள் முன் மாலே பூங்
கார் வானத்து உள்ளாய் கடலோடும் வெற்பொடும் பார் வானம்
உண்டாய் நீ பண்டு –84-

(இ – ள்.) மாலே – திருமாலே!
பூ கார்வானத்து உள்ளாய் – அழகியதிருக்கார்வானமென்னுந்திவ்வியதலத்தி லெழுந்தருளியிருப்பவனே! –
கடலோடும் – சமுத்திரத்தோடும்,
வெற்போடும் – மலைகளோடும்,
பார் – பூமியையும்,
வானம் – ஆகாயத்தையும்,
பண்டு – முற்காலத்தில் (பிரளயகாலத்தில்) நீ -,
உண்டாய் – அமுதுசெய்தருளினாய்; (அப்படிப்பட்ட உன்னை),
முன் – கிருஷ்ணாவதாரத்தில்,
ஆய்ச்சி – இடைச்சியாகிய யசோதைப்பிராட்டி,
தாலேலோ என்று தாலாட்டி – தாலேலோவென்று பாடித் தாலாட்டுதல் செய்து,
தன் முலை பாலாலே – தனது ஸ்தந்யத்தால்,
எ ஆறு பசி ஆற்றினள் – எப்படி பசியைத் தணித்தாளோ! (எ – று.)

உனது உலகமுண்ட பெருவயிற்றுக்கு ஆய்ச்சியின் முலைப்பால் எவ்வாறு பசிதணிக்கவல்லது?
உன்னுடைய மாயை என் தான்! என்பதாம். இதனால், எம்பெருமான் தன்தன்மை தோன்றாதவாறு கரந்து
உலகத்திற் சாதாரண மானுடர்போலவே பிறந்துவளர்ந்த கிருஷ்ணாவதாரத்தில் ஈடுபட்டுக் கூறியவாறு,
“வானாகித் தீயாய் மறிகடலாய் மாருதமாய்த், தேனாகிப் பாலாந் திருமாலே –
ஆனாய்ச்சி, வெண்ணெய் விழுங்க நிறையுமே முன்னொருநாள், மண்ணையுமிழ்ந்த வயிறு” என்ற பாசுரமும்,
“அவ்வச்சாதிகளிலே அவதரித்து அதிலுள்ளாருடைய தாரகமே தனக்குத் தாரகமாயிருக்கிறபடி.
ஸ்ரீ வராஹ மானா னாகில் கோரைக்கிழங்கு தாரகமாம்; இடையனானானாகில் வெண்ணெய் தாரகமாயிருக்கிறபடி,”
“ப்ரளயங்கொள்ளாதபடி வயிற்றிலே வைத்து வெளிநாடுகாணப் புறம்பேயுமிழ்ந்து ரக்ஷித்த வயிறு
இத்தனை வெண்ணெயாலே நிறைக்க வேண்டியிருந்ததோ!” என்ற வ்யாக்யாநவாக்கியங்களும் இங்குக் காணத்தக்கன.

————

85–திருக் கள்வனார் –

பண்டே உன் தொண்டு ஆம் பழஉயிரை என்னது என்று
கொண்டேனைக் கள்வன் என்று கூறாதே மண் தலத்தோர்
புள் வாய் பிளந்த புயலே உன்னை கச்சிக்
கள்வா என்று ஓதுவது என் கண்டு –85-

(இ – ள்.) புள் வாய் பிளந்த – (கொக்கென்னும்) பறவையினது (வடிவங் கொண்டுவந்த அசுரனது) வாயைப் பிளந்து கொன்ற,
புயலே – நீர்கொண்ட மேகம்போன்றவனே! –
மண் தலத்தோர் – பூமியிலுள்ளவர்கள், –
பண்டே உன் தொண்டு ஆம் – அநாதிகாலமாக உனக்கு அடிமைப்பட்டிருப்பதாகிய,
பழ உயிரை – அநாதியாயுள்ள ஆத்மாவை,
என்னது என்று கொண்டேனை – என்னுடையது (ஸ்வதந்த்ரமானது) என்று கருதியிருந்த என்னை,
கள்வன் என்று கூறாது – திருடனென்று சொல்லவேண்டியதாக இருக்க அவ்வாறு கூறாமல்,
உனை – (ஸர்வஸ்வாமியான) உன்னை,
கச்சி கள்வா என்று ஓதுவது – கச்சிக்கள்வனேயென்று சொல்வது,
என் கண்டு – என்னகாரணங்கண்டோ?

கள்ளமென்பது – ஒருவர்க்குஉரிய பொருளைத் தன்னதாகக்கொள்வது; ஆகவே, அநாதியாக உனக்கே அடிமையாகக்
கிடந்த உயிரை நான் என்னுடையதென்று கொள்வதனால் என்னைக் கள்வனென்றல் தரும்;
உலகத்திலுள்ள பொருள்கள்யாவும் நின்னுடையனவே யாதலால், வெண்ணெய்கொள்ளுதல் முதலிய தொழில்களைச்
செய்யினும் உன்னைக் கள்வனென்றல் தகாது; இவ்வாறு இருக்க, உலகத்தார் இத்தன்மையை ஆய்ந்து அறியாமலே
என்னை யானே திருடிக்கொண்ட பெருந்திருடனாகிய என்னைக் கள்வனென்னாமல் ஸர்வஸ்வாமியான
உன்னைக் கள்வனென்கின்றனரே! இது என்னபேதைமையென்று சமத்காரந்தோன்றக் கூறியவாறு.
ஸேஷத்வமே ஆத்மாவுக்கு ஸ்வரூபமாகையாலே, அதற்குமாறாக ஸ்வதந்த்ரமென்று நினைக்கை ஆத்மாபஹார மாதல் காண்க.
நித்யனான ஆத்மா அநாதியாகவே எம்பெருமானுக்கு அடியவ னாதலால், ‘பண்டே உன்தொண்டாம் பழவுயிர்’ என்றார்.
‘கொண்டேனை’ என்று இறந்தகாலத்தாற் கூறியதனால், இப்போது ஐயங்கார் உண்மையறிவு தோன்றித் தம்முயிரை
அடியவனென்று கருதியிருக்கின்றன ரென்பது விளங்கும். ‘என்கண்டு’ என்பது – மண்டலத்தோரது அறியாமையே
இவ்வாறுகூறக் காரணமென்பதைப் புலப்படுத்தும்.

———-

86-திருப் பவள வண்ணம் –

கண்டு அறிந்தும் கேட்டு அறிந்தும் தொட்டு அறிந்தும் காதலால்
உண்டு அறிந்தும் மோந்து அறிந்தும் உய்யேனே -பண்டைத்
தவள வண்ணா கார் வண்ணா சாம வண்ணா கச்சிப்
பவள வண்ணா நின் பொற் பாதம் –86-

(இ – ள்.) பண்டை – பழமைக்காலத்தில் (கிருதயுகத்தில்);
தவளம் வண்ணா – (பால்போல்) வெண்ணிறமானவனே!
கார் வண்ணா – மேகத்தின் தன்மையை யுடையவனே!
சாம வண்ணா – (இயற்கையில்) கருநிறமானவனே!
கச்சி பவளம் வண்ணா – காஞ்சீபுரத்தி லெழுந்தருளியுள்ள பவளவண்ணனே! –
நின் பொன் பதம் – உனது அழகிய திருவடிகளை, –
காதலால் – பக்தியோடு, –
கண்டு அறிந்தும் – (எனதுகண்களால்) தரிசித்துஉணர்ந்தும்,
கேட்டு அறிந்தும் – (காதுகளாற்) கேட்டுஉணர்ந்தும்,
தொட்டுஅறிந்தும் – (மெய்யினாற்) பரிசித்து உணர்ந்தும்,
உண்டு அறிந்தும் – (வாயினாற்) புசித்து உணர்ந்தும்,
மோந்து அறிந்தும் – (மூக்கினால்) மோந்துஉணர்ந்தும்,
உய்யேன் – ஈடேறுகின்றேனில்லை; (எ – று.) – ஏ – இரக்கப்பொருளது.

“உண்ணுஞ்சோறு பருகுநீர் தின்னும்வெற்றிலையு மெல்லாம், கண்ணன்,”
“வாஸுதேவஸ் ஸர்வம்” என்பவை முதலியவற்றிற் கூறுகிறபடி ஐம்பொறிகளாலும் எம்பெருமானையே நுகரப்படு
பொருளாகக் கொண்டு ஈடேறவேண்டியதாயிருக்க, யான் அவ்வாறிருத்தலை விட்டு,
“கண்டுகேட்டுண்டுயிர்த்துற்றறியுமைம்புலனும், ஒண்டொடிகண்ணேயுள” என்றவாறு சிற்றின்பத்தில் அழிந்து வருந்துகின்றேனே;
இவற்றைப்போக்கி என்னைப் பாதுகாத்தருளவேண்டு மென்பதாம்;
“உரைமாற்ற முண் டென்பொறி யைந்து முன்னிடத்தன்றி யுண்ணு,
மிரை மாற்றவேண்டு மிதுவே யென்விண்ணப்பம் என்னப்பனே” என்றார் அழகரந்தாதியிலும்.
வேறுவேறு காலங்களில் வேறுவேறுபொருள்களால் அநுபவிக்கப்படுவன ஒருகாலத்து இத்திருவடியின்கண்ணே அநுபவிக்கப்படு மென்க.

இனி, கார்வண்ணா சாமவண்ணா என்பதற்கு – (கலியுகத்தில்) காளமேகம்போன்ற நீலநிறமுள்ளவனே!
(துவாபரயுகத்தில்) பசுமைநிறமுள்ளவனே! என்று பொருள்கூறி, எம்பெருமான் நான்கு யுகங்களிலும் நான்கு
நிறமுடையவனாயிருக்கின்றபடியை இச்செய்யுளிற் பின்னிரண்டடிகளினாற் கூறியதாகக் கொள்ளுதல் ஏற்கும்;
“க்ருதயுகத்திலேவந்தால் க்ருதயுகபுருஷர்கள் ஸத்வோத்தரராகையாலே அவர்களுடைய ருசி(க்கு) அநுகுணமாகச்
சுக்லவர்ணமான வடிவையுடையனாயிருக்கும்,”
“திரேதாயுகத்தில்வந்தால் சிவந்தவடிவையுடையனாயிருக்கும்; அக்காலத்திலே புருஷர்கள் ரஜ: ப்ரசுரராகையாலே
சிவப்பிலேயாயிற்று ருசியுண்டாயிருப்பது; அந்தருசி(க்கு) அநுகுணமாகச் சிவந்தவடிவைக்கொண்டுமுகங்காட்டும்,”
“த்வாபரயுகத்திலுள்ளார் ரஜஸ்தமோமிஸ்ரராயிருக்கையாலே அவர்களுடைய ருசி(க்கு) அநுகுணமாகச்
சிவப்புமன்றியிலே நீலமுமன்றியிலே பாசியினுடைய புறத்திற் பசுமைபோலே ஸ்ரமஹரமான திருமேனியை யுடையனாயிருக்கும்,”
“கலிகாலத்தில் தன்பக்கல் அபிமுகராய் ஒருவர்ணவிஸேஷத்திலே ருசி பண்ணுவார் இல்லாமையாலே
ஸ்வாபாவிகமான வடிவுதன்னை (கருநிறத்தை)க் கொண்டிருக்கும்,”
“பாலினீர்மை செம்பொனீர்மை பாசியின் பசும்புறம், போலு நீர்மை பொற்புடைத்தடத்து வண்டுவிண்டுலா,
நீலநீர்மை யென்றிவை நிறைந்தகால நான்குமாய், மாலினீர்மை வையகம் மறைத்த தென்னநீர்மையே,”
“திருவடிவிற் கருநெடுமாற் சேயனென்றுந் திரேதைக்கண் வளை
யுருவாய்த் திகழ்ந்தானென்றும், பெருவடிவிற் கடலமுதங் கொண்டகாலம்” என்பன காண்க.

———–

87-திருப் பரமேச்வர விண்ணகரம் –

பதத் தமிழால் தன்னையே பாடுவித்து என்னைத் தன்
பதத்து அடியார்க்கே ஆட்படுத்தான் இதத்த
பரமேச்சுர விண்ணகரான் பல ஆன்
வர மேச்சு உரல் அணைந்த மால் –87-

(இ – ள்.) பல ஆன் வர – பலபசுக்கள் ஒருங்குதிரண்டுவர,
மேச்சு – (அவற்றை) மேய்த்து,
உரல் அணைந்த – (வெண்ணெய் களவாடியதற்காக யசோதைப்பிராட்டியால்)
உரலிற் பிணிப்புண்டிருந்த, மால் – திருமாலாகிய இதத்த பரமேச்சுர விண்ணகரான் –
(தன்னடியார்க்கு) நன்மைசெய்கின்ற பரமேச்சுரவிண்ணகரமென்னுந் திவ்வியதலத்திலெழுந்தருளிய பரமபதநாதன், –
பதம்தமிழால் – பக்குவமாயுள்ள தமிழ்ப்பாடல்களினால்,
தன்னையே பாடுவித்து – (பிறரைத் துதியாமல் பரதேவதையாகிய) தன்னையே பாடும்படி செய்து, என்னை -,
தன் பதத்து அடியார்க்கே – தனது திருவடிகளில் தொண்டுபூண்டவர்கட்கே,
ஆள்படுத்தான் – அடிமையாக்கினான்; (எ – று)

பரமேச்சுரவிண்ணகரத்தி லெழுந்தருளியிருக்கிற திருமால், தன்னைக் கவிபாடுதற்கு ஏற்ற ஜ்ஞாநஸக்திகள்
முதலியன என்னிடத்திலில்லாதிருக்கவும், தனது நிர்ஹேதுககிருபையால் அவற்றை எனக்கு உண்டாக்கி,
வேதங்களாலும் அளவிட்டுச் சொல்லமுடியாத தன்னைப்பற்றிக் கவிபாடித் துதிக்குமாறு செய்து என்னைத்
தன்னடியார்க்கு ஆட்படுமாறு செய்தன னென்பதாம்.
எம்பெருமானது அடிமை நிலைத்து நிற்பது அவனடியார்க்கு அடிமைப்பட்டபின்னரேயாகு மாதலால்,
“எந்தம்மைவிற்கவும்பெறுவார்களே” என்றபடி தாம் அவர்க்கு ஆட்பட்டிருத்தலால்,
‘தன்பதத்தடியார்க்கேயாட்படுத்தான்’ என்றது. விஷயகௌரவத்தாலும் இயற்கையாகவே பாஷை
இனியதாயிருத்தலாலும், ‘பதத்தமிழால்’ என்றார்;
“என்னால் தன்னை யின்றமிழ்பாடிய வீசனை” என்பது, நம்மாழ்வார்பாசுரம்,
எம்பெருமான் எப்போதும் ‘உயிர்கள் எவ்வாறு கரைமரஞ்சேருமோ?’ என்று அவர்களின் நன்மையையே
எதிர்பார்த்து நிற்பவனாதலால், ‘இதத்த பரமேச்சுரவிண்ணகரான்’ எனப்பட்டான். மேச்சு = மேய்த்து: மரூஉ.

பரமேச்சுரன் (தேவாதிதேவன்) எழுந்தருளியிருக்கின்ற விண்ணகரமாதல்பற்றி, இத்தலத்திற்குப்
பரமேச்சுரவிண்ணகர மென்று திருநாமம்; வைகுண்டப்பெருமாள்ஸந்நிதி யெனப்படுவது, இதுவே.

———–

88-திருப் புட்குழி –

மால் வேழமும் அரவும் மாயையும் வெற்பும் கடலும்
மேல் வீழ் படையும் விடமும் போய் பாலன்
நெருப்பு உள் குழி குளிர நின்றதும் கேட்டு ஓதார்
திருப் புட்குழி அமலன் சீர் –88-

(இ – ள்.) (இரணியாசுரன் தனக்குஇணங்கிவராத தனதுகுமாரனான பிரகலாதாழ்வானை உபத்திரவிக்கும்பொருட்டு ஏவியனவான),
மால் வேழமும் – பெரிய மதயானைகளும்,
அரவும் – பெரும்பாம்புகளும்,
மாயையும் – (சம்பரனென்னும்அசுரனாற்செய்யப்பட்ட) மாயையும்,
வெற்பும் – மலையும்,
கடலும் – சமுத்திரமும்,
மேல் வீழ் படையும் – மேலேவிழுகின்ற வாள்முதலிய ஆயுதங்களும்,
விடமும் – விஷமும்,
போய் – (உபத்திரவஞ்செய்யமாட்டாமல் வலியொடுங்கிப்) போக,
பாலன் – (எம்பெருமானது திருவஷ்டாக்ஷரத்தின் மகிமையை யறிந்து உச்சரித்த) சிறுவனாகிய பிரகலாதாழ்வான்,
குழி உள் நெருப்பு குளிர நின்றது – பள்ளத்திலே மூட்டிய நெருப்புச் சுடாமற் குளிரும்படி நின்றதை,
கேட்டுஉம் – கேட்டிருந்தும், –
திருப்புட்குழி அமலன் சீர் – திருப்புட்குழியென்னுந் திவ்வியதலத்தி லெழுந்தருளிய திருமாலினது சிறப்புக்களை,
ஓதார் – (இவ்வுலகத்துச்சனங்கள்) கூறமாட்டார்கள்; (எ – று.)

எம்பெருமானது திருவடிகளையே சரணமாக நம்பியிருந்த சிறுவனாகிய பிரகலாதாழ்வான் தன் தந்தையாகிய
இரணியாசுரனது சூழ்ச்சியினால் தோன்றிய பலவகையாபத்துக்களினின்று நீங்கியதைக் கேட்டறிந்தும்,
உலகத்துச்சனங்கள் அப்பெருமானது குணங்களை யநுசந்தித்து நற்கதிபெறாது அழிகின்றனரே!
இது என்ன பேதைமை? என்று இரங்கியவாறு.
இரணியன் அருந்தவம்புரிந்து பெருவரங்கள்பெற்றுச் செருக்கித் தன்னையே அனைவரும் கடவுளாகக்கொண்டு வணங்கி
வழிபடவேண்டுமென்று கட்டளையிட்டகாலத்தில் எல்லாத்தெய்வங்களும் இருந்தஇடம் தெரியாதபடி மறைந்துகிடக்க,
அவ்விரணியனது செருக்கை யொழிக்குமாறு எம்பெருமான் பிரகலாதனுக்கு அநுக்கிரகித்து நரசிங்க
மூர்த்தியாய்த் தோன்றிய பின்பு பிறதெய்வங்கள் தலையெடுத்ததனால் ஸ்ரீமந்நாராயணனே பரதேவதையென்று
அப்பிரானதுசீரையே ஓதவேண்டியதாக இருக்க, அதனைவிட்டுப் பிறதெய்வங்களின்சீரையும் ஓதுகின்றார்களே!
இது என்ன அறிவு! என்ற கருத்தும் ‘நெருப்புட்குழிகுளிர நின்றதுகேட்டும் ஓதார் திருப்புட்குழி அமலன்சீர்’ என்றவிடத்துத் தோன்றும்.

இரணியாசுரனது ஏவுதலினால் திக்கஜங்கள் பிரகலாதனைப் பூமியிலே வீழ்த்தித் தந்தங்களினாலே பாய்ந்து இடிக்க,
அந்தத்தந்தங்கள் முறிந்து பொடியாய்ப்போயினதனால், மால்வேழமும்; தக்ஷகன் முதலான கொடிய மகாசர்ப்பங்கள்
உக்கிரமான விஷங்களைக் கக்கிக்கொண்டுவந்து அவனது சகல அவயவங்களிலும் கடிக்கவும்
அவனது தேகத்திலுள்ள தோலிற் கிஞ்சித்தாயினும் சேதமுண்டாகவில்லை யாதலால், அரவும்;
மகாமாயாவியாகிய சம்பராசுரன் செய்த மாயைகளெல்லாம் ஸ்ரீமந்நாராயணனுடைய நியமநத்தினாலே திருவாழியாழ்வான்
அவரைப் பாதுகாக்கும்பொருட்டு அங்கே எழுந்தருளித் தகித்துச் சாம்பராக்கிவிட்டதனால், மாயையும்;
பருவதங்களினாலே அமுக்கப்பட்டபோதிலும் ஸ்ரீவிஷ்ணுஸ்மரணமாகிற கவசத்தினாலே காக்கப்பட்டதனால், வெற்பும்;
தைத்தியர்கள் நாகபாசங்களினாலே கட்டிக் கடலிலே போகட அவன் அதில்வீழ்ந்து அசைந்துகொண்டு அதனை
விட்டுப் புறப்பட்டு வெளியில்வந்துவிட்டதனால், கடலும்; அங்கிருந்த அசுரர்களெல்லாரும் ஒன்றாய்ச்சேர்ந்து
பலவிதஆயுதங்களையெடுத்துப் பிரகரித்து வதைக்கும்படி யத்தனிக்க, அவன் அவற்றினாற் கிஞ்சித்தும் வேதனை
யுறாமல் விளங்கியதனால், மேல்வீழ்படையும்; பாகஞ்செய்வோர் போஜநங்களிலெல்லாம் கலந்துகொடுத்த மகாவிஷம்
ஸ்ரீஅநந்தநாமோச்சாரண பிரபாவத்தினாலே நிர்வீரியமாகி அவனுடைய உதரத்தில் ஜீரணமாகிவிட்டதனால், விடமும்;
அசுரர்கள் அக்கினியை வளர்த்து அவனை அதிலே மறையவைத்து அனலை மூட்டிக்கொளுத்த அவ்வக்கினி கொஞ்சமாகிலும்
அவனைத் தகிக்கமாட்டாமல் அதிசீதளமானதனால், நெருப்பும் ஒன்றுஞ்செய்யமாட்டாமற் போயினமை பிரசித்தம்.
“நம்பெருமா ளெழுத்தெட்டின் பெருமை நவிலுமதோ,
சம்பரன்மாயம் புரோகிதர்சூழ்வினை தாரணிவாள்,
வெம்படை மாசுணம் மாமதவேழம் விடந்தழல் கால்,
அம்பரமே முதலானவை பாலனுக்கு அஞ்சினவே” என்றார் திருவரங்கத்துமாலையிலும்.

புள்ளை (சடாயுவென்னும் பெரியவுடையாரைக்) குழியிலிட்டு ஸம்ஸ்கரித்ததுபோல எம்பெருமான்
சேவை சாதிக்கின்ற தலமாதல்பற்றி, திருப்புட்குழியென்று இத்தலத்திற்குத் திருநாம மென்பர்.

————-

89-திரு நின்ற ஊர் -தலைவி தோழி யார்க்கு அறத்தொடு நிற்றல் –

சீர் அறிந்து தோழி மீர் சென்று கொணர்ந்து எனக்குப்
போர முலை முகட்டில் பூட்டுமினோ நீர் அவுணர்
பொன்ற ஊர் புட் கழுத்தில் பொன்னை மாணிக்கத்தை
நின்ற ஊர் நித்திலத்தை நீர் –89-

(இ – ள்.) தோழிமீர் – (எனது) பாங்கிமார்களே! –
நீர் – நீங்கள், –
நேர் அவுணர் பொன்ற – எதிர்த்துப்பொருத அசுரர்கள் அழியும்படி,
ஊர் – ஏறிநடத்துகின்ற,
புள் – கருடாழ்வானது,
கழுத்தில் – கழுத்திலே,
பொன்னை – பொன்போலப் பிரகாசிப்பவனும்,
மாணிக்கத்தை – (இயற்கையில்) கருமாணிக்கம்போன்ற கருநிறமுள்ளவனுமாகிய,
நின்றவூர் நித்திலத்தை – திருநின்றவூரென்னுந் திவ்வியதலத்தி லெழுந்தருளிய முத்துப்போன்றவனை,
சீர் அறிந்து – (அவனது) சிறப்பை யுணர்ந்து, –
சென்று – போய்க்கிட்டி,
கொணர்ந்து – கொண்டுவந்து,
எனக்கு போர – எனக்குத் திருப்தியுண்டாகும்படி
முலை முகட்டில் – (எனது) தனங்களது உச்சியின்மீது,
பூட்டுமின் – அணியுங்கள்; (எ – று.)

திருநின்றவூர்ப் பத்தராவியாகிய தலைமகனைக் களவொழுக்கத்தாற் கூடிப்பிரிந்த தலைவி
அப்பிரிவாற்றாமையாற் பலவாறு நோவுபட, அத்துயர மாத்திரத்தையே கண்ட தோழியர்
அந்நோயின்காரணமும் அதற்குப்பரிகாரமும் இன்னவென்று உணராது வேறுபலவகையாக ஆராய்ந்து
பரிகாரஞ்செய்யத் தொடங்கியபோது நோயொன்றும் மருந்தொன்று மாகையாலே அந்நோய் தீராது வளர,
அதனை ஆற்றமாட்டாத அந்தத்தலைவி நாணந்துறந்து தானே தனது நோயையும் நோயின்காரணத்தையும்
அந்நோய் தீர்க்கும் மருந்தையும் அம்மருந்தைப் பிரயோகிக்கும் விதத்தையும் உணர்த்துதல், இச்செய்யுளிற் கூறிய விஷயம்.
இங்ஙனம் களவைவெளிப்படுத்துதலின் காரணம் – தன்கருத்தைத் தோழியர்மூலமாகத் தாய்மார்க்கும் அவர்கள்
மூலமாகத் தந்தைக்கும் மற்றும் பெரியோர்க்கும் தெரிவித்துத் தன்னை அவனுக்கே விரைவில் வெளிப்படையாக
மணஞ்செய்துவைக்கும்படி கொள்ளும் விருப்பம்.

எம்பெருமானை – பெறுதற்கு அருமையும் ஒண்மையும் பற்றிப் பொன்னாகவும், கருநிறம்பற்றி மாணிக்கமாகவும்,
ஸ்ரமஹரமாயிருத்தல்பற்றி முத்தாகவும் கூறினள்;
“வெள்ளறையுள் கல்லறைமேற்பொன்னை மரதகத்தை,”
“நின்றவூர் நின்ற நித்திலத்தொத்தினை,”
“நின்றவூர் நித்திலத்தை” என்ற ஆன்றோர் அருளிச்செயல்கள் காண்க.
எம்பெருமானொருத்தனையே இவ்வாறு பொன்னாகவும் மாணிக்கமாகவும் நித்திலமாகவும் குணபேதத்தால் வியப்புத்தோன்றக் கூறியது –
பலபடப்புனைவணியாம். எம்பெருமானைப் பொன்மாணிக்கம் முத்து என்று உருவகத்தாற் கூறியதற்கு ஏற்ப,
“முலை முகட்டிற்பூட்டுமின்’ என்று தலைவி சமத்காரந்தோன்றக் கூறினள்;
பொன் முதலியவை முலைமுகட்டிற் பூணத்தக்க பொருள்களாதல் காண்க. ‘முலைமுகட்டிற்பூட்டுமினோ’ என்றதனால்,
“மலராள்தனத்துள்ளான்” என்றவாறு அப்பிராட்டியோடொப்ப எம்பெருமானைத் தான் அநுபவிக்கப்
பாரிக்கின்றனள் இத்தலைவி யென்பது பெறப்படும்.
சீர் அறிந்து என்பதற்கு – “மற்றொருவர்க் கென்னைப் பேசலொட்டேன் மாலிருஞ்சோலை யெம்மாயற்கல்லால்” என்றபடி
அவ்வெம்பெருமானுக்கன்றி மற்றொருத்தற்குப் பேச்சுப்படாதபடி அநந்யார்ஹையான எனது சிறப்பை யறிந்து என்றும் உரைக்கலாம்.

எம்பெருமான் ஒருகால் காட்சிகொடுத்து மறைய, பின்பு பிரிவாற்றாது வருந்துகின்ற ஐயங்கார் தம்பக்கல்
பரிவுடையாரை நோக்கி ‘எம்பெருமானை என்னிடத்திற்சேர்த்து என்னை ரக்ஷிக்கப் பாருங்கள்’ என்று பிரார்த்தித்தல்,
இதற்கு உள்ளுறைபொருள். விவரம் உய்த்து உணர்க.

———-

90-திரு எவ்வுளூர்-

நீர்மை கெட வைத்தாரும் நின்னோடு எதிர்ந்தாரும்
சீர்மை பெற நின் அடிக்கீழ்ச் சேர்க்கையினால் நேர்மை இலா
வெவ் உளத்தனேன் செய் மிகையைப் பொறுத்து அருளி
எவ்வுள் அத்தனே நீ இரங்கு–90-

(இ – ள்.) எவ்வுள் அத்தனே – திருவெவ்வுளூர் என்னுந் திவ்வியதலத்தில் எழுந்தருளிய தலைவனே! – நீ -, –
நீர்மை கெட – (தமது) தன்மை அழியும்படி,
வைதாரும் – (உன்னை) நிந்தித்தவரும்,
நின்னோடு எதிர்த்தாரும் – உன்னோடு எதிர்த்துப் போர்செய்தவரும், (தாங்கள் செய்த அபராதத்தினால் அழிந்துபோகாமல்),
சீர்மை பெற – சிறப்பு அடையும்படி,
நின் அடிக்கீழ் சேர்கையினால் – உனது திருவடிகளிற் சேர்தலினாலே, –
நேர்மை இலா – நல்லகுணமில்லாத,
வெம் உளத்தனேன் – கொடிய சிந்தனையையுடைய யான்,
செய் – செய்த,
மிகை – குற்றங்களையும்,
பொறுத்து அருளி – உனது திருவருளினாற் பொறுத்துக்கொண்டு,
இரங்கு – (என்திறத்தில்) திருவுள்ளமிரங்கி (உனக்கு) ஆட்கொள்வாயாக; (எ – று.)

வைதார் – சிசுபாலன் முதலானோர். எதிர்த்தார் – தந்தவக்ரன் முதலானோர். எம்பெருமான் தன்னை விரும்பி
இடைவிடாது மனத்திற்கொண்டு பக்தியோடு வாழ்த்தியவர்க்கும் வழிபட்டவர்க்கும் பரமபதம் அளித்தல் போலவே,
தன்னை வெறுத்து இடைவிடாது மனத்திற்கொண்டு வைதவர்க்கும் எதிர்த்துப் போர்செய்தவர்க்கும் பரமபதம்
அளித்தருள்கின்றன னென்பதையும்; அபாரகருணாநிதியான அப்பெருமான் உயிர்கட்கு நற்கதியளித்தற்குத்
தன்சம்பந்தமான ஏதேனும் ஒன்றை வியாஜமாகக்கொண்டு அருள் செய்கின்றன னென்பதையும்;
எவ்விதத்திலும் சேதநரை உஜ்ஜீவிப்பிப்பது எம்பெருமானது இயல்பு என்பதையும்;
ஏதேனும் ஒருவியாஜத்தை அபேக்ஷிக்கும் எம்பெருமான் த்வேஷாதிகளினாலாவது செய்யும் நாமஸங்கீர்த்தனாதிகளையும்
திருவுள்ளம்பற்றியருளும்படியான மகோதாரனென்பதையும் இங்கு உணரலாம்;
“வைதாரையு முன்மலைந்தாரையு மலர்த்தாளில்வைத்தாய்,
மொய்தாரையத்தனை தீங்கிழைத்தேனையு மூதுலகிற்,
பெய்தாரை வானிற் புரப்பா னிடபப்பெருங்கிரியாய்,
கொய்தாரைவேய்ந்த திருவடிக்கீழ்த் தொண்டுகொண்டருளே” என்றார் அழகரந்தாதியிலும்.
‘எம்பெருமானது திருவடியே வீடு’ என்ற கொள்கை, இரண்டாமடியில் விளங்குகின்றது. ‘எவ்வுளத்தனே’ என்ற விளியால்,
வைதாரையும் எதிர்த்தாரையும் கூடக்கைவிடமாட்டாது திருவடிக்கீழ்ச்சேர்த்துக்கொள்ளும்
உரிமையுடையவன் எம்பெருமா னென்பது, பெறப்படும்.
“செய்தகுற்றம் நற்றமாகவே கொள் ஞாலநாதனே” என்பது திருமழிசையார் பாசுரம்.

திருமால் சாலிஹோத்திர மகாரிஷிக்குப் பிரதியக்ஷமாகி, உறைதற்கு உரிய உள் ‘எவ்வுள்’ என வினாவியதனால்,
இத்தலத்திற்குத் திருவெவ்வுளூரென்று திருநாமமாயிற் றென்பர்.

—————-

91-திரு நீர் மலை –

இரங்கும் உயிர் அனைத்தும் இன் அருளால் காப்பான்
அரங்கன் ஒருவனுமே ஆதல் கரங்களால்
போர் மலை வான் வந்த புகழ் வாணன் காட்டினான்
நீர் மலை வாழ் எந்தை எதிர் நின்று –91–

(இ – ள்.) இரங்கும் – வருந்துகின்ற,
உயிர் அனைத்தும் – எல்லாவுயிர்களையும்,
இன் அருளால் – (தனது) இனியகருணையினால்,
காப்பான் – பாதுகாப்பவன்,
அரங்கன் ஒருவனுமே ஆதல் – திருவரங்கநாதன் ஒருத்தனேயாவனென்ற விஷயத்தை,
கரங்களால் – (தனது) ஆயிரங்கைகளினாலும்,
போர் மலைவான்வந்த – போர்செய்யும்படி வந்த,
புகழ் வாணன் – பிரசித்திபெற்ற பாணாசுரன்,
நீர்மலை வாழ் எந்தை எதிர் நின்று – திருநீர்மலையென்னுந் திவ்வியதலத்தில் நித்தியவாசஞ்செய்கின்ற எம்பெருமானது எதிரிலே நின்று, காட்டினான் -; (எ – று.)

பாணாசுரன் முதலிற் சிவபிரானை யடுத்து அவனது துணைவலியாற் செருக்கிக் கண்ணபிரானோடு போர்செய்யத்தொடங்கி,
இடையிலே தனது பரிவாரங்களோடு சிவபிரான் கைவிட்டு ஓடியதனால் தனது குறைகள் தீரவும் தன்விருப்பம் கைகூடவும்
பெறாமையோடு அப்பிரானது சக்கராயுதத்தினாற் கைகள் அறுப்புண்டு, சிவபிரான் பிரார்த்தனைக்கு இணங்கி
நான்கு கைகளோடும் உயிரோடும் தன்னை அக்கண்ணபிரான் விட்டிட்டதைக் காணவே,
அவ்வசுரன் ஸ்ரீகிருஷ்ணனே ரக்ஷகனென்று துணிந்து அப்பிரானை வணங்கி உறவுபூண்டு அத்திருமாலருளாற் பேறு
பெற்று உய்ந்தனனென்பது பிரசித்தமாதலால், ஸ்ரீரங்கநாதனே எல்லாவுயிர்களையுந் தடுமாற்றத்தினின்று
நீக்கிக் காக்கின்ற கடவுளாவ னென்றதைக் காட்டியவ னாவான்;
“வணங்கரியா னரங்கன் னடியார்தொழ வாளரவு,
வணங்கரியாடல்பரிதேர் நடத்தெந்தை வானவர்க்கும்,
வணங்கரியா னன்றிக் காப்பாரில்லாமை விண்மண்ணறியும்,
வணங் கரியானவர் வாணன் கண்டாகனன் மார்க்கண்டனே” என்றார் திருவரங்கத்தந்தாதியிலும்.

“புகழ்வாணன்’ என்றது அவன் சிவபிரான் தனதுவாயிலிற் கணங்களோடு பாதுகாவலாகும் பெருமை பெற்றிருந்தவ னென்பதையும்,
‘கரங்களால் போர்மலைவான்’ என்றது – தான் ஆயிரங்கைகள் கொண்டதனால் போர்த்தினவு விஞ்சப்பெற்றிருந்தவ னென்பதையுங் காட்டும்.
“ருத்ரனும் ஸகலப்ராணிகளையும் ஸம்ஹரிக்கையே தொழிலாகவுடையனாய், விடாயர் முகத்திலே
நெருப்பைச் சொரிந்தாற்போலே யிருக்கத் தழல்நிறவண்ணனாய்,
தன்னையாஸ்ரயித்தவர்களை ‘அறுத்துத்தா, பொசித்துத்தா’ என்று கொடுந்தொழில்களைச் செய்வித்துக் கொள்ளுகையாலும்,
தன்னை ஆஸ்ரயித்த வாணனை ‘தலையிற்பூவாடாதே நோக்குகிறேன்’ என்று ப்ரதிஜ்ஞை பண்ணித் தன்னைத்
தொழுத கைகளைக் கள்ளிக்காடுசீய்த்தாப்போலே சீய்க்கக்கண்டு ‘உயிருண்டாகில் உப்புமாறியுண்ணலாம்’ என்று
நெற்றியிற் கண்ணைப் புதைத்துக்கொண்டு நழுவினவனாகையாலும் ………… ரக்ஷகனாகமாட்டான் ………
ஈஸ்வரன் மாதாக்கள்கைவிட்ட அவஸ்தையிலும்
“பின்னுநின்றடியேனுக்கு உற்றானாய் வளர்த்து என்னுயிராகி நின்றான்” என்கிறபடியே தன்னுருக்கெடுத்து
வேற்றுருக்கொண்டு தாய்முகங்காட்டியும், இன்சொல்லுச் சொல்லியும், ப்ராதாக்களும் பர்த்தாக்களும் நெகிழ
நின்றவன்று தான் ஏறிட்டுக்கொண்டு கழுத்திலே ஓலைகட்டித் தூதுபோயும், புருவம்நெரித்த விடத்திலே தேரைநடத்தியும்,
மார்பிலே அம்பேற்றும், சாவாமல் நோக்கியும், செத்தாரை மீட்டும் நாராயணத்வப்ரயுக்தமான உதரத்தெரிப்பாலே
அகவாயிலேநின்று ஸத்தையைநோக்கிக்கொண்டுபோருகையாலே இவனே எல்லார்க்கும் ரக்ஷகன்” என்ற
ப்ரபந்நபரித்ராணம் இங்குக் காணத்தக்கது.
“வாணபுரம்புக்கு முக்கட்பிரானைத் தொலைய வெம்போர்கள்செய்து,
வாணனை யாயிரந்தோள் துணித்தான் சரணன்றி மற்றொன்றிலமே” என்பது, நம்மாழ்வார் பாசுரம்.
நீரானது அரண்போலச் சூழப்பெற்ற மலையாதல்பற்றி, இத்தலம், திருநீர்மலை யெனப் பெயர்பெறும்.

————–

92-திரு இட வெந்தை —

நின்று திரியும் பிறவி எல்லாம் நேர்வித்து
கொன்று திரியும் கொடு வினையார் இன்று
வெருவிட எந்தைக்கே விழுமிய தொண்டு ஆனேன்
திருவிட வெந்தைக்கே செறிந்து –92-

(இ – ள்.) நின்று திரியும் பிறவி எல்லாம் நேர்வித்து – நிலைத்திணைப் பொருளும் (ஸ்தாவரமும்) இயங்கு
திணைப்பொருளும் (ஜங்கமமும்) ஆகிய எல்லாப்பிறவிகளையும் (எனக்கு) உண்டாக்கி,
கொன்று திரியும் – (என்னை) மிகவும் வருத்திக்கொண்டு திரிகின்ற,
கொடு வினையார் – மிகக்கொடிய தீவினைகள்,
இன்று -இப்போது,
வெருவிட – அஞ்சியோடும்படியாக, (யான்),
திருவிடவெந்தைக்கே செறிந்து – திருவிடவெந்தையென்னுந் திவ்வியதலத்தில் நெருங்கி,
எந்தைக்கே விழுமிய தொண்டு ஆனேன் – (அத்தலத்தில் எழுந்தருளிய) எமது ஸ்வாமியாகிய நித்யகல்யாணப்பெருமானுக்கே சிறந்த அடியவனாயினேன்; (எ – று.)

எம்பெருமானுக்கே அடிமைப்பட்டதனால், எனக்குப் பிறவித்துன்பங்களை இதுகாறும் விளைத்து என்னை வருத்தி
வந்த பாவங்களெல்லாம் இனி என்னையணுகாது அஞ்சியோடு மென்பதாம்.
“அகஞ்சிவந்த கண்ணினராய் வல்வினையராவார்,
முகஞ்சிதைவராமன்றேமுக்கி – மிகுந்திருமால்,
சீர்க்கடலையுள் பொதிந்த சிந்தனையேன்றன்னை,
யார்க்கடலாஞ் செவ்வேயடர்த்து,”
“வானோ மறிகடலோ மாருதமோ தீயகமோ,
கானோ வொருங்கிற்றுக் கண்டிலமால் – ஆனீன்ற,
கன்றுயரத் தாமெறிந்து காயுதிர்த்தார் தாள்பணிந்தோம்,
வன்றுயரையாவா மருங்கு” என்பன நம்மாழ்வார்பாசுரம்.
செறலினால், ‘கொடுவினையார்’ என அஃறிணையை உயர்திணையாக் கூறினார்; திணைவழுவமைதி.

இத்தலத்தி லெழுந்தருளிய வராகப்பெருமாள் தமதுதேவியை இடப்பக்கத்திற் கொண்டிருத்தலால்,
இத்தலத்திற்குத் திருவிடவெந்தையென்று திருநாமமாயிற்று.

————–

93-திருக் கடன் மல்லை–

செறிந்த பணை பறித்து திண் களிற்றைச் சாடி
முறிந்து விழப் பாகனையும் மோதி எறிந்து
தருக்கு அடல் மல்லைக் மைத்தான் தஞ்சம் என்று நெஞ்சே
திருக்கடல் மல்லைக்குள் திரி –93–

(இ – ள்.) நெஞ்சே – (எனது) மனமே! –
செறிந்த – நெருங்கியுள்ள.
பணை – தந்தங்களை,
பறித்து – பிடுங்கி, (அவற்றைக்கொண்டே),
திண் களிற்றை – வலிய (குவலயாபீடமென்னும்) மதயானையை,
சாடி – அடித்துக்கொன்று, –
பாகனையும் – (அவ்யானையை நடத்துபவனான) பாகனையும்,
முறிந்து விழ – இறந்து கீழ்விழும்படி,
மோதி எறிந்து – அடித்துத் தள்ளி, –
தருக்கு அடல் மல்லை – செருக்கையும் தேகவலிமையையுமுடைய மல்லர்களை,
குமைத்தான் – பொருது கொன்றவனாகிய திருமாலே,
தஞ்சம் என்று – ரக்ஷகமென்று (அறுதியிட்டு),
திருக்கடன்மல்லைக்குள் திரி – திருக்கடன்மல்லையென்னுந் திவ்வியதலத்திற் சென்று திரிவாயாக; (எ – று.)

எம்பெருமானையே ரக்ஷகமாக நினைத்துத் திருக்கடன்மல்லையிற் சென்று வசித்தால் அப்பெருமான்
விரோதிகளையெல்லாம் போக்கி நற்கதியளிப்ப னென்பதாம்.
இது, பூதத்தாழ்வார் திருவவதாரஸ்தலம்.

————-

94- திருவல்லிக்கேணி —

திரிந்து உழலும் சிந்தை தனிச் செவ்வே நிறுத்தி
புரிந்து புகன்மின் புகன்றால் மருந்து ஆம்
கருவல்லிக்கு ஏணி ஆம் மாக்கதிக்கு கண்ணன்
திருவல்லிக்கேணி யான் சீர் –94-

(இ – ள்.) திரிந்து உழலும் – (ஐம்புலவாசைகளிற்) சென்று அலைகின்ற,
சிந்தைதனை – உங்கள் மனத்தை,
செவ்வே நிறுத்தி – (அவ்வாறு செல்லவொட்டாது) நேராக நிறுத்தி,
திருவல்லிக்கேணியான் – திருவல்லிக்கேணியென்னுந் திவ்வியதலத்தி லெழுந்தருளிய,
கண்ணன் – கண்ணபிரானாகிய வேங்கடகிருஷ்ணனது,
சீர் – கீர்த்தியை,
புரிந்து புகன்மின் – விரும்பிக் கூறுங்கள்;
புகன்றால் – அவ்வாறு புகழ்ந்துகூறினால், (அது), –
கரு வல்லிக்கு – கருப்பமாகிய கொடிக்கு,
மருந்து ஆம் – (நசிக்கச்செய்யும்) ஒளஷதமாம்;
மா கதிக்கு – சிறந்த முத்தியுலகத்துக்கு,
ஏணி ஆம் – (ஏறிச்செல்லுதற்குஉரிய) ஏணியாகும்; (எ – று.)

மனத்தைப் பல விஷயங்களிற்செல்லாது ஒருவழிப்படுத்தித் திருவல்லிக்கேணியி லெழுந்தருளிய திருமாலின்
கீர்த்தியை யெடுத்துக்கூறினால், அது கொழுந்தோடிப்படர்கின்ற கர்ப்பபரம்பரைகளை நீக்கி முத்தி
நெறியிலேறுதற்கு எளியஉபாயமாகு மென்பதாம்.
கருவல்லிக்கு மருந்து – பிறப்புக்களை இனி உண்டாகவொட்டாது தடுக்குந் திவ்யௌஷதம்,
கீழிடத்திலிருந்து மேலிடத்திலேறுதற்கு ஏணி இன்றியமையாக் கருவியாதல்போல
நிலவுலகத்திலிருந்து மேலுலகமாகிய முத்தியுலகத்தி லேறுதற்குக் கண்ணபிரானது புகழ்கள்
இன்றியமையாத உபாயமாமென்பது, ‘ஏணியாம் மாக்கதிக்கு’ என்றதன் கருத்து. கண்ணன் – பார்த்தசாரதியுமாம்.

இது – தொண்டைமான்சக்கரவர்த்தியின் பிரார்த்தனைப்படியே திருவேங்கடமுடையான் கண்ணனாகத்
தனது குடும்பத்தோடு சேவைசாதித்த தலம்;
இத்தலத்துப்புஷ்கரிணி – அல்லிப்பூக்கள் நிறையப்பெற்றதனால், கைரவிணியென்று வடமொழியிலும்,
திருவல்லிக்கேணி யென்று தென்மொழியிலும் பெயர்பெறும்.
இந்தப் புண்ணியதீர்த்தத்தின்பெயரே இத்தலத்திற்கும் பெயராயிற் றென்க.
இது மயிலையை யடுத்திருத்தலால், மயிலைத்திருவல்லிக்கேணி யெனப் பெயர்பெறும்;
இம்மயிலையே பேயாழ்வாரது திருவவதாரஸ்தலமாம்.

———–

95-திருக்கடிகை -சோளிங்க புரம்–

சீர் அருளால் நம்மைத் திருத்தி நாம் முன் அறியாக்
கூர் அறிவும் தந்து அடிமை கொண்டதற்கே நேரே
ஒரு கடிகையும் மனமே உள்ளுகிலாய் முத்தி
தரு கடிகை மாயவனைத் தான் –95-

(இ – ள்.) மனமே – ! – சீர் அருளால் – சிறந்த திருவருளினால், நம்மை – ,
திருத்தி – நல்லவழியிற் செல்லுமாறு செய்து,
நாம் முன் அறியா கூர் அறிவும் தந்து – நாம் இதற்குமுன்னே அறிந்திராத நுட்பமான அறிவையும் (நமக்குக்) கொடுத்து,
அடிமை கொண்டதற்கு – (நம்மை) ஆட்கொண்டதற்காக, –
முத்தி தரு கடிகை மாயவனை – (தன்னையடைந்தார்க்கு) நற்கதியையளிக்குந் திருக்கடிகை
யென்னுந் திவ்வியதலத்தி லெழுந்தருளிய எம்பெருமானை,
நேரே – நேராக,
ஒரு கடிகையும் – ஒரு நாழிகைப் பொழுதாவது,
உள்ளுகிலாய் – நினைக்கமாட்டாய்; (எ – று.) – தான் – ஈற்றசை.

எம்பெருமான் தனது நிர்ஹேதுக கிருபையினால் நம்மைத்திருத்தி நுண்ணியபகுத்தறிவைக் கொடுத்து
நம்மையாட்கொண்டதற்காக, அப்பெருமானைச் சிறிதுபொழுதாவது சிந்திக்கலாமே!
அதுவுஞ்செய்யாது செய்ந்நன்றி மறந்தவனாய் வாளா கிடக்கின்றனையே! இது என்ன துர்ப்புத்தி! என்று
தமது நெஞ்சத்தின் நிலையை இகழ்ந்தவாறு, நம்மிடத்து நன்மை சிறிதுமில்லாதிருக்கையிலும்
அவ்வெம்பெருமான் வலியக் கருணைசெய்து திருத்தி நம்மை அடிமைகொண்டதற்குக் கைம்மாறு –
அப்பிரான் விஷயத்தில் உபகாரஸ்மிருதி செய்யவேண்டுவதன்றி, வேறுதொழிலின்று என்பது இங்குப் போதரும்.

ஒருவர் ஒருகடிகைப்பொழுது இத்தலத்தி லுறைந்தாலும் அவர்க்கு முத்தி கிடைக்கு மாதலால்,
இத்தலத்திற்குக் கடிகையென்று திருநாமம்; கடிகாசல மெனப்படும்.
இது, சோளதேசம்போன்று வளம்மிக்கு நரசிங்கமூர்த்தி உறைதற்கு இடமாயிருத்தல்பற்றி,
சோளஸிம்ஹபுரமென்றும் வழங்கப்பெறும். சோளஸிம்ஹராஜனது புர மெனினுவாம்.

தொண்டைநாட்டுத்திருப்பதிகள் முற்றும்.

——————————-

வட நாட்டுத் திருப்பதிகள்–12-

96-திருவேங்கடம் –

தானே சரணமுமாய் தானே பலமுமாய்
தானே குறை முடிக்கும் தன்மையான் தேன் ஏய்
திருவேங்கடம் தொழுதேம் தீய விபூதிக்குள்
மருவேம் கடந்தனெம் இவ்வாழ்வு –96–

(இ – ள்.) தானே -, சரணமும் ஆய் – உபாயமாகியும்,
தானே -, பலமும் ஆய் – உபேயமாகியும்,
தானே குறை முடிக்கும் தன்மையான் – தானே (அடியார்களது) மனக்குறையைப் போக்கி
அவரெண்ணத்தை ஈடேற்றுந் தன்மையுடையவனாகியு மிருக்கின்ற திருவேங்கடமுடையானது,
தேன்ஏய் திருவேங்கடம் – தேன்நிறைந்த (பொழில்கள்சூழ்ந்த) திருவேங்கடமென்னுந் திவ்வியதலத்தை,
தொழுதேம் – வணங்கினோம்; (அதன்பயனாக),
தீய விபூதிக்குள் – கொடிய இந்தலீலாவிபூதியில்,
மருவேம் – இனிப் பொருந்த மாட்டோம்;
இ வாழ்வு – இந்த ஸாம்ஸாரிகவாழ்க்கையை,
கடந்தனெம் – இனிக் கடந்துவிட்டோம்; (எ – று.)

எம்பெருமான் தன்னைச் சேர்தற்குத் தானே உபாயமாகியும், அவ்வாறு சேர்ந்தால் பயனாகியும்,
அவ்வாறு சேரவொட்டாமல் குறுக்கேவருகின்ற விரோதிகளைப் போக்கிப் பயனளிப்பவனாகியும் நிற்பனென்று
அந்த எம்பெருமானது ஸ்வரூபத்தை முன்னிரண்டடிகளினால் விளக்கினார்.
இவ்வாறான எம்பெருமானைத் தாம் அடைக்கலமாகச் சேர்ந்ததனால், இனி, இந்தஸம்ஸார வாழ்க்கை யொழிந்து
இந்த லீலாவிபூதியைவிட்டு நித்யவிபூதியாகிய மோட்சத்தைச் சேர்தல் திண்ண மென்பதாம்.
த்ரிபாத்விபூதியைப்போலல்லாது பலவகைத்துன்பங்கட்கும் இடமாயிருத்தல்பற்றி, லீலாவிபூதியை ‘தீயவிபூதி’என்றார்.
கடந்தனெம் – தெளிவுபற்றி எதிர்காலத்தை இறந்தகாலத்தாற் கூறிய காலவழுவமைதி.

————

97-திருச் சிங்கவேள் குன்றம் -திரு அஹோபிலம் –

வாழ் குமரன் மேல் கனக வஞ்சகன் மேல் ஓர் முகத்தே
சூழ் கருணையும் முனிவும் தோன்றினவால் கேழ் கிளரும்
அங்கவேள் குன்ற அழல் சாபத்தைப் பிளந்த
சிங்கவேள் குன்றத்தினார்க்கு –97-

(இ – ள்.) கேழ் கிளரும் – நிறம்விளங்குகின்ற,
அங்கம்வேள் – அழகிய தேகத்தையுடைய மன்மதன்,
குன்ற – சாம்பலாயழியும்படி,
அழல் – (தனது நெற்றிக்கண்ணைத்திறந்து) கோபித்த,
சரபத்தை – (சிவபிரானது அவதாரமாகிய) சரபமென்னும் விலங்கை,
பிளந்த – பிளந்துஅழித்த,
சிங்கவேள்குன்றத்தினார்க்கு – சிங்கவேள்குன்றமென்னுந் திவ்வியதலத்தி லெழுந்தருளிய நரசிங்கப்பிரானுக்கு,
வாழ் குமரன்மேல் – கடவுளினருள்பெற்ற பிரகலாதனென்னும் சிறுவனிடத்து,
ஓர் முகத்து – ஒருபால்,
சூழ் கருணையும் – நிறைந்த பேரருளும், –
கனகம் வஞ்சகன்மேல் – (அவனதுதந்தையான) வஞ்சனைக்குணமுடைய இரணியன்மீது,
(ஓர்முகத்து – ஒருபால்),
முனிவும் – கடுங்கோபமும்,
தோன்றிய – உண்டாயின; (எ – று.) ஏ, ஆல் – ஈற்றசைகள்.

தனதுமெய்யடியானான பிரகலாதனை இரணியன் வருத்தியதுபற்றி அன்னான்மீது பெருஞ்சினமும்,
பெற்றதந்தை தன்னைப் பலவாறாக நலியவும் அந்நிலையிலும் தனது மெய்யன்பு மாறாமலிருந்ததுபற்றிப்
பிரகலாதாழ்வான்மீது திருவருளும் நரசிங்காவதாரமூர்த்திக்கு ஒருங்கே தோன்றின வென்க;
இவ்வாறு ஒன்றற்குஒன்று மாறான குணங்களை ஒருங்கே எம்பெருமான்கொண்டது, அப்பிரானது ஆஸ்சர்யகுணயோகத்தை விளக்கும்.

சரபம் – இரண்டுதலைகளையும் சிறகுகளையும் கூரியநகமுள்ள எட்டுக்கால்களையும் மேல்நோக்கிய
கண்களையு முடைய தொரு மிருகவிசேடம்; இதனைப் பறவையென்றலு முண்டு.
இது, சிங்கத்தை எளிதிற்கொல்லுந் திறமுடையது. வெறுஞ்சிங்கமன்றி நரசிங்க மாதலாலும்,
ஸாமாந்யஸிம்ஹமன்றி வரம்பிலாற்றலுடையபுருஷோத்தமனது அவதாரமான திவ்யஸிம்ஹ மாதலாலும், இது சரபத்தைக் கொன்றிட்டது.
இரணியனென்ற பெயர் பொன்னிறமானவ னென்று பொருள்படுதலால், அதன்பரியாயநாமமாக ‘கனகன்’ என்றார்;
இரணியம் கனகம் என்பன – பொன்னின் பெயர்கள். முதலடியில் முறைநிரனிறைப்பொருள்கோள் காண்க.

சிங்கமாகிய யாவரும் விரும்பப்படுகின்ற கட்டழகுடைய பெருமான் எழுந்தருளிய திருமலையாதலால்,
சிங்கவேள்குன்றம் என்று இத்தலத்திற்குப் பெயர்; ‘சிங்கவேழ்குன்றம்’ என்று வழங்குதலு முண்டு;
அப்போதைக்கு நரசிங்கமூர்த்திகள் எழுந்தருளியிருக்கின்ற ஏழுகுன்றங்களையுடையது எனப்பொருள் காண்க;
இதுவே அஹோபில மெனப்படும்.

————

98-திருவயோத்தி –

ஆர்க்கும் இது நன்று தீது ஆனாலும் நெஞ்சே நீ
பார்க்கும் பல கலையும் பன்னாதே சீர்க்கும்
திரு ஐ யோதிப் புயலை சீரிய மெய்ஞ்ஞானத்து
உருவை ஒத்தின் பொருளை ஓர் –98–

(இ – ள்.) நெஞ்சே – (எனது) மனமே! –
இது – (யான்சொல்லுகின்ற) இவ்விஷயம்,
ஆர்க்கும் நன்று – எல்லோர்க்கும் நல்லதே;
தீது ஆனாலும் – (ஒருகால்அதனால்) தீமையேநேர்வதானாலும், – நீ -,
பார்க்கும் பல கலையும் – (உலகத்திற்) காணப்படுகின்ற பலவகைச்சாஸ்திரங்களையும்,
பன்னாது – கண்டபடி கற்காமல்,
சீரிய மெய் ஞானத்து உருவை – சிறந்த தத்துவஞான சொரூபியானவனும்,
ஓத்தின் பொருளை – வேதத்தின் அர்த்தமாகி யிருப்பவனுமாகிய.
சீர்க்கும் திரு ஐயோத்தி புயலை – சிறப்புப்பொருந்திய திருவயோத்தியென்னுந்திவ்வியதலத்தி லெழுந்தருளிய
காளமேகம்போலக் கருநிறமுடைய ஸ்ரீராமபிரானை,
ஓர் – தியானிப்பாயாக; (எ – று.)

தர்க்கம் வியாகரணம் முதலிய உலகத்துச்சாஸ்திரங்கள் பலவற்றையும் படித்துப் பழுதே பலபகலும்போக்காமல்,
தத்துவஞானஸ்வரூபியாகிய கடவுளையே தியானஞ் செய்வாயாக என்று மனத்திற்கு உபதேசித்தனரென்க.
உலகத்துவழங்குகின்ற சாஸ்திரங்களிற் பயிலுதல் வேதத்தின்நுண்ணியபொருளை உணர்தற்பொருட்டே யாதலாலும்,
வேதப்பொருளாகிய கடவுளையறியாது மற்றைச்சாஸ்திரங்களிற் பயில்வது பயனற்றதாதலாலும் அதனை விட்டு
வேதப்பொருளாகிய கடவுளைத் தியானித்தலே சிறந்த செயலாகுமென்பதாம்.
அன்றியும், கலைகளிற்பயிலுதல் மிகவும்வருத்தமாயிருத்தலோடு புத்தியில்நிஷ்கர்ஷம் தோன்றாமல்
புத்திசலித்தற்குங் காரணமாயிருத்தலால் அதனைநீத்து, கடவுளை உபதேசத்தினா லுணர்ந்து வழிபடுக வென்று போதித்தன ரென்க;
“ஸாஸ்த்ரஜ்ஞாநம் பஹுக்லேஸம் – புத்தே: சலநகாரணம் : உபதேஸாத் ஹரிம் புத்வா – விரமேத்ஸர்வகர்மஸு” என்ற
மேற்கோள் இங்கு உணரத்தக்கது. கடவுளைத் தியானித்தலென்பது அனைவர்க்குங்கடமை யாதலால்
‘ஆர்க்கும் இதுநன்று’ என்றும், அவ்வாறு செய்தலில் தீதுஒன்றுமில்லை யென்பதை வற்புறுத்துதற்பொருட்டு
‘தீதானாலும்’ என்றும் கூறினர்.
திருவயோத்தியென்பது – திரிபுநோக்கி, திருவையோத்தி என வந்தது. ஓதப்படுதலினால், வேதத்திற்கு ‘ ஓத்து’ எனப்பெயர்.

அயோத்தி – பகைவர்களாற் போர்செய்து வெல்லமுடியாதது எனப்பெயர் பெறும்: அரண்
முதலியவற்றால் மிக்கபாதுகாவலையுடையது என்பது கருத்து;
இது, ஸ்ரீராமபிரானது திருவவதாரஸ்தலம்: முத்திதரும் நகரமேழனுள் ஒன்று.

————

99-திரு நைமிசாரணியம் –

ஒரு அறிவும் இல்லாத என் போல்வார்க்கு உய்யலாம்
பேர் அறிவு உண்டேனும் பிறர்க்கு அரிது பார் அறிய
நைமிசாரண்யத்து நாதர் அடியாரோடும்
இம்மிசார்வு உண்டாயினால் –99-

(இ – ள்.) பார் அறிய – உலகத்தார் அறியும்படி,
நைம்மிசாரண்ணியத்து நாதர் அடியாரோடும் – திருநைமிசாரணியத்தி லெழுந்தருளிய ஸர்வஸ்வாமியினது பக்தர்களோடும்,
இம்மி சார்வு உண்டாயினால் – கொஞ்சமாவது சம்பந்தம் ஏற்படுமேயாயின், –
ஓர் அறிவும் இல்லாத – சிறிதேனும் அறிவில்லாத,
என் போல்வார்க்கு – என்னைப்போன்றவர்கட்கும்,
உய்யல் ஆம் – ஈடேறுதல் கூடும்;
பிறர்க்கு – (அவ்வாறு பாகவதசம்பந்தம்பெறாத) மற்றையோர்க்கு,
பேர் அறிவு உண்டு ஏனும் – விசேஷஞானம் உளதாயினும்,
அரிது – (ஈடேறுதல்) முடியாத காரியமாகும்; (எ – று.)

வீடுபேற்றுக்கு அறிவு பிரதானகாரண மன்று; பாகவத சம்பந்தமே முக்கியமானகாரண மென்பதாம்.
“ஜ்ஞாந அநுஷ்டாநங்களை யொழிந்தாலும் பேற்றுக்கு அவர்கள்பக்கல் ஸம்பந்தமே அமைகிறாப்போலே” என்கிற ஸ்ரீவசநபூஷணமும்,
“பகவலலாபஹேதுவான தத்வஜ்ஞாநமும், ததநுரூப (அந்தஞானத்திற்குஏற்ற) அநுஷ்டாநமு மின்றிக்கே யொழிந்தாலும்
பகவல்லாபத்துக்கு “பஸுர்மநுஷ்ய: பக்ஷீவா – யேசவைஷ்ணவஸம்ஸ்ரயா:) தேநைவதேப்ரயாஸ்யந்தி –
தத்விஷ்ணோ:பரமம்பதம் (பசுவாயிருந்தாலும் மநுஷ்யனாயிருந்தாலும் பக்ஷியாயிருந்தாலும் யாராயிருந்தாலும்
ஸ்ரீவைஷ்ணவர்களை யாஸ்ரயித்தவர் – அந்தஸம்பந்தத்தினாலேயே அந்தவிஷ்ணுவினுடைய பரமபதத்தைச் சார்வர்)” என்றும்,
“யம்யம்ஸ்ப்ரூஸதிபாணிப்யாம் – யம்யம்பஸ்யதி சஷுஷா ஸ்தாவராண்யபிமுச்யந்தே –
கிம்புநர்பாந்தவா ஜநா: (விஷ்ணுபக்தன துஸ்பர்ஸம் நேரிட்டாலும் பார்வைக்கு இலக்கானாலும் ஸ்தாவரங்களும் மோக்ஷம் பெறும்;
அப்படியிருக்க, பந்துக்களைப் பற்றிச் சொல்லவேண்டுமோ?)” என்றும் சொல்லுகிறபடியே
பாகவதஸம்பந்தமே நிரபேக்ஷஸாதநமாகிறாப்போலே” என்ற அதன்வியாக்கியானமும் இங்குக் காணத்தக்கன.
(பாகவதர்கட்கு இடைவழியில் இளைப்புத்தீருமாறு நிழல்கொடுத்து உதவின புளியமரமொன்று
ஸ்ரீமணவாளமாமுனிகளின் திருவருளால் முத்திபெற்ற வரலாறு இங்குக் கருதத்தக்கது.)

ஒருகாலத்தில் முனிவர்கள் ‘தவஞ்செய்தற்குச் சிறந்த இடம் நிலவுலகத்தில் யாது?’ என்று தங்களுக்கு விளக்கிக்
காட்டுதற்பொருட்டுப் பிரமனை வேண்டியபோது, அம்முனிவர்க்கு, அப்பிரமதேவன் தான் ஒரு தருப்பை யாழியைச்செய்து
மண்ணுலகத்திலுருட்டி அதுசென்று நின்ற இடத்தையே சிறந்ததென்று காட்டினனாதலால்,
அதற்கு இடமான இத்தலம் நைமிச மெனப் பெயர்பெற்றது. நைமிசம் – நேமிவிழுந்த இடம்.

————–

100-திருச் சாளக்கிராமம் –

உண்டாம் முறைமை உணர்ந்து அடிமைப் பேர் பூண்டேன்
பண்டம் குடி குலத்தால் பல் மதத்தால் கொண்டாட்டால்
ஆளாம் கிராமத்தால் அல்லல் பேர் பூணாமல்
சாளக்கிராமத்தார் தாட்கு –100-

(இ – ள்.) பண்டு ஆம் – தொன்று தொட்டுவருகிற,
குடி (ஆல்) – குடியினாலும்,
குலத்தால் – குலத்தினாலும்,
பல் மதத்தால் – பலவகையாகவுள்ள மதத்தினாலும்,
கொண்டாட்டால் – (தாம்தாம்செய்யுந் தொழில்முதலியவற்றாலுண்டாகின்ற) ஏற்றத்தினாலும்,
ஆள் அ கிராமத்தால் – உரிமைகொண்டு வசிக்கிற தம்தமதுகிராமத்தினாலும்,
அல்லல் பேர் பூணாமல் – துன்பத்திற்கு இடமாகிய பெயரை வைத்துக்கொள்ளாமல், –
சாளக்கிராமத்தார் தாட்கு – சாளக்கிராமமென்னுந் திவ்வியதலத்திலெழுந்தருளியுள்ள திருமாலினது திருவடிகளோடு,
உண்டாம் – பொருந்திய,
முறைமை – சம்பந்தத்தை,
உணர்ந்து – ஆராய்ந்து தெரிந்துகொண்டு,
அடிமை பேர் – (அப்பெருமானுக்கு) அடியவனென்கின்ற பேரை (தாஸ்யநாமத்தை),
பூண்டேன் – வைத்துக்கொண்டேன்; (எ – று.)

குடி முதலியவற்றால் வருகின்ற பேர்கள் அகங்காரத்திற்கே இடனாகி அழிதற்கே யுரியனவாதலோடு தாமும்
நிலையாதன வாதலால் அவற்றை நல்லாசிரியரது உபதேசம் முதலியவற்றால் அறநீத்து,
ஆத்மாவுக்கு நிலைநின்ற பேராகிய ஸ்ரீவைஷ்ணவதாஸனென்கின்ற அடிமைப்பேரைப் பூண்டு கொண்டே னென்று
தாம் நல்லுணர்ச்சிபெற்றிருத்தலை இப்பாசுரத்தால் தெரிவிக்கின்றன ரென்க.
“அஹங்காரமாகிற ஆர்ப்பை (மாலிந்யத்தை)த் துடைத்தால் ஆத்மாவுக்கு அழியாத பேர் அடியா னென்றிற.
க்ராம குலாதிகளால் வரும் பேர் அநர்த்தஹேது” என்ற ஸ்ரீவசநபூஷணவாக்கியங்கள் இங்குக் கருதத்தக்கன.
குடி குலம் முதலியவற்றால் வரும் பெயர்கள் உடலைப்பற்றி வருவன வாதலால், அவற்றிற்கும் ஆத்துமாவுக்கும்
யாதொரு தொடர்பு மில்லாது நின்று உடலொழியும்போது அவை தாமும் ஒழியும்;
ஆகலான், அவற்றால் ஆத்மாவுக்கு எவ்வகைப்பயனும் விளையாது; அடிமைப்பேரோ என்றும் உளதாகையால்
அதனையுணர்ந்து பூண்டோர்க்கு எம்பெருமானதுபேரருள் சித்திக்கு மென்க.
இங்ஙனம் குலம்குடி முதலியவற்றால் வரும் பேர்கள் கேவலம் அகங்காரத்திற்கே காரணமாய்
ஸ்வரூப ஹாநியையு முண்டாக்கு மென்பார் ‘அல்லற்பேர்’ என்றார்.
குடியென்பது – பிறந்த வமிசம்; குடியால்வரும் பேராவன – கந்தாடையார் ப்ரதிவாதிபயங்கரத்தார் சக்கரவர்த்தியார் என்றாற் போல்வன.
குலம் – வர்ணம்; குலத்தால்வரும் பேராவன – பிராமணன் க்ஷத்திரியன் என்றாற் போல்வன.
மதத்தால் வரும் பேராவன – சைவன் வைஷ்ணவன் என்றாற் போல்வன.
கொண்டாட்டால்வரும் பேராவன – சதாவதானி மஹோபாத்யாயன் சமயகோளரி மகாபண்டிதன் என்றாற் போல்வன.
ஈகிராமத்தால் வரும் பேராவன – திருமலையார் நாவற்பாக்கத்தார் என்றாற் போல்வன.

————–

101-திருவதரியாச்சிரமம் —

தாட்கு அடிமை என்று தமை உணரார்க்கு எட்டெழுத்தும்
கேட்க வெளியிட்டருளும் கேசவனை வேட்கையொடு
போவது அரிது ஆனாலும் போய்த் தொழுவோம் நெஞ்சமே
மாவதரியாச்சிரமத்து –101-

(இ – ள்.) நெஞ்சமே – (எனது) மனமே! –
தாட்கு – (தனது) திருவடிகட்கு,
அடிமை என்று – அடிமைப்பட்டவ ரென்று,
தமை – தங்களது ஸ்வரூபத்தை,
உணரார்க்கு – அறியாத இவ்வுலகத்தவர்க்கு,
எட்டு எழுத்தும் – (ஆத்மாவினது ஸ்வரூபத்தை உள்ளபடிஉணர்த்துவதான) திருவஷ்டாக்ஷர மகாமந்திரத்தை,
கேட்க – காதிற்படும்படி,
வெளியிட்டு அருளும் – கருணையோடு வெளியிட்ட,
கேசவனை – திருமாலை, –
போவது அரிது ஆனாலும் – யாத்திரைசெய்வது வருத்தமுடையதாயிருந்தாலும்,
மா வதரியாச்சிரமத்து – சிறந்தபதரிகாச்சிரம மென்னுந் திவ்வியதலத்தில்,
வேட்கையொடு – பக்தியுடனே,
போய் -, தொழுவோம் – வணங்குவோம்; (எ – று.)

முன்னொருகாலத்தில் குருசிஷ்யகிரமத்தை உலகத்தில் அனைவர்க்கும் விளக்குதற்பொருட்டு
நரனென்னும் ஸிஷ்யனும், நாராயணனென்னுங் குருவுமாகப் பதரிகாச்சிரமத்தில் திருமால் தோன்றி,
சிஷ்யனுக்குக் குரு திருமந்திரத்தை உபதேசித்தருளி, தன்னை உணராத உலகோர்க்குத் தான் அறிந்த தொடர்பையே
பற்றாசுஆகக்கொண்டு ஈடேறுதற்கு ஏற்ற வழியைக் காட்டியருளியதனால், அப்பெருமானெழுந்தருளியிருக்கின்ற
தலம்போய்த் தொழுதற்கு அரியதாயிருந்தாலும், அப்பிரான்செய்த உபகாரஸ்மிருதியால் அங்கு அருமைப்பட்டாயினுஞ் சென்று
அப்பிரானைத் தொழுது உய்வுபெற வேண்டுமென்று தமதுநெஞ்சிற்கு அறிவுறுத்துகின்றன ரென்க.
“நரநாரணனா யுலகத்தறநூல், சிங்காமைவிரித்தவன்” என்ற திருமங்கையாழ்வார் பாசுரமும்,
“ஸம்ஸாரிகள் தங்களையும் ஈஸ்வரனையும் மறந்து ஈஸ்வரகைங்கர்யத்தையுமிழந்து இழந்தோமென்கிற இழவுமின்றிக்கே
ஸம்ஸாரமாகிற பெருங்கடலிலே விழுந்து நோவுபட, ஸர்வேஸ்வரன் தன் க்ருபையாலே இவர்கள் தன்னையறிந்து
கரைமரஞ் சேரும்படி தானே ஸிஷ்யனுமாய் ஆசார்யனுமாய் நின்று திருமந்த்ரத்தை வெளியிட்டருளினான்.
ஸிஷ்யனாய் நின்றது, ஸிஷ்யனிருக்கும் இருப்பு நாட்டார் அறியாமையாலே அத்தை அறிவிக்கைக்காக” என்ற
முழுக்ஷுப்படியும் இங்குக் காணத்தக்கன.
திருமாலால் வெளியிடப்பட்ட திருமந்திரம் ஆத்மஸ்வரூபத்தை உள்ளபடி காட்டவல்ல தென்பார்
‘தமையுணரார்க்கு எட்டெழுத்துங் கேட்க வெளியிட்டருளுங் கேசவன்’ என்றார். எட்டெழுத்து – திருவஷ்டாக்ஷரம்.

பதரிகாஸ்ரமம் என்ற வடசொல் திரிந்துவந்தது; (பதரி – இலந்தை மரம்.) இலந்தைமரங்களடர்ந்த ஆஸ்ரமமென்பது, பொருள்;
இது – இமயமலையிலுள்ளது; அதுபற்றியே, “போவதரிதானாலும்” என்றார்.

—————

102-திருக் கங்கைக் கறைக் கண்டம் என்னும் கடி நகர் –

மத்தால் கடல் கடைந்து வானோர்க்கு அமுது அளித்த
அத்தா எனக்கு உன் அடிப் போதின் புத்தமுதை
கங்கைக் கரை சேரும் கண்டத்தாய் புண்டரிக
மங்கைக்கு அரசே வழங்கு –102-

(இ – ள்.) மத்தால் – (மந்தரமலையாகிய) மத்தினாலே,
கடல் கடைந்து – திருப்பாற்கடலைக்கடைந்து,
வானோர்க்கு – தேவர்களுக்கு அமுது அளித்த – அமிருதத்தைக் கொடுத்தருளிய,
அத்தா – தலைவனே!
புண்டரிக மங்கைக்கு அரைசே – செந்தாமரைமலரில் வாழ்கின்ற பெரியபிராட்டியார்க்குத்தலைவனே!
கங்கை கரைசேரும் கண்டத்தாய் – கங்கைநதிக்கரையிற்பொருந்திய கண்டமென்னுங் கடிநகரி லெழுந்தருளியிருப்பவனே! –
எனக்கு – அடியேனுக்கு,
உன் அடி போதின் புது அமுதை – உனது திருவடித்தாமரையில்) தோன்றுகின்ற புதிய அமிருதத்தை,
வழங்கு – கொடுத்தருள்வாயாக; (எ – று.)

இதனால், ஐயங்கார், எம்பெருமானை நோக்கி, உனது திருவடிகளின் போக்யதையை அனுபவிக்குமாறு
எனக்கு நல்லறிவைத்தந்தருள்வாயென்று பிரார்த்திக்கின்றனர்.
“தேனேமலருந் திருப்பாதம்,”
“விஷ்ணோ: பதே பரமேமத்வஉத்ஸ: (விஷ்ணுவினது சிறந்ததிருவடிகளிலே தேனின்பெருக்கு உள்ளது)” என்றபடி
எம்பெருமானது திருவடிகளில் போக்யதை விஞ்சியிருக்குமென்க. பாற்கடலைக் கையினால் வருந்திக் கடைந்து
அதனினின்று எழுந்த அமிருதத்தைப் பிரயோஜநாந்தரபரரான தேவர்கட்குக் கொடுத்தது போலன்றி,
அநந்யப்ரயோஜநனான அடியேனுக்கு உன் திருவடிகளினிடத்து இயற்கையாகவேயுள்ள இனிமையைத் தருவது
மிகவும் எளிதாகு மென்ற கருத்து,
‘மத்தாற் கடல்கடைந்து வானோர்க்கு அமுதுஅளித்த அத்தா! எனக்கு உன்னடிப்போதிற் புத்தமுதை வழங்கு’ என்ற
தொடரில் தோன்றும் அமுதம் வேண்டுமென்று பிரார்த்தியாத தேவர்கட்கு அதனை உண்டாக்கியளித்த
நீ அதனைவேண்டுகின்ற எனக்கு இயற்கையாக உன்னிடத்திலுள்ள அதனை அளிக்கலாகாதோ?
சமயம் வந்தபோதுமாத்திரம் காலைக்கட்டிக் காரியங்கொண்டு மற்றைச்சமயங்களில் விலகிநிற்பவர்க்குத்தான் உதவவேண்டுமோ?
எப்போதும் உன்னையே அணுகிநின்று உன்னாலல்லது மற்றையாவராலும் ஒன்றுங்குறைவேண்டாத எனக்கு உதவலாகாதோ?
என்பவை முதலிய கருத்துக்களும் இங்குத்தொனிக்கும்.
புத்தமுதுஎன்றது – எத்துணைக்காலம் அனுபவித்தாலும் தெவிட்டுதலில்லாது மேன்மேலும் இன்சுவைபயப்பதும்,
‘தேவாமிருதம்போல அசுரர்கள் கைக்கொள்ளப்புகுகிறார்களே!’ என்று அஞ்சவேண்டாததுமாகிய அமிருத மென்றபடி.

இத்தலம் இப்பொழுது தேவப்ரயாகை யென்று வழங்குகின்ற தென்பர். புண்டரீகமங்கையென்பது – இத்தலத்துநாச்சியார்திருநாமம்.

—————-

103-திருப்பிருதி –

வழங்கும் உயிர் அனைத்தும் வாரிவாய்ப் பெய்து
விழுங்கும் கவந்தன் விறல் தோட் கிழங்கை
பொருப்பு இருதிக்கும் கிடந்தால் போல் துணித்து வீழ்த்தான்
திருப்பிருதிக்கு என் நெஞ்சே செல் -103-

(இ – ள்.) என் நெஞ்சே – எனது மனமே! –
வழங்கும் உயிர் அனைத்தும் – சஞ்சரிக்கின்ற எல்லாப்பிராணிகளையும்,
வாரி – (தனது இரண்டு கைகளாலும் ஒருசேரத்) திரட்டியெடுத்து,
வாய் பெய்து – (தனது) வாய்க்குள் தள்ளி,
விழுங்கும் – விழுங்குந்தன்மையுள்ள,
கவந்தன் – கபந்தனென்னும் அசுரனது,
விறல் தோள் கிழங்கை – வலிமையுள்ள தோள்களின் மூலபாகத்தை,
பொருப்பு இரு திக்கும் கிடந்தால் போல் – மலை இரண்டுபக்கத்திலும்வீழ்ந்து கிடந்ததுபோலக் (கிடக்கும்படி),
(இராமாவதாரத்தில்) துணிந்து வீழ்த்தான் – வெட்டித்தள்ளிய திருமாலினது,
திருப்பிருதிக்கு – திருப்பிருதியென்னுந் திவ்வியதலத்திற்கு,
செல் – நீ சென்று சேர்வாயாக; (எ – று.)

திருமாலினது திருப்பிருதியென்னுந் திவ்வியதலத்தைப் போய்ச்சேர்ந்தாயாயின், உனது சகலவிரோதிகளும் போய்
நற்கதிபெறுவது திண்ணமென்பது, கருத்து. இராமபிரான் கவந்தனது வலத்தோளையும்,
லஷ்மணன் அவனது இடத்தோளையும் வெட்டித் தள்ளியதாகக் ஸ்ரீராமாயணத்திற் கூறியிருக்க,
இங்கு இவ்வாசிரியர் கவந்தனது இருதோள்களையும் இராமபிரானே வெட்டித்தள்ளியதாக கூறியது –
“ராமஸ்ய தக்ஷிணோ பாஹு:” என்றபடி லஷ்மணனை இராமபிரானது வலக்கையாகக் கூறியிருப்பதுகொண்டு
அவ்விலக்குமணனது செயலையும் இராமபிரானது செயலாகவே கொண்டதனாலாகுமென்க.
இது, ஒருவகை உபசாரவழக்கின்பாற்படுமென்னலாம். கவந்தனதுதோள்கள் யோசனைதூரம் நீண்டிருந்தன வாதலால்
அவை வெட்டப்பட்டுக் கீழ்வீழ்ந்துகிடந்ததற்கு – இருபொருப்புக்கள் கீழ்வீழ்ந்திருத்தலை உவமை கூறினார். தோட்கிழங்கு – புஜமூலம்.

————–

104-திருவட மதுரை –

செல்வம் உயிர் உடம்பு சேர உரித்தாக்கி
வல்வினையை நீக்குமினோ மாந்தர்காள் தொல்லை
வடமதுரையான் கழலே வாய்த்த தஞ்சம் என்று
திடமது உரை செய்தான் திறத்து –104-

(இ – ள்.) மாந்தர்காள் – மனிதர்களே! – (அனைவர்க்கும்),
“கழலே – எனது திருவடிகள்தாம்,
வாய்த்த தஞ்சம் – பொருந்திய ரக்ஷகமாகும்,’ என்று -,
திடம்அது உரைசெய்தான் – உறுதியாக உபதேசித்தவனும்,
தொல்லை வடமதுரையான் திறத்து – பழமையான (முதற்கடவுளான) வடமதுரையிற் பிறந்தவனுமாகிய பெருமானிடத்தில், –
செல்வம் – (நுமது) செல்வங்களையும்,
உயிர் – பிராணனையும்,
உடம்பு – உடம்பையும்,
சேர – ஒருசேர,
உரித்து ஆக்கி – உரியனவாகச் சமர்ப்பித்து,
வல் வினையின் நீங்குமின் – வலிய இருவினைத் தொல்லைகளினின்று நீங்குங்கள்; (எ – று.)

கர்மம் ஜ்ஞாநம் பக்தி ப்ரபத்தி முதலிய உபாயங்களையெல்லாம் ஒழித்துத் தனது திருவடிகளையே தஞ்சமாகப்
பற்றும்படி உபதேசித்த ஸ்ரீகிருஷ்ண பகவான்திறத்தில் உமது உடல் பொருள் ஆவி அனைத்தையும் ஒருசேர அர்ப்பணம்பண்ணி,
அப்பிரானருளால் இருவினைத் தொல்லைகளினின்றும் நீங்கி உய்வுபெறுவீர்களென்று உலகத்தார்க்கு உபதேசித்தவாறு,
“ஸர்வதர்மாந் பரித்யஜ்ய – மாமேகம்ஸரணம்வ்ரஜ” என்று அப்பிரான் சரமஸ்லோகத்தில் தன்னையே ரக்ஷகமாக
அடையுமாறு கூறியிருக்கவும், ஸேஷபூதன் இழியுந் துறை ஸேஷியின் திருவடிகளே யாதலால்,
‘கழலே வாய்த்ததஞ்சமென்று திடமது உரைசெய்தான்’ என்றார்.
திடம் = த்ருடம்; அது – பகுதிப்பொருள்விகுதி. செல்வமுயிருடம்பு உரித்தாக்கி – பன்மையொருமை வழுவமைதி.

இது – ஸ்ரீகிருஷ்ணபகவானது திருவவதாரஸ்தலம்; முத்திதரும் நகரமேழனுள் இதுவும்ஒன்று.
கண்ணுக்கு மதுரமாயிருத்தலாலும், மதுவென்ற அசுரனை யழித்த இடமாதலாலும், இதற்கு மதுரையெனப் பெயர்வந்ததென்பர்.

————–

105-திருத் துவாரகை –

திறம் திறமாத் தாம் துய்க்கும் தீம் சுவையை நாடி
அறம் திறம்பி பாதகர் ஓர் ஐவர் நறுந்துளவ
மாதுவரை யோனே மனம் துணையாகக் கொண்டு என்னைக்
காதுவர் ஐயோ மெய் கலந்து –105-

(இ – ள்.) நறுந் துளவம் – நறுமணமுடைய திருத்துழாய்மாலையைத் தரித்த,
மா துவரையோனே – பெருமைபெற்ற துவாரகையென்னுந் திவ்வியதலத்தை வாழுமிடமாகக்கொண்டவனே! –
பாதகர் ஓர் ஐவர் – மிகக்கொடிய பாதகங்களைச் செய்வதற்குக் காரணமாய்நிற்கின்ற பஞ்சேந்திரியங்கள்,
திறம்திறம் ஆ – விதம்விதமாக,
தாம் துய்க்கும் – தாம் அனுபவித்தற்கு உரிய.
தீஞ்சுவையை – இன்சுவையுள்ளபொருள்களை,
நாடி – தேடிக்கொண்டு,
அறம் திறம்பி – தருமமார்க்கத்தினின்று தவறி,
மனம் துணை ஆ கொண்டு – (எனது) மனத்தை(த் தமக்கு) உற்றதுணையாகக்கைக்கொண்டு,
மெய் கலந்து – எனது உடலிற் பொருந்தி,
என்னை -, காதுவர் – இடைவிடாது வருத்துவார்கள்; ஐயோ -! (எ – று.)

“மனமாளு மோரைவர்” என்றபடி கொடிய பஞ்சேந்திரியங்கள் மனத்தைத் தமக்கு உற்ற துணையாகக்கொண்டு
சரீரத்திற்கு உள்ளாகவே இருந்து தம்தமக்குஉரிய விஷயங்களில் விரும்பி என்னுயிரை வருத்திக் கொல்கின்றன;
இவற்றை உனது அருளென்னுந் தண்டா லடித்து வலியொடுக்கி நற்கதி யளிக்கவேண்டுமென்பதாம்.
எம்பெருமான் சேதநர்கள் தன்னையுணர்ந்து வழிபட்டு ஈடேறுதற்பொருட்டே கரணகளேபரங்களை அவர்கட்கு அளித்திருக்க,
இந்திரியங்கள் அவ்வெம்பெருமானை வழிபடுதற்கு இசையாது மனத்தைத் துணைக்கொண்டு வேறுவழியிற் செல்லுதலால்
“பாதகர்ஓரைவர் அறந்திறம்பிக் காதுவர்’ என்றார். பஞ்சேந்திரியங்கள் புறம்பே விலகிநின்றால் ஒருவாறு உய்தல்கூடும்;
உள்ளேபுகுந்து உற்றதுணைவர் போன்று உயிரை வருத்துதலால், உய்யும் வகை யில்லை யென்பது, ‘
காதுவ ரையோ மெய்கலந்து’ என்பதன் கருத்து;
“புறப்பகைகோடியின் மிக்குறினு மஞ்சார், அகப்பகையொன்றஞ்சிக் காப்ப” என்றது காண்க.
‘திறந்திறமாத் தாம்துய்க்குந் தீஞ்சுவை’ என்றது – மெய்வாய் கண் மூக்குச் செவி யென்னும் பஞ்சேந்திரியங்களும்
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்னும் ஐவகைப் புலன்களைத் தமக்கு விஷயமாகக் கொண்டிருத்தலால் என்க.
செறலினால் ‘ஐவர்’ என அஃறிணையை உயர்திணையாக் கூறினார்.

துவரை – த்வாரகா என்ற வடசொல்லின் சிதைவு; அகன்ற துவாரத்தையுடையது எனக் காரணப்பொருள்படும்.
இதுவும் முத்திதரும் நகரமேழனுள் ஒன்று. இந்நகரம் – காலயவனன் பெருஞ்சேனையோடு வடமதுரையை
முற்றுகைசெய்தபோது அவனால் யாதவர்க்கு எங்குத் தீங்குவருமோ? என்ற கருத்தினால்
ஸ்ரீகிருஷ்ணபகவான் சமுத்திரத்தினிடையே அவ்யாதவரைப் பாதுகாக்குமாறு ஏற்படுத்தி அரசாண்ட நகரம்.
“பதினாறாமாயிரவர் தேவிமார் பணிசெய்யத் துவரையென்னு, மதில் நாயகராகிவீற்றிருந்த மணவாளர்” என்பது, பெரியார்பாசுரம்.

———–

106-திருவாய்ப்பாடி –

கலந்து அமரரோடும் கரை கண்டாரோடும்
பொலிந்து திரு நாட்டு இருக்கப் போவீர் மலிந்த புகழ்
அண்டராய்ப் பாடி அமலர் அடியார் அடியார்
தொண்டராய்ப் பாடித் தொழும்–106-

(இ – ள்.) (உலகத்தவர்களே!) –
மலிந்த புகழ் – நிறைந்த கீர்த்தியையுடைய,
அண்டர் – இடையர்கள்வாழ்கின்ற,
ஆய்ப்பாடி – திருவாய்ப்பாடி யென்னுந் திவ்வியதேசத்தி லெழுந்தருளியிருக்கின்ற,
அமலர் – குற்றமற்ற கண்ணபிரானது,
அடியார் அடியார் தொண்டர் ஆய் – தாஸஅநுதாஸர்க்கு அடிமைப்பட்டவராய்,
பாடி – (அவரது குணங்களைப்) பாடி,
தொழும் – (அவரை) வணங்குங்கள்; (அவ்வாறு வணங்கினால்), –
அமரரோடும் – நித்ய ஸூரிகளோடும்,
கரைகண்டாரோடும் – (இவ்வுலகத்தினின்று) அக்கரை சேர்ந்தவரான முக்தர்களோடும்,
கலந்து – ஒருசேரக்கலந்து,
பொலிந்து – சிறப்புப்பெற்று,
திருநாடு – பரமபதத்தில்,
இருக்க – அழிவின்றி இருக்கும்படி,
போவீர் – செல்வீர்கள்; (எ – று.)

திருமால் ஸ்ரீகிருஷ்ணனாகத் திருவவதரித்து விளையாடின இடமாகிய திருவாய்ப்பாடியி லுள்ள அடியாரின்
அடியார்கட்கு அடியவராகி அவரது குணங்களைப் பாடித் துதித்தால், அதன்பயனாக, நீங்கள் ஸ்ரீவைகுண்டலோகத்தில்
அநாதியாய் வாழ்கின்ற நித்யஸூரிகளோடும் ஸம்ஸாரத்தினின்று வீடுபெற்றுச்சென்ற முக்தரோடும்
ஒருகோவையாகக்கலந்து பேராநந்தமநுபவிக்கப்பெறுவீ ரென்று உலகத்தோர்க்கு உபதேசித்தவாறு:
இச்செய்யுளால், பாகவதசேஷத்தின் சிறப்பைக் கூறின ரென்க.

அமரர் – என்றும் மரணமில்லாதவர்; நித்யஸூரிகள் எனப்படுவர்; அவராவார் – அநந்த கருட விஷ்வக்ஸேநர் முதலியோர்.
கரைகண்டோர் – எம்பெருமானது நிர்ஹேதுககிருபையினால் தத்துவஞானம் தோன்றப்பெற்று ஸாம்ஸாரிக
ஸகலபாபங்களையும் ஒழித்து முக்தியிற் சேர்ந்தவர்கள்;
“கரைகண்டோர், துளக்கமில்லாவானவர்” என்றார் நம்மாழ்வாரும்.
இங்கு கலை கண்டார், என்ற பாடம் சாஸ்திரங்களில்வல்லவரெனப் பொருள்படுமாயினும, இனிதுபொருந்தாமை உணர்க.
அண்டர் ஆய்ப்பாடி அமலர் என்பதற்கு – இடையர்களது ஆய்ப்பாடியில் தோன்றிய குற்றமற்ற பாகவதர் என்றும்,
அண்டராகிய ஆய்ப்பாடியமல ரென்றும் பொருள் கூறினுமாம்.

ஆய்ப்பாடி – இடையர்கள்வசிக்கின்ற சேரி யெனப் பொருள்படும்; ‘கோகுலம்’ என்று வடமொழியில் வழங்கப்பெறும்.

—————

107–திருப்பாற் கடல் –

தொழும் பாய நான் நல்ல சூது அறிந்து கொண்டேன்
செழும் பாய் அலை முத்தம் சிந்தி முழங்கும்
திருப்பாற் கடலான் தாள் சேர்ந்தார் அடி சேர்ந்து
இருப்பாற்கு அடலாம் இடர் –107-

(இ – ள்.) தொழும்பு ஆய – (எம்பெருமானுக்கு) அடியவனாகிய, நான் –
நல்ல சூது – நல்ல உளவை,
அறிந்து கொண்டேன் -; (அதாவது), – செழும்பாய் அலை – செழித்த பாய்கின்ற அலைகளினால்,
முத்தம் சிந்தி – முத்துக்களைக் கொழித்து,
முழங்கும் – ஒலிக்கின்ற,
திருப்பாற்கடலான் – திருப்பாற்கடலென்னுந் திவ்வியதலத்தி லெழுந்தருளிய க்ஷீராப்திநாதனது,
தாள் – திருவடிகளை,
சேர்ந்தார் – உபாயமாக அடைந்த பாகவதர்களது,
அடி – திருவடிகளை,
சேர்ந்து இருப்பாற்கு – தஞ்சமாகப்பற்றிக் கவலையற்று இருப்பவனுக்கு,
இடர் – பிறவித்துன்பங்களையெல்லாம்,
அடல் ஆம் – ஒழித்தல் எளிதிற்கூடும் (என்பதே) ; (எ – று.)

பாகவதர்களின் திருவடிகளை யாச்சிரயித்தலே பிறவித்துன்பங்கள் யாவும் ஒழிந்து எளிதில் ஈடேறுதற்கு உரிய
உபாயமென்பதனை யான்அறிந்து கொண்டு கடைப்பிடிக்கலானே னென்பதாம்.
அற்பச்செயலாற் பெரும்பேறு சித்திக்கும் உபாய மாதலால், “நல்லசூது’ என்றார்.

எம்பெருமானது ஐவகை நிலைகளுள், திருப்பாற்கடலி லெழுந்தருளியிருப்பவன் வியூகமூர்த்தியாவன்;
“வ்யூஹமாவது – ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரார்த்தமாகவும், ஸம்ஸாரிஸம்ரக்ஷணார்த்தமாகவும்,
உபாஸகாநுக்ரஹார்த்தமாகவும் ஸங்கர்ஷண ப்ரத்யும்ந அநிருத்த ரூபணே நிற்கும் நிலை”.

வடநாட்டுத்திருப்பதிகள் முற்றும்.

————-

திரு நாட்டுத் திருப்பதி -108-

இடருடையேன் சொல்ல எளிதோ பிரமன்
அடரும் விடையோற்கும் அரிதே -தொடரும்
கருவைகும் தம் பிறவிக் கட்டு அறுத்து மீளாத்
திருவைகுந்தம் பெறுவார் சீர் –108-

(இ – ள்.) தொடரும் – (இருவினைப்பயன்காரணமாகத்) தொடர்ந்து வருவதும்,
கரு வைகும் – கர்ப்பத்தினிடத்திற் பிரவேசிப்பதற்குக் காரணமானதுமான,
தம் பிறவி கட்டு – தமது ஜந்மபந்தத்தை,
அறுத்து – (எம்பெரு மானது திருவருளால் அடியோடு) ஒழித்து,
மீளா – (தன்னிடத்துச்சேர்ந்த வர்கள்) திரும்பிவருதலில்லாததாகிய,
திரு வைகுந்தம் – ஸ்ரீவைகுண்ட லோகத்தை,
பெறுவார் – அடையப்பெறுபவர்களது,
சீர் – சிறப்பானது, –
பிரமன் – பிரமதேவனுக்கும்,
அடரும் விடையோற்கும் – போர்செய்யுந்தன்மையுள்ள ருஷபத்தை வாகனமாகவுடைய சிவபெருமானுக்கும்,
அரிது – சொல்லமுடியாதது; (என்றால்), –
இடர் உடையேன் – ஸம்ஸாரத்தில் மிகவும் உழலுகின்ற யான்,
சொல்ல – புகழ்ந்து கூறுதற்கு, எளிதோ – எளியதாகுமோ? (எ – று.)

“முதலாவார் மூவர்” என்றபடி திருமாலோடு சேர்த்து எண்ணப்படு கின்ற பிரமருத்திரராகிற மற்றை
யிருமூர்த்தியராலுமே ஸ்ரீவைகுண்டலோகத்தை யடைந்த முக்தர்களின் பெருமை சொல்லமுடியா தென்றால்,
கேவலம் ஸம்ஸாரத்தில் உழலுகின்ற ஜ்ஞாநஹீநனான என்னால் எவ்வாறு சொல்லப் போகு மென்பதாம்;
இங்குக் கைமுதிகநியாயத்தினால் (கைமுதிகநியாய மாவது – ஓர்எலி தண்டத்தை விழுங்கியதென்றால்
அதிற்கட்டப்பட்டிருந்த அபூபமும் – (பக்ஷணமும்) விழுங்கியமை பெறப்படுவதுபோல்வது.)
பிரமருத்திரர்க்கே திருவைகுந்தம் பெறுவார் சீர் சொல்ல அரிதாயின் என்னால் எவ்வாறு சொல்ல முடியு மெனக் கூறியது –
தொடர்நிலைச் செய்யுட்பொருட் பேறணியாம்.

இது – திருமாலினது ஐவகைநிலையகளுள் பரத்வம் விளங்குந் தானம்.
“பரத்வமாவது – அகால கால்யமான நலமந்தமில்லதோர்நாட்டிலே நித்ய முக்தர்க்குப் போக்யனாய்க்
கொண்டு எழுந்தருளியிருக்கும் இருப்பு.” இதுவே – பரமபதமெனவும், நித்தியவிபூதி யெனவும்படும்.

———–

மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்
பொற் பாதம் என் தலை மேல் பூ –

(இ – ள்.) மண்ணில் அரங்கம் முதல் – நிலவுலகத்திலுள்ள திருவரங்கம் பெரியகோயில் முதலாக,
வைகுந்தம் நாடு அளவும்- பரமபதநாடு வரையிலும்,
எண்ணு திருப்பதி நூற்றெட்டினையும் – நன்குமதிக்கப்படுகின்ற நூற்றெட்டுத் திருமால்திருப்பதிகளையும்,
நண்ணுவார் – சென்று சேர்பவர்களும்,
கற்பார் – (வாயினாற்) சொல்லுபவர்களும்,
துதிப்பார் – தோத்திரஞ்செய்பவர்களும்,
கருதுவார் – மனத்தினால் நினைப்பவர்களும்,
கேட்டு இருப்பார் – (பிறர் சொல்லக்) கேட்டிருப்பவர்களுமாகிய பரமபாகவதர்களது,
பொன்பாதம் – அழகிய திருவடிகள்,
என் தலைமேல் பூ – நான் முடிக்கு அணியாகச் சூடும் மலர்களாகும்; (எ – று.)

நூற்றெட்டுத்திருமால்திருப்பதிகளைப்பற்றி யாத்திரைமுதலியன செய்கின்ற அடியவர்களது திருவடித்
தாமரைகளை முடிமேற்கொள்வே னென்பதாம்.
“நூலோதி வீதி, வாழியெனவருந்திரளை வாழ்த்துவார்தம் மலரடிஎன் சென்னிக்கு மலர்ந்தபூவே” என்றது, இங்கு ஒப்புநோக்கத்தக்கது.

———–

பதின்மர் உரைத்த பதி ஒரு நூற்று எட்டும்
துதி செய்ய அந்தாதி சொன்னான் அதிக
குணவாள பட்டர் இரு கோகனத் தாள் சேர்
மணவாள தாசன் வகுத்து

(இ – ள்.) அதிகம் குணம் ஆளர் பட்டர் – மிக்க நற்குணங்கள் வாய்ந்த வரான பெரியபட்டரது,
இரு கோகனகம் தாள் – தாமரைமலர்போன்ற திரு வடித்தாமரைக ளிரண்டையும்,
சேர் – (தஞ்சமென்று) பற்றின,
மணவாள தாசன் – அழகியமணவாளதாசன், –
பதின்மர் உரைத்த – ஆழ்வார்கள் பதின்மரும் மங்களாசாசனஞ்செய்தருளிய,
பதி ஒரு நூற்றெட்டும் – திருமாலின் நூற்றெட்டுத் திருப்பதிகளையும்,
துதி செய்ய – தோத்திரஞ் செய்யுமாறு,
வகுத்து – (சோழநாடு முதலியனவாகப்) பகுத்துக்கொண்டு,
அந்தாதி சொன்னான் – இந்த அந்தாதிப்பிரபந்தத்தைப் பாடினான்; (எ – று.)

ஆழ்வார் பதின்மரும் மங்களாசாசனஞ் செய்தருளிய நூற்றெட்டுத் திருப்பதிகளையும் யாவரும் உணர்ந்து துதிக்குமாறு
சோழநாடு முதலாகப் பிரித்துக்கொண்டு நூற்றெட்டுத் திருப்பதியந்தாதியைப் பிள்ளைப்பெருமாளையங்கார் பாடின ரென்பதாம்.

இச்செய்யுளிரண்டும் – நூலாசிரியர் தம்மைத் தானே பிறன்போலும் பாயிரங்கூறியன; பிரயோகவிவேகநூலார் –
‘இது, தன்னைப் பிறன்போலும் நாந்தி கூறுகின்றது. வடநூலார் தாமே பதிகமும் உரையும் செய்வார்:
இனிச் சம்பந்தர் சடகோபர் முதலாயினாரும் திவாகரரும் பதினெண்கீழ்க்கணக்குச் செய்தாரும்
முன்னாகப் பின்னாகப் பதிகங்கூறுவதுங் காண்க’ என்றவை கருதத்தக்கன. இது, தற்சிறப்புப்பாயிர மெனப்படும்.

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி முற்றிற்று.

இதுவரையிற் கூறிவந்த திருப்பதிகள் மயர்வறமதிநலம்அருளப் பெற்ற ஆழ்வார்களால் மங்களாசாஸனம்
செய்யப்பட்டு மிகவும்ஏற்றம்பெற்றன.
இவைகளன்றி, முனிவர்முதலியோரால் ப்ரதிஷ்டைசெய்யப்பட்டு ஏற்றம் பெற்ற புராணஸ்தலங்களும்,
ஆழ்வாராசாரியர்களின் திருவவதாரம் முதலியசம்பந்தங்களினால் ஏற்றம்பெற்ற தலங்களும், உண்டு அவையாவன:-

1. திருநாராயணபுரம் – செல்வப்பிள்ளை’ எழுந்தருளிய தலம். ஸ்ரீபாஷ்ய காரர், திருநாராயணன் செல்வப்பிள்ளை
என்ற இவர்கட்குச் சந்நிதி முதலியன நிர்மாணம்செய்து செல்வப்பிள்ளையை எழுந்தருளப் பண்ணி
உத்ஸவாதிகளையெல்லாம் நடப்பித்தருளினர்.
நாராயணா த்ரியென்றும், வேதாத்ரியென்றும், யாதவாத்ரியென்றும், யதிசைலமென்றும் மறுபெயர்களையுடைய
பிரசித்தமான தலம் இதுவே. இது மேல்நாட்டி லுள்ளது.

2. ராஜமன்னார் கோயில் – ராஜகோபாலன் எழுந்தருளிய தலம்.

3. ஜநார்த்தநம் – ஜநார்த்தநப்பெருமாள் எழுந்தருளிய தலம்; இப்பெருமான் தமது கையிற் கொண்டுள்ள நீரை
யுகமுடிவில் ஆசமநஞ் செய்வரென்பர்; இது, மேலைக்கடற்கரையி லுள்ளது.

4. ஸ்ரீழமுஷ்ணம் – ஆதிவராகப்பெருமாள் எழுந்தருளியதலம். இது, எட்டு ஸ்வயம்வ்யக்தஸ்தலங்களில் ஒன்று. சோழநாட்டி லுள்ளது.

5. புஷ்கரம் – தீர்த்தஸ்வரூபியாகிய எம்பெருமான் எழுந்தருளிய தலம். இது, ஸ்வயம்வ்யக்தஸ்தலங்களில் ஒன்று.

6. ஜகந்நாதம் – ஸ்ரீகிருஷ்ணமூர்த்தி எழுந்தருளிய தலம். புருஷோத்தமம் என்னும் மறுபெயருடையது. வடநாட்டி லுள்ளது.

7. ஸ்ரீகூர்மம் – ஸ்ரீவராகப்பெருமாள் எழுந்தருளிய தலம்.

8. சிங்கப்பெருமாள்கோயில் – இது, தொண்டைநாட்டிலுள்ளது; நரசிங்க மூர்த்தி எழுந்தருளியுள்ள தலம்.

9. அவந்தி – கண்ணன் எழுந்தருளிய தலம். உஜ்ஜயினி என்னும் மறுபெய ருடையது. இது, முத்திதரும்நகரங்கள் ஏழனுள் ஒன்று.

10. கயா – பல்குனி நதிக்கரையி லுள்ளது. சிராத்தபிண்டம் போடும்படி யான விஷ்ணுபாதத்தை யுடையது.

11. ப்ரயாகை – மாதவப்பெருமாள் ஆலிலையில் பள்ளிகொண்டுள்ள தலம் அலகபாத் என்னும் மறுபெயருடையது.

12. மயிலாப்பூர் – இது, முதலாழ்வார்கள் மூவரில் பேயாழ்வார் திருவவதரித்த தலம்.

13. திருமழிசை – திருமழிசையாழ்வார் திருவவதரித்த தலம். மஹீஸாரக்ஷேத்ரம் என்னும் மறுபெய ருடையது.

14. திருவஞ்சிக்களம் – குலசேகராழ்வார் திருவவதரித்த தலம். மலை நாட்டி லுள்ளது.

15. திருமண்டங்குடி – தொண்டரடிப்பொடியாழ்வார் திருவவதரித்த தலம்.

16. திருக்குறையலூர் – திருமங்கையாழ்வார் திருவவதரித்த தலம்.

17. காட்டுமன்னார்கோவில் – ஸ்ரீமந்நாதமுனிகளும் ஸ்ரீஆளவந்தாரும் திருவவதரித்த தலம்.

18. பூவிருந்தவல்லி – திருக்கச்சிநம்பிகள் திருவவதரித்த தலம்.

19. ஸ்ரீபெரும்பூதூர் – ஸ்ரீ பாஷ்யகாரர் திருவவதரித்த தலம். இவர்க்குப் பெரிய நம்பிகள் தவயம் உபதேசம்செய்த தலம் – ஸ்ரீ மதுராந்தகம்.

20. கூரம் – கூரத்தாழ்வான் திருவவதரித்த தலம்.

21. மழலைமங்கலம் – எம்பார் திருவவதரித்த தலம்.

22. பச்சைப்பெருமாள்கோயில் – முதலியாண்டான் திருவவதரித்த தலம்.

மற்றும் பல வுள.

——————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading