சங்கத் தமரர் குழாத்தொடு மூழ்வினை தான் விலங்கச்
சங்கத் தமரன்ப ராயிருப்ப பீர்கடறானவர் தே
சங்கத் தமரம் படவெய்த சார்ங்கத் தனுவரங்கன்
சங்கத் தமரன் சரணே சரண் என்று தாழ்ந்து இருமே –81-
கடல் – சமுத்திரமும்,
தானவர் தேசம் – அசுரர்களுடைய நாடும்,
கத்த – தவித்துக்கதறவும்,
மரம் பட – (ஏழு) மராமரங்கள் அழியவும்,
எய்த – அம்பு எய்த
சார்ங்கம் தனு – சார்ங்கமென்னும் வில்லை யுடைய,
அரங்கன் – ரங்கநாதனும்,
சங்கம் தமரன் – (பாஞ்சஜந்யமென்ற) சங்கத்தின் முழக்கத்தை யுடையவனு மாகிய திருமாலினது,
சரணே – திருவடிகளே,
சரண் – ரக்ஷகம்,
என்று – என்று கொண்டு,
தாழ்ந்திரும் – (அவற்றை) வணங்கி யிருங்கள்; (அங்ஙனமிருப்பீராயின்),
ஊழ்வினை தான் விலங்க – (உங்கள்) கருமமுழுதுந் தொலைய,
சங்கத்து அமரர் குழாத்தொடும் – (எம்பெருமான் பக்கல்) மனம் பற்றுதலை யுடைய நித்திய ஸூரிகள் வர்க்கத்தோடு ஒப்ப,
சங்கத்து அமர் – (அவர்களுடைய) கூட்டத்திற் பொருந்திய,
அன்பர் ஆய் – அடியார்களாய் (முக்தர்களாய்),
இருப்பீர் – (பரமபதத்தில்) வாழ்ந்திருப்பீர்கள்; (எ – று.)
திருவரங்கனது திருவடியே தஞ்சமென்று சரண் புகுந்திருப்பீராயின், பரம பதத்தில் நித்ய ஸூரிகள் சமூகத்தில்
அவர்களோடொப்ப இருக்கப் பெறுவீரென உலகத்தார்க்கு உபதேசித்ததாம்.
முதலடியில், சங்கம் = ஸங்கம்; இரண்டாமடியில், சங்கம் = ஸங்கம்; நான்காமடியில், சங்கம் = சங்கம்.
அமரர் மரணமில்லாதவர்; “அயர்வறு மமரர்களதிபதி யவனவன்” என்றவிடத்துப் போல,
“அமரர்” என்பது – இங்கு, முத்தி யுலகத்து நிரதிசய வின்பமனுபவிக்கிற நித்திய ஸூரிகளைக் குறித்தது.
இராமபிரான் ஆக்கினேயாஸ்திரம் பிரயோகித்துக் கடலை வற்றுவிக்கத் தொடங்கிய போது தாபமடைந்து
அஞ்சிக் கதறியோடி வந்து சரண் புகுந்து ஒடுங்கி நின்று தன் பிழையைப் பொறுக்குமாறு பிரார்த்தித்த
வருணனுக்கு அபயமளித்து அவனை நோக்கி “எனது அம்பு வீண் போகாதாதலால், அதற்கு இலக்கு ஏன்?” என்ன,
நீர்க்கடவுள் “மரு காந்தாரமென்ற தீவில் நூறு கோடிக்கும் மேலாக வாழ்கிற அசுரர்கள் மிகக் கொடியராய் உலகத்தை வருத்துதலால்,
அவர்கள் மேல் இந்த அனலம்பை விடுத்தருள்க” என்று சொல்ல,
இராம மூர்த்தி அங்ஙனமே அதனை விடுத்து அவ்வசுரர்களனைவரையும் எரித்தொழித்தன னென்ற வரலாற்றை யுட்கொண்டு,
“கடல் தானவர் தேசங் கத்த வெய்த” என்றார்.
இராமனம்பினாற் பீடிக்கப்பட்டு அம்மருகாந்தார பூமி அலறிற்றென்று ஸ்ரீவால்மீகி பகவான் கூறியிருத்தலுங் காண்க.
கடல் தானவர் தேசம் – கடலிடையேயுள்ள அசுரர் நாடுமாம்.
சார்ங்கமென்பது – திருமால் வில்லின் பெயர்.
திருமாலின் அம்சமான இராமபிரானது வில் அவ் விஷ்ணு தநுசின் அம்சமுடைய தென்பார், இங்கு “சார்ங்கத்தனு” என்றார்.
சரண் – சரண மென்ற வட சொல்லின் விகாரம்; ஏ – பிரிநிலை.
“சார்ங்கத்தன் றண்ணரங்கன்” என்றும், “என்று சார்ந்திருமே” என்றும் பாடமுண்டு.
கடல் தானவர் தேசம் – கடல்போன்ற (பெரு வெள்ளமாகத் திரண்ட) அசுரர்களுடைய நாடுகளை,
கத்து அமர் – ஆரவாரிக்கின்ற போரிலே, அம்பு அட – தனது அம்புகள் அழிக்கும்படி,
எய்த – பிரயோகித்த என்று உரைப்பாரு முளர்.
சங்கத்து அமரர் என்பதற்கு – சங்கமென்னுந்தொகை யளவினரான அமரர்க ளென்று உரைத்தலு மொன்று;
கீழ் “தாமரை மாத்திரை வானவர்” என்றாற்போல:
சங்கம் – ஓர் பெருந் தொகை; நூறு பதுமங் கொண்டது. ஈற்றடி – முற்றுமோனை.
———-
இருந்தே னுகமுட வன்வரை நோக்கி யிருப்பது போல்
இருந்தே னுகந்துனை வைகுண்ட நோக்கி யெதிர் பொருந்கேள்
இரும்தே னுகனும் படவதைத் தாய் வெண்ணை யாமத் தொளித்து
இருந்தே னுகரரங் காகாணு நாளினி யென்றருளே–82-
எதிர் பொரும் – எதிரில் வந்து போர் செய்த,
தேனுகனும் – தேநுகாசுரனும்,
கேளிரும் – அவ்வினத்தாரான மற்றும் பல அசுரர்களும்,
பட – அழியும்படி,
வதைத்தாய் – (அவர்களைச்) சங்கரித்தவனே!
யாமத்து – இராத்திரி காலத்தில்,
ஒளித்திருந்தே – (ஆயர் மனையில்) மறைந்திருந்து கொண்டே,
வெண்ணெய் நுகர் – (கிருஷ்ணாவதாரத்திலே) வெண்ணெயை (க் களவுசெய்து) உண்ட,
அரங்கா – ! –
இருந்தேன் உக – பெருமையுள்ள (சுவை மிக்க) தேன் (தனது நாவிலே) சிந்த வேண்டு மென்று கருதி
முடவன் – முடவனொருவன்,
வரை நோக்கி இருப்பது போல் – (அத் தேன் கூட்டை யுடைய) மலையை (ஆசையோடு அண்ணாந்து) பார்த்திருந்தாற்போல,
உனை உகந்து வைகுந்தம் நோக்கி இருந்தேன் – உன்னை யடைய விரும்பிப் பரம பதம் சேர்தலை நெடு நாளாக எதிர் நோக்கி யிருக்கிறேன்;
காணும் நாள் – (அப் பரம பதத்தை நான்) அடைந்து உன்னைத் தரிசிக்குங்காலம்,
இனி என்று – இனி எப்போதோ!
அருள் – அருளிச் செய்வாய்; (எ – று.)
யாதொரு முயற்சியுஞ் செய்ய மாட்டாத முடவன் தனக்குக் கிடைத்தற்கு அரிய தென்று ஆராய்ந்துணராது
கொம்புத் தேனுக்கு ஆசை யுற்றிருந்தாற் போல, அதிகார பூர்த்தி யில்லாத யான் பெறுதற்கு அரிதென்று கருதாமல்
பரம பதத்தில் உன்னை யடைய நெடுநாளாக அவா வுற்றிருக்கிறேன்;
அடியேனுக்கு விரைவில் அருள் புரிய வேண்டு மென்பதாம்.
காணும் நாள் இனி என்று அருள் – அந்நாள் இந்நாளென்று சொன்னாலும் அதனை
எதிர்பார்த்துக் கொண்டு ஆறி யிருப்பேனென்பது, குறிப்பு.
கேளிர் என்றது, மற்றும் கண்ணனைக் கொல்லும்படி கம்சனா லேவப் பட்ட பிரலம்பன், கேசி, பூதனை,
அரிஷ்டன், கபித்தன், வத்ஸன் முதலிய அசுர வர்க்கத்தாரைக் குறிக்கும்;
இனி, தனது உறவினரென்று கொண்டு, சிசுபாலன் முதல் நாராயண கோபாலர் ஈறாகத் தனது நெருங்கிய
உறவினர் பலரைத் தான் நேராகவும் அருச்சுனனைக் கொண்டுங் கொன்ற செய்தியைக் குறித்ததாகவுங் கொள்ளலாம்.
கேளிர் – (யோக க்ஷேமங்களைக்) கேட்குந் தன்மையை யுடையவர்; எனவே, உறவினரும் நண்பரு மாவர்:
இதனை, கேண்மை யென்ற பண்பினடியாப் பிறந்த தென்னலாம்: இர் – பலர்பால் விகுதி.
யாமம் – ஏழரை நாழி கைகொண்ட பொழுது, மூன்று யாமங்களை யுடையதான இரவுக்கு ஆகு பெயர்;
“த்ரியாமா” என்பது, இரவினொருபெயர். “இல்லிலொளித்து” என்றும், “ஆளுநாள்” என்றும் பாட முண்டு.
“வெண்ணெய்யாமத்து ஒளித்திருந்தே நுகர்” என்றதனால், இவ் வுடம்பாகிய உறியிலே கட்டுப் பட்டுள்ள
வெண்ணெய் போலச் சாரமான ஆத்மாவை விரும்பி எவரும் அறியாதபடி கைக் கொண்டு அநுபவிப்பவன்
எம்பெருமானென்பது தோன்று மென்பர்.
“ஒளித்திருந்து” என்றவிடத்து, “இருந்து” என்பது – துணைவினை: “எழுந்திருந்து” என்ற விடத்துப் போல.
“நுகர்” என்றதன் நகரம் னகரமாகத் திரித்துக் கொள்ளப் பட்டது, யமகத்தின்பொருட்டு.
வெண்ணெய் + யாமம் = வெண்ணெ யாமம்; தனிக் குறிலைச் சாராத யகரம், யகரம் வரக் கெட்டது.
————–
அரும்பாகவ தரிக்கும் பெயராய் புள்ளரசி னுக்கோர்
அரும்பாகவ தரத்துப் பனை யாயரங்கா வென வுண்
அரும் பாகவதர் பத தீர்த்தம் கொள்ளாதடிகள் கொப்புள்
அரும்பாகவதர் தொலைப்பார் கல்லார் கங்கை யாடுதற்கே –83-
கல்லார் – அறிவில்லாதவர்கள், –
“அரும் பாகு அவதரிக்கும் பெயராய் – (துதிப்பவர் நாவிலே) மேன்மையான கருப்பஞ் சாற்றுப் பாகு போன்ற
இனிமை யூறும்படியான திரு நாமங்களை யுடையவனே!
புள் அரசினுக்கு ஓர் அரும் பாக – பக்ஷி ராஜனான கருடனுக்கு ஓர் அருமையான பாகனே!
(கருடனை வாகனமாகக் கொண்டு ஏறி நடத்துபவனே!),
அதரம் துப்பு அனையாய் – வாயிதழ் பவழம் போலச் சிவந்தவனே!
அரங்கா – திருவரங்கனே!
என உணரும் – என்று (எம்பெருமானை) அறிந்து துதிக்கின்ற,
பாகவதர் – ஸ்ரீவைஷ்ணவர்களுடைய,
பத தீர்த்தம் – ஸ்ரீபாததீர்த்தத்தை,
கொள்ளாது – ஏற்று உட் கொள்ளாமல், –
கங்கை ஆடுதற்கு – கங்கா ஸ்நாநஞ் செய்தற் பொருட்டு,
அடிகள் கொப்புள் அரும்பு ஆக அதர் தொலைப்பார் – (நடந்து யாத்திரைசெய்வதனால்) உள்ளங் கால்களிற்
கொப்புளங்கள் அரும்பு போலுண்டாக அரு நெறிகளைக் கடந்து கழிப்பார்கள்; (எ – று.)
திருமாலின் மெய்யடியார்களுடைய ஸ்ரீபாத தீர்த்தங் கொள்ளாமல் கங்கா ஸ்நாநஞ்செய்தலினால் என்னபயன்? என்பதாம்.
பகவத் பாத தீர்த்தமாகிய கங்கையினும் பாகவத பாத தீர்த்தம் மேம்பட்ட தென்பது, குறிப்பு.
பாகவதர் – பகவானுடைய பக்தர்; வடமொழித்தத்திதாந்தநாமம்.
“ராமநாமமே கற்கண்டு” என்றாற்போல, “அரும்பாகு அவதரிக்கும்பெயராய்” என்றார்.
அதரம் – வடசொல். முதலடியில், அருமை – மேன்மை; (ஒப்பு) இல்லாமையுமாம்.
————
ஆடு முன் னீர்முதற் றீர்த்தத்தி னாலரு மாதவத்தால்
ஆடுமுன் னீர் மறை வேள்வியி னாலண்ட ராயுடன் மாறு
ஆடுமுன் னீரது மாயையி னால் என்று அரங்கனைக் கொண்ட
ஆடுமுன் னீர் செய்த பாவமும் போய் முத்தராம் வண்ணமே -84-
ஆடும் முந்நீர் முதல் தீர்த்தத்தினால் – நீராடுகிற கடல் முதலிய புண்ணிய தீர்த்தங்களினாலும்
(புண்ணிய தீர்த்தங்களில் நீராடுதலினாலும்),
அரு மா தவத்தால் – (செய்தற்கு) அரிய பெருந் தவத்தைச் செய்தலினாலும்,
ஆடு முன் ஈர் மறை வேள்வியினால் – ஆடு முதலியவற்றை அறுக்கிற வேத விதிப்படி செய்யும் யாகங்களினாலும்,
அண்டர் ஆய் உடல் மாறாடும் – (மனித சன்மம் நீங்கித்) தேவ சன்மமாக உடம்பு மாறும்:
அது, அங்ஙனம் வேற்றுமை யடைவது தானும்,
மாயையினால் – (திருமாலினது) மாயையினாலேயே,
என்று முன்னீர் – என்று எண்ணுங்கள்:
முன் நீர் செய்த பாவமும் போய் முத்தர் ஆம் வண்ணம் – முற் பிறப்புக்களில் நீங்கள் செய்த தீ வினைகளும் தீர்ந்து
முத்தி பெற்றவராகும்படி, அரங்கனை கொண்டாடும் – ஸ்ரீரங்கநாதனைத் துதியுங்கள்; (எ – று.)
தீர்த்த யாத்திரை, தவம், யாகம் என்பன செய்தலாற் சுவர்க்கம் பெறலாம்;
அங்ஙனம் பெறுதலில், மனித சன்மம் ஒழிந்து தேவ சன்மம் நேரும்: அதுவும் கரும வசப்பட்டதே யாதலால்,
அங்ஙனம் பிறவி மாறுதலிற் பயனென்னே!
எம்பெருமானைத் துதித்தால் தான் பிறப்பு ஒழிய மாயையைக் கடந்து முத்தி பெறலாம் என்பது, கருத்து.
தேவர்கள் நல் வினைப் பயனால் இன்ப நுகர்வரேனும் உயிரைப் பந்தப் படுத்துவதில் பொன் விலங்கும் இருப்பு விலங்கும் போலப்
புண்ணிய சன்மமும் பாவ சன்மமும் சமமே யாதலாலும், அத்தேவர்களும் நல்வினை முடிந்தவுடனே அவ்வுடம்பு ஒழிய மீளவும்
இவ் வுலகத்திற் கரும வசத்திற்கு ஏற்ப வேறு பிறவி கொள்வராதலாலும், சுவர்க்கப் பேறு வீடு பேறு போலச் சிறந்ததாகாதென்க.
தேவ சன்மம் எழுவகைப் பிறப்புக்களிலும் நால் வகைக் கதிகளிலும் ஒன்றாதல் காண்க.
முந்நீர் என்பது, முன்னீர் என னகரம் திரித்துக் கொள்ளப்பட்டது யமகத்தின் பொருட்டு;
முன்னீர் என்றே கொண்டு, பழமையான நீரெனக் கடலைக் குறிக்கலாமாயினும்,
நான்காமடியில் முன் என்பது – முற்காலத்திலென்ற பொருளில் வருதலால், அங்ஙனங்கொள்ளுதல் சிறவாது.
ஆடு – ஆட்டை, முன் – எதிரிலே, ஈர் – அறுக்கிற என்றும் பொருள்படும்; முன் – இடமுன்.
ஈர் வேள்வி – வினைத் தொகை; ஈர்தல் – அரிதல். அண்டம் – வானம்: அதிலுள்ளவர், அண்டர்.
முன்னீர் – ஏவற்பன்மைமுற்று; முன்னிலை யெதிர்மறைப் பன்மை முற்றாகக் கொண்டு, நினைக்க மாட்டீ ரென்றலு மொன்று;
உன்னீர் என்று எடுப்பினும், இப் பொருள்கள் படும்.
———-
வண்ணங் கலிவஞ்சி வெண்பா வகவல் வகை தொடுத்தோர்
வண்ணங் கலிகெட வேண்டுமென் றேமக்கண் மாட்டுரையேன்
வண்ணங் கலிகடல் போல் வானரங்கன் வகுளச் செல்வன்
வண்ணங் கலி யன் புகழ் தாள் எனக்கென்று மா நிதியே –85-
ஓர் வண்ணம் கலி கெட வேண்டும் என்றே – (ஏதேனும்) ஒரு விதமாக வறுமை யொழிய வேண்டுமென்றே கருதி
(எவ்வாற்றாலாயினும் பொருளீட்டுதலையே முக்கியமாகக் கொண்டு),
மக்கள் மாட்டு – மனிதர்கள் பக்கல் (மனிதர்கள் விஷயமாக),
வண்ணம் கலி வஞ்சி வெண்பா அகவல் வகை தொடுத்து உரையேன் – அழகிய கலிப்பாவும் வஞ்சிப்பாவும் வெண்பாவும்
ஆசிரியப்பாவும் அவற்றின் இனமுமான செய்யுள்களைப் புனைந்து கவி பாடேன்;
வண்ணம் கலி கடல் போல்வான் – திருமேனி நிறம் ஒலிக்கின்ற கடல் போன்றவனாகிய,
அரங்கன் – ரங்கநாதனது,
வகுளம் செல்வன் வள் நம் கலியன் புகழ் தாள் – மகிழ மலர் மாலையை யுடைய ஞானச் செல்வரான நம்மாழ்வாரும்
ஞான வளத்தையுடைய நமது திருமங்கையாழ்வாரும் துதி செய்த திருவடிகளே,
எனக்கு என்றும் மா நிதி – அடியேனுக்கு எப்பொழுதும் பெரிய செல்வமாம்; (எ – று.)
வண்ணம் என்பதற்கு – வண்ணமென்னும் உறுப்புக்கு இடமான என்றும் பொருள் கொள்ளலாம்:
செய்யுளுறுப்புக்களிலொன்றாகிய வண்ணமாவது – ஒரு பாவின் கண் நிகழும் ஓசை விகற்பம்;
அது, வல்லெழுத்துமிக்கு வருதலாகிய வல்லிசை வண்ணமும்,
மெல்லெழுத்து மிக்குவருதலாகிய மெல்லிசை வண்ணமும்,
இடையெழுத்துமிக்குவருதலாகிய இயைபு வண்ணமும்,
நெட்டெழுத்துப் பயின்று வருதலாகிய நெடுஞ்சீர் வண்ணமும்,
குற்றெழுத்துப் பயின்று வருதலாகிய குறுஞ்சீர் வண்ணமும்,
நெட்டெழுத்தும் குற்றெழுத்தும் சமமாக விரவி வருதலாகிய சித்திர வண்ணமும்,
ஓசையான் ஒழுகி நடப்பதாகிய ஒழுகு வண்ணமும் முதலாகப் பலவகைப்படும்.
கலிப்பா முதலிய நால் வகைப் பாக்களில் ஒவ்வொன்றன் இனமும், தாழிசை துறை விருத்தம் என்று மூன்று வகைப்படும்.
மக்கள் மாட்டு, மாட்டு – ஏழனுருபு: நான்கனுருபின் பொருளில் வந்தது.
வண்ணம் – வர்ண மென்ற வடசொல்லின் விகாரம்.
கலி கடல் – வினைத்தொகை. கலி – கடலுக்கு இயற்கையடை மொழி. அரங்கன்தாளென இயையும்.
வகுளம், நிதி – வடசொற்கள்.
தம் பக்கல் திருவுள்ளமுவந்து திருக் குறுகூர்ப் பொலிந்து நின்ற பிரான் பிரசாதித்த மகிழ மலர் மாலையைத் தரித்ததனால்,
நம்மாழ்வார்க்கு, வகுளாபரண ரென்று ஒரு திருநாமம் வழங்கும்.
ஆழ்வார்கள் பன்னிருவரில் திருவாய்மொழிப் பிரபந்தம் முதலிய நான்கு தமிழ் வேதங்களையும் அருளிச் செய்தவரான நம்மாழ்வாரையும்,
பெரிய திருமொழி முதலிய ஆறு அங்கங்களையும் அருளிச் செய்தவரான திருமங்கை யாழ்வாரையும் எடுத்துக் கூறியது,
மற்றைப் பதின்மர்க்கும் உபலக்ஷணம்.
எம் பெருமான் திருவடிகள், வேண்டும் பொருள்களை யெல்லாந் தந்து தாமும் குறையாமையால், “மாநிதி” எனப்பட்டன.
அத் திருவடியாகிய பெரு நிதியைப் பெற்றுள்ளேனாதலால், ஒருவாறு வறுமை கெட வேண்டுமென்று உரையேனென்றார்.
ஓர் வண்ணம் தொடுத்து என இயைத்தலுமொன்று.
————-
மானா கவரு நிருதன்புன் மாயையின் மங்கை யென்னு
மானா கவரு மணியை முன்நீங்கினான் மாயன் என்பார்
மானா கவரும் பலர் சோலை சூழ மதிலரங்கா
மானா கவரு மமுதே யதுவு நின் மாயமன்றே –86-
மால் – பெரிய,
நாகம் – புன்னை மரத்தினது,
அரும்பு – அரும்புகள்,
அலர் – மலரப் பெற்ற,
சோலை – சோலைகள்,
சூழும் – சூழ்ந்த,
மதில் அரங்கா – மதில்களை யுடைய திருவரங்கத்தி லுள்ளவனே!
மால் நா கவரும் – ஆசையுடன் (அடியார்களால்) நாவிற் கொண்டு நுகரப்படுகிற,
அமுதே – அமிருதம் போன்றுள்ளவனே! –
மாயன் – ஆச்சரியகரமான குணஞ் செயல்களை யுடையவனாகிய இராமபிரன்,
மான் ஆக வரும் நிருதன் புல் மாயையின் – மான் வடிவமாக வந்த மாரீசனென்ற அரக்கனது அற்பமான மாயையினால்,
மங்கை என்னும் – தனது மனைவியாகிய,
மால் நாகம் அரு மணி யை – (விஷத்தினால்) மயக்கத்தைச் செய்யுந் தன்மையதான சர்ப்பத்தினது பெறுதற்கு அரிய மாணிக்கத்தை,
முன் – முன்பு,
நீங்கினன் – பிரிந்தான்,
என்பார் – என்று சொல்வார்கள்:
அதுவும் – அங்ஙனம் மயங்கியதும்,
நின் மாயம் அன்றே – நீகாட்டிய மாயை யன்றோ; (எ – று.) – அன்றே – தேற்றம்.
நினது சங்கல்பத்தினாற் கொண்ட மநுஷ்ய பாவனையினாலேயே அங்ஙனம் மாயைக்கு உட்பட்டவன் போன்று காட்டினா யென்றபடி.
நாகமணி – நாகரத்நம்; கிடைத்தற்கு அருமையும் ஒளியும் பற்றி, அது பிராட்டிக்கு உவமை கூறப்பட்டது.
நாவினால் துதித்தற்கு இனிய னென்பது, “நா கவரும் அமுது” என்பதன் கருத்து
——————
மாயா தவர் தலை வாவரங் காவட மா மதுரை
மாயா தவரண்டர் வந்தடைந் தான்மழு வாளிபிர
மாயா தவர்செய்வர் முந்நூல் செந்நூல் கொண்ட வண்ணமொப்ப
மாயா தாவரத் தனைக் குடர் கோத்ததுன் வாணகமே –87-
மா யாதவர் தலைவா – பெருமையை யுடைய யது குலத்தார்க்குத் தலைவனே!
அரங்கா – !
வட மா மதுரை மாயா – வடதிசையிலுள்ள பெரிய மதுரையிற் கண்ணனாக அவதரித்த மாயவனே! –
தவர் – முனிவர்களும்,
அண்டர் – தேவர்களும்,
வந்து அடைந்தால் – (கொடிய பகைவர்க்கு அஞ்சி) வந்து சரணமடைந்தால்,
மழு ஆளி – சிவனும்,
பிரமா – பிரமனும் ஆகிய,
அவர் – அவ்விரு மூர்த்திகளும்,
யாது செய்வர் – என்ன செய்ய மாட்டுவர்! (ஒன்றுஞ்செய்யத் திறமில்லாரென்றபடி);
உன் வாள் நகமே – உனது வாள் போற் கூரிய நகமே,
முந்நூல் செந்நூல் கொண்ட வண்ணம் ஒப்ப – (நினது மார்பில் விளங்கிய வெண்ணிறமான) முப்புரி நூல் சிவந்த நூலை
வடமாக அணிந்தவிதத்தை யொக்கும்படி,
மாயாத வரத்தனை குடல் கோத்தது – (பலவாற்றாலும்) அழியாத வரத்தைப் பெற்றவனாகிய இரணியனது
குடலைப் பிடுங்கி மாலையாக அணிந்தது; (எ – று.) –
ஈற்றுஏகாரம் – பிரிநிலையோடு, சிறப்பு.
“முந்நூல் செந்நூல் கொண்ட வண்ண மொப்ப” என்றது –
கூருகிர் நுதியில் பைந்தேன் பொழி மலர் அலங்கன் மார்பம் போழ்ந்து
செங்குருதி யூறி வழி பசுங்குடர் மென் கண்ணி யாளரி வளைந்ததன்றே –
என்றபடி நரசிங்க மூர்த்தி இரணியனது மார்பைத் தனது கைந்நகங்களினாற் பிளந்து குடலைப் பறித்து மாலையாகத்
தரித்துக் கொண்ட போது அக்குடலினின்று வழிந்த இரத்தப் பெருக்கின் சம்பந்தத்தால் வெண்புரிநூல் செந்நூல்போலாயிற் றென்றும்,
இரத்தமூறுதலாற் செந்நிறமான அக்குடலானது செந்நூலினாலானதோ
ருபவீதத்தை நிவீதமாக (கழுத்தில் மாலை போலத் தொங்கும்படி) அணிந்தது போலுமென்றுங் கருத்துப்படும்.
இரணியன், தனித்தனி தேவர் மனிதர் விலங்கு முதலிய பிராணிகளாலும் ஆயுதங்களாலும் பகலிலும் இரவிலும்
பூமியிலும் வானத்திலும் வீட்டின் அகத்திலும் புறத்திலும் தனக்குமரணமில்லாதபடி வரம்பெற்றவனாதலால்,
“மாயாதவரத்தன்” எனப் பட்டான்.
பிரம ருத்திரர்கள் தம்மைக் குறித்துத் தவம் புரிந்து துதித்துப் பிரார்த்திக்கின்ற அசுரர் முதலிய கொடியவர்கட்கு அவர்கள்
வேண்டியபடி யெல்லாம் பெரு வரங்களைக் கொடுத்திடுதலும், அவற்றால் அவர்கள் மிகச் செருக்கி உலகங்களைப் பலவாறு
வருத்திய காலத்தில் தேவர்களும் இருடிகளும் முதலிற் சிவபிரானைப் போயடுக்க
அப்பெருமான் தன்னா லொன்றுமாகாமற் பிரமனை யடுக்க
அத்தேவனும் அங்ஙனமே விஷ்ணுவைச் சரணமடைய
அப்பரமன் அங்ஙனமே அவர்கட்கு அபயமளித்து அவ்வசுரர்களை உரிய சூழ்ச்சி பல செய்து அழித்தலுமாகிய
வழக்கத்துக்கு இரணியன் செய்தி ஓருதாரணமாதலை இச்செய்யுளில் விளக்கினார்.
சந்திரகுலத்து யது வென்னும் அரசனது மரபில் திருமால் கண்ணனாகத் திருவவதரித்துச் சிறப்புற்றதனால் “மா யாதவர்தலைவா” என்றும்,
அக்கண்ணன் மதுரையில் திருவவதரித்து முதலிற்செய்த மாயங்கள் அநந்தமாதலால் “வடமாமதுரைமாயா” என்றும் விளித்தார்.
மழுஆளி – மழுவென்னும் ஆயுதத்தை யாள்பவன்; இ – ஆண்பாற்பெயர்விகுதி.
வடமும், வடத்திற் புரியும், புரியிலிழையும் மூன்றாகவுள்ளதனால், உபவீதத்துக்கு, முந்நூ லென்று பெயர்.
முந்நூல், செந்நூல் – பண்புத்தொகைகள்.
மாயாத வரத்தனைக் குடல் கோத்தது உண் வாணகமே –
மேருகிரி யுடல் அவுணன் மிடல் கெடுத்தாய் என்பர் அது உன் கூர் உகிரே யறிந்தது யல்லால் கோவே நீ அறியாயால் -என்பரே
———-
நகமுண் டகந்தரித் தாற்கருண் மாயற்கு ஞால முந்நீர்
நகமுண் டகமகிழ்ந் தாற்கடியே மென்மி னற்கதிவா
நகமுண் டகம்பர னென்னா தரங்கனை நாடிலயன்
நகமுண் டகமலர் தான்குவி யாது நடுக்குளத்தே –88-
நக – (கண்டவரனைவரும்) பரிகாசமாகச் சிரிக்கும்படி,
முண்ட கம் தரித்தாற்கு – முண்டமாகிய தலையை (பிரம கபாலத்தை)க் கையிற் கொண்டவனான சிவபிரானுக்கு,
அருள் – கருணைசெய்த,
மாயற்கு – ஆச்சரிய சக்தியை யுடையவனும்,
ஞாலம் – பூமியையும்,
முந்நீர் – கடல்களையும்,
நகம் – மலைகளையும்,
உண்டு – (பிரளய காலத்திலே) திருவயிற்றினுட் கொண்டு,
அகம் மகிழ்ந்தாற்கு – மனமகிழ்ந்தவனுமான திருமாலுக்கு,
அடியேம் – தொண்டர்களாயினோம் (யாம்),
என்மின் – என்று எண்ணுங்கள்; (அங்ஙனம் எண்ணினமாத்திரத்தால்),
நல் கதி வானகம் உண்டு – (எல்லாப் பதவிகளினுஞ்) சிறந்த பதவியாகிய பரமபதம் (உங்கட்குச்) சித்திக்கும்: (மற்றும்),
அகம் பரன் என்னாது அரங்கனை நாடில் – நானே தலைவனென்று அகங்காரங் கொள்ளாமல் ரங்கநாதனை விரும்பிச் சரணமடைந்தால், –
அயன் – பிரமனது,
நகம் முண்டக மலர் – நகங்களையுடைய தாமரை மலர் போன்ற கையானது,
உம் நடு குளத்தே குவியாது – உங்கள் நடுத் தலையிலே (மீண்டும் பிறக்குமாறு விதித்தெழுதுதற்குக்) குவியாது; (எ – று.) – தான் – அசை.
அகம் பரன் என்னாது அடியேம் என்மின், –அயனது நகமுண்டகமலர் உம்நடுக்குளத்துக் குவியாது, நற்கதிவானகம் உண்டு
என்று இயைத்தும் கருத்துக் கொள்ளலாம்.
யானென்னுஞ் செருக்கை யறுத்து, ஆபத்காலத் திலே சிவனுக்கும் அருள்செய்தவனும்
நித்தியனு மாகிய மாயவனுக்குத் தொண்டு பூணுங்கள்;
அங்ஙனம் அடிமை பூண்டவளவிலே கருமமனைத்துந் தொலைதலால், பிரமன் கையைக் குவித்து உங்கள் தலையில்
மறுபடி பிறக்க விதித்துஎழுதான்; ஆகவே, உங்கட்கு முத்தி கைகூடும் எனக் காண்க.
நால்வகை நகையுள் இங்குக்குறித்த நகை, இகழ்ச்சி பற்றியது.
முண்டகம் – உடலினின்று கிள்ளியெடுக்கப்பட்ட தலை. முண்டம் – உடற்குறையென்ற படி.
இனி, நகமுண்டகம் தரித்தான் என்பதற்கு –
தாருக வன முனிவர் ஏவிய நகு வெண்டலையைச் சிரத்திலணிந்த சிவபிரானென்றும் பொருள்கொள்ள லாம்;
முண்டகம் – தலைமாத்திரமாகிய உடற்குறை,
நக – (தன்னை யழித்தற் பொருட்டுச்) சிரித்துக் கொண்டு வர,
தரித்தாற்கு – (அதனைக் கைப்பற்றிச் சிரத்தின் மீது) அணிந்து அடக்கினவனுக்கு என்று பதவுரை காண்க:
“சீற்றமா முனிவர் வேள்வித்தீயில் வெண்டலைதானொன்று,
தோற்றியே யுலகம்யாவுந் தொலைய நக்கெழுந்ததன்றே,”
“நக்கெழுசிரத்தை யன்னோர் நாதன் மேல் விடுத்தலோடும்,
அக்கணமணுக வற்றா லகிலமதிறவா வண்ணம்,
முக்கணன ருள்செய்தந்தமுண்ட முண்டகக்கைபற்றிச்,
செக்கரஞ்சடைமேற்கொண்டுன் செயவினைப் புரிதி யென்றான்” என்பன, இங்கு நோக்கத்தக்கன.
இனி, நக – விளங்க, முண்டகம் – சிரமாலையை, தரித்தாற்கு – தரித்த உருத்திர மூர்த்திக்கு என்று உரைப்பாரு முளர்.
நகம் – மலை யென்ற பொருளில், புடைபெயராத தென்று காரணப் பொருள்படும் வடசொல்.
வானகம் என்றதன் னகரத்தை நகரமாகத் திரித்துக்கொண்டது, யமகத்தின்பொருட்டு.
அஹம், பரன், நகம் – வடசொற்கள்.
அயனகமுண்டகமலர் என்று சந்திசேர்க்காமல் அயன் நகமுண்டக மலர் என்று சந்தி பிரித்தபடியே கொண்டதும், யமகத்தின்பொருட்டே.
“சிலவிகாரமா முயர்திணை” என்றபடி அயன் என்ற நிலைமொழியின் ஈற்றுனகரத்தை யொழித்து
“அயநகமுண்டகமலர்” என்ற பாடங் கொள்ளினும் இழுக்காது.
நகம்முண்டகமலர் – நகத்தையுடைய தாமரைமலர்: எனவே, கையென்றதாயிற்று; இது, யானையை “கைம்மலை” என்றல் போலும்.
குளம் – நெற்றி: இங்குத் தலையென்ற பொருளில் வந்தது; இலக்கணை:
சிறப்புப்பெயர் பொதுப்பொருளின் மேலது, கருமகதியைத் தலைவிதியென்றும், தலையெழுத்தென்றுங் கூறுதல், மரபு.
சிறுபான்மை “லலாடலிபி” என்றவழக்கும் இருத்தல் பற்றி, குளம் – நெற்றி யென்றே கொள்ளினுமாம்.
பிரமன் உங்களை மீண்டும் பிறப்பெடுக்கச் செய்யான் என்ற பொருளை வேறு வகையாகக் கூறிவிளக்கியது, பிறிதினவிற்சியணி.
எழுதும் பொழுது எழுது கருவி பிடித்தற்குக் கைகுவிதலாகிய இயல்பு, இங்குக் கருதற்பாலது.
———-
குளப்படி நெய்யடி சிற்கொத்த தோ கொள்ளப் பற்றிய தோ
குளப்படி யிற்றிங்கள் சேரரங்கா கோல மாய வன்றுன்
குளப்படி காட்டும் பிறை மறுப் போலொரு கோட்டிருந்து
குளப்படி யின்னகத் துட்பரல் போன்ற குவலயமே –89-
குளம் படியில் திங்கள் சேர் அரங்கா – குளத்தின் (சந்திர புஷ்கரிணியின்) படியிலே சந்திரன்
(தன்குறை தீர்த்தற் பொருட்டுத் தவஞ் செய்யுமாறு), சேர்ந்த திருவரங்கத்தில் எழுந்தருளி யிருப்பவனே! –
கோலம் ஆய அன்று – (நீ) மகா வராக ரூபமாகிய அந் நாளில்,
உன் குளம் படி காட்டும் பிறை மறு போல் – உனது நெற்றியினுருவத்தைக் காட்டுகின்ற பிறைச் சந்திரனிடத்து விளங்குங் களங்கம் போல,
ஒரு கோடு இருந்து – (உனது) ஒரு மருப்பிலே தங்கி,
குளம்பு அடியின் அகத்துள் பரல் போன்ற – காற் குளம்பின் கீழ்ப் பருக்கைக் கல்லை நிகர்த்து அடங்கிய,
குவலயம் – பூமண்டலமானது, (பிரளய காலத்தில் நீ உண்ட பொழுது),
குளம் படி நெய் அடிசிற்கு ஒத்ததோ – வெல்லமும் படி யளவு கொண்ட நெய்யுங் கலந்த உணவுக்கு ஒப்பாயிருந்ததோ!
கொள்ள பற்றியதோ – அமுது செய்தற்குப் போதுமானதாயிருந்ததோ! (எ – று.)
உனது பெரு வடிவுக்கு முன் மிகச் சிறியதாகிய மண்ணுலகம், நீ உண்ணுங் காலத்தில் உனக்கு ஒரு கவளத்துக்கேனும் போதுமோ!
அன்றி, மண்ணை யுண்டது அதன் இனிமைபற்றியோ! என வியந்து கூறியவாறு.
அண்டம் எலாம் உண்டை என்பர் அறியாதார் ஆங்கு அவை நீ உண்டு அருளும் காலத்தில் ஒரு தூற்றுக்கு ஆற்றாவால் –
என்பதுங் காண்க.
ஒவ்வாது பற்றா தென்பதே துணிவு;
நீ உண்டது நினது திருவிளையாட்டே: உயிர்களைக் காப்பது கருதியே அங்ஙனஞ்செய்தாய் என்பது, குறிப்பு.
நாண் மன்னு வெண் திங்கள் கொல்-நயந்தார்க்கு நச்சிலை கொல் –
சேண் மன்னு நாள் தடம் தோள் பெருமான் தன் திரு நுதலே –
இரு நாள் பகலின் இலங்கு மதி அலங்கல் இருளின் எழில் நிழல் கீழ்
பெரு நாணில் பின் அவன் நெற்றி பெற்றிதாக பெறு மன்னோ –
நிறக்கும் செழும் சுடர்க் கோடு இப்பாரு நிசா முகத்து
சிறக்கும் பிறையும் களங்கமும் போலும் எனில் சிறு கண்
மறக்கும் சரம் செற்ற மாயோன் அரங்கன் வராகமதாய்
பிறக்கும் பிறப்பின் பெருமை எவ்வாறு இனிப் பேசுவதே –திருவரங்கத்து மாலை-என்றபடி
எம்பெருமானது திரு நெற்றி பிறைச் சந்திரன் போலுதலால், “உன் குளப்படி காட்டும்” என்ற அடைமொழி பிறைக்குக் கொடுக்கப்பட்டது.
பிறை மறுப்போற் குவலயம் உன் ஒருகோட்டிருந்து – வளைந்த வெண்ணிறமான கோரதந்தத்துக்குப் பிறையும்,
அவ்வளை மருப்பிற் குத்தியெடுத்த பூமிக்குப் பிறையிலுள்ள களங்கமும் உவமையாம்;
“நிறக்குஞ் செழுஞ் சுடர்க்கோடு மிப்பாரு நிசாமுகத்துச்,
சிறக்கும் பிறையுங் களங்கமும் போலு மெனிற்சிறுகண்,
மறக்குஞ்சரஞ்செற்றமாயோ னரங்கன் வராகமதாய்ப்,
பிறக்கும் பிறப்பின் பெருமை யெவ்வா றினிப்பேசுவதே” என்பர் திருவரங்கத்து மாலையிலும்:
பன்றியாய் படியெடுத்த பாழியான் என்பரது வென்றியார் உனது எயிற்றின்
மென்றுகள் போன்று இருந்ததால் —
குளப்படி யின்னகத்துட் பரல் போன்ற குவலயம்
தீதறு திங்கள் பொங்கு சுடர் உம்பர் உலகு
ஏழின் உடன் உடனே மாதிர மண் சுமந்து வட குன்று நின்ற மலை யாறும்
ஏழு கடலும் பாதமர் சூழ் குளம்பின் கமண்டலத்தின் ஒரு பால் ஒடுங்க
வளர் சேராதி முன் ஏனமாகி யாரானாய மூர்த்தியது நம்மை யாளும் அரசே
எனப் பெரியார் பணித்தது பார்க்கத் தக்கது.
குளப்படி நெய்யடிசில் – சர்க்கரைப்பொங்கல்.
பின்னிரண்டடி – உவமையணி.. கோலம் – பன்றி. குளம்பு + அடி = குளப்படி; மென்றொடர் வன்றொடராயிற்று.
அடியின்னகத்து, னகரமெய் – விரித்தல். நெற்றிக்குப் பிறை யுவமை – வளைந்த வடிவிலும், ஒளியிலும்.
———–
குவலையஞ் சூழ்கடல் காயா மரகதம் கொண்ட னெய்தல்
குவலையங் கண்டன்பர் நைவ ரென்றார் கொற்ற வாணற்குவா
குவலைய நேமிதொட் டாயரங் காகொடும் பல் பிறப்பா
குவலையங்க கற்றுனைக் காணிலென் னாங்கொல் குறிப்பவர்க்கே –90-
கொற்றம் வாணற்கு – வெற்றியை யுடைய பாணாசுரனுக்கு,
வாகு அலைய – தோள்கள் (துணிப்புண்டு) துடிக்கும்படி,
நேமி தொட்டாய் – சக்கராயுதத்தைப் பிரயோகித்தவனே!
அரங்கா – ! –
அன்பர் – (நினது) அடியார்கள்,
குவலையம் சூழ் கடல் – பூமண்டலத்தை வளைந்திருக்கிற சமுத்திரத்தையும்,
காயா – காயாம்பூவையும்,
மரகதம் – மரகதரத்தினத்தையும்,
கொண்டல் – நீர் கொண்ட மேகத்தையும்,
நெய்தல் – கரு நெய்தல் மலரையும்,
குவலையம் – கருங்குவளைமலரையும்,
கண்டு – பார்த்து,
நைவர் – (அவை நினது வடிவத்தை நினைப்பூட்டுதலால்) மனமுருகுவார்கள், என்றால் – , –
கொடும் பல் பிறப்பு ஆகு வலை அற்று அங்கு உனை காணில் – கொடிய பலவகைப்பட்ட பிறப்புக்களாகிய வலைகளின்
தொடர்பு ஒழிந்து அப்பரமபதத்திலே நினது திருமேனியைப் பிரதியக்ஷமாகத் தரிசித்தால்,
அவர்க்கு குறிப்பு என் ஆம் கொல் – அவர்கள் கருத்து மற்றும் யாதாகுமோ! (எ – று.)
பலவகைக் கலக்கத்துக்கு இடமான இவ்வுலகத்துப் பிறவியி லிருக்கை யிலேயே நினது உருவத்துக்குப் போலியாமவற்றைக்
கண்டவளவிலே மன முருகும் மெய்யடியார் பிறப்புநீங்கிப் பரமபதத்தில் உன்னையே நேரிற்கண்டால் எவ்வளவு ஆனந்த மடையார் என்றபடி;
தொடர்நிலைச்செய்யுட்பொருட்பேறணி. கடல்முதலியன எம்பெருமானது திருமேனிநிறத்திற்கு உவமையாகுதலை,
கடலோ மழையோ முழு நீலக் கல்லோ காயா நறும் போதோ
படர் பூம் குவளை நாண் மலரோ நீலோற் பலமோ பானலோ
இடர்சேர் மட்வாருயிர் உண்பதியாதோ வென்று தளர்வாள்-
பூவையும் காயாவும் நீளமும் பூக்கின்ற காவி மலர் என்றும் காண் தோறும்
பாவியேன் மெல்லாவி மெய்ம்மிகவே பூரிக்கும் அவ்வவை எல்லாம் பிரான் உருவே என்று –
கருநெய்தலும் கருங்குவளையும் – சாதிபேதம்.
நெய்தல் குவலையம் என்பதற்கு – நெய்தல் நிலத்துத் தோன்றும் நீலோற்பல மென்று உரைப்பாரு முளர்.
தொட்டாய் என்ற சொல்லின் ஆற்றலினால், நீ படைக்கலத்தைத் தொட்டமாத்திரமே துஷ்ட நிக்கிரகத்துக்குப் போதும் என்ற குறிப்பு விளங்கும்;
அன்றிய வாணன் ஆயிரம் தோளும் துணிய அன்று ஆழி தொட்டான் –
வாணன் ஆயிரம் புயங்கள் குருதி நீர் சிந்தியோட நேமி தொட்ட திருவரங்க ராசரே –
குவலயம், மரகதம், பாணன், பாஹு, நேமி – வடசொற்கள்.
வாகு வலைய – வாகு என்பது வடமொழித் திரிபாதலால், அதன் குற்றியலுகரம் உயிர்வரக் கெடவில்லை.
முதலிரண்டடிகளில் குவலையம் என்றது, இடைப்போலி. பிறப்பு உயிரைப் பந்தப்படுத்துவதால், வலை யெனப்பட்டது.
காயா என்ற செடியின் பெயரும், நெய்தல் குவலயம் என்ற நீர்ப்பூங் கொடிகளின் பெயரும் – அதனதன்மலர்க்கு முதலாகுபெயராம்.
மரகதம் – பச்சையிரத்தினம். அங்கு – சேய்மைச்சுட்டு.
——–
குறியானைச் செங்கன் நெடியானை வானவர் கோனைச் சங்கக்
குறியானை வித்த திருவரங்கே சனைக் கூவி நின்று
குறியானை காத்தவனைப் பாடினேன் கொடி கூப்பிடினும்
குறியானை யப்பவர் போற் கொடியேன் சொலும் கொள்வன் என்றே –91-
குறியானை – குறுகிய வடிவமுடைய வாமனாவதாரஞ் செய்தவனும்,
செம் கண் நெடியானை – சிவந்த திருக் கண்களை யுடைய திரிவிக்கிரமனாய் நீண்டு வளர்ந்தவனும்,
வானவர் கோவை சங்கம் குறியால் நைவித்த திருவரங்கேசனை – தேவராஜனான இந்திரனை (த் தனது பாஞ்சஜந்யமென் னுஞ்)
சங்கத்தின் முழக்கத்தால் (பாரிஜாதாபஹரண காலத்திலே) மூர்ச்சித்து விழச் செய்த ஸ்ரீரங்கநாதனும்,
கூவி நின்று குறி யானை காத்தவனை – (“ஆதிமூலமே!” என்று தன்னைக்) கூவியழைத்துத் தியானித்த
கஜேந்திராழ்வானைப் பாதுகாத்தவனு மாகிய திருமாலைக்குறித்து, –
கொடி கூப்பிடினும் குறி ஆ நயப்பவர் போல் கொடியேன் சொலும் கொள்வன் என்று – காக்கை (இயல்பாகக்) கத்தினாலும்
(அதனை ஒரு) நல்ல நிமித்தமாக விரும்பி உலகத்தார் கொள்வது போலக் கொடியவனான யான் வாய்க்கு வந்தபடி
சொல்லுஞ் சொல்லையும் நன்மையாக (அப்பெருமான்) ஏற்றுக்கொள்வ னென்று நினைத்து,
பாடினேன் – வாய்விட்டுக் கவிபாடினேன்; (எ – று.)
அற்ப ஜந்துவாகிய காக்கை தன்னடைவிலே செய்யுஞ் சத்தத்தையும் விருந்து வருதல் முதலியவற்றைக் குறிக்கும்
நற் குறியாக நிமித்தமுணர்ந்த பெரியோர் கொள்ளுதல் போல, எளியவனான யான் வாயில் வந்தபடி சொல்லுஞ் சொல்லையும்
எம்பெருமான் குற்றமாகக் கொள்ளாது குணமாகக் கொள்வ னென்றெண்ணியே யான்,
அப்பரமனது பெருமையையும் எனது சிறுமையையுங் கருதாது அவனைக் குறித்து வாய்விட்டுக் கவிபாடலானே னென்றன ரென்க.
நாக்கு நின்னை யல்லால் அறியாது நான் அது அஞ்சுவன் என் வசம் அன்று –
மூர்க்குப் பேசுகின்றான் இவன் என்று முனிவாயேலும் என் நாவுக்கு ஆற்றேன்
காக்கை வாயிலும் கட்டுரை கொள்வர் காரணா கருளக் கொடியானே -பெரியாழ்வார்
என்ற பெரியாழ்வார் பாசுரத்தையும்,
அதன் வியாக்கியானத்தில்
“அறிவுடையார் குற்றமாகாதவளவன்றிக்கே குணமாகவுங் கொள்வர்கள்; அது ஓரிடத்தே யிருந்து தனக்கு வேண்டினது
பிதற்றிப் போகவும் அத்தை அறிவுடையார் “நமக்கு நன்மைசொல்லுகிறது” என்று கொள்ளுவர்களிறே” என்றதையும் காண்க.
இது, திருமாலவன் கவி யாது கற்றேன் பல்லியின் சொல்லும் சொல்லாக் கொள்வதோ யுண்டு பண்டு பண்டே —
என்றதனோடு ஒப்பு நோக்கத்தக்கது.
“குறியானைச் செங்கணெடியானை” என்றவிடத்து, முரண்தொடை காண்க.
செங்கண் – செந்தாமரைக் கண்ணென்ற குறிப்பு.
குறி – ஒலி. நைவித்தல் – வருந்தச்செய்தல். குறி யானை – வினைத்தொகை; குறித்தல் – கருதுதல்.
ஆ – விகாரம். “நயப்பவர்” என்பது, யமகத்துக்கு ஏற்பப் போலி விகாரங்களேற்றி “னையப்பவர்” என்று கொள்ளப்பட்டது.
உம்மை இரண்டும் – இழிவுசிறப்பு.
———-
வனத்திற் சிலம்பி விடு நூலுட் பட்டு மசக மெய்த்த
வனத்திற் சிலம்பின போற் பிணி வாய்ப்பட்டென் வாய் புலம்பின்
வனத்திற் சிலம்பின் குரலன்னம் வாழு மரங்கனிப்பு
வனத்திற் சிலம்பினின்றான் கேட்கு மோவும்பர் வாழ்த்தை விட்டே –92–
மசகம் – கொசுகானது,
வனத்தில் சிலம்பி விடு நூலுள் பட்டு – காட்டிலே சிலந்திப்பூச்சி வாய்விட்டு இழைத்த நூலினிடையே சிக்கிக் கொண்டு,
மெய் தவனத்தின் சிலம்பின போல் – உடல்தவிப்பினால் அரற்றியது போல,
பிணி வாய் பட்டு என் வாய் புலம்பின் – (யான்) நோயின்கண் அகப்பட்டு எனது வாய்விட்டு அரற்றினால், (அந்த அரற்றொலியை), –
சிலம்பின் குரல் அன்னம் வனத்தில் வாழும் அரங்கன் இ புவனத்தில் சிலம்பில் நின்றான் – சிலம்பென்னுங் காலணியினொலி போன்ற
குரலையுடைய அன்னப் பறவைகள் நீரிலே வாழ்தற்கிடமான திருவரங்கத்திற் பள்ளிகொண்டிருப்பவனும்
இந்த உலகத்திலே (திருவேங்கடமென்னும்) மலையில் நின்றருள் பவனுமான எம்பெருமான்,
உம்பர் வாழ்த்தை விட்டு கேட்குமோ – (பரம பதத்தில் வாழும்) நித்ய முக்தர்களுடைய மங்கலவாழ்த் தொலியை விட்டுக் கேட்டருள்வனோ? (எ – று.)
ரங்கநாதன் நித்தியசூரிகளுடைய மங்கல வாழ்த்தை விட்டு எனது புலம்பலொலியைக் கேட்பனோ வென்று இரங்கின ரென்க.
மசகம் – வடசொல், தவனம் – தபநமென்ற வடசொல்லின் திரிபு.
சிலம்பின் – சிலம்பினது என்பதன் தொகுத்தல்.
வனம் என்பது – காடு நீர் என்ற இருபொருளிலும், வநம் என்ற வடசொல் திரிந்ததாம்.
அன்னத்தின் குரலுக்குச் சிலம்பினொலி உவமையாதலை, “மின்னார்சிலம்பிற் சிலம்புங் குர வன்னம்” எனச் சிந்தாமணியிலுங் காண்க.
புவநம் – வடசொல்.
மலையின் பெயரான சிலம்பு என்பது – இங்குச் சிறப்பாய், மலைகளிற் சிறந்த தான திருவேங்கடத்தை யுணர்த்திற்று;
அதற்கு “திருமலை” என ஒருபெயர் வழங்குதலுங் காண்க.
“கோயில் திருமலை” என்று சேர்த்துச் சொல்லுதல் தோன்ற, “அரங்கன் சிலம்பினின்றான்” என்றார்.
நான்கடியிலும் “வனத்து” என்ற பாடமும் உண்டு.
————-
விடத்தேரை மன்னும் வனப் பாழும் கிணற்றுள் வெம்பாம்பு பற்றும்
விடத்தேரை வாய் வண்டு தேன் வேட்டல் போல் விசித்துக் கொடு போய்
விடத்தேரையில் வெங்கட் கூற்றை எண்ணாது எண்ணும் வேட்கை எல்லாம்
விடத்தேரை யூரரங்கன்று இருந்தாளில் விழு நெஞ்சமே –93-
நெஞ்சமே – மனமே! –
விடத்தேரை மன்னும் – விடத்தேரை யென்னும்மரம் பொருந்திய,
வனம் – காட்டிலேயுள்ள,
பாழ் கிணற்றுள் – பாழடைந்த கிணற்றிலே,
வெம் பாம்பு பற்றும் – கொடிய பாம்பினாற் கௌவிக் கொள்ளப்பட்ட,
விடம் தேரை – நஞ்சுஏறிய தவளையினது,
வாய் – வாயிலேயகப்பட்டுள்ள,
வண்டு – வண்டானது,
தேன் வேட்டல் போல் – தேனை விரும்புதல்போல,
விசித்து கொடு போய்விட தேர் ஐயில் வெங் கண் கூற்றை எண்ணாது எண்ணும் – (உயிரை உடம்பினின்று பாசத்தாற்)
கட்டியிழுத்துக் கொண்டுபோய்விட எண்ணுகிற வேற்படையையும் கொடுந்தன்மையையு முடைய யமனை
(ப் பின்புறத்திலேயே யிருக்கிறா னென்று) எண்ணாமல் (நீ மேன் மேல்) எண்ணுகின்ற,
வேட்கை எல்லாம் – ஆசைகள்யாவும்,
விட – ஒழிய,
தேரை ஊர் அரங்கன் திரு தாளில் விழு – (அருச்சுனனுக்குத்) தேரையோட்டிய ரங்கநாதனது திருவடிகளிற் சேர்வாய்; (எ – று.)
துன்பத்துள் துன்பமான உலக வாழ்க்கையிலிருந்து கொண்டே தனக்கு உடனே வரக் கடவதாகிய துன்பத்தைச் சிறிதும்
நினையாமல் இன்பத்தையே மேன்மேல் அவாவும் பேதைமையியல்புக்கு,
கொடிய விருக் ஷவர்க்கத்தை யுடைய வெய்ய கானத்தில் நீரற்றபாழ்ங்கிணற்றிலே பாம்பின்வாய்ப்பட்டு நஞ்சுலைதக்கேறிய
தேரையின் வாயி லகப்பட்டதொரு வண்டு தேனைவிரும் புதலை உவமை கூறினார்.
“வண்டு நஞ்சுபொருந்தின தவளையின் வாயிலுள்ள தேனை விரும்புவதுபோலத் தகுதியில்லாத பலவற்றை
அவாவுகிற ஆசைகளை யெல்லாம் விடு, அந்தத்தேரையூர்கிற அரங்கனது திருத்தாளில் விழு” என்று உரைப்பாருளர்;
‘அத்தேர்’ எனச் சுட்டுதல், கதையை உட்கொண்டு மனம் திருத்தாளில் விழுதலாவது – திருவடியையே இடைவிடாது தியானித்தல்.
அடியவர்க்கு எளியவ னென்பார், “தேரையூ ரரங்கன்” என்றார்.
இனி, “தேரையூ ரரங்கன்” என்பதற்கு – திருவிழாக்களிலே திருத்தேருத்ஸவங் கண்டருளுகிற நம்பெருமா ளென்றும் பொருள்கொள்ளலாம்;
கீழ் 83 – ஆஞ் செய்யுளில் “கரி யாடற்பரி தேர் நடத்து எந்தை” என்றது காண்க.
கொடியகருவியும் கல்நெஞ்சுமுடையா னென்பார், “அயில் வெங்கட் கூற்று” என்றார்.
அயில் – இங்கு, முத்தலைவேல்: சூலம். வெங்கண் – அஞ்சாமை, அஞ்சுவித்தல், கண்ணோட்டமின்மை; அச்சந்தருங் கண்களுமாம்.
பாழ் + கிணறு = பாழ்ங்கிணறு: அல்வழியிற் சிறுபான்மை இனமெலி மிக்கது; பாழாகியகிணறு. என்க.
வேட்டல், வேட்கை – தொழிற்பெயர்கள்; தல், கை – விகுதிகள். கொடு – தொகுத்தல். போய்விட, விடு – துணிவுணர்த்தும்.
தேர்கூற்று – வினைத்தொகை. ஐயில் = அயில்: முதற்போலி.
————–
விழுங்கூன் றசைச் சுவர் நீர் மலங் கோழை வெம் பித்தொடுங்க
விழுங்கூ னரம்புறி யென்பேணி தோற்சட்டை வீழ்ந்து நொந்த
விழுங்கூந்த லாரழப் பாடையில் போய் சுடும் வெய்ய செந்தீ
விழுங்கூன நோய்க் குடில் வேண்டேன் அரங்க விமானத்தானே –94-
அரங்கவிமானத்தனே – ஸ்ரீரங்கவிமானத்திற் பள்ளிகொண் டிருப்பவனே! –
கூன் விழும் – கூன்விழு மியல்புள்ள,
தசை சுவர் – தசை யினாலாகிய சுவரும், –
நீர் – ஜலமும்,
மலம் – மலமும்,
கோழை – கோழையும்,
வெம் பித்தொடும் – கொடிய பித்தமும் ஆகிய இவற்றுடனே,
கவிழும் – கவிழ்கிற,
கூன் – பாத்திரமும், –
நரம்பு உறி – நரம்புகளினாலமைக்கப்பட்டதொரு சிக்கமும், –
என்பு ஏணி – எலும்புகளினாலாகியதோ ரேணியும், –
தோல் சட்டை – தோலினாலாகியதொரு சட்டையும், –
அவிழும் கூந்தலார் – விரிந்த கூந்தலையுடையவர்களான மாதர்கள்,
நொந்து – வருந்தி,
வீழ்ந்து – கீழ்விழுந்து,
அழ – புலம்ப,
பாடையில் போய் – பாடைமேற் கொண்டு போய்,
சுடும் வெய்ய செம் தீ விழுங்கு – சுடுகிற கொடிய சிவந்த தீயினால் விழுங்கப்படுகிற (எரிக்கப்படுகிற),
ஊனம் நோய் குடில் – துன் பந்தரும்நோய்கள் வசிக்கிற குடிசையு மாகிய உடம்பை,
வேண்டேன் – விரும்பேன்; (எ – று.)
“ஊனேறு செல்வத் துடற்பிறவி யான் வேண்டேன்” என்பதை அடியொற்றியது இச்செய்யுள்.
உடம்பின் பலவகையிழிவுகளையும் எடுத்து உரைத்து, இங்ஙனந் தூயதல்லாத உடம்பை வேண்டே னென்றார்.
இப் பிறப்பையொழித்துத் திவ்வியதேஜோமயமான வடிவத்துடன் பரமபதத்து நிரதிசயவின்பநுகரும் பேற்றை அளித்தருளவேண்டு மென்பது, குறிப்பு.
இவ்வுடம்பை வேண்டே னென்றதனால், உடம்பின்சம்பந்தமான இவ்வுலக வின்பங்களை வேண்டாமை தானே பெறப்படும்.
உடம்பாகிய ஒருபொருளை “தசைச்சுவர்” என்பது முதலாகப் பலவாறுபுனைந்துரைத்ததனால், புலபடப் புனைவணி.
இச்செய்யுள், அருவருப்புத்தோன்றக் கூறினமையால், பீபத்ஸ மென்னும் இழிப்புச்சுவைக்கு உதாரணமாம்.
கூன்விழுதல் – முதுகு வளைதல். தசை = சதை: எழுத்துநிலைமாறுதல், இலக்கணப்போலி.
கூன் என்பது மட்கலங்களில் ஒருவகையாதலை,
“கூனையுங் குடமுங் குண்டுசட்டியும், பானையும் வனையு – மங்குசப்பையல் யான்” என்ற விடத்துங் காண்க.
ஜலம் மலம் முதலியன வெளிப்படுதலால், அவற்றோடு கவிழுங் கூ னெனப்பட்டது. சட்டை – அங்கி.
“ஏற்புச் சட்டகம், முடைக்குரம்பை, புழுப்பிண்டம், பைம்மறியாநோக்கப் பருந்தார்க்குந் தகைமைத்து,
ஐயும் பித்தும் வளியும் குடரும் கொழுவும் புரளியும் நரம்பும் மூத்திரபுரீடங்களும் என்றிவற்றது இயைபு” என
உடம்பின் தூய தன்மையை விளக்கும் இறையனாரகப் பொருளுரை வாக்கியம் இங்கு நோக்கத்தக்கது.
———–
மானத் துவண்ட லுழவோர் எழுத்தின் வடிவுற்ற சீர்
மானத் துவண்ட வினையாளராயினு மால் வளர் வி
மானத் துவண்டல மா மரங்கம் வழி யாவரினு
மானத் துவண்டமர் தாரண்ட ராம்பதம் வாய்க்குமங்கே –95-
மால் நத்து – பெரிய நத்தையானது,
வண்டல் உழ – சேற்றிலே ஊர்ந்து செல்ல,
ஓர் எழுத்தின் வடிவு உற்ற சீர் மான – (அவ்வூர்தலாலாகிய வரையானது தற்செயலாய்)
ஓர் அக்ஷரத்தினது வடிவமாக அமைந்த சிறப்புப் போல, –
துவண்ட வினையாளர் ஆயினும் – வருந்துதற்குக் காரணமான ஊழ்வினையை யுடையவர்களே யானாலும், (அவர்கள்),
மால் வளர் விமானத்து வள் தலம் ஆம் அரங்கம் வழி ஆ வரினும் – திருமால் கண்வளர்ந் தருளுகிற (பிரணவாகார)
விமானத்தையுடைய சிறந்ததலமாகிய ஸ்ரீரங்கத்தின் மார்க்கமாய்த் தன்னடைவிலே வந்தாலும்,
அங்கே – அவ்வரவினாலே,
மானத்து வண்டு அமர் தார் அண்டர் ஆம் பதம் வாய்க்கும் – பெருமையையும் வண்டுகள் மொய்க்கும்
மாலையையுமுடைய முக்தர்களாகும் பதவி சித்திக்கும்; (எ – று.)
ஒருவனுக்குப் பக்தி முதலியன இல்லாதிருக்கையில் அபுத்தி பூர்வமாய் ஸ்ரீரங்க மார்க்கமாக யாத்திரை நேர்ந்தாலும்
அதுவே வியாஜமாக எம்பெரு மானருளால் அவனுக்குத் தீவினைகள் நீங்கி நிரதிசய வின்ப நுகரும்படியான முக்தி பதம் சித்திக்கு மென்பதாம்;
இதற்கு, வண்டலிலே நத்து ஊர்ந்து செல்லுதலாலாகிய கோடு ஒரோ சமயத்து ஓரெழுத்து வடிவமாகத் தன்னடைவிலே
அமைகிற குணாக்ஷர நியாயத்தை ஒப்புமை கூறினார்: உவமையணி. மான – உவமவுருபு.
துவண்ட வினை – பெயரெச்சம், காரணப்பொருளது; “நோய்தீர்ந்த மருந்து” என்றவிடத்துப் போல, வினையாளர் – கர்மிகள்,
அண்டம் – பரமபதம்; அதில் வாழ்பவர், அண்டர். “தேவர்கள் மாலையில் வண்டு மொய்க்காது” என்ற விலக்கு
அருளிற் சிறந்தவரான முக்தர்க்கு இல்லை யென்பது தோன்ற, “வண்டமர்தாரண்டர்” என்றார்.
————-
அங்காக்கைக் கே மங்கைக் கீந்தான் அரங்கன் அவனிக்கு வாய்
அங்காக்கைக் கே பசித்தான் நிற்க வே முத்தி யாக்கித் துயர்
அங்காக்கைக் கே சிலர் வேறே தொழுவரருந்திரவிய்
அங்காக்கைக் கே தனத் தாடரு மோதிரு வன்றியிலே –96-
அம் – அழகிய,
கா – சோலையை (இந்திரனது கற்பகச் சோலையிலுள்ள பாரிஜாத தருவை),
மங்கைக்கு – தன் மனைவியான சத்திய பாமைக்கு,
கைக்கே ஈந்தான் – கையிலே கொடுத்தவனும் (கைவசமாக்கித் தந்தவனும்),
அவனிக்கு – உலகத்தை யுண்பதற்கு,
வாய் அங்காக்கைக்கே – (தனது) வாயைத் திறக்குமவ்வளவாகவே,
பசித்தான் – பசியுற்றவனும் (வாய்திறந்து உலகத்தையுட்கொள்ள அவாக்கொண்டவனும்) ஆகிய,
அரங்கன் – ரங்கநாதன்,
நிற்கவே – இருக்கையிலே, (அவனை விட்டு),
முத்தி ஆக்கி துயரம் காக்கைக்கே சிலர் வேறே தொழுவர் – (தமக்கு) மோக்ஷத்தைக் கொடுத்துத் துன்பங்கள் வாராதபடி
(தம்மைக்) காப்பதற்காகவே வேறு தெய்வங்களைச் சிலர் வணங்குவார்கள்;
அருந் திரவியம் – அருமையான செல்வப்பொருளை,
திரு அன்றியிலே – திருமகள் கொடுப்பளேயல்லாமல்,
காக்கை கேதனத்தாள் தருமோ – காக்கை வடிவ மெழுதிய துவசத்தை யுடையவளான மூதேவி கொடுக்க மாட்டுவளோ? (எ – று.)
பொருட்செல்வத்தை அதற்கு அதிதேவதையான இலக்குமி கொடுக்க வல்லளே யன்றி அதற்கு மாறான தன்மையுள்ள
மூதேவி கொடுக்கவல்லளல்ல ளென்ற உபமான வாக்கியந் தானே,
பிறவித் துன்பத்தையொழித்து முத்திச் செல்வத்தை அதற்கு உரியதலைவனான திருமால் கொடுத்தருள்வனே யன்றி
அதற்கு உரியரல்லாத பிறதேவர்கள் கொடுக்கத்தரமுடையரல்ல ரென்ற உபமேயக் கருத்தை விளக்குதலால், பிறிதினவிற்சியணி.
முத்தியளித்துத் துயர்தீர்க்கும் எம்பெருமானி ருக்க அவனைத்தொழாது சிலர் தேவதாந்தரங்களைத் தொழுதல்,
செல்வந்தருந் திருமக ளிருக்க அவளைவழிபடாது மூதேவியைவழிபடுதல்போலப் பெரும்பேதைமையா மென்பது, குறிப்பு.
நாட்டினான் தெய்வம் எங்கும் நல்லதோர் அருள் தன்னாலே
காட்டினான் திருவரங்கம் உய்பவர்க்கு உய்யும் வண்ணம்
கேட்டிரே நம்பிமீர் காள் கெருட வாகனும் நிற்க
சேட்டை தன் மடியகத்துச் செல்வம் பார்த்து இருக்கின்றீரே -என்ற திருமாலைப் பாசுரம் இங்கு உணரத்தக்கது.
கைக்கே, ஏ – அசைநிலை. அங்காக்கைக்கே, ஏ – பிரிநிலை. காக்கைக்கே, ஏ – தேற்றம். தருமோ, ஓ – எதிர்மறை.
அன்றியிலே, ஏ – ஈற்றசை; இல் – சாரியை. அங்காக்கை, காக்கை – தொழிற்பெயர்கள்:
அங்கா, கா – பகுதி, கை – விகுதி. முக்தி, த்ரவ்யம், கேதநம் – வடசொற்கள். காக்கை காக மென்ற வடசொல்லின் சிதைவு:
கா என்று கத்துவது எனக் காரணப் பொருள்படும். துயரம், அம் – சாரியை. “அன்றியுமே” என்பதும் பாடம்.
———–
அன்றே யடைய யுனக்கே யடிமை என்றாய்ந்து உணர்ந்தார்
அன்றே யடையப் படுவாருனை யரங்கா வனத்திய்
அன்றே யடையை யயில்வோரு மீதறி யாரறிஞர்
அன்றே யடையைம் புலனாலு நன்கில்லை யாங்கவர்க்கே –97-
அரங்கா – ! – “அடைய – (உயிர்கள்) யாவும்,
அன்றே – அந்நாளிலேயே (தொன்றுதொட்டே யென்றபடி),
உனக்கே அடிமை – உனக்கே அடிமைப்பட்டவை,” என்று -,
ஆய்ந்து உணர்ந்தார் அன்றே – ஆராய்ந்து அறிந்தவர்களன்றோ,
உனை அடைய படுவார் – உன்னைச் சேர்தற்கு உரியர்;
வனத்து இயன்றே அடையை அயில்வோரும் – காட்டில் வசித்துக் கொண்டே இலையைப் புசிப்பவர்களான முனிவர்களும்,
ஈது அறியார் – இந்த உண்மையை யுணரா ராயின்,
அறிஞர் அன்றே – அறிவுடையார்க ளல்லர்;
அவர்க்கு – அவர்கட்கு,
ஆங்கு அடை ஐம்புலனாலும் நன்கு இல்லை – அவ்வனத்திலிருந்து அடைக்கப்பட்ட (அடக்கியாளப்பட்ட)
பஞ்சேந்திரியங்களாலும் நற்பயனில்லை; (எ – று.)
எல்லாச் சேதநாசேதநங்களும் உன்னுடைமையாமென்னும் உண்மை யறிவுள்ளவரே பரமபதத்தில் உன்னைச் சேர்வர்;
அஃதில்லாதவர் வனவாசஞ் செய்து இலை முதலியன புசித்துப் பஞ்சேந்திரிய நிக்கிரகஞ்செய்தாலும் பயனில்லை யென்பதாம்.
முதலடியில், அன்று – காலமுணர்த்துஞ் சுட்டிடைச்சொல். அடைய என்றது – எஞ்சாமைப்பொருளுணர்த்தும்.
இதற்கு, தாமும் தமதுடைமையு மாகிய எல்லாம் என்று பொருள்கொள்ளுதலு மொன்று.
இரண்டாமடியில், அன்றே – தேற்றம். அடையப்படுவார் = அடையத்தகுவார்.
மூன்றாமடியில், இயன்று ஏய் அடை என்று பிரித்து, ஏய் என்பதற்கு – (அவ்விடத்திற்) பொருந்திய என்று உரைப்பாரு முளர்; வினைத்தொகை.
நான்காமடியில், “அன்று” என்ற எதிர்மறைக்குறிப்பு முற்றுப் பலர்பாலுக்கு வந்தது; ஏ – தேற்றம். அடை புலன் – வினைத்தொகை. ஆங்கு அசையுமாம்.
————
ஆங்கார மாமின்னைத் தோய்மார் பரங்கனளை வெண்ணெயுண்டு
ஆங்கார மாநில முண்டாற்குத் தொண்டனிவ் வண்டத் தப்பால்
ஆங்கார மான்பகு திப்புறம் போயமு தாற்றிர் படிந்து
ஆங்கார மானடி காண்பே னவன்ற னருள் சிந்தித்தே –98-
கார் – மேகத்தில்,
ஆம் – உண்டாகின்ற,
அம் – அழகிய,
மின் – மின்னல் போன்றவளான,
மாவை – இலக்குமியை,
தோய் – தழுவுகிற,
மார்பு – மார்பையுடைய,
அரங்கன் – ரங்கநாதனும்,
அளையிணை உண்டு ஆங்கு – வெண்ணெயை யுண்டாற்போலவே,
ஆர – நிரம்ப,
மா நிலம் உண்டாற்கு – பெரிய உலகத்தை உட்கொண்டவனுமான திருமாலுக்கு,
தொண்டன் – அடியன் (யான்); (ஆதலால்),
அவன்தன் அருள் சிந்தித்து – அப்பெருமானுடைய கருணையைத் தியானித்து, –
இ அண்டத்து அப்பால் – இந்த அண்ட கடாஹத்துக்கு அப்புறத்திலே,
ஆங்காரம் மான் பகுதி புறம் போய் – அகங்காரம் மஹாந் ப்ரக்ருதி என்ற ஆவரணங்களைக் கடந்து மேற்சென்று,
அமுது ஆற்றில் படிந்து – அம்ருதமயமான விரஜாநதியில் நீராடி,
ஆங்கு ஆர் அ(ம்)மான் அடி காண்பேன் – அவ்விடத்தில் (பரமபதத்தில்) எழுந்தருளி யிருக்கின்ற
ஸ்வாமியினுடைய திருவடியைத் தரிசிப்பேன்; (எ – று.)
திருவரங்கனுக்குத் தொண்டனான நான் அவனருளாற் பரமபதத்திற் சென்று அவனைத் தரிசிப்பே னென்பதாம்.
எம்பெருமானது நீலமேனிக்குக் காளமேகமும் அதிலுறையுந் திருமகளுக்குக் காளமேகத்தில் விளங்கும்
மின்னலும் உவமை யென்பது தோன்ற, “ஆங்காரமாமின்னைத்தோய்மார் பரங்கன்” என்றார்.
அளையினையுண்டாங்கு ஆர மாநிலமுண்டான் – எம் பெருமான் விரும்பி யுண்ணும் உணவாதலில்
வெண்ணெயோடு உலகோடு வாசியில்லை யென்பது குறிப்பு. ஆங்கு – உவமவுருபு.
பதினான்கு லோகங்க ளும் அடங்கிய அண்ட கடாஹம் முறையே ஒன்றுக்கு ஒன்று பதிற்று மடங்கான
ஜலம் அக்நி வாயு ஆகாசம் அகங்காரம் மஹாந் ப்ரக்ருதி என்ற ஏழு ஆவரணங்களாலுஞ் சூழப்பட்டுள்ள தென்பதையும்,
இப்படிப்பட்ட அநந்த கோடி பிரமாண்டங்க ளடங்கிய மூலப்பிரகிருதிக்கு அப்புறத்தே விரஜாநதிக்கு அப்பால்
ஸ்ரீமந்நாராயணன் எழுந்தருளியிருக்கும் பரமபதம் உள்ள தென்பதையும் தத்துவ நூல்களால் விளங்க உணர்க.
முதலடியில், “ஆம் கார் அம் மா மின் ஐ” என்ற பதப்பிரிவில்,
“ஐ” என்னும் இரண்டனுருபை “மா” என்றதனோடு கூட்டிப் பொருள் காண்க.
அஹங்காரம், மஹாந், ப்ரக்ருதி என்ற வடசொற்கள் விகாரப்பட்டன.
அம்மான் என்பது, “அமான்” எனத் தொக்கது.
“அவன்ற னருள் சிந்தித்தே” – அவனருள் சிந்தித்தலல்லது, வீடுபேற்றுக்கு வேறுஉபாய மில்லை யென்றபடி.
————
சிந்தாகுல முய்யக் குன்றெடுத்தாய் தென்னரங்க சுற்றும்
சிந்தா குலகம் படைத்து அளித்தாய் நிலம் சென்று இரந்த
சிந்தா குலவு செல்வந்தந்தை தாய் குரு தெய்வமு நீ
சிந்தா குலமடைந்தேன் அடியேன் சென்மம் தீர்த்து அருளே –99-
சிந்து – (இந்திரனேவிய மேகங்கள் விடாப் பெரு மழை) பொழிதலால் வருந்திச் சிதறிய,
ஆ குலம் – பசுக்கூட்டம்,
உய்ய – உயிர் பிழைக்கும்படி,
குன்று எடுத்தாய் – கோவர்த்தன மலையை யெடுத்துக் குடையாகப் பிடித்தவனே!
தென் அரங்க – அழகிய திருவரங்கத்தை யுடையவனே!
சுற்றும் சிந்து ஆகு – சுற்றிலும் கடல் அமையப் பெற்ற,
உலகம் – உலகத்தை,
படைத்து – சிருஷ்டித்து,
அளித்தாய் – ரக்ஷித்தவனே!
சென்று – (மகா பலிசக்கரவர்த்தி யினிடத்துப்) போய்,
நிலம் இரந்த – மூன்றடி நிலத்தை யாசித்த,
சிந்தா – வாமன மூர்த்தியே! –
குலவு – சிறப்புற்று விளங்குகின்ற,
செல்வம் – செல்வமும்,
தந்தை – தந்தையும்,
தாய் – தாயும்,
குரு – ஆசாரியனும்,
தெய்வமும் – கடவுளும், (ஆகிய எல்லாம்),
நீ – (எனக்கு) நீயே;
சிந்தா ஆகுலம் அடைந்தேன் அடியேன் சென்மம் தீர்த்தருள் – (பிறப்புத் துன்பத்தைக் குறித்து) மனக் கலக்க
மடைந்துள்ளவனான அடியேனுடைய பிறப்பை யொழித்துக் கருணை செய்வாய்; (எ – று.)
சிந்துஆ, ஆகுஉலகம் – வினைத்தொகைகள். யமகத்தின்பொருட்டு, “ஆக்குலம்” என வலிமிகவில்லை.
இரண்டாமடியில், சிந்து – ஹிந்து என்ற வட சொல்லின் விகாரம்.
மூன்றாமடியில், சிந்தா – சிந்தன் என்பதன் விளி.
சிந்தன் = குறளன்: இரண்டடியுயரமுள்ளவனை “குறளன்” என்றும்,
மூன்றடி யுயரமுள்ளவனை “சிந்தன்” என்றும் குறிக்கிற சிறிது வேறுபாட்டை இங்குக் கருதாமல், பரியாய நாமமாகக் கொண்டு கூறினார்;
அன்றியும், வாமன மூர்த்தியின் வளருந்தன்மையைக் கருதி “சிந்தன்” என்றா ரெனக் கொள்ளினுமாம்.
சிந்தாகுலம் – தீர்க்க சந்தி பெற்ற வடமொழித் தொடர். தெய்வமும் என்ற இறந்தது தழுவிய எச்சவும்மை,
பெயர்ச் செவ்வெண்ணினீற்றில் வந்தது.
———
தீரத் தரங்கப் பவ நோய் துடைத்து என்னைத் தேவரொடும்
தீரத் தரங்கப் பணி காப்ப வைத்த செயல் என்பதோர்
தீரத் தரங்க வபயம் என்றார்க்கும் திரைப் பொன்னி சூழ்
தீரத் தரங்கன் சிலம் பார்ந்த செய்ய திருவடியே –100-
“அத்தர் அங்க – தலைவர்களான பிரமருத்திரர்களைத் (தனது) திருமேனியிற் கொண்டருள்பவனே!
அபயம் – அடைக்கலம்”,
என்று – என்று ஓலமிடுவது போன்று,
ஆர்க்கும் – ஆரவாரிக்கின்ற,
திரை – அலைகளை யுடைய,
பொன்னி – காவேரியாறு,
சூழ் – சூழ்ந்த,
தீரத்து – வரம்பை யுடைய,
அரங்கன் – திருவரங்கத்தை யுடையவனான எம்பெருமானது,
சிலம்பு ஆர்ந்த செய்ய திரு அடி – சிலம்பென்னும் ஆபரணம் பொருந்திய சிவந்த சீர்பாதம்,
தரங்கம் பவம் நோய் தீர துடைத்து – அலை போல மாறி மாறி வந்து வருத்துகின்ற (எனது) பிறப்புத் துன்பத்தை யொழியுமாறு நீக்கி,
என்னை – அடியேனை,
தேவரொடும் – நித்திய ஸூரிகளோடும்,
தீரத்தர் (ஒடும்) – ஞானிகளாய் வீடு பெற்றவர்களான முக்தர்களோடும்,
அங்கு – அவ்விடத்தில் (பரம பதத்தில்),
அ பணி – (எம்பெருமானுக்குச் செய்யும்) அந்தக் கைங்கரியங்களை,
காப்ப – காத்திருந்து தவறாமற் செய்யுமாறு,
வைத்த -, செயல் என்பது – செய்கையை,
ஓர்தீர் – அறியுங்கள்; (எ – று.)
திருவரங்கனுடைய திருவடிகள், என்னைப் பிறப்பொழித்து பரமபதத்தில் நிச்சிய முக்தர்களுடனிருந்து பலவகையான
பகவத் கைங்கரியங்களைப் புரியச் செய்தன; ஆதலால், உலகத்தீர்! நீவிரும் அவன் திருவடிகளை யடைந்து உய்யுங்க ளென்பதாம்.
திருவடியடைந்தேன் பரமபதத்துக்கு உரியனானே னென்பது, குறிப்பு.
எம்பெருமான் தன்னடியார்க்குத் தவறாது பரமபதந் தந்தருள்வ னென்னும் நம்பிக்கை கொள்ளுதல் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாய மாதலால்,
பரமபதம் பெறுவே னென்னாது தெளிவு பற்றிப் பெற்றேனென் பார், “பணிகாப்ப வைத்த செயல்” என்றார்:
நம்மாழ்வார் “அவாவற்று வீடுபெற்ற” என்றாற் போல.
“அயர்வறு மமரர்கள்” என்ற இடத்தில் “அமரர்கள்” என்றது போல, இங்கு “தேவர்” என்றது – நித்திய ஸூரிகளைக் குறித்தது.
தீரர் என்ற சொல்லுக்கு ஞானிகள் என்ற பொருள், வேதத்திலும் வந்துள்ளது; இங்கு, அப்பெயர், முக்தர்களைக் குறித்தது.
நித்யராவார் – பிறப்பு இறப்பு இல்லாமல் எம்பெருமான் போலவே என்றும் ஒரு படிப்படப் பரமபதத்தில்
வாழ்கிற அநந்த கருட விஷ்வக்ஸேநர் முதலியோர்.
முக்தராவார் – இவ்வுலகங்களிற் கரும வசத்தராயிருந்து பின்பு கடவுளருளாற் பிறப்பை யொழித்து முத்தி பெற்றவர்.
“ஏறாளுமிறையோனுந் திசை முகனுந் திருமகளுங் கூறாளுந் தனியுடம்பன்” என்ற அருளிச் செயலின் பொரு ளமைய, “அத்தரங்க” என்றார்.
அபயமென்றது – அஞ்சாதேயென்று என்னைப் பாதுகாத்தற்கு உரியவன் நீ யென்றும்,
அஞ்சாதே யென்று உன்னாற் பாதுகாக்கப்படுதற்கு உரியன் யானென்றும் கருத்துப்படும்.
“அத்தரங்க அபயமென்று ஆர்க்கும் திரைப்பொன்னி” என்றது – தற்குறிப்பேற்றவணி.
பவம், தீரம் – வடசொற்கள். தேவரொடும் என்ற வும்மை, தீரத்தார் என்பதனோடும் எடுத்துக் கூட்டப்பட்டது.
பணி – பணிவிடை, செயலென்பது என்றவிடத்து, ‘என்பது’ – பகுதிப் பொருள் விகுதி, ஒர்தீர் – ஏவற்பன்மை முற்று; ஈர – விகுதி.
—————
பணவாள் அரவின் அரங்கேசர் தாளில் பரிதி வளை
நிணவாள் அம் சார்ங்கம் கதை தோளில் சார்த்தினன் நீள் நிலமேல்
குணவாளர் ஆம் பட்டர்க்கு ஏழ் ஏழ் பிறப்பும் குடி அடியான்
மணவாள தாசன் யமக அந்தாதி வனைந்தனனே —
நீள் நிலம் மேல் – நீண்ட நிலவுலகத்திலே, –
குணம் ஆளர் ஆம் பட்டர்க்கு – உத்தம குணங்களை யுடையவரான பட்டரென்னும் ஆசாரி யர்க்கு,
ஏழ் ஏழ் பிறப்பும் குடி அடியான் – பதினான்கு தலை முறைகளிலும் (தொன்று தொட்டுப்) பரம்பரையாக அடியவனான,
மணவாளதாசன் – அழகிய மணவாளதாசன், – யமகம் அந்தாதி வனைந்தனன் – யமகவந்தாதிப்பாமாலையைத் தொடுத்து, –
பரிதி – சக்கரமும், வளை – சங்கமும், நிணம் வாள் (பகைவர்களின்) கொழுப்புத் தோய்ந்த வாளும்,
அம் சார்ங்கம் – அழகிய சார்ங்க மென்ற வில்லும், கதை – கதையும் ஆகிய பஞ்சாயுதங்களையும்
தோளின் – (தமது) திருக்கைகளிற் கொள்பவரான,
பணம் வாள் அரவின் அரங்கஈசர் – படத்தை யுடைய ஒள்ளிய திருவனந்தாழ்வானைச் சயனமாக வுடைய ஸ்ரீரங்கநாதரது,
தாளில் – திருவடியிலே,
சாத்தினன் – சமர்ப்பித்தான்; (எ – று.)
செய்யுளுறுப்பு இருபத்தாறனுள் “மாட்டு” என்னும் உறுப்புப் பற்றி, பொருட் பொருத்தத்துக்கு ஏற்பச்
சொற்கள் எடுத்துக் கூட்டப்பட்டன; கொண்டுகூட்டுப்பொருள்கோள்.
தோள் = கை: “தோளுற்றொர்தெய்வந் துணையாய்” என்ற விடத்துப் போல்.
“பரிதி வளை நிணவாளஞ்சார்ங்கம் கதை தோளின் அரங்கேசர்” என்றதனை,
“தொனி தக்க சங்கந் திருச் சக் கரஞ் சுடர் வாண் முசலங், குனி தக்க சார்ங்கந் தரித்தா ரரங்கர்” என்பத னோடு ஒப்பிடுக.
ஸ்ரீ திருவரங்கத்தந்தாதி முற்றிற்று
————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply