அடிமுடி தேடிய கதைக்கு மறுப்பு.!
ஆதாரம்:-[திவ்யகவி பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் இயற்றிய ‘பரப்பிரம்ம விவேகம்’ என்னும் மகத்தான படைப்பில் இருந்து]
“சர்வம் விஷ்ணு மயம் ஜகத்”
சைவர்களால் திருமாலான சர்வேஷ்வரனை சிறுமை படுத்த திட்டமிட்டு புனையப்பட்ட கதைகளில் ஒன்றுதான்
“அடிமுடி தேடிய கதை” இந்த மூட பங்கத்தை நிர்மூலமாக்கவே இந்த பதிவு..!
சைவர்கள் இயற்றிய கதையை பார்ப்போம்;
முன்னொரு காலத்தில் திருமாலும் திசைமுகனும் தானே கடவுளென்று பிணங்கி நிற்க;
அவர்கள் வேறுபாட்டை நீக்கும் பொருட்டு அண்ணாமலையார்(சிவன்) அக்கினிப் பிழம்பான மலைவடிவமாய்
அவர்கள் முன் தோன்றவே, திருமால் வராகமாய் அவனடியைத் தேடியும்,
பிரமன் அன்னமாய் அவன் முடியைத் தேடியும் அலைந்தார்களாம்..😀 நல்ல நகச்சுவை கதையொன்று இது.!
இதற்க்கான மறுப்பு இனி:-
“அண்ட மளக்க வடிக்கீ ழொடுங்கியுல குண்ட பொழுதுதரத் துள்ளொடுங்கி—
துண்டமதி சூடினான் மாலருளாற் றோன்றினான் ஆங்கவனைத் தேடினான் மாலென்ப தென்”.
இதன் கருத்து:— அண்டங்களனைத்தையும் திருமால் அளந்தான், அப்பொழுது அனைத்துலகங்களும் அவனடிக்கீழ் ஒடுங்கியது.
பிரளய காலத்தில் காப்பதற்காக உலகையெல்லாம் உண்டான். அக்காலத்தில் உலகனைத்தும் அவனது திருவயிற்றில் ஒடுங்கியது
ஸ்ருஷ்டிகாலத்தில் அருள்கொண்டு உலகனைத்தையும் உமிழ்ந்தான். அச்சமயம் பிறைசூடியாகிய சிவபெருமான் முதல்
சகல ஜீவர்களும் மறுபடியும் தோன்றினர். இவ்வாறிருக்க சிவனடியைத் திருமால் தேடினான் என்பது ஏனோ? என்பதாகும்.
அண்டமளந்த வரலாறு.
விரோசனன் மகன் மாவலி. இவன் பெருவலி படைத்தவன்; வரபலம் மிக்கவன்.
இவன் தன் ஆற்றலால் மூன்று உலகங்களையும் வென்று தன் ஆட்சிக்குட்படுத்தினான்.
ஒரு சமயம் மாவலி வேள்வியொன்று இயற்றினான். அதுகாலை, இந்திரன் வேண்டுகோளுக்கிணங்கித் திருமால் வாமனனாகி
மாவலிபால் சென்று மூவடி மண் வேண்டினான். அப்பொழுது அசுரகுருவாகிய சுக்கிரன், ‘
வந்திருப்பவன் மாயத் திருமால்; இவனுக்குத் தானம் கொடுக்காதே’ என்று தடுத்தான்.
மாவலியோ குருவின் சொல்லையும் மீறி வாமனனுக்குத் தாரை வார்த்து பாரைக் கொடுத்தான்.
தானம் கொடுத்த மண்ணைத் திருமால் அளக்கத் தொடங்கினான். நெடு வடிவங்கொண்டு ஓரடியால் மண்ணுலகையும்,
மற்றோரடியால் விண்ணுலகையும் அளந்து மூன்றாமடிக்கு இடமில்லாமலிருக்கவே மாவலியின் முடியில் வைத்து
அவனைப் பாதாளத்துக் கிறைவனாக்கினான் என்பது இவ்வரலாற்றினை—-
“ஒருகுறளா யிருநில மூவடிமண் வேண்டி உலகனைத்து மீரடியா லொடுக்கி ஒன்றும்
தருகவெனா மாவலியைச் சிறையில் வைத்த தாடாளன்……” என்பர் திருமங்கையாழ்வார்,
இனி திருமால் அண்டமளந்த வரலாற்றினை அடியில் வரும் சான்றுகள் கொண்டு தெளிக.
“கீழ் ஏழ் உலகமும் உற்ற அடியினை”(பரிபாடல் 3-20)
“ஞாலம் மூன்றடித் தாய முதல்வதற்கு” (கலித்தொகை- நெய்தற்கலி 7)
“மன்மருங்கு அறுத்த மழுவாள் நெடியோன்”(அகம் 220)
[நெடியோன்–திரிவிக்கிரமனாகிய திருமால்]
“ஏமம் ஆகிய நீர்கெழு விழவின் நெடியோன் அன்ன நல் இசை”
(பதிற்றுப்பத்து 2-5)
“இருநிலம் கடந்த திருமறு மார்பின் முந்நீர் வண்ணன்…”
(பெரும்பாணாற்றுப்படை)
“நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை நீர்செல நிமிர்ந்த மாஅல் போல்”
(முல்லைப்பாட்டு)
“நீரும் நிலனும் தீயும் வளியும் மாக விசும்பொரு ஐந்துடன் இயற்றிய மழுவாள் நெடியோன் தலைவன் ஆக” (மதுரைக்காஞ்சி)
“கோள்வாய் மதியம் நெடியோன் விடுத்தாங்கு” (சிந்தாமணி)
“மூவுலகும் ஈரடியால் முறைதிறம்பா வகைமுடியத் தாவிய சேவடி”(சிலம்பு)
“திரண்டமரர் தொழுதேத்தும் திருமால்! நின் செங்கமல ரண்டடியால் மூலவுலகும் இருள்தீர நடந்தனையே”(சிலம்பு)
“வாணன் பேரூர் மறுகிடை நடந்து நீணில மளந்தோன் ஆடிய குடமும்”
(சிலம்பு)
எனப் பல இடங்களிலும் தமிழ்நூல்களிலும் திரிவிக்கிரமாவதாரம் பேசப்படுவது காண்க.
“வாணன் பேரூர் மறுகிடைத் தோன்றி நீணிலம் அளந்தோன் மகன்முன் ஆடிய” (மணிமேகலை மலர்வளம் புக்க காதை)
“நெடியோன் குறளுரு வாகி, நிமிர்ந்து, தன் அடியிற் படியை அடக்கிய அந்நாள் நீரிற் பெய்த, மூரி வார்சிலை, மாவலி….”
(மணிமேகலை சிறைக்கோட்டம் – அறக்கோட்டம் ஆக்கிய காதை)
“நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி” (மணிமேகலை உலகவறவி புக்ககாதை)
என்று மணிமேகலையிலும் பல இடங்களில் வாமனதிரிவிக்கிரமா வதாரங்கள் பற்றிக் கூறுவன நோக்குக.
உலகப் பொது மறை என்று கூறப்படும் திருக்குறளிலே வள்ளுவனாரும்.
“மடியிலா மன்னவன் எய்தும்; அடியளந்தான் தாஅயது எல்லாம் ஒருங்கு”(திருக்குறள்-610)
என்று கூறுவது காண்க.
“கானின்ற தொங்கலாய் காசிபனார் தந்ததுமுன் கூனின் றளந்த குறளென்ப…” (பொன்முடியார்-திருவள்ளுவமாலை)
“மாலும் குறளாய் வளர்ந்திரண்டு மாணடியான் ஞாலம் முழுதும் நயந்தளந்தான்…” (பரணர் -திருவள்ளுவமாலை)
“கண்ணகன் ஞாலம் அளந்தூஉம் காமருசீர்த் தண்ணறும் பூங்குருந்தம் சாய்த்ததூஉம்—-
நண்ணிய மாயச் சகடம் உதைத்ததூஉம் இம்மூன்றும் பூவைப்பூ வண்ணன் அடி.”
(திரிகடுகம் கடவுள் வாழ்த்து)
“வைய மகளை யடிப்படுத்தாய் வையகத்தா ருய்ய வுருவம் வெளிப்படுத்தாய் —வெய்ய
வடுந்திற லாழி யரவணையா யென்று நெடுந்தகை நின்னையே யாம்”.(புறப்பொருள் வெண்பா மாலை)
எனப் பிற நூல்களிலும் உலகளந்த செய்தி வருவது காண்க.
தமிழ் அணங்குக்குச் சிறந்த அணிகலனாய் மிளிர்வது இறையனார் அகப்பொருளாகும்.
சிவபெருமானால் அருளிச்செய்யப்பெற்ற காரணத்தினால் இந்நூலுக்கு இறையனார் அகப்பொருள் என்று பெயர்.
இதற்க்கு உரை கண்டவர் தெய்வப்புலமை நக்கீரனார். இவர் கடைச்சங்கத்தில் வீற்றிருந்த புலவர் பெருந்தகையாவர்,
நக்கீரனார் எழுதிய உரையிலே எடுத்துக்காட்டாக அமைந்த பாடல்களில் சில திருமாலின் திரிவிக்கிரமாவதாரம் பற்றிப் பேசுகின்றன.
இதனை அடியிற் காண்க;
வேழம் வினாதல்
“வருமால் புயல்வண்கை மான்தேர் வரோதயன் மண்ணளந்த திருமா லவன்வஞ்சி அன்னஅஞ் சீரடிச் சேயிழையீர்!
கருமால் வரையன்ன தோற்றக் கருங்கைவெண் கோட்டுச் செங்கட் பொருமால்
களிறொன்று போந்ததுண் டோநும் புனத்தயலே”(இறையனார் அகப்பொருளுரை 57)
“கொடியார் நெடுமதிற் கோட்டாற் றரண்கொண்ட கோன் பொதியிற் கடியார் புனத்தயல் வைகலுங் காண்பல்
கருத்துரையான் அடியார் கழலன் அலங்கலங் கண்ணியன் மண்ணளந்த நெடியான்
சிறுவன்கொல் லோவறி யேனோர் நெடுந்தகையே” (இறையனார் அகப்பொருளுரை -88)
“சென்றார் வருவது நன்கறிந் தேன்செருச் செந்நிலத்தை வென்றான் பகைபோல் மெல்லியல் மடந்தைமுன் வெற் நின்றான்
அளந்த நிலமும் குளிர்ந்தது நீள்புயலால்[பெடுத்து பொன்தான் மலர்ந்து பொலங்கொன்றை தாமும் பொலிந்தனவே”.
(இறையனார் அகப்பொருளுரை 317)
சங்கினை வாழ்த்துதல்
“தேனிற வார்கண்ணிச் செம்பியன் மாறன் செழுங்குமரி வானிற வெண்திரை மால்கடல் தோன்றினை மண்ணளந்த
நீனிற வண்ணனும் ஏந்தினன் தம்முன் நிறம்புரைதீர் பானிற வெண்சங்கம் யார்நின்னின் மிக்க படிமையரே”. (இறையனார் அகப்பொருளுரை 314)
“திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே என்னும்” என்ற நம்மாழ்வார் வாக்கினுக்கிணங்க,
திருமாலின் பெருமையினை அரசர்கள் மேல் ஏற்றிக் கூறுவது பண்டைக் காலத் தமிழ்ப் புலவர்கள் மரபு.
இம்மரபுக்கேற்ப நக்கீரர் உரையிலும் மாலின் புகழை மன்னன்மேல் ஏற்றிக் கூறினார். மேலும் சில பாடல்களும் காண்க:–
“வானுற நிமிர்ந்தனை வையக மளந்தனை பான்மதி விடுத்தனை பல்லுயி ரோம்பினை
நீனிற வண்ணநின் நிரைகழல் தொழுதனம்.” (யாப்பருங்கலக் காரிகை மேற்கோள்)
“முன்புலக மேழினையுந் தாயதுவு மூதுணர்வோர் இன்புறக்கங் காநதியை யீன்றதுவும் —
நன்பரதன் கண்டிருப்ப வைகியதுங் கான்போ யதுமிரதம் உண்டிருப்பா ருட்கொண் டதும்
வெந்த கரியதனை மீட்டுமக வாக்கியதும் அந்தச் சிலையினைப்பெண் ணாக்கியதும் —
செந்தமிழ்தேர் நாவலன்பின் போந்ததுவு நன்னீர்த் திருவரங்கக் காவலவன் மாவலவன் கால்.” (தண்டியலங்காரம் குளகச் செய்யுள் மேற்கோள்)
[வெந்த கரி — கரிக்கட்டையான பரீட்சித்து. செந்தமிழ் தேர் நாவலன் –திருமழிசைப்பிரான்]
உலகளந்த வரலாற்றைக் கூறும் பாடல்கள் தண்டியலங்காரத்தில் மேலும் பல உண்டு.
விரிவுக்கஞ்சி விடுத்தனம். இனி கம்பர் கூறுவதைக் காண்போம்.
“நின்றதாண் மண்ணெலா நிரப்பி யப்புறம் சென்றுபா விற்றிலே
சிறிது பாரெனா ஒன்றவா னகமெலா மொடுக்கி யும்பரை
வென்றதாள் மீண்டது வெளிபெ றாமையே.”(கம்பராமாயணம்- வேள்வி 36)
பரம சைவராக விளங்கிய கவி ஒட்டக்கூத்தரும் இவ்வரலாற்றினை விட்டு வைக்கவில்லை.
நக்கீரரைப் போல மாலின் பெருமையை மன்னன் மேலேற்றிக் கூறுகிறார்:—-
“நவ்வி மடநோக்கான் ஞாலத்தை யோரடியால் வவ்வி யிருதோளில் வைத்தமால்.”(குலோத்துங்க சோழன் உலா)
“மிக்கோ னுலகளந்த மெய்யடியே சார்வாகப் புக்கோ ரருவினைபோற் போயிற்றே– அக்காலம்
கானகத்தே காதலியை நீத்துக் கரந்துறையும் மானகத்தேர்ப் பாகன் வடிவு.” (புகழேந்திப் புலவர்: நளவெண்பா, கலிநீங்கு காண்டம் -7)
என்றார் புகழேந்தியும்.
கம்பர் ஒட்டக்கூத்தர், புகழேந்தி மூவரும் சமகாலப் புலவர்கள் என்பது பலர் கொள்கை.
இவர்கள் மூவருமே உலகளந்த உத்தமன் வரலாற்றினைக் கூறுவது குறிக்கொள்ளத் தக்கது.
“போதங்கொண் மாணுருவாய்ப் புவியிரந்த அஞ்ஞான்று புகன்று கொண்ட வேதங்கள் நான்கினையும் வேதியர்பால் கேட்டருளி மீண்டும் கற்றே”
(கலிங்கத்துப்பரணி)என்றார் சயங்கொண்டாரும்.
“தேடிய அகலிகை சாபம் தீர்த்ததாள் நீடிய உலகெலா மளந்து நீண்டதாள் ஓடிய சகடிற வுதைத்துப் பாம்பின்மேல்
ஆடியுஞ் சிவந்ததா ளென்னை யாண்டதாள்”(வில்லிபாரதம்)
என உலகளந்த திருவடியின் பெருமையினை வில்லிபுத்தூரார் பாரதத்தில் நயம்பட உரைப்பதை உணர்க.
“பூவரு மயன்முதல் யாவரு மறியா
மூவுல களந்தநின் சேவடி வாழ்த்தி”
(திருவரங்கக் கலம்பகம்)
“அடலவுணன் பாற்குறுகி அற்பநிலங் கையேற்றாய் கடலகிலம் யாவுமுந்தி காட்டுவது கண்டிலையோ.”
(அழகர் கலம்பகம்)
என்பனவும் காண்க.
இதுவரை சங்க கால இலக்கியங்களிலிருந்தும், தொன்மையான சிறந்த தமிழிலக்கியங்களிலிருந்தும் சான்றுகள் காட்டப்பட்டன.
இனி, காலத்தால் முற்பட்ட முதலாழ்வார்களுடைவும், திருமழிசைப் பிரானுடையவுமான
அருளிச்செயலமுதத் திருவாககினை மட்டும் காண்போம். மற்றைய ஆழ்வார்கள் கூறுவதை திவ்யப்பிரபந்தத்தில் கண்டு தெளிக.
“நின்று நிலமங்கை நீரேற்று மூவடியால் சென்று திசையளந்த செங்கண்மால்”
(பொய்கையாழ்வார்)
“அடிமூன்றில் இவ்வுலகம் அன்றளந்தாய் போலும்
அடிமூன் றிரந்தவனி கொண்டாய்”
(பூதத்தாழ்வார்)
“வாய்மொழிந்து வாமனனாய் மாவலிபால் மூவடிமண் நீயளந்து கொண்ட நெடுமாலே”
(பேயாழ்வார்)
“தாளால் உலகம் அளந்த அசைவேகொல் வாளா கிடந்தருளும் வாய்திறவான்”
(திருமழிசையாழ்வார்)
இனி, அடிமுடி தேடிய கதைக்கு மறுப்பான வெண்பாவின் மேல் பகுதியைக் காண்போம்.
உலகுண்டபொழுது……மாலென்பதென்?
இதன் கருத்து;
திருமால் பிரளய காலத்தில் அழியாமல் காக்க அனைத்துலகங்களையும் உண்டான்.
உலகங்கள் அனைத்தும் அவன் உதரத்துள் ஒடுங்கின. அக்காலம் பிரம்மன், சிவன், தேவர், மனிதர் முதலிய அனைவரும்
திருமால் திருவைற்றுள் உறைந்தனர். சிருஷ்டி காலத்தில் தன் கருணையினால் உண்ட உலகனைத்தையும் உமிழ்ந்தான்.
அப்போது பிரம்மன் முதல் அனைத்துலகங்களும், பிறை சூடியாகிய சிவனும் தோன்றினர்.
உண்மை இவ்வாறிருக்க: சிவபெருமான் அடியைத் திருமால் தேடினான் என்பது எவ்வாறு பொருந்தும்? என்பது கருத்து.
இக்கருத்தினை..
“அன்றுலக முண்டுமிழ்ந்தா யகிலசெகத் காரணனீ என்றுனக்கே யாளானோம் இமிழருவி வடமலைவாழ்
மன்றல்கமழ் துழவோயுன் வயிற்றுளெங்களொடு கடை சென்றுறைந்து மீளவருந் தேவரை யாமதியோமே.”[நாட்
என்று திருவேங்கடக் கலம்பகம் தெளிவாகக் கூறும்.
இனி இதன் சான்றுகள்:—-
ஐம்பெரும் பூதங்கள், சூரிய சந்திரர்கள், மற்ற கிரகங்கள், பன்னிரு ஆதித்தியர், அஷ்டவசுக்கள், ஏகாதச ருத்திரர்கள்,
அசுவிநீ தேவர்கள், இயமன், உருத்திரன் முதலியவர்களும், மூவேழ்உலகமும், அவற்றில் உள்ள சராசரஜீவர்களோடு,
உந்திக் கமலத்தில் தோன்றிய பிரமனும் திருமாலிடத்திலிருந்தே தோன்றினர் என்பதைப் பரிபாடல் தெளிவாக விளக்குவது காண்க;
“மா அயோயே! மாஅயோயே!
மறுபிறப் பறுக்கும் மாசில் சேவடி
மணிதிகழ் உருபின் மா அயோயே!
தீவளி விசும்பு நிலன் நீர் ஐந்தும்
ஞாயிறுந் திங்களும் அறனும் ஐவரும்
திதியின் சிறாரும் விதியின் மக்களும்
மாசில் எண்மரும் பதினொரு கபிலரும்
தாமா இருவரும் தருமனும் மடங்கலும்
மூவேழ் உலகமும் உலகினுள் மன்பதும்
மாயா வாய்மொழி உரைதர வலந்து
வாய்மொழி ஓடை மலர்ந்த
தாமரைப் பூவினுள் பிறந்தோனும் தாதையும் நீயென மொழியுமால் அந்தணர் அருமறை.”(பரிபாடல்-3)
மேலும், பரிபாடலிலே திருமாலின் வராகாவதாரம் பேசபபடுகிறது.
ஆனால் வராக வடிவெடுத்து சிவனடியைத் தேடியதாக எங்குமே கூறவில்லை.
ஊழி காலத்தில் நீரினுள் அமிழ்ந்த பூமியை வராகாவதாரம் எடுத்து மீண்டும் நிலைநிறுத்திய திருமாலின்
முதுமையை எவரும் அறியார் என்றே உள்ளது.
“கேழல் திகழ்வரக் கோலமொடு பெயரிய
ஊழி ஒருவினை உணர்த்தலின் முதுமைக்கு
ஊழி யாவரும் உணரா
ஆழி முதல்வ! நிற்பேணுதும் தொழுது”. (பரிபாடல் – 2)
என்றும்,
“புருவத்துக் கருவல் கந்தரத்தால்
தாங்கி, இவ்வுலகம் தந்து அடிப்படுத்ததை நடுவண்
ஓங்கிய பலர் புகழ் குன்றினோடு ஒக்கும்”.(பரிபாடல்-4)
என்றும் பரிபாடல் முதலான சங்கநூல்கள் திருமால் பெருமையைப் பாடுகின்றனவேயொழிய,
சிவனடியை வராக வடிவெடித்துத் திருமால் தேடியதாக எங்குமே இல்லை.
இது ஸுதர்சனம் ஆசிரியரால் சங்ககாலத் தமிழர் சமயத்திலும், சாதிமத ஆராச்சியிலும் விரிவாக நிலைநாட்டப்பெற்றுள்ளது.
ஸுதர்சனம் வெளியீடான சோலைமலைக்குறவஞ்சியும்.
“சாலவே அனந்தன் தலையில் இடுப்புவியெலாம்
கோலமோர் துகளெனக் கொடுவந்து வைத்ததால்
சுவேத வராக கல்பப்பேர் சொல்லி
இவேதியர் முதலாய் இனம்சங்கல் பிக்கிறார்
அப்படிக் கிருக்க அருணைக் கல்லடியை
எப்படி அறியா திருந்ததென் றிசைத்தாய்?.”
என்று கூறிச் செல்வது காண்க.
இனி. கூரேச விஜயத்தில், ‘அடிமுடி தேடிய கட்சி என்ற அத்தியாயத்தின் உரைத் தொகுப்பினை அடியிற் காண்க:
“பிரளய காலத்தில் சிவனையும், சிவனைப் பெற்ற பிரமனையும், அவனால் படைக்கப்பட்ட தேவ, மனுஷ்ய, திரியக்ஸ்தாவரங்களையும்,
சிவனால் வசிக்கப்பட்ட கைலை முதலிய அஷ்டகுல பர்வதங்களையும், தன்னுடைய குக்ஷியில் தரித்திருக்க,
இந்தச் சிவன் விஷ்ணுவினுடைய குக்ஷியை விட்டு நழுவி இருந்தானோ? இப்படியிருக்க விஷ்ணு வராகாவதாரம் பண்ணி,
சேதனனான சிவனுடைய பாதத்தைத் தேடினாரென்பது வேத விருத்தமன்றோ?………
“திருவண்ணாமலையின் பிரபாவத்தைக் கேளுங்கள். அதற்கு சுதர்சனகிரியென்று திருநாமம். அதனுடைய சரித்திரமாவது—
ஜைமினி பாரதத்தில் ஆரண்ய பர்வத்தில் தர்மநந்தனனுக்கு ரோமசரிஷி திவ்யதேசங்களின் பிரபாவங்களில்,
திருக்கோவலூர் திவ்யதேசத்தின் சரித்திரம் சொன்னவுடனே சுதர்சநகிரி மகாத்மியத்தைச் சொல்லுகிறார்….
“அதாவது; ஜகத் சிருஷ்டியின் ஆதியில் திருவாழி ஆழ்வானை லோக சிருஷ்டி பண்ணச் சொல்லி அனுப்ப,
அவர் அப்படிச் செய்யாமலிருந்ததின் பேரில் பிரம்மாவை சிருஷ்டித்து ஜகத் சிருஷ்டி பண்ணச் சொல்லி நியமிக்க,
அவரும் அப்படியே வெகுகாலம் கழித்ததின் பேரில், சிவனை சிருஷ்டித்து ஜகத் சிருஷ்டி பண்ணும்படி அனுப்ப,
அவரும் அப்படியே அலட்சியமாயிருந்ததின் பேரில் ஒரு வராஹத்தை சிருஷ்டித்து ஜகத் சிருஷ்டி பண்ணும் படி அனுப்பினார்.
அந்த வராஹத்தைக் கண்ட பிரம்மா, நீர் யார்? எதற்கு வந்தீர்?’ என்று கேட்க,
‘நான் சிருஷ்டி பண்ணும்படி ஸ்ரீமகா விஷ்ணு (வினாலே) அனுப்ப வந்தேன் என்ன.
அதற்க்கு பிரம்மா கோபித்து, ‘என்னை சிருஷ்டிங்கும் படி அனுப்பியிருக்கிறாரே’ என்று
வராஹத்துடன் வாதம் செய்கையில் சுதர்சந ஆழ்வான்,
‘ஒருவருக்கொருவர் சம்வாதம் நேரிட்டால் மத்யஸ்தராவார்கள் இருவரையும் சமாதானம் பண்ணாமல் பார்த்துக்
கொண்டிருப்பார்களாகில் அவர்களுக்கு நரகமுண்டு’ என்று வேதத்திற்சொல்லுகையால் தான் மத்யஸ்தராய் வந்து,
‘ஓய்! வராஹ மூர்த்தியே! நீர் லோக சிருஷ்டி பண்ண வந்தேன் என்று சொல்லுகிறீர்,
உம்முடைய வியாபாரம் மிகப் பெரிதாயிருக்கையால் இதோ நான் பர்வத ரூபமாயிருக்கிறேன்,
என்னை நீர் கெல்லுவீராகில், நீர் சிருஷ்டிக்க சாமர்த்தியமுடையவரென்று நம்புகிறேன்’ என்று சொன்னார்.”
வராஹ மூர்த்தியும் அப்படியே அந்த சுதர்சநகிரியை தம்முடைய கோர தந்தங்களினாலே பேர்த்தெறிந்தது
மல்லாமல் விஸ்வரூபம் தரித்து மஹத்தான உக்கிரத்துடனே சேவை சாதிக்கையில், திருவாழியாழ்வானும்
பிரம்ம ருத்திரர்களும் வேத வாக்கியங்களினாலே தோத்திரம் செய்து, கோபத்தை சாந்தம் பண்ண வேண்டும்
என்று பிரார்த்திக்கையில், அப்படியே ஸ்ரீஸ்வாமியானவர் திருவுள்ளத்தில் சந்தோசமுண்டாய் பிரம்மாவை அழைத்து ‘
நீர் லோக சிருஷ்டியைப் பண்ணக்கடவீர்’ என்றும், ருத்திரனை அழைத்து ‘
நீர் சங்காரத் தொழிலைப் பண்ணக் கடவீர்’ என்றும் நியமிக்க;
அப்போது சிவன் ஸ்வாமியை மிகவும் தோத்திரம்செய்து, ‘இந்த கொடிய வியாபாரம் அடியேனுக்கு நியமிக்க வேண்டாம்,
என்று கண்ணுங் கண்ணீருமாய் அழுததின்பேரில், ஸ்வாமி கிருபை கூர்ந்து,
‘ஆகில் நீர் சூரியனைப் பார்க்கக்கடவீர், அவனிடத்தில் நின்றும் வைவஸ்வத மனு என்கிற இயமன் உண்டாவான்,
அவனைக்கொண்டு நித்ய சம்ஹாரங்களைப் பண்ணுவிக்கடவீர்,
முடிவில் நீர் சுதாவாய் பிரளயகால ருத்திர ரூபத்தைத் தரித்து சர்வ சம்ஹாரம் பண்ணக்கடவீர்’ என்று நியமித்தார்
“சிவனுக்கு அந்த சுதர்சநகிரியின் அடிவாரத்தில் ஒரு ஆலயம் பிரஷ்டை பண்ணும்படியும்,
தம்மையும் அவ்விடத்தில் விஷ்ணுஸ்தலமாய் பிரதிஷ்டை பண்ணும்படியாகவும் நியமித்து,
உத்ஸவங்கள் நடந்தேறி வருகிறதாய் ஜைமினி பாரதத்தில் ஏழு அத்தியாயங்களில் இந்தச் சரித்திரம் சொல்லப்பட்டிருக்கிறது”
“அதன் பின் வல்லாளகண்டன் என்ற அரசனால் அந்த விஷ்ணுஸ்தலம் சிவஸ்தலமாக்கப் பட்டது. அதற்க்கு ஒரு மாகாத்மியமும் உண்டாக்கப்பட்டது”.
“இந்த சுதர்சநகிரிக்கும் அண்ணாமலை என்ற பெயருண்டாக்கி, சிவனுக்குப் பாட்டனான விஷ்ணுவானவர்
வராஹரூப மெடுத்துப் பேரனுடைய பாதத்தைத் தேடினார் என்றும்,
சிவனுக்கு பிதாவான பிரம்மாவானவர் குமாரனுடைய சிரசைத் தேடினார் என்றும்,
இந்தப் பொய்களுக்குத் தகுதியாய், தாழம்பூ பொய்சாட்சி சொன்னதாயும், அதற்க்காகத் தாழம்பூ தேவார்ஹமல்லாதே
போகக்கடவதென்று சபித்ததாயும் இந்தக் கதை ஸ்காந்தபுராணத்தின் பூர்வபாகத்தில் சொல்லப்பட்டிருக்கிறதென்றும் சொல்வது
வேதங்களுக்கும் இதிஹாசமாகிய பாரதத்திற்கும், புராணங்களுக்கும் விரோதிக்கிரதுமல்லாமல் பௌத்திரன் காலைப் பாட்டன் தேடுகிறதும்,
புத்திரன் சிரசைப் பிதா தேடுகிறதுமாகச் சொல்லுகிறது யுக்தி விரோதமுள்ளதாய், பரிஹாஸாஸ்பதமாகவிருக்கிறது.”
“விஷ்ணுவானவர் பாதளத்தில் கீழே ஆதிகூர்மமாயும், அதற்க்குமேல் ஆதிசேஷனாயும், அவதரித்திருக்கச் சிவனுடைய
காலைத் தேடிக் காணாதே போய்விட்டாரென்று சொல்வது புராண விரோதமென்று கண்டித்தார்.”
[கூரேச விஜயத்தின் உரைத் தொகுப்பு]
எனவே அடிமுடி தேடிய கதை ஒரு பொய், புரட்டு, புனைப்பு கதை என்பது தெரிகிறது.
“சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்
எம்பெருமானார் திருவடிகளே சரணம்..!
கூரேசர் திருவடிகளே சரணம்…!
ஆதாரம்:-[திவ்யகவி பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் இயற்றிய ‘பரப்பிரம்ம விவேகம்’ என்னும் மகத்தான படைப்பில் இருந்து]
————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply