ஸ்ரீ நம் ஆழ்வார் தம் திரு வாக்கால் –இரண்டாம் பத்தில் ஸ்ரீ திருவாய் மொழி -பற்றி அருளிச் செய்யும் ஸ்ரீ ஸூ க்திகள் – –

‘இத்திருவாய்மொழி கற்றார், கண்ணாற் காணப்பட்டன எல்லாம் பகவானைப் பெறாமையாலே -அலாபத்தாலே –
நோவு படுகிற சம்சாரத்திலே இருந்து நோவுபடாமல்,
( கண்டார் எல்லாம் பகவானைப் பெற்று -லாபத்தாலே-களித்து வாழும் நாட்டிலே புகப்பெறுவர்’ என்கிறார்
இவை பத்தும் விடார் கண்டீர் வைகுந்தம் திண்ணனவே–பதங்களைக் கடாக்ஷித்து அவதாரிகை –
ஆழ்வாருடைய பாவ வ்ருத்தி உண்டாகும் என்று தாத்பர்யம் )

சோராத எப்பொருட்கும் ஆதியாம் சோதிக்கே
ஆராத காதல் குருகூர்ச் சடகோபன்
ஓராயிரம் சொன்ன அவற்றுள் இவை பத்தும்
சோரார் விடார் கண்டீர் வைகுந்தம் திண்ணனவே–2-1-11-

சோராத எப்பொருட்கும் ஆதியாம் சோதிக்கு –
இவ்வளவிலே வந்து இவரோட கலந்து இவரை உளராக்குகையாலே, ஒன்றும் ஒழியாதபடி
எல்லாப் பொருள்கட்கும் ஈஸ்வரனுமாய்,
இவரோடே வந்து கலந்து அத்தாலே-உஜ்ஜவலனுமாய் – ஒளி உருவனுமாய் இருந்தான்.

இவர் ஒருவரையும் சோரக் கொடுக்கவே, எல்லாப் பொருள்கட்கும் ஈஸ்வரனாயுள்ள தன்மை அழியுமாதலின,
இவர்க்கு வந்து முகங்காட்டுதற்கு முன்பு எல்லாப் பொருள்கட்கும் ஈஸ்வரனாய் உள்ள தன்மையும் அழிந்தது போலே கிடந்தது;

இவர் இழவு தீர வந்து முகங்காட்டின பின்பு எல்லாப்பொருள்கட்கும் நிர்வாஹகன் ஆனான் என்பார்,
‘சேராத எப்பொருட்கும் ஆதி’என்கிறார்.

பேறு இழவுகள் இவரது அன்றி, ‘தன்னது’ என்னுமிடம் வடிவில் புகரிலே தோற்ற நின்றானாதலின் ‘சோதிக்கு’ என்கிறார்.
இதனால்,க்ருதக்ருத்யனானான் -‘செய்ய வேண்டியனவற்றைச் செய்து முடித்தவனாய் இரா நின்றான்’ என்பதனைத் தெரிவித்தபடி.

(பிரணயித்வ நிபநந்தனமாகவும் வாஸ்தவமான ஆகாரத்தாலும் இரண்டு விதமாக அருளிச் செய்து
இவருடன் கலந்ததனால் உஜ்ஜவலனாயும் தனது பேறாகவும் கொண்டமையும் தோற்ற அருளிச் செய்கிறார் )

ஆராத காதல் –
இத் திருவாய் மொழியில் சொல்லப்பட்ட பொருள்; கண்ணால் காணப்பட்ட பொருள்கள் எல்லாம்
பகவானைப் பெறாத காரணத்தாலே தம்மைப் போலே நோவு படுகின்றனவாகக் கொண்டு,
அவற்றுக்குமாகத் தாம் நோவுபடும்படியான அபிநிவேசமாதலின் அதனைத் தெரிவிப்பதற்கு ‘ஆராத காதல்’ என்கிறார்.

காதல் குருகூர்ச் சடகோபன் –
காதலைக் கொண்டே இவரை நிரூபிக்க வேண்டி இருத்தலின், ‘காதல் சடகோபன்’ என்கிறார்.
‘இது, தற்புகழ்ச்சி அன்றோ?’ எனின், தம் படி சொல்லும் போதும் தாமே சொல்ல வேண்டுமே.
(அவரது பக்தியின் ஸ்வ பாவம் அவருக்கே தெரியுமது ஒழிய பிறருக்குத் தெரியாது இறே –
இவருடைய ஆகாரங்கள் வேறே ஓர் இடத்திலே காணாமையாலே -)

சொன்ன அவற்றுள் –
இக் காதலோடே அருளிச் செய்த ஆயிரத்துள் அவற்றுள் இவை பத்தும் –
அல்லாதவை ஒரு தலையாக, இத்திருவாய்மொழி ஒரு தலையாம் படி அக்காதலை வாய் விட்டுக் கூறிய பதிகமாதலின்,
‘அவற்றுள் இவை பத்தும்’ என்கிறார்.

இவை பத்தும் சோரார் விடார் கண்டீர் வைகுந்தம்.
இங்கே இருந்து, கண்ணுக்கு இலக்கான பொருள்கள் அடங்கலும் பகவானைப் பெறாத காரணத்தால்
நோவுபடுகின்றனவாக அநுசந்திக்குமவர்கள்,
இவ்விருப்பை விட்டுக் கண்ணால் கண்டார் அடங்கலும் பகவானைப் பெற்றமையால் களிக்கும்
நித்திய விபூதியை விடாமல் நித்திய அநுபவம் பண்ணப் பெறுவர்கள்.

‘கண்டீர்’ என்று கையெழுத்துக் கூப்பிடுகிறார்.

‘திண்ணன’ என்றது, -ஸூ நிச்சிதம் -ஐயமின்மையைக் குறிக்க வந்தது.

இங்கே உள்ள சிலரைப் பற்றிச் சொல்லிற்று ஓர் அர்த்த மாகிலன்றே, ஐயம் திரிவுகள் உள்ளனவாம்?
பகவானுடைய பிரபாவத்தைப் பற்றிச் சொன்னதாகையாலே இது தனக்கு எங்கேயாயினும் சூளுறவு செய்யலாம் என்றபடி.
(விஞ்ஞான சாரதிர் மனஸ் ப்ரக்ரஹவாந் நர -ஸோ அத்வந பாரமாப்நோதி தத் விஷ்ணோ பரமம் பதம் -என்றும்
ச கல்வேவம் வர்த்தயந் யாவதாயுஷம் ப்ரஹ்ம லோகம் அபி சம்பத்யதே -என்றும் உச்யமானம் அன்றோ பரமபதம் )

இத்திருவாய்மொழியில், முதற் பாட்டிலே தொடங்கி,
நாரை தொடக்கமாக, அன்றில், கடல், காற்று, மேகம், சந்திரன், இருள், கழி, விளக்கு ஆகிய
இப்பொருள்களைக் குறித்துச் சோகித்து
மிகவும் தளர்ந்த அளவிலே அவன் வந்து முகங்காட்ட,
‘இனி என்னை விடா தொழிய வேண்டும்’ என்று கூறி,
இத் திருவாய் மொழி கற்றார்க்குப் பலத்தைச் சொல்லித் தலைக் கட்டினார்

——————

நிகமத்தில் – ‘இத்திருவாய் மொழியைக் கற்று உணர வல்லவர்கட்கு, -தேவதாந்த்ரங்கள் பக்கல்
ஈஸ்வரத்வ புத்தி பண்ணுகையாகிற ஊனம் குற்றம் இல்லை,’ என்கிறார்

ஏத்த ஏழுலகும் கொண்ட கோலக்
கூத்தனைக் குருகூர்ச் சடகோபன் சொல்
வாய்த்த ஆயிரத்துள் இவை பத்துடன்
ஏத்த வல்லவர்க்கு இல்லை ஓர் ஊனமே–2-2-11-

ஏழ் உலகம் ஏத்த ஏழ் உலகும் கொண்ட –
சங்கைஸ் ஸூ ராணாம் ‘வானத்திலும் பூமியிலும் உள்ள அமரர் கூட்டமும், அவ்வாறே மனிதர்களும்,
அங்கேயே சஞ்சரிக்கிற தேவர்களும் ஸ்துதிக்க, இவ்வுலகங்களை எல்லாம் தன் அடிகளால் அளந்தவன் எவனோ,
அவ்விறைவனான திரிவிக்கிரமன், என்னுடைய மங்களங்களின் விருத்தியின் பொருட்டு
எனக்கு எப்பொழுதும் அருள் புரிய வேண்டும்,’ என்கிறபடியே, ஏத்தி ஸ்துதிக்க,
அந்த ஹர்ஷத்தாலே -அம்மகிழ்ச்சியாலே எல்லா உலகங்களையும் திருவடியின் கீழே இட்டுக் கொண்ட.

சங்கைஸ் ஸூ ராணாம் திவி பூதலைஸ் தைஸ் ததா மனுஷ்யைர் ககநே ச கேஸரை
ஸ்துத க்ரமாக் பிரசகார ய ஸர்வதா மமாஸ்து மங்கள்ய விருத்தயே ஹரி -ஸ்ரீ விஷ்ணு தர்மம் –

கோலக் கூத்தனை –
திருவுலகு அளத்தருளின போது வல்லார் ஆடியது போன்று இருந்தானாதலின் ‘கூத்தனை’ என்றும்,
அப்போதைய வடிவழகின் மிகுதியினைக் கூறுவார்,‘கோலக் கூத்தனை’ என்றும் அருளிச் செய்கிறார்.

இதனால், இந்திரன்-ராஜ்ய ஸ்ரத்தை – இழந்த தனது ராஜ்யத்தைப் பெறும் பொருட்டு வணங்கியது போன்று,
இவர் ஒரு பயனைக் கருதி வணங்குமவர் அல்லர் என்பதுவும் ,
அவ்விறைவனுடைய வடிவழகினை அனுபவித்தலே இவர்க்குப் பேறு என்பதுவும் போதரும்.

குருகூர்ச் சடகோபன் சொல் –
ஆப்திக்கு இன்னார் கூறியது என்ன வேண்டுதலின், ‘குருகூர்ச் சடகோபன்’ என்கிறார்.
இதனால், (த்ரீணீ பதா விசக்ரமே )வேதாந்தத்தைக் காட்டிலும் ஆழ்வாரிடத்தில் பிறந்த திருவாய்மொழிக்குள்ள
ஆபி ஜாத்யம் — உயர்குடிப் பிறப்பின் சிறப்பினைக் கூறியபடி

வாய்ந்த ஆயிரம்
இத்தனை போது இவர் கூறி வந்த பரம் பொருள் நேர் பட்டாற் போலேயாயிற்று இப்பிரபந்தமும் நேர் பட்டபடி.
அன்றி,வாச்சியத்திற் காட்டில் வாசகம் நேர் பட்டபடி என்றுமாம்.
அதாவது, விஷயத்தை உள்ளபடி பேசவற்றாய் இருக்கை.

இவை பத்து உடன் ஏத்த வல்லவர்க்கு –
இத் திருவாய்மொழியை-சஹ்ருதயமாக – மனமாரத் ஸ்துதிக்க வல்லவர்கட்கு.

ஓர் ஊனம் இல்லை – இவ்வாத்துமாவுக்கு ஊனமாவது -அபர தேவதைகள் பக்கல் – இறைவர் அல்லாதாரை-
பரத்வ புத்தி பண்ணுகையும் இறைவர் என்று எண்ணுதலும்,
பர தேவதை பக்கல் -இறைவனை -பரத்வ பிரதிபத்தி பண்ணாமையும் -இறைவன் என்று எண்ணாமையும்.
இப்படி வரக்கூடிய ஊனம் இது கற்றார்க்கு இல்லை.

முதற்பாட்டில், மேல் பரக்க அருளிச் செய்கிற இத்திருவாய் மொழியின் அர்த்தத்தைத் தொகுத்து –
ஸங்க்ரஹேன -அருளிச் செய்தார்.
துக்கத்தைப் போக்குமவன்-நிவர்த்தகன் – ஆதலானும்,
சீலவான் ஆதலானும்,
ஸூகுமாரன் ஆதலானும், புண்டரீகாக்ஷன் -தாமரைக்கண்ணன் ஆதலானும்,
ஆபத் சகன் ஆகையானும்,
அகடிதகடநா சமர்த்தன் ஆதலானும்,
ஸ்ருஷ்ட்டி ஸ்திதிகளை -படைத்தல் காத்தல்களைச் செய்கையாலும்,
அழித்தலைச் செய்கையாலும்,
ஈஸ்வர அபிமானிகளாய் இருக்கிறவர்களுடைய ஸ்துதிகள் முதலியவைகளாலும்,
இப்படிப் பல வகைகளாலே அவனுடைய பரத்துவத்தை அருளிச் செய்து,
இது கற்றார்க்குப் பலம் சொல்லித் தலைக்கட்டினார்.

———

நிகமத்தில் , ‘இத்திருவாய்மொழியை ‘உனக்கே நாம் ஆட் செய்வோம்’ என்று
இருக்கும் அடியவர்கள்,-பகவத் ஏக போகராய் இருப்பார் –
என்னைப் போன்று தனித்திராமல் திரளாக அனுபவியுங்கள்,’ என்கிறார்.
கூட்டமாக இந்தத் திருவாய் மொழியையே அனுபவிப்பதே பலம் என்றவாறு –

குழாங்கொள் பேர் அரக்கன் குலம் வீய முனிந்தவனைக்
குழாங்கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்து உரைத்த
குழாங்கொள் ஆயிரத்துள் இவை பத்தும் உடன் பாடிக்
குழாங்களாய் அடியீர்! உடன் கூடி நின்று ஆடுமினே–2-3-11-

குழாம் கொள் பேர் அரக்கன் குலம் வீய முனிந்தவனை –
கரிஷ்யே மைதிலீ ஹேதோர பிசாசம ராக்ஷஸம் -ஆரண்ய –46-) ’சீதா பிராட்டியின் பொருட்டு, பாணங்களால்
இவ்வுலகத்தில் பிசாச சாதி அற்றதாயும், இராக்கத சாதி அற்றதாயும் செய்வேன்’ என்கிற படியே,
புத்திரர் பௌத்திரர் முதலானவர்களும் உறவினர்களுமான இவர்களாலே குழாங்கொண்டு –
வர புஜ பலத்தால் – வரத்தின் வலிமை தோள் வலிமை என்பனவற்றால் தழைத்து வேர் ஊன்றின
ராக்ஷஸருடைய ஜாதியினைக் கிழங்கு எடுத்த சக்கரவர்த்தி திருமகனை.

குழாம் கொள் தென் குருகூர்ச் சடகோபன் –
அடியார்கள் கூட்டத்தைக் கொண்ட அழகிய திருக் குருகூரில் அவதரித்த ஸ்ரீ சடகோபர்.
ஜன ஸ்தானம் அடியறுப்பு உண்ட பின்பு தண்ட காரண்யத்தில் முனிவர்கள் குடி ஏறியது போன்று,
‘வாயும் திரையுகளும்’ என்ற திருவாய்மொழியில் உண்டான நிலையினின்றும் தப்பிய ஆழ்வாரைக்
காண வேண்டும் என்னும் பேரவாவோடு ஸ்ரீ வைஷ்ணவர்கள் அடையத் திரண்டு வந்து சேர்ந்தார்களாதலின்,
‘குழாங்கொள் தென் குருகூர்’ என்கிறார்.

‘நல்லார் நவில் குருகூர்’ அன்றோ?
சத்துகள் இருந்த இருந்த இடங்களிலே வாய் புலற்றும்படியான தேசமானால்,
அத் தேசத்திலுள்ளார் திரளச் சொல்ல வேண்டா அன்றோ?
திரண்டவர்களுக்கு ஜீவனம் வேண்டும் இறே

தெரிந்து உரைத்த குழாம் கொள் ஆயிரத்துள் –
உள்ளபடி அநுசந்தித்துச் சொன்ன
பத்துப்பாட்டு ஒரு திருவாய் மொழியாய், பத்துத் திருவாய்மொழி ஒரு பத்தாய்,
இப்படிப் பத்துப் பத்தான ஆயிரம். திரண்ட ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ஜீவனமாக இவை இருத்தலின்,
‘குழாம் கொள் ஆயிரம்’ என்கிறார்.

‘ஆயின் திருவாய்மொழி ஜீவனம் ஆகுமோ?’ எனின்,
‘தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன்மாலைகள் சொன்னேன்,
அண்டத்து அமரர் பெருமான் அடியேனே’ என்பது இவருடைய திருவாக்கு.

இவை பத்தும் உடன் பாடி –
சாபிப்ராயமாக அப்யஸித்து-
இவை பத்தையும் பொருள் உணர்ச்சி நிறைந்த கருத்தோடு பாடி.

குழாங்களாய் –
என்னைப் போன்று பருகிக் களித்தேனே’ என்று கூறி,
குழாம் தேட இராதே,
முற்படவே திரளாக இழியப் பாருங்கள்.

அடியீர் உடன் கூடி நின்று ஆடுமின் –
அவன் பக்கலிலே நிக்ஷிப்தபரராய் இருக்கிற நீங்கள் நால்வர் இருவர் இங்கிருக்கும்
நான்கு நாளும் தள்ளத் தக்க அர்த்த காமங்களைப் பற்றிச் ‘சீறு, பாறு’ என்னாதே,
நம் பெரிய குழாத்திலே போய்ப் புகுமளவும் ஒரு மிடறாய் அனுபவிக்கப் பாருங்கள்.

(ஆடுகை -அவகாஹியாய் -அனுபவிக்கப் பாருங்கோள் -என்றபடி )

அனுகூலர் கிடையாமையாலே ‘நால்வர் இருவர்’ என்கிறார்;
நம்பிள்ளை நஞ்சீயரைப் பார்த்து, ‘இதர உபாயங்களுக்கு அனுஷ்டாதாக்கள் பலராய் இருக்க,
இதற்கு அநுஷ்டாதாக்கள் மிகச் சிலராய் இருத்தற்குக் காரணம் யாது?’ என்று கேட்க,
‘உலகத்தில் இருந்ததே குடியாக அனைவரும் சம்சாரிகளாக இருக்க,
அதில் நாலிரண்டு பேர் உத்தம ஆஸ்ரமிகளானால்
சம்சாரிகளுக்கு ஒரு உத்கர்ஷமும் சந்யாசிகளுக்கு ஒரு அபகர்ஷமுமே உண்டோ?
ஸ்வர்க்க அனுபவத்துக்கு ஜ்யோதிஷ்டோமம் முதலிய யாகங்களைச் சாதனமாகச் சாஸ்திரங்கள் விதிக்கின்றன;
ஓர் ஊரில் ஒரவனன்றோ யாகம் செய்தான் என்று கேள்விப்படுகிறோம்?
ஆதலால், இதற்கோ உமக்கு ஆள் பற்றப் போகிறது?’ என்று நம்பிள்ளைக்கு நஞ்சீயர் அருளிச் செய்தார் –

முதற்பாட்டில், திருவுள்ளத்தைக் கொண்டாடினார்;
இரண்டாம் பாட்டில், அதனையும் இசைவித்த இறைவனைக் கொண்டாடினார்;
மூன்றாம் பாட்டில், தம் நெஞ்சிற்பட்டதோர் உபகாரத்தைக் கூறினார்;
நான்காம் பாட்டில், அவ்வுபகாரத்திற்குக் கைம்மாறாக ஆத்தும சமர்ப்பணம் பண்ணி அது தனக்கு வருந்தினார்;
ஐந்தாம் பாட்டில், ‘எனக்குப் பிரதம ஸூஹ்ருதமும் நீயேயான பின்பு உன் திருவடிகளைக் கிட்டினேனேயன்றோ?’ என்றார்:
ஆறாம் பாட்டில், ‘இன்றோ கிட்டிற்று? தேவரீர் எனக்கு விசேஷமான கடாக்ஷம் – திருவருள் பண்ணின அன்றே பெற்றேனே அல்லேனோ?’ என்றார்;
ஏழாம் பாட்டில்-அவனுடைய போக்யதையை அனுசந்தித்து – இனிமையை நினைத்து ‘உன்னைப் பிரியில் தரியேன்’ என்றார்;
எட்டாம் பாட்டில், யிப்படி நிரதிசய போக்யனானவனை -எல்லையற்ற இனியனானவனை எளியது ஒரு விரகாலே அடையப் பெற்றேன்’ என்றார்.
அன்றியே ‘பல காலம் கூடிச் செய்து பெறக் கூடிய தவத்தின் பலத்தை அவனைப் பின் சென்று மிக எளிதில் அடைந்தேன் என்கிறார்’ எனலுமாம்.
ஒன்பதாம் பாட்டில், ‘என்னுடைய எல்லாத் துக்கங்களும் போகும்படி அனுபவித்துக் களித்தேன் என்றார்
பத்தாம் பாட்டில் -இப்படி அனுபவித்துக் களிப்பார் திரளிலே போய்ப் புகப்பெறுவது எப்போதோ?’ என்றார்;
நிகமத்தில் ,’ இத்திருவாய்மொழியைக் கருத்தோடு கூடிக் கற்று-அப்யஸித்து , நான்கு நாளும் நால்வர் இருவர்
உள்ளார் கூடியிருந்து அனுபவிக்கப் பாருங்கோள்,’ என்றார்.

———–

நிகமத்தில்-‘இத்திருவாய்மொழியினைக் கற்க வல்லவர்கள் இவர் பிரார்த்தித்தபடியே
நித்திய ஸூரிகள் திரளிலே போய்ப் புக்குச் சர்வேஸ்வரன் திருவடிகளிலே,
‘சூட்டு நன்மாலை’ப்படியே திருமாலை சாத்தி அடிமை செய்யப் பெறுவார்கள்’ என்கிறார்.

வாட்டம் இல் புகழ் வாமனனை இசை
கூட்டி, வண் சடகோபன் சொல் அமை
பாட்டு ஓர் ஆயிரத்து இப்பத்தால் அடி
சூட்ட லாகும் அம் தாமமே–2-4-11-

வாட்டம் இல் புகழ் வாமனனை –
இவ்வளவில் வந்து முகம் காட்டிற்று இலனாகில் புகழுக்கு வாட்டம் வரும் இறே
‘நோக்கு ஒன்றும் வாட்டேன் மினே’ என்றவாறே, ‘புறப்பட்டோம்’ என்று நாணத்தோடே வந்து தோன்றினான்;
இவள் வாட, அவன் புகழாயிற்று வாடுவது.
இத் துன்ப நிலையிலே வந்து முகம் காட்டுகையாலே பூர்ணமான கல்யாண குணங்ளை யுடையவன் ஆனான் என்கிறாள்.
தன் உடைமை பெறுகைக்கு இரப்பாளனாமவன் ஆகையாலே ‘வாமனன்’ என்கிறாள்.

இசை கூட்டி –
பரிமளத்தோடே பூ அலருமாறு போன்று, இசையோடே புணர்புண்டவைகள்.

வண் சடகோபன் சொல்
உதாரதீர் முநி –‘உதார குணத்தை யுடையவரும் மனன சீலருமான ஸ்ரீவால்மிகி இராகவனுடைய கீர்த்தியினை
உண்டு பண்ணுகிற இந்தக் காவியத்தைச் ஸ்லோகங்களாலே செய்தார்’ என்கிறபடியே,
மானச அனுபவத்தோடு அல்லாமல் வாசிகம் ஆக்கி நாட்டை வாழ்வித்த வண்மையர் ஆதலின்,
‘வண் சடகோபர்’ என்கிறார்.

அமை பாட்டு ஓர் ஆயிரத்து –
அமைவு -சமைவாய், சொல்லும் பொருளும் நிறைந்திருத்தல்.

இப் பத்தால் அம் தாமம் அடி சூட்டலாகும் –
இப்பத்தையும் கற்க வல்வர்கட்குச் செவ்வி மாலையைக் கொண்டு
அவன் திருவடிகளிலே நித்திய கைங்கரியம் பண்ணப் பெறலாம்.

‘ஆயின், நித்திய கைங்கரியத்தைச் செய்வதற்கு இவர்க்குப் பிறந்த ஆற்றாமை
இதனைக் கற்குமவர்கட்கும் உண்டாக வேண்டாவோ?’ எனின், வேண்டா;
தொண்டினைச் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டு, அது பெறாமையாலே போலே காணும்
இவ்வாற்றாமை எல்லாம் இவர்க்குப் பிறந்தன;
பித்ரு தனம் -தமப்பன் செல்வம் புத்திரனுக்குக் கிடைக்க வேண்டியது முறையாமாறு போன்று,
இவ் வாற்றாமையால் வந்த கிலேசம் இது கற்றவர்களுக்கு அனுபவிக்க வேண்டாமல்,
‘அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ!’ என்று இவர் ஆசைப்பட்டபடியே
அத்திரளிலே போய்ப் புக்கு அனுபவிக்கப்பெறுவர்.

முதற்பாட்டில், ‘அடியார்களுடைய ஆபத்தே செப்பேடாக உதவும் தன்மையினை உடையவன், இவளுடைய ஆபத்துக்கு வந்து உதவுகின்றிலன்,’ என்றாள்;
இரண்டாம் பாட்டில், ‘‘விரோதி உண்டே’ என்பது இறைவனுக்கு நினைவாக, ‘வாணனுடைய பாஹு தோள் வனத்திலும் வலிதோ இவளுடைய விரோதி?’ என்றாள்;
மூன்றாம் பாட்டில், ‘இப்படிச் செய்ய நினைத்த நீர், முன்பு அச் செயலை எதற்காகச் செய்தீர்?’ என்றாள்;
நான்காம் பாட்டில், ‘அது பொறுக்க மாட்டாமல் அது தன்னையே உபகாரமாகச் சொல்லா நின்றாள்,’ என்றாள்;
ஐந்தாம் பாட்டில், ‘அவ்வளவிலும் வாராமையாலே, -நிர்த்தயன் -அருள் இல்லாதவன்’ என்றாள் திருத்தாய்;
ஆறாம் பாட்டில், அது பொறுக்கமாட்டாமல், ‘கெடுவாய்! ஆகரத்தில் தகவு மறுக்குமோ? அது நம் குறைகாண் என்கிறாள்,’ என்றாள்;
ஏழாம் பாட்டில், ‘அவன் குணம் ஹானியை -இன்மை தன்னையே குணமாகக் கொள்ளும்படி இவளை வஞ்சித்தான்,’ என்றாள்;
எட்டாம் பாட்டில், ‘உம்மைத் தஞ்சமாகப் பற்றின-அபாஸ்ரயமாகப் பற்றின – இவள் படும் பாடே இது?’ என்றாள்;
ஒன்பதாம் பாட்டில், ‘இவள் பேற்றில் நீர் செய்தருள நினைத்திருக்கிறது என்?’ என்றாள்;
பத்தாம் பாட்டில்,சேஷித்தது -‘எஞ்சி நிற்பது நோக்கு ஒன்றுமேயாயிற்று; இஃது ஒன்றையும் நோக்கிக் கொள்ளீர்,’ என்றாள்;
நிகமத்தில் , இத் திருவாய் மொழியைக் கற்றார்க்குப் பலம் சொல்லித் தலைக்கட்டினார்.

————

நிகமத்தில் , ‘இத் திருவாய்மொழியைக் கற்க வல்லவர் உளராகில்,
அவர் பரம பதத்தில் போய் நித்திய அனுபவம் பண்ணப் பெறுவர்’ என்கிறார்

கூறுதல் ஒன்று ஆராக் குடக் கூத்த அம்மானைக்
கூறுதலே மேவிக் குருகூர்ச் சடகோபன்
கூறின அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
கூறுதல் வல்லார் உளரேல் கூடுவர் வைகுந்தமே–2-5-11-

கூறுதல் ஒன்று ஆராக் குடக் கூத்த அம்மானை –
தன் படிகளைப் பேசப் புக்கால்,ஆனந்த வல்லியில் சொல்லுகிறபடியே, பேசித் தலைக் கட்ட ஒண்ணாதிருக்கிறவனை.
அவ்வாறு பேச ஒண்ணாது ஒழிந்தது பரத்துவத்தை அன்று;
குடக்கூத்து ஆடிய செயல் ஒன்றுமே ஆயிற்று.
விஷ்ணோர் ஜிஷ்ணோர் வஸூ தேவாத் மஜஸ்ய –‘மகாத்துமனும், ஐந்து ஆயுதங்களைக் கையில் தரித்திருப்பவனும்,
ஜெயசீலனும், வசுதேவருக்குப் புத்திரனும், எங்கும் நிறைந்தவனுமான கண்ணபிரானுடைய நற்குணங்கள் உலகங்கள்
அனைத்தும் சேர்ந்து பதினாயிரம் வருஷங்கள் கூறினாலும் கூறி முடிவு பெறா,’ என்பது பாரதம்.

அம்மானை –
குடக் கூத்தாலே என்னைத் தனக்கே உரிமை யாக்கிக் கொண்டவனை.-அநந்யார்ஹம் ஆக்கினவனை

கூறுதலே மேவி –
‘நான் சொல்லுவது என்? சொல்லீரே!’ என்னா, மீண்டும் ‘சொல்லீர் என் அம்மானை’ என்று தொடங்குமவர் ஆதலின்,
‘பேச நிலம் அன்று’ என்று வேதங்கள் மீண்ட விஷயம் என்று, தாமும் ‘பேச ஒண்ணாது’ என்று கை வாங்காதே,
அழகிதாகப் பேசக் கடவோம் என்று உறுதி கொண்டார்.
‘உறுதி கொண்ட அளவேயோ, கூறியதும் உண்டோ?’ என்னில்,
‘குருகூர்ச் சடகோபர் அன்றோ? கூறச் சொல்ல வேண்டுமோ?
மயர்வற மதிநலமருளப் பெற்றவர்க்குப் பேசத் தட்டு உண்டோ?’ என்றபடி.

கூறின அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப்பத்தும் கூறுதல் வல்லார் உளரேல் –
விஷயத்துக்குத் தகுதியாகப் பேசித் தலைக் கட்டின அந்தாதி ஆயிரத்திலும் இப்பத்தையும் கற்க வல்லவர் உளராகில்.

கூடுவர் வைகுந்தம் –
‘அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ’ என்று ஆசைப் பட்டுப் பெறாது
‘ஆடியாடி’யாய் விசனப் படாமல், இப் பாசுர மாத்திரத்தைச் சொல்லவே நான் பிரார்த்தித்துப் பெற்ற பேறு பெறுவார்கள்.

‘ஆயின், இவரைப் போன்று, ஆற்றாமை இல்லாதவர்களும் பெறுதல் கூடுமோ?’ எனின்
தமப்பனது தனம் கிடந்தால் புத்திரன் அழித்து ஜீவிக்குமத்தனையன்றோ?
அது போன்று, இங்கும் ஆழ்வார் பட்ட வியசனம் பட வேண்டா;
இவருடைய அனுபவத்தைப் பரம பதத்திலே அனுபவிக்கப் பெறுவர்.

முதற்பாட்டில், இவர் ஆசைப்பட்ட படியே அடியார்கள் குழாங்களோடே வந்து கலந்தபடி சொன்னார்;
இரண்டாம் பாட்டில், தம்மோடு கலந்த பின்பு திருமேனியும் திவ்விய அவயவங்களும் திவ்விய ஆயுதங்களும் நிறம் பெற்றன என்றார்;
மூன்றாம் பாட்டில், தம்மோடே கலந்து தன் சத்தை பெறுதல். இன்றேல், இல்லையாம் படியாய் வந்து கலந்தான் என்றார்;
நான்காம் பாட்டில், மேல் உவமையாகச் சொன்ன பொருள்கள் நேர் நில்லாமையாலே, அவற்றைச் சிக்ஷித்துச் சேர்த்துக் கூறி அனுபவித்தார்;
ஐந்தாம் பாட்டில், அவைதாமும் உவமையாக நேர் நில்லாமையாலே, அவற்றைக் கழித்து உபமேயந்தன்னையே அனுபவித்தார்.
ஆறாம் பாட்டில், ‘இப்படி எல்லாரைக் காட்டிலும் வேறுபட்ட தன்மையினை யுடைய இவன், முத்தன் தன்னை
அனுபவிக்குமாறு போன்று, தான் என்னை அனுபவித்தான்’ என்றார்;
ஏழாம் பாட்டில், தமக்காக இராமன் கிருஷ்ணன் முதலிய அவதாரங்களைச் செய்தான் என்றார்;
எட்டாம் பாட்டில், ‘அவனை என்னால் பேச முடியாது’ என்றார்;
ஒன்பதாம் பாட்டில், துணை தேடிக் கொண்டு மீண்டும் பேசுவதற்குத் தொடங்கினார்;
‘பத்தாம் பாட்டில்’, ‘இப் படிகளால் என்னோடே கலந்து இம் மகாகுண ஒன்றையும் பேச என்றால் சால மிறுக்குடைத்து’ என்றார்;
நிகமத்தில் , இது கற்றார்க்குப் பலம் சொல்லித் தலைக் கட்டினார்.

————-

நிகமத்தில் ‘இத் திருவாய் மொழியினைக் கற்க வல்லவர்கள் யாரேனுமாகவுமாம்;
அவர்களுக்குக் குலம் சரணம் கோத்திரம் முதலானவைகள்-அப்ரயோஜம் – பிரயோஜனம் அற்றவைகள்;
இவ் வாகாரத்தாலே -இத் தன்மையாலே அவர்கள்-பகவதீயர் – பகவானுக்கு உரிமைப் பட்டவர்கள்,’ என்கிறார்

கண்ணித் தண் அம் துழாய் முடிக் கமலத் தடம் பெருங் கண்ணனைப் புகழ்
நண்ணித் தென் குருகூர்ச் சடகோபன் மாறன் சொன்ன
எண்ணில் சோர்வு இல் அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசை யொடும்
பண்ணில் பாடவல்லார் அவர் கேசவன் தமரே!–2-6-11-

கண்ணி தண் அம் துழாய் முடிக் கமலம் தடம் பெரும் கண்ணனை –
இப்போதாயிற்று-வளையம் – மாலை செவ்வி பெற்றதும்,
முடி நன்கு தரித்ததும், திருக்கண்கள்-விக்ஷிதம் – மலர்ச்சி பெற்றதும்.

புகழ் நண்ணி –
இவன், தம் பக்கல் செய்த -வ்யோமோஹ -காதலாகிய குணத்திலே -அவகாஹித்து -மூழ்கி.

தென்குருகூர்ச் சடகோபன் மாறன் –
ஒன்று திருப் பெயர்;
ஒன்று-சத்ரு வர்க்கத்துக்கு – பகைவர் கூட்டத்துக்கு-ம்ருத்யுவாய் – யமனாக உள்ளவர் என்பதனைக் காட்ட வந்தது.

எண்ணில் சோர்வு இல் அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து –
அவன் தம் பக்கல் பண்ணின வியாமோகத்தின் மிகுதியை நினைத்து,
அவற்றில் ஒன்றும் குறையாமல் அருளிச் செய்த ஆயிரத்தில் இப் பத்து.

இசை யொடும் பண்ணில் பாட வல்லார்-
இதில் அபிநிவேசத்தால் -ஆசையாலே இசையோடும் பண்ணோடும் பாட வல்லவர்கள்.
பண்ணாவது, கானம்.
இசையாவது, குருத்துவம் லகுத்துவம் முதலானவைகள் தம்மிலே நெகிழ்ந்து பொருந்துகை.
‘தொனியாலும் திறத்தாலும்’ என்றபடி.

அவர் கேசவன் தமரே –
அவர்கள் யாரேனுமாகவுமாம், குலம் சரணம் கோத்திரம் முதலானவைகள் -அப்ரயோஜம் -பயன் அற்றவைகள்;
‘விண்ணப்பஞ் செய்வார்கள்’ என்னுமாறு போன்று, இத் தன்மையாலே அவர்கள் பகவதீயர் -பகவானுக்கு உரிமைப்பட்டவர்கள்.

முதற்பாட்டில், எம்பெருமான் ‘இவர் நம்மை விடின் செய்வது என்?’ என்று கொண்ட அதிசங்கையை -ஐயத்தைப் போக்கினார்;
இரண்டாம் பாட்டில், அது போன பின்னர் அவனுக்கு உண்டான புதுக் கணிப்பைச் சொன்னார்;
மூன்றாம் பாட்டில், தமக்கு அவன் செய்த கொடையினைச் சொல்லி-அனுசந்தித்து வித்தரானார் – ஈடுபட்டார்;
நான்காம் பாட்டில், ‘அவன் உமக்குப் பண்ணின உதவி எது?’ என்ன, ‘இதர விஷய வைராக்கியம்’ என்றார்;
ஐந்தாம் பாட்டில், இதர விஷய வைராக்கியம் முன்னாக ஆத்மா உள்ள வரையிலும் உள்ள அடிமையிலே அதிகரித்த நான் இனி ஒருநாளும் விடேன்’ என்றார்;
ஆறாம் பாட்டில,ஆஸ்ரிதற்கு ‘அடியார்கட்கு உதவுவாய் ஆன பின்பு எனக்கு ஒரு குறை உண்டோ?’ என்றார்;
ஏழாம் பாட்டில், ‘என்னுடைய சம்பந்தி சம்பந்திகளுக்கும் ஒரு முறை இல்லை’ என்றார்;
எட்டாம் பாட்டில், இதற்குத் தாம் செய்த உபாயம் இன்னது என்றார்;
ஒன்பதாம் பாட்டில், ‘இவர் அகவாய் அறிய வேண்டும்’ என்று ஓரடி பேர நிற்க, ‘இனிப்போக ஒண்ணாது’ என்றார்;
பத்தாம் பாட்டில், ‘நாம் போகாதொழிகிறோம்; நீர்தாம் போகாதொழிய வேண்டுமே?’ என்ன, ‘காலத்ரயத்திலும் -முக்காலத்திலும் –
ஸர்வ வித எல்லா விதமான பந்துவுமான உன்னை விடக் காரணம் இல்லை’ என்றார்;
நிகமத்தில் , இது கற்றார்கட்குப் பலம் சொல்லித் தலைக் கட்டினார்.

———

நிகமத்தில் -‘இத்திருவாய்மொழி கற்றவர்களை இத் திருவாய்மொழி தானே எம்பெருமான்
திருவடிகளில் சேர்த்து விடும்,’ என்கிறார்.

வண்ண மாமணிச் சோதியை அமரர் தலை மகனைக்
கண்ணனை நெடு மாலைத் தென் குருகூர்ச் சடகோபன்
பண்ணிய தமிழ் மாலை ஆயிரத்துள் இவை பன்னிரண்டும்
பண்ணில் பன்னிரு நாமப் பாட்டு அண்ணல் தாள் அணைவிக்கும–2-7-13-

வண்ணம் மா மணிச் சோதியை –
அழகிய நிறத்தை யுடைத்தாய்ப் பெரு விலையதான இரத்தினம் போலே இருக்கிற விக்கிரகத்தை உடையவனை.
‘நீல ரத்தினம் போன்ற வடிவில் தேஜஸ்ஸை – ஒளியை உடையவன்’ எனலுமாம்.
வண்ணம் – நிறம்-
மா-கருமை–
இவ்வடிவழகினைக் கொள்ளை கொள்ளும் போக்தாக்களைச் சொல்லுகிறார் மேல்:

அமரர் தலைமகனை –
ஒரு நாடாக அனுபவித்தாலும் தன் அழகினைப் பரிச்சேதிக்க ஒண்ணாதிருக்கின்றவனை.

கண்ணனை –
அவர்களே அனுபவித்துப் போகாமல் இங்குள்ளாரும் அனுபவிக்கும்படி கிருஷ்ணனாய் வந்து அவதரித்தவனை.

நெடுமாலை –
ஒருவனை அங்கீகரித்தால் அவன் அளவில் முடிவு பெறாத வியாமோகத்தை யுடையவனை.

தென் குருகூர்ச் சடகோபன் பண்ணிய –
வேதம் போன்று பிறப்பிலி அன்று; அபவ்ருஷேயம் ‘புருஷனால் செய்யப்படாதது’ என்னுமதிலும்
வீறு உண்டாய் இருக்கிறதாயிற்று -வக்த்ரு விசேஷத்தாலே – இயற்றினார் சிறப்பாலே.

பண்ணில் ஆயிரத்துள் இவை பன்னிரண்டும் –
இவை பண்ணிலே யாயிற்று நடந்தது.

பன்னிரு நாமப் பாட்டு –
வைஷ்ணவத்திற்கு அடையாளமான திருநாமங்களை வைத்துப் பாடினவை. ‘இது செய்வது என்?’ எனில்,

அண்ணல் தாள் அணைவிக்கும் –
சர்வேஸ்வரன் திருவடிகளோடே சேர்த்துவிடும்;
‘இத்திருவாய்மொழியின் சம்பந்தந்தானே கேசவன் தமராக்கி விடும்,‘ என்பதாம்.

முதற்பாட்டில், தம்மோடு சம்பந்தி சம்பந்திகளும் எல்லாரும் தம்மைப் போன்று இவனுடைய அங்கீகாரத்திற்கு ஆளானார்கள்-விஷயீ க்ருதரானார்கள் என்றார்;
இரண்டாம் பாட்டில், இதற்கு அடி நாராயணன் ஆகையாலே என்றும், அந்நாராயண மந்திரத்தின் பொருள் இன்ன தென்றும் அருளிச் செய்தார்;
மூன்றாம் பாட்டில், இப்படி -விஷயீ கரிக்கைக்கு ஹேது -அங்கீகரிப்பதற்குரிய காரணத்தைச் சொன்னார்;
நான்காம் பாட்டில், சர்வ -எல்லாக் காலங்களிலும் தன்னையே அனுபவிக்கும்படி செய்தான் என்றார்;
ஐந்தாம் பாட்டில், இப்படித் தம்மை அனுபவித்ததனாலே அவன் வடிவில் புகரைச் சொன்னார்;
ஆறாம் பாட்டில், ‘இப்படி என்னை அடிமை கொண்டதற்கு அடி நிர்ஹேதுகமான கிருபை -திருவருள்,’ என்றார்;
ஏழாம் பாட்டில், ‘தன்னையே எல்லாக் காலமும் அனுபவிக்கும்படியான மனத்தினைத் தந்தான்’ என்றார்;
எட்டாம் பாட்டில்; தந்த அளவு அன்றியே தீ மனத்தினையும் போக்கினான்,’ என்றார்;
ஒன்பதாம் பாட்டில், ‘தன்னுடைய கல்யாண குணங்களையே நான் அனுபவிக்கும்படி என் மனத்திலே புகுந்தான்,’ என்றார்;
பத்தாம் பாட்டில், ‘அனுபவத்திற்கு விரோதியாய் இருந்த இந்திரியங்களையும் தன் வழி யாக்கிக் கொண்டான்’ என்றார்;
பதினோராம் பாட்டில்,ஏவம் விதமானவன் ‘இவ்விதமான இவன் என்னை அல்லது அறியான் ஆனான்,’ என்றார்;
பன்னிரண்டாம் பாட்டில், ‘என்னைப் போலே காண்பார்க்குக் காணலாவதொழியத் தன் முயற்சியால் -ஸ்வ யத்னத்தால் -அறியப் போகாது’ என்றார்;
நிகமத்தில் , பலம் சொல்லி முடித்தார்.

————-

அவதாரிகை –

நிகமத்தில் இத் திருவாய்மொழி அப்யசிக்க வல்லார்கள்
இத் திருவாய் மொழியில் சொன்ன முக்த ப்ராப்ய போகத்தைப் பெறுவார் -என்கிறார் –

கண்டலங்கள் செய்ய கருமேனி யம்மானை
வண்டலம்பும் சோலை வழுதி வளநாடன்
பண்டலையில் சொன்ன தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லார்
விண்டலையில் வீற்று இருந்து ஆள்வர் எம்மா வீடே –2-8-11-

கண்டலங்கள் செய்ய கருமேனி யம்மானை –
பூ தலங்கள்-என்னுமா போலே திருக் கண்களின் பரப்பைப் பற்றச் சொல்லுகிறது
பரந்த சிவந்து இருந்துள்ள திருக் கண்களையும் –
அவற்றுக்கு பரபாகமாம் படி கறுத்த திரு மேனியையும் உடைய
சர்வேஸ்வரனைக் கவி பாடிற்று
பிரதிபாத்ய வைலஷ்யண்யத்தை சொல்கிறார்-

வண்டலம்பும் சோலை வழுதி வளநாடன் -பண்டலையில் சொன்ன தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லார் –
வெள்ளத்திலே அலைவாரைப் போலே தேன் வெள்ளத்திலே வண்டுகள் அலையா நின்றுள்ள சோலையை உடைய
திரு வழுதி வள நாட்டை உடைய ஆழ்வார் அருளிச் செய்தது –
வக்த்ரு வைலஷ்யண்யத்தை சொல்கிறார்
தலையான பண்ணிலே மேலே சொன்ன தமிழ் யாயிற்று இப்பிரபந்தம் தான்
அன்றியே –
பண்ணின் மேலே சொன்ன -என்னுதல்
பிரபந்த வைலஷ்யண்யத்தை சொல்கிறார்-

ஆயிரத்திலும் வைத்துக் கொண்டு இப்பத்தையும் அப்யசிக்க வல்லார்கள் –
நாகஸ்ய ப்ருஷ்ட்டே -என்கிறபடியே பரமபதத்தில் தங்கள் வ்யாவ்ருத்தி தோற்ற இருந்து –
எவ்வகையாலும் விலஷணமான மோஷமானது தங்களுக்கு விதேயமாம் படி பெறுவார்
நாராயண வல்லி–நா கஸ்ய -ந அஹம் பவதி -துக்கம் இல்லாத -கலசாத தேசம் –
பரமாகாசம் உபரி பிரதேச -வாக்குக்கும் மனத்துக்கும் எட்டாத
அம்பச்ய -கனை கடலும் புவனச்ய -கல்லும்-

விண்டலையில் வீற்று இருந்து ஆள்வர் எம்மா வீடே –
விண் தலை -தலையான விண்ணிலே என்னுதல்
அங்குள்ளார் தங்கள் ஆஜ்ஞ்ஞா அநு வர்த்தனம் பண்ணும் படியாகப் பெறுவார்-

எம் மா வீடே —
ஆத்மா லாபத்து அளவும் அன்றிக்கே பரம புருஷார்த்த லஷண மோஷத்தை ஆளப் பெறுவார் –
இனிமையான உயர்ந்த வீடு –

வீற்று இருந்து –
சாம்சாரிகமான சங்கோசம் எல்லாம் தீரும் படி வீறு பட்டு இருந்து –
வீற்று இருந்து -பார்த்தாலே அனுபவம் மிக்கு இருப்பது தோன்றுமே –

ஆள்வர் எம்மா வீடே –
தன் பால் மனம் வைக்கத் திருத்தி வீடு திருத்துவான் -1-5-10-என்று எனக்கும் என் பரிகரத்துக்கும்
தருவானாக சமைத்து நிற்கிற பரம பதத்தை ஆளப் பெறுவார் –
ஆழ்வார் சம்பந்தம் அடியாகவே ஆளப் பெறுவோமே –

முதல் பாட்டில் இத் திருவாய் மொழியில் பரக்கச் சொல்லுகிற அர்த்தத்தை சங்க்ரஹேண அருளிச் செய்யா நின்று கொண்டு
சம்சாரம் ஆகிற இக் கடலைக் கடக்க வேணும் என்று இருப்பவர்களுக்குக் கடத்திக் கொடுக்கும் என்றார்
இரண்டாம் பாட்டில் -அவன் வேணுமோ அவனோட்டை சம்பந்தமே கடத்தும் என்றார்
மூன்றாம் பாட்டில் அவனுடைய அதி மானுஷ சேஷ்டிதங்கள் பிரத்யஷிக்கலாம் என்றார்
நாலாம் பாட்டில் –அந்தமில் பேரின்பத்தைப் பெற வேணும் என்று இருப்பார் அவனை ஆஸ்ரயிங்கோள் என்றார்
அஞ்சாம் பாட்டில் -கீழ் இணைவனாம் எப்பொருட்கும் என்றத்தை விவரித்தார்
ஆறாம் பாட்டில் இவ் உத்கர்ஷம் எல்லாம் அவனுக்கு உண்டோ என்ன நாம் ஆராய வேண்டாதபடி அர்ஜுனன் பண்டே தெரிந்து அறுதியிட்டான் என்றார்
ஏழாம் பாட்டில் -ஒருவன் அநுவர்த்தனம் கொண்டு அறிய வேணுமோ –அவனுக்கு இஷ்ட சர்வ சேஷ்டா விஷயமாய் அன்றோ ஜகத்து இருக்கிறது என்றார்
எட்டாம் பாட்டில் வ்யாப்தி தொடக்கமான அவனுடைய அபதானங்கள் ஒருவரால் பரிச்சேதிக்க முடியாது என்றார்-
ஒன்பதாம் பாட்டில் –அவனுடைய வ்யாப்தியை இசையாதார் ஹிரண்யன் பட்டது படுவர் -என்றார்
பத்தாம் பாட்டில் –ஏவம் பூதனானவனை நான் கண்டு அனுபவிக்கப் பெற்றேன் என்றார்
நிகமத்தில் இது கற்றார்க்கு பலம் சொல்லித் தலைக் கட்டினார் –

(எட்டாம் பாட்டில்-வியாப்தி தொடக்கம் -அபதானங்கள் -ஸ்வரூபமும் சேஷ்டிதங்களும் -எத்தையும் – -பரிச்சேதிக்க முடியாதே –
உகந்த உள்ளத்தான் -வேதத்துக்கு உகப்பு -மகா பலி உதாரன் உகப்பு -இந்த்ரன் உகப்பு –ஆழ்வாருக்கு உகப்பு -பெருமாளுக்கு உகப்பு ஐந்தும் உண்டே
அகில ஜகன் நியமன /அவதரண /ஆஸ்ரித பராதீன /வயிற்றில் வைத்து ரஷித்து உமிழ்ந்து /எங்கும் வியாபித்து
-தத் பிரத்யுக்த வியாபாரங்கள் எல்லாம் -பரிச்சேதிக்க முடியாது என்றபடி-)

——————

நிகமத்தில் ‘இத் திருவாய்மொழியை அப்யஸிக்க வல்லவர்
இதில் சொன்ன ப்ராப்யத்தைப் பெறுவர்,‘ என்கிறார்.

விடலில் சக்கரத்து அண்ணலை மேவல்
விடலில் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
கெடலில் ஆயிரத்துள் இவை பத்தும்
கெடலில் வீடு செய்யும் கிளர்வார்க்கே–2-9-11-

விடல் இல் சக்கரத்து அண்ணலை’
நாம் விடுகிறோம்’ என்று அதி சங்கை பண்ணுவது என்?
நாம் ஒருவரையும் விடோங்காணும்’ என்று கையில் திருவாழியைக் காட்டினான்;
‘விடல் இல் சக்கரத்து அண்ணலை’ என்கிறார்.
அதாவது,
‘ஒருநாளும் விடாத திருவாழியைக் கையிலேயுடைய சர்வேஸ்வரனை’ என்கிறார்.

மேவல் விடல் இல் வண் குருகூர்ச் சடகோபன் சொல் –
அவன் ஸ்வபாவத்தாலே கிட்டி அவனைப் பிரியில் தரியாதபடி பரம உதாரரான ஆழ்வார் அருளிச் செய்த.
வண்மையாவது,
இவ் வனுபவத்துக்குப் பாசுரமிட்டு உபகரித்த உபகாரம்.

கெடல் இல் ஆயிரத்துள் இவை பத்தும் –
இவ் வாத்துமாவுக்குக் கேட்டின் வாசனையும்-அநர்த்த கந்தமும் – வாராதபடி நன்மையை ஆராய்ந்து
அருளிச் செய்த ஆயிரத்துள் இப்பத்தும்.

கிளர்வார்க்குக் கெடல் இல் வீடு செய்யும் –
‘வரில் பொகடேன், கெடில் தேடேன்’ என்று இருக்கை அன்றி, -ஸ்ரத்தாநராய் இருப்பார்க்கு -நம்பிக்கை யுடையவர்க்குக்-
அநர்த்த கந்த ரஹிதமாய்- கேட்டின் வாசனையும் இல்லாததாய்- அகங்கார மமகாரங்களை உடைத்து அன்றிக்கே,
‘தனக்கே யாக வேணும்’ இவர் பிரார்த்தித்த படியே இவ் வாத்மாவினுடைய
ஸ்வரூபத்திற்குத் தகுதியான-அனுரூபமான பேற்றினைச் செய்து கொடுக்கும்.

முதற்பாட்டில், காயிகமான பேற்றை அபேக்ஷித்தார் ;
இரண்டாம்பாட்டில், மானஸீகமான பேற்றினை அபேக்ஷித்தார் ;
மூன்றாம் பாட்டில், வாசிகமான பேற்றினை அபேக்ஷித்தார் ;
நான்காம் பாட்டில், ஸ்வரூபத்திற்கு அனுரூபமான ப்ராப்யத்தை நிஷ்கரிஷித்தார் ;
ஐந்தாம்பாட்டில், ‘நீர் யாராய் இப் பேற்றினை அபேஷித்தீர் ?’ என்ன,
‘நான் யாராயினுமாக; உன்னை அனுபவித்து மகிழும்படி செய்தருளவேண்டும்’ என்றார்;
ஆறாம் பாட்டில், ‘த்ரிவித கரணங்களாலும் உன்னைப் பிரீதி புரஸ்ஸரமாக அனுபவிக்கச் செய்தருள வேண்டும்’ என்றார்;
ஏழாம் பாட்டில், அப்படிச் சடக்கெனச் செய்யாமையாலே இன்னாதானார்;
எட்டாம் பாட்டில், ‘ஸ்வரூபத்திற்குத் தகுதியாக நீ ஷண நேரம் என்னோடே அனுபவிக்கப் பெறில் பின்புள்ள காலமெல்லாம் வேண்டேன்’ என்றார்;
ஒன்பதாம் பாட்டில், ‘உன்னை அனுபவிக்க இட்டுப் பிறந்து வைத்து அது கிடையாதபடி நானே அநர்த்தத்தைச் சூழ்த்துக் கொண்டேன்’ என்றார்;
பத்தாம் பாட்டில், ‘ஞான விசேஷத்தைப் பண்ணித் தந்தோம் அன்றே?’ என்று,
என்னை ஒருநாளும் என் கையில் காட்டித் தாராதொழிய வேண்டும் என்றார்;
நிகமத்தில் , இது கற்றார்க்குப் பலம் சொல்லித் தலைக்கட்டினார்.

———–

நிகமத்தில்‘இத்திருவாய் மொழி கற்றாரை, இத் திருவாய் மொழி தானே –
ஜென்மத்தை -பிறப்பினைப் போக்கி அழகர் திருவடிகளிலே சேர்த்து விடும்,’ என்கிறார்.

பொருள் என்று இவ் உலகம் படைத்தவன் புகழ் மேல்
மருள் இல் வண் குருகூர் வண் சடகோபன்
தெருள் கொள்ளச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப் பத்து
அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே–2-10-11-

பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன் புகழ்மேல் மருள் இல்வண் குருகூர் வண்சடகோபன் சொன்ன ஆயிரம் –
ப்ரயோஜனப்படும் -பயன்படும் என்று இல்வுலகங்களை உண்டாக்கினவனுடைய கல்யாண குணங்கள் விஷயமாக –
அஞ்ஞான கந்தமும் -அறிவின்மையின் வாசனையும் இல்லாத ஆழ்வாரால் அருளிச்செய்யப்பட்ட ஆயிரம்.
இவற்றை உண்டாக்கி-கரண களேபரங்களை – உடல் உறுப்புகளைக் கொடுத்து விட்டால்,
கொடுத்த உறுப்புகளைக் கொண்டு-சப்தாதி விஷயத்தில் – ஐம்புல இன்பங்களில் -ப்ரவணராய் -ஆசை யுடையராய்க்
கை கழியப் புக்கால், ‘நம் நினைவு தப்பியது அன்றோ?’ என்று நெகிழ்ந்து கை வாங்குகை யன்றி,
‘ஒருநாள் அல்லா ஒருநாளாகிலும் பயன்படாதோ?’ என்று பலகாலும் உண்டாக்கா நிற்கும் –
ஆதலால் -, ‘பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன்’ என்கிறார்.

மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர் ஆகையாலே, அவனுடைய குண விஷயமாக
மருள் இல்லாதவர் ஆதலின், ‘மருளில் சடகோபன்’ என்கிறார்.

‘பிரபந்தமோ?’ எனில்,
தெருள் கொள்ளச் சொன்ன ஓர் ஆயிரம் –
மருள் உண்டாய்க் கழிய வேண்டிற்று இவர்க்கு.
இவருடைய பிரபந்தத்தைக் கற்றார்க்கு-அப்யசித்தார்க்கு – முதலிலே அறிவின்மை தான் இல்லை.
கேட்டார்க்குத் தெளிவைப் பிறக்கும்படி அன்றோ அருளிச் செய்தது?

தம்முடைய ஞானத்துக்கு அடி, சர்வேஸ்வரன்;
இவர்களுடைய ஞானத்திற்கு அடி, தாம் என்றபடி.

‘பிரபந்தந்தான் செய்வது என்?’ என்னில்,
அருளுடையவன் தாள் அணைவிக்கும்.
அருளை யுடையவன் திருவடிகளிலே சேர்த்து விடும்.
அருளைக் கொண்டே பரம் பொருளை நிரூபிக்கவேண்டி இருத்தலின், ‘அருளை யுடையவன்’ என்கிறார்.

முடித்து –
அது செய்யுமிடத்துச் சம்சார சம்பந்தத்தை வாசனையோடே போக்கித் திருவடிகளிலே சேர்த்து விடும்.
ஒரு ஞான லாபத்தைப் பண்ணித் தந்து விடுதலே அன்றி,
அர்த்த கிரியாகாரியாய் இருக்குமாதலின், ‘முடித்தே’ என ஏகாரங் கொடுத்து அருளிச் செய்கிறார்-

முதற்பாட்டில், ‘திருமலையாழ்வாரைக் கடுக ஆஸ்ரயியுங்கோள் அடைமின்,’ என்றார்;
இரண்டாம் பாட்டில், ‘திருமலையோடு சேர்ந்திருக்கின்ற ஸ்ரீ பதியை -திருப்பதியை ஆஸ்ரயியுங்கோள் அடைமின்,’ என்கிறார்;
மூன்றாம் பாட்டில், ‘அதனோடு சேர்ந்த அயன் மலை அமையும்,’ என்றார்;
நான்காம் பாட்டில், ‘திரிதந்தாகிலும்’ என்கிறபடியே ‘மீண்டும் திருமலையை ஆஸ்ரயியுங்கோள் அடைமின் என்றார்;
ஐந்தாம் பாட்டில், ‘அதனோடு சேர்ந்த புற மலையை ஆஸ்ரயியுங்கோள் அடைமின்’ என்றார்;
ஆறாம் பாட்டில், ‘திருமலைக்குப் போகும் மார்க்க சிந்தனை -வழியை நினைத்தலே அமையும்,’ என்றார்;
ஏழாம் பாட்டில், ‘அவ் வழியோடு சேர்ந்த திருமலையை ஆஸ்ரயியுங்கோள் அடைமின்,’ என்றார்;
எட்டாம் பாட்டில், ‘நித்திய ஸூரிகளுக்குக் கூட ப்ராப்யம் – அடையத் தக்கது,
ஆகையால், திருமலையே பரம ப்ராப்யம் அடையத் தக்கனவற்றுள் உயர்ந்தது’ என்றார்;
ஒன்பதாம் பாட்டில், ‘திருமலையைத் தொழக் கடவோம்’ என்கிற துணிவே வேண்டுவது என்றார்;
பத்தாம் பாட்டில், ‘எல்லாப் படியாலும் திருமலை யாழ்வாரை-ஆஸ்ரயிக்கையே புருஷார்த்தம் -அடைதலே பேறு,’ என்று தலைக் கட்டினார்;
நிகமத்தில் இது கற்றார்க்குப் பலம் அருளிச் செய்தார்.

இரண்டாம் பதிகத்தில்
முதல் திருவாய்மொழியாலே, ‘மணியை வானவர் கண்ணனைத் தன்னதோர் அணியை’ என்கிறபடியே,
‘விலக்ஷண விஷயமாகையாலே பிரிந்தாரைக் கண்ணாஞ்சுழலை இடப் பண்ணும்,’ என்றார்;
இரண்டாம் திருவாய்மொழியாலே, ‘கூடினாலும் அதனைப் போன்று மறப்பிக்கும்,’ என்றார்;
மூன்றாம் திருவாய்மொழியால், ‘கூடிய பொருள் தான் நிரதிசய ஸூக ரூபம்,’ என்றார்;
நான்காம் திருவாய் மொழியில், அவ் விஷயத்துக்குத் தேசிகரோடு அனுபவிக்கப் பெறாமையாலே –
மோஹங்கதரானார்- மோகத்தை அடைந்தார்;
ஐந்தாம் திருவாய்மொழியால், தாம் ஆசைப்பட்டபடியே வந்து கலந்தமை சொன்னார்;
ஆறாம் திருவாய் மொழியால், தம் இழவுக்கும் அவன் அதி சங்கை கொள்ளும் என்றார்;
ஏழாம் திருவாய்மொழியால், தம்முடைய சம்பந்தி சம்பந்திகளையும் விஷயீ கரித்த-ஏற்றுக் கொண்டபடியைச் சொன்னார்;
எட்டாம் திருவாய்மொழியால் அவனுடைய மோக்ஷ ப்ரதத்துவத்தை அருளிச்செய்தார்;
ஒன்பதாம் திருவாய்மொழியால், பிராப்ய நிஷ்கர்ஷம் பண்ணினார்;
பத்தாம் திருவாய்மொழியால், நிஷ்கர்ஷித்த- அறுதியிட்ட பிராப்யத்தைப் பெறுகைக்குத் -லபிக்கைக்கு
திருமலையாழ்வாரை -ஆஸ்ரயிக்க அடையச் சொன்னார்.

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading