ஸ்ரீ தூப்புல் வேதாந்த மஹாதேசிகன் :
செல்ல வேண்டிய திசையை சரியாக காட்டுபவனே தேசிகன்.
ஆசார்யன் என்பதும் இதை போலவே.
சாரி என்றால் சஞ்சரிப்பவன்.
பாத சாரி காலால் நடந்து செல்பவன்.
கஜாச்சாரி யானை மேல் செல்பவன்.
எனவே சரியான பாதையில் நடந்து சென்று மற்றவர்க்கு வழிகாட்டுபவன் ஆசார்யன்.
ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தில் ஒரு தேசிகன் பெயருக்காக உயர்ந்தவர் என்றால்
அவரே
நிகமாந்த தேசிகன் என்றும்
சுவாமி தேசிகன் என்றும் பெயர் கொண்ட தூப்புல் வேதாந்த மஹாதேசிகன்.
இவர் ஒரு மஹா ஆசார்யனாய் இருந்து வைணவ சமயம் காத்த உத்தமர்.
ஶ்ரீ தூப்புல் வேதாந்த தேசிகனாகப்பட்டவர்
அனந்தசூரியார் – தோத்தாத்ரி அம்மை தம்பதிக்கு திவ்ய குமாரனாய்
தொண்டைமண்டல
காஞ்சி மாநகரில்
பொய்கையாழ்வார் அவதரித்த விளக்கொளி எம்பெருமான் ஆலய பகுதியான
தூப்புல் எனும்
திருவிடத்தே திருமலை வேங்கடவன் கோயில் மணியின் அம்சமாக
கி.பி. 1268 ஆம் ஆண்டு,
விபவ வருஷம்,
புரட்டாசி மாஸம்,
சிரவணம் நட்சத்திரத்ரம கூடிய
புதன்கிழமையில்
அவதரித்தார்.
ஒரு வெண்கல மணியை பெருமாள் தனக்கு கொடுத்து அதை தான் விழுங்கியதாக கனவு கண்டாள் அவர் தாய்.
ஸ்ரீ ராமானுஜரைப் போன்று இவரால் கணீரென்று வேத நாதம் எங்கும் ஒலிக்க பிரகாசிப்பார் என்று பெருமாளே அருளினார்.
அதனால் தான் பெருமாள் சந்நிதியில் மணி கிடையாது. திருவாராதனம் போது வெளியே உள்ள மணி மட்டும்
இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் ஸ்ரீ வேங்கடநாதன் என்பதாம்.
பின்னாளில் இவர் ‘சுவாமி தேசிகன்’,
‘தூப்புல் நிகமாந்த தேசிகன்’,
‘தூப்புல் பிள்ளை’,
‘உபய வேதாந்தாசாரியர்’
‘சர்வ தந்திர சுதந்திரர்’
மற்றும்
‘தூப்புல் வேதாந்த மஹாதேசிகன்’
என்னும் பெயர்களால் அழைக்கப் பெற்றார்.
ஸ்ரீ இராமனுசரின் உறவினரான நடாதூர் அம்மாளின் நேரடிச் சீடரும்
இவரது தாய்மாமனுமான ஸ்ரீ கிடாம்பி அப்புள்ளாரிடம் வடமறையான வேதங்களும்,
தென் மறையான
திவ்ய பிரபந்தமும்,
புராணங்களும் மற்றும்
சாத்திரங்களையும் குறைவறக் கற்றார்.
ஏழாம் வயதில் ஸ்ரீ கிடாம்பி அப்புள்ளாரினால் உபநயனம் செய்விக்கப் பட்டதோடு,கல்வியும் கற்றவர்,
தன் இருபத்தோராம் வயதில் திருமங்கை என்றழைக்கப்பட்ட கனகவள்ளி எனும் மங்கையை மணம் புரிந்தார்.
தன்னுடைய இருப்பத்தேழாம் வயதில் வைணவ குரு எனும் நிலையை அடைந்த இவர்
தன்னுடைய குருவான கிடாம்பி அப்புள்ளாரின் ஆணைப்படி கடலூருக்கு அருகில் உள்ள திருவஹீந்தரபுரம் சென்று சில காலம் வாழ்ந்தார்.
திருப்பதி,
மேல்கோட்டை,
காஞ்சிபுரம்,
அயோத்தியா,
பிருந்தாவனம்,
பத்ரிநாத்,
திருவரங்கம்
உள்ளிட்ட எண்ணற்ற தலங்களுக்கு சென்று ஜெகத்குரு இராமனுசரின் தத்துவங்களை பரப்பினார்.
இறுதியில் தன் மகனான குமார வரத தேசிகனோடு திருவரங்கம் வந்தவர் இப்புவியில் 101 வருஷங்கள் வாழ்ந்தார்.
ஸ்ரீ இராமனுசரின் தத்துவங்களை பரப்புவதையே முழுப்பணியாக கருதியவர் சுமார் நூற்றிருப்பத்து நான்கு நூல்களை
தமிழ், வடமொழி, பிராகிருதம், மணிப்பிரவாள நடையில் அருளியுள்ளார்.
அவர் தமிழில் :
அடைக்கலப்பத்து,
மும்மணிக்கோவை,
நவமணிமாலை,
அதிகார சங்கிரகம்,
ஆகார நியமம்,
அம்ருதரஞ்சனி,
அம்ருதஸ்வாதினி,
அர்த்த பஞ்சகம்,
சரமஸ்லோக சுருக்கு,
த்வய சுருக்கு,
கீதார்த்த சங்கிரகம்,
பரமபத சோபனம்,
பிரபந்த சாரம்,
ஸ்ரீவைஷ்ணவ தினசரி,
திருச்சின்னமாலை,
திருமந்திர சுருக்கு,
உபகார் சங்கிரகம்,
விரோத பரிகாரம்,
பன்னிருநாமம்
வடமொழியில் :
பாதுகா சஹஸ்ரம்,
கோதாஸ்துதி,
யதிராஜ சப்ததி,
வைராக்ய பஞ்சகம்,
அபீதிஸ்தவம்,
ஆதிகாரண சாராவளி,
அஷ்டபுஜ அஷ்டகம்,
பகவத் தியான சோபனம்,
பூஸ்துதி,
சதுஸ்லோகி
பாஷ்யம்,
தசாவதார ஸ்தோத்திரம்,
தயாசதகம்,
வரதராஜ
பஞ்சாசத்,
தெய்வநாயக பஞ்சாசத்,
திவயதேச மங்களாசனம்,
கருட பஞ்சாசத்,
ஹயக்ரீவ ஸ்தோத்திரம்,
தேசிக மங்களம்,
மணிப்ரவாளத்தில் :
அம்ருதரஞ்சனி ரஹஸ்யம்,
அஞ்சலி பிரபாவம்,
ஹஸ்திகிரி மஹாத்ம்யம்,
குருபரம்பரா சாரம்,
முனிவாகன போகம்,
ஆராதன காரிகா,
ஊசல்பா
ப்ராக்ருதத்தில் :
அச்யுதசதகம்
என பல நூல்களை எழுதியுள்ளார்.
மாமன் அப்புள்ளார் ஐந்து வயதில் அவரை நடாதூர் அம்மாள் பிரசங்கத்திற்கு அழைத்து சென்ற போது
அவர் ஒரு கணம் சிறுவனைப் பார்த்து பிரமித்து
”எங்கே பிரசங்கத்தை நிறுத்தினோம்” என்பதை மறந்து போனார்.
மீண்டு யோசிக்கையில், சரியாக அந்த ஸ்லோகத்தை எடுத்து சொன்னார் தேசிகர்.
20 வயதில் சகல சாஸ்திரங்களும் அறிந்தார். அப்புள்ளாரிடம் கருட மந்திர உபதேசம் பெற்றார்.
திருவஹீந்த்ரபுரம் என்ற பெயர் இப்போது சுருங்கி திருவந்திபுரம் ஆகிவிட்டாலும் தேசிகரின் சரித்திரம் கொஞ்சமும் சுருங்கவில்லை.
இங்கு தான் ஒரு சிறு குன்றில் பலநாள் அன்ன ஆகாரமின்றி கருட மந்த்ரம் ஜபித்தார்.
ஶ்ரீ ஹயக்ரீவ மந்திரம் ஜபிக்வே எம்பெருமானும்
திவ்ய தரிசனம் தந்துஅவருக்கு ஹயக்ரீவ மந்திராபதேசம் செய்து
ஶ்ரீ தேசிகன் விருப்பப்படி அவரது நாவில் குடிகொண்டார்.
தனது சிலா ரூபத்தையும் கொடுத்தார்.
அந்த ஹயக்ரீவ விக்ரஹத்தை இன்றும் தேவநாத பெருமாள் சந்நிதியில் காணலாம்.
காஞ்சி விஜயம் செய்து பிறகு பல திவ்ய தேச யாத்ரை சென்ற தேசிகன் ”பிரபத்தி’ எனும் சரணாகதி தத்தவத்தை
விளக்கி வைஷ்ணவ சமூகம் பயன்பெற செய்தவர்.
நியாச விம்சதி,
நியாச தசகம்,
நியாச திலகம் என்று வடமொழியிலும்,
அடைக்கலப் பத்து,
அர்த்த பஞ்சகம் என்று தமிழிலும் அளித்த பெரிய ஞானி.
சகல கலைகளும் கைதேர்ந்து சர்வ தந்திர ஸ்வதந்திரர் என்று அழைக்கப் பட்டார்..
திருப்பதி சென்று தயா சதகம் இயற்றினார். பெருமாளால் வேதாந்தாச்சார்யா என்று கௌரவிக்கப் பட்டவர்.
ஸ்ரீ ரங்கம் போகும் வழியில் ஸ்ரீ பெரும்புதூர் சென்று ஸ்ரீ ராமானுஜரை வழிபட அங்கே யதிராஜ சப்ததி என்ற ஸ்லோகம் உருவானது.
ஸ்ரீ ரங்கத்தில் ரங்கநாதர் மகிழ்ந்து அளித்த பெயர் தான் வேதாந்த தேசிகர் என்று நாம் இன்றும் அவரை அறிவது..
ரங்கநாயகி தாயார் அளித்த பெருமை தான் சர்வ தந்த்ர ஸ்வதந்த்ரர்.
1327ல் அலாவுதினின் தளபதி மாலிக் காப்பூர் தெற்கே பல ஆலயங்களை அழித்தபோது
ஸ்ரீரங்க பெருமாள் திருப்பதிக்கு எடுத்து செல்லப்பட்டும் ஸ்ரீ பாஷ்ய க்ரந்தங்கள் கர்நாடகத்துக்கும் எடுத்துச் செல்லப்பட்டது.
இந்த பொறுப்பை தேசிகன் ஏற்றார். ஒரு இரவு செத்த பிணங்களோடு பிணமாக கிடந்து மிலேச்சர்களிடம் இருந்து
அரிய வைஷ்ணவ செல்வங்களை காப்பாற்றியவர் ஶ்ரீ மஹா தேசிகன்
”ஸ்ரீ ரங்கம் மீண்டும் பழம் பொலிவை பெற நீ அருள்வாய்” என்று பெருமாளை அவர் பாடியதே அபிதி ஸ்தவம் என்ற ஸ்லோகம்.
ஸ்ரீ ரங்கத்தில் ஆழ்வார்களின் விக்ரஹ பூஜை கூடாது அவர்களில் பலர் பிராமணர்களே அல்ல, என்றும்
திவ்ய பிரபந்தம் சமஸ்க்ருதம் அல்ல அதை ஓதக்கூடாது” என்றும் பத்தாம் பசலிகள் சிலர் தடுக்க
அனைவருக்கும் ஆழ்வார்கள் பெருமையை எடுத்துரைத்து, திவ்யப்ரபந்தம் வேத சாரம் என்று நிருபித்து
இனியும் இம்மாதிரி எதிர்ப்புகள் வரக்கூடாதே என்று முன் யோசனையாக கல்வெட்டுகளில் பதித்து
ராப்பத்து
பகல் பத்து உத்சவ மகிமையை இன்றும் நமக்கு விளங்கச் செய்தவர் நம் தேசிகர்.
தேசிகர்
ஸ்ரீ ரங்கத்தில் தான் பெருமாள் திருவரங்கனை பாதாதி கேசம் வரை வர்ணித்த பகவத் த்யான சோபனம் ஸ்தோத்ரம் இயற்றினார்.
இதை படிக்கும் போது திருப்பாணாழ்வாரின் அமலனாதி பிரான் பாசுரங்கள் படிப்பதுபோல் எண்ணம் தோன்றுகிறது.
”தேசிகா, என் பாதுகையிலிருந்து ஆரம்பியேன் ” என்று ஸ்ரீ ரங்கநாதனே எடுத்துக் கொடுக்க, விடிகாலை 4 மணிக்கு எழுத்தாணியை பிடித்தார்.
மூன்றே மணி நேரத்தில் 1008 பாதுகா ஸ்துதி ஸ்லோகம் உருவானது. அதை உச்சரிக்கவே குறைந்தது 7 மணி நேரம் ஆகும் நமக்கு.
மறுநாள் காலை பண்டிதர்கள் அனைவரும் மூக்கில் மேல் விரலை வைக்க மறந்தாலும் தேசிகரை ”கவிதார்க்கிக சிம்ஹம்” என்ற
பட்டத்தை அவருக்கு அளித்து கௌரவிக்க மறக்கவில்லை.
ஸ்ரீ வில்லிப்புத்தூரில் ஆண்டாளை வழிபாட்டு கோதா ஸ்துதி உருவானது.
ஆண்டாள் உத்சவத்தின் போது திவ்ய பிரபந்தத்துடன் ஆண்டாளின் விருப்பப் படியே,
கோதாஸ்துதி ஸ்லோகங்கள் சொல்லப்பட்டு வருகிறதே.
காசு, தங்கம், நாணயம் இதெல்லாம் தேசிகர் பார்த்ததில்லை, வாங்கிக்கொள்ள மாட்டார்.
எனவே உஞ்சவ்ரித்தியில் வாழ்ந்த அவருக்கு அரிசியோடு தங்கமணிகளை கலந்து கொடுத்து,
அதை அவர் மனைவியிடம் கொடுத்து சமைக்க சொல்ல, அவளோ இதெல்லாம் என்ன அரிசியோடு என்று கேட்க,
ஏதாவது பூச்சி முட்டையாக இருக்கும் என்று கையால் கூட தங்கத்தை தொடாமல் தர்ப்பையால் அவற்றை ஓதுக்கி வெளியே எறிந்து விட்டார்.
தேசிகரின் பால்ய நண்பன் வித்யாரண்யன்
விஜயநகர சாம்ராஜ்யத்தில் பெரிய பதவியில் இருந்ததால்,
”தேசிகா, நீ எதற்காக ஏழ்மையில் வாடுகிறாய், வா என்னிடம், இங்கு உனக்கு நிறைய பரிசு வழங்க
ஏற்பாடு செய்கிறேன் என்றான் ” வித்யாரண்யனுக்கு அவர் பதிலாக எழுதியதே நமக்கு பொக்கிஷமாக கிடைத்த
”வைராக்ய பஞ்சகம்”.
”வித்யாரண்யர் நமக்கல்லவோ மிகப்பெரிய பரிசை அளித்துவிட்டார்.”.
ஆதி சங்கரர் ஒரு ஏழைப் பெண்ணுக்கு பொன் மழை பெய்ய வைத்த கனக தாரா ஸ்தோத்ரம் தெரியுமல்லவா.
அதே போல் இன்னொன்றும் காஞ்சியில் நடந்திருக்கிறதே.
காஞ்சிபுரத்தில் தேசிகர் வாழ்ந்தபோது, அவரை அவமானப் படுத்த சில விஷமிகள்,
ஒரு ஏழைப்பையன் தனது திருமணத்துக்கு உதவி கேட்டபோது
”தம்பி நீ தேசிகர் என்று ஒருவர் ரெண்டு தெரு தள்ளி வசிக்கிறார். பணக்காரர்.
யார் கேட்டாலும் பணம் தருவாரே, அவரைப் போய் கேள்” என்று அனுப்ப,
அந்த அப்பாவி அவரது எளிய வாழ்க்கை நெறி தெரியாமல் அவரை நிதி உதவி கேட்க, அவனை அழைத்துக்கொண்டு
நேராக வரதராஜ பெருமாள் கோவில் சென்று தாயாரின் சந்நிதியில் அவளை உதவி செய் என வேண்டினார் தேசிகர்.
”அவரது மனதைத் தொடும்
”ஸ்ரீ ஸ்துதி” தாயாரை உடனே அங்கே ஒரு பொன்மழை பெய்ய வைக்க காரணமானது..
ஒரு பாம்பாட்டி தேசிகரிடம் ”என்னுடைய விஷ பாம்புகளை உங்களால் சமாளிக்க முடியுமா?” என்று சவால் விட,
அவர் தரையில் ஒரு கோடு போட்டு
” உன் பாம்புகள் இந்த கோட்டைத் தாண்டட்டும்” என்றார்.
சில விஷ பாம்புகள் கோட்டைத் தாண்ட முயன்றபோது தேசிகர் உச்சரித்த கருட மந்திர ஸ்லோகம் கேட்ட கருடன் வந்து
அத்தனை பாம்புகளையும் அன்றைய காலை உணவாகத் தூக்கிக் கொண்டு போய் விட்டான்.
பாம்பாட்டி அவர் காலில் விழுந்து ”என் பிழைப்பே இந்த பாம்புகள் தான் ” தயவு செய்து அவற்றை திரும்ப தரவேண்டும்
என்று கெஞ்சினதால், மீண்டும் கருட மந்த்ரம் சொல்லி கருடனை அந்த பாம்புகளை திரும்ப தர வைத்தார் .
”உங்களால் எல்லாமே செய்ய முடியும் என்கிறார்களே, என்னைப்போல் கட்ட முடியாவிட்டாலும்
ஒரு சாதாரண கிணறு கட்ட முடியுமா உங்களால்?” என்று ஏளனமாக கேட்டானாம் ஒரு மேஸ்திரி.
”சரியப்பா கட்டுகிறேன்”
‘ நான் கொடுக்கும் கற்களை மட்டுமே கொண்டு அதைக் கட்டவேண்டும்”
”ஆஹா அப்படியே.’ என்ற தேசிகர் அவன் கொடுத்த அளவு சரியில்லாத கோணா மாணா கற்களைக் கொண்டே கட்டிய
அந்த வினோத கிணறு இன்றும் திருவஹிந்திர புரத்தில் இருக்கிறது.
எங்கே நீர் வற்றினாலும் அந்த கிணற்றில் நீர் வற்றுவதில்லை. சுவையிலும் குன்றவில்லை.
மற்றொரு சிற்பி தனது பங்குக்கு அவரை சவாலுக்கு இழுக்க, அவன் விரும்பியவாறே, அவன் அமைத்த பீடத்தில்
தனது உருவத்தையே தத் ரூபமாக சிலையாக வடித்துக் காட்டியபோது அசந்து போனான்.
அவனமைத்த பீடம் போதாததால் அங்கங்கே அவர் உருவச்சிலையை உளியால் வெட்டும்போது அவன் வெட்டிய பாகங்கள்
அவருடைய உடலிலிருந்து ரத்தத்தை சிந்த வைக்க, பயந்தே போய் அவர் காலடியில் விழுந்து மன்னிக்க வேண்டினான் அந்த சிற்பி.
தனது உருவத்தை தானே தேசிகர் வடித்த சிலாரூபம் இன்றும் தேவநாதர் ஆலயத்தில் இருக்கிறதே.
மேலே சொன்ன அவர் கட்டிய கிணறையும் பார்க்க தவறவேண்டாம்.
கோவிலுக்கு அருகாமையில் சற்று தள்ளி ஒரு மண்டபத்தில் உள்ளது.
நமது தூப்புல் குலமணியும் ஸாக்ஷாத் திருமலைமால் கண்டாவதாரமும் ராமானுஜ முனி அபராவதாரமாவார்.
அவர் ஆழ்வார் மீது வைத்திருக்கும் பற்றை அளவிடமுடியாது,
வேறு எந்த ஆசார்யனும் தன்னை “சந்தமிகு தமிழ் மறையோன்” என்று பறைசாற்றி கொண்டதில்லை.
அவர் காலத்தில் அத்வைத சித்தாந்தம் தலைஓங்கி நிற்க அதை நிஷ்கர்ஷித்து உண்மை பொருளை நிலை நாட்ட இவர்களுக்கு
ஆழ்வார் ஸ்ரீஸூத்திகள் துணைபுரிந்தன. அதையும் நம் ஸ்வாமி “தெரியாத மறைநிலங்கள் தெளிகின்றோமே” என்றுசாதித்தார்.
ஆளவந்தார் இராமானுஜ முனிகாலம் தொடங்கி தேசிகறது காலம் ஏன் இன்றைய அளவிலும் ஆங்காங்கே
பூர்வபக்ஷம் தலை ஓங்குகிறது அப்பொழுது அவர்கள் வேத வேதாந்தத்தை கொண்டேவாதம் செய்கிறார்கள்.
நமது ஆசார்யர்களோ ஆழ்வார்களோ திவ்ய பிரபந்தங்களைக்கொண்டு உண்மை பொருளை உணர்த்துகின்றனர்.
இது நமது சித்தாந்துக்கே உரிய சிறப்பு.
——-
இந்த குரு பரம்பரை
ஸ்ரீ ராமானுஜர்
கிடாம்பி ஆச்சான் -ப்ரணதார்த்தி ஹரர்
அவர் குமாரர் -ராமானுஜாச்சார்யார்
அவர் குமாரர் ரங்க ராமானுஜாச்சார்யார்
அவர் குமாரர் ராமானுஜாச்சார்யார் என்னும் அப்புள்ளார்
இவரே வாதி ஹம்ஸ அம்பு வாஹர் என்றும் காஞ்சி கடாம்பூ என்றும் சொல்லப்படுபவர்
இவர் ஸகோதரி -தோதாரம்பை -என்பவளை
அநந்த ஸூரி -என்பவரை திருமணம் செய்தவர்
அநந்த ஸூரி -காஞ்சியில் உள்ள புண்டரீகாக்ஷ ஸூரி யுடைய திருக்குமாரர் –
இந்த தம்பதிக்கே -வேதாந்தச்சார்யார் -திருக்கண்ட அம்சமாக அவதாரம்
அநந்த ஸூரி -74 சிம்ஹாசனாதிபதிகளில் ஒருவராக இருந்தும் தமது மாதுலரான அப்புள்ளார் இடம் ஆஸ்ரயிக்கச் செய்தார்
அப்புள்ளார் ஆச்சார்யரான நடாதூர் அம்மாளும் சிறிய வயதிலேயே அவரைக் கடாக்ஷித்து அருளினார்
தேசிகருக்குப் பின்
ப்ரஹ்ம தந்த்ர ஸ்வ தந்த்ர ஜீயர் -பரகால ஸ்வாமி மடத்துக்கு முதல் ப்ரவர்த்தகர்
தேசிகர் திருக்குமாரர் நாயனாச்சார்யர்
அவர்க்குப் பின்பு
கடிகாசலம் அம்மாள் -இவர் இடம் தான் அஹோபில மட ஸ்தாபகர் ஆதி வண் சடகோப ஸ்வாமி கால ஷேபாதிகள் பெற்றார்
கடிகாசல அம்மாள் திருக்குமாரர் வரத விஷ்ணு வாச்சாரியார்
பரத்வாதி பஞ்சகத்தில் நடாதூர் அம்மாள்
ஸ்ரீ ரெங்கஸ்தல வேங்கடாத்ரி கரிகிர் தயாதவ் சஷ்டோத்தரே
ஸ்தாநே க்ராம நிகேதனேஷு ச ஸதா ஸாந்நித்யமாஸே துஷே
அர்ச்சா ரூபிணாம் அர்ச்சக அபிமதிதஸ் ஸ்வீ குர்வதே விக்ரஹம்
பூஜாம் சாகில வாஞ்சிதான் விதரதே ஸ்ரீ ஸாய தஸ்மை நம
என்று அர்ச்சா மூர்த்திக்கு மங்களா ஸாஸனம் செய்துள்ளார்
—
வடக்கு திரு வீதிப்பிள்ளை சிஷ்யர் கிடாம்பி ஸ்ரீ ரெங்காச்சார்யார்
அவர் குமாரரும் சிஷ்யரும் கேசவாச்சார்யர்
அவர் குமாரரும் சிஷ்யரும் ஸ்ரீ நிவாஸாச்சார்யார்
அவர் குமாரரும் சிஷ்யரும் கேசவாச்சார்யர்
அவர் குமாரரும் சிஷ்யரும் ஸ்ரீநிவாஸாச்சார்யார்
இவர் திரு நாராயண புரத்தில் அவதாரம் -இவரே ஆதி வண் சடகோப யதீந்த்ர மஹா தேசிகன்
அஹோபில மட மூலஸ்தர் –
இவர் நடாதூர் அம்மாளின் திருப்பேரனான ஸ்ரீ வரத விஷ்ணு வாசர் இடம் கிரந்த காலஷேபம் பண்ணினார்
இவர் காலம் -கிபி 1379-1458
—————
தேசிகர் 101 வருஷம் வாழ்ந்தார். தனது அந்திம நேரம் நெருங்கியதை உணர்ந்த தேசிகர் தனது குமாரர்
குமார வரதாசாரியாரை அழைத்து அவர் மடியில் தலை வைத்து, அவரை
”திருவாய் மொழி, உபநிஷத் எல்லாம் சொல்லப்பா. கேட்டுக்கொண்டே செல்கிறேன்” என்றார். பரமபதம் அடைந்தார்.
தாயார் ரங்கநாயகி தன்னருகே ஒரு சந்நிதியில் தேசிகரை இருத்திக் கொண்டாள்.
வேறு யாருக்கும் இங்கு இடமில்லை என்ற அவள் ஆணை இன்றும் நிலுவையில் இருக்கிறது.
”ராமானுஜ தயா பாத்ரம், ஞான வைராக்ய பூஷணம்,
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம் வந்தே வேதாந்த தேசிகம் ”
ஸ்ரீ நிகமாந்த மஹா தேசிகரே ! வேதாந்த தேசிகரே ! வேதாந்தாசார்யரே !
சீரார் தூப்புல் பிள்ளையே !இன்னும் ஒரு நூறாண்டிரும் !
—————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் ..
Leave a Reply