கீழ்ப்பாட்டிலே திருமஞ்சனம் பண்ணினார்;
இப்பாட்டிலே திருமாலை சூட்டுகிறார்.
முன்னடிகளிலே எம்பெருமானுடைய நான்கு அவதாரங்களைக் குறிக்கிறார்;
“மாயமான் மாயச் செற்று“ என்றதனால் ஸ்ரீராமாவதாரம்;
“மருதிறநடந்து“ என்றதனால் ஸ்ரீ க்ருஷ்ணாவதாரம்.
“வையம்தாய்“ என்றதனால் ஸ்ரீ திரிவிக்ரமாவதாரம்.
“அம்மா பரவைபொங்கத் தடவரை திரித்து வானோர்க்கீயும்“ என்றதனால் ஸ்ரீ கூர்மாவதாரம்.
மாயமான் மாயச் செற்று மருது இற நடந்து வையம்
தாய மா பரவை பொங்கத் தடவரை திரித்து வானோர்க்கு
ஈயுமால் எம்பிரானார்க்கு என்னுடைச் சொற்கள் என்னும்
தூய மா மாலை கொண்டு சூட்டுவன் தொண்டனேனே -16-
பதவுரை
மாயம்–மாயச் செய்கையை யுடைய
மான்–மாரீசனாகிற மான்
மாய–முடியும்படி
செற்று–கொன்றவனாயும்
மருது–(இரட்டை) மருத மரங்கள்
இற–முறிந்து விழும்படி
நடந்து–நடை கற்றவனாயும்
வையம் தாய்–(த்ரிவிக்ரமனாகி) உலகங்களை யளந்து கொண்டவனாயும்
அப்படி–அப்படிப்பட்ட
மா–பெரிதான
பரவை–கடலானது
பொங்க–பொங்கும் படியாக
தட வரை–பெரிதான மந்தர பர்வதத்தை
திரித்து–சுழலச் செய்து
(அமுதமெடுத்து)
வானோர்க்கு–தேவர்களுக்கு
ஈயும்–கொடுத்தவனாயுமுள்ள
மால்–ஆச்ரித வ்யாமோஹ சாலியான
எம் பிரானாருக்கு–எம்பெருமானுக்கு
சொற்கள் என்னும்–வாய்மொழிகளாகிற
தூய–பரிசுத்தமான
மா மாலை கொண்டு–சிறந்த மாலையைக் கொண்டு
தொண்டனேன்–அடியேன்
சூட்டுவேன்–சூட்டுவேன்
முன்பே விச்வாமித்ரருடைய யாகத்தில் மாரீசனை உயிர் மாய்த்திருக்க வேணும்;
அப்போது விட்டிட்டதனாலன்றோ இப்போது இவ்வநர்த்தம் விளைக்க வந்தானென்று
உயிர் மாயத் தொலைத்தானாயிற்று.
பொய்ம் மாய மருதான அசுரரை -பெரியாழ்வார்
வையம் தாய் = ‘தாய்‘ என்றது தாவி யென்றபடி.
“பாயோரடி வைத்ததன் கீழ்ப் பரவை நிலமெல்லாந் தாய்“ என்ற திருவாய்மொழியுங் காண்க.
“அம்மா“ என்பது அமா எனத் தொகுத்தலாயிற்று.
ஆக இப்படிப்பட்ட எம்பெருமானுக்கு எனது தமிழ்ப் பாசுரங்களாகிய தூய மா மாலையைக் கொண்டு
சூட்டுவேனென்றாயிற்று.
———————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply