ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் -13–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை சாரம் —

‘இரும்பு அனன்று உண்ட நீரும் போதரும் கொள்க என் தன்
அரும் பிணி பாவம் எல்லாம் அகன்றன என்னை விட்டுச்
சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்க மா கோயில் கொண்ட
கரும்பினைக் கண்டு கொண்டு என் கண்ணினை களிக்குமாறே–13-

பதவுரை

இரும்பு

இரும்பானது
அனன்று

பழுக்கக் காய்ச்சப் பெற்று
உண்ட

உட் கொண்ட
நீரும்

ஜலமும்
போதரும்

வெளியிலே வந்து விடும்;
கொள்க

(இதை) உறுதியாக நினையுங்கோள்;
என் தன்

என்னுடையவையாய்
அரு

போக்கமுடியாதவையாய்
பிணி பாவம் எல்லாம்

நோய்களுக்கு அடியான பாவங்களெல்லாம்
என்னை விட்டு அகன்றன

என்னை விட்டு நீங்கிப் போயின
கரும்பு அமர்

வண்டுகள் பொருந்திய
சோலை சூழ்ந்த

சோலைகளாலே சூழப்பட்ட
மா அரங்கம்

மாட்சிமை தங்கிய ஸ்ரீரங்கத்தை
கோயில் கொண்ட

இருப்பிடமாகக் கொண்டு வாழ்கிற
கரும்பினை

பரம போக்யனான எம்பெருமானை
என் கண் இணை

எனது இரண்டு கண்களும்
கண்டு கொண்டு

பார்த்த வண்ணமாய்
களிக்கும் ஆறு ஏ

மகிழ்ச்சி யடையும் விதம் என்னே! (என்று வியக்கிறார்)

தம்மை விட்டு ஒருகாலும் பிரிக்கக்கூடாமலிருந்த அரும்பிணி பாவமெல்லாம் அகன்று போன ஆச்சரியத்தினால்

இரும்பனன்றுண்ட நீரும் போதரும் என்கிறார்.

இரும்பானது பழுக்கக் காயந்து நீரைக்குடித்தால் குடித்த நீரடங்கலும் இரும்பிலே சுவறிப் போமத்தனை யொழிய

அந்த இரும்பில் நின்றும் வெளிப்படுத்தியெடுக்க முடியாதென்பது லோகாது பவஸித்தமே யாகிலும்,

அந்த நீரும் அந்த இரும்பில் நின்று வெளிப்பட்டுவிடுமென்று நிச்சயிக்கலாம்;

ஏனென்றால்,

அனன்ற இரும்பு போன்ற என்னிடத்திலே தனித்துப் பிரித்துக் களைந்தொழிக்க வொண்ணாதபடி மங்கிக் கிடந்த

அரும்பிணி பாவங்கள் வெளிப்பட்டனவன்றோ; ஆதலால் இதுபோல் அதுவும் நேரலாம் என்கிறாராயிற்று.

அரும்பிணி பாவமெல்லாம் அகலவே, திருவரங்கம் பெரிய கோயிலிலே நித்ய ஸந்நிதி பண்ணி யிருக்கின்ற

பரம போக்யனான பெருமானைக் கண்ணாரக் கண்டு களிக்கப் பெற்றே னென்கிறார் பின்னடிகளில்.

தகாத விஷயங்களைக் கண்டு களித்த என் கண்கள் இன்று ஸ்வரூபாநுரூபமான விஷயத்தைக் கண்டு களிக்கப் பெற்றமை என்ன பாக்கியம்! என்று அதிசயப்படுகிறார்.

——————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading