ஸ்ரீ பராசரபட்டர்–அருளிச் செய்த -ஸ்ரீ குண ரத்ன கோஸம்–ஸ்ரீ ஸூவர்ண குஞ்சிகா– ஸ்லோகங்கள் –53-54-55-56–

கீழ் ஸ்லோகத்தில் –கிமேதந் நிர்தோஷ -என்றது –ந கச்சின் ந அபராத்யதி -என்று
சிறிய திருவடியை நோக்கி பிராட்டி அருளிச் செய்ததை உட்கொண்டதாம் –
திருவடியைப் பொறுப்பிக்குமவள் தன் சொல் வழி வருமவனைப் பொறுப்பிக்கச் சொல்ல வேண்டா விறே-
அங்கனம் பொறுப்பிக்குமவள் கணவனுடன் இந் நாட்டில் பிறந்து படாதன பட்டதெல்லாம் நினைந்து பரிந்து
பிறத்தற்கு ஹேதுவான கருணையும் அளவு கடந்த ஸ்வாதந்த்ர்யத்தையும் வெறுக்கிறார் –
மாதாததஸிந -என்றதற்கு ஏற்ப கூபத்தில் விழும் குழவியுடன் குதித்து அவ் வாபத்தை நீக்கும்
அவ் வன்னை போலே இவ்வுலகில் வந்து பிறந்ததை நினைந்து பரிந்து பேசுகிறார் ஆகவுமாம் —

நேது: நித்ய ஸஹாயிநீ ஜநநி ந: த்ராதும் த்வம் அத்ர ஆகதா
லோகே த்வம் மஹிம அவபோத பதிரே ப்ராப்தா விமர்தம் பஹு
க்லிஷ்டம் க்ராவஸு மாலதீ ம்ருது பதம் விஸ்லிஷ்ய வாஸா: வநே
ஜாத: திக் கருணாம் திக் அஸ்து யுவயோ: ஸ்வாதந்த்ர்யம் அத்யங்குசம்–ஸ்லோகம் —53 —

நேதுர் நித்ய ஸஹாயிநீ ஜனனி -நஸ் த்ராதும் த்வம் அத்ர ஆகதா -லோகே த்வன் மஹிம அவபோத பதிரே -ப்ராப்தா விமர்தம் பஹூ-
தாயே நீ-நேது – நாயகனுக்கு என்றும் துணைவியாய்–நம்மைக் காப்பதற்கு-உனது மகிமையை அறிவதில் செவிடான இந்த உலகத்தில்
ஆகதா -அவதரித்தவளாகி –விமர்தம் பஹூ-வருத்தத்தை அதிகமாக அடைந்தனை-

க்லிஷ்டம் க்ராவஸூ மாலதீ ம்ருது பதம் -விஸ்லிஷ்ய வாஸோ வநே -ஜாதோ திக் கருணாம் திகஸ்து யுவயோ ஸ்வா தந்த்ர்ய மத் யங்குசம் –
ஜாதிப் பூ போலே மெல்லிய திருவடிகள் பாறைகளிலே க்லேசப் பட்டது
கானகத்திலே வசித்தல் -பிரிந்து -வருத்தம் யுண்டாயிற்று –
யுவயோ -உங்கள் இருவருடையவும் கருணையைப் பற்றியும் அளவு கடந்த ஸ்வாதந்தர்யத்தைப் பற்றியும் நிந்தை உண்டாகுக —

கொன்னவிலும் வெம் கானத்தூடு கொடும் கதிரோன் துன்னு வெயில் வறுத்த வெம்பரல் மேல் பஞ்சடியால் நடக்க நேர்ந்ததே –
அகலகில்லேன் இறையும் என்ற நிலை மாறி பிரியவும் நேர்ந்ததே

அந்தோ நாட்டில் பிறந்து படாதன படுவதற்கு காரணம் கருணை தானே
அத்தகைய கருணை எதற்கு -அங்கே இருந்தே ரஷிக்கல் ஆகாதோ
அடக்குவார் அற்ற ஸ்வாதந்த்ர்யமே காரணம் –
அவனது ஸ்வா தந்த்ர்யத்தை இவள் மேலும் ஏற்றி அருளுகிறார்

லஷ்ம்யா சஹ ரஷக-என்பதையே நித்ய சஹாயி நீ ஆகதா –
மட உலகம் –என்ன சொன்னாலும் உன் மகிமை காதில் ஏறாதே
கழிந்த துன்பங்களுக்கு இரங்குவதும்
அந்தத் துன்பங்களுக்கு காரணமான குணங்களை நிந்திப்பதும்
பரிவின் பெருக்கினால் கூடுமே –

தாயே ஸ்ரீரங்கநாயகீ! உனது மகிமைகளையும் பெருமைகளையும் எப்படிக் கூறினாலும், இந்த உலகத்தில் உள்ளவர்கள் காதுகளில் அவை ஏறாது.
இப்படிப்பட்ட (கொடிய) உலகத்தில் நீ இராமனின் துணைவியாக திரு அவதாரம் செய்தாய்.
எங்களைக் காப்பாற்றவே நீ தோன்றினாய். ஆனால் நடந்தது என்ன? நீ மிகுந்த துன்பங்களை அடைந்தாய் அல்லவா?
மிகவும் மென்மையான மாலதி மலர்கள் போன்ற உனது திருப் பாதங்கள் நோகும்படியாகப் பாறைகளில் (காட்டில்) நடந்து சென்றாய்.
உனது கணவனைப் பிரித்து வாழ்தல் என்பது அந்தக் காட்டில் நடந்தது.
இது அனைத்தும் எங்கள் மீது உனக்கு உள்ள கருணையால் அல்லவா நடைபெற்றது.
போதும் தாயே! இப்படி எங்களுக்காக உனக்குத் துன்பங்கள் உண்டாகும்படி இருக்கும் உனது அந்தக் கருணையை நான் வெறுக்கிறேன்.

இறையோனுக்கு எந்நாளும் துணைவி யுந்தன் ஏற்றம் எல்லாம் எடுத்து நான் இயம்பினாலும்
இறையேனும் செவி யேறா இந்த லோகத்தெமை ஏற்க வந்து நீ படும் பாடென்னே
அறை மீது நடந்தடி மெல்லலர்கள் வாட்டம் அடைந்தன கான் பிரிந்து துன்படைந்தாய்
நிறை கருனையொடு தாயே நீவிர் கொண்ட நெறி கடந்த சுதந்திரமும் நிந்தை செய்வாம் –53

அறை மீது -பாறை மேலே-

ஹே ஜனனி–ந -த்ராதும் அத்ர ஆகதா-த்வம் -எம் போன்ற சம்சார சேதனரை ரக்ஷித்து அருள திருவவதரித்த தேவரீர்
நேதுர் நித்ய  சஹாயிநீ ஸதீ-நித்ய ஸஹ சாரிணியாய்க் கொண்டு திருவவதரித்தீர்
த்வன் மகிமா அவ போத பதிரே லோகே-உம்முடைய மஹிமையை எடுத்து உரைத்தாலும் கேட்க செவியில்
துளை இல்லாத லோகத்தில் அன்றோ திருவவதரித்தது –
ப்ராப்தா விமர்தம் பஹூ–நாட்டில் பிறந்து படாதன பட்டு மனிசர்க்காய் – மாலதீம்ருது பதம் க்ராவஸூ
க்லிஷ்டம்-மாலதி புஷ்பத்தை காட்டிலும் ஸூகுமாரமான திருவடிகளைக் கொண்டு வெம் பரல்களிலே நடந்து வருந்திற்று –

நெய்வாய வேல் நெடும் கண் நேரிழையும் இளங்கோவும் பின்பு போக எவ்வாறு நடந்தனையோ எம்மிராமாவோ

மெல்லணை மேல் முன் துயின்றாய் இன்று இனிப் போய் வெங்கான மரத்தின் நீழல் கல்லணை மேல்
கண் துயிலக் கற்றனையோ கரிய கோவே

பொருந்தார் கை வேல் நுதி போலே பரல் பாய மெல்லடிகள் குதிரி சோர விரும்பாத கான் விரும்பி வெயில் உறைப்ப
வெம் பசி நோய் கூர இன்று பெரும் பாவியேன் மகனே போகின்றாய்

எத்தனை கிலேசங்கள் பட்டாலும் அகலகில்லேன் இறையும் என்று அகலாதே தான் இருக்கப் பெற்றதோ என்னில்
விஸ்லிஷ்ய வநே வாஸோ ஜாதோ -திக் கருணாம் தி கஸ்து யுவயோ ஸ்வா தந்த்ர்ய மத் யங்குசம்–ஏகாஷி ஏக காரணிகள் நடுவில்
துன்புற்று அன்றோ பத்து மாதம் கழித்தீர்

கிருபை கருணை அடியாக வழிய சிறை புகுந்தீர் என்று அறியாத லோகம் அன்றோ
இப்படிப்பட்ட சங்கல்பம் இனி ஒருக்காலும் வேண்டாம் தாயே என்று பிரார்த்திக்கிறார்

யுவயோ–இருவரையும் -உம்மிடத்தில் கருணையையும்
ஈஸ்வரன் இடத்தில் ஸ்வாதந்தர்யத்தையும் கனிசியாத லோகம் அன்றோ

இப்படியாக நீ இங்கு வந்து எங்களைக் காக்க வேண்டுமா? இதற்கு நீ என்னிடம்,
”இவ்வாறு நான் வரக்கூடாது என்று தடுப்பதற்கு நீ யார்?”, என்று
உனது சுதந்திரத்தை முன்னிறுத்திக் கூறுகிறாய். அந்தச் சுதந்திரத்தையும் நான் வெறுக்கிறேன்.

தன்னால் ஸ்ரீரங்கநாச்சியார் எத்தனை இன்னல்கள் அனுபவித்தாள் என்று கூறிப் புலம்புகிறார்.
இத்தனைக்கும் காரணம் அவளது கருணை என்று கூறி, அந்தக் கருணையை தான் வெறுப்பதாகக் கூறுகிறார்.

அன்று சீதையாக இவள் கானகத்தில் நடந்ததைத் தடுக்க, பராசர பட்டர் இல்லை.
ஆனால், அவளது திருவடிகள் அனுபவித்த வேதனைகளை துடைக்க வேண்டும் என்று பட்டர் எண்ணினார் போலும்.
அதனால் தான் அவருடைய கட்டளைக்கு ஏற்ப இன்றளவும் இவளது திருவடிகளுக்குப் பட்டுத் தலையணை வைக்கிற சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

———-

இறைவனுக்குத் துணையாய் -அவனைக் கொண்டே பிராட்டி நம்மை ரஷிக்க வேண்டி இருப்பினும்
அவளுக்காக அவன் அரியனவும் செய்பவன் ஆதலின் நம்மை ரஷிப்பது ஒரு பெரிய காரியமோ -என்கிறார் —

அதிசயிதவாந் ந அப்திம் நாத: மமந்த பபந்த தம்
ஹர தநு: அஸௌ வல்லீ பஞ்சம் பபஞ்ஜ ச மைதிலி
அபி தச முகீம் லூத்வா ரக்ஷ:கபந்தம் அநர்த்தயந்
கிம் இவ ந பதி: கர்த்தா த்வத் சாடு சுஞ்சு மநோரத:–ஸ்லோகம் —54 —

மைதிலி
அசௌ நாத -இந்த ரங்க நாதன்
பிராட்டியே இந்த ரங்கநாதன் –த்வச் சாடு சுஞ்சு-உனக்கு ப்ரியம் செய்தலோடு கூடிய
மநோரத -மநோ ரதத்தை யுடையவனாய்
அப்திம் -கடலில் –அதிசயிதவான் -பள்ளி கொண்டான் -நீ பிறந்த இடம் என்பதால் –
மமந்த -கடையவும் செய்தான் -அமுதினில் வரும் பெண்ணமுதம் கொள்ள கடையவும் செய்தான் –
தம் பபந்த -அதனை அணை கட்டவும் செய்தான் –

இளம் கிழை பொருட்டு விலங்கால் அணை இளம் கிழை பொருட்டு விலங்கால் அணை கட்டினான் –
தவ ப்ரியம் தாம யதீய ஜன்ம பூ யதர்த்த மம்போதி ரமந்தய பந்திச -ஆளவந்தார் -ஸ்ரீ ஸூக்தி-
ஹரதநு வல்லீ பபஞ்ஜம் ச -சிவனது வில்லை கொடியை முறிப்பது போலே முறிக்கவும் செய்தான் –
வில்லிறுத்ததும் மெல்லியல் தோள் தோய்கைக்காக-

தச முகீம் லூத்வா ரஷ கபந்தம் அநர்த்தயத் அபி -பத்து முகங்களை அறுத்து அரக்கனது முண்டத்தை ஆடவும் செய்தான் –
பொல்லா இராவணன் தலையைக் கிள்ளிக் களைந்ததும் இவளுக்காகவே –
கிமவ ந பதி –நின் கணவன் எதைத் தான் செய்ய மாட்டான் –

யதி ராமஸ் சமுத்ராந்தரம் மேதிநீம் பரிவர்த்தயேத் அஸ்யா ஹேதோர் விசாலாஷ்யா யுகத மித்யேவ மே மதி -சிறிய திருவடி வாக்கு –

தாயே! சீதாபிராட்டியே! ஸ்ரீரங்கநாயகீ! உனது அன்பு நாயகனான ஸ்ரீரங்கநாதன் உன்னை அடைவதற்கும்,
உனது மகிழ்ச்சிக்காகவும் எதைத் தான் செய்யாமல் இருந்தான்?
உனக்கு இன்பம் அளிக்க வேண்டும் என்பதற்காக நீ பிறந்த இடமான திருப்பாற்கடலில் எப்போதும் சயனித்துள்ளான்.
உன்னை அடைவதற்காக அந்தத் திருப்பாற்கடலைக் கடையவும் செய்தான்.
அந்தக் கடலின் மீதே இராமனாக வந்து அணை கட்டினான்.
ஒரு சிறிய கொடியை முறிப்பது போன்று ஒப்பற்ற சிவ தனுசை முறித்தான்.
பத்து தலைகள் உடைய இராவணனின் தலைகளை அறுத்து, தலை இல்லாத அவன் உடலை நடனமாடச் செய்தான்.

ஸ்ரீரங்கநாச்சியார், “குழந்தாய்! நீ கூறுவது அனைத்தையும் நான் ஒப்புக் கொள்கிறேன்.
எனக்காக அவன் இவை அனைத்தையும் செய்தான் என்பது உண்மை.
ஆனால் இவை அவன் என் மீது கொண்ட அன்பால் ஆகும்.
உங்களுக்காக அவன் என்ன செய்தான்? நீங்கள் அனைவரும் கரையேறினால் அல்லவோ எனக்கு மகிழ்ச்சி?
இதன் பொருட்டு அவன் என்ன செய்தான்?”, என்று கேட்டாள்.

உடனே பட்டர், “தாயே! அவன் எங்களுக்காக அல்லவோ, எங்களைக் கரையேற்ற, எங்கள் இராமானுசனைப் படைத்தான்.
ஆக, உன்னுடைய விருப்பத்தை அவன் புரிந்து தானே இவ்விதம் செய்தான்?”, என்று ஸாமர்த்தியமாகக் கூறினார்-

தடம் கடல் சாய்ந்தான் சேது சமைத்தனன் கடைந்தான் நாதன்
கொடியென வரன் தன் வல்வில் குறைததனன் அரக்கன் பத்து
முடி தடிந்துடல மாட முன்னமர் கண்டான் சீதே
முடிந்திட உன் விருப்பம் முந்து மன் முடியான் என்னோ –54–

முந்தும் மன் -முற்பட்ட கணவன்-

ஹே மைதிலி
அ சௌ நாத அப்திம் அதிசயிதவாந் -மா கடல் நீறுள்ளான் -தேவரீர் திருவவதரித்த திருப் பாற் கடலை
விடாமல் கண் வளரும் அழகிய மணவாளர்
தம் மமந்த -தம்முடைய சயன ஸ்தானம் என்று பாராதே-உம்மை பெற -ஆழ் கடல் தன்னை மிடைந்திட்டு
மந்தரம் மத்தாக நாட்டி வடம் சுற்றி வாசுகி வன் கயிறாகக் கடைந்திட்டார்
பபந்த தம்-உண்ணாது உறங்காது ஒலி கடலை ஊடறுத்து பெண் ஆக்கை ஆப்புண்டு தாமுற்ற பேது -என்கிறபடி
உம்மிடத்தில் வ்யாமோஹம் அடியாக அக்கடலிலே கற்களையும் மலைகளையும் இட்டு அணை காட்டினார் -இவ்வளவேயோ
ஹரத நுர வல்லீ பஞ்ஜம் பபஞ்ஜச –திக்கு நிறை புகழாளன் தீ வேள்விச் சென்ற நாள் மிக்க பெரும் சபை நடுவே வில்லிறுத்தான்-என்றும்
காந்தள் முகில் விரல் சீதைக்காக்கிக் கடுஞ்சிலை சென்று இறுக்க -என்றும்
உமக்காக அன்றோ அனாயாசமாக வில்லை இறுத்தார்
தச முகீம் லூத்வா ரஷக பந்தம் அநர்த்தயத் அபி-அவன் தலையை அறுக்க அறுக்க முளைத்து எழுந்த போது அறவே அறுத்து ஒழித்து
ராக்ஷஸ பந்தகத்தைக் கூத்தாட வைத்தார்
ஆகை இவை எல்லாம் உம்மைப் பெறுவதற்காகவே அன்றோ
த்வச்சாடு சுஞ்சு மநோரத -பதி-கிமவ ந கர்த்தா -உம்மை உகப்பிப்பது ஒன்றையே பாரித்து இருக்கும் உம் மணவாளர்
எதைத்தான் செய்யார் -அவருக்கு துர்க்கடமாவது தான் ஓன்று உண்டோ
இந்த ஸ்லோகார்த்தம் திரு உள்ளம் பற்றியே –
முமுஷுப்படியில் -தன் சொல் வழி வருமவனை பொருப்பிக்கச் சொல்ல வேண்டாம் இறே -என்று அருளிச் செய்துள்ளார்

இவளுக்காக எதுவும் செய்யத் தயாராக நம்பெருமாள் உள்ளான்.
திருப்பாற்கடலில் சயனித்தும், கடைந்தும், கடக்கவும் செய்தான்.
இத்தனை செய்பவன், அவள் நமக்காக சிபாரிசு (புருஷகாரம்) செய்யும்போது, மறுக்கவா போகிறான்?

——–

பிராட்டியை அனுபவிக்க எல்லாம் வல்ல இறைவன் விஸ்வரூபம் முதலிய என்னென்ன செய்தாலும்
அவை பிராட்டியினது அழகியதொரு லீலைக்கும் போதா -என்கிறார்-

தச சத பாணி பாத வதந அக்ஷி முகை: அகிலை:
அபி நிஜ வைஸ்வரூப்ய விபவை: அநு ரூப குணை:
அவதரணை: அதை: ச ரஸயந் கமிதா கமலே
க்வசந ஹி விப்ரம ப்ரமிமுகே விநி மஜ்ஜதிதே–ஸ்லோகம் —55 —

கமிதா கமலே -இலக்குமியே உன் காதலன்
தச சத பாணி பாத வதந அஷி முகை ரகிலை-ஆயிரக் கணக்கான கைகள் என்ன -அடிகள் என்ன -முகம் என்ன –
கண்கள் என்ன -இவை முதலியவற்றை உடையவனாயும்
அகிலை -குறைவற்றவைகளாயும்
அநுரூப குணை-ஏற்புடைய குணங்கள் உள்ளவைகளுமான -தக்க குணங்களாலும் என்றுமாம் —

தனது விஸ்வரூபத் தன்மையினாலும்
அவதரணை ரதைச்ச -அவற்றைத் தவிர்த்த அவதாரங்களாலும் –
பஹூநிமே வ்யதீதாநி ஜன்மாநி -ஸ்ரீ கீதை -வ்யூஹ மூர்த்திகள் என்னவுமாம்
ரசயன்-அனுபவித்துக் கொண்டு
தவ விப்ரம ப்ரமிமுகே -உனது விலாசச் சுழி வாயிலிலே
க்வசந-ஒரு மூலையிலே
ஹி விநி மஜ்ஜதி -மூழ்கி விடுகிறான் அல்லவா –

இறைவன் பிராட்டிக்காக எதுவும் செய்வதற்கு ஹேது அவளது போக்யதையே –
வாய் புகு நீராய் போக்யதை வெள்ளத்தில் எங்கேயோ ஒரு மூலையில் மூழ்கி விடுகிறான் –

விப்ரமம் -காதலர் மனத்துக்கு இனிய லீலை
இத்தை சுழியாக உருவகம் செய்தலால் பிராட்டியை ஓர் பேரின்ப வெள்ளமாக கொள்க -ஏக தேச உருவாக
விநிமஜ்ஜதி –மஜ்ஜதி-நிமஜ்ஜதி-விநிமஜ்ஜதி–நி -உபசர்க்கத்தால் ஆழ மூழ்குதலும்
வி உபசர்க்கத்தால் இதன் இன்பச் சிறப்பும்
நிகழ் காலத்தால் இன்னும் மூழ்கிக் கொண்டே இருக்கும் பேர் ஆழமும் தோற்றுகின்றன-

தாமரை மலரில் அமர்ந்தவளே! ஸ்ரீரங்கநாயகீ! உனது கணவனான ஸ்ரீரங்கநாதனுக்கு உள்ள ஆயிரம் திருக் கைகள் என்ன,
அழகான திருவடிகள் என்ன, அழகிய திருமுகம் என்ன, நீண்ட பெரிய கண்கள் என்ன, இவற்றைத் தவிர அவனிடம்
பொருந்தியுள்ள பல திருக் கல்யாண குணங்கள் என்ன? இப்படியாக அவன் விச்வரூபம் எடுத்த போதிலும்,
பல அவதாரங்கள் எடுத்த போதிலும் உனது காதல் என்னும் பெருவெள்ளத்தில் உண்டான ஒரு சுழலில் சிக்கி, மூழ்கி நிற்கிறான் அல்லவா?

இவன் எத்தனை ஸ்வரூப-ரூப-குணங்கள் கொண்டவனாக இருந்தாலும், அவளிடம் வசப்பட்டு அல்லவோ நிற்கிறான்?
அவளது கடைக் கண் பார்வையில் சிக்கியே நிற்கிறான்.

ஆயிரம் ஆயிரமான வடிகள் கைகள் ஆநனம்கள் நயனங்கள் ஏய்ந்து
மாயிருமை வாய்ந்ததன விசுவரூப மகிமையினால் ஏற்புடைய குணங்களாலும்
சேயொரு தாமரை வாழ்வாய் சனித்தலாலும் சிங்கார நலன் துய்ப்பான் நினது நேசன்
போயொரு மூலையில் மூழ்கிப் போகின்றான் இன் புரிலளித லீலை எனும் சுழிவாய்ப் பட்டே –55–

சனித்தல் -அவதாரங்கள்

அவனுடைய சர்வ பிரகார உபயோக சாமர்த்தியமும் பிராட்டியுடைய விலாச சேஷடித வைதக்யத்தின் ஏக தேசத்திலே அடங்கும்
ஹே கமலே-தவ -கமித-உம்முடைய வல்லபர்
தச சத பாணி பாத வதநாஷி முகைர் –சஹஸ்ர பாஹு தர வக்த நேத்ரம் -என்றபடி ஆயிரக்கணக்கான
திருக்கரங்கள் திருவடிகள் திரு முகங்கள் திருக்கண்கள் முதலான
அநுரூப குணை-தேவரீருக்கு ஏற்றவையான
அகிலை நிஜ வைஸ்வரூப்ய விபவைர் அபி-தம்முடைய விஸ்வரூபாதி அதிசயங்கள் எல்லாவற்றாலும்
அதை அவதரணைச்ச-மற்றும் அவதார விசேஷணங்களாலும்-வாஸூதேவாதி சாதுர் வ்யூஹம் –
விதி சிவ மத்யே விஷ்ணு ரூபம் -உபேந்திர மத்ஸ்ய கூர்மாதி ரூபேண -பலவகை அவதாரங்களாலே
ரசயன் -அனுபவியா நின்றவராய்
க்வசந ஹி விப்ரம ப்ரமிமுகே விநி மஜ்ஜதி தே–பெரும் கடலில் ஒரு திவலை போலே
உம்முடைய விலாச சேஷ்டிதமாகிற சுழியின் ஏக தேசத்திலே அமிழ்ந்து போகிறார் –
வி உபசர்க்கத்தால் இதன் இன்பச் சிறப்பும்
நிகழ் காலத்தால் இன்னும் மூழ்கிக் கொண்டே  இருக்கும் பேர் ஆழமும் தோற்றுகின்றன-

அவளைப் போன்றே தானும் தோற்றம் அளித்தாலாவது,
பட்டர் தன்னை இவ்விதம் புகழ்கிறாரா என்று பார்க்க மோஹினி அலங்காரத்தில் வந்த
சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

————

நம் போல்வாரைக் காத்தற்கு ஏற்ற இடமாய் இருத்தலின் ஏனைய இடங்களிலும் ஸ்ரீரங்கத்தில்
மிக்க மகிழ்வுடன் எழுந்து அருளி இருப்பதாகக் கூறுகிறார் —

ஜநந பவந ப்ரீத்யா துக்த அர்ணவம் பஹு மந்யஸே
ஜநநி தயித ப்ரேம்ணா புஷ்ணாஸி தத் பரமம் பதம்
உததி பரம வ்யோம்நோ: விஸ்ம்ருத்ய மாத்ருச ரக்ஷண
க்ஷமம் இதி தியா பூய: ஸ்ரீரங்க தாமநி மோதஸே–ஸ்லோகம் —56 —

ஜநந பவந ப்ரீத்யா -பிறந்தகத்து அன்பினாலே
துக்தார்ணவம் -பாற் கடலை
பஹூ மன்யஸே -மதிக்கின்றாய்-வசிக்கின்றாய் –
ஜநநி தயித ப்ரேம்ணா -தாயே -காதலன் பால் கொண்ட பிரேமத்தாலே -புக்ககத் தன்பினாலே
புஷ்ணாசி தத் பரமம் பதம் -பிரசித்தமான பரம பதத்தை போஷிக்கின்றாய் -வளமுற வாழ்கின்றாய் –
உததி பரம வ்யோம்நோர் -அப்படிப் பட்ட பாற் கடலையும் பரம பதத்தையும்
விஸ்ம்ருத்ய மாத்ருச ரஷண -மறந்து என் போன்ற மக்களைக் காப்பதற்கு
ஷமம் இதி தியா பூயஸ் ஸ்ரீ ரங்க தாமநி மோதஸே -ஏற்ற இடம் என்ற எண்ணத்தினாலே மிகவும் ஸ்ரீ ரங்க ஷேத்ரத்திலே மகிழ்கின்றாய் —

பெண்டிருக்கு பிறந்தகத்தில் பெற்றோரிடம் அன்பும்-பிறகு கொண்ட கொழுநனிடம் பேரன்பும்
அப்பால் பெற்ற மக்களிடம் மிக்க அன்பும் தோன்றுவது இயல்பே –
அப்படியே பிராட்டியினது அன்பு நிலை–முதலில் மதிப்பாய் –பிறகு வளமாய் –பின்பு மகிழ்வாய் -வருணிக்கப் பட்டு இன்பம் பயப்பது காண்க –
ஜநநி -என்று விளித்து -மாத்ருசர் -என் போல்வாரை -மக்கள் -புத்திர வாத்சல்யமே கணவன் பால் உள்ள காதலையும் விட மிக்கு இருக்கும்
என் போல்வாரை -என்றது அநந்ய கதித்வம் ஆகிஞ்சன்யமும் உள்ள நிலைமை –
அதனாலே ஸ்ரீ ரங்கமே பிராட்டியை மகிழ்வித்துக் கூத்தாடும் படி செய்யும் இடம்-

அவ் வூரின் பேரும் பெரிய பிராட்டியாருக்கு ந்ருத்த ஸ்தானம் -பெரியவாச்சான் பிள்ளை ஸ்ரீ ஸூக்தி
நாச்சியார் திருமொழி -11-9- வ்யாக்யானத்தில்
பிறந்தகத்தில் சீராடும் இன்பத்தையும் குன்றாத வாழ்வான வைகுண்ட வான் போகத்தையும் மறந்து விடும்படி
பிராட்டியை மகிழ்விக்கிறது ஸ்ரீ ரங்கம் –
அங்கனம் மறந்து மகிழ்வதற்கு ஹேது தாய்மையால் வந்த புத்திர வாத்சல்யமே என்றதாயிற்று –

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! நீ பிறந்த இடம் என்ற காரணத்தினால் திருப்பாற்கடலை மிகவும் மதிக்கிறாய்.
நீ புகுந்த இடம் என்ற காரணத்தினாலும், உனது கணவன் மீது உள்ள காதல் என்னும் காரணத்தினாலும்,
அனைவரும் துதிக்கும் பரமபதத்தை மிகவும் விரும்புகின்றாய்.
ஆனால் இரண்டையும் நீ இப்போது நீ மறந்துவிட்டாய் போலும்!
அதனால்தான் உனது பிள்ளைகளான எங்களைப் பாதுகாப்பதற்கு, உனக்கு ஏற்ற இடம் என்று மனதில் கொண்டு,
நாங்கள் உள்ள ஸ்ரீரங்கத்தில் என்றும் மகிழ்வுடன் அமர்ந்தாய் போலும் .

பிறந்தகத்து அன்பினாலே பீடு பாற் கடல் பெறுத்தி
சிறந்தக முன் தன் செம்மல் அன்பினால் செழிப்பு உறுத்தி
மறந்தக மவை மகிழ்ந்து மக்கள் எம்மனோரைக் காக்கச்
சிறந்தகம் இக்தே என்று சென்னி சீரரங்கில் வாழ்தி–56-

ஹே ஜநநி-
துக்தார்ணவம் ஜநந பவந ப்ரீத்யா பஹூ மன்யஸே–பிறப்பகம் என்னும் ப்ரீதி விசேஷத்தாலே
திருப்பாற் கடலை உகந்து அருளுகின்றீர் –ஷீரா சாகர கன்னிகை அன்றோ –
தத் பரமம் பதம் தயித ப்ரேம்ணா புஷ்ணாசி –தத் விஷ்ணோ பரமம் பதம் –ஸ்ருதி -திரு நாட்டை
மணவாளர் இடம் உள்ள ப்ரீதியாலே ஆதரியா நின்றீர்
உததி பரம வ்யோம்நோர் விஸ்ம்ருத்ய –இவை இரண்டையுமே மறந்து ஒளித்து அன்றோ
மாத்ருச ரஷண ஷமமதி தியா–ஸ்ரீ ரங்க தாமநி – பூயச் மோத ஸே –எம் போன்ற சம்சாரிகளைக் காத்து அருளுவதற்காகவே
பாங்கான இடம் என்று அதிமாத்ர ப்ரீதியோடே வர்த்திக்கிறீர்
பெரிய பிராட்டியாருக்கு ஆஸ்ரித ரக்ஷணத்திலே முழு நோக்கு –
உததி பரம வ்யோம் நோர் விஸ்ம்ருத்ய -உத்தர சதகம் -79-போலவே இங்கும் –

பெண்டிருக்கு பிறந்தகத்தில் பெற்றோரிடம் அன்பும்
பிறகு கொண்ட கொழுநனிடம் பேரன்பும்
அப்பால் பெற்ற மக்களிடம் மிக்க அன்பும் தோன்றுவது இயல்பே –
அப்படியே பிராட்டியினது அன்பு நிலை
முதலில் மதிப்பாய் –
பிறகு வளமாய் –
பின்பு மகிழ்வாய் -வருணிக்கப் பட்டு இன்பம் பயப்பது காண்க –

ஸ்ரீரங்கம் என்ற பெயர், ஸ்ரீரங்க நாச்சியாராலேயே வந்தது. ரங்கம் என்றால் கூத்து நடக்கும் இடம் என்பதாகும்.
ஸ்ரீ என்பது ஸ்ரீரங்கநாச்சியாரைக் குறிக்கும். ஆக, இவள் மகிழும் இடம் என்று கருத்து.

பட்டர் இவ்விதம் கூறியதைக் கேட்ட நம்பெருமாள் பட்டரிடம்,
“ஸ்ரீரங்கத்தில் உள்ளதால் அவள் மகிழ்வுடன் இருக்கிறாள் என்று நீவிர் கூறினீர். அது சரியே!
ஆனால் என்ன காரணம் என்று கூறவில்லையே!
இதோ இது போன்று நம் திருமார்பில் உள்ளதால் அல்லவோ மகிழ்வுடன் உள்ளாள்”, என்று கூறியபடி,
தன்னுடைய திருமார்பில் உள்ள பதக்கத்தில் அவள் அமர்ந்துள்ளதைக் காண்பிக்கிற சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

——————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திரு மலை நல்லான் ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading