ஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ உத்தர காண்டம்–109–ஸ்ரீ ராம மகா ப்ரஸ்தானம் (ஸ்ரீ ராமரின் மகா பரஸ்தானம்)–

அத்தியாயம் 109 (646) ஸ்ரீ ராம மகா ப்ரஸ்தானம் (ஸ்ரீ ராமரின் மகா பரஸ்தானம்)

விடிந்தவுடன், விசாலமான மார்பும் கமல பத்ரம் போன்ற கண்களும் உடைய ராமர், புரோஹிதர்களை அழைத்து,
முன்னால் அக்னி ஹோத்ரம் செல்லட்டும். பிராம்மணர்களுடன் அக்னி பிரகாசமாக வாஜபேய குடைகளுடன்
பிரதான வீதிகளில் செல்லட்டும் என்று உத்தரவிட்டார்.

உடனே தேஜஸ்வியான வசிஷ்டர், மஹா ப்ராஸ்தானிகம் – என்ற செயலுக்குத் தேவையான ஏற்பாடுகளை குறைவற செய்தார்.
சூக்ஷ்மமான ஆடைகளைத் தரித்து, கையில் குசத்துடன், தயாராக கிளம்பினர்.

ராமரும் வழியில் தென்பட்ட எதுவானாலும், யாரானாலும், உணராமல், பாதிக்கப் படாமல்,
சூரிய, சந்திர கிரணம் போலச் சென்றார். அவருடைய வலது பக்கத்தில் லக்ஷ்மி தேவியும் வந்து நின்றாள்.

இடது பக்கத்தில் ஹ்ரீ என்ற மகாதேவியும், முன்னால் வ்யவஸாயம் என்ற தேவியும் சென்றனர்.
பல விதமான ஸரங்கள், வில், மற்ற ஆயுதங்கள் மனித உருவம் எடுத்து முன் சென்றன.

வேதங்கள் பிராம்மணர்களாக, எல்லோரையும் ரக்ஷிக்கும் காயத்ரி, ஓங்காரமும், வஷட்காரமும் ராமரைத் தொடர்ந்தன.
மகானான ரிஷிகளும், பல அரசர்களும், ஸ்வர்கம் நோக்கிச் செல்லும் ராமரை அனுகமனம் செய்தன.

சென்று கொண்டிருந்த ராமரை அந்த:புர ஸ்திரீகள் பின் தொடர்ந்தனர்.
முதியவர்களும், பாலர்களும், வயதொத்த கிங்கரர்கள், கிளம்பினர்.

பரத, சத்ருக்னர்களும், தங்கள் அந்த:புர ஸ்திரீகளுடன், தங்கள் அக்னி ஹோத்ரம் இவைகளுடன் கிளம்பினர்.
ஊர் ஜனங்களும் அதே போல, தங்கள் அக்னி ஹோத்ரம், புதல்வர்கள், மனைவி, மக்கள் சகிதம் பின் தொடர்ந்தனர்.

இதன் பின் அனைத்து பிரஜைகளும், இது வரை மகிழ்ச்சியும் ஆரோக்யமுமாக வளைய வந்த ஜனங்கள்,
சென்று கொண்டிருந்த ராமனைத் தொடர்ந்து சென்றன. ராகவனின் குணங்கள் அவன் பால் ஈர்த்தது தான் காரணமாக இருக்க வேண்டும்.

‘திர்யக்யோகிநிகதாஸ்சாபி ஸர்வே ராமம் அநுவ்ரதா:’என்பது, ஸ்ரீராமா. உத்தர காண். 109 : 22.

‘அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி, பெருமாள் திருமொழி. 10 : 10.-

கற்பார் இராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ?
புற்பா முதலாப் புல்லெறும்பாதி ஒன்று இன்றியே
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே.–7-5-1-

பக்ஷிகளும், பசு, வாகனங்களை இழுக்கும் மிருகங்களும், ஸ்திரீ புருஷர்களுமாக, விகல்பமின்றி,
ஆனந்தமாக ராமனுடன் சென்றனர். வானரங்களும் ஸ்நானம் செய்து, கில கில சப்தத்துடன், நடந்தனர்.

யாருமே இதற்காக வெட்கப் பட்டதாகவோ, தீனமாகவோ, துக்கத்துடனோ காணப் படவில்லை. பரமாத்புதமான காட்சியாக,
ஆனந்த மயமாக இருந்தது. ஜனபத ஜனங்கள், ராகவனைப் பார்க்க வந்தவர்கள், பின்னால் பக்தியுடன் நடந்து வந்தனர்.

நகரத்தில் இருந்த ஜீவன்கள், அந்தர்தானமாக கண்ணுக்குத் தெரியாமல் இருந்தவை, ஸ்வர்கம் செல்ல கிளம்பி விட்ட
ராகவனுடன், உடன் நடந்தனர். ஸ்தாவர, ஜங்கம, யார், எது ராமரைக் கண்டாலும், ராம கமனம் என்று தெரிந்தவுடன்,
அனுகமனம் செல்ல (உடன் செல்ல) தயாராக சேர்ந்து கொண்டனர். மூச்சு விடும் ஜீவன்களில்
ஒன்று கூட அயோத்தியில் பாக்கியில்லை. சூக்ஷ்மமாகக் கூட காண முடியவில்லை. பறவைகளும் ராமரைத் தொடர்ந்தன.

————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading