அத்தியாயம் 108 (645) ஸ்ரீ விபீஷணாத்யாதேஸ: (ஸ்ரீ விபீஷணன் முதலானோருக்கு செய்தி)
ஸ்ரீ ராமரின் கட்டளையை ஏற்று தூதர்கள், வழியில் எங்கும் நிற்காமல் தொடர்ந்து பிரயாணம் செய்தனர்.
மதுராம் என்ற அந்த நகரை மூன்று இரவுகள் பிரயாணம் செய்து அடைந்தனர்.
ஸ்ரீ சத்ருக்னனிடம் உள்ளது உள்ளபடி விவரித்தனர்.
ஸ்ரீ லக்ஷ்மணனை தியாகம் செய்ததையும், ராகவ பிரதிக்ஞையையும் சத்ருக்னன் கேட்டான்.
புத்திரர்களுக்கு அபிஷேகம் செய்வித்ததையும் விரிவாகச் சொன்னார்கள்.
ஊர் ஜனங்கள் அனுகமனம் (உடன் நடத்தல்) செய்யப் போவதையும் தெரிவித்தார்கள்.
விந்த்ய மலைச் சாரலில், குசனுக்காக குசாவதி என்ற அழகிய நகரம் ஸ்தாபனம் செய்ததை,
ஸ்ராவஸதி என்ற நகரம், லவனுக்காக நிரமாணித்ததை, சொன்னார்கள்.
வரும் நாட்களில் ராமனும் பரதனும் அயோத்தி நகரில் ஒருவர் மீதியில்லாமல் உடன் அழைத்துக் கொண்டு
ஸ்வர்கம் செல்ல இருப்பதையும் சொன்னார்கள். மகாரதிகள் இருவரும், கிளம்பி விட்டனர்,
ராஜன், தாங்களும் வந்து சேர்ந்து கொள்ளுங்கள் என்றனர்.
இதைக் கேட்டு தன் குலம் முழுவதும் முடிவை நெருங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்து, பிரஜைகளை வரவழைத்து,
காஞ்சனர் என்ற புரோகிதரையும் வரவழைத்து, நானும் என் சகோதர்களுடன் செல்ல வேண்டும்,
அதனால் என் புத்திரர்களுக்கு அபிஷேகம் செய்து வைக்கிறேன் என்றான்.
சுபாஹு என்ற மகன், மதுரா நகரையும், சத்ரு காதி வைதிசம் என்ற நகரையும்,
மதுரா நகரை இரண்டாகப் பிரித்து இருவருக்குமாக அளித்து விட்டு, அவர்களை அரசர்களாக நியமித்தான்.
சேனை செல்வம் யாவும் இருவருக்கும் சமமாக பிரித்து அளித்தான்.
ஒரே ஒரு ரதத்தில் (ராகவன்-ரகு குலத் தோன்றல்) சத்ருக்னன் அயோத்தி நோக்கி புறப்பட்டான்.
கொழுந்து விட்டெரியும் நெருப்பு போல தவக் கோலத்தில் இருந்த அண்ணலைக் கண்டான்.
சூக்ஷ்மமான வெண் பட்டுடுத்தி, முனிவர்களுடன் அமர்ந்திருந்த ராமரைப் பார்த்து,
என் புதல்வர்களுக்கு ராஜ்யத்தை பிரித்துக் கொடுத்து விட்டேன். நானும் அனுகமனம் செய்யவே வந்தேன்.
என்னைப் பிரித்து அன்னியமாக நினைக்க வேண்டாம் என்றான். ராமரும் தலையசைத்து அனுமதி கொடுத்தார்.
இதற்குள், சுக்ரீவனும் அவனைச் சார்ந்த வானரங்கள், கரடிகள், வந்து சேர்ந்தனர், தேவ, ரிஷி, கந்தர்வர்களிடம்
வானர ரூபத்துடன் பிறந்து ராம கைங்கர்யமே பிறவிப் பயனாக வந்தவர்கள்,
ராமர் தன் முடிவை நிச்சயித்துக் கொண்டு விட்டதையறிந்து, பணிவாக தாங்களும் அனுகமனம் செய்ய விரும்புவதாகச் சொன்னார்கள்.
ராஜன், நாங்களும் அனுகமனம் செய்வதாக தீர்மானித்து தான் வந்தோம்.
எங்களை விட்டுப் போனால் தான் யம தண்டம் தாக்கியது போல தவிப்போம் என்றனர்.
ராமரும் சிரித்துக் கொண்டே – பா3டம்- அப்படியே ஆகட்டும் என்றார்.
சுக்ரீவனும், நரேஸ்வரா, நானும் அங்கதனை ராஜ்யத்தில் அபிஷேகம் செய்து வைத்து விட்டுத் தான் வந்தேன் என்றான்.
உங்களுடன் அனுகமனம் செய்யத் தான் வந்திருக்கிறேன் எனவும் ராமரும் சிரித்துக் கொண்டே சுக்ரீவா,
நீ என் நண்பன். நீ வேறு நான் வேறல்ல. தேவலோகமானாலும், பரம பதமானாலும் சேர்ந்தே போவோம் என்றார்.
விபீஷணனைப் பார்த்து கட்டளையிடுவது போலச் சொன்னார். விபீஷணா, பிரஜைகள் உள்ள வரை லங்கையில் நீ இருப்பாய்.
சந்திர, சூரியன் உள்ளவரை, மேதினி இருக்கும் வரை, என் கதை உலகில் நிலவும் வரை உன் ராஜ்யத்தில் ஸ்திரமாக இருப்பாய்.
நீ தான் ராஜ்யம் ஆளுவாய். என் நட்பை நினைத்து இந்த கட்டளையை ஏற்றுக் கொள் என்றார். எதுவும் பதில் பேசாதே.
பிரஜைகளை நீதி தவறாது பாலனம் செய். ராக்ஷஸ ராஜனே, நீ பெருந்தன்மையான மனம் உடையவன்.
இக்ஷ்வாகு குல தெய்வமான ஜகந்நாதனை எப்பொழுதும் ஆராதனை செய்து வா.
(ஸ்ரீ ரங்கநாதன் என்பது வழக்கு) இந்த தெய்வம் எங்கள் குல தெய்வம்.
அப்படியே என்று ராமர் அளித்ததை ஏற்றுக் கொண்டு ராக்ஷஸ ராஜாவான விபீஷணன்,
ராகவனுடைய கட்டளையை சிரமேற் கொண்டவனாக அப்படியே செய்வதாக வாக்கு கொடுத்தான்.
இதன் பின் ராமர் ஹனுமானைப் பார்த்து, புவியில் ராம கதை நிலவும் வரை நீயும் இரு.
நீயாகவே அப்படி ஒரு விருப்பம் தெரிவித்திருக்கிறாய். ஹரீஸ்வரா, என் வாக்யத்தை பரி பாலித்துக் கொண்டு,
என் நாமம் உலகில் உள்ளவரை சந்தோஷமாக இரு. ஹனுமானும் தன் திருப்தியை தெரிவித்துக் கொண்டான்.
இந்த உலகில் தங்கள் சரித்திரம் நிலவும் வரை, உங்கள் கட்டளையை பரி பாலித்தபடி உலகில் இருக்கிறேன் என்றான்.
பின் ஜாம்பவானைப் பார்த்து, முதியவர் இவர். ப்ரும்மாவின் பிள்ளை. இவரும், மைந்த, த்விவதனோடு ஐந்து பேரை,
கலி காலம் வரும் வரை உலகில் ஜீவிதர்களாக இருங்கள் என்று கட்டளை இட்டார்.
இவர்களுக்குத் தனித் தனியாக இப்படி கட்டளைகள் கொடுத்து விட்டு மற்ற ருக்ஷ, வானரங்களை அனுப்பி விட்டார்.
————————————————————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply