ஸ்ரீ விஷ்ணு பர்வம்–அத்யாயம் – 82–அசுரர்களின் நகரம் – ஷட்புரம் |–(-ஷட்புரவதம்)–

பிரம்மன் அசுரர்களுக்கு அளித்த வரம்; பிராமணர்களுக்குத் தொல்லை கொடுக்கக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் தேவர்களால் கொல்லப்படாதவர்களான அசுரர்கள்; அசுரர்களுக்கு வழிகாட்டிய சிவன்–

ஜநமேஜய உவாச
வைஷ²ம்பாயந த⁴ர்மஜ்ஞ வ்யாஸஷி²ஷ்ய தபோத⁴ந |
பாரிஜாதஸ்ய ஹரணே ஷட்புரம் பரிகீர்திதம் ||2-82-1

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! வியாசரின் சீடரே, ஓ! அறநெறிகளை அறிந்தவரே, ஓ! தவத்தையே செல்வமாகக் கொண்டவரே, ஓ! வைசம்பாயனரே, பாரிஜாத மரம் அபகரிக்கப்பட்ட கதையைச் சொன்ன போது, பயங்கரம் நிறைந்த அசுரர்களின் வசிப்பிடமான ஷட்புரத்தைக் குறித்தும் நீர் குறிப்பிட்டீர்.

நிவாஸோ(அ)ஸுரமுக்²யாநாம் தா³ருணாநாம் தபோத⁴ந |
தேஷம் வத⁴ம் முநிஷ்²ரேஷ்ட² கீர்தயஸ்வாந்த⁴கஸ்ய ச ||2-82-2

ஓ! தவசிகளிலும், முனிவர்களிலும் முதன்மையானவரே, அந்த அந்தகாசுரர்களின் அழிவை இப்போது சொல்வீராக” என்று கேட்டான்.

வைஷ²ம்ப்யந உவாச
த்ரிபுரே நிஹதே வீரே ருத்³ரேணாக்லிஷ்டகர்மணா |
தத்ர ப்ரதா⁴நா ப³ஹவோ ப³பூ⁴வுரஸுரோத்தமா꞉ ||2-82-3

வைசம்பாயனர், “சக்திமிக்கவனான ருத்திரன் வீரம் நிறைந்த திரிபுரர்களைக் கொன்ற பிறகும் முன்னணி அசுரர்கள் பலர் எஞ்சியிருந்தனர்.

ஷ²ராக்³நிநா ந த³க்³தா⁴ஸ்தே ருத்³ரேண த்ரிபுராலயா꞉ |
ஷஷ்டி²꞉ ஷ²தஸஹஸ்ராணி ந ந்யூநாந்யதி⁴காநி ச ||2-82-4

திரிபுரவாசிகளில், அறுபது லட்சத்திற்கும் குறையாத அசுரர்கள் ருத்திரனுடைய கணைகளின் நெருப்பால் எரிக்கப்படாமல் இருந்தனர்

தே ஜ்ஞாதிவத⁴ஸம்தப்தாஷ்²சக்ருர்வீரா꞉ புரா தப꞉ |
ஜம்பூ³மார்கே³ ஸதாமிஷ்டே மஹர்ஷிக³ணஸேவிதே ||2-82-5

ஆதி³த்யாபி⁴முகா² வீரா꞉ ஸஹஸ்ராணாம் ஷ²தம் ஸமா꞉ |
வாயுப⁴க்ஷா ந்ருபஷ்²ரேஷ்ட² ஸ்துவந்த꞉ பத்³மஸம்ப⁴வம் ||2-82-6

ஓ!மன்னர்களில் முதன்மையானவனே, தங்கள் உற்றார் உறவினரின் அழிவின் விளைவால் துயரில் பீடிக்கப்பட்டிருந்த அந்த வீரர்கள், சூரியனை நோக்கித் திரும்பிய முகங்களுடன் காற்றை மட்டுமே உண்டு, நல்லோரும், பெரும் முனிவர்களும் விரும்பும் ஜம்பூத்வீபத்தில் பிரம்மனைத் துதித்துக் கொண்டு நூறாயிரம் ஆண்டுகள் தவம் செய்து வந்தனர்.(5,6)

தேஷாமுது³ம்ப³ரம் ராஜந்க³ண ஏக꞉ ஸமாஷ்²ரித꞉ |
வ்ருக்ஷம் தத்ராவஸந்வீராஸ்தே குர்வந்தோ மஹத்தப꞉ ||2-82-7

சிலர் அத்தி மரத்தின் அடியில் உறைவிடத்தை ஏற்படுத்திக் கொண்டு கடுந்தவங்களைச் செய்து வந்தனர்;

கபித்த²வ்ருக்ஷமாஷ்²ரித்ய கேசித்தத்ரோஷிதா꞉ புரா |
ஸ்ருகா³லவாடீஸ்த்வபரே சேருருக்³ரம் ததா² தப꞉ ||2-82-8

சிலர் விளா மரத்தின் அடியிலும், வேறு சிலர் நரிகளின் குகைகளிலும் {ஸ்ருகால மரங்களின் அடியிலும்} வாழ்ந்து கொண்டு கடுந்தவங்களில் ஈடுபட்டனர்.

வடமூலே ததா² சேருஸ்தப꞉ கௌரவநந்த³ந |
அதீ⁴யந்தோ பரம் ப்³ரஹ்ம வடம் க³த்வாஸுராத்மஜா꞉ ||2-82-9

ஓ! குருவின் வழித்தோன்றலே, இன்னும் சில அசுரர்கள் ஆல மரத்தின் அடியை அடைந்து, ஆன்ம அறிவியலைக் கற்றுத் தவங்களைச் செய்து வந்தனர்.

தேஷாம் துஷ்ட꞉ ப்ரஜாகர்தா நரதே³வபிதாமஹ꞉ |
வரம் தா³தும் ஸுரஷ்²ரேஷ்ட²꞉ ப்ராப்தோ த⁴ர்மப்⁴ருதாம் வர꞉ ||2-82-10

ஓ! மன்னா, அறவோரில் சிறந்தவனும், தேவர்களில் முதன்மையானவனுமான படைப்பாளன் பிரம்மா, அவர்களுடைய தவங்களில் நிறைவடைந்து வரமளிப்பதற்காகக் கீழே வந்தான்.

வரம் வரயதேத்யுக்தாஸ்தே ராஜந்பத்³மயோநிநா |
நேஷுஸ்தத்³வரதா³நம் து த்³விஷந்தஸ்த்ர்யம்ப³கம் விபு⁴ம் ||2-82-11

தாமரையில் பிறந்த அந்தத் தேவனால், “வரத்தை வேண்டுவீராக” என்று கேட்கப்பட்டும், தலைவன் திரயம்பங்கனிடம் {சிவனிடம்} கொண்ட வன்மத்தின் காரணமாக அவர்கள் எதையும் {எந்த வரத்தையும்} வேண்டாதிருந்தனர்.

இச்ச²ந்தோ(அ)பசிதிம் க³ந்தும் ஜ்ஞாநிநாம் குருநந்த³ந |
தாநுவாச ததோ ப்³ரஹ்மா ஸர்வஜ்ஞ꞉ குருநந்த³ந ||2-82-12

ஓ! குருவின் வழித்தோன்றலே, அவர்கள் தங்கள் உற்றார் உறவினரின் அழிவுக்குப் பழிவாங்கும் விருப்பத்தை வெளிப்படுத்திய போது, அனைத்தையும் அறிந்தவனான பெரும்பாட்டன் {பிரம்மன்},

விஷ்²வஸ்ய ஜக³த꞉ கர்து꞉ ஸம்ஹர்துஷ்²ச மஹாத்மந꞉ |
க꞉ ஷ²க்தோ(அ)பசிதிம் க³ந்தும் மாஸ்து வோ(அ)த்ர வ்ருதா² ஷ்²ரம꞉ ||2-82–13

அநாதி³மத்⁴யநித⁴ந꞉ ஸோமோ தே³வோ மஹேஷ்²வர꞉ |
தமாஸூய ஸுக²ம் ஸ்வர்கே³ வஸ்துமிச்ச²ந்தி யே(அ)ஸுரா꞉ ||2-82-14

“உமாதேவியுடன் கூடிய தலைவன் மஹேஷ்வரன் பிறப்பும், நடுநிலையும் {இருப்பும்}, அழிவும் அற்றவனாவான் {ஆதி, மத்யம், அந்தமற்றவனாவான்}. மொத்த அண்டத்தையும் அவனே படைக்கிறான், அவனே அழிக்கிறான். அவனுக்குத் தீங்கிழைக்க வல்லவன் எவன்? அது பயனற்ற காரியமே. அவனுக்கு எதிரான உங்கள் வன்மத்தைக் கைவிட்டுத் தேவர்களின் நகரில் மகிழ்ச்சியாக வாழ விரும்புவீராக” என்றான்.(13,14)

தே நேஷுஸ்தத்ர கேசித்து து³ராத்மாநோ மஹாஸுரா꞉ |
அதே²ஷுரபரே ராஜந்நஸுரா ப⁴வ்யபா⁴வநா꞉ ||2-82-15

இவ்வாறு பிரம்மனால் சொல்லப்பட்டதும் தீய ஆன்மா கொண்ட அசுரர்கள் பலர் அதற்கு இணங்கவில்லை; ஆனால் பவனின் {சிவனின்} சக்திகளை அறிந்த அவர்களில் சிலர் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தினர்.

நேஷுர்யே ஸுது³ராத்மாநஸ்தாநுவாச பிதாமஹ꞉ |
வரயத்⁴வம் வரம் வீரா ருத்³ரக்ரோத⁴ம்ருதே(அ)ஸுரா꞉ ||2-82-16

பெரும்பாட்டன், விருப்பமில்லாத தீய அசுரர்களிடம், “ஓ! அசுர வீரர்களே, ருத்ரனுக்கு எதிரான உங்கள் பழியுணர்வைத் தவிர வேறு எந்த வரத்தையும் வேண்டுவீராக” என்று கேட்டான்.

தே ஊசு꞉ ஸர்வதே³வாநாமவத்⁴யா꞉ ஸ்யாம ஹே விபோ⁴ |
புராணி ஷட்ச நோ தே³வ ப⁴வந்த்வந்தர்மஹீதலே ||2-82-17

இதைக் கேட்ட அவர்கள், “ஓ! தலைவா, நாங்கள் தேவர்கள் அனைவராலும் கொல்லப்படமுடியாதவர்களாவோமாக. நாங்கள் பூமிக்கு அடியில் ஆறு நகரங்களை நிறுவுவோமாக;

ஸர்வகாமஸம்ருத்³தா⁴ர்த²ம் ஷட்புரம் சாஸ்து ந꞉ ப்ரபோ⁴ |
வயம் ச ஷட்புரம் க³த்வா வஸேம ச ஸுக²ம் விபோ⁴ ||2-82-18

ஷத்புரம் என்ற பெயரில் அவை அழைக்கப்படட்டும் {எங்கள் விருப்பங்களை அந்நகரங்கள் நிறைவேற்றட்டும்}. ஓ! தலைவா, அந்த ஆறு நகரங்களுக்குச் சென்று நாங்கள் மகிழ்ச்சியாக வாழ்வோமாக.

ருத்³ராது³க்³ரம் ப⁴யம் ந ஸ்யாத்³யேந நோ ஜ்ஞாதயோ ஹதா꞉ |
நிஹதம் த்ரிபுரம் த்³ருஷ்ட்வா பீ⁴தா꞉ ஸ்ம தபஸாம் நிதே⁴ ||2-82-19

ஓ! தவத்தையே செல்வமாகக் கொண்டவனே, திரிபுரவாசிகள் கொல்லப்பட்டதைக் கண்டு நாங்கள் பேரச்சத்தால் பீடிக்கப்பட்டிருக்கிறோம். எங்கள் உற்றார் உறவினரைக் கொன்ற ருத்ரனிடம் இருந்து எங்களுக்கு அச்சமுண்டாகாதிருப்பதாக” என்று கேட்டனர்.

பிதாமஹ உவாச
அஸுரா ப⁴வதாவத்⁴யா தே³வாநாம் ஷ²ங்கரஸ்ய ச |
ந பா³தி⁴ஷ்யத² சேத்³விப்ராந்ஸத்பத²ஸ்தா²ந்ஸதாம் ப்ரியாந் ||2-82-20

பெரும்பாட்டன் {பிரம்மன்}, “ஓ! அசுரர்களே, நல்லோரை விரும்புகிறவர்களும், நல்ல வழிமுறைகளில் நடப்பவர்களுமான பிராமணர்களின் வழியில் தடைகளை ஏற்படுத்தாமல் இருந்தால் நீங்கள் தேவர்களாலும், சங்கரனாலும் கொல்லப்பட முடியாதவர்களாக இருப்பீர்கள்.

விப்ரோபகா⁴தம் மோஹாச்சேத்கரிஷ்யத² கத²ஞ்சந |
நாஷ²ம் யாஸ்யத² விப்ரா ஹி ஜக³த꞉ பரமா க³தி꞉ ||2-82-21

உலகின் மிகச்சிறந்த புகலிடங்களான பிராமணர்களுக்கு நீங்கள் அறியாமையினால் தீங்கிழைக்க நேர்ந்தாலும் அழிவை அடைவீர்கள்

நாராயநாத்³விபே⁴தவ்யம் குர்வத்³பி⁴ர்ப்³ராஹ்மணாஹிதம் |
ஸர்வபூ⁴தேஷு ப⁴க³வாந்ஹிதம் த⁴த்தே ஜநார்த³ந꞉ ||2-82-22

அனைத்து உயிரினங்களுக்கு நன்மையைச் செய்பவன் தலைவன் ஜனார்த்தனன் என்பதால், நீங்கள் பிராமணர்களைத் துன்புறுத்தினால் நாராயணனிடமிருந்து உங்களுக்கு அச்சமுண்டாகும்” என்றான் {பிரம்மன்}

தே க³தா அஸுரா ராஜந்ப்³ரஹ்மணா யே விஸர்ஜிதா꞉ |
யே(அ)பி ப⁴க்தா மஹாதே³வமஸுரா த⁴ர்மசாரிண꞉ ||2-82-23

ஸ்வயம் ஹி த³ர்ஷ²நம் தேஷாம் த³தௌ³ த்ரிபுரநாஷ²ந꞉ |
ஷ்²வேதம் வ்ருஷப⁴மாருஹ்ய ஸோம꞉ ஸப்ரவர꞉ ப்ரபு⁴꞉ |
உவாசேத³ம் ச ப⁴க³வாநஸுராந்ஸ ஸதாம் க³தி꞉ ||2-82-24

ஓ! மன்னா, பெரும்பாட்டனால் விடை கொடுத்து அனுப்பப்பட்ட அந்த அசுரர்கள் அங்கிருந்து சென்றனர். நல்லோரின் புகலிடமும், திரிபுரவாசிகளைக் கொன்றவனுமான அந்தத் தெய்வீகத் தலைவனே, உமையுடனும், தன் தொண்டர்களுடனும், அறம் சார்ந்தவர்களும், தன் தொண்டர்களுமான மற்ற அசுரர்களின் முன் தோன்றினான்.(23,24)

வைரமுத்ஸ்ருஜ்ய த³ம்ப⁴ம் ச ஹிம்ஸாம் சாஸுரஸத்தமா꞉ |
மாமேவ சாஷ்²ரிதாஸ்தஸ்மாத்³வரம் ஸாது⁴ த³தா³மி வ꞉ ||2-82-25

{சிவன் அவர்களிடம்}, “ஓ! அசுரர்களில் முதன்மையானவர்களே, உங்களுக்கு நன்மை நேரட்டும். பகைமை, செருக்கு, வன்மம் {ஹிம்சை} ஆகியவற்றைக் கைவிட்டு என் புகலிடத்தை நாடியிருக்கிறீர்கள். எனவே நான் உங்களுக்கு வரமளிக்கப் போகிறேன்

யைர்தீ³க்ஷிதா꞉ ஸ்த² முநிபி⁴꞉ ஸத்க்ரியாபரமைர்த்³விஜை꞉ |
ஸஹ தைர்க³ம்யதாம் ஸ்வர்க³꞉ ப்ரீதோ(அ)ஹம் வ꞉ ஸுகர்மணா ||2-82-26

உங்கள் செயல்பாடுகளில் நான் நிறைவடைந்திருக்கிறேன். எப்போதும் நற்பணிகளில் ஈடுபடுபவர்களும், உங்களுக்குத் தீக்ஷை அளித்தவர்களுமான {உங்களை நல்வழியில் ஈடுபடுத்தியவர்களுமான} இருபிறப்பாளர்களுடன் சேர்ந்து நீங்கள் தேவலோகத்திற்குச் செல்வீராக

இஹ யே சைவ வத்ஸ்யந்தி தாபஸா ப்³ரஹ்மவாதி³ந꞉ |
அபி காபித்தி²கா வ்ருக்ஷே தேஷாம் லோகோ யதா² மம ||2-82-27

பிரம்மஞானத்தை அறிந்தவர்களும், இந்த விளா மரத்தின் அடியில் வாழ்பவர்களுமான தவசிகள் என் உலகை அடைவார்கள்

இஹ மாஸாந்தபக்ஷாந்தௌ ய꞉ கரிஷ்யதி மாநவ꞉ |
வாநப்ரஸ்தே²ந விதி⁴நா பூஜயந்மாம் தபோத⁴ந꞉ ||2-82-28

ஒரு மாதமோ, அரை மாதமோ {ஒரு பக்ஷமோ} {புது நிலவு நாளிலோ, முழு நிலவு நாளிலோ} அறச்சடங்குகளுடன் என்னைத் துதிக்கும் துறவிகள் {வானப்ரஸ்தர்கள்},

வர்ஷாணாம் ஸ ஸஹஸ்ரம் து தபஸாம் ப்ராப்ஸ்யதே ப²லம் |
க்ருத்வா விராத்ரம் விதி⁴வல்லப்ஸ்யதே சேப்ஸிதாம் க³திம் ||2-82-29

ஓராயிரம் ஆண்டுகள் செய்த தவத்தின் பலனை அடைவார்கள். அவர்கள் என்னை மூன்று இரவுகள் வழிபட்டால் தாங்கள் விரும்பிய உலகை {விரும்பிய கதியை} அடைவார்கள்.

அர்கத்³வீபே நிவஸதோ த்³விகு³ணம் தத்³ப⁴விஷ்யதி |
ந விதே³ஷே² ச ப⁴த்³ரம் வோ வரமேதத்³த³தா³ம்யஹம் ||2-82-30

அர்க்கத்வீபத்தில்[பூமியில் ஜம்பூத்வீபம், சாகத்வீபம், குசத்வீபம், சால்மலிகத்வீபம், கிரௌஞ்சத்வீபம், புஷ்கரத்வீபம் முதலிய த்வீபங்கள் இருப்பதாக மஹாபாரத பீஷ்ம பர்வ 11ம் அத்யாயத்திலும், 12ம் அத்யாயத்திலும் வரும் பூமி பர்வ உபபர்வத்தில் சொல்லப்படுகிறது. அர்க்கம் என்றொரு த்வீபம் சொல்லப்படவில்லை. சூரியனுக்கும் அர்க்கன் என்ற பெயர் உள்ளதால் இங்கே சொல்லப்படுவது சூரியலோகம் என்றும், அர்க்கன் என்பதற்கு நல்லோன் என்ற பொருளும் உள்ளதால் நல்லவர்கள் வசிக்கும் த்வீபம் என்றும் பொருள் கொள்ளலாம். இதே அத்யாயத்தில் 5, 6ம் ஸ்லோகங்களில் “நல்லோரும், பெரும் முனிவர்களும் விரும்பும் ஜம்பூத்வீபம்” வருவதன் பொருள் உணர்ந்தால் இது ஜம்பூத்வீபத்தையே குறிப்பிடுகிறது என்ற தீர்மானத்திற்கு வரலாம்.] {நல்ல மனிதர்கள் விரும்பும் த்வீபத்தில் / ஜம்பூத்வீபத்தில் / இந்தியாவில்} வாழும் மனிதன், இவ்வழியில் என்னை வழிபட்டால் இருமடங்கு பலன்களை அறுவடை செய்வான்; ஆனால் பகை நாட்டில் வாழும் மனிதனால் எதையும் ஈட்ட முடியாது. {உங்களுக்கு நன்மை நேரட்டும்}.

ஷ்²வேதவாஹநநாமாநம் யஷ்²ச மாம் பூஜயிஷ்யதி |
ஸர்வதோ ப⁴யசித்தோ(அ)பி க³திம் ஸ மம யாஸ்யதி ||2-82-31

என்னை ஸ்வேதவாஹனனாக (வெள்ளை நிறக் காளையை வாகனமாகக் கொண்டவனாக) இங்கே துதிப்பவன், மனத்தில் அச்சத்தால் பீடிக்கப்பட்டவனாக இருப்பினும் என்னை அடைவான்.

ஔது³ம்ப³ராந்வாடமூலாந்த்³விஜாந்காபித்தி²காநபி |
ததா² ஸ்ருகா³லவாடீயாந்த⁴ர்மாத்மாநோ த்³ருட⁴வ்ரதாந் ||2-82-32

அறம் சார்ந்தவர்களும், அர்ப்பணிப்பில் உறுதிமிக்கவர்களும், அத்தி, ஆல, விளா மரங்களுக்கு அடியில் வாழ்பவர்களும், நரிகளின் குகைகளில் {ஸ்ருகால மரங்களுக்கு அடியில்} வாழ்பவர்களும்,

முநீம்ஷ்²ச ப்³ரஹ்மவாதீ³யாந்ஸவிஷே²ஷேண யே நரா꞉ |
பூஜயிஷ்யந்தி ஸததம் தே யாஸ்யந்தீப்ஸிதாம் க³திம் ||2-82-33

குறிப்பாக முனிவர்களை வழிபடுபவர்களுமான மனிதர்கள் தாங்கள் விரும்பிய உலகங்களை {கதிகளை} அடைவார்கள்” {என்றான் சிவன்}

இத்யுக்த்வாத² மஹாதே³வோ ப⁴க³வாஞ்ச்²வேதவாஹந꞉ |
தைரேவ ஸஹித꞉ ஸர்வே ருத்³ரலோகம் ஜகா³ம வை ||2-82-34

ஓ! பெரும் மன்னா, தெய்வீகமானவனும், ஸ்வேதவாஹனனுமான மஹாதேவன் இதைச் சொல்லிவிட்டு, அவர்களுடன் {அறம் சார்ந்த அசுரர்களுடன்} சேர்ந்து ருத்ர லோகத்திற்குச் சென்றான்.

ஜம்பூ³மார்க³ம் க³மிஷ்யாமி ஜம்பூ³மார்கே³ வஸாம்யஹம் |
ஏவம் ஸங்கல்பமாநோ(அ)பி ருத்³ரலோகே மஹீயதே ||2-82-35

நான் ஜம்பூத்வீபத்திற்கு {இந்தியாவுக்குச்} செல்லப் போகிறேன், நான் அங்கே {ஜம்பூத்வீபத்தில்} வாழப்போகிறேன்” என்று மனத்தில் தீர்மானிப்பவர்களே கூட ருத்ரலோகத்தை அடைவார்கள்[“ஜம்பு மார்க்கம் போவேன். நான் ஜம்பு மார்க்கத்தில் வசிக்கிறேன் இப்படி ஸங்கல்பம் செய்கிறவன் கூட ருத்ரலோகத்தில் பெருமை அடைகிறான்”]” என்றார் {வைசம்பாயனர்}

இதி ஷ்²ரீமஹாபா⁴ரதே கி²லேஷு ஹரிவம்ஷே² விஷ்ணுபர்வணி
ஷட்புரவதே⁴ த்³வ்யஷீ²திதமோ(அ)த்⁴யாய꞉

————–—————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாஸ பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading