ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி -21-30–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

அவனை ஒருவரால் அளவிட்டுப் பேச ஒண்ணாது கிடீர் என்கிறார் –
கீழ்த் திரு வுலகு அளந்த அருளின இடம் ப்ரஸ்திதமான வாறே அப்படி வரையாதே பரிமாறும்
கிருஷ்ணாவ தாரத்தைச் சொல்லுகிறார் –

பேசுவார் எவ்வளவு பேசுவர் அவ்வளவே
வாச மலர்த் துழாய் மாலையான் -தேசுடைய
சக்கரத்தான் சங்கினான் சார்ங்கத்தான் பொங்கரவ
வக்கரனைக் கொன்றான் வடிவு ——21-

பரிச்சேதித்துப் பேச ஒண்ணாமைக்கு தனித் தனியே ஹேதுக்களை அருளிச் செய்து –வடிவு பிரகாரம்
பேசுவார் எவ்வளவு பேசுவர் அவ்வளவே –உள்ளபடி கண்டு பேச ஒண்ணாது-

—————

ஒருவராலும் அவனை அளவிட்டுப் பேச ஒண்ணாது என்றாரே –
அநந்தரம் திரு வுள்ளத்தைக் குறித்து நீ முன்னம் அவனை அழகிதாக சாஷாத் கரிக்கையிலே
ஸ்ரத்தை பண்ணு கிடாய் என்கிறார் –

வடிவார் முடி கோட்டி வானவர்கள் நாளும்
கடியார் மலர் தூவிக் காணும் -படியானை
செம்மையால் உள்ளுருகிச் செவ்வனே நெஞ்சமே
மெய்ம்மையே காண விரும்பு ——22-

நாம் ஒரு நாளைக்கு ஒரு நாள் உண்ணுமோ பாதி எப்பொழுதும் தொழுமவர்கள் –சதா பஸ்யந்தி -இறே –
செம்மையால்–அவன் சேஷி நாம் சேஷ பூதர் என்னும் புத்தி பண்ணி ஹ்ருதயம் சிதிலமாய் –
செவ்வனே –நீ ஓன்று கொண்டு அவனைக் காண இருக்கை அன்றிக்கே-ஒரு யத்னம் செய்யாது இருக்கத்
தானே தன்னைக் கொடு வந்து காட்டுவதாகக் கொண்டு –
மெய்ம்மையே –மனஸ்ஸே ஒரு குண ஆவிஷ் கார மாத்திரத்திலே தெகுட்டி விடாதே
அவனைப் பத்தும் பத்தாக சாஷாத் கரிக்கையிலே யாதரி-
பிரயோஜன நிரபேஷமாக ஆசைப்படு–பிரயோஜனமும் அவனே-பிரயோஜனமும் அவனே -என்றபடி
முதல் தன்னிலே இவர் சாஷாத் கரித்தன்றோ அனுபவிக்கிறது -என்னில்-ஒருக்கால் கண்டோம் இறே என்றால்
அவ்வளவால் பர்யவசிக்கும் விஷயம் அல்லாமையாலும்
இவர் இருந்து கண்டது சம்சாரத்தே ஆகையாலும் ஆறி இருக்க விரகு இல்லையே –

——————

மெய்ம்மையைக் காண விரும்பு -என்றாரே – அந்த உபதேசம் கடுகப் பலித்துக் கொடு நின்றதாய் இருந்தது –
தான் சொன்னபடியே திருவுள்ளம் விரும்புகிற படி-இவருடைய நெஞ்சாகில் இங்கனே இருக்க வேண்டாவோ –

விரும்பி விண் மண்ணளந்த அஞ்சிறைய வண்டார்
சுரும்புதுளையில் சென்றூத -அரும்பும்
புனந்துழாய் மாலையான் பொன்னங்கழற்கே
மனந்துழாய் மாலாய் வரும் ——-23-

மனஸ்ஸானது முன்னாடி தோன்றாமல் நின்ற நிலம் துழாவிப் கொண்டு பிச்சேறி வாரா நிற்கும் –
ஹ்ருதயமான துழாய் கலங்கிக் கொண்டு பிச்சேறா நிற்கும்-
வ்யாமோஹத்தைப் பண்ணித் துழாவி வாரா நின்றது –வண்டுகள் பட்டது படா நின்றது –

————–

அபி நிவிஷ்டராய்க் கொண்டு எல்லாம் செய்தோம் இறே என்று ஏறி மறிந்து இராதே -நெஞ்சே
அவனை மேலே விழுந்து ஆஸ்ரயிக்கப் பார் கிடாய் என்கிறார் –
ஆசை பிறந்த பின்பு இனி விச்சேதம் இன்றிக்கே அனுபவிக்கப் பார் என்கிறார் –

வருங்கால் இரு நிலனும் மால் விசும்பும் காற்றும்
நெருங்கு தீ நீருருவு மானான் -பொருந்தும்
சுடராழி ஒன்றுடையான் சூழ் கழலே நாளும்
தொடராழி நெஞ்சே தொழுது —-24-

அவ்வோ பதார்த்தங்களுக்கு அந்தராத்மாவாய் நிற்கையாலே லீலா விபூதி விசிஷ்டனாய் –
தேஜோ ரூபமான திரு வாழியை யுடையனாகையாலே நித்ய விபூதி யுக்தனாய் யுள்ளான்-
தொழு வித்துக் கொள்ளப் பரிகரம் உண்டு-
சூழ் கழலே – ஆஸ்ரிதரை அகப்படுத்துக் கொள்ளுகிற திருவடிகளையே
புறம்பு போகாமல் சூழ்த்துக் கொள்ளும் திருவடிகளையே -என்னுதல்
இத்தால் அவன் எதிர் சூழல் புக்குத் திரியா நின்றால் அத்தை அறிந்த இன்றாகிலும் நீ தொடராயோ
கீழ் விச்சேதித்துப் பட்டது போரும் இனி மேல் உள்ள காலம் முறையாலே இடைவிடாதே தொடர்ந்து ஆஸ்ரயி-

———-

இவர் இப்படி உபதேசிக்கச் செய்தேயும் திரு உள்ளமானது திமிர்த்துத் தன்னுடைய பூர்வ வ்ருத்தத்தை ஸ்மரித்து
இருந்தாப் போலே இருந்தது -அத்தைப் பார்த்து நீ இங்கே கிட்டி ஆஸ்ரயித்தால்
உனக்கு வருவதொரு குறை இல்லை காண் என்கிறார் –

தொழுதால் பழுதுண்டே தூ நீருலகம்
முழுதுண்டு மொய் குழலாள் ஆய்ச்சி விழுதுண்ட
வாயானை மால் விடை ஏழ் செற்றானை வானவர்க்கும்
சேயானை நெஞ்சே சிறந்து ——-25–

ஜகத்துக்கு அவன் வயிறு தாரகமானால் போலேயும் நெய் அவனுக்கு தாரகமானால் போலேயும்
அடிமை உனக்கு தாரகம் அன்றோ –நான் சொல்லுகிற வேப்பங்குடி நீர் இது வன்றோ என்கிறார் –
வெண்ணெய் உண்ணா விடில் அவனுக்கு பிரளயம் வந்தது போலே –
ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ளத் த்ரவ்யத்தாலே அங்கு வயிறு நிறையாமையாலே வந்த குறை தீர்ந்தானாய் இருக்கிறவன் –
தனக்கு அசாதாரண பரிகரத்துக்குத் தானே விரோதியைப் போக்கும்-
ப்ரஹ்மாதிகளுக்கும் கூட அவ்வருகாய் இருப்பான் ஒருவன் ஆன பின்பு
இனி அவன் காலிலே விழுந்து பிழைக்கில் பிழைக்கும் அத்தனை-
நெஞ்சே -சம்பந்தத்தை நினைத்து அங்குத்தைக்குத் தகுதியாய்க் கொண்டு ஆஸ்ரயித்ததால்
உனக்கு வருவதொரு தப்பு உண்டோ –

———-

இப்படிக் கிட்டி ஆஸ்ரயிக்கத் தம் திரு உள்ளத்தை அவன் உகந்து அருளின நிலங்களில் காட்டில் விரும்பின படியை
அருளிச் செய்கிறார் –கோயில்களில் இருக்கிறது இசைந்தார் நெஞ்சிலே புகவிறே –
அங்கன் இன்றிக்கே-யசோதை பிராட்டி வெண்ணெயை விழுங்கும் காட்டில் நாம் பெற்றது என் என்னில்
உகந்து அருளின தேசங்களிலே நமக்காக வந்து ஸூலபனானான் என்கிறார் -என்னவுமாம்
தொழுதால் பழுதுண்டே என்றாரே-இவர் இப்படிச் சொல்ல அவன் பேசாது இரானே –

சிறந்த வென் சிந்தையும் செங்கண் அரவும்
நிறைந்த சீர் நீள் கச்சி யுள்ளும் உறைந்ததுவும்
வேங்கடமும் வெக்காவும் வேளுக்கைப் பாடியுமே
தாங்கடவார் தண் துழாயார் ——–26–

அவனுடைய ஆதரத்துக்கு இவை இரண்டும் ஒரு கோவையாய் இருக்கிறது –
உகந்த படுக்கையான திரு வநந்த வாழ்வானோபாதி என்னுடைய நெஞ்சும் –
திரு வநந்த ஆழ்வானையும்-என்னுடைய நெஞ்சையும் தன்னதாக அபிமானித்து இருப்பது –
வேங்கடமும் வெக்காவும் வேளுக்கைப் பாடியும்-இத்தையும் தாங்கடவார்-சாதரமாக யுறைந்து -அதிக்ரமியார்-
திருக் கச்சி முதலான திருப்பதிகளிலும் ஸூரிகளில் பிரதானனான திரு வனந்த ஆழ்வானில் காட்டிலும்
தம் திரு உள்ளத்தை மிகவும் விரும்புகையாலே முந்துற திரு உள்ளத்தை அருளிச் செய்தார் –

————–

பகவத் சமாஸ்ரயணம் பண்ணினாரில் ஆரானும் ஒருவர் பாபபலம் புஜித்தார் உண்டு என்று இதுக்கு
முன்பு எங்கேனும் கேட்டு அறிவதுண்டோ என்கிறது –

ஆரேதுயர் உழந்தார் துன்புற்றார் ஆண்டையார்
காரே மலிந்த கருங்கடலை – நேரே
கடைந்தானைக் காரணனை நீரணை மேல் பள்ளி
அடைந்தானை நாளும் அடைந்து —-27-

அக்னி நா சிஞ்சேத்-நெருப்பினால் நனைத்தல் போல இருப்பது ஓன்று இறே
பகவத் பஜனம் பண்ணியும் பாப பலானுபவம் பண்ணுகை யாகிறதும் –
கடலுக்கு தொடுத்த அம்பு அவன் மேல் விடாமையே அன்றிக்கே அவன் சத்ருக்கள் மேலே விட்டது இல்லையோ
அனுக்ரஹ பலம் காணுதலே இறே உள்ளது –ஆஸ்ரித கார்யம் செய்கைக்காகக் கிட்டக் கிடக்கிற படி –
எக்காலத்தில் எத்தேசத்தில் யார் அவனைப் பற்று துஷ்கர்ம பலத்தை அனுபவித்தார் –

————-

இவர்கள் பண்ணின பாப பலம் இவர்களுக்கு புஜிக்க வேண்டுவது
பாண்டவர்கள் தங்கள் சத்ருக்களை தாங்கள் நிரசிக்கும் அன்று அன்றோ என்கிறார் –
கீழ் வேங்கடமும் வெக்காவும் வேளுக்கைப் பாடியும் -என்ற பிரசங்கத்தாலே
ஆஸ்ரித பாரதந்த்ர்யத்தை அனுசந்தித்து ஈடுபடுகிறார் –

அடைந்தது அரவணை மேல் ஐவர்க்காய் அன்று
மிடைந்தது பாரத வெம் போர் -உடைந்ததுவும்
ஆய்ச்சி பால் மத்துக்கே அம்மனே வாள் எயிற்றுப்
பேய்ச்சி பால் உண்ட பிரான் ——28-

உகந்தாருக்கு தன உடம்பைக் கொடுக்கும் –-ஆஸ்ரிதர்க்காகத் தன் உடம்பை அழிய மாறியும் நோக்கும்
இவன் அஞ்சாததும் பீஷ்மாதிகளுக்கே –அஞ்சுவதும் யசோதைப் பிராட்டிக்கே-
அம்மனே –இது ஒரு எத்திறம் இருக்கிறபடி –கெட்டேன் இவனால்

————

யசோதைப் பிராட்டி ப்ரஸ்துதை யானவாறே அவளுடைய ஸ்நேஹத்தையும் குணங்களையும் சொல்லி
அவளும் ஒருத்தியே -என்று கொண்டாடுகிறார் –
கீழே உடைத்ததுவும் ஆய்ச்சி பால் மத்துக்கு-என்றாரே அச்சத்துக்கு இவன் பால் ஒப்பு இல்லாதாப் போலே
ஸ்நேஹத்துக்கும் யசோதைப் பிராட்டிக்கு ஒப்பில்லை – என்கிறது –
கீழே மிடைந்தது பாரத வெம்போர் -என்று ஆஸ்ரிதர்க்காக அவன் தன்னை அழிய மாறின படியைச் சொன்னாரே
இதில் அவனுக்காக இவள் தன்னை அழிய மாறின படி சொல்லுகிறது –
அச்சம் கெடுகை ஸ்த்ரீத்வம் அழிய மாறுகை -ஸ்த்ரீத்வ பிரயுக்தம் இறே அச்சம் –
அவளும் ஒருத்தியே என்று கொண்டாடுகிறார் –

பேய்ச்சி பாலுண்ட பெருமானைப் பேர்ந்து எடுத்து
ஆய்ச்சி முலை கொடுத்தாள் அஞ்சாதே -வாய்த்த
இருளார் திருமேனியின் பவளச் செவ்வாய்
தெருளா மொழியானைச் சேர்ந்து —-29–

ஸ்த்ரீத்வ பிரயுக்தமான பயத்தைப் பொகட்டு கடுக வந்து எடுத்து ப்ரத்யௌஷதம் பண்ணுகையிலே ஒருப்பட்டாள் ஆய்த்து
கேட்ட விடத்தே மோஹித்து விழுகை அன்றிக்கே கால் நடை தந்து–வந்து— எடுத்து-பிரதிகிரியை பண்ண தொடங்கினாள் ஆய்த்து
மோஹித்து விழுமதுவும் பிரேம கார்யமே யாகிலும் -அவனைப் பெறும் படியும் கார்யம் பார்க்க வேணும் இறே
மயர்வற மதி நலம் பெற்றும் -யாம் மடலூர்ந்தும் -என்னப் பண்ணும் விஷயம் இறே –

——————

அவன் சந்நிஹிதன் ஆகையாலே அவள் ஸ்நேஹித்தாள் –இப்போது நமக்கு அவன் சந்நிஹிதன் அன்றே என்னில்
அவன் சந்நிஹிதனான இடங்களைச் சொல்லுகிறார் –
ஒரு கால விசேஷத்திலே ஒருத்திக்கு எளியனான இந்நிலை எல்லார்க்கும் உண்டாம்படி கோயில்கள் எங்கும்
வந்து நின்று அருளின படியை அருளிச் செய்கிறார் –

சேர்ந்த திருமால் கடல் குடந்தை வேங்கடம்
நேர்ந்த வென் சிந்தை நிறை விசும்பும் -வாய்ந்த
மறை பாடகம் அனந்தன் வண்டுழாய்க் கண்ணி
இறைபாடி யாய இவை —-30–

நேர்ந்த வென் சிந்தை – என்கையாலே இத் திருப்பதிகளிலே வந்து நின்றது எல்லாம் என் ஹிருதயத்திலே
புகுந்து இருக்கைக்கு – என்கிறது –
வேதத்தில் நின்றதோடு கண்ணால் காணப் படுகிற திருப்பதிகளோடு வாசி அற இவருக்கு பிரகாசமாய் இருக்கிறபடி
இறைபாடி யாய இவை–ஸ்ரீ யபதி அத்யபி நிவிஷ்டனாய் சேர்ந்து வர்த்திக்கிற ராஜ தானி

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading