ஸ்ரீ குருகை காவல் அப்பன் அருளிச் செய்த தனியன் –
சீராரும் மாடத் திருக் கோவலூர் அதனுள்
காரார் கரு முகிலைக் காணப் புக்கு –ஒராத்
திருக் கண்டேன் என்று உரைத்த சீரான் கழலே
உரைக் கண்டாய் நெஞ்சே யுகந்து-
மாட மா மயிலையில் அவதரித்து-மஹ்தாஹ்வயர்-என்னும்படி –
செம்மை +வடி -சேவடி போலே –பெருமை +ஆழ்வார் -பேயாழ்வார்
நிரதிசய ப்ரேமத்தை யுடையராய் – அத்தாலே திருக் கண்டேன் என்று உரைத்த
பேயாழ்வார் திருவடிகளிலே நிரந்தர அனுசந்தானத்தை விதிக்கிறது இதில் –
கோவலன் வர்த்திகையாலே அதுவே நிரூபகமான தேசம்-
புற மழைக்கு ஒதுங்கினவர்க்கு உள்ளும் மழை முகில் போல்வான் தன்னை அன்பு கூரும்படியான தாம் அனுபவிக்கப் புக்கு –
அனுசந்தித்து -மனனம் பண்ணி -திருக் கண்டேன் என்று உரைத்த -அவ்வனுப ஜெனித ப்ரீதி யாலே
தாம் சாஷாத் கரித்த படியை – அவர் திருக் கண்டேன் என்று அனுசந்தித்தால் போலே நீயும் அவர் திருவடிகளை
வாக்காலே அனுசந்திக்கப் பார்
———
கண்டு அடைவு கெட்டுப் பேசிற்று ஆகையாலே – ஆகையாலே அன்றோ பேயர் ஆய்த்து-
பர பக்திக்கு அநந்தரம் சாஷாத் காரமாய் இறே இருப்பது
தன்னைக் காட்டிக் கொடுக்கக் கண்டேன் -என்கிறார் இதில் –
ஞானத்தைச் சொல்லுகிறது வையம் தகளி-
ஞான விபாகையான பக்தியைச் சொல்லுகிறது அன்பே தகளி –
பக்தியால் சாஷாத் கரித்த படியைச் சொல்கிறது இதில் –
( உயர்வற -என்று முதல் பத்திலும் -வண் புகழ் நாரணன் -என்று அடுத்த பத்திலும்
-திருவுடை அடிகள் -என்று மூன்றாம் பத்திலும் அருளிச் செய்தார் இறே நம்மாழ்வார் )
முதலாமவர் -உபய விபூதி யுக்தன் -என்று அனுசந்தித்தார்
மற்றவர் அவனுக்கு வாசக சப்தம் -நாராயண சப்தம் -என்றார்
இவர் அத்தோடு ஸ்ரீ மச் சப்தத்தைக் கூட்டிக் கொள்ள வேணும் -என்கிறார்-
சேஷியுடைய ஸ்வரூபம் சொன்னார் முதல் ஆழ்வார்
சேஷ பூதன் ஸ்வரூபம் சொன்னார் நடுவில் ஆழ்வார்
இரண்டுக்கும் அடியான ஸ்வரூபம் சொல்லுகிறார் இவர்
எம்பெருமான் கடல் கடைய தேவர்கள் நடு நின்றால் போலே முன்புற்றை ஆழ்வார்கள் பிரசாததத்தாலே
கண்டு கொண்டு நின்றேன் என்கிறார் –
அவர்கள் இருவருடையவும் பிரசாதத்தாலே பகவத் பிரசாதம் அடியாக தமக்குப் பிறந்த பர பக்தி பரம பக்தி பர்யந்தமாக முற்றி
அத்தாலே கடலைக் கண்டவன் அதுக்குள் உண்டான முத்து மாணிக்காதிகளைத் தனித் தனி கண்டு உகக்குமா போலே
லஷ்மீ சங்க கௌஸ்துபாதிகளுக்கு இருப்பிடமாய் அவயவ ஸுந்தரியாதிகள் அலை எரிகிற பெரும் புறக் கடலான
எம்பெருமானை சாஷாத் கரித்து அனுபவிக்கிறார் பேயார்-
————–
அவனைக் காண்கிற காட்சியில் எல்லாம் உண்டாய் இருக்கச் செய்தேயும் -ஆதார அதிசயத்தாலே
அது கண்டேன் இது கண்டேன் என்று தாம் கண்டு அனுபவிக்கப் பெற்ற படி பேசுகிறார் –
திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன் -செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக் கண்டேன்
என்னாழி வண்ணன் பால் இன்று ———-1-
இவள் கடாஷம் பெறாத போது-அவனோடு அல்லாதாரோடு வாசி இன்றிக்கே இருக்கும்
இந்த்ரன் தம்பியாய் அவன் பின்னே திரியச் செய்தே அவள் பாராத போது இந்த்ரன் ஐஸ்வர்யம் நஷ்டமாயிற்று
உபாசன வேளையில் இவள் புருஷகாரமாக வேண்டினாப் போலே சாஷாத் கார வேளையிலும் முற்பாடு உடையவள் இவள் –
பேணிக் கருமாலைப் பொன் மேனி காட்டா முன் காட்டும் திருமாலை நங்கள் திரு -இரண்டாம் திரு -56-என்று
சாஷாத் காரத்துக்கும் அடி இவள் –
தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -முதல் திரு -67-என்று ஞானத்துக்கும் அடி இவள் –
திருக் கண்டேன்–-தர்மம் தன்னைக் கண்டேன் –
பொன் மேனி கண்டேன்–-அவள் இருக்கும் ஆசனம் கண்டேன்-
அவளும் தண்ணீர் தண்ணீர் என்று மேல் விழும்படி இருப்பதாய் –
பொன் போலே ஸ்ப்ருஹணீயமாய் இருக்கிற திரு மேனியைக் கண்டேன்-
புரி சங்கு –கூனல் சங்கம் – என்னுமா போலே சேஷத்வத்தாலே எப்போதும் ப்ரஹ்வீ பாவத்தை உடைத்தாய் இருக்கும்-
என் ஆழி வண்ணன் –இவருடைய கடல் இருக்கிறபடி
கடலின் உள்ளே இறே பிராட்டியும் சங்கும்ரத்னமும் எல்லாம் பிறப்பது –
இன்று –அவன் காட்டக் கண்ட இன்று-இவள் புருஷ்காரமாகக் கண்டேன் இன்று
———–
அவனைக் கண்ட போதே விரோதி வர்க்கம் அடையப் போய்த்து என்கிறார் –கைங்கர்யமே யாத்ரையாம் படி யானேன் –
(கீழே பஞ்ச வர்ணம் -அதில் பச்சை வர்ணம் சேர்ந்து இங்கு )
இன்றே கழல் கண்டேன் ஏழ் பிறப்பும் யான் அறுத்தேன்
பொன் தோய் வரை மார்பில் பூந்துழாய் -அன்று
திருக் கண்டு கொண்ட திருமாலே உன்னை
மருக்கண்டு கொண்டேன் மனம் —–2-
திருவடிகளைக் காண்கைக்கும் ஜன்மத்துக்கும் சஹாவஸ்தானம் இல்லாமை –
அவள் விரும்புகிற விஷயம் என்றும் ஸ்ரீ யபதித்தவத்தால் வந்த பெருமையை நினைத்தும் பிற்காலியாதே மருவிக் கண்டு
கொண்டது என்னுடைய மனஸ்ஸூ –அந்தப்புர பரிகரமான நான் இன்று உன் திருவடிகளைக் கண்டு அனுபவிக்கப் பெற்றேன் –
பிராட்டியோபாதி பரிவு உண்டாய்க் கண்டேனோ – விலக்காமையே உள்ளது –
ஒரு பிரயோஜனத்தை கொண்டு போகை அன்றிக்கே உன் பக்கலிலே மருவிற்று
பிராட்டியோட்டை சம்பந்தம் உறவு அறியாதார்க்கு வெருவுகைக்கு உடலாம்
உறவு அறிந்தார்க்கு அயோக்யன் என்று அகலாமைக்கு உடலாம் –
———-
கீழ் இவருடைய மனஸ் ஸூ அங்கே மறுவின படி சொல்லிற்று
அவன் இவருடைய மனசை அல்லது அறியாத படி சொல்லுகிறது இதில் –
மனத்துள்ளான் மா கடல் நீருள்ளான் மலராள்
தனத்துள்ளான் தண் துழாய் மார்வன் சினத்துச்
செரு நருகச் செற்று உகந்த தேங்கோத வண்ணன்
வரு நரகம் தீர்க்கும் மருந்து ——–3-
மனத்துள்ளான் –உத்தேச்யம் அவ்விடமே-மனசைப் படுக்கையாகப் புகுந்தான் –
சம்சார சம்பந்தத்தை அறுப்பானாய்க் கொண்டு மனசிலே புகுந்தான் –
என் நெஞ்சினில் வந்து பேர்க்க முடியாதபடி வாழ்கிறான் –
மலராள் தனத்துள்ளான் –அவனுடைய நல் ஜீவன் இருக்கும் இடம் –
தண் துழாய் மார்வன்-அவளுடைய நல் ஜீவன் இருக்கும் இடம் –
——–
சர்வ ரஷகனானவன் திருவடிகளே ப்ராப்ய ப்ராபகங்கள் என்கிறார் –
கீழ் – தமக்குச் செய்த படி சொன்னார் –இதில் பொதுவான ரஷையைச் சொல்லுகிறது –
அது ஸ்வஜன ரஷணம் –
மருந்தும் பொருளும் அமுதமும் தானே
திருந்திய செங்கண் மால் ஆங்கே பொருந்தியும்
நின்று உலகம் உண்டும் உமிழ்ந்தும் நீரேற்று மூவடியால்
அன்று உலகம் தாயோன் அடி ——–4—
மருந்தும் பொருளும் அமுதமும் தானே-விரோதியைப் போக்குவானும் அபிமதத்தைத் தருவானும் அபிமதம் தானும் அவனே –
சம்சார வியாதியைப் போக்கும் பேஷஜமும்-
இஷ்டமான மோக்ஷ ஸூகத்தைத் தரும் பொருளும் -ஸ்வத இஷ்டமாய் இருக்கிற போக்யமான அம்ருதமும்-
திரு வுலகு அளந்து அருளின எம்பெருமான் திருவடிகளே-சமிதை பாதி சாவித்திரி பாதி யல்ல –
நமுசி பிரக்ருதிகளை பொடிப் படுத்தின படியாலே -மருந்து–அர்த்தியாய் வருகையாலே பொருளானான்
திருவடிகளைத் தலையிலே வைக்கையாலே அம்ருதமானான்
உண்டு -மருந்தான படி–உமிழ்ந்து -பொருளான படி -செங்கண் மால் -அமுதமான படி
————-
திரு வுலகு அளந்து அருளின படி பிரச்துத்தமானவாறே அதுக்குத் தோற்று அவன் அழகை அனுபவிக்கிறார் –
அவனே மருந்தும் -பொருளும் -அமுதமுமானவாறே இனி அழகை அனுபவிப்போம் என்கை-
அப்ராக்ருதமான அழகுக்கு வஸ்துக்களை சத்ருசமாக சொல்லுகிறது – அலமாப்பாலே இறே-
அழகை அனுசந்தித்தாருக்குப் பேசாது இருக்க ஒண்ணாது-பேச ஒண்ணாது –
அடி வண்ணம் தாமரை அன்றுலகம் தாயோன்
படி வண்ணம் பார்க்கடல் நீர் வண்ணன் முடி வண்ணம்
ஓராழி வெய்யோன் ஒளியும் அக்தே அன்றே
ஆராழி கொண்டார்க்கு அழகு —-5–
கையிலே திரு வாழி பிடித்தால் வேறு ஒரு ஆபரணம் சாத்த வேண்டாது
இருக்கிறவனுடைய அழகு அடி வண்ணம் தாமரை-அவன் அழகிலே ஆழங்கால் பாட்டு அனுபவிக்கிறார் –
————–
கீழ்ச் சொன்ன அழகையும்-அத்தோடு ஒத்த சேஷ்டிதங்களையும் சேர்த்து அனுபவிக்கிறார் –
அழகன்றே ஆழியாற்கு ஆழி நீர் வண்ணம்
அழகன்றே அண்டம் கடத்தல் அழகன்றே
அங்கை நீர் ஏற்றாற்கு அலர்மேலோன் கால் கழுவ
கங்கை நீர் கான்ற கழல் —–6-
திருவாழி யோபாதி நிறமும் சிறந்து இருக்கும் -இந் நிறம் உடையவனுக்கு வேறொரு ஆபரணம் வேணுமோ –
திருவடிகள் பாவனமானது மாத்ரம் அல்ல போக்யமும் என்றபடி-
ஏழு உலகும் கொண்ட கோலக் கூத்தன் -என்கிறபடியே வல்லார் ஆடினால் போலே
அழகுக்கு உடலாய் இருப்பது ஓன்று அன்றோ-
———–
இப்படி அவன் அழகிலே தோற்ற இவர் தம் திரு உள்ளத்தைக் குறித்து
அவன் திருவடிகளிலே நாம் அடிமை செய்து வாழும் படி வாராய் என்கிறார் –
கழல் தொழுதும் வா நெஞ்சே கார்க் கடல் நீர் வேலை
பொழில் அளந்த புள்ளூர்திச் செல்வன் எழில் அளந்தங்கு
எண்ணற்கரியானை எப்பொருட்க்கும் சேயானை
நண்ணற்கரியானை நாம் –7-
எழிலை அளந்து மநோ ரதிக்க ஒண்ணாதவனை–அவர் காட்டக் காண இருக்கிற நாம்
திருவடிகளைத் தொழுவோம் போரு –
—————-
எல்லா இந்த்ரியங்களும் அவனை அனுபவிக்க வேணும் என்கிறார் –
நாமம் பல சொல்லி நாராயணா வென்று
நாம் அங்கையால் தொழுது நன்னெஞ்சே வா மருவி
மண்ணுலகம் உண்டு உமிழ்ந்த வண்டறையும் தண்டுழாய்க்
கண்ணனையே காண்க நங்கண் ———8–
பிச்சர் வாழைத் தோட்டம் புக்கால் போலே தோற்றின திரு நாமங்களை அடங்கச் சொல்லி –
அவை எல்லாவற்றுக்கும் அடியான பிரதான நாமத்தைச் சொல்லி-
பிரளயம் வரும் என்று ஏற்கவே கோலி திரு வயிற்றிலே வைத்து-வெளி நாடு காண உமிழ்ந்து –
நிரதிசய போக்ய பூதனான ஸூலபனான கிருஷ்ணனையே விரும்பிக் காண வேணும் கண்
——-
காண்க நம் கண் என்று இவர் சொன்னவாறே அவன் தன்னைக் காட்டக் கண்டு அவனுடைய அழகை அனுபவிக்கிறார் –
கண்ணும் கமலம் கமலமே கைத்தலமும்
மண்ணளந்த பாதமும் மற்றவையே எண்ணில்
கருமா முகில் வண்ணன் கார்க்கடல் நீர் வண்ணன்
திருமா மணி வண்ணன் தேசு ——-9-
ஜிதந்தே புண்டரீகாஷா எண்ணப் பண்ணும் கண் –முதலுறவு பண்ணும் திருக் கண்கள் –
ஸ்பர்சத்துக்குத் தோற்று விழும் நிலமாய் – காடும் மோடுமான பூமியை அளந்து கொண்ட திருவடிகளும்
அந்தக் கமலம் போலே இரா நின்றன-
திருமா மணி வண்ணன் – காந்தி மிகுத்ததான பெரு விலையனான ரத்னத்தை உடைய நிறத்தை உடையவன்
ஸ்ரீ மத்தாய் ஸ்லாக்கியமான -ஸ்ரீ மன் நாராயண அர்க்கமான மணி-சர்வதா சாம்யம் காணாமல் கதிர் பொறுக்குகிறார் இறே
புறம்பு உபமேயம் பொய்யாய் இருக்கும் -இங்கு உபமானம் பொய்யாய் இருக்கும் –
———–
இப்படி அழகு குறைவற்ற விஷயத்தை-அனுபவிக்கும் போது –யோக்யராய்ப் பேச வேணுமே –
ஆனால் சிறிது நன்மை தேடிக் கொண்டு வந்து புகுர வேண்டாவோ என்ன
நீங்கள் மேல் விழுந்து அனுபவிக்க -எல்லா நன்மையையும் தன்னடையே உண்டாம் என்கிறார்
அங்குள்ள நன்மையே பேசிப் போம் இத்தனையோ-நமக்கும் சில பேறு உண்டாவோ -என்ன
நாம் அவனுடைய திருநாமம் சொல்லி உபக்ரமிக்க-எல்லா சம்பத்துக்களும்-தங்கள் ஸ்வரூபம் பெருகைக்குத்
தாமே வந்தடையும் என்கிறார் –
தேசும் திறலும் திருவும் உருவமும்
மாசில் குடிப் பிறப்பும் மற்றவையும் -பேசில்
வலம் புரிந்த வான் சங்கம் கொண்டான் பேரோத
நலம் புரிந்து சென்றடையும் நன்கு —-10–
இஸ் சம்பத்துக்கள் எல்லாம் நமக்கு-இவ் வாஸ்ரயத்தை சென்று கிட்டி ஸ்வரூபம் பெற வேணும் என்று கொண்டு
ஸ்நேஹித்துச் சென்று மேல் விழும் தன் பேறாகச் சென்று அடையும்-
இவன் திரு நாமம் சொல்லி அல்லது நிற்க மாட்டாதாப் போலே அவையும் இவனை அடைந்து அல்லது நிற்க மாட்டா –
——————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply