ஸ்ரீ பெரிய திருமொழியில் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானத்தில் -நாலாம் பத்து ஸ்ரீ திருமொழிகளின் பிரவேசங்களின்–தொகுப்பு–

போதலர்ந்த பொழில் சோலைப் புறம் எங்கும் பொரு திரைகள்
தாதுதிர வந்தலைக்கும் தடமண்ணித் தென் கரை மேல்
மாதவன் தான் உறையுமிடம் வயல் நாங்கை வரி வண்டு
தேதென என்று இசை பாடும் திருத் தேவனார் தொகையே-4-1-பிரவேசம் –

தனக்கு அசாதாரணரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் உடைய பிரதிபந்தகத்தைப் போக்கி –
அரு வினைகள் போயகல அடியவர்கட்கு என்றும் அருள் நடந்து
அவர்கள் பக்கலிலே பிரசாதத்தை பண்ணுகைக்காக ஸ்ரீ அரிமேய விண்ணகரிலே சந்நிஹிதன் ஆனான் என்றார் –
அவ்வளவு அன்றிக்கே
பிரயோஜனாந்த பரர்களான ப்ரஹ்மாதிகளுக்கும் -இந்திரனும் இமையவரும் -ஸ்ரீ திருப் பாற் கடலில் போலே
அபிமதங்களைக் கொடுக்கைகாக ஸ்ரீ சர்வேஸ்வரன் வந்து வர்த்திக்கிற தேசம் ஸ்ரீ திருத் தேவனார் தொகை என்கிறார்-

——————

கம்பா மா கடல் அடைத்து இலங்கைக்கு மன் கதிர் முடி யவை பத்தும்
அம்பினால் அறுத்து அரசு அவன் தம்பிக்கு அளித்தவன் உறை கோயில்
செம்பலா நிரை செண்பகம் மாதவி சூதகம் வாழைகள் சூழ்
வம்புலாங்கமுகு ஓங்கிய நாங்கூர் வண் புருடோத்தமே—4-2-1- பிரவேசம்-

ப்ரஹ்மாதிகளுக்கும் உத்பாதகனுமாய் -(இந்துவார் சடை பாசுரம் -4-2-9–) அவர்கள் தங்கள் தங்களுக்கு அனர்த்தத்தை
சூழ்த்துக் கொள்ளும் அன்று அவற்றைப் போக்கி ரஷிக்கும் ஸ்வ பாவனுமாய் -( வாளையார் பாசுரம் -4-2-8-)
அவர்கள் தாங்கள் அசுரர்கள் உடன் வரும் அன்றும் அவர்களை ஜெயித்து-(ஈசன் தன் பாசுரம்-4-2-9- )
ஜகத்தை ரஷிக்குமவன் – வந்து எழுந்து அருளி இருக்கிற தேசம்
ஸ்ரீ வண் புருஷோத்தம் என்று அத்தேசத்தின் உடைய வைலஷண்யத்தை அனுசந்தித்து அத்தைப் பேசி
அனுபவிக்கிறார்

———————-

பேரணிந்து உலகத்தவர் தொழுது ஏத்தும் பேரருளாளன் எம்பிரானை
வாரணிமுலையாள் மலர் மகளோடு மண் மகளும் உடன் நிற்ப
சீரணி மாட நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
காரணி மேகம் நின்றது ஒப்பானைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே–4-3-1–பிரவேசம்

ஞானானந்த ஸ்வரூபனாய் -பேதியா இன்ப வெள்ளத்தை
நிரதிசய போக்யனாய்-ஏழ் இசையின் சுவை தன்னை – உள்ளத்துள் ஊறிய தேனை
என்றும் ஒக்க உள்ளனாய் இருக்கிற -இறப்பு எதிர் காலக் கழிவும் ஆனானை-ஸ்ரீ சர்வேஸ்வரனை
தன்னை ஆஸ்ரயிக்கும் இடத்தில் புருஷகாரமாம் ஸ்ரீ பிராட்டிமாரோடு கூட வந்து -மலர்மகளோடு மண் மகளும் உடன் நிற்ப –
நித்ய வாசம் பண்ணுகிற ஸ்ரீ செம்பொன் செய் கோயிலின் உள்ளே நான் காணப் பெற்றேன் என்று
தாம் பெற்ற பேற்றை அனுபவித்து இனியர் ஆகிறார்

————————

மாற்றரசர் மணி முடியும் திறலும் தேசும் மற்றவர்தம் காதலிமார் குழையும் தந்தை
கால் தளையும் உடன் கழல வந்து தோன்றிக் கத நாகம் காத்தளித்த கண்ணர் கண்டீர்
நூற்று இதழ் கொள் அரவிந்தம் நுழைந்த பள்ளத்து இளம்கமுகின் முது பாளை பகுவாய் நண்டின்
சேற்றளையில் வெண் முத்தம் சிந்து நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண்மாலே–4-4-1- பிரவேசம்

ஆஸ்ரித விரோதி நிரசன சீலனாய்-சர்வ ரஷகனாய் இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன்
ஸ்ரீ திருத் தெற்றி அம்பலத்திலே-நம்முடைய விரோதியைப் போக்கி நம்மை அடிமை கொள்ளுகைக்காக
வந்து நின்றான் என்று ஹ்ருஷ்டர் ஆகிறார் –
என் செங்கண்மால் -என்று பாட்டு தோறும் அருளுகிறார்

———————

தூம்புடைப் பனைக்கை வேழம் துயர் கெடுத்தருளி மன்னு
காம்புடைக் குன்றம் ஏந்திக் கடு மழை காத்த எந்தை
பூம் புனல் பொன்னி முற்றும் புகுந்து பொன் வரண்ட வெங்கும்
தேம பொழில் கமழ் நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே–4-5-1–பிரவேசம்

சர்வ நிர்வாஹகனாய்-ஆஸ்ரித விரோதி நிரசன சீலனாய்
விரோதியைப் போக்கும் இடத்தில் தானே வந்து அவதரித்து போக்குமவன் ஸ்ரீ திரு மணிக் கூடத்தில் நின்றான் என்று
க்ருதஞ்ஞர் ஆகையாலே -இவை எல்லாம் தமக்கு செய்கைக்கு வந்து இருக்கிறான் என்று ஹ்ருஷ்டர் ஆகிறார்-

————————–

தா வளந்துலகம் முற்றும் தட மலர்ப் பொய்கை புக்கு
நாவள நவின்று அங்கே ஏத்த நாகத்தின் நடுக்கம் தீர்த்தாய்
மாவளம் பெருகி மன்னு மறையவர் வாழும் நாங்கைக்
காவளம் பாடி மேய கண்ணனே களை கண் நீயே -4-6-1- பிரவேசம் –

சுகுமாரராய் இருப்பார் வழி போகப் புக்கால் நீர் கண்ட இடம் எங்கும் மேலே ஏறிட்டுக் கொள்ளுமா போலே
இவரும்
தம்முடைய மார்த்தவத்தாலே அவனை ஒழியச் செல்லாமையாலே சம்சாரத்தில் பொருந்தாமை உடையராய்
இவ்விரோதியைப் போக்கி அவனைப் பெறுகைக்கு உடலாக பலகாலும் பிரபத்தி பண்ணா நிற்பராய்த்து
கடுக பலிப்பதொரு உபாயத்தை பற்ற வேணும் இறே
ஒரு வ்யபிசாரமாதல் -விளம்பமாதல் -இல்லாத சாதனத்தைப் பரிக்ரஹிக்க வேணும் இறே
அதாகிறது
த்வமேவ உபாய பூதோ மேபவ -என்கை இறே
அஹம் அஸ்ம்ய அபராதாநாம் ஆலய அகிஞ்சன -என்கையாலே -தான் உபாயம் அல்லாமை சொல்லிற்று
அகதி -என்கையாலே பிறர் உபாயமாக மாட்டார்கள் என்கிறது
தன்னை முற்படச் சொல்லுவான் என் என்னில்-தன் அனர்த்தத்துக்கு ஹேது தானே இறே
இவ்வளவும் வர சம்சரிகைக்கு கார்யம் பார்த்தான் தானே அன்றோ –
இனி பிறர் தானே அனுக்ரஹம் பண்ணுவாரைப் போலே இருந்து
அனர்த்தத்தை விளைக்கும் அத்தனை அல்லது ரஷகர் ஆக மாட்டார்களே

பித்தோபஹதன் உணர்த்தி உண்டான அளவிலே-நானே என் தலை மயிரைப் பறித்துக் கொள்ளுதல்
கண்ணைக் கலக்கிக் கொள்ளுதல் செய்து-என் விநாசத்தைச் சூழ்த்துக் கொள்ளுவன்
அவ்வளவில் நீ எனக்கு ரஷகன் ஆக வேணும் -என்று தெளிந்து இருப்பான் ஒருவன் கையிலே
தன்னைக் காட்டிக் கொடுக்குமா போலே இருப்பது ஓன்று இறே பிரபத்தி பண்ணுகை யாவது தான்
மத்யம பதத்தாலே தன்னைக் கழித்து இறே பிரபத்தி பண்ணுவது
ஆகையாலே நானும் எனக்கு இல்லை
பிறரும் எனக்கு இல்லை
நீயே ரஷகனாக வேணும் என்று
ஸ்ரீ திருக் காவளம் பாடி நாயனார் திருவடிகளிலே சரணம் புகுகிறராய் இருக்கிறது

கீழ்த் திரு மொழி யோடு இதுக்கு சேர்த்தி என் என்னில்
சரண்யன் ஆனவன் ஸ்ரீ பிராட்டிமாரோடே கூடத் ஸ்ரீ திரு மணிக் கூடத்திலே வர்த்தியா நின்றான் என்றார்
ஸ்ரீ லஷ்மீ பதி இறே ஆஸ்ரயநீயன் ஆனவன்-இங்கே சரணம் புகுகிறார்

———————–

கண்ணார் கடல் போல் திருமேனி கரியாய்
நண்ணார் முனை வென்றி கொள்வார் மன்னு நாங்கூர்த்
திண்ணார் மதிள் சூழ் திரு வெள்ளக் குளத்து
வண்ணா வடியேன் இடரைக் களையாயே –4-7-1–பிரவேசம்

காவளம்பாடி மேய கண்ணா களை கண் நீயே -என்று சரணம் புக்க இடத்திலும்
சம்சாரத்திலே சப்தாதி விஷயங்கள் நடையாடுகிற இடத்திலே தம்மை இருக்கக் கண்டார்
ப்ரியஞ்சனம் அபச்யந்தீம் பச்யந்தீம் ராஷசீ கணம்
ஸ்வ கணேன ம்ருகீம் ஹீ நாம் ஸ்வ கணை ராவ்ருதாமிவ -என்னும்படியே
இழக்கிறது நித்ய சூரிகள் உடன் இருக்கிற இருப்பையும்
பெறுகிறது -சப்தாதி விஷயங்களையும்
அவற்றுக்கு பணி செய்து திரிகையுமாய் இரா நின்றது
நீ அசக்தனாய் இருந்து என் அபிமதம் இழக்கிறேன் அன்று
நீ சக்தனாய் இருக்க நான் இழப்பதே -என்ன
உனக்கு அபிமதம் ஏது என்ன –
த்வத் பிராப்தி விரோதியான பிரகிருதி சம்பத்தத்தை அறுத்துத் தர வேணும் என்கிறார்

———————

கவள யானை கொம்பு ஒசித்த கண்ணன் என்றும் காமரு சீர்க்
குவளை மேகம் அன்ன மேனி கொண்ட கோன் என் ஆனை என்றும்
தவள மாட நீடு நாங்கைத் தாமரையாள் கேள்வன் என்றும்
பவள வாயாள் என் மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே –4-8-1- பிரவேசம் –

திருவடிகளிலே விழுந்து சரணம் புக்கு-அடியேன் இடரைக் களையாய் -என்று
தேவரோட்டை அனுபவத்துக்கு விரோதியைப் போக்கித் தர வேணும் என்று அபேஷித்தார்
அவனும் அப்படியே செய்வானாக ஒருப்பட-அது பற்றாமல்-ப்ராப்தியால் உண்டான த்வரையாலே
தாமான தன்மை போய்-பிரிந்து-பிரிவாற்றாமையாலே நோவு பட்டு-

——————–

நும்மைத் தொழுதோம் நுந்தம் பணி செய்து இருக்கும் நும் அடியோம்
இம்மைக்கு இன்பம் பெற்றோம் எந்தாய் இந்தளூரீரே
எம்மைக் கடிதாக் கருமம் அருளி யாவா வென்று இரங்கி
நம்மை ஒரு கால் காட்டி நடந்தால் நாங்கள் உய்யோமே —-4-9-1-பிரவேசம் –

பெற வேணும் என்னும் அபேஷையிலே கண் அழிவு இல்லாமை சொல்லிற்று இறே -கீழில் திரு மொழியிலே
பார்த்தன் பள்ளி பாடுவாள் -என்று உகந்து அருளின நிலங்களைச் சொல்லி வாய் வெருகைக்கு மேற்பட
இல்லை இறே அபேஷைக்கு
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் என்னும் -என்றும்
கண்ணன் விண்ணூர் தொழவே சரிகின்றன சங்கம் -என்றும்-சொல்லுகிற இவை அடைய
இவருக்கு உகந்து அருளின நிலங்களிலே யாய்த்து
ஆகையால்
பரமபதம் கலவிருக்கையாக இருக்க-அவ்விடத்தை விட்டு ஆஸ்ரிதர்க்கு சர்வ அபேஷித ப்ரதன் ஆகைகாக
ஸ்ரீ திருவிந்தளூரிலே வந்து சந்நிஹிதன் ஆனான்
நாம் அங்கே போகப் புகவே நினைத்தவைகள் எல்லாம் பெறலாம் -என்று பெரிய பாரிப்போடே போய்ப் புக்க விடத்து
ஒரு ஸ்ரீ புண்டரீகன் அக்ரூரன் என்றால் போலே சொல்லுகிற இவர்கள் பக்கலில் பண்ணின
விசேஷ கடாஷத்தை தம் பக்கலிலேயும் பண்ணி
திருக் கண்களாலே குளிர நோக்குதல்
அணைத்தல்
வினவுதல்
இவர் -வழு விலா அடிமை செய்ய வேண்டும் நாம் -என்று பாரித்து கொடு புக்க படியே அடிமையில் ஏவுதல் –
பண்டை நாளால் திரு வாய் மொழி போலே
நம்மை ஒருகால் காட்டி நடந்தால்-சோதி வாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காய்
நின் பாத பங்கயமே தலைக்கு அணியாய் -போன்ற பரிமாற்றங்கள் -செய்யக் கண்டிலர்
அத்தாலே-மிகவும் அவசந்னராய்
ஒரு மின்னிடை மடவார்
காதில் கடிப்பில்
பிராட்டிமார் தசை பிறந்தால் பிரணய கலஹத்தாலே கிலாய்த்துச் சொல்லும்
பாசுரம் அடைய ஆழ்வார் தாமான தன்மையிலே சொல்லலாம் படி யான பாவம் பிறந்து
சந்நிதியும் உண்டாய்
எனக்கு அபேஷையிலும் கண் அழிவு அற்று
பிராப்தனுமாய் இருக்க
என்னை அடிமை கொள்ளாது ஒழிவதே -என்னும் இன்னாப்புடனே சிவட்கு பிறந்து வார்த்தை சொல்லுகிறார்

———————–

ஆய்ச்சியர் அழைப்ப வெண்ணெய் உண்டு ஒரு கால் ஆலிலை வளர்ந்த எம்பெருமான்
பேய்ச்சியை முலை உண்டு இணை மருது இறுத்துப் பெரு நிலம் அளந்தவன் கோயில்
காய்த்த நீள் கமுகும் கதலியும் தெங்கும் எங்குமாம் பொழில்களின் நடுவே
வாய்த்த நீர் பாயும் மண்ணியின் தென் பால் திரு வெள்ளியங்குடி யதுவே –4-10-1- பிரவேசம் –

நினைத்த வகைகள் எல்லாம் பரிமாறப் பெற்றிலோம் என்று இன்னாதானார் கீழ்
நீர் இப்படி இன்னாதாகிறது என் என்ன
நம்மை ஆசைப் பட்டாருக்கு நினைத்த வகைகளில் எல்லாம் பரிமாறலாம் படி
ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ணாதி யாவதாரங்களைப் பண்ணி முகம் கொடுத்த நாம் அன்றோ ஸ்ரீ திரு வெள்ளி யங்குடியிலே வந்து
சந்நிஹிதர் ஆனோம்-ஆன பின்பு நினைத்த வகைகளில் எல்லாம் பரிமாறத் தட்டு என்ன என்று சமாதானம் பண்ண
சமாஹிதராய் அவனைப் பேசி அனுபவிக்கிறார்
ததேவ கோபாய யத பிரசாதாய்ச ஜாயதே – இறே-ஒரு குண ஆவிஷ்காரத்தை தோற்றுவித்தார் -என்கை –

———————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading