திரு மந்திரத்தின் அக்ஷர பத ஸங்க்யைகள்
பேசுமின் திரு நாமம் எட்டு எழுத்தும் ( பெரிய திருமொழி 1-8-9 ) என்கிற படியே
இது எட்டு திரு எழுத்தாய் -ஓம் -என்றும் -நம -என்றும் -நாரயண -என்றும் மூன்று பதமாய் இருக்கும் ..
பிரணவ அர்த்தம் ..
இதில் முதல் பதமான -பிரணவம் -அ -என்றும் -உ -என்றும் -ம -என்றும் மூன்று திரு எழுத்தாய் ,
நால் வேதக் கடல் அமுது ( பெரியாழ்வார் திருமொழி 4-3-11 ) என்னும் படி வேத சாரமாய் ,
மூன்று எழுத்தாகி ( பெரியாழ்வார் திரு மொழி 4-7-10 )என்கிற படியே மூன்று பத மாய் ,
மூன்று பொருளை வெளி இடக் கடவதாய் ,
மூலமாகிய ஒற்றை எழுத்தாய் (பெரியாழ்வார் திரு மொழி 4-5-4 )
ஒரு பதமாய் , ஒரு பொருளைக் காட்டக் கடவதாய் , இருக்கும் ..
சப்த அர்த்தங்கள் என்ற இரண்டாலும் , ஜீவ பர பிரதான்யம் கொள்ளக் கடவது இறே ..
ஓங்கார ரதம் பார்த்த செல்வத் தேர் போல ( பெரிய திரு மொழி 2-10-8 ) இறே இருப்பது ..
அடியேன் அடியாய் ஆவி அடைக்கலம் ( திரு விருத்தம் -85 ) என்கிற படியே ,
ஆத்ம சமர்பணத்திற்கு மந்திரமாய் ,
சந்தஸ்ஸூ வேதங்களில் பிரணவம் நான் என்ற மூன்று எழுத்தாய் ( பெரியாழ்வார் திரு மொழி 4-10-4 )
முதல்வனோடே வேறு செய்யாமல் ( திரு சந்த விருத்தம் -116 ) ஒரு பேரிலே இருப்பாக்குகையாலே ,
இரண்டு பங்குக்கு ஒரு மூல பிரமாணம் போலேயாய்
வேதத்துக்கு கீழும் மேலும் செப்பும் மூடியும் போல ,
செம்சொல் மறைப் பொருளை (பெரியாழ்வார் திரு மொழி 4-10-7 ) இது சேமித்துக் கொண்டு இருக்கும் ..
அ -கார அர்த்தம் ..
ஓர் எழுத்து ஓர் உரு (பெரிய திருமொழி 6-1-5 ) என்னும் படி
இதுக்கு பிரக்ருதியாய் ,முதல் எழுத்தாய் , எல்லா வற்றிலும் ஏறி ,
சொல் நிறப்பத்தை வுண்டாக்குகிற துளக்கமில் விளக்கான (திருக் குறும் தாண்டகம் -18 ) அகாரம் ..
நான் மறையும் செம் பொருளுக்கு அடியாய் (நாச்சியார் திருமொழி 11-6 )
அவை அவை தோறும் ( திரு விருத்தம் -96 ) நிறைந்து நின்ற (திருவாய் மொழி 3-2-7 )
அக்ஷரங்களில் அகாரம் நான் என்று மேல் இருந்த விளக்கான (பெரியாழ்வார் திருமொழி 4-3-11 )
எம்பெருமானைக் காட்டுகிறது ..
இது அவ ரக்ஷண -என்கிற தாதுவிலே பதம் ஆகையாலே , இந்த ரஷகம் ஆகிற தொழில்
காக்கும் இயல்வினனான ( திரு வாய் மொழி -2-2-9 ) சர்வேஸ்வரன் பக்கலிலே கிடக்கை யாகையாலே ,
மூவா தனி முதலாய் மூ வுலகும் காவலோன் ( திருவாய் மொழி 2-3-8 ) என்கிற படியே
காரண வஸ்துவே ரஷகமும் என்று தோன்றும் ..
தேச கால அவஸ்த பிரகார அதிகாரிகளை இட்டு ரஷணத்தை சுறுக்காமை யாலே ,-
துளிக்கின்ற வான் இன் நிலம் ( திரு வாய் மொழி 2-3-10 )-என்றும் –
வரும் காலம் நிகழ் காலம் கழி காலமாய் ( திரு வாய் மொழி 3-1-5 ) -என்றும் –
ஞாலத் தூடே நடந்தும் நின்றும் கிடந்தும் இருந்தும் ( திரு வாய் மொழி 9-3-1 )-என்றும் –
மன் உயிர்க்கு எல்லாம் அரணாய (முதல் திரு வந்தாதி -60 ) என்கிற படியே –
எல்லாத் தேசத்திலும் , எல்லாக் காலத்திலும் ,எல்லா அளவிலும் , எல்லா வழியாலும் ,
எல்லோரையும் ரஷிக்கும் படியைக் காட்டுகிறது ..
அருளால் அளிப்பார் யார் ( திரு வாய் மொழி 2-2- 2 )-என்றும் –
உவந்து எம்மைக் காப்பாய் ( நான் முகன் திரு வந்தாதி -19 ) -என்கிற படியே
அருளையும் உகப்பையும் பரிகரமாகக் கொண்டு ,
மலர் கதிரின் சுடர் உடம்பாலும் (திரு வாய் மொழி 3-1-5 )
வருந்தாதே ஞான த்தாலும் ( திரு வாய் மொழி 3-1-5 )
எழுவார்க்கு (முதல் திரு வந்தாதி -36 ) உடம்பைப் பூண் கட்டியும் ,
விடை கொள்வார்க்கு ( முதல் திரு வந்தாதி -36 ) செடியார் ஆக்கை கழித்தும் ( திரு வாய் மொழி 1-5-7 )
வழுவா வகை நினைந்தார்க்கு ( முதல் திரு வந்தாதி -36 ) தன் தாளின் கீழ் சேர்த்தியை உண்டாக்கியும் ,
சேர்ந்தார்களை என்றும் மகிழப் பண்ணியும் ( திரு வாய் மொழி 2-3-6 ),
பிரிந்து கூடாதார் ( திரு வாய் மொழி 8-3-6 ) பண்ணியும்
பண்பும் தாமேயாயும் பண்ணும் ரஷணம் சேதனர் நின்ற அளவுக்கு ஈடாய் இருக்கும் ..
அகார அர்த்தம் ஸ்ரீ யபதியே ..
திரு வுக்கும் திரு வாகிய செல்வன் ( பெரிய திரு மொழி 7-7-1 )
திரு மங்கை தன்னோடும் திகழ்கின்ற திரு மாலார் (திரு வாய் மொழி 10-6-9 ) என்று
அவனுக்கு நிரூபஹம் ஆகையாலும் ,
த்யு மணியையும் மாணிக்கத்தையும் பூவையும் விடாத பிரபையும் ஒளியும் மணமும் போல ,
மணியை அணி உருவில் ( பெரிய திரு மொழி 8-9-2 )
திரு மாலை ( பெரிய திரு மொழி 5-6-7 ) என்னும் படியே
தன்னோடும் பிரிவிலாத திரு மகள் ( பெரிய திரு மொழி 4-5-5 ) ஆகையாலும்
ஊழி ஊழி தலை அளிக்கும் திரு மால் (திரு வாய் மொழி 10-7-6 ) என்னும் படி
ரஷண தர்மத்துக்கு இவள் தர்ம பதி ஆகையாலும் ,
திரு மாலே நானும் உனக்கு (திருப் பல்லாண்டு -11 ) -என்றும் –
திரு மார்பா உனக்காக்கி தொண்டு பட்ட (பெரிய திரு மொழி 6-3-9 ) என்னும் ஆத்மாவுக்கு
மிதுன சேஷத்வம் ஸ்வரூபம் ஆகையாலும் ,
ஸ்வரூப ரூப விபவங்களைப் போல ,பிரகிருதி பிரத்யய தாதிகளையும் விடாமையாலே
இதுலே ஸ்ரீ சம்பந்தமும் அனுசந்திக்கப் படும் ..
லுப்த சதுர்த்தி யர்த்தம் ..
இதில் ஏறிக் கழிந்த சதுர்த்தி -ரஷிக்கப் படுகிற வஸ்துக்கள் அடைய அவனுக்கு சேஷம் என்று
கண்ட வாற்றால் தனதே வுலகு (திரு வாய் மொழி 4-5-10 ) என்னும் படி
ரஷிக்கைக்கு அடியான உறவை அறிவிக்கிறது ..
ரக்ஷிக்கிறவன் ஸ்வாமியாய் /ரக்ஷிக்கப் படுகிறவர்கள் தாச பூதராய் இருக்கை இறே
இரண்டு தலைக்கும் நிலை நின்ற ஸ்வரூபம் ..
அடியேன் என்று இசையாதவனை ( திரு வாய் மொழி 8-8-2 ஆத்மாவை இல்லை செய்த கள்ளனாக -விறே சொல்லுவது ..
உ -காரர்த்தம் ..
உ காரம் அறுதிப் பாட்டைக் காட்டுகை யாலே ,எம்பெருமானுக்கே சேஷம் என்று பிறர்க்கான நிலையைக் கழிக்கிறது ..
ஒருவனுக்கு அடிமை யான க்ருஹ க்ஷேத்ரம் முதலானவை பிறர்க்கு ஆக்கலாம் படி வந்தேறியாய் ,
நிலை நில்லாதே கழிகிறாப் போல அன்று இறே ஆத்மாவின் சேஷத்வம் ..
சாயை போல ( பெரியாழ்வார் 5-4-11 )
நிழலும் அடி தாறும் ( பெரிய திருவந்தாதி -31 ) என்னும் படி
நிழல் போல்வனரான ( திரு விருத்தம் -2 ) நாய்ச்சிமார் வுடைய சேஷத்வம் போல , அநந்யார்ஹமுமாய் இருக்கும் ..
பிறர்க்கு அடைந்து தொண்டு படுகை ஆத்ம நாசமாய் ( பெரிய திரு மொழி 2-5-2 )
புறம் தொழாது ஒழிகை தேட்டம் ஆகையாலே ( நான் முன் திருவந்தாதி -68 )
மற்றானும் அல்லனே ( சிறிய திரு மடல் -54 ) என்று தேறும் படி
அவன் முகத்து அன்றி விழியேன் ( நாச்சியார் திரு மொழி 12-4 ) என்று இருக்கை ஆயிற்று ஸ்வரூபம் ..
என்னை முற்றும் உயிர் உண்டு ( திரு வாய் மொழி 10-7-3 ) என்னும் படி எம்பெருமானுக்கு
வாய் புகு சோறான ஆத்மாவை பிறர்க்கு ஆக்குகையாவது –
மறையவர் வேள்வியில் புரோடாசத்தை நாய்க்கு இடுமா போல ( நாச்சியார் திரு மொழி 1-5 ) இருப்பது ஓன்று இறே
மகார அர்த்தம் ..
மகாரம் – ககாரம் முதலான 24 எழுத்தும் ,
பாரு நீர் எரி காற்றினோடும் ஆகாசமும் ( பெரிய திரு மொழி 1-8-7 )
துன்னு கர சரணம் முதலாக எல்லா உறுப்பும் ( திரு வாய் மொழி 7-8-9 )
செவி வாய் கண் மூக்கு வாய் உடல் (முதல் திருவந்தாதி -12 )
உண்ணு சுவை ஒளி யூறு ஒலி நாற்றம் ( திரு வாய் மொழி 7-8-9) பிரகிருதி மானாங்கார மனங்கள்
( திரு வாய் மொழி 10-7-10 ) என்கிற 24 தத்துவங்களையும் காட்டி ,
தான் 25 வரான ஆத்மாவைக் காட்டக் கடவ தாகையாலும் ,-
மன -ஞானதே -என்கிற தாது ஞானத்துக்கு இருப்பிடம் ஆன ஆத்மாவைக் காட்டுகையாலும் ,
சென்று சென்று பரம் பரமாய் ( திரு வாய் மொழி 8-8-5 ) என்னும் படி
முன் உருவில் பின் உருவாய் (திரு நெடும் தாண்டகம் -1 ) விஞ்ஞானம் என்னும் படி
அறிவால் மிக்கு ,ஞானம் மாத்திரம் அன்றிக்கே ,உணர்ந்து உணர்ந்து (திரு வாய் மொழி 1-3-6 ) என்னும் படி
நிலை நின்ற ஞாதாவாய் ,
தேனும் பாலும் கன்னலும் அமுதுமாகி தித்தித்து ( திரு வாய் மொழி 8-8-4 ) என்னும் படி
ஆனந்த ரூப மான ஆத்ம வஸ்துவை பிறர்க்கு உரித்து அல்லாத படி ,சேஷ மாகச் சொல்லப் பட்டது என்கிறது ..
கண்கள் சிவந்த தின் படியே –திருவாய்மொழி- 8-8 ) ஞான ஆனந்தாதி களுக்கு முன்னே சேஷத்வம் சொல்லிற்று ..
மணத்தையும் ஒளியையும் கொண்டு விரும்பப் படும் பூவும் மாணிக்கமும் போல ,
அவனுக்கு ஆன போது விரும்பப் பட்டு
பிறர்க்கு ஆன போது ஏறாளும் இறையோனில் ( திரு வாய் மொழி 4-8 ) படியே கை விடப்படும் ஆத்மா என்று தோற்றுகைக்காக .
அடியோம் என்று ( திருப் பல்லாண்டு -10 ) எழுத்துப் பட்ட அன்று சேஷத்வம் எல்லோருக்கும் பொதுவாகையாலே
ஆத்மாக்கள் என் வுடைமையையும் ( பெரியாழ்வார் திரு மொழி 5-4-1 ) என்னும் படி
ஆத்மாவுக்கு சேஷமான அசித்தையும் இம் ம -காரம் தான் காட்டக் கடவது .
——————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply