திருவாய் மொழி – திவ்யார்த்த தீபிகை–முனியே நான்முகனே முக்கண்ணப்பா–10-10-

கீழ் -அர்ச்சிராதி கதியைப் பரக்கப் பேசி -அந்தமில் பேரின்பத்து அடியரொடு இருந்தமை -என்றார் –
திருக் கண்களை திறந்து பார்த்த வாறே திருப்புளி ஆழ்வார் அடி வாரத்திலேயே தாம் வீற்று இருக்கக் கண்டார்
நித்ய முக்தர்கள் திரளிலே இருந்ததாகச் சொன்ன இருப்பு ஜ்ஞான அனுசந்தான மாத்ரமாய் இருந்தது –
பிரக்ருதியிலே தாம் சிக்குண்டு இருந்த படியைக் கண்டு போர நொந்தார் –
தம்முடைய ஆகிஞ்சன்யத்தையும் அநந்ய கதித்வத்தையும் நன்கு உணர்ந்த எம்பெருமான்
இன்னமும் நம்மை நோவு பட விட்டு இருப்பது என்னே -என்று மிகவும் கிலேசித்து
மாதா பிதாக்கள் அருகே இருக்க –
பசியாலும் தாகத்தாலும் நோவு படுகிற ஸ்த நந்த்ய பிரஜை
ஆர்த்தியின் மிகுதியாலே தாய் பேரைச் சொல்லிக் கூப்பிடுமா போலே
ஈர நெஞ்சு இள நெஞ்சு இல்லாதார்கள் உடைய ஹிருதயங்களும் கூட இரங்கும்படியாக
அவனுக்கும் தம்மை ரஷித்து அல்லது பரமபதத்தில் இருப்பு அரிதாம் படி
காட்டுத் தீயிலே அகப்பட்டாரைப் போலே ஆர்த்த த்வநியோடே பெரு மிடறு செய்து கூப்பிட்டு
அவனும் வந்து தோற்றி
இவருடைய பிரகிருதி சம்பந்தத்தை அறுத்து
அடியார் தம் திரளிலே கொண்டு சேர்க்க
தாம் க்ருதக்ருதராய் அவாவற்று வீடு பெற்ற படியை பேசுகிறார் இத் திருவாய்மொழியில்

இப்பிரபந்ததுக்கு பிரமேயமான வஸ்து சர்வேஸ்வரன் –
இப்பிரபந்தம் -அவாவில் அந்தாதி –
மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர் கவி பாடினார் –
இனி அவருடைய அவதாரம் தான் சர்வேச்வரனுடைய அவதாரத்தோபாதி சாதுக்கள் உடைய ஸூ க்ருதபலம் –ஈடு-

——————————————————————————————————————————————————————————————–

முனியே நான்முகனே முக்கண்ணப்பா என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக் கண் கருமாணிக்கமே என் கள்வா
தனியேன் ஆருயிரே என் தலை மிசையாய் வந்திட்டு
இனி நான் போகல ஒட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே –10-10-1-

நிர்ஹேதுகமாக உன் வடிவு அழகைக் காட்டி
என்னை ஈடுபடுத்தி வைத்து
உன்னால் அல்லது செல்லாதபடி பண்ணி வைத்து அருளி
இன்னமும் இந்த சம்சாரத்தில் இப்படி தள்ளி வைப்பது தகுதி அன்று –
முனியே நான்முகனே முக்கண்ணப்பா-ஆழ்வார் த்ரிமூர்த்தி சாம்யம் ப்ரமமோ ஐக்ய ப்ரமமோ கொண்டவர் அல்லர் –
திண்ணன் வீடு -ஒன்றும் தேவு -முதலிய பதிகங்களில் பரத்வ ஸ்தாபகம் பண்ணி அருளினவர்
நீராய் நிலனாய் தீயாய் காலாய் நெடு வானாய் சீரார் சுடர்கள் இரண்டாய் சிவனாய் அயனாய் -முதலிய
இடங்களில் போலே சரீராத்மபாவ நிபந்தனமான ஐக்யவ்யபதேசம் –
நான் முகனையும் முக் கண்ணனையும் அநு பிரவேசித்து
சிருஷ்டி சம்ஹாரங்களை நடத்திப் போரும் முனியே
எந்த கார்யத்துக்கும் மானசமான சங்கல்பத்தை செய்து அருளுவதால் முனியே -என்கிறார்
என் பொல்லாக் கனிவாய்த் தாமரைக் கண் கருமாணிக்கமே
கீழே சர்வ சாதாரண ஸ்வரூபம் அனுசந்தித்தார்
இப்பொழுது அசாதாராண திவ்ய மங்கள விக்ரஹ வை லஷண்யம் பேசுகிறார் –
இந்த வடிவு அழகைக் காட்டி கொள்ளை கொண்டபடி –
என் கள்வா-
என் இசைவு இன்றிக்கே என்னை அபஹரித்தவனே
தனியேன் ஆருயிரே –
வேறு ஒன்றினால் தரிக்க ஒண்ணாதபடி என்னைப் பண்ணிணவனே
சம்சாரிகள் உடன் பொருந்தாமை -தனியேன்
என் தலை மிசையாய் வந்திட்டு இனி நான் போகல ஒட்டேன் –
நித்ய சம்சாரியாய்ப் போந்த என்னை
விஷயீ கரித்த அளவன்றிக்கே
நான் பரிபூர்ண அனுபவம் பண்ணும் படியையும் வந்திட்டு
இன்னமும் உபேஷிக்கப் பார்த்தாய் ஆகில் நான் ஒட்டுவனோ
சேஷ்யே புரஸ்தாத் சாலாயாம் யாவன்மே ந ப்ரசீததி-என்ற ஸ்ரீ பரத ஆழ்வான் வார்த்தை போலே
ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே-
த்யாஜ்யமான விஷயங்களைக் காட்டி
அநாதி காலம் அகற்றி வைத்தால் போலே
இன்னமும் அகற்றப் பார்க்க வேண்டா -என்றபடி-

————————————————————————————————————————————————————————————————————–

மாயம் செய்யேல் என்னை உன் திரு மார்வத்து மாலை நங்கை
வாசம் செய் பூம் குழலாள் திரு வாணை கண்டாய் நின்னாணை கண்டாய்
நேசம் செய்து உன்னோடு என்னை உயிர் வேறின்றி யொன்றாகவே
கூசம் செய்யாது கொண்டாய் என்னைக் கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ –10-10-2-

தம் கார்யம் செய்து அல்லது நிற்க ஒண்ணாதபடி ஆணை இடுகிறார்
ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே -என்றார் கீழ்
உடனே அபயம் அளிக்க வேணுமே
செய்யக் காண வில்லை
மீண்டும்- மாயம் செய்யேல் என்னை-என்கிறார் இதிலும் –
அதுக்குமேலே ஆணை இடுகிறார் –
உன் திரு மார்வத்து மாலை நங்கை வாசம் செய் பூம் குழலாள் திரு வாணை கண்டாய் நின்னாணை கண்டாய் –
உன் திரு மார்புக்கு அலங்காரமாய் இருப்பவளும்
சர்வ கந்த -என்று இருக்கும் உனக்கும் பரிமளம் கொடுக்கும் கூந்தலை உடையவளான பிராட்டி மேல் ஆணை –
அவளுக்கு வல்லபனான உன் மேலும் ஆணை –
பெரியாழ்வார் -வளைத்து வைத்தேன் -இனி போகல் ஒட்டேன்
உன் தன் இந்திர ஞாலங்களால் ஒளித்திடில் நின் திரு ஆணை கண்டாய் -என்று
பிராட்டி ஆணை மாத்ரம் இட்டார்
இவர் இருவர் மேலும் ஆணை இடுகிறார்
என் கார்யம் செய்து தலைக்கட்டி அல்லது நீங்கள் இட்ட அடி பெயர ஒண்ணாது –
சேஷியான நாம் செய்த படி இருப்பது தானே -சேஷ பூதரான -உமக்கு ஸ்வரூபம் –
ஆணை இடுவது ஸ்வரூப விருத்தம் அன்றோ என்ன
ஆற்றாமை மிகுதியைச் சொல்லி அதனால் ஆணை இடத் தகும் -என்கிறார்
நேசம் செய்து உன்னோடு என்னை உயிர் வேறின்றி யொன்றாகவே
பெரிய பிராட்டியார் பக்கலிலே பண்ணும் ச்நேஹத்தை என் பக்கலிலே பண்ணி
ஆத்மபேதம் இல்லாமல் அன்றோ என்னைக் கொண்டது
இரண்டு தத்வம் என்று பிரித்து காண ஒண்ணாத படி அன்றோ கலந்து பரிமாறியது
கூசம் செய்யாது கொண்டாய்-
என் பக்கலில் உண்டான அயோக்யதைகளைக் கண்டால்
கூசி -காத வழிக்கு அப்பால் செல்ல வேணுமே
சிறிதும் கூசாமல் அன்றோ பரிஹரித்தாய்
ஆனபின்பு
என்னைக் கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ –
உன்னைக் கிட்டி அனுபவிக்கும்படி பண்ணி அருள வேணும் –

———————————————————————————————————————————————————————————————————————-

கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ என் பொல்லாக் கருமாணிக்கமே
ஆவிக்கோர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் நான்
மேவித் தொழும் பிரமன் சிவன் இந்திரனாதிக்கு எல்லாம்
நாவிக் கமல முதல் கிழங்கே உம்பரந்ததுவே–10-10-3-

தாஹித்தவன் தாஹ சாந்தி பிறக்கும் அளவும் தண்ணீர் தண்ணீர் -என்னுமா போலே
மீண்டும்– கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ-என்கிறார்
ஆற்றாமை மிகுந்தாலும் நானே வந்து கிட்டுகை முறைமை அன்று
உனக்கும் அவத்யம் ஆகும்
நீ தானே வந்து கூவிக் கொண்டு போக வேணும் –
நீ இப்படிப் பட்ட வடிவு அழகு படைதில்லை யாகில் நான் கதற வேண்டாமே –
என் பொல்லாக் கருமாணிக்கமே –
நீ அழைத்த போது கண்டு இருக்கல் யாய்த்து இ றே
நீ நீ அன்றிக்கே இருந்தாய் ஆகில் –
க்ரமத்திலே அழைக்க நினைத்தாய் ஆகில் அழகைக் காட்டி அனன்யார்ஹம் ஆக்கிற்று ஏன்-ஈடு
ஆவிக்கோர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் நான் –
கொள் கொம்பை ஒழிய கொடி நிற்குமோ
வேரை அறுத்து படர் என்றால் படருமோ
என்னாத்மாவுக்கு உஜ்ஜீவன ஹேதுவாய் இருப்பதொன்று உன்னை ஒழிய வேறு காண்கின்றிலேன்
பேற்றுக்கு உபாயமாக நீர் ஏதேனும் செய்தது உண்டோ என்ன –
மேவித் தொழும் பிரமன் சிவன் இந்திரனாதிக்கு எல்லாம் நாவிக் கமல முதல் கிழங்கே —
இவர்கள் தங்கள் கார்யம் தாங்களே செய்து கொள்கிறார்களோ
-என்னைப் போல் -ஆவிக்கோர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் நான் -என்று கூட சொல்லி அறியார்களே –

உம்பர் அந்ததுவே -அவர்களுக்கு மேல்பட்ட நித்ய சூரிகளுக்கும் பரம பிராப்யன் ஆனவனே –

அப்படிப் பட்டவர்களையும் நிர்வஹிக்கும் உனக்கு என்னை நிர்வஹிக்கை மிகையோ –

————————————————————————————————————————————————————————————————————-

உம்பர் அம் தண் பாழேயோ அதனுள் மிசை நீயேயோ
அம்பர நற் சோதி அதனுள் பிரமன் அரன் நீ
உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ
எம்பரம் சாதிக்கல் உற்று என்னைப் போர விட்டிட்டாயே –10-10-4-

சர்வ நிர்வாஹனான நீயே என் கார்யத்தையும் நிர்வஹிக்க வேண்டி இருக்க
என் கார்யம் நானே பண்ணிக் கொள்ளப் பார்த்தாய் ஆகில் என்னைக் கை விட்ட படி அன்றோ –
உம்பர் அம் தண் பாழேயோ –
மூலப் பிரகிருதி நிர்வாஹத்வம் சொல்கிறது
பாழ் நிலம் -எதையும் விளைவித்துக் கொள்ளலாமே
போக மோஷங்களை சேதனர் விளைத்துக் கொள்ள நிலம் -மூல பிரகிருதி
உம்பர் –அம் -தண் -இவை அதனுடைய விசேஷணங்கள்
அதனுள் மிசை நீயேயோ –
அந்த பிரக்ருதியிலே கட்டுப் பட்டு நிற்கும் ஆத்மவர்க்கங்களுக்கும் நிர்வாஹகன் நீயே
அம்பர நற் சோதி அதனுள் பிரமன் அரன் நீ –
அம்பரம் நல் சோதி நீ -ஆகாசத்தையும் தேஜஸ் சையும் சொல்லி
உப லஷணத்தால் பஞ்ச பூதங்களும் நீ இட்ட வழக்கு
அதனுள் பிரமன் அரன் நீ –
அண்டத்துக்கு உட்பட்ட ப்ரஹ்ம ருத்ராதிகளும் நீ இட்ட வழக்கு
உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ
தேவர்களையும்
மற்று உள்ளார்களையும்
படைத்த முனியாக பிரசித்தன் நீ
மனனம் பண்ணுமவன் முனி
அவரவர்கள் உடைய கர்மங்களை மனனம் பண்ணியே விஷம சிருஷ்டியைப் பண்ண வேண்டி இருப்பதால் இங்கு முனிவன் என்கிறார்
ஆக மூன்று அடிகளாலும் அவன் முதன்மையைப் பரக்கச் சொல்லி தனது குறைகளை கூறி முடிக்கிறார் –
எம்பரம் சாதிக்கல் உற்று என்னைப் போர விட்டிட்டாயே-
என் கார்யம் நீ செய்வதாக ஏறிட்டுக் கொண்டு கார்யகாலத்தில் உபேஷித்து விட்டாயே –
அன்றிக்கே
என் கார்யம் நானே செய்து கொள்ள வேணும் என்று பார்த்து என்னைப் போர விட்டிட்டாயே -என்றுமாம் –

———————————————————————————————————————————————————————————————————————-

போரவிட்டிட்டு என்னை நீ புறம் போக்கலுற்றால் பின்னை யான்
ஆரைக் கொண்டு எத்தை யந்தோ எனது என்பது என் யான் என்பது என்
தீர விரும்புண்ட நீரது போலே என்னாருயிரை
ஆரப் பருக எனக்காரா வமுதானாயே–10-10-5-

ஆரைக் கொண்டு -உபாயமாகக் கொண்டு
எத்தை -புருஷார்த்தத்தை
சர்வ ரஷகனான நீ உபேஷித்தால் என் கார்யம் நான் செய்யவோ –
பிறர் செய்யவோ –
நானும் செய்ய முடியாமல்
பிறரும் செய்ய முடியாமல் அன்றோ இருப்பது –
இனி முடிந்தேன் அத்தனை அன்றோ –
போரவிட்டிட்டு என்னை நீ புறம் போக்கலுற்றால்-
என்னை போர விட்டிட்டு நீ புறம் போக்கலுற்றால்
வேறு புகலற்ற என்னை உன் பக்கலில் நின்றும் பிரித்து உபேஷித்து உனக்கு புறம்பான
விஷயாந்தரங்களில் போக்க நினைத்தால் என்ற படி
என் கார்யம் நானே செய்து கொள்வேனாக பார்த்து கை விட்டால் –
பின்னை யான் ஆரைக் கொண்டு எத்தை யந்தோ-
சர்வ சக்தனான நீ அநாதாரித்த பின்பு
அசக்தனான நான்
எந்த வுபாயத்தைக் கொண்டு
எந்த புருஷார்த்தத்தை சாதிப்பது
எனது என்பது என் யான் என்பது என் –
நான் முடிந்தேன் என்கிறார்
தீர விரும்புண்ட நீரது போலே என்னாருயிரை ஆரப் பருக எனக்காரா வமுதானாயே-
பழுக்க காய்ச்சின இரும்பு காய்ச்சல் தீர நீரை நிச்சேஷமாக பருகுமா போலே
எனது ஆத்மவச்துவை பரிபூர்ணமாக புஜிக்கைக்காக வன்றோ
எனக்கு உன்னுடைய போக்யதையைக் காட்டி என்னை அகப்படுத்தினாய்
அன்றியே
என்னாருயிரை என்ற இடத்து என் ஆர் உயிர் உன்னை ஆரப் பருகும்படியாக எனக்கு நீ பரம போக்யன் ஆனவன் அல்லையோ –

——————————————————————————————————————————————————————————————————-

எனக்கு ஆரா வமுதாய் எனதாவியை யின்னுயிரை
மனக்காராமை மன்னி யுண்டிட்டாய் இனி யுண்டு ஒழியாய்
புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய்
உனக்கேற்கும் கோல மலர்ப் பாவைக் கன்பா என்னன்பேயோ–10-10-6-

பெரிய பிராட்டியார் இடத்திலும் என்னிடத்திலும் மிகுந்த அபி நிவேசம் கொண்டவனாய்
எனது உடலிலும் உயிரிலும் அதிகமான விருப்பத்தைப் பண்ணி புஜித்த நீ
இனி என்னை உபேஷியாதே விரைவில் விஷயீ கரித்து அருளாய்
கோல மலர்ப் பாவைக் கண்பா என்னன்பேயோ-
ஆழ்வார் பக்கலில் அன்பே வடிவு எடுத்தவன்
பிராட்டியைக் காட்டிலும் அதிகமாக ச்நேஹித்தவனாய் இருந்து வைத்து இப்போது உபேஷிப்பது தகுதியோ –
எனக்கு ஆரா வமுதாய்-
தேவர்கள் உண்ணும் அமிர்தம் போன்று அன்று ஆழ்வார் உடைய ஆராவமுது
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழி தோறும் அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாராவமுதமே -என்னும்படியான அமுதம் அன்றோ
எனதாவியை யின்னுயிரைமனக்காராமை மன்னி யுண்டிட்டாய்-
இங்கு ஆவி என்று உடலைச் சொல்லுகிறது
என் உடம்பையும் உயிரையும் எவ்வளவு அனுபவித்தாலும்
திருப்தி பிறவாமல் உண்டிட்டாய் –
மனக்கு ஆராமை மன்னி யுண்டிட்டாய்
இனி யுண்டு ஒழியாய் –
நீயே முடிப்பது அன்றோ அழகு
நடுவே குறை கிடக்க விடுவது உண்டோ
புக்த சேஷத்தை பிறர் புஜிப்பார் உண்டோ
நீயே புஜித்து பூர்த்தி செய்யும் அத்தனை –
புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய் உனக்கேற்கும் கோல மலர்ப் பாவைக் கன்பா
திவ்ய மங்கள விக்ரஹ சௌந்தர்யத்தை பேசுகிறார்
உன் வடிவு அழகும்
கண் அழகும்
வாய் அழகும்
பிராட்டியோடு சேர்த்தி அழகு அன்றோ
என்னை விஷயீ கரித்தது
உனக்கேற்கும் கோல மலர்ப் பாவைக் கன்பா-
துல்ய சீல வயோ வ்ருத்தாம் துல்ய அபிஜன லஷணாம் ராகவோர்ஹதி வைதேஹீம் தஞ்சேயம் அஸி தேஷணா-திருவடி
உனக்கேற்கும் -என்பதையே கத்யத்தில் எம்பெருமானார் -பகவன் நாராயண அபிமத அநு ரூப-என்று அருளிச்க் செய்தது-

—————————————————————————————————————————————————————————————————————————-

கோல மலர்ப் பாவைக்கு அன்பாய என்னன்பேயோ
நீல வரை யிரண்டு பிறை கவ்வி நிமிர்ந்த தொப்ப
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட வெந்தாய்
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனிப் போக்குவேனோ –10-10-7-

பிரளயத்தில் மூழ்கி இருந்த ஸ்ரீ பூமிப் பிராட்டியை எடுத்து அவளோடு கலந்தால் போலேயும்
கடலைக் கடந்து பெரிய பிராட்டியாரோடே சம்ச்லேஷித்தது போலேயும்
பிராட்டி பரிக்ரஹமான என்னை சம்சார சாகரத்தில் நின்றும் எடுத்து என் பக்கலிலே மிகவும் வ்யாமோஹம் கொண்டு இருக்கிற உன்னை
பெற்று வைத்து இனித் தப்ப விடுவேனோ
கோல மலர்ப் பாவைக்கு அன்பாய என்னன்பேயோ-முந்திய பாசுரம் போலே இருக்கும் என்று மயங்குவோம்
அங்கு அன்பா அன்பேயோ
இங்கு அன்பாய அன்பேயோ
பெரிய பிராட்டியார் மேலே உள்ள அன்பின் மிகுதியால்
அவ்வன்பே அடியாக
அவள் பரிக்ரஹமான என் பக்கலிலே அன்பு கொண்டு இருப்பவனே
அங்கு இரண்டு விளிகள்
இங்கு ஒரே விளி
நீல வரை யிரண்டு பிறை கவ்வி நிமிர்ந்த தொப்ப கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட வெந்தாய் –
பெரும் கேழலார் தம் பெரும் கண் மலர்ப் புண்டரீகம் நம் மேல் ஒருங்கே பிறழ வைத்தார் -என்றும்
ஏனத் துருவாய் இடந்த ஞானப் பிரானை யல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே -என்றும்
பன்றியாய் அன்று பாரகம் கீண்ட பாழியான் ஆழியான் அருளே நன்று -என்றும் -அருளிச் செய்து இருப்பன விவஷிதம்
இரண்டு பிறைகவ்வி நீல வரை நிமிர்ந்தது ஒப்ப -என்று அந்வயம்
நீல மணி பர்வதத்தின் ஸ்தானத்தில் -கோல வராஹமும்
இரண்டு பிறைகளின் ஸ்தானத்தில் இரு கோரப் பற்களும்
நிலத்துக்கு உபமானம் சொல்லப் படாதது என் என்னில் பூமி தனிப்ப ஒரு வஸ்துவாக தெரியாமல் இருந்தமை –
பிறையில் மறுவோபாதி திரு எயிய்ற்றில் கிடந்த பூமி -ஈடு
அது போலே சம்சார பிரளயத்தில் நின்றும் என்னை எடுத்தவனே -உள்ளுறை பொருள்
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனிப் போக்குவேனோ
கடல் பாற் கடலாய் இருக்க நீலக் கடல் என்றது
கடைகிற பெருமாள் காளமேக நிறத்தனன் ஆகையால்
அவனது மேனியின் நிழலீட்டாலே கடலும் கறுத்ததாக தோன்றிற்று
அபிபணிபதி பாவாத் -ஸ்ரீ ரெங்க விமானம்
உன்னைப் பெற்று இனி போக்குவேனோ
பூமிப் பிராட்டியையும் பெரிய பிராட்டியையும் பெற பாடு பட்டால் போலே என்னைப் பெறவும் பாடு பட்ட பின்பும்
இப்போது உபேஷித்தால் விடுவேனோ -என்றபடி –

————————————————————————————————————————————————————————————————————————————

பெற்று இனிப் போக்குவனோ உன்னை என் தனிப் பேருயிரை
உற்ற விரு வினையாய் உயிராய் பயனாய வையாய்
முற்ற விம்மு வுலகும் பெரும் தூறாய்த் தூற்றில்புக்கு
முற்றக் கரந்து ஒளித்தாய் என் முதல் தனி வித்தேயோ –10-10-8-

மிகவும் விசஜாதீயனாய் இருந்த எனக்கு முகவும் தாரகனான வுன்னைப் பெற்று வைத்து இனி விடுவேனோ –
உயிர் ராய் விட்டு உடல் தரிக்க வற்றோ
என் தனிப் பேருயிரை-உயி ரான ஸ்ரீ சூ க்தி
உற்ற இரு வினையாய் –
உன்னை ஒழிய வேறு சில கருமங்களை ஸ்வ தந்தரமாக நினைத்து இருந்தால் அன்றோ உன்னை விடலாவது
ஆத்மாவைப் பற்றி விடாதே கிடக்கிற புண்ய பாபங்கள் ஆகிய கருமங்கள் நீ இட்ட வழக்கு அன்றோ
உயிராய்-
கருமங்களை அனுஷ்டிக்கும் சேதனர்களும் நீ இட்ட வழக்கு
பயனாய வையாய்
-கரும பலன் உன்னை ஒழிய சித்திக்கும் என்று இருந்தேனோ
இது எல்லாம் சொல்லி தம்மிடம் ஒன்றும் எதிர் பார்க்க நியாயம் இல்லை என்கிறார்
முற்ற விம்மு வுலகும் பெரும் தூறாய்த்-
மூ வுலகங்களாய் இருக்கும் இந்த சம்சாரம் புதர் போன்றது -இத்தை உண்டாக்கினவனும் நீயே
தூற்றில்புக்கு முற்றக் கரந்து ஒளித்தாய்-
புதராய் இருக்கும் சம்சார நிலம் எங்கும் வியாபித்து ஒருவரும் அறியாதபடி நின்றாய்
என் முதல் தனி வித்தேயோ-
எனக்கு பிரதம ஸூ க்ருதும் ஆனவனே
நானாக ஓரடி வந்திலன்
முதலே பிடித்து கிருஷி பண்ணினவன் நீயே யன்றோ -என்றபடி
ஆக இவ்வளவு ஹேதுக்களால் உன்னை இனி போக்குவேனோ –

———————————————————————————————————————————————————————————————————————-

முதல் தனி வித்தேயோ முழு மூ வுலகாதிக்கு எல்லாம்
முதல் தனி யுன்னை யுன்னை எனை நாள் வந்து கூடுவன் நான்
முதல் தனி யங்கும் இங்கும் முழு முற்றுறு வாழ் பாழாய்
முதல் தனி சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவிலீயோ –10-10-9-

எம்பெருமான் உலகங்களை எல்லாம் தனக்கு சரீரமாகக் கொண்டு எங்கும் பரந்தவனாய் இருப்பது சாதாரண ஆகாரம்
திரு நாட்டில் திவ்ய மங்கள விக்ரஹத்தோடு எழுந்து அருளி இருப்பது அசாதாரண ஆகாரம் –
தீ எம்பெருமான் நீர் எம்பெருமான் திசையும் இரு நிலனும் எம்பெருமானாகி நின்றால் அடியோம் காணோமால் -என்றபடி
ஆழ்வார்கள் சர்வ சாதாரண ஆகாரத்தால் திருப்தி அடையாதவர்கள் –
ஜகத் ஆகாரனாய் இருக்கும் இருப்பு உகந்தாருக்கும் உகவாதாருக்கும் பொதுவாய் இருக்கும்
அசாதாராண இருப்பு அப்படி அன்றே
அத்தைக் கொண்டே ஆழ்வார்கள் திருப்தி அடைவார்கள்
அனைத்துக்கும் த்ரிவித காரணமாய் இருப்பவன்
நீ ரஷிக்க என்று புக்கால் ரஷ்ய வர்க்கம் சஹகரிக்க வேண்டாதபடி அசஹாயனாய் நின்று ரஷிப்பவன்
முதல் தனி யுன்னை யுன்னை
முதல்வனாய்
ஒப்பில்லாதவனாய்
இருக்கிற யுன்னை
இரட்டிப்பு -நீ யான யுன்னை -நம்பிள்ளை -அசாதாரணத்தோடு கூடிய யுன்னை
அப்படிப் பட்ட திருப்தியைத் தந்து அருள வேணும்
எனை நாள் வந்து கூடுவன் நான் –
திருநாட்டின் சுவை அறிந்தவனும்
அசாதாரண திவ்ய மங்கள விக்ரஹ சேவை சேவிக்க ஆசைப்படுபவனுமான நான்
என்று வந்து கூடுவேன்
முதல் தனி யங்கும் இங்கும் முழு முற்றுறு வாழ் பாழாய்
அசேதனத்துக்கும் நிர்வாஹகன்
பாழ் மூலப் பிரகிருதி -போக மோஷங்கள் விளைத்துக் கொள்ளும் ஸ்தலம்
அவனையே நோக்கி பாழ் என்கிறது -நிர்வாஹ்ய நிர்வாஹக பாவ சம்பந்த நிபந்தமான அபேதோபசாரம் –
முதல் தனி சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவிலீயோ-
சேதனங்களுக்கு நிர்வாஹகன்
முடிவிலீ-என்றது பிரகிருதி போலே நச்வரம் அன்றிக்கே
நித்தியமான ஆத்மதத்வத்தை சொல்கிறது
இங்கும் சொல் ஆத்ம தத்துவத்தோடு நிற்காமல்
அதுக்கு நிர்வாஹகனான எம்பெருமான் அளவும் சொல்லுகிறது-

————————————————————————————————————————————————————————————————————-

சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவில் பெரும் பாழேயோ
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான வின்பமேயோ
சூழ்ந்து அதனில் பெரிய என்னவா வறச் சூழ்ந்தாயே –10-10-10-

பெரிய பிராட்டியார் ஆணை இட்டுத் தடுத்து
பெரிய ஆர்த்தி உடன் கூப்பிட்ட ஆழ்வார் உடைய கார்யம்
செய்து அல்லது நிற்க ஒண்ணாததாயிற்று எம்பெருமானுக்கு –
இவர் பிரார்த்தித்த படியாக பரிபூர்ணனாக கொண்டு வந்து சம்ச்லேஷித்து அருளினான் –
அது கண்டு -என்னுடைய அபரிமிதமான விடாய் எல்லாம் தீர வந்து என்னோடு கலந்தாய் –
என்னுடைய மநோ ரத்தமும் நிறைவேறப் பெற்றேன் என்று களிப்புடன் அருளுகிறார்
தத்வ த்ரயங்களை விட பெரியதான ஆழ்வார் அவா அறச் சூழ்ந்து அருளினான்
என் அவா அற -என்னுடைய அவா தீரும்படி -சாமான்யமான பொருள் –
நையாயிகர் -இச்சாயா விஷய சித்த்யா நாச -என்பார்கள்
ஒரு விஷய ஆசை அது சித்தித்த பின்பு நசிக்கும்
பகவத் விஷயம் கிட்டியதும் அவா நசிந்து போனது -சாதாரண பொருள்
அற -ஆறு பொருள்கள் -நஞ்ஞின் ஸ்தானம் -அல்பத்வம் ஒரு பொருள்
என் அவா சிறிது என்னும்படி
தம்மை அனுபவிக்கப் பாரித்து -பதறி -வந்த எம்பெருமானைக் கண்டார்
அவனுடைய அவாவின் மிகுதியைப் பார்த்தவாறே அது கடலையும்
தம்முடைய அவா குழப்படியாகவும் தோன்றி இங்கனே அருளிச் செய்கிறார்
இங்கு ஈடு -தத்வ த்ரயத்தையும் விளாக்குலை கொண்டு அவை குளப்படியாம்படி பெரிதான என்னுடைய அபி நிவேசத்தை
அதிலும் பெரிய உன் அபி நிவேசத்தைக் காட்டி வந்து சம்ச்லேஷித்தாயே –
என்னுடைய கூப்பிடும் ஒரு படி ஒவும்படி பண்ணிற்றே -என்று –
பெருமாள் காட்டில் இருந்து மீண்டு எழுந்து அருளி -அங்கெ
பரதம் ஆரேப்ய முதிதே பரிஷச்வஜே -என்று
ஸ்ரீ பரத ஆழ்வானை மடியில் வைத்து உச்சி மோந்து உகந்து
அணைத்தால் போல் ஆயிற்று ஆழ்வார் உடைய விடாய் கெடும்படி கலந்தது –
பாழேயோ -சோதியோ -இன்பமேயோ -மூன்றும் எம்பெருமான் இடத்தே அந்வயிக்கும் படியான விளிகள்
முன்னிரண்டு அடிகள் அசேதன சேதனங்களை மாத்ரம் சொல்லுவான போல் தோன்றும்
அப்படி இல்லை
ஈட்டு ஸ்ரீ ஸூ க்திகள் – அவற்றுக்கும் ஈஸ்வரனை ஒழிய ப்ருதுக் ஸ்திதி இல்லாமையாலே அவ்வளவும் செல்லுகிறது –
சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த -ஒவ்வொரு தத்வத்துக்கு உள்ள பரிபூர்ண வ்யாப்தி சொல்கிறது
பத்து திக்குகளிலும் வ்யாப்தி சொன்னபடி
ஜீவாத்மா தத்வத்துக்கு ஞானத் த்வார வ்யாப்தி உண்டே –

————————————————————————————————————————————————————————————————————————————————

அவாவறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா வற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொன்ன
அவாவில் யந்தாதிகளால் இவை யாயிரமும் முடிந்த
அவாவில் யந்தாதி யிப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே –10-10-11-

சூழ் விசும்பு அணி முகிலுக்கு முன் வரையில் -பரபக்தி தசை
சூழ் விசும்பு அணி மிகில் திருவாய் மொழி பர ஞான தசையில் அருளிச் செய்தது
முனியே நான் முகனே முக்கண் அப்பா திருவாய் மொழி பரம பக்தி தசையில் அருளிச் செய்யப் பட்டது
பரமபக்திக்கே முடிந்த அவா என்று பெயர்
இப்படிப் பட்ட பரமபக்தி பேசுவித்த இப்பதிகம் வல்லவர்கள்
இவ் விருள் தரும் மா ஞாலத்தில் பிறந்து வைத்தே
நித்ய சூரிகளே இவர்கள் என்னும்படியான பெருமை யுடன் பொலிவர்கள் என்று பலன் சொல்லி தலைக் கட்டி அருளுகிறார்
கீழ் -அஞ்சிறைய மட நாரை பதிகத்தில் -அருளாத நீர் -பட்டம் சூட்டி திருநாமம் சாத்தினவர்
இதில் அவா அறச் சூழ் அரி -என்று பட்டம் சூட்டி திரு நாமம் சாத்துகிறார்
ஆசை தீர வந்து கலந்த சர்வேஸ்வரன்
ஆஸ்ரிதர்களின் தாபம் அரிப்பவர் ஹரி
அப்பொருள் இப்பொழுது தான் நிலை பெற்றது என்று காட்ட அரி என்கிறார் இங்கே
உடனே அயனை அரனை -என்றது சர்வர்க்கும் அந்தராத்மா –
சர்வதம் கல்விதம் ப்ரஹ்ம-என்றும்
ஜகதாத்ம்யமிதம் சர்வம் -என்றும்
உபநிஷத் வாக்யங்களை விசிஷ்டாத்வ சித்தாந்திகள் நிர்வஹிக்க வேண்டிய கட்டளையை ஆழ்வார் நினைப்பூட்டுகிறார்
அலற்றி
அவா வற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொன்ன –
கூப்பிட்டு அவனைப் பெற்று
சமஸ்த பிரதிபந்தகங்களும் தொலைந்து
அந்தமில் பேரின்பம் எய்தின ஆழ்வார் அருளிச் செய்த
அவாவில் யந்தாதிகளால் இவை யாயிரமும்-
இப்பிரபந்ததுக்கு திருவாய்மொழி திரு நாமம் பிரசித்தமாய் இருந்தாலும்
ஆழ்வார் உகந்த திரு நாமம் அவாவில் அந்தாதி –
ஆழ்வார் உடைய அவாவினால் திருவவதரித்த அந்தாதித் தொடை
க்யாதி லாப பூஜா அபேஷையாலே பிரபந்தங்கள் இயற்றும் கவிகள் போலே அன்றிக்கே
பக்தி பலாத்காரத்தாலே பிறந்தது ஆயிற்று -இப்பிரபந்தம்
ஆச்சார்யஹிருதயம் -சூர்ணிகை -188- நீர் பால் நெய் அமுதாய் நிரம்பின ஏரி நெளிக்குமா போலே -அவாவில் அந்தாதி என்று பேர் பெற்றது-
அவா உபாத்யாயராக நடத்த நடந்த ஆயிரம் என்றும்-
ஆழ்வாருக்கு பின்பு நூறாயிரம் கவிகள் போரும் உண்டாயிற்று
அவர்கள் கவிகளோடு கடலோசையோடு வாசி அற்று அவற்றை விட்டு இவற்றைப் பற்று துவளுகைக்கு அடி
இவருடைய பக்தி அபி நிவேசம் வழிந்து புறப்பட்ட சொல் ஆகையாலே இ றே -ஈட்டு ஸ்ரீ ஸூ க்திகள்
முடிந்த அவாவில் யந்தாதி யிப்பத்து-
இதற்கும் மேல் அவா இல்லை என்னும்படியான பரம பக்தி தசையில் அருளிச் செய்த திரு வாய் மொழி
பக்தியினுடைய சரமாவதியான பரம பக்தி நிலை
பரம பக்தியின் பரீவாரூபமாக தோன்றின இப்பத்து
அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே
பிறந்தே உயர்ந்தார் -என்று கொண்டு பூர்வர்கள் வியாக்யானம்
சம்சாரத்தில் பிறந்து வைத்தே நித்ய சூரிகள் உடன் ஒப்பாவார்
எம்பெருமான் இனிலத்தில் திருவவதரிக்கச் செய்தேயும் பூரணன் -உயர்த்தியில் குறை வற்று இருப்பது போலே
திருவாய்மொழி வல்லாரும் பிராக்ருதர்களின் கருத்தாலே சம்சாரிகளாக இருந்தாலும்
தத்வ ஞானிகளால் நித்ய முக்தர்களாக விளங்குவார்கள் –

——————————————————————————————————————————————————————————————————————————–

திருவாய்மொழி நூற்றந்தாதி –

முனி மாறன் முன்புரை செய் முற்றின்பம் நீங்கி
தனியாகி நின்று தளர்ந்து -நனியாம்
பரம பக்தியால் நைந்து பங்கயத்தாள் கோனை
ஒருமை யுற்றுச் சேர்ந்தான் உயர்ந்தே –100

—————————————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

One Response to “திருவாய் மொழி – திவ்யார்த்த தீபிகை–முனியே நான்முகனே முக்கண்ணப்பா–10-10-”

  1. G. Ramaswamy Says:

    ஸ்ரீ கரியமாணிக்க பெருமாள் ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் அவதாரம். இவர் பற்றி எந்த புராணத்தில் பேசப் படுகிறது என்ற விவரம் தெரிவிக்க வேண்டுகிறேன்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading