ஆழ்வாரை திரு நாட்டுக்கு எழுந்து அருளப் பண்ணிக் கொண்டு போக எம்பெருமான் விரைந்தமை சொல்லிற்று
அருள் பெறுவார் அடியார் -என்னும் திருவாய்மொழியில் –
அதற்கு சிறிது இடையூறு விளைந்தது கீழ்த் திருவாய் மொழியில் –
ஆழ்வார் உடைய திரு மேனியில் எம்பெருமான் அளவு கடந்த அபி நிவேசம் பண்ணி இத் திரு மேனி உடன் திரு நாட்டுக்குக் கொண்டு போக முயல
ஆழ்வார் அதன் தண்மையை அறிவித்து தடுக்க இவ் வழியாலே எம்பெருமான் உடைய விரைதல் சிறிது தடைப் பட்டது –
எம்பெருமானும் ஆழ்வார் உடைய நிஷேததுக்கு இணங்கி நின்று
இவருக்கு விண்ணுலகம் தர விரைந்தானாக வானேறும் வழியிலே கொண்டு போக முயன்ற அளவிலே
ஆழ்வார் அவனை மடி பிடித்து கேள்வி கேட்க தொடங்கினார்
அதாவது
இன்று இப்படி பதறுகின்ற நீ அநாதி காலம் இவ் விருள் தரும் மா ஞாலத்தில் படு குழியில் தள்ளி விட்டு வைத்து ஆறி இருந்ததமை எங்கனம்
இன்று இப்படி ஆதரிக்கைக்கும் அநாதி காலம் அநாதரிக்கைக்கும் ஹேது சொல்லி அருள வேணும் -என்கிறார்
அவனும் ஹேது சொல்லலாம் என்று பலவாறு சிந்தித்துப் பார்த்தான்
எதற்கும் பிரதிகோடி சொல்ல வல்லவர் ஆழ்வார் என்று தன்னில் தான் உணர்ந்து
நிரங்குச ஸ்வா தந்த்ர்யத்தால் செய்யுமதுக்கு ஹேது உண்டோ -என்று ஆழ்வார் தாமே சமாதானம் அடைந்திடுக என்றும் கருதி
ஒரு மறு மாற்றமும் இல்லாமல் கவிழ்ந்து நின்று காலாலே தரையைக் கீறி நின்றான்
இது ஒரு நிர்ஹேதுக விஷயீ காரம் என்று ஆழ்வார் அறிந்து விஸ்மிதராய் களித்து பேசுகிறதாய் இரா நின்றது இத் திருவாய் மொழி –
—————————————————————————————————————————————————————————————————————-
திருமால் இரும் சோலை மலை என்றேன் என்ன
திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
குரு மா மணி யுந்து புனல் பொன்னித் தென்பால்
திருமால் சென்று சேர்விடம் தென் திருப்பேரே –10-8-1-
இத்தலையில் ஸ்வல்ப வ்யாஜ மாத்ரமே கொண்டு விஷயீ கரிப்பவன் -என்று நிர்ஹேதுக விஷயீ கார வைபவத்தை அருளிச் செய்கிறார்
திருமால் இரும் சோலை மலை என்றேன் என்ன திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்-
என் ஊரைச் சொன்னாய் என் பேரைச் சொன்னாய் -என்று மடி மாங்காய் இட்டு விஷயீ கரிப்பவன்
என் பக்கல் பற்றாசு ஓன்று கிட்டியது
வை லஷண்யம் அறியாமல் திருமால் இரும் சோலை மலை -என்றேன்
புத்தி பூர்வகமாக சொன்னேன் அல்லேன்
பல மலைகளையும் சொல்லிப் போகிற வரிசையில் இத்தையும் சொல்லி வைத்தேன்
இத்தனையே கொண்டு பிராட்டியும் தானுமாக என் நெஞ்சிலே வந்து புகுந்தான்
மித்ர பாவமே அமையும் என்றார் இ றே பெருமாள்
அஹ்ருதயமாக சொன்னதையும் சஹ்ருதயமாக ஆக்க வல்லவள் பிராட்டி அருகே இருக்க
மலையைப் பற்றின என் வாக்கு மலையேயாக ஆனதே
நீர் வண்ணன் -நீர் சிறிய த்வாரம் கிட்டினாலும் உள்ளே புகுந்து நிறையுமே
உக்தி மாத்ரமே பலன் பெற செய்ததே
அவன் எங்கே உள்ளான் என்றால்
குரு மா மணி யுந்து புனல் பொன்னித் தென்பால் திருமால் சென்று சேர்விடம் தென் திருப்பேரே –
குரு -சிறந்த –
சிறந்த ரத்னன்களைக் கொண்டு தல்லா நின்றுள்ள புனல்
பொன்னி -கனக நதி -திருக் காவேரி தென் கரையில் உள்ள திருப்பேர் நகர் -அப்பக் குடத்தான் சந்நிதி
திருமால் சென்று சேர்விடம் -பரம ரசிகனான தானும் பிராட்டியும் விரும்பிச் சென்று சேரும் இடம் அதுவே இருக்க கிடீர்
என்னுடைய அஹ்ருதயமான உக்தி மாத்ரத்தைக் கொண்டு
என்னுடைய ஹிருதயத்திலே வந்து புகுந்தான்
இது என்ன நிர்ஹேதுக விஷயீ காரம் -என்று உள் குலைந்து பேசுகிறபடி
———————————————————————————————————————————————————————————————————————————————————-
பேரேயுறைகின்ற பிரான் இன்று வந்து
பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
காரேழ் கடலேழ் மலையேழ் உலகுண்டும்
ஆரா வயிற்றானை அடங்கப் பிடித்தேனே –10-8-2-
சர்வேஸ்வரனாய் இருந்தும் என்னுடன் கலக்கப் பெறாமையால் குறைவாளனாய் இருந்தான் –
காரேழ் கடலேழ் மலையேழ் உலகுண்டும் ஆரா வயிற்றானை-புஷ்கலா வர்த்தகம் முதலான மேகங்கள் ஏழையும்
கடல்கள் ஏழையும்
குலபர்வதங்கள் ஏழையும்
உடைத்தான லோகங்களை எல்லாம் ரஷித்தும் கூட என் செய்தோம் என்று குறைப் பட்டு இருந்தானாம் ஆழ்வார் திரு உள்ளத்தில் வாசம் கிடைக்கப் பெறாமையாலே
அக்குறை தீர்ந்தது ஆயிற்று இப்போது
இக்குறை தீர்க்க திருப்பேர் நகரிலே வாசம் செய்து இருந்து
ஸ்வல்ப வ்யாஜ மாத்ரமே கொண்டு ஆழ்வார் திரு உள்ளத்திலே புகுந்தான்
தாமரைப் பூவை விட்டு தன்னுடைய மார்பில் வந்து பிராட்டி அகலகில்லேன் இறையும் என்று சொல்லிக் கொண்டு இருந்தால் போலே
தானும் பேரேன் பேரேன் என்று சொல்லிக் கொண்டே புகுந்தானாம்
நீ இங்கேயே இருக்கப் போகிறாயா போகப் போகிறாயா கேட்பார் இன்றிக்கே இருக்கச் செய்தே
தானே ஆணை இட்டு பேரேன் என்கிறான் ஆயிற்று
என் நெஞ்சு நிறையப் புகுந்தான் –
நிறைய -நெஞ்சிலே அந்வயிக்காது -புகுந்தவன் இடத்தில் அந்வயிக்கும்
என் நெஞ்சு நிறையும் படி புகுந்தான் என்ற பொருளில் இல்லை
இதனால் தான் பூரணன் ஆனால் போலே புகுந்தான் –
————————————————————————————————————————————————————————————————————————————————-
பிடித்தேன் பிறவி கெடுத்தேன் பிணி சாரேன்
மடித்தேன் மனை வாழ்க்கையுள் நிற்பதோர் மாயையை
கொடிக் கோபுர மாடங்கள் சூழ் திருப் பேரான்
அடிச் சேர்வது எனக்கு எளிதாயினவாறே –10-8-3-
இவன் திருவடி நமக்கு எளிதானவாறே என்று வியக்கிறார் –
பிடித்தேன் -எம்பெருமானை இனி ஒரு நாளும் பிரியாதபடி சிக்கென பிடித்தேன்
பிறவி கெடுத்தேன் -திறந்து கிடந்த வாசல் தோறும் நுழைந்து திரியும் ஜந்து போலே எத்தனையோ யோனிகளில்
நுழைந்து புறப்பட்ட யான் புநரபி ஜனனம் புநரபி மரணம் புநரபி ஜநநீ ஜடரே பதனம் –
என்னும் படியான நிலை சேராதபடி பண்ணிக் கொண்டேன்
பிணி சாரேன் -பிறவியைக் கெடுத்த பின் பிறவியைத் தோற்றி வரும் பிணிகளையும் கெடுத்தேன் ஆனேன்
மடித்தேன் மனை வாழ்க்கையுள் நிற்பதோர் மாயையை -அநாதி காலம் தொடர்ந்த பிரகிருதி சம்பந்தத்தையும் நிவர்ப்பித்தேன்
மூல பிரக்ருதியை உரு அழித்தேன்
ஈடு -எம்பெருமானார் உலாவி அருளுகிறவர் முடியப் போகாதே நடுவே மீண்டு அருள
எம்பார் கதவை ஒருச்சரித்து திரு மால் இரும் சோலை யாகாதே திரு உள்ளத்தில் ஓடுகிறது -என்ன
ஆம் அப்படியே என்று அருளிச் செய்தார் -என்பதாக –
புக்த்வா சதபதம் கச்சேத்
அஹே பாதம் அஹிரேவ ஜா நாதி – பாத ரேகை ஆனதால் தத்வம் அறிந்து கேட்டார்
கொடிக் கோபுர மாடங்கள் சூழ் திருப் பேரான்அடிச் சேர்வது எனக்கு எளிதாயினவாறே-
அறுகம் புல்லை இட்டு கண்ணைப் புதைத்துக் கொள்
சானகச் சாற்றைக் குடி
தலையைக் கீழே நடு
காலை மேலே எடு
என்ற அரும் தேவைகளை சாஸ்திரம் சொல்லா நிற்க
எனக்கு இங்கனே இருப்பதொரு மூலையடி உண்டாவதே -ஈடு
திருப் பேரான் -திருப் பேரில் ஸ்தாவரப் பிரதிஷ்டையாக கிடக்கிறவன் -பொருளில் நிற்கிறவன் என்கிறார் –
—————————————————————————————————————————————————————————————————————-
எளிதாயின வாறென்று என் கண்கள் களிப்ப
களிதாகிய சிந்தையனாய்க் களிக்கின்றேன்
கிளிதாவிய சோலைகள் சூழ் திருப் பேரான்
தெளிதாகிய சேண் விசும்பு தருவானே –10-8-4-
தனக்கு திரு நாட்டைக் கொடுத்து அருளுபவனாய் இரா நின்றான்
கிளிதாவிய சோலைகள் சூழ் திருப் பேரான் தெளிதாகிய சேண் விசும்பு தருவானே
முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டுப் பின்னோர்ந்து
தாமதனைப் பேசுபவர்கள் -கிளி யோடு ஒக்கச் சொல்லப் படுபவர்கள்
அத்தகைய சத்புருஷர்கள் வாழும் இடமான திருப் பேர் நகரில் உறையும் பெருமான்
இருள் தரும் மா ஞாலம் போல் அன்றிக்கே எப்பொழுதும் தெளிவைத் தரும்
திரு நாட்டைத் தருவதாக கண்ட கண்கள் விடாய் தீர்ந்து களித்தன
சிந்தையும் களித்தது-
—————————————————————————————————————————————————————————————————————————–
வானே தருவான் எனக்காய் என்னோடு ஒட்டி
ஊனேய் குரம்பை இதனுள் புகுந்து இன்று
தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான்
தேனேய் பொழில் தென் திருப் பேர் நகரானே –10-8-5-
திருநாடு தருவதாக சபதம் செய்து விரோதிகளை போக்கி அருளினான்
வானே தருவான் எனக்காய்-எனக்கு வானே தருவானாய் -என்றபடி
என்னை இங்கே வைத்து தொண்டர்க்கு அமுது உண்ண சொன்மாலைகள் சொல்லுவிக்கும் கார்யம் தலைக் கட்டுகையாலே
இங்கு நின்றும் கொண்டு போய் திரு நாட்டில் வைப்பதாக கருதினான்
அநாதி காலம் நித்ய சம்சாரியாய்ப் போந்த எனக்கு நித்ய சூரிகள் பெரும் பேற்றை அளிக்க சங்கல்பித்து அருளினான்
என்னோடு ஒட்டி -என்னோடு சபதம் பண்ணி
இன்று ஆழ்வாருக்கு திரு நாட்டைக் கொடுப்பேன் -இல்லை யாகில் அயர்வறும் அமரர்கள் அதிபதி பதவி இழப்பேன்
அத்யமே மரணம் வா அபி தரணம் சாகரச்ய வா
அராவண மராமம் வா
இத்தை முடித்தல் கடத்தல் தப்பான அர்த்தம்
கடலையாவது கடக்கிறேன் நானாவது முடிந்து போகிறேன் என்கிறார் பெருமாள்
ஊனேய் குரம்பை இதனுள் புகுந்து இன்று தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான்
உம்முடைய நிர்பந்தத்தால் இவ்வுடலை ஒழியவே கொண்டு போவதாக முடிந்தது
இனி ஆறி இருப்பேனோ
சரீரத்துக்கு உள்ளே புகுந்து
புண்ய பாப ரூபமான கர்மங்களை தானே தவிர்ந்து அருளினான் -என்கை-
—————————————————————————————————————————————————————————————————————————-
திருப்பேர் நகரான் திரு மால் இரும் சோலை
பொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து
இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
விருப்பே பெற்று அமுதம் உண்டு களித்தேனே –10-8-6-
ஓர் இடம் இல்லாதாரைப் போலே என் நெஞ்சில் வந்து புகுந்து க்ருதக்ருத்யன் ஆனான் –
திருப்பேர் நகரான் திரு மால் இரும் சோலைபொருப்பே உறைகின்ற பிரான் என்று இரண்டு திவ்ய தேசங்களைச் சொன்னது
சீரார் திரு வேங்கடமே திருக் கோவலூரே மதிட்கச்சியே –என்று ஓதப்படும் எல்லா திவ்ய தேசங்களுக்கும் உப லஷணம்
இப்படி அளவு கடந்த தேச விசேஷங்களை தனக்காக கொண்டவன்
இன்று வந்து -இப்படி வர வேண்டும் என்னும் நினைவு நேற்று இன்றிக்கே இருக்க இன்று வந்ததாகச் சொல்லுகையால் -நிர்ஹேதுகம்
வரும் பொழுதே இருப்பேன் இருப்பேன் என்று சொல்லிக் கொண்டே வந்தான் ஆயிற்று –
பெருமாள் அரண்யத்தில் ஜடாயு மகாராஜரைக் கண்ட போது இளையோனை நோக்கி
இஹ வத்ச்யாமி சௌமித்ரே சார்த்த மேதே ந பஷிணா-என்று இவர் சிறகின் கீழே வர்த்திக்க பாரா நின்றோம் என்றால் போலே
என் நெஞ்சு நிறையப் புகுந்தான் –
இசை வு காட்டாது இருந்த என் நெஞ்சிலே நிறையப் புகுந்தான்
விருப்பே பெற்று அமுதம் உண்டு களித்தேனே-
கம்ச சிசுபாலாதிகள் நெஞ்சிலும் எம்பெருமான் இருப்பது உண்டு
அப்படி இன்றிக்கே அபிமான பஹூ மானங்களோடே இருக்கப் பெற்றேன் ஆதலால் இதுவே அமுத பானமாகப் பெற்றேன் –
————————————————————————————————————————————————————————————————————————————–
உண்டு களித்தேற்கு உம்பர் என் குறை மேலைத்
தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்
வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப்பேரான்
கண்டு களிப்ப கண்ணுள் நின்று அகலானே –10-8-7-
கீழ் பாட்டிலே களித்தேனே -களிப்பை பிரஸ்தாபித்தார்
அத்தை ஆர அமர பேசி மகிழ்கிறார் இதில்
உண்டு களித்தேற்கு உம்பர் என் குறை-இங்கேயே இருந்தே இப்படிப்பட்ட
அனுபவம் பெற்று களிப்பதை விட பரமபத அனுபவத்தில் என்ன விசேஷம் உள்ளது –
அதிலே அபேஷை உடையோம் அல்லோம்
மேலைத் தொண்டு உகளித்து-மேலான தொண்டு -திருவாய்மொழி பாடுகை
அதனால் உகப்பானது தலை மண்டியிட்டு -அல்லது -அதிசயித்து
அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன் -முமுஷூப்படியிலே அந்தி தொழும் சொல் என்கையாலே பலம் சொல்லிற்று –
கைங்கர்ய ரசம் அதிசயித்தாள் அதனுடைய எல்லையில் -எல்லையான நிலைமையில் -சொல்லக் கடவதான
தொழும் சப்தம் -நமஸ் -சப்தம் -இது தானே முடிவான பேறு -அத்தை இங்கே பெற்றேன் –
வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப்பேரான் கண்டு களிப்ப கண்ணுள் நின்று அகலானே
உன்னை மெய் கொள்ள காண விரும்பும் என் கண்களே -என்று விடாய்த்த கண்கள் களிக்கும்படி
நான் போகச் சொல்லிலும் கண் வட்டத்தில் நின்றும் அகலகில்லான்
இப்படி அவனை அனுபவித்து களிக்கப் பெற்றவனுக்கு ஏதேனும் குறை உண்டோ –
——————————————————————————————————————————————————————————————————————————————-
கண்ணுள் நின்று அகலான் கருத்தின் கண் பெரியன்
எண்ணில் நுண் பொருள் ஏழிசையின் சுவை தானே
வண்ண நல் மணி மாடங்கள் சூழ் திருப்பேரான்
திண்ணம் என் மனத்துப் புகுந்தான் செறிந்து இன்றே –10-8-8-
பரம போக்யனான திருப்பேரான் -வ்யாமோஹமே வடிவு எடுத்தவனாய் -ஒரு நாளும் நீங்க மாட்டாதவனாய்
என் நெஞ்சினுள் புகுந்தான் –
கண்ணுள் நின்று அகலான்-சதா பஸ்யந்தி சூரய-என்கிறபடியே
சதா தர்சனம் பண்ணுகைக்கு இடமாக திருநாடு ஓன்று இருப்பதை நினையாதே
இங்கேயே சதா தர்சனம் பண்ணும்படி இரா நின்றான்
கருத்தின் கண் பெரியன் -கருத்து -மநோ ரதம் -பெரிய பெரிய
மநோ ரதங்களை பண்ணா நின்றான் –
தம்மை பரமபதத்தில் ஏறக் கொண்டு போவதிலும்
ஆதிவாஹிகரை நியமிப்பதிலும்
தான் முன்னே துரந்தரனாய் கொண்டு போமதிலும்
அவன் பாரிக்கும் பாரிப்பு தம்மால் எண்ணி முடிக்கும் தரம் அன்று
எண்ணில் நுண் பொருள்-எத்தனை தூரம் ஆராய்ந்து பார்த்தாலும் இது புரிந்து கொள்ள முடியாத சூஷ்ம விஷயம்
அவனுடைய பாரிப்பு வாய் கொண்டு சொல்ல முடியாதது மட்டும் அன்று
நெஞ்சும் எட்டாதபடி கஹனமானது
ஏழிசையின் சுவை தானே -பரம ரசிகன் என்னலாம் அத்தனை
சப்த ஸ்வரங்களுக்கு மேற்பட்ட போக்யமான வஸ்து இல்லை
அந்த சப்த ஸ்வரங்களின் சுவையே வடிவு எடுத்தவன் என்று
அவனுடைய ராசிக்யத்தை குலாவலாம் ஒழிய
ஆழ்வார் அளவிலே அவன் கொண்ட பாரிப்புகளை நெஞ்சாலும் நினைக்கப் போகாதே –
——————————————————————————————————————————————————————————————————————————————–
இன்று என்னைப் பொருளாக்கி தன்னுள் என்னை வைத்தான்
அன்று என்னைப் புறம் போகப் புணர்த்தது என் செய்வான்
குன்று அன்னத் திகழ் மாடங்கள் சூழ் திருப்பேரான்
ஓன்று எனக்கு அருள் செய்ய உணர்த்தல் உற்றேனே –10-8-9-
உயிரான பாசுரம் இப்பதிகத்துக்கு
இன்று இவ்வளவாக விஷயீ கரிக்கைக்கும்
முன்பு நெடு நாள் உபேஷித்து இருந்ததற்கும்
காரணம் அருளிச் செய்ய வேண்டும் என்று தமக்கு உண்டான ஜிஜ்ஞாசையை வெளியிடுகிறார்
கீழே -இன்று விண்ணுலகம் தருவானே விரைகின்றான் -என்றார்
அப்படி விரையத் தொடங்கின நாளை -இன்று -என்கிறார் -இதில்
கூவிக் கொள்ளும் காலம் இன்னும் குறுகாதோ -என்றும்
கண்ணாளா கடல் கடைந்தாய் உன் கழற்கே வரும் பரிசு தண்ணாவாது அடியேனை பணி கண்டாய் சாமாறே -என்றும்
கதறி அழுத காலத்தை -அன்று -என்கிறார்
அன்றிக்கே
மயர்வற மதி நலம் அருளினான் என்று தமது வாயால் பேசலாம் படி விஷயீ கரிக்கப் பெற்ற நாள் தொடக்கி உள்ள காலத்தை –
இன்று என்றும்
அதற்கு முற்பட்ட அநாதியான காலங்கள் எல்லாம்
அன்று -என்றும் சொல்கிறார்
நஞ்சீயர் பட்டர் இடம் இதற்கு என்ன மறுமொழி அருளிச் செய்தான் என்ன
அவன் பதில் சொல்வதற்கு என்ன இருக்கிறது
இவர் தலையிலே ஒரு பழியை ஏறிட்டு நெடு நாள் இழந்து கிடந்த நாம் என்ன சொல்லுவது
என்று வெள்கி -காலாலே தரையைக் கீறி நிற்பது தவிர வேறு உண்டோ -என்றாராம் –
ருசி இல்லாமையால் உபேஷித்து இருந்தோம் –
இன்று ருசி பெற்று சாதனானுஷ்டானம் செய்ததால் செய்தோம் என்று சொல்ல முடியாதே
என்னுடைய பிரவ்ருத்திக்கு விரோதியான ஸ்வ-பிரவ்ருத்தியில் இது வரையில் நீர் ஊன்றி இருந்தீர்
அது என்னை விலக்கினபடியாய் இருந்தது
விலக்காத சமயம் எதிர்பார்த்து இருந்தேன்
அது இப்போது கிடைத்தமையால் உம்மை ஆதரித்தேன்
அன்றியும்
என்னைத் தவிர மற்றவற்றிலும் நீர் சாதனத்வ புத்தி பண்ணிப் போந்தீர் இதுகாறும்
இப்போது தான் அது தவிர்ந்து என்னையே உபாயமாக கொண்டீர் அதனால் ஆதரித்தேன் –
சைதன்ய பிரயுக்தமாய் வரும் அத்வேஷ பர்யந்தமான ருசியை சாதனம் என்ன ஒண்ணுமோ
உபாயத்வம் தன் தலையிலே கிடக்க ஆழ்வாருடையத்திலே உபாயத்வத்தை ஏறிட்டுச் சொல்ல முடியுமோ
நம்முடைய ஸ்வா தந்த்ர்யத்தாலே உபேஷித்து இருந்தோம்
ஸ்வா தந்த்ர்யத்தாலே ஆதரித்தோம்
இதை ஆழ்வார் நன்கு தெரிந்து கொண்டு கேள்வி கேட்கிறார்
ஆதாலால் ஒரு பதிலும் சொல்லி பிழைக்க முடியாது என்று பேசாதே கிடந்தான் –
ஆச்சார்யஹிருதயத்தில் -இரண்டாம் பிரகரணம் -102–சூர்ணிகை
இட்கிலேன் நோன்பறிவிலேன் கிற்பன் கீழ் நாள்கள் என்கையாலே சாதனத்ரய பூர்வ அப்யாசஜம் அல்ல -என்று தொடங்கி
சூர்ணிகை -113-
வரவாறு இல்லை வெறிதே என்று அறுதி இட்ட பின்பு வாழ் முதல் என்கிற ஸூ க்ருதம் ஒழியக் கற்பிக்க லாவது இல்லை-என்றும்
நாலாம் பிரகரணத்தில் -சூர்ணிகை -228-
அஹேதுகமாக ஆதரித்த நீ அநாத்ய நாதா ஹேது சொல் என்று மடியைப் பிடிக்க —-இதுவும் நிருத்தரம் என்று கவிழ்ந்து நிற்க –
என்றும்
அருளிச் செய்ததையும் மணவாள மா முனிகள் அருளிச் செய்த வ்யாக்யானமும் விவஷிதம்
நாசௌ புருஷ காரேண நசாப்யான்யேன ஹேதுநா கேவலம் ஸ்வ இச்யை வாஹம் ப்ரேஷ கஞ்சித் கதாசன -என்றான் அவன் தானும் இ றே-
—————————————————————————————————————————————————————————————————————–
உற்றேன் உகந்து பணி செய்து உனபாதம்
பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய்
கற்றார் மறைவானர்கள் வாழ் திருப் பேராற்கு
அற்றார் அடியார் தமக்கு அல்லல் நில்லாவே –10-8-10-
கீழே எம்பெருமான் கவிழ் தலையிட்டு வாய் மூடி நின்றான்
ஆழ்வீர் உமக்கு இனி வேண்டுவது என் சொல்லிக் காணீர் -என்ன
திருவாய் மொழி பாடுகை யாகிற இக்கைங்கர்யத்தை பரம ஆனந்தமாகச் செய்யப் பெற்ற எனக்கு வேறே என்ன அபேஷை உள்ளது
முன்னடிகள் முன்னிலையாக பேச
எம்பெருமான் தலை துலுக்கி உகப்பு காட்டி அருள
பின்னடிகள் அனைவருக்கும் தெரியும்படி படர்க்கையாக அருளிச் செய்கிறார்
அவன் தானே செய்தான் என்னுமன்று அவனுக்கு
வைஷம்யமும் நைர்க்ருண்யமும் சர்வ முக்தியும்
பிரசங்கியாதோ என்னில்
இத்தலையில் ருசியை அபேஷித்துச் செய்கையாலே அவனுக்கு அவை தட்டாது
அது ஹேது என்று ஈஸ்வரனுக்கு உத்தரம் ஆனாலோ என்னில் -அது உபாயம் ஆக மாட்டாது
பல வியாப்தம் ஆனது இ றே உபாயம் ஆவது
இந்த ருசி அதிகாரி ஸ்வரூபம் ஆகையாலே தத் விசேஷணமாம் இத்தனை
உபாயம் சஹகாரி நிரபேஷம் ஆகையாலும் இந்த ருசி உபாயம் ஆக மாட்டாது
இது உபாயம் ஆகாமையாலே இவர்க்கு இல்லை என்னலாம்
சர்வ முக்தி பிரசங்க பரிஹார்தமாக அவனுக்கு உண்டு என்னவுமாம் -ஈடு
உற்றேன் -நிமஜ்ஜதோ நந்த பவார்ண வாந்தச் சிரயா மே கூலமிவாசி லப்த -ஆளவந்தார்
உகந்து பணி செய்து உனபாதம் பெற்றேன்-திருவாய் மொழி பாடுகையே பணி செய்கை
உகந்து பணி செய்கை சாதனமாய் அதற்கு சாத்தியம் வேறு ஓன்று இருப்பதாக ஆழ்வார் திரு உள்ளம் அன்று
உகந்து பணி செய்கையும் பாதம் பெறுகையும் ஒன்றே -ஈதே இன்னம் வேண்டுவது என்கிறார் அன்றோ –
கற்றார் -குருகுல வாசம் பண்ணி போது போக்கினவர்கள்
வேதத்துக்கு வ்யாசபதம் செலுத்த வல்லார்கள்
அனுபவித்து வர்த்திக்கும் திவ்ய தேசம்
அங்கே உறையும் பெருமானுக்கு அற்றுத் தீர்ந்த அடியார்க்கு துக்க பிரசக்தி உண்டோ
அற்றார் அடியார் தமக்கு -அற்றார்களுக்கு அடியார்க்கு என்றும் கொள்ளலாம்
திருபேராற்கு-முன்னிலையில் வந்த படர்க்கையாகவும்கொண்டு இதுவும் எம்பெருமானை நோக்கிச் சொல்வதாக கொள்ளலாம்-
—————————————————————————————————————————————————————————————————————
நில்லா வல்லல் நீள் வயல் சூழ் திருப்பேர் மேல்
நல்லார் பலர் வாழ் குருகூர்ச் சடகோபன்
சொல்லார் தமிழ் ஆயிரத்துள் இவை பத்தும்
வல்லார் தொண்டர் ஆள்வது சூழ் பொன் விசும்பே –10-8-11-
இத் திருவாய் மொழி கற்கைக்கு பரமபத சாமாஜ்ய பலன் கிட்டும்
திருப்பேர் நகருக்கு -நீள் வயல் சூழ் -விசேஷணம் ஆனால் போலே நில்லா அல்லல் என்பதுவும் ஒரு விசேஷணம்
துக்கங்கள் ஆனவை -இது நமக்கு உறைவிடம் அன்று என்று தாமே விட்டுப் போம்
நல்லார் நவில் குருகூர் நகரான ஆழ்வார் அருளிச் செய்த தமிழ் சொல் நிரம்பிய ஆயிரத்துள் இப்பதிகம் வல்லார் இட்டது சட்டமாய் இருக்கும் திரு நாடு-
—————————————————————————————————————————————————————————————————————————
திருவாய்மொழி நூற்றந்தாதி –
திருமால் தன் பால் விருப்பம் செய்கின்ற நேர் கண்டு
அரு மாயத்து அன்று அகல்விப்பான் என் பெருமால் நீ
இன்று என் பால் செய்வான் என் என்ன இடருற்று நின்றான்
துன்னு புகழ் மாறனைத் தான் சூழ்ந்து –98–
———————————————————————————————————————————————————————————————————–
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply