ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேசரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி –
கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –
சீர் ஓன்று தூப்புல் திரு வேங்கடமுடையான்
பார் ஒன்றச் சொன்ன பழ மொழியுள் ஓர் ஓன்று
தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வான் ஏறப் போம் அளவும் வாழ்வு
———————————————————————————-
சிறப்புத் தனியன்கள் –
மன்னு திருமந்திரத்தின் வாழ் துவயத்தின் இன்பொருளும்
துன்னு புகழ்க் கீதை தனில் சொன்ன எண் நான்கின் இன் பொருளும்
அன்ன வயல் கச்சி யருளாளர் திருச் சின்ன வொலி
யின்ன படி என்று உரைத்தான் எழில் வேதாந்த்ரியனே –
எண் நான்கின் இன் பொருளும் -முப்பத்து இரண்டு அஷரங்களால் ஆகிய சரம ஸ்லோகத்தின் அர்த்த விசேஷங்களும் –
———
ஏகாந்த மூன்றும் எழிலால் உரை செய்து
மா காந்தம் செய்து அருளும் வள்ளலாய் -சாகாந்த
தேசிகனாம் தூப்புல் திரு வேங்கடேச குரு
வாசகமே எங்களுக்கு வாழ்வு –
மா காந்தம் செய்து அருளும் வள்ளலாய்-பெருமை மிக்க உலோகமான காந்தம் போலே பிறர் மனசைக் கவர்ந்து
அவர்களை உஜ்ஜீவிக்குமாறு அருள் புரியும்
சாகாந்த தேசிகனாம் -வேதாந்த தேசிகன் என்று பிரசித்தி பெற்ற –
——————————-
பரிச்சின்னமான விரு நாலு எழுத்தின் பல் வண்மை எலாம்
விரிச்சு நலம் பெற வோத வல்லார்க்கு இந்த மேதினிக்கே
மரிச்சு இன்னம் மீளப் பிறவாமல் வாழ்விக்கும் மால் வரதர்
திருச் சின்ன வோசை இனிமை யுண்டோ மற்றைத் தேவருக்கே –
[அளவுபட்ட திருவெட் டெழுத்தான திருமந்திரத்தின் பல்வகைப் பலனையும் அளிக்கவல்ல தன்மை முழுதையும் தாம் நன்மையை அடையும் பொருட்டு விளக்கி அநுஸந்தாநம் செய்யும் பாகவதோத்தமர்களை இந்தத்தரணியிலே இறந்து பின்னும்பிறக்காமல் உஜ்ஜீவிக்கச் செய்பவரும் பக்தர்களிடம் விசேடஅன்பு உடையவருமான பேரருளாளருடைய திருச்சின்னத்தின் சப்தத் தின் இனிமை மற்றைத் தேவர்பாற் பெறமுடியுமோ?
மால்வரதர், திருச்சின்ன வோசை யினிமை யுண்டோமற்றைத் தேவர்கட்கே என்றதன் வியாக்கியானமாக-முதல்வன்வந்தா னித்யவிபவன் வந்தான் என்றுஉன் முன்னூது விருதுசின்னம் முச்சகமு மெச்சுமிதை மற்றுமுள தெய்வங்கள் முன்னூதில் வெட்குவார் காண்-எனவமைத்துப் பாடிய பெற்றியே பெற்றி.
—————————————————————————-
திவ்ய பிரபந்தங்கள் திரு வீதிகளில் சேவிக்கக் கூடாது என்ற ஆஷேபங்களை வென்று
இந்த பிரபந்தம் சாதித்ததாகச் சொல்லுவார்கள்-ஸ்ரீ பேர் அருளாளன் திரு உள்ளம் உகந்து திருச் சின்னங்களில் ஒன்றை ஸ்ரீ தேசிகன் இடம் அருளியதால் இன்றும் ஒற்றைத் திருச் சின்னமே சேவிக்கப் படுகிறது –
—————————————————
முகவுரை.
உன்னரு ளன்றி யெனக்கொரு நற்றுணை யின்மையினா
லென்னிரு வல்வினை நீயே விலக்கி யிதங்கருதி
மன்னிய நற்றிரு மந்திர மோதும் பொருணிலையே
பொன்னரு ளாலரு ளாய்புகழ் தூப்புற் குலவிளக்கே.-(பிள்ளையந்தாதி. 15)
தேவர் முனிவர்களுஞ் சித்தர்களும் பத்தர்களும்|
பூவின் மழைபொழிந்து போற்றியே – தாவி|
யுலகளந்த மாலை யுணர்ந்துகக்குந் தூப்புற்
குல குருவே யெங்கள் குரு.-(தேசிகர் நூற்றந்தாதி. 26.)
பூவின் மன்னு மங்கைதாள் பொருந்துமார்ப னாழ்புகழ்
யாவுமங்கம் வேதநான்குபாடுமாற னாகம்
மேவியோங்கு பாச்சியம் விரித்த யோகி நாமமே
நாவிலங்கு தூப்புலய்யர் பாதநண்ணுநெஞ்சமே.-(ஸ்ரீ வேதாந்த தேசிகன் துதி.)
செய்யாட் குகந்த திருமார்பன் வேங்கடச் சீர்வரையான்
மையாருங் கண்டன் மலரய னேத்தி வணங்குவளைக்
கையா னருளிற் கனிந்துயர் தூப்புற் கதிரனைய
வையா! சரண மடைந்தேன் றளுக்க டைக்கலமே.-(ஸ்ரீ வேதாந்ததேசிகன் அடைக்கலப்பத்து. 10.)
திருமலை மால் திருமணியாய்ச் சிறக்க வந்த பேராசிரியர் ஸ்ரீமத் வேதாந்த தேசிகர். அத்யாச்சரியமான அபார பாண்டித்யமும், அற்புதமான அநுட்டானமும், அனைவரும் ஆதரிக்கத் தக்க ஆத்மகுண பூர்த்தியும், விசேடித்துப் போற்றத் தக்க விரக்தியும் ஒருங்கே அமைந்தவர் இம் மஹான். இச் சந்தமிகு தமிழ் மறையோன் அவதரித்தருளியிராவிடில் கலியுலகில்,பண்டித வுலகில், ஸ்ரீ வைஷ்ணவ வுலகில், இவ்விருள்தருமா ஞாலத்தில் இன்பம் காண்பது அரிதினும் அரிதே.
இவ்வவதார புருஷச்ரேஷ்டர் எண்ணில் பல்குணங்கள் நன்கு பொருந்தியவர். ஆசாரியர்கட்கு அணிகலமான ஞான, பக்தி, விரக்திகள் என்ற முக்குணங்கள் இவரை அடைந்து நிறம் பெறுவன இந்நல்லாசிரியரது கவித்திறன், சாஸ்த்ர பாண்டித்யம்,தமிழ், பிராகிருதம் முதலிய பல பாஷைகளில் அளவு கடந்த வல்லமை, எளிய நடையில் ஸ்தோத்ரங்கள் இயற்றும் பெற்றி, கம்பீர நடையில் சாஸ்த்ரீயக்ரந்தங்கள் அருளிச்செய்யும் அழியா வழகு முதலியன ஒப்புயர்வற்றன.
இந்நாவலருந் தென்வடமொழி நற்பொருள் பெற்ற நம்பி இவ்வுலகில் தோன்றி அருளிய திவ்ய ஸூக்திகள் அனந்தம். இம் மறைமுடித்தேசிகனாரது சாஸ்த்ர பாண்டித்யச் சீர்மையை
சததூஷணீ, தத்வமுக்தாகலாபம், ஸர்வார்த்தஸித்தி, ந்யாய பரிசுத்தி, ந்யாஸித்தாஞ்ஜநம், ஸேச்வரமீமாம்ஸை, மீமாம்ஸா பாதுகை என்னும் அரும் பெரு நூல்கள் நன்கு அறிவிக்கும்.
அரிய பெரிய சீரிய உயர்ந்த அழகிய வியாக்கியானங்களை அருளிச் செய்வதிலுள்ள அபார அற்புதமான சக்தியை தத்வடகை, கீதாதாத்பர்ய சந்திரிகை, கீதார்த்த ஸங்க்ரஹ ரக்ஷை,ஸ்தோத்ர பாஷ்யம், சதுச் ச்லோகீபாஷ்யம், கத்யபாஷ்யம் என்னும் திவ்ய க்ரந்தங்கள் தெற்றெனத் தெளிவிக்கும்.ஆதிமஹா கலிகளைப் போலே சாலச் சிறந்த காவ்ய நாடகங்களை இயற்றுவதில் ஒப்பற்ற நைபுண்யத்தை யாதவாப்யுதயம், ஸங்கல்பஸூர்யோதயம், ரகுவீர கத்யம், ஹம்ஸ் ஸந்தேசம், ஸுபாஷிதநீவி முதலியவைகளும்,பாதுகா ஸஹஸ்ரம் முதலிய பல பல துதி நூல்களும் புலப்
படுத்தும். அபார கருணாநிதியான அச்சுதனின் அபிநவ தசாவதாரமெனக் கொண்டாடப் பெற்று வரும் ஆழ்வார் அருளிச்செயல்களில் ஆழ்ந்து அகங்குழைந்து உருகி நிற்கும் அளவிலாப் பெருமை த்ரமிடோப நிஷத் தாத்பர்யரத்நாவளி, த்ரமிடோபநிஷத்ஸாரம் முதலியவற்றால் மூதலிக்கப் பெறும். அமிழ்தினுமினியதமிழ் இலக்கண இலக்கியங்களிலும் அனைவரும் போற்றியுகக்கத்தக்க ஆச்சரியமான பேரறிவு பெற்று சீரிய நற்கவிகளையியற்றும்பெற்றி”தேசிகமாலை ” யென நற்றமிழர் நன்கு போற்றி வரும்
துய்யதமிழ் இருபத்துநான்கு பிரபந்தங்களினால் தலைமைபெற்று நிலைத்து நிற்கும். அநுட்டான விஷயங்களில் ஆழ்ந்து சிறந்ததேறிய ஆராய்ச்சிகளைச் செய்து நிகரற்ற நிர்ணயங்களை வெளி யிடும் அபூர்வவல்லமை ஸச்சரித்ரரக்ஷை, ஸ்ரீபாஞ்சராத்ர ரக்ஷை,நிஷேப ரக்ஷை முதலியவற்றால் நன்கு உணர்த்தப் பெறும்.-கூரிய சீரிய ரஹஸ்யார்த்தங்களையும் வெளியிட்டு ஸம்ஸாரிகளை உய்விப்பதில் உண்டாகிய அஸாதாரணமான பரமகருணை ஸம்ப்ரதாய பரிசுத்தி முதலிய ரஹஸ்யங்களினால் ஸதஸ்யமாக விளங்கும்.
அதிமாநுதிவ்யப்ரபாவங்களையுடைய ஆசார்ய ஸார்வ பெளமர் நம் வேதாந்த தேசிக சிகாமணி. கடலளவாயதிசை யெட்டினுள்ளும் மிடைதந்த கலியிருளை உபதேசங்களாலும்,
அநுட்டானங்களாலும், பல பல திவ்யக்ரந்தரசநைகளாலும் அறவே போக்கியருளிய அந்தணர் திலகமே இத்தூப்புல் வள்ளல். பகவத் பாகவத பக்திப் பெருஞ்செல்வமும் ஐஹிகஸுகங்களில் அதிமாத்ரவிரக்தியும் இவ்விசுவாமித்திரகுலதிலகரது நித்ய சரித்
திரங்களினால் நிலை நின்று விளங்கும்.
சீரொன்றுதூப்புற் றிருவேங் கடமுடையான்
பாரொன்றச் சொன்ன பழமொழியுள் ஒரொன்று
தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வானேறப் போமளவும் வாழ்வு.-(தேசிகமாலைத்தனியன்.)
தம்மை வணங்கினார்க் கெஞ்ஞான்றுந் தம்முடைய
தன்மை யளிக்குமி ராமாநுசர்போல் -உம்மை
வணங்கு மடியேற்கு வாதிசிங்கரே நீர்
இணங்கும் வகையருள்வீ ரின்று.-(தேசிகர்நூற்றந்தாதி, 97.)
கண்டார் கரையைக் கடந்தார் பவக்கடலை
அண்டாத வார்வ மடைந்திட்டார்-வண்டாரும்
கொந்தலர்பூந் தூப்புல்வருங் குற்றமில்சீர் வாதிசிங்கர்
செந்தமிழ்நூல் சிந்தித் தவர்.-(தேசிகர்நூற்றந்தாதி, 91.)
மாமலர் மன்னிய மங்கை மகிழ்ந்துறை மார்பினன் திருநாராயணன். அவனே மறை முடித்தேசிகன். அவன் தாள் நற்றாள். அத்தாண்மலர் சூடியவன் தொல்லருள் மாறன்.
அவன் துணையடிக்கீழ் வாழ்வை யுகந்தவர் இராமாநுசமுனி.vஅவர் வண்மை போற்றும் சீர்மையர் ” தூப்பு) பிள்ளை ” யாம் “வேதாந்தகுரு ” அவரது பொற்றாமரையடியையே என்றும் நினைந்திருப்பார் பாதம் அடியேன் சென்னிதனிற் சூடும்மலர். திருவாய் மொழித்தேவர் நம்மாழ்வார். “ திருமொழித்தேவர் ” திருமங்கையாழ்வார். அதுபோல திருச்சின்னமாலைத் தேவர் தூப்புல் திருவேங்கடமுடையான் என ஆன்றோர்கூறுப. அணங்குகண்டவனே நன்மை யளித்துக் காக்கவல்லவன். திருக் கண்டவன் ஞானத்தமிழன். திருவின் திருவை உள்ளவாறு கண்டு, கண்டவாறு உரைத்தவனே கவிவாதி சிங்கத் தேவாய் விளங்கிய நம் வேதாந்த தேசிகன். செய்யதாமரைத் திருமறு மார்பனே திருச்சின்னன். (சின்னம் – அடையாளம்). அவனே சுந்தரன். வெற்றித்திருவால் விளங்குபவனே திருமகள் கேள் வனாகிய ஒருவன். தேனவேதியர் தொழுந் தெய்வம் அவனே.-(தேனவேதியர் – தேனரும் வேதியரும். தேனர் – ஆத்மாவைத் திருடுபவர் .) அவனே அத்திகிரித்திருமால். (அத்திகிரி, ஹஸ்திகிரி.-திகிரி -சக்கரம். அத்தி-யானை.) அவனே பேரருளாளன். அவனே தேவாதிராஜன். அவனது திருச்சின்னமே எங்கும் முழங்குவது.‘திருச்சின்னம்’ என்பது எம்பெருமானுடைய ஸந்நிதிகளில் ஸேவிக்கப் பெறுகிற ஒரு வாத்யவிசேஷம். அதன் ஓசை யின் காம்பீர்யமும் இனிமையும் ஒப்பற்றன. அவை வருணிக் கவும் இயலாது ஸ்ரீ தேவப்பெருமாள் ஸந்நிதியில் ஸேவிக்கப்பெறும் திருச்சின்னவாத் யவோசை ஸ்வாமிதேசிகன் திருவுள்ளத்தைக் கவர்ந்தது. அவ்வினிய ஓசையில் ஒரு நுட்பத்தைக் கண்டார் வேதசிரத் தேசிகனார். திருச்சின்னத்தை முழக்கி உலகை உய்யக் கொண்டவரே நம் ஆரியசிகாமணியான வேதாந்தவாரியன். அண்ட கோளகைக்கு அப்புறத்து அண்டர் கோன் அமரும் அந்தமில் பேரின்ப வீடு எய்திய ஓர் விஞ்சையர் கோதை புண்டரீக மென்பதத்தியைப் புகழ, அப்பிராட்டியும் மிக மகிழ்ந்து அம்மங்கையாரிடம் வண்டாமது மாலையை அளிக்க,அக்கன்னி அம்மாலையை யாழிடைப் பிணித்து அயனுலகம் எய்தினள் என அழுந்தூருள் வாழ்வோனாகிய கம்பநாட்டாழ்வான் பாடியுள்ளான். தூப்புல்இறை தமது பேரின்ப அநுபவ வெள்ளமேலீட்டால் திருச்சின்னத்துக்குப் பாமாலை சாத்தி மகிழ்ந்தார். திருச்சின்னனான திருமார்பனுக்குத் திருச் சின்னமாலை” என்னும் நித்யமான நீள் மணங்கமழும் பாமாலையைச் சாற்றித் திருவுக்குந் திருவாகிய செல்வனை மகிழ்வித்தவர்-தூப்புல் மா புருடன். திருவின் நாயகனைத் திருக் கொண்டு காட்டி இருவரையும் நன்கு துலங்கவைத்ததனாலன்றே அத்திரு முன்பே திருவரங்கத்தில் நித்திய வாசஞ் செய்யுந்திருப்பேறு பெற்றான் இத்தமிழ் மறைதந்த வள்ளல் என்பர் பேரறிஞர்.
உலகம் போற்றும் பெற்றியரான தூப்புற்குலமணி தேவாதி தேவனான பேரருளாளனுடைய யாத்ரோத்ஸவாதிகளில் ஊதப் பெறுகிற திருச்சின்னத்தின் நாதநலம் இருக்கும் இருப்பை
அநுஸந்தித்து, அதுபோன்ற நாதவின்பத்தை நல்குமோ இதர தேவதைகளின் பிரயாணகாலத்தில் முழங்கப் பெறும் காஹளாதி வாத்தியங்கள் என்று அநுபவித்து, அந்த அதிமதுரநாதம் மற்றத் தேவதைகட்கு ஸாதாரணமல்லாமையினாலே பகவானுடைய
அஸாதாரண குணங்களை நிரூபிக்கக்கருதி அப்படிப்பட்ட உயர் குணங்களை உடைய பெருமாள் எழுந்தருளினார் என்றுகாட்டுவதாகத் திருவுள்ளம்பற்றி அருளிச் செய்துள்ளார் இம்மாலையை.ஏரணி கீர்த்தி இராமாநுசமுனி வண்மை போற்றும் சீரியனான இவ்வேதாந்த வாரியனின் “திருச்சின்னமாலை”யைச் சற்றுச் சிரமேல் அணிந்து அவ் அடியார்க்கு நல்லாரின் இன்னருள் பெற்று இன்புறுவோமாக. சேரவாரும் செகத்தீரே!நல்லன்பர்களே ! வம்மின்
தொண்டரடிப் பொடியாழ்வார் அருளிச் செய்தது ” திருமாலை “. “திருமாலை அறியான் திருமாலை அறியான்” என்பது மூதுரை. தென்னரங்க மணவாளர்க்கன்பு மிக்குச்
செப்பியது இந்நற்றிருமாலை நாற்பத்தைந்து பாசுரங்களடங்கிய பிரபந்தம். தேசிகனார் அருளாளப் பெருமாள் தேசின்திறத்தில் ஈடுபட்டுத் திருவாய் மலர்ந்தருளிய திருப்பதிகம் ” சின்னத்திருமாலை ” என்ப. பிரணவத்தைச் “ சிறுவேதம் ” (அமிருதாசுவாதினி. 2) என இவ்வேதாந்தவாரியர் குறிப்பதை இங்கு நினைக.-தூப்புல் துரந்தரனின் துய்ய தமிழ் இருபத்து நான்கு பிரபந்தங் களுள் திருவுடன் மாலையாக அமைந்து விளங்குவதே இவரது
செய்ய தமிழ் மாலையாகிய “ திருச்சின்னமாலை ”. இது ஒரு தனித் தமிழ்ப் பிரபந்தம்.
தம்மை இப்படி விசேஷித்துக் கடாக்ஷித்தருளின பேரருளாளனிடத்தில் கரை புரண்ட பக்திமேலிட்டுத் தம்முடைய திருமாளிகைக்குச் செல்லும்போது அத்திருச்சின்னத்தின்கம்பீர
மான ஓசை ஸர்வவேதார்த்தங்களையும் உத்கோஷிக்கிறாப் போலே ஸ்வாமியின் திருச் செவியில்பட அவற்றை ப்ரதிபாதித்து“ திருச்சின்னமாலை ” என்னும் பிரபந்தத்தைச் செய்தருளினார்
பெருமாள் கோவிலை-பேரருளாளரைப் ஒரு பஞ்சாசத்துச் முள்ள மீதன்பு
திருச்சின்னமாலை விருத்தம். நாடியே-எங்கள் பாடியே சூடியே-
திருச்சின்னமாலை சாத்தியே–சரணங்கள்.-
கரதலா மலகம் போல் வேதாந்தத்தைக் கரைகண்ட கண்டாவதாரர் நாளும்
நிரதராய்க் கச்சியைச்சூழ் திவ்யதேச நிலையெல்லாஞ் சேவித்து நிதமுந்தாமே
விரதராய்ப் பேரருளா ளரையுமின்னம் வெண்பரிமுகத் தாரையுமா ராதித்தே
வரதர்திரு வடிச்செந்தா மரையை வாழ்த்தி வந்திப்பார் திருமலையைச் சிந்திப்பாரே
-விருத்தம்.-(வேதாந்த தேசிக வைபவப் பிரகாசிகைக் கீர்த்தனை) என்பது காண்க.
வோதக் கடலேந்துலகமெலாங் காத்தபிரான் வந்தான்
200 வடவேங் கடத்தரசு வந்தான் -றொடர்கதியைக்
கைமாவி னுக்குமொரு காலமா வென்றருள்சே
201 வைமாத வப்பெருமான் வந்தான்-பைமா
வனந்த கருடா சலத்திருப்பான் வந்தான்
202 மனந்தனிலே வீற்றிருப்பான் வந்தா னினைந்து
பொழிவிழியா னந்தப்புலவர்பிரான் வந்தான்
203 வழிபுழுகு மெய்யுடையான் வந்தா-னழகொழுகு
நீல மலைகுனிய நின்ற பெரு மான்வந்தான்
204 மாலை யணிந்திலகு மால்வந்தான்-வேலைப்
புடவிலய மாகாமற்பொன்னுதரந் தாங்க
205 வடலிலையி லேதுயின்றான் வந்தான்-கடல்கடந்த
சீராமன் வந்தான் சிவனே செபித்தாலும்
206 வாரா விருந்தான் வரவந்தா-னேரலர்மேன்
மங்கை மணவாளன் வந்தான்வந் தானென்று
207 பைங்கனகச் சின்னம் பணிமாறக்-(திருவேங்கடவுலா .)
156 கருத்தி னருத்தி யினைக் கண்டு மகிழ்ந்து
மருத்தின் மகன் றோள்வந்தான் வந்தான்-திருத்திப்
157 பரவத்து நிர்ணயஞ்செய் பட்டர்பிரான் முன்னே
வரவயப் புள்ளில்வந்தான் வந்தான்-அரவ
158 உருவமரு வுங்கொடியோ னூருக்குத் தந்தை
மருகருக்காத்தூதுவந்தான் வந்தான்-உருகு
159 கடக்குஞ் சரங்கார்கக் கால்விசைத்தோடி
மடுக்கரைக்கு முன்வந்தான் வந்தான்-அடுக்கா
160 விதலையை யுற்ற வியன் மதலைக்காக
மிதிலை யதி லேவந்தான் வந்தான்—இதனின்
161 மனத்திற் கொடுமை கொண்ட மாதின் மொழியால்
வனத்தினிடை யேவந்தான் வந்தான்- சினத்திற்
162 ககனத்து வந்து கடுந்தவஞ்செய் மன்னன்
மகனுக்கு முன்வந்தான் வந்தான்-செகத்தோர்
163 புகழ்புட்பகத்தே பொருவி லொருதம்பி
மகிழ்வுற்றிட வந்தான் வந்தான்- மகிமை
164 மருவும் மணிவண்ணன் வந்தான் வந்தானென்
றொருவாது சின்னமுறைக்கத் திருவீதி-(தென் புதுவை மணிவண்ணனுலா.)
அசுவமேதயாக சாலைக்குச் செல்லச் செழு மணித்திண்டேர் ஏறினான் ஸ்ரீராம
பிரான்.
மங்கையர் வாழ்த்த மாகத ரேத்த மறைய வராசிகள் கூறப்
பொங்கிய கடலிற் புடைபரந் திரைத்துப் பொன்னகர்ச் சனம்புடை சுற்றப்
பங்கமல்வீரன் பங்கயக் கண்ணாற் பார்த்தபார்த்திடமெலாஞ் சனங்கள்
செங்கரங் கூப்பத் தேவர்களுவப்ப வேறினான் செழுமணித் திண்டேர்.
-(அசுவமேதயாகப்படலம். 72.)
அப்பொழுது திருச்சின்னங்கள் மாறி மாறி ஊதத்தலைப்பட்டன.
எங்ஙனமெனின்,
கம்புவைத் தரித்த கையிற் கார்முகந் தரித்தான் வந்தான்
அம்புயக் கண்ணன் வந்தான் அன்பருக் கன்பன் வந்தான்
தம்பியர்க் கினியான் வந்தான் தசரத ராமன் வந்தான்
உம்பருக் கமிழ்த முன்னாள் உதவியாவொருவன் வந்தான்.-(73)
மநுகுலம் விளங்கத் தோன்றி வரிசிலை யிளையானோடும்
முனியொடு போனான் வந்தான் முப்புர மெரித்த வில்லி
தநுவினை யறுத்துச் சீதை தனைக்கரம் பிடித்தான் வந்தான்
அனையவ ளுடனே மீண்டும் அயோத்தியி லடைந்தான் வந்தான்-(74)
தாயுரை தலைமேற் கொண்டு தையலை யுடனே கொண்டு
தீயவெங் கானஞ் சேர்ந்த செருவலி வில்லி வந்தான்
தூயமா முனிவன் முன்பு தோன்றிய தூயோன் வந்தான்
மாயமா ரீசன் மாள வரிசிலை வளைத்தோன் வந்தான்.-(75)
அநுமனை யடிமைகொண் டாங் காயிரங் கதிரோன் மைந்தற்
கினியனாய் வாலி மாள வெரிசரந் துரந்தோன் வந்தான்
நினைவதன் முன்ன மாழி| நீரெலா நெருப்பதாகக்
குனிசிலை வளைத்தான் வந்தான் கோசலை நாடன் வந்தான்.–(76)
குன்றினா லாழி கட்டிக் கொடுந்திறற் சேனை யோடு
சென்றிராக் கதரை யெல்லாஞ் செருக்களத் தவிய நூறித்
தன்றிற லழிந்து நின்ற தசமுகன் வலிமைகண்டங்
கின்றுபோய் நாளை வா வென்றியம்பிய விறைவன் வந்தான்.-(77)
முன்னநாஞ்சொன்ன நாளின் முடுகிநாஞ்செல்லோ மாயின்
வன்னியின் பரதன் வீழு மென்றுதன் மனத்தி லெண்ணி
அன்னவ னெரிவி ழாமல் அநுமனை முன்னே யேவிப்
பொன்னக ரடைந்தான் வந்தான் புவனமூன் றுடையான் வந்தான்.-(78)
என்று கூறி,
இசைந்துடன் மாறியூதத் தன்றுணை யிலாத வென்றித்
தசரத ராமன் தேர்மேல் பொன்றிகழ் மாடவீதி புகுந்தனன்-(79)என முற்றுவித்துள்ளார்.
மேற்குறித்த பாடல்களில் “வந்தான் ” என்றபதம் முதற் பாட்டில் ஆறு முறையும், இரண்டு முதல் நான்கு வரையிலுள்ள பாக்களில் முறையே மூன்று முறையும், ஐந்தாறாம் பாக்களில் ஒரு முறையும் காணப்பெறுகின்றது. “கம்பு ‘ (சங்கு) என்று ஆதியிற் றொடங்கியுள்ளதையும் ” கம்பன்” என்ற திருநாமத்தையும் ஆய்ந்து நோக்கி உண்மை தெளிக. அவ்வாறு பாசுரங்
களும் திருச்சின்னம் பரிமாறியதை விளக்குகின்றது.
வேதாந்த வாசிரியன் யாத்த ” திருச்சின்னமாலை பதினொன்று பாசுரங்கள் கொண்டது. இறுதிப்பாசுரம் நீங்கலாக இதர பத்துப்பாசுரங்கள் எண்சீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தங்
களாக வமைக்கப்பெற்று ஒவ்வொரு பாசுரத்திலும் “வந்தார்” எனும்பதம் எண் முறை வந்து, ஈற்றடியிறுதி ‘ வந்தார்தாமே ” என முற்றுவித்துள்ளது விசேடித்து அநுபவித்தற்குரியது. இறுதிப் பாசுரமும் அதே விருத்த வகையே. அதில்லையேல் இம் மாலைப் பொருள் எளிதில் அரியவியலாது.
இத்திருச்சின்னமாலை என்ற சீரிய நற்பிரபந்தம், மன்னு திரு மந்திரத்தின், வாழ்துவயத்தின் பொருளும், துன்னு புகழ்க் கீதைதனிற்சொன்ன வெண்னான்கின் பொருளும், இன்னபடி என்று உரைக்கும் செய்ய தமிழ்மாலை.
இதில், முதலாறு பாசுரங்கள் திரு மந்திரார்த்தத்தை வெளி யிடுகின்றன. அவற்றுள், முதல் மூன்று பாட்டுக்கள் பிரணவார்த்தத்தைப் பிரதி பாதிக்கின்றன. அவற்றுள், முதல் இரண்டு
பாசுரங்களால் பிரணவத்தில் உள்ள அகாரத்தின் அர்த்தம் கூறப் பெறுகின்றது. முதற்பாசுரத்தில், அனைத்தையும் படைத்தல் முதலிய தன்மைகளால் காரணத்வமும், நித்யஸூரிகளால் அநுப விக்கப்படுதல் முதலியவற்றாலும், இரண்டாம் பாசுரத்தில் வேதத்தைக் காத்தல் முதலியவற்றாலும் ரக்ஷகத்வமும் விளக்கப் பெற்றுள்ளன. மூன்றாவது பாசுரம் அகாரத்தின்மேல் ஏறி லோபித்துக்கிடக்கும் நான்காம் வேற்றுமையையும், உகாரமகாரங் களின் அர்த்தங்கள் இருக்கும்படியையும் விளக்கும். நான்கு முதல் ஆறுவரையுள்ள பாக்கள் நமச்சப்தத்தின் அர்த்தத்தையும், நாராயணசப்தார்த்தத்தையும், நாராயண சப்தத்தின் மீதுள்ள நான்காம் வேற்றுமையின் பொருளையும் கூறும். துவயப் பொருளை வெளிக்காட்டுவது ஏழாம் பாட்டு. சரம சுலோகக் கருத்தைச் சுருக்கிக் கூறுவது எட்டாம் பாட்டு. அச்சுலோகரத்தினத்தில் மாம், அஹம்’ என்ற சொற்களால் தோற்றுகிற குணங்களை அவனுடைய லீலைகளைக் கொண்டு நிரூபிப்பது ஒன்பதாம்பாட்டு.
கீழ்க்கூறிய ரஹஸ்யார்த்தங்களை யெல்லாம் பேரருளாளன் விஷயத்திலே அநுபவித்து அர்ச்சாவதார வைபவத்தைப் பரக்கப் பேசுகின்றது அடுத்த பத்தாம் பாட்டு. நிகமனப் பாசுரம் இம் மாலைச் சுருக்கத்தையும், சங்கதியையும், பேரருளாளன் பிரபாவ மான இந்நன்னூல் சிற்றின்பம் இசையாதார்க்கு இனிதாம் என்பதையும் நன்கு புலப்படுத்துகின்றது.
ரஹஸ்யத்ரய ஸாரார்த்தத்தை விரிவாகவும், சுருக்கமாகவும் பல பிரபந்தங்களில் தனக்குவமையில்லாத சாகாந்த தேசிகன் அருளிச் செய்வர்.
” மூன்றி லொருமூன்று மூவிரண்டு முந்நான்குந்
தோன்றத் தொலையுந்துயர்.”-(ரஹஸ்யபதவீ. தேசிகமாலை, அமிருதரஞ்சனி 4.)
என்ற குறட்பா ஒன்றே இதற்குத்தக்க சான்று பகரும்.
ஏகாந்த மூன்று மெழிலா லுரைசெய்து
மாகாந்தஞ் செய்தருளும் வள்ளலாய்-சாகாந்த
தேசிகனார் தூப்புற் றிருவேங்க டேசகுரு
வாசகமே யெங்களுக்கு வாழ்வு.
[ திருமந்திரம், துவயம், சரமசுலோகம் என்ற மூன்று ரஹஸ்யங்களையும் அழகோடு பேருரை வகுத்து பெருமையுள்ள காந்தம் என்னும் உலோகத்தைப்போல் பிறர் மனத்தைக் கவர்ந்து அவர் உஜ்ஜீவிக்குமாறு அருள் புரிகின்ற வள்ளலாகி வேதாந்த தேசி கன் என்று பிரசித்திபெற்ற தூப்புல்திருவேங்கட முடையானுடைய அருளிச் செயல்களே எங்களை உஜ்ஜீவிக்கச் செய்யும்.]
மூன்று ரஹஸ்யங்களின் பொருள் விளக்கும் திருச்சின்னமாலை யமைப்பில் ‘ இவ்வாறுள்ளவர், இன்ன குணம்செயல் உள்ளவர் வந்தார்‘ என்று ஒவ்வோரடியிலும் வந்துள்ளதை நோக்க, ஒவ்வொரு தொடரும் ஆதியம் பகவானாகிய திருமாலது ஒரு ” திருநாமம்” ஆக அமைந்துள்ளதைக் காண்க–
1) ஈர் உலகைப் படைக்க எண்ணி யிருந்தார்.
(2) எழில் மலரோன் தன்னை அன்றே ஈன்றார்.
(3) மாருதி மண் நீர் ஆகும் மாயோர்
(4)வானொடு எரி ஆகும் மறை யோர்.
(5) சூரியர் தம் முடன் துலங்கு தூயோர். (6) சுரர்களுக்கு அன்று அமுது அருள் சுந்தரனார். (7) வாரிதி சூழ் வையகம் வாழ் வித்தார்.
(8) வண்மையுடன் வரம் தருவார்.
(9) அருமறையை ஊழிதனில் காத்தார்.
(10) அது தன்னை அன்று அயனுக்கு அளித்தார்.
(11) தரும வழி அழியாமல் காப்பார்.
(12) தாமரையா ளுடன் இலங்கும் தாதை
(13) திருவுரையாய்த் தாம் பொருளாய் நிற்பார்.
(14) திரு அருளால் செழும் கலைகள் தந்தார்.
(15) மருவலர்க்கு மயக்கு உரைக்கும் மாயோர்.
(16) வான் ஏற வழி தந்தார்.
(17) அனைத்து உலகும் காக்கும் அருளாளர் . (18) அனைத்துக்கும் அதிபதியாய் நிற்பார்.
(19) தினைத்தனையும் திருமகளை விடாதார்
(20) தேசு ஒத்தார் மிக்காரும் இல்லார்.
(21) நினைக்க நமக்கு இன் அறிவு தந்தார்.
(22) நிலை நின்ற உயிர் தோன்ற நினைந்தார்.
(23) எனக்கு இவர் நான் இவர்க்கு என்ன இனியார்.
(24) எழுத்து ஒன்றில் திகழ நின்றார்.
(25) நாம் வணங்கத் தாம் இணங்கா நிற்பார்.
(26) நம்மை அடைக்கலம் கொள்ளும் நாதர் . (27) நாம் எமக்கு ஆம் வழக்கு எல்லாம் அறுத்தார்.
(28) நமக்கு இது என்று உரையாமல் வைத்தார்.
(29) சேமம் எண்ணி எம்மை அன்பர்க்கு அடைத்தார்.
(30) செழும் தகவால் திண்சரணாம் ஈசர்.
(31) தீவினையை அனைத்தும் தாம் தவிர்ப்பார்.
(32) எமைத் தமக்கே யாய்க்கொள்வார்.
(33) உலகு எல்லாம் உள்ளே வைத்து உமிழ் ந்தார்.
(34) உலகு உடம்பாய்த் தாம் உயிராய்நின்றார்.
(35) அலை கடலாய் ஆனந்தம் அடைந்தார்.
(36) அளவு இல்லா அருள் ஆழிப் பெருமாள்.
(37) திலகம் எனும் திருமேனிச் செல்வர்.
(38) செழும் குணங்கள் இரு மூன்றும் உடையார்.
(39) இலகு சுடர் முழுநலம் ஆம் இனியார்.
(40) எல்லார்க்கும் கதி ஆனார்.
(41) அருளாலே விலங்குஇரண்டும் அழிப்பார்.
(42) அம்சிறையைக் கழித்துஅருளும் அன்பர்.
(43) மருள்வாரா நம்மைக் காப்பார்.
(44) வான்ஏற வழிநடத்தி வைப்பார்.
(45) தெருள்ஆரும் தெளிவிசும்பு தருவார்.
(46) திண்கழற்கீழ் வாழ்ச்சிநமக்கு அருள்வார். (47) பொருளான அடிமைநமைக் கொள்வார்.
(48) பிரியாமல் காத்து அளிப்பார்.
(49) அகலகிலாத் திருமகளார் அன்பர்.
(50) அடிஇரண்டும் ஆறாகத் தருவார்.
(51)புகல்இல்லார் புகல்ஆகும் புனிதர்.
(52) பொன்உலகில் திருவுடனே திகழ்வார்.
(53) அகிலம்எலாம் ஆனந்தம் ஆனார்.
(54) அடியிணைக்கீழ் வைத்து அடிமை கொள்வார்.
(55) பகல்நடுவு இரவுஅழைக்க வல்லார்.
(56) பகல்ஒன்றாய் இரவு அழித்தார்.
(57) தருமன்விடத் தாம்தூது போனார்.
(58) தரணிபொறாத் திண்பாரம் தவிர்த்தார். (59) அருமறையின் பொருள்அனைத்தும் விரித்தா.
(60) அஞ்சினநீ என்னைஅடை என்றார். (61) தருமம்எலாம் தாம்ஆகி நிற்பார்.
(62) நம்வினை அனைத்தும் தாமேதவிர்ப்பார்.
(63) பரம்எனது நீபுலம்பேல் என்றார்.
(64) பார்த்தனுக்குத்தேரூர்ந்தார்.
(65) வஞ்சனைசெய் பூதனையை மாய்த்தார்.
(66) மல்லர்மத கரிமாள மலைந்தார்.
(67) கஞ்சனைக் கடும்சினத்தால் போர்கடிந்தார்.
(68) கண்நுதல்முன் வாணன்தோள் கழித்தார்.
(69) வெம்சொல்தர வீடுகொடுத்து உகந்தார்.
(70) விலக்கு இல்லா வழிநடத்தவிரைந்தார்.
(71) பஞ்சவரைப் பலவகையும் காத்தார்.
(72) பாஞ்சாலி குழல்முடித்தார்.
(73) அத்திகிரி அருளாளப் பெருமாள்.
(74) ஆனைபரி தேரின்மேல் அழகர்.
(75) கச்சிதனில் கண்கொடுக்கும் பெருமாள்
(76) கருதவரந் தரும்தெய்வப் பெருமாள் . (77) முத்திமழை பொழியும்முகில் வண்ணர்.
(78) மூலமென ஓலம்இட வல்லார்.
(79) உத்தரவே திக்குள்ளே உதித்தார்.
(80) உம்பர்தொழும் கழல் உடையார்.
“ஸ்ரீ ஹஸ்திகிரி மாஹாத்ம்யம் ” என்று ஒரு ரஹஸ்யம் ஸ்ரீ வேதாந்ததேசிகனால் மணிப்பவள நடையில் அருளிச் செய்யப் பெற்றுள்ளது. அதனை “மெய்விரத நன்னிலத்து மேன்மை “(29) என்று அதன் இறுதிப்பாசுரம் கூறும். ஸத்யவரதம் என்னும் சிறந்த க்ஷேத்ரத்தின் பெருமை என்பது அத்தொடரின் பொருள். மெய்விரதம் ஸத்யவ்ரதம். இத்திருப்பதி காஞ்சீபுரம், ஹஸ்திகிரி, பெருமாள்கோயில் எனவும் வழங்கப்பெறும். இந்தப்
புண்ணியதலத்தில் அநுஷ்டிக்கப்படும் வ்ரதங்கள் முதலிய புண்ய கர்மங்களுக்கு உடனேபலன் கிடைப்பது நிச்சயமாதலின் ‘மெய் விரதம்’ எனப்பெயர் வந்தது என்பர்.
இந்தரஹஸ்யத் தொடக்கம் பின்வருமாறு :
” ஸகலலோக ஹிததம விஷய விவித வேதாந்தோப ப்ரஹ் மணங்களான புராணங்களில் முக்யதம மாகையாலே முற்பட எண்ணப்பட்ட ப்ரஹ்மாண்டபுராணத்தில் ஸத்யவரத க்ஷேத்ர மாஹாத்ம்ய முகத்தாலே ஸந்தர்சிதமான பேரருளாளன் பெருமையை பாவுகரான பகவந்நிஷ்டருடைய ஹ்ருதயரஞ்சநார்த்தமாக மநஸ்ஸிலே பாவமும், வாக்கிலே ராகமும், கரத்திலே தாளமுமாக பாவ ராக தாளங்களை வகுத்த பரத சாஸ்திரத்தின்படியேபண்ணும் இசையும் திகழப் பார்க்கின்றோம். இத்தைக் குறிக்கொண்டு கேட்டருள்வீர்மின்.”
[ஸகலலோக – எல்லாவுலகங்களுக்கும்; ஹிததமவிஷய – உயர்ந்த நன்மையைப்பற்றிக் கூறுகிற; விவித – அநேகவிதங்களான; வேதாந்த – வேதாந்தங்களின் அர்த்தங்களை; உபப்ரஹ்மணங்களான – விசதமாக நிரூபிக்கிற; ஸந்தர்சிதமான – காட்டப்பெற்ற; பாவுகர் – ரஸிகர் ; பகவந்நிஷ்டர் – பாகவதர்; ஹ்ருதயரஞ்சநார்த்தம் மனத்தில் சந்தோஷம் உண்டாவதற்காக ; வகுத்தவிரிவாக நிரூபிக்கப்பெற்றிருக்கிற; பரத சாஸ்திரம் – பரதமுனி
யால் இயற்றப்பெற்றது; பண்ணும் – கானமும்; இசையும் -ஷட்ஜாதிஸ்வரங்களும்; திகழ – பிரகாசிக்கும்படி ; குறிக்கொண்டு-ஸாவதானமாக.]
இந்தமாஹாத்ம்ய மத்தியில்,
“இப்படி வேகவதியாய் வந்த ஸரஸ்வதியினுடைய வேகம் அடங்கும்படி வெஃகாவில் துயிலமர்ந்த வேந்தன் கடாக்ஷிக்கக் கலக்கமற்றுவந்த ஸரஸ்வதியையும் கூட்டிக்கொண்டு ப்ரஹ்மா அச்வமேதயாகத்தை நடத்த வபாஹோமம் ப்ரவ்ருத்தமான வளவிலே ஆயிரம்கோடி ஆதித்யர்கள் உதித்தாப்போலே உத்தரவேதி மத்யத்திலே ஒரு மஹாதேஜஸ்ஸு தோன்றிற்று.(வெஃகா – திருவெஃகா என்னும் க்ஷேத்திரம் ; துயில் அமர்ந்த வேந்தன் – அறிதுயிலமர்ந்த ராஜாவாகிய ஸ்ர்வேச்வரன் ; கலக்கமற்று– பிரணய கோபம் நீங்கி.)” இப்படி பெருமாள் ஆவிர்பவித்தருளினபடிக்கு நித்யஸுரிகள் முகத்தாலே காளங்கள் வலம்புரி கலந்தெங்கும் ஆர்த்தன .(ஆவிர்பவித்தருளினபடிக்கு – அத்தோற்றத்தின் ஏற்றத்திற்குத் தகுந்தபடி; நித்யஸூரிகள் முகத்தாலே – நித்யஸூரிகளுடைய வாயினால் ஊதப்பெற்ற; எங்கும் – எல்லாத்திக்குக்களிலும்; கலந்து -வியாபித்து; ஆர்த்தன – சப்தித்தன.)
அத்திகிரி யருளாளப் பெருமாள் வந்தார்
ஆனைபரி தேரின்மே லழகர் வந்தார்
கச்சிதனில் கண்கொடுக்கும் பெருமாள் வந்தார்
கருதவரம் தரும்தெய்வப் பெருமாள் வந்தார்
முத்திமழை பொழியும்முகில் வண்ணர் வந்தார்
மூலமென ஒலமிட வல்லார் வந்தார்
உத்தரவே திக்குள்ளே உதித்தார் வந்தார்
உம்பர் தொழும் கழலுடையார் வந்தார் தாமே-என மறைமுடித் தேசிகனார் உயர்விருத வருளாளப் பெருமாள் தேசின் திறத்தில் திருச்சின்னமாலை பாடியிருப்பது நோக்கத்தக்கது.
இங்குக் காட்டிய இரண்டு பாசுரங்களில் முதற் பாசுரத் திலுள்ள பின்னிரண்ட்டிகள் “திருச்சின்ன மாலை ” யில் உள்ள இரண்டாவது பாசுரத்தின் பின்னிரண்டடிகளே. ” அத்தி
கிரியருளாளப் பெருமாள் வந்தார் ” என்ற இரண்டாம் பாசுரம் “ திருச்சின்ன மாலை ” யின் பத்தாவது பாசுரமாக அங்ஙனே மிளிர்கின்றது.
அத்திகிரி அருளாளப் பெருமாள் உத்தரவேதிக்குள்ளே உதித்தவுடன் திருச்சின்னம் பரிமாறியதை வெகு கம்பீரமாக நன்கு உணர்த்துகின்றன இப்பாக்கள்.
“திருச்சின்னமாலை ” யில் முன்னோர் மொழி பொன்னேபோல் போற்றியுள்ள பெற்றி காண்பாம்.
ஈருலகைப் படைக்க வெண்ணி யிருந்தார் எழில் மலரோன் றன்னை யன்றே யீன்றார் (1)
என்பதை
தேவும் எப்பொருளும் படைக்க
பூவல் நான்முகனைப் படைத்த
தேவன் எம்பெருமானுக் கல்லால்
பூவும் பூசனையும் தகுமே?-(திருவாய்மொழி 2-2-4)-திருவுருவு கிடந்தவாறும் கொப்பூழ்ச்
செந்தாமரை மலர்மேல் திசைமுகன் கருவுள் வீற்றிருந்து படைத்திட்ட கருமங்களும் -(திருவாய்மொழி 5-10-8)-என்பனவற்றோடு ஒப்பிடலாம்.-
நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய்நெடு வானாய்
சீரார் சுடர்க ளிரண்டாய்ச் சிவனாய் அய னானாய்!-(திருவாய்மொழி 6-9-1)-தீயாய் நீராய் நிலனாய் விசும்பாய்க் காலாய் நீயாய் நீநின்ற வாறு இவை யென்ன நியாயங்களே !
-(திருவாய்மொழி 7-8-1)-என்பனவற்றை
மாருதமண்ணீராகு மாயோர் வானோடெரித்தாமாகு மறையோர்-2- என்பவற்றிற்கு மூலமென்னலாம்.அயர்வறு மமரர்கள் அதிபதி–தூயானைத் தூய மறையானை
-(பெரிய திருமொழி 11-7-3)-என்பதன் வியாக்கியானமாக-சூரியர்தம் முடன் துலங்கு தூயோர்-எனவமைத்தார் போலும்.
பொங்கு நீள்முடி அமரர்கள் தொழுதெழ அமுதினைக் கொடுத்து அளிப்பான்–(பெரிய திருமொழி 5-3-6) என்ற மங்கையர் கோன் பாடல்-சுரர்களு க்கன் றமுதருள் சுந்தரனார்
என வேற்றுருவுடன் பொலிந்து நிற்கின்றது.-அமரர்க்கு அமுதீந்த ஆயர்கொழுந்து-(திருவாய்மொழி 1-7-9)என்பதும் அநுஸந்தேயம்.
வசையில் நான்மறை கெடுத்த அம்மலரயற்கு அருளிமுன் பரிமுகமாய்
இசைகொள் வேதநூலென் றிவை பயந்தவனே ! -(பெரிய திருமொழி-5-3-2)
என்ற வேல் வலவன் பாசுரத்தையும் அதுதன்னை அன்று அயனுக்கு அளித்தார்-2-
என்ற அடிகளையும் நோக்குக.
எனக்கே யாட்செய் எக்காலத்தும் என்றுஎன்|
மனக்கே வந்து இடை வீடின்றி மன்னி
தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே
எனக்கே கண்ணனையான்கொள் சிறப்பே.-(திருவாய்மொழி 2-9-4)
என்ற வண்குருகூர்ச் சடகோபன் திருவாய் மலர்ந்தருளிய பாசுரத்தின் மூன்றாவதடியை
தமக்கேயா யெமைக் கொள்வார் (4) எனப் பொன்னே போல் போற்றி யுள்ளார் தூப்புற்றூயோன்.
உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் மணங்கூடியும்
கண்ட வாற்றால் தனதே யுலகென நின்றான் தன்னை
வண்தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே.-(திருவாய்மொழி 4-5-10)
ஆதியாகி அகலிடம் படைத்து உண்டுமிழ்ந்து கடந்திடந் திட்ட
சோதி நீள்முடி யாய்! தொண்ட னேன்மது சூதனனே !-(திருவாய்மொழி 7-1-3)
ஞாலமுற்றும் உண்டுமிழ்ந்த நாத னென்றும்-(பெரிய திருமொழி 4-8-6)
கஞ்சனைக் கொன்று அன்று உலகமுண் டுமிழ்ந்த கற்பகத்தை/ -(பெரிய திருமொழி 5-6-6)
என்ற ஆழ்வார்கள் அருளிச் செயல்களின் ஸங்க்ரஹமே-உலகெல்லா முள்ளேவைத் துமிழ்ந்தார் (5) என்ற வேதாந்த வாசிரியரின் வாய்மொழியாக மலர்ந்த
தென்னலாம்.
திடவிசும் பெரி வளி நீர்நிலம் இவை மிசை
படர் பொருள் முழுவது மாய் அவை யவை தொறும்
உடல் மிசை யுயி ரெனக்கரந்து எங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவை யுண்ட சுரனே —-(திருவாய்மொழி 1-1-7)உம்முயிர் வீடுடையான்-(திருவாய் மொழி 1-2-1) என்ற குருகைநாதன் வாய் மொழிகளின் ஸாரார்த்தமே-உலகுடம் பாய்த் தாமுயிராய் நின்றார்-5- என்று விளங்குகின்ற தென்க.
உயர் வற வுயர் நலம் உடையவன்-(திருவாய்மொழி 1-1-1) என்றதன் கருத்து
அலை கடலா யானந்த மடைந்தார் (5)
பிணக்கற அறு வகைச் சமயமும் நெறியுள்ளி யுரைத்த
கணக்கறு நலத்தனன் அந்தமி லாதியம் பகவன்-(திருவாய்மொழி 1-3-5)
என்பதை
செழுங்குணங்கள் இருமூன்றும் உடையார் (5) என ஷாட்குண்யபரி பூர்ணராய் (ஜ்ஞானசக்தி பலைச்வர்ய வீர்ய தேஜஸ்ஸு) நிரூபிதஸ்வரூப விசேஷணங்களையும் ஸ்வரூபநிரூபகந்தர் கதமானவ மலத்வத்தையும் கூறுகின்றார்.
இனனுணர் முழுநலம்--(திருவாய்மொழி 1-1-2)- ஒளிவரு முழுநலம்-(திருவாய்மொழி 1-3-2)
என்பனவற்றின் வியாக்கி யானமாக–இலகு சுடர் முழுநலமா மினியார்-(5)என்கின்றார் வேதாந்த குரு.
திருமெய்யுறைகின்ற செங்கண் மால் நாளும்
இருமை வினைகடிந்து இங்கு என்னை யாள்கின்றானே.-(திருவாய்மொழி 10-4-2)
இன்று தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான்
தேனேய் பொழில் சூழ் திருப்பேர் நகரானே.-(திருவாய்மொழி 10-8-5) என்ற ஆழ்வார் பாசுரங்களையும்-தாமனைத்துந் தீவினையைத் தவிர்ப்பார் (4)nஎன்பதனோடு ஒப்பிடுக.
அருள்பெறுவார் அடியார் தம் அடியனேற்கு ஆழியான்
அருள்தருவான் அமைகின்றான் அது நமது விதிவகையே -(திருவாய் மொழி 10-6-1)
மண்கொள் உயிர்க்கெல்லாம் ஞாலத்து அருள் செய்யும் வானவ ரீசனை-(திருவாய்மொழி 3-6-11)என்ற பரசுரங்களின் கருத்து-அளவில்லா வருளாழிப் பெருமாள் (5) என்பதிற்றிகழ்கின்றது.-அருளாலே விலங்கிரண்டு மழிப்பார்-6-அஞ்சிறையைக் களித்தருளு மன்பர்-6-என்பனவும் அதைச் சார்ந்ததே.)
வானேற வழிதந்த வாட்டாற்றான் -(திருவாய்மொழி 10-6-5) என்றதே வானேற வழிநடத்தி வைப்பார்-(16)என விரிந்தது போலும்
விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான்--(திருவாய்மொழி 10-6-3) தெளிதாகிய சேண்விசும்பு தருவானே.-(திருவாய்மொழி 10-8-4)–நீ அவர்க்கு வைகுந்த மென்றருளும் வான். -(பெரிய திருவந்தாதி 53) என்ற ஆழ்வார்களின் அருளிச் செயல்களே
தெருளாருந் தெளிவிசும்பு தருவார் (6) என புத்துருக் கொண்டு நிற்கிறது.
அகலகில்லேன் இறையு மென்று அலர்மேல் மங்கை யுறைமார்பா !-(திருவாய்மொழி 6-10-10)-கோலமலர்ப்பாவைக்கன் பாகிய என் அன்பே யோ!-(திருவாய்மொழி 10-10-7)-என்ற ஆழ்வார் செய்யதமிழ் மாலைகள்-அகலகில்லாத் திருமகளா ரன்பர்-7- –தினைத்தனையுந் திருமகளை விடாதார்-2-என்ற தேசிகனார் மொழிகளாக மிளிர்ந்தன.
ஆறெனக்கு நின்பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்-(திருவாய்மோழி 5-7-10)என்ற குருகூர்ச் சடகோபன் சொல்லோடு அடியிரண்டி மாறாகத் தந்தார் (7) என்பது ஒப்பு நோக்கத் தகும்.
அடிக்கீழமர்ந்து புகுந்து அடியீர்! வாழ்மின் என்றருள் கொடுக்கும் —(திருவாய்மொழி 6-10-11)-அருளா தொழிவாய் அருள்செய்து அடியேனைப் பொருளாக்கி உன்பொன்னடிக்கீழ்ப் புகவைப்பாய்-(திருவாய்மொழி 9-8-8)-சன்ம சன்மாந்தரம் காத்து அடியார்களைக் கொண்டு போய் தன்மை பெறுத்தித் தன் தாளிணைக் கீழ்க் கொள்ளும் அப்பனை-(திருவாய்மொழி 3-7-7)என்றசடகோபன் வாய்மொழிகள் திண்கழற்கீழ் வாழநமக் கருள்வார் (6) என்ற தேசிகனார் திருவாக்காக மலர்ந்தது என்னலாம்.
பாழியால் மிக்க பார்த்தனுக் கருளிப் பகலவ னொளிகெட பகலே
ஆழியால் அன்றங்கு ஆழியை மறைத்தான் அரங்கமா நகரமர்ந்தானே. -(பெரிய திருமொழி 5-7-8)என்ற மானவேற் கலியன் வாயொலிகள்-பகல்நடுவே யிரவழைக்க வல்லார்-7-
என்ற மறைமுடி ஆசிரியன் வாக்காக ஒலிக்கின்றன.
வல்வினை தீர்க்கும் கண்ணனை-(திருவாய்மொழி 4-4-11)-தீராவினைகள் தீரஎன்னை யாண்டாய் !-(திருவாய்மொழி 5-8-10)-என்ற ஆழ்வார் பாசுரங்களையும்
தாமேநம் வினையனைத்துந் தவிர்ப்பார் (8) என்பதனோடு ஒப்பு நோக்கத்தகும்.
கஞ்சன்விட்ட வெஞ்சினத்த களிறடர்த்த காளையென்றும்
வஞ்சமேவி வந்தபேயின் உயிரையுண்ட மாயனென்றும்-(பெரிய திருமொழி 4-8-2)-பேய்மகள், துஞ்சநஞ்சு சுவைத்துண்ட தோன்றலை கஞ்சனைத் துஞ்சவஞ்சித்த வஞ்சனை
-(பெரிய திருமொழி 7-10-8)-என்ற கலியன் உரை செய்தவற்றையும்,
வஞ்சனைசெய் பூதனையை மாய்த்தார்9-கஞ்சனைப் போர்க் கடுஞ்சினத்தாற் கடிந்தார்)-9-
என்பனவற்றையும் ஒப்பிடலாம்.
வாணபுரம் புக்கு முக்கட் பிரானைத் தொலைய வெம் போர்கள் செய்து
வாணனை ஆயிரம் தோள்துணித்தான் -(திருவாய்மொழி 7-10-7) என்ற ஆழ்வார் பாசுரத்தை
கண்ணுதல்முன் வாணன்தோள் கழித்தார் (9) என்பது அடியொற்றியுளதென்னலாம்.
அன்று ஐவர்க்கு அருள்செய்த நெடியோன் -(திருவாய்மொழி 3-7-11)
என்ற ஆழ்வார் பாசுரமும்-பஞ்சவரைப் பலவகையுங் காத்தார்(9) என்றதும் ஒருபடித்தே.
கன்னலே! அமுதே ! கார்முகில் வண்ணனே ! -(திருவாய்மொழி 7-1-2) என்பர் நம்மாழ்வார்.
முத்திமழைபொழியு முகில் வண்ணர் (10)என விளக்கியுள்ளார் தூப்பு குலவிளக்கு.
ஆழ்வார்கள் திருவாய் மலர்ந்தருளிய தேனை உண்டுகளித்து பிறர் உய்யுமாறு பிரபந்தம்
அருளி அத்தேனைச் சேமித்து வைத்தவரே நம் தூப்புற்குலமணி என்பது தெற்றென விளங்கும்.
திருச்சின்னமாலை யாகிய இவ்வரிய பிரபந்தத்தில் அநேக மணிகள் உள்ளன.-
பெரிய பிராட்டியாரையும் அத்திருமங்கையின் கேள்வனான திருமாலையும் சேர்த்து அநுபவிப்பது-தாமரையாளுடனிலங்குந் தாதை-2-
திருவுரையாய்த்தாம் பொருளாய் நிற்பார்-2-
தினைத்தனையுந் திருமகளை விடாதார்-3-
அகலகில்லாத் திருமகளாரன்பர்-7-
பொன்னுலகில் திருவுடனே திகழ்வார்-7-
அருள்வரதனே “காக்குங் கடவுள் ” என்பதை,
அருமறையை யூழிதனிற் காத்தார்-2-
தருமவழி யழியாமற் காப்பார்-2-
அனைத்துலகுங் காக்கும் அருளாளர்-3-
மருள் வாராவகை நம்மைக் காப்பார்-6-பிரியாமற் காத்தளிப்பார்-6-
பஞ்சவரைப் பலவகையுங்காத்தார்-9-
அத்திகிரித் திருமாலின் அருண்மையை வெளிப்படுத்தும் பகுதிகளாவன :-
சுரர்களுக் கன்றமுதருள் சுந்தரனார்-1-
வாரிதிசூழ் வையகம் வாழ்வித்தார்-1-
அதுதன்னை யன்றயனுக் களித்தார்-2-
திருவருளாற் செழுங்கலைகள் தந்தார்-2-
சேம மெண்ணியெம்மையன்பர்க் கடைத்தார்-4-
செழுந்தகவால் திண்சரணாமீசர்-4-
அளவில்லா வருளாழிப் பெருமாள்-5-
அருளாலே விலங்கிரண்டு மழிப்பார்-6-
திண்கழற்கீழ் வாழ்ச்சி நமக்கருள்வார்-6-
பிரியாமற் காத்தளிப்பார்-6-
அத்திகிரி யருளாளப் பெருமாள்-10-
உயர்விருத வருளாளப் பெருமாள்-11-
அவரது
அவர் “ மாயோன்”என்பது,
மாருத மண்ணீராகு மாயோன்-1-
மருவலர்க்கு மயக்குரைக்கு மாயோன்-2-
பேரருளாளனே “சர்வலோக நாயகன் “ என்பதை
அனைத்துக்கு மதிபதியாய் நிற்பார்-3-
நம்மை யடைக்கலங் கொள்ளுநாதர்-4-
நாம் வணங்கத்தாம் வணங்கா நிற்பார்-4-
செழுந்தகவால் திண்சரணாமீசர்-4–
அவரே ஆதியம்பகவன் என்பதும், ஸர்வசக்தன் என்பதும், சரணாகதவத்ஸலன் என்பதும்
மூலமென வோலமிட வல்லார் வந்தார்-10-
செழுங்குணங்களிரு மூன்றுமுடையார்-5- என்பது அவன் பகவச்சப்தவாச்யன் எனக் குறிக்கின்றது.)
அவரது வடிவழகு
சுந்தரனார்-1-
தேசொத்தார் மிக்காருமிலாதார்-3-
திலகமெனுந் திருமேனிச் செல்வர்-5-
முத்திமழை பொழியு முகில்வண்ணர்–10-என்பனவற்றிற்பொலிந்து திகழ்கின்றது.
அருளாளப் பெருமாள் “இனியார் ” என்பதை,
எனக்கிவர் நானிவர்க் கென்னவினியார்-3-
இலகுசுடர் முழுநலமாமினியார்–5-என்று விளக்குகிறார் விசுவாமித்திரகுலவிப்பிரர்.
அவன் ‘ முத்திதரும் அண்ணல் ” என்பது
வானேற வழிதந்தார்-2-
வீடு கொடுத்துகந்தார்-9-
முத்தி மழை பொழியு முகில்-10- என்பனவற்றிற் கொண்டாடப்பெறுகின்றது.
அவரே கண்ணனாய்த் திருவவதரித்தவர் “-என்பது பின் வரும் அடிகளால் வெளிப்பபடை.
பகல் நடுவேயிர வழைக்க வல்லார்-7-
தருமன் விடத்தாந்தூது போனார்-8-
தரணி பொறாத்திண்பாரந்தவிர்த்தார்-8-
அருமறையின் பொருளனைத்தும் விரித்தார்-8-
அஞ்சின நீ யென்னையடை யென்றார்-8-
தரும மெலாந்தாமாகி நிற்பார்-8-
தாமே நம் வினையனைத்துந்தவிர்ப்பார்-8-
பரமெனது நீ புலம் பேல் என்றார்-8-
பார்த்தனுக்குத் தேரூர்ந்தார்-8-
வஞ்சனைசெய் பூதனையை மாய்த்தார்-9-மல்லர் மதகரி மாள மலைந்தார்-9-
கஞ்சனைப்போர் கடுஞ்சினத்தாற் கடிந்தார்-9-
கண்ணுதன்முன் வாணன்றோள் கழித்தார் -9-வெஞ்சொல்தர வீடு கொடுத்து கந்தார்-9-
பஞ்சவரைப் பலவகையுங் காத்தார்-9-
பாஞ்சாலி குழல் முடித்தார் -9-
அவரே ” நான்முகற் பயந்த நாரணன் ” என்பதை
எழில் மலரோன்றன்னை யன்றேயீன்றார்-1-
அது தன்னை யன்ற யனுக்களித்தார்-2- என்பனவற்றிற் காட்டுகின்றார்.
முத்திமழை பொழியுமுகில் (10) என்பது எதிகட்கிறைவரான பெரும்பூதூர் வந்த வள்ளலைக்
குறிப்பதாகக் கருதுவது இழுக்காகாது.
அத்திகிரி அருளாளப் பெருமாள் வந்தார். ஆனைபரி தேரின்மே லழகர் வந்தார் (10)-ஆனைமேலழகர், பரிமேலழகர், தேரின் மேலழகர் என்ற திருநாமங்களின் இடையிலுள்ளதான தோரழகு மோரழகே-திருக்குறட்குச் சீரிய உரையிட்ட பரிமேலழகர் ஸ்ரீ காஞ்சிமா நகரத்திலுள்ள ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோயில் அருச்சக பரம்பரையிற் பிறந்தவர் ; வைணவ சமயத்தினர்-பதினொன்றாம் நூற்றாண்டுக்கும் பதினான்காம் நூற்றாண்டுத்தொடக்கத்துக்கும் இடைப்பட்ட காலமொன்றே பரிமேலழகர்க்கு
உரியது என்பது சாஸந ஆராய்ச்சியாளர் கருத்து.-பரிமேலழகியன் என்பது, குதிரை நம்பிரான் மேல் அலங்காரத் திருக்கோலங்கொண்டருளியவர் என்ற பொருளதாய்க் கச்சி அருளாளப் பெருமாளைக் குறிப்பதாம். சித்திரா பெளர்ணிமை முதலிய திருவிழாக் காலங்களில் அப்பெருமான் பரிமேலழகியாராகவும் ஆனைமேலழகியாராகவும் காட்சி தருந்திருக்கோலம் இன்றும் தரிசிக்கத்தக்கது.
பதத் தொகுதி அழகு
எழில் மலரோன்-1-
துலங்கு தூயோர்-1-
அருளாழிப் பெருமாள்-5-
திலகமெனுந்திருமேனி-5-
சுடர் முழுநலம்-5-
அருளுமன்பர்-6-
வழி நடத்தி வைப்பார்-6-
மாளமலைந்தார்-9-
ஆனைபரி தேரின் மேலழகர்-10-
முத்தி மழை பொழியுமுகில்-10-
உம்பர்தொழுங் கழலுடையார்-10–என்பன காண்க.
மோனையழகு
வண்மையுடன் வரந்தருவார் வந்தார்தாமே-1-
அது தன்னையன் றயனுக்களித்தார்-2
மருவலர்க்கு மயக்குரைக்கு மாயோர்-2-
வானேற வழிதந்தார் வந்தார்-2-
உலகெல்லா முள்ளே வைத் துமிழ்ந்தார்-5-
அலைகடலா யானந்த மடைந்தார்-5-
அஞ்சி றையைக்கழித்தருளு மன்பர்-6-
புகலில்லார் புகலாகும் புனிதர்-7-
அகில மெலா மானந்த மானார்-7-
புகலில்லார் புகலாகும்-7-
மூலமென வோலமிட வல்லார்-10-என்பன வற்றில் அநுப்ராசங்காண்க.
எம்பெருமானைச் சொன்னவிடமெல்லாம் பிராட்டியையும் சொல்லும். ஸர்வசரீரியே திருமகளார் தனிக்கேள்வன். எவ்வாறு விஷ்ணு எங்கும் உளனோ அவ்வாறே திருவும் எங்கு முளள்.-பரத்வத்துக்குத் தாம்பத்யம் உயிர். இந்து தன் நிலவுடன் இலங்கும் தன்மை போல் அவன் திருதனக்கு அவனே திருவாகித் திருவுடன் ஒன்றியே நாராயணனும், நாராயணனோ டொன்றியே திருவும் விளங்குதலின் பரதத்துவம் ஒன்றே.
“அர்த்தோ விஷ்ணுரியம் வாணீ “ என்று ஸ்ரீ பராசரபசுவான் அருளிச் செய்கிறார்.
“புல்லிய சொல்லும் பொருளும் போலவும்” என்பது பரிபாடலில் காணப்பெறும் உவமம், ‘ சொல்லும். பொருளும்போற்பரந்து‘ (இராமா. பால. ஆற்று 19) என்று த்வநியில் வைத்துக் குறிப்பிடுவர் கம்ப நாடர். பூமகளும் பொருளும் மெனநீயென் மாமகள் தன்னொடு மன்னுதி-(இராமா. பால. கடிமண 87.)[பொருள்- பரம் பொருளாகிய திருமால் ; பூமகள்-திருமா மகள் ]என விளக்குதலும் காண்க-இவற்றையெல்லாம் சால விளக்குவான் வேண்டி இத் திருச்சின்னமாலையில் திருவுரையாய்த் தாம் பொருளாய் நிற்பார் (2) என்று அழகுற வமைத்துள்ளார் தூப்புல் மா புருடன். இவரது உவமை நலம் அனைவரது உள்ளத்தையுங் கொள்ளை கொள்ள வல்லதே.
முத்திதர வல்ல தலைவன் வந்தான் சகலாண்ட நாதன் வந்தான்-என்பன
முத்திமழை பொழியுமுகில் வண்ணர் வந்தார்உம்பர்தொழுங் கழலுடையார் வந்தார் தாமே
என்பவற்றின் கருத்தையுட்கொண்டு வந்தனவே.
கண்ணனெழிற் கமலபதக் காதல் வந்தார்
கிரிசையறி வுடனினைவு வந்தார் வந்தார்
கண்ணிதுவென் றெண்ணுமறை காப்பார் வந்தார்
கண்ணனருள் பொதியுமதி வண்ணர் வந்தார்
பண்ணமரும் பழமறைகள் பூத்தார் வந்தார்
பாடியமே நாடியநாப் பகவர் வந்தார்
கண்ணனடி நண்ணுநலம் தந்தார் வந்தார்
கண்ணனெனக் கண்கொடுப்பார் வந்தார் தாமே.(தேசிகமாலை – கீதைச்சுருக்கு – 7.
வகுளமாலை தொகுதி 3 பகுதி 1, 2. பக்கம். 2) இவற்றால் வேதாந்த குருவின் வாசகத்தைத் தமிழ்கூறு நல்லுலகு பொன்னேபோல் போற்றியுள்ளமை தேற்றம்.
————————
ஈருலகைப் படைக்கவெண்ணி யிருந்தார் வந்தா
ரெழின்மலரோன் றன்னையன்றே யீன்றார் வந்தார்
மாருதமண் ணீராகு மாயோர் வந்தார்
வானொடெரி தாமாகு மறையோர் வந்தார்
சூரியர்தம் முடன்றுலங்கு தூயோர் வந்தார்
சுரர்களுக்கன் றமுதருள்சுந் தரனார் வந்தார்
வாரிதிசூழ் வையகம்வாழ் வித்தார் வந்தார்
வண்மையுடன் வரந்தருவார் வந்தார்தாமே (1)
[ஈர்உலகை-சேதனம், அசேதநம் என்னும் இருவிதமான பிரபஞ்சத்தை; படைக்க – சிருட்டிக்க; எழில் – அழகிய; மலரோன் -பிரமன் ; மாருதம் -வாயு ; மாயோர் – ஆச்சரிய குண சேஷ்டிதங்களை யுடையவர் ; வான் – ஆகாசம்; எரி – அக்நி ; மறையோர் -வேதத்தால் போற்றப்பெறுபவர் ; சூரியர் – நித்ய சூரிகள்; துலங்குவார் – விளங்குபவர் ; சுரர் – தேவர்; அன்று – திருப்பாற்கடல் கடைந்த அக்காலத்தில்; சுந்தரனார் – அழகர் ; வாரிதி – கடல்;
வையகம் உலகம் ; வண்மை – கொடை ; தருவார் – கொடுத்தருளுவார்.
அருமறையை யூழிதனிற் காத்தார் வந்தா
ரதுதன்னை யன்றயனுக் களித்தார் வந்தார்
தருமவழி யழியாமற் காப்பார் வந்தார்
தாமரையா ளுடனிலங்குந் தாதை வந்தார்
திருவுரையாய்த் தாம்பொருளாய் நிற்பார் வந்தார்
திருவருளாற் செழுங்கலைக டந்தார் வந்தார்
மருவலர்க்கு மயக்குரைக்கு மாயோர் வந்தார்
வானேற வழிதந்தார் வந்தார் தாமே. (2)
(அருமறை – அறியவரிய வேதங்கள் ; ஊழி – பிரளயகாலம் ;அது – அந்த வேதத்தை ; அயனுக்கு – பிரமனுக்கு ; அளித்தார் -கிருபையாலே உபதேசித்தவர்; தருமவழி – அறநெறி; தாமரையாள் – பெரிய பிராட்டியார் ; தாதை – உலகுக்குத் தந்தை; திரு -இலக்குமி ; உரை – வாக்கு; பொருள் – அர்த்தம்; செழும்கலைகள் – மேன்மேலும் தழைக்கின்ற வித்யைகள் ; மருவலர்க்கு -தம்மை அடையாதார்க்கு; மயக்கு – மோஹந சாஸ்த்ரங்கள் ;வான் – பரமபதம் ; வழிதந்தார் – உபாயங்களை உபதேசித்தவர்.]
அனைத்துலகுங் காக்குமரு ளாளர் வந்தா
ரனைத்துக்கு மதிபதியாய் நிற்பார் வந்தார்
தினைத்தனையுந் திருமகளை விடாதார் வந்தார்
தேசொத்தார் மிக்காரு மில்லார் வந்தார்
நினைக்கநமக் கின்னறிவு தந்தார் வந்தார்
நிலைநின்ற வுயிர்தோன்ற நினைந்தார் வந்தா
ரெனக்கிவர்நா னிவர்க்கென்ன வினியார் வந்தா
ரெழுத்தொன்றிற் றிகழநின்றார் வந்தார் தாமே.(3)
அனைத்து உலகும் – உலகம் யாவையும்; அருளாளர் -பேரருளாளர்; அனைத்துக்கும் – எல்லாவஸ்துக்களுக்கும்; அதிபதி – சுவாமி ; தேசு – தேஜஸ்ஸு; இன் அறிவு – ஆநந்த
ரூபமான ஜ்ஞாநம்; நிலைநின்ற – நித்யனான ; உயிர் – ஜீவன் ; கோன்ற-தன்னையறியவேறு ஜ்ஞாநம் வேண்டாத படிதானே பிரகாசிக்கும்படி ; எனக்கு இவர் – எனக்கு இவர் சுவாமி;
நான் இவர்க்கு – நான் இவருக்கு அடியன் ; என்ன – என்று சொல்ல; இனியார் – போக்யமாய்த் தோன்றுமவர்; ஒன்று எழுத்தில – ஓர் அக்ஷரமான பிரணவத்தில்; திகழ நின்றார் – போற்றப் பெற்றுப் பிரகாசிப்பவர்.
நாம்வணங்கத் தாமிணங்கா நிற்பார் வந்தார்
நம்மையடைக் கலங்கொள்ளு நாதர் வந்தார்
நாமெமக்காம் வழக்கெல்லா மறுத்தார் வந்தார்
நமக்கிதுவென் றுரையாமல் வைத்தார் வந்தார்
சேமமெண்ணியெம்மையன்பர்க் கடைத்தார் வந்தார்
செழுந்தகவாற் றிண்சரணா மீசர் வந்தார்
தாமனைத்துந் தீவினையைத் தவிர்ப்பார் வந்தார்
தமக்கேயா யெமைக்கொள்வார் வந்தார் தாமே.(4)
வணங்க-ஸேவிக்க, இணங்கா நிற்பார் – பலனளிக்க உடன் பட்டு நிற்பவர்; நாதர் – ரக்ஷகர் ; வழக்கு – விவாதங்கள்; சேமம்- க்ஷேமம்; அன்பர்க்கு – பாகவதர்கட்கு ; அடைத்தார் – அடிமையாக்கியவர் ; செழும் தகவால் – மிக்க கிருபையால் ; ஈசர் – ஸர்வேசுவரன்; வினை – கர்மங்கள் ; தவிர்ப்பார் – ஒழிப்பவர் ; கொள்வார் – அங்கீகரிக்குமவர்
உலகெல்லா முள்ளேவைத் துமிழ்ந்தார் வந்தா
ருலகுடம்பாய்த் தாமுயிராய் நின்றார்வந்தா|
ரலைகடலா யானந்த மடைந்தார் வந்தா
ரளவில்லா வருளாழிப் பெருமாள் வந்தார்
திலகமெனுந் திருமேனிச் செல்வர் வந்தார்
செழுங்குணங்க ளிருமூன்று முடையார் வந்தா
ரிலகுசுடர் முழுநலமா மினியார் வந்தா
ரெல்லார்க்குங் கதியானார் வந்தார் தாமே. (5)
(உள்ளே – பிரளய காலத்தில் தம் வயிற்றினுள்; உமிழ்ந்தார் – சிருட்டி காலத்தில் மறுபடி படைத்தவர் ; உயிராய் -அந்தர்யாமியாய்; அலைகடலாய் – குமிழி, நுரை, அலைமுதலிய
பல நிலைமையில் மாறுகின்ற அலை நிறைந்த கடலைப்போலிருந்து;
திருமேனி – திவ்யமங்கள விக்ரஹம் ; இரு மூன்று குணங்கள் – ஜ்ஞநம்,சக்தி, பலம், ஐசுவரியம், வீரியம், தே ஸ் என்ற ஆறுகுணங்கள் : அல்லது, காக்குந்தன்மை, அருள், ஜ்ஞாநம் எளிமை, இந்திரியங்களின் அடக்கம், மனத்தின் அடக்கம் என்பன; இலகு -மாறுபடாமல் பிரகாசிக்கின்ற; சுடர் -ஜ்ஞாந ஸ்வரூபரும் ; முழுநலம் – பரிபூர்ணாநந்தஸ்வரூபருமாகஆகின்ற; கதி – அநுபவிக்கப் பெறும் பலனாயிருப்பவர்.
அருளாலே விலங்கிரண்டு மழிப்பார் வந்தா
ரஞ்சிறையைக் கழித்தருளு மன்பர் வந்தார்
மருள்வாரா வகைநம்மைக் காப்பார் வந்தார்
வானேற வழிநடத்தி வைப்பார் வந்தார்
தெருளாருந் தெளிவிசும்பு தருவார் வந்தார்
திண்கழற்கீழ் வாழநமக் கருள்வார் வந்தார்
பெருவானி லடிமைநம்மைக் கொள்வார் வந்தார்
பிரியாமற் காத்தளிப்பார் வந்தார் தாமே. (6)
விலங்கு- விலங்கு போன்ற புண்ய பாபங்களாகிய கர்மங்கள் ; அம்சிறை – ஸம்ஸாரிகளுக்குக்கர்மவசத்தால் அழகிய தாய்த் தோன்றுகின்ற ஸம்ஸாரமாகிய சிறையை ; கழித்து – போக்கி ; மருள் – அந்திம காலத்தில் தீய நினைவுகளைத் தருகின்ற
அஜ்ஞாநம் ; வான் – பரமபதம்; வழி – அர்ச்சிராதி மார்க்கம் ; தெருள் – ஜ்ஞாநம்; ஆரும் – நிறைந்து பிரகாசிக்கும் ; தெளிவிசும்பு சுத்த ஸத்துவமயமான பரமபதத்தை; கழல்- திருவடிகள்;வாழ – கைங்கரியம் செய்து வாழும்படி ; பெருவானில் -ஸ்ரீ வைகுண்டத்தில் ; கொள்வார் – ஏற்றுக்கொள்பவர்.)
அகலகிலாத் திருமகளா ரன்பர் வந்தா
ரடியிரண்டு மாறாகத் தந்தார் வந்தார்
புகலில்லார் புகலாகும் புனிதர் வந்தார்
பொன்னுலகிற் றிருவுடனே திகழ்வார் வந்தா
ரகிலமெலா மானந்தமானார் வந்தா
ரடியிணைக்கீழ் வைத்தடிமை கொள்வார் வந்தார்
பகனடுவே யிரவழைக்க வல்லார் வந்தார்.
பகலொன்றா யிரவழித்தார் வந்தார்தாமே-7-
அகலகிலா – கணமும்பிரியாத ; ஆறாக – உபாயமாக ; புகல் உபாயம் ; புனிதர் – பரிசுத்தர்; பொன் உலகு – பரமபதம் ; அகிலம் – லீலா நித்ய விபூதியாகிய உலகங்கள் ; அழைக்க -கொணரும்; பகல் ஒன்றாய் – முக்தியில் ஒரே பகலாய் ; இரவு – ஸம்ஸாரமாகிய இராத்திரி.
தருமன்விடத் தாந்தூது போனார் வந்தார்
தரணி பொறாத் திண்பாரந் தவிர்த்தார் வந்தா
ரருமறையின் பொருளனைத்தும் விரித்தார் வந்தா
ரஞ்சினநீ யென்னையடை யென்றார் வந்தார்
தருமமெலாந்தாமாகி நிற்பார் வந்தார்
தாமேநாம் வினையனைத்துந் தவிர்ப்பார் வந்தார்
பரமெனது நீபுலம்ப லென்றார் வந்தார்
பார்த்தனுக்குத் தேரூர்ந்தார் வந்தார் தாமே. (8)
தருமன்- தருமபுத்திரன்; தூதுபோனார் – துரியோதனனிடம் தூதுசென்றவர்; தரணி – பூமி; விரித்தார் – ஸ்ரீபகவற் கீதை வாயிலாக விளக்கியவர் ; அடை – சரணமடைவாயாக ; தருமம் –
உபாயம் ; வினை – கர்மங்கள்; தவிர்ப்பார் – தொலைப்பவர் ; பரம் – உனக்குப் பலனை யளித்துக் காக்கவேண்டிய பொறுப்பு; புலம்பல் வருந்தாதே; என்றார் – என்று உறுதி கூறியவர் ; தேரூர்ந்தார் -தேரை ஓட்டியவர்.
வஞ்சனைசெய் பூதனையை மாய்த்தார் வந்தார்
மல்லர்மத கரிமாள மலைந்தார் வந்தார்
கஞ்சனைப்போர் கடுஞ்சினத்தாற் கடிந்தார் வந்தார்
கண்ணுதன்முன் வாணன்றோள் கழித்தார் வந்தார்
வெஞ்சொறர வீடுகொடுத் துகந்தார் வந்தார்
விலக்கில்லா வழி நடத்த விரைந்தார் வந்தார்
பஞ்சவரைப் பலவகையுங் காத்தார் வந்தார்
பாஞ்சாலி குழன் முடித்தார் வந்தார் தாமே .) (9)
மாய்த்தார் – கொன்றவர்; மல்லர் – முஷ்டிகன் முதலிய மல்லரும் ; மதகரி – குவலயாபீட மென்னும் மதயானை ; மாள – மாண்டுபோகும்படி ; மலைந்தார் – போர்செய்தவர்; கடும் –
கொடிய ; கடிந்தார் – கொன்றவர்; கண்நுதல் – நெற்றிக்கண்ணைப் படைத்த சிவபிரான் ; வாணன் – பாணாஸுரன்; கழித்தார் -அறுத்தார்; வெம் சொல்தர- சிசுபாலன் கொடிய நிந்தைச்சொற்களைக்கூற; வீடு – மோக்ஷம்; உகந்தார் – மகிழ்ந்தவர்; விலக்கு இல்லாவழி – தடையில்லாத அர்ச்சிராதி மார்க்கம்; பஞ்சவர் – பஞ்சபாண்டவர்கள் ; பாஞ்சாலி – திரௌபதி; குழல் – கூந்தல்.]
அத்திகிரி யருளாளப் பெருமாள் வந்தா
ரானைபரி தேரின்மே லழகர் வந்தார்
கச்சிதனிற் கண்கொடுக்கும் பெருமாள் வந்தார்
கருதவரந்தருதெய்வப் பெருமாள் வந்தார்
முத்திமழை பொழியுமுகில் வண்ணர் வந்தார்
மூலமென வோலமிட வல்லார் வந்தா
ருத்தரவே திக்குள்ளே யுதித்தார் வந்தா
ரும்பர்தொழுங் கழலுடையார் வந்தார் தாமே.(10)
[பரி -குதிரை; கச்சி – காஞ்சீபுரம்; கண் – ஜ்ஞா நக்கண்ணை; கருத – மநத்தினால் அநுஸந்தித்தால்; தெய்வப்பெருமாள் தேவச்சிரேஷ்டர் ; முத்தி – மோக்ஷம்; முகில் – மேகம் ; வண்ணர் – நிறமுடையவர் ; மூலம் எனஓலம் இட – முதலையால் பீடிக்கப்பட்ட கஜேந்திரன் ஆதிமூலமே என்று கூக்குரலிட; வல்லார் – அந்த யானையைக் காக்கச் சக்தியுடையவர் ; உதித்தார் – ஆவிர்ப்பவித்தவர் ; உம்பர் – நித்யசூரிகள் ; கழல் – திருவடி.
மறைத்தலையி லிசை யெழுத்தில் வணங்கும்வாக்கின்
மந்திரத்தி னாலெழுத்தாந் திருநா மத்தி
னிறைத்திலகு வேற்றுமையி லிரண்டா மொன்றி)
னெடுமாறன் கீதையெலா நிறைந்த சொல்லி
னுறைத்தவர்கண் டுரைத்தபொரு ளான வெல்லா
முயர்விரத வருளாளப் பெருமா டேசின்
றிறத்திலியை திருச்சின்னமாலை பத்துஞ்
செவிக்கினிதாஞ்சிற்றின்ப மிசையா தார்க்கே. (11)
மறைத் தலையில் – வேதங்களின் ஆரம்பத்திலும் முடிவிலும்; இசை – அமைந்த ; எழுத்து – எழுத்தாகிய ப்ரணவம் ; வாக்கு நமச்சப்தம்; மந்திரம் – திருமந்திரம்; திருநாமம் – நாராயண சப்தம்; நிறைத்து – பூர்த்திசெய்து; வேற்றுமை – நான்காம் வேற்றுமையில் ; இரண்டுஆம் ஒன்றில் – இரண்டுபாகமாக யிருந்து ஒரு மந்திரமாயுள்ள துவயத்திலும் ; சொல்லில் – சரம சுலோகத்திலும் ; உறைத்தவர் – நன்கு பரிசயம் செய்த ஆசாரி யர்கள் ; உரைத்த- நமக்கு உபதேசித்த ; உயர்விரதம் – சரணா கதரக்ஷண மென்னும் உயர்ந்த விரதத்தைக் கொண்டுள்ள ; தேசின் பெருமையின் ; திறத்தில் – விஷயத்தில் ; சிறுஇன்பம் –
அற்பமான ஸம்ஸாரஸுகத்தை ; இனிது – மதுரம்.)
திருச்சின்னமாலையில் உள்ள நிகமனப்பாசுரம் இம்மாலைச் சுருக்கத்தையும், சங்கதியையும், பேரருளாளன் பிரபாவமான இந்நன்னூல் சிற்றின்பம் இசையாதார்க்கு இனிதாம் என்பதையும் புலப்படுத்துகின்றது.
வேதங்களின் முதலிலும் முடிவிலும் அமைந்த எழுத்தாகிய பிரணவத்திலும் வணக்கத்தைக்கூறும் சொல்லாகிய நமச்சப்தத்திலும், மூலமந்திரத்தில் உள்ள நான்கு அக்ஷரங்கள் அமைந்தநாராயண சப்தத்திலும், அந்த நாராயண சப்தத்தைப் பூர்த்திசெய்து பிரகாசிக்கின்ற நான்காம் வேற்றுமையிலும், இரண்டுபாகமாயிருந்து ஒருமந்திரமாயுள்ளதுவயத்திலும், எம்பெருமானுடையஸ்ரீஸுக்தியாகிய ஸ்ரீ பகவத் கீதையில் உள்ள எல்லாப்பொருளும் தன்னுள் அடங்கப் பெற்ற சுலோகரத்தினத்திலும்
நன்கு பரிசயம் செய்த ஆசார்யர்கள் தாங்கள் உள்ளபடி அறிந்து நமக்கும் உணர்ந்தவாறு உபதேசித்த அர்த்தங்கள் அனைத்தையும் சரணாகத ரக்ஷணம் என்னும் உயர்ந்த விரதத்தைக் கொண்டுள்ள பேரருளாளப் பெருமாளுடைய பெருமையின் விஷயத்திலே
இயைத்து உரைக்கின்ற திருச்சின்ன மாலையாகிய பத்துப் பாசுரங்களும் அற்பமான ஸம்ஸார ஸுகத்தை விரும்பி அங்கீ கரிக்காதவர்களுக்கு செவிக்கு மதுரமாயிருக்கும். இப்பிரபந்தம் பேரின்பமான பகவதநுபவத்தில் கருத்துடையோர்க்கே ரஸிப்பதாகும் என்றபடி.)
————————————————————————————–
வாழ்க உலகெலாம்.
வாழ்க சந்தமிகுதமிழ் மறையோன்.
வளர்க திருச்சின்னமாலை.
வாழ்க அன்பரீட்டம்.
சொல்வதுமுன்னாமந்தொழுவதுமுன்பாத
நல்குவது முன்னுடைய நற்குணமே-தொல்லருளுக்
கெம்மை யிலக்காக்கி யீனமா மெம்பரிசு
செம்மைசெய் தேசிகனே யின்று.-(தேசிகர் நூற்றந்தாதி 95)
நானிலமுந் தான்வாழ நான்மறைகள் தாம்வாழ
மாநகரின் மாறன் மறைவாழ – ஞானியர்கள்
சென்னியணி சேர்தூப்புல்வேதாந்த தேசிகரே !
இன்னமொரு நூற்றாண் டிரும்.
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேதாந்த தேசிகன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply