ஸ்ரீ கம்ப நாடார் அருளிச் செய்த ஸ்ரீ ஏர் எழுபது –

பாயிரமும், வாழ்த்தும் நீங்கலாக -70 பாடல்கள் இந்த நூலில் உள்ளன.-இதனை இயற்றிய ஆசிரியர் கம்ப நாடர்-கம்பராமாயணம் இயற்றிய கம்பர் தம் இளமைக்காலத்தில் இதனைப் பாடியிருக்கலாம்.-அல்லது இந்தக் கம்ப நாடர் பிற்காலத்தவராக இருக்கலாம்-கம்பராமாயணம் போன்ற செறிவோ, திண்மொழியோ, குழப்பமான சொற்றொடர் அடுக்குப் பெருக்கமோ இதில் இல்லை-உழவுத் தொழிலின் மேன்மையை இந்த நூல் போற்றுகிறது 

பாயிரம்

கங்கை பெறுங் காராளர் கருவிஎழு பதும்உரைக்க
அங்கை பெறும் வளைத்தழும்பும் முலைத் தழும்பும் அணிய, மலை
மங்கை பெறும் திருவுருவாய் வந்துறைந்தார் தமை, வலஞ்செய்
கங்கை பெறும் தடவிகடக் களிற்றானைக் கழல்பணிவாம். 1

கார் மேகத்தால் வாழ்பவர் காராளர் -உழவர் -அவர்களைப் போற்றும் கருவியாக இந்த 70 பாடல்களும் பாடப்படுகின்றன. 
இதனை உரைக்க ஆனைமுகன் தாள்களைப் பணிவோம் -உமை தழுவும்போது அவளது வளையல் தழும்பும், முலைத் தழும்பும் பெற்றவன் சிவன். 
அவன் மங்கை மங்கை உருவமும் சேர்ந்து அமையும் அம்மையப்பராக இருக்கிறார். 
அவரை வலம் செய்தவன் இந்த ஆனைமுகன் -அவர் நீர்த் துறையில் அமர்ந்திருக்கிறார் -அகன்ற உருவில் இருக்கிறார் -விகடம் – நல்ல மதம் -அறிவு நீர் தந்து கொண்டிருக்கிறார்

நிறைக்குரிய அந்தணர்கள் நெறிபரவ, மநுவிளங்க,
தறைக்குரிய காராளர் தமதுவரம்பு இனிதோங்க,
மறைக்குரிய பூமனையும், வண்டுளபத் தாமனையும்,
பிறைக்குரிய நெடுஞ்சடிலப் பெம்மானை யும், பணிவாம். 2

அந்தணர் நெறியைப் போற்றவும் மனுநெறி விளங்கவும் வாழ்பவர் காராளர்
இவர்களின் எல்லை இனிதே ஓங்க, மறை ஓதும் பூமன் -பிரமன்-துளசி மாலையன் – திருமால் -தலையில் பிறை சூடியவன் -சிவன் மூவரையும் பணிவாம்

திங்களின்மும் மாரிபெய்யஞ், செகத்திலுயிர் செழித்தோங்கக்,
கங்கைகுலா திபர்வயலிற் கருவீறத், தொழுகுலத்தோர்
துங்கமக, மநுநீதி துலங்கிடவை யம்படைத்த
பங்கயன்றன் நாவிலுறை பாமடந்தை பதந்தொழுவாம்.-3-

மாதந்தோறும் 3 மழை பெய்ய,
உயிரினங்கள் செழித்து ஓங்க
காராளர் கரு வீறு பெற
அவரைத் தொழும் குலத்தோர் மனுநெறி துலங்க
வையம் படைத்த பிரமன் நாவில் உறையும் நாமடந்தையைத் தொழுவாம்

ஈழமண்டல முதலென, உலகத் தெண்ணு மண்டலத் தெறிபடை வேந்தர்தாழு மண்டலக்கும், செம்பியன் மரபினோர் தாமெலாம் பிறந் தினியபல் வளத்தின்வாழு மண்டலங், கனகமு மமணிகளும் வரம்பில் காவிரி குரம்பினிற் கொழிக்குஞ்சோழ மண்டலம், இதற்கிணை யாம்எனச் சொல்லு மண்டலஞ் சொல்வதற் கிலையே-4- 

ஈழ மண்டலம் முதல் எண்ணப்படும் எல்லா வேந்தரும்  தாழும் மண்டலம்  செம்பியன் மரபினோர் காக்கும் காவிரி வளம் கொழிக்கும் சோழ மண்டலம்  இதற்கு இணையாகச் சொல்ல எந்த மண்டலமும் இல்லை –

முடியுடைய மன்னவரின் மூவுலகும் படைத் துடையகொடி யுடைய மன்னவரிற் குலவுமுதற் பெயரு டையான்,இடியுடைய வொலிகெழு நீர் எழுபத் தொன் பதுநாட்டுக்குடியுடையான், சென்னி பிறர் என்னு டையார் கூறீரே? -5-

மூவுலகிலும் உள்ள முடி மன்னர்  கொடிமன்னர்  அனைவரும் குலவும் முதன்மையான பேர் உடையவன்  79 நாட்டுக் குடிகளை உடையவன் சென்னி  பிறர் என்ன உடையார்?

மந்திரம் அனைய திண்டோள் மணிமுடி வளவன், சேரன்,சுந்தர பாண்டி யன்றன் சுடர்மணி மகுடஞ் சூட,அந்தணர் குலமும் எல்லா அறங்களும் விளங்க, வந்தஇந்திரன் ஓலக் கம்போல் இருந்தது, பெரிய நாடே. -6-

மலை போன்ற தோள் கொண்ட மணிமுடி அரசர்களான வளவன், சேரன், பாண்டியன் ஆகியோர் முடி சூட,  அந்தணர் அறம் விளங்க,  இந்திர ஓலக்கம் போல இருந்தது, பொன்னிநாடு என்னும் பெரிய நாடு.

ஆழித் தேவர் கடலானார், அல்லாத் தேவர் அம்பலத்தார்ஊழித் தேவர் தாங்கூடி உலகங் காக்க வல்லாரோ?வாழித் தேவர் திருமக்கள், வையம் புரக்கும் பெருக்காளர்மேழித் தேவர் பெருமைக்கு வேறு தேவர் கூறேனே! -7-

கையில் சக்கரத்தை உடைய தேவர் கடலில் உறங்குகிறார்.  அவர் அல்லாத தேவர்கள் அம்பலக் கோயிலில் கிடக்கின்றனர்  இவர்களா ஒன்று கூடி உலகத்தைக் காக்க வல்லவர்?  காப்பவர் மேழித் தேவர் அன்றோ!  இவர் பெருமைக்கு வேறு தேவரைக் கூறமாட்டேன். 

தொழுங் குலத்திற் பிறந்தாலென், சுடர்முடிமன் னவராகிஎழுங்குலத்திற் பிறந்தாலென், இவர்க்குப்பின் வசியரெனுஞ்செழுங் குலத்திற் பிறந்தாராய்ச் சிறப்புடையா ராய் வாய்மைஉழுங் குலத்தில் பிறந்தாரே உலகுய்யப் பிறந்தாரே !  -8

தொழும் தேவர் குலத்தில் பிறந்தால் என்ன  முடி சூடும் மன்னர் குலத்தில் பிறந்தால் என்ன  இவர்களுக்குப் பின் வைசியர் குலத்தில் பிறந்தால் என்ன  உங்கு உய்யப் பிறந்தவர் உழுங்குலத்தில் பிறந்தவரே ஆவர். 

எழுங்குலத்திற் பிறந்தாலென் இவர்க்குப்பின் வணிகரெனும்செழுங்குலத்திற் பிறந்தாலென் சிறப்புடையர் ஆனால் என்அழுங்குழவிக் கன்புடைய தாயேபோல் அனைத்துயிர்க்கும்எழுங்கருணைப் பெருக்காளர், எளியரோ யாம்பகழ!உழுங்கொழுவிற் கருவீறி உலகமுதற் கருவாகச்செழுங்கமலத் தயனிவரைச் செய்துலகஞ் செய்வானேல்!-8

அழும் குழந்தையிடம் அன்பு காட்டும் தாய் போல்  அனைத்து உயிர்களுக்கும் கருணை காட்டி எழும் கருணைப் பெருக்காளர்  யாம் புகழும் அளவுக்கு எளியரோ  உழும் கொழுக்கருவே உலக முதலாகிய கரு. 

வேதியர்தம் உயர்குலமும், விறல்வேந்தர் பெருங்குலமும், நீதிவளம் படைத்துடைய நிதிவளத்துத் திருக்குலமும், சாதிவளம் படைத்துடைய தாயனைய காராளர் கோதில்குலம் தனக்கு நிகர் உண்டாகிற் கூறீரே.  -9-

வேதியர் குலம்  வேந்தர் குலம்  நிதியர் குலம் – ஆகியவை  காராளர் குலத்துக்கு நிகர் இல்லை 

வேதியர்தம் உயர்குலமும், விறல்வேந்தர் பெருங்குலமும்,நீதிவளந் தருமுறையான் நிலநிறையு நிதிவளனும்சாதிவளம் படைத்துடைய தாயனைய காராளர்கோ தில்குலந் தனக்கு நிகர் உண்டாகிற் கூறீரே  -9-வேறு பாடம்

(பாயிரம் முடிந்தது)

1 உழவு நாட்கோடல்

சீர் மங்க லம் பொழியும், தெண்டிரைநீர்க் கடல்சூழ்ந்தபார்மங்க லம்பொழியும், பல்லுயிருஞ் செழித்தோங்கும்,கார்மங்க லம்பொழியும் பருவத்தே காராளர்ஏர்மங்க லம்பொழிய இனிதுழநாட் கொண்டிடினே.-1-

கார்மேகம் சிறந்து மழை பொழிந்த பருவத்தில்  உழவர் ஏர் பூட்டும் நன்னாள் கொள்வர்.  கொண்டதும்  உலகே சீர் பெற்றுச் சிறக்கும் பல உயிர்களும் செழித்து ஓங்கும் 

2 உழவுச் சிறப்பு

நீர்விழாக் கொளவளர்ந்த நிலமெல்லாந், தம்முடையசீர்விழாக் கொளவிளங்கும் திருவிழாப் பெருக்காளர்,ஏர்விழாக் கொளினன்றி, எறுழ்க்கரிதேர் மாப்படையாற்போர்விழாக் கொளமாட்டார், போர்வேந்த ரானோரே. -2-

நிலம் நீர் ஊறி விழாக் கொள்ளும் காலத்தில் திருவிழா பெருக்குபவர் உலகம் சிறக்கும் சீர்விழாக் கொள்வர்  இவர்கள் இப்படி ஏர் விழாக் கொள்ளாவிட்டால்  வேந்தர் கரி, பரி, மா படைகளைக் கொண்டு போர்விழா கொள்ள முடியாது

3 அலப்படையின் சிறப்பு

குடையாளும் முடிவேந்தர் கொலையானை தேர்புரவிபடையாளும் இவைநான்கும் படைத்துடைய ரானாலென்,மடைவாளை வரும்பொன்னி வளநாடர் தங்கள்அலப்படைவாளைக் கொண்டன்றிப் பகையறுக்க மாட்டாரே -3-

அலம் என்னும் கலப்பைப் படை கொண்டு உழுது பயிரிட்டு,  பொன்னி நாட்டு உழவர் போரடிக்காவிட்டால்,  வேந்தர் நாற்படை கொண்டிருப்பதால் என்ன பயன்?

4 மேழிச் சிறப்பு  

வாழிநான் மறையோர்கள் வளர்க்கின்ற வேள்விகளும்,ஆழியால் உலகளிக்கும் அடல்வேந்தர் பெருந்திருவும்,ஊழிபே ரினும் பெயரா உரையுடைய பெருக்காளர்மேழியால் விளைவதல்லால் வேறொன்றால் விளையாவே. -4-

நானமறையாளர் வளர்க்கும் வேள்வி வாழி ஆணைச்சக்கரத்தால் உலகளிக்கும் வேந்தர் செல்வம் வாழி இவை உலகுக்கு உணவளிக்கும் உழவரின் மேழியால் விளைவது அல்லாமல்  வேறொன்றால் விளையாது 

நீற்றோனும் மலரோனும் நெடியோனும் என்கின்றதோற்றாளர் இவராலே தொல்லுலகம் நிலைபெறுமோ?மாற்றாத காவேரி வளநாடர் உழுங்கலப்பைஊற்றாணி உளதாயின் உலகுநிலை குலையாதே! -5-

சிவன், பிரமன், மால் – இவர்கள் தோற்றத்தால் உலகம் நிலைபெறுமா  காவிரி நாட்டு உழவர் ஊற்றாணியால் அன்றோ  உலகை நிலைகுலையாமல் இருக்கச் செய்கிறது  ஊற்றாணி என்பது கலப்பைக் கொழு  “உழுவார் உலகத்தார்க்கு ஆணி” – திருக்குறள் 

ஆற்றாணி வேணியர்பால் அம்மையிருந்து அனைத்துலகும்போற்றாணி யாம் கச்சிப் புறமெல்லாம் அறம்வளர்க்கச்சேற்றாணிக் கரமொதுக்கும் செல்வரணி ஏர்க்காலின்ஊற்றாணி உறுதியினால் உலகுறுதி யானதுவே.-6-

காஞ்சிபுர ஆற்றுமணலில் கரையாத ஆணியாக இருப்பவர் ஏகாம்பரர் -அவர்பால் இருப்பவர் அம்மை காமாட்சி -இவள் அறம் வளர்க்கிறாள் -வளர்க்க உதவுபவர் சேற்றில் நடவு நடும் உழவர் -இதுதான் ஏர்க்கால் ஊற்று 

உரையேற்ற செங்கதிரோன் ஒளிநெடுந்தேர் பூண்டநுகம்திரையேற்ற கடலுலகில் செறியிருளை மாற்றுவதுவிரையேற்ற இருநிலத்தோர் வறுமையொடு வீழாமேகரையேற்றும் நுகமன்றோ காராளர் உழுநுகமே! -6-வேறு பதிப்பு

கதிரோன் தேரை இழுக்கும் 7 குதிரைகளுக்குப் பூட்டிய நுகம்  உலகின் இருளைப் போக்குகிறது  காராளர் ஏரில் பூட்டிய நுகம்  உலகின் வறுமையைப் போக்குகிறது 

வளைத்த திரைக் கடல் சூழ்ந்த வையகத்தோர் எல்லோர்க்கும் தொளைத்த தொளை பசும் பொன்னின் அணி கிடக்கும் துணைத்தல்லால் திளைத்து வருஞ் செழும் பொன்னித் திருநாடர் உழுநுகத்தில் தொளைத்த தொளை போலுதவும் தொளை யுளதோ சொல்லீரே! -7-

காதி போட்ட துளையில் அணிகலன் கிடக்கிறது  இது அவருக்கு அழகு தருகிறது  உழவர் நுகத்தில் போட்ட துளைகளில் எருதுகள் பூட்டப்பட்டுள்ளது  இது நிலத்தை உழுது உலகைக் காக்கிறது 

ஓராணித் தேரினுக்கும், உலகங்கள் அனைத்தினுக்கும் பேராணிப் பெருக்காளர் பெருமைக்கு நிகருண்டோ! காராணிக் காவேரி வள நாடர் உழுநுகத்தின் சீராணிக்கு ஒப்பதொரு சிறந்தாணி செப்பீரே! -8-

சூரியன் தேர் அச்சில் இருக்கும் கடையாணி  அந்தத் தேரைக் கழலாமல் ஓடச் செய்கிறது  உழவர் நுகத்தில் பூட்டிய கடைமுளை எருதுகளை நேர் வழியில் நடத்தி உழச்செய்து உலகைக் காக்கிறது 

நாட்டுகின்ற சோதிடத்தின் நாண்பொருத்தம் நாட்பொருத்தம்காட்டுகின்ற கயிறிரண்டும் கயிறல்ல; கடைப்புவியில்தீட்டுப்புகழ்ப் பெருக்காளர் செழுநுகத்தோடு உழும்பகடுபூட்டுகின்ற கயிறிரண்டும் புவிமகள்மங் கலக்கயிறே! 

மங்கல நாண் பூட்டும் நாளை தாலி கட்டும் நாளை சோதிடத்தால் நாண் அணிவிக்கும் ஆண் பெண் பொருத்தம் நாள் பொருத்தம் ஆகியவற்றைப் பார்க்கும் சோதிடக் கயிறு கயிறு அல்ல உழவர் நுகத்தடியில் எருதினைப் பூட்டும் கயிறே உலகினைக் கட்டிக் காக்கும் கயிறு.

தடுத்த நெடு வரையாலும் தடவரைகள் எட்டாலும் உடுத்த திரைக் கடலாலும் உலகினிலை வலியாமோ?எடுத்த புகழ்ப் பெருக்காளர் எழு நுகத்தோடு இணைப்பகடு தொடுத்த தொடை நெகிழாதேல் உலகு தொடை நெகிழாதோ! -10-

8 மலையரணாலும்  கடல் அரணாலும்  உலகினைக் காப்பாற்ற முடியாது  உழவர் எருதினை நுகத்தில் பூட்டும் தொடை அவிழாமல் இருந்தால் மட்டுமே  உலகினைக் காப்பாற்ற முடியும். 

வேதநூல் முதலாகி விளங்குகின்ற கலை யனைத்தும் ஓதுவார் எல்லாரும் உழுவார் தம் தலைக் கடைக்கே!கோதைவேன் மன்னவர் தம் குடை வளமும் கொழு வளமே ஆதலால் அவர் பெருமை யாருரைக்க வல்லாரே! -11-

வேதநூல் முதலானவை கலைகள் -அத்தகைய கலைகள் பலவற்றையும் ஓதுவார் எல்லாரும்  உழுவார் தலைக் கடை வாயிலுக்கு வந்தாக வேண்டும் -மன்னர் வெண்ணஃகொற்றக் குடைக் கீழ் இருக்ககும் வளமும் கொழு நிலத்தை உழுவதால் பெற்றிருக்கும் வளமே -அதனால் உழவர் பெருமையை எடுத்துரைக்க யாரால் முடியும்

செழுவான மழை வாரித் திங்கடொறும் பொழிந்தாலும்,கெழுவார நில மடந்தை கீழ் நீர் கொண் டெழுந்தாலும்,வழுவாத காவேரி வளநாடர் உழுங்கலப்பைக் கொழுவாணி கொண்டன்றிக் குவலயஞ்சீர் நிரம்பாவே. -12-

திங்கள் மும்மாரி பொழிந்தாலும் நிலத்தில் ஊற்று சுரந்தாலும் காவிரி நாட்டார் கலப்பைக் கொழுவாகிய ஆணி கொண்டு உழவுத் தொழில் செய்யா விட்டால் உலகம் சிறப்புப் பெறாது

வெங்கோபக் கலிகடந்த வேளாளர் விளைவயலுள் பைங்கோல முடிதிருந்தப் பார்வேந்தர் முடிதிருந்தும், பொங்கோதை கடற்றானைப் போர்வேந்தர் நடத்துபெருஞ்
செங்கோலை நடத்துங்கோல் ஏரடிக்கும் சிறுகோலே
–13-

பஞ்சம் போக்குபவர் வேளாளர் -அவர் வயலில் நாற்று முடி நட்டுத் திருந்தினால்
வேந்தர் முடி திருந்தும் -வேந்தரின் செங்கோலை நடத்தும் கோல் -ஏர் மண்ணைத் தள்ளும் தாற்றுக்கோலே

வானமழை பொழிந்தாலும் வளம்படுவ தெவராலே? ஞான மறையவர் வேள்வி நலம் பெறுவ தெவராலே? சேனை கொடு பொரு மன்னர் செருக் களத்தில், செருக்குமத யானை வலி எவராலே? இவர் எருதின் வலியாலே!-14-

வானம் பொழிந்தாலும் வளம் பெருகுவது எதனால் மறையவர் வேள்வி எதனால்
மன்னர் போர்க் களத்தில் போர் யானையின் வலிமை எதனால் உழவு செய்யும் எருதுகளின் வலிமையால்

கண்ணுதலோன் தனது திருக் கண்டத்திற் படிந்த கறை,
விண்ணவரை அமுதூட்டி விளங்குகின்ற கறை யென்பார்;
மண்ணவரை அமுதூட்டி வானுலகம் காப்பதுவும்,
எண்ணருஞ் சீர்ப் பெருக்காளர் எருது சுவல் இடு கறையே
!-15-

சிவன் கருத்தில் இருக்கும் கறை விண்ணவர்க்கு அமுதம் ஊட்டிற்று என்பர்
மண்ணில் வாழும் மக்களுக்கு அமுதம் ஊட்டுவது மாட்டின் கழுத்தில் ஏர் நுகம் தாங்கு இழுத்ததால் உண்டான தழும்புக் கறை.

ஊட்டுவார் பிறருளரோ? உலகு தனில் உழு பகடு
பூட்டுவார் புகழன்றிப் பிறர் புகழும் புகழாமோ?
நாட்டுவார் சயத்துவசம் நயப்பாரை இவர்க்கு நிகர்
காட்டுவார் யார் கொல்? இந்தக் கடல் சூழ்ந்த வையகத்தே!
-16-

உணவு ஊட்டுவார் உழவரைத் தவிர வேறு யார் உண்டு ஏரில் பகடு பூட்டுவார் புகழ் அல்லாமல் வேறு எந்தப் புகழால் பிறருக்குப் பயன் வெற்றியில் மேம்பட்டவராக இவரை அல்லாமல் வேறு யாரைக் காட்டுவது

பார் பூட்டும் திசை யனைத்தும் பகடுகளும் பரம்பூணா
போர் பூட்டும் காமனுந்தன் பொரு சிலை மேற் சரம் பூட்டான்
கார் பூட்டும் கொடைத் தடக் கைக் காவேரி வள நாடர்
ஏர் பூட்டின் அல்லது மற்(று) இரவியும் தேர் பூட்டானே! –
-17-

பகடு ஏர் பாரம் இழுத்தால் அல்லாமல் விளைச்சல் இல்லை -விளைச்சல் உண்ணும் மக்கள் உடலில் தெம்பு இல்லை எனவே பகடு பூட்டாவிட்டால் -காமன் அம்பு பூட்டான் ஏர் பூட்டா விட்டால் சூரியன் தேர் வருவதால் என்ன பயன்

கார் நடக்கும் படி நடக்கும் காராளர் தம்முடைய
ஏர் நடக்கும் எனிற் புகழ்சால் இயலிசை நாடகம் நடக்கும்
சீர் நடக்கும் திறன் நடக்கும் திரு வறத்தின் செயல் நடக்கும்
பார் நடக்கும் படை நடக்கும் பசி நடக்க மாட்டாதே! -18-

கார்மேகம் நடக்கும் காராளர் ஏர் நடக்கும் எனில், இயல் இசை நாடகம் நடக்கும்
சீர், திறன், அறத்தின் செயல், உலகியல் – நடக்கும் பசி மட்டும் நடக்காது

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற் றெல்லாரும்
தொழுதுண்டு பின் செல்வர் என்றே யித் தொல்லுலகில்
எழுதுண்ட மறை சொன்னால் இவர் ஏவன் மள்ளர்க்கும்
பழுதுண்டோ? பார் வேந்தர் படை மன்னர் ஒப்பாரோ?
-19-

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற் றெல்லாரும் தொழுதுண்டு பின் செல்வர்
என்று திருவள்ளுவர் மறை எழுதிச் சொல்கிறது -இந்த மள்ளருக்குப் பழுது உண்டோ வேந்தர் இவருக்கு ஒப்பு ஆவாரோ

அலகிலா மறை விளங்கும், அந்தணர் ஆகுதி விளங்கும்
பல கலையாம் தொகை விளங்கும், பாவலர் தம் பா விளங்கும்,
மலர் குலாந் திரு விளங்கும், மழை விளங்கும், மனு விளங்கும்,
உலகெலாம் ஒளி விளங்கும், உழவர் உழும் உழவாலே!
-20-

உழவர் உழும் உழவால் வேதம் விளங்கும் வேள்வி விளங்கும் கலைகள் விளங்கும்
பாவலர் பாடல் விளங்கும் திரு விளங்கும் மழை விளங்கும் மனுநெறி விளங்கும்
உலகின் புகழ் விளங்கும்

பழுதுசால் வகையறியாப் பழமறையோர் பெருவேள்விக்(கு)
உழுதுசால் வதுகலப்பை உயர்வான(து) என்றக்கால்,
எழுதுசால் பெருங்கீர்த்தி ஏராளும் பெருக்காளர்,
உழுதசால் வழியன்றி உலகுவழி அறியாதே! – 21

பழமையான மறை வழியில் வேள்வி செய்வாரை விட உழும் கலப்பை உயர்வானது -உழவர் பெருஞ் சிறப்புக்கு உரியவர் இவர்கள் நிலத்தை உழுத மண் பள்ளமாகிய ‘படைச்சால்’ வழியில் உலகம் செல்லும். -படைச்சாலில் விதை இடுவர் அது விளையும் விளைவைப் பெற வழிச் செல்வர்

மட்டிருக்கும் திரு மாதும், மகிழ்ந்திருக்கும் புவி மாதும்,
முட்டிருக்கும் சய மாதும், முன்னிருப்பார் முது நிலத்து
விட்டிருக்கும் கலி தொலைத்த விறல் தடக் கை வேளாளர்,
கொட்டிருக்க ஒரு நாளும் குறை யிருக்க மாட்டாதே!
– 22

திருமகள் புவிமகள் வெற்றிச் செல்வி உழவர்க்குத் துணையாக முன் வந்து நிற்பர் பஞ்சம் போக்கும் வேளாளர் முன் வந்து நிற்பர் -அவர்கள் கையில் தொத்தும் மண் வெட்டி இருக்கும் போது அவர்களுக்கு ஒரு குறையும் இருக்க முடியாது-

மேடு வெட்டி வளப் படுத்தி மெய் வரம்பு நிலை நிறுத்திக்
கோடு வெட்டிக் காராளர் குவலயத்தைக் காத்திலரேல்,
பாடு வெட்டிக் குறும்படக்கப் படை வேந்தர் அவர் விளைத்த
காடு வெட்டிப் பகை யறுத்துக் கலி களைய மாட்டாரே
.–23

மேட்டை வெட்டிச் சமநிலமாக வளப்படுத்தி வரப்பு கட்டி, கங்கு வெட்டி, பயிரிட்டு,
வேளாளர் உலகைக் காப்பாற்றா விட்டால் வேந்தர் பகைவரைச் சாய்த்து பஞ்சம் போக்குவது எப்படி?

எழுதொணா மறை விளங்கும், இயல் இசை நாடகம் விளங்கும்,
பழுதிலா அறம்விளங்கும், பார் வேந்தர் முடி விளங்கும்,
உழுதுசால் பல போக்கி உழவருழக் கிய வெங்கால்
புழுதியால் விளையாத பொருள் உளவோ புகலீரே!
–24-

மறை விளங்கும் இயல் இசை நாடகம் விளங்கும் அறம் விளங்கும் வேந்தர் சூடும் முடி விளங்கும் உழவர் உழுது உழக்கிய புழுதியால் விளையாத பொருள் என்ன இருக்கிறது?

மெய் வரம்பா நிற்கின்ற வேத நூல் நெறி வரம்பாம்,
இவ் வரம்பும் அவ் வரம்பும் இப் புவிக்கு வரம்பாமோ?
பொய் வரம்பு தவிர்த்தருளும் புவி மடந்தை திருமைந்தர்
செய் வரம்பு திருத்தாரேல் திசை வரம்பு திருந்தாதே!
–25-

வேத நூல் நெறி மக்கள் வாழ்க்கைக்கு வரம்பு என்பர் மற்றும் அந்த வரம்பு, இந்த வரம்பு என்று கூறுவர் இவையெல்லாம் பொய்யான வரம்புகள் உழவர் வயலில் நிறுத்தக் கட்டும் வரம்பே (வரப்பே) உதவும் வரம்பு.

அடுத்திரக்காக் கொடை சீர்த்தித் தாளாளர் அணி வயலில்
எடுத்து எருக் கொண்(டு) எழில்வளர இசையாரேல், இவ் வுலகில்
தொடுத்திருக்கும் அறத் துறையும், தொழுமிருக்குமகத் துறையும்,
படுத்திருக்கும் அவை யல்லால் பரிந்திருக்க மாட்டாவே!
-26-

தாளாளர் வயலில் எரு போடா விட்டால் இந்த உலகில் அறத் துறை எங்கே
அகத் துறை எங்கே இவை படுத்திருக்கும் அல்லவா பரிவுடன் இருக்க மாட்டா

அடுத்திறக்கிப் பெருங் கூடை அளவு படவே எருவை
எடுத்திறக்கித் தலை மேலே கொண்டவர் தாம் இடை யிடையே
கொடுத்திறக்கி நில மகளைக் கும்பிட்டு வணங்காரேல்
படுத்திறக்கித் திரிவார் தம் பழி மறுக்க மாட்டாரே!
– 27

எருவைப் பெரிய கூடையில் தூக்கி வருவர் -தலையிலுள்ள கூடையை இரு கைகளாலும் இறுக்கிப் பிடித்துக் கொண்டு எரு அளவாகப் பரந்து நிலத்தில் இறங்கும்படி உடலை விரைவாக எவ்விச் சுழற்றுவர் கொஞ்சமாக இருக்கும் போது இறக்கிக் குனிந்து கையால் விசிறுவர் -எரு விழுந்த நிலத்தைத் தொழுவர். – பிறர் பழித்தால் ஏற்றுக் கொள்வர்.

வெறுப்ப தெல்லாம் பொய்யினையே, வேளாளர் மெய்யாக
ஒறுப்ப தெல்லாம் கலியினையே, உள்ளத்தால் வெள்ளத்தால்
செறுப்பதெல்லாம் புல்லினையே, செய்யின் வளம் அறிந்தறிந்து
மறிப்ப தெல்லாம் சேற்றினையே, வளம் படுத்தற் பொருட்டாலே
! 27 (வேறு)

வேளாளர் வெறுப்பது பொய் -தண்டிப்பது பஞ்சம் -அழிப்பது பயிரிடையில் முளைக்கும் புல் -புறட்டிப் போடுவது சேறு -இவை வயலையும், மக்களையும் வளப் படுத்துவதற்காக.

வரம்படிக்க மலர் பரப்பி வயலடிக்க வரம்பு தொறுங்
குரம்படிக்க மணி கொழிக்கும் குலப் பொன்னித் திரு நாடர்,
பரம்படிக்க உடைந்தளைந்த பழனச் சேற்(று) உரமன்றி
உரம்படிக்க பிறிதுண்டோ உண்டாயின் உரையீரே!
– 28

வரம்பு அடிக்க வயலை அடிப்பர் -குரம்பு அடிக்க நென் மணி கொழிக்கும் -பரம்பு அடிக்க சேறு சமமாகும்-எரு உரம்பு அடிக்க எல்லா நலமும் உண்டாகும்

பத்தி விளைத்து இருந்தெய்வம் பணிவார்க்கும், தற் பரமாம்
முத்தி விளைத்திடும் ஞான முதல்வருக்கும், இன்னமுதம்
வைத்து விளைத்திடுவார்க்கும், வல்லவர்க்கும், பெருக்காளர்
வித்து விளைத்திடிலன்றி வேண்டுவன விளையாவே
. -29-

பத்தி விளைய உரையாற்றுவோர்-தெய்வம் பணிவார் -முத்தி விளையத் தவம் செய்வோர் -ஞான முதல்வர் -உணவு தருவோர் வல்லவர் ஆகியோர் தரும் விளைச்சல்கள் எல்லாமே உழவர் விளைச்சல் இல்லாவிட்டால் விளையாது

மறை மயங்காது, அருள் விளங்கும் மதி மயங்காது, திறல் வேந்தர்
இறை மயங்கா, மனு நெறியும் இன மயங்கா, யாவர்க்கும்
நிறை மயங்காது, ஒரு நாளும் நிலை மயங்காது, உலகமெல்லாம்
முறை மயங்கா, அவர் வயலின் முளை மயங்காத் திறத்தாலே
.-30-

உழவர் விதைத்த பயிர் முளைகள் நெருக்கமாக மயங்காமல் வளர்ந்தால்
மறைகள், அருள் தரும் எண்ணம், இறை வழங்கும் நிலை, மனுநெறி, மக்களின் நிறையுடைமை, உலக முறைமை எதுவும் மயக்கம் இல்லாமல் இருக்கும்

ஏறு வளர்த்திடும் முகிலும் இசை வளர்க்கும் எனுரைப்பின்
ஆறு வளர்த்திடுவது சென்(று) அலை கடலைத் தானன்றோ!
வேறு வளர்பபன கிடப்ப வேளாளர் விளை வயலின்
நாறு வளர்த்திடிலன்றி ஞாலமுயிர் வளராதே!
-31-

முகில் இடியை வளர்க்கும் -ஆறு கடலை வளர்க்கும் -வயலில் நாற்று வளர்ந்தால் அன்றி ஞாலம் வளராது

வெறுத்த மீன் சனி புகிலென், வெள்ளி தெற்கே யாயிடிலென்,
குறித்த நாள் வரம்பழியாக் குலப் பொன்னித் திரு நாடர்,
மறித்து நாட்டிட நின்ற வள வயலினிடை நாற்றைப்
பறித்து நாட் கொண்டதற்பின் பார் பசிக்க மாட்டாதே!
–32-

எந்த மீன் -நட்சத்திரம் சனிக்குள் புகுந்தால் என்ன -வெள்ளி தெற்கே போனால் என்ன
வயலில் நாற்றைப் பறித்து நடவு செய்யா விட்டால் மக்கள் பசி தீராது

மாணிக்கம் முதலாய மணி யழுத்தித் தொழில் சமைத்த
ஆணிப் பொன் முடி வேந்தர் அணி முடியும் முடியாமோ?
பேணிப் பைங் கோல முடிப் பெருக்காளர் சுமவாரேல்
சேணுக்கும் திசைப் புறத்தும் செங்கோன்மை செல்லாதே! –
-33-

வேந்தர் அணியும் மாணிக்கம் பதித்த முடி முடி ஆகுமா உழவர் சுமக்கும் பயிர் முடி இல்லா விட்டால் அரசர் செங்கோல் செல்லாது

தென்னன் முடி சேரன் முடி தேங்கு பொன்னி நாடன் முடி
கன்னன் முடி கடல் சூழ்ந்த காசினியோர் தங்கள் முடி
இன்ன முடி அன்றியும் மற்று எடுத்துரைத்த முடிகள் எல்லாம்
மன்னு முடி வேளாளர் வயலின் முடி கொண்டன்றோ
–34-

தென்னன் சேரன் சோழன் கன்னன் மற்றும் உலகிலுள்ளோர் சூடும் முடிகள் எல்லாமே வேளாளர் வயலில் பயிர் முடி நட்டால் தான் சிறக்கும்

வெய்ய கலி வலி தொலைக்கும் வேளாளர் விளை வயலில்
செய்யின் முடி விளம்பாரேல் விளம்புவன சில உளவோ?
மையறு மந்தணர் விளம்பார் மறை மனு மன்னவர் விளம்பார்
ஐயமறு புலவோரும் அருந் தமிழ் நூல் விளம்பாரே.
-35-

பஞ்சம் போக்குபவர் வேளாளர் அவர் நாற்று முடி தடவு செய்யா விட்டால் அந்தணர் மறை சொல்லார் மன்னவர் மனு நெறி இல்லை புலவர் தமிழ் பாட மாட்டார்

மெய்ப் பாங்கு படக் கிடந்த வேத நூல் கற்றாலென்?
பொய்ப் பாங்கு படப் பிறரைப் புகழு நூல் கற்றாலென்?
செய்ப் பாங்கு படக் கிடந்த செழுஞ் சாலி நன்னாற்றைக்
கைப் பாங்கு பகுத்து நடக் கற்றாரே கற்றாரே! –
36-

வேத நுல் கற்றால் என்ன பயன் -பிறரைப் புகழ்ந்து பாடும் தமிழ்நூல் கற்றால் என்ன பயன் -நெல் நாற்று நடக் கற்கா விட்டால் பயனில்லை

உலகத்தில் பகடுழக்கும் ஓங்கு முடித் திறல் வேந்தர்
அலறத்தின் பகடுழக்கும் அதுவுமொரு முனையாமோ?
உலகத்தில் பகடுழக்கும் உயர் முடி கொள் வேளாளர்
சிலவருழச் சிலவர் நடும் அவை யன்றோ திரு முனையே
! -37

வேந்தர் யானை நடக்கும் போர் முனை ஒரு முனை ஆகுமா -வேளாளர் சிலர் உழ, சிலர் நடவு செய்யும் வயல் முனைவு அன்றோ முனை

ஏராலே சேறாக்கி எருவாலே கருவாக்கி
நீராலே பைங் கூழை நிலைப்பிப்பார் தமை யன்றிக்
காராலே காவேரி நதியாலே காசினியில்
ஆராலே பசி தீர்வார் அகலிடத்தில் பிறந்தோரே?
-38-

ஏர் உழுது சேறாக்கி எரு இட்டுப் பயிர் விளைவிப்பார் இல்லாமல் மழையாலோ, காவிரி ஆற்றாலோ பசியைப் போக்க முடியுமா

அந்தணர்க்கு வேத முதல். அரசர்க்கு வெற்றி முதல்,
முந்திய சீர் வசியருக்கு முதலுழவாம், மூதுலகில்
வந்த வுயிர் தமக்கெல்லாம் மருந்தாக வைத்த முதல்
செந் தமிழ்க்கு முதலாம் அத் திருவாளர் செய் முதலே!
-39-

அந்தணர்க்கு வேதம் முதல் -அரசர்க்கு வெற்றி முதல் -வணிகர்க்கு உழவு முதல்
உலகுக்கு நெல் மருந்து முதல் -செந்தமிழ் வளர்க்கும் முதலும் வேளாளர் நடும் நெல் முதலே

சீர் வளரும், மறை வளரும், திறல் வேந்தர் முடி வளரும்,
பேர் வளரும் வாணி பத்தும் பெரு நிதியம் மிக வளரும்,
ஏர் வளரும், திரு வளரும், இசை வளரும், கடல் சூழ்ந்த
பார் வளரும், காராளர் பயிர் வளரும் திறத்தாலே!
–40-

பயிர் வளரும் திறத்தால் -சீர் வளரும் மறை வளரும் -வேந்தர் முடி வளரும்
வணிகம் வளரும் திரு வளரும் இசை வளரும்

காற்று மேல் வருகின்ற கார் விடினும், கடல் சுவறி,
யாற்று நீர் அற வெள்ளி அரசனும் தெற்காயிடினும்,
ஏற்றமே கொடு நாளும் இறைத் துலகம் விளைவித்தும்
காத்துமே உயிர் வளர்த்தல் காராளர் தங்கடனே-
41-

காற்று வந்து கார் மேகம் பெய்யாமல் போனாலும் ஆற்று நீர் வறண்டு போனாலும் ஏற்றம் கொண்டு நீர் இறைத்து பயிர் வளர்த்து உயிர் காத்தல் காராளர் கடமை

கலை யிட்ட மறை வேந்தர் கனல்வேள்வி வளர்ப்பதுவும்,
மலை யிட்ட புயத் தரசர் மணி மகுடம் சூட்டுவதும்,
தலை யிட்ட பொருள் நான்கும் தலை நீட்டப் படுவதுவும்,
நிலை யிட்ட வேளாளர் துலையிட்ட நீராலே
-42-.

மறையோர் வேள்வி செய்வதும் அரசர் முடி சூடுவதும் அறம், பொருள், இன்பம், வீடு – நான்கும் தலை காட்டுவதும் ஏற்றத் துலையில் இறைக்கும் நீரால் தான்

கெட்டாரைத் தாங்குதலால், கேடு படாத் தொழிற் குலத்தோர்
ஒட்டாரென்(று) ஒருவரையும் வரையாத உயர் நலத்தோர்
பட்டாங்கு பகர்ந்தோங்கும் பசிய கலப் பைங்கூழை
நட்டாரே வையமெல்லாம் நலந் திகழ நட்டாரே!
-43-

கெட்டாரைத் தாங்குவர் யாருக்கும் கெடுதி செய்யாத தொழில் புரிபவர் தன்னோடு ஒட்டாதவர் என்று யாரையும் கொள்ளாத உயர் நலம் கொண்டவர் உலகியல் பசியைப் போக்குவதே இதற்காகவே பயிர் நடுவார் இதனால் உலக மக்களை நட்டவர் உழவர்களே

கார் தாங்கும் காவேரி நதி தாங்கும் காராளர்
ஏர் தாங்கு வாரன்றி யாவரே தாங்க வல்லார்?
பார் தாங்கு மன்னுயிரின் பசி தாங்கும் பைங்கூழின்
நீர் தாங்கு வாரலரோ நிலந் தாங்கு கின்றாரே!
–44-

காவேரியைத் தாங்குவது கார் பொழியும் மழை காவேரி தாங்குவது காராளரை. -இவர் ஏர் தாங்குவார் இவரன்றி உலகைத் தாங்க வல்லலார் யார் உயிரின் பசியைப் தாங்குவது பயிர் பயிரின் பசிக்கு நீர் தருபவர் காராளர்

வளைகளையும், மணிகளையும், மலர்களையும், வரும் பலவின்
சுளைகளையும் கொடு கரைக்கே சொரி பொன்னித் திரு நாடர்,
விளை களையுள் செஞ்சாலி வேரூன்றிக் கோடு கொள்ளக்
களை களையா விடில் வேந்தர் கலி களைய மாட்டாரே.
–45-

வளை, மணி, மலர், பலவின் சுளை முதலானவற்றைக் கரையில் சேர்க்கும் ஆறு பொன்னி -பொன்னி நாட்டில் களை களைந்து நெல்லம் பயிர் வேரூன்றாவிட்டால் வேந்தர் பஞ்சம் போக்க முடியாது

திருவடையும், திறலடையும், சீரடையும், செறிவடையும்,
உருவடையும், உயர்வடையும், உலகெலாம் உயர்ந்தோங்கும்,
தருவடையும் கொடையாளர் தண் வயலில் செஞ்சாலி
கருவடையில் பூதலத்தில் கலி யடைய மாட்டாதே!
-46-

திரு, திறல், சீர், செறிவு, உரு, உயர்வு அடைய வயலில் நெல் கருப் பிடிக்கா விட்டால் பஞ்சம் போக்க முடியாது

ஏற்றேறும் அரன் சிறப்புக்(கு) எழிலேறும் மகத்து அழல்கள்
மாற்றேறும் அரசர் முடி வளர்ந்தேறும் வளமை மிகும்
ஊற்றேறும் குலப் பொன்னி உறைநாடர் இடும் சாலி
ஈற்றேறும் போது கலி ஈடேற மாட்டாதே
.-47

பொன்னி நாட்டு உழவர் வயலில் விதைத்த நெல் ஈடேறும் -அதனால் பஞ்சம் நீங்கும் அரசன் முடி வளம் பெறும் சிவனுக்கு வேள்வி சிறக்கும்

முதிராத பருவத்தும், முற்றிய நல் பருவத்தும்,
கதிராகி உயிர் வளர்ப்ப(து) இவர் வளர்க்கும் கதிரன்றோ!
எதிராக வருகின்ற எரி கதிரும், குளிர் கதிரும்
கதிராகி உயிர் வளர்ப்ப(து) உண்டாயிற் காட்டீரே! –
48-

நாம் முதிராத பருவத்திலும் முதிர்ந்த பருவத்திலும் நெல் கதிராக மாறி நம் உயிரை வளர்க்கும்-எரி கதிரோ குளிர் கதிரோ உணவாகி நம் உயிரை வளர்க்க முடியுமா

அலை வளையும், புவி வேந்தர் அங்கையில் தங்கிய வீரச்
சிலை வளையும், மதன் கருப்புச் சிலை வளையும், கொடுங் கலியின்
தலை வளையும், காராளர் தண் வயலில் செஞ்சாலிக்
குலை வளையும் பொழுதினிற் செங் கோல் வளைய மாட்டாதே!
–49-

வேந்தர் வில் வளையும் -மன்மதன் கரும்பு வில் வளையும் -கலி என்னும் பஞ்சத்தின் தலை வளையும் எதனால் வேளாளர் வயலில் நெல்லங்குலை வளையவதால்-இதனால் செங்கோல் மட்டும் வளையாது

அறங் காணும், புகழ் காணும், அருமறையின் ஆகமத்தின்
திறங் காணும், செயங் காணும், திரு வளர்க்கும் நிதி காணும்,
மறங் காணும், கருங் கலியின் வலி தொலைத்த காராளர்
புறங் காணுஞ் சோறிட்டுப் புறங் காணப் புகுந்திடினே-
-50-

நெல் விளைந்து சோறிடக் கண்டால் மேலே சொன்ன அனைத்தும் காணலாம்

மாயனார் வடிவாளும், மகபதிவச் சிரவாளும்,
தாயனார் அரிவாளின் தகைமை பெறுந் தன்மையவேல்,
தூயனார் அவர் வழியோர் சுடரரிவாட் கிணையென்ன
வாயினாற் புகலுதும் யாம் மன்னரொரு வாளினையே.
–51-

வடிவாள் கூர்மையா ஒளி -இதனால் மாயவனுக்குச் சிறப்பு -சிரவாள் தலை ஒளி
சிவன் தலையில் கங்கை, நிலவு சூடிச் சிறப்பினைப் பெற்றார் -அரிவாள்-அரியப்பட்ட ஒளி பிரமன் தலை ஒன்று அரியப்பட்டுச் சிறப்பினைப் பெற்றார் -மன்னன் கையில் போர் வாள் ஏந்திச் சிறப்பினைப் பெற்றான் -இவை யெல்லாம் தூயனார் உழவர் கையில் இருக்கும் நெல் அறுக்கும் அரிவாளுக்கு இணை ஆமோ வாயைத் திறந்து சொல்லுங்கள்

தோட்டியல் பூங் குழற் பெரிய பிராட்டிக்கு ஈராழிச் சொல்
பாட்டியல் சீர் பெற வளித்த பரமருவப் புற முன்னோர்
காட்டிய நென் முளை யறுத்தார் கிளை யறுத்தார்
ஊட்டியறுத் தார் மரபோர் ஊட்டவறுத் தாருலகே. –
-52-

உழத்தி பெரிய பிராட்டி ஈர நெல் அறுக்கிறாள் -திருமகள் பெரிய பிராட்டி பாற்கடலில் இருக்கிறாள் -பாட்டியல் சீர் பெறும் உழத்தி நெல் அறுக்கிறாள் -பாட்டியல் சீர் பெறும் உமை பரமன் பக்கம் இருக்கிறாள் -முளை நெல்லை அறுத்தவர் தம் கிளைஞரை அறுப்பர் -ஊட்டி அறுக்கும் மரபு அரச மரபு அரசர்க்கு ஊட்ட உழத்தியர் நெல் அறுத்தனர்

அருவுண்ட பொற் கதிரை நெற் கதிர் நேர் ஆதுலர்க்குப்
பரிவுண்ட பெரு வார்த்தை புதிதன்று பழமைத்தே!
விரிவுண்ட கடற் படியும் மேகங்கள் மறுத்தாலும்,
திரிவுண்டோ காராளர் செயலினுக்குச் செப்பீரே!
–53-

அறுத்த நெல்லை உழவர் ஆதுலர்க்கு (கேட்போர்க்கு) வழங்குவர் கடல் படியும் மேகம் பெய்ய மறுத்தாலும் உழவர் வழங்க மறுப்பதில்லை

கோடு வரம் பிடை யுலவும் குலப் பொன்னித் திரு நாடர்
நீடு பெரும் புகழ் வளரும் நில மடந்தைத் திரு மக்கள்
பீடு வரம் பிடை வயலில் பிறை வாளில் கடிகின்ற
சூடு வரம் பெறாதேல் சுருதி வரம் பேறாதே!-
54-

பொன்னி நீர் வரப்புள்ள வயலில் பாயும் உழவர் நிலமடந்தையின் திருமக்கள் அவர் வயலில் நெற்கட்டுகள் (சூடு) இல்லை என்றால் அந்தணர் சுருதி ஓதுதல் நடைபெறாது

சீரான விறல் வேந்தர் செரு விளைத்துச் செல்வதுவும்,
பேரான மநு நீதி பிறழாது விளங்குவதும்,
நீராலே செஞ்சாலி விளைவித்து நெறி நடத்தும்
காராளர் விளை வயலிற் வளம் பண்ணும் பொருட்டாலே
. –55-

வேந்தர் போரிடுவதும் மனுநீதி பிறழாமல் ஆள்வதும் உழவர் நீர் பாய்ச்சி, நெல் விளைவித்து, வயல்வளம் பெருக்குவதற்காகவே

கடி சூட்டு மலர் வாளிக் காமனடல் சூடுவதும்,
கொடி சூட்டு மணி மாடக் கோபுரம் பொன் சூடுவதும்,
முடி சூட்டி வய வேந்தர் மூவுலகும் இறைஞ்சு புகழ்
படி சூட்டி யிருப்பதெல்லாம் படு சூட்டின் வலியாலே,
–56-

காமன் மலர் அம்பு எய்வது கோயில் கோபுர மணிமாடம் பொன்னால் வேயப்படுவது வேந்தர் முடி சூட்டிக் கொள்வது இவை யெல்லாம் உணவுக்குப் படி யளக்கும் நெல் கட்டுச் சூடு வயலில் பெருகுவதனாலேயே

முருட்டின் மிகு வெம் பகைவர் முரண் கெடுத்திவ் வுலக மெல்லாம்
தெருட்டி நெறி செல்கின்ற செங்கோன்மை செலுத்துங்கோல்,
வெருட்டின் மிகுங் கருங் கலியை வேரோடும் அகற்றுங் கோல்,
சுருட்டி மிகத் தடிந்து செந்நெற் சூடுமி தித் திடுங்கோலே
. –57

முரண் பகை கெடுத்து செங்கோல் செலுத்தும் கோல் எது -கலி என்னும் வறுமையைப் போக்கும் கோல் எது -நெல்லைச் சுருட்டிப் பிடித்து அறுத்து அதன் சூட்டை அடித்து உதறி மாடு விட்டு மிதிக்கும் கோல்

காராளும் கரி யினமும் பரி யினமும் கை வகுத்துப்
போராளும் முடி வேந்தர் போர்க் கோலம் எந் நாளும்
சீராளும் செழும் பொன்னித் திரு நாடர் புகழ் விளக்கும்
ஏராளும் காராளர் இவர் செய்யும் போராலே ! –
-58-

வேந்தர் யானை, குதிரை நடத்தி, போர் புரிவது எதனால் ஏர் நடத்தி, காராளர் நெல் அடிக்கும் போரால்

பார் வேந்தர் பெருஞ் செல்வம் பழுது படாது ஒரு நாளும்
ஏர் வேந்தர் பெருஞ் செல்வம் அழிவு படா திருத்தலினால்
தேர் வேந்தர் போர் களத்துச் சிலர் வெல்வர் சிலர் தோற்பர்
ஏர் வேந்தர் போர்க் களத்துள் இரப்பவரும் தோலாரே
–59-

பார் வேந்தர் செல்வம் பழுது படாமல் இருப்பது ஏர் வேந்தர் செல்வம் அழியாமல் இருப்பதால் தான் தேர் வேந்தர் போர் களத்தில் சிலர் வெல்வர். சிலர் தோற்பர் ஏர் வேந்தர் போர்க் களத்தில் இரந்து கேட்போரும் தோற்பதில்லை

வளம் பாடும் குடை மன்னர் மத யானை படப் பொருத
களம் பாடும் பெருஞ் செல்வங் காசினியிற் சிறந்தன்று!
தளம் பாடும் தாரகலத் தாளாளர் தம்முடைய
களம் பாடும் பெருஞ் செல்வங் காசினியிற் சிறப்புடைத்தே! —
60-

யானைப் போர்க்களத்தைப் பாடுவதை விட காராளர் போர்களத்தைப் பாடுவது சிறப்புடையது

நாவலோ நாவலென நாடறிய முறை யிட்ட
ஏவலோர் போர்க் களத்தில் எதிர் நிற்பர் முத் தமிழ் தேர்
பாவலோர் இசை வல்லோர் பற்றுடைய பதினெண்மர்
காவலோர் எல்லோரும் கை யேற்கும் பொருட்டாலே! –6
1-

“நாவலோ நாவல்” நெல் அடிக்கத் தொடங்கும் போது உழவர் இவ்வாறு குரவை ஒலி எழுப்புவர் -அதனைக் கேட்டதும் போர் மறவர் முத்தமிழ்ப் பாவலர் இசை வல்லோர் 18 கணத்தவர் அனைவரும் கை யேந்தி நிற்பர் உழவர் நெல் வழங்குவர்

எடுத்த போர்க் களத்தரசர் இனைப் பகடு சில நடத்திப்
படுத்த போர் பயந்ததனால் பார் தாங்கி வாழ்வதெல்லாம்
எடுத்த போர் உழவளரும் இனைப் பகடு சில நடத்திப்
படுத்த போர் வையகத்தில் விளங்குகின்ற பயனாலே!
–62-

உழவர் பகடு (எருது) பிணையல் நடத்தி நெல் அடிப்பர் -அதன் வளத்தால் மன்னரின் பகடு (யானை) போர்க்களத்தில் நடக்கும்

விற் பொலியும் பெருங் கீர்த்தி வேளாளர் விளை வயலில்
நெற் பொலி யுண்டாமாகின் நில மகளும் பொலிவுண்டாம்
பொற் பொலி வுண் டாமுலகம் புகழ்ப் பொலி வுண் டாம் புலவோர்
சொற் பொலி வுண் டாங் கலியின் துயர் பொலிய மாட்டாதே.-
-63-

ஒளி பொலியும் பெருஞ்சிறப்பபு கொண்டவர் வேளாளர் -அவர் வயலில் நெல் பொலியுமாயின் நிலமகள் பொலிவாள் உலகில் பொன் பொலியும் புலவர் சொல் பொலியும் கலி என்னும் வறுமை பொலியாது

தன்னிகரொன் றொவ்வாத தலம் வளர்க்கும் பெருக்காளர்
மன்னு பெருங் களத்தினிடை மாருதத்தில் தூற்றி விடும்
செந் நெல்லைப் பொலிவாலே செம் பொன் மலை எனக்குவித்தே
அந் நெல்லின் பொலிவாலே அவனியுயிர் வளர்ப்பாரே! –
64-

உழவர் நிகரில்லாத் தலம் வளர்ப்பவர் அவர் களத்தில் காற்றில் நெல் தூற்றுவர் தூற்றிய நெல்மலை குவியும் அந்தக் குவியல் நெல்லால் உலகின் உயிரினங்களை வளர்ப்பர்

ஆடையா பரணங்கள் அணிந்து முடி சுமந்திடலும்
ஓடையா னை யினெருத்தம் உயர்ந்துலகம் தாங்குதலும்
பேடையோ டன நீங்காப் பெருங் கழனிப் பெருக்காளர்
கூடையா னது கையிற் கொண்டு களம் புகுந்திடினே. —
65-

அன்னம் நீங்காக் கழனி -கழனி உழவர் உழவர் களத்தில் ஏற்போர் கூடை கூடை கொண்டு களத்தில் புகுந்து உலகோர் நெல்லைப் பெற்றுக்கொள்வதால் அரசன் ஆடை அணி பொலிய முடி சூடிக்கொள்வான் அவன் யானைக்கு ஓடை பொலியும்

வலி யாற்று மன்னவர்க்கும், மறையவர்க்கும், தேவருக்கும்,
ஒலி யாற்றும் பேருலகில் உய்ய வமு திடுங் கூடை,
கலி மாற்றி நயந்த புகழ்க் காராளர் தம்முடைய
பொலி தூற்றுங் கூடைக்குப் போதுவதோ புகலீரே!
–66-

மன்னவர் மறையவர் தேவர் பொலிவு பெற உழவர் அமுது தருவர் இவர் நெற்பொலி தூற்றும் கூடைக்கு நிகர் உண்டா

சீற்றங் கொள் கருங் கலியைச் செறுக்குங் கோல், செக தலத்துக்
கூற்றங் கொள் மனு நெறியை உண்டாக்கி வளர்க்குங் கோல்
ஏற்றங் கொள் வய வேந்தர்க்கு எப் பொருளும் கொடுத்துலகம்
போற்றுஞ் சொற் பெருக்காளர் பூங் கையினிற் பொலி கோலே.
–67-

உழவர் கைகள் நெல்பொலி தூற்றும் கோலே கலியின் செறுக்கை அறுக்கும் கோல் மனு நெறி உண்டாக்கி வளர்க்கும் கோல் வேந்தர்க்கு எல்லாம் கொடுத்துப் போற்றும் கோல்

திருத் தோட்டுப் பிரமாவாற் செனிக்கின்ற உயிர்களுக்கும்
உருத் தோட்டுப் புகழுக்கும் உரிமை முறை வளர்க்கின்ற
வரைக் கோட்டுத் திணி புயத்து வளர் பொன்னித் திரு நாடர்
விரைக் கோட்டை கொண்டன்றோ வேந்தரிடுங் கோட்டைகளே!
–68-

உழவரின் நெல்விதைக் கோட்டையால் வேந்தர் கோட்டை இருக்கிறது பிரமன் உண்டாக்கும் உயிர்கள் வாழ்கின்றன

தளர்ந்துயிர் அத்தனைக்கும், தாளாளர், எண்டிசையும்,
வளர்ந்த புகழ் பெருக்காளர், வலிமையார் உரைப்பாரே?
அளந்துலகம் அனைத்தாளும் அரசர் வேதியர் புலவர்
களந்துவைக்க வையுகுத்த கல்லறைகள் உண்பாரேல்.
–69-

உழவர் உயிர்களுக்குத் தாளாளர் எங்கும் புகழை வளர்ப்பவர் இவர் வலிமையைச் சொல்ல வல்லார் ஆர் அரசர் அந்தணர் புலவர் எல்லாரும் சேரும் கல்லறை உழவர் களமே

அரியாதனத்தின் மேலிருந்தே அம் பொற் குடைக் கீழ் அரசியற்றும்
பெரியார் பக்கல் பெறும் பேறும் பேறே யல்ல பெருக்காளர்
சொரியா நிற்பச் சிலர் அளந்து தூற்றா நிற்பச் சிலர் அளந்து
புரியா நிற்பப் பெறும் பேற்றுக்(கு) அது நேரொக்கப் போதாதே! —
70-

அரசர் பக்கத்தில் இருந்து கொண்டு ஆணை செலுத்தும் பேறு பேறு அன்று -உழவர் களத்தில் நெல் தூற்றவும் நெல் அளக்கவும் பெறும் பேறே பெரும் பேறு

பார் வாழி! நான்மறை நூற் பருணிதராகுதி வாழி!
கார் வாழி! வளவர் பிரான் காவேரி நதி வாழி!
பேர் வாழி! பெருக்காளர் பெருஞ் செல்வக் கிளை வாழி!
ஏர் வாழி! இசை வாழி! எழுபத் தொன் பது நாடே!
–வாழ்த்து

பார் நான்மறை ஆகுதி கார் மழை வளவர் பிரான் காவேரி யாறு உழவர் கிளைஞர் உழவரின் ஏர் உழவரின் இசை 79 நாடுகள் -எல்லாம் வாழ்க

ஏர் எழுபது முற்றும்

————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –


Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading