ஸ்ரீ திவ்ய தேச மங்களா ஸாஸன அருளிச் செயல்கள்-ஸ்ரீ திரு வண் பரிசாரம் –ஸ்ரீ திருப்பதி சாரம்

மூலவர் -திருக் குறள் அப்பன் -திரு வாழ் மார்பன் –வீற்று இருந்த திருக் கோலம் -கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -கமல வல்லி நாச்சியார்
விமானம் -இந்த்ர கல்யாண விமானம்
தீர்த்தம் -லஷ்மி தார்த்தம்
மங்களா சாசனம் -நம்மாழ்வார் -8-3-ஒரே பாசுரம் — ஸுகுமார்யம் -கொடை தன்மை -ஆழ்வாரையே கொடுத்து அருளினார் –

சப்த ரிஷிகள் அத்ரியை முன்னிட்டு பகவானைப் பிரார்த்திக்க அவர்களுக்கு சேவை சாதித்து அருளினார்
ஹிரண்ய கசிபுவைக் கொன்ற நரசிங்கப் பெருமாள் கோபம் தீர்ந்து லஷ்மியைத் தன் திரு மார்பில் சேர்த்துக் கொண்ட இடம்
நம்மாழ்வாரின் தாயார் உடைய நங்கையாரின் திரு வவதார ஸ்தலம் -சோமா தீர்த்தக் கரையில் –
அகஸ்தியர் -குலசேகர மகரிஷி -ராமர் லஷ்மணர் சீதா ஆஞ்சநேயர் விபீஷணன் பிரகாரத்தில் சேவை

தற்போது உள்ள பெயர் ஸ்ரீ திருப் பதி சாரம்
மூலவர் ஸ்ரீ திருக் குறளப்பன், ஸ்ரீ திரு வாழ் மார்பன்
கோலம் வீற்றிருந்த
திருமுக மண்டலம் கிழக்கு
உற்சவர் ஸ்ரீ திரு வாழ் மார்பன்
தாயார் ஸ்ரீ கமல வல்லி நாச்சியார்
தீர்த்தம் ஸ்ரீ லக்ஷ்மி தீர்த்தம்
விமானம் ஸ்ரீ இந்த்ர கல்யான விமானம்
மண்டலம் ஸ்ரீ மலைநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் தமிழ் நாடு
அடிப்படை இடம் ஸ்ரீ நாகர்கோயில்
நாமாவளி ஸ்ரீ கமல வல்லீ ஸமேத ஸ்ரீ திருக் குறளப்பன் ஸ்வாமிநே நமஹ-

————–

ஸ்ரீ ஸ்ரீ நம்மாழ்வார் -1-பாசுரம் மங்களாசாசனம் —

வருவார் செல்வார் வண் பரிசாரத் திருந்த என்
திரு வாழ் மார்வற்கு என் திறம் சொல்லார் செய்வதென்?
உருவார் சக்கரம் சங்கு சுமந்து இங்கும்மோடு
ஒரு பாடுழல்வான் ஓரடியா னுமுள னென்றே. –8-3-7-

ஒரு காலத்தில் சப்தரிஷிகள் எழுவரும் திருமாலைக் காணும் முகத்தான் சுசீந்திரத்திற்கு அருகாமையில் இருக்கும் ஒரு இடத்தில் (தற்போது ஆஸ்ரமம்
என்று அழைக்கப்படும் கிராமம்) தவஞ்செய்ய அவர்கட்கு இறைவன் சிவரூபமாய் காட்சியளிக்க, தாங்கள் இறைவனை மஹாவிஷ்ணு ரூபத்திலேயே
தரிசிக்க விரும்பியதால், சுசீந்தரத்திற்கு 4 மைல் தொலைவில் உள்ள சோமதீர்த்தம் என்ற இடத்தில் மீண்டும் தவம் செய்ய, தவத்தின் கடுமையை
மெச்சிய ஸ்ரீமந் நாராயணன் மஹாவிஷ்ணு வாக அவர்கட்கு காட்சி கொடுக்க எந்நாளும் இதேபோன்ற திருக்கோலத்தில் இங்கே எழுந்தருளி பக்தர்களின்
பாவம் போக்கி மோட்சம் நல்கிட வேண்டுமென்று கேட்க திருமாலும் அதற்கிசைந்து அவ்வண்ணமே செய்வதாக ஒப்புக்கொண்டனர்.
இதனால்தான் இங்கு அமர்ந்துள்ள பெருமாளைச் சுற்றி 7 ரிஷிகள் சூழ்ந்துள்ள திருக்கோலத்தை இன்றும் காணமுடிகிறது.

இத்தலத்தைப் பற்றி பிறிதொரு கதையும் உண்டு. பகவான் நரசிம்ம அவதாரங்கொண்டு இரண்யனை வதம் செய்து விட்டு மிகவும் கோபம்
அடங்காதவராய் இருந்த போது லட்சுமி பயந்துபோய் இவ்விடம் வந்து அவர் சாந்த மூர்த்தியாக வேண்டுமென தவம்செய்ததாகவும், பின்பு பிரகலாதனின் பிரார்த்தனைக்கு இணங்கி சாந்தமடைந்த எம்பிரான் தேவியைத் தேடி இவ்விடம் வர லட்சுமி மிகவும் ஆனந்தம் அடைந்து பகவானின் திருமார்பில் நித்யாவாசம் செய்ய எத்தனித்து உள்புகுந்து கொண்டாராம்.

திருவாகிய இலக்குமியை தன் சரீரத்திலே இவ்விடத்தில் பெருமாள் ஏற்றுக்கொண்டதால் இப்பிரானுக்கு திரு+வாழ்+மார்பன் திருவாழ்மார்பன்
என்பது திருநாமம்.

இப்பகுதியில் திருவெண்பரிசாரம் என்றால் வெகு சிலருக்கே தெரியும். திருப்பதிசாரம் என்பதே இவ்வூருக்குச் சகலரும் அறிந்த பெயராக உள்ளது.

திருவாகிய இலக்குமி தனது பதியாகிய மஹாவிஷ்ணுவை இவ்விடத்தில் சார்ந்ததால் திருப்பதி சாரம் என்பதே இத்தலத்திற்குப் பொருத்தமான பெயர்
என்று இவ்வூர்வாழ் பெரியோர் பகர்கின்றனர்.
இதனாற்றான் இங்கு தாயாருக்கு தனிச் சன்னதியோ தனி விக்ரகமோ கிடையாது. ஏகாந்தத்தில் இருவரும் ஒருமிக்கவே சேவை சாதிக்கின்றனர்.

மூலவர்–திருவாழ்மார்பன்
தாயார்-  கமலவல்லி நாச்சியார்
தீர்த்தம்–   லட்சுமி தீர்த்தம்
விமானம்–  இந்திர கல்யாண விமானம்
காட்சி கண்டவர்கள்–  காரி, உடைய நங்கை, லட்சுமி, கருடன், சப்த ரிஷிகள்

இங்குள்ள மூலவர் கடுகு, சர்க்கரை மற்றும் மலைதேசத்து மூலிகைகளால் செய்யப்பட்டுள்ளதால் (சூடிப்புனயப் பட்டுள்ளதால்) இவருக்கு
திருமஞ்சனம் கிடையாது.
நம்மாழ்வாரின் அன்னை ஸ்ரீஉடையநங்கை அவதரித்த தலம்.

திருப்பதிசாரத்தில் பிறந்த உடையநங்கை ஆழ்வார் திருநகரியைச் சார்ந்த காரி என்பாருக்கு மணமுடித்துக் கொடுக்கப்பட்டு உடைய நங்கை
புத்திரப்பேறு வேண்டி இத்தலத்தில் 41 நாட்கள் விரதமிருந்து பெருமாளுக்கு ஊஞ்சல் உற்சவம் நடத்தி கலி 43வது நாள் நம்மாழ்வாரைப் பெற்றெடுத்தார்.

வைகாசி விசாகத்தன்று அவதரித்த நம்மாழ்வாரை ஆழ்வார் திருநகரியில் உள்ள ஆதிப்பிரான் சன்னதியில் விட அந்தக் குழந்தை தவழ்ந்து புளியமர
பொந்தில் புகுந்து யோக முத்திரையுடன் பத்மாஸன யோகத்தில் ஆழ்வாராய் அமர்ந்தார்.

திருக்குறுங்குடி எம்பெருமானை வேண்டிய பின்பு உடைய நங்கை இத்தலத்திற்கு வந்து 41 நாள் தவமிருந்தார்.

இங்கு மூலவருக்கு வலப்புறத்தில் இராம, இலக்குவ, சீத்தா பிராட்டியாருண்டு. இதற்கு ஒரு காரணக் கதை உண்டு. வீடணன்
அயோத்தியில் ஸ்ரீஇராம பிரானின் பட்டாபிஷேகத்தில் கலந்து கொண்டு திரும்பும் போது அவரால் கொணரப்பட்ட பெருமான் அரங்கனாக
பள்ளிகொண்ட பின்பு விபீஷ்ணன் இவ்வழியாக இலங்கை செல்லும் போது இப்பெருமானை வழிபட்டு வேண்டுதல் ஒன்று உண்டு என்று விளம்பினார்.
உடனே வீடணனுக்கு காட்சி கொடுத்த திருவாழ்மார்பன் யாது வேண்டுமென அன்போடு வினவ, என்னால் இராமாவதார திருக்கோலத்தை மறக்க
முடியவில்லையே என்று கண்ணீர் மல்க நின்று மீண்டும் ஒருமுறை காட்சியைக் காண ஆசைப்படுகிறேன். என்று சொல்ல அவ்விதமே காட்சி தந்தருளினார்
என்பர்.

குலசேகர ராஜன் (குலசேகர ஆழ்வார் வம்ச அரசர்) கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் இத்தலத்தைப் புதுப்பித்து வாகனம். மதில் போன்ற திருப்பணிகள் பலவும்
செய்து, கொடிக்கம்பத்தையும் (துவஜஸ்தம்பத்தையும்) நிர்மாணித்து பிரம்மோத்ஸ்வமும் செய்துவைத்தார்.

ஆஞ்ச நேயரின் வேண்டுகோளுக்கிணங்கி அகத்தியர் இங்கு இராமாயணம் அருளியதாகவும் கூறுவர்.

இப்பெருமான் பிரஸன்ன மூர்த்தியாகி 4 கரங்களுடன் சங்கு சக்கரங்களுடன் காட்சியருளுவது கண்கொள்ளாக் காட்சியாகும்.

நம்மாழ்வார் குழந்தையாகத் தவழ்ந்துள்ளது போன்ற மிக அழகிய விக்ரகம் இங்கு ஒன்றுள்ளது.

60-திரு வண் பரிசாரம் -பிரிவாற்றாது வருந்தும் தலைவியின் நிலை கண்ட செவிலி இரங்கல்

அடியும் குளிர்ந்தாள் அறிவும் குலைந்தாள்
முடிகின்றாள் மூச்சு அடங்கு முன்னே கடிது ஓடி
பெண் பரிசு ஆர் அங்குப் பிறப்பித்து மீளுவார்
வண் பரிசாரம் சிறந்த மாற்கு –60-

அடியும் குளிர்ந்தாள் அறிவும் குலைந்தாள் -கால்களும் குளிரப் பெற்று அறிவும் அழியப் பெற்று
முடிகின்றாள் -மரணம் அடையும் அந்திம தசையில் இருக்கிறாள்
மூச்சு அடங்கு முன்னே கடிது ஓடி பெண் பரிசு -பெண்ணின் தன்மையை
ஆர் அங்குப் பிறப்பித்து-விளங்கும் படி சொல்லித் தெரிவித்து –
மீளுவார் வண் பரிசாரம் சிறந்த மாற்கு –இருந்த மாற்கு -பாட பேதம் –

வீற்று இருந்த திருக்கோலம்
வண் பரிசாரத்து இருந்த என் திரு வாழ் மார்பற்கு என் திறம் சொல்லார் செய்வது என் -நம்மாழ்வார் –

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading