பக்தாம்ருதம் விஶ்வஜநாநுமோதநம் ஸர்வார்த்ததம் ஸ்ரீஶடகோபவாங்மயம் |
ஸஹஸ்ரஶாகோபநிஷத்ஸமாகமம் நமாம்யஹம் த்ராவிட வேதஸாகரம் ||
எம்பெருமானின் பக்தர்களுக்கு அமுதம் போன்றிருக்கும், எல்லோருக்கும் ஆனந்தத்தைக் கொடுக்ககூடியதும், எல்லா அர்த்தங்களையும் காட்டகூடியதும், ஸ்ரீ சடகோபரின் திருவாக்கிலே உதித்ததும், ஆயிரம் சாகைகளையுடைய ஸாம வேதமாய், அதன் ஸாரமான சாந்தோக்ய உபநிஷத்தாய் இருக்கும், தமிழ் வேதக் கடலான திருவாய்மொழியை நான் வணங்குகிறேன்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூர் என்றும்
மருவினிய வண்பொருநலென்றும் அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே ஏப்பொழுதும்
சிந்தியாய் நெஞ்சே தெளிந்து
நெஞ்சே! திருவழுதி நாடு என்கிற ப்ராந்தியத்தை நினைத்தும், அதனுள் இருக்கும் அழகிய திருக்குருகூர் என்ற திவ்யதேசத்தை நினைத்தும், அனைவரும் விரும்பும்படி இனிமையாய் இருக்கும் தாமிரபரணி ஆற்றை நினைத்தும், பெறுதற்கரிய வேதங்களை அந்தாதி க்ரமத்தில் திருவாய்மொழியாகப் பாடின ஆழ்வாரின் இரண்டு திருவடிகளை எப்பொழுதும் தெளிவுடன் சிந்திப்பாயாக.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்
இனத்தாரையல்லாது இறைஞ்சேன் தனத்தாலும்
ஏதும் குறைவிலேன்எந்தை சடகோபன்
பாதங்கள் யாமுடைய பற்று
என்னுடைய மனத்தாலும் வாக்காலும் வள்ளல் தன்மையுடைய திருக்குருகூரை ஆதரிக்கும் கோஷ்டியில் இருப்பவர்களைத் தவிர மற்றவர்களை வணங்கமாட்டேன். கைங்கர்யச் செல்வத்திலும் எவ்விதமான குறையும் என்னிடத்தில் இல்லை. ஏனெனில் என்னுடைய ஸ்வாமியான நம்மாழ்வாரின் திருவடிகள் நம்முடைய பற்றுக்கோலாக இருப்பதால்.
ஏய்ந்த பெரும் கீர்த்தி இராமானுச முனிதன்
வாய்ந்த மலர்ப் பாதம் வணங்குகின்றேன் ஆய்ந்த பெருஞ்
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதம்தரிக்கும்
பேராத உள்ளம் பெற
குற்றமில்லாத சிறந்த குணங்களால் நிறைந்து இருப்பவரான நம்மாழ்வார் அருளிச்செய்த நேர்மை மிகுந்த தமிழ் வேதத்தை தாங்கிக்கொள்ளும் சக்தி கொண்டதாய் வேறொரு விஷயத்தில் செல்லாத நெஞ்சை அடைவதற்காக தகுதியான பெரிய புகழையுடைய எம்பெருமானாரின் பொருத்தமான திருவடித்தாமரைகளை வணங்குகிறேன்.
வான் திகழும் சோலை மதிள் அரங்கர் வன்புகழ் மேல்
ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் ஈன்ற
முதல் தாய் சடகோபன் மொய்ம்பால் வளர்த்த
இதத் தாய் இராமானுசன்
ஆகாசத்தளுவும் வளர்ந்திருக்கும் மரங்களையுடைய சோலைகளையும் ஏழு மதிள் சுற்றுக்களையும் உடைய திருவரங்கத்தில் சயனித்திருக்கும் பெரிய பெருமாளின் திருக்கல்யாண குணங்கள் விஷயமாக அமைந்த தமிழ் வேதமான ஆயிரம் பாசுரங்களையும் முதலிலே பெற்றெடுத்த தாய் நம்மாழ்வார், மிடுக்குடன் அதனை வளர்த்த, அதன் நன்மையைப் பார்க்கும் இரண்டாம் தாய், எம்பெருமானார்.
மிக்க இறை நிலையும் மெய்யாம் உயிர் நிலையும்
தக்க நெறியும் தடையாகித் தொக்கியலும்
ஊழ் வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர் கோன்
யாழின் இசை வேதத்தியல்
ஆழ்வார் திருநகரியில் இருப்பவர்களுக்குத் தலைவரான நம்மாழ்வார் அருளிச்செய்த வீணையின் இசை போன்ற திருவாய்மொழிப் பாசுரங்கள் மிகவும் உயர்ந்தவனான எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணனின் தன்மையையும், நித்யமாக இருக்கும் ஜீவாத்மாவின் தன்மையையும், ஸ்வரூபத்துக்குச் சேர்ந்த உபாயத்தின் தன்மையையும், அந்த எம்பெருமானை அடைந்து அனுபவிக்கும் நிலைக்கு விரோதியாய்ச் சேர்ந்து இருக்கும் முன்னை வினைகளின் தன்மையையும், வாழ்வாகிற உயர்ந்த புருஷார்த்தத்தின் தன்மையும் விளக்கிக் கூறும்.
ச்ரிய:பதியான ஸர்வேச்வரன் எல்லாரையும் விட உயர்ந்தவன், அனைத்துக் கல்யாண குணங்களையும் உடையவன், திருமேனியை உடையவன், ஸ்ரீவைகுண்டம் மற்றும் ஸம்ஸாரம் ஆகிய இரு உலகங்களுக்கும் தலைவன், வேதத்தாலே முழுவதுமாகக் காட்டப்பட்டவன், எல்லாவிடத்திலும் வ்யாபித்திருப்பவன், எல்லாரையும் நியமிப்பவன், சேதனர்களுக்கும் அசேதனப் பொருள்களுக்கும் அந்தர்யாமியாய் இருந்து அவர்களை முழுவதுமாக ஆள்பவன் ஆகிய விஷயங்களை எடுத்துச் சொல்லி அப்படிப்பட்ட எம்பெருமான் தனக்கு மயர்வற மதிநலம் அருளியதை நினைத்து மகிழ்கிறார் இப்பதிகத்தில்.
திருவாய்மொழிக்கு இந்தப் பதிகம் சுருக்கம். இந்தப் பதிகத்துக்கு முதல் மூன்று பாசுரங்கள் சுருக்கம். முதல் மூன்று பாசுரங்களுக்கு முதல் பாசுரம் சுருக்கம். முதல் பாசுரத்துக்கு முதல் வரி சுருக்கம் என்பர் பெரியோர்.
முதல் பாசுரம். எம்பெருமானின் பரத்வத்தைக் காட்டும் கல்யாண குணங்களுடன் கூடியிருப்பதையும், தன் விஷயத்தில் காரணமில்லாமல் அவன் செய்த நன்மையும், நித்யஸூரிகளை ஆள்வதையும், அழகிய திருமேனியுடன் இருப்பதையும் அனுபவித்து அப்படிப்பட்ட எம்பெருமானின் திருவடிகளில் தொண்டு செய் என்று தன் நெஞ்சுக்குச் சொல்லுகிறார்.
உயர்வற உயர் நலம் உடையவன் யவனவன்
மயர்வற மதி நலம் அருளினன் யவனவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன்
துயரறு சுடரடி தொழுதெழென் மனனே.
மற்ற உயர்த்திகள் எல்லாம் ஒன்றுமில்லாமல் செய்யுமளவுக்கு உயர்ந்ததான ஆனந்தம் முதலிய கல்யாண குணங்களையுடையவன். சாஸ்த்ரத்தில் பரதெய்வமாகக் காட்டப்பட்ட அவன் என்னுடைய அறியாமை முழுவதும் அழியும்படி இயற்கையான ஞானம் மற்றும் ப்ரேமத்தை எனக்கு அருளினான். அவன் மறதி போன்ற குறைகள் இல்லாத நித்யஸூரிகளுக்குத் தலைவனானவன். நம் துயர் போகும்படி அவனுடைய மிகவும் ஒளிவிடக்கூடிய திருவடிகளைக் குறித்துத் தொண்டு செய்து, என் மனஸ்ஸே! உஜ்ஜீவனத்தைப் பெற்று எழு.
இரண்டாம் பாசுரம். “யவன்” என்று சொன்ன எம்பெருமானின் ஸ்வரூபத்தினுடைய தனித்துவம் வாய்ந்த பெருமையை அருளிச்செய்கிறார்.
மனனகமலமற மலர்மிசை எழுதரும்
மனனுணர்வளவிலன் பொறியுணர்வவையிலன்
இனனுணர் முழுநலம் எதிர்நிகழ் கழிவினும்
இனனிலன் எனனுயிர் மிகு நரையிலனே
மனஸ்ஸிலிருந்து மலமான காமம் க்ரோதம் முதலியவை கழிய, அதனால் மலர்ந்து மேலே வளரக்கூடியதான ஞானத்தாலே அளவிடமுடியாத நிலையிலும் ஆத்மாவைவிட உயர்ந்தவனாக இருப்பவனாய், வெளிப் புலன்களுக்கு விஷயமான அசித்தைவிட உயர்ந்தவனாய், இப்படி சேதனாசேதனங்களை விட உயர்ந்தவனாய், ஞானம் மற்றும் ஆனந்தத்தை அடையாளமாக உடையவனாய், எதிர்காலம், நிகழ்காலம் மற்றும் இறந்தகாலத்திலும் தனக்கு ஒப்பாகவோ, தன்னைவிட உயர்ந்தோ வேறொன்று இல்லாதவன் எனக்கு உயிராக இருக்கிறான். “அவன் துயரறு சுடரடி தொழுதெழு என் மனனே” என்று எல்லாப் பாசுரங்களிலும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மூன்றாம் பாசுரம். எம்பெருமானின் லீலாவிபூதியுடன் கூடியிருக்கும் தன்மையைக்காட்டி அவன் எல்லாப் பொருள்களிலும் எல்லா இடங்களிலும் இருக்கிறான் என்பதைக் காட்டுகிறார்.
இலனது உடையனிது என நினைவரியவன்
நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன்
புலனொடு புலனலன் ஒழிவிலன் பரந்த அந்
நலனுடை ஒருவனை நணுகினம் நாமே
“இந்தப் பொருள் அவனிடத்தில் இல்லை, இந்தப் பொருள் உள்ளது” என்று சில பொருள்களிலும் மட்டும் அளவிட்டு நினைக்க முடியாதவனாய், பூமியிலும், மேலுலகத்திலும் இருப்பவனாய், உருவத்துடன் இருக்கும் அசித்தையும் உருவம் இல்லாத ஆத்மாவையும் தனக்கு சரீரமாக உடையவனாய், இப்படிக் கண்ணுக்குப் புலப்படும் பொருள்களுள் கலந்து நிற்கும்பொழுதே அவற்றின் தன்மை (குறைகள்) தனக்கு இல்லாதவனாய், ஒன்றொழியாமல் எல்லாவற்றிலும் வ்யாபித்திருப்பவனாய், முன்பு சொன்ன கல்யாணகுணங்களுடன் கூடியிருப்பவனாய், தனித்துவம் வாய்ந்தவனை நாம் அணுகப் பெற்றோம்.
நான்காம் பாசுரம். எல்லாப் பொருள்களினுடைய ஸ்வரூபம் எம்பெருமானின் அதீனத்தில் உள்ளது என்று ஸாமாநாதிகரண்யத்தாலே அருளிச்செய்கிறார்.
குறிப்பு – ஸாமாநாதிகரண்யம் என்பது வேறுபட்ட பல தன்மைகள் ஒரே பொருளை ஆதாரமாகக் கொண்டு இருப்பது. ஒரே பொருளைக் குறிக்கும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சொற்கள் என்றும் விளக்கப்படும்.
நாம் அவன் இவன் உவன் அவள் இவள் உவள் எவள்
தாம் அவர் இவர் உவர் அது இது உது எது
வீம் அவை இவை உவை அவை நலம் தீங்கு இவை
ஆம் அவை ஆய் அவை ஆய் நின்ற அவரே
(மேலே காட்டப்படும் பல விதமான வஸ்துக்களைப் பார்க்கும்) தாமும், தூரத்தில் இருப்பவனும், அருகில் இருப்பவனும், நடுவில் இருப்பவனும், தூரத்தில் இருப்பவளும், அருகில் இருப்பவளும், நடுவில் இருப்பவளும், எவள் என்று கேட்கப்படுபவளும், கௌரவம் உடையவரும், அவர்களில் தூரத்தில் இருப்பவரும், அருகில் இருப்பவரும், நடுவில் இருப்பவரும், தூரத்தில், அருகில் மற்றும் நடுவில் இருக்கும் அஃறிணைப் பொருளும், எது என்று கேட்கப்படும் பொருளும், அழியக்கூடிய தாழ்ந்த பொருள்களும், தூரத்தில், அருகில், நடுவில் இருக்கும் பொருள்களும், உயர்ந்த மற்றும் தாழ்ந்த தர்மங்களும், வரப்போகும் மற்றும் வந்திருக்கும் எல்லாப் பொருள்களுமாய் தாமேயாய் நின்ற எம்பெருமான் இவற்றை எல்லாம் தன் அதீனத்தில் வைத்துள்ளான்.
ஐந்தாம் பாசுரம். ரக்ஷண ரூபத்தில் இருக்கும் ஸ்திதி எம்பெருமானின் அதீனத்தில் உள்ளது என்று வையதிகரண்யத்தாலே அருளிச்செய்கிறார்.
குறிப்பு – வையதிகரண்யம் என்பது இரண்டு மற்றும் அதற்கு மேற்பட்ட பொருள்கள் வேறுபட்ட ஆதாரங்களைக்கொண்டு இருப்பது. இரண்டு மற்றும் அதற்கு மேற்பட்ட சொற்கள் வேறுபட்ட பொருள்களைக் குறிக்கும் என்றும் விளக்கப்படும்.
அவரவர் தமதமது அறிவறி வகை வகை
அவரவர் இறையவர் எனவடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதி வழி அடைய நின்றனரே
வேறு வேறு ப்ரயோஜனங்களுக்காக அதிகாரிகள் (வேறு வேறு தகுதியுடையவர்கள்) தங்கள் அறிவின் வகையாலே தங்களுடைய ருசிக்கு ஏற்ற தேவதைகளைப் பலனைக் கொடுக்கும் தலைவர்களாகக் கருதி அடைவார்கள். அந்த தேவதைகள் பலம் கொடுக்கும் தலைவராக எந்தத் தடையுமில்லை. எல்லாருக்கும் ஸ்வாமியான எம்பெருமான் அந்த அந்த அதிகாரிகள் தங்களின் விதிப்படி பலனை அடையும்படி அந்த தேவதைகளுக்கு அந்தர்யாமியாக நின்றான்.
ஆறாம் பாசுரம். எல்லா ப்ரவ்ருத்தி (செயல்பாடு), நிவ்ருத்திகளும் (செயல்படாமல் இருப்பது) எம்பெருமானின் அதீனத்தில் உள்ளன என்று ஸாமானாதிகரண்யாத்தாலே அருளிச்செய்கிறார்.
நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர்
நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர்
என்றுமொரியல்வினர் என நினைவரியவர்
என்றுமொரியல்வொடு நின்ற எம் திடரே
நிற்றல் இருத்தல் கிடத்தல் திரிதல் ஆகிய ப்ரவ்ருத்திகளுக்கு இருப்பிடமான பொருள்களும், நிவ்ருத்திக்கு இருப்பிடமான பொருள்களுமாய், இதனாலே, என்றும் ஒரு குறிப்பிட்ட தன்மையை உடையவர் என்று நினைக்க முடியாதவனாய் இருப்பான் எம்பெருமான். எல்லாப் பொருள்களிலும் இருந்து வேறுபட்டவன். வேதம் என்ற உறுதியான ப்ரமாணத்தாலே அறியப்படுபவன்.
ஏழாம் பாசுரம். இந்த ஸாமானாதிகரண்யம், சரீராத்மபாவ ஸம்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டது என்கிறார்.
திடவிசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
படர்பொருள் முழுவதுமாய் அவையவை தொறும்
உடல்மிசை உயிர் எனக் கரந்தெங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவை உண்ட சுரனே
நிலையாக நிற்கும் ஆகாசமும் அக்னியும் வாயுவும் நீரும் பூமியும், இவைகளை இருப்பிடமாகக் கொண்டு பரந்த எல்லாப் பொருள்களும் தான் என்று சொல்லும்படி அவைகளுக்கு உபாதான காரணமாய், அவை எல்லாவற்றிலும் சரீரத்தில் ஆத்மா வ்யாபித்து இருப்பதைப் போலே, மறைந்து வ்யாபித்து இருக்கிறான். ஒளி மிகுந்து இருக்கும் வேதத்தின் உட்பொருளாகத் தோற்றுபவன் ப்ரளயம் வரும்பொழுது இவை எல்லாவற்றையும் விழுங்கிய “சுரன்” (தேவன்).
எட்டாம் பாசுரம். வ்யஷ்டி ஸ்ருஷ்டி (அண்டத்துக்குள் பல வகையாகக் காணப்படும் பொருள்களைப் படைத்தல்) மற்றும் வ்யஷ்டி ஸம்ஹாரத்தைச் செய்யும் ப்ரஹ்மா மற்றும் ருத்ரனும் எம்பெருமானுக்கு அதீனப்பட்டவர்கள் என்கிறார்.
சுரர் அறிவரு நிலை விண் முதல் முழுவதும்
வரன் முதலாய அவை முழுதுண்ட பரபரன்
புரம் ஒரு மூன்றெரித்து அமரர்க்கும் அறிவு இயந்து
அரன் அயன் என உலகு அழித்து அமைத்து உளனே
தேவர்களான ப்ரஹ்மா முதலியவர்களுக்கும் அறியமுடியாத நிலையையுடைத்தான ஆகாசம் முதலான ஸமஷ்டிரூபத்தில் (பிரித்துப் பார்க்க முடியாத நிலையில் இருக்கும்) எல்லாப் பொருள்களுக்கும் பெரிய காரணமாய் அவற்றை முழுவதுமாக உண்டு அழிப்பதாலே பரர்களான (பெரியவர்களான) ப்ரஹ்மா ருத்ரன் போன்றவர்களுக்கும் பரனானவன் எம்பெருமான். அந்த எம்பெருமான், ருத்ரன் என்றும் ப்ரஹ்மா என்றும் ப்ரஸித்தராய் தனித்துவம் வாய்ந்த மூன்று நகரங்களை எரித்தும், தேவர்களுக்கு ஞானத்தைக் கொடுத்தும், அண்டத்துக்குள் இருக்கும் உலகங்களை அழித்தும் அவற்றை ஸ்ருஷ்டித்தும், அவர்களுக்குள்ளே அந்தாராத்மாவாக உள்ளான்.
ஒன்பதாம் பாசுரம். ஈச்வரனை ஒத்துக்கொள்ளாத வேத பாஹ்யர்களில் (வேதத்தை ஒத்துக் கொள்ளாதவர்) முதலில் கருதப்படுபவரான ஸர்வசூன்யவாதிகளான மாத்யமிக பௌத்தரை நிராகரிக்கிறார்.
உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள்
உளன் அலன் எனில் அவன் அருவம் இவ்வருவுகள்
உளன் என இலன் என இவை குணம் உடைமையில்
உளன் இரு தகைமையொடு ஒழிவிலன் பரந்தே
நம்முடைய கருத்தால் ஈச்வரன் உளன் என்றாலும் பிறர் கருத்தால் ஈச்வரன் இலன் என்றாலும் உளன் என்ற விஷயத்தை ஒத்துக்கொண்டே பேசவேண்டும். உளன் என்றும் இலன் என்றும் சொல்லுகிற இவற்றை குணமாக உடையவனாகையாலே உருவத்துடனும் உருவம் இல்லாமலும் இவ்வுலகில் இருக்கும் பொருள்கள் தன்னை வெளிப்படுத்தும் மற்றும் மறைக்கும் இரண்டு நிலையில் இருக்கும் தன்மையோடு உளனாய் அவை எல்லாவற்றையும் வ்யாபித்து, அவற்றை விடாமல் இருப்பவன் இந்த எம்பெருமான்.
பத்தாம் பாசுரம். முன் பாசுரத்தில் சொன்ன எம்பெருமானின் வ்யாப்தியினுடைய ஸௌகர்யத்தை அருளிச்செய்கிறார்.
பரந்த தண் பரவையுள் நீர்தொறும் பரந்துளன்
பரந்த அண்டம் இது என நில விசும்பு ஒழிவு அறக்
கரந்த சில் இடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும்
கரந்து எங்கும் பரந்துளன் இவை உண்ட கரனே
எம்பெருமான் எல்லாவிடமும் பரந்த குளிர்ந்த காரணஜலமான ஏகார்ணவத்தில் ஒவ்வொரு அணுவிலும் பெரிய இடமுடைய இந்த அண்டத்தில் இருப்பதுபோல சுருக்கம் இல்லாமல் இருக்கிறான். பூமியிலும், மேலுலகங்களிலும் ஒன்றுவிடாமல் மிக நுண்ணியதாய் மிகச்சிறிய இடங்கள்தோறும் இந்த இடங்களில் தானே ஒளிவிடக்கூடிய ஆத்மாக்கள்தோறும் மறைந்து எல்லாவிடத்திலும் வ்யாப்தனாயிருப்பவன், இந்தப் பொருள்களை ஸம்ஹார நிலையிலும் தனக்குள்ளே அடக்கிவைத்துக் கொண்டு தான் ஸ்திரமாய் இருந்தவன்.
பதினொன்றாம் பாசுரம். இதுவரை விளக்கிய பர்த்வத்தை சுருங்கச் சொல்லி இத்திருவாய்மொழிக்குப் பலம் மோக்ஷமாக அருளிச்செய்கிறார்.
கர விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
வரனவில் திறல்வலி யளி பொறை யாய் நின்ற
பரன் அடி மேல் குருகூர்ச் சடகோபன் சொல்
நிரனிறை ஆயிரத்து இவை பத்தும் வீடே
மறைந்து இருக்கும் ஆகாசம், அக்னி, வாயு, ஜலம், பூமி ஆகிய இவற்றை இருப்பிடமாகக்கொண்ட, மேலும் இவற்றுக்குத் தன்மைகளாக உள்ள உயர்ந்ததான சப்தம், எரிக்கும் தன்மை, வலிமை, குளிர்த்தி, பொறுமை ஆகிய இந்தப் பொருள்களும் அவற்றின் தன்மைகளும் எல்லாம் தனக்கு ப்ரகாரமாம்படி (சரீரமாம்படி) நின்ற ஸர்வேச்வரனுடைய திருவடி விஷயமாக, திருநகரியைப் பிறப்பிடமாக உடையராய், எதிர்வாதம் செய்பவர்களை வெல்லும் தன்மையையுடையவரான ஆழ்வார் அருளிச்செய்ததாய் பொருத்தமாக நிறைந்திருக்கும் ஆயிரம் பாசுரங்களுக்குள், இந்தப் பதிகம், எம்பெருமான் திருவடிகளில் ஸமர்ப்பிக்கப்பட்டன. இவை மோக்ஷத்தை அளிக்ககூடியவை.
எம்பெருமானின் பரத்வத்தை முழுவதுமாக அனுபவித்த பின்பு, ஆழ்வார் அந்த எம்பெருமானை அடைவதற்கு வழியை இந்தப் பதிகத்தில் மற்றவர்களுக்கு உபதேசம் செய்கிறார். தாம் அனுபவித்த விஷயம் மிக உயர்ந்ததாக இருக்க, இதை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள நினைத்து இங்கிருக்கும் ஸம்ஸாரிகளைப் பார்க்க, அவர்கள் உலக விஷயத்திலேயே மண்டிக் கிடந்தார்கள். தன் பெருங்கருணையாலே அவர்களுக்கும் நன்மை செய்வோம் என்று பார்த்து அவர்களுக்கு மற்ற விஷயங்களில் ஆசையைவிட்டு பகவத் விஷயத்தில் பக்தி செய்யுங்கள் என்று உபதேசம் செய்கிறார்.
முதல் பாசுரம். மற்ற விஷயங்களை விட்டு எம்பெருமானைப் பற்றப் பாருங்கள் என்கிறார்.
வீடுமின் முற்றவும் வீடு செய்து உம்முயிர்
வீடு உடையான் இடை வீடு செய்ம்மினே
எம்பெருமானை வழிபடுவதற்கு விரோதியான எல்லாவற்றையும் அடியோடு விடுங்கள். அவற்றை விட்டு, உம்முடைய ஆத்மாவை மோக்ஷத்தைக் கொடுக்கக்கூடிய எம்பெருமான் விஷயத்திலே ஸமர்ப்பியுங்கள்.
இரண்டாம் பாசுரம். மற்ற விஷயங்களை விடுவதை எளிமைப்படுத்துவதற்காக, அவற்றின் நிரந்தரமில்லாத தன்மையை விளக்குகிறார்.
மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள்
என்னும் இடத்து இறை உன்னுமின் நீரே
ஆத்மா விரும்பி எடுத்துக் கொண்ட சரீரங்கள் மின்னலைக்காட்டிலும் நிலையற்ற தன்மையுடன் இருக்கும் என்று சொல்லப்படுவதால் நீங்கள் எம்பெருமானைப் பற்றிச் சிந்தியுங்கள்.
மூன்றாம் பாசுரம். எப்படி விடுவது என்பதைச் சுருக்கமாக விளக்குகிறார்.
நீர் நுமது என்று இவை வேர் முதல் மாய்த்து இறை
சேர்மின் உயிர்க்கு அதன் நேர் நிறை இல்லே
ஆத்மா மற்றும் அதன் உடைமைகளில் இருக்கும் அஹங்காரம் மற்றும் மமகாரம் ஆகிய இவற்றை ருசி மற்றும் வாஸனைகளாகிற வேரோடே அறுத்து எம்பெருமானைச் சேருங்கள். ஆத்மாவுக்கு இதையொத்த நிறைவு வேறில்லை.
நான்காம் பாசுரம். இப்படி மற்ற விஷயங்களை விட்டு பற்றப்படும் எம்பெருமானின் பெருமையை அருளிச்செய்கிறார்.
இல்லதும் உள்ளதும் அல்லது அவன் உரு
எல்லையில் அந்நலம் புல்கு பற்று அற்றே
அசித்தைப்போலவும் சித்தைப்போலவும் இல்லாத அவனுடைய ஸ்வரூபமானது எல்லையில்லாத ஆனந்தத்தை வடிவாகக் கொண்டிருக்கும். ஆகையால் மற்ற விஷயங்களில் பற்றை விட்டு, எம்பெருமானை ஆசையுடன் பற்று.
ஐந்தாம் பாசுரம். வணங்கப்படும் எம்பெருமான் மிகவும் உயர்ந்த புருஷார்த்தமாக இருப்பதை அருளிச்செய்கிறார்.
அற்றது பற்று எனில் உற்றது வீடு உயிர்
செற்றது மன்னுறில் அற்று இறை பற்றே
மற்ற விஷயங்களில் பற்று விடப்பட்டவுடனே ஆத்மா கைவல்ய மோக்ஷத்தைப் பெற்றதாகும். அந்த எண்ணத்தையும் விட்டு பகவத் விஷயத்தைப் பற்றப் பார்க்கில் மற்ற விஷயங்களில் ஆசையை விட்டு ஈச்வரனைப் பற்று.
ஆறாம் பாசுரம். வணங்கப்படும் எம்பெருமான் எல்லோரிடமும் ஸமமாக இருப்பதை அருளிச்செய்கிறார்.
பற்று இலன் ஈசனும் முற்றவும் நின்றனன்
பற்று இலை ஆய் அவன் முற்றில் அடங்கே
ஸர்வேச்வரனாக இருந்தும் தன் விருப்பத்துக்கு விஷயமானவர்களில் பற்றைவிட்டு நம் விஷயத்தில் முழுவதுமாக ஈடுபட்டு நின்றான். நீயும் ஸம்ஸார ஸங்கத்தை விட்டு அவனுடைய எல்லா விஷயங்களிலும் முழுகப்பார்.
ஏழாம் பாசுரம். அவனுடைய மிகப் பெரிய விபூதியைப் பார்த்து அஞ்சி விலகாமல், அவனுக்கு அத்தோடு உண்டான ஸம்பந்தத்தை நினைத்து அதனுள்ளே புகுவதற்கு முயற்சி செய் என்கிறார்.
அடங்கு எழில் சம்பத்து அடங்கக் கண்டு ஈசன்
அடங்கு எழில் அஃதென்று அடங்குக உள்ளே
மிகவும் அழகியதான செல்வத்தை ஒன்றுவிடாமல் பார்த்து “ஈச்வரனுக்கு அது மிகவும் அழகான, பெருமையைக் கொடுக்கும் சேஷமாயிருக்கும்” என்று உணர்ந்து அதினுள்ளே மூழ்க முயற்சி செய்.
எட்டாம் பாசுரம். எப்படி வணங்குவது என்பதை அருளிச்செய்கிறார்.
உள்ளம் உரை செயல் உள்ள இம் மூன்றையும்
உள்ளிக் கெடுத்து இறை உள்ளில் ஒடுங்கே
மனஸ்ஸும் வாக்கும் உடம்பும் நமக்கு முதலிலேயே இருப்பதாய், இருக்கும் இம்மூன்றையும், இவற்றின் ப்ரயோஜனத்தை ஆராய்ந்தறிந்து, மற்ற விஷயத்தில் இருந்து விலக்கி, எம்பெருமானாகிய வகுத்த விஷயத்தில் பரதந்த்ரனாய் ஒதுங்கு.
ஒன்பதாம் பாசுரம். எம்பெருமானை வணங்குவதால் ஏற்படும் விரோதி நிவ்ருத்தியை அருளிச்செய்கிறார்.
ஒடுங்க அவன் கண் ஒடுங்கலும் எல்லாம்
விடும் பின்னும் ஆக்கை விடும் பொழுது எண்ணே
எம்பெருமானிடத்திலே மூழ்கவே ஆத்மாவின் ஞானம் முதலியவைகளின் சுருக்கமும், அவித்யை முதலியவைகள் எல்லாம் விட்டுக் கழியும். பின்னையும் இந்த உடலின் முடிவை எதிர்பார்த்திரு.
பத்தாம் பாசுரம். எம்பெருமானின் ப்ராப்யத்வ பூர்த்தியை அருளிச்செய்கிறார்.
எண் பெருக்கு அந்நலத்து ஒண் பொருள் ஈறில
வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே
கணக்கற்றதாய் ஆனந்தம் முதலிய குணங்களையுடைய ஆத்மாக்கள் மற்றும், எல்லையில்லாத கல்யாண குணங்களையுடைய நாராயணனின் உறுதியான திருவடிகளைச் சென்று சேர்.
பதினொன்றாம் பாசுரம். இந்தப் பதிகம் எவ்வளவு முக்யமாகக் கைக்கொள்ளத்தக்கது என்பதை பலமாக அருளிச்செய்கிறார்.
சேர்த் தடத் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
சீர்த் தொடை ஆயிரத்து ஓர்த்த இப் பத்தே
சேர்ந்திருக்கும் தடாகங்களையுடைய அழகிய திருநகரியில் நம்மாழ்வார் அருளிச்செய்த முறையான சீர்களின் (பா)மாலையையுடைய ஆயிரம் பாசுரங்களிலும், இத்திருவாய்மொழி உயர்ந்ததாக நிரூபிக்கப்பட்டன.
ஆழ்வார், எம்பெருமான் உகந்த கைங்கர்யத்தை ஆசைப்பட எம்பெருமானும் தெற்குத் திருமலை என்று சொல்லப்படும் திருமாலிருஞ்சோலை ஸ்தலத்தை எண்ணித் தான் அங்கே இருக்கும் இருப்பை ஆழ்வாருக்குக் காட்டிக் கொடுத்து “நாம் உமக்காக இங்கே வந்துள்ளோம், நீர் இங்கே வந்து எல்லா விதமான கைங்கர்யங்களிலும் ஈடுபடலாம்” என்று சொல்ல, ஆழ்வாரும் திருமலையை முழுவதுமாக அனுபவித்து இனியராகிறார்.
முதல் பாசுரம். மிகவும் ஒளிவிடும் ஸர்வேச்வரன் விரும்பிய திருமலையே நமக்குக் குறிக்கோள் என்கிறார்.
கிளரொளி இளமை கெடுவதன் முன்னம்
வளரொளி மாயோன் மருவிய கோயில்
வளரிளம் பொழில் சூழ் மாலிருஞ்சோலை
தளர்விலராகில் சார்வது சதிரே
கிளர்ந்து வருகிற ஞான ஒளிக்கு யோக்யதை உண்டான இளமையானது கெடுவதற்கு முன்னே வளர்ந்து வருகிற குண ஒளியையுடைய ஆச்சர்ய ரூபனான ஸர்வேச்வரன் பொருந்தி வாழ்கிற திவ்யஸ்தானமாய் வளர்ந்திருந்தாலும் இளமையாக இருக்கும் பொழில்களாலே சூழப்பட்டு அதனாலே மாலிருஞ்சோலை என்று திருநாமம் கொண்ட திருமலையை வேறு ப்ரயோஜனங்களை எதிர்பார்க்கும் தளர்த்தி இல்லாமல் அடைவதுவே சிறந்தது.
இரண்டாம் பாசுரம். அழகருடைய திருமலையோடு சேர்ந்து இருக்கும் திவ்யதேசத்தைக் கொண்டாடுவதே குறிக்கோள் என்கிறார்.
சதிரிள மடவார் தாழ்ச்சியை மதியாது
அதிர்குரல் சங்கத்து அழகர் தம் கோயில்
மதி தவழ் குடுமி மாலிருஞ்சோலை
பதி அது ஏத்தி எழுவது பயனே
ஸாமர்த்யம் மற்றும் இளமை ஆகியவற்றை உடைய ஸ்த்ரீகளுடைய தாழ்ந்ததான காமச்சொற்கள் மற்றும் செயல்களை ஆசைப்படாமல் முழங்குகிற ஸ்ரீபாஞ்சஜன்யத்தை உடையவராகையாலே மிகவும் அழகாக இருக்கும் அழகருக்கு தனித்துவம் வாய்ந்த ஸ்தானமாய் சந்த்ரனானவன் தவழும்படி ஓங்கின சிகரங்களைக் கொண்ட திருமலையில் இருக்கும் ப்ரஸித்தமான திவ்யதேசத்தை ஸ்தோத்ரம் பண்ணி வாழ்ச்சிபெறுவதே குறிக்கோள்.
மூன்றாம் பாசுரம். பெரிய வள்ளல் தன்மையை உடைய எம்பெருமான் வாழ்கிற திருமலையோடு சேர்ந்த அருகாமை மலையை அடைவதே குறிக்கோள் என்கிறார்.
பயன் அல்ல செய்து பயனில்லை நெஞ்சே
புயல் மழை வண்ணர் புரிந்துறை கோயில்
மயல் மிகு பொழில் சூழ் மாலிருஞ்சோலை
அயல் மலை அடைவது அது கருமமே
நெஞ்சே! பயனற்ற செயலைச் செய்து ஒரு ப்ரயோஜனமும் இல்லை. தூறலும் துளியுமான காளமேகம்போலே ஸ்வபாவத்தையுடைய அழகர் எம்பெருமான் ஈடுபாடு கொண்டு நிரந்தரமாக வாழ்கிற ஸ்தானமாய், கண்டார் நெஞ்சு கலங்கும்படி அழகான பொழில் சூழ்ந்த திருமலைக்கு அருகில் இருக்கும் மலையை அடைவதுவே செய்ய வேண்டியது.
நான்காம் பாசுரம். நம்மைக் காக்கும் எம்பெருமான் வாழ்கிற பெரிய பொழில் சூழ்ந்த திருமலையை அடைவதுவே செய்யவேண்டியது என்கிறார்.
கருமவன் பாசம் கழித்து உழன்றுய்யவே
பெருமலை எடுத்தான் பீடுறை கோயில்
வருமழை தவழும் மாலிருஞ்சோலை
திருமலை அதுவே அடைவது திறமே
கர்மங்களாகிற கழற்ற அரிய கயிறுகளைக் கழற்றி அடிமைசெய்து ஆத்மாக்கள் உஜ்ஜீவனம் அடையவே கோபர்கள்/கோபிகைகளின் துன்பம் தீரும்படி பெரிய மலையை எடுத்துக் காத்தவன் தன்னுடைய காப்பாளன் என்கிற பெருமை விளங்கும்படி வாழ்கிற ஸ்தானமாய் வருகிற மேகங்கள் தவழும்படி மிகவும் உயர்ந்து பரந்த சோலையையுடைத்தான திருமலையை அடைவதே செய்யவேண்டியது.
ஐந்தாம் பாசுரம். ரக்ஷிக்க உதவும் திருவாழியையுடைய எம்பெருமான் வாழ்கிற திருமலையின் சுற்றில் இருக்கும் மலையை அடைவது நல்ல வழி என்கிறார்.
திறமுடை வலத்தால் தீவினை பெருக்காது
அறமுயல் ஆழிப் படை அவன் கோயில்
மறுவில் வண் சுனை சூழ் மாலிருஞ்சோலை
புற மலை சாரப் போவது கிறியே
பல விதமான வலிமையினாலே கொடிய பாபங்களை வளர்த்துக் கொள்ளாமல் அடியார்களைக் காக்கும் தர்மத்தில் முயலும் திருவாழியை ஆயுதமாக உடையவனுடைய இருப்பிடமாய், வந்து அடைபவர்களுக்கு நன்மை செய்யும் களங்கம் இல்லாத சுனைகளாலே சூழப்பட்ட திருமலையின் சுற்றில் இருக்கும் மலைக்கு அருகே போவது நல்ல வழி.
ஆறாம் பாசுரம். அடியார்களிடத்திலே மிகுந்த அன்புகொண்ட எம்பெருமான் வாழ்கிற திருமலைக்குப் போகும் வழியை நினைப்பதே நன்மை என்கிறார்.
கிறியென நினைமின் கீழ்மை செய்யாதே
உறியமர் வெண்ணெய் உண்டவன் கோயில்
மறியொடு பிணைசேர் மாலிருஞ்சோலை
நெறிபட அதுவே நினைவது நலமே
உலக விஷயங்களில் ஈடுபட நினைக்கும் தாழ்ச்சியைச் செய்யாமல் இதை நல்ல வழி என்று நினையுங்கள். ஏனெனில் உறியிலே சேமித்து வைத்த வெண்ணெயை அமுதுசெய்த க்ருஷ்ணனுடைய கோயிலாய், கன்றுகளோடேகூட மான்பேடைகள் சேருகிற திருமலையினுடைய வழியிலே இருக்கவேண்டும் என்கிற அதையே நினைக்கை நமக்கு ப்ரயோஜனம்.
ஏழாம் பாசுரம். ப்ரளய ஆபத்திலே நம்மைக் காக்கும் எம்பெருமான் வாழ்கிற திருமலை விஷயத்தில் செய்யும் அனுகூலமான செயல்களே சிறந்தது என்கிறார்.
நலமென நினைமின் நரகழுந்தாதே
நிலமுனம் இடந்தான் நீடுறை கோயில்
மலமறு மதிசேர் மாலிருஞ்சோலை
வலமுறை எய்தி மருவுதல் வலமே
ஸம்ஸாரம் என்னும் நரகத்தில் அழுந்தாதே இதை உயர்ந்த குறிக்கோள் என்று எண்ணுங்கள். முற்காலத்திலே பூமியை இடந்தெடுத்தவன் நிரந்தரமாக வாழ்கிற கோயிலாய், களங்கமில்லாத சந்த்ரன் பொருந்தியிருக்கும் திருமலையை தலைவைன்/தொண்டன் என்ற க்ரமத்தில் அனுகூலமான செய்லகளைச் செய்து பொருந்துவதே உயர்ந்த ப்ரயோஜனம்.
எட்டாம் பாசுரம். அடியார்கள் விஷயத்தில் நன்மைகளைச் செய்யும் க்ருஷ்ணன் வாழ்கிற திருமலையிலே நிரந்தரமாக அனுகூலமான செயல்களைச் செய்வதே நம் ஸ்வரூபத்துக்குச் சேர்ந்தது என்கிறார்.
வலம் செய்து வைகல் வலம் கழியாதே
வலம் செய்யும் ஆய மாயவன் கோயில்
வலம் செய்யும் வானோர் மாலிருஞ்சோலை
வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே
அடியார்களுக்கு அடங்கி இருக்கும் அனுகூலமான செயலை பண்ணும் க்ருஷ்ணனான ஆச்சர்யபூதனுடைய கோயிலான, பரமபதத்தைச் சேர்ந்தவர்களும் அனுகூலமான செயல்களைச் செய்யும் திருமலையைக் குறித்து, வலிமையை உண்டாக்கி நிரந்தரமாக அந்த வலிமையை வேறு விஷயங்களில் செலவிட்டு வீணாக்காமல், ப்ரதக்ஷிணம் முதலிய அனுகூலமான செயல்களைச் செய்து, நிரந்தரமாகக் கூடி இருத்தலே ந்யாயம்.
ஒன்பதாம் பாசுரம். பூதனையைக் கொன்ற எம்பெருமான் வாழ்கிற திருமலையைத் தொழவேண்டும் என்கிற நினைவில் உறுதியே வெற்றிக்குக் காரணம் என்கிறார்.
வழக்கென நினைமின் வல்வினை மூழ்காது
அழக்கொடி அட்டான் அமர் பெரும் கோயில்
மழக்களிற்றினம் சேர் மாலிருஞ்சோலை
தொழக் கருதுவதே துணிவது சூதே
மிகவும் வலிமையான பாபங்களிலே மூழ்காதே, இது ஸ்வரூபத்துக்குச் சேர்ந்தது என்று நினையுங்கள். பேயான பெண்ணை அழைத்தவன் பொருந்து வாழும் பெரிய கோயிலாய் ஆனைக்கன்றுகளின் கூட்டம் சேரும் திருமலையை தொழவேண்டும் என்கிற நினைவிலே உறுதியுடன் இருக்கையே ஸம்ஸாரத்தை வெல்வதற்கான வழி.
பத்தாம் பாசுரம். வேதத்தை சொல்லிக் கொடுத்து வளர்ப்பவனான எம்பெருமான் வாழ்கிற திருமலையில் புகுகிற இதுவே குறிக்கோள் என்று தொடங்கிய உபதேசத்தை முடித்தருளுகிறார்.
சூதென்று களவும் சூதும் செய்யாதே
வேதமுன் விரித்தான் விரும்பிய கோயில்
மாதுறு மயில் சேர் மாலிருஞ்சோலை
போதவிழ் மலையே புகுவது பொருளே
எளிமையான வழி என்று நினைத்து களவாடுதல், பார்த்துக்கொண்டிருக்கும்போதே அபஹரித்தல் ஆகியவைகளைச் செய்யாமல் முற்காலத்தில் கீதோபதேசம் மூலமாக, வேதார்த்தத்தை விவரித்தவனான எம்பெருமான் விரும்பி வாழும் கோயிலாய், மென்மையை உடைய மயில்கள் சேர்ந்து வாழும் ஓங்கி, பரந்த சோலைகளில் பூவானது மலருகிற திருமலையிலே சென்று புகுவதே குறிக்கோள்.
பதினொன்றாம் பாசுரம். பகவானை அடைவதை இந்தப் பதிகத்துக்கு ப்ரயோஜனமாக அருளிச்செய்கிறார்.
பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன் புகழ் மேல்
மருளில் வண் குருகூர் வண் சடகோபன்
தெருள் கொள்ளச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்து
அருள் உடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே
அடியார்களின் அனுகூலம் ப்ரயோஜனம் என்று இந்த உலகத்தைப் படைத்தவனுடைய தயை, க்ஷமை முதலிய குணங்களின் பெருமை விஷயமாக, அறியாமை சற்றும் இல்லாதவராய், உயர்ந்ததான ஆழ்வார்திருநகரிக்குத் தலைவராய், பெரிய வள்ளலான நம்மாழ்வார், உண்மை ஞானமானது ஆத்மாக்கள் பெறும்படி அருளிச்செய்த தனித்துவம் வாய்ந்த ஆயிரத்துள் இந்தப் பதிகமானது, ஸம்ஸாரத்தை அழித்து பரிபூர்ண க்ருபையையுடைய அழகருடைய திருவடிகளைப் பெற்றுக் கொடுக்கும்.
“தேவரீருக்குக் கைங்கர்யம் செய்வதற்குத் தடையாக இருக்கும் சரீரத்தைப் போக்கியருள வேண்டும்” என்று ஆழ்வார் எம்பெருமானிடம் வேண்ட, எம்பெருமானும் “உம்முடைய இந்த சரீரத்துடன் கைங்கர்யம் பெற்றுக் கொள்ளத்தான் வடக்குத் திருமலையில் வந்த சேவை சாதிக்கிறோம். ஆகையால் இங்கே வந்து நீர் நம்மை அனுபவிக்கலாம்” என்று சொல்ல, ஆழ்வார் மிகவும் மகிழ்ந்து, எம்பெருமானிடம் தனக்கு நிரந்தரமான கைங்கர்யத்தைத் தந்தருளுமாறு ப்ரார்த்திக்கிறார்.
முதல் பாசுரம். எல்லோருக்கும் தலைவனான திருவேங்கடமுடையானுக்கு எல்லா விதமான கைங்கர்யத்தையும் செய்ய வேண்டும் என்று தன் பந்துக்களுடன் சேர்ந்து ஆசைப்படுகிறார்.
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழுவிலா அடிமை செய்ய வேண்டுநாம்
தெழிகுரல் அருவித் திருவேங்கடத்து
எழில்கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே
பெரிய ஆரவாரத்தை எழுப்பும் அருவியையுடைய திருவேங்கடமாகிற திருமலையில் இருப்பதாலே அழகையுடைத்தான ஒளிமயமான திருமேனியையுடைய நம்முடைய குலநாதனுக்கு நாம் ஒழிவில்லாத காலமெல்லாம் எல்லாவிடத்திலும் உடனிருந்து, எல்லா நிலைகளிலும் பிரியாமல் நின்று, ஒன்றும் நழுவாதபடி எல்லாக் கைங்கர்யங்களையும் செய்ய வேண்டும்.
இரண்டாம் பாசுரம். இப்படிப்பட்ட எல்லோரையும் விட உயர்ந்த தலைவனின் குணங்கள், திருமேனி ஆகியவற்றின் பெருமையை அருளிச்செய்கிறார்.
எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும்
முந்தை வானவர் வானவர் கோனொடும்
சிந்துபூ மகிழும் திருவேங்கடத்து
அந்தமில் புகழ்க் கார் எழில் அண்ணலே
நமது பரம்பரபரையில் முதல்வனாகத் திகழும் எம்பெருமான், பரமபதத்திலே வசிப்பவர்கள் தங்கள் தலைவரான சேனை முதலியாருடன், நிலத்தில் தூவின புஷ்பங்கள் மலரும்படியான திருமலையில் வாழ்வதாலே, முடிவில்லாத புகழை உடையவனாய் கறுத்த வடிவழகையுடைய தலைவனாக விளங்குகிறான்.
மூன்றாம் பாசுரம். இப்படி அழகிய திருமேனியை உடையவன் நித்யஸூரிகளால் வணங்கப்படுபவன் என்கிறார்.
அண்ணல் மாயன் அணி கொள் செந்தாமரைக்
கண்ணன் செங்கனி வாய்க் கருமாணிக்கம்
தெண்ணிறைச் சுனை நீர்த் திருவேங்கடத்து
எண்ணில் தொல் புகழ் வானவர் ஈசனே
திருமேனியைப் பார்த்தாலே ஸ்வாமி என்று தோற்றும்படியாய், ஆச்சர்யமான குணங்கள் மற்றும் சொத்துக்களை உடையவனாய், அழகை உடைய புண்டரீகாக்ஷனாய், சிவந்த கனி போன்ற திருப்பவளத்தை உடையவனாய் நீல ரத்னம் போலே ஒளிவிடும் திருமேனியை உடையவன். தெளிந்து ப்ரகாசமான நிறத்தையுடைய சுனைநீரைக் கொண்ட திருமலையிலே நிற்பதாலே கணக்கற்ற இயற்கையான குணத்தை உடையவனாய் பரமபதத்திலே வசிப்பவர்களுக்கு ஸ்வாமியானவன்.
நான்காம் பாசுரம். என்னைப் போன்ற தாழ்ந்தவனை ஏற்றுக்கொண்ட எம்பெருமானின் எளிமைக்கு முன்பு நித்யஸூரிகளால் வணங்கப்படுவது ஒரு பெருமையோ என்கிறார்.
ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது
தேசமோ திருவேங்கடத்தானுக்கு
நீசனேன் நிறை ஒன்றும் இலேன் என் கண்
பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே
நித்யஸூரிகளுக்குத் தலைவன் என்று சொல்லுவேன். இப்படிச் சொன்னால், மிகவும் தாழ்ந்தவனாய், நல்ல குண பூர்த்தி இல்லாமல் இருக்கும் என்னிடத்தில் அன்பைவைத்து அதனாலே மிகவும் ஒளிபடைத்த திருமேனியையுடையவனான திருவேங்கடத்தானுக்கு அது ஒரு பெருமையோ?
ஐந்தாம் பாசுரம். எளிமையை உடையவன் என்று மட்டுமோ அவன் பெருமை? எளிமையுடன் மிகவும் இனிமையானவனுக்கு ஸர்வேச்வரன் என்பதனால் ஒரு பெருமையோ என்கிறார்.
சோதியாகி எல்லா உலகும் தொழும்
ஆதி மூர்த்தி என்றால் அளவாகுமோ
வேதியர் முழு வேதத்தமுதத்தைத்
தீதில் சீர்த் திருவேங்கடத்தானையே
வைதிகர்களுடைய எல்லா வேதங்களிலும் கொண்டாடப்பட்டபடி மிகவும் இனிமையை உடையவனாய் ஆள்பார்த்து அனுபவம் கொடுக்கும் தீமை இல்லாத எல்லாருக்கும் அனுபவத்தைக் கொடுக்கும் குணத்தை உடையவனான ஒளிவிடும் திருவேங்கடமுடையானைக் கொண்டு எல்லாரும் தொழும்படி எல்லாருக்கும் காரணனான ஸர்வேச்வரன் என்றால் அது ஒரு பெருமையோ?
ஆறாம் பாசுரம். விரோதிகள் நீங்கி பகவானை அனுபவிப்பதற்குக் காரணமான எளிமையாக அடையும்படி இருப்பதை அருளிச்செய்கிறார்
வேங்கடங்கள் மெய்ம் மேல் வினை முற்றவும்
தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார்
வேங்கடத்துறைவார்க்கு நமவென்னல்
ஆம் கடமை அது சுமந்தார்கட்கே
திருமலையிலே நிரந்தரமாக வாழும் ஸ்வாமிக்கு “நம:” என்று சொல்வதை தங்கள் தலையிலே சுமப்பவர்களுக்கு முற்காலத்தில் சேர்த்துவைத்த பாபங்கள் மற்றும் வருங்காலத்தில் வரும் பாபங்கள் ஆகிய இரண்டும் முழுவதுமாக எரிந்துபோய்விடும். இது ஸத்யம். அப்படி எம்பெருமானை அடைபவர்கள் தங்கள் ஸ்வரூபத்துக்கு இனிமையைக் கொடுக்கும் பகவானை அனுபவிப்பது போன்றவைகளையே செய்வார்கள்.
ஏழாம் பாசுரம். எம்பெருமானை அடைவதின் எல்லை நிலமாக அவன் நின்றருளின திருமலை தானே பரம ஸாம்யாபத்தியைத் தரும் என்று அருளிச்செய்கிறார்
சுமந்து மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு
அமர்ந்து வானவர் வானவர் கோனொடும்
நமன்றெழும் திருவேங்கடம் நங்கட்குச்
சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே
உயர்ந்ததான புஷ்பங்களையும் நல்ல நீரையும் சிறந்ததான தீபத்தையும் நல்ல தூபத்தையும் கையிலே ஆசையுடன் வைத்துக்கொண்டு வேறு ப்ரயோஜனங்களில் ஆசை இல்லாமல் நன்றாக அமர்ந்து, நித்யஸூரிகள், தங்கள் தலைவரான சேனைமுதலியாருடன் வணங்கி எழும்படி, திருவேங்கடம் என்ற திருநாமத்தை உடைய மிகவும் பரந்த திருமலை, நமக்கு பரம ஸாம்யாபத்தி மோக்ஷத்தைத் தானே தரும்.
எட்டாம் பாசுரம். இப்படிப்பட்ட திருமலையை அனுபவிக்க, ப்ராப்திக்குத் தடையாக இருப்பவை தானே அழிந்துவிடும் என்கிறார்.
குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன்
அன்று ஞாலம் அளந்த பிரான் பரன்
சென்று சேர் திருவேங்கட மா மலை
ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே
கல் மாரியாலே திருவாய்ப்பாடியில் இருந்தவர்கள் துன்பப்பட, கோவர்த்தன மலையை ஏந்தி அவர்களைக் காத்தவனாய், அன்று பூமியை அளந்து தனக்காகக் கொண்ட உபகாரகனான உயர்ந்த தலைவன் சென்று சேர்ந்த திருவேங்கடமாகிற பெரிய திருமலை ஒன்றை மட்டும் தொழ, நம்முடைய விரோதிகள் தானே ஒழிந்துவிடும்.
ஒன்பதாம் பாசுரம். நல்ல கதியைக் காட்டக்கூடிய திருவேங்கடமுடையானுக்கும் விரோதியைப் போக்கும் தன்மை இந்த தேசத்துடன் இருக்கும் ஸம்பந்தத்தாலே என்கிறார்.
ஓயும் மூப்புப் பிறப்பிறப்புப் பிணி
வீயுமாறு செய்வான் திருவேங்கடத்து
ஆயன் நாள்மலராம் அடித் தாமரை
வாயுள்ளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கே
அப்பொழுது அலர்ந்த திருவடித்தாமரைகளை வாக்குள்ளும் மனத்துள்ளும் வைப்பவர்களுக்கு பலவீனத்தைக் கொடுக்கும் வயோதிகம், பிறப்பு, இறப்பு, நோய்கள் ஆகியவை அழியும்படிச் செய்பவன் திருமலையிலே வாழும் கண்ணன் எம்பெருமான்.
பத்தாம் பாசுரம். மிகவும் இனிமையான திருவேங்கடத்தைப் பற்றுங்கள் என்று தன் பந்துக்களுக்கு உபதேசம் செய்கிறார்.
வைத்த நாள் வரை எல்லை குறுகிச் சென்று
எய்த்திளைப்பதன் முன்னம் அடைமினோ
பைத்த பாம்பணையான் திருவேங்கடம்
மொய்த்த சோலை மொய் பூம் தடம் தாழ்வரே
உங்களுக்கு நிர்ணயித்து வைத்த நாளினுடைய எல்லையானது உங்களருகில் வந்து பலவீனத்தைத் தந்து அதன் காரணமாக இளைப்பதற்கு முன்னே, விரிகிற பணங்களையுடைய அநந்தனை படுக்கையாக உடைய ஸர்வேச்வரனின் திருமலையில், செறிந்த சோலையினுடைய அழகிய புஷ்பங்களையுடைய பரந்த திருத்தாழ்வரையைச் சென்று அடையுங்கள்.
பதினொன்றாம் பாசுரம். இத்திருவாய்மொழிக்குப் பலமாக கைங்கர்யஸ்ரீ கிடைக்கும் என்பதை அருளிச்செய்கிறார்.
தாள் பரப்பி மண் தாவிய ஈசனை
நீள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல்
கேழில் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
வாழ்வர் வாழ்வெய்தி ஞாலம் புகழவே
திருவடிகளைப் பரப்பி பூமியை அளந்துகொண்ட ஸர்வேச்வரனை, உயர்ந்த சோலையையுடைய ஆழ்வார்திருநகரிக்குத் தலைவரான நம்மாழ்வார் அருளிச்செய்த ஒப்பில்லாத ஆயிரம் பாசுரங்களுள் இந்தப் பத்து பாசுரங்களையும் அர்த்தத்துடன் சொல்ல வல்லவர்கள் கைங்கர்ய ஸாம்ராஜ்யத்தைப் பெற்று உலகம் புகழும்படி அடிமை செய்து வாழப்பெறுவார்கள்.
ஐச்வர்யம், கைவல்யம், பகவத் கைங்கர்யம் ஆகிய மூன்று விதமான புருஷார்த்தங்களில் ஐச்வர்யமும் கைவல்யமும் ஆத்ம ஸ்வரூபத்துக்குச் சேராது என்றும் அவை மிகவும் தாழ்ந்தது என்றும் சொல்லி, ச்ரிய:பதியான ஸர்வேச்வரனின் திருவடிகளில் கைங்கர்யம் செய்வதே மிக உயர்ந்த புருஷார்த்தம் என்று தன்னுடைய பெரிய கருணையாலே ஸம்ஸாரிகளுக்கு உபதேசம் செய்கிறார் ஆழ்வார். எம்பெருமானார் இந்தப் பதிகத்தைத் திருநாராயணபுரம் திருநாரணன் எம்பெருமானுக்கு ஸமர்ப்பித்தார்
முதல் பாசுரம். மிகப் பெரிய சக்கரவர்த்திகளே பிக்ஷை எடுத்து வருந்துவார்கள். ஆதலால் நம்முடன் இயற்கையான ஸம்பந்தமுடைய, எப்பொழுதும் செல்வத்தையுடைய நாராயணன் திருவடிகளை அடையுங்கள் என்கிறார்.
ஒரு நாயகமாய் ஓட உலகுடன் ஆண்டவர்
கரு நாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்
பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்
திருநாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்துய்ம்மினோ
எல்லாவற்றுக்கும் தலைவராய் நெடுங்காலம் நடக்கும்படி உலகத்துடன் பொருந்தி ராஜ்யம் நடத்தியவர்கள் அந்த ஐச்வர்யம் தீர்ந்தவுடன் பிக்ஷையெடுக்கப்பார்த்து அந்த ஸமயத்தில் கறுத்த நாயாலே கவ்வப்பட்ட காலையுடையவர்களாய் உபயோகமற்ற பானையைப் பாத்ரமாகக் கொண்டு இந்தப் பெரிய பூமியில் எல்லாரும் காணும்படி இந்தப் பிறவியிலேயே பிச்சை எடுப்பார்கள். இப்படி இவ்வுலக ஐச்வர்யம் நிரந்தரமாக இல்லாததால், எப்பொழுதும் செல்வத்துடன் இருக்கும் நாராயணனுடைய திருவடிகளை காலம் தாழ்த்தாமல் உடனே நினைத்து உஜ்ஜீவனத்தைப் பெறுங்கள்.
இரண்டாம் பாசுரம். ஐச்வர்யத்தை இழப்பது மட்டுமல்லாமல் விரும்பிய விஷயத்தையும் பிரிய நேரிடும் ஆதலால் எல்லாருக்கும் தலைவனான ச்ரிய:பதியை அடையுங்கள் என்கிறார்.
உய்ம்மின் திறை கொணர்ந்து என்று உலகாண்டவர் இம்மையே
தம் இன் சுவை மடவாரைப் பிறர் கொள்ளத் தாம் விட்டு
வெம்மின் ஒளி வெயில் கானகம் போய்க் குமை தின்பர்கள்
செம்மின் முடித் திருமாலை விரைந்தடி சேர்மினோ
திறையைக் கொண்டுவந்து பிழைத்துக்கொள்ளுங்கள் என்று இந்த வார்த்தையைக் கொண்டே உலகத்தை ஆண்டவர்கள் இப்படி வாழ்ந்த பிறவியிலேயே தங்களுக்கு என்று தனித்துவமாய் மிகவும் பிடித்தவர்களாய் இன்பத்தையுடையவர்களாய் இருக்கும் ஸ்த்ரீகளை, மற்றவர்கள் பறித்துக்கொள்ளும்படி, தாங்களே கைவிட்டு, வெப்பம் மிகுந்த, பார்த்தவர் கண்களில் மின்னொளி பரக்கும், வெயிலையுடைய காட்டுக்குள்ளே போய் அங்கும் வேறு ராஜாக்களால் துன்புறுவார்கள். ஆதலால் விரைந்து சென்று தடுக்கப்படாத ஒளிமிகுந்த கிரீடத்தையுடைய திருமாலின் திருவடிகளில் சேருங்கள்.
மூன்றாம் பாசுரம். காலில் விழுந்த ராஜாக்களையும் மதிக்காமல் இருந்தவர்கள் பின்பு ஒரு மதிப்பும் இல்லாமல் ஆவார்கள். ஆதலால் இனியவனான கண்ணன் திருவடிகளை அடையுங்கள் என்கிறார்.
அடி சேர் முடியினராகி அரசர்கள் தாம் தொழ
இடி சேர் முரசங்கள் முற்றத்தியம்ப இருந்தவர்
பொடி சேர் துகளாய்ப் போவர்கள் ஆதலில் நொக்கெனக்
கடி சேர் துழாய் முடிக் கண்ணன் கழல்கள் நினைமினோ
தங்கள் காலில் விழுந்த கிரீடத்தையுடைய ராஜாக்கள் தாங்களே தொழும்பொழுது இடிபோன்ற முரசங்கள் முற்றத்திலே ஓசை செய்யும்படி இருந்தவர்கள் ஒரு பொருளின் துகளுடன் சேர்ந்த மிகச்சிரிய துகளாகும்படி மதிப்பற்றுப் போவார்கள். ஆதலால் உடனே நறுமணம் மிகுந்த திருத்துழாயாலே அலங்கரிக்கப்பட்ட கிரீடத்தையுடைய கண்ணன் திருவடிகளை நினையுங்கள்.
நான்காம் பாசுரம். அவமானப்படுவது மட்டும் இல்லாமல் ஆயுளும் நிலைநில்லாததாகையால் விரோதிகளைப் போக்கும் கண்ணன் திருவடிகளை வணங்குங்கள் என்கிறார்.
நினைப்பான் புகின் கடல் எக்கலின் நுண் மணலில் பலர்
எனைத்தோருகங்களும் இவ்வுலகாண்டு கழிந்தவர்
மனைப்பால் மருங்கற மாய்தல் அல்லால் மற்றுக் கண்டிலம்
பனைத்தாள் மதகளிறட்டவன் பாதம் பணிமினோ
ஆராய முயன்றால் பல யுகங்களும் இந்த உலகத்தை ஆண்டு கழிந்துபோனவர்கள் கடலில் உருவாகிய மேடுகளில் இருக்கும் மிக நுண்ணிய மணலைவிட மிகுதியானவர். தங்களின் வீட்டின் பகுதிகளுக்கும் அதன் சுற்றுப்புறங்களுக்கும் வித்யாசம் தெரியாதபடி அழிவதைத் தவிர வேறு நிலையைப் பார்த்ததில்லை. ஆதலால் பனைபோலே பருத்த அடிப்பரப்பையுடைய யானையை அழித்தவனான கண்ணனின் திருவடிகளை வணங்குங்கள்.
ஐந்தாம் பாசுரம். விருப்பத்துக்குரித்தான் பெண்களும் அவர்களுடன் கூடுவதும் நிலையற்றதாகையாலே அழகிய உருவத்தையுடையவனான ஸர்வேச்வரன் திருநாமத்தைச் சொல்லி வாழப் பாருங்கள் என்கிறார்.
பணிமின் திருவருள் என்னும் அம் சீதப் பைம் பூம் பள்ளி
அணி மென் குழலார் இன்பக் கலவி அமுதுண்டார்
துணி முன்பு நாலப் பல் ஏழையர் தாமிழிப்பச் செல்வர்
மணி மின்னு மேனி நம் மாயவன் பேர் சொல்லி வாழ்மினோ
அழகியதாய் குளிர்ந்ததாய் பரந்த பூப்படுக்கையிலே, திருவருளைப் பண்ணியருளவேணும் என்னும் ஆசையையுடைய, அழகாக அலங்கரிக்கப்பட்ட மிகவும் மென்மையான கூந்தலையுடையவர்களின் இன்பமான கலவி என்னும் அமுதத்தை அனுபவித்தவர்கள், தாங்கள் அணிந்திருக்கும் வஸ்த்ரமானது பின்பக்கம் வரை எட்டாமல் இருப்பதால் முன்னே தொங்கும்படி இருக்க, முன்பு ஈடுபட்டிருந்த பல வகைப்பட்ட ஸ்த்ரீகள் தாங்களே பழித்தாலும்கூட, அவர்களை நோக்கி நடப்பார்கள். ஆதலால் நீலரத்னம்போலே ஒளிபடைத்த திருமேனியையுடையவனாய், நமக்கு தன் அனுபவத்தைக் கொடுக்கும் ஆச்சர்யபூதனின் திருநாமங்களைச் சொல்லி ஆனந்தமாக வாழுங்கள்.
ஆறாம் பாசுரம்.. இவ்வுலகில் நிலைநின்ற வாழ்க்கை இல்லாததால் அப்படி இருக்க ஆசைப்படுபவர்கள் திருப்பாற்கடல்நாதனுக்குத் தொண்டராகுங்கள் என்கிறார்.
வாழ்ந்தார்கள் வாழ்ந்தது மா மழை மொக்குளின் மாய்ந்து மாய்ந்து
ஆழ்ந்தார் என்றல்லால் அன்று முதல் இன்றறுதியா
வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பர் என்பதில்லை நிற்குறில்
ஆழ்ந்தார் கடல் பள்ளி அண்ணல் அடியவராமினோ
வாழ்ந்தார்களாகத் தங்களை நினைத்திருப்பவர்கள் வாழ்ந்தது பெருமழையில் நீர்க்குமிழிபோலே நசித்து நசித்துக் கீழே போனார்கள் என்பதைத் தவிர, உற்பத்தி முதல் இன்று வரை ஓரே நிலையில் வாழ்ந்தார்கள் என்பது இல்லை. நிலைநின்ற வாழ்வு வேண்டுமாகில் ஆழ்ந்து நிறைந்த கடலைப் படுக்கையாகவுடைய ஸர்வஸ்வாமிக்கு அடியார் ஆகுங்கள்.
ஏழாம் பாசுரம். உடம்பை வளர்க்கும் உணவு முதலிய இன்பமும் நிரந்தரமற்றது ஆகையால் எல்லாருக்கும் காரணமான ஸர்வேச்வரன் குணங்களை நினையுங்கள் என்கிறார்.
ஆமின் சுவை அவை ஆறோடடிசில் உண்டார்ந்த பின்
தூ மென் மொழி மடவார் இரக்கப் பின்னும் துற்றுவார்
ஈமின் எமக்கொரு துற்றென்று இடறுவர் ஆதலின்
கோமின் துழாய் முடி ஆதி அம் சோதி குணங்களே
ப்ரக்ருதிக்குச் சேர்ந்ததாய் விரும்பத்தக்கதாய் உலக ப்ரஸித்தமான ஆறு ரஸங்களோடு கூடின உயர்ந்ததான அன்னத்தை உண்டு த்ருப்தியடைந்தபின், சுத்தமாய் மென்மையான பேச்சையுடைய ஸ்த்ரீகள் கேட்பதால் மீண்டும் முயன்று உண்ணுபவர்கள், அந்தச் செல்வம் அழிந்த பிறகு, அந்த ஸ்த்ரீகளிடமே சென்று எங்களுக்கு ஒரு பிடி அன்னம் இடவேணும் என்று கேட்டு அது கிடைக்காததால் ஆங்காங்கே திரிவார்கள். ஆதலால் திருத்துழாயாலே அலங்கரிக்கப்பட்ட கிரீடத்தையுடைய எல்லாருக்கும் காரணமான, அழகிய ஒளிபடைத்த திருமேனியையுடைய ஸர்வேச்வரனின் குணங்களை, அவனை அடைந்து அனுபவியுங்கள்.
எட்டாம் பாசுரம். பகவானுடைய அருள் இல்லாதபோது கிடைக்கும் ராஜ்யமும் நிலையற்றதாகையாலே ஆதிசேஷனில் சயனித்திருப்பவன் திருநாமங்களைச் சொல்லுங்கள் என்கிறார்.
குணம் கொள் நிறை புகழ் மன்னர் கொடைக் கடன் பூண்டிருந்து
இணங்கி உலகுடன் ஆக்கிலும் ஆங்கவனை இல்லார்
மணம் கொண்ட போகத்து மன்னியும் மீள்வர்கள் மீள்வில்லை
பணம் கொள் அரவணையான் திருநாமம் படிமினோ
சீலம் முதலிய குணங்களுக்கு இருப்பிடமாய் பூர்ணமான புகழையுடையவராய் க்ஷத்ரிய குல புத்ரர்களாய் வள்ளல் தன்மையை ஏறிட்டுக்கொண்டு நிலைபெற்று நின்று இருந்து உலகம் உடன்படும்படி ரக்ஷித்துப் போனாலும் அந்த ஐச்வர்ய விஷயமாக ஸர்வேச்வரனை அடிபணிந்து நில்லாதவர்கள், எப்பொழுதும் புதியதாக இருக்கும் ஐச்வர்ய இன்பத்திலே இப்படி நிலைநின்றார்களாகிலும் அந்த ஐச்வர்யத்தை இழப்பார்கள். விரிகிற பணங்களையுடைய ஆதிசேஷனைப் படுக்கையாக கொண்டுள்ள எம்பெருமான் திருநாமங்களை எப்பொழுதும் சொன்னால் மீண்டும் இவ்வுலகுக்கு வரவேண்டாத மோக்ஷம் கிடைக்கும்.
ஒன்பதாம் பாசுரம். மேலுலகத்தில் இருக்கும் ஸ்வர்க்கானுபவமும் நிலையற்றதாகையாலே நிலைநின்ற கைங்கர்யத்தைக் கொடுக்கும் ஈச்வரனை அடையுங்கள் என்கிறார்.
படி மன்னு பல்கலன் பற்றோடறுத்து ஐம்புலன் வென்று
செடி மன்னு காயம் செற்றார்களும் ஆங்கவனை இல்லார்
குடி மன்னும் இன் சுவர்க்கம் எய்தியும் மீள்வர்கள் மீள்வில்லை
கொடி மன்னு புள்ளுடை அண்ணல் கழல்கள் குறுகுமினோ
நிலத்தையும் எப்பொழுதும் அணிந்திருந்த பலவகைப்பட்ட ஆபரணங்களையும் பற்றோடு அறுத்து, ஐம்புலன்களையும் வென்று, தூறுமண்டிக்கிடக்கிற சரீரத்தை ஜயித்தவர்களும், இந்த தவத்தின் பலனால் பொருந்தி இருக்கும் குடியிருப்பையுடைய உயர்ந்த இனிமையையுடைய ஸ்வர்க்கத்தை பெற்றாலும், அந்த இன்பத்துக்காக, அங்கும் எம்பெருமானை வணங்காதவர்கள் அதை இழந்து திரும்புவார்கள். மீளாத இன்பத்தை அடைய கொடியிலே எப்பொழுதும் இருக்கும் பெரியதிருவடியையுடைய ஸர்வேச்வரனுடைய திருவடிகளை அடையப்பாருங்கள்.
பத்தாம் பாசுரம். இப்படி உலக இன்பங்களைப் போலே நிரந்தரமற்றதாக இல்லாமல் கைவல்யம் நிரந்தரமான ப்ரயோஜனமாக இருந்தாலும் அதில் எம்பெருமானுக்குத் தொண்டு செய்து அனுபவிக்கும் வாய்ப்பில்லாததால் ஸர்வேச்வரனை அடையும் பகவத் ப்ராப்தியே உயர்ந்த ப்ரயோஜனம் என்கிறார்.
குறுக மிக உணர்வத்தொடு நோக்கி எல்லாம் விட்ட
இறுகல் இறப்பென்னும் ஞானிக்கும் அப்பயன் இல்லையேல்
சிறுக நினைவதோர் பாசம் உண்டாம் பின்னும் வீடில்லை
மறுகலில் ஈசனைப் பற்றி விடா விடில் வீடஃதே
உள்நோக்கிய ஞானத்தாலே நிரூபிக்கப்படும் ஆத்மவஸ்துவுடன் ஆழமாக நினைத்து ஆத்மாவைத் தவிர எல்லா விஷயங்களையும் விட்டவனாய் ஆத்மாவில் மட்டும் சென்று முடிந்த மோக்ஷத்தை புருஷார்த்தம் என்றிருக்கும் ஞானிக்கும் எம்பெருமானை உபாயமாகப் பற்றுகை இல்லையாகில் தாழ்ந்த புருஷார்த்தங்களை நினைப்பதற்குக் காரணமான ஓர் பாசம் ஏற்பட்டு அதனால் அந்த கைவல்ய மோக்ஷமும் கிடைக்காது. ஆதலால் எல்லாவிதமான தோஷங்களுக்கும் எதிர்த்தட்டான, எல்லாவிதமான மங்கள குணங்களையும் உடைய ஸ்வாமியை அடைந்து அகலாமல் இருந்தால் அதுவே சிறந்த புருஷார்த்தம்.
பதினொன்றாம் பாசுரம். இத்திருவாய்மொழிக்குப் பலமாக துக்கம் போய் ஆத்மா உஜ்ஜீவனத்தை அடைவதை அருளிச்செய்கிறார்.
அஃதே உய்யப் புகுமாறென்று கண்ணன் கழல்கள் மேல்
கொய் பூம் பொழில் ஸூழ் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்
செய் கோலத்தாயிரம் சீர்த் தொடைப் பாடல் இவை பத்தும்
அஃகாமல் கற்பவர் ஆழ் துயர் போய் உய்யற்பாலரே
வாழ்ச்சிக்குக் காரணமாகக் கிட்டும் உபாயம் அதுவே என்று அறுதியிட்டு கண்ணனுடைய திருவடிகளின்மேலே கொய்யப்படும் புஷ்பங்களையுடைய பொழிலையுடைய ஆழ்வார்திருநகரிக்குத் தலைவரான நம்மாழ்வார் அந்தரங்க கைங்கர்யங்களாகச் செய்த சீரும் தொடையும் கொண்ட அழகிய ஆயிரம் பாசுரங்களில் இவை பத்தையும் நழுவாதபடிக் கற்பவர்கள் ஆழ்ந்து வரும் துக்கம் போய் ஆத்ம உஜ்ஜீவனத்தை அடைவார்கள்.
ச்ரிய:பதியான ஸர்வேச்வரன் அர்ச்சாவதார ரூபத்திலே பெருங்கருணையுடன் ஆத்மாக்களுக்கு உதவுவதற்காக இவ்வுலகில் வந்து காத்திருக்க, இங்குள்ளவர்கள் அவனால் நியமிக்கப்பட்ட வேறு தெய்வங்களைத் தேடிப் போவதைக்கண்டு, எல்லோருக்கும் எம்பெருமானுடைய பரத்வத்தை விரிவாக உபதேசம் செய்து அவர்களைத் திருத்தி மகிழ்கிறார். அர்ச்சாவதாரத்திலே எம்பெருமானின் பரத்வத்தை ஆழ்வார் காட்டிய பதிகம் இது. இந்த திவ்யதேசம் ஆழ்வாருடைய திருவவதார ஸ்தலம் ஆகையாலே இங்கிருக்கும் எம்பெருமானிடத்தில் ஆழ்வாருக்குத் தனி ஈடுபாடு என்பதும் வெளிப்படுகிறது.
முதல் பாசுரம். எல்லாவற்றுக்கும் காரணமான ஸர்வேச்வரன் இங்கே இருக்க வேறு எந்த தேவதையைத் தேடுகிறீர்கள் என்கிறார்.
ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா
அன்று நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர் படைத்தான்
குன்றம் போல் மணி மாட நீடு திருக்குருகூர் அதனுள்
நின்ற ஆதிப் பிரான் நிற்க மற்றைத் தெய்வம் நாடுதிரே
எம்பெருமானிடத்தில் ஒன்றியிருக்கும்படிச் சேர்வதான தேவதைகளும் அவர்களின் உலகங்களும் மனுஷ்யர் தொடக்கமான ப்ராணிகளும் மற்றும் உண்டான எல்லாப் பொருள்களும் எதுவும் இல்லாத அன்று இவர்களை ஸ்ருஷ்டிக்கவேணும் என்னும் கருணை உள்ளத்துடன் ப்ரஹ்மாவுடன் தேவதைகள், உலகம், ப்ராணிகள் ஆகியவற்றைத் தன்னை அடைவதற்கு வழிசெய்யும் வகையில் படைத்தவனாய் மலைகள்போலே மாணிக்கமயமான மாடங்கள் உயர்ந்திருக்கிற திருக்குருகூரில் நிற்கிற எல்லாவற்றுக்கும் காரணனான மஹோபகாரகன் இங்கிருக்க ஸ்ருஷ்டி ஸம்ஹாரம் ஆகியவற்றுள் கர்மத்தாலே ஈடுபடும் தேவதைகளைத் தேடுகிறீர்களே.
இரண்டாம் பாசுரம். அந்த தேவர்களையும் உங்களையும் படைப்பதற்குத் தேவையான நித்யமங்கள குணங்களை உடைய எம்பெருமான் வாழும் திருநகரியை அடையுங்கள் என்கிறார்.
நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான்
வீடில் சீர்ப் புகழ் ஆதிப்பிரான் அவன் மேவி உறை கோயில்
மாட மாளிகை சூழ்ந்தழகாய திருக்குருகூரதனைப்
பாடி ஆடிப் பரவிச் சென்மின்கள் பல்லுலகீர் பரந்தே
பலவகைப்பட்ட உலகத்தீரே! நீங்கள் உங்கள் குணத்துக்கு ஏற்றதாக வணங்கும் தேவதைகளையும் உங்களையும் ஸ்ருஷ்டி காலத்திலே படைத்தவனான, அதற்குத் தேவையான ஞானம் சக்தி முதலிய குணங்களையுடையவனான, புகழையுடைய ஆதிப்பிரானான எம்பெருமான், பொருந்தி வாழும் ஸ்தானமாய், மாடங்களும், மாளிகைகளும் சூழ்ந்து அதனாலே அழகாக இருக்கும் திருநகரியைப் பாடி ஆடி ஸ்துதித்து எல்லாவிடத்திலும் சென்று சொல்லுங்கள்.
மூன்றாம் பாசுரம். இப்பொழுது படைக்கப்பட்டிருக்கும் ஜகத்தை எம்பெருமான் காப்பாற்றுவதே, அவன் மேன்மையைக் காட்டும் என்கிறார்.
பரந்த தெய்வமும் பல்லுலகும் படைத்து அன்றுடனே விழுங்கிக்
கரந்துமிழ்ந்து கடந்திடந்தது கண்டும் தெளியகில்லீர்
சிரங்களால் அமரர் வணங்கும் திருக்குருகூர் அதனுள்
பரன் திறம் அன்றிப் பல்லுலகீர்! தெய்வம் மற்றில்லை பேசுமினே
பரந்திருக்கும் தேவதைக் கூட்டங்களையும் பல் வித உலகங்களையும் படைத்து, ப்ரளயம் வந்த காலத்தே உடனே விழுங்கி, அதை ஒளித்து வைத்து, ப்ரளயத்துக்குப் பிறகு வெளியே உமிழ்ந்து, பின்பு அளந்து கொண்டு, மீண்டும் இடைப்பட்ட ப்ரளயத்திலே இடந்து எடுத்த இவற்றைக் கண்டும், தெளிவான அறிவில்லாமல் இருக்கிறீர்களே. தேவர்கள் தங்களது தலைகளால் வணங்கும் திருநகரிக்குள்ளே நிற்கிற பரம்பொருளுக்குச் சரீரமாயல்லது வேறு ஸ்வதந்த்ரமான தெய்வம் இல்லை. பல விதமான உலகத்தில் உள்ளவர்களே, அப்படி இருந்தால் சொல்லுங்கள்.
நான்காம் பாசுரம். இவ்வுலகில் ஈச்வரர்கள் என்று கொண்டாடப்படுபவர்களுக்கும் ஈச்வரனான, வேதத்தில் பரதெய்வமாகச் சொல்லப்பட்ட ஸர்வேச்வரன் விஷயத்தில் அவன் ஈச்வரன் இல்லை என்றும் அனுமானத்தாலே ஈச்வரனைச் சொல்லும் நையாயிகர்களுக்கு என்ன ப்ரயோஜனம் என்கிறார்.
பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும்
நாயகன் அவனே கபால நன் மோக்கத்துக் கண்டு கொண்மின்
தேசமாமதிள் சூழ்ந்தழகாய திருக்குருகூர் அதனுள்
ஈசன் பால் ஓர் அவம் பறைதல் என்னாவது இலிங்கியர்க்கே
ஈச்வரனாகச் சொல்லப்பட்ட ருத்ரனுக்கும் அவனுக்கும் தந்தையான ப்ரஹ்மாவுக்கும் மற்ற தேவதைகளுக்கும் நாயகனானவன் அந்த ஸர்வேச்வரனே. ப்ரஹ்மாவின் சாபத்தால் ருத்ரன் கையிலே ஒட்டியிருந்த கபாலத்தை நன்றாகப் போக்கின இந்த சரித்ரத்தை ஐந்தாவது வேதமான மஹாபாரத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். ஒளிமயமாய் மிகச்சிறந்ததான மதிள்களாலே சூழப்பட்டு அத்தாலே அழகாக இருக்கும் திருநகரிக்குள்ளே இருக்கும் இயற்கையான ஸர்வேச்வரன் விஷயத்திலே இவன் ஈச்வரன் இல்லை என்ற தாழ்ந்த வார்த்தைகளைச் சொல்லுகிற இத்தால் நையாயிகர்களுக்கு என்ன ப்ரயோஜனம் உண்டு?
ஐந்தாம் பாசுரம். பாஹ்ய (வேதத்தை ஒத்துக்கொள்ளாதவர்கள்) குத்ருஷ்டி (வேதத்துக்குத் தவறான அர்த்தம் சொல்லுபவர்கள்) மதத்தவர்களை ஜயித்து, திருநகரியில் நிற்கிற ஸர்வேச்வரனே எல்லாரையும் விட உயர்ந்தவன் என்கிறார்.
இலிங்கத்திட்ட புராணத்தீரும் சமணரும் சாக்கியரும்
வலிந்து வாது செய்வீர்களும் மற்று நும் தெய்வமும் ஆகி நின்றான்
மலிந்து செந்நெல் கவரி வீசும் திருக்குருகூர் அதனுள்
பொலிந்து நின்ற பிரான் கண்டீர் ஒன்றும் பொய் இல்லை போற்றுமினே
லிங்கத்தை வணங்குவதைக் காட்டும் தாமஸ புராணத்தை நம்பும் குத்ருஷ்டிகளான நீங்களும், வேதத்தை ஒத்துக்கொள்ளாத சமணர்கள் மற்றும் பௌத்தர்களும், வீணான தர்க்கங்களில் ஈடுபட்டு வாதம் செய்யும் வைசேஷிகர்கள் முதலியவர்களும் மற்றும் நீங்கள் விரும்பி வணங்கும் தேவதைகளும் தன் அதீனத்திலே இருக்கும்படி அவற்றை வளர்த்துவிட்டவன், செந்நெலானது மிகுந்து கவரிபோலே அசைகிற திருநகரியில் பரிபூர்ணனாய் தன் மேன்மை ஒளிவிடும்படி நிற்கும் ஸர்வேச்வரனே! இதை நீங்களே காணுங்கள். இதில் ஒன்றும் பொய் இல்லை. ஆகையாலே உங்கள் கொள்கைகளை விட்டு அவனையே கொண்டாடுங்கள்.
ஆறாம் பாசுரம். இது உங்களுக்குத் தெரியாமல் இருப்பது அவரவர் கர்மத்துக்கு ஏற்றபடி எம்பெருமான் இந்த ஸம்ஸாரத்தை நடத்துகிற ஸாமர்த்யத்தாலே என்கிறார்.
போற்றி மற்றோர் தெய்வம் பேணப் புறத்திட்டு உம்மை இன்னே
தேற்றி வைத்தது எல்லீரும் வீடு பெற்றால் உலகில்லை என்றே
சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு திருக்குருகூர் அதனுள்
ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர் அதறிந்தறிந்து ஓடுமினே
வேறு ஒரு தேவதையை ஸ்தோத்ரம் பண்ணி ஆதரிக்கும்படி தன்னிடத்திலிருந்து உங்களை விலக்கி, இப்படி அவர்கள் விஷயத்தில் நம்பிக்கையுடன் வைத்திருப்பது, எல்லாரும் பகவானை அடையும் மோக்ஷத்தைப் பெற்றால் சாஸ்த்ரத்தில் காட்டப்பட்ட உலக மர்யாதை குலையும் என்பதற்காக. இதற்குக் காரணம், சேற்று நிலத்தில் செந்நெலும் தாமரையும் போட்டிபோட்டுக் கொண்டு வளரும் திருநகரியிலே வாழும், மிக உயர்ந்த பல விதமான சக்திகளை உடையவனாய்க் கொண்டு எல்லாரையும் கர்மத்தை அனுபவிக்கச்செய்பவனுடைய, ஆச்சர்யமான ப்ரக்ருதியுடன் சேர்ந்த ஸம்பந்தம். அதை நன்றாக அறிந்து இந்த உலகைக் கடக்கப் பாருங்கள்.
ஏழாம் பாசுரம். இப்படியே மற்ற தெய்வங்களை வணங்கி வந்தால் இதற்கு முன்பு பெற்ற பலனையே பெறுவீர்கள். ஆதலால், கருடக்கொடியை உடைய, எல்லாவற்றுக்கும் காரணமான எம்பெருமானுக்கு அடிமை ஆகுங்கள் என்கிறார்.
ஓடி ஓடிப் பல பிறப்பும் பிறந்து மற்றோர் தெய்வம்
பாடி ஆடிப் பணிந்து பல் படிகால் வழி ஏறிக் கண்டீர்
கூடி வானவர் ஏத்த நின்ற திருக்குருகூர் அதனுள்
ஆடு புட்கொடி ஆதி மூர்த்திக்கு அடிமை புகுவதுவே
வேறு சில பெயர் சொல்லவும் தகுதியில்லாத தேவதையைப் பாடுவது, ஆடுவது என்று கொண்டு வணங்கி, பல விதத்தாலும் சாஸ்த்ர மார்கத்தாலே மேலும் மேலும் வணங்கி, பல பிறவிகளில் ஓடிப் பிறந்து, நேரே அனுபவித்தீர்கள். ஆதலால், நீங்கள் வணங்கும் தேவர்கள் எல்லாரும் கூடி ஸ்தோத்ரம் பண்ணி அடையும்படித் திருநகரியிலே நிற்கும், ஆடிவருகிற பெரியதிருவடியை கொடியாகவுடைய எல்லாருக்கும் காரணனான ஸர்வேச்வரனுக்கு அடிமை ஆகுங்கள்.
எட்டாம் பாசுரம். மார்க்கண்டேயனுக்கு ருத்ரன் உதவியதும் எம்பெருமான் க்ருபையாலே என்று மற்ற தேவதைகளுக்கும் பலன் கொடுக்கும் சக்தி எம்பெருமானே கொடுக்கிறான் என்பத உதாரணத்துடன் அருளிச்செய்கிறார்.
புக்கடிமையினால் தன்னைக் கண்ட மார்க்கண்டேயன் அவனை
நக்க பிரானும் அன்றுய்யக் கொண்டது நாராயணன் அருளே
கொக்கலர் தடம் தாழை வேலித் திருக்குருகூர் அதனுள்
மிக்க ஆதிப்பிரான் நிற்க மற்றைத் தெய்வம் விளம்புதிரே
தொண்டு செய்து உள்கலந்து தன்னை நேராகக் கண்ட மார்க்கண்டேயனென்று ப்ரஸித்தமானவனை, நக்கபிரான் என்று திக்கையே ஆடையாகக் கொண்டிருப்பவனும் தன் அடியார்களுக்கு நன்மை செய்பவனுமான ருத்ரனும், ஆபத்துக்காலத்திலே காப்பாற்றி பகவானுக்கு அடிமையாக்கி வாழவைத்தது நாராயணன் அருளாலேயே நடந்தது. ஆதலால், கொக்கின் நிறம்போலே வெளுத்து மலரும் பூவையுடைய பெரிய தாழைகளை வேலியாகவுடைய திருநகரியுள் நிற்கும் எல்லாரையும் விட உயர்ந்தவனாய், ஆதி காரணனாய், மஹோபகாரனான எம்பெருமான் நிற்க, வேறு எந்த தெய்வத்தைச் சொல்லுகிறீர்கள்?
ஒன்பதாம் பாசுரம். மற்றவர்களாலே புரிந்து கொள்ள முடியாத எம்பெருமான் வாழும் திருநகரியை உங்களுடைய வாழ்ச்சிக்காக நினையுங்கள் என்று அருளிச்செய்கிறார்.
விளம்பும் ஆறு சமயமும் அவை ஆகியும் மற்றும் தன் பால்
அளந்து காண்டற்கரியனாகிய ஆதிப் பிரான் அமரும்
வளம் கொள் தண் பணை சூழ்ந்தழகாய திருக்குருகூர் அதனை
உளம் கொள் ஞானத்து வைம்மின் உம்மை உய்யக் கொண்டு போகுறிலே
வார்த்தைகளால் மட்டும் நிறைந்திருக்கும் ஆறு பாஹ்ய சமயங்களும் (வேதத்தை ஒத்துக்கொள்ளாத சார்வாக, பௌத்த, சமண, வைசேஷிக, ஸாங்க்ய, பாசுபத மதங்கள்) மற்றுமுள்ள குத்ருஷ்டி (வேதத்துக்குத் தவறான அர்த்தம் கூறும்) மதங்களும் எல்லாம் கூடி வந்தாலும், தன்விஷயத்தில் ஆராய்ந்து காண்பதற்கு அரியதான தன்மையை உடைய, எல்லாருக்கும் காரணனான, மஹோபகாரகன் பொருந்தி வாழும் தேசமாய், அழகியதாய், குளிர்ந்ததான நீர்நிலங்களாலே சூழப்பட்டு மிகவும் இனிமையாக இருக்கும் திருநகரியை, நீங்கள் வாழ்ச்சியைப் பெறவேண்டும் என்று நினைத்தீர்களானால் உங்கள் உள்ளத்தில் இருக்கும் ஞானத்தில் வையுங்கள்.
பத்தாம் பாசுரம். எல்லாவற்றுக்கும் ஆத்மாவாய், மிகவும் எளியவனாய், எல்லாரையுடைய மனதையும் கவரக்கூடிய சேஷ்டிதங்களையுடைய எம்பெருமானுக்கு அடிமை செய்வதே விரும்பத்தக்கதும் தகுந்ததும் என்று அருளிச்செய்கிறார்.
உறுவதாவது எத்தேவும் எவ்வுலகங்களும் மற்றும் தன்பால்
மறுவின் மூர்த்தியோடு ஒத்து இத்தனையும் நின்ற வண்ணம் நிற்கவே
செறுவில் செந்நெல் கரும்பொடோங்கு திருக்குருகூர் அதனுள்
குறிய மாணுருவாகிய நீள் குடக் கூத்தனுக்கு ஆட்செய்வதே
எல்லா தேவதைகளும் எல்லா உலகங்களும் மற்றுமுண்டான எல்லா சேதனர்களும் அசேதனப் பொருள்களும் இவை எல்லாவற்றையும் தன் ஸ்வரூபத்திலே, குற்றமில்லாத தனித்துவம் வாய்ந்த திருமேனியைப் போலே, பெருமை சேர்க்கும் சரீரமாய்க்கொண்டு, தன்னுடைய ஸ்வரூபம், ஸ்வபாவம் ஆகியவை குலையாதபடி நிற்கும் எம்பெருமான் அம்மேன்மையோடே விளைநிலங்களில் செந்நெலானது கரும்புடன் வளரும்படியான திருநகரிக்குளே நிற்பவனாய், அடியார்கள் எளிதில் அனுபவிக்கும்படி வாமனனாய் ப்ரஹ்மசாரி உருவத்துடன், மிகப்பெரிய பெருமையையுடைய குடக்கூத்தாடிய கண்ணனுக்கே அடிமை செய்வதே சிறந்ததும் தகுந்ததுமாய் இருக்கும் புருஷார்த்தம்.
பதினொன்றாம் பாசுரம். இத்திருவாய்மொழியை நினைத்துச் சொன்னவர்களுக்குப் பரமபதம் கையிலேயென்று பலத்தை அருளிச்செய்கிறார்.
ஆட்செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன் வண் குருகூர் நகரான்
நாட்கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்
வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இப்பத்தும் வல்லார்
மீட்சி இன்றி வைகுந்த மாநகர் மற்றது கை அதுவே
வாசிக கைங்கர்யத்தைப் பண்ணி திருவாழியைத் திருக்கையிலேயேந்திய உபகாரகனை அடைந்தவராய் உயர்ந்ததான திருநகரிக்குத் தலைவராய் புதிய பரிமளத்தையுடைய திருமகிழமாலையை திருமார்பிலேயுடையவராய் மாறன் என்கிற குடிப்பெயரையும் சடகோபர் என்கிற விசேஷமான திருநாமத்தையும் உடைய ஆழ்வார், பகவத் விஷயத்தில் கொண்ட மிகுந்த ஆசையால் அருளிச்செய்த ஆயிரம் பாசுரங்களுக்குள் இப்பத்துப் பாசுரங்களையும் அர்த்தத்துடன் அனுபவிக்க வல்லவர்கள் கையிலே இதை அனுபவிப்பதாகிய பலத்துக்கு மேலே, மிகவும் தூரத்தில் இருக்கும், மீட்சியில்லாத ஸ்ரீவைகுண்டமாகிற மாநகரம் இருக்கும்.
ஆழ்வார் பராங்குச நாயகியாக மடலூரப் பார்த்து, இரவிலே மிகவும் வ்யசனப்பட்டு, பின்பு விடிந்தவுடன் சிறிது தெளிவு பெற்றாள். பின்பு தாய்மார்களும் தோழிமார்களும் இவளுக்கு அறிவுரை சொல்லப் பார்க்க, இவள் அவர்கள் சொல்லைக் கேட்காமல், அவனை நினைப்பதால் ப்ரீதியுடனும் அவனை நேரில் காணப் பெறாததால் அப்ரீதியுடனும் பாடக்கூடிய பாசுரங்களாக இவை அமைந்துள்ளன. இது உருவெளிப்பாடு என்னும் க்ரமத்தில் ஆழ்வாரால் எம்பெருமானை நேரே காண்பதைப் போலே அனுபவிக்கப்பட்டது. இதில் நம்பி எம்பெருமானின் திருமேனி அழகை ஆழ்வார் பூர்த்தியாக அனுபவிக்கிறார்.
முதல் பாசுரம். நம்பியின் தனித்துவம் வாய்ந்த அடையாளமான திருவாழி திருச்சங்கத்தாழ்வார்களிலும், ப்ரதானமான அவயவ அழகிலும் என் நெஞ்சு ஈடுபடுகிறது என்கிறாள்.
எங்ஙனேயோ அன்னைமீர்காள்! என்னை முனிவது நீர்
நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
சங்கினோடும் நேமியோடும் தாமரைக் கண்களோடும்
செங்கனிவாய் ஒன்றினோடும் செல்கின்றதென் நெஞ்சமே
அன்னைமீர்காள்! என்னைப் பெற்ற நீங்கள் எனக்கு விருப்பமானதைச் செய்யாமல், என்னை நினைத்து உகக்க வேண்டியிருக்க இப்படிக் கோபப்படுவது ஏன்? நம் குடிக்குத் தனித்துவம் வாய்ந்தவராய், அழகிய திருமேனியுடையவராய், திருக்குறுங்குடியில் கல்யாணகுண பூர்த்தியையுடைய நம்பியை நான் அனுபவித்தபின் அவருடைய சங்கினோடும், திருவாழியோடும், தாமரைபோலே அழகாய் இருக்கும் திருக்கண்களோடும் சிவந்த கனிபோலே தனித்துவமாய் இருக்கும் திருவதரத்தோடும் என் நெஞ்சு ஆசையுடன் செல்கிறது.
இரண்டாம் பாசுரம். நம்பியுடைய ஒப்பனை அழகும், தோளும் எல்லாவிடத்திலும் வந்து நின்று அனுபவத்துக்கு விஷயமாகிறது என்கிறாள்.
என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் என்னை முனியாதே
தென்னன் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
மின்னு நூலும் குண்டலமும் மார்பில் திருமறுவும்
மன்னு பூணும் நான்கு தோளும் வந்தெங்கும் நின்றிடுமே
என்னை ஆணையிடாமல் என் நெஞ்சினாலே அனுபவித்துப் பாருங்கள். தெற்குத் திக்கிலே அழகான சோலையையுடைய திருக்குறுங்குடியில் நம்பியை நான் கண்டபின்பு ஒளிவிடும் திருயஜ்ஞோபவீதமும், திருமகர குண்டலங்களும், திருமார்பில் ஆபரணமான ஸ்ரீவத்ஸமும், எப்பொழுதும் கழற்றாத ஆபரணங்களும் நான்கு திருத்தோள்களும் நான் போகுமிடமெல்லாம் வந்து நிற்கின்றன.
மூன்றாம் பாசுரம். நம்பியின் அழகை காப்பாற்றி வளர்க்கும் ஆயுதங்கள் எல்லாவிடத்திலும் ஒளிவிடுகின்றன என்கிறாள்.
நின்றிடும் திசைக்கும் நையுமென்று அன்னையரும் முனிதிர்
குன்ற மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
வென்றி வில்லும் தண்டும் வாளும் சக்கரமும் சங்கமும்
நின்று தோன்றிக் கண்ணுள் நீங்கா நெஞ்சுள்ளும் நீங்காவே
வாயடைத்து நிற்கும், அறிவை இழக்கும், சிதிலையாகும் என்றுகொண்டு பெற்ற தாய்மார்களான நீங்கள் முன்பு நம்பி விஷயத்தில் ஈடுபடுத்தி இப்பொழுது கோபப்படாதீர்கள். மலைபோலே இருக்கிற மாடங்களையுடைய திருக்குறுங்குடியில் நம்பியை நான் அனுபவித்தபின் வெற்றியையுடைய வில்லும், கதையும், வாளும், சக்கரமும் சங்கமும் ஒன்றாக நின்று என் கண்ணுக்குள் தோன்றி விலகிப்போகாமல் இருக்கின்றன. நெஞ்சுக்குள்ளும் இருந்து விலகிப்போகாமல் இருக்கின்றன.
நான்காம் பாசுரம். மேன்மை பொலியும் நமபியின் திருமேனி அழகின் உயர்த்தி என் அருகில் வந்தது என்கிறாள்.
நீங்க நில்லா கண்ண நீர்கள் என்று அன்னையரும் முனிதிர்
தேன் கொள் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
பூந்தண் மாலைத் தண்டுழாயும் பொன் முடியும் வடிவும்
பாங்கு தோன்றும் பட்டும் நாணும் பாவியேன் பக்கத்தவே
இவள் கண்ணீர் குறையவில்லை என்று நம்பி விஷயத்தில் மூட்டின தாய்மார்களான நீங்களும் கோபப்படுகிறீர்கள். தேனையுடைய சோலைகளைக்கொண்ட திருக்குறுங்குடியில் நம்பியை நான் அனுபவித்த பின்பு அனுபவிக்கத் தகுந்ததாய் குளிர்ச்சியாய் மாலை வடிவில் இருக்கும் செவ்வித் திருத்துழாயும் அவன் பரத்வத்தைக் காட்டும் விரும்பத்தக்க கிரீடமும் திருமேனியும் அதற்குத் தகுந்த பட்டாடையும் அரைநாணும் அருகிலே சென்று அனுபவிக்க முடியாத பாபத்தையுடைய என் அருகில் வந்தன.
ஐந்தாம் பாசுரம். நம்பியின் திருமுகத்தின் அழகு என் ஆத்மா வரை செல்கிறது என்கிறாள்.
பக்கம் நோக்கி நிற்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர்
தக்க கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
தொக்க சோதித் தொண்டை வாயும் நீண்ட புருவங்களும்
தக்க தாமரைக் கண்ணும் பாவியேன் ஆவியின் மேலனவே
அவன் வரும் பக்கத்தை நோக்கி நிற்கும், சிதிலையாகும் என்று தாய்மார்களான நீங்களும் கோபித்து வார்த்தை சொல்கிறீர்கள். பூர்த்திக்குத் தகுதியான கீர்த்தியையுடைய திருக்குறுங்குடி நம்பியை நான் அனுபவித்தபின்பு திரண்ட ஒளியையுடைய தொண்டைப்பழம் போலிருக்கிற திருவதரமும் நீண்ட திருப்புருவங்களும் அதற்குத் தகுதியான நீட்சியையுடைய தாமரை போன்ற திருக்கண்களும் நினைத்தபடி அனுபவிக்கப்பெறாத பாபத்தையுடைய என் ஆத்மாவின் வரை செல்கிறது.
ஆறாம் பாசுரம். நம்பியின் திருமுகத்தின் அழகும், ரூபம், புஜம் முதலியவற்றின் உயர்த்தியும் என் நெஞ்சிலே பூர்ணமாக நிறைந்தது என்கிறாள்.
மேலும் வன் பழி நம் குடிக்கிவள் என்று அன்னை காண கொடாள்
சோலை சூழ் தண் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
கோல நீள் கொடி மூக்கும் தாமரைக் கண்ணும் கனி வாயும்
நீல மேனியும் நான்கு தோளும் என் நெஞ்சம் நிறைந்தனவே
அவன் வந்து கைக்கொள்ளும் வரை காத்திருக்கும் நம் குடிக்கு, தானாகக் காண ஆசைப்படும் இவள், உள்ளதனையும் பெரியதான பழி ஒரு வடிவெடுத்தாப்போலே இருக்கிறாள் என்று தாயாரானவள் நம்பியைக் காண அனுமதிப்பதில்லை. சோலை சூழ்ந்த குளிர்ச்சியான திருக்குறுங்குடியில் நம்பியை நான் கண்டபின்பு, மிகவும் அழகாய் நீண்ட கற்பகக் கொடி போலேயிருக்கிற திருமூக்கும், தாமரைப் பூப்போன்ற திருக்கண்களும், பழுத்த திருவதரமும் நீல நிறத்தையுடைய திருமேனியும் நான்கு திருத்தோள்களும் என் நெஞ்சிலே வந்து நிறைந்தன.
ஏழாம் பாசுரம். மிகவும் ஒளிமயமான ஓங்கிய விரும்பத்தக்க திருமேனியுடன் நம்பி என் நெஞ்சுக்குள்ளே கையும் திருவாழியுமாய் நின்றார் என்கிறாள்.
நிறைந்த வன் பழி நம் குடிக்கிவள் என்று அன்னை காண கொடாள்
சிறந்த கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனியொடும்
நிறைந்தென்னுள்ளே நின்றொழிந்தான் நேமியங்கையுளதே
நம்முடைய குடிக்கு இவள் பூர்ணமான, வலிமையான பழி என்று தாயார் நம்பியைக் காண அனுமதிக்கவில்லை. சிறந்த கீர்த்தியையுடைய திருக்குறுங்குடி நம்பியை நான் அனுபவித்தபின்பு, பூர்ணமான ஒளிக்கற்றையாலே சூழப்பட்டு ஓங்கிய விரும்பத்தக்க திருமேனியோடு என் நெஞ்சுக்குள்ளே நிறைந்து நின்றுவிட்டான். அந்நிலையில் அழகிய திருக்கையிலே திருவாழியும் இருந்தது.
எட்டாம் பாசுரம். நம்பியினுடைய எல்லா அவயங்களின் அழகும் என் முன்னே நிற்கின்றன என்கிறாள்.
கையுள் நன்முகம் வைக்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர்
மை கொள் மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
செய்ய தாமரைக் கண்ணும் அல்குலும் சிற்றிடையும் வடிவும்
மொய்ய நீள் குழல் தாழ்ந்த தோள்களும் பாவியேன் முன் நிற்குமே
கையுள் அழகிய முகத்தை வைக்கும், சிதிலையாகும் என்று இதற்குக் காரணமான தாய்மார்களான நீங்களும் கோபிக்கிறீர்கள். கரிய நிறத்தையுடைய மாடங்களையுடைய திருக்குறுங்குடியில் நம்பியை நான் கண்டபின் சிவந்த தாமரை போன்ற திருக்கண்களும், அரை ப்ரதேசமும், சிறுத்த இடையும், அழகிய திருமேனியும், செறிவையுடைய நீண்ட திருக்குழல்கள் (கூந்தல்) தாழ்ந்த திருத்தோள்களும் ஆசைப்படி அனுபவிக்கமுடியாத பாபத்தையுடைய என் முன்னே நிற்கின்றன.
ஒன்பதாம் பாசுரம். நம்பி கணக்கற்ற அழகுகளுடன் கூடியிருந்து எல்லையில்லாத இனிமையையுடையவனாகக் கொண்டு என் நெஞ்சை விட்டுப் போகாமல் இருக்கிறார் என்கிறாள்.
முன் நின்றாய் என்று தோழிமார்களும் அன்னையரும் முனிதிர்
மன்னு மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
சென்னி நீள் முடி ஆதியாய உலப்பில் அணிகலத்தன்
கன்னல் பால் அமுதாகி வந்து என் நெஞ்சம் கழியானே
எல்லோரும் காணும்படி முன்னே வந்து நின்றாய் என்று தோழிகளும் தாய்மாரும் கோபிக்கிறீர்கள். பொருந்தி இருக்கும் மாடங்களையுடைய திருக்குறுங்குடியில் நம்பியை நான் கண்டபின்பு, தலையில் அவன் மேன்மையைக் காட்டும் ஓங்கிய கிரீடம் முதலான கணக்கற்ற அணியப்பட்ட ஆபரணங்களையுடையவன் சர்க்கரை, பால், அமிர்தம் ஆகியவைபோலே மிகவும் இனிமையானவனாக வந்து என் நெஞ்சைவிட்டுப் போகாமல் இருக்கிறான்.
பத்தாம் பாசுரம். நித்யஸூரிகளுக்கு இனிமையான, மிகவும் ஒளி படைத்த, அடைய வேண்டிய திருமேனியானது, மற்றவர்களுக்குப் பார்க்க முடியாதபடி என்னுளே ஒளிவிடுகிறது என்கிறாள்.
கழிய மிக்கதோர் காதலள் இவள் என்று அன்னை காண கொடாள்
வழுவில் கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
குழுமித் தேவர் குழாங்கள் கை தொழச் சோதி வெள்ளத்தின் உள்ளே
எழுவதோர் உரு என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவரிதே
இவள் கைகழிய விஞ்சின காதலையுடையவளானாள் என்று தாயானவள் நம்பியைக் காண அனுமதிப்பதில்லை. குறைவற்ற கீர்த்தியையுடைய திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின் ஸூரிஸங்கங்கள் பரஸ்பரம் கூடியிருந்து தொண்டு செய்து அனுபவிக்கும்படி ஒளிக்கற்றையின் நடுவில் உயர்ந்து தோன்றுகிற தனித்துவம் வாய்ந்த திருமேனியானது அப்படியே என் நெஞ்சுக்குள்ளே தோன்றுகிறது. எத்தனையேனும் அறிவுடையார்க்கும் இது தங்கள் முயற்சியால் அடைய அரியது.
பதினொன்றாம் பாசுரம். இதிதிருவாய்மொழியைச் சொன்னவர்களுக்கு தான் பகவானுக்கு அடிமை என்ற உண்மைத் தன்மையைப் புரிந்து கொள்வதே பலம் என்று அருளிச்செய்கிறார்.
அறிவரிய பிரானை ஆழியங்கையனையே அலற்றி
நறிய நன்மலர் நாடி நன்குருகூர்ச் சடகோபன் சொன்ன
குறி கொள் ஆயிரத்துள் இவை பத்தும் திருக்குறுங்குடி அதன் மேல்
அறியக் கற்று வல்லார் வைட்டணவர் ஆழ் கடல் ஞாலத்துள்ளே
தங்கள் ஸாமர்த்யத்தால் அறிய ஒண்ணாதபடியான ஸ்வாமியாய் திருவாழியை அழகிய திருகையிலேயுடையவனைக் காதலால் அலற்றி, உயர்ந்த பரிமளத்தையுடைய சிறந்ததான புஷ்பங்களைப்போலே ஆராய்ந்து, சிறந்த குணங்களையுடையவராய் திருநகரிக்குத் தலைவரான ஆழ்வார் அருளிச்செய்த ஆயிரத்துள் ஆயுத அவயவ ஆபரண ரூப அடையாளங்களையுடைய திருக்குறுங்குடியில் நம்பி விஷயமாக உள்ள இந்தப் பதிகத்தையும் ஞான ஒளி பிறக்கும்படிக் கற்று அர்த்தத்தையும் நினைத்துப் பார்க்க வல்லவர்கள் ஆழமான கடல் சூழ்ந்த பூமியில் பகவத் ஸம்பந்தத்துடன் வாழ்வார்கள்.
எம்பெருமான் தன்னிடத்தில் சிறிது ஆசையுடையவர்களையும் ரக்ஷிப்பவனாக இருந்தும் ஏன் இன்னும் தன்னை வந்து ரக்ஷிக்கவில்லை என்று பார்த்தார் ஆழ்வார். தான் மற்றைய உபாயங்களில் ஈடுபட்டிருப்பதாக நினைத்து எம்பெருமான் நம்மை ரக்ஷிகாமல் இருக்கலாம் என்று நினைத்து ஆழ்வார் இந்தத் திருவாய்மொழியில் வானமாமலை எம்பெருமானுக்குத் தன்னுடைய தாழ்ச்சியையும் தனக்கு வேறு உபாயங்களில் அந்வயம் இல்லாததையும் அறிவித்து, சரணாகதி செய்கிறார்.
முதல் பாசுரம். உன்னை அடைவதற்காக சாஸ்த்ரத்தில் காட்டப்பட்ட உபாயங்கள் என்னிடம் இல்லாதபோதும் உன்னை அடைய வேண்டும் என்கிற ஆசை உள்ளது. இப்படி இருந்தும் அடியார்களுடன் கூடியிருப்பதற்கு இங்கே எழுந்தருளியிருக்கும் உனக்கு வெளிப்பட்டவனோ என்கிறார்.
நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன் ஆகிலும் இனி உன்னை விட்டொன்றும்
ஆற்றகிற்கின்றிலேன் அரவின் அணை அம்மானே!
சேற்றுத் தாமரை செந்நெல் ஊடு மலர் சிரீவரமங்கல நகர்
வீற்றிருந்த எந்தாய்! உனக்கு மிகை அல்லேன் அங்கே
பலத்தைப் பெறுவதற்கு அனுஷ்டிக்கப்படும் கர்மயோகத்தை உடையவனல்லேன். ஆதலால், நுண்ணியதான ஞான யோகத்தை உடையவனல்லேன். இவை இரண்டாலும் கூடும் பக்தியும் இல்லாதபோதும் உன் குணங்களை நினைத்துப் பார்த்த பின்பு உன்னை விட்டு ஒரு க்ஷணமும் வாழ முடியவில்லை. ஆதிசேஷணைப் படுக்கையாகக் கொண்டு உன் திருமேனியை அவனுக்குக் கொடுத்த ஸ்வாமியாய் சேற்று நிலத்தில் தாமரையானது செந்நெலோடே கலந்து மலரும்படி அழகான சிரீவரமங்கல நகரிலே அடியார்களைக் காப்பதற்காகக் கொண்ட தனித்துவம் வாய்ந்த வீற்றிருந்த திருக்கோலத்தாலே எனக்கு உபகாரகனானவனே! அங்கே ரக்ஷகனாக இருக்கும் உன்னால் காக்கப்படுபவர்களுள் நான் வெளிப்பட்டவன் அல்லேன்.
இரண்டாம் பாசுரம். என்னை ஏற்றுக்கொள்வதற்குத் தடைகள் இருந்தாலும், அவற்றை போக்கக் கூடியவன் நீயே என்பதால், எனக்கு க்ருபைபண்ணி அருள வேண்டும் என்கிறார்.
அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன் உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து நான்
எங்குற்றேனும் அல்லேன் இலங்கை செற்ற அம்மானே
திங்கள் சேர் மணி மாட நீடு சிரீவரமங்கல நகர் உறை
சங்கு சக்கரத்தாய் தமியேனுக்கருளாயே
உன் அருளால் உன்னை அடைந்து உன்னிடத்திலும் அல்லேன். நீ கைக்கொள்ளும் வரை காத்திருக்கலாம் என்று இங்கும் என்னால் இருக்க முடியவில்லை. மிகவும் இனியவனான உன்னைக் காணவேண்டும் என்கிற ஆசையில் அகப்பட்டு, நான் உலக விஷயங்களில் ஈடுபட்டிருக்கும் நிலையிலும் இல்லை. இலங்கையை அழித்து, பின்பு பெற்றுக் கொண்ட ஸ்வாமியாய், சந்த்ரனோடு சேரும்படி மாணிக்கமயமான மாடங்கள் வளர்கிற சிரீவரமங்கலநகரிலே நிரந்தரமாக வாழ்பவனாய், எதிரிகளை அழிக்க உதவும் திருச்சங்கு திருவாழி ஆகியவற்றை உடையவனே! உன்னைத் தவிர வேறு துணையில்லாத எனக்கு நீ க்ருபை பண்ணி அருள வேண்டும்.
மூன்றாம் பாசுரம். பரத்வத்தை வெளியிடும் சிறந்த திருமேனிகளைக் கொண்டு, என்னை ஏற்றுக்கொண்டு என் தொண்டையும் ஏற்றுக்கொண்ட உபகாரத்துக்கு நான் என்ன கைம்மாறு செய்தேன் என்கிறார்.
கருளப் புட்கொடி சக்கரப்படை வான நாட எம் கார் முகில் வண்ணா
பொருள் அல்லாத என்னைப் பொருள் ஆக்கி அடிமை கொண்டாய்
தெருள் கொள் நான்மறை வல்லவர் பலர் வாழ் சிரீவரமங்கல நகர்க்கு
அருள் செய்து அங்கிருந்தாய்! அறியேன் ஒரு கைம்மாறே
கருடனாகிற பறவையைக் கொடியாகவும் திருவாழியை ஆயுதமாகவும் பரமபதத்தை நாடாகவுமுடைய காளமேகம் போலே எனக்காகக்கொடுத்த திருமேனியை உடையவனாய் ஒரு வஸ்து என்று நினைக்கமுடியாதபடி இருந்த என்னை ஸ்வரூபத்தை உணர்ந்தவனாக ஆக்கி, வாசிக கைங்கர்யத்தையும் ஏற்றுக்கொண்டாய். உயர்ந்த ஞானத்தை உடையவராய்க்கொண்டு நான்கு வேதங்களையும் நடத்தவல்லவர்கள் பலரும் வாழும் சிரீவரமங்கலநகருக்கு அருளைப்பண்ணி அங்கே இருக்கிறவனே! நீ செய்த உபகாரத்துக்கு ஒரு கைம்மாறு நான் செய்ததாகத் தெரியவில்லை.
நான்காம் பாசுரம். அடியார்களை நன்றாகக் காக்கும் தன்மையையுடைய உன்னை என் ஆசையைக் கொண்டு எப்படிப் பெறுவது என்கிறார்.
மாறு சேர் படை நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காய் அன்று மாயப் போர் பண்ணி
நீறு செய்த எந்தாய் நிலம் கீண்ட அம்மானே!
தேறு ஞானத்தர் வேத வேள்வி அறாச் சிரீவரமங்கல நகர்
ஏறி வீற்றிருந்தாய் உன்னை எங்கெய்தக் கூவுவனே?
எதிரிகளாய்க் கூடின சேனையையுடைய துர்யோதனன் முதலிய நூற்றுவரும் நசிக்கும்படி தனியரான பஞ்ச பாண்டர்களுக்கும் உதவுபவனாய் அன்று ஆச்சர்ய சேஷ்டிதங்களையுடைய யுத்தத்தைப் பண்ணி எல்லாரையும் பொடிப்பொடியாகும்படிச் செய்த மஹோபகாரகனாய், பூமியை இடந்தெடுத்த ஸ்வாமியாய், தெளிந்த ஞானத்தையுடையவர்களுடைய வைதிகமான பகவதாராதனம் இடைவிடாமல் நடக்கும் சிரீவரமங்கலநகரில் ஏறி, தனித்துவம் தோன்றும்படி எழுந்தருளியிருந்த எம்பெருமானே! உன்னை எங்கே அடைவதாகக் கூவுவேன்?
ஐந்தாம் பாசுரம். எதிரிகளை அழிக்கும் தன்மையையுடைய நீ அடியார்களின் அனுபவத்துக்காக இங்கே இருப்பதைக் கண்டேன். இப்படி இருக்கிற உன்னை அடைய நான் முயற்சி செய்வது தகுமா என்கிறார்?
எய்தக் கூவுதல் ஆவதே எனக்கு? எவ்வதெவ்வத் துளாயுமாய் நின்று
கைதவங்கள் செய்யும் கருமேனி அம்மானே!
செய்த வேள்வியர் வையத் தேவர் அறாச் சிரீவரமங்கல நகர்
கை தொழ இருந்தாய் அது நானும் கண்டேனே
உன்னாலேயே ரக்ஷிக்கப்பட வேண்டிய எனக்கு உபாயமாக உன்னை அழைப்பது தகுமா? எவ்வகைப்பட்ட எதிரிகளாகிற அஸுரக்கூட்டத்துள் புத்தர் முதலிய அவதாரங்களைச் செய்து நின்று அவர்களை ஏமாற்றும் செயல்களைச் செய்யும் அழகிய கறுத்த திருமேனியையுடைய ஸ்வாமியே! செய்ய வேண்டியதைச் செய்து முடித்தவர்களாய் இவ்வுலகிலேயே நித்யஸூரிகளைப்போன்று இருப்பவர்கள் விடாமல் வாழும் சிரீவரமங்கலநகர் முழுவதும் தொண்டு செய்யும்படித் தலைவனாய் இருந்தாய். நானும் அந்த இருப்பைக் கண்டேன். ஆனபின்பு அங்கே என்னையும் சேர்த்துக் கொள்வது உன் பொறுப்பு என்று கருத்து.
ஆறாம் பாசுரம். அடியார்களுக்கு உதவுவதில் மிகவும் ஒளிபடைத்த தன்மையையுடைய நீ உன்னை நான் வந்து அனுபவித்துத் தொண்டு செய்யும்படி வந்தருள வேண்டும் என்கிறார்.
ஏனமாய் நிலம் கீண்ட என் அப்பனே கண்ணா! என்றும் என்னை ஆளுடை
வான நாயகனே மணி மாணிக்கச் சுடரே!
தேனமாம் பொழில் தண் சிரீவரமங்கலத்தவர் கை தொழ உறை
வானமாமலையே அடியேன் தொழ வந்தருளே
வராஹவேஷத்தைக் கொண்டு பூமியை இடந்தெடுத்த செயலால் எனக்கு உபகாரகனாய், கண்ணனாய், எப்பொழுதும் என் இருப்பு அழியாமல் அடிமைகொண்டு, பரமபதத்தில் இருக்கும் ஆனந்தத்தைப்போலே வாசிக கைங்க்கர்யத்தை ஏற்றுக் கொண்ட நாயகனான எம்பெருமானே! உயர்ந்ததான மாணிக்கம்போலே மிகவும் ஒளிபடைத்த தேஜஸ்ஸையுடையவனாய், தேனையுடைய மாஞ்சோலைகளையுடைய குளிர்ச்சியான சிரீவரமங்கலத்திலே உள்ளவர்கள் கைங்கர்யம் செய்யும்படி அங்கே நிரந்தரமாக வாழும், பரம்பதத்திலே இருப்பவர்களுக்கும் அனுபவிக்கும்படி பெரிய மலைபோலே மிகவும் ஸ்திரமான திருமேனியை உடையவனே! அடியவனான நான் தொண்டு செய்யும்படி அந்த நிலையை விட்டு என்னிடத்தில் வந்து அருள வேண்டும்.
ஏழாம் பாசுரம். எல்லாருடைய இருப்புக்கும் காரணமான நீ என்னை உன்னிடத்தில் இருந்து பிரித்து என் இருப்பை அழிக்காமல் இருக்க வேண்டும் என்கிறார்.
வந்தருளி என் நெஞ்சிடம் கொண்ட வானவர் கொழுந்தே! உலகுக்கோர்
முந்தைத் தாய் தந்தையே! முழு ஏழ் உலகும் உண்டாய்
செந்தொழிலவர் வேத வேள்வி அறாச் சிரீவரமங்கல நகர்
அந்தமில் புகழாய்! அடியேனை அகற்றேலே
உன் இருப்பிடங்களை விட்டு இங்கே வந்தருளி, உன் விஷயத்தில் விருப்பமற்றிருந்த என் நெஞ்சை இருப்பிடமாகக் கொண்டு என் இருப்பை நோக்கி பரமபதவாஸிகளின் இருப்பையும் வளர்ப்பவனாய் இவ்வுலகத்திற்கு தனித்துவம் வாய்ந்த முதன்மைத் தாயாய் தந்தையாய் எல்லா உலகங்களையும் அமுதுசெய்து திருவயிற்றில் வைத்து ரக்ஷித்தாய். வேறு எதிர்பார்ப்பு இல்லாத நேர்மையான செயல்களை உடையவர்களுடைய வைதிகமான பகவதாராதனம் மாறாமல் நடக்கும் சிரீவரமங்கலநகரிலே முடிவற்ற குணங்களையுடையவனே! அடியேனை நீ உன் விஷயத்தில் இருந்து அகற்றாமல் இருக்கவேண்டும்.
எட்டாம் பாசுரம். உன்னை விட்டுப் பிரிவதற்குக் காரணமான புலன்கள் நடையாடும் ஸம்ஸாரம் உனக்குக் கீழ்ப் படிந்திருக்க, அதிலே என்னை வைத்தது என்னை அகற்றுவதற்காகவோ என்கிறார்.
அகற்ற நீ வைத்த மாய வல் ஐம் புலன்கள் ஆம் அவை நன்கறிந்தனன்
அகற்றி என்னையும் நீ அருஞ்சேற்றில் வீழ்த்தி கண்டாய்
பகற்க்கதிர் மணி மாட நீடு சிரீவரமங்கை வாணனே! என்றும்
புகற்கரிய எந்தாய் புள்ளின் வாய் பிளந்தானே!
உன்னிடத்தில் ஈடுபாடு இல்லாதவர்களை அகற்றுவதற்காக நீ உண்டாக்கி வைத்தவையாய், ஆச்சர்யத் தன்மையை உடையதாய், வெல்ல அரிதான ஐம்புலன்களை நன்றாக அறிந்தேன். நீ என்னையும் உன்னிடத்தில் இருந்து அகற்றி அரிதான சேற்றிலே தள்ளிவிட்டாய் என்று நினைத்து அஞ்சுகின்றேன். விளங்குகிற ஒளியையுடைய மாணிக்கங்களையுடைய மாடங்கள் ஓங்கி இருக்கும் சிரீவரமங்கைக்குத் தலைவனாய், ஒரு நாளும் உள்ளே புக முடியாத என் ஸ்வாமியாய், பகாஸுரன் வாயைப் பிளந்தவனே! நீ இப்படி சக்தியுடன் இருந்தும் என் விரோதிகளைப் போக்கவில்லையே என்று கருத்து.
ஒன்பதாம் பாசுரம். அடியார்களின் விரோதிகளைப் போக்குவதாலே மிகவும் ஒளிவிடுபவனாக இருக்கும் நீ, நான் உஜ்ஜீவிக்கும்படி க்ருபைபண்ணி அருளவேண்டும் என்கிறார்.
புள்ளின் வாய் பிளந்தாய்! மருதிடை போயினாய்! எருதேழ் அடர்த்த என்
கள்ள மாயவனே! கருமாணிக்கச் சுடரே!
தெள்ளியார் திருநான்மறைகள் வல்லார் மலி தண் சிரீவரமங்கை
உள் இருந்த எந்தாய்! அருளாய் உய்யுமாறெனக்கே
பகாஸுரனை அழித்தவனாய் யமளார்ஜுன மரங்களை வீழ்த்தியவனாய் ஏழு எருதுகளையும் அழிப்பவனாய், இப்படி ஒருவருக்கும் புரியாத ஆழமான விஷயங்களை எனக்குக் காட்டித்தந்த ஆச்சர்யபூதனே! கறுத்த மாணிக்கத்தின் சுடர்போலேயிருக்கிற திருமேனி அழகையுடையவனே! தெளிவை உடையவர்களாய் பகவத் ஸ்வரூபத்தைக் காட்டும் ஸ்ரீயையுடைய நான்கு வேதங்களின் தாத்பர்யங்களும் தாங்களிட்ட வழக்காய் இருப்பவர்கள் மிகுதியாக வாழ்க்கையாலே ஸம்ஸார தாபம் இல்லாதபடி குளிர்ச்சியான சிரீவரமங்கையின் உள்ளே என்னை அனுபவிக்கச் செய்வதற்காக எழுந்தருளியிருந்த உபகாரகனே! எனக்கு உன் திருவடிகளில் தொண்டு செய்து உஜ்ஜீவிக்கும் வழியை க்ருபைபண்ணியருள வேண்டும்.
பத்தாம் பாசுரம். எம்பெருமான் “நம்மைப் பெறுவதற்கு நம் திருவடிகளே உபாயம்” என்று காட்டிக்கொடுக்க, இந்த உபகாரத்துக்கு என்னிடத்தில் ஒரு கைம்மாறு இல்லை என்கிறார்.
ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் உனக்கோர்
கைம்மாறு நான் ஒன்றிலேன் எனதாவியும் உனதே
சேறு கொள் கரும்பும் பெருஞ்செந்நெலும் மலி தண் சிரீவரமங்கை
நாறு பூந்தண்டுழாய் முடியாய்! தெய்வ நாயகனே
எனக்கு உன்னை அடைவதற்கு வழியாக உன் திருவடிகளையே புகலிடமான உபாயமாகக் கொடுத்து விட்டாய். இப்படிப்பட்ட உனக்கு ஓர் கைம்மாறு ஒன்றும் உள்ளவனாக நான் இல்லை. எனது ஆத்மாவும் முன்பே உன்னுடையதாக இருக்கிறது. சேற்று நிலத்திலே இருக்கும் கரும்பும் அதைக்காட்டிலும் பெரிதாக வளரும் செந்நெலும் நெருங்கிக் குளிர்ச்சியாக இருக்கும் சிரீவரமங்கையில் இருப்பவனாய் மிகவும் நறுமணம் வீசும் புதிய, குளிர்ச்சியான திருத்துழாயாலே அலங்கரிக்கப்பட்ட கிரீடத்தையுடையவனாய் நித்யஸூரிகளுக்கு நாயகனாய் இருப்பவனே! இப்படிப்பட்ட உனக்கு நான் கைம்மாறு செய்ய முடியாது என்று கருத்து.
பதினொன்றாம் பாசுரம். இத்திருவாய்மொழியைப் பாடவல்லவர்கள் நித்யஸூரிகளுக்கு மிகவும் இனியவர்களாவார்கள் என்று பலத்தை அருளிச்செய்கிறார்.
தெய்வ நாயகன் நாரணன் திரிவிக்கிரமன் அடி இணை மிசை
கொய் கொள் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன்
செய்த ஆயிரத்துள் இவை தண் சிரீவரமங்கை மேய பத்துடன்
வைகல் பாட வல்லார் வானோர்க்காரவமுதே
நித்யஸூரிகளுக்குத் தலைவனான ஸர்வேச்வரனாய் இயற்கையான தாயன்பையுடைய நாராயணனாய்த் தன் சொத்தை தான் கொள்ளும் த்ரிவிக்ரமன் திருவடிகளிலே, கொய்துகொள்ளும்படி மிகுதியாக இருக்கும் பூக்களையுடைய பொழில்களாலே சூழப்பட்ட திருநகரிக்குத் தலைவரான ஆழ்வார் அருளிச்செய்த ஆயிரம் பாசுரங்களில் குளிர்ச்சியான சிரீவரமங்கையை மேவிய இந்தப் பத்துப் பாசுரங்களையும் அர்த்தத்தோடே உடன்பட்டுப் பாட வல்லவர்கள் பரமபதவாஸிகளுக்கு எப்போதும் ஆராவமுதம்போலே இனிமையாக இருப்பார்கள்.
சிரீவரமங்கலநகரிலே எழுந்தருளியிருக்கும் வானமாமலை எம்பெருமானிடத்தில் வேரற்ற மரம் போலே விழுந்து சரணாகதி செய்தும் அவன் வந்து முகம் காட்டாமல் இருக்க, ஒரு வேளை எம்பெருமான் நம்முடைய சரணாகதியைத் திருக்குடந்தையிலே ஏற்றுக்கொள்வான் போலிருக்கிறது என்று எண்ணித் திருக்குடந்தையில் ஆராவமுதன் எம்பெருமானிடத்தில் தன்னுடைய அநந்யகதித்வத்தைச் (வேறு புகலில்லாமல் இருக்கும் நிலை) சொல்லிச் சரணம் புகுகிறார் ஆழ்வார்.
முதல் பாசுரம். உன்னுடைய இயற்கையான ஸம்பந்தமே காரணமாக உன் அழகையும் இனிமையையும் காட்டிக்கொண்டு, நான் சிதிலமாகும்படி நீ திருக்குடந்தையிலே கண்வளர அதைக் கண்டேன் என்கிறார்.
ஆராவமுதே அடியேன் உடலம் நின்பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே!
சீரார் செந்நெற்கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தை
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே
எனக்கு இயற்கையான தலைவனாய், எத்தனை அனுபவித்தாலும் த்ருப்தி பிறவாத எப்பொழுதும் இனிமையானவனாய், அடியேனுடைய சரீரம் உன் விஷயத்தில் அன்பே வடிவாக நீரைப்போலே உருக்குலைந்து வருத்தத்துடன் கரையும்படி உருகப்பண்ணும் அளவிடமுடியாத இனிமையை உடையவனே! கனத்தாலே விஞ்சின செந்நெற்கதிர்கள் கவரிவீசினாப்போலே இருப்பதாய் அதற்குக் காரணமான ஜல ஸம்ருத்தியை உடைய திருக்குடந்தையிலே அழகு விஞ்சின ஒப்பனை திகழும்படிக் கண்வளர்ந்தருளினாய். என் கண்ணாலே கண்டு அனுபவித்தேன். ஆனால் வேறு பரிமாற்றங்கள் கிடைக்கவில்லை என்று கருத்து.
இரண்டாம் பாசுரம். அடியார்களுக்காகப் பல அவதாரங்களைச் செய்த நீ உன் கண்ணாலே நன்றாகக் கடாக்ஷிக்கவில்லை, நான் என் செய்வேன் என்கிறார்.
எம்மானே என் வெள்ளை மூர்த்தி! என்னை ஆள்வானே!
எம்மா உருவும் வேண்டும் ஆற்றால் ஆவாய் எழிலேறே!
செம்மா கமலம் செழுநீர் மிசைக் கண் மலரும் திருக்குடந்தை
அம்மா மலர்க் கண் வளர்கின்றானே! என் நான் செய்கேனே?
எனக்கு ஸ்வாமியாய், எனக்கு ஸத்வகுணம் பிறக்கும்படி பரிசுத்தமான வடிவை உடையவனாய், எனக்கு அனுபவத்தைக் கொடுப்பவனாய், எல்லா விதங்களிலும் இருக்கும் உயர்ந்த திருமேனிகளை ஆசையால் அங்கீகரித்து இருப்பவனாய், அந்த அந்த விக்ரஹங்களில் இருக்கும் அழகாலே எல்லாருடைய மனங்களையும் கவர்ந்து செருக்கனாயிருக்குமவனாய் இருப்பவனே! சிவந்து பெருத்த தாமரைகள் மிகுதியாக நீரின்மேலே எல்லாவிடங்களிலும் மலரும் திருக்குடந்தையிலே அந்த உயர்ந்ததான தாமரைப்பூப்போலே இருக்கிற திருக்கண்கள் வளரும்படி கிடக்கிறவனே! நான் இப்பொழுது என் செய்வேன்?
மூன்றாம் பாசுரம். கைம்முதல் இல்லாத நான் உன்னைத் தவிர வேறொருவராலும் ரக்ஷிக்கப்பட வேண்டாம். இப்படியாக்கின நீயே எப்பொழுதும் என்னை உன் திருவடிகளிலே அடிமை கொள்ளாப் பார் என்கிறார்.
என் நான் செய்கேன் யாரே களைகண் என்னை என் செய்கின்றாய்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
கன்னார் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய் அடியேன் அருவாணாள்
சென்னாள் எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்தே செலக்காணே
நான் என்னைக் காத்துக்கொள்ள என்ன செயலைச் செய்வேன்? எனக்கு ரக்ஷகர் யார்? என்னை என்ன செய்வதாக இருக்கிறார்? உன்னைத் தவிர வேறு யாராலும் ஒரு குறையும் போக்கப்பட வேண்டியவனாக நான் இல்லை. மிகவும் திண்ணிய மதிள் சூழ்ந்த திருக்குடந்தையிலே சயனித்திருப்பவனே! அடியேனுடைய ஆத்மா உஜ்ஜீவிக்கும் காலம் இருக்கும் நாள் எத்தனை நாளோ அந்த நாளெல்லாம் உன் திருவடிகளை பிடித்துக்கொண்டே நடக்கும்படி பார்த்தருளவேண்டும்.
நான்காம் பாசுரம். அளவற்ற பெருமையையுடைய ஸர்வேச்வரனான உன்னை இந்த அர்ச்சாவதாரத்திலே அனுபவிக்க ஆசைப்பட்டு அது முடியாமல் கலங்கி நிற்கிறேன் என்கிறார்.
செலக் காண்கிற்பார் காணும் அளவும் செல்லும் கீர்த்தியாய்!
உலப்பிலானே! எல்லா உலகும் உடைய ஒரு மூர்த்தி!
நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய் உன்னைக் காண்பான் நான்
அலப்பாய் ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவனே
மேலே போகக் காணவல்ல சக்தியையுடையவர்கள் காணுமளவுக்கும் மேலே போகக்கூடிய குண கீர்த்தியையுடையவனாய் அதற்கு முடிவில்லாமல் இருப்பவனே! எல்லா உலகத்தையும் அடிமையாகவுடைய அத்விதீயமான திருமேனியையுடையவனாய் உன்பக்கல் ஆசை விஞ்சியிருப்பவர்களுடைய திருக்குடந்தையிலே சயனித்திருப்பவனே! உன்னை நான் நினைத்தபடி கண்டு அனுபவிக்கைக்காக அலமந்து ஆகாசத்தை நோக்கி பக்திபரவசரைப்போலே அழுது ப்ரபன்னரைப்போலே தொழுவேன்.
ஐந்தாம் பாசுரம். உன் கண்ணழகிலே ஈடுபட்டுப் பலவிதமான செயல்களைச் செய்யும் நான் உன் திருவடிகளைச் சேரும்படிப் பார்த்தருள வேண்டும் என்கிறார்.
அழுவன் தொழுவன் ஆடிக் காண்பன் பாடி அலற்றுவன்
தழுவல் வினையால் பக்கம் நோக்கி நாணிக் கவிழ்ந்திருப்பன்
செழு ஒண் பழனக் குடந்தைக் கிடந்தாய் செந்தாமரைக் கண்ணா
தொழுவனேனை உன தாள் சேரும் வகையே சூழ் கண்டாய்
அழுவது, தொழுவது, ஆடிப் பார்ப்பது, பாடுவது, அலற்றுவது, என்னைத் தழுவி இருக்கும் காதலாகிற ப்ரபலமான பாபத்தால் அவன் வரக்கூடிய பக்கங்களைப் பார்த்து அங்கு வாராமையாலே வெட்கப்பட்டுத் தலை கவிழ்ந்திருப்பேன். மிகுதியாய் அழகாய் இருக்கும் நீர் நிலங்களையுடைய திருக்குடந்தையிலே சயனித்திருப்பவனாய் சிவந்த தாமரை போன்ற திருக்கண்களையுடையவனே! உன்னைத் தொழுபவனான என்னை உன் திருவடிகளை அடையும்படி ஒரு நல்ல வழியை நீயே பார்க்க வேண்டும்.
ஆறாம் பாசுரம். நித்யஸூரிகளால் வணங்கப்படும் மிகவும் இனிமையை உடையவனான நீ என் விரோதியைப் போக்கி உன் திருவடிகளிலே சேர்த்துக்கொண்டருள வேண்டும் என்கிறார்.
சூழ் கண்டாய் என் தொல்லை வினையை அறுத்து உன் அடி சேரும்
ஊழ் கண்டிருந்தே தூராக் குழி தூர்த்து எனை நாள் அகன்றிருப்பன்
வாழ் தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய் வானோர் கோமானே!
யாழின் இசையே அமுதே அறிவின் பயனே அரியேறே
வாழ்ச்சியாலே இயற்கையான புகழை உடையவர்களுக்காகத்தான் திருக்குடந்தையிலே சயனித்தருளினாய். நித்யஸூரிகளுக்கும் தலைவனாய் யாழின் இசைபோலே, எப்பொழுதும் இனிக்கும் அமுதம்போலே, ஸ்துதிப்பது முதலான செயல்களால் நாக்குக்கு இனியவனாய், மனதுக்கும் இனியவனாய் உயர்ந்த சிங்கத்தைப்போன்ற பெருமையை உடையவனே! உன் திருவடிகளைச் சேர்ந்து அதற்கே ஆட்பட்டிருக்கும் பழமையான நிலையைக் கண்டிருந்தே, நிரப்பமுடியாத ஆசை என்னும் குழியை தூர்த்து எத்தனை நாள் அகன்று இருப்பேன். என் அநாதிகால பாபத்தை அறுத்து உன் திருவடிகளைச் சேரும்படிச் சூழ்ந்தருள வேண்டும்.
ஏழாம் பாசுரம். உன்னுடைய திருமேனி அழகைக்காட்டி என்னை அடிமை கொண்டபின்பு உன் திருவடிகளைத் தந்து என் விரோதியைப் போக்கவேண்டும் என்கிறார்.
அரியேறே என்னம் பொற்சுடரே செங்கட்கருமுகிலே
எரியே பவளக் குன்றே நால் தோள் எந்தாய் உனதருளே
பிரியா அடிமை என்னைக் கொண்டாய் குடந்தைத் திருமாலே
தரியேன் இனி உன் சரணம் தந்து என் சன்மம் களையாயே
கட்டுக்கடங்காத ஸ்வாதந்த்ரியத்தாலே செருக்குடன் இருப்பவனாய் விரும்பத்தக்க பொன்போலேயிருக்கிற திருமேனியில் ஒளியை எனக்கு அனுபவிக்கக் கொடுத்தவனாய் சிறந்த திருக்கண்களையுடையவனாய் முன்பு சொன்ன பொன்னொளிக்கு இருப்பிடமான கறுத்த திருமேனியையுடையவனாய், எதிரிகளுக்கு அக்னிபோலே சிவந்த பவளக்குன்றுபோலே உயர்ந்த திருமேனியையுடையவனாய் நான்கு தோள்களையும் காட்டி என்னை எழுதிக்கொண்ட ஸ்வாமியே! உன்னுடைய க்ருபையை ஒருகாலும் பிரியாதபடி வாசிக கைங்கர்யங்களைக் கொண்டாய். திருக்குடந்தையிலே பிராட்டியுடன் சேவைசாதிப்பவனே! இனி நான் உன் பிரிவைத் தாங்கமாட்டேன். உன் திருவடிகளைத் தந்து என்னுடைய சரீர ஸம்பந்தத்தை போக்கியருள வேண்டும்.
எட்டாம் பாசுரம். விபரீதமான பலமே கிடைத்தாலும் உன்னைத் தவிர வேறொரு ரக்ஷகர் எனக்கு இல்லை. இப்படி வேறு தலைவன் இல்லாத நான் உன் திருவடிகளை விடாதபடி அனுமதி கொடுக்கவேண்டும் என்கிறார்.
களைவாய் துன்பம் களையாதொழிவாய் களைகண் மற்றிலேன்
வளை வாய் நேமிப் படையாய் குடந்தைக் கிடந்த மா மாயா
தளரா உடலம் எனதாவி சரிந்து போம் போது
இளையாதுன தாள் ஒருங்கப்பிடித்துப் போத இசை நீயே
நீ என் துன்பத்தைப் போக்கினாலும் போக்காவிட்டாலும் வேறு ஒரு துன்பத்தைப் போக்கும் புகல் எனக்கு இல்லை. சூழ்ந்த வாயையுடைய திருவாழியை ஆயுதமாகவுடையாய்! திருக்குடந்தையிலே சயனித்திருக்கிற மிகவும் ஆச்சர்யமான அழகை உடையவனே! என் உடல் தளர்ந்து எனது ப்ராணன் நிலைகுலைந்து சரீரத்தைவிட்டு போகும்போது சித்தமானது பலவீனத்தை அடையாமல் உன் திருவடிகளையே உபாயமும் உபேயமுமாக ஒருபடிப்படப் பிடித்து இருக்கும்படி நீயே அனுமதி பண்ணியருள வேண்டும்.
ஒன்பதாம் பாசுரம். எனக்கு அனுமதி தந்து உன் திருவடிகளை காட்டிய நீ, எப்படி உன் சயனத் திருக்கோலத்தின் அழகைக் காண்பித்தாயோ அதைப்போல் நடையழகையும் காட்டவேண்டும் என்கிறார்.
இசைவித்தென்னை உன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே
அசைவில் அமரர் தலைவர் தலைவா ஆதிப் பெருமூர்த்தி!
திசை வில் வீசும் செழு மா மணிகள் சேரும் திருக்குடந்தை
அசைவில் உலகம் பரவக் கிடந்தாய் காண வாராயே
என்னை அடிமைத்தனத்தில் இசையும்படிப் பண்ணி, உன் திருவடிகள் விஷயமான வழி மற்றும் பலனாகிய எண்ணத்துடன் இருத்திய ஸ்வாமியே! பகவதனுபவத்துக்கு ஒரு அசைவும் இல்லாத ஸூரிகளுக்குத் தலைவர்களான அநந்த கருட விஷ்வக்ஸேனர் ஆகியோருக்கும் தலைவனாய், எல்லாவற்றுக்கும் காரணனாய் மிகவும் மேன்மை பொருந்திய திருமேனியை உடையவனே! திக்குக்கள் தோறும் ஒளியை வீசும் அழகிய விலையுயர்ந்த ரத்னங்கள் சேருகிற திருக்குடந்தையில் அலைச்சல் தீர்ந்து உலகம் கொண்டாடும்படி சயனித்திருப்பவனே! நான் காணும்படி வரவேண்டும்.
பத்தாம் பாசுரம். மனதிலே நீ இருந்து ஆனந்தத்தைக் கொடுத்தாலும் வெளியிலே நான் கண்டு அனுபவிக்கமுடியாதபடி இருக்கிற உன்னை, எத்தனை திவ்யதேசங்களிலே தேடித் திரிவது என்கிறார்.
வாரா அருவாய் வருமென் மாயா மாயா மூர்த்தியாய்
ஆரா அமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்
தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய் திருக்குடந்தை
ஊரா உனக்காட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ
கண்ணாலே அனுபவிக்கலாம்படி திருமேனியழகோடு நடந்து வாராமல், உருவமில்லாதவனாய் என் மனதிலே தோன்றி உன் ஆச்சர்ய குணங்களை எனக்குக் காட்டுபவனாய், அழிவில்லாத திருமேனியோடு எத்தனை அனுபவித்தாலும் த்ருப்தி பிறவாத அம்ருதம்போலே இனியவனாய் உனக்கு அடிமையான என் ப்ராணனின் இருப்பிடமான நெஞ்சுக்குள்ளே மிகவும் ஆனந்தத்தை விளைக்கிறாய். தீராத வினைகள் தீரும்படி என்னை வாசிக கைங்கர்யம் கொண்டவனாய், கண்டு அனுபவிக்கும்படி திருக்குடந்தையை தனித்துவம் வாய்ந்த இருப்பிடமாய்க்கொண்டு இருப்பவனே! உனக்கு அடிமைப்பட்டிருந்தும் வேறு கதியில்லாத அடியேன் இன்னும் மேலுண்டான காலத்திலும் நினைத்தபடி அனுபவிக்கமுடியாமல் வருந்துவேனோ?
பதினொன்றாம் பாசுரம். இத்திருவாய்மொழியை நன்றாகக் கற்கவல்லவர்கள் அடியார்களுக்கு விரும்பத்தவர்களாவர்கள் என்கிறார்.
உழலை என்பில் பேய்ச்சி முலையூடு அவளை உயிர் உண்டான்
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன்
குழலின் மலியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்
மழலை தீர வல்லார் காமர் மானேய் நோக்கியர்க்கே
உழலை கோத்தாற்போலே இருக்கிற எலும்புகளையுடைய பேய்ச்சி முலையினுள்ளிருந்த அவளுடைய ப்ராணனை எடுத்த க்ருஷ்ணனுடையவையாய் தமக்கு உபாயமாக முன்பு காட்டிகொடுத்த திருவடிகளையே உபாயமாக புத்திபண்ணிக்கொண்ட, திருநகரிக்குத் தலைவரான ஆழ்வார் குழலிலும் மிகவும் இனிதாக இருக்கும்படி அருளிச்செய்த தனித்துவம் வாய்ந்த ஆயிரம் பாசுரங்களுக்குள் இப்பத்தையும் தங்கள் சிறுபிள்ளைத்தனம் தீர்ந்து சொல்ல வல்லவர்கள் மான்போலிருக்கிற கண்களையுடைய திவ்ய அப்ஸரஸ்ஸுகளுக்கு ப்ரஹ்மாலங்காரம் செய்யும் க்ரமத்தில் விரும்பத்தக்கவர்களாக ஆவார்கள். மான்போன்ற கண்களை உடையவர்களுக்கு காமுகர்கள் எப்படியோ அதைப்போலே ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு இந்த பாசுரங்களைச் சொல்ல வல்லவர்கள் என்று கருத்து.
சரணாகதி செய்யும் காலத்தில் எம்பெருமானுடைய திருக்கல்யாண குணங்களைச் சொல்லிக்கொண்டும் நமக்கு வேறு புகலில்லை என்பதையும் வேறு உபாயங்களில் அந்வயம் இல்லை என்பதையும் சொல்லி பிராட்டி புருஷகாரமாக எம்பெருமான் திருவடிகளை அணுகவேண்டும். இதை ஆழ்வார் இந்தப் பதிகத்தில் திருவேங்கடமுடையான் விஷயத்தில் மிகவும் அழகாகச் செய்து காட்டுகிறார்.
முதல் பாசுரம். எல்லோரையும் ரக்ஷிக்கும் தன்மைகளைக் கொண்டு திருமலையிலே இருக்கும் உன்னை அடிமையான நான் கிட்டும் வழியை அருளிச்செய்ய வேணும் என்கிறார்.
உலகம் உண்ட பெரு வாயா உலப்பில் கீர்த்தி அம்மானே!
நிலவும் சுடர் சூழொளி மூர்த்தி நெடியாய் அடியேன் ஆருயிரே!
திலதம் உலகுக்காய் நின்ற திருவேங்கடத்து எம்பெருமானே!
குல தொல் அடியேன் உன பாதம் கூடுமாறு கூறாயே
ப்ரளய காலத்திலே உலகத்தை அமுதுசெய்தபோது, காப்பதற்கு உபகரணமான பெரிய பாரிப்பையுடைய திருவாயையுடையவனாய் முடிவில்லாத கீர்த்தியை உடைய இயற்கையான ஸ்வாமியே! இயற்கையான அழகு முதலிய குணங்களால் ஜ்வலிக்கும் பூர்ணமாய் ஒளிமயமான திருமேனியையுடையவனாய் அளவற்ற பெருமையுடையவனாய் எனக்கு ப்ராணனானவனே! எல்லா உலகுக்கும் திலகமாய் நின்ற திருமலையிலே எனக்கு உன்னுடைய ஸ்வாமித்வத்தைக் காட்டிக்கொண்டு நின்றவனே! பரம்பரையாகப் பழைய அடியவனான நான் உன் திருவடிகளைச் சேரும் வழியை நீ அருளிச்செய்யவேண்டும்.
இரண்டாம் பாசுரம். எல்லா விரோதிகளையும் போக்கும் ஆய்தங்களையுடைய நீ, உன்னிடத்திலே மிகவும் ஈடுபாடு கொண்டுள்ள நான் உன் திருவடிகளைச் சேரும்படி க்ருபை பண்ணியருள வேண்டும் என்கிறார்.
கூறாய் நீறாய் நிலனாகிக் கொடு வல் அசுரர் குலம் எல்லாம்
சீறா எரியும் திருநேமி வலவா! தெய்வக் கோமானே!
சேறார் சுனைத் தாமரை செந்தீ மலரும் திருவேங்கடத்தானே!
ஆறா அன்பில் அடியேன் உன் அடி சேர் வண்ணம் அருளாயே
க்ரூரராய் மிகவும் வலிமை படைத்த அசுரர்களுடைய கூட்டம் எல்லாம் சிதறி தூளியாம்படித் தரைப்பட்டிருக்கும்போது மேலும் சீறி ஜ்வலிக்கும் வீரஸ்ரீயையுடைய திருவாழியை அடக்கி ஆளவல்லவனாய் நித்யஸூரிகளுக்குத் தலைவனே! சேற்றாலே பூர்ணமான சுனையிலே சிவந்த தாமரையானது சிவந்த தீயைப்போன்ற நிறத்தைக் கொண்டு மலரும்படியிருக்கும் திருமலையிலே வாழ்பவனே! அளவற்ற அன்பை உடையவனான அடியேன் உன் திருவடிகளைச் சேரும்படி க்ருபை பண்ணியருள வேண்டும்.
மூன்றாம் பாசுரம். உன்னுடைய ரூபத்தாலும் குணத்தாலும் இனிமையாலும் மிகவும் உய்ரந்தவிதத்தில் அனுபவிக்கப்படுபவனான நீ, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் திருமலையிலே புகலிடமாய் வந்ததைப்போலே அடியோங்களுக்கு இரங்கி அருளவேண்டும் என்கிறார்.
வண்ணம் அருள் கொள் அணி மேக வண்ணா! மாயவம்மானே!
எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே! இமையோர் அதிபதியே!
தெண்ணல் அருவி மணி பொன் முத்தலைக்கும் திருவேங்கடத்தானே!
அண்ணலே! உன் அடி சேர அடியேற்கு ஆவாவென்னாயே
நிறத்தில் பிச்சேறும்படியான அழகையுடைய மேகம்போன்ற திருமேனியையுடையவனே! ஆச்சர்யமான குணங்களால் எல்லோரையும் விடப் பெரியவனாய் இருப்பவனே! நெஞ்சில் புகுந்து தித்திக்கும் அமுதே! நித்யஸூரிகளுக்கு இந்த அனுபவத்தைக் கொடுக்கும் பெருமையையுடையவனே! தெளிந்த அழகான அருவிகள் மணியையும் பொன்னையும் முத்தையும் அலைக்கும் திருமலையிலே இருப்பவனாய் தனித்துவம் வாய்ந்த தலைவனாய் இருப்பவனே! உன்னுடைய திருவடிகளைச் சேரும்படி அடியோங்களுக்கு ஐயோ! ஐயோ! என்று இரங்கி அருளவேண்டும்.
நான்காம் பாசுரம். உலகத்துக்கு விரோதிகளை அழையச்செய்யும் செல்வத்தையுடைய நீ, உன்னுடைய மிகவும் இனிமையான திருவடிகளை நான் கிட்டும்படி பண்ணியருள வேண்டும் என்கிறார்.
ஆவா! என்னாது உலகத்தை அலைக்கும் அசுரர் வாணாள் மேல்
தீவாய் வாளி மழை பொழிந்த சிலையா! திருமா மகள் கேள்வா
தேவா! சுரர்கள் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே!
பூவார் கழல்கள் அருவினையேன் பொருந்துமாறு புணராயே
உலகத்தை ஐயோ! ஐயோ! என்று இரங்காதே துன்புறுத்தும் அசுரர்கள் ப்ராணன் விஷயமாக அக்னிமுகமான அம்புகளை மழைபோலே பொழிந்த ஸ்ரீ சார்ங்கம் என்னும் வில்லையுடையவனே! வீரபத்னியான லக்ஷ்மிக்கு தகுந்த நாயகனாய் அதனாலே உஜ்ஜ்வலரூபனாய், தேவர்களும், ரிஷிகளும் கூட்டமாக ஆதரிக்கும்படியான திருமலையில் வாழ்பவனே! பூவாலே நிறைந்த உன் திருவடிகளை இழக்கும்படி மிக அரிதான பாபத்தையுடைய நான் உன்னைக் கிட்டும் வழியைச் சொல்லிக் கொடுக்கவேண்டும்.
ஐந்தாம் பாசுரம். அடியார்களைக் காப்பதற்காக அநாயாஸமான செயல்களையுடைய உன் திருவடிகளைச் சேர்வது எந்நாள் என்கிறார்.
புணரா நின்ற மரம் ஏழ் அன்றெய்த ஒரு வில் வலவாவோ!
புணரேய் நின்ற மரம் இரண்டின் நடுவே போன முதல்வாவோ!
திணரார் மேகம் எனக் களிறு சேரும் திருவேங்கடத்தானே!
திணரார் சார்ங்கத்துன பாதம் சேர்வது அடியேன் எந்நாளே?
கூட்டமாக நின்ற ஏழு மராமரங்களையும் ஸுக்ரீவ மஹாராஜருக்கு எம்பெருமான் சக்தியிலே தேவையில்லாத ஸந்தேஹம் வந்த அக்காலத்திலே அவருக்கு நம்பிக்கை பிறக்கும்படியாக எய்த ஒரு வில்லை உடையவனே! பொருந்தி நின்ற இரண்டு மரங்களின் நடுவே போன ஜகத்துக்குக் காரணனானவனே! கதிப்பு விஞ்சின மேகங்கள் என்று சொல்லும்படி யானைகள் சேர்ந்து வாழும் திருமலையிலே வாழ்பவனே! பெருமையையுடைய ஸ்ரீசார்ங்கத்தையுடையவனான உன் திருவடிகளை அடியேன் சேருவது எந்நாள்? ஓ என்று வருத்தத்தின் மிகுதியை ஒவ்வொரு வரியிலும் வெளியிடுகிறார்.
ஆறாம் பாசுரம். மிகுந்த ஞானத்தையுடைய ஸூரிகளும் அடிமை செய்யும் திருமலையிலே உன் திருவடிகளைக்கிட்டி நான் அடிமை செய்வது எந்நாள் என்கிறார்.
எந்நாளே நாம் மண் அளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கென்று
எந்நாளும் நின்று இமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இனம் இனமாய்
மெய்ந்நாமனத்தால் வழிபாடு செய்யும் திருவேங்கடத்தானே!
மெய்ந்நான் எய்தி எந்நாள் உன் அடிக்கண் அடியேன் மேவுவதே?
எல்லா லோகங்களையும் அளந்த திருவடித்தாமரைகள் இரண்டையும் நாம் காண்பதற்கு எந்த நாளை உடையோம் என்று ஸூரிகள் எல்லாக்காலத்திலும் நின்று இப்படிச் சொல்லி துதித்து வணங்கி கூட்டம் கூட்டமாக சரீரம், வாக்கு மற்றும் மனதாலே அடிமை செய்யும்படியான திருவேங்கமுடையானே! உனக்கே ஆட்பட்டவனான நான் உண்மையாகக் கிட்டி, உன் திருவடிகளிலே பொருந்துவது எந்நாள்?
ஏழாம் பாசுரம். எல்லோருக்கும் ஆனந்தத்தைக் கொடுக்கும் உன்னை அனுபவிக்கு எந்த ஸாதனத்தையும் அனுஷ்டிக்காமல் இருந்தும் அனுஷ்டித்துப் பலம் காலம் தாழ்த்திக் கிடைப்பதைப்போலே என்னால் பொறுக்கமுடியவில்லை என்கிறார்.
அடியேன் மேவி அமர்கின்ற அமுதே! இமையோர் அதிபதியே!
கொடியா அடு புள் உடையானே! கோலக் கனி வாய்ப் பெருமானே!
செடியா வினைகள் தீர் மருந்தே! திருவேங்கடத்து எம்பெருமானே!
நொடியார் பொழுதும் உன பாதம் காண நோலாதாற்றேனே
இயற்கையான அடிமைத்தனத்தையுடைய நான், உன்னைக் கிட்டி நிரந்தர அனுபவம் பண்ணும்படியான அமுதமே! நித்யஸூரிகளுக்குத் தலைவனே!
அடியார்களின் விரோதிகளை அழிப்பவனான பெரியதிருவடியைக் கொடியாக உடையவனே! அழகிய கனிந்த பழத்தைப்போன்ற சிவந்த திருவதரத்தை உடையவனே! செடிபோலே செறிந்த பாபங்களை தீர்க்கும் மருந்தே! திருவேங்கடத்தில் இருக்கும் என் ஸ்வாமியே! எந்த நோன்பையும் நோற்காமல் இருந்தும், உன்னை அடையாமல் இருக்கும் ஒரு நொடிப்பொழுதைக்கூட என்னால் தாங்கமுடியவில்லை.
எட்டாம் பாசுரம். தங்களை ஈச்வரர்களாக நினைப்பவர்களும் நன்றாக வணங்கும்படி ஸுலபனாய் நிற்கிற நீ, க்ருஷ்ணனாய் வந்ததைப்போலே என்பக்கல் வரவேண்டும் என்கிறார்.
நோலாதாற்றேன் உன பாதம் காணவென்று நுண்ணுணர்வின்
நீலார் கண்டத்தம்மானும் நிறை நான்முகனும் இந்திரனும்
சேலேய் கண்ணார் பலர் சூழ விரும்பும் திருவேங்கடத்தானே!
மாலாய் மயக்கி அடியேன்பால் வந்தாய் போலே வாராயே
உன் திருவடிகளைக் காண்பதற்கு எந்த ஸாதனத்தையும் அனுஷ்டியாதிருந்தாலும், பொறுக்கமுடியவில்லை என்று சொல்லி எல்லாமறிந்த நுணுக்கமான ஞானமுடைய கறுத்திருக்கும் கழுத்தையுடையவனான ஜகத்துக்குத் தலைவனான ருத்ரனும், அவனுக்கும் தந்தையாய் நிறைந்த ஞாபத்தையுடைய ப்ரஹ்மாவும் மூன்றுலோகங்களுக்குத் தலைவனான இந்த்ரனும், இளம் மீன்களைப்போன்ற கண்களையுடைய பார்வதி, ஸரஸ்வதி, இந்த்ராணி போன்ற பெண்களும் சூழ, ஆசையுடன் வந்து வணங்கும் திருவேங்கடத்தானே! கரிய நிறத்தையுடைய க்ருஷ்ணனாய் எல்லோரையும் மயக்கி வந்தாற்போலே அடியேன்பக்கல் நீ வரவேண்டும்.
ஒன்பதாம் பாசுரம். மிகவும் இனிமையான மற்றும் அழகான உன் திருவடிகளை ஒரு க்ஷணமும் பிரிய மாட்டேன் என்கிறார்.
வந்தாய் போலே வாராதாய் வாராதாய் போல் வருவானே
செந்தாமரைக் கண் செங்கனி வாய் நாற்றோளமுதே எனதுயிரே
சிந்தாமணிகள் பகரல்லைப் பகல் செய் திருவேங்கடத்தானே
அந்தோ அடியேன் உன பாதம் அகலகில்லேன் இறையுமே
உன்னை விரும்பாதவர்கள் விஷயத்தில் வருவதைப்போலே இருந்து வாராமல் இருப்பாய். அடியார்கள் விஷயத்தில் வருவதற்கு வாய்ப்பில்லை என்று நினைத்திருக்கும்போது அவர்கள் ஆசைப்படி அனுபவத்தைக்கொடுக்க வருவாய். சிவந்த தாமரைபோலே அழகாய் இருக்கும் திருக்கண்களையும், சிவந்த கனி போலே இனிமையாய் இருக்கும் திருவதரங்களையும், அடியார்களை எடுத்தணைக்கும் நான்கு திருத்தோள்களையும் உடையவனே! அடியார்களுக்கு அமுதம்போன்று இருக்கும் நிலையை எனக்குக் காட்டிக்கொடுத்து எனக்கு உயிராய் இருப்பவனே! நினைத்ததெல்லாம் கொடுக்கக்கூடிய விலையுயர்ந்த ரத்னங்களினுடைய ஒளியானது இரவைப் பகலாக ஆக்கும் திருமலையில் வாழ்பவனே! ஐயோ! உன் திருவடிகளை அடியேன் சிறிதும் அகல முடியாதவனாக இருக்கிறேன்.
பத்தாம் பாசுரம். புருஷகாரமான பிராட்டியையும், குணங்களையுமுடைய உன் திருவடிகளை வேறுபுகலில்லாதவனாக அடைந்தேன் என்று முறையாக சரணாகதியைப் பண்ணுகிறார்.
அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா!
நிகரில் புகழாய்! உலகம் மூன்றுடையாய்! என்னை ஆள்வானே!
நிகரில் அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே!
புகல் ஒன்றில்லா அடியேன் உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே
“நொடிப்பொழுதும் அகல மாட்டேன்” என்று அலர்மேல்மங்கைத் தாயார் நிரந்தரமாக வாழும் திருமார்பையுடையவனே! ஒப்பில்லாத எல்லையில்லாத வாத்ஸல்யத்தை உடையவனே! மூன்று விதமான சேதனர்கள் மற்றும் அசேதனப் பொருள்களையும் சொத்தாகக் கொண்டிருக்கும் ஸ்வாமித்வத்தை உடையவனே! என்னையும் அடிமைகொள்ளும் ஸௌசீல்யத்தை உடையவனே! ஒப்பில்லாத கைங்கர்ய நிஷ்டரான அமரரும் குணானுபவ நிஷ்டரான முனிவர்களுமான கூட்டங்கள் விரும்பி வாழும் திருமலையிலே இருக்கும் ஸௌலப்யத்தை உடையவனே! வேறு புகல் ஒன்றும் இல்லாத அடியேன் உன்னுடைய திருவடிகளின் கீழே ஸ்திரமாக அமர்ந்துவிட்டேன்.
பதினொன்றாம் பாசுரம். இத்திருவாய்மொழியைப் பற்றியவர்கள் பரமபதத்திலே பெருமையுடன் நிரந்தரமாக விளஙுவார்கள் என்று பலனை அருளிச்செய்கிறார்.
அடிக் கீழ் அமர்ந்து புகுந்து அடியீர்! வாழ்மின் என்றென்றருள் கொடுக்கும்
படிக்கேழ் இல்லாப் பெருமானைப் பழனக் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன ஆயிரத்துத் திருவேங்கடத்துக்கிவை பத்தும்
பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரிய வானுள் நிலாவுவரே
“அடியார்களே! நம்முடைய திருவடிகளின் கீழே ஸ்திரமாகப் புகுந்து நிரந்தரமான அனுபவத்தைப் பண்ணுங்கள்!” என்றென்று தன் க்ருபையைக் கொடுக்கும் நிலைக்கு ஒப்பில்லாத ஸர்வேச்வரனைக் குறித்து, குளிர்ச்சியான நீர்நிலங்களையுடைய திருநகரிக்குத் தலைவரான நம்மாழ்வார் தம்முடைய கார்யங்களை முடித்துக்கொள்வதற்காக அருளிச்செய்த ஆயிரம் பாசுரங்களிலும் வைத்துக்கொண்டு திருமலைக்கு என்று ஏற்பட்ட இந்தப் பத்துப் பாசுரங்களை அர்த்தத்துடன் பிடித்துக்கொண்டவர்கள் மிகவும் பெருமை வாய்ந்த பரமபதத்தில் பெருமையுடன் வீற்றிருந்து நிரந்தர அனுபவத்துடன் வாழ்வார்கள்.
எம்பெருமானைத் துறந்து துயரத்தின் உச்சியை அடைந்த நம்மாழ்வார் தன்னிலை மாறிப் பெண்ணிலையை அடைந்தார். பராங்குச நாயகியாக ஸ்ரீரங்கநாதனிடத்தில் மிகவும் ஈடுபட்டு பேச முடியாத நிலையை அடைந்து, பராங்குச நாயகியின் திருத்தாயாராகத் தன் மகளைக் கொண்டு போய் பெரிய பெருமாள் திருமுன்பே இருக்கும் திருமணத்தூண்களுக்கு நடுவே கிடத்தித் தன் மகளின் அவல நிலையை அவனிடத்தில் முறையிட்டு “இவள் விஷயத்தில் நீ தான் எல்லா ரக்ஷணங்களையும் செய்யவேண்டும்” என்று ப்ரார்த்தித்து நிற்கிறாள்.
முதல் பாசுரம். மிகவும் விரும்பத்தக்கதான தனித்துவம் வாய்ந்த அடையாளங்களைச் சொன்ன இவள் துன்பத்துடன் இருக்கிறாள், இவள் விஷயத்தில் என்ன செய்வதாக நினைத்திருக்கிறீர் என்கிறாள்.
கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் கண்ண நீர் கைகளால் இறைக்கும்
சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும் தாமரைக் கண் என்றே தளரும்
எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு? என்னும் இரு நிலம் கை துழாவிருக்கும்
செங்கயல் பாய் நீர்த் திருவரங்கத்தாய் இவள் திறத்தென் செய்கின்றாயே?
இரவும் பகலும் கண்கள் துயிலவேண்டும் என்ற அறிவும் இல்லாதவள். கண்ணில் பெருகும் நீரை கடல் நீரைக் கையாலே இறைப்பதைபோலே இறைக்கிறாள். எம்பெருமானுடைய சங்கு சக்கரம் என்று சொல்லி கையைக் கூப்புகிறாள். எம்பெருமானுக்குத் தாமரை போன்ற கண் என்று சொல்லித் தளர்கிறாள். உன்னை விட்டு எப்படி வாழ்வேன் என்று சொல்லுகிறாள். பெரிய பூமியை கையாலே துழாவி ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கிறாள். சிவந்த கயல்கள் துள்ளிப் பாயும் நீரையுடைய திருவரங்கத்திலே வாழ்பவனே! இப்படிப்பட்ட மாறுபாடுகளை உடையவள் விஷயத்தில் என்ன செய்யப்போகிறாய்?
இரண்டாம் பாசுரம். நீ எல்லாவிதத்திலும் ரக்ஷகனாயிருக்க, இவளுடைய சரீரம் என்ன ஆகப் போகிறது என்கிறாள்.
என் செய்கின்றாய் என் தாமரைக் கண்ணா என்னும் கண்ணீர் மல்க இருக்கும்
என் செய்கேன் எறி நீர்த் திருவரங்கத்தாய் என்னும் வெவ்வுயிர்த்து உயிர்த்துருகும்
முன் செய்த வினையே முகப்படாய் என்னும் முகில் வண்ணா தகுவதோ என்னும்
முன் செய்திவ்வுலகம் உண்டுமிழ்ந்தளந்தாய் என் கொலோ முடிகின்றது இவட்கே
என்னை உனக்கே ஆக்கிகொண்ட, மிகவும் அழகிய திருக்கண்களை உடையவனே! என்பாள். கண்களில் கண்ணீர் பெருகி எதுவும் செய்ய முடியாமல் இருப்பாள். அலையெறிகிற நீரையுடைய திருவரங்கத்தில் வாழ்பவனே! உன்னை அடைய நான் என்ன செய்ய முடியும் என்பாள். வெப்பமான மூச்சை பலமுறை விட்டு உருகுவாள். நான் முன்பு செய்த பாபத்தினாலேயே நீ என் முன் வாராதிருக்கிறாய் என்று சொல்லுவாள். மேகத்தைபோன்ற உதாரகுணத்தை உடையவனே! நீ செய்வது தகுமோ என்பாள். இந்த லோகத்தை முன் காலத்தில் படைத்து, பிறகு அளந்து கொண்டவனே! என் பெண்பிள்ளைக்கு என்ன ஆகப்போகிறதோ?
மூன்றாம் பாசுரம். அடியார்களின் விரோதிகளைப் போக்கும் பல அவதாரங்களைச் செய்த நீ, இவள் இப்படித் துன்பப்படுவதற்கு என்ன செய்தாய் என்கிறாள்.
வட்கிலள் இறையும் மணிவண்ணா! என்னும் வானமே நோக்கும் மையாக்கும்
உட்குடை அசுரர் உயிர் எல்லாம் உண்ட ஒருவனே! என்னும் உள்ளுருகும்
கட்கிலீ உன்னைக் காணுமாறருளாய் காகுத்தா! கண்ணனே! என்னும்
திட்கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய்! இவள் திறத்தென் செய்திட்டாயே?
சிறிதும் வெட்கம் இல்லாதவளாக இருக்கிறாள். மணியைப்போன்று எளிமையாக இருப்பவனே என்பாள். இதைக் கேட்டு வருகிறானா என்று வானத்தைப் பார்ப்பாள். வாராததாலே மயங்குவாள். வலிமையை உடைய அசுரர்களுடைய உயிர்களை சிறிதும் மிச்சம் வைக்காமல் உண்ட தனித்துவம் வாய்ந்த வீரனே என்பாள். அதை நினைத்து உள்ளம் உருகுவாள். கண்ணுக்குக் காண அரிய நீ உன்னை நான் காணும்படி க்ருபை பண்ண வேண்டும். எல்லோருக்கும் தரிசனம் கொடுத்த ஸ்ரீராமனாயும் க்ருஷ்ணனாயும் அவதரித்தாயே என்பாள். திண்ணியதாய், கொடியையுடைய மதிள் சூழ்ந்த திருவரங்கத்திலே வாழ்பவனே! இவளிப்படித் துன்பத்துடன் இருப்பதற்கு நீ செய்தது என்ன?
நான்காம் பாசுரம். மிகவும் பெருமை பொருந்தியவனாய் இருந்து இவளை துன்பத்துக்கு ஆளாக்கின நீ இவள் விஷயத்தில் என்ன நினைத்திருக்கிறாய் என்கிறாள்.
இட்ட கால் இட்ட கையளாய் இருக்கும் எழுந்துலாய் மயங்கும் கை கூப்பும்
கட்டமே காதல் என்று மூர்ச்சிக்கும் கடல் வண்ணா! கடியை காணென்னும்
வட்ட வாய் நேமி வலங்கையா என்னும் வந்திடாய் என்றென்றே மயங்கும்
சிட்டனே! செழு நீர்த் திருவரங்கத்தாய்! இவள் திறத்தென் சிந்தித்தாயே?
இட்டு வைத்த இடத்தில் இருக்கும்படியான காலையும் கையையும் உடையவளாய் இருப்பாள். அந்த நிலை மாறி எழுந்திருந்து உலாவுவாள். பிறகு மோஹிப்பாள். எம்பெருமான் வருவான் என்று கைகூப்புவாள். வாராததால், இந்தக் காதல் மிகவும் கஷ்டப்படுத்துகிறது என்று வெறுத்து மூர்ச்சை அடைவாள். எல்லாவற்றையும் தன்னுள்ளே வைத்து ரக்ஷிக்கும் கடலைப்போன்றவனே! எனக்கு மிகவும் கடியவனாய் நின்றான் என்பாள். எல்லாப் பக்கங்களிலும் வாயையுடைய திருவாழியை வலக்கையிலே உடையவனே என்பாள். வந்துவிட்டாய் என்று பலமுறை ஆசைப்பட்டுப்பார்த்து அப்படி வாராததாலே மயக்கம் அடைவாள். பேரொழுக்கம் உடையவனைப்போலே அழகிய நீர்க்கரையிலே, திருவரங்கத்திலே சயனித்திருப்பவனே! இவள் விஷயத்தில் என்ன நினைத்திருக்கிறாய்?
ஐந்தாம் பாசுரம். நீ அடியார்கள் விருப்பத்தை நிறைவேற்றும் பவ்யதையை உடையவனாயிருக்க, இவள் ஒவ்வொரு க்ஷணமும் நிலை மாறும் துன்பத்தை உடையவளாக இருக்கிறாள் என்கிறாள்.
சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும் திருவரங்கத்துள்ளாய் என்னும்
வந்திக்கும் ஆங்கே மழைக் கண் நீர் மல்க வந்திடாய் என்றென்றே மயங்கும்
அந்திப் போதவுணன் உடல் இடந்தானே! அலை கடல் கடைந்த ஆரமுதே!
சந்தித்துன் சரணம் சார்வதே வலித்த தையலை மையல் செய்தானே
அந்திப்பொழுதில் அஸுரனான ஹிரண்யனுடைய சரீரத்தைப் பிளந்தவனே! அலையையுடைய கடலைக் கடைந்த மிகவும் இனிமையானவனே! உன் திருவடிகளையே சேர்ந்து அனுபவிக்க வேண்டும் என்ற ஸ்திரமான எண்ணத்தை உடைய இப்பெண்பிள்ளையை மதிகெடுத்தவனே! இவள் முன்பு உன்னுடன் கூடியதை நினைப்பாள். அது இப்போது கிடைக்காததால் அறிவழிவாள். பிறகு தேறி நிற்பாள். கை கூப்புவாள். திருவரங்கத்தில் சயனித்திருப்பவனே என்பாள். தலையாலே வணங்குவாள். அங்கேயே குளிர்ந்த கண்ணீர் பெருகும்படி வந்து என்னைக் கொள்ளாய் என்று பல முறை சொல்லி மயங்குவாள்.
ஆறாம் பாசுரம். அடியார்களை ரக்ஷிக்கத் தேவையான ஆயுதங்களைப் பூர்த்தியாக உடைய நீ, இவள் இப்படி அலற்றும்படிச் செய்துள்ளாய், இந்நிலையில் நான் என்ன செய்வது என்பதை அருளிச்செய்ய வேண்டும் என்கிறாள்.
மையல் செய்து என்னை மனம் கவர்ந்தானே! என்னும் மாமாயனே! என்னும்
செய்யவாய் மணியே! என்னும் தண்புனல் சூழ் திருவரங்கத்துள்ளாய் என்னும்
வெய்ய வாள் தண்டு சங்கு சக்கரம் வில் ஏந்தும் விண்ணோர் முதல்! என்னும்
பைகொள் பாம்பணையாய்! இவள் திறத்தருளாய் பாவியேன் செயற்பாலதுவே
என்னை மையல் கொள்ளும்படி பண்ணி நெஞ்சை அபஹரித்தவனே! என்பாள். எல்லை இல்லாத ஆச்சர்யச் செயல்களை உடையவனே! என்பாள். சிவந்த திருவதரங்களையுடைய மணிபோன்று எளிமையானவனே! என்பாள். குளிர்ந்த நீர் சூழ்ந்த திருவரங்கத்தில் சயனித்திருப்பவனே ! என்பாள். விரோதிகள் விஷயத்தில் வெப்பமே வடிவான ஸ்ரீபஞ்சாயுதங்களையும் எப்பொழுதும் ஏந்தியிருந்து, நித்யஸூரிகளுக்குக் காரணனே! என்பாள். உன்னுடைய ஸ்பர்சத்தாலே விரிகிற பணங்களை உடையவனாய், திருவநந்தாழ்வானைப் படுக்கையாக உடையவனே! இவள் விஷயத்தில், இவளை இப்படி பார்க்க வேண்டிய பாபத்தை உடைய நான் செய்யும் செயலை அருளிச்செய்ய வேண்டும்.
ஏழாம் பாசுரம். அடியார்களைக் காக்க உதவும் திருப்பாற்கடலில் சயனித்திருப்பது ஆகிய குணங்களை உடையவன் தன்மைகளைச் சொல்லி வருந்துகிறாள் என்கிறாளை
பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்! பற்றிலார் பற்ற நின்றானே!
கால சக்கரத்தாய்! கடல் இடம் கொண்ட கடல்வண்ணா! கண்ணனே! என்னும்
சேல் கொள் தண் புனல் சூழ் திருவரங்கத்தாய்! என்னும் என் தீர்த்தனே! என்னும்
கோல மா மழைக் கண் பனி மல்க இருக்கும் என்னுடைக் கோமளக் கொழுந்தே
என்னுடைய மென்மைத்தன்மையை உடைய கொழுந்துபோலே மெலிந்திருக்கும் இவள் “எல்லா இடங்களிலும் எதிரிகளுக்குத் துன்பங்களையும் அடியார்களுக்கு இன்பங்களையும் உண்டாக்கினவனே! வேறு புகல் இல்லாதவர்களான ஜயந்தன் (காகாஸுரன்) முதலியவர்களும் பற்றும்படி நின்றவனே! கால சக்கரத்தை நடத்துபவனே! கடலிலே ஒரு கடல் சாய்ந்தாற்போலே சயனித்திருப்பவனே! கண்ணனே! சேல்களை உடைய குளிர்ந்த நீர் சூழ்ந்த திருவரங்கத்திலே சயனித்திருபவனே!” என்று சொல்லி கண்ணீர் மல்க செயலற்று இருப்பாள்.
எட்டாம் பாசுரம். உன்னுடைய அதிமானுஷ சேஷ்டிதங்களில் ஈடுபட்டு மேன்மேலும் துன்புறுகிற இவளுக்கு நான் என்ன செய்வேன்? என்கிறாள்.
கொழுந்து வானவர்கட்கு! என்னும் குன்றேந்திக் கோநிரை காத்தவன்! என்னும்
அழும் தொழும் ஆவி அனல வெவ்வுயிர்க்கும் அஞ்சன வண்ணனே! என்னும்
எழுந்து மேல் நோக்கி இமைப்பிலள் இருக்கும் எங்ஙனே நோக்குகேன்? என்னும்
செழும் தடம் புனல் சூழ் திருவரங்கத்தாய்! என் செய்கேன் என் திருமகட்கே
நித்யஸூரிகளுக்குத் தலையானவன் என்பாள். கோவர்த்தன மலையை எளிதில் ஏந்திப் பசுக்களைக் காத்தவனே என்பாள். பக்தி பரவசரைப் போலே அழுவாள். ப்ரபன்னரைப் போலே தொழுவாள். ஆத்ம வஸ்து வெந்துபோகும்படி வெப்பமாக மூச்சுவிடுவாள். இப்படி துக்கத்தைக் கொடுத்த கரிய திருமேனியை உடையவனே! என்பாள். மேலே தலையெடுத்துப் பார்த்து கண்ணை இமைக்காமல் இருப்பாள். எப்படி உன்னைக் காண்பேன்? என்பாள். அழகிய பெருத்த நீர் சூழ்ந்த திருவரங்கத்தில் சயனித்திருப்பவனே! லக்ஷ்மியைப்போன்ற என் பெண்பிள்ளைக்கு நான் என்ன செய்வேன்?
ஒன்பதாம் பாசுரம். லக்ஷ்மி, பூமி, நீளா நாயகனான உன் மிகுந்த ப்ரணயித்வத்தில் (காதலில்) அகப்பட்ட இவளுக்கு என்ன முடிவு ஏற்படும் என்பது எனக்குத் தெரியவில்லை என்கிறாள்.
என் திருமகள் சேர் மார்பனே! என்னும் என்னுடை ஆவியே! என்னும்
நின் திருவெயிற்றால் இடந்து நீ கொண்ட நிலமகள் கேள்வனே! என்னும்
அன்றுருவேழும் தழுவி நீ கொண்ட ஆய் மகள் அன்பனே! என்னும்
தென் திருவரங்கம் கோயில் கொண்டானே! தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே
எனக்குத் தலைவியான லக்ஷ்மி விரும்பி உறையும் திருமார்பை உடையவனே! என்பாள். அதனாலே எனக்கு ஆவியாய் இருப்பவனே! என்பாள். உன்னுடைய திருவெயிற்றால் இடந்து எடுத்து நீ கொண்ட ஸ்ரீபூமிப்பிராட்டிக்கு நாயகனே! என்பாள். ருஷபங்களைப் பந்தயமாக வைத்த அன்று, இடிபோலே ஓசை எழுப்பிய ஏழு ருஷபங்களையும் தழுவி, அழித்து, நீ ஏற்றுக்கொண்ட நப்பின்னைப்பிராட்டி விஷயத்தில் அன்புடையவனே! என்பாள். கட்டளைப்பட்ட திருவரங்கத்தை இருப்பிடமாகக் கொண்டவனே! என்பாள். இவளின் துன்பத்துக்கு முடிவு எப்படி ஏற்படும் என்று தெரியவில்லை.
பத்தாம் பாசுரம். எம்பெருமான் பராங்குச நாயகியுடன் கலக்க, அதைக் கண்ட திருத்தாயார் தன் ஆனந்தத்தை வெளியிடுகிறாள்.
முடிவு இவள் தனக்கொன்றறிகிலேன் என்னும் மூவுலகாளியே! என்னும்
கடிகமழ் கொன்றைச் சடையனே! என்னும் நான்முகக் கடவுளே! என்னும்
வடிவுடை வானோர் தலைவனே! என்னும் வண் திருவரங்கனே! என்னும்
அடி அடையாதாள் போல் இவள் அணுகி அடைந்தனள் முகில் வண்ணன் அடியே
இவள் இப்படி இருந்த தன் நிலைக்கு முடிவு ஒன்று தெரியவில்லை என்பாள். மூன்று லோகங்களையும் ஆளும் இந்த்ரனுக்கு அந்தராத்மாவாக நின்று நடத்துபவனே! என்பாள். நறுமணம் மிகுந்த கொன்றை மாலையைச் சூடிய ஜடையயுடைய ருத்ரனுக்கு அந்தராத்மாவாக நின்று நடத்துபவனே! என்பாள். இவர்களுக்கும் தலைவனான ப்ரஹ்மா என்னும் தெய்வத்துக்கும் அந்தராத்மாவாக நின்று நடத்துபவனே! என்பாள். தன்னைப்போன்ற வடிவையுடைய நித்யஸூரிகளுக்குத் தலைவனே! என்பாள். வள்ளல் தன்மையுடன் இருக்கும் திருவரங்கனே! என்பாள். அவன் திருவடிகளை கிட்டமாட்டாதாப்போலிருந்த இவள் காளமேகம் போன்ற திருமேனியையுடையவன் திருவடிகளை கிட்டி அடைந்தாள்.
பதினொன்றாம் பாசுரம். இத்திருவாய்மொழியைக் கற்றவர்கள் பரமபதத்தில் நித்யஸூரிகளுக்கு நடுவே ஆனந்தத்துடன் இருப்பார்கள் என்று பலத்தை அருளிச்செய்கிறார்.
முகில் வண்ணன் அடியை அடைந்தருள் சூடி உய்ந்தவன் மொய் புனல் பொருநல்
துகில் வண்ணத் தூநீர்ச் சேர்ப்பன் வண் பொழில் சூழ் வண் குருகூர்ச் சடகோபன்
முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை ஆயிரத்திப் பத்தும் வல்லார்
முகில் வண்ண வானத்து இமையவர் சூழ இருப்பர் பேரின்ப வெள்ளத்தே
வள்ளல் தன்மையுடைய மேகத்தைப்போன்ற பெரியபெருமாளின் திருவடிகளையே அடைந்து அதுக்கடியான அவருடைய க்ருபையை தலையில்சூடி உஜ்ஜீவித்தவராய் மிகுதியான நீரையுடைய திருப்பொருநல்லின் துகிலின் வண்ணம்போன்ற பரிசுத்தமான நீரையுடைய இடத்துக்கு அருகில் இருக்கும் சிறந்ததான பொழில்களாலே சூழப்பட்ட, செல்வம் மிகுந்த திருநகரிக்குத் தலைவரான ஆழ்வார், காளமேகம்போலே மிகவும் அழகையுடைய பெரியபெருமாள் திருவடிகள் விஷயமாக அருளிச்செய்த ஆயிரம் பாமாலைகளில், இப்பத்தையும் உண்மையான பாவத்துடன் சொல்லவல்லவர்கள் மேகத்தைப்போன்ற நிறத்தையுடைய பரமபதத்தில் நித்யஸூரிகள் சூழ எல்லையில்லாத ஆனந்தக் கடலில் இருப்பார்கள்.
எம்பெருமானைப் பிரிந்து துக்கப்பட்ட ஆழ்வார் இரண்டு பதிகங்களில் பெண் பாவனையில் மிகவும் வருத்தத்துடன் பாசுரங்களை அருளிச்செய்தார். ஆழ்வாரை தேற்றவேண்டும் என்று பார்த்த எம்பெருமான் தன்னுடைய வெற்றிச் சரித்ரங்களை எல்லாம் ஆழ்வாருக்கு நன்றாகக் காட்டிக்கொடுக்க அவற்றை மிகவும் ஈடுபட்டு அனுபவித்த ஆழ்வார் அதை மற்றவர்களும் அனுபவிக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தாலே ஆழியெழ என்று தொடங்கி இப்பதிகத்தில் அருளிச்செய்கிறார்.
முதல் பாசுரம். எம்பெருமான் திருவுலகளந்தருளின விதத்தை நினைத்துப் பார்த்து ஆனந்தப்படுகிறார் ஆழ்வார்.
ஆழி எழச் சங்கும் வில்லும் எழத் திசை
வாழி எழத் தண்டும் வாளும் எழ அண்டம்
மோழை எழ முடி பாதம் எழ அப்பன்
ஊழி எழ உலகம் கொண்டவாறே
ஆயுதங்களில் முக்யமானவனான திருவாழியாழ்வான் முன்னே உயர்ந்து தோன்றவும், உடனே ஸ்ரீபாஞ்சஜந்யமும் ஸ்ரீசார்ங்கமும் தோன்றவும், கதையும் வாளும் தோன்றவும், இந்த ஆயுத பூர்த்தியைக் கண்டு திசைதோறும் நின்றவர்கள் பெருத்த கோஷத்துடன் மங்களாசாஸனம் செய்ய, எம்பெருமான் வேகமாக வளர, அண்டகபாலம் பிளந்து அது வழியாக ஆவரண ஜலம் நீர்க்குமிழியாகக் கிளம்பும்படி திருமுடியும் திருவடியும் உயரக்கிளம்பும்படி, நல்லகாலமும் தோன்றும்படி ஸர்வேச்வரன் உலகத்தை அளந்து கொண்ட விதம் இருந்தபடியே!
இரண்டாம் பாசுரம். எம்பெருமான் அம்ருதத்தைக் கடைந்தெடுத்த சரித்ரத்தை நினைத்துப்பார்த்து ஆனந்தம் அடைகிறார் ஆழ்வார்.
ஆறு மலைக்கு எதிர்ந்தோடும் ஒலி அர
வூறுசுலாய் மலை தேய்க்கும் ஒலி கடல்
மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி அப்பன்
சாறு பட அமுதம் கொண்ட நான்றே
பெரிய உபகாரகனான ஸர்வேச்வரன் தேவர்களுக்கு மஹோத்ஸவம் உண்டாம்படி அம்ருதத்தைக் கொண்ட நாளன்று, கடலைக் கடைந்த வேகத்தில் ஆறுகள் தங்கள் பிறப்பிடமான மலையை நோக்கி எதிர்ப்பக்கம் ஓடுகிற ஒலியும், வாசுகி என்கிற பாம்பின் உடம்பைச் சுற்றி மந்தர மலையிலே தேய்க்கும் ஒலியும் கடல் இடம் வலமாக மாறிச் சுழன்று அழைக்கின்ற ஒலியும் கேட்டன.
மூன்றாம் பாசுரம். எம்பெருமான் பூமியை இடந்தெடுத்த சரித்ரத்தை நினைத்துப்பார்த்து ஆனந்தம் அடைகிறார் ஆழ்வார்.
நான்றில ஏழ் மண்ணும் தானத்தவே பின்னும்
நான்றில ஏழ் மலை தானத்தவே பின்னும்
நான்றில ஏழ் கடல் தானத்தவே அப்பன்
ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே
பெரிய உபகாரகனான எம்பெருமான் பூமியை அண்ட கபாலத்தில் இருந்த ஒட்டு விடும்படிக் குத்தி இடந்து, எயிற்றில் கொண்ட காலத்தில் ஏழு தீவுகளைக் கொண்ட பூமியும் நழுவாமல் தங்கள் இடத்தில் இருந்தன. மேலும் பூமியைத் தாங்கி நிற்கும் ஏழு மலைகளும் அசையாமல் தங்கள் இடத்தில் இருந்தன. மேலும், ஏழ கடல்களும் உடைந்தொழுகாமல் தங்கள் இடத்தில் இருந்தன.
நான்காம் பாசுரம். எம்பெருமான் ஜகத்தை ஸம்ஹரித்துத் தன் வயிற்றில் வைத்து ரக்ஷிப்பதை நினைத்து ஆனந்தம் அடைகிறார்.
நாளும் எழ நில நீரும் எழ விண்ணும்
கோளும் எழ எரி காலும் எழ மலை
தானும் எழச் சுடர் தானும் எழ அப்பன்
ஊளி எழ உலகம் உண்ட ஊணே
பகல் இரவு போன்ற மாறுபாடுகள் குலையும்படியும் நிலம், நீர் ஆகியவைகள் நிலைகுலைந்துபோகும்படியும், ஆகாசமும், க்ரஹங்களும் நிலைகுலைந்துபோகும்படியும், மலைகள் அடிவாரத்துடன் தூக்கப்படும்படியும், நக்ஷத்ரம் முதலிய ஒளி படைத்த பதார்த்தங்களும் குலையவும், ப்ரளய ஆபத்திலே காக்கும் எம்பெருமானின் பெரிய உபகாரங்கள் “பசித்துண்டான்” என்று சொல்லும்படி இந்த உலகத்தை உண்டது இருந்தபடியே!
ஐந்தாம் பாசுரம். எம்பெருமான் மஹாபாரத யுத்தத்தை நடத்தியதை நினைத்துப் பார்க்கிறார்.
ஊணுடை மல்லர் ததர்ந்த ஒலி மன்னர்
ஆணுடைச் சேனை நடுங்கும் ஒலி விண்ணுள்
ஏணுடைத் தேவர் வெளிப்பட்ட ஒலி அப்பன்
காணுடைப் பாரதம் கையறை போழ்தே
அடியார்களிடத்தில் பக்ஷபாதியான கண்ணன் அழகிய மஹாபாரத யுத்தத்தை கைதட்டி ஏற்பாடு செய்த போது வலிமை வாய்ந்த உடலை உடைய மல்லர்கள் நெரிந்துவிழுகிற ஓசையும், ராஜாக்களுடைய வீர புருஷர்களை உடைய சேனைகள் நடுங்கும் ஓசையும், ஆகாசத்திலே தங்களுக்குரிய பெருமைகளை உடைய தேவர்கள் யுத்தத்தைப் பார்க்க வந்து கொண்டாடுகிற ஓசையும் கேட்டது.
ஆறாம் பாசுரம். எம்பெருமான் ஹிரண்யனை அழித்ததை நினைத்துப் பார்க்கிறார்.
போழ்து மெலிந்த புன் செக்கரில் வான் திசை
சூழும் எழுந்து உதிரப் புனலா மலை
கீழ்து பிளந்த சிங்கம் ஒத்ததால் அப்பன்
ஆழ் துயர் செய்து அசுரரைக் கொல்லுமாறே
நாள் கழியும் வேளையில் இளம் செக்கர்போலே ஆகாசமும் திசைகளும் சூழ எழுந்து ரத்த நீராகும்படி அடியார்களுக்கு உதவுபவனான நரஸிம்ஹன் எம்பெருமான் பெரிய துக்கத்தை விளைத்து அஸுரனான ஹிரண்யனைக் கொல்லும் விதம் மலை கிழியும்படி பிளந்த சிங்கத்தை ஒத்திருந்தது.
ஏழாம் பாசுரம். எம்பெருமான் இலங்கையை அழித்ததை நினைத்துப் பார்க்கிறார்.
மாறு நிரைத்து இரைக்கும் சரங்கள் இன
நூறு பிணம் மலை போல் புரள கடல்
ஆறு மடுத்து உதிரப் புனலா அப்பன்
நீறு பட இலங்கை செற்ற நேரே
எதிரெதிராக ஓசை செய்யும் அம்புகளாலே கூட்டம் கூட்டமாக நூறு நூறாய் ராக்ஷஸப் பிணங்கள் மலைபோலே புரண்டு வீழ ஆறுகளை உட்கொண்ட கடலைப்போலே ரத்தம் பெருக, அடியார்களுக்கு உதவி செய்யும் சக்ரவர்த்தித் திருமகன் இலங்கையை பஸ்மமாகும்படி யுத்தம் செய்த நேர்மை இருந்தபடி.
எட்டாம் பாசுரம். பாணாஸுர யுத்தம் நடந்த விதத்தை நினைத்துப் பார்க்கிறார்.
நேர் சரிந்தான் கொடிக் கோழி கொண்டான் பின்னும்
நேர் சரிந்தான் எரியும் அனலோன் பின்னும்
நேர் சரிந்தான் முக்கண் மூர்த்தி கண்டீர் அப்பன்
நேர் சரி வாணன் திண் தோள் கொண்ட அன்றே
தன் பேரனான அநிருத்தனுக்கு உதவிய கண்ணன் எம்பெருமான், ருத்ரன் முதலியவர்களை நம்பி வந்த பாணனுடைய திடமான தோள்களை அறுத்து வெற்றி கொண்ட அன்று , மயிலைக் கொடியாக உடைய ஸுப்ரஹ்மண்யன் எதிரே நிற்க முடியாமல் சாய்ந்துபோனான். மேலும் ருத்ரனோ என்று ப்ரமிக்கும்படியான க்ரௌர்யத்தையுடைய அக்னியும் எதிர் நில்லாமல் சரிந்தான். மேலும் மூன்று கண்களை உடையவனாகையாலே சக்தி மிகுந்தவனான ருத்ரனும் புறமுதுகிட்டுப் போனான். இதை நீங்கள் எல்லோரும் பார்த்தீர்களே!
ஒன்பதாம் பாசுரம். எம்பெருமான் ஜகத்தை ஸ்ருஷ்டிக்கும் விதத்தை நினைத்துப் பார்க்கிறார்.
அன்று மண் நீர் எரி கால் விண் மலை முதல்
அன்று சுடர் இரண்டு பிறவும் பின்னும்
அன்று மழை உயிர் தேவும் மற்றும் அப்பன்
அன்று முதல் உலகம் செய்ததுமே
உலகத்தைப் படைத்த பெரிய உபகாரகன் முதலில் உலகத்தை உண்டாக்கியதும் அக்காலத்திலே அதுக்குக் காரணமான பஞ்சபூதங்களையும், உலகில் இருக்கும் மலை முதலிய பொருள்களையும் உண்டாக்கியதும், அக்காலத்தில் சந்த்ரன் ஸூர்யன் ஆகிய இருவரையும் மற்ற ஒளி விடும் பொருள்களையும் உண்டாக்கியதும், அக்காலத்திலே, அதுக்குமேலே மழையையும், மழையை நம்பி இருக்கும் ப்ராணிகளையும், மழையைக் கொடுக்கும் தேவர்களையும், மற்ற ப்ராணிகளையும் உண்டாக்கியதும் எல்லாம் ஒரே ஸமயத்தில் நடந்தன.
பத்தாம் பாசுரம். எம்பெருமான் கோவர்த்தன மலையைத் தூக்கியதை நினைத்துப் பார்த்து அனுபவிக்கிறார்.
மேய் நிரை கீழ் புக மா புரளச் சுனை
வாய் நிறை நீர் பிளிறிச் சொறிய இன
ஆநிரை பாடி அங்கே ஒடுங்க அப்பன்
தீ மழை காத்துக் குன்றம் எடுத்தானே
மேய்கிற பசுக்களானவை கீழே ஒதுங்கும்படியும் கீழ் மேலாக மலையை எடுத்ததால் மலையில் வாழும் யானை முதலிய மிருகங்கள் புரண்டு விழும்படியும் சுனைகளின் வாய்வரை நிறைந்த நீரானது பெரிய கோஷத்தோடு சொரியும்படியும் தன் இனமான ஆயர்களையும் தன் பசுக்களையுமுடைய திருவாய்ப்பாடி முழுவதும் அங்கே ஒடுங்கும்படியும் ஆபத்தைப் போக்குபவனான கண்ணன் தீய மழையைத் தடுக்க கோவர்த்தனம் என்கிற மலையை எடுத்தான்.
பதினொன்றாம் பாசுரம். இத்திருவாய்மொழியைக் கற்றவர்களுக்கு இது எல்லாவிதத்திலும் வெற்றியைக்கொடுக்கும் என்று பலத்தை அருளிச்செய்கிறார்.
குன்றம் எடுத்த பிரான் அடியாரொடும்
ஒன்றி நின்ற சடகோபன் உரை செயல்
நன்றி புனைந்த ஓர் ஆயிரத்துள் இவை
வென்றி தரும் பத்தும் மேவிக் கற்பார்க்கே
கோவர்த்தனத்தைத் தூக்கிய மஹோபகாரனான கண்ணனுக்கு அடியார்களான பாகவதர்களோடே ஒன்றாகக்கூடி நின்ற ஆழ்வாருடைய ஆயிரம் பாசுரங்களுக்குள் ஸர்வேச்வரனுடைய வெற்றிச்சரித்ரங்களைக் காட்டும் நன்மையை உடைய இந்த பதிகத்தை அர்த்தத்துடன் கற்பவர்களுக்கு எல்லாவிதமான வெற்றியையும் இது தரும்.
ஆத்மாவினுடைய உண்மையான ஸ்வரூபத்துக்கு ஏற்ற வ்ருத்தி (செயல்) அடியார்களுக்குத் தொண்டு செய்வதே என்ற விஷயத்தை ஆழ்வார் இந்தப் பதிகத்தில் தானும் அனுபவித்து மற்றவர்களுக்கும் உபதேசமாக அருளிச்செய்கிறார். பகவானுக்குத் தொண்டு செய்வது முதல் நிலை. அவன் அடியார்களுக்குத் தொண்டு செய்வது என்பது இறுதி நிலை என்ற விஷயத்தை ஆழ்வார் இப்பதிகத்தில் தெளிவாகக் காட்டியுள்ளார்.
முதல் பாசுரம். அடியார்களிடத்தில் அன்புகொண்டவனான ஸர்வேச்வரனுக்கு அடியார்களான பாகவத விஷயமான சேஷத்வத்துக்கு மூன்று லோக ஐச்வர்யம் ஒப்பன்று என்கிறார்.
நெடுமாற்கடிமை செய்வேன் போல் அவனைக் கருத வஞ்சித்து
தடுமாற்றற்ற தீக்கதிகள் முற்றும் தவிர்ந்த சதிர் நினைந்தால்
கொடு மா வினையேன் அவன் அடியார் அடியே கூடும் இதுவல்லால்
விடுமாறென்பதென்? அந்தோ! வியன் மூவுலகு பெறினுமே
எல்லையில்லாத ஆசையை உடைய ஸர்வேச்வரனுக்கு அடிமைசெய்பவன்போல அவனை மனதிலே நினைத்த நிலையில், என்னுடைய தடுமாற்றம் போகும்படியும், என்னிடத்தில் இருக்கும் பொல்லாவழிகள் எல்லாம் வஞ்சித்து என்னை விட்டுப்போயின. இனி, தகுந்தது எது என்று பார்த்தால் அவனுக்கு அடியவர்களான பாகவதர்களுடைய திருவடிகளையே அடைவதைத் தவிர பரந்த மூன்று உலகங்களின் செல்வத்தையும் பெற்றாலும் கொடிய, பெரிய பாபத்தை உடைய நான் அந்த அடியவர்களுக்கு அடிமையாக இருப்பதை விடுவது என்று சொல்லவும் கூடுமோ? ஐயோ!
இரண்டாம் பாசுரம். மழைமேகம்போலே அடியார்கள் விஷயத்தில் வள்ளல்தன்மையுடைய ஸர்வேச்வரன் திருவடிகளிலே அடிமை செய்கிற பாகவதர்களுக்கு ஐச்வர்யோத்தோடு கூடின ஆத்மானுபவமும் ஒப்பன்று என்கிறார்.
வியன் மூவுலகு பெறினும் போய்த் தானே தானே ஆனாலும்
புயல் மேகம் போல் திருமேனி அம்மான் புனை பூங்கழல் அடிக் கீழ்
சயமே அடிமை தலை நின்றார் திருத்தாள் வணங்கி இம்மையே
பயனே இன்பம் யான் பெற்றது உறுமோ பாவியேனுக்கே?
பெரியதான மூவுலக ஐச்வர்யத்தைப் பெற்றாலும், இதில் ஈடுபாடில்லாமல் தன்னைத் தானே அனுபவிக்கப் பெற்றாலும், மழைமேகம்போலே திருமேனியையுடைய ஸர்வேச்வரனுடைய புனையப்பட்ட புஷ்பங்களையும் வீரக்கழலையுமுடைய திருவடிகளின்கீழே ஸ்வயம்ப்ரயோஜனமாய் இருக்கிற தொண்டின் உயர்ந்த நிலையில் இருப்பவர்களுடைய உயர்ந்ததான திருவடிகளை வணங்கி இந்த லோகத்திலேயே பலனாக நான் பெற்றதான ஆனந்தத்துக்கு இப்படி வித்யாசத்தைச் சொல்ல வேண்டும்படி பாபத்தைப்பண்ணின எனக்கு அந்த ஐச்வர்ய கைவல்யங்கள் சேருமோ?
மூன்றாம் பாசுரம். எல்லோருடனும் கூடும் தன்மையை உடைய வாமனன் திருவடி பெறுகையும், அவனடியார்களான பாகவதர்கள் இங்கே இருக்கிற இதைவிட உயர்ந்ததல்ல என்கிறார்.
உறுமோ பாவியேனுக்கு இவ்வுலகம் மூன்றும் உடன் நிறைய
சிறு மா மேனி நிமிர்த்த என் செந்தாமரைக் கண் திருக்குறளன்
நறு மா விரை நாண்மலர் அடிக் கீழ்ப் புகுதல் அன்றி அவன் அடியார்
சிறு மா மனிசராய் என்னை ஆண்டார் இங்கே திரியவே
மூன்று லோகங்களும் ஒரே செயலிலே நிறையும்படி சிறிய ஆனால் அழகிய மற்றும் பெருமை வாய்ந்த திருமேனியை வளரும்படி பண்ணினவனாய் எனக்கு மிகவும் இனிமையாய், சிவந்த தாமரை போலே இருக்கிற திருக்கண்களையுடைய ஸ்ரீவாமனனுடைய நறுமணம் வீசும் சிறந்ததான தேனையுடைய செவ்விப்பூவைப்போலே இருக்கிற திருவடிகளின்கீழே சென்றடைவது, அந்த எம்பெருமானுக்கு அடியவர்களான மனுஷ்யராக இருக்கும் சிறுமையும் மஹாபுருஷர்களாய் இருக்கும் மேன்மையையும் உடையவராய் என்னை அடிமைகொண்டவர்கள் இந்த லோகத்திலே நம் கண்வட்டத்திலே இருக்க அதைத் தவிர, இப்படி அவனுக்கடிமையாக இருப்பதற்கும் அவனடியார்களுக்கு அடிமையாக இருப்பதற்கும் வித்யாசம் சொல்ல வேண்டும்படியான பாபத்தையுடைய எனக்குச் சீரியதோ? அடியார்களுக்கு அடிமையாக இருப்பதே சிறந்தது என்று கருத்து.
நான்காம் பாசுரம். அடியார்கள் இருக்கும் இவ்வுலகில் அவர்களுக்கு உகப்பாகும்படி ஆபத்தில் ரக்ஷிக்கும் எம்பெருமானுடைய கைங்கர்யமும் கிடைத்தால் குறையில்லை என்கிறார்.
இங்கே திரிந்தேற்கிழுக்குற்றென்? இரு மா நிலம் முன் உண்டுமிழ்ந்த
செங்கோலத்த பவள வாய்ச் செந்தாமரைக் கண் என் அம்மான்
பொங்கேழ் புகழ்கள் வாயவாய்ப் புலன் கொள் வடிவென் மனத்ததாய்
அங்கேய் மலர்கள் கையவாய் வழிபட்டோட அருளிலே
பரந்ததான சிறந்ததான ஜகத்தை ப்ரளயாபத்து வந்த காலத்திலே அமுதுசெய்து பின்பு உமிழும்போது சிவந்த அழகிய பவளம்போலே இருக்கிற திருவதரத்தையும், சிவந்த தாமரைபோன்ற கண்ணையும் உடையவன் என் ஸ்வாமி. வளர்ந்து கிளம்புகிற தன் குணங்கள் வாக்குக்கு விஷயமாகவும் நம் புலன்களைக் கவரும் திருமேனி என் மனத்திலேயாகவும் அந்த எம்பெருமானுக்குத் தகுந்ததான மலர்களை கையிலே கொள்ளவும் அடியார்களின் வழியிலே நானும் உடன்பட்டு இங்கே நடக்கும்படி அருளுமாகில் இங்கே திரியும் எனக்கு என்ன தாழ்ச்சி ஏற்படும்? தாழ்ச்சி ஏற்படாது என்று கருத்து.
ஐந்தாம் பாசுரம். பரமபதத்திலே ஆனந்தத்துடன் இருந்தாலும் அத்துடன் இவ்வுலகத்து செல்வங்களும் கூடினாலும், இங்கே ஒரு சரீரத்தில் இருந்து கொண்டு அடியார்களுக்கு உகப்பாகத் திருவாய்மொழி பாடி அனுபவிப்பதற்கு ஒப்பாகுமா என்கிறார்.
வழிபட்டோட அருள் பெற்று மாயன் கோல மலர் அடிக் கீழ்
சுழிபட்டோடும் சுடர்ச் சோதி வெள்ளத்து இன்புற்றிருந்தாலும்
இழிபட்டோடும் உடலினில் பிறந்து தன் சீர் யான் கற்று
மொழிபட்டோடும் கவி அமுதம் நுகர்ச்சி உறுமோ? முழுதுமே
நித்யகைங்கர்யத்திலே நெறிபட்டுச் செல்லும்படி அவன் அருளைப் பெற்று ஆச்சர்ய குண சேஷ்டிதங்களை உடைய ஸர்வேச்வரனுடைய மிகவும் இனிமையான திருவடிகளின்கீழே சுழித்து ஓடுகிற ப்ரபையை உடைய ஒளிக்கற்றையைப்போன்ற பரமபதத்திலே மிகவும் ஆனந்தத்துடன் இருந்தாலும் கீழே சொன்ன ஐச்வர்ய கைவல்யங்கள் கிடைத்தாலும், மிகவும் தாழ்ந்த சரீரத்திலே பிறந்து அவனுடைய குணங்களை யான் கற்று சொல்லாய்ப் பெருகும் கவியாகிற அமுதமான திருவாய்மொழியை அடியார்களுடன் கூடியிருந்து அனுபவித்து ரஸிக்கைக்குச் சேருமோ?
ஆறாம் பாசுரம். விரோதிகளைப் போக்கும் ஸர்வேச்வரனின் குணகணங்களை அடியார்களுக்கு இன்பம் கொடுக்கும்படித் திருவாய்மொழி மூலம் அனுபவிக்குமதுக்கு ஜகத்காரண பூதனான ஈச்வரனாயிருக்கும் இருப்புத்தான் ஒப்பாகுமோ? என்கிறார்.
நுகர்ச்சி உறுமோ? மூவுலகின் வீடு பேறு தன் கேழில்
புகர்ச் செம் முகத்த களிறட்ட பொன் ஆழிக் கை என் அம்மான்
நிகர்ச் செம்பங்கி எரி விழிகள் நீண்ட அசுரர் உயிர் எல்லாம்
தகர்த்துண்டு உழலும் புட்பாகன் பெரிய தனி மாப் புகழே
தனக்கு ஒப்பில்லாத, ஒளியையுடைய சீற்றத்தாலே சிவந்த முகத்தையுடைய ஆனையை அழித்த, விரும்பத்தக்க திருவாழிமோதிரத்தை அணிந்த திருக்கையை உடையவன் என் ஸ்வாமி. ஜாதிக்கு ஏற்ற சிவந்த மயிர்களையும் அக்னிசக்ரம் போலே இருக்கிற விழிகளையும் உடைய உயரமான சரீரத்தையுடைய அஸுரர்களுடைய ப்ராணன்களையெல்லாம் தகர்த்து உண்டு திரியும் பெரிய திருவடியை ஆளக்கூடியவனுடைய பெரிய தனித்துவம் வாய்ந்த மிகவும் இனிமையான குணகணங்களை அடியார்களுக்கு விருப்பமான திருவாய்மொழி மூலம் அனுபவித்து ரஸிப்பதை மூன்று உலகங்களின் விஷயமான உருவாக்கும் சக்தியைப் பெற்றிருக்கும் ஈச்வரனாக இருக்கும் தன்மை கிட்டமுடியுமோ?
ஏழாம் பாசுரம். எல்லா உலகுக்கும் காரணனான ஸர்வேச்வரன் திருவடிகளை அடைவதைவிட அவனுக்கு அடியார்களான பாகவதர்களுடைய சேர்த்தியே நமக்கு என்றும் வேண்டும் என்கிறார்.
தனி மாப் புகழே எஞ்ஞான்றும் நிற்கும்படியாத்தான் தோன்றி
முனி மாப் பிரம முதல் வித்தாய் உலகமூன்றும் முளைப்பித்த
தனிமாத் தெய்வத் தளிர் அடிக் கீழ்ப் புகுதல் அன்றி அவன் அடியார்
நனி மாக் கலவி இன்பமே நாளும் வாய்க்க நங்கட்கே
தனித்துவமாய் மிகவும் உயர்ந்ததான புகழை எல்லாக்காலமும் நிற்கும்படித் தானே ஸ்ருஷ்டியில் ஈடுபட்டு, ஸ்ருஷ்டியைப் பற்றிச் சிந்திப்பதாய், ப்ரஹ்மம் என்ற வார்த்தையால் சொல்லப்படும், ப்ரதானமாய் உள்ள உபாதான காரணமான மூன்று உலகங்களையும் படைத்த, தனித்துவம் வாய்ந்த பரதேவதையின் ஸுகுமாரமான திருவடிகளின்கீழே சேருவதைவிட அவன் அடியார்களின் மிகவும் சிறந்ததான சேர்த்தியின் இன்பமே நமக்கு எப்பொழுதும் வாய்க்க வேண்டும்.
எட்டாம் பாசுரம். தனிக்கடலில் சயனித்திருக்கும் ஸர்வேச்வரனுடைய அடியார்களோடு உண்டான சேர்த்தியே நமக்கு எப்பொழுதும் வேண்டும் என்கிறார்.
நாளும் வாய்க்க நங்கட்கு நளிர் நீர்க் கடலைப் படைத்துத் தன்
தாளும் தோளும் முடிகளும் சமனிலாத பல பரப்பி
நீளும் படர் பூங்கற்பகக் காவும் நிறை பன்னாயிற்றின்
கோளும் உடைய மணிமலைபோல் கிடந்தான் தமர்கள் கூட்டமே
குளிர்ந்த ஜலத்தையுடைய கடலைப் படைத்து தனக்கென்று இருப்பதாய் வேதத்தில் காட்டப்பட்ட ஒப்பில்லாத திருவடிகளையும் திருத்தோள்களையும் திருமுடிகளையும் (கிரீடம்) பலவாகப் பரப்பி, நீள்கின்ற, பணைத்து அழகான கற்பகச்சோலையையும் நிறைந்த பலவான ஆதித்ய தேஜஸ்ஸையும் உடைய மாணிக்கமலைபோலே சயனித்திருப்பவனின் அடியார்களோடு ஏற்பட்ட சேர்த்தியானது நமக்கு எப்பொழுதும் கிடைக்க வேண்டும்.
ஒன்பதாம் பாசுரம். எதிரிகளைப் போக்க உதவும் திவ்யாயுதங்களை உடைய ஸர்வேச்வரனுக்கு அடியார்களான பாகவதர்களுடன் தொடர்புடையவர்களுக்கு அடியவராகிற உறுதிப்பாடு நமக்கு உண்டாகவேண்டும் என்கிறார்.
தமர்கள் கூட்ட வல் வினையை நாசம் செய்யும் சதிர் மூர்த்தி
அமர்கொள் ஆழி சங்கு வாள் வில் தண்டாதி பல் படையன்
குமரன் கோல ஐங்கணை வேள் தாதை கோதில் அடியார் தம்
தமர்கள் தமர்கள் தமர்களாம் சதிரே வாய்க்க தமியேற்கே
அடியார்களுடைய கூட்டத்துக்கு வரும் வலிய பாபங்களுடைய விநாசத்தைச் செய்யும் ஸாமர்த்யத்தை உடைய ஸ்வாமியாய், யுத்தத்துக்குத் தயாராய் இருக்கும் ஸ்ரீபஞ்சாயுதங்கள் தொடக்கமான பல ஆயுதங்களை உடையவனாய் பருவத்தில் இளமையை உடையவனாய், அழகுக்கு உதாரணமான ஐந்து அம்புகளை உடைய காமனுக்கும் தந்தையானவனுடைய குற்றம் இல்லாத அடியார்களின் அடியார்களுக்கும் அடியார்களைப் பற்ற தாஸ்ய ஸம்பந்தத்தை உடையோம் ஆகிற அருளானது ஸம்ஸாரத்தில் துணையற்றவர்கள் ஆன நமக்கு உண்டாக வேண்டும்.
பத்தாம் பாசுரம். மிகவும் இனிமையான திருமேனி மற்றும் அவயவங்களையுடைய ஸர்வேச்வரனைப் பிரியாமல் இருக்கும் அடியார்களின் ஸம்பந்தி பரம்பரையின் எல்லையில் அடிமை செய்து நடக்கவேண்டியது கல்பந்தோறும் உண்டாக வேண்டும் என்கிறார்.
வாய்க்க தமியேற்கு ஊழி தோறூழி ஊழி மாகாயாம்
பூக் கொள் மேனி நான்கு தோள் பொன் ஆழிக் கை என் அம்மான்
நீக்கம் இல்லா அடியார் தம் அடியார் அடியார் அடியார் எம்
கோக்கள் அவர்க்கே குடிகளாய்ச் செல்லும் நல்ல கோட்பாடே
அழகின் உயர்த்தியையுடைய காயாம்பூ நிறத்தைக் கொள்ளும் திருமேனியையும் நான்கு திருத்தோள்களையும் விரும்பத்தக்க திருவாழியை உடைய திருக்கைகளையும் உடைய, இவ்வடிவழகைக் காட்டிக் கொடுத்து என்னை எழுதிக்கொண்ட ஸ்வாமி எம்பெருமான். அவனை பிரிவில்லாதபடி அனுபவிக்கிற அடியார்களுக்கு தனித்துவம் வாய்ந்த சேஷ பரம்பரையில் உள்ளவர்கள் எனக்கும் என்னை உடையவர்களுக்கும் தலைவர்கள். அவர்களுக்கே தொண்டு செய்யும் குலம், செல்லும்படியராய் சிறந்ததான ஸ்வீகாரத்தைச் செய்வது ஒரொரு மஹா கல்பம் தோறும் இங்கே தனியனாக இருக்கும் எனக்கும் உண்டாக வேண்டும்.
பதினொன்றாம் பாசுரம். இத்திருவாய்மொழிக்குப் பலமாக, அடியார்களுக்குத் தொண்டு செய்யும் குடும்பம் அமைவதை அருளிச்செய்கிறார்.
நல்ல கோட்பாட்டுலகங்கள் மூன்றின் உள்ளும் தான் நிறைந்த
அல்லிக் கமலக் கண்ணனை அந்தண் குருகூர்ச் சடகோபன்
சொல்லப் பட்ட ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
நல்ல பதத்தால் மனை வாழ்வர் கொண்ட பெண்டிர் மக்களே
உயர்ந்ததான இடத்தை உடைய மூன்று லோகங்களிலும் எம்பெருமான் வ்யாப்தனாய், மலர்ந்த தாமரைப்பூப்போலே இருக்கிற திருக்கண்களை உடையவனைப் பற்ற, அழகிய குளிர்ந்த குருகூர்க்குத் தலைவரான நம்மாழ்வாரால் அருளிச்செய்யப் பட்ட ஆயிரம் பாசுரங்களுக்குள் இந்தப் பதிகத்தையும் வல்லவர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனைவி மக்களை உடையவராய்க் கொண்டு நல்ல பதத்தை, குடும்ப வாழ்க்கையில் நன்றாக வாழப் பெறுவார்கள்.
எம்பெருமானைப் பிரிந்து மிகவும் வருந்தி இருந்த ஆழ்வாருக்கு அவன் தான் தன்னை எல்லோரும் எளிமையாகக் கண்டு அனுபவிக்கும்படி திருக்கண்ணபுரத்தில் அர்ச்சாரூபத்தில் எழுந்தருளியிருப்பதைக் காட்டி, இந்த தேஹத்தின் முடிவில் தன்னை அடைந்து விடலாம் என்று உறுதிகொடுக்க, அதை நினைத்து ஆனந்தத்தை அடைகிறார் ஆழ்வார் இந்தப் பதிகத்தில்.
முதல் பாசுரம். ஆலிலைக் கண்ணனான மஹோபகாரகன் திருவடிகளிலே எல்லாக்காலங்களிலும் அன்புடன் தொண்டு செய்யுங்கள் என்று இத்திருவாய்மொழியின் முக்கியக் கருத்தைச் சுருக்கமாக அருளிச்செய்கிறார்.
மாலை நண்ணித் தொழுதெழுமினோ வினை கெட
காலை மாலை கமல மலர் இட்டு நீர்
வேலை மோதும் மதிள் சூழ் திருக்கண்ணபுரத்து
ஆலின் மேலால் அமர்ந்தான் அடி இணைகளே
அலைவீசும் கடலாலே மோதப்பட்ட மதிள் சூழ்ந்த திருக்கண்ணபுரத்திலே வாழும், ஆலிலையில் இருந்து ஜகத்தை ரக்ஷித்த நினைத்துப்பார்க்கமுடியாத செயலைச் செய்த எம்பெருமான் திருவடிகளைக் குறித்து ஆசையுடன் பகல் இரவு என்று வித்யாஸம் பார்க்காமல் சிறந்த தாமரைப்பூக்களை ஸமர்ப்பித்து நீங்கள் உங்கள் எம்பெருமானை அனுபவிப்பதற்குத் தடையாக இருக்கும் வினைகள் தீரும்படிக் கைங்கர்யம் செய்து வாழ்ச்சியைப் பெறுங்கள்.
இரண்டாம் பாசுரம். அவன் வாழும் தேசத்தை வணங்கி அதினுடைய பாதுகாப்பை நினைத்து இன்பத்துடன் வாழப்பாருங்கள் என்கிறார்.
கள் அவிழும் மலர் இட்டு நீர் இறைஞ்சுமின்
நள்ளி சேரும் வயல் சூழ் கிடங்கின் புடை
வெள்ளி ஏய்ந்த மதிள் சூழ் திருக்கண்ணபுரம்
உள்ளி நாளும் தொழுதெழுமினோ தொண்டரே!
அனுபவத்தில் ஆசை உள்ள நீங்கள் தேனை ஒழுகவிடும் பூக்களைக்கொண்டு ஆராதியுங்கள். பெண் நண்டுகளுடன் ஆண் நண்டுகள் சேர்ந்து வாழும் வயல்களாலே சூழப்பட்ட அகழினுடைய அருகிலே வெள்ளியாலே செய்யப்பட்ட மதிளாலே சூழப்பட்ட திருக்கண்ணபுரத்தை பாதுகாப்பான இடம் என்று எப்பொழுதும் நினைத்து, தொழுது கிளர்த்தியோடு ப்ரார்த்தியுங்கள்.
மூன்றாம் பாசுரம். உயர்ந்த விபூதிகளை உடையவனாய்க் கொண்டு எளிமையாக இருக்கும் ஸர்வேச்வரனை முழுவதுமாய் ஆராதியுங்கள் என்கிறார்.
தொண்டர் நுந்தம் துயர் போக நீர் ஏகமாய்
விண்டு வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சுமின்
வண்டு பாடும் பொழில் சூழ் திருக்கண்ணபுரத்து
அண்ட வாணன் அமரர் பெருமானையே
வண்டுகள் களித்துப் பாடும் சோலையாலே சூழப்பட்ட திருக்கண்ணபுரத்திலே பரமபதநாதனாய் நித்யஸூரிகளாலே அனுபவிக்கப்படுபவனாய் இருப்பவனுக்குக் கைங்கர்யம் செய்ய ஆசைப்படுபவர்களே! உங்களின் துன்பமானது தீரும்படி நீங்கள் முழுமனதுடன் மலர்ந்த புதுமை மாறாத பூக்களை இட்டு உங்கள் அடிமைத்தனத்துக்கேற்ப ஆராதியுங்கள்.
நான்காம் பாசுரம். மிகவும் இனியவனான கண்ணனை நப்பின்னைப் பிராட்டியின் சேர்த்தியிலே ஆராதியுங்கள் என்கிறார்.
மானை நோக்கி மடப் பின்னை தன் கேள்வனை
தேனை வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சுமின்
வானை உந்தும் மதிள்சூழ் திருக்கண்ணபுரம்
தான் நயந்த பெருமான் சரணாகுமே
மானே வருந்தும்படியான நோக்கையுடையவளாய் ஆத்மகுணபூர்த்தியை உடையவளான நப்பின்னைப்பிராட்டிக்குக் கேள்வனாய் தேன்போலே இனிமையாக இருக்கும் கண்ணனை, வாடாத மலர்களைக்கொண்டு நீங்கள் ஆராதியுங்கள். ஆகாசத்தை உந்தித்தள்ளும்படியான ஓக்கத்தை உடைய மதிள் சூழ்ந்த திருக்கண்ணபுரத்தைத் தானே விரும்பின ஸர்வேச்வரன் உங்களுக்குப் புகலிடமாக இருப்பான்.
ஐந்தாம் பாசுரம். அடியார்களுக்குப் பரமபதத்தைக் கொடுப்பவனான எம்பெருமான், தன் விஷயத்தில் தொண்டு செய்யும் ஆசையை உடையவர்களுக்கு தான் அவர்கள் விஷயத்தில் அன்பே வடிவெடுத்தவனாக இருப்பான் என்கிறார்.
சரணம் ஆகும் தன தாள் அடைந்தார்க்கெல்லாம்
மரணம் ஆனால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்
அரண் அமைந்த மதிள் சூழ் திருக்கண்ணபுரத்
தரணியாளன் தனதன்பர்க்கு அன்பாகுமே
தன் திருவடிகளைக் குறித்து ப்ரபத்தி பண்ணின எல்லாருக்கும் தானே உபாயமாக இருந்து கொண்டு, அவர்களின் மரண காலத்தில் திரும்பி வர வேண்டாத மோக்ஷ தேசத்தைக் கொடுக்கும் மஹோபகாரகனாய், பாதுகாப்புக்கு அமைந்த மதிள் சூழ்ந்த திருக்கண்ணபுரத்திலே பூமியைக் காப்பதற்காக வந்து நிற்பவன், தன் திருவடிகளில் அன்புபூண்டவர்களுக்கு அன்பே வடிவெடுத்தவனாக இருப்பான்.
ஆறாம் பாசுரம். ப்ரஹ்லாதனுடைய பகவத் அனுபவத்துக்குத் தடையாக இருந்த ஹிரண்யனைப் பிளந்தவன், தன் பக்கல் உயர்ந்த ப்ரேமத்தை உடையவர்களுக்கு உயர்ந்த ப்ரயோஜனமாக இருப்பான்.
அன்பனாகும் தன தாள் அடைந்தார்க்கெல்லாம்
செம்பொன் ஆகத்து அவுணன் உடல் கீண்டவன்
நன்பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக்கண்ணபுரத்து
அன்பன் நாளும் தன மெய்யர்க்கு மெய்யனே
தன் திருவடிகளை ஆச்ரயித்தவர்களுக்கெல்லாம் எல்லையில்லாத வாத்ஸல்யத்தை உடையவனாய் சிவந்த பொன்போலேயிருக்கிற வடிவையுடைய ஹிரண்யாஸுரனுடைய சரீரத்தைப் பிளந்தவனாய் நல்ல பொன்னாலே செய்யப்பட்ட மதிள்சூழ்ந்த திருக்கண்ணபுரத்திலே விரும்பி வாழ்பவன் தன்னையே உயர்ந்த குறிக்கோளாய் உடையவர்களுக்கு எப்பொழுதும் அவர்களையே உயர்ந்த குறிக்கோளாய் உடையவனாய் இருப்பான்.
ஏழாம் பாசுரம். தன்னையே ஆசைப்படுபவர்களுக்குத் தன்னை எளிமையாகக் கொடுத்து, வேறு விஷயங்களை விரும்புபவர்களுக்கு அவற்றைக் கொடுத்து விலகி நிற்பான் என்கிறார்.
மெய்யன் ஆகும் விரும்பித் தொழுவார்க்கெல்லாம்
பொய்யன் ஆகும் புறமே தொழுவார்க்கெல்லாம்
செய்யில் வாளை உகளும் திருக்கண்ணபுரத்து
ஐயன் ஆகத்தணைப்பார்கட்கு அணியனே
தன் விஷயத்தில் ப்ரயோஜன புத்தியுடன் இருப்பவர்களுக்குத் தன்னுடைய உயர்ந்த நிலையைக் காட்டிக் கொடுத்து நிற்பான். வேறு சில ப்ரயோஜனங்களை ஆசைப்பட்டு ஆச்ரயிப்பவர்களுக்கு அந்த ப்ரயோஜனங்களைக் கொடுத்து தான் மறைந்து நிற்பான். வயலிலே வாளை மீன் துள்ளி விளையாடும் திருக்கண்ணபுரத்திலே இருக்கும் எல்லோருக்கும் ஸ்வாமியானவன் தங்கள் உள்ளத்திலே தன்னைப் பலமாக நினைப்பவர்களுக்கு மிகவும் எளியவானாக இருப்பான்.
எட்டாம் பாசுரம். அவனைச் சென்று அடையுங்கள். உங்களுடைய துக்கத்தையும் அதற்குக் காரணமான ஸம்ஸாரத்தையும் போக்கியருளுவான் என்கிறார்.
அணியன் ஆகும் தன தாள் அடைந்தார்க்கெல்லாம்
பிணியும் சாரா பிறவி கெடுத்தாளும்
மணி பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக்கண்ணபுரம்
பணிமின் நாளும் பரமேட்டி தன் பாதமே
மிகவும் இனியதான திருவடிகளை அடைந்தவர்களுக்கு மிகவும் அருகிலே இருந்து அனுபவிப்பான். அதனால், மற்றைய விஷயங்களில் ஆசை ஆகிற வ்யாதியும் கழிந்துவிடும். அதற்குக் காரணமான பிறவியையும் கழித்து அடிமை கொள்வான். ஆதலால், மணியும் பொன்னும் சேர்ந்த மதிள் சூழ்ந்த திருக்கண்ணபுரத்திலே பரமபதத்தில் இருப்பதைப்போலே இருப்பவனின் திருவடிகளை எப்பொழுதும் வணங்கி அனுபவிக்கப் பாருங்கள்.
ஒன்பதாம் பாசுரம். நான் அவனை அடைந்து என்னுடைய எல்லா துக்கங்களும் தீரப்பெற்றேன். ஆதி காரணனானவனைக் கிட்டினார்க்குத் துன்பம் உண்டோ என்கிறார்.
பாதம் நாளும் பணியத் தணியும் பிணி
ஏதம் சாரா எனக்கேல் இனி என் குறை?
வேத நாவர் விரும்பும் திருக்கண்ணபுரத்து
ஆதியானை அடைந்தார்க்கு அல்லல் இல்லையே
அவன் திருவடிகளை எப்பொழுதும் அனுபவிக்க முன்புண்டான துக்கங்கள் எல்லாம் போய்விடும். மேலும் எந்த துக்கங்களும் வந்து சேராது. ஆதலால், எனக்கு என்ன குறை உண்டு? வேதத்தைச் சொல்லுவதையே நாக்குக்கு அடையாளமாகக் கொண்டவர்கள் விரும்பும்படியான திருக்கண்ணபுரத்திலே இருக்கும் பரமகாரணபூதனை அடைந்தவர்களுக்கு துக்கம் இல்லையே.
பத்தாம் பாசுரம். திருமகள் கேள்வனான ஸர்வேச்வரனுடைய திருக்கண்ணபுரத்தைச் சொன்னவுடன் துக்கங்கள் வாராமல் இருந்தன. எனக்கினி என்ன குறை உண்டென்கிறார்.
இல்லை அல்லல் எனக்கேல் இனி என் குறை?
அல்லி மாதர் அமரும் திருமார்பினன்
கல்லில் ஏய்ந்த மதிள் சூழ் திருக்கண்ணபுரம்
சொல்ல நாளும் துயர் பாடு சாராவே
தாமரைப்பூவை இருப்பிடமாக உடையவளாய் பெண்களில் சிறந்தவளான லக்ஷ்மி நிரந்தரமாக வாழும் திருமார்பை உடையதாய், கல்லாலே செறிந்த மதிள்சூழ்ந்த திருக்கண்ணபுரத்தைச் சொன்னவுடன் எப்பொழுதும் துக்கங்கள் அருகில் வாராமல் இருந்தன. ஆதலால் எனக்கு எம்பெருமானை அனுபவிக்காமல் இருக்கும் துக்கம் இல்லை. இனி என்ன குறையுண்டு?
பதினொன்றாம் பாசுரம். இத்திருவாய்மொழிக்குப் பலமாக பகவதனுபவத்தை அருளிச்செய்கிறார்.
பாடு சாரா வினை பற்றற வேண்டுவீர்!
மாட நீடு குருகூர்ச் சடகோபன் சொல்
பாடலான தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
பாடி ஆடிப் பணிமின் அவன் தாள்களே
ஸம்ஸாரத்தில் இருக்கும் எல்லா துக்கங்களும் உங்கள் அருகில் இல்லாதவாறு முழுவதுமாக நீங்கவேண்டியிருந்தீர்களாகில், மாடங்கள் உயர்ந்த திருநகரிக்குத் தலைவரான நம்மாழ்வார் அருளிச்செய்ததாய் கானரூபமான தமிழ் பாசுரங்கள் ஆயிரத்துள்ளும் இப்பத்தையும் அன்பினாலே பாடி, ஆனந்தத்தாலே ஆடி அந்த எம்பெருமானின் திருவடிகளை வணங்கி அனுபவிக்கப் பாருங்கள்.
எம்பெருமானுக்கு நித்யகைங்கர்யத்தைப் பண்ண ஆசைப்பட்ட ஆழ்வார் அது இங்கே செய்ய முடியாது என்றுணர்ந்து, பரமபதத்துக்குச் சென்று கைங்கர்யம் செய்வதை ஆசைப்பட, அங்கே போவதற்கான விரோதிகளைக் கழித்து நம்மை அழைத்துப் போகக்கூடியவன் திருமோகூரிலே இருக்கும் காளமேகம் எம்பெருமானே என்று அவனே தனக்கு வழித்துணையாக இருப்பான் என்று அவன் திருவடிகளைத் தஞ்சமாகப் பற்றுகிறார்.
முதல் பாசுரம். எதிரிகளை அழிக்கும் தன்மையையுடைய மிகவும் இனியவனான காளமேகத்தைத் தவிர வேறு புகலில்லை என்கிறார்.
தாள தாமரைத் தட மணி வயல் திருமோகூர்
நாளும் மேவி நன்கமர்ந்து நின்று அசுரரைத் தகர்க்கும்
தோளும் நான்குடைச் சுரி குழல் கமலக் கண் கனி வாய்
காளமேகத்தை அன்றி மற்றொன்றிலம் கதியே
வலிமையான தாளையுடைய தாமரைகள் தடாகங்களை அலங்கரிக்கும் வயலையுடைய திருமோகூரிலே எப்பொழுதும் வசித்து மிகவும் உகப்புடன் பொருந்தியிருப்பவனாய் விரோதிகளான அஸுரர்களை துன்புறுத்தி அழிக்கும்படி நான்கு திருத்தோள்களையுமுடைய சுரிந்திருக்கும் குழலையுடையவனாய் அன்பான திருவதரங்களையுடையவனாய் காளமேகம்போலே வள்ளல் தன்மையையுடைய எம்பெருமானைத் தவிர வேறு நமக்குத் துணையாக இருக்கும் புகலிடத்தை உடையோமல்லோம்.
இரண்டாம் பாசுரம். மிகவும் இனியவனாய் எப்பொழுதும் அனுபவிக்கலாம்படியான நாம பூர்த்தியையுடைய ஸர்வேச்வரன் திருவடிகளைத் தவிர எல்லா நிலைகளிலும் எனக்கு வேறொரு கதியில்லை என்கிறார்.
இலம் கதி மற்றொன்று எம்மைக்கும் ஈன் தண் துழாயின்
அலங்கலங்கண்ணி ஆயிரம் பேருடை அம்மான்
நலங்கொள் நான்மறை வாணர்கள் வாழ் திருமோகூர்
நலங்கழல் அவனடி நிழல் தடம் அன்றி யாமே
பூந்தாரை இனியதாக்குகிற குளிர்ந்த திருத்துழாயையுடைத்தாய் அசைகிற அழகிய மாலையையுடையவனாய் அனுபவிக்கத்தக்க ஆயிரம் திருநாமங்களையுடைய இயற்கையான தலைவனாய், கருணை முதலிய உயர்ந்த குணங்களையுடையவராய் நான்கு வேதங்களை நடத்துபவர்கள் வாழ்ச்சியுடன் இருக்கும் திருமோகூரிலே வாழ்கிறவனாய், அழகிய வீரக்கழலை உடையவனுடைய திருவடி நிழலாகிற தடாகத்தைத் தவிர, நாம் எல்லாப் பிறவிகளிலும் கதியாக வேறொன்றை உடையவர்கள் அல்லோம்.
மூன்றாம் பாசுரம். எல்லா உலகத்தையும் ரக்ஷிக்கும் தன்மையை உடைய எம்பெருமானின் திருமோகூரை நம் துக்கம் கெடும்படி அடைவோம் என்கிறார்.
அன்றி யாம் ஒரு புகலிடம் இலம் என்றென்றலற்றி
நின்று நான்முகன் அரனொடு தேவர்கள் நாட
வென்று இம்மூவுலகளித்து உழல்வான் திருமோகூர்
நன்று நாம் இனி நணுகுதும் நமதிடர் கெடவே
உன்னைத் தவிர நாங்கள் வேறு ஒரு புகலை உடையவர்கள் அல்லோம் என்று தங்கள் தளர்த்தி தெரியும்படி பலமுறை கூப்பிட்டு, பலன் கிடைக்கும் வரை நின்று, ப்ரஹ்மா ருத்ரன் ஆகிய தேவர்கள் தேடி வணங்க, விரோதிகளை வென்று இந்த மூன்று லோகங்களையும் காப்பதையே தொழிலாகக் கொண்டவனுடைய திருமோகூரை நாம் நம் துக்கம் தீரும்படி இனி வேறு பலனை எதிர்பார்க்காதவர்களாக இருந்து கொண்டு, அடைவோம்.
நான்காம் பாசுரம். ருசியையுடைய பாகவதர்களைப் பார்த்து, உலகத்தை ரக்ஷிப்பதற்காக திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருப்பவனுடைய திருவடிகளை அடைவோம் வாருங்கள் என்று அழைத்தருளுகிறார்.
இடர் கெட எம்மைப் போந்தளியாய் என்றென்றேத்திச்
சுடர் கொள் சோதியைத் தேவரும் முனிவரும் தொடரப்
படர் கொள் பாம்பணைப் பள்ளி கொள்வான் திருமோகூர்
இடர் கெட அடி பரவுதும் தொண்டீர்! வம்மினே
எம்பெருமானுடைய திருவடிகளில் ஆசையுடையவர்களே! “துக்கம் தீரும்படி எழுந்தருளி எங்களைக் காக்க வேண்டும் ” என்று பலமுறை தளர்த்தி தெரியும்படிக் கொண்டாடி, அதனால் பெரிய ஒளியை உடைய சோதிமயமான திருமேனியை தேவர்களும், முனிவர்களும் வந்தடைவதற்காக எம்பெருமான் ஸ்பர்சத்தாலே விரிந்த படத்தையுடைய ஆதிசேஷப் படுக்கையிலே பள்ளிகொண்டருளுபவனுடைய திருமோகூரிலே நம் துக்கம் தீரும்படி அவன் திருவடிகளைக் கொண்டாடுவோம். வாருங்கள்.
ஐந்தாம் பாசுரம். எல்லோருடனும் கூடும் தன்மையையுடைய த்ரிவிக்ரமன் வாழும் திருமோகூரில் கோயிலை அனுபவிட்த்து இன்பமடைவோம் வாருங்கள் என்கிறார்.
தொண்டீர்! வம்மின் நம் சுடரொளி ஒரு தனி முதல்வன்
அண்டமூவுலகளந்தவன் அணி திருமோகூர்
எண்திசையும் ஈன் கரும்பொடு பெருஞ்செந்நெல் விளையக்
கொண்ட கோயிலை வலஞ்செய்து இங்கு ஆடுதும் கூத்தே
நமக்கு அனுபவிக்கத்தக்கதாய், மிகவும் ஒளிபடைத்த ஒளிவடிவாய் இருக்கும் திருமேனியையுடையவனாய், உலகுக்கு உபாதான, நிமித்த, ஸஹகாரி காரணங்களாய்த் தானே இருப்பவனாய், படைக்கப்பட்ட அண்டத்துள் இருக்கும் மூன்று லோகங்களையும் அளந்து கொண்டவனுடைய அழகிய திருமோகூரிலே எல்லாத் திசைகளிலும் இனிய கரும்பொடு பெரிய செந்நெலானது விளையும்படி ஏற்றுக்கொண்ட கோயிலை இந்த பூமியிலே ப்ரதக்ஷிணம் செய்து ப்ரீதியின் மிகுதியால் நடனம் ஆடுவோம். ஆசையுடைய தொண்டர்களே! வாருங்கள்.
ஆறாம் பாசுரம். அனுபவிப்பவர்களுக்கு அனுபவத்தைக் கொடுப்பவனாய் நம்பத்தகுந்தவனான எம்பெருமான் திருவடிகளைத் தவிர வேறொன்றை ரக்ஷமாக உடையோம் அல்லோம் என்கிறார்.
கூத்தன் கோவலன் குதற்று வல்லசுரர்கள் கூற்றம்
ஏத்தும் நங்கட்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன்
வாய்த்த தண் பணை வள வயல் சூழ் திருமோகூர்
ஆத்தன் தாமரை அடி அன்றி மற்றிலம் அரணே
தேர்ந்த நாட்டியக்காரர் ஆடினாற்போலே நடப்பவனாய், காக்கப்பட வேண்டியவர்களின் பின் சென்று காப்பவனாய், துன்புறுத்துவர்களாய் மிகவும் பலம் வாய்ந்த அஸுரர்களுக்கு ம்ருத்யுவாய், வேறு ப்ரயோஜனத்தை எதிர்பார்க்காமல் கொண்டாடும் நமக்கும், அமரர்களுக்கும், முனிவர்களுக்கும் ஆனந்தத்தைக் கொடுப்பவனாய், ஸம்ருத்தமாய் குளிர்ந்த நீர்நிலைகளாலும் அழகிய வயலாலும் சூழப்பட்ட திருமோகூரிலே அடியார்களுக்கு நம்பிக்கையுடன் பற்றும்படி நிற்கும் ஆப்ததமனுடைய தாமரைபோன்ற திருவடிகளை அன்றி வேறு புகல் உடையோம் அல்லோம்.
ஏழாம் பாசுரம். எல்லா உலகங்களையும் படைத்த ஸர்வேச்வரன் வாழும் திருமோகூரைப் பற்றி அங்கே கைங்கர்யங்களைச் செய்தால் உடனே நம் துக்கங்கள் போய்விடும் என்கிறார்.
மற்றிலம் அரண் வான் பெரும் பாழ் தனி முதலா
சுற்றும் நீர் படைத்து அதன் வழித் தொல் முனி முதலா
முற்றும் தேவரோடு உலகு செய்வான் திருமோகூர்
சுற்றி நாம் வலம் செய்ய நம் துயர் கெடும் கடிதே
தனித்துவம் வாய்ந்த பெரிய மேன்மையையுடைய தகுதிவாய்ந்த ப்ரக்ருதி முதலாகக் கொண்டு எல்லா இடத்திலும் வ்யாபித்திருக்கும் காரண ஜலத்தைப் படைத்து அதன் மூலமாக மிகவும் பழையவனாய் படைப்பை நினைத்திருக்கும் ப்ரஹ்மா முதலாக எல்லா தேவர்களுடன் கூடின எல்லா லோகங்களையும் செய்பவனுடைய திருமோகூரை ப்ரதக்ஷிணம் முதலான கைங்கர்யங்களை நாம் செய்ய நம்முடைய துன்பமானது உடனே போய்விடும். ஆதலால் இனி நாங்கள் வேறு ஒரு புகல் உடையவர்கள் அல்லோம்.
எட்டாம் பாசுரம். உங்களுடைய எல்லாத் துன்பங்களும் தீரும்படி தசரதபுத்ரன் என்னும் குளிர்ந்த தடாகத்தை அடைந்து அனுபவியுங்கள் என்கிறார்.
துயர் கெடும் கடிதடைந்து வந்து அடியவர்! தொழுமின்
உயர் கொள் சோலை ஒண் தட மணி ஒளி திருமோகூர்
பெயர்கள் ஆயிரம் உடைய வல்லரக்கர் புக்கழுந்தத்
தயரதன் பெற்ற மரதக மணித் தடத்தினையே
உயர்த்தியையுடைய சோலைகளையும் சிறந்த தடாகங்களையும் அலங்காரமாகவுடைத்தாய் மிகவும் ஒளிவிடும் திருமோகூரிலே கணக்கற்ற திருநாமங்களையுடையவராய், மிகவும் வலிமை பொருந்திய ராக்ஷஸர்கள் புகுந்து மூழ்கும்படியாக தசரதன் பெற்ற மரதகமணி போலே கறுத்த நிறத்தையுடைய தடாகத்தை அவன் குணத்துக்கு அடிமையான நீங்கள் வந்து அடைந்து தொழுங்கள். உங்கள் துன்பமானது உடனே நீங்கும்.
ஒன்பதாம் பாசுரம். உயர்ந்த அவயங்களுடன் இருக்கும் எம்பெருமான் வாழும் திருமோகூரை நமக்கு ரக்ஷகமாக அடைந்தோம் என்று ஆனந்தப்படுகிறார்.
மணித்தடத்தடி மலர்க் கண்கள் பவளச் செவ்வாய்
அணிக்கொள் நால் தடந்தோள் தெய்வம் அசுரரை என்னும்
துணிக்கும் வல்லரட்டன் உறை பொழில் திருமோகூர்
நணித்து நம்முடை நல்லரண் நாம் அடைந்தனமே
தெளிந்த தடாகம்போலே திருவடிகளையும் மலர்ந்த தாமரைபோலே இருக்கிற திருக்கண்களையும் பவளம்போலே சிவந்த திருவதரத்தையும் உடையவனாய், எல்லா ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட நான்கு பெரிய திருத்தோள்களையுடைய திவ்ய திருமேனியையுடையவனாய், அஸுரர்களை எப்பொழுதும் அழிக்கும் பெரிய பலத்தையுடையவன் நிரந்தரமாக வாழுமிடமாய் பொழிலையுடைய திருமோகூராகிற நம்முடைய சிறந்த ரக்ஷகமான தேசமானது அருகிலே வந்தது. நாம் அதை அடைந்தோம்.
பத்தாம் பாசுரம். அடியார்கள் ஆசைப்பட்ட திருமேனியை எடுத்துக்கொண்டு ரக்ஷிப்பவனுடைய திருமோகூரின் திருநாமத்தை நம்மோடு அந்வயமுடையவர்கள் நினைத்துக் கொண்டாடுங்கள் என்கிறார்.
நாம் அடைந்த நல் அரண் நமக்கென்று நல்லமரர்
தீமை செய்யும் வல்லசுரரை அஞ்சிச் சென்றடைந்தால்
காம ரூபங்கொண்டு எழுந்தளிப்பான் திருமோகூர்
நாமமே நவின்று எண்ணுமின் ஏத்துமின் நமர்காள்!
“நமக்கு நாம் பாற்றின அரண் சிறந்த ஒன்று” என்றுகொண்டு நல்லதறியும் தேவர்கள், பொல்லாங்கைச் செய்யும் மிகவும் வலிமை வாய்ந்த அஸுரர்களைப் பார்த்து அஞ்சிச்சென்று அடைந்தால், அவர்கள் விரும்பின திருமேனியைக்கொண்டு கிளர்ந்து ரக்ஷிப்பவனுடைய திருமோகூரின் புகழையே, நம்முடன் தொடர்புடையவர்களான நீங்கள் பயின்று நினையுங்கள். அவற்றை ப்ரேமத்துடன் கொண்டாடுங்கள்.
பதினொன்றாம் பாசுரம். இத்திருவாய்மொழிக்குப் பலமாக பகவானை அடைவதற்குத் தடையாக இருப்பவை விலகுவதை அருளிச்செய்கிறார்.
ஏத்துமின் நமர்காள்! என்று தான் குடமாடு
கூத்தனைக் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
வாய்த்த ஆயிரத்துள் இவை வண் திருமோகூர்க்கு
ஈத்த பத்திவை ஏத்த வல்லார்க்கு இடர் கெடுமே
“நம்முடையவர்கள் எல்லாரும் ஏத்துங்கள்” என்று தான் குடத்தைக் கொண்டு கூத்தாடினவனை, திருநகரிக்குத் தலைவரான நம்மாழ்வாருடைய அந்தரங்க கைங்கர்யங்களாய் இவை எம்பெருமானுக்குத் தகுதியாக வாய்த்த ஆயிரம் பாசுரங்களுக்குள்ளே உயர்ந்ததான திருமோகூர்க்கு ஸமர்ப்பிக்கப்பட்ட இந்தப் பத்துப் பாசுரங்களை அன்புடன் பாடவல்லவர்களுக்கு சரீரத்தின் முடிவில் துணை இல்லை என்ற துக்கம் தீரும்.
ஆழ்வார் பரமபதத்தை விரைந்து சென்று அடையவேண்டும் என்று ஆசைப்பட, எம்பெருமானும் அதற்கு இசைந்தான். ஆனால் அவனோ ஆழ்வாரைத் திருமேனியுடன் பரமபதத்துக்கு அழைத்துச் சென்று அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டான். அதைக் கண்ட ஆழ்வார் அவனுக்கு அவ்வாறு செய்யலாகாது என்று உபதேசிக்க, எம்பெருமானும் இறுதியில் ஆழ்வாரின் விருப்பத்துக்கு இசைந்தான். அதைக் கண்ட ஆழ்வார், எம்பெருமானின் சீல குணத்தைக் கண்டு மிகவும் ப்ரீதியை அடைந்து, அதை இந்தப் பதிகத்தில் வெளியிடுகிறார்.
முதல் பாசுரம். ஈச்வரன் தன்னிடத்தில் கொண்ட ஆசையைப் பார்த்த ஆனந்தத்தாலே, தங்களை காத்துக்கொள்ள ஆசைப்படுபவர்கள் எம்பெருமான் விஷயத்தில் ஈடுபடும்போது அவனிடத்தில் மூழ்கிவிடாமல் இருக்குமாறு அருளிச்செய்கிறார்.
செஞ்சொற்கவிகாள்! உயிர்காத்தாட்செய்ம்மின் திருமாலிருஞ்சோலை
வஞ்சக் கள்வன் மாமாயன் மாயக் கவியாய் வந்து என்
நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியா வண்ணம் என்
நெஞ்சும் உயிரும் அவை உண்டு தானேயாகி நிறைந்தானே
திருமாலிருஞ்சோலை மலையில் இருப்பவனாய் எல்லாரிடத்திலும் எல்லாவற்றையும் அவர்கள் அறியாமல் அபஹரிப்பவனாய் அதுக்குக் காரணமான ஆச்சர்யமான ரூபம், குணம் முதலியவைகளை உடையவனான எம்பெருமான், கவி பாடுவித்துக்கொள்ளும் வஞ்சச் செயலாலே உளனாய், இங்கே வந்து என் நெஞ்சினுள்ளும் உயிரினுள்ளும் கலந்து, அருகில் இருப்பவர்களும் அறியாதபடி அந்த என்னுடைய நெஞ்சையும் உயிரையும் உண்டு தானே அனுபவிப்பவனாய் எல்லா ஆசைகளும் நிறைவேறப்பெற்றவன் ஆனான். நேர்மையான சொற்களாலே கவிபாட வல்லவர்களே! அவன் கையில் உங்கள் உயிர் மற்றும் உயிரைச் சார்ந்த பொருள்களும் அகப்படாதபடி காத்துக்கொண்டு வாசிக கைங்கர்யம் செய்யப் பாருங்கள்.
இரண்டாம் பாசுரம். என்னுடன் கூடிய ஆனந்தத்தாலே எனக்கு மிகவும் இனியவனாகக் கொண்டு செய்ய வேண்டியதைச் செய்தவனாக இருந்தான் என்கிறார்.
தானேயாகி நிறைந்து எல்லா உலகும் உயிரும் தானேயாய்
தானே யான் என்பான் ஆகித் தன்னைத் தானே துதித்து எனக்குத்
தேனே பாலே கன்னலே அமுதே திருமாலிருஞ்சோலைக்
கோனேயாகி நின்றொழிந்தான் என்னை முற்றும் உயிர் உண்டே
என்னை எல்லா விதத்திலும் அனுபவித்து, தானே ப்ரதானனாகி, பரிபூர்ணனாய் எல்லா லோகங்களும் ஆங்காங்கே இருக்கும் எல்லா ப்ராணிகளும் தானேயாம்படி அந்தர்யாமியாய் இருந்து, நான் என்ற வார்த்தையால் குறிக்கப்படும் வஸ்துவும் தானேயாகி, தன்னைப் பற்றித் தானே துதிப்பவனுமாய் இருந்து துதித்து, அதனால் ஏற்பட்ட ஆனந்தத்தை எனக்குக் காட்டுகையாலே, தேனும் பாலும் சர்க்கரையும் அமுதுமாய் அவற்றில் இருக்கும் எல்லாவித இனிமையும் திருமாலிருஞ்சோலையில் எழுந்தருளியிருக்கும் தலைவனான தானேயாகி நின்றுவிட்டான்.
மூன்றாம் பாசுரம். என்னளவில்லாமல் என் சரீரத்திலும் ஆசை கொண்டு, அதனாலே ஆனந்தத்துடன் நிலைத்து நிற்கிறான் என்கிறார்.
என்னை முற்றும் உயிர் உண்டு என் மாய ஆக்கை இதனுள் புக்கு
என்னை முற்றும் தானேயாய் நின்ற மாய அம்மான் சேர்
தென்னன் திருமாலிருஞ்சோலைத் திசை கை கூப்பிச் சேர்ந்த யான்
இன்னும் போவேனேகொலோ? என்கொல் அம்மான் திருவருளே
என்னை எல்லா விதத்திலும் அனுபவித்து அத்துடன் நில்லாமல் என்னுடைய அஜ்ஞானம் ஆகியவற்றுக்குக் காரணமான சரீரத்துக்குள்ளே புகுந்து என்னையும் சரீரத்தையும் தானே அபிமானியாகி நின்ற ஆச்சர்ய குண சேஷ்டிதங்களையுடைய இயற்கையான ஸ்வாமியானவன் பொருந்தி வாழும் தேசமாய் தெற்குத் திசையில் சிறந்ததாய் இருக்கும் திருமாலிருந்சோலையில் நிற்கிற திசையை நோக்கி கை கூப்பி அடைந்த நான் அந்தத் திசையிலும் ஆசை பிறந்தவனாய், வேறு ஒரு போக வேண்டிய இடம் இருப்பதாக நினைத்துப் போவேனோ? இயற்கையான தலைவனின் ஆசைகள் எப்படி இருக்கிறது!
நான்காம் பாசுரம். என் சரீரத்தை விரும்புவதற்குக் காரணம் இந்தத் திருமலை ஆகையால் இரண்டையும் ஆதரித்து இரண்டு இடங்களையும் கைவிடாமல் இருக்கிறான் என்கிறார்.
என்கொல் அம்மான் திருவருள்கள்? உலகும் உயிரும் தானேயாய்
நன்கென் உடலம் கை விடான் ஞாலத்தூடே நடந்துழக்கி
தென்கொள் திசைக்குத் திலதமாய் நின்ற திருமாலிருஞ்சோலை
நங்கள் குன்றம் கை விடான் நண்ணா அசுரர் நலியவே
என்னைப்பிடிப்பதற்காக எல்லா உலகங்களும் எல்லா ப்ராணிகளும் தானேயாகும்படி அந்தர்யாமியாய் இருந்து அத்துடன் நில்லாமல் தன்னை ஆசைப்படாத அஸுரர்கள் நசிக்கும்படி பூமியிலே மிகவும் நடந்து தெற்குத் திசைக்குத் திலகமாய் நின்ற திருமாலிருஞ்சோலை என்று பேரைக்கொண்டிருக்கும், நம் போன்றவர்களுக்கு அனுபவிக்கும்படி இருக்கும் திருமலையைக் கைவிடமாட்டான். என் சரீரத்தையும் மிகவும் கைவிடாமல் இருக்கிறான். ஸ்வாமியானவனுடைய உபகாரங்கள் எப்படி இருக்கின்றன!
ஐந்தாம் பாசுரம். தன்னுடன் கூடி திருவாய்மொழி பாடக் கேட்ட ப்ரீதியாலே ரஸிகனாய் தலையை ஆட்டுகிறான் என்கிறார்.
நண்ணா அசுரர் நலிவெய்த நல்ல அமரர் பொலிவெய்த
எண்ணாதனகள் எண்ணும் நன்முனிவர் இன்பம் தலை சிறப்பப்
பண்ணார் பாடல் இன் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடித்
தென்னாவென்னும் என்னம்மான் திருமாலிருஞ்சோலையானே
எம்பெருமானை ஆசைப்படாத அஸுரர்கள் நசிக்கும்படியும் பக்தி பரவசராய் எம்பெருமானை ஆசைப்படும் தேவர்கள் பொலிவடையும்படியும் எம்பெருமானின் எண்ணிப்பார்க்க முடியாத வைபவங்களை ப்ரேமத்தாலே ஆசைப்படும் நல்ல முனிவர்கள் ஆனந்தத்தை அடையும்படியும் பண் நிறைந்த இசையையுடைய இனிய கவிகளை எனக்கு அந்தர்யாமியாய் இருந்து கொண்டு தன்னையே தான் பாடி திருமாலிருஞ்சோலையானாய் நிற்கிற என் ஸ்வாமியானவன் தென்னா தெனா என்று தலையை ஆட்டி அனுபவிக்கிறான்.
ஆறாம் பாசுரம். ப்ரஹ்மா ருத்ரன் முதலியவர்களுக்கும் உபகாரகனாய் ச்ரிய:பதியானவன் திருமலையில் நின்று என்னை அடிமைகொள்ளுகைக்கு மிகவும் ஆசையுடன் இருக்கிறான் என்கிறார்.
திருமாலிருஞ்சோலையானே ஆகிச் செழுமூவுலகும் தன்
ஒரு மா வயிற்றினுள்ளே வைத்து ஊழி ஊழி தலை அளிக்கும்
திருமால் என்னை ஆளுமால் சிவனும் பிரமனும் காணாது
அருமால் எய்தி அடி பரவ அருளை ஈந்த அம்மானே
ருத்ரனும் ப்ரஹ்மாவும் காணப்பெறாமல், அவர்கள் பெறுதற்கரிதான பெரிய பக்தியை உடையவர்களாய்க் கொண்டு திருவடிகளை ஸ்தோத்ரம் பண்ணும்படித் தன் அருளைக் கொடுத்த ஸர்வாதிகனாய், உயர்ந்த மூன்று லோகங்களையும் தன்னுடைய தனித்துவம் வாய்ந்த சக்திபெற்ற திருவயிற்றினுள்ளே ஒரு சிறு பகுதியிலே வைத்து கல்பந்தோறும் சிறந்த முறையில் ரக்ஷிப்பவனாய், திருமகள் கேள்வனாய் திருமாலிருஞ்சோலையிலே நிலை பெற்றவனாய் இருந்து என்னை அடிமை கொள்ளுவதில் பெரும் பித்தனாய் இருக்கிறான்.
ஏழாம் பாசுரம். தம்மை ஏற்றுக்கொள்வதற்காக அவன் வந்து நின்ற திருமலையினுடைய பெருமையைப் புகழ்ந்து அருளுகிறார்.
அருளை ஈ என்னம்மானே! என்னும் முக்கண் அம்மானும்
தெருள்கொள் பிரமன் அம்மானும் தேவர்கோனும் தேவரும்
இருள்கள் கடியும் முனிவரும் ஏத்தும் அம்மான் திருமலை
மருள்கள் கடியும் மணி மலை திருமாலிருஞ்சோலை மலையே
என்னுடைய ஸ்வாமியே! க்ருபையைத் தந்தருளவேண்டும் என்று முக்கண்ணனான ருத்ரனும், ஞானம் போன்ற குணங்களையுடைய ப்ரஹ்மாவும் தேவர்களின் தலைவனான இந்த்ரனும் முப்பத்து முக்கோடி தேவர்களும் அஜ்ஞானம் முதலிய தமஸ்ஸுக்களை போக்கக்கடவரான ரிஷிகளும் ஸ்தோத்ரம் பண்ணும்படியான ஸ்வாமியின் இருப்பிடமான திருமலையாய் எல்லா விதமான கலக்கங்களையும் போக்கக்கூடிய மிகவும் இனிமையான சிறந்த மலை திருமாலிருஞ்சோலை மலையே.
எட்டாம் பாசுரம். திருமலை தொடக்கமான திவ்யதேசங்களைப்போலே என்னுடைய எல்லா அவயவங்களையும் விரும்பி ஒரு நொடியும் பிரியாமல் இருக்கிறான். இப்படியும் ஒருவனா! என்று ஆச்சர்யப்படுகிறார்.
திருமாலிருஞ்சோலை மலையே திருப்பாற்கடலே என் தலையே
திருமால் வைகுந்தமே தண் திருவேங்கடமே எனதுடலே
அருமா மாயத்தெனதுயிரே மனமே வாக்கே கருமமே
ஒருமா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே
திருமாலிருஞ்சோலை மலையையும் திருப்பாற்கடலையும் என் தலையையும், திருமகள் கேள்வனானவனின் பரமபதத்தையும் குளிர்ந்த திருவேங்கடம் என்கிற பெரிய திருமலையையும் என் சரீரத்தையும் கடத்தற்கரியதாய் மிகப் பெரியதாய் ஆச்சர்யமான ப்ரக்ருதியோடே சேர்ந்து படைக்கப்பட்ட என் ஆத்மாவையும் மனஸ்ஸையும் வாக்கையும் செயல்களையும் ஒரு க்ஷணத்தில் ஒரு சிறு பகுதியும் பிரியாமல் இருக்கிறான். என்னைப் பெறுவதற்காக காலத்துக்கு உட்பட்ட எல்லா பொருள்களுக்கும் காரணனான ஒருவனாயிருக்கிறானே!
ஒன்பதாம் பாசுரம். ஜகத் ஸ்ருஷ்டி முதலியவற்றுக்குக் காரணமான ஸர்வேச்வரன் தம்முடைய சரீரம் முதலியவற்றை விரும்பியதைக் கண்டு, அத்தை அவன் விடும்படிக்கு, தன் திருவுள்ளத்தைக் குறித்து “அவன் எழுந்தருளி இருக்கும் திருமலையை விடாமல் வணங்கு” என்று அருளிச்செய்கிறார்.
ஊழி முதல்வன் ஒருவனே என்னும் ஒருவன் உலகெல்லாம்
ஊழி தோறும் தன் உள்ளே படைத்துக் காத்துக் கெடுத்துழலும்
ஆழி வண்ணன் என் அம்மான் அந்தண் திருமாலிருஞ்சோலை
வாழி மனமே! கை விடேல் உடலும் உயிரும் மங்கவொட்டே
காலத்துக்கு உட்பட்ட எல்லாப் பொருள்களுக்கும் தனிக் காரணன் என்று சொல்லப்பட்ட, தனித்துவம் வாய்ந்தவனாய், எல்லா லோகங்களையும் எல்லாக் காலத்திலும் தன் ஸங்கல்பத்தின் சிறு பகுதிக்குள் படைத்து, காத்து, அழித்து, இதுவே தொழிலாகச் செய்யும் எல்லைகாணமுடியாத தன்மையை உடையவனாய் இந்த உறவாலே எனக்கு ஸ்வாமியானவனின் அழகிய குளிர்ந்த திருமாலிருஞ்சோலையை, மனமே! நமக்கு த்யாஜ்யமான தேஹம் ப்ராணன் முதலியவை மங்கும்படி, நெருங்கி அடையப்பாராய். இதை அவன் நம் கார்யம் செய்து முடிக்கும்வரை கைவிடாதே. இத்தாலே நீ வாழ்ச்சியடைய வேண்டும்.
பத்தாம் பாசுரம். இப்படித் தான் திருமலையை அடைந்திருந்தும் அவனுடைய ஆசையை நிவர்த்தி செய்வதற்காக ப்ரக்ருதி மற்றும் ப்ராக்ருதமான பொருள்களின் தாழ்ச்சியைக் காட்டி, இப்படிப்பட்ட மாயை நசிக்கும்படி அருளவேண்டும் என்று ப்ரார்த்திக்கிறார்.
மங்கவொட்டு உன் மா மாயை திருமாலிருஞ்சோலை மேய
நங்கள் கோனே! யானே நீயாகி என்னை அளித்தானே!
பொங்கைம்புலனும் பொறியைந்தும் கருமேந்திரியம் ஐம்பூதம்
இங்கு இவ்வுயிரேய் பிரகிருதி மானாங்கார மனங்களே
திருமாலிருஞ்சோலை மலையிலே நித்யவாஸம் பண்ணி என்போல்வார்க்கு ஸ்வாமியானவனாய் நானே என் குறைகளைப் போக்கிக்கொள்ளுமாபோலே வேறுபாடற நீதானேயாகி என்னை ரக்ஷித்தவனே! கிளர்ந்து புலப்படும் சப்தம் முதலிய ஐந்து விஷயங்களும், அதிலே ஈடுபடும் கண் முதலிய ஐந்து இந்த்ரியங்களும், அவற்றில் ஈடுபடுவதற்கு உதவும் ஐந்து கர்மேந்த்ரியங்களும், பஞ்ச பூதங்களும், ஸம்ஸாரத்தில் ஜீவனோடு சேர்ந்து படைக்கப்படும் மூலப்ரக்ருதியும், மஹான் என்கிற தத்வமும், அஹங்காரம் என்கிற தத்வமும், மனஸ்ஸும் ஆகிற உன்னுடைய மிகவும் ஆச்சர்யமான ப்ரக்ருதி மற்றும் ப்ராக்ருதங்களான இவை எல்லாம் மங்கும்படி இசைந்து அருள வேண்டும்.
பதினொன்றாம் பாசுரம். இத்திருவாய்மொழிக்குப் பலமாக இவர் ஆசைப்பட்டபடி ஈச்வரன் விரோதிகளை போக்குவதில் ஈடுபட்டதைச் சொல்லி, அதுவே பலமாக அருளிச்செய்கிறார்.
மானாங்கார மனம் கெட ஐவர் வன்கையர் மங்கத்
தானாங்காரமாய்ப் புக்குத் தானே தானே ஆனானைத்
தேனாங்காரப் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல் ஆயிரத்துள்
மானாங்காரத்திவை பத்தும் திருமாலிருஞ்சோலை மலைக்கே
மஹத், அஹங்காரம், மனம் ஆகியவை மூலமாக இருக்கும் இந்த சரீரத்துடனான ஸம்பந்தம் நசிக்கும்படியும் மிகவும் வலிய ஐந்து இந்த்ரியங்கள் மங்கும்படியும் தானே பெரிய அபிமானத்துடன் புகுந்து என் ஆத்மா மற்றும் ஆத்மாவின் உடைமைகள் எல்லாம் தன் அதீனத்தில் இருக்கும்படி ஆனவனை, வண்டுகளின் செருக்கை உடைய பொழிலை உடைய திருநகரிக்குத் தலைவரான நம்மாழ்வார் அருளிச்செய்த ஆயிரம் பாசுரங்களுக்குள் திருமாலிருஞ்சோலை மலைக்கேயான இந்தப் பத்துப் பாசுரங்களும் மஹத் அஹங்காரம் மனம் ஆகியவற்றால் சொல்லப்பட்ட எல்லாப் பொருள்களின் நிவ்ருத்தியில் நோக்காக இருக்கும். அவை தன்னடையே கழியும் என்று கருத்து.
எம்பெருமான் ஆழ்வாரைப் பரமபதத்துக்கு அழைத்துப்போகத் தானே கருடவாஹனத்திலே வந்தருளினான். ஆழ்வாரும் எம்பெருமான் தனக்கு முதலில் இருந்து செய்த நன்மைகளை எண்ணிப்பார்த்து, நாம் இதற்காக ஒன்றுமே செய்யாமல், அவனே நம்மைக் கைக்கொள்ளுகிறான் என்றிருந்தார். அந்த ஸமயத்தில் ஆழ்வாருக்கு ஒரு எண்ணம் ஏற்பட்டது. இத்தனை காலம் நாம் ஒன்றும் செய்யாமல் இருக்க இன்று எப்படி எம்பெருமானின் கடாக்ஷம் நம் விஷயத்தில் பலித்தது என்று ஒர் ஸந்தேஹம் ஏற்பட அதை எம்பெருமானிடத்திலேயே கேட்டார். எம்பெருமானோ அதற்கு பதில் சொல்ல முடியாமல் இருக்க, ஆழ்வார் எம்பெருமானின் நிர்ஹேதுக (இயற்கையான) க்ருபையைப் புரிந்து கொண்டு, நம் விஷயத்தில் எம்பெருமான் இப்படி விசேஷ கடாக்ஷம் செய்தானே என்று மகிழ்ந்து களிக்கிறார்.
முதல் பாசுரம். தற்செயலாக நான் திருமாலிருஞ்சோலை மலையை அடையும்போது எம்பெருமான் பிராட்டியுடன் என் நெஞ்சிலே வந்து புகுந்தான் என்கிறார்.
திருமாலிருஞ்சோலை மலை என்றேன் என்னத்
திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
குருமா மணி உந்து புனல் பொன்னித் தென்பால்
திருமால் சென்று சேர்விடம் தென்திருப்பேரே
நாட்டில் வார்த்தை சொல்வதைப் போலே நான் திருமாலிருஞ்சோலை மலை என்றேன். அப்படிச் சொன்ன அளவிலே ச்ரிய:பதியாய் பரிபூர்ணனான தான் வந்து என் நெஞ்சுக்குள்ளே பூர்ணமாகப் புகுந்தான். அந்தத் திருமால் சென்று சயனித்தருளின இடம் மிகவும் உயர்ந்த மாணிக்கங்களை உந்தித் தள்ளுகிற நீரையுடைய காவிரியின் தென்பக்கத்தில் இருக்கும் அழகிய திருப்பேர்.
இரண்டாம் பாசுரம். முன்பு குறைவாளரைப் போலே இன்று இங்கிருந்து போகேன் என்று சொல்லிக்கொண்டு என் நெஞ்சிலே பூர்ணனாய்ப் புகுந்தான் என்கிறார்.
பேரே உறைகின்ற பிரான் இன்று வந்து
பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
காரேழ் கடலேழ் மலை ஏழுலகுண்டும்
ஆரா வயிற்றானை அடங்கப் பிடித்தேனே
திருப்பேரிலே நிரந்தரமாக வாழும் ஸர்வேச்வரன் முன்பு குறைவாளனாய் இருந்தாற்போலே இன்று வந்து போகேன் என்று என் நெஞ்சிலே பரிபூர்ணமாம்படிப் புகுந்தான். மேகங்கள் ஏழையும், ஸமுத்ரங்கள் ஏழையும், குல பர்வதங்கள் ஏழையும் லோகங்களை எல்லாம் அமுதுசெய்தும் நிறையாத வயிற்றை உடையானை என்னுள்ளே எல்லாவிதத்திலும் பரிபூர்ணமாய் அனுபவிக்கப் பெற்றேன்.
மூன்றாம் பாசுரம். அடியார்களுக்கு எளியவனான ஸர்வேச்வரனுடைய திருவடிகளை அடைவது எளிதாகி, அதன் காரணமாக எல்லா துக்கங்களும் விலகப் பெற்றேன் என்கிறார்.
பிடித்தேன் பிறவி கெடுத்தேன் பிணி சாரேன்
மடித்தேன் மனை வாழ்க்கையுள் நிற்பதோர் மாயையை
கொடிக் கோபுர மாடங்கள் சூழ் திருப்பேரான்
அடிச்சேர்வது எனக்கு எளிதாயினவாறே
கொடிகளையுடைய கோபுரங்களாலும் மாடங்களாலும் சூழப்பட்ட திருப்பேரை இருப்பிடமாக உடைய ஸுலபனான எம்பெருமானின் திருவடிகளை அடைவது எனக்கு எளிதான பின்பு அவற்றைப் பெற்றேன். அதன் காரணமாக பிறவித் தொடர்பை அறுத்தேன். அதனால் வரும் துக்கங்களைச் சேரேன். ஸம்ஸாரத்தில் நிற்கையாகிற அஜ்ஞானத்தைப் போக்கினேன்.
நான்காம் பாசுரம். எனக்குப் பரமபதத்தைக் கொடுப்பதாக இருந்தான். அதனாலே என் கண்ணும் நெஞ்சும் களிக்கும்படி ஆனந்தித்தேன் என்கிறார்.
எளிதாயினவாறென்று என் கண்கள் களிப்பக்
களிதாகிய சிந்தையனாய்க் களிக்கின்றேன்
கிளி தாவிய சோலைகள் சூழ் திருப்பேரான்
தெளிதாகிய சேண் விசும்பு தருவானே
வருந்தின என் கண்கள் கிடைத்தற்கரிய பலம் எளிமையாகக் கிடைக்கிறதே என்று களிக்கும்படி ஆனந்தம் நிறைந்த நெஞ்சை உடையவனாகக் கொண்டு ஆனந்தித்தேன். அதற்குக் காரணம் கிளிகள் தாவும்படி செறிந்த சோலைகள் சூழ்ந்த திருப்பேரிலே ஸுலபனாக இருப்பவன், மிகவும் தெளிவையுடைய ப்ரகாசமான பரமபதத்தைக் கொடுப்பதாக இருந்ததே.
ஐந்தாம் பாசுரம். இப்படிப் புருஷார்த்தத்தைக் கொடுப்பதற்காக என்னுடைய எல்லா விரோதிகளையும் போக்கினான் என்கிறார்.
வானே தருவான் எனக்கா என்னோடு ஒட்டி
ஊனேய் குரம்பை இதனுள் புகுந்து இன்று
தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான்
தேனேய் பொழில் தென்திருப்பேர் நகரானே
வண்டுகள் நிறைந்த பொழிலையுடைத்தாய் அழகியதான திருப்பேர் நகரிலே எழுந்தருளி இருப்பவன், எனக்குப் பரமபதத்தையே தருவதாக எண்ணி, என்னோடு சேர்ந்து சபதம் செய்து மாம்ஸம் நிறைந்த கூடான இந்த சரீரத்துக்குள்ளே இன்று தானே வந்து புகுந்து, அவனைப் பிரிந்து நாம் தடுமாறுவதற்குக் காரணமான புண்ய பாபங்களைப் போக்கினான்.
ஆறாம் பாசுரம். மற்றை உகந்தருளின (எம்பெருமான் ஆசைப்பட்டு வாழும்) தேசங்களை விட என் நெஞ்சில் அதிகம் ஆசை கொண்டு இங்கே புகுந்து அவன் அனுபவிக்க அதைக் கண்டு ஆனந்தி ஆனேன் என்கிறார்.
திருப்பேர் நகரான் திருமாலிருஞ்சோலைப்
பொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து
இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
விருப்பே பெற்று அமுதம் உண்டு களித்தேனே
என்னை அடைவதற்காக திருப்பேர் நகரிலேயும் பின்பு இன்னும் அருகில் உள்ள திருமாலிருஞ்சோலை மலையிலும் நிரந்தரமாக வாழும் மஹோபகாரகன் இன்று தானே வந்து “இங்கேயே இருப்பேன்” என்று எண்ணி என் நெஞ்சு நிறையும்படிப் புகுந்தான். அவனுடைய பெரிய ஆசையைப் பெற்று குணானுபவம் என்னும் அமுதத்தைப் பருகி ஆனந்தித்தேன்.
ஏழாம் பாசுரம். இப்படி என் நெஞ்சில் நிரந்தரமாக இருப்பவனை அனுபவித்துக் களிக்கிற எனக்கு என்ன குறை உண்டு என்கிறார்.
உண்டு களித்தேற்கு உம்பர் என் குறை? மேலைத்
தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்
வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப்பேரான்
கண்டு களிப்பக் கண்ணுள் நின்று அகலானே
வண்டுகள் களிக்கும் பொழில் சூழ்ந்த திருப்பேர்நகரான் தன்னை எப்பொழுதும் கண்டு அனுபவிக்கும்படி என் கண்ணுக்குள்ளே நின்று போகாமல் இருக்கிறான். இப்படி அனுபவித்து ஆனந்தித்த எனக்கு மேலே பரமபதத்திலே போய் அனுபவிக்க என்ன குறை இருந்தது? அதிகமான தொண்டு மேலெழுந்து முடிவிலே தொழுகைக்கு வாசகமான “நம: என்னும் வார்த்தையைச் சொன்னேன்.
எட்டாம் பாசுரம். எல்லா விதத்திலும் மிகவும் இனியவனாகக் கொண்டு என் நெஞ்சிலே த்ருடமாகப் புகுந்தான் என்கிறார்.
கண்ணுள் நின்றகலான் கருத்தின் கண் பெரியன்
எண்ணில் நுண் பொருள் ஏழிசையின் சுவை தானே
வண்ண நன் மணி மாடங்கள் சூழ் திருப்பேரான்
திண்ணம் என் மனத்துப் புகுந்தான் செறிந்தின்றே
வெளிக்கண்களுக்கு எப்பொழுதும் அனுபவிக்கும்படி அகலாமல் இருக்கிறான். என்னைப் பரமபதத்தில் கொண்டுபோய் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மிகவும் பெரியவனாய் இருக்கிறான். எண்ணிப்பார்க்கில் மிகவும் நுண்ணிய தன்மைகளை உடையவனாய், தானே ஏழ் இசையின் சுவைகளை உடையவனாய், பல வர்ணங்களில் உயர்ந்ததான மாணிக்கங்களாலே அமைக்கப்பெற்ற மாடங்கள் சூழ்ந்த திருப்பேரிலே வாழ்பவன் என் மனதில் நிர்ஹேதுகமாக (காரணமே இல்லாமல்) இன்று த்ருடமாம்படிப் புகுந்தான்.
ஒன்பதாம் பாசுரம். “இன்று காரணமேயில்லாமல் எனக்கு நன்மை செய்தவன் முன்பு என்னை கைவிட்டிருந்ததற்குக் காரணம் என்ன?” என்று கேட்கவேண்டியிருந்தது என்கிறார்.
இன்றென்னைப் பொருள் ஆக்கித் தன்னை என்னுள் வைத்தான்
அன்று என்னைப் புறம் போகப் புணர்த்தது என் செய்வான்
குன்றென்னத் திகழ் மாடங்கள் சூழ் திருப்பேரான்
ஒன்று எனக்கருள் செய்ய உணர்த்தல் உற்றேனே
அஸத்தாக இருந்த என்னை இன்று ஸத்தான வஸ்துவாக்கி மிகவும் உயர்ந்த இனிமையை உடையவனான தன்னை என் நெஞ்சுள்ளே வைத்தான். முற்காலத்தில் என்னை மற்ற விஷயங்களில் ஈடுபட்டு இருக்கும்படி எண்ணியிருந்தது எதற்காக? குன்றென்று சொல்லும்படி விளங்குகிற மாடங்கள் சூழ்ந்த திருப்பேர் நகரில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமான் இவை இரண்டில் ஒன்றுக்கான காரணத்தை அருளிச்செய்வதற்காக நான் எதிர்பார்த்திருக்கிறேன்.
பத்தாம் பாசுரம். கைங்கர்யத்தைப் பெற்றுக்கொள்பவனான அவன் திருவடிகளை அடிமைசெய்து பெற்றேன். இனி வரும் காலம் எல்லாம் இதுவே போதும் என்கிறார்.
உற்றேன் உகந்து பணி செய்து உன பாதம்
பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய்
கற்றார் மறை வாணர்கள் வாழ் திருப்பேராற்கு
அற்றார் அடியார் தமக்கு அல்லல் நில்லாவே
என் முயற்சியாக எந்த ஒரு காரணமும் இல்லாமல் உன் திருவடிகளை அடைந்தேன். ப்ரீதியால் தூண்டப்பட்டு வாசிகமான கைங்கர்யத்தைச் செய்து உன்னுடைய திருவடிகளைப் பெற்றேன். இயற்கையான பந்துவானவனே! இந்தக் கைங்கர்யமே எனக்கு எப்பொழுதும் வேண்டுவது. ஆசார்யன் மூலமாக வேதார்த்தங்களைக் கற்று அதை நடத்தவல்லவர்கள் பகவதனுபவத்துடன் வாழும் திருப்பேரிலே எழுந்தருளியிருக்கும் உனக்காகவே இருக்கும் அடியவர்களுக்கு துன்பங்கள் தன்னடையே நில்லாதே.
பதினொன்றாம் பாசுரம். இத்திருவாய்மொழிக்குப் பலமாகப் பரமபதத்தை ஆள்வதை அருளிச்செய்கிறார்.
நில்லா அல்லல் நீள் வயல் சூழ் திருப்பேர் மேல்
நல்லார் பலர் வாழ் குருகூர்ச் சடகோபன்
சொல்லார் தமிழ் ஆயிரத்துள் இவை பத்தும்
வல்லார் தொண்டர் ஆள்வது சூழ் பொன் விசும்பே
துக்கத்துக்கு இடமல்லாத தேசமாய் பெரிய பரப்பை உடைய வயல்களாலே சூழப்பட்ட திருப்பேர் விஷயமாக உயர்ந்த மஹான்கள் பலரும் திருவாய்மொழி கேட்டு வாழும் திருநகரிக்குத் தலைவரான நம்மாழ்வாருடைய சொற்கள் சேர்ந்திருக்கும் ஆயிரம் தமிழ் பாசுரங்களுக்குள் இவை பத்தையும் கற்க வல்லவரான தொண்டர்கள் தாங்கள் நிர்வாஹகராய் நடத்துவது, பெரியதாகச் சூழ்ந்திருக்கும் பொன்மயமான பரமபதமே.
பரமபதத்துக்கு விரைந்து செல்லவேண்டும் என்ற எண்ணம் ஆழ்வாருக்கு ஏற்பட, எம்பெருமானுக்கும் இவரைப் பரமபதத்துக்கு அழைத்து போகும் ஆசை மிகவும் அதிகமாக, அதற்கு முன் ஆழ்வாருக்குப் பரமபதத்தை அடைவதில் ஆசையை மேலும் அதிகமாக்க வேண்டும் என்று எண்ணி வேதாந்தத்தில் சொல்லப்பட்ட அர்ச்சிராதி கதியைக் காட்டிக்கொடுத்தான். ஆழ்வார் அதை அனுபவித்து அந்த அர்ச்சிராதி மார்க்கத்தில் ஸ்ரீவைஷ்ணவர்கள் எல்லோரும் போகும்படியையும் பரமபதத்தை அடைந்து அங்கே நித்யஸூரிகளுடன் இருப்பதையும் இந்தப் பதிகத்தில் வெளியிடுகிறார், தான் பெற்ற பேறு எல்லா ஸ்ரீவைஷ்ணவர்களுக்கும் கிடைக்கும் என்று அவர்கள் விச்வஸிப்பதற்காக.
முதல் பாசுரம். அர்சிராதி மார்க்கத்தில் செல்வதற்கு முற்பட்டவர்களாய் பூர்ணமாக இனிமையான ஸர்வேச்வரனின் அடியார்களான பாகவதர்களைக் கண்டு, அசையும் மற்றும் அசையாப் பொருள்களையுடைய இந்த ஜகத்தில் ஏற்பட்ட மாற்றங்களை அருளிச்செய்கிறார்.
சூழ் விசும்பணி முகில் தூரியம் முழக்கின
ஆழ் கடல் அலை திரை கையெடுத்தாடின
ஏழ் பொழிலும் வளமேந்திய என்னப்பன்
வாழ் புகழ் நாரணன் தமரைக் கண்டுகந்தே
எனக்கு தனித்துவம் வாய்ந்த பந்துவாய் ஆனந்தத்தை அளிக்கும் குணங்களை உடைய நாராயணனுக்கு தனித்துவம் வாய்ந்த பந்துக்களான அடியார்களைக் கண்டு மகிழ்ந்து எல்லா இடத்திலும் சூழ்ந்த ஆகாசத்திலே திரண்டிருக்கும் மேகங்கள் தூர்ய கோஷத்தைப் பண்ணின. ஆழமான கடல்கள் அலைந்து வருகிற திரையை கையாக எடுத்து ஆடின. ஏழு தீவுகளும் பரிசு ரூபமான நல்ல வஸ்துக்களை ஏந்தின.
இரண்டாம் பாசுரம். இயற்கையான தலைவனான நாராயணனுக்கு அடியார்களானவர்களைக் கண்டு உலகத்தார் கௌரவித்த விதத்தை அருளிச்செய்கிறார்.
நாரணன் தமரைக் கண்டுகந்து நல்நீர்முகில்
பூரண பொற்குடம் பூரித்தது உயர் விண்ணில்
நீரணி கடல்கள் நின்றார்த்தன நெடுவரைத்
தோரணம் நிரைத்து எங்கும் தொழுதனர் உலகே
இயற்கையான தலைவனான நாராயணனுக்கு அடியார்களைக் கண்டு உகப்பையுடைத்தாய் சுத்தமான ஜலத்தாலே பூர்ணமான மேகமானது உயர்ந்த ஆகாசத்திலே பூர்ணமான பொற்குடங்களாக நிறைந்தது. நிரைக் கொண்டிருக்கும் கடல்களானவை நின்று கோஷித்தன. நெடிய மலைகளாகிற தோரணங்களை அணிவகுத்து உலகிலுள்ளார் எல்லா இடத்திலும் தொழுதனர்.
மூன்றாம் பாசுரம். த்ரிவிக்ரமன் எம்பெருமானின் அடியார்கள் முன்னிலையில் ஆதிவாஹிக லோகத்திலுள்ளவர்கள் வந்து வரவேற்ற விதத்தை அருளிச்செய்கிறார்.
தொழுதனர் உலகர்கள் தூப நல் மலர் மழை
பொழிவனர் பூமி அன்றளந்தவன் தமர் முன்னே
எழுமின் என்று இரு மருங்கிசைத்தனர் முனிவர்கள்
வழியிது வைகுந்தற்கு என்று வந்தெதிரே
மஹாபலி “என்னது” என்று அபிமானித்த அன்று பூமியை தனக்கே ஆக்கிக் கொள்ளும்படி அளந்தவனின் அடியார்களுடைய முன்னிலையில் தூபத்தை ஸமர்ப்பித்து, நல்ல புஷ்ப மழைகளை பொழிந்து, அவ்வோ உலகங்களில் உள்ளவர்களுடையவர்கள் அஞ்சலி செய்தவர்கள். அந்த உலகங்களில் உள்ள நாவடக்கம் உடைய முனிவர்கள் ஸ்ரீவைகுண்டத்துக்குப் போகுமவர்களுக்கு வழி இது என்று சொல்லி எதிரே வந்து “எழுந்தருளலாமே” என்று இரண்டு பக்கத்திலும் நின்றுகொண்டு ஆசையாகச் சொன்னார்கள்.
நான்காம் பாசுரம். பூர்த்தியான இனிமையை உடையவனான திருமாலின் அடியார்களைக் கண்டு தேவலோகத்திலுள்ளவர்கள் வரவேற்ற விதத்தை அருளிச்செய்கிறார்.
எதிர் எதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர்
கதிரவர் அவர் அவர் கைந்நிரை காட்டினர்
அதிர் குரல் முரசங்கள் அலை கடல் முழக்கொத்த
மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே
மதுவை வெளியிடும் திருத்துழாயைத் திருமுடியிலே உடைய திருமாலின் அடியார்களுக்கு கண் இமைக்காதவர்களான தேவர்கள் இவர்கள் போகிறவழிக்கு முன்னே இருப்பிடங்களைச் செய்தார்கள். பன்னிரண்டு ஆதித்யர்களும் தம் தம் நிலையிலே கிரணங்களாகிற கைகளை நிரையாகக் கொடுத்தார்கள். அவர்கள் அடித்த முரசங்கள் அதிருகிற குரலானவை அலை கடலிலே ஓசையைப் போன்று இருந்தன.
ஐந்தாம் பாசுரம். வருணன் இந்த்ரன் ப்ரஜாபதிகளானவர்கள் திருமாலுக்கு அடியார்கள் என்று ஆதரித்த விதத்தை அருளிச்செய்கிறார்.
மாதவன் தமர் என்று வாசலில் வானவர்
போதுமின் எமதிடம் புகுதுக என்றலும்
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
வேத நல் வாயவர் வேள்வியுள் மடுத்தே
வருணன் இந்த்ரன் ப்ரஜாபதிகளாகிற ஆதிவாஹிக தேவர்கள் தங்கள் இருப்பிடங்களின் வாசலில் வந்து நின்று திருமால் அடியார்கள் இவர்கள் என்று ஆதரித்து “இங்கே எழுந்தருளுங்கள், எங்கள் இருப்பிடங்களில் ப்ரவேசியுங்கள்” என்று பரிசுகளுடன் வரவேற்ற அளவிலே, வேதத்தைச் சொல்லுவதாகிற சிறப்பை உடையவர்கள் யாகம் முதலிய தர்மங்களை நமக்குக் கிடைத்ததே என்று ஆசையுடன் ஸமர்ப்பித்து கின்னரர்களும் கருடர்களும் கீதங்களைப் பாடினர்.
ஆறாம் பாசுரம். “எல்லாருக்கும் தலைவன் என்பதற்கு அடையாளமாகத் திருவாழியை உடையவனுக்கு அடியவரான நீங்கள் இந்த மேலுலகத்தை ஆளுங்கள்” என்று ஆதிவாஹிகர்களின் மஹிஷிகள் வாழ்த்தினவிதத்தை அருளிச்செய்கிறார்.
வேள்வியுள் மடுத்தலும் விரை கமழ் நறும் புகை
காளங்கள் வலம்புரி கலந்தெங்கும் இசைத்தனர்
ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று
வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே
வைதிகர்கள் எல்லா தர்மங்களையும் ஸமர்ப்பித்தவுடன் பரிமளத்தை வெளியிடும் ஸுகந்தமான தூபங்கள் எல்லாவிடமும் கலந்து, காளங்களையும், வலம்புரிச் சங்குகளையும் கொண்டு ஒலி எழுப்பினார்கள். இந்த அடியார்களைக் கண்ட ஆனந்தத்தால், ஒளி படைத்த கண்களையுடைய தேவஸ்த்ரீகள் திருவாழியையுடைய ஸர்வேச்வரனுக்கு அடியார்களான நீங்கள் இந்த ஸ்வர்க்கம் முதலான இடங்களை ஆளுங்கள் என்று ப்ரீதியுடன் வாழ்த்தினார்கள்.
ஏழாம் பாசுரம். திருப்பாற்கடலில் சயனித்திருப்பவனாய் எல்லாருக்கும் தலைவனாய் அர்ச்சாவதாரத்தில் எளிமையானாவனாய் இருப்பவனின் அடியார்களை மருத் கணங்களும் வஸு கணங்களும் பின்தொடர்ந்து ஸ்தோத்ரம் பண்ணின விதத்தை அருளிச்செய்கிறார்.
மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும்
தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர் தொடு கடல்
கிடந்த எங்கேசவன் கிளரொளி மணி முடி
குடந்தை எங்கோவலன் குடி அடியார்க்கே
ஆழமான கடலிலே சயனித்தருளி இருப்பவனாய், எனக்கும் ப்ரஹ்மா முதலியவர்களையும் படைத்தவனான கேசவனாய் கிளர்ந்த ஒளியுடையவனாய் மணிமயமான கிரீடத்தை அணிந்தவனாய் திருக்குடந்தையிலே சயனித்திருப்பவனான க்ருஷ்ணனுக்கு பரம்பரையாக அடியார்களானவர்களை தேவஸ்த்ரீகள் வாழ்த்தினவுடன் மருதர்களும் வஸுக்களும் எல்லாவிடமும் தொடர்ந்து சென்று ஸ்தோத்ரம் செய்தார்கள்.
எட்டாம் பாசுரம். அடியார்களுக்கு எளியவனான க்ருஷ்ணனின் அடியார்கள் என்கிற ஆசையால் பரமபதவாஸிகள் தங்கள் நாட்டெல்லையில் வந்து எதிர்கொள்ள, அடியார்கள் பரமதத்தைக் கிட்டினார்கள் என்று அருளிச்செய்கிறார்.
குடியடியார் இவர் கோவிந்தன் தனக்கென்று
முடியுடை வானவர் முறை முறை எதிர்கொள்ளக்
கொடியணி நெடு மதிள் கோபுரம் குறுகினர்
வடிவுடை மாதவன் வைகுந்தம் புகவே
அடியார்களுக்காக அவதரித்த கோவிந்தனுக்கு என்றே இருக்கும் குலத்தையுடைய அடியார்கள் என்று ஈச்வரனைப் போலே கிரீடம் முதலியவைகளையுடைய நித்யஸூரிகள் தங்கள் நிலைக்கேற்ப இவர்களை வந்து எதிர்கொள்ள, அலங்கரிக்கப்பட்ட திருமேனியை உடையவனாய் பிராட்டியுடன் எழுந்தருளியிருக்கும் ஸர்வேச்வரனுடைய ஸ்ரீவைகுண்டத்திலே புகுவதற்கு கொடியாலே அலங்கரிக்கப்பட்ட பெரிய மதிள்களையுடைய கோபுரவாசலில் புகுந்தார்கள்.
ஒன்பதாம் பாசுரம். “ஸ்ரீவைகுண்டநாதனுடைய அடியார்கள் நமக்கு விரும்பத்தக்கவர்கள்” என்று, திருவாசல் காக்கும் முதலிகள் ஆசையுடன் இருந்த விதத்தை அருளிச்செய்கிறார்.
வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்
வைகுந்தன் தமர் எமர் எமதிடம் புகுதென்று
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே
ஸ்ரீவைகுண்டத்தில் சென்று புகுந்தவுடன், திருவாசல் காக்கும் முதலிகள் “ஸ்ரீவைகுண்டநாதனின் விருப்பத்துக்கு ஆட்பட்டவர்கள் நமக்கும் விரும்பத்தக்கவர்கள். எங்கள் இருப்பிடத்தில் வரவேண்டும்” என்று உகந்தார்கள். அத்தேசத்திலே கைங்கர்யபரர்களான அமரர்களும் குணானுபவபரர்களான முனிவர்களும் “பூமியிலே தாழ்ந்த விஷயங்களில் மூழ்கியிருந்தவர்கள் பரமபதத்திலே புகுவது ஒரு பாக்யமே!” என்று உகந்தார்கள்.
பத்தாம் பாசுரம். ஸ்ரீவைகுண்டநாதனின் ஆணையின் பேரில் நித்யஸூரிகளும் திவ்யாப்ஸரஸ்ஸுக்களும் அடியார்களை ஆதரித்த விதத்தை அருளிச்செய்கிறார்.
விதி வகை புகுந்தனர் என்று நல் வேதியர்
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்
நிதியும் நற்சுண்ணமும் நிறை குட விளக்கமும்
மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே
“நம்முடைய பாக்யம் அடியாக ஈச்வரனின் ஆணையின் பேரில் இந்த அடியார்கள் வந்து புகுந்தார்கள்” என்று சிறந்தவர்களாக வேதாந்தத்தில் காட்டப்பட்ட நித்யஸூரிகள் தங்கள் இருப்பிடங்களில் உபசாரங்களுடன் அடியார்களுடைய திருவடிகளை விளக்கினார்கள். அடியார்களுக்கு மிகச் சிறந்த தனமான எம்பெருமானின் திருவடி நிலைகளையும் எம்பெருமான் திருமேனி ஸம்பந்தம் பெற்றதால் சிறந்ததான திருச்சூர்ணத்தையும் பூர்ண கும்பங்களையும் மங்களதீபங்களையும் பூர்ணசந்த்ரனைப் போன்ற முகத்தையும் மடப்பத்தையும் உடைய திவ்ய அப்ஸரஸ்ஸுக்கள் ஏந்திக்கொண்டு வந்தார்கள்.
பதினொன்றாம் பாசுரம். இத்திருவாய்மொழிக்குப் பலமாக பகவதனுபவத்தை அருளிச்செய்கிறார்.
வந்தவர் எதிர் கொள்ள மாமணி மண்டபத்து
அந்தமில் பேரின்பத்து அடியரோடிருந்தமை
கொந்தலர் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே
பிராட்டியுடன் இருக்கும் எம்பெருமானே வந்து எதிர்கொள்ள, திருமாமணி மண்டபத்தில் எல்லை இல்லாத பெரிய ஆனந்தத்தையுடைய ஸூரிகளோடே கூடி இருந்த விதத்தை, பூங்கொத்து அலருகிற பொழிலையுடைய திருநகரிக்குத் தலைவரான நம்மாழ்வார் அருளிச்செய்ததாய் பல விதமான சந்தஸ்ஸுக்களை உடைய ஆயிரம் பாசுரங்களுக்குள் இப்பத்தையும் அனுஸந்திக்கவல்லார்கள் பகவத் குணங்களை அனுபவிக்கப் பெறுவார்கள்.
பரமபதத்தை மானஸீகமாக அனுபவித்த ஆழ்வார், தன்னுடைய திருக்கண்களை விழித்துப் பார்த்துத் தான் இன்னும் ஸம்ஸாரத்தில் இருப்பதைப் பார்த்து, மிகவும் வருத்தப்பட்டார். இனியும் தன்னால் தரிக்க முடியாது என்றுணர்ந்து எம்பெருமானைக் கதறி அழைத்தும், பிராட்டியின் மீது ஆணையிட்டும் எம்பெருமானிடத்தில் தன்னைப் பரமபதத்தில் சேர்த்துக்கொள்ளும்படி ப்ரார்த்திக்க, எம்பெருமானும் இவர் பிரிவால் இவரை விடவும் வருந்தி, உடனே பரமபதத்தில் இருந்து பிராட்டியுடன் தன்னுடைய கருட வாஹனத்தில் புறப்பட்டு ஆழ்வார் இருந்த இடத்துக்கு வந்து, ஆழ்வாரைத் தானே பரமபதத்துக்கு அழைத்துச் சென்றான். ஆழ்வாரும் ஆனந்தமாக “அவாவற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன்” என்று தானே ஆனந்தத்துடன் சொல்லி இந்த ப்ரபந்தத்தைத் தலைக்கட்டுகிறார்.
முதல் பாசுரம். ஸ்ருஷ்டி முதலிய கார்யங்களாலே முதலிலிருந்து உபகாரகனாய் இருந்து, வடிவழகைக் காட்டி ருசியை உண்டாக்கி, உன்னை விட்டு வாழ முடியாதபடி எனக்கு அனுபவத்தைக் கொடுப்பதாக ஆசையுடன் வந்த நீ, இனியும் குணங்களை மட்டும் காட்டி வஞ்சித்து அகன்று போக விட மாட்டேன் என்கிறார்.
முனியே நான்முகனே! முக்கண்ணப்பா! என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே! என் கள்வா!
தனியேன் ஆருயிரே! என் தலை மிசையாய் வந்திட்டு
இனி நான் போகலொட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே
ஸ்ருஷ்டி செய்யும் விதத்தை நினைப்பவனே! ஸ்ருஷ்டியைச் செய்வதற்காக ப்ரஹ்மாவைச் சரீரமாக உடையவனே! ஸ்ருஷ்டித்த உலகத்தை பின்பொரு நாள் அழிப்பதற்காக முக்கண்ணனாய் உபகாரகனான ருத்ரனைச் சரீரமாக உடையவனே! எனக்கு பழுத்த பழம் போலே மிக இனிமையாக இருக்கும் திருவதரத்தையும் தாமரைப்பூப்போலே இருக்கும் திருக்கண்களையும் துளைக்கப்படாத, கறுத்த மாணிக்கம் போன்ற திருமேனியையும் உடையவனே! என்னையும் அவ்வழகாலே வஞ்சித்துக் கொண்டவனே! ஸம்ஸாரத்தில் தனிமைப்பட்ட எனக்கு உயிரானவனே! என் தலைக்கு மேலே வந்து இருந்து உன்னிடத்தில் எனக்கு ஆர்த்தியையும் உண்டாக்கின பின்பு நான் உன்னை முன்புபோலே அகன்று போக அனுமதிக்கமாட்டேன். என்னை நீ சிறிதும் வஞ்சிக்காமல் இருக்கவேண்டும்.
இரண்டாம் பாசுரம். தம்முடைய கார்யத்தை எம்பெருமான் செய்கைக்காக அவனுக்கும் விரும்பத்தக்கவளான பிராட்டியுடைய திருவாணை என்கிறார்.
மாயஞ்செய்யேல் என்னை உன் திருவார்வத்து மாலை நங்கை
வாசஞ்செய் பூங்குழலாள் திருவாணை நின்னாணை கண்டாய்
நேசஞ்செய்து உன்னோடு என்னை உயிர் வேறின்றி ஒன்றாகவே
கூசஞ்செய்யாது கொண்டாய் என்னைக் கூவிக் கொள்ளாய் வந்தந்தோ
என்னை இனி வஞ்சிக்காமல் இருக்க வேண்டும். உன் செல்வத்தின் அடையாளமாய், திருமார்புக்கு பரபாகமாய் (எதிர் நிறம்) ஒரு தங்க மாலை போன்றவளாய் குண பூர்த்தியை உடையவளாய் சிறந்த கூந்தலையுடைய லக்ஷ்மியின் ஆணையானது உனக்கு ஆணையாக இருக்கும். அன்பு செய்து உன்னோடு என்னை ஆத்மபேதம் இல்லாதவாறு ஒன்றாக நினைக்கும்படிக்கு என்னைக் கூசாமல் அங்கீகரித்து அருளினாய். என்னை வந்து “ஆழ்வீர் வாரும்” என்று அழைத்துக்கொண்டருள வேண்டும். ஐயோ! உன் ஆசையை நிறைவேற்ற நான் ஆணையிட வேண்டியிருக்கிறதே என்று கருத்து.
மூன்றாம் பாசுரம். ப்ரஹ்மா முதலிய ஸகல ஆத்மாக்களுக்கும் பிறப்பிடமான திருநாபீகலத்துக்கு மூலஸ்தானமான நீ வந்து என்னை ஏற்றுக்கொளண்டருள வேண்டும் என்கிறார்.
கூவிக் கொள்ளாய் வந்தந்தோ! என் பொல்லாக் கருமாணிக்கமே!
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் நான்
மேவித் தொழும் பிரமன் சிவன் இந்திரனாதிக்கெல்லாம்
நாவிக் கமல முதற்கிழங்கே உம்பரந்ததுவே
எனக்கு மிகவும் இனியவனாய் துளைக்கப்படாத கறுத்த மாணிக்கம் போன்ற திருமேனியை உடையவனாய், அடைந்து வணங்கக்கூடிய ப்ரஹ்மா ருத்ரன் இந்த்ரன் முதலானவர்களுக்கு முதலான திருநாபீகமலத்துக்கு இருப்பிடமாய், நித்யஸூரிகளுக்கும் இருப்பு செயல்கள் முதலியவைகளுக்கு நிர்வாஹகன் ஆனவனே! என் ஆத்மாவுக்கு ஓர் பற்றுக்கொம்பு உன்னைத்தவிர நான் அறிகின்றிலேன். நீயே வந்து அழைத்து என்னைக் கொண்டருளவேண்டும். ஐயோ! உன் கார்யத்தை நான் சொல்ல வேண்டியுள்ளதே.
நான்காம் பாசுரம். எல்லாவற்றையும் சரீரமாகக் கொண்ட நீ, உன் சரீரமான என்னை ஆள்வதாக ஏறிட்டுக்கொண்டு வைத்து, என்னை இந்த ஸம்ஸாரத்தில் தவிக்க விட்டாயே என்று வருத்தத்துடன் கூப்பிடுகிறார்.
உம்பர் அந்தண் பாழேயோ! அதனுள் மிசை நீயேயோ!
அம்பர நற்சோதி! அதனுள் பிரமன் அரன் நீ
உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ
எம்பரஞ்சாதிக்கலுற்று என்னைப் போரவிட்டிட்டாயே
மேலானதாய், உனக்கு விளையாட்டுப்பொருளாக இருப்பதாலே சிறந்ததாய், குளிர்ந்திருப்பதாய், இவ்வுலக இன்பம் மற்றும் மோக்ஷத்தை விளைத்துக்கொள்ளும் இடமாய் இருக்கும் மூலப்ரக்ருதிக்குள் இருப்பவனே! ஆகாசம், சிறந்ததான தேஜஸ்ஸு முதலிய பொருள்களைப் படைத்து அதற்குள்ளும் அந்தர்யாமியாய் இருந்து, அண்டத்துக்குள்ளே ப்ரஹ்மா ருத்ரன் ஆகியோரைப் படைத்து அவர்களுக்கும் அந்தர்யாமியாய் இருப்பவன் நீ. தேவர்களையும், மனுஷ்யர் முதலிய அறிவுடையவர்களையும், சிந்தித்துப் படைத்தவன் நீ. என்னுடைய சரீரத்தை ஆள்வதாக ஏறிட்டுக்கொண்டு என்னை இங்கேயே விட்டு வைத்தாயே.
ஐந்தாம் பாசுரம். எனக்கு மிகவும் இனியவனாக இருந்தும் என்னை நீ விலக்கினால் எனக்கு ஒரு உஜ்ஜீவனம் உண்டோ என்கிறார்.
போர விட்டிட்டு என்னை நீ புறம் போக்கல் உற்றால் பின்னை யான்
ஆரைக் கொண்டு எத்தை அந்தோ எனதென்பதென்? யானென்பதென்?
தீர இரும்புண்ட நீரது போல என் ஆருயிரை
ஆரப் பருக எனக்கு ஆராவமுதானாயே
தன் காய்ச்சல் தீரும்படி இரும்பு உறிஞ்சின நீரைப்போலே என் ஆத்மாவின் வருத்தம் தீரும்படி முழுவதுமாகப் பருகுகைக்கு எனக்கு ஆராத அமுதமானாயே. நீ விலக்கி விட்டு அநாதரித்து என்னை மற்ற விஷயங்களிலே போக்க நினைத்தால், பின்பு நான் மற்று ஆரைக்கொண்டு எந்தப் பலனைப் பெறுவேன்? ஐயோ! என்னது என்று சொல்வதற்கு எந்த உபகரணமும் இல்லை. நான் என்பதற்கு ஸ்வதந்த்ரன் இல்லை.
ஆறாம் பாசுரம். பிராட்டியிடத்தில் கொண்டாற்போலே என்னிடத்திலும் மிகவும் ஆசைகொண்ட நீ உன் இனிமையான தன்மையைக் காட்டி அனுபவத்தைக் கொடுத்தாய். இனி முழுக்க என்னை ஆளவேண்டும் என்கிறார்.
எனக்கு ஆராவமுதாய் எனதாவியை இன்னுயிரை
மனக்காராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டொழியாய்
புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய்
உனக்கேற்கும் கோலமலர்ப் பாவைக்கன்பா! என் அன்பேயோ
தன்னிலத்தில் அலர்ந்த காயாம்பூப்போன்ற நிறத்தை உடையவனாய் தாமரை போன்ற திருக்கண்களையும் சிவந்த திருவதரத்தையும் உடைய உனக்குத் தகுதியான திருமேனியை உடையவளாய் பூவில் பிறப்பாலே மிகவும் இனியவளாய் பெண்களுக்குரிய ஆத்மகுணங்களை உடைய லக்ஷ்மிக்கு அன்பை உடையவனே! என்னிடத்தில் அன்பே வடிவொத்தவனாக இருப்பவனே! எனக்கு மிகவும் இனியவனாய் என்னுடைய உடம்பையும் சிறந்ததான ஆத்மாவையும் ஹ்ருதயத்துக்கு த்ருப்தி பிறவாதபடி விரும்பி நிரந்தரமாக அனுபவித்தாய். இனி, குறையும் (மீதம் உள்ளவற்றையும்) அனுபவித்தே விடவேண்டும்.
ஏழாம் பாசுரம். அடியார்களின் ரக்ஷகனான உன்னைப் பெற்றும், இனி விடுவேனோ என்கிறார்.
கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்ததொப்ப
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்!
நீலக் கடல் கடைந்தாய்! உன்னைப் பெற்று இனிப் போக்குவனோ
வடிவழகையும் இனிமையையும் உடையவளான பிராட்டிக்கு உகப்பான அத்தாலே என்னிடத்திலும் மிகவும் ஆசையுடன் இருப்பவனே! நீல ரத்னகிரியானது இரண்டு பிறையைக்கவ்வி எழுந்திருந்தாற்போலே சிறந்த வடிவழகை உடைய தனித்துவம் வாய்ந்த மஹாவராஹமாய் பூமியை ப்ரளயத்திலிருந்து முழுகி எடுத்துத் தன் திரு எயிற்றிலே வைத்த செயலாலே எனக்கு ஸ்வாமியானவனே! உன் வடிவின் நிழல்பட்டு நீலமான கடலைக் கடைந்து அடியார்களை ரக்ஷித்தவனே! உன்னைப் பெற்றுவைத்து இனி நழுவவிடுவேனோ?
எட்டாம் பாசுரம். கிடைத்தற்கரியவனாய் எல்லாருக்கும் அந்தர்யாமியாய் எனக்குத் தாரகனான உன்னைப் பெற்றுவைத்துக் கைவிடுவேனோ என்கிறார்.
பெற்றினிப் போக்குவனோ? உன்னை என் தனிப் பேர் உயிரை
உற்ற இரு வினையாய் உயிராய்ப் பயனாய் அவையாய்
முற்ற இம்மூவுலகும் பெருந்தூறாய்த் தூற்றில் புக்கு
முற்றக் கரந்தொளித்தாய் என் முதல் தனி வித்தேயோ!
இரண்டு வகைப்பட்ட கர்மங்கள் அதாவது புண்யம் மற்றும் பாபங்களுக்கு நிர்வாஹகனாய், ஆத்மாவை நடத்துபவனாய், அந்தக் கர்மங்களால் உண்டான பலன்களைக் கொடுப்பவனாய். இந்த மூன்று லோகங்கள் மற்றும் எல்லாமாகிற பெரிய புதரிலே புகுந்து ஒன்றும் தெரிந்து கொள்ளமுடியாதபடி மறைந்து நிற்பவனாய் எனக்கு முதல் ஸுக்ருதமான (நற்செயல் – நற்பயன்) தனித்துவம் வாய்ந்த காரணனே! உன்னைக் கைபுகும்படிப் பெற்றுவைத்து, உன்னைப் பிரிந்து வாழமுடியாத இந்த நிலையில், விட வழியுண்டோ?
ஒன்பதாம் பாசுரம். காரணம் மற்றும் கார்ய நிலையில் இருக்கும் எல்லா அறிவுள்ள மற்று அறிவற்ற பொருள்களுக்கு அந்தர்யாமியாய் இருப்பது முதலான நிலைகளாலே ப்ரதானனாய், அவற்றிலிருந்து வேறுபட்ட சிறந்த ஸ்வரூப ரூப குணம் முதலியவைகளை உடைய உன்னை என்று வந்து அடைவேன் என்கிறார்.
முதல் தனி வித்தேயோ! முழு மூவுலகாதிக்கெல்லாம்
முதல் தனி உன்னை உன்னை எனை நாள் வந்து கூடுவன் நான்
முதல் தனி அங்கும் இங்கும் முழு முற்றுறு வாழ் பாழாய்
முதல் தனி சூழ்ந்தகன்றாழ்ந்துயர்ந்த முடிவிலீயோ!
மூன்று லோகங்கள் முதலான எல்லாப் பொருள்களுக்கும் நிமித்த மற்றும் உபாதான காரணமாய் அண்டத்துக்கு உள்ளும் புறமும் இருக்கும் எல்லாப் பொருள்களையும் வ்யாபித்து தனித்துவம் வாய்ந்த காரணமாய் வாழ்ச்சிக்கு விளை நிலமான மூல ப்ரக்ருதியை நடத்துபவனாய், முதல்வனாய், ஒப்பற்றவனாய், எங்கும் பரவி, பத்துத் திக்கிலும் உண்டாய், நித்யமான ஆத்மாக்களுக்கு நியந்தாவனவனே! இப்படி முதல்வனாய் ஒப்பற்றவனான உன்னை நான் எந்நாள் வந்து கூடுவேன்?
பத்தாம் பாசுரம். மூன்று தத்வங்களையும்விடப் பெரியதான தன் ஆசை தீரும்படி எல்லாவிதத்திலும் பரிபூர்ணனாய்க்கொண்டு கூடினாய் என்று தனக்கு ஸாயுஜ்ய மோக்ஷத்தை அளித்து எல்லை இல்லாத ஆனந்தத்தை அளித்தபடியை அருளிச்செய்கிறார்.
சூழ்ந்தகன்றாழ்ந்துயர்ந்த முடிவில் பெரும் பாழேயோ
சூழ்ந்ததனில் பெரிய பர நன்மலர்ச் சோதீயோ
சூழ்ந்ததனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ
சூழ்ந்ததனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே
கார்ய நிலையில் இருக்கும் எல்லாப் பொருள்களையும் சூழ்ந்து வ்யாபித்து கீழும் மேலும் இருப்பதால் பத்துத்திக்கிலும் இருக்கும் நித்யமான பெரிய மூல ப்ரக்ருதியைச் சரீரமாக உடையவனாய், தன்னுடைய ஞானத்தாலே வ்யாபித்து அந்த ப்ரக்ருதியைவிடப் பெருத்து மேலானதாய் சிறப்பை உடைய மலர்ந்திருக்கும் ஞானத்தையுடைய ஆத்மாவைச் சரீரமாக உடையவனாய், இந்த ப்ரக்ருதி மற்றும் ஆத்மாக்களை வ்யாபித்து அதற்கும் மேலே கல்யாண குணங்களால் ஞானம் ஆனந்தம் முதலிய குணங்களை உடைய நியந்தா ஆனவனே! வளைத்துக்கொண்டு இவற்றை விடப் பெரிதாய் இருக்கும் என் ஆசையானது தீரும்படி நான் உனக்கு உள்ளே அடங்கும்படி ஸாயுஜ்ய மோக்ஷத்தைக் கொடுத்தாயே!
பதினொன்றாம் பாசுரம். தனக்குப் பலன் கிடைத்த விதத்தை வெளியிட்டு இத்திருவாய்மொழிக்குப் பலமாக, இதில் ஞானம் உடையவர்களுடைய பிறவியின் உயர்த்தியை அருளிச்செய்கிறார்.
அவாவறச்சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவாவற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொன்ன
அவாவில் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவாவில் அந்தாதி இப்பத்தறிந்தார் பிறந்தார் உயர்ந்தே
அடியார்களுடைய ஆசை தீரும்படி எல்லையில்லாத ஸம்ச்லேஷத்தைப் பண்ணுகையாலே துக்கத்தைப் போக்கும் அரியாய், ப்ரஹ்மாவுக்கு அந்தராத்மாவாய், அப்படியே ருத்ரனுக்கும் அந்தராத்மாவான பரமப்ராப்யபூதனைக் கூப்பிட்டு தன் ஆசை தீரப்பெற்று மோக்ஷத்தைப் பெற்ற திருநகரிக்குத் தலைவரான நம்மாழ்வார் அருளிச்செய்த சிறந்த அந்தாதிப் பாசுரங்களாக அமைந்த இவையாயிரமும் பரபக்திரூபமாக முடிந்த ஆசையிலே அந்தாதிகளான இப்பத்தையும் அனுஸந்தித்தவர்கள் இவ்வுலகில் பிறந்தே மேன்மையை அடைந்தவர்கள் ஆவார்கள்.
—————————————————————————————
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply