ஸ்ரீ.வில்லிபாரதம் – நான்காம் பாகம் -45. பதினேழாம் போர்ச் சருக்கம்- ஸ்ரீ.உ.வே.சே.கிருஷ்ணமாசாரியர் ஸ்ரீ உ.வே.வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியர் உரைகள்

ஈர் ஒரு பிறப்பின் ஒரு சிறு குறளாய், யாவரும் தேவரும் வியப்ப,
கார் ஒரு வடிவு கொண்டெனச் சென்று, காவல் கூர் மாவலி அளித்த
நீர் ஒரு கரத்தில் வீழும்முன், தரங்க நீல் நிற மகர நீர் உடுத்த
பார் ஒரு கணத்தில் அளவிடும் கமல பாதனார் நாதனார், நமக்கே.கடவுள் வாழ்த்து

தேவர்உம் – தேவர்களும், யாவர்உம் – மறற எல்லாரும், வியப்ப –
(கண்டு) அதிசயிக்கும்படி, கார் ஒரு வடிவு கொண்டு என – கரிய மேகம் ஒரு
புருஷவுருவத்தை எடுத்துச் சென்றார்போல, ஈர் ஒரு பிறப்பின் – இரண்டு
வகைப்பட்ட ஒப்பற்ற பிறப்புக்களையுடைய, ஒரு சிறு குறள் ஆய் – சிறியதொரு
வாமன மூர்த்தியாய், சென்று – போய், காவல் கூர் -(மூவுலகங்களையுங்)
காத்தல்தொழில் மிகுந்த, மாவலி – மகாபலிசக்கரவர்த்தி, அளித்த – தாரை
வார்த்துக்கொடுத்த, நீர் – தானஜலம், ஒரு காலத்தில் – ஒரு [வலது]
திருக்கையில், வீழும்முன் – விழுவதற்கு முன்னே[மிகவிரைவி லென்றபடி],
தரங்கம் -அலைகளையுடைய, நீல் நிறம் – நீலநிறத்தை யுடைய, மகரம் –
சுறாமீன்களையுடைய, நீர் – கடலினால், உடுத்த – சூழப்பட்ட, பார் – பூமியை,
ஒருகணத்தில் – ஒரு க்ஷணப்பொழுதிலே, அளவிடும் – அளந்தருளிய, கமல
பாதனார்ஏ- செந்தாமரைமலர்போலுந் திருவடிகளையுடைய எம்பெருமான் தான்,
நமக்குநாதனார் – நமக்குத் தலைவராவர்; (எ -று.)

     ஈரொருபிறப்பு – தேகவுற்பத்தியாகிய ஒரு பிறப்பும், உபநயந ஸம்ஸ்காரத்தா
லாகிய தொருபிறப்பும் ஆக இரண்டுபிறப்பு; இதனால், பிராமணர்க்குத்
தென்மொழியில் ‘இருபிறப்பாளர்’ என்றும், வடமொழியில் ‘த்விஜர்’ என்றும் பெயர்.
பதினேழா நாட்போரில் மாலைப்பொழுதிற் கன்னன் உயிரிழத்தற்கு முன்பு கண்ணன்
ஒரு பிராமணவுருவங்கொண்டு அவனிடஞ் சென்று அவன் செய்துள்ள
புண்ணியமனைத்தையுந் தாரைநீருடன் தானம் வாங்குவதனால், அவ் வரலாற்றைக்
கூறுகிற இச்சருக்கத்துக் கடவுள்வாழ்த்தில், அக்கருத்துத் தோன்ற, அதனோடொத்த
மாவலிபக்கல்மூவடி நிலம் கருத்துத் தோன்ற, அதனொடொத்த மாவலிபக்கல்மூவடி
நிலம் பெற்றவரலாற்றை எடுத்துக்கூறினார்; அங்கும் “அங்கையாலேற்றான்…
மூவுலகமுமுடன் கவர்ந்தோன்” (241) என்று கூறுவதுங் காண்க.

     இதுமுதற்பதினாறுகவிகள் – பெரும்பாலும் இரண்டு நான்கு ஏழாஞ்சீர்கள்
மாச்சீர்களும், மற்றவை விளச்சீர்களுமாகிய எழுசீராசிரியவிருத்தங்கள். 

அற்றை வெஞ் சமரில் அமர் முனைந்து ஆற்றாது அழிந்துபோம்
அவனிபர் பலரும்,
மற்றை நாள், ‘அகில புவனமும் இன்றே மடியும்’ என்று,
அனைவரும் மயங்க,
ஒற்றை வெண் சங்கும் பல் வகைப் பறையும் ஓத வான் கடல்
என ஒலிப்ப,
கற்றை வெண் கவரி கால் பொர, தனிப் பொற் கவிகை நீழலில்
களம் கலந்தார்.2.- முன்னையநாள்தோற்ற அரசர்பலரும் களங்குறுகுதல்.

அற்றை வெம் சமரில் – அன்றைநாள் [பதினாறாநாள்] கொடிய
யுத்தத்தில்,அமர் முனைந்து – போர்செய்து, ஆற்றாது – முன் நிற்கமாட்டாமல்,
அழிந்து போம்- தோற்றுப்போன, அவனிபர் பலர் உம் – அரசர்ளெல்லாரும்,
மற்றைநாள் -பதினோழாநாளில், அலகு இல் புவனம்உம் – அளவில்லாத பூமி
முழுவதும், இன்றுஏ- இன்றைத்தினமே மடியும் – அழிந்துபோம், என்று-,
அனைவர்உம் — எல்லாரும்,மயங்க – பிரமிக்கும்படி, ஒற்றை வெண் சங்குஉம் –
ஒப்பற்ற வெள்ளியசங்கங்களும், பல்வகை பறைஉம்-, ஓதம் வான் கடல் என –
அலைகளையுடையபெரிய கடல்போல, ஒலிப்ப – ஒலிக்கவும், கற்றை வெண்
கவரி – தொகுதியாகியவெண்சாமரங்கள், கால் பொர – காற்றை வீசவும், தனி
பொன் கவிகைநீழலில்ஒப்பற்ற பொற்காம்பிட்ட குடைகளின் நிழலிலே, களம்
கலந்தார் -போர்க்களத்தை அடைந்தார்; (எ – று.)- ஒற்றை – ஒருகுழற்கருவி
யென்றாருமுளர்.

எண்-இரு தினத்தில் பட்ட பல் படையும் ஈண்டு மீண்டு
எழுந்தன என்னும்
வண்ணம், ஓர் அளவு இல் வாசியும், தேரும், மத சயிலமும்,
பதாதிகளும்,
விண்ணும் மண்ணகமும் தெரிவுறா வழக்கின் வெங் களம்
முழுவதும் கஞல,
அண்ணல் அம் தடக் கைக்கு எதிர் இலா வண்மை ஆண்தகை
அரசுடன் அடைந்தான்.3. கர்ணன் துரியோதனனோடு போர்க்களஞ் சேர்தல்.

எண் இரு தினத்தில் – கீழ்ப்பதினாறுநாள்களில், பட்ட – (போரில்)
இறந்த, பல் படைஉம் – பலசேனைகளும், ஈண்டு – இவ்விடத்தில், மீண்டு –
திரும்பவும், எழுந்தன – பிழைத்துவந்தன,’ என்னும் வண்ணம் – என்றுசொல்லும்படி,
ஓர் அளவு இல் – ஒரு அளவு இல்லாத, வாசிஉம் குதிரைகளும், தேரும்-, மத
சயிலம்உம் – மதத்தையுடைய மலைபோன்ற யானைகளும், பதாதிகளும்-, விண்உம்
மண்அகம்உம் தெரிவுறாவழக்கின் – வானுலகத்தவராலும் நிலவுலகத்தவராலும்
[யாவராலும்] (இத்தன்மையதென்று)அறியக்கூடாத தன்மையாக, வெம் களம்
முழுவதுஉம் – கொடிய போர்க்களம் முழுவதிலும், கஞல – நெருங்க,- அண்ணல்
அம் தட கைக்கு – பெருமையையுடைய அழகிய பெரிய கைகளுக்கு, எதிர் இலா –
ஒப்பில்லாத, வண்மை – தானத்தையுடைய, ஆண்தகை – ஆண்மைக் குணமுடைய
கர்ணன், அரசுடன் – துரியோதனனனோடு, அடைந்தான் -(போர்க்களத்தைச்)
சேர்ந்தான்; (எ -று.)- பி-ம்: என்ன.

சென்னியில் மகுட மணி வெயில் எறிப்ப, திருக் குழை மணி
வெயில் எறிப்ப,
மன்னிய பொலம் பூண் மணி வெயில் எறிப்ப, வனை கழல் மணி
வெயில் எறிப்ப,
தன்னை முன் பயந்தோன்தன்னினும் வடிவம் தயங்கு செஞ் சுடர்
வெயில் எறிப்ப,
கன்னன் அன்று இருந்த அழகினை யாரே கண்டு கண்
களிப்புறாது ஒழிந்தார்?4.- கன்னனிருந்த பொலிவுகண்டு யாவருங் களித்தல்.

சென்னியில் – தலையில்தரித்த, மகுடம் – கிரீடத்திற் பதித்த, மணி –
இரத்தினங்கள், வெயில் எறிப்ப – சூரியகாந்தி போன்ற ஒளியை வீசவும், திரு
குழை – அழகிய குண்டலத்தி 
லிழைத்த, மணி-, வெயில் எறிப்ப-, மன்னிய –
(மற்றை அவயங்களிற்) பொருந்திய, பொலம் பூண் – பொன்னாபரணங்களிலுள்ள,
மணி-, வெயில் எறிப்ப-, வனை கழல்- (காலிற்) கட்டிய வீரகண்டையிற்பொருந்திய,
மணி-, வெயில் எறிப்ப–, தன்னை முன் பயந்தோன் தன்னின்உம் – தன்னை
முன்னே பெற்ற சூரியனிலும்(அதிகமாக), வடிவம் தயங்கு செம் சுடர் – (தன்)
உடம்பில் விளங்குகிற சிவந்த ஒளி, வெயில் எறிப்ப-, கன்னன் அன்று இருந்த
அழகினை-, கண்டு-, கண்களிப்பு உறாது ஒழிந்தார்- கண்கள் களிப்படையாமற்
போனவர், யாரே – எவர் தாம்? [எவருமில்லை; எல்லோரும் அன்றைக்குக்
கர்ணன் போரில் வந்திருந்த அழகைநோக்கிக்கண்களித்தன ரென்றபடி]; (எ -று.)-
சொற்பொருட்பின் வருநிலையணி.     

ஒருங்கு அளப்பு அரிய பதாகினிக் குழாமும், உயிர்க்கு
உயிரான தம்பியரும்,
அருங் களக்கனி கொள் வண்ணனும் தானும், அறன் அருள்
அறனுடை அரசன்,
பெருங் களப் பரப்பின் அணி பெற அணிந்து, பேர் உலகு
உய்யுமாறு இருண்ட
கருங் களத்தவனைக் காசினித் தேர்மேல் கண்டென, காணுமா நின்றான்.5.- யுதிஷ்டிரன் தம்பிமார்முதலியோரோடு போர்க்களத்தில்
வந்துநிற்றல்.

அறன் இருள் – தருமக்கடவுள் பெற்ற, அறன் உடை அரசன் –
தருமங்களையுடைய யுதிட்டிரராஜன், ஒருங்கு அளப்ப அரிய – (தனித்தனி
கூறுகூறுக அளவிடலாமேயன்றி) ஒருசேர [முழுவதும்] அளவிடுதற்கு அரிய,
பதாகினி குழாம்உம் – சேனைக்கூட்டமும், உயிர்க்கு உயிர் ஆன தம்பியர்உம்
உயிரினுஞ் சிறந்த (வீமன்முதலிய) தம்பிமார்கள் நால்வரும், அரு கள கனி
கொள்வண்ணன்உம் தான்உம் – அரிய களாப்பழத்தை உவமையாகக்கொண்ட
கருநிறமுடைய கண்ணனுந் தானுமாக, பெரு களம் பரப்பின் – பெரிய
போர்க்களத்தின் பரந்த இடத்திலே, அணிபெற அணிந்து – அழகாகச் சென்று
சேர்ந்து, பேர் உலகு உய்யும் ஆறு – பெரிய உலகத்தவர் பிழைக்கும்படி,
இருண்ட- (விடமுண்டு) கறுத்த, கரு களத்தவனை – நீலகண்டத்தையுடைய
உருத்திரமூர்த்தியை, காசினி தேர்மேல் – பூமியாகிய தேரின்மேல், கண்டு என –
கண்டாற் போல, காணும் ஆ – (தன்னைக்) காணும்படி நின்றான் – (ஒரு தேரின்
மேல்) நின்றான்

நின்ற அக் குரிசில் அருச்சுனன் தேர்மேல் நின்றருள் நீல
மேனியனை, மன்றல் அம் துளப மாலை
மாதவனை, வழிபடுமவர்க்கு வான் துணையை, தன் தடங் கண்ணோடு
இதயம் முத்து அரும்ப, தாள்
இணை முடி உற வணங்கி,
‘இன்றை வெஞ் சமரில் இரவிதன் சேய் வான் எய்துமோ? இயம்புதி!’
என்றான்.6.- ‘இன்று கர்ணன் இறப்பானா?’ என்று யிதிஷ்டிரன் வினாவல்.

நின்ற – இவ்வாறு நின்ற, அ குரிசில் – வீரனாகிய அத்தருமன்,-
அருச்சுனன் தேர்மேல் நின்றருள் – அருச்சுனனது தேரில் (பாகனாக) எழுந்தருளிய,
நீலம் மேனியனை – நீலநிறமுடைய திருமேனியையுடையவனும், மன்றல் –
வாசனையையுடைய, அம் – 
அழகிய, துளபம் மாலை – திருத்துழாய்மாலையை
யுடைய, மாதவனை – இலக்குமிக்குக் கணவனும், வழிபடுமவர்க்கு – (தன்னை)
வணங்கும் அடியார்களுக்கு, வான் துணையை – சிறந்த துணைவனுமாகிய
கண்ணனை, தன் தடகண்ணோடு – தனது பெரிய கண்களும், இதயம் – மனமும்,
முத்து அரும்ப – ஆனந்தக்கண்ணீர்விட்டுப் புளகிக்கும்படி, தாள் இணை –
(அவனது) உபயதிருவடிகள், முடி உற – (தன்) தலையின்மேற் பொருந்துமாறு,
வணங்கி – நமஸ்கரித்து, ‘இன்றை வேம் சமரில் – இன்றைக்குச்செய்யுங் கொடிய
யுத்தத்தில், இரவி தன் சேய் – சூரியகுமாரனானகர்ணன், வான்எய்தும்ஓ –
சுவர்க்கத்தை அடைவானோ? இயம்புதி – சொல்வாயாக,’ என்றான் – என்று
வினவினான்; (எ-று.)

    தன் அடியார்க்கு மற்றைத்துன்பங்களைப்போக்கி இன்பமளித்துத்
துணைசெய்தல்மாத்திரமே யன்றிப் பிறவித்துன்பங்களையும் ஒழித்து வீட்டுலகத்துப்
பேரின்பத்தையும் அருளுஞ் சிறப்புத்தோன்ற, ‘வான்துணை’ என்றார். கண்
முத்தரும்புதல் – ஆனந்தத்தாற் கண்ணீர்துளித்தல். இதயம்முத்தரும்புதல் –
ஆனந்தத்தால் மனஞ்சிலிர்த்தல்.     

இத் தினம் இரவி சிறுவனும் விசயன் ஏவினால் இறந்திடும்; நாளைத்
தத்தின புரவித் தேர்ச் சுயோதனனும் சமீரணன் தனயனால் மடியும்;
அத்தினபுரியும் ஈர்-இரு கடல் சூழ் அவனியும் நின்ன
ஆம்’ என்றான்-
சித்தினது உருவாய் அகண்டமும் தான் ஆம் செய்ய கண் கருணை
அம் திருமால்.7.- ஸ்ரீகிருஷ்ணன், கர்ணசுயோதனரின் இறுதிநாள்களைத்
தெரிவித்தல்.

சித்தினது உரு ஆய் – ஞானசொரூபியாய், அகண்டஉம் தான்
ஆம் -எல்லாப்பொருள்களுந் தானாகிய, செய்ய கண் – சிவந்த திருக்கண்களையும்,
கருணை – திருவருளையும், அம் – அழகையுமுடைய, திரு மால் –
இலக்கமிக்குநாயகனான கண்ணன், ‘இ தினம் – இன்றைக்கு, இரவி சிறுவன்உம் –
சூரியகுமாரனும், விசயன் ஏவினால் – அருச்சுனன் பாணங்களால், இறந்திடும் –
இறப்பான்; நாளை – நாளைக்கு, தத்தின புரவி – பாய்கிற குதிரைகளைப் பூட்டிய,
தேர் – தேரையுடைய , சுயோதனன்உம் – துரியோதனனும், சமீரணன் தனயனால் –
வாயுகுமாரனான வீமனால், மடியும் – இறப்பான்; (பின்பு), அத்தினபுரியும்-, ஈர் இரு
கடல்சூழ் அவனிஉம் – நான்கு திக்குக்களிலுள்ள கடல்களாற் சூழப்பட்ட
பூமிமுழுவதும், நின்ன ஆம் – உன்னுடையவையேயாய்விடும்,’ என்றான் – என்று
உத்தரஞ் சொல்லினான்; (எ -று.)

     (சந்திரகுலத்துத்தோன்றிய) ஹஸ்தி என்னும் அரசனால் உண்டாக்கப்பட்டமை
பற்றியும், யானைகளை மிகுதியாக உடைமைபற்றியும், இவர்கள்
இராஜதானிக்கு ‘ஹஸ்திநாபுரீ’ என்று பெயர்.  

செங் கண் மால் உரைத்த இன் சொல் ஆர் அமுதம் செவிப் பட,
சிந்தனை தெளிவுற்று,
‘எங்கள் மானமும்’ தொல் ஆண்மையும் புகழும் நீ அலால், யார்
நிலையிடுவார்?
வெங் கண் மாசுணத்தோன் வஞ்சனைக் கடலின் வீழ்ந்து
அழுந்தாவகை எடுத்து, இன்று
அம் கண் மா நிலமும் தந்தனை!’ எனப் பேர் அறத்தின் மா மகன்
இவை உரைப்பான்:8.- எட்டுக்கவிகள் – யுதிஷ்டிரன் ஸ்ரீகிருஷ்ணன் செயலைப்
பாராட்டுதலை
க்கூறும்.

பேர் அறத்தின் மா மகன் – பெரிய தருமக்கடவுளின் சிறந்த
குமாரன்,செங் கண் மால் உரைத்த – சிவந்த திருக்கண்களையுடைய கண்ணபிரான்
சொல்லியருளிய, இன் சொல் – இனிய சொல்லாகிய, ஆர் அமுதம் – (பெறுதற்கு)
அரிய அமிர்தம், செவி பட – காதுகளிற் பட்டமாத்திரத்தில், சிந்தனை தெளிவுற்று-
மனந்தெளியப்பெற்று, (அவனைநோக்கி) ‘எங்கள்மானம்உம் – எங்களது
மானத்தையும், தொல் ஆண்மைஉம் – தொன்றுதொட்டுள்ள பராக்கிரமத்தையும்
புகழ்உம் – கீர்த்தியையும், நீ அலால் – நீயேயல்லாமல், யார் – வேறுயாவர்,
நிலையிடுவார் – நிலைநிறுத்துபவர்? [எவருமில்லை]:வெம் கண் மாசுணத்தோன் –
வெவ்விய கண்களையுடைய பாம்புக்கொடியையுடைய துரியோதனனது, வஞ்சனை
கடலின் – வஞ்சனையாகிய கடலிலே, வீழந்து அழுந்தா வகை – விழுந்து
அமிழ்ந்துபோகாதபடி, எடுத்து -(எங்களைக்) காத்து, இன்று – இப்பொழுது, அம்
கண் மா நிலம்உம் – கொடுத்தாய்,’ என – என்றுசொல்லி, இவை – இன்னும்
இப்படிப்பட்ட தோத்திரங்களை, உரைப்பான் – சொல்லுவானானான்; (எ – று.)-
அவை மேல் ஏழுகவிகளாற் கூறுகின்றார்.

     அமிர்தமுண்டதனால் மரணமயக்கமொழிந்து தெளிவடைதல் போல,
தருமபுத்திரனுக்கு இச்சொல்லைக்கேட்டதனால் அச்சம் நீங்கி அறிவு தெளிந்தது.

பொங்கு அழல் சிந்தைச் சுயோதனன் கங்கைப் புனல்
விளையாட்டிடைப் புதைத்த
வெங் கழு முனையில் விழாமல், ஓர் அளி ஆய், வீமனுக்கு
ஆர் உயிர் அளித்தாய்;
பைங் கழல் அரசர் அவையினில் யாமும் பார்த்திருந்து அலமர,
பயந்த நுங்கு அழல் அனையாள்
நாணமும் துகிலும் நோக்கினை-காக்கும் நாயகனே!

ஏழுகவிகள் – ஒருதொடர்.

     (இ-ள்.) காக்கும் நாயகனே – காத்தல்தொழிலுக்குஉரிய தலைவனே!
பொங்குஅழல் சிந்தை -மேல்மேல்மிகுகிற கோபத்தீயையுடைய மனத்தையுடைய,
சுயோதனன்-, கங்கை புனல் விளையாட்டிடை – கங்காநதியின் நீரில்
விளையாடுமிடத்தில், புதைத்த  – நாட்டி வைத்த, வெம் கழு முனையில் – கொடிய
கழுமரத்தின் நுனியில், விழாமல் – விழுந்து இறவாமல், ஓர் அளி ஆய் – ஒப்பற்ற
வண்டின் வடிவாகி, வீமனுக்கு-, ஆர் உயிர் அளித்தாய் – அரிய உயிரைக்
காத்தருளினாய்; பைங் கழல் அரசர் – பசியவீரக்கழலையுடைய அரசர்களது,
அவையினில் – சபையில், யாம்உம் பார்த்திருந்து அலமர – கணவராகிய நாங்கள்
ஐவரும் பார்த்துக்கொண்டிருந்து (என்செய்வதென்று) மனஞ்சுழலா நிற்க, பயந்து –
அஞ்சின, நுங்கு அழல் அனையாள் – (எல்லாவற்றையும்) விழுங்குகின்ற
அக்கினியைப்போன்ற திரௌபதியினது, நாணம்உம் – வெட்கத்தையும், துகில்உம் –
ஆடையையும் நோக்கினை – (போகாதபடி) கடாட்சித்தருளினாய்; (எ -று.)

     சேர்ந்த இடத்தைச் சுட்டு அழித்தல்பற்றி, கோபத்தை அழலென்றார்.
‘நுங்கழலனையாள்’ என்றதனால், அவமதிக்கத்தக்கவளல்ல ளென்றபடி; இனி,
நும்கழல் அனையாள் என்று பிரித்து – உமது திருவடிபோன்றவ ளெனினுமாம்;
என்றது,பக்திமிகுதிபற்றி. அலமர, அலமா – பகுதி.

கானக மருங்கில், மேவலன் பணியால், கடும் பசியுடன் வரும் கடவுள்
மானவ முனிவன் தாபமும்
சாப வருத்தமும் உறாவகை ஒழித்தாய்;
யான் ஒரு பொருளாத் தூது சென்றருளி, எதிர் இலா விதுரன்
வெஞ் சிலையும்,
பானுவின் மதலை கவசமும், அகற்றி, பரிந்து பல் வினைகளும்
புரிந்தாய்;

கானகம் மருங்கில் – காட்டினிடத்தில், மேவலன் பணியால் –
பகைவனாகிய துரியோதனனது சொல்லினால், கடு பசியுடன் – மிகுந்த பசியுடனே,
வரும் – வந்த, கடவுள் – தெய்வத்தன்னையையுடைய, மானவ முனிவன் –
மனிதவிருடியாகிய துருவாசரது, தாபம் உம் – பசித்துன்பமும், சாபம் வருத்தம்உம் –
சபித்தலாலுண்டாகுந் துன்பமும், உறா வகை – உள்ளனவாகாதபடி, ஒழித்தாய் –
போக்கினாய்; யான் ஒரு பொருள் ஆ -(பொருளல்லாத) என்னை ஒரு பொருளாக
(மதித்து), தூது சென்று அருளி -(எங்களுக்காகத்துரியோதனனிடந்)
தூதனாகப்போயருளி, எதிர் இலா – ஒப்பில்லாத, விதுரன் – விதுரனது வெம்
சிலைஉம்- கொடிய வில்லையும், பானுவின் மதலை – சூரியகுமாரனது, கவசம்உம் –
கவசத்தையும், அகற்றி – ஒழித்து, பரிந்து – இரங்கி, பல் வினைகள்உம் –
(இன்னும்)பல தொழில்களையும், புரிந்தாய்-; (எ – று.)

     துருவாசருக்குத்தெய்வத்தன்மை – சபிக்கச்சபிக்கத் தவங் குறைவுபடாமல்
மேன்மேல்வளரப்பெறுவதொருவரம். முன்னிரண்டடிகளிற்குறித்தவரலாறு:-
பாண்டவர்கள்  வனவாசஞ்செய்கையில் துருவாசமுனிகர் ஒருநாள்
பலமுனிவர்களோடுந்துரியோதனன் அரண்மனைக்குச் சென்று, அறுசுவை யமைந்த
அருவிருந்துண்டு, ‘உனக்கு வேண்டும் வரம் பெறுவாய்’ என்ன, அவன் செல்வச்
செருக்கினாலும் பாண்டவரை இம்முனிவர் சாபத்துக்கு உட்படுத்த வேண்டு
மென்னுங் கருத்தினாலும் ‘இன்றைக்கு எமதுமனையில் அமுதுசெய்தது போலவே
நாளைக்குப் பாண்டவர்பக்கல் சென்று அமுது செய்ய வேண்டுவதே எனக்குத்
தரும்வரம்’ என்ன, அப்படியே அம்முனிவர் பல முனிவர்களோடும் மற்றைநாள்
மத்தியானபொழுது பாண்டவரிருந்த ஆச்சிரமத்தில் வந்து சேர்ந்து, ‘இன்றைக்கு
எங்களுக்கு நல்லுணவு இடவேண்டும்’ என்று சொல்ல, அதற்குமுன்னமே
பலமுனிவர்களோடும் வேண்டியவாறு உண்டு சூரியனருளின அக்ஷயபாண்டத்தைக்
கழுவிக் கவிழ்த்துவிட்ட பாண்டவர்களை அம்முனிவர்களை நீராடி வரச் சொல்லி
அனுப்பிவிட்டு இரதற்கு என்செய்வதென்று எல்லோரும் மனங்கலங்கிக்
கிருஷ்ணபகவானைத் தியானிக்க, அவர் உடனே அங்கு எழுந்தருளிப்
பாண்டத்தைப் கொண்டுவரச்சொல்லி அதிலுள்ளதொரு சோற்றுப்பருக்கையைத்
தாம்உண்ட மாத்திரத்தில், அம்முனிவர்யாவரும் வயிறுநிரம்பிப் பசி தணிந்து
தெவிட்டித் தெக்கெறிந்து மனமிகமகிழ்ந்து இவர்களுக்கு ஆசிர்வாதஞ் செய்து
விட்டுப் போயின ரென்பது. கண்ணன் தூதுசென்ற பொழுது இந்திரனை
வரவழைத்து, ‘கர்ணன் தன்னுடன் பிறந்த கவசகுண்டங்களோடும் இருந்தால்
அவனைக் கொல்லுதல்எவர்க்கும் முடியாது: அருச்சுனன் சபதம் பொய்த்துவிடும்;
அவன் அருச்சுனனைக் கொன்றுவிடுவான்; ஆதலின், நீ ஒருமுனிவடிவங் கொண்டு
சென்று கேட்டவற்றையெல்லாங்கொடுக்கிற அவனிடத்துக் கவசகுண்டலங்களை
இரந்து வாங்கிவருவாய்’ என்று சொல்ல, அங்ஙனமே அவன் ஒரு விருத்த
வேதியனுருவத்தோடு சென்று இரந்து அவற்றைப்பெற்றுவந்தானென்ப. ‘பல்வினைகள்’
என்றது – அசுவத்தாமனிடந் துரியோதனாதியர்க்கு உள்ளநம்பிக்கையை உபாயத்தால்
ஒழித்ததும், கர்ணனை நாகாஸ்திரத்தை இரண்டாமுறை அருச்சுனன்மீது விடாதபடி
குந்தியைக்கொண்டு வரங்கேட்பித்ததும் முதலியன. மானவமுனிவன் –
முன்கோபமுடைய முனியுமாம்.   

களப் பலி நாக கன்னிகை புதல்வன் கருதலான்தனக்கு நேர்ந்திடவும்,
கிளப்ப அருந் திதியை மயக்கி, வான் மதியம் கிளர் ஒளி
அருக்கனைக் கேட்ப,
வளப்படும் திதியின் முந்துற எமக்கே வழங்கிடும்படி மதி கொளுத்தி,
உளப் பொலிவுடனே விசயனுக்கு அருளால், உருளுடைக் கொடி
கொள் தேர் ஊர்ந்தாய்;

 நாக கன்னிகை புதல்வன் – நாககன்னிகையாகிய உலூபியின்
புத்திரனான இராவான், கருதலான் தனக்கு – பகைவனாகிய துரியோதனனுக்கு,
களம்பலி – போர்க்களத்திற் பலி கொடுக்கப்படுதற்கு, நேர்ந்திடஉம் –
சம்மதித்திருக்கவும்,கிளப்பு அரு திதியை – மாற்றுதற்கு அரிய திதியை, மாற்றுதற்கு
அரியதிதியை -மயக்கி – மாற்றி, வான் – ஆகாயத்தில், மதியம்  – சந்திரன்,
கிளர்ஒளி அருக்கனை- விளங்குகிற ஒளியையுடைய சூரியனை, கேட்ப –
சேரும்படி, வளம் படும் -மேன்மைப்பட்ட, திதியை – அமாவாசையை, முந்துற –
முற்படும்படி செய்து,எமக்குஏ – எங்களுக்கே, வழங்கிடும்படி – (அவன் தன்னைப்
பலியாகக்)கொடுக்கும்படி மதி கொளுத்தி – (அவனுக்கு) அறிவை உண்டாக்கி,
உளம்பொலிவுடன் – மன மகிழ்ச்சியோடு, விசயனுக்கு – அருச்சுனனுக்கு,
அருளால் -கருணையினால், உருள் உடை கொடி கொள் தேர் –
சக்கரங்களையுடையதுவசத்தைக்கொண்ட தேரை, ஊர்ந்தாய் – ஓட்டினாய்;
(எ – று.) பி – ம்: திதியின்

     அமாவாசையாவது – சூரியனுஞ் சந்திரனும் கூடும்நாள்: கிருஷ்ணபக்ஷத்துப்
பதினைந்தாந்திதி. கேட்டல் – சேர்ந்துநண்பாதல்; இதற்கு இப்பொருள்,
கேண்மையென்பதன் சம்பந்தமாக வந்தது; இனி, வானத்திற் சந்திரன் சூரியனை
‘இதுஎன்ன’ வென்று கேட்கும்படி யென்றுமாம்.    

அஞ்சியோ, அன்றி அருள்கொலோ, அறியேன்; ஆகவத்து
அடுதொழில் மறந்த
வெஞ் சிலை விசயற்கு உள்ளவாறு உணர்த்தி, மீளவும்
பொரும்படி விதித்தாய்;
வஞ்சினம் மறந்து, நேமியும் தரித்து, வலம்புரி குறித்து, மூதாதை
துஞ்சிட அமரில் சிகண்டி செய் தவத்தின் தொடர் பயன்
வழாவகை துரந்தாய்;

 அஞ்சிஓ -(பகைவர்கட்குப்) பயந்ததனாலோ, அன்றி – அல்லாமல்,
அருள்கொல்ஓ – (உயிர்களிடத்துக்) கருணையினாலோ, அறியேன் – (இரண்டில்
ஒன்று காரணமென்று நிச்சயமாகத்) தெரிந்திலேன்; ஆகவத்து – போர்க்களத்தில்,
அடு தொழில் – போர் செய்யுந் தொழிலை, மறந்த – விட்ட, வெம் சிலை
விசயற்கு -கொடிய வில்லையுடைய அருச்சுனனுக்கு, உள்ள ஆறு உணர்த்தி –
தத்துவங்களைஉபதேசித்து [ஸ்ரீகீதையை அருளிச்செய்து], மீளஉம் மறுபடி,
பொரும்படி -போர்செய்யும்படி, விதித்தாய் – நியமித்தாய்; – வஞ்சினம்மறந்து –
(முன்சொன்ன)பிரதிஜ்ஞையையும் மறந்து விட்டு, நேமிஉம் தரித்து –
சக்கராயுதத்தையும் எடுத்து,வலம்புரி குறித்து – சங்கநாதமுஞ்செய்து, அமரில் –
யுத்தத்தில், மூதாதை – பெரியபாட்டனாராகிய பீஷ்மர், துஞ்சிட – இறக்கும்படி,
சிகண்டி செய் தவத்தின் தொடர்பயன் – சிகண்டி (முற்பிறப்பிற்) செய்திருந்த
தவத்தினது (இப்பிறப்பில்) தொடருகிறபிரயோஜனம், வழா வகை – தவறாதபடி,
துரந்தாய் – நடத்தினாய்; (எ -று.)

     முதல்நாட்போரில் எதிர்வந்துநின்ற வீரர்களெல்லாம் பாட்டனும் அண்ணன்
தம்பிமாரும் மாமனும் உறவினரும் கல்விபயிற்றிய ஆசிரியரும் மனங்கலந்த
நண்பர்களுமாகவே யிருக்கக் கண்டு போர் புரியே னென்று காண்டீபங்
கைநெகிழத்தேர்த்தட்டின்மீதே திகைத்துக்கிடந்த அருச்சுனனுக்குக் கண்ணன்
தத்துவோபதேசஞ்செய்து தனதுவிசுவரூபங்காட்டி, அவனதுமயக்கத்தை ஓட்டி,
அவனைப்போர் புரியுமாறு உடன்படுத்தினான். வஞ்சினம் – படைத்துணையாக
அழைத்த துரியோதனனுக்குப் படையெடுத்துப் போர்செய்யே னென்று
வாக்குத்தத்தஞ்செய்தது. நேமியெடுத்தது – மூன்றாநாட் போரில் பீஷ்மர்
பாண்டவசேனையையெல்லாம் பாணவருஷத்தால் அழித்துப் போர்செய்யவும்
அருச்சுனன் எதிரிற்பொராமல் மறந்து நின்றபொழுது. வீடுமன் அழிந்த
பொழுதிலும்மற்றுஞ் சிலபொழுதிலும் கண்ணன் சங்கநாதஞ்செய்து நின்றார்;
அவ்வொலியாற்பகைவர் சேனைகள் நடுங்கி ஒடுங்கின

ஒரு பகல் விசயன் மார்பம் ஊடுருவ ஒழுகு வெங்
கடத்து ஒருத்தலின்மேல்
வரு பகதத்தன் எறிந்த வேல் உன்தன் வண் துழாய்
மார்பகத்து ஏற்றாய்;
பொரு பகை அரசர் பலர் பட, அபிமன் பொன்றிய பொழுது,
செந் தழலின்
நிருபனை முனியால் விழாவகை விலக்கி, நிசியில் வெங்
கயிலையும் கண்டாய்;

ஒழுகு – பெருகுகிற, வெம் – வெவ்விய, கடத்து –
மதஜலத்தையுடைய, ஒருத்தலின்மேல் – யானையின்மேல் (ஏறி), வரு – (போர்க்கு)
வந்த, பகதத்தன் – பகதத்தனென்னும் அரசன், ஒரு பகல் – ஒருநாள்,
[பன்னிரண்டாம்போர்நாள்], விசயன் – அருச்சுனனது, மார்வம் – மார்பை,
ஊடுருவ – துளைக்கும்படி, எறிந்த – 
வீசின, வேல் – வேலை, உன்தன் –
உன்னுடைய, வண் துழாய் மார்பு அகத்து – செழிப்பான திருத்துழாய்மாலையை
யுடைய மார்பினிடத்தே, ஏற்றாய் – ஏற்றுக்கொண்டாய்; பொரு பகை அரசர் பலர்
பட – போர்செய்கிற பலவகையரசர்கள் இறக்கும்படி, (கொன்று), அபிமன் –
அபிமந்யு, பொன்றிய பொழுது – இறந்த காலத்தில், (அருச்சுனன்), செம் தழலின் –
செம்மையான அக்கினியில், விழா வகை – விழாதபடி, நிருபனை – அருச்சுனனை,
முனியால் – முனிவரைக் கொண்டு, விலக்கி – தடுத்து,- நிசியில் – இராத்திரியில்,
வெம் – விரும்பப்படுகிற, கயிலைஉம் – கைலாசத்தையும், கண்டாய் – (போய்ப்)
பார்த்துவந்தாய்; (எ -று.)

     நிருபதமுனியால் என்ற பாடத்திற்கு வஞ்சனையற்ற முனிவனாலென்க. உபதா
என்றசொல் – ஒருவரைச்சோதித்த லென்ற பொருளுடையதாதலால், நிருபதன் –
சோதனை வேண்டாதவன் [வஞ்சனையற்றவன்] என்ற கருத்தது. நிருபதன் +
முனிவன் = நிருபதமுனிவன்: “சிலவிகாரமாமுயர்திணை”. அரசர்பலர் – துன்முகன்
உருமித்திரன் இலக்கணகுமாரன் துச்சனி முதலோர்

‘வருணன் மா மதலை வாசவன் மதலை மார்பினில் எறிந்த
வெங் கதையைக்
கருணையால் மருமம் புதைய ஏற்று, அந்தக் காளை
கையறும்படி கண்டாய்;
தருண வாள் நிருபர் மயங்கி வீழ்தர வெண்-சங்கமும் முழக்கி,
நேமியினால்
அருணன் ஆதபத்தை மறைத்து, இரவு அழைத்து, ஆங்கு அபிமனுக்கு
அரும் பழி கொண்டாய்;

வருணன் மா மதலை – வருணனது சிறந்த குமாரனாகிய
சுதாயுவென்பன், வாசவன் மதலை மார்பினில் – இந்திர குமாரனான அருச்சுனனது
மார்பில், எறிந்த – வீசிய, வெம் – கொடிய, கதையை – கதாயுதத்தை, மருமம் –
(தன்) மார்பில், புதைய – அழுந்தும்படி, கருணையால் – அருளினால், ஏற்று –
ஏற்றுக்கொண்டு, அந்த காளை – அந்த வீரன், கையறும்படி – இறக்கும்படி,
கண்டாய் – செய்தாய்; தருணம் வாள் நிருபர் – யௌவனபருவத்தை
யுடையவராகியஆயுதங்களையுடைய அரசர்கள், மயங்கி வீழ் தர – மயங்கி
விழும்படி, வெண்சங்கம்உம் முழக்கி – வெள்ளிய சங்கத்தையும் ஊதி,
நேமியினால் – சக்கரத்தினால்,அருணன் ஆதபத்தை மறைத்து – சூரியனது
வெயிலை மறையச்செய்து, இரவுஅழைத்து – இராத்திரியை வரும் படிசெய்த,
ஆங்கு – அப்பொழுது, அபிமனுக்குஅரு பழி கொண்டாய் – அபிமந்யுவைக்
கொன்ற அரிய பழிக்குப் பழிவாங்கினாய்.

ஏ வருஞ் சாப பண்டிதன் புதல்வன் ஏவிய ஏவினால் யாங்கள்
வீ வரும் தன்மை அறிந்து, வாகனமும் விறல் படைகளும்
ஒழித்திட்டாய்;
மூவரும் ஒருவர் ஆகி நின்றருளும் மூர்த்தியே! பார்த்திவர் பலரும்
தேவரும் உணரார், நின் செயல்!’ என மால் சேவடிகளில்
முடி சேர்த்தான்.

ஏ வரு – அம்புகள்வெளிப்படுகிற, சாபம் பண்டிதன் புதல்வன் –
வில்வித்தையில் வல்ல துரோணனதுபுத்திரனாகிய அசுவத்தாமன், ஏவிய –
பிரயோகித்த, ஏவினால் – நாராயணாஸ்திரத்தினால், யாங்கள் – நாங்கள் வீவரும் –
இறக்கும்படியான, தன்மை – தன்மையை, அறிந்து – தெரிந்து, வாகனங்கள்உம் –
(எங்கள்) வாகனங்களையும், விறல் படைகள்உம் – வெற்றியைத் தருகிற
ஆயுதங்களையும், ஒழித்திட்டாய் – விட்டிருக்கச்செய்தாய்; மூவர்உம் ஒருவர் ஆகி
நின்றருளும் மூர்த்தியே – திருமூர்த்திகளும் ஒருமூர்த்தியாகிநின்றருளுகிறவடிவத்தை
யுடையவனே! பார்த்திவர் பலர்உம் – அரசர்கள் பலரும்,தேவர்உம் –
தேவர்களும், நின் செயல் – உனது திருவிளையாட்டை, உணரார் –
அறியார்கள், என  – என்றுதுதித்து, மால் சே அடிகளில் – கண்ணனது
சிவந்ததிருவடிகளில், முடிசேர்த்தான் – (தன்) தலையை வைத்து வணங்கினான்;
(யுதிஷ்டிரன்); ( எ – று.)- ஏ வரும் எனப் பிரித்து – அஸ்திரசஸ்திரங்கள்
கைவந்தஎன்றும், யாங்கள் ஏவரும் எனக்கூட்டி நாங்களெல்லோருமென்றும்
உரையிடலாம்.பி -ம்: வேலினால்.

கண்ணனும் கருணைக் கண்ணனை இறைஞ்சி, கைகளால் தழுவி,
‘ஐவிரும் நீர்
எண்ணஅரும் அமரில் இறக்கிலீர்; அஞ்சல்!’ என்று உபசாரமும்
இயம்பி,
பண் அமர் தடந் தேர்ச் சேனையின் பதியைப் பார்த்து, ‘அணி
வகுக்க!’ எனப் பணித்தான்.
அண்ணல் அம் திட்டத்துய்மனும், தெவ்வர் அஞ்சிடும்படி,
அணி வகுத்தான்.16.- கிருஷ்ணன் யுதிஷ்டிரனுக்கு அபயமளித்து
த்ருஷ்டத்யும்நனைக்கொண்டு அணிவகுத்தல்.

கண்ணன்உம் – கிருஷ்ணனும், கருணை கண்ணனை – அருள்
சுரக்கிறகண்களையுடைய தருமனை, இறைஞ்சி – வணங்கி, கைகளால் தழுவி-, ‘நீர்
ஐவிர்உம் – நீங்கள் ஐந்துபேரும், எண் அமரும் அமரில் – எண்ணுதற்கும் அரிய
போரில், இறக்கிலீர் – இறக்க மாட்டீர்கள், அஞ்சல் – பயப்படவேண்டாம்,’ என்று-,
உபசாரம் உம் இயம்பி – உபசாரமான வார்த்தைகளையுஞ் சொல்லி, பண்உறும் –
அலங்காரம் அமைந்த, தட தேர் – பெரியதேரையுடைய, சேனையின் பதியை
பார்த்து – சேனைத்தலைவனான திட்டத்துய்மனை நோக்கி, அணி வகுக்க என –
அணிவகுப்பாயாக வென்று, பணித்தான் – கட்டளையிட்டான்; அண்ணல் –
பெருந்தன்மையையுடைய, அம் – அழகிய, திட்டத்துய்மன்உம் – அச்சேனாபதியும்,
தெவ்வர் அஞ்சிடும்படி – பகைவர்கள் பயப்படும்படி, அணி வகுத்தான்-; (எ -று.)-
பி -ம்: பண்ணமர் தடந்தேர்ச்.

     கண்ணன் தருமனை எதிர்வணங்கினது, ராஜமரியாதைக்கு. அஞ்சல் –
அல்லீற்று எதிர்மறைவியங்கோள்முற்று. வகுக்கென – தொகுத்தல்

ஐவர் பதாகினி வெள்ளம் அணிந்தவா கண்டு, அடு விறல் கோல் நெடு
விற் கை அங்கர் கோமான்,
பை வரு மாசுணக் கொடியோன்தன்னை நோக்கி, பரித் தடந் தேர் நரபாலர்
பலரும் கேட்க,
‘கை வரு பல் படைக்கும் ஒரு வீரர் ஒவ்வாக் கட்டாண்மை அரசே!
இக் களத்தில், இன்றே,
கொய்வரு தார்ப் புயப் பகைவர் சிரங்கள் எல்லாம், குறை உடலம்
கூத்தாட, கொய்வேன்!’ என்றான்.7.- ஐந்துகவிகள் – கர்ணன் வார்த்தை: சல்லியன்

பாகனானால்தான் தன்னுயிரிருக்கும்வரையில்முனைந்து
பொருது வெல்வதாக உறுதிகூறுதலைத் தெரிவிக்கும்.

 

ஐவர் – பாண்டவர்களது, பதாகினி வெள்ளம் – சேனைத்திரள்,
அணிந்த ஆ(று) – அணிவகுக்கப்பட்டுநின்ற விதத்தை, அடு விறல் கோல் –
(பகைவர்களைக்) கொல்லுகின்ற வெற்றியையுடைய அம்புகளைச் சொரிகின்ற,
நெடுவில் – நீண்ட வில்லேந்திய, கை – கையையுடைய, அங்கர் கோமான் –
அங்கதேசத்தார்க்கு அரசனான கர்ணன், கண்டு – பார்த்து, பை வரும் – படம்
பொருந்திய, மாசுணம் கொடியோன் தன்னை நோக்கி – பாம்புக்கொடியுடைய
துரியோதனனை நோக்கி, பரி தட தேர் – குதிரைகள் பூட்டிய பெரிய
தேரையுடைய,நரபாலர் பலர்உம் – மனிதர்களைக்காக்கிற அரசர்கள்யாவரும்,
கேட்க -கேட்கும்படி, ‘கை வரு பல் படைக்குஉம் – கைதேர்ந்த பல
ஆயுதங்களுக்கும், ஒருவீரர் ஒவ்வா – ஒருவீரரும் ஒப்பாகாத, கட்டு ஆண்மை –
உறுதியானபராக்கிரமத்தையுடைய, அரசே – அரசனே! இ களத்தில் – இந்தப்
போர்க்களத்தில்,இன்றுஏ – இன்றைக்கே, கொய்வரு தார் – பறித்துத்
தொடுக்கப்பட்டமாலைகளையுடைய, புயம் – தோள்களையுடைய, பகவைர் –
பகைவர்களது, சிரங்கள்எல்லாம் – தலைகளை யெல்லாம், குறை உடலம்
கூத்தாட – கவந்தங்கள்குதிக்கும்படி, கொய்வேன் – அறுப்பேன்,’ என்றான் –
என்று சொன்னான்,(எ -று.) –பி -ம்: தார்போர்ப்.

     பதினாறுகவிகள் – பெரும்பாலும் ஒன்று இரண்டு ஐந்து ஆறாஞ்சீர்கள்
காய்ச்சீர்களும், மற்றையவை மாச்சீர்களுமாகிய எண்சீராசிரியவிருத்தங்கள்

கார்ப் பாகசாதனன்தன் மகனுக்கு, எல்லாக் கலகமும் செய்
வஞ்சனையே கற்ற கள்வன்,
தேர்ப்பாகனாய் நின்றான்; அவனுக்கு ஒப்பார் தேவர் உலகினும்
இல்லை; திசைகள் எல்லாம்
ஆர்ப்பாக மோதிவரும் கவன மா நெஞ்சு அறிவானும், போரில் விரகு
அறிவிப்பானும்,
போர்ப் பாகு ஆய்த் தேர் கடவு செயல் வல்லானும், புனை தாமச்
சல்லியனே, புவியில்’ என்றான்.

கார் – மேகங்களைவாகனமாகவுடைய, பாகசாதனன் தன் –
இந்திரனது, மகனுக்கு – குமாரனான அருச்சுனனுக்கு, எல்லா கலகம்உம் செய்  –
கலகங்களை யெல்லாஞ் செய்கின்ற, வஞ்சனைஏ கற்ற – வஞ்சகங்களையே பழகிய,
கள்வன் – திருட்டுத்தனமுடைய கண்ணன், தேர் பாகன் ஆய் நின்றான் -;
அவனுக்கு ஒப்பார் தேவர் உலகின் உம் இல்லை-; திசைகள் எல்லாம் –
எல்லாத்திக்குகளிலும், ஆர்ப்பு ஆக – ஆரவாரம் உண்டாம்படி, மோதி வரும் –
எதிர்த்து வருகிற, கவனம் மா – நடைகளையுடைய குதிரைகளின், நெஞ்சு –
மனத்தை, அறிவான்உம் -(சமயத்துக்குஏற்ற) உபாயங்களைத் தெரிவிப்பவனும்,
போர்பாகு ஆய் – போருக்கு உரிய சாரதியாய், தேர் கடவு செயல்
வல்லான்உம் -தேர்செலுத்துந் தொழிலில்வல்லவனுமாகிய, புனை தாமம்
சல்லியன்ஏ – அணிந்தபோர்மலையையுடைய சல்லியன்தானே, புவியில் –
இவ்வுலகத்தில் (அவனுக்குஒப்பான்), என்றான்-; (எ  – று.) – கவனம்- கமநம்;
வடசொற்றிரிபு.

அவன் இன்று என் மணி நெடுந் தேர் கடவுமாகில், அருச்சுனனுக்கு
அடல் ஆழியவனே அன்றிச்
சிவன் வந்து தேர் விடினும், கொல்வேன், அந்தத் தேர் நின்றார்
இருவரையும்; செங்கோல் வேந்தே!
பவனன் சேய் முதலான துணைவர் ஓர் ஓர் பகழி முனைதனக்கு
ஆற்றார்; பரவை ஆடைப்
புவனங்கள் அனைத்தையும் நின் குடைக்கீழ் ஆக்கி, புரி திறல்
வாகையும் நினக்கே புனைவிப்பேனே.

மூன்றுகவிகள் – ஒருதொடர்

     (இ-ள்.) அவன் – அச்சல்லியன், இன்று – இன்றைக்கு, என்- எனது, மணி
நெடு தேர்- (அடிக்கும்) மணிகள் கட்டிய பெரிய தேரை, கடவும் ஆகில் –
செலுத்துவனானால், அருச்சுனனுக்கு-, அடல் ஆழியவன் ஏ அன்றி – வலிய
சக்கரத்தையுடைய (காத்தாற் றொழிற்கடவுளாகிய) திருமாலேயல்லாமல், சிவன்வந்து
தேர்விடின் உம் – (அழித்தற்றொழிற்கடவுளாகிய) சிவன் சாரதியாக வந்துதேர்
செலுத்தினாலும், அந்த தேர் நின்றார் இருவரைஉம் – அத்தேரில் நின்ற கிருஷ்ண
அருச்சுனர் இரண்டுபேர்களையும் கொல்வேன்-; செங்கோல்வேந்தே – நீதிதவறாத
அரசாட்சியையுடைய அரசனே! பவனன் சேய்முதல் ஆன துணைவர்- (மற்றை)
வாயுமகனான வீமன் முதலிய சகோதரர்கள், ஓர் ஓர் பகழி முனை தனக்கு –
ஒவ்வொரு அம்பின் நுனிக்கேனும், ஆற்றார் – போதமாட்டார்; பரவை ஆடை –
கடலைச் சேலையாகவுடைய, புவனங்கள் அனைத்தைஉம் – பூமிகள் முழுவதையும்,
நின் குடைக்கீழ் ஆக்கி – உனது ஆளுகையின் கீழ் ஆகச்செய்து, புரி திறல்
வாகைஉம் – செய்த வல்லமையைக் குறிக்கிற வெற்றிமாலையையும், நினக்கு ஏ
புனைவிப்பேன் – உனக்கே சூட்டுவேன்; (எ -று.)- மணி – அழகியவென்றும்,
நவரத்தினங்களும் பதித்த வென்றுமாம்.    

நஞ்(சு) சோற்றம் பெற நுகர்வுற்று இருண்ட கண்டர் நல் தொண்டர்
வடிவம் என, நண்ணும் வெண்ணீற்று
அம் சோற்று மடல் கைதை கமழும் கானல் அகல் குருநாட்டு
அரி ஏறே! ஆனின் தீம் பால்
வெஞ் சோற்றோடு இனிது அருந்தி, அமுது அருந்தும்
விண்ணவர்போல், இந் நெடு நாள் விழைந்து வாழ்ந்தேன்;
செஞ்சோற்றுக் கடன் இன்றே கழியேனாகில், திண் தோள்கள்
வளர்த்ததனால், செயல் வேறு உண்டோ?

நஞ்சு – விஷத்தை, சோற்றம் பெற – உணவாகப் பொருந்தும்படி,
நுகர்வுற்று – அமுதுசெய்து, இருண்ட – (அதனாற்) கறுத்த, கண்டர் –
கழுத்தையுடையபரமசிவனது, நல்தொண்டர்- நல்ல அடியார்களது, வடிவம் என –
உடம்பு (திருநீறு பொருந்துவது) போல, நண்ணும் – பொருந்திய, வெள் –
வெண்மையான, நீறு – நீற்றையுடைய, அம் – அழகிய, சோறு – சோற்றியையும்,
மடல் – மடல்களையுமுடைய, கைதை – தாழைகள், கமழும் – வாசனை வீசுகிற,
கானல் – கடற்கரைச்சோலைகளையுடைய, அகல் குருநாடு – பரந்த குருநாட்டிலே
வாழுகிற, அரி ஏறே -(பகைவர்களுக்கு) ஆண்சிங்கம் போன்றவனே! ஆனின் தீம்
பால் – பசுவினது இனிய பாலை, வெம் சோற்றோடு – சுடுகின்ற சோற்றுடனே,
அழுது அருந்தும் விண்ணவர்போல் – அமிர்தத்தை யுண்ணுகிற தேவர்கள்போல,
இநெடு நாள் – இவ்வளவு பல காலமும், விழைந்து – விரும்பி, இனிது –
இனிமையாக, அருந்தி – (உன்னிடம்) உண்டு,வாழ்ந்தேன்-; செம் சோறு கடன்-(நீ
எனக்குச்) செவ்வையாகப்போகட்டுவந்த சோற்றுக்குப் பிரதியுபகாரமாகச்
செய்யவேண்டுங்கடமையை, இன்று ஏ கழியேன் ஆகில் – இன்றைக்கே
கழிக்காமற்போய்விடுவேனானால், திண் தோள்கள் வளர்த்ததனால் –* வலிய
தோள்களை வளர்த்ததனாலே, வேறு செயல் உண்டுஓ – வேறுபயனுளதோ? (எ -று.)

     நஞ்சு சோற்றம் என்பது ‘நஞ்சோற்றம்’ என விகாரமாயிற்று; சோற்றம்,
அம் -சாரியை. இனி, இத்தொடரை – நஞ்சு ஓர் தம்பெற என்று பிரித்து –
நஞ்சினதுஆரவாரமானது அடங்க என்று பொருள் கூறுவாருமளர். ‘நஞ்சேற்றம்’
என்றபாடத்துக்கு -விஷத்தைப் பெருமைபெற உண்டு என்க. நீறு – பூஞ்சுண்ணம்.
சோறு- வயிரமற்ற சோற்றி. அக்காலத்திற் குருநாட்டின் எல்லை கடல்மட்டும்
இருந்ததுபோலும். ஈற்றடியில் ‘அவிப்பலி’ என்ற புறத்துறைப் பொருள் காணலாம்.
“வெள்வா ளமருட் செஞ்சோ றல்லது, உள்ளா மைந்த ருயிர்ப்பலி கொடுத்தன்று”
என்பது கொளு.   

ஓர் ஊரும் ஒரு குலமும் இல்லா என்னை உங்கள் குலத்து
உள்ளோரில் ஒருவன் ஆக்கி,
தேர் ஊருமவர் மனைக்கே வளர்ந்த என்னைச் செம் பொன் மணி
முடி சூட்டி, அம்பு ராசி
நீர் ஊரும் புவிபாலர் பலரும் போற்ற, நின்னினும் சீர் பெற
வைத்தாய்; நினக்கே அன்றி,
ஏர் ஊரும் கதிர் முடியாய்! உற்ற போரில், யார்க்கு இனி என் உயிர்
அளிப்பது? இயம்புவாயே!’

ஓர் ஊரும் ஒரு குலமும் இல்லா என்னை-, உங்கள் குலத்து
உள்ளோரில் ஒருவன் ஆக்கி – உங்கள் குலத்தவரில் ஒருவனாகப் பாவித்து, தேர்
ஊருமவர் மனைக்குஏ – தேரைநடத்துகிற பாகரது மனையில்தானே, வளர்ந்த
என்னை-, செம்பொன் மணி முடி சூட்டி = செம்பொன்னினாற் செய்து
நவரத்தினமுமிழைத்த கிரீடத்தைத்தரிப்பித்து, அம்புராசி நீர் ஊரும் புவிபாலர்
பலர்உம் போற்ற – கடல்நீராற் சூழப்பட்டபூமியை ஆளுகிற அரசர்க ளெல்லாரும்
புகழும் படி, நின்னின்உம் சீர் பெற – உன்னினும் மிகச் சிறப்புப்பெறுமாறு,
வைத்தாய்-; நினக்குஏ அன்றி – (இத்தனை உபகாரமுஞ்செய்த) உனக்கேயல்லாமல்,
ஏர் ஊரும் கதிர் முடியாய் – அழகுபொருந்திய ஒளியையுடைய
கிரீடத்தையுடையவனே! உற்ற போரில் – நேர்ந்த யுத்தத்தில், இனி-, யார்க்கு என்
உயிர் அளிப்பது-! இயம்புவாய் – சொல்; (எ -று.)- என்று கர்ணன் கூறினான்.
மனைக்கு – உருபுமயக்கம். அம்புராசி – நீர்த்தொகுதியை யுடையது.

கன்னன் இவை எடுத்து உரைப்ப, மகிழ்ந்து கேட்டு, காந்தாரன்
திருக்குலத்துக் கன்னி ஈன்ற
மன்னர் பிரான், இமைப் பொழுதில் பழுது இலாத மத்திர ராசனை
எய்தி, ‘மதுப சாலம்
தென்ன தென என முரலும் செவ்வி மாலைத் திருத் தோளாய்! யான்
ஒன்று செப்பினால், அவ்
இன் உரை கேட்டு, ஒரு வரம் நீ நல்கல் வேண்டும்; என் ஆணை!’
எனக் கரம் கொண்டு இறைஞ்சினானே.22.- துரியோதனன் சல்லியனை ஒருவரம்வேண்டுமென
இறைஞ்சுதல்.

கன்னன் இவை எடுத்து உரைப்ப-, காந்தாரன் திருகுலத்து கன்னி
ஈன்ற – காந்தாரநாட்டரசனது மேன்மையான குலத்தில்தோன்றிய பெண்ணாகிய
காந்தாரி பெற்ற, மன்னர்பிரான்- அரசர்க்கரசனான துரியோதனன், மகிழ்ந்து கேட்டு-,
இமைப்பொழுதில்-, பழுது இலாத மத்திரராசனை எய்தி – ஒரு குறைவுமில்லாத
மத்திரதேசத்தரசனான சல்லியனை அடைந்து, ‘மதுபசாலம் – வண்டுகளின் கூட்டம்,
தென்ன தென என முரலும் – தென்னதென வென்று இசைபாடுகிற, செவ்வி மாலை
– அழகிய மாலையயணிந்த, திருத்தோளாய் – அழகிய தோள்களையுடையவனே!
யான் ஒன்று செப்பினால் – நான் ஒரு வார்த்தை சொன்னால், அ இன் உரை
கேட்டு- அவ்வினியவார்த்தையைக் காதுகொடுத்துக்கேட்டு, நீ -, ஒரு வரம் –
ஒருவரத்தை,நல்கல் வேண்டும் – (எனக்குக்) கொடுத்தல் வேண்டும்; என்
ஆணை – என்மேல்ஆணை,’ என – என்று சொல்லி, கரங்கொண்டு –
கைகளால், இறைஞ்சினான் -தொழுதான்; (எ -று.)- தென்னதென வென –
இசைக்குறிப்பு.

செறுத்தவர்தம் பெரு வாழ்வும் உயிரும் மாற்றி, சேர்ந்தவர்கள்
புரிந்த பெருந் தீமை எல்லாம்
பொறுத்து, உலகம் முழுது ஆளும் திகிரியோய்! யான் பொருளாக
ஒரு வரம் நீ புகலுவாயேல்,
மறுத்து உரையேன்; உரைத்தருள்!’ என்று உரைத்தான், அந்த மத்திர
பூபனும்; இவனும், ‘மருவலாரைக்
கறுத்த மழை முகில் வெளுக்கக் கருகு மேனிக் கண்ணனைப்போல்
எங்களை நீ காததி!’ என்றான்23.-வரங்கொடுக்கச் சல்லியனிசைய, துரியோதனன்
கண்ணனைப்போல் நீ எங்களைக் காக்கவேணு மெனல்.

அந்த மத்திர பூபன்உம் – மத்திரதேசத்தரசனான அச்சல்லியனும்,
(அதுகேட்டுத் துரியோதனனைநோக்கி), ‘செறுத்தவர் தம் – பகைத்தவர்களது,
பெருவாழ்வுஉம் – பெரிய எல்லாவாழ்க்கைகளையும், உயிர்உம் – உயிரையும், மாற்றி
– ஒழித்து, சேர்ந்தவர்கள் புரிந்த – (தன்னை) அடைந்தவர்கள் செய்த, பெரு தீமை
எல்லாம் – பெரிய தீங்குகள் முழுவதையும், பொறுத்து-, உலகம் முழுது ஆளும் –
உலகமுழுவதையும் அரசாளுகின்ற, திகிரியோய் – ஆஜ்ஞா சக்கரமுடையவனே! நீ-,
யான் பொருள் ஆக – பொருளல்லா என்னை ஒரு பொருளாக மதித்து, ஒரு வரம்-,
புகலுவாய்ஏல் – கேட்பையானால், மறுத்து உரையேன் -(அதை நான்) தடுத்துச்
சொல்லேன: உரைத்தருள் – (அவ்வரம் இன்னதென்று) சொல்லி யருளுவாய்’, என்று
உரைத்தான்-; இவன்உம் – துரியோதனனும், (உடனே),’ மருவலாரை –
பகைவர்களாகிய பாண்டவர்களை, கறுத்த மழை முகில் வெளுக்க – மழைபெய்கிற
காளமேகமும் வெளுப்பென்னும்படி, கருகும் மேனி – மிகக்கறுத்த
திருமேனியையுடைய, கண்ணனைப்போல் – கிருஷ்ணன் காப்பதுபோல, எங்களை-,
நீ-, காத்தி – காப்பாய்,’ என்றான்-,( எ – று.)- சிறுபிழைசில பொறுத்தல்
அரிதன்றாதலால், ‘பெருந்தீமையெல்லாம் பொறுத்து’ என்றான்.

வாவும் மா மணி நெடுந் தேர் அரசர்க்கு எல்லாம் வாய்ப்பான நீ
எனையும் புரப்பது அன்றி,
ஏவுமா தொழில் புரிந்து உன் குடைக்கீழ் வைகும் என் போல்வார்
உனைப் புரத்தல் இசைவது ஒன்றோ?
தேவுமாய், மானுடமாய், மற்றும் முற்றும் செப்புகின்ற பல கோடி
சராசரங்கள்
யாவுமாய், விளையாடும் ஆதிமூர்த்தி யாதவனுக்கு யான் எதிரோ?
எதிர் இலாதாய்!24.-அதுகேட்ட சல்லியனது வார்த்தை

இரண்டு கவிகள் – ஒருதொடர்

     (இ-ள்.) எதிர்இலாதாய் – ஒப்பில்லாதவனே! வாவும் – தாவுகின்ற, மா –
குதிரைகள்பூட்டிய, மணி – மணிகள்கட்டிய, நெடு – பெரிய, தேர் – தேரையுடைய,
அரசர்க்குஎல்லாம்-, வாய்ப்பு ஆன – பொருந்தின காவலாகிய, நீ-, எனைஉம் –
என்னையும், புரப்பது அன்றி – காப்பதல்லாமல், ஏவும் ஆ(று) -(நீ) ஏவினபடி,
தொழில் புரிந்து – குற்றேவல்செய்து, உன் குடைக்கீழ்வைகும் – உன் ஆளு
கையின்கீழ்த் தங்குகிற, என்போல்வார் – என்னைப்போல்பவர், உனை புரத்தல் –
உன்னைக் காத்தல், இசைவது ஒன்றுஓ – பொருந்துவதொரு காரியமோ? தேஉம்
ஆய் – சகலதேவஜாதியுமாய், மானுடம் ஆய் – மனித ஜாதியுமாகி, மற்றுஉம் –
இன்னும், முற்றுஉம் செப்புகின்ற – முழுவதுஞ்சொல்லுகிற, பல கோடி –
அநேககோடியாகிய , சர அசரங்கள் யாஉம் ஆய் – அசையும்பொருளும்
அசையாப்பொருளுமாகிய எல்லாமாகி, விளையாடும் – விளையாடுகின்ற, ஆதி
மூர்த்தி – (எல்லாவற்றுக்கும்) முதன்மை வடிவமாகிய, யாதவனுக்கு – யது
குலத்தில்தோன்றிய கண்ணபிரானுக்கு, யான்-, எதிர்ஓ – ஒப்பாவேனோ? (எ -று.)

     நீ சாரத்தியாஞ்செய்த எம்மைக் காக்கவேண்டு மென்று துரியோதனன்
குறிப்பாகவுணர்த்தினதனால் அதனையுணராது, சல்லியன், பாண்டவரைக்
கண்ணன்காப்பதுபோல், அரசரையும்பாதுகாக்கின்ற உன்னைப்பாதுகாப்பது
என்னால்இயலுவதொருசெயலோ? என்று மறுத்துரைத்தான்.

நேர் செலுத்தும் தனிச் செங்கோல் உடையாய்! யாது நினைவு உனக்கு?’
என்று அவன் வினவ, நிருபன்தானும்
தார் செலுத்தும் பெருஞ் சேனை சூழ நின்ற சல்லியனை முகம் நோக்கி,                         ‘தனஞ்சயற்குத்
தேர் செலுத்தும் முகுந்தனைப்போல், நீயும், இன்று, தேர் இரவி
மகன் திண் தேர் செலுத்தின் அல்லால்,
போர் செலுத்தி ஐவரையும் வென்று, வாகை புனைதல் நமக்கு அரிது’
என்று போற்றினானே.25.-‘கர்ணனுக்குச் சாரத்தியஞ்செய்க’ என்று துரியோதனன் வினவிய
சல்லியனிடம் தன்கருத்தை வெளிப்படையாகத்
தெரிவித்தல்.

நேர் செலுத்தும் – நேராக நடக்கின்ற, தனி – ஒப்பற்ற, செங்கோல்
உடையாய் – அரசாட்சிமுறையை யுடையவனே! உனக்கு- ! நினைவு – எண்ணம்,
யாது – என்ன?’ என்று-, அவன் வினவ – அச்சல்லியன்கேட்க, நிருபன்
தான்உம் -துரியோதனனும், தார் செலுத்தும் – ஒழுங்காக நடத்தப்படுகிற, பெரு
சேனை-, சூழ -(தன்னைச்) சூழும்படி, நின்ற – (இடையில்) நின்ற, சல்லியனை
முகம் 
நோக்கி – சல்லியன்முகத்தைப் பார்த்து, ‘தனஞ்சயற்கு – அருச்சுனனுக்கு,
தேர் செலுத்தும் – தேரோட்டுகின்ற, முகுந்தனைபோல் – கிருஷ்ணனைப்போல்,
நீயும்-, இன்று-, தேர் இரவிமகன் – தேரையுடைய சூரியனது குமாரனாகிய
கர்ணனுக்கு, திண் தேர் – வலிய தேரை, செலுத்தின் அல்லால் – ஓட்டினாலல்லாமல்,
போர் செலுத்தி- யுத்தத்தைநடத்தி, ஐவரைஉம் – பஞ்சபாண்டவரையும், வென்று –
ஜயித்து, வாகைபுனைதல் – வெற்றிமாலையைச் சூடுதல், நமக்கு-, அரிது –
அரியது,’என்று-,போற்றினான் – புகழ்ந்து கூறினான்; (எ -று.)- முகுந்தன்- (தன்
அடியார்களுக்கு)முத்தியின்பத்தையும் இவ்வுலகவின்பத்தையுங் கொடுப்பவன்;
மு – முத்தி, கு – பூமி. 

‘புல்லிய சொல் மதியாமல் என்னை நோக்கிப் புகன்றனையால்; புல்
மேயும் புல்வாய்க்கு என்றும்
வல்லிய மாப் பணித்த தொழில் புரியின் அன்றோ, மத்திரத்தான்
கன்னனுக்கு வலவன் ஆவான்?
சொல்லிய நா என்படும், மற்று ஒருவன் சொன்னால்? சுயோதனன்
ஆதலின், பொறுத்தேன், சொன்னது’ என்று
சல்லியன் மா மனம் கொதித்து, புருவம் கோட்டி, தடங் கண்ணும்
மிகக் சிவந்தான் தறுகணானே.26.- சல்லியன் துரியோதனன்சொல்லைக் கண்டித்துக் கூறுதல்

தறுகணான் – அஞ்சாமையை யுடையவனாகிய, சல்லியன்-,
(அதுகேட்டு), மா மனம் கொதித்து – சிறந்தமனம் மிகக்கோபித்து, புருவம்
கோட்டி -(அதனால்) புருவத்தை நெறித்து, (துரியோதனனைநோக்கி), ‘மதியாமல் –
(நீ சிறிதும்)ஆலோசியாமல், என்னை நோக்கி-, புல்லியசொல் –
அற்பத்தன்மையையுடையசொற்களை, புகன்றனை – சொன்னாய்; என்றுஉம் –
எப்பொழுதும், புனம் மேயும்- வனத்தில் மேய்கிற, புல்வாய்க்கு – புல்லைத்
தின்னுகிற வாயையுடைய மானுக்கு, வல்லியம் மா – புலியாகிய விலங்கு, பணித்த
தொழில் – கட்டளையிட்ட செய்கையை, புரியின் அன்றோ – செய்தாலல்லவோ,
மத்திரத்தான் – மத்திரநாட்டரசனான சல்லியன், கன்னனுக்கு-, வலவன் ஆவான் –
சாரதியாவான்; மற்று ஒருவன் சொன்னால் – (உன்னைத்தவிர) வேறொருத்தன்
(இந்தவார்த்தையைச்) சொல்வானாகில், சொல்லிய நா என் படும் – சொன்ன அந்த
நாக்கு என்ன பாடுபடும்? சுயோதனன் ஆதலின் – (சொன்னவன்)
துரியோதனனாதலால், சொன்னது பொறுத்தேன்-, என்று – என்றுசொல்லி, தட
கண்உம் மிக சிவந்தான் – பெரிய கண்களும் (கோபத்தால்) மிகச் சிவக்கப்
பெற்றான்;(எ-று.)

     ‘மத்திரத்தான் வலவனாவான்,’ ‘சுயோதனனாதலிற் பொறுத்தேன்’ என்பன –
தன்மைமுன்னிலைகளைப் படர்க்கையாகக் கூறிய இடவழுவமைதி.  

சதுர் விதத் தேர் வீரருக்கும் தடந் தேர் ஊரும் சாரதிதன்
தனயனுக்குத் தடந் தேர் ஊர்தல்,
மது மலர்த் தார் வலம்புரியாய்! இழிவு அன்றோ? நீ மதித்த விறல்
கன்னனுக்கும் எனக்கும் இப்போது
எதிர் மலைக்கும் சேனைதன்னை இரு கூறு ஆக்கி, இகல் புரிந்தால்,
என் கூற்றை இரிய வென்று, அக்
கதிர் அளித்தோன் கூற்றினையும் அழித்திலேனேல், கடவுவன் தேர்
அவற்கு’ என்று கனன்று சொன்னான்.27.- இதுவும் அது.

மது மலர் தார் வலம்புரியாய் – தேனையுடைய நஞ்சா வட்டை
மலர்களாலாகிய மாலையையுடையவனே! சதுர்விதம் தேர் வீரருக்குஉம் -(அதிரதர்
மகாரதர் சமரதர் அர்த்தரதர் என்று) நால்வகைப்பட்ட ரதாதிபதிகளுக்கும், தட
தேர்ஊரும் – பெரிய தேரைச் செலுத்துகிற, சாரதிதன் – பாகனது, தனயனுக்கு –
மகனுக்கு, தட தேர் ஊர்தல் – பெரிய தேரை ஓட்டுதல், இழிவு அன்றோ –
அவமானந்தருவதன்றோ? நீ மதித்த விறல் – நீ கௌரவித்த வெற்றியையுடைய,
கன்னனுக்கும்-, எனக்கும்-, இப்பொழுது-, எதிர் மலைக்கும் – எதிர்ற்போர்செய்கிற,
சேனை தன்னை- (பகைவர்) சேனையை, இரு கூறு ஆக்கி – இரண்டுபாகமாகப்
பிரித்துக் கொண்டு, இகழ் புரிந்தால் – போர் செய்தால், என் கூற்றை – எனக்கு
ஏற்படும் பாகத்தை, இரிய – ஒழியும்படி, வென்று – ஜயித்து, அ கதிர்
அளித்தோன்கூற்றினைஉம் – அச்சூரியகுமாரனுக்கு ஏற்படும் பாகத்தையும்,
அழித்திலேன்ஏல் -(அவனுக்குமுன்) அழிக்காமற்போவேனே யானால், அவற்கு –
அவனுக்கு, தேர்கடவுவன் -தேரை ஓட்டுவேன்,’ என்று -, கனன்று-கோபித்து,
சொன்னான்-; (எ-று.)-நீ மதித்த விறல் என்றது – பிறர் அவன்வலிமையை
மதியாமை தோன்றநின்றது.

செங் கோல மலரில் இருந்து அனைத்தும் ஈன்ற திசைமுகன்தான் அறம்
வளர்க்கும் தெய்வப் பாவை
பங்கோனுக்கு ஆதி மறைப் புரவி பூண்ட படிக் கொடித் தேர் கடவு
தனிப் பாகன் ஆனான்;
‘பொங்கு ஓதப் பாற்கடலான் இவன்!’ என்று யாரும் புகல்கின்ற
வசுதேவன் புதல்வன் வந்து
வெங் கோப விசயனுக்குச் சூதன் ஆனான்; விசயனும், அன்று,
உத்தரன் தேர் விசையின் ஊர்ந்தான்.28,- இரண்டுகவிகள் – ஒருதொடர்: துரியோதனன்
சமாதானப்படுத்திச் சில சொல்லச் சல்லியன் கர்ணனுக்குப்
பாகனாதற்கு இசைதலைத் தெரிவிக்கும்.

செம் – செம்மையான, கோலம் – அழகிய, மலரில் – (திருமாலின்
திருவுந்தித்தாமரைப்) பூவில், இருந்து-, அனைத்து உம்ஈன்ற –
எல்லாவற்றையும்படைத்த, திசைமுகன் – நான்குதிக்குகளிலும் முகங்களையுடைய
பிரமன், அறம் வளர்க்கும் – முப்பத்திரண்டு தருமங்களையும் வளரச்செய்கிற,
செல்வம் – செல்வத்தையுடைய, பாவை – சித்திரப்பிரதிமைபோலும் உமாதேவியை,
பங்கோனுக்கு – (தனது) இடப்பக்கத்திற் கொண்ட பரமசிவனுக்கு, ஆதி –
பழமையான, மறை – வேதங்களாகிய, புரவி – குதிரைகளை, பூண்ட – பூட்டப்
பட்டுள்ள, படி – பூமியாகிய, கொடி தேர் – துவசத்தையுடைய தேரை – கடவு –
ஓட்டுகின்ற, தனி பாகன் ஆனான் – ஒப்பற்ற சாரதியாயினான்; பொங்கு –
(அலைகள்)பொங்குகிற, ஓதம் – வெள்ளத்தையுடைய, பாற்கடலான் – திருப்பாற்
கடலிற்பள்ளிகொண்டிருக்கும் ஸ்ரீமந்நாராயணன், இவன் என்று-, யாரும்
புகல்கின்ற -யாவருஞ் சொல்லுகிற, வசுதேவன் புதல்வன் – வசுதேவனது
குமாரனாகிய கண்ணன்,வந்து-, வெம் கோபம் விசயனுக்கு – கொடிய
கோபத்தையுடைய  அருச்சுனனுக்கு,சூதன் ஆனான் – சாரதியானான்; விசையன்
உம் – அருச்சுனனும், அன்று -அவ்வுத்தரகோக்கிரகணகாலத்தில், உத்தரன் தேர் –
உத்தரகுமாரனதுதேரை, விசையின் ஊர்ந்தான் – வேகமாய்ச் செலுத்தினான்;
(எ – று.)- பாவை – உவமாகுபெயர்.அயன் அரனுக்குத்தேரூர்ந்தது,
திரிபுரசங்காரகாலத்தில். அறம் வளர்க்குஞ் செல்வப்பாவை – ஆதிபருவத்து
அருச்சுனன் றீர்த்த யாத்திரைச் சருக்கத்து 13 – ஆம் பாடலுரை காண்க.

பூந் தராதலம் முழுதும் மதித்த ஆண்மைப் போர் வேந்தே! உனைப்
போலப் புகழே பூண்டு,
வேந்தராய் அமர்க்களத்தில் அதிசயித்த வீரரானவர்க்கு இதுதான்
மேம்பாடு அன்றோ?
மாந்தராய் எக் கலையும் வல்லார்க்கு அன்றி, வாசி நெடுந் தேர் ஊர
வருமோ?’ என்று என்று,
ஏந்து அரா எழுதிய பொற் கொடியோன் சொல்லி இறைஞ்சுதலும்,
உடன்பட்டான்; என்செய்வானே!

பூ தராதலம் முழுதுஉம் – அழகாகிய பூமியினிடத்திலுள்ளவர்
எல்லாராலும், மதித்த – மதிக்கப்பட்ட, ஆண்மை – பராக்கிரமத்தையுடைய, போர்
வேந்தே – போர்தொழிலில்வல்ல அரசனே! உனை போல – உன்னைப்போல,
புகழ்ஏ பூண்டு – கீர்த்தியையே மேற்கொண்டு, வேந்தர் ஆய் – அரசர்களாகி,
அமர்களத்தில் – போர்க்களத்திலே, அதிசயித்த – மிகச்சிறந்த, வீரர் ஆனவர்க்கு-
வீரர்களுக்கு, இமு – இவ்வாறுதேரூர்வது, மேம்பாடு அன்றோ – ஒரு
பெருமையன்றோ? மாந்தர் ஆய் – மனிதர்களாகி, எ கலைஉம் வல்லார்க்கு
அன்றி -எல்லாக்கல்விகளிலும் வல்லவர்களுக்கே யல்லாமல், (மற்றவர்க்கு), வாசி
நெடு தேர்ஊர வரும்ஓ – குதிரைகள்கட்டிய பெரியதேரை ஓட்டத்தெரியுமோ?
என்று என்று-,ஏந்து அரா எழுதிய பொன்கொடியோன் – படமெடுத்த நாகத்தை
எழுதின அழகியகொடியையுடைய துரியோதனன், சொல்லி -(பலவார்த்தைகள்)
பேசி, இறைஞ்சுதலும்- வணங்கினவளவில், உடன்பட்டான் – (சல்லியன்
கன்னனுக்குத் தேரோட்டச்)சம்மத்தித்தான்; என் செய்வான் – (இவ்வளவுபெரியவன்
சொன்னாற்சம்மதியாமல்வேறு) யாது செய்வான்? (எ -று.) – மாந்தராய் எக்கலையும்
வல்லார்க்கு என்பதை -எக்கல்லையும் வல்லாராகிய மாந்தர்க்கு என
மாற்றிப்பொருள்கொள்க.

மகபதிதன் மகனுக்கு வசுதேவன்தன் மகன் பாகன் ஆனதுபோல்,
வயங்கு சோதிப்
பகலவன்தன் மகனுக்கு நிகர் இல் ஆண்மைப் பல் விதப் போர்ச்
சல்லியன் தேர்ப் பாகன் ஆனான்;
புகல் அரிய தும்பையுடன் வெற்றி வாகை புனைந்திடும், இக்
கணத்தில், வலம்புரித் தார் வேந்தன்;
அகல் உததி உடை ஆடை அவனி முற்றும் அவனது, இனி’
என ஆர்த்தது, அரசன் சேனை.30.- அதுதெரிந்த துரியோதனன்சேனை மகிழ்ந்தார்த்தல்.

மகபதி தன் மகனுக்கு – இந்திரகுமாரனான அருச்சுனனுக்கு,
வசுதேவன்தன் மகன் – வசுதேவபுத்திரனான கிருஷ்ணன், பாகன் ஆனதுபோல்-,
வயங்கு சோதி பகலவன்தன் மகனுக்கு – விளங்குகிற ஒளியையுடைய
சூரியகுமாரனான கன்னனுக்கு, நிகர் இல் ஆண்மை – ஒப்பற்ற பராக்கிரமத்தையும்,
பல் விதம் போர் – பல வகைப்பட்ட போர்களையுமுடைய, சல்லியன்-, தேர்
பாகன்ஆனான் – வலம்புரி தார் வேந்தன் – நஞ்சாவட்டை மாலையையுடைய
துரியோதனன், இ கணத்தில் – இந்தக்ஷணத்திலே, புகல் அரிய தும்பையுடன் –
(தான்அணிந்துள்ள) சொல்லுதற்கரிய தும்பைப்பூமாலையுடனே, வெற்றி வாகை
புனைந்திடும் – சயத்துக்கு அடையாளமான வாகைப்பூமாலையையுஞ் சூடுவான்;
அகல் உததி – பரந்த கடலை, உடை ஆடை -உடுக்கப்படுகிற சேலையாகவுடைய,
அவனி முற்று உம் – பூமிமுழுவதும், இனி-,அவனது – அத்துரியோதனனதேயாம்,’
என – என்று சொல்லிக்கொண்டு, அரசன்சேனை – துரியோதனனதுசேனை,
ஆர்த்தது – ஆரவாரித்தது; ( எ -று.)-” அதிரப்பொருவது தும்பையாம்
போர்க்களத்து மிக்கோர், செருவென்றது வாகை யாம்.

பெற்று இழந்த கவசமும் குண்டலமும் மீளப் பெற்றனன்போல்,
அடல் அருக்கன் பெற்ற பிள்ளை,
மற்றை அணி விரல் முடக்க இணை இலாத மத்திர பூபனைத் தழுவி,
மணித் தேர் ஏற்ற,
பற்றலர் நெஞ்சு அலமருமாறு அவனும் பாகர் படிவம் கொண்டு,
அமர்க்கு அமைந்த பரிகள் பூட்டி,
உற்ற வடிக்கயிறுடனே உளவு கோல் கொண்டு, ஊர்ந்தனனால்,
அருணனுக்கே உவமை சால்வான்.31.- சல்லியன் கர்ணனுக்குப் பாகனாயமர்தல்.

அடல் அருக்கன் பெற்ற பிள்ளை – வலிமையையுடைய சூரியன்
பெற்ற குமாரனாகிய கர்ணன், பெற்று -(இயல்பாக உடம்புடனே) பெற்று, இழந்த –
(இந்திரனுக்குத் தானஞ்செய்து) இழந்து போன, கவசம்உம் குண்டலம்உம் –
கவசத்தையுங் குண்டலங்களையும், மீள பெற்றனன் போல் – திரும்பவும்
கிடைக்கப்பெற்றவன்போல (மகிழ்ந்து), மற்றை அணி விரல் முடக்க இணை
இலாத -(இவனை எண்ணியவிரலுக்குப்பின் இவனோடொக்க எண்ணி) வேறொரு
அழகியவிரலை மடக்குவதற்கு உவமைபெறாத , மத்திரபூபனை – மத்திர
நாட்டரசனானசல்லியனை, தழுவி – அணைத்துக்கொண்டு, மணி தேர் ஏற்ற –
மணிகள்கட்டியதேரின்மேல் ஏறச்செய்ய, – அருணனுக்குஏ உவமை சால்வான் –
(சூரியன்பாகனான)அருணனுக்கே உபமானமாகப் பொருந்துந்தன்மையையுடைய,
அவன்உம் -அச்சல்லியனும், பற்றலர் நெஞ்சு அலமரும் ஆறு – பகைவர்கள்
மனஞ் சுழலும்படி,பாகர் வடிவம்கொண்டு – சாரதிகளுக்குரிய வேஷத்தைத்
தரித்துக் கொண்டு,அமர்க்கு அமைந்த பரிகள்  பூட்டி – போர்த்தொழிலுக்குப்
பொருந்திய குதிரைகளை(த் தேரிற்) பிணைத்து, உற்ற வடிக்கயிறுடனே –
பொருந்தியகுதிரைவாய்க்கயிற்றையும், உளவுகோல் – குதிரை யோட்டுங்
கோலையும், கொண்டு- (கைகளிற்) பிடித்துக்கொண்டு, ஊர்ந்தனன் – தேரூர்ந்தான்;
(எ – று.)

     மற்றையணிவிரல்முடக்க இணையிலாத பூபன் என்றது – சிறந்த வீரர்களை
எண்ணத்தொடங்கிச் சல்லியன் ஒருத்தனென்று முதலிற் கைவிரலொன்றை
மடக்கினபின்பு இவனோடொத்தவீரர் வேறெவரும் இல்லையாதலால் மற்றொரு
விரலைமடக்கி யெண்ணுவதற்கு உவமைபெறாதவன் என்றபடி. அணிவிரல் –
பவித்திரவிரல்[இரண்டாவது விரல்] என்றுமாம்.   

பணி நிறுத்தி எழுதுறு பொற் பதாகையானைப் படாது ஒழி தம்பியரோடும்
பார்க்கவன் போல்
அணி நிறுத்தி, கிருப கிருதரையும் பல் போர் அரசரையும் இரு மருங்கும்
அணிகள் ஆக்கி,
நுணி நிறுத்திச் சகுனி முதலானோர் தம்மை, நுவல் அரு நாள் உடுக்
கோளின் நடுவண் வான
மணி நிறுத்தி வைத்தது என, பவள மேரு வரை நின்றது என,
நின்றான்,-வண்மை வல்லான்32.- கர்ணன் அணிவகுத்து நிற்றல்.

வண்மை வல்லான் – தானத்தில் வல்ல கர்ணன்,- பார்க்கவன்
போல் -(அசுரசேனாபதியாகிய) சுக்கிரன்போல, பணி நிறுத்தி எழில் உறு பொன்
பாதகையானை – பாம்பை யெழுதி அழகுபொருந்திய பொற்கொடியையுடைய
துரியோதனனை, படாது ஒழி தம்பியரோடுஉம் -(பதினாறுநாட்களிலும்)
இறவாதொழிந்த தம்பியரோடுஉம் – (பதினாறுநாட்ளிலும்) இறவாதொழிந்த
தம்பிமார்களுடனே, அணி நிறுத்தி – (படைவகுப்பில்) ஒழுங்காக நிற்கச்செய்து,
கிருபனையும்-, அடு போர் செய்யும் அரசரைஉம்- கொல்லுகின்ற போரைச்செய்யும்
மற்றை அரசர்களையும், இரு மருங்குஉம் – இரண்டுபக்கங்களிலும், அணிகள்
ஆக்கி- வரிசைகளாக நிறுத்தி, சகுனி முதலானோர் தம்மை – சகுனி முதலிய
சிலவீரர்களை, நுணி நிறுத்தி – (படைவகுப்பின்) நுனியிலே நிற்கச் செய்து,
நுவல் அரு- (கணக்கிட்டுச்) சொல்லுதற்கு அரிய – நாள் – (இருபத்தேழு)
நக்ஷத்திரங்களும்,உடு – மற்றைத் தாரகைகளும், கோளின் – கிரகங்களும் ஆகிய
இவற்றின், நடுவன் -நடுவிலே, வானமணி – ஆகாயத்தில் இரத்தினம்போல்
விளங்குகிற சூரியனை, நிறத்திவைத்தது என நிறுத்திவைத்ததுபோலவும்,
பவளம் மேரு வரை நின்றது என -மேருமலைபோலப் பெரியதொரு பவழ
மயமான மலை நின்றதுபோலவும், நின்றான் -(சேனைமுகத்து விளக்கமாகவும்
கம்பீரமாகவும் நின்றான்) (எ -று.) – பி -ம்:-கிருபகிருதரையும்பல்போர்.

கோவல் சூழ் பெண்ணை நாடன், கொங்கர் கோன், பாகை வேந்தன்,
பாவலர் மானம் காத்தான், பங்கயச் செங் கை என்ன,
மேவலர் எமர் என்னாமல், வெங் களம்தன்னில் நின்ற
காவலன் கன்னன் கையும் பொழிந்தது, கனக மாரி.33.- போர்க்களத்திற் கன்னன் தானஞ்செய்தல்

கோவல் சூழ் – திருக்கோவலூரைச் சூழ்ந்த, பெண்ணை –
பெண்ணையாறுபாய்கிற, நாடன் – திருமுனைப்பாடி நாட்டையுடையவனும், கொங்கர்
கோன் – கொங்கநாட்டார்க்குத் தலைவனும், பாகை வேந்தன் – வக்கபாகையென்னும்
நகரத்துக்கு அரசனும், பாவலர் மானம் காத்தான் – கவிகளுக்கு (வேண்டியவற்றை
யெல்லாங் கொடுத்து அவர்கள்) மானத்தை (அழியாமற்) காப்பாற்றினவனுமாகிய
வரபதியாட்கொண்டானது, பங்கயம் செம் கை என்ன – செந்தாமரைமலர்போலுஞ்
சிவந்த கைபோல, வெம் களம் தன்னில் நின்ற – கொடிய போர்க்களத்தில் நின்ற,
வெம் களம் தன்னில் நின்ற – கொடிய போர்க்களத்தில் நின்ற, காவலன் கன்னன் –
காத்தலில்வல்ல கர்ணனது, கையும்-, மேவலர் எமர் என்னாமல்- (இவர் எமக்குப்)
பகைவர் (இவர்) எம்மைச் சேர்ந்தவர் என்ற பேதம் பாராட்டாமல் [யாவர்க்கும்
ஒருதன்மையாக], கனகம் மாரி – பொன் மழையை, பொழிந்தது – சொரிந்தது;
கோவல் – நடுநாட்டிலுள்ள திருமாலின் திருப்பதிகளிரண்டனுள் ஒன்று: சைவர்
திருக்கோவல்வீரட்டத்தைக்குறிப்பது இது என்பர். நடுநாடு – மாகதக்கொங்குநாடு
எனப்படு மென்ப. அணியிலக்கணநுண்மையறியாதார், கர்ணன்கை தானம்
வழங்கியதுஇங்கு வர்ணியமென்பது  தெரியாமையால் பிரசித்த உவமமான
கர்ணன்கையைஉவமேயமாக்கியது விபரீதவுவமையணி யென்பர். பி – ம்:
பகைஞர் வேந்தன்.

     இதுமுதல் இருபதுகவிகள் – கீழ்ச்சருக்கத்துப் பன்னிரண்டாங் கவிபோன்ற
அறுசீராசிரியவிருத்தங்கள்

அந்தணர், பரிசின்மாக்கள், அவனிபர் முதலோர் யார்க்கும்
சிந்தைகள் களிக்கத் தான தியாகமும் சிறப்பும் நல்கி,
கந்தன் ஓர் வதனம் ஆகி அவதரித்தன்ன கன்னன்,
சந்து அணி குவவுத் தோளான் சல்லியன்தனக்குச் சொல்வான்34.- தானாதிகள்செய்தபின் கர்ணன் சல்லியனிடங் கூறுதல்.

கந்தன் – (தேவசேனாபதியாகிய ஆறுமுகங்களையுடைய)
சுப்பிரமணியன், ஓர் வதனம் ஆகி அவதரித்து அன்ன – ஒரு
முகமுடையவனாகிப்பிறந்தாற்போன்ற, கன்னன்-, அந்தணர் – பிராமணர்களும்,
பரிசில் – வெகுமதியைப்பெறுதற்குரிய, மாக்கள் – மற்றை மனிதர்களும்,
அவனிபர் – அரசர்களும், முதலோர்யார்க்குஉம் – முதலிய எல்லார்க்கும்,
சிந்தைகள் களிக்க – மனங்கள்களிப்படையும்படி, தான தியாகம்உம் சிறப்புஉம்
நல்கி – (முறையே) தானங்களையுந்தியாகங்களையும் வரிசைகளையுங்கொடுத்து,
சந்து அணி – சந்தனம்பூசிய,சல்லியன்தனக்கு-, சொல்வான்- (எ -று.) – அது
மேல் இரண்டு கவிகளாற்கூறுகின்றார். பி – ம்: அந்தணப்.

     கந்தனுக்குங் கன்னனுக்கும் வேறுபாடு முகத்தின் எண்ணிக்கையிலே யன்றி
வேறு குணவிசேஷங்களில் இல்லையென்பது மூன்றாமடிக்குக் கருத்து. சந்து –
வடசொற்றிரிபு. குவவு – உரிச்சொல்.     

மேகவாகனன்பால் பெற்ற வெயிலவன் இயமதங்கி
ஆகிய முனிவற்கு ஈந்த அரும் பெருஞ் சாபம் பெற்றேன்;
நாக வெம் பகழி பெற்றேன்; நாரணற்கு ஒத்த உன்னைப்
பாகனும் ஆகப் பெற்றேன்; பாக்கியம் பலித்தவாறே35.- இரண்டுகவிகள் – ஒருதொடர்: சல்லியன்பாகனானமையைக்
கர்ணன் பாராட்டிக்கூறுதலைக் தெரிவிக்கும்.

மேகவாகனன்பால் – மேகங்களைவாகனமாகவுடைய இந்திரனிடத்து,
பெற்ற-, வெயிலவன் – வெயிலையுடைய சூரியன், இயமதங்கி ஆகிய முனிவற்கு –
ஜமதக்நிமுனிவனுக்கு, ஈந்த – கொடுத்த, அரு பெரு சாபம் – அரிய பெரிய
வில்லை,பெற்றேன் – (பரசுராமரிடத்தினின்று யான்) அடைந்தேன்; நாகம் வெம்
பகழி -கொடிய நாகாஸ்திரத்தை, பெற்றேன்-; நாரணற்கு ஒத்த – கிருஷ்னனுக்கு
ஒப்பான, உன்னை-, பாகன்உம் ஆக பெற்றேன் – சாரதியாகவும் அடைந்தேன்;
பாக்கியம் பலித்த ஆறுஏ – (எனது) நல்வினை பயன்பட்ட விதம் அதிசயிக்கதக்கதே:
(எ -று.)

     ஈற்றேகாரம், வியப்புப்பொருள்பட நின்றது. இயமதங்கி = ஜமதக்நி:
பரசுராமன்தந்தை; வடசொற்சிதைவு. இந்தவில்லுக்கு விஜயம் என்றுபெயர்; இது,
இந்திரன்பொருட்டு விசுவகர்மா நிருமித்தது. இதைக்கொண்டு முன்னே இந்திரன்
பலஅசுரர்களையும், பரசுராமர் பல அரசர்களையும் வென்றார்; இதனோசையாற்
பகைவர்கள் பலர் மூர்ச்சிப்பர்.  

எனக்கு எதிர் விசயன் அல்லது இல்லை; அவ் விசயன் என்பான்-
தனக்கு எதிர் என்னை அன்றித் தரணிபர் யாரும் இல்லை;
மனக்கு நேரான தோழன் மகிதலம் முழுதும் எய்த,
கனக் குரல் களிற்றோய்! இன்று காண்டி, என் ஆண்மை!’ என்றான்.

கனம் குரல் களிற்றோய் – பருத்த குரலையுடைய யானைச்
சேனையையுடையவனே! எனக்கு -, எதிர் – சமானம், விசயன் அல்லது இல்லை –
அருச்சுனனையல்லாமல் (வேறெவரும்) இல்லை; அ விசயன் என்பான் தனக்கு –
அந்த அருச்சுனனுக்கு, எதிர்-, என்னை அன்றி-, தரணிபர் யார்உம் – பூமியை
ஆளுகிற அரசரெவரும், இல்லை-;  மனக்கு நேர் ஆன தோழன் – மனத்திற்கு
ஒத்தநரண்பனான துரியோதனன், மகிதலம் முழுதும் எய்த – பூமிமுழுவதையும்
அடையும்படி.இன்று – இன்றைக்கு, என் ஆண்மை – எனது பாராக்கிரமத்தை,
காண்டி பார்ப்பாயாக, என்றான் – என்று (கர்ணன்) கூறினான்; (எ – று.) –
உபமேயோபமாலங்காரம்.

என்றலும் மத்திரேசன் இள நகை செய்து, ‘நீ நின்
வென்றியும், வலியும், கற்ற வின்மையும், விளம்ப வேண்டா;
ஒன்றொடு ஒன்று இரண்டு தேரும் உருளுடன் உருள்கள் ஒத்து,
சென்று எதிர் முனைந்தபோது, உன் சேவகம் தெரியும் மாதோ!37.- மூன்றுகவிகள் – ஒருதொடர்: சல்லியன் கர்ணனது
செருக்கடங்கப்பேசுதல்.

என்றலும் – என்று (கன்னன்) சொன்னவளவில்-, மத்திரஈசன் –
மத்திரநாட்டரசனான சல்லியன், இள நகை செய்து – புன்சிரிப்புச் செய்து, நீ-,
நின் -உனது, வென்றிஉம் – ஜயத்தையும், வலிஉம்- பலத்தையும், கற்ற
வின்மைஉம் -பயின்றவிற்றொழிலையும், விளம்ப வேண்டாம் – (எனக்குச்)
சொல்லவேண்டாம்;இரண்டு தேரும்-, ஒன்றொடுஒன்று -, உருளுடன் உருள்கள்
கோத்து -சக்கரங்களோடு சக்கரங்கள் நெருங்கப்பெற்று, எதிர்சென்று – எதிரிற்
போய்,முனைந்த போது – போர் செய்து பொழுது, உன் சேவகம் தெரியும் –
உனது வீரம்விளங்கும்; (எ -று.) – கன்னனை இகழ்தல் காரணமாக இளநகை
பிறந்தது.இரண்டுதேர் – கர்ணார்ச்சுனர் தேர்கள்.

ஒருவரை ஒருவர் ஒவ்வா உரனுடை வீரர் நீங்கள்
இருவரும் பொரும் போர்தோறும் யாங்களும் பாங்காய் நின்றோம்;
வெருவரல் மறந்தும் இல்லா விசயனை ஒருபோதத்தும்,
திரு வரும் வண்மையோய்! நீ செயித்திடக் கண்டிலேமால்.

திரு வரும் வண்மைபோய் – செல்வம் பொருந்திய
தானத்தையுடையவனே! ஒருவரை ஒருவர் ஒவ்வா – ஒருத்தரை யொருத்தர்
ஒத்திராத, உரன் உடை – வலிமையையுடைய, வீரர் – வீரர்களாகிய, நீங்கள்
இருவரும்,-, பொரும் போர் தோறுஉம் – போர் செய்யும்பொழுதெல்லாம்,
யாங்கள்உம்-, பாங்கு ஆய்நின்றோம் – பக்கத்திற் பொருந்தியிருந்தோம்:
வெகுவரல்மறந்துஉம் இல்லா – மறந்துஉம் இல்லா – மறந்தும் அஞ்சுதலில்லாத,
விசயனை – அருச்சுனனை,  ஒருபோதத்துஉம் – ஒருபொழுதிலும், நீ -,
செயித்திட – வெல்ல,கண்டிலேம் – பார்த்தோமில்லை; (எ -று.)

     முதலடி – இருவருஞ் சிறந்தவீர ரென்னும் பொருளோடு, அருச்சுனனுக்குக்
கன்னன் ஒப்பாகானென்னுங் கருத்துந் தோன்ற நின்றது.   

வயிர்த்து இருவோரும் சொன்ன வஞ்சினம் முடிக்குமாறு
செயிர்த்திடும் இற்றைப் பூசல் தெரியுமோ? தெரிந்தது இல்லை;
அயிர்த்தனம்!’ என்று தேர் ஊர் ஆண்தகை உரைப்ப, நீட
உயிர்த்தனன் ஆகி, மீள உத்தரம் உரைக்கலுற்றான்:

இருவோர்உம் -(நீங்கள்) இருவரும், வயிர்த்து – விரோதங்
கொண்டு,சொன்ன-, வஞ்சினம் – சபதத்தை, முடிக்கும் ஆறு – நிறைவேற்றும்படி,
செயிர்த்திடும் – கோபித்துச்செய்யப் போகிற. இற்றை பூசல் –
இன்றைப்போரின்முடிவு, தெரியும்ஓ -(இப்பொழுது) அறியப்படுமோ? தெரிந்தது
இல்லை-; அயிர்த்தனம் – சந்தேகித்தோம், என்று -, தேர் ஊர் ஆண்தகை –
தேரோட்டுகிற ஆண்மைக்குணமுடைய சல்லியன், உரைப்ப – சொல்ல, (கன்னன்),
நீட உயிர்த்தனன் ஆகி -(கோபத்தால்) மிகப் பெருமூச்சுவிட்டவனாய், மீள –
திரும்பவும், உத்தரம் உரைக்கல்உற்றான் – மறுமொழி சொல்லத்தொடங்கினான்;
(எ -று.)- அது மேற்கவியிற் காண்க.

     பாண்டவருங் கௌரவருங் கிருபரிடத்துந் துரோணனிடத்துந் தாம் தாம்
கற்றபடைத்தொழிலைப் பலபெரியோர் முன்னிலையில் அரங்கேற்றுகிற பொழுது,
கன்னன்எழுந்து தன்திறமையைக்காட்டி, அருச்சுனனைப் போருக்கு அழைக்க,
அவன்’அரசகுமாரனாகிய எனக்குத் தேர்ப்பாகனது அபிமானபுத்திரனாகிய
உன்னோடுபோர்செய்தல் பொருந்தாது’ என்று தோன்றுமாறுசொல்ல, அப்பொழுது
கன்னன்மிகக்கோபித்து ‘என்னைப்பழுதுசொன்ன உன்முகத்தைக் கொய்து
அரங்கபூசைசெய்கிறேன்’ என்று சபதஞ்செய்தான்; திரௌபதியைத் துகிலுரிந்த
காலத்துஅருச்சுனன் ‘யான் கர்ணனைக் கொல்வேன்’ என்று சபதஞ்செய்தான்

“இந்திரன் மகனுக்கு என்னை எதிர் இல்லை” என்று, நின்ற
தந்திரபாலர் முன்னர், சல்லிய! இகழ்தல் வேண்டா;
மந்திர வாசித் திண் தேர் வல்லையேல், ஊர்வது அன்றி,
வெந் திறல் விளைக்கும் வெம் போர் வினைக்கு நீ யார்கொல்?’
என்றான்40.-சல்லியனைக் கர்ணன் கடிந்துகூறுதல்

சல்லிய – சல்லியனே! இந்திரன் மகனுக்கு – அருச்சுனனுக்கு, எதிர்
இலை என்று – (யான்) சாமான னல்ல னென்று, நின்ற தந்திரபாலர் முன்னர் –
(சுற்றிலும்) நின்ற சேனைத்தலைவர்களுக்கு எதிரில், என்னை-, இகழ்தல் வேண்டா-;
வல்லைஏல்- (நீ) வல்லவனானால், மந்திரம் வாசி திண் தேர் – சாலையிற்
கட்டப்படுகிற குதிரைகள்பூட்டிய வலிய தேரை, ஊர்வது அன்றி – ஓட்டுவதல்லாமல்,
வெம் திறல் விளைக்கும் – கொடிய வலிமையினாற் செய்யப்படுகிற, வெம் போர்
வினைக்கு – பயங்கரமான போர்த்தொழிலைப்பற்றிப்பேசுதற்கு , நீ யார் என்றான்-;
(எ -று.)- மந்திரம் – மந்துராஎன்னும் வடசொற்றிரிபு.

வலியுடைத் தேரோன் சொன்ன வாசகம் வலவன் கேட்டு,
கலியுடைத் தடந் தேர் விட்டு, காலின் நின்று, உடைவாள் வாங்கி,
‘ஒலியுடைப் புரவித் திண் தேர் உனக்கு நான் ஊருவேனோ?
எலியுடைப் பூசல் பூஞைக்கு எதிர்ப்படின், என் படாதோ?’41.- இரண்டுகவிகள் – சல்லியகர்ணர் மாறுபாடுகொண்டு தம்மில்
வாள்கொண்டெழத் துரியோதனன் விலக்குதலைத்
தெரிவிக்கு

வலி உடை தேரோன் – வலிமையையுடைய தேரையுடைய
கர்ணன்,சொன்ன-, வாசகம் – வார்த்தையை, கேட்டு-, வலவன்- (அவன்)
பாகனானசல்லியன்,- கலி உடை – விட்டு(க்கீழ் இறங்கி), காலின் நின்று –
கால்களால்(தரையில்) நின்றுகொண்டு, உடை வாள் வீசி – உடுப்பிற்கட்டுங்
கைவாளை எடுத்துச்சுழற்றிக்கொண்டு, (அவனைநோக்கி), ‘ஒலி உடை –
ஓசையையுடைய, புரவி திண்தேர் – குதிரைகளைப்பூட்டிய வலிய தேரை, (இனி),
உனக்கு நான் ஊருவேன்ஓ-?எலி உடை பூசல் – எலியினது ஆரவாரம், பூஞைக்கு
எதிர்ப்படின் – பூனைக்குஎதிரேவந்தால், என் படாதுஓ – என்னபாடு படாதோ?’
(என்றுசொன்னான்); (எ -று.)-எலியின் ஆரவாரமெல்லாம் பூனைக்குமுன்னே
இருந்துவிடந்தெரியாமல்அழிந்துவிடுவது போல, உன்செருக்குமுழுவதும்
என்வலிமைக்கு முன் அழிந்துவிடுமென்றபடி. பி – ம்: வலியுடைத்தோளான்.
வாள்வாங்கி.

உரு உரும் என்னச் சீறி உடன்றபின், உதயன் காதல்
மருவுறும் மைந்தன்தானும் வாளொடு மண்ணில் தாவி,
இருவரும் இரண்டு காயம் இகலும் முன், உரக கேது
வெருவரும் சிந்தையோடு, வெய்தின் போய் விலக்கினானே.

(என்று சல்லியன் சொல்லி), உரு உரும் என்ன – அச்சந்தருகின்ற
இடிபோல, சீறி உடன்றபின்- கோபித்துப் பகைத்தவுடனே, உதயன் – சூரியனது,
காதல் மருவுறும் – அன்புபொருந்திய, மைந்தன் தான்உம் – குமாரனான கர்ணனும்,
வாளொடு – (தன்) வாளாயுதத்துடனே, மண்ணில் தாவி – தரையிற் குதித்து,
இருவரும்-, இரண்டு காயம் இகலும்முன் – இரண்டு தழும்புபடும்படி போர்செய்தற்கு
முன்னமே-, உரக கேது – பாம்பைக் கொடியிலுடைய துரியோதனன்,- வெருவரும்
சிந்தையோடு – அஞ்சுகின்ற மனத்துடனே, வெய்தின் – விரைவாக, போய்-,
விலக்கினான் – தடுத்தான்; (எ -று.) – காயம் – இலக்கு என்பாரு முளர்

மூளும் வெஞ் சினத்தை மாற்றி, முரணுறுத்தவர்கள்தம்மை
மீளவும் தேரில் ஏற்றி, ‘வெஞ் சமர் விளைமின்’ என்றான்-
மாளவும் பாண்டு மைந்தர், வையகம் முழுதும் தானே
ஆளவும், கருதி, எல்லா அரசையும் அழிக்கும் நீரான்.43.- துரியோதனன் சமாதானப்படுத்தி இருவரையும்
தேரிலேற்றிப் போரை நடத்தச் சொல்லுதல்.

பாண்டு மைந்தர் மாளஉம் – பாண்டவர் இறக்கவும், வையகம்
முழுதுஉம் தான்ஏ ஆளஉம் – பூமிமுழுவதையுந் தானொருவனாகவே
அரசாட்சிசெய்யவும், கருதி – எண்ணி, எல்லா அரசைஉம்- அரசர்கள்யாவரையும்,
அழிக்கும் – அழியச்செய்கிற, நீரான் – தன்மையையுடைய துரியோதனன்,-
மூளும் -பொங்குகிற, வெம் சினத்தை – (அவர்கள்) கொடிய கோபத்தை, மாற்றி –
நீக்கி,முரண் உறுத்தவர்கள் தம்மை – (தமக்குள்) மாறுபாடு கொண்ட
கர்ணசல்லியரை,மீளஉம் தேரில்  ஏற்றி – மறுபடியும் (கர்ணனது)
தேரின்மேலேறச்செய்து, வெம் சமர்விளைமின் என்றான்- (பாண்டவசேனையொடு)
கொடிய போரைச் செய்யுங்கள்என்று சொன்னான்;  (எ-று.)- சல்லியனையுங் கூட்டி
‘சமர்விளைமின்’ என்றது,பாகனையின்றிப் போர்செய்தல் கூடாதாதலின்

வனை கழல் கிருதவன்மன், வரி சிலைக் கிருபன், தானே
தனை நிகர் சகுனி, தாமா, சாலுவன், திகத்த ராசன்,
இனைய பொன் தடந் தேர் வீரர் யாவரும், எண் இல் சேனைக்
கனை கடலோடு சூழ்ந்து, கன்னனைக் காத்து நின்றார்.44.- கிருதவன்மன்முதலியோர் கர்ணனைக் காத்துநிற்றல்.

வனை கழல் – கட்டிய வீரக்கழலையுடைய கிருதவன்மன் –
கிருதவர்மாவும், வரி சிலை – கட்டமைந்த வில்லையுடைய, கிருபன் –
கிருபாசாரியனும், தான்ஏ தனை நிகர் – (வேறுஉவமை யில்லாமையால் )
தன்னைத்தானே ஒத்த, சகுனி – சகுனியும், தாமா – அசுவத்தாமாவும், சாலுவான் –
சாலவனும்,திகத்தராசன் – திரிகர்த்த நாட்டரசனும், இனைய – இப்படிப்பட்ட,
பொன் தட தேர் -அழகிய பெரிய தேரையுடைய, வேந்தர் யாவர்உம் –
அரசர்கள் எல்லாரும், எண்இல் சேனை – அளவில்லாத சேனையாகிய,
கனைகடலோடு – ஒலிக்கின்ற கடலுடனே, சூழ்ந்து – (துணையாகச்) சுற்றிக்கொண்டு
கன்னனை -, காத்துநின்றார் – காவல் செய்து நின்றார்கள்; (எ -று.)- சாலுவன்
திகத்தராசன் – திரிகர்த்தராஜனாகிய சாலுவ னென்பாரு முளர். பி -ம்: தேர்வீரர்.

நின்ற அக் கன்னன்தன்னை நெஞ்சு உற மகிழ்ந்து நோக்கி,
‘வென்றனம் பூசல் இன்றே; விசயனும் தாதைதன்பால்
சென்றிடும்’ என்று தேறிச் செப்பினன், சிற்சில் மாற்றம்-
மன்றல் அம் சுரும்பு மாறா வலம்புரி மாலையானே:5.- அப்போது துரியோதனன் போர்வென்றோமென்று
மகிழ்ந்த கூறலுறுதல்
.

மன்றல் – வாசனையையுடைய, அம் – அழகிய, சுரும்பு –
வண்டுகள்,மாறா – நீங்காமல்மொய்க்கின்ற, வலம்புரிமாலையான் –
நஞ்சாவட்டைமாலையையுடைய துரியோதனன், நின்ற- (எதிரில்) நின்ற, அ
கன்னன்தன்னைநோக்கி.- நெஞ்சுஉற மகிழ்ந்து – மனம் மிகக்களித்து, ‘இன்றே –
இன்றைக்கே, பூசல் வென்றனம் – போரிற் (பகைவரைச்) செயித்தோம்;
விசயன்உம் -அருச்சுனனும், தாதை தனபால் -(தன்) தகப்பனாகிய இந்திரனிடத்து,
சென்றிடும் -போய் விடுவான் [இறப்பான்],’ என்று தேறி – என்று நிச்சயித்து, சில்
சில் மாற்றம் -சிலசிலவார்த்தைகளை, செப்பினன் – சொல்வானானான்; (எ – று.)-
அது மேல்ஏழுகவிகளாற் கூறுகின்றார்.

சதமகன் மகன் தேர்ப் பாகன்தன்வயின் கேண்மை விஞ்சி,
விதுரனும் அமர் செய்யாமல், வெஞ் சிலை இறுத்து, பின்னும்
யதுகுலத் தலைவனான இராமனும் தானும், பாரில்
நதி முதல் தீர்த்தம் யாவும் ஆடுவான் நயந்து போனான்.46.- ஏழுகவிகள் – சல்லியகர்ணர்கட்குத் துரியோதனன் முகமன்
கூறியதைத் தெரிவிக்கும்.

எட்டுக்கவிகள் – ஒருதொடர்.

     (இ-ள்.) சதமகன்மகன் – இந்திரகுமாரனான அருச்சுனனது, தேர் பாகன்
தன்வயின்- சாரதியான கண்ணனிடத்து, கேண்மை விஞ்சி – நேசம்மிகுந்து,
விதுரனும்-,  அமர் செய்யாமல்-, வெம் சிலை இறுத்து – கொடிய வில்லை
முறித்துப்போகட-, பின்னும் – பின்பு, யது குலம் தலைவன் ஆன – யதுவின்
குலத்துக்குத் தலைவனாகிய, இராமன்உம்தான்உம் – பலராமனுந்தானும்,
(அவ்விதுரனுடன்), பாரின் – பூமியிலுள்ள, நதி முதல் தீர்த்தம் யாஉம் –
ஆறுகள்முதலிய புண்ணியதீர்த்தங் ளெல்லாவற்றிலும், ஆடுவான் – நீராடும்
பொருட்டு, நயந்து – விரும்பி, போனான் – யாத்திரை போய் விட்டான்;
(எ -று.)-முதல் மூன்று கவிகள் முன்னிகழந்தவற்றைக் கூறும்.

     பலராமன் – க்ருஷ்ணனுக்குத் தமையன்; வசுதேவர்மனைவியான
ரோகிணிவயிற்றில்பிறந்தவன்; இவன் துரியோதனனிடம் அன்புடையவனாதலாலும்
கண்ணனுக்குவிரோதமாகுமேயென்று கருதியதனாலும் துரியோதனன்பக்கத்தும்
பாண்டவர்பக்கத்தும் சேராமல் தீர்த்தயாத்திரைசென்றான். யது என்பவன் –
சந்திரகுலத்துத் தோன்றிய யயாதியின் மக்களில்ஒருவன்.   

கங்கைதன் வயிற்றில் தோன்றி, தாதைதன் காதல் தீர்ப்பான்,
எங்களுக்கு அரசும் வாழ்வும் இரு நிலம் முழுதும் தந்து,
வெங் களத்து உதயன் போல, வீடுமன், களத்தை எல்லாம்
செங் களப் படுத்தி, மீண்டும் தேவரில் ஒருவன் ஆனான்.

வீடுமன் – பீஷ்மன் , கங்கைதன் வயிற்றில்தோன்றி – கங்கையின்
வயிற்றினின்றும் பிறந்து, தாதைதன் காதல் தீர்ப்பான் – (தன்) தகப்பனது
ஆசையைமுடிக்கும்பொருட்டு, எங்களுக்கு-, அரசுஉம் – இராச்சியத்தையும்,
வாழ்வுஉம் -செல்வவாழ்க்கையையும், இரு நிலம் முழுதுஉம் –
பெரியபூமிமுழுவதையும், தந்து -கொடுத்து, வெம் களத்து – விரும்பப்படுகிற
பூமிமுழுவதையும், உதயன் போல – சூரியன்போல, களத்தை எல்லாம் –
போர்க்களம் முழுவதையும், செம்களம்படுத்தி -(இரத்தவெள்ளத்தாற்)
சிவந்தகளமாகச்செய்து, மீண்டும் – பின்பு, தேவரில் ஒருவன்ஆனான் –
தேவர்களுள் ஒருத்தனாயினான்; (எ- று.)

     ‘எங்களுக்கு’ என்றது – தனது பாட்டன்மாராகிய விசித்திரவீரியனையுஞ்
சித்திராங்கதனையுங் கருதி. சூரியன் தன்சிவந்தகிரணங்களினால் உலகமுழுவதையுஞ்
செம்மையாக்குவதுபோல, இவ்வீடுமர் தமதுகை அம்பினாற் கொல்லப்படுகிற
பகைவர்களின் செந்நீராற் களமுழுவதுஞ் செம்மையாம்படி பொருது
பத்தாநாட்போரில் அழிந்தா ரென்றவாறு. மீண்டும் – முன்போலவேயென்றபடி

கரி முகக் கடவுள் அன்ன கடும் பரித்தாமா என்னும்
குரை கழல் துணைத் தாள் சிங்கக் குருளையைப் பயந்த தாதை,
அரு மறைக்கு அயனை ஒப்பான், அடல் சிலைக்கு அரனை ஒப்பான்,
திருவருட்கு அரியை ஒப்பான், திருத் தகு வீடு சேர்ந்தான்.

கரி முகம் கடவுள் அன்ன – யானைமுகக்கடவுளாகிய விநாயகனைப்
போன்ற, கடு பரித்தாமா என்னும் – வலிய அசுவத்தாமனென்கிற, குரை கழல் –
ஒலிக்கின்ற வீரக்கழலையுடைய, துணை தாள் – இரண்டகால்களையுடைய, சிங்கம்
குருளையை – சிங்கக்குட்டியை, பயந்த – பெற்ற, தாதை – தந்தையும், அருமறைக்கு
– அரிய வேதங்களுக்கு, அயனை ஒப்பான் – பிரமனைஒப்பவரும், அடல்சிலைக்கு-
வலிய வில் வித்தைக்கு, அரனைஒப்பான் – உருத்திரனை ஒப்பவரும், திரு அருட்கு
– மேலான கருணைக்கு, அரியை ஒப்பான் – விஷ்ணுவை ஒப்பவரும் ஆகிய
துரோணர், திரு தகு வீடுசேர்ந்தான் – மேன்மைபொருந்திய முத்தியுலகத்தை
அடைந்தார்;

‘சாயலால் சிறந்த தோகைச் சாமளத் தடம் புள் ஊர்திச்
சேய் அலால், தேவர் வாழ்வு தேவருக்கு யாவர் ஈந்தார்?
நீ அலால், சமரில் என்னை நிலையிடற்கு உரியார் உண்டோ?
தோயலால் பயந்த காதல் சூரனை அனைய சூரா!

தோயலால் பயந்த – (தான்) புணர்ந்ததனாற்பெற்ற, காதல் சூரனை –
அன்புடைய சூரியனை, அனைய – ஒத்த, சூரா – வீரனே! சாயலால், சிறந்த –
மென்மையால் மிகுந்த, தோகை – தோகையையுடைய சாமளம் – கறுத்த, தட –
பெரிய, புள் – மயிலாகிய பறவையை, ஊர்தி – வாகனமாகவுடைய, சேய் அலால் –
சுப்பிரமணியக் கடவுளேயல்லாமல், தேவர் வாழ்வு – தேவர்களின் வாழ்க்கையை,
தேவருக்கு-, யாவர் ஈந்தார் – வேறியாவர் கொடுத்தார்? (அவ்வாறே), சமரில் –
போரில், என்னை – நிலையிடற்கு – நிலைபெறச்செய்வதற்கு, உரியார் –
உரியவர்கள்,நீ அலால் உண்டுஓ – நீயல்லாமல் (வேறுயாராயினும்) உளரோ?
(எ – று.) -இனி,நீயே வெற்றியளிக்க வல்லாயென்று கர்ணனைநோக்கி கூறியது,
இது “சாயன்மென்மை” என்பது காண்க.

‘மித்திரர் என்று நோக்காது, என்னுடன் விளைந்த நண்பால்,
மத்திர நிருபன் மைந்தன் வந்து எனக்கு உதவி ஆனான்;
குத்திரன் அல்லன்; செம்மைக் கொள்கையன்; மறையின் மிக்க
அத்திர சாபம் வல்லான்; இவனொடு ஆர் அமர் செய்கிற்பார்?

மத்திர நிருபன் மைந்தன் – மத்திரநாட்டரசகுமாரனாகிய சல்லியன்,
என்னுடன் விளைந்த நண்பால் – என்னோடு உண்டான சிநேகத்தால், மித்திரர்
என்று நோக்காது – (தனக்குப் பாண்டவர்கள்) உறவினரென்று பாராமல், எனக்கு
வந்து உதவி ஆனான்-; (இவன்), குத்திரன் அல்லன் – வஞ்சகனல்லன்; செம்மை
கொள்கையன் – நல்லொலழுக்கமுடையான்; மறையின் மிக்க – மந்திரங்களாற்
சிறந்த,அத்திரம் – அஸ்திரங்களோடு கூடிய, சாபம் – வில்தொழிலில், வல்லான் –
சமர்த்தன்; இவனொடு ஆர் அமர் செய்கிற்பார் – இவனுடன் எவர்
போர்செய்யவல்லவர்?(எ-று.)- இது, சல்லியன் சிறப்புக்கூறியது.

என் மொழி மறாமல் இன்று உன் இரத சாரதியும் ஆனான்;
நன் மொழி அன்றி, வேறு நவை மொழி நவிறல் தேற்றான்;
தன் மொழி உறுதி யாவும் தரும் எனக் கைக்கொளாமல்,
புன் மொழி ஆடி, நும்மில் புலப்பது புன்மை அன்றோ?

(இன்னும் அவன்), என் மொழி மறாமல் – என்வார்த்தையைத்
தடுக்காமல், இன்று உன் இரத சாரதியும் ஆனான்-; நல் மொழி அன்றி – நல்ல
வார்த்தைகளையே யல்லாமல், வேறு நவை மொழி – (அவற்றிற்கு) வேறாகிய
கெட்டவார்த்தைகளை, நவிறல் தேற்றான் – சொல்லுதல் அறியான்; தன் மொழி –
அவன்வார்த்தை, உறுதி யாஉம் தரூம் என – நன்மைகளையெல்லாங் கொடுக்கும்
என்று, கைக்கொளாமல்- (எண்ணி) அங்கீகரியாமல், புல் மொழி ஆடி –
இழிவானபேச்சுக்களைப் பேசிக்கொண்டு, நும்மில்புலப்பது – உங்களுக்குள்
விரோதப்படுவது, புன்மை அன்றோ – இழிவன்றோ? (எ – று.) – அச்சல்லியன்
நட்புரிமையினாற் பாகனாக, நீவிர் புலத்தல் கூடாதென்று கர்ணனிடம் கூறினது,
இது. தேற்றா னென்னும் பிறவினை, இங்குத் தேறானென்னத் தன்வினைப்
பொருள்பட்டு நின்றது.

இதயமும், வலியும், தேயத்து இயற்கையும், வினையும், பற்பல்
கதிகளும், உணர்ந்து, பூணும் கவன மாத் தெரிந்து பூட்டல்,
எதிரிதன் விசயம் கூறல், இடிக்கும் நண்பு ஆதல், வெம் போர்
முதிர் இடம் காலம் எண்ணல், சூதர்க்கு முறைமை கண்டாய்!’

இதயம்உம் – (குதிரைகளின்) மனத்தையும், வலிஉம் – வலிமையையும்,
தேயத்து இயற்கைஉம் – (அவை பிறந்த) நாடுகளின் தன்மையையும், வினைஉம் –
(அவற்றிற்கு ஏற்ற) தொழில்களையும், பற் பல் கதிகள் உம் – பலவகைப்பட்ட
நடைகளையும், உணர்ந்து – அறிந்து, பூணும் – பூட்டுதற்குரிய, கவனம் மா –
விரைந்தோடுதலையுடைய குதிரைகளை, தெரிந்து – ஆராய்ந்து, பூட்டி -(தேரில்)
அணைத்து,- எதிரி தன் விசயம் கூறல் – பகைவனது விசேஷஜயத்தைச்
சொல்லுதலும், இடிக்கும் நண்பு ஆதல் – (சொல்லவேண்டிய நன்மைகளை)
நெருக்கிச்சொல்லுகின்ற சிநேகிதனாதலும், வெம் போர் – கொடிய போர்த்
தொழிலுக்கு,முதிர் – சிறந்து, இடம் – இடத்தையும், காலம் – காலத்தையும்,
எண்ணல் -ஆலோசித்தலும், சூதர்க்கு – சாரதிகளுக்கு, முறைமை – கடமையாம்:
கண்டாய் -அறிவாய்; (எ -று.)- என்றது, அருச்சுனன் வெற்றியைச் சல்லியன்
சிறப்பித்துச்சொன்னதற்கு நீ கோபங்கொள்ளுதல் முறைமையன்றென்று
குறிப்பித்தபடி.

என்ன மன்னர்மன்னவன் முகம் புகுந்து இருவருக்கும் நல் உரை
எடுத்து உரைத்து,
அந் நிலத்திலே நிற்க, வல் விரைந்து, அறன் மகன் படைக்கு அதிபன்
என்று முன்
சொன்ன திண் திறல் துருபதேயனும், சோமகேசராய் உள்ள சூரரும்,
கன்னன் நின்ற அம் முனையில், நெஞ்சினும் கடுகு தங்கள் தேர்
கடவினார்களே.53.- இங்ஙன் துரியோதனன் பேசிநிற்கையில், பாண்டவர் பக்கத்தார்
தம்தேரைக் கர்ணன்நின்றவிடத்துச் செலுத்தல்.

என்ன – என்று, மன்னர் மன்னவன் – இராசராசனான
துரியோதனன், முகம் புகுந்து – எதிரிற் சென்று, இருவருக்கும்-, நல் உரை எடுத்து
உரைத்து – நல்ல வார்த்தைகளை எடுத்துச் சொல்லி, அ நிலத்திலே நிற்க – அந்த
இடத்திலே நின்று கொண்டிருக்க,- (அப்பொழுது), அறன்  மகன் படைக்கு அதிபன்
என்று – தருமபுத்திரனது சேனைக்குத் தலைவனென்று, முன் சொன்ன – முன்னே
சொல்லப்பட்ட, திண் திறல் – மிகுந்தவலிமையையுடைய, துருபதேயன்உம் –
துருபதராஜகுமாரனான திட்டத்துய்மனும், சோமக ஈசர் ஆய் உள்ள சூரர்உம் –
சோமககுலத்துக்குத் தலைவராயுள்ள வீரர்களும், கன்னன் நின்ற அ முனையில் –
கர்ணன் நின்ற அப்போர்களத்தினிடத்தில், நெஞ்சின்உம் கடுகு –
மனோவேகத்தைக்காட்டிலும் விரைந்துசெல்கிற, தங்கள் தேர் – தங்களது தேர்களை,
வல் விரைந்து – மிகவும் வேகமாக, கடவினார்கள் – செலுத்தினார்கள்;

     வல்விரைந்து, திண்டிறல் – ஒருபொருட்பன்மொழிகள். சோமகனென்பது –
திட்டத்துய்மன் மூதாதையின் பெயர்.

     இதுமுதல் பத்துக்கவிகள் – பெரும்பாலும் ஒன்றுமூன்றுஐந்து ஏழாஞ்சீர்கள்
மாச்சீர்களும், மற்றையவை கூவிளச்சீர்களுமாகிய எண்சீராசிரியவிருத்தங்கள்

சென்ற வீரரும், சிலைகள் கால் பொர திண் சிலீமுகம் சேர ஏவினார்;
நின்ற வீரரும் தனு வளைத்து, மேல் நெடிய சாயகம் நிமிர வீசினார்;
ஒன்ற மா நிலம் பொன்ற மீது எழுந்து ஓதம் ஊர்வது ஒத்து,
உம்பர் அஞ்சினார்;
அன்றை ஆகவம்தனில் நிகழ்ந்த போர், ஆரை ஆரை என்று
அதிசயிப்பதே?54.- இருதிறத்தாரும் அதிசயிக்கப் பொருதல்.

சென்ற வீரர்உம் – வந்த சோமகவீரர்களும், சிலைகள் கால்
போர் -விற்களின் கோடிகள் வளையும்படி (வளைத்து), திண் சிலீமுகம் – வலிய
அம்புகளை,சேர – ஒருசேர, ஏவினார் – எய்தார்கள்; நின்ற வீரர்உம் – (எதிரில்)
நின்றகிருதவன்மன் முதலிய வீரர்களும், தனு வளைத்து – வில்லை வணக்கி,
மேல் -அவர்கள் மேல், நெடிய சாயகம் – பெரிய அம்புகளை, நிமிர –
நெருங்கும்படி,வீசினார் – பிரயோகித்தார்கள்; ஒன்ற – ஒருசேர, மா நிலம் –
பெரிய பூமிமுழுவதும், பொன்ற – அழியும்படி, ஓதம் – கடல்வெள்ளம், மீது
எழுந்து ஊர்வதுஒத்து – மேலேபொங்கிவருங்காலத்திற்போல, உம்பர்
அஞ்சினார் – தேவர்கள்பயந்தார்கள்; அன்றை – அன்றைக்கு, ஆகவந்தனில் –
போர்க்களத்தில், நிகழ்ந்த -நடந்த, போர் – யுத்தத்தில், ஆரை ஆரை என்று –
யார்யாரையென்று, அதிசயிப்பது- வியந்து புகழ்வது?

ஏறு தேர் அழிந்து, இவுளிமா அழிந்து, ஏவு பாகு அழிந்து,
எண்ணில் எண் இலார்
நூறு நூறு கோல் நுழைய மெய் எலாம் நொந்து துஞ்சினார்,
முந்து போர் செய்தார்;
வேறு வேறு பல் கோடி வீரர்கள் மேரு ஒப்பது ஓர் வில் வளைத்திட,
சூறை மாருதம் போல் விபாகரன் சுதன் நடாவு தேர் சூழ வந்ததே.55.- பலவீரரிறத்தல். 

முந்து போர் செய்தார் – முன்னே போர்செய்தவர்களாகிய, எண்ணில்
எண்ணிலார் – கணக்குக்கொண்டு எண்ண முடியாத (இரண்டுசேனையிலுமுள்ள)
ரதாதிபர்கள், நூறு நூறு கோல் நுழைய – பலபல பாணங்கள்வந்து தைப்பதனால்,
ஏறு தேர் அழிந்து – (தாம்) ஏறிய தேர்கள் அழியப்பெற்று, இவுளிமா அழிந்து –
(அவற்றிற்பூட்டிய) குதிரைகள் அழியப்பெற்று, ஏவுபாகு அழிந்து – (அவற்றைச்)
செலுத்துகிற சாரதி அழியப்பெற்று, மெய் எலாம் நொந்து – உடம்புமுழுவதும்
வருந்தி, துஞ்சினார் – இறந்தார்கள்; வேறு வேறு பல் கோடி வீரர்கள் –
வெவ்வேறுபலகோடிசூரர்கள், மேரு ஒப்பது ஓர் வில்வளைத்திட – மகாமேரு
கிரியைப்போல்வதொரு (பெரு வல்) வில்லை (த் தனித்தனி) வளைத்துப்போர்
செய்ய,விபாகரன்சுதன் நடாவு தேர் – சூரியகுமாரனான கன்னன் ஏறிய தேர்,
சூறைமாருதம்போல் – சுழல்பெருங்காற்றுப்போல, சூழவந்தது – சுற்றிச்
சுற்றிவந்தது

முட்ட வந்து தம் பின் கொடாமல், மேல் முன் கொடுத்து,
மா முனைகொள் வாளியின்
பட்டு ஒழிந்த அவ் இருவர் சேனையின் பதிகளும் சயம்
பட உடற்றினார்;
விட்ட பாணம் வந்து, இருவர் ஆகமும் வெளி அடைக்கவே,
வில் வளைத்தபின்,
திட்டத்துய்மனும் கன்னனுக்கு இடைந்து, ஏறு தேருடன்
தேறி ஓடினான்.56.- திட்டத்துய்மன் கர்ணனால்தோற்றுத் தேரோடுஓடல்.

பட்டு ஒழிந்த – இறந்தவர்க ளொழிந்த, அஇருவர் சேனையின் –
பாண்டவ கௌரவ சேனைகளுக்கு, பதிகள்உம் – தலைவரான திட்டத்துய்மனுங்
கன்னனும், முட்ட வந்து – நெருங்க வந்து, தம் பின் கெடாமல் – தமது
முதுகைக்கொடாமல், முன் கொடுத்து – மார்பை (அம்புகளுக்கு இலக்காகக்)
கொடுத்துக் கொண்டு, மா முனை கொள் வாளியின் – சிறந்தநுனியைக்கொண்ட
அம்புகளினால், சயம் பட – வெற்றி உண்டாம்படி, மேல் – மேன்மேலே,
உடற்றினார்- போர்செய்தார்கள்; விட்ட பாணம் -(ஒருவர்மேல் ஒருவர்) விட்ட
அம்புகள், வந்து- இருவர் ஆகம்உம் – இருவருடம்பு முழுவதையும், வெளி
அடைக்க ஏ – மேலேமறைக்கும்படி, வில் வளைத்தபின் – வில்லைவளைத்துப்
போர்செய்த பின்பு,(அப்போரில்), திட்டத்துய்மனும்-, – கன்னனுக்கு-, அழிந்து –
தோற்று, ஏறு தேருடன்- தானேறிய தேருடனே, தேறி ஓடினான் – உயிர்தப்பி
ஓடிப்போனான்; (எ -று.)-ஏறுதேருடன் அழிந்து என இயைப்பினுமாம். பி – ம்:
கன்னனுக்கிடைந்து.

சோமகேசரில் பட்டு ஒழிந்த வெஞ் சூரர்தம்முடன், துரோண சூதனன்,
காம பாணமே என விலக்க அருங் கணைகள் மெய் உறக்
கைகழன்றபின்,
தாமம் ஆர் முடித் தம்முன் ஏவலின், தன்னை ஒத்த தோள்
வீரர்தம்மொடும்,
வீமசேனன், மற்று அவரை வென்ற போர் விசய கன்னன்மேல்
வெய்தின் எய்தினான்.57.- தருமன்கட்டளையால் வீமன் கர்ணன்மேற் செல்லல்.

காம பாணம்ஏ என – மன்மதபாணங்களேபோல, விலக்க அரு –
தடுத்தற்கு அரிய, கணைகள் – (கன்னன்விட்ட) அம்புகள், மெய் உற -(தம்)
உடம்பில்தைத்தலினால், துரோண சூதனன் – துரோணரைக் கொன்றவனாகிய
திட்டத்துய்மன்,சோமகஈசரில்- சோமககுலத்தலைவர்களுள், பட்டு ஒழிந்த –
இறந்தவர்கள்போகமிகுந்த, வெம் சூரர்தம்முடன் – கொடிய வீரர்களுடனே, கை
கழன்ற பின் -ஓடிப்போனபின்பு,- தாமம் ஆர் முடி – பூமாலைபொருந்திய
முடியையுடைய,தம்முன் – தன்தமையனான தருமனது, ஏவலின் – கட்டளையினால்,
வீமசேனன் -,தன்னை ஒத்த தோள் வீரர்தம்மொடு உம் – தனக்குச்சமமானமான
புஜபலத்தையுடைய வீரர்களோடு, அவரை வென்ற போர் – திட்டத்துய்மன்
முதலியோரைச் சயித்த யுத்தத்தையுடைய, விசய் கன்னன்மேல் – விசேஷ
ஜயத்தையுடைய கர்ணன்மேல், வெய்தின் எய்தினான் – உக்கிரமாகச் சென்றான்;
(எ -று.)

     ஓடிப்போகுமிடத்தில் ‘வெஞ்சூரர்’ என்றும், ‘துரோணசூதனன’ என்றும்
கூறியது – இகழ்ச்சி: கன்னன்சிறப்பைக் குறித்தற்காகவுமாம். விசயசேனன்மேல்
என்றபாடத்திற்கு – விசேஷஜயத்தையுடைய சேனையையுடைய கர்ணன்மே
லென்க.     

காலினால் வரும் காளை மைந்தனும், கதிரினால் வரும்
காளை மைந்தனும்,
மாலினால் வரும் களிறு, வாசி, மா மன்னு தேர் எனும் வாகனத்தினார்,
வேலினால் எறிந்து அமர் உடற்றியும், வெய்ய வாளினால்
வெட்டி முட்டியும்,
கோலினால் எறிந்து உருவ எற்றி வில் கோலியும், களம் குறுகினார்களே58.-ஐந்துகவிகள் – வீமகர்ணர்கள் கடும்போர் புரிய
முடிவில் வீமன் வென்று கர்ணனுயிரைவிடுத்துச் செல்லலைக் கூறும்.

காலினால் வரும் – வாயுவினாற் பிறந்த, காளை மைந்தன் உம் –
இளவெருதுபோன்ற வீரனான வீமனும், கதிரினால் வரும் – சூரியனாற் பிறந்த,
காளை மைந்தன் உம் – கர்ணனும், மாலினால் வரும் களிறு – மதமயக்கத்தோடு
வருகிறயானையும் வாசி – குதிரையும், மா மன்னு தேர் – பெருமை பொருந்திய
தேரும், எனும் வாகனத்தினார் – என்கிற வாகனங்களையுடைய இரண்டுசேனை
வீரர்களும், வேலினால் எறிந்து அமர் உடற்றிஉம் – வேலால் வீசிப் போர்செய்தும்,
வெய்ய வாளினால் வெட்டிமுட்டிஉம் – கொடிய வாளால் துணித்துமோதியும், வில்
கோலி –  வில்லை வளைத்து, கோலினால் எறிந்து – அம்புகளால் எய்து, உருவ –
துளைக்கும்படி, எற்றிஉம் – தாக்கியும், களம் குறுகினார்கள் – போர்க்களத்தை
அடைந்தார்கள்; (எ -று.)

     இனி, இக்கவிக்கு – வாயுகுமாரனான வீமனது மகனாகிய சுருத
சேனனென்பவனும் சூரியகுமாரனான கர்ணனது மகனாகிய
விருஷசேனனென்பவனும் யானை குதிரை தேர் என்னும்வாகனங்களின்மேல்
ஏறினவர்களாய், (முறையே) வேலினாலும் வாளினாலும் வில்லினாலும் பொருது
களங்குறுகினார்களென்று உரைத்து, மேலைக்கவியின் முதலடிக்கு – வீமனும்
கன்னனுந் தத்தம் மக்களது போர்த்திறத்தைக் கண்டு கண்டு: களித்து என்று
உரைப்பினுமாம்

மைந்தர் போர் விதம் கண்டு கண்டு, தார் மருவும் அம் புயத்து
இருவரும் களித்து,
உந்தும் மா நெடுந் தேர் இரண்டும் வந்து, உள்ளம் ஆன தேர்
ஒத்து உலாவவே,
அந்தரம் புதைந்து உம்பரார் எலாம் அஞ்சி ஓடுமாறு அப்பு மாரியும்
சிந்த, எண் திசாமுகமும் அண்டமும் செவிடு பட்டிடச் சிலை
வணக்கினார்.

தார் மருவும் – போர்மாலை பொருந்திய, அம் புயத்து – அழகிய
தோள்களையுடைய, இருவர்உம் – கன்னனும் வீமனும்,- மைந்தர் – (தம்முடன் வந்த)
வீரர்களது, போர் விதம் – போர்செய்யும்  வகைகளை, கண்டு கண்டு –
பார்த்துப்பார்த்து, களித்து – (தாம்) மகிழ்ந்து, உந்தும் மா நெடு தேர் இரண்டுஉம் –
செலுத்தப்படுகிற பெரிய உயர்ந்த (தமது) இரண்டுதேர்களும், உள்ளம் ஆனதேர்
ஒத்து – (தத்தம்) மனோரதத்தைப் போன்று , வந்து உலாவ – உலாவி வராநிற்க,-
உம்பரார் எலாம் – மேலுள்ள தேவர்களெல்லாம், அஞ்சி ஓடும் ஆறு – பயந்து
ஓடும்படி, அப்பு மாரிஉம் – பாணவருஷமும், அந்தரம் புதைந்து – ஆகாயத்தை
மறைத்து, சிந்த – சிந்தவும், எண் திசாமுகம்உம் – எட்டுத்
திக்குக்களினிடத்திலுள்ளவர்களும், அண்டம்உம் – அண்டகோள
முழுவதிலுள்ளவர்களும், செவிடு பட்டிட – (நாணொலிமிகுதியால்) செவிடாம்படியும்,
சிலை வணக்கினார்- வில்லை வளைத்தார்க்ள; (எ – று.) – உள்ளமான தேர் –
மனோரதமென்ற வட சொல்லின்மொழிபெயர்ப்பு ; விருப்பமென்பது பொருள்.

செல் வணக்கி மேல் கீழ் எனும் பெருந் திசை இரண்டினும்
திகழும் விற்கள்போல்
வில் வணக்கி, அவ் இருவரும் பொரும் வெஞ் சமத்தில்
வீமனை, உரத்தினும்,
மல் வணக்கு தோளினும், இலக்கு இலா வாளி ஏவினான், ஒளியாகவே-
கல் வணக்கி முப்புரம் எரித்த முக்கண்ணினான் வலக்
கண் அளித்துளான்.

செல் வணக்கி – மேகங்களில் வளைவாகத்தோன்றி, மேல்கீழ்எனும்
பெரு திசை இரண்டின்உம் – மேற்கு கிழக்கு என்கிற பெரிய இரண்டு திக்குகளிலும்,
திகழும் – விளங்குகிற, விற்கள்போல் – இந்திரதனுகளைப் போல, வில் வணக்கி –
(தத்தம்) வில்லை வளைத்து, அ இருவர்உம் – கன்னனும் வீமனும், பொரும் –
போர்செய்கிற, வெம் சமத்தில் – கொடிய யுத்தத்தில், கல் வணக்கி – மேருமலையை
(வில்லாக) வளைத்து, முப்புரம் எரித்த – திரிபுரங்களைத் தகித்த, முக்
கண்ணினான் -மூன்றாவது [நெற்றிக்] கண்ணையுடைய உருத்திரனது, வலம் கண் –
வலதுகண்ணாகிய சூரியனால், அளித்துளான் – பெறப் பட்டவனாகிய கர்ணன்,
வீமனை -வீமனது, உரத்தின்உம் – மார்பிலும், மல் வணக்கு தோளின்உம் –
மல்லுத்தொழிலைப்பயின்ற தோள்களிலும், ஒளி ஆக – ஒழுங்காக, இலக்கு இலா
வாளி – எதிரில்லாதஅம்புகளை, ஏவினான் – பிரயோகித்தான்; ( எ – று.)

     மல் வணக்கு தோள் – விராட நகரத்தில் எல்லாமல்லரையும் வென்று
வந்தானொரு மல்லனைத் தோற்பித்த தோளென்றுமாம். கல் – இலக்கணையால்
மேருவை உணர்த்திற்று. இறைவனுக்குக் கண்மூன்றும் முச்சுட ராதலால், இங்ஙனங்
கூறினார்.       

வலக்கண் ஆன செஞ் சுடர் இடக்கணும் வாகுவும் துடித்து
ஆகுலத்துடன்
கலக் கணீர் பொழிந்து இனையும் வேலையில், கனல் படும்
புணில் தடி படும் கணக்கு,
இலக்கணம் தவா வீமன் வாளி ஈர்-இரண்டு நால்-இரண்டு
எண்-இரண்டினால்
அலக்கண் எய்த எய்தனன், உதாரிதன் அணிகள் நீடு தோள்
ஆகம் எங்குமே.

வலக்கண் ஆன -(இறைவனது) வலக்கண்ணாகிய, செம்சுடர் –
சிவந்த கிரணங்களையுடைய சூரியன், இடக் கண்உம் வாகுஉம் துடித்து –
இடக்கண்ணும் இடத்தோளும் துடிக்கப் பெற்ற, ஆகுலத்துடன் – கவலையுடனே,
கலம் க(ண்)ணீர் பொழிந்து – மிகுந்த கண்ணீரைச் சொரிந்து, இனையும்
வேலையில் – வருந்தும் பொழுதில், கனல்படும் புணில் தடி படும் கணக்கு –
நெருப்பினாலாகிய புண்ணிலே தடியடிபட்டதன்மையாக, இலக்கணம் தவா
வீமன் – (உத்தமவீர) லக்ஷணங்களிற் சிறிதுங்குறையாத வீமன், உதாரிதன் –
உதாரணகுணமுடைய கர்ணனது, அணிகள் நீடு – ஆபரணங்கள் மிகுந்த, தோள் –
தோள்களிலும், ஆகம் எங்குஉம் – உடம்புமுழுவதிலும், அலக்கண் எய்த –
துன்பமடையும்படி, ஈர் இரண்டு – நான்கும், நால் இரண்டு – எட்டும், எண்
இரண்டு – பதினாறுமாகிய, வாளியினால் – அம்புகளால், எய்தனன் – எய்தான்;
(எ – று.)

     செஞ்சுடர் – அன்மொழித்தொகை. குமாரனாகிய கர்ணனுக்கு இன்று மரணம்
நேரிடப்போவதனால், அதற்கு முற்குறியாகச் சூரியனுக்கு இடக்கண்ணுந் தோளுந்
துடிக்க, அதுகருதி அவன் வருந்தினான். சூரியன் அத்தீயகுறியால்
மனவருத்தபடும்பொழுது வீமன் கர்ணன்மீது பலபாணங்களைப் பிரயோகித்து
அவன்வருத்தத்தை மிகச்செய்தலால், ‘கனற்படும்புணிற்றடிபடுங்கணக்கு’ என
உவமைகூறினார். பி – ம் :கற்படும்புணிற். 


‘விசயன் வஞ்சினம் அழியும்’ என்று கன்னனை
வீமன் கொல்லாது விடுத்துச் செல்லுதல்

வேதம் ஆகி நின்றவனை எய்த போர் வில்லி முன்னவன்,
சல்லியன்தனோடு
ஓதினான், ‘ “இவற்கு எம்பி வஞ்சினம் ஒழியும்” என்று கொண்டு
உயிர் வழங்கினேன்;
சூதனாகி நீ வந்து தேர் விடும் தொலைவு இலாத போர்
வலியை அன்றியே,
யாது கூறலாம் வன்மை? வின்மைதான் யாது?’ எனா,
இமைப்போதில் ஏகினான்.

 

வேதம் ஆகி நின்றவனை – வேதங்களின் சொரூபி யாகிய
பரமசிவனை, எய்த – அம்பெய்துபொருத, போர் வில்லி – விற்போரையுடைய
அருச்சுனனது, முன்னவன் – முன்னே பிறந்தவனாகிய வீமன்,’ இவற்கு –
இக்கர்ணனுக்கு, எம்பி வஞ்சினம் ஒழியும் என்று கொண்டு – (யான் இவனைக்
கொன்றால்) எனது தம்பியாகிய அருச்சுனனது சபதந் தவறுமே யென்று எண்ணி,
உயிர் வழங்கினேன் – உயிரைக்கொடுத்தேன்; நீ -, சூதன் ஆகி – சாரதியாகி,
வந்து-, தேர் விடும் – தேரோட்டுவதனாலாய, தொலைவு இலாத – அழிதலில்லாத,
போர்வலிமை அன்றிஏ – போரின் வலிமையையே யல்லாமல், வன்மை –
(அக்கர்ணனது)வலிமையைக் குறித்து யாது கூறலாம் – என்ன சொல்லலாம்?
வின்மை தான் -விற்போர்த் திறமைதான், யாது – ஏது?’ எனா – என்று
இகழ்ச்சியாக,சல்லியன்தனோடு ஓதினான் – சல்லியனுடன்சொல்லியவனாய்,
இமைப்போதில் – ஒருமாத்திரைப்பொழுதிலே, ஏகினான் – (அப்பாற்) சென்றான்;
(எ – று.)

     பாசுபதம்பெறத் தவநிலை நின்ற அருச்சுனனை அழிக்கத்
துரியோதனனேவலாற் பன்றியாய்வந்த மூகாசுரன்மேல் வேடவடிவாய் வந்த
சிவபெருமான் அம்பெய்ய, அது பிளக்குமுன்னே அருச்சுனன் அம்பொன்று எய்து
வராகத்தைவிழுத்த, அதுகாரணமாக அவ்விருவர்க்கும் உண்டான போரில்,
பரமசிவனை அருச்சுனன் அம்பெய்தும் விற்கழுந்தால் முடியில் அடித்தும் எதிர்த்தா
னென்க.       

அங்கர் குல நரபாலனும் வாழ்வுடை அங்கர்களும் முனை
சாய்தர, ஊழியின்
மங்குல் நிகர் பல கோல் விடு வீமனும், மைந்தர் அனைவரும்,
மாறு அடு காலையில்,
வெங் கை வரி சிலை கால் பொர, யாரினும் விஞ்சு திறல்
விடசேனன் எனா வரு
செங்கணவன், வசுதேவன் முன் நாள் அருள் சிங்க அரசு
இளையானொடு சீறியே,63.- இதுவும் மேலைக்கவியும் – ஒருதொடர்: விடசேனன் சாத்தகியோடு
பொருது தேர்முதலியன இழந்தமை கூறும்.

அங்கர் குல நர பாலன்உம் – அங்கதேசத்திலுள்ளார்
கூட்டத்துக்குத் தலைவனான கர்ணனும், வாழ்வு உடை அங்கர்கள் உம் –
வாழ்தலையுடைய அவ்வங்கதேசத்துவீரர்களும், முனை – போர்க்களத்தில்,
சாய்தர -வலியழியும்படி, ஊழியின் மங்குல் நிகர் – யுகாந்த காலத்து
(விடாப்பெருமழைபொழிகின்ற) மேகம்போன்ற, பல கோல் விடு – பல அம்புகளை
விடுகின்ற, வீமனும் -, மைந்தர் அனைவர்உம் – வீரர்களெல்லோரும், மாறு
அடுகாலையில் – பகைவர்களை அழிக்கின்ற பொழுதில்,- யாரின்உம் விஞ்சு
திறல் -எல்லோரினும் மிக்க பராக்கிரமத்தையுடைய, விடசேனன் எனா வரு –
விருஷசேனனென்னும் பேர்பெற்றுவந்த, செம்கணவன் – (கோபத்தாற்) சிவந்த
கண்களையுடைய வீரன், வசுதேவன் முன் நாள் அருள் – வசுதேவர் முன்னே
பெற்ற, சிங்க அரசு – சிறந்த சிங்கம்போன்ற கண்ணனது, இளையானொடு –
தம்பியாகிய சாத்தகியுடனே, வெம் கை – கொடிய கையிற்பிடித்த, வரி சிலை –
கட்டமைந்த வில், கால் பொர – கோடிகள் வளைய (வளைத்து), சீறி –
கோபித்து,-(எ – று.)-‘சீறி’ என்பது, மேற்கவியில். “ஏவலும்” என முடியும்.

     அங்கர்கள் என்பதற்கு – சதுரங்கசேனாவீரரென்றும் பொருள் கொள்ளலாம்.
மைந்தர் அனைவர் – பாண்டவர் மக்களாகிய பிரதிவிந்தியன் சுருதசேனன்
சுருதகீர்த்தி புண்டலன் செபசனன் என்பரெல்லாருமாம்.

     இதுமுதல் ஆறுகவிகள் – பெரும்பாலும் முதல் ஐந்தாஞ்சீர்கள்
தேமாச்சீர்களும், இரண்டு ஆறாஞ்சீர்கள் கருவிளச்சீர்களும், மற்றைநான்குங்
கூவிளச்சீர்களுமாகிய எண்சீராசிரியச்சந்தவிருத்தங்கள். ‘ தந்த தனதன தானன
தானன தந்த தனதன தானன தானன’ என்பது இவற்றின் சந்தக்குழிப்பாம்

திண் சிலையின் நெடு நாண் ஒலியோடு அணி சிஞ்சிதமும்
எழ மால் இளையோன் இணை
வண் புயமும் வியன் மார்பமும் ஊடுற வன்பு பெறு பல வாளிகள்
ஏவலும்,
நண்பொடு அவன், இவன் ஏறிய தேர், கொடி, நன் புரவி, குடை,
பாகு, இவை வீழ்தர,
ஒண் பிறையின் முகம் ஆன சிலீமுகம் ஒன்பது உதையினன்,
வாகுவும் மார்புமே.

திண் சிலையின் – வலிய வில்லிலேற்றிய, நெடு நாண்
ஒலியோடு -நீண்ட நாணியின் ஒலியுடன், அணி சிஞ்சிதம்உம் – அழகிய
ஆபரணங்களின்ஒலியும், எழ – உண்டாம்படி, மால்இளையோன் – கிருஷ்ணன்
தம்பியானசாத்தகியினது, இணை – (ஒன்றோடொன்று) ஒத்த, விண் புயம்உம் –
அழகிய தோள்களிலும், வியன்மார்பம்உம் – அகன்ற மார்பிலும், ஊடுஉற –
துளைக்கும்படி, வன்பு பெறு பல வாளிகள் – வலிமைபெற்ற பல பாணங்களை,
ஏவலும் – (விடசேனன்) ஏவினவளவில், நண்பொடு – இவனோடு ஒப்ப, அவன்
சாத்தகி, இவன் ஏறிய – விடசேனன் ஏறின, தேர் – தேரும், கொடி- கொடியும், நல்
புரவி – சிறந்த குதிரைகளும், குடை – குடையும், பாகு – பாகனும், இவை  ஆகிய
இவையெல்லாம், வீழ்தர – விழும்படியாகவும், வாகுஉம் மார்புஉம்- தோள்களிலும்
மார்பிலும், ஒண் பிறையின் முகம் ஆன – ஒளி பொருந்திய பிறைச்சந்திரன்போன்ற
நுனியையுடைய, சிலீமுகம் ஒன்பது – ஒன்பதுபாணங்களை, உதையினன் –
தொடுத்தான்; (எ – று.)- ஸ்ரீஞ்ஜிதம் – அசைகின்ற ஆபரணங்களினாலெழும் ஒலி:
வடசொல்.

குன்றின் அருவிகள்போல் மததாரைகள் கொண்ட கட தட
வாரண மாமிசை
சென்று சில கணை ஏவினர், ஓர் இரு சிந்து கிரண
திவாகரராம் என,-
‘இன்று வயல் உழுவீர்; புது நீர் வரும்’ என்று, வரி மணலே
குறி கூறிட,
அன்று வரு குட காவிரி நாடனும், அம் பொன் வரி கழல்
மாகதர் கோவுமே.65.- சோழனும் மாகதனும் யானைமீதிருந்து பொருதல்

வயல்உழுவீர் – கழனிகளை உழுது பயிர்செய்பவர்களே!
இன்றுபுது நீர் வரும் – இன்றைக்குப் புதுவெள்ளம் வரும்’, என்று -, வரிமணல்ஏ-
அடர்ந்தமணல்களே, குறிகூறிட – (முன்னே) குறிசொல்ல, அன்றுவரு – அன்றைக்கே
(தவறாமல்வெள்ளம்) வரப்பெறுகின்ற, குட காவிரி – மேற்கிலுற்பத்தியாகிற
காவேரிநதிபாய்கின்ற, நாடன்உம் – நாட்டையுடைய சோழனும், அம் பொன் வரி
கழல் -அழகிய பொன்னினாலாகிய கட்டப்பட்டவீரக்கழலையுடைய, மாகதர்
கோஉம் -மகதநாட்டார்க்குத் தலைவனானசாதேவனென்பவனும், குன்றின்
அருவிகள்போல் -மலையினின்று பெருகுகிற நீரருவிகள்போல, மததாரைகள்
கொண்ட -மதநீர்ப்பெருக்கைக் கொண்ட, கட தடம் – கபோலங்களி
னிடத்தையுடைய, வாரணம்மாமிசை – யானையாகிய விலங்கின்மேலேறி, சென்று –
போய் , சிந்து கிரணம் -வீசுகிற கிரணங்களையுடைய, ஓர் இரு திவாகரர் ஆம்
என – இரண்டுசூரியர்கள்போல, சில கணை ஏவினர் – சிலபாணங்களைப்
பிரயோகித்தார்கள்;

கங்கை நதியிடை, வேயொடு பாகு அடர் கம்ப நிகள மதாசலம்
நீர் உண,
வங்க மறி கடல் சூழ் எழு பார் வலம் வந்த மனு குல
சோழனை, மாகதன்,
அங்கனையர் இள மா முலை தோய் புயம் அந்தி வெயில் நிகர்
சோரியின் மூழ்குற,
வெங் கண் அழல் உதிரா, அதிரா, எதிர் மின்கொல் என இணை
வாளிகள் ஏவவே,66.- இதுவும் மேலைக்கவியும் – ஒருதொடர்: இருவரும் பொருகையில்
சோழன் மாகதனுயிரைக் கவர்தலைக் கூறும்

வேயொடு – மூங்கிற்கோலையும், பாகு – பாகனையும், கம்பம் –
கட்டுத்தறியையும், நிகளம் – சங்கிலியையும், அடர் – அழிக்க வல்ல, மத அசலம்-
மதத்தையுடைய மலைபோன்ற (தனது) பட்டத்து யானை, கங்கை நதியிடை –
கங்காநதியில், நீர் உண – நீரைக் குடிக்கும் படி, வங்கம் மறி கடல் சூழ் –
மரக்கலங்களையுடைய அலையலைக்கின்ற கடல்களாற் சூழ்ப்பட்ட, எழு பார் –
ஏழுதீவுகளையும், வலம் வந்த – (தடையின்றிப்) பிரதட்சிணமாகவந்த, மனு குல
சோழனை – மனுவின்குலத்தில்தோன்றிய சோழராஜனை, மாகதன் –
மகததேசத்தரசன், எதிர் – எதிர்ந்து, அங்கனையர் – பெண்களது, இள மா முலை –
இளைய பருத்த தனங்கள், தோய் – புணரப்பெற்ற, புயம் – தோள்கள்,  அந்தி
வெயில் நிகர் – சாயங்காலத்து வெயிலை யொத்த, சோரியின் – செந்நீரிலே,
மூழ்குற- முழுகும்படி, வெண் கண் அழல் உதிரா – கொடிய கண்கள் நெருப்புப்
பொறிசிந்தும்படி சீறி, அதிரா – கர்ச்சித்து, மின் கொல் என – மின்னலோ
வென்னும்படி,இணை வாளிகள் – இரண்டு அம்புகளை, ஏவ – விட,- (எ – று.)-
“சிலைகோலிஉயிர் கொண்டு திருகினன்” எனமேற்கவியோடுமுடிக்க. மநு –
சூரியன்மகன். வங்கம்- மரக்கலம்; அலையுமாம்.

வஞ்சி மதுரை புகார் உடையான், வட மண்டலிகர் திறை
வாரிய நேரியன்,
விஞ்சி முனைதொறும் வாள் அசுரேசரை வென்ற பொழுது,
அடல் வானவர் கோன் அருள்
நஞ்சு பொழி எரி கால் ஒரு கோல் கொடு, நம்பர் சிலை
மலைபோல் அவன் ஏறிய
குஞ்சரமும் விழ, மாகதர் கோன் உயிர் கொண்டு திருகினன்,
வார் சிலை கோலியே.

வஞ்சி – கருவூரும், மதுரையும், புகார் – காவிரிப்பூம்பட்டினமும்
(என்னுந் தமிழ்நாட்டு மூன்று இராசதானிகளையும்), உடையான் – (தன்
ஆளுகையின்கீழ்) உடையவனாகிய, வட மண்டலிகர் – வடக்குத்தேசத்தரசர்கள்
(கொணர்ந்துகொடுக்கிற), திறை – வரிகளை (யெல்லாம்), வாரிய – கொள்ளுகிற,
நேரியன் -சோழன், வார் சிலை கோலி – நீண்ட வில்லை வளைத்து, முனைதொறு
உம் -பலபலபோர்களில், வாள் அசுர ஈசரை – வாளைத்தாங்கிய அசுர ராசர்களை,
விஞ்சி- மிகுதியாக, வென்ற பொழுது – (இந்திரனுக்குத் துணையாகிச்)
சயித்தகாலத்தில்,அடல் வானவர்கோன் அருள் – வலிமையையுடைய
தேவராஜனாகிய இந்திரன்தந்தருளிய, நஞ்சுபொழி – விஷத்தைக் கக்குகிற, எரி
கால் – நெருப்பை வீசுகிற,ஒருகோல் கொடு – ஒரு அம்பினால், நம்பர் சிலை
மலைபோல் – சிவபெருமானுக்குவில்லாகிய மேருமலை போன்ற, அவன் ஏறிய
குஞ்சரம்உம் – அவன்ஏறிவந்தயானையும், விழ – விழும்படி, மாகதர்கோன் உயிர்
கொண்டு – அம்மகதரர்சனது உயிரைக் கவர்ந்து கொண்டு [அவனைக் கொன்று],
திருகினன் – மீண்டான்; (எ -று.)

     சேரநாட்டுக்கு வஞ்சியும், பாண்டியநாட்டுக்கு மதுரையும், சோழ நாட்டுக்குப்
புகாரும் இராசதானி யென்க. இத்தமிழ்நாடு மூன்றும் முன் ஒருகாலத்துச்
சோழனாளுகைக்கு உட்பட்டிருந்தனபோலும். நேரியன் – நேரியென்னும்
மலையையுடையவன்.     

அண்டர் குல பதியாம் விடை வாகனன், அம் பொன் முடி மலர்
நாறிடு தாளினன்,
எண் திசையும் மனு நீதி செய் கோலினன், எங்கும் ஒரு்
குடையால இடு நீழலன்,
மண்டு கிரண சிகாமணி மோலியன், வண்டு மது நுகர்
தாதகி மாலையன்,
மிண்டு முது புலி ஏறு பதாகையன், வென்றி வளவனை
யார் நிகர் வீரரே?68.- சோழன் சிறப்பு.

அண்டர்குல பதி ஆம் – தேவர்கூட்டத்துக்குத் தலைவனாகிய,
விடைவாகனன் – விருஷபத்தை வாகனமாகவுடைய பரமசிவனது, அம் பொன்
அடி மலர்- அழகிய பொன்போல அரிய திரு வடித்தாமரை மலர்கள், நாறிடு –
மணக்கப்பெற்ற, சேகரன் – முடியை யுடையவனும், எண்திசைஉம் –
எட்டுத்திக்குகளிலும், மனு நீதி செய் – மநுதரும சாஸ்திர நீதியின்படி நடத்துகின்ற,
கோலினன் – செங்கோலையுடையவனும், எங்குஉம் – எவ்விடத்திலும், ஒரு
குடையால் – ஒற்றைக்குடையினால், இடும் – செய்கிற, நீழலன – நிழலை
யுடையவனும், மண்டு கிரணம் – மிகுந்த  ஒளியையுடைய சிகாமணி –
முடியிலணியும்மணியையணிந்த, மோலியன் – தலையையுடையவனும், வண்டுமது
நுகர் – வண்டுகள்தேனுண்ணப்பெற்ற, தாதகி மாலையன் –
ஆத்திப்பூமாலையையுடையவனும், மிண்டு முது புலி ஏறு – வலி மிகுந்த, வென்றி
புலிபொருந்திய, பதாகையன் – கொடியை யுடையவனுமாகிய, வென்றி வளவனை –
வெற்றியையுடைய சோழனை, நிகர்வீரர் – ஒக்கின்ற வீரர், யார் -? (எ -று.)

     பரமசிவனது திருவடிகளில் தன்முடிபடும்படி காலந்தோறுஞ் சாஷ்டாங்கமாக
விழுந்து தண்டனிடுபவ னென்பது, முதலடிக்குக் கருத்து. இனி, முதலடிக்கு
அண்டர்குலபதி ஆம் – இந்திரனாகிய, விடை – இடபத்தை, வாகனன் –
வாகனமாகக் கொண்டவன் எனினுமாம். சூரியவமிசத்தரசனொருவனுக்குத்
தேவேந்திரன் விடப வாகனமாகி யிருந்தானென்பது கதை; அவ்வரசன்பெயர்
ககுத்ஸ்த னென்பது. அம் பொன் – அழகியமாற்றரசர் பொன்முடியிலேயுள்ள,
மலர் -, அடியில் நாறுகின்ற, சேகரன் – குலசேகர னெனினுமாம். பி – ம்:
அன்பொன்முடிமலர் நாறிடுதாளினன்.

யாது ஏவல்?’ என்று பல மன்னரும் ஈண்ட, இப் பார்
மீது ஏவல் கொள்ளும் விறல் சென்னி கை வில்லின் வன்பால்
மோது ஏவு பட்டு, முகம் மாறி, மகதர் கோமான்
சாதேவன் வீழ முதுகிட்டது, தானை வெள்ளம்.69.- மாகதன் விழவே, சேனை முதுகிடல்.

பல மன்னர்உம் – பலதேசத்து அரசர்களும், யாது ஏவல் என்று –
(எங்களுக்குக் கட்டளையிடுங்) குற்றேவல் என்ன வென்று வினவி, ஆண்ட –
திரளும்படி, இ பார்மீது – இந்தப்பூமியில், ஏவல் கொள்ளும் – ஆணை செலுத்துகிற,
விறல் – வெற்றியையுடைய, சென்னி – சோழனது, கை வில்லின் – கையிற்பிடித்த
வில்லினது, வன்பால் – வலிமையால், மோது – எய்யப்பட்ட, ஏவு – அம்பு, பட்டு –
தைத்தலினால், மகதர் கோமான் சாதேவன் – மகததேசத்தார்க்கு அரசனாகிய
சகதேவனென்பவன், முகம் மாறி – தலை துணிக்கப்பட்டு, வீழ – கீழேவிழ, தானை
வெள்ளம் – (துரியோதனாதியரின்) சேனைக்கூட்டம், முதுகிட்டது – புறங்கொடுத்தது;
(எ -று.)

     எல்லார்க்குந்தலைவனாதலால், சென்னியென்றுபெயர்போலும்; சென்னி தலை
சாதேவன் – வடசொற்றிரிபு; இவன், சராசந்தன்மகன்.

     இதுமுதற் பதினாறு கவிகள் – பெரும்பாலும் வெண்டளை பெற்ற ஐஞ்சீரால் வந்த கொச்சகக்கலிப்பாக்கள்.  

புறமிட்ட தானை நிலை கண்டு, பொறாது, சோதி
நிறம் இட்ட வில் கைத் துரோணன் மகன் நெஞ்சு கன்றி,
மறம் இட்ட வாளி பல தூவி வருதல் நோக்கி,
அறம் இட்ட சிந்தை அரசன்தன் அனுசர்தம்மில்,70.- இதுவும் மேலைக்கவியும்- ஒரு தொடர்: அருச்சுனன் கனன்று
பொருது அசுவத்தாமனைவென்று பதாதியாக்கிப்போக்கல்.

புறம் இட்ட – முதுகுகொடுத்த, தானை – (தமது) சேனையின்,
நிலைகண்டு – நிலைமையைப்பார்த்து, சோதி நிறம் இட்ட – ஒளியின் தன்மை
பொருந்திய,வில் – வில்லேந்திய, கை – கையையுடைய, துரோணன் மகன் –
அசுவத்தாமன்,பொறாது – பொறுக்காமல், நெஞ்சு கன்றி – மனம் வெதும்பி, மறம்
இட்ட -வலிமைபொருந்திய, வாளி பல – பல அம்புகளை, தூவி வருதல் –
சிந்திவருதலை,நோக்கி – பார்த்து,- அறம் இட்ட சிந்தை- தருமம் பொருந்திய
மனத்தையுடைய,அரசன்தன் – யுதிட்டிரனது, அனுசர்தம்மில் – தம்பிமார்களுள்,-
(எ -று.)- “நிற்பான்” என மேற்கவியோடு இயையும்.

இன்றே முடிப்பன் வினை!’ என்று இரண்டு இந்த்ரநீலக்
குன்றே நிகர்ப்பத் திருமாலொடும் கூடி நிற்பான்,
சென்றே அதிரப் பரித்தாமனைச் செங் கை அம்பால்
வென்றே, இமைப்பின் வெறுங் காலினின் மீள விட்டான். ‘இன்றே – இன்றைக்கே, வினை – போர்த்தொழிலை, முடிப்பன் –
முடிப்பேன்’, என்று – என்று எண்ணி, இரண்டு இந்திரநீலம் குன்றுஏ நிகர்ப்ப –
இந்திரநீலரத்தினமயமான இரண்டுமலைகளையே ஒக்கும்படி, திருமாலொடுஉம்
கூடிநிற்பான் – கண்ணனுடன் கூடி நிற்பவனாகிய அருச்சுனன்,- அதிர –
ஆரவாரமுண்டாகும்படி, சென்று – (எதிரிற்) போய், பரித்தாமனை –
அவ்வசுவத்தாமாவை, செம் கை அம்பால்- சிவந்த கைகளினால் விடப்படுகிற
அம்புகளால், வென்று – ஜயித்து, இமைப்பின் -நொடிப்பொழுதினுள்ளே, வெறு
காலினின் மீள – (தேரின்றிக்கே) வெறுங்கால்களால்திரும்பிப்போம் படி, விட்டான் –
(உயிரோடு) அனுப்பினான்.

துரியோதனன்தன் இளையோரில் சுதக்கணப் பேர்ப்
பெரியோன், முறிந்த பெருஞ் சேனையின் பின்பு நின்றோன்,
பரியோடும், மான் தேர்ப் பரப்போடும், பதாதியோடும்,
கரியோடும், ஊழிக் கனல் என்னக் கனன்று வந்தான்.72.- துரியோதனன் தம்பி சுதக்கணன் கனன்றுவருதல்.

துரியோதனன் தன் இளையோரில் – துரியோதனன் தம்பிமாருள்,
சுதக்கணன் பேர் – சுதக்கணன் என்னும் பெயரையுடைய, பெரியோன் – மகாவீரன்,
முறிந்த பெரு சேனையின் பின்பு  நின்றோன் – நிலைகெட்ட (தமது) பெரிய
சேனைக்குப் பின்னே நின்றவன், பரியோடுஉம் – குதிரைகளுடனும், மான் தேர்
பரப்போடு உம் – குதிரைகளைப்பூட்டிய தேர்களின் கூட்டத்தோடும்,
பதாதியோடுஉம் – காலாள்களுடனும், கரியோடுஉம் – யானைகளுடனும், ஊழி
கனல்என்ன – யுகாந்தகாலத்து அக்கினிபோல, கனன்று வந்தான்- கோபித்து
வந்தான்; (எ- று.) – செய்யுளோசையின் பொருட்டு ‘ என்ன கனன்று’ என
இயல்பாய்வந்தது.

முகிலின் சிலையின் சிலை கோலி, முனை கொள் அம்பு
பெகுலம் தொடுத்து வரு காளையைப் பெட்பின் நோக்கி,
நகுலன் சிறிது நகைசெய்து, நகை செய் வாளி
அகிலம் தொடுத்து, ஆங்கு அவன்தன்னையும் அஞ்சுவித்தான்.73.- நகுலன் அவனை யோட்டுதல்.

முகிலின் சிலையின் – மேகத்தில் தோன்றுகிற இந்திரவில்லைப்போல,
சிலை கோலி – வில்லை வளைத்து, முனை கொள் அம்பு – கூர்மைகொண்ட
அம்புகளை, பெகிலம் தொடுத்து வரு – பலவாகப்பிரயோகித்துவருகிற, காளையை –
அச்சுதக்கணனை, நகுலன்-, பெட்பின் நோக்கி – போர்விருப்பத்தோடு பார்த்து,
சிறிதுநகை செய்து – புன் சிரிப்புச்செய்து, நகை செய் வாளி அகிலம் – ஒளிசெய்கிற
அம்புகள் அநேகத்தை, தொடுத்து – (அவனம்புகளுக்குஎதிரே) தொடுத்து விலக்கி,
ஆங்கு – அப்பொழுதே, அவன் தன்னைஉம்  அஞ்சுவித்தான்- அவனையும்
பயந்து ஓடச்செய்தான்; (எ -று.)- பெகிலம் – பஹூளம் என்னும் வடமொழித்திரிபு.

‘மட்டுப் படாமல் வரு தெவ்வர் மலையின், நின்றே
தட்டுப்படாது, இன்று எமர்ஆனவர் தானை’ என்னா,
பட்டுப்படாத வடி வேல் நரபாலர் சூழ,
முட்டுப்படாத முரட் கன்னன் முனைந்து சென்றான்.74.- கர்ணன் சேனைசூழ முனைந்துவருதல்.

‘மட்டுபடாமல் – அளவுபடாமல், வரு – வருகிற, தெவ்வர் –
பகைவர்கள், மலையின் -(இப்படி) போர்செய்தால், எமர் ஆன வர் தானை –
எம்முடையவர்கள்சேனை, இன்று – இன்றைக்கு, நின்று  தட்டுப்படாது – நிலைநின்று
காணப்படாது,’ என்னா – என்று எண்ணி, பட்டு படாத – (முன்போர்களில்) இறந்து
ஒழியாத, வடி வேல் நரபாலர் – கூர்மையையுடைய வேலையுடைய
மனிதர்களைக்காக்கிற அரசர்கள், சூழ – சுற்றிலும்வரும்படி, முட்டு படாத முரண்
நன்னன் – தடைப்படாத வலிமையுடைய கர்ணன், முனைந்து சென்றான் – விரைந்து
(எதிரிற்) போனான்; (எ -று.)- பட்டு படாத – ஆயுதம் பட்டிறவாதஎனினுமாம்

பாஞ்சாலரின், கேகயரின், பல பாடை மாக்கள்
ஆம் சார்பினில் வந்து அடைந்தோர்களில், அன்று போரில்
மாஞ்சார் ஒழிந்த பல மன்னரும் சூழ, வண்டு
பூஞ் சாறு அருந்தும் நறுந் தாமம் புனைந்த தோளான்,75.- இரண்டுகவிகள் – ஒருதொடர் : பலமன்னவர் சேனையோடு தருமன்
எதிர்த்துச்செல்ல, இருவரும் பொருதலைக்கூறும்.

பாஞ்சாலரின் – பாஞ்சாலதேசத்தாருள்ளும், கேகயரின் –
கேகயநாட்டருள்ளும், ஆம் சார்பினில் வந்து – தக்க துணையாக வந்து,
அடைந்தோர்கள் – சேர்ந்தவர்களாகிய, பல பாடைமாக்களின் – பலபாஷைகள்
பேசுகிற (வேறுபலதேயத்து) மனிதருள்ளும், போரில் மாஞ்சார்ஒழிந்த – போரில்
இறந்தவர்கள்போகமிகுந்த, பல மன்னரும்-, சூழ – சுற்றிலும்வரும்படி, அன்று –
அப்பொழுது, வண்டு பூ சாறு அருந்தும் – வண்டுகள் மலர்களின் தேனை
யுண்ணுகிற, நறுதாமம் – மணக்கின்றமாலையை, புனைந்த – தரித்த, தோளான் –
தோள்களை யுடையவனாகிய,- (எ -று.) – “தருமன்மைந்தன் என மேற்கவியோடு
இயையும். மாஞ்சார் – மாய்ந்தார் என்பதன் இடைப்போலி. பி – ம்: நறுந்தார்கள்.

மன்னன் தருமன் திருமைந்தன், மலைய வந்த
கன்னன் கருத்தும், கடுஞ் சேனையும் கண்டு, மேற் போய்,
பொன் அம் பொருப்பு ஓர் இரண்டு என்ன, வெம் பூசல் செய்தார்,
இன்னம் தமக்குத் தமை அன்றி எதிர் இலாதார்.

மன்னன் தருமன் திரு மைந்தன் – தருமராசனது சிறந்த புத்திரனாகிய
யுதிட்டிரன், மலையவந்த போர்செய்தற்குவந்த, கன்னன் – கர்ணனது, கருத்துஉம் –
எண்ணத்தையும், கடு சேனை உம் – மிகுந்த சேனையையும், கண்டு – பார்த்து,
மேல் போய் – அவன் மேல் எதிர்த்துச்செல்ல,- தமக்கு தமை அன்றி –
தங்களுக்குத் தங்களையே யல்லாமல், இன்னம் எதிர் இலாதார் – வேறு
உவமையில்லாத தருமனும் கர்ணனும், அம் பொன் பொருப்பு ஓர் இரண்டு
என்ன -அழகிய பொன்மயமான இரண்டு மேருமலைகள்போலச் (சிறிதுஞ்
சலனமில்லாமல்),வெம் பூசல் செய்தார் – கொடிய யுத்தத்தைச் செய்தார்கள்;
(எ -று.)- போய் -போக.

உதையன் புதல்வன் பெருஞ் சேனை, உதிட்டிரன் கைக்
குதை அம்பில் வீழ்ந்தார், இனையோர் எனக் கூறல் தேற்றார்;
இதையம் பழுது இல் இவன் சேனை அவன் கை அம்பால்
உதையுண்டு வீழ்ந்தார் உரைத்தாலும் உரைக்கல் ஆற்றா.77.- இருபக்கத்தும் பலர் மடிதல்.

உதையன் புதல்வன் – சூரியபுத்திரனான கர்ணனது, பெரூசேனை –
பெரிய சேனையில், உதிட்டிரன் – தருமனது, கை – கையினா லெய்யப்பட்ட, குதை
அம்பில் – கட்டமைந்த அம்புகளினால், வீழ்ந்தார் – இறந்துவிழுந்தவர்கள்,-
இனையோர்என – இத்தனைபேரென்று, கூறல் தேற்றார் – சொல்லுதற்கு
அறியப்பட்டார் [அளவிறந்தரென்றபடி]: இதையம் பழுது இல் – மனத்திற் சிறிதுங்
குற்றமில்லாத, இவன் – தருமனது, சேனை – சேனையில், அவன் கை அம்பால் –
அந்தக்கர்ணன் கையினால்தொடுத்த அம்புகளினால், உதையுண்டு – எய்யப்பட்டு,
வீழ்ந்தார் – இறந்து விழுந்தவர்களை, உரைத்தால் உம் – (கணக்கிட்டுச்)
சொல்லத்தொடங்கினாலும், உரைக்கல் – சொல்லுதல், ஆற்றா – முடியாது;

பொற்பு ஊசல் என்ன இரு சேனையும் போயும் மீண்டும்
மற்பூசல் செய்ய, ஒளி செய்யும் அம் மன்னர்-தம்மில்,
முன் பூசல் அம்பின் பிளந்து அண்ட முகடு விள்ள,
வில் பூசல் எய்திப் புரிந்தார்-விலின் வேதம் வல்லார்.78.- கர்ணனும் தருமனும் விற்போர்புரிதல்.

பொற்பு ஊசல் என்ன – அழகிய ஊஞ்சல்போல.இரு சேனைஉம் –
இரண்டுபக்கத்துச் சேனைகளும், போய்உம் – பின்னிட்டும், மீண்டு –
திரும்பிமுன்னிட்டு, மல்பூசல் செய்ய – வலிய  போரைச்  செய்யா நிற்க,- வில்லின்
வேதம் வல்லார் – தநுர்வேதத்தில் வல்லவராகிய, ஒளிசெய்யும் – (சேனைக்கு)
விளக்கத்தைச் செய்கிற, அ மன்னர் – கன்னனுந்தருமனும், முன் – விரைந்து
விடப்படுகிற, பூசல் – ஆரவாரத்தையுடைய, அம்பின் – அம்புகளினால், அண்டம்
முகடு – அண்ட கோளத்தின் மேல்முகடும், பிளந்து விள்ள – பிளவுபட்டு
வெடிக்கும் படி , தம்மில்- தமக்குள், வில் பூசல் – விற்போரை, எய்தி புரிந்தார் –
பொருந்திச் செய்தார்; (எ -று.)- பொற்பு – பொலிவு: உரிச்சொல்;
“பொற்பேபொலிவு”.

கொலை அம்பும் மாளா மணி ஆவமும் கொண்ட செங் கைச்
சிலையும், கிரிகள் இரண்டு என்னத் திரண்ட தோளும்,
நிலையும், குறிப்பும், சிறு நாண் ஒலி நின்றவாறும்,
மலையும் திறலும், புகழ்ந்து, அண்டரும் வாழ்த்தினாரே.79.- இருவர் போரையும் தேவரும் வாழ்த்துதல்.

(அவ்விருவீரர்களது), கொலை அம்பு – (பகைவரைக்)
கொல்லுதலையுடைய அம்புகள், மாளா – குறைதலில்லாத, மணி ஆவம்உம் –
அழகிய அம்புப்புட்டில்களையும், செம் கை – சிவந்த கையில், கொண்ட – பிடித்த,
சிலைஉம் – விற்களையும், கிரிகள் இரண்டு என்ன – இரண்டுமலைகள்போல (வலிய),
திரண்ட தோள் உம் – திரட்சியாகவுள்ள தோள்களையும், நிலைஉம் – (போருக்கு
நின்ற) நிலையையும், குறிப்புஉம் – (அம்புஎய்தற்கு) லட்சியம்பார்த்தலையும், சிறு
நாண் ஒலி – சிறிய நாணியின் ஒசை, நின்ற ஆறு உம் – பொருந்திய விதத்தையும்,
மலையும் திறல்உம் -போர்செய்யும் வன்மையையும் (பார்த்து), அண்டர்உம் –
தேவர்களும், புகழ்ந்து -துதித்து, வாழ்த்தினார்- (கண்ணெச்சில்படாம லிருக்கவென்று)
ஆசீர்வாதமுஞ்செய்தார்கள்; (எ -று.)- ‘தேவரும் புகழ்ந்து வாழ்த்தினார்’ எனவே,
மனிதர் புகழ்ந்துவாழ்த்தினமை தானே பெறப்படும்.

தாழம் குறித்துக் கரை செய்யும் தரங்க வேலை
ஆழ் அம்புராசி எழு பார் தனி ஆள நிற்போன்
சூழ் அம் பொன் மாலைத் துணைத் தோள்களின் எட்டும், மார்பின்
ஏழ் அம்பும், எய்தான்-இருள் காயும் இரவி மைந்தன்.80.- கர்ணன் தருமன்மார்பிலும் தோளிலும் அம்புஎய்தல்.

தாழம் – தாழைமரங்கள், குறித்து – வரிசையாகத் தோன்றி,
கரைசெய்யும் – (சுற்றிலும்) கரையைச் செய்கிற, தரங்கம் வேலை – நீர்
அலைகளையுடைய, ஆழ் – ஆழமான, அம்புராசி – கடல்களாற் சூழப்பட்ட,
எழுபார் – ஏழுதீவுகளைம், தனி ஆள – தனியே அரசாளுதற்கு, நிற்போன் –
நிற்பவனாகிய தருமனது, அம் பொன் மாலை சூழ் – அழகிய பொன்மயமான
ஆரங்கள் பொருந்திய, துணி தோள்களின் -இரண்டு தோள்களிலும், எட்டுஉம் –
எட்டுஅம்புகளையும், மார்பின் – மார்பிலே, ஏழ் அம்புஉம் – ஏழம்புகளையும்,
இருள்காயும் இரவி மைந்தன் – இருளை யழிக்கிற சூரியனது மகனான கர்ணன்,
எய்தான்-;(எ -று.)

     தாழம் – ஐயீற்றுமரப்பெயர் ஈறுகெட்டு அம்முச்சாரியை பெற்றது. தாழம்
என்பதைத் தொழிற்பெயராகக் கொண்டு, தாழம் – தாழ்தலை [சாந்தமாதலை],
குறித்து- எண்ணி, கரை செய்யும் – கரையிற் செல்லுகிற, தரங்கம் என்பாருமுளர்.
‘தாழங்குரித்து’ என்னும் பாடத்திற்கு, தாழ் – தாழைகள், அங்குரித்து – முளைத்து
என்க. பி – ம்: இறைவன்.  

தன் தோளும் மார்பும் சரம் மூழ்க, வெஞ் சாபம் வாங்கி
நின்றோனை, வாய்மை நிலை நின்ற நிருபர் ஏறும்,
வன் தோள் உற நாண் வலித்து, ஓர் இரு வாளி ஏவி,
சென்று ஓர் இமைப்பின், சிலையும் திறல் அம்பும் வீழ்த்தான்.81.- தருமன் அம்பெய்து கர்ணனது புயங்கீறிச்
சிலையும் வீழ்த்தல்.

தன் தோள்உம் – தனது தோள்களிலும், மார்புஉம் – மார்பிலும்,
சரம் மூழ்க – அம்புகள் அழுந்தும்படி, வெம் சாபம் வாங்கி நின்றோனை – கொடிய
வில்லை வளைத்துநின்ற கர்ணனை, வாய்மை நிலை நின்ற – சத்தியத்தில் தவறாமல்
நிலையாய் நின்ற, நிருபர் ஏறு உம் – அரசர்களுக்கு ஆண்சிங்கம்போன்ற தருமனும்,
சென்று – (எதிரிற்) போய் வல் தோள் உற – வலிய தோளிற் படும்படி, நாண்
வலித்து – நாணியை இழுத்து, ஓர் இரு வாளி ஏவி – ஒப்பற்ற இரண்டு
பாணங்களைப் பிரயோகித்து, ஒர் இமைப்பின் – ஒரு கணப்பொழுதினுள்ளே, புயம்
கீறி – தோள்களைப் பிளந்து, சிலைஉம் வீழ்த்தான் – வில்லையுந் துணித்துத்
தள்ளினான்; (எ -று.) பி – ம்: நிருபரேறு.

வேறு ஓர் வரி வில், வெயிலோன் மகன், வெய்தின் வாங்கி,
நூறோடு நூறு தொடுத்து ஏவும் நுதி கொள் அம்பால்,
கூறு ஓர் இரண்டு பட யாரையும் கொன்ற போழ்தின்,
ஆறு ஓடிவிட்டது, அடையார் உடல் அற்ற சோரி.82.- கர்ணன் வேறுவில் கொண்டு பலரையுங்கொல்லக் குருதியாறு
பெருகல்.

வெயிலோன் மகன் – சூரியகுமாரனான கர்ணன், வேறு ஓர் வரி
வில் -வேறொரு கட்டமைந்த வில்லை, வெய்தின் வாங்கி – விரைவாக
எடுத்துவளைத்து,நூறோடு நூறு – பலநூற்றுக்கணக்காக, தொடுத்து ஏவும் –
தொடுத்து விடுகிற, நுதிகொள் அம்பால் – கூர்மையைக்கொண்ட அம்புகளினால்,
கூறு ஓர் இரண்டு பட – (உடல்வேறு உயிர்வேறாக) இரண்டு கூறுபடும்படி,
யாரைஉம் – எல்லோரையும், [பலரையும்என்றபடி], கொன்ற போழ்தின் -,
அடையார் – பகைவரது, உடல் -உடம்பினின்றும், அற்ற – வெளிப்பட்ட, சோரி –
இரத்தம், ஆறுஓடிவிட்டது -ஆறாகிப்பெருகி விட்டது

சாதேவன், தண்டதரன், தண்டகன், சித்ரதேவன்,
தீது ஏதும் இல்லாத் திறல் சாத்தகி, சித்ரகீர்த்தி,
தாது ஏறு தார்த் தம்பியரோடு, இகல் தண்டநாதன்
மீது ஏறு தேரும் தகர்ந்து, ஒண் சுடர் வில்லும் அற்றான்.83.-தம்பிமாருடன் சேர்ந்து பொருத த்ருஷ்டத்யும்நன்
தேரொடு வில்லையும் இழத்தல்.

சாதேவன்-, தண்டதரன்-, தண்டகன் -, சித்ர தேவன்-, தீது
ஏதுஉம்இல்லா திறல் – குற்றஞ் சிறிதுமில்லாத வல்லமையையுடைய, சாத்தகி-,
சித்ரகீர்த்தி-,(என்னும் பெயரையுடைய), தாது ஏறு தார் – பூந்தாதுகள் பொருந்திய
போர்மாலையையுடைய, தம்பியரோடு – (தன்) தம்பிமார்களுடன், இகல் தண்டம்
நாதன் – வலிமையையுடைய (பாண்டவ) சேனைக்குத் தலைவனான திட்டத்துய்மன்,
(கர்ணனெய்த அம்புகளால்), மீது ஏறு தேர்உம் தகர்ந்து – (தான்) மேலே ஏறிய
தேரும் பிளந்து, ஒண் சுடர் வில்உம் அற்றான் – மிக்கஒளியையுடைய வில்லுந்
துணிப்பட்டான்; (எ – று.)

     தம்பிமார்களுந் தேர்தகர்ந்து வில்லுமற்றா ரென்பதாம். ஒண்சுடர் –
ஒருபொருட்பன்மொழி. திறலுக்குத் தீது – தோல்வி. இங்கேகூறிய சாதேவன்
முதலியஅறுவர் – தண்டநாதனென்று பேர்பெற்ற ஒருவனுக்குத் தம்பிமாரென்றும்,
தண்டநாதன் அண்ணனென்றும். இவர்கள்யாவரும் ஒருபக்கத்து வீமனால் தோற்றா
ரென்றும் இப்பாட்டிற்குப் பொருள் கூறினாருமுளர்: இஃது பொருத்தமாகத்
தோன்றவில்லை.    

முன் சேனையோடும் வலி உற்று முனைந்து, கொற்ற
மன் சேனைநாதன் பொழி வாளி மழையில் மூழ்கி,
தன் சேனைநாதன் முதல் யாவரும் தளர்தல் கண்டு,
நன் சேனை நாலும் உடன் சூழ, நடக்கலுற்றான்.84.- சேனைநாதன் தளர்ந்ததுகண்டு தருமன் பொரலுறுதல்.

முன் – முன்னே, சேனையொடுஉம் – சேனையுடனே, வலி உற்று
முனைந்து – வலிமைபொருந்திப் போர்செய்து, (பின்பு), கொற்றம் மன் சேனைநாதன்
– வெற்றியையுடைய துரியோதனராஜனது சேனைக்குத் தலைவனான கர்ணன், பொழி
– சொரிகிற, வாளி மழையின் – பாணவருஷத்திலே, மூழ்கி – முழுகி, தன் சேனை
நாதன்முதல் யாவர்உம் – தனது சேனைத்தலைவன் [திட்டத்துய்மன்] முதலிய
யாவரும், தளர்தல் – சோர்வடைதலை, கண்டு – பார்த்து, (தருமபுத்திரன்), நன்
சேனை நாலும் உடன்சூழ – நல்ல நால்வகைக் சேனைகளுந் தன்னுடன் சுற்றிலும்
வரும்படி, நடக்கல் உற்றான் – எதிர் செல்பவனானான்; ( எ -று.) – பி -ம்:
யாருந்.

கிருபன் என்று எண் திசையும் வரி சிலைக்கு உரை செய் முனி,
கிருதவன்மன், சிந்தை விரகுடைச் சகுனி எனும்
நிருபர், அங்கங்கள்தொறும் நிரையினில் துளை உருவ, நெடிய அம்பு
ஐம்பது அறுபது படப்பட முடுகி,
முரண் மிகும் திண் கடவுள் முரசுடைக் கொடி கொள் அணி முகிலின்
வந்து அண்டர் குல முதல்வன் அத் தனுவினொடு
தரணியின்கண் சமரம் மலைவது ஒத்து, இரதமிசை தருமன் மைந்தன்
பரிதி புதல்வனைக் குறுகினனே85.- கிருபன்முதலியோர்மீது அம்புஎய்து கொண்டு
தருமன் கர்ணனைக் குறுகுதல்.

கிருபன் என்ற – கிருபாசாரியனென்று, எண்திசை உம் –
எட்டுத்திக்குகளிலும், வரி சிலைக்கு – கட்டமைந்த வில்லின் தொழிலுக்கு, உரை
செய்- சிறப்பித்துச்சொல்லப்படுகிற, முனி – முனிவனும், கிருதவன்மன் –
கிருதவர்மாவும்,சிந்தை விரகு உடை – மனத்தில் வஞ்சனையையுடைய, சகுனி –
சகுனியும், எனும் -என்கிற, நிருபர் – அரசர்களது, அங்கள்கள்தொறுஉம் –
உடம்புகள்தோறும்,நிரையினில் – வரிசையாக, துளை உருவ – துளைத்துச்
செல்லும்படி, நெடிய அம்பு -நீண்ட அம்புகள், ஐம்பது அறுபது படப்பட –
ஐம்பதும் அறுபதுமாகப்பொருந்தும்படி, முடுகி – விரைவாக எய்து கொண்டு,-
அணி முகிலின் – அழகியமேகமாகிய வாகனத்தின் மேல் (ஏறி), அண்டர் குலம்
முதல்வன் – தேவர்கூட்டத்துக்குத் தலைவனான இந்திரன், அ தனுவினொடு –
அவ்விந்திர வில்லுடனே,தரணியின்கண் – பூமியில், வந்து-, சமரம் மலைவது –
போர்செய்வதை, ஒத்து-,முரண் மிகும் – போர்த்தொழில் மிகுந்த, திண் – வலிய,
கடவுள் -தெய்வத்தன்மையையுடைய, முரசு உடை கொடி கொள் – முரசத்தின்
வடிவத்தையுடைய, துவசத்தைக்கொண்ட, தருமன் மைந்தன் – யுதிட்டிரன்,
இரதம்மிசை  தேரின்மேலே, பரிதி புதல்வனை – சூரியபுத்திரனானகர்ணனை,
குறுகினன் – சமீபித்தான்;

     முகிலுக்குக் கடவுட்டன்மை – உலகமும் அதற்கு உறுதியாகிய அறம் பொருள்
இன்பங்களும் நடத்தற்கு ஏதுவாதல், ‘கிருதவன்மன் கருது’ என்ற பாடமிருப்பின்,
செய்யுளோசையினிதாகிச் சந்தவிருத்த மென்னலாமெனத்தோன்றுகின்றது. முடுகி,
ஒத்து குறுகினன் என்க.

     இதுமுதல் ஆறுகவிகள் – பெரும்பாலும் ஒன்று மூன்று ஐந்து ஏழாஞ்சீர்கள்
கருவிளச்சீர்களும், இரண்டு ஆறாஞ்சீர்கள் கூவிளங் காய்ச்சீர்களும், நான்கு
எட்டாஞ்சீர்கள் கருவிளங்காய்ச்சீர்களுமாகிய எண்சீராசிரியவிருத்தங்கள். இதுமுதற்
பத்துக்கவிகள் அந்தாதித் தொடையுடையன.   

தருமன் மைந்தன் பரிதி புதல்வனைக் குறுகி, இரு சரம் அவன் செங்
கை வரி சிலை துணித்திடவும், எதிர்
இரு சரம் துன்றி உயர் கொடி அறுத்திடவும், உடன் இரு சரம் சென்று
தனி இரத மொட்டு இடறிடவும்,
ஒரு சரம் பொங்கு திறல் வலவன் மெய்ப் புதைதரவும், ஒரு சரம் திண்
கவன துரகதத்து உரன் உறவும்,
வரம் மிகும் துங்க தனுவினை வளைத்து, எரி கொள் சில வடி சரம்
கொண்டு, அவனது இரு புயத்து எழுதினனே.86.- தருமன் கர்ணனுடன் பொருதமை.

தருமன் மைந்தன்-, பரிதி புதல்வனை குறுகி -, இரு சரம் –
இரண்டுஅம்புகள், அவன் – அக்கர்ணனது, செம் கை – சிவந்த  கையிற்பிடித்த,
வரிசிலை -கட்டமைந்த வில்லை, துணித்திடஉம் – துண்டாக்கவும், இரு சரம்-,
எதிர் துன்றி -எதிரே நெருங்கி, உயர் கொடி – உயர்ந்த துவசத்தை, அறுத்திடவும்-,
இரு சரம்-,உடன் சென்று – விரைந்துபோய், தனி – ஒப்பில்லாத, இரதம்மொட்டு –
தேரின்கொடிஞ்சி யென்னும் உறுப்பை, இடறிடஉம் – தள்ளிடவிடவும் – ஒருசரம்-,
ஓர்அம்பு, பொங்கு திறல் – மிகுந்தவல்லமையையுடைய, வலவன்-பாகனான
சல்லியனது,மெய் – உடம்பில், புதைதர உம்-நன்றாகத்தைக்கவும், ஒருசரம்-,திண் –
வலிய,கவனம் – விரைந்து செல்லுதலையுடைய, துரகதத்து – குதிரைகளின், உரன் –
மார்பில், உறஉம் – பொருந்தவும், வரம் மிகும் – சிறப்பு மிகுந்த, துங்க தனுவினை –
உயர்ந்த வில்லை, வளைத்து-, எரி கொள் – நெருப்பை (உவமையாக)க் கொண்ட,
சில வடி சரம் கொண்டு – சில கூரிய அம்புகளால்;அவனது இரு புயத்து –
அவனுடைய இரண்டு தோள்களிலும், எழுதினன் – கிளறினான்; (எ – று.)- துர
கதம்- விரைந்து செல்வது: காரணக்குறி.மொட்டு – குமிழ்வடிவான கூம்பு
என்பாருமுளர்.

வடி சரம் கொண்டு அவனது இரு புயத்து எழுதிய பின், வட கலிங்கம்,
குகுரம், மகதம், ஒட்டியம், முதல
படிதொறும் தங்கள் குடை நிழல் பரப்பிய அரசர் பலருடன், பைம்
பொன் முடி மகுடவர்த்தனர் பலரும்,
இடி முழங்கும் குரலின் அதி பயத்தொடு பிலனில் இழி புயங்கங்கள்
என, ஒருவருக்கு ஒருவர் நடை
அடி தளர்ந்து, அஞ்சலியும் முதுகும் இட்டவர் ஒழிய, அடைய அன்று
உம்பரிபதி குடி புக, பொருதனனே.87.- தருமன் வடகலிங்கர் முதலியோரையோட்டிப் பலரையும்
விண்புகச் செய்தமை

வடி சரம் கொண்டு அவனது இரு புயத்து எழுதிய பின் -, வட
கலிங்கம் – வடக்கே யுள்ள கலிங்கதேசமும், குகுரம்- குகுரதேசமும், மகதம் –
மகததேசமும், ஒட்டியம் – ஒட்டியதேசமும், 
முதல – முதலாகிய, படி தொறுஉம் –
நாடுகள்தோறும், தங்கள் தங்களது, குடை நிழல் பரப்பிய- வெண்கொற்றக்குடையின்
நிழலைப் பரவச்செய்து அரசாண்ட, அரசர் பலருடன் – பல அரசர்களும், பைம்
பொன் முடி – பசும்பொன்னாலாகிய கிரீடத்தையுடைய, மகுடவர்த்தனர் பலர்உம் –
முடி. தரிக்கும் பல அரசர்களும் (ஆகிய இவர்களுள்), இடி முழங்கும் குரலின் –
இடியிடிக்கிற ஓசையினால், அதி பயத்தொடு – மிகுந்த அச்சத்துடனே, பிலனில்இழி
– வளைகளிலே இறங்குகிற, புயங்கங்கள் என – பாம்புகள்போல (த் தேரிலிருந்து
நிலத்தில் இறங்கி), ஒருவருக்கு ஒருவர் – ஒருத்தருக்கொருத்தர் (முற்பட்டு), நடை
அடி தளர்ந்து – (அச்சத்தாற்) கால்நடைசோர்ந்து, அஞ்சலி உம் –
கைகூப்பித்தொழுதலையும், முதுகுஉம் – முதுகுகாட்டுதலையும், இட்டவர் ஒழிய –
செய்தவர்கள் தவிர, அடைய – மற்றையோரெல்லாம், அன்று – அன்றைத்தினத்தில்,
உம்பர் பதி குடி புக – தேவலோகத்திற் குடிபோம்படி [இறந்து சுவர்க்கமடையும்படி],
பொருதனன் – போர்செய்தான் (தருமன்); (எ – று.)- முதல- குறிப்புப் பெயரெச்சம்.

அடைய, அன்று, உம்பர் பதி குடி புகப் பொருது, தனது அணி கொள்
சங்கம் பவள இதழின் வைத்தருளுதலும்,
யஉடையும் அண்டம், திசைகள் செவிடு பட்டிடும், அமரர் உலகு
பொன்றும், பணிகள் பிலமும் முற்றுற இடியும்,
இடை வழங்கும் தரணி வளர் சனத்தொடு மடியும்ய என முழங்கும்
பெரிய அரவம், எக் கடலும் எழு
கடையுகம் கண்ட வடவையின் முகத்து எரி கனலி கதுவ, மண்டும்
பவனன் ஒலியினின், கடுகியதே.88- தருமனுடைய சங்கநாதம்

அடைய அன்று உம்பர் பதி குடி புக பொருது-, தனது-, அணி
கொள் சங்கம் – அழகைக் கொண்ட சங்கத்தை, பவளம் இதழின் – பவழம்போற்
சிவந்த வாயில், வைத்தருளுதலும் – (தருமன்) வைத்து ஊதின வளவில், அண்டம்
உடையும் – அண்ட கோளம் வெடிக்கும்; திசைகள் செவிடு பட்டிடும் – திக்குகள்
செவிடாய் விடும்; அமரர் உலகு பொன்றும் (மேலுள்ள) தேவலோகம் அழியும்;
பணிகள் பிலம்உம் – (கீழுள்ள) நரகலோகமும், முற்றுற இடியும்- முழுவதும்
இடிபடும்; இடை வழங்கும் தரணி – (அவ்விரண்டுஉலகங்களுக்கும்)
இடையிலேபொருந்திய பூமி, வளர்சனத்தொடு – பொருந்திய ஜனத்துடனே,
மடியும் -இறக்கும், என – என்னும்படி, முழங்கும் – ஒலிக்கிற, பெரிய அரவம் –
பேரொசை,எ கடல்உம் எழு – எல்லாக் கடல்களும்பொங்குகிற, கடையுகம் –
யுகாந்தகாலத்தில்,கண்ட – (வெளியிற்) காணப்பட்ட, வடவையின் முகத்து – படபா
என்னம் பெண்குதிரையின் முகத்திலே, எரி – எரிகிற, கனலி – நெருப்பு, கதுவ –
பற்றும்படி,மண்டும் – மிகுந்து வீசுகிற, பவனன் – காற்றின், ஒலியினில் –
ஓசையைக்காட்டிலும்,கடுகியது – மிகுந்தது;

கதுவ, மண்டும் பவனன் ஒலியினின் கடுகி, அணி கவசமும் குண்டலமும்
மகபதிக்கு அருள் குரிசில்,
சதுர் முகம் கொண்டது ஒரு கனக மொட்டு இரதமொடு சதுர் விதம்
தங்கு கதி இவுளி ஒப்பு அற அடைசி,
மதுபம் ஒன்றும் புதிய தெரியல் மத்திர நிருப வலவன் உந்தும்
பொழுதில், அதனின் மிக்கு எழு மடியும்
அதிரஎங்கும் தனது வளை முழக்கினின் அயர, அறனின் மைந்தன் சமர
முனை முகத்து அணுகினனே.89.- சல்லியன் சாரத்தியஞ்செய்யக் கர்ணன்சங்கமுழக்கித் தருமன் இருந்த
இடத்து வருதல்.

அணி கவசம்உம்- அழகிய கவசத்தையும், குண்டலம்உம் –
குண்டலங்களையும், மகபதிக்கு – இந்திரனுக்கு, அருள் – கொடுத்தருளிய, குரிசில் –
பெருமையிற்சிறந்த கர்ணன், சதுர் முகம் கொண்டது – நான்கு பக்கங்களையும்
(ஒருதன்மையாகக்)) கொண்டதாகிய, கனகம் மொட்டு – பொற்கொடிஞ்சியையுடைய,
ஒரு இரதமொடு – ஒப்பற்ற தேருடனே, சதுர் விதம் தங்கு கதி இவுளி –
நான்குவகை பொருந்திய நடையையுடைய குதிரைகளை, ஒப்பு அற – ஒப்பில்லாத
படி, அடைசி – பூட்டி, மதுபம் ஒன்றும் – வண்டுகள் பொருந்திய, புதிய தெரியல் –
அன்றலர்ந்த பூமாலையையுடைய, மத்திர நிருபன் வலவன் – மத்திரதேசத்
தரசனாகியசாரதி, உந்தும் பொழுதில் – செலுத்தும்பொழுது, தனது வளை
முழக்கினின் – தன்சங்கத்தின் நாதத்தால், அதனின் கீழ்ச்சொன்ன தருமனது
சங்கநாதத்தைக் காட்டிலும்,எழு மடிஉம் மிக்கு – ஏழுமடங்கு அதிகமாய், அதிர –
பேரொலிஉண்டாகவும்,எங்குஉம் – எல்லா இடமும், அயர – திகைக்கவும், கதுவ
மண்டும் பவனன்ஒலியினில் – (நெருப்புப்) பற்றும் படி நெருங்குகிற
காற்றினோசையினும், கடுகி -உக்கிரமாக, அறனின் மைந்தன் – தருமபுத்திரனது,
சமரம் முனை முகத்து – போர்செய்யுமிடத்தின்முன்னே, அணுகினன் –
சமீபித்தான்

அறனின் மைந்தன் சமர முனை முகத்து அணுகி, அவன் அகலமும்
திண் புயமும் வடி சுடர்ப் பகழி பல
உறவும், அஞ்சங்கள், முடி, உருளை, அற்று இரதம் நடு உடையவும்,
துங்க வரி சிலை குணத்துடன் அறவும்,
மறம் விளங்கும் பரிகள் துணிகள் பட்டிடவும், விறல் வலவன்
அங்கம் சிதறி உரனில் உற்றன முதுகு
பறியவும், தண்டு முரசு எழுது பொன் துகிலினொடு பரியவும், சண்ட தனு
உற வளைத்தனன், இவனே.90.- கர்ணன் தருமனுடைய புயம் முதலியவற்றிலும் தேருறுப்புக்களிலும்
கடுமையாக அம்பெய்தமை

அறனின் மைந்தன் சமரம் முனை முகத்து அணுகி -, அவன்
அகலம்உம் – அத்தருமன்மார்பிலும், திண் புயம் உம் – வலிய தோள்களிலும்,
வடிசுடர் பகழி பல – கூர்மையான ஒளியையுடைய அநேகம் அம்புகள், உறஉம் –
பொருந்தவும்,- அஞ்சங்கள் – அச்சுக்களும், முடி – மேல்முகடும், உருளை –
சக்கரங்களும், அற்று – அழிந்து, இரதம் நடு உடையஉம் – தேரின் நடுவிடம்
பிளக்கவும்,- துங்கம் வரி சிலை – சிறந்த கட்டமைந்த வில், குணத்துடன் –
நாணியோடும், அறஉம் – அறுபடவும், மறம் விளங்கும் பரிகள் – வலிமையோடு
விளங்குகிற குதிரைகள், துணிகள் பட்டிடஉம் – பல துண்டுகள்பட்டுப்போகவும்,
விறல் வலவன் – வலிமையையுடைய சாரதியினது, அங்கம் – உடம்பை, சிதறி –
துளைத்து, உரனில் உற்றன – மார்பில் தைத்த அம்புகள், முதுகு பறியஉம்-
முதுகின்வழியாய் நீங்கவும், தண்டு – துவசதண்டம், முரசு எழுது பொன்
துகிலினொடு – முரசத்தை யெழுதிய அழகிய கொடிச்சீலையுடனே, பறியஉம்
– ஒடிபடவும், இவன் – கர்ணன், சண்ட தனு – உக்கிரமான வில்லை, உற
வளைத்தனன் – நன்றாக வளைத்தான்; (எ -று.)- அஞ்சம் – அக்ஷம் என்னும்
வடமொழித் திரிபு.

இவனும் அவனைப் புயமும் உரமும் முழுக, துவசம் இடிய, மணி
மொட்டு இரதம் ஒடிய, வரி வில் துணிய,
நவ நடை வயப் புரவி விறல் வலவன் மெய்ப் புதைய, நகு சரம்
நிரைத்து ஒரு வில் நடு உற வணக்கின பின்,
‘அவனும் இவனைப் பொருது, முனம் இவன் மலைத்தபடி அடையவும்
அழித்தனன், இவ் அடல் மிகு களத்தில்’ என,
உபநிடத வித்து முதல், அவனிபர் எனைப் பலரும், உரமும் அவர்
கற்ற கலை உறுதியும் உரைத்தனரே.91.- தருமனும் அசுவத்தாமன் முதலியோர் சிறப்பித்துரைக்கத் திறம்பட
அம்பெய்தமை.

இவன்உம் – கர்ணனும், அவனை – தருமனை , புயம் உம்
உரம்உம் முழுக – தோள்களிலும் மார்பிலுந் தைக்கவும், துவசம் இடிய – கொடி
விழவும், மணி மொட்டு இரதம் – நவரத்தினங்களிழைத்த கொடிஞ்சியையுடைய
தேர்,ஒடிய – ஒடியவும், வரி வில் துணிய – கட்டமைந்த வில் துணிபடவும், நவ
நடைவய புரவி – ஒன்பதுவகை நடைகளையுடைய வலிமையையுடைய குதிரைகளும்,
விறல் வலவன் – வெற்றியைத்தருகிற சாரதியும், (ஆகிய இவற்றினது), மெய்
உடம்பில், புதைய – அழுந்தவும், நகு சரம் – விளங்குகிற அம்புகளை, நிரைத்து –
வரிசையாகத் தொடுத்து, ஒரு வில் – ஒருவில்லை, நடுஉற – நடுவிலே பொருந்த,
வணக்கினபின்- வளைத்தஉடனே,- அவன்உம் – தருமனும், இவனை – கர்ணனை,
பிறகு பொருது – பின்பு போர்செய்து, முன் மலைத்தபடி அடைய உம் – முன்னே
போர்செய்து (அவன்தன்னை) அழித்தபடி யெல்லாம், இ அடல் மிகு களத்தில் –
இவ்வலிமைபொருந்திய போர்க்களத்தில், அழித்தனன் – அழித்தான், என என்று,
உபநிடத வித்து முதல் – வேதாந்தத்தை அறிந்த அசுவத்தாமன் முதலிய அவனிபர்
எனைப் பலர்உம் – பூமியைக்காக்கிற அரசர்களெல்லாரும், உரம்உம் – அவர்கள்
வலிமையையும், அவர் கற்ற கலை உறுதிஉம் – அவர்கள் பயின்ற வில்வித்தையின்
வல்லமையையும், உரைத்தனர் – (சிறப்பித்துச்) சொன்னார்கள்; (எ – று.) –
உபநிடதம்- உபநிஷதம். உபநிடதவித்து – கிருஷ்ணனாகவுமாம். கர்ணனால்
தேரழியவேறோரிரதமிசைத் தருமன் ஏறிவந்தனனென்பதை மேற்கவியில்
அநுவாதமுகத்தாற்கூறுவர்.

     இதுமுதல் நான்குகவிகள் – பெரும்பாலும் ஒன்று மூன்று ஐந்து ஏழாஞ்சீர்கள்
கருவிளங்காய்ச்சீர்களும், மற்றை நான்குங் கூவிளங் காய்ச்சீர்களுமாகிய
எண்சீராசிரியச்சந்தவிருத்தங்கள். ‘தனதனன தத்தனன தனதனன தத்தனன
தனதனனதத்தனன தனதனன தத்தனனா’ என்பது, இவற்றிற்குச்சந்தக்குழிப்பு

உறுதியுடன் மற்றொர் ரதமிசை கொளும் உதிட்டிரனும், ஒரு கையில்
வயச் சிலையும், ஒரு கையில் வடிக் கணையும்,
விறலினொடு எடுத்து எதிர் செல்பொழுது, அருள் மிகுத்த மொழி
வெயிலவன் அளித்தருளும் விதரண குணக் குரிசில்
மறம் உற விடுத்த கணை பொடியுற இயற்றி, அவன் மது மலர் உரத்தை
வழிவழி துளை படுத்துதலின்,
எறி படை விடுத்து, இரதமிசை உற இளைத்து, முதுகு-இட, அறன் மகற்கு
இரவி மகன் இவை உரைத்தனனே:92.- மீண்டும் பொரத்தொடங்கிய தருமன்
கர்ணனால் சோர்ந்து முதுகுகொடுத்தல்.

உறுதியுடன் – வலிமையோடு, மற்று ஒர் ரதம் மிசை கொளும் –
வேறொரு தேரின்மேல் ஏறிக்கொண்ட, உதிட்டிரன்உம் – தருமனும், ஒருகையில் –
இடக்கையில், வயம் சிலைஉம் – வெற்றியைத்தருகிற வில்லையும், ஒரு கையில் –
வலக்கையில், வடி கணை உம் – கூர்மையான அம்புகளையும், விறலினொடு
எடுத்து- பராக்கிரமத்தோடு எடுத்துக்கொண்டு, எதிர் செல்பொழுது – எதிரிற்
செல்கிறபொழுதில், அருள் மிகுத்த மொழி – கருணை மிகுந்து தோன்றுகிற
இன்சொற்களையுடைய, வெயிலவன் அளித்தருளும் – சூரியபகவான் பெற்றருளிய,
விதரணம் குணம் குரிசில் – தானகுணத்தையுடைய வீரனான கர்ணன், மறம்உற
விடுத்த – (அத்தருமன்) வலிமைபொருந்த விட்ட, கணை- அம்புகளை, பொடி உற
இயற்றி – (தன்கணைகளாற்) பொடியாம்படி செய்து, அவன் மது மலர் உரத்தை –
அத்தருமனது தேனையுடைய பூமாலைகளைத் தரித்த மார்பை,  வழி வழி
துளைபடுத்துதலின் – இடந்தோறும் துளைதுளையாகச்செய்ததனால், (தருமன்), உற
இளைத்து – மிகச்சோர்ந்து, இரதமிசை – தேரின் மேல், எறி படை (பகைவர்மேல்)
எறிகிற ஆயுதங்களை, விடுத்து – போகட்டுவிட்டு, முதுகு இட – முதுகு கொடுக்க,
(அப்பொழுது), அறன் மகற்கு – தருமபுத்திரனுக்கு . இரவி மகன் – கர்ணன், இவை
உரைத்தனன் – இவ்வார்த்தைகளைச் செல்வானானான்; (எ -று.) அது மேற்கவியிற்
கூறுகின்றார்.

     ஒருரதம் – ஒரதம் எனத் தொகுத்தல் விகாரம். தானத்துக்கு இன்சொல்
முக்கியமாக வேண்டுவதாதலின், ‘அருண்மிகுத்தமொழி விதரண குணக்குரிசில்’
என்றார்; “இன்சொல் விளைநிலனா ஈதலே வித்தாக” என்பர்.  

உரை உடையை; கற்ற கலை உணர்வு உடையை; தக்க மதி உளம்
உடையை; மிக்க கிளை உறவு உடையை; சத்ய குண
வரை உடையை; எத் திசையும் வழு அற வளர்த்த புகழ் வரிசை கொள்
அறத்து இளைஞர் வழிபடும் மதிப்பு உடையை;
தரை முழுதும் முத்த நிலவு உமிழ் குடை நிழற்ற ஒரு தனி நனி புரக்கும்
உயர் தலைமை பெறுகிற்றி; பகை
கரை அழிய உற்ற பொழுது உயிர் கொடு புறக்கிடுதல் கடன் அல
உனக்கு; நிலை கருதி, அணி நிற்றி’ என,93.- கர்ணன் நீ புறமிடுதல் தகாதெனல்.

இதுவும் மேற்கவியும் – ஒருதொடர்.

     (இ – ள்.) ‘உரை உடையை – புகழை யுடையவனாயிருக்கிறாய்; கலை கற்ற
உணர்வு உடையை – (படிக்கத்தக்க) நூல்களைப் படித்ததனாலுண்டாகிய நல்லறிவை
யுடையாய்; தக்க மதி உளம் உடையை – தகுந்த இயற்கையறிவோடுகூடிய
மனத்தையுடையாய்; மிக்க கிளை உறவு உடையை – மிகுந்த சிநேகிதர்களையும்
பந்துக்களையு முடையாய்; சத்ய குணம் வரை உடையை – உண்மைக்குணத்தின்
அளவையுடையாய்; எதிசைஉம் – எல்லாத்திக்குக்களிலும், வழு அற –
பழிப்பில்லாமல், வளர்த்த – வளரச்செய்த, புகழ் வரிசை – கீர்த்தியின் மேன்மையை,
கொள் – கொண்ட, அறத்து இளைஞர் – தருமநெறிதவறாத தம்பிமார், வழிபடும் –
கீழ்ப்பட்டு நடக்கிற, மதிப்பு உடையை – கௌரவத்தை யுடையாய்; நிலவு உமிழ் –
சந்திரகாந்தியைப்போன்ற காந்தியை வீசுகிற, முத்தம் குடை – முத்துக்களாலாகிய
குடை, நிழற்ற – நிழலைச்செய்யும்படி, தரைமுழுதுஉம்- பூமிமுழுவதையும்,
ஒருதனி -ஒப்பில்லாமல் தானொருவனாகவே, நனி புரக்கும் – நன்றாக
அரசாளுகிற, உயர்தலைமை – உயர்ந்த அதிகாரத்தை, பெறுகிற்றி – பெற
விருக்கிறாய்; (இப்படிப்பட்ட நீ),பகை – பகைவர்கள், கரை அழகிய –
எல்லையில்லாதபடி, உற்றபொழுது -வந்துநெருங்கியபொழுதில், உயிர் கொடு
புறக்கிடுதல் – (மானத்தைக் காத்துக்கொள்ளாமல்) உயிரைக் (காத்துக்) கொண்டு
முதுகுகொடுத்தல், உனக்கு -, கடன்அல – முறைமையல்ல; (ஆதலால்), நிலை
கருதி – (புறங்கொடாமல்) நிலைபெறுதலைஎண்ணி, அணிநிற்றி – சேனையில்
நிலைநிற்பாயாக’, எனா – என்று (கர்ணன்)சொல்ல,- (எ -று.)- “மதித்து” என
மேற்கவியோடு தொடரும்.

கருதி அணி நிற்றி’ என, உறுதி சமரத்து உரைசெய் கருணனை மதித்து, மிகு
கருணையவன் நிற்பளவில்,
விருதர் தலை அற்று உருள, விருதர் மத அத்திகளின் விரி தலைகள்
அற்று உருள, விறல் இவுளி மெய்த் துணிய,
இரதம், வயிர் அச்சு, உருளை, முடிகொள் தலை, அற்று உருள, இரு
புறமும் முட்டி விறல் ஒரு கதைகொடு எற்றி, எதிர்
பொரு சமர் முருக்கி வரு புரை இல் பவனக் கடவுள் புதல்வன் ஒர்
இமைப் பொழுதில் முதல்வனை அடுத்தனனே.94.- கர்ணன்சொல்லைமதித்துத் தருமன்நிற்க, வீமன் தருமனையடுத்தல்.

கருதி ஆலோசித்து, அணி – படைவகுப்பில், நிற்றி – நிலை
நிற்பாய்’, என – என்று, உறுதி உறுதியானவார்த்தைகளை, சமரத்து – போரில்,
உரைசெய் – சொன்ன, கருணனை – கர்ணனை, மதித்து – நன்கு மதித்து, மிகு
கருணையவன் – மிகுந்த அருளையுடைய தருமன், நிற்பு அளவில் – நிற்கிற
சமயத்தில்,- விருதர் – காலாள்வீரர்களது, தலை -தலைகள், அற்று – அறுபட்டு, –
உருள – புரளவும், விருதர் – வீரர்களது, மதம் அத்திகளின் – மதயானைகளின்,
விரிதலைகள் – பரந்த தலைகள், அற்று உருள – அறுபட்டுப், புரளவும், விறல்
இவுளி -வலிமையையுடைய குதிரைகளின், மெய் – உடம்பு, துணிய – அறுபடவும்,
இரதம் -தேர்களின், வயிர் அச்சு – வயிரம் பொருந்திய அச்சும், உருளை –
சக்கரங்களும்,முடி கொள் தலை – கலசத்தைக் கொண்ட மேல்முகடுகளும், அற்று
உருள -அறுபட்டுப்புரளவும்,- விறல் இட்ட – வெற்றி பொருந்திய, ஒரு கதை
கொடு -ஒப்பற்ற (தனது சத்துருகாதினி யென்னுங்) கதாயுதத்தைக்கொண்டு , இரு,
புறம்உம் -இரண்டுபக்கங்களிலும், எற்றி – தாக்கி, எதிர் பொரு சமர் –
எதிர்த்துச்செய்கிறபோரில், முருக்கி வரு – (பகைவர் சேனையை) அழித்துவருகிற,
புரை இல் -குற்றமில்லாத, பவனக்கடவுள் புதல்வன் – வாயுதே வனது புத்திரனான
வீமன், ஒர் இமைப்பொழுதில் – ஒரு நொடிப் பொழுதுள்ளே, முதல்வனை –
தமையனான தருமனை, அடுத்தனன் – சமீபித்தான்;(எ – று.)- வயிர்-வயிரம்
என்பது விகாரப்பட்டது.

முதல்வன் வென்னிடுதல் கண்டு, முடியுடை வேந்தரோடும்,
விதலை இல் வயிர நெஞ்சின் வீமன் வந்து உறலும், ‘காலின்
புதல்வனைப் பொருது வேறல் அரிது!’ எனப் பொலம் பொன் தேரோன்
மதலையை நோக்கி, பாகன்,
வன் பகை தோன்றச் சொன்னான்.95.-வீமன் வந்திட்டதுகண்டு, சல்லியன்,
வீமனைவேறலரிதெனல்.

முதல்வன் – தருமன், வென் இடுதல் – புறங்கொடுத்தலை, விதலை
இல் –  (அச்சத்தால்) நடுங்குத லில்லாத, வயிரம் – உறுதியையுடைய, நெஞ்சின் –
மனத்தையுடைய, வீமன்-, கண்டு-,முடி உடை வேந்தரோடுஉம் – கிரீடத்தையுடைய
அரசர்களோடும், வந்து உறலும் – வந்து சேர்ந்தவுடனே,-பொலம் பொன்தேரோன்
-அழகிய பொன்னிறமான தேரையுடைய சூரியனது, மதலையை நோக்கி –
குமாரனான கர்ணனைப்பார்த்து, பாகன் – சல்லியன், ‘காலின் புதல்வனை –
வாயுபுத்திரனான வீமனை, பொருது – போர்செய்து, வேறல் – வெல்லுதல்,
அரிது -அருமையானது,’ என – என்று வன் பகை தோன்ற – பகையின் வலிமை
தோன்றும்படி, சொன்னான்-;(எ – று.)-‘காலின் புதல்வன்’ என்றது, தந்தையாகிய
வாயுவைப்போலவே மைந்தனாகிய வீமனுந் தடுத்தற்கரிய வலிமையையுடையவ
னென்றற்கு.

     இது முதல் இருபத்தைந்து கவிகள் – கீழ்ச்சருக்கத்தில் 12 -ஆம் கவிபோன்ற
அறுசீராசிரியவிருத்தங்கள்.

காமனே என்ன நின்ற கன்னன் வில் கையில் வாங்கி,
‘வீமனே ஆக, வென்றி விசயனே ஆக, வெற்றித்
தாமனே! காண்டி; இற்றைச் சமரில், என் தழல் வாய் ஒற்றைத் தூமம்
நேர் பகழிக்கு ஆற்றார்;
தூண்டுதி இரதம்’ என்றான்.96.-கர்ணன் வீரவாதம்.

காமன்ஏ என்ன நின்ற – மன்மதனேபோல நின்ற, கன்னன்-, வில்
கையில் வாங்கி-வில்லைக் கையில் எடுத்துக் கொண்டு, (சல்லியனைநோக்கி),
‘வெற்றிதாமனே-ஜயமாலையையுடையவனே! வீமன்ஏ ஆக –  வீமன் தானாவது,
வென்றிவிசயன் ஏ ஆக – வெற்றியையுடைய அருச்சுனன் தானாவது, என் –
எனது, தழல்வாய் – நெருப்புப்போன்ற முனையையுடைய, தூமம் நேர் –
புகைகிளம்பப்பெற்ற,ஒற்றை பகழிக்கு – ஒருபாணத்துக்கு, ஆற்றார்- முன்
நிற்கமாட்டார்கள்; இற்றைசமரில் – இன்றையுத்தத்தில், காண்டி – பார்ப்பாய்;
இரதம் – தேரை, தூண்டுதி -செலுத்துவாய், என்றான் – என்று சொன்னான்;
(எ-று.)

     காமன் – ஒப்புயர்வில்லாத கட்டழகுக்கும், விலக்குதற்கரிய அம்பெய்தற்கும்
உவமை.ஆக என்னுஞ் சொல் இரண்டும், விகற்பப்பொருளில்வந்த
இடைச்சொற்கள்.    

என்னும் முன், மருத்தின் மைந்தன் இரதமேல் வரி வில் வாங்கி,
கன்னனது உரையும் வில்லும் கணத்திடைச் சிதைந்து வீழ,
முன் ஒரு வாளி தொட்டான்; எதிரியும் முரண் வில் ஒன்றால்,
பன்னிரு வாளி மீளி மார்பிடைப் பரப்பினானே.97.- இரண்டுகவிகள்-வீமன் கர்ணனோடு பொருது அவனை
மூர்ச்சித்துவிழச்செய்தலைக் கூறும்.

என்னும் முன்-என்று (கர்ணன்) சொல்லுவதற்கு முன்னே, மருத்தின்
மைந்தன் – வாயுபுத்திரனான வீமன், இரதம் மேல் – தேரின்மேலே, வரி வில்
வாங்கி-கட்டமைந்த வில்லைவளைத்து, கன்னனது உரைஉம் – கர்ணனது பேச்சும்,
வில்லும்-,கணத்திடை – க்ஷணப்பொழுதினுள்ளே, சிதைந்து வீழ-கெட்டழியும்படி,
முன்-முன்னே,ஒரு வாளி – ஓரம்பை, தொட்டான் – தொடுத்தான்; எதிரிஉம் –
பகைவனானகர்ணனும், முரண்வில் ஒன்றால் – வலிமையையுடைய வேறொரு
வில்லினால்,பன்னிருவாளி – பன்னிரண்டு அம்புகளை, மீளி மார்பிடை – வலிய
வீமன் மார்பிலே,பரப்பினான் – பரவச்செய்தான்;(எ – று.)-உரை சிதைந்துவீழ்தல்-
கீழ்ச் சல்லியனோடுசொல்லிய வார்த்தை பயன்படாமற்போதல்.
உரையும்வில்லுஞ்சிதைந்துவீழ -உடனவிற்சியணி.

பாய்ந்த அப் பாணம் தன்னைப் பாணியால் திமிர்ந்து, வீமன்
காய்ந்த வாள் அனைய தாரைக் கடுங் கொடும் பகழி ஒன்றால்
ஏய்ந்த தேர் அருக்கன் மைந்தன் இதயத்து மூழ்குவித்தான்;
வேய்ந்த தாரவனும் தேரின்மிசை அயர்வுற்று வீழ்ந்தான்.

வீமன்,-,பாய்ந்த அ பாணம்தன்னை -(தன் மார்பிற்) பாய்ந்த
அப்பன்னிரண்டுபாணத்தை, பாணியால் திமிர்ந்து – கையாற் பொடியாக்கிவிட்டு,
காய்ந்த வாள் அனைய – (பகைவரைக்) கொல்லுகிற, வாள்போன்ற, தாரை –
நுனியையுடைய, கடு கொடு பகழி ஒன்றால் – விரைந்து செல்லுகிற
கொடியதொருபாணத்தால், தேர் ஏய்ந்த அருக்கன் மைந்தன் – தேரிற் பொருந்திய
சூரியகுமாரனது,இதயத்து – நெஞ்சில், மூழ்குவித்தான் – அழுந்தச்செய்தான்;
வேய்ந்த தாரவன்உம் – அணிந்த மாலையையுடைய கர்ணனும், தேரின்மிசை –
தேரின்மேல், அயர்வு உற்று- மூர்ச்சையடைந்து, வீழ்ந்தான் – விழுந்தான்

வீழ்தலும், மன்னர் மன்னன் வெம் படை வென்னிட்டு ஓட,
வாழ்வு அற வீழ்ந்தோன்தன்னை மத்திரத் தலைவன் தேற்ற,
ஏழ் பரித் தேரோன் மைந்தன் எழுந்து, பின் சாபம் வாங்கி,
சூழ் படை வீரர் யாரும் துஞ்சிடத் துணித்திட்டானே.99.-சல்லியனாற்றேறிய கர்ணன் சூழ்ந்த படைவீரரைத்
துணித்திடல்.

வீழ்தலும் – (கர்ணன்) விழுந்தவளவில், மன்னர் மன்னன் –
ராஜராஜனான துரியோதனனது, வெம் படை – கொடிய சேனை, வென் இட்டு
ஓட -புறங்கொடுத்து ஓடிப்போக, வாழ்வு அறவீழ்ந்தோன் தன்னை – ஜீவித்தல்
அறும்படி (மூர்ச்சித்து) விழுந்த கர்ணனை மத்திரம் தலைவன் – மத்திர
நாட்டாரசனான சல்லியன், தேற்ற – மூர்ச்சைதெளியச்செய்ய,-ஏழ் பரி தேரோன்
மைந்தன் – ஏழுகுதிரையையுடைய தேரையுடைய சூரியனது மகனான கர்ணன்,
பின்-பின்பு எழுந்து – எழுந்திருந்து, சாபம் வாங்கி – வில்லை வளைத்து, சூழ்
படை வீரர் யார்உம் – சூழ்ந்த சேனையிலுள்ள வீரர்களெல்லாம், துஞ்சிட –
இறக்கும்படி, துணித்திட்டான் – பிளந்துவிட்டான்;

கைத்தல வண்மை வேந்தன் கார்முகம் பொழிந்த அம்பால்,
எத்தனை நிருபர் மாய்ந்தார்? எண்ணுதற்கு யாவர் வல்லார்?
பத்தி கொள் சாதுரங்கப் படைஞர் பாஞ்சாலர்தம்மில்
செத்தனர் எழுவர், சிங்கசேனனை உள்ளிட்டாரே.00.- கர்ணனம்பால் மிகப்பலவீரரும்
சிங்கசேனன்முதலிய பாஞ்சாலரெழுவரும் மாய்தல்.

கைத்தலம் – கைகளினாற் செய்கிற, வண்மை – தானத்தையுடைய,
வேந்தன் – கர்ணனது, கார்முகம் – வில், பொழிந்த – சொரிந்த, அம்பால் –
அம்புகளினால், எத்தனை நிருபர் மாய்ந்தார் – எத்தனை அரசர்கள் இறந்தார்கள்?
எண்ணுதற்கு  யாவர் வல்லார் – (இறந்தவர்களைக்) கணக்கிடவல்லவர்கள் யாவர்?
பத்தி கொள் – வரிசையைக்கொண்ட, சாதுரங்கம் படைஞர் – சதுரங்கசேனையை
யுடையவர்களாகிய, பாஞ்சாலர் தம்மில் – பாஞ்சால நாட்டரசர்களுள்,
சிங்கசேனனைஉள்ளிட்டார் – ஸிம்ஹசேனனுட்பட்டவர்களாகிய, எழுவர் –
ஏழுபேர், செத்தனர்-;(எ-று.)- எழுவர்-சிங்கசேனனும், 83-அம் கவியிற் கூறிய
அறுவரும்எனத்தோன்றுகின்றது.

சேனையும் முறிந்து, வீமசேனனும் முதுகிட்டு ஓட,
கான் அமர் துளவோன் கண்டு, கடும் பரி நெடுந் தேர் பூண்ட,
யானைமேல் சிங்கம் செல்வது என்ன வந்து, எய்தியிட்டான்-
வானவர்க்கு அரசன் மைந்தன், மைந்துடை வரி வில்லோனே.101.-வீமனும் சேனையோடுபுறக்கிட அருச்சுனன் அங்கு
வந்துசேர்தல்.

சேனையும்-, முரிந்து – அழிந்து, வீமசேனனும் முதுகிட்டுஓட-, கான்
அமர் துளவோன் – காட்டிற்பொருந்திய திருத்துழாய்மாலையையுடைய கண்ணன்,
கண்டு-, கடு பரி நெடு தேர் தூண்ட –  விரைந்தோடுகிற குதிரைகளைப் பூட்டிய
பெரிய தேரை ஓட்ட, வானவர்க்கு அரசன் மைந்தன் – தேவேந்திரனது குமாரனும்,
மைந்து உடை வரி வில்லோன் – வலிமையையுடைய கட்டமைந்த
வில்லையுடையவனுமாகிய அருச்சுனன், யானைமேல்-, சிங்கம்-, செல்வது என்ன-
(போருக்குப்) போவதுபோல, வந்து எய்திட்டான் – (கர்ணன்மேல்) வந்துசேர்ந்தான்;

சென்றவன் சேனை தன்னில் நிருபரும், செருச் செய்கிற்பான்
நின்றவன் சேனைதன்னில் நிருபரும், நேர்ந்தகாலை,
என்றவன் மதலை ஏவும், இமையவர் தெவ்வை ஓட
வென்றவன் ஏவும், தம்மில் விசும்பினை வேய்ந்தவாலோ.102.- அருச்சுனகர்ணரின் அம்புகள் வானத்தைமூடுதல்.

சென்றவன் சேனை தன்னில்-(போருக்குச்) சென்ற அருச்சுனன்
சேனையிலுள்ள, நிருபர்உம் – அரசர்களும், செரு செய்கிற்பான் நின்றவன் –
போர்செய்யும்பொருட்டு நின்ற கர்ணனது, சேனை தன்னில் நிருபரும்-, நேர்ந்த
காலை – எதிர்த்த பொழுது, என்றவன் மதலை ஏஉம் – சூரியகுமாரனது
பாணங்களும் இமையவர் தெவ்வை ஓட வென்றவன், தேவர்களுக்குப்
பகைவர்களான (நிவாதகவசர் காலகேயர் முதலிய) அசுரர்களை ஓடும்படி சயித்த
அருச்சுனனது, ஏஉம் – அம்புகளும், தம்மில் – தமக்குள் (நெருங்கி) விசும்பினை
வேய்ந்த – ஆகாயத்தை மறைத்தன; (எ – று.)-
என்றவன், அவன் – பகுதிப்பொருள் விகுதி

இரவிதன் மதலைக்காக, இமைத்த கண் விழிக்கும் முன்னர்,
புரவிஅம்தாமா என்னும் பூசுரன் தேரில் தோன்றி,
அரவு-அணைச் செல்வன் மெய்யும் அருச்சுனன் மெய்யும், செக்கர்
விரவிய வானம் என்ன, வெஞ் சரம் புதைவித்தானே.103.-கர்ணனுக்கு உதவியாக வந்து அசுவத்தாமா
க்ருஷ்ணார்ச்சுனர்மேல் அம்புமழைபொழிதல்

இரவி தன் மதலைக்கு ஆக – கர்ணனுக்கு உதவியாக, இமைத்த
கண்விழிக்கும் முன்னர்-மூடினகண் திறப்பதற்குமுன்னே[மிகவிரைவில்என்றபடி]
அம்புரவித்தாமா என்னும் பூசுரன்,-அழகிய அசுவத்தாமா என்னும் பிராமணன்,
தேரில் தோன்றி – தேர்மேல் வந்து, அரவு அணை செல்வன் மெய்உம் –
ஆதிசேஷனைச் சயனமாகவுடைய எல்லாஐசுவரியங்களுக்குந் தலைவனான
கண்ணனது உடம்பும். அருச்சுனன் மெய்உம் – அருச்சுன னுடம்பும், செக்கர்
விரவியவானம் என்ன – செம்மேகங்கள் பொருந்திய கரிய ஆகாயம் போலாம்படி,
வெம்சரம் புதைவித்தான்- கொடிய அம்புகளைத்தைக்கச்செய்தான்; (எ – று.)

     பூசுரன்- (பிரமதேஜசினாற்) பூமியில் தேவன்போல விளங்குபவன்.
செம்மேகம்பொருந்திய கருவானம்-இரத்தத்தாற்சிவந்த கரியதிருமேனிகளுக்கு
உவமை.     

விசையனும் வெகுளுற்று, அந்த வேதியன் வில்லும் தேரும்
அசைவுற முடுகி எய்தான்; அவனும் மற்று இவனை வேறு ஓர்
குசையுடைப் புரவித் தேரும் குனி வரும் சிலையும் கொண்டு,
நிசையினை அருக்கன் போல, நிலை தளர்ந்திடுவித்தானே04.-மூன்றுகவிகள்-கடுமையாகப்பொருகையில் அருச்சுனன்
அசுவத்தாமனைமூர்ச்சிப்பிக்க, துச்சாதனன் தேரோடும்அவனைக்
கொண்டுபோதல்.

விசையன்உம் – அருச்சுனனும்,-வெகுள் உற்று- கேபாங்கொண்டு
அந்த வேதியன் – அந்தப்பிராமணகுலத்தானாகிய அசுவத்தாமனது, வில்லும்
தேரும்-, அசைவு உற – அழிதலை 
அடையும்படி, முடுகி எய்தான் – உக்கிரமாக
அம்பெய்தான்; அவன்உம் – அசுவத்தாமனும், இவனை-அருச்சுனனை, வேறுஓர்-,
குசை உடை புரவி தேர்உம் – கடிவாளத்தையுடைய குதிரைகளைப் பூட்டிய
தேரையும், குனி வரும் சிலைஉம் – வளைதல் பொருந்திய வில்லையும், கொண்டு -,
நிசையினை அருக்கன் போல – இராத்திரியைச் சூரியன் (அழிப்பது) போல, நிலை
தளர்ந்திடுவித்தான்-உறுதிநிலை தளரச்செய்தான்;

தளர்ந்த அத் தளர்ச்சி கண்டு, தனஞ்சயன்தன்னைத் தேற்றி,
‘கிளர்ந்து அடர் புரவித்தாமா கேவலன் அல்லன், ஐயா!
பிளந்திடு, இங்கு இவனை’ என்ன, பிறை முகப் பகழி ஒன்றால்,
உளம் புகத் தொடுத்தான், பாகன் உரை முடிவதன்முன் அம்மா!

தளர்ந்த அ தளர்ச்சி கண்டு – (அருச்சுனன்) நிலை தளர்ந்த
அந்தத்தளருகையைப் பார்த்து, (கண்ணன்), தனஞ்சயன் தன்னை தேற்றி-
அருச்சுனனைத்தைரியப்படுத்தி, ‘ஐயா-தலைவனே! கிளர்ந்து அடர் புரவித்தாமா –
மிக்குப்போர்செய்கிற அசுவத்தாமன், கேவலன் அல்லன் – அலட்சியமாக
வெல்லத்தக்கவனல்லன்; இங்கு-இப்பொழுது, இவனை-, பிளந்திடு-
(மார்பில்அம்பெய்து) பிளப்பாயாக’, என்ன – என்றுசொல்ல,-அருச்சுனன்), பாகன்
உரை முடிவதன்முன்-கண்ணன் வார்த்தை முடிவதற்குமுன்னமே, பிறைமுகம் பகழி
ஒன்றால்-  அர்த்தசந்திரபாணமொன்றினால், உளம் புக – நெஞ்சில் தைக்கும்படி,
தொடுத்தான்-எய்தான்; (எ – று.)

     அம்மா – ஈற்றசை. ஐயா – பாகன் எசமானனை அழைப்பதோர்
சொல்விழுக்காடு.  

எய்த அப் பகழி ஒன்றால், ஈசன் மா மதலை மாழ்கி,
வெய்துயிர்த்து இரதமீது வீழ்ந்தனன்; வீழ்ந்தோன்தன்னைக்
கைதவச் செயலினான் துச்சாதனன் கண்டு, முன்னைச்
செய் தவப் பயன்போல் வந்து, தேரொடும் கொண்டு போனான்.

எய்த அ பகழி ஒன்றால் – (அருச்சுனன்) எய்த
அந்தஒருபாணத்தினால், ஈசன் மா மதலை – பரமசிவனது சிறந்த குமாரனான
அசுவத்தாமா, மாழ்கி – மயங்கி வெய்து உயிர்த்து-வெப்பமாகப் பெருமூச்சுவிட்டுக்
கொண்டு, இரதம் மீது – தேரின்மேல், வீழ்ந்தனன்-, வீழ்ந்தோன் தன்னை –
விழுந்த அவனை, கைதவம்செயலினான் – வஞ்சனைச்செய்கையையுடையவனாகிய,
துச்சாதனன்-,கண்டு-, முன்னை செய் தவம் பயன்போல் – முற்பிறப்பிற்செய்த
நல்வினையின் பலன் (பிற்பிறப்பில் வந்து உதவுவது)  போல, வந்து-(உதவியாக)
வந்து, தேரொடுஉம் கொண்டு போனான் – தேரோடும் உடன்கொண்டு சென்றான்;

போன அப் புரவித்தாமா புரிந்து போர் தொடங்கும் எல்லை,
சேனைகள் நான்கினோடும் சித்திரவாகன் என்னும்
மீனவன், வழுதி, மாறன், வெண் மதி மரபில் வந்தோன்,
வானவர் முதல்வன் சென்னி வரி வளை உடைத்து மீண்டோன்,107.-நான்குகவிகள் – அசுவத்தாமன் மீண்டுவந்து பொர,
சித்திரவாகனபாண்டியன் அவனோடு கடும்போர்செய்தலைக்
காட்டும்.

இதுவும் மேலைக்கவியும் – ஒருதொடர்

     (இ-ள்.) போன – (இவ்வாறு அழிந்து) போன,  அ புரவித் தாமா -அந்த
அசுவத்தாமன், புரிந்து – (மீண்டும் வந்து)  விரும்பி, போர் தொடங்கும் எல்லை-
யுத்தத்தை ஆரம்பிக்கும் பொழுதில், வெண் மதி மரபில் வந்தோன் –
வெண்ணிறமுள்ள சந்திரனது குலத்திற்பிறந்தவனும், வானவர் முதல்வன் –
தேவேந்திரனது, சென்னி-முடியை, வரி வளை-கோடுள்ள வளையினால்,
உடைத்து -உடையச் செய்து (வென்று) நீண்டோன் – திரும்பினவனும், மீனவன்-
மீனக்கொடியையுடையவனும், மாறன் – (பகைவர்களுக்கு) மாறாக இருப்பவனும்
ஆகிய, சித்திரவாகனன் என்னும் வழுதி – சித்திர வாகனன் என்னும்பாண்டியன்,
சேனைகள் நான்கினோடுஉம் – நால்வகைச்சேனைகளுடனே,- (எ – று.)- “சென்று”
எனமேற் கவியோடு இயையும்.

     சித்திரவாகன் = சித்திரவாகனன்; பலவகை வாகனங்களையுடையவன்;
இவன்மகளாகிய சித்திராங்கதையென்பவளை அருச்சுனன்
தீர்த்தயாத்திரைசென்றபொழுது மணஞ்செய்துகொண்டானாதலால், இவன்,
அருச்சுனனுக்கு மாமனாவன், மலயத்துவச பாண்டியன்மகளாகிய
தடாதகைப்பிராட்டியைச் சுந்தரபாண்டியவடிவமாகி மணம்புரிந்துகொண்ட
சிவபெருமான், அவளிடந் தமக்குப் பிறந்த குமாரனாகிய உக்கிரபாண்டியனுக்கு
முடிசூட்டி, அவனுக்குப் பகையாகுங் கடலையும் இந்திரனையும் மேருவையும்
வெல்லுமாறு, வேலும் வளையுஞ் செண்டும் அளித்துப்போயினர், பின்னர் அவன்,
தன்நகர்மேற்பொங்கியெழுந்த ஏழுகடல்களையும் வேலெறிந்துவற்றச் செய்து
வென்றான்; ஒருகாலத்தில் தன்நாட்டிற் பொதியமலையில்  மேய்ந்திருந்த
மேகங்களைப் பிடித்துத் தளைசெய்து, அதுகேட்டுத் தன்னை எதிர்த்து யுத்தஞ்
செய்ததேவேந்திரன்மீது வளையையெறிந்து மகுடபங்கப்படுத்திச்சயித்தான்;
மற்றொருகால்தன்  நாட்டிற் பஞ்சம் நேரிட்டபொழுது மேருகிரியையடைந்து
நிதிதேடி அதுஇருக்குமிடந்தெரியாமல் அதன்மேற்செண்டைவீசி, அதற்கு
ஆற்றாமல்அம்மலையரசன் எதிரில்வந்து கொடுத்த பொருள்களையெல்லாம்
பெற்றுவந்தானென்பது, கதை, சித்திரவாகனனும் உக்கிரகுமாரனும்
ஒரேகுலத்தவராதலால், உபசாரவழக்காக இங்ஙனங் கூறினார்.

சென்று எதிர் ஊன்றி, வெவ் வேல் சேய் அனான் தேரின்மேலும்,
வன் திறல் வலவன்மேலும், வாம் பரிமாவின்மேலும்,
துன்றிய கணைகள் ஏவி, தொடு சிலை துணித்து வீழ்த்தான்;
அன்று அவன் செய்த வீரம் அரசரில் ஆர் செய்தாரே

எதிர் சென்று – எதிரிற் போய், ஊன்றி – தாக்கி, வெம்
வேல்சேய் அனான் – கொடிய வேலையுடைய முருகக்கடவுளைப் போன்ற
அசுவத்தாமனது, தேரின்மேலும்-, வன் திறல் – மிகுந்த வல்லமையையுடைய,
வலவன் மேல்உம் – சாரதிமேலும், வாம் பரி மாவின் மேல்உம்- தாவிப் பாய்கிற
குதிரைகளின்மேலும், துன்றிய கணைகள் ஏவி – அடர்ந்தஅம்புகளை எய்து, தொடு
சிலை- (கையிற்) பிடித்த வில்லை, துணித்து வீழ்த்தான் -அறுத்துத் தள்ளினான்;
அன்று – அன்றைக்கு அவன் – அப்பாண்டியன், செய்த-,வீரம்- வீரத்தன்மையை,
அரசரில் ஆர் செய்தார் – அரசர்களுள் வேறுயார்செய்தவர்? (எ-று.)- எவரும் இல
ரென்றபடி.

வேறு ஒர் தேர் மேற்கொண்டு, விதி தரு மரபினோனும்
சீறி, வெங் கணைகள் நூறு தெரிந்து, ஒரு சிலையும் வாங்கி,
கூறிய செஞ் சொல் ஏடு குறித்து எதிர் கொண்ட வைகை
ஆறு உடையவனை அஞ்ச, அருஞ் சமர் உடற்றினானே.

விதி தரு மரபினோன்உம் – பிரமனது குலத்தில் தோன்றிய
அசுவத்தாமனும்,- சீறி – கோபித்து, வேறு ஒரு தேர் மேற்கொண்டு – வேறொரு
தேரின்மீது ஏறி, வெம் கணைகள் நூறு தெரிந்து – கொடிய நூறு அம்புகளை
ஆராய்ந்து எடுத்துக்கொண்டு, ஒரு சிலைஉம் வாங்கி – ஒருவில்லையும் வளைத்து,
கூறியசெம் சொல் ஏடு – சொன்ன சிறந்த சொற்களை [தேவாரச்செய்யுளை]
எழுதியஏடு, குறித்து எதிர்கொண்ட – எதிர்நோக்கிச் சென்ற, வைகை ஆறு
உடையவனை -வையைநதியை (த் தனது நாட்டில்) உடைய பாண்டியனை,
அஞ்ச – அஞ்சும்படி,அரு சமர் உடற்றினான் – அரிய போரைச் செய்தான்;
(எ – று.)

     விதிமரபினோன் – பிராஹ்மணன், ஏடுஎதிர்கொண்ட வைகை
யென்பதிலடங்கிய கதை:- திருஞானசம்பந்தமூர்த்திநாயனார் சமணர்களை வென்று
சைவமதத்தை நிலைநிறுத்தும்பொருட்டுப் பாண்டிய நாட்டுக்குச் சென்றபொழுது,
சமணர்கள் நாயனார் முன்னிலையில் ‘நாம் இருதிறத்தேமும் நமது சமய
சித்தாந்தத்தை யெழுதிய ஏட்டை ஓடுகின்ற வையையாற்றிலே இடுவோம்:
எதிர்ந்துசெல்லும் ஏடே மெய்ப்பொருளையுடையது’ என்று சொல்ல, நாயனாரும்
அப்படியே செய்வோமென்று “வாழ்கவந்தணர்” என்னும் பாசுரத்தை ஏட்டில்
எழுதிஅவ்வேட்டைத் தனது கையினால் வைகைநதியில் இட, அவ்வேடு நதியிலே
எதிர்ந்து நீரைக் கிழித்துக்கொண்டு சென்ற தென்பது, கதை; எண்ணாயிரஞ்
சமணமுனிவர்கள் தனித்தனி ஒவ்வொரு வெண்பாவைப் பாடி ஏட்டிலெழுதித்
தத்தமது பீடத்தின் கீழ் வைத்துவிட்டுப் போய்விட, பாண்டியன் அவற்றை யெடுத்து
வைகையாற்றில் எறிந்துவிடும்படிஏவ, அவ்வாறு எடுத்தெறியப் பட்ட அவற்றுள்
நானூறுபாடல்கள் நீர் செல்லுமுறையிற்சென்று கடலிற்சேராமல் எதிரேறிச்சென்றன:
அவையே நாலடி நானூறு என்னும் ஒருகதையும் உண்டு

அந்தணன் ஏவை எல்லாம் அவனிபன் அவ் அவ் அம்பால்
முந்துற விலக்கி, தங்கள் மூவகைத் தமிழும் போல,
சிந்தையில் குளிக்குமாறு, சிலீமுகம் மூன்று விட்டான்;-
தந்தையை முதுகு கண்டோன் தனயனுக்கு இளைக்குமோதான்?

அந்தணன் ஏவை எல்லாம் – பிராமணனாகிய அசுவத்தாமனது
அம்புகளையெல்லாம், அவனிபன் – க்ஷத்திரியனாகிய பாண்டியன், அ அ
அம்பால்- (தான் எய்த) அந்தந்த அம்புகளினால், முந்துற விலக்கி – முன்னே
தடுத்து,தங்கள் மூவகை தமிழ்உம்போல – தாங்கள் வளர்த்த (இயல் இசை நாடகம்
என்னும்)மூன்றுவகைப் பட்ட தமிழைப்போல, சிந்தையில் குளிக்கும் ஆறு –
மனத்தில்(நன்றாய்ப்) பதியும்படி, சிலீமுகம் மூன்று விட்டான்- மூன்று அம்புகளை
எய்தான்; தந்தையை முதுகு கண்டோன் – தகப்பனைப் புறங் கொடுக்கச்செய்த
பாண்டியன், தனயனுக்கு இளைக்கும்ஓ – பிள்ளைக்கு இளைப்பானோ? (எ -று.)-
தான் – ஈற்றசை.

     பாண்டியன் அசுவத்தாமனை வென்றா னென்னுஞ் சிறப்புப் பொருளை
‘தந்தையைவென்றவன் மைந்தனுக்கு இளைப்பனோ?’ என்னும் பொதுப்பொருளாற்
சாதிக்கவைத்தனால், வேற்றுப் பொருள்வைப்பணி. ‘தந்தையை முதுகு கண்டோன்
தனயனுக்கு இளைக்குமோ’ என்றது – பாண்டியன் பரமசிவனைப் புறங்கொடுக்க
அடித்தவ னாதலாலும், அசுவத்தாமன் சிவகுமாரனாதலாலும். அரிமர்த்தன
பாண்டியன்மீது கோபத்தாற் சிவபெருமான் வையை யாற்றை அவன் நகர்மேல்
ஏவ,அந்நதி மதுரையை அழிக்குமாறு பெருகி வர, அந்நகரத்தார் யாவரும்
அரசன்கட்டளைப்படி கூலியாள் வைத்துக் கரைகோலுகையில், பிட்டுவிற்றுண்ணும்
வந்தியென்னும் மலட்டுக்கிழவிக்குத் தன்கருணையினால் வேலையாளாக வந்து
அமர்ந்த சோமசுந்தரக்கடவுள் வேலையைச் செவ்வையாகச்செய்யாமல் அவனைத்
தன்கைப்பொற்பிரம்பால் முதுகில் வீசி அடிக்க, அப்பெருமான் அந்தர்த்தான
மாயினா னென்பது, கதை.  

காலினல் துகைத்து, வேலைக் கனை கடல் ஏழும் முன் நாள்
வேலினால் சுவற்றும் கொற்ற வெங் கயல் விலோத வீரன்,
மாலினால் பொரு கை வேழம், வாசி, தேர், பதாதி, மாய,
கோலினால் சுவற்றினான், அக் குறுகலார் சேனை வெள்ளம்.111.-பாண்டியன் மாற்றாரது சேனைக்கடலை வற்றுவித்தல்.

முன் நாள் – முற்காலத்தில், வேலை – அலைகளையுடைய, கனை –
ஒலிக்கிற, கடல் ஏழ்உம் – ஏழுகடல்களையும், காலினால் – (தன்) கால்களினால்,
துகைத்து – மிதித்து, வேலினால் – வேலாயுதத்தால், சுவற்றும் – வற்றச்செய்த,
கொற்றம் – வெற்றிக்கு அடையாளமான, வெம் – கொடிய, கயல் விலோதம் –
மீனக்கொடியையுடைய, வீரன் – வீரத்தன்மையையுடைய பாண்டியன், மாலினால்
பொரு – மதமயக்கத் தோடு போர்செய்கிற, கை – துதிக்கையையுடைய, வேழம் –
யானைகளும், வாசி – குதிரைகளும், தேர் – தேர்களும், பதாதி – காலாள்களும்,
மாய – அழியும்படி, கோலினால் – அம்பினால், குறுகலர் – பகைவர்களுடைய,
சேனை – சேனையாகிற, அ வெள்ளம் – அக்கடலை, சுவற்றினான்- வற்றச்
செய்தான்;(எ -று.)

     பாண்டியன் முன்னே வேலெறிந்து சமுத்திரத்தை வற்று வித்ததுபோல,
இப்பொழுது அம்பெய்து சேனாசமுத்திரத்தை வற்றுவித்தா னென்னும் உவமையணி
தொனிக்கின்றது, ‘காலினாற் றுகைத்து’ என்றது- மதுரையை அழிக்கப் பொங்கிவந்த
சமூத்திரம் தன்கால்வடிவம்பலம்பப் பாண்டியன்நின்றமையைக் குறிக்கும்; ‘காலினாற்
றுகைத்’ என்னும் பாடத்துக்கு – காற்றினால்மோதப்பட்டு வந்த கடலென்க. 

சங்கரன் அருளால் வந்த சதுர் மறைக் குமரன் மீள,
பொங்கு அழல் கடவுள் என்ன, பொரு சிலை வெய்தின் வாங்கி,
மங்குல்போல் பொழியும் வாளி மழையினால் அழிந்தது அந்தோ,
செங் கயல் நெடும் பதாகைத் தென்னவன் செம் பொன் தேரே!112.-ஏழுகவிகள்-அசுவத்தாமனோடு பொருது பாண்டியன்
வீழ்ந்திடுதலைக்கூறும்.

சங்கரன்- சிவபிரானது, அருளால் – கருணையினால், வந்த –
பிறந்த,சதுர் மறை குமரன் – நான்குவேதங்களும்வல்ல அசுவத்தாமன், மீள –
மறுபடியும்,பொங்கு அழல் கடவுள் என்ன-  பற்றியெரிகிற அக்கினிதேவன்போல்,
வெய்தின் -பயங்கரமாக,  பொரு சிலை – போர்செய்தற்குரிய வில்லை, வாங்கி –
வளைத்து,மங்குல் போல் – மேகம்போல, பொழியும் – சொரிகிற, வாளி
மழையினால் -பாணவர்ஷத்தால், செம் கயல் – செவ்வியமீனை எழுதிய, நெடு
பதாகை-பெரியகொடியையுடைய, தென்னவன் – பாண்டியனது, செம் பொன்
தேர் – சிவந்தபென்னினாலாகியதேர், அழிந்தது-;(எ-று.) அந்தோ –
இரக்கக்குறிப்பு.

சிங்க ஏறு அனையான் அந்தத் தேரின்நின்று இழிந்து, முன்னம்
தங்கள் மால் வரையில் வைகும் தமிழ்முனிதன்னைப் போல,
பொங்கு வெண் தரங்க முந்நீர்ப் புணரிகள் ஏழும் சேர
வெங் கையால் வாரும் கொற்ற வேழமா மேற்கொண்டானே.

சிங்கம் ஏறு அனையான் – ஆண்சிங்கத்தைப்போன்ற பாண்டியன்,
அந்த தேரினின்று இழிந்து-, முன்னம்-முன்னே, தங்கள் மால் வரையில் வைகும்
தமிழ் முனிதன்னை போல – தங்கள் நாட்டிலுள்ள பெரிய பொதியமலையில்
வாழ்கிறதமிழைப் பரவச்செய்த அகத்தியமுனிவர் (கடலைக்குடித்தது) போல,
பொங்குவெண்தரங்கம் – (மேல்மேற்) பொங்குகிற வெண்மையான
அலைகளையுடைய,  முந்நீர்-மூன்றுதன்மையையுடைய, புணரிகள் ஏழ்உம் –
ஏழுகடல்களையும் சேர -ஒருசேர, வெம் கையால் – வெப்பத்தையுடைய
துதிக்கையால், வாரும் -முகந்துகொள்ளவல்ல, கொற்றம்-வெற்றியையுடைய,
வேழம் மா மேற்கொண்டான் -யானையாகிய விலங்கின் மேல் ஏறிக்கொண்டான்;
(எ – று.)

     இந்திரன்முதலிய தேவர்கள் தம்பகைவனாகிய விருத்திராசுரன் மற்றும் பல
அசுரர்களுடனே கடலில் ஒளித்துக்கொண்ட போது, அகத்தியமகாமுனிவரை வந்து
பிரார்த்திக்க, அவர் அக்கடலினீரைத் தமது ஒருகையால் முற்றும் முகந்து
பருகியருளி, உடனே ஒளித்திருந்த அவ்வசுரனை இந்திரன் கொன்ற பின்,
அவர்கள் வேண்டுகோளின்படி மீண்டும் உமிழ்ந்தனரென்பது கதை;
நீர்மையென்னும்பண்புப்பெயர், ஈறுபோய் ‘நீர்’ என நின்றது: முந்நீர்-மூன்று
நீர்மையை [தன்மையை]யுடையதுஎனக் கடலுக்குப்  பண்புத்தொகையன்மொழி;
மூன்றுதன்மைகள் -பூமியைப் படைத்தல், காத்தல், அழித்தல் என்பன; நீரினின்று
நிலம் பிறந்ததெனவேதம் ஓதுதலாற் படைத்தலும், நீரின்றி உலகம் பிழையாதாதலின்
காத்தலும், இறுதியில் நீரினால் மூடப்பட்டு உலகம் அழிதலால் அழித்தலும் ஆக
முத்தொழில்களுங் கடலுக்கு உரியனவாயின, ‘முந்நீரினுள்புக்குமூவாக்
கடம்பெறித்தான்’ என்றவிடத்து அடியார்க்குநல்லாருரை காண்க.  

மலையினில் பிறந்த ஆரம் மணம் கமழ் வடிவில் தங்கள்
அலையினில் பிறந்த ஆரம் அழகு உற அணிந்த கோமான்,
கொலையினில் சிறந்த கோட்டுக் குஞ்சரம் கொண்டு, மீண்டும்
சிலையினில் குருவின் மைந்தன் தேரொடும் செருச் செய்தானே

(தங்கள்) மலையினில் பிறந்த – தங்கள் நாட்டிலுள்ள
மலயபருவதத்தி லுண்டான, ஆரம் – சந்தனத்தின், மணல் கமழ்- வாசனைவீசுகிற,
வடிவில்-உடம்பிலே, தங்கள் அலையினின்-தங்கள் கடலிலே, பிறந்த-தோன்றின,
ஆரம் முத்துக்களினாலாயமாலையை, அழகுஉற – அழகுபொருந்தும்படி, அறிந்த –
தரித்த, கோமான் – பாண்டியராசன், கொலையினில்சிறந்த –
கொல்லுதற்றொழிலிலேமிகுந்த, கோடு – தந்தங்களையுடைய, குஞ்சரம் கொண்டு-
யானைமேல் ஏறிக்கொண்டு-மீண்டுஉம்-மறுபடியும், சிலையினில் – வில்லினால்,
குருவின் மைந்தன் தேரொடுஉம் – துரோண புத்திரனது (அசுவத்தாமனது)
தேருடனே, செரு செய்தான்-போர் செய்தான்

மோதி மத் தாரை மாறாக் கைம் முகம் உகுத்த செக்கர்ச்
சோதி மத்தக வெங் குன்றின் தழை செவித் துளங்கு காற்றால்,
சாதிமைத் துரோணன் மைந்தன் தனித் தடந் தேரில் கொற்ற
ஓதிமப் பதாகை ஆடை அப்புறத்து ஒடுங்கிற்று அம்மா!

மோதி மத் தாரை மாறா –  (மேன்மேற்) பெருகி மதநீர்ப்பெருக்கு
இடையறாத, கை முகம் உகுத்த செக்கர் சோதி-துதிக்கையையுடைய முகத்தினின்று
வெளிப்படுத்துக்கொண்டிருக்கிற (புள்ளிகளின்) சிவந்த ஒளியையும், மத்தகம்  –
மஸ்தகத்தையுமுடைய, வெம் குன்றின் – கொடிய மலைபோன்ற (பாண்டியனேறிய)
யானையின், தழை செவி துளங்கு காற்றால் – தழைந்த காதுகள்
அசைதலாலுண்டாகிய காற்றினால், சாதிமை துரோணன் மைந்தன் –
உயிர்குடிப்பிறப்பையுடைய அசுவத்தாமனது தனி தட தேரில் – ஒப்பற்ற பெரிய
தேரிலுள்ள, கொற்றம் – வெற்றிக்கு அடையாளமான, ஓதிமம் – அன்னத்தின்
வடிவத்தை எழுதிய, பதாகை ஆடை  – கொடிச்சீலை, அப்புறத்து ஒடுங்கிற்று –
பின் ஒதுங்கியது; (எ – று.)-இதனால், பாண்டியன் யானையின் உயர்ச்சியும்
வலிமையுந் தொனிக்கின்றது. அம்மா – வியப்பு.

     மததாரை – மத்தாரையென விகாரமாயிற்று. மதநீர் வெம்மையுடைய தெனக்
கூறப்படுவதனால், மோது – மோதுகின்ற, இமத்தாரை – குளிர்ந்த மததாரை யென்று
கூறுவது பொருந்தாதெனத் தோன்றுகின்றது.  

கூற்று என, கொண்டல் என்ன, குரை கடல் என்ன, சூறைக்
காற்று என, கொடிய கோபக் கடும் பெருங் கரட மாவின்
ஊற்று எழும் மதங்கள் ஏழும் ஒழுகி, மண் உடைந்து, தாழும்
சேற்றிடைப் புதைந்தது, அந்தச் சேய் அனான் தேரின் காலே.

கூற்று என – யமன்போலவும், கொண்டல் என்ன – நீர்கொண்ட
மேகம்போலவும், குரை கடல் என்ன – ஒலிக்கிற கடல் போலவும், சூறை காற்று
என- சுழல்பெருங்காற்றுப்போலவும், கொடிய – கொடுந்தன்மையையுடைய,
கோபம் -(அடங்காத) கோபத்தையுடைய, கடு – விரைவையுடைய, பெரு – பெரிய,
கரடம் -கன்னங்களையுடைய, மாவின் – (பாண்டியனது) யானையினின்றும், ஊற்று
எழும் -ஊற்றெடுத்துப் பெருகுகிற, மதங்கள் ஏழ்உம் – எழுவகை மதங்களும்,
ஒழுகி -பொழிவதனால், மண் உடைந்து – மண்கரைந்து, தாழும் –
ஆழமாகவுண்டாகிய,சேற்றிடை – செற்றியே, அந்த சேய் அனான் தேரின்கால் –
முருகக்கடவுளைப்போன்ற அந்த அசுவத் தாமனது தேர்ச்சக்கரம், புதைந்தது –
அழுந்திற்று;

மறையவன் செம் பொன் தேரை வளைந்து, மண்டலங்கள் ஓட்டி,
பிறை முகக் கணையால் அம் தண் பிறைக் குல வழுதி எய்ய,
நிறை வயப் புரவித்தாமா நேர் உற விலக்கி, தன் கை
அறை சிறைப் பகழி ஒன்றால், ஆனையை வீழ்வித்தானே.

அம் தண் பிறை குலம் – அழகிய குளிர்ந்த சந்திரனது மரபில்
தோன்றிய, வழுதி – பாண்டியன், மறையவன் செம்பொன் தேரை – வேதம்வல்ல
அசுவத்தாமனது செம்பொன்மயமான தேரை, வளைந்து – சூழ்ந்து, மண்டலங்கள்
ஓட்டி – (யானையை) மண்டலகதிகளாகச் செலுத்தி, பிறை முகம் கணையால் –
அர்த்தசந்திர பாணங்களால், எய்ய-, புரவித்தாமா-, (அவ்வம்புகளையெல்லாம்),
நிறைவு அற – (வந்து) நிறைதலில்லையாம்படி, நேர் உற – எதிரிலே பொருந்த,
விலக்கி – (தன் அம்புகளால்) தடுத்து, தன் கை அறை – தனது கையினால்
வலிவாகவிடப்பட்ட, சிறை – இறகுகளையுடைய, பகழி ஒன்றால் – ஒருபாணத்தால்,
ஆனையை-, வீழ் வித்தான் – கீழே கொன்றுதள்ளினான்

பாண்டியன் கை வில்லோடும் பதாதியாய், பகழி சிந்தி,
ஈண்டிய இவுளித்தாமன் இரு தடந் தோளும் மார்பும்
வேண்டியவாறு சோரி வீழ்தரப் பொருத பின்னர்,
தூண்டிய துரோணன் மைந்தன் தொடை ஒன்றால், தானும் வீழ்ந்தான்.

பாண்டியன்-, கை வில்லோடுஉம் – கையிற்பிடித்த வில்லுடனே,
பதாதிஆய் – (வாகனமில்லாமற்) காலாளாகி, பகழி சிந்தி – அம்புகளைப் பெய்து,-
ஈண்டியஇவுளித்தாமன் – நெருங்கின அசுவத்தாமனது, இரு தட தோள்உம் –
இரண்டுபெரிய தோள்களிலும், மார்புஉம் – மார்பிலும், வேண்டிய ஆறு –
வேண்டியபடியெல்லாம் [மிக அதிகமாக என்றபடி], சோரிவீழ்தர – இரத்தம்
பெருகும் படி, பொருத பின்னர் – போர்செய்தபின்பு, துரோணன் மைந்தன்
தூண்டிய- அசுவத்தாமன் பிரயோகித்த, தொடை ஒன்றால் – அம் பொன்றினால்,
தான்உம் வீழ்ந்தான் – தானும் இறந்துவிழுந்தான்; (எ -று.)- வேண்டியவாறு
பொருதபின்ன ரென்று இயைப்பினுமாம்.

பட்டனன் முனிவன் கையின் பஞ்சவன்’ என்று, வேந்தர்
கெட்டனர், முரசம் தீட்டும் கேதனன் சேனையுள்ளார்;
தொட்டனர், வரி வில்; வாளி தொடுத்தனர்; அடுத்து மேன்மேல்
விட்டனர், வேந்தர் வேந்தன் சேனையில் வேந்தர் உள்ளார்119.-பாண்டியன்இறக்கவே பாண்டவசேனையார் வென்னிட,
மற்றையோர் கடுமையாகப் பொருதல்.

முனிவன் கையின் – அசுவத்தாமனது கையால், பஞ்சவன் –
பாண்டியன், பட்டனன் – இறந்தான்,’ என்று-, முரசம் தீட்டும் கேதனன் சேனை
உள்ளார் – முரசத்தை யெழுதிய கொடியையுடைய தருமனது
சேனையிலுள்ளவர்களான, வேந்தர் – அரசர்கள், கெட்டனர் – வலியழிந்தார்;
வேந்தர் வேந்தன் சேனையில் உள்ளார் – துரியோதனனது சேனையிலுள்ளவரான,
வேந்தர் – அரசர்கள், (பாண்டியனிறந்தானென்றுகளித்து), வரி வில் தொட்டனர் –
கட்டமைந்த வில்லை எடுத்து, வாளி தொடுத்தனர் – பாணங்களைத் தொடுத்து,
மேல்மேல் அடுத்து விட்டனர் – மேலே மேலே நெருங்கி விட்டார்கள்;(எ-று.)

     ‘பட்டனன் முனிவன்கையிற்பஞ்சவனென்று’ என்னுங் காரணத்தைப்
பின்வாக்கியத்தோடுங் கூட்டுக. கெட்டனர் – காணாமலோடினாரென்றுமாம்

விற் கை ஆரியன் மகன் விசும்பின் வீழ்தரும்
உற்கையாம் என விடும் ஒளி கொள் வாளியால்,
கொற்கையான் இறந்த பின், கோழியான் எனும்
சொல் கையா மனு குலத் தோன்றல் தோன்றினான்.120.-அசுவத்தாமன்முன் சோழன் றோன்றுதல்.

வில் கை – வில்லேந்திய கையையுடைய, ஆரியன் மகன் –
ஆசாரியபுத்திரனான அசுவத்தாமா, விசும்பின் வீழ்தரும் உற்கை ஆம் என –
ஆகாயத்தினின்று விழுகிற எரிகொள்ளி போல, விடும் – விட்ட, ஒளி கொள்
வாளியால் – ஒளியைக்கொண்ட அம்பினால், கொற்கையான் – கொற்கையென்னும்
ஊரையுடைய பாண்டியன், இறந்தபின்-,-கோழியான் எனும் – சோழனென்கிற,
சொல்கையா – சொல் வெறுக்காத, மனு குலம் தோன்றல் – மனு மரபில்
தோன்றியஅரசன், தோன்றினான் – வந்தான்; (எ – று.)

    கோழி – உறையூர்; முற்காலத்து ஒருகோழி நிலமுக்கியத்தால்
யானையோடுபொருது அதனைப் போர்தொலைத்தல் கண்டு அந்நிலத்திற் செய்த
நகராதலின், கோழியென்று உறையூருக்குப் பெயராயிற்று. இதனைச்
சிலப்பதிகாரவுரையால் அறிக: (நாடுகாண்காதை-வரிகள் 247-248 உரை); இதை
இராதானியாக உடையவன், சோழன்; கீழ் ‘நாகையாப் புகழான்’ என்றதுபோல,
இங்கு ‘சொற்கையா மனுகுலத்தோன்றல்’ என்றார்.

     இதுமுதற் பதினைந்துகவிகள் – மூன்றாஞ்சீரொன்று மாச்சீரும் மற்றை
மூன்றும்விளச்சீர்களுமாகிய கலிவிருத்தங்கள்

தேரின்மேல் நின்று, நீ சிறு கண் செம்புகர்க்
காரின்மேல் வீரனைக் கணையின் காய்வதே?
பாரின்மேல் ஆர்கொல் இப் பாதகம் செய்தார்?-
நீரின்மேல் எழுத்து என நிலை இல் ஆண்மையாய்!121.-இதுமுதல் மூன்றுகவிகள் – சோழன் அசுவத்தாமனை
இகழ்ந்து கூறியன தெரிவிக்கும்.

நான்குகவிகள்-ஒருதொடர்.

     (இ-ள்.) நீரின்மேல் எழுத்து என – நீரிலெழுதிய எழுத்துப் போல், நிலை
இல்- சிறிதும் நிலைபெறுதலில்லாத, ஆண்மையாய் -பராக்கிரமமுடையவனே! நீ-
,தேரின்மேல் நின்று – தேரின்மேல் இருந்துகொண்டு, சிறுகண்-சிறியகண்களையும்,
செம்புகர் – சிவந்த புள்ளிகளையுமுடைய, காரின்மேல்  – மேகம்போன்ற
யானையின்மேலிருந்த, வீரனை – வீரனாகிய பாண்டியனை, கணையின் காய்வதுஏ-
அம்பினாற் கொல்லுவது தகுதியோ? பாரின்மேல் – பூமியில். ஆர் –
(உன்னைத்தவிர) வேறுயார், இ காதகம் செய்தார் – இப்பாவத்தொழிலைச்
செய்தவர்?[எவரும் இலர்]; (எ – று.)-கொல் – அசை.

     தேரின்மேலுள்ளவன் யானைமேலுள்ளவனைப் பொருது கொல்லுதல்.
அதருமயுத்தம். கார் – உவமைவாகுபெயர். எழுத்து- எழுதப்படுவது எனச்
செய்யப்படுபொருள்விகுதிபுணர்ந்துகெட்டு விகாரப்பட்ட பெயர், பி – ம்;
எழுத்தன,

ஆர்ப்பன மறை மொழிந்து, அனைவர் பாவமும்
தீர்ப்பன வேள்விகள் செய்வது அன்றியே,
கூர்ப்பன பல படை கொண்டு போர் செய,
பார்ப்பன மாக்களும் பாரின் வல்லரோ?

ஆர்ப்பன – ஆரவாரிப்பனவாகிய, மறை – வேதமந்திரங்களை,
மொழிந்து – சொல்லி, அனைவர் பாவம்உம் தீர்ப்பன – எல்லோர்தீவினைகளையும்
ஒழிப்பனவாகிய, வேள்விகள் – யாகங்களை, செய்வது அன்றிஏ-சேய்யவல்லவரே
யல்லாமல், (அதைவிட்டு),-கூர்ப்பன பல படை கொண்டு –
கூர்மையையுடையனவாகிய பல ஆயுதங்களால் போர் செய் – போர்செய்வதற்கு,
பார்ப்பனமாக்கள்உம் – பிராமணர்களும், பாரின் – பூமியில், வல்லரோ-?

     பார்ப்பனமாக்கள் – பாரப்பாராகிய மனிதர் என இருபெயரொட்டு

தாதையைக் கொன்ற வெஞ் சாப வீரனைக்
கோதை வில் கணைகளால் கொன்றிலாத நீ,
ஊதை முன் சருகுபோல் ஓடல் அல்லதை,
மோது அயில் படைகொடு முனைய வல்லையோ?’

தாதையை – (உன்) தந்தையாகிய துரோணனை, கொன்ற-, வெம்
சாபம்வீரனை – கொடிய வில்லையுடைய திட்டத்துய்மனை, கோதை வில்
கணைகளால் -நாணியையுடைய வில்லினாலெய்யப்படுகிற அம்புகளால்,
கொன்றிலாத -கொல்லமாட்டாத, நீ-, ஊதை முன் சருகுபோல்-
பெருங்காற்றுக்குமுன்னே உலர்ந்தஇலைபோல், ஓடல் அல்லதை –
ஓடிப்போவதே யல்லாமல், மோது அயில்படைகொடு-தாக்குதற்கு உரிய
கூர்மையான ஆயுதங்களால், முனைய வல்லஓ -போர்செய்ய வல்லவனோ?
(எ – று.) – அல்லதை. ஐ-சாரியை.

என்று, சில் மொழி மொழிந்து, இவுளித்தாமன்மேல்
துன்று வில் வளைத்தனன், சோழ பூபதி;
குன்றுடன் குன்று அமர் குறிக்குமாறுபோல்
சென்று சென்று அடுத்தன, தேரும் தேருமே.124.-ஆறுகவிகள்-அசுவத்தாமனும் சோழனும்
கடுமையாகப் பொருதலைக் கூறும்`

என்று-, சில் மொழி மொழிந்து – சிலவார்த்தைகளைச் சொல்லி,
இவுளித்தாமன்மேல் – அசுவத்தாமன்மேலே, சோழபூபதி – சோழநாட்டரசன்,
துன்றுவில் வளைத்தனன் – வலிய வில்லை வளைத்தான்; குன்றுடன் குன்று அமர்
குறிக்கும் ஆறுபோல் – மலையோடு மலை போர் தொடங்கும்விதம்போல, தேர்உம்
தேர்உம் – இரண்டுதேர்களும், சென்று சென்று அடுத்தன – விரைந்துபோய்
நெருங்கின

இருவர் செங் கரங்களும், இரண்டு கால்களும்,
உரன் உறப் பிணித்த நாண் ஓசை வீசவும்,
மருவு பொன்-தோள் உற வலியின் வாங்கவும்,
விரைவுடன் வளைந்தன, வில்லும் வில்லுமே.

இருவர் செம் கரங்கள்உம் – இவ்விருவர்களது சிவந்தகைகளாலும்
இரண்டு கால்கள்உம் – இருகோடிகளிலும், உரன் உற பிணித்த – வலிமை
பொருந்தப்பூட்டப்பட்ட, நாண் – நாணியின், ஓசை-ஒலி, வீசஉம் – மிகும்
படியாகவும்,-மருவுபொன் தோள் உற-பொருந்திய அழகிய தோள்களிற்படும்படி,
வலியின் வாங்கஉம் -வலிமையோடு(நாணியை) இழுக்கும்படியாகவும்,-விரைவுடன்-
வேகத்தோடு, வில்உம்வில்உம் – இரண்டு விற்களும், வளைந்தன-; (எ – று.)-
தோள் உற – தோள்வலிமைபொருந்த என்னவுமாம்.

புகல் அரு மறையவன் புராரி ஆதியாம்
திகழ் ஒளி இமையவர் சிறப்பின் ஈந்தன,
இகல் முனை முனை உற எதிர்ந்து தள்ளவே,
அகல் வெளி புதைத்தன, அம்பும் அம்புமே.

புகல் அரு – (சிறப்பித்துச்) சொல்லுதற்கு அரிய, மறையவன் –
அசுவத்தாமன், புராரி ஆதி ஆம் – சிவன்முதலான, திகழ் ஒளி இமையவர் –
விளங்குகிற ஒளியையுடைய தேவர்கள், சிறப்பின் ஈந்தன – சிறப்பாகக் கொடுத்த
அஸ்திரங்களை, இகல் முனை – போர்க்களத்தில், முனை எதிர்ந்து உற – முன்னே
எதிர்ந்து செல்லும் படி, தள்ள – பிரயோகிக்க,- அம்புஉம் அம்புஉம் – (இருவர்)
அம்புகளும், அகல் வெளி புதைத்தன – பரந்த ஆகாயவெளியை மறைத்தன; (எ-
று.)-மிக அடர்த்தியாகப் பரவின, ஈந்தனவாகிய அம்பும் அம்பும் என்று இயைத்து
உரைப்பாருமுளர்.

சுரர் உலகு எய்திய துரோணன் மைந்தனை
இரு கணை புயத்தினும், இரண்டு மார்பினும்,
ஒரு கணை நுதலினும், உருவ ஏவினான்-
மரு விரி தாதகி வாச மாலையான்.

மரு விரி – தேனொழுகுகிற, வாசம் – வாசனையுடைய, தாதகி
மாலையான் – ஆத்திப்பூமாலையையுடைய சோழன்,-சுரர் உலகுஎய்திய – (இறந்து)
தேவலோகத்தை அடைந்த, துரோணன் – துரோணரது, மைந்தனை – புத்திரனான
அசுவத்தாமனை, இரு கணை – இரண்டு அம்புகள், புயத்தின்உம் – தோள்களிலும்,
இரண்டு – இரண்டு அம்புகள், மார்பின்உம் – மார்பிலும், ஒரு கணை – ஓரம்பு,
நுதலின்உம் – நெற்றியிலும், உருவ – துளைக்கும்படி, ஏவினான் – எய்தான்;

பிறை முடிச் சடையவன் பிள்ளை வள் உகிர்
விறலுடைப் புலிக்கொடி வீரன் மெய் எலாம்
புறவினுக்கு அரிந்த நாள் போல, மேல் விடும்
திறலுடை வாளியால் சிவப்பித்தான்அரோ.

பிறை முடி சடையன் – இளஞ்சந்திரனை யணிந்த திரு
முடியிலுள்ள(கபர்த்தமென்னுஞ்) சடையையுடையஉருத்திரனது, பிள்ளை –
மகனானஅசுவத்தாமன், வள் உகிர் – கூர்மையானநகங்களையும், விறல் உடை –
வெற்றியையுமுடைய, புலி – புலியையெழுதிய, எலாம் – உடம்பு முழுவதையும்,
மேல்விடும் – மேலே பெய்கிற, திறல் உடை – வலிமையையுடைய, வாளியால் –
அம்புகளினால், புறவினுக்கு அரிந்த நாள் போல – புறாவைக் காக்கும் பொருட்டு
அறுத்துக் கொடுத்த காலத்திலேபோல, சிவப்பித்தான் – சிவக்கச்செய்தான்; (எ-று.)-
அரோ- ஈற்றசை.

     பிள்ளை- இளமைப்பெயர்; “தவழ்பவை தாமு மவற்றோரன்ன” என்னுந்
தொல்காப்பியச்சூத்திரத்தில் ‘தாமும்’ என்றதனால், இது உயர்திணைக்கும்
உரியதாதல்கொள்ளப்படும். 
சோழனுஞ் சிபியும் சூரியகுலத்தவராதலால்,
இங்ஙனம்அபேதமாகக்கூறினார், புற- குறியதன் கீழ் ஆ, குறுகிற்று.

துளவு அணி முடியவன் துள்ளு கன்றினால்
விளவினை எறிந்தென, வீர வேலினால்,
வளவனும் வெகுண்டு, பின், மயூரவாகனன்
இளவலை எறிந்தனன், எவரும் அஞ்சவே

துளவு அணி முடியவன் – திருத்துழாயை யணிந்த
திருமுடியையுடைய கண்ணன், துள்ளு கன்றினால் – துள்ளுகிற கன்றை வீசி
அதனால், விளவினை எறிந்து என – விளாமரத்தை எறிந்தாற்போல, வளவனும் –
சோழனும், பின் – பின்பு, வெகுண்டு – கோபித்து, வீரம் வேலினால் –
வீரத்தன்மையையுடைய வேலால், எவர்உம் அஞ்ச – எல்லோரும் பயப்படும்படி,
மயூர வாகனன் இளவலை – மயில்வாகனமுடைய முருகக்கடவுளது தம்பியான
அசுவத்தாமனை, எறிந்தனன்-; (எ -று.)- சிவன்மகனாதலால், ‘மயூரவாகன
னிளவல்’ என்றார்.

உருத்திரன் தாதுவின் உற்பவித்த அக்
கருத்துடை முனிவன் மெய் கலங்கி வீழ்தலும்,
திருத் தகு சகுனியும், சிற்சில் வேந்தரும்,
வருத்தமோடு எடுத்து, அவன் வருத்தம் மாற்றினார்.130.-சோழன்வேலால் அசுவத்தாமன் கலங்கிவிழ, சகுனி
முதலியவேந்தர் அவன்வருத்தம் மாற்றுதல்.

உருத்திரன் தாதுவின் – உருத்திரமூர்த்தியினது சுக்கிலத்தினால்,
உற்பவித்த – பிறந்த, கருத்து உடை-(வெல்லும்) எண்ணத்தையுடைய, அ
முனிவன் -அந்த அசுவத்தாமன், மெய்கலங்கி வீழ்தலும் – உடம்பு கலக்கமடைந்து
(மூர்ச்சித்து)விழுந்தவளவில்,-திரு தகு – செல்வம்பொருந்திய, சகுனியும்-, கில் சில்
வேந்தர்உம்,-(மற்றுஞ்) சிலசில அரசர்களும், வருத்தமோடு – மனவருத்தத்துடனே,
எடுத்து -(அவனை) எடுத்துவைத்துக்கொண்டு, அவன் வருத்தம் மாற்றினார் –
அவனதுவருத்தத்தை நீக்கினார்;(எ – று.)

     உருத்திரன் – (பகைவர்களை) அழச்செய்பவன். உத்பவித்த – உற்பவித்த;
தகரம் றகரமாயிற்று, கருத்து உடை முனிவன் – நெஞ்சம்பிளந்த முனிவனென்றுமாம்.
திரு – சூதாட்டத்திற் பிறரை வெல்வதனால் வரும் பொருள். ஆற்றினார் என்றும்
பதம்பிரிக்கலாம்.  

அவனொடும் மீள வந்து, அபயன் தன்னொடு,
கவன மான் தேருடைக் காவல் மன்னவர்,
சிவனொடும் அமர் பொரும் தெவ்வர் என்னவே,
துவனி செய் முரசு எழ, துன்று போர் செய்தார்.131.-நான்குகவிகள்-அசுவத்தாமனுடனே மன்னர்பலர்வந்து
சோழனுடன்பொருது அழிந்தமை கூறும்.

கவனம் – கடைகளையுடைய, மான் – குதிரைகளைப் பூட்டிய, தேர்
உடை – தேர்களையுடைய, காவல் மன்னவர் – (இராச்சியத்தைக்)
காத்தற்றொழிலையுடைய அரசர்கள், அவனொடு – அசுவத்தாமனுடனே, மீள –
திரும்பவும், வந்து-, சிவனொடுஉம் அமர்பொரும்-சிவனோடுபோர்செய்கிற, தெவ்வர்
என்ன – பகைவர்களாகிய அசுரர்கள்போல, துவணி செய் முரசு எழ-ஒலியைச்
செய்கிற முரசவாத்தியங்கள் முழங்கும்படி, அபயன் தன்னொடு- சோழனுடனே,
துன்று போர் – நெருங்கினபோரை, செய்தார்-; (எ – று.)

     அபயன் என்பதற்கு-தன்னைச்சரணமடைந்தவர்களை அஞ்ச வேண்டாமென்று
அபயமளித்துக் காப்பவனென்று பொருள் போலும். சிவனொடுபொரும் பகைவர்.
சோழனோடுபொருது முன்னிற்கமாட்டாமைக்கு உவமை.  

துன்மருடணன் மகன் சுவாகு, துன்முகன்
வில்மகன் சுவாது, வாள் வெயில் விபாகரன்-
தன் மகன் திருமகன் சங்கன், என்பவர்
மன் மகார் பலரொடும் மடிந்து வீழவே,

இதுமுதல் நான்குகவிகள் – ஒருதொடர்.

     (இ-ள்.) துன்மருடணன் மகன் – துன்மருடணனது புத்திரனாகிய, சுவாகு-
சுவாகுவும், துன்முகன் வில் மகன் – துன்முகனது ஒளியையுடைய புத்திரனாகிய,
சுவாது – சுவாதுவும், வாள் வெயில்-ஒளியையுடைய கிரணங்களையுடைய,
விபாகரன்தன் – சூரியனது, மகன் – குமாரனாகிய கர்ணனது திருமகன் –
அழகியபுத்திரனாகிய, சங்கன் – சங்கனும், என்பவர் – என்று சிறப்பித்துச்
சொல்லப்படுபவராகிய, மன் மகரர் – இராசகுமாரர்கள், பலரொடுஉம் – (மற்றும்)
பலவீரர்களுடனே, மடிந்துவீழ – இறந்து கீழே விழும்படி,-(எ-று.) -“ஏற்ற” என்க.
சுவாகு=சுபாகு; அழகியதோளுடையவன் துன்மருடணன்  துன்முகன்என்று
துரியோதனன்தம்பிமார்கள், பி-ம்: துன்மருடன்.  

பண் அக இசை அளி பாடு தண்டலைக்
கண் அகன் காவிரி நாடன் கைக் கணை,
மண்ணகம் நெருக்கு உற மலைந்த மன்னரை,
விண்ணகம் இடன் அற விரைவின் ஏற்றவே,

பண் அகம் – சுரங்களைத் தம்மிடத்திலுடைய, இசை-
சங்கீதப்பாடல்களை, அளி – வண்டுகள், பாடு – பாடுதற்கு இடமான, தண்டலை –
சோலைகளையுடைய கண்அகல் – இடமகன்ற, காவிரி-காவேரிநதிபாய்கிற, நாடன்-
நாட்டையுடையசோழனது, கை கணை- கையினா லெய்யப்பட்ட அம்புகள், மண்
அகம் நெருக்கு உற – பூமியில் நெருக்க முண்டாம்படி, மலைந்த – (திரண்டுவந்து)
போர்செய்த, மன்னரை – அரசர்களை, விண் அகம் இடன் அற – வீரசுவர்க்கத்தில்
இடம் இல்லையாம்படி, விரைவின்- சீக்கிரமாக, ஏற்ற- ஏறச்செய்ய (கொல்ல)-
(எ- று.)- “மீள” என்க.

     இனி, பண் நகஎனப்பிரித்து-பண்கள்விளங்கும்படி வண்டுகள் இசை பாடுகிற
சோலையென்றுமாம்; நக -செயவெனெச்சம். நெருக்கு-முதனிலை திரிந்த
தொழிற்பெயர்.மண்ணகம், விண்ணகம் – அகம், ஏழுனுருபு தண்டலை – தண்தலை;
குளிர்ந்தஇடத்தையுடையது: பண்புத்தொகையன்மொழி.  

முன்னிய சிலை மறை முனிவன் மைந்தனும்,
தன் நிகர் இலா விறல் சகுனி ஆதியாத்
துன்னிய நிருபரும், ‘தொல் அமர்க்கு நீ
சென்னி!’ என்று, அவன் புகழ் செப்பி மீளவே,

சிலை மறை – தனுர்வேதத்தை, முன்னிய – அறிந்த, முனிவன்
மைந்தன்உம் – துரோணகுமாரனான அசுவத்தாமனும், தன் நிகர் இலா –
(சூதாட்டத்தில்) தனக்கு ஒப்பில்லாத, விறல் – வெற்றியையுடைய, சகுனி ஆதி
ஆய்-சகுனி முதலாக, துன்னிய – நெருங்கிவந்த, நிருபர்உம் – அரசர்களும்,
‘தொல்அமர்க்கு பழைய போருக்கு, நீ,-சென்னி – தலையாவாய்,’ என்று-, அவன்
புகழ் -அச்சோழனது கீர்த்தியை, செப்பி – சொல்லி, மீள – திரும்பிப்போய்விட,-
(எ-று,.)- “அடுத்தார்” என மேலிற்கவியோடு முடியும். ‘சென்னி’ என்பது
சோழனைக்காட்டுவதோர் சொல்: அதற்குக் காரணங் கற்பித்ததுபோற்
கூறியிருக்கும்நயம் பாராட்டத்தக்கது.

சோனா மேகம் பொழிவதுபோல்,-துச்சாதனனும் தம்பியரும்
வான் நாடு ஏற வழி தேடி வருவார் போல, வெருவாமல்,
மேல் நாள் மொழிந்த வஞ்சினங்கள் முடிப்பான் நின்ற
வீமன் எதிர்,-
ஆனா வாளி மழை தூவி அடல் வெஞ் சிலையோடு, அடுத்தாரே.135,-அப்போது துச்சாதனனும் அவன் தம்பிமார்
ஒன்பதின்மரும் வீமனெதிரேயடுத்தல்.

துச்சாதனனும்-, தம்பியர்உம் – அவன் தம்பிமார்களொன்பதுபேரும்,
வெருவாமல் – அஞ்சாமல், அடல் வெம் சிலையோடு – வலிய கொடிய வில்லுடனே,
சோனா மேகம் பொழிவது போல்-விடாப்பெருமழையை மேகம் பெய்கின்றதுபோல,
ஆனா வாளிமழை தூவி – நீங்காத பாணவருஷத்தைச் சொரிந்து கொண்டு, மேல்
நாள் மொழிந்த வஞ்சினங்கள் – முற்காலத்திற் சொன்ன சபதங்களை, முடிப்பான்
நின்ற-நிறைவேற்றும்பொருட்டு நின்ற, வீமன் எதிர்-வீமனுக்கு எதிரில், வான் நாடு
ஏறவழி தேடி வருவார் போல – வீரசுவர்க்கம் அடைவதற்கு வழியைத் தேடி
வருபவர்போல, அடுத்தார் – வந்துசேர்ந்தார்கள்;(எ – று.)-தம்பியர் ஒன்பதின்மர்
என்பது -மேல் 140 – ஆங் கவியால் விளங்கும். மேனாள் – திரௌபதியைத்
துகிலுரிந்தகாலத்தில்.

     இதுமுதற் பன்னிரண்டு கவிகள் – மூன்றாஞ்சீரும் ஆறாஞ்சீருங்
காய்ச்சீர்களும்,மற்றைநான்கும் மாச்சீர்களுமாகிய அறுசீராசிரியவிருத்தங்கள்

உருத்து, இன்று அரசர் ஐவரையும் உடனே கொல்வன்!’ என, எண்ணி,
கருத்தின்படியே விரைந்து ஓடும் கவனப் புரவிக் கால் தேரில்
செருத் திண் பணைகள் முழங்க வரு செங்கோல் மன்னற்கு
இளையோனை
மருத்தின் புதல்வன் கண்டு, மழை முகில்போல், எதிர்
வாய்மலர்ந்தானே:136.- துச்சாதனனைக்கண்டு வீமன் சில கூறலுறல்.

உருத்து – கோபித்து, ‘இன்று – இன்றைக்கு, அரசர்
ஐவரைஉம் -பஞ்சபாண்டவர்களையும், உடனே – விரைவிலே, கொல்வன் –
கொல்வேன்,’ என -என்று, எண்ணி – நினைத்து, கருத்தின் படிஏ விரைந்து
ஓடும்-(தன்)எண்ணத்தின்படியே வேகமாயோடுகிற, கவனம் புரவி – கதிகளையுடைய
குதிரைகளைப் பூட்டிய, கால்-சக்கரங்களையுடைய, தேரில் – தேரின்மேல் (ஏறி),
செரு – திண் பணைகள் – போருக்குரிய வலிய வாச்சியங்கள் முழங்க-
பேரொலிசெய்யும்படி, வரு-வருகிற, செங்கோல் மன்னற்கு – நீதிதவறாத
அரசாட்சியையுடைய துரியோதனனுக்கு, இளையோனை – அடுத்த தம்பியாகிய
துச்சாதனனை, மருத்தின் புதல்வன் – வாயுகுமாரனான வீமன், கண்டு – நோக்கி,
மழை முகில் போல்-மழைபொழிகின்ற  மேகம் (இடிமுழங்குவது) போல, எதிர் –
எதிரில், வாய் மலர்ந்தான் – வாய் திறந்து (சிலவார்த்தைகளைச்) சொல்வானானான்;
(எ – று.)-அவற்றை மேல் மூன்று கவிகளிற் காண்க.

     கருத்தின்படி – மனோவேகமாக வென்றுமாம். கொடுங்கோன் மன்னனாகிய
துரியோதனனை ‘செங்கோன்மன்னன்’ என்றது, இகழ்ச்சி.   

துச்சாதனனே! உனைப்போலும் சூரர் உளரோ? சூரர் எலாம்
மெச்சாநின்றார் வேத்தவையில் மேல் நாள் நீ செய் விறல்
ஆண்மை;
அச்சு ஆர் இரதப் போர்க்கும் உனக்கு ஆர் வேறு எதிர் உண்டு?
அம்ம! விரைந்து,
இச்சா போகமாக விருந்து இன்றோ மறலிக்கு இடும் நாளே?137.-மூன்றுகவிகள்-ஒருதொடர்:வீமன் துச்சாதனனையழிக்கப்
போவதாகவீரவாதங்கூறியதைத் தெரிவிக்கும்.

துச்சாதனனே-! அம்ம- கேட்பாயாக: உனைபோலும் சூரர் உளர்ஓ –
உன்னை யொக்கும் வீரர்கள் வேறு உண்டோ? மேல் நாள் – முற்காலத்தில்,
வேந்துஅவையில் – இராசசபையில், நீ-, செய்-செய்த, விறல் ஆண்மை –
வெற்றியோடுகூடிய பராக்கிரமத்தை, சூரர் எலாம் – வீரர்கள்யாவரும்,
மெச்சாநின்றார் -(இப்பொழுதுங்) கொண்டாடுகிறார்கள்; அச்சு ஆர் இரதம்
போர்க்குஉம் – இரிசுகள்பொருந்திய தேரின்மேல் ஏறிச்செய்கிற போரிலும்,
உனக்கு-, எதிர் – ஒப்பு, வேறுஆர் உண்டு-வேறே யாவர் இருக்கிறார்கள்?
விரைந்து – சீக்கிரமாக, இச்சா போகம்ஆக – இஷ்டப்படியே புசிக்கும்படி,
மறலிக்கு – யமனுக்கு, விருந்து இடும் நாள் -(உன்னை) விருந்துணவாக
அமைக்கிறநாள், இன்றோ – இன்றைக்குத்தானோ? (எ-று.)

     முன்னிரண்டடிகள் – இகழ்ச்சிகுறிக்கும். ஆண்மை யென்றது, திரௌபதியின்
துகிலை உரிந்ததை. அச்சு – அக்ஷமென்னும் வடமொழித்திரிபு. அம்ம –
இடைச்சொல்: “அம்ம கேட்பிக்கும்” விருந்து – புதுமை; இப்பண்புப்பெயர்,
புதிதாய்வந்தவர்க்கு இடும் உணவுக்கு இருமடியாகுபெயர். 

இன்றோ, உன்தன் சென்னி துணித்து இழி செம் புனலில்
குளித்திடும் நாள்?
இன்றோ, அழலின் உற்பவித்தாள் இருள் ஆர் அளகம்
முடித்திடும் நாள்?
இன்றோ, தாகம் கெட நாவுக்கு இசைந்த தண்ணீர் பருகிடும் நாள்?
இன்றோ, உரைத்த வஞ்சினங்கள் எல்லாம் பயன் பெற்றிடும் நாளே?

உன் தன் சென்னி துணித்து – உன் தலையை அறுத்து, இழி செம்
புனலில் – (அதனனின்று) வழிகிற இரத்தத்தில், குளித்திடும் நாள் – (யான்)
மூழ்குந்தினம். இன்றுஓ – இன்றைக்குத்தானோ? அழலின் உற்பவித்தாள் –
அக்கினியிற்பிறந்த திரௌபதி, இருள் ஆர் அளகம் – இருளையொத்த – (மிகக்கரிய)
(தனது) கூந்தன்மயிரை, முடித்திடும் நாள்-எடுத்து முடிக்குந்தினம், இன்றோ-? தாகம்
கெட – தண்ணீர்வேட்கை கெடும்படி, நாவுக்கு இசைந்த தண் நீர் –
நாக்குக்குப்பொருந்திய குளிர்ந்த நீரை, பருகிடும் நாள் – (நான் கையால் அள்ளி
எடுத்துக்) குடிக்கிற தினம் இன்றோ-? உரைத்த வஞ்சினங்கள் எல்லாம் – (நாங்கள்)
சொன்ன சபதங்களெல்லாம், பயன் பெற்றிடும் நாள்-பலனடையுந் தினம், இன்றோ-?

     திரௌபதி, துரியோதனன் துச்சாதனனைக்கொண்டு கூந்தலைப்பிடித்திழுத்துச்
சபையிற்கொணர்ந்து துகிலுரிந்துந் தன்மடிமேலுட் காரென்று சொல்லியும்
தன்னைப்பங்கப்படுத்தினபொழுது, துரியோதனாதியர் நூற்றுவரையுங் கொன்று
அவர்களிரத்தத்தில் நனைத்தாலன்றி விரித்தகூந்தலை எடுத்துமுடித்து
அலங்கரிக்கப்பதில்லையென்று சபதஞ்செய்தான், யாகசேனமகாராசன் செய்வித்த
புத்திரகாமயாகத்தில் அருச்சுனனை மணஞ்செய்து கொள்ளும்பொருட்டுத்
தீயினின்றுந் திரௌபதி பிறந்தான்

வென்றே அவனி முழுது ஆளும் வீரோதயன் நின் தம்முனையும்
கொன்றே, நாளை அமரர் எதிர்கொள்ளக் கடிதின் வர விடுவன்;
இன்றே நீ போய் இடம் பிடிப்பாய்; எண்ணா எண்ணம்
எணி, மன்றில்
அன்றே கலகம் விளைத்து, என்றும் அழியா அரசை அழித்தோனே.

எண்ணா எண்ணம் எண்ணி-நினைக்கத்தகாத நினைப்பை
நினைத்து,மன்றில் – சபையிலே, அன்று – அந்நாளில், கலகம் விளைத்து –
சூதுபோரைஉண்டாக்கி, என்றும் அழியா அரசை – எந்நாளும் அழியாத (எங்கள்)
அரசாட்சியை, அழித்தோனே – அழியச்செய்தவனே! வென்று – வெற்றிகொண்டு,
அவனி முழுது – பூமி முழுவதையும், ஆளும்-அரசாளுகிற, வீர உதயன்-
வீரத்தன்மையின்  தோற்றத்தையுடையவனாகிய, நின் தம்முனைஉம் – உனது
தமையனான துரியோதனனையும், நாளைஏ – நாளைக்கே, கொன்று-, அமரர் எதிர்
கொள்ள – தேவர்கள் எதிர்கொண்டு அழைத்துப்போம்படி, கடிதின- விரைவிலே,
வரவிடுவன்-வரும்படி அனுப்புவேன்;(ஆதலால்), நீ-,இன்றுஏ போய் இடம்
பிடிப்பாய் – இன்றைக்கே சென்று (சுவர்க்கத்தில் இடம் அமைத்து வைப்பாயாக;
(எ- று.)

     எதிர்கொண்டு அழைத்துப்போதல், மரியாதை. துரியோதனன் கலகம்
விளைத்ததற்கும் அதனால் தருமனரசாட்சியை அழியச்செய்ததற்குந் துச்சாதனன்
முக்கியமான துணைவனாயிருந்ததனால், இவன் தொழிலாகக்கூறப்பட்டன. இனி,
கலகம் – திராளபதியைத்துகிலுரிதலாகக் கொண்டு, கலகத்தைச்செய்து அது
காரணமாக எந்நாளும் அழியாத உங்களரசாட்சியை அழிக்கத்தொடங்கினவனே
யென்றுமாம்.   

வீமன் கருத்தோடு இவை மொழிய, வேறு உத்தரம் மற்று
ஒன்று இன்றி,
ஊமன்தனைப்போல் அவன் நிற்க, உடனே இளையோர் ஒன்பதின்மர்
நாமம் பெறு கோல் ஓர்
ஒருவர் நால் நாலாக நடந்த வழி
தூமம் கிளர ஒரு கணத்தில் தொடுத்தார், எதிர் வந்து அடுத்தாரே.140.-துச்சாதனன் ஊமன்போலிருக்க, அவன்தம்பிமார்கள்
அம்புதொடுத்தல்.

வீமன்-, கருத்தோடு இவை மொழிய – (கொடிய) எண்ணத்தோடு
இப்பேச்சுக்களைச்சொல்ல,-அவன் – துச்சாதனன், வேறு உத்தரம் மற்று ஒன்று
இன்றி – (அவ்வார்த்தைகளுக்கு) எதிராகியவிடை வேறொன்று
மில்லாமல்,ஊமன்தனை போல் நிற்க – ஊமையானவனைப்போல (வாளா) நிற்க,
உடனே-, இளையோர் ஒன்பதின்மர் – அவன் தம்பிமார் ஒன்பது பேர், நாமம்
பெறுகோல்-(தங்கள்) பேரை எழுதப்பெற்ற அம்புகளை, ஒருவர் நால் நால் ஆக –
ஒவ்வொருவர் நான்கு நான்கு விழுக்காடு, நடந்த வழி தூமம்கிளர-சென்றவழியிலே
புகை கிளம்பும்படி (மிக உக்கிரமாக என்றபடி) ஒரு கணத்தில் –
ஒருக்ஷணப்பொழுதினுள்ளே, தொடுத்தார் – தொடுத்துக் கொண்டு, எதிர் வந்து
அடுத்தார்-எதிரில் வந்து நெருங்கினார்கள்;(எ- று.)

     ஊமன் – பேசுதலில்லாதவன், நாமம் பெறு கோல் – அச்சந்தருதலைப்பெற்ற
அம்புமாம்; நாம் – அச்சம், உரிச்சொல்: அம்-சாரியை.

தொடுத்தார் தொடுத்த கணை அனைத்தும், சூரன்தானும்,
தன் கணையால்
தடுத்தான்; மீள ஓர் ஒருவர்க்கு ஓர் ஓர் பகழி, தனு வாங்கி,
விடுத்தான்; அவரும் இரதமிசை வீழ்ந்தார்; வீழ்ந்த வீரரை வந்து
அடுத்தார், விரைவில், அகல் வானத்து அழகு ஆர்
காதல் அரம்பையரே.141.-ஒன்பதின்மரும் வீமனம்பால் மாளுதல்.

தொடுத்தார் – (அவர்கள் அம்பு) தொடுத்தார்கள்; தொடுத்த-, கணை
அனைத்துஉம் – அம்புகளை யெல்லாம், சூரன் தான்உம் – வீமனும், தன்கணையால்
– தன் அம்புகளினால், தடுத்தான் – விலக்கினான்; மீள – திரும்பவும், ஓர்ஒருவர்க்கு
ஓர்ஓர் பகழி – ஒவ்வொருவருக்கு ஒவ்வொருஅம்பு விழுக்காடு, தனு வாங்கி-
வில்லைவளைத்து, (ஒன்பது அம்புகளை), விடுத்தான் – விட்டான்; அவர்உம் –
அவ்வொன்பதுபேரும், இரதம்மிசை வீழ்ந்தார் – தேரின் மேல் இறந்து விழுந்தார்கள்;
வீழ்ந்த வீரரை – (அங்ஙனம்) விழுந்த வீரர்களை, அகல் வானத்து – பரந்த
தேவலோகத்துள்ள, அழகு ஆர் – அழகு நிரம்பிய, காதல் -விருப்பத்தையுடைய,
அரம்பையர் – தெய்வப்பெண்கள், விரைவில்-சீக்கிரத்தில், வந்து அடுத்தார் –
வந்துகூடினார்; (எ-று.)

    போரில் இறந்த வீரரது உயிர்கள் உடனே வீரசுவர்க்கத்தை அடைந்தன
வென்றபடி, அரம்பை – ரம்பா; வடசொற்றிரிபு: அரம்பையென்பவள்
தெய்வமகளிர்க்குட் சிறந்தவளாதலால், அவர்களுக்கு அரம்பையரென்று பெயர்
வழங்கிற்று.   

உயிர்க்கு ஆர் உயிராம் தம்பியர்கள், ஓர் ஒன்பதின்மர்,
வீமன் கைச்
செயிர்க் காய் கணையால் சிரம் துணிந்து, தேர்மேல் வீழ,
சினம் கதுவி,
பயிர்க்கா மாரி பொழிந்து வரு பருவப் புயல்போல் பாவனனை
மயிர்க் கால்தொறும் அம்புஇனம் சொருக, மன்னற்கு இளையோன்
மலைந்தானே.142.-நான்குகவிகள் – துச்சாதனனும் வீமனும்
விற்போர்புரிதலைக்கூறும்.

உயிர்க்கு ஆர் உயிர் ஆம் – உயிர்க்கும் அரிய உயிராகிய (மிக
அருமையான), தம்பியர்கள் ஓர் ஒன்பதின்மர் – தம்பிமார்கள் ஒன்பதுபேர், வீமன்
கை – வீமன்கையினாலெய்த, செயிர்காய் கணையால் – வலிமையோடு கொல்லுகிற
அம்புகளால், சிரம்துணிந்து – தலை அறுபட்டு, தேர் மேல் வீழ – தேரில் இறந்து
விழுந்ததனால், சினம் கதுவி-கோபம் மூண்டு, மன்னற்கு இளையோன்-
துரியோதனன் தம்பியான துச்சாதனன், பயிர்க்கு ஆ (க) மாரி பொழிந்துவரு-பயிர்
செழிக்கும்படி மழை சொரிந்து வருகிற, பருவம் புயல் போல்-கார்காலத்து
மேகம்போல, மயிர் கால்தொறுஉம்-ஒவ்வொரு உரோமத்துவாரத்திலும், அம்பு
இனம்சொருக – பாணங்களின் கூட்டத்தைத் தைக்கும்மாறு, பாவனனை-
வாயுகுமாரனானவீமனை, மலைந்தான் – பொருதான்; (எ – று.)-பாவனன் –
பவனன் மகன்:தத்திதாந்தம். பி-ம்: சொருகி

தன் மேல் உரக கேதனனுக்கு இளையோன் தொடுத்த
சரங்கள் எல்லாம்
கல்மேல் மேகத் துளி என்னக் காய்ந்தான், அவற்றைக் கடிது உதறி,
மல் மேற்கொண்ட புயம் உற வில் வாங்கி, கொடும் போர் வாளி பல
மென் மேல் எய்தான்; எதிர்ப்பட்டால் விடுமோ, பின்னை,
விறல் வீமன்?

விறல் வீமன், – வெற்றியையுடைய வீமன்,- காய்ந்தான் -கோபித்து,-
உரக கேதனனுக்கு இளையோன் – பாம்புக்கொடியையுடைய துரியோதனனுக்குத்
தம்பியாகிய துச்சாதனன், தன் மேல் தொடுத்த-, சரங்கள் எல்லாம் –
அம்புகளனைத்தும், கல் மேல் மேகம் துளி என்ன – கல்லின்மேல் விழுந்த
மேகத்தின் மழைநீர்த்துளிகள்போல(ச் சிதிறிப்போம்படி), அவற்றை கடிது உதறி –
அவ்வம்புகளை விரைவாக உதறிவிட்டு,-மல் மேல் கொண்ட புயம் உற –
மற்போரை மேன்மையாகக் கொண்ட தோளின்வலிமை பொருந்த, வில் வாங்கி –
வில்லைவளைத்து, கொடு போர் வாளி பல – கொடிய போருக்கு உரிய பல
அம்புகளை, மென்மேல் எய்தான் – மேல்மேலே தொடுத்தான்; எதிர்ப்பட்டால் –
(பகைவன்) எதிரிரே வந்து அகப்பட்டால், பின்னை – பின்பு, விடும்ஓ-(வீமன்)
விடுவானோ? (எ – று.)-பொதுப்பொருளும் சிறப்புப் பொருளுமாக வாரமையால்,
இது, வேற்றுப்பொருள்வைப்பணியாகாது.

தூவாநின்ற ஏ அனைத்தும் துச்சாதனன் தன் தொடை பிழையா
ஏவால் விலக்கி, ஏழு கணை எய்தான்; எய்த கணை ஏழும்
மாவானவற்றின் தலை நான்கும், மடங்கல் கொடியும், மணித் தேரும்,
மேவா, நிருபன் மலர்த் தடக் கை வில்லும், துணித்து, வீழ்த்தனவே

தூவாநின்ற – (வீமன்) பொழிகிற, ஏ அனைத்துஉம் – அம்புகளை
யெல்லாம், துச்சாதனன்-, தன் – தனது, தொடை பிழையா – தொடுத்த இலக்குத்
தவறாத, ஏவால் – அம்புகளினால், விலக்கி – தடுத்து, ஏழுகணை எய்தான் –
ஏழம்புகளைத் தொடுத்தான்; எய்த கணை ஏழ்உம் -தொடுத்த அந்த ஏழம்புகளும்,
மேவாநிருபன் – (தம்மோடு மனம்) பொருந்தாத (பகைவனாகிய) வீமராஜனது,
மாவானவற்றின் – (நான்கு) தேர்க்குதிரைகளின், தலை நான்குஉம்-
தலைகள்நான்கையும், மடங்கல் கொடிஉம்-சிங்கக்கொடியையும், மணி தேர்உம் –
அழகிய தேரையும், மலர் தட கை வில்உம் – தாமரை மலர் போன்ற பெரிய
கையிற் பிடித்த தனுசையும், (ஆக ஏழு பொருளையும்), துணித்து – அறுத்து,
வீழ்த்தன – தள்ளிவிட்டன; (எ – று.) பி-ம்: துணிய.

இத் தேர் அழிய, வேறு ஒரு தேர் ஏறி, பரவையிடைச் சுழன்ற
மத்தே அனையான் சிலை வாங்கி, மன்னற்கு இளைய வய மீளி
அத் தேர் அழிய, கொடி, வலவன், வய மா, அனைத்தும் அற்று விழ,
பத்தே எய்து, ஆங்கு இணை வாளி பகைவன் புயத்தில் பட, எய்தான்.

மன்னற்கு இளைய வயம் மீளி – தருமராஜனுக்கு அடுத்த
தம்பியாகியவலிமையையுடைய வீரனாகிய வீமன், இ தேர் அழிய – இந்தத் தேர்
அழிந்ததனால்,வேறு ஒரு தேர் ஏறி-, பரவை இடை சுழன்ற மத்துஏ அனைய –
பாற்கடலிற்சுழன்று  கொண்டிருந்த மத்தாகிய மந்தரமலையையே போன்ற, சிலை
வாங்கி,-(வேறொரு) வில்லை எடுத்து வளைத்து, அ தேர் அழிய – அத்
துச்சாசனனேறியதேர் அழியவும், கொடி-கொடியும், வலவன் – சாரதியும், வயம் மா
அனைத்துஉம் -வலிமையையுடைய தேர்க்குதிரைகளெல்லாமும், அற்று விழ –
அறுபட்டு விழவும்,பத்துஎய்து – பத்து அம்புகளைத் தொடுத்து, ஆங்கே –
அப்பொழுதே, இணைவாளி –  இரண்டு அம்புகளை, பகைவன் புயத்தில் பட –
பகைவனான அவனதுதோளிரண்டிலும் படும்படி, எய்தான்-; (எ – று.) மந்தரம்
பாற்கடலைக்கலக்கியதுபோல வில் போர்க்கடலைக் கலக்குதலால், உவமை, மத்து –
மந்த்தம் என்னும் வடமொழித் திரிபு. பி-ம்; மத்தேயனையான்.

காரின் கரிய குழல் தீண்டி, கலை அன்று உரிந்த கழற் காளை
பாரில் குதித்து, ஓர் அதி பாரப் பைம் பொற் கதையால் பாவனன்தன்
தேரில் புடைக்க, தேர் சிதைந்து சிந்திற்று; அவனும் சிலை மாற்றி,
போரில் சிறந்த தண்டமுடன் புவிமேல் பாய்ந்தான், புலி போல்வான்.146.- ஐந்துகவிகள்-அவ்விருவரும் கதாயுத்தம்புரிந்தமை
கூறும்.

காரின்கரிய – மேகம்போலக்கறுத்த, குழல் – (திரௌபதியின்)
கூந்தலை, தீண்டி – தொட்டு (ப்பிடித்துஇழுத்துக்கொண்டு வந்து), அன்று –
அக்காலத்தில், கலை உரிந்த – (அவள்) துகிலை அவிழ்த்த, கழல் காளை – வீரக்
கழலையுடைய வீரனாகிய துச்சாசனன், பாரில் குதித்து – (தேர் அழிந்ததனால்)
தரையிற் குதித்து, ஓர் – ஒரு, அதி பாரம்- மிக்க கனம்பொருந்திய பைம்பொன்
கதையால் பசும் பொன்னாலாகிய கதாயுதத்தால், பாவனன் தன்தேரில் புடைக்க –
வாயுகுமரானான வீமனது தேர்மேல் அடிக்க, தேர்சிதைந்து சிந்திற்று-அத்தேர்
அழிந்துசிதறியது; புலி போல்வான் – புலியையொக்கும் வீரனாகிய, அவன்உம்-
வீமனும், சிலை மாற்றி-வில்லை விட்டு, போரிற் சிறந்த தண்டமுடன் – போரில்
(தனக்குச்) சிறந்த கதாயுதத்துடனே, புவி மேல் பாய்ந்தான் – பூமியிற்குதித்தான்;
(எ -று.)-புவி என்பது – வடமொழியால் ஏழாம்வேற்றுமை.

இருவரும் புயங்களின் அப்பி, ஒத்தினர்; இகல் புரிந்து, தண்டு
இறுகப் பிடித்தனர்;
மருவி ஒன்றொடு ஒன்று அனல் கக்க, மொத்தினர்; வலம் இடம்
கொள் மண்டலம் முன் பயிற்றினர்;
அருகு சென்று சென்று, அடி வைத்து அடுத்தனர்; அகல நின்று நின்று,
ஒர் இமைப்பின் முட்டினர்;
திருகு வெஞ் சினத்து, இடி ஒத்து, உரப்பினர்; திசையின் மண்டு இபக்
கிரி சத்தமிட்டவே.

இருவர்உம் – வீமனும் துச்சாதனனும், புயங்களின்- தோள்களில்,
அப்பி ஒத்தினர் – நன்றாகத் தட்டினார்கள்; இகல் புரிந்து – பராக்கிரமத்தை
மேற்கொண்டு, தண்டு-கதையை, இறுக பிடித்தனர் – அழுந்தப் பிடித்தார்கள்;
ஒன்றொடு ஒன்று மருவி – ஒன்றோடொன்று சேர்ந்து, அனல்கக்க –
நெருப்புப்பொறியைச்சிந்தும்படி, மொத்தினர் – தாக்கினார்கள்; வலம் இடம் கொள்
மண்டலம் – வலசாரியும் இடசாரியுமாக மண்டலகதியை, முன் பயிற்றினர் –
முன்னேபழக்கினார்கள்; அருகு சென்று சென்று – கிட்டப்போய்ப் போய், அடி
வைத்து -கால்களை வைத்துக்கொண்டு, அடுத்தனர் – நெருங்கினார்கள் அகல
நின்று நின்று -தூரத்திலே நின்று நின்று, ஒர் இமைப்பின் முட்டினர் –
ஒருநொடிப்பொழுதுள்ளேநெருங்கினார்கள்; திருகு வெம் சினத்து மாறுபடுகிற
கொடிய கோபத்தால், இடி ஒத்துஉரப்பினர் – இடிபோல அதட்டினார்கள்;
(அவ்வதிர்ச்சியால்), திசையில் மண்டு -(எட்டுத்)திக்குகளிலும் பொருந்திய, இபம்
கிரி – மலைபோன்ற (அஷ்ட) திக்கஜங்கள், சத்தம்இட்ட – வீரிட்டன; (எ- று.)-
;கிரிசிந்தியிட்டவே’ என்ற பாடம் சந்தத்துக்கு மாறுபடும்.

     இதுமுதற் பத்துக்கவிகள்-பெரும்பாலும் ஒன்று ஐந்தாஞ்சீர்கள்
புளிமாச்சீர்களும், இரண்டு நான்கு ஆறு எட்டாஞ்சீர்கள் கூவிளச்சீர்களும், மூன்று
ஏழாஞ்சீர்கள் -புளிமாங்கய்ச்சீர்களுமாகிய எண்சீராசிரியச்சந்தவிருத்தங்கள்,’ தனன
தந்தன தனதத்ததத்தன தனன தந்தன தனதத்த தத்தன’ என
இவற்றிற்குச்சந்தக்குழிப்புக் காண்க.  

வெகுளி கொண்டு கொண்டு, எதிர் கொக்கரித்தனர்; விசையுடன்
கிளர்ந்து உயரக் குதித்தனர்;
உகவை விஞ்ச வெங் கதையைச் சுழற்றினர்; உயர் விசும்பு எறிந்து,
ஒரு கைப் பிடித்தனர்;
முகம் மலர்ந்து நின்று, அதிரச் சிரித்தனர்; முதிர வஞ்சினம் பல
கட்டுரைத்தனர்;-
மகிபர் கண்ட கண்டவர் சித்தம் உட்கிட, வரை இரண்டு வெஞ்
சமர் கற்பது ஒக்கவே.

மகிபர் கண்ட கண்டவர் – பார்த்த பார்த்த அரசர்களெல்லாம்,
சித்தம்உட்கிட-மனந்திடுக்கிடும்படி, வரை இரண்டு – இரண்டு  மலைகள், வெம்
சமர்கற்பது ஒக்க-கொடிய போரைப் பழகுவதை ஒக்கும்படி, (இருவரும்) வெகுளி
கொண்டு கொண்டு –  கோபத்தை மிகுதியாகக் கொண்டு, எதிர் கொக்கரித்தனர் –
எதிரேகர்ச்சித்தார்கள்; விசையுடன் – வேகத்தோடு, உயர கிளர்ந்து குதித்தனர் –
மேலே எழும்பிக் குதித்தார்கள்; உகவை விஞ்ச – களிப்புமிக, வெம் கதையை
சுழற்றினர் – கொடிய கதாயுதத்தைச்சுழற்றி, உயர்விசும்பு எறிந்து – உயர்ந்த
ஆகாயத்தில் வீசி, ஒரு கை பிடித்தனர்-ஒருகையால் (மீளவும்) ஏந்திப்பிடித்தார்கள்;
முகம் மலர்ந்து நின்று – முகமலர்ச்சிபெற்று நின்று, அதிர – அதிரும்படி,
சிரித்தனர்- சிரித்தார்கள்; முதிர – மிகுதியாக, வஞ்சினம் பல – பல சபதங்களை,
கட்டுஉரைத்தனர்-உறுதியாகச் சொன்னார்கள்; (எ-று.) உகத்தலுக்கும்,
முகமலர்தலுக்குங்காரணம் – ஒத்த வீரனோடு போர்நேர்ந்தமை, ஒருவர்
செய்வதைமற்றவருஞ் செய்வதால், ‘கற்பதொக்க’ என்றார். பி-ம்: விசையுடன்
சினந்து.

இகலி வெங் கொடுங் கதை ஒத்து மொத்து ஒலி, இடியின் வெங் கொடுங்
குரல் ஒத்து, ஒலித்தன;
மகிதலம் பிளந்தது; சர்ப்ப வர்க்கமும் வயிறு அழன்று, நஞ்சுகள்
கக்கியிட்டன;
திகிரி அம் தடங் கிரி பக்கு நெக்கது; செவிடுகொண்டு அயர்ந்தன,
திக் கயக் குலம்;
முகடு விண்டது, அண்டமும் அப்புறத்து உற; முகில்களும், பெருங்
குகை புக்கு ஒளித்தவே.

இகலி – (இருவரும்) பகைத்து, வெம் கொடு கதை – மிகவுங்
கொடியகதாயுதத்தால், ஒத்து மொத்து ஒலி – ஒருங்கே தாக்குதலினாலுண்டாகிற
ஓசை,இடியின் வெம்கொடுகுரல்ஒத்து – மிகவும் கொடிய இடியின் முழக்கத்தைப்
போன்று,ஒலித்தன-; (அதனால்), மகி தலம் பிளந்தது – பூமியிடம் பிளவுபட்டது;
சர்ப்பவர்க்கம்உம் – (பாதாளத்திலுள்ள)  பாம்புக்கூட்டங்களும், வயிறு அழன்று –
(அச்சத்தால்) வயிறு வெதும்பி நஞ்சுகள் கக்கியிட்டன – விஷங்களை வெளியிற்
கக்கின; அம் திகிரி தட கிரி – அழகிய பெரிய சக்கரவாளமலை, பக்கு நெக்கது –
பிளவுபட்டுச்சிதைந்தது, திக் கயம் குலம் -திக்கஜங்களின் கூட்டம், செவிடு
கொண்டு அயர்ந்தது – செவிடாகித் தளர்ந்தது;அப்புறத்து அண்டம்உம் உற –
(இவ்வண்டத்துக்கு) அப்பாலுள்ள அண்டங்களுமுட்பட, முகடு விண்டது –
மேல்முகடு பிளந்தது; முகில்உம் – மேகங்களும்,  பெருகுகை புக்கு ஒளித்த –
(அஞ்சிப்) பெரிய மலைக்குகைளிற் போய் மறைந்தன;(எ- று.)-வெங்கொடு –
ஒருபொருட்பன்மொழி.  திகிரியங்கிரி. அம் -சாரியையாகவுமாம். அப்புறத்து
அண்டம் – பகிரண்டம்.

விழிகளும் சிவந்தன; நெற்றியில் பொறி வெயர்வு வந்து அரும்பின,
இப்பி முத்து என;
மொழிகளும் கிளம்பின, நெட்டிடிப்பு என; முரி முரிந்த, வண் புருவச்
சிலைத் துணை;
எழிலுடன் பரந்து இறுகித் தடித்தன, இமய மந்தரங்களொடு ஒத்த
பொற் புயம்;
அழியும் அங்கம் என்று, ஒரு சற்று இளைத்திலர்; அமரில் அன்று,
அருங் கதை இட்டு, அடிக்கவே.

விழிகள்உம் – (இருவர்) கண்களும், (கோபத்தால்), சிவந்தன-;
இப்பிமுத்து என – சிப்பியில்நின்றுந்தோன்றுகிற முத்துக்கள் போல, நெற்றியில் –
நெற்றியிலே, வெயர்வு பொறி –  வேர்வை நீர்த்துளிகள்,  வந்து அரும்பின –
வந்துதோன்றின; நெடு இடிப்புஎன – பெரிய இடிபோல, மொழிகள்உம் கிளம்பின –
வீரவாதச் சொற்களும் உண்டாயின; வண் புருவம் சிலை துணை – அழகிய
விற்போன்ற இரண்டுபுருவங்களும், முரி முரிந்த – மிக நெறிப் புற்றன; இமய
மந்தரங்ளொடு ஒத்த – இமயமலையோடும் மந்தர மலையோடுஞ் சமமான, பொன்
புயம்  – அழகிய தோள்கள், எழிலுடன் பரந்து – அழகுடனே பரவி, இறுக
தடித்தன – நன்றாகப் பருத்தன; அமரில் – போரில், அன்று – அப்பொழுது, அரு
கதை இட்டு  அடிக்க – அரிய கதாயுதத்தைக்கொண்டு அடிக்கப்படுதலால், அங்கம்
அழியும் என்று-உடம்பு சிதையு மென்று, ஒரு சற்று இளைத்திலர்-(ஒருவரும்)
மிகச்சிறிதும் இளைத்தாரில்லை;( எ- று.)-மலையரசனாதலால் இமயமும், கடலைக்
கலக்கியதாதலால் மந்தரமும் உவமை கூறப்பட்டன.

எதிர் மலைந்த வெஞ் சமர் இப்படிக்கு இவர் இரிதல் இன்றி
மொய்ம்புற உத்தரிக்கவும்,
உதரம், நெஞ்சு, உரம், புயம், மெய், கழுத்து, என உரை செய்
அங்கம் ஒன்றினும் உற்று உறைத்தில;
கதைகளும் பிளந்து, ஒடிபட்டு எடுத்தன; கரதலங்களும்
கருகிச் சிவந்தன;
முதிர் சினம் கொளுந்தலின், முற்றும் விட்டிலர்; முரணுடன்
தொடங்கினர், முட்டி யுத்தமே.151.- ஐந்துகவிகள் – இருவரும் பின்பு  முட்டியுத்தந்தொடங்க
வீமன் துச்சாதனனையழித்தமைகூறும்.

இவர் – வீமனும் துச்சாதனனும், எதிர் மலைந்த – எதிர்த்துச் செய்த,
வெம் சமர் – கொடிய யுத்தத்தில், இப்படிக்கு – இவ்வாறு, இரிதல் இன்றி –
நிலைகெடுத லில்லாமல், மொய்ம்புஉற – வலிமை பொருந்த, உத்தரிக்கஉம் –
தாக்கிப்போர்செய்யவும்,-உதரம் – வயிறும், நெஞ்சு – நெஞ்சும், உரம் – மார்பும்,
புயம் – தோள்களும், கழுத்து – கழுத்தும், என – என்று, உரை செய் –
சொல்லப்படுகிற, மெய் அங்கம் ஒன்றின்உம் – உடம்பின் உறுப்பு ஒன்றிலும்,
உற்று உறைத்தில- (கதைகள்) போய்ப்படவில்லை, கதைகளும்-, பிளந்து ஒடிபட்டு –
பிளவுபட்டு ஒடிந்து, எடுத்தன கர தலங்கள்உம் – (அக்கதைகளை) எடுத்தனவாகிய
கைகளினிடங்களும், கருகிசிவந்தன – கறுத்துச்சிவந்துவிட்டன; இவர் – இவர்கள்,
முதிர் சினம் கொளுந்தலின் – மிகுந்த கோபம் மூண்டதனால், முற்றுஉம் விட்டு –
ஆயுதங்களையெல்லாம் ஒழித்து விட்டு, முட்டி யுத்தம் – முட்டியினாற்செய்கிற
போரை, முரணுடன் – வலிமையோடு, தொடங்கினர்-; (எ – று.)- முஷ்டியுத்தம் –
கைக்குத்துப் போர். பி-ம்: விட்டிலர்

விரல்கள் ஐந்தையும் செறியக் குவித்து, ஒளி மிகு நகம் புதைந்திட
உட் புதைத்து, இரு
கரதலங்களும் சிகரப் பொருப்பிடை கரிய கொண்டல் மண்டு உரும்
ஒத்து இடித்திட,
அருளுடன் சிறந்து அறன் உற்ற கொற்றவன் அநுசனும், தயங்கு
உரகத் தனிக் கொடி
நிருபர்தம் பெருந்தகை முன் கனிட்டனும், நினைவுடன் கலந்து, எதிர்
குத்தியிட்டபின்.

இதுமுதல் நான்கு கவிகள் – ஒருதொடர்.

     (இ-ள்.) அருளுடன் கருணையுடனே, சிறந்த அறன்-மேலான தருமமும்,
உற்ற- பொருந்திய கொற்றவன் – வெற்றியையுடைய யுதிட்டிரனது, அனுசன்உம் –
உடன்பிறந்தவனாகிய வீமனும், தயங்கு – விளங்குகிற, தனி – ஒப்பற்ற, உரகம்
கொடி- பாம்புக் கொடியையுடைய, நிருபர்தம் பெருந் தகை – அரசர்களுக்கெல்லாம்
அரசனாகிய துரியோதனனது, முன் கனிட்டன்உம் – முதல் தம்பியாகிய
துச்சாதனனும்,  நினைவு உடன் கலந்து -(தாம்தாம்வெல்லவேண்டுமென்ற)
எண்ணத்துடனே (ஒருவரோடொருவர்) கைகலந்து,  விரல்கள் ஐந்தைஉம் செறிய
குவித்து – ஐந்து விரல்களையும் ஒரு சேர நெருங்கும்படி மடக்கி, ஒளி மிகு நகம்
புதைந்திட – ஒளிமிகுந்த நகம் பதியும்படி உள்புதைத்து – நான்குவிரல்களினிடையே
கட்டை விரலை வைத்து, இரு கரதலங்கள்உம் – இரண்டுகைகளி னிடங்களாலும்,
சிகரம் பொருப்பிடை – சிகரங்களையுடைய மலையிலே, கரிய கொண்டல் – கறுத்த
(நீர்கொண்ட) மேகம், மண்டு – கர்ச்சிக்கிற, உரும் ஒத்து – இடியைப் போன்று,
இடித்திட – இடிக்கும்படி , எதிர் குத்தியிட்டபின் – எதிரே குத்தின பின்பு,-
(எ – று.)- “தகர்த்து ***கலக்கி” என்க.

     சிறந்தறன் – அகரம் தொகுத்தல், அருள் அறத்திற்குக்காரணமாதலால்,
‘அருளுடன் சிறந்தறனுற்ற கொற்றவன் என்றார்.   

அனிலன் மைந்தன் என்று உரை பெற்ற கொற்றவன், அரசன் முந்து
தம்பியை மத்தகத்திடை
கனல் கொளுந்த வந்து அதிரத் தகர்த்து, இரு கவுள் நெரிந்து, வண்
செவி உட் கரக்கவும்,
முனை சிதைந்து உரம் பெறு பல் தெறிக்கவும், மொழிகளும் தளர்ந்தன
முற்று ஒளிக்கவும்,
மினலினும் சிவந்து ஒளி மிக்க அற்புத விழி பிதுங்கவும், பெருகக்
கலக்கியே,

அனிலன் மைந்தன் என்று – வாயுகுமாரனென்று, உரைபெற்ற-
பேர்பெற்ற, கொற்றவன் – வெற்றியையுடைய வீமன். அரசன் முந்து தம்பியை –
துரியோதனனது முதல்தம்பியான துச்சாதனனை, மத்தகத்துஇடை-தலையிலே,
கனல்கொளுந்த – நெருப்புப்பொறி சிந்தவும், அதிர – அதிர்ச்சியடையவும் முந்து –
முன்னே, தகர்த்து – குத்தி,-இருகவுள் – இரண்டுகன்னங்களும், நெரிந்து –
நொருங்கி, வண் செவிஉள் கரக்கஉம் – அழகியகாதுகள் உள்ளே மறையவும்,
முனை சிதைந்து – நுனி ஒடிந்து, உரம்பெறுபல்தெறிக்க உம் – வலிமைபெற்ற
பற்கள் சிந்தவும், மொழிகள்உம் – சொற்களும், தளர்ந்தன – தளர்ச்சிபெற்றனவாகி,
முற்றுஒளிக்கஉம் – முழுவதும் இல்லையாகி, மறையவும் மினலின்உன் –
மின்னலைக்காட்டிலும், சிவந்து- செம்மையாகி, ஒளி பெற்ற – ஒளியைப்பொருந்திய,
அற்புதம் விழி – வியக்கத்தகுந்த கண்கள், பிதுங்கஉம் – வெளியிற் புறப்பட்டு
விடவும், பெருக கலக்கி – மிகுதியாகக் கலங்கச்செய்து, -(எ- று.)- “திருப்பி” என்க.
பி-ம்: கொளுந்தவந்து, ஒளிமிக்க.

பத யுகங்கள் அங்குலி தொட்டு உறுப்பு உள பலவும் என்புடன் தசை
பற்று விட்டு அற,
விதவிதம் படும் புடைபட்டு இடிப்புற, விசி நரம்பு சந்துகளில்
தெறித்து இற,
மதுகை அம் தடம் புய வெற்பு அற, பல வரையுடன் பொருந்திய
நல் கழுத்து அற,
முதுகிலும் கவின் பெற உற்பவித்தென முகனையும் புறம்
திருகத் திருப்பியே,

பத யுகங்கள் இரண்டு கால்களும், அங்குலி – விரல்களும்,
தொட்டு -தொடங்கி, உறுப்பு உள பலஉம்-உள்ள பல அவயவங்களும், என்புடன்
தசை பற்றுவிட்டு்- எலும்போடு சதைக்கு உள்ள சம்பந்த மொழிந்து, அற-
அழியவும்,-வித விதம்படும் புடை பட்டு – பலவகைப்பட்ட குத்துப்பட்டு, இடிப்பு
உற இடிபடுதலால், விசிநரம்பு -கட்டுப்பட்ட நரம்பு, சந்துகளில்தெறித்திட –
சந்துகளிலே சிந்திவிடவும்,-மதுகை – வலிமையையுடைய, அம் – அழகிய, தட –
பெரிய, புயம் வெற்பு -மலைகள்போன்ற தோள்கள், அற – அறுபடவும்-பல
வரையுடன் பொருந்திய – பலஇரேகைகளோடு கூடின, நல் கழுத்து – அழகிய
கழுத்தும், அற – அறுபடவும்,(முட்டியினாற்குத்தியபின்), முதுகிலும் கவின்பெற
உற்பவித்து என – (முகம்)பின்புறத்திலும் அழகுபொருந்தத் தோன்றினாற்போல,
முகனைஉம் – முகத்தையும்,புறம்திருக – பின்னே திரும்பும்படி, திருப்பி-,
(எ – று.)- “பற்றியிட்டு …..இழுத்து….. ஒளிசிறந்தனன்” எனமுடியும். நல்கழுத்து –
உத்தமவிலக்கணமைந்த கழுத்து என்றுமாம்.

மயிரை வன் கரம்கொடு உறப் பிடித்து, எதிர் வர விழுந்திடும்படி பற்றி
இட்டு, உடல்
அயிர் படும் கடுந் தரையில் துகள்பட, அடி இரண்டினும் சரியத்
துகைத்து, எழு
செயிருடன் பெருந் தொடை தொட்டு இழுத்து, அணி திகழ் உரம்
புகுந்து அவுணக் குலத்து இறை
உயிர் கவர்ந்த சிங்கமொடு ஒப்புறத் தனது ஒளி சிறந்தனன்,
கடிது உக்கிரத்தொடே.

கடிது உக்கிரத்தொடு – மிகுதியான கோபத்தோடு மயிரை-, வல்
கரம்கொடு உற பிடித்து – வலிய கைகளால் உறுதியாகப் பிடித்து, எதிர் வர
விழுந்திடும்படி – எதிரிலே பொருந்த விழும்படி, பற்றி இட்டு – இழுத்துத்தள்ளி,
உடல் – உடம்பை, அயிர்படும் கடு தரையில் – மணல்கள் பொருந்திய வலிய
பூமியிலே, துகள் பட – புழுதி படும்படி, அடி இரண்டின்உம் – இரண்டு
கால்களாலும், சரிய துகைத்து – அழுந்த மிதித்து, எழு செயிருடன் – உண்டாகிற
கோபாவேசத்துடனே, பெரு தொடை தொட்டு இழுத்து-பெரிய தொடைகளைப்
பிடித்து இழுத்து, அணி திகழ்உரம் பகுந்து-அழுகு விளங்குகிற மார்பைப்பிளந்து,
அவுணர் குலத்து இறை – அசுரர்கூட்டத்துக்குத்தலைவனான இரணியனது, உயிர் –
உயிரை, கவர்ந்த – கொள்ளைகொண்ட,சிங்கமொடு – நரசிங்கமூர்த்தியோடு, ஒப்பு
உற – ஒக்கும்படி, தனது ஒளி சிறந்தனன் -தன்னுடைய ஒளி மிகுந்தான்; (எ- று.) –
பி-ம்: மயிர்கரங்கள் கொண்டிறுகப்பிடித்து.

உகிர் எனும் பெரும் பெயர் பெற்ற சொட்டைகள் உருவி, எங்கணும்
புதைபட்டு, உரத்தலம்
வகிரவும், கொடுங் குடர்வட்டம் அற்று உகு வயிறு தொங்கவும்,
கிழிவித்த பின்,-செறி
துகிர் பரந்த செம் பவர் ஒத்த நெட்டுடல் சொரிதரும் செழுங்
குருதிப் பெருக்கிடை,
பகிரதன் தரும் கடவுள் துறைப் புனல் படியும் உம்பர்தம்
பரிசின், குளிக்கவே,156.-  துச்சாதனன்குருதிப்புனலில் வீமன் நீராடுதல்.

இதுவும்மேற்கவியும் – ஒருதொடர்.

     (இ-ள்.) உகிர் எனும் பெரு பெயர் பெற்ற-நகமென்னும் பெரிய பெயரைப்
பெற்ற, சொட்டைகள் – ஆயுதங்கள், உருவி – ஊடுருவி, எங்கண்உம் -(உடம்பு)
முழுவதும், புதைபட்டு – அழுந்துதலால், உரம் தலம் வகிரஉம் – மார்பினிடம்
பிளவுபடவும்,-கொடு குடர்வட்டம்  அற்று – கொடிய குடலின் சுற்று அறுபட்டு,
உகுவயிறு தொங்கஉம் – விழுகிற வயிறு தொங்கும்படியாகவும், கிழிவித்தபின்-
கிழியச்செய்தபின்பு, செறி துகிர் உடைந்த செம்பவர் ஒத்த – சிறந்த பவழம் பிளந்த
இடத்துள்ள சிவந்த நிறத்தைப் போன்ற, நெடு உடல் சொரி தரும் செழு குருதி
பெருக்கிடை-பெரிய உடம்பினின்று வழிகிற செழுமையான இரத்த வெள்ளத்தில்,
பகிர தன் தரும்கடவுள்துறை புனல் – பகீரதனாற் (பூலோகத்துக்குக்) கொணரப்பட்ட
தெய்வத்தன்மையையுடைய ஆகாசகங்காநதியின் நீர்த்துறையில், படியும் – நீராடுகிற,
உம்பர்தம் பரிசின் – தேவர்களின் தன்மைபோல, குளிக்க – (அருவருப்பில்லாமல்
மனமகிச்சியோடு விரும்பி) நீராடுமாறு,- (எ – று.)- “தருமனுக்கிளையோன்…
ஏற்றுதலும்” என்க. பி-ம்: துகிர்பரந்த.

     பகீரதன் – சூரியகுலத்துப் பேர்பெற்றற ஓர் அரசன்; இவன்,
கபிலமகாமுனிவரதுகோபத்தீக்கு இரையாய்ச் சாம்பரான தமது
மூதாதையராகியசகரபுத்திராறுபதினாயிரவரையும் நற்கதிபெறச்செய்யும் பொருட்டுப்
பலவாயிரம் வருஷகாலம் பெருந்தவஞ்செய்து தேவலோகத்துஉள்ள கங்காநதியைப்
பூமிக்குக் கொணர்ந்து அங்கிருந்து பாதாளத்துக்கு அழைத்துக்கொண்டுபோய்
அதன்நீரினால் அவர்கள் சாம்பலை நனைத்தானென்பது, கதை

மன்னற்கு இளையோனை வாள் தருமனுக்கு இளையோன்
துன்னிப் பிளந்து, சுரர் உலகம் ஏற்றுதலும்,
கன்னற்கும் மற்று உள்ள காவலர்க்கும் நில்லாமல்,
வென்னிட்டது, அம் மன்னன் வீரப் பெருஞ் சேனை157.-அப்போது துரியோதனன்சேனை வென்னிடல்.

மன்னற்கு இளையோனை – துரியோதனன் தம்பியை, வாள்
தருமனுக்கு இளையோன் – ஒளியையுடைய தருமனது தம்பி,  துன்னி – நெருங்கி,
பிளந்து-, சுரர் உலகம் ஏற்றுதலும்-தேவலோகத்தை யடையச் செய்தவளவில்,-அ
மன்னன்-அத் துரியோதனனது, வீரம் பெருசேனை – வீரத்தன்மையையுடைய
பெரியசேனையானது, கன்னற்குஉம் – (சேனாபதியான) கர்ணனுக்கும். மற்று உள்ள
காவலர்க்குஉம் – மற்றுமுள்ள அரசர்களுக்கும், நில்லாமல்-(தடுக்கவுந்)
தடைப்பட்டுநிற்காமல், வென்இட்டது-முதுகுகொடுத்து ஓடிற்று; (எ – று,)

     இதுமுதல் இருபத்தொருகவிகள் – பெரும்பாலும் வெண்டளையால் வந்த
நாற்சீர் நான்கடிக்கொச்சகக்கலிப்பாக்கள். 

வண்டு ஆரவாரம் அறாத நறும் பூந் துளபத்
தண் தார் முடியோனும், விற் கைத் தனஞ்சயனும்
கண்டார்; அவர் முதலாம் காவலரும் கைகலந்தார்;
வெண் தாரகை பரந்த விண் ஒத்தது, ஆகவமே.158.- வீமன் துச்சாதனனைக் கொன்றது கண்டு
க்ருஷ்ணார்ச்சுனர் முதலோர் உடன்கூடுதல்

வண்டு் ஆரவாரம் அறாத – வண்டுகளின் பேரொலி நீங்காத,
நறு -வாசனை வீசுகிற, பூ – அழகிய, தண் – குளிர்ந்த, துளபம் –
திருத்துழாயினாலாகிய,தார் – மாலையையுடைய, முடியோன்உம் – முடியையுடைய
கண்ணணும், வில் கைதனஞ்சயன்உம் – வில்லைப்பிடித்த கையையுடைய
அருச்சுனனும், அவர் முதல் ஆம் காவலர்உம் – அவர்முதலிய அரசர்களும்,
கண்டார் – (வீமன் துச்சாதனனைக்கொன்றதைப்)பார்த்து, கைகலந்தார் – உடன்
கூடினாராக, ஆகவம் -(பாண்டவசேனை நின்ற) போர்க்களம், வெண் தாரகைபரந்த
விண் – வெண்மையானநட்சத்திரங்கள் பரவிய ஆகாயத்தை, ஒத்தது-; (எ- று.)

     கைகலந்தார் என்பது முற்றெச்சமாய், கைகலக்க வென்னும் பொருள் தந்து
நின்றது; இதனை முற்றாகவேகொண்டு பொருளுரைத்தால், ஏகவாக்கியமாகாது
பின்னவாக்கியமாகும்.      

வேகம் மிகும் செந் தீயில் மேல் நாள் அவதரித்த
தோகை குழலும் துகிலும் உடன் தொட்டன’ என்று,
ஆகம் உறப் பிளந்த ஆண்தகை, மீண்டு, அவ் வீரன்
பாகம் உறு கை விரல்கள் பத்தும் துணித்தானே159.-வீமன் திரௌபதி கூந்தலைப்பற்றியவை இவையென்று மீண்டுந்
துச்சாதனன் கைவிரல்பத்தையுந் துணித்தல்.

ஆகம் உற பிளந்த – துச்சாசனனுடம்பை நன்றாகக்கீண்ட,
ஆண்தகை -ஆண்மைக்குணமுள்ள வீமன், அ  வீரன் – வீரனாகிய
அத்துச்சாசனனது, பாகம்உறு கை விரல்கள் பத்துஉம் – கூறாகப்பொருந்திய
கைகளின் பத்துவிரல்களையும்,'(இவை), வேகம் மிகும் செம் தீயில் உக்கிரத்தன்மை
மிகுந்த செம்மையாகியநெருப்பில், மேல் நாள் அவதரித்த – முன்னே பிறந்த,
தோகை மயில் போலுஞ்சாயலையுடைய திரௌபதியின், குழல்உம் – கூந்தலையும்
துகில்உம் -சேலையையும், உடன் தொட்டன – ஒருங்கேதொட்ட
குற்றமுடையவையாம்,’ என்று- என்றுஎண்ணி, மீண்டு – மறுபடியும், துணித்தான் –
தனித்தனி அறுத்தான்

தண்ணீர் நிகர் எனத் துச்சாதனன் தன் மெய்யில் இழி
புண்ணீர் பருகப் புகுவோனை, யாவருக்கும்
கண்ணீர் வரத் தடுத்தான்-காணுங்கால், எத்திறத்தும்
வெண் நீர்மை இல்லாத மேகம்தனைப் போல்வான்.160.-துச்சாதனனிரத்தத்தை வீமன் குடிக்கப்புகக்
கிருஷ்ணன் தடுத்தல்.

காணுங்கால்-பார்க்குமிடத்தில், எ திறத்துஉம் – எல்லாவகையாலும்,
வெண் நீர்மை இல்லாத மேகந்தனை போல்வான்- வெண்ணிறமில்லாத (மிகக்கரிங்)
மேகத்தை ஒப்பவனாகிய கண்ணபிரான், துச்சாதனன்தன் மெய்யில் இழி புண்நீர் –
துச்சாதனனுடம்பிலிருந்து வழிகிற இரத்தத்தை, தண் நீர் நிகர் என-குளிர்ந்த நீரை
ஒக்கு மென்னும்படி, பருக புகுவோனை – குடிக்கத் தொடங்குகிற வீமனை,
யாவருக்குஉம் கண் நீர் வர – எல்லோர்க்கும் (இரக்கத்தால் கண்களில்)
நீர்வருவதைநோக்கி, தடுத்தான் – (குடிக்கவேண்டாமென்று) தடைசெய்தான்;(எ- று.)

     கருநிறத்தாலும் கைம்மாறு கருதாது கருணைமழைபொழிதலாலும்
காத்தற்றொழிலாலும் குளிர்ச்சியினாலும்ஒத்திருத்தலால், ‘எத்திறத்தும் மேகந்தனைப்
போல்வான்’ என்றார்.   

குடியாமல் அக் குருதி கொப்பளித்து, வாகை
முடியாநின்று, ‘என் எண்ணம் முற்றினன்’ என்று ஆங்கண்
படி ஆளும் செங்கோன்மைப் பார்த்திவருக்கு எல்லாம்
கொடி ஆர் மடங்கல் எனக் கூத்தாடி நின்று ஆர்த்தான்.161.-துச்சாதனன்குருதியைக் கொப்பளித்து என் எண்ணம்
முற்றியதென்று வீமன் கூத்தாடுதல்.

(வீமன்), -குடியாமல் அ குருதி கொப்பளித்து- (வாயிற்கொண்ட)
அவ்விரத்தத்தை(க் கண்ணன் வார்த்தையினாற்) பருகாமல் உமிழ்ந்துவிட்டு, வாகை
முடியாநின்று – வெற்றிமாலையைச்  சூட்டிக்கொண்டு நின்று ஆங்கண் –
அவ்விடத்திலுள்ள, படி ஆளும் செங்கோன்மை – பூமியை ஆளுகிற
அரசாட்கிமுறையின் தன்மையையுடைய, பார்த்திவருக்கு எல்லாம் –
அரசர்களிடத்தெல்லாம், என் எண்ணம் முற்றினன் என்று – எனது நினைப்பை
நிறை வேற்றினனென்று சொல்லி, கொடி ஆர்மடங்கல் என – (தன்) கொடியிற்
பொருந்திய சிங்கம்போல, கூத்தாடி நின்று ஆர்த்தான் – கூத்தாடிக்கொண்டு
ஆரவாரித்து நின்றான்

துன்பம் உறும் துன்னீதித் துச்சாதனன் போர் செய்து,
ஒன்பதின்மர் தம்பியரோடு உம்பர் ஊர் புக்கான்’ என்று,
அன்புடைய தம்முன் அடி வீழ்ந்து அகங்கரித்தான்-
வன்புடைய தாதையினும் மிக்க வலியோனே162.- துச்சாதனன் ஒன்பதுதம்பிமாரோடும் இறந்தமையை
வீமன் கூறிச்செருக்குதல்.

வன்பு உடைய – வலிமையையுடைய, தாதையின்உம் – தன்
தந்தையாகிய வாயுவைப்பார்க்கிலும், மிக்க வலியோன் – மிகுந்த
வலிமையையுடையவீமன், ‘துன்பம் உறும் – (பிறர்க்குத்) துன்பத்தைத் தருகிற,
துன் னீதி – கெட்டநியாயங்களையுடைய, துச்சாதனன்-,போர்செய்து-,ஒன்பதின்பர்
தம்பியரோடு -ஒன்பது பேர்தம்பிமாருடனே, உம்பர் ஊர்புக்கான் -தேவலோகத்தை
அடைந்தான், ‘என்று – என்றுசொல்லி, அன்பு உடைய தம்முன்-அன்பையுடைய
தமையனாகிதருமனது, அடி வீழ்ந்து-திருவடிகளில் (வந்து) விழுந்து (நமஸ்கரித்து),
அகங்கரித்தான் – செருக்குக்கொண்டுகளித்தான்; (எ – று.)-துன்னீதி – அநியாயம்:
துர்நீதி யென்பதன் விகாரம்;  சுநீதிஎன்பதன் எதிர்மொழி

பாண்டவர்கள் சேனை மதி கண்ட பௌவம் என,
காண்டவம் அன்று உண்ட கனல்போல், நனி தருக்கி,
மூண்ட நிலை கண்டு, முதுகிடு தன் சேனையுடன்
மீண்டும் எதிர் ஊன்றாமல், வெய்யோன் மகன் நின்றான்.163.-பாண்டவசேனை தருக்கியிருப்பதுகண்டும் கர்ணன்
தன்சேனையோடு எதிர்க்காமல் வாளாவிருத்தல்.

வெய்யோன் மகன் – வெப்பத்தையுடைய சூரியனது குமாரனான
கர்ணன், பாண்டவர்கள் சேனை-, மதி கண்ட பௌவம் என – பூர்ணசந்திரனைப்
பார்த்த கடல்போலவும், அன்று காண்டவம் உண்ட கனல்போல் – அந்நாளிற்
காண்டவவனத்தை உணவாகக் கொண்ட அக்கினிபோலவும், நனிதருக்கி-மிகவுஞ்
செருக்குக்கொண்டு, மூண்ட நிலை – மேல்வந்த விதத்தை, கண்டுஉம் – பார்த்தும்,
முதுகு இடு – புறங்கொடுத்துப்போகிற, தன் சேனையுடன் – தனது சேனையுடனே,
மீண்டுஉம் எதிர் ஊன்றாமல் – மீளவும் எதிரே சென்று போர்செய்யாமல்,
நின்றான் -வாளாவிருந்தான்;

மேல்கொண்டு பாண்டவர்தம் வெஞ் சேனை சூழ்ந்திடவும்
மால் கொண்டவர் போல மாண்டாய்!’ எனக் கழறி,
கால் கொண்ட திண் தேர் கடாவினான், கை உளவு
கோல் கொண்டான்; கன்னனும் அக் கூற்றுக்கு எதிர் கூறும்:164.-வாளாவிருத்தற்குக் கர்ணனையிடித்துக்கூறிச்
சல்லியன் தேரைச் செலுத்தலுறல்.

கை உளவுகோல் கொண்டான் – கையிற் குதிரை யோட்டுங்
கோலைக்கொண்ட சாரதியாகிய சல்லியன்,-(கன்னனை நோக்கி), ‘வெம் – கொடிய,
பாண்டவர்தம் சேனை-, மேல்கொண்டு – மேலேவந்து, சூழ்ந்திடஉம் –
சுற்றிக்கொள்ளவும், (எதிர்சொல்லாமல்), மால் கொண்டவர் போல –
மயக்கங்கொண்டவர்கள்போல, மாண்டாய்-(வலி) அழிந்தாய்,’ என கழறி என்று
இடித்துச்சொல்லி,-கால் கொண்ட திண்தேர் – சக்கரங்களைக்கொண்ட வலிய
தேரை,கடாவினான் – செலுத்தினான்; கன்னனும்-, அ கூற்றுக்கு எதிர் கூறும் –
அச்சல்லியனது வார்த்தைக்கு உத்தரஞ்சொல்லுவானாயினான்; (எ -று,) – அது
மேற்கவியிற் கூறுகின்றார். கூற்று – கூறப்படுவது;  சொல், மாண்டாய், மாள் –
பகுதி.

வேந்தன் அனைய விறல் தம்பி வீமன் கை
மாய்ந்த நிலை கண்டு, மனம் தளர்ந்தது அல்லாது,
கூர்ந்த திறல் மத்திரத்தார் கோவே! வெருவுமோ,
பாந்தள் எதிர் செல்லப் பறவைக்கு அரசு?’ என்றான்165.-கர்ணன் ‘துச்சாதனனிறந்த சோகத்தாலிருந்த நிலை
இது’ என்று சமாதனாங் கூறுதல்.

கூர்ந்த திறல் – மிகுந்தவலிமையையுடைய, மத்திரத்தார் கோவே –
மத்திரநாட்டார்க்கு அரசனான சல்லியனே! வேந்தன் அனைய –
துரியோதனனைப்போன்ற, விறல்தம்பி – வலிமையையுடைய அவன் தம்பியாகிய
துச்சாதனன், வீமன் கை – வீமனதுகையினால்,  மாய்ந்த நிலை – இறந்தநிலையை,
கண்டு – பார்த்து, மனம்தளர்ந்தது அல்லாது – (யான்) மனத்தளர்ச்சிபெற்றதே
யல்லாமல், பறவைக்கு அரசு – பக்ஷிராஜனானகருடன், பாந்தள் எதிர் செல்ல –
பாம்புக்கு எதிரேபோவதற்கு, வெருவும்ஓ – அஞ்சுமோ?’ என்றான் – என்று
சொன்னான்; (எ- று.)

     யான் பகைவர் முன்னே செல்லுதற்குச் சிறிதும் அஞ்சமாட்டேனென்பது
தோன்ற நின்றமையால், பின்னிரண்டடி பிறிதுமொழிதல் என்னும் அணி

முன்னம் அமரில் முதுகிட்ட மன்னரையும்,
மன்னவர்கள் மன்னனையும், வன் பேர் அணி ஆக்கி,
பொன் அசலம் போலும் புனை பொற் கொடி நெடுந் தேர்க்
கன்னன், எதிர் ஊன்றினான், காயும் கனல் போல்வான்.166.-கர்ணன் முதுகிட்டோரையும் துரியோதனனையும்
பேரணியாக்கிப் பகைவரை எதிர்த்தல்.

(என்றுசொல்லி), காயும் கனல் போல்வான் – கொதிக்கிற
நெருப்புப்போன்ற கோபமுள்ளவனாகிய, பொன் அசலம் போலும் – பொன்
மலையாகியமேருபோன்ற, புனை – அழகிய, பொன் – பொன்னாலாகிய, கொடி
நெடுதேர் – கொடியையுடைய பெரியதேரையுடைய, கன்னன்-,-முன்னம்-முன்னே,
அமரில் – போரில், முதுகுஇட்ட – புறங்கொடுத்த, மன்னரைஉம் – அரசர்களையும்,
மன்னவர்கள் மன்னனைஉம் – இராசராசனான துரியோதனனையும், வல் பேர்
அணிஆக்கி – வலிய பெரிய படையாக வகுத்து, எதிர் ஊன்றினான் – எதிர்த்துச்
சென்றான்;

சேனாபதியான தேர்த் துருபதேயனும், வான்
மீனாம் எனப் பரந்த வேந்தருடனே, தனக்குத்
தான் ஆண்மைக்கு ஒப்பாம் தருமனையும் சேனையையும்,
மா நாகம் உட்க வகுத்து, ஆங்கு எதிர் நடந்தான்.167.-த்ருஷ்டத்யும்நனும் தம்பக்கத்தவரை அணிவகுத்து
எதிரே செல்லுதல்.

சேனா பதி ஆன – (பாண்டவ) சேனைத்தலைவனான, தேர்
துருபதேயன்உம் – தேரையுடைய துருபதாராஜகுமாரனான திட்டத்துய்மனும்,
ஆங்கு- அப்பொழுது, வான் மீன் ஆம் என பரந்த – ஆகாயத்தில் விளங்குகிற
நட்சத்திரங்கள்போலப்பரவிய, வேந்தருடனே – அரசர்களோடு, தனக்கு தான்
ஆண்மைக்கு ஒப்பு ஆம் – பராக்கிரமத்தில் தனக்குத் தானே உவமையாகிய
தருமனைஉம் – உதிட்டிரனையும், சேனையையும்-, மா நாகம் உட்க – (உலகத்தைத்
தாங்குகிற) மகாநாகங்களும் (பாரமிகுதியால்) அஞ்சும்படி, வகுத்து – படைவகுத்து,
எதிர் நடந்தான் – எதிரே சென்றான்; (எ-று.)-மின்னுவது மீன் எனக் கரணப்பெயர்

பொன் ஆர் முரசம் முதல் போர் வெம் பணையாலும்,
வில் நாண் ஒலியாலும், விண்ணோர் செவிடுபட;
பல் நாம பேதப் படை ஒளியாலும், பல பூண்
மின்னாலும், கண்கள் வெறியோடிவிட்டனவே.168.-பறையோசைமிகுதியும் ஆபரணங்களினொளி மிகுதியும்,

 பொன் ஆர் – அழகுபொருந்திய, முரசம் முதல் – பேரிகை
முதலான போர் வெம் பணையால்உம் – போருக்குரிய கொடிய வாச்சியங்களின்
பேரொலியாலும் வில் நாண் ஒலியால்உம் – வில்லின் நாணியின் டங்காரத்தொனி
மிகுதியாலும், விண்ணோர் – தேவர்களும், செவிடுபட – செவிடாய்விட,-பல் நாம
பேதம் படை  ஒளியால் உம் – பலவகைப்பட்ட பெயர்களையுடைய ஆயுதங்களின்
ஒளியினாலும், பல பூண் மின்னால்உம் – பலவகை ஆபரணங்களின் ஒளியாலும்,
கண்கள் வெறியோடிவிட்டன – (தேவர்கள்) கண்களுந் திகைப்படைந்துவிட்டன;
(எ- று.)

     ‘விண்ணோர்’ என்பதைக் கண்களோடுங் கூட்டுக, விண்ணுலகத்தவர் தன்மை
கூறவே, மண்ணுலகத்தவர் தன்மை தானே பெறப்படும், வெறியோடி விடுதல் –
ஒளிமிகுதியால் ஒளியிழத்தல்.   

யாமினியில் எவ் உயிர்க்கும் ஏற்ற துயில் மாற்றுவோன்
மா மதலை கோ மதலை மான் தேர் விடசேனன்,
நாம மணித் தேர்மேல், நகுலன்மேல் சென்று, சில
தாம முனை வாளி தழற் பொறிபோல் சிந்தினனே.169.-ஐந்துகவிகள் – கர்ணன்மகனான விடசேனன் நகுலனுடன்
பொருது அவனை மூர்ச்சித்துவிழச்செய்தலைக் கூறும்.

யாமினியில் – இராத்திரியில், எ உயிர்க்குஉம் –
எல்லாவுயிர்களுக்கும்.ஏற்ற – பொருந்திய, துயில் – தூக்கத்தை, மாற்றுவோன்-
(தான் உதித்து)ஒழிப்பவனாகிய சூரியனது, மா மதலை –  சிறந்த குமாரனான
கர்ணனது, கோமதலை – தலைமையான புத்திரனாகிய, மான் தேர் விடசேனன்-
குதிரைகளைப்பூட்டிய தேரையுடைய விருஷசேனனென்பவன்,-நாம மணிதேர்மேல்,
அச்சத்தைத்தருகிற மணிகளைக்கட்டிய தேரின்மேல், சென்று – போய், நகுலன்மேல்-
, தாமம் – ஒளியையும், முனை – கூர்மையைமுயுடைய, சில வாளி – சில
அம்புகளை, தழல் பொறி போல – நெருப்புப் பொறிகளைப்போல, சிந்தினன் –
இறைத்தான்; (எ-று.) – யாமினி – (மூன்று) யாமங்களையுடையது எனக் காரணப்
பெயர்

வெம் புரவித் திண் தேர் விசயற்கு இளையோனும்,
செம் பதுமக் கையில் சிலை நாண் ஒலி எழுப்பி,
கம்ப மத மால் யானைக் கன்னன் மகன் ஏவிய கூர்
அம்பு அடைய அம்பால் அறுத்து அறுத்து, வீழ்த்தினனே.

வெம் புரவி – கொடிய குதிரைகளைப் பூட்டிய, திண்தேர்-வலிய
தேரையுடைய, விசயற்கு இளையோன்உம் – அருச்சுனன் தம்பியாகிய நகுலனும்,
செம் பதுமம் கையில் – செந்தாமரைமலர் போன்ற கையிற்பிடித்த, சிலை-வில்லினது,
நாண் – நாணியின், ஒலி-தொனியை, எழுப்பி-உண்டாகச்செய்து,  கம்பம் –
கம்பத்திற்கட்டப்படுகிற, மதம் மால் – மதமயக்கத்தையுடைய, யானை –
யானைபோன்ற, கன்னன் மகன் – (கர்ணனது) குமாரனான விடசேனன், ஏவிய –
தொடுத்த, கூர்அம்பு அடைய – கூர்மையையுடைய அம்புகளையெல்லாம்,
அம்பால் – (தன்)அம்புகளினால், அறுத்து அறுத்து வீழ்த்தினன் –
துணித்துத்துணித்துக் கீழேதள்ளினான்;

அண்டர் பெருமானுக்கு அம் பொற் கவசமுடன்
குண்டலமும் ஈந்தோன் குமரன் கொடுங் கணையால்,
மண்டு கனல் அருந்த வன் காண்டவம் எரித்த
திண் திறலோன் தம்பி தடந் தேர்க் கால்களை அழித்தான்.

அண்டர்பெருமானுக்கு – தேவர்களுக்குத்தலைவனான இந்திரனுக்கு,
அம் பொன் கவசமுடன் – அழகிய பொன்னாலாகிய கவசத்தோடு, குண்டலம்உம் –
குண்டலங்களையும், ஈந்தோன் – தானஞ் செய்த கர்ணனது, குமரன் – குமாரனாகிய
விருஷசேனன், கொடுகணையால் – (தனது)  கொடுமையான அம்புகளால், மண்டு
கனல் அருந்த – எரிகின்ற நெருப்பு உண்ணும்படி, வல் காண்டவம் – வலிய
காண்டவவனத்தை, எரித்த – தகிக்கச்செய்த, திண் திறலோன் – வலிய
பராக்கிரமத்தையுடைய அருச்சுனனது, தம்பி – தம்பியான நகுலனுடைய, தட தேர்
கால்களை – பெரிய தேரின் சக்கரங்களை, அழித்தான் – அழியச்செய்தான்

மற்று ஒரு தேர் ஏறி, மருத்துவர்தம் மைந்தனும், அக்
கொற்ற நெடுங் கச்சைக் கொடியோன் திருமைந்தன்
வெற்றி விலோதனமும் வெஞ் சாபமும் உடனே
அற்று விழ எய்தான்; அவன் ஆண்மைக்கு ஆர் எதிரே?

மருத்துவர் தம் மைந்தன்உம் – அசுவினீதேவர்களது மகனான
நகுலனும், மற்று ஒரு தேர் ஏறி – வேறொருதேரில் ஏறிக்கொண்டு, கொற்றம்
வெற்றிக்கு அடையாளமான, நெடு – நீண்ட, கச்சை கொடியோன் –
கச்சையினுருவத்தை யெழுதிய கொடியையுடைய கர்ணனது, அ திரு மைந்தன் –
மேன்மையான மகனாகிய அவ்விடசேனனது, வெற்றி விலோதனம்உம் –
ஜயத்துக்குஅடையாளமான கொடியும், வெம் சாபம்உம் – கொடியவில்லும்,
உடனே அற்று விழ- விரைவிலே அறுபட்டு விழும்படி, எய்தான் – அம்பெய்தான்;
அவன்ஆண்மைக்கு ஆர் எதிர் – அந்நகுலனது பராக்கிரமத்திற்கு எவர் தாம்
எதிராவார்? (எ- று.) – எவரும் எதிராகாரென்றபடி,

     மருத்துவர் – மருந்தை அறிந்தவர்: வைத்தியர் என்றபடி; இவர், தேவ
வைத்தியர், கச்சை-கஷ்யா: யானையின் வயிற்றிற்கட்டுங் கயிறு.   

மீண்டு, அவனும் வேறு ஒரு வில் மேரு என வாங்கி,
பாண்டவனை வீழும்படி எய்தான்; வீழ்ந்தோனை
மூண்ட அனல் செங் கண் முரண் வீமன் கொண்டு ஏக,
காண்டவம் நீறு ஆக்கினான், கண்டான் அவன் போரே.

அவன்உம் – விடசேனனும், மீண்டு – மீளவும், வேறு ஒரு வில்-
மற்றொரு வில்லை, மேரு என – மேருமலையைப்போல, வாங்கி,- எடுத்து
வளைத்து,பாண்டவனை – நகுலனை, வீழும்படி-(மூர்ச்சித்துக்கீழே) விழும்படி,
எய்தான் -அம்பெய்தான்; வீழ்ந்தோனை – (அங்ஙனம்) விழுந்த நகுலனை, அனல்
மூண்ட -நெருப்புப்பொறி எழும்பப்பெற்ற, செம் கண் – (கோபத்தாற்) சிவந்த
கண்களையும,முரண் – வலிமையையு முடைய,  வீமன்-, கொண்டு ஏக – எடுத்துக்
காண்டவவனத்தைச் சாம்பலாக்கின அருச்சுனன், அவன் போர் – அவ்விடசேனனது
போரை, கண்டான்; (எ – று.)-

     பாண்டவன்- பொதுப்பெயர் இங்குச் சிறப்பாய் நின்றது. 

நன் தூண் திகழ் மதியா, நாகம் பரு மத்தா,
அன்று ஊண் திரை மதியா, அண்டர்க்கு அமுது அளித்தோன்
முன் தூண்டிய தேரில் சென்றான்-முனை வாளி
மின் தூண்டில் வீசி, விடசேன மீன் படுப்பான்.174.-விடசேனனது ஆண்மைகண்டு
அருச்சுனன் அவனைக் கொல்லுமாறு செல்லுதல்.

 திகழ் மதி – விளங்குகிற சந்திரன், நல் தூண் ஆ –
நல்லதூணாகவும்,நாகம் – (மந்திர மென்னும்) மலை, பருமத்துஆ –   பருத்த
மத்தாகவும், திரை -அலைகளையுடைய பாற்கடலை, மதியா – கடைந்து, அன்று –
அந்நாளில்,அண்டர்க்கு-தேவர்களுக்கு, அமுது – அமிர்தத்தை, ஊண் – உணவாக,
அளித்தோன் – கொடுத்தருளின கண்ணன், முன் தூண்டிய – முன்னே நின்று
செலுத்தப்பெற்ற, தேரில் – தேரிலே, (அருச்சுனனாகிய வலைஞன்), முனை வாளி –
கூர்மையையுடைய அம்பாகிய, மின் தூண்டில் – விளங்குகிற தூண்டிலை, வீசி –
எறிந்து, விடசேனன் மீன் – விடசேனனாகிய மீனை, படுப்பான் – அகப்படுத்திக்
கொல்லும்பொருட்டு, சென்றான்-;(எ- று.)

     “மத்து மந்தரம் வாசுகி கடைகயி றடைதூண், மெத்து சந்திரன்” என்றார்,
கம்பரும். தூண்டில் – மீன்பிடிக்குங் கருவியிலொன்று. விடசேனமீன் –
உயர்திணையீறு விகாரமாயிற்று. அம்பைத் தூண்டிலாகவும் விடசேனனை மீனாகவும்
உருவகப்படுத்தினதற்கு ஏற்ப, அருச்சுனனை ‘வலைஞன்’ என்னாமையால்,
ஏகதேசவுருவகவணி. ஊண் திரை யென்றேஎடுத்து – உணவுக்குரியபாற்கடற்றிரை
யெனினுமாம். மீனைக்கூறியது துள்ளுந்தன்மைக்கேற்ப.  

தம்பி படும் துன்பம் தமையனையும் காண்பன்’ என
வெம்பி எதிர் சென்று, விடசேனன் வில் வாங்கி,
பம்பி வரு கொடித் தேர்ப் பார்த்தனையும் பாகனையும்
அம்பின் மறைத்தான், அடல் ஏறு அரி அனையான்.175.-விடசேனன் கடுமையாகப் பொருதல்.

அடல் – வலிமையையுடைய, அரி ஏறு – ஆண்சிங்கத்தை,
அனையான் – ஒத்தவனாகிய, விடசேனன்-, ‘தம்பி படும் துன்பம் – தம்பியாகிய
நகுலன் அடைந்த துன்பத்தை, தமையனைஉம் காண்பன் – தமையனாகிய
அருச்சுனனையும் அடையும்படி செய்வேன்,’ என – என்றுஎண்ணி, வெம்பி –
கோபித்து, எதிர் சென்று – எதிரே போய், வில் வாங்கி – வில்லை வளைத்து,-
பம்பிவரு-நெருங்கி வருகிற, கொடி தேர் – அனுமக்கொடியைக்கொண்ட
தேரையுடைய,பார்த்தனைஉம் – அருச்சுனனையும், பாகனைஉம் – அவன்
சாரதியானகண்ணனையும் அம்பின் – அம்புகளினால், மறைத்தான்-;

     கீழ் நகுலனை மூர்ச்சித்து விழும்படி செய்ததுபோலவே இப்போது
அருச்சுனனையும் விழச்செய்வேன் என்பது முதலடிக்குக் கருத்து. பார்த்தன் –
பிரதையின்மகன். பிரதை – குந்தி : .இது, இங்கே அருச்சுனனுக்குக்
காரணவிடுகுறிப்பெயர்.    

வில் நாணும், வில் பிடித்த வெவ் விரலும், வில் நடுவும்,
முன் ஆன தும்பை முடித்தோன் முடித் தலையும்,
பின் ஆக வாங்கும் பிறை அம்பும், பேர் அமரில்
ஒன்னார் முனை தடிந்தோன், ஓர் அம்பினால் அறுத்தான்.176.-அருச்சுனன் விடசேனனை அம்பினாலறுத்திடுதல்.

பேர் அமரில் – பெரிய யுத்தத்தில், ஒன்னார் – பகைவர்களது,
முனை- போரை, தடிந்தோன் – அழித்தவனாகிய அருச்சுனன், -முன் ஆன –
எதிரிலேவந்த, தும்பை முடித்தோன் – (போர்மாலையாகி) தும்பையைச்சூடின
விடசேனனது,பின் ஆக வாங்கும் பிறைஅம்புஉம் – (தான்) பின்னிடும்படி
எடுத்துவிடுகிறஅர்த்தசந்திர பாணங்களையும், வில் நாண்உம் – வில்லின்
நாணியையும், வில் பிடித்தவெம் விரல்உம் -வில்லைப்பிடித்த கொடிய விரலையும்,
வில் நடுஉம் – வில்லின்நடுவிடத்தையும், முடி தலைஉம் – கிரீடத்தையுடைய
தலையையும், ஓர் அம்பினால்அறுத்தான்

வீழ்ந்தான் விடசேனன்; வேந்தர் எலாம் வெஞ் சமரில்
தாழ்ந்தார், புறங்கொடுத்தார், தந்தை தடந் தேர்க் காலைச்
சூழ்ந்தார்; சில வீரர் தோலாது எதிர் நடந்து,
வாழ்ந்தார், சுரர் ஆகி, வான் மாதர் மெய் கலந்தே.177.-விடசேனன் வீழவே
எஞ்சியவர் கர்ணன் தேர்க்காலைச் சூழ்தல்.

விடசேனன்-, வீழ்ந்தான் – இறந்துவிழுந்தான்; (அதனால்),
வீரர்எல்லாம்-கௌரவசேனைவீரர்யாவரும், வெம் சமரில் – கொடிய போரில்,
தாழ்ந்தார் – தோற்று, புறம் கொடுத்தார் – முதுகிட்டுப்போய், தந்தை தட தேர்
காலை-(தமது சேனாபதியாகிய) அவன் தந்தையான கர்ணனது பெரிய தேரின்
சக்கரத்தை, சூழ்ந்தார் –  சுற்றிக்கொண்டார்கள்; சிலவீரர்-, தோலாது –
தோற்காமல், எதிர் நடந்து  – எதிரே சென்று பொருது, சுரர் ஆகி –
தேவர்களாய், வான மாதர்மெய் கலந்து-தேவலோகத்துப் பெண்களது உடம்பைத்
தழுவி, வாழ்ந்தார் -(வீரசுவர்க்கத்தில்) வாழ்ந்தார்கள்; (எ – று.)-பி-ம்;
வேந்தரெலாம்.

சாய்ந்தனன் களத்து அருச்சுனன் சரத்தினால் தனயன்’
என்று அவன்-தந்த
வேந்தனும் கருத்து அழிந்து தன் தேர்மிசை வீழ்ந்தனன்;
அவன பொன்-தேர்
ஊர்ந்த சல்லியன் தேற்றினன், பற்பல உரைகளால்; அவ் எல்லைப்
பாந்தள் அம் கொடிப் பார்த்திவன் நின்றுழிச் சென்றனன்,
பரித்தாமன்..178.-கர்ணன்புத்திரசோகத்தால் மூர்ச்சித்துவிழ, சல்லியன்
தேற்றுதலும் அசுவத்தாமன் துரியோதனனிடைச்
செல்லுதலும்.

அருச்சுனன் சரத்தினால் – அருச்சுனனது பாணங்களால், தனயன் –
தன்மகனான விடசேனன், களத்து – போர்க்களத்தில், சாய்ந்தனன் –
இறந்துவீழ்ந்தான், என்று-,  அவன் தந்த வேந்தன்உம் – அவனைப் பெற்ற
அரசனான கர்ணனும், கருத்து அழிந்து – மனஞ் சிதைந்து, தன் தேர்மிசை
வீழ்ந்தனன் – தனது தேரில் மூர்ச்சித்துவிழுந்தான்; அவன் பொன் தேர் ஊர்ந்த –
அவனது அழகிய  தேரை ஓட்டுகிற, சல்லியன்-, பல் பல உரைகளால்-
பலபலவார்த்தைகளினால், தேற்றினன்-(அவனைச்) சமாதானப்படுத்தினான்; அ
எல்லை – அப்பொழுது, பரித்தாமன் – அசுவத்தாமா, பாந்தள் அம் கொடி –
அழகிய பாம்புக்கொடியையுடைய, பார்த்திவன் – துரியோதனன், நின்ற உழி –
நின்றவிடத்துக்கு, சென்றனன் – போனான்; (எ – று.)- அவற் றந்த – ஐயுருபு
உயர்திணையில்தொக விகாரமாயிற்று, நின்றுழி – விகாரம்.              

     இதுமுதற் பதின்மூன்றுகவிகள் – பெரும்பாலும் முதற்சீர்மாச்சீரும், ஈற்றுச்சீர்
காய்ச்சீரும், மற்றைநான்கும் விளச்சீர்களுமாகிய அறுசீராசிரியவிருத்தங்கள்.

தப்ப அருஞ் சமர் விளைத்தனிர், நீயும் அத் தருமன்
மைந்தனும்; வென்றே
மெய்ப் பெரும் புகழ் புனை குருகுலத்திடை, வீடுமன் முதலான
எப் பெருந் திறல் குரவரும் கிளைஞரும், ஏனை மன்னரும், யாரும்,
ஒப்பு அரும் பெருஞ் சாதுரங்கத்துடன் உடன்று, உயிர் மாய்ந்தாரே!179.- இதுமுதல் மூன்றுகவிகள்-பலரும்இறந்தமையால் இப்போதாவது
சமாதானப்பட்டுவாழ்வது உத்தமமெனத்
துரியோதனனிடம் அசுவத்தாமன் கூறுதலைத் தெரிவிக்கும்.

நீயும்-, அ தருமன் மைந்தன்உம் – அத்தருமபுத்திரனும், தப்பு அரு
சமர் – ஒழிதலில்லாத போரை, விளைத்தனிர் – செய்யத்தொடங்கினீர்கள், என்றே –
என்கிறகாரணத்தினாலேயே, மெய் பெரும் புகழ் – உண்மையான பெரிய கீர்த்தியை,
புனை – பொருந்திய, குருகுலத்திடை – குருவம்சத்தில் தோன்றிய, வீடுமன் முதல்
ஆன – பீஷ்மர் முதலாகிய, பெரு திறல் – மிக்க வல்லமையையுடைய, எ குரவர்உம்
– எல்லாப் பெரியோர்களும், கிளைஞர்உம் – பந்துக்களும், ஏனை மன்னர்உம் –
மற்றை அரசர்களும், யார்உம் – எல்லோரும், ஒப்பு அரு – உவமையில்லாத, பெரு
– பெரிய, சாதுரங்கத்துடன்-சதுரங்கசேனையோடும், உடன்று – போர்செய்து,
உயிர்மாய்ந்தார் – உயிர்நீங்கினார்

வளை இலாதன மங்கல விழவும், நல் வரம்பு இலா மரபும், தொல்
விளைவு இலா அரும் புலமும், முத் தீ இலா வேதியர் மனை வாழ்வும்,
துளை இலா மணி
முத்தும், அம் தண் புனல் துறை இலா வளநாடும்,
கிளை இலா அரசு இயற்கையும், நன்று எனக் கேட்டு
அறிகுவது உண்டோ?

வளை இலாதன – சங்கினொலி யில்லாதனவாகிய, மங்கலவிழவு
உம் -மங்கலச்சடங்குகளும், நல் வரம்பு இலா – நல்லொழுக்கமில்லாத, மரபுஉம் –
குலமும்,தொல் விளைவு இலா-தொன்றுதொட்டுவருகிற விளைதலில்லாத, அரு
புலம்உம் – அரிய கழனியும், முத்தீ இலா – மூன்று அக்கினியில்லாத,
வேதியர்மனை வாழ்வுஉம் – பிராமணர்களது இல்வாழ்க்கையும், துளை இலா –
துவாரமில்லாத, மணிமுத்துஉம் – அழகிய முத்தும், அம் தண்புனல் துறை இலா –
அழகிய குளிர்ந்த நீர்த்துறையில்லாத, வளம்நாடுஉம் – அழகிய தேசமும், கிளை
இலா – பந்துக்க ளில்லாத, அரசு இயற்கைஉம் – அரசாட்சியின் தன்மையும், நன்று
என – (தனித்தனி)நல்ல தென்று, கேட்டு அறிகுவது உண்டோ-? (எ – று.) – கேட்டு
அறிவதில்லையென்றபடி.

     வளை – மற்ற மங்கலவாத்தியங்களுக்கும் உபலட்சணம். முத்தீ – ஆகவநீயம்,
காருகபத்தியம், தக்ஷிணாக்கி என்பன, புனல்துறை – ஆறு முதலியன, “ஆறில்லா
வூருக் கழகுபாழ்” என்றார், ஓளவையாரும், வளையில்லாத மங்கல விழவு
முதலியனபோலக் கிளையில்லாத அரசியற்கை நன்றன் றென்றபடி, ஆதலால்
பந்துக்களெல்லாம் இறத்தற்குக் காரணமான போரை இவ்வளவோடாவது நிறுத்த
வேண்டு மென்றான். மங்கலவிழவுஎன்பதை – உம்மைத்தொகையாகக் கொண்டு,
சங்கொலியில்லாத மங்கலகாரியமுந் திருவிழாவும் என்றும் உரைக்கலாம், மணி
முத்து- நவரத்நங்களிலொன்றாகிய முத்துமாம்.      

‘தும்பி மா, பரிமா உள, தேர் உள, சுருங்கின; சுருங்காமல்
நும்பிமார்களில் இருந்தவர்தம்மொடும், நுவல் அரும் பல கேள்வித்
தம்பிமாரொடும், நும்முன் ஆகிய
விறல் தருமன் மா மகனோடும்
பம்பி, மா நிலம் புரப்பதே கடன்’ எனப் பார்த்திவற்கு
உரை செய்தான்.

சுருங்கின – (அழிந்தவைபோகக்) குறைந்தவையாகிய, தும்பி மா –
யானைகளும், பரி மா – குதிரைகளும், உள – உள்ளன; தேர் உள – தேர்கள்
உள்ளன: நும்பிமார்களில்-உன் தம்பியருள்ளே,  சுருங்காமல் இருந்தனர்
தம்மொடுஉம் – அழியாமல் மிகுந்தவர்களுடனும், நுவல் அரு-சொல்லுதற்கு அரிய,
பல கேள்வி – பலவகைநூற்கேள்விகளையுடைய தம்பிமாரொடுஉம் – வீமன்
முதலியதருமன் தம்பிமார்களுடனும், நும் முன் ஆகிய – உங்கள் தமையனான,
விறல்தருமன் மா மகனோடுஉம் – வெற்றியையுடைய சிறந்த தருமபுத்திரனோடும்,
பம்பி -சேர்ந்து (சமாதானமாகி), மா நிலம் – பெரியபூமியை, புரப்பதுஏ –
காப்பதுவே, கடன்- முறைமையாம், என- என்று, பார்த்திவற்கு –
துரியோதனனுக்கு,உரைசெய்தான் -சொன்னான், (அசுவத்தாமன்)

ஆரியன் திருமகன் இவை உரைசெய, அரசனும் அவை கேட்டு,
‘காரியம் புகல்வது புவி ஆட்சியில் கருத்து உடையவர்க்கு அன்றோ?
தூரியம் கறங்கு அமரிடை உடல் விழ, சுரர் உலகு உயிர் எய்த,
வீரியம் பெறல் எனக்கு இனிப் பயன்!’ என விளம்பினன்,
விறல் வேலோன்.182.-எனக்குவீரியமே பயனெனத் துரியோதனன்
மறுமொழி கூறல்.

ஆரியன் – துரோணாசாரியரது, திரு மகன் – சிறந்த குமாரனான
அசுவத்தாமன், இவை உரை செய – இவ்வார்த்தைகளைச் சொல்ல, விறல்
வேலோன் – வெற்றியைத்தரும்வேலையுடையவனாகிய, அரசன்உம் –
துரியோதனனும், அவை கேட்டு – அவ்வார்த்தைகளைச் செவியுற்று, (அவனை
நோக்கி), ‘காரியம் புகல்வது – (நீ) சொல்லுந்தொழில், புவி ஆட்சியில் கருத்து
உடையவர்க்கு அன்றுஓ – பூமியை அரசாளுதலில் எண்ணமுடையவர்களுக்கன்றோ
(செய்யத்தக்கது)? தூரியம்  கறங்கு – வாச்சியங்கள் முழங்குகின்ற, அமரிடை –
போர்க்களத்தில், உடல்விழ – உடம்புவிழவும், உயிர் -, சுரர் உலகு எய்த –
தேவலோகத்தையடையவும் வீரியம் பெறல் – வீரத்தனத்தைப் பெறுதல், எனக்கு-,
இனி, இனிமேல், பயன் – அடையப்படும் பிரயோஜனமாம்,’ என- என்று,
விளம்பினன் – சொன்னான்

முனி மகன் புகல் கட்டுரை மறுத்த பின், முனிவு உறாவகை போருக்கு
இனிமை கொண்ட சொல் பல மொழிந்து அவனொடும்,
இரப்பவர் உள்ளங்கைக்
கனி எனும் கொடைக் கன்னனைத் தழீஇ, அவன் கண் உகு
புனல் மாற்றி,
பனி நெடுங் குடைப் பார்த்திவன் நுவன்றனன், பார்த்தனது
உயிர் கொள்வான்.183.-துரியோதனன் அசுவத்தாமனோடு பின்பு இனியவார்த்தை
கூறிக் கர்ணனைச்சோகம்மாற்றி அருச்சுனனுயிரைக்
கொள்ளுமாறு கூறுதல்.

பனி நெடு குடை – குளிர்ந்த பெரிய (ஒற்றைவெண்கொற்றக்)
குடையையுடைய, பார்த்திவன் – துரியோதனன்,- முனிமகன் புகல் –
துரோணகுமாரன் சொன்ன, கட்டுரை – உறுதி வார்த்தையை, மறுத்தபின் –
தடுத்தபின்பு,-முனிவு உறா வகை- (தன்வார்த்தையைத் தடுத்தானென்று அவனுக்குக்)
கோபம், உண்டாகாதபடி, போருக்கு – போர்செய்யும் பொருட்டு, இனிமை கொண்ட
சொல் பல – (கேட்டற்கு) இனிப்புப் பொருந்திய பல வார்த்தைகளை,
அவனொடுஉம்மொழிந்து-அவனோடு சொல்லி, இரப்பவர் உள்ளங்கைகனி எனும் –
யாசகர்களுடைய அகங்கையிலுள்ள பழம் போலச் சித்தமான, கொடை –
தானத்தையுடைய, கன்னனை – கர்ணனை, தழீஇ – தழுவிக்கொண்டு, அவன்
கண்உகு புனல் மாற்றி – (புத்திரசோகத்தால்) அவன்கண்களினின்று பெருகுகிற
நீரைத்துடைத்து, பார்த்தனது உயிர் கொள்வான்-அருச்சுனனது உயிரைக்
கொள்ளும்படி,நுவன்றனன் – சொன்னான்;

மலை கலங்கினும், மாதிரம் கலங்கினும், மாதிரங்களில் விண்ணோர்
நிலை கலங்கினும், நெடுங் கடல் கலங்கினும், நிலம்
கலங்கினும், சேடன்
தலை கலங்கினும், பேர் அவை மூன்றினும் தளர்வு இலாதவர் கற்ற
கலை கலங்கினும், போர்முகத்து என் மனம் கலங்குமோ? கலங்காதே184.- இரண்டுகவிகள் – துரியோதனனும் சல்லிய
அசுவத்தாமருங்கேட்கக் கர்ணன் தான் கலங்காது அருச்சுனன்
தலையைக் கொய்வேனெனல்.

மலை-,  கலங்கின்உம் – சலித்தாலும், மாதிரம் – திக்குக்கள்,
கலங்கினும்-, மாதிரங்களில் விண்ணோர் – திக்குக்களிலுள்ள தேவர்கள், நிலை
கலங்கின்உம் – (தாம் தாம் நிற்கும்) நிலை கலங்கினாலும், நெடு கடல் – பெரிய
கடல், கலங்கினும்-, நிலம் – பூமி, கலங்கினும்-, சேடன் தலை – (பூமியைத்
தாங்குகிற) ஆதிசேஷனது தலை, கலங்கினும்-, பேர் அவை மூன்றின்உம்  –
பெரியமூன்று  வகைச் சபைகளிலும்-, தளர்வு இலாதவர் – அஞ்சுத லில்லாத
புலவர்கள்,கற்ற – படித்த, கலை – கல்வி, கலங்கினும்-, என் மனம்- போர்
முகத்து -போர்க்களத்தில், கலங்கும்ஓ – சலிக்குமோ? கலங்காதே -சலியாதன்றோ?
(எ – று.)-ஈற்றேகாரம் – தேற்றம்.

     மாதிரங்களில்விண்ணோர் – அஷ்டதிக்பாலகர், தம்மினும் உயர்ந்தோர்
ஒத்தோர் தாழ்ந்தோர் என்னும் முத்திறத்தவருறைதலால், அவை மூன்றாயின;
“உயர்ந்தோரொத்தவர் தாழ்ந்தோர் மருவு மூன்றவையு மாராய்ந்து’  என்றதுங்
காண்க.கலங்காமையைவற்புறுத்தும்பொருட்டு, ‘கலங்குமோ கலங்காதே’ என
உடன்பாட்டுமுகத்தானும் எதிர்மறைமுகத்தானுங் கூறினார்

என் மகன் தலை என் எதிர் துணிய அம்பு
ஏவிய புருகூதன்,-
தன் மகன் தலை துணிப்பன், இக் கணத்தில்,
ஓர் சாயகம்தனில்’ என்று,
மன்மகன்தனக்கு, இரதம் ஊர் மத்திரன் மகன்தனக்கு,
உயர் வேள்வி
வில் மகன்தனக்கு, உளம் மகிழ்ந்து உரைத்தனன்,
வெயிலவன் மகன் அம்மா.

என் மகன் தலை – என் குமாரனது தலை, என் எதிர் துணிய –
என்எதிரே அறுபடும்படி, அம்பு ஏவிய – பாணத்தைப் பிரயோகித்த, புருகூதன்தன்
மகன்- இந்திரகுமாரனான அருச்சுனனது, தலை – தலையை, ஓர் சாயகந்தனில் –
ஒருஅம்பினால், இ கணத்தில் – இந்தக்ஷணத்தில்தானே, துணிப்பன் – அறுப்பேன்,
என்று-, மன்மகன் தனக்கு – திருதராஷ்டிரராஜகுமாரனான துரியோதனனுக்கும்,
இரதம் ஊர் – (தனக்குத்) தேரோட்டுகிற, மத்திரன் மகன் தனக்கு – மத்திர ராஜ
குமாரனான சல்லியனுக்கும், உயர் வேள்வி – சிறந்த  யாகங்களுக்குரிய, வில்-வில்
வித்தையில்வல்ல, மகன் தனக்கு – அசுவத்தாமனுக்கும், உளம் மகிழ்ந்து –
மனங்களித்து, உரைத்தனன் – சொன்னான், வெயிலவன் மகன் – வெயிலையுடைய
சூரியனது மகனான கர்ணன்;(எ-று.)-பி-ம்: மத்திரமகிபதிக்கு, ‘மகன்’
என்னுஞ்சொற்பிரயோகத்தை நோக்குங்கால், இப்பாடபேதம் சிறப்புடைத்தன்று

சுரிமுகங்களில், பேர் இயங்களில், எழு துவனியால் பகிரண்டம்
நெரியும்!’ என்று அயன் அஞ்சினன்; ‘சேனையின் நெருக்கினால்,
எனைத்து உள்ள
கிரிகளும் சரிந்திடும்!’ என அஞ்சினன்; கிரீசனும்; கிளர் ஆழி
அரியும் அஞ்சினன், ‘தூளியால் அலை கடல் அடைய
வற்றிடும்!’ என்றே.186.-பேரொலி சேனைநெருக்கம் மேலெழுதூளி இவற்றின்
வருணனை.

(அப்பொழுது), சுரி முகங்களில் – சுழிந்த முகத்தையுடைய
சங்குகளினின்றும், பேரியங்களில் – முரசங்களினின்றும், எழு – உண்டாகிய,
துவனியால் – ஒலியினால், பகிரண்டம் – வெளியிலுள்ள அண்டங்களெல்லாமும்,
நெரியும் – அதிர்ந்து நொருங்கும், என்று – என்றுஎண்ணி, அயன் –
(படைத்தற்கடவுளான) பிரமன், அஞ்சினன் – பயந்தான்: சேனையின் நெருக்கினால்
– சேனைகளின் நெருக்கத்தாலுண்டான பாரத்தால், எனைத்துஉள்ளகிரிகள்உம் –
உள்ள மலைகளெல்லாம், சரிந்திடும் – சாய்ந்துவிடும், என- என்று எண்ணி,
கிரிசன்உம் – (கைலாச) மலையில்வாசஞ்செய்கிறசிவனும், அஞ்சினான்-; கிளர்
ஆழி – விளங்குகிற கடலிற்பள்ளிகொள்கிற, அரிஉம் – விஷ்ணுவும், தூளியால் –
புழுதியினால், அலைகடல் அடைய – அலைகின்ற கடல்களெல்லாம், வற்றிடும் –
வற்றிப் போம், என்று- என்று எண்ணி, அஞ்சினன்-; (எ – று.)

     பேரியங்கள், அம் – சாரியை; இனி, பேர் இயங்கள் எனப்பிரித்து – பெரிய
வாச்சியங்க ளென்றுமாம். வெளியண்டங்கள் நெரியுமெனவே, இவ்வண்டம்நெரிதல்
சொல்லாமலேபெறப்படும்.    

பரியுடன் பரி நெருங்கின; நெருங்கின, படையுடன் படை; மத்தக்
கரியுடன் கரி நெருங்கின; நெருங்கின, கடவு தேருடன் தேரும்;
விரி நெடுங் குடை குடையொடு நெருங்கின; விலோதமும் விலோதத்தோடு
அரி எறிந்திட நெருங்கின, ஆடையும் ஆடையும் அலமந்தே.187.-நான்குகவிகள் – இருதிறத்துச் சேனையும் நெருங்குதலைக்
கூறும்

பரியுடன் – குதிரைகளோடு, பரி நெருங்கின-;படையுடன் –
காலாட்சேனையோடு, படை நெருங்கின-; மத்தம்கரியுடன் –
மதம்பிடித்தயானைகளோடு, கரி நெருங்கின-; கடவு தேருடன் – செலுத்தப்படுகிற
தேர்களோடு, தேரும் நெருங்கின-; விரி நெடு குடை – பரந்த நீண்ட குடைகள்,
குடையோடு நெருங்கின; அரி எறிந்திட – காற்று வீசுதலினால், ஆடைஉம்
ஆடைஉம் அலமந்து – சீலைகளுஞ் சீலைகளும் அசையப்பெற்று, விலோதம்உம் –
துவசங்களும், விலோதத்தோடு – துவசங்களோடு, நெருங்கின-;

பரியில் வீரரும் பரியில் வீரரும் வயப் படை எறிந்தனர்; கொற்றக்
கரியில் வீரரும் கரியில் வீரரும் அமர் கடுகினர்; கால் தேராம்
கிரியில் வீரரும் கிரியில் வீரரும் எதிர் கிடைத்தனர்; பத சாரித்
தெரியல் வீரரும் தெரியல் வீரரும் உடன் செருப்
புரிந்தனர் அன்றே.

அன்று – அப்பொழுது, பரியில் வீரர்உம் – குதிரைகளின்மேல்
ஏறியவீரர்களும், பரியில் வீரரும்,-, (ஒருவர்மேலொருவர்), வயம் படை
எறிந்தனர் -வெற்றியைத்தருகிற ஆயுதங்களை எறிந்தார்கள் – கொற்றம் –
வெற்றியையுடைய,கரியில் வீரர்உம் – யானைகளின்மேல் ஏறிய வீரர்களும்,
கரியில் வீரரும்-,அமர்கடுகினர் – போரில் விரைந்தார்கள்; கால்தேர் ஆம் –
சக்கரங்களையுடையதேர்களாகிய, கிரியில்-மலைகளின்மேலேறிய, வீரரும்-,
கிரியில்வீரரும்-, எதிர்கிடைத்தனர் – எதிரேகிட்டினார்கள், பதசாரி – கால்களால்
நடக்கிற, தெரியல் -போர்மாலையையுடைய, வீரரும்-, தெரியல்வீரரும்-,உடன்-
ஒருவரோடொருவர்,செருபுரிந்தனர் – போர் செய்தார்கள்;(எ -று.)-அன்றே
ஈற்றசையாகவுமாம். பி-ம்:பலசெருப்.

எடுத்த வேல்களும் வேல்களும் முனைந்தன; இலக்கு உறக்
கொடும் பாணம்
தொடுத்த சாபமும் சாபமும் வளைந்தன; தொடியுடைக் கர சாலத்து
அடுத்த வாளமும் வாளமும் பொருதன; அங்குலிகளின் சுற்றி,
விடுத்த நேமியும் நேமியும் துணித்தன, வீரர் சென்னிகள் வீழ

எடுத்த – (கையில்) எடுத்த, வேல்களும் வேல்களும்-, முனைந்தன –
போர்செய்தன;  இலக்கு உற – லட்சியத்திலே பொருந்தும்படி, கொடு பாணம் –
கொடிய அம்புகளை, தொடுத்த-, சாபம்உம்-விற்களும்-, சாபமும்-, வளைந்தன-,
தொடி உடை – தொடியென்னும் ஆபரணத்தையுடைய, கரசாலத்து – கைகளின்
கூட்டத்தில், அடுத்த – பொருந்திய, வாளம்உம் – வாள்களும், வாளமும்-,
பொருதன- போர்செய்தன; அங்குலிகளின் – விரல்களினால், சுற்றிவிடுத்த –
கழற்றிவிட்ட,நேமிஉம் – சக்கரங்களும், நேமியும்-, வீரர்சென்னிகள் வீழ-வீரர்களது
தலைகள்விழும்படி, துணித்தன – அறுத்தன; (எ – று.) இலக்கு – குறிப்பிட்ட
பொருள். பி-ம்:கரசாலம்.

அறன் மகன் பெருஞ் சேனையின் நிருபரும், அரவ வெங் கொடி ஆடை
மறன் மகன் கொடுஞ்
சேனையின் நிருபரும், -வஞ்சினம் பல கூறி,
திறல் மிகுந்த தம் சேனையோடு எதிர் எதிர் சென்று சென்று,
இடம்தோறும்
உற மலைந்தனர், -ஒருவருக்கு ஒருவர் தோள் உரமும்
வீரமும் ஒத்தோர்.

ஒருவருக்கொருவர் ஒருவர் – ஒருத்தரோடொருத்தர், தோள்
உரம்உம் -புஜபலத்திலும், வீரம்உம் – பராக்கிரமத்திலும், ஒத்தோர் –
ஒத்தவர்களாகிய, அறன்மகன் பெரு சேனையில் நிருபர்உம் – தருமபுத்திரனது
பெரியசேனையிள்ளஅரசர்களும், வெம் அரவம்கொடிய பாம்பை யெழுதிய, கொடி
ஆடை -கொடிச்சீலையையுடைய, மறன்மகன் – அதருமத்தையுடைய
துரியோதனனது,கொடுசேனையில்- கொடிய சேனையிலுள்ள, நிருபர்உம் –
அரசர்களும், வஞ்சினம்பல கூறி பல சபதங்களைச் சொல்லிக்கொண்டு, திறல்
மிகுந்த தம் சேனையொடு -வலிமை மிகுந்த தமது சேனையுடனே, எதிர் எதிர்
சென்று சென்று – எதிரே எதிரே போய்ப் போய், இடம் தோறுஉம் –
இடங்கள்தோறும், உற மலைந்தனர் -நன்றாகப் போர்செய்தார்கள்;(எ – று.)-மறன்
மகன் – அதருமமுடையதிருதராட்டிரனது மகனுமாம்.

இளைஞரும் பெருஞ் சேனையும் இரு புடை நடக்க,
கிளைஞர் யாவரும் நேமி அம் கிரி எனச் சூழ,
விளையும் வெஞ் சின வீமன் முன் போதர, விசயன்
வளை நெடுஞ் சிலை கணை மழை பொழிந்திட, வந்தான்.191.-அருச்சுனன் தம்பிமார்முதலானாரோடு வருதல்.

விசயன் – அருச்சுனன்,-இளைஞர்உம் – தம்பிமரான நகுல
சகதேவரும், சேனைஉம் – பெரிய சேனைகளும், இருபுடை நடக்க – இரண்டு
பக்கங்களிலுஞ் செல்லவும், கிளைஞர் யாவர்உம்-பந்துக்கள் எல்லாரும், நேமி அம்
கிரி என – அழகிய சக்கரவாளமலைபோல, சூழ – சுற்றிலும்வரவும், விளையும் வெம்
சினம் – மேன்மேற்பொங்குகிற கொடிய கோபத்தையுடைய, வீமன்-, முன் போதரா –
முன்னே செல்லவும், வளை நெடு சிலை – வளைந்த நீண்ட வில், கணை மழை
பொழிந்திட – அம்பு  மழையைச் சொரியவும், வந்தான்-;

     இதுமுதல் மூன்று கவிகள் – பெரும்பாலும் முதற்சீரும் ஈற்றுச்சீரும்
மாச்சீர்களும், மற்ற மூன்றும் விளச்சீர்களுமாகிய கலிநிலைத்துறைகள்.

கிரிசன் மைந்தனும், கிருபனும், கிருதவன்மாவும்,
வரி பொலங் கழல் சகுனியும், முதலிய மறவோர்
எரியும் வெங் கனற் கண்ணினர் எயில் எனச் சூழ,
தெரியும் வாளி வன் சிலையுடைக் கன்னனும் சென்றான்192.-கர்ணனும் அசுவத்தாமாமுதலோர்சூழ எதிர்செல்லுதல்.

கிரிசன்மைந்தன்உம் – சிவகுமாரனான அசுவத்தாமனும், கிருபனும்-,
கிருதவன்மாவும்-, வரி பொலம்கழல் – கட்டப்பட்ட பொன்னாலாகிய
வீரக்கழலையுடைய, சகுனியும்-, முதலிய-, மறவோர்-, வீரர்கள், எரியும் வெம் கனல்
– எரிகின்ற கொடிய நெருப்புப்போலக் கோபத்தாற் சிவந்த, கண்ணினர் –
கண்களையுடையவர்களாய், எயில் என – மதில்போல,  சூழ – சுற்றிலும் வரும்படி,
வாளிதெரியும் – அம்புகளை ஆராய்ந்து தொடுக்கின்ற, வல்சிலை உடை – வலிய
வில்லையுடைய, கன்னனும்,- சென்றான் – (எதிரிற்) போனான்: (எ – று.)-கண்ணினர்
– குறிப்பு முற்றெச்சம், கிரிஸன் என்பது போல், கிரிஸன் என்றும் வடசொல்உண்டு.

கிரிசன்மைந்தன்உம் – சிவகுமாரனான அசுவத்தாமனும், கிருபனும்-,
கிருதவன்மாவும்-, வரி பொலம்கழல் – கட்டப்பட்ட பொன்னாலாகிய
வீரக்கழலையுடைய, சகுனியும்-, முதலிய-, மறவோர்-, வீரர்கள், எரியும் வெம் கனல்
– எரிகின்ற கொடிய நெருப்புப்போலக் கோபத்தாற் சிவந்த, கண்ணினர் –
கண்களையுடையவர்களாய், எயில் என – மதில்போல,  சூழ – சுற்றிலும் வரும்படி,
வாளிதெரியும் – அம்புகளை ஆராய்ந்து தொடுக்கின்ற, வல்சிலை உடை – வலிய
வில்லையுடைய, கன்னனும்,- சென்றான் – (எதிரிற்) போனான்: (எ – று.)-கண்ணினர்
– குறிப்பு முற்றெச்சம், கிரிஸன் என்பது போல், கிரிஸன் என்றும் வடசொல்உண்டு.

மல் வளைத்த தோள் வலன் உற வலன் உறத் தம்தம்
வில் வளைத்தனர், விசையுடன் சிலீமுகம், திகிரிக்
கல் வளைத்த பார்தனக்கு இடு காவணம் போல,
சொல் வளைத்திலர், தொடுத்தனர்-தும்பை அம் தொடையார்.193.-ஏழுகவிகள் – அருச்சுனனும் கர்ணனும் மிகக்கடுமை
யாகப் பொருதமை கூறும்.

தும்பை அம் தொடையார்-அழகிய தும்பைப்பூ
மாலையையுடையவர்களாகிய, மல் வளைத்த தோள் வலியர்கள் -மற்போரை மிகப்
பயின்றதோள்களின் வலிமையையுடைய அருச்சுனனும் கர்ணனும்,-வலன் உற –
பலம்பொருந்த, தத்தம் வில் வளைத்தனர் – தந்தமது வில்லை வளைத்து, சொல்
வளைத்திலர் – சொல்லொன்றுஞ் சொல்லாமல், திகிரி கல்வளைத்த-சக்கரவாள
கிரியாற்சூழப்பட்டுள்ள, பார் தனக்கு – பூமி முழுவதுக்கும், இடு காவணம்
போல – மேலேபோட்ட பந்தலை யொக்கும்படி, சிலீமுகம் – அம்புகளை,
விசையுடன் -வேகத்தோடு, தொடுத்தனர்-;

மருவ அருஞ் சுருதி கூறும் நிலை நாலும் வழுவாது
இருவரும் சிலை வணக்கியதும், எய்த விரகும்,
ஒருவரும் சிறிது உணர்ந்திலர்; உகாந்தம் எனவே
வெருவரும் செயலில் விஞ்சினர்கள், விஞ்சையருமே.

இருவர்உம் – கர்ணனும் அருச்சுனனும், மருவு அரு – பயிலுதற்கு
அருமையான, சுருதி – தனுர்வேதத்தில், கூறும் – சொல்லப்படுகிற, நிலைநால்உம் –
ஆலீடம் முதலிய நால்வகைநிலைகளும், வழுவாது – தவறாமல் (நின்று), சிலை
வணக்கியதுஉம் – வில்லைவளைத்ததையும், எய்த விரகுஉம் – (அம்பு)
எய்தபக்குவத்தையும், ஒருவர்உம் சிறிதுஉணர்ந்திலர் – எவருங்கொஞ்சமேனும்
அறிந்தாரில்லை; விஞ்சையர்உம் – (மேலுலகத்துள்ள) வித்தியாதரர்களும் உகாந்தம்
என – யுகமுடிவுகாலமென்று எண்ணி, வெருவரும் செயலில் விஞ்சினர்கள்-
பயப்படுந்தொழிலில் மிகுந்தார்கள்; (எ- று.)

     சுருதியென்பதற்கு -(எழுதப்படாமல் ஆசாரியசிஷ்யபரம்பரையாகக்)
கேட்கப்பட்டுவருவ தென்று பொருள், விஞ்சையர் – பதினெட்டுத்தேவகணங்களுள்
ஒருவகையார்.

     இதுமுதல் ஒன்பதுகவிகள் – பெரும்பாலும் இரண்டு மூன்றாஞ்சீர்கள்
கூவிளங்காய்ச்சீரும், மற்றவை மாச்சீர்களுமாகிய கலிநிலைத்துறைகள்

ஒன்றொடு ஒன்று முனையோடு முனை உற்று உற விழும்;
ஒன்றொடு ஒன்று பிளவு ஓட விசையோடு புதையும்;
ஒன்றொடு ஒன்று துணி பட்டிட ஒடிக்கும்; உடனே,
ஒன்றொடு ஒன்று இறகு கௌவும்;-எதிர் ஓடு கணையே.

எதிர் ஓடு கணை – எதிரேசெல்லுகிற அம்புகள், ஒன்றோடு
ஒன்று-,முனையோடு முனைஉற்று – நுனியோடு நுனிபொருந்தி, உற விழும் –
மிகுதியாகவிழும்; ஒன்றோடொன்று-, பிளவுஓட – பிளவுபடும்படி, விசையோடு
புதையும் – வேகத்தோடு தாக்கும்; ஒன்றோடொன்று-, துணிபட்டிட – துண்டு
படும்படி,ஒடிக்கும்-: உடனே – விரைவாக,  ஒன்றோடொன்று-,  இறகு கவ்வும் –
(அம்புகளின்) இறகுகளைப் பறிக்கும்;

இடம் புரிந்திடில் வலம் புரியும், எண்ணின் முறையால்;
வலம் புரிந்திடில் இடம் புரியும்; மண்டலமும் ஆய்,
நடம் புரிந்து, பவுரிக் கதி நடத்தும்;-எதிரே,
சலம் புரிந்து, அதிர முட்டும் இரு சந்தனமுமே.

எதிரே-, சலம் புரிந்து  – போர்செய்து, அதிர – அதிர்ச்சி
யுண்டாம்படி, முட்டும் – (ஒன்றோடொன்று) தாக்குகிற, இரு சந்தனம்உம் –
இரண்டுதேர்களும் எண்ணில் – ஆலோசிக்கு மிடத்து, முறையால் – முறையே,
இடம் புரிந்திடில் – (ஒன்று) இடப்பக்கமாக வந்தால்,வலம் புரியும்-((மற்றொன்று)
வலப்பக்கமாக வரும்:-வலம் புரிந்திடில் – (அது)வலப்பக்கத்திலே வந்தால், இடம்
புரியும் – (இது) இடப்பக்கமாக வரும்: (இங்ஙனன்றி),மண்டலம்உம் – (இரண்டுஞ்)
சுற்றிச்சுற்றிவருதலும். ஆய் – ஆகி, நடம் புரிந்து -கூத்தாடிக்கொண்டு, பவுரி கதி
நடத்தும் – (தானே) சுற்றிவருதலாகிய பவுரியென்னுங்கதியை நடத்திக்காட்டும்;

     சலம்புரிந்து அசைதலைச் செய்து என்றுமாம். சந்தனம் = ஸ்யந்தநம்

ஆசு போம் இவுளி மா கடவி, ஆழி இரதம்
மூசு போரில் ஒருவர்க்கு ஒருவர் முந்த விடலால்,
வாசுதேவனையும் மத்திர மகீபதியையும்
தேசு வேறு தெரிகிற்றிலர்கள், தேவர்களுமே.

ஆசு போம் – விரைந்துசெல்லுகிற, இவுளி மா – குதிரைகளை,
கடவிஓட்டி, ஆழி இரதம் – சக்கரங்களையுடைய தேரை, மூசுபோரில் – நெருங்கிய
யுத்தத்தில் ஒருவர்க்கு ஒருவர் முந்தவிடலால் – ஒருத்தருக்கொருத்தர் முன்னே
செலுத்துதலால்,-வாசுதேவனை உம்-வசுதேவபுத்திரனாகிய கண்ணனையும்,
மத்திரமகீபதியைஉம் – மத்திரநாட்டரசனான சல்லியனையும், தேவர்களும்-, தேசு
வேறு தெரிகிற்றிலர்கள் – வேறுஒளியாற் காணவில்லை; (எ – று.) இரு வரையுஞ்
சமமாகவே யறிந்தன ரென்றபடி ஆஸு  – வடமொழி அவ்யயம், இனி, ஆசு போம்
– குற்றம் நீங்கிய வென்றுமாம்.

மறமும் ஒத்த; வழு அற்ற சுழி ஒத்த; வலி கூர்
புறமும் ஒத்த; கதி பற்பலவும் ஒத்த; புகல் வாள்
நிறமும் ஒத்த; உயரம் பருமை நீளம் எனும் மெய்த்
திறமும் ஒத்த;-இரு தேரில் வரு திண் பரியுமே.

இரு தேரில் வரு – இரண்டுதேரிலும் பூட்டப்பட்ட, திண்பரிஉம் –
வலிய குதிரைகளெல்லாம்,- மறம்உம் – வலிமையிலும், ஒத்த – (ஒன்றோடொன்று)
ஒத்திருந்தன; வழு அற்ற – குற்றமில்லாத, சுழி – (நல்லிலக்கணமாகிய) சுழிகளிலும்,
ஒத்த-; வலிகூர் – வலிமைமிகுந்த, புறம்உம் – முதுகும், ஒத்த-; கதி பல் பலஉம் –
பலவகைப்பட்ட நடைகளிலும், ஒத்த-; புகல் – (சிறப்பித்துச்) சொல்லப்படுகிற, வாள்-
ஒளியையுடைய, நிறம்உம் – வருணத்திலும், ஒத்த-; உயரம் பருமை நீளம் எனும் –
உயர்ச்சியும் பருமனும் நீட்சியு மென்கிற, மெய் திறம்உம் – உடம்பின்
தன்மைகளிலும், ஒத்த-

நிலை இரண்டில் உற நின்ற நிமலர்க்கு நிகர்வோர்
மலை இரண்டினை வளைத்து எதிர் மலைந்தது எனவே,
அலை இரண்டு என அதிர்ந்து பொரும் அவ் இருவர் கைச்
சிலை இரண்டும் நிமிராது, கணை சிந்தினர்களே.

நிலை இரண்டில் – இரண்டு் நிலைமைகளில், உற – ஒரு சேர, நின்ற-,
நிமலற்கு – குற்றமற்ற சிவபிரானுக்கு, நிகர்வோர்-சமானமானவராகிய, அலை இரண்டு
என – இரண்டு கடல்கள் போல, அதிர்ந்து – ஆரவாரித்து, பொரும்-போர் செய்கிற,
அ இருவர் – அந்த அருச்சுனனும் கர்ணனும்,-மலை இரண்டினை வளைத்து-
இரண்டுமலைகளை (வில்லாக) வணக்கிக் கொண்டு, எதிர் மலைந்தது எனஏ –
எதிரிற் போர்செய்ததுபோலவே,  கை சிலை இரண்டுஉம் நிமிராது – கையிற்பிடித்த
இரண்டுவிற்களும் (வளைவு) நிமிராமல், கணை சிந்தினர்கள் – அம்புகளை
சொரிந்தார்கள்; (எ – று.)

     பரமசிவன் ஒரேகாலத்தில் இரண்டுவடிவமெடுத்துநின்று
இரண்டுமேருமலைகளைக் கையில் வில்லாகஎடுத்துக்கொண்டு போர்
செய்தாற்போன்றனர் என்பது, கருத்து, நிமலர்என்றபாடத்திற்கு- திருமாலும்
உருத்திரமூர்த்தியும் என்க; தேவர்கள் தாரதமியமறிய இருவரையும் போர்மூட்டிவிட,
பொருதன ரென்று வரலாறு ராமாயணத்திலுள்ளது.   

தேவதத்தமும் முழக்கி, உயர் தேவர் பலரால்
ஆவம் மெத்தும் வகை பெற்ற பல அம்பு தெரியா,
மூவர் தம்தம் வடிவாம் முதல்வன் மெய்ப் புதல்வன்மேல்
பூவின் மொய்த்த அறுகாலின் நிரை போல விடவே,200.-இரண்டுகவிக்ள்- அருச்சுனன் கடுமையாக அம்புவிட,கர்ணன்
அவற்றைத் தறித்தமை கூறும்

இதுமுதல் மூன்றுகவிகள் – ஒருதொடர்.

     (இ-ள்.) (அருச்சுனன்),-தேவதத்தம்உம் முழக்கி-தேவதத்தமென்னும்(தனது)
சங்கத்தை யெடுத்து நாதஞ்செய்து, உயர்தேவர்பலரால் – சிறந்த பல தேவர்களால்,
ஆவம் மெத்தும் வகை தூணிநிரம்பும்படி பெற்ற-, பல அம்பு – அநேகபாணங்களை,
தெரியா – ஆராய்ந்து எடுத்து, மூவர் தத்தம் வடிவு ஆம் முதல்வன் –
திரிமூர்த்திகளது சொரூபியாகிய சூரியபகவானது,-மெய் புதல்வன்மேல்-
உண்மையானபுத்திரனாகியகர்ணன்மேலே, பூவின்மொய்த்த- மலரிலே மொய்க்கிற,
அறுகாலின் நிரைபோல – வண்டுகளின் கூட்டத்தை யொக்கும்படி (சாரத்தை
உறிஞ்சும்படி),  விட -பிரயோகிக்க,-(எ-று  “அங்கர்பெருமான்… தறியா’ என
இயையும்.

     தேவதத்தமென்னுஞ் சங்கம், அருச்சுனனுக்கு அக்கினிதேவனாற்
காண்டவதகனகாலத்தில் அளிக்கப்பட்டது. சூரியன் திரிமூர்த்திகளின்
சொரூபியென்றுஸ்ரீராமாயணத்தில் யுத்தகாண்டத்தில் ஆதித்யஹ்ருதயத்திலும்,
பிறநூல்களிலுங்கூறப்பட்டுள்ளது. மூன்றாம் அடிக்கு – திரிமூர்த்திசொரூபியாகிய
ஸ்ரீமந்நாராயணனதுதிருமேனியின்  முக்கிய அவயவமாகிய
வலக்கண்வடிவமானசூரியனதுகுமாரனென்றும் உரைக்கலாம்; அவ்வுரையில், மெய்
என்பது – அதனுறுப்புக்களுட்சிறந்த கண்ணுக்கு முதலாகுபெயர், இனி,
முச்சுடர்களின் வடிவமாகியசூரியபகவானது உடம்பின் சேர்க்கையாற்பிறந்த புதல்வ
னென்றும்பொருள்கொள்ளலாம். அறுகால்-ஆறாகிய கால்களையுடையது;
பண்புத்தொகைபுறத்துப்பிறந்த அன்மொழித்தொகை.  

பரிதி அன்பொடு வழங்கிய பராபரம் எனும்
பெரு வலம்புரி குறித்து, விறல் அங்கர் பெருமான்,
வரி நெடுஞ் சிலை வலாரி திருமைந்தன் விடு திண்
சரம் அடங்க அமர் தந்த சரம் எய்து தறியா,

விறல் அங்கர் பெருமான்  – வலிமையையுடைய அங்கநாட்டார்க்கு
அரசனான கர்ணன், அன்பொடு-, பரிதி – சூரியன், வழங்கிய-(தனக்கு)
கொடுத்தருளின பராபரம் எனும்-பரார்பரமென்னும் பெயரையுடைய, பெருவலம்
புரி- பெரியவலம்புரிச்சங்கத்தை, குறித்து – ஊதி, வரி நெடு சிலை – கட்டமைந்த
பெரியவில்லையுடைய, வலாரி திரு மைந்தன் – இந்திரனது சிறந்த மகனான
அருச்சுனன்,விடு – (தன்மேல்) விடுகிற, திண் – வலிய சரம்  அடங்க – அம்புகளை
யெல்லாம்,அவர் தந்த சரம் எய்து – அச்சூரியன் கொடுத்த அம்புகளைப்
பிரயோகித்து, தறியா- துணித்து,- (எ- று,) “கதிர்க்கணைவிதங்கள் கொடு***தேர்
இயக்கமற்றிட ஒர்கூடமியற்றினன்” என மேற்கவியில் முடியும்.

     வலசாரி – பலாரி; பல அரி: பலன் என்னும் அசுரனை அழித்தவன் –பி-ம்:
அமர்தந்த.    

வயக் கதிர்க் கணை விதங்கள் கொடு மாயன் விடு தேர்
இயக்கம் அற்றிட இயற்றினன், ஓர் கூடம், இவனும்;
தியக்கம் உற்றிட மயக்கி, நெடுமால் செய் விரகால்,
உயக்கம் மிக்க சரகூடம் உளதாயது, அவணும்.202.-கர்ணன் பலவகைகளாற் சரகூடமுண்டாக்க,
கிருஷ்ணனும் தன் மாயையால் சரகூட முண்டாக்கல்.

இவன்உம் – கர்ணனும், வய – வலிமையையுடைய, கதிர் –
ஒளியையுடைய, கணை விதங்கள் கொடு – அம்புகளின் வகைகளால், மாயன் விடு
தேர் – கண்ணன் செலுத்துகிற (அருச்சுனன்) தேர், இயக்கம் அற்றிட – செல்லுதல்
இல்லையாம்படி, ஒர் கூடம் – ஒருமறைவை. இயற்றினன் – உண்டாக்கினான்; நெடு
மால் – (திரிவிக்கிரமனாய்) நீண்ட கண்ணன், தியக்கம் உற்றிட – கலக்கமுண்டாம்
படி,மயக்கி – மயங்கப்பண்ணி, செய் – செய்த விரகால் – மாயையினால், உயக்கம்
மிக்க- வருத்தம் மிகுந்த, சர கூடம் – அம்புக்கூடு, அவண்உம் – அவ்விடத்திலும்
(கர்ணன்பக்கத்திலும்), உளது ஆயது-உண்டாயிற்று; (எ – று.) – சரகூடம் –
அம்புகளால் தொடுக்கும் பின்னற்செறிவு.

மாயா சரகூடம் வளைத்திடலால், வலையுள் படு வீர மடங்கல் என,
சாயாபதி மைந்தனும் நின்றனன்; மெய் தளர்வுற்றனன், நின்ற
தனஞ்சயனும்;
‘ஏயா இது என்கொல் முனைந்து பொராது எழுது ஓவியம் ஆயினை’
என்று விறல்
காயா மலர் வண்ணன் விளம்புதலும், கவி வெங் கொடியோன் இரு
கை குவியா,203. – சரகூடத்தினுட்பட்ட கர்ணன் செயலற்று நிற்க,
அருச்சுனனும் அங்ஙன் நிற்கவே, கிருஷ்ணன் வினாதல்.

இதுமுதல் மூன்றுகவிகள் – ஒருதொடர்

     (இ-ள்.) மாயா சரகூடம் – (கிருஷ்ணன்) மாயையாலாகிய அம்புக்கூடு.
மறைத்திடலால் – (முழுவதும்) மறைத்துவிட்டதனால், சாயா பதி மைந்தன்உம் –
சாயாதேவியின் கணவனான சூரியனது குமாரனாகிய கர்ணனும், வலை உள்படு –
வலையினுள்ளே அகப்பட்டுக்கொண்ட, வீரம் மடங்கல்என-வீரத்தன்மையையுடைய
சிங்கம் போல, நின்றனன் – (ஒன்றுஞ் செய்யமாட்டாமல்வாளா) நின்றான்;
நின்றதனஞ்சயன்உம் – (எதிரில்) நின்ற அருச்சுனனும், மெய் தளர்வுற்றனன் –
(ஒன்றுஞ்செய்யாது) உடம்புதளர்ச்சியடைந்தான்; (அது நோக்கி), விறல் –
வெற்றியையுடைய, காயா மலர் வண்ணன்-காயாம் பூப்போன்ற (கரிய திருமேனி)
நிறத்தையுடைய கண்ணன், (அருச்சுனனை நோக்கி), ‘ ஏயா – தகாத,  இது –
இவ்வாறுநிற்பது, என்கொல் – என்ன? முனைந்து பொராது – விரைந்து
போர்செய்யாமல், எழுது ஓவியம் ஆயினை – எழுதுசித்திரம்போல (அசைவற்று)
நின்றுவிட்டாய்,’ என்று-, விளம்புதலும் – சொன்னவளவில்,- வெம் கவி
கொடியோன்- (பகைவர்க்குப்) பயங்கரமான அனுமத்துவசத்தையுடைய அருச்சுனன்,
இருகைகுவியா – இரண்டுகைகளையுங் கூப்பி (அஞ்சலிசெய்துகொண்டு),-(எ – று.)-
அடுத்தகவியில் “என்றலுமே” என்பதனோடு தொடரும். சாயை – சூரியன்
மனைவிகளுள் ஒருத்தி, கபி – கவி எனத் திரிந்தது.

     இதுமுதற் பதினெட்டுக்கவிகள் – பெரும்பாலும் எல்லாச்சீர்களும்
மாச்சீர்களாகிய  எண்சீராசிரியவிருத்தங்கள்.    

வன் போர் புரி வெங் கணை அங்கர் பிரான் மறனால் உயர் பேர்
அறனார் குமரன்-
தன் போல விளங்கினன்; ஆதலின் என் தனுவும் குனியாது;
சரங்கள் செலா;
அன்பு ஓடியது உள்ளம்; எனக்கு இனிமேல் அவனோடு அமர்
செய்தலும் இங்கு அரிதால்;
வென் போகுவன்’ என்றலுமே, இறைவன் விசையோடு இரதத்தினை
மீள விடா,204.-கர்ணன் தருமபுத்திரன்போல் தோன்றுவதனால் இனி
என்னாற் பொர முடியாதென்று அருச்சுனன் சொல்ல,
க்ருஷ்ணன் தேரைத் திருப்பிவிடுதல்.

‘வல் போர் புரி – வலிய போரைச் செய்கிற, வெம் கணை –
கொடியஅம்புகளையுடைய, அங்கர் பிரான் – அங்கநாட்டார்க்கு அரசனான
கர்ணன்,மறனால் உயர் – வலிமையினாற்சிறந்தபேர் – பெரிய, அறனார் குமரன்
தன் போல -தருமபுத்திரன்போல, விளங்கினன் – (எனக்குக்) காணப்பட்டான்;
ஆதலின் -ஆதலால், என் தனுஉம் – எனது வில்லும், குனியாது – வளையாது;
சரங்கள் – அம்புகளும், செலா – (அவன்மேற்) செல்லா, உள்ளம் – மனம், அன்பு
ஓடியது -(அவன்மேல்) அன்புசெல்லப்பெற்றது; எனக்கு-, இனி மேல்-, இங்கு –
இவ்விடத்தில்,அவனோடு-, அமர்செய்தல்உம்- போர்செய்தலும், அரிது –
அருமையானது; ஆல் -ஆதலால், வென்போகுவன் – முதுகுகாட்டிப்போவேன்’,
என்றலுமே – என்றுசொன்ன மாத்திரத்தில்-, இறைவன் – கண்ணன், விசையோடு –
வேகத்தோடு,இரதத்தினை – தேவர், மீளவிடா – திரும்ப விட்டு,-(எ – று)-,
“முரசக்கொடி மன்னவன் முன்புசெல” என அடுத்த  கவியில் தொடரும்.

     அறன் – அறம் என்னும் பகுதியின்மேல் அன்விகுதிபெற்று வந்த
ஆண்பாற்பெயர்; ‘ஆர்’ விகுதி உயர்வுகுறிக்கவந்தது, அன்பாவது – மனைவியும்
புத்திரரும் முதலிய உறவினரிடத்துக் காதலுடையவனாதல். இறைவன் –
(எல்லாப்பொருள்களிலும் அந்தர் யாமியாய்த்) தங்குகின்றவன்; இறுத்தல் –
தங்குதல்.  

முகில்வண்ணனும் வாசவன் மா மகனும் முரசக் கொடி மன்னவன்
முன்பு செல,
‘பகலின்பதி மைந்தனை இன்னமும், இப் பகல் சாய்வதன் முன்பு,
படுத்திலையால்;
இகல் எங்ஙன் முடித்திடும், நின் கையில் வில்? இது என்ன வில்?’
என்று திருத்தமையன்
புகலும் சொல் அவன் செவியில் புகவே, புண்மேல் அயில் உற்றது
போன்றதுவே.205. – அப்போது, இன்னும் கர்ணனைக் கொல்லாமைக்காக
அருச்சுனன்வில்லைத் தருமன் பழித்துரைத்தல்.

முகில் வண்ணன்உம் – மேகம்போன்ற நிறத்தையுடைய கண்ணனும்,
வாசவன்  மா மகன்உம் – சிறந்த இந்திரகுமாரனான அருச்சுனனும், முரசம் கொடி
மன்னவன் முன்பு – முரசையெழுதிய கொடியையுடைய தருமனுக்கெதிரில், செல –
போக,- திருதமையன் – (அருச்சுனனது) மேலான தமையனான அத்தருமன்,
‘இன்னமும்-, இ பகல் சாய்வதன் முன்பு – இந்தப் பகற்பொழுது கழிதற்குமுன்னே,
பகலின் பதி மைந்தனை – பகற்பொழுதுக்குத் தலைவனான சூரியனது மகனான
கர்ணனை, படுத்திலை – கொன்றாயில்லை; நின் கையில் வில் – எனது கையிற்
பிடித்தவில், இகல் – பகையை, எங்ஙன் – எவ்வாறு முடித்திடும் – அழித்துவிடும்?
இதுஎன்னவில்-?’ என்று-, புகலும் – (அலட்சியமாகச்) சொன்ன, சொல் – வார்த்தை,
அவன் செவியில் புகா – அருச்சுனனது காதில் நுழையவே, புண்மேல் அயில்
உற்றது போன்றது-புண்ணில் வேல் நுழைந்தது போன்றது, (எ-று.)-மிகவருத்தம்
உண்டாக்கிற்று என்றபடி-புண் – கர்ணனைத் தருமனாகக் கண்டதானலுண்டான
தளர்ச்சிக்கும், அதன்மேல் வேல் பொருந்துதல் – தருமன் வார்த்தை
செவியுற்றதற்கும் உவமை யென அறிக.

கூர் ஆர் முனை வாளி கொள் இச் சிலையைக் குறை என் எதிர்
கூறினர், அம் புவிமேல்
யார் ஆயினும், ஆவி செகுத்திடுமால்; இது வஞ்சினம் ஆதலின்,
இப்பொழுதே
தார் ஆர் புய வென்றி உதிட்டிரனைத் தலை கொய்வன்’ எனத்
தனுவும் குனியா,
வாராமுன், விலக்கி, அருச்சுனனை ‘வருக!’ என்று தழீஇ மதுசூதனனே206.- தன்சபதப்படி வில்லைப்பழித்த தருமனைக் கொல்வேனென்று
வந்தஅருச்சுனனைக் கிருஷ்ணன் தடுத்தல்

இதுமுதல் மூன்றுகவிகள் – ஒருதொடர்.

     (இ-ள்.) (அருச்சுனன்), ‘கூர்ஆர் – கூர்மை பொருந்திய, முனை –
நுனியையுடைய, வாளி-அம்புகளை, கொள் – கொண்ட, இ  சிலையை – இந்த
வில்லை, அம்  புவிமேல் – அழகிய பூமியில், என் எதிர் – என எதிரிலே, குறை
கூறினர் – குறைவாக வார்த்தை சொன்னவர்கள், யார் ஆயின்உம் –
எவரேயானாலும் ஆவிசெகுத்திடும் – அவருயிரை (இவ்வில்) அழித்துவிடும்; இது-,
வஞ்சினம் – (எனது) சபதமாம்; ஆதலின்-, இப்பொழுதே-, தார் ஆர் புயம் –
மாலைபொருந்திய தோள்களையும், வென்றி – வெற்றியையுமுடைய, யதிட்டிரனை –
தருமனை, தலைகொள்வன் – தலைதுணிப்பேன்,’ என-  என்றுசொல்லி, தனுஉம்
குனியா – வில்லையும் வளைத்து, வாராமுன்-வருவதற்குமுன்னமே (மிகவிரைவிலே),
மதுசூதனன் – கண்ணன் அருச்சுனனை-, விலக்கி – தடுத்து, வருக என்று –
வருவாயாக வென்றுசொல்லி (அருகேயழைத்து), தழீஇ – தழுவிக்கொண்டு,-
(எ- று.)- “என்னாவுரைசெய்தலும்” என்று 208 ஆங் கவியில் வருவதனோடு
தொடரும்.           

குரவோர்களை நீ எனினும், கொலையின் கொடிது” என்று உயர்
கேள்வியர் கூறுவரால்;
உரவோனையும் அம் முறை கொன்றதனோடு ஒக்கும் சில புன்சொல்
உரைத்திடுவாய்-
இரவோர் தமது இன் முகம் வண்மையினால் இதயத்தொடு கண்டு,
மகிழ்ந்து, பெரும்
பரவு ஓத நெடுங் கடல் சூழ் புவியில் பரிதாபம் ஒழித்த பனிக்
குடையோய்!’207.- பெரியோரைப் புன்மாழிகூறுதல் தலையறுத்ததனோடு
ஒக்குமென்று கண்ணன் கூறுதல்.

 இரவோர்தமது – இரக்கின்ற யாசகர்களது, இன்முகம் – இனிய
முகத்தை, வண்மையினால் – ஈகைக்குணத்தால், இதயத்தொடு – நல்மனத்தோடு,
கண்டு – பார்த்து மகிழ்ந்து – களித்து, பெரு – பெரிய, பாவு – பரவிய, ஓதம் –
அலைகளையுடைய, நெடு நீண்ட,  கடல் – கடலினால், சூழ்-சூழப்பட்டுள்ள,
புவியில்- பூமியில் (உள்ளவர்களது), பரிதாபம் – வருத்தமாகிய வெப்பத்தை,
ஒழித்த -போக்கின, பனி குடையோய் – (நல்ல ஆளுகையாகிய)
குளிர்ந்தகுடையையுடையவனே!  ‘குரவோர்களை – ஐம்பெருங்குரவர்களை, நீ
எனின்உம் – (மரியாதைபற்றிப் பன்மையாகக் கூறாமல்) நீ என்று (இகழ்ச்சியாக
ஒருமையாற்) கூறினாலும், (அது), கொலையின் – (அவர்களைக்)
கொல்லுதலைக்காட்டிலும், கொடிது – கொடுமையையுடையது,’ என்று-, உயர்
கேள்வியர்-சிறந்த நூற்கேள்விகளையுடைய பெரியோர்கள், கூறுவர் –
சொல்லுவார்கள்:  ஆல் – ஆதலால், அ முறை – அந்தக்கிரமப்படி,
உரவோனைஉம் – வலிமையையுடைய யுதிட்டிரனையும், கொன்றதனோடு ஓக்கும் –
கொன்றதோடு ஒப்பாகிற, சில புன்சொல் – சில இழிவான சொற்களை,
உரைத்திடுவாய் – சொல்லிவிடுவாயாக; (எ – று.)

     ‘பெரியோர்களைக் குறித்துச் சிறிது இகழ்ந்து, பேசினாலும் அவர்களைக்
கொலைசெய்ததோ டொப்பா மென்று சான்றோர்சொல்வார், ஆதலால், இப்பொழுது
நீ தருமனை நோக்கிச் சில இழிசொற்கள் சொல்வாயாக; சொன்னால்  அவனைக்
கொன்றதனோ டொப்பாம்.
 ஆகவே, உன்வில்லைப் பழித்தவரைக் கொல்வே
னென்ற உனது சபதம் நிறைவேறினதாகும்’ என்று உபாயங் கூறி, அருச்சுனன்
தருமனைக் கொல்வதைக் கண்ணபிரான் தடுத்தருளினான், குரவோர்- ஈற்றயல்
அகரம் ஓவாயிற்று, குரவராவார்- அரசன், போதகாசிரியன், வமிசகுரு, தந்தை,
தமையன் என்பாரு முளர், உரவு-தேகபலம், புத்திபலம், மனோபலம், ஆயுதபலம்
சேனாபலம் முதலியவற்றோடு,தெய்வபலமும், இல்முகம் எனப் பிரித்து – இல்லாமை
(வறுமை) தோன்றுகிற முகமென்றுமாம். “காப்பவர்க்குச் செல்சார் கவிழ்தல்
எஞ்ஞான்றும்” என்றவாறுலோபிகள் இரப்பவரதுமுகத்தைக் காணாதபடி
தலைகவிழ்ந்து கொள்வ ராதலால், ‘இரவோர்தம தின்முகம் வண்மையினா
லிதயத்தொடு கண்டு’ என அவனதுதானகுணத்தை வெளியிட்டார்.  

என்னா உரை செய்தலும், அஞ்சி இளைத்து, இரு கைகொடு
இறைஞ்சி, நராதிபனைத்
தன் நா இசையாதன சிற்சில சொல், தளர்வோடு எதிர் நின்று,
தனஞ்சயனும்
சொன்னான்; அறன் மா மகன் ஓர் உரையும் சொல்லாமல், ‘இனித்
துறவு எய்துவன்!’ என்று
உன்னா, விரைவொடு இரதத்தின் இழிந்து, உயர் கான் அடைவான்
உணர்வுற்றனனே208.-அருச்சுனன் தருமனைப் புன்மொழிகூற, அவன்பேசாது
துறப்பேனென்று கானகஞ்செல்லத் தொடங்கல்.

என்னா – என்று, உரைசெய்தலும்- (கண்ணன்)
அருளிச்செய்தவளவில்,-தனஞ்சயன்உம் – அருச்சுனனும், அஞ்சி-, இளைத்து –
சோர்ந்து, இரு கைகொடு இறைஞ்சி – இரண்டுகைகளாலும் (அவனைத்) தொழுது,
நரஅதிபனை – மனிதர்க்குத் தலைவனானதருமனை நோக்கி, எதிர் நின்று எதிரிலே
நின்று, தளர்வோடு – மனத்தளர்ச்சியுடனே, தன் நா இசையாதன – தனது நாவினாற்
சொல்லுதற்குப் பொருந்தாதவையாகிய, சிற் சில சொல் – சிலசில பழிப்பான
வார்த்தைகளை, சொன்னான்-; அறன் மா மகன் -சிறந்த தருமபுத்திரன், ஓர்
உரைஉம் – ஒருவார்த்தையையும், சொல்லாமல்-, ‘இனி துறவுஎய்துவன் –
இப்பொழுது துறவறத்தை அடைவேன்,’ என்று-, உன்னா – எண்ணி, விரைவோடு –
வேகத்தோடு, இரதத்தின் – தேரினின்றும், இழிந்து – இறங்கி, உயர்காண்அடைவான்
– சிறந்த காட்டை அடையும்பொருட்டு, உணர்வு உற்றனன் –
ஆலோசித்தவனானான்; (எ-று.)

     இங்கே, இனி – இப்பொழுது என்னும்பொருளைத்தந்தது. துறவு –
சன்னியாசம்.கானுக்குஉயர்வு – தவஞ்செய்வதற்கு வாய்ப்பான
இடமாயிருத்தல்.      

நர நாரணர் சென்று தராபதி தாள் நளினத்தில் விழுந்து, ஒரு நாயகமா
வரன் ஆம் அவனைப் புனை தேர்மிசையே வைத்துத் துனி
மாறிடுமாறு உரைசெய்து,
‘அரனாம் என நீ அணி நின்றிட, யாம் அனல் அம்பு என ஓடி
இமைப்பிடை, முப்
புரமே அகம் ஆய தயித்தியரின் பொருவோன் உயிர் கைக்கொடு
போதுவமே.209.-இதுவும் மேலைக்கவியும் – ஒருதொடர்: க்ருஷ்ணார்ச்சுனர்
தருமன்காலில்விழுந்து  கோபம்மாற்றிக் கர்ணனுயிரைக்
கொல்வோமென்று விடைபெற்றுச் செல்லுதலைக்கூறும்.

நர நாரணர் – அருச்சுனனும் கண்ணனும், சென்று-போய் தராபதி –
பூமிக்குத் தலைவனான தருமனது, தாள் நளினத்தில் – தாமரைமலர்போன்ற
திருவடிகளில், விழுந்து – வீழ்ந்து நமஸ்கரித்து, ஒரு நாயகம் ஆ –
ஏகாதிபத்தியமாக, வரன் ஆம் அவனை – (யாவர்க்குந்) தலைவனாகப் போகிற
அத்தருமனை, புனைதேர் மிசை ஏ – அழகிய தேரின்மேலேயே, வைத்து –
இறங்கிப்போகாதபடி நிறுத்தி, துனி மாறிடும் ஆறு – கோபம், நீங்கிவிடும்படி,
உரைசெய்து – (சில இன்சொற்கள்) சொல்லி, (பின்பு), நீ-, அரன் ஆம் என –
சிவபெருமான் போல, அணி நின்றிட – சேனையிலே நின்று கொண்டிருக்க,-யாம் –
நாங்கள், அனல்அம்பு என – நெருப்பை முனையாகவுடைய (விஷ்ணுவாகிய)
பாணம்போல, இமைப்புஇடை-இமைப்பொழுதுள்ளே, ஓடி – விரைந்துசென்று,
முப்புரம்ஏ அகம் ஆய – மூன்று பட்டணங்களையுமே (தமக்கு) இடமாகக்
கொண்ட,தயித்தியரின் – அசுரர்கள் போல, பொருவோன் – போர் செய்கிற
கர்ணனது, உயிர்- உயிரை, கைக்கொடு-பறித்துக்கொண்டு (அவனைக்கொன்று),
போதுவம் -வருவோம்;

விடை கொண்டனம்’ என்று வணங்கி, நிலா மதியம் பகலே ஒளி
விட்டது எனக்
குடை கொண்டு நிழற்ற, இரண்டு அருகும் குளிர் சாமரம் மாருதம்
மாறு பொர,
புடை கொண்டு மகீபர் திரண்டு வர, புனை தேர், மத மா, புரவித்
திரள், கைப்
படை கொண்ட பதாகினி, முன் பின் வரும் படி ஏகினர்
மாதவ பற்குனரே.

விடை கொண்டனம் – உத்தரவு பெற்றுக்கொள்ளுகிறோம், என்று –
என்றுசொல்லி, வணங்கி – நமஸ்கரித்துவிட்டு, நிலா மதியம் – நிலாவையுடைய
பூர்ணசந்திரன், பகல்ஏ – பகற்பொழுதில்தானே, ஒளிவிட்டது என – ஒளியை
வீசியதுபோல, , குடை – ஒற்றைவெண்கொற்றக் குடை, கொண்டு நிழற்ற –
நிழலைச்செய்து கொண்டிருக்கவும். இரண்டு  அருகுஉம் –
இரண்டுபக்கங்களிலும், சாமரம்-சாமரைகள், குளிர் மாருதம் மாறு பொர-குளிர்ந்த
காற்றை மாறிமாறி வீசவும், மகீபர்- பூமியைக்காக்கிற அரசர்கள், புடைகொண்டு –
எல்லாப்பக்கங்களிலுஞ்சூழ்ந்துகொண்டு, திரண்டு வர-கூட்டமாகி வரவும், புனை
தேர் – அழகியதேர்களும், மதம் மா – மதயானைகளும், புரவி-குதிரைகளும்,
திரள் கை – திரண்டகைகளையுடைய, படை – காலாட்கூட்டமும், கொண்ட –
(ஆகிய நான்குஅங்கங்களைக்) கொண்ட, பதாகினி – சேனை, முன் பின்
வரும்படி –  முன்னும்பின்னும் வரவும், மாதவ பற்குனர் – கண்ணனும்
அருச்சுனனும்,ஏகினர்-சென்றார்கள்; (எ – று.)

     விடைகொண்டனம் – விரைவுபற்றிய காலவழுவமைதி, இனி குடை
கொண்டு -குடையால், நிழற்ற – (பிடிப்பவன்) நிழலைச்செய்ய என்றுமாம்.
திரள்கைப்படையெனவே, காலாளாயிற்று, புரவித்திரள் – குதிரைக்கூட்டமும்,
கைப்படை கொண்ட பதாகினி – கைகளில் ஆயுதங்களைக்கொண்ட
காலாட்சேனையும் என்றுமாம்.
211.-போர்க்களத்தில் பலவகையோசை யுண்டாதல்.

வெம் – கொடிய – வெற்றிமாலையையுடைய, நெடு சிலையின் –
நீண்டவில்லின், சிறு நாண் – சிறிய நாணியினது, விசை ஓதைஉம் –
வேகத்தாலுண்டாகியஒலியும், வெம் விருது ஓதைஉம் – கொடிய வெற்றிற்கு
அடையாளமானசின்னங்களின் ஒலியும், வெண் சங்கு ஓதைஉம் – வெண்மையான
சங்கத்தின்ஒலியும், வண் பணை ஓதைஉம் – பெரிய பறைகளின் ஒலியும், நால்
வகை ஆகியதானை நெடு கடலின்-பெரியகடல்போன்ற சதுரங்கசேனையின்,
பொங்கு  ஓதைஉம்- மிகுந்த ஒலியும், அண்டம் உடைந்திட – அண்ட கோளம்
(அதிர்ச்சியால்)உடைந்துவிடும்படி அப்புறம் உற்று-அப்பாலுள்ள பகிரண்டங்களிலுஞ்
சென்று,அகலாது – நீங்காமல், செவி பட – காதுகளிற் கேட்கப்பட, இமையா
விழியோர்முதல் யாவர்உம் – இமையாத கண்களையுடைய தேவர் முதலில்
எல்லோரும், இங்குஓதை எழுந்தது – இப்போர்க்களத்தில் உண்டான ஒலியென்று.
அறிந்திலர் -தெரிந்தாரில்லை; (எ-று.)-வேறு என்ன பேரொலியோவென்று சங்கித்து
அஞ்சினர்என்றபடி விருதோதை – விருதுகூறுகிற ஓசையுமாம், மற்று –
அசை.

தாமங்களின் வைப்பு அருள் காளையும், அச் சரகூடம் அறுத்து,
அணி தானையொடும்
வீமன்தனொடும் பொருகின்றமை தன் விழி கண்டு களித்திட,
வில் விசயன்,
காமன்தனை நீறு எழ வென்ற நுதல் கண்போல் எரிகின்ற கருத்துடனே,
மா மந்தர வெற்பு அன
தேர் கடவும் வலவன்தனொடு ஆகவம் மன்னினனே.212.- மாயாசரகூடத்தையத்துக் கர்ணன் வீமனோடு
பொருவதுகண்டு அருச்சுனன் அங்குச் சேர்தல்

வில்விசயன் – காண்டீவத்தையுடைய அருச்சுனன்,- தாமங்களின்
வைப்பு – ஒளிகளுக்கு இருப்பிடமான சூரியன், அருள் – பெற்றருளிய,
காளைஉம் -கர்ணனும், அசர கூடம் அறுத்து – (கண்ணன்மாயையாலாகிய)
அந்தஅம்புக்கூட்டை அறுத்துத் தள்ளிவிட்டு, அணி தானையொடுஉம் – அழகிய
சேனையுடனும், வீமன் தனொடுஉம் – வீமசேனனுடனும், பொருகின்றமை – போர்
செய்கிறதை. தன் விழி – தனது கண்கள், கண்டு – பார்த்து, களித்திட – மகிழா
நிற்ககாமன்தனைநீறு எழ வென்ற – மன்மதனைச் சாம்பராம்படியெரித்து வெற்றி
கொண்ட, நுதல் கண்போல் – (பரமசிவனது) நெற்றிக்கண்போக, எரிகின்ற-
(கோபத்தால்) தபிக்கிற, கருத்துடனே- மனத்துடனே, மா மந்தர வெற்பு அன –
பெரிய மந்தரமலையைப் போன்ற, தேர் – தேரை, கடவும்-செலுத்துகிற,
வலவன்தனொடு-சாரதியாகிய கண்ணனோடு, ஆகவம்-போர்க்களத்தை, மன்னினன்-
அடைந்தான்;(எ – று.)

     ஆயிரங்கிரணங்களை யுடைமையாலும், மற்றைச்சுடர்களாகிய சந்திர
அக்கனிகளுக்கு ஒளிகளைக் கொடுத்துவாங்குந் தன்மையையுடைமையாலும்,
தாமநிதியென்று சூரியனுக்குப் பெயர்.

அங்கிக் கதிர் தந்த கொடுஞ் சிலை நாண் அரவக் கணை அஞ்ச
எறிந்து, மிகச்
சங்கித்து, அடல் அங்கி அளித்த தனிச் சரம் ஏவினன் வந்து
தனஞ்சயனும்;
பொங்கிக் கனல் சாலம் எழுந்தது எனப் புகையும்படி போய்,
அகல் வான் நதியின்
கங்கில் பொறி விட்டது, தாரகையின் கணம் என்ன, எழுந்தது
காய் கனலே.213.-அருச்சுனன் ஆக்கினேயாஸ்திரத்தை விடுதல்.

தனஞ்சயன்உம் – அருச்சுனனும், வந்து-, அங்கி கதிர் தந்த –
அக்கினியென்னுஞ் சுடர் அளித்த, கொடு சிலை – கொடிய காண்டீவமென்னும்
வில்லின், நாண் – நாணியை, அரவம் கணை – (கர்ணனது) நாகாஸ்திரம், மிக
சங்கித்து-(இடியோசையோவென்று) மிகவுஞ் சந்தேகித்து அஞ்ச – பயப்படும்படி,
எறிந்து – (கைவிரலால்) தெறித்து, அடல் – வலிமையையுடைய, அங்கி அளித்த –
அங்கி அருளிய, தனி சரம் – ஒப்பில்லாத ஆக்கினேயாஸ்திரத்தை, ஏவினன் –
பிரயோகித்தான்; எழுந்தது – (அதில் நின்றும்) உண்டானதாகிய, காய் கனல்-
எரிகின்றநெருப்பு,-கனல் சாலம்-(பிரளயகாலத்து) நெருப்புத்திரள், பொங்கி
எழுந்தது என-பற்றிமேலே கிளர்ந்ததென்னுமாறு, புகையும்படி – புகையுண்டாகும்
படி, போய் -மேலெழுந்துசென்று, அகல் வான் நதியின் கங்கில் – பரந்த
ஆகாசகங்கையின்கரையில், தாரகையின் கணம் என்ன – நட்சத்திரங்களின்
கூட்டத்தைப்போலபொறிவிட்டது – பொறிகளைச் சிதறியது. (எ – று.) பி-ம்:
எறிந்தது காய்.

இணை இன்றி எழுந்து சுடும் கனலால், இரதங்களும், வேல் முதல்
எப் படையும்,
கணையும், சிலையும், கவனப் பரியும், கரியும், கரியானவை
கண்டு, இயமன்
துணைவன் துணை வாகு வளர்ந்திடவும், துணை வார் புருவங்கள்
துடித்திடவும்,
பணை வெங் குரல் கன்றி முழங்கிடவும், பவ்வத்து அரசன் தரு
பாணம் எடா,214.-இதுவும் மேலைக்கவியும் – ஒருதொடர்:
வாருணாஸ்திரத்தால் கர்ணன் ஆக்நேயாஸ்திரத்தை
யவித்தலைக் கூறும்.

இணை இன்றி – ஒப்பில்லாமல், எழுந்து – மேல்மேல் வளர்ந்து,
சுடும்- எரிக்கின்ற, கனலால் – அக்கினியினால், இரதங்கள்உம் – தேர்களும்,
வேல் முதல்எ படைஉம் – வேல் முதலிய எல்லா வாயுதங்களும், கணைஉம் –
அம்புகளும்,சிலைஉம் – வில்லும், கவனம்பரிஉம் – நடைகளையுடைய
குதிரைகளும், கரிஉம் -யானைகளும், கரி ஆனமை – (எரிந்து) கரியாய்விட்டதை,
இயமன் துணைவன்-யமனது தம்பியான கர்ணன், கண்டு-, (வீராவேசத்தால்), துணை
வாகுவளர்ந்திடஉம் -ஒன்றொடொன்றொத்த (இரண்டு) தோள்களும் ஓங்கியிடவும்,
துணை வார்புருவங்கள் – நீண்ட இரண்டு புருவங்களும், துடித்திடஉம் –
துடிக்கவும், பணைவெம் குரல் – பருத்த கொடிய சிங்கநாதஞ்செய்யும் ஒலி, கன்றி
முழங்கிடஉம் -சினந்து, ஒலிக்கவும், பவ்வத்து அரசன் தரு – கடலுக்கு அரசனாகிய
வருணன் அளித்த, பாணம் – வாருணாஸ்திரத்தை, எடா – எடுத்து,-(எ – று.)
-“விடும்” என்பதனோடு தொடரும், யமனுங் கர்ணனுஞ் சூரியன் மக்களாதலால்,
‘இயமன் துணைவன்’ என்றார். பணை வெம் குரல்-வாச்சியங்களின் பயங்கரமான
தொனியுமாம்.

பவ்வம் புனல் வற்ற முகந்து வலம் பட அம்பரமூடு உருவப் பரவா,
வெவ் அம்புதம் ஏழும் உடன் பொழியும் வெள்ளம் புரை வெள்ளம்
மிகச் சொரிய,
செவ் அம்பரம் ஒத்த களத்திடை, அச் செய்யோன் மகன் வன்பொடு
சீறி விடும்
அவ் அம்பு நொடிப்பொழுதத்து அறவோன் அனுசன் தழல் அம்பை
அவித்ததுவே.

பவ்வம் – கடல் புனல் வற்ற-நீர் வறளும்படி,முகந்து-(நீரை)
மொண்டுகொண்டு, வலம் பட – வலமாக, அம்பரம் ஊடு- ஆகாயத்தில், உருவ-
ஒழுங்காக, பரவா – பரவி, வெம் அம்புதம் ஏழ்உம் – கொடிய சப்தமேகங்களும்,
உடன் – ஒருசேர, பொழியும் – (பிரளயகாலத்துச்) சொரிகிற, வெள்ளம் –
நீர்வெள்ளத்தை, புரை – ஒத்த, வெள்ளம்-வெள்ளத்தை, மிக – மிகுதியாக, சொரிய-
பொழியும்படி, செம் அம்பரம் ஒத்த – (இரத்தத்தாற்) செவ்வானம்போலச் சிவந்த,
களத்தின் இடை – போர்க்களத்திலே, செய்யோன் மகன் – செந்நிறமுடைய
சூரியனது குமாரனான கர்ணன், வன்பொடு-வலிமையோடு, சீறி – கோபித்து,
விடும் -பிரயோகித்த, அ அம்பு – அந்த வாருணாஸ்திரம், நொடிப்பொழுதத்து –
கைந்நொடிப்பொழுதுள்ளே, அறவோன் அனுசன் – தருமன் தம்பியான
அருச்சுனனது, தழல் அம்பை – ஆக்கினேயாஸ்திரத்தை,  அவித்தது –
தணியச்செய்தது; (எ – று.) பி-ம்-களத்திடையிச்.

     “பாடிமிழ் பனிக்கடல் பருகி வலனேர்பு, கோடுகொண்டேழுந்த கொடுஞ்செல
வெழிலி” என்றார், முல்லைப்பாட்டிலும். அம்புதம் – நீரைக்கொடுப்பது. தழலம்பு –
அக்கினியைத் தெய்மாகவுடைய அஸ்திரம்

வாயுக் கணை ஏவினன் வானவர்கோன் மைந்தன்; திகழ் பேர்
ஒளி வான்மணியின்
சேய் உற்று உரகேசன் வழங்கிய திண் திறல் வெங் கணை
ஒன்று தெரிந்தனனால்;
ஆயுப் புறமிட்டுவிடப் பொருவோன் அரி வெங் கணை,
அங்கு மலைந்திடுவோன்
வீ உற்பல மா முனை வெங் கணை மேல் வீசிப் பொரும்
முன்பு, விழுங்கியதே.216.-இரண்டுகவிகள்-அருச்சுனன்விட்ட அஸ்திரங்களைக்
கர்ணன்மாற்றுஅஸ்திரங்களாற் போக்கின்மை கூறும்.

வானவர் கோன் மைந்தன் – தேவராஜகுமாரனான அருச்சுனன்,
வாயுகணை – வாயவ்யாஸ்திரத்தை, ஏவினன்-தொடுத்தான்; திகழ் பேர் ஒளி-
விளங்குகிறபெரிய ஒளியையுடைய, வான் மணியின் – ஆகாயத்துக்கு
இரத்தினம்போன்றசூரியனது, சேய் – புத்திரனான கர்ணன், உற்று-பொருந்தி,
உரக ஈசன் வழங்கிய -சர்ப்பங்களுக்குத் தலைவனாகிய ஆதிசேஷன் தந்த,
திண்திறல் சர்ப்பாஸ்திரத்தை,தெரிந்தனன் – ஆராய்ந்து தொடுத்தான்; ஆயு
புறம் இட்டுவிட – ஆயுள் ஒழியும்படி, பொருவோன் – போர்செய்பவனாகிய
கன்னனது. அரி வெம் கணை-கொடிய சர்ப்பாஸ்திரம், அங்கு – அவ்விடத்து,
மலைந்திடுவோன் – எதிர்த்துப்போர்செய்கிற அருச்சுனனது, உற்பலம் வீ –
கருங்குவளைமலர் போன்ற கூர்மையான, மா முனை – சிறந்த நுனியையுடைய,
வெம்கணை – கொடிய வாயவ்யாஸ்திரத்தை, மேல் வீசி பொரும் முன்பு –
மேன்மேலேவிரைந்துதொடுக்கும் முன்னே, விழுங்கியது – உட்கொண்டு அடக்கிற்று;
(எ – று.)–பி-ம்: அவ்வெங்கணை.

     ஆகாயத்துக்கு அழகையும் விளக்கத்தையுஞ் செய்தலால், ககனமணியென்று
சூரியனுக்குப் பெயர். சர்ப்பம் காற்றை உணவாகஉட்கொள்ளுதலால்,
வாயுஅஸ்திரத்துக்கு சர்ப்ப அஸ்திரம் மாறாகும். உற்பலம்-உத்பலம். அரிய=ஹரி:
பாம்பு.     

என் அம்புதனக்கு எதிர் இல்லை’ எனா, இருள் அம்பினை ஏவினன்
வில் விசயன்;
கன்னன் கலை எட்டுடன் எட்டுடை வெண் கதிர் அம்பு தொடுத்து
எதிர் கன்றினனால்;
முன் அம்பு சிதைந்து சிதைந்து அழியா, முகம் மாறி இமைத்து
விழிக்கும் முனே,
பின் அம்பு தொடர்ந்து செலச் செலவே, பிலம் மூழ்கியது; என்ன
பெரும் பிழையோ?

வில் விசயன் – வில்லில்வல்ல அருச்சுனன், என் அம்பு தனக்கு
எதிர்இல்லை எனா-எனது இந்த அம்புக்கு எதிரில்லையென்று எண்ணி, இருள்
அம்பினை- அந்தகாராஸ்திரத்தை, ஏவினன்-; கன்னன்-, கலை எட்டுடன் எட்டு
உடை -பதினாறுகலைகளையுடைய, வெண் கதிர் அம்பு-வெண்மையாகிய
ஒளியையுடையபூர்ணசந்திராஸ்திரத்தை, எதிர் தொடுத்து – (அதற்குப்) பிரதியாகப்
பிரயோகித்து,கன்றினன் – கோபித்தான்; பின் அம்பு – பின்புவிட்ட கர்ணன்
அஸ்திரம், தொடர்ந்துசெல செல – தொடர்ந்து விரைந்து செல்லுதலால், முன்
அம்பு – முன்புவிட்ட(அருச்சுனன்) அஸ்திரம், இமைத்து விழிக்கும் முனே –
(கண்ணை)மூடித்திறக்கும்முன்னே, சிதைந்து சிதைந்து – கெட்டுக் கெட்டு,
அழியாமுகம் மாறி -(முன் ஒருபோதும் அழியாத தன்) முகம் மாறுபட்டு, பிலம்
மூழ்கியது என்ன -பாதளாத்துள்ளே மறைந்தாற்போல (மறைந்துவிட்டது); பெரு
பிழைஓ-(இங்ஙன்போனதும்) தப்பித்துக்கொண்டதாமோ?(எ-று.)

     கலை – சந்திரன்பங்கு- எட்டுடன் எட்டு – எட்டோடு கூடிய எட்டு –
வெண்கதிர் – அன்மொழித்தொகை.

மகவான் அருள் வாளி தொடுத்தனன், அம் மகவான் மகன்; வாசிகள்
ஏழுடை வெம்
பகவான் அருள் வாளி தொடுத்தனன், அப் பகவான் அருள்
தியாகபராயணனும்;
தக வாளி இரண்டும் உடன் கதுவி, தாழாது உயராது சமம் பெறவே,
முகவாய்கள் பிளந்தன; மற்று உள போர் முனை வாளியும்,
இப்படி முட்டினவே.218.-அருச்சுனனெய்த அஸ்திரங்களோடு கர்ணனெய்த அஸ்திரங்கள்
முட்டிக்கொண்டு தடுத்தல்.

மகவான் அருள் வாளி – இந்திரனருளிய ஐந்திராஸ்திரத்தை, அ
மகவான் மகன் – அவ்விந்திரன் மைந்தனான அருச்சுனன் சுனன்தொடுத்தனன்-;
வாசிகள் ஏழ் உடை – ஏழுகுதிரையையுடைய, வெம் பகவான் – வெவ்விய சூரியன்,
அருள் – அருளிய வாளி – சூரியாஸ்திரத்தை, பகவான் அருள் – அச்சூரியன்
பெற்ற, தியாக பராயணன்உம் – தான குணத்துக்கு மேலானஇருப்பிடமாகிய
கர்ணனும், தொடுத்தனன்-; வாளி இரண்டுஉம் – அவ்விரண்டுஅஸ்திரங்களும்,
தக – தகுதியாக, உடன் – ஒன்றோடொன்று கதுவி – பொருந்தி,தாழாது – (ஒன்று)
தாழ்வடையாமலும் உயராது – (ஒன்று) உயர்வடையாமலும்,சமம்பெற –
ஒப்புமைபொருந்த முகம்வாய்கள் பிளந்தன – முனைகள் பிளவுபட்டன;மற்றுஉள –
இன்னும்உள்ள, போர் – போருக்குரிய, முனை வாளிஉம் -கூர்மையையுடைய
அஸ்திரங்களும், இப்படி முட்டின – இவ்வாறு ஒன்றோடொன்றுஎதிர் தடுத்தன;
(எ-று.)

     நிறைந்த மகிமை, தைரியம், கீர்த்தி, சம்பத்து, ஞானம், வைராக்கியம் என்கிற
இந்த ஆறுக்கும் பகமென்றுபெயர்; அதையுடையவன், பகவான். பர அயந என்ற
இரண்டுஞ் சேர்ந்தபொழுது, பாராயணன் என்ற வடநூல்விதிப்படி னகரம்
ணகரமாயிற்று.    

உரம் மந்தர வெற்பினும் மிக்க புயத்து உரவோன், உளம் வெஞ்
சினம் ஊறி எழ,
பிரமன் கணை ஏவுதலும், சமனார் பின்னோன் முடுகிப் பிறை
மா மவுலிப்
பரமன் கணை ஏவினன்; அக் கணை அப் பகவன் கணை
நீறுபடுத்துதலின்,
சரம் அங்கு அவை வேறு தொடுத்திலர், கைத் தனுவும் குனிவித்திலர்,
தார் முடியோர்.219.- பிரமாஸ்திரத்தைக் கர்ணன் ருத்திராஸ்திரத்தாலடக்க,
இருவரும் சற்றுவாளாவிருத்தல்.

உரம் – வலிமையையுடைய, மந்தரம்  வெற்பின்உம்
மந்தரமலையைக்காட்டிலும், மிக்க – மிகுந்த, புயத்து உரவோன் தோள்களின்
வலிமையுடைய அருச்சுனன், உளம் – மனத்தில், வெம் சினம் – கொடியகோபம்,
ஊறி எழ – மேல்மேல் அதிகப்படி பிரமன்கணை – பிரமாஸ்திரத்தை, ஏவுதலும் –
தொடுத்த வளவில், சமனார் பின்னோன் – யமனுக்குப் பின்னே பிறந்த கர்ணன்,-
முடுகி- விரைந்து, பிறை மா மவுலி பரமன் கணை – பிறைச்சந்திரனைச்  சூடிய
பெரிய முடியையுடைய சிறந்த ருத்திரனது அஸ்திரத்தை, ஏவினன் – தொடுத்தான்;
அ கணை – அந்த ருத்திராஸ்திரம், அ பகவன் கணை – அந்தப்பிரமாஸ்திரத்தை,
நீறுபடுத்துதலின் – சாம்பலாக்கிவிட்டதனால், அங்கு – அப்பொழுது, தார்
முடியோர்- மாலையைச்சூடிய மயிர்முடியையுடைய அவ்விருவரும், சரம் அவை
வேறு -வேறு அம்புகளை, தொடுத்திலர் – தொடுத்தாரில்லை; கை தனுஉம் –
கையிலுள்ளவில்லையும், குனிவித்திலர் – வளைத்தாரில்லை; (எ – று.)

     சமன் – யமன் என்பதன் சிதைவு; ஸமன் என்பதன் திரிபு எனினுமாம்:
யாவரிடத்தும் பக்ஷபாதமின்றி நடுவுநிலையாக இருப்பவன் என்க.

இவ்வாறு இமையோர்கள் வரங்களினால் இருவோர்களும் எய்திய
மா மறை கூர்
வெவ் வாளிகள் ஓடி உடற்றுதலால், வெஞ் சேனை அடங்க
மடங்கியபின்,
மை வான் அளகம், திசை வாள் முகமா, மலையாம் முலை,
வாரிதி வண் துகிலம்,
செவ் ஆறு படுத்தலின், மேதினியாள் திருமேனி அணிந்தது,
செவ்வணியே.220.-படுகளச்சிறப்பு.

 இ ஆறு – இவ்விதமாக, இருவோர்கள்உம் – கர்ணனும் –
அருச்சுனனும், இமையோர்கள் வரங்களினால் – தேவர்கள் கொடுத்தருளிய
வரங்களால், எய்திய – பெற்ற, மா மறை கூர் – சிறந்த மந்திரங்கள் பொருந்திய,
வெம் வாளிகள் – கொடிய அஸ்திரங்கள், ஓடி உடற்றுதலால் – விரைந்து சென்று
அழித்தலால், வெம் சேனை – கொடிய இரண்டுசேனைகளும், அடங்க – எல்லாம்,
மடங்கிய பின் – அழிந்தபின்பு, மை வான் அளகம் – கறுத்த ஆகாயமாகிய
கூந்தலையும், திசை ஆம் வாள் முகம் – திக்குக்களாகிய ஒளியையுடைய
முகத்தையும், மலை ஆம் முலை – மலையாகிய தனங்களையும், வாரிதி வண்
துகிலம் – கடலாகிய அழகிய ஆடையையும், செம் ஆறு- சிவந்த ரத்தப்பெருக்கு,
படுத்தலின் – செம்மையாக்கியதனால், மேதினியாள் – பூமிதேவியினது, திரு
மேனி -அழகிய உடம்பு, செம் அணி – செந்நிறமுள்ள அலங்காரத்தை,
அணிந்தது -தரித்தாற் போன்றது; (எ -று.)   

     மை வான் – மேகங்களையுடைய வானமுமாம். துகிலம், அம் – காரியை,
“காரார் வரைக்கொங்கைக் கண்ணார் கடலுடுக்கைச், சீரார் சுடர்ச்சுட்டிச் செங்கலுழிப்
பேராற்றுப், பேரார மார்பிற் பெருமா மழைக்கூந்தல், நீரார வேலி நிலமங்கை”,
“வானியங்கு தாரகைமீன், என்னு மலர்ப்பிணைய லேய்ந்த மழைக்கூந்தல், தென்ன
னுயர்பொருப்புந் தெய்வ வடமலையும், என்னுமிவையே முலையா வடிவமைந்த,
அன்ன நடைய அணங்கு” என்றார் பெரியோரும்.  

மகபதி மைந்தனை, மீளவும், தினகரன் மகன், உயிர்
கொண்டிடவேணும்’ என்று, உறு சினம்
மிக மிக, வன் சிலை கோலி, ஒண் கிரி பல மிடை வனம் வெந்திட
ஓடி, அந்தரமிசை
புகை கதுவும்படி சீறி, வெம் பொறி விடு புரி தழல் மண்டிய நாளில்
அம்பு என வரும்
இகலுடை வெம் பகு வாய்கள் ஐந்து உடையது ஒர் எழில் கொளும்
புயங்கனை ஏவ என்று உசவியே,221.-மூன்றுகவிகள்-கர்ணன் அருச்சுனன் கழுத்தையே
யிலக்காகக் கொண்டு நாகாஸ்திரத்தை எய்தமைகூறும்

இதுவும் மேற்கவியும்-ஒருதொடர்

     (இ-ள்.) தினகரன் மகன் – சூரியகுமாரனான கர்ணன், மீள உம் – பின்பு,
மகபதி மைந்தனை – இந்திரகுமாரனான அருச்சுனனை, உயிர் கொண்டிட வேணும்
என்று – சொல்லவேண்டுமென்று, உறு சினம் – பெருங்கோபம், மிக மிக –
மேன்மேல் அதிகப்பட, வல் சிலை கோலி – வலிய வில்லை வளைத்து, வெம்
பொறி விடு – வெவ்விய பொறிகளைச் சிந்துகிற, புரி தழல் – விரும்பிய அக்கினி,
ஒள் கிரி பல – ஒளியையுடைய பல மலைகள், மிடை – நெருங்கப்பெற்ற, வனம் –
காண்டவவனம், வெந்திட – எரிந்துபோம்படி, அந்தர மிசை – ஆகாயத்தில், ஓடி –
விரைந்து சென்று,புகை கதுவும்படி – புகை நெங்கும் படி, சீறி – கோபித்து,
மண்டிய நாளில் – பற்றியகாலத்தில், அம்பு என வரும் – (அருச்சுனனைக்
கொல்லும்பொருட்டு) அஸ்திரமாகவந்த, இகல் உடை – வலிமையையுடைய, வெம்
பகு வாய்கள்- கொடிய திறந்தவாய்கள், ஐந்து உடையது – ஐந்தையுடையதாகிய,
ஓர் – ஒரு, எழில் கொள் -அழகைக்கொண்ட, புயங்கனை – நாகாஸ்திரத்தை, ஏவ
என்று -விடவேண்டுமென்று, உசவி சொல்லி,- (எ-று.)-“பரிவுடனருளி
வணங்கியெடாவிடும்பொழுதினில் என மேற்கவியிற் றொடரும்.

     இதுமுதல் ஏழுகவிகள் – பெரும்பாலும் ஒன்று நான்கு ஐந்து எட்டாஞ்சீர்கள்
கருவிளச்சீர்களும், மற்றைநான்கும் கூவிளச்சீர்களுமாகியஎண்சீராசிரியச்சந்த
விருத்தங்கள். ‘தன தன தந்தன தானன தனதன தனதன தந்தன
தானன தனதன’ என்பது, இவற்றுக்குச் சந்தக்குழிப்பு.    

பரிமள சந்தன தீபமும், கமழ் புகை பனி மலரும் கொடு
பூசையும் பரிவுடன்
அருளி, வணங்கி, எடா விடும் பொழுதினில், அடல் வலவன் சில
கூறினன் பரிவொடு;
‘விரி துளவம் புனை மாயன் வஞ்சனை உளன்; விசயன் அகன் தட
மார்பகம் புதைதர
உரக நெடுங் கணை ஏவுக!’ என்றிட, அவன் உறுதி நினைந்திலன்,
ஆதவன் குமரனே.

பரிமள சந்தனம் தீபம்உம் – வாசனையையுடைய சந்தனத்தையும்
விளக்கையும், கமழ் புகை – வாசனைவீசுகிற தூபத்தையும், பனி மலர்உம் –
குளிர்ச்சியையுடைய  பூக்களையும் கொடு – கொண்டு, பூசைஉம் – பூஜையையும்,
பரிவுடன் அன்போடு, அருளி – செய்து, வணங்கி – நமஸ்கரித்து, எடா – எடுத்து
விடும் பொழுதினில் – விடுகிற சமயத்தில்,- அடல் வலவன் வலிமையையுடைய
பாகனான சல்லியன், பரிவொடு – அன்போடு சில கூறினான் – சில
வார்த்தைகளைச்சொல்பவனாகி, ‘விரி துன்பம் புனை – மலர்ந்த திருத்துழாயை
யணிந்த, மாயன் -கண்ணன், விசயன் – அருச்சுனனது, அகல் தட மார்பு அகம் –
விசாலமான பெரியமார்பினிடத்தில், புதைதர – அழுந்தும்படி [மார்பை
இலக்காகக்கொண்டு], உரகம்நெடு கணை – பெரிய நாகாஸ்திரத்தை, ஏவுக –
பிரயோகிப்பாயாக,’ என்றிட -என்றுசொல்ல, ஆதபன் குமரன் – சூரிய குமாரனான
கர்ணன், அவன் உறுதிஅச்சல்லியன் சொன்ன நன்மையை, நினைந்திலன் –
எண்ணியனில்லை;

மழு உறு செங்கை இராமன் என்பவன் அருள் வரி சிலை கொண்டு, அணி
நாணி தன் செவியொடு
தழுவுற, மண்டலமாய் வளைந்திட, முது தறுகண் நெடுஞ் சினம் மூளும்
வெங் கணையினை,
எழிலி மதங்கய வாகனன் தனயனது எழில் பெறு கந்தரமே துணிந்திடும்
வகை,
அழல் எழு நெஞ்சொடு நாடி நின்று, உதையினன்-அளி முரல் பங்கய
நாயகன் குமரனே.

அளி முரல் – வண்டுகள் ஒலிக்கின்ற. பங்கயம் – தாமரைக்கு,
நாயகன் – தலைவனான சூரியனது, குமரன் – குமாரனான கர்ணன்,- மழு உறு –
பரசு என்னும் ஆயுதம் பொருந்திய, செம் கை – சிவந்த கையையுடைய, இராமன்
என்பவன் – பார்க்கவராமனென்பவர், அருள் – கொடுத்தருளிய, வரி சிலை –
கட்டமைந்தவில்லை, கொண்டு – (கையிற்) பிடித்து, அணி நாணி – அழகிய நாண்,
தன் செவியோடு – தனது காதுகளோடு, தழுவுற – பொருந்தவும்,- மண்டலம்
ஆய் -வட்டவடிவமாய், வளைந்திட – (வில்) வளையவும், தறுகண் –
அஞ்சாமையையுடைய,முது நெடு சினம் மூளும் – பழைய பெருங்கோபம் மிகுந்த,
வெம் கணையினை -கொடிய நாகாஸ்திரத்தை, எழிலிமதங்கயம் வாகனன் –
மேகமாகியானையைவாகனமாகவுடைய இந்திரனுக்கு, தனயனது – குமாரனான
அருச்சுனனுடைய, எழில்பெறு – அழகைப் பெற்ற, கந்தரம்ஏ – கழுத்தே,
துணிந்திடும்வகை – அறுபடும்படி,அழல் எழும் நெஞ்சோடு – வெப்பம்பொருந்திய
மனத்துடனே, நாடி நின்று -இலக்குப் பார்த்து நின்று, உதையினன் –
பிரயோகித்தான்; (எ-று.)

     மழுவுறு கை யிராமன் – பரசுராமன்; இவர், ஸ்ரீமகாவிஷ்ணுவினது ஆறாம்
அவதாரம்: இவரிடத்துக் கர்ணன் பிராமணவடிவமாச்சென்று தநுர்வேதம் பயின்றான்,
முது சினம் – தன்தாயை அருச்சுனன் கொன்றதனாலாகியது. கந்தரமே, ஏகாரம் –
பிரிநிலையோடு தோற்றம், சூரியனைக் கண்டமாத்திரத்தில் தாமரைமலர்தலால்,
தாமரையாகிற பெண்ணுக்குச் சூரியனைக் கணவனென்பது, மரபு. 

வலவன் எனும் திருமால், அதன் துனை கெழு வரவை அறிந்து, அணி
தேரின் வன் திகிரிகள்
இலகிய அங்குலி ஆறு-இரண்டு அவனியின்-இடை புதையும்படி
தாழ நின்றிடுதலின்,
அலர் கதிர் தந்தருள் காளை அம்பு என விடும் அரவு தனஞ்சயன்
மார்பையும் களனையும்
விலகி, அவன்தன தாதை அன்று உதவிய வெயில் மகுடம்தனை
மோதி வந்து இடறவே,224.- அந்தநாகக்கணை அருச்சுனனுடைய கிரீடத்தைத்
தாக்கித் தள்ளுதல்.

இதுவும் மேலைக்கவியும் – ஒருதொடர்

     (இ -ள்.) வலவன் ஏனும் – அருச்சுனசாரதி யெனப்படுகிற, திருமால் –
கண்ணன், அதன் – அந்நாகாஸ்திரத்தின், துனை கெழு – உக்கிரம் [வேகம்]
மிகுந்த,வரவை – வருகையை, அறிந்து – தெரிந்து, அணி தேரின் – அழகிய
(தமது)தேரினது, வல் திகிரிகள் – வலிய சக்கரங்கள், இலகிய – விளங்கிய,
அங்குலி ஆறுஇரண்டு – பன்னிரண்டு அங்குலம், அவனியினிடை – பூமியில்,
புதையும்படி -அழுந்தும்படி, தாழ நின்றிடுதலின் – அழுத்தி நின்றதனால், அலர்
பதிர் தந்தருள்காளை – விளங்குகிற கிரணங்களையுடைய சூரியன் பெற்றருளிய
பிள்ளையானகர்ணன், அம்பு என விடும் – அஸ்திரமாகத் தொடுத்த அரவு –
நாகம், தனஞ்சயன் – அருச்சுனனது மார்பையும்-, களைஉம் – கழுத்தையும்,
விலகி – நீங்கி, அவன் தன் தாதை – அவனது தந்தையான இந்திரன், அன்று –
அந்நாளில் உதவிய – கொடுத்த, வெயில் மகுடம் தனை – சூரியனொளிபோன்ற
ஒளியையுடைய கிரீடத்தை, மோதி வந்து இடற – வந்து தாக்கித் தள்ள,- (எ-று.)-
“உதையினன்” என மேலைக்கவியில் முடியும். அங்குலி – விரற்கிடை. தன, அ –
ஆறனுருபு.    

இடறிய திண் பணி வாளி பின் பறிதலும், எதிர் பொர, வெஞ் சிலை
கோலி நின்றவன், அணி
பிடரினும் உண்டுகொல் பார்வை என்றிட, வலி பெற நிலை நின்று இரு
தோள்களும் பரிவுற,
அடவியின் வெந்து தன் வால் குறைந்திட விடும் அயில் முக வெங்
கணையால், அதன் பருமைகொள்
உடலம் இரண்டு உடலாய் விழுந்து அலமர உதையினன் உம்பர்பிரான்
அருள் குரிசிலே.225.- பின்பு கணையானநாகத்தை அருச்சுனன்
இரண்டுதுண்டாக்கிவிடுதல்
.

உம்பர்பிரான் – தேவராஜனான இந்திரன், அருள் – பெற்ற,
குரிசில் -பெருமையிற்சிறந்த அருச்சுனன், எதிர் பொர – எதிரே போர்செய்தற்கு,
வெம் சிலை- கொடிய வில்லை, கோலி நின்றவன் – வளைத்துநின்றவன், திண் –
வலிய, இடறிய- (தன் கிரீடத்தைத்) தள்ளின, பணி வாளி – நாகாஸ்திரம், பின்
பறிதலும் – பின்னால்நீங்கினவளவில், அணி பிடரின்உம் – அழகியபின்புறத்தும்
‘பார்வை உண்டு கொல்கண் உளதோ? ‘என்றிட – என்னும்படி வலி பெற –
வலிமை பொருந்த, நிலைநின்று – நிலையிலே நின்று, இரு தோள்கள்உம் பரிவு
உற – இரண்டு தோள்களும்மகிழ்ச்சியாற் பூரிக்க, அடவியின் – காண்டவவனத்தில்,
வெந்து – எரிந்து, தன் வால்குறைந்திட – அதன் வால் அறுபடும்படி, விடும் –
விட்ட, அயில் வெம் முகம்கணையால் – கூர்மையையுடைய நுனியையுடைய
கொடிய அம்பினால், அதன் -அந்நாகத்தின், பருமை கொள் – பருத்தலைக்
கொண்ட, உடலம் – உடம்பு, இரண்டுஉடல் ஆய் – இரண்டு துண்டாகி,
விழுந்து – கீழ்விழுந்து, அலமர – வருந்தும்படி,உதையினன் – எய்தான்; (எ -று.)

     பறிதல் – கடந்து ஓடுதல், பெயர்ந்து வழுவுதல், பின்பு அறிதலும் என்றும்
பிரித்து உரைக்கலாம்

பிறகு புரிந்து எழில் கூர் தனஞ்சயன் விடு பிறைமுக வெங் கணையால்
அழிந்திடு பணி
திறலுடன் முன் துணி சேரும் ஐந் தலையொடு திரியவும் வந்து,
‘எனை ஏவுக’ என்று அலறவும்,
‘உறவொடு குந்தி வழா வரம் பெறுதலின், உரை வழுவும்; பெரிது
ஆகுலம் புரியினும்,
மறு கணை ஒன்று தொடேன், முனிந்து, இனி’ என, வரி கழல் அங்கர்
குலாதிபன் புகலவே,226.-அழிகிறநாகம் மீண்டும் அருச்சுனன்மீதுவிடுமாறு
வேண்ட, கர்ணன் மறுத்திடல்.

இதுவும் மேலைக்கவியும் – ஒருதொடர்.

     (இ – ள்.) பிறகு – (கிரீடத்தை இடறின) பின்பு, எழில்கூர் – அழகுமிகுந்த,
தனஞ்சயன் – அருச்சுனன், புரிந்து – விரும்பி, விடு – விட்ட, பிறைமுகம் வெம்
கணையால் – கொடிய அர்த்த சந்திரபாணத்தால், அழிந்திடு – அழிகிற, பணி –
நாகம், திறலுடன் – வலிமையுடனே, முன் துணி சேரும் ஐந்தலையொடு – முன்னே
துணி பட்ட ஐந்துதலைகளோடு, திரியஉம் வந்து – மீளவும் வந்து, எனை ஏவுக
என்று – என்னை (இன்னொருமுறை) விடுவாயாக வென்று, அலறஉம் – கதறிச்
சொல்லவும்,- வரி கழல் – கட்டிய வீரக்கழலையுடைய, அங்கர் குல அதிபன் –
அங்கநாட்டார்கூட்டத்துக்குத் தலைவனான கர்ணன், ‘குந்தி – பாண்டவர் தாய்,
உறவொடு – (தாய்) முறைமையோடு, வழாவரம் பெறுதலின் – தவறவொண்ணாத
வரத்தை (என்னிடம்) பெற்றதனால், உரை வழுவும் – (மறுபடி உன்னைவிட்டால் )
என்வார்த்தைபொய்க்கும்; (ஆதலால்), பெரிது ஆகுலம் புரியின்உம் – மிகுந்த
வருத்தத்தைச்செய்தாலும், இனி – இனிமேல், மறு கணைஒன்று – மற்றொருதரம்
நாகாஸ்திரத்தை, முனிந்து – கோபித்து, தொடேன் – தொடுக்கமாட்டேன்,’ என –
என்று, புகல – சொல்லிவிட,- (எ-று.)-“உரகம்***நொந்து உரைசெய்து
மறலியிடந்தனிலானது” என்க. ஐந்தலை – ஐந்து ஈறுகெட்டது; [நன் – உயிர்-38.]

எரியிடை வெந்து, உடல் வாலும் முன் தறிதலின், இடர் அற உய்ந்திட,
நீ பெரும் புகல் என
விரைவொடும் வந்து, “எனை வாளி கொண்டிடுக!” என விசயனை
வென்றிடுமாறு உளம் கருதவும்,
ஒரு தனி வெஞ் சிலை கால் வளைந்திலதுகொல்? ஒரு படியும்
பிழைபோனது உன் தொடை’ என
வரி கழல் அங்கர் பிரானை நொந்து, உரைசெய்து, மறலியிடம்தனில்
ஆனது அன்று, உரகமே.227.- கர்ணனை நொந்துகொண்டு அந்நாகம் இறத்தல்.

உரகம் – அந்நாகம், ‘எரியிடை – நெருப்பிலே, உடல் வெந்து
உடம்புஎரிந்து, வால்உம் முன் தறிதலின் – வாலும் முன்னே (அருச்சுனன்
கணையால்)அறுபட்டதனால், இடர் அற – துன்பமில்லாமல், உய்ந்திட – (யான்)
பிழைக்கும்பொருட்டு, நீ பெரு புகல் என –  நீ பெரிய புகலிடமென்று எண்ணி,-
விரைவொடுவந்து-வேகத்தோடு (உன்னிடம்) வந்து, எனை வாளி கொண்டு இடுக
என – என்னை அஸ்திரமாகக்கொள்ளுவாயாகவென்றுசொல்ல, விசயனை
வென்றிடும்ஆறு – அருச்சுனனைச் சயிக்கும்படி, உளம் கருதஉம் – (நீயும்)
மனத்தில்நினைக்கவும், ஒரு தனிவெம் சிலை – ஒப்பற்றதொரு கொடிய வில், கால்
வளைந்திலது கொல் – (செவ்வையாகக்) கோடிவளையவில்லையோ? உன்
தொடை -நீ தொடுத்த இலக்கு, ஒரு படிஉம் – (எய்த) ஒரு தரத்திலும்,
பிழைபோனது -தவறிப்போய்விட்டது,’ என – என்று, வரி கழல் அங்கர்
பிரானை -கட்டியவீரக்கழலையுடைய அங்கதேசத்தார்க்கரசனான கர்ணனை
நோக்கி, நொந்துஉரைசெய்து – வருத்தத்தோடு சொல்லிவிட்டு, அன்று –
அப்பொழுது, மறலிஇடந்தனில் யமனிடத்தில், ஆனது – சென்றது; [இறந்த
தென்றபடி];

நாகாயுதம் தப்பி நரன் உய்ந்த பொழுதத்து, நாகக் கொடிச்
சேகு ஆன நெஞ்சத்தவன் சேனையில், தன் செருச் சேனையில்,
பாகு ஆர் கடா யானை நரபாலர் மகிழ்வோடு பரிவு எய்தினார்-
ஏகாதசம்தன்னில் எக் கோளும் நிகர் என்ன இகல் இன்றியே228.-நாகாஸ்திரத்துக்கு அருச்சுனன்தப்பினமைக்குப்
பாண்டவபக்கத்துமன்னர் பெருமகிழ்வுறல்.

நாகாயுதம் தப்பி – நாகாஸ்திரந் தவறி, நரன் உய்ந்த பொழுதத்து –
அருச்சுனன் பிழைத்தபொழுதில், நாகம் கொடி – சர்ப்பத்துவசத்தையுடைய, சேரு
ஆன நெஞ்சத்தவன் – (சிறிதும் இரக்கமில்லாமல்) வயிரம் பொருந்திய
மனத்தையுடைய துரியோதனனது, சேனையில் – சேனையிலும், தன் –
அருச்சுனனது, செரு சேனையில் -போர்வல்ல சேனையிலுமுள்ள, பாகு ஆர் கடாம்
யானை – பாகன் பொருந்திய மதயானைக்கு ஒப்பான, நரபாலர் – அரசர்களெல்லாம்,
ஏகாதசந்தன்னில் – பதினோராமிடத்தில், எகோள்உம் – எல்லாக்கிரகங்களும், நிகர்
என்ன – ஒத்திருப்பதுபோல, இகல்இன்றி – மாறுபாடில்லாமல், மகிழ்வோடு –
களிப்போடு, பரிவு – துன்பத்தை, எய்தினார் – அடைந்தார்கள்; (எ-று.)

     துரியோதனன்சேனையில் நரபாலர்பரிவும் அருச்சுனன் செருச் சேனையில்
நரபாலர் மகிழ்வும் ஒருநிகராக எய்தினாரென்று எதிர்நிரனிறை, பரிவெய்தினார் –
ஆச்சரியப்பட்டாரென்பாருமுளர். கடா – ஆண் பெயராகவுமாம், ஏகாதசம் –
ஒன்றோடுகூடிய பத்து, எல்லாக்கிரகங்கட்கும் பதினோராமிடம் மிக்க பயனைக்
கொடுக்கக்கூடிய இடமென்பது, சோதிட நூற்கொள்கை.

     இது முதல் எட்டுக் கவிகள் – ஈற்றுச்சீ ரொன்று மாங்கனிச் சீரும், மற்றை
நான்குங்காய்ச்சீர்களு மாகிய கலிநிலைத்துறைகள்,

அரு மார்பு இலக்காக எய்’ என்ன எய்யா அகங்காரமும்,
வரு மாசுணம்தன்னை மறுகாலும் ஏவாமல் மறை செய்ததும்,
பொருமாறு நினைவு அற்றதும், கண்டு, நரன் ஒத்த போர் மீளியை,
திருமாலொடு ஒப்பானும் உளம் நொந்து, நொந்து, அம்ம சில கூறுவான்:229,- சல்லியன் மனம்நொந்து கர்ணனைச் சில கூறலுறுதல்.

திருமாலொடு ஒப்பான்உம் – கண்ணனோடு ஒத்த சல்லியனும்,-
அருமார்பு இலக்கு ஆக – (அழித்தற்கு) அரிய (அருச்சுனன்) மார்புலட்சியமாக,
எய் -(அம்பு) எய்வாய், என்ன – என்று (தான்) சொல்ல, எய்யா – (அவ்வாறு
கர்ணன்அம்பு) தொடுக்காத, அகங்காரம்உம் – நான்என்னுஞ்செருக்கையும், வரு
மாசுணந்தன்னை – மீண்டுவந்த நாகத்தை, மறு கால்உம் ஏவாமல் –
மற்றொருதரமுந்தொடுக்காமல், மறை செய்ததுஉம் – மறுத்தல் செய்ததையும்,
பொரும்ஆறு – போர்செய்யும்படி, நினைவு அற்றது உம் – (கர்ணன்)
நினைப்பில்லாமற்போனதையும், கண்டு – பார்த்து, உளம் நொந்து நொந்து – மனம்
மிகவருந்தி, நான் ஒத்த போர் மீளியை – அருச்சுனனைப்போன்ற போரில்வல்ல
வீரனான கர்ணனை நோக்கி, சில கூறுவான் -சிலவார்த்தை சொல்லுவானானானன்;
(எ-று.) – அதுமேற்கவியிற் கூறுகிறார்,

என்னாலும் அரிது, இத் தடந் தேர் விரைந்து ஊர்தல்; இனி
என்றும் மற்று
உன்னாலும் அரிது, அந்த விசயன்தன் உயிர் கொள்ளல்
உன்னித்த போர்;
பன்னாக துவசற்கும் அரிதால், உனைக் கொண்டு பார் ஆளுமாறு!’
என்னா இழிந்தான், அவன் தேரின்மிசைநின்றும், இசை நின்றுளான்.230.- இரண்டுகவிகள்-‘இனிச் சாரத்தியஞ் செய்யேன்;
உன்னால் வெல்லலும் ஆகாது’ என்று அத்தேரைவிட்டுச்
சல்லியன்தன்தேரி லேறிக்கொள்ளுதலைக் கூறும்.

இசை நின்றுளான் – கீர்த்தி நிலைபெற்றுள்ளவனாகிய சல்லியன்,-
‘இதட தேர் – இந்தப் பெரிய தேரை, விரைந்து ஊர்தல் – வேகமாகச் செலுத்துதல்,
என்னாலும்-, அரிது – (செய்தற்கு) அருமையானது; மற்று – மேலும், இனி என்றுஉம்
– இனிமேல் எப்பொழுதும், உன்னித்த போர் – முயன்றுசெய்கிற போரில், அந்த
விசயன்தன் உயிர் கொள்ளல் – அந்த அருச்சுனனைக் கொல்லுதல், உன்னாலும்-,
அரிது – அருமையானது; பன்னாக துவசற்குஉம் – பாம்புக்கொடியையுடைய
துரியோதனனுக்கும், உனைகொண்டு – உன்னை (த் துணையாகவைத்து)க் கொண்டு,
பார் ஆளும் ஆறு – பூமியை அரசாளும்விதம், அரிது – அருமையானது,’ என்னா
– என்று சொல்லி, அவன் தேரின் மிசை நின்றும் – அந்தக் கர்ணனது தேரின்
மேனின்று, இழிந்தான் – இறங்கினான்; (எ-று.)-பன்னாகம் – பந்நகம் என்பதன்
விகாரம்.

என்றே, எழில் குந்திவயின் நல்கு தனி ஆளி இகல் ஏறு அனான்
வன் தேர் செலுத்திப் பெரும் போர் முடிப்பிக்க வரு சல்லியன்,
தென் தேர் இசைச் செவ்வி நறை நாறு மலர் விட்ட சிறை வண்டு என,
தன் தேரின் மேல்கொண்டு, தனி வில்லும் மீளத் தரித்தான்அரோ.,

எழில் – அழகையுடைய குந்தி வயின் – குந்திதேவியினிடத்தில்,
நல்கு – பிறந்த, தனி – ஒப்பில்லாத, இகல் – வலிமையையுடைய, யாளி ஏறு –
ஆண்சிங்கத்தை, அனான் – ஒத்தவனாகிய கர்ணனுக்கு, வன் தேர் செலுத்தி –
வலியதேரை ஓட்டி, பெரு போர் முடிப்பிக்க வரு – பெரிய யுத்தத்தை முடியச்
செய்யவந்த, சல்லியன்-,- என்று – என்று சொல்லி, செவ்வி – அழகையுடைய, நறை
நாறும்- வாசனை வீசுகிற, மலர் – பூவை, விட்ட -விட்டு (அப்பாற்) சென்ற, தென்
தேர் -தேனை ஆராய்ந்து உண்கிற, இசை – இசைப்பாட்டையுடைய, சிறை வண்டு
என -சிறகுகளையுடைய வண்டு போல, தன் தேரு மேல்கொண்டு –
(கர்ணன்தேரைவிட்டுத்) தனது தேரின்மேல் ஏறிக்கொண்டு, தனி வில்உம் –
ஒப்பற்றதனது வில்லையும், மீள – திரும்புவும், தரித்தான் – (கையிற்) பிடித்தான்;
(எ -று.)

     தென் – தேன் என்பதன் விகாரம், முன்னே தருமன்வேண்டிக் கொண்டபடி
சல்லியன் அடிக்கடி இகழ்ந்துபேசிக் கர்ணனது தைரியத்தைக் குறையச்
செய்பவனாதலால், அவனை இங்ஙனங் கூறினார், தேரு, உ -சாரியை, தேரும்
என்று பிரிப்பினுமாம்.       

கத வாசி நடை அற்று, வலி அற்று, வரி விற் கொள் கணை யாவையும்
வித ஆழி நிலன் உற்று விரை தேரும் மெய் வன்பும் மெலிவு
உற்ற பின்பு,
உதவாமல் மழுவாளி உரைசெய்த சாபத்தை உற உன்னினான்-
அதவா, முரண் போர்தனக்கு அஞ்சுமோ, என்றும் அடல்
அங்கர்கோன்?232.-கர்ணன் பரசுராமன்சாபத்தை நினைத்தல்.

அடல் – வலிமையையுடைய, அங்கர் கோன் – அங்க நாட்டார்
அரசனான கர்ணன், கதம் வாசி – வலியையுடைய குதிரைகள், நடைஅற்று –
நடத்தலில்லையாகி, வரிவில் கொள் – கட்டமைந்த வில்லில் தொடுக்கப்படுகிற,
கணையாவைஉம் – அம்புகளெல்லாம், வலி அற்று – பலமில்லாதனவாகி, விரை
தேர்உம் -வேகமாகச் செல்லுகிற இரதமும், விதம் ஆழி நிலன் உற்று –
பலவகையாகியசக்கரங்கள் பூமியிற் புதையப்பெற்று, மெய்வன்புஉம் மெலிவு
உற்றபின்பு -தேகபலமுங் குறைவடைந்தபின்பு, மழுவாளி –
கோடாலிப்படையையுடையபரசுராமன், உதவாமல் – (அஸ்திரசஸ்திரங்களெல்லாஞ்
சமயத்திற்குப்)பயன்படாமற்போம்படி, உரை செய்த – சொன்ன, சாபத்தை –
சபிப்பை, உற -செவ்வையாக, உன்னினான் – எண்ணினான்; அதவா –
அச்சாபமில்லாவிட்டால்(கர்ணன்), என்று உம் – எப்பொழுதும், முரண் போர்
தனக்கு – வலிமையையுடையயுத்தத்துக்கு, அஞ்சும்ஓ – பயப்படுவானோ?
(எ -று.)- அஞ்சமாட்டான் என்றபடி.

     மழு ஆளி – மழுவை ஆளுபவன், கர்ணன் இளம்பிராயத்திற்
பிராமணவடிவங்கொண்டு பரசுராமரிடஞ்சென்று வில்வித்தையைக் கற்றுக்
கைதேர்ந்துவருகையில், ஒருநாள் அவர் இவன்மடியின் மேல் தந்தலையைவைத்துக்
கொண்டுசாய்ந்து சயனித்திருக்க, அப்பொழுது இவனால் தன்மைந்தனாகிய
அருச்சுனனுக்குப்பின்பு இடையூறு நேருமென்று கருதிய தேவேந்திரன்
ஒருவண்டுவடிவங் கொண்டுசென்று அவன் தொடையைத் துளைத்துப் புண்படுத்த,
இரத்தம் பெருகிவழியவுங்குருவின் நித்திரைக்குப் பங்கம் வருவிக்கக்கூடாதென்று
எண்ணிக் கர்ணன்அரிதிற்பொறுத்துக்கொண்டு வருந்தாதிருக்க, உடனே
துயிலுணர்ந்த அவ்விராமன்அதனை நோக்கி அந்தணனுக்கு இத்தகையபொறுமை
யிராதென்றெண்ணி, ‘நீ யார்?உண்மையைக் கூறுவாய்’ என்ன, இவனும்
மறைக்கமாட்டாமல்’க்ஷத்திரியசாதியானான அதிரதனென்னுந் தேர்ப்பாகன் வளர்த்த
மகன்யான்’ என்ன,இருபத்தொருமுறை பூமிமுழுதுஞ் சுற்றிவந்து க்ஷத்திரியர்கள்
பலரையும் வேரறுத்த அப்பார்க்கவர் கடுங்கோபங்கொண்டு, ‘யான் உனக்குக்
கற்றுக் கொடுத்த கல்வியனைத்துந் தக்கசமயத்தில் உதவாதபடி மறந்து போய்
விடக்கடவது’ என்று சாபங்கொடுத்தார். கர்ணன் அரசாண்டுவருகையில், ஒருநாள்
தேரின்மீதேறி வீதியில்விரைந்து செல்லுகையில், ஒரு முனிவரது பசுவின் கன்று
தேர்ச்சக்கரத்தின் கீழ்அகப்பட்டு நசுங்கி இறந்துபோய்விட, அம்முனிவர் மிக
வருந்திஎத்தனை சமாதானப்படுத்தியுங் கேளாமல் போர்க்களத்தில் உன் உடல்
பகைவரம்பினால் இங்ஙனஞ் சிதைந்து உனது தேர்ச்சக்கரம் நிலத்தில்
அழுந்திவிடக்கடவதென்று சபித்தார், அதவா – வடமொழி அவியயம்

இயற்கைப் பெருங் கொற்ற வலி அன்றி, யார் யாரிடத்தும் பெறும்
செயற்கைப் படைத் திண்மை கை வந்திலா வெய்ய
செய்யோன் மகன்,
வெயர்க்கத் தன் நுதல் கண் சிவப்பு ஏற, மனம் வெம்ப,
மண்மீது இழிந்து,
அயர்க்கச் சபித்தோனை வந்தித்து, வேறு ஓர் அடல் தேரின்மேல்,233.-இதுவும் மேலைக்கவியும் -ஒருதொடர்: கர்ணன்
வேறுதேரேறி அருச்சுனன்மீது பல அம்புகள்விட,
கர்ணன்வலி குறைவதைக் கிருஷ்ணன் அருச்சுனனுக்குச்
கூறிக்கொடுத்தமை கூறும்.

இயற்கை – இயல்பாகவுள்ள, பெரு – பெரிய, கொற்றம் –
வெற்றிக்குக்காரணமான, வலி அன்றி – பலத்தைமாத்திரமே யல்லாமல், யார்
யாரிடத்துஉம் பெறும் – பலபேரிடத்தினின்றும் பெறுகிற, செயற்கை –
செயற்கையாகவுள்ள,  படை திண்மை – ஆயுதங்களின் வலிமை, கை வந்திலா –
சித்தியாகப் பெறாத, வெய்ய – வெம்மையையுடைய, செய்யோன்மகன் – செம்மை
நிறத்தையுடைய சூரியனது குமாரனான கர்ணன், (கோபத்தால்) தன் – தனது,
நுதல் -நெற்றி, வெயர்க்க – வேர்வையடையவும், கண் – கண்கள், சிவப்பு ஏற-
செம்மைநிறத்தை மிகுதியாகப் பெறவும், மனம் வெம்ப – நெஞ்சுகொதிக்கவும்,
மண்மீதுஇழிந்து – (தேரினின்றும்) பூமியில் இறங்கி, அயர்க்க சபித்தோனை –
(யாவையும்)மறக்கும்படி சபித்த பரசுராமரை, வந்தித்து – (திக்குநோக்கி)
நமஸ்கரித்து, வேறு ஓர்அடல் தேரின்மேல் – வேறொரு வலிமையையுடைய
தேரில்,-(எ-று.) “ஏறி” என்க

ஏறி, தன் வலவன் செலுத்த, தடக் கையில் இகல் வில்லுடன்,
சீறி, கொடுஞ் சாயகம் கோடி முகிலூர்தி சேய்மேல் விட,
காறிக் கனன்று அக் கடுந் தேர் செலுத்தும் கரும் பாகனார்
கூறிக்கொடுத்தார், அருக்கன் குமரன் வன்மை குறைகின்றதே.

ஏறி – ஏறிக்கொண்டு, தன் வலவன் – தனது சாரதி செலுத்த –
(அத்தேரைச்) செலுத்தாநிற்க,- தட கையில் – பெரிய கையிலே (பிடித்த),
இகல்வில்லுடன் – வலிமையையுடைய வில்லோடு, சீறி – கோபித்து (ச் சென்று),
கொடு சாயகம் கோடி கொடியகோடிபாணங்களை, முகில்ஊர்திசேய்மேல் –
மேகங்களாகிய வாகனத்தையுடைய இந்திரனதுபுத்திரனாகிய அருச்சுனன்மேல் விட-
பிரயோகிக்க,- காறி கனன்று – மிகவுங்கோபித்து, அ கடு தேர் செலுத்தும் – அந்த
விரைந்த தேரை ஓட்டுகிற, கரு – கருநிறத்தையுடைய, பாகனார் – சாரதியாகிய
கண்ணபிரான், அருக்கன் குமரன் சூரியகுமாரனான கர்ணன், வன்மை குறைகின்றது
– பலங்குறைகிறதை, கூறிக்கொடுத்தார் – (அருச்சுனனுக்குச்) சொல்லிக்கொடுத்தார்;
(எ-று.)

     முகிலூர்தி – பண்புத்தொகைப் புறத்துப்பிறந்த அன்மொழித்தொகை.
காறிக்கனன்று – ஒருபொருட்பன்மொழி.  

குறை அற்ற தன் வில்லை, மகவற் குமாரன், குனித்து, ஆசுகம்
சிறை அற்ற கிரி போல நிற்கின்ற தினகாரி சிறுவன்தன் மெய்,
மறையத் தொடுத்தான், உயிர்க் கால் அவிப்பான்,
மயிர்க் கால்தொறும்-
கறை அற்ற மதி போல நிலவு ஈனும் முத்தக் கழற் காலினான்.235.-அருச்சுனன் கர்ணன்பிராணவாயுவையொடுக்கப்
பாணந்தொடுத்தல்.

கறை அற்ற-களங்கமில்லாத, மதிபோல – பூர்ணசந்திரன்போல,
நிலவுஈனும்-வெண் காந்தியை வீசுகிற, முத்தம்கழல்-முத்துக்களாலாகிய
வீரக்கழலையணிந்த, காலினான் – பாதத்தையுடையவனாகிய, மகவற்குமாரன் –
இந்திரபுத்திரனான அருச்சுனன்,-குறை அற்ற – ஒருகுறையும் இல்லாத, தன்
வில்லை-தனது காண்டீவத்தை, குனித்து-வளைத்து, சிறை அற்ற கிரி போல
நிற்கின்ற-இறகுகளறுபட்ட மலைபோல (வலிகுறைந்து) நிற்கிற, தினகாரி சிறுவன்
தன் -சூரியகுமாரனான கர்ணனது, மெய்-உடம்பு மறைய-மறையும்படி, மயிர் கால்
தொறுஉம் – உரோமத்துவாரங்கள்தோறும், உயிர் கால் அவிப்பான் –
பிராணவாயுவை யழிக்கும்பொருட்டு, ஆசுகம் – பாணங்களை, தொடுத்தான் –
எய்தான்;( எ – று.)

     மகவத்குமாரன் – விகாரம். தினகாரி – நாளைச் செய்பவன். சிறையற்ற
கிரி – கர்ணன்சாரதியாகிய சல்லியன் தன்னைவிட்டுப் போக இழந்ததற்கு
உவமையாகவுமாம். 

எத் தலங்களினும் ஈகையால், ஓகை வாகையால், எதிர் இலா வீரன்,
மெய்த்தலம் முழுதும் திறந்து உகு குருதி வெயிலவன்
கரங்கள்போல் விரிய,
கொத்து அலர் அலங்கல் மகுடமும் கவச குண்டலங்களும்
உருக் குலைந்தும்,
கைத்தலம் மறந்தது இல்லை-விற் குனிப்பும், கடுங் கணை
தொடுத்திடும் கணக்கும்.236.-உடம்பெல்லாங்குருதிவழியவும் கர்ணன்வில்
அம்புகளை ஓவாதுபொழிதல்

ஈகையால் – தானத்தினாலும், ஓகை வாகையால் –
களிப்புக்குக்காரணமான வெற்றியாலும் எ தலங்களின்உம் – எல்லாவிடங்களிலும்,
எதிர் இலா – (தனக்கு) ஒப்புப்பெறாத, வீரன் – வீரானாகிய கர்ணனது, மெய்தலம்
முழுதும்உம் – உடம்பினிட முழுவதும், திறந்து – துளையுண்டாகி, உகு –
(அத்துளைகளினின்றும்) பெருகுகிற, குருதி – இரத்தம், வெயிலவன் கரங்கள்
போல்-சூரியனது கிரணங்கள்போல, உகுப்ப – சொரியவும், கொத்து அலர் –
பூங்கொத்துகள்அலரப்பெற்ற, அலங்கல் – வெற்றிமாலையைச்சூடிய, மகுடம்உம் –
கிரீடமும், கலசகுண்டலங்கள்உம் – கவசமுங் குண்டலங்களும், உரு குலைந்துஉம் –
வடிவமழிந்தபின் பும் கைத்தலம் – (அவனது) கையினிடங்கள்,  வில் குனிப்புஉம்-
வில்லை வளைத்தலையும், கடு கணை தொடுத்திடும் கணக்குஉம் – கொடிய
அம்புகள் எய்யுந்தன்மையையும், மறந்தது இல்லை-, ( எ- று.)-பி-ம்: போல்விரிய.

     இரத்தத்திற்குச் சூரியகிரணம். செம்மை நிறத்தால் உவமை. மகுடம்
உருக்குலைந்தது. இப்பொழுது; கவசகுண்டலங்கள் உருக்குலைந்தது, முன்னே
இந்திரனுக்குக் கொடுத்தபொழுது, அதனையும் இங்கே எடுத்துக்கூறியது, அது
இவன்வலி குறைவதற்கு முக்கிய காரணமாதலின்.

     இதுமுதற் பத்துக்கவிகள் – இச்சருக்கத்தின் முதற்கவிபோன்ற
எழுச்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தங்கள். 

அத்த வெற்பு இரண்டு விற்கிடை எனப் போய் ஆதவன்
சாய்தல் கண்டருளி,
முத்தருக்கு எல்லாம் மூலமாய், வேத முதல் கொழுந்து
ஆகிய முகுந்தன்,
சித்திரச் சிலைக் கை விசயனை, ‘செரு நீ ஒழிக!’ எனத்
தேர்மிசை நிறுத்தி,
மெய்த் தவப் படிவ வேதியன் ஆகி, வெயிலவன்
புதல்வனை அடைந்தான்237.-சூரியாஸ்தமனமாவதற்கு இரண்டுவிற்கிடையிருக்கப்
போரைநிறுத்றுவித்துஸ்ரீக்ருஷ்ணன் வேதியனாய்க்
கர்ணனிடஞ்செல்லல்

அத்த வெற்பு – அஸ்தகிரி, இரண்டு விற்கிடை என-இரண்டு
விற்கிடைத்தூரத்தி லுள்ளதென்னுமிடத்தில், ஆதபன்-சூரியன், போய் – சென்று,
சாய்தல்-விழுதலை, முத்தருக்கு எல்லாம் – முத்தியுலகத்தையடைந்தவர் யாவர்க்கும்,
மூலம் ஆய் – முதற்கடவுளாகி, வேதம் முதல் கொழுந்து ஆகிய  – வேதங்களின்
சிறந்த கொழுந்தாகிய, முதல்வன் – தலைவனாகிய கண்ணன், கண்டருளி –
பார்த்தருளி,- சித்திரம் சிலை கை – அழகிய வில்லேந்திய கையையுடைய,
விசயனை- அருச்சுனனை (நோக்கி), நீ செரு ஒழிக என – நீ (சற்றே) போரை
நிறுத்துவாயாகவென்று சொல்லி, தேர் மிசை நிறுத்தி – தேரின்மேல் (அவனை)
நிற்கச் செய்துவிட்டு,மெய் தவம்படிவம் – உண்மையாகிய தவவேஷத்தையுடைய,
வேதியன் ஆகி -பிராமண வடிவமாய், வெயிலவன் புதல்வனை – கர்ணனை,
அடைந்தான்; (எ- று.)

    அத்தம் =அஸ்தம், வடசொற்றிரிபு. விற்கிடை – வில் கிடக்கு மவ்வளவு தூரம்.
‘வேதமுதற்கொழுந்தாகிய’ என்றது – வேதாந்தங்களிற் சிறப்பாக எடுத்துப்
பிரதிபாதிக்கப்படுகிற என்றபடி.   

தாண்டிய தரங்கக் கருங் கடல் உடுத்த தரணியில் தளர்ந்தவர்
தமக்கு வேண்டிய தருதி நீ எனக்
கேட்டேன்; மேருவினிடைத் தவம் பூண்டேன்;
ஈண்டிய வறுமைப் பெருந் துயர் உழந்தேன்; இயைந்தது ஒன்று இக்
கணத்து அளிப்பாய்!-
தூண்டிய கவனத் துரகதத் தடந் தேர்ச் சுடர் தரத் தோன்றிய
தோன்றால்!’238,-‘உனக்குஇயைந்ததை எனக்குத்தருக’ என்று
வேஷதாரியான கிருஷ்ணன் கேட்டல்.

இரண்டுகவிகள் – ஒருதொடர்.

     (இ-ள்.) தூண்டிய – (அருணனாற் செலுத்தப்படுகிற, கவனம் துரகதம் –
கதிகளையுடைய குதிரையைப் பூட்டிய, தட தேர் – பெரிய தேரையுடைய, சுடர் –
முச்சுடர்களுட், சிறந்த சூரியன், தர – பெற, தோன்றிய – பிறந்த, தோன்றால்-
வீரனே!மேருவினிடை-மகாமேருகிரியினிடத்தில், தவம் பூண்டேன் – தவத்தைச்
செய்துகொண்டிருந்தவனும், ஈண்டிய – மிகுந்த, வறுமை – தரித்திரத்தால், பெருதுயர்
உழந்தேன் – பெரிய துன்பத்தை அனுபவித்தவனுமாகிய யான், தாண்டிய –
மோதுகிற, தரங்கம் – அலைகளையுடைய, கருகடல்-கரியகடலினால், உடுத்த –
சூழப்பட்ட, தரணியில் – பூமியில், தளர்ந்தவர் தமக்கு – (வறுமையால்) தளர்ச்சியை
யடைந்தவர்களுக்கு, நீ-, வேண்டிய – (அவர்கள்) வேண்டின பொருள்களை தருதி-
கொடுக்கிறாய், என – என்று, கேட்டேன்-கேள்விப்பட்டு வந்தேன்; (எனக்கு),
இயைந்தது ஒன்று-கொடுக்கக்கூடியதொரு பொருளை, இ கணத்து இப்பொழுதே,
அளிப்பாய் – கொடுப்பாயாக; (எ-று.)-தோன்றால் தோன்றல் என்பதன் விளி

என்று கொண்டு, அந்த அந்தணன் உரைப்ப, இரு செவிக்கு அமுது
எனக் கேட்டு,
வென்றி கொள் விசயன் விசய வெங் கணையால் மெய் தளர்ந்து
இரதமேல் விழுவோன்,
‘நன்று!’ என நகைத்து, ‘தரத் தகு பொருள் நீ நவில்க!’ என,
நான் மறையவனும்,
‘ஒன்றியபடி நின் புண்ணியம் அனைத்தும் உதவுக!’ என்றலும்,
உளம் மகிழ்ந்தான்.239.-வேஷதாரி கர்ணனைப் புண்ணியமெல்லாம் தரக்கேட்டல்

அந்த அந்தணன் – அந்தப் பிராமணன், என்று கொண்டு உரைப்ப-
என்றுசொல்ல, (அவ்வார்த்தையை), வென்றிகொள் – வெற்றியைக்கொண்ட, விசயன்-
அருச்சுனனது, விசயம் – விசேஷஜயத்தைத் தருகிற, வெம்கணையால் – கொடிய
பாணங்கனினால், மெய் தளர்ந்து – உடம்பு தளரப்பெற்று, இரதம்மேல் விழுவோன்-
தேரின்மேல் விழும் நிலைமையிலுள்ளவனாகி  கர்ணன், இரு செவிக்கு அமுது என
-இரண்டு காதுகளுக்கும் அமிருத மென்னும்படி (மிகஇனிப்பாக), கேட்டு –
செவியுற்று, நன்று என – நல்லதென்று சொல்லி, நகைத்து – சிரித்து, தர தகு
பொருள்-(உனக்குக்) கொடுக்கத்தக்க பொருளை, நீ நவில்க என – நீ
சொல்லுவாயாகஎன்று சொல்ல,-நால் மறையவன்உம் – நான்குவேதங்களையும்
அறிந்தஅப்பிராமணனும், ‘நின்  புண்ணியம் அனைத்துஉம் – நீ செய்துள்ள
நல்வினைமுழுவதையும், ஒன்றியபடி, – உள்ளபடியே, உதவுக – கொடுப்பாயாக,’
என்றலும் -என்று சொன்னவளவில், உளம் மகிழ்ந்தான்-(கர்ணன்) மனங்களித்தான்;
(எ – று)   

     நன்று என்றது – நீ சொன்னபடியே தருவேனென்று தனது உடன்பாட்டைத்
தெரிவித்தபடி.       

ஆவியோ நிலையின் கலங்கியது; யாக்கை அகத்ததோ?
புறத்ததோ? அறியேன்;
பாவியேன் வேண்டும் பொருள் எலாம் நயக்கும் பக்குவம்தன்னில்
வந்திலையால்;
ஓவு இலாது யான் செய் புண்ணியம் அனைத்தும் உதவினேன்;
கொள்க நீ! உனக்குப்
பூவில் வாழ் அயனும் நிகர் அலன் என்றால், புண்ணியம்
இதனினும் பெரிதோ?’240.-இரண்டுகவிகள்-ஒருதொடர்; கர்ணன் மனவுவப்போடு
தன்புண்ணிய மனைத்தையுந் தாரைவார்த்துக்கொடுக்க
அவ்வேதியன் பெற்றமை கூறும்.

 ஆவிஓ – உயிரோவென்றால். நிலையின் கலக்கியது- தான்
நிற்குமிடத்தில் நின்றும் எழுந்தது, (அவ்வுயிர்), யாக்கை அகத்ததுஓ – (இப்பொழுது)
உடம்பினுள்ளே உள்ளதோ? புறத்ததுஓ – (அன்றிஉடம்புக்கு) வெளியேசென்றதோ?
அறியேன் – அறிகிறேனில்லை. பாவியேன் தீவினையையுடைய யான், வேண்டும்
பொருள் எலாம் – (வேண்டுவார்) வேண்டும் பொருள்களையெல்லாம், நயக்கும் –
விரும்பிக்கொடுக்கின்ற, பக்குவந்தன்னில் – சமயத்தில்,  வந்திலை –  (நீ)
வந்தாயில்லை, யான் செய் புண்ணியம் அனைத்துஉம் – யான் செய்துள்ள
நல்வினையையெல்லாம். ஓவுஇலாது – (ஒன்றும்) ஒழிதல் இல்லையாம்படி,
உதவினேன் – கொடுத்தேன்; நீ கொள்க – நீ பெற்றுக்கொள்வாயாக, உனக்கு-,
பூவில் வாழ் அயன்உம் – (திருமாலின் திருவுந்தித்) தாமரைமலரில் வாழ்கிற
பிரமனும், நிகர் அலன் என்றால்-ஒப்பாகான் என்று சொன்னால். புண்ணியம்-
(என்)நல்வினை, இதனின்உம் பெரிதுஓ-(உனக்குதானஞ்செய்யும்) இத்தொழிலினுஞ்
சிறந்ததோ? (எ – று.)-அன்றென்றபடி.

     முதலடியில் முன் ஓகாரம் – உயர்வுசிறப்பு; பின் ஓகாரம் இரண்டும்-ஐயம்.
இன்னுங் கேட்ட கேட்டவற்றையெல்லாம் கொடுக்கும் ஆற்றல் இப்பொழுது
இல்லையாதலால், “பாவியேன்” என்று தன்னைத்தானே வெறுத்துக்கொண்டான்.

என்ன முன் மொழிந்து, கரம் குவித்து இறைஞ்ச, இறைஞ்சலர்க்கு
எழிலி ஏறு அனையான்,
கன்னனை உவகைக் கருத்தினால் நோக்கி, ‘கைப் புனலுடன்
தருக’ என்ன,
அன்னவன் இதயத்து அம்பின்வாய் அம்பால் அளித்தலும்,
அங்கையால் ஏற்றான்-
முன்னம் ஓர் அவுணன் செங் கை நீர் ஏற்று மூஉலகமும்
உடன் கவர்ந்தோன்.

கர்ணன்), என்ன-என்று முன் – முன்னே, மொழிந்து – சொல்லி,
கரம்குவித்து – கைகளைக்கூப்பி, இறைஞ்ச-வணங்க,-இறைஞ்சலர்க்கு எழிலி ஏறு
அனையான் – (தன்னை) வணங்காத பகைவர்களுக்கு மேகத்தில் தோன்றுகிற
பேரிடியை யொப்பவனாகியகண்ணன், கன்னனை-, உவகை கருத்தினால் –
மகிழ்ச்சியோடு  கூடியஎண்ணத்தோடு, நோக்கி – பார்த்து, கை புனலுடன் தருக
என்ன – கையினால் தாரைவார்க்கப்படுகிறநீரோடு தானஞ்செய்வா யென்று சொல்ல,
அன்னவன் – அக்கர்ணன் இதயத்து அம்பின் வாய் அம்பால் – (தன்) நெஞ்சில்
தைத்த அம்பின் வழியேவெளிவருகிற செந்நீரால், அளித்தலும் -தாரைவார்த்துக்
கொடுத்தவளவில்,-முன்னம் – முன்னே (வாமனாவதாரத்தில்), ஓர் அவுணன் – ஒரு
அசுரனது (ஓப்பற்ற மகாபலி சக்கரவர்த்தியின்), செம் கை – சிவந்த கையினால்
தத்தஞ்செய்யப்பட்ட, நீர் – தான ஜலத்தை, ஏற்று – (கையில்) பெற்று, மூ
உலகம்உம் – மூன்று லோகங்களையும், உடன் – ஒருசேர, கவர்ந்தோன் –
(அவனிடத்தினின்றும்) பறித்துத் தன்வசப்படுத்திக் கொண்டவனாகிய கண்ணன்,
ஆங்கையால் – தன் அகங்கையினால், ஏற்றான் – (அந்நீரை) ஏற்றுக் கொண்டான்,
(எ- று.)

மல்லல் அம் தொடையல் நிருபனை முனிவன் மகிழ்ந்து,
‘நீ வேண்டிய வரங்கள்
சொல்லுக; உனக்குத் தருதும்!’ என்று உரைப்ப, சூரன் மா
மதலையும் சொல்வான்:
‘அல்லல் வெவ் வினையால் இன்னம் உற்பவம் உண்டாயினும்
ஏழ் எழு பிறப்பும்,
“இல்லை” என்று இரப்போர்க்கு “இல்லை” என்று உரையா இதயம்
நீ அளித்தருள்!’ என்றான்.242.-வேதியன்நீ வேண்டும்வரங்கேளென்ன, இனி
எப்பிறப்பினும் இரப்பார்க்கு இல்லையென்னாமையைக்
கர்ணன்வேண்டுதல்.

முனிவன் – பிராமணன், மகிழ்ந்து – சந்தோஷித்து, மல்லல் –
வளப்பத்தையுடைய, அம் – அழகிய, தொடையல் – மாலையைச் சூடிய, நிருபனை –
கர்ணராஜனை நோக்கி, ‘நீ வேண்டிய வரங்கள்-நீ விரும்பின வரங்களை, சொல்லுக
– சொல்லுவாயாக; உனக்கு-,தருதும்-கொடுப்போம்,’ என்று உரைப்ப-என்று சொல்ல,-
சூரன் மா மதலைஉம் – சிறந்த சூரியபுத்திரனான கர்ணனும் சொல்வான் – உத்தரஞ்
சொல்பவனாய்,-‘அல்லல்-பிறவித் துன்பங்களுக்குக் காரணமான, வெம் வினையால் –
கொடிய கருமத்தினால், இன்னம்- இன்னமும், உற்பவம் – பிறப்பு, உண்டாயின் உம்
– உண்டானாலும் ஏழ் ஏழு பிறப்புஉம் – எழுமையையுடைய எழுவகைச்
சன்மங்களிலும், இல்லை என்று இரப்போர்க்கு – (வறுமையால்) ஒரு பொருளும்
இல்லையென்று சொல்லி யாசிப்பவர்களுக்கு, இல்லை என்று உரையா –
(வைத்துக்கொண்டே நீ கேட்கும் பொருள் இப்பொழுது என்னிடம்)
இல்லையென்றுசொல்லி லோபஞ்செய்யாத,- இதயம் – நல்லமனத்தை, நீ-,
அளித்தருள் – (எனக்குக்)கொடுத்தருள்வாயாக,’  என்றான் – என்று சொன்னான்;
(எ – று.)

மைத்துனன் உரைத்த வாய்மை கேட்டு, ஐயன், மன மலர்
உகந்து உகந்து, அவனைக்
கைத்தல மலரால் மார்புறத் தழுவி, கண் மலர்க் கருணை
நீர் ஆட்டி,
‘எத்தனை பிறவி எடுக்கினும், அவற்றுள் ஈகையும்
செல்வமும் எய்தி,
முத்தியும் பெறுதி முடிவில்’ என்று உரைத்தான்-மூவரும்
ஒருவனாம் மூர்த்தி.243.-வேண்டியவரத்தைக் கொடுத்து முத்தியையும் பெறுமாறு
ஸ்ரீக்ருஷ்ணண் வரம் அளித்தல்.

மூவர்உம் ஒருவன் ஆம் மூர்த்தி – திரிமூர்த்திகளும் ஒரு
மூர்த்தியானவடிவமுடையவனாகிய, ஐயன் – பிராமணன்,-மைத்துனன் – (தனது)
அத்தைபிள்ளையாகிய கர்ணன், உரைத்த – சொன்ன, வாய்மை – உண்மையான
வார்த்தையை, கேட்டு-, மனம் மலர் உகந்து உகந்து – இருதயகமலம் மிகவும்
மகிழ்ந்து, கைத் தலம் மலரால் – பூப்போல் மெல்லிய (தனது)  கைகளினிடங்களால்,
மார்பு உற – மார்பிலே, அழுந்தும்படி, அவனை – அக்கர்ணனை,  தழுவி –
ஆலிங்கனஞ்செய்துகொண்டு,-கண் மலர் – செந்தாமரைமலர்போலுங் கண்களினிறுந்
தோன்றுகிற, கருணை நீர் – அருளாகிய நீர் வெள்ளத்தால், ஆட்டி –
ஸ்நானஞ்செய்வித்து,- (அவனை நேக்கி ‘நீ), எத்தனை பிறவி எடுக்கின் உம் –
எத்தனைஜன்மமெடுத்துப் பிறந்தாலும், அவற்றுள் – அப்பிறப்புக்களுள்,
ஈகைஉம் -தானஞ்  செய்தலையும், செல்வம்உம்-செல்வத்தையும், எய்தி –
அடைந்து முடிவில் -(அப்பிறப்புக்களின்) முடிவிலே, முத்திஉம் – மோக்ஷத்தையும்
பெறுதி – பெறுவாய்,’ என்று உரைத்தான் – என்று சொன்னான்; (எ-று.)

     தந்தையாகிய வசுதேவருக்கு உடன்பிறந்தவளாதலால், குந்தி கண்ணனுக்கு
அத்தையாவள்; அவள்மகனாதலால், கன்னன் கண்ணனுக்கு மைத்துனனாயினான்;
அத்தைமைந்தனை ‘மைத்துனன்’என்பது, முற்காலத்துவழக்கம்போலும்.
பிரமனதுவடிமாய் உலகங்களைப் படைத்தலுந் தானானநிலையில் நின்று காத்தலும்
உருத்திர சொரூபியாகி அழித்தலுஞ் செய்யுந் திருமாலின் அவதாரவிஷேமாகிய
கண்ண னென்று, ‘மூவருமொருவனாமூர்த்தி’ என்பதற்குக் கருத்து

போற்றிய கன்னன் கண்டு கண் களிப்ப, புணரி மொண்டு
எழுந்த கார் முகிலை
மாற்றிய வடிவும், பஞ்ச ஆயுதமும் வயங்கு கைத்தலங்களும், ஆகி,
கூற்று உறழ் கராவின் வாயின்நின்று அழைத்த குஞ்சர ராசன்
முன் அன்று
தோற்றியபடியே தோற்றினான்-முடிவும் தோற்றமும் இலாத
பைந் துளவோன்.244.-கர்ணன் கண்கினிப்ப, வேதியன் நிஜவடிவத்தைக்
காட்டுதல்.

முடிவுஉம் தோற்றம்உம் இலாத – இறத்தலும் பிறத்தலு
மில்லாத(நித்தியமாகிய), பைந் துளவோன்-பசிய திருத்துழாய் மாலையையுடைய
கண்ணன், போற்றிய கன்னன் – (தன்னைத்) துதித்த கர்ணன் கண்டு – சேவித்து,
கண்களிப்ப – கண்கள் களிப்படையும்படி, புணரி மொண்டு எழுந்த கார் முகிலை –
கடல் நீரை (வயிறு நிரம்ப)  முகந்துகொண்டு (ஆகாயத்தில்) எழும்பிய
கார்காலத்துக்காளமேகத்தை, மாற்றிய – (தனக்கு ஒப்பாகாதென்று) நீக்கின
(மிகக்கரிய) வடிவுஉம் -திருமேனியும்,  பஞ்ச ஆயுதம்உம் வயங்கு –
ஐம்படைகளும் விளங்குகிற, கைத்தலங்கள்உம் – திருக்கையிடங்களும், ஆகி-,
கூற்று உறழ் – யமனை ஒத்த(மிகக்கொடிய) கராவின் – முதலையினது, வாயின் –
வாயிலே, நின்று -அகப்பட்டுக்கொண்டு, அழைத்த – கூப்பிட்ட, குஞ்சர ராசன்
முன் -கசேந்திராழ்வான்முன்னே, அன்று – அந்நாளில், தோற்றியபடியே –
எழுந்தருளிவந்தபடியே, தோற்றினான் – சேவைகொடுத்தான்; (எ-று.)

     பஞ்ச வாயுதம் – சங்கம், சக்கரம், கதை, வாள், வில் என்பன; இவற்றிற்கு
முறையே பாஞ்சசன்னியம், சுதரிசனம், கௌமோ தகீ, நந்தகம், சார்ங்கம் என்று
பெயர்

அமரரானவரும், அமர யோனிகளும், அமரருக்கு அதிபனானவனும்,
கமல நான்முகனும், முனிவரும், கண்டு, கனக நாள்மலர்
கொடு பணிந்தார்;
‘சமர மா முனையில் தனஞ்சயன் கணையால் சாய்ந்து உயிர் வீடவும்,
செங் கண்
அமல நாரணனைக் காணவும், பெற்றேன்!’ என்று, தன் அகம்
மிக மகிழ்ந்தான்.245.- கர்ணன் நாராயணனைக் காணப்பெற்றேனென்று
அகமிகமகிழ்தல்.

அமரரானவர்உம் – தேவர்களும், அமர யோனிகள்உம் – மற்ற
தேவஜாதியிலுள்ளவர்களும், அமரருக்கு அதிபனாவன்உம் தேவராஜனான
இந்திரனும், கமலம் நான்முகன்உம் – தாமரைமலரில் தோன்றிய
நான்குமுகங்களையுடைய பிரமனும் முனிவர்உம் -முனிவர்களும், கண்டு –
(அக்காட்சியைத்) தரிசித்து, கனகம் நாள் மலர் கொடு – பொன்மயமாகிய அன்று
மலர்ந்த (கல்பகவிருக்ஷங்களின்) பூக்களைக்கொண்டு, பணிந்தார் – வணங்கி
அருச்சித்தார்கள்;  (கர்ணன்), சமரம் மா முனையில் – பெரியபோர்க்களத்தில்,
தனஞ்சயன் கணையால் ; திருக்கண்களையுடைய, அமலன் நாரணனை – குற்றமற்ற
ஸ்ரீமந்நாராயணனை, காணஉம் – தரிசிக்கவும், பெற்றேன்-, என்று – என்று எண்ணி,
தன் அகம் மிக மகிழ்ந்தான் – தன்மனம் மிகக்களித்தான்; (எ- று.)

     அமரயோனிகள் – சித்தர், கருடர், கின்னரர், கிம்புருடர், கந்தருவர், இயக்கர்,
விஞ்சையர், உரகர் முதலிய தேவகணங்கள், வீட- விடஎன்பதன் நீட்டல்,
தன்னியல்பிலே ஒருகுற்றமுஞ் சிறிதுமில்லாமை மாத்திரமேயன்றித் தனக்குச்
சரீரமாகிய சராசரங்களின் சம்பந்தத்தாலாகிய குற்றஞ்சிறிதுந் தட்டாதவ னென்பது
விளங்க, ‘அமல நாரணன்’ என்றார்.   

அருந் தழல் மா மகம் புரிந்தும், கடவுள்-கங்கை ஆதியாம் புனல்
படிந்தும், அனில யோகத்து
இருந்தும், அணி மலர் தூவிப் பூசை நேர்ந்தும், எங்கும் ஆகிய
உன்னை இதயத்துள்ளே
திருந்த நிலைபெறக் கண்டும், போகம் எல்லாம் சிறுக்கி, அனைத்து
உயிருக்கும் செய்ய ஒண்ணாப்
பெருந் தவங்கள் மிகப் பயின்றும், பெறுதற்கு எட்டாப் பெரும்
பயன், நின் திருவருளால் பெறப்பெற்றேனே.246.-இதுமுதல் நான்குகவிகள்-நாராயணனைக் காணப்பெற்று
மகிழ்ந்த கர்ணன்வார்த்தை.

அரு – அரிய, தழல் – அக்கனியில், மா மகம் – சிறந்த யாகங்களை,
புரிந்துஉம் – செய்தும், கடவுள் – தெய்வத்தன்மையையுடைய, கங்கை ஆதி ஆம் –
கங்கைமுதலான, புனல்-புண்ணியதீர்த்தங்களில், படிந்துஉம் – நீராடியும்,
அனலயோகத்து இருந்துஉம் – பஞ்சாக்கினிமத்தியில் நின்று செய்கிற
அஷ்டாங்கயோகானுஷ்டான நிலைமையிற் பொருந்தியும், அணி மலர் தூவி –
அழகியபூக்களையிட்டு அருச்சித்து, பூசை நேர்ந்துஉம் – பூசை செய்தும், எங்குஉம்
ஆகிய உன்னை – எல்லாவிடத்தும் அந்தர்யாமியாகவுள்ள உன்னை, இதயத்துள்ளே
– (தம்) மனத்தினுள்ளே, திருந்த – திருத்தமாக, நிலைபெற – வந்துநிலைபெற்று
வீற்றிருக்க, கண்டுஉம் – தரிசித்தும், போகம் எல்லாம் சிறுகி –
இன்பமெல்லாங்குறைந்து, அனைத்து உயிருக்குஉம் – எல்லாவுயிர்களுக்கும்,
செய்யஒண்ணா-செய்தற்கருமையான, பெரு தவங்கள் – பெரிய தபசுகளை, மிக
பயின்றுஉம்- மிகுதியாகச்செய்தும், பெறுதற்கு  எட்டா – பெறுவதற்குக் கிடைக்காத,
பெரு பயன் – பெரிய (மோட்சமாகிய) பிரயோஜனத்தை, நின்திரு அருளால் –
உனது மேன்மையான கருணையினால், பெற பெற்றேன்- (இனி)அடையப்பெற்றேன்;
(எ – று.)

     கங்கைக்குத் தெய்வத்தன்மை – தன்னில் ஒருகால் மூழ்கியவருக்குங்
கருமமனைத்தையும் போக்கி நற்கதியளித்தல். அனிலயோக மென்னும் பாடத்துக்கு-
வேறொன்றையுமுண்ணாமற் காற்றையே யுண்டு செய்யும் யோகமென்க.

     இதுமுதற் பன்னிரண்டு கவிகள் – இச்சருக்கத்தின் பதினேழாங்கவிபோன்ற
எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தங்கள். 

நீல நெடுங் கிரியும் மழை முகிலும் பவ்வ நெடு நீரும் காயாவும்
நிகர்க்கும் இந்தக்
கோலமும், வெங் கதை, வாளம், சங்கு, நேமி, கோதண்டம், எனும்
படையும், குழையும் காதும்,
மாலை நறுந் துழாய் மார்பும், திரண்ட தோளும், மணிக் கழுத்தும்,
செவ் இதழும், வாரிசாதக்
காலை மலர் என மலர்ந்த முகமும், சோதிக் கதிர் முடியும்,
இம்மையிலே கண்ணுற்றேனே!.

நீலம் – நீலரத்தினமயமாகிய, நெடு கிரிஉம் – பெரிய மலையையும்,
மழை முகில்உம் – மழைபொழிகிற காளமேகத்தையும், பவ்வம் நெடு நீர்உம் –
கடலின் மிகுந்த நீரையும், காயாஉம் -காயாமலரையும், நிகர்க்கும் – ஒக்கின்ற,-இந்த-,
கோலம்உம் – (உனது) திருமேனியையும், வெம் – (பகைவர்க்குக்) கொடிய, கதை –
கதையும், வாளம் – வாளும், சங்கு – சங்கமும், நேமி – சக்கரமும், கோதண்டம் –
வில்லும், எனும் – என்கிற, படைஉம் – பஞ்சாயுதங்களையும், குழைத்த – தளிர்த்த,
வாசம்-வாசனையையுடைய, நறு – நல்ல, துழாய் மாலை –
திருத்துழாய்மாலையையணிந்த, மார்புஉம் – திருமார்பையும், திரண்ட தோள்உம் –
திரட்சியாகவுள்ள தோள்களையும், மணிகழுத்துஉம் – அழகிய திருக்கழுத்தையும்,
செம் இதழ்உம் – சிவந்த திருவதரத்தையும், காலம் – (தக்க) பருவத்தில் மலர்ந்த,
வாரிசாதம் மலர் என – தாமரைப்பூப்போல, மலர்ந்த – மலர்ந்துள்ள, முகம்உம் –
திருமுகத்தையும், சோதி கதிர் முடிஉம் – மிகுந்த ஒளியையுடைய – திருமுடியையும்,
இம்மையில்ஏ – இப்பிறப்பில்தானே, கண்ணுற்றேன் – (பிரதியக்ஷமாகத்)
தரிசிக்கப்பெற்றேன்; (எ – று.)-வாரி  ஜாதம் – நீரிற் பிறப்பது. சோதிகதிர் –
ஒருபொருட்பன்மொழி. பி-ம்:  குழையுங் காதும் காலை.

‘தருமன் மகன் முதலான அரிய காதல் தம்பியரோடு எதிர் மலைந்து,
தறுகண் ஆண்மைச்
செருவில், எனது உயிர் அனைய தோழற்காகச் செஞ்சோற்றுக் கடன்
கழித்தேன்; தேவர் கோவுக்கு
உரைபெறு நல் கவசமும் குண்டலமும் ஈந்தேன்; உற்ற பெரு நல்
வினைப் பேறு உனக்கே தந்தேன்;
மருது இடை முன் தவழ்ந்தருளும் செங் கண் மாலே! மா தவத்தால்,
ஒரு தமியன் வாழ்ந்தவாறே!

முன் – முன்னே (கிருஷ்ணாவதாரத்தில் இளம்பிராயத்தில்), மருது
இடை – இரட்டை மருதமரங்களினிடையே, தவழ்ந்தருளும் – தவழ்ந்துசென்றருளிய,
செம் கண் மாலே – சிவந்த திருக்கண்களையுடைய திருமாலென்னுந்
திருநாமமுடையவனே! தறுகண் – அஞ்சாமையோடுகூடிய, ஆண்மை –
பராக்கிரமத்துக்கு இடமான, செருவில் – போர்க்களத்தில், எனது உயிர்
அனையதோழற்கு ஆக – என்னுடைய உயிரையொத்த நண்பனாகிய துரியோதனன்
பொருட்டாக, தருமன் மகன் முதல் ஆன – தருமபுத்திரன் முதலய, அரிய –
(பெறுதற்கு) அருமையான, காதல் – அன்பையுடைய, தம்பியரோடு –
தம்பிமார்களுடனே, அமர் மலைந்து – போர் செய்து, செம் சோறு கடன்
கழித்தேன் – (அவன் எனக்குச்) செவ்வையாகப் போகட்டுவந்த சோற்றுக்குப்
பிரதியுபகாரஞ்செய்துவிட்டேன்; தேவர் கோவுக்கு – தேவேந்திரனுக்கு, உரைபெறு –
உயர்ச்சி பெற்ற, நல் கவசம்உம் – நல்ல கவசத்தையும், குண்டலம்உம் –
குண்டலங்களையும், ஈந்தேன் – தானஞ்செய்தேன்; உற்ற பெருநல்வினை பேறு –
பொருந்திய பெரிய புண்ணியமாகிய பயனை, உனக்கே-, தந்தேன் – கொடுத்தேன்,
ஒருதமியன் – (உன்னையன்றி) வேறு துணையுங் கதியுமில்லாத ஒப்பற்ற
யானொருத்தன், மா தவத்தால்- (முற்பிறப்பிற் செய்த) சிறந்த தவத்தின் பயனால்,
வாழ்ந்த ஆறு ஏ – இப்படிப்பட்ட பெருவாழ்வையடைந்த விதம் வியக்கத்தக்கதே;
(எ – று.)

வான் பெற்ற நதி கமழ் தாள் வணங்கப்பெற்றேன்; மதி பெற்ற
திருவுளத்தால் மதிக்கப்பெற்றேன்;
தேன் பெற்ற துழாய் அலங்கல் களப மார்பும், திருப் புயமும்,
தைவந்து தீண்டப்பெற்றேன்;
ஊன் பெற்ற பகழியினால் அழிந்து வீழ்ந்தும், உணர்வுடன் நின்
திருநாமம் உரைக்கப்பெற்றேன்;
யான் பெற்ற பெருந் தவப் பேறு, என்னை அன்றி, இரு நிலத்தில்
பிறந்தோரில் யார் பெற்றாரே!’

வான் பெற்ற – ஆகாயத்திற் பொருந்திய, நதி-தேவகங்காநதி,
கமழ் -தோன்றின, தாள் – (உனது) திருவடிகளை, வணங்கப்பெற்றேன் –
சமஸ்கரிக்கப்பெற்றேன்; மதி பெற்ற – சந்திரனை யுண்டாக்கின, திரு உளத்தால் –
மேன்மையான  (உனது) மனத்தினால், மதிக்கப்பெற்றேன் – கௌரவிக்கப்பெற்றேன்;
தேன் பெற்ற – தேனையுடைத்தான், துழாய் – திருத்துழாயினாலாகிய, அலங்கல் –
மாலையையும், களபம்-கலவைச் சந்தனத்தையும் அணிந்த, மார்புஉம் – (உனது)
திருமார்பும், திருபுயம்உம் – திருத்தோள்களும்,  தைவந்து தீண்டப்பெற்றேன் –
(என்மேல)் தடவி ஸ்பரிசிக்கப்பெற்றேன்; ஊன் பெற்ற – (பகைவர் உடம்பின்)
தசையை (நுனியிலே பொருந்த)ப் பெற்ற, – பகழியினால் – (அருச்சுனன்)
பாணத்தினால், அழிந்து – வலிகெட்டு, வீழ்ந்துஉம் – கீழேவிழுந்த பின்பும்,
உணர்வுடன் – நல்லறிவோடு, நின் திரு நாமம் – உனது சிறந்த பெயர்களை,
உரைக்கப்பெற்றேன் – சொல்லப்பெற்றேன்; யான் பெற்ற – நான் அடைந்த, பெரு
தவம் பேறு  – பெரிய தவத்தினாற் பெறுதற்குரிய பாக்கியத்தை, என்னை அன்றி –
என்னையல்லாமல், இரு நிலத்தில்பிறந்தோரில் – பெரிய நிலவுலகத்திற்
பிறந்தவர்களுள், யார் – வேறுயார், பெற்றார்-? (எ – று.)

     திருமால் உலகமளந்தகாலத்தில் மேலே சத்தியலோகத்திலே சென்ற அவரது
திருவடியைப் பிரமன் தன்கைக் கமண்டல தீர்த்தத்தாற் கழுவிவிளக்க அந்த
ஸ்ரீபாததீர்த்தமே கங்காநதி

யாகப் பெருகியதாதலால் ‘வான்பெற்ற நதிகமழ்தாள்’ என்றும், திருமாலின்
திருவுள்ளத்தினின்றுஞ்சந்திரன் தோன்றினானென்று வேதத்திற் கூறப்படுதலால்
‘மதிபெற்ற திருவுளம்’ என்றுங்கூறினான்.   

என்று மகிழ்வுற, வணங்கும் எல்லி மைந்தன் இன்புற, வண்
புறவினில் ஆனிரையின் பின் போய்,
கன்றுகொடு விள எறிந்த கண்ணன்தானும், கன்னனுக்குக்
கட்டுரைப்பான்; ‘கடவுள் நாதன்
அன்று உனது கவசமும் குண்டலமும் வாங்க அழைத்தேனும்,
குந்தியைக் கொண்டு அரவ வாளி
ஒன்று ஒழியத் தொடாத வரம் கொள்வித்தேனும், உற்பவத்தின்
உண்மை உனக்கு உணர்வித்தேனும்,250.- இதுவும் மேலைக்கவியும் – கவசகுண்டலம் வாங்கச்செய்தமை
முதலியன என்செயலே என்று சொல்லி ஸ்ரீகிருஷ்ணன் தன்
பாகுதொழிலுக்குச் செல்லுதலைத் தெரிவிக்கும்.

என்று – என்றுசொல்லிப்புகழ்ந்து, மகிழ்வு உற – களிப்பு மிக,
வணங்கும் – நமஸ்கரிக்கிற, எல்லி மைந்தன் – சூரியகுமாரனான கர்ணன், இன்பு
உற- இன்பமடைய, வண் புறவினில்-வளப்பத்தையுடைய முல்லை நிலத்திலே,
ஆன்நிரையின் பின் போய் – பசுக்கூட்டத்தை மேய்த்துக்கொண்டு அதன்பின்னே
சென்று,கன்று கொடு விள எறிந்த – கன்றினால் விளாமரத்தை  வீசியடித்த,
கண்ணன்தான்உம் – கிருஷ்ணனும், கன்னனுக்கு-, கட்டுரைப்பான் –
உறுதியாகச்சொல்பவனாய்,- கடவுள் நாதன் –  தேவேந்திரன், அன்று – அந்நாளில்,
உனது-, கவசம்உம் – கவசத்தையும், குண்டலம்உம் – குண்டலங்களையும், வாங்க –
தானமாகப் பெறும்படி, அழைத்தேன்உம் – (அவனை) வரவழைத்தவனும்,-அரவம்
வாளி – நாகாஸ்திரத்தை, ஒன்று ஒழிய – ஒருதரமேதவிர (மறுபடியும்), தொடாத –
(அருச்சுனன்மேற்) பிரயோகிக்க வொட்டாத, வரம் – வரதத்தை, குந்தியைக்
கொண்டு-,கொள்வித்தேன்உம் – பெறச்செய்தவனும், உற்பவத்தின் உண்மை –
(உன்) பிறப்பின்நிச்சயத்தை, உனக்கு-, உணர்வித்தேன்உம் – அறிவித்தவனும்,-
(எ-று.)

     எல்லி – ஒளியையுடையவன், எல் – ஒளி, கண்ணன் பாண்டவதூதனாய்
அத்தினபுரிக்குச் சென்றபொழுது கர்ணனுக்குத்  தானே நேராகவுங் குந்தியைக்
கொண்டும் பிறப்பை உணர்த்தினான். 

தக்ககன்தன் மகவான உரக வாளி தனஞ்சயனைச் சதியாமல்
சாய்வித்தேனும்,
மெய்க் கருணை நின்பொருட்டால், ‘யானே’ என்று மீண்டும் போய்த்
தேர் வலவன் விசயற்கு ஆனான்-
எக் கடலும், எக் கிரியும், எல்லா மண்ணும், இமையோரும்,
மானுடரும், எல்லாம் ஆகி,
மைக் கண் இளங் கோவியர் நுண் துகிலும் நாணும் வரி வளையும்
மட நெஞ்சும் வாங்கும் மாலே.

தக்கன் தன் – தக்ஷகனது, மகவு ஆன – பிள்ளையாகிய, உரகம்
வாளி- நாகாஸ்திரம், தனஞ்சயனை – அருச்சுனனை, சதியாமல் – அழிக்காதபடி,
சாய்வித்தேன்உம் – (அவன்தேரைநிலத்தில்) அழுந்தச்செய்தவனும், நின் பொருட்டு
உனக்காக, மெய் கருணை – உண்மையான அருளையுடைய, யானே – நான்தான்,
என்று – என்றுசொல்லி, போய்-, மீண்டு்உம் – மறுபடியும், விசயற்கு –
அருச்சுனனுக்கு, தேர்வலவன் ஆனான் – தேர்ப்பாகனாய் விட்டான்; (யாரேனில்),
ஏ கடல்உம் – எல்லாகடல்களும், எ கிரிஉம் – எல்லா மலைகளும், எல்லா
மண்உம் – எல்லாவுலகங்களும், இமையோர்உம் – தேவர்களும், மானுடர்உம் –
மனிதர்களும், எல்லாம் – மற்றஎல்லாச்சராசரங்களின் வடிவங்களும், ஆகி -,
மைகண் – மையிட்ட கண்களையுடைய, இள கோவியர் – இளம்பருவத்தையுடைய
இடைப்பெண்களது, நுண் – மெல்லிய, துகில்உம் – சேலைகளையும், நாண்உம் –
வெட்கத்தையும், வரி வளைஉம் – அழகிய வளைகளையும், மடநெஞ்சுஉம் –
மடமைக்குணத்தையுடைய மனத்தையும், வாங்கும் – கவர்ந்த, மால் – திருமால்;
(எ – று.)

     சாய்வித்தேன் – அந்த அஸ்திரத்தை அழியச்செய்தேன் என்றுமாம்.
கோவியர்-பசுக்களைக்காப்பவன் என்னும் பொருளதாகிய கோபன்என்பதன்
பெண்பாலானகோபீ என்பதன் விகாரமாகிய கோவிஎன்பதன்பன்மை. கண்ணன்
இளமையில்ஒருநாள் குளத்தில்நீராடிக் கொண்டிருந்த இடைப்பெண்களது
துகில்களைவிளையாட்டாக் கவர்ந்து கொண்டுபோய் ஒளித்தார். கண்ணன்
விஷயத்திற் கொண்டகாமநோயா லுண்டான விரகவேதனையால்
கோபஸ்திரீகளுக்கெல்லாந் துகில்நெகிழ்ந்து போகின்றதனாலும், நாணம்
அழிதலாலும், வேதனைமிகுதியால்உடம்புமெலிதல்பற்றிக் கைவளைகள் கழன்று
விழுந்துவிடுதலாலும், அவர்கள் நெஞ்சுதன்வசமன்றிக் கிருஷ்ணவசமாதலாலும்,
இங்ஙனங் கூறினார். நாண், மடம் என்பன -பெண்களுக்கு உரிய முக்கிய
குணங்கள். நாண், – தமக்கு ஒவ்வாத கருமங்களைச்செய்ய வெள்குதல்; மடம் –
அறிந்தும் அறியாதுபோலிருக்குந் தன்மை,மூன்றாமடியால் எம்பெருமானது
ஜகச்சரீரகத்வத்தையும், நான்காமடியால்சௌலப்பியத்தையும் வெளியிடடார்

பகலவன்தன் மதலையை நீ பகலோன் மேல்பால் பவ்வத்தில்
படுவதன்முன் படுத்தி’ என்ன,
இகல் விசயன் உறுதி உற அஞ்சரீகம் எனும் அம்பால் அவன்
இதயம் இலக்கமாக
அகல் உலகில் வீரர் எலாம் மதிக்க எய்தான்; அந்த ஆசுகம் உருவி,
அப்பால் ஓடி,
தகல் உடையார் மொழி போலத் தரணியூடு தப்பாமல் குளித்தது;
அவன்தானும் வீழ்ந்தான்.252.,-கிருஷ்ணன் சொற்படி அருச்சுனனெய்த அம்பாற்
கர்ணன் வீழ்தல்.

(கண்ணன் அருச்சுனனை நோக்கி), நீ-, பகலோன் –
பகலைச்செய்பவனாகிய சூரியன்,  மேல் பால் பவ்வத்தில் படுவதன் முன் –
மேற்குத்திக்கு்கடலில் விழுந்து அஸ்தமிக்கு முன்னமே, பகலவன் தன்மதலையை-
(அச்)சூரியபுத்திரனான கர்ணனை, படுத்தி – கொல்வாய்’ என்ன – என்றுசொல்ல,-
இகல் விசயன்  – பராக்கிரமத்தையுடைய அருச்சுனன்,-உறுதி உற –
வலிமைபொருந்த, அஞ்சரீகம் எனும் அன்பால் – அஞ்சரீகம் என்னும்
பெயரையுடைய  அம்பினால், அவன் இதயம் இலக்கம் ஆக – அவனது மார்பு
இலக்காக, அகல் உலகில் வீரர்எலாம் – பரந்த உலகங்களிலுள்ள வீரர்கள்யாவரும்,
மதிக்க – (தன்னைக்) கௌரவிக்கும்படி, எய்தான்-, அந்த ஆசுகம் – அந்த அம்பு,
தகல்உடையார் மொழிபோல – (ஞானஒழுக்கங்களினால்)  தகுதியையுடைய
முனிவரது சாப அனுக்கிரகவார்த்தைகள் போல, தப்பாமல் – (சிறிதும்) தவறாதபடி,
உருவி – (மார்பைத்) துளைத்துக் கொண்டு அப்பால்ஓடி – பின்னே விரைந்து
சென்று,தரணியூடு – பூமியிலே, குளித்தது – விழுந்து அழுந்திற்று; அவன்
தான்உம் -கர்ணனும், வீழ்ந்தான்-கீழே விழுந்தான்: (எ-று.)

கருடனது திருத் தோளில் கண்ட கோலம் கண்ணினும் நெஞ்சினும்
நிற்க, கருணை ஆதி-
புருடனது திருநாமம் தனது நாவில் போகாமல் நனி விளங்க,
புதைந்து வாளி
வருடம் உடல் குளிப்பிக்க, செம் பொன் தேர்மேல் மன்னர் எலாம்
புடை சூழ, வையம் காக்கும்
குருடன் மகன் அருகு இருந்து சோகம் கூர, குற்றுயிரினுடன் கிடந்தான்
கொடையால் மிக்கோன்.253.- கர்ணன் நிலைமை.

கருடனது – பெரியதிருவடியின், திரு தோளில் – அழகிய
தோள்களின்மேல், கண்ட – காணப்பட்ட, கருணை – அருளையுடைய,
ஆதிபுருடனது – [யாவர்க்கும்] முதல்வனும் புருஷோத்தமனுமாகிய எம்பெருமானது.
கோலம் – திவ்வியசொரூபம், கண்ணின்உம் – (தனது) கண்களிலும், நெஞ்சின்உம் –
மனத்திலும், நிற்க – நிலைபெற்றிருக்கவும், திருநாமம் – [அக்கடவுளது] சிறந்த
பெயர்,தனது நாவில் – தன்நாக்கில்நின்றும் – போகாமல்- நீங்கிப்போகாதபடி, நனி
விளங்க- நன்றாகவிளங்கவும், வாளிவருடம் – பாணவருஷம், புதைந்து –
மேலேஅழுந்தி,உடல் –  உடம்பை, குளிர்விக்க – குளிரச் செய்யவும். மன்னர்
எலாம் -அரசர்கள்யாவரும், புடைசூழ – பக்கங்களிற் சூழ்ந்து நிற்கவும், வையம்
காக்கும் -பூமியை அரசாளுகிற, குருடன் மகன் – பிறவிக்குருடனாகிய
திருதராட்டிரனதுமைந்தனான துரியோதனன், அருகு இருந்து – பக்கத்திலே
யிருந்து, சோகம் கூர -துன்பம் மிகவும், கொடையால் மிக்கோன் –
தானத்தால்மிகுந்தவனான கர்ணன், செம்பொன் தேர்மேல் – சிவந்த
பொன்னாலாகிய தேரில், குறு உயிரினுடன் -குறைப்பிராணனோடு, கிடந்தான் –
விழுந்திருந்தான்; (எ – று.)

     வீரர்களெல்லாஞ் சிறந்தபுண்களை விரும்புவராதலால், ‘வாளிவருடமுடல்
குளிர்விக்க’ என்றார்.    

முந்தி எதிர் பொரும் விசயன் தொடுத்த கோலால், முடி சாய்ந்து
இன்று ஐவருக்கும் முன்னோன் வீழ்ந்தான்;
அந்தி படுவதன் முன்னே ஆவி போம்’என்று அசரீரி எடுத்து
உரைப்ப, அன்னையான
குந்தி தனது உளம் உருக, கண்ணீர் சோர, குழல் சரிய, போர்ககளத்து,
‘கோ, கோ!’ என்று,
வந்து, இரு கை தலைப் புடைத்து, தலைநாள் ஈன்ற மகவின்மேல்
வீழ்ந்து அழுதாள், மன்னோ மன்னோ!254.-கர்ணன் குற்றுயிருடனிருப்பதை அசரீரியாலறிந்து
குந்திதேவி கதறிக்கொண்டு களங்குறுகுதல்.

முந்தி – முன்னேநின்று, எதிர் பொரும் – எதிர்த்துப் போர்செய்கிற,
விசயன் – அருச்சுனன், தொடுத்த – எய்த கோலால்,- அம்பினால், ஐவருக்குஉம்
முன்னோன் – பஞ்சபாண்டவர்க்குந் தமையனான கர்ணன், இன்று – இன்றைக்கு,
முடிசாய்ந்து – தலைசாய்ந்து, வீழ்ந்தான்-; ‘அந்திபடுவதன் முன்னே –
மாலைப்பொழுது கழிவதற்கு முன்பே, ஆவி போம் – உயிர் நீங்கும்,’ என்று-,
அசரீரி – உடம்பில்லாத (தெய்வத்தன்மையையுடைய) ஆகாசவாணி, எடுத்து
உரைப்ப – உரத்துச்சொல்ல,-அன்னை ஆன – அவன் தாயாகிய, குந்தி-,  தனது
உளம் உருக – தன்மனங் கரையவும், கண் நீர் சோர – கண்களினின்று நீர்
பெருகவும், குழல் சரிய – கூந்தல் அவிழவும், கோ கோ என்று – கோகோவென்று
அரற்றிக்கொண்டு, போர்க்களத்து – யுத்தகளத்தில், வந்து-, இரு கை தலை
புடைத்து- இரண்டுகைகளாலுந்தலையிலே அடித்துக்கொண்டு, தலை நாள் ஈன்ற
மகவின்மேல் – முன்னாளில் (கன்னிகையாயிருக்கும்பொழுது) பெற்ற பிள்ளையாகிய
கர்ணன்மேல், வீழ்ந்து அழுதாள்-; (எ- று.)-கோ கோ வெனல் – சோகக் குறிப்பு.
மன்னோமன்னோ ஈற்றசை: இதுவும் சோகக்குறிப் பென்னலாம்.

என்றே என் தாதையுழைக் கன்னி மாடத்து எழில் இரவி திருவருளால்
ஈன்றேன், ஈன்ற
அன்றே பொற் பெட்டகத்தில் கங்கை ஆற்றில் ஆம் முறையால்,
உனை விடுத்தேன், அருள் இலாதேன்;
வென்றே மண் கவர்தரு மன் மதலைக்கு ஆவி மித்திரன் ஆனது கேட்டு,
உன் வீரம் கேட்டு,
நன்றே என் தவப் பயன் என்று உன்னி வாழ்ந்தேன்; நாகமும் நீ
அரசாள நடக்கின்றாயோ?255.-இதுவும் மேலைக்கவியும் – குந்திவார்த்தை.

மூன்றுகவிகள்  – ஒருதொடர்.

     (இ-ள்.) என்றே – எப்பொழுதே, என் தாதை உழை – எனது தந்தையின்
மனையில், கன்னிமாடத்து – கன்னிகாமடத்தில், எழில் இரவி திரு அருளால்-
அழகையுடைய சூரியனது மேலான கருணையினால், ஈன்றேன் – (உன்னைப்)
பெற்றேனோ, ஈன்ற அன்றே-பெற்ற அப்பொழுதே, உனை – உன்னை, அருள்
இலாதேன் – தயையில்லாதயான், பொன் பெட்டகத்தில் – அழகினையுடைய
பெட்டியில் (வைத்து), கங்கை ஆற்றில் – கங்காநதியில். ஆம்முறையால் –
செல்லும்படி, விடுத்தேன் – விட்டுவிட்டேன்; (பின்பு) வென்று ஏ –
(பாண்டவரைச்சூதினாற்) சயித்தே, மண் கவர் தரு – அவர்களிராச்சியத்தைப்
பறித்துக்கொண்ட, மன் மதலைக்கு – இராசபுத்திரனான துரியோதனனுக்கு, ஆவி
மித்திரன் ஆனது – (நீ) பிராணசிநேகிதனானதை, கேட்டு – கேள்விப்பட்டும் உன்
வீரம் – உனது வீரத்தனத்தை, கேட்டு – கேள்விப்பட்டும், என் தவம் பயன் –
எனது(முற்பிறப்பிற்செய்த) தவத்தின்பலன்,  நன்றே என்று நல்லதே யென்று,
உன்னி-எண்ணி, வாழ்ந்தேன் – மகிழ்ச்சியோடிருந்தேன், நீ-,(இப்பொழுது),
நாகம்உம்அரசாள – (இவ்வுலகத்தில் அரசாண்டதேயன்றிச்) சுவர்க்கலோகத்திலும்
அரசர்களும்பொருட்டு, நடக்கின்றாய்ஓ-செல்லுகிறாயோ- (எ – று.)

     கன்னிமாடம் – கலியாணமாகாத பெண்கள் வசித்தற்கு ஏற்படுத்திய இடம்
பெட்டகம் – பேடகம் என்னும் வடமொழித்திரிபு. கண்ணன் சொல்லக்கேட்டதனால்,
கேட்டு’ என்றாள்

ஓர் அஞ்சு பேர் உளரால் அறம் தவாத உதிட்டிரன் ஆதியர், உரகக்
கொடியோன் ஆதி
ஈர்-அஞ்சு பதின்மர் உளர் தம்பிமார்கள், இங்கிதங்கள் அறிந்து,
அடைவே ஏவல் செய்ய;
பார் அஞ்சும் ஒரு குடைக்கீழ் நீயே ஆளும் பதம் அடைந்தும்,
விதி வலியால் பயன் பெறாமல்,
கார் அஞ்சு கரதலத்தாய்! அந்தோ அந்தோ, கடவுளர்தம்
மாயையினால் கழிவுற்றாயே!’

கார் அஞ்சு  கரதலத்தாய் – (கைம்மாறுகருதாமற்
பேருதவிசெய்தலால்) மேகமும் அஞ்சுகின்ற கைகளின் இடத்தையுடையவனே!
(உனக்கு), அறம் தவாத – தருமநிலைதவறாத, உதிட்டிரன் ஆதியர் –
தருமபுத்திரன்முதலியவர்களாகிய,  ஓர் அஞ்சு பேர் –  ஒப்பற்ற ஐந்துபெயர்
(தம்பிமார்கள்), உளர்- இருக்கின்றனர்; உரகம் கொடியோன் ஆதி –
பாம்புக்கொடியையுடையதுரியோதனன் முதலான, ஈர் அஞ்சு பதின்மர் –
நூறுபெயர், தம்பிமார்கள்-, உளர்-;(இவர்களெல்லாம்), இங்கிதங்கள் – (உன்)
குறிப்புக்களை, அறிந்து – தெரிந்து,அடைவே-முறைப்படி, ஏவல் செய்ய-(நீ) ஏவின
தொழில்களைச் செய்யும்படி, பார் -பூமிமுழுவதையும், அஞ்சும் – (யாவரும்)
அஞ்சும்படியான, ஒரு குடைக்கீழ்-ஒப்பற்றகுடையின் கீழே, நீஏ – நீ ஒருவனாகவே,
ஆளும் – அரசாளும்படியான, பதம் -நிலைமையை, அடைந்துஉம்-
அடைந்திருந்தும், விதிவலியால் – (முற்பிறப்பிற்செய்த)ஊழ்வினையின் பலத்தினால்,
பலன் பெறாமல் – பயனை அடையாமல், கடவுளர் தம்மாயையினால் தேவர்களின்
வஞ்சனையால், கழிவுற்றாய் – மரணமடைந்தாய்;அந்தோ அந்தோ -ஐயோ! ஐயோ!
(எ – று.)-ஏகாரம் – இரக்கம்.

     தம்பிமார்களென்பது, முன்வாக்கியத்திலுங் கூட்டப்பட்டது. ஈரஞ்சுபதின்மர் –
பண்புத்தொகைப் பன்மொழித்தொடர், இங்கிதம் அறிதல் – ஒருவன் மனக்கருத்தை
முகம் கண் புருவம் முதலியவற்றின் குறிப்பினால் அறிந்துகொள்ளுதல். ஆளும்
பதம்என்றது – இந்நூற்றைவருக்கும் மூத்தவனாய்ப்பிறந்ததை ஒரு குலத்தில்
மூத்தவனுக்கே அரசாட்சி உரிய தென்பது நீதிநூல் துணிபாதலால், இங்ஙனங்
கூறியது, பயன்பெறுதல் – சக்கரவர்த்தியாதல், கடவுளர், இந்திரன் திருமால்
முதலியவர்.     

என்று என்றே அமர்க் களத்தில் நின்ற வேந்தர் யாவரும் கேட்டு
அதிசயிப்ப, ஏங்கிஏங்கி,
அன்று அன்போடு எடுத்து அணைத்து, முலைக்கண் ஊறல் அமுது
ஊட்டி, நேயமுடன், அணித்தா ஈன்ற
கன்று எஞ்ச இனைந்து இனைந்து மறுகாநின்ற கபிலையைப்போல், என்
பட்டாள்-கலாபம் வீசிக்
குன்று எங்கும் இளஞ் சாயல் மயில்கள் ஆடும் குரு நாடன்
திருத்தேவி, குந்திதேவி!257.- குந்தியின் அன்பின்செயல்.

குன்று எங்குஉம் – மலையில் எவ்விடத்தும், இள-இளமையாகிய,
சாயல் – மென்மையையுடைய, மயில்கள்-, கலாபம் வீசி – தோகையை
விரித்துக்கொண்டு, ஆடும் – கூத்தாடுகிற, குரு நாடன் – குருநாட்டையுடைய
பாண்டுவினது, திரு தேவி-மேலானமனைவியாகிய, குந்திதேவி – குந்தியென்னும்
ராஜபத்தினி, என்றுஎன்று – என்றுஇவ்வாறு பலசொல்லி, அமர் களத்தில் நின்ற
வேந்தர் யாவர்உம் – போர்க்களத்தில் நின்ற அரசரெல்லாரும், கேட்டு அதிசயிப்ப
– செவியுற்று (இது என்னவென்று) வியக்கும்படி, ஏங்கி ஏங்கி – மிகப்புலம்பி,
அன்று – அப்பொழுது, அன்போடு, அன்புடனே எடுத்து அணைத்து – (கைகளால்)
எடுத்துத்தழுவிக்கொண்டு, முலைக்கண் ஊறல் அமுது ஊட்டி – தனங்களிற் சுரக்கிற
பாலை உண்பித்து, நேயமுடன் – அன்போடு, அணித்து ஆ – சமீபகாலத்தில்,
ஈன்ற – பெற்ற, கன்று- ஏஞ்ச இறக்க, இனைந்து இனைந்து – மிகவருந்தி,
மறுகாநின்ற – கலங்குகிற, கபிலையை போல் – பசுவைப்போல, என் பட்டாள் –
என்னவருத்தப்பட்டாள்!!! (மிகவும் வருந்தினள் என்றபடி); (எ- று.)

     அதிசயித்தல் – கர்ணனுக்குக் குந்தி தாயென்று எவருக்கும் இதுவரையிலுந்
தெரியாததனா லென்க, மிக்க அன்பினால் தனங்களிற் பால் சுரந்தது, குந்தி
இங்ஙனஞ்செய்தது-முன் கர்ணனிடஞ்சென்று நாகாஸ்திரத்தை அருச்சுனன்மீது
இரண்டாமுறை விடாதபடியும் மற்றைத்தம்பிமார்களைக் கொல்லாதபடியும் இரண்டு
வரங்கேட்டு வாங்கினபொழுது, அவனும் இவளை ‘யான் போர்க்களத்தில்
இறக்கும்போது யாவரும் அறிய எனக்கு முலைப்பாலுட்டி யான் உமதுபிள்ளை
யென்பதைப் புலப்படுத்தவேண்டும்’ என்றும். போர்முடியுமட்டும் பஞ்சபாண்டவரு
முட்பட எவர்க்கும் நான் உமக்கு மகனென்பதைப் புலப்படுத்தாதிருத்தல் வேண்டு
மென்றும். இரண்டுவரங்கேட்டு வாங்கினனாதலால். 

அன்னை மடியினும் கரத்தும் உடல் கிடப்ப, அங்கர்பிரான்
ஆவி தாதை-
தன்னை மருவுறத் தழுவி, தானம் உறக் கிளர்ந்தது, அவண்
தடுமாறாமல்-
மின்னை வலி உற நீட்டி, அண்ட முகடு அசையாமல்,
விண்ணோர் தச்சன்,
பொன்னை அழகு எழப் பூசி, ஒளி பிறங்க நாட்டியது ஓர்
பொன்-தூண் ஒத்தே.258.-கர்ணனாவிவிண்ணுலகஞ் சேர்தல்.

அன்னை – தாயாகிய குந்தியின், மடியின்உம்-மடியிலும்,
கரத்துஉம் -கைகளிலும், உடல் – அவனுடம்பு, கிடப்ப – பொருந்தியிருக்க,-
அங்கர் பிரான் -அங்கநாட்டார்க்குத்தலைவனான கர்ணனது, ஆவி-உயிர், அவண்
தடுமாறாமல் -அங்கே அலையாதபடி, விண்ணோர் தச்சன் – தேவர்களது சிற்பியான
விசுவகர்மா,அண்டம் முகடு அசையாமல் – அண்டகோளத்தின் மேல்முகடு
சலியாதபடி,மின்னை-மின்னலை, வலி உற – வலிமை பொருந்த, நீட்டி – நீள
வடிவமாக்கி,பொன்னை அழகு எழ பூசி – (அதன்மேற்) பொன்னை அழகு
உண்டாம்படி பூசி,ஒளி பிறங்க-ஒளி விளங்கும்படி, நாட்டியது – நேராக
நிறுத்தியதாகிய, ஓர் – ஒரு,பொன் தூண் – அழகிய கம்பத்தை, ஒத்து –
போன்று [ஒளிவடிவமாகி], தாதை தன்னை மருவுற தழுவி – தந்தையாகிய
சூரியனைச் சேருமாறு பொருந்தி, தானம் உற மேலுலகத்து உயர்ந்தபதவிலேயே
சேர, கிளர்ந்தது – எழுந்துவிளங்கிற்று; (எ – று.)

     இடையிலே சூரியமண்டலத்தைப் பேதித்துக்கொண்டு அதன் வழியே சென்று
சுவர்க்கஞ்சேர வேண்டுதலால், ‘ஆவி தாதை தன்னை மருவுறத்தழுவித் தானமுறக்
கிளர்ந்தது’ என்றார். தச்சன்-தக்ஷன் என்னும் வடமொழித்திரிபு, பின் இரண்டடி –
தற்குறிப்பேற்றவணி.

     இதுமுதற் பன்னிரண்டுகவிகள் – கடையிருசீரும் மாச்சீரும், மற்றை நான்குங்
காய்ச்சீருமாகிய அறுசீராசிரியவிருத்தங்கள்.   

மருத்து உதவ வரு சண்ட மருத்தாலும், மருத்துவான் வழங்கும்
சோதி உருத் திகழும் கரிய சுடர்
உருத்து எழு வெங் கனலாலும், உகாந்தம்தன்னில்
நிருத்தமிடும் பெரும் பவ்வ நெடு நீத்தம் வறப்பதுபோல்,
நிருபன் சேனைப்
பெருத்த கடல் சுவறிய அப் பெருமைதனை எப்படி
நாம் பேசுமாறே!259.- துரியோதனன்சேனை வற்றியதைப் பற்றிய கவிக்கூற்று.

மருத்து – வாயுபகவான், உதவ – அருள்செய்ததனால், வரு – பிறந்த,
சண்ட மருத்தால்உம் – கடுங்காற்றுப்போன்ற வீமனாலும், மருத்துவான் வழங்கும் –
இந்திரன்பெற்றருளின, சோதி உருதிகழும் – ஒளியோடு கூடிய வடிவம்
விளங்கப்பெற்ற, கரிய சுடர்- கருத்த நிறத்தையுடைய, உருத்து எழு – பற்றியெரிகிற,
வெம்-கொடிய கனலால்உம் – நெருப்புப்போன்ற அருச்சுனனாலும், உகாந்தந்
தன்னில் – யுகமுடிவு காலத்தில், நிருத்தம் இடும் – (பொங்கியெழுதலால்)
கூத்தாடுகிற,பெரு பவ்வம் – பெரியகடலின், நெடுநீத்தம் – மிகுந்த நீர்வெள்ளம்,
வறப்பதுபோல் -வறந்து போவதுபோல், நிருபன் சேனை பெருத்த கடல் –
துரியோதனனதுசேனையாகிய பெரிய கடல் சுவறிய – வறந்துபோன, அ
பெருமைதனை -அந்தப்பெருங்காரியத்தை, நாம்-, பேசும் ஆறு-சொல்லும்
விதம், எப்படி -எவ்வாறோ? (பேசுதற்கு அரிதென்றபடி); (எ- று.)

     யுகாந்தகாலத்திற் காற்றும்நெருப்புஞ் சேர்ந்து கடலை வறளச் செய்வதுபோல
இப்பொழுது வீம அருச்சுனர்கள் சேர்ந்து துரியோதனன் சேனையாகிய கடலை
வறளச்செய்தனரென்பது, கருத்து, மருத்துவான் – தேவர்களையுடையவன், மருத் –
தேவர், அருச்சுனனது நிறங் கருமையாதலால், ‘கரிய சுட ருருத்தெழுவெங்கனல்
என்றார்.        

யஅணையார்தம் படைக் கடலின் அரு நிலைக்குக்
கரை ஏறல் ஆன கோலப்
புணையாய், எத் திறங்களினும் பகிராமல், உற்றது எலாம் புகலத்
தக்க துணையாய், என் உயிர்க்கு
உயிராம் தோழனும் ஆகிய உன்னைத் தோற்றேன்ஆகில்,
இணை யாரும் இலா அரசே! யாரைக் கொண்டு, அரசு ஆள
இருக்கின்றேனே!260.-இதுவும்  மேற்கவியும்-துரியோதனன் புலம்பலைத்
தெரிவிக்கும்.

இணை யார்உம் இலா – ஓப்பு எவரும் இல்லாத, அரசே – அரசனே!
அணையார் தம் – (நம்மோடு) சேராத பகைவர்களது, படை கடலின் – சேனையாகிய
சமுத்திரத்தின், அரு நிலைக்கு – (கடப்பதற்கு) அரிய பரப்புக்கு, கரை ஏறல் ஆன
அக்கரையை அடைவதற்குப் பொருந்திய, கோலம் – அழகிய, புணை ஆய் –
தெப்பமாகி, எ திறங்களின்உம் – எல்லாவகைகளிலும், உற்றது எலாம் – நேர்ந்த
இன்பதுன்பங்களெல்லாவற்ைறையும் பகிராமல் – பேதமில்லாமல், புகல தக்க –
சொல்லுதற்குத்தகுந்த, துணை ஆய் – துணைவனாகி, என் உயிர்க்கு உயிர் ஆம் –
எனது உயிருக்கும் உயிராகிய [மிக அருமையான], தோழன்உம் ஆகிய –
நண்பனுமான, உன்னை,-, தோற்றேன் ஆகில் – இழந்த பின்பு, யாரை கொண்டு
அரசு ஆள – வேறு யாரைத் துணையாகவைத்துக்கொண்டு இராச்சியத்தை
ஆளும்பொருட்டு, இருக்கின்றேன்-(யான்) வாழ்ந்திருக்கிறேன்?

சூழ் வேலை உலகு ஆளும் சூழ்ச்சியும், இப் பெருஞ்
செல்வத் துவக்கும், நெஞ்சால்
வீழ்வேனோ? அமராட வீமனொடு தலைநாளில்
விளைந்த செற்றம்
தாழ்வேனோ? உனை ஒழிந்தும், தம்பியரை ஒழிந்தும்
இனித் தனித்து நானே
வாழ்வேனோ? வாழ்வே! என மன வலியே! வருகின்றேன்,
வருகின்றேனே!’

வாழ்வே – (எனது) எல்லாவாழ்க்கைகளுக்குங் காரணமானவனே!
என் மனம்வலியே – என் மனத்தின் வலிமைக்குக் காரணமானவனே! உனை
ஒழிந்துஉம் – உன்னை இழந்தும்,  தம்பியரை ஒழிந்துஉம் – தம்பிமார்களை
இழந்தும், இனி – இனிமேல்,  வேலை சூழ் – கடலாற் சூழப்பட்ட, உலகு –
நிலவுலகமுழுவதையும், ஆளும் – அரசாளுகிற, சூழ்ச்சிஉம் – ஆலோசனையையும்,
இ பெருஞ்செல்வம் துவக்குஉம் – இந்த அரசப் பெருஞ்செல்வத்திலுள்ள
பிணிப்பையும், நெஞ்சால்-(என்) மனத்தினால், வீழ்வேன் ஓ – விரும்புவேனோ?
(விரும்பமாட்டே னென்றபடி), (ஆயினும்), வீமனோடு –  வீமனுடனே, அமர் ஆட –
போர்புரியும்படி, தலைநாளில் விளைந்த –  இளமைக் காலத்தில்தானே
முதிர்ந்துதோன்றிய, செற்றம்-பகைமை, தாழ்வேன் ஓ – தாழப்பெறுவேனோ? (நான்
உயிரோடிருக்கும் வரையில் அந்தச்செற்றம் என்னைவிட்டு நீங்காது என்றபடி): இனி-,
நானே தனித்து வாழ்வேன் ஓ-? (வாழேனென்றபடி): (ஆதலால்), வருகின்றேன்
வருகின்றேன் – (நானும் உன்னுடனே) வந்து விடுகின்றேன் வந்துவிடுகின்றேன்;
(எ- று.)-ஏகாரம் – இரங்கற் பொருளது-அடுக்கு, அவலம்பற்றியது.

     இனி, செற்றம் நீங்கப்பொருது என்னுயிரைமாய்த்து வீரசுவர்க்கஞ் சேர்வதே
தகுதியென்பது கருத்து.     

எனக்கொண்டு சுயோதனன் பேர் இரக்கமுடன் அழுது
அரற்ற, இருந்த வேந்தர்
மனம் கொண்ட வருத்தமுடன், ‘வலி இழந்தோம்!’ எனக்
கலுழ, வானின் எங்கும்
இனக் கொண்டல் முழங்குவபோல் அந்தர துந்துபி முழங்க,
இமையோர் ஆர்ப்ப,
கனக் கொண்ட கதிர் புதல்வன் பாடு அறிந்து
மூழ்கியதால் கடலினூடே.262.-சூரியன் அஸ்தமித்தல்.

எனக்கொண்டு – என்று, சுயோதனன் – துரியோதனன், பேர்
இரக்கமுடன் – மிக்க வருத்தத்தோடு, அழுது  அரற்ற – கண்ணீர்விட்டுக் கதறவும்,-
இருந்த வேந்தர் – உடனிருந்த அரசர்கள், மனம் கொண்ட வருத்தமுடன் – (தம்)
மனத்துக்கொண்ட வருத்தத்துடன், ‘வலி இழந்தோம்-வலிமையை யிழந்துவிட்டோம்,’
என கலுழ-என்றுவருந்தவும்,-வானின்-ஆகாயத்திலே, எங்குஉம்-  எப்புறத்தும்,
இனம் கொண்டல் முழங்குவ போல் – தொகுதியாகிய மேகங்கள் இடிப்பனபோல,
அந்தரதுந்துபி முழங்க – வானப்பறை ஒலிக்கவும்,- இமையோர் ஆர்ப்ப –
தேவர்கள்ஆரவாரிக்கவும்,- கனம் கொண்ட கதிர் – தொகுதியாக (ஆயிரமென்னுங்
கணக்குப்பட)க் கொண்டுள்ள கிரணங்களையுடைய சூரியன், புதல்வன் பாடு –
(தன்)புத்திரனான கர்ணனுடைய இறப்பை, அறிந்து-, கடலினூடு-மேல்கடலில்,
மூழ்கியது-;(எ – று.)

     சூரியன் அஸ்தமித்ததைத் தன்புதல்வனிறந்ததற்காகக் கடலில் மூழ்கியதாகக்
கற்பித்தார்; ஏதுத்தற்குறிப்பேற்றவணி, வீரசுவர்க்கத்திற்கு விருந்தாகக்
கர்ணனுயிர்வருவதுபற்றி, வானப்பறை முழங்கத்தேவர்க ளார்த்தன ரென்க. ‘கதிர்
மூழ்கியது’ என அஃறிணையாகக் கூறியது, தேவர்களை இருதிணையாலுங்
கூறலாமாதலால். ஆல் – ஈற்றசை, பி – ம்: கனற்கொண்டகதிர்

பேர் அறத்தின் மகன் முதலாம் பிள்ளைகள் ஐவரும்,
தம்மைப் பெற்ற பாவை
ஆர் கயற் கண் புனல் சொரிய அழுகின்ற குரலினைக் ,
கேட்டு ஆழியானை
ஓர் இமைப்பில் வினவியிட, உள்ளபடி உரைத்ததன்பின்,
உரும்ஏறு உண்ட
கூர் எயிற்று நாகம்போல் குலைகுலைந்து, தம்முனைப்
போய்க குறுகினாரே.263.- கிருஷ்ணனை வினவிச் செய்தியறிந்து பாண்டவர்
கர்ணணைக்கிட்டுதல்.

பேர் அறத்தின் மகன் முதல் ஆம் பிள்ளைகள் ஐவர்உம் –
பெருமைபெற்ற தருமபுத்திரன் முதலாகிய குந்தீபுத்திர ரைவரும்,-தம்மை பெற்ற
பாவை ஆர் கயல் கண் புனல்சொரிய அழுகின்ற குரலினை கேட்டு –
தம்மைப்பெற்ற பாவைபோன்றவளான குந்திதேவி நிரம்பிய கயல்போன்ற
கண்களினின்று நீர்வடிய அழுகின்ற குரலைச் செவியேற்று, ஆழியானை வினவியிட
– (இதற்குக் காரணம்என்? என்று) ஸ்ரீக்ருஷ்ணனை வினாவ,-(அப்பிரானும்), ஓர்
இமைப்பில் உள்ளபடி உரைத்ததன்பின்,-,-(அதுகேட்ட பாண்டவர்), உரும் ஏறு
உண்ட கூர் எயிறு நாகம்போல் குலை குலைந்து – பேரிடியைச் செவியேற்ற
கூர்மையான பற்களையுடைய நாகம் நடுநடுங்குவதுபோல நடுநடுங்கி, போய் –
(தாமிருந்த இடத்தினின்றுஞ்) சென்று, தம்முனை – தமது அண்ணனான கர்ணனை,
குறுகினார். (எ-று.)

‘கன்னி இளம் பருவத்தில் அரியமா எனும் கடவுள் காதல் கூர,
மன்னிய மந்திரம் எமக்கும் இன்று அளவும் உரைத்திலையால்;
மறந்தாய் கொல்லோ?
பின்னிய செஞ் சடைக் குழலாய்! ஈது என்ன பேர் அறிவு?
பெற்ற தாயின்
அன்னியம் நன்றாய் இருந்தது; இப்படியே பிழைப்பிப்பது
அறிந்திலேமே!’264.- ஐந்துகவிகள்-பாண்டவரின் புலம்புதலைத் தெரிவிக்கும்.

கன்னி இளம் பருவத்தில் – கன்னிகையாயிருந்த
இளமைப்பருவத்தில்தானே, அரியமா எனும் கடவுள்-சூரியனென்று
சொல்லப்படுகின்ற தேவன், காதல் கூர – (உன்னிடத்துக்) காதல்மிகும்படி
மன்னிய -(உன்னிடத்து வந்து) பொருந்திய, மந்திரம் – மந்திரத்தைப்பற்றி இன்று
அளவும்-,எமக்கும்-, உரைத்திலை – (நீ) சொல்லாதிருந்திட்டாய்; மறந்தாய்கொல்ஓ
– (அதனை)மறந்திட்டாயோ? பின்னிய செஞ்சடைக் குழலாய் –
சடையாய்த்திரித்தமயிர்முடியுடையவளே! இது -(இங்ஙன்பெற்றபிள்ளைகட்கும்
செய்தி தெரியாதபடிமறைத்துவைத்த) இச்செய்கை, என்ன பேர் அறிவு-
என்னபேரறிவுடைமையாம்?பெற்ற தாயின் – பெற்ற தாயைக் காட்டிலும்,
அன்னியம் – வேறுபட்டசுற்றமே, நன்றுஆய் இருந்தது-; இப்படி பிழைப்பிப்பது –
இப்படி தவறுசெய்யச் செய்வதை,அறிந்திலேம் – (வேறெங்குங்) கண்டிலேம்;
(எ- று.)-ஏகாரம் – இரக்கம். இது-தருமன்புலம்பல். குந்தியைநோக்கிக் கூறியது,

     குந்திதேவி பெற்றதாயாக இராமல் வேறு சுற்றமாக இருந்தால்,
பிள்ளைகட்குக்செய்தியை மறைத்தாளென்ற பழிப்பு வாரதாகையால்,
‘பெற்றதாயினும்அன்னியம்நன்றாயிருந்தது’என்ற தென்னலாம்.  பிழைப்பித்தல் –
அண்ணனான கர்ணனைக்கொல்லுமாறு செய்வித்தமை. 

ஊற்று இருந்த விழியினளாய் உனைப் பயந்தாள் மனம்
மறுக, உயிராய் நின்று
காற்று இருந்த இடம் தேடிக் கணை பலவும் உடல் குளிப்ப,
கன்னா! இன்று
கூற்று இருந்த பதி தேடிக் குடி இருக்க நடந்தனையோ?
-கொற்ற வேந்தாய்
வீற்றிருந்து, இங்கு ஐவேமும் அடி வருடப் புவி
ஆள விதி இலாதாய்!’

கன்னா – கர்ணனே!  ஊற்று இருந்த விழியினள் ஆய் –
ஊற்றிருக்கின்றதென்று கருதுமாறு நீர்சுரக்கின்ற கண்களையுடையவளாய், உனை
பயந்தாள் –  உன்னைப்பெற்ற தாய்,  மனம் மறுக – சோகத்தினால் மனஞ்சுழல,
உயிர் ஆய் நின்றகாற்று இருந்த இடம் தேடி கணை பலஉம் உடல் குளிப்ப –
உயிரென்று சொல்லப்பட்ட காற்றானது தங்கியிருந்த இடத்தைத்தேடி மிகப்பல
அம்புகள் உடலில்மூழ்க,-இன்று-, கூற்று இருந்த பதிதேடி குடி இருக்க நடந்தனைஓ
– யமனிருக்கின்ற இடத்தைத் தேடி அங்கே குடிபோகலாமென்று கருதிச்
சென்றிட்டாயோ? கொற்றம் வேந்து ஆய் வீறு இவரு இருந்து – வெற்றிபொருந்திய
அரசனாகிய பெருஞ்சிறப்புடனே இங்கே தங்கியிருந்து,  ஐவேம்உம் – நாங்கள்
ஐந்துபேரும். அடிவருட – (உனது) பாதங்களைத் தடவிப் பணிசெய்யாநிற்க , புவி
ஆள – பூமியையாளும்படி, விதி – ஊழ்வினையை, இலாதாய் – இல்லாதவனே!
(எ – று.)- இது, வீமன்புலம்பல்.

     பாண்டவர் ஐவரினும் மூத்தவ னாதலால் இந்தக்கர்ணனே ஐவரும்
பணிசெய்யத் தான் அரசனாகி ஆளவேண்டும் முறையிருந்தும் அங்ஙனமின்றி
இறந்து கிடந்தது பற்றி ‘ஆளவிதியிலாதாய்’ என்றது.

ஊன் தொடுத்த வய வாளி எத்தனை ஆயிரம் தொடுத்தேன்;
உரகத்தால் நீ-
தான் தொடுத்த கடுங் கணைக்குத் தப்பினேன் என
மகிழ்ந்தேன்; சஞ்சரீகத்
தேன் தொடுத்த மலர் அலங்கல் தின நாதன் சேயே! நின்
திருமார்பத்தில்
யான் தொடுத்த நெடும் பகழி எனைக் கெடுப்பது அறிந்திலேன்;
என் செய்தேனே!’

சஞ்சரீகம் தேன் தொடுத்த – வன்டுகளாற் சேர்க்கப்படும்
தேன்நிரம்பிய, மலர் – மலர்கொண்டுதொடுக்கப்பெற்ற, அலங்கல் –
வெற்றிமாலையணிதற்குரிய, தினநாதன்  சேயே – சூரியபுத்திரனான கர்ணணே!
ஊன்தொடுத்த வய வாளி – (பகைவரின்) மாமிசம்பொருந்திய வெற்றியுள்ள
அம்புகளை, (உன்மீது), எத்தனை ஆயிரம் தொடுத்தேன்-? (அன்றியும்),
நீதான்உரகத்தால்தொடுத்த கடுங்கணைக்கு தப்பினேன் எனமகிழ்ந்தேன் – நீ
நாகாஸ்திரத்தைவைத்து விட்ட கொடிய அம்புக்குத் தப்பினேனென்று
அகமகிழ்ந்தேன் நின் திரு மார்பத்தில் – உன்னுடைய அழகிய மார்பிலே, யான்
தொடுத்த நெடும்பகழி – யான் (இலக்காகக் குறித்து) விடுத்த கொடிய அம்புகள்,
எனை கெடுப்பது அறிந்திலேன் – எனக்கே தீமைசெய்வதாவதனை (அப்போது)
அறியாமற்போய்விட்டேன்!  என்செய்தேன் ஏ – (நான்) என்னகாரியஞ்
செய்திட்டேன்!!!  (எ – று.)-தன்பாணம் தன் அண்ணனையே கொன்றதனால்,
‘எனைக்கெடுப்பதறிந்திலேன்’ என்றான். இது, அருச்சுனன் புலம்பல்.

‘யாய் உரைத்தது அல்லாது, வேறு உரைத்தது, அசரீரி என்னும்
தேவின் மகிழ்ந்தேன்;
வாய் உரைத்தது, இன்று அளவும் கேட்டிலேம்; கேட்டனமேல்
வாட்டம் உண்டோ?
பேய் உரைத்துத் தாலாட்ட, முலைப்பாலோடு உயிர் உண்ட
பித்தா! ஈண்டை
நீ உரைத்த பிறகு அறிந்தோம்; எம்முனை இன்று எமைக்
கொண்டே நேர் செய்தாயே.

பேய் உரைத்து – பேய்ச்சி (தாயென்று  தன்னைச்)
சொல்லிக்கொண்டு, தாலாட்ட-, முலைப்பாலோடு முலைப்பாலுடனே, உயிர்
உண்ட -(அவளது) உயிரையுறிஞ்சியுண்டிட்ட, பித்தா – பித்தன்போன்றிருந்தவனே!
யாய்உரைத்தது அல்லாது – (இப்போது எமது தாய், சொன்னதல்லாமல், வேறு
உரைத்தது- வேறொருத்தர் சொன்னதையாவது, அசரீரிஎன்னும் தேவின்வாய்
உரைத்தது -அசரீரியாகியதெய்வத்தின் வாயினாற்சொல்லியதையாவது, இன்று
அளவுஉம் -இன்றைவரையிலும், கேட்டிலேம் – (கர்ணன் குந்திக்கு
மூத்தபுதல்வனென்பதுகுறித்துக்) கேட்டோ மில்லை கேட்டனம் ஏல் – (முன்னமே
இதனைக்) கேட்டு அறிந்தோமேயானால், (அதற்குஏற்ப நடந்திருப்போம்:
ஆகையால்அப்போது), வாட்டம் உண்டுஓ – (எங்களுக்குத் துயரத்தினால் இப்போது
உண்டாகுந்) தளர்ச்சி நேர்ந்திருக்குமோ? ஈண்டை – இப்போது, நீ உரைத்தபிறகு –
நீ சொன்னபிறகே. அறிந்தோம் – (கர்ணன்எங்கட்கு அண்ணன்:
குந்திக்குமூத்தபுதல்வன்என்று) அறிந்திட்டோம்; எம்முனை -எமது அண்ணனான
கர்ணனை, எமை கொண்டு ஏ – (அவனது தம்பிமாரான)எங்களைக்கொண்டே,
இன்று-,நேர்செய்தாய் ஏ – உயிரழியச்செய்து விட்டாயே, (எ- று.) – பித்தன் –
செய்யவேண்டுவன தவிரவேண்டுவனதெரியாதவன்: பேய்ச்சியைத்தாய்போலக்கருதி
முலையுண்டதனால் இங்ஙன் கூறியது. இது, நகுலன்புலம்பல், பி – ம்:
அல்லாதவெமருரைத்தது.

ஆடகனைப் புதல்வனைக் கொண்டு அழிப்பித்தாய்; இலங்கை
நகர்க்கு அரசை அன்று
வீடணனைப் பகை ஆக்கிக் கிளையுடனே வீழ்வித்தாய்;
வேலை சூழ்ந்த
நாடு அறியப் புகுந்து எமக்கு நாயகமாம் கன்னனையும்,
நரன் கை அம்பால்
ஈடு அழியப் பொருவித்தாய்; இமையோர்கள் வல்ல விரகு
யார் வல்லாரே?’

ஆடகனை – இரணியாசுரனை, புதல்வனை கொண்டு – (அவனது)
புத்திரனான பிரகலாதனைக்கொண்டு, அழிப்பித்தாய்-, இலங்கை நகர்க்கு அரசை –
இலங்காபுரிக்குத்தலைவனான இராவணனை, அன்று – முற்காலத்தில், வீடணனை –
(அவன் தம்பியாகிய) விபீஷ்ணனுக்கு, பகை ஆக்கி – பகைவனாகச் செய்து,
கிளையுடனே, பந்துவர்க்கத்துடனே, வீழ்வித்தாய் – இறந்துவிழச்செய்தாய், வேலை
சூழ்ந்த – கடலாற் சூழப்பட்ட, நாடு – உலகத்திலுள்ளார்,  அறிய-அறியும்படி,
புகுந்து- வந்து, எமக்கு நாயகம் ஆம்-எங்கட்கு எல்லாம் தலைமை  பூணவேண்டிய,
கன்னனைஉம் – கர்ணணையும், நரன்கை அம்பால் – அருச்சுனனது கையம்பினால்,
ஈடு அழிய – வலிமை குன்றியிறக்க, பொருவித்தாய்-போர்செய்யுமாறு புரிந்தாய்;
இமையோர்கள் வல்ல விரகு – தேவர்களின் வல்லமைபெற்ற உபாயத்தை,
வல்லார் -அறியவல்லார், யார்ஏ – யாவர்தாம்’ (எ – று.)-இது, சகதேவன்புலம்பல்.

     புதல்வன் தம்பி இவர்களைக்கொண்டே திருமால் தந்தையையும்
அண்ணனையும் கொல்வித்தா னென்கிற சிறப்புப்பொருளை, ‘ இமை யோர்கள்
வல்லவிரகியார் வல்லாரே’ என்ற பொதுப்பொருள் கொண்டு சமர்த்தித்தது –
வேற்றுப்பொருள்வைப்பணி.  

இவ் வகையே திருத் தமையன் இணை அடிக்கீழ் வீழ்ந்து
அலறி, யாயும் தாங்கள்
ஐவரும் போய்த் தம் பாடி வீடு அடைந்தார், ஆகுலத்தால்
அழிந்த நெஞ்சார்.
பைவரு மாசுணத் துவசப் பார்த்திவனைக் கொண்டே
தம் பாடிபுக்கார்,
தைவரு திண் சிலைத் தடக் கைச் சகுனிதனை
முதலான தரணிபாலர்.269.-கர்ணனைக்குறித்துப் புலம்பியபின் பாண்டவர் பாசறை சேர,
சகுனிமுதலியோர் துரியோதனனைக்கொண்டுபாசறைசேர்தல்.

இ வகைஏ – இவ்விதமாக, திரு தமையன் – சிறந்த அண்ணனான
கர்ணனது,இணை அடிக்கீழ் – உபயபாதங்களின்கீழ், வீழ்ந்து-, அலறி –
வாய்விட்டுக்கதறி,யாய்உம் – தாயும் தாங்கள் ஐவர்உம் – (பாண்டவராகிய)
தாங்கள்ஐந்துபேரும்,ஆகுலத்தால் –  துயரினால், அழிந்த – வருந்திய,
நெஞ்சார் -நெஞ்சையுடையவர்களாய், போய்-, தம் பாடி வீடு – தமதுபடைவீட்டை,
அடைந்தார்-, தைவருதிண் சிலை – தீண்டியெய்தற்கு உரிய வலிய வில்லை
யேந்திய,தட கை – பெரியகையையுடைய, சகுனி தனை – சகுனியை, முதல் ஆன-
முதலாகவுடைய, தரணிபாலர் – அரசர், பைவரு – படமெடுத்தலையுடைய, மாசுணம்
– பாம்பின்வடிவத்தை, துவசம்-கொடியிலேகொண்டுள்ள, பார்த்திவனை –
துரியோதனராசனை, கொண்டு – தம்முடனழைத்துக் கொண்டு, தம்பாடி – தமது
பாசறையை, புக்கார் – போய்ச்சேர்ந்தார்கள்; (எ – று.)

——————————–  

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading