ஸ்ரீ.வில்லிபாரதம் – முதல் பாகம் -10. இராயசூயச் சருக்கம்- ஸ்ரீ.உ.வே.சே.கிருஷ்ணமாசாரியர் ஸ்ரீ உ.வே.வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியர் உரைகள்

பாண்டவர்கள் புரிந்த தவப் பயன் ஆகி அவதரித்து,
பகைத்து மேன்மேல்
மூண்ட வினை முழுவதுவும் முனைதோறும் முரண்
முருக்கி, முகில் புகாமல்,
காண்டவமும் கனல் வயிற்றுக் கனல் தணிய நுகருவித்து,
காக்குமாறே
பூண்டருள் எம் பெருமானைப் போற்றுவார் எழு பிறப்பும்
மாற்றுவாரே.-தெய்வ வணக்கம் – கிருஷ்ணஸ்துதி.

இது – காப்புச் செய்யுள்.  இதனால், தாம் பாடத் தொடங்கிய சருக்கம்
இடையூறில்லாமல் இனிது முடியும்பொருட்டு உயர்ந்தோர் வழக்கத்தின்படியே
கவி கடவுள் வணக்கங் கூறுகின்றார்.  ஆயின், இந்நூலின் தொடக்கத்திற்
கடவுள் வணக்கங் கூறியது போதாதோ!  சருக்கந்தோறும் பெரும்பாலும்
தனியே கடவுள் வணக்கங் கூறுவானேனென்னின் நூல் ஒன்றேயாயினும்
சருக்கங்கள் பொருளால் வேறுபடுதலாலும், நூலின் முதலிடை கடைகளிற்
கடவுள்வாழ்த்துக் கூறுதல் மிகவும் மங்கலமாதலாலும், கல்விக்குப் பயன்
கடவுளை வணங்குதலே யாதலாலும், இவ்வாறு கூறினரென்க.

     (இதன்பொருள்.) பாண்டவர்கள் புரிந்த தவம் பயன் ஆகி அவதரித்து –
பாண்டுமகாராசனது குமாரர்களான ஐவரும் (முற்பிறப்பிற்) செய்த தவத்தினது
பயனேயாகி யுதித்து, – பகைத்து மேல் மேல் மூண்ட வினை முழுவதுஉம் –
(அப் பஞ்ச பாண்டவர்கட்குப் பங்காளிகளான துரியோதனாதியர்கள்)
பகைமைகொண்டு மேன்மேலும் முயன்றுசெய்த வஞ்சகச் செயல் முழுவதையும்,
முனைதோறும் முரண் முருக்கி – (அந்தந்தச் செயல் செய்யும்) இடந்தோறும்
வலியழியச் செய்து, – முகில் புகாமல் – (மழை பெய்து தணிக்கவந்த)
மேகங்கள் அணுகாதபடி (அம்பு தொடுத்து விலக்கி), காண்டவம்உம் –
காண்டவ வனத்தையும், கனல் வயிறு கனல் தணிய நுகருவித்து –
அக்கினிதேவனுடைய வயிற்றிலுள்ள பசித்தீ அடங்கும்படி அவனுண்ணச்
செய்து, காக்கும் ஆறே பூண்டருள் – (எல்லாவுயிர்களையுங்) காக்கும்
வகையையே மேற்கொண்டருளிய, எம்பெருமானை – எமது தலைவனான
கண்ணபிரானை, போற்றுவார் – துதிப்பவர்கள், – எழுபிறப்பும் மாற்றுவார் –
ஏழு வகைப்பட்ட பிறப்புக்களையும் நீக்குபவராவர்;  (என்றவாறு)-ஈற்று ஏகாரம்
– தேற்றம்.

     வேண்டிய பயன்களை வேண்டியவாறே பெறுவிக்கின்ற தவம் போல,
கண்ணபிரான் பாண்டவர்கட்கு வேண்டிய பயன்களை அருள்செய்ததனால்,
‘பாண்டவர்கள் புரிந்த தவப் பயனாகி அவதரித்து’ என்றார். “பொங்கழற்சிந்தைச்
சுயோதனன் கங்கைப் புனல் விளையாட்டிடைப் புதைத்த, வெங்கழுமுனையில்
விழாமலோரளியாய் வீமனுக்காருயி ரளித்தாய்” என்னும்படி ஒருநாள் துரியோதனன்
கங்காநதியின் ஸ்நாநகட்டத்தில், இரும்பினாலும் செம்மரத்தினாலும் இயன்ற
கூரிய கழுக்களை நீரின்மேல் தோன்றாதபடி உள்நாட்டச்செய்து வீமனை ‘நீரில்
விளையாடலாம் வா’ என்றுசொல்லி வஞ்சனையாக அழைத்துப்போய்,
‘இங்கிருந்து நீ நீரிற் குதிக்கிறாயா, பார்ப்போம்’ என்ன, அங்ஙனமே வீமன்
குதித்தற்குச்சித்தனாய் நின்றபொழுது, கண்ணன் கருவண்டினுருவங்கொண்டு
கழுமுனைதோறும் இருக்க, வீமன் அதனை நோக்கி, ‘இது என்ன?
நீரோட்டத்தில் வண்டுகள் உட்கார்ந்திருக்கின்றனவே’ என்று உற்றுப்
பார்க்கும்போது, அங்கெல்லாம் வசிகள் நாட்டியிருக்கக் கண்டு தன்
சந்தேகத்தின்படி அவை நாட்டியிராத இடம் பார்த்துக் குதித்துக் கரையேறி
மீண்டனனென்பது முதலாகப் பற்பல சமயங்களிற் பற்பலவாறு
துரியோதனாதியர்கள் பாண்டவர்களை யழித்தற்குச் செய்த
வஞ்சனைகட்கெல்லாம் மாறாகக் கண்ணபிரான் ஒவ்வோருபாயஞ்செய்து
பாண்டவர்களைப் பாதுகாத்தமை பற்றி, ‘பகைத்து மேன்மேல் மூண்டவினை
முழுவதுவும் முனைதோறும் முரண் முருக்கி’ என்றார்.  இத்தொடரில்,
அவர்கள் பகைமைகொண்டு மேன்மேற்கோபித்துச் செய்த போர்த்தொழில்கள்
எல்லாவற்றையும் யுத்த களந்தோறும் வலிமையழித்து என்றபொருளும்
தோன்றும்.

     காண்டவ தகனகாலத்தில் இந்திரனேவலாற் பெருமழை பொழிந்து
அத்தீயை யழிக்க வந்த மேகங்களையெல்லாம் அருச்சுனன் அம்புமழை
பொழிந்து துரத்தியோட்டினமையை, கீழ்க் காண்டவ தகனச் சருக்கத்தில்
“கன்மழை பொழியுங் காளமாமுகிலுங் கடவுளர்த் துரந்தவன் கரத்தில்,
வின்மழை பொழியக் கற்களுந் துகளாய் மேனியும் வெளிறி மீண்டனவே”
என்றதனாலுணர்க;   அதனோடு அம்மேகங்கள் பொழிந்த  மழைநீரில் ஒரு
துளியும் தீயின்மேல் விழாதபடி அவன் அம்புகளை அடர்த்தியாகத் தொடுத்துச்
சரகூடங் கட்டித் தடுத்தமையும், ‘முகில் புகாமல்’ என்ற தொடரில் அமையும்.
தான் சார்ந்த இடத்தை மிக வருத்துதலாலும், அகப்படும் பொருள்களை
யெல்லாம் சீரணிக்கச் செய்யும் ஆற்றலுடைமையாலும், பசி ‘வயிற்றுக்கனல்’
எனப்பட்டது;  அருச்சுனன் காண்டவ தகனஞ் செய்வித்தது கண்ணபிரானது
அனுமதிகொண்டே யாதலால், அதனைக் கண்ணன்மே லேற்றிக் கூறினார்.
படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களில் திருமால் தனக்குச்
சிறப்பாகக்கொண்ட தொழில் காத்தலாதலால் ‘காக்குமாறே பூண்டருள்’
எனப்பட்டது.  ‘எம்’ என்ற தன்மைப்பன்மை, எல்லாவுயிர்களையும்
உளப்படுத்தியது.  எழு பிறப்பு-மனிதர், தேவர், மிருகம், பறவை, ஊர்வன,
நீர்வாழ்வன, தாவரம் என்பன.  எழுவகைப்பட்ட பிறப்புக்களையும்
மாற்றுவாரென்றது, எம்பெருமானருளாற் கரும மனைத்தும் ஒழிய முத்தி பெறுவ
ரென்றபடி.

     பாண்டவர்- பாண்டு புத்திரர்;  வடமொழித் தத்திதாந்த நாமம்;  கள் –
விகுதிமேல்விகுதி.  தபஸ், பலம் – தவம், பயம்;  பயம் – பயன் என
ஈற்றுப்போலி.

     இங்ஙனம் துஷ்டநிக்கிரக சிஷ்டபரிபாலன சீலனான எம்பெருமான்
விஷயமாக வணக்கம் கூறியதனால், கவி தாம் தொடங்கிய காரியம்
இடையூறின்றி இனிதுமுடியு மென்பது கருத்து.  இப்பாட்டு மொழிமாற்று
முதலியன இன்மையால், யாற்றுநீர்ப்பொருள்கோள்.

     இதுமுதற் பதினேழு கவிகள் – பெரும்பாலும் முதல்நான்கு சீரும்
காய்ச்சீர்களும் மற்றையிரண்டும் மாச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு
கொண்ட அறுசீராசிரியவிருத்தங்கள். 

வியன் உம்பர் பல கணமும் சுரபதியும் சென்று, எழில்
கொள் விசும்பில் மேவ,
நயனங்கள் முதலான ஐம் புலனும் மனமும்போல்
நகரி எய்தி,
பயன் மிஞ்சு தொழிலினராய்ப் பாண்டவரும் திருமாலும்
பயிலும் வேலை,
மயன் என்பான் வாய் புதைத்து, வளம் பட, வந்து, ஒரு
மாற்றம் வழங்கினானே:பாண்டவர்கள்முன்னிலையில் மயன் வந்து
ஒன்றுசொல்லத் தொடங்குதல்.

வியன் உம்பர் பல கணம்உம் – மேலான பலவகைப்பட்ட
தேவர்களின் கூட்டமும், சுரபதிஉம் – அத்தேவர்கட்கெல்லாம் அரசனான
இந்திரனும், சென்று – (அருச்சுனனோடு போர்செய்தலையொழிந்து) போய்,
எழில் கொள் விசும்பின் மேவ-அழகு கொண்ட சுவர்க்கலோகத்திற்சேர, –
பாண்டவரும் – பஞ்சபாண்டவர்களும், திருமாலும் – ஸ்ரீமகாவிஷ்ணுவின்
அவதாரமான கண்ணபிரானும், நகரி எய்தி – இந்திரப்பிரத்த நகரத்தைச்
சேர்ந்து, பயன் மிஞ்சு தொழிலினர் ஆய் – நற்பயன் மிக்க செயல்களை
யுடையவர்களாய், நயனங்கள் முதல் ஆன ஐம்புலன்உம் மனம் உம் போல்
பயிலும் வேலை – கண்கள் முதலிய பஞ்ச இந்திரியங்களும் (இவற்றைப்
புலன்களிற் செலுத்துகின்ற) மனமும்போல ஒற்றுமைகொண்டு கூடியிருக்குங்
காலத்தில்,-மயன் என்பான் – மயனென்கிற அசுரத்தச்சன், வந்து-(அவர்கள்
முன்னிலையில்) வந்து, வாய் புதைத்து – ((கையினால்) வாயை மூடிநின்று,
வளம்பட ஒரு மாற்றம் விளம்பினான்-சிறப்பாக ஒரு வார்த்தையைச்
சொல்லலானான்; (எ – று.)-அதனை, அடுத்த இரண்டு கவிகளிற் காண்க.

     ‘வியனும்பர் பலகணமுஞ் சுரபதியுஞ் சென்றெழில்கொள் விசும்பின் மேவ’
என்றது, கீழ்ச்சருக்கத்தில், “துன்றுதன்சேனைச் சுரகணஞ்சூழச் சுரபதி துறக்கம
தடைந்தான்” என்றதன் அநுவாதம்;  தொடர்ச்சி தோன்றக் கூறியது.

     ஐம்பொறிகளையும் உரிய புலன்களிற் செலுத்தி ஒற்றுமைப்பட்டு நிற்கும்
மனம்போலப் பஞ்சபாண்டவர்களையும் உரிய தொழில்களிற் பிரவேசிக்கும்படி
கண்ணபிரான் பிரேரேபித்து அவர்களைக்கொண்டு தொழில்செய்விக்கின்ற
தலைமையும் ஒற்றுமையும் தோன்ற, ‘ஐம்புலனும் மனமும்போல் பாண்டவரும்
திருமாலும் பயிலும்வேலை’ என்றார்.  ஓர் உடலுயிர்க்கே இன்றியமையாதனவான
ஆறுகரணங்களையும் இவ்வறுவர்க்கும் உவமை கூறியது, இவ்வறுவரும்
ஒருவர்போல் ஒற்றுமைப்பட நின்றன ரென்பதை விளக்கும்.  எல்லாப்
பிராணிகளுள்ளும் அந்தர்யாமியாய் நின்று தொழில் செய்கிற திருமாலுக்கு-
அகத்துறுப்பாகிய மனத்தையும், அக்கண்ணபிரான் வழியே யொழுகுகின்றவரும்
ஒருவருக்கொருவர் மாறுபடாதவர்களுமான பஞ்சபாண்டவர்களுக்கு-
புறத்துறுப்பாகிய பஞ்சேந்திரியங்களையும் உவமைகூறியமை ஏற்கும்.
‘ஐம்புலனும் மனமும்’ என நிறுத்தின முறைமைக்கு ஏற்ப, ‘பாண்டவரும்
திருமாலும்’ என உபமேயங்களை நிறுத்தியது, முறைநிரல் நிறைப்
பொருள்கோள். 
 பொறியை ‘புலன்’ என்றது, உபசார வழக்கு.  ‘கண்ணிற்
சிறந்த உறுப்பில்லை’ ஆதலால், அதனைத் தலைமையாகவைத்து ‘நயனங்கள்
முதலான ஐம்புலன்’ என்றார்; என்றது, பஞ்சபாண்டவர்களுள் மூத்தவனும்
சிறந்தவனுமான தருமபுத்திரனுக்கு ஐம்பொறிகளுட்சிறந்த கண்ணை உவமை
கூறியவாறாம்;  அன்றி, மெய் வாய் கண் மூக்குச் செவி யென்னும்
ஐம்பொறிகளுள் மூன்றாவதாய்ச் சிறப்புப் பெறுகிற கண்ணையுதிட்டிரன்
வீமசேனன் அருச்சுனன்நகுலன் சகதேவன் என்ற பஞ்சபாண்டவருள்
மூன்றாமவனாய்ச் சிறக்கிற அருச்சுனனுக்கு உவமை கூறியதாகவுங்
கொள்ளலாம்.

     மயன்-தெய்வத்தச்ச ரிருவரில் ஒருவன்; மற்றொருவன் விசுவகர்மா.
மயன் – அசுரசிற்பி யெனப்படுவன்.  வாய்புதைத்தல் – விநயக்குறி.  தான்
பெற்ற உயிருதவிக்கு எதிருதவிசெய்து சிறப்புப்பெறுமாறு பாண்டவர்கட்குச்
சிறந்ததொரு மண்டபத்தைத் தான் நிருமித்துக்கொடுப்பதாகப்
பேசுகின்றனனாதலால், ‘வளம்பட ஒருமாற்றம் விளம்பினான்’ என்றார்.

உம்மால் இன்று அரு வினையேன் உயிர் பிழைத்தேன்; நீர்
தந்த உயிர்க்கு வேறு ஓர்
கைம்மாறு வேறு இல்லை;-குருகுலம்போல் எக் குலமும்
காக்குகிற்பீர்!-
தெம் மாற உலகு ஆளும் செங்கோன்மைக் குரு பதிக்கு,
சிற்பம் வல்லோர்,
‘அம்மா!’ என்று அதிசயிப்ப, அரிய மணி மண்டபம் ஒன்று
அமைக்கின்றேனே.மயன் சொன்ன வார்த்தை.

குரு குலம்போல் எக்குலம்உம் காக்குகிற்பீர் – (நீங்கள்பிறந்த)
குருவென்னும் அரசனது குலத்தின் ஒழுக்கத்தைப் பாதுகாப்பதுபோலவே மற்று
எல்லாக்குலத்தாரது ஒழுக்கத்தையும் பாதுகாத்து நடக்கின்றவர்களே!
அருவினையேன் – தீர்த்தற்கு அரிய தீவினையை யுடையேனான நான், இன்று
– இன்றையதினத்தில், உம்மால் உயிர் பிழைத்தேன் – உங்கள் கருணையால்
இறவாமல் உயிர்கொண்டு உய்ந்தேன்;  நீர் தந்த உயிர்க்கு மீண்டு ஓர்
கைம்மாறு வேறு இல்லை – நீங்கள் எனக்கு உயிர் தந்தருளியமையாகிய
உபகாரத்திற்கு ஈடாகப் பின் நான் செய்யத்தக்கதொரு பிரதியுபகாரம்
வேறெதுவுமில்லை;  தெவ் மாற – பகைவர்கள் இலராக, உலகு ஆளும் –
பூலோகத்தை அரசாளுகிற, செங்கோன்மை – நீதிதவறாத அரசாட்சி
முறைமையையுடைய, குருபதிக்கு – குருகுலத்தார்க்குத் தலைவனான
யுதிட்டிரராசனுக்காக, சிற்பம் வல்லோர் அம்மா என்று அதிசயிப்ப –
சிற்பசாஸ்திரங்களில் தேர்ந்த தபதிகள் அம்மா!  என்று சொல்லி
ஆச்சரியமடையும்படி, அரிய மணி மண்டபம் ஒன்று அமைக்கின்றேன் –
அருமையான இரத்தினகசிதமாகிய மண்டபமொன்றைச் செய்துதருகிறேன்;
(எ – று.) ஏ – ஈற்றசை; தேற்றமுமாம்.

     கண்ணபிரான் குருகுலத்திற் பிறந்தவர்களான பாண்டவர்கட்குச்
சகாயனாய் நின்று அக்குலத்தின் ஒழுக்கத்தையும் மற்றும் உலகத்தாரது
நல்லொழுக்கங்களையும் ஓம்புதலால், ‘குருகுலம் போல் எக்குலமும்
காக்குகிற்பீர்’ என்ற விளி கண்ணபிரானுக்கும் ஏற்கும்.  காண்டவவனம்
முழுவதும் தீப்பட்டு எரிகையில் கொடியதீயிலகப்பட்ட மயன் தக்ஷகனது
மாளிகையினின்றும் ஓடி ‘அருச்சுனா! அபயம்’ என்று அபயம் வேண்டி அரற்ற,
அர்ச்சுனன் அபயங்கொடுக்க, அம்மயனைக் கொல்லும்படி கோபத்தாற்
கண்சிவந்து சக்கராயுதத்தையெடுத்த கிருஷ்ணனும் அருச்சுனன்
அபயங்கொடுத்ததைக் கண்டு தானும் அவன்பக்கல் கருணைசெய்ய,
கிருஷ்ணார்ச்சுனரது நோக்கத்தைக் கண்டு அக்கினியும் மயனைத்
தகித்திலனானமைபற்றி ‘உம்மால் இன்று அருவினையேன் உயிர்பிழைத்தேன்’
என்றான்.  அவ்வரலாற்றைக் கீழ்ச்சருக்கத்திற் காண்க.  கிருஷ்ணார்ச்சுனர்
செய்த உதவியை, ஐம்புலனும் மனமும் போலுள்ள ஒற்றுமைநயம்பற்றிப்
பிறர்மேலும் ஏற்றி, ‘உம்மால் உயிர்பிழைத்தேன்’ என்றும்;  தீயினாற்
பெரியதோர் ஆபத்தை யுற்றன னாதலால், அதனை அடைதற்கு ஏற்ற பிராரப்த
கருமத்தை யுடையே னென்பான், ‘அருவினையேன்’ என்றும்;  அந்த
ஆபத்காலத்தில் அவர்கள் உயிர்காத்து உதவியதற்குச் சமானமான
அரியபொருள் உலகத்தில் வேறெதுவுமில்லையாதல் பற்றி, ‘நீர்தந்த உயிருக்கு
மீண்டோர் கைம்மாறு வேறில்லை’ என்றும், அங்ஙனம் செய்யாமற்செய்த
உதவியும் காலத்தினாற் செய்த உதவியும் பயன் தூக்காதுசெய்த
உதவியுமானதற்கு ஏற்றதொரு கைம்மாறு இல்லையாயினும், எனது
செய்ந்நன்றியறிவுகாரணமாக என்னாலியன்றதைக் கடமையாச்செய்வே
னென்பான், ‘அரியமணிமண்டபமொன்று அமைக்கின்றேன்’ என்றுங் கூறினான்.
உயர்குலத்திற்பிறந்து வீரத்திலும் நீதியிலும் சிறந்த அரசனென்பது ‘தெம்மாற
உலகாளுஞ் செங்கோன்மைக் குருபதி’ என்ற தொடரினாற்போதரும்.
தருமபுத்திரனுக்கு ‘அஜாதசத்ரு’ என்று வடமொழியில் ஒருபெயருள்ளதனால்,
அப்பெயரின் பொருளமைய ‘தெம்மாறவுலகாளுங் குருபதி’ என்றார்;
(அப்பெயரின் பொருள், பகைவர்களுண்டாகப் பெறாதவனென்பது);  யான்
அமைத்துத்தருவது எளிதென்று கருதி வேண்டாவென்று மறாமற்சிறப்பாக
ஏற்றுக்கொள்ளத்தகு மென்பான், ‘சிற்பம்வல்லோர் அம்மாவென்று அதிசயிப்ப
அரியமணி மண்டபமொன்று அமைக்கின்றேன்’ என்றான்.

     செம்கோல் – கோணலில்லாதகோல்;  அதுபோலப் பக்ஷபாதமாக ஒரு
பக்கத்திற் கோணுதலின்றி நேர்மையுடைய அரசாட்சிக்கு வழங்கும்;
உவமையாகு பெயர்.  அரசாட்சியை வடநூலாரும் ‘தண்டம்’ என்பர்.
செங்கோன்மை, மை- பகுதிப்பொருள் விகுதி.  தெவ் – பகைமையுணர்த்தும்
உரிச்சொல்;  இப்பெயருரிச்சொல் –  பண்பாகுபெயராய், பகைவரை
யுணர்த்தும்.  தெவ்+மாற=தெம்மாற;  “தெவ்வென்மொழியே……………..மவ்வரின்
வஃகான் மவ்வுமாகும்”.  

மேல் நாள், இவ் வுலகு ஆண்ட விடபருவன், அசுர குல
வேந்தர் வேந்தன்,
தான் ஆண்மையுடன் பொருது, தரியலரைத் திறை கொணர்ந்த
தாரா பந்தி-
போல் நாளும் ஒளி வீசும் பல மணிகள் விந்து எனும்
பொய்கைதன்னில்
ஆனாமல் கிடப்பன உண்டு; அவை இதற்கே உபதானம்
ஆகும் என்றான்.

மேல் நாள் – முன் ஒரு காலத்தில், இ உலகு ஆண்ட –
இந்த நிலவுலகத்தை அரசாண்ட, அசுரகுலம் வேந்தர் வேந்தன் –
அசுரர்குலத்துத்தோன்றிய அரசர்கட்கு அரசனான, விடபருவன் – வ்ருஷபர்வா
என்னும் பெயருள்ள அசுரசிரேஷ்டன், தான்-, ஆண்மையுடன் பொருது-
பராக்கிரமத்துடனே போர்செய்து, தரியலரை திறை கொணர்ந்த – பகைவர்களை
வென்று அவர்களிடத்தினின்று அரசிறையாகப் பெற்றுக்கொண்டுவந்த,
தாராபந்திபோல் நாளும் ஒளி வீசும் – நக்ஷத்திரவரிசைகள்போல எப்பொழுதும்
ஒளியை வீசுகிற, பல மணிகள்- பலவகை யிரத்தினங்கள், விந்து எனும் பொய்கை
தன்னில் ஆனாமல் கிடப்பன – பிந்து வென்னும் பெயருள்ள சரசில்
நீங்காதவையாய்க் கிடப்பவை, உண்டு-; அவை – அந்த இரத்தினங்கள்,
இதற்கே உபகரணம் ஆகும் – இந்த மண்டபமமைத்தற்கே உரிய சாதனமாகும்,
என்றான் – என்று (மயன்) கூறினான்;  (எ – று.)

     நாளும் ஒளிவீசும்-பகலிலும் இரவிலும் வேறுபாடின்றிப் பிரகாசிக்கு
மென்றபடி.  ‘புதுமணிகள்’ என்றும் பாடமுண்டு.  திறையாவது – வென்ற
அரசர்க்குக் கீழமைந்த அரசர் கொடுக்கும் பொருள்.  வென்ற அரசர் தோற்ற
அரசர்களிடத்தினின்று வலியக்கவர்வனவும், திறை யெனப்படும்.  பல நிறமாய்
விளங்கும் பலசாதி மணிகட்கு, பலநிறமாய் விளங்கும் பலவகை
நக்ஷத்திரங்களின் நிரையை உவமை கூறினார்.

    வ்ருஷபர்வா, அஸு ரகுலம், தாராபங்க்தி, மணி, பிந்து, உபகரணம் –
வடசொற்கள்.  வேந்தர்வேந்தன்-ராஜராஜன்.  ஆண்மை – ஆண்தன்மை.
பௌருஷம்.  ஆண்மையுடன், ‘உடன்’- மூன்றாம் வேற்றுமை யுருபு,
அடைமொழிப் பொருளில் வந்தது;  ஆண்மையுடையவனாய் என்றபடி;
ஆண்மையினால் என்று கொண்டு, கருவிப்பொருளில் வந்த தெனினுமாம்.
‘தரியலரை’ என்றவிடத்து இரண்டனுருபு – தரியலரினின்று என்று ஐந்தனுருபின்
பொருள்படுதலால், உருபுமயக்கம்.  விந்துவெனும் பொய்கை – பிந்துஸரஸ்:
இது – கைலாசகிரியின் வடக்கில் மைநாகபர்வதத்தைச் சார்ந்த இரணியசிருங்க
மென்னுங் குன்றிலுள்ளது.  பொய்கை – மானிடராக்காத நீர்நிலை.  தன் –
சாரியை.      

என்பதன் முன் முப்பதின்மேல் இரட்டி கொள் நூறாயிரவர்
எடுத்த பாரம்
வன்புடனே தரித்து, வரை அசைந்தாலும் அசையாத
வயிரத் தோளார்.
அன்பு மிகும் விழிக் கருணை அறன் புதல்வன் ஏவலினால்,
அசுரத் தச்சன்
தன் பணி ஈது எனப் பணிப்ப, ஒரு நொடியில் கொடு வந்தார்;
தளர்வு இலாதார்.மிகப் பல ஏவலாளர்கள்இரத்தினங்களை
எடுத்துக்கொண்டு வருதல்.

என்பதன்முன் – என்று (மயன்) சொன்னதற்கு முன்னே
[சொன்னவுடனே யென்றபடி],- அன்பு மிகும் விழிகருணை அறன் புதல்வன்
ஏவலினால் – அன்புநிறைந்த கண்ணருளையுடைய தருமபுத்திரனது
ஆஜ்ஞையைக்கொண்டு, – அசுரத்தச்சன்தன் பணி ஈது என பணிப்ப – அசுர
சிற்பியான மயன் தனது காரியம் இதுவென்று கட்டளையிட, வரை
அசைந்தாலும் அசையாத வயிரம் தோளார்-மலைநெகிழ்ந்தாலும் நெகிழாத
மிக்க உறுதியுள்ள தோள்களை யுடையவர்களும், தளர்வு இலாதார் – (தொழில்
செய்தலில்) தளர்ச்சியில்லாதவர்களுமான, முப்பதின் மேல் இரட்டிகொள் நூறு
ஆயிரவர் – அறுபதுலக்ஷம்பேர், எடுத்த பாரம் வன்புடனே தரித்து – (தாம்
தாம்) எடுத்த (நவரத்தினங்களாகிய) பெரும்பாரச் சுமைகளை வலிமையோடு
தாங்கி, ஒரு நொடியில் கொடு வந்தார் – ஒருமாத்திரைப் பொழுதிலே கொண்டு
வந்து சேர்ந்தார்கள்;  (எ – று.)

     ‘என்பதன்முன் அறன்புதல்வ னேவலினால்’ என்று காரியத்தை முன்னும்
காரணத்தைப் பின்னும் நிகழ்ந்தனவாகக் கூறியது, மிகையுயர்வுநவிற்சியணி;
இது, காரியவிரைவைச் சொல்வது.  முப்பதின்மேலிரட்டி – முப்பதை
இரண்டினாற் பெருக்கியதொகை;  எனவே, அறுபதாயிற்று.  முப்பதுக்குமேல்
இரண்டு கூடியதென்று கொண்டால், முப்பத்திரண்டு என்றாகும்.  பிறர்மேற்
கண்சென்றவிடத்து அருள்நிகழ்வதனாலும், மனத்து நிகழுங் கருணையின்
குறிப்புக் கண்ணின் உவந்தநோக்கத்திற் புலனாதலாலும், ‘விழிக்கருணை’
எனப்பட்டது.  நொடி – இயல்பில் ஒருமுறை கைந்நொடித்தற்கு
வேண்டும்பொழுது.  கொடு-கொண்டு என்பதன் விகாரம்.  ஈது-இது என்பதன்
சுட்டு நீண்டது.  ‘எடுத்த பாரம் வன்புடனே தரித்து’ என்றது, அவர்களெடுத்த
இரத்தின பாரத்தின் மிகுதியை யுணர்த்தும்.

மீது அடுக்கிப் பசும் பொன்னால் சுவர் செய்து, மரகதத்
தூண் வீதி போக்கி,
ஓது இடத்தில் சுருங்காமல் செழுந் துகிர் உத்தரம் பரப்பி,
உலகு ஓர் ஏழும்,
‘மாது இடத்தான் வைகுதற்கு வாய்க்குமதோ இது!’ என்ன,
வரம்பு இல் கேள்விச்
சோதிடத்தோர் நாள் உரைப்ப, சுதன்மையினும் முதன்மை
பெறத் தொடங்கினானே.மயன் மண்டபங் கட்டத் தொடங்குதல்.

வரம்புஇல் கேள்வி – எல்லையில்லாத நூற்கேள்வியையுடைய,
சோதிடத்தோர் – ஜ்யோதிஷநூல்வல்லவர், நாள் உரைப்ப – சுபதினத்தை
நிச்சயித்துச் சொல்ல, (அந்நாளிற் சுபமுகூர்த்தத்திலே),- மீது அடுக்கி
பசும்பொன்னால் சுவர்செய்து – பசியபொன்னினாலாகிய கற்களை
ஒன்றன்மேலொன்றாக அடுக்கி அப்பொன்னினாலேயே சுவர்களை யெழுப்பி,
மரகதம் தூண் வீதி போக்கி-மரகதமென்னும் பச்சையிரத்தினத்தாலாகிய
தூண்களை ஒழுங்குபட நிறுத்தி, ஓது இடத்தில் சுருங்காமல்-(சிற்பநூல்) கூறிய
இடத்தினளவிற் சுருங்காதவண்ணமாய், செழுந் துகிர் உத்திரம் பரப்பி –
செழிப்பான பவழத்தினாலாகிய உத்திரத் துண்டுகளை மேலே பரப்பி, உலகு
ஓர் ஏழும் ‘மாது இடத்தான் வைகுதற்கு வாய்க்குமதோ!’ இது என்ன –
இம்மண்டபம் அழகியபெண்ணான அம்பிகையைத் தனது இடப்
பக்கத்திலுடையவனாகிய சிவபிரான் வீற்றிருத்தற்குத் தக்கவாறு
அமைக்கப்படுகிறதோ வென்று ஏழுலகத்துச்சனங்களும் வியந்து கூறும்படி,
சுதன்மையினும் முதன்மை பெற – சுதர்மையென்கிற தேவேந்திர
சபாமண்டபத்தினும் சிறப்புப்பெறுமாறு, தொடங்கினான் – (ஒரு சபா
மண்டபத்தைச் செய்யத்) தொடங்கினான், (மயன்); (எ – று.)

     மாது இடத்தான்- அம்பிகைக்குத் தனது திருமேனியில் இடப்பகுதியைக்
கொடுத்து அப்பகுதி பெண்வடிவமும் வலப்பகுதி தனது ஆண்வடிவமுமாகக்
கலந்துநின்ற அர்த்தநாரீசுவர மூர்த்தியாகிய சிவபிரான்: மாது – விரும்பப்படும்
அழகுடைய பெண்.  உலகுஓரேழும் மாதிடத்தான்வைகுதற்கு வாய்க்குமதோ
இது என்ன – சிவபிரான் வீற்றிருத்தற்கு இது கிடைக்குமோ என்று
உலகத்தாரனைவரும் விரும்பும்படி யென்று உரைப்பாருமுளர்.  மா திடத்தான்
என்று பதம் பிரித்து, மிக்க உறுதியையுடையவனான நமது அரசன்
வீற்றிருத்தற்கு வாய்ப்பதோ இது என்று நிலவுலகத்துச் சனங்களெல்லாம்
கொண்டாட என்று உரைத்தலுமாம்;  இவ்வுரையில், த்ருடம் என்ற வடசொல்
திடமென்று விகாரப்பட்ட தென்க;  அது – நெஞ்சுறுதி, சொல்லுறுதி,
உடல்வலிமை, ஒழுக்க நிலைகுலையாமை என்பவற்றைக் குறிக்கும்.

     மரகதம் – எழுத்து நிலைமாறுதலாய், மரகதம் எனவும் வழங்கும்;
வடசொல்: வீதி, ஜ்யோதிஷம், ஸு தர்மா என்ற வடசொற்கள் விகாரப்பட்டன.
ஜ்யோதிஷம் – சூரியன் முதலிய சுடர்களின் சஞ்சாரத்தைக் கொண்டு
பயனுரைக்கும் நூல்.  ஸு தர்மா என்ற தேவசபையின் பெயர் – நல்ல
தருமங்கள் தன்னிடத்து நிகழப்பெறுவ தென்று பொருள்படும்.  உத்திரம் –
உத்தரம்.  உலகுஓரேழ் என்றது-மேலேழுலகங்களெனக்கொண்டு, அவற்றில்
முதலதான பூலோகமென்றதில் அதன்கீழுள்ள ஏழுலகங்களும்
அடங்குமென்பர்; அன்றி, இரட்டுறமொழித லென்னும் உத்தியால், மேலுலகங்களேழும் கீழுலகங்களேழு மென இருவகையும்
ஒருங்குகொள்ளினும் அமையும்.  மேலேழுலகங்களாவன:- பூலோகம்
புவர்லோகம் சுவர்லோகம் மகர்லோகம் ஜநலோகம் தபோலோகம் சத்யலோகம்
என்பன.  கீழேழுலகங்களாவன:- அதலம் விதலம் சுதலம் தராதலம் ரசாதலம்
மகாதலம் பாதாளம் என்பன.  ஜம்பூ பிலக்ஷம் குசம் கிரௌஞ்சம் சாகம்
சால்மலிபுஷ்கரம் என்ற ஏழுதீவுகளாகவுள்ள பூமிமுழுவதும் என்றலுமொன்று;
இவ்வுரைக்கு ‘உலகு’ என்றது, உலகத்தின் ஒரு பகுதியை யுணர்த்தியதெனக்
கொள்ளவேண்டும்;  “மாயோன்மேயகாடுறை யுலகமும்” என்ற
தொல்காப்பியத்தில் ‘உலகம்’ என்பது போல. 

மனத்தாலும், திருத் தகு நூல் வரம்பாலும், உரம் பயில்
தோள் வலியினாலும்,
இனத்தாலும், தெரிந்து, தனது எண்ணிய எண்ணினுக்கு ஏற்ப,
எண் இல் கோடித்
தினத்தாலும் செயற்கு அரிய செழு மணி மண்டபம் ஈர்-ஏழ்
திங்கள் செய்தான்;
தனத்தால் மிஞ்சிய தருமன் தம்பியர்க்குத் தண்டுடன்
வெண் சங்கும் ஈந்தான்.மயன், மண்டபம்கட்டிமுடித்து வீமனுக்குக்
கதாயுதத்தையும், அருச்சுனனுக்குச்சங்கத்தையும் கொடுத்தல்.

(மயன்), – மனத்தால்உம் – (தனது) மனத்தின்
கற்பனாசக்தியினாலும், திரு தகு நூல் வரம்பால்உம்-மேன்மையமைந்த
சிற்பசாஸ்திர பிரமாணத்தைக்கொண்டும், உரம் பயில்தோள் வலியினால்உம் –
திண்மை மிகுந்த (தனது) கைகளின் திறமையினாலும், இனத்தால்உம்-(தனது)
பரிவாரமாகவுள்ள சிற்பிவர்க்கத்தாரைக்கொண்டும், தெரிந்து தனது எண்ணிய
எண்ணினுக்கு ஏற்ப – ஆலோசித்துத் தான் நிச்சயித்த மனோ நிச்சயத்திற்கு
இயைய, எண் இல் கோடி தினத்தால்உம் செயற்கு அரிய செழு மணி
மண்டபம் – அளவிறந்த கோடிக்கணக்கான நாள்களிலும் (பிறராற்) செய்து
முடித்தற்கு அருமையான சிறந்த இரத்தின மண்டபத்தை, ஈர்ஏழ்திங்கள்
செய்தான் – பதினான்கு மாதத்திற்செய்து முடித்தான்;  (அதுவன்றி), தனத்தால்
மிஞ்சிய தருமன் தம்பியர்க்கு – செல்வத்தால்மிக்க தருமபுத்திரனுடைய
தம்பியராகிய வீமசேனனுக்கும் அருச்சுனனுக்கும், தண்டுடன் வெள் சங்கும்
ஈந்தான் – கதாயுதத்தையும் வெண்ணிறமான சங்கையும் முறையே கொடுத்தான்;
(எ – று.)

    சத்துருகாதினியென்னும் பெயருள்ள கதாயுதமும், தேவதத்தமென்னும்
பெயருள்ளதும் வருணனுடையதுமான பெரிய சிறந்த சங்கமும் விருஷபருவா
என்ற அசுரராசனால் பகைவர்களைப் போரிலழித்தபின்பு பிந்துசரசில்
வைக்கப்பட்டன வென்றும், அவற்றை மயன் அங்குள்ள இரத்தினப் பொதியை
யெடுத்துக்கொண்டு வந்தபோது உடன் எடுத்துக்கொண்டு வந்து
வீமார்ச்சுனர்க்குக் கொடுத்தன னென்றும் வியாசபாரதத்தினா லறிக.  தோள் –
கை.  “தோளுற்றொர் தெய்வந் துணையாய்த் துயர் தீர்த்தவாறும்” என்ற சிந்தாமணியிற் போல.  தினத்தால்-உருபுமயக்கம்.   தினத்தாலும் –
தினஞ்சென்றாலும் என்றபடி. ஈரேழ் – பண்புத்தொகை.  திங்கள் என்ற
சந்திரனதுபெயர், இலக்கணையாய் மாசத்தைக் குறித்தது.  அமாவாசைக்கு
அமாவாசை ஒருமாச மெனக்கொண்டு சந்திரசம் பந்தத்தால் மாசத்தை
வரையறுத்தல் சாந்திரமாநபக்ஷரீதி.  தருமத்தினின்று தவறினவர்கட்குத்
தக்கதண்டனைசெய்து தருமத்தைக் காத்தலால், யமனுக்கு ‘தருமன்’ என்று
பெயர்.  ‘தந்தையே மைந்தனாகிறான்’ என்னும் நூல்வழக்குப்பற்றி,
தருமபுத்திரனை ‘தருமன்’ என்றது.  இனி ஒரு பெயரின் ஒருபகுப்பைக்
கொண்டு அப்பெயர் முழுவதையுங் குறிப்பதொரு வழக்கினால்,
தருமபுத்திரனென்ற பெயரைத் தருமனென்று குறித்ததாகவுங் கொள்ளலாம்.

அத் தபதி தன் குறிப்பால் அமைத்த பெரு மண்டபத்தின்
அளவு நீளம்
வித்தரமோடு உயர்ச்சி எனும் வனப்பு அனைத்தும், கண்டோர்கள்,
வியந்து கூற,
கொத்து அலர் தார் மணி முரசுக் கொடி உயர்த்தோன் கனற்
பிறந்த கொடியும் தானும்,
எத் தமரும் மன மகிழ, குடி புகுந்தான்-இறைஞ்சலருக்கு இடி
ஏறு அன்னான்.தருமபுத்திரன்அந்தமண்டபத்திற் பிரவேசஞ்செய்தல்.

அ தபதி-(மயனென்கிற) அந்த அசுரசிற்பி, தன் குறிப்பால்-
தனது மனச்சங்கற்பத்தினால், அமைத்த – நிருமித்த, பெருமண்டபத்தின் –
பெரிய அந்த மண்டபத்தினது, நீளம் வித்தரமோடு உயர்ச்சி எனும் அளவு
வனப்பு அனைத்தும் – நீளமும் அகலமும் உயரமும் என்று சொல்லப்படுகிற
அளவுகளின் வரையறையும் அழகும் ஆகிய எல்லாவற்றையும், கண்டோர்கள்
வியந்து கூற – பார்த்தவர்களெல்லாரும் அதிசயித்துச்சொல்ல, இறைஞ்சலருக்கு
இடி ஏறு அன்னான் – பகைவர்கட்குப் பேரிடிபோன்றவனான, கொத்து அலர்
தார் மணி முரசம்கொடி உயர்த்தோன்-பூங்கொத்து மலரப்பெற்ற மாலையைத்
தரித்தவனும் அழகிய முரசவாத்தியத்தின் வடிவத்தை யெழுதிய துவசத்தை
உயரநிறுத்தியவனுமாகிய தருமபுத்திரன், கனல் பிறந்த கொடிஉம் தான்உம்-
யாகாக்கினியில் தோன்றிய பூங்கொடிபோன்ற திரௌபதியும் தானுமாக, எ தமர்
உம் மனம் மகிழ குடிபுகுந்தான்-எல்லாச் சுற்றத்தார்களும் மன மகிழ
(அம்மண்டபத்திற்) பிரவேசஞ் செய்தான்; (எ – று.)

    அம்மண்டபத்தின் நீளம் அகலம் உயரம் என்ற அளவுகளின் அமைப்பும்
விசித்திரவேலைப்பாடும் காண்பவரெல்லாம் ஆச்சரியப்பட்டுப் புகழ்ந்து
பேசும்படி யிருந்தன வென்க.  தருமன் தனது வெற்றிக்கு அறிகுறியாக
முரசவடிவத்தைக் கொடியிற்கொண்டனனென்க.  இறைஞ்சலருக்கிடியேறன்னான்
– பகைவர்கட்கு அச்சத்தையும் அழிவையும் விளைப்பவ னென்றபடி.
பகைவர்களாகிய சர்ப்பங்கட்கு இடியேறு போன்றவனென ஏகதேசவுருவகமாக உரைப்பாரு முளர்; நாகங்கட்கு இடி அச்சந் தந்து அழிவு செய்யுமென்ப.

    ‘உயர்த்தோன்’ என்ற சொல்-உயரநாட்டியவனென்ற பொருளோடு,
மற்றையெல்லா வரசர்களுடைய கொடிகளினும் சிறக்கும் படு
நிலைநிறுத்தினவனென்றபொருளையுங்காட்டும்.  இரண்டாவது கொடி –
பூங்கொடிபோன்ற பெண்ணுக்கு உவமையாகு பெயர்;  மெல்லியதாய்
ஒல்கிஒசியும் வடிவில் உவமம்.  ‘முரசக்கொடி யுயர்த்தோன்
கனற்பிறந்தகொடியும் தானும் குடிபுகுந்தான்’ – ஆண்பாலும் பெண்பாலும்
கலந்து சிறப்பினால் ஆண்பால் முடிபைப் பெற்றன;  பால்வழுவமைதி;  [நன் –
பொது 27.] ‘எத்தமரும்’ என்றது, வீமன்முதலிய நான்கு தம்பிய ராதியோரை.
தமர்-தம்மவர்:  கிளைப்பெயர்.  இறைஞ்சலர் – வணங்காதவர்:  எனவே
பகைவராயிற்று.  ஏறு – ஆண்மைப்பெயர்;  பெரியதையும் சிறந்ததையும் ‘ஏறு’
என்றல், மரபு.

    அங்கிவேசமுனிவரிடத்தில் துரோணாசாரியருடன் வில்வித்தையைக்
கற்றுவந்தபொழுது, ‘எனக்கு இராச்சியங் கிடைத்த பின்னர்ப் பாதி உமக்குப்
பங்கிட்டுக்கொடுப்பேன்’ என்று அவர்க்கு வாக்குதத்தஞ் செய்திருந்த
பாஞ்சாலராசனாகிய துருபதன்,பின்பு ஒருகாலத்தில் அவர் தம்குழந்தைக்குப்
பாலுக்காகப் பசுவேண்டுமென்று சென்று கேட்டபொழுது முகமறியாதவன்போல
‘நீ யார்?’ என்று வினவிச் சில பரிகாசவார்த்தைகளைச் சொல்லிச் சபையிற்
பங்கப்படுத்த, அப்பொழுது அவர் ‘என்மாணாக்கனாகிய இராசகுமார
னொருவனைக்கொண்டு உன்னை வென்று கட்டிக் கொணரச்செய்து உன்
அரசையுங் கைக்கொள்வேன்’ என்று சபதஞ்செய்துவந்து, பின்பு அங்ஙனமே
அருச்சுனனைக்கொண்டு பங்கப்படுத்தி அப்பிரதிக்ஞையை நிறைவேற்றிவிட,
யாகசேனன் துரோணர்மீது மிகக்கறுக்கொண்டு அவரைக் கொல்லும் பொருட்டு
ஒரு புத்திரனையும், அருச்சுனனது பல பராக்கிரமங்களைக்கண்டு
மகிழ்ந்ததனால் அவனுக்கு மணஞ்செய்து கொடுக்கும் பொருட்டு
ஒருபுத்திரியையும் பெறவிரும்பிப் புத்திரகாமயாகஞ் செய்விக்க, அவ்வோமத்
தீயினின்று திட்டத்துய்மனும் திரௌபதியும் தோன்றின ராதலின், திரௌபதி
‘கனற்பிறந்தகொடி’ எனப்பட்டாள். 

தம்பியர்கள் நால்வருடன், தண் துழாய் முடியோனும்
தானும் ஏனை
அம் புவி மன்னரும், முனிவர் அனைவரும், சூழ்தர
இருந்த அமயம்தன்னில்,
தும்புரு நாரதன் என்னும் இருவரினும், நாரதனாம்
தோன்றல் தோன்ற,
பைம் பொன் மலர் தூய், எதிர் போய்ப் பணிந்து, இறைஞ்சி,
என் செய்தான் பாண்டு மைந்தன்?அங்கு நாரதமாமுனிவன்வருதல்.

பாண்டு மைந்தன் – பாண்டுமகாராசனது மூத்த குமாரனான
தருமபுத்திரன், தம்பியர்கள் நால்வருடன் – (வீமன் அருச்சுனன் நகுலன்
சகதேவன் என்னும் தனது) தம்பிமார் நான்குபேருடனே, தண் துழாய்
முடியோன்உம் – குளிர்ச்சியான திருத்துழாய் மாலையையணிந்த
திருமுடியையுடையவனான கண்ணபிரானும், தான்உம் – தானுமாக, ஏனை அம்
புவி மன்னர்உம் முனிவர் அனைவர்உம் சூழ்தர இருந்த – அழகிய
நிலவுலகத்தையாளுகிற மற்றை(ப் பற்பலதேசத்து) அரசர்களும் முனிவர்களும்
ஆகிய எல்லாரும் தன்னைச்சூழ்ந்திருக்க(த் தான் அவர்கட்கெல்லாம் நடுவில்
அச்சபாமண்டபத்திலே) வீற்றிருந்த, அமயம்தன்னில் – சமயத்திலே, – தும்புரு
நாரதர் என்னும் இருவரின்உம் நாரதன் ஆம் தோன்றல் தோன்ற –
(சங்கீதஸாஹித்யங்களிற் பேர் பெற்றவர்களான) தும்புரு நாரதன் என்ற
தேவவிருடியரிருவருள்ளும் நாரதனாகிய பெருமையிற்சிறந்த முனிவன் அங்கு
எழுந்தருள, (அத்தருமபுத்திரன் தான்), ‘எதிர் போய் பணிந்து இறைஞ்சி பைம்
பொன் மலர் தூய் என் செய்தான்-எதிர்கொண்டு சென்று வரவேற்று
நமஸ்கரித்துத் துதித்துப் பசியபொன்மயமான மலர்களைவிட்டு அருச்சித்து
(மற்றும்) எவ்வளவு உபசாரஞ் செய்தான்? [மிக்க உபசாரங்களைச் செய்தன
னென்றபடி]; (எ – று.)- அவற்றை, அடுத்த கவியிற் காண்க.

தம்பி-தாம் – பகுதி, பி-முறைப்பெயர்விகுதி:  தமக்கு முன்பு பிறந்தவனென்ற
பொருளில் ‘தம்முன்’ என்று வழங்குதல்போலத் தமக்குப்பின்பு பிறந்தவனென்ற
பொருளைத் தரக்கூடிய ‘தம்பின்’ என்ற பெயர் தம்பியெனச் சிதைந்து வழங்கிய
தென்பர் ஒருசாரார். இதன்மேல், அர் – பலர்பால்விகுதி, கள் – விகுதிமேல்
விகுதி.

     புவி – வடசொல்; இது அந்தப்பாஷையில் ஏழாம் வேற்றுமை விரியாயினும்
தமிழில் பெயர்மாத்திரமாய் வழங்கும்.  சூழ்தர – சூழ;  தா – துணைவினை.
தும்புருநாரதர் – பன்மைவிகுதிபெற்ற உயர்திணையும்மைத்தொகை.  நாரதன்
என்ற வடமொழிப்பெயர் – ஆத்மஞானத்தை உபதேசிப்பவனென்றும்,
மனிதர்கட்கு உள்ள ஒற்றுமையை (த்தான் செய்யுங்கலகத்தினாற்) கெடுப்பவ
னென்றும் காரணப்பொருள்படும்.  நரன் – ஆத்மா; அதற்கு உரிய ஞானம் –
நாரம்; தா – கொடுத்தல்:  அன்றி, நரர் – மனிதர்;  அவர்சமூகம் அல்லது
அவர்சம்பந்தமான ஒற்றுமை – நாரம்; த – கெடுத்தல்.  தோன்றல் –
அனைவரினுஞ்சிறந்து தோன்றுபவன்;  அல் – கருத்தாப்பொருள்விகுதி,
உயர்திணையாண்பாற் சிறப்புப்பெயர்.  பசுமை + பொன் = பைம்பொன்;
“ஈறுபோதல்” என்னுஞ் சூத்திர விதி.  தூய், தூ – பகுதி; இதுவே உகரம்
பெற்று ‘தூவு என்று வழங்குவது: ய் – இறந்தகால வினையெச்சவிகுதி.  மைந்து
– இளமை;  அதனையுடையவன், மைந்தன்.  தும்புருநாரதரென்னு மிருவரும்
இசைக்கிழமையுடைய தேவவிருடிக ளாதலாலும், அவ்விருவருள்ளும் நாரதன்
பிரசித்திபெற்றுச் சிறத்தலாலும் ‘தும்புருநாரதரென்னுமிருவரினும் நாரதனாம்
தோன்றல்’ என்றார்;  தோன்றல் – பெரியவன்.  பொன்மலர் – பொன்போ
லருமையான மலர் எனினுமாம்.  ‘அமயந்தன்னில்’ என்றவிடத்து
‘அவையந்தன்னில்’ என்றும்பாட முண்டு;  சபையி லென்பது பொருள்.
இரண்டு பாடத்திலும், தன்-சாரியை.  பிந்தின பாடத்துக்கு ‘அம்’ என்பதும்
சாரியையாம்.  முடி – மயிர்முடி

ஏற்றினான், ஆசனத்தில்; தனித்தனியே உபசாரம் யாவும் தந்து,
மாற்றினான், வழி இளைப்பு; மலர் அயன்போல் இருந்தோனை
மகிழ்ச்சி கூர்ந்து,
போற்றினான்; ‘நீ வர, யான் புரி தவம் யாது!’ எனப்
புகழ்ந்தான்;-பொதியில் தென்றல்
காற்றினால் அரும்பு நறுஞ் சூதம்போல் புளகு
அரும்பும் காயத்தானே.தருமபுத்திரன்நாரதமாமுனிவனுக்குச்
செய்யும் உபசாரம்.

பொதியில்-பொதியமலையிலிருந்து வருகிற, தென்றல் காற்றினால்
– தென்றற்காற்றினாலே, அரும்பும் – தளிர்த்துப் பூக்கின்ற, நறுஞ்சூதம் போல்
– வாசனை வீசுகின்ற மாமரம்போல, புளகு அரும்பும் – (நாரதமுனிவரது
வரவுபற்றிய மகிழ்ச்சியினால்) மயிர்ச்சிலிர்ப்பு உண்டாகப்பெற்ற, காயத்தான் –
உடம்பையுடையவனாகிய தருமபுத்திரன், – மலர் அயன்போல் இருந்தோனை –
(திருமாலின் திருநாபித்) தாமரைமலரில் தோன்றிய பிரமன்போலச்
சிறப்புற்றிருந்தவனான நாரதமகா முனிவனை, ஆசனத்தில் ஏற்றினான் –
(சிறந்ததோர்) ஆசனத்திலிருத்தி, உபசாரம் யாவும் தனித்தனியே தந்து-
(அருக்கியம் பாத்தியம் முதலிய) உபசாரங்களையெல்லாம் தனித்தனி [விடாமல்
ஒன்றன்பின்ஒன்றாகச்] சமர்ப்பித்து, வழி இளைப்பு மாற்றினான்-
(அம்முனிவனது) வழிவரவினாலாகிய தளர்ச்சியைத் தீர்த்து, மகிழ்ச்சி கூர்ந்து
போற்றினான் – ஆனந்தம்மேலிட்டுத் துதித்து, நீ வர யான் புரி தவம் யாது
எனப்புகழ்ந்தான்-‘நீ இங்கு எழுந்தருளுதற்கு யான்செய்துவைத்த தவம்
யாதோ!’ என்று புகழ்ந்து உபசாரவார்த்தை கூறினான்;  (எ – று.)

     தவிசு அளித்தல் [ஆஸநம்], கையில்நீர்தரல் [அர்க்யம்], கால் கழுவ
நீர்தரல் [பாத்யம்], முக்குடிநீர்தரல் [ஆசமநீயம்], நீராட்டல் [ஸ்நாநம்], ஆடை
சாத்தல் [வஸ்திரம்], முப்புரிநூல் தரல் [உபவீதம்], தேய்வை பூசல் [கந்தம்],
மலர்சாத்தல் [புஷ்பம்], மஞ்சளரிசிதூவல் [அக்ஷதை], நறும்புகை காட்டல்
[தூபம்], விளக்கிடல் [தீபம்], கருப்பூரம் ஏற்றல் [கர்ப்பூரம்], அமுதமேந்தல்
[போஜநம்], அடைக்காய்தரல் [தாம்பூலம்], மந்திரமலரான் அருச்சித்தல்
[மந்த்ரபுஷ்பம்] என்ற பதினாறும், ஷோடசோபசார மெனப்படும்.

     பூக்களுள் தாமரை சிறத்தலால், அது, அடைமொழி கொடாமல் வாளா
‘மலர்’ எனப்பட்டது.  அஜன்-அ – திருமாலினிடத்தினின்று, ஜன் –
தோன்றினவன்.  ‘தந்தையே மைந்தனாகிறான்’ என்னும் நூல்வழக்குக்கு ஏற்ப,
பிரமனது மனத்தினின்று தோன்றிய குமாரனான நாரதனுக்கு அப்பிரமனை
உவமை கூறியது, ஏற்கும்;  தத்துவஞானத்திலும் தவப்பெருமையிலும்
பிரமன்போலச் சிறந்தவன் நாரதனென்க.  முனிவன்வரவினாலாகிய
மகிழ்ச்சியால் தருமனுடல் மயிர் சிலிர்த்ததற்கு, தென்றற்காற்றின் வரவினால்
மாமரம் தளிர்த்தல் உவமை கூறப்பட்டது:- “நல்லோர்வரவால்
நகைமுகங்கொண்டின்புறீஇ, அல்லோர்வரவா னழுங்குவார் – வல்லோர்,
திருந்துந் தளிர்காட்டித் தென்றல்வரத் தேமா, வருந்துஞ் சுழல் கால் வர” என்ற
செய்யுள் இங்கு நினைக்கத்தக்கது. தென்றல் – தென்திசைக்காற்று, தெற்கிலிருந்து
வருவது எனப் பொருள்படும்.  தென்றல் – தெற்கு என்பது ஈறுகெட்டு றகரம்
னகரமாகத் திரிந்தது; து – சாரியை; அல் – பெயர்விகுதி:  சாரியையின்
உகரங்கெட்டுத் தகரம்றகரமானது – சந்தி. பொது + இல் = பொதுவில்; என்பது
பொதியில் என உகரம் திரிந்து இகரமாய் யகர உடம்படுமெய் பெற்று முடிந்தது;
மரூஉ முடிபு.    

யான் புரிந்த தவம் உலகில் யார் புரிந்தார், அவனிபரில்?-
இசையின் வீணைத்
தேன் புரிந்த தெள் அமுதால் அமுது உண்டோர் செவி
இரதம் தெவிட்டுவிப்பாய்!
மான் புரிந்த திருக் கரத்து, மதி இருந்த நதி வேணி,
மங்கை பாகன்
தான் புரிந்த திருக் கூத்துக்கு இசைய, மகிழ்ந்து இசை
பாடும் தத்வ ஞானி!’தருமபுத்திரன் நாரதனைநோக்கிக்கூறிய உபசாரமொழி.

வீணை இசையின் – யாழிசையாகிய, தேன் புரிந்த தெள்
அமுதால் – தேனோடுகலந்த தெளிவான அமிருதத்தினால், அமுது உண்டோர்
செவி இரதம் தெவிட்டுவிப்பாய் – (திருப்பாற்கடலினின்று தோன்றிய)
அமிருதத்தைப் பானஞ்செய்தவர்களான தேவர்களுடைய காதுகளில் அந்த
அமிருதத்தினும் மிக்கசுவையை மிகநிறைக்கின்ற சங்கீத பண்டிதனே! மான்
புரிந்த திருக்கரத்து – மான் தங்கிய அழகிய கையையும், மதி இருந்த நதி
வேணி – சந்திரன் தங்கியதும் கங்காநதியைத் தரித்ததுமான சடையையுமுடைய,
மங்கை பாகன் – என்றும் மாறாத இளமையையுடையளான அம்பிகையை
(வாம) பாகத்திற்கொண்டவனாகிய சிவபெருமான், தான் புரிந்த – தான்
செய்தருளுகின்ற, திருக்கூத்துக்கு – திருநடனத்துக்கு, இசைய – இணங்க,
மகிழ்ந்து இசை பாடும் – ஆனந்தங்கொண்டு தேவகானம் பாடுகிற, தத்வஞானி
– தத்துவஞானத்தையுடையவனே! (இப்படிப்பட்ட மகாமுனிவனான நீ
என்பக்கல் எழுந்தருளப்பெற்றே னாதலால்), யான் புரிந்த தவம் உலகில்
அவனிபரில் யார் புரிந்தார் – யான் செய்த அவ்வளவு பெருந்தவத்தை
உலகமுழுவதிலுமுள்ள அரசர்களில் வேறு யாவர் செய்துள்ளார்?  [ஒருவரும்
செய்திலர் என்றபடி]; (எ – று.)-தான் – அசை.

    கீழ்க்கவியில் ‘நீ வர யான்புரி தவம் யாது?’ என்று சுருங்கச் சொல்லியதன்
விவரணம் இது; கீழ்த் தொகுத்துச் சுட்டலாகக் கூறியதனை இங்கு
வகுத்துக்காட்டலாக விளக்கியதாதலால், இது கூறியதுகூற லென்னுங்
குற்றத்தின்பாற் படாது.  (இச்செய்யுள், சில ஏட்டுப் பிரதிகளிலில்லை.)

     மிக்க இனிமையைக் குறித்தற்கு, தேனொடு கலந்த தெளிந்த அமிருதம்
என்றார்.  ‘இசையின் வீணைத் தேன் புரிந்த தெள்ளமுதால் அமுதுண்டோர்
செவியிரதம் தெவிட்டுவிப்பாய்’ என்ற சொற்போக்கில், நாரதனது
திவ்வியகானாமிருதம் தேவாமிருதத்தினும் இனிதென்பது தோன்றுதல் காண்க.
‘செவியுதரந்தெவிட்டுவிப்பாய்’ என்றும் பாடமுண்டு.

     இனி, வீணை – யாழினது, தேன்-தேன்போன்ற நரம்பினின்று, புரிந்த –
எழுந்த, இசையின் – கீதமாகிய, தெள் அமுதால் – சுத்தமான அமிருதத்தினால்
என்றும் உரைகொள்ளலாம்: இவ்வுரையில், தேன் என்றது – தேனொழுக்குப்
போன்ற வடிவையும் இனிமையையுமுடைய யாழ்நரம்பிற்கு உவமையாகுபெயர்;
யாழ்நரம்புக்குத் தேனொழுக்கு உவமையாதலை “பசும்பொன் யாழ்நரம்பு
தேனார்த்தெனத் தீண்டி” என்ற சிந்தாமணியினாலும் உணர்க. அவநிபர் என்ற
வடமொழிப்பெயர் – பூமியைக் காப்பவரென்று பொருள்படும்; அவநி – பூமி.
இசையின், இன்-சாரியை. அம்ருதம் – மரணத்தைத் தவிர்ப்பது [சாவாமருந்து]
என்று பொருள்படும்.  தெவிட்டுதல் – தேக்கிடுதல்.

     மான் புரிந்த திருக்கரம் – இடத்திருக்கை.  சிவபிரான் மானேந்திய
கதை
:- ஒரு காலத்திற் சிவபிரான் தன்னை மதியாத தாருகவனத்து
முனிவர்களுடைய கருவத்தைப் பங்கஞ்செய்யவும் அவர்களின்
மனைவியர்களது கற்பு நிலையைப் பரிசோதிக்கவும் கருதித் தான் ஒரு
விடவடிவங்கொண்டு அவரில்லந்தோறுஞ் சென்று பிக்ஷாடனஞ்செய்து,
தன்னைநோக்கிக் காதல்கொண்ட அம்முனிபத்தினியரது கற்புநிலையைக்
கெடச்செய்ய, அதுகண்டு பொறாமற் கோபமூண்ட அம்முனிவர்கள்
அபிசாரயாகமொன்று செய்து, அவ்வோமத்தீயினின்று எழுந்த நாகங்கள்
பூதங்கள் மான் புலி முயலகன் வெண்டலை முதலியவற்றைச் சிவனைக்
கொன்றுவரும்படி ஏவ, சிவபெருமான், தன்மேற் சீறிவந்த நாகங்களை
ஆபரணங்களாகவும், பூதங்களைத் தனது கணங்களாகவுங்கொண்டு மானைக்
கையிலேந்தி, புலியைத் தோலையுரித்து உடுத்து முயலகனை முதுகிற்
காலாலூன்றி வெண்டலையைக் கையாற்பற்றிச் சிரமேலணிந்து, இங்ஙனமே
அவற்றையெல்லாம் பயனிலவாகச் செய்துவிட்டன னென்பதாம்.

     ‘மதியிருந்த வேணி’ என்றதன்விவரம்:- தக்ஷமுனிவனது
புத்திரிகளாகிய அசுவினி முதலிய இருபத்தேழு நக்ஷத்திரங்களையும், மணஞ்
செய்துகொண்ட சந்திரன் பக்ஷபாதமாக அம்மகளிருள் உரோகிணி
யென்பவளிடத்தில் மிகவும் மோகங்கொண்டு எப்பொழுதும் அவளுடனே
கூடிவாழ்ந்து மற்றை மனைவியரை உபேக்ஷை செய்ய, அப்புதல்வியரின்
வருத்தத்தை நோக்கின தக்ஷமுனிவன் சந்திரனைக் கோபித்து
‘க்ஷயமடைவாயாக’ என்று சபிக்க, அச்சாபத்தாற் சந்திரன் பதினைந்து
கலைகளும் குறைந்து மற்றைக்கலையொன்றையும் இழப்பதற்கு முன்னம்
சிவபிரானைச் சரணமடைய, அப்பெருமான் அருள்கூர்ந்து அவ்வொற்றைக்
கலையைத் தன்தலையிலணிந்து மீண்டும் கலைகள் வளர்ந்து வரும்படி
அநுக்கிரகித்தன னென்பதாம்.  இவ்வரலாற்றினால், சிவபிரான் தன்னைச்
சரணமடைந்தவர்களின் குறையைத் தீர்த்தருளுந் தன்மைய னென்பது
விளங்கும்.

     ‘நதிவேணி’ என்றதிற் பொதிந்தவரலாறு:- திருமால் உலகமளந்த
காலத்தில் மேலே சத்தியலோகத்திற் சென்று அப்பிரானது திருவடியைப்
பிரமன் தன் கைக்கமண்டல தீர்த்தத்தாற் கழுவிவிளக்க, அந்த
ஸ்ரீபாததீர்த்தமாகப்பெருகித் தேவலோகத்திலிருந்த ஆகாசகங்காநதியை,
சூரியகுலத்துப் பகீரதசக்கரவர்த்தி, கபிலமுனிவனது கண்ணின் கோபத் தீக்கு
இலக்காய் உடலெரிந்து சாம்பலாகி நற்கதியிழந்த தனது மூதாதையரான
சகரபுத்திரர் அறுபதினாயிரவரை நற்கதி பெறுவிக்கும் பொருட்டு நெடுங்காலந்
தவஞ்செய்து மேலுலகத்திலிருந்து கீழுலகத்திற்குக் கொணர்கையில், அவனது
வேண்டுகோளினாற் சிவபிரான் அந் நதியைச் சடைமுடியில் ஏற்றுச் சிறிது
சிறிதாகப் பூமியில் விட்டருளினனென்பதாம்.  இதற்குச் சைவ புராணங்களில்
வேறு வரலாறும் கூறப்படும்.

     ‘தத்வ’ என்ற வடசொல் விகாரப்படாமல் நின்றது செய்யுளோசையின்
பொருட்டு.  தத்வஞானம் – மெய்யுணர்வு;  அதாவது – பிறப்பு வீடுகளையும்
அவற்றின் காரணங்களையும் விபரீத ஐயங்களாலன்றி உண்மையாலுணர்தல்

எனத் தருமன் மகன் கூற, இளையோர்கள் தனித்தனி நின்று
இறைஞ்ச, நீலக்
கனத்து அனைய திருமேனிக் கண்ணனும் தன் மனம்
களிப்பக் கண்ணின் நோக்க,
மனத்தில் அழுக்கு அணுகாத மா தவத்தோன் உதிட்டிரற்கு,
‘இம் மாட கூடம்
தனத்தில் மிகு குபேரன் எழில் அளகையினும் இலது!’
என்று சாற்றினானே.நாரதமுனிவன்அச்சபாமண்டபத்தைக் கொண்டாடுதல்.

என – என்று, தருமன் மகன் – தருமபுத்திரன், கூற – (நாரத
முனிவனுக்கு உபசாரவார்த்தை) சொல்ல, – இளையோர்கள் – (அவனது)
தம்பியரான வீமன் முதலிய நால்வரும், தனித்தனி நின்று இறைஞ்ச –
தனித்தனியே அருகில் வந்து நின்று (அம்முனிவனை) நமஸ்கரிக்க,-நீல கனத்து
அனைய திருமேனி கண்ணனும்-நீலமேகத்தைப் போன்ற திருமேனி
நிறத்தையுடைய கிருஷ்ணனும், தன் மனம் களிப்ப கண்ணின் நோக்க – தனது
மனங்களிக்கக் கண்களால் (விருப்பத்தோடு அம் முனிவனை) நோக்க,-
மனத்தின் அழுக்கு அணுகாத மாதவத்தோன் – சிந்தையிற் களங்கமென்பது
சிறிதுஞ் சாரப்பெறாத பெருந்தவ முடையவனான அந்த நாரதமாமுனிவன்,
உதிட்டிரற்கு – தருமபுத்திரனை நோக்கி, இ மாட கூடம் தனத்தின் மிகு
குபேரன் எழில் அளகையினும் இலது என்று சாற்றினான் -‘இத்தன்மையதான
சபாமண்டபம் செல்வத்தில் மிக்க குபேரனுடைய நகரமான அழகிய
அளகாபுரியிலும் இல்லை’ என்று சொன்னான்; (எ – று.)

    திரிலோகசஞ்சாரியான நாரதமுனிவன் ‘தனபதியான குபேரனுடைய
நகரத்திலும் இத் தன்மையது இல்லை’ என்று சொன்னதனால்,
பிறவிடங்களிலில்லை யென்பது தானே அமையும்.  நீலகநம்-நீர்கொண்ட
காளமேகம்.  கண்ணபிரான் திருமாலின் திருவவதாரமூர்த்தி யாதலால்,
அப்பெருமான் திருவுள்ளவுகப்போடு அன்பு காட்டிக் குளிரக் கடாக்ஷித்தலே
முனிவனுக்குத் தக்க உபசாரமாகும். கண்ணின், இன் – ஐந்தனுருபு.  மனத்தின்,
அளகையின்-இன்-ஏழனுருபு. மனத்தினழுக்கணுகாத – மனத்தில் தீய சிந்தனை,
சிறிதுமில்லாத என்றபடி. உதிட்டிரன் – யுதிஷ்டிரன், யுதிஸ்திரன் என்று பிரிந்து,
போரிற் பின்வாங்காமல் உறுதியாய் நிலைநிற்பவனென்று பொருள்படும்.
மாடகூடம்-சிகரத்தையுடைய மாளிகை.  குபேரன் என்ற பெயர் – குற்சிதமான
(விகாரப்பட்ட) உடம்பையுடையவனென்று பொருள்படும்;  பேரம் – உடம்பு;
இவன் இமயகிரிச்சாரலில் தவஞ்செய்து கொண்டிருக்கையில் அங்கு எழுந்தருளிய
சிவபிரானது பக்கத்துநின்ற உமாதேவியின் மேல் இடக்கண்ணைச் செலுத்தி
அவ்வபசாரத்தினால் அந்தக்கண் பசந்து ஒளிமழுங்கப்பெற்று ஏகாக்ஷிபிங்கள
னென்னும் ஒரு பெயரையும் அடைந்தனனென்பதை யறிக.  அளகையினும்,
உம் – உயர்வு சிறப்பு.  ‘நோக்கி’ என்ற பாடத்துக்கு – கண்ணபிரான் நாரதன்
வரவுபற்றித் திருவுள்ள முவந்திருக்க அம் முனிவன் அம்மண்டபத்தைத் தன்
கண்களாற் பார்த்து என்று பொருள் கொள்க.  ‘அளகையினுமினிது’ என்றும்
பாடம்.   

மண்மிசை நால் விரல் நிற்கும் மணி மகுடத்து அணி
அரங்கில், மண் உளோரும்
விண்மிசை வாழ்நரும் நெருங்க, விராய அரு மறைச்
சடங்கின் இராயசூயம்
கண்மிசை மா மணி நிகர் என் கான்முளையைப் புரிவி’
என, ‘காலன் ஊரில்”
பண்மிசை வீணையின் கிழவன்-‘பாண்டு மொழிந்தனன்’
எனவும் பகர்வுற்றானே.பாண்டுமகாராசன் உன்னைஇராயஸு யயாகஞ் செய்யச்
சொல்லினனென்று நாரதன் யுதிஷ்டிரனிடம் தெரிவித்தல்.

மண்மிசை – பூமியின்மேல் (நிலவுலகத்தார் யாவர்க்கும்
என்றபடி), நால் விரல் நிற்கும்-(இந்த மண்டபத்தை ஒன்றாக வைத்துக் கையின்
கடைவிரலை மடக்கி எண்ணினால் அங்ஙனம் எண்ணிய விரலுக்குப் பின்
இதனோடு ஒக்கவைத்து எண்ணுதற்கு வேறொருமண்டபம் இல்லாமையால்
மற்றை) நான்கு விரல்களும் (மடக்கப்படாமல்) நின்றிடும்படியான, மணிமகுடத்து
அணி அரங்கில் – இரத்தினகசிதமான சிகரத்தையுடைய அழகிய
சபாமண்டபத்திலே, மண் உளோரும் விண்மிசை வாணரும் நெருங்க –
பூலோகத்திலுள்ளவர்களான மனிதர்களும் மேலுலகத்தில் வாழ்பவர்களான
தேவர்களும் (மிகுதியாக வந்து திரண்டு) நெருங்க, விராய அரு மறை சடங்கின்
இராயசூயம் – பொருந்திய அருமையான வேதவிதிப்படி செய்யப்படுகின்ற
வைதிகச் செயல்களுடைய ராஜசூயமென்னும் பெரிய யாகத்தை, கண்மிசை மா
மணிநிகர் என் கான்முளையை புரிவி-கண்ணிலுள்ள சிறந்த கருமணிபோன்ற
(அருமையான) எனது புத்திரனாகிய யுதிஷ்டிரனைச் செய்விப்பாய், என –
என்று, காலன் ஊரில் – யம லோகத்திலே, பாண்டுமொழிந்தனன் -(உன்
தந்தையான) பாண்டு மகாராஜன் (அங்குச் சென்ற என்னுடன்) சொன்னான்,
எனவும் – என்றும், பண் மிசை வீணையின் கிழவன் பகர்வுற்றான் – இசையில்
மேம்பட்ட வீணையின் உரிமையை யுடையவனான நாரத மா முனிவன்
(தருமபுத்திரனை நோக்கிச்) சொன்னான்; (எ – று.)

     தென் திசையிலுள்ளதும், பித்ருதேவதைகள் வசிக்குமிடமும்,
தெற்குத்திக்குப்பாலகனும் பித்ருபதியுமான யமனால் ஆளப்படுவதுமாகிய
பித்ருலோகமென்ற பரலோகம், இங்கு ‘காலனூர்’ எனப்பட்டது;  இது-மறுமை
யுலகங்களி லொன்று.  யான் பித்ருலோகத்திற்குச் சென்றிருந்தபொழுது அங்கு
வசிக்கிற உனது தந்தையான பாண்டுமகாராஜன், என்னை நோக்கி
‘பூலோகத்துக்குச் செல்லும் நீ, அங்கு என் அருமைமகனான  யுதிஷ்டிரனைக்
கண்டு அவனைச் சிறந்த பெருவேள்வியாகிய இராயசூயயாகஞ் செய்யச்
சொல்வாயாக’ என்று சொன்னான் என, நாரத மாமுனிவன் யுதிஷ்டிரராசனை
நோக்கிச் செய்தி கூறின னென்பதாம்.

    பெருவிரல், சுட்டுவிரல், நடுவிரல் பவித்திரவிரல், கடைவிரல் என்ற
கைவிரலைந்தனுட் கடைவிரலை முதலாகவைத்து மடக்கி ஒன்றுமுதலாக
எண்ணித் தொகையிடுதல், மரபு; உலகத்திலுள்ள சிறந்த சபாமண்டபங்களை
யெண்ணித்தொகையிடக்கருதி இந்தச் சபாமண்டபம் ஒன்றென்று முதலிற்
கடைவிரலை மடக்கி எண்ணினபின்பு, இதனோடு ஒப்பவைத்து மற்றை
விரல்களையும் மடக்கியெண்ணுவதற்கு ஏற்ற சபாமண்டபம் வேறு
இல்லாமையால், மற்றை நான்கு விரல்களும் மடக்கப்படாமலே நின்று
விடும்படியான ஒப்பற்ற சிறப்பையுடைய மண்டபமென்பது, ‘மண்மிசை நால்
விரல்நிற்கும் அரங்கு’ என்பதன் கருத்து;  மேல் விராட பருவத்தில் “அதிரதர்
தம்மை யெண்ணி லணிவிரல் முடக்க வொட்டா, முதிர்சிலைமுனி” என்றும்,
கன்ன பருவத்தில் “மற்றையணிவிரன் முடக்க விணையிலாத மத்திரபூபன்”
என்றும் வருவனவற்றோடு இதனை ஒப்பிடுக.

     சடங்கு – வேதத்தின் ஆறு அங்கங்களாகிய சீக்ஷை முதலிய நூல்களின்
கருத்தின்படி செய்யப்படுவதென்று காரணப்பொருள்படும்: ஷட் – ஆறு,
அங்கம் – உறுப்பு.  ‘விண்’ – தேவலோகத்திற்கு இடவாகுபெயர்.  வாணர் –
வாழ்நர்.  காண்பது கண்எனக்காரணக்குறி;  மிசை – ஏழனுருபு.  மகனுக்கு,
கண்ணின்கருமணி – இன்றியமையாதவுறுப்பாதலிலும், அருமை பாராட்டப்
படுதலிலும் உவமம்.  கான்முளை-கால் – சந்ததியில், முளை – தோன்றினவன்;
சந்ததி விருத்திக்குக் காரணமானவ னென்றுமாம்.  என் கான்முளையை
இராயசூயம் புரிவி – இரண்டு செயப்படுபொருள் வந்தவினை.  காலன் –
(பிராணிகளின்) ஆயுளைக் கணக்கிடுபவன்.  பண்மிசைவீணை –
இசைக்கருவிகளிற்  சிறந்ததான வீணையென்ற படி: வீணையின் கிழவன் –
வீணாகானத்திற் சிறந்தவன்.  கிழவன் – உரிமையென்னும் பொருளதான
கிழமையென்ற பண்பினடியாப் பிறந்தபெயர்: இதன் பெண்பால் – கிழத்தீ.
‘எனவும்’ என்ற உம்மை-கீழ்ச்செய்யுளைநோக்கி இறந்தது தழுவிய எச்சம்

தந்தை மொழி தனயருக்குச் சாற்றி, முனி அகன்றதன்
பின் தம்பி ஆன
இந்திரனும், தன் மனத்தில் எண்ணமும் ஈண்டு ஆகும்
என எண்ணிக் கூறும்:
‘அந்த நரமேத மகம் இயற்றுதற்கு என்று அவனிபரை
அடைய வாரி,
பந்தம் உறு பெருஞ் சிறையில் படை கெழு வேல்
சராசந்தன் படுத்தினானே.இதுமுதல் மூன்றுகவிகள் -ஒருதொடர் : நாரதன் சென்ற
பின்பு, கண்ணன் சராசந்தனைக் கொல்ல வேண்டுமெனல்.

முனி – நாரதமுனிவன், தந்தை மொழி-பிதாவாகிய பாண்டு
சொல்லி யனுப்பின வார்த்தையை, தனயருக்கு சாற்றி-புத்திரர்களான
பாண்டவர்கட்கு இவ்வாறு சொல்லி, அகன்றதன் பின் – சென்றதன்பின்பு,
தம்பிஆன இந்திரன்உம்-உபேந்திரனாகிய ஸ்ரீகிருஷ்ணனும், தன் மனத்தில்
எண்ணம்உம் ஈண்டு ஆகும் என எண்ணி – தனது மனத்தில்
வெகுகாலமாயிருந்த நினைவான ஜராஸந்த வதமும் இச்சந்தர்ப்பத்தில்
நிறைவேறுமென்று நினைத்து ஆலோசித்து, கூறும் – (தருமபுத்திரனை
நோக்கிப் பின் வருமாறு) சொல்வான்:- படை கெழு வேல் சராசந்தன்-
சேனைகள் நிறையப்பெற்றவனும் வேல்முதலிய ஆயுதங்களின் தொழிலில்
தேர்ந்தவனுமான ஜராஸந்தனென்ற அரசன், அந்த நரமேதயாகம் இயற்றுதற்கு
என்று – பிரசித்தமான நரமேதமென்னும் யாகத்தைத் தான்
செய்தற்பொருட்டாக, அவனிபரை அடையவாரி – அரசர்களை
ஒருங்கேபிடித்துத் திரட்டிக்கொண்டுபோய், பந்தம் உறு பெருஞ் சிறையில்
படுத்தினான் – விலங்கின் தளை பொருந்திய பெரிய சிறைச்சாலையிற்
சேர்த்து வைத்தான்;       (எ – று.)

    திருமாலின் திருநாமங்களிலொன்றான ‘உபேந்திரன்’ என்பது –
இந்திரனுக்குத் தம்பியாய்ச் சேர்ந்தவனென்று பொருள்படும்;  அப்பெயரின்
பொருளையே இங்கு ‘தம்பியான இந்திரன்’ என்று குறித்தார்.  முன்னொரு
காலத்தில் இந்திரன் அசுரர்கள் நலிதலால் வருந்தித் தேவர்களுடனே
திருமாலைச் சரணமடைந்து ‘நீ எப்பொழுதும் என்னுலகத்தில்
எழுந்தருளியிருந்து என்பகை தவிர்த்து எம்மைப் பாதுகாத்தருளவேண்டும்’
என்றுவேண்ட, அதற்கு இணங்கிய ஸ்ரீமகாவிஷ்ணு, காசியபமுனிவனது
மனைவியாகிய அதிதிதேவியின் வயிற்றில் அவ்விந்திரனுக்குத் தம்பியாய் ஓர்
அவதார மெடுத்துத்தோன்றி உபேந்திரனெனப் பெயர் கொண்டு
தேவலோகத்தில் அவ்விந்திரனருகிலேநின்று அவனது துயரத்தைத்
தீர்க்கலாயின னென்பதை யறிக.  இங்கு ‘தம்பியான இந்திரன்’ என்றது,
அத்திருமாலின் அவதார விசேஷமான கண்ணபிரான்மேல் நின்றது.

    மகததேசத்து அரசனும் தேவர்கட்குப் பகைவனுமாகிய பிருகத்ரத
னென்பவன் மைந்தனில்லாக்குறையால் வனத்திற்சென்று சண்டகௌசிக
மகாமுனிவனை வணங்கி வரம்வேண்ட, அவன் தனது வாஸஸ்தாநமாக இருக்கும்
மாமரத்தின் கனியொன்றைக்கொடுக்க அதனை அவ்வரசன் காசிதேசத்தரசன்
பெண்களாகிய தம்மனைவிய ரிருவர்க்கும் பகிர்ந்து கொடுத்தான்.  அதனால்,
அவ்விருவரிடத்தும் பாதிபாதியாகக் குழந்தை பிறந்தது.  அவற்றை அவன்
ஊர்ப்புறத்தி லெறிந்துவிடும்படி கட்டளையிட, அங்ஙனம் எறியப்பட்ட
அப்பிளவுகளை அந்தக் கிராமதேவதையாகிய ஜரையென்பவள் இரவில்
ஊர்வலம் வருகையிற் கண்டு எடுத்துப் பொருத்திப் பிழைப்பித்து, தன்னாற்
பொருத்தப்பட்ட காரணத்தால் ஜராசந்தனென்று பெயரிட்டு வளர்க்கும்படி
அக்குழந்தையைத் தந்தையிடம் கொடுத்துப் போயினள்.  அங்ஙனம் வளர்ந்து
அந்நாட்டில் கிரிவிரசமென்னும் நகரத்தில் அரசாண்டு செருக்குக்கொண்டு
பற்பல அரசர்களைப் போரிற்கொன்று அநேக அரசர்களை வென்று சிறையில்
வைத்திருந்த சராசந்தன், அஸ்தி பிராஸ்தி என்னும் தனது பெண்க ளிருவரைக்
கண்ணனது மாமனாகுங் கம்சனுக்கு மணஞ் செய்வித்திருந்தான்.  பின்பு
கண்ணன் கம்சனைக்கொன்றது காரணமாகச் சராசந்தன் வெகுகோபங்கொண்டு
கிருஷ்ணனை வம்சத்தோடு கொல்லவேண்டுமென்று அநேகம்
பெருஞ்சேனையோடு எதிர்த்துவந்து கண்ணன் எழுந்தருளியிருந்த மதுராபுரியை
வளைத்துப் பெரும்போர்செய்து என்ராம கிருஷ்ணர்களாலும் யாதவசேனையாலும்
தானும் தன் ஒன்றுமும் வெல்லப்பட்டவனாய் ஓடிப்போயினான்.  இங்ஙனம் பதி
சிறந்த சபமறை பங்கப்பட்டபின்பும் கோபாவேசமுற்றுப் பலமான
சபாமண்டானையைத் திரட்டிக்கொண்டு ஒருகால் மதுரை நோக்கி எண்ணின
பின்வந்தான். அச்சமயத்திலேயே, யவன தேசாதிபதியான மடக்கிரெனன்
கிருஷ்ண பலராமர்களையே தான் எதிர்த்தற்கு ஏற்ற யால்வான்களென
நாரதமுனிவரால் அறிந்து சேனையைச் சித்தஞ் செய்துகொண்டு
போரின்பொருட்டு மதுரைக்கு வந்தனன். அப்பொழுது கண்ணன் ஏககாலத்தில்
இருதிறத்தாரோடு பெரும் போர்செய்தால் யாதவசேனைக்கு நாசமுண்டாகக்
கூடுமென்று நினைத்துச் சமுத்திரராசனைப் பன்னிரண்டுயோசனை தூரம் இடம்
விடும்படி கேட்டு, மேற்கடலிடையே பகைவர் உட்புகவொண்ணாதபடி மிகவும்
பாதுகாவலுடையதான துவாரகாநகரத்தை நிருமித்து மதுரையிலிருந்த
கணங்களையெல்லாம் அந்நகரத்திற் கொண்டு சேர்த்துத் தானும் தனியே
ஓராயுதமுமில்லாமல் மதுரையினின்று விரைவாக வெளிப்புறப்பட்டுத் துவாரகை
சேர்ந்து அதுமுதல் அங்கேயே எழுந்தருளி யிருந்தனன்.  தான் அவதார
விசேஷத்தில் அடைந்திருக்கும் மனிதத் தன்மையை அநுசரித்து, காலத்துக்கு
ஏற்ற கோலமாய், கண்ணன் இங்ஙனஞ்செய்தது, பின்பு சராசந்தன் வீமனால்
மரணமடையவேண்டிய ஊழ்வினையின் உண்மையை நோக்கியேயாயினும்,
இராசதருமத்தைப் பார்க்குமிடத்து, பகைக்குப் பயந்து பங்கப்பட்டதாகவே
முடிதலால், சராசந்தனுக்கு அஞ்சிக் கண்ணன் மதுரையைவிட்டுத் ஓடினனென்று
ஓர் அபவாதம் பரவியது.  இவ்பகைவனாயுள்ள சராசந்தனை, வீமனைக்கொல்வது
இது தக்க சமயமாகுமென்று கண்ணபிரான் ஆலோசித்துப் பேசுந்திறம்
‘தன்மனத்தி உண்டாகுமெனவெண்ணிக் கூறும்’ என்று விளக்கப்பட்டது.

    நரமேதயாகமென்பது – மனிதர்களைக்கொன்று செய்வதொரு யாகம்;
நரமேதஞ் செய்யவேணுமென்ற கருத்தினால், சராசந்தன் பல அரசர்களை
வலிய எதிர்த்துப் பொருது வென்று உயிரோடு பிடித்துக் கொணர்ந்து
விலங்கிட்டுச் சிறைச்சாலையிலடைத்துத் தொகுத்து வைத்திருந்தனனென்க. இத்
தன்மைய கொடுஞ் செயல் புரிந்துள்ள சராசந்த னொருவனைக் கொன்று
வென்று அவன் பொருள்களைக் கவர்ந்து வந்தால் அநேக அரசர்களை
வென்று திறை கொணர்ந்ததாகவும்,  துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபாலன
தருமத்தை யநுட்டித்ததாகவும் முடிதலால் அவனைக் கொல்ல வேண்டு
மென்பது கருத்து.  பந்தம் – கட்டு.  பந்தம்உறு – கபாட பந்தனம் முதலிய
பாதுகாவலமைந்த எனினுமாம்.  தம்பியான இந்திரன் கூறும் – செய்யுமென்
முற்று ஆண்பாலுக்கு வந்தது.

சதகோடிதனக்கு ஒளித்துத் தடங்கடலில் புகும் கிரிபோல்,
 தளர்ச்சி கூர்ந்து,
சத கோடி முடி வேந்தர் தங்கள் உயிர் கொண்டு ஒளித்தார்,
 சமருக்கு ஆற்றார்;
சத கோடி சுரும்பு அரற்றும் தாராய்! அச் சராசந்தன்தன்னை
 இன்னே
சத கோடி இப மதுகைச் சதாகதிசேய்தனை ஒழியச்
 சாதிப்பார் யார்?

சதகோடி சுரும்பு அரற்றும் தாராய் – நூறுகோடிக்கணக்கான
வண்டுகள் ஆரவாரித்தற் கிடமான மலர்மாலையையணிந்த தருமபுத்திரனே!-
சதகோடிதனக்கு ஒளித்து தடகடலில் புகும் கிரிபோல் – (தேவேந்திரனுடைய)
வச்சிராயுதத்திற்கு அஞ்சி யொளித்துப் பெரிய கடலிற் புக்கு மறைந்த (மை
நாகம் முதலிய) மலைகள்போல, சதகோடி முடிவேந்தர் – நூறு
கோடிக்கணக்கான கிரீடாதிபதிகளான அரசர்கள், சமருக்கு ஆற்றார் –
(சராசந்தனுடைய) போருக்கு முன்நிற்க மாட்டாதவர்களாய், தளர்ச்சி கூர்ந்து –
மனத்தளர்வும் உடற் றளர்வும் மிக்கு, தங்கள் உயிர் கொண்டு ஒளித்தார் –
தம்முடைய உயிர் அரிதில் தப்பி உய்யக்கொண்டு ஓடி ஒளித்து விட்டார்கள்;
அச்சராசந்தன் தன்னை – அத் தன்மையனான சராசந்தனை, இன்னே-
இப்பொழுது, சதகோடி இபம் மதுகை சதாகதி சேய்தனை ஒழிய சாதிப்பார்
யார் – நூறுகோடி யானை வலிமையையுடைய வாயுவின் குமாரனான
வீமசேனனைத் தவிரக் கொல்லவல்லவர் எவர் இருக்கின்றனர்? [எவருமில்லை
யென்றபடி];  (எ – று.)

    “பலகோடிக் கணக்கான அரசர்கள் பொருதற்கு அஞ்சி, யொளித்திடுமாறு
பெருவலி படைத்தவன் சராசந்தன்” அவனை வெல்லவல்லவன் வீமசேனனே
யென்பது கருத்து.

    ‘சதகோடியிபமதுகை’ என்பது – சதாகதிசேய்க்கு அடைமொழி. இளமையில்
ஒருகால் துரியோதனாதியர் வீமனுக்கு விருந்துசெய்விக்கிற வியாஜமாகச்
சமையற்காரரைக்கொண்டு அவனுக்கு மிக்க விஷங்கலந்த உணவைக்கொடுத்து
உண்பித்து, அதனால் மயங்கியிருக்கிற சமயத்தில் அவனைக்கயிற்றினாற்
கட்டிக்கங்கைநீரிலே போகட்டுவிட, அதில்வீழ்ந்து பாதாளஞ்சேர்ந்த அவ்
வீமனை அங்குள்ள சிறு நாகங்கள் கடிக்க, முந்தினவிஷம் இவ்விஷத்தால்
நீங்கினவளவிலே, கயிற்றுக்கட்டையும் மெய்வலிமையால் துணித்திட்ட அவனுக்கு,
வாசுகி வாயுகுமாரனென்ற அபிமானத்தோடு தக்க உபசாரங்கள் செய்து
ஆங்குள்ள அமிருதகலசங்களிற் சிலவற்றை உண்பிக்க, இயல்பிற்
பதினாயிரம்யானைபலங்
 கொண்டவனான வீமசேனன் அவ்வமிருதத்தை
யுண்டு மிகவும் அதிகமான பலத்தைப் பெற்று மீண்டன னென்பது, கீழ்
ஆதிபருவத்தில் வந்தவரலாறு;  ஆனதுபற்றி, ‘சதகோடியிபமதுகைச் சதாகதிசேய்’
என்றார்.

     நூறு கூர் நுனியை யுடையதாதலால், வச்சிராயுதத்திற்கு ‘சதகோடி’ என்று
பெயர்: பண்புத்தொகையன்மொழி, மற்றை மூன்றடிகளிலுள்ள ‘சதகோடி’ என்ற
சொல், மிக்க பெருந்தொகையென்ற மாத்திரத்தையுணர்த்தின.  முன்னொரு
காலத்தில் மலைகளெல்லாம் பறவைகள்போல இறகுடையனவாயிருந்து
அவற்றால் உலகமெங்கும் பறந்து திரிந்து பலவிடங்களின் மேலும் இருந்து
அவ்வவ்விடங்களை யெல்லாம் பிராணிகளுடனே அழித்துவர, அதனை
முனிவர் முதலியோராலறிந்த திரிலோகாதிபதியான தேவேந்திரன் சினந்து
சென்று தனது வச்சிராயுதத்தால் அவற்றின் சிறகுகளை யறுத்துத்தள்ளி
வருகையில், வாயுவின் உதவியைக்கொண்டு மைநாகம் முதலிய சில மலைகள்
விரைந்து ஓடிக் கடலினுட்புக்கு ஒளித்துத்தப்பின என்பதுவரலாறு.  இங்கு,
வச்சிராயுதம்-மிக்க வலிமையையுடைய சராசந்தனுக்கும், மலைகள் – அவனுக்கு
அஞ்சியவலிய பெரிய அரசர்கட்கும் உவமை.

    சதாகதி – ஸதாகதி.  எப்பொழுதும் சஞ்சாரத்தையுடையவன்.  மயிர்
முடியப்படுதல் பற்றி, சிரசுக்கு, ‘முடி’ என்றுபெயர்; அது – அத் தலையிலணியுங்
கிரீடத்திற்கு இடவாகுபெயராம்.  அடையாளப் பூமாலை, அலங்காரத்திற்கு
அணியும் மலர்மாலை, வெற்றி மலர்மாலை என்னும் மூன்றும், ‘தார்’ என்ற
சொல்லில் அடங்கும்.  இன்னே – நிகழ்காலங் குறிப்பதோரிடைச் சொல்.

    செம்மையென்ற பண்புப்பெயர், ஈறுபோய் ஆதிநீண்டு முன் நின்ற
மகர மெய் யகரமாத்திரிந்து, ‘சேய்’ என நின்றது;  இந்நிறத்தின் பெயர்,
செந்நிறமுடைய முருகக் கடவுளுக்கு முதலிற் பண்பாகுபெயராய், பின்பு,
அது குமாரனென்னும், வடசொற்போல, அம்முருகக்கடவுள் போன்று
பலபராக்கிரமங்களிற் சிறந்த மைந்தனுக்கு உவமையாகுபெயராய் வழங்குதலால்,
இருமடியாகுபெயர்.  சாதித்தல் – வெல்லுதலுமாம்.  சதகோடி என்ற ஒரு சொல்
ஒரு பொருளிலேயே பலமுறைவந்தது சொற்பொருட்பின்
வருநிலையணி.     

ஆர மணம் கமழ் அசலம் அநேகம் உள ஆனாலும்,
அலையின் கூல
வாரிதியை மதிப்பதற்கு வல்லது மந்தரம் அன்றி
மற்றும் உண்டோ?
போர் விசயம் இவனுடன் முன் பொருதோரில் யார் பெற்றார்?
போதும், இப்போது
ஆரண மா முனிவரராய்’ எனப் புகன்றான்; அறன் மகனும்,
‘அஃதே’ என்றான்.தருமன் ஒருப்பட, கண்ணன் வீமனுடனும் அருச்சுனனுடனும்
வேதியர் வடிவில் சென்று, சராசந்தனின் அவையைச் சார்தல

ஆரம் மணம் கமழ் அசலம் அநேகம் உள ஆனாலும்-
சந்தனமரங்களின் நறுமணம் வீசப்பெற்ற மலைகள் பல (உலகத்தில்)
உள்ளனவாயினும், அலையின் கூலம் வாரிதியை மதிப்பதற்கு வல்லது –
அலைகள்மோதுங் கரையையுடைய (பாற்) கடலைக் கடையவல்லது, மந்தரம்
அன்றி மற்றும் உண்டோ – மந்தரமலையொன்றேயன்றி வேறுமலையும்
உளதோ? [இல்லையேயென்றபடி]; அவனுடன் முன்போர் பொருதோரில்
விசயம் யார் பெற்றார் – அச்சராசந்தனோடு முன்பு போர் செய்தவர்களில்
வெற்றியை யாவர் பெற்றுளர்?  [எவரும் பெற்றில ரென்றபடி]; இப்போது –
இப்பொழுது, ஆரணம் மாமுனிவரர் ஆய் போதும் –  வேதம்வல்ல சிறந்த
பிராமண சிரேஷ்டர்களின் வேடங் கொண்டவர்களாய் (நாங்கள் அவனிடத்துச்)
செல்வோம், என புகன்றான் – என்று (கண்ணபிரான்) கூறியருளினான்;  அறன்
மகன்உம் – தருமபுத்திரனும், அஃதே என்றான் – ‘அவ்வாறேயாகுக’ என்று
சொல்லி உடன்பட்டான்;  (எ – று.)

    பாற்கடலைக் கடைதற்கு மந்தரகிரியே  வல்லதாதல் போல, சராசந்தனைக்
கொல்லுதற்கு வீமனே ஏற்றவ னென்க.  ‘இவனுடன்’ என்றபாடத்துக்கு இவ்
வீமனுடன் என்க.

    அந்தணவடிவங்கொண்டு செல்லுதற்குக் காரணம் – மேல் 16-ஆம்
கவியில் விளங்கும்.  இச்செய்யுளின் முதலிரண்டடியிற் கூறிய உபமான
வாக்கியம் இதனோடு ஒரு தொடராய் நின்ற கீழ்ச்செய்யுளில் வந்த உபமேய
வாக்கியத்தோடு பிம்பப் பிரதிபிம்ப பாவம்பெற்று நின்றதனால்,
எடுத்துக்காட்டுவமையணி.இனி, ஒரு தொடரென்னக் கொள்ளாவிடின்,
முதலடிகளிற் கூறிய உபமானம் பிறிதுமொழிதலணியாக உபமேயத்தைத்
தோற்றுவித்த தென்ன வேண்டும்.  சந்தனமரம் மலைச்சார்பில்
வளர்வதாதலால், ‘ஆரமணங்கமழ் அசலம்’ என்று விசேடித்துக் கூறப்பட்டது.

    முன்னொருகாலத்தில் இவ் வண்டகோளத்துக்கு அப்புறத்திலுள்ள
விஷ்ணுலோகத்துச் சென்று திருமகளைப் புகழ்ந்துபாடி அவளால் ஒரு பூமாலை
பிரசாதிக்கப்பெற்ற ஒரு வித்தியாதரமகள் மகிழ்ச்சியோடு அம்மாலையைத் தன்
கைவீணையில் தரித்துக் கொண்டு பிரமலோக வழியாய் மீண்டு வருகையில்
துருவாசமகாமுனி எதிர்ப்பட்டு அவளை வணங்கித் துதிக்க, அவ்விஞ்சை
மங்கை அம்மாலையை அம்முனிவனுக்கு அளித்திட்டாள்;  அதன்
பெருமையை யுணர்ந்து அதனைச் சிரமேற்கொண்ட முனிவன் ஆனந்தத்தோடு
தேவலோகத்துக்கு வரும்போது, வெகு உல்லாசமாக ஐராவத யானையின்மேற்
பவனி வந்துகொண்டிருந்த இந்திரனுக்கு அம் மாலையைக் கைநீட்டிக்
கொடுக்க, அவன் அதனை அங்குசத்தால் வாங்கி அவ் யானையின்
பிடரியின்மேல் வைத்தவளவில், அம்மதக் களிறு அதனை துதிக்கையாற்
பிடித்து இழுத்துக் கீழெறிந்து காலால் மிதித்துத் துவைத்தது;  அதுகண்டு
முனிவரன் கடுங்கோபங்கொண்டு ‘இங்ஙனஞ் செல்வச்செருக்குற்றநினது எல்லா ஐசுவரியங்களும் கடலில் ஒளித்துவிடக்கடவன’ என்று
சாபங்கொடுக்க, உடனே தேவர் செல்வம் யாவும் ஒழிந்தன:  ஒழியவே, அசுரர்
வந்துபொருது அமரரை வெல்வாராயினர்.  பின்பு இந்திரன் தேவர்களோடு
திருமாலைச் சரணமடைந்து அப்பிரான் அபயமளித்துக் கட்டளையிட்டபடி
அசுரர்களையும் துணைக்கொண்டு மந்தரமலையை மத்தாக நாட்டி வாசுகி
யென்னும் பாம்பைக் கடைகயிறாகப் பூட்டிப் பாற்கடல் கடைந்து, அதனினின்று
வெளியெழுந்த அமிருதத்தையும் எல்லாச் செல்வங்களையும் பெற்று
வாழ்ந்தனன் என்பது, இரண்டாமடியிற் குறித்த வரலாறு.

    ‘போதும்’ என்ற தன்மைப்பன்மை-வீமார்ச்சுனர்களை உளப்படுத்தியது.
‘இப்போது போதும்’ என்றது – விரைவு பற்றிவந்த காலவழுவமைதி.  விசயம் =
விஜயம்:  விசேஷஜயம்.  ஆரமணம் கமழ் என்று பிரித்து, நிரம்பக்
கோட்டுப்பூ முதலியவற்றின் மணம் வீசப்பெற்ற எனினுமாம்.  அறன் என்பதை
அஃறிணைப்பெயரின் மகரனகரப் போலி யென்றாவது, ‘அன்’விகுதி பெற்ற
உயர்திணைப் பெயரென்றாவது கொள்க.  ‘அஃதே’ என்றது
அங்கீகாரவார்த்தை.     

அரி விரசும் துழாய் மகுடத்து அரியும், இரண்டு அரிகள்
அருள் ஆண்மையோரும்,
எரி விரசும் நெடுங் கானம் இரு தினத்தில் விரைந்து
ஏகி, எண் இல் காவல்
கிரிவிரச நகர் எய்தி, கிரித் தடந் தோள் மகதேசன்
கிளரும் கோயில்
கரி விரசும் கோபுரப் பொன் திரு வாயில் புகுந்து,
உரைத்தார், காவலோர்க்கே.கண்ணனும் வீமார்ச்சுனரும்புறப்பட்டுச்
சராசந்தனரண்மனை சேர்தல்.

அரி விரசும் துழாய் மகுடத்து அரிஉம்-வண்டுகள் நெருங்கி
மொய்க்கப்பெற்ற திருத்துழாய்மாலையைத் தரித்த முடியையுடைய திருமாலின்
அவதாரமான கண்ணபிரானும், இரண்டு அரிகள் அருள் ஆண்மையோர்உம் –
அரியென்னும் பெயருள்ள வாயுவும் இந்திரனுமாகிய இருவரும் பெற்ற
பராக்கிரமசாலிகளான வீமார்ச்சுனர்களும், (ஆகிய மூவரும்), எரிவிரசும் நெடுங்
கானம் இரு தினத்தில் விரைந்து ஏகி – தீப்பொருந்திய பெரிய காட்டுவழியிலே
இரண்டுநாளில் விரைவாகச் சென்று, எண் இல் காவல் கிரி விரசம் நகர் எய்தி
– அளவிறந்த பாதுகாவலையுடைய கிரிவிரசமென்னும் நகரத்தை யடைந்து, கிரி
தடதோள் மகத ஈசன் கிளரும் கோயில் – மலைகள் போன்ற பெரிய
தோள்களையுடைய மகததேசத்து அரசனான அச் சராசந்தன் வாழ்கின்ற
அரண்மனையினது, கரி விரசும் கோபுரம் பொன் திருவாயில் – யானைகள்
நெருங்கி நிற்கப் பெற்றதும் கோபுரத்தை யுடையதுமாகிய பொன்மயமான
அழகியவாயிலில், புகுந்து-, காவலோர்க்கு உரைத்தார் – அவ்வாயில் காவல்
செய்யுஞ் சேவகர்க்கு (தம் வரவை)ச் சொல்பவரானார்கள்; (எ – று.)

     அரி என்பது-திருமால் வாயு இந்திரன், என்ற பொருள்களில் ஹரி என்ற
வடசொல்லின் விகாரம்.  வெப்பம் பொருந்தினதென்பதும் காட்டுத்தீ
எரியப்பெற்றதென்பதும், பாலைவனத்தையுடையதென்பதும், ‘எரிவிரசும்’ என்ற
அடைமொழியினாற் புலனாம்.  நீரரண் நிலவரண் மலையரண் காட்டரண் என்ற
நால்வகை அரண்களுள் மலையரணாக இயல்பிலமைந்த ஐந்து மலைகளின்
தொகுதியுடைய நகராதலால் கிரிவ்ரஜ மென்று பெயராயிற்று

வந்தனர், முனிவர் மூவர்’ என்று உரைமின், மன்னவற்கு’
 என, அவர் உரைப்ப,
‘தந்திடும்’ எனலும், புகுந்து, நீடு அம் பொன்-தவிசு
 இருந்து, ஆசியும் சாற்ற,
கந்து அடர் குவவுத் தோளில் விற் குறியும், காட்சியும்,
 கருத்து உற நோக்கி,
‘அந்தணர் அல்லீர்; யாவர் நீர்?’ என்றான்; அவ் உரைக்கு
 அமலனும் உரைப்பான்:அந்தண வடிவங்கொண்டுசென்ற மூவரையும் சராசந்தன்
யாவரென்று வினாவுதல்.

மூவர் முனிவர் வந்தனர் என்று மன்னவற்கு உரை மின் என-
மூன்று அந்தணர்கள் வந்துள்ளா ரென்று (நீங்கள் சென்று உங்கள்)
அரசனுக்குச் சொல்லுங்கள் என்று (வாயில் காவலரை நோக்கிக் கண்ணன்
முதலிய மூவரும்) சொல்ல, அவர் உரைப்ப – அவ் வாயில்காவலாளர்
(அங்ஙனமே அரண்மனையினுட்சென்று சராசந்தமகாராசனுக்குச்செய்தி)
சொல்ல, தந்திடும் எனலும்-(அதுகேட்ட அவ்வரசன் ‘வந்த அந்தணர்களை)
உள்ளே அழைத்துக் கொண்டு வாருங்கள்’ என்று அநுமதி செய்தவுடனே,
(வாயிலோரால் அழைக்கப்பட்டு), புகுந்து – (மூவரும்) உள்ளே சென்று, நீடு
அம் பொன்தவிசு இருந்து – (சராசந்தனாற் காட்டப்பட்ட) பெரிய அழகிய
பொன்மயமான பீடத்தில் விற்றிருந்து, ஆசிஉம் சாற்ற -(அவ் வரசனுக்கு)
வாழ்த்தும் கூற, (அப்பொழுது அவ்வரசன்), கந்து அடர் குவவு தோளில்
வில்குறிஉம் காட்சி உம் கருத்து உற நோக்கி – தூணை யொத்த
திரட்சியையுடைய (அம்மூவரது) தோள்களிலுள்ள வில்லின் தழும்பையும்
(அவர்களுடைய) தோற்றத்தையும் தனது விவேகத்தினால் நன்றாக உற்று
நோக்கி, நீர் அந்தணர் அல்லீர் யாவர் என்றான் – ‘நீங்கள் பிராமணர்களல்லீர்,
மற்றை யாவர்?’ என்று வினவினான்; அ உரைக்கு அமலன்உம் உரைப்பான் –
(அங்ஙனம் அவன் வினாவிய) அந்த வார்த்தைக்குக் கண்ணனும்
விடைசொல்லுவான்;  (எ – று.) அதனை அடுத்த கவியிற் காண்க.

     இனி, ‘காட்சியும்’ என்றதற்கு-பார்வைக் குறிப்பையும் என்று உரைத்தலு
மொன்று.  “பகைமையுங் கேண்மையுங் கண்ணுரைக்கும் கண்ணின், வகைமை
யுணர்வார்ப் பெறின்” என்பது காண்க.  கருதுவது, கருத்து.  நீர் யாவர் –
இடவழுவமைதி.

     இதுமுதற் பதினொரு கவிகள்-பெரும்பாலும் இரண்டுநான்கு ஏழாஞ்சீர்கள்
மாச்சீர்களும், மற்றை நான்கும் விளச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு
கொண்ட எழுசீராசிரிய விருத்தங்கள்

யான் விது குலத்தில் யாதவன்; இவரோ, குருகுலத்
தலைவனுக்கு இளையோர்;
மான்மத மலர்த் தார் மன்ன! கேள்: ஒருவன் வாயுவின்
மதலை; மற்று ஒருவன்,
வான் மதில் உடுத்த பொன் நகர்க்கு இறைவன் மதலை; நின்
வள நகர் காண்பான்,
கான் மதக் களிற்றாய்! முனிவராய் வந்தோம், காவலர்க்கு
அணுக ஒணாமையினால்.’தாங்கள் இன்னாரென்பதையும் அந்தணராய் வந்ததன்
காரணத்தையும் கண்ணன் சராசந்தனுக்குச் சொல்லுதல்.

மான்மதம் மலர் தார் மன்ன-கஸ்தூரியின் வாசனை வீசும்
பூமாலையைத் தரித்த அரசனே!  கால் மதம் களிற்றாய்-
வழிகிறமதசலத்தையுடைய யானைச் சேனையை யுடையவனே!  கேள் – (யான்
சொல்வதைக்) கேட்பாய்;-யான்-, விது குலத்தில் யாதவன் – சந்திரகுலத்தில்
யதுவம்சத்திற் பிறந்தவனான கிருஷ்ணன்:  இவரோ – இவ்விருவருமோ,
குருகுலம் தலைவனுக்கு இளையோர் – (சந்திரவம்சத்தில்) குருவென்னும்
அரசனது குலத்துக்குத் தலைவனான யுதிஷ்டிரனுக்குத் தம்பியர்:  ஒருவன் –
(இவர்களில்) ஒருத்தன், வாயுவின் மதலை-வாயுதேவனது குமாரனான
வீமசேனன்;  மற்று ஒருவன்-, வான்மதில் உடுத்த பொன் நகர்க்கு இறைவன்
மதலை-பெரிய மதிலினாற் சூழ்ப்பட்ட பொன்மயமான நகரமாகிய அமராவதி
நகரத்திற்கு அரசனான தேவேந்திரனது குமாரனாகிய அருச்சுனன்; (நாங்கள்
மூன்றுபேரும்), நின் வளம் நகர் காண்பான்-உனது வளப்பம் மிக்க நகரத்தைப்
பார்க்கும் பொருட்டு, காவலர்க்கு அணுகொணாமையினால் முனிவர்
ஆய்வந்தோம்-அரசர்கள் உனது நகரத்தினுட்புக இயலாததால்
பிராமணவேடங்கொண்டவர்களாய் வந்தோம்:  (எ-று.) – ‘என்று கொண்டு
உண்மை யாதவன் உரைப்ப’ என்று அடுத்த கவியோடு ஒரு தொடராய்
இயையும்.

     சராசந்தன் நெடுநாளாகச் சேர்த்து வைத்திருக்கிற மிகப்பெரிய
சேனையிலுள்ள அளவிறந்த சிறந்த பெரும் போர்வீரர்களோ டெல்லாம் போர்
செய்து அவர்களனைவரையுந் தொலைத்துப் பின்பு அவனை யெதிர்த்துக்
கொல்வதென்றால் அதிக காலதாமதமாகுமாதலால் அங்ஙனமாகாமல் அவனை
நேரிலணுகித் துவந்துவ யுத்தத்திலே வதைத்திட வேண்டுமென்னும்
நோக்கத்தினால் அந்தணவடிவங்கொண்டு சென்றனரென்று வடநூலிற்கூறிய
கருத்தும் “காவலர்க் கணுகொணாமையினால்” என்றதில் உள்ளுறை பொருளாக
அமைதல் காண்க.  நினது காவல் வீரர்க்கு முன்பு (மன்னவர்) நெருங்குத
லரிதாதலா லென்க.  இப் பொருளையும் உட்கொண்டு மேல் ‘என்று
கொண்டுண்மையாதவனுரைப்ப’ என்றனரென்னலாம். அரசர்கள் அவனனுமதி
பெற்றன்றி அவனது நகரினுட் செல்ல இயலா தென்றும் அவ்வரையறை
முனிவர்கட்கு இல்லை யென்றும் உணர்க.

     விதுகுலம் – வடமொழித் தொடர். ‘யது’ என்பவன், சந்திரகுலத்துப்
பிரசித்திபெற்ற ஓர் அரசன்:  யயாதியின் குமாரன்; குருகுலப் பூர்வீகத்து
ராசர்களிற் பிரதானனான பூருவின் உடன் பிறந்தவன், யாதவன்-யதுவினது மரபிற்
பிறந்த மகன்: வடமொழித் தத்திதாந்தநாமம்.  இவரோ, ஓ – தெரிநிலை.  கால்
மதம் – வீனைத்தொகை.  களிறு, ஏனைக்கும் உபலக்ஷணம்.

என்றுகொண்டு உண்மை யாதவன் உரைப்ப, இரு புய வலியின்,
 எண் திசையும்
சென்றுகொண்டு அடர்த்து, தெவ்வர்தம் உயிரும் திறைகளும்
 முறை முறை கவர்ந்து,
வென்றுகொண்டு, அணிந்த வாகையோன், ‘தினவு மிக்கன,
 எமது இணை மேறுக்
குன்றுகொண்டு அமைந்த தோள்கள்; எம்முடன் நீர் குறித்து அமர்
 புரியும்’ என்று உரையா.இதுமுதல்மூன்றுகவிகள்-குளகம்: வீமனைச் சராசந்தன்
வலியப் போர்க்கு அழைத்தல்.

என்று கொண்டு உண்மை யாதவன் உரைப்ப-என்று
உண்மையான செய்தியைக் கண்ணன் சொல்ல,-எண் திசைஉம் சென்று
கொண்டு-எட்டுத் திக்குக்களிலும் அடிக்கடி போய்க்கொண்டு, இரு புயம்
வலியின் அடர்த்து – இரண்டு தோள்களின் வலிமையினால் (அரசர்களை)
நெருக்கிப் பொருது, தெவ்வர்தம் உயிர்உம் திறைகள்உம் முறை முறை கவர்ந்து
– அப் பகையரசர்களுடைய உயிரையும் திறைகளையும் பலமுறை வாரி,
வென்று கொண்டு அணிந்த வாகையோன் – வெற்றிகொண்டு (அதற்கு
அடையாளமாகத்) தரித்த வாகைப்பூமாலையை யுடையவனான சராசந்தன்,
‘எமது – எம்முடைய, இணை மேரு குன்றுகொண்டு அமைந்த தோள்கள்-
இரண்டு மகாமேரு மலைகளாகியவை போன்ற புயங்கள், தினவு மிக்கன – (பல
நாளாகத் தக்கபோர் பொறாமையாற்) போர்த்தினவு மிகுந்தன;  எம்முடன் நீர்
குறித்து அமர்புரியும் – (அத்தினவு நீங்கும் பொருட்டு) எம்முடன் நீங்கள்
விரும்பிப் போர் செய்யுங்கள்,’ என்று உரையா – என்று சொல்லி, (எ – று.)-
‘என’ என்று அடுத்த கவியோடு தொடர்ந்து முடியும்.

     எனக்குத் தோள் தினவு மிக் கிருத்தலால், எம்முடன் போர் செய்மி
னென்றனன் சராசந்தனென்க.  ‘என்று கொண்டு’ என்றவிடத்து, ‘கொண்டு’
என்றது – அசை:  ‘என்று கொண்டினைய கூறி’ என்ற
கம்பராமாயணத்திற்போல:  எமது, எம்முடன் என்றவை – செருக்குப் பற்றி
வந்த உயர்வுப்பன்மை.  ‘இணை மேருக்குன்று கொண்டமைந்த தோள்கள்’
என்றது, இல்பொருவுவமை,தோள்கள் தினவுமிக்கன- “எய்யெனவெழுபகை
யெங்குமின்மையால், மொய்பொரு தினவுறு முழவுத்தோளினான்” என்ற
கம்பராமாயணமும் காண்க.  வாகை யென்னும் ஒருவகை மரத்தின்பெயர் –
இங்கு இலக்கணையால், அம் மரத்தின் மலர்களாகிய மாலையைக் குறித்தது;
இருமடியாகுபெயர்.  ‘வெட்சி நிரைகவர்தல் மீட்டல் கரந்தையாம் வட்கார்
மேற்செல்வது வஞ்சியாம்-உட்கா, ரெதிரூன்றல் காஞ்சி எயில் காத்தல் நொச்சி,
அது வளைத்தலாகு முழிஞை-அதிரப்பொருவது தும்பையாம் போர்க்களத்து
மிக்கோர், செருவென்றது வாகையாம்” என்ற திவாகரத்தினால், இன்ன இன்ன
பூமாலை இன்ன இன்ன சமயத்து வீரர்கள் தரித்தற்கு உரியதென்பதை அறிக.
மேருகிரி-பூமியின் நடுவிலுள்ள பொன்மயமானதொரு பெரியமலை:  ஆயுதங்களால் அழிக்கமுடியாத வலிமையிலும், பருமையிலும், இது தோள்கட்கு
உவமை கூறப்படும்.  

நீ எனில், ஆண்டு ஓர் ஒன்பதிற்று-இரட்டி, நெடுஞ் சிறைக்
கலுழன் முன் நெறிக்கொள்
ஈ என ஓடி, மதுரை விட்டு, ஆழி எயில் துவாரகைப்
பதி புகுந்தாய்:
நோய் என அசுரர்க்கு உடைந்து, பொன்-காவில் நுழை தரும்
நூறு மா மகத்தோன்
சேய் எனின், இளையன்; வீமனை விசும்பில் சேர்த்துவன்!’
என விழி சிவவா,

(மற்றும் சராசந்தன் கண்ணனை நோக்கி),-‘நீ எனில் – நீயோ
என்றால், ஆண்டு ஓர் ஒன்பதிற்று இரட்டி – பதினெட்டு வருஷகாலமாக,
நெடுஞ் சிறை கலுழன் முன் நெறிக்கொள் ஈ என மதுரை விட்டு ஓடி ஆழி
எயில் துவாரகை பதி புகுந்தாய் – பெரிய இறகுகளையுடைய கருடனுக்கு
எதிர்ப்பட்ட ஈயென்னுஞ் சிறுபறவை போல (எனக்கு அஞ்சி உனது
இராசதானியான) மதுராபுரியைவிட்டு ஓடிப்போய் மேல் கடலில் நிருமிக்கப்பட்ட
மதிள்சூழ்ந்த துவாரகாபுரியினுட் சென்று ஒளித்துள்ளாய்; நோய் என
அசுரர்க்கு உடைந்து பொன் காவில் நுழைதரு நூறு மா மகத்தோன் சேய்
எனின் – நோய்க்கு (அஞ்சுவது) போல அசுரர்கட்கு அஞ்சித் தோற்றுப் புறங்
கொடுத்தோடிப் பொன்மயமான கற்பகச் சோலையிற் பதுங்கியுள்ள
தேவேந்திரனது குமாரனான அருச்சுனனோ வென்றால், இளையன் – (உங்கள்
மூவரிற்) சிறுவனாயிருக்கிறான்; (ஆகவே), வீமனை விசும்பில் சேர்த்துவன் –
வீமசேனனையே (எதிர்த்துப் பொருது) விண்ணுலகத்திற் சேர்ப்பேன், என-
என்று வீரவாதங்கூறி, விழி சிவவா – (கோபத்தினால்) கண்கள் சிவக்கப்பெற்று,
(எ – று.)- ‘அழைத்து’ என அடுத்த கவியோடு தொடரும்.

     இதனால், சராசந்தன், கிருஷ்ணனோடும் அருச்சுனனோடும் பொராமல்,
வீமனோடு போர் விரும்புதற்குக் காரணங் கூறுகின்றான்.  அஞ்சினவரோடு
பொருதல் அறமன்றாதலாலும், தனக்கு நிகரல்லாத இளையாரோடு
போர்செய்யின் பலபராக்கிரமங்கட்குச் சிறப்பில்லையாதலாலும், கண்ணனையும்
அருச்சுனனையும் விலக்கினான் என்க.  அசுரர்க்கு அஞ்சி மரச்செறிவில்
ஒதுங்கியிருக்கிறவனுடைய பிள்ளையென்று அருச்சுனனை இழித்துக் கூறினான்.
மேல் 31-ஆங் கவியிற் கூறுகிறபடி தான் அசுராம்சமாதலால், ‘கலுழன்
முன்னேறி, யேயென வோடி’ என்று பாட மோதி, கருடன் மேல் ஏறிக்கொண்டு
(காண்பவர்யாவரும்) ‘ஏஏ’ என்று நகைத்துப் பரிகாசம் பண்ண ஓடிப்போய்
என்று உரைப்பாருமுளர்.  ‘நெடுஞ்சிறைக்கலுழன் முன் நெறிக்கொளீயென
வோடி’ என்றது – தனது பெருமையும் எதிரியினது சிறுமையுந் தோன்றச்
செருக்குப் பற்றி உவமை கூறியதாம்;  கருடன் பக்ஷிராஜனாதலால், சிறப்புக்கு
அவனை யெடுத்துக் கூறினான்.  ஆண்டு ஓர் ஒன்பதிற்று இரட்டி –
பதினெட்டு வருஷத்திற்கு முன்பு என்றபடி.  இனி, இதற்கு, பதினெட்டு
முறையென்று உரைப்பாருமுளர்.  ‘ஏயென’ என்பது விரைவுக்குறிப்புமாம்.
‘துவாரகைப் பதிபுகுந்தாய்’ என்றவிடத்து ‘துவாரபதி புகுந்தாய்’ என்றும்
பாடமுண்டு.

     மது என்னும் அசுரனால் முதலில் அமைக்கப்பட்ட நகரமாதலாலும் பின்பு
மது என்னும் சந்திரகுலத்து அரசனாற் சீர்திருத்தி ஆளப்பட்டதனாலும்,
கண்ணுக்கு இனியதாயிருத்தலாலும், ‘மதுரா’ என்று பெயர்.  இங்குக் குறித்தது,
வடமதுரை; யமுனாநதி தீரத்திலுள்ளது.

     கடல் தானே இயற்கையரணாக அமையப்பெற்ற நகரமென்பது
‘ஆழியெயிற் றுவாரகைப்பதி’ என்ற தொடரினாற் போதரும்; ‘எழிற்றுவாரகை’
என்ற பாடத்திற்கு, எழில்- அழகையுடைய என்க.  ஆழ்ந்துள்ளது, ஆழி; இ –
கருத்தாப் பொருள்விகுதி.  பொன்னுலகமாகிய தேவலோகத்திலே உள்ளவை
யாவும் பொன்மயமாதலால், ‘பொற்கா’ எனப்பட்டது.  கா – பாதுகாக்கப்படுவது
என்று காரணப்பொருள்பெறும் பெயர்.  நுழைதரு, ‘தா’ என்ற துணைவினை
குறுக்கலும் விரித்தலும் பெற்றது.  சிறந்த அசுவமேதயாகம் நூறு செய்தவன்
தேவேந்திர பதவி பெறுதலால், இந்திரனுக்கு ‘நூறுமாமகத்தோன்’ என்று ஒரு
பெயர்.  இவனுக்கு வடமொழியில், சதமக என்று ஒரு பெயர் வழங்குதலையுங்
காண்க.  பீமன் என்ற வடசொல், வீமன் என்று விகாரப்பட்டது;  அப்பெயர் –
(பகைவருக்குப்) பயங்கரனென்று காரணப்பொருள்படும்.

மந்திரச் சுற்றத்தவர்களை அழைத்து, மதலையை,
‘மகிதலம்தனக்கு ஓர்
இந்திரன்’ எனவே, மணி முடி புனைந்து, அன்று, யாவரும்
தேவரும் வியப்ப,
மந்தரகிரியும் விந்தமும் தம்மில் மலைவபோல், மல்
அமர் மலைவான்,
சந்து அணி தடந் தோள் கொட்டி, ஆர்த்து, எழுந்தான், தழல்
உமிழ் விழிச் சராசந்தன்.

மந்திரச் சுற்றத்தவர்களை அழைத்து -(இராஜாங்க காரியத்திலே
தனக்கு) உற்ற உறவினரான மந்திரிகளை உடன் வைத்துக்கொண்டு, அன்று –
அன்றைய தினமே (அப்பொழுதே), யாவரும் தேவரும் வியப்ப –
எல்லா மனிதர்களும் தேவர்களும் (கண்டு) அதிசயிக்கும்படி [வெகுசிறப்பாக],
மதலையை மகிதலம் தனக்கு ஓர் இந்திரன் எனவே மணி முடி புனைந்து-
தனதுமகனான சகதேவனென்பவனைப் பூலோகத்துக்கு ஓர் இந்திரனென்னும்படி
இரத்தினகிரீடஞ் சூட்டிப் பட்டாபிஷேகஞ் செய்துவைத்து, மந்தரகிரிஉம்
விந்தம்உம் தம்மில் மலைவ போல் மல் அமர் மலைவான் – மந்தரமலையும்
விந்தியமலையும் தமக்குள் [ஒன்றோடொன்று] போர்செய்வனபோல(த் தானும்
வீமனும்) மற்போர் செய்யும்பொருட்டு, சந்து அணி தட தோள் கொட்டி
ஆர்த்து எழுந்தான் – சந்தனம்பூசிய பெரிய தனது தோள்களைக் கையால்
தட்டி ஆரவாரஞ்செய்து கொண்டு எழுந்தான்: (யாவனெனில்),-தழல் உமிழ்
விழி சராசந்தன் – (கோபாவேசத்தினால்) அக்கினியைச் சொரிகின்ற
கண்களையுடைய சராசந்தன்;  (எ – று.)- கீழ் 20 – ஆஞ் செய்யுளில்
‘வாகையோன்’ என்றதை இச்செய்யுளில் வந்த ‘சராசந்தன்’ என்ற பெயர்க்கு
விசேஷணமாகவைத்துக் குளகச்செய்யுள்களுக்கு முடிவு காண்க.

    சராசந்தன் தன் புதல்வனுக்குப் பட்டங்கட்டிவிட்டு வீமசேனனோடு
மற்போர் பொருமாறு தோளைத்தட்டி ஆரவாரஞ் செய்து கொண்டெழுந்தன
னென்பதாம்.  போரில் வெற்றி தோல்விகள் ஒருதலையல்ல வாதலால்
யாக்கைநிலையாமையைக்குறித்து, போர்க்குச் செல்லுகையிற் புதல்வர்க்கு
முடிசூட்டிவைத்துச் செல்லுதல், அரசரினியல்பு:  அது, அரசன்
போரிலிருக்கையில் இராஜாங்க காரியங்களைப் பார்த்தற்கும் ஏற்கும்.
மந்திரிகள் ஐம்பெருங்குழுவிற் சேர்ந்தவராதலால், ‘மந்திரச்சுற்றத்தவர்’
எனப்பட்டனர்;  உரியசமயங்களில் அரசனைச் சூழ்ந்திருந்து ஆலோசனை
சொல்பவராய் அரசனது சுகதுக்கங்களைத் தமது சுகதுக்கங்களாகக் கருதுபவ
ரென்றபடி.  மந்தரம் – ஆலோசனை:  வடசொல்.  வலிய பெரிய
உடம்பையுடைய வீம சராசந்தர்க்கு மந்தரகிரியும் விந்தியகிரியும் உவமை
கூறப்பட்டன.  கீழ் 16-ஆஞ் செய்யுளில் மந்த்ரம் வீமனுக்கு உவமை
கூறப்பட்டவாறும் காண்க.  பாற்கடலைக் கடைந்த பெருமையுடைமையால்
மந்தரத்தையும், முன்னொரு காலத்தில் நாரதமாமுனிவனால் தூண்டப்பெற்று
மகாமேருகிரியோடு மாறுபட்டு மிகப்பெரியதாய் வளரத்தொடங்கிச்
சூரியசந்திராதியரது சஞ்சாரத்தைத் தடுக்குமாறு ஓங்கி உயர்ந்ததனால்
விந்தத்தையும் எடுத்துக் கூறினார்.  அன்று+யாவர்-அன்றி யாவர்:
குற்றியலிகரம்.  மல்அமர் – ஆயுதமின்றி உடல்வலிமை கொண்டு செய்யும்
போர்.      

யாளி வெம் பதாகை வீமனும் அவனும், யாளியும்
யாளியும் எனவே,
தாளினும், சமர மண்டலங்களினும், தாழ் விரல் தடக் கை
முட்டியினும்,
தோளினும், சென்னித்தலத்தினும், மற்போர் சொன்ன போர்
விதம் எலாம் தொடங்கி,
நாளினும் திங்கள் ஒன்றினில் பாதி, நள் இரவினும்,
சமர் நடத்தி,இதுவும்,அடுத்தகவியும்-குளகம்: இருவரும் பிரயாசைப்
பட்டு மற்போர்புரிதல்.

யாளி வெம் பதாகை வீமன்உம் – சிங்கத்தின்வடிவ மெழுதிய
(பகைவர்க்குப்) பயங்கரமான துவசத்தையுடைய வீமசேனனும், அவன்உம் –
அச்சராசந்தனும், (ஆகிய இருவரும்),- யாளிஉம் யாளிஉம் எனவே-இரண்டு
சிங்கங்கள் ஒன்றோடொன்று போர் செய்தல்போலவே,-தாளின்உம் –
கால்களினாலும், சமரம் மண்டலங்களின்உம்-மற்போர்க்கு உரிய
மண்டலவகைகளினாலும், தாழ் விரல் தடகை முட்டியின்உம் –
கவிந்தவிரல்களமைந்த பெரியகைகளின் முஷ்டிகளாலும், தோளின்உம் –
தோள்களினாலும், சென்னி தலத்தின்உம்-தலையினாலும், மல் போர் சொன்ன
போர் விதம் எலாம் தொடங்கி – (யுத்தசாஸ்திரங்களில்) மற்போர்க்குச்
சொன்ன யுத்தவகைகளெல்லா வற்றாலும் (முறையே மற்போர்செய்யத்)
தொடங்கி, திங்கள் ஒன்றினில் பாதி நாளின் உம் – ஒரு மாதத்திற்பாதியாகிய
நாள்களிலெல்லாம், நள் இரவின் உம் சமர் நடத்தி – நடு இராத்திரியுமுட்பட
(விடாமற்) போரை நடத்தி, (எ – று.)- ‘உழந்து தளர்ந்தார்’ என
அடுத்தகவியோடு தொடர்ந்துமுடியும்.

     பகலும் இரவும் ஒழியாது பதினைந்துநாள் போர்செய்து என்பது
ஈற்றடியின் பொருள்.  சராசந்தவதம் இரவில் நிகழ்ந்ததென்று முதனூலால்
விளங்கும்.  தனது பலபராக்கிரமங்கட்கும் போரில் எளிதிற் பகைவெல்லும்
திறத்துக்கும் அறிகுறியாக, வீமன் சிங்கவடிவத்தைக் கொடியிற்
கொண்டனன்போலும். பதாகை – ‘பெருங்கொடி’ என்று
பொருளுரைத்திருக்கின்றனர், ஆசிரியர் நச்சினார்க்கினியர். யாளி –
யானையைக் கொல்லவல்லதும் சிங்கம் போல்வதும் துதிக்கை
யுடையதுமாகியதொரு யாளியானையென்னும் மிருக விசேஷமுமாம்.  என-
உவமவுருபு.  வலசாரி இடசாரிமண்டலம், பவுரி என்ற கதிவிசேடங்கள், இங்கு
‘சமர மண்டலங்கள்’ எனப்பட்டன.  சென்னித்தலத்தினும் –
தலையினிடத்தினாலு மென்க.  பாதி – பகுதியென்பதன்மரூஉ.  ‘யாளி
வெம்பதாகை வீரனு மிவனும்’ என்றும், ‘மற்றுஞ்சொன்ன போர்விதமெலாம்’
என்றும் பாடமுண்டு.  

பூதலம் நடுங்க, எழு கிரி நடுங்க, போதகத்தொடு
 திசை நடுங்க,
மீதலம் நடுங்க, கண்ட கண்டவர்தம் மெய்களும் மெய்
 உற நடுங்க,
பாதலம் நடுங்க, இருவர் மா மனமும் பறை அறைந்து
 அயர்வுடன் நடுங்க,
சாதல் அங்கு ஒழிந்த இடர் எலாம் உழந்து, தங்களில்
 தனித்தனி தளர்ந்தார்.

(தாங்கள் கொடும் போர்செய்யுந் திறத்தினால்), பூதலம் நடுங்க –
பூமி அதிரவும், எழு கிரி நடுங்க – ஏழுகுலபருவதங்கள் சலிக்கவும்,
போதகத்தொடு திசை நடுங்க-அஷ்டதிக்கஜங்களுடனே எட்டுத்திக்குக்களும்
தம்பிக்கவும், மீதலம் நடுங்க – மேலுள்ளதான விண்ணுலகம் அதிர்ந்தசையவும்,
கண்ட கண்டவர்தம் மெய்களும் மெய் உற நடுங்க-(அப்போரை) நோக்கின
நோக்கின சனங்களுடைய உடம்புகளும் மனமுமுட்பட (அச்சத்தால்)
நடுங்கவும், பாதலம் நடுங்க – கீழுலகமும் கம்பமடையவும், இருவர்
மாமனம்உம் பறை அறைந்து அயர்வுடன் நடுங்க – தம் இருவருடைய
நெஞ்சமும் பறை கொட்டினாற்போல மிகத்துடித்துச்சோர்வோடு பதறவும்,
சாதல் ஒழிந்த இடர் எலாம் அங்கு உழந்து – இறத்தலொன்று நீங்கலான
துன்பங்களையெல்லாம் அந்த மற்போரிலே பட்டு, தங்களில் தனிதனி
தளர்ந்தார் – தங்களுள்ளே தனித்தனியே [இருவரும்] களைப்புற்றார்கள்:
(எ -று.)

எழுகிரி – கைலாசம், இமயம், மந்தரம், விந்தியம், நிஷதம், ஏமகூடம்,
நீலகிரி என்பன; இவை-ஸப்தகுலபர்வத மெனப்படும்: கந்தமாதனமுங்கூட்டி,
அஷ்டகுலபர்வதமென்றலு முண்டு. ஐராவதம், புண்டரீகம், வாமநம், குமுதம்,
அஞ்சநம், புஷ்பதந்தம், சார்வபௌமம், சுப்பிரதீகம் என்கிற எட்டு
யானைகளும் முறையே கிழக்குமுதலிய எட்டுத்திக்குக்களிலும் கீழ்நின்று
பூமியைத் தாங்குதலால் ‘அஷ்டதிக்கஜம்’ எனப்படும்.  பத்துப் பிராயத்து யானைக்குட்டிக்கு ‘போதம்’ என்று வடமொழியிற் பெயர்:  அது ‘க’ ப்ரத்யயம்
பெற்று ‘போதகம்’ என நின்றது;  இங்கு யானையென்ற மாத்திரையாயிற்று.
‘கண்ட கண்டவர்’ என்ற அடுக்கு – எஞ்சாமையை விளக்கும்.
நிலையில்லாமையாற் பொய்யாகிய உடலை ‘மெய்’ என்றல், மங்கலவழக்கு.
அந்தக்கரணமாய்ச் சிறந்த உறுப்பாகிற மனமும், தலைமைதோன்ற
இலக்கணையால் ‘மெய்’ எனப்பட்டது.  ‘மெய்களும் மெய்யுற நடுங்க’
என்பதற்கு – உடம்புகளும் உண்மையாக நடுக்கமடைய என்று உரைத்தலு
மொன்று.  ‘மனமும் பறையறைந்து’-“நெஞ்சு பறைகொட்ட” என்றார் பிறரும்.
‘அங்கு’ என்பது – அசையுமாம்.  ‘சாதலொழிந்த இடரெலாம்’ எனவே, சாதற்கு
அண்ணியதான (மரணாந்தமான) அவஸ்தைக ளெல்லாம் என்றபடி.
‘இருவர்மாமனமும்பறை யறைந்து அயர்வுடன் நடுங்க’ என்பதற்கு –
(அருகில்நிற்கிற கண்ணன் அருச்சுனன் என்கிற) இரண்டுபேருடைய
சிறந்தமனமும் (இப்போர் வீம சராசந்தர்களில் யார்க்கு அநுகூலமாய்
முடியுமோ வென்று) தடுமாற்றமுற்றுப் பதைபதைத்து அயர்ச்சியடைய வென்று
உரைப்பாரு முளர்.  ‘இருவர்’ என்றது தொகைக் குறிப்பு.

கொல்ல என்று எண்ணும் இருவரும், ஒருவர் ஒருவரைக்
கொல்லொணாமையினால்,
மல் அமர் வலியும் இரு புயவலியும் இழந்து,
மா மகிதலத்து உறலும்,
கல் அடர் செம் பொன் வரையின் முக் குவடு காலுடன்
பறித்த கால் கண்டு,
நல்ல தன் மைந்தற்கு உணர்வு மீண்டு எய்த, நலத்துடன்
நல்கியது அன்றே.இருவரும் மூர்ச்சையடைந்தபின்பு வீமன் தெளிதல்.

கொல்ல என்று எண்ணும் இருவர்உம் – (ஒருவரை யொருவர்)
கொல்லவேண்டு மென்று நினைக்கின்ற (வீமன் சராசந்தன் என்ற) இரண்டு
பேரும், ஒருவர் ஒருவரை கொல் ஒணாமையினால் – ஒருவர் மற்றொருவரைக்
கொல்ல முடியாமையால், மல் அமர் வலி உம் இருபுயம் வலிஉம் இழந்து –
மற்போர்த்திறமும் இரண்டு தோள்களின் வலிமையுந்தொலையப் பெற்று, மா
மகி தலத்து உறலும் – பெரிய பூமியில் மூர்ச்சித்து விழுந்து கிடந்தாராக, கல்
அடர் செம்பொன்வரையின் முக்குவடுகாலுடன் பறித்த கால் – கற்கள் நிறைந்த
சிவந்த பொன்மயமான மேருகிரியினது மூன்று சிகரங்களை அடியோடுபிடுங்கிய
வாயுவானது, கண்டு – (தனது மகன் மூர்ச்சையடைந்ததைப்) பார்த்து, நல்ல
தன் மைந்தற்கு உணர்வு மீண்டு எய்த நலத்துடன் நல்கியது – தனது
சத்புத்திரனான அவ் வீமனுக்கு உணர்ச்சி மீளவும் உண்டாகும்படி இனிமையாய்
உதவிற்று;  (எ – று.)- அன்று, ஏ – ஈற்றசை; அப்பொழுதே யெனினுமாம்.

     ‘இருவரும் மூர்ச்சையடைதலும், இனிய காற்று வீச, வீமனுக்கு மூர்ச்சை
தெளிந்தது’ என்ற கருத்தை, தற்குறிப்பேற்ற வகையால், ‘வாயுதேவன் தன் மகன் மூர்ச்சையடைந்ததைப் பார்த்து, அவனுக்கு மீளவும் ப்ரஜ்ஞை வந்து
தெளிவுண்டாகுமாறு அன்போடு வந்து உதவினன்’ என்றார். தீயோர்க்கும்
நல்லோர்க்கும் கலகம் நிகழ்கையில் நல்லோர்க்கு உதவுதல் நல்லவரான
தேவர்களின் இயல்பு ஆதலால், வாயுதேவன் தேவாமிசமான வீமனுக்கு உதவின
னென்பதும்பட, ‘நல்ல தன்மைந்தற்கு நலத்துடன் நல்கியது’ என்றாரென்றுங்
கொள்ளலாம். கண்ணன் சொற்படி வீமன் தனது தந்தையான வாயுவை
மனத்திற்கொண்டு அவனது தெய்விக வலிமையைப் பெற்றுச் சராசந்தனை
வதைத்தனனென்று முதனூல் கூறும். தேவர்களை இருதிணையாலும்
கூறலாமாதலால், இங்கு ‘கால் நல்கியது’ என்று அஃறிணையாக் கூறப்பட்டது.
‘கொல்ல’ என்றது – அகரவிகுதிபெற்ற வியங்கோள்; இங்கு – கொல்வேனாக
என்று விரியும். கொல் லொணாமை – கொல்லவொன்றாமை யென்பதன் மரூஉ.

     பொன்வரையின் முக்குவடு பறித்தகதை:- முன்னொரு காலத்தில்
வாயுதேவனுக்கும் ஆதிசேஷனுக்கும் தமக்குள் யார் பலசாலியென்று விவாதம்
உண்டாக, அதனைப் பரீக்ஷித்தறியும் பொருட்டு வாயுதேவன் மேருமலையின்
சிகரத்தைப்பெயர்த்துத் தள்ளுவதென்றும், ஆதிசேஷன் அதுபெயர
வொட்டாமற் காத்துக்கொள்வதென்றும் கோட்பாடு உண்டாகி அங்ஙனமே
இருவரும் தேவர்கள் முதலியோர்களுடைய முன்னிலையிலே தம் தம்
வலிமையைக் காட்டத் தொடங்கியபொழுது, ஆதிசேஷன் தனது ஆயிரம்
படங்களாலும் மேருமலையின் ஆயிரஞ் சிகரங்களையும் கவித்துக்கொண்டு
பெயரவொட்டாமல் வெகுநேரங் காக்க, பின்பு வாயுதேவன் தன் வலிமையால்
அம்மலைச் சிகரங்களில் மூன்றைப் பெயர்த்துக்கொண்டு போய்த் தென்கடலில்
தள்ளி விட்டனன் என்பதாம். 

மீளவும் மிருக துவசன் உற்று எழுந்து, விதலையின்
விழுந்த மேவலனை,
தாளொடு தாள்கள் வலி உற, தன் பொன் தடக் கையால்
முடக்கு அறப் பிடித்து,
வாள் உகிர் வாளால் கனகனைப் பிளந்த வண் துழாய்
மணம் கமழ் மௌலிக்
கோள் அரி எனவே பிளந்து, எறிந்து, அண்ட கோளமும் பிளக்க,
நின்று, ஆர்த்தான்.வீமன் சராசந்தனுடலைக்கிழித்து எறிதல்.

மிருக துவசன் – சிங்கக்கொடி யுடையவனான வீமன், எழுந்து-
, மீளஉம்உற்று – மீண்டும்நெருங்கி, விதலையின் விழுந்த மேவலனை –
நடுக்கத்தோடு தரையில் விழுந்துகிடக்கிற பகைவனான சராசந்தனை, தாளொடு
தாள்கள் வலி உற – (அவனுடைய) ஒரு காலின் மீது (தன்னுடைய இரண்டு)
கால்களும் வலிமையாக ஊன்ற, தன் பொன் தட கையால் முடக்கு அற
பிடித்து – தனது அழகிய பெரிய கையினால் மடங்காதபடி (மற்றொருகாலைப்)
பிடித்து, வாள் உகிர் வாளால் கனகனை பிளந்த வண்துழாய் மணம் கமழ்
மௌலிகோள் அரிஎனஏ – பிரகாசமுள்ள வாளாயுதம்போற் கூரிய கைந்நகங்களினால் இரணியனைப் பிளந்து அழித்த வளப்பமுள்ள திருத்துழாயின்
வாசனைவீசுந் திருமுடியையுடைய வலிய நரசிங்கமூர்த்தி போலவே, பிளந்து-
(அச்சராசந்தனுடம்பை) இரு கூறாகக்கிழித்து, எறிந்து – (அவ்வுடற்கூறுகளை)
வீசியெறிந்து, நின்று – (தனது வெற்றி தோன்றப் போர்க்களத்தில்) நிலை
நின்று, அண்டகோளம் உம் பிளக்க ஆர்த்தான் – (பெருமுழக்கத்தினாலாகிய
அதிர்ச்சியால்) உலகவுருண்டையும் பிளவுபடும்படி ஆரவாரஞ் செய்தான்;
(எ-று.)

மிருகதுவசன், எழுந்து உற்று மேலவனை வலியுறப் பிடித்து, கனகனைப்
பிளந்த கோளரியெனவே பிளந்து, எறிந்து, நின்று, பிளக்க ஆர்த்தான் என
முடிபு காண்க.  சிங்கம் நகாயுத மெனப்படுதற்கு ஏற்ப, ‘உகிர்வாளால்’
எனப்பட்டது.  பொன்னிறமுள்ளவ னாதல்பற்றி வந்த ‘ஹிரண்யன்’ என்ற
பெயர்க்குப் பரியாயநாமமாக, ‘கனகன்’ என்றார், கநகம், ஹிரண்யம் என்ற வட
சொற்கள்-பொன்னின் பெயர்களாம்.  அண்டகோளமும் பிளக்க எறிந்து என்று
இயைத்து உரைப்பாருமுளர்.  மீளவும் உற்று எழுந்து – மீண்டும்
உணர்ச்சியுற்று எழுந்து எனினுமாம்.  மிருகமென்ற விலங்கின் பொதுப்பெயர்,
தலைமைபற்றி மிருகராசனான சிங்கத்தை யுணர்த்திற்று.  மேவலன் –
விரும்பாதவன், சேராதவன் எனவே, பகைவனாயிற்று.  முடக்கு – மடங்குதல்;
முடங்கு என்ற முதனிலைதிரிந்த தொழிற்பெயர்.  வாள் –
ஒளியையுணர்த்துகையில், உரிச்சொல்.

     கனகனைப் பிளந்த கதை:-தனித்தனி தேவர் மனிதர் விலங்கு
முதலிய பிராணிகளாலும் ஆயுதங்களாலும் பகலிலும் இரவிலும் பூமியிலும்
வானத்திலும் வீட்டின் அகத்திலும் புறத்திலும் தனக்கு மரணமில்லாதபடி வரம்
பெற்றவனும், இரணியாக்கனது உடன்பிளந்தவனுமான இரணியன் தேவர்
முதலிய யாவர்க்கும் கொடுமையியற்றித் தன்னையே கடவுளாக அனைவரும்
வணங்கும்படி செய்துவருகையில், அவனது மகனான பிரகலாதாழ்வான்,
இளமை தொடங்கி மகாவிஷ்ணுபக்தனாய், தந்தையின் கட்டளைப்படி முதலில்
அவன் பெயர் சொல்லிக் கல்வி கற்காமல், நாராயண நாமஞ் சொல்லி வரவே
கடுங்கோபங்கொண்ட இரணியன் பிரகலாதனைத் தன்வழிப் படுத்துதற்குப்
பலவாறு முயன்றபின் அங்ஙனம் வழிபடாத அவனைக் கொல்லுதற்கு என்ன
உபாயஞ் செய்தும் அவன் பகவானருளால் இறந்திலனாக, ஒருநாள்
சாயங்காலத்தில் தந்தை மைந்தனை நோக்கி ‘நீ சொல்லும் நாராயணனென்பான்
எங்கு உளன்?  காட்டு’ என்ன, அப்பிள்ளை “சாணினுமுளனோர் தண்மை
யணுவினைச் சதகூறிட்ட, கோணினு முளன் மாமேருக்குன்றினு முளன்
இந்நின்ற, தூணினு முளன் நீ சொன்ன சொல்லினு முளன்’ என்று சொல்ல,
உடனே இரணியன் ‘இங்கு உளனோ?’ என்று சொல்லி எதிரிலிருந்த தூணைப்
புடைக்க, அதனினின்று திருமால் மனித ரூபமும் சிங்கவடிவமுங் கலந்த
நரசிங்கமூர்த்தியாய்த் தோன்றி இரணியனைப் பிடித்து வாயிற்படியில்
தன்மடிமீது வைத்துக்கொண்டு தனது திருக்கைந் நகங்களால் அவன் மார்பைப்
பிளந்து அழித்திட்டுப் பிரகலாதனுக்கு அருள் செய்தனன் என்பதாம்

பிளந்து எறி பிளவு மீளவும் பொருந்தி, பிளிறு மா மத
கரி நிகர்ப்பக்
கிளர்ந்து, வெஞ் சமரம் தொடங்கலும், தனது கேதனக்
கேசரி அனையான்,
வளர்ந்த திண் புயத்தின் வலியினால், முன்னை மல் அமர்
எழு மடங்கு ஆக
உளைந்திட மலைந்து, வீழுமாறு உதைத்தான்; ஓர் இரண்டு
ஆனதால், உடலம்.மீண்டும் உடலொன்றிச்சராசந்தன் போர்தொடங்க, வீமன்
அவனுடலை மீளவும் பிளத்தல்.

பிளந்து எறி பிளவு – (இங்ஙனம் வீமனாற்) கிழித்து எறியப்பட்ட
(சராசந்தனது) உடல்கூறுகள், மீளவும் பொருந்தி-மீண்டும் ஒன்று சேர்ந்து,
பிளிறு மா மத கரி நிகர்ப்ப கிளர்ந்து – க்ர்ச்சிக்கின்ற பெரிய மதயானைபோல
உற்சாகங்கொண்டு எழுந்து, வெம் சமரம் தொடங்கலும்-கொடிய போரைத்
தொடங்குதலும், -தனது கேதனம் கேசரி அனையான் – தனது கொடியில்
வடிவு காணப்படுகிற சிங்கத்தைப் போன்றவனான வீமசேனன்,-வளர்ந்த திண்
புயத்தின் வலியினால் – (யுத்தாவேசத்தினால்) பூரித்தெழுந்த தனது கைகளின்
வலிமையைக்கொண்டு, முன்னை மல் அமர் எழுமடங்கு ஆக உளைந்திட
மலைந்து – முன்புசெய்த மற்போரினும் ஏழுமடங்கு மிகுதியாக (ச் சராசந்தன்)
தளர்ச்சியடையுமாறு (மற்போர்) பொருது, வீழும் ஆறு உதைத்தான் – (அவன்
தரையில்) வீழ்ந்திடுமாறு காலினாலுதைத்தான்:  உடலம் ஓர் இரண்டு ஆனது –
(அவ்வுதையினால்) சராசந்தனுடம்பு (மீளவும்) இருபிளவாயிற்று;  (எ – று.)-
ஆல் – ஈற்றசை.

     இங்கு நிகழும் வெற்றி தோல்விகட்கு ஏற்ப, வீமனுக்குச் சிங்கத்தையும்,
சராசந்தனுக்கு யானையையும் உவமைகூறினர்.  சிங்கம் யானையைப்
பிளந்திடுமாறுபோல, வீமன் சராசந்தனைக் கிழித்தன னென்க.  தனது
திறத்துக்கு ஏற்ற கொடியுடையானென்பார்.  “தனது கேதனக் கேசரியனையான்”
என்றார்.  ‘பிளவு’ என்ற தொழிற்பெயர், பிளக்கப்பட்ட கூறுகளுக்குத்
தொழிலாகுபெயராம்.  மதகரி – வடமொழித் தொடராதலின், வருமொழி
முதல்வலி இயல்பு.  கேதநம், கேஸரீ – வடசொற்கள்.  கேஸரம் – பிடரிமயிர்,
அதனையுடையது கேஸரீ என ஆண் சிங்கத்திற்குக் காரணக்குறி.  முன்னை,
ஐ-சாரியை. உடலம், அம்-சாரியை

சீறி, அக் குரிசில் கீண்ட பேர் உடலை, ‘சென்னி தாள்
செவ்வையின் இடாமல்
மாறி இட்டிடுக!’ என்று, ஆர் உயிர்த் துணையாய் வந்த
மா மரகத வடிவோன்
கூறி இட்டிடாமல் குறிப்பினால் உரைப்ப, குறிப்பை
அக் குறிப்பினால் குறித்து,
வேறு இடப் புவியின்மிசை எறிந்தனனால்; வீமன் வல்லபத்தை
யார் உரைப்பார்!அவ்வுடற்பிளவுகளை மாறிஇடும்படி கண்ணன்
குறிப்பிக்க, வீமன் அங்ஙனமே செய்தல்.

அ குரிசில் சீறி கீண்ட பேர் உடலை – பெருமையிற்
சிறந்தவனான அவ்வீமசேனன் கோபித்துக் கிழித்தெறிந்த பெரிய உடற்பிளவுகளை,
சென்னி தாள் செவ்வையின் இடாமல் மாறி இட்டிடுக என்று – தலையோடு
தலையும் காலோடு காலுமாக நேரே இடாமல் (தலையொடுகாலும் காலொடு
தலையுமாக) மாறிப்போட்டிடுவாயாக என்று, ஆர் உயிர் துணை ஆய் வந்த மா
மரகத வடிவோன் – (பாண்டவர்க்கு) அருமையான பிராணசகாயனாய் உடன்
வந்த சிறந்த மரகதமென்னும் பச்சையிரத்தினம்போன்ற திருமேனி
நிறமுடையவனான கண்ணபிரான், கூறியிட்டிடாமல் குறிப்பினால் உரைப்ப –
வாய்மொழியாற் கூறாமற் குறிப்பினாலுணர்த்த, (வீமசேனன்), குறிப்பை அ
குறிப்பினால் குறித்து – அங்ஙனங் குறிப்பித்த விஷயத்தை அக்கண்ணன்
குறிப்பித்த வகையினால் உணர்ந்து கொண்டு, வேறு இட புவியின் மிசை
எறிந்தனன் – (தலையும் காலும்) மாறுபட (அவ்வுடற்கூறுகளைப்)  பூமியின்மேல்
இட்டான்; வீடுமன் வல்லபத்தை யார் வியப்பார்- (உடல் வலிமை கொண்டு
பொருததேயன்றிக் குறிப்புணர்ந்து இங்ஙனம் ஏற்றபடி செய்த) வீமசேனனுடைய
திறமையைக் கொண்டாடிக் கூற வல்லவ ரெவர்?  [எவருமில்லை
யென்றபடி]: (எ-று.)-ஆல் ஈற்றசை; ஆதலால் என்பதன் விகார மெனினுமாம்.

    வீமனதுவல்லமை யாவராலும் வியந்து பேச முடியாதபடி மிகவிஞ்சி
யுள்ள தென்பதாம்.  கண்ணன் ஒரு கோரையையெடுத்து வீமன் காண இரு
கூறாக்கிழித்து அவ்விருபாதியையும் அடிநுனி மாறிஇட்டுக் குறிப்பிக்க,
அக்கருத்தை அச்செயலினால் வீமன் குறிப்பாக வுணர்ந்து சராசந்தனுடற்
கூறுகளை அங்ஙனம் தலையும் காலும் மாறுபடும்படி இட, அவை முன்போல
ஒருங்குகூடி எழ மாட்டா தொழிந்தன வென்க.  உயிர்த்துணை –
உயிரோடொத்த துணைவன், உயிரைப் பாதுகாக்குந் துணைவன்.  கருமை நீலம்
பசுமை என்ற நிறங்களில் ஒன்றற்கு ஒன்று உள்ள சிறிது வேறுபாட்டைப்
பெரிதாகக்கருதாது அபேதமாக உரைத்தல் கவிசமயமாதலால், கிருஷ்ணனை,
‘மரகதவடிவோன்’ என்றார்;  “பச்சைமா மலைபோல் மேனி…………அச்சுதா”
எனப் பெரியாரும் பணித்தார்.  ‘குறிப்பினாலுரைப்ப’ என்றவிடத்து, பேசாதது
பேசுவதுபோல சொல்லப்பட்டது;  ‘நாற்ற முரைக்கும் மலருண்மை’ என்றாற்
போல: வழுவமைதி, உரைப்ப=உணர்த்த. குரிசில் – ஆண்பாற் சிறப்புப்பெயர்.
பெருமை+உடல்=பேருடல்:  அருமை+உயிர்=ஆருயிர்: செவ்வை-‘ஐ’
விகுதிபெற்ற பண்புப் பெயர்.  இட்டிடுக+என்று=இட்டிடுகென்று:  வியங்கோளின்
ஈற்று அகரம் தொகுத்தல்விகாரப்பட்டது.  ‘இட்டிடுக’ என்பதில் ‘இடு’ என்பதும்
‘கூறியிட்டிடாமல்’ என்பதில் ‘இட்டிடு’ என்பதும் துணிவுணர்த்துந்
துணைவினையாய் நின்றன.  

சந்தச் சிகரச் சந்து அணியும் தடந் தோள் ஆண்மைச்
 சராசந்தன்,
முந்தப் பொருத மல் அமரில், முரணோடு அழிந்து
 முடிந்ததன்பின்,
இந்தப் புதுமைதனை வியவா, ஏத்தா, இறைஞ்சா,
 யதுகுல மா
மைந்தற்கு ஒரு வாசகம் உரைப்பான், மணித் தார்ப்
 புய வாசவன் மைந்தன்:சராசந்தனிறந்தமை கண்டுவியந்த அருச்சுனன்
கண்ணனை நோக்கி ஒன்று சொல்லத் தொடங்குதல்.

சந்தம் – அழகிய, சிகரம் – மலைச்சிகரம்போன்ற, சந்து
அணியும் தட தோள் – சந்தனத்தேய்வைபூசிய பெரியதோள்களின், ஆண்மை-
வலிமையையுடைய, சராசந்தன்-, முந்த பொருதமல் அமரில் – முற்பட்டுச்
செய்த மற்போரில், முரணோடு அழிந்து முடிந்ததன் பின்-வலிமையும் தானும்
அழிந்து ஒழிந்ததன்பின்பு,- மணி தார் புயம் வாசவன் மைந்தன் – அழகிய
மாலையை யணிந்த தோள்களையுடைய தேவேந்திரனது குமாரனான
அருச்சுனன், – இந்த புதுமைதனை வியவா – இந்த அற்புதச் செயலைக்குறித்து
ஆச்சரியங்கொண்டு, ஏத்தா இறைஞ்சா – (கண்ணபிரானைத்) துதித்து வணங்கி,
யதுகுலம் மா மைந்தற்கு ஒரு வாசகம் உரைப்பான் – யதுவென்னும் அரசனது
குலத்தில் தோன்றிய சிறந்த குமாரனான அக்கண்ணனை நோக்கி ஒரு
வார்த்தை சொல்பவனானான்; (எ – று.)-அதனை, அடுத்த கவியிற் காண்க.

    ‘இந்தப்புதுமை’ என்றது – சராசந்தனுடம்பு அடிமுதல் முடிவரையும்
இருகூறாகப் பிளவுபட்டபின்பு மீளவும்பொருந்தி உயிர் பெற்றெழுந்ததும், பின்பு
மாறி இட்டவளவிலே பொருந்தாது மாய்ந்தமையுமாகிய அதிசயச் செய்கையை.
‘சந்தச்சிகரச் சந்தணியும்’ என்பதற்கு – அழகியமலையில் தோன்றுகிற
சந்தனத்தின் குழம்பை யணியு மென்றும், ‘தடந்தோளாண்மை’ என்பதற்கு –
பெரியதோள்களையும் பௌருஷத்தையு முடையவென்றும், ‘சராசந்தன்
முரணோடு அழிந்து முடிந்ததற்பின்’ என்பதற்கு – மீள  மீளப் பிழைத்தெழும்
வலிமையும் அழிந்து சராசந்தன் இறந்ததன் பின்பு என்றும் உரைப்பாருமுளர்.
யதுகுலம் ஆம் மைந்தற்கு என்று பிரித்து, யதுகுலத்தில் தோன்றிய வீரனுக்கு
என்று உரைத்தலும் ஒன்று.  ‘முரணோடு அழிந்து’ என்பது-தலைகால்களை
மாறி இட்ட மாறுபாட்டினால் அழிந்து என்றும் பொருள்படும்.  வியவா, ஏத்தா,
இறைஞ்சா – உடன்பாட்டெச்சங்கள்.  ஏத்தா, இறைஞ்சா என்பவற்றிற்கு,
‘கண்ணனை’ என்ற செயப்படுபொருள் வருவிக்க.  வாஸவன் என்ற பெயர் –
அஷ்டவசுக்களுக்குத் தலைவனென்றும், ஐசுவரியமுடையவ னென்றும்
பொருள்படும்.  வசு என்றது – தேவர்களிலொரு பகுப்பினர்க்கும்
செல்வத்திற்கும் பெயராம்.  இதுமுதற் பதின்மூன்று கவிகள் – பெரும்பாலும்
மூன்றாஞ்சீரும் ஆறாஞ்சீரும் காய்ச்சீர்களும், மற்றைநான்கும்
மாச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு கொண்ட அறுசீராசிரிய
விருத்தங்கள்.
    

இன்று ஆர் அமரின் இவன் கையால் இறந்தோன்
உடலம் ஒன்றியதும்,
ஒன்றாது இரண்டு பட்டதும், யாம் உணரும்படி நீ
உரைத்தருள்வாய்-
குன்றால் அன்று மழை தடுத்த கொற்றக் கவிகைக்
கோபாலா!’
என்றான்; என்ற பொழுது, அவனும் இறந்தோன் சரிதம்
இனிது உரைப்பான்:அருச்சுனன்வினாவ, கண்ணன்,சராசந்தன் வரலாறு கூறத்
தொடங்குதல்.

அன்று – அந்நாளில் [முன்னொருகாலத்தி லென்றபடி], குன்றால்
– கோவர்த்தனமென்னும் மலையைக்கொண்டு, மழை தடுத்த – மழையைத்
தடுத்திட்ட, கொற்றம் கவிகை – கொற்றக்குடையையுடைய, கோபாலா –
கோபாலனே!-ஆர் அமரின்-(செய்தற்கு) அரிய போரில், இன்று-
இன்றைத்தினத்தில், இவன் கையால் இறந்தோன் – இவ்வீமசேனனுடைய
கையினால் இறந்தவனான சராசந்தனது, உடலம் – உடம்பின் கூறுகள்,
ஒன்றியதுஉம் – (முதலில்) ஒன்றுசேர்ந்து உயிர்த்தெழுந்ததன் காரணத்தையும்,
ஒன்றாது இரண்டுபட்டதுஉம் – (பின்பு) ஒன்றுபடாமல் (தனித்தனியே கிடந்து)
அழிந்ததன் காரணத்தையும், யாம் உணரும்படி நீ உரைத்தருள்வாய்-நாங்கள்
அறியும்படி நீ சொல்லியருள்வாய்’ என்றான் – என்று (அருச்சுனன்
கண்ணனை) வேண்டினான்: என்றபொழுது – என்று வேண்டியபொழுது,
அவனும் – அக்கண்ணபிரானும், இறந்தோன் சரிதம் இனிது உரைப்பான் –
இறந்திட்டவனான சராசந்தனுடைய வரலாற்றை நன்கு விளங்கச்
சொல்பவனானான்;  (எ – று.)- அதனை, அடுத்த ஆறுகவிகளிற் காண்க.

     ‘யாம்’ என்ற தன்மைப்பன்மை வீமனை உளப்படுத்தியது.  மேல் 36 –
ஆம் செய்யுளில், “அதுகேட்டுள மகிழ்ந்தார் சுரர்கோமகனும் துணைவனுமே”
என்பதும் காண்க.  இதனாலும், ‘இவன்’ என்று அண்மைச் சுட்டினாற்
குறித்ததனாலும், சராசந்தனை முடித்தபின்பு வீமன் கிருஷ்ணார்ச்சுனரைச்
சார்ந்திருந்தனனென்று அறிக.  அன்று – இளமையிலென்றபடி.
‘கோவர்த்தனமென்னும் கொற்றக்குடையே’ என்றபடி இந்திரன் பெய்வித்த
மழையைத் தடுத்தற்பொருட்டுக் கண்ணன் குடையாக எடுத்துப் பிடித்த
கோவர்த்தனமென்னும் மலை அம்மழையைச் சிறிதும் கீழ் விழவொட்டாதபடி
முற்றும்தடுத்து மேகங்களின் முயற்சியைப் பழுதுபடுத்தி இந்திரனையும்
வெல்லுதற்குக் காரணமானதும், அப்பொழுது கண்ணன் பசுக்களைச் சிறிதும்
வருந்தாதபடி குறிக்கொண்டு பாதுகாத்ததுபற்றி இந்திரனால் ‘கோவிந்தன்’ என்ற
திருநாமம் சூட்டிப் பட்டாபிஷேகஞ் செய்யப்பெற்றுக் கோக்களுக்கு
அதிபதியாகிக் கோபாலனாய் விளங்கியதும், அக்கோவிந்தபட்டாபிஷேகத்திற்கு
ஏற்ற கொற்றக்குடையை யுடைமையுந்தோன்ற ‘குன்றாலன்றுமழை தடுத்த
கொற்றக் கவிகைக் கோபாலா’ என்று விளித்தான்.  கொற்றக் கவிகை –
வெற்றியைத் தருகிற குடை: வெற்றிக்கு அடையாளமான குடை யெனினுமாம்.
கவிகை – கவிந்திருப்பதான குடைக்குத் தொழிலாகுபெயர்:  இதில், கை –
தொழிற்பெயர்விகுதி.  கோபாலன் – பசுக்களைக்காப்பவன்;  கோ – பசு.
‘அவனும்’ என்ற உம்மை-கதைத் தொடர்ச்சி பற்றியது;  இறந்து தழுவிய
எச்சத்தின் பாற்படும்.

     குன்றால் மழைதடுத்த கதை:- திருவாய்ப்பாடியில் ஆயர்களெல்லாரும்
கூடி மழையின் பொருட்டாக இந்திரனை ஆராதித்தற்கென்று வழக்கப்படி
சமைத்த சோற்றைக் கண்ணபிரான் ஒருகால் அவனுக்கு இடாதபடி விலக்கிக்
கோவர்த்தன மலைக்கு இடச்சொல்லித் தானே ஒரு தேவதா ரூபங்கொண்டு
அமுதுசெய்தருள, அவ்விந்திரன் கோபத்தோடு புஷ்கலாவர்த்தம் முதலிய பல
மேகங்களை யேவி, கண்ணன் விரும்பி மேய்க்கிற கன்றுகட்கும் பசுக்கட்கும்
கண்ணனுக்கு இஷ்டரான இடையர்க்கும் இடைச்சியர்க்கும் தீங்குதரும்படி
கல்மழையை ஏழுநாள் இடைவிடாது பெய்வித்தபொழுது கண்ணன் கோவர்த்தன
கிரியைக்குடையாகப் பிடித்து மழையைத் தடுத்து எல்லாவுயிர்களையும்
இடையூறு சிறிதுமின்றிக் காத்தருளின னென்பதாம். 

வானோர் பகைவர்களில் ஒருவன் மகத குலத்து,
மாரதப்பேர்
ஆனோன் வயிற்றில் அவதரித்தான்; அவன்காண்,
இந்த அடல் வேந்தன்;
மீனோததி சூழ் மேதினியின் வேந்தர் குலத்தை,
வேரோடும்,
தான் ஓர் ஆழி தனி நடத்தி, தடிந்தான், அணிந்த
சமர்தோறும்.இதுமுதல் ஆறுகவிகள் -கண்ணன் சராசந்தனது
வரலாற்றைக் கூறுதல்.

வானோர் பகைவர்களில் ஒருவன் – தேவர்கட்கு
ஜந்மசத்ருக்களான அசுரர்களில் ஒருத்தன், மகதகுலத்து மாரதன் பேர்
ஆனோன் வயிற்றில் அவதரித்தான் – மகததேசத்து – அசுரர்குலத்தில்
தோன்றிய பிருகத்ரத னென்னும் பெயருள்ள அரசனது வயிற்றினின்று
பிறந்தான்;  அவன் காண் இந்த அடல் வேந்தன் – அவனே
வலிமையையுடைய இச்சராசந்தன்; (இவன்), மீன உததிசூழ் மேதினியின் –
மீன்களையுடைய கடலினாற் சூழப்பட்ட பூலோகத்தில், தான் ஓர் ஆழி
தனிநடத்தி-தான் (தனது) ஒப்பற்ற ஆஜ்ஞாசக்கரத்தைப் பொதுவறநடத்தி,
அணிந்தசமர்தோறுஉம்-அணிவகுத்துச் செய்த போர்களிலெல்லாம், வேந்தர்
குலத்தை வேரோடுஉம் தடிந்தான் – ராஜவம்சத்தை வேரோடும்
துணித்திட்டான்;  (எ – று.)

    சராசந்தன் அசுராம்சமாய்ப் பிறந்தவனென்பது, முதல் வாக்கியத்தின்
கருத்து.  இனி, முதல்வாக்கியத்திற்கு – தேவர்கட்குப் பகையரசர்
களாயினோர்களில் மகதகுலத்து ப்ருகத்ரத னென்னும் அரசனிடத்து ஒரு
குமாரனுதித்தா னென்று பொருளுரைப்பாருமுளர்.  சந்திரகுலத்துப்
பூருவம்சத்தில் குருவென்னும் அரசனது புத்திரர் மூவர்.  அவருள்
சுதநுவென்பவனது மரபில் தோன்றியவன் உபரிசரவசு:  அவன் குமாரன் இந்த
ப்ருகத்ரதன் என்று அறிக.   இச்சந்ததியரசர்கள் மகததேசத்தை யாண்டு
மாகதரென்று பெயர்பெற்றதனால், இவர்கள் மரபு ‘மகதகுலம்’ எனப்பட்டது.
அசுரர்கட்கு ‘தேவசத்ருக்கள்’ என்று ஒரு பெயர் உள்ளதனால் அவர்களை
‘வானோர் பகைவர்கள்’ என்றார்.  ‘ப்ருகத்ரதன்’ ‘மஹாரதன்’ என்ற
வடமொழிப்பெயர்களிரண்டும் பெருந்தேருடையவனென்று ஒருபொருள்படுதல்
காண்க.  கருப்பம் கணவன்வயிற்றில் இரண்டுமாதம் தங்கிப் பின்பு மனைவியின்
வயிற்றிற்சேர்கிறதென்னும் நூல்வழக்குப்பற்றியும், ஒருவனது மனைவியின்
வயிற்றில் தோன்றியவரை அவனது வயிற்றில் தோன்றியவ ரென்னும் உலக
வழக்குப்பற்றியும், பிருகத்ரதனுடைய மனைவியரிருவர் வயிற்றினின்று
பிறந்தவனை ‘மாரதப்பேரானோன் வயிற்றிலவதரித்தான்’ என்றார்; இது –
ஒருவகை உபசாரவழக்கு.  வயிற்றில் – ‘இல்’, நீக்கப்பொருளில் வந்த ஐந்தனுருபு.
காண் – தேற்றம்.  மீநோததி – வடமொழித்தொடர்:  மீந+உததி; குணசந்தி;
உததி – நீர் தங்குமிடம்: உதம்=உதகம் – ஜலம்.  மேதிநீ – வடசொல்;
பூர்வத்தில் திருமாலினாற்கால்கொண்டு துகைத்துக் கொல்லப்பட்ட மதுகைடப
ரென்னும் அசுரர்களது மேதசினால் நனைந்தமைபற்றி, பூமிக்கு ‘மேதிநீ’ – என்று
பெயராயிற்று;  மேதஸ்-உடற்கொழுப்பு.  ‘வேரோடும்’ என்றது –
புத்திரபௌத்திராதி சந்ததியோடு மென்றபடி. ஓராழி தனி நடத்துபவன்,
ஏகசக்கராதிபதி யெனப்படுவன்

எண்ணற்கு அரிய முடி வேந்தர் எண்ணாயிரவர்
பசு ஆக,
மண் இத்தனையும் தன் குடைக்கீழ் வைக்கும்படி,
மா மகம் புரிவான்
கண்ணி, சிறையினிடை வைத்தான்; கண் ஆயிரத்தோன்
முதலாக
விண்ணில் பயிலும் தேவர்களும், இவன் பேர் சொல்ல
வெருவுவரால்!

 (இச்சராசந்தன்), மண் இத்தனைஉம் தன் குடைக்கீழ்வைகும்படி –
பூலோக முழுமையும் தனது அரசாட்சியின்கீழ் வைத்து நடத்தும்படி, எண்ணற்கு
அரிய முடிவேந்தர் எண் ஆயிரவர் பசுஆக மா மகம் புரிவான் கண்ணி –
மதித்தற்கு அருமையான கிரீடத்தைத் தரித்த அரசர்கள் எண்ணாயிரம்பேரே
யாகபசுக்களாக (அவர்களைக்கொன்று) பெரியநரமேதயாகஞ் செய்யக்கருதி,
சிறையினிடை வைத்தான் – (மிகப்பல அரசர்களைப் போரில் வென்று
உயிரோடுபிடித்துத் தனது) சிறைச்சாலையில் (அடைத்து) வைத்திட்டான்: கண்
ஆயிரத்தோன் முதல் ஆக விண்ணில் பயிலும் தேவர்கள்உம் –
(உடம்புமுழுவதுமாக) ஆயிரங்கண்களைப் பெற்றுள்ளவனான இந்திரன் முதலாக
மேலுலகிற் சஞ்சரிக்குந் தேவர்களும், இவன் பேர் சொல்ல வெருவுவர் – இந்தச்
சராசந்தனுடைய பெயரைச் சொல்ல அஞ்சுவார்கள்;  (எ – று.)- ஆல்-ஈற்றசை.

    இவன்பெயரைத் தம்வாயினாற் சொல்லுதற்கும் அஞ்சுவார்கள் எனவே,
இதனை எதிர்த்து நின்று போர்செய்தற்கு அஞ்சுவார்களென்று கூறாமலே
அமையும்.  இவன் பெயரைப் பிறர் சொல்லத் தாம் அது கேட்டவளவிலே
அஞ்சுவார்க ளென்றுங் கருத்துக்கொள்ளலாம்.  புக்தி சக்திகளிற்
சிறந்தவர்களாய் மேலுலகத்திலுள்ள தேவர்களும் தம் அரசனுட்பட இங்ஙனம்
அஞ்சுவார்களெனவே, அவ்வறிவாற்றல்களிற் குறைபாடுடையரான
இந்நிலவுலகத்து மனிதர்களும் அரசர்களும் இவன் பக்கல் மிக அஞ்சுதல்
சொல்லவேண்டாதாயிற்று.  ஆளுகையைக் குடை யென்றல், கவிசமயம்.  ‘தன்
குடைக்கீழ் வைகும்படி’ என்ற பாடத்திற்கு – நிலவுலகம் முழுவதும் தனது
அரசாட்சியின் கீழ்த் தங்கும்படியென்பது பொருள். ‘எண்ணற்கு அரிய’
என்பது-முடிக்கு அடைமொழி யாக்குதல், பொருந்தாது; மேல், ‘எண்ணாயிரவர்’
என்ற தொகைப் பெயர் வருதலால்.  சொல்ல = சொல்லவும், இழிவு சிறப்பும்மை
தொக்கது விகாரம்.  தேவர்களும், உம் – உயர்வு சிறப்பு.  மண் இத்தனையும்
– பூலோக மென்றுள்ளது எவ்வளவோ அவ்வளவையு மென்றபடி;  உம்மை,
முற்றுப்பொருளது.  ‘புரிவான்’ என்பதை, ‘வான்’ விகுதிபெற்ற எதிர்கால
வினையெச்ச மென்றாவது, அவ்விகுதி, பெற்ற தொழிற்பெயரின் இரண்டாம்
வேற்றுமைத்தொகை யென்றாவது கொள்க;  புரிவான் கண்ணி – புரியக்
கண்ணி; அல்லது புரிதலைக்கண்ணி.  கண்ணி, கண் – பகுதி

இவனைப் பயந்தோன் மகவு ஒன்றும் இன்றி,
சண்டகௌசிகப்பேர்த்
தவனைப் பணிந்து, வரம் வேண்ட, தவனும், தான் வாழ்
தடஞ் சூதத்து,
அவனிக்கு அரிய தீம் கனி ஒன்று அளித்தான்; அளித்த அக்
கனியை நவ நித்தில வாள் நகை இருவர் இல்
வாழ்பவர்க்கு நல்கினனால்.

இவனைப் பயந்தோன் – இச்சராசந்தனைப் பெற்ற தந்தையான
பிருகத்ரதன், மகவு ஒன்றுஉம் இன்றி – (ஆதியில்) ஒரு பிள்ளையு
மில்லாமையால், சண்டகௌசிகன் பேர் தவனை பணிந்து வரம் வேண்ட –
சண்டகௌசிகனென்னும் பெயரையுடைய முனிவனை நமஸ்கரித்து(ப்
புத்திரபாக்கியத்தைக் குறித்து) வரங்கேட்க,-தவன்உம் – அம்முனிவனும், தான்
வாழ் தடசூதத்து அவனிக்கு அரிய தீம் கனி ஒன்று அளித்தான் – தான்
வசித்தற்கு இடமான பெரிய மாமரத்தினின்று (தன்மடியில்) விழுந்ததும்
மண்ணுலகிற் கிடைத்தற்கரியதுமான இனிய ஒரு பழத்தை (அந்தப்
பிருகத்ரதமகாராசனுக்கு)க் கொடுத்தான்; அளித்த அ கனியை –
(அம்முனிவராற்) கொடுத்தருளப்பட்ட அந்த மாம்பழத்தை, (அவ்வரசன்), நவம்
நித்திலம் வாள் நகை இருவர் இல் வாழ்பவர்க்குஉம் நல்கினன் – புதிய
முத்துப்போன்ற ஒளியுள்ள பற்களையுடைய தன்மனைவியரிருவர்க்கும்
(உரியதாகக்) கொடுத்தான்; (எ – று.)

    பிருகத்ரதன் காசிராசனது இரட்டைப் பெண்களை மணஞ்செய்து
கொண்டபொழுது அவ்விருவரிடத்தும் தான் சிறிதும் பக்ஷபாதமின்றிச்சமமாக
நடப்பதாய் வாக்குத்தத்தஞ் செய்திருந்தனனாதலால், அவ்வுறுதிமொழி
தவறாமல் தனக்குவரமாக் கிடைத்த ஒருகனியை இருவர்க்குமாகக்
கொடுத்தனனென்க.  மகப்பேறளிக்குஞ் சிறப்பும் சுவைமிகுதியுந்தோன்ற
‘அவனிக்கு அரிய தீங்கனி’ எனப்பட்டது.  வெள்ளொளியிலும், அழகிய
வடிவிலும் முத்து-இப்பற்களுக்கு உவமை.  நாட்பட்ட பழைய முத்து
வெள்ளொளி மழுங்கிப் பழுப்படைந்திருக்கு மாகலின் அவை இப்பற்களுக்கு
உவமையாகாவென்பது தோன்ற, ‘நவநித்திலவாண’கை, என்றார்.  இல்வாழ்பவர்
– வீட்டிலிருந்துகொண்டு சம்சாரகாரியங்களைப் பார்ப்பவர்;  கணவன்
கிருகஸ்தாச்சிரம தருமத்தை நடத்துதற்குத் துணையாய் நிற்பவர்.  மகவு –
இளமைப்பெயர்.  தவன் – தவமுடையவன்.  ‘தவன்’ என்ற சொல்
இரண்டனுள், பின்னது – சுட்டுமாத்திரையாய் நின்றது, தான் வாழ் சூதம் – தான்
எந்த மாமரத்தினடியில் வீற்றிருந்தனனோ அந்தமாமரம் என்றபடி.
தீம்+கனி=தீங்கனி; தீம் – இனிமை.  தீம் – என்பதனடியாப் பிறந்த பெயரெச்சம்,
‘தீவிய’ என்றும், தீமை என்பதனடியாப் பிறந்த பெயரெச்சம்-‘தீய’ என்றும் நிற்கிற
வேறுபாடுங் காண்க.  சூதம், நவம் – வடசொற்கள்.  ‘அவனிக்கு’ என்பதில்
நான்கனுருபு ஏழனுருபின் பொருளில் வந்தது உருபு மயக்கம்.  ஆல் –
ஈற்றசை.   

காசித் தலைவன் கன்னியர், தம் கண்போல் வடு
முற்றிய கனியை
ஆசின் பிளந்து, தம் கொழுநன் அருளால், அமுது ஒத்து
இனிது அருந்த,
மாசு அற்று இலங்கும் மகவு இருவர்வயினும் பகிர்ந்து
வளர்ந்ததன் பின்,
பாசத்துடனே ஓர் ஒருவர் பயந்தார், வடிவில் பப்பாதி.

காசி தலைவன் கன்னியர் – காசிராசனது பெண்களான
அம்மாதரிருவரும், தம் கண்போல் வடு முற்றிய கனியை-தங்கள் கண்கள்
போன்ற இளமாம்பிஞ்சு முதிர்ந்ததான அந்தப் பழத்தை, தம் கொழுநன்
அருளால் ஆசின் பிளந்து அமுது ஒத்து இனிது அருந்த – தங்கள் கணவனது
கட்டளையின்படி விரைவாக (இருகூறாகப்) பிளந்து தேவாமிருதத்தை (உண்பது)
போன்று இனிமையாகப் புசித்தனராக,-மாசு அற்று இலங்கும் மகவு –
குற்றமின்றி விளங்கும் ஒருகுழந்தை, இருவர்வயின்உம்பகிர்ந்து வளர்ந்ததன்
பின் – அவ்விரண்டுமாதர்களுடைய கருப்பத்திலும் பாதிபாதியாய் நன்கு
வளர்ந்ததன் பின்பு, – பாசத்துடனே – அன்போடு, ஓரொருவர் – அவர்களில்
ஒவ்வொருவரும், வடிவில் பப்பாதி பயந்தார் – (ஒருபுதல்வனுடைய) வடிவத்தின்
பாதிபாதி அங்கத்தை ஈன்றனர்; (எ-று.)

    கர்ப்போற்பத்திக்கு மூலமான மாம்பழத்தை இருகூறாகப் பகிர்ந்து
ஒவ்வொருவர் ஒவ்வொருபாதியை உண்டன ராதலால் அக்காரணத்திற்கு ஏற்பக்
காரியமும் பரிணமிக்க, ஒரு குழந்தையின் வலப்பாதி ஒருத்தியின்
கருப்பத்தினின்றும் அதன் இடப்பாதி மற்றொருத்தியின் கருப்பத்தினின்றுமாக
வெளிவந்தன வென்க.  பிரசவிக்கிறகாலத்தில் தாயர்க்கு மகவைக்
கண்டுகளிக்கும் ஆதரம் உண்டாகின்ற இயற்கைபற்றி ‘பாசத்துடனே பயந்தார்’
என்றார்.  கண்போல் வடுமுற்றிய கனி – கண்ணைப்போல வடுவாயிருந்து
பின்பு முற்றிப் பழுத்த மாங்கனி.  மாம்பிஞ்சின் உட்பிளவு-மகளிர் கண்ணுக்கு,
வடிவில் உவமை;  “வடுப்பிளவனையகண்ணாள்”  என்றார்,
சீவகசிந்தாமணியிலும்.  ‘வடுப்போலுங்கண்’ என்று பிரசித்தமாக உவமை
சொல்லும் மரபுக்குமாறாக ‘கண்போல்வடு’ என்று உபமான உபமேயங்களை
மாற்றிச் சொன்னது எதிர்நிலையணி.  மாசு அற்று இலங்கும் மகவு – ஊமை
முடம் குருடு செவிடு முதலிய உடற்குறையில்லாத குழந்தை யென்றபடி.
வயின் – வயிறு;  வளர்ந்ததற்பின் – கருமுதிர்ந்த பின்பு.  பாதி + பாதி =
பப்பாதி:  மரூஉமுடிபு.  கன்னி – கந்யா என்ற வடசொல்லின் விகாரம்:
இளம்பெண் என்று பொருள். பாசம் – வடசொல்: அது போலப்
பந்தப்படுத்தலால், இலக்கணையாக, அன்புக்கு வழங்கும். ஆசின்பிளந்து –
அதன் பயன் பழுதுபடுமாறு பிளந்து எனினும் அமையும்; ஆசு – குற்றம்;
இன் – சாரியை.    

ஒருவன் இருவர் உதரத்தும் உடன் உற்பவித்த
உற்பாதம்
வெருவி, மகத குல வேந்தன் வியல் மா நகரின்
புறத்து எறிய,
புரிசை வாயில், கண்டு, அவற்றைப் புசிப்பாள் எடுத்து,
பொருத்தினளால்-
தருமம் உணரா மனத்தி, ஒரு தசை வாய் அரக்கி,
சரை என்பாள்.

ஒருவன் இருவர் உதரத்தும் உடன் உற்பவித்த உற்பாதம்
வெருவி – ஒருபுதல்வனே (பாதிபாதியாய்) இரண்டு மனைவியர் வயிற்றினின்றும்
ஒரே சமயத்திற் பிறந்ததை ஓர் உற்பாதமாகக்கருதி அந்தத்தீக்குறிக்கு அஞ்சி,
மகதகுல வேந்தன் வியல் மாநகரின்புறத்து எறிய – மகதகுலத்து அரசனான
அப்பிருகத்ரதன் (அவ்வுடற் கூறுகளை) விசாலமான சிறந்த தனது கிரிவிரச
நகரத்தின் வாயிற்புறத்திலே எறிவித்துவிட, புரிசை வாயில் –
அம்மதில்வாயிற்புறத்திலே, அவற்றை – அவ்வுடற் கூறுகளை, கண்டு –
பார்த்து, புசிப்பாள் – உண்ணவந்தவளான, தருமம் உணரா மனத்தி சரை
என்பாள் ஒரு தசை வாய் அரக்கி- தருமமென்பது இன்னதென்று
அறிதலுமில்லாத கொடுமனமுடையவளும் ஜரையென்னும் பெயருள்ளவளும்
புலாலுண்ணும் வாயுடையவளுமான ஒரு ராக்ஷசி, எடுத்து பொருத்தினள் –
(அவ்வுடற்பாதிகளை) எடுத்துப் பொருத்திப் பார்த்தாள்;  (எ – று.) – ஆல் –
ஈற்றசை;  செய்யுளி னிறுதியில் நிற்பதேயன்றிச் செய்யுளடியின் இறுதியில்
நிற்பதும் பயனிலையினிறுதியில் நிற்பதுமான இடைச்சொல்லும்
பொருள்தராதாயின் ஈற்றசை யெனவேபடும்.

    உற்பாதம்-பின்வருந்தீமைக்கு அறிகுறியாக முன்புதோன்றும் துர்நிமித்தம்.
தவப்பெருமையையுடைய முனிவ னருளிய மாங்கனியைப் புசித்ததனால்
இருமனைவியரும் கருப்பமாயினராதலின் இருகுழந்தைகள் பிறக்கு மென்று
மகிழ்ச்சிகொண்டிருந்த பிருகத்ரதன் அவ்விருவரும் பிரசவித்தவுடனே மகவின்
முகங்காணுமாசையாற் சென்று பார்க்கும்போது ஒருமகவே இருபாதியாய்ப்
பிறந்திருக்கக்கண்டு துன்பங்கொண்டு இது ஏதோ உற்பாதமா யிருக்கிறதென்று
அஞ்சி அவ்வுடற்பாதியிரண்டையும் ஊர்ப்புறத்தே எறிந்துவிடும்படி
கட்டளையிட, அங்ஙனமே தாதியர் அவற்றை யெடுத்துக் கொண்டுபோய்
அந்நகர் மதில் வாயிலின்புறத்தே எறிந்து விட்டனர்.  தசையுண்ணுமியல்புடைய
அரக்கியான ஜராதேவி அந்நகரின் அதிதேவதையாகிய தனது வழக்கத்தின்படி
இரவில் ஊரைச்சுற்றி வருகையில் அம்மானுட மகவின் இரு கூறுகளையும்
கண்டு புசிக்கும்படி எடுக்கையில் ஒவ்வொன்றும் சரிபாதியாயிருக்கிற
அதிசயத்தை நோக்கி ஊழ்வினைதூண்ட அவ்விருபாதியையும் நேருக்கு நேராக
வைத்துப் பொருத்திப் பார்த்தனள்.  அப்போது அவ்விருபாதியும் ஒன்றி ஒருவடிவாய் அமைந்து உயிர்பெற்றது என விவரங்காண்க.  ‘அவற்றை’
என்பது – கண்டு, புசிப்பாள், எடுத்து, பொருத்தினள் என்ற அனைத்துக்கும்
செயப்படுபொருளாம்.  ஊனைத்தின்று ஊனைப் பெருக்கும் ஒருபாவி
யென்பார், ‘தருமமுணராமனத்தியொருதசைவாயரக்கி’ என்றார்.  தருமமென்று
ஒன்று உள்ளதென்று அறியாதவளெனவே, அவ்வறத்தை
யநுட்டித்தறியாதவளென்பது சொல்ல வேண்டாதாயிற்று.

தன்னால் ஒன்றுபடுதலும் அத் தனயன்தன்னை,
‘சராசந்தன்
என்னா அழைத்தி’ என, மகதத்து இறைவற்கு அளித்து,
அங்கு ஏகினளால்;
அந் நாள் முதல் அப் பெயர் படைத்தான்; அதனால்,
இவ்வாறு ஆனது’ எனச்
சொன்னான்; அது கேட்டு, உளம் மகிழ்ந்தார், சுரர் கோ மகனும்
துணைவனுமே.

(அந்த ஜராதேவி), தன்னால் ஒன்று படுதலும்
(அவ்வுடற்பாதியிரண்டும்) தன்னாலே சந்தித்து ஒருவடிவாகவே, அ தனயன்
தன்னை – அந்தப்புதல்வனை, மகதத்து இறைவற்கு அளித்து –
மகததேசாதிபதியான பிருகத்ரதனுக்குக் கொடுத்து, சராசந்தன் என்னா
அழைத்தி என – (‘இக்குழந்தையை) ஜராசந்தனென்று பெயரிட்டு
அழைக்கக்கடவாய்’ என்று சொல்லி, அங்கு ஏகினள் – அவ்விடத்தினின்று
சென்றாள்; அ நாள் முதல் அ பெயர் படைத்தான் – அன்றுமுதலாக
(அப்புதல்வன்) ஜராஸந்தனென்னும் பெயரைப்பெற்றான்; அதனால் – இவனது
உற்பத்தி வரலாறு இங்ஙன மாதலால், இ ஆறு ஆனது – இப்படியாயிற்று, என
– என்று, சொன்னான் – (கண்ணன்) கூறினான்:  அதுகேட்டு-அவ்வரலாற்றைக்
கேட்டு சுரர் கோ மகன்உம் துணைவன்உம் – தேவராசனான இந்திரனது
குமாரனாகிய அருச்சுனனும் அவனது உடன்பிறந்தவனான வீமனும்,
உளம்மகிழ்ந்தார் – (அதிசயித்து) மனம் மகிழ்ந்தார்கள்; (எ – று.) – ஏ, ஆல் –
ஈற்றசைகள்.

    அருளறங்களை நோக்காது புலாலுண்ணுமியல்பினால் அவ்வுடற்
பிளவுகளைப் புசித்தற்கு எடுத்த ஜராதேவி அப்பிளவுகளைத் தன்கையாற்
பொருத்தியவுடனே ஒன்றி உயிர்த்தெழுந்த அக்குழந்தையைக் கொன்றுதின்ன
மனங்கொள்ளாது கருணைகூர்ந்து அம்மகவை மகவில்லாக்குறையால் மனம்
வருந்துகிற அந்நகரத்தரசனிடங் கொண்டுபோய்க் கொடுத்து நிகழ்ந்த
வரலாற்றைக் கூற, அவன் அக்குழவியை மகிழ்ச்சியோடு ஏற்று அன்புடன்
வளர்த்திட்டனனென்க.  ஜராஸந்தன் – ஜரையென்பவளாற் பொருத்தப்
பட்டவன்.  ‘அதனால் இவ்வாறு ஆனது’ என்றதன் தாற்பரியம் – முன்
இருபாதியாயிருந்தவை ஒன்றாகத் தெய்விகமாய் நேருக்கு நேராகவைத்துப்
பொருத்தப்பட்ட உடம்பாதலால் போரிலும்பிரிந்து நேருக்கு நேராயிருந்த
வளவிற் பொருந்திற்று என்றும், தலைகால்மாறி இடவே
பொருந்திப்பயன்படுதற்கு வகையின்றிப் பொருந்தாது இறந்தது என்றுங்
காண்க. உளம் – அகத்துஉறுப்பு:  அந்தக்கரணம்.  துணைவன். வ் –
பெயரிடைநிலை.  

வின முற்றியபின், மூவரும் நல் வின”ய புரி “பார்
 மன்னவர
இனதல் சிற விட்டு, இகல் மல்லால் இறந்”தான் மகன
 எழில் மகுடம்
புனவித், அந்த நகரீசன் பொன்-தாள் வணங்க, அவன் ஏறும்
துனை பொன் தடந் “தர் ஊர்ந், அறத்தின் சுதன் வந் எதிர்
 கொண்டிட, மீண்டார்கண்ணன் முதலிய மூவரும்இந்திரப்பிரத்த நகரத்திற்கு
மீளுதல்.

வினை முற்றியபின் – (இவ்வாறு) போர்த்தொழில் முடிந்த
பின்பு, மூவர்உம் – (கண்ணன் வீமன் அருச்சுனன் என்ற) மூன்றுபேரும், நல்
வினை ஏ புரிவோர் – தருமகாரியங்களையே செய்பவர்களாய், மன்னவரை
இனைதல் சிறை விட்டு – (சராசந்தனாற் சிறைவைக்கப்பட்ட) அரசர்களை
வருந்துதற்கிடமான சிறைச்சாலையினின்று விடுத்து, இகல் மல்லால் இறந்தோன்
மகனை எழில் மகுடம் புனைவித்து – வலியமற்போரினா லிறந்தவனான
சராசந்தனது புத்திரனாகிய சகதேவனை அழகிய முடிசூட்டுவித்து, அந்த நகரீ
ஈசன் பொன் தாள் வணங்க – அக்கிரி விரசநகரத்திற்கு அரசனாய் அமைந்த
அச்சகதேவன் (திறையுடன் வந்து) அழகிய (தங்கள்) பாதங்களில் விழுந்து
நகஸ்கரிக்க (ப் பெற்று), அவன் ஏறும் துனை பொன் தட தேர் ஊர்ந்து –
அச்சகதேவன் ஏறிவந்த விரைந்து செல்லும் பொன் மயமான பெரிய தேரில்
தாங்கள் ஏறி அதனைச் செலுத்திக்கொண்டு, அறத்தின் சுதன் வந்து
எதிர்கொண்டிட மீண்டார்-(தாங்கள் வெற்றியோடு வருதலைக் கேள்வியுற்ற)
தருமபுத்திரன் (மகிழ்ச்சியினால்) வந்து எதிர்கொள்ள மீண்டு இந்திரப்பிரத்த
நகரஞ் சேர்ந்தார்கள்;

    கண்ணபிரான் வீமார்ச்சுனரைத் தேரிலேற்றித் தான் தேரூர்ந்தனனென்று
முதனூல் கூறும்.  அச்சராசந்தனது தேரின் சிறப்பும் முதனூலிற் பரக்கக்
கூறப்பட்டுள்ளது:  அது, இந்திரனிடமிருந்து பிருகத்ரதனது தந்தையான
உபரிசரவசு பெற்றது.  உருத்திரமூர்த்திக்குப் பலியிடுமாறு சிறைவைக்கப்பட்ட
அரசர்களை அப்பிராணாபாயத்தினின்று நீக்கிச் சிறைவிடுத்தலும்,
வம்சபரம்பரையாக ஒரு நகரத்தை அரசாண்டுவருகிற ஓரரசன்
கொடியவனாயிருப்பது கருதி அவனைக்கொன்றாலும் அவ்வரசாட்சியைச்
சாதுவான அவன் மகனுக்கு அளித்தலும் பெரும்புண்ணியமாதலால்,
‘நல்வினையே புரிவோர் மன்னவரை யினைதற்சிறைவிட்டு இகல்மல்லாலிறந்தோன்
மகனை எழில்மகுடம்புனைவித்து’ என்றார். கீழ் 22- ஆம் கவியிற் கூறியபடி
சராசந்தன் தன் மகனுக்கு இராச்சிய பாட்டாபிஷேகஞ் செய்வித்திருக்கவும்,
மீண்டும் இவர்கள் அவனுக்கு முடிசூட்டுதல் எற்றுக்கு எனின், – அரசர்களின்
இராச்சியம் முதலிய செல்வம்யாவும் அவர்களை வென்றவர்க்கு
உரியனவாய்விடுகின்ற முறைமைப்படி சராசந்தனைக் கொன்ற தமக்கு
உரியனவாய்விட்ட அவனது அரசாட்சியை மீண்டும் அவன் மகனுக்கே தாம்
அருளினாற் கொடுத்தல் விளங்க என்க.  பொன்தாள் – பொன்னாலாகிய வீரக்
கழலையணிந்த பாதம் எனினுமாம்: இவ்வுரைக்கு, பொன் கருவியாகுபெயர்.
ஸு தன் – வடசொல். நகரீசன் – வடமொழித்தொடர்; தீர்க்கசந்திபெற்றது நகர்
ஈசன் எனப்பிரித்தலுமொன்று.  ‘நகரிசனம்பொற்றாள் வணங்க’ என்று பாடமோதி,
அந்தப்பட்டணத்திலுள்ள சனங்களெல்லாரும் தம்பாதத்திலே வணங்கவென்று
உரைப்பாருமுளர்;  இப்பாடம், முதனூலுக்கும் ஏற்கும்

கருதற்கு அரிய நிதி அனத்ம் கவர்ந்”தார் காட்ட, கண்டு உவந்த
முரசக் கொடி”யான் முன், “வதம் மொழிந்”தான் முதலாம்
முனிவரரும்
அரசக் குழாமும் ஈண்டிய “பர் அவயில், கடவுள் அரசு ஈன்ற
வரி வில் குமரன் மாதிரங்கள் வெல்வான் ஏகும் வக உரத்தான்:இனி, திக்குவிசயஞ்செய்தலைப்பற்றிய ஆலோசனை.

இதுவும், அடுத்தகவியும் – குளகம்.

     (இ -ள்.) கருதற்கு அரிய நிதி அனைத்துஉம் – (சராசந்தனிடமிருந்து
கொணர்ந்த) நினைத்தற்கும் முடியாத [அளவிறந்த] செல்வம் அவ்வளவையும்,
கவர்ந்தோர் காட்ட – (அங்கிருந்து) கவர்ந்துகொண்டு வந்தவர்களான வீமன்
முதலிய மூவரும் (இன்னதின்னதென்று) காண்பிக்க, கண்டுஉவந்த-(அவற்றைப்)
பார்த்து மகிழ்ந்த, முரசம் கொடியோன் முன் – முரசவாத்தியத்தின்
வடிவமெழுதிய கொடியையுடையவனான தருமபுத்திரனது முன்னிலையில்,
வேதம் மொழிந்தோன் முதல் ஆம் முனிவரர்உம் அரசர் குழாம் உம் ஈண்டிய
பேர் அவையில்-வேதங்களை (நான்கு கூறாகவகுத்துத் தன் மாணாக்கர்கட்கு)க்
கூறியருளிய வியாசபகவான் முதலான ருஷிசிரேஷ்டர்களும் அரசர்களுடைய
கூட்டமும் நெருங்கிய பெரியசபையிலே, கடவுள் அரசு ஈன்ற வரி வில் குமரன்
– தேவராசனான இந்திரன்பெற்ற கட்டமைந்த வில்லின் தொழிலிற் சிறந்த
குமாரனான அருச்சுனன், மாதிரங்கள் வெல்வான் ஏகும் வகை – திக்குக்களைச்
சயிப்பதற்குச் செல்லும்வகையை, உரைத்தான் – (பின்வருமாறு) கூறினான்; (எ –
று.)-அதனை, அடுத்த கவியிற் காண்க.

    திருமாலினது திருவவதாரமூர்த்தியாகிய வியாசமாமுனிவன் தத்துவஞானம்
முதலியவற்றில் அனைவரினுஞ் சிறத்தலால், அவனைத் தலைமையாக வைத்துக்
கூறினார்.  கலியுகத்தில் மனிதர்கட்கு ஆயுள் அறிவு ஆற்றல் முதலியன
குறைதலை நோக்கி, அவர்கட்கு உபயோகமாம்படி,  அருள்கொண்டு நடந்த
துவாபரயுகத்தின் அந்தத்திலே, பராசரமுனிவனது குமாரன், பலவாறு
சிதறிக்கிடந்த வேதத்தை இருக்கு யசுஸ் சாமம் அதர்வணம் என
நான்காகப்பிரித்துச் சுருக்கி வகுத்து அவற்றைமுறையே பைலன் வைசம்பாயநன்
ஜைமிநி ஸு மந்து என்ற நான்கு முனிவர்கட்கு ஓதுவித்து அவர்களைக்கொண்டு
உலகத்திற் பரவச்செய்து, வேதவியாசனென்னும் பெயரைப் பெற்றனனாதலால்,
அந்த மகாமுனிவனை, ‘வேதம்மொழிந்தோன்’ என்றார். மாதிரங்கள் வெல்வான்
ஏகும் வகை – ஒவ்வொரு திக்கிலுமுள்ள அரசர்களைச் சயித்தற்பொருட்டுப்
போர்க்குச் செல்லும் விதம்.  அரசர் + குழாம் – அரசக்குழாம், “சிலவிகாரமா
முயர்திணை.”  

‘சுருதிப் படி”ய வர ராயசூயப் பெயர் மா மகம் தொடங்கக்
கருதி, குணபால் எம்முன்னும், வட பால் யானும், கால்-திசக்கும்
நிருதித் திசக்கும் நடு எம்பி இவனும், சில “வள் நிர மணித் “தர்
வரு திக்கினில் இவ் இள”யானும், மலவான் எழுக வருக!’ எனா.இன்ன இன்ன திசைக்குஇன்னாரின்னார் போர்க்குச்
செல்வதென்று வரையறுத்தல்.

சுருதிப்படியே – வேதவிதிப்படியே, வர ராயசூயம் பெயர் மா
மகம் தொடங்க-சிறந்த ராஜசூயமென்னும் பெயருள்ள பெரிய யாகத்தை
ஆரம்பிப்பதற்கு, கருதி – ஆலோசித்து,-குணபால் எம்முன்உம்-கிழக்குத்
திக்கில் எமது தமையனான வீமனும், வடபால்யான் உம் – வடக்குத்திக்கில்
நானும், கால்திசைக்குஉம் நிருதி திசைக்குஉம் நடு எம்பி இவன்உம் –
வாயுவின்திக்கான வடமேற்குக்கும் நிருதியின்திக்கான தென்மேற்குக்கும்
நடுவிலுள்ளதாகிய மேற்குத்திக்கில் எமது தம்பியான இந்நகுலனும், சிலை வேள்
நிரைமணிதேர் வரு திக்கினில் இ இளையோன்உம் – வில்வன்மையில் தேர்ந்த
மன்மதனது ஒழுங்குபட்ட அழகிய தேராகிய தென்றற்காற்றுத் தோன்றி
வருவதற்கு இடமான தெற்குத்திக்கில் நம்மெல்லார்க்கும் இளையவனான இச்
சகதேவனுமாக, மலைவான் எழுக வருக – போர் செய்தற்பொருட்டு எழுந்து
செல்வோமாக, எனா-என்று, (எ-று.)- ‘அருச்சுனன் திக்குவிசயஞ்செய்யச்
செல்லும் வகையைச் சொன்னான்’ என்று முந்தின செய்யுளோடு இயைத்து
முடிக்க.  இங்ஙனமன்றி, அடுத்த செய்யுளில் வரும் ‘எழுந்தார்’ என்னும்
முற்றோடு கூட்ட முடிப்பாருமுளர்.

    இராயசூயயாகஞ் செய்து ஸம்ராட் என்னும் பெரும் பெயர்பெறுதற்கு
எல்லாவரசரையும் வென்று கீழ்ப்படுத்துதல் இன்றியமையாத தாதலால்,
‘ராயசூயப்பெயர் மாமகந் தொடங்கக்கருதி மலைவானெழுகவருக’ எனப்பட்டது.
மேற்றிசையென்ற பொருளை ‘காற்றிசைக்கும் நிருதித்திசைக்கும் நடு’ என்றது,
பிறிதினவிற்சியணி: தென்றிசையை ‘சிலைவேணிரைமணித்தேர் வரு திக்கு’
என்றதும் அது.  மெல்லிய கரும்பாகிய வில்லைக்கொண்டே பிரமன் முதல்
எறும்பு ஈறாகவுள்ள எல்லாவுயிர்களையும் பொருது எளிதில் வென்று
தன்வசப்படுத்தும் வில்வன்மையுடைமை தோன்ற, ‘சிலைவேள்’ என்றார்.
வேள் – (ஆண்பாற்கும் பெண்பாற்கும் ஒருவர் மீது ஒருவர்க்கு) விருப்பத்தை
விளைக்குந் தேவன்; அல்லது, (அனைவராலும்) விரும்பப்படும்
கட்டழகுடையவன்.  “ஆலைக்கரும்பு சிலை ஐங்கணை பூ நாண் சுரும்பு,
மாலைக்கிளி புரவி மாருதம் தேர்” என்றபடி காமோத்தீபகமான
தென்றற்காற்றை மன்மதனேறிவருந்தேர் என்று கூறுதல் மரபு ஆதலால்,
‘வேள்நிரைமணித்தேர்’ என்றார்.  ‘அத்தேர்வரு திக்கு’ எனவே, தெற்கு என்ற தாயிற்று, தேர்’ என்றதற்கு ஏற்ப, ‘வரிசையான மணிகள் கட்டிய’ என்ற
பொருளும் பொருந்த ‘நிரைமணி’ என்ற அடைமொழி
கொடுக்கப்பட்டதென்னலாம்; கிழக்கும் வடக்கும் மங்கலத்திசையாதலால்
அவை முறையே முன்னும், அவற்றிற்கு மாறான மற்றவை முறையே பின்னுமாக
வைத்துக் கூறப்பட்டன.  ‘ஸ்ருதி’ என்ற வடசொல் – எழுதாக்கிளவியாய்க் குரு
சிஷ்ய கிரமத்திலே கர்ணபரம்பரையாகக் கேள்வியில் வழங்கியதென்று
காரணம் பொருள்படும்.  குணக்கு+பால்=குணபால்.  வடக்கு+பால்=வடபால்.
முன்புபிறந்தவனை ‘முன்’ என்றது காலவாகுபெயர்.  எழுக – முற்றெச்சம்

எண்ணும் “சன”டன் விரவின் எழுந்தார், இவர் ஈர்-இரு”வாரும்;
விண்ணும், கடவுள் ஆலயமும் முதலா உள்ள “மல் உலகும்,
மண்ணும், புயங்க தலம் முதலாம் மற்று எவ் உலகும், மாதிரமும்,
ண்ணென்றிட்ட, ஐந் வகப் பெரும் “பர் இயத்தின் வனியினால்.வீமன் முதலிய நால்வரும்திக்குவிசயத்துக்குப்
புறப்படுதல்.

உடனே), இவர் ஈர் இருவோர்உம் – கீழ்க்கூறிய தருமன்
தம்பியர் நான்கு பேரும், எண்ணும் சேனையுடன் – (யாவராலும்) நன்கு
மதிக்கத்தக்க சிறந்த சேனைகளுடனே, விரைவின் எழுந்தார் – விரைவாக
(ப்போர்க்கு)ப் புறப்பட்டார்கள்;  ஐந்து வகை பெரும் பேர் இயத்தின்
துவனியினால் – (அப்பொழுது அச்சேனைகளில் முழக்கப்பட்ட) ஐந்துவகைப்
பெயரையுடைய பெரிய வாத்தியங்களின் முழக்கத்தினால்,-விண்உம் கடவுள்
ஆலயம்உம் முதல் ஆ உள்ள மேல் உலகுஉம் – அந்தரமும் தேவர்கட்கு
இருப்பிடமான சுவர்க்கமும் முதலாகவுள்ள மேலுலகங்களும், மண்உம் – இந்தப்
பூலோகமும், புயங்கதலம் – முதல் ஆம் மற்று எ உலகுஉம் -நாகலோகம்
முதலான மற்றைக் கீழுலகமனைத்தும், மாதிரம் உம்-(சுற்றிலுமுள்ள எட்டுத்)
திக்குக்களும், துண்ணென்றிட்ட திடுக்கிட்டன; (எ – று.)

     ஐந்துவகை இசைக்கருவி – தோற்கருவி, தொளைக்கருவி, நரம்புக்கருவி,
கஞ்சக்கருவி, மிடற்றுக்கருவி என்பன;  [கஞ்சம்=காம்ஸ்யம்; வெண்கலம்.
மிடறு-கண்டம், சாரீரம்,] துவனி-த்வனி என்ற வடசொல்லின் விகாரம்.
‘விண்ணும்—துண்ணென்றிட்ட’ என்றது, பலவகை யுத்தவாத்தியங்களின் மிக்க
கோஷத்தினால் அவ்வுலகங்கள் அதிர்ந்தன என்ற பொருளோடு,
அவ்விடங்களிலுள்ள சேதனப்பொருள்களனைத்தும் அஞ்சி நடுங்குதலையும்
அசேதனப்பொருள்க ளனைத்தும் அதிர்ச்சியையும் அடைந்தன என்ற
கருத்தையும் குறிக்கும்.  ஈரிருவோர் – பண்புத்தொகை.  இருவர் என்பது
இருவோர் எனச் சிறுபான்மை ஈற்றயல் அகரம் ஓகாரமாயிற்று.  ஆலயம்,
புஜங்கதலம் – வடசொற்கள் புஜங்கமென்ற பாம்பின் பெயர் – புஜம் கம் என்று
பிரிந்து, மார் பினால் செல்வதென்றும், வக்கிரகதியாக (வளைந்து வளைந்து)
செல்வதென்றும் காரணப்பொருள்படும். துண்ணெனல் – அச்சக்குறிப்பு.
துண்ணென்றிட்ட – பலவின்பாலிறந்தகாலமுற்று. 

நானம் கமழும் செங்கழுநீர் நறுந் தார் “வந்தர் நால்வர”ம்,
மானம் பெறு திண் “சன”டன், வளர் மாதிரத் வகுத் ஏவி,
மீனம், கமடம், ஏனம், நரஅரியாய், நரராய், மெய்ஞ் ஞான
ஆனந்தமும் ஆகிய நாதன், அன்”ற, வராபதி அடந்தான்.நால்வரையும்திக்குவிசயத்திற்கு அனுப்பின பின்பு
கண்ணன் துவாரகை சேர்தல்.

மீனம் – மற்சியாவதாரமும், கமடம் – கூர்மாவதாரமும், ஏனம்-
வராகாவதாரமும், நர அரி-நரசிங்காவதாரமும், ஆய்-ஆகி, நரர் ஆய் –
(வாமநன் பரசுராமன் தசரதராமன் பலராமன் கிருஷ்ணன் என்ற)
மநுஷ்யாவதாரங்களுமாகி, மெய் ஞான ஆனந்தம்உம் ஆகிய – ஸத்சித்
ஆநந்த ஸ்வரூபியுமாகிய, நாதன் (எல்லாப்பொருள்கட்குந்) தலைவனான
திருமால் (கண்ணபிரான்)-நானம் கமழும் – கஸ்தூரியின் பரிமளம் வீசுகின்ற,
செங்கழுநீர் நறுந்தார் – செங்கழுநீர் மலர்களினாலாகிய சுகந்த மாலையை
தரித்த, வேந்தர் நால்வரை உம்-(வீம அருச்சுன நகுல சகதேவரென்னும்)
அரசர்கள் நான்கு பேரையும், மானம் பெறு திண்சேனையுடன் – மானத்தையே
(முக்கியமாகப்) பெற்ற வலிய சேனையுடனே, வளர் மாதிரத்து வகுத்து ஏவி –
நீண்டுவளர்ந்த (பெரிய) (நான்கு) திசைகட்கும் (ஒவ்வொருவராகப்)
பகுதிப்படுத்தி அனுப்பிவிட்டு, அன்றே துவராபதி அடைந்தான் – அன்றைக்கே
(தனது) துவாரகாபதியைச் சேர்ந்தான்; (எ – று.)

    திக்விசயஞ் செய்துவர நான்கு திசைகட்கும் வீமனாதியர் நால்வரையும்
அனுப்பியபின்பு கண்ணன் அன்றே துவாரகை சேர்ந்தானென்க.
துஷ்டநிக்கிரக சிஷ்டபரிபாலனஞ் செய்தற் பொருட்டுத் திருமால் கரும
சம்பந்தத்தினாலன்றித் தனது இச்சாமாத்திரத்தாற் கொண்டருள்கிற தசாவதா
ரங்களுள் இனி நிகழ்வதான கல்கியவதாரம் நீங்கலாக இதுவரை நடந்த மற்றை
ஒன்பது அவதாரங்களும், ‘மீனம் கமடம் ஏனம் நரவரியாய் நரராய்’ என்று
குறிக்கப்பட்டன.  ஐந்து அவதாரங்களை ‘நரர் என்ற ஒரு சொல்லில்
அடக்கினார்; நரர் – மனிதர்.  நரவரி – மனிதவடிவங்கலந்த சிங்கவடிவம்;
“நரங்கலந்தசிங்கமாம்” என்றார் பெரியாரும்.

     1. மீனம் :-முன்னொரு காலத்திற் பிரமதேவன் கண்துயில்கையில்
சோமகனென்னும் அசுரன் வேதங்களையெல்லாம் கவர்ந்துகொண்டு கடலினுள்
மறைந்துசெல்ல, பிரமன் முதலிய தேவர்களின் வேண்டுகோளினால் திருமால்
ஒருமீனாகத் திருவவதரித்துக் கடலினுட்புக்கு, அவ்வசுரனைத்தேடிப்பிடித்துக்
கொன்று அவன் கவர்ந்துசென்ற வேதங்களை மீட்டுக்கொணர்ந்து
அன்னப்பறவை வடிவங்கொண்டு அவற்றைப் பிரமனுக்கு உபதேசித்தருளினன்.

     2. கமடம் :-திருப்பாற்கடல் கடைந்தபொழுது, மத்தாகியமந்தரகிரி
கடலினுள்ளே சென்று அழுந்திவிடாதபடி, திருமால்மகாகூர்மரூபத்தைத் தரித்து
அதற்கு ஆதாரமாக எழுந்தருளியிருந்தான்.

     3. ஏனம்:- இரணியனது உடன் பிறந்தவனான இரணியாக்கனென்னும்
கொடிய அசுரராசன் தன்வலிமையினாற் பூமியைப்பாயாகச் சுருட்டி
யெடுத்துக்கொண்டு கடலில் மூழ்கிச் சென்றபோது தேவர்முனிவர்
முதலியோரது வேண்டுகோளினால் திருமால்மகாவராகரூபமாகத்
திருவவதரித்துக் கடலினுட்புக்கு அவ்வசுரனை நாடிக்கண்டு பொருது கொன்று,
பாதாளலோகத்தைச் சார்ந்திருந்த பூமியை அங்குநின்று கோட்டினாற் குத்தி
யெடுத்துக்கொண்டுவந்து பழையபடி விரித்தருளினன்.

     4. நரவரி:- கீழ்,26-ஆம் செய்யுளுரையிற் காண்க.

     5. வாமநன்:- மகாபலியென்னும் அசுரராசன் தன்வல்லமையால்
இந்திரன் முதலிய யாவரையும் வென்று மூன்று உலகங்களையுந்
தன்வசப்படுத்தி அரசாண்டு செருக்குக்கொண்டிருந்தபொழுது, அரசிழந்த
தேவர்கள் திருமாலைச் சரணமடைந்து வேண்ட, அப்பெருமான், குள்ள
வடிவமான வாமநாவதாரங்கொண்டு, அந்தப்பலியினிடஞ்சென்று, தன்காலடியால்
மூவடிமண்வேண்டி அதுகொடுத்தற்கு அவன் இசைந்தவுடனே,
திரிவிக்கிரமனாக ஆகாயத்தை அளாவிவளர்ந்து, ஓரடியாற் பூலோகத்தையும்,
மற்றோரடியால் மேலுலகத்தையும் அளந்து, மூன்றாமடிக்காக அவன் முடியிற்
கால்வைத்து அவனைப் பாதாளத்தில் அழுத்தி அடக்கினன்.

     6. பரசுராமன்:-உலகத்திலே எவரும் அழிப்பவ ரில்லாமையாற்
கொழுத்துத் திரிந்து கொடுமை யியற்றிவந்த க்ஷத்திரிய வம்சங்கள் பலவற்றை
நாசஞ்செய்யும்பொருட்டு, நாராயணமூர்த்தி ஜமதக்நிமுனிவனது மனைவியான
ரேணுகையினிடம் ராமனாய்த் திருவவதரித்து, பரசுவென்னும் கோடாலிப்
படையையே ஆயுதமாகக்கொண்டு தனது தந்தையின் ஓமதேனுவைக் கவர்ந்து
அவனைக் கொன்றிட்டது காரணமாகக் கார்த்தவீரியார்ச்சுனனையும் அவனது
குமாரர்களையும் கொன்று அழித்து அதனாலேயே க்ஷத்திரிய வம்சம்
முழுவதன் மேலும் கோபாவேசங்கொண்டு உலகத்திலுள்ள அரசர்கள்
பலரையும் இருபத்தொரு தலைமுறைபொருது ஒழித்திட்டான்.

     7. தசரதராமன் :- ஒருகாலத்தில் தேவர்களெல்லோரும் இராவணன்
முதலிய ராக்ஷஸர்களின் உபத்திரவம் பொறுக்க மாட்டாமல் ஸ்ரீமகா
விஷ்ணுவைச் சரணமடைந்து வேண்ட, அப்பிரான் தசரதசக்கரவர்த்தி
குமாரனாக ஸ்ரீராமனாய்த் திருவவதரித்து, அரக்கர்களனைவரையும் ஒழித்து
நல்லோரைக் காத்தருளினன்.

     8-9. பலராம கிருஷ்ணர்:-துஷ்ட அசுரர்கள் பலரும் கெட்ட
அரசர்கள் பலரும் ஒருங்கேகூடி வசிப்பதனாலுண்டான பூமிபாரத்தைநி விருத்தி
செய்யும் பொருட்டு அப்பூமிதேவியின் பிரார்த்தனையின்படி தேவர்கள்
வேண்டியதனால், திருமால் வசுதேவகுமாரராய்ப் பலராம கிருஷ்ணர்களாகத்
திருவவதரித்தான்.

     இந்த ஒன்பது அவதாரங்களுள் பரசுராம பலராம அவதாரங்கள்
ஆவேசாவதாரமென்றும், மற்றவை அம்சாவதாரமென்றும், அவற்றுள்ளும்
ஸ்ரீராமகிருஷ்ணாவதாரங்கள் பூர்ணாவதாரங்களென்றும் அவற்றிலும்
கிருஷ்ணாவதாரம் சம்பூர்ணமென்றும் கூறப்படும்.  திருமாலுக்கு மற்றும் பல
அவதாரங்கள் நூல்களிற் கூறப்பட்டிருப்பினும், இவை
முக்கியாவதாரங்களாமென்று உணர்க.  திர்யக் ஜாதியைச் சேர்ந்த ஐந்து
அவதாரங்களை ஒன்றாகவும், மனுஷ்ய ஜாதியைச் சேர்ந்த ஐந்து
அவதாரங்களை ஒன்றாகவும், பிரித்தெடுத்துக் கூறினார்.  ‘ஆய்’ என்ற
சொல்லின் ஆற்றல், அந்தந்த வடிவமாகப் பிறந்தபொழுது தனது
தெய்வத்தன்மை மேலிடாமல் அவ்வவ்வடிவிற்கு உரிய உருவம் குணம்
செயல்களையே மேற்கொண்டிருந்தன னென்றதையுணர்த்து மென்பது
சம்பிரதாயம்.

     உயிரை நீத்தாவது மானத்தைப்பாதுகாக்குங் கருத்துச் சேனைவீரர்க்கு
முக்கியமாதலால், ‘மானம்பெறு திண் சேனை’ என்றார்.  மெய் – உண்மை
ஞானம்.  அன்றே, ஏ – தேற்றம். 

வான் மருச்சுதனும், ஈர்-இரண்டு கடல் வய
வரூதினியின் வர்க்கமும்,
நால் மருப்பு, ஒரு க, மும் மதத், வய நாகம் “மவி
வளர் திசயின் வாழ்
“கான் மதிக்க, நெடு வங்கமும், திகழ் கலிங்கமும்,
தெறு குலிங்கமும்
தான் மலத், முன முரண் மிகுத் வரு தரியலார
முன தள்ளி”ய.இதுமுதல்மூன்றுகவிகள்-வீமசேனன் கிழக்குத்
திக்குவிசயஞ் செய்தலைக்கூறும்.

வான் மருத் சுதன்உம் – பெருமையையுடைய வாயுதேவனது
குமாரனான வீமனும், ஈர் இரண்டு கடல் வயவரூதினியின் வர்க்கம் உம் –
(அவனுடன் புறப்பட்ட) நான்கு சமுத்திரங்கள் போன்ற வலிய (நான்கு)
சேனைவகைகளும், நால் மருப்பு ஒரு கை மும் மதத்து வய நாகம் மேவி
வளர் திசையின் வாழ் கோன் – நான்கு தந்தங்களையும் ஒருதுதிக்கையையும்
மூன்று மதங்களையுமுடைய வலிய (ஐராவத) யானை பொருந்தி வளர்கிற
(கிழக்குத்திக்கில் வசிக்கின்ற அத்திக்குப்) பாலகனான இந்திரனும், மதிக்க –
நன்கு மதிக்கும்படி,- நெடு வங்கம்உம் திகழ்கலிங்கம்உம் தெறு குலிங்கம்உம்
மலைத்து – பெரியவங்கதேசத் தரசரையும் விளங்குகிற கலிங்க தேசத்தரசரையும்
பகை யழிக்க வல்லவரான குலிங்கதேசத்தரசரையும் எதிர்த்துப்பொருது,
முனைமுரண் மிகுத்து வரு தரியலாரை முனை தள்ளி – போர் முனைகிற
வலிமையை மிகுதியாகக் காட்டி எதிர்த்துவந்த அப்பகையரசர்களை
அப்போர்முனைகளிற் கொன்று வீழ்த்தி, – (எ – று.) – ‘தடிந்து என அடுத்த
கவியோடு தொடரும்.

    வீமசேனன் கீழ்திசையிலே சேனையுடன் சென்று வங்க கலிங்க குலிங்க
தேசத்தாரோடு பொருது அப்பகைவர்களை முனைமுகத்தில் கொன்று
வீழ்த்தினா னென்றவாறு. மருச்சுதன் – மருத்ஸு தன். வான் மருத்-வானத்திற்
சஞ்சரிக்கிற வாயு எனினுமாம்.  ஈரிரண்டு கடல் – கீழ்கடல் தென்கடல்
மேல்கடல் வடகடல் என்ற நாற்றிசைக் கடல்கள்.  யானை தேர் குதிரை
காலாள் என்ற நால்வகைச் சேனைகட்கு நான்கு கடல்கள் உவமை
கூறப்பட்டன.  அளவிறந்த பரப்பும், அணியணியாக வருதலும், பேராரவாரமும்,
அச்சந்தருதலும்பற்றிச் சேனைக்குக் கடல் உவமை.  ஐராவதம் தனது
துதிக்கையின் இருபுறத்தும் இரட்டைத் தந்தமுடையதாதலால், ‘நான்மருப்பு
நாகம்’ எனப்பட்டது.  மும்மதம் – கன்னமிரண்டு, குறியொன்று ஆகிய
மூன்றிடத்தினின்றும் பெருகும்மதம்.  ‘நான்மருப்பு நாகம் மேவிவளர்திசை’
எனவே கிழக்குத்திசை யென்றதாயிற்று.  கஜங்களுள் ஐராவதம் –
கிழக்குத்திசை யானை.  அஷ்டதிக்குப்பாலகருள் இந்திரன் கிழக்குத்
திக்குப்பாலகன்.  வங்கம் கலிங்கம் குலிங்கம் என்ற தேசப்பெயர்கள்-
இடவாகுபெயராய், அந்தந்த நாட்டின் அரசையுணர்த்தின.  முனை –
போர்க்களம்.  மலைத்து, தள்ளி என்ற வினைகளுக்கும், அடுத்த இரண்டு
செய்யுள்களில் வருகிற தொடர்ச்சி வினைகளுக்கும், ‘மருச்சுதன்’, ‘வரூதினியின்
வர்க்கம்’ என்ற இரண்டும் வினைமுதலாம்.  கிழக்குத் திசையென்ற பொருளை,
‘நான்மருப்பொருகை மும்மதத்துவயநாக மேவிவளர்திசை’ என்று வேறு
வகையாகக் கூறினது.  பிறிதினவிற்சியணி.

     இதுமுதல் இருபத்துநான்கு கவிகள் – பெரும்பாலும் ஒன்று மூன்று
ஐந்தாஞ்சீர்கள் மாச்சீர்களும், இரண்டு நான்கு ஆறாஞ்சீர்கள்
கூவிளங்காய்ச்சீர்களும், ஏழாவது விளச்சீருமாகிய கழிநெடிலடி நான்கு
கொண்ட எழுசீராசிரியவிருத்தங்கள்.

மற்றும் மற்றும் அவண் மருவு பாடகளின் மன்
குலத்தொடு தடிந், “மல்
உற்ற உற்றவர, யானம் யாவ”ம் ஒடிந் இடிந்
பொடி”ண்ண”வ,
இற்ற இற்ற பல தலகளால், அல எறிந் “மாதி
வரு குருதியால்,
முற்ற முற்ற வரஇனமும் வார் குருதி நதி”மாய்
எழ, முருக்கி”ய,

அவண் மருவு – அக்கிழக்குத்திசையிற் பொருந்திய, மற்றும்
மற்றும் பாடைகளின் மன் – வேறு வேறு பாஷைகள் வழங்கும் நாடுகளின்
அரசர்களை, குலத்தொடு கடிந்து – வம்சத்தோடு நாசஞ்செய்து, – மேல் உற்ற
உற்றவரை – மற்றும் வந்து வந்து எதிர்த்த வீரர்களை, யானம் யாவை உம்
ஒடிந்து இடிந்து பொடியுண்ண – (அவர்களுடைய தேர் முதலிய)
வாகனங்களெல்லாம் முறிந்து நெருங்கிப் பொடியாய் விடவும், இற்ற இற்ற
பலதலைகளால் – மேன்மேல் அறுபட்ட பல தலைகளினாலும், அலை எறிந்து
மோதி வரு குருதியால் – அலைகளை வீசியடித்தோடி வருகிற இரத்தத்தினாலும்,
முற்ற முற்ற வரை இனம்உம் வார்குருதி நதிஉம் ஆய்எழ – அவ்விடங்கள்
முழுவதிலும் மலைக்கூட்டமும் நீண்ட இரத்த நதியுமாய்த் தோன்றவும்,
முருக்கி – அழித்து,- (எ – று.) – ‘குவித்து’ என அடுத்த கவியோடு தொடரும்.
ஏகாரங்கள் – ஈற்றசை.

    “சிங்களம் சோனகம் சாவகம் சீனம் துளுக் குடகம், கொங்கணம்
கன்னடம் கொல்லம் தெலுங்கம் கலிங்கம் வங்கம், சங்கம் மகதம் கடாரம்
கவுடம் கடுங்குசலம், தங்கும்புகழ்த் தமிழ்சூழ் பதினேழ்புவிதா மிவையே” என்ற
பதினெட்டுத்தேச பாஷைகளுள், கீழ்க்கவியிற் கூறிய வங்கமும் கலிங்கமும்
நீங்கலாக மற்றவற்றில், கிழக்குத்திக்கில் வழங்கும் பாஷைகள், ‘மற்றும்மற்றும்
அவண்மருவுபாடைகள்’ எனப்பட்டன.  பாடை – பாஷா.  இங்கு ‘பாடைகள்’
என்றது – தானியாகுபெயராய், பாஷைகள் வழங்குந்தேசங்களை யுணர்த்திற்று;
அந்தப் பாஷைகளின் அரசரெனவே, அவை வழங்கும் நாடுகளின்
அரசரென்பது தானே அமையுமென்றுங் கொள்க.  உற்ற உற்றவரை யானம்
யாவையும் பொடியுண்ணும்படியும் வரையினமும் குருதிநதியுமாய் எழும்படியும்
முருக்கியென்க. தலைகளின் குவியலால் மலைக்கூட்டமும் இரத்தப்
பெருக்கினால் இரத்தநதியுமாய் எழ என்று முறையே சென்று இயைதலால்,
முறைநிரனிறைப்பொருள்கோள். யாநம் – வடசொல்;  ஊர்தி;
தேர்யானைகுதிரைகள்.  முருக்கி – முருங்கி யென்பதன் பிறவினையான
முருக்கு – பகுதி; அடுக்குக்கள் மிகுதி பற்றியன. 

அந்த அந்த அவனிபர் எலாம், ‘அபயம், அபயம்!’
 என்று அடி வணங்க”வ,
வந்த வந்த நிதி யாவ”ம் சிகர வட மகீதரம்
 எனக் குவித்,
‘எந்த எந்த நரபாலர் பாரில் நிகர்’ என்ன என்ன,
 அவர் இற எனத்
தந்த தந்த வித தந்திமீ கொடு, தங்கள் மா நகரி சார”வ.

அந்த அந்த அவனிபர் எலாம் – (போரில் இறந்தவரொழிய
எஞ்சிநின்ற) அந்தந்த அரசர்களெல்லாரும், அபயம் அபயம் என்று அடி
வணங்க ஏ – அபயம் அபயமென்று [அபயம் வேண்டி] (வீமசேனனுடைய)
பாதங்களில் விழுந்து வணங்கவே (பின்பு வீமனும் அவனுடைய சேனைகளும்),
வந்த வந்த நிதி யாவைஉம் – (ஆங்காங்குக்) கிடைத்த கிடைத்த
செல்வங்களையெல்லாம், சிகரம் வட மகீதரம் என குவித்து – (ஆயிரம்)
சிகரங்களையுடைய வடக்கிலுள்ள (பொன்மயமான) மகா மேரு மலையைப்
போலக் குவியல்செய்து,- பாரில் எந்த எந்த நரபாலர் நிகர் என்ன என்ன-
‘பூமியில் எந்த எந்த அரசர்தாம் (இவ்வீமனுக்கு) ஒப்பாவர் (எவரும் ஒவ்வார்)’
என்று (கண்டவர்) அனைவரும் சொல்லும்படி, அவர் இறை என தந்த
தந்தவிதம் தந்திமீது, கொடு – அவ்வரசர்கள் திறையாக மிகுதியாகக் கொடுத்த
பலவகைப்பட்ட யானைகளின்மேல் (அச்செல்வக் குவியல்களையெல்லாம்)
ஏற்றிக்கொண்டு, தங்கள் மா நகரி சார – தங்களுடைய பெரிய இந்திரபிரத்த
நகரத்தையடைய, – (எ – று.) – ‘விசையன் ஏகினான்’ என அடுத்த கவியோடு
தொடர்ந்துமுடியும்.

    வீமசேனன் கீழைத்திசையில் மன்னரை வென்று அந்த அந்த மன்னர்
அபயம் வேண்டி அடிகளில் வீழ்ந்து கொடுத்த மலைபோல் திரண்ட
இறைப்பொருளை யானைமீது கொண்டு தனக்கு ஒப்பாரின்றி வெற்றியோடு
நகர்சார்ந்தன னென்க.  ‘அபயம்’ என்பதற்கு எங்களை அஞ்சாதேயென்று
பாதுகாக்கத் தக்கவன் நீ என்றாவது, அஞ்சாதேயென்று உன்னால் பாதுகாக்கத்
தக்கவர் நாங்கள் என்றாவது பொருள்கொள்க.  அ+பயம்=அபயம்:
வடமொழிச்சந்தி.  ‘அபயம் அபயம்’ என்ற அடுக்கு, அச்சம் பற்றினது.  நிதி,
சிகரம், மஹீதரம், நரபாலர், விததந்தீ – வடசொற்கள்.  சிகரம் – மலையுச்சி;
கொடுமுடி.  மகீதரம் – (மேலும் கீழும் இருந்து) பூமியைத் தாங்குவது; மகீ-
பூமி.  நரபாலர் – மனிதரைக் காப்பவர்.  தந்தீ – தந்தத்தையுடையது.
யானைகளின் வகைகள் – நதிசரம் வநசரம், கிரிசரம் என்பன;  இவை
முறையே நதிச்சார்பிலும் வனச்சார்பிலும் மலைச்சார்பிலும் தோன்றிச்
சஞ்சரிப்பன:  பத்திரம் மந்திரம் மிருகம் என்கிற யானை வகைகளும் உண்டு.
இறை – இறுக்கப்படுவது; இறு-பகுதி:  இறுத்தல்-செலுத்துதல்: ஐ-
செயப்படுபொருள் விகுதி.  

விசைய வெம் பகழி விசயன், வெவ் விசயொடு, இரு நிதிக்
 கிழவன் “மவி வாழ்
திசை அடந், கதிர் இரவி என்னும்வக சீறி, மாறு
பொரு தெவ்வர் ஆம்
நிசை அழிந் வெளி ஆக, நால் வக நெருங்கு
“சனயொடு நிலனும் நின்று
அசைய, வன்பினுடன் ஏகினான்-எழு பராகம்
எண் திச அடக்க”வ.இதுமுதல் ஐந்துகவிகள் -அருச்சுனன் வடக்குத் திக்கு
விஜயஞ்செய்தலைக் கூறும்.

விசையம் வெம் பகழி-வெற்றியைத் தருகிற கொடிய
அம்புகளையுடைய, விசையன் – அருச்சுனன், – வெம் விசையொடு –
கடுமையான வேகத்துடனே, இரு நிதி கிழவன் மேவி வாழ் திசை அடைந்து –
பெரிய நிதிகட்குத் தலைவனான குபேரன் பொருந்திவசிக்கிற திசையாகிய
வடக்குத் திசையைச் சார்ந்து, கதிர் இரவி என்னும் வகை சீறி-
கிரணங்களையுடைய சூரியனென்று (தன்னைச்) சொல்லும்படி உக்கிரங்கொண்டு,
மாறு பொரு தெவ்வர் ஆம் நிசை அழிந்து வெளி ஆக – மாறாகவந்து
போர்செய்கிற பகைவர்களாகிய இருள் அறத்தொலைந்து
வெட்டவெளியாகுமாறு, நால்வகை நெருங்கு சேனையொடு – செறிந்த
சதுரங்கசேனையுடனே, நிலன்உம் நின்று அசைய – (சலியாது நிற்பதனால்)
நிலமென்று பெயர்பெற்றதான பூமியும் (பாரமிகுதியைப் பொறுக்கமாட்டாமல்)
நெடும்பொழுது அசையவும், எழுபராகம் எண்திசை அடைக்க-(சேனைகள் செல்லுதலால்) மேலெழுந்த தூளி எட்டுத் திக்குகளையும்
மறைக்கவும், வன்பினுடன் ஏகினான் – வலிமையோடு (போர்க்குச்) சென்றான்;
(எ – று.)

    பராக்கிரமத்தினாலாகிற திவ்விய தேஜசோடு கூடிய அருச்சுனனை
ஆயிரங்கிரணங்களோடு விளங்குகின்ற சூரியனாகவும், அருச்சுனனால்
எளிதிலழிக்கப்படுகிற பகைவர்களைச் சூரியனால் எளிதில் ஒழிக்கப்படுகிற
இருளாகவும் உருவகஞ்செய்தார். வடதிசையிலுள்ள மிகப்பலராகிய வலிய
சிறந்த அரசர்களையெல்லாம் வெல்லுதற்கு ஏற்றவன் அருச்சுனனே யென்பார்,
இங்கு அவனை ‘விசயன்’ என்ற பெயரினாற் குறித்தார்.  விஜயம், விஜயன்
என்ற வடசொற்கள், தமிழில் விசயம், விசயன் வின்று விகாரப்படும்; அவை
முறையே எதுகையையும், பிராசத்தையும் நோக்கி, இங்கு ‘விசையம்’ ‘விசையன்’
என இடைப்போலி பெற்றன.  விசயன் (விஜயன்) என்ற பெயர் – விசேஷமான
வெற்றியையுடையவனென்று பொருள்படும்;  இதற்கு-தன்னைச்
சயிப்பவரெவருமில்லாதவனென்று பொருள் கூறுதலும் உண்டு.  மகாபதுமம்,
பதுமம், சங்கம், மகரம், கச்சபம், முகுந்தம், குந்தம் நீலம், வரம் என்ற ஒன்பது
நிதிகளுக்கும் குபேரன் தலைவனாய் நவநிதி நாயகனென்று ஒரு பெயர்
பெறுதலால், ‘இருநிதிக்கிழவன்’ என்பதற்கு – மிக்க நிதிகட்கு உரியவனென்று
பொருள்கொள்ளுதலே சிறப்பு;  இரு-பெருமை யென்னும் பொருளதான
இருமையென்ற பண்பின் அடி. குபேரன் வடக்குத்திக்குப் பாலகனாய்
அத்திசையிற் கைலாசகிரிச்சார்பிலே அளகாபுரியில் வாழ்தல்பற்றி, அத்திசை
‘நிதிக்கிழவன் மேவிவாழ் திசை’ எனப்பட்டது.  மேவி-விரும்பி எனினுமாம்.

     நிசா – இராத்திரி; இவ்விருட்பொழுதின் பெயர், இங்கு ஆகுபெயராய்,
அக்காலத்தில் மிகுதியாகத் தோன்றுகிற இருளை உணர்த்திற்று.  இது –
காலவாகுபெயர்.  முச்சுடர்களுள் மற்றையிருசுடர்களாகிய சந்திர
அக்கினியர்போலப் பதினாறு ஏழுகிரணங்களையுடையனாகாமற் சூரியன்
அவர்கட்குக் கொடுத்து வாங்குகிற ஆயிரங்கிரணங்களையுடையனாதலால்,
கதிரிரவி என்று விசேடித்துக் கூறப்பட்டனன்.  நிலம் – பூமி.  அது நிலன்என
இறுதிப்போலி பெற்றது.  நிலன் அசைதல்-பூகம்பம்.  எழுபராகம்-
வினைத்தொகை.  பராகம் – புழுதி.  ‘ழுபராகம்எண்டிசையடக்க’-
சொல்நிலையால் முரண்தொடை. அருச்சுனன் தான் செல்கிற வடதிசையில்
தன்னால் வெல்லப்படுகிற அரசர்களிடமிருந்து மிக்கசெல்வத்தைக் கொணர்ந்து
அதனால் தனஞ்சயனென்று பெயர்பெறுவதுபற்றி, அதற்கு ஏற்றதிசையென்பதற்கு
‘நிதிக்கிழவன்மேவிவாழ்திசை’ எனப்பட்டதென்க.  

பாரதப் பெயர் கொள் வருடம் ஆதி, பல பாரின்
உள்ள நரபாலர,
பேர் அற, குலமும் “வரற, பொரு, பிஞ்ஞகன்
கிரி”ம் இமயமும்
சேர மொத்தி, அவண் உள்ள கந்தருவர் கின்ன”ரசர்
பலர் திற இட,
போர் அடர்த், உகம் முடிந்தகால எழு புணரி என்ன
நனி பொங்கியே,

இதுமுதல் மூன்று கவிகள் – குளகம்.

     (இ -ள்.) (அருச்சுனன்),- பாரதம் பெயர் கொள் வருடம் ஆதி பல
பாரின் உள்ள நரபாலரை – பாரதமென்னும் பெயரைக்கொண்ட வர்ஷம்
[பாரதவர்ஷம்] முதலிய பல இடங்களிலுமுள்ள அரசர்களை, பேர் அற
குலம்உம் வேர் அற பொருது – (அவரவர்களுடைய) பெயரும்
வழங்காதொழியவும் வம்சமும் வேரோடு நாசமாகவும் போர் செய்து
(தொலைப்பவனாய்), – பிஞ்ஞகன் கிரிஉம் இமயம்உம் சேர மொத்தி-சிவபிரான்
வீற்றிருக்கின்ற மலையாகிய கைலாசத்தையும் இமயகிரியையும் ஒருங்கே
அடர்த்து, அவண் உள்ள கந்தருவர் கின்னர ஈசர் பல திறை இடபோர்
அடர்த்து – அவ்விடங்களிலுள்ள கந்தருவராஜர்களும் கின்னர ராஜர்களும்
பலவகைத் திறைப்பொருள்களைக் கொணர்ந்து கொடுக்கும்படி (அவர்களைப்)
போர்முனையில் நெருக்கி, உகம் முடிந்த காலை எழு புணரி என்ன நனி
பொங்கி – யுகாந்த காலத்திற் பொங்கியெழுகிற கடல்போல மிகவும்
உக்கிரங்கொண்டு,- (எ – று.)-‘அணுகி’ என அடுத்த கவியோடு தொடரும்.

    தென்கடலுக்கு வடக்காகவும் இமயமலைக்குத் தெற்காகவும் இருக்கின்ற
பூமியானது – நாபிமகாராசனது பௌத்திரனும் ருஷபமகாராசனது புத்திரனுமான
பரதனால் ஆளப்பட்டதனால், பாரதவர்ஷமென்று பெயர்பெற்றது:
அப்பாரதவருஷத்தில் பாண்டவரது இந்திரப்பிரத்த நகரத்துக்கு வடக்குப் பாகம்,
இங்கு ‘பாரதப்பெயர்கொள்வருடம்’ என்று குறிக்கப்பட்டது.  ஒன்பது
வர்ஷங்களுள் இப்பாரதவருஷத்துக்கு வடக்கே யிருக்கின்ற கிம்புருஷவர்ஷம்,
ஹரிவர்ஷம், இளாவிருதவர்ஷம்.  கேதுமாலவர்ஷம், ரம்பகவர்ஷம்,
இரண்மயவர்ஷம், குருவர்ஷம், பத்ராசுவவர்ஷம் என்ற எட்டையும் அடக்கி
‘பாரதப்பெயர் கொள்வருடமாதிபலபார்’ என்றார்; (கிம்புருஷவர்ஷம் முதலியன,
நாபிமகாராசனது உடன்பிறந்தவர்களான கிம்புருஷன் முதலிய எண்மர்க்கும்
தனித்தனி தந்தையாற் பகுத்துக் கொடுக்கப்பட்டமை பற்றி வந்த பெயராம்.)
இந்த ஒன்பது வருஷமுமே, ஜம்பூத்வீபத்தின் பிரிவுகள்.  இவற்றில்,
பாரதவர்ஷம் – கர்மபூமி; மற்றையெட்டும் – போகபூமி.  ‘பார்’ என்ற
பூமியின்பெயர் – இங்கு இலக்கணையாய், அதன் ஒருபகுப்பை யுணர்த்திற்று;
“மாயோன்மேய காடுறையுலகம்” என்ற தொல்காப்பியத்தில் ‘உலகம்’ என்றது
போல; இன் – ஏழனுருபு.

     மயில் தோகையைக் குறிக்கின்ற பிஞ்சம் என்ற வடசொல், தமிழில்
பிஞ்ஞகமென்று விகாரப்பட்டு வழங்கும்.  மயிற்பீலியினாலாகிய
தலைக்கோலத்தை யுடைமையால், சிவபிரானுக்கு, பிஞ்ஞகனென்று பெயர்.
கந்தருவர், கின்னரர் – பதினெட்டுத் தேவகணங்களிற் சேர்ந்தவர்.  கின்னரர் –
குதிரைமுகமும் மனிதவடிவமுமுடையவராய்க் கின்னரமென்னும் வாத்தியத்தைக்
கைக்கொண்டு இசைபாடித் திரிபவர், கிந்நரேசர் – குணசந்திபெற்ற வடமொழித் தொடர். பிரமனது தினத்தின் முடிவும் அவனது ஆயுளின் முடிவும் ஆகிய
கல்பாந்தகாலங்கள், இங்கு ‘உகமுடிந்தகாலை’ எனப்பட்டன; அக்காலங்களிற்
கடல்பொங்கி உலகத்தையழித்தல், மரபு; அவை முறையே நைமித்திகப்
பிரளயமென்றும், பிராகிருதப்பிரளயமென்றும் பெயர்பெறும்.  யுகம் காலம்
என்ற வடசொற்கள் – உகம் காலை என்று விகாரப்பட்டன.  புணரி – (நதிகள்
தன்னிடம்வந்து) புணரப்பெறுவது;  புணர் – பகுதி; புணர்தல் – கலத்தல்: இ-
பெயர்விகுதி;  (நதிகளை மனைவியராகவும் கடலைக் கணவனாகவுங் கொண்டு
அதனை நதிபதியென்று வழங்குதல் உணரத்தக்கது.) வருடம் –
வடமொழித்திரிபு:  வாசஞ் செய்யுமிடம்.  ஆதியென்பது – வடசொல்லாதலால்,
‘ஆதிபல’ என அதன் முன் வலி இயல்பாயிற்று.  ‘கந்தருவகின்னரேசர்’ என்ற
பாடத்திற்கு, ஈசர் என்பது கந்தருவ என்பதனோடுந் தொடரும்;  கந்தர் வேசர்,
கிந்நரேசர் என்க.    

விந்த மால் வரையும், ஏமகூடமுடன், நிடத நாம
நெடு வெற்பும், மா
மந்தராசலம், விசால மாலிய மணித் தடஞ் சிகர
மலையுடன்,
கந்தமாதனமும், நீல சலமும், எனப் புகன்ற பல
கிரியில் வாழ்
அந்தராதிபர் நடுங்க, “மரு கிரி அப் புறத் நனி அணுகி”ய,

மால் விந்தம் வரைஉம் – பெரிய விந்தியகிரியும்,
ஏமகூடமுடன் நிடதம் நாமம் நெடுவெற்புஉம் – ஏமகூடம் நிஷதம் என்னும்
பெயருள்ள பெரியபர்வதங்களும், மா மந்தர அசலம் – பெரிய மந்தரகிரியும்,
விசாலம் மணி தடம் சிகரம் மாலியம் மலையுடன் – பரந்த அழகிய பெரிய
சிகரங்களையுடைய மாலியவாந் என்னும் மலையும், கெந்தமாதனம்உம் –
கந்தமாதன பருவதமும், நீலசைலம்உம் – நீலகிரியும், என புகன்ற-என்று
சொல்லப்பட்ட, பல கிரியில் – பல மலைகளிலும், வாழ் – வசிக்கின்ற, அந்தர
அதிபர் – ஆகாசஸஞ்சாரிகளான வித்யாதர யக்ஷ கந்தர்வ கின்னரராசர்
முதலியோர், நடுங்க – (அச்சத்தால் உள்ளமும் உடலமும்) நடுங்கும்படி,
மேருகிரி அப்புறத்துஉம் நனி அணுகி – மகாமேரு மலைக்கு அப்பாலும்
மிகுதியாக [நெடுந்தூரம்] சென்று, – (எ-று.) – ‘அடக்கி’ என்று அடுத்த
கவியோடு தொடரும்.

    இச்செய்யுளின் முதல் மூன்று அடிகளிற் குறிக்கப்பட்ட ஏழு
மலைகளையும் சப்தகுலகிரியென்பர் ஒருசாரார்;  ஏழுத்வீபங்களுள்
மற்றவற்றிற்கு நடுவிலுள்ளதான ஜம்பூத்வீபத்தின் நடுவிலே ‘மேரு’ என்கிற
சுவர்ணபர்வதம் விளங்குகிறது;  ஜம்பூத்வீபத்தின் பகுப்பான ஒன்பது
வர்ஷங்களுள் இளாவிருதவர்ஷம் மேருவைச் சுற்றிலுமுள பூமியாம்;
அதனையடுத்து முறையே வடக்கில் ரம்பகம் இரண்மயம் குரு என்ற
வர்ஷங்களும், முறையே தெற்கில் ஹரி கிம்புருஷம் பாரதம் என்ற
வர்ஷங்களும் இருக்கின்றன; பாரதவர்ஷம் எப்படி தெற்கின் கடைசியோ,
அப்படியே குரு வருஷம் வடக்கின் கடைசி;  மேருவிற்குக் கிழக்கில் பத்ராசுவ
வர்ஷமும், மேற்கில் கேதுமாலவர்ஷமும் உள்ளன.  பாரதவர்ஷத் தின்
வடதிசையெல்லைமலை இமயமாதல் போலக் கிம்புருஷவர்ஷத்தின்
வடதிசையெல்லை மலை ஏமகூடமும், ஹரிவர்ஷத்தின் வடதிசை யெல்லைமலை
நிஷதமுமாம்;  ஆகவே, கிம்புருஷவர்ஷத்திற்கு ஏமகூடவர்ஷ மென்றும்,
ஹரிவர்ஷத்திற்கு நிஷதவர்ஷ மென்றும் பெயருண்டு.  நீலசைலம்
ரம்பகவர்ஷத்தின் தென்திசை யெல்லைமலை.  மேருவையடுத்து
இளாவிருதவர்ஷத்திலுள்ள நான்கு மலைகளுள் கிழக்குமலை மந்தரமும்,
மேற்குமலை கந்தமாதநமுமாம்.  மால்யவான் என்ற மலையும்மேருவின்
கிழக்கிலுள்ளது.  விந்தியமலை பாரதவர்ஷத்தின் இடையிலுள்ள தென்பது,
வெளிப்படை.  விந்தியகிரி இந்திரபிரத்தத்துக்குத் தெற்கிலுள்ளதாயினும்
குலகிரிகளிற் சேர்ந்ததாதலால் இங்குக் கூறப்பட்டது.

    விந்த்யம், ஹேமகூடம், நிஷதம், மால்யவாந், கந்தமாதநம் என்ற
வடசொற்கள் விகாரப்பட்டன.  நாமம், மந்தராசலம், விஸாலம், நீலஸைலம்,
அந்தராதிபர், மேருகிரி – வடசொற்கள்.  மந்தராசலம், அந்தராதிபர் – தீர்க்க
சந்தி.  அம் தரா அதிபர் என்றுபிரித்து, அழகிய பூமிக்குத் தலைவரென்று
உரைப்பாருமுளர்.  மணித்தடஞ் சிகரம் – இரத்தினங்களுடைய பெரிய
சிகரமெனினுமாம்.  விந்த்யம் – (சூரியஸஞ்சாரத்தைத்) தகைந்தது; (அகத்திய
முனிவரால்) அடக்கப்பட்டது.  ஹேமகூடம் – பொன் மயமான சிகரமுள்ளது.
நிஷதம் – (தேவர்கள்) தங்கப்பெற்றது.  மால்யவாந் – மாலையின்
வடிவமுள்ளது.  கந்தமாதநம் – மலர்மணத்தினால் மகிழ்விப்பது.  நீலம் –
நீலநிறமானது.    

அத் திசக்கண் அரசான உத்தர குருக்கள் “மன்மய
அடக்கி, ‘மேல்
எத் திசக்கும் இவன் அன்றி வீரர் இலர்’ என்று
“தவரும் இயம்ப”வ,
மெத் இசப் பனி நிலா எழ, சமர விசய கம்பமும் நிறுத்தினான்;-
முத் இசக்கும், மதி, வெண்குடக் கடவுள் முதல்வனான
அரி புதல்வ”ன.

அ திசைக்கண் அரசு ஆன – அந்த வடதிசை யெல்லையில்
வாழ்கிற அரசர்களாகிய, உத்தரகுருக்கள் – உத்தர குருக்களென்பவருடைய,
மேன்மையை-பெருமிதத்தை, அடக்கி-,-மேல் – பின்பு, எ திசைக்கு உம் இவன்
அன்றி வீரர் இலர் என்று தேவர்உம் இயம்ப – எந்தத்திசையிலும் இவனன்றி
வேறு சிறந்த வீரரில்லை என்று தேவர்களும் (தன்னை) வியந்து கூற, மெத்து
இசை பனி நிலா எழ – மிக்க கீர்த்தியாகிய குளிர்ந்த சந்திர காந்தி எழுந்து
பரவ, சமரம் விசயம் கம்பம் உம் நிறுத்தினான்-போர் வெற்றியைக் குறிக்கின்ற
தூணையும் (அவ்வுத்தரகுரு பூமியில்) நாட்டினான்: (யாவனெனில்),-மதி –
சந்திரமண்டலம் போன்ற, முத்து இசைக்கும் வெள் குடை –
முத்துக்களினாலமைக்கப்பட்ட வெண்கொற்றக்குடையையுடைய, கடவுள்
முதல்வன் ஆன அரி புதல்வன் – தேவராசனான இந்திரனது குமாரனாகிய
அருச்சுனன்; (எ – று.)

    ஜம்பூத்வீபத்தில் இந்தப் பாரதவர்ஷத்திலே தமது குரு நாட்டுக்கு
வடக்கிலுள்ள நாடுகளின் அரசர்களையும், இப்பாரதவருஷத்திற்கு வடக்கிலுள்ள
மற்றை எட்டுவர்ஷங்களின் அரசர் களையும், ஸப்தகுல
பருவதங்களிலுள்ளாரையும் வென்றனன் அருச்சுனன் என்றறிக.

    ஜம்பூத்வீபத்தில் வடகோடியான குருவர்ஷத்தில் வசிக்கிற அரசர்கள்
‘உத்தரகுருக்கள்’ எனப்பட்டனர்;  இவர்கள், ஜம்பூத்வீபத்தின் அதிபதியான
ஆக்நீத்திர ராசனது புதல்வ ரொன்பதின் மரிற் குருவென்னும் அரசனது
குலத்தவர்.  பாரதவர்ஷத்தில் சந்திரவம்சத்துக் குருவென்னும் அரசனது
சந்ததியார்களான பாண்டவ துரியோதனாதியரும் குருக்களெனப்படுதலால்,
இந்தத் தக்ஷிணகுருக்களினும் வேறுபாடு விளங்க ‘உத்தரகுருக்கள்’ என்றா
ரெனவுங் கொள்ளலாம்.  அரசு – உயர்திணைப்பொருள்தரும்
அஃறிணைச்சொல்.  மேன்மை – மேம்பாடு, பலம், பராக்கிரமம், வெற்றி,
களிப்பு, செருக்கு.  திசைக்கு – உருபுமயக்கம்.  மெத்து இசை –
வினைத்தொகை.  முத்துக்குடைக்கு பூர்ண சந்திரன் – வட்டவடிவிலும்
வெண்மையான குளிர்ந்த ஒளியிலும் உவமம்.  முத்து இசைக்குங் குடை
யென்று இயையும்.  விஜயகம்பமும் நிறுத்தினான், உம் – இறந்ததுதழுவிய
எச்சம்.  கீர்த்தியைவெண்ணிறமுடைய தென்றல் கவிமரபாதலால்
‘இசைப்பனிநிலாவெழ’ எனப்பட்டது. 

கரிகள் “காடி, இரதங்கள் “காடி, பவனத்தினும்
கடுகு கவன வெம்
பரிகள் “காடி, நவ”காடி மா மணிகள், பல் வகப் படு
பசும் பொனின்
கிரிகள் “காடி என”வ, கவர்ந், எழு கிரிப் புறம்
தெறு கிரீடி வந்,
அரிகள் “காடி கிளர் “சால சூழ் தம செல்வ மா நகரி
அணுகினான்.

எழுகிரி புறம் தெறு கிரீடி – ஸப்தகுலபர்வதங்
களினிடத்தையடர்த்து வெற்றிகொண்ட அருச்சுனன், – கரிகள் கோடி –
(அவ்வவ்வரசர்களுடைய) கோடிக்கணக்கான யானைகளையும்,
இரதங்கள்கோடி-கோடிக்கணக்கான தேர்களையும், பவனத்தின்உம் கடுகு
கவனம் வெம் பரிகள் கோடி – காற்றிலும் விரைந்து செல்லும் நடை
வேகத்தையுடைய கோடிக்கணக்கான குதிரைகளையும், நவகோடி மா மணிகள்-
கோடிக்கணக்கான சிறந்த ஒன்பது வகை யிரத்தினங்களையும், பல் வகைபடு
பசும்பொனின் கிரிகள் கோடிஎன-பலவகைப்பட்ட பசும் பொன்னின்
கோடிக்கணக்கான மலைகள்போன்ற குவியல்களையும், கவர்ந்து –
கவர்ந்து கொண்டு, வந்து-மீண்டும் வந்து, அரிகள்கோடிகிளர் சோலை சூழ் –
கோடிக்கணக்கான வண்டுகள் மொய்த்தெழுதற்கிடமான சோலைகள் சூழ்ந்த,
தமது செல்வம் மா நகரி – தமது செல்வம் நிறைந்த பெரிய இந்திரப்பிரத்த
நகரத்தை, அணுகினான் – சேர்ந்தான்; (எ – று.)

     ஏழு குலாசலங்களையும் அடர்த்து வெற்றி கொண்ட அருச்சுனன்
கோடிக்கணக்கான யானை முதலிய சேனைகளையும், மிகத்திரண்ட பொன்னையும்
மணிகளையும் பெருவாரியாகத் திரட்டிக் கொண்டு அத்தினாபுரத்துச்
சோலையிடத்துத் தங்கினான் என்க.  இறுதியில் நின்ற ‘என’ என்ற
எண்ணிடைச்சொல், நின்றவிடத்துப் பிரிந்து, ‘கரிகள்கோடியென,’ ‘இரதங்கள்
கோடியென’ ‘பரிகள் கோடியென’, ‘நவகோடி மாமணிகளென’ என்று
பிறவிடத்துஞ்சென்று பொருந்தும். இனி, பொனின் கிரிகள் கோடி யென
என்பதற்கு – பொன்மயமான கோடி மலைகள் போல என்று உரைப்பாருமுளர்.
கோடி யென்றது ஒரு பேரெண்ணைக் காட்டுவதோடு குவியல் முதலிய
பொருளையும் காட்டவல்லது.  ஏ – அசை. ‘எழுகிரிப்புறந்தெறு’ என்ற விவரம்,
கீழ் 47 – ஆஞ் செய்யுளிற் கூறப்பட்டது.

     கிரீடீ – வடசொல்:  கிரீடமுடையவன்;  மேல் வனவாசகாலத்திற்
சிவபிரானிடம் பாசுபதாஸ்திரம் பெற்றபின்பு மேலுலகத்திற்குச் சென்று
தேவேந்திரனாற் சுவர்க்கலோகத்தில் இளவரசு முடிசூட்டப்பெறுதல்பற்றி
வந்தது, இப்பெயர்.  இவன் இப்பெயர் பெறுதல் இதன்பின் நிகழ்வதாயினும்,
பிற்காலத்தில் நூலியற்றிய கவி எங்கும் இப்பெயரால் இவனைக்குறிக்கத்
தட்டில்லை:  இன்னும் இதுபோல்வனவற்றிற்கெல்லாம் இவ்வாறே கொள்க.
யானைகள் முதலியன, ஆங்காங்குத் திறைகொண்டவை.  செல்வமாநகரி – கீழ்
இந்திரப்பிரத்தச்சருக்கத்திற் கூறியவை நினைக.   

வடா சென்ற வரி சில மகீபனினும் எழு மடங்கு
மிகு வலி”டன்
குடா சென்று, இளய வீர மா நகுலன், ‘நகுலன்!’
என்று குலகுலய”வ’
அடாத மன்னரை அடர்த், அடுத்தவர, ‘அஞ்சல்!’ என்று
அமர் உடற்றினான்
இடாதவன் தனம் எனக் கரந்தனர்கள், ஏன
மன்னவர்கள் யாரு”ம.இதுமுதல் நான்குகவிகள் -நகுலன் மேற்குத்
திக்குவிசயஞ்செய்தலைக் கூறும்.

வடாது சென்ற வரி சிலை மகீபனின்உம் – (திக்கு விசயத்தின்
பொருட்டு) வடபுலத்திற்சென்ற கட்டமைந்த வில்லையுடைய அருச்சுனனது
வலிமையைக்காட்டிலும், எழு மடங்கு மிகுவலியுடன் – ஏழுமடங்கு மிகுதியான
(சேனைமுதலிய) வலிமையுடனே, இளைய வீரன் மா நகுலன்-
(அவ்வருச்சுனனுக்கு) அடுத்த தம்பியும் வீரனுமான சிறந்த நகுலனானவன்,
குடாது சென்று-மேல்புலத்துச்சென்று, நகுலன் குலைகுலைய-(தன்னைக்
கண்டவர்கள்) நகுலனிவன் நகுலனிவன் என்று சொல்லி நடுநடுங்க,
அடுத்தவரை அஞ்சல் என்று – (தன்னிடம் வந்து) சரண்புகுந்த அரசர்களை
‘அஞ்சவேண்டா’ என்று சொல்லி அபயமளித்து, அடாத மன்னரை அடர்த்து
அமர் உடற்றினான் – (தன்னிடம் வந்து) பணியாத அரசர்களை நெருக்கிப்
போரில் வருத்தினான்;  (அப்போரின் கடுமையைக் கண்டவளவிலே), ஏனை
மன்னவர்கள் யார்உம் – (அவனால் எதிர்க்கப்படாத)
மற்றையரசர்களெல்லோரும், இடாதவன் தனம் என கரந்தனர்கள் –
(இரப்பவர்க்குக்) கொடாதவனுடைய செல்வம் (தொலைதல்) போல
ஓடியொளித்தார்கள்; (எ – று.)

     இடாதவன் தனம் தொலைதலை “ஈயார்தேட்டை தீயார்கொள்வர்,”
உடாஅது முண்ணாதும் தம்முடம்புசெற்றும், கெடாஅதநல்லறமுஞ் செய்யார்-
கொடாஅது, வைத்தீட்டினா ரிழப்பர் வான்றோய்மலைநாட, உய்த்தீட்டுந் தேனீக்
கரி” என்பவை முதலியவற்றாலறிக. வடக்கிலுள்ளது – வடாது; குடக்கிலுள்ளது –
குடாது; மரூஉமொழி. குலைகுலைய – இரட்டைக்கிளவி.  அஞ்சல் –
எதிர்மறைவியங்கோள். உடற்றினான், உடல் என்பதன் பிறவினையான் உடற்று –
பகுதி.  ஏனை – இடைச்சொல்.  நகுலனென்று என்பதற்கு – ருத்திரமூர்த்தி
யென்றெண்ணியென உரைப்பாருமுளர். 

மாளவத்தினொடு கர்ப்படம், பொர வகுத்து எதிர்ந்த
திரிகர்த்தமும்,
தூள வண் புடை இருட் பிழம்பு எழ, அருக்கனின்
பெரிது சுடர் எழ,
தாள வண் கதியுடைத் துரங்க ரத கச பதாதியொடு,
தகு சினம்
மூள வந்து, எதிர் மலைந்த மன்னவரை முதுகு கண்டு,
அமர் முருக்கியே,

இதுவும், அடுத்த கவியும் – குளகம்.

     (இ -ள்.) மாளவத்தினொடு கர்ப்படம் – மாளவதேசத்திலும் கர்ப்பட
தேசத்திலும், பொர வகுத்து எதிர்த்த திரிகர்த்தம்உம் – போர்செய்தற்கு
(ச்சேனைகளை) அணிவகுத்து எதிர்த்த திரிகர்த்ததேசத்திலும், தூளம்வன்பு
உடை இருள் பிழம்பு எழ – தூளியினாலாகிய வலிமையையுடைய இருளின்
திரள் மேலெழவும், அருக்கனில் பெரிது சுடர் எழ – (தரித்த ஆபரணமும்
ஏந்திய ஆயுதமும் முதலியவற்றினால்) சூரியனைக்காட்டிலும் மிகுதியாகப்
பிரகாசமுண்டாகவும், தாளம் வண் கதி உடை துரங்க ரத கசபதாதியொடு தகு
சினம் மூள வந்து எதிர் மலைந்த மன்னவரை – தாளவொற்றுக்கு இயைய
அடிவைத்து நடக்கிற சிறந்த நடையையுடைய குதிரை தேர் யானை காலாள்
என்னுஞ் சதுரங்கசேனையோடு தக்ககோபம் மேன்மேலுண்டாக எதிரில்வந்து
போர்செய்த அரசர்களை, அமர் முருக்கி முதுகுகண்டு – போரில் வலியழித்துப்
புறங்கொடுத்தோடச்செய்து, (எ – று.) – ‘வாரி’ என அடுத்த கவியோடு
தொடரும்.

     தன்னுடைய அணிகலன் ஆயுதம் என்ற இவற்றினொளி வெயில்போல்
வீசவும், பெருந்திரளான சேனைகள் செல்வதனால் நிலத்துகள் மேலெழுந்து
பேரிருளையுண்டாக்கவும், நகுலன் மாளவம் கர்ப்படம் திரிகர்த்தம் என்ற
தேசங்களிற்சென்று பகைவரை வென்று அழித்தானென்பதாம்.  குதிரை,
நால்வகைப்படையுள் தான் ஓர் அங்கமாக நிற்றலேயன்றி, மற்றோர்
அங்கமாகிய தேரை நடத்துதற்கு இன்றியமையாத தன்மையையும்
உடைமையால், அதனை முதலில் வைத்து ‘துரங்கரதகச பதாதி’ என்றார்.
தாளவண்கதியுடைத் துரங்கம் – ஆட்டக்குதிரை;  “கூத்தினர் செயலெனக்
குலாவும் வாம்பரி” என்றார் பிறரும்.  அருக்கனில், இல் – ஐந்தனுருபு,
எல்லைப்பொருளது.   

கூற்று இசைக்கும் என உடன் வரும் கடிய கொடிய
சேனையொடு குமரனும்,-
காற்று இசைக்கும் என வருணனும், தனி கருக் குலைந்து,
உளம் வெருக் கொள,
தோற்றுஇசைக்கும் வசை கொண்டு மற்று அவர்கள் சொரிதரும்
திறைகள் வாரி, அம்
மேல் திசைக்கும் ஒரு மேரு உண்டு என உயர்த்தினான்,
நிகர் இல் வீரனே.

நிகர் இல் வீரன்-ஒப்பற்ற வீரனாகிய, குமரன் உம்-இளமகனான
நகுலனும், கூற்று இசைக்கும் என உடன் வரும் கடிய கொடிய சேனையொடு-
யமனையொக்குமென்று சொல்லும்படி விரைந்துவருகிற வலியகொடிய
சேனைகளுடனே, காற்று இசைக்கும் என- சண்டமாருதம் போலுமென்னும்படி,
வருணன் உம் தனி கருகுலைந்து உளம் வெருக்கொள – (அந்த
மேல்திசைப்பாலகனான) வருணனும் ஆதாரமற்றுக் குடல்குழம்பி மனம்
அச்சங்கொள்ளும்படி, (அத்திக்கினெல்லையிற் சென்று), அவர்கள் தோற்று
இசைக்கும் வசைகொண்டு சொரிதரும் திறைகள் வாரி- அம்மேற்றிசை
யரசர்கள் தோல்வியடைந்து (உலகத்தவராற்) சொல்லப்படும் பழிப்பைப்
பெற்றுக் கொணர்ந்து சொரிந்த திறைப்பொருள்களை ஒருங்கு தொகுத்து, அ
மேல் திசைக்கும் ஒரு மேருஉண்டு என உயர்த்தினான் – (வடதிசையிலன்றி)
அந்த மேற்குத்திக்கிலும், ஒரு மேருகிரி உண்டென்று சொல்லும்படி
உயர்த்தினான்;  (எ-று) – மற்று – அசை.

    ‘வசைகொண்டு அவர்கள் சொரிதருந் திறைகள்’ என்றது, வசையைப்
பெற்று அதற்கு ஈடாகச் சொரிந்த பொருள்களென்று சமத்காரக் கருத்து
அமையக் கூறப்பட்டுள்ளதனால், பரிவர்த்த நாலங்காரம்; தமிழில்
மாற்றுநிலையணி எனப்படும்; இது, உயர்ந்த பொருளைக்கொடுத்து
இழிந்தபொருளை வாங்கியதாகச் சொல்லியது.  திறைப்பொருட்டொகுதியின்
மிகுதியும் ஒளியுந் தோன்ற அதற்குப் பொன்மலையான மகாமேருகிரியை
உவமை கூறினார்.  பிரசித்தமான மேருமலை வடதிசையி லுள்ளதாதலால்,
‘மேற்றிசைக்கு மொரு மேருவுண்டென’ என்று இல்பொருளுவமையாக
வகுத்துக் கூறப்பட்டதென்க.  சேனைக்கு, யமன் – தவறாது
பிராணிகளையழிக்குங் கொடுமையில் உவமம், கூற்று – பிராணிகளின்
உடலையும் உயிரையும் வெவ்வேறாகப் பிரித்துக்  கூறுபடுத்துந் தேவன்.
முதலிரண்டடிகளில், ‘இசைக்கும்’ என்பது – உவமவுருபு.  உடன் என்ற
இடைச்சொல் – விரைவை யுணர்த்திற்று.  தன்னுடன் என்றும் பொருள்
கொள்ளலாம்.  குமரன் – அழகிலும் பல பராக்கிரமங்களிலும் முருகக்கடவுள்
போன்ற ஆண்மகன்;  உம்மை – எச்சம்.  காற்று – விரைவிலும், வலிமையிலும்
உவமம்.  வருணனும், உம்-உயர்வுசிறப்பு.  வெரு-வெருவு என்ற
முதனிலைத்தொழிற்பெயரின் விகாரம்.  சொரிதரும், தா – துணைவினை.
மேற்றிசைக்கும், உம் – இறந்ததுதழுவிய எச்சம்.

அளவு இலாத திறையோடும், அத் திசை உதித்து ஓர்
இரவி ஆம் என,
துளவ மாலை கமழ் மௌலி நாதன் உறை துவரை
எய்தி, உயர் சுருதியின்
கிளவியால் முனிவர் தொழு பதம் தொழுது, கேசரித்
துவச வீரனுக்கு
இளவல், மீளவும், அரிப்பிரத்த நகர் எய்தி, மன்னனை
இறைஞ்சினான்.

கேசரி துவசம் வீரனுக்கு இளவல் – சிங்கத்தின்
வடிவமெழுதிய கொடியையுடைய வீரனான வீமனுக்குத் தம்பியாகிய நகுலன்,-
அளவு இலாத்திறையோடு உம் – (இங்ஙனம் ஆங்காங்குக் கைக்கொண்ட)
அளவிறந்த திறைப்பொருள்களுடனே,-அ திசை உதித்தது ஓர் இரவி ஆம் என
– அந்த மேற்குத்திக்கில் உதயஞ் செய்ததொரு சூரியனாமென்று (அனைவருஞ்)
சொல்லும்படி, துளபம் மாலை கமழ் மௌலிநாதன் – திருத்துழாய்மாலை
நறுமணம் வீசும் முடியையுடைய ஜகந்நாதனான கண்ணபிரான், உறை-
எழுந்தருளியிருக்கின்ற, துவரை-துவாரகாபுரியை, எய்தி-அடைந்து, உயர்
சுருதியின் கிளவியான் – சிறந்த வேதவாக்கியங்களைக் கொண்டு (துதித்து)
முனிவர் தொழு – முனிவர்கள் வணங்குகிற, பதம் – (அப்பெருமானுடைய)
திருவடிகளை, தொழுது – (தான்) நமஸ்கரித்து, மீள உம் அரிப்பிரத்தம் நகர்
எய்தி – பின்புமீண்டு (தமது) இந்திரப்பிரத்த நகரத்தையடைந்து, மன்னனை
இறைஞ்சினான் – தருமராசனை வணங்கினான்;

     மேல் திசையில் துவாரகாபுரியில் வீற்றிருக்கின்ற ஸ்ரீகிருஷ்ணனுக்கு
மேற்கில் உதித்ததொரு சூரியனை உவமைகூறினார்; இல்பொருளுவமை.
அபௌருஷேயமாய் ‘[செய்யா மொழியாய்] நித்தியமாயுள்ள வேதம், சிறந்த
பிரமாண மாதலால், ‘உயர்சுருதி’ எனப்பட்டது.  நகுலனது பல
பராக்கிரமங்களைக் குறிப்பித்தற்கு, ‘வீமனது தம்பி’ என்றார்.  ‘தருமன்’ என்ற
யமனது பெயர் இலக்கணையாய் அவன் மகனான யுதிட்டிரனை
யுணர்த்துதல்போல ‘கேசரி’ என்னும் வாநரவீரனதுபெயர் இலக்கணையாய்
அவன் மகனான அநுமானை யுணர்த்தியதெனக்கொண்டால்,
‘கேசரித்துவசவீரனுக்கிளவல்’ என்றது – அநுமக்கொடியையுடைய வீரனான
அருச்சுனனுக்குத் தம்பியென்று பொருள்படும்.  இளவல் – இளையவன்:
இளமையென்ற பண்பினடியாப் பிறந்த பெயர்:  அல் – பெயர்விகுதி.
இந்திரப்பிரத்த மென்பதன் பரியாயமாக, அரிப்பிரத்தமெனப்பட்டது, ஹரி –
இந்திரன்.  கண்ணனது கட்டளைப்படி இந்திரன் விசுவகர்மனைக்கொண்டு
நிருமித்த நகரமாதலால், அதற்கு இந்திரப்பிரஸ்தமென்று கண்ணனாற்
பெயரிடப்பட்டது;  ஏவுதற்கருத்தாவின் சம்பந்தத்தோடு வந்தபெயர்:  ப்ரஸ்தம்
– தங்குமிடம்.  தேவர்களை இருதிணையாகவும் கூறலாமாதலால்,
‘உதித்ததோரிரவி’ என்று அஃறிணையாகக் கூறப்பட்டது.  ‘உதித்ததேரிரவி’
என்றும் பாடமுண்டு:  தேரிரவி – சிறந்த ஒற்றைத்தனியாழித் தேரையுடைய
சூரியன்.  

குன்று இசைத்த கச ரத துரங்கம பதாதி சூழ
இறைகொள்ளவும்,
நின்று இசைத்துவரு பல பணைக் குலம் இரைக்கவும்,
கொடி நிரைக்கவும்,
துன்று இசைப் பனி நிலா எழக் கவிகை எண் இலாதன
துலங்கவும்,
தென் திசைப் படர்தல் மேயினான்-நகுல நிருபனுக்கு
இளைய செம்மலே.இதுமுதற் பன்னிரண்டுகவிகள் – சகதேவன்
தெற்குத்திக்குவிசயஞ்செய்தலைக் கூறும்.

நகுலநிருபனுக்கு இளைய செம்மல் – நகுலனாகிய அரசனுக்கு
இளையவனும் வீரனுமான சகதேவன்,- குன்று இசைத்த கச ரத துரங்கமம்
பதாதி சூழ இறை கொள்ளஉம்-மலை போன்ற யானை தேர் குதிரை காலாள்
என்னும் சதுரங்கசேனைகள் (தன்னைச்) சுற்றிலும் இருத்தல்செய்யவும், நின்று
இசைத்து வருபல பணை குலம் – இடைவிடாது முழக்கப்பட்டு வருகிற
பலவகை வாத்தியங்களின் கூட்டம், இரைக்கஉம் – ஆரவாரிக்கவும், கொடி
நிரைக்கஉம் – துவசங்கள் வரிசையாய் அமையவும், துன்று இசை பனி நிலா
எழ – அடர்ந்து பொருந்துதலையுடைய குளிர்ந்த சந்திரகாந்திபோன்ற
வெள்ளொளி யெழுமாறு, கவிகை எண் இலாதன-அளவற்றனவான
வெண்கொற்றக் குடைகள், துலங்கஉம்-விளங்கவும், தென் திசை படர்தல்
மேயினான்-தெற்குத்திக்கிற் செல்லுதலைப் பொருந்தினான்; (எ – று.)

     சகதேவன் தன்னைச்சுற்றி நால்வகைச் சேனையிருக்கவும், பலவகை
வாச்சியங்கள் ஆரவாரிக்கவும், கொடி நிரைக்கவும், கவிகை துலங்கவும்,
பொருதற்காகத் தென்திசை நோக்கிச் செல்லலாயினனென்க.  நகுலன் போலவே
எளிதிற் பகை வென்றுவரத்தக்கவனென்பதைக் குறிப்பித்தற்கு,
‘நகுலநிருபனுக்கிளைய செம்மல்’ என்றார்.  இசைத்த – உவமவுருபு.  யானை
தேர்களுக்கு, மலை – பெருவடிவிலும், வலிமையிலும் உவமை.  கஜரத துரங்கம
பதாதி – வடமொழித்தொடர்.  “படைதனக்கு யானை வனப்பாகும்” “யானை
யுடைய படைகாண்டல் மிகவினிதே” என்றபடி யானைச்சேனை சிறத்தலால்
அது முதலாகவைத்துக் கூறப்பட்டது.  துரங்கமம் – விரைந்துசெல்வது.  பல
பணைக்குலம் – கொட்டுவனவும் ஊதுவனவுமாகிய  தோற்கருவி
தொளைக்கருவி முதலியன.  மூன்றாமடியில், ‘இசை’ என்றது – முதனிலைத்
தொழிற்பெயர்;  இரண்டாம் வேற்றுமைத்தொகை.  ‘துன்றிசைப்பனிநிலாவெழ’
என்பதற்கு – மிக்க கீர்த்தியாகிய குளிர்ந்த சந்திரகாந்தி எழுந்து பரவ என்று
உரைத்தலுமாம்;  கீழ் 48 – ஆம் கவியில் “மெத்திசைப்பநினிலாவெழ”
என்றமை காண்க.  நிருபன் – மனிதரைக் காப்பவன்;  (ந்ரு-மனிதர்).  செம்மல்
– பெருமையிற் சிறந்தவன்:  செம்மையை யுடையவனென்று காரணப்பொருள்
காணலாம்:  ஆண்பாற் சிறப்புப்பெயர்;  அல் – பெயர்விகுதி.  இறை –
இறுத்தல், தங்குதல்;  தொழிற்பெயர், இறு – பகுதி, ஐ – விகுதி

அத் திகைக்கண் இரு கடலினுக்கு நடுவான மண்டலம்
அனைத்தினும்,
மத்திகைப் புரவி மண்டலேசரும், வயங்கு
மா மகுட மகிபரும்,
புத்தி கைக்க அமர் பொருது, அழிந்து, திறை பொழிய, வாரி,
வளர் புய கிரிப்
பித்திகைத் தொடையல் நீலன் என்னும் நரபதி பெரும்
பதி புகுந்பின்

இதுவும், அடுத்த கவியும் – குளகம்.

     (இ -ள்.) (சகதேவன்), – அ திகைக்கண் – அந்தத் தெற்குத்திக்கிலே.
இரு கடலினுக்குஉம் நடு ஆன மண்டலம் அனைத்தின் உம் – கீழ்கடல்
மேல்கடல் என்ற இரண்டிற்கும் இடைப்பட்ட தேசங்களிலெல்லாம் (சென்று),
மத்திகை புரவி மண்டல ஈசர்உம் சம்மட்டியென்னும் கயிற்றுக்கருவி கொண்டு
செலுத்தப்படுங்குதிரைச் சேனையையுடைய மண்டலாதிபதிகளும், வயங்கு மா
மகுடம் மகிபரும் – விளங்குகிற சிறந்த மகுடவர்த்தன மன்னவர்களும், புத்தி
கைக்க – மனம்வெறுக்கும்படி, அமர் பொருது-போர் செய்து, அழிந்து திறை
பொழிய வாரி – (அவர்கள் அப்போரில்) தோற்றுத் திறைப்பொருள்களை
மிகுதியாகச்சொரிய வாரிக்கொண்டு, வளர் புய கிரி பித்திகை தொடையல்
நீலன் என்னும் நரபதி பெரும் பதி புகுந்த பின் – (பூரித்து) வளர்ந்து மலைகள்
போன்ற தோள்களிற் கருமுகைப் பூமாலையை யணிந்த நீலனென்னும்
அரசனுடைய (மாகிஷ்மதியென்னும்) பெரிய நகரத்திற் பிரவேசித்தபின்பு,
(எ -று.)- ‘கண்டு’ என அடுத்த கவியோடு தொடரும்.

     சகதேவன் தென் திசையிலே பல மன்னரையும் வென்று பெருந்திரளான
திறைப்பொருளை வாரிக்கொண்டு நீலனென்பானுடைய மாகிஷ்மதி நகரத்துக்குப்
பொரச்சென்றா னென்பதாம்.  திகையெனும், திசையெனினும் ஒக்கும்.  கண் –
ஏழனுருபு.  ‘மண்டலேசர்’ என்றவிடத்து, ‘மண்டலீகர் என்றும் பாடமுண்டு;
அவர் – நாற்பது கிராமம் ஆள்பவர்.  ‘மகுடவர்த்தனர் – ஒருகோடி கிராமம்
ஆள்பவர்.  மனம் புத்தி சித்தம் அகங்காரம் என்ற நான்கு
அந்தக்கரணங்களுள் மனம் ‘புத்தி’ எனப்பட்டது;  இலக்கணை.  “கருமுகையும்
சுவர்த்தலமும் பித்திகை”  என்ற பிங்கலந்தையினால், பித்திகை யென்பதன்
பொருளை யுணர்க:  சிறுசண்பகம் அல்லது இருவாட்சியென்பர்.  தொடையல்-
தொடை-தொடுக்கப்படுவது;  தொடு – பகுதி, ஐ-செயப்படுபொருள்விகுதி;
இதன் மேல், அல் – சாரியை.  மத்திகை-குதிரைச்சம்மட்டி;  குதிரையோட்டுங்
கருவியி னொன்று.  “இவன் தன் பகைவர் யாவரையும் இமையோராக்கு
மெழினீலன்” என்று கீழ்த் திரௌபதி மாலையிட்ட சருக்கத்தில் நீலன்
சிறப்பித்துக் கூறப்பட்டிருத்த லுணர்க.  நரபதி – வடசொல், மனிதர்க்குத்
தலைவன்;  நரர் – மனிதர்.     

அந்த மா நகரி காவலான சுடர் அங்கி சீறி,
எதிர்பொங்கி, மேல்
வந்த வீரன் மிகு சேனை யாவையும் மயங்க,
வெம் புகை இயங்கவே,
கந்து சீறு களி யானை மன்னன் அது கண்டு,
வெங் கனல் அவிப்பது ஓர்
இந்து மா முக சரங்கள், ஏழு நெடு நாவினான்
அழிய, ஏவினான்.

அந்த மா நகரி காவல் ஆன-அந்தப் பெரிய மாகிஷ்மதி
பட்டணத்துக்குப் பாதுகாப்பாயிருந்த, சுடர் அங்கி-ஒளியையுடைய
அக்கினிதேவன், சீறி – கோபித்து, எதிர் மேல் பொங்கி-எதிராக மேலே
ஜ்வலித்து எழுந்து, வந்த வீரன் மிகு சேனை யாவைஉம் மயங்க வெம்புகை
இயங்கஏ – (அந்நகரத்தில்) பிரவேசித்த வீரனான சகதேவனுடைய மிக்க
சேனைகளெல்லாம் மயங்கித் திகைக்கும்படி கொடியபுகையோடு பரவவே, –
கந்து சீறு களியானை மன்னன் – கட்டுத்தறியை முறிக்கின்ற மதக்களிப்புள்ள
யானைச்சேனையையுடைய சகதேவன்,- அதுகண்டு – அதனைப்பார்த்து, –
வெம் கனல் அவிப்பதுஓர் இந்து மா முகசரங்கள்-வெவ்விய அந்த
அக்கினியை யடக்கவல்ல ஒப்பற்றசிறந்த அர்த்தசந்திரபாணங் களை, ஏழு
நெடுநாவினான் அழிய – நீண்ட ஏழு நாக்குக்களை யுடைவனான
அக்கினிதேவன் புறங்கொடுக்கும்படி, ஏவினான் – பிரயோகித்தான்; (எ – று.)

    மாகிஷ்மதி நகரத்துக்கு அக்னிதேவன் காவலாதலால், சகதேவன் பொர
வந்தபோது அந்த அக்கினி, சகதேவன் சேனைகள் யாவும் மயங்கும்படி
புகையோடு இயங்க, அர்த்த சந்திர பாணங்களால் சகதேவன், அவனை
அடக்கினானென்க. அக்கினியின் சுவாலைகளேழும் அவனுக்கு நா
எனப்படுதலால், ‘ஏழு நெடுநாவினான்’ என்றார்.  கீழ்க் காண்டவதகனச்
சருக்கத்தில் – “தாலுவேழினையும் நனைத்தனன்” என்றதையுங் காண்க.
இந்துமுக சரம் – பிறைச்சந்திரன்போல வளைவான நுனியையுடைய அம்பு.
கனலவிப்பதற்கு ஏற்ப இந்துமாமுகசரங்களென்றனரென்னலாம்;  சந்திரன்
போல அக்கினியின் வெப்பத்தைத் தணிக்குந் தன்மையுள்ள அம்புகளென்க:
இது, சந்திராஸ்திரம்:  சந்திரனைத் தெய்வமாகவுடைய அம்பு என்றாவது,
சந்திரன்போலக் குளிர்ச்சியைச் செய்யும் வாருணாஸ்திரமென்றாவது கொள்க.
கட்டுத்தறியை முறித்தல் மதயானையினியல்பு; மேல்வந்த வீரன் என்று
எடுத்தும், வந்த வீரன்மேல் என்று மாற்றியும் உரைப்பினுமாம்.  இச்செய்யுளில்,
‘அங்கிசீறியெதிர் பொங்கிமேல்’ ‘மயங்கவெம்புகையியங்கவே’,
‘நாவினானழியவேவினான்’ என்றவிடங்களில், வந்த எழுத்தே மீண்டும் வந்தது,
பிராசமென்னும் சொல்லணி.  ‘வீரன் விடுசேனை’ என்றும் பாடமுண்டு.
களியானை மன்னன் – மதயானை போன்ற சகதேவன் எனினுமாம்

அஞ்சி, அந்த அழலோனும், அப்பொழுது ஒர்
அந்தணாளன் வடிவு ஆகியே,
வஞ்சி அம் தொடையல் மன்னன் முன்பு வர, வந்த
மா முனியை, மன்னன், ‘நீ
எஞ்சி நின்று, சுடுகின்ற காரணம் இது என்னை?’
என்னலும் இயம்பினான்-
மஞ்சு இவர்ந்த புகை வானவன் தனது வரவும், நீலன்
வழிபாடுமே.

அப்பொழுது-, அந்த அழலோன்உம் – அந்த
அக்கினிதேவனும், அஞ்சி – அச்சங்கொண்டு, ஓர் அந்தணாளன் வடிவு
ஆகியே – ஒரு பிராமண ரூபமாய், வஞ்சி அம் தொடையல் மன்னன் முன்பு
வர – அழகிய வஞ்சிப் பூமாலையைத் தரித்த (சகதேவ) ராசனது எதிரிலேவர,-
மன்னன் – (அச்சகதேவ)ராசன், வந்த மா முனியை – அங்ஙனம் வந்த சிறந்த
அந்த அந்தணனை நோக்கி, நீ எஞ்சிநின்று சுடுகின்ற காரணம் இது என்னை
என்னலும் – ‘நீ (பற்றற அவிந்திடாமற்) சேடித்துநின்று (இவ்வாறு என்
சேனைகளைச்) சுடுகின்றதற்குக் காரணம் யாது?’ என்று வினாவியவுடனே,
மஞ்சு இவர்ந்த புகை வானவன் – மேகத்தையளாவி யெழுகிற புகையையுடைய
அக்கினிதேவன், தனது வரவுஉம் – தான் (இந்நகரத்திற்கு) வந்த
வரலாற்றையும், நீலன் வழிபாடுஉம் – நீலராசன் தன்னை யுபசரித்துவேண்டி
வரம்பெற்றதையும், இயம்பினான் – சொன்னான்; (எ – று.)

     சகதேவன் நீலராசனது மாகிஷ்மதிநகரத்திற் பிரவேசித்துப்போர்
தொடங்கினபோது, அவ்வரசனுக்குத் துணைவனான அக்கினி தேவன்
பலவடிவங்கொண்டு சகதேவனது சேனைகளைக் கொளுத்தியழிக்க, சகதேவன்
ஒன்றுஞ் செய்யமாட்டாது திகைத்துநின்று உடனே அக்கினி பகவானைப்
பலவாறு துதித்துப் பிரார்த்தித்துப் பிராயோபவேசமாகத் தருப்பசயனத்திற்
படுத்து வரங்கிடக்க, அக்கினிதேவன் அச்சரணாகதிக்குக் கட்டுப்பட்டு
அவனெதிரில் வந்து தணிந்த வார்த்தைகள் கூறிச் சகதேவனை வரவுவிசாரிக்க,
அவனும் மகிழ்ச்சிகொண்டு எழுந்து தான் வந்த காரணத்தைத் தெரிவித்தவுடன்,
அக்கினி மறைந்தவளவிலே, அத் தீக்கடவுளின் கட்டளையால் நீலராசன்
சகதேவனை யெதிர்கொண்டு உபசரித்துத்திறைகொடுத்தனனென முதனூல்
கூறுகின்றது.  அக்கினிதேவன் நீலராசனது குமாரியினிடம் மிக்க காதல்கொண்டு
அவளைப்பலவாறு அநுசரித்து விடாது தொடர்தலை யுணர்ந்த அந்நீலராசன்
அக்கன்னிகையை அந்தணவடிவங் கொண்ட அக்கினிதேவனுக்கு அளிக்க,
அவளை மணஞ் செய்துகொண்ட அனற்கடவுள், அவ்வரசனது
வேண்டுகோளின்படி அங்கு இருந்து அந்நகரத்தை வெல்ல வருபவர்களை
யெரித்து வருகின்றனனென்ற வரலாற்று விவரத்தையும் முதனூலில் காணலாம்.

     வஞ்சி என்ற கொடியின் பெயர், அதன் மலர்க்கு முதலாகுபெயராம்.
வஞ்சிப்பூமாலை, பகைவர்மே லெதிர்த்துப் போர்செய்யச் செல்வார்க்கு உரியது.
வஞ்சியந்தொடையல் என்பதில், அம் – சாரியையுமாம்.  அந்த மாமுனி
என்றும் எடுக்கலாம்.  இவர்தல் – எழுதல், ஏறுதல், என்னை, ஐ – சாரியை.
வழிபாடு – வழிபடு என்ற முதனிலை திரிந்த தொழிற்பெயர்.  ‘தனது வரமும்’
என்றும் பாடமுண்டு.     

நீலன் இட்ட திறையான கோல மணி நீலம் ஆதி
நவ நிதியமும்,
சால மிக்க தமனியமும், வௌவி, உயர் சாரல்
விந்த சயிலப் புறத்து,
ஏல நெட்டடவி முறிய மோதி, வெளியாக ஏழ்
கடலையும் கடைக்
காலம் முற்றி எழு கால் எனும்படி, கலக்கினான்,
எழு கலிங்கமும்.

(பின்பு சகதேவன்),- நீலன் இட்ட திறை ஆன – நீலராசன்
கொணர்ந்து கொடுத்த திறைப்பொருளாகிய, கோலம் நீலம் மணி ஆதி நவ
நிதியம்உம் – அழகிய நீலரத்தினம் முதலிய நவரத்தினங்களாகிய
திரவியங்களின் திரளையும், சால மிக்க தபனியம்உம் – மிகவும் அதிகமான
பொன்னையும், வௌவி – கவர்ந்துகொண்டு,- உயர் சாரல் விந்த சயிலம்
புறத்து – உயர்ந்த விந்தியமலையினது சாரலருகேயுள்ள, ஏலம் நெடு அடவி –
ஏலக் கொடிகளையுடைய பெரிய காடு, வெளி ஆக – வெற்றிடமாம்படி, முறிய
மோதி – முறிய அடர்த்து, ஏழ்கடலைஉம் கடைக்காலம் முற்றி எழு கால்
எனும்படி – கல்பாந்தகாலத்தில் முதிர்ந்தெழுகிற பிரசண்ட மாருதம் ஏழு
சமுத்திரங்களையும் கலங்க வீசியடித்தல் போல, எழு கலிங்கம் உம்
கலக்கினான் – ஏழுவகைக் கலிங்க தேசங்களையும் பொருது கலங்க
வடித்தான்; (எ – று.)

    கலிங்கமென்று பெயர்கொண்ட தேசம் ஒன்றல்லவென்றும், அவற்றில்
ஒன்று ஏழு பகுப்புடையதென்றும் உணர்க. ‘நவரத்நமும்’ என்றும் பாடமுண்டு.
தபநீயம் என்ற வடசொல் – (நெருப்பில்) தபிக்கப்பட்டு விளங்குவதென்று
காரணப்பொருள் பெறும்;  இது தமிழில் ‘தமனியம்’ என்று விகாரப்பட்டு
வழங்குதலும் உண்டு.  ‘எனும்படி’ என்பது – உவமவுருபு.  எழுகலிங்கம்-
பண்புத்தொகை.  உம் – முற்றுப்பொருளது, ஏழ் கடல் – உவர்நீர், கருபஞ்சாறு,
கள், நெய், தயிர், பால், நன்னீர் இவற்றின் மயமானவை:  பிரளய காலத்திற்
பெருங்காற்று எழுந்து வீசியடித்துக் கடல்களையலைக்குமென்பது,
புராணபிரசித்தம்.  நெடுமை+அடவி=நெட்டடவி:  பண்புப்பெயர்  ஈறுபோய்த்
தன்ஒற்று இரட்டிற்று. 

சென்னி நாடு, குட கொங்க நாடு, திறை கொண்டு, தென்னன்
உறை செந்தமிழ்க்
கன்னி நாடு உறவுடன் புகுந்து, மணி நித்திலக் குவைகள்
கைக் கொளா
மன்னி, நாடு கடல் கொண்ட கைம் முனிவன் வைகும் மா
மலயம் நண்ணினான்-
மின்னி நாடுற விளங்கு வெஞ் சமர வீர வாகை
பெறு வேலினான்.

நாடுற மின்னி விளங்கு – (தூரத்திலுள்ளவர்களும்) உற்று
நோக்குமாறு மின்னிப் பிரகாசிக்கிற, வெம்சமரம் வீரம்வாகைபெறு வேலினான்
– கொடிய போரில் வெற்றிக்கு அறிகுறியாகிற வாகைப்பூமாலையைப் பெறுகின்ற
வேலாயுதத்தை யுடையவனான சகதேவன்,- சென்னி நாடு – சோழராசனது
நாட்டிலும்,  குட கொங்க நாடு-(அதற்கு) மேற்கிலுள்ளதான கொங்க நாட்டிலும்,
திறை கொண்டு-(அவ்வரசரிடம்) திறை பெற்றுக்கொண்டு,-தென்னன் உறை
செம் தமிழ் கன்னி நாடு உறவுடன் புகுந்து – பாண்டிய ராசன் வசிக்கிற
சுத்தமான தமிழ்வழங்கும் பாண்டி நாட்டிலே உறவுமுறை பாராட்டிக்கொண்டு
பிரவேசித்து, மணி நித்திலம் குவைகள் கைக்கொளா-(அவ்வரசனால் திறை
கொடுக்கப்பட்ட) அழகிய முத்துக்களின் திரள்களைப் பெற்றுக்கொண்டு,- நாடு
கடல் கொண்ட கை முனிவன் மன்னி வைகும் மா மலயம் நண்ணினான் –
(விருத்திராசுரன்) விரும்பிப்புக்க இடமான கடலைக் கையிற்கொண்டு
ஆசமநஞ்செய்த அகத்திய மகாமுனிவன் நிலைத்து வீற்றிருக்கப்பெற்ற
சிறப்பையுடைய பொதியமலையைச் சேர்ந்தான்;  (எ – று.)

     சென்னி – தலை: சோழ ராசனுக்கு ‘சென்னி’ என்பது, தலைமைபற்றி
வந்த பெயரெனப்படும்.  தென்னன்-பரத கண்டத்தில் எல்லா நாடுகளுக்கும்
தெற்காகிய நாட்டை யாள்பவன்;  தென்னாடு – பாண்டியநாடு.  தமிழுக்கு
ஆதியிலக்கணநூல் செய்த அகத்தியமகாமுனிவனும், வம்ச பரம்பரையாகத்
தமிழ்ப்பாஷையைப் பரிபாலனஞ் செய்துவந்த பாண்டியராசர்களும், தமிழை
வளர்த்த சங்கப்புலவர்களும் வாழ்கிற இடமாதலால் பாண்டியநாடு, ‘செந்தமிழ்
நாடு’ எனப்பட்டது.  அதற்கு ‘கன்னி நாடு’ என்று பெயர்வந்ததன் காரணம் –
கன்னியாகுமரி யெனப் படும் நதியையுடைமை.  அன்றி, மலயத்துவச
பாண்டியனது மகளாய்ப் பிறந்தவளும் உமாதேவியின் அவதாரமுமாகிய
தடாதகையென்று பெயர்பெற்ற மீனாக்ஷியம்மையென்ற கன்னிகையினால்
ஆளப்பட்டமை யென்றுங் கூறுவர்.

     சகதேவன் தனது தமையன்மாருளொருவரான அருச்சுனனது
மனைவியரில் ஒருத்தியாகிய சித்திராங்கதையும், அவள் மகனான
பப்புருவாகனனும்,  அவள்தந்தையாதலின் அருச்சுனனுக்கு மாமனாரான
சித்திரவாகன பாண்டியனும் வசிக்கிற இடமாகிய பாண்டிய நாட்டிராசதானியான
மதுரைக்கு, அந்த உறவு முறைக்கு உரிய இயல்போடு புக்கனனென்பார்;
‘உறவுடன் புகுந்து’ என்றார்.  பாண்டிய நாட்டைச் சார்ந்த கடலில் முத்து
மிகுதியாக உண்டாகுதலால், அங்கு முத்துத் திறைகள் அளிக்கப்பட்டன.
‘குடகொங்க நாடு’ என்பதனைக் குடநாடு கொங்கநாடு என்று இரண்டாகக்
கொள்வாருமுளர்.  ‘வைகுமால்வரையினண்ணினான்’ என்பதும் பாடம்.
மணிநித்திலம் – நவரத்தினங்களிலொன்றாகிய முத்து எனினுமாம்.

     அகத்தியர் கடல்குடித்த கதை:- இந்திரன் முதலிய தேவர்கள்,
தம்பகைவனான விருத்திராசுரன் மற்றும் பல அசுரர்களுடனே
கடலிலொளித்துக் கொண்டபோது, அகத்திய மாமுனிவரைச் சரணமடைந்து
பிரார்த்திக்க, அவர் அக்கடலின் நீரைத்தமது ஒரு கையால் முற்றும் முகந்து
பருகியருளி, உடனே ஒளித்திருந்த அவ்வசுரனை இந்திரன் கொன்றபின்பு,
அவர்கள் வேண்டுகோளின்படி மீண்டும் அக்கடலை உமிழ்ந்தன ரென்பதாம். 

செகத்து இயங்கு தனி ஆழி ஐவரினும் இளைய
காளையொடு சேனை அந்
நகத்து இயைந்த பொழுது, அவனி பவ்வம் உறு நவ் எனத்
தலை நடுங்கவே,
மிகத் தியங்கி, நெடு மேரு வெற்பின்மிசை மேவு
வானவர்கள், மீளவும்
அகத்தியன்தனை வடக்கு இருத்தும் வகை உன்னினார்கள்,
சமமாகவே.

 செகத்து இயங்க – பூலோகம் முழுவதிலும் தடையின்றிச்
செல்லுகின்ற, தனி ஆழி – (ஒப்புயர்வற்ற தனித்த ஆஜ்ஞையாகிய)
ஏகசக்கரத்தையுடைய, ஐவரின்உம் – பஞ்சபாண்டவர்களுள்ளும், இளைய –
இளையவனான, காளையொடு – வீரனாகிய சகதேவனோடு (சென்ற), சேனை –
(மிகப்பெரிய) சேனைகள், அ நகத்து இயைந்தபொழுது – அந்த
மலயபர்வதத்தில் ஒருங்கு சேர்ந்தபோது, (அதனால் ஒருபுறத்தே மிக்க அதிக
பாரத்தைப் பொறுக்கமாட்டாமல்), அவனி – பூமி, பவ்வம் உறு நவ் என தலை
நடுங்கவே – கடலிற் பொருந்திய  தோணிபோல  அசைவடைந்து
தென்புறஞ்சாயவே, – நெடுமேரு வெற்பின்மிசை மேவு வானவர்கள் – (பூமியின்
மத்தியிலுள்ள) மகாமேருகிரியின் மீது வசிக்கிற தேவர்கள், மிக தியங்கி –
(இதற்கு என்செய்வதென்று) மிகவும் கலங்கி, சமம் ஆக – (பூமி) சமமாதற்
பொருட்டு, மீளஉம் அகத்தியன்தனை வடக்கு இருத்தும் வகை உன்னினார்கள்
– மீண்டும் அகத்திய முனிவனை வடதிசையிலிருக்க வைக்குமாறு கருதினார்கள்;
(எ -று.)

    இச்செய்யுள், சகதேவனுடன் சென்ற சேனைமிகுதியை [வடதிசை
மேலெழுமாறு தென்திசை தாழ்ந்ததென] அதிசயோக்தி வகையால் வருணித்தது.
முன்னொரு காலத்தில் சகல தேவர்களும் முனிவர்களும் மேருகிரியிலே
ஒருங்கு கூடியதனால், அவ்வடபுறம் தாழ்ந்து தென்புறம் உயரவே, அதனைக்
கண்டு கலங்கிய அனைவரும் மிக்க மகிமையுடையவரான அகத்திய
முனிவரைத் தென்திசைக்குச் செல்லும்படி வேண்ட, அவ்வாறே அம்முனிவர்
தெற்கில் வந்து பொதியமலையிற்சேரவே, இருதிசையும் ஒப்பநிலைபரம்
பெற்றுப் பூமி சமநிலையுற்றது என்ற வரலாறுபற்றி, ‘மீளவு மகத்தியன்தனை
வடக்கிருத்தும்வகை யுன்னினார்கள் சமமாகவே’ எனப்பட்டது.

     ஐவர் – தொகைக்குறிப்பு.  காளை – இளவெருது; அதுபோன்ற திண்ணிய
வீரனுக்கு உவமையாகுபெயர்:  நடை வலிமை காம்பீரியங்களால் உவமம்.
நகம் – வடசொல்; சலியாதது.  அவநி – வட சொல்; (அரசர்களாற்)
பாதுகாக்கப்படுவதென்று காரணப்பொருள்படும்.  பவ்வம்=பௌவம்:
முதற்போலி.  அகத்தியன் – வடமொழிப்பெயர்;  (விந்திய) கிரியை அடக்கியவ
னென்று காரணப்பொருள் பெறும்;  அகம் – மலை: சலியாதது.
‘பவ்வமுறுநாளென’ என்ற பாடத்திற்கு – கடல்மேற்கொள்ளுங் கற்பாந்த
காலத்திற்போலப் பூமிகம்பமடைய வென்பது பொருளாம்.  

கல் நிலம்கொல் என வலிய மெய் பெறு கடோற்கசன்தனை
அழைத்து, ‘நீ
தென்இலங்கை திறைகொண்டு, மீள்க!’ என, இளைய
தாதை உரைசெய்யவே,
மின் இலங்கு அணி எயிற்று அரக்கர் குல வீரனாகிய
விபீடணன்-
தன் நிலம் கொதிகொளப் புகுந்து, ஒரு சழக்கு அற,
சமர் உழக்கினான்.

(அங்கு இருந்தபடியே), கல் நிலம் கொல் என வலிய
மெய்பெறு கடோற்கசன் தனை அழைத்து – கருங்கற்பாறை மயமான தலமோ
என்று சொல்லும்படி வலிமையையுடைய தேகத்தைப்பெற்ற கடோற்கசனை
வரவழைத்து, இளைய தாதை – (அவனது) சிறிய தந்தையான சகதேவன், நீ
தென் இலங்கை திறைகொண்டு மீள்க என உரைசெய்யவே -‘நீ தெற்கிலுள்ள
இலங்காபுரியிற் சென்று திறை வாங்கி வருவாயாக’ என்று சொல்லவே,
(அக்குமாரன்) மின் இலங்கு அணி எயிறு அரக்கர் குலம் வீரன் ஆகிய
விபீடணன் தன் நிலம் கொதி கொள புகுந்து – மின்னல் போல விளங்குகிற
வரிசையான பற்களையுடைய இராக்கதவம்சத்து வீரனாகிய விபீஷணனது
ஆட்சியிலுள்ள இடமாகிற அவ்விலங்காபுரியில் (அங்குள்ளார் மனங்)
கொதித்தலைக் கொள்ளும்படி பிரவேசித்து, ஒரு சழக்கு அற சமர்
உழக்கினான் – தடு மாற்றஞ் சிறிதுமில்லாமற் போர்செய்தான்;  (எ – று.)

     கடோற்கசனையழைத்து இலங்கை சென்று திறை கொண்டு வருமாறுகூற,
இலங்கை சென்று அன்னான் பொரலானானென்க.  ராக்ஷசரிடந்
திறைவாங்குதற்கு அரக்கிபெற்ற பிள்ளையை யனுப்புதல் தகுதியென்ற
கருத்தினால், கடோற்கசனை வரவழைத்துச்செய்தி கூறியனுப்பினான்.
கடோற்கசன் – வீமனுக்கு இடும்பனது தங்கையான இடும்பியென்னும்
அரக்கியினிடம் பிறந்த மகன்;  இவன் தனது தாதையான வீமனையும் மற்றை
அவனுடன் பிறந்தவர்களையும் விட்டுப் பிரிந்து செல்லுகையில், அன்போடு
வணங்கி அவர்கள் தன்னை வேண்டியகாலத்து நினைக்கும்படியாகவும்,
அங்ஙனம் நினைத்தமாத்திரத்திலே தான் வந்து உதவுவதாகவும்,
வாக்குதத்தஞ்செய்து போயினனாதலின், அங்ஙனமே இப்பொழுது சகதேவன்
நினைத்த வளவில் வந்தனனென்று அறிக.  கீழ், வேத்திரகீயச்சருக்கத்து,
செய்யுள்-32 காண்க.  கடம் – குடம்:  உத்கசம் – மயிரில்லாதது:  இவனுடைய
குடம்போன்ற தலை, மயிரின்றி யிருந்ததனால், கடோத்கசனென்று இவனுக்குப்
பெயரிடப்பட்டதென்று வடநூல் கூறும்:  குணசந்திபெற்ற பெயர்: இனி
இப்பெயர்க்கு-கடம் – குடம்போன்ற, உத்கசன் – மிக்க மயிர்முடியுடையவன்
என்று பொருள்கொள்வர் ஒருசாரார்.

     ‘கொல்’ என்ற இடைச்சொல், வினாப்பொருளில் வந்தது.  லங்கா என்ற
வடசொல், இலங்கையென்று விகாரப்பட்டது: கடல் சூழ்ந்த தீவு.  அது
தென்கட லிடையே யுள்ளதனால் ‘தென்இலங்கை’ எனப்பட்டது; இது,
ராக்ஷசராஜதானியென்பது பிரசித்தம்.  விபீஷணன் –
பயங்கரனல்லாதவனென்றும், (பகைவர்க்கு) மிகவும் பயங்கரனென்றும்
காரணப்பொருள் பெறும்.  இராவணனது தம்பியும் அவனுக்குப் பின்பு
ராக்ஷசராசனுமாகிய இவன் ஏழுசிரஞ்சீவியருள் ஒருவனென்று அறிக.
‘குதிகொள்’ என்ற பாடத்திற்கு – விபீஷணனது ராச்சியம் அதிர்ச்சியடைய
என்றும், ‘சழக்குற’ என்ற பாடத்திற்கு – அச்சமுண்டாக என்றும் பொருளாம்.
கொதி – முதனிலைத்தொழிற்பெயர்.  கொள = கொள்ள: தொகுத்தல்

யாரையோ? உரைசெய் நீ!’ எனத் திறல் நிசாசராதிபன்
இயம்பலும்,
‘பாரை ஏழினையும் முழுதுடைக் குருகுலத்து மேன்மை
பெறு பாண்டுவின்
பேரன் யான்; விறல் இடிம்பன் மா மருகன்’ என, அரக்கர்
பெருமான் மனத்து
ஊரும் ஆதரவினோடு அழைத்து, அவனை உவகையோடு
மிக உறவு உறா.

இதுமுதல் நான்கு கவிகள் – குளகம்.

     (இ -ள்.) திறல் நிசாசர அதிபன் – வலிமையையுடைய இராக்கதராசனான
விபீஷணன், (கடோத்கசனை நோக்கி), நீ யாரையோ உரைசெய் என
இயம்பலும் – ‘நீ யார்? சொல்’ என்று வினாவுதலும்,-(கடோத்கசன்), ‘யான்-,
பாரை ஏழினைஉம் முழுது உடை குருகுலத்து மேன்மை பெறு பாண்டுவின்
பேரன்-ஏழு தீவுகளாகவுள்ள பூமி முழுவதையும் தனது
அரசாட்சியிலுடையவனும் குருவென்னும் அரசனது குலத்தின் மேன்மை
பெற்றவனுமான பாண்டுமகாராசனது பௌத்திரன்: விறல் இடிம்பன் மா மருகன்-
வலிமையையுடைய இடிம்பனென்னும் அரக்கர் தலைவனது சிறந்த மருமகன்’,
என – என்று விடை சொல்ல,-(அது கேட்டவுடன்), அரக்கர் பெருமான் –
இராக்கதராசனான அவ் விபீஷணன், மனத்து ஊரும் ஆதரவினோடு-(தன்)
மனத்திலுண்டாகி  மிகுகிற அன்புடனே, அவனை அழைத்து-
அக்கடோற்கசனை வரவழைத்து, உவகையோடு மிக உறவு உறா –
மகிழ்ச்சியோடு மிகவும் உறவு பாராட்டி (உபசரித்து),-(எ – று.)- ‘என’ என்று
அடுத்த கவியோடு தொடரும்.

    விபீஷணன், கடோற்கசனிடத்து, தனது அரக்கர் குலத்தவனென்ற
ஒற்றுமைபற்றி அன்புடன் உறவுகொண்டாடினனென்க.  ‘நிசாசராதிபன்’ என்று
முன் வந்ததனால், பின்வந்த ‘அரக்கர் பெருமான்’ என்றது, சுட்டின்
தன்மையதாய் நின்றது.  “வேறு இல்லை உண்டு யார் வேண்டும் படும் தகும்,
வினை பெயரெச்சம் வியங்கோள் பத்தும், திணைபாலிட மெலாஞ்
செல்லுமென்ப” என்றபடி இங்கு ‘யார்’ என்பது முன்னிலை யொருமையில்
வந்தது;  ஐ, ஓ என்ற இரண்டும் – அசை;  நிசாசராதிபன் – தீர்க்க சந்தி
பெற்ற வடமொழித் தொடர்.  நிசாசரர் – இரவில் (வலிமை கொண்டு)
சஞ்சரிப்பவர்.  ‘முழுது’ – உரிச்சொல்.  ஒருவனது பெயரை அவனது
பௌத்திரனுக்கு இடுதல் பெரும்பான்மை மரபாதலால், அப்பிதாமகனது
நாமதேயத்தைப் பெறுவனென்று பேரனென்ற சொற்குக் காரணப்பொருள்
கூறுவர்.  இடிம்பன் மகா பலசாலியென்று பிரசித்திபெற்றவ னாதலால்,
‘விறலிடிம்பன்’ எனப்பட்டான்.  மருகன் – உடன்பிறந்தவளது மகன்.
பெருமான் – பெருமையையுடையவன்;  மான் – பெயர்விகுதி.  ‘யாரையா’
என்ற பாடத்திற்கு, ‘ஐயா’ என்று விளித்ததாகக் கொள்க

‘நீ இலங்கையிடை வந்தது என்கொல்?’ என, ‘நீதியால்
உயர் உதிட்டிரன்
ராயசூயம் எனும் நாம மா மகம் இயற்றுவான் விறலொடு
எண்ணினான்;
நேயமான இளையோர்கள் நால்வரும் நெடுந் திசாமுகம்
அடங்க வென்று,
ஏய மா நிதி திரட்டல் உற்றனர்கள்; யானும், நின்
நகரி எய்தினேன்.

 நீ இலங்கையிடை வந்தது என்கொல் என – ‘நீ
இவ்விலங்காபுரியில் வந்ததன் காரணம் யாதோ?’ என்று (விபீஷணன்) வினாவ,-
(அதற்கு விடையாகக் கடோற்கசன்),- ‘நீதியால் உயர் உதிட்டிரன் – நீதியினாற்
சிறந்த தருமபுத்திரன், ராயசூயம் எனும் நாமம் மா மகம் இயற்றுவான் –
ராஜசூயமென்னும் பெயருடைய மகா யாகத்தை (த் தான்) செய்யுமாறு,
விறலொடு எண்ணினான் – உறுதியாக மனச்சங்கற்பஞ் செய்து கொண்டான்;
(அதன் பொருட்டு), நேயம் ஆன இளையோர்கள் நால்வர்உம் – (அவன்
பக்கல்) அன்பையுடைய அவனதுதம்பியர் நான்குபேரும், நெடுந் திசாமுகம்
அடங்க வென்று ஏய மா நிதி திரட்டல் உற்றனர்கள் – நீண்ட
திக்குக்களிடங்களிலெல்லாம் (சென்று அவ்வரசர்களைச்) சயித்து (ஆங்காங்கு)ப்
பொருந்திய மிக்க திரவியங்களைச் சேர்ப்பவரானார்கள்; (அதற்காகவே)
யான்உம் நின் நகரி எய்தினேன் – நானும் உனது இவ்விலங்காபுரிக்கு வந்தேன்;
(எ – று.) – இச்செய்யுளில் ‘என’ என்றது, அடுத்த செய்யுளில் வரும் ‘புகல’
என்ற வினையெச்சத்தைக்கொள்ளும்.

     தான் வந்த காரணத்தை இதனால் கடோற்கசன் கூறுவான்.  என் –
வினாவினைக் குறிப்புமுற்று.  கொல் – அசை.  ‘ராயசூயம்’ என வடமொழி
முதலில் இகரம் பெறாது நின்றது;  சிந்தாமணியில் “ராசமாபுரி”, “ரவிகுலதிலகன்”
என்பன போல. இயற்றுவான் – எச்சம், ஏய என்ற இறந்தகாலப் பெயரெச்சத்தில்,
ஏய் – பகுதி, அ – விகுதி, ய் – இடைநிலை. தனிக் குறிலைச்சாராத பகுதியீற்று
யகரம் யகரம்வரக் கெட்டது. உற்றனர்கள்+யானும்=உற்றனர்களியானும்,
“தன்னொழி மெய்ம்முன் யவ்வரி னிகரம் துன்னுமென்று துணிநரு முளரே”
என்பது காண்க.      

‘அற்பு அனைத்து உலகும் எண்ணவே, அறன் அளித்த
மன்னன் அழல் வேள்வியின்
கற்பனைக்கு உதவி தருக!’ என, பழைய கால் விழுத்த
நெடு வேலை வீழ்
வெற்பனைப் புகல, அந்த வீடணன் அளித்த நீடு
உயர் வியன்தலைப்
பொற்பனைத்தரு ஒர் ஏழும் ஏழும் உடனே கவர்ந்து,
கழல் போற்றியே,

அன்பு அனைத்து உலகுஉம் எண்ணஏ – (உனது) அன்பை
உலகத்தவரனைவருங் கொண்டாட, அறன் அளித்த மன்னன் அழல்
வேள்வியின் கற்பனைக்கு உதவி தருக – யமதருமராஜன் பெற்ற புத்திரனான
யுதிஷ்டிர ராஜன் அக்கினியிடத்துச் செய்வதாகிய (இராசசூய) யாகத்தின்
நியமத்துக்கு உரிய பொருளுதவியைத் தருவாயாக,’ என – என்று, பழைய கால்
விழுத்த நெடு வேலை வீழ் வெற்பனை புகல – முன்னொரு காலத்தில்
வீசியடித்த காற்று (பிடுங்கி) எறியப் பெரிய கடலில் வீழ்ந்திட்ட (மகா
மேருகிரியின் சிகரமாகிய திரிகூட மென்னும்) மலைக்கு உரியவனான
விபீஷணனை நோக்கி (க் கடோற்கசன்) சொல்ல,- (அது கேட்டவுடன்), அந்த
வீடணன் அளித்த – அவ்விபீஷணராஜன் (திறையாகக் கொடுத்த), நீடு உயர்
வியன் தலை பொன் பனை தரு ஒர் ஏழும்-மிகவுயர்ந்த விசாலமான
தலையையுடைய பொன்மயமான பதினான்கு பனை மரங்களையும், உடனே
கவர்ந்து-உடனே (கடோற்கசன்) பெற்றுக்கொண்டு, கழல் போற்றி –
(அவ்விபீஷணனுடைய) பாதங்களை வணங்கி, (எ – று;) ‘மீள வந்து’ என
அடுத்த கவியோடு தொடரும்.

     இப் பனைமரங்கள் யாகத்தில் தோரணக் கம்பமாக நாட்டுதற்கு
உரியனவா மென்பதை முதனூல் கொண்டு அறிக.  பொன் பனை –
அழகியபனை எனினுமாம்.  ஸ்ரீராமபக்தனும் மகாசாத்துவிகனுமான
விபீஷணன்பக்கல் தான் ஒரு காரியநிமித்தம் எதிர்த்து அபசாரப்பட்ட குற்றந்
தீர்தற் பொருட்டு கடோற்கசன், முடிவில் அவன் பாதங்களை வணங்கினன்.
ஆதிசேஷனை வென்று வாயுவினால் வலியக் கவர்ந்துகொண்டு வந்து
தென்கடலிலிடப்பட்ட மேரு சிகரமான திரிகூடமலையின்மீது அமைக்கப் பெற்ற இலங்காபுரியின் அரசனென்பார், ‘பழையகால் விழுத்த நெடுவேலைவீழ்
வெற்பன்’ என்றார்.  ‘வெற்பன்’ என்பது, குறிஞ்சி நிலத்தலைவன் பெயராய்
வழங்கும்.  அன்பு+அனைத்து=அற்பனைத்து: மென்றொடர் வேற்றுமையில்
வன்றொடராயிற்று;  [நன்-உயிர் – 34.] தருகென – தொகுத்தல்.  தரு-
வடமொழித்தற்சமம்.  ‘அறனளித்தமன்னன்’ என்றது, தருமத்தைப்
பாதுகாக்கின்ற அரசன் என்றவாறுமாம்.  ‘உலகு’ என்றது, சனங்களை
யுணர்த்திற்று.  உதவி – ‘இ’ விகுதி பெற்ற தொழிற்பெயர். 

மீள வந்து இளைய தாதை பாதம் முடிமீது வைத்து,
ஒளி விளங்கு பொன்
பாளை அம் பனைகள், பற்பராகம் முதலான பல் மணி,
பரப்பினான்,
நாள் இரண்டில்; இமையோரொடு ஒத்த பெரு ஞான
பண்டிதனும், நல் அறன்
காளை பைங் கழல் வணங்கினன், தனது பதி புகுந்து
நனி கடுகியே.

(பின்பு கடோற்கசன்), நாள் இரண்டில் மீளவந்து-இரண்டு
நாள்களில் (இலங்கையினின்று) திரும்பிவந்து, இளையதாதை பாதம் முடி மீது
வைத்து – தனது சிறிய தந்தையான சகதேவனுடைய பாதங்களைத் தன்
சிரத்தின் மேல்வைத்து வணங்கி, ஒளி விளங்கு பொன் பாளை அம் பனைகள்-
ஒளிவீசுகிற பொன்மயமான பாளைகளையுடைய அழகிய அப்
பனைமரங்களையும், பற்பராகம் முதல் ஆன பல் மணி – (மற்றும்
இலங்கையினின்று கொணர்ந்த) பத்மராகம் முதலான பல ரத்தினங்களையும்,
பரப்பினான் – (சகதேவனது முன்னிலையில்) மிகுதியாகவைத்துக் காட்டினான்;
(அதன் பின்பு), இமையோரொடு ஒத்த பெரு ஞான பண்டிதன்உம் –
தேவர்க்குச் சமமான சிறந்த தத்துவஞானத்தையுடைய பண்டிதனான
சகதேவனும், நனி கடுகி தமது பதி புகுந்து – மிக விரைந்து தமது
இந்திரப்பிரத்த நகரத்தைச் சேர்ந்து, நல் அறன் காளை பைங் கழல்
வணங்கினன் – நல்ல தருமபுத்திரனுடைய பசும்பொற் கழலணிந்த பாதத்தை
வணங்கினான்; (எ – று.)

    இக்கவியில் ‘பற்பராகமுதலான பன்மணி பரப்பினான்’ என்றது கொண்டு,
மேற்கவியில் பொற்பனைகளோடு பல இரத்தினங்களையும் விபீஷணன்
கொடுத்தனனென்று உணர்க;  இது – வந்ததுகொண்டு வாராத
துணர்த்தலென்னும் உத்தியின்பாற்படும்.  அங்ஙனங் கொடுத்தமையை
முதனூலிற் பரக்கக்காண்க.  பாதம் முடிமீதுவைத்து – பாதமீதுமுடிவைத்து
என்று மாற்றியுரைக்கலாம்.  பற்பராகம்-பத்மராகம்: செந்தாமரை மலர்போலச்
செந்நிறமுடைய ஒருவகையிரத்தினம்.  ‘நாளிரண்டில்’ என்பதைப் பிந்தின
வாக்கியத்தோடு கூட்டுதலும் ஒன்று.  இமையோர் – கண் இமையாதவர்;
எதிர்மறைத் தெரிநிலைவினையாலணையும்பெயர்; எதிர்மறை ஆகாரம்
புணர்ந்துகெட்டது:  விகுதிமுதல் ஆகாரம் ஓகாரமாயிற்று.  இமையில்
மூடாமையாகிய விசேஷமுடையவர் என்றுகொண்டால், உடன்பாட்டுக்குறிப்பு
வினையாலணையும் பெயராம்.  இனி, இமை-ஒளி; மனிதரினும் மிக்க
ஒளியையுடையவரென்றலும் உண்டு.  மனிதரினும் தேவர் அறிவிற் சிறத்தலால்,
அவரைச் சகதேவனுக்கு உவமையாக்கினார்.  சகதேவன், தத்துவ ஞானத்திலும் சோதிடவுணர்ச்சியிலும் தேர்ந்தவனாதலால், ‘பெருஞானபண்டிதன்’
எனப்பட்டான்.  மேல், கிருட்டிணன் தூதுசருக்கத்திலும், முகூர்த்தங்கேள்விச்
சருக்கத்திலும், பிறவிடங்களிலும் இத்தன்மை விளங்கும்.  தருமபுத்திரனது
சற்குண பூர்த்தி விளங்க, ‘நல்லறன் காளை’ என்றார்.  ‘காளைதன்கழல்’
என்பதும் பாடம்.  தாதை – ‘தாத’ என்ற வடசொல்லின் விகாரம்.
ஜ்ஞாநபண்டிதன் – வடமொழித்தொடர். 

ஆல் வரும் புரவித் திண் தேர் அறன் மகன், அநுசர் ஆன
நால்வரும் சென்று, திக்கு ஓர் நால்-இரண்டினும் தன் செய்ய
கோல் வரும் படியே ஆக்கி, கொணர்ந்தன திறைகள் கண்டான்.
மேல்வரும் இராயசூய வேள்வி நாம் விளம்பக் கேண்மோ:தம்பியர் நால்வரும்கொணர்ந்த திறைப்பொருள்களைத்
தருமன் காணுதல்.

ஆல்வரும் – ஆட்டமாடிக்கொண்டு வருகின்ற, புரவி –
குதிரைகளையும், திண் தேர் – வலிய தேர்களையுமுடைய, அறன் மகன் –
தருமபுத்திரன்-, அநுசர் ஆன நால்வர்உம் – (தனது) தம்பியான (வீமன்
முதலிய) நான்குபேரும், சென்று – போய், திக்கு ஓர் நால் இரண்டின்உம் –
எட்டுத்திசைகளிலும், தன்செய்ய கோல் வரும்படிஏ ஆக்கி – தனது செங்கோல்
செல்லும்படி செய்து, கொணர்ந்தன – (அந்தந்தத் தேசத்தவரிட மிருந்து)
கொண்டுவந்தனவான, திறைகள் – திறைப்பொருள்களை யெல்லாம், கண்டான்
– (மகிழ்ச்சியோடு) பார்த்தான்; மேல் வரும் இராயசூய வேள்வி நாம் விளம்ப
கேண்மோ – இனி நிகழும் ராஜசூய யாகத்தைப்பற்றி நாம்சொல்லக்
கேட்பாயாக;  (எ – று.)

     பாரத சரித்திரம் ஜநமேஜயமகாராஜனுக்கு வைசம்பாயன முனிவர்
கூறியதாக முதனூலிற் கூறியுள்ளதால், இங்கு ‘கேள்’ என்ற ஏவலொருமை
அவ்வரசனைக்குறித்தது, ‘நாம்’ என்ற தனித்தன்மைப்பன்மை, பௌராணிகர்க்கு
உரியது.  மோ – முன்னிலையசை.  ஆல் வரும் புரவி – நாட்டியக் குதிரை;
குதிரையின் நடைவிகற்பங்களுள் ஆட்டமும் ஒன்றாம்;  ஆவல் – ஆடுதல்;
ஆல்வரும் என்பதில் ‘வா’ என்பதன் விகாரமான ‘வரு’ என்பதைத்
துணைவினையென்றுங் கொள்ளலாம்.  ‘ஆல்வரும் புரவித் திண்டேர்’
என்பதற்கு – கனைத்து ஒலிக்கின்ற குதிரைகள்பூட்டிய வலியதேரையுடைய
என்று உரைத்தலு மொன்று; ஆலல் – ஒலித்தல். அநுஜர் – பின்பு பிறந்தவர்.
செய்ய என்ற குறிப்புப்பெயரெச்சத்தில், செம்மை என்ற பண்புப்பகுதி,
ஈறுபோய் முன்நின்ற மகரமெய் யகரமாத்திரிந்து ‘செய்’ என நின்றது.
நீதிதவறாது அரசனாற் செய்யப்படும் முறைமை, ஒருபுறம்கோணாது செவ்விய
கோல்போலுதலால், ‘செய்யகோல்’ எனப்பட்டது; உவமையாகுபெயர்;
வடநூலாரும் ‘தண்டம்’ என்றார்.  நாலிரண்டு – பண்புத்தொகை.
இதுமுதற் பன்னிரண்டு கவிகள் – பெரும்பாலும் முதற்சீரும்
நான்காஞ்சீரும் விளச்சீர்களும், மற்றைநான்கும் மாச்சீர்களுமாகிய கழிநெடிலடி
நான்குகொண்ட அறுசீராசிரியவிருத்தங்கள்; இவற்றில், மூன்று
ஆறாஞ்சீர்கள் தேமாச்சீர்களாகவே நிற்கும். 

இரணியன் இரணியாக்கன் என்ற தானவரை வென்று, ஆங்கு,
அரணிய இலங்கை மூதூர் அரக்கனை அநுசனோடும்
மரணம் உற்றிட, முன் சீறி, மாமனை மலைந்து, மற்றை
முரணிய பகையும் தீர்ப்பான், மூர்த்தியாய்ப் பிறந்துளோனை,இவ்விரண்டுகவிகள்-குளகம்: கண்ணன் முதலியோரை
யழைத்ததற்குத் தருமபுத்திரன் ஆளனுப்புதல்.

இரணியன் இரணியாக்கன் என்ற தானவரை ஆங்குவென்று
-ஹிரண்யன் ஹிரண்யாக்ஷன் என்னும் பெயருள்ள அசுரர்களை அக்காலத்திற்
சயித்து, அரணிய இலங்கை முது ஊர் அரக்கனை – அரண்களையுடைய
இலங்கையென்னும் பழமையான நகரிலிருந்த இராக்கதராசனான இராவணனை,
அநுசனோடு மரணம் உற்றிட – அவன் தம்பியான கும்பகர்ணனுடனே
மரணமடையும் படி, முன் சீறி – முற்காலத்திற் கோபித்து(ப் பொருது), –
மாமனை மலைந்து மற்றை முரணிய பகைஉம் தீர்ப்பான் மூர்த்தி ஆய் பிறந்து
உளோனை – மாதுலனான கம்சனைப் பொருது கொன்று மாறுபட்ட மற்றொரு
பகைவனான சிசுபாலனையும் தொலைத்தற்குத் திருமாலின் அவதாரமாய்த்
தோன்றியுள்ளவனாகிய கண்ணபிரானை, – (எ -று.)

    67. இக்கவியிற் குறித்ததன் விவரம், மேல் 143-ஆங் கவி முதலிய ஏழு
கவிகளில் நன்கு விளங்கும், ஹிரண்யன் – பொன் நிறமானவன், ஹிரண்ய
அக்ஷன் – பொன்நிறமான கண்களையுடையவன்.  கம்ஸன் – கண்ணனது
தாயான தேவகிக்குத் தமையனாதலால், கண்ணனுக்கு மாமனாவன்,
தன்னைக்கொல்லப் பிறந்த தேவகீபுத்திரன் யசோதையினிடம் ஒளித்து வளர்தல்
முதலிய வரலாறுகளை நாரதர் சொல்லக்கேட்டுக் கம்சன் அதிக கோபங்கொண்டு
கிருஷ்ணனைக்கொல்ல நிச்சயித்து, வில்விழாவென்கிற  வியாஜம் வைத்துக்
கண்ணனை மதுரைக்கு வரவழைத்துப் பலவகையில் வதைக்க வழிதேடுகையில்
கம்சசபையிலே கிருஷ்ணபகவான் வேகமாக எழும்பிக் கஞ்சனது
மஞ்சத்தின்மேலேறி அவனது கிரீடம் கழன்று கீழேவிழும்படி அவனைத்
தலைமயிர் பிடித்துத் தரையில்தள்ளி  அவன்மேல் தான் விழுந்து
அவனைக்கொன்றிட்டன னென்பதை யுணர்க.

     தாநவர்- வடசொல்; (காசியபமுனிவரது மனைவியருள்) தநு என்பவளது
சந்ததியார்; தாநவர், தைத்யர் என்பன அசுரர்களின் பரியாயநாமமாக
வழங்குதலால், இங்கு, தைத்தியரை ‘தாநவர்’ என்றார்.  இரணியனும்
இரணியாக்கனும் காசியபமுனிவரது மனைவியருள் திதியென்பவளிடத்திற்
பிறந்தவ ரென்று புராணம் கூறும்.  இலங்கை, கடத்தற்கு அரியதாய்ச்
சுற்றிலுமுள்ள கடலாகிய இயற்கைநீரரண் முதலிய பாதுகாப்புக்களை
யுடைமையால், ‘அரணியவிலங்கை’ எனப்பட்டது.  அரணிய –
குறிப்புப்பெயரெச்சம்;  இ – சாரியை.  இலங்கை ஆதியில் தேவசிற்பியான
விசுவகர்மாவினால் இந்திரனுக்காக நிருமிக்கப்பட்டுப் பின்பு மாலியவான்
முதலிய பூர்வீகராக்ஷசர்க்கும், அதன்பிறகு குபேரனுக்கும் , அப்பால்
இராவணனுக்கும் இராசதானி யாயினமை தோன்ற, ‘மூதூர்’ என்றார்.  முரணிய
– இறந்தகாலப் பெயரெச்சம்: இன் என்ற இடைநிலை ஈறுதொக்கது

விரைவினில் கொணருமாறு வீணை நாரதனைப் போக்கி,
தரணிபர்க்கு எல்லாம் ஓலை தனித்தனி தூதின் போக்கி,
வரனுடைச் சுருதி நான்கும் வகுத்தவன் ஆதிஆன
இருபிறப்பாளர் யார்க்கும் உலூகனை ஏவினானே.:இவ்விரண்டுகவிகள்-குளகம்: கண்ணன் முதலியோரை
யழைத்ததற்குத் தருமபுத்திரன் ஆளனுப்புதல்.

விரைவினில் கொணரும் ஆறு – சீக்கிரம் அழைத்து வரும்படி,
வீணை நாரதனை போக்கி – வீணாகானத்திற் சிறந்தவனான நாரதமகாமுனிவனை
யனுப்பி,- தரணிபர்க்கு எல்லாம் ஓலை தனித்தனி தூதின் போக்கி – மற்றையரசர்
யாவர்க்கும் வேறு வேறாகத் தூதர்கள் மூலமாகத் திருமுகம் அனுப்பி, – வான்
உடை சுருதி நான்கு வகுத்தவன் ஆதி ஆன இருபிறப்பாளர் யார்க்குஉம்
உலூகனை ஏவினான் – மேன்மையுடைய வேதங்கள் நான்கையும்
வகுத்தருளியவனான வியாஸமுனிவன் முதலாகிய முனிவர்களெல்லார்க்கும்
உலூகனென்ற புரோகிதனை (அழைப்பவனாக) அனுப்பினான், (தருமபுத்திரன்);
(எ -று.)

     68.  தரணிபர் – பூமியைக்காப்பவர், தரணி – (எல்லாப் பொருளையும்)
தரிப்பது.  தூதின், இன் ஐந்தனுருபு, ஏது.  தூது – உயர்திணைப் பொருள்தரும்
அஃறிணைச்சொல்.   வரன் = வரம்.  தாய் வயிற்றிற் பிறத்தலாகிய இயற்கைச்
சன்மத்தோடு பின்பு உபநயனச்சடங்கினால் வருகிற ஞானசன்மமும் ஒருபிறப்பா
மென்பது நூற்கொள்கை யாதலால், பிராமணர்க்கு ‘இருபிறப்பாளர்’ என்று
பெயர்.      

தானவர் தச்சன் வந்து சமைத்தது ஓர் சிற்பந்தன்னை
வானவர் தச்சன் கண்டு மகிழும் மண்டபத்தின், வேந்தர்
ஆனவர் எவரும் ஈண்டி, அந்தணர் எவரும் ஈண்டி,
மானவர் எவரும் ஈண்டி, வரம்பு அற நெருங்கினாரே.அரசர்கள் முனிவர்கள்முதலிய பலரும் வந்துசேர்தல்.

தானவர் தச்சன் வந்து சமைத்தது ஓர் சிற்பம் தன்னை –
அசுரசிற்பியான மயன் வந்து நிருமித்த ஒப்பற்ற சிற்ப வேலைத்திறத்தை,
வானவர் தச்சன் கண்டு மகிழும் – தேவசிற்பியான விசுவகர்மா பார்த்து
மகிழும்படியான, மண்டபத்தின் – அச் சபாமண்டபத்திலே,-வேந்தர் ஆனவர்
எவரும் ஈண்டி – அரசர்களெல்லாரும் வந்துசேர்ந்தும், அந்தணர் எவர்உம்
ஈண்டி – முனிவர்களெல்லாரும் வந்துசேர்ந்தும், மானவர் எவர்உம் ஈண்டி –
(மற்றை) மனிதர்களெல்லாரும் வந்துசேர்ந்தும், வரம்பு அற நெருங்கினார் –
எல்லையின்றி நெருக்கமுற்றார்கள்;  (எ – று.)

    காண்டவவனத்தில் தன்னை உயிர்காத்த உதவியை உட்கொண்டு
மயன்தானே வலியவந்து அரியபெரிய மண்டபத்தையமைத்தனனாதலால், ‘வந்து
சமைத்ததோர் சிற்பம்’ என்றார்.  மகிழும் மண்டபம் – மகிழ்தற்குக் காரணமான
மண்டபம்;  பெயரெச்சம், காரியப்பொருளது;  “நோய்தீரும் மருந்து”,
“நின்முகங்காணும் அவா” என்ற விடங்களிற்போல.  மாநவர் –
(காசியபமுனிவரது மனைவியருள்) மநு என்பவளது மரபினர்;  வேந்தரானவர்,
ஆனவர் – முதல்வேற்றுமைச்சொல்லுருபு.  

வர வர, வந்த வந்த முனிவரை வணங்கி, ஆசி
திரமுறப் பெற்று, வேந்தர் சிறப்பு எலாம் திருக்கண் நோக்கி,
நரபதிதானும் மற்றை நால்வரும், நீலமேனி
இரவியை அனையான்தன்னை, உவகையோடு, எதிர்கொண்டானே.பாண்டவர், அனைவரையும்வரவேற்றுக் கண்ணனை
எதிர்கொள்ளச் செல்லுதல்.

நரபதி-தருமராசன்,-தான்உம் மற்றை நால்வர்உம்-தானும் தனது
தம்பியர் நான்குபேருமாக,- வரவர-(முனிவர்கள் முதலியோர்) வருந்தோறும்,
வந்த வந்த முனிவரை வணங்கி-வந்த வந்த முனிவர்களை நமஸ்கரித்து, ஆசி
திறம்உற பெற்று-(அம்முனிவர்கள் கூறிய) ஆசீர்வாதங்களை (த் தமக்கு)
உறுதியாக ஏற்றுக்கொண்டு, வேந்தர் சிறப்பு எலாம் திரு கண் நோக்கி –
அரசர்கள் கொணர்ந்துகொடுத்த வரிசைப் பொருள்களை யெல்லாம் தங்கள்
திருக்கண்களாற் பார்த்து (அங்கீகரித்து),- நீலம் மேனி இரவியை
அனையான்தன்னை உவகையோடு எதிர்கொண்டான் – நீலநிறமுள்ள
திருமேனியையுடைய சூரியனைப்போன்று விளங்குபவனான கண்ணபிரானை
மகிழ்ச்சியோடு எதிர்கொள்ளலானான்; (எ – று.) – அதன் விவரத்தை, அடுத்த
செய்யுளிற் காண்க.

    அரசர்கள் முன்பு திறைகொடுத்ததுமன்றி இப்பொழுதும் பற்பல
காணிக்கைகள் கொணர்ந்து கொடுத்தனரென்று அறிக.  கண்ணன் நீலநிறமுள்ள
திருமேனியையும் திவ்விய தேஜஸையும் உடைமையால், ‘நீலமேனி யிரவியை
யனையான்’ என்றார்:  இதனை இல்பொருளுவமை யென்னலாம், ‘வேந்தர்
சிறப்பெலாம் திருக்கணோக்கி’ என்பதற்கு-அரசர் வருகிற சம்பிரமத்தை
யெல்லாம் கண்குளிரப்பார்த்து என்று உரைப்பாருமுளர்.  எதிர்கொள்ளுதல்-
எதிர்சென்று வரவுஏற்றல்.  நரபதி தானும் நால்வரும் எதிர்கொண்டான் –
ஆண்பாலும் பலர்பாலும் கலந்து, சிறப்பினால் ‘எதிர்கொண்டான்’ என்ற
ஆண்பால்முடிபைப் பெற்றது;  பால் வழுவமைதி.  வரவர-அடுக்கு,
தொறுப்பொருளது. அந்தஅந்த என்றும் பதம் பிரிக்கலாம். திரம் – ஸ்திரம்.

கர கதக் களிறு போலும் கனிட்டர் ஈர்-இருவரோடும்
துரகதத் தடந் தேர் விட்டு, துழாய் மணம் கமழும் பொன்-தோள்
மரகதக் கிரி அன்னானை வணங்கினன் தழுவி, வெள்ளைத்
திருநிறத்தவன்தன் செம்பொன் திருப்பதம் இறைஞ்சினானே.யுதிஷ்டிரன் ஸ்ரீகிருஷ்ணபலராமர்களை
யெதிர்கொள்ளுதல்.

(கண்ணனை எதிர்கொள்ளுதற்குத் தம்பியரோடும் பரிவாரங்க
ளோடும் தேரேறி நகர்புறத்துச் சென்ற தருமபுத்திரன் கண்ணனைக்
கண்டவுடனே), கரம் கதம் களிறுபோலும் கனிட்டர் ஈர் இருவரோடுஉம்-
துதிக்கையையும் கோபத்தையுமுடைய ஆண்யானை போன்ற தன் தம்பியர்
நால்வரோடும், துரகதம் தட தேர்விட்டு-குதிரைகள் பூண்ட பெரிய தேரை
விட்டு இறங்கி, துழாய் மணம் கமழும் பொன் தோள் மரகதம் கிரி அன்னானை
வணங்கினன் தழுவி-திருத்துழாயின்பரிமளம் வீசுகிற அழகிய
தோள்களையுடைய மரகதமலைபோன்றவனான கண்ணனை வணங்கி
அளவளாவி, வெள்ளை திருநிறத்தவன்தன் செம்பொன் திருபதம்
இறைஞ்சினான்-வெண்மையான திருமேனிநிறத்தை யுடையவனாகிய
பலராமனுடைய செம்பொற்கழலை யணிந்த திருவடிகளை வணங்கினான்;

     “யானை, அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும்” என்றபடி மறைத்தற்கு
உரிய காலத்திலே மறைத்துவைத்து வெளிப்படுத்தற்கு உரியகாலத்திலே
வெளிப்படுத்துந் தீராக்கோபமுடைமையால், ‘மதக்களிறு’ எனப்பட்டது.
“பொள்ளெனவாங்கே புறம்வேரார் காலம்பார்த்து, உள்வேர்ப்பரொள்ளியவர்”
என்றதனால், அத்தகைய கோபம் உபமேயமாகிய அரசர்க்கும் ஏற்கும்;
“திருகுவெஞ்சினக்களிறனைய சீற்றத்தான்” என்றார் பிறரும்.  இனி கரகதம்
என்பதை வடமொழித்தொடராகக் கொண்டு, துதிக்கையை யடைந்ததாகிய
வென்று உரைப்பாருமுளர்.  கனிட்டர்=கநிஷ்டர்; ஜ்யேஷ்டர் என்பது இதன்
எதிர்மொழி.  பலராமன் – கண்ணனது தமையன்; திருமாலின் எட்டாம்
அவதாரம்: இவனிடத்து ஆதிசேஷனது அம்சமும் கலந்திருந்தது;
வசுதேவனுடைய பத்தினியருள் தேவகியின் கருப்பத்தில் ஆறுமாசமும், பின்பு
ரோகிணியின் கருப்பத்தில் ஆறுமாசமும் இருந்து பிறந்தவன் இவன். பொன் –
பொற்கழலுக்குக் கருவியாகுபெயர்.  இக்கவியில் ‘இறைஞ்சினான்’ என்ற
முற்றுக்கும், மேற்கவியில் ‘நரபதி’ என்றதே எழுவாயெனக் கொள்ளலாம்.
வணங்கினான் – முற்றெச்சம்.

இரு புடை மருங்கும் திக்கு ஓர் எட்டையும் வென்றோர் போத,
நிருபதி தேரில் போத, நேமியான் களிற்றில் போத,
சுரர் பெருந் தச்சன் செய்த தொல் நகர் வீதி புக்கார்;
வரு திருப் பவனி கேட்டார், வள நகர் மாதர் எல்லாம்.கண்ணன் பாண்டவர்களுடன்வீதியிற்செல்ல, மாதர்கள்
வாயிலில்வந்து கண்டு அன்புகொண்டு தொழுதலை இதுமுதற்
பன்னிரண்டு கவிகள் கூறும்.

திக்கு ஓர் எட்டைஉம் வென்றோர் – எட்டுத்திக்குக் களிலுமுள்ள
அரசரனைவரையும் சயித்தவர்களான வீமன் முதலிய தம்பியர்நால்வரும், இரு
புடை மருங்குஉம்போத – இரண்டுபக்கங்களிலும் செல்லவும், நிருபதி – (தரும)
ராசன், தேரில் போத – (நடுவிலே) தேரின்மீது செல்லவும், நேமியான் –
சக்கராயுதமுடையவனான கண்ணன், களிற்றில் போத-யானை மீது (ஏறி
முன்னே) செல்லவும், சுரர் பெருந்தச்சன் செய்த தொல் நகர் வீதிபுக்கார் –
பெருமையையுடைய தேவசிற்பியான விசுவகர்மாவினாற் செய்யப்பட்ட பழமையான
இந்திரப்பிரத்தநகரத்து வீதியிற்சென்றார்கள்;  வரு திரு பவனி – (இங்ஙனம்
இவர்கள்) சிறப்பாகப் பவனிவருகிற செய்தியை, வளம் நகர் மாதர் எல்லாம் –
செல்வம் நிறைந்த அந்நகரத்தில்வசிக்கிற மகளிரனைவரும், கேட்டார் –
கேள்வியுற்றார்கள்; (எ – று.)

    பவனிவருதல்-திருவீதியில் உத்ஸவங்கொண்டருளுதல்; உலாப்போத
லென்றும், ஊர்வலம்வருதலென்றும், ஊர்கோலமென்றும் கூறப்படும்.  ‘மாதர்
எல்லாம்’ என்றது, பேதை முதலிய ஏழுபருவத்துமகளிரையும்; மேல் 77-ஆஞ்
செய்யுளில் ‘எழுவகைப்பருவமாதர்’ என்பது காண்க. மருங்கு – ஏழனுருபு. 

ஈர் அடிகளினும் செம்பஞ்சு எழுதுவார், எழுதும் முன்னர்,
ஓர் அடி எழுதி, மின்போல் ஒல்கி வந்து, இறைஞ்சுவாரும்;
ஆர் அமுது அனைய கண்ணின் அஞ்சனம் எழுதுகின்ற
சீரிய கோலும், கையும், திருத்தகத் தோன்றுவாரும்;

இதுமுதல் ஐந்து கவிகள் – குளகம். 

     (இ -ள்.) ஈர் அடிகளின்உம் செம் பஞ்சு எழுதுவார்-(தமது) இரண்டு
பாதங்களிலும் செம்பஞ்சுக்குழம்பூட்டத் தொடங்கினவர்களாகி, ஓர் அடி எழுதி
– ஒரு பாதத்துக்கு (அச்செம்பஞ்சின் சாரத்தைப்) பூசி, எழுதும்முன்னர் –
(மற்றொரு பாதத்திற்கு அதனை) எழுதுதற்கு முன்னே, மின்போல் ஒல்கிவந்து
இறைஞ்சுவார்உம்-(கண்ணன் பவனிவருகிறசெய்தி கேள்வியுற்றதனால்
ஆதரத்தோடு) மின்னற்கொடிபோல் நுடங்கி (வாயிலில்) வந்து
(அப்பெருமானைக்கண்டு) வணங்குபவர்களும்,-ஆர் அமுது அனைய
கண்ணின் அஞ்சனம் எழுதுகின்ற சீரிய கோல்உம் கைஉம் – அருமையான
அமிருதத்தைப் போன்ற தங்கள் கண்களிலே மைதீட்டிக்கொண்டிருக்கிற
கருவியாகிய சிறந்த கோலுங்கையுமாக [இரண்டு கண்களிலும் மையிட்டு
முடியாத நிலையிலே], திரு தக தோன்றுவார்உம் – அழகு அமைய (வாயிலில்
வந்து) வெளிப்படுபவர்களும்,-

    அவரவர் தம்மாளிகையினுள்ளேயிருந்து பலவகையலங்காரஞ்செய்து
கொண்டிருக்கையில் உலாச்செய்தி கேள்வியுற்றவுடனே நின்றநிலையிலே
விரைந்து அவ்வலங்காரம் நிறைவுறாமலே வாயிலில் வந்து
அப்பவனிக்கோலங்காண்பாராயின ரென்க. மின்னலுவமை – மெல்லியதாய்
ஒல்கியொசியும் வடிவின் விளக்கத்துக்கு. கண்ணின் கருவிழிச் சுற்றுப்புறத்திலுள்ள
வெண்ணிறத்தையும், அக்கண்ணழகு காண்பவருக்கு மகிழ்ச்சிவிளைத்
தலையும்பற்றி, ‘அமுதனைய கண்’ என்றார். திருத் தக என்பதற்கு – திருமகளோ
டொப்பவென்று உரைத்தலு மொன்று. ‘ஓடிவந்திறைஞ்சுவாரும்’ என்பதும் பாடம். 

விரி துகில் வேறு உடாமல், விரை கமழ் தூ நீர் ஆடி,
சுரி குழல் மேகம் மாரி துளித்திட எதிர்கொள்வாரும்;
கரதல மலரில் சங்கும், கலாபமும், சிலம்பும், ஆர்ப்ப,
தெருவுஎலாம் தாமே ஆகி, சீறடி சிவப்பிப்பாரும்;

விரை கமழ் தூ நீர் ஆடி – வாசனைவீசுகின்ற சுத்தமான
ஜலத்திலே ஸ்நானஞ்செய்து,  விரி துகில் வேறு உடாமல் – (ஈரவஸ்திரத்தை
மாற்றிப்) பெரியவேறு வஸ்திரத்தை உடுத்துக்கொள்ளாமலே [நனைந்த
ஆடையுடனே], சுரி குழல் மேகம்மாரி துளித்திட – நுனிசுருண்ட தம்
கூந்தலாகிய மேகம் நீர்த்துளியைச் சிந்த, எதிர்கொள்வார்உம் – (கண்ணனை)
எதிர் கொண்டுசெல்பவர்களும்,-கரதலம் மலரில் சங்குஉம் – தாமரை
மலர்போன்ற தம் கைகளி லணிந்த சங்கு வளையல்களும், கலாபம்உம் –
இடையணியும், சிலம்புஉம் – காற்சிலம்புகளும், ஆர்ப்ப – ஒலிப்ப, தெரு
எலாம் தாமேஆகி சிறு அடி சிவப்பிப்பார்உம் – வீதியெங்கும் தாமே
பரந்துசென்று தமது சிறிய பாதங்களைக் கன்றிச்சிவக்கச் செய்பவர்களும்,-
(எ- று.)

    விரிதுகில் – மடிப்பாயிருந்து விரிக்கப்படும் ஆடையென்றும், உலரும்படி
வெயில்காற்றுக்களில் விரிக்கப்பட்டிருந்த துகிலென்றும் கொள்ளலாம்.  ஸ்நான
ஜலம் பலவகைப் பரிமளத்திரவியங்களாற் சுகந்தமூட்டப்பட்டிருந்த தென்பார்,
‘விரைகமழ்தூநீர்’ என்றார்.  இது, அந்நகரத்தவரது செல்வவளத்தை விளக்கும்.
சுரிகுழல்மேகமாரி துளித்திட – காளமேகம் மழை பொழிவது போலக்
கரியகூந்தல்நீர்த்துளிசொரிய வென்க;  உருவகவணி.  காதலால்விரைந்து
ஓடி வந்ததனால், சீறடி சிவந்தன.  மாளிகையினுள்ளிருந்து வீதிவரையில்
வருமளவிலே சிவந்தன வென்றதனால், அவ்வடிகளின் மிக்க மென்மை
தோன்றும்.  இங்ஙனம் மகளிர் விரைந்து வெளிப்பட்டது தம்மனைக்கு
அணித்தான வீதிகடந்து போய்விடுதற்கு முன்பு கண்ணனைக்
காணவேண்டுமென்னும் வேட்கையினால்; அது தோன்ற, ‘எதிர்கொள்வார்’
என்றார்.

    கரதலமலர் – முன்பின்னாகத்தொக்க உவமைத்தொகை.  சங்கு –
வளைக்குக் கருவியாகுபெயர்.  கலாபம் – இடையணிகளில் ஒருவகை:
இருபத்தைந்து கோவையுள்ளது; “எண்கோவை மேகலை காஞ்சியொருகோவை,
பண்கொள் கலாபம் இருபத்தைந்து – கண்கொள், பருமம் பதினான்கு
முப்பத்திரண்டு, விரிசிகை யென்றுணரற்பாற்று” என்றது காண்க.
‘பண்கொள்கலாபமிருபத்தொன்று’ என்றும், ‘பண்கொள்கலாபம்’ பதினாறு’ என்றும்
பாடமோதி, கலாபம் – இருபத்தொரு கோவையிடையணி யென்றும், பதினாறு
கோவையிடையணி யென்றும் கொள்ளுதலுமுண்டு.  சிலம்பு – நூபுரமென்னும்
காலணி;  சிலம்புவது பற்றிவந்த காரணக்குறி; சிலம்புதல் – ஒலித்தல்.
“நுதலடிநுசுப்பென மூவழிச்சிறுகி” என்றபடி மகளிர்க்குப் பாதம் சிறுத்திருத்தல்
உத்தம விலக்கணமாதலால், ‘சீறடி’ எனப்பட்டது.

வார் குழைப் பற்பராக மணி விளக்கு ஏற்றுவாரும்;
நேர் இழை மருங்குல் வாட்டும் நிறை குடம் பூரிப்பாரும்;
கார் இளங் கமுகும், பச்சைக் கதலியும், நிரைத்து, தோள் ஆம்
தோரணம் நாட்டுவாரும்; தூ மலர் சிந்துவாரும்;

வார் குழை – (தாம் அணிந்த) பெரிய குழையென்னுங்
காதணியிலுள்ள, பற்பராகமணி – பதுமராக ரத்தினத்தால், விளக்கு
ஏற்றுவார்உம் – திருவிளக்கு ஏற்றுபவர்களும், – நேர் இழை – மெல்லிய
நூல்போன்ற, மருங்குல் – (தமது) இடையை, வாட்டும் – (பாரத்தால்) வருந்தச்
செய்கிற, நிறை குடம் -(தங்கள் தனங்களாகிய) பூர்ணகும்பங்களை,
பூரிப்பார்உம் – (வேட்கையால் மற்றும்) பூரிக்கச் செய்பவர்களும்,- கார் இளங்
கமுகும் – பசுமையான (தம் கழுத்தாகிய) இளங்கமுகையும், பச்சை கதலிஉம் –
(தம் தொடைகளாகிய) பச்சைவாழை மரங்களையும், நிரைத்து-வரிசைப்பட
நிறுத்தி, தோள் ஆம் தோரணம் நாற்றுவார்உம் – தம் தோள்களாகிய
பூமாலைத் தோரணங்களைத் தொங்கவிடுபவர்களும்,- தூமலர் சிந்துவார்உம் –
(ஓடிவரும்போது தங்கள் கூந்தலிற் சூடியிருந்த) நல்லமலர்களைச்
சொரிபவர்களும்,- (எ – று.)

    அரசர்முதலிய பெருமையிற் சிறந்தோர் வீதியில் வருகையில்
மங்களகரமாகவும் அலங்காரமாகவும் தீபமேற்றிப் பூர்ணகும்பம்
பூரித்துவைத்துக் கமுகும் கதலியும் நிரைத்துத் தோரணம் நாற்றி மலர்சிந்துதல்
சனங்களின் இயல்பு ஆதலால், அவ்வுபசாரங்களை இம்மகளிர் தமது
குழையென்னுங் காதணியிலுள்ள பதுமராக ரத்தினத்தின் ஒளியைக்கொண்டும்,
தமதுதனம் கழுத்து தொடைதோள் என்னும் அவயவங்களைக் கொண்டும்
கூந்தலிற்சூடிய, மலர்களைக் கொண்டும் விரைவில் அமைத்தனரென
வருணித்தார்;  உருவகவிசேடம். வரையும் நெய்ப்பும்பற்றி, கமுகு,
கழுத்திற்கு உவமை கூறப்படும்.  தொடைக்கு வாழையுவமை திரண்டு
உருண்டவடிவில் மென்மையும் அழகும் வடிவும் பற்றி.  கைகள் பூமாலைக
ளெனப் பட்டன; “எரியவிழ்காந்தண் மென்பூத் தலைகொடுத் திசையவைத்துத்,
திரள்பெறச் சுருக்குஞ் செச்சைமாலையோ” என்றார் பிறரும்.  இனி
‘நாட்டுவாரும்’ என்று பாடங்கொண்டு, தோள்களாகிய தோரணக் கம்பங்களை
அமைப்பவரென்றலு மொன்று.  தோளுக்கு இளமூங்கிலை
உவமைகூறுதலுண்டாதலால், அது தோரணக்கம்ப மெனப்பட்டது போலும். 

மாதர்கள் எவர்க்கும் முன் போய் வணங்குதற்கு உன்னி, சிந்தை
ஆதரவுடனே வந்தும், ஆவணம் அணுகுறாமல்
சூது அடர் கொங்கை, பொன்-தோள், சுரி குழல், சுமக்கல் ஆற்றாப்
பேதுறு மருங்குலோடும் பித்துறு பிடி அன்னாரும்;

மாதர்கள் எவர்க்குஉம் முன்போய் வணங்குதற்கு உன்னி –
(மற்றை) மகளிர்யாவர்க்கும் முன்னே (தாம்) சென்று (கண்ணபிரானைத்)
தரிசிக்கநினைத்து, சிந்தை ஆதரவுடனே வந்து உம் – மனத்திற் கொண்ட
ஆசையுடனே ஓடிவரத் தொடங்கியும், சூது அடர் கொங்கை பொன் தோள்
சுரி குழல் சுமக்கல் ஆற்றாபேதுறு மருங்குலோடுஉம் – (வடிவிற்)
சூதாட்டக்கருவி போன்ற தனங்களும் அழகிய தோள்களும் சுரித்த கூந்தலும்
என்னும் இவற்றின் பாரத்தைத் தாங்கமாட்டாமல் வருந்துகிற இடையுடனே,
ஆவணம் அணுகுறாமல் – அவ்வாறு (தாம் முன்புகருதியபடி) முன்
செல்லமாட்டாமல், பித்து உறு – (மோகத்தால்) மதிமயக்கங்கொண்ட, பிடி
அன்னார்உம் – பெண்யானை போன்றவர்களும் (ஆக),- (எ – று.)

    சிலமகளிர் தாம் எல்லாமாதர்க்கும் முந்திப்போய் வணங்க நினைத்து
ஆசையுடன் ஓடிவர முயன்றும் தங்கள் தனபாரத்தையும் பூரித்த
தடந்தோள்களையும் கூந்தற் பாரத்தையும் பொறுக்க மாட்டாமல் மெல்லிடை
வருந்துதலினாலே விரைந்து செல்ல மாட்டாதவர்களாய், கருதிய விருப்பம்
கைகூடாமையால் மோகப்பித்தம் விஞ்சின ரென்க.  நடை மெதுப்பட்டமை
தோன்ற, ‘பிடியன்னார்’ என்றார்.  பிடி – யானையின் பெண்மைப் பெயர்;
சூது என்ற ஆட்டத்தின் பெயர், இங்கு அவ்வாட்டத்தில் நிறுத்தப்படுகிற
காய்க்கு ஆகுபெயர்.  அடர் – உவமவுருபு.  இனி, சூது அடர் –
சூதாட்டக்கருவியை (த் தனக்கு ஒப்பாகா தென்று) வென்ற எனினுமாம்.  சூது –
தாமரையரும்புமாம்.  அவணம் = ஆவணம்;  அகரச்சுட்டு நீண்டது.  வணம் =
வண்ணம்; தொகுத்தல். 

இவ் வகை குழுக்கொண்டு ஆங்கண், எழுவகைப் பருவ மாதர்,
செவ்வியும், அழகும், தேசும், செய்ய பூந் திருவோடு ஒப்பார்,
மெய் வழி நின்ற போக மேகமே அனையான்தன்னை
மை வழி கண்ணின் நோக்கி, மனன் உற வணங்கினாரே.

செவ்விஉம் – (இயற்கை) அழகிலும், அழகுஉம் –
(ஆடையாபரணங்களாகிய செயற்கை) அழகிலும், தேசுஉம்-ஒளியிலும், செய்ய
பூ திருவோடு ஒப்பார் – செந்தாமரைமலரில் வாழ்கின்ற திருமகளோடு
ஒப்பவர்களான, எழு வகை பருவம் மாதர் – எழுவகைப்பருவத்து மகளிரும்,-
இவ்வகை-இவ்வாறு, ஆங்கண் – அவ்விடத்தில் [இந்திரப்பிரத்தநகரத்து
வீதிகளில்], குழுக்கொண்டு – (வந்து) கூட்டமாகக்கூடி,- மெய்வழி நின்ற
போகம் மேகம்ஏ அனையான் தன்னை-போகஸ்வபியியும்
மேகம்போன்றவனுமான கண்ணபிரானை, மை வழி கண்ணின் நோக்கி –
தீட்டிய அஞ்சனம் வழிகிற (தம்) கண்களாற்பார்த்து, மனன் உற வணங்கினார்
– மனப்பூர்வமாக (ஆழ்ந்த அன்புடன்) தொழுதார்கள்;

     (73) இறைஞ்சுவாரும் தோன்றுவாரும் (74) எதிர்கொள்வாரும் அடி
சிவப்பிப்பாரும் (75) ஏற்றுவாரும் பூரிப்பாரும் நாற்றுவாரும் சிந்துவாரும் (76)
பிடியன்னாருமாகத் (77) திருவோடொப்பார் எழுவகைப் பருவமாதர் இவ்வகை
ஆங்கண் குழுக்கொண்டு அனையான் தன்னை நோக்கி வணங்கினார் என்க.
எழுவகைப் பருவ மாதர் – பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை,
தெரிவை, பேரிளம்பெண் என்பவர்;  இவர்க்குமுறையே வயதெல்லை – ஐந்து
முதல் ஏழளவும் பேதை; எட்டுமுதற் பதினொன்றளவும் பெதும்பை;
பன்னிரண்டுமுதற் பதின்மூன்றளவும் மங்கை, பதினான்குமுதற்
பத்தொன்பதளவும் மடந்தை;  இருபதுமுதல் இருபத்தைந்தளவும் அரிவை;
இருபத்தாறுமுதல் முப்பத்தொன்றளவும் தெரிவை; முப்பத்திரண்டுமுதல்
நாற்பதளவும் பேரிளம்பெண் எனக்காண்க.  (இப்பிராயஎல்லை சிறிது
வேறுபடக் கூறுதலுமுண்டு.) கீழ் ‘இறைஞ்சுவார்’ முதல் ‘பிடியன்னார்’ ஈறாகக்
கூறப்பட்டவர்களை ஏற்றபடி பேதையர்முதற் பேரிளம்பெண்களீறாக
அமைத்துக்கொள்க.  இச்செய்யுளின் இரண்டாமடி எழுவகைப் பருவமாதர்க்கும்
உவமை கூறியதாதலால், ‘செவ்வி’ என்பதற்குப் பருவமெனப் பொருள்
கூறலாகாது.

    கட்டழகுடைய கண்ணபிரானைக் கண்டு களிக்கையில் அரும்புகிற
ஆனந்தக்கண்ணீராற் கரைந்து மையொழுகுதல் தோன்ற, ‘மைவழிகண்ணின்
நோக்கி’ எனப்பட்டது.  ஐம்பொறிகளாலும் நுகரப்படும் இன்பந்தான் ஒரு
புருஷவடிவங் கொண்டாற் போன்றவ னென்பது, ‘மெய்வழி நின்ற போக
மனையான்’ என்பதன் கருத்து.  மேகமேயனையா னென்றது-
நீலநிறமுடையதாய்க் குளிர்ந்து காண்பவர்க்குத் தாபந்தீர்க்கிற வடிவத்திலும்,
கைம்மாறு கருதாது கருணைமழை பொழிதலிலும் காளமேகம்
போன்றவனென்றபடி.  இனி, மூன்றாமடிக்கு, மெய்ப்பரிசவின்பமாகிய
மழையைப் பொழிகிறதொரு மேகம் போன்றவனை யென்றலுமொன்று.
திருவோடொப்பார், மூன்றனுருபுஒப்புப்பொருளில் வந்தது.  ஆங்கண் –
அக்கண் என்பது மெலித்தலும் நீட்டலும் பெற்றது

மாடம் பயிலும் மணித் தோரண வீதி,
நீடு அஞ்சனக் கண் நெருங்கித் தடுமாற,
ஆடம்பரக் கொண்டல் அன்னானை, ஆபாத
சூடம் கருதி, தொழுதார்-சில மாதர்.

மாடம் பயிலும் – மாளிகைகள் இடைவிடாது பொருந்தப்
பெற்ற, மணி தோரணம் வீதி – அழகிய தோரணங்கட்டி யலங்கரிக்கப்பட்டுள்ள
வீதியிலே,- சில மாதர் – சில மகளிர், – அஞ்சனம் நீடு கண் நெருங்கி தடுமாற
– மைதீட்டிய நீண்ட (தமது) கண்கள்நெருக்கமுற்றுக் கண்ணபிரானது
அவயவங்கள் பலவற்றிலும் அங்குமிங்குமாகப் பரந்துசெல்லுதலால்
தடுமாற்றமடைய, – ஆடம்பரம் கொண்டல் அன்னானை – (மழை பொழிதற்
பொருட்டு) ஆடம்பரஞ்செய்து வருகிற நீர்கொண்ட காள மேகத்தைப்
போன்றவனான அக்கண்ணபிரானை, ஆபாத சூடம் – திருவடிமுதல்
திருமுடியளவாக, கருதி – மனத்தில் ஊன்ற வைத்து, தொழுதார் –
வணங்கினார்கள்; (எ – று.)

     மகளிர் பலர் தம்தம் இருகண்களாலும் காணுதற்குத்தம்மில்
நெருங்கியபோது அவர்கள் கண்களும் நெருக்கமுற்றன. கண்ணபிரானது சகல
அவயவங்களின் அழகையும் சிறிது பொழுதினுள்ளே கண்டுகளிக்க
வேண்டுமென்னுங் கருத்தினாற் பரபரப்புக் கொண்டு பலவிடத்தும் பார்வை
செலுத்துதல் பற்றி, ‘கண்தடுமாற’ என்றார்.  ஆடம்பரம் – இடி மின்னல்
முதலியன கொண்டல் – தொழிலாகுபெயர்; கொள் – பகுதி: தல் – விகுதி;
மற்றவை – சந்திவிகாரம்.  ஆபாதசூடம் – வடமொழித் தொடர், மனிதர்களைப்
பற்றிக் கூறும்போது கேசாதிபாதமென்றும், தேவர்களைப்பற்றிக் கூறும்போது
பாதாதிகேச மென்றுங் கூறுதல், மரபு.

     இதுமுதல் ஆறுகவிகள் – மாச்சீரும் காய்ச்சீரும் விளச்சீருமாய் விரவி
வந்த நாற்சீரடி நான்குகொண்ட தரவுகொச்சகக் கலிப்பாக்கள்

கங்கை தரு பொற் கழலான் மணி மார்பில்
கொங்கை முகுளம் குழையும்படியாக,
சங்கை அற, மெய் தழுவுதற்குத் தம்மினும் தம்
செங் கை மலர் பதற, சென்றார்-சில மாதர்.

சில மாதர் – மற்றுஞ் சில மகளிர்,- கங்கை தருபொன்
கழலான் – கங்காநதியைப்பெற்ற அழகிய திருவடியையுடைய திருமாலின்
திருவவதாரமான கண்ணபிரானது, மணி மார்பில் – அழகிய திருமார்பிலே,
கொங்கை முகுளம் குழையும்படி ஆக – தங்கள் தனங்களாகிய அரும்புகள்
அழுந்தி நெரியும்படியாக, சங்கை அற மெய் தழுவுதற்கு-கூச்சமில்லாமல்
அவனது திருமேனியை ஆலிங்கனஞ்செய்வதற்கு [இறுக அணைத்தற்கு],
தம்மினும் தம்செம்கை மலர் பதற – தங்கள் மனம் விரைதலைக் காட்டிலும்
மிகுதியாகத் தங்கள் சிவந்த தாமரை மலர்போன்ற கைகள் விரைவுகொள்ள,
சென்றார் – ஓடிவந்தார்கள்; (எ – று.)

     சங்கையற – எவரேனும் கண்டு பழிப்பரோ வென்ற எண்ணமில்லாமல்
எனினுமாம்.  திருமால் உலகளந்தகாலத்து மேலே சத்தியலோகத்திற் சென்ற
அப்பெருமானது திருவடியைப் பிரமன் தன்கைக் கமண்டல தீர்த்தத்தாற் கழுவி
விளக்க, அந்த ஸ்ரீபாத தீர்த்தமே கங்காநதியாகப் பெருகியதுபற்றி, ‘கங்கைதரு
பொற்கழலான்’ என்றார்; தருதல் – தோன்றுவித்தல்.  மேலும் “கங்கைமாநதி
கால்வழி கருணையங்கடலே” என்பர்.  முகுளம் – தாமரை யரும்பென்றாவது, கோங்கரும்பென்றாவது கொள்க. ‘பதறநின்றார் சிலமாதர்’
என்றும் பாடமுண்டு.      

வண்டு மலர் கரும்பு ஆம் வண்ணப் படையானைக்
கண்டனைய கண் நிறைந்த காயா மலர் வண்ணன்,
செண்டு தரித்தோன், திருப்பவளத்து ஆர் அமுதம்
உண்டு, மனத்தினால், உய்ந்தார்-சில மாதர்.

சில மாதர் -, வண்டு மலர் கரும்பு ஆம் – வண்டுகளும்
மலர்களும் கரும்பும் ஆகிய, வண்ணம் படையானை – சிறந்த
ஆயுதங்களையுடைய மன்மதனை, கண்டு அனைய – கண்டாற் போன்றவனும்,
கண் நிறைந்த – (காண்பவரின்) கண்களுக்கு (யாதொரு குறைவுமில்லாமல்)
நிறைந்து தோன்றுகின்றவனும், காயாமலர் வண்ணன் – காயாம்பூப் போன்ற
நீலநிறத்தையுடையவனும், செண்டு தரித்தோன் – (அலங்காரமாகவும்
விலாசமாகவும் திருக்கையிற்) பூச்செண்டைக் கொண்டுள்ளவனுமான
கண்ணபிரானது, திரு பவளத்து – அழகிய பவழம்போன்ற சிவந்த
அதரத்தினது, ஆர் அமுதம் கிடைத்தற்கரிய அமிருதம்போன்ற திவ்விய
ரசத்தை, மனத்தினால் உண்டு – தம்மனத்திற்கொண்ட பாவனையினாற் பருகி,
(அதனால்), உய்ந்தார்-(வேட்கைமிகுதியால் உயிர்நீங்காது) பிழைத்தனர்;
(எ -று.)

மரணாந்தமான வேட்கைமிகுதி யுண்டானபோது இந்தப்பாவனை ஒருவாறு
அத்துயர் தணித்து உயிரை உடலில் நிலைநிறுத்தியதென்க.  மன்மதனுக்கு
வண்டினொழுங்கு வில்லின்நாணியும், தாமரை முதலிய ஐவகை மலர்கள்
பஞ்சபாணங்களும், கரும்பு வில்லு மாகும்.  இதனை, “ஆலைக்கரும்பு சிலை
ஐங்கணை பூ நாண் சுரும்பு” என்பதனாலும் அறிக.  படை – படைக்கலம்.
ஸர்வாங்க சுந்தரனான கண்ணனது திருமேனியின் கட்டழகு அவனது
குமாரனான மன்மதனது உடம்பினழகு போலுதலால், ‘படையானைக்கண்டனைய’
என்றார்;  மன்மதன் சிவபிரானால் உடலெரிக்கப்பட்டு அநங்கனாதற்கு முன்பு
உடம்போடு கூடியிருக்கையில் அவனுடம்பைக் கண்டாற் போன்ற என்றுங்கொள்க.
கண்டு – எச்சத்திரிபு. சாமுத்திரிகலக்ஷணம் முதலியவற்றிற் குறைவின்றிக்
காண்பவர்க்கெல்லாம் மிக்க திருப்தியுண்டாக்குகின்றவ னென்பது, ‘கண்ணிறைந்த’
என்றதனாற் பெறப்படும். கள் நிறைந்த என்று பதம்பிரித்து, தேன் நிறைந்த
என்று உரைத்து, காயாமலர்க்கு அடைமொழியாக்குதலுமொன்று. திருப்பவளம்
வாயிதழுக்கும், ஆரமுதம் – அதன் இனியரசத்துக்கும் உவமையாகுபெயர்கள்.
‘திருப்பவளத்தூறமுதம்’ என்றும் பாடமுண்டு.  ஆரமுதம்-நிறைந்த
அமிருதமுமாம்.  திருப்பவளத்து ஆரமுதம் உண்ணுதல் – அதரபானம்.
மனத்தினால் உண்டு – அதனைத் தாம் பருகுவதுபோல மனத்தினாற் பாவித்து

வஞ்சம் பயில் சகட வாள் அசுரன் மாள, விறல்
கஞ்சன் பட, உதைத்த காலானைக் கண்டு, உருகி,
அஞ்சு அம்பு மெய் உருவ, ஐம் புலனும் சோகம் உற,
நெஞ்சம் தடுமாற, நின்றார்-சில மாதர்.

சிலமாதர்,-,-வஞ்சம் பயில் வாள் சகட அசுரன் மாள –
வஞ்சனைசெய்தலில் தேர்ந்த வாள்போலக் கொடிய சகடாசுரன் அழியவும்,
விறல் கஞ்சன் பட – பல பராக்கிரமங்களையுடைய கம்சன் இறக்கவும்,
உதைத்த-, காலானை – திருவடியுடையவனான கண்ணபிரானை, கண்டு –
பார்த்து, உருகி – மனமுருகி,-அஞ்சு அம்பு மெய் உருவ – மன்மத பாணங்கள்
தம் உடம்பில் தைத்து ஊடுருவிச்செல்லவும், ஐம்புலன்உம் சோகம் உற –
(அதனால் தங்கள்) பஞ்சேந்திரியங்களும் வருத்தமடையவும், நெஞ்சம் தடுமாற
– மனம் சஞ்சலப்படவும், நின்றார் – செயலொழிந்து நின்றார்கள்; (எ – று.)

     சகடுதைத்த கதை:-வசுதேவ குமாரனாய்த் தேவகி வயிற்றினின்று
வடமதுரையில் திருவவதரித்த கண்ணன் உடனே திருவாய்ப்பாடி சேர்ந்து
அங்கு நந்தகோபகுமாரனாய் யசோதை வளர்க்க வளர்ந்தருளும்போது,
நந்தகோபகிருகத்தில் ஒருவண்டியின் கீழ்ப்புறத்திலே தொட்டிலிற்
பள்ளிகொண்டிருந்த ஸ்ரீகிருஷ்ணன், ஒருகால் அச்சகடத்திற்
கம்சனாலேவப்பட்ட அசுரனொருவன் வந்து ஆவேசித்துத் தன்மேலே விழுந்து
தன்னைக்கொல்லமுயன்றதை யறிந்து, பாலுக்கு அழுகிற பாவனையிலே தன்
சிறிய திருவடிகளை மேலேதூக்கி உதைத்தருள, அவ்வுதைபட்டமாத்திரத்தில்
அச்சகடு திருப்பப்பட்டுக் கீழேவிழுந்து அவ்வரசனுள்பட அழிந்தது என்பதாம்.

    மன்மதனம்பு ஐந்து – தாமரைமலர், மாமலர், அசோகமலர், முல்லைமலர்,
நீலோற்பலமலர் என்பன.  இவற்றின் தொழில் – முறையே உன்மத்தம், மதநம்,
சம்மோகம், சந்தாபம், வசீகரணம் என்பன.  இவை செய்யும் அவத்தைகள் –
சுப்பிரயோகம், விப்பிரயோகம், சோகம், மோகம், மரணம் என்பன.
அஞ்சு=ஐந்து:போலி.  மாள பட என்பவையும், உருவ உற தடுமாற
என்பவையும் – வினைச்செவ்வெண்.  ஐம்புலனும், உம்மை – இனைத்தென்றறி
பொருளில் வந்த முற்றும்மை.    

தங்கள் குல முன்றில் தலையாய மும் மதத்து
வெங் கண் மதமாமிசை வருவோன் மெய்ந் நோக்கி,
அம் கண் மிளிர, அரும் புருவ வில் முரிய,
திங்கள்நுதல் வேர்வு ஓட, நின்றார்-சில மாதர்.

சில மாதர்,-,-தங்கள் குலம் முன்றில் – தங்களுடைய
மாளிகைவாயிலிலே, தலை ஆய மும் மதத்து வெங்கண் மதம் மா மிசை
வருவோன்- தலைமைபெற்றதும் மூன்றுவகைமதஜலங்களையும் கொடுமையையும்
களிப்பையுமுடையதுமான யானையின்மேல் வருகின்றவனாகிய கண்ணபிரானது,
மெய் – திருமேனியை, நோக்கி – பார்த்து, – அம் கண் மிளிர-(தமது) அழகிய
கண்கள் சஞ்சலமடையவும், அரும் புருவம் வில் முரிய – அருமையான
புருவங்களாகிய விற்கள் நெறிந்து நெற்றியிலேறி வளையவும், திங்கள் நுதல்
வேர்வு ஓட – பிறைச்சந்திரன்போன்ற வெற்றி யில் வேர்வை நீர் வழியவும்,
நின்றார் – (வேட்கைநோய் விஞ்சி) நின்றார்கள்; (எ – று.)

    வீதியில் தங்கள் வீட்டுவாயிலில் கிருஷ்ணன் வரும்போது சில மாதர்
காமவேட்கை மிக நின்றாரென்பதாம்.  கண்மிளிர்தல் முதலியன,
உவகைச்சுவையின் மெய்ப்பாடு.  குலம் – கிருகம்.  முன்றில் – இல்முன்:
இலக்கணப்போலி, தலையாய மா என இயையும்.  பட்டத்துயானையாகிய
அரசயானை யென்றபடி, வெங்கண் – அஞ்சாமை: அஞ்சுவிக்குந்தன்மை;
பயங்கரமான கண்களுமாம்.  மதமா – வலியயானை யெனினுமாம்; “மதவே
மடனும் வலியுமாகும்” என்றது தொல்காப்பியம்.  முன்றிற்றலை யென்று கூட்டி,
முன்றிலில் என்று உரைத்து, ஆயமும்மதத்து – உண்டாகிய மூவகை
மதங்களையுமுடைய என்றலுமொன்று.  அம் கண் மிளிர என்பதற்கு – நீர்
கண்களில் ததும்பி விளங்க என்றுமாம்.  புருவத்துக்கு வில் – வளைந்த
வடிவிலும், நெற்றிக்குப் பிறைச்சந்திரன் வளைவான வடிவிலும் ஒளியிலும்
உவமம்.      

கால முகிலும் மலர்க் காயாவும் அன்ன திருக்
கோலம் உடையோன் குலவு மணிப் பூண் மார்பின்
மாலை நறுந் துளப மன்றலுக்கு, வாள் நயன
நீல வரி வண்டு ஆகி, நின்றார்-சில மாதர்.

சில மாதர்-,-காலம் முகில்உம் – கார்காலத்து மேகத்தையும்,
மலர் காயாஉம்-காயாம் பூவையும், அன்ன-போன்ற [நீலநிறமான], திரு கோலம்
உடையோன் – திருமேனியையுடையவனான கண்ணபிரானது, குலவு மணி பூண்
மார்பின் – விளங்குகிற இரத்தினாபரணங்களைத் தரித்த மார்பிலணிந்த, மாலை
நறுந்துளபம்-நல்ல திருத்துழாய்மாலையினது, மன்றலுக்கு-வாசனைக்கு
(அழகுக்கு), வாள் நயனம் வரி நீலம் வண்டு ஆகி – வாட்படை போன்ற
தங்கள் கண்கள் உடற்கோடுகளையுடைய நீலநிறமுள்ள வண்டுகளாகப்பெற்று,
நின்றார்-; (எ – று.)

     வண்டுகள் நறுமணத்தை விரும்பி மாலையைநாடி மொய்த்தல் போலத்
தம்கண்கள் கண்ணபிரான் சாத்திக்கொண்டு திவ்விய பரிமளம் வீசுகிற
திருத்துழாய்மாலையின் அழகிலே ஈடுபட்டு அதிற் பதிய சிலமாதர் நின்றனர்
என்க.  துளபமன்றலுக்கு என்பதை மன்றல் துளபத்துக்கு என மாறுதல் நலம்.
‘ஆக நின்றார்’ என்பதும் பாடம்.  துளஸீ, நயநம் என்ற வடசொற்கள்
விகாரப்பட்டன.  மகளிர்கண்ணுக்கு வண்டு – கருநிறத்திலும், வடிவிலும்,
பரப்பிலும் உவமம்.      

மங்கையர் பலரும் இங்ஙன் மன்மத பாணம் நான்கின்
இங்கித இன்பம் எய்தி, இன் உயிரோடு நிற்ப,
பங்கு உற வந்த அந்தப் பாண்டவர் ஐவரோடும்,
கொங்கு அவிழ் துளபத் தாரான், குந்தி வாழ் கோயில் புக்கான்.கண்ணன் பாண்டவர்களுடன்குந்தியின் மாளிகை
சேர்தல்.

 மங்கையர் பலர்உம் – பலமகளிரும், இங்ஙன் – இவ்வாறு,
மன்மத பாணம் நான்கின் – மன்மதனதுபாணங்கள் நான்கினால், இன்பம்
இங்கிதம் எய்தி – உவகைச் சுவைக்கு உரிய மெய்ப்பாடுகளை யடைந்து, இன்
உயிரோடு நிற்ப – (உணர்வு முதலியவற்றை யிழந்து) இனிய
உயிர்மாத்திரத்தோடு கூடிநிற்க, -கொங்கு அவிழ் துளபம் தாரான் – வாசனை
வீசுகின்ற திருத்துழாய்மாலையை  யுடையவனான கண்ணபிரான், பங்கு உற
வந்த அந்த பாண்டவர் ஐவரோடும் – (தனது) அருகாக வந்த அந்தப்
பஞ்சபாண்டவர்களுடனே, குந்திவாழ் கோயில் புக்கான் – (அவ்விந்திரப்பிரஸ்த
நகரத்திலே) குந்திதேவி வசிக்கிற மாளிகைக்குப் போய்ச் சேர்ந்தான்; (எ – று.)

     கீழ் “அஞ்சம்பு மெய்யுருவ” என்று சொல்லி, இங்கு
‘மன்மதபாணநான்கின்’ என்றது, மன்மதபாணம் ஐந்தில் ஈற்றதான
நீலோற்பலமலரை யொழித்தற்கு; ‘நினைக்கும் அரவிந்தம் நீள் பசலை மாம்பூ,
அனைத்துணவு நீக்கும் அசோகு – வனத்திலுறு, முல்லை கிடைகாட்டும் மாதே
முழுநீலம், கொல்லும்மதனம்பின் குணம்” என்று கூறப்பட்ட மன்மதன்
கணைச்செயல்களில் நீலத்தினது காரியமான மரணமொன்று தவிர மற்றை
யம்புகளின்செயல்கள் யாவும் கண்ணனைக் கண்ட மகளிர்பக்கல்
நிகழ்ந்தனவென்பார், ‘மங்கையர் பலரு மிங்ஙன் மன்மத
பாணநான்கினிங்கிதவின்ப மெய்தி யின்னுயிரோடு நிற்ப’ என்றார்.  இன்ப
விங்கிதம் என்றது, சிருங்கார ரசத்தால் உள்ளத்து நிகழுங் குறிப்புக்கு ஏற்ப
உடம்பி லுளவாகும் கண்ணீரரும்பல் மெய்ம்மயிர்சிலிர்த்தல் நுதல்வியர்த்தல்
புருவம்நெறித்தல் முதலிய மெய்ப்பாடுகளை.  ‘மங்கையர் பலரும்……….நிற்ப’
என்றது, கீழ்ப்பன்னிரண்டு கவிகளில் விரித்துக் கூறியவற்றைத்
தொகுத்துச்சுட்டியது; அநுவாதம்.  உலாவென்னும் பிரபந்தத்திற்கு அங்கமாகக்
கூறிய விதிகளைத்தழுவி இங்ஙனம் பவனிக்காதலை விரித்துரைத்தார்.

     பங்கு உற – இரண்டுபக்கங்களிலும் பின்புறத்திலும் பொருந்த. கோயில்-
கோ இல்; சிறந்தவீடு: யகரவுடம்படுமெய் பெற்றது, இலக்கணப்போலி.  மதன்
என்ற பெயர் – (ஆசை நோயாற்) பிராணிகளின் அறிவைக் கலக்குபவனென்று
பொருள்படும்.  ‘குந்திவாழ் கோயில்’ என்றது, அரண்மனையில் இராசஸ்திரீகள்
வசிக்கின்ற இடமான அந்தப்புரத்தை.  “மங்கையர்” என்றது சிறப்புப்பெயர்
பொதுப்பொருளின்மேலது.

     இது முதல் எட்டுக்கவிகள் 66 – ஆங் கவிபோன்ற அறுசீர்க்
கழிநெடிலடியாசிரியவிருத்தங்கள்.
 

கொற்றவர் ஐவர்தம்மைக் குருகுலம் விளங்குமாறு
பெற்றவள் பாதம் போற்றி, பிறப்பு இறப்பு அறுக்க வல்லோன்,
மற்று அவள் வாழ்த்த வாழ்த்த, மனம் மகிழ்ந்து, அழலின் வந்த
பொற்றொடி பணிவும், ஏனைப் பூவையர் பணிவும், கொண்டான்.கண்ணன் குந்தியைவணங்குதலும், அவனைத்
திரௌபதி முதலியோர் வணங்குதலும்.

பிறப்பு இறப்பு அறுக்க வல்லோன் – (தன்னை
வணங்கினவர்களுடைய சனனமரணங்களை நீக்கி (அவர்கட்கு)
முத்தியளிக்கவல்லவனான கண்ணபிரான்,- குருகுலம் விளங்கும் ஆறு கொற்றவர்
ஐவர் தம்மைபெற்றவள் பாதம் போற்றி – குருவென்னும் அரசனது வம்சம்
பெருமையடையும்படி வெற்றியையுடைய பஞ்சபாண்டவர்களைப் பெற்றவளான
குந்திதேவியினது பாதங்களை நமஸ்கரித்து, அவள் வாழ்த்த வாழ்த்த
மனம்மகிழ்ந்து – அக்குந்திதேவி பலவாறுவாழ்த்த (அவ்வாழ்த்துக்களை யேற்று)
மனம் மகிழ்ந்து, மற்று – பின்பு, அழலின் வந்த பொன்தொடி பணிவுஉம் ஏனை
பூவையர் பணிவுஉம் கொண்டான் – (துருபதன் செய்வித்த புத்திரகாமயாகத்து)
ஓமாக்கினியினின்று உதித்த பொன்னாலாகிய தொடியென்னுங்
கைவளையையுடையவளான திரௌபதியினது வணக்கத்தையும் (சுபத்திரை
முதலிய)மற்றை மகளிரது வணக்கத்தையும் பெற்று வாழ்த்துக் கூறியருளினான்;
(எ – று.)

     கண்ணன் தான் தேவாதிதேவனான திருமாலினம்சாவதாரமாயினும்
மானுடபாவனையை மேற்கொண்டுள்ளதனால், தனக்கு அத்தைமுறையான
குந்தியின் பாதங்களில் வணங்க, சுபத்திரை திரௌபதி முதலியோர்
அப்பிரானை வணங்கினாரென்பதாம்.  ‘பிறப்பிறப்பறுக்கவல்லோன்
ஐவர்தம்மைப் பெற்றவள்பாதம் போற்றி அவள் வாழ்த்த வாழ்த்த மனமகிழ்ந்து’
என்றதில், எம்பெருமானது பரத்வத்தோடு சௌலப்யமும் வெளியாம். ‘அழலின்
வந்த பொற்றொடி’ என்றது, கருப்பத்திற் பிறவாதவளெனத்திரௌபதியினது
உற்பத்திச் சிறப்பை யுணர்த்தும். முக்திபெற்றவர் கருமந் தொலைந்ததனால்
மீளவும் பிறத்தலில்லையாதலால் ‘பிறப்பிறப்பறுக்க வல்லோன்’ என்றார்.
ஒருமகளை வணங்கிப் பலமகளிரது வணக்கத்தைக் கொண்டானென்றதில்,
பரிவர்த்தநாலங்கார மென்னும் மாற்றுநிலையணி தொனித்தல் காண்க.
கொற்றவரைவர் தம்மைப்பெற்றவள் – வீரமாதா என்றபடி.  மற்று –
வினைமாற்றுமாம். ஐவர் – தொகைக்குறிப்பு. குருகுலம் விளங்குமாறு –
குருவம்சம் சந்ததியறாது தொடர்ச்சியுற்று நீடித்து வாழும்படி யெனினுமாம்.

    பஞ்சபாண்டவர்களில் நகுல சகதேவர்கள் மாத்திரிவயிற்றிற்
பிறந்தவராயினும், குந்தியை ‘ஐவர்தம்மைப் பெற்றவள்’ என்றது, துர்வாச
மகாமுனிவனை வழிபட்டு மந்திரோபதேசம்பெற்ற குந்திமாத்திரிக்கு
அம்மந்திரத்தைச் சொல்லிக்கொடுக்க அதன் பலத்தினாலேயே அவ்விருவரும்
பிறந்தனராதலாலும், மாத்திரி பாண்டு வோடு சககமநஞ்செய்து இறந்துவிட
இளமை தொடங்கி நகுலசகதேவர்களையும் குந்தியே வளர்த்தனளாதலாலு
மெனக்காண்க;  “அந்தணன் முன்தரு மந்திர மைந்தினி லறுவரையுங் கடவுட்,
குந்தி பயந்தனள்” என்பர் மேலும். பொற்றொடி – மூன்றனுருபும்
பயனுந்தொக்கதொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை.  பூவை –
நாகணவாய்ப்பறவை; கிளியுமாம். அவை கொஞ்சிப் பேசுவதுபோல இனிமையாகப்
பேசுபவர், பூவையர்.  

அரசவைக்கு அணிசெய் சிங்க ஆசனத்து இருத்தி, வெற்றி
முரசுடைத் துவச வேந்தன் முகம் மலர்ந்து இருந்த காலை,
விரை செயப் புரவித் திண் தேர் வீமனை முதலோர், எங்கும்
உரை செலக் கவர்ந்த செல்வம் காட்டி நின்று, உரைசெய்தாரே.பாண்டவர்கள் கண்ணனோடுஅளவளாவுதல்.

பின்பு) வெற்றி முரசு உடை துவசம் வேந்தன் – சயத்துக்கு
அறிகுறியாகிய முரசவாத்தியத்தின் வடிவத்தையுடைய கொடியையுடைய
தருமராசன், அரசு அவைக்கு அணி செய் சிங்க ஆசனத்து இருத்தி – இராச
சபைக்கு அலங்காரத்தைச்செய்வதொரு திவ்வியசிங்காதனத்திலே
(கண்ணபிரானை) எழுந்தருளப்பண்ணி, முகம்மலர்ந்து இருந்த காலை –
(கண்ணபிரானது வரவினாலாகிய மகிழ்ச்சியினாலே) முகமலர்ச்சியுற்றிருந்த
சமயத்தில்,- விரை செயம் புரவிதிண் தேர் வீமனை முதலோர் – வேகமாய்ச்
செல்வனவும் வெற்றியைத்தருதற்கு ஏற்றனவுமாகிய குதிரைகள் பூட்டிய
வலியதேர்களையுடைய வீமசேனனை முதலாகவுடையவர்களான (தருமன்
தம்பியர்) நால்வரும், எங்கும் உரைசெல கவர்ந்த செல்வம் காட்டி நின்று
உரைசெய்தார் – எல்லாத்திக்குகளிலும் (தங்கள்) ஆஜ்ஞை தடையின்றிச்செல்ல
(ஆங்காங்கு அரசர்களை வென்று இராசசூய யாகத்தன் பொருட்டுத் தாம்)
கவர்ந்துகொண்டு வந்த பொருள்களை யெல்லாம் (அக்கண்ணபிரானுக்குக்)
காண்பித்து (அருகில்) நின்று (அவை இன்னவை இன்னவையென்ற
விவரத்தையும் தமது போர்வரலாற்றையும்) கூறினார்கள்; (எ – று.)

    சோடசோபசாரங்களுள் தவிசளித்தல் கூறினது, மற்றவற்றிற்கும்
உபலக்ஷணம்.  “அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சங்கடுத்தது காட்டும்
முகம்” என்றபடி அகத்துமகிழ்ச்சிக்கு ஏற்ப முகம்மலர்ந்திருந்ததென்க.
விருந்தோம்புவார்க்கு இன்றியமையாதனவான இன்முகம் இன்சொல் உபசரித்தல்
என்ற மூன்றனுள் முதலதான முகமலர்ச்சியைக் கூறினது, பிறவற்றிற்கும்
உபலக்ஷணமாம்.  சயப்புரவி – உத்தம விலக்கண மமைந்த குதிரை;
போர்த்தொழிற்கு ஏற்ற குதிரையுமாம்.  உரை – கட்டளைச்சொல்;  எங்கும்
உரை செல – எல்லாவிடத்தும் புகழ் பரவ எனினுமாம்.  செல்வம் – பொன்
மணி யானை தேர் குதிரை முதலாக முன்பு கூறியன.  வீமனை முதலோர்
என்பதில், ஐ – சாரியை யெனினுமாம்.  வெற்றி முரசுடைத்துவசம்-தனது
வெற்றியை விளக்குகிற முரசக்கொடியென்றுங் கொள்க.

முன் நரமேதம் செய்வான் முடிச் சராசந்தன் என்னும்
கின்னரர் பாடும் சீரான், கிளப்ப அருஞ் சிறையில் வைத்த
அந் நரபதிகளோடும், அவன் மகன் மாகதேசன்,
எந் நரபதிகளுக்கும் இரவியே என்ன, வந்தான்.சராசந்தன் மகனானசகதேவன் முதலியோர்
அவ்வேள்விக்கு வருதல்.

முடி – கிரீடாதிபதியான, சராசந்தன் என்னும் – ஜராசந்த
னென்னும் பெயருள்ள, கின்னரர் பாடும் சீரான் – (பதினெட்டுத்
தேவகணங்களில் ஒரு சாராரான) கின்னரர்கள் பாடும் புகழையுடையவனாகிய
அரசன், முன்-முன்பு, நரமேதம் செய்வான் – நரமேதயாகஞ் செய்தற்பொருட்டு,
கிளப்பு அரு சிறையில் வைத்த – சொல்லுதற்கு அரிய [மிகக்கொடிய]
சிறைச்சாலையிலே வைக்கப்பெற்றவர்களான, அந்நரபதிகளோடுஉம் – அந்த
[கீழ்க்கூறிய] அரசர்களுடனே, அவன் மகன் மாகதஈசன் – அச்சராசந்தனது
புத்திரனும் மகததேசத்தார்க்கு அரசனுமான சகதேவன், எ நரபதிகளுக்குஉம்
இரவிஏ என்ன வந்தான் – எல்லாவரசர்கட்கும் சூரியனென்று சொல்லுமாறு
(சிறந்த தோற்றமுடையவனாய்) வந்து சேர்ந்தான்; (எ – று.)

    ‘நரமேதம்’ என்பது, சிவபிரானது முன்னிலையிற் சராசந்தன் பல
அரசர்களைப் பலிகொடுக்க உத்தேசித்ததை.  நூறு அரசர்களைப் பசுக்களாக
நிறுத்திக்கொன்று பலிசெலுத்தக்கருதிச் சராசந்தன் அரசர்களை வென்று
உயிரோடு கவர்ந்து சிறைச்சாலையிலிட்டுத் தொகுத்து வருகையில்
எண்பத்தாறுபேர் சேர்ந்தனராக, மற்றும் பதினால்வரைச்சேர்த்தற்கு முயன்றுவரு
மளவிலே கண்ணன் வீமனைக்கொண்டு சராசந்தனைக் கொன்று
அவ்வரசர்களைச் சிறை விடுவித்தன னென்க.  அவ்வரசர்களை ‘அந்நரபதிகள்’
என்று சுட்டியது, கீழ் 14-ஆஞ் செய்யுளிலும், 37 – ஆஞ் செய்யுளிலும்
கூறிப்போந்தன ராதலால்.  அவ்வரசனைக் கண்ணன் சிறைவிடுத்தபோது,
அவர்கள் மிக்க மகிழ்ச்சியோடு அப்பெருமானை வணங்கிப் பலவாறு துதித்து
‘இனி எங்கட்கு நியமநம் யாது? கூறியருள்க’ என்ன, பகவான் ‘இனி நீவிர்
நும்நும் நாடுகளை அரசாளுதலும், யுதிட்டிரன் செய்யும் இராயசூய யாகத்துக்கு
வந்து உதவுதலும் செய்வீராக’ என்று நியமித்து விடையளிக்க அவர்கள்
மீண்டனராதலால், அங்ஙனமே வேள்விக்கு வந்தனரென்க.  சராசந்தனது
மிக்கபுகழ் இம் மண்ணுலகிலேயன்றி விண்ணுலகிலும் பரவிய தென்பது,
‘கின்னரர் பாடுஞ்சீரான்’ என்றதனால் விளங்கும்.  கிளப்பு அருஞ் சிறை-
மீட்டற்கு அரிய சிறையுமாம், ஜராசந்தகுமரன், கண்ணன் வீமன் அருச்சுனன்
என்பவர்களது அருளைப்பெற்று அரசனாய்ச் சிறத்தல் தோன்ற,
‘எந்நரபதிகளுக்கு மிரவியேயென்ன வந்தான்’ என்றார்.  ரவி – வடசொல்: ஏ –
உயர்வுசிறப்பு.  செய்வான் – எச்சம். 

அரும் பனைக் கொடியோன் ஆதி அரவு உயர்த்தவன் ஈறு ஆகும்,
பொரும் படைச் சேனை வெள்ளப் பூருவின் குலத்து உளோர்கள்,
கரும் பனைத் தடக் கை வெங் கண் கரி முதல் சேனையோடும்,
இரும்பினைக் குழைக்கும் நெஞ்சர் யாவரும், ஈண்டி மொய்த்தார்.வீடுமன் முதலிய பூருகுலத்துவேந்தரனைவரும்
வேள்விக்கு வருதல்.

அரும் பனை கொடியோன் ஆதி-அருமையான பனைமரத்தின்
வடிவமெழுதிய துவசத்தையுடைய வீடுமன்முதல், அரவு உயர்த்தவன்
ஈறுஆகும் – பாம்புக்கொடியை உயரநாட்டியவனான துரியோதனன்
ஈறாகவுள்ள, இரும்பினை குழைக்கும் நெஞ்சர் – இரும்பையும்
நெகிழ்ச்சியுடையதென்னும்படியான நெஞ்சுறுதியை யுடையவர்களாகிய, பொரும்
படை சேனை வெள்ளம் பூருவின் குலத்து உளோர்கள் யாவரும்-போர்செய்கிற
படைக்கலங்களையும் சேனாசமூகத்தையுமுடைய பூருவென்னும் அரசனது
மரபில் தோன்றிய அரசர்களெல்லாரும், கரும் பனை தட கை வெம் கண் கரி
முதல் சேனையோடும் – கருநிறமான பனைமரம்போன்ற பெரிய துதிக்கையையும்
கொடுந்தன்மையையுமுடைய யானை முதலிய சதுரங்கசேனைகளுடனே, ஈண்டி
மொய்த்தார் – (இந்திரப்பிரத்த நகரத்தில்) வந்து நிறைந்தார்கள்; (எ – று.)

    பூரு-யயாதியின் குமாரன்; யதுவினுடன் பிறந்தவன்: இவன் குருகுலத்துப்
பூர்விகராசர்களிற் பிரதாநனாதலால், வீடுமன் முதலியோரை ‘பூருவின்
குலத்துளோர்கள்’ என்றார்.  யானைத் துதிக்கைக்குப் பனைமரம்-
கருநிறத்திலும், பெருவடிவிலும் உவமம்.  இவர்களுடைய நெஞ்சின்
மிக்கவன்மையோடு ஒப்பு நோக்குமிடத்துக் கடினமான இரும்பும் குழைவுறும்
நெகிழ்ச்சிப்பொருளென்று சொல்லத்தக்கதாகு மென்பார், ‘இரும்பினைக்குழைக்கு
நெஞ்சர்’ என்றார்; இரும்பினும் வலிய நெஞ்ச ரென்பது கருத்து,
(‘பனைக்கொடியோன்’ என்ற பெயர் பலராமனுக்கு வழங்குமிடமுண்டு.)
வெள்ளம் – ஓர் பெருந்தொகை.

இந்திரபுரிக்கும், இந்த இந்திரபுரிக்கும், தேவர்,
அந்தரம் அறிவுறாமல், அதிசயித்து உவகை கூர,
செந்திரு மடந்தைக்கு உள்ள செல்வங்கள் அனைத்தும் சேர
வந்தது போலும், வேள்வி மா நகர்த் தோற்றம் அம்மா!இந்திரப்பிரத்தநகரத்தில் எல்லாச் செல்வமும் நிறைதல்.

வேள்வி மா நகர் தோற்றம் – இராஜசூயயாகஞ்
செய்யுமிடமாயமைந்த பெரிய அவ்விந்திரப்பிரத்தநகரத்தின் காட்சிப்
பொலிவானது,- தேவர் – தேவர்கள், இந்திரபுரிக்குஉம்-அந்தத் தேவேந்திரனது
நகரியான (தமது) அமராவதிக்கும், இந்த இந்திரபுரிக்குஉம் – இந்த
இந்திரபிரத்தநகரத்துக்கும், அந்தரம் அறிவுறாமல் – வேறுபாடு அறிய இயலாமல்,
அதிசயித்து உவகை கூர – ஆச்சர்யமடைந்து மகிழ்ச்சி மிகுமாறு, செம் திரு
மடந்தைக்கு உள்ள செல்வங்கள் அனைத்துஉம் சேர வந்தது போலும் –
செந்நிறமுடைய ஸ்ரீ மகாலக்ஷ்மிக்கு உரியனவாயுள்ள செல்வங்களெல்லாம் அங்கு
ஒரு சேர வந்து நிறைந்த தன்மையைப் போலும்; அம்மா – ஆச்சரியம்! (எ – று.)

    விண்ணுலகத்திலுள்ள இந்திரபுரியான அமராவதிக்கும் மண்ணுலகத்திலுள்ள
இந்திரபுரியான இந்திரப்பிரத்தத்துக்கும் வேறுபாடறிய வொண்ணாதபடியும்,
விண்ணுலகத்திற்போல மண்ணுலகத்திற் செல்வம் நிறைந்தபுதுமையைநோக்கித்
தேவர்கள் வியந்து மகிழும்படியும், பொன் மணி நெல் வாகனம் அடிமைமுதலிய
ஐசுவரியங்களெல்லாம் அப்பொழுது அவ்விந்திரப்பிரத்த நகரத்தில் நிறைந்தன
வென்பதாம்.  அம்மா – அதிசயப்பொருள் தரும் இடைச்சொல்:
அச்செல்வநிறைவுகுறித்து அதிசயித்து ‘அம்மா’ என்றார்.  இராயசூய யாகத்தின்
பொருட்டுப் பலதேசத்தரசர்களையும் வென்று கவர்ந்து வந்த
பலவகைப்பொருள்களின் திரளும், யாகத்தின் பொருட்டுச் செய்த அலங்காரப்
பொலிவும் அமைந்ததனால், இங்ஙனம் வருணிக்கப்பட்டது.
தன்மைத்தற்குறிப்பேற்றவணி.  இந்த்ரபுரீ, அந்தரம் – வடசொற்கள்

தோரண வீதிதோறும், தூரிய முழக்கம்தன்னின்
ஆரண முழக்கம் மிஞ்ச, அந்தணர் ஆகி உள்ளோர்,
காரணம் உணர்ந்தோர், வேள்விக் கனல்முகமாகத் தேவர்
பாரணம் பண்ண இட்ட பைம் பொன் வேதிகையில் சேர்ந்தார்.அந்தணர் அநேகர் வேதபாராயணத்தோடு யாகசாலை
சேர்தல்.

காரணம் உணர்ந்தோர் – (சகலசராசரங்களுக்குங்) காரணமான
ஆதிமூலப்பொருளினியல்பை யறிந்தவர்களாகிய [ப்ரஹ்மஜ்ஞாநிகளாகிய],
அந்தணர் ஆகி உள்ளோர் – பிராமணர்கள் – தோரண வீதிதோறுஉம் –
தோரணங்கள் நாட்டி யலங்கரிக்கப்பட்டுள்ள (இந்திரப்பிரத்தநகரத்து) வீதிகளில்,
தூரியம் முழக்கந்தன்னின் ஆரணம் முழக்கம் மிஞ்ச – மங்கல வாத்திய
கோஷத்தைக்காட்டிலும் தாம் வேதபாராயணஞ்செய்யும் ஒலி அதிகப்பட,
வேள்வி கனல் முகம் ஆக தேவர் பாரணம்பண்ண இட்ட பைம்பொன்
வேதிகையில் சேர்ந்தார் – யாகாக்கினிமுகமாகத் தேவர்கள் தமக்கு உரிய
உணவான ஹவிஸைப் பெற்று நுகரும்படி அமைக்கப்பட்ட பசும்பொன்
மயமான யாகவேதிகையினருகிற் சென்று சேர்ந்தார்கள்;  (எ – று.)

     வேதிகை – யாகசாலையில் அமைக்கப்படுகிற மேடை.  தேவர்களின்
பொருட்டு அக்கினியில் அவிசொரிய அதனை அக்கினி ஏற்று அந்தந்தத்
தேவர்க்குச் சேர்த்தல்பற்றி, தேவர்கள் அக்கினியை முகமாகவுடையவரென்று
வேதத்திற் கூறப்படுதலால், ‘வேள்விக்கனன் முகமாகத் தேவர்
பாரணம்பண்ணவிட்ட வேதிகை’ எனப்பட்டது.  மிஞ்ச=விஞ்ச; மரூஉ.

சுடும் அனல் கலுழனாக, சுருதியின்படியே, கோட்டி,
நடுவுற, திசைகள் நான்கும் நான்கு வெள் ஏறு கோட்டி,
வடு அறச் சமைத்த சாலை மண்டபம்தன்னை நோக்கின்,
கடவுளர்க்கு அமைத்த யாக தலம் எனக் கவினிற்று அம்மா!இதுமுதல் மூன்றுகவிகள் -யாகசாலை வருணனை.

சுருதியின்படியே – வேதவிதிப்படியே, சுடும் அனல் – சுடுகிற
அக்கினிக்கு உரிய இடமான ஓமகுண்டத்தை, நடு உற கலுழன் ஆக
கோட்டிநடுவிலே – கருடாகாரமாகச் செய்து, திசைகள் நான்குஉம் – (அதன்)
நான்கு பக்கங்களிலும், நான்குவெள் ஏறு கோட்டி – நான்கு விருஷபேஷ்ட
கைகளை வைத்து, வடு அற சமைத்த – குற்றமில்லாதபடி அமைக்கப்பட்ட,
சாலை மண்டபந்தன்னை – யாசகசாலை மண்டபத்தை, நோக்கின் –
பார்க்குமிடத்து, (அது), கடவுளர்க்கு அமைத்த யாகதலம் என கவினிற்று –
(இந்திரன் முதலிய) தேவர்கள் யாகஞ் செய்தற்பொருட்டு அமைத்த யாகசாலை
போலச் சிறந்து விளங்கிற்று;  அம்மா – ஆச்சரியம்; (எ – று.)

    அக்கினிக்கு ஆதாரமான வேதிகையை, சிறகுகளையும் புச்சத்தையும்
பரப்பிக்கொண்டு கீழ்நோக்காகக் கிழக்குமுகமாயுள்ள கருடப்பறவையின்
வடிவமாகக் கட்டியமைத்தல், கருடசயநமெனப்படும்;  அது முதலடியிற்
கூறப்பட்டது.  ‘வ்ருஷப’ என்ற சொல்லை யுட்கொண்ட மந்திரத்தைச் சொல்லி
அந்தக் கருட வடிவின் நான்குபுறத்திலும் அமைக்கப்படுகிற நான்கு
செங்கற்கள், ‘வ்ருஷபேஷ்டகா’ எனப் பெயர்பெறும்;  அவற்றை
இரண்டாமடியிற் குறித்தார்.  வெண்மை – ஏற்றுக்கு அடைமொழி.  அனல் –
தானியாகுபெயர்.  ‘சுடுமணாற்கலுழனாக’ என்ற பாடத்துக்கு – சுடுமணால் –
சுடப்பட்ட மண்ணாகிய செங்கலினாலென்க.  மனிதர் யாகஞ் செய்தற்கு
அமைத்த சாலைக்கு, தேவர் யாகஞ்செய்தற்கு அமைத்த சாலையை உவமை
கூறினார், சிறப்புப் பற்றி.  கலுழன் – கருடன் என்ற வடசொல்லின் சிதைவு.
கவினிற்று – கவின் என்ற பகுதியினடியாப்பிறந்த ஒன்றன்பாலிறந்த காலமுற்று

திருந்த மெய்ஞ் ஞானமும் தெளிந்த தெய்வத
அருந் தவ முனிவர் பேர் அவையின் மேன்மையால்,
பெருந் தகை நாபி அம் பெருமன் வாழ்வுபோன்று
இருந்தது-குருபதி யாக சாலையே.

மெய்ஞானம்உம் திருந்த தெளிந்த – (வேதத்திற்
கருமகாண்டத்திற் கூறிய சடங்குகளில் மாத்திரமன்றி அதன் பிரம்மகாண்டத்தின்
பயனான) தத்துவஞானத்திலும் நன்றாகத் தேர்ந்துள்ள, தெய்வதம் அரும் தவம்
முனிவர் – தெய்வத்தன்மையுள்ளவர்களும் (பிறர்செய்தற்கு) அரிய தவத்தைத்
தாம் செய்தவர்களுமான முனிவர்கள் கூடிய, பேர் அவையின் – பெரிய
சபையினது, மேன்மையால் – சிறப்பினால்,- குருபதி யாகசாலை –
குருகுலத்தலைவனான தருமராசனது யாகசாலையானது, – பெருந்தகை நாபி
அம் பெருமன் வாழ்வு போன்று இருந்தது – பெருமைகுணமுள்ளவனான
திருமாலினது திருநாபியில் தோன்றிய அழகிய சிறந்த தலைவனான பிரமன்
வாழுமிடமாகிய சத்தியலோகம் போன்றிருந்தது; (எ – று.)

    பிரமலோகமாகிய சத்தியலோகம் தத்துவஞானத்திற் சிறந்த பலபெரியோர்கள்
கூடிவாழ்கிற பேரவையுடையதாய் மேம்படுதலால், அதனை, மெய்யுணர்வுடைய
பல சிறந்தமுனிவர்கள் கூடிய சபையையுடையதான யுதிட்டிரனது யாகசாலைக்கு
உவமை கூறினார். மெய்ஞ்ஞானமும், உம் – இறந்ததுதழுவிய எச்சம்;
உயர்வுசிறப்புமாம். ‘நாபியம்பெருமன்’ என்றவிடத்து, அம் – சாரியையுமாம்.
மன் = மன்னன்.  பெருந்தகை – பண்புத்தொகை யன்மொழி,  வாழ்வு –
வாழுமிடத்துக்கு ஆகுபெயர்.  பூதேவராதலால், ‘தெய்வத முனிவர்’
எனப்பட்டனர்;  முனிவர்க்குத் தெய்வத்தன்மை – சாபாநுக்கிரகசத்தி,
அனைவராலும் நன்கு மதிக்கப்படுதல் முதலியன.

     இது முதல் எட்டுக் கவிகள் – பெரும்பாலும் மூன்றாஞ்சீரொன்று
மாச்சீரும், மற்றைமூன்றும் விளச்சீர்களுமாகிய அளவடி நான்கு கொண்ட
கலிவிருத்தங்கள்.    

யாதவ குலத்தினுக்கு இறைவன் ஆகிய
மாதவன் இணை அடி வணங்கி, மற்று உள
பூதலத்து அரசு எலாம் பொருந்து பொற்பினால்,
ஓத நீர் வண்ணன் வாழ் உலகு போன்றதே!

யாதவ குலத்தினுக்கு இறைவன் ஆகிய – யதுவென்னும்
அரசனது சம்பந்தமான குலத்துக்குத் தலைவனாகிய, மாதவன் –
கண்ணபிரானது, இணை அடி – உபயபாதங்களை, வணங்கி – நமஸ்கரித்து,
மற்றுஉள பூதலத்து அரசு எலாம் பொருந்து பொற்பினால் – பூமியிலுள்ள
மற்றை யரசர்களெல்லாரும் சேர்ந்திருக்கிற சிறப்பையுடைமையால்,-
(அவ்யாகசாலையானது)?-ஓதம் நீர் வண்ணன்வாழ் உலகுபோன்றது –
கடல்போன்ற கரிய திருநிறத்தை யுடையவனான திருமால் வீற்றிருக்கின்ற
உலகத்தை [ஸ்ரீவைகுண்டலோகத்தை]ப் போன்றிருந்தது; (எ – று.)

    திருமாலினவதாரமான கண்ணனை வணங்கிப் பல அரசர்களும் தங்கப்பெற்ற
யாகசாலைக்கு, அத்திருமாலை வணங்கி அனைவரும் வாழுமிடமான
விஷ்ணுலோகத்தை உவமை கூறினார். மாதவன் – வடசொல்; அத்திருநாமம் –
திருமகள்கொழுநனென்றும், மதுவென்னுஞ் சந்திரகுலத்து அரசனது மரபில்
தோன்றியவனென்றும் பொருள்படும்.  கண்ணன் யதுகுலத்தரசர்களில்
ஒருவனாதலால், மற்றையரசர்களை ‘மற்றுள பூதலத்தரசெலாம்’ என்றார். அரசு –
உயர்திணைப்பொருள்தரும் அஃறிணைச்சொல். 

விதியினும் உயர்ந்த தொல் வியாதன், மேதினி
பதிகள் ஆகிய திறல் பாண்டு மைந்தரை,
‘மதியினில் ஒரு புடை வருக!’ என்று, அன்பினால்,
திதி உறச் சில்மொழி செவியில் செப்பினான்:அப்பொழுது வியாசமுனிவன்அங்கு வந்து பாண்டவர்க்குச்
சில கூறத் தொடங்குதல்.

விதியின்உம் உயர்ந்த-(அறிவொழுக்கங்களிற்) பிரமனைக்
காட்டிலுஞ் சிறந்தவனான, தொல் வியாதன் – பழமையான வியாசமுனிவன்,-
மேதினி பதிகள் ஆகிய – பூமிக்குத் தலைவர்களான, திறல் பாண்டுமைந்தரை-
வலிமையையுடைய பாண்டுவின் குமாரர்களை [பஞ்சபாண்டவர்களை],
மதியினில் ஒரு புடை வருக என்று – விருப்பத்தோடு ஒரு தனியிடத்தில்
வருவீராக என்று சொல்லி, (ஏகாந்தமான ஓரிடத்திற்கு அழைத்துக்கொண்டு
போய்), அன்பினால் – அன்போடு, சிலமொழி – சிலவார்த்தைகளை, செவியில்
திதி உற – (அவர்களுடைய) காதுகளில் நிலைபெறும்படி, செப்பினான்-
சொல்லலானான்; (எ – று.)-அவ்வார்த்தைகளை, அடுத்த மூன்று கவிகளிற்
காண்க.

     வியாசன் திருமாலின் அவதாரமாதலால், அவனுக்கு ‘விதியினும் உயர்ந்த’
என்ற அடைமொழி கொடுக்கப்பட்டது; “(வேதாவுமொவ்வாவியாதன்”
“சுருதியாவும், விரைமலர் விதியின் மிஞ்ச விதித்தருள் வியாதனென்பான்”
என்றார் கீழ் ஆதி பருவத்தும்.) ‘தொல்’ என்ற அடைமொழி, அவன்
பாண்டவர்கட்குப் பாட்டனானவனென் உறவுமுறைமையை விளக்கும்.  விதி –
(எல்லாவற்றையும்) படைக்கிற கடவுள்.  உம் – உயர்வுசிறப்பு.
‘விதியினுமுயர்ந்தசொல்வியாதன்” என்ற பாடத்திற்கு-கடவுளின்
கட்டளையைக்காட்டிலும் மேம்பட்ட சொற்களையுடையவியாசனென்னலாம்.
‘வ்யாஸன்’ என்ற வடமொழிப்பெயர்.  (வேதங்களை) வகுத்தவனென்பதுபற்றி
வந்தது. பூமியையாள்கிற அரசர்களைப் பூமியாகிய பெண்ணின் கணவரென்று
கூறுதல் தோன்ற, ‘மேதினிபதிகள்’ என்றார்.  வருகென்று – தொகுத்தல்.  திதி
– ஸ்திதி என்ற வடசொல்லின் விகாரம்.   

இங்கிதத்து இந்திரர் என்பர் யாவரும்,
சங்கரன் விதியினால், தரணி பாலர் ஆய்,
வெங் கனல் தோன்றிய மின்னை, ஐவரும்,
மங்கலம் புவிமகள் வழக்கின் எய்தினீர்;இதுமுதல் மூன்றுகவிகள் -ஒருதொடர்; வியாசமுனிவன்
வார்த்தை.

யாவர்உம் – (முற்பிறப்பின் வரலாற்றை யுணர வல்லவர்)
எல்லாரும், இங்கிதத்து – குறிப்பினால் (உணர்ந்து), இந்திரர் என்பர் –
(உங்களை) முன்பு இந்திரராயிருந்தவர்களென்று சொல்வார்கள்;  ஐவர்உம் –
நீங்களைந்துபேரும், சங்கரன் விதியினால்-சிவபிரானுடைய கட்டளையினால்,
தரணிபாலர் ஆய் – அரசர்களாகி, வெம் கனல் தோன்றிய மின்னை –
வெவ்விய யாகாக்கினியினின்று உதித்த மின்னல்போன்ற பெண்ணான
திரௌபதியை, புவிமகள் வழக்கின் மங்கலம் எய்தினீர் – பூமியை ஒருங்கு
அரசாளும் வழக்கம்போல் ஒத்து விவாகஞ் செய்துகொண்டீர்கள்;

     சங்கரன் என்ற வடசொல் – (அடியார்க்கு) இன்பத்தைச்
செய்கிறவனென்றும் (சம் – சுகம்), தரணீபாலர் என்ற வடசொல்-பூமியைப்
பாதுகாப்பவரென்றும் பொருள்படும்.  மின் – மின்னல்போல விளங்கும்
மெல்லிய வடிவமுடைய பெண்ணிற்கு உவமையாகுபெயர்.  ஐவரும் எய்தினீர் –
முன்னிலையிற் படர்க்கைவந்த இடவழுவமைதி;  ‘ஐவிர்’ என்றிருப்பின்,
வழாநிலையாம்.  இங்கிதத்து மங்கலமெய்தினீர் என்று கூட்டி, இன்பமாக
மணஞ்செய்துகொண்டீரென உரைப்பினுமாம்.  இங்கு இதத்து என்று பிரித்து,
இவ்வுலகத்திலே இனிமையாக என்றும் பொருள் கொள்ளலாம்.  பூமியாகிய
பெண்ணுக்கு ஐவரும் ஒருங்கு தலைவராகி ஆளுதலை, திரௌபதியை ஐவரும்
மணஞ்செய்துகொண்டதற்கு உவமையாக அமைத்து, ‘மின்னை ஐவரும்
புவிமகள் வழக்கின் மங்கல மெய்தினீர்’ என்றார்.

     இங்குக் குறிப்பிட்ட செய்தியின் விவரம்:- முற்காலத்தில்
நாளாயனியென்ற ஒருத்தி மௌத்கல்யனென்பவனை மணஞ்செய்து
கொண்டாள்.  அவன் அவளது கற்பின்  உறுதியையும் அன்பின்நிலையையும்
சோதிக்கக்கருதி மிகுந்த குஷ்டநோயும் அதனாற்சிதைந்தவடிவமும்
மிக்ககிழத்தனமும் எப்பொழுதும் பெருங்கோபமும் உடம்பில்
துர்க்கந்தமுமுடையவனாகத் தன்னைக்காட்டிப் பலவாறு கொடுமைசெய்தான்.
அவள் அவன் பக்கல் அன்பு சிறிதும் குறையாமற் பலவகை யுபசாரங்களையும்
வழுவாது நன்மனத்தோடு புரிந்து முறைப்படி அவனுண்டு மிகுந்த எச்சிலைத்
தானுண்டு வாழ்ந்திருந்தாள்.  ஒருநாள் அவனுண்ட மிச்சிலில் அவனுடைய
கைவிரலொன்று அற்று விழுந்துகிடக்கக் கண்டும் கிஞ்சித்தும்
அருவருப்புக்கொள்ளாமல் அதனை யெடுத்து வைத்துவிட்டு அவ்வுணவை
அன்போடு உண்ண, அங்ஙனம் அவள் நிலைகுலையாது வழிபட்டு வந்ததை
அவன் பார்த்து மிகுந்த திருப்தி கொண்டு தனது நோய்வடிவத்தை யொழித்துத்
தவமகிமையாற் காமனினுஞ் சிறந்த கட்டழகுடைய வடிவங்கொண்டு மிக்க
அன்போடு அவளைக்கொண்டாடி, ‘நினக்கு வேண்டும் வரம் வேண்டுவாய்’
என்றான்.  என்னலும், அவள் வேறொரு வரத்தையும் வேண்டாமல் உன்
அன்பு எப்பொழுதும் என்பக்கல் நீங்காதாகுக’ என்று வேண்ட, அங்ஙனமே
அவன் உடன்பட்டு ஐந்து வடிவங்கொண்டு இவளையனுபவித்தான். இவ்விருவரும்
நெடுங்காலம் நீங்காமற் பெரும்போகம் நுகர்ந்தபின் நாளாயனி விதிவசத்தால்
இறக்கும்போது ‘அடுத்தபிறப்பிலும் ஒருபெண்ணாய்ப்பிறந்து இக்கணவனையே
கூடுவேன்’ என்று கருதினாள். அவ்வாறே மறுபிறப்பில் இந்திரசேனையென்னும்
பெயருடையவளாய் அவனைச் சேர்தற்கு வந்தபொழுது அவன்
முத்திபெறுதற்பொருட்டுப் பெருந்தவஞ் செய்யுங் கருத்துடையவனாய் அவளுக்கு
இடங்கொடாது நீங்கிச்சென்றான். செய்யவே, அப்பொழுது இவள் அவனை
‘யான் இனி என்செய்வது?’ என்று வினவி அவன் கட்டளையிட்டபடி
அர்த்தநாரீசுவரமூர்த்தியை நோக்கித் தவஞ்செய்தாள்.  அத்தவத்துக்கு உவந்த
அக்கடவுள் தனக்கு உரிய ஐந்து முகங்களையுடைய வடிவத்தோடு
பிரத்தியக்ஷமாகையில் இவள் ‘எனக்கு ஏற்ற கணவனைத்தருக’ என்று அன்பினால்
ஐந்து தரம் அடுக்கிச்சொல்லி வேண்டினாள்; அந்த ஐந்துமுகக்கடவுளும்
‘அப்படியேயாகுக’ என்று ஐந்து முறைகூறி அவள் ஐந்துகொழுநரைப் பெறும்படி
அநுக்கிரகித்தான். அதற்கு அவள் மகிழாமல் தக்க ஒரு நாயகனைத் தரும்படி
பிரார்த்தித்தாள். பரமசிவன் ‘நீ ஐந்துதரம் வேண்டியபடி நாம் உனக்கு ஐந்துதரம்
அருளியது தவறாது; ஆனால், அவ்வரத்தை இப்பிறப்பிலன்றி
மறுபிறப்பிலனுபவிக்கும்படி அருள்செய்கிறோம்’ என்று அநுக்கிரகித்து அவளைக்
கங்காநதியில் மூழ்கிவரும்படியும் அங்ஙனம் முழுகிவரும்பொழுது எதிரில்
தோன்றும் புருஷனைத் தன்னிடம் அழைத்து வரும்படியும் கூறி அனுப்பினான்.
அவ்வாறே சென்ற அவள் ‘அப்பொழுதே ஒரு பதியைப் பெறாது மறுபிறப்பில்
ஐந்து பதிகளைப் பெறவேண்டுமே’ என்று கொண்ட சோகத்தோடு கங்கையில்
முழுகி யெழுகையில், அவளுடைய விழிகளினின்று பெருகிய கண்ணீர்
கங்கையில் விழுந்து பொற்றாமரைமலராயிற்று.  அந்த அற்புதச்செயலை அங்கு
வந்த தேவேந்திரன் பார்த்து அதிசயித்து ‘இது என்ன?’ என்று
வினாவிக்கொண்டு அவளைச் சமீபித்தான்.  அங்ஙனம் வினாவியவனை அவள்
தன்னுடன் வந்து செய்தி யறிந்துகொள்ளும்படி சொல்லியழைக்க, அவ்வாறே
அந்த இந்திரன் அவளைத் தொடர்ந்து செல்லுகையில் அங்கு மனைவியுடன்
சூதாடிக்கொண்டிருந்த சிவபிரானைக்கண்டு மதியாது அலட்சியஞ் செய்து
செருக்கிப்பேசினான்.  உருத்திரமூர்த்தி கோபங்கொண்டு அவனது
செருக்கையடக்கிப் பிலத்தினுள்ளே செலுத்தி, இங்ஙனமே முன்புசெருக்குற்றுப்
பின்பு தன்னால் அடக்கப்பட்டு அப்பிலத்தில் அடைத்துவைக்கப் பெற்றுள்ள
நான்கு இந்திரர்களையும் அவனுக்குக் காட்டி, ‘நீங்களைவரும் பூலோகத்தில்
மநுஷ்யராஜராய்ப் பிறந்து ராஜகன்னிகையாக மறுபிறப்பெடுக்கும்
இவளொருத்தியை மணம்புரிந்துகொண்டு துஷ்டநிக்கிரக சிஷ்டபரிபாலனஞ்
செய்து குற்றந்தீர்ந்து மீண்டும் விண்ணுலகமடைவீர்’ என்று ஆஜ்ஞைசெய்தான்.
அங்ஙனமே புதிய இந்திரன் அருச்சுனனாகவும், பழைய இந்திரர் நால்வரும்
மற்றை அவனுடன்பிறந்தவராகவும் தேவகுமாரராய்க் குந்தி மாத்திரி தேவியரிடம்
பிறந்து, அவ்விந்திரசேனையின் அவதாரமான திரௌபதியை ஒருங்கு
விவாகஞ்செய்து வாழ்ந்தனர் என்பதாம்.  இவ்வரலாறு, கீழ்த் திரௌபதி
மாலையிட்ட சருக்கத்திற் பரக்கக் கூறப்பட்டது.  முந்திய இந்திரர் நால்வர் –
விசுவபுக், பூததாமா, சிபி, சாந்தி என்பவர், பிந்திய இந்திரன் பெயர் – தேஜஸ்வீ
என்பது.       

ஓர் ஒரு தலைவராய், ஓர் ஒர் ஆண்டு, உளம்
கூர் உவகையினொடும் கொழுநர் ஆயினீர்;
ஆர் அழல் பிறந்த மான் அறத்தின் மைந்தற்குப்
பேர் அழல் வளர்த்திடும் பெற்றி பெற்றனள்.

 ஓர் ஓர் ஆண்டு-ஒவ்வொருவருடம், ஓர் ஒரு தலைவர் ஆய்-
(நீங்கள்) ஒவ்வோர் அரசராக, உளம் கூர் உவகையினொடும் கொழுநர்
ஆயினீர் – மனத்தில் நிறைந்த மகிழ்ச்சியுடன் (இத்திரௌபதிக்குக்)
கணவராயிருந்தீர்கள்;  ஆர் அழல் பிறந்த மான் – அரிய யாகாக்கினியினின்று
தோன்றிய இத்திரௌபதியானவள், (இப்பொழுது), அறத்தின் மைந்தற்கு –
(உங்களில் மூத்தவனான) தருமபுத்திரனுக்கு, பேர் அழல் வளர்த்திடும் பெற்றி –
பெருமையுள்ள யாகாக்கினியை (உடனிருந்து) வளர்க்கும் பெருமையை,
பெற்றனள் – பெற்றாள்;  (எ – று.)

     இத்துணை நாளாய்த் திரௌபதி பஞ்சபாண்டவரில் ஒவ்வொருவர்க்கு
ஒவ்வொரு வருடமாக முறையே மனைவியாய் ஒழுகினளாயினும், இப்பொழுது
அவள் பாண்டவர்களில் மூத்தவனான தருமபுத்திரனுடன் வீற்றிருந்து
வேள்வியை நடத்தும் யாகபத்தினியாயின ளென்பதாம். ‘உளம்கூர்
உவகையினொடும்’ என்றது – ஐந்துகணவர்கள் ஒருமனைவியை மனவேறுபாடின்றி
ஒருமனமாக அன்புகொண்டு நடத்திய அருமையை எடுத்துக் காட்டியவாறாம்.
பின்னிரண்டடியில், அழலிற்பிறந்தவள் அழலை வளர்க்குந் தகுதியைப்
பெற்றனளென ஒருநயந் தோன்றுதலுங் காண்க. அழல் வளர்த்திடும் பெற்றியாற்
பேர்பெற்றன ளென்றுகொண்டு, யாக பத்தினியென்று பெயருடையளாயினா
ளென்றலு மொன்று. முன்னிரண்டடியிற் குறித்தவிஷயம், முன்கதைத்
தொடர்ச்சியில் விளக்கப்பட்டது.  மான் – கண்பார்வையழகில் மான்போன்ற
பெண்ணுக்கு உவமையாகுபெயர்.    

மைந்தர் நீர் நால்வரும்; மகம் செய் வேந்தனே
தந்தையும்; தாயும், இத் தரும வல்லியே;
இந்த வான் பிறப்பினுக்கு, இற்றை நாள் முதல்,
குந்தியும் பாண்டுவும் என்று கொண்மினே.’

இந்த வான் பிறப்பினுக்கு – இந்தப் பெரிய ஜன்மத்தில்,
இற்றைநாள் முதல் – இன்றைத்தினம் முதலாக, (யாகம் முடியும் வரையும்), நீர்
நால்வரும் மைந்தர் – (வீமன் முதலிய தம்பியரான) நீங்கள் நான்குபேரும்
புத்திரர்களும், மகம் செய்வேந்தன் ஏ தந்தைஉம் – யாகத்தைச் செய்கிற
மூத்தவனான தருமராசனே பிதாவும், இ தருமவல்லி ஏ தாய்உம் –
தருமபுத்திரனுக்கு யாகபத்தினியாகிய இத்திரௌபதியே மாதாவுமாக
(இருக்கக்கடவீர்கள்); குந்திஉம் பாண்டுஉம் என்று கொண்மின் – (இப்போது
நீங்கள் திரௌபதியையும் தருமபுத்திரனையும் முறையே உங்கள் மாதா
பிதாக்களான) குந்திதேவியும் பாண்டுமகாராசனுமென்றே கொள்ளக்கடவீர்கள்;
(எ – று.)

    “ஜ்யேஷ்டப்ராதா பித்ருஸம:” என்றபடி தமையன் தந்தையோ
டொப்பவனாதல் காண்க; அங்ஙனமாகவே, தமையன் மனைவி தாயும், தம்பியர்
புத்திரருமாவர்; இராமாயணத்தில் சுமித்திரை இலக்குமணனுக்கு ‘இராமனைத்
தசரதனாகவும் ஜாநகியை நானாகவும் அறி’ என்று அறிவுணர்த்தியதனோடு
இதனை ஒப்பிடுக.  இம்முறைமையை முன்னிரண்டடியாற் கூறியபின்பும்
‘குந்தியும் பாண்டுவு மென்று கொண்மின்’ என்றது, வற்புறுத்துதற்கு; ஆதலால்,
கூறியது கூறலென்னுங் குற்றத்தின்பாற் படாது. இரண்டாமடியில் ‘தந்தையுந்
தாயும்’ என நிறுத்திய முறைமையோடு நான்காமடியில் – ‘குந்தியும் பாண்டுவும்’
என நிறுத்திய முறைமை மாறுபடுதல், எதிர்நிரனிறைப்பொருள்கோள்.
‘மைந்தர்’ என்பதை வீமன் முதலிய நால்வரையும் நோக்கிய அண்மைவிளியெனக்
கொண்டு உரைத்தலுமொன்று.  மகஞ்செய்வேந்தன் – யஜமானன். தருமவல்லி –
தருமமயமான ஒரு பூங்கொடிபோன்ற பெண்: அறக்கொடி என்பது, இதற்கு
ஏற்ற தென்மொழித்தொடர். கல்பக விருக்ஷத்திற்குக் காமவல்லிபோலத்
தருமராசனுக்குத் தருமவல்லி என்க. இன்று+நாள் = இற்றைநாள், மென்றொடர்
வன்றொடராய் ஐகாரச்சாரியை பெற்றது.  

கனல் வரு மின்னையும் கணவன்தன்னையும்,
முனிவரன் மொழிந்திட, முகூர்த்தம் ஆனபின்,
புனை முடி, திருக் குழல், புழுகும், நானமும்,
இனிமையின் சாத்தினார், எண் இல் மாதரே.இதுவும், அடுத்த கவியும் – திரௌபதிக்கும்
தருமபுத்திரனுக்கும் வேள்விக்கோலஞ் செய்தல்.

முனிவரன் மொழிந்திட -ருஷிசிரேஷ்டனான வியாச
மாமுனிவன் (இவ்வாறு) சொல்ல, (அப்பால்), முகூர்த்தம் ஆனபின் –
(யாகாரம்பத்துக்குரிய) சுபமுகூர்த்தம் தொடங்கின உடனே, எண் இல் மாதர் –
அளவற்ற [மிகப்பலரான] மகளிர், கனல் வரு மின்னைஉம் கணவன்
தன்னைஉம் – யாகாக்கினியிலுதித்த பெண்ணான திரௌபதிக்கும் அவள்
கணவனான தருமபுத்திரனுக்கும், புனை முடி திரு குழல் – கிரீடந்தரிக்கிற
சிரசிலும் அழகியகூந்தலிலும், புழுகு உம் நானம்உம் இனிமையின் சாத்தினார் –
கஸ்தூரிப்புழுகென்னும் மயிர்ச்சாந்தையும் ஸ்நானத்திற்கு உரிய
வாசனைத்தைலத்தையும் பிரியமாக இட்டார்கள் (எ – று.)

மங்கலஸ்நானஞ் செய்வித்தற்பொருட்டு இவை சாத்தினார். ‘மின்னையுங்
கணவன் தன்னையும்’ என்றவிடத்து இரண்டனுருபுகள் நான்கனுருபின்
பொருளில் வந்தது, உருபுமயக்கம். ‘மின்னையுங் கணவன் தன்னையும்’ என்ற
முறைமைக்கு ‘புனைமுடி திருக்குழல்’ என்ற முறைமை மாறுபடுதல்
எதிர்நிரனிறைப்பொருள்கோள்;மின்னுக்குக் குழலிலும் கணவனுக்கு
முடியிலுமென மாற்றிப்பொருள் காண்க. முனிவரன்மொழிந்திட-
வியாசமாமுனிவன் கட்டளை கூற, சாத்தினார் என்று இயைத்துப்பொருள்
கொள்ளுதலுமாம். முஹூர்த்தம்-வடசொல்; இரண்டு நாழிகைப்பொழுது,
‘திருக்குழல்’ என்பதற்கு – ஸ்ரீதேவியென்னும் தலைக்கோலத்தையணிந்த
கூந்தலென்று உரைப்பாரு முளர்

கதியொடு பிறை தவழ் கடுக்கைக் காட்டு நல்
நதி தரு புனல்கொடு நானம் ஆட்டினார்;
விதிமுறை அறிந்தவர், வேள்விக்கு ஏற்பன,
பதியுடன் அணிந்தனர், பாவைதன்னையும்.

 கதியொடு – (அங்குவந்து சேர்ந்ததனாற்) புகலிடம்
பெற்றதாகிய, பிறை – பிறைச்சந்திரன், தவழ் – மந்தகதியாக ஊரப்பெற்ற,
கடுக்கை காடு-கொன்றைப்பூமாலையைத் தரித்த (சிவபிரானது)
சடைக்காட்டினின்று இழிந்த, நல் நதி-சிறந்தநதியான கங்கையினின்று, தரு –
கொணர்ந்த, புனல் கொடு – தீர்த்தத்தைக்கொண்டு, நானம் ஆட்டினார் –
(திரௌபதிக்கும் தருமபுத்திரனுக்கும் மங்கள) ஸ்நானஞ் செய்வித்தார்கள்;
விதிமுறை அறிந்தவர் – (யாகங்களுக்கு ஏற்ற) சாஸ்திர விதிகளை வழுவாது
அறிந்தவர்கள், பதியுடன் பாவைதன்னைஉம் – அக்கணவனையும்
மனைவியையும், வேள்விக்கு ஏற்பன அணிந்தனர் – யாகச்சடங்குக்கு ஏற்ற
ஆடையாபரணங்களால் அலங்கரித்தார்கள்;  (எ – று.)

    தக்ஷமுனிவனது சாபத்தினாலாகிய ரோகத்திற்கு அஞ்சிச்சரணம்புக்க
சந்திரன் அச்சமின்றித்தங்குங் காட்டரணென்ற ஒரு கருத்து அமைய ‘கதியொடு
பிறை தவழ் கடுக்கைக்காடு’ என்றார்; எனவே, சிவபிரானது ஜடாடவியாயிற்று.
‘கடுக்கை’ என்ற கொன்றைமரத்தின்பெயர், அதன் மலர்களாலாகிய மாலைக்கு
இருமடியாகுபெயர்.  காடு – காடுபோலடர்ந்த சடைக்கற்றைக்கு
உவமையாகுபெயர்.  காட்டுநதி – காட்டாறு.  கங்கா நதியென்ற பொருளை
‘கதியொடு பிறைதவழ் கடுக்கைக்காட்டு நன்னதி’ என்று சுற்று வழியாற்
சொன்னது –பிறிதினவிற்சியணி. நன்னதி தன்னில் நீராடியவரது
தீவினையனைத்தையுந்தீர்த்து அவர்களைப் பரிசுத்தராக்கும் புண்ணிய
தீர்த்தமென்க.  கொடு – தொகுத்தல்.  நானம் – ஸ்நாநம் என்ற வடசொல்லின்
விகாரம், பதி – வடசொல்.   பாவை – சித்திரப்பிரதிமை;  அதுபோ லழகிய
பெண்ணுக்கு உவமையாகுபெயர்.  தருபுனல் – வினைத்தொகை: தா என்ற
பகுதி விகாரப்பட்டது.  ஏற்பன – பெயர்:  மூன்றாம்வேற்றுமைத்தொகை. 

மாலை முன் வணங்கி, கங்கை மைந்தனை வணங்கி, யாக
சாலையை நோக்கும் வேந்தன், தம்பியை நோக்கி, ‘முந்நீர்
வேலையின் மணலின் சாலும் மிகு சனம் அருந்த, தேவர்
ஆலயத்து அமுதம் அன்ன அடிசில் நீ அளித்தி’ என்றான்இதுமுதல்மூன்றுகவிகள் – ஒருதொடர்:தருமபுத்திரன்,
தம்பியர் முதலியோர் அந்தயாகத்திற் செய்யவேண்டுந்
தொழில்களை நியமித்தல்.

மாலை – திருமாலின் திருவவதாரமான கண்ணபிரானை,  முன்
வணங்கி-முதலில் நமஸ்கரித்து, (அதன்பின்பு), கங்கை மைந்தனை வணங்கி –
கங்கையின் மகனான பீஷ்மனை நமஸ்கரித்து, யாகசாலையை நோக்கும் –
(யாகஞ்செய்தலைக் குறித்து) யாகசாலையை நோக்கிச் செல்லுகிற, வேந்தன் –
தருமராசன்,- தம்பியை நோக்கி – (தனது அடுத்த) தம்பியான வீமசேனனைப்
பார்த்து,- ‘முந்நீர் வேலையின் மணலின் சாலும் மிகு சனம் அருந்த-மூன்று
நீர்மையையுடைய கடலின் மணல்களைக் காட்டிலும் மிக்கபெருந்தொகையாக
வந்து கூடியுள்ள சனங்கள் உண்ணும்படி, தேவர் ஆலயத்து அமுதம் அன்ன
அடிசில் – தேவர்களுடைய மாளிகைகளிற் பொருந்திய அமிருதத்தைப் போன்ற
[மிக இனிய] உணவை, நீ அளித்தி – நீ கொடுக்கக்கடவாய்,’ என்றான் –
என்று கட்டளையிட்டான்; (எ – று.)

    யஜ்ஞமூர்த்தி, யஜ்ஞபதி, யஜ்ஞாங்கன், யஜ்ஞவாஹநன், யஜ்ஞசாதநன்
என்பவை முதலாகப் பலவாற்றால் தான் கூறப்படும்படி யாகத்துக்குப்
பலவகையாலும் உரிமைபூண்ட முழுமுதற் கடவுளான திருமாலின் திருவவதார
மூர்த்தியாதலால், கண்ணபிரான் முதலில் வணங்கப்பட்டனன்.  அதன்பின்பு
வீடுமனை வணங்கினது, அவன் பெரியபாட்டனாதலால்.

     வீடுமனை ‘கங்கைமைந்தன்’ என்றதன் விவரம் :- முன்னொரு
காலத்தில் தேவர்கள் யாவருங்கூடிப் பிரமதேவனது சபையிற் சென்று
கங்காநதியின் பெண்தெய்வம் வணங்கியபொழுது, அங்கு வந்திருந்த வருணன்,
அவளழகை உற்றுநோக்கிக் காதல் கொண்டான்; கங்கையும் அவன்மீது
காதல்கொண்டு எதிர் நோக்கினாள்;  அதனையறிந்த நான்முகக்கடவுள்
வருணனைப் பூமியில் மானுடப்பிறப்பெடுக்கவும், கங்கையை மானுடமகளாய்
அவனைச் சிலநாள் மணந்திருக்கவும் சபித்திட்டாள்;  அங்ஙனமே வருணன்
குருகுலத்திற் சந்தனுவாய்ப் பிறந்தான், கங்கையும் ஓர் மனிதமகளாகி ‘யான்
எந்தத் தீச்செயல் செய்யினும் மறுக்கலாகாது’ என்னுங் கோட்பாட்டினோடு
அவனை மணஞ்செய்து கொண்டாள்.  இது நிற்க, பிரபாசனென்னும் வசு,
தன்மனைவியின் சொல்லைக் கேட்டு வசிட்டனிடமுள்ள காமதேனுவைக்
கொள்ளைகொள்ள எண்ணினான்;  மற்றை யேழுவசுக்களும்.  அவனுக்கு உதவிசெய்யவே, எண்மரும் இரவிற்சென்று பசுவைக் கவர்ந்தனர்.
அதனையறிந்த வசிஷ்டமகாமுனிவன், அஷ்டவசுக்களையும் மானுடசன்ம
மெடுக்கவும், அவர்களுள் மனைவி சொற்கேட்ட பிரதானனான பிரபாசனைப்
பூமியிற் பலநாள் வாழ்ந்து பெண்ணின்ப மற்றிருக்கவும் சாபங் கொடுத்தான்;
எட்டு வசுக்களும் சந்தனுவுக்குக் கங்கையின் வயிற்றிற்பிறந்தனர்.  முதலில்
பிறந்த ஏழுகுழந்தைகளையும் தாய் பிறந்த அப்பொழுதே கங்காநதியில்
எடுத்தெறிந்துவிட்டாள்.  எட்டாவது பிள்ளை பிறந்த உடனே தந்தை
‘இக்குழந்தையைக் கொல்லலாகாது’ என்று மறுக்க, கங்கை கணவனை விட்டு
நீங்கினள்.  அவ்வெட்டாவது மகனே இவ்வீடுமன்.

    தம்பியர் நால்வரில் மற்றைமூவர்க்கும் செய்தொழில்கள் அடுத்த கவியில்
நியமிக்கப்படுதலாலும் அடுத்த தம்பியாதலாலும் இங்கு ‘தம்பி’ என்றது,
வீமனைக்குறித்தது.  தேவராலயத்து அமுதம் – தேவாமிருதம்.  ‘வேலையின்
மணலிற்சாலுமிகுசனம்’ என்றது, உயர்வுநவிற்சியணி.

     முந்நீர் – ஆற்றுநீர், ஊற்றுநீர்,வேற்றுநீர், [மழை நீர்] என்னும்
மூன்றுவகை நீரையுடையதெனப்  பண்புத்தொகையன் மொழியாகிய காரணப்
பெயரென்பது, பழைய கொள்கை; இதனை மறுத்து, ‘முந்நீர் – கடல்;
ஆகுபெயர்.  ஆற்றுநீர், ஊற்றுநீர், மேல்நீர் என இவை யென்பார்க்கு,
அற்றன்று; ஆற்றுநீர் மேல் நீராகலானும், இவ்விரண்டுமில்வழி ஊற்றுநீரும்
இன்றாமாதலானும் இவற்றை முந்நீரென்றல் பொருந்தியதன்று.  முதியநீரெனில்,
‘நெடுங்கடலுந் தன்னீர்மை குன்றும் தடிந்தெழிலி, தானல் காதாகிவிடின்’
என்றதனால், அதுவும் மேல்நீரின்றி அமையாமையின், ஆகாது; ஆனால்,
முந்நீர்க்குப் பொருள் யாதோவெனின், -முச்செய்கையையுடைய நீர்
முந்நீரென்பது:  முச்செய்கையாவது – மண்ணைப்படைத்தலும், மண்ணை
யழித்தலும், மண்ணைக்காத்தலுமாம்’ என்பர் அடியார்க்குநல்லார்.
நச்சினார்க்கினியர் கருத்தும் இதுவே. “நீரினின்று நிலம்பிறந்தது” என
வேதமோதுதலாற் படைத்தலும், நீரின்றி உலகம் பிழையாதாதலாற் காத்தலும்,
இறுதியில் நீரினால் மூடப்பட்டு உலகம் அழிதலால் அழித்தலும் ஆக
முத்தொழில்களும் கடலுக்கு உரியனவாம்.  இப்பொருளில்
நீர்மையென்றபண்புப்பெயர் ஈறுபோய் ‘நீர்’ என நின்றதென்க.  இனி, ‘முன்னீர்’
என்றலுமொன்று; பழைய நீரென்க: “ஆதியில் கடவுள் நீரையே படைத்தார்”
என்று புராணம் கூறும்.

     இதுமுதல் எட்டுக் கவிகள் – இச்சருக்கத்தின் 66-ஆம் கவிபோன்ற
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தங்கள்.  

நாவியின் மதமும், சாந்தும், நறும் பனி நீரும், தாரும்,
வாவியில் காவில் உள்ள மலர்களும், மற்றும் யாவும்,
மேவிய வரி வில் ஆண்மை விசயனை, ‘நல்குக!’ என்றான்;
தூ இலை, பளிதம், ஏனைத் துணைவரை வழங்கச் சொன்னான்.

மேவிய – பொருந்திய, வரி வில் ஆண்மை – கட்டமைந்த
வில்லைக் கொண்டுசெய்யும் போர்த்திறத்தையுடைய விசயனை – அர்ச்சுனனை
நோக்கி, ‘நாவியின் மதம்உம் – கஸ்தூரிப்புழுகையும், சாந்துஉம்-
சந்தனத்தையும், நறும் பனிநீரும்-வாசனையையுடைய பனிநீரையும், தார்உம் –
பூமாலைகளையும், வாவியில் காவில் உள்ள மலர்கள்உம் – தடாகங்களிலும்
சோலைகளிலுமுள்ள (நீர்ப்பூவும் கோட்டுப்பூவும் கொடிப்பூவும் நிலப்பூவுமாகிய)
மலர்களையும், மற்றும்யாவுஉம் – மற்றும் முடிக்கப்படுவனவும்
பூசப்படுவனவுமான பொருள்களெல்லாவற்றையும், நல்குக – (வந்த
சனங்கட்கெல்லாம்) கொடுக்கக் கடவாய்’, என்றான் – என்று கட்டளை
கூறினான்: ஏனை துணைவரை-மற்றை உடன்பிறந்தவரான நகுல சகதேவர்களை
நோக்கி,- தூஇலை – சுத்தமான வெற்றிலையையும், பளிதம் – பச்சைக்
கர்ப்பூரத்தையும், வழங்க – (வந்த சனங்கட்கெல்லாம்) கொடுக்கும்படி,
சொன்னான் – கட்டளை கூறினான் (தருமபுத்திரன்); (எ – று.)

     கஸ்தூரி யென்பது ஒருவகைமானின் வயிற்றினின்று எடுக்கப்படுவதாதலின்
மிருகநாபி யென்றும் மிருகமத மென்றும் வடமொழியிற்பெயர் பெறுதலால், அது
தமிழில் ‘நாவியின் மதம் எனப்பட்டது. நாபி, மதம், சந்தநம், வாபீ –
வடசொற்கள். நாவி-கஸ்தூரிமிருகம் எனக்கொள்ளுதலு மொன்று.  பனிநீர் –
குளிர்ச்சியான ஒருவகைவாசனை நீர்; பனி – குளிர்ச்சி.  யா – அஃறிணைப்
பன்மை வினாப்பெயர்;  இதில் ‘வை’ விகுதிபுணர்ந்து கெட்டது.  இங்கு
வினா – எஞ்சாமைகுறித்தது; உம்மை – முற்றும்மை. ஆண்மை – பௌருஷம்,
வீரம். ‘வரிவில்லாண்மைமேவிய விசயனை’ என மொழிமாற்றி யுரைப்பினுமாம்.
வெற்றிலையைக் கூறினது – பாக்குச் சுண்ணாம்புகட்கும், பச்சைக்கர்ப்பூரத்தைக்
கூறினது – லவங்கம் ஏலக்காய் சாதிக்காய் முதலிய மற்றை
முகவாசப்பண்டங்கட்கும் உபலக்ஷணம். துணைவர் – உடன்பிறந்தவர்;
இரட்டையருமாம்.  ‘தூவிலைபழுக்காய்’ என்ற பாடத்துக்கு, பழுக்காய் – பாக்கு
என்க.     

‘தானமும் தியாகம்தானும் தபனன் மா மதலையான
மானவன் கொடுக்க!’ என்றான்; ‘வரம்பு இலா நிதிகள் யாவும்
கானல் அம் கடல் சூழ் வையம் காவலன் காவல்!’ என்றான்;
ஏனையோர் பலரும் வேந்தன் ஏவலின் முறை நின்றாரே.

தானமும் தியாகம் தானும் – தானத்தையும் தியாகத்தையும்,
தபனன் மா மதலை ஆன மானவன் கொடுக்க சூரியனது சிறந்த குமாரனான
பெருமையையுடைய கர்ணன் கொடுக்கக்கடவன்,’ என்றான் – என்று
நியமித்தான்; ‘வரம்பு இலா நிதிகள் யாஉம் – எல்லையில்லாத
செல்வங்களெல்லாம் கானல் அம் கடல் சூழ் வையம் காவலன்  காவல் –
கழிகளின் தொடர்பையுடைய அழகிய கடலினாற் சூழப்பட்டுள்ள பூமியை
அரசாள்பவனான துரியோதனனது பாதுகாவலின் கீழ் இருக்கக்கடவன,’
என்றான் – என்றும் நியமித்தான் (தருமபுத்திரன்) ஏனையோர் பலரும் – மற்றும்
பலபேரும், வேந்தன் ஏவலின் முறை நின்றார் – அத்தருமராசனது
கட்டளையின் ஒழுங்கிலே நின்று தம்தம் தொழிலை நடத்துவாராயினர்;
(எ – று.)

     தாநம் – சற்பாத்திரங்களிலே கொடுத்தல் என்றும், தியாகம் –
வரையறையின்றிப் பலர்க்குங் கொடுத்தல் என்றும் வேற்றுமையுணர்க; முன்னது
புண்ணியக்கொடையென்றும், பின்னது புகழ்க்கொடையென்றும் கூறப்படும்.
லோபம் சிறிதுமின்றி வேண்டுவார்க்கு வேண்டுவன கொடுக்கும் வண்மையிற்
கர்ணன் சிறந்தவனாதலால், தானமும் தியாகமும் அவன் வசத்தில்
ஒப்பிக்கப்பட்டன.  துரியோதனன், ராஜராஜனாய்க் கையிலே
தநரேகையுடையனாதலால், தநாத்தியக்ஷனாதற்கு உரியன்.  மானம் –
பெருமை; அதனையுடையவன் – மானவன்.  ‘மாநவன்’ என்ற வடசொல்
திரிந்ததெனக்கொண்டால், மநுவின்மரபிற் பிறந்தவன் [மனிதன்] என்று
ஆகும். ‘கானலங்கடல்’ என்றவிடத்து, அம் – சாரியையுமாம்.  தாநம்,
த்யாகம், தபநன், நிதி – வடசொற்கள்.   

தழல் வளர் ஓம குண்டத் தலத்தினில், வலத்தில், ஆதித்
தழல் வரு பாவை வைக, தருமன் மா மதலை, ஆங்கண்,
தழல் புரை வேதவாணர் தாள் இணை வணங்கி, தானும்
தழல் என இருந்தான், எல்லா வினைகளும் தகனம் செய்வான்தருமபுத்திரனும் திரௌபதியும் யாகவேதிகையில்
வீற்றிருத்தல்.

தழல் வளர் ஓமகுண்டம் தலத்தினில் – அக்கினி சொலித்து
ஓங்கியெரியு மிடமான ஓமகுண்டத்துக்குச் சமீபத்திலே, ஆதி தழல் வரு
பாவை வலத்தில் வைக – முன்பு ஓமாக்கினியினின்று தோன்றிய பெண்ணான
திரௌபதி (தனது) வலப்பக்கத்திலே இருக்க; எல்லாவினைகளும் தகனம்
செய்வான் தருமன் மா மதலை – சகல பாவங்களையும் எரிப்பவனான சிறந்த
தருமபுத்திரன், ஆங்கண் – அவ்விடத்து, தழல் புரை வேதவாணர் தாள்
இணைவணங்கி – அக்கினிக்குச் சமானமான [ஸ்வயம்பரிசுத்தர்களான]
வேதம்வல்லமுனிவர்களுடைய உபயபாதத்தை நமஸ்கரித்து, தான்உம் தழல்
என இருந்தான்- தானும் ஓர் அக்கினிபோல (ச் சுத்தனாய்) வீற்றிருந்து
விளங்கினான்;  (எ -று.)

    காருகபத்தியம், ஆகவநீயம், தக்ஷிணாக்நி என மூவகைப்படுகிற
வைதிகாக்கினி பொருந்திய ஓமகுண்டங்கட்கு அருகில், திரௌபதி தன்
வலப்பக்கத்திலிருக்க, தருமபுத்திரன், அந்த யாகவேதிகையிலே நான்காவதோர்
அக்கினிபோல இருந்தா னென்க.  தலத்தினில் இருந்தான் என இயையும்.
‘தழலென இருந்தான்’ என்று உவமை கூறுதற்கு ‘எல்லாவினைகளுந் தகனஞ்
செய்வான்’ என்ற அடைமொழி சாதனமாதலால், கருத்துடையடைமொழியணி.
அக்கினி, மற்றொன்றின் உதவியினாலன்றித் தானாகவே இயல்பிலேயே
பரிசுத்தமாய் அத்தூய்மை வேறொன்றின் சம்பந்தத்தாற் கெடாதாகத் தன்னைச்
சார்ந்த பொருள்களை யெல்லாம் தான் பரிசுத்தமாகச் செய்யுஞ்
சிறப்புடைமையால், முனிவர்க்கும் தருமபுத்திரனுக்கும் உவமை கூறப்பட்டது.
அக்கினிக்கு ‘சுசி’ எனவடமொழியில் ஒரு பெயரிருத்தல் இங்குக் கருதத்தக்கது.
‘தழல் புனை வேதவாணர்’ என்ற பாடத்துக்கு, ஓமாக்கினியை வளர்த்தற்கு
உதவியாகிற ப்ரஹ்மா அத்வர்யு உத்காதா ஹோதா முதலிய வைதிகப்
பிராமணர்களுடைய இணையடிகளை வணங்கி என்க.  வேதவாணர் –
வேதங்களை ஓதியும் ஓதுவித்தும் வேதவிதிப்படி சடங்குகள் செய்வித்தும்
வாழ்பவர்.  செய்வான் என்பதை எச்சமாகக் கொண்டு, எல்லா வினைகளையும்
எரித்தற் பொருட்டுத் தழல்போல இருந்தா னென்றலு மொன்று. ‘தானும்’
என்றஉம்மை – இறந்தது தழுவிய எச்சம்.  தழல் என்ற சொல் ஒரு
பொருளிலேயேபலமுறைவந்தது, சொற்பொருட்பின்வருநிலையணி;
வெவ்வேறு பொருளில்வராததனால், யமகமென்னுஞ் சொல்லணியாகாது.
கணவனது வலப்பக்கத்தில்மனைவி வீற்றிருத்தல் மரபு ஆதலால், ‘பாவை
வலத்தில்வைகை’ என்றார். தழலில் வந்த பாவை தழல் வளர்குண்டத்
தலத்தினில் வைக என ஒருநயம்தோன்றுதல் காண்க.

கட கரி உரிவை போர்த்த கண்ணுதற் கடவுள், மாறி,
இடம் வலமாக, பாகத்து இறைவியோடு இருந்தவாபோல்,
உடல் கலை உறுப்புத் தோலின் ஒளித்திடப் போர்த்து,
வேள்விக்
கடனினுக்கு உரிய எல்லாம் கவினுறச் சாத்தினானே.தருமபுத்திரன் மான்தோல் முதலியன தரித்தல்.

 கட கரி உரிவை போர்த்தகண் நுதல் கடவுள் – மதயானையின்
தோலை மேலே போர்த்துக்கொண்டுள்ள நெற்றிக் கண்ணையுடைய சிவபிரான்,
பாகத்து இறைவியோடு – (தனது) வாமபாகத்திலுள்ள பார்வதி தேவியோடு, இடம்
வலம் ஆக மாறி இருந்த ஆ போல் – (அத்தேவிக்கு உரிய) இடப்பக்கம்
வலப்பக்கமாக மாற வீற்றிருந்த விதம்போல, (தருமபுத்திரன் தன் மனைவியான
திரௌபதியை வலப்பக்கத்திலேயே கொண்டு தான் வீற்றிருந்து), கலை உறுப்பு
தோலின் உடல் ஒளித்திட போர்த்து – கலைமானினது முழுத்தோலினால் தன்
உடம்பு மறையும்படி போர்த்துக்கொண்டு, வேள்வி கடனினுக்கு உரியஎல்லாம் –
மற்றும் யாகமுறைமைக்கு ஏற்றவற்றையெல்லாம், கவின்உற சாத்தினான் –
அழகாகத் தரித்துக்கொண்டான்; (எ – று.)

    திரௌபதி வலப்பக்கத்திலே வீற்றிருக்கத் தருமபுத்திரன் மான் தோலை
உடல்மறையப் போர்த்துக்கொண்டு இருந்ததற்கு, யானைத்தோலைப்
போர்த்துக்கொண்டுள்ள சிவபிரான் தனது இடப்பாகத்திலுள்ள அம்பிகையை
வலப்பக்கத்திலிருத்தி வீற்றிருந்தாற்போல வென உவமை கூறினார்.

    யானைத்தோல் போர்த்த கதை:- அருந்தவமியற்றிப் பெருவரம் பெற்ற
கஜாசுரனென்பவன் தேவர் முனிவர் முதலியோரை இடைவிடாது வருத்தித்துரத்த,
அஞ்சியோடின அவர்களது பிரார்த்தனையாற் பரமசிவன் தன்னை யெதிர்த்துப்
போர்செய்யவந்த அவ்வசுரனைக் காலாலுதைத்துத் தள்ளிக்கொன்று
தோலையுரித்துப் போர்த்தருளின தென்றாயினும், தாருகவனமுனிவர் ஏவின
யானையினுட்சென்று உருத்திரமூர்த்தி உடலைப்பிளந்து அதனுரிவையைப்
போர்த்துக்கொண்ட தென்றாயினுங் கொள்க.

     கடம் – யானைக்கன்னம்;  அதனினின்றுவழியும் மதநீர்க்கு இடவாகுபெயர்.
கடகரி – வடமொழித்தொடராதலின், வலி இயல்பு. உரிவை – உரிக்கப்பட்டது;
உரி – பகுதி; ஐ – செயப்படுபொருள்விகுதி, வ் – எழுத்துப்பேறு. உறுப்புத்தோல்
– கால்வால் செவி முதலிய அங்கங்களிலொன்றுந் தவறாதபடி எடுத்த
முழுத்தோல்.       

பொங்குறும் ஓமச் செந் தீப் புகையினைப் போர்த்தது
என்ன,
பைங் கடல் பருகு மேகம் பரிதியை மறைத்தது என்ன,
அங்கு உறுப்புடனே வெங் கோட்டு அரிணத் தொக்கு அருணமேனி
எங்கணும் புதைப்ப, வேள்வித் தொழிலிலே இதயம் வைத்தான்.தருமபுத்திரன் யாகச்சடங்கிலேயே கருத்துவைத்தல்.

பொங்குறும் ஓமம் செம் தீபுகையினை போர்த்தது என்ன –
கொழுந்து விட்டெழுந்து வளர்ந்து எரிகிற செந்நிறமான ஓமாக்கினி புகையைத்
தன்மேலே மிகுதியாகக் கொண்டிருந்தது என்று உவமை கூறும்படியாகவும்,
பைங்கடல் பருகும்மேகம் பரிதியை மறைத்தது என்ன – கருநிறமான கடலின்
நீரைக் குடித்தெழுந்த காளமேகம் சூரியனை மறைத்தது என்று உவமை
கூறும்படியாகவும், உறுப்புடனே வெம்கோடு அரிணம்தொக்கு அருணம் மேனி
எங்கண்உம் புதைப்ப – (கால் வால் முதலிய எல்லா) உறுப்புக்களோடும்
கொடிய கொம்புகளை உடைய மான் தோலானது செந்நிறமான (தனது) உடம்பு
முழுவதையும் மறைக்கப் போர்த்துக்கொண்டு (தருமபுத்திரன் வீற்றிருந்து),
அங்கு – அவ்விடத்தில் (அல்லது அப்பொழுது), வேள்வி தொழிலிலே இதயம்
வைத்தான் – யாக காரியத்திலேயே மனத்தைச் செலுத்தினான்;  (எ – று.)

     கீழ்க் கவியிலே செந்நிறமுடைய சிவபிரானும், இக்கவியிலே
செந்நிறமுடைய அக்கினியும் சூரியனும், செந்நிறமுடைய தருமபுத்திரனுக்கு
உவமை கூறப்பட்டனர்.  கருநிறம் மிக்க கிருஷ்ணசாரமென்னும் கலைமானின்
தோலுக்கு, கருநிறமுடைய யானைத்தோலும் புகையும் மேகமும் ஏற்ற
உவமையாதல் காண்க.  ‘பைங்கடல் பருகுமேகம்’ என்றது – நீர்கொண்ட
காளமேகம் என்றதற்கு;  பசுமை கருமை நீலம் என்ற நிறங்களை அபேதமாகக்
கூறுதல் கவிசமய மாதலால், ‘பைங்கடல்’ எனப்பட்டது.  இனி, பசுமை-
குளிர்ச்சியுமாம்.  அங்கு என்பதை அசையாகவும் கொள்ளலாம்.  ஹரிணம்,
த்வக் என்ற வடசொற்கள் விகாரப்பட்டன. அருணம் – தற்சம வடசொல்.
தொழிலிலே என்ற ஏகாரம் – பிரிநிலை; மற்றைச் செயல்களிற் சிறிதும் கருத்தைச்
செலுத்தாது வேள்விச் செயலிலேயே கருத்தை முற்றும் ஊன்றவைத்தானென்க.
தருமபுத்திரனுடைய செந்நிறமேனியிலே க்ஷத்திரிய தேஜசு மிக்கு விளங்குதலால்,
அதற்கு உபமானமாதற்கு, அக்கினியை, ‘பொங்குறு மோமச் செந்தீ’ என்று
விசேடித்துக் கூற வேண்டிற்று.

தருமன் மா மதலை, அந்தச் சடங்கு சொற்படியே
தொட்டு,
புரிவுடைத் திசைகள் நான்கும் புற்களால் காவல் செய்து,
விரி சுடர்த் தீகள் மூன்றும் விண்ணவர் முகங்கள் ஆக,
சுருவையால் முகந்த நெய்யை, சுருதியால், ஓமம் செய்தான்.தருமபுத்திரன் ஓமஞ்செய்தல்.

 தருமன் மாமதலை – யமதர்மராஜனது சிறந்த குமாரனான
யுதிட்டிரன்,-அந்த சடங்கு – அந்த ராஜசூயயாக காரியத்தை, சொல்படியே –
வேதசாஸ்திர விதிப்படியே, தொட்டு-தொடங்கி,-புரிவு உடைதிசைகள்
நான்குஉம்-(ஒன்றோடொன்று) தொடர்ச்சியுள்ள நான்கு திக்குகளிலும்,
புற்களால் காவல் செய்து – தருப்பைப்புற்களைக்கொண்டு பாதுகாப்பு
அமைத்து, விரிசுடர் தீகள் மூன்றும் – பரவுகிற ஜ்வாலைகளையுடைய மூன்று
வகை அக்கினிகளும், விண்ணவர் முகங்கள் ஆக – தேவர்கட்கு முகங்களாய்
அமைய, (அங்ஙனம் பாவித்து அவற்றில்), சுருவையால் முகந்த நெய்யை
சுருதியால் ஓமம் செய்தான் – சுருவை என்னுந் துடுப்புக்கொண்டு
மொண்டெடுத்த நெய்யை வேதமந்திரோச்சாரணத்தோடு ஓமம் பண்ணினான்;
(எ – று.)

     வேதிகையில் அக்கினியைப் பிரதிஷ்டித்த பின்பு அதிற்செய்யும்
சடங்கின்பயனை அசுரர்கள் கவராதபடி அதற்குப்பாதுகாவலாகத் தருப்பைகளை
நான்குவிளிம்பிலுஞ் சூழவைத்தல் இரண்டாமடியிற் குறிக்கப்பட்டது; அது,
பரிஸ்தரண மெனப்படும்.  தேவர்களை யுத்தேசித்து நெருப்பில் மந்திர
பூர்வமாக ஆகுதி செய்யப்படுகிற ஹவிசை அந்த அக்கினி தேவன் பெற்று
உண்ட மாத்திரத்தால் தேவர்கள் தாம் உண்டவாறுபோலத் திருப்திப்படுதல்
பற்றி ‘தேவர்கள் அக்கினியை முகமாக உடையவர்’ என்று வேதத்திற்
கூறப்பட்டிருத்தல் இங்கு அறியத்தக்கது.  சுருவை – ஓமாக்கினியில் நெய்யை
மொண்டு சொரியும் அத்திமரத்தாற் செய்த அகப்பை: நெய்த்துடுப்பு; ஸ்ருவம்
என்ற வடசொல்லின் விகாரம்.  புல் என்ற பொதுப்பெயர், இங்குச்
சிறப்பாய்த்தருப்பையைக் குறித்தது.  

முழுது உணர் வரம்பு இல் கேள்வி முனிவரர் குழாமும், என்றும்
அழிவு இலா மலரோன் ஆதி அமரர்தம் குழாமும், சூழ,
எழு சுடர் முத் தீப் பொங்க, எழு பகல் ஓமம் செய்தான் –
பழுது அறு பாண்டு செய்த மா தவம் பலித்தது ஒப்பான்.தருமபுத்திரன் ஏழுநாள் ஓமஞ்செய்தல்.

பழுது அறு பாண்டு செய்தமாதவம் பலித்தது ஒப்பான் –
குற்றமற்ற பாண்டுமகாராசன் இயற்றிய பெருந்தவம் பயன்பட்டது
போன்றவனான தருமபுத்திரன்,- முழுது உணர் வரம்பு இல் கேள்வி முனிவரர்
குழாம்உம் – முழுவதும் அறிந்த எல்லையில்லாத நூற்கேள்விகனையுடைய
ருஷிசிரேஷ்டர்களின் கூட்டமும், என்றுஉம் அழிவு இலா மலரோன் ஆதி
அமரர்தம் குழாம்உம் – எப்பொழுதும் அழிதலில்லாத பிரமன் முதலிய
தேவர்களுடைய கூட்டமும், சூழ – (தனது) சுற்றிலுமிருக்க,- எழு சுடர் மு தீ
பொங்க – எழுந்தெரிகிற ஜ்வாலைகளை உடைய மூன்று வகை அக்கினியும்
திருப்தியுற்று விளங்குமாறு, எழுபகல் ஓமம் செய்தான் – ஏழுநாள் ஓமம்
பண்ணினான்; (எ – று.)

     முழுதுணர் வரம்பில்கேள்வி என்ற இரண்டும்-முனிவரர்க்கு அடைமொழி.
முழுதுணர்தல் – தேயமிடை யிட்டவற்றையும் காலமிடை யிட்டவற்றையும்
அறிதல்.  வரம்பில் கேள்விகளை முழுதுணர்ந்த முனிவரரென மொழி மாற்றி
உரைப்பினுமாம்.   கேள்வியாவது – கேட்டற்கு உரிய நூற்பொருள்களைக்
கற்றறிந்தவர் கூறக்கேட்டல்.  இது, கற்றவர்க்கு அதனாலான அறிவை
வலியுறுத்துவதும், கல்லாதவர்க்குக் கல்வியறிவையுண்டாக்குவதுமாய்ச்
சிறத்தலால், எடுத்துக்கூறப்பட்டது.  இனி, கேள்வி – நல்லாசிரியர் பக்கல்
ஞானோபதேசம் பெறுதல் எனினுமாம்.  வரம்பு இல் கேள்வி – அனந்தமான
சுருதிகளுமாம்.  முழுது-எஞ்சாமைப்பொருள் குறிப்பதோர் உரிச்சொல்:
“முழுதென்கிளவி எஞ்சாப் பொருட்டே” என்பது தொல்காப்பியம்.  என்றும் –
கற்பாந்தகால மளவுமென்றபடி.  எழுசுடர் – வினைத்தொகை;
பண்புத்தொகையாக்கொண்டு, ஏழு சுவாலைக ளெனினுமாம்.  பகல் –
தினத்திற்கு இலக்கணை: பழுதறு என்றது – பாண்டுவுக்கும், தவத்துக்கும்
அடைமொழியாகத் தக்கது.  

இம் முறை, இராயசூய மா மகத்துக்கு எழுதொணா
நான்மறை உரைத்த
அம் முறை இமையோர் ஆனவர்க்கு எல்லாம் அரும் பெறல்
அவி உணவு அருளி,
மும் முறை வலம் வந்து, இருவரும் சுவாகை-முதல்வனை
முடி உற வணங்கி,
தெம் முறை அரசர் இடு திறை அனைத்தும் தானமும்
தியாகமும் செய்தான்.தருமபுத்திரன் யாகமுடிவில் தானமும் தியாகமும்
செய்தல்.
 

இ முறை இராயசூய மாமகத்துக்குஎழுது ஒணாநால் மறை
உரைத்த அ முறை-இவ்வகையாக ராஜசூய மென்னுஞ் சிறந்த யாகத்துக்கு
எழுதாக்கிளவியான நால்வகை வேதங்களிற் கூறிய அந்தவிதிப்படி,
(தருமபுத்திரன்), இமையோர் ஆனவர்க்கு எல்லாம் – தேவர்களெல்லார்க்கும்,
அரும்பெறல் அவி உணவு அருளி – பெறுதற்கு அரிய ஹவிஸாகிய உணவைக்
கொடுத்து, இருவரும் – தானும் தன் மனைவியுமாகிய இரண்டு பேருமாக,
சுவாகை முதல்வனை மும்முறை வலம்வந்து முடி உற வணங்கி –
சுவாகாதேவியின் கணவனான அக்கினிதேவனை, மூன்றுதரம் பிரதக்ஷிணஞ்
செய்து (தமது) சிரசு (நிலத்திலே) படும்படி நமஸ்கரித்து,- தெவ் முறை அரசர்
இடு திறை அனைத்தும் தானமும் தியாகமும் செய்தான் – பகைமை
முறைமையிலே நின்ற அரசர்கள் (தன் தம்பியரான வீமன் முதலியோர்க்குத்
தோற்றுக்) கொடுத்த பொருள்களை யெல்லாம் தானமாகவும் தியாகமாகவும்
(அந்தணர்க்கும் பிறர்க்கும்) வழங்கினான்; (எ – று.)

     எழுது – முதனிலைத்தொழிற்பெயர். எழுதொணா – நான்காம்
வேற்றுமைத்தொகை.  ஒணா – மரூஉமொழி.  ‘அரும்பெறல்’ என்பதை
‘அருங்கேடன்’ என்றாற்போலக் கொள்க.  ‘அரும்பெற லவியுணவு’ என்றது,
அந்த யாகத்தின் தூய்மையைக் கருதி.  சுவாகை – ஸ்வாஹா என்ற
வடசொல்லின் விகாரம்; இவள்-தக்ஷமுனிவனுடைய பெண்களில் ஒருத்தி.  தெம்
முறையரசரிடுதிறை – வீமன் முதலிய தம்பியர் நால்வரும் திக்குவிசயஞ் செய்து
ஈட்டிய பொருள்.  இடுதிறை – வினைத்தொகை.  முதலடியில் ‘எம்முறை’ என்ற
பாடத்துக்கு, வேதங்கள் ராஜசூயயாகத்துக்கு எந்த முறைமையாகச்
சொல்லியுள்ளனவோ அந்த முறைப்படி யென்க;  அப்பொருளுக்கு, ‘உரைத்த’
என்றது, பலவின்பால்முற்று.  ராஜஸூயமஹாமகம் என்ற வடமொழித்தொடர்
விகாரப்பட்டது.  இராயசூயம் ஆம் மகத்துக்கு என்றும் பதம் பிரிக்கலாம்.

     இதுமுதல் ஆறுகவிகள் – இச்சருக்கத்தின்18-ஆங் கவிபோன்ற
எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தங்கள்.

ஏழு நாள், இவ்வாறு, இமையவர் எவர்க்கும் இமகிரிதனில்
அயன் வேட்ட
ஊழி மா மகம்போல், இயற்றி, எண் திசையின் உயர் புனல்
யாவையும் சொரிய,
ஆழிவாய் முகிலும் மின்னுமே என்ன, அரும் புனல்
ஆடிய பின்னர்,
வாழி பாடினர்கள், நாரதன் முதலோர்; மங்கலம் பாடினர்,
புலவோர்.தருமபுத்திரன் அவபிருதஸ்நானஞ் செய்தல்.

இ ஆறு – இப்படி, ஏழுநாள் -ஏழுதினங்களில், இமையவர்
எவர்க்குஉம் – தேவர்களெல்லார்க்கும், (திருப்திகரமாக), இமகிரிதனில் அயன்
வேட்ட ஊழி மா மகம் போல் இயற்றி – (ஆதிகாலத்தில்) இமயமலையிலே
பிரமன் செய்த முறைமை தவறாத பெரிய யாகத்தைப்போல (வெகு சிறப்பாகத்
தருமபுத்திரன் இராசசூயயாகத்தை)ச் செய்து, (அதன் முடிவில்), எண்திசையின்
உயர் புனல் யாவைஉம் சொரிய – எட்டுத்திக்குகளினின்றுங் கொணர்ந்த சிறந்த
புண்ணியதீர்த்தங்களையெல்லாம் (பெரியோர்) சொரிய, ஆழிவாய் முகில்உம்
மின்னும்ஏ என்ன அரும்புனல் ஆடிய பின்னர் – கடலில் மேகமும் மின்னலும்
(படிந்தாற் போலத் தருமபுத்திரனும் திரௌபதியும்) பெறுதற்கு அருமையான
அப்புண்ணிய தீர்த்தங்களினால் நீராடிய பின்பு, நாரதன் முதலோர் வாழி
பாடினர்கள் – நாரதன் முதலிய முனிவர்கள் ஆசீர்வாத கீதங்களைப்
பாடினார்கள்; புலவோர் மங்கலம் பாடினர் – வித்துவான்கள் மங்கல வாழ்த்துக்
கவிகளைப் பாடினார்கள்; (எ – று.)

    பூர்வத்திற் பிரமதேவன் திருமாலினருளைப் பெறவேண்டி அப்பரமனைக்
குறித்து இமயமலையிலே தேவர்களுடனிருந்து அசுவமேத யாகத்தை மிக்க
சிறப்பாகச் செய்து முடித்தன னென்பது உணர்க.  மிகச் சிறந்த அந்த
யாகத்தை இங்குத்  தருமபுத்திரன் செய்த இராயசூயயாகத்துக்கு உவமை
கூறினார்.  இமையவரெவர்க்கும் இயற்ற என இயையும்; இமையவ ரெவர்க்கும்
வேட்ட என்று இயைத்து, தேவர்களெல்லோருக்கும் (க்ஷேமகரமாம்படி) பிரமன்
செய்த யாகமெனினுமாம்.  யாகத்தின் முடிவில் அதன்பூர்த்திக்கு அறிகுறியாகச்
செய்கிற மங்கள ஸ்நானம், ‘அவபிருதம்’ எனப்படும்.  கடல் – புண்ணிய
தீர்த்தப்பெருக்குக்கும், மேகம் – தருமபுத்திரனுக்கும், அதனிடத்து உள்ள
மின்னல்-அவனையடுத்துள்ள திரௌபதிக்கும் உவமை.  ஹிமகிரி-
வடமொழித்தொடர்: பனிமலை.  வேட்ட, வேள் – பகுதி.  ஊழி – முறைமை.
உயர்புனல்-வினைத்தொகை.  ஆழிவாய், வாய் – ஏழனுருபு.  பின்னர், அர் –
சாரியை. “வாழிய வென்பதன் ஈற்றி னுயிர்மெய், ஏகலுமுரித்து” என்றதனால்,
‘வாழிய’ என்ற வியங்கோள் ‘வாழி’ என்று விகாரப்பட்டது;  இது
ஆகுபெயராய், வாழ்க என்று பாடும் வாழ்த்துப் பாடலின்மேல் நின்றது.
புலவர் என்பது, ‘புலவோர்’ என (ச் சிறுபான்மை) ஈற்றயல் அகரம்
ஓகாரமாயிற்று.     

பெயர் பெறும் முனிவர் எவர்க்கும் எண்-இரண்டு ஆம்
பேர் உபசாரமும் வழங்கி,
உயர்வு அற உயர்ந்த வேள்வியின் உயர்ந்தோன், உயர்
குலப் பாவையும் தானும்,
மயர்வு அறு ஞான வடிவமாய் நின்ற மாயனை
மனனுற வணங்கி,
அயர்வு அறு கங்கை மகன் பதம் பணிவுற்று, அறன் மகன்
வினவினன் அம்மா!பின்பு தருமபுத்திரன்வீடுமனை ஒன்றுகேட்கத்
தொடங்குதல்.

பெயர் பெறு முனிவர் எவர்க்கும் – கீர்த்தியினால்
பிரசித்திபெற்ற (அங்கு வந்துள்ள) இருடிகளெல்லார்க்கும், எண் இரண்டு ஆம்
பேர் உபசாரமும் வழங்கி – பதினாறுவகையான சிறந்த உபசாரங்களையுஞ்செய்து,
உயர்வு அற உயர்ந்த வேள்வியின் உயர்ந்தோன் – தனக்கு மேம்பட்டதொன்று
இல்லாதபடி (தானே எல்லாவற்றினும் மிகச்) சிறந்த யாகத்தைச் செய்து
முடித்ததனால் மேன்மை பெற்றவனான, அறன் மகன் – தருமபுத்திரன், உயர்குலம்
பாவையும் தானும் – சிறந்த குலத்தில் தோன்றிய அழகிய பெண்ணான
திரௌபதியும் தானுமாக, மயர்வு அறு ஞானம் வடிவம் ஆய் நின்ற மாயனை
மனன் உற வணங்கி – மயக்கமில்லாத தத்துவ ஞானத்தின் சொரூபமாய் நின்ற
கண்ண பிரானை மனப்பூர்வமாக நமஸ்கரித்து, அயர்வு அறு கங்கைமகன் பதம்
பணிவு உற்று – (எதிலும்) சோர்வு இல்லாத வீடுமனுடைய பாதங்களை
நமஸ்கரித்து, வினவினன் – (ஒன்று) வினவலானான் (எ – று.) – அவ்வினாவை,
அடுத்த செய்யுளின் முதலிரண்டடிகளிற் காண்க.  அம்மா – ஈற்றசை.

    வேள்வியின் உயர்ந்தோன் – ராஜசூயயாகத்தை முடித்து ‘ஸம்ராட்’
என்னும் பெயர்பெற்று மேம்பட்டவ னென்றபடி.  ‘உயர்குலம்’ என்றது இங்குச்
சோமககுலத்தை.  உயர்வு, மயர்வு, அயர்வு – தொழிற்பெயர்கள்.  மயர்வாவது
– ஒன்றை மற்றொன்றாக மாறுபட உணரும் விபரீதஞானம்.  மாயன் –
மாயையையுடையவன்; மாயை – செயற்கு அரியன செய்து முடிக்கும்
திவ்வியசக்தி. பிரபஞ்சகாரணமான பிரகிருதியுமாம்.  ஆச்சரியகரமான
குணங்களும் செயல்களு மெனவுமாம்.  தான் பிறர்க்கு மாயை செய்யினும்
அம்மாயைக்குத் தான் உட்படாதவ னென்பார் ‘மயர்வறுஞான வடிவமாய் நின்ற
மாயன்’ என்றார்.  சமயோசிதமான ஆலோசனையைத் துணிந்து கூறுதலில்
தவறாதவனென்ற கருத்து அமைய, கங்கை மகனுக்கு ‘அயர்வறு’ என்ற
அடைமொழி கொடுக்கப்பட்டது.  மனன் உற – மனத்தில் அன்பு பொருந்த.

பரிதியும் மதியும் வன்னியும் முதலாம் பல் வகைக்
குலத்தும் உற்பவித்த
நரபதி குழாத்தில் யாவரே பெறுவார், நவிலும் முற்பூசை,
மற்று” என்ன,
கருதிய வசுக்கள் எண்மரில் ஒருவன், கங்கையின்
திருமகன், தெய்வச்
சுருதி மா மகம் செய் புனிதனை நோக்கி, தொல்
முனிவரையும் நோக்கி,அக்கிரபூசைக்கு உரியவர் யாரென்று தருமன் வீடுமனை
வினாவுதல்.

இதுவும், அடுத்த கவியும் – குளகம்.

     (இ -ள்.) ‘பரிதிஉம் – சூரியனும், மதிஉம் – சந்திரனும் வன்னிஉம் –
அக்கினியும், முதல்ஆம் – முதலியோரை ஆதிபுருஷராக   உடையனவான,
பல் வகை குலத்தும் – பலவகை ராஜவம்சங்களிலும், உற்பவித்த – தோன்றின,
சுரபதி குழாத்தில் – அரசர்களுடைய கூட்டத்தில், நவிலும் முன் பூசை
பெறுவார் – சிறப்பித்துச் சொல்லப்படுகிற முதற்பூசையைப் பெறுதற்கு உரியவர்,
யாவரே – யார்தாம்?’ என்ன – என்று (தருமபுத்திரன் வீடுமனை) வினாவ,-
கருதிய வசுக்கள் எண்மரில் ஒருவன் – நன்குமதிக்கப்படுகிற அஷ்டவசுக்களில்
ஒருவனும், கங்கையின் திருமகன் – கங்காதேவியின் சிறந்த குமாரனுமான
வீடுமன், தெய்வம் சுருதி மாமகம் செய் புனிதனை நோக்கி – தெய்வத்தன்மை
பொருந்திய வேதங்களிற் கூறிய விதிப்படி சிறந்த இராசசூயயாகத்தைத்
தலைமையாக இருந்து நடத்திய பரிசுத்த மூர்த்தியான வியாசமகா முனிவனைப்
பார்த்து, தொல் முனிவரரைஉம் நோக்கி – பழமையான [பெரிய] மற்றை
ருஷிசிரேஷ்டர்களையும் பார்த்து,- (எ – று.)-‘உரைமின் என்றலும்’ என
அடுத்த கவியோடு தொடரும்.  மற்று-அசை.

    கருதியவசுக்கள் – முன்னே குறிக்கப்பட்ட வசுக்களென்றும், வசிட்டனது
காமதேனுவைக் கவரக் கருதிய வசுக்களென்றுங் கொள்ளலாம்.
வசுக்களெண்மரில் ஒருவன் – பிரபாசனென்னும் வசுவின் பிறப்பானவன். செய்
புனிதன் – செய்வித்த புனிதன்;  தன்வினை பிறவினைப் பொருளது.  வியாசன்
வேள்வி செய்விப்பவர்களுள் தலைமைபெற்ற பிரஹ்மஸ்தானத்தில் வீற்றிருந்து
அந்த யாகத்தைக் குறைவற நடப்பித்தன னாதலால்,
‘தெய்வச்சுருதிமாமகஞ்செய் புனிதன்’ எனப்பட்டான். 

ஆர்கொலோ, அக்ர பூசனைக்கு உரியார், அரசரில்’
அந்தணீர்! உரைமின்-
பார் எலாம் தம்தம் குடை நிழல் புரக்கும் பார்த்திவர்
யாரையும் உணர்வீர்;
தார் உலாம் மார்பீர்!’ என்றலும், வியாதன் தருமன்
மா மதலையை நோக்கி,
‘காரின் மா மேனிக் கரிய செந் திகிரிக் கண்ணனுக்கு
உதவு’ எனக் கதித்தான்.வீடுமன்முனிவர்களை வினாவ, வியாசன் கண்ணனுக்குக்
கொடுக்க வென்றல்.

‘தார் உலாம் மார்பீர்அந்தணீர் – தாமரைப் பூமாலை
அசைகின்ற மார்பையுடையவர்களான முனிவர்களே!- பார் எலாம்தம்தம் குடை
நிழல் புரக்கும் பார்த்திவர் யாரைஉம் உணர்வீர் – பூமிமுழுவதையும் தம்தம்
ஆளுகையின் கீழ்வைத்து ஆளுகின்ற அரசர்களெல்லாரையும்பற்றி நீங்கள்
அறிவீர்கள்;  அரசரில் அக்ரபூசனைக்கு உரியார் ஆர்கொலோ உரைமின் –
(இங்கு வந்துள்ள) அரசர்களுள் முதற்பூஜை செய்யப்பெறுதற்கு உரியவர்
யாரோ? சொல்லுங்கள்,’ என்றலும் – என்றுவினாவியவுடனே,- வியாதன் –
வியாசமாமுனிவன், தருமன் மா மதலையை நோக்கி – பெருமையுள்ள
தருமபுத்திரனைப் பார்த்து, காரின் மா மேனி கரிய செம் திகிரி கண்ணனுக்கு
உதவு என கதித்தான் – ‘காளமேகம் போன்ற கரிய திருமேனியையும் பெரிய
செந்நிறமுள்ள சக்ராயுதத்தையுடைய கிருஷ்ணபகவானுக்கு (முதற் பூஜை)
செய்யக் கடவாய்’ என்று சொல்லியருளினான்; (எ – று.) 

     ‘கரிய’ என்பதில், கருமை – பெருமைமேல்நின்றது.  காரின்
கரியமாமேனி என மாற்றி இயைத்து உரைப்பினுமாம்.  கரிய செந்திகிரி
என்றவிடத்து, முரண்தொடை காண்க.  காரின் மா மேனி கரிய என்ற
பாடம், மேகம்போலஅழகியமேனி கருமையாயிருக்கப்பெற்ற என்று
பொருள்படும்.  அக்ரபூசனை -வடசொல்.  ஆளுகையைக்
குடைநிழலென்றல்மரபு.  மாலையை யுணர்த்துகின்ற’தார்’ என்ற
பொதுப்பெயர், இங்குச்சிறப்பாய்த் தாமரைப் பூமாலையைக்குறித்தது.
அந்தணர்க்குத் தாமரைப் பூமாலை உரியதாதலை, ‘பைங்கமலத்
தண்டெரியற்பட்டர்பிரான்” என்ற பெரியாரருளிச்செயலினாலும்த அறிக.
இனி,தார் – தாமரை மணிமாலையும்,  துளசிமணிமாலையுமாம்.
கதித்தான்-வடமொழித்தாதுவினடியாப் பிறந்தமுற்று

என்ற போது அந்த வேத்தவை இருந்தோர் யாவரும்
இருந்துழி இருந்து,
‘நன்று, நான்மறையோர் சிகாமணி உரைத்த நவிர் அறு
நல் உரை!’ என்றார்.
சென்ற போர்தோறும் வென்றியே புனையும் சேதிப
பதி சிசுபாலன்
கன்றினான், இதயம்; கருகினான், வதனம்; கனல் எனச்
சிவந்தனன், கண்ணும்.அதற்கு அனைவரும் உடன்பட, சிசுபாலன் மாறுபடுதல்.

என்றபோது – என்று (வியாசமாமுனிவன்) சொன்ன சமயத்தில்,
அந்த வேந்து அவை இருந்தோர் யாவர்உம் – அந்தராஜசபையிலிருந்தவர்
களெல்லாரும், இருந்தஉழி இருந்து – தாம்தாம் இருந்த இடத்திலேயே இருந்து,
நால்மறையோர் சிகாமணி-நான்குவேதங்களையு முணர்ந்த
முனிவர்களெல்லாரும் தலைமேற்கொள்ளும் இரத்தினம்போலச் சிறந்த
வியாசமாமுனிவன், உரைத்த – சொன்ன, நவிர் அறு நல் உரை நன்று –
குற்றமற்ற சிறந்த வார்த்தை நன்றாயுள்ளது, என்றார் – என்று
சொல்லிக்கொண்டாடி அதற்கு உடன்பட்டார்கள்; சென்ற போர் தோறுஉம்
வென்றி ஏ புனையும் சேதிப்பதி சிசுபாலன் – சென்றசென்ற போர்கள்
பலவற்றில்வெற்றியையே பெறுகிற சேதிதேசத்தையாளுமரசனான சிசுபாலன்
மாத்திரம், இதயம் கன்றினான் – மனம்வெதும்பி, வதனம் கருகினான் –
முகம்கறுத்து, கண்ணும் கனல் என சிவந்தனன் – கண்களும் நெருப்புப்போலச்
சிவக்கப்பெற்றான்; (எ – று.)

    சிசுபாலன் – வசுதேவனது உடன்பிறந்தவளும் அதனாற் கண்ணனுக்கு
அத்தையும் சேதிதேசத்து அரசனாகிய தமகோஷனுக்குப் பத்தினியுமான
கருதசிரவையென்பவளுடைய மகன்.  இவன் பிறந்தபொழுது
மூன்றுகண்களையும் நான்கு கைகளையுமுடையவனாய்க்
கழுதைக்குரலாற்புலம்பி ஆரவாரித்தான்;  அதனையுணர்ந்த தாய்தந்தையர்
முதலிய சுற்றத்தாரனைவரும் இது என்னென்று அஞ்சிக்கலங்கி
இவனைக்கைவிடுவதாகக் கருதுகையில், ஆகாயவாணி இவன தந்தையை
நோக்கி, ‘அரசே! இப்புதல்வன் மேம்பாடுடையவன்; மகாபலசாலி:
இவன்பக்கல் அஞ்சவேண்டா; இவனை நன்றாகக் காப்பாற்றுக; இவனை நீ
கொல்லாதே.  இவன் இப்பொழுது இறக்கற்பாலனல்லன்;  இவனைக்
கொல்பவன் பிறந்துள்ளான்; சக்ராயுதத்தினால் இவனைக்கொல்வன்’ என்றது.
அந்த அசரீரி  வார்த்தையைக் கேட்டு இவன்தாய் குழந்தையினிடத்து
அன்பினால் வருந்தி அந்தச்சொல்லின் தெய்வத்தையே தொழுது ‘இவனைக்
கொல்பவன் யார்?’ என்று வினாவியதற்கு, அந்தத் தெய்வீகவாக்கு ‘யார்
இவனை மடியில் வைத்துக்கொள்ளுகையில், இவனது கைகளிரண்டும்
நெற்றிக்கண்ணும் மறைகின்றனவோ, அவனால் இவனுக்கு மரணம்’ என்று
கூறிற்று;  அவ்வாறே பலரும் எடுத்துக்கொள்ள மறைபடாத கைகளும்
கண்ணும், கண்ணபிரான் வந்து எடுத்த வளவிலே மறைபட்டன;  அதனால்,
இவனைக்கொல்பவன் கண்ணனே யென்று அறிந்த இவன் தாய் ‘யாது செய்யினும் என்மகனைக் கொல்லலாகாது’ என்று கண்ணனை வேண்ட, அந்த
அத்தையின் நன்மொழிக்கு ஒருசார் இணங்கிய கண்ணன் ‘இவன் எனக்கு
நூறுபிழைசெய்யுமளவும் இவன் பிழையை நான் பொறுப்பேன்’ என்று
கூறியருளினான்.  பின்பு சிசுபாலன் தனக்குக் கண்ணன் சத்துரு வென்பதை
இளமையிலேயே அறிந்து அதனாலும் முந்தின சன்மங்களின்
தொடர்ச்சியினாலும் வளர்ந்த மிக்க பகைமையைப் பாராட்டி எப்பொழுதும்
அப்பெருமானுடைய திவ்விய குணங்களையும் திவ்வியச்செயல்களையும்
நிந்திப்பதே தொழிலாக விருந்தான்.  இவனுக்கு மணஞ்செய்து கொடுப்பதென்று
நிச்சயிக்கப்பட்டிருந்த ருக்மிணியைக் கண்ணன் வலியக்கவர்ந்து மணஞ்செய்து
கொண்டதுமுதல் இவன் அப்பெருமானிடத்து அளவிறந்த வைரங்கொண்டனன்
என அறிக.

    இதயங்கன்றுதல் – பொருமையின்செயல்.  முகங்கறுத்தது தனக்கு
அவமானமென நினைத்ததனால்.  கண்சிவத்தல்-கோபக்குறி.  கருகினான்
வதனம் சிவந்தனன் கண்ணும் என்றவிடத்து முரண்தொடை காண்க.
‘யாவரும் இருந்துழியிருந்து நன்றென்றார்’ என்றதனால், சிசுபாலன் மாறுபட்டுக்
கோபத்தாலெழுந்தனனென்பது தோன்றும்.   ‘வேத்தவை’ என்ற பாடத்துக்கு
மென்றொடர் வேற்றுமையில் வன்றொடராயிற்றென்றும், ‘சேதியம்பதி’ என்ற
பாடத்துக்கு, அம் – சாரியையென்றுங் கொள்க.  வேந்து –
உயர்திணைப்பொருள்தரும் அஃறிணைச்சொல்.  இருந்துழி-தொகுத்தல்.
நன்கு-தகுதியுடையது என்றபடி; இது அங்கீகாரவார்த்தை.  சிகாமணி, சேதிபதி-
வடமொழித்தொடர்கள்.  வென்றியே புனையும் – வெற்றிக்கு அறிகுறியான
வாகைப்பூமாலையையே தரிக்கும் என்னவுமாம். இவ்வுரைக்கு ‘வென்றி’ என்பது
– வெற்றிமாலைக்கு ஆகுபெயர்.  ‘சென்றபோர்தோறும் வென்றியே புனையும்’
என்ற அடைமொழி, சிசுபாலனது பலபராக்கிரமத்தின் சிறப்பையுணர்த்தும்.
இனிநிகழும் போரில் இவன் வென்றிபுனையாது அழிவுபெறுதல்பற்றி,
‘சென்றபோர்தோறும்’ என வேண்டிற்று.  சிசுபாலன் இதயம் கன்றினான்
வதனம் கருகினான் கண்சிவந்தான் என்பன, ‘உயர்திணை தொடர்ந்த
பொருள்முதல் ஆறும், அதனொடு சார்த்தின் அத்திணை முடிபின’ என்றபடி
அஃறிணைச்சினை உயர்திணை முதலின் வினையைக் கொண்டு முடிந்த
திணைவழுவமைதிகள்.  போது-மரூஉமொழி.

‘பூபாலர் அவையத்து முற்பூசை பெறுவார்,
புறங்கானில் வாழ்
கோபாலரோ” என்று உருத்து, அங்கு அதிர்த்து,
கொதித்து, ஓதினான்-
காபாலி முனியாத வெங் காமன் நிகரான கவின்
எய்தி, ஏழ்
தீ பால் அடங்காத புகழ் வீர கயம் அன்ன சிசுபாலனே.-இதுமுதற்பதின்மூன்று கவிகள் – சிசுபாலன்
கண்ணனைக் குறித்துப் பலவாறு நிந்தித்தல்.

காபாலி முனியாத-சிவபிரானாற் கோபித்து எரிக்கப்படாத,
வெம் காமன் – (அனைவராலும்) விரும்பப்படுகின்ற [கட்டழகுடைய]
மன்மதனுக்கு, நிகர் ஆன-சமானமான, கவின்-அழகை, எய்தி-பெற்று,
ஏழ்தீபால் அடங்காத புகழ்-ஏழுதீவுகளிலும் அடங்கமாட்டாத கீர்த்தியை
யுடையவனான, வீர கயம் அன்ன – வலிமையிற்சிறந்த யானையைப்போன்ற,
சிசுபாலன் – சிசுபாலனென்னும் அரசன்,- ‘பூபாலர் அவையத்து முன்பூசை
பெறுவார் – பூமியையாளுகின்ற அரசர்கள் கூடிய சபையில்
அக்கிரபூசையுபசாரத்தைப் பெறுதற்குத் தகுதியுடையவர், புறம் கானில் வாழ்
கோபாலரோ – (நகரத்துக்குப்) புறம்பான வனத்திலே வசிக்கிற பசுமேய்க்கு
மியல்புடைய இடையர்களோ?’ என்று-, உருத்து அங்கு அதிர்த்து கொதித்து
ஓதினான் – கோபித்து அப்பொழுது இரைச்சலிட்டு மனம்புழுங்கிக் கூறினான்;
(எ – று.)-இது, தொகுத்துச்சுட்டல்;  அடுத்தபதினொருகவிகள்,
வகுத்துக்காட்டல்.

     கண்ணன் க்ஷத்திரியசாதியில் உயர்ந்த சந்திரகுலத்திலே வசுதேவன்
மகனாய்த் தேவகிவயிற்றிற் பிறந்திருந்தும், தாழ்ந்த இடையர்சாதியில்
நந்தகோபன் மனையில் அவன் மகனாக யசோதை வளர்க்க வளர்ந்தது
மாத்திரத்தைக் கொண்டு, அவனைச் சிசுபாலன் இடையனென இகழ்ந்தான்;
வடமதுரையில் வசுதேவனும் தேவகியும் கம்சனாற் சிறையிலிருத்தப்பட்டுத்
தளைபூண்டிருக்கையில், திருமால் தேவகியிடம் எட்டாவது கருப்பத்திற்
கண்ணனையவதரிக்க, ‘இக்குழந்தையைக் கம்சன் முன்னைய கோட்பாட்டின்படி
கொன்று விடுவனே’ என்கிற அச்சத்தால், தாய்தந்தையர் அந்தத் தெய்வக்
குழவியின் அநுமதிபெற்று அந்தச் சிசுவை அது பிறந்த நடுராத்திரியிலேயே
கோகுலத்திலே இடையர் தலைவனான நந்தகோபனது கிருகத்திலே
இரகசியமாகக்கொண்டு சேர்த்து விட்டு, அங்கு அப்பொழுது யசோதைக்கு
மாயையின் அமிசமாய்ப் பிறந்திருந்ததொரு பெண்குழந்தையை
எடுத்துக்கொண்டு வந்துவிட, அதுமுதற் கம்சனைக் கொல்லுகிற வரையில்
இளம்பருவத்திலெல்லாம் கண்ணன் அந்த ஆய்ப்பாடியிலேயே வளர்ந்தன
னென்பது வரலாறு.

     பூபாலர், கோபாலர் – வடமொழிப்பெயர்கள்.  ஓகாரம் – எதிர் மறைப்
பொருளையும் இகழ்ச்சியையும் கொண்டவினா.  புறங்கான் –
நாட்டுக்குப்புறமாகிய வன மென்றபடி.  அங்கு வாழ்பவர்
நாகரிகமில்லாதவரென்று இகழுங் குறிப்பினால் ‘புறங்கானில் வாழ்கோபாலர்’
என்றான்.  நாடும் நாடுசார்ந்த இடமுமாகிய முல்லைநிலம் புறம்பாதலும்,
இடையர் அந்நிலத்துக்கு உரிய மனிதராதலும் கருதத்தக்கன.
(முல்லைநிலத்துக்கு ‘புறவம்’ என்ற பெயர் நகர்ப்புறமாதல்பற்றி வந்ததுபோலும்.)
அங்கு – அவ்விடத்து எனினுமாம்;  அசையென்றலுமொன்று. அதிர்த்து
ஓதுதல் – பெருங்குரலாக அதட்டிப்பேசுதல்.

    கபாலீ என்ற வடசொல் காபாலி என விகாரப்பட்டது.  பிரம
கபாலத்தைக்கையிற்கொண்டமைபற்றி, சிவபிரானுக்கு ‘கபாலி’ என்று
ஒருபெயராயிற்று.  முன்னொருகாலத்திற் கைலாசகிரியிலே பரமசிவன், ஸநகர்
முதலிய நால்வர்க்கு யோக நிலைமையை யுணர்த்துதலினிமித்தம் தான்யோகஞ்
செய்துகொண்டிருக்கையில் பிரமனேவலால் மலரம்புகளை யெய்து தனது
தவத்தைக் கெடுக்கலுற்ற மன்மதனைச் சினந்து நெற்றிக் கண்ணைவிழித்து அதன்
நெருப்புக்கு இரையாய் உடலெரிந்து சாம்பலாய்ப் போம்படி செய்தன னென்பது
கதை.  இங்ஙனம் அங்கத்தையிழந்து அநங்கனாகாத ஒரு மன்மதனது
வடிவத்தைப் போன்ற மிக்க அழகுடைய வடிவத்தைப்பெற்று என
இல்பொருளுவமை கூறுவார், ‘காபாலி முனியாத வெங்காமனிகரான கவினெய்தி’
என்றார்.  இப்பொழுது உள்ள மன்மதன் இவனது வடிவழகுக்கு உவமையாதற்கு
ஏலானென்பது தோன்றும். சிவபிரானா லெரிக்கப்படுதற்கு முன்பு இருந்த
மன்மதனது சுந்தரமூர்த்தியைக் கருதிக் கூறினாருமாம்.  இதனை, கீழ் 80-ஆங்
கவியின் முன்னிரண்டடியோடு ஒப்பிடுக.  ஆகவே, கண்ணன் போலவே
சிசுபாலனும் கட்டழகுடையானென்பது போதரும்.

    ‘வெம்மை’ என்ற சொல் – பண்புப்பெயராய் வெப்பத்தை
யுணர்த்துதலேயன்றி உரிச்சொல்லாய் விருப்பத்தையுமுணர்த்துதலை ‘வெம்மை
வேண்டல்” என்ற தொல்காப்பியத்தாலுணர்க.  காமன் என்ற வடமொழிப்பெயர்
– காமத்தை விளைக்குந் தேவனென்றும், அனைவராலுங்
காமிக்கப்படுகிறவனென்றும் பொருள்படும்.  த்வீபம் என்ற வடசொல், தீ என்று
விகாரப்பட்டது.  ஏழ் தீபால் அடங்காத புகழ் – ஏழு தீவுகளாகவுள்ள
பூலோகமுழுவதிலுமேயன்றி வேறுலகங்களிலும் பரவிய பெருங்கீர்த்தி.
வீரகஜம் – வடமொழித்தொடர்.  வீரம் – வலிமை, ஆற்றல்.  மதத்தால்
மயங்கிக் கோபிக்கிற யானைபோலச் செருக்கினால் மயங்கிக்
கோபாவேசங்கொண்ட சிசுபால னென்றதற்கு, ‘வீரகயமன்ன சிசுபாலன்’
என்றார்.  “யானை அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும்” என்றபடி யானை
தனக்குவேண்டிய கவளம் முதலியன கொடுத்துப் பலவாற்றாலும் உதவுகிற
பாகனையே பேதைமையாற்கோபித்து எதிர்த்தல்போல, இவன் தனது
விகாரவடிவத்தைப் போக்கியருளிய கண்ணபிரானையே அறிவின்மையாற்
பகைத்தலால் உவமை ஏற்கும்.

     இதுவும், அடுத்த கவியும் – பெரும்பாலும் ஈற்றுச்சீரொன்று
தேமாங்கனிச்சீரும், மற்றைநான்கும் மாங்காய்ச்சீர்களுமாகிய நெடிலடி நான்கு
கொண்ட கலிநிலைத்துறைகள்.

     அடியில்வருகிற செய்யுளொன்று சிலஏட்டுப்பிரதிகளில் இச்செய்யுளுக்கு
முன்னே காணப்படுகிறது:- ‘கொச்சையிடையர் மகளிருக்குங் கூத்துக்குனித்து
நவநீதப், பிச்சை நுகருமிவ னெமக்குமுன்னே பூசைபெறு வானாஞ், சச்சை
மறையின் முறையென்னாந்தருமன் புரிந்த மகமென்னாஞ், செச்சைவடிவேன்
முடியரசர் செங்கோலென்னாந் திருவென்னாம்.”

சூரன் குலத்தோர், குபேரன் குலத்தோர், சுடர்ப் பாவகப்
பேரன் குலத்தோர்கள், முதலோர் இருந்தார்கள்,
பெயர் பெற்ற பேர்;
வீரம்கொலோ? வாகு சாரம்கொலோ? செல்வ
மிச்சம்கொலோ?
பூர் அம்பு ராசிப் புவிக்கு என்றும் முதுவோர்கள்
பொதுவோர்கொலோ?

சூரன்குலத்தோர் – சூரியவம் சத்தவர்களும்’ குபேரன்
குலத்தோர் – சந்திரவம்சத்தவர்களும், சுடர் பாவகன் பேரன் குலத்தோர்கள் –
ஒளியையுடைய பாவகனென்று ஒரு பெயரை யுடையவனான அக்கினியின்
வம்சத்தவர்களும், முதலோர் – முதலியவர்களாகிய, பெயர் பெற்ற பேர் –
பிரசித்திபெற்ற அரசர்கள், இருந்தார்கள் -(பலர் இங்கு) வந்திருந்தார்கள்;
(அங்ஙனமிருக்கவும்), வீரம் கொள் ஓ-பராக்கிரமமிகுதிபற்றியோ, வாகு சாரம்
கொல் ஓ-தோள்வலிமை மிகுதிபற்றியோ, செல்வம் மிச்சம் கொல் ஓ –
பொருள் மிகுதிபற்றியோ (இடையர்களிலொருவனான கிருஷ்ணனுக்கு
அக்கிரபூசையளிப்பது1 அன்றியும்), பூர் அம்புராசி புவிக்கு என்றும்
முதுவோர்கள் பொதுவோர் கொல் ஓ-(நீர்) நிறைந்த கடல்சூழ்ந்த பூலோகத்தில்
எக்காலத்தும் பெரியமனிதர்கள் இடையர்கள் தாமோ? (எ – று.)

     சோமன், இந்து என்ற வடமொழிகளும், மதி என்ற தென்மொழியும்
சந்திரனுக்கேயன்றிக் குபேரனுக்கும் பரியாயநாமமாக வழங்குதல்பற்றிச் சந்திரன்
குலத்தோரை ‘குபேரன்குலத்தோர்’ என்றார்.  சந்திரனை குபேரன் என்ற
சொல்லாற்குறித்தது, லக்ஷிதலக்ஷணையென்க.  (குபேரன்-சோமன், இந்து, மதி,
சோமன்.  இந்து, மதி=சந்திரன்.) ஸோமனென்பது – குபேரனுக்கும் வழங்கும்.
ஜ்யோதிஷசாஸ்திரத்தில் திதி யோகினியைக் குறிக்கின்ற
“சதமகேந்துஹுதாசநரக்ஷஸாம்”என்ற சுலோகத்தில் ‘இந்து’ என்றது
குபேரனைக்குறித்தது.  கீழ்க்காண்டவதகநச்சருக்கத்திலும், மேல் நிரைமீட்சிச்
சருக்கத்திலும் ‘மதி’ என்பது குபேரனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வகைவழக்குப்பற்றி, பிற்காலத்து நிகண்டில் “கலையினனுடுவின்வேந்தன்
கலாநிதியொடு குபேரன்” எனச் சந்திரன் பெயர்களிற் குபேரனென்பதைச்
சேர்த்தும்,
 “புருடவா கனனே சோமன் புட்பக விமானமுள்ளோன்” எனக்
குபேரன் பெயர்களிற்சோமனென்பதைச் சேர்த்தும் கூறினர்.
‘குபேரன்’ என்ற வடசொல் குற்சிதமான உடம்பை யுடையவனென்று
காரணப்பொருள்படுதலால், அப்பெயர், க்ஷயரோகத்தால் உடல் குன்றுபவனான
சந்திரனுக்கும் காரணவகையால் ஏற்குமென்பதையுமுணர்க.

     பாவகன் – பரிசுத்தமாகச் செய்பவன்.  அம்புராசி – நீரின் தொகுதி.
பூர்ணமென்ற பொருள்குறிக்கும் பூரமென்ற வடசொல், ‘அம்’ கெட்டு ‘பூர்’ என
நின்றது; நகரம் = நகர் என்பதுபோல.  ஸுரன், பாவகன், பாஹூஸாரம்,
அம்புராசி – வடசொற்கள்.  முச்சுடர்களிற் சூரியன் ஆயிரங்கிரணங்களையும்,
சந்திரன் பதினாறுகலைகளையும், அக்கினி ஏழுஜ்வாலைகளையும்
உடையராதலின், அச்சிறப்புமுறைபற்றி, சூரிய சந்திர அக்கினியரென்ற முறைபட
நிறுத்தினான்; கீழ் “பரிதியு மதியும் வன்னியும்” என்றவிடத்தும் இம்முறைமை
காண்க.  பாவகப்பேரன்-“சில விகாரமா முயர்திணை.”

    ‘பேரன்குலத்தோரிருந்தீர்கண் முடிமன்னர் பெயர்பெற்றபேர்’ என்ற
பாடத்துக்கு, முச்சுடர்களின் குலத்துமுடிமன்னவராய்ப் பெயர்
பெற்றநீங்களெல்லாம் இருந்தீர்களே என்று எல்லாவரசர்களையும்
முன்னிலைப்படுத்தி யுரைத்ததாகக்கொள்க.  ‘இருந்தீர்கள் முடிமன்னர்
பெயர்பெற்றபேர்’ என்றது, கிருஷ்ணன் முடிபெறாதவனென்னுங்குறிப்பை
உட்கொண்டது; அதுபற்றிய வரலாறு:- சந்திரகுலத்தில் நகுஷனது குமாரனான
யயாதி சுக்கிரசாபத்தாற் கிழத்தனமடைந்து தனது மூத்தகுமாரனான யதுவையும்
அடுத்த குமாரர்களான துர்வசு துர்க்கியு அநு என்பவர்களையும் தனித்தனி
‘என் இளமையைக் கொடுத்து என் முதுமையைக் கைக்கொள்’ என்று வேண்டி,
அவர்கள் அதற்கு உடன்படா தொழிந்தபின்பு, கடைசிக்குமாரனான பூருவை
வேண்ட, அவன் அதற்கு இணங்கி மூப்பைப்பெற்றுக்கொண்டு யௌவனத்தைக்
கொடுத்ததனால், அரசன் மகிழ்ந்து தன் கருத்துக்கு இசையாத யது முதலிய
மூத்த மக்கள் நால்வர்க்கும் முடிசூடிஅரசாளுஞ் சிறப்பு இல்லையாகச் செய்து
சிற்றரசராக்கி இளையமகனான பூருவைச் சகல பூமண்டலத்துக்கும் அதிபதியாக
நிறுத்தி முடிசூட்டிப் பட்டாபிஷேகஞ்செய்து வைத்திட்டான்;  அக்குமாரர்களுள்
மூத்தவனாய்த் தனக்குரிய அரசாட்சியைத் தந்தையின் சாபத்தாலிழந்த யதுவின்
குலத்திற் பிறந்தவன் கிருஷ்ணன்.  ஆகவே, முடிதரித்து அரசாளுஞ் சிறப்புக்
கண்ணன் குலத்தார்க்கு இல்லையென்க.  இந்த இழிவைக் கருதித்
துரியோதனன் கண்ணனை நோக்கி “சலத்தினால் வினையியற்றுவார் முடிதரித்த
காவலரொ டொப்பரோ” என இகழ்வதுங் காண்க.

    மிச்சமென்பதை, வீரம்வாகுசாரம் என்றவற்றோடுங் கூட்டுக வீரம்,
புஜபலம், செல்வம் முதலிய எவற்றிலும் கண்ணன் விஞ்சினவனல்ல னென்பது,
மூன்றாமடியின் உட்கோள்.  முதுவர், பொதுவர் – முதுவோர்  பொதுவோர்
எனச் சிறுபான்மை ரகர வீற்றயல் அகரம் ஓகாரமாயிற்று.  முதுவர் – முதுமை
யென்ற பண்பினடியாப் பிறந்தபெயர்.  காடும் காடுசார்ந்த இடமுமாகிய
முல்லைநிலம், நாடும் நாடுசார்ந்த இடமுமாகிய மருதநிலத்துக்கும், மலையும்
மலைசார்ந்த இடமுமாகிய குறிஞ்சிநிலத்துக்கும் இடையிலுள்ளதனால்
அந்நடுநிலமான முல்லைநிலத்தில் வாழ்கிற சாதியார்க்கு இடையரென்றும்
பொதுவரென்றும் பெயர்களாயின; இடை, பொது, நடு என்பவை – ஒரு
பொருளன.  சுவாயம்புவ மனுவின் குலத்தார் முதலானவர்களை ‘முதலோர்’
என்று குறித்தான்.  பெயர் – புகழ்;  கீர்த்தியினால் எங்கும் பிரசித்தமாகும்
பேர்.  இச்செய்யுளில் ‘சூரன் குலத்தோர் குபேரன்குலத்தோர்,’ ‘வீரங்கொலோ
வாகுசாரங்கொலோ’ ‘முதுவோர்கள்பொதுவோர்கொலோ’ என்ற இடங்களில்
பிராசமென்னுஞ் சொல்லணி காண்க. 

பராசர முனிவன் மதலை ஆம்படியே பகர்ந்தனை,                                                    பழுது இலா மாற்றம்;
இராச மண்டலத்தின் மரபினால், வலியால், ஏற்றமும்
தோற்றமும் உடையோன்,
சுராசுரர் வியக்கும், கஞ்சனை மலைவான், சூரன் மா மகன்
வயிற்று உதித்தான்;
தராதலமிசையே பிறந்து, இவன் கற்றது, எத்தனை
இந்திரசாலம்!

பராசரமுனிவன் மதலை – பராசரமுனிவனது குமாரனே!-(நீ),
ஆம் படியே – தகுதியானவிதமாகவே, பழுதுஇலா மாற்றம்-குற்றமற்ற
வார்த்தையை, பகர்ந்தனை-சொன்னாய்; இராசமண்டலத்தில் – அரசர்களுடைய
கூட்டத்தில், மரபினால் வலியால் ஏற்றம்உம் தோற்றம்உம் உடையோன் –
குலத்தினாலும் வலிமையினாலும் மேன்மையையும் கீர்த்தியையு முடையவன்,
சுர அரசர் வியக்கும் கஞ்சனை மலைவான் சூரன் மா மகன் வயிறு உதித்தான்
– தேவர்களும் அசுரர்களும் (ஒருநிகராக) அதிசயித்துப் பேசப்பெற்றவனான
கம்சராசனைக் கொல்லும் பொருட்டுச் சூரனென்பவனது மூத்தமகனான
வசுதேவனது வயிற்றிற் பிறந்தவனாகிய கிருஷ்ணனேயாம்;  இவன்-,
தராதலம்மிசை பிறந்து பூமியிலே பிறந்து, கற்றது – தெரிந்து செய்தது, எத்தனை
இந்திர சாலம் – எவ்வளவு பெருமாயையுண்டு! (எ – று.)-அம்மாயையின்
வகைகளை, அடுத்தகவி முதலாகக் காண்க.

    ‘பராசரமுனிவன் மதலை’ என்றது – அண்மைவிளி;  ஆதலின்’
இயல்பாய் நின்றது.  ‘ஆம்படியே பழுதிலாமாற்றம் பகர்ந்தனை’ என்றது,
‘கல்லைக்கடிக்க நன்றாய்ச்சமைத்தாய்’ என்றாற்போன்ற பிறகுறிப்புவகையால், நீ
சொன்ன வார்த்தை சிறிதுந்தகுதியுடைதன்றென்று இகழ்ந்தவாறாம், இனி,
முதலடிக்கு – நீ பராசர முனிவனது மகனானதற்கு ஏற்பவே இங்ஙனங்
கூறினாய் என்று பதவுரை கூறி, நீ ஓடம் விடும் வலைச்சியினிடமாய்ப்
பராசரமுனிவனுக்கு மகனாய்ப் பிறந்ததற்கு உரிய அறிவுகொண்டே
இப்படிப்பட்ட வார்த்தையைப் பெரிய ராஜசபையிலே சொன்னாய் என்று
சிசுபாலன் வியாசமகரிஷியைப் பார்த்துக் கோபித்துப் பரிகாசம் பண்ணி
நிந்தித்தனனென்று கொள்ளுதலுமொன்று; இது, கருத்துடையடைகொளியணி.
பராசரமுனிவன் ஒருநாள் யமுனாநதி கடத்தற் பொருட்டுத் தோணியேறிச்
செல்லுகிறபோது, அத்தோணியைச் செலுத்துகின்றவளும் செம்படவன் வளர்த்த
மகளுமான மத்ஸ்யகந்தி யென்னும் அழகிய கன்னிகையினிடம் காதல்கொண்டு,
தனது மந்திரபலத்தால் அவளது உடம்பின் புலால்நாற்றத்தைப் போக்கி
யோஜனகந்தியென்று பெயர் பெறுமாறு அவட்கு நறுமணத்தை யுண்டாக்கி
அந்நதியினிடையே ஒருத்வீபத்தில் அவளை மணந்து அவளிடமாக
ஒருமகனைப்பெற அக்குமாரனே கிருஷ்ணத்வைபாயந னென்னும்
வியாசமுனிவன் என வரலாறு உணர்க.  இழிந்த ஜாதிப் பெண்ணினிடம்
பிறந்ததற்கு உரிய அறிவிற்கு ஏற்ப இவ்வாறு தகுதியல்லாத வார்த்தையைச்
சொன்னாய் என்றான்.  இவ்வகையாகத் துரியோதனன் விதுரனை
இகழ்வதனோடு இதனை ஒப்பிடுக.  பழுதில் ஆம் மாற்றம் என்று எடுத்து,
குற்றத்தின்பாற்பட்ட வார்த்தை யெனினும் பொருந்தும்.

     ஏற்றம் – மற்றையோரினும் மேம்படுதல்.  தோற்றம்- நெடுந்தூரத்தி
லுள்ளாராலும் அறியப்படும்படி சிறந்துதோன்றுதல். சிசுபாலனும் கம்சன்
போலவே அசுராம்சமுடைய னாதலாலும், இவ்விருவரும் துருவாசமுனிவனது
சாபத்தைப்பெற்ற ஜயவிஜயர்களின் பிறப்பு ஆதலாலும், தனக்கு இனமான
கம்சனைச் சிசுபாலன் ‘சுராசுரர்வியக்குங் கஞ்சன்’ என்று கொண்டாடினன்.
மலைவான் – எச்சம்.  சூரன் – சந்திரவம்சத்தில் யதுகுலத்தில்
தேவகர்ப்பனென்பவனது மகன்: அவனுக்கு மாரிஷை என்ற மனைவியினிடம்
வசுதேவன் முதலிய பத்துப் பிள்ளைகளும், பிருதைமுதலிய ஐந்துபெண்களும்
பிறந்தார்கள்; இவர்களில் வசுதேவன் மூத்தவனாதலால் ‘சூரன்மாமகன்’
எனப்பட்டான். இச்சூரனது மரபிற்பிறந்தமைபற்றிக் கண்ணனுக்குச் சௌரியென
ஒருதிருநாமம் வழங்கும். ‘சூரன்மாமகன்வயிற்றுதித்தான்’ என்பதை, கீழ் 31-ஆஞ்
செய்யுளில் “மாரதப்பேரானோன் வயிற்றிலவதரித்தான்” என்றாற்போலக் கொள்க.
‘தராதலமிசையே பிறந்து இவன்கற்றது’ என்றது – இவன் பிறந்ததுமுதலாகவே
எவரும் கற்பிப்பாரின்றித் தானே பெருமாயைகளை  அறிந்தனனென்றபடி.
இந்த்ரஜாலம் – வடமொழித்தொடர்:  சிறந்த பெருமாயை.  உதித்தான் –
பெயர். தராதலம் – பூமியின் இடம்: வடமொழித்தொடர். சுர+அசுரர்=சுராசுரர்:
தீர்க்கசந்திபெற்றவடமொழித்தொடர்.  சிறந்தமகாபுருஷனைக் கொல்லப்பிறந்த
மாயவனென்பது பின்னிரண்டடியிற்கூறிய இகழ்ச்சி.  ‘சுராதிபர் மறையால்
வேலைமண்புரப்பான் சூரர் மாமகன் வயிற்றுதித்தோன், சராசரம் வியக்கப்
பிறந்தவன் கற்றது’ என்றும் பாடம் காணப்படுகின்றது.

     இதுமுதல் ஐந்துகவிகள் – இச்சருக்கத்தின் பதினெட்டாங் கவிபோன்ற
எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தங்கள்.  

சொற்றவா நன்று, சுகன் திருத் தாதை! சூதிகைத்
தோன்றிய பொழுதே,
பெற்ற தாய்தானும் பிதாவும் முன் வணங்க, பேசலா
உரை எலாம் பேசி,
கற்ற மாயையினால் கன்னி அங்கு இருப்ப, கார் இருள்,
காளிந்தி நீந்தி,
அற்றை நாள் அண்டர் ஆனவர்க்கு எல்லாம் அரசனுக்கு
அரு மகவு ஆனான்.

சுகன் திரு தாதை – சுகமுனிவனது சிறந்த தந்தையே!- சொற்ற
ஆ நன்று – (நீ) சொன்னவிதம் நன்றாகயிருந்தது!  (நீ சொன்ன கிருஷ்ணன்),
சூதிகை தோன்றியபொழுதே – பிரஸவகிருகத்திற் பிறந்தபொழுதே,
பெற்றதாய்தான்உம் பிதாஉம் முன்வணங்க – (தன்னைப்) பெற்ற தாயான
தேவகியும் தந்தையான வசுதேவனும் எதிரில் தன்னை வணங்கி நிற்க,
(அவ்வணக்கத்தையேற்றுக்கொண்டு), பேசலா உரைஎலாம் பேசி –
சொல்லலாகாத பேச்சுக்களையெல்லாம் பேசி,- கற்ற மாயையினால்-(தான்
பிறத்தற்குமுன்னமே) தெரிந்துசெய்த மாயையினால், கன்னி அங்கு இருப்ப –
பிறந்த பெண்குழந்தை அவ்விடத்திலே [திருவாய்ப்பாடியில் நந்தகோப
கிருகத்திலே] இருக்க, அற்றை நாள் – அன்றைத்தினமே [அப்பொழுதே], கார்
இருள் – கரிய இருட்பொழுதில், காளிந்தி நீந்தி – யமுனாநதியைக் கடந்து, அண்டர் ஆனவர்க்கு எல்லாம் அரசனுக்கு அரு மகவு ஆனான் –
இடையர்கட்கெல்லாம் தலைவனான நந்தகோபனுக்கு அருமைப்
புதல்வனாய்விட்டான்;  (எ – று.)

    வடமதுரையில் தேவகனுடைய குமாரியான தேவகியை வசுதேவன்
விவாகஞ்செய்து கொண்டபோது அவளுக்கு உடன் பிறந்த முறையாகியற
கம்சன் கலியாணரதத்தில் அந்த மணமக்களையேற்றித் தான் அந்த ரதத்தை
நடத்தினான்; அப்போது ஆகாயவாணி கம்சனை விளித்து ‘அடா மூடா! நீ
எவளை அவள் புருஷனோடு தேரிலேற்றி வெகுபிரியமாய் நடத்துகின்றாயோ,
அவளுடைய எட்டாம்பிள்ளை உன்னுயிரைப்போக்கும்’ என்று சொல்லிற்று.
அது கேட்டவுடனே கம்சன் கத்தியைக் கையிலேந்தி உடன்பிறந்தாளைத்
துணிக்கத் துணிந்தான்.  அச்சமயத்தில் வசுதேவன் ‘நீ இவளைக்
கொல்லவேண்டாம்; இவள்வயிற்றிற் பிறக்கும் பிள்ளைகளையெல்லாம் உனக்குத்
தந்துவிடுவேன்; நீ அவர்களை இஷ்டப்படி செய்துகொள்’ என்றுசொல்ல,
அதற்குக் கம்சன் உடன்பட்டுத் தேவகியைக் கொல்லாதுவிட்டான்.
காலநேமியென்னும் அசுரனது பிறப்பான அந்தக் கம்சன் முதலிய கொடிய
அரசர்கள் பலரும், துஷ்டர்களான அசுரர்கள் பலரும் பூமியில் ஒருங்கு
மிக்கதனாலாகிய அதிகபாரத்தைப் பொறுக்கமாட்டாத பூமிதேவியின்
வேண்டுகோளுக்கு இரங்கிய பிரமன் முதலிய தேவர்களின் பிரார்த்தனையினால்
திருமால் தான் தேவகியின் எட்டாவது கருப்பத்தில் அவதரித்துக் கம்சனையும்
மற்றைக்கொடியோரையும் அழித்துப் பூமிபாரத்தை நிவிருத்தி செய்வதாக
வாக்குதத்தஞ் செய்தனன்.  அச்செய்தியை நாரதமுனிவன் வந்து சொல்ல
அறிந்த கம்சன் மிக்ககோபங்கொண்டு தேவகியையும் வசுதேவனையும்
தளையிட்டுச் சிறைவைத்திட்டான்.  பின்பு திருமால் சகல லோகங்களையும்
மோகிப்பிக்கின்ற யோகநித்திரையென்கிற தனது மாயையை நோக்கி, ‘நீ
பாதாளத்திலிருக்கிற இரணியகசிபுவின் குமாரர் அறுவரையும் முறையே
தேவகியின் கருப்பத்திற் சேர்;  அவ்வறுவரும் கம்சனாற்
சங்கரிக்கப்பட்டவுடனே, எனது அம்சமாயிருக்கிற ஆதிசேஷன் தேவகியின்
ஏழாவது கருப்பத்திற் சனிப்பான்; வசுதேவனுடைய பத்தினி ரோகிணி
யென்பவளொருத்தி நந்தகோபனுடைய கோகுலத்திலே யிருக்கின்றாளன்றோ;
அவளுடைய வயிற்றிலிருக்கும் வாயுரூபமான ஏழுமாதத்துக் கருப்பத்தைக்
கலைத்துவிட்டு, தேவகியின் வயிற்றிலிருக்கும் சேஷாம்சமான ஏழுமாதத்துக்
கருப்பத்தைக் கொண்டுபோய் ரோகிணி கர்ப்பத்திற் சேர்த்து விடு; பின்பு நீயும்
நந்தகோபனுடைய பத்தினியான யசோதையின் வயிற்றில் ஒரு
பெண்குழந்தையாகப் பிறப்பாய்’ என்று கட்டளையிட்டருளினான்.  அங்ஙனமே
அந்த மாயாதேவி செய்த சூழ்ச்சியினாற் பிறந்த ஆறு குழந்தைகளையும்
வசுதேவன் முன்பு தான் கம்சனுக்கு வாக்குதத்தஞ் செய்தபடி அவனிடம்
கொடுக்க, அவன் அவற்றைக் கொன்றுவிட்டான்.  அப்பால் ஏழாவது கருப்பம்
கலைந்துவிட்டபின்பு விஷ்ணு சர்வலோகசம்ரக்ஷணார்த்தமாய்த் தேவகியின்
கருப்பத்தி லெழுந் தருளி மழைக்காலத்தில் ஆவணி மாதத்தில் கிருஷ்ணபக்ஷத்து
அஷ்டமியின் இரவிலே கிருஷ்ணனாய்த் திருவவதரித்தனன். யோகநித்திரையும்,
ஸ்வாமி நியமநப்படி யசோதையின் கருப்பத்திற் பிரவேசித்துக் கிருஷ்ணனவதரித்த
தினத்திலேயே பிறந்தாள்.  நான்கு திருத்தோள்களுடன் அவதரித்த ஸ்ரீ
கிருஷ்ணனை வசுவேனும் தேவகியும் சேவித்துப் பலவாறு துதித்து, கம்சனிடம்
தமக்குள்ள அச்சத்தால் ‘திருவாழி திருச்சங்கு முதலான
திவ்யலக்ஷணங்களோடும் நான்கு கைகளோடுங்கூடின இந்தத் திவ்வியரூபத்தை
மறைத்துக்கொள்ளவேணும்’ என்று பிரார்த்திக்க, கண்ணன் அந்த ஸ்வரூபத்தை
விட்டுச்சாதாரண பாலகரூபனாகி ‘என்னை எடுத்துக்கொண்டு போய்க்
கோகுலத்ிலுள்ள நந்தகோப கிருகத்தில் யசோதையின் படுக்கையில் விட்டு
அங்கு உள்ள பெண்குழந்தையை எடுத்துக்கொண்டு வந்து கம்சனிடத்திற்
கொடுங்கள்’ என்று உபாயஞ்சொல்ல, அங்ஙனமே வசுதேவன் உடனே அந்தக்
கிருஷ்ணனாகிய குழந்தையை யெடுத்துக்கொண்டு வெளியில் வந்தான்.
காவலாள்களெல்லாரும் யோகநித்திரையினால் மதிமயங்கிச் சும்மா
இருந்தார்கள்.  அப்படியே அந்த மதுராபுரியின் வாசற்காப்பவர்களும்
மயங்கியிருந்தார்கள்.  வசுதேவர் குழந்தையை யெடுத்துக் கொண்டு
போகையிலுண்டாயிருந்த மழையைத் திருவனந்தாழ்வான் தன் திருமுடிகளால்
தடுத்துக்கொண்டே கூட எழுந்தருளினான்.  அப்பொழுது, சுழித்து ஓடாநின்ற
ஆழமான தண்ணீருள்ள யமுனாநதியும் சுவாமியை எழுந்தருளப்பண்ணிக்
கொண்டுபோகிற வசுதேவருக்கு முழங்காலளவாயிருந்தது.  அக்காலத்தில்
நந்தகோபனுடைய பத்தினியானயசோதையும் யோகநித்திரையின் அம்சமான
ஒரு கன்னிகையைப் பெற்றும் அவ்யோகநித்திரையினால் மயக்கமுற்றுப்
பிறந்ததின்னதென் றறியாமலிருந்தாள்.  அங்கிருந்தவர்களும் அப்படியே
மயங்கியிருந்தார்கள்.  ஆனதுபற்றி, வசுதேவர் தடையின்றி அங்குச்சென்று
இப்பிள்ளைக்குழந்தையை யசோதையின் படுக்கையில்விட்டு
அப்பெண்குழந்தையை எடுத்துக்கொண்டு தம்மிடம் வந்துசேர்ந்தார்.  பின்பு
யசோதை மாயா மோகந்தெளிந்து கிருஷ்ணனாகிய குழந்தையைப் பார்த்து,
தனக்கு மகன் பிறந்தா னென்று மகிழ்ந்தாள்.  மதுரையில் வசுதேவர்
அப்பெண் குழந்தையைத் தேவகியின் படுக்கையில் விட்டவுடனே அது கத்த,
அவ்வொலிகேட்டுக் காவலாட்களெல்லாம் ஓடிப்போய்த் தேவகிக்குக் குழந்தை
பிறந்ததென்று கம்சனுக்கு அறிவித்தார்கள்.  உடனே கம்சனும் ஓடிவந்து
அக்குழந்தையைத் தூக்கியெறிந்து கொல்லமுயல்கையில், அது எழும்பி
வானத்தில் நின்று ‘உன்னைக்கொல்லப்பிறந்தவன் ஒளித்து வளர்கிறான்’ என்று
சொல்லிவிட்டுப் போய்விட்டது.  பின்பு கிருஷ்ணன் நந்தகோபன் மகனாகவே
திருவாய்ப்பாடியில் யசோதை வளர்க்க வளரலானான் என்பது, இங்கு அறிய
வேண்டிய கதை.

     ஆ-ஆறுஎன்பதன் விகாரம்.  ‘நன்று’ என்றது, பரிகாசமாகச் சொன்னது;
இகழ்ச்சிக் குறிப்பாகிய எதிர்மறையிலக்கணை.  சுகன் திருத்தாதை –
அண்மைவிளி.  சுகன் திருத்தாதையாகிய நீ சொன்னது நன்றுஎன
முன்னிலைக்குப் படர்க்கைவந்த இடவழுவமைதியாகவுங் கொள்ளலாம்.
‘சுகன்திருத்தாதை’ என்றது, நீ வைராக்கியமுடைய முற்றத்துறந்த
முனிவனல்லையென்ற இகழ்ச்சிக்குறிப்பு:  ஒரு பிள்ளையை உற்பத்திசெய்தவ
னென்றவாறு: அன்றியும், சுகமுனிவன் பிறந்தபொழுதே பற்றுக்களனைத்தும்
ஒழிந்து பரம்பொருளை நோக்கித் தனியே சென்றதைக்கண்டு, அவனது
தந்தையான வியாசன், மகனது பிரிவைப் பொறுக்கமாட்டாமற் பின்தொடர்ந்து
சென்று அன்போடு ‘மைந்தா!’ என்று அழைத்தவளவில், அக்குமாரன் ஒன்றும்
பேசாதே செல்ல, வனத்திலுள்ள மரம் முதலியனவெல்லாம் ‘ஏன்?’ என்று
விடைதந்தன என்ற வரலாறும் உணர்க. ஆகவே, நீ புத்திரவாற்சலியத்தால்
அவன்பின்சென்று அவனோடு பேசத் தொடங்கியதுபோல, பௌத்திரர்களாகிய
பாண்டவர்கள் பக்கல் அன்பினால் இங்குவந்து அவர்கட்கே அனுகூலனான
கிருஷ்ணனைக் கொண்டாடினைபோலும் என்ற குறிப்புந்தோன்றும்.  “நீடிய
நதியினாடு நேரிழை யரம்பை மாதர், வீடறிசுகனைக் கண்டு மென்றுகில்
வனைந்திலாராய், நாடிநான்மறைகள் சொற்ற நற்றவவியாதனைக்கண்டு ஓடினார்
கரைசென் றுற்றார் உடுத்தனர் நாணித்தானை,” “வரம்பிலாமறையை
நான்காய்வகுத்தவன் வனப்பு வாய்ந்த, அரம்பையர்தம்மை நோக்கி அரைக்கொரு
துகிலிலாதான், நிரம்பிய அறிவன் சென்று நீங்கிய பின்னர் யாழின் நரம்பை
வெல்சொல்லீர் சொன்மின் நற்றுகிலுடுத்த தென்றான்”. “ஏடலர் கூந்தன்
மாதரிசைத்தவம் முனியை நோக்கி, ஆடவரிவர்கள் மற்றையரிவைய
ரிவர்களென்ன, நாடுதல் நினக்குண்டந்த நற்றவன்தனக்கு அஃதில்லை, பீடுசால்
முனிவ என்றே பேசின ரகன்று போனார்,” “இவ்வண்ண மறிவுதானே யிலங்கிய
சுகன்” என்ற வரலாற்றை யுட்கொண்டு ‘சுகன் திருத்தாதை’ எனக்குறிப்பாய்
இகழ்ந்தானுமாம்.

     ஸூதிகா, மாயா கந்யா, காளிந்தீ என்ற வடசொற்கள் விகாரப்பட்டன.
சூதிகை யென்ற பிரசவத்தின் பெயர்-தானியாகுபெயராய், பிரசவிக்கிற
இடத்தைக் குறித்தது.  காளிந்தி – களிந்தமென்னும் மலையினின்று தோன்றுதல்
பற்றிய பெயர்;  தத்திதாந்த நாமம்.  இருள் – இருட்பொழுதுக்கு ஆகுபெயர்.
முன் – இடமுன்.  முன்வணங்க – விரைந்து வணங்க எனினுமாம்.
‘பேசலாவுரை’ என்றது – தனக்குப்பிரதியாக வேறொருகுழந்தையைக் களவாடி
எடுத்து வந்து மாறுபாடாகக் கம்சனிடம் கொல்லக் கொடுக்கும்படி போதித்த
வஞ்சக வார்த்தை யென்றபடி;  பிறர்க்குச் சொல்லலாகாத இரகசிய
வார்த்தைகளென்றும், குழந்தைப் பருவத்தில் மற்றையோர் பேசமாட்டாத
பேச்சுக்களென்றும் கருத்துப்படும்.  ‘அண்டரானவர்க்கு’ என்றதில், ‘ஆனவர்’
என்பது – பகுதிப்பொருள்விகுதி.  தெய்வமெனப்படுகிற தாய்தந்தையரைத் தான்
வணங்குவதற்கு மாறாக அவர்கள் தன்னை வணங்கும்படி செய்து பார்த்த
விபரீத வொழுக்க முடையானென்றும், பிறந்தவுடனே தந்தைக்கு வஞ்சகங்
கற்பித்த மகாவஞ்சக னென்றும், ஒருவன் மகனாய்ப் பிறந்து மற்றொருவனுக்கு மகனென்று வளர்ந்த குலக்கேடனென்றும் இகழ்ந்தான்.   

ஈன்ற தாய் வடிவம் கொண்டு, உளம் உருகி, இணை முலைத்
தடத்து அணைத்து,அமுதம்
போன்ற பால் கொடுப்ப, பொழி முலைப் பாலோ, பூதனை
உயிர்கொலோ, நுகர்ந்தான்?
சான்ற பேர் உரலால் உறிதொறும் எட்டாத் தயிருடன் நறு
நெய் பால் அருந்தி,
ஆன்ற தாய் கண்டு வடத்தினின் பிணிப்ப, அணி உரலுடன்
இருந்து அழுதான்!

 ஈன்ற தாய் வடிவம் கொண்டு – (பூதனையென்ற அசுரஸ்திரீ)
குழந்தையைப்பெற்று வளர்க்கின்ற தாயினுருவமாகி, உளம் உருகி, –
(தன்குழந்தையின் பக்கல் தாய் மன முருகுகின்ற வாறு போலத் தான்)
மனமுருகுகிறதாகப் பாவனை காட்டி, இணைமுலை தடத்து அணைத்து-தனது
இரண்டு கொங்கைகளினிடத்தும் (கிருஷ்ணனாகிய குழந்தையை எடுத்து)
அணைத்துக்கொண்டு, அமுதம்போன்ற பால்கொடுப்ப – தேவாமிருதத்துக்குச்
சமமான [மிகஇனிய] தன் முலைப்பாலை ஊட்ட, பொழி முலைப்பாலோ
பூதனை உயிர்கொலோ நுகர்ந்தான் – (இந்தக்கிருஷ்ணன் அவளுடைய)
கொங்கைசுரந்த பாலையோ அன்றி அவளுடைய உயிரையோ குடித்திட்டான்,
(மற்றும் இவன்), சான்றபேர் உரலால்-மிக்கபெரிய உரலினுதவியைக்கொண்டு,
உறிதொறும் எட்டாதயிருடன் நறு நெய் பால் அருந்தி – (ஆய்ச்சியர்)
உறிகள்தோறும் எட்டாதபடி உயரவைத்துள்ள தயிரையும் நறுமணம் வீசுகிற
நெய்யையும் பாலையும் (எட்டு எடுத்து) உண்டு, ஆன்ற தாய் கண்டு
வடத்தினில் பிணிப்ப – சிறந்ததாயான யசோதை (அச்செய்தியை) நோக்கி
கயிற்றினாலே (தன்னை உரலோடு) கட்டிவைக்க, அணிஉரலுடன் இருந்து
அழுதான் – அழகிய அந்த உரலோடு இருந்து புலம்பினான்; (எ – று.)

    தன்னைக்கொல்லப் பிறந்தவன் ஒளித்துவளர்கிறானென்பதை யுணர்ந்த
கம்சன் மிக்க அச்சங்கொண்டவனாய்ப் பிரலம்பன், கேசி, தேனுகன், பூதனை,
அரிஷ்டன் முதலான அசுரர்களை யழைத்து, ‘உன்னைக்கொல்பவன்
பிறந்திருக்கிறான்’ என்று தேவகிவயிற்றிற் பிறந்த பெண் சொல்லிற்றாதலால்
இவ்வுலகத்தில் விசேஷமான பலம் சாமர்த்தியம் அழகு முதலியவை
எந்தெந்தக் குழந்தையினிடத்திற் காணப்படுமோ அந்தந்தச் சிறந்த
ஆண்குழந்தைகளைத் தேடி எப்படியாவது கொன்றுவிட வேண்டுமென்று
கட்டளையிட்டான்; உடனே அவர்களெல்லோரும் அங்ஙனமே
முயல்வாராயினர். அவர்களிலொருத்தியான பூதனையென்னும்
ராக்ஷசிமாயையால் நல்ல பெண்ணுருவத்தோடு இரவில் அங்கங்கே சென்று
சிறுகுழந்தைகளுக்குத்தாய் முலைகொடுப்பதுபோலத் தான் தனது நஞ்சுதீற்றிய
முலையைக்கொடுத்துக் குழந்தைகைளைக்கொன்றுகொண்டே கோகுலத்திலும்
வந்து தூங்கிக்கொண்டிருந்த கண்ணனாகிய யசோதையின் குழந்தையையுமெடுத்து
முலைகொடுத்துக் கொல்லமுயல, பகவானான குழந்தை அப்பேய் மகளின்
முலைகளைக் கைகளாலிறுகப்பிடித்து அவளுயிரோடு உறிஞ்சி அவளைப்
பேரிரைச்சலிட்டுக் கதறி விழும்படி செய்தது என்பது, முதலிரண்டடியிற் குறித்த
கதை. ‘பொழிமுலைப்பாலோ பூதனையுயிர்கொலோ நுகர்ந்தான்’ என்றது-அவளது
முலைப்பாலை மாத்திரம் உறிஞ்சினானில்லை, அவளுயிரையு முட்பட உறிஞ்சி
யொழித்தான் என்றபடி; அவள் முலைப்பாலை யுண்ட குழந்தைகள் உடனே
ரத்தமாம்சமெல்லாம் உலரப்பெற்று மரணமடைய, இவன் அவளை நரம்புகளின்
கட்டெல்லாம் நீங்கித்தன் இயல்பான பெருங்குரல் கொண்டு கதறிப் பயங்கரமான
ரூபத்தோடு தரையில் வீழ்ந்து இறக்கும்படி செய்தான்.  ‘பாலோ’ என்ற ஓகாரம் –
ஒழியிசை.  ‘உயிர்கொலோ’ என்ற ஓகாரம் – தெரிநிலை.  கொல் – அசை
பெற்றதாய் வடிவுகொண்டு உளமுருகி மார்போடணைத்து மிகஇனிய
பால்கொடுத்தவளை அப்பாலைமாத்திரம் உண்ணாது உயிரையும் உண்டு
ஒழித்தது தகுதியோ? எனச் சிசுபாலன் கண்ணனை இகழ்ந்தவாறாம்;
இரக்கமின்றி இளமையிலேயே பெண்கொலைசெய்தவ னென்க.  கொன்றவனை
‘உயிரையுண்டான்’ என்றல், மரபு.

    “பொத்தவுரலைக் கவிழ்த்ததன்மேலேறித், தித்தித்த பாலுந்தடாவினில்
வெண்ணெயும், மெத்தத் திருவயிறார விழுங்கிய, அத்தன்,” “தாளுரன்மேல்
வைத்துவெண்ணெய், தாங்குறி யெட்டக்கரத்தார்,” “தந்தமுறியி லவர்வைத்த
தயிர்பால் வெண்ணெ யெட்டாமற், குந்தியுரலின் மிசையேறி” என்றபடி
கண்ணன் இளம்பருவத்தில் தயிர் பால் வெண்ணெய் முதலியவற்றைக்
களவுசெய்து உண்னுதலையறிந்த ஆய்ச்சியர் ‘அவற்றை இவனுக்கு எட்டாதபடி
வைக்கக்கடவோம்’ என்று உறிகளில் மேலே உயரச்சேமித்து வைக்க, கண்ணன்
உரலையுருட்டிக்கொண்டு போய் உறியின் கீழிட்டு அதன்மேலேறி நின்று
எட்டித் தயிர் முதலியவற்றை உண்டனனென்பது, மூன்றாமடியிற்
குறிக்கப்பட்டது.  எட்டா – ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம்: உடன் பாட்டு
இறந்தகாலவினையெச்சமாக் கொண்டு ‘எட்டி’ என்று பொருள்கொள்ளினுமாம்.
நறுநெய் – பண்புத்தொகை.

     கண்ணன் குழந்தையாயிருந்த காலத்தில் திருவாய்ப்பாடியில்
ஆயர்மனைகளிற் சென்று அவர்களுடைய பால் தயிர் வெண்ணெய்
முதலியவற்றைக் களவுசெய்து உண்டு துன்பப்படுத்துகின்ற பல
விளையாட்டுக்களைச் செய்தலை ஆய்ச்சியர் சொல்ல அறிந்து கோபித்த
யசோதை அக்குற்றத்துக்கு ஒரு தண்டனையாகக் கிருஷ்ணனை
வயிற்றிற்கயிற்றினாற் கட்டி உரலோடு பிணித்துவிட, அதிற் கட்டுண்டபடியே
அழுதன னென்பது, ஈற்றடியிற் குறிக்கப்பட்ட விஷயம்.  உரலினுதவிகொண்டு
எட்டி வெண்ணெய் முதலியன களவாடியவனை அவ்வுரலுடனே
கட்டிவைத்திட்டாள்.  ஆன்றதாய் – குழந்தையினிடத்து அன்பு செய்தலிற்
சிறந்த தாய்:  தன் குழந்தை செய்யுங் குற்றங்களைக் கண்டு
குணமாகக்கொண்டு மகிழு மியல்புடையாளென்க.  அப்படிப்பட்டவளும்
வெறுத்து நன்றாகத் தண்டிக்கும்படி வஞ்சனை களவு முதலிய பல பொல்லாங்குகளை இடைவிடாது செய்தவனெனச் சிசுபாலன் கண்ணனை
இகழ்ந்தவாறு.  ஆன்ற, (சால் என்பதன் மரூஉவான) ஆல்-பகுதி.
‘அணியுரலுடன்’ என்றதை மத்திமதீபமாக, முன்னின்ற ‘பிணிப்ப’
என்றதனோடும், பின்னிற்கும் ‘இருந்து’ என்பதனோடுங் கூட்டுக

பாடினான் மறுகு, பெரு நகை விளைப்ப; பாவையர்
மனைதொறும், வெண்ணெய்க்கு
ஆடினான்; அவர்கள் முகம்தொறும் எச்சில் ஆக்கினான்;
கன்று முன் ஓட
ஓடினான்; ஆவின் பேர் இளங் கன்றை உயிருடன் ஒரு
தனி விளவில்
சாடினான்; அரவின் முதுகையும், புள்ளின் தாலுவோடு
அலகையும், பிளந்தான்!

பெரு நகை விளைப்ப – (காண்பவர்க்கு) மிக்க நகைப்பை
யுண்டாக்கும்படி, மறுகு பாடினான் – (கண்ணன் கோகுலத்து) வீதிகளிற்
பாட்டுப் பாடிக்கொண்டு திரிந்தான்;  பாவையர் மனைதொறும் – இளமையான
அழகிய இடைச்சாதிப்பெண்களுடைய வீடுகள்தோறும், வெண்ணெய்க்கு
ஆடினான் – (அவர்கள்) வெண்ணெய்கொடுக்கப்பெற்று அதற்காக மகிழ்ந்து
கூத்தாடியுண்டான்:  அவர்கள் முகம்தோறும் எச்சில் ஆக்கினான் – அந்தக்
கோப கன்னிகைகளுடைய முகங்கள்தோறும் எச்சில் செய்தான்: அகன்று முன்
ஓட- (அந்தக்கோபஸ்திரீகள் தன்னை தொட்டு) விலகி முன்னே ஓடிச் செல்ல,
ஓடினான்-(தான் அவர்களைப் பின்தொடர்ந்து) ஓடிச்சென்றான்;  ஆவின் பேர்
இளங்கன்றை – பசுவினது பெரிய இளங்கன்றொன்றை, உயிருடன் – உயிரோடு,
ஒரு தனி விளவில் சாடினான் – ஒப்பற்றதொரு விளாமரத்தின் மேல்
வீசியெறிந்தான்; அரவின் முதுகைஉம் – ஒரு பாம்பின் முதுகையும், புள்ளின்
தாலுவோடு அலகைஉம் – ஒரு பறவையின் வாயோடு மூக்கையும், பிளந்தான் –
பிளந்திட்டான்; (எ – று.)

    திருவாய்ப்பாடியில் ஆயரும் ஆய்ச்சியரும் கண்டுகளிக்கும்படி கண்ணன்
இளமையிற் பலவாறு வேய்ங்குழலூதி யிசைத்தல், வாயினால் இன்னிசைபாடுதல்,
கூத்தாடுதல் முதலிய வினோதங்களைச்செய்து மகிழ்ந்தன னென்பது பிரசித்தம்:
(கம்சனது சூழ்ச்சியினால் வந்த குவலயாபீடமென்னும் யானையின்
கொம்பையொடித்தற்குக் கண்ணன் நின்றாடிய கூத்து அல்லியக்கூத்தெனப்
பெயர்பெறுமென்றும், அக்கண்ணன் கம்சனாகிய அசுரனை வெல்லுதற்கு
மல்லனாய்ச் சென்று அறைகூவியெழுந்து அவன் மீது தாவி அவனைப்பிடித்து
உயிர்போக நெரித்துத் தொலைத்தபோது ஆடிய கூத்து மற்கூத்தெனப்
பெயர்பெறு மென்றும், கண்ணன் தனது பேரனான அநிருத்தனை வாணாசுரன்
சிறைவைத்தமைபற்றி அவனையெதிர்த்தற்குச் சென்றபோது அவனுடைய
நகரவீதியிற் சென்று பஞ்சலோகங்களாலும் மண்ணாலுமான குடங்கொண்டு
ஆடிய கூத்து குடக்கூத்தெனப்பெயர்பெறுமென்றும் சிலப்பதிகாரத்தாலும்
அதன் அடியார்க்குநல்லாருரையாலும் தெரிகின்றது.) பாவையர் – சித்திரப்
பிரதிமைபோ லழகிய மகளிர்.  ‘அவர்கள் முகந்தொறும் எச்சிலாக்கினான்’
என்றது – அவர்களை முத்தமிட்டதும் அதரபானஞ்செய்ததும் பற்றி: கண்ணன்
ஆய்ச்சியர் வீடுகளில் தான் வெண்ணெய் களவாடிக் கைவிரலால் தொட்டு
எச்சில்செய்து உண்கிறபோது அவ்வீட்டு இளம்பெண்கள் பார்த்துக்கொண்டே
வந்து விட்டால் அவர்கள் முகத்தைத் தனது எச்சிற்கையால் தொட்டுக் கை
வெண்ணெயைத் தடவியும், அவர்கள் முகத்தில் தன்வாய் வெண்ணெயை
யுமிழ்ந்தும், அவர்கள்தாம் வெண்ணெய் களவாடி யுண்டனரென்று கண்டவர்
கருதுமாறு செய்து சிரிக்கிற வழக்கமும் உண்டென்க.  ‘ஆக்கினான் கன்று
முன்னோட ஓடினான்’ என்ற பாடத்துக்கு, கன்றுகள் முன்னே ஓடிச்செல்ல
அவற்றைத்துரத்தி மேய்த்துக்கொண்டு பின்னே சென்றனனென்று பொருள்
காண்க; பிராயம் முதிர்ந்த இடையர்கள் பசுக்களை மேய்க்க, சிறுபிள்ளையான
கண்ணன் இடைச்சாதிப்பிள்ளைகளுடனே சேர்ந்து கன்றுகளை மேய்த்தன
னென்க.

    கம்சனாலேவப்பட்ட அசுரர்களிற் கபித்தாசுரன் விளாமரத்தின் வடிவமாய்,
கண்ணன் தன்கீழ்வரும்பொழுது மேல்விழுந்து கொல்வதாக எண்ணி வந்து
நிற்க, அதனையறிந்து கிருஷ்ணபகவான் அவ்வாறே தன்னைமுட்டிக்
கொல்லும்பொருட்டுக் கன்றின் வடிவங்கொண்டுவந்த வத்ஸாசுரனைப்
பின்னிரண்டு கால்களையும் பிடித்து எடுத்துச்சுழற்றி விளாமரத்தின் மேல்
எறிய, இருவரும் சிதைந்து தமது அசுரவடிவத்துடனே விழுந்து இறந்தன
ரென்பதும்; பூதனைக்கும் பகாசுரனுக்கும் தம்பியான அகாசுரன் கண்ணன்
கன்று மேய்த்து விளையாடும் வழியிற் பெரிய மலைப்பாம்பின் வடிவமாய்
வாய்விரித்துக்கிடக்க, இடைப்பிள்ளைகள் மலைக்குகையென்று கருதிப்
பசுக்களோடுங் கன்றுகளோடும் அதனுள்ளே புகுந்துசெல்ல, கண்ணபிரான்
தானும் ஒன்றுங்கூறாமல் உட்சென்று அங்குப் பெரிய வடிவமெடுத்து
அப்பாம்பினுடலைக் கீண்டெழுந்து அதனையழித்து ஆயர்களையும்
ஆக்களையும் அளித்தருளின னென்பதும்; பகனென்னும் அசுரன்
கொக்குவடிவங்கொண்டு கண்ணபிரானைக் கொல்வதாக நெருங்கிவர,
அப்பொழுது கண்ணன் அப்பறவையின்வாயலகுகளை இருகையாலும்
பிடித்துக்கிழித்து அதனை அழித்தன னென்பதும், பின்னிரண்டடிகளில்
அறியவேண்டிய கதைகள்.  “கன்றெனுமசுரனாற்கனியுகுத்ததும்,
வன்திறற்புள்ளின்வெவ்வாய் கிழித்ததும், சென்றிடுநீணெறிச்செழும்
பொற்குன்றையும், வென்றுயர் பாந்தளின் மிடறுகீண்டதும்” என்ற
பாகவதத்தையும் காண்க.  அரவின் முதுகைப்பிளந்ததற்குக் காளியமர்த்தன
கதையைக் கொள்ளுதல் பொருந்தாது.  கன்று-பசுமுதலியவற்றின் இளமைப்
பெயர்; “யானையுங் குதிரையுங் கழுதையும் கடமையும், ஆனோடைந்துங்
கன்றெனற்குரிய” என்பது தொல்காப்பியம்.  தாலு – வடசொல்.

    முன்னிரண்டடி – தகுதியில்லாத வழிகளால் விளையாடுகிறவ னென்றும்,
பின்னிரண்டடி – பலபிராணிகளை இம்சித்தவனென்றும் சிசுபாலன் கண்ணனை
இகழ்ந்தவாறாம். ‘பாவையர் பெருநகை விளைப்ப’ என்றதை, ‘மறுகுபாடினான்’,
‘மனைதொறும் வெண்ணெய்க்கு ஆடினான்’ என்ற இரண்டோடுங் கூட்டலாம்.
பெருநகைவிளைத்தல் – மிகநகைத்துப் பரிகாசம் பண்ணுதல்.  வெண்ணெய்க்கு
ஆடுதல் – வெண்ணெய் தரச்சொல்லிக் கூத்தாடுதலுமாம்.  

பின்னிய குஞ்சிக் கோவலர் பயந்த பேதையர்
பலரையும், களிந்த
கன்னியின் மருங்கும், ஓரையின் மருங்கும், கலை எலாம்
நாணிடக் கவர்ந்தே,
முன்னிய இன்பச் செருக்கிலே மயக்கி, மூரி வில்
காமனும் ஆனான்;
அன்னியன் அல்லன்; மற்று-இவன் பெருமை அரசரில்
ஆர் அறியாதார்?

பின்னிய குஞ்சி கோவலர் பயந்த – பின்னப்பட்ட
குடுமியையுடைய இடையர்கள்பெற்ற, பேதையர் பலரைஉம் – இளம்பெண்கள்
பலபேரையும், களிந்தகன்னியின் மருங்குஉம் – யமுனையாற்றினிடத்தும்,
ஓரையின் மருங்குஉம்-(மற்றும்அவர்கள்) விளையாடுமிடத்திலும், நாணிட
கலைஎலாம் கவர்ந்து – (அவர்கள்) வெள்கும்படி (அவர்களுடைய)
ஆடைகளை யெல்லாம் அபகரித்து, முன்னிய இன்பம் செருக்கிலே மயக்கி-
(தான்) விரும்பிய சிற்றின்பக்களிப்பிலே (அவர்களை) மயங்கச்செய்து, மூரி வில்
காமன்உம் ஆனான்- (அவர்கட்கு) வலியவில்லையுடைய மன்மதனுமாயினான்;
அன்னியன் அல்லன் – (அவர்கள்பக்கல் இவ்வாறு தூர்த்தனாயொழிதற்கு
இவன்) அயலானல்லன் [அவ்விடைச்சாதியாரிலொருவனாக அவர்களுடைய
முழுநம்பிக்கைக்கு இடமாகி வளர்ந்தவனே]; மற்று இவன் பெருமை அரசரில்
ஆர் அறியாதார் – மற்றும் இக்கிருஷ்ணனுடைய மேன்மைகளை அரசர்களில்
அறியாதவர் எவர்? [எவருமில்லை: அனைவரும் நன்கு அறிவரென்றபடி];
(எ -று.)

திருவாய்ப்பாடியிலுள்ள கோபஸ்திரீகன், கண்ணபிரானிடங்கொண்ட
வேட்கைமிகுதியால் அவன் தம்மிடம் காதல் விஞ்சுமாறு நோன்பு நோற்று,
அந்நோன்பின் முடிவில் யமுனாநதியிலே நீராட, அப்பொழுது அவர்கள்
கரையில் அவிழ்த்து வைத்து விட்டுப்போன ஆடைகளை யெல்லாம் கண்ணன்
வந்து எடுத்துக் கொண்டு அருகிலுள்ள மரத்தின்மேலேறியிருந்து சிறிது
பொழுது அவர்களை அலைக்கழித்து, பின்பு அவர்கள் கைகூப்பி வணங்கி
மிகவும் பிரார்த்தித்ததனால் அவர்கட்கு அத்துகில்களை அளித்தருளின
னென்பது, முதலிரண்டடிகளில் அறியவேண்டிய வரலாறு.
‘வண்டமர்பூங்குழலார் துகில் கைக்கொண்டு, விண்டோய்மரத்தான்’ என்றார்
பெரியாழ்வாரும்.  மற்றும், அவ்வாழ்வார் “ஆற்றிலிருந்து
விளையாடுவோங்களைச், சேற்றாலெறிந்து வளைதுகில்கைக்கொண்டு,
காற்றிற்கடியனாயோடி அகம்புக்கு மாற்றமுந்தாரான்’ என்று அருளிச்செய்தபடி
யமுனையாற்றில் நீராடிக்கொண்டிருந்த ஆயர்மங்கையர் கரையிற்
களைந்துவைத்த ஆடைகளைக் கண்ணன் வாரியெடுத்துக்கொண்டு தன்
அகத்திலே சென்றுபுக்க செய்தியும் உண்டு.

    சரத்காலத்திலே வானம் நிர்மலமாயிருப்பதையும் இரவில் நிலா
எறிப்பதையும், பூந்தடாகங்களையும், பூஞ்சோலைகளையும் கண்ணன்
கண்டுகளித்து, முன்பு தான்வரமளித்திருந்தபடி கோபஸ்திரீகளோடு சேர்ந்து
கிரீடிக்கக் கருதி, தமையனில்லால் தான் ஒன்றியாக வனத்திற்போய், பெண்கள்
மனத்தை யிழுக்கத்தக்கதும் இன்னபடியென்று சொல்லக்கூடாமல் இனியதுமான
தொனியுள்ளதாக வேணுகானஞ் செய்தருளினான்;  அந்த வேய்ங்குழலிசையைக்
கேட்டு ஆய்ச்சியரெல்லாம் பரவசராய்த் தம்தம் மாளிகைகளை விட்டுப்
பரபரப்புடனே கண்ணனிருக்குமிடத்துக்கு வந்து சேர்ந்து பலவாறு பெருங்காதல்
பூண்டுநிற்க, கண்ணபிரான் அக்கோபகன்னிகைகளாற் சூழப்பட்டு அவ்விரவை
ராஸக்கிரீடையென்ற உத்ஸவத்திலே செலுத்தினான்;  அப்பெண்கள்,
தம்சுற்றத்தவரால் தடுக்கப்பட்டாலும் அவர்களை லக்ஷ்யஞ்செய்யாமல்
இரவுதோறும் இங்ஙனம் கண்ணனைச் சேர்ந்துவிட்டுப் பிரிய மனமில்லாமல்
மிக்க ஆனந்தத்தை அனுபவித்துவந்தார்கள் என்பது, மூன்றாமடியில்
அறியவேண்டிய விஷயம்.  (தருமத்தை நிலைப்பிக்க அவதரித்த
எம்பெருமான் தரும விரோதமாக இங்ஙனஞ் செய்வது ஒக்குமோ?
அக்கன்னிகைகளுக்கும் இதனால் பாதகமுண்டாகா? எனின்:- அப்பெருமான்
தன்னைச்சேர்ந்தவர்களுடைய சகல பாவங்களையும் போக்கடிக்கும்படியான
பரிசுத்தி யுடையவனாதலாலும், வேதாந்த நிர்ணயத்தின்படி
அன்புசெலுத்வேண்டுமிடத்திலேயே அக்கன்னியர் அன்பு
செலுத்தினார்களாகையாலும், அவர்கட்குச் சகலபாவநிவிருத்தியே யல்லது
பாவமுண்டாவதில்லை.  எம்பெருமானுக்கோ, ஜீவாத்மாவுக்கு
உண்டாவதுபோலப் பாபபந்தம் உண்டாகாது; ஏனெனில்,- பிருதிவி, அப்பு,
தேயு, வாயு, ஆகாசம் என்கிற பஞ்சபூதங்கள் எப்படி எல்லாப் பிராணிகளிலும்
வியாபித்திருக்குமோ, அப்படியே, ஸ்வாமி அந்தப் பெண்களிடத்தும்
அவர்களுடைய கணவர்களிடத்தும் மற்றுமுள்ள ஆத்மகோடிகளிடத்தும்
வியாபித்திருக்கும் பரமாத்மாவாகையாலே, அவனுக்குப் புதிதாக ஒருசம்பந்தம்
வந்ததில்லை யென்க.  இன்னும் பலவகையாகவும் ஏற்ற சமாதானம்
ஆன்றோராற் கூறப்பட்டு வழங்கும்.) குஞ்சி – ஆடவர் மயிர்முடி.  பிராயம்
முதிர்ந்தபின்பும் குடுமிமயிரைப் பின்னிக்கொண்டிருத்தல், இடையரியல்பு.
பேதையர் – கபடமில்லாத கன்னிகைகளென்றபடி.  களிந்தகன்னி-
களிந்தமென்னும் மலையினிடத்தினின்று உதித்துவருகிற பெண்பாலாகிய நதி.
மருங்கு – இடம், பக்கம்; ஏழனுருபுமாம்.  ஓரை – மகளிர் விளையாடுமிடம்;
மகளிர் கூட்டமுமாம்.  ‘ஓரையின் மருங்கு’ என்றது – ‘நாணிடக்கலையெலாங்
கவர்ந்து’ என்பதனோடும், ‘பலரையும்’ என்றது – இவ்விரண்டனோடும்
தொடர்தற்கு உரியவை.  நாணிட – நாண: இடு – துணைவினை.  ‘கவர்ந்தே’
என்ற ஏகாரம்-இழிவைக்காட்டும்.  மன்மதனது கருப்புவில்தானே அவன்
எல்லாவுயிர்களை யும் வெல்லுதற்குக் கருவியாதலால்,  ‘மூரிவில்’ எனப்பட்டது,
‘காமனுமானான்’ என்றது – தன்கட்டழகினாலும் குணஞ்செயல்களினாலும்
அம்மகளிரைத் தன்பக்கல் மோகமடையும்படி செய்து அவர்களோடு
கூடினானென்றபடி. உம்மை – கீழ்க்கூறிய கலைகைவர்தல், மயக்குதல் என்ற
செயல்களை நோக்குதலால், இறந்தது தழுவிய எச்சப்பொருளது.
‘அன்னியனல்லன்’ என்பதற்கு – (நம்மால் உள்ளவாறு அறியலாகாதபடி)
அயலானல்லன் என்றும் கருத்துக்கூறலாம்.  ‘பெருமை’ என்றது, இங்குக்
குறிப்பினால் சிறுமையையுணர்த்திற்று.  ‘அரசரில் ஆர் அறியாதார்’ என்றது –
அரசரனைவரும் கிருஷ்ணனுடைய அக்கிரமங்களை அறிந்திருந்தும் அவனை
அக்கிரபூசைக்கு உரியவனென்று உடன்பட்டது பெருந்தவறென்று சபையார்க்குக்
குறைகூறியவாறாம்.  இச்செய்யுள் – ஜாரசோரசிகாமணியென்று சிசுபாலன்
கண்ணனைப் பழித்தபடியாம்

அண்டர்க்கு எல்லாம் அரசு ஆன ஆகண்டலனுக்கு
அண்டர் இனிது
உண்டற்கு அமைத்த பால் அடிசில் உண்டான், ஒரு
நாள், ஒரு தானே;
கொண்டல் கல்மாரியை, முன்னம், கோவர்த்தனமே
குடையாக,
சண்ட ப்ரசண்ட வேகமுடன், தடுத்தான்; ஏறு படுத்தானே.

அண்டர்க்கு எல்லாம் அரசு ஆன ஆகண்டலனுக்கு –
தேவர்கட்கெல்லாம் அரசனான இந்திரனுக்கு, இனிது உண்டற்கு –
இனிமையாகப் புசிப்பதற்கு உபயோகமாக, அண்டர் அமைத்த – இடையர்கள்
சமைத்துச் சித்தப்படுத்திய, பால் அடிசில்-பால் போல் வெண்ணிறமான
சோற்றை, ஒரு நாள் ஒரு தானே உண்டான் – ஒருநாள் (கிருஷ்ணன்
அல்விந்திரனுக்கு இன்றித்) தானே தனியாகப்புசித்திட்டான்; (மற்றும்),
கொண்டல் கல் மாரியை – (இந்திரனது கட்டளையால்) நீர்கொண்ட
காளமேகங்கள் பொழிந்த கல்மழையை, முன்னம் – முன்பு, கோவர்த்தனமே
குடை.  ஆக – கோவர்த்தன மலையையே குடையாகக்கொண்டு,
சண்டப்ரசண்டவேகமுடன் – மிகவும் அதிகமான விரைவுடனே, தடுத்தான் –
தடுத்திட்டான்; (அன்றியும்), ஏறுபடுத்தான்-எருதையழித்தான்; (எ – று.)

    இடையர்கள் தங்களுக்கு ஜீவநாதாரமான பசுக்களுக்கு வேண்டிய
புல்லையும் தண்ணீரையும் உண்டாக்குகிற மேகங்களுக்கு இந்திரன்
தலைவனாதலால் அவனுக்குத் திருப்தியையுண்டாக்கி அவனது பிரீதியினால்
மேகங்கள் மழைபொழியத் தாங்களும் பசுக்களும் க்ஷேமமடைதலைவேண்டி
வருஷத்துக்கு ஒருமுறை சரத்காலத்தில் இந்திரனுக்குப் பொங்கலிடுகிற
வழக்கத்தைக் கொண்டிருந்தனர்.  அங்ஙனம் ஒருவருஷத்தில்
திருவாய்ப்பாடியிலுள்ள இடையர்களெல்லோரும்கூடி இந்திராராதனை
பண்ணுதற்காக வீடுகள்தோறும் வரியிட்டுச் சமைத்துச் சோறு முதலிய
உணவுகளைப் பெருந்திரளாகவும் மிக இனிதாகவும் சித்தப்படுத்திய போது, இந்திரனைச் செருக்கடக்கக் கருதிய கிருஷ்ணன் அவ்விடையர்களை
நோக்கி ‘பசுக்களுக்கும் நமக்கும் பலவகைவளங்கதை் தந்து உதவி நம்மைப்
பாதுகாக்கிற இந்தக்கோவர்த்தனகிரியை ஆராதிப்பதே நமக்குத் தகுதி:  நமக்கு
இந்திரனாலும் மற்றவர்களாலும் ஆவதென்ன?’ என்று சிலசொல்லிப் போதித்து
அவர்கள் மனத்தைமாற்றி அவர்களோடுதானும் இருந்து இந்திரபூசைக்குப்
பிரதியாகப் பர்வதபூசையைச் செய்வித்தான்.  வழக்கமாக இந்திரன் பூசையை
ஏற்றுக்கொள்ளுகிறவகையிலும் இக்கோவர்த்தன பர்வத பூசையில் விசேஷம்
காட்டி இடையர்களை மகிழ்விக்கக் கருதிக் கண்ணன் அவர்கள் பர்வதபூசை
செய்துவரும்போது தான் ஒரு தேவதாரூபமாய் அந்தக் கோவர்த்தனகிரியின்
சிகரத்தின் மேல் வீற்றிருந்து “நான்தான் இந்தப் பர்வததேவதை” என்று
சொல்லி, அக்கோபாலர்கள் இட்ட அந்தப் பலிகளையெல்லாம்
அமுதுசெய்தருளியதுமன்றி, அம்மலைத்தெய்வத்தைத் தரிசித்து வணங்கிப்
பிரார்த்தித்த ஆயர்கட்கெல்லாம் வேண்டிய வரங்களையுந் தந்தனன்.
இங்ஙனம் பூசையை இழந்ததனாற் கோபமுற்ற இந்திரன் பசுக்களுக்கும்
கன்றுகளுக்கும் இடையர்க்கும் இடைச்சியர்க்கும் அழிவுசெய்யும்படி மேகக்
கூட்டத்தை ஏவி இடைவிடாத பெருங்காற்றுமழையைப் பொழிவித்தபோது,
கண்ணன் கோவர்த்தனமலையையெடுத்துக் குடையாகப் பிடித்து மழையைத்
தடுத்துக் கன்றுகாலிகளையும் இடையர்களையும் காத்தருள, இங்ஙனம் ஏழுநாள்
கழிந்தபின்பு இந்திரன் கருவபங்கப்பட்டு மேகங்களை யகற்றிவிட்டு
வானத்தினின்று இழிந்துவந்து கண்ணனைப் பலவாறு துதித்து,
அப்பெருமானுக்குக் கோவிந்தனென்கிற திருநாமத்தைச் சாத்திக் கோக்களுக்கு
இந்திரனாகப் பட்டாபிஷேகஞ்செய்து சென்றனன் என்பது, இங்கு
அறியவேண்டிய கதை.  கள்ளங்கபடமற்ற சாதுசனங்களான
இடையர்களெல்லார்க்கும் துர்ப்போதனை செய்து தேவேந்திரனை வஞ்சித்து
அவனுணவைக்கவர்ந்து உண்டு தன் இனத்தவரான இடையர்களையும்
ஏமாற்றிப் பின்பு அதனாலான தீங்கையொழித்தற்குத் தானே சிரமப்பட்டுக்
கல்லைச் சுமந்தனனெனப் பழித்தவாறு.

    இந்திரன் கல்மழை பொழிந்ததனால் அதனைக் கல்மலை கொண்டே
தடுத்திட்டான்: அவன் நீர்மழைபொழிந்திருந்தால் அதனை நீர்கொண்டே
தடுத்திருப்பான், அகடிதகடநா சாமர்த்தியமுடைய எம்பெருமான் என்பதும்;
‘அஃறிணையாகிய மலை, தனக்குச்செய்த பூசையை ஏற்றுக்கொள்ளுந் தரமிலது’
என்ற குறைதீரவும், தேவதாந்தரங்களை யுத்தேசித்துச் செய்யும் பூசைகளை
அந்தந்தத் தேவதைகளுக்கு அந்தர்யாமியாய் நின்று ஏற்றுக்கொண்டு
வரமளிப்பவன் தேவாதிதேவனான தானேயென்பது தோன்றவும்,
கோவர்த்தனமலைக்கு இட்ட உணவுகளைக் கண்ணன் தான் ஒரு தெய்வ
வுருக்கொண்டு உண்டருளின னென்பதும்; “கோவர்த்தன மலைக்குப்
பூசைசெய்தோம்;  அதனால் உடனே பெருந்தீங்கு விளைவதாயிற்று; அதனைக்
கண்ணன் முயன்று தடுத்து நம்மைக் காத்தருளினான்’ என்று இடையர்கள்
உட்கொண்டு அம்மலையைக் குறித்துக் குற்றங்குறை கூறாதிருக்கு மாறு அந்தமலையைக் கொண்டே பாதுகாத்தன னென்பதும் கருதத்தக்க
பொருள்கள்.  திருவாய்ப்பாடியில் பொதுவானார் வர்ஷார்த்தமாக
இந்திரனுக்குக் கொடுபோயிடுகிற சோற்றைக் கண்டு, ‘நாம் பிறந்து வளர்கிற
ஊரிலே சிலர் ஒன்றைத் தேவதாந்தரத்துக்கு ஆக்குகையாவதென்?’ என்று
அதுவும் பொறுக்கமாட்டாதே ‘மலையின் முன்னே கொடுபோய்க்
குவியுங்கோள்’ என்று சொல்லி ‘தான்மலையாயிருந்து ஜீவிக்குமவன்’ என்ற
ஆன்றோருரை நைடயையுங் காண்க.

    ஆகண்டலன் என்ற வடமொழிப்பெயர் – (பகைவர்களை) நன்றாகக்
கண்டிப்பவனென்று காரணப்பொருள் பெறும்.  பால் அடிசில் –
உவமைத்தொகை.  ஒருதானே, கோவர்த்தனமே என்ற ஏகாரங்கள் –
பிரிநிலையோடு சிறப்பு.  கோவர்த்தன மென்றது – (எப்பொழுதும் மாறாத
புல்லையுந் தண்ணீரையுமுடையதாதலால்) பசுக்களை விருத்தியடையச் செய்வது
என்பதுபற்றி வந்த பெயர்.  மழை ஒருதுளியேனும் ஆயர்மேலும்
ஆக்களின்மேலும் விழாதபடி கண்ணனெடுத்த அம்மலை கவிந்து நின்றதனால்,
குடையாயிற்று.  சண்டப்ரசண்ட வேகமுடன் – மிக்ககொடிய பெருங்காற்றின்
மகாவேகத்தோடு கூடின, கொண்டல்களின் கல்மாரியை என்று இயைத்து
உரைப்பினுமாம்.  சண்டப்ரசண்டவேகம் – வடமொழித்தொடர்.

     ஏறுபடுத்த விவரம்:- கண்ணன் நப்பின்னை யென்பவளை
மணஞ்செய்துகொள்ளுதற்காக, அவள் தந்தை கந்யாசுல்கமாகக் குறித்தபடி,
யாவர்க்கும் அடங்காத அசுராவிஷ்டமான ஏழு எருதுகளையும் ஏழு
திருவுருக்கொண்டு சென்று வலியடக்கித் தழுவின னென்பதாம்.  கண்ணனைக்
கொல்லும்படி கம்சனால் ஏவப்பட்ட அசுரர்களில் அரிஷ்டனென்பவன் எருது
வடிவங் கொண்டு பசுக்களையெல்லாம் முட்டி இடைச்சேரியைப்
பயப்படுத்திக்கொண்டு ஸ்ரீகிருஷ்ணனது திருவயிற்றின் மேற்கண்வைத்துக்
கொம்புகளை நீட்டிப் பாய்ந்துவர, கண்ணபிரான் அவனைக் கொம்புகளிற்
பிடித்து அசைய வொட்டாமற் செய்து தன்காலினால் அவன் வயிற்றில்
ஓரிடியிடித்து அவன் கழுத்தைப் பிடித்துக் கசக்கி அவனுடைய கொம்புகளில்
ஒன்றைப்பறித்து அதனாலேயே அவனை அடித்துக்கொன்று விழுத்தின னென்ற
கதையையுங் கொள்ளலாம்.  எருதை யழித்தலாகிய பெரும்பாதகத்தைச்
செய்தவனெனப் பழித்தவாறு.

    ‘தடுத்தானீறுபடுத்தானே’ என்று பாடமுண்டு; அதற்கு – ஈறுபடுத்தான்
என்றாவது நீறுபடுத்தான் என்றாவது எடுத்து, மேகங்களைச் சிதறடித்து
அழிவுசெய்தா னென்று பொருள் கொள்வர்.  ‘தடுத்தானேறுபடுத்தானே’
என்றவிடத்துப் பிராசமென்னுஞ்சொல்லணி காண்க.

     இதுமுதல் மூன்று கவிகள் – இச்சருக்கத்தின் 29-ஆம் கவி போன்ற
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தங்கள். 

‘பம்பிப் பரந்த புல் மேயும் பசுவின் கன்றும், கோபாலர்-
தம் புத்திரரும், அம்புயத்தோன் தன் மாயையினால்
ஒளித்திடும் நாள்,
‘எம் புத்திரரும், எம் கோவின் இளங் கன்றினமும்’ எனத் தெளிய,
வம்பின் புரிந்த மாயை இவன் அல்லால், யாவர் வல்லாரே!

 பம்பி பரந்த புல் மேயும் பசுவின் கன்றுஉம் –
நெருங்கிப்பரந்தபுற்களை மேய்ந்து உட்கொள்ளுகிற பசுக்களின் கன்றுகளும்,
கோபாலர்தம்புத்திரர்உம் – இடையர்களுடைய பிள்ளைகளும், அம்புயத்தோன்
தன்மாயையினால் ஒளித்திடு நாள் – பிரமன்செய்த மாயையினால்
மறைந்திட்டபோது, எம் புத்திரரும் எம் கோவின் இளங் கன்று இனமும் என
தெளியவம் பின்புரிந்த – ‘எங்கள் பிள்ளைகளும் எங்கள் பசுக்களின்
இளங்கன்றுகளுமே’ என்று (இடையர்கள் ஐயமறக் கருதுமாறு கிருஷ்ணன்
தானே அத்தனைகன்றுகளும் இடைப்பிள்ளைகளுமாகவடிவு கொண்டு)
துடுக்காகச் செய்த, மாயை-மாயையை, இவன் அல்லால் வல்லார் யாவர் –
இந்தக் கிருஷ்ணனேயன்றி அறிந்து செய்ய வல்லவர் வேறுயாவர் உளர்?
[எவருமல்லை என்றபடி];

     கண்ணன் இளமைப்பருவத்தில் ஆயர் சிறுவர்களுடனே ஆன்கன்றுகளை
மேய்த்துவரும் நாட்களில் ஒருநாள், பிரமன் அப்பெருமானது
திருவிளையாட்டைக் காணவேண்டுமென்று கருதிக் கன்றுகளையும்
சிறார்களையும் தன் மாயையினால் வானத்தே மறைத்துவைக்க; கிருஷ்ணன்,
அதையுணர்ந்து, வண்ணமும் வனப்பும் தோற்றமும் வடிவும் தொழிலும்
குணமும் பூணும் துகிலும் தாரும் குழலும் முதலிய அனைத்திலும் சிறிதும்
வேற்றுமையில்லாதபடி தானே அச்சிறாரும் கன்றுகளுமாக வடிவெடுத்து
அந்தந்த மனைக்குப்போய் வந்துகொண்டிருக்க, இங்ஙனமே ஓராண்டு செல்ல,
நான்முகன் இதுகண்டு நாணமுற்றுச் சிறுவர்களையும் கன்றுகளையுங்
கொண்டுவந்து சமர்ப்பித்து வணங்கித் தன் பிழையைப் பொறுத்தருளும்படி
கண்ணபிரானைப் பிரார்த்தித்தன னென்பது, இங்குக் குறித்த வரலாறு.

    இச்செய்யுள் – எவ்வகைமாயைக்கும் மேம்பட்ட பெருமாயை செய்ய
வல்லானென்று இழித்துரைத்த படியாம்.

    புத்த்ரர் – என்ற வடசொல் – புத் த்ரர் என்று பிரிந்து, நமது
தாய்தந்தையரைப்) புத் என்ற நரகத்திற் சேரவொட்டாது அதனினின்று
பாதுகாப்பவரெனக் காரணப்பொருள் பெறும்.  அம்புயத்தோன் – (திருமாலின்
திருநாபித்) தாமரை மலரில் தோன்றினவன்.  வம்பிற் புரிந்த மாயை – பிரமன்
செய்த மாயைக்குப் பிரதியாகச் செய்த மாயை.  ‘பம்பிப் பசுந்தண் புன்மேயும்’
என்றும் பாடமுண்டு.  அல்லால்+யாவர்=அல்லாலியாவர்; தன்ஒழமெய்ம்முன்
யகரம்வர இகரந் தோன்றிற்று; [நன்-மெய் – 3.]  

அதிரப் பொரும் போர் அஞ்சினனோ? அஞ்சாமைகொலோ?
தெரியாது
மதுரைப் பதியும், தன் கிளையும், வாழ்வும் துறந்து,
வாரிதிவாய்
எதிர் ஒப்பிலாத துவாரகை என்று இயற்பேர் படைத்த
மா நகரில்,
முதிரப் பொரும் போர்த் தம்முனுடன் இருந்தான், பல் நாள்,
முரண் அறுத்தே.

அதிர பொரும் போர் அஞ்சினனோ – (கிருஷ்ணன்தான்
ஜராசந்தனோடும் காலயவனனோடும்) ஆரவாரமுண்டாம்படி (ஒருங்கு) போர்
செய்தற்கு அச்சங்கொண்டவனாதல் பற்றியோ, அஞ்சாமைகொலோ –
அங்ஙனம் போர்செய்தற்குத் தான் அச்சங்கொள்ளாமையினாலேயோ, தெரியாது
– (இன்னபடியென்று) தெரிந்திலது; மதுரை பதிஉம் தன்கிளைஉம் வாழ்வுஉம்
துறந்து – மதுராபுரியையும் (அதில்) தனது உறவினரோடுகூடி வாழ்தலையும்
விட்டிட்டு, வாரிதிவாய்-(மேற்குக்) கடலிலே, எதிர் ஒப்பு இலாத துவாரகை
என்று இயல் பேர் படைத்த மா நகரில் – தனக்குச் சரியான உவமையைப்
பெறாததும் துவாரகையென்று இயற்பெயர் பெற்றதுமான பெரியநகரத்தில்
(புகுந்து அதில்), முதிரபொரும் போர் தம்முனுடன் – மிகுதியாகச் செய்யும்
போரில்வல்ல தனது தமையனான பலராமனுடனே, பல நாள் – அநேகநாள்,
முரண் அறுத்து இருந்தான் – பகையின்றி வீற்றிருந்தான்; (எ – று.)

    இதிற்குறித்த விஷயம் முன்பு எழுதப்பட்டது.  தனது சொந்தவூரைவிட்டு,
வேற்றூர்க்குச் செல்லுதல், பகைக்கு அஞ்சாமையினாலன்று,
அஞ்சுதலினாலேயாம் என்பது, முதலடியின்போக்கு.  பகைக்கு அஞ்சி
ஊரைவிட்டு ஓடிக்கடலிடை யொளித்தவனென்று இகழ்ந்தவாறாம்.  நீரரண்,
நிலவரண், மலையரண், காட்டரண் என்ற நால்வகையரண்களுட் கடலாகிய
இயற்கை நீரரணைப் பெற்றுள்ளதனாற் பகைவர் வந்து புகவொண்ணாதபடி
பாதுகாப்பமைந்த நகரத்தி லென்பான், ‘வாரிதிவாய் நகரில்’ என்றான்.
அதிரப்பொரும் போரஞ்சினனோ அஞ்சாமை கொலோ – தெரியாது’
என்றதன்பின், ‘முதிரப் பொரும் போர்த்தம்முனுடன் முரணறுத்து இருந்தான்’
என்றது இகழ்ச்சி.  தம் முன் – தமக்குமுன் பிறந்தவன்; முன் –
காலவாகுபெயர், இயற்பேர் – சுபாவமானபெயர்:  இயற்கைப் பெயர்:
முரணறுத்து இருந்தான் என்பதற்கு-போர் செய்தலை யொழித்திருந்தானென்றும்
பொருள் கொள்ளலாம்.  ‘இருந்தா னொருநாள் முரணறுத்தே’ என்றும்
பாடமுண்டு.   

கஞ்சன் எனும் மாமனொடு காளை அமர் செய்தான்;
வஞ்சனையினால், அமரும் எத்தனை மலைந்தான்?
தஞ்சம் எனவே மருவு தமரில் ஒருதானே
மிஞ்சி, விரகால், உரிய மேதினி புரந்தான்.

காளை – இளவெருதுபோலக் கொழுத்தவனான கிருஷ்ணன்,
கஞ்சன் எனும் மாமனொடு – (தனது) மாதுலனான கம்ஸனுடனே, அமர்செய்தான்
– போர்செய்து அவனைக் கொன்றிட்டான். (மற்றும்), வஞ்சனையினால் அமரும்
எத்தனை மலைந்தான் – தந்திரவகைகளால் எத்தனையோ யுத்தங்களையுஞ்
செய்து முடித்தான்; தஞ்சம் என மருவு தமரில் – (தன்னையே)
ஆதாரமாகக்கொண்டு சார்ந்துள்ள சுற்றத்தார்களில், ஒருதானே
மிஞ்சிதானொருவன் மாத்திரமே மேம்பட்டு, விரகால் உரிய மேதினி புரந்தான் –
தந்திரமாகத் தனக்குரியதாக்கிக்கொண்ட இராச்சியுத்தை ஆள்பவனானான்;
(எ – று.)

    நெருங்கிய சுற்றத்தார்க்கும் பிறர்க்கும் ஒப்ப அன்பின்றி வஞ்சனையால்
தீங்கு இழைத்தவ னென்று பழித்தபடியாம்.  முதலடியிற்குறித்த வரலாறு, கீழ்
67-ஆங் கவியினுரையில் விவரிக்கப்பட்டது.  காளை – உவமையாகுபெயர்;
காளையமர் செய்தான் என்பதற்கு – காளைப்பருவத்திலே போர்செய்தானென்று
உரைப்பினுமாம்; அது பதினாறு பிராயத்துக்குட்பட்ட கட்டிளமைப்பருவம்.
கம்சனைக் கொன்றதன் பின்பு கிருஷ்ணன் பலராமனுடன் சாந்தீபினி யென்ற
அந்தணன்பக்கல் வேதசாஸ்திரங்களை யோதின பின்பு, அக்குருவுக்குத்
தக்ஷிணை கொடுத்தற் பொருட்டு, அவனது விருப்பத்தின்படி, சங்கினுருவந்
தரித்துக் கடலில்வாழ்ந்த பஞ்சஜநனென்ற அசுரனைக் கடலிற்புகுந்து
பொருதுகொன்று, முன்பு அவனாற் கவர்ந்து கொண்டு போகப்பட்ட
குருபுத்திரனை மீட்டுக் கொடுத்தமை, பதினெட்டுமுறை ஜராசந்தனைப் பொருது
வென்றமை, காலயவனென்ற மிலேச்சராஜனைத் தந்திரத்தால் அழியச்
செய்தமை, ருக்குமியைப் பங்கப்படுத்தியமை முதலிய பலவற்றை
உள்ளத்திற்கொண்டு ‘வஞ்சனையினால் அமருமெத்தனை மலைந்தான்’
என்றான். ‘தஞ்சமெனவே மருவுதமர்’ என்றது, யதுகுலத்தரசர்களை.  தஞ்சம் –
பற்றுக்கோடு, ஆதரவு, ரக்ஷகம்.

     இக்கவி – ஈற்றுச்சீரொன்று தேமாச்சீரும், மற்றை மூன்றும்
விளங்காய்ச்சீர்களுமாகிய அளவடி நான்குகொண்ட கலிவிருத்தம். 

அன்னையும், தாதைதானும் அருஞ் சிறை அகத்து வைக,
முன் இரு-மூவர் முன்னோர்தங்களை முருக்குவித்தான்;
பின் ஒரு தமையன்தன்னை, “பெற்ற தாய் இருவர்’ என்று என்று,
இந் நிலம் சொல்ல வைத்தான்; இவனை வேறு யாவர் ஒப்பார்?’

அன்னைஉம் – (தனது) தாயும், தாதைதான்உம் – (தனது)
தந்தையும், அரும் சிறை அகத்து வைக – (தனக்காக) மீளுதற்கு அரிய
சிறைச்சாலையிலே இருக்க, முன் இரு மூவர் முன்னோர் தங்களை
முருக்குவித்தான் – முன்னே பிறந்த தனது தமையன்மார் ஆறுபேரையும்
கொல்வித்தான்; பின் ஒரு தமையன் தன்னை – (அவ்வறுவர்க்கும்) பின்னே
பிறந்த ஒரு தமையனை, பெற்றதாய் இருவர் என்று என்று இ நிலம் சொல்ல
வைத்தான் – (பெற்ற தாயார் இவனுக்கு) இரண்டுபேர் என்று இந்நிலவுலகத்தார்
பலமுறை சொல்லும்படி செய்தான்; இவனை ஒப்பார் வேறு யாவர் –
(இத்தன்மையனான கிருஷ்ணனுக்கு அவனே ஒப்பாவனன்றி) இவனை ஒப்பவர்
வேறுயாவருளர்? (எவருமில்லை யென்றபடி); (எ – று.)

     தாய் தந்தையர்க்கும் தமையன்மார்க்கும் பெருந்தீங்கு விளைத்த
கொடியனென்று நிந்தித்தவாறாம்.  தேவகியின் எட்டாவது பிள்ளை கம்சனைக்
கொல்லுமென்று அசரீரிவாக்குச் சொன்னதும், திருமால் தேவகியின் எட்டாவது
கர்ப்பத்தில் தான் அவதரித்துக் கம்சனைக் கொல்லுவதாகத் தேவர்கட்கு வாக்கு
தத்தஞ் செய்தருளிய செய்தியை நாரதர் வந்து கூறியதும் பற்றிக் கம்சன் மிக்க
கோபமடைந்து, தேவகியையும் வசுதேவரையும் சிறைச்சாலையில் தளையிட்டு
வைத்தமை கொண்டு, தாய்தந்தையர் சிறையிலிருத்தற்குக் கண்ணன் காரணமாக
உரைக்கப்பட்டனன்.  ‘முன்னிருமூவர் முன்னோர் தங்களை முருக்குவித்தான்’
என்று சொன்னது, கம்சனாற் கொல்லப்பட்ட தேவகியின் புத்திரரறுவரும்
திருமாலின் கட்டளைப்படி மாயையினால் தேவகியின் கருப்பத்திற்
சேர்க்கப்பட்ட இரணியகசிபு குமாரராதலால், தன்னைக் கம்சன் கொல்லாதபடி
பாதுகாத்துக்கொண்ட தந்திரம் வல்லவனான கிருஷ்ணன் தனக்கு
முன்பிறந்தவரறுவரை அங்ஙனமே கம்சன் கொல்லாதபடி காத்தற்கு
யாதோருபாயமுஞ் செய்யாது விட்டமையே, அவன் அத்தமையன்மாரைக்
கொல்வித்ததாகக் குற்றஞ்சாற்றப்பட்டது.  அவ்வறுவர் பெயர்:- கீர்த்திமான்,
சுஷேணன், உதாயு, பத்திரசேனன், ருசுதாசன், பத்திரதேவன் என்பன; (இவை,
அவர்கட்கு முற்பிறப்பிலிருந்த பெயர்,) பின்பு தேவகியின் ஏழாவது
கருப்பத்தைத் திருமாலின் நியமனப்படி மாயையானது ஏழாவது
மாதத்தொடக்கத்திலே நடுராத்திரியில் தேவகியின் வயிற்றினின்று பெயர்த்து
ரோகிணியின் கருப்பத்திற் சேர்த்துவிட, அங்கு நின்று அவதரித்த
பலராமனுக்கு, தேவகி ரோகிணி என்ற இருவரும் தாயராதல் காண்க.
“ஒருதாயுதரத்திலோரறுதிங்க ளுறைந்தபின்னை, ஒருதாய் வயிற்றில் வந்துற்ற
தெம்மாய முரைத்தருளே” என்றது, இங்கு நோக்கத்தக்கது.

     தமையனான பலராமனுக்குத் தாயரிருவராக அமைத்தற்குக் காரணம்,
தம்பியாகிய கிருஷ்ணன் திருமாலாகிய தனது நிஜரூபத்திலிருந்து மாயைக்கு
இட்ட கட்டளையேயாதல் கொண்டு, அச்செயலைச் சிசுபாலன் கிருஷ்ணன்
மேலேற்றிக் கூறினான்.  ‘பெற்ற தாய் இருவர்’ என்றது,
ஒருமைப்பன்மைமயக்கம்.  ‘என்றென்று’, என்ற அடுக்கு – வியப்பினாற்
பலகாற்கூறுதலை விளக்கும்; வேறியாவர் – குற்றியலிகரம்.

     இதுவும், அடுத்த கவியும் – 66-ஆங் கவிபோன்ற அறுசீர்க்கழி
நெடிலடியாசிரிய விருத்தங்கள்.

என்றுகொண்டு எண்ணி, நாவுக்கு இசைந்தன உரைகள் எல்லாம்
ஒன்றின் ஒன்று உச்சமாக, உயர்ச்சியும் தாழ்வும் தோன்ற,
கன்றிய மனத்தினோடும் கட்டுரைசெய்தான்-மன்றல்
தென்றல் அம் சோலை சூழும் சேதி நாடு உடைய கோவே.

என்று கொண்டு – என்று இவ்வாறாக, எண்ணி –
(கிருஷ்ணனுடைய செய்திகளையும் குணஞ் செயல்களையும்) குறித்து, நாவுக்கு
இசைந்தன உரைகள் எல்லாம் – வாயில்வந்த வார்த்தைகளை யெல்லாம்,
ஒன்றின் ஒன்று உச்சம் ஆக-ஒன்றுக்கு மேல் ஒன்றாக, உயர்ச்சிஉம் தாழ்வுஉம்
தோன்ற-உயர்வும் இழிவும் புலப்பட, கன்றிய மனத்தினோடுஉம்
கட்டுரைசெய்தான் – கோப தாபங் கொண்ட மனத்துடனே தொடுத்துரைத்தான்:
(யாவனெனில்:-) மன்றல் தென்றல் அம்சோலை சூழும் சேதி நாடு உடைய
கோ – நறுமணமுள்ள தென்றற்காற்று வீசுகின்ற அழகியசோலைகள்சூழ்ந்த
சேதிதேசத்தை (த்தனது ஆளுகையின் கீழ்) உடைய அரசனான சிசுபாலன்;
(எ- று.)

சிசுபாலன் கூறிய தூஷணைச்சொற்களினுள்ளே புகழ்ச்சிப் பொருளும்
வெளிப்படையாகவேனும் குறிப்பாகவேனும் தோன்றுதல் பற்றி, ‘உயர்ச்சியும்
தாழ்வும் தோன்ற’ எனப்பட்டது.  அங்ஙனம் இருவகைக் கருத்துநிகழ்தல்,
கீழ்ச்சென்ற பத்துக்கவிகளையும் உய்த்து நோக்குமிடத்துத்தானே விளங்கும்.
மாயவனான கண்ணனது திருவிளையாடல்களில் ஈடுபடாதவர்க்கு அவை
குற்றமாகவும், ஈடுபடுபவர்க்கு அவைதாமே குணமாகவுந் தோன்றுமென்க.
உண்மையில், உயர்ந்த குணஞ் செயல்களையும் இழிந்தனவாகக்கொண்டு
கூறினன் சிசுபாலனென்பது போதரும்.  சிசுபாலன் வாக்கியங்களில்
கண்ணனைப் புகழ்ந்தவைபோல மேல்நோக்கில் தோன்றுகின்றவை சிலவும்,
அவன் கருத்தால் வஞ்சப்புகழ்ச்சியணி வகைகொண்டு கிருஷ்ணனைப்
புகழ்கிறது போலப் பழித்தவையேயா மென்க.  தென்றல்,
பொதியமலையிலிருந்து சந்தனமரத்தின் வாசனையோடு வீசுதலால், ‘மன்றல்
தென்றல்’ எனப்பட்டது.  மன்றலைச் சோலைக்கும் அடைமொழியாக்கலாம்.
‘என்று கொண்டு’ என்பதில், கொண்டு – அசை: இது – தொல்காப்பியத்து
“கிளந்தவல்ல வேறு பிறதோன்றினுங், கிளந்தவற்றியலாலுணர்ந்தனர் கொளலே”
என்ற இடைச்சொல்லியற் புறனடைச் சூத்திரத்தாற் கொள்ளப்படும்.  உச்சம் –
வடசொல்.

திண்ணிய நெஞ்சினனான சிசுபாலன், தன் நெஞ்சில் தீங்கு தோன்ற,
எண்ணிய மன் பேர் அவையின் இயம்பிய புன் சொற்கள்
எலாம் எண்ணி எண்ணி,
புண்ணியர் வந்து இனிது இறைஞ்சும் பூங் கழலோன் வேறு
ஒன்றும் புகலான் ஆகி,
பண்ணிய தன் புரவி நெடும் பரு மணித் தேர் மேற்கொண்டான்,
பரிதிபோல்வான்.இவ்வகைச் சிசுபாலன்சொன்ன நிந்தனைச்
சொற்களைக்கேட்ட கண்ணன் அவனோடு பொரத்
தேரிலேறுதல்.

திண்ணிய நெஞ்சினன் ஆன சிசுபாலன் – கடுமையுள்ள
மனமுடையவனான சிசுபாலன், தன்நெஞ்சில் தீங்கு தோன்ற – தனது
மனத்திலுள்ள கெட்ட எண்ணம் வெளியாம்படி, எண்ணிய மன் பேர்
அவையின் இயம்பிய – (அனைவராலும்) நன்கு மதிக்கப்பட்ட நிலைபெற்ற
பெரிய அந்தச் சபையிற்கூறின, புல்சொற்கள் எல்லாம் – தூஷணைச்
சொற்களெல்லாவற்றையும், புண்ணியர் வந்து இனிது இறைஞ்சும் பூ கழலோன்
– நல்வினையையுடையவர்கள் வந்து அடுத்து இனிமையாக [அன்போடு]
வணங்குகிற தாமரை மலர்போன்ற திருவடிகளை யுடையவனான கண்ணபிரான்,
எண்ணி – கணக்கிட்டு, எண்ணி – ஆலோசித்து, வேறு ஒன்றுஉம் புகலான்
ஆகி – (அந்நிந்தனைச் சொற்களுக்கு) மாறாக ஒரு வார்த்தையையுஞ்
சொல்லாதவனாய், பரிதிபோல்வான் – சூரியனைப்போன்று, பண்ணிய புரவி
நெடும் பரு மணி தன் தேர் மேல் கொண்டான் – அலங்கரிக்கப்பட்ட
குதிரைகள் பூட்டிய பெரிய பருத்தமணிகள் கட்டிய தனது தேரின்மேல்
ஏறினான்;  (எ – று.)

    சிசுபாலன் நூறுபிழை செய்யுமளவும் பொறுத்தருள்வதாக அவனது
தாய்க்கு வாக்குதத்தஞ் செய்திருந்ததற்கு ஏற்பக் கண்ணபிரான் அவனது
தூஷணை வாக்கியங்களை எண்ணித் தொகையிட்டுக்கொண்டேவந்து அவை
நூற்றுக்கு மேற்பட்ட பின்பு பொறுக்கமாட்டாதவனாய் அவனை யழிக்கக்
கருதிப் போர்க்கு எழுந்தனனென்பார், ‘புன்சொற்களெல்லாம் எண்ணி
யெண்ணி வேறொன்றும் புகலானாகித் தேர்மேற்கொண்டான்’ என்றார்.
இவ்வாறு கண்ணபிரான் சிசுபாலனது நூறுபிழைகளைப் பொறுத்தருளியது
பற்றியே, “பிழை நூறும் சான்றோர் பொறுப்பர்” என்ற நீதிவாக்கியம்
வழங்கலாயிற்றென்ப “க்ரியா கேவலம் உத்தரம்” என்றபடி வாயினாலொன்றுஞ்
சொல்லாமற் காரியத்திலே வல்லமை காட்டுதல் பெரயோரியல்பாதலால்,
கண்ணன் வேறொன்றும் புகலானாகித் தேர்மேற்கொண்டான்.  திண்ணிய
நெஞ்சு – பெரியோரிடத்து மதிப்பும் பயபக்தி விசுவாசங்களும் இல்லாத கடின
சித்தம் பிறந்தபொழுதே தொடங்கிக் கண்ணனிடத்துப் பகைமை பூண்டவனாய்
முந்தின பிறப்புக்களிலும் பகைவனாதலால் பிறவிப்பகைவனான சிசுபாலன்
சொன்னசொல் ஒவ்வொன்றிலும் அவன் கொண்டுள்ள கிருஷ்ணத்வேஷம்
புலனாகுதலால், ‘திண்ணிய நெஞ்சினனான சிசுபாலன் தன் நெஞ்சில் தீங்கு
தோன்ற இயம்பிய புன்சொற்கள்’ எனப்பட்டன.  மன் அவை –
வினைத்தொகை.  மன் பேர் அவை-அரசர்கள் கூடிய பெரியசபை எனினுமாம்.
புண்ணிய – எம்பெருமானைச் சரணமடைந்து உய்தற்கு ஏற்ற
நல்வினையுடையோர்.  புரவிபண்ணுதல்-குதிரைக்குச் சேணம் முதலியன
இடுதல் மணி – அடிக்கும் மணி.  பருமணித்தேர் – நல்லிலக்கண முழுதுமமைந்த
விலையுயர்ந்த முழுரத்தினங்கள் பதிக்கப்பெற்றதேர் எனினுமாம்.  சூரியன்
இருளையழித்து உலகத்து ஒளிசெய்தற்குச் சிறந்ததொரு தேரின்மீது உதித்தல்
போல, ‘அச்சுதபாநு’ எனப்படுகிற கிருஷ்ணன் கொடிய
வகைவனைத்தொலைத்து உலகத்துக்கு நன்மை செய்தற்பொருட்டுச்
சிறந்ததொரு தேரிலேறினானென்பது, ‘தேற்மேற்கொண்டான் பரிதிபோல்வான்’
என்றதன் கருத்து, ‘திண்புரவி’ என்றும் பாடமுண்டு.

     இதுமுதல் நான்கு கவிகள் – இச்சருக்கத்தின் முதற்கவிபோன்ற
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தங்கள். 

எந் நாட்டில் அவனிபரும் ஈண்டிய இத் தொல் அவையின்
இசைத்த-சேதி
நல் நாட்டுக்கு அதிபதியாம் நரபால!-நின் மாற்றம் நன்று நன்று!
கல் நாட்டும் படியாக இருவோரும் பொருது அறிதும்;
கடிது ஏகு!’ என்று,
தன் நாட்டம் மிகச் சிவந்தான்-கரிய வடிவினில் புனைந்த
தண் துழாயோன்.கண்ணன் சிசுபாலனைப்போர்க்கு அழைத்தல்.

சேதி நல்நாட்டுக்கு அதிபதி ஆம் நரபால – நல்ல சேதி
தேசத்துக்குத் தலைவனான மனிதராஜனே!- எ நாட்டில் அவனிபரும் ஈண்டிய
– எந்தத்தேயத்து அரசர்களும் கூடிய, இ தொல் அவையின் – இந்தப் பெரிய
சபையிலே, இசைத்த – சொன்ன, நின் மாற்றம் – உனது வார்த்தை, நன்று
நன்று – மிக அழகியதாயிருந்தது; கல் நாட்டும் படி ஆக – சிலாஸ்தாபநஞ்
செய்யும்படி, இருவோரும் பொருது அறிதும் – நாமிருவரும் (போர்செய்து
நமக்குள் இருக்கிற உயர்வு தாழ்வு) அறிவோம்; கடிது ஏகு – விரைவிற்
புறப்பட்டு வா’, என்று-என்று (சிசுபாலனை நோக்கிச்) சொல்லி (அவனை
அறை கூவி), தன் நாட்டம் மிக சிவந்தான் – (கோபத்தினால்) தனது கண்கள்
மிகச் செந்நிறமடையப் பெற்றான், (யாவனெனில்.-) கரிய வடிவினில் புனைந்த
தண் துழாயோன் – கருநிறமான (தனது) திருமேனியில் தரித்த குளிர்ச்சியான
திருத்துழாய்மாலையை யுடையவனாகிய கண்ணபிரான்; (எ – று.)

     சபையாரது அறிவொழுக்கங்களின் முதிர்ச்சியைச் சபையின் மேலேற்றி,
‘தொல் அவை’ என்றார்.  ‘சேதிநன்னாட்டுக்கு அதிபதி யாம் நரபால’ என்று
சிசுபாலனைக் கண்ணன் விளித்தது, ‘நீ நிலவுலகத்தில் ஒரே தேசத்துக்கு
அதிபதியான மனிதராசன்:  நானோ மூவுலகத்துக்கும் அதிபதியான தேவராசன்’
என்று காட்டுதற்கு: ‘நன்று’ என்றது, எதிர்மறையிலக்கணை; சிறிதும் நன்றன்று
என்றபடி.  ‘நன்று நன்று’ என்ற அடுக்கு – வெகுளிபற்றியது.

     சிறந்த ஒரு வீரன் போரிற் புறங்கொடாதுநின்று பகைவராலிறந்தால்
அவனது பெயரையும் பெருமையையும் எழுதிக்கல்லுருத்தாபித்தல் மரபாதலால்,
‘கல்நாட்டும்படியாகப்பொருது’ எனப்பட்டது.  இது – புறப்பொருளிலக்கணத்தில் ‘நடுகல்’ எனப்படும்.  இந்நூற் சிறப்புப்பாயிரத்தில் “கல்நாட்டியமர் பொருது”
என்பதும் இது.  “பலர் என்னை முன்நின்று கன்னின்றவர்” என்ற
திருக்குறளையுங் காண்க.  ‘நாட்டும்படியாக’ என்றதில் ‘ஆக’ என்பது-அசை.
இருவோரும் அறிதும்’ என்றது-தன்மையிற்படர்க்கை வந்த இடவழுவமைதி;
‘இருவோமும்’ என்றிருப்பின், வழாநிலையாம், ‘நாட்டம் சிவந்தான்‘ என்றும்
கரியவடிவினில்’என்றும் ஓரடியில் வந்தது, முரண்தொடையாம்

சேதி குல நரபதியும் செருப் புரிதற்கு அஞ்சுவனோ?
தேரில் ஆனான்;
மோதி வலம்புரி ஊத, முகில்இனங்கள் முழங்குவபோல்
முரசம் ஆர்ப்ப,
வேதியரோடு அவை இருந்த வேந்தர் எலாம் அதிசயிப்ப
விமானம்தோறும்
சோதிமுடி அமரர் வர, நகர்ப் புறத்தில் அமர் புரியத்
தொடங்கினாரே.சிசுபாலனும் தேரிலேற,இருவரும் போர் தொடங்குதல்.

சேதி குலம் நரபதிஉம் – சேதிநாட்டரசர் குலத்தில் தோன்றிய
அரசனான சிசுபாலனும், செரு புரிதற்கு அஞ்சுவன் ஓ – போர் செய்தற்குப்
பயப்படுவனோ? [பயப்படான் என்றபடி]; (ஆகவே), தேரில் ஆனான் (உடனே
அவனும்) தேரில் ஏறினான்; (பின்பு இருவரும்), மோதி வலம்புரி ஊத –
ஒன்றற்கு ஒன்று எதிராக வலம்புரிச் சங்குகள் முழங்கவும், முகில் இனங்கள்
முழங்குவபோல் முரசம் ஆர்ப்ப – மேகக்கூட்டங்கள் இடிமுழக்கம்
செய்வனபோலப் போர்ப்பறைகள் ஆரவாரஞ் செய்யவும், வேதியரோடு
அவையிருந்த வேந்தர் எல்லாம் அதிசயிப்ப – முனிவர்களும் அவர்களோடு
சபையில் வீற்றிருந்த அரசர்களும் ஆகிய அனைவரும் ஆச்சரியமடையவும்,
சோதிமுடி அமரர் விமானம் தோறும் வர – ஒளியுள்ள கிரீடந்தரித்த தேவர்கள்
விமானங்களிலேறி (ப் போர் காணுதற்கு வானத்திலே) வரவும், நகர் புறத்தில்
அமர் புரிய தொடங்கினார் – அந்த இந்திரப்பிரத்த நகரத்திற்கு
வெளியிடத்திலே (ஒருவரோடொருவர்) போர் செய்யத் தொடங்கினார்கள்;
(எ -று.)

‘சேதிகுலம்’ என்ற சொற்றொடர் – இலக்கணையாய்ச் சேதி நாட்டரசர்
குல மென்ற பொருளோடு, வினைத்தொகையாய் (ப் பகைவர்களை)ச்
சேதிக்கின்ற [துணிக்கிற] குலமென்றும் ஒரு பொருள்படுதலால், அப்படிப்பட்ட
குலத்தில் தோன்றிய அரசனும் போர்செய்ய அஞ்சுவனோ? என்றார்.
சேதிநாட்டரசர், யாரோடும் போர்செய்தற்கு அஞ்சாத நெஞ்சுறுதி படைத்தவ
ரென்பது உணர்க.  உம்மை – இறந்தது தழுவிய எச்சத்தோடு சிறப்புப்
பொருளது.  ஓ – எதிர்மறை.  ஊத, ஆர்ப்ப, அதிசயிப்ப, வர –
வினைச்செவ்வெண்.  முழங்குவ-பெயர்.  சோதி என்பதை முடிக்கும்
அமரர்க்கும் கூட்டலாம்.  நகரத்துச் சனங்களுக்கு யாதொரு தீங்கும்
உண்டாகாமைப் பொருட்டு நகர்ப்புறத்தில் அமர் செய்யலாயின ரென்க.

ஆதி வரு கதிப் பரியும், அணி வயிரத் திண் தேரும்,
அனிலம் என்ன
மோதி வரு கட களிறும், காலாளும், பொறாது, உரகர்
முடிகள் சோர,
யாதவனாம் நரபதியும், இருங் கிளையும், பெருங் கிளையோடு
எதிர் இலாத
சேதி குல நரபதியும், செய்த அமர் சுராசுரரில்
செய்தார் உண்டோ?சேனைகளோடும்சுற்றத்தாரோடும் கூடிய கண்ணனும்
சிசுபாலனும் போர்செய்தல். 

ஆதி வரு கதி பரிஉம் – மண்டலமா யோடிவருகிற நடையில்
வல்ல குதிரைகளும், அணி வயிரம் திண் தேர்உம் – அழகிய மரத்தாலாகிய
வலிய தேர்களும், அனிலம் என்ன மோதி வரு கட களிறுஉம் – காற்றுப்போல
(மிக்கவிசையும் மிக்க வலிமையுங் கொண்டு) தாக்கிவருகிற மதயானைகளும்,
காலாள்உம் – பதாதிகளும் (ஆகிய சதுரங்கசேனைகளின் மிகுதியாலாகிய
அதிகபாரத்தை), பொறாது – தாங்கமாட்டாமல், உரகர் முடிகள் சோர –
(கீழிருந்து பூமியைத் தாங்குகிற) நாகஜாதியார் தலைகள் சாய, யாதவன் ஆம்
நரபதிஉம் இருங்கிளைஉம் – யதுகுலத்தில் தோன்றிய கிருஷ்ணனாகிய
அரசனும் அவனுடன் நின்ற அவனது மிக்க சுற்றத்தவர்களும், பெருங்
கிளையோடு எதிர் இலாத சேதி குல நரபதிஉம் – மிக்க சுற்றத்தவருடன்
கூடிநின்ற ஒப்பற்ற சேதிநாட்டரசர் குலத்தவனான சிசுபாலனும், செய்த –
(ஒருவரோடொருவர்) செய்த, அமர் – யுத்தம் போன்ற யுத்தத்தை, சுர
அசுரரில் செய்தார் உண்டோ – தேவாசுரர்களிலுஞ் செய்தவருண்டோ?
[இல்லை யென்றபடி] (எ. று.)

    தேவாசுரயுத்தத்தினுங் கொடிய யுத்தத்தைச் செய்யலாயின ரென்பதாம்.
வேள்விக்கு வரும்போதே இருவரும் தம்தம் சேனைகளுடன்
வந்திருந்தனரென்றும், அவரவரது அன்புடைச் சுற்றத்தார் அவரவர்க்குப்போர்
துணையாயின ரென்றும் அறிக.  ஆதி – மண்டலமாயோடுதல்; இது
குதிரையின் கதிவகைகளிலொன்று; வலசாரி, இடசாரி முதலிய
கதிவிகற்பங்கட்கும் இது உபலக்ஷணம்.  இனி, ஆதி – நெடுஞ்செலவு என்றனர்
நச்சினார்க்கினியர் (கலித்.96: வரி 20; மதுரைக்காஞ்சி. வரி.390): அதாவது,
குதிரையின் நேரோட்டம்.  வயிரத்தேர் – வச்சிரரத்தினம் பதித்த தேருமாம்.
காலாள் – யானை தேர் குதிரையென்னும் வாகனமின்றிக் கால்களினால்
நடந்துசெல்லும் வீரர்.  உரகர் என்ற வடசொல் – (கால்களில்லாமையால்)
மார்பினாலூர்ந்து செல்பவரென்று காரணப் பொருள்படும்: உரஸ் – மார்பு.
இங்கு, உரகர் – சர்ப்பராஜனான ஆதிசேஷனும், வாசுகி முதலிய அஷ்டமகா
நாகங்களும்; வாசுகி முதலியோர் கிழக்கு முதல் எண்திசையிலும் இருந்து
பூமியைத் தாங்க ஆதிசேஷன் நடுவில் நின்று தாங்குகின்றனன் என்ப.  கிளை
– மரத்துக்கிளைப்போல் ஒருவரைத்தழுவி நிற்கும் உறவினர்க்கு
உவமையாகுபெயர்

யானைமேல் வரு நிருபரும், திறல் யானைமேல்
வரு நிருபரும்,
சோனை மா முகில் ஏழுமே நிகர் என்ன அம்பு
தொடுத்தலின்,
தானை ஆறும் நிறைந்து, பல் அணி ஆகி, மிஞ்சிய
சதுர் விதச்
சேனை யாவையும் மெய் சிவந்தன, சிந்தை
மா மலர் கருகவே.இதுமுதல் நான்கு கவிகள்- இருதிறத்துச்
சேனைகளும் போர் செய்தலையுணர்த்தும்.

 யானைமேல் வரு நிருபர்உம் – (கிருஷ்ணன் பக்கத்தவராய்)
யானைமேலேறிவந்த அரசர்களும், திறல் யானைமேல் வரு நிருபர்உம் –
(சிசுபாலன் பக்கத்தவராய்) வலிய யானைமேலேறி வந்த அரசர்களும்,
சோனைமா முகில் ஏழ்உம்ஏ நிகர் என்ன – விடாப்பெருமழை பொழியும்
பெரிய ஏழு மேகங்களுமே (தங்கட்குச்) சமான மென்று சொல்லும்படி,
அம்புதொடுத்தலின்-(இடைவிடாது) அம்புமழை சொரிந்ததனால், தானை
ஆறுஉம் நிறைந்து பல்அணி ஆகி மிஞ்சிய சதுர்விதம் சேனை யாவைஉம் –
அறுவகைப் படைகளும் நிரம்பிப் பற்பல அணிவகுப்புகளாய் மிகுந்திருக்கிற
நால்வகைச் சேனைகளிலும் பிராணிகளும், (புண்பட்டு), சிந்தை மா மலர் கருக
மெய்சிவந்த – (தம் தமது) மேலான இதயகமலம் வாடிக் கருக
இரத்தப்பெருக்கினால் உடல்சிவக்கப் பெற்றான்; (எ – று.)

     நிருபர் – வடசொல்.  மனிதரைக்காப்பவரென்று பொருள்படும்; நிரு –
மனிதர்.  முகில்ஏழ் – சம்வர்த்தம்;  ஆவர்த்தம், புஷ்கலாவர்தம், சங்கிருதம்,
துரோணம், காளமுகி, நீலவர்ணம்என.  தானை ஆறு – மூலப்படை,
கூலிப்படை, நாட்டுப்படை, காட்டுப்படை, துணைப்படை, பகைப்படை என்பன.
சிந்தைகருகமெய் சிவந்தன -முரண்தொடை.  உம்மை ஐந்தனுள்
முதலிரண்டும் – எண்ணுப்பொருளன: மற்றை மூன்றும் – முற்றும்மை.  ஏகாரம்
இரண்டனுள், முன்னது பிரிநிலையோடு தேற்றம்; பின்னது – ஈற்றசை.
அரசர்கள் மேகம்போல அம்புமழை சொரிந்ததனாற் படைகளாகிய நதிகள்
நிரம்பி என ஒரு பொருள் தொனித்தலுங் காண்க.  “பூவிற்குத்தாமரையே”
என்றபடி எல்லா மலர்களிலுந் தாமரை சிறத்தலால், அடைமொழிகொடாது
வாளா ‘மலர்’ எனப்பட்டு: மாமலர் எனவே, தாமரையென்றவாறுமாம்.

     இதுமுதல் ஆறுகவிகள் – பெரும்பாலும் ஒன்று மூன்று ஐந்தாஞ்சீர்கள்
மாச்சீர்களும், மற்றை நான்கும் விளச்சீர்களுமாகிய கழிநெடிலடி
நான்குகொண்ட எழுசீராசிரியவிருத்தங்கள்.

ஓர் இரண்டு வரூதினிக்குளும் உயர் தடங் கிரி ஒப்பவே
ஈர்-இரண்டு விதத்தினாலும் இயம்பல் உற்றன எண்ணில் பல்
தேர், இரண்டு அணி உருளினோடு உருள் சென்று முட்டின-தீஇடிக்
கார் இரண்டு எதிர் மலையுமாறென அண்ட பித்தி கலங்கவே.

ஓர் இரண்டு வரூதினிக்குள்உம் – (கிருஷ்ணன் சிசுபாலன்
என்னும்) இருதிறத்தார் சேனைகளிலும், உயர்தட கிரிஒப்ப – உயர்ந்த பெரிய
மலைகளுக்கு ஒப்பாக, ஈர் இரண்டுவிதத்தினால்உம் இயம்பல் உற்றன –
நான்குவகையினாற் பெயர் குறித்துச் சொல்லப்படுவனவான, எண் இல் பல்
தேர் – அளவிறந்த பலதேர்களின், இரண்டு அணி உருளினோடு உருள் –
அழகிய இரண்டு முன் சக்கரங்களோடு முன்சக்கரங்கள், – தீ இடி கார்
இரண்டு எதிர்மலையும் ஆறு என – நெருப்புமயமான இடியையுடைய இரண்டு
மேகங்கள் (ஒன்றோடொன்று) எதிர்த்துப் போர்செய்யும் விதம்போல, அண்ட
பித்தி கலங்க சென்று முட்டின – (அதிர்ச்சியினால்) அண்டகோளத்தின்
சுவர்நிலை கலங்கும்படி எதிரோடித் தாக்கின; (எ – று.)

தம்மேலேறிய அதிரதர் மகாரதர் ஸமரதர் அர்த்தரதர் என்ற நால்வகை
வீரர்களின் தகுதிக்கு ஏற்பத் தேர்கள் நால்வகையாகப் பகுத்துக்
கூறப்படுதலால், ‘ஈரிரண்டு விதத்தினாலு மியம்பலுற்றன தேர்’ என்றார்;
பல்+தேர் = பஃறேர்: நிலைமொழியீற்று லகரம் தகரம்வர ஆய்தமாகத்திரிதற்கு,
“குறில்வழி லளத் தவ்வணையி னாய்தம், ஆகவும்பெறூஉம் அல்வழியான”
என்பதும், லகரத்தின் முன்வருமொழிமுதல் தகரம் றகரமாகத்திரிதற்கு,
“னலமுன் றனவும் ணளமுன் டணவும் ஆகுந் தநக்க ளாயுங் காலே” என்பதும்
விதியாம்.  ‘எண்ணிலாத் தேர்’ என்றும் பாடமுண்டு.  வரூதிநீ, அண்டபித்தி –
வடசொற்கள்.  ‘அண்டபித்தி கலங்க முட்டின’ என்பது-உயர்வுநவிற்சியணி.
‘தடங்கிரி யொப்ப’ என்றும், ‘தீயிடிக்காரிரண்டெதிர் மலையுமாறென’ என்றும்,
ஒப்புமைகூறியது, உவமையணி. இரண்டும் சேர்ந்துவந்தது,
சேர்வையணியாம்.காரிரண்டு எதிர்மலைதல், இல்பொருளுவமை.

சிங்கம் ஒன்றுடன் ஒன்று சீறு செருக்கு எனும்படி, சேனைவாய்,
வங்கர், கொங்கணர், துளுவர், ஆரியர், மகதர், ஒட்டியர்,
மாளவர்,
கங்கர், கொங்கர், தெலுங்கர், சீனர், கலிங்கர், சிங்களர்,
கௌசலர்,
அங்கர், சோனகர், ஆன வீரர் அதிர்ந்து, தங்களின்
அமர் செய்தார்.

 சேனைவாய் – இருதிறத்துச் சேனைகளிலுமுள்ள, வங்கர்
கொங்கணர் துளுவர் ஆரியர் மகதர் ஒட்டியர் மாளவர் கங்கர் கொங்கர்
தெலுங்கர் சீனர் கலிங்கர் சிங்களர் கௌசலர் அங்கர் சோனகர் ஆனவீரர் –
வங்கம் முதற் சோனகமீறாகச்சொல்லப்பட்ட பதினாறு தேசத்தவர்களான
வீரர்களும்,-சிங்கம் ஒன்றுடன் ஒன்று சீறு செருக்கு எனும்படி – சிங்கங்கள்
ஒன்றோடொன்று சீறிக்களித்துப் போர்செய்யுந் திறத்தை உவமை கூறும்படி,
அதிர்ந்து தங்களின் அமர்செய்தார் – ஆரவாரித்துத் தங்களுக்குள்ளே
[ஒருவரோடொருவர்] போர்செய்தார்கள்; (எ – று.)

     பற்பல பாஷைகள் பேசும் பலவேறு தேசத்துச் சனங்கள்
போர்வீரர்களாய்ச் சேனைகளில் வந்து அமர்தல், இயல்பு: அன்றியும்
அவ்விராயசூய யாகத்துக்குவந்த பற்பலதேசத்து அரசர்களின் சேனைகளிலுள்ள
அவ்வத்தேசத்து வீரர்கள் இவ்விருவர்க்கும் சகாயமாய் இருதிறத்துச்
சேனைகளிலும் புக்குநின்று பேர் செய்யலாயினரென்க. உவமையணி. வங்கம்
முதலியன, ஐம்பத்தாறு தேசங்களிற் சேர்ந்தவை. இவற்றில் பெரும்பாலன,
பதினெட்டுப் பாஷைகள் வழங்குந் தேசங்களாகவுங் குறிக்கப்பட்டுள்ளன.
துளுவம் – பஞ்சதிரவிட தேசங்களில் ஒன்று;  மற்றவை – தமிழ் தெலுங்கு
கன்னடம் மலையாளம்.  ஆர்யர் விந்தியமலைக்கும் இமயமலைக்கும் இடையிலே
கிழக்கும் மேற்கும் கடலெல்லையாகவுள்ள ஆர்யாவர்த்த மெனப்படுகிற புண்ணிய
பூமியில் வாழ்பவர். ஒட்டியம் – ஓட்ரதேசம்.  ஸ்ரீசைலம், பீமேச்சுரம்,
ஸ்ரீகாளஹஸ்தி என்ற மூன்று சிவலிங்க ஸ்தானங்களையுடையதேசம்.
அக்காரணத்தால், த்ரிலிங்கதேச மெனப்பெயர் பெறும்; அது, தெலுங்கமென
விகாரப்பட்டது. இதுவே, தெலுங்கு பாஷைக்கு உரிய நாடு.  சிங்களம் –
ஸிம்ஹளம் என்ற வடசொல்லின் சிதைவு.  அது இலங்கைத் தீவு; ஈழநாடு.
கோஸலர் – கோஸல தேசத்தார்.  அங்கம் – சிவபிரானது நெற்றிக் கண்ணின்
நெருப்பினா லெரிக்கப்பட்ட மன்மதனது அங்கம் விழுந்த இடமாதல் பற்றிவந்த
பெயர்.  அதிர்ந்து – கர்ச்சித்துச் சிங்கநாதஞ்செய்து, சிங்கம் – ஸிம்ஹம் என்ற
வடசொல் சிதைந்தது;  (யானை முதலிய மிருகங்களையெல்லாம்) ஹிம்ஸிக்க
வல்லதாதலால் ஹிம்ஸமென வரவேண்டிய பெயர், எழுத்துநிலைமாறி, ஸிம்ஹம்
என வழங்கப்பட்டதென்க.

வெருவரும்படி கம்பு கொம்பு விதம்கொள் மா முரசு ஆதியா,
இருவர்தம் படைகளினும் ஊழி எழுந்த கால் என அதிர்தலால்,
மருவி, எண் திசை முகமும் நிற்பன மத்த வாரண கன்னமும்,
திரு விரும்பு புயத்து வானவர் செவிகளும், செவிடு ஆனவே.-வாத்திய கோஷம்.

 இருவர்தம் படைகளின்உம் – (கிருஷ்ணனும் சிசுபாலனுமாகிய)
இருவர்களுடைய சேனைகளிலும், கம்பு கொம்பு விதம் கொள் மாமுரசு ஆதி
ஆ – சங்குகளும் ஊதுகொம்புகளும் பலவகைகொண்ட பெரிய முரசங்களும்
முதலாக (ப்போர்க்கு உரிய வாத்தியங்கள்), வெருவரும்படி – (கேட்பவர்க்கு)
அச்சமுண்டாம்படி, ஊழி எழுந்த கால் என அதிர்தலால் – கற்பாந்த காலத்தில்
எழுந்துவீசுகிற காற்றுப்போல ஆரவாரித்தலால், எண்திசை முகம்உம் மருவி
நிற்பன மத்த வாரண கன்னம்உம் – எட்டுத்திக்குகளினிடத்தும் பொருந்தி
நிற்பனவான மதயானைகளின் காதுகளும், திரு விரும்பு புயத்து வானவர்
செவிகள்உம் – வீரலக்ஷ்மி விரும்பி வசிக்குந் தோள்களையுடைய
மேலுலகவாசிகளான தேவர்களின்காதுகளும், செவிடு ஆன – செவிடாய்
விட்டன; (எ – று.)

     உயர்வுநவிற்சியணி. வாத்தியகோஷம் எட்டுத்திசைகளின்
எல்லையிலும் மேலெல்லையிலுஞ் சென்று மிக அதிர்ந்து நன்கு தாக்கித் திக்
கஜங்களையும் தேவர்களையும் செவிடாக்கிவிட்டது என
அம்முழக்கத்தின் மிகுதியை வருணித்தவாறாம்.  வெருவரும்படி – வெருவு
என்ற வினைப்பகுதியும் வாஎன்ற துணைவினையும் சேர்ந்து விகாரப்பட்டு
‘வெருவா’ என நின்றது.  கம்பு, விதம், மத்தவாரணகர்ணம்-வடசொற்கள்.
‘ஊழியெறிந்தகால்’ என்றும் பாடமுண்டு.  ‘கம்புகொம்பு விதங்கள்’ என்ற
பாடத்துக்கு – சங்குகளின் வகைகளும் ஊதுகொம்புகளின் வகைகளும் என்று
பொருள் காண்க.

புடை படக் கிளைஆகி வந்து எதிர் பூ துரந்தரர் யாவரும்,
தொடை படப் பரிவுறு மனத்தொடு தொந்த யுத்தம் உடற்றினார்,
குடை எடுத்தனர், இருவரும்; பெறு கொடி எடுத்தனர்; கொற்ற வெம்
படை எடுத்தனர்;-மா மறைப் பசுபாலனும், சிசுபாலனும்.சுற்றத்தார்கள்போர்செய்ய கிருஷ்ணசிசுபாலரும்
பொருதல்.

புடைபட – பக்கங்களிலே பொருந்த, கிளை ஆகி வந்து –
(இருவர்க்கும்) சுற்றமாய்வந்து, எதிர் – எதிர்த்த, பூதுரந்தரர் யாவர்உம்-பூமியை
ஆளுகிற பாரத்தை வகிப்பவரான அரசர்களெல்லாரும், தொடை பட –
தொடர்ச்சியாக, பரிவு உறு மனத்தொடு – (தம்தம் தலைவரிடம்) பற்றுமிக்க
மனத்துடனே, தொந்தயுத்தம் உடற்றினார் – இவ்விருவராக ஒருவரோடொருவர்
போர்செய்து பகையழித்தார்கள்;  (அங்ஙனமாக), குடை எடுத்தனர் –
ஒற்றைவெண் கொற்றக்குடையை உயரத்தரித்துள்ளவர்களும், பெறுகொடி
எடுத்தனர் – (வெற்றிக்கு அறிகுறியாகப்) பெற்ற துவசத்தை
உயரநாட்டியுள்ளவர்களுமான, மா மறை பசுபாலன்உம் சிசுபாலன்உம்
இருவர்உம் – மகிமையுள்ளவேதங்கட்குத் தலைவனான கோபாலனாகிய
ஸ்ரீகிருஷ்ணனும் சிசுபாலனும்  ஆகிய இருவர்களும், கொற்றம் வெம்படை
எடுத்தனர் – வெற்றியையுடைய கொடிய ஆயுதங்களை (ப் போர்
செய்தற்பொருட்டு)க் கைகளிலெடுத்துக் கொண்டார்கள்; (எ – று.)

     ‘புடைபட’ என்பதற்கு – பெருந்தொகுதியாக என்றும், ‘தொடைபட’
என்பதற்கு – அம்புகள் (எதிரிகளின்மீது) படஎன்றும், ‘பரிவுறுமனத்தொடு’
என்பதற்கு – (தாம் மகாவீரராதலாற் போரில்) ஆசைமிக்க மனத்தோடு என்றும்
பொருள் கொள்ளலாம்.  பரிவு – கவலையுமாம்.  கிளை – படைத்துணை.  பூ
துரந்தரர், த்வந்த்வயுத்தம், பசுபாலன், சிசுபாலன்-வடசொற்கள்.  மாமறைப்
பசுபாலன் – சிறந்த பிரமாணமான வேதங்களை வெளியிட்டவனும்
அவ்வேதங்களினாற் கொண்டாடப்படுபவனுமான கோவிந்தன்.  ‘பசுபாலன்’
என்ற பெயர்-பசுக்களைக் காப்பவனென்றும் உயிர்களைக் காப்பவனென்றும்
பொருள்படும்.  ‘பசுபாலனும் சிசுபாலனும்’ என்றவிடத்துப் பிராசமென்னுஞ்
சொல்லணி காண்க

வேலினால், வடி வாளினால், வரி வில்லினால், உரைபெற்ற வெங்
கோலினால், இருவரும் முனைந்து, இரு குன்றம் ஒத்தன தேரினார்,
மாலினால் வரும் மத்த யானைகள் மலைவது ஒத்து மதித்த போர்-
நூலினால் வழு அற மலைந்தனர்-நுண்மை யாவினும் நுண்ணியார்.இருவரும் செய்தபோர்த்திறம்.

நுண்மை யாவின்உம் நுண்ணியார் இருவர்உம் – நுண்ணிய
பொருள்க ளெல்லாவற்றினும் நுண்ணிய தமது அறிவு நுட்பத்தை
யுடையவர்களான கண்ணனும் சிசுபாலனுமாகிய இருவரும்,-இரு குன்றம் ஒத்தன
தேரினார் – இரண்டு மலைகளைப் போன்றனவான தேர்களின்
மேலிருந்தவர்களாய்,- வேலினால் – வேலாயுதத்தைக் கொண்டும்,
வடிவாளினால் – கூரிய வாளாயுதத்தைக்கொண்டும், வரி வில்லினால்
உரைபெற்றவெம் கோலினால் – கட்டமைந்த வில்லினா லெய்யப்படுகிற
புகழ்பெற்ற கொடிய அம்புகளைக்கொண்டும், மாலினால் வரு மத்த யானைகள்
மலைவது ஒத்து – மயக்கத்துடனே வருகிற மதங்கொண்ட யானைகளிரண்டு
தம்மிற் போர் செய்வது போன்று, மதித்த போர் நூலினால் வழுஅற – நன்கு
மதிக்கப்பட்ட யுத்த சாஸ்திரமுறைப்படி தவறாமல், முனைந்து மலைந்தனர் –
ஊக்கங்கொண்டு போர்செய்தார்கள்;

    நுண்மையாவினும் நுண்ணியார் – நுண்ணிய பொருள்களனைத்தையும்
நுட்பமாக உணரும் அதிசூக்ஷ்மபுத்தியுடையோர்.  நுண்மை-பண்பாகுபெயராய்,
நுண்ணியபொருளின்மேல் நின்றது.  ‘நுண்ணியார்’ என்றவிடத்து, அறிவினது
நுண்மை அதனையுடையார்மே லேற்றிக் கூறப்பட்டது, வடிவாள் –
வடிக்கப்பட்ட வாள்;  வடித்தல் – நெருப்பிற் காய்ச்சியடித்துக் கூராக்குதல்:
தேர்ந்தெடுக்கப்பட்ட வாள் எனினுமாம்.  தேர்க்குக் குன்றம் – வலிமை பருமை
உயர்வுகளில் உவமம்.  தேரினார் – குறிப்பு முற்றெச்சம்.  ‘குன்றமொத்துயர்
தேரினார்’ என்பதும் பாடம்.  ‘மாலினால்’ என்றதில் ‘ஆல்’ என்ற மூன்றனுருபு
அடைமொழிப்பொருளது.  உரை பெற்ற – சிறந்ததென்று கொண்டாடப்பெற்ற.

வெஞ் சினம் முடுக, ஒருவருக்கு ஒருவர் வெல்லலும்
தோற்றலும் இன்றி,
வஞ்சினம் உரைசெய்து, உள்ளமும், மெய்யும், வாகு
பூதரங்களும், பூரித்து,
எஞ்சினர்தமைப்போல் இளைத்த பின், இனி வான் ஏற்றுதல்
கடன் எனக் கருதி,
கஞ்சனை முனிந்தோன், இவன் முடித் தலைமேல், கதிர்
மணித் திகிரி ஏவினனேஇருவரும் சிலநேரம்சமமாகப் பொருதபின்பு, கண்ணன்
சிசுபாலன்மேல் தனது சக்கராயுதத்தைப் பிரயோகித்தல்.

வெம் சினம் முடுக – கடுங்கோபம் மேல்மேல் மூள,
ஒருவருக்கு ஒருவர் வெல்லல்உம் தோற்றல்உம் இன்றி-ஒருவரை மற்றொருவர்
வெல்லுதலும் ஒருவருக்கு மற்றொருவர் தோல்வியடைதலும் இல்லாமல்,
வஞ்சினம் உரைசெய்து-(ஒருவரையொருவர் கொல்வதாகச்) சபதவார்த்தைகளைச்
சொல்லிக்கொண்டு, உள்ளம்உம் மெய்உம் வாகு பூதரங்கள்உம் பூரித்து-மனமும்
உடம்பும் மலைகள்போன்ற தோள்களும் (வீராவேசத்தாற்) பூரிப்படையப்பெற்று,
(இருவரும் சில நேரம் பொருது), எஞ்சினர்தமை போல் இளைத்தபின் –
வலியொடுங்கினவரைப் போலக் களைப்புற்ற பின்பு, கஞ்சனை முனிந்தோன் –
கம்சனைக் கோபித்துக் கொன்றவனான கண்ணபிரான், இனி வான் ஏற்றுதல்
கடன் என கருதி – ‘இனி (இவனை) மேலுலகத்துக்கு அனுப்புதல் முறைமையாம்’
என்று நினைத்து, இவன் முடி தலைமேல் – இந்தச் சிசுபாலனுடைய கிரீடந்தரித்த
சிரசின்மேல், கதிர்மணி திகிரி ஏவினன் – பிரகாசமுள்ள அழகிய
சக்கராயுதத்தைப் பிரயோகித்தான்;                          (எ – று.)

     கம்சனும் சிசுபாலனும் துர்வாசமுனி சாபமுற்ற ஜயவிஜயரின் பிறப்பாய்
ஓரினத்தவ ராதலால், அவர்கட்கு முன்பு வாக்களித்தபடி கம்சனைக்கொன்ற
கண்ணன் தானே இப்பொழுது சிசுபாலனையுங் கொல்லப் படைக்கல
மெறிந்தனன் என்பது, ஈற்றடியின் கருத்து.  திருமாலுக்குச் சக்கரம் முதலியன
ஆயுதவகையில் மாத்திரமன்றி ஆபரணவகையிலும் அமைதல் தோன்ற,
‘மணித்திகிரி’ எனப்பட்டது.  சாபநிவிருத்திபெறுதற்கு உரியகாலம்
குறுகியிட்டதனால், ‘இனி வானேற்றுதல் கடன்’ என்று எம்பெருமான்
திருவுள்ளம் பற்றினன்.  வஞ்சினம் – வீரவாதம்.  உள்ளம் பூரித்தல் –
யுத்தத்தில்  உற்சாகத்தால் மனம் கொதித்துப் பொங்குதல்: உடம்பும்
தோள்களும் பூரித்தல் – அந்தப் போர்மகிழ்ச்சியாற் புடைபருத்தல்.  பாஹு
பூதரம் – வடமொழித்தொடர்;  முன்பின்னாகத்தொக்க உவமைத்தொகை.
‘எஞ்சினர் தமைப்போல்’ என்பதற்கு – இறந்தவரைப்போல வென்று
உரைப்பாருமுளர்.  பூதரம் – மலை, (மேலுங்கீழும் இருந்து) பூமியைத்
தாங்குவது.  வான் – இங்கே பரமபதம்.

     இது முதல் இச்சருக்கம் முடியுமளவும் பதினேழுகவிகள் –
இச்சருக்கத்தின் பதினெட்டாங்கவிபோன்ற எழுசீர்க்கழிநெடிலடியா
சிரியவிருத்தங்கள். 

ஏவிய திகிரி, வீரரைத் துறக்கம் ஏற விட்டிடும்
இரவியைப்போல்,
மேவிய பகையாம் மைத்துனன் முடியை விளங்கு
கோளகை உற வீசி,
ஆவிகள் அனைத்தும் நிறைந்து, ஒளி சிறந்த அச்சுதன்,
அலைகொள் பாற்கடலில்
தீவிய அமுதம் அமரருக்கு அளித்தோன், திருக் கரம்
சென்று சேர்ந்ததுவே.சக்கரம் சிசுபாலனைத்தலைதுணித்தல்.

ஏவியதிகிரி – (அங்ஙனம் கண்ணன்) செலுத்திய
சக்ராயுதமானது,- வீரரை துறக்கம் ஏற விட்டிடும் இரவியை போல் –
(பின்னிடாது பொருது இறந்த) வீரரை மேலுள்ளதான வீரசுவர்க்கத்திற்குச்
செல்லும்படி வழிவிடுகிற சூரிய மண்டலத்தைப்போலப் பிரகாசித்துக்கொண்டு
சென்று, மேவிய பகை ஆம் மைத்துனன் முடியை விளங்கு கோளகி உறவீசி –
நெருங்கிய பகைவனான மைத்துன முறைமையுடைய சிசுபாலனது தலையை(த்
துணித்து விளங்குகிற) அண்டகோளத்தின் முகட்டைப் பொருந்தும்படி
வீசியெறிந்து விட்டு,-ஆவிகள் அனைத்தும் நிறைந்து – உயிர்களிலெல்லாம்
வியாபித்து, ஒளிசிறந்த – ஒளிமிக்க விளங்குகின்ற, அச்சுதன் – அச்சுதனென்னுந்
திருநாம முடையவனும், அலைகொள் பாற்கடலில் தீவிய அமுதம் அமரருக்கு
அளித்தோன் – அலைகளைக்கொண்ட திருப்பாற்கடலில் தோன்றிய இனிமையான
அமிருதத்தைத் தேவர்கட்குக் கொடுத்தருளியவனுமான அக் கண்ணபிரானது,
திரு கரம் – சிறந்த வலத்திருக்கையில், சென்று சேர்ந்தது – போய்ச்
சேர்ந்துவிட்டது; (எ – று.)

     வீரசுவர்க்கஞ்செல்வார் இடையிலுள்ள சூரியமண்டலத்தைப் பிளந்து
கொண்டு அதன் வழியாய் மேற்செல்லவேண்டுதலால், ‘வீரரைத் துறக்கமேற
விட்டிடுமிரவி’ எனப்பட்டது.  ஒளிமிகுதியினாலும், வட்டவடிவினாலுமேயன்றி,
வீரனான சிசுபாலனது உயிரைப் பரமபதமேறச் செலுத்துதலினாலும்,
சக்கரத்துக்கு வீரருயிரைத் துறக்கமேற விட்டிடும் இரவி உவமையாகும்.
தேவர்கள் பக்கல் பக்ஷபாதமுடையவனாதலால் அசுராம்சமுள்ள சிசுபாலனை
அழித்தனனென்பது ஈற்றடியில் தொனிக்கும், மைத்துனன் – இங்கே அத்தை
மகன்.  அச்யுதன் என்ற வடமொழிப்பெயர் – அழிவில்லாதவனென்றும்,
சரணமடைந்தவர்களைக் கைவிடாதவனென்றும் பொருள்படும்.  தீவிய – தீம்
என்ற பண்பினடியாப் பிறந்த குறிப்புப் பெயரெச்சம்.  ‘திவ்ய’ என்றவடமொழி
விகாரப் பட்டதெனக் கொள்ளுதலு மொன்று, சேர்ந்ததுவே-சிறுபான்மை
குற்றியலுகரம் உயிர்வரக் கெடாது பொதுவிதியால்
வகரவுடம்படுமெய்பெற்றது. 

சேதி மன்னவன்தன் முடியினை நெடியோன் திகிரி சென்று
அரிந்திட, ஒரு பொற்
சோதி மற்று அவன்தன் உடலின்நின்று எழுந்து, சுடரையும்
பிளந்துபோய், மீண்டு,
மாதிரம் அனைத்தும் ஒளியுற விளக்கி, மண் அளந்தருள்
பதம் அடைய,
வேதியர் முதலோர் யாவரும், வேள்விப் பேர் அவை
வேந்தரும் கண்டார்.சிசுபாலனுயிர்கண்ணபிரானது திருவடியிற் சேர்தல்.

சேதி மன்னவன்தன் முடியினை – சேதிதேசத்தரசனான
சிசுபாலனது தலையை, நெடியோன் திகிரி சென்று அரிந்திட – கண்ணபிரானது
சக்ராயுதம் போய் அறுத்தவுடன், ஒரு பொன் சோதி – பொன்மயமான ஓர்
ஒளியானது, அவன்தன் உடலினின்று எழுந்து – அந்தச்சிசுபாலனது
உடம்பினின்று எழுந்து, சுடரைஉம் பிளந்து போய்-சூரிய மண்டலத்தையும்
பிளந்துகொண்டு ஊடுருவிச்சென்று, மீண்டு – திரும்பி, மாதிரம் அனைத்துஉம்
ஒளி உற விளக்கி – திக்குகளையெல்லாம் சோதிமயமாகப் பிரகாசிப்பித்துக்
கொண்டு, மண் அளந்தருள் பதம் அடைய – (முன்பு திரிவிக்கிரமாவதார
காலத்தில்) உலகத்தை யளந்தருளிய கண்ணபிரானது திருவடியிற் சேர,
(அவ்வுயிர் பரமாத்மாவினிடம் சாயுச்சியமடைந்ததை), பொ வேள்வி அவை
வேந்தர்உம் வேதியர் முதலோர் யாவர்உம் கண்டார் – பெரிய அந்தயாக
சபையிற் கூடியிருந்த அரசர்களும் அந்தணர்கள் முதலானவர்களெல்லாரும்
பார்த்தார்கள்; ( எ – று.)- மற்று – அசை.

    எம்பெருமானது திருவடியே வீடாயிருக்குமென்ற கோட்பாடு, இங்கு
விளங்குகின்றது. “தேரார்நிறைகதிரோன் மண்டலத்தைக் கீண்டுபுக்கு”
“வெங்கதிர்ப்பரிதிவட்டத்தூடுபோய்”, “இருளகற்று மெரிகதிரோன் மண்டலத்தூ
டேற்றிவைத்து” என்ற அருளிச்செயல்களாலும், பரமபதஞ் சேர்வார்
சூரியமண்டலத்தினூடே போதலுணர்க.  சுடர்-ஒளி; முச்சுடரில் சந்திர
அக்கினியராகிய மற்றை யிருசுடர்க்கும் ஒளியைக்கொடுத்து வாங்கும்
ஆயிரங்கிரணங்களையுடைய சிறப்புப்பற்றிச் சூரியன் ‘சுடர்’ எனப்பட்டான்.
மகாபலிசக்கரவர்த்தியைச் செருக்கடக்குமாறு திருமால் உலகமளந்தது,
அரசிழந்து வருந்திய தேவர்களைப் பாதுகாத்தருளுதற்பொருட்டாதலாலும்,
உலக மளந்து கொள்ளுகிற வியாஜத்தால் எம்பெருமான் எல்லாப்பிராணிகளின்
முடியிலும் தனது அடியைவைத்து அனைத்துயிரையும்
ஆட்கொண்டருளியதனாலும், ‘மண்ணளந்தருள்பதம்’ எனப்பட்டது. அன்றியும்,
உயர்ந்தவர் செயல்களைக் குறிக்கும் வினைச்சொற்களோடெல்லாம் ‘அருள்’
என்பது துணைவினையாய் நின்று மேன்மைப்பொருள் குறிக்கும்; படைத்தருள்,
காத்தருள், அழித்தருள் முதலியன காண்க.  நெடியோன்-ஸ்ரீமகாவிஷ்ணு

‘ஈது ஒரு புதுமை, இருந்தவா!’ என்பார்; ‘இந்திரசாலமோ?’ என்பார்;
‘மாது ஒரு பாகன் அல்லது, இக் கண்ணன் மதி குலத்தவன்
அலன்!’ என்பார்;
‘கோது ஒரு வடிவாம் புன்மொழி கிளைஞர் கூறினும்
பொறுப்பரோ?’ என்பார்;
காது ஒரு குழையோன் இளவலைத் தேர்மேல் கண்டு தம் கண்
இணை களிப்பார்.அதுகண்ட அனைவரும்கொண்டாடி மகிழ்தல்.

(அதுகண்ட அரசர் முதலியோரெல்லாரும்), ஈது ஒரு புதுமை
இருந்தஆ என்பார் – (இவனுடம்பினின்று ஒருசோதி தோன்றி யெழுந்து
கண்ணனது பாதத்திற்சேர்ந்த) இஃது ஓர் அதிசயம் இருந்தவிதம் (என்னே!)
என்று கொண்டாடிச்சொல்பவர்களும், இந்திரசாலம் ஓ என்பார் – (இது
மெய்த்தோற்றமன்றிப் பொய்த்தோற்றமாகிய) இந்திரசாலவித்தையோ என்று
சொல்பவர்களும், இ கண்ணன் மாது ஒரு பாகன் அல்லது மதிகுலத்தவன்
அவன் என்பார்-இந்தக் கிருஷ்ணன் அர்த்தநாரீசுவரமூர்த்தியான
சிவபிரானேயல்லாமற் (சாதாரணமனிதனான) சந்திரகுலத்தானொருவனல்லன்
என்று சொல்பவர்களும், கோது ஒரு வடிவுஆம் புல் மொழிகிளைஞர்
கூறின்உம் பொறுப்பர் ஓ என்பார்-குற்றந்தானே ஒரு வடிவமெடுத்தாற்போன்ற
நிந்தனைச்சொல்லை நெருங்கிய உறவினரே கூறினாலும் கேட்பவர்
பொறுப்பரோ? [பொறார்] என்று சொல்பவர்களும், காது ஒருகுழையோன்
இளவலைதேர்மேல் கண்டு தம் கண் இணை களிப்பார் – ஒரு காதிலே
குண்டலத்தைத் தரித்தவனான பலராமனது தம்பியாகிய கண்ணபிரானைத்
தேரின் மீதிருக்கத் தரிசித்து (க் கண்படைத்த பயன்பெற்றோமென்று) தங்கள்
கண்களிரண்டுங் களிக்கப் பெறுபவர் களுமானார்கள்; (எ – று.)

    காதொருகுழையோனிளவலைத் தேர்மேற்கண்டு – கண்ணன்
வெற்றிபெற்று விளங்கிய காட்சியைச் சேவித்து.  இக்கண்ணன் பக்கல்
மனிதபாவனையை யொழித்துத்தேவபாவனையையே கொள்ளவேண்டுமென்பது,
இரண்டாமடியின் உட்கொள்.  நெருங்கிய உறவினன் செய்த பிழையைப்
பொறுத்திலனென்ற குற்றம் இதனாற் கண்ணனுக்கு வராதென்பது,
மூன்றாமடியின் தாற்பரியம்.  மாது ஒரு பாகன் – அம்பிகையை
வாமபாகத்திலுடையவன்.  கோதொரு வடிவாம் புன்மொழி – குற்றத்தின் ஒரு
வடிவமான வசைமொழி யெனினுமாம்.  காதொரு குழையோன் – ஒரு காதிலே
குண்டலத்தையும் மற்றொரு காதிலே குழையையும் அணிந்தவன்.  இளவல் –
இளமையுடையவன்; அல் – பெயர்விகுதி.  ஆ – ஆறு என்பதன் விகாரம்.
இச்சொல் இங்ஙனம் விகாரப்பட்டு வரும் போது பலவிடங்களில் ‘என்னே’
என்பது தொக்குநிற்றலை நூல்களிற் காணலாம்.   

அதிசயித்து இவ்வாறு இருந்துழி, இருந்தோர் அனைவரும்,
ஆழியான்தன்னைத்
துதி செய, தருமன் சுதன் முதல் எவரும் தொழுது, எதிர்
வந்து வந்து இறைஞ்ச,
விதி எனப் பொருத வெங் களத்திடை, அவ் வியாத மா முனி
எடுத்து உரைப்ப,
மதியுடைக் கடவுள்-வீடுமன் முதலாம் மன்னவர்
யாவரும் கேட்டார்.அனைவரும் கேட்பவியாசமுனிவன் சிசுபாலனது
பழைய வரலாற்றை யெடுத்துக் கூறத்தொடங்குதல். 

இ ஆறு அதிசயித்து இருந்த உழி – இப்படி
ஆச்சரியமடைந்திருந்த போது, இருந்தோர் அனைவர்உம் ஆழியான் தன்னை
துதி செய – அங்கிருந்த அரசர் அந்தனன் முதலியோ ரெல்லாரும்
கண்ணபிரானைத் தோத்திரஞ்செய்ய, தருமன் சுதன் முதல் எவர்உம் எதிர்
வந்து வந்து தொழுது இறைஞ்ச – தருமபுத்திரன் முதலான
பாண்டவர்களெல்லாரும் கண்ணபிரானெதிரில் வந்து வந்து கைகூப்பி வணங்க,-
விதி என பொருத வெம்களத்திடை – ஊழ்வினைப்பயனென்னும்படி போர்
செய்த கொடிய அந்த யுத்த களத்திலே, அ வியாத மா முனி எடுத்து உரைப்ப
– அந்த வேத வியாசமகாமுனிவன் (கண்ணனைப்பலவாறு நிந்தித்து அழிந்த
சிசு பாலனது உடலினின்று ஒரு சோதி எழுந்து கண்ணனது திருவடியிற்
சேர்ந்ததற்குக் காரணமான வரலாற்றை) எடுத்துச் சொல்ல, மதி உடை கடவுள்
வீடுமன் முதல் ஆம் மன்னவர் யாவரும் கேட்டார் – சிறந்த அறிவுடைய
தெய்வத்தன்மையுள்ள பீஷ்மன் முத லான அரசர்களெல்லோரும்  (அதனைக்) கேட்பவரானார்கள்; (எ – று.)-
அவ்வரலாற்றை, அடுத்த ஏழுகவிகளிற் காண்க.

    இருந்துழி-தொகுத்தல்.  ஆழியான் கடல்போலும் கருநிற முடையவன் :
அல்லது, சக்கராயுதத்தை யுடையவன்: அன்றி, கடலிற் பள்ளிகொள்பவன்
முன்பு செய்தவினை தவறாது பலிப்பது போலச் சிசுபாலனைத் தவறாது
கொல்லும்படி போர்செய்த இடமென்பார், ‘விதியெனப் பொருதகளம்’ என்றார்.
சிசுபாலன் இறத்தற்கேற்ற ஊழ்வினையே இங்ஙனம்போராய் விளைந்த
தென்னும்படி  பெரும்போர்செய்த கள மெனினுமாம்.  பொருத களம்-
பெயரெச்சம் இடப்பெயர்கொண்டது.  அவ்வியாதமாமுனி – கண்ணனுக்கு
அக்ரபூஜை செய்யும்படி முன்புசொன்ன வியாசமுனிவன் என்றபடி;
அகரச்சுட்டு, பிரசித்தியையுங்காட்டும்.  அஷ்டவசுக்களில் ஒருவனது
அம்சமாதல் தோன்ற, ‘கடவுள் வீடுமன்’ எனப்பட்டான்.  பீஷ்மன் என்ற
வடசொல், வீடுமனென விகாரப்பட்டது; அச்சொல்லுக்கு – பயங்கரனானவ
னென்பது உற்பத்தி யருத்தம்: பயங்கரமான விரதமுடையவனென்பது கருத்து.
இவன் தனது தந்தைக்கு யோஜநகந்தியை இரண்டாவது மணஞ்செய்வித்தற்கு
அவளை வளர்த்த தந்தையான செம்படவன் இசைதற் பொருட்டு, தான்
மணஞ்செய்து கொள்வதில்லை யென்றும், மூத்தவனாய்ப் பட்டத்துக்கு உரிய
தனது இராச்சியத்தையும் மற்றை எல்லாச்செல்வங்களையும் தனக்குச் சிறிய
தாயாக வருமவளுக்குப் பிறக்கும் பிள்ளைக்கே கொடுப்பதாகவும், இங்ஙனம்
ஒழித்தற்கரிய மண்ணாசை பெண்ணாசை பொன்னாசையென்னும்
மூவகையாசையையும் இளமையிலேயே ஒழித்துக் கேட்போர் அஞ்சும்படியான
சபதத்தைச் செய்ததனால், இவனுக்கு இப்பெயர்; தேவர்கள் முன்னிலையில்
இந்தவிரதத்தை மேற்கொண்டதனால், தேவவிரதனென்றும் இவனுக்குப்
பெயருண்டு. 

ஐவகை வடிவாய், எங்குமாய், நின்ற அச்சுதன், அமலன்,
ஆனந்தன்,
செய் ஒளி திகழும் பங்கயக் கண்ணன், திருமகள்
கொழுநனைக் காண,
துய்ய செய் தவத்துத் துருவாச முனிவன் சேறலும், சுடர்
கொள் வைகுண்ட
மெய் உறு கோயில் துவார பாலகர் அவ் வேத
பண்டிதன்தனை விலக்க,இதுமுதல் ஏழுகவிகள் -ஒருதொடர்:
வியாசமாமுனிவன் கூறிய பழையவரலாறு. 

ஐவகை வடிவு ஆய்-ஐந்துவகை வடிவமுடையவனாய், எங்கும்
ஆய் நின்ற-எல்லாவிடத்தும் வியாபித்து நின்ற, அச்சுதன் – அச்யுதனென்னுந்
திருநாமமுடையவனும், அமலன் – குற்றமில்லாதவனும், ஆனந்தன் –
பேரானந்தத்தை யுடையவனும், செய் ஒளி திகழும் பங்கயம் கண்ணன் –
செந்நிறவொளிவிளங்குந் தாமரை மலர்போன்ற திருக்கண்களை யுடையவனும்,
திருமகள் கொழுநனை-இலக்குமியின் கணவனும் ஆகிய ஸ்ரீமந்நாராயணனை,
காண தரிசிப்பதற்காக, துய்ய செய் தவத்து துருவாச முனிவன் சேறலும் –
பரிசுத்தமான செய்த தவத்தையுடைய துருவாசமகாமுனிவன்
(ஸ்ரீவைகுண்டத்துக்குச்) செல்லும்போது, சுடர் கொள் வைகுண்டம் கோயில்
மெய் உறு துவாரபாலகர் – பேரொளியைக் கொண்ட அந்த ஸ்ரீ
வைகுண்டலோகத்திலுள்ள கோயிலின் வாயில்காவலாளரான உண்மைக்
குணம்பொருந்திய ஜயவிஜயர்கள், அ வேதபண்டிதனை விலக்க – வேதங்களில்
தேர்ந்தவனான அத்துருவாசமுனிவனைத் (திருக்கோயினுட் புகவொட்டாது) தடை
செய்ய, (எ – று.)- ‘விலக்கிய இருவர் தம்மையும் அந்த முனிவரர் சபித்தான்’
என அடுத்த செய்யுளோடு குளகமாகத் தொடரும்.

    ‘ஐவகைவடிவு’ என்றது – பரத்வம், வியூகம், விபவம், அந்தர்யாமித்வம்,
அர்ச்சை என்ற திருமாலின் ஐவகை நிலைகளை.  இவற்றில், பரத்வமாவது –
பரமபதத்தி லெழுந்தருளி யிருக்கும் நிலை.  வியூகமாவது – வாசுதேவ
ஸங்கர்ஷண ப்ரத்யும்ந அநிருத்தர்களாகிய நான்கு ரூபத்துடன் திருப்பாற்கடலி
லெழுந்தருளி யிருக்கும் நிலை.  விபவம்-ராமகிருஷ்ணாதி அவதாரங்கள்.
அந்தர்யாமித்வம்-சராசரப் பொருள்க ளெல்லாவற்றினுள்ளும் எள்ளினுள்
எண்ணெய்போல மறைந்து வசித்தல்: அடியார்களின் மனத்தில் வீற்றிருத்தலும்
இதில் அடங்கும்.  அர்ச்சை – விக்கிரகரூபங்களில் ஆவிர்ப்பவித்தல்.
(“வலனோங்கு பரமபத மாமணிமண்டபத்திலமர், நலனோங்கு பரம்பொருளாய்
நான்குவியூகமுமானாய், உபயகிரிப்புய ராமனொடுகண்ணன் முதலான,
விபவவுருவமுமெடுத்து வீறுமுயிர்தொறுங்குடிகொள், அந்தரியாமியுமான
தமையாமே எளிதாக, இந்தநெடுவேங்கடத்திலெல்லோருந்தொழ நின்றோய்”,
“வடிவைந்தின்வாழுமிடம், வைகுந்தம் பாற்கடல் மாநீரயோத்தி வண்பூந்துவரை,
வைகுந்த மன்பர்மனம் சீரரங்கம் வடமலையே” என்பவை இங்கு
நோக்கத்தக்கன).  செய்தவத்துத் துருவாச முனிவன் – தவஞ்செய்த
துருவாசமுனிவன் என்க.  “மதியாதவன்கதிர் மின்மினிபோலொளிர் வைகுந்தம்”
என்றபடி பரமபதம் மிக்க சோதிமயமாய் விளங்குதலால், ‘சுடர்கொள்
வைகுண்டம்’ எனப்பட்டது.  செய்யொளி திகழும் பங்கயம் – செந்தாமரை.
பங்கயக் கண்ணன் – புண்டரீகாக்ஷன். 

விலங்கிய இருவர்தம்மையும் அந்த வெஞ் சின முனிவரன்
வெகுண்டு,
‘துலங்கிய கோயில் துவாரம் விட்டு, அவனி தோன்றுமின்,
போய்’ எனச் சபித்தான்,
அலங்கல் அம் துளவ மௌலியான் அது கேட்டு,
அந்தணன்தனை எதிர்கொண்டு,
‘கலங்கிய துவாரபாலர் நின் சாபம் கடப்பது
எக் காலமோ?’ என்றான்.

விலங்கிய இருவர் தம்மைஉம் – (அங்ஙனந்) தடுத்த
அவ்வாயில் காவலாளரிருவரையும், அந்த வெம் சின முனிவரன் –
கடுங்கோபமுள்ள ரிஷிச் சிரேஷ்டனான அந்தத் துருவாசமாமுனிவன்,
வெகுண்டு – கோபித்து, துலங்கிய கோயில் துவாரம் விட்டு போய் அவனி
தோன்றுமின் என சபித்தான் – ‘விளங்குகின்ற இத்திருக்கோயில்வாயிலை
விட்டுப்போய் (நீங்கள்) பூமியிற் பிறக்கக்கடவீர்’ என்று சாபமிட்டான்;
அலங்கல் அம் துளவம் மௌலியான் – மாலையாகத் தொடுத்த அழகிய
திருத்துழாயைச் சூடிய திருமுடியை யுடையவனான திருமால், அது கேட்டு-
அச்சாப வார்த்தையைச் செவியுற்று, அந்தணன் தனை எதிர்கொண்டு –
அம்முனிவனை எதிரில் வந்து வரவேற்று உபசரித்து, கலங்கிய துவாரபாலர்
நின்சாபம் கடப்பது எக்காலம்ஓ என்றான் – ‘(உனது சாபத்தாற்) கலங்கிய
இவ்வாயில்காவலர் உனது சாபம் நிவிருத்தியாகப் பெறுவது எந்தக் காலத்திலோ?’
என்று வினாவினான்;

     தன்னை வைகுண்டத்துக்குப் போகவொட்டாதபடி கோயில் வாயிலில்
நின்று கதிவிலக்கினவர்களைக் கோபித்து அவ்வுலகத்தில் அவ்விடத்தையும்
அதிகாரபதவியையும் இழந்து கீழுள்ள பூலோகத்தில் ஜனனகதியிற் சேர்க
என்று சபித்தான்.  தவத்திற் சிறந்து ஆற்றலாற் பெரியரான முனிவர் சபித்த
சாபம் அவர்கள் தாமே நிவிருத்தி செய்தாலன்றி முழுமுதற்கடவுளாலும் நீக்க
வொண்ணாதென்பது இங்கு விளங்கும்.  ‘அம் துளவம் அலங்கல் மௌலியான்’
என மொழிமாற்றி, அழகிய திருத்துழாய்மாலையையணிந்த முடியை
யுடையானென்றல், நேர். ‘விலங்கிய’ என்பதைப் பிறவினைப் பொருளில் வந்த
தன்வினை யென்றாவது, விலக்கிய என்ற பிறவினை எதுகை நயம் நோக்கி
விலங்கிய என மெலித்தல் விகாரமடைந்த தென்றாவது கொள்க.  “சாபத்தாலும்
சாபமொழி தன்னால் வளருந்தவத்தாலும், கோபத்தாலும் பேர் படைத்த
கொடிய முனிவன் துருவாசன்” என்னும்படி துருவாசமுனிவன் மிக்க
முன்கோபியாதலால், ‘வெஞ்சின முனிவரன் எனப்பட்டான்;
‘சுலபகோபரானமஹர்க்ஷி’ என்றான், இவனைக் காளிதாஸனும். “குணமென்னுங்
குன்றேறிநின்றார் வெகுளிகணமே” ஆதலால் அக்கோபம் விரைவில் தணிந்து
அருளுமியல்புடையனென்பார் ‘அந்தணன்’ என்றார். 

என்றலும், முனிவன் பரிந்து, ‘இவர் எழு கால் இன்புறும்
அன்பராய் வருதல்;
அன்றி, மும் மடங்கு பகைவராய் வருதல்; அல்லது, இங்கு
உன் பதம் அணுகார்;
மன்றல் அம் துளப மாலையாய்!” என்ன, மலர்மகள்
மகிழ்நனும், அவரை,
‘கன்றிய மறையோன் சாபம் நீர் கடக்கும் கருத்து மற்று
யாதுகொல்?’ என்றான்.

என்றலும் – என்று (திருமால்) வினாவியவுடனே, முனிவன் –
துருவாசன், பரிந்து-(திருமாலின் கோயில்வாயில் காவலாளரைத் தான்
சபித்தமைக்கு) இரங்கி, ‘மன்றல் அம் துளபம்மாலையாய் – நறுமணமுள்ள
அழகிய திருத்துழாய்மாலையை யுடையவனே! இவர்-இத்துவாரபாலகர், இன்பு
உறும் அன்பர் ஆய் எழு கால் வருதல் – (தேவரீர் பக்கல்) மகிழ்ச்சி மிக்க
அன்பையுடைய பக்தர்களாய் ஏழுபிறப்புப் பிறத்தல், அன்றி-அல்லாமல்,
பகைவர் ஆய் மும் மடங்கு வருதல் – (தேவரீர்க்கு) விரோதிகளாய் மூன்று
முறை பிறத்தல், அல்லது – என்ற இவ்விரண்டிலொன்றினாலன்றி, இங்கு
உன்பதம் அணுகார் – இவ்விடத்தில் தேவரீருடைய திருவடியைச்சாரார்,’ என்ன
– என்று (சாபநிவிருத்தியை வகுத்துக்)கூற,-மலர்மகள் மகிழ்நன்உம் –
செந்தாமரை மலரில்வாழுந் திருமகளின் கணவனான அத்திருமாலும், அவரை –
அவ்வாயிலோரை நோக்கி, கன்றிய மறையோன் சாபம் நீர் கடக்கும் கருத்து
யாதுகொல் என்றான் – ‘கோபித்த முனிவன் (உங்களைச்சபித்த) சாபத்தை நீங்கள்
நிவிருத்தி செய்துகொள்ளும் ஆலோசனை (இவ்விரண்டில்) எது?’ என்று
வினவினான்; (எ – று.) மற்று – அசை; வினைமாற்றுமாம்.

     எழுமுறை அன்பராய்ப் பிறந்து சாபந் தொலையக் கருதுகின்றீரோ?
மும்முறை பகைவராய்ப்பிறந்து சாபந் தொலையக் கருதுகின்றீரோ? இவ்
விருவகையில் நுமது விருப்பம் யாது? என்று வினவினான்.  ‘பரிந்து’ என்றது,
அவன் கொண்ட கழிவிரக்கத்தைக் காட்டிற்று. ‘அன்றி’ என்றது –
விகற்பப்பொருளில் வந்தது.  ‘துளவமோலியாய்’ என்றும் பாடமுண்டு.
மலர்மகள் மகிழ் நன் – மலர்மகளோடு கூடிமகிழ்பவன்.  மகிழ்நன் என்ற
பெயரில், மகிழ் – பகுதி;  ந் – பெயரிடைநிலை.  கருத்துமக்கியாது கொல்’
என்றும் பாடமுண்டு.  ‘முனிவன் பரிந்து’ என்றவிடத்து ‘முனியுந்தொழுது’
என்றும், ‘மும்மடங்கு பகைவராய்’ என்றவிடத்து ‘மும்மடங்குன் பகைவராய்’
என்றும் சிலபிரதிகளிற் காணப்படுகின்றன. 

மற்று, அவர் இறைவன் மலரடி வணங்கி, ‘வான் பிறப்பு
ஏழ் உற மாட்டேம்;
உற்று முப் பவமும் உனக்கு வெம் பகையாய் உற்பவித்து,
உன் பதம் உறுவேம்;
வெற்றிகொள் முதிர் போர் நேமியாய்!” என்றார்; விமலனும்,
கொடிய வெஞ் சாபம்
அற்றிடும் வகை அவ் வரம் அவர்க்கு அளித்தான்; அசுரர் ஆய்,
அவரும் வந்து, உதித்தார்.

மற்று – பின்பு, அவர் – அத்துவாரபாலகர், இறைவன் மலர்
அடி வணங்கி – திருமாலினது தாமரைமலர் போன்ற திருவடிகளை
நமஸ்கரித்து, ‘வெற்றி கொள் முதிர் போர் நேமியாய் – ஜயங்கொள்ளும்
பெரும் போரைச் செய்கின்ற சக்ராயுதத்தையுடையவனே! வான் பிறப்பு ஏழ் உற
மாட்டேம் – அதிகமான ஏழுபிறப்புக்களை (நாங்கள்) விரும்பமாட்டோம்;  முப்
பவம்உம் உற்று உனக்கு வெம் பகை ஆய் உற்பவித்து உன் பதம் உறுவேம் –
(குறைவான) மூன்று பிறப்புக்களையே ஏற்றுக்கொண்டு உனக்குக் கொடிய
பகைவராய்த்தோன்றி(ப் பின்பு) உனது திருவடியைச் சேர்வோம்,’ என்றார்-
என்று (தமது கருத்தை) விண்ணப்பஞ் செய்தார்கள்; (அது கேட்டு),
விமலன்உம் – குற்றமற்றவனான திருமாலும், கொடிய வெம்சாபம் அற்றிடும்
வகை அ வரம் அவர்க்கு அளித்தான் – அவ்வாறே (மும்முறை
பகைவராய்ப்பிறந்து) மிகக்கொடிய அச்சாபந் தீரும்படி அவர்கட்கு
வரங்கொடுத்தருளினான்;  அவரும் அசுரர் ஆய் வந்து உதித்தார் –
(அங்ஙனமே) அவர்களும் (முதலில்) அசுரர்களாய்(ப் பூமியில்)வந்து
பிறந்தார்கள்; (எ – று.)

    அன்பராய்ப் பிறப்பதானால் ஏழுபிறப்பு எடுக்கவேண்டியதனாலும்,
அன்பராய்ப் பிறந்தால் விரைவில் அழிவுநேராதாதலின் காலம் நீட்டிக்கு
மாதலாலும், அவர்கள் அன்பராய்ப் பிறத்தற்கு உடன்பட்டிலர்.  மும்முறை
பகைவராய்ப் பிறந்து அப்பிறப்புத் தோறும் விரைவில் அத்திருமால்கையாலழிந்து
வீடு பெறலாமென்பது அவர்களுட்கோள்.  வான்பிறப்பு – சிறந்த பிறப்பு
எனினுமாம்; அப்பிறப்புக்குச் சிறப்பு-திருமாலுக்கு அன்பராதல்.  விமலன் என்ற
வடமொழித் திருநாமம் – தான் இயல்பிலே கருமத்தொடர்பில்லாதவன் என்ற
பொருளோடு, தனக்குச்சரீரமாகிய ஜீவாத்மாக்களின் கருமமும் தன்னிடம்
தொடரப்பெறாதவனென்னும் பொருளையும் கொண்டது.  ‘வான்பிறப்பு’ என்ற
விடத்து, வன்பிறப்பு என்று சிலபிரதிகளிற் காணப்படுகிறது.  கொடியவெம் –
ஒருபொருட்பன்மொழி.

இரணியன், இரணியாக்கன், என்று உரைக்கும் இயற்பெயர்
இருவரும் எய்தி,
முரணிய கொடுமை புரிந்து, மூஉலகும் மொய்ம்புடன்
கவர்ந்திடு நாளில்,
அரணியின் அழல்போல் நரஅரி உருவாய் அச்சுதன்
தூணில் அங்குரித்து,
தரணியின் உகிரால் பிளந்து, முன் உகத்தில் தன் பகை
செகுத்தனன். பின்னும்,

இருவரும் – அந்தத் துவாரபாலகரிரண்டுபேரும், முன்உகத்தில்
– முதல் யுகமான கிருதயுகத்திலே, இரணியன் இரணியாக்கன் என்று உரைக்கும்
இயல் பெயர் எய்தி – இரணியனென்றும் இரணியாக்ஷனென்றும்
சொல்லப்படுகிற இயற்பெயரைப்பெற்று, முரணிய கொடுமை புரிந்து – (நீதிக்கு)
மாறுபட்ட கொடுந்தொழில்களைச் செய்து, மூ உலகும் மொய்ம்புடன் கவர்ந்திடு
நாளில் – மூன்று உலகங்களையும் வலியத் தம்வசப்படுத்தியிருந்த காலத்தில்,
அச்சுதன்-திருமால்.  அரணியின் அழல்போல் – தீக்கடைகோலினின்று தீ
(எழுவது)போல, நர அரி உரு ஆய் தூணில் அங்குரித்து – நரசிங்கரூபமாய்த்
தூணிலிருந்து அவதரித்து, தன் பகை – தன்னிடத்துப் பகைமை பாராட்டிய
இரணியனை, தரணியின் உகிரால் பிளந்து – சூரியன்போல் விளங்குகிற (தன்)
கைந்நகத்தினால் (மார்பைப்) பிளந்து, செகுத்தனன் – அழித்தருளினான்;
பின்னும் – பின்பும் [திரேதாயுகத்திலும்], (எ – று.)- ‘அரக்கர்குலத்துக்
கதிபதியாகி ஆண்டுபோய் மீண்டுமங்குரித்து’ என அடுத்த கவியோடு
குளகமாகத் தொடரும்.

    நரசிங்கமூர்த்தியாய் இரணியனைக் கொன்றதை எடுத்துக்கூறினது,
வராகமூர்த்தியாய் இரணியாக்ஷனைக் கொன்றதற்கும் உபலக்ஷணம்.  அரணி-
கடைந்து தீயையுண்டாக்குதற்கு இடமான மரத்துண்டு;  அதில் வேறொரு
மரத்துண்டுகொண்டு கடைந்த விடத்து நெருப்பு உண்டாதலியல்பு. யாகத்துக்கு
உரிய அந்த வைதிக அக்கினியை இங்கு உவமை கூறியது, உலகத்துப்
பிராணிகள்போல ஒரு தாயின் கர்ப்பத்திலே சிலகாலமிருந்து பிறவாமல்
விரைவாகத் தூணினின்று உதித்து விளங்கியதையும் தூய்மையையும்
காட்டுதற்கு.  தரணி என்ற வடசொல்-சூரியனது பரியாயநாமங்களிலொன்று;
(இருளைக்) கடத்தற்குக் கருவியானவனென்றாவது, (வானத்தைக்)
கடக்கின்றவனென்றாவது இதற்குக் காரணப்பொருள் காண்க.  இனி, ‘தரணியின்
உகிராற்பிளந்து’ என்பதற்கு – பூமியிலே நகத்தினாற்பிளந்து என்று உரைத்தல்
பொருந்தாது; “மண்ணிற்சாகிலன் வானிலுஞ்சாகிலன்………..வரத்தால்” என்றபடி,
அவன் பூமியிலிறவாத வரம் பெற்றவனாதலால்.  தரணியிற் கொடுமைபுரிந்து
என்று இயைத்துப் பொருள் கொள்ளினுமாம்.  மூவுலகு – சுவர்க்கம் பூமி
பாதாளம்.  அங்குரித்து-அங்குரமென்ற வடமொழிப்பெயரினடியாப் பிறந்த
வினையெச்சம்: அங்குரம் – முளை. ‘நரவரி’ என்றவிடத்து ‘ஆளரி’ என்றும்
பாடமுண்டு; பொருள் அதுவே. 

அரக்கர்தம் குலத்துக்கு அதிபதி ஆகி, ஆண்டு போய்,
மீண்டும் அங்குரித்து,
தருக்குடன் அவர்கள் இருவரும் முறையால் தம்பியும்
தமையனும் ஆனார்;
சிரக் குவையுடனே புயவரை நிரையும் சிந்த அச்
சிந்துவினிடையே
சரக் குவை சொரிந்தான்-அமலன், அவ் உகத்து, தசரதன்தன்
வயிற்று உதித்தே.

மீண்டும் – மீளவும், அவர்கள் இருவரும்-அத்துவார
பாலகரிரண்டுபேரும், ஆண்டு – அவ்விடத்து [நிலவுலகத்தில்], போய்
அங்குரித்து – சென்று பிறந்து, அரக்கர்தம் குலத்துக்கு தருக்குடன் அதிபதி
ஆகி – இராக்கதர்களுடைய கூட்டத்துக்குப் பெருமிதத்தோடு தலைவர்களாய்,
முறையால் தம்பியும் தமையனும் ஆனார் – உறவுமுறைமையினால் தம்பியான
கும்பகர்ணனும் தமையனான இராவணனுமானார்கள்: அமலன் –
பரிசுத்தமூர்த்தியான திருமால், அ உகத்து – அந்தத் திரேதாயுகத்திலே,
தசரதன் தன் வயிறு உதித்து – தசரதசக்கரவர்த்தியின் வயிற்றில் தோன்றி
(ஸ்ரீராமாவாதாரஞ்செய்து), அ சிந்துவின் இடையே – கடலினிடையேயுள்ளதான
அவ்விலங்காபுரியிலே, சிரம் குவையுடனே புயம்வரைநிரையும்சிந்த –
(அவ்விராவண கும்பகர்ணர்களுடைய) தலைகளின் குவியலுடனே மலைபோன்ற
தோள்களின் வரிசையும் அற்றுவிழும்படி, சரம்குவை சொரிந்தான் –
அம்புக்கூட்டங்களை மிகுதியாகப் பிரயோகித்தான்;  (எ – று.)   

     இராவணன் பத்துத்தலையும் இருபதுதோளுமுடையவனாதலால்,
‘சிரக்குவையுடனே புயவரைநிரையும்’ எனப்பட்டது.  தசரதன் என்ற
வடமொழிப்பெயர் – பத்துத்திக்கிலுஞ் செல்ல வல்ல தேருடையவனென்று
பொருள்படும்:  தச – பத்து, ரதம் – தேர். சிந்துவினிடையே சிந்த – கடலிலே
சிதறிவிழ எனினுமாம்.  இருவரும் அதிபதியாகி – பன்மையொருமைமயக்கம்.
தருக்கு – செருக்கு, அகங்காரம், களிப்பு.  ஸிந்து – வடசொல்.

இந்த நல் உகத்தில் இறைவனுக்கு அன்னோர் இருவரும்
கிளைஞராய் எய்தி
வந்தனர், வஞ்சக் கஞ்ச மாமனும் இம் மைத்துனன்தானுமாய்
மன்னோ;
சிந்தையில் உணர்வீர்’ என்றுகொண்டு உரைத்தான், சித்து அசித்து
உணர்ந்தருள் முனியும்;
அந்த மன் அவையில் இருந்துளோர் எல்லாம் அமலனைத்
துதித்து, அதிசயித்தார்.

அன்னோர் இருவர்உம் – அந்தத் துவாரபாலகரிரண்டு பேரும்,
இந்த நல் உகத்தில் – இந்தநல்ல (துவாபர) யுகத்திலே, வஞ்சம் கஞ்சன்
மாமன்உம் இ மைத்துனன்தான்உம் ஆய் – வஞ்சனையையுடைய மாமனாகிய
கம்சனும் அத்தைமகனான இந்தச் சிசுபாலனுமாக, இறைவனுக்கு கிளைஞர் ஆய்
எய்தி வந்தனர் – திருமாலாகிய கண்ணபிரானுக்கு உறவினராய் வந்து
பிறந்தார்கள்; சிந்தையில் உணர்வீர் – (இச்செய்தியை) மனங்கொண்டு
அறிவீர்களாக, என்று-, சித்து அசித்து உணர்ந்தருள் முனிஉம்-சித்தும்
அசித்துமாகிய தத்துவப்பொருளின் இயல்பை அறிந்தருளிய வியாசமாமுனிவனும்,
கொண்டு உரைத்தான் – எடுத்துச்சொல்லியருளினான்; (அதுகேட்டு), அந்த மன்
அவையின் இருந்துளோர் எல்லாம் – அந்தப் பெரியசபையிற் கூடியிருந்தவர்க
ளெல்லாரும், அமலனை துதித்து அதிசயித்தார் – ஆச்சரியமடைந்து
கண்ணபிரானைத் துதித்தார்கள்; (எ – று.) மன், ஓ- ஈற்றசை.  ‘கொண்டு’
என்பதையும் அசை யென்னலாம்.

    முத்திபெற விரும்புபவர் அறிய வேண்டிய தத்துவங்கள் மூன்று;
அவையாவன-சித், அசித், ஈச்வரன்.  சித் – உணர்வுடையது; ஜீவாத்மா. அசித்
– உணர்வில்லாதது; ஜடம்.  ஈச்வரன்-முழு முதற் கடவுளான பரமாத்மா. இம்
மூன்றையும் தத்வத்ரய மென்பர்.  இவற்றில் சித்தையும் அசித்தையும்
உணர்ந்தமை கூறியது, ஈச்வரனை யுணரந்தமைக்கும் உபலக்ஷணம்.
இந்நூலாசிரியர் மேல் நம்மாழ்வாரை “சித்தசித்தொடீச னென்று செப்புகின்ற
மூவகைத் தத்துவத்தின் முடிவுகண்ட சதுர்மறைப் புரோகிதன்” என்றும்,
துரியோதனனை “சித்தசித்துணர்விலாதான்” என்றுங் கூறுதல் காண்க.
ஸ்ரீவைஷ்ணவ விசிஷ்டாத்வைத சித்தாந்தத்துக்கு உரிய இம்மூன்று
தத்துவங்களின் தன்மையைத் தத்வத்ரயம், ஸ்ரீவிஷ்ணுபுராணம் முதலிய
நூல்களிற் காண்க.

    கிருதயுகமும் திரேதாயுகமும் இவர்கட்குச் சாபவிமோசனத்துக்கு உரிய
காலமாகாது சாபானுபவத்துக்கேயுரிய காலமாய்க் கழிய, இந்தத் துவாபரயுகமே
சாபந்தீர்ந்து முன்னையபதவியையடைதற்கு உரிய காலமாகுதலால்,
‘இந்தநல்உகம்’ எனப்பட்டது.  மன் அவை – ராஜ சபையுமாம்.  துதித்து
அதிசயித்தார் – அதிசயித்துத் துதித்தார் என மொழிமாற்றி விகுதி பிரித்துக்
கூட்டுக.    

வீடுமன், விதுரன், துரோணனே முதலாம் விரகு இலா
உணர்வுடை வேந்தர்
நாடினர் மனத்தில்; புளகம் உற்று உடலம், நயனம் நீர்
மல்க, நாக் குழறிப்
பாடினர்; புகழ்ந்து பரவினர்; பரவிப் பைந் துழாய் கமழ்
மலர்ப் பாதம்
சூடினர்;-சுருதிக்கு எட்ட ஒணாது ஒளிரும் சுடர் மணித்
துய்ய சோதியையே.பலரும் கண்ணனைத்தியானித்துத் துதித்து வணங்குதல். 

வீடுமன் விதுரன் துரோணனே முதல் ஆம் – பீஷ்மனும்
விதுரனும் துரோணனும் முதலான, விரகு இலா உணர்வுஉடை வேந்தர்-
கபடமில்லாத அறிவையுடைய அரசர்கள், சுருதிக்கு எட்ட ஒணாது ஒளிரும்
சுடர்மணி துய்ய சோதியை – வேதங்களுக்கு எட்ட முடியாதபடி (அப்பாற்பட்டு)
விளங்குகிற பிரகாசத்தையுடைய நீலநிறமுள்ள பரிசுத்தமான ஒளிவடிவமாகிய
கண்ணபிரானை, மனத்தில் நாடினர் – மனத்திற்கொண்டு தியானித்து, உடலம்
புளகம் உற்று – (ஆனந்தாதிசயத்தால்) உடம்பு மயிர்ச்சிலிர்ப்படையப்பெற்று,
நயனம் நீர் மல் – கண்களில் ஆனந்தக் கண்ணீர்பெருக, நா குழறி-நாக்குக்
குழறப்பெற்று, பாடினர்- பாடினார்கள்; புகழ்ந்து பரவினர் – கொண்டாடித்
துதித்தார்கள்; பரவி-அங்ஙனம் துதித்து, பைந்துழாய் கமழ்மலர் பாதம்
சூடினர்-பசுமையான திருத்துழாய் மணம் வீசப்பெற்ற தாமரை மலர் போன்ற
(அக்கண்ணனது) திருவடிகளைத் தமது சிரத்தின் மேற் கொண்டு
வணங்கினார்கள்;  (எ – று.)

     விதுரன் பாண்டவர்க்கும் துரியோதனாதியர்க்கும் சிறிய தந்தை; விசித்திர
வீரியராசனது மனைவியரிலொருத்தியான அம்பிகையினா லேவியனுப்பப்பட்ட
தாதியினிடத்து வியாசமாமுனிவனருளாற் பிறந்தவன்; யமதருமராசனது
அம்சமானவன்.

    துரோணம்-பரத்வாஜமுனிவனது குமாரன்; கிருபாசாரியருடன் பிறந்தவளான
கிருபியின் கணவன்; அசுவத்தாமனது தந்தை; துரியோதனாதியர்க்கும்
பாண்டவர்க்கும் அஸ்திரசஸ்திரங்களைக் கற்பித்த ஆசிரியன்.
வைதிகவிரதாநுட்டானஞ் செய்துகொண்டிருக்கையில் தேவர்களா
லேவியனுப்பப்பட்ட மேனகையின் கட்டழகைக்கண்டு காதல்கொண்ட பரத்துவாச
முனிவனது விருப்பத்தால் ஒருதுரோண கும்பத்திற் பிறந்தமைபற்றி, இவனுக்குத்
துரோணனென்று பெயர்: துரோணகும்பம் – பதக்களவு கொண்ட பாத்திரம்;
[துரோணம்-பதக்கு, இரண்டுமரக்கால்].  இவன் பிராமணசாதியிற்
பிறந்தவனாயினும், குருகுலத்து ராஜகுமாரர்களுக்குப் படைக்கலப்பயிற்சி
கற்பிக்குந் தொழிலை மேற் கொண்டது முதல் வீடுமன் சொன்னபடி குடை
கொடி முதலிய ராஜசின்னங்கள் பலவற்றையும் ஏற்று க்ஷத்திரியன் போன்று
ஒழுகியதனால், இவனையுஞ்சேர்த்து ‘வீடுமன் விதுரன் துரோணனே முதலாம்
வேந்தர்’ என்றார்; அதனை “முனிநீஐயா இதற்குமுன்னம் இன்றுமுதலா, இனி
இவ்வுலகுக்கு அரசாய் எம்மிலொருவனாகிக், குனிவில் வலியா லமருங் கோடி
யென்று கொடுத்தான், பனிவெண்குடையும் நிருபர்க்குரியவரிசை பலவும்” என
வாரணா வதச்சருக்கத்திற் கூறியதனாலுணர்க.

    மயிர்ச்சிலிரிப்பும், கண்ணீர்பெருகுதலும், நாக்குழறுதலும் – பேரானந்தத்தின்
மெய்ப்பாடுகள்.  புளகம், நயநம்-வடசொற்கள். துழாய் – அடியார்கள் இட்டு
அருச்சித்தது.  ‘சூடினர்’ என்ற வினையின் ஆற்றலால் எம்பெருமானது
திருவடித்தாமரை மலர்அடியார்களின் முடிக்கு அலங்காரமென்க.  விரகிலா
உணர்வு – விபரீதஞானமில்லாத உண்மையறிவு. மணி – நீலரத்தினமுமாம்

அப்பொழுது, அமலன் அருஞ் சினம் ஒழிந்து, ஆங்கு, அருளுடை
அறத்தின் மைந்தனைப் பார்த்து,
‘இப்பொழுது அரசர் ஆனவர்க்கு எல்லாம் இருஞ் சிறப்பு
உதவுக!’ என்று இசைப்ப,
முப்பொழுது உணரும் முனிவரன் பணியால், முறை முறை
பூசனை புரிந்தான்-
மைப்பொழுது ஒளி கூர் வெண் நிலவு உமிழும் மதி குலத்து
உதித்தருள் மன்னன்.தருமபுத்திரன்அனைவர்க்கும் பூஜோபசாரங்களைச்
செய்தல். 

அ பொழுது – (அனைவரும் துதித்து வணங்கிய) அப்பொழுது,
அமலன் – கண்ணபிரான், அருஞ் சினம் ஒழிந்து – (பிறர் அணுகுதற்கு) அரிய
கோபம்தணியப்பெற்று, ஆங்கு-அவ்விடத்தில், (அருகிலுள்ள), அருள் உடை
அறத்தின் மைந்தனை பார்த்து-(எல்லாவுயிர்களிடத்துங்) கருணையையுடைய
தருமபுத்திரனை நோக்கி, இ பொழுது அரசர் ஆனவர்க்கு எல்லாம்
இருஞ்சிறப்பு உதவுக என்று இசைப்ப -‘இப்பொழுது நீ
அரசராயுள்ளாரனைவர்க்கும் சிறந்த உபசாரங்களைச் செய்வாயாக’ என்று
கட்டளையிட,-மை பொழுது ஒளி கூர் வெள் நிலவு உமிழும் மதிகுலத்து
உதித்தருள் மன்னன் – இருளுக்கு உரிய இராக்காலத்திலே பிரகாசம் மிக்க
வெண்ணிறமான நிலாவை வீசுகின்ற சந்திரனதுவம்சத்தில் தோன்றிய
தர்மராஜன்,-மு பொழுது உணரும் முனிவரன் பணியால் – மூன்றுகாலத்து
வரலாறுகளையும் அறிந்த இருடிச் சிரேஷ்டனான வியாசமா முனிவனது
கட்டளையினால், முறை முறை பூசனை புரிந்தான் – முறைமை தவறாது
(அரசர்கட்கெல்லாம்) பூஜோபசாரங்களைச் செய்தான்; (எ – று.)

    வியாசமாமுனிவன் சொல்லியருளியவாறு முதலிற் கண்ணபிரானுக்கும்
பிறகு மற்றையோர்க்குமாக அவரவர் தகுதிக்கு உரிய முறைப்படி சிறப்புச்
செய்தனனென்க.  கோபத்தின் பின்னாகச் சிறிது பொழுது நிற்பது சினம்;
(இச்சொற்கு இப்பொருள் நச்சினார்க்கினியருரையிற் கண்டது.) சிசுபாலன் மீது
கோபங்கொண்ட கண்ணபிரான் அக்கோபத்தின் காரியமாகிய சிசுபால வதத்தை
நடத்தி முடித்தபின்பும் சிறிதுநேரம் கோபந்தணியாது நிற்க, கோபத்தின்
தொடர்ச்சியாகிய அச்சினம் அனைவரும் வணங்கித் துதித்ததனால்
தணிந்ததென்க;  (நரசிங்கமூர்த்திக்கு இரணியன்மேலெழுந்தகோபம் அவனைக்
கொன்றபின்பும் தணியாததாக, அதுகண்ட பிரமன் முதலியோர் துதித்து
வணங்க அச்சிங்கப்பிரான் சினந்தணிந்தமை, இங்கு ஒப்பு நோக்கத்தக்கது)
உதவுகென்று – தொகுத்தல்: முப்பொழுது-இறந்தகாலம், நிகழ்காலம்,
எதிர்காலம்; இது – இங்குக் காலவாகுபெயராய், அக்காலங்களில்
நிகழ்ந்தவையும் நிகழ்கின்றவையும் நிகழ்பவையுமான செய்திகளைக் குறித்தது.
ஈற்றடி, எங்கும் விளங்கும் புகழோடு இயல்பிலே தண்ணளியையு முடையவன்
தருமபுத்திரன் என்ற குறிப்பு.  தேவர்களை இருதிணையாலுங் கூறலா மாதலால்,
தருமனெனப்படுகிற யமன் இங்கு ‘அறம்’ என அஃறிணை வாய்பாட்டுச்
சொல்லாற் கூறப்பட்டான்.  ஆங்கு – அசையுமாம்.  கூர் – உரிச்சொல்

அரு மறை முறையால் அரசனை முனிவர் அனைவரும்
ஆசி சொற்றருளி,
தரு நிரை பயிலும் தம் தம விபினம் சார்ந்தனர்,
தகவுடன் மீள;
கரு முகில் அனைய மேனி அம் கருணைக் கண்ணனும்,
கிளையுடன், துவரைத்
திரு நகர் அடைந்தான், சென்று, வன் திறல் கூர் சேதிபப்
பெரும் பகை செகுத்தே.முனிவர்களும் கண்ணனும்தம்தம் இடஞ்சேர்தல்.

முனிவர் அனைவர்உம் – இருடிகளெல்லோரும், அரசனை –
தருமராசனை, அருமறை முறையால் ஆசி சொற்று அருளி – அருமையான
வேதங்களின் விதிப்படி ஆசீர்வாதஞ் சொல்லி அநுக்கிரகித்து, தகவுடன் –
தகுதியான உபசாரம் பெற்றவர்களாய், தரு நிரை பயிலும் தம்தம விபினம் மீள
சார்ந்தனர் – மரங்களின் தொகுதி பொருந்திய தாம் தாம்
வசிக்குந்தபோவனத்துக்கு மீண்டும் சென்றார்கள்; கருமுகில் அனைய மேனி
அம் கருணை கண்ணன்உம் – காளமேகம்போன்ற திருமேனி நிறத்தையும்
அழகிய திருவருளொழுகும் கண்களையு முடையவனான ஸ்ரீகிருஷ்ணனும்,
வல்திறல் கூர் சேதிபன் பெரும்பகை செகுத்து-வலிய பல பராக்கிரமம் மிக்க
சேதி தேசத்தரசனான சிசுபாலனாகிய பெரியபகைவனை யொழித்தவனாய்,
கிளையுடன் சென்று துவரை திருநகர் அடைந்தான் – தனது சுற்றத்தாருடனே
புறப்பட்டுத் துவாரகாபுரி யென்கிற தனது சிறந்த நகரத்தைச் சேர்ந்தான்;

     கண்ணனது திருவவதாரத்தில் முக்கியமான பயன்களிலொன்றும்
கண்ணன் தருமனது இராயசூய யாகத்துக்கு வரப் புறப்பட்டபோது கொண்ட
உத்தேசமும் சிசுபாலவத மாதலால், அக்காரியத்தைச் செய்துமுடித்து வெற்றி
தோன்ற மீண்டெழுந்தருளின னென்பது விளங்க, ‘சேதிபப்பெரும்பகை
செகுத்துச் சென்று திருநகரடைந்தான்’ என்றார்.  மறைமுறையால் ஆசி
சொற்றருளி – வேதமந்திரங்களைக் கொண்டு ஆசீர்வாதஞ் சொல்லியருளி
எனினுமாம்.  விபிநம் – வடசொல்.  ‘அம்கருணைக்கண்ணன்’ என்பதற்கு
அழகிய திருவருளையுடைய கிருஷ்ணனென்றும் பொருள் கொள்ளலாம்.
முந்தின பொருளில், கண்ணனது கண்ணோட்டமுடைமை அவனது கண்களின்
பார்வையிலே வெளியாகின்ற தென்பது கருத்து.  துவரை – வடசொற்சிதைவு.
கிளையுடன் – பலராமன் முதலியோருடன். 

அராவ வெங் கொடியோன் ஆதியா உள்ள அரசரும்
தம் நகர் அடைந்தார்;
விராடனும், யாகசேனனும், முதலாம் வேந்தரும்
தம் பதி புகுந்தார்;
சராசனத் தடக் கைச் சல்லியன் முதலோர் கிளையுடன்
தம் புரம் சார்ந்தார்;
பராவ அரும் முதன்மைப் பாண்டவர் கடல் பார் பண்புறத்
திருத்தி, ஆண்டிருந்தார்.துரியோதனன் முதலியோர்தம்தம் நகர்க்கு மீளுதல்.

அராவம் வெம் கொடியோன் ஆதி ஆ உள்ள அரசர் உம் –
பாம்பின்வடிவ மெழுதிய பயங்கரமான துவசத்தையுடைய துரியோதனன்
முதலாக அங்கு வந்துள்ள குருகுலத்து அரசர்களும், தம்நகர் அடைந்தார் –
தங்களுடைய அஸ்தினாபுரிக்குப் போய்ச்சேரலானார்கள்;  விராடன்உம்
யாகசேனன்உம் முதல் ஆம் வேந்தர்உம் – (மத்ஸ்யதேசத்து அரசனான)
விராடனும் (பாஞ்சால தேசத்து அரசனான) யாகசேனனும் முதலான அரசர்களும்,
தம்பதி புகுந்தார் – தம்தம் நகரத்துக்குப் போய்ச் சேரலானார்கள்; சராசனம் தட
கை சல்லியன் முதலோர் – வில்லையேந்திய பெரிய கையையுடைய (மத்திரதேசத்
தரசனான) சல்லியன் முதலிய அரசர்களும், கிளையுடன் – சுற்றத்தாருடனே, தம்
புரம் சார்ந்தார் – தங்கள் நகரத்துக்குப்போய்ச் சேரலானார்கள்; (இங்ஙனம்
வந்தவரனைவரும் மீள), பராவு அரு முதன்மை பாண்டவர் – துதித்தற்கு அரிய
தலைமையையுடைய பாண்டவர்கள், கடல்பார் பண்பு உறதிருத்தி ஆண்டு
இருந்தார் – கடல் சூழ்ந்த நிலவுலகத்தை நன்மையமையும்படி
சீர்திருத்தஞ்செய்து அவ்விடத்திலே [இந்திரப்பிரத்தநகரத்திலே] அரசாண்டு
கொண்டிருந்தார்கள்; (எ – று.)

    இரட்டுறமொழிதலென்னும் உத்தியால், ‘ஆண்டு’ என்பதற்கு
அவ்விடத்தில் என்றும், அரசாட்சி செய்து என்றும் இருபொருள்
கொள்ளப்பட்டன.  தம்நகர் அடைந்தார், தம்பதி புகுந்தார், தம்புரம்சார்ந்தார்
என்ற வெவ்வேறு சொற்றொடர்கள் ஒருபொருளனவாய் வந்தது,
பொருட்பின்வருநிலையணி. ‘அரா’ என்ற குறியதன்கீழ் ஆ குறுகாது
‘அம்’ சாரியைபெற்று, அராவம் என்று நின்றது.  அராவக்கொடியோன் என்ற
தொடர் – பாம்புபோலக் கொடியவனென்றும் பொருள்படும்.  யாகசேநன்
என்பது, துருபதனது மற்றொரு பெயர்; இவன், திரௌபதியின் தந்தை.  சல்யன்
– (பகைவர்க்கு) அம்பு நுனிபோல் (வருத்தஞ்செய்)பவன்; சல்யம் – அம்புமுனை.
இவன், பாண்டு மகாராசனது இரண்டாம் மனைவியான மாத்திரியின்
உடன்பிறந்தவனாதலால், நகுல சகதேவர்க்கு மாமனாவன். சராஸநம் என்ற
வடசொல் சர அஸநம் என்றுபிரிந்து – அம்புகளைத் தள்ளுவது என்றும்;
சரஆஸநம் என்று பிரிந்து – அம்புகளை (த் தொடுத்தற்காக) வைத்தற்கு
இடமாவது என்றும் காரணப் பொருள்படும். பண்பாவது எல்லாரியல்புகளும்
அறிந்து ஒத்து ஒழுகுதல். “பண்பெனப்படுவது பாடறிந்தொழுகல்.” என்றார்
கலித்தொகையிலும்.  ‘கிளையுடன் தம்புரஞ்சார்ந்தார் என்றவிடத்து ‘தமருடன்
தம்புரஞ் சார்ந்தார்’ என்று சிலபிரதிகளிற் பாடல் காணப்படுகிறது.

முன் குலத்தவர்க்கும், முனி குலத்தவர்க்கும், மும் மதக்
கைம் முகக் களிற்று
மன் குலத்தவர்க்கும், வான் குலத்தவர்க்கும், வரம்பு இலா
வகைக் கலை தெரியும்
நன் குலத்தவர்க்கும், பொருள் எலாம் நல்கி, நாள்தொறும்
புகழ் மிக வளர்வான்,
தன் குலக் கதிர்போல் தேய்ந்து ஒளி சிறந்தான்-தண்ணளித்
தருமராசனுமே.தருமபுத்திரனதுகொடைச்சிறப்பு.

தண் அளி தருமராசன்உம் – குளிர்ச்சியான
கருணையையுடைய தருமபுத்திரனும்,-முன் குலத்தவர்க்குஉம் – (நால்வகை
வருணத்துள்ளும்) முதல்வருணத்தவரான அந்தணர்களுக்கும்,
முனிகுலத்தவர்க்குஉம் (அவர்களுள்ளுஞ் சிறந்தவர் களான) முனிவர்களின்
பகுப்பினர்க்கும், மும் மதம் கைமுகம் களிறு மன் குலத்தவர்க்குஉம் –
மூன்றுவகை மதஜலத்தையும் துதிக்கையுள்ள முகத்தையுடைய
யானைச்சேனையையுடையவர்களான ராசகுலத்தவர்க்கும், வான்குலத்தவர்க்குஉம்
– தேவசாதியார்க்கும், வரம்பு இலா வகை கலை தெரியும் நல் குலத்தவர்க்கு
உம்-அளவற்ற பலவகைச் சாஸ்திரங்களை ஓதியுணர்ந்த சிறந்த புலவர்
வகுப்பினர்க்கும், நாள்தோறும்-தினந்தோறும், புகழ்மிகவளர்வான் பொருள்
எலாம் நல்கி – கீர்த்தி மிகவும் விருத்தியாம்படி (பொன் ஆடை அணிகலம்
முதலிய) பொருள்களையெல்லாம் கொடுத்து, தன் குலம் கதிர்போல் தேய்ந்து
ஒளிசிறந்தான்-தான் பிறந்த குலத்துக்கு ஆதிபுருஷனான சந்திரன்போலச்
சுருங்கி ஒளி மிகுந்தான்; (எ – று.)

     “அருந்த வானவர்க்கு ஆரமுது அன்புடன் அளிப்போன்” என்றபடி,
சந்திரன் தன் கலைகளாகிய அமிருத கிரணங்களைத்தேவர்கட்கு உண்ணக்
கொடுத்துத் தான் கலைகுறைந்தும் சிறப்புமிகுதல் போல, தருமராசன் தனது
பொருள்களை யெல்லாம் பூதேவராகிய அந்தணர் முதலியோர்க்குக் கொடுத்துச்
செல்வங் குறைந்தும் தேஜசினாலும் புகழினாலும் மிக்கனன் என்பதாம்.  ஒளி –
காந்தியும் புகழும்.  இனி, சந்திரன் போலத் தேய்ந்தும் (அச்சந்திரனினும்
மேலாக) ஒளி சிறந்தான் என்று பதவுரைகூறி, சந்திரன் கலை குறைந்து வடிவு
தேய்ந்த காலத்தில் ஒளி குறைவதுண்டு:  அங்ஙனமின்றித் தருமபுத்திரன்
பொருள்களெல்லாம் நல்கியதனாற் செல்வம் தேய்ந்தும் ஒளி குறையாது
அக்கொடையினாலாகும் மகிழ்ச்சிபற்றி மிக விளங்கினானென்று
கருத்துக்கொள்ளுதலு மொன்று: சந்திரன் கலை தேய்ந்த காலத்தும் ஒளி
செய்துசிறத்தல்போலத் தருமராசனும் பொருள் தேய்ந்தும் ஒளியுற்றுவிளங்கின
னென்றுங் கொள்க.  சந்திரன் முதலிற் கலை குறைந்தனனாயினும் உடனே
கலை வளரப்பெறுதல்போலத் தருமனும் முதலிற் கொடையினாற் செல்வந்
தேய்ந்தனனாயினும் பின்பு விரைவிற் செல்வம் வளரப் பெற்றன னென்ற
கருத்தும் அமையும்.  கொடுக்கக் கொடுக்கப் புண்ணியத்தாற் செல்வம்
பெருகுதலியல்பு.  ‘தன்குலக்கதிர்போ லேந்தொளி சிறந்தான்’ என்று பாட
மோதுவாருமுளர்;  ஏந்துஒளி – சிறந்த ஒளி.  ஒருகுலத்தவனுக்கு அக்குலத்து
முதல்வனை உவமை கூறுதல் ஏற்கும்.

     அளியாவது – அன்புகாரணத்தால் தோன்றும் அருள்.  தீவினைக்கு ஏற்ற
தண்டனை செய்து தருமத்தைக் காத்தலால், யமனுக்குத் தர்மராஜ னென்று
வடமொழியில் ஒரு பெயர்;  தந்தையே மைந்தனாகிறா னென்னும்
வழக்குப்பற்றி, தருமராஜன் புத்திரனை ‘தருமராசன்’ என்றார்.  இவனும்
தருமந்தவறாது காப்பவ னாதலால், அவனையே தர்மராச னென்று குறித்தலும்
தகும்:  கல்வி கரையிலவாதலாலும், அதன் பகுப்புக்கள் பலவாதலாலும்,
‘வரம்பிலாவகைக் கலை’ எனப்பட்டது.  ‘புகழுடன் வளர்வான்’ என்பதும்
பாடம்.            

————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading