ஸ்ரீ தேசிக‌ நூற்ற‌ந்தாதி–

ஸ்வாமி தேசிக‌னைப் போற்றி ஸ்ரீந‌யினாராசாரியாரின் சிஷ்ய‌ரான‌ க‌ந்தாடை ம‌ன்ன‌ப்ப‌ங்கார் எழுதிய‌ அற்புத‌மான‌ நூல் ஸ்ரீதேசிக‌ நூற்ற‌ந்தாதி. ஏனோ அவ்வ‌ள‌வாக‌ ப்ர‌ப‌ல‌மாகாத‌ இந்நூலை, ப‌ல‌ அரிய‌ நூல்க‌ளைத் தேடிப்பிடித்து கூடுமான‌ம‌ட்டிலும் விளக்கங்களுடன் வெளியிட்ட‌ அன்றைய திருவ‌ல்லிக்கேணித் த‌மிழ்ச் ச‌ங்க‌ம் 1937ல் ச‌ங்க‌த்தின் இர‌ண்டாவ‌து வெளியீடாக‌ இந்த‌ தேசிக‌ நூற்ற‌ந்தாதியின் மூல‌த்தை ம‌ட்டும் ப‌திப்பித்து வெளியிட்டிருக்கிற‌து.

பின்னும் அந்த‌ நூலுக்குக் கிடைத்த‌ ஆத‌ர‌வினாலும், ஏற்க‌ன‌வே அச்சிட்ட‌ நூல் பிர‌திக‌ள் தீர்ந்து விட்ட‌தாலும், ச‌ங்க‌த்தின் 58வ‌து ப‌திப்பாக‌, பாட‌ல்க‌ளுக்குச் சிறு குறிப்புக‌ளுட‌ன் 1954ல் வெளியிடப் பட்டிருக்கிற‌து.

பின் ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளுக்குப் பின் ஸ்ரீம‌த் ஆண்ட‌வ‌ன், ஸ்ரீம‌த் ப‌ர‌வாக்கோட்டை ஆண்ட‌வ‌ன் அனுக்ர‌ஹ‌ங்க‌ளுட‌ன் திருவேங்க‌ட‌த்தான் திரும‌ன்ற‌ம், பேராசிரிய‌ர் ந‌.சுப்பு ரெட்டியாரைப் ப‌திப்பாசிரிய‌ராக‌வும், இராசிபுர‌ம் திரு மு. இராம‌சாமியை உரையாசிரிய‌ராக‌வும் கொண்டு சுருக்க‌மான‌ உரையுடன் 2002ல் வெளியிட்டுள்ள‌து.

அத‌ன்பின் ம‌துரை ஸ்ரீதேசிக‌ன் ச‌ன்ன‌தி ச‌பையின‌ர் அத‌ன் மூல‌த்தை ம‌ட்டும் 2003ல் திருப்புல்லாணி ஸ்ரீதேசிகன் சந்நிதி சம்ப்ரோக்ஷணத்தின்போது ஸ்ரீமத் ஆண்டவன் திருக்கரங்களால் வெளியிட்ட‌ன‌ர்.

சமீபத்தில், ஸ்ரீபௌண்டரீகபுரம் ஆண்டவன் ஆச்ரமத்திலிருந்து பல தேசிக விஷயமான ஸ்தோத்ரங்களுடன் இந்த நூற்றந்தாதியையும் சேர்த்து விரிவான வ்யாக்யானத்துடன் வெளியிட்டிருக்கின்றனர்.

திருவ‌ல்லிக்கேணித் த‌மிழ்ச் ச‌ங்க‌த்தார் அளித்துள்ள‌ குறிப்புக‌ள் வைண‌வ‌ நூல்க‌ளில் ஆழ‌ங்கால் ப‌ட்ட‌வ‌ர்க‌ளுக்குத் தேனாய் இனிக்கும். புதிய‌வ‌ர்க‌ளுக்கு அங்கு குறிப்பிட்டுள்ள‌ மேற்கோள்க‌ள் அந்நூல்க‌ளைத் தேடிப் ப‌டித்து இன்புற‌ வைக்கும்.

ஸ்ரீதேசிக நூற்றந்தாதி

தனியன்கள்

ராமாநுஜ தயாபாத்ரம் ஜ்ஞான வைராக்ய பூஷணம்
ஸ்ரீமத் வேங்கடநாதார்யம் வந்தே வேதாந்த தேசிகம். (1)

யஸ்சக்ரேநிகமாந்தார்ய ஸ்துதிம் காதாசதாத்மிகாம்
மன்னப்பங்காரபிக்யந்தம் ஆச்ரயே தேசிகப்ரியம். (2)

வெண்பாத் தனியன்

சீரொன்று தூப்புற் றிருவேங் கடமுடையான்
பாரொன்றச் சொன்ன பழமொழியுள் – ஓரொன்று
தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வானேறப் போமளவும் வாழ்வு

சீர் ஒன்று – சிறப்புப் பொருந்திய; தூப்புல் – தூப்புல் குடியில் அவதரித்த; திருவேங்கடம் உடையான் – வேதாந்த தேசிகர்; பார் ஒன்ற – பூமியில் நிலைத்திருக்கும்படி; சொன்ன – செய்தருளிய; பழமொழியுள்—பழமையான வேத ஸாரமாகிய நூல்களுள்; ஓரொன்றுதானே – ஒவ்வொரு கிரந்தமே; தாரணியில் வாழ்வார்க்கு – இப்பூமியில் வாழும் மனிதர்களுக்கு; வான் – வைகுந்த்த்தை; ஏறப்போம் அளவும் – ஏறியடையும் வரைக்கும்; வாழ்வு – வாழ்வாக; அமையாதோ? – பொருந்தாதோ? (பொருந்தும் என்றபடி)

பழவினைக டாமகலப் பரவாதி சிங்கத்தின்
கழலிணையைத் தன்னெஞ்சிற் கழலாமே எந்நாளும்
தொழுதொழுமன் னப்பங்கார் தூயமலர்த் தாளிணையே
தொழுதெழுநீ நன்னெஞ்சே தொல்வினைகள் தொடராவே

பழவினை – ஊழ்வினை, “அக்கேபோ லங்கை யொழிய விரலழுகித், துக்கத் தொழுநோ யெழுபவே – யக்கா, லலவனைக் காதலித்துக் கான்முரித்துத் தின்ற, பழவினை வந்தடைந்தக்கால்” (நாலடியார், தீவினையச்சம் 3); பரவாதி – புறச்சமயி, “பறந்துபுக் குப்பர வாதிக டுன்னும் படுநரகுன்” (திருநூற்றந்தாதி 51); தொல்வினை – பழவினை, “தொல்வினை தொடர்ந்து தருசூழ் பிறவியென்னும் வல்வினை தொடர்ந்து”(பிரமோத்.பஞ்சா 38); தொடரா – பின்பற்றமாட்டா; தொழுதெழுநீ நன்னெஞ்சே – “அவன், துயரறு சுடரடி தொழுதெழு என்மனனே.” (திருவாய்மொழி 1-1-1); “எம்பெருமானுடைய ஆச்ரிதஜந ஸமஸ்த்து;காபநோதந ஸ்வபாவமான திருவடி மலர்களிலே ஸர்வதேச ஸர்வாவஸ்தோசித ஸர்வசேஷ வ்ருத்தியையும் பண்ணி உஜ்ஜீவியென்று தம்முடைய திருவுள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார்.” (ஆறாயிரப்படி); “இதுக்கு அவ்வருகே விக்ரஹ வைலக்ஷண்யம் சொல்ல ஒருப்பட்டுக் கீழ்நின்ற நிலையைக் குலுக்கி ‘அவன்’ என்று அவ்வருகே போகிறார்; (துயரறு) – ‘துயரறுக்கும்’ என்று முன்புள்ள முதலிகள் அருளிச் செய்யும்படி; ஸமஸ்தது;காபநோதந ஸ்வபாவமான திருவடிகள்; ஸகலாத்மாக்களுடையவும் து:கத்தைப் போக்குகையே ஸ்வபாவமான திருவடிகள்; ‘துயரறு சுடரடி’ என்று எம்பெருமானார் அருளிச் செய்யும்படி:– “வ்யஸநேஷு மநுஷ்யாணாம் ப்ருசம்பவதி து:கித:” என்றால் து:க நிவ்ருத்தியும் அவனதாயிருக்குமிறே; இவர் துயரறத்தான் துயர் தீர்ந்தானாயிருக்கை. இத்தால், இவர் மயர்வற அவன் துயரற்றபடி. (சுடரடி) – நிரவதிக தேஜோரூபமான திவ்யமங்கள விக்ரஹத்தைச் சொல்லுகிறது. (சுடர்) – பஞ்ச சக்திமயமான புகரைச் சொல்லுகிறது. (அடி) – சேஷபூதன் சேஷிபக்கல் கணிசிப்பது திருவடி களையிறே. ஸ்தநந்தய ப்ரஜை முலையிலே வாய் வைக்குமாபோலே, இவரும் ’உன் தேனே மலருந்திருப்பாதம்’ என்கிற திருவடிகளிலே வாய் வைக்கிறர். (தொழுது) – நித்யஸம்ஸாரியாய்ப் போந்த இழவெல்லாம் தீரும்படி ஸ்வரூபாநுரூபமான வ்ருத்தியிலே அந்வயித்து, (எழு)- ’அஸந்நேவஸபவதி’ என்னும் நிலைகழிந்து, “ஸந்தமேநம்ததோவிது” என்கிறவர்கள் கோடியிலே எண்ணலாம்படியாக “உஜ்ஜீவிக்கப்பார். அடியிலே தொழாமையால் வந்த ஸங்கோசம் தீரும்படி அடியிலே தொழுது-உஜ்ஜிவியென்கிறார், (என்மனனே) – இப்போதாயிற்று தம்மைக் கண்டது; ’அருளினன்’ என்று நின்ற வித்தனையிறே முன்பு. இருவர் கூடப் பள்ளியோதி யிருந்தால், அவர்களிலே ஒருவனுக்கு உத்கர்ஷமுண்டானால், மற்றையவன் தனக்கு அவனோடே ஒரு ஸம்பந்தத்தைச் சொல்லிக்கொண்டு கிட்டுமாபோல ‘மநஏவமநுஷ்யாணாம் காரணம் பந்தமோக்ஷயோ’ என்கிறபடியே நெடுநாள் பந்த ஹேதுவாய்ப் போந்தது இப்போது முந்துற்ற நெஞ்சாய் முற்பட்டு நிற்கிறபடியாலே அத்தோடே தமக்கு ஒரு ஸம்பந்தத்தை ஆசைப்பட்டு ’என்மனனே’ என்கிருர். …….. ‘தொழுதெழு’ என்கையாலே – ப்ராப்திபலமான கைங்கர்யத்தைச் சொல்லிற்று. ’என்மனனே’ என் கையாலே பரிசுத்தாந்த: கரணனே அதிகாரியென்னுமிடம் சொல்லிற்று.”-(ஈடு முப்பத்தாறாயிரப்படி) *நல்லைநெஞ்சே! நாம் தொழுதும் நம்முடை நம் பெருமான்” -(அறிவுதரும் பெரிய திருமொழி 1-7-9), “சோதியநந்தன். கலியிற் றொழுதெழ நின்றனரே” (தேசிகமாலே, மெய்விரத நன்னிலத்து மேன்மை. 26), ‘நாதமுனிகழலே நாளுந் தொழுதெழுவோம் நமக்கார் நிகர் நானிலத்தே” (தேசிக மாலை, அதிகாரஸங்கிரஹம், 6).

எந்தைமன் னப்பங்கா ரென்றைக்குந் தன்னாமம்
சிந்தைதனில் வைத்திடவே செல்வஞ்சேர் – தந்தையொடு
தாயாகிக் காப்பரிந்தத் தாரணியி லுள்ளாரை
வாயார வாழ்த்து நலம். (3)

(3) எந்தை – எம்ஸ்வாமி; தந்தையொடு தாயாகிக் காப்பர்- “அன்னையாய் அதீதனாய் என்னை யாண்டிடும், தன்மையான்.” (கண்ணிநுண்சிறுத்தாம்பு.4), “மேலாத் தேவர்களும் நிலத்தேவரும் மேவித்தொழும், மாலார்வந்து இன நாள் அடியேன் மனத்தே மன்னினார், சேலேய் கண்ணியரும் பெருஞ் செல்வமும் நன்மக்களும், மேலாத்தாய்தந்தையும் அவரே இனி யாவாரே.” (திருவாய்மொழி 5-1-8); தாரணி-பூமி; வாயார வாழ்த்து – “எண்திசையும் அறிய இயம்புகேன், ஒண்தமிழ்ச் சடகோபனருளையே” (கண்ணிநுண் சிறுத் தாம்பு, 7.)

1. சென்னியில் சூடும் மலர்

வேதமுடித் தேசிகனே! வேதியர் குலத்து அரசே!
சாது சனங்களுக்குத் தாவளமே! – போது அமரும்
நின் அடியை என்றும் நினைத்திருப்பார் பாதம் என்தன்
சென்னிதனில் சூடும் மலர். (1)

பொழிப்புரை:- வேதங்களை உனது திருமுடியில் தரித்த அழகனே! அந்த வேதங்களை நாள் தோறும் ஓதிக் கொண்டிருக்கும் அந்தணர்கள் கூட்டத்துக்குத் தங்கும் இடமாக இருப்பவனே! தாமரை மலர் போன்ற உனது திருவடியை என்றும் எண்ணிக்கொண்டு இருக்கின்ற அடியார்களது திருவடியே எனது தலையில் (முடியில்) அணிந்துகொள்ளும் மலராகும்.

நூல்.

(1) எல்லா நூல்களும் மங்கலமொழி முதல் வகுத்துக் கூற வேண்டுவது மரபாதலால், ’வேதமுடி’ என்று தொடங்கினார்.. கம்பநாட்டாழ்வான் இயற்றியருளிய ’ஆழ்வார் நூற்றந்தாதி’ என்கிற ’சடகோபரந்தாதி’, ’வேதத்தின் முன்செல்க’ என்று : தொடங்கி யுள்ளது காண்க. வேதம் – ஆதிநூல். வித்தென்னும் பகுதியடியாகத் தோன்றிய பெயர் என்பர். வித் – ஞானம். இது: பரதகண்டத்து ஆஸ்திகர்களால் கொண்டாடப்பெறும் நூல். இது இருக்கு, எஜுஸ், சாமம், அதர்வணம் என்று நான்கு பிரிவை யுடையது. இது ஞானகாண்ட, கர்மகாண்ட வகையால் ஈச்வரனையும், அவனை உபாஸிக்கும் யஞ்ஞாதிகளையும் கூறும். இதற்கு இராவணன் சந்தமுதலிய வகுத்தான். இது சிக்ஷை, வியாகரணம், நிருத்தம், சந்தஸ், சோதிஷம், கல்பம் என ஆறு அங்கங்களை யுடையது. இதனைச் சோமுகன் என்னும் அசுரன் திருடிச்செல்லப் பின் விஷ்ணுமூர்த்தி அன்ன உருவமாய்ப் பிரமனுக்கு: உபதேசித்தனர். இதன் முடிவு உபநிஷத்துக்கள். மீமாம்சா சாஸ்திரிகள் வேதம் சிருட்டிக்கப்பட்டன அல்ல அநாதி என்பர்: நியாயவேதாந்தியர் ஈச்வரவாக்கியம் என்பர். கடவுள் வேதங்களைப் பிரமனுக்கு உபதேசிக்கப் பிரமன் அதனை இருடிகளுக்கும் அவ்விருடிகள் அதனைத் தம் சீடருக்கும் உபதேசித்தனர் என்பர். – (அபிதான சிந்தாமணி); தேசிகன் – அழகன் (தேசிகம். அழகு) ’வடிவழகார்ந்த வண்தூப்புல் வள்ளல்’-(பிள்ளை யந்தாதி. 20). குரு. “பற்றற்றவன் கொடுக்கும் பண்டமனைத்தினையும் பற்றுதலுந் தேசிகர்க்குப்பாங்கு’-(சைவ. ஆசா.88). ’பூருவா சாரியர்கள் போதமநுட் டாநங்கள், கூறுவார் வார்த்தை களைக் கொண்டுநீர் – தேறி, இருள்தருமா ஞாலத்தே யின்பமுற்று வாழும், தெருள் தருமா தேசிகனைச் சேர்ந்து’-(உபதேச ரத்தினமாலை. 72) *அருள்பெற்ற, நாதமுனி முதலான நந்நேசிகரையல்லால், பேதை மனமேயுண்டோ பேசு” (உபதேசரத்தின மாலை. 36), “தேசிகர்பால் கேட்ட செழும் பொருளை” (௸. 57), ‘யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க் குயர்ந்த வுலகம் புகும்’ -(திருக்குறள். துறவு. 6) “தோனல்லாத வுடம்பை யானென்றும், தன்னோடியைபில்லாத பொருளை எனதென்றுங்கருதி அவற்றின்கட் பற்றுச் செய்வதற். கேதுவாகிய மயக்கத்தைக் கெடுப்பான் வானோர்க்கும் எய்தற்கரிய வீட்டுலகத்தை யெய்தும். மயக்கம் அறியாமை. அதனைக் கெடுத்தலாவது தேசிகர்பாற் பெற்ற உறுதி மொழிகளானும் யோகப்பயிற்சியானும் அவை யானெனதன்மை தெளிந்து, அவற்றின்கட் பற்றை விடுதல்.”) தேசாந்தரி, வணிகன். (3, 4 பிங்கல 3678) தமிழில் தேசிகன்? என்னும் சொல்லுக்கு வணிகன் என்றும், ஆசான் என்றும் இரு பொருள்கள் உள. “தேசிகன் வணிகன் ஆசான்” – (சூடாமணி நிகண்டு) நம் தேசிகனை ஆசான் என்றமட்டில் உணர்வது போதாது. உலகமறிந்த வணிகர்களுக்கெல்லாம் இவன் உயர்ந்த, கொண்டு விலை செய்யும் வணிகன். விலையுள்ள பொருள்களைக் குறைந்த விலைக்கு வாங்கி அவை கிடையாத வேறிடங்களில் கொண்டுபோய் உயர்ந்த விலைக்கு விற்று நல்ல லாபத்தை அடைபவன் வணிகன் என்று உலகம் அறியும். விலையில்லாத (அதாவது யாரும் விலைமதிக்கவும் கொடுக்கவும் முடியாத) பொருள்களை (சாஸ்திரததிவங்களையும் அர்த்தங்களையும்) யாரும் அறியாத (அதாவது வேதசாஸ்திரங்களில் மறைபொருளாகக் கிடந்த) இடங்களில் தேடி வாங்கி (மனத்தில்  கொண்டு) இவைகிடையாது தவிக்கும் இடங்களாகிய சம்ப்ரதாய நிஷ்டர்களுக்கு அவர்களுடைய பக்திச்ரத்தையாகிய விலைக்கு மட்டில் விற்று அவன் த்ரவ்ய லாபம் அடைவதைப்போல் அன்றிக்கே படிப்போரும், கேட்போரும் அனுஷ்டிப்போரும் ஆத்மலாபம் அடையச் செய்வதாக்கும் இவன் விசித்திர வாணிபம் இருந்தபடி. தேசிகன் என்னும் வடமொழிச் சொல்லுக்கு வழி காட்டுபவன் என்பது தாதுப் பொருள். கார்யாகாரியங்களையும் விதி நிஷேதங்களையும் தன்னை அடுத்தவனுக்கு எடுத்துக்கூறி அவனை நல்வழிப்படுத்தி இவ்வுலகிலுள்ள மட்டும் பாபதோஷங்கள் இல்லாத நல்வாழ்வும் பிறகு மோக்ஷபர்யந்தமான நற்கதியும் சித்திக்கும்படி வழிகாட்டுபவன் ஆசான் ஆதலின் அவனுக்குத் தேசிகன் என்பது பெயராயிற்று. பட்டப்பெயராகவோ காரணப் பெயராகவோ மற்றவர்கள் தேசிகன் என்ற சொல்லைத் தங்கள் பெயருடன் சேர்த்துக் கொண்டபோதிலும் இச்சொல் இடுகுறிப் பெயராக இவன் ஒருவனுக்கே தமிழ் மொழி வழங்கும் நாடுகளிலும் பிற நாடுகளிலும் அமைந்து கிடக்கும் திறம் ஒன்றே இவனைப் பரமாச்சாரியன் ஆக்கித் தருகிறது. “சீலங் கவர்ந்திடுந் தேசிகர்” என்பது ரஹஸ்ய ஸந்தேசப் பாசுரம் .-(அமிருதரஞ்சனி.15) இதற்கு “சீலங்கவர்ந்திடும்” என்கிற பாட்டாலே ஸதாசார்ய ப்ரஸாதமடியாக தனக்கு வருகிற பரமபுருஷார்த்த லாபத்தை அநுஸந்திக்கிறான். (சீலங்கவர்ந்திடுமென்றது) – ஆத்ம குணங்களையும் ஆசாரத்தையும் அங்கீகரிக்கு மவர்கள் என்றபடி, (தேசிகர் என்றது)- “ஆச்ரிதரை வழியல்லா வழிபோகாதபடி விலக்கி நல்வழி காட்டுகைக்கு நிலவர் என்ற படி..”- (ரஹஸ்ய ஸந்தேச விவரணம்) என்று நம் வேதாந்த குருவே வியாக்கியான மிட்டுள்ளார். ’மருளற்ற தேசிகர் வானுகப் பாலிந்த வையமெல்லா, மிருளற் றிறைவ னிணையடி பூண்டுய வெண்ணுதலாற், றெருளுற்ற செந்தொழிற் செல்வம் பெருகிச் சிறந்தவர்பா லருளுற்ற சிந்தையினுலழி யாவிளக் கேற்றினரே.’ – (தேசிகமாலை. அதிகாரசங்கிரகம், 37) ’தெருளார் மறைமுடித் தேசிக னேயெங்க டுப்புற்றேவே.’ – (பிள்ளையந்தாதி 12) ’அருள்தரு மாரண தேசிகனே யெங்க டூப்புற்றேவே.’-(பிள்ளையந்தாதி. 18) வேதியர் — வேதமுணர்ந்தோர்; வேதியர் குலத்தரசே – ’நல்வேதியர்கள் தொழும் திருப்பா தனிராமாநுஜன்” – (இராமாநுச நூற்றந்தாதி. 105); சாதுசனங்களுக்கு – ஸ்ரீவைஷ்ணவர்கட்கு. ” வாதியர் மன்னுந்தருக்கச் செருக்கின் மறைகுலையச் சாது சனங்க ளடங்க நடுங்கத் தனித்தனியே, யாதி யெனாவகை யாரண தேசிகர் சாற்றினர்நம், போத மருந்திரு மாதுட னின்ற புராணணையே – (தேசிகமாலை. அதிகாரசங்கிரகம், 13) “சாது சனம் வாழவென்று சாற்றியநற் ப்ரபந்தசாரம்?-(தேசிகமாலை. பிரபந்தசார சிறப்புத்தனியன், சாதுக்கள். * தம்பிறப்பாற் பயனென்னே சாதுசனங்களிடையே” – (திருவாய்மொழி 3-5-4), “சாதுசனத்தை நலியும்” – (திருவாய்மொழி 3-5-5); தாவளம்- இருப்பிடம் (தெலுங்கு), வசிக்குமிடம். ‘பூவள ருந்திரு மாது புணர்ந்தநம் புண்ணியஞர், தாவள மான தனித் திவஞ் சேர்ந்து தமருடனே’- (தேசிகமாலை. பரமபத சோபானம், 18) ; போது – பூ, மலரும் பருவத்தரும்பு, “காலை யரும்பிப் பகலெல்லாம் போதாகி, மாலை மலருமிந் நோய்.” -(திருக்குறள், காமத்துப்பால். பொழுது கண்டிரங்கல். 7); பாதம் – திருவடி, “ அவர் பாதம் வணங்கினற்கு,”; நின்னடியையென்று நினைந்திருப்பார் பாதம் – ‘ எந்தை பிரான் தன்னை, பாதம் பணிய வல்லாரைப் பணியுமவர் கண்டீர், ஒதும் பிறப்பிடை தோறும் எம்மையாளுடையார்களே.’ — (திருவாய்மொழி 3-7-3), “எந்தைபிரான் தனக்கு அடியாரடியார் தம்மடியாரடியார் தமக்கடியாரடியார்தம், அடியாரடியோங்களே.” – (திருவாய்மொழி 3-7-9) ; சென்னி – தலை; மலர் – பூ. (2)

2. நமக்குப் பற்று

மலர்மகள்கோன் தாள் இணையை மன்னி இருப்பார்கள்
சிலர் அவரால் செய்கருமம் என்னாம்? – மலர் அறுசீர்
வேதாந்த தேசிகனை வேறு ஆகாது ஏத்துவார்
பாதாம்புயம் நமக்குப் பற்று. (2)

பொழிப்புரை:– தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளது கணவன் திருமாலின் திருவடியைப் பொருந்தி (நினைந்து) இருப்பவர்கள் சிலர் உண்டு. அவர்களால் செய்யக்கூடிய காரியம் என்ன இருக்கிறது? ஆனால், குற்றம் நீங்கிய சிறப்பை உடைய வேதாந்த தேசிகனை, தன்னோடு வேறு ஆகாமல், அந்த ஆசாரியரோடு ஒன்றி நின்று போற்றும் அடியார்களது திருவடித் தாமரையே, நமக்குப் பற்றுக்கோடு ஆகும். (தஞ்சமாக) அடைக்கலமாக ஆகும்.

மலர்மகள்கோன் – திருமாமகள் கேள்வன், திருமால்; மன்னி – பொருந்தி; கருமம் – கடமை ; மலம் – அழுக்கு, பற்று, ஆர்வம், செற்றம் முதலியவற்றிற்கும் மலமெனக் கூறுவர்; வேதாந்த தேசிகன் – “எழில் வேதாந்தாரியன்” – (தேசிக மாலை திருச்சின்ன மாலை சிறப்புத்தனியன்), “மின்னுறு நூலமர் வேங்கட நாதனந் தேசிகனே” – (தேசிகமாலை, பன்னிரு நாமம் சிறப்புத்தனியன்), “ சீர்கொண்ட தூப்புற் றிருவேங்க டாரியன்.”- (௸,௸), “ சிட்டர்தொழும், வேதாந்த தேசிகனை -(தேசிகமாலை. கீதார்த்தசங்கிரகம். சிறப்புத் தனியன்), * கீதை மொழிந்தருளும் வேதாந்த தேசிகனார்.” (௸,௸), “ சீராரும்‘வேதாந்த தேசிகர்கோன்,”- (தேசிக மாலை, ஆகார நியமம். சிறப்புத்தனியன்), “ ஞானியர்கள், சென்னியணி சேர்தூப்புல் வேதாந்த தேசிகனே” ‘தூப்புல் வருநிகமாந்தாசிரியன்’-(வாழித்திருநாமம்), “வேண்பெரிய விரிதிரைநீர் வையத் துள்ளே வேதாந்த வாரியனென் றியம்ப நின்றோம். ‘ -(தேசிக மாலை, அமிருதாசுவாதினி. 37), “சந்தமிகு தமிழ்மறையோன் றுாப்புற் றோன்றும் வேதாந்த குரு.”- (தேசிகமாலை. பிரபந்தசாரம், 18), “ தீதற்ற நற் குணப் பாற்கடற் றாமரைச் செம்மலர்மேன், மாதுற்ற மார்பன் மருவவின் கீதையின் வண்பொருளைக், கோதற்ற நான்மறை மெளலியி னாசிரி யன்குறித்தான், காதற் றுணிவுடை யார் கற்கும் வண்ணங் கருத்துடனே.” – தேசிகமாலை. கீதார்த்தசங்கிரகம் 21), ’ மெய்விரத நன்னிலத்து மேன்மை யேத்தி வேதாந்த வாசிரியன் விளங்கினானே.”-(தேசிகமாலை. மெய்விரத நன்னிலத்து மேன்மை. 28), “பெருவேலியா மெம்பி ரான் பேசுபய வேதாந்த தேசிகன்”-(அழகர்பிள்ளைத் தமிழ். பழிச்சினர்ப்பரவல். 12), “செந்தமிழு மாரியமுந் தேர்ந்த பொதுத் தேசிகனே, யெந்தவிதச் சித்து மியற்ற வல்லாய்.”, “ தேசிக னிதயக் கோயிற் செழுமலர் மிசைவார்”, “செந் தமிழ்ப் புலவரேத்துந் தேசிகப் பெருமான்,” “ மருள்புகாநிலைத் தேசிகன்,” “சருவ சித்தியு மெய்தித் தேசிகன் றன்னையே நிகர், “ “ தேசிக னென்னுமாசான்,”” புவனி போற்று நந் தேசிகன் “-(ஸ்ரீலஸ்ரீ தண்டபாணிசுவாமிகள்) ; “வேறாகா தேத்துவார் – “,” தேவுமற்றறியேன், “ “வேறென்றும் நான் அறியேன்” என்ற நிலையிலுள்ளோர்; பாதாம்புயம் – திருவடித் தாமரை பற்று – அடைக்கலம் * “பற்றுக பற்றற்றான் பற்றினையப்பற்றைப் பற்றுக பற்றுவிடற்கு”-(திருக்குறள். துறவு, 10), “ கட்டப் பொருள்விரித்த காசினியி னான்மறையி, னிட்டப் பொருளியம்பு மின்பொருளைச் – சிட்டர்தொழும், வேதாந்த தேசிகனை மேவுவார் தங்கடிருப் பாதாம் புயமடியேன் பற்று. ’, ‘* கீதை மொழிந்தருளும் வேதாந்த தேசிகனார், பாதார விந்தமலர் பற்று “-(தேசிகமாலை, கீதார்த்தசங்கிரகம், சிறப்புத் தனியன்கள்); நமக்குப்பற்று- ஸ்ரீவைஷ்ணவர்களாகிய அனைவருக்குந் தஞ்சமாகும்.

3. என்பால் இருப்பார்.

பற்று ஒன்றும் இன்றிப் பராங்குசனை யேபற்றும்
சித்தம்உடை வேதாந்த தேசிகனை – குற்றம்இல்லா
அன்பால் அடைபவர்க்கு ஆளாகும் அன்பரே
என்பால் இருப்பர் இசைந்து. .3.

(பொழி) எந்தவிதமான உலகப் பற்றும் இல்லாமல், நம்மாழ்வாரையே தஞ்சமாகப் பற்றிக் கொள்கின்ற மனத்தை உடைய வேதாந்த தேசிகனை, குற்றம் இல்லாத அன்போடு அடைகின்ற பக்தர்களுக்கு அடியவர்களாகின்ற அன்பர்களே, என்னிடத்தில் விருப்பத்துடன் தங்கியிருப்பார்கள்.

(3) பற்று – ’ இல்லதும் உள்ளதும் அல்லது அவனுரு, எல்லையில் அந்நலம், புல்குபற்றற்றே.” -(திருவாய்மொழி 1-2-4), “ அற்றது பற்றெனில், உற்றது வீடுஉயர், செற்றது மன்னுறில், அற்றிறைபற்றே.” –( ௸1-2-5), “புற்றிலன் ஈசனும், முற்றவும் நின்றனன், பற்றிலையாய் அவன் முற்றிலடங்கே.” (௸1-2-6); பராங்குசன் – பிற மதங்களாகிய யானைகளைத் தமது பிரபந்தங்களிற் கூறிய தத்துவார்த்தங்களாற் செருக்கடக்கி அவற்றிற்கு மாவெட்டியென்னுங் கருவிபோல இருக்கும் நம்மாழ்வார். “பாடுவ தெல்லாம் பராங்குசனை நெஞ்சத்தாற், றேடுவதெல் லாம்புளிக்கீழ்த் தேசிகனை-ஓடிப்போய்க், காண்ப தெலா நங்கையிரு கண்மணியை யான்விரும்பிப், பூண்பதெலா மாறனடிப் போது.”-(பெருந்தொகை. பொருளியல். 1823), ”தேன ருமகிழ்த் தொடையலு மவுலியுந் திருக்கிளர் குழைக் காதும், கான ருமலர்த் திருமுகச் சோதியுங் கயிரவத் துவர்வாயும், மோன மாகிய வடிவமு மார்பமு முத்திரைத் திருக்கையும், ஞான தேசிகன் சரணதா மரையுமென் னயனம்விட் டகலாவே.”. (௸1824); பராங்குசனையே பற்றும் – பூமன்னுமாது பொருந்திய மார்பன் புகழ்மலிந்த, பாமன்னுமாறனடி பணிந் துய்ந்தவன் ”-(இராமாநுச நூற்றந்தாதி. 1) “மாமலர்மன் னிய மங்கை மகிழ்ந்துறை மார்பினன்றாட் டூமலர் சூடியதொல் லருண் மாறன் றுணயடிக்கீழ், வாழ்வை யுகக்கும்.”-(பிள்ளை யந்தாதி. 1); அன்பாலடைபவர் – ”அன்பன் தன்னை அடைந்தவர்கட்கெல்லாம், அன்பன் தென்குருகூர் நகர் நம்பிக்கு, அன்பனாய்.”- (கண்ணிநுண் சிறுத்தாம்பு. 11); ஆளாகும் அன்பர் – ” என் நம்பிக்கு ஆள், புக்ககாதல் அடிமைப் பய னன்றே ” – (கண்ணிநுண்சிறுத்தாம்பு, 9), ” நகர்நம்பிக்கு ஆள், உரியனாய் அடியேன் பெற்ற நன்மையே.” – (கண்ணிநுண் சிறுத்தாம்பு. 3) ; என்பால் – என்னிடத்து; இசைந்து – உடன்பட்டு.

One Response to “ஸ்ரீ தேசிக‌ நூற்ற‌ந்தாதி–”

  1. Valayapatti Kanniappan Kanniappan Says:

    ஸ்ரீதேசிக நூற்றந்தாதி
    13. வைம்மின்
    நேரிசை வெண்பா
    (’வை’ வ மோனை, ‘ய்’ எதுகை)

    அகற்றி வினையனைத்து மந்தமிறஞ் சீராற்
    சகத்திற் சதிராக வெம்மை – உகப்புடனே
    உய்விக்கும் வேதாந்த தேசிகரா முத்தமரை
    வைம்மின் மனந்தன்னில் வாய்த்து!

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading