மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார்கள் மங்களாசாசனஞ்செய்த நூற்றெட்டுத் திருமால் திருப்பதிகளைப் பற்றிப்
பாடிய அந்தாதித்தொடை யாலமைந்த நூல் என்பது பொருள்.
திருப்பதி – திருமால் அர்ச்சாவதார ரூபியாய் எழுந்தருளியிருக்குந் திவ்வியதலம்.
உகந்தருளிய நிலங்களாகையால், இவற்றிற்கு ‘திரு’ என்று அடைமொழி கொடுக்கப்பட்டது.
‘திருப்பதி’ என்பது – அத்தலங்களையும், அவற்றில் எழுந்தருளியுள்ள எம்பெருமான்களையுங் குறிக்கும்.
———
தனியன் -சிறப்புப் பாசுரம் –
ஏற்ற மணவாளர் இசைத்தார் அந்தாதி வெண்பா
தோற்றக் கேடில்லாத தொன் மாலைப் போற்றத்
திருப்பதியா நூற்று எட்டினையும் சேவிப்போர்
கருப்பதியா வண்ணம் உண்டாக –
(இ – ள்.) திருப்பதி ஆம் நூற்றெட்டினையும் – நூற்றெட்டுத் திருப்பதி களையும்,
சேவிப்போர் – சேவிப்பவர்கள்,
கரு பதியா வண்ணம் உண்டாக – (தமக்கு) மீண்டும் (தாயின்) கருப்பத்திற் பொருந்தாத விதம் உண்டாகுமாறு (மீண்டும் பிறப்பின்றி முத்தியைச்சேருமாறு), –
தோற்றம் கேடு இல்லாத தொல் மாலை போற்ற – பிறப்பும் இறப்பு மில்லாத பழமையாகிய திருமாலைச் சொல்லித் துதிக்கும்படியாக, –
ஏற்றம் மணவாளர் – சிறப்பினையுடைய அழகியமணவாளதாசரென்பவர்,
அந்தாதி வெண்பா – வெண்பாவினாலாகிய நூற்றெட்டுத்திருப்பதியந்தாதியை,
இசைத்தார் – பாடியருளினார்; (எ – று.)
அடியவர்கள் திருமாலின் நூற்றெட்டுத்திருப்பதிகளையும் தாம் சேவிக் கக்கருதுங்காலத்தில்
அத்திருப்பதிகளைப் பாடித் துதித்துப் பிறவித்துயர் தீர்ந்து மோக்ஷஸாம்ராஜ்யத்தைப் பெறும்படி
அழகியமணவாளதாசரால் இந்நூல் அருளிச்செய்யப்பட்ட தென்பது, கருத்து.
இதனால், இந்நூலின் சிறப்பும், இந்நூலாசிரியரது தெய்வப்புலமையும் விளங்குதல் காண்க.
சிறப்புப்பாயிரவிலக்கணங்களுள், “மணவாளர்’ என்றதனால் ஆக்கியோன்பெய ரும்
அந்தாதி வெண்பா என்றதனால் நூற்பெயரும் “வெண்பா என்றதனால் – யாப்பும்,
‘நூற்றெட்டினையும் சேவிப்போர் கருப்பதியாவண்ண முண்டாகத் தொன்மாலைப்போற்ற’ என்றதனால்
நுதலியபொருளும் பயனும் நூல்செய் தற்குக் காரணமும்,
இச்செய்யுளில் செம்பொருளாகவும் குறிப்புப்பொரு ளாகவும் விளங்குமாறு உணர்க.
சொல்நோக்கு பொருள்நோக்கு தொடைநோக்கு நடைநோக்கு முதலிய இனிய நோக்கங்கள்யாவும் அமைய
ஆசு மதுரம் சித்திரம் விஸ்தாரம் என்னும் நால்வகையிலும் திவ்வியகவிகளைப் பாடவல்ல புலவர்
பெருமானாதலால், இவர்க்கு ‘ஏற்றம்’ என்ற அடைமொழி கொடுக்கப்பட்டது.
ஏற்ற மணவாளர் என்று பிரித்து – (எம்பெருமானது விஷயமான கவிகளைச் சொல்லுதற்குத்) தகுதியுடைய
மணவாளர் என்று உரைத்தலும் பொருந்தும்;
எம்பெருமானைத் துதிப்பதற்கு ஏற்ற ஞானம் முதலிய குணங்களை யுடைமையால், இவரை இவ்வாறு கூறுதல் தகுமென்க.
ஒருபெயரின் ஒருபகுதியைக் கொண்டு அப்பெயர் முழுவதையுங் குறிப்பதொரு மரபுபற்றி,
அழகியமண வாளதாசரை ‘மணவாளர்’ என்றார்; (இதனை, வடநூலார் “நாமைகதேஸே நாமக்ரஹணம்’ என்பர்.)
திருமால் துஷ்டநிக்கிரகசிஷ்டபரிபாலநத்தின் பொருட்டும் தருமத்தை நிலைநிறுத்துதற் பொருட்டும்
தனது இச்சையினாலேயே மத்ஸ்ய கூர்மாதிகளான திருவவதாரங்களைச் செய்தபோதிலும்,
ஜீவாத்மாக்கள் தேவ திர்யங் மநுஷ்ய ஸ்தாவரரூபங்களாய்க் கருமவசத்தினாற் பிறந்தழிவதுபோலப்
பிறப்பு இறப்புக்களை யுடையவ னாகாமையால், அவனை “தோற்றக்கேடில்லாத மால்’ என்றார்.
தொல்மால் – எப்போதுமுள்ள புராணபுருஷன்.
மால் – பெருமை, அடியார்கள்பக்கல் அன்பு, திருமகளிடத்துக்காதல், மாயை, கருநிறம், இவற்றை யுடையவன்.
தோற்றம் – தோன்றுதல்; தொழிற்பெயர். கேடு – “கெடு’ என்னும் முதனிலை திரிந்த தொழிற்பெயர்.
போற்ற, உண்டாக என்னுஞ் செயவெனெச்சங்கள் – காரியப்பொருளனவாய் எதிர்காலங் குறிக்கும்.
உண்டாக, போற்ற, இசைத்தா ரென்க. உம்மை – முற்றுப்பொருளது.
போற்றவும் உண்டாகவும் இசைத்தார் என வினைச்செவ்வெணாக்கி உரைப்பாரு முளர். பதியா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.
இக்கவி அபியுக்தரி லொருவர்செய்த தென்பர். இது, வைஷ்ணவ சம்பிரதாயத்தில்’தனியன்’ எனப்படும்.
(நூலினுள் அடங்காது தனியே பாயிர மாய் நிற்றல்பற்றியது, அப்பெயர்; ‘அன்’ விகுதி – உயர்வுப்பொருளது.)
———
காப்பு – காத்தல்: அது, இங்கு, காக்கின்ற கடவுளின் விஷயமான வணக்கத்தைக் குறிக்கும்:
ஆகவே, கவி தமக்கு நேரிடக்கூடிய இடையூறுகளை நீக்கித் தமது எண்ணத்தை முடிக்கவல்ல தலைமைப்
பொருளின்விஷயமாகச் செய்யுந் தோத்திர மென்பது, கருத்து.
இக்காப்புச்செய்யுள் ஆழ்வார்கள் பன்னிருவரையும் பற்றியது. ஸ்ரீவைஷ்ணவசமயத்தவரான இந்நூலாசிரியராற்
கூறப்பட்ட இக்காப்புச்செய்யுள் விஷ்ணுபக்தர்களிற் சிறந்த ஆழ்வார்களைக் குறித்ததாதலால், வழிபடுகடவுள்வணக்கமாம்.
தம் தமது மதத்திற்கு உரிய கடவுளை வணங்குதலேயன்றி, அக்கடவுளது அடியார்களை வணங்குதலும்
வழிபடுகடவுளின்வணக்கத்தின்பாற் படுமென அறிக. ஆழ்வார்களால் வெளியிடப்பட்டுள்ள திவ்வியப்
பிரபந்தங்களின் சொற்பொருட் கருத்துக்களமையுமாறு அவர்களால் மங்களாசாஸநஞ்செய்யப்
பெற்ற நூற்றெட்டுத்திருப்பதிகளின் விஷயமாகவே அம்முதனூல்கட்கு வழிநூல்போல
இவராற் செய்யப்படுவது இப்பிரபந்த மென்பதுபற்றி, இந்நூலின் இக்காப்புச்செய்யுளை ஏற்புடைக்
கடவுள்வணக்க மென்று கொள்ளவும் அமையும். இப்பன்னிரண்டுஆழ்வார்களும் திருமாலினிடத்துப் பரிவராய்
அப்பிரானுக்கு ரக்ஷையாக நிற்கின்ற ஆயுதபரிஜனங்களின் அம்ஸமாவ ராதலால்,
அவர்களை ரக்ஷையாகக் கொள்ளுதல் ஏற்கு மென்க.
காப்பு –
ஆழ்வார்கள் பன்னிருவர்
பொய்கை பூதன் பேயார் பொன் மழிசைக் கோன் மாறன்
செய்ய மதுரகவி சேரர் பிரான் வையகம் எண்
பட்டர் பிரான் கோதை தொண்டர் பாதப் பொடி பாணன்
கட்டவிழ் தார் வாட் கலியன் காப்பு –
(இ – ள்.) பொய்கை – பொய்கையாழ்வாரும்,
பூதன் – பூதத்தாழ்வாரும்,
பேயார் – பேயாழ்வாரும்,
பொன் மழிசை கோன் – திருமழிசையாழ்வாரும்,
மாறன் – நம்மாழ்வாரும்,
செய்ய மதுரகவி – செம்மையையுடைய மதுரகவியாழ்வாரும்,
சேரர் பிரான் – குலசேகராழவாரும்,
வையகம் எண் பட்டர்பிரான் – உலகத்தவரால் நன்குமதிக்கப்பெற்ற பெரியாழ்வாரும்,
கோதை – ஆண்டாளும்,
தொண்டர் பாதம் பொடி – தொண்டரடிப்பொடி யாழவாரும்,
பாணன் – திருப்பாணாழ்வாரும்,
கட்டு அவிழ் தார் வாள் கலியன் – (அரும்புகளின்) முறுக்கு விரிந்த மாலையைத் தரித்த வாட்படையை யேந்திய திருமங்கையாழ்வாரும்,
காப்பு – (நமக்கு) ரக்ஷகமாவர்; (எ – று.)
ஆசீர்வாதம் (வாழ்த்து), நமஸ்காரம் (வணக்கம்), வஸ்துநிர்த்தேசம் (தலைமைப்பொருளுரைத்தல்) என்ற
மூன்றுவகை மங்களங்களுள், இது – நமஸ்காரத்தின்பாற்படு மென்க.
“பொய்கையார் பூதத்தார் பேயார் புகழ்மழிசை, யைய னருண்மாறன் சேரலர்கோன் –
துய்யபட்ட, நாத னன் பர்தாள்தூளி நற்பாணன் நன்கலிய, னீதிவர்தோற்றத்தடைவா மிங்கு” என்றபடி திருவவதாரகிரமத்தால்,
பொய்கையார் பூதத்தார் பேயார் திருமழிசைப்பிரான் மாறன் குலசேகரன் பெரியாழ்வார் தொண்டரடிப்பொடி
திருப்பாணர் திருமங்கையாழ்வார் என முறைப்படுத்தி, நம்மாழ்வாரது சிஷ்யரான மதுரகவியை அவரையடுத்தும்,
பெரியாழ்வாரது திருமகளாரான ஆண்டாளை அவரையடுத்தும் கூறின ரென உணர்க.
பொய்கை – குளம்; கச்சித்திருப்பதியிலே திருவெஃகாவென்னுந் திவ் வியதலத்தின் வடபுறத்திலுள்ள
பொற்றாமரைப்பொய்கையில் திருவவதரித்த ஆழ்வாரை “பொய்கை’ என்றது – இடவாகுபெயர்;
இனி, உவமவாகுபெயராய் ஊர்நடுவேயுள்ள குளம்போல எல்லார்க்கும் எளிதிற்பயன்கொடுப்பவ ரென்று உரைத்தல், சம்பிரதாயமன்று.
பூதன் – எம்பெருமானையறிதலாலே தமதுஉளனாகையை யுடையவ ராதலால், இவர்க்கு இத்திருநாமம்;
‘பூஸத்தாயாம்’ என்றபடி ஸத்தையென்னும் பொருள்கொண்ட ‘பூ’ என்னும் வடமொழி
வினையடியினின்று பிறந்த பெய ராதலால்,
‘பூதன்’ என்பதற்கு – ஸத்தை (உள்ளவனாயிருக்கை) பெறுகின்றவ னென்று பொருளாயிற்று:
இனி, இத்திருநாமத்துக்கு – (உலகத்தவரோடு சேராமையால்) பூதம் போன்றவ ரென்று பொருளுரைத்தல், சம்பிரதாயமன்று.
பேயார் – உலகத்தவராற் பேய்போல எண்ணப்படுபவர்; அல்லது, அவர்களைத் தாம் பேய் போல எண்ணுபவர்;
“பேயரே யெனக்கி யாவரும் யானுமோர், பேயனே யெவர்க்குமிதுபேசியென்,
ஆயனே யரங்கா வென்றழைக்கின்றேன், பேயனாயொழிந்தே னெம்பிரானுக்கே” என்ற கொள்கைப்படி
இவர் பகவத்பக்தியாற் பரவசப்பட்டு நெஞ்சழிதல் கண்சுழலுதல் அழுதல் சிரித்தல் தொழுதல் மகிழ்தல் ஆடுதல் பாடுதல் அலறுதல்
முதலிய செய்கைகளையே எப்பொழுதுங் கொண்டு காண்பவர் பேய்பிடித்தவரென்னும்படி யிருந்ததனால், பேயாழ்வாரென்று பெயர்பெற்றனர்.
பொன்மழிசைக்கோன் – திருமழிசை யென்று வழங்குகின்ற மஹீஸாரக்ஷேத்ரத்தில் திருவவதரித்த பெரியோன்;
இத்தலம், தொண்டைநாட்டிலுள்ளது.
நம்மாழ்வார்க்கு அநேகந்திருநாமங்கள் இருப்பினும், அவற்றில் ‘மாறன்’ என்பது, முதலில் தந்தையார் இட்ட குழந்தைப்பெய ராதலால்,
அதில் ஈடுபட்டு அப்பெயரினாற் குறித்தார். பிறந்த பொழுதே தொடங்கி அழுதல் பாலுண்ணுதல் முதலியன செய்யாமல்
உலக நடைக்கு மாறாயிருந்ததனால், இவர்க்கு ‘மாறன்’ என்ற இத்திருநாமம் இடப்பட்டதுபோலும்;
வலியவினைகட்கு மாறாக இருத்தலாலும், அந்நியமத ஸ்தர்களை அடக்கி அவர்கட்குச் சத்துருவாயிருத்தலாலும்,
பாண்டியநாட்டில் தலைமையாகத் தோன்றியதனாலும் வந்த பெய ரென்றலும் உண்டு.
மதுரகவி – இனிமையானபாடல் பாடுபவர். மதுரகவிக்குச் செம்மை – மற்றை யாழ்வார்கள்போல
எம்பெருமானுக்கு அடிமைப்படாமல் அப்பெருமானது அடியவரான நம்மாழ்வார்க்கு அடிமைபூணுதல்;
பகவத்பக்தியினும் பாகவத பிரதிபத்தி விசேஷமென்பது, ஸ்ரீவைஷ்ணவசித்தாந்தம்.
சேரர்பிரான் – சேரநாட்டிலுள்ளார்க்கு அரசர்.
பட்டர்பிரான் – வித்துவான்களுக்கெல்லாந் தலைவர். வல்லபதேவனென்னும் பாண்டியராஜன் வேதாந்த
சித்தாந்தமான பரதத்துவத்தை நிர்ணயம்பண்ணவேண்டுமென்று ஏற்படுத்திய வித்யாசுல்க மாகிய பொற்கிழியை,
இவர் அங்குத்திரண்டுவந்த வித்துவான்களையெல்லாம் வாதத்தில்வென்று அறுத்துக் கொண்டது கண்ட
அவ்வரசன் அக்காலத்தில் பண்டிதர்கட்கெல்லாந் தலைவராய் விளங்கிய தகுதிக் கேற்ப, இவர்க்கு இத்திருநாமத்தைச் சாற்றின னென்க.
இவர் மற்றையாழ்வார்கள்போலத் தமதுநன்மையை நாடாமல் எம்பெருமானது நன்மையை நாடி
அவனுக்குப் பல்லாண்டுபாடிய சிறப்புத்தோன்ற ‘வையகமெண்பட்டர்பிரான்’ என்றார்.
‘வையகம்’ என்பது – இங்கு இடவாகுபெயராய், உலகத்திலுள்ளாரை உணர்த்திற்று.
கோதை – மாலை; எம்பெருமானுக்கு மாலைபோல மிக இனியளாயிருப்பவள்: அல்லது,
எம்பெருமானுக்குச் சமர்ப்பித்தற்காகத் தனதுதந்தையார் அமைத்துவைத்த பூமாலையை
அவரில்லாதசமயத்தில் தான்சூடிக்கொண்டு அழகுபார்த்துப் பின்பு, கொடுத்தவள்;
அன்றி, எம்பெருமானுக்குப் பாமாலைசூட்டினவள்.
தொண்டர்பாதப்பொடி – உள்ளும் புறமும் ஒத்துத் தொண்டுசெய்யும் மெய்யடியாரான ஸ்ரீவைஷ்ணவர்களுடைய
திருவடித்தூளிபோல அவர்கட்குக் கீழ்ப்படிந்து அடிமைபூண்டு ஒழுகுபவராதலால், இவர்க்கு ‘தொண்டரடிப்பொடி’ என்று திருநாமம்.
பாணன் – வீணையுங் கையுமாய்ப் பெரியபெருமாள் திருவடிக்கீழே நிரந்தரசேவைபண் ணிக்கொண்டு பாட்டுப்பாடிப் புகழ்பவர்;
பாண் – இசைப்பாட்டு.
கலியன் – மிடுக்குடையவர்; சோழராசன் கட்டளைப்படி மங்கைநாட்டார்க்கரசராகிய இவர் குமுதவல்லியென்னுங்
கட்டழகியை மணஞ்செய்துகொள்ளுதற்பொருட்டு அவள் சொற்படி நாடோறும் ஆயிரத்தெட்டு
ஸ்ரீவைஷ்ணவர்களைஅமுதுசெய்வித்துவருகையில், கைப்பொருள் முழுவதுஞ் செலவாய்விட்டத னால் வழிபறித்தாகிலும்
பொருள்தேடிப் பாகவத ததீயாராதநத்தைத் தடையற நடத்தத் துணிந்து வழிச்செல்வோரைக் கொள்ளையடித்து வரும்போது
ஸ்ரீமந்நாராயணன் இவரையாட்கொள்ளக் கருதித் தாம் ஒருபிராம ணவேடங்கொண்டு பலஅணிகலங்களைப் பூண்டு
மணவாளக் கோலமாய் மனைவியுடனே இவரெதிரில் எழுந்தருள, இவர் கண்டு களித்து ஆயுதபாணி யாய்ப்
பரிவாரத்துடன் சென்று அவர்களை வளைத்து வஸ்திரஆபரணங் களையெல்லாம் அபகரிக்கையில்
அம்மணமகன் காலிலணிந்துள்ள மோதிர மொன்றைக் கழற்றமுடியாமையால் அதனையும் விடாமற் பற்களாலே கடித்து வாங்க,
அம்மிடுக்கை நோக்கி, எம்பெருமான், இவர்க்கு ‘கலியன்’ என்று ஒருபெயர் கூறினா னென உணர்க.
இவர் தமதுகுடிக்குஏற்ப இளமையிலேயே ஆயுதவித்தையில் தேர்ச்சிபெற்றுச் சோழராஜனையடுத்துச்
சேனா பதியுத்தியோகத்தி லமர்ந்து கொற்றவனுக்குக் கொடியவரோடு கடும்போர் நேருங்காலங்களிற் படைகளோடு
முன்சென்று பராக்கிரமத்தாற் பகைவென்று பரகாலனென்று பெயர்பெற்றுப் பலமுறை வாகைசூடிவந்தவ ராதலால்,
‘கட்டவிழ்தார்வாட்கலியன்’ என்றார்; தாரை வாளுக்கும் அடை மொழியாக்கலாம். தார் – முள்ளிமலர்மாலை யெனினுமாம்.
இவர்க்கு இம்மலர் மாலை உரியதாதலை, “முள்ளிச்செழுமலரோ தாரான்” என்பதனா லுணர்க.
———-
நம்மாழ்வார் –
பிறவாத பேறு பெறுதற்கு எஞ்ஞான்றும்
மறவா திறைஞ்சு என் மனனே துறவாளன்
வண் குருகூர் வாவி வழுதி வளநாடுடைய
தண் குருகூர் நம்பி திருத் தாள் –
(இ – ள்.) என் மனனே – எனது மனமே, –
துறவு ஆளன் – பற்றின் மையுடையவரும் (பற்றற்றவரும்),
வள் குருகு ஊர் வாவி வழுதி வளம் நாடு உடைய தண் குருகூர் நம்பி – அழகிய நீர்வாழ்பறவைகள் உலாவப்பெற்ற
நீர்நிலைகள் சூழ்ந்த பாண்டிவளநாட்டிலுள்ள குளிர்ந்த திருக்குருகூரில் திருவவதரித்த பெரியவருமான நம்மாழ்வாரது,
திரு தாள் – திருவடிகளை, – பிறவாத பேறு பெறுதற்கு – மீண்டும் பிறவாமையாகிற இலாபத்தையடையும் பொருட்டாக,
எ ஞான்றும் – எப்பொழுதும்,
மறவாது – மறவாமல்,
இறைஞ்சு – வணங்குவாயாக; (எ – று.)
திருமாலடியார்களிற் சிறந்த ஆழ்வார்கள் பன்னிருவருள் ஐந்தாமவராகிய நம்மாழ்வார் –
மற்றையாழ்வார்கள்போல லௌகிகவிஷயஞானம் நடை யாடுகையில் எம்பெருமானருளால் ஒருகாலவிசேஷத்தில்
தத்துவஞானாதிகள் தோன்றப்பெற்று அந்தப்பகவானை யனுபவிப்பதன்றித் திருத்துழாய் பரிமளத்துடனே
அங்குரிப்பதுபோல இயற்கையிலேயே விலக்ஷணமான ஞானபக்திகளையுடையவ ராதலால்,
மிகுந்த ஏற்றமுள்ளவராய்த் தத்துவ ஞான பிரவர்த்தநத்திற் சிறந்தவராதலோடு ஸ்ரீவைஷ்ணவர்கட்கு
இந்தப் பூலோகத்திற் பிரதமாசாரியருமாவர். ஆகவே, கவி இவரைப்பற்றித் தனியே காப்புச்செய்யுள் கூறின ரென்க.
இவ்வாழ்வார் – பகவானது அம்சமும், ஸ்ரீகௌஸ்துபத்தினது அம்சமும், சேனைமுதலியாரது அம்சமுமாவர்.
சடகோபன், வகுளாபரணன், பராங்குசன் என்ற பெயர்களும் இவர்க்கு வழங்கும்.
இதனால், நம்மாழ்வாரது திருவடிகளை வணங்கினால் மீண்டும் இவ்வுல கத்திற்பிறந்திறத்தலாகிய பிறவித்துயர் தீருமென,
தம்மனத்துக்கு இதோப தேசஞ் செய்கின்றனரென்க. பேறு – பெறுதற்கு உரியது; புருஷார்த்தம்.
எஞ்ஞான்றும் மறவாது இறைஞ்சுதல் – எப்பொழுதும் விடாமல் மனத்திற் கொண்டு வணங்குதல்.
மனம் – மனன்: ஈற்றுப்போலி. நம்மாழ்வார் பிறந்த பொழுதேதொடங்கி உலகப்பற்றுச் சிறிதுமின்றி யிருந்தவ ராதலால்,
அவரை ‘துறவாளன்’ என்றார். நம்பி – ஆண்பாற் சிறப்புப்பெயர்.
இச்செய்யுளின் பின்னிரண்டடிகள் – திரிபு என்னுஞ் சொல்லணியின் பாற்படும்:
திரிபாவது – அடிகளின் முதலெழுத்துமாத்திரம் வேறுபட்டிருக்க,
இரண்டுமுதலிய பலஎழுத்துக்கள் ஒன்றிநின்று பொருள்வேறுபடுவது:
இதனையும் யமகவகையி லடக்குவர் ஒருசாரார். அடுத்த இரண்டுசெய்யுள் களிலும் இவ்வணி காண்க.
———
உடையவர் –
முன்னே பிறந்து இறந்து மூதுலகிற் பட்ட எல்லாம்
என்னே மறந்தனையோ என் நெஞ்சே சொன்னேன்
இனி எதிரா சன்மங்கள் இன்று முதல் பூதூர்
முனி எதிராசன் பேர் மொழி —
(இ – ள்.) என் நெஞ்சே – எனது மனமே! –
முன்னே – இதற்குமுன்பு,
பிறந்து இறந்து – ஜநநமரணங்களை யடைந்து,
முது உலகில் பட்ட எல்லாம் – பழமையாகிய இவ்வுலகத்தில் அநுபவித்த கஷ்டங்களையெல்லாம்,
மறந்தனையோ – மறந்துவிட்டாயோ!
என்னே – (மீண்டும் ஸம்ஸாரத்திற் செல்லாமலிருத்தற்கு உரிய வழியைத் தேடாமல் அதனிடத்திலேயே செல்கின்ற இது) என்ன விபரீதபுத்தி!
சொன்னேன் – (நான் இப்பொழுது ஓர் உறுதி மொழி) கூறுகின்றேன்: (அதாவது), –
இன்றுமுதல் – இன்றுதொடங்கி,
பூதூர் முனி எதிராசன் பேர் மொழி – ஸ்ரீபெரும்பூதூரில் திருவவதரித்த துறவியாகிய யதிராஜனது திருநாமத்தைச் சொல்லுவாய்;
(நீ அவ்வாறு சொல்வையாயின்), சன்மங்கள் இனி எதிரா – பிறப்புக்கள் இனி (உனக்கு) உண்டாகமாட்டா; (எ – று.)
இதனால், யதிராஜனது திருநாமத்தை வாயினாற்சொல்லுதலாகிய இந்தச் சிறுதொழிலொன்றினாலேயே
பிறவித்துயரைக் கடத்தலாகிய பெரும்பேறு கிடைப்பதாயிருக்க, அதனைப்பெறாது ஜநநமரணங்கட்கே இடமாகிய
உலகவாழ்க்கையிற் கிடந்து உழல்கின்ற தமது மனத்துக்கு நல்லுபதேசஞ் செய்கின்றனரென்க.
என்னே – ‘பட்டபிறகும் அறிவுவரவில்லையே!’ என்று மனத்தின் அறியாமைக்கு இரங்கிக்கூறியவாறு: இகழ்ச்சிக்குறிப்புமாம். எம்
பெருமான் “உடையவர்’ என்று ஒருநாமதேய முண்டாகுமாறு எதிராஜரை நோக்கி,
“உமக்கும் உம்முடையார்க்கும் உபயவிபூதி ஐஸ்வர்யமும் தந்தோம்’ என்று அருளிச்செய்கையாலும்,
உடையவர்க்கு முற்பட்ட ஆசாரியர்கள் அவர்திருமுடிசம்பந்தத்தாலும் பிற்பட்ட ஆசாரியர்கள் அவரது திருவடி சம்பந்தத்தாலும்
உய்வுபெறுவரென்பது, ஸ்ரீவைஷ்ணவர்களின் துணிபாதலாலும்,
முனியெதிராசன் பேர் மொழிந்தால் இனிச் சந்மம் எதிரா என்று கூறின ரென்னலாம்.
“சொன்னேன்’ = சொல்லுகின்றேன்: இயல்புபற்றிவந்த காலவழுவமைதி. சன்மம் – ஜந்மம்: வடமொழி.
முனி – மநநசீலன்: தத்துவஞான முடையவன்: இப்பெயர், துறவறமுடையோனைக் குறிக்கும்.
எதிராசன் = யதிராஜன்: யதிகட்குத் தலைவன்: யதிகள்யாவரினும் மேம்பட்டிருப்பவன். பேர் – பெயர்: மரூஉ.
ஸ்ரீவைஷ்ணவ விஸிஷ்டாத்வைத மத ஸ்தாபநாசார்யரும் ஸ்ரீ பாஷ்யகாரருமாகிய யதிராஜர் தமது திருவடி சம்பந்தத்தாற்
பின்புள்ளோரும் தமது திருமுடி சம்பந்தத்தால் முன்புள்ளோரும் ஈடேறுமாறு குருபரம் பரையில் நடுநாயக மணியாய்ச் சிறத்தலால்,
அவரைப்பற்றி, இந்நூலாசிரியர் இங்குத் துதிகூறின ரென்க.
இவர், தொண்டைநாட்டில் ஸ்ரீபெரும்பூதூரில் ஸ்ரீகேசவஸோமயாஜியாரின் திருக்குமாரராய்த் திருவவதரித்தவர்;
இவருக்கு நல்லம்மானாகிய பெரியதிருமலைநம்பியால் இளமையில் இடப்பட்ட திருநாமம் – இளையாழ்வாரென்பது;
பின்பு பஞ்சஸம்ஸ்காரஞ்செய்தபோது பெரியநம்பி ‘ராமாநுஜன்’ என்ற பெயரை யிட்டனர்.
இவர் ஸந்யாஸாச்ரமம் பெற்றபோது திருக்கச்சிப்பேரருளாளப்பெருமாள் ‘ராமாநுஜமுநி’ என்று பேரிட்டழைத்தனர்;
உடையவர் எம்பெருமானார் பாஷ்யகாரர் கோயிலண்ணன் சடகோபன்பொன்னடி என்ற திருநாமங்களும் இவர்க்கு உண்டு;
இவர் – ஆதிசேஷாம்மாவர். இவரதுசம்பந்தம் பெற்ற காரணத்தால், ஸ்ரீவைஷ்ணவசமயம், “எம்பெருமானார்தரிசனம்’ என்று சிறப்பித்துக் கூறப்படும்.
————-
கூரத் தாழ்வான் –
முக்கால மில்லா முகில் வண்ணன் வைகுந்தத்தது ‘
எக்காலம் செல்வான் இருக்கின்றேன் தக்கார் எண்
கூரத் தாழ்வான் அடியைக் கூடுதற்கு நாயடியேன்
போரத் தாழ்வான சடம் போட்டு —
(இ – ள்.) நாய் அடியேன் – நாய்போற் கடைப்பட்டவனாகிய யான், –
போர தாழ்வு ஆன சடம் போட்டு – மிகவும் இழிவையுடையதாகிய இவ்வுடம்பை (இங்கு) விட்டிட்டு, –
தக்கார் எண் கூரத்தாழ்வான் அடியை கூடுதற்கு. பெரியோர்களால் நன்குமதிக்கப்பெற்ற கூரத்தாழ்வானது திருவடிகளைச் சேர்தற்கு –
முக்காலம் இல்லா முகில் வண்ணன் வைகுந்தத்து – (இறப்பு நிகழ்வு எதிர்வு என்னும்) மூன்றுகாலங்களுமில்லாததாகிய
காளமேகம்போன்ற திருநிறமுடைய திருமாலினது ஸ்ரீ வைகுண்டலோகத்தில்,
எக்காலம் – எந்நாளில்,
செல்வான் இருக்கின்றேன் – சென்று சேரப்போகின்றேன்? (எ – று.)
இந்நூலாசிரியர்க்கு ஸ்வாசார்யரான பட்டர்க்குக் கூரத்தாழ்வான் திருத்தமப்பனா ராதல்பற்றியும்
தம்குலமுதல்வரான திருவரங்கத்தமுதனார் ஸ்ரீபாஷ்யகாரருடைய திருவடிகளில் ஆஸ்ரயித்தற்குக் கூரத்தாழ்வான்
புருஷகாரமாயிருந்தமைபற்றியும், அவ்வாழ்வானைப்பற்றி வணக்கம் கூறப்பட்ட தென்க.
கூரமென்னுந்தலத்தில் திருவவதரித்து, எம்பெருமானுடைய திருக் கலியாணகுணகணங்களாகிய அமுதவெள்ளத்தில் முழுகி
மிகவும் ஈடுபட்டு நன்றாக ஆழ்பவ ராதலால், இவர்க்கு இத்திருநாமம்.
கூரம் – தொண்டைநாட்டில் காஞ்சீபுரத்துக்கு வடமேற்கிலுள்ள தொரு தலம்.
இவர் – ஹாரீதகுல திலகரான ஸ்ரீராமஸோமயாஜியாரின் குமாரர்; இராமாம்சம் சங்காம்சம் ஸர்வநேத்ராம்சம்:
இவரது வேறுதிருநாமங்கள் – ஸ்ரீவத்ஸசிஹ்நர், திருமறு மார்பர், நடையாடுபதஞ்சலி, ஸஞ்சாரிமஹாபாஷ்யர், யதீந்த்ரசரணர் என்பன.
கூரத்தாழ்வான் அடி என்பதற்கு – பட்டர்எனப் பொருள்கொள்ளுதலும் தகும்:
பட்டர் – கூரத்தாழ்வானது திருக்குமாரராதலாலும், அத்தமப் பனாரிடத்தினின்று முக்கியமான வித்யைகளை
யெல்லாம் அதிகரித்த சிஷ்ய ராதலாலும், ஸிஷ்யரை ஆசாரியரது திருவடியாகக் கூறுதல் மரபாதலாலுமென்க.
மிகவும் நிக்ருஷ்டமாகிய இந்தமாம்ஸதேகத்தை ஒழித்துவிட்டுத் தே ஜோமயமான திவ்யசரீரத்தோடு
அந்தமில்பேரின்பத்தழிவில் வீட்டுலகத்தை யடைந்துள்ள தமதுபரமாசாரியராகிய கூரத்தாழ்வானது திருவடிகளை
எப்போது கூடுவே னென்று, நூலாசிரியர் ஸம்ஸாரத்தில் வெறுப்புக்கொண்டு மிக்கஆற்றாமையோடு கூறுகின்றனரென்க.
நிமிஷம் காஷ்டை கலை நாழிகை முகூர்த்தம் நாள் மாதம் வருஷம் யுகம் கற்பம் முதலிய காலவரையறை
பரமபதத்தில் இல்லையாதலால், ‘முக்காலமில்லாவைகுந்தம்’ எனப்பட்டது.
இனி, ‘முக்காலமில்லா’ என்பதை ‘முகில்வண்ணனுக்கு’ அடைமொழி யாக்கி, காலத்தினால் தோன்றுங் குற்றமற்று
என்றும் ஒருபடிப்பட இருக்கிற முகில்வண்ணனென்று உரைகூறலு மொன்று.
திருமாலுக்குக் காளமேகம் உவமை – கருநிறத்திலும் நெய்ப்பிலும் குளிர்த்தியிலும் கண்டோரை
மகிழ்வித்தலிலும் கைம்மாறுகருதாது கருணைமழை பொழிதலிலு மென்க.
வைகுந்தம் – வைகுண்டம் என்ற வடசொல்லின் சிதைவு: குண்டம் – பாபம்; அஃது இல்லாதவர் – விகுண்டர்:
அவருடைய சம்பந்தமுள்ள உலகம் – வைகுண்டம்.
“வஞ்சமுக்குறும்பாங் குழியைக் கடக்கும் நங்கூரத்தாழ்வான்” என்றபடி நீக்குதற்குஅரிய வித்யாமதம் தநமதம் குலமதம்
என்கின்ற மும் மதங்களையும், மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை யென்கிற மூவகைப் பற்றுக்களையும் ஒழித்தவராய்,
உடையவரதுபேரருளுக்குப் பிரதமபாதரமாய் அவருக்கு அந்தரங்கசிஷ்யராயிருந்ததுபற்றி, ‘தக்காரெண் கூரத்தாழ்வான்’ என்றார்.
அடியேன் – இரட்டுறமொழிதலால், சரமாங்கமாகிய அடிபோன்றவ னென்றும், அடிமைப்பட்டவ னென்றும் பொருள்படும்.
‘அடியேன்’ என்றது, ஆத்துமாவை. சடம் = ஜடம்: அறிவில்லாத பொருள்; அசித்து.
போரத்தாழ்வான சடம் – புழுநெளிந்து புண்ணழுகி யோசனைநாறுங் கழிமுடை நாற்றத்தையுடைத்தாய்,
ஊறி யுவர்த்தக்க ஒன்பதுவாய்ப்புலனுங் கோதிக்குழம்பலைக்குங் கும்பமான மாமிசதேகம்.
‘போட்டு’ என்றதனால், இந்தச்சரீரம் இவர்க்குப் பெருஞ்சுமையாயிருக்கின்ற தென்பது, போதரும்.
———
பட்டர் –
நான் கூட்டில் வந்தவன்றே நானறியா நன்மை எல்லாம்
தான் கூட்டி வைத்த நலந்தான் கண்டீர் -ஆம் கூட்டச்
சிட்டருக்கு வாய்ந்த திருவரங்கன் இன்னருளால்
பட்டருக் காட்பட்ட பயன் –
(இ – ள்.) கூட்டம் ஆம் சிட்டர்க்கு – திரள்திரளாகவுள்ள பெரியோர் கட்கு,
வாய்த்த – (கருணைசெய்யுமாறு வாத்ஸல்யத்துடன்) பொருந்தியிருக்கின்ற,
திருவரங்கன் – ஸ்ரீரங்கநாதன்,
இன் அருளால் – (தனது) இனிமையான (நிர்ஹேதுக) கிருபையினால், –
நான் -, கூட்டில் – இந்தச் சரீரத்தில்,
வந்த – வந்துபிறந்த,
அன்றே – அப்பொழுதே,
நான் அறியா நன்மை எல்லாம் – என்னால் அறியப்படாத நல்வினைகளையெல்லாம்,
தான் கூட்டி வைத்த – தான் உண்டாக்கிய,
நலம் – நன்மையென்பது, –
பட்டருக்கு – ஸ்ரீபராசரபட்டர்க்கு,
ஆள்பட்ட – சிஷ்யனாக அமையப்பெற்றதாகிய,
பயன் – பயனாகும்; (எ – று.) – கண்டீர் – முன்னிலையசை; தேற்றமுமாம். தான் – அசை.
ஸர்வேஸ்வரன் என்னையும் அறியாமல் என்னிடத்து நிகழ்ந்த சுகிருத விசேஷங்களையே காரணமாகக்கொண்டு,
ஸ்ரீ பராசரபட்டரது திருவடிகளில் ஆஸ்ரயிக்குமாறு செய்து அதனால் என்னை ஈடேற்றின னென்பதாம்.
‘நான் அறியா நன்மை’ என்பது – அஜ்ஞாதஸுக்ருத விஸேஷங்க ளெனப்படும்; அவையாவன –
‘என்னூரைச் சொன்னாய், என்பேரைச் சொன்னாய், என்னடியாரை நோக்கினாய், அவர்கள் விடாயைத் தீர்த்தாய்,
அவர்கட்கு ஒதுங்க நிழலைக் கொடுத்தாய்’ என்றாற்போல எம்பெருமான் தானே வியாஜமாகக் கொள்ளுமவை:
இவ்வாறு அப்பிரான் கொள்வதற்குக் காரணம் – ஸர்வமுக்திப்ரஸங்கம் வராமைக்காக என்பர்:
ஆயின், எம்பெருமானது திருவருள் நிர்ஹேதுகம் என்பது எவ்வாறு? ஸஹேதுகமாகவன்றோ தோற்றுகின்றது? என்னில், – அன்று:
சிருஷ்டிகாலத்திலே இவ்வாத்மா உருமாய்ந்து கரணகளேபரங்களின்றி இறகொடிந்த பறவை போலவாகி
உரை மெழுக்கிற் பொன் போல மூலப்ரக்ருதியிற் கிடக்கையில்,
எம்பெருமான் ‘இவ்வாத்மா நம்மை யடைந்து உஜ்ஜீவநம் அடையவேணும்’ என்று தனது நிர்ஹேதுகமான பரமகிருபையாலே
கரண களேபரம் முதலியவற்றைக் கொடுத்து ஸ்ருஷ்டித்த பின்பன்றோ, இவ்வாத்மாவுக்கு அஜ்ஞாதஸுக்ருத விஸேஷங்களைக்
கற்பிக்கத்தக்க நிலைமை வந்தது. ஆகையால், எம்பெருமானது நிர்ஹேதுககிருபையே ஆத்மா ஈடேறுவதற்குக் காரணமாம்: இதனை விளக்குதற்காகவே, ‘திருவரங்கன் இன்னருளால் நான் கூட்டில் வந்தஅன்றேநானறியாநன்மையெல்லாம் கூட்டிவைத்த’ என்றார்.
(கூடு – பால்பகாவஃறி ணைப்பெயராய்ச் சரீரங்களை யுணர்த்துமென்க.)
இதன்விவரத்தை, ஸ்ரீவசந பூஷணம் முமுக்ஷுப்படி முதலிய ரஹஸ்யக்ரந்தங்களிலும், அவற்றின்வியாக் யாநங்களிலும் பரக்கக்காணலாம்.
“ஞான மநுட்டாந மிவை நன்றாகவே யுடைய, னான குருவை யடைந்தக்கால் – மாநிலத்தீர்,
தேனார்கமலத் திருமாமகள் கொழுநன், தானே வைகுந்தந்தரும்” என்றபடி ஸதாசார்ய ஸம்பந்தம் முக்திக்குக் காரணமாய் நிற்றலாலும்,
அதுவும் அவ்வெம்பெருமானது இன்னருளாலேயே நிகழவேண்டிய தாகையாலும்,
“நானறியா நன்மையெல்லாந் தான்கூட்டிவைத்த நலம் – பட்டர்க்கு ஆட்பட்ட பயன் கண்டீர்’ என்றார்.
கூட்டமாம் சிட்டர்க்கு வாய்த்த திருவரங்கன் – “பத்துடை யடியவர்க் கெளியவன்”. சிட்டர் = ஸிஷ்டர்: நல்லொழுக்க முடையவர்:
பெரியோர். பண்டிதரைக் குறிக்கின்ற “பட்டர்’ என்ற பொதுப்பெயர், சிறப்பாக இவர்க்கு இட்டு வழங்கப் பெற்றது.
———-
திருப்பதிகளின் வகை –
ஈரிருபதாம் சோழம் ஈரொன்பதாம் பாண்டி
யோர் பதின் மூன்றா மலை நாடு ஓரிரண்டாம் சீர் நடு நா
டாறோடீ ரெட்டுத் தொண்டை யவ்வட நாடாறிரண்டு
கூறு திரு நாடு ஒன்றாகக் கொள்–
(இ – ள்.) சோழம் – சோழநாட்டுத் திருப்பதிகள், –
ஈர் இருபது ஆம் – நாற்பதாகும்;
பாண்டி – பாண்டியநாட்டுத் திருப்பதிகள், –
ஈர் ஒன்பது ஆம் – பதினெட்டாகும்;
மலை நாடு – மலைகள் நிறைந்த சேரநாட்டுத் திருப்பதிகள், –
ஓர் பதின்மூன்று ஆம் – பதின்மூன்றாகும்;
சீர் நடுநாடு – சிறப்புப் பொருந்திய நடுநாட்டுத் திருப்பதிகள், –
ஓர் இரண்டு ஆம் – இரண்டாகும்;
தொண்டை – தொண்டைநாட்டுத் திருப்பதிகள், –
ஆறோடு ஈர் எட்டு – இரு பத்திரண்டாகும்;
அ வட நாடு – தூரத்திலுள்ள வடநாட்டுத் திருப்பதிகள், –
ஆறு இரண்டு – பன்னிரண்டாகும்;
கூறு – சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற,
திருநாடு – பரமபதமென்ற திவ்வியலோகம்,
ஒன்று – ஒன்றாகும்;
ஆ – இவ்வாறாக,
கொள் – (திருமாலின் திருப்பதிகள் நூற்றெட்டென்பதை) அறிந்துகொள்வாயாக; (எ – று.) –
இச்செய்யுள், நூலாசிரியர் தமது மனத்தை விளித்துக் கூறியதாகவேனும், சீடனைநோக்கிக் கூறியதாகவேனும் கொள்ளத்தக்கது.
சோழம் முதலிய நாட்டின் பெயர்கள் – அந்நாட்டிலுள்ள திருமால் திருப்பதிகளைக் குறித்தன: இடவாகுபெயரின் பாற்படும்.
நடுநாடு – தொண்டைநாட்டுக்கும் சோழநாட்டுக்கும் இடையிலுள்ள தேசம்.
தொண்டை – தொண்டைமா னென்னும் அரசனால் ஆளப்பட்ட நாடு; தொண்டை மான்’ என்றது, குலத்து
முன்னோரில் ஒருவனது பெயராய் அவ்வரசனது பரம்பரையோர்க்கெல்லாம் வழங்கும்;
இப்பெயரின் காரணம் வருமாறு:- தொண்டைநாட் டிராசதானியான காஞ்சீபுரத்தி லிருந்த தொண்டைமா னிளந்திரையனைக்
குறித்துப் பாடியதாகிய பெரும்பாணாற்றுப்படையில்
“அந்நீர்த், திரை தருமரபின்…. பல்வேல்திரையன்” என்றவிடத்து
“நாகப ட்டினத்துச்சோழன் பிலத்துவாரத்தால் நாகலோகத்தே சென்று நாககன்னியை மணந்தகாலத்து அவள்
‘யான்பெற்ற புதல்வனை என்செய்வேன்?’ என்ற பொழுது, ‘தொண்டையை (தொண்டை – ஓர்கொடி) அடையாளமாகக்
கட்டிக் கடலிலே விட, அவன் வந்து கரையேறின், அவற்கு யான் அரச வுரிமையை எய்துவித்து நாடாட்சிகொடுப்பல்’ என்று அவன்கூற,
அவளும் புதல்வனை அங்ஙனம் வரவிட, திரைதருதலின் ‘திரையன்’ என்று பெயர் பெற்ற கதை கூறினார்’ என்றும்
“தொண்டையோர்மருக” என்றவிடத்து
‘தொண்டையைச் சூடினோருடைய குடியி லுள்ளவனே!’ என்றும் ஆசிரியர் நச்சினார்க்கினியர் உரைத்தவாற்றால் விளங்கும்.
இனி, ‘தொண்டை’ என்பதற்கு – நிலமகட்குத் தொண்டை (கழுத்துப்) போல முக்கியஸ்தாநமாகவுள்ளதென்றும்,
தொண்டர்கள் வசிக்கின்ற இடமென்றும் காரணப்பொருள் – கூறுவாரு முளர்.
வடநாடு – தமிழ்நாட்டின் வடவெல்லையாகிய திருவேங்கடமலை தொடங்கி வடக்கேயுள்ள நாடு. அகரச்சுட்டு – சேய்மையைக் குறிக்கும்.
நலமந்தமில்லதோர் நாடாகிய ஸ்ரீவைகுண்டம் எல்லாநாடுகளினுஞ் சிறந்த தாதலால், ‘திருநாடு’ என்று தனியே சிறப்பித்துக் கூறப்படும்.
“கடல்கிழக்குத் தெற்குக் கரைபொருவெள்ளாறு, குடதிசையிற்கோட் டைக்கரையாம் –
வடதிசையி, லேணாட்டுப்பெண்ணை யிருபத்துநாற்காதம், சோணாட்டுக் கெல்லையெனச்சொல்”,
“வெள்ளாறதுவடக்கா மேற்குப்பெரு வழியாம், தெள்ளார்புனற் கன்னி தெற்காகு –
முள்ளாரா, வாண்ட கடல் கிழக்கா மைம்பத்தறுகாதம், பாண்டிநாட் டெல்லைப் பதி”,
“வடக்குத் திசைப்பழனி வான்கீழ் தென்காசி, குடக்குத்திசை கோழிக்கூடாம் –
கடற்கரையி, னோரமோ தெற்காகு முள்ளெண்பதின்காதம், சேரநாட்டிற் கெல்லையெனச் செப்பு,”
“மேற்குப் பவளமலை வேங்கட நேர்வடக்கா, மார்க்குமு வரி யணிகிழக்குப் –
பார்க்குளுயர், தெற்குப் பினாகிதிகழிருபதின்காதம், நற்றொண்டை நாடெனவே நாட்டு” என்பவற்றால்
சோழ பாண்டிய சேர தொண்டை நாட்டி னெல்லையை யறிக.
———-
1–திருவரங்கம் பெரிய கோயில் –
சீர் வந்த உந்தித் திசை முகனால் அல்லாது என்
சோர்வந்த சொல்லில் சுருங்குமோ ஆர்வம்
ஒருவர் அங்கு அங்கு ஒயில் உகந்து அவரை ஆள்வான்
திரு அரங்கம் கோயில் சிறப்பு -1-
(இ – ள்.) ஒருவர் – ஒருத்தர்,
அங்கு அங்கு – அந்த அந்த விஷயங்களில் (பலவகையான உலகப்பற்றுக்களில்),
ஆர்வம் ஓயில் – ஆசையொழிந்தால்,
அவரை – அவ்வாறு பற்றற்ற அன்பரை,
உகந்து – விரும்பி,
ஆள்வான் – அடிமைகொள்பவனாகிய எம்பெருமானது,
திருவரங்கம் கோயில் – திருவரங்கம்பெரியகோயி லென்னுந் திருப்பதியின்,
சிறப்பு – பெருமையானது, –
சீர் வந்த உந்தி திசைமுகனால் அல்லாது – சிறப்புப்பொருந்திய (திருமாலின்) நாபீகமலத்திற் பிறந்த நான்கு
திக்கையும் நோக்கிய நான்குமுகங்களையுடைய பிரமதேவனா வல்லாமல்,
என் சோர்வந்த சொல்லில் சுருங்குமோ – எனது குற்றம் பொருந்திய சொற்களில் அடங்குமோ? (எ – று.)
எம்பெருமானது திருநாபீகமலத்தில் தோன்றி அவனதுஅருளைப் பெற்றுத் தேவர்களுட்சிறந்தவனாய் அந்த எம்பெருமானது
ஸ்வரூபரூபகுண விபவங்களைத் துதித்தற்கு ஏற்ற பலமுகங்களையுடையனான பிரமன்
ஸ்ரீரங்கத்தின் சிறப்பை ஒருகால் கூறிமுடித்தால் முடிக்கலாமே யொழிய,
சாதாரணமனிதனாய் அற்பஞானமுடையவனான என்னால் எவ்வாறு கூற முடியும்? முடியா தென்பதாம்;
பிரமதேவன் நான்முகனா யிருத்தலும், எம்பெருமானது புதல்வனாயிருத்தலுமன்றி ஸ்ரீரங்கத்திலெழுந்தருளியுள்ள
கடவுளை முதலில் ஆராதித்தவனுமாயிருத்தலால், ‘சீர்வந்த வுந்தித்திசைமுகனா லல்லாது’ என்றனரென்க.
எம்பெருமானது திருவருளுக்குப் பாத்திரமாவதற்குப் பற்றறுதலே முதற்காரண மென்பதை, மூன்றாமடியாய் விளக்கினார்.
‘அங்கங்கு’ என்ற அடுக்கு – பற்றுண்டாதற்குஉரிய வழிகள் பலவாதல்பற்றியதாம்.
‘ஓயில்’ என்ற எதிர்காலவினையெச்சம், ஓய்வதுஅருமை யென்பதைக் குறிப்பிக்கும்.
கோ + இல் = கோயில்; “கோவில்’ என வகரவுடம்படுமெய் பெற்று வரற்பாலது யகரவுடம்படுமெய்பெற்று வந்தது: இலக்கணப்போலி.
திருவரங்கமென்பது – திருமாலின் திவ்யதேசங்கள் நூற்றெட்டனுள் தலைமைபூண்டதும்,
சோழநாட்டுத்திருப்பதிகள் நாற்பதில் முக்கியமானதும்,
‘கோயில் திருமலை பெருமாள்கோயில்’ என்று பிரதானமாக எடுத்துக் கூறப்படுகின்ற மூன்றுதலங்களுள் முதலதும்,
‘கோயில்’ என்றும் ‘பெரிய கோயில்’ என்றும் மறுபெயருடையதும்,
‘பூலோகவைகுண்டம்’ எனப்படுகின்ற மகிமையுடையதும், ‘போகமண்டபம்’ எனப்படுவது மாகிய தலம்.
பிரணவாகாரமான ஸ்ரீரங்கவிமானத்திலே ஆதிசேஷசயனத்திற் பள்ளிகொண்டருளுந் திருமால் ஆதியிற் சத்தியலோகத்தில்
பிரமனது திருவாராதனத் திருவுருவமாயிருந்தான்:
பின்பு, சூரியகுலத்து மநுகுமாரனான இக்ஷ்வாகு மகாராஜன் பிரமனைக்குறித்துப் பலகாலம் அரும்பெருந்தவம் புரிந்து
அத் தேவனருளால் அப்பெருமானைத் தான்பெற்றுத் திருவயோத்திக்கு எழுந்த ருளப்பண்ணிக்கொண்டுவந்து
பிரதிஷ்டித்துத் திருவாராதனஞ்செய்துவந்தனன்.
அந்தஸ்ரீரங்கநாதனே இக்ஷ்வாகுமுதல் இராமபிரான்வரையிலுள்ள இரவிகுலமன்னவரெல்லார்க்கும் குலதெய்வமாகி விளங்கினான்.
இங்ஙனம் மனிதவுருவங்கொண்ட பெருமாளாகிய இராமபிரானால் வணங்கப்பட்ட மைபற்றி,
ரங்கநாதனுக்கு ‘பெரிய பெருமாள்’ என்று திருநாமம்.
இராமபிரான். வனவாசஞ்சென்று விபீஷணனுக்கு அபயமளித்துக் கடல்கடந்து இலங்கைசேர்ந்து இராவணாதிராக்ஷஸசங்காரஞ்செய்து,
திருவயோத்திக்கு மீண்டுஎழுந்தருளிப் பட்டாபிஷேகஞ் செய்துகொண்டபின்பு சுக்கிரீவன் முதலிய அனைவர்க்கும் விடைகொடுத்து
அவரவரைத் தந்தம் இருப்பிடங்கட்கு அனுப்பும்பொழுது தனதுதிருவாராதனமூர்த்தியும் குலதனமுமான திருவரங்கநாதனைத்
தனக்கு மிகவும்அந்தரங்கனான விபீஷணாழ்வானிடங் கொடுத்து ஆராதித்துவரும்படி நியமித்து அனுப்பினான்.
அங்ஙனமே அவ்வரக்கர்பெருமான் அவ்வமரர்பெருமானை அவ்விமானத்துடனே எழுந்தருளப்பண்ணிக்கொண்டு
இலங்கை நோக்கிச் செல்லும்பொழுது இடைவழியில் உபயகாவேரிமத்தியிலே
பெருமான் புடைபெயராது விமானத்துடனே நிலைநின்றருளினான். அவ்வாறு திருமால் திருவுள்ளமுவந்து தங்கிய இடமே ஸ்ரீரங்க மெனப்படுவது.
இராமபிரான், திருவவதாரத்தை முடித்துக்கொண்டு தன்னடிச்சோதிக்கு எழுந்தருளும்பொழுது வந்து தன்னைவணங்கித் தனது பிரிவை யாற்றமாட்டாது நின்ற விபீஷணனுக்கு இக்ஷ்வாகு குலதெய்வமும் தனது திருவாராதனமூர்த்தியு மான திருவரங்கநாதனைத் தந்தருளினனென வரலாறு கூறுதலுமுண்டு.
(ஸ்ரீ வைகுண்டம் திருப்பாற்கடல் சூரியமண்டலம் யோகிகளுடைய உள்ளக்கமலம் என்னும் இவையனைத்தினும் இனியதென்று திருமால்)
திரு வுள்ளமுவந்து எழுந்தருளியிருக்கு மிடமான தென்பதுபற்றி, “ரங்கம்’ என்று அவ்விமானத்திற்குப் பெயர்;
திருமால் இங்கு ரதியை (ஆசைப்பெருக்கத்தை) யடைகின்றன னென்க.
‘ரங்கம்’ என்னும் வடமொழி அகரம் மொழிமுதலாகி முன்வரப்பெற்று ‘அரங்கம்’ என நின்றது;
இங்கு, ‘அரங்கம்’ என்பது – விமானத்தின்பெயர் திருப்பதிக்கு ஆனதோர் ஆகுபெயர் (தானியாகுபெயர்.)
இனி, திருமகளார் திருநிருத்தஞ்செய்யு மிடமாயிருத்த லாலும், ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய திருவுக்கு
(மேன்மைக்கு)க் கூத்துப் பயிலிடமா யிருத்தலாலும்,
ஆற்றிடைக்குறை (நதியினிடையே உயர்ந்த திடர்) ஆதலாலும், திருவரங்கம்’ என்னும் பெயர் வந்த தெனினுமாம்.
(பரத்வம்வ்யூஹம் விபவம் அந்தர்யாமி அர்ச்சை என்ற திருமால்நிலைகள் ஐந்தனுள், பரமாகிய திருநாடும் வ்யூஹமாகிய
திருப்பாற்கடலும்ஒழியமற்றைத்தலங்கள் – அர்ச்சையின் வகையினைச் சேர்ந்தவை;
இந்த அர்ச்சை – மாநுஷம் ஆர்ஷம் தைவம் ஸ்வயம்வ்யக்தம் என நான்குவகைப்படும்;
இவற்றுள், சாதாரணமநுஷ்யரால் பிரதிஷ்டைசெய்து பூஜிக்கப்பட்டு வருபவை – மாநுஷமாம்;
வ்யாஸர் முதலிய மஹரிஷிகளால் பிரதிஷ்டைசெய்து பூஜிக்கப்பட்டு வந்தவை – ஆர்ஷமாம்;
பிரமன்முதலிய தேவர்களால் பிரதிஷ்டை செய்து பூஜிக்கப்பட்டுவந்தவை – தைவமாம்.
இவ்வாறன்றி, எம்பெருமான் ஸ்வயமாகவே ஆவிர்ப்பவிக்கப் பிறகு தேவர்முதலியோராற் பூஜிக்கப்பட்டு வந்தவை – ஸ்வயம்வ்யக்தமாம்.
அந்த ஸ்வயம்வ்யக்த க்ஷேத்ரம் எட்டாகும்; அவையாவன –
ஸ்ரீரங்கம், திருவேங்கடம், ஸ்ரீமுஷ்ணம், வானமாமலை, புஷ்கரம், நைமிசாரணியம், பதரிகாச்சிரமம், சாளக்கிராமம் என்பன.
திருமாலின் நூற்றெட்டுத் திருப்பதிகள் – மாநுஷமொழிந்த மற்றை மூவகை யர்ச்சையினைச் சேர்ந்தவையென்றும்,
மூவகையர்ச்சையிற் சேர்ந்த திருப்பதிகளுள்ளுஞ் சில – ஆழ்வார்களது மங்களாசாசனம்பெற்ற நூற்றெட்டுத்திருப்பதிகளிற் சேர்ந்தனவாகாமல்,
புராணஸ்தலங்களென்று சிறப்பித்துக்கூறப்படுமென்றும் அறிக.)
“ஸ்ரீரங்கம்’ என்ற திவ்வியதேசம் பூமண்டலத்திலுள்ள திருமால் திருப்பதிக ளெல்லாவற்றினும் சிறத்தல்பற்றியும்,
அத்தலத்தினிடத்துத் தமக்கு அன்புமிகுதல்பற்றியும், அத்தலத்தைத் தன்னிலேயுடைய சோழநாட்டை
முதலாகவே இந்நூலாசிரியர் கூறலாயின ரென்க.
நூல் தொடங்கும்போது மங்கலமொழியை முதலில்வைத்துக்கூறுவது மரபாதலின், “சீர்’ என்று தொடங்கினார்.
இந்தநூல், நேரிசைவெண்பாவினா லியன்று, பின்னிரண்டடிகள்தோறும் திரிபு என்னுஞ் சொல்லணி யமையச் செய்யப்பெற்றுள்ளது.
————–
2– திரு உறையூர்
சிறப்புடைய செல்வத் திருப்பதிகள் போலே
மறப்புடைய நாயேன் மனத்துள் உறப் போந்து
அறம்தையா நின்ற அரங்கா திரு வாழ்
உறந்தையாய் இங்கு உறைந்தது ஒது —
(இ – ள்.) மறப்பு உடைய – மறதியையுடைய,
நாயேன் – நாய்போலக் கடைப்பட்டவனான எனது,
மனத்துள் – மனத்திலே,
உறபோந்து – நன்றாக எழுந்தருளியிருந்து,
அறம் தையாநின்ற – தருமத்தைப் பதியுமாறுசெய்கின்ற,
அரங்கா – திருவரங்கநாதனே!
திரு வாழ் உறந்தையாய் – இலக்குமி வாழ்கின்ற திருவுறையூரென்னுந் திவ்வியதலத்தி லெழுந்தருளியிருப்பவனே! –
(நீ), – சிறப்பு உடைய செல்வம் திருப்பதிகள் போல – பெருமை பெற்ற செல்வம் நிறைந்த திவ்விய ஷேத்திரங்கள் போல,
இங்கு – இந்த என் மனத்தில்,
உறைந்தது – நித்தியவாசஞ் செய்வதற்குக் காரணத்தை,
ஓது – கூறியருள்வாய்; (எ – று.)
திருப்பதிகளில் திருவுள்ளமுவந்து வாழ்வதுபோல, மிகவுந்தண்ணியனான எனது மனத்தில் வாழ்வது உனது
நிர்ஹேதுகமான கிருபாகடாக்ஷமேயென ஈடுபட்டுக் கூறியவாறு.
எம்பெருமான் திவ்வியதேசங்களில் எழுந்தருளியிருக்குமாறுபோல, நின்றதிருக்கோலமாகவும் கிடந்ததிருக்கோலமாகவும்
வீற்றிருந்த – திருக்கோலமாகவும் அந்த எம்பெருமானை அடியேன் மனத்தினால் அன்போடு தியானித்தல்பற்றி,
அப்பெருமான் நான் நினைத்தபடியெல்லாம் எனது மனத்தில் திருவுள்ளமுவந்து வந்து
எழுந்தருளியிருக்கின்றன னென்பது தோன்ற, இங்ஙனங் கூறினார்.
திருப்பதிகள் யாவும் என்றும் அழியாததான ஸ்ரீவைஷ்ணவ ஸ்ரீயை யுடையன வாதலால், “சிறப்புடைய செல்வத்திருப்பதிகள்’ என்றார்.
நீ இவ்வாறு காரணமின்றிச் செய்யும் பெருங்கருணையை நினைத்தற்கும் வல்லமையற்றவன் யா னென்பார், ‘மறப்புடைய நாயேன்’ என்றார்;
எம்பெருமானிடத்துச் செல்லும்போது, தமதுகுற்றத்தை முன்னிட்டுக்கொண்டு செல்லுதல் முறைமையாகு மென்பது, இங்கு உணரத்தக்கது.
இங்குக்கூறிய “மறப்பு’ – எம்பெருமானை ஸ்வாமியென்றும்,
தன்னை ‘ஸ்வம் (உடைமை)’ என்றும் அறியாமையை உணர்த்து மென்னலுமாம்;
“மறந்தே னுன்னை முன்னம்” என்ற திருமங்கையாழ்வார் பாசுரமும்,
அதன் வ்யாக்யாநத்தில், ‘ஸம்பந்தம் ஸ்வாபாவிகமே யாகையாலே முன்பு நெடுநாள் மறந்துபோகச் செய்தேயும்
சிலநாள் ஸ்மரித்து மறந்தாற்போலே யிருக்கத் தோற்றிற்று’ என்று பெரியாரருளியதும் இங்கு உணரத்தக்கன.
திருவரங்கநாதனே அழகியமணவாளக்கோலமாக இத்தலத்தில் எழுந்தருளியிருத்தலால்,
‘அரங்கா திருவாழுறந்தையாய்’ எனச் சேர்த்துக்கூறினார்.
திருஉறைந்த காரணம்பற்றி, இத்திருப்பதிக்கு, ‘திருவுறையூர்’ என்று திருநாமமாயிற்று;
உறையூர் = உறந்தை : மரூஉ. இஃது, அழகிய மணவாளனுக்கும் உறையூர்வல்லிக்கும் திருமணம் நடந்த தலம்;
திருப்பாணாழ்வார் திருவவதரித்த தலம்.
———-
3-திருத் தஞ்சை –
ஓதக்கேள் நெஞ்சே உனக்கும் இது நன்று எனக்கும்
மேதக்க நன்மை இதின் வேறு இல்லை போதப்
பெருந்தஞ்சை மா மணியைப் பேணி வடிவம்
பொருந்து அஞ்சை மா மணியைப் போற்று —
(இ – ள்.) நெஞ்சே – மனமே! –
ஓத – (நான்) சொல்வதை,
கேள் – (நீ) கேட்பாயாக;
(கேட்டால்), இது உனக்கும் நன்று – நான் சொல்லுகின்ற இவ்விஷயம் உனக்கும் நன்மையை யுண்டாக்கும்;
எனக்கும் மேதக்க நன்மை இனி வேறு இல்லை – எனக்கும் மிக்கநன்மையை யுண்டாக்குவது இதனினும் வேறொன்று இல்லையாம்;
(இவ்வாறு நம்மிருவர்க்கும் ஒருங்கே நன்மை பயக்கக்கூடிய உபாயம் யாதெனில்), –
பெருந் தஞ்சை மா மணியை போத பேணி – பெரிய திருத்தஞ்சையென்னுந் திவ்வியதலத்தி லெழுந்தருளிய
சிறந்த மாணிக்கம்போன்ற கடவுளை நன்றாக விரும்பித் துதித்து,
வடிவம் பொருந்து – (அப்பெருமானது) திருமேனியிற் பொருந்திய,
அஞ்சை – பஞ்சாயுதங்களையும்,
மா – லஷ்மியையும்,
மணியை – கௌஸ்துபரத்நத்தையும்,
போற்று – வாழ்த்துவாயாக; (எ – று.)
திருத்தஞ்சையி லெழுந்தருளியுள்ள எம்பெருமானையும், அவனது திருமேனியில் அமைந்துள்ள பஞ்சாயுதம்
முதலியவற்றையும் போற்றினால் விஷயாந்தரங்களைப் பற்றியுள்ள உனக்கும் அதனாலுண்டான மாசு ஒழிய
எனக்கும் நற்பேறுவாய்க்கு மென்பதாம். தமக்குள்ளடங்கிய மனத்தை இங்ஙனம் வேறுபடுத்துக் கூறியது,
இதுவரையில் மனம் தமக்கு வசப்படாமல் விஷயாந்தரங்களிற் சென்று தமக்குப் பலபடியாலும்
அநர்த்தத்தை விளைத்து வந்ததனா லென்க.
‘தஞ்சைமாமணி’ என்பது, இத்தலத்து எம்பெருமானது திருநாமம். இதனால்,
இத்தலத்திற்குத் தஞ்சை மா மணிக்கோயிலெனத் திருநாமமுண்டாயிற்று.
வடிவம்பொருந்து அஞ்சு – சுதர்ஸநமெனப்படுஞ் சக்கரமும், பாஞ்சஜந்ய மெனப்படுஞ் சங்கமும்,
கௌமோ தகீ யெனப்படுங் கதையும், நந்தகமெனப்படும் வாளும், சார்ங்கமெனப்படும் வில்லுமாம்.
‘வடிவம்பொருந்து’ என்ற தொடர், ‘மா’, ‘மணி’ என்றவற்றோடும் இயையும்.
திருமாலின் வலப்பால் மேற்கரத்திற் சக்கரமும், இடப்பால் மேற்கரத்திற் சங்கும், வலப்பாற்கீழ்க்கரத்திற் கதையும்,
இடப்பாற் கீழ்க்கரத்தில் வில்லும், அரையில் உடைவாளும், வலத்திருமார்பில் இலக்குமியும்,
இடத்திருமார்பிற் கௌஸ்துபரத்நமும் உள்ளனரென்க.
இனி, ‘வடிவம்பொருந்து அஞ்சை’ என்பதற்கு – திருமால் திருவுருவங்கொண்டுள்ள ஐவகைநிலையை எனக் கூறலு மொன்று.
அவை – பரத்வம், வ்யூஹம், விபவம் அந்தர்யாமித்வம், அர்ச்சை என்பன.
(அவற்றுள், பரத்வமாவது – பரமபதத்தில் பரவாசு தேவராய் எழுந்தருளியிருக்கும் நிலை;
வ்யூஹமாவது – திருப்பாற்கடலில் (வாசுதேவ ஸங்கர்ஷண ப்ரத்யும்ந அநிருத்தர்களாகிய நான்குரூபத்துடன்) எழுந்தருளியிருக்கும் நிலை;
விபவமாவது – ராமக்ருஷ்ணாதி யவதாரங்கள்.
அந்தர்யாமித்வமாவது – சராசரப்பொருள்களெல்லாவற்றினுள்ளும் எள்ளினுள் எண்ணெய்போல மறைந்துவசித்தலும்,
அடியார்மனத்தில் வீற்றிருத்தலும்; அர்ச்சையாவது – விக்கிரகரூபத்தில் ஆவிர்ப்பவித்தல்.)
‘அஞ்சு’ என்பது – இவ்விருவகைப்பொருளிலும் எண்ணலளவையாகுபெயர்; இச்சொல், ‘ஐந்து’ என்பதன் முழுப்போலியாம்,
“போதம்’ என்று பிரித்து – அறிவு விளங்குகின்ற என்று உரைப்பாரு முளர்.
உம்மைகள் இரண்டும் – ஒன்றை யொன்று நோக்கி இறந்ததும் எதிரதுந் தழுவியன.
தஞ்சாசுரனைக் கொன்ற தலமாதல்பற்றி, இதற்குத் தஞ்சையென்று நாமதேய முண்டாயிற் றென்பர்.
————–
4-திருவன்பில் –
போற்றி செய வோர் குடைக் கீழ்ப் பொன்னாடும் இந்நாடும்
நால் திசையும் ஆண்டாலும் நன்கு இல்லை தோற்றம் இலா
எந்தை அன்பில் ஆதி இணைத் தாமரை அடிக்கே
சிந்தை அன்பிலாதார் சிலர் –4-
(இ – ள்.) தோற்றம் இலா எந்தை – பிறப்பில்லாத எமதுதந்தையும்,
அன்பில் ஆதி – திருவன்பி லென்னுந் திருப்பதியி லெழுந்தருளியிருக்கின்ற முழுமுதற்கடவுளுமான எம்பெருமானது,
இணை தாமரை அடிக்கு – இரண்டு திருவடித்தாமரைகளினிடத்தில்,
சிந்தை அன்பு இலாதார் சிலர் – தமது மனத்திற் பக்தியைக்கொள்ளாதவராகிய சிலபேர், –
போற்றி செய – (யாவரும் தமக்கு) வாழ்த்துக்கூற,
ஓர் குடை கீழ் – ஒற்றைவெண்கொற்றக்குடையின் நிழலிலே,
பொன் நாடும் – பொன்னுலகமாகிய தேவலோகத்தையும்,
நால்திசையும் இ நாடும் – நான்குதிக்கின் எல்லைவரையிலுமுள்ள இம்மண்ணுலகத்தையும்,
ஆண்டாலும் – தனியரசாட்சிசெய்தாலும்,
நன்கு இல்லை – (அதனால் அவர்க்கு யாதொரு) நன்மையும் உண்டாகாது; (எ – று.)
அழியாப் பேரின்பத்தைப் பெற்று உய்யுமாறு எம்பெருமானிடத்துப் பக்திசெலுத்துவதைவிட்டு அழிந்தொழியுந்
தன்மையதாகிச் சிற்றின்பத்திற்கே இடமான இந்திரபதவிமுதலிய சிறப்புக்களை ஒருங்கேயடைந்து
எல்லாவுலகங்களையும் தனிச்செங்கோல் செலுத்தும் பெருமை பெற்றாலும் அஃது நற்கதிபெறுதற்குச் சிறிதுங்காரணமாகா தாதலால்,
அதனால் யாதொரு பயனு மில்லை யென்பதாம்.
அரசாட்சியை – குடையென்றும், கோலென்றும், சக்கரமென்றுங் கூறுதல், கவிசமயம்.
பொன்னாடும் இந்நாடும் என்பது, மேல் கீழ் உலகங்க ளெல்லாவற்றிற்கும் உபலக்ஷணம்.
ஸ்வர்க்க லோகத்திலுள்ளன யாவும் பொன்மயமா யிருக்குமென்பது நூல்துணிபாதலின், அது ‘பொன்னாடு’ எனப்படும்.
தோற்றத்தைக்கூறியது – இறப்பிற்கும் உபலக்ஷணம்; தோற்றமிலாவெந்தை – ஆதிமத்யாந்தரஹித னென்றவாறு,
ஒருபிறப்பில் மாத்திரம் மக்களானவர்க்கு உவந்தபோது உபகாரத்தைச் செய்யும் தந்தைபோலவல்லாமல்
எப்போதும் இடைவிடாமல் அடியவரான தமக்கு அன்போடு ஆவன எல்லாவற்றையும் செய்த
உபகாரகனாதலால், எம்பெருமானை ‘எந்தை’ என்றார்; இது, ஸர்வவிதபந்துவாயிருத்தற்கு உபலக்ஷணம்.
ஆதி – “முதலாவார் மூவரே யம்மூவருள்ளும், முதலாவான் மூரிநீர் வண்ணன்” என்றார் பெரியாரும்.
போற்றி – இகரவிகுதிபெற்ற தொழிற்பெயர்;
இனி, போற்றிசெய என்பதற்கு- போற்றியென்ற சொல்லைக் கொண்டு வாழ்த்த எனினுமாம்;
இப் பொருளில், “போற்றி’ என்பது – ‘போற்றிய’ என்னும் வியங்கோளின் அங கரணம்; ஈறுதொக்குவந்த தென்க.
உம்மைகள் நான்கனுள், முன்னைய இரண்டும் – எண்ணுப்பொருளன; மூன்றாவது – முற்றுப்பொருளது;
நான்காவது – உயர்வுசிறப்புப்பொருளது. அடிக்கு – உருபுமயக்கம். ஏகாரம் – இசை நிறை: சிறப்புப்பொருளுமாம்.
————
5-திருக் கரம்பனூர்
சிலமா தவம் செய்தும் தீ வேள்வி வேட்டும்
பலமா நதியில் படிந்தும் உலகில்
பரம்ப நூல் கற்றும் பயன் இல்லை நெஞ்சே
கரம்பனூர் உத்தமன் பேர் கல் -5-
(இ – ள்.) நெஞ்சே – எனதுமனமே! –
உலகில் – இவ்வுலகத்தில்,
சில மாதவம் செய்தும் – சில பெருந்தவங்களைச் செய்தும்,
தீ வேள்வி வேட்டும் – ஓமாக்கினியையுடைய யாகத்தைச் செய்தும்,
பல மா நதியில் படிந்தும் – பல சிறந்தநதிகளில் மூழ்கியும்,
பரம்ப நூல் கற்றும் – விரிவாக நூல்களைப் படித்தும்,
பயன் இல்லை – (அவற்றால்) யாதொருபயனுமுண்டாகாது;
(ஆதலால், அவ்வாறெல்லாம் செய்வதைவிட்டுத் தவறாமற்பயன் பெறும்படியாக).
கரம்பனூர் உத்தமன் பேர் கல் – திருக்கரம்பனூரென்னுந் தலத்தி லெழுந்தருளியுள்ள புருஷோத்தமனது
திருநாமத்தைப் பலதரம் கூறுவாயாக; (எ – று.)
பகவத்ப்ராப்திக்கு விரோதியான சரீரஸம்பந்தாதிகளை யறுத்துக்கழித்து எம்பெருமானைப் பெறவேண்டுமென்று
கருதி அரும்பெருந்தவஞ்செய்தும் மகாயாகங்களைப்புரிந்தும் புண்ணியநதிகளில் மூழ்கியும்
‘சித்திக்கு வித்து அதுவோ இதுவோ’ என்று பலநூல்களைப் படித்தும் புருஷார்த்தம் கை கூடாமல் வருந்தல் வேண்டா;
அடியார்கள்பக்கல் பேரருளுடையனாகிய திருக்கரம்பனூரிலெழுந்தருளியுள்ள எம்பெருமானது திருநாமசங்கீர்த்தன மென்ற
இந்த எளிய உபாயத்தினாலேயே சகலவிரோதிகளும் ஒழிய நற்கதி பெறுவாயென்று தமது நெஞ்சிற்கு ஹிதோபதேசஞ் செய்கின்றார்.
“ஊன் வாடவுண்ணாதுயிர்காவலிட்டு உடலிற்பிரியாப்புலனைந்தும் நொந்து, தாம் வாடவாடத் தவஞ்செய்யவேண்டா”,
“காயோடு நீடுகனியுண்டு வீசுகடுங் கால் நுகர்ந்து நெடுங்காலம் ஐந்து, தீயோடுநின்று தவஞ்செய்யவேண்டா …..
தில்லைத் திருச்சித்திரகூடஞ் சென்று சேர்மின்களே” என்ற வாய்பாடு கொண்டது, இச்செய்யுள்.
“செய்தவராகவருந்தியுந் தீர்த்தத்துறைபடிந்துங், கைதவராகமங்கற்று மென்னாம்” என்றார் அழகரந்தாதியிலும்.
உத்தமன் – ‘புருஷோத்தமன்’ என்ற சொல்லின் நாமைகதேஸே நாமக்ரஹணம்.
கதம்பமஹர்ஷிக்குத் திருமால் ப்ரத்யக்ஷமான தல மாதல்பற்றி, இது ‘கரம்பனூர்’ என்று பெயர்பெற்றதுபோலும்.
கரம்பனூர் – கதம்பனூர் என்பதன் மரூஉவென்க. இத்தலம் – ‘உத்தமர்கோயில்’ என்று வழங்கப்பெறும்.
———
6-திரு வெள்ளறை-
கல் இருந்தான் தந்தை கமலத்தோன் அக்கமலத்
தில் இருந்தான் தந்தை அரங்கேசன் என்றே தொல்லை மறை
உள் அறையா நின்றமையால் உள்ளமே கள்ளம் இன்றி
வெள்ளறையான் தானே விரும்பு –6-
(இ – ள்.) உள்ளமே -எனது மனமே! –
‘கல் இருந்தான் தந்தை – கை லாசமலையி லிருப்பவனாகிய சிவபெருமானது திருத்தந்தை,
கமலத்தோன் – (திருமாலினதுநாபித்) தாமரையில் தோன்றியவனாகிய பிரமனாவன்;
அக் கமலத்தில் இருந்தான் தந்தை – அந்தத்தாமரைமலரில் வாழ்பவனாகிய பிரமனது திருத்தந்தை,
அரங்கேசன் – திருவரங்கநாதனாவன்;
என்று -,
தொல்லை மறையுள் அறையாநின்றமையால் – பழமையாகிய வேதங்களிற் சொல்வதனால், –
கள்ளம் இன்றி – கபடமில்லாமல்,
வெள்ளறையான் தாளே – திருவெள்ளறையென்னுந்தலத்தி லெழுந்தருளியுள்ள எம்பெருமானது திருவடிகளையே,
விரும்பு – விரும்பிச்சேர்வாயாக; (எ – று.)
இதனால், பிரமருத்திரர்களுக்கும் காரண மென்று வேதத்திற் சிறப்பித்துக் கூறப்படுந் தலைமை பெற்றுள்ள
எம்பெருமானது திருவடிகளை நீ விரும்பிச் சரணமடைவா யென்று தமதுநெஞ்சிற்கு உபதேசஞ் செய்கின்றனர்.
பரதெய்வம் இன்னதென்று தெரியாமல் தடுமாறவொட்டாதபடி இதுவே பரதெய்வமென்று நிச்சயித்துக் கூறினரென்க.
“நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும், தான்முகமாய்ச் சங்கரனைத் தான்படைத்தான்” என்றார் திருமழிசைப்பிரானும்.
கல் – கற்களையுடைய மலைக்குச் சினையாகுபெயர்; இது, சிறப்பாய்க் கைலாசகிரியை யுணர்த்திற்று.
கமலம் – நீரையலங்கரிப்பதென்று காரணப் பொருள்படுந் தற்சமவடசொல்.
கமலத்தில்லிருந்தான் – எதுகைநோக்கிய விரித்தல். அரங்க + ஈசன் = அரங்கேசன்: குணசந்திபெற்ற வடமொழித் தொடர்.
ஓதலாகாதென்று சிலர்க்கு மறுக்கப்படுதல்பற்றி, மறையென்று பெயர்;
இனி, இச்சொல்லுக்கு – (எளிதிலுணரலாகாதபடி) மறைந்துள்ள பொருள்களையுடையதென்று காரணப்பொருள்கூறவுமாம்.
வெள்ளறை – வெண்மையான பாறைகளா லியன்ற மலை; (அறை – பாறை;) இது, வடமொழியில் ‘ஸ்வேதாத்ரி’ எனப்படும்.
———–
7-திருப் புள்ளம் பூதங்குடி –
விரும்பினவை எய்தும் வினை அனைத்தும் தீரும்
அரும்பரம வீடு அடைவீர் பெரும் பொறிகள்
கள்ளம் பூதம் குடி கொள் காயமுடையீர் அடிகள்
புள்ளம் பூதங்குடியில் போம் –7-
(இ – ள்.) பெரும் பொறி கொள் – வலிய ஐம்பொறிகளைக்கொண்டதும்,
கள்ளம் பூதம் குடி கொள் – வஞ்சனைக்குணமும் பஞ்சபூதங்களும் பொருந்தப் பெற்றதுமான,
காயம் – சரீரத்தை,
உடையீர் – உடையவரான ஜநங்களே! (நீங்கள்), –
அடிகள் புள்ளம்பூதங்குடியில் போம் – எம்பெருமான் எழுந்தருளியிருக்கின்ற திருப்புள்ளம் பூதங்குடியென்னுந் தலத்திற் போய்ச் சேருங்கள்;
(சேர்ந்தமாத்திரத்தில்), – விரும்பினவை எய்தும் – (நீங்கள்) விரும்பியவை எல்லாம் கைகூடும்;
வினை அனைத்தும் தீரும் – (உங்களது) எல்லாவினைகளும் நீங்கும்;
அரும் பரம வீடும் அடைவீர் – பெறுதற்கு அரிய சிறந்த முத்தியுலகத்தையும் சேர்வீர்கள்; (எ – று.)
திருப்புள்ளம்பூதங்குடி யென்னுந் திருப்பதியைச் சேர்ந்தமாத்திரத்தில், அதன்மகிமையால் நீங்கள்
இம்மையில் விரும்பிய எல்லாவற்றையும் பெற்று வினையனைத்துந்தீர்ந்து மறுமையில் மோக்ஷத்தையும் பெறுவீ ரென்பதாம்.
நல்வினையும் பிறப்பிற்கு ஏதுவாதலால் அதனையுஞ்சேர்த்து ‘வினை யனைத்துந் தீரும்’ என்றார்.
“இருள்சே ரிருவினையுஞ் சேரா விறைவன், பொருள்சேர் புகழ்புரிந்தார்மாட்டு” என்றார் திருவள்ளுவனாரும்.
தேவஜந்மம் நல்வினைப்பயனாற் பெரிதும் இன்பநுகருமாறு நேர்வதாயினும் அத்தேவர்களும் நல்வினை முடிந்தவளவிலே
அவ்வுடம்புஒழிய மீளவும் இவ்வுலகத்திற் கருமவசத்திற்குஏற்ப வேறுபிறவி கொள்பவ ராதலும்,
உயிரைப் பந்தப் படுத்துவதில் பொன்விலங்கும் இருப்புவிலங்கும் போலப் புண்ணியஜந்மமும் பாபஜந்மமும் சமமேயாதலும்,
எல்லாக்கருமங்களையும் முற்றுமொழித்தவர்களே சிற்றின்பத்திற்கும் பெருந்துன்பத்திற்கும் இடமான எழுவகைப்பிறப்புக்களிலும்
புகுதாமல் பேரின்பத்திற்கே இடமான மீளாவுலகமாகிய முத்தியிற் சேர்ந்து மீளவும் பிறத்தலிலராவ ரென்பதும் உணர்க.
சஞ்சிதகருமமும் ஆகாமியகருமமும் அநப்யுபகதப்ராரப்தமும்ஆகிய எல்லாக்கருமங்களும் காட்டுத்தீயின்முன்
பஞ்சுப்பொதிபோலவும் விளக்கின்முன் இருள்போலவும் மிக எளிதில் அதிசீக்கிரத்தில்
அழிந்தொழிதலால், ‘வினையனைத்துந் தீரும்’ என்றாருமாம்.
(பிறப்பு அநாதியாய் வருதலின் உயிரால் அளவின்றி ஈட்டப்பட்டுள்ள வினைகள் – சஞ்சிதம்;
அவற்றுள் இறந்த உடம்புகளால் அநுபவித்தன ஒழியப் பிறக்கும் உடம்புகளால் அநுபவிக்கக் கடவனவாய் நின்றவை – ப்ராரப்தம்;
ஆகாம்யம் – பிறக்கும்உடம்புகளால் புதியனவாக ஈட்டப்படுபவை. எடுத்த உடம்பால் அநுபவிப்பவை – அப்யுபகதப்ராரப்தமும்,
இனிவரும் உடம்புகளால் அநுபவிக்கப்படுபவை – அநப்யுபகதப்ராரப்தமுமாம்.)
துஷ்டமிருகங்களை யகப்படுத்தும் பொறியை (யந்திரத்தை)ப் போன்று ஆத்துமாவை இந்திரியங்கள்
அகப்படுத்துதலால், அவை ‘பொறி’ எனப்படும். அவைகளின் வலிமையை நோக்கி ‘பெரும்பொறி’ என்றார்.
நிலம் நீர் தீ காற்று வானம் என்னும் பஞ்சபூதங்களினால் இவ்வுடம்பு அமைக்கப் பட்டிருத்தலின், ‘பூதங்குடிகொள்காயம்’ எனப்பட்டது;
“மண்ணாய் நீ ரெரிகால்மஞ்சுலாவுமாகாசமுமாம், புண்ணாராக்கை” என்னும் பாசுரங் காண்க.
இது நிலையற்றதாயிருந்தும் நிலையுள்ளதுபோலத் தோன்றி அஜ்ஞாநத்தை விளைத்தலின்,
இதற்கு, ‘கள்ளம்’ என்ற அடைமொழி கொடுத்துக் கூறினார்.
அடிகள் – பெரியவ ரென்னும் பொருளது; வடமொழியில் ‘பாதா:’ என்பது போல.
பரமம், பூதம், காயம் – வடசொற்கள். வீடு – எல்லாப்பற்றுக்களையும் விட்டு அடையப்படு மிடம்:
‘முக்தி’ என்னும் வடசொல்லும் இப்பொருளதே. போம் – ‘போகும்’ என்ற ஏவற்பன்மைமுற்றின் ஈற்றுஉயிர்மெய் சென்றது.
ஜடாயுவென்ற புள்ளிற்கு (பக்ஷிக்கு)ப் பிரதியக்ஷமாய் இராமபிரான் மோக்ஷங்கொடுத்த தலமென்பது,
‘புள்ளம்பூதங்குடி’ என்பதற்குப் பொருளாகலாம்.
————–
8-திருப் பேர் நகர் –
போம்மானை எய்து பொரும் ஆனைக் கொம்பு பறித்து
ஆம் ஆனை மேய்த்து உவந்த அம்மானை தாமச்
செழும் திருப் பேரானை சிறு காலே சிந்தித்து
எழுந்து இருப்பேற்கு உண்டோ இடர் -8-
(இ – ள்.) போம் மானை எய்து – (தனக்கு முன்னே மாயமாக) ஓடிச் சென்ற (மாரீசனாகிய) பொன்மானை அம்பெய்து கொன்றும்,
பொரும் ஆனை கொம்பு பறித்து – யுத்தஞ்செய்யவந்த (குவலயாபீடமென்னும்) யானையினது தந்தங்களைப் பிடுங்கியும்,
ஆம் ஆனை மேய்த்து – மந்தையாகத்திரண்ட பசுக்களை மேய்த்தும்,
உவந்த – மகிழ்ந்த,
அம்மானை – ஸ்வாமியும்,
தாமம் செழுந் திருப்பேரானை (செழுந்திருப்பேர் தாமத்தானை) – வளப்பமமைந்த திருப்பேரென்னுந் தலத்தி லெழுந்தருளியிருப்பவனுமான திருமாலை,
சிறுகாலை – சிற்றஞ்சிறுகாலையில்,
சிந்தித்து – தியானித்துக்கொண்டே,
எழுந்திருப்பேற்கு – எழுந்திருக்கும் எனக்கு,
இடர் – பிறவித்துன்பம்,
உண்டோ – உள்ளதாகுமோ? (உண்டாகா தென்றபடி); (எ – று.)
நான்தினந்தோறும் வைகறைப்பொழுதில் எம்பெருமானைத் தியானித்துக் கொண்டே துயிலொழிந்து எழுதலால்,
அந்த எம்பெருமான் என்னைப் பிறவித்துயர் சிறிதும் அணுகாதவாறு பாதுகாப்ப னென்பதாம்.
போமானை பொருமானை ஆமானை அம்மானை என்று வந்துள்ள சொல்நயம் பாராட்டத் தக்கது.
அம்மான் = அந்தமஹான். ‘தாமச்செழுந்திருப்பேரானை’ என்றவிடத்து, விகுதியும் உருபும் பிரித்துக் கூட்டப்பட்டன.
தாமம் – வடசொல்; இடமென்னும் பொருளது: இனி, பிரித்துக்கூட்டாமல்,
தாமம் – மாலையையணிந்த, செழுந்திருப்பேரானை யென்று கூறுவாரு முளர்.
சிறுகாலை – விடியற் காலத்துக்கு ஐந்துநாழிகைநேரம் முற்பட்ட காலம்; உஷ:கால மென்றும் ப்ராஹ்மமுகூர்த்த மென்றும் சொல்லப்படும்.
‘ப்ராஹ்மமுகூர்த்தத்தில் பகவானைச் சிந்தித்துக்கொண்டு துயிலெழவேண்டும்’ என்று ஆஹ்நிகங்கள் கூறும்.
சிந்தித்து எழுந்திருப்பேற்கு = சிந்தியாநின்று எழுந்திருப்பேற்கு என்றுபொருள்.
துயிலொழியுங்காலத்தல்லது முன்னே உணர்வு இல்லாமையால், உணர்வு உண்டாகுங் காலந் தொடங்கியே
சிந்திப்பவனாகிய எனக்கு என்றவாறு: “கொழுநற் றொழுதெழுவாள்” என்றவிடத்தில் “தொழுது’ என்பது போல; எச்சத்திரிபு.
———————————————————————–
9-திருவாதனூர்-
இடர் ஆன ஆக்கை இருக்க முயலார்
மடவார் மயக்கின் மயங்கார் -கடவுளர்க்கு
நாதன் ஊர் ஆதரியார் நான் எனது என்னார் அமலன்
ஆதனூர் எந்தை அடியார் –9-
(இ – ள்.) அமலன் – குற்றமற்றவனும்,
ஆதனூர் எந்தை – திருவாதனூ ரென்னுந் தலத்தி லெழுந்தருளியுள்ளவனுமாகிய எம்பெருமானது,
அடியார் – பக்தர்கள், –
இடர் ஆன ஆக்கை இருக்க முயலார் – (பலவகைத்) துன்பங்கட்கும் இடமாகிய தமது உடம்பு நிலைத்திருக்குமாறு முயற்சிசெய்ய மாட்டார்கள்;
மடவார் மயக்கில் மயங்கார் –இளமகளிரது மோகவலையிற் சிக்கித் தியங்கமாட்டார்கள்;
கடவுளர்க்கு நாதன் ஊர் ஆதரியார் – தேவர்கட்குத் தலைவனான இந்திரனது ஊரையும் (சுவர்க்கலோகவின்பத்தையும்) விரும்பமாட்டார்கள்;
நான் எனது என்னார் – அகங்கார மமகாரச்சொற்களையும் சொல்லமாட்டார்கள்; (எ – று.)
திருமாலடியார்கள் – தேகாபிமானங் கொள்ளாமலும் காமமயக்கத் திற்கு உட்படாமலும் நின்று
சிற்றின்பவாசையை அறவொழித்து அகங்கார மமகாரங்களின்றி யிருப்ப ரென்பதாம்;
இதனால், ஸ்ரீவைஷ்ணவலக்ஷணங் கூறியவாறு.
இவர்கள் என்றும் அழியாத பேரின்பத்தினிடத்து ஆசையுள்ள வராய் உண்மையுணர்ந்தவ ராதலால், இவ்வாறாவ ரென்க.
ஆக்கை – யாக்கை என்பதன் மரூஉ: (தோல் முதலிய எழுவகைத் தாதுக்களால்) யாக்கப்பட்டதென்று பொருள்படும்;
(யாத்தல் – கட்டுதல்.)
இடரான ஆக்கை –
“வினையின்வந்தது வினைக்குவிளைவாயது,
புனைவனநீங் கிற் புலால்புறத்திடுவது,
மூத்துவிளிவுடையது தீப்பிணியிருக்கை,
பற்றின் பற்றிடம் குற்றக்கொள்கலம்,
புற்றடங்காவிற் செற்றச்சேக்கை,
அவலக் கவலை கையாறழுங்கல்,
தவலாவுள்ளந் தன்பாலுடையது, மக்கள்யாக்கை” என்பது, மணிமேகலை.
மடவார் – இளமகளிர். இனி, மடமைக்குணமுடைய மகளிருமாம்; மடமையாவது – அறிந்தும் அறியாதுபோலிருத்தல்.
மயக்கு – முதனிலை திரிந்த தொழிற்பெயர். ஆதரியார் – ஆதரம் என்னும் வடமொழிப் பெயரினடியாப் பிறந்த எதிர்மறைமுற்று.
நான் என்பது – பகவானுக்கு அடியவனாய் ஸ்வதந்த்ரனல்லாத தன்னை ஸ்வதந்த்ரனென்பது;
இது, அகப் பற்றெனவும், அஹங்கார மெனவும்படும்.
எனது என்பது – எம்பெருமானது உடைமையாய்த் தன்னுடைமையல்லாதவற்றைத் தன்னுடைமையாகச் சொல்வது;
இது – புறப்பற்றெனவும், மமகார மெனவும்படும்.
‘அமலன்’ என்ற திருநாமம் – இயல்பிலே யாதொருகுற்றமும் தன்னிடத்திலில்லாத வனென்னும் பொருளோடு,
தனக்குச் சரீரமாக அமைகின்ற சராசரங்களின் வினைத்தொடர்பு ஒன்றும்
தன்னிடத்திற் பொருந்தப்பெறாதவ னென்ற கருத்தையுங் கொண்டது.
காமதேநுவுக்குப் பிரதியக்ஷமான தல மாதல்பற்றி, இதற்கு “ஆதனூர்’ என்று திருநாம மாயிற்றுப் போலும்
————————————————————————
10-திரு அழுந்தூர் –
அடியாராய் வாழ்மின் அறிவு இலாப் பேய்காள்
செடி ஆர் வினை அனைத்தும் தீரும் முடிவில்
செழுந்தூரத் தன் எனினும் செங்கண் மால் எங்கள்
அழுந்தூர் அத்தன் அணியன் ஆம் –10-
(இ – ள்.) அறிவு இலா பேய்காள் – புத்தியில்லாமையாற் பேய்போன் றிருப்பவர்களே! (நீங்கள்), –
அடியார் ஆய் வாழ்மின் – (எம்பெருமானுக்குத்) தொண்டர்களாய் நல்வாழ்ச்சியை யடையுங்கள்; (அவ்வாறுசெய்தால்), –
செடி ஆர் வினை அனைத்தும் தீரும் – செடிபோலடர்ந்துள்ள (உங்களது), தீவினைகள்யாவும் ஒழியும்;
செம் கண் மால் – சிவந்த திருக்கண்களையுடைய திருமாலும்,
அழுந்தூர் எங்கள் அத்தன் – திருவழுந்தூரென்னுந் திருப்பதியிலெழுந்தருளிய எங்கள் ஸ்வாமியுமாகிய எம்பெருமான்,
செழுந் தூரத்தன் எனினும் – (சாதாரணமான நிலையில்) மிக்க தூரத்திலிருப்பவன் போலத் தோன்றினாலும்,
முடிவில் – அந்திமகாலத்தில்,
அணியன் ஆம் – சமீபத்தில் வந்து காட்சிதந்து உங்களுக்கு நற்கதியை அளிப்பவனாவன்; (எ – று.)
மெய்யடியராக வாழ்பவர்கட்கு இருவினையும் எம்பெருமானதுதிருவருளால் ஒழிந்துபோக, அவரது அந்திமதசையில்
அவ்வெம்பெருமான் கருடா ரூடனாய் வந்து ஸேவைஸாதித்துத் தானே வழித்துணையாகி நற்கதியிற் சேர்ப்ப னென்பதாம்;
இத்தன்மையை, அர்ச்சிராதி முதலிய நூல்களிற் பரக்கக் காண்க.
எம்பெருமான் எங்குமுளனாயினும் அவனை “செழுந்தூரத்தன்’ என்றது – அடியவர் இங்கு இருக்கும் நாளில்
அவ்வெம்பெருமான் பிரதியட்சமாகத் தோன்றிக் காட்சிதாராமையா லென்க.
“முடிவில் செழுந்தூரத்தன்’ என இயல்பான பாடத்துக்கு – அளவில்லாத மிக்கதூரத்தி லிருப்பவனென்று பொருள்:
இப்பொருளில், பின்னிரண்டடிக்கு – “பத்துடையடியவர்க் கெளியவன் பிறர்களுக் கரிய வித்தகன்” என்பது, கருத்து.
நிலைநின்ற புருஷார்த்தமாகிய எம்பெருமானைப் பற்றுதலிற் பக்திசெலுத்து தலை விட்டு நிலையில்லாத
புருஷார்த்தங்களான அறம்பொருளின்பங்களை விரும்புகின்றவர்களை “அறிவிலாப்பேய்காள்’ என விளித்தார்.
செடியார் வினை – புதர்போல அடர்ந்துள்ள வினை; “செடியாய வல்வினைகள் தீர்க்குந் திருமால்” என்பது, குலசேகராழ்வார்பாசுரம்.
செங்கண்மால் – அடியவர்களை அன்புடன் நோக்கிநோக்கிக் கண்கள் சிவந்த திருமா லென்க.
“செழுந்தூரத்தன்னெனினும்,’ அழுந்தூரத்தன்னணியனாம்’ – னகரமெய் – விரித்தல்விகாரம்.
தனது தபோபலத்தால் விமானத்துடன் ஆகாசத்திற் சஞ்சரிக்குந் தன்மையனான உபரிசரவஸுவென்னும் அரசன்
தேவர்கட்கும் முனிவர்கட்கும் நேர்ந்த விவாதத்தில் பக்ஷபாதமாகத் தீர்ப்புச்சொன்னமையால் ரிஷிகளாற் சபிக்கப்பட்டுப்
பூமியில் விழுகையில் அவனதுதேர் அழுந்தப்பெற்ற இட மாதல்பற்றி,
இதற்கு, அழுந்தூர்’ என்று பெயர்வந்த தென்பர்; ‘தேரழுந்தூர்’ எனவும் வழங்கும்.
—————————————————————————
11- திருச் சிறு புலியூர் –
ஆ மருவி மேய்த்த அரங்கர் எதிர் ஆர் நிற்பார்
தாம் மருவி வாணனைத் தோள் சாய்த்த நாள் சேமம்
உறு புலி ஊர் வன் தோல் உடையான் உடைந்தான்
சிறு புலியூர் எந்தை மேல் சென்று –11-
(இ – ள்.) தாம் – திருவரங்கநாதர்தாம்,
(கிருஷ்ணாவதாரத்தில்), வாணனை மருவி – பாணாசுரனைக் கிட்டி,
தோள் சாய்த்த – (போரில்அவனது) ஆயிரந் தோள்களையும் அறுத்துத்தள்ளிய,
நாள் – காலத்தில், –
சேமம் உறு – (அந்தப் பாணாசுரனுக்குக்) காவலாக அமைந்தவனான,
புலி ஊர் வல் தோல் உடையான் – புலியானது மேற்கொண்டுள்ள வலியதோலை (வலியபுலித்தோலை)ஆடையாகவுடைய சிவபெருமான்,
சிறுபுலியூர் எந்தைமேல் சென்று – சிறு புலியூரென்னுந் தலத்தி லெழுந்தருளிய எமது தந்தையாகிய அவ்வெம்பெருமானை யெதிர்த்துச்சென்று,
உடைந்தான் – தோற்றோடினான்; (ஆதலால்), –
ஆ மருவி மேய்த்த அரங்கர் எதிர் ஆர் நிற்பார் – (கிருஷ்ணாவதாரத்தில்) பசுக்களை விரும்பிமேய்த்த
ஸ்ரீரங்கநாதருக்கு முன்பாக எவர்தாம் எதிர்த்து நிற்கவல்லவர்? (எத்தேவராலும் எதிர்த்துநிற்றல் முடியாது); (எ – று.)
“அவரிவரென்றில்லை யனங்கவேள்தாதைக்கு, எவருமெதிரில்லை கண்டீர்,
உவரிக் – கடல்நஞ்சமுண்டான் கடனென்றே வாணற்கு, உடனின்று தோற்றா னொருங்கு” என்ற பாசுரம், இங்குக் காணத்தக்கது.
சிவபெருமான் பரிவாரங்களோடு எதிர்த்தும் எம்பெருமான் முன்னே நிற்கமாட்டாமல் புறங்கொடுத்தோடினனென்றபொருளை,
‘ஆமருவிமேய்த்தவரங்கரெதிரார்நிற்பார்?’ என்ற வாக்கியங்கொண்டு சமர்த்தித்ததனால்,
இது – தொடர்நிலைச்செய்யுட்குறியணியாம்; இதனை, வடநூலார் காவ்யலிங்காலங் கார மென்பர்.
இச்செய்யுளினால், எம்பெருமானே தேவாதிதேவனென்று அறுதியிட்டவாறு.
‘உடையான் உடைந்தான்’ என்ற தொடர்மொழி, சொல்லால் முரணுதலின் முரண்தொடையாம்;
“சொல்லினும் பொருளினும் முரணுதல் முரணே” என்றது காண்க.
எம்பெருமான் வியாக்கிரபாத மஹர்ஷிக்குப் பாலசயனமாய்ச் சேவை சாதித்த தலமாதல்பற்றி,
இதற்கு ‘சிறுபுலியூர்’ என்று திருநாமம்.
————————————————————
12-திருச்சேறை –
சென்று சென்று செல்வம் செருக்குவார் வாயில் தொறும்
நின்று நின்று தூங்கும் மட நெஞ்சமே இன் தமிழைக்
கூறைக்கும் சோற்றுக்கும் கூறாதே பேறு ஆகச்
சேறைக்கு நாயகன் பேர் செப்பு –12-
(இ – ள்.) செல்வம் செருக்குவார் வாயில்தொறும் – செல்வத்தினால் இறுமாப்புக்கொண்டவரது வீட்டுவாசல்கள்தோறும்,
சென்று சென்று – போய்ப்போய்,
நின்று நின்று – அங்கங்கே நெடுநேரம் நின்று,
தூங்கும் – சோர்வையடைகின்ற,
மடம் – அறியாமையையுடைய,
நெஞ்சமே – (எனது) மனமே! – (நீ),
இன் தமிழை – இனிய தமிழ்ப்பாடலை,
கூறைக்கும் – வஸ்திரத்தின்பொருட்டும்,
சோற்றுக்கும் – சோற்றின்பொருட்டும்,
கூறாது – (மநுஷ்யரைப்) பாடாமல்,
பேறு ஆக – முத்திப்பயன் கைகூடும்படி,
சேறைக்கு நாயகன் பேர் செப்பு – திருச்சேறையென்னுந் திவ்யதலத்திற்குத் தலைவனான எம்பெருமானது திருநாமத்தைப் பாடுவாயாக; (எ – று.)
நிலையில்செல்வத்தையும் அஹங்காரம் மமகாரம் முதலிய இழிகுணங் களையு முடையவரான அற்பமனிதரைக்
கூறைசோறுகளாகிய நிலையற்ற பயனைப் பெறுதற்பொருட்டுக் கவிபாடித் துதித்து நரகத்தைவிளைத்துக் கொள்ளாமல்,
எல்லையில்பெரும்பொருளையுடையவனும் அநந்தகல்யாண குணகணநிதியும் புருஷோத்தமனுமான
எம்பெருமானைப் பாடித் துதித்து என்றும்அழிவில்லாததான பரமபதத்தை யடைந்து
பேராநந்தத்தைப் பெறுவா யென்று தமதுமனத்திற்கு நல்லறிவு கூறியவாறு.
செல்வர்வாயில் தொறும் செல்லுதற்குக் காரணம் மனமே யாதலால், அவ்வாறுசென்று தூங்குந் தமது
செயலைத் தம்மனத்தின்மே லேற்றிக் கூறினார்; இது – ஒரு வகை உபசாரவழக்கு.
“அகத்தாரேவாழ்வாரென் றண்ணாந்து நோக்கிப்,
புக த்தாம்பெறாஅர் புறங்கடைபற்றி, மிகத்தாம் வருந்தியிருப்பர்” என்றபடி காவல் மிகுதியால் செல்வரது
வீட்டினுள்ளே நுழைவது அருமையாகின்றத னால் ‘செல்வஞ்செருக்குவார்வாயில்தொறும் நின்றுநின்று தூங்கும்’ என்றார்;
இவ்வாறு அவர் தமதுவீட்டுவாயிலில் காவலாளரைவைப்பது செல்வச்செரு க்கைத் தோற்றுவிக்கு மென்க.
‘இன்தமிழைக் கூறைக்குஞ் சோற்றுக்குங் கூறாதே’ என்றதனால், தமிழ்ப் பாடலின் அருமை பெருமைகளைச்
சிறிதுங்கரு தாது அற்பப்பயனுக்காகப் பாழ்படுத்துவதைப்பற்றி இரங்கியவாறு.
இத்தலத்தில் எம்பெருமான் நாய்ச்சியார் விமானம் தீர்த்தம் நிலம் என்ற ஐந்து ஸாரமுள்ள பொருள்கள் அமைந்திருத்தலால்,
இத்தலத்திற்கு ‘திருச்சேறை’ என்று திருநாம மாயிற்று.
இது, வடமொழியில் ‘பஞ்சஸார க்ஷேத்ரம்’ என வழங்கப்படுதலுங் காண்க.
இவ்வாறு ஸாரமுள்ள பொருள்களையுடைய இத்தலத்தில் காவேரிநதி தவஞ்செய்து
கங்காநதியைக்காட்டிலும் சிறப்புப்பெற்றன ளென்பர்.
——————————————————————
13-திருத் தலைச் சங்க நாண் மதியம் –
செப்புங்கால் ஆதவனும் திங்களும் வானும் தரையும்
அப்பும் காலும் கனலும் ஆய் நின்றான் கைப்பால்
அலைச் சங்கம் ஏந்தும் அணி அரங்கத்து அம்மான்
தலைச் சங்க நாண் மதியத்தான் –13–
(இ – ள்.) கைப்பால் – கையினிடத்தில்,
அலை சங்கம் – அலைகளையுடைய கடலினிடத்துத் தோன்றிய (பாஞ்சஜந்யமென்னுஞ்) சங்கத்தை,
ஏந்தும் – தரித்துள்ள,
அணி அரங்கத்து அம்மான் – திருவரங்கத்தி லெழுந்தருளியுள்ள ஸ்வாமியும்,
தலைச்சங்கநாண்மதியத்தான் – திருத்தலைச்சங்க நாண்மதியமென்னுந் திவ்விய தலத்திலெழுந்தருளியுள்ள வனுமான எம்பெருமான், –
செப்பம் கால் – சொல்லுமிடத்தில், –
ஆதவனும் – சூரியனும்,
திங்களும் – சந்திரனும்,
வானும் – ஆகாயமும்,
தரையும் – பூமியும்,
அப்பும் – ஜலமும்,
காலும் – காற்றும்,
கனலும் – அக்கினியும்,
ஆய் – ஆகி, நின்றான் – (எங்கும் பரவி) நிற்பவ னாவன்; (எ – று.)
சராசரங்களாகிய யாவும் எம்பெருமானது வடிவமே யென்பது, கருத்து;
“உலவுதிரையுங் குலவரையு மூழிமுதலா வெண்டிக்கும்,
நிலவுஞ் சுடரு மிருளுமாய் நின்றான்” என்பது முதலிய பெரியார்பாசுரங்களைக் காண்க.
ஆதபன் – எங்கும் நன்றாகத் தபிப்பவன்; சூரியன்; வடசொல். செய்யுளாதலின், பஞ்சபூதங்களை முறைபிறழ வைத்தார்.
எம்பெருமான் திருக்கையில் தரித்துள்ள பாஞ்சஜந்யமென்னுஞ் சங்கமானது கடலிலேதோன்றிய பஞ்சஜநனென்னும்
அசுரனது உடலிற் பிறந்த தென்பதை,
“கடலிற் பிறந்து கருதாது பஞ்சசன, னுடலில் வளர்ந்துபோ யூழியான்
கைத்தலத்திடரிற் குடியேறித் தீயவசுரர். நடலைப்பட முழங்குந் தோற்றத்தாய் நற்சங்கே” என்பதனாலும் அறிக.
இனி, அலைச்சங்கம் என்பதற்கு – (பகைவரைத் தனதுபேரொலியால்) அலைத்தலை (வருத்துதலை)
யுடைய சங்கமென்றும் பொருள்கொள்ளலாம்.
சிறந்த சங்கத்தை யேந்திய நாண்மதியப்பெருமானை யுடைய தலமா தல்பற்றி,
இத்தலத்திற்கு ‘தலைச்சங்கநாண்மதியம்’ என்று திருப்பெய ரென்பர்.
———————————————————————-
14- திருக் குடந்தை –
தானே படைத்து உலகத் தானே அளித்து நீ
தானே அழிக்கும் தளர்ச்சியோ வானில்
திரு மகுடம் தைக்கச் சிறு குறளாய் நீண்ட
பெரும குடந்தைக் கிடந்தாய் பேசு –14-
(இ – ள்.) சிறு குறள் ஆய – (முதலில்) சிறிய வாமனாவதாரமாகி,
(பின்பு), வானில் – ஆகாயமுகட்டில்,
திரு மகுடம் தைக்க – அழகிய கிரீடம் முட்டும் படி,
நீண்ட – (திரிவிக்கிரமனாகி) நீண்டுவளர்ந்தருளிய,
பெரும – பெருமானே!
உலகை – உலகங்களை,
நீ தானே – நீயே,
படைத்து – (பிரமனாகிச்) சிருஷ்டித்து,
(நீ) தானே -, அளித்து (தானானநிலையில் நின்று) பாதுகாத்து,
(நீ) தானே -, அழிக்கும் – (சிவனாகி) அழிப்பதனாலாகிய,
தளர்ச்சியோ – இளைப்பினாலோ,
குடந்தை கிடந்தாய் – திருக்குடந்தையென்னுந் தலத்திற் பள்ளிகொண்டிருக்கின்றாய்?
பேசு – (இதன்காரணத்தைக்) கூறியருள்வாயாக; (எ – று.)
எல்லா வுலகங்களையும் நீ ஒருவனாகவே படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் முத்தொழில்களையுஞ் செய்ததனால்
நேர்ந்த தளர்ச்சி நீங்குவதற்காகவோ இவ்வாறு இந்தத்திருக்குடந்தையிற் பள்ளிகொண்டருள்வா யென்று வினவியவாறு.
வரம்பிலாற்றலுடையவனான எம்பெருமானுக்கு எந்தநிலையிலும் ஒருவகை வருத்தமும் தோன்றாதாயினும் இவ்வாறு கூறியது –
இவ்வாசிரியர்க்கு அப்பெருமான் பக்கலுள்ள பொங்கும் பரிவினா லென்க.
“நடந்த கால்கள் நொந்தவோ நடுங்க ஞால மேனமாய்,
இடந்த மெய் குலுங்கவோ இலங்குமால்வரைச்சுரம்,
கடந்தகால்பரந்த காவிரிக்கரைக் குடந்தையுள்,
கிடந்தவா றெழுந்திருந்து பேசு வாழிகேசனே” என்ற திருமழிசையாழ்வார் பாசுரத்தை அடியொற்றியது, இச்செய்யுள்.
எம்பெருமான் பிரமருத்திரரைச் சிருஷ்டித்து, அவர்கட்கு அந்தராத்மாவாய் நின்று அவர்களைக்கொண்டு
ஸ்ருஷ்டி ஸம்ஹாரங்களை நடத்துதலால், அவனே முத்தொழில்களையும் நடத்துபவனெனக் கூறினார்;
இனி, ஸத்வாரகமான (ஒருவரை முன்னிட்டுச்செய்கின்ற) ஸ்ருஷ்டி ஸம்ஹாரங்களைக் குறிப்பதெனக் கொள்ளாமல்,
அத்வாரகமாகச் செய்கின்ற ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களையே கூறியதாகக் கொள்ளுதலும் பொருந்தும்.
‘நீ’ என்பதை ‘படைத்து’ ‘அழிக்கும்’ என்பவற்றோடும் கூட்டுக.
———————————————————————–
15-திருக் கண்டியூர்
பேசவரின் தென் அரங்கன் பேர் எல்லாம் பேசுக வாய்
கேசவனைக் காண்க விழி கேட்க செவி ஈசனார்
உண்டி ஊர் தோறும் உழன்று இரவாமல் தவிர்த்தான்
கண்டியூர் கூப்புக என்கை –15-
(இ – ள்.) வாய் – (எனது) வாயானது, –
பேச வரின் – பேசத் தொடங்கினால்,
தென் அரங்கன் பேர் எல்லாம் பேசுக – அழகிய ஸ்ரீரங்கநாதனது திருநாமங்களை யெல்லாம் பேசக்கடவது;
விழி – (எனது) கண்கள், –
கேசவனை காண்க – கேசவனென்னுந் திருநாமத்தையுடைய எம்பெருமானைத் தரிசிக்கக்கடவன;
செவி (எனது) காதுகள், –
கேட்க – (அவனது புகழ்களையே) கேட்கக்கடவன;
என் கை – எனது கைகள், –
ஈசனார் – சிவபெருமானை,
ஊர்தோறும் உழன்று உண்டி இரவாமல் – ஊர்கள்தோறும் அலைந்துசென்று உணவை யாசிக்க வொட்டாமல்,
தவிர்த்தான் – (அவனது சாபத்தை) நீக்கி யருளியவனுடைய,
கண்டியூர் – திருக்கண்டியூரென்னுந் தலத்தை நோக்கி,
கூப்புக – குவித்து அஞ்சலிசெய்யக்கடவன; (எ – று.)
எம்பெருமானே வாய் முதலிய உறுப்புக்களை யளித்து மாநுடர்களைப் பிறப்பித்ததன் காரணம் எல்லாவகையாலும்
இவர்கள் தன்னையடைந்து வழிபட்டு நற்கதிபெறுதற்பொருட்டே யாதலால்,
அப்பெருமானது திருநாமங்களைச் சொல்லித் துதிக்குமாறு வாயையும்,
அவனது திருவுருவத்தைத் தரிசிக்குமாறு கண்களையும், அவனது வைபவங்களைக் கேட்குமாறு செவிகளையும்,
அவனது திவ்வியதேசத்தைக் கூப்பித் தொழுமாறு கைகளையும் வேண்டுகின்றன ரென்க;
மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் பஞ்சேந் திரியங்களுள், மூக்கை நோக்கி அவ்வெம்பெருமானுக்குச் சாத்திய
பத்திர புஷ்பாதிகளின் திவ்யகந்தத்தை மோந்து நுகருமாறு வேண்டியதாக உபலக்ஷணத்தாற் கொள்க.
“கேசவனையே செவிகள்கேட்க திருவரங்கத்,
தீசனையே சென்னியிறைஞ்சிடுக –
நேசமுடன், கண்ணனையேகாண்க விருகண் ணிணர்கொள்
காயாம்பூ, வண்ணனையே வாழ்த்துக வென்வாய்” என்றார் திருவரங்கக்கலம்பகத்திலும்.
“வாழ்த்துகவாய் காண்ககண் கேட்கசெவி மருடந்,
தாழ்த்துவணங்குமின்கள் தண்மலரால் –
சூழ்த்ததுழாய், மன்னுநீண் முடியென் தொல்லைமால்தன்னை,
வழாவண்கைகூப்பி மதித்து” என்ற திருமழிசைப்பிரான் பாடலை ஒருவாறு அடியொற்றியது இச்செய்யுள்.
தென்னரங்கன் – தெற்கேயுள்ள திருவரங்கத்திலுள்ளவனெனினுமாம்.
கேசவன் – பிரமனையும் சிவனையும் தன்னங்கத்திற்கொண்டவ னென்றும்,
அழகியமயிர் முடியையுடையவ னென்றும்,
கேசியென்னும் அசுரனைக் கொன்றவ னென்றும் பொருள்படும் வடசொல்.
இத்தலத்து எம்பெருமான் திருநாமம் ‘அரன் சாபந்தீர்த்தபெருமாள்’ என்ப தாதலால்,
இங்கு, அப்பெருமானை ‘ஈசனார் உண்டியூர்தோறு முழன்றிரவாமல் தவிர்த்தான்’ என்றார்.
“பிண்டியார்மண் டையேந்திப் பிறர்மனை திரிதந்துண்ணு,
முண்டியான் சாபந்தீர்த்த ஒருவனூர் உலகமேத்துங், கண்டியூர்” என்ற திருமங்கையாழ்வார் வாக்கு இங்குக் கருதத்தக்கது.
‘என்’ என்பதை, ‘வாய்’ முதலியவற்றோடுங் கூட்டுக.
சிவபெருமானது சாபத்தைக் கண்டநஞ்செய்ததுபோலச் சேவைசாதித்த இடமாதலால்,
இத்தலத்திற்கு ‘திருக்கண்டியூர்’ என்று திருநாம மாயிற்று; இது – வடமொழியில், “கண்டநபுரம்’ எனப்படும்.
————————————————————————–
16-திரு விண்ணகர் -ஒப்பிலியப்பன் சந்நிதி –
கையும் உரையும் கருத்தும் -உனக்கே அடிமை
செய்யும் படி நீ திருத்தினாய் ஐயா
திரு விண்ணகராளா சிந்தையிலும் எண்ணேன்
பெரு விண்ணகர் ஆளும் பேறு –16-
(இ – ள்.) ஐயா – தலைவனே!
திருவிண்ணகர் ஆளா – திருவிண்ணகர மென்னுந் திருப்பதிக்குத் தலைவனே! –
கையும் – (எனது) கைகளும்,
உரையும் – வாக்கும்,
கருத்தும் – எண்ணமும், (ஆகிய திரிகரணங்களையும்),
உனக்கே அடிமை செய்யும் படி -, நீ திருத்தினாய் – நீ திருத்தமான வழியிற் போகச் செய்தாய்;
(ஆதலால், இனிமேல்), பெரு விண் நகர் ஆளும் பேறு – பெருமை பெற்ற தேவலோகத்தை அரசாளுஞ்செல்வத்தை (தேவேந்திரபதவியையும்),
சிந்தையிலும் எண்ணேன் – (ஒருபொருட்டாக) மனத்திலும் நினைக்க மாட்டேன், (யான்); (எ – று.)
வேறுவிஷயங்களிற் செல்லாது உன்விஷயத்தில் உபயோகிக்குமாறு எனது திரிகரணங்களையும் நீ
நிர்ஹேதுககடாக்ஷத்தாற்செய்தா யாதலால், இனி மீளாவுலகமாய்ப் பேரின்பத்திற்கு உரிய இடமான
பரமபதத்திற்குச் செல்ல இணங்குவேனேயன்றிச் சிலகாலம் சிற்றின்பங்களை யநுபவித்தற் கேயுரிய
சுவர்க்கலோகத்து இந்திரபதவியைக் கொடுத்தாலும் அதனையும் சிறிதும் பொருள்செய்யேன் யா னென்பதாம்.
“ஆனாதசெல்வத்தரம்பையர்க டற்சூழ,
வானாளுஞ்செல்வமு மண்ணரசும் யான்வேண்டேன்” என்று குல சேகராழ்வார் அருளிச்செய்தமை காண்க.
இவ்வாறு நினைப்பது, திருமா லடியார்களுக்கு இயல்பாகு மென்க.
‘அரங்கன் தமர்கள் பொருந்தார் அணிதான வமராவதியும் தருநிழலும்,
தாரணி தான வயிராவதமுந் தருகினுமே” என்றதும்,
பிரமன் கட்டளையால் இந்திரன் சரபங்க மஹர்ஷியைச் சத்திய லோகத்துக்கு அழைத்தபோது மகாவிஷ்ணுபக்தனான
அம்முனிவன் அம்மேலுலகையுமுட்பட இகழ்ந்து “அற்பங்கருதேன்” என்றும்,
“மறுகாநெறி யெய்துவன்” என்றும் உரைத்ததும் உணரத்தக்கன.
முதலில் நினைந்து பிறகு மொழிந்து பின்பே ஒருதொழில் செய்யப்படுதலால், அம்முறைபற்றி,
‘மனோ வாக் காயம்’ என்று வழங்கப்படுகின்ற திரிகரணங்களை இங்கே மாற்றிக்கூறினர்.
விண்ணகரென்பது – தேவலோகம்போன்ற தென்ற காரணம்பற்றி வந்த பெய ரென்னலாம்;
இதுவே, உப்பிலியப்பன்ஸந்நிதி யெனப்படுவது. இத்தலத்து எம்பெருமான் திருநாமம் – உப்பிலியப்பன்;
(ஒப்பிலியப்பனென்றும் வழங்குவர்.) இத்தலத்து எம்பெருமான் திருவேங்கட முடையான் போன்ற திருவுருவ முள்ளவராய்,
அன்பர்களின் அபிமதத்தைப் பூர்த்திசெய் கின்றன ரென்றும், மிருகண்டுமுனிவர் பத்தினியினது விருப்பத்தின்படி
உப்பில்லாத பிரசாதங்களையே அமுதுசெய்கின்றன ரென்றும் அறிக.
————–
17-திருக் கண்ணபுரம் –
பேறு தரினும் பிறப்பு இறப்பு நோய் மூப்பு
வேறு தரினும் விடேன் கண்டாய் ஏறு நீர்
வண்ண புரத்தாய் என் மனம் புகுந்தாய் வைகுந்தா
கண்ண புரத்தாய் உன் கழல் –17-
(இ – ள்.) ஏறு நீர் வண்ணம் புரத்தாய் – (அலைகள் கரைமேற்) புரளப் பெற்ற நீரையுடைய கடல்போன்ற கருநிறத்தைக்கொண்ட திருமேனியை யுடையவனே!
என் மனம் புகுந்தாய் – எனது மனத்திற் குடிபுகுந்துள்ளவனே!
வைகுந்தா – ஸ்ரீவைகுண்டத்தில் எப்போதும் வாழ்பவனே!
கண்ணபுரத்தாய் – திருக்கண்ணபுரமென்னுந் திவ்வியதலத்தி லெழுந்தருளியிருப்பவனே! –
(நீ அடியேனுக்கு), பேறு தரினும் – பரமபுருஷார்த்தமாகிய மோக்ஷத்தைக் கொடுத்தாலும்,
வேறு – அதற்குமாறாக,
பிறப்பு இறப்பு நோய் மூப்பு தரினும் – ஜநநத்தையும் மரணத்தையும் வியாதியையும் கிழத்தனத்தையும் தந்தாலும்
(இந்த லீலாவிபூதியிலேயே அலையவைத்தாலும்),
உன் கழல் – உனது திருவடிகளை,
விடேன் – (உபாயமாகக் கொண்டிருப்பேனேயன்றி ஒருபோதும்) விட்டு நீங்கேன்; (எ – று.) – கண்டாய் – முன்னிலையசை; தேற்றமுமாம்.
பேறு – புருஷனால் அர்த்தித்துப்பெறப்படும் பரமபுருஷார்த்தம்; மோக்ஷைஸ்வர்யம்.
உம்மைகள் – விகற்பப்பொருளன. ‘வண்ணப்புரத்தாய்’ என வலிமிக்குவரற்பாலது, எதுகைநயம்நோக்கி இயல்பாயிற்று.
புரமென்ற வடசொல் – சரீரம் பட்டணம் என்னும் இருபொருளையுங் காட்டவல்லது.
ஏறு நீர் – வினைத்தொகையன்மொழி. கழல் – வீரர்கள் தமது வீரத்துக்கு அறி குறியாகப் பாதங்களில் அணியும் ஓர்வடம்;
“வீரத்தின்வீக்கியகழலே யாட வர்கான்மிசை யணிவடம்” என்றது காண்க:
இச்சொல் – இங்கு, தானியாகு பெயராய், திருவடியை உணர்த்திற்று.
தலைவனான நீ உனது நிர்ஹேதுக கிருபையாலே அடியேனுக்கு நிரதி சயாநந்தத்தையுடைய மோக்ஷத்தை யளித்தாலும் சரி:
அன்றி, என்னைப் பரிசோதிப்பதற்காகவாதல் உனது நிரங்குஸஸ்வாதந்த்ரியத்தாலேயாதல் இந்த ஸம்ஸாரத்திலேயே
அலையவைத்தாலும் சரி: அவற்றால் அடியேனுக்கு ஒருவகை லாபலோபங்களு மில்லை;
எல்லாத்திசையிலும் உனது திருவடிகளையே சரணமாகக்கொண்டு உன்னுடைய விருப்பத்தினால்
அடியேனுக்கு நேர்கின்ற அவ்வந்நிலையிலேயே பரிபூர்ணதிருப்தியுட னிருப்பே னென்று தமது உறுதியான
உபாயாத்யவஸாயத்தை வெளியிடுகின்றனரென்க.
“களைவாய் துன்பங் களையாதொழிவாய் களைகண்மற்றிலேன்” என்ற திருவாய் மொழியும்,
“இன்பந்தரு பெருவீடு வந்தெய்திலென் எண்ணிறந்த,
துன்பந் தருநிரயம்பலசூழிலென்?*** இராமாநுசனென்னை யாண்டனனே” என்ற இராமாநுசநூற்றந்தாதியும் இங்குக் காணத்தக்கன.
“நானந்த வைகுந்த நாடெய்தி வாழிலென் ஞாலத்தன்றி,
ஈனந்தவாத நிரயத்து வீழிலென் யானடைந்தேன், *** அரங்கனையே” என்றார் திருவரங்கக்கலம்பகத்தும்.
திருக்கண்ணபுரமென்பது, பஞ்சகிருஷ்ணக்ஷேத்ரங்களுள் ஒன்று;
(மற்றவை – திருக்கண்ணங்குடி, திருக்கண்ணமங்கை, திருக்கண்ணன் கவித்தலம், திருக்கோவலூர் என்பன என்பர்.)
இத்தலத்தின் மறுபெயர், கண்வபுரம். இத்தலத்தில் விமானம் – உத்பலாவதகம்:
அதன்பொருள் வருமாறு:- பலம் – மாமிசம், அது சோஷிக்கப்பெற்றவர் – உத்பலர்: அவராவார் –
தேகத்தை உபேக்ஷிக்கின்ற முழுக்ஷுக்கள்:
அவர்களைக் காக்கின்ற கடவுள் எழுந்தருளியிருக்கும் விமான மாதலால், இதற்கு ‘உத்பலாவதகம்’ என்று திருநாமம்.
இதுபற்றியே, “மரணமானால் வைகுந்தங்கொடுக்கும் பிரான்” என்று நம்மாழ்வார் மங்களாசாசனஞ்செய்ததும்.
இவ்விமானம் பிரதக்ஷிணஞ் செய்யும்போது கட்புலனாகாதவாறு கட்டப்பெற்றுள்ள தென்பர்.
——————————————————————————–
18-திருவாலி –
கழன்று போம் வாயுவினைக் கட்டாமல் தீர்த்தம்
உழன்று போய் ஆடாமல் உய்ந்தேன் அழன்று
பொரு வாலி காலன் பரகாலன் போற்றும்
திருவாலி மாயனையே சேர்ந்து –18-
(இ – ள்.) அழன்று – கோபித்து,
பொரு – போர்செய்த,
வாலி – வாலிக்கு,
காலன் – யமனாய்நின்றவனும்,
பரகாலன் போற்றும் திருவாலி மாயனை – திருமங்கையாழ்வாரால் பாடித் துதிக்கப்பெற்ற திருவாலியென்னுந்
திருநகரியி லெழுந்தருளி யிருப்பவனுமான ஆஸ்சரியகுண சேஷ்டிதங்களையுடைய எம்பெருமானை,
சேர்ந்து – உபாயமாகப்பற்றியதனால், –
கழன்றுபோம் வாயு வினை கட்டாமல் – (உடம்பிலிருந்து) வெளிச்செல்லுகின்ற மூச்சுக்காற்றைப் (பிராணயாமத்தால்) அடக்காமலும்,
உழன்று போய் தீர்த்தம் ஆடாமல் – வருந்திப் பலவிடங்களிலுஞ்சென்று புண்ணியதீர்த்தங்களில் மூழ்காமலும்,
உய்ந்தேன் – நற்கதிபெற்றேன், (யான்); (எ – று.)
எம்பெருமானுக்கே யடியவனாயிருக்கின்ற ஆத்மாவின் ஸ்வரூபத்திற்கு விருத்தமான தவஞ்செய்தல் முதலிய
உபாயாந்தரத்தை மேற்கொண்டு வருத்தப்படாமல், ஆத்ம ஸ்வரூபத்திற்கு அநுகூலமாய் ஸித்தோபாயமான
எம்பெருமானைப் பற்றுதலாகிய பிரபத்தியுபாயத்தை மேற்கொண்டு எளிதில் நற்கதி பெற்று ஈடேறினே னென்பதாம்.
காலன் – (பிராணிகளின் ஆயுட்) காலத்தை முடிவுசெய்பவ னென்று பொருள்படுங் காரணக்குறி.
திருவாலியென்பது திருமங்கையாழ்வாரின் திருவவதாரஸ்தல மாதலால், அத்தலத்து எம்பெருமானை
‘பரகாலன்போற்றுந் திருவாலிமாயன்’ என்றார்.
திருமங்கையாழ்வார் தாம் பிறந்த கள்ளக்குடிக்கு ஏற்ப இளமையிலேயே ஆயுதவித்தையில் தேர்ச்சிபெற்றுச்
சோழராஜனையடுத்துச் சேனாபதியுத்தியோகத்தி லமர்ந்து கொற்றவனுக்குக் கொடியவரோடு
கடும்போர் நேருங் காலங்களிற் படைகளோடு முன்சென்று பராக்கிரமத்தாற் பகைவென்று வந்தவ ராதலின்,
இவர்க்கு ‘பரகாலன்’ என்று பெயர்.
எம்பெருமானைத் திருமகள், ஆலிங்கனஞ்செய்து கொண்ட தல மாதல் பற்றி, இதற்கு, ‘திருவாலி’ என்று பெயர்.
—————————————————————————–
19-திரு நாகை –
சேர்ந்து உனக்குக் குற்றேவல் செய்திலன் என் சிந்தையில் நீ
ஆர்ந்ததற்கு ஓர் கைம்மாறு அறிகிலேன் பூந்துவரை
மன்னா கை ஆழி வலவா வலம் புரியாய்
தென் நாகாய் அருளிச் செய் –19-
(இ – ள்.) பூ துவரை மன்னா – அழகிய துவாரகாபுரிக்கு அரசனே!
கை ஆழி வலவா (வலம் கை ஆழியாய்) – வலத்திருக்கையில் (சுதர்சநமென்னுஞ்) சக்கரத்தையுடையவனே!
வலம் புரியாய் – (இடத்திருக்கையில் பாஞ்ச ஜந்யமென்னும்) வலம்புரிச்சங்கத்தை யுடையவனே!
தென் நாகையாய் – அழகிய திருநாகையென்னுந்தலத்தி லெழுந்தருளி யிருப்பவனே! –
சேர்ந்து உனக்கு குறு ஏவல் செய்திலன் – (அடியேன் இதுவரையில் உன்னைச்) சரணமாக அடைந்து உனக்குச்
சிறிய கைங்கரியத்தையும் செய்தேனில்லை; (அவ்வாறு இருக்கவும்),
என் சிந்தையில் – அடியேனது மனத்தில்,
நீ ஆர்ந்ததற்கு – (காரணமின்றியெழுந்த பெருங்கருணையோடு) நீ நன்றாக எழுந்தருளியிருப்பதற்கு,
ஓர் கைம்மாறு அறிகிலேன் – ஒருபிரதியுபகாரத்தையும் அறியேன்;
அருளிச்செய் – (ஏதேனும் இருப்பின் அதனை இன்னதென்று நீ அடியேனுக்குக்) கூறியருள்வாயாக; (எ – று.)
நானே உன்னைச் சரணமடைந்து ஏதேனும் ஒரு திருத்தொண்டைச் செய்தேனாயின், அதனையே பற்றாசு ஆகக் கொண்டு
நீ அடியேன்மனத்தி லெழுந்தருளலாம்; அவ்வாறு ஒன்றுமில்லா திருக்கையிலும்
நீ உனது நிர்ஹேதுக கிருபையாலேயே அடியேனது மனத்தில் வந்து குடிபுகுந்தாய்;
நீ இவ்வாறு எழுந்தருளியது செய்யாமற் செய்த பேருதவி யாதலால், அதற்குத் தக்க கைம்மாறு இல்லாவிடினும்
எல்லாவிதத்தினாலும் பரிபூர்ணனான உனக்குப் போலியாயிருப்பதொருபிரதியுபகாரமும் காண்கின்றிலே னென்பதாம்.
“ஆறெனக்கு நின்பாதமே சரணாகத்தந்தொழிந்தாய் உனக்கோர் கைம்,
மாறு நானொன்றிலேன் எனதாவியு முனதே” என்ற நம்மாழ்வார் பாசுரத்தின் கருத்துக்கொண்டது, இது.
குற்றேவல் – கைங்கர்யம். துவரை – த்வாரகா என்ற வடமொழியின் சிதைவு:
இது – முத்திதரும் நகர மேழனுள் ஒன்று;
(மற்றவை – அயோத்யை மதுரை மாயை காசி காஞ்சி அவந்தி என்பன.)
கையாழிவலவா – விகுதி பிரித்துக்கூட்டப்பட்டது. இனி, இத்தொடர்க்கு – விகுதிபிரித்துக்கூட்டாமல், கையிலேந்தியுள்ள
ஆழியைப் பிரயோகிப்பதில் வல்லவனே! என்றும் உரைக்கலாம்.
ஆழி – பகைவரையழிப்பதென்பது பற்றி வந்த பெயர்.
வலம்புரி – வலப்பக்கமான உட்சுழியை யுடையது; காரணக்குறி. தென்னாகை – தெற்கின்கணுள்ள நாகையுமாம்.
நாகை – நாகபட்டணமென்பதன் மரூஉ. நாகராஜனுக்குப் பிரதியக்ஷமான தல மாதலால், இதற்கு ‘திருநாகை’ என்று பெயர்.
————
20-திரு நறையூர் –
செய்ய சடையோன் திசை முகத்தோன் வானவர் கோன்
ஐயம் அறுத்து இன்னம் அறியாரே துய்ய
மரு நறை ஊர் வண் துழாய் மாயோன் செவ் வாயான்
திரு நறையூர் நின்றான் செயல் –20-
(இ – ள்.) துய்ய – பரிசுத்தமாகிய,
மரு நறை ஊர் வள் துழாய் – நறுமணமும் தேனும் பொருந்திய செழிப்பான திருத்துழாயை யணிந்த,
மாயோன் – ஆச்சரியமான குணசேஷ்டிதங்களையுடையவனும்,
செவ் வாயோன் – (செந் தாமரைமலர்போலச்) சிவந்த திருவதரத்தை யுடையவனும்,
திருநறையூர் நின்றான் – திருநறையூரென்னுந் திவ்வியதலத்தில் நின்றதிருக்கோலமாக எழுந்தருளியிருப்பவனு மான எம்பெருமானது,
செயல் – செய்கையைப் பற்றி, –
செய்ய சடையோன் – செந்நிறமான (கபர்த்தமென்னுஞ்) சடையையுடைய சிவபிரானும்,
திசைமுகத்தோன் – நான்குதிக்கையும் நோக்கிய நான்குமுகங்களையுடைய பிரமனும்,
வானவர் கோன் – தேவர்கட்கெல்லாந் தலைவனான இந்திரனும்,
ஐயம் அறுத்து – சந்தேகத்தையொழித்து (நிஸ்ஸந் தேஹமாய்),
இன்னம் அறியார் – இன்னமும் அறியமாட்டார்கள்; (எ – று.)
எம்பெருமானது வலப்பக்கத்தில் வாழ்கின்ற சிவபெருமானும், அவனது திருவுந்திக்கமலத்திலேயே யிருக்கின்ற பிரமனும்,
தேவர்கட்கெல்லாந் தலைவனென்று பேரிட்டுக்கொண்டிருக்கின்ற இந்திரனுமே எம்பெருமானது செயலை
உள்ளபடியறியமாட்டார்க ளென்பதாம்; எனவே, நம்போலியரால் அவ்வெம்பெருமானதுசெயலை அறியமுடியுமோ? என்பது கருத்து.
“எம்பெம்மானை ஆரே யறிவா ரதுநிற்க – நேரே, கடிக்கமலத்துள்ளிருந்துங்
காண்கிலான் கண்ண, னடிக்கமலந்தன்னை யயன்,”
“ஆரேயறிவா ரனைத் துலகு முண்டுமிழ்ந்த, பேராழியான்தன் பெருமையைக் –
கார்செறிந்த, கண்டத்தா னெண்கண்ணான் காணான்” என்பன காணத்தக்கன.
துய்ய = தூய. துழாய் – துளஸீ யென்ற வடமொழியின் சிதைவென்பர். வாய்சிவந்திருத்தல், உத்தமலக்ஷணம்.
நறுமணம்மிக்கதல மென்பதுபற்றி, இதற்கு ‘திருநறையூர்’ என்று திரு நாமம்;
வடமொழியில், “ஸுகந்தகிரி’ என்று எம்பெருமான் எழுந்தருளியிரு க்குமிடத்தை வழங்குவதுங் காண்க.
இங்கு, கந்யாசுல்கமாக நாச்சியாருக்குப் பிராதானியத்தை எம்பெருமான் அளித்ததனால்,
இத்தலத்திற்கு ‘நாச்சி யார்கோவில்’ என்று ஒருபெயர் வழங்குகின்றது.
இத்தலத்து எம்பெருமான், மேதாவிமுனிவரின்கன்னிகையைப் பலியென்னும்அசுரன் கவர்ந்துசெல்ல அவனைச் சபித்து
அக்கன்னிகையை அம்முனிவர்க்கு அருள்செய்தன ரென்றும், திருமங்கையாழ்வார்க்கு எம்பெருமான் திருவிலச்சினை பிரசாதித்தன னென்றும் அறிக.
———-
21-திரு நந்திபுர விண்ணகரம்
செயற்கு அரிய செய்வோமைச் செய்யாமை -நெஞ்சே
மயக்குவார் ஐவர் வலியால் நயக்கலவி
சிந்தி புர விண்ணகரம் என்பர் திருச் செங்கண் மால்
நந்தி புர விண்ணகரம் நாடு –21-
(இ – ள்.) நெஞ்சே – மனமே! –
செயற்கு அரிய செய்வோமை – செய்வதற்கு அருமையான தொழில்களையும் செய்யவல்ல நம்மை,
செய்யாமல் – செய்யவொட்டாமல்,
வலியால் மயக்குவார் – (தமது) வலிமையால் மயங்கச் செய்பவர்களாகிய,
ஐவர் – பஞ்சேந்திரியங்கள், (உன்னைநோக்கி),
‘நயம் கலவி சிந்தி – இனிமையைத் தருகின்ற சிற்றின்பத்தையே எப்போதும் நினைப்பாய்;
விண் நகரம் புர – ஸ்வர்க்கலோகத்தை யரசாட்சிசெய்வாய்’,
என்பர் – என்று துர்ப்போதனை செய்வார்கள்; (நீ அந்தப்பஞ்சேந்திரியங்கட்கு வசப்பட்டு அவற்றைக்கொள்ளாமல்),
திரு செங் கண் மால் – (அழகிய செந்தாமரை மலர் போன்ற) சிவந்த திருக்கண்களையுடைய திருமாலினது,
நந்திபுர விண்ணகரம் – திருநந்திபுரவிண்ணகரமென்னுந்தலத்தை,
நாடு – (எப்போதும்) விரும்புவாயாக; (எ – று.)
தவம் முதலிய அரும்பெருந்தொழிலைச் செய்து எமபெருமானையடைய வேண்டு மென்றாலும் அவற்றைச்செய்து
அவ்வெம்பெருமானையடையும் வல்லமை பெற்றுள்ள நம்மைப் பஞ்சேந்திரியங்கள் நற்றொழிலொன்றையுஞ் செய்ய
வொட்டாமல் மயக்கிச் சிற்றின்பத்திலேயே வலியஇழுக்கின்றன;
மனமே! நீ அவற்றின்வழியிற் சேராமல், எம்பெருமானெழுந்தருளியிருக்கின்ற நந்திபுரவிண்ணகரத்தை நாடுதலாகிற
இச்சிறுதொழிலைக் கைக்கொண்டாலும் பேரின்பங் கைகூடுமென மனத்திற்கு உபதேசஞ்செய்கின்றன ரென்க.
‘செயற்கரியசெய்வோம்’ என்று மேம்பாடுதோன்றக் கூறியது, மனத்தை நல்வழிப்படுத்துதற்பொருட்டாம்;
“நெஞ்சமே நல்லை நல்லை” என்றவிடத்துப் போல.
“உய்வந்தொழும்புசெய்தென் றிருப்போமை யுய்யாம லைவர், பெய்வந்தொழுவினைக்கேயென்பரால்” என்றது,
இங்கு ஒப்புநோக்கத்தக்கது.
செயற்கு எளியவாவன – வேண்டியவாறே மனத்தைப் பஞ்சேந்திரியங் களின்வழிகளால் ஐம்புலன்களிற் செலுத்துதலும்,
கண்டபொருளை விரும்புதலும், அவை கிடையாதபோது கோபித்தலும் முதலாயின;
செயற்குஅரியவாவன – இயமம் நியமம் முதலான எண்வகை யோகவுறுப்புக்கள்.
இனி, செயற்கரிய என்பதற்கு – எம்பெருமானது முகமலர்த்திக்காகச் செய்யுங் குற்றேவல்களென்றலும் பொருந்தும்.
‘நயக்கல்வி’ என்ற பாடத்துக்கு – இனிமையைத் தருகின்ற படிப்பு என்று பொருள்;
அவையாவன – வாத்ஸ்யாயநம் கொக்கோஹம் முதலிய காமசாஸ்திரங்கள்.
எம்பெருமானைத் தியானஞ் செய்து உய்யாமல், நயக்கல்வியை விரும்பிக்கற்றும் ஸ்வர்க்கத்தை
அரசாண்டும் பயனில்லை யென்பது, கருத்து. அடியார்களை அன்புடன்நோக்கிநோக்கி எம்பெருமானது திருக்கண்கள் சிவந்தனபோலும்.
ஐம்பொறிகளை “ஐவர்’ என உயர்திணையாகக்கூறியது இழிப்புப்பற்றிய திணைவழுவமைதி;
தொல்காப்பியவுரையில் நச்சினார்க்கினியர் “தாம்வந்தார் தொண்டனார்’ என்பது, உயர்சொல் குறிப்புநிலையின் இழிபு விளக்கிற்று’ என்றது,
இங்கு உணரத்தக்கது. ஐவர் – தொகைக்குறிப்பு.
நந்திதேவர்க்குப் பிரதியக்ஷமான சிறந்த நகர மாதல்பற்றி, இத்தலத் திற்கு, “திருநந்திபுரவிண்ணகரம்’ என்று திருநாமம்:
இது, “நாதன்கோவில்’ என வழங்கும்.
————
22-திரு இந்தளூர் –
நாடுதும் வா நெஞ்சமே நாராயணன் பதிகள்
கூடுதும் வா மெய்யடியார் கூட்டங்கள் சூடுதும் வா
வீதி யிந்தளத்த கிலின் வீசு புகை வாசம் எழும்
ஆதி இந்தளூரான் அடி –22-
(இ – ள்.) நெஞ்சமே – (எனது) மனமே! –
நாராயணன் பதிகள் – திரு மாலினது திருப்பதிகளை,
நாடுதும் – சென்று தரிசிப்போம்; வா -;
மெய் அடியார் கூட்டங்கள் – உண்மையான பக்தர்களது கூட்டங்களை,
கூடுதும் – போய்ச் சேருவோம்: வா -;
இந்தளத்து – தூபக்கால்களிற் போகடப்பட்ட,
அகிலின் – அகிற்கட்டைகளினின்று,
வீசு – வீசுகின்ற,
புகை – புகையினது,
வாசம் – நறுமணமானது,
வீதி – தெருக்களில்,
எழும் – கமழ்ந்து எழப்பெற்ற,
ஆதி இந்தளூரான் – முதன்மையாகிய திருவிந்தளூரென்னுந் தலத்தி லெழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானது,
அடி – திருவடித் தாமரைகளை,
சூடுதும் – (தலைமேற்) சூடிக்கொள்ளுவோம்: வா -; (எ – று.)
திருமாலின் திருப்பதிகளிற் சென்று அடியார் கூட்டங்களுடன் கூடி எம்பெருமானது திருவடித் தாமரைகளை
முடிக்கு அணியாகச் சூடுமாறு இணங்கிவரும்படி தமதுநெஞ்சை யழைக்கின்றன ரென்க.
நாராயணன் என்ற திருநாமம் – நித்யவஸ்துக்களையெல்லாம் தனக்குஇருப்பிடமாகவுடையவ னென்றும்,
நித்யவஸ்துக்களுக்கு ஆதாரமாயிருப்பவனென்றும், பிரளயப் பெருங்கடலை வாழுமிடமாகக்கொண்டவ னென்றும்
இவ்வாறாகப் பொருள்படும். “சூடுதும்’ என்ற வினைக்கு ஏற்ப, திருவடி தாமரையாக்கி உரைக்கப்பட்டது.
சந்திரன் தனது சாபம் நீங்கப்பெற்ற தல மாதலால், ‘திருவிந்தளூர்’ என்று இத்தலத்திற்குப் பெய ரென்பர்.
இதற்கு வடமொழியில் ‘ஸுகந்த வநம்’ என்று ஒருதிருநாமம் வழங்குகின்றது.
————-
23-திருச் சித்திர கூடம்
அடியால் உலகு எல்லாம் அன்று அளந்து கொண்ட
நெடியானைக் கூடுதியேல் நெஞ்சே கொடிது ஆய
குத்திர கூடு அங்கி கொளுந்தா முன் கோவிந்தன்
சித்திர கூடம் கருதிச் செல் –23–
(இ – ள்.) நெஞ்சே – மனமே ! –
அடியால் – (தனது) திருவடிகளினால்,
உலகு எல்லாம் – எல்லாவுலகங்களையும்,
அன்று – முற்காலத்தில்,
அளந்து கொண்ட – அளந்து தன்னுடையனவாக்கிக்கொண்ட,
நெடியானை – திரிவிக் கிரமாவதாரஞ்செய்த கடவுளை,
கூடுதி ஏல் – சேரவேண்டுமென்று விரும்பினையானால், –
கொடிது ஆய – கொடுமையுள்ளதாகிய,
குத்திரம் – இழிகுணத்தைக்கொண்ட,
கூடு – இந்தச்சரீரத்தை,
அங்கி – அக்கினியானது,
கொளுந்தா முன் – எரித்துவிடுதற்குமுன்னமே,
கோவிந்தன் – கோவிந்தராஜ னெழுந்தருளியிருக்கின்ற,
சித்திரகூடம் – திருச்சித்திரகூடமென்னுந் திவ்வியதலத்தை,
கருதி – நினைத்து,
செல் – செல்வாயாக; (எ – று.)
இறப்பதற்குமுன்னம் சித்திரகூடத்தைச் சென்று சேர்வாயானால், என்றும் எம்பெருமானைக் கூடிவாழும் நற்கதி வாய்க்கு மென்பதாம்.
உயிர்கள் தன்னையுணராதநிலையிலும் தனக்கும் அவைகட்கு முள்ள தொடர்பையே பற்றாசெனக்கொண்டு
தேவேந்திரனுக்கு மூவுலகத்தையும் மீட்டுக்கொ டுத்த லென்ற ஒருவ்யாஜத்தை முன்னிட்டுக்
காடும் ஓடையு மான நிலப் பரப்பையெல்லாம் தனதுமலர்போன்ற மெல்லிய திருவடிகளால் அளந்து
அவ்வுயிர்களைத் தனக்கு அடிமையாக்கிக் கொண்ட பரமகாருணிகனான அந்தத்திரிவிக்கிரமனே
சரணமடைதற்கு உரியவ னென்பது தோன்ற, அப்பெருமானை ‘அடியாலுலகெல்லாமன் றளந்து கொண்ட நெடியான்’ என்றார்.
நிலவுலகத்தையளந்ததில் நிலவுலகத்தோடு அதன்கீழுள்ள ஏழுலகங்களும்,
வானத்தையளந்ததில் நிலவுலகத்திற்குமேலுள்ள ஆறுலகங்களும் அடங்கியதனால் ‘உலகெல்லாம் அளந்துகொண்ட’ எனப்பட்டது.
ஸம்ஸாரத்தை மேன்மேலும் விளைப்பதாய்ப் பலதுன்பங்கட்கும் அசுத்தங்கட்கும் இடமாய் ஆத்மா சேர்ந்திருத்தற்கு
ஒருகூடுபோல நிற்றலால், உடம்பை ‘கொடிதாய குத்திர கூடு’ என்றார்.
‘இறப்பதற்குமுன்’ என்ற பொருளில் ‘குத்திர கூடங்கிகொளுந்தாமுன்’ என்றது – காரணத்தைக் காரியமாகக் கூறிய
உபசாரவழக்கின்பாற்படும்.
கோவிந்த னென்ற திருநாமத்துக்கு – பசுக்களைக் காத்தவ னென்றும்,
உயிர்களை அடிமையாகவுடையவ னென்றும்,
சூரியகிரணத்தில் தங்கியிருப்பவ னென்றும்,
வேதத்தை (ஹம்ஸரூபியாகிப் பிரமனுக்கு) உபதேசித்தவ னென்றும்,
(வராஹாவதாரஞ்செய்து நஷ்டமான) பூமியை யடைந்தவ னென்றும் இன்னுஞ்சிலவாறாகவும் பொருளுரைக்கப்படும்.
திருமங்கையாழ்வார் இத்தலத்தை மங்களாசாஸநஞ்செய்கையில் “தில்லைத்திருச்சித்திரகூடஞ் சென்று சேர்மின்களே” என்று
உபதேசமுகத்தாற் கூறியிருத்தலால், இவ்வாசிரியரும் தமதுமனத்தைநோக்கி உபதேசமாகக் கூறினர்போலும்.
சித்திரகூடம் – விசித்திரமான சிகரங்களை யுடையதெனப் பொருள் படுங் காரணப்பெயர்.
இது, இராமபிரான் வனவாசஞ்செய்தபொழுது அவ்வெம்பெருமானது திருவுள்ளத்திற்கு மிகவும் பாங்காயிருந்ததொருமலை;
அதனைப்போலவே, இத்தலமும் எம்பெருமானது திருவுள்ளத்திற்கு மிகவும்பாங்காயிருப்ப தென்பதுபற்றி,
அப்பெயரே இதற்கும் இடப்பட்ட தென்பர். இங்கு உத்ஸவமூர்த்தி, இராமபிரான் வனவாசஞ்செய்கையில்
சித்திரகூடபருவதத்தில் வீற்றிருந்தவண்ணமாக எழுந்தருளியிருக்கின்றனர்;
மூலமூர்த்தி, க்ஷீராப்திநாதன்போலச் சயனத்திருக்கோலமாகிச் சிவபிரானது நடனத்தைப் பார்த்து ஆமோதித்துக்
கொண்டு எழுந்தருளியிருக்கின்றனர்.
இது, தில்லைமரங்க ளடர்ந்த காடா யிருந்ததனால், ‘தில்லைத் திருச்சித்திரகூடம்’ என்று வழங்கப்படும்.
இது, எம்பெருமான் தேவர்களும் முனிவர்களும் சூழக் கொலுவீற்றிருந்தசபை.
—————
24-திருச் சீராம விண்ணகரம் –
செல்லும் தொறும் உயிர்ப்பின் செல்லும் இரு வினையை
வெல்லும் உபாயம் விரும்புவீர் தொல் அரங்கர்
சீராம விண்ணகரம் சேர்மின் பின் மீளாத
ஊர் ஆம் அவ் விண்ணகரம் உண்டு –24-
(இ – ள்.) செல்லும் தொறும் – (உடலைவிட்டு உயிர்) போகின்ற இடங் களிலெல்லாம்,
உயிர் பின் செல்லும் – அவ்வுயிரின்பின்னே விடாதுதொ டர்ந்துசெல்லுகின்ற,
இரு வினையை – (நல்வினை தீவினையென்னும்) இரண்டு வினைகளையும்,
வெல்லும் – கடத்தற்குத் தக்க,
உபாயம் – வழியை,
விரும்புவீர் – இச்சிக்கின்றவர்களே! – (நீங்கள்),
தொல் அரங்கர் சீராமவிண்ணகரம் சேர்மின் – பழைய திருவரங்கநாதனுடைய திருச்சீராமவிண்ணகர மென்னுந் தலத்தைப் போய்ச் சேருங்கள்;
பின் – அவ்வாறுசேர்ந்தபிறகு,
மீளாத ஊர் ஆம் அ விண்நகரம் – (தன்னைச்சேர்ந்தவர்) திரும்பிச் செல்லுதலில் லாத திருநகரமாகிய அந்தப்பரமபதம்,
உண்டு – (உங்களுக்குச்) சித்திக்கும்.
திருச்சீராமவிண்ணகரத்தைச் சேர்ந்தால், இருவினைகளையுமொழித்து மீளாவுலகமாகிய பரமபதத்தில் நிலைத்து
வாழ்வீ ரென்று ஜநங்கட்கு ஹிதோபதேசஞ் செய்தவாறு.
திருமங்கையாழ்வாரும் “காழிச்சீராமவிண்ணகரே சேர்மினீரே” என்று பரோபதேசமாகக் கூறியது, கருதத்தக்கது.
இருவினைகளும் தம்மைச்செய்த உயிர்கள் எத்தனை பிறப்பெடுத்தாலும் அத்தனை பிறப்புக்களிலும்
அவ்வுயிர்களைப் பின்தொடர்ந்துசென்று தத்தம்பயனைத் தவறாதுவிளைக்கு மென்பதை,
செல்லுந்தொறு முயிர்ப்பின் செல்லு மிருவினை’ என்றதனால் விளக்கினார்.
தாம் செய்த அவ்வவ்வினைகளின் பயனாகச் சுவர்க்கம் முதலிய இடங்களிற் சேர்ந்தவர் அவ்வினைகள்
கழிந்த பிறகு அவ்வவ்விடங்களினின்று திரும்பிவிடுதல்போல, பரமபதத்தைச் சேர்ந்தவர் தொல்லை யிருவினைகளும் ஒழிதலால்
அங்கு நின்று திரும்பிச்செல்லாராவ ரென்பதுபற்றி அம்முத்தியுலகத்தை ‘மீளாதவூராம் அவ்விண்ணகரம்’ என்றார்.
இந்நூலாசிரியர்க்கு ஸ்ரீரங்கநாதனிடத்துள்ள பத்திப்பேரன்பினாலும்,
நூற்றெட்டுத் திருப்பதிகளுட் சிறந்த தலம் திருவரங்கமே யாதலாலும்,
மற்றைத் திருப்பதிகளிலுள்ள எம்பெருமான்களையும் “அரங்கர்’ என்றே ஆங்காங்குக் கூறுவதென்க.
சக்கரவர்த்தித்திருமக னெழுந்தருளியிருக்கின்ற சிறந்தநகரமாதல்பற்றி, இத்தலத்திற்கு ‘சீராமவிண்ணகரம்’ என்று பெயர்.
காளி வாசஞ்செய்கிற காரணம்பற்றி இத்தலத்திற்குக் காழிச்சீராமவிண்ணகர மென்றும் பெயருண்டு.
(இது, சீர்காழி யென்றும் வழங்கப்படும்.)
இது, திருஞானசம்பந்தமூர்த்திநாயனாரைத் திருமங்கையாழ்வார் தமது கவித்திறத்தினால் வென்று
அவரது வெற்றிவேலைத் திருமுன்காணிக்கையாகப் பெற்ற தலம்.
————-
25–திருக் கூடலூர் –
உண்டு கேட்டு உற்று மோந்துப் பார்க்கும் ஐவர்க்கே
தொண்டு படலாமோ உன் தொண்டனேன் விண்டு இலங்கும்
ஆடல் ஊர் நேமி முதல் ஐம்படையாய் அன்பு உடையாய்
கூடலூராய் இதனைக் கூறு –25-
(இ – ள்.) விண்டு இலங்கும் – விட்டுவிட்டுப் பிரிகாசிக்கின்ற,
ஆடல் ஊர் – வெற்றி பொருந்திய,
நேமிமுதல் – சக்கரம் முதலிய,
ஐம் படையாய் – பஞ்சாயுதங்களையுடையவனே!
அன்பு உடையாய் – (உயிர்களிடத்தில் நிர்ஹேதுகமான) கிருபையையுடையவனே!
கூடலூராய் – திருக்கூடலூரென் னுந் தலத்தி லெழுந்தருளியிருப்பவனே ! –
உன் தொண்டனேன் – உனக் கேயடியவனாகிய நான், (அவ்வாறு அடிமையாயிருத்தலைவிட்டு), –
உண்டு – (இனியவுணவுகளைச்) சுவைத்தும்,
கேட்டு – (இனியஇசைமுதலியவற்றைக்) கேட்டும்,
உற்று – (இன்பமுண்டாக்கும் பொருள்களைப்) பரிசித்தும்,
மோந்து – (நறுமணமுள்ள பொருள்களை) மோந்தும்,
பார்க்கும் – (நற்காட்சியுள்ள பொருள்களைக்) கண்டும் மகிழ்கின்ற,
ஐவர்க்கே – பஞ்சேந்திரியங் கட்கே,
தொண்டு படல் ஆமோ – அடிமைப்படுதல் தகுதியாகுமோ? (எ – று.)
மெய் வாய் கண் மூக்குச் செவி யென்னும் ஐம்பொறிகளுள் கண் எம் பெருமானையே தரிசிப்பதும்,
செவி அப்பெருமான துவைபவங்களையே கேட்பதும், வாய் அவனையே துதிப்பதும்,
மூக்கு அவனது திவ்வியபரிமளத்தையே மோப்பதும், கை கால் தலை முதலிய உறுப்புக்களையுடைய மெய்
அவ் வெம்பெருமானைத் தொழுதல் வலஞ்செய்தல் வணங்குதல் முதலியன செய்வதுமாக,
இங்ஙனம் எல்லாப்பொறிகளும் ஸர்வஸ்வாமியான எம்பெருமானது விஷயங்களையே நுகரும் பொருளாகக் கொள்வதனால்
நான் ஈடேறும்வகை எளிதில் அமைந்திருக்க, அதனை விட்டு,
“கண்டுகேட் டுண் டுயிர்த் துற்றறியு மைம்புலனும், ஒண்டொடிகண்ணே யுள” என்றபடி சிற்றின்ப விருப்பத்தால்
விஷயாந்தரங்களிற் சென்று பஞ்சேந்திரியங்கட்கு வசப்பட்டு நாசமடையலாமோ?
நான் அவ்வாறு வசப்பட்டு அழியாதவாறு பாது காப்பது உனதுகடமை யென்று வேண்டியவாறாம்.
“உண்ணுஞ்சோறு பருகுநீர் தின்னும்வெற்றிலையு மெல்லாம், கண்ணன்,”
“வாஸுதேவஸ்ஸர்வம்,”
“ஸர்வகந்த: ஸர்வரஸ:” என்றவற்றால் தாரக போஷக போக்யாதிகளெல்லாம் அவ்வெம்பெருமானே யாதலை யுணர்க.
“ஐவர்க்குத் தொண்டுபடலாமோ வுன்தொண்டனேன்’ என்ற தொடரில், ஸாஸ்வதமும் ஸர்வரஸமுமான நீ இருக்கையில்,
நஸ்வரமும் அஸாரமுமான பஞ்சேந்திரியங்கட்கு ஆட்படுதல் தகா தென்பது, போதரும்:
வெண்டளைபற்றி “மோந்துப்பார்க்கும்’ என, அல்வழியில் மென்றொடர்முன் வலிமிக்குவந்தது. ஆடல் = அடல்: நீட்டல்விகாரம்.
தேவர்கள் கூட்டமாகவந்து எம்பெருமானைச் சேவிக்குந் தலமாதலால், ‘திருக்கூடலூர்’ என்று இத்தலத்திற்குத் திருநாம மென்பர்.
—————
26-திருக் கண்ணங்குடி –
கூறு புகழ்த் தன் அடிக்கே கூட்டுவனோ இன்னம் எனை
வேறுபடு பல் பிறப்பில் வீழ்த்துவனோ தேறுகிலேன்
எண்ணம் குடியாய் இருந்தான் நின்றான் கிடந்தான்
கண்ணங்குடியான் கருத்து –26-
(இ – ள்.) எண்ணம் – (எனது) மனத்தை,
குடி ஆய் – (தான்) வாழுமிட மாகக்கொண்டு,
இருந்தான் நின்றான் கிடந்தான் – (அந்நெஞ்சினில்) வீற்றிருத்தலையும் நிற்றலையும் சயனித்தலையும் செய்பவனும்,
கண்ணங்குடியான் – திருக்கண்ணங்குடியென்னுந் தலத்தி லெழுந்தருளியிருப்பவனுமான எம் பெருமான், –
என்னை – அடியேனை,
கூறு புகழ் தன் அடிக்கே கூட்டுவனோ – (வேதங்களிற் சிறப்பித்துக்) கூறப்படுகின்ற கீர்த்தியையுடைய
தனதுதிருவடிகளிலே சேர்த்துக்கொள்வனோ? (அன்றி),
இன்னம் – இனி மேலும்,
வேறுபட – (அவ்வாறு தன்திருவடிகளிற் சேர்த்துக்கொள்ளுவதற்கு) மாறாக,
பல் பிறப்பில் – பலவகைப்பிறப்புக்களிலும்,
வீழ்த்துவனோ – தள்ளி வருத்துவனோ?
கருத்து – (அவனது) திருவுள்ளக்கருத்தை,
தேறுகிலேன் – (இன்னதென்று) அறியேன், (யான்); (எ – று.)
என்மனத்திலே வந்துபுகுந்து நிற்பதும், அவ்வாறுநிற்குமிடத்து வருத்தந்தட்டுகையில் வீற்றிருப்பதும்,
அவ்வாறு இருக்குமிடத்தும் வருத்தந்தோற்றினாற் பள்ளிகொள்வதுமாக இவ்வாறு நிலையாகவாழ்கின்ற
எம்பெருமான் அடியேனுக்கு நற்கதியருள்வனோ? அன்றி,
இதுவரையிலும்போலவே இன்னமும் பலவகைப்பிறப்புக்களில் அலைந்துழலவைப்பனோ?
நிரங்குசஸ்வதந்த்ரனான அவ்வெம்பெருமான் யாதுசெய்வனோ? அறிய னென்பதாம்.
இவ்வாறு ஐயங்கார் ஐயமுறுதற்குக் காரணம்,
எம்பெருமான் தம்மிடத்துக் காரணமின்றியெழுந்த பெருங்கருணையோடு பேரன்புபாராட்டுதலும்,
இயற்கையான அடிமைப்பொருளாகிய தாம் இத்தனைகாலம் அவ்வெம்பெருமானுக்கு ஆட்படாமல்
ஸ்வதந்த்ரராய்த் திரிந்து விமுகராகக்கிடந்தமையுமென்க.
“பின்பிறக்கவைத்தனன்கொலன்றி நின்றுதன்கழற்கு,
அன்புறை க்கவைத்தநாளறிந்தனன்கொல் ஆழியான்,***,
என் திறத்தி லென்கொல் எம்பிரான் குறிப்பில்வைத்ததே” என்ற பெரியார்பாசுரத்தை அடியொற்றியது, இது.
எம்பெருமான் தனது அடியார்களின் சரீரத்தில் நூற்றெட்டுத் திருப்பதிகளிற்செய்துள்ள விருப்பத்தைச் செய்வானென்ற
கொள்கை விளங்குமாறு ‘எண்ணங்குடியா யிருந்தான் நின்றான் கிடந்தான்’ என்றார்;
“நிற்பதுமோர் வெற்பகத்து இருப்புவிண் கிடப்பதும், நற்பெருந்திரைக்கடலுள் நானிலாதமுன்னெலாம்,
அற்புத னநந்தசயன னாதிபூதன் மாதவன், நிற்பதும் இருப்பதுங் கிடப்பதும் என்னெஞ்சுளே,”
“நின்ற தெந்தை யூரகத் திருந்த தெந்தை பாடகத்து, அன்றுவெஃகணைக்கிடந்த தென்னிலாதமுன்னெலாம், ***
நின்றது மிருந்ததுங் கிடந்தது மென்னெஞ்சுளே” என்ற திருமழிசையாழ்வார் பாசுரங்களும்,
“உகந்தருளின நிலங்களெல்லாவற்றிலும் பண்ணும் விருப்பத்தை இவனுடைய ஸரீரைகதேஸத்திலே பண்ணும்.
அங்குத்தை வாஸம் ஸாதநம்; இங்குத்தை வாஸம் ஸாத்யம். “கல்லுங் கனை கடலும்” என்கிறபடியே
இது ஸித்தித்தால் அவற்றில் ஆதரம் மட்டமாயிருக்கும்” என்ற ஸ்ரீவசநபூஷணவாக்கியங்களும் இங்குஉணரத்தக்கன.
பல்பிற ப்புக்களாவன – மக்கள் தேவர் விலங்கு புள் ஊர்வன நீர்வாழ்வன தாவரம் என்னும் எழுவகைப்பிறப்புக்கள்.
கண்ணன் வாழ்கின்ற இடமாதலால், இத்தலத்திற்கு ‘திருக்கண்ணன் குடி’ என்று பெயர்;
அதுவே கண்ணங்குடியென்று வழங்குவதாயிற்று.
இத்தலத்தைக்குறித்து ‘உறங்காப்புளி, ஊறாக்கிணறு, காயாமகிழ், தீராவழக்கு, திருக்கண்ணங்குடி’ என்று ஒருபழமொழி வழங்கும்.
————
27-திருக் கண்ண மங்கை –
கருத்தினால் வாக்கினால் நான்மறையும் காணா
ஒருத்தனை நீ நெஞ்சே உணரில் பெருத்த முகில்
வண்ணம் அம்கை கண் கால் வனசம் திரு அரங்கம்
கண்ணமங்கை ஊர் என்று காண் –27-
(இ – ள்.) நெஞ்சே – மனமே! –
கருத்தினால்- மனத்தினாலும்,
வாக்கினால்-வாக்கினாலும்,
நால் மறையும் – நான்குவேதங்களும்,
காணா – கண்ட றியமுடியாத,
ஒருத்தனை – ஒப்பற்ற திருமாலை,
நீ உணரின் – நீஅறியவிரும்பினால், – (அவனுக்கு),
“வண்ணம் – திருமேனிநிறம்,
பெருத்த முகில் – பெரிய காளமேகமாம்;
அம் கை – அழகிய திருக்கைகளும்,
கண் – திருக்கண்களும்,
கால் – திருவடிகளும்,
வனசம் – செந்தாமரைமலர்களாம்;
ஊர் – இருப்பிடம்,
திருவரங்கம் – ஸ்ரீரங்கமும்,
கண்ணமங்கை – திருக்கண்ணமங்கையு மாம்,’ என்று -,
காண் – அறிவாயாக; (எ – று.)
எம்பெருமானது ஸ்வரூபத்தை உள்ளபடியறிய விரும்பினால், அவனது திருமேனிநிறம் காளமேகத்தைப்போலு மெனவும்,
அவனது கை கால் கண்க ளென்ற உறுப்புக்கள் செந்தாமரைமலர்போலு மெனவும்,
அவனெ”ந்தருளியிருக்கின்ற இடங்கள் ஸ்ரீரங்கமும் திருக்கண்ணமங்கையும் போன்ற திருப்பதிகளெனவும்
இவ்வாறு தனித்தனியே உவமைப்பொருள்களைக் கொண்டு ஒருவாறு ஊகித்து உணரலாமேயன்றி,
வேதபுருஷனது மனோவாக்குக்களுக்கும் எட்டாத அந்தஎம்பெருமானது ஸ்வரூபத்தை நேர் கொடு நேரே நிரூபித்து
உணர்தல் அற்பஞானமுள்ள நம்மால் எவ்வாற்றாலும் முடியா தென்பது, கருத்து.
(“மைவளர்க்கும் மணியுருவம் மாதகமோ மழைமுகிலோ வென்கின்றாளால்,”
“அடித்தலமும் தாமரையே அங்கை களும் பங்கயமே யென்கின்றாளால்,”
“கைவண்ணந் தாமரை வாய்கமலம் போலும் கண்ணினையுமரவிந்தம் அடியுமஃதே”,
“தமருள்ளந் தஞ்சை தலையரங்கந் தண்கால், *** ஏவல்லவெந்தைக்கிடம்” என்னும் பெரியார்பாசுரங்களை இங்கே அறிக.)
ஆநந்தவல்லியில் எம்பெருமானது ஆனந்தகுணத்தை அளவிடப்புக்க வேதபுருஷன்
“யதோவாசோநிவர்த்தந்தே, அப்ராப்ய மநஸாஸஹ, ஆநந்தம்ப்ரஹ்மண:” என்று தனது
வாக்குக்கும் மனத்துக்கும் எட்டாமல் மீண்டமைபற்றி எம்பெருமானது தன்மைஅறிதற்கு அரியதென்பது தானே பெறப்படுதலால்,
‘கருத்தினால் வாக்கினால் நான்மறையுங் காணவொருத்தன்’ என்றார்.
ஒருத்தன் – அத்விதீயன்: ஈடுமெடுப்புமில்லாத ஒரு தெய்வம்.
நான்மறை – ருக், யஜுஸ், ஸாமம், அதர்வணம் என்பன:
அன்றி, தைத் திரியம், பௌடியம், தலவகாரம், ஸாமவேதம் என்பனவுமாம்.
வண்ணம் – வர்ணம் என்பதன் சிதைவு. அங்கை – அகங்கை யென்பதன் திரிபுமாம்: அகங்கை – உள்ளங்கை;
“அகமுனர்ச் செவி கை வரி னிடையன கெடும்.” வநஜம் – நீரில்தோன்றுவ தெனத் தாமரைக்குக் காரணவிடுகுறி.
திருமங்கையாழ்வார் இத்தலத்தில் வந்து இங்கு எழுந்தருளியுள்ள எம்பெருமானைப் பதிகம்பாடித் துதிக்கையில்,
திருநின்றவூர்ப் பத்தராவிப் பெருமாள் முன்பு திருக்கடன்மல்லையில் ஒருபாடல்பெற்றது போதாதெ ன்று மீட்டும்
அவ்வூரிலுள்ள நாய்ச்சியாரான என்னைப்பெற்ற அன்னையால் ஞாபிக்கப்பட்டவராய், ஆழ்வாரெதிரில் வந்து காட்சியளிக்க,
ஆலிநாடர் “நின்றவூர்நின்ற நித்திலத்தொத்தினை *** கண்ணமங்கையுட் கண்டு கொண்டேனே” என்று
அப்பிரானையுஞ் சேர்த்துத் துதிசெய்தன ரென்க.
———–
28-திருக் கவித்தலம் –
காணியும் இல்லமும் கைப் பொருளும் ஈன்றோரும்
பேணிய வாழ்க்கையும் பேர் உறவும் சேணில்
புவித் தலத்தில் இன்பமும் பொங்கு அரவம் ஏறிக்
கவித் தலத்தில் கண் துயில்வோன் காண் –28-
(இ – ள்.) (அடியேனுக்கு), காணியும் – பூமியும்,
இல்லமும் – வீடும்,
கை பொருளும் – கையிலுள்ள திரவியமும்,
ஈன்றோரும் – பெற்ற தாய்தந்தை யரும்,
பேணிய வாழ்க்கையும் – விரும்பிய நல்வாழ்வும்,
பேர் உறவும் – நெருங்கிய சுற்றத்தாரும்,
சேணில் புவித்தலத்தில் இன்பமும் – மறுமையிலும் இம்மையிலும் உண்டாகக்கூடிய இன்பங்களும், –
கவித்தலத்தில் – திருக்கவித்தல மென்னுந் தலத்தில்,
பொங்கு அரவம் ஏறி – சீறுந்தன்மையுள்ள ஆதிசேஷன்மீது ஏறி,
கண் துயில்வோன் – திருக்கண்வளர்ந்தருளுந் திரு மாலினுடைய,
கால் – திருவடிகளேயாம்; (எ – று.)
போக்ய போகோபகரண போகஸ்தாநங்களாகிய யாவும் எனக்கு எம் பெருமான் திருவடிகளே யென்பது, கருத்து.
“தோட்டமில்லவளாத்தொழு வோடை துடவையுங் கிணறுமிவையெல்லாம்,
வாட்டமின்றி யுன்பொன்ன டிக்கீழே வளைப்பகம்வகுத்துக்கொண்டிருந்தேன்,”
“பெற்றதாய்நீயே பிறப்பித்ததந்தை நீ, மற்றையாராவாரும்நீ பேசில்,”
“ஒருநற்சுற்றமெனக்குயி ரொண்பொருள், வருநல்தொல்கதியாகிய மைந்தன்” என்ற
ஆழ்வார்களின் அருளிச்செயல்கள் இங்குக் கருதத்தக்கன.
காணி – விளைநிலம். உறவுக்குப் பெருமையாவது, வறுமைக்காலத்திலும் தம்மைவிட்டுப் பிரியாமல் உடனிருந்து உதவிசெய்தல்.
சேண் – மேலுலகம். இறந்தபின் மறுமையிற் பெறக்கூடிய இன்பம் பெரும்பாலும் மேலுலகத்திற்சென்று பெறக்கூடியதா யிருத்தலால்,
அம்மறுமையின்பத்தை ‘சேணிலின்பம்’ என்றார்.
திருக்கவித்தலத்தில் எம்பெருமான் புஜங்கசயநத்திற் பள்ளிகொண்டிருத்தலால்,
அப்பிரான் ‘பொங்கரவமேறிக் கவித்தலத்திற் கண்டுயில்வோன்’ எனப்பட்டான்.
தன்மீது திருக்கண்வளர்கின்ற எம்பெருமானுக்கு எச்சமயத்தில் யாவரால் என்னதீங்கு விளையுமோ? என்று,
தீங்கு உண்டாதற்கு இடமாகாத எம்பெருமான்திறத்திலும் பொங்கும்பரிவினாற் பயசங்கைகொண்டு
மங்களாஸாஸநபரனான ஆதிசேஷன் எப்போழ் துஞ் சீறிக்கொண்டிருப்ப னென்னுங் கருத்தைக்
குறிப்பித்தற்கு, அரவத்திற்கு ‘பொங்கு’ என்ற அடைமொழி கொடுத்தார்.
பக்தர்கள் கோஷித்துத் துதிக்கும்போது பயசங்கையினால் திருவநந்தாழ்வான் அழலுமிழ்வனென்று
“ஆங்காரவாரமதுகேட்டு அழலுமிழும் பூங்காரரவணையான்” என்று திருமழிசைப்பிரான் கூறியிருத்தலுங் காண்க.
அநுமானுக்குப் பிரதியக்ஷமான தல மாதலால், இத்திருப்பதிக்கு, “திரு க்கவித்தலம்’ என்று பெய ரென்பர்.
—————
29-திரு வெள்ளியங்குடி –
கால் அளவும் போதாக் கடல் ஞாலத் தோர் கற்ற
நூல் அளவே அன்றி நுவல்வார் ஆர் கோலப்
பரு வெள்ளி அம் குடியான் பாதக ஊண் மாய்த்த
திரு வெள்ளி யங்கு டியான் சீர் –29-
(இ – ள்.) கோலம் பரு வெள்ளி அம் குடியான் – அழகிய பெரிய (கைலாசமென்னும்) வெள்ளிமலையை வாழுமிடமாகவுடையனான சிவபிரானது,
பாதகம் ஊண் – (பிரமஹத்தியாகிய) பாவத்தினால் நேர்ந்த இரந்துண்ணுதலை
மாய்த்த – ஒழித்தருளிய,
திருவெள்ளியங்குடியான் – திருவெள்ளியங்குடி யென்னுந் தலத்தி லெழுந்தருளிய எம்பெருமானது,
சீர் – சிறப்பை, –
கால் அளவும் போதா கடல் ஞாலத்தோர் – (திரிவிக்கிரமாவதாரகாலத்தில் எம்பெருமானது) ஒருதிருவடியினாலளவிடுதற்கும்
போதாத கடல்சூழ்ந்த நிலவுலகத்திலுள்ளவர்களில்,
கற்ற (தாம்) படித்தறிந்த,
நூல் அளவே அன்றி – நூல்களின் அளவாகக் கூறுவதேயல்லாமல்,
நுவல்வார் – முழுதும் உணர்ந்து சொல்லவல்லவர்,
ஆர் – யாவருளர்? (எ – று.)
எம்பெருமானது திருக்கல்யாணகுணங்களை முழுவதுந் தெரிவிக்கின்ற நூல்களும் இவ்வுலகத்திலில்லை;
ஆகவே, “நூலளவேயாகுமாம் நுண்ணறிவு” என்றபடி,
அவ்வெம்பெருமானது குணங்களைச் சிறிதே கூறுகின்ற அந்நூல்களைக் கற்றவர்கள் அதனால் தாம் உணர்ந்து
கொண்ட சிறிதளவே எம்பெருமானது குணங்களைக் கூறவல்லவ ராவரேயன்றி
முற்றுமுணர்ந்து கூறவல்லவர் ஒருவருமில்லை யென்பதாம்.
பூமியைப்பார்க்கிலும் எம்பெருமானது திருவடி பெரிதாயிருந்த தென்பார் ‘காலளவும் போதாக் கடன்ஞாலம்’ என்றார்;
இதனால், அத்திரிவிக்கிரமாவதாரங்கொண்ட எம்பெருமானது உருவத்தின் பெருமை அளவிடுதற்கு அரியதென விளக்கியவாறு,
‘காலளவும் போதாக் கடன்ஞாலம்’ என்ற தொடரால், எம்பெருமானது சரமாவயவமான திருவடிகளில் ஒன்றின்
அளவையே கண்டறியமாட்டாத நிலவுலகத்தார் அவ்வெம்பெருமானது சீர்முழுவதையும் எவ்வாறு காணமாட்டுவர்? என்ற பொருள் தோன்றும்;
இங்கு, ஞாலத்திற்குக்கொடுத்துள்ள ‘காலளவும்போதா’ என்ற அடைமொழி இவ்வாறு ஒருகருத்தை உட்கொண்டிருத்தலால்,
கருத்துடையடைமொழியணியாம்.
எம்பெருமானது நித்யவிபூதியாகிய பரமபதம் “த்ரிபாத் (முக்காற்பங்குள்ள) விபூதி’ என்று பெயர்பெறுமாறு
இந்த லீலாவிபூதி முழுதும் அந்தஎம்பெருமானது பெருஞ்செல்வத்தில் நான்கிலொருபங்கே யாதல்பற்றி,
‘காலளவும்போதாக் கடன்ஞாலம்’ என்றாருமாம்.
“முதலாவார் மூவர்” என்றபடி முதல்மூர்த்திகளாகிய மூவரில் ஒருவன் தலையறுப்புண்டான்;
ஒருவன் தலையைக் கொய்து அப்பாதகத்தால் வருந்தி யலைந்து அதைப் போக்கிக் கொள்வதற்கு
உபாயந்தேடி உலகமெங்கும் இரந்து திரிந்தான்;
ஒருவன் அவனது பாதகத்தை மிக எளிதில் அகலுமாறு அருள்செய்தான்;
ஆகவே, அவ்வாறு அருள்செய்த திருமாலே மற்றையிருமூர்த்தியினும் பரதேவதையாவ னென்றற்கு,
அவனை ‘பருவெள்ளியங்குடியான் பாதகவூண் மாய்த்த திருவெள்ளியங்குடியான்’ என்றார்;
“பேசநின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும், நாயகனவனே கபால நன்மோக்கத்துக் கண்டுகொண்மின்” என்றது காண்க.
சுக்கிராசாரியனுக்குப் பிரதியக்ஷமான தலமாதலால், இத்திருப்பதிக்கு “திருவெள்ளியங்குடி’ என்று பெயர்;
‘பார்க்கவபுரி’ என்று இத்தலத்திற்கு வடமொழியில் ஒருபெயர் வழங்குதலுங் காண்க.
———
30-திருமணி மாடக் கோயில் –
சீரே தரும் கதியில் சேருகைக்கு நான் உன்னை
நேரே வணங்கினேன் நெஞ்சே நீ பாரில்
அணி மாடக் கோயில் அரங்கனார் நாங்கூர்
மணி மாடக் கோயில் வணங்கு –30-
(இ – ள்.) நெஞ்சே – மனமே! –
சீரே தரும் கதியில் சேருகைக்கு – சிறப்பையே தருகின்ற நல்லகதியில் (முத்தியுலகத்தில்) சென்றுசேர்வதற்காக,
நான் -, உன்னை – (எனது நன்மைதீமைகட்குக் காரணமாயிருக்கின்ற) உன்னை,
நேரே வணங்கினேன் – நன்றாகத்தொழுகின்றேன்;
நீ -, (யாது செய்யவேண்டுமெனின்), –
பாரில் – இந்நிலவுலகத்தில்,
அணி மாடம் கோயில் அரங்கனார் – அழகிய மாடமாளிகைகளையுடைய கோயிலென்று சொல்லப்படுகின்ற
ஸ்ரீரங்கத்திலெழுந்தருளியுள்ள ரங்கநாதனது,
நாங்கூர் மணிமாடக்கோயில் – திருநாங்கூரைச்சார்ந்த திருமணிமாடக்கோயி லென்னுந் திவ்வியதலத்தை,
வணங்கு – தொழுவாயாக; (எ – று.)
அத்திருப்பதியை வணங்குமாறு நீ இசைவாயானால், நமக்குத் தவறாமல் நற்கதிவாய்க்குமென்று தமது
நெஞ்சைநோக்கி இதமுரைத்தவாறு. தமக்கு நற்கதிவாய்த்தற்கும், அன்றித்தீநரகிற்கிடந்துழைத்தற்கும் எல்லாவற்றிற்கும்
மனமே காரண மாதலால், நற்கதிகிடைப்பதற்கு முயற்சிசெய்யவேண்டுமென்று கருதிய ஆசிரியர்
தமது விருப்பத்தின்படி வருதற்பொருட்டு அந்நெஞ்சை வணங்கி வேண்டுகின்றன ரென்க;
“நெஞ்சமே நல்லைநல்லை யுன்னைப்பெற்றா, லென்செய்யோ மினியென்னகுறைவினம்,
மைந்தனை மலராண்மணவாளனைத், துஞ்சும்போதும் விடாது தொடர் கண்டாய்” என்ற நம்மாழ்வார்பாசுரம், இங்குக் கருதத்தக்கது.
இதுமுதற் கூறப்படுகின்ற திருப்பதிகள் பதினொன்றையும், “திருநாங் கூர்த்திருப்பதிகள்’ என வழங்குவர்.
நாங்கூர் – வடமொழியில், நாகபுரி யெனப்படும்.
அழகிய உபரிகைவீடுகள் நிறைந்த எம்பெருமானெழுந்தருளியிருக்கின்ற தலமாதலால்,
இத்தலத்திற்கு, “திருமணிமாடக்கோயில்’ என்று பெயர் வந்ததுபோலும்.
————
31-திரு வைகுந்த விண்ணகரம் –
வணங்கேன் பிற தெய்வம் மால் அடியார் அல்லாக்
குணங்கேடர் தங்களுடன் கூடேன் இணங்கி நின்று
வைகுந்த விண்ணகரம் வாழ்த்துவேன் ஈது அன்றோ
வைகுந்த விண்ணகர வாழ்வு –31-
(இ – ள்.) (நான்), – பிற தெய்வம் – திருமாலல்லாத வேறுதெய்வங்களை,
வணங்கேன் – வணங்கமாட்டேன்;
மால் அடியார் அல்லா – திருமாலினது அடியவரல்லாத,
குணம் கேடர்தங்களுடன் – நற்குணமில்லாதவரோடு,
கூடேன் – சேரமாட்டேன்;
இணங்கிநின்று – (திருமாலடியாருடன்) கூடிநின்று,
வைகுந்த விண்ணகரம் – திருவைகுந்தவிண்ணகரமென்னுந் திவ்வியதலத்தை,
வாழ்த்துவேன் – துதிப்பேன்;
ஈது அன்றோ – இவ்வாறு அடியவருடன் கூடித் துதித்தலல்லவோ,
வைகுந்த விண் நகரம் வாழ்வு – ஸ்ரீவைகுண்டமென்னுந் திவ்வியநகரத்தி லுண்டாகின்ற நல்வாழ்க்கையாவது; (எ – று.)
“அடியார்நிலாகின்ற வைகுந்தம்” என்னுஞ் சிறப்பினையுடைய ஸ்ரீவைகுண்டத்துச் சென்றாலும் அங்கு உண்டாகும்
நல்வாழ்வென்பதும் திருமாலடியார்களுடன் கூடி எம்பெருமானைத் துதித்தலே யாதலால்,
இந்நிலவுலகத்திலேயே மறந்தும் புறந்தொழாமலும் அவைஷ்ணவஸஹவாஸ மில்லாமலும் நின்று
ஸ்ரீவைஷ்ணவர்களுடன் கூடி எம்பெருமானை யேத்தி ஜீவந் முக்தனாவேன் அடியேன் என்பதாம்.
பரதேவதையான திருமாலையன்றி, பிரளயகாலத்தில் பிறவுயிர்களோடொப்ப அவனது திருவயிற்றினுட் புக்குப் பின்பு
வெளிப்படுபவர்களும் தமக்கு ஆபத்துநேர்ந்த காலத்தில் அவனையே சரணமடைந்து தேறி மற்றைச்சமயங்களிற்
செருக்கித் திரிபவர்களு மான அபரதேவதைகளைச் சிறிதும் பொருள்செய்யாமையில் தமக்குஉள்ள உறுதியான துணிவை
‘வணங்கேன் பிறதெய்வம்’ என்பதனால் வெளியிட்டார்;
“அரங்கா! உன்னையன்றித் தெய்வமாக மதிக்குள்வையே னடியேன் பிறராரையுமே,”
“உலகமுண்ட திருக்கந்தரத்தனையல்லாது எண்ணே னொரு தெய்வத்தையே” என்றார் பிறவிடங்களிலும்,
கணவனையே தெய்வமாகக் கொண்டொழுகுங் கற்புடைமகளிர்க்குப் பிறிதோராடவரது தொடர்பில் லாதிருத்தல்
இன்றியமையாதவாறுபோல, எம்பெருமானைச் சரணமடைந்து உய்யும் பிரபந்நர்க்குத் தேவதாந்தரபஜநம்
பண்ணாமை அவசியமென்பர் ஆன்றோர்.
பிணி பசி மூப்புப் பிறப்பு இறப்புத் துன்பங்க ளின்றித் தாம் உய்யமாட்டாதவரும் தம்மைச் சரணமடைந்தவர்களைச்
சமயத்திலே கை விடுபவர்களுமான பிறதேவதைகளையும் அவரைப்பற்றிய பொய்ந்நூல்களையும்
தமது ஆராய்ச்சிக்குறைவினால் உண்மையென்று நம்பிப் பாராட்டிப் பழுதே பலபகலும் போக்குகின்ற
வம்பருடன் கூடுதல் அறிவின்கேட்டிற்குக் காரணமாய் ஸம்ஸாரத்திற்கே வித்தாமாதலால்,
‘மாலடியாரல்லாக் குணங்கேடர்தங்களுடன் கூடேன்” என்றார்.
“சிரவார்க்கெழுதுணையாஞ் செங்கண்மால்நாமம், மறந்தாரை மானிடமாவையே,” என்பது பூதத்தார் பாசுரம்.
தம்மோடுகூடினவர்களைத் தீக்கதியிற் சேர்த்தலால், மாலடியாரல் லாதவர் குணங்கேட ராவர்.
ஸ்ரீவைஷ்ணவர்களேற்றமறிந்து உகந்திருக்கையும் *** ஜ்ஞாநமும் விரக்தியும் ஸாந்தியு முடையனாயிருக்கும்
பரமஸாத்விகனோடே ஸஹவாஸம்பண்ணுகையும் வைஷ்ணவாதிகாரிக்கு அவஸ்யாபேக்ஷிதமாகையால்,
“இணங்கிநின்று வாழ்த்துவேன்’ என்றார்.
ஸ்ரீவைகுண்டத்தில் எம்பெருமான் எழுந்தருளியிருப்பதுபோலவே இத்தலத்தில் வீற்றிருந்ததிருக்கோலமாகச்
சேவைசாதித்தலால், இத்திருப்பதிக்கு, “திருவைகுந்தவிண்ணகரம்’ என்று பெய ரென்பர்.
————-
32-திரு அரிமேய விண்ணகரம் –
வாழும் அடியார் மட நெஞ்சே நம் அளவோ
தாழும் சடையோன் சது முகத்தோன் பாழிக்
கரிமேய விண்ணகரக் காவலோன் கண்டாய்
அரிமேய விண்ணகரத் தார்க்கு –32-
(இ – ள்.) மடம்நெஞ்சே – அறியாமையையுடைய மனமே! –
அரிமேய விண்ணகரத்தார்க்கு – திருவரிமேயவிண்ணகர மென்னுந் திவ்வியதலத்தி லெழுந்தருளியுள்ள எம்பெருமானுக்கு,
வாழும் அடியார் – அடியவராக வாழ்கின்றவர்கள் நம் அளவோ – நாம்மாத்திரந்தானோ? (அன்று) ;
தாழும் சடையோன் – தொங்குகின்ற (கபர்த்தமென்னுஞ்) சடையையுடைய சிவபிரானும்,
சதுமுகத்தோன் – நான்குமுகங்களையுடைய பிரமதேவனும்,
பாழி கரிமேய விண் நகரம் காவலோன் – பலம்பொருந்திய (ஐராவதமென்னும்) யானைமேல் ஏறிச் செல்லுகின்ற
சுவர்க்கலோகத்துக்கு அரசனாகிய இந்திரனும், (அடியவராவர்); (எ – று.) –
கண்டாய் – முன்னிலையசை; தேற்றமுமாம்.
நம்மைப்போல ஸாமாந்யரான மநுஷ்யர்கள்தாம் அப்பிரானுக்கு அடியவரென்று நினைக்கிறாயோ? அவ்வாறல்ல,
உலகத்தார்க்கு யோகஞ்செய்யும் முறையை யுணர்த்தியவனாய், “ஸங்கராத்ஜ்ஞாநமந்விச்சேத்” என்றவாறு
ஞானத்தைத் தரக்கூடியவனாய்ப் பாகவதாக்ரேஸரனான சிவபெருமானும்,
எப்போதும் வேதங்களை யோதி அவற்றின்பொருளையுணர்பவனான பிரமதேவனும்,
தேவர்கட்கெல்லாந்தலைவனான மஹேந்திரனுமே அத்திருமாலுக்கு அடியவராவர்;
இப்படி எல்லார்க்கும் அவனே தலைவ னாதலால், வேறுதெய்வங்களினிடத்திற் சிறிதும்பற்றுவையாது
அவனையே நம்பியிருப்பின், நமக்குத் தவறாமல் நற்கதி கிடைக்கு மென்று நெஞ்சிற்கு அறிவுறுத்தியவாறு.
சதுமுகத்தோன் = சதுர்முகத்தோன். கரி – கரத்தையுடையது என்பதனால், யானைக்குக் காரணக்குறி;
இனி, இச்சொல்லுக்கு – கருமைநிற முடைய தாதலால் கரியெனத் தமிழ்வகையாற் காரணங் கூறலாகாது;
வடசொல்லாதலின், “காவலன்’ என்பது ‘காவலோன்’ எனத் திரிந்தது. மேய – மேவிய என்பதன் விகாரம்.
‘திருவரிமேயவிண்ணகரம்’ என்பது – அரிபொருந்திய விண்ணகரம் போன்றது எனப் பொருள்படும்.
(“அரி’ என்ற சொல் – அழகு திருமால் குரங்கு சிங்கம் தவளை மூங்கில் முதலிய பலபொரு ளுள்ளது.)
———
33-திருத் தேவனார் தொகை –
ஆர்க்கும் வலம் புரியால் அண்டமும் எண் திசையும்
கார்க்கடலும் வெற்பும் கலங்கினவால் சீர்க்கும்
திருத் தேவனார் தொகை மால் செவ்வாய் வைத்து ஊதத்
தருத் தேவனார் தொகையும் சாய்ந்து –33-
(இ – ள்.) சீர்க்கும் – சிறப்புப்பெற்ற,
திருத்தேவனார்தொகை மால் – திருத்தேவனார்தொகை யென்னுந் திவ்வியதலத்திலெழுந்தருளியிருக்கின்ற திருமால்,
(பாரிஜாதவிருக்ஷத்தைத் தேவலோகத்தினின்று பேர்த்துக்கொணரும்போது),
செம் வாய் வைத்து ஊத – (பாஞ்சஜந்யத்தைத்) தமது சிவந்தவாயிலே வைத்து ஊதுகையில்,
ஆர்க்கும் வலம்புரியால் – பேராரவாரஞ் செய்கின்ற அந்த வலம்புரிச்சங்கத்தினால்,
தரு தேவனார் தொகையும் – கற்பகதருவின்நிழலில் வசிக்கின்ற தேவர்களின் கூட்டமும்,
சாய்ந்து – மூர்ச்சித்துவிழ, —
அண்டமும் – அண்டங்களும்,
எண் திசையும் – எட்டுத் திக்குக்களும்,
கார் கடலும் – கரிய சமுத்திரமும்,
வெற்பும் – அஷ்டகுல பருவதங்களும்,
கலங்கின – கலங்கிப் போயின; (எ – று.) – ஆல் – ஈற்றசை; வியப்புக்குறிப்புமாம்.
எம்பெருமானது பஞ்சாயுதங்களு ளொன்றான சங்கத்தினது சிறப்பை இதனாற் கூறினார்.
“அருட்கொண்டலன்னவரங்கர் சங்கோசையி லண்ட மெல்லாம்,
வெருட்கொண்டிடர்பட மோகித்து வீழ்ந்தனர் வேகமுடன்,
தருக்கொண்டுபோகப்பொறாதே தொடருஞ் சதமகனுஞ்,
செருக்கொண்ட முப்பத்துமுக்கோடிதேவருஞ் சேனையுமே” என்றார் திருவரங்கத்துமாலையிலும்,
சாய்ந்து = சாய; எச்சத்திரிபு. சாய்ந்து கலங்கின என்று ஒருமுடிபாகவே உரைப்பாரு முளர்.
அண்டம் – உலகவுருண்டை, அண்டம், எண்டிசை, கடல், வெற்பு என்பன – அங்குள்ள ஜீவராசிகளையும் குறித்தலால், ஆகு பெயர்கள்.
தேவர்கள் கற்பகதருவின் நிழலில் வசித்தலை, “இன்றளிர்க்கற்பக நறுந்தேனிடைதுளிக்குநிழலிருக்கை” என்ற கம்பராமாயணத்தாலும் அறியலாம்.
“தேவர்கள் சபைகூடின இடமாதலால், இத்திருப்பதிக்கு ‘திருத்தேவனார்தொகை’ என்று பெயராயிற்றென்னலாம்.
———–
34-திரு வண் புருடோத்தமம் –
சாய்ந்த திரு அரங்கம் தண் வேங்கடம் குடந்தை
ஏய்ந்த திரு மால் இருஞ்சோலை பூந்துவரை
வண் புருடோத்தமம் ஆம் வானவர்க்கும் வானவன் ஆம்
ஒண் புருடோத்தமன் தன் ஊர் –34-
(இ – ள்.) வானவர்க்கும் வானவன் ஆம் – தேவர்கட்கெல்லாந் தேவனாகிய,
ஒள் புருடோத்தமன்தன் – அழகிய புருஷோத்தம னென்னுந் திருமாலினது,
ஊர் – திருப்பதிகளாவன, –
சாய்ந்த திருவரங்கம் – (எம்பெருமான்) பள்ளிகொண்டிருக்கின்ற ஸ்ரீரங்கமும்,
தண் வேங்கடம் – குளிர்ந்த திருவேங்கடமலையும்,
குடந்தை – திருக்குடந்தையும்,
ஏய்ந்த திருமாலிருஞ்சோலை – (எம்பெருமானது திருவுள்ளத்துக்குப் பாங்காகப்) பொருந்திய திருமாலிருஞ்சோலைமலையும்,
பூ துவரை – அழகிய துவாரகையும்,
வள் புருடோத்தமம் – திருவண்புருடோத்தமம்,
ஆம் – ஆகும்; (எ – று.)
புருஷோத்தமனென்ற வடசொல் – பத்தர்களும் முக்தர்களும் நித்யர்களுமாகிய புருஷர்கள்
யாவரினுஞ் சிறந்தவ னென்று பொருள்படும். புருஷோத்தம னெழுந்தருளியிருக்கின்ற வளப்பமுள்ள திருப்பதி யாதலால்,
‘ இதற்கு ‘திருவண்புருடோத்தமம்’ என்று பெயர்.
—————-
35-திருச் செம்பொன் கோயில் –தலைவி ஆற்றாமை மிகுதியால் மடலூரத் துணிதல் –
ஊர்வேன் மடலை ஒழிவேன் மடம் நாணம்
சேர்வேன் கரிய திருமாலை பார் அறிய
அம்பொன் செய் கோயில் அரங்கன் அணி நாங்கூர்ச்
செம்பொன் செய் கோயிலினில் சென்று –35-
(இ – ள்.) பார் அறிய – உலகத்தவரெல்லாம் உணரும்படி (வெளிப்படையாக),
மடம் நாணம் ஒழிவேன் – மடப்பத்தையும் நாணத்தையும் துறந்தவளாகி,
மடலை ஊர்வேன் – மடலூர்ந்துசெல்வேன்; (அதனாலேனும்), –
அம்பொன் செய் கோயில் அரங்கன் – அழகிய பொன்னினாற் செய்யப்பட்ட கோயிலையுடைய திருவரங்க நாதனது,
அணி – அழகிய,
நாங்கூர் – திருநாங்கூரைச் சேர்ந்த,
செம்பொன்செய்கோயிலினில் – திருச்செம்பொன் செய்கோயிலென்னுந் தலத்தில்,
சென்று – போய்,
கரிய திருமாலை – (அங்கு எழுந்தருளியுள்ள) கருநிறமுடைய எம்பெருமானை,
சேர்வேன் – அடைவேன், (யான்); (எ – று.)
திருச்செம்பொன்செய்கோயிலென்னுந் தலத்தி லெழுந்தருளியுள்ள எம்பெருமானது திவ்விய சௌந்தரியத்தி லீடுபட்டு
அவனது உத்தமபுருஷத்தன்மையைக் கருதியதனாலே அப்பொழுதே அவனைக் கிட்டவேண்டும் படியான ஆசையுண்டாய்,
அங்ஙனம் அவனைக்கிட்டப்பெறாமையாலே ஐயங்கார் ஆற்றாமை மீதூர்ந்து தளர்ந்தார்;
அத்தளர்ச்சியாலே தாமானதன்மை குலைந்து, ஆண்பெண்ணாம்படியான நிலைமை தோன்றி ஒருபிராட்டி நிலையை யடைந்தார்.
ஆண்பெண்ணாதல் கூடுமோ வெனின், –
“கண்ணிற் காண்பரேல் ஆடவர் பெண்மையை அவாவுந் தோளினாய்,”
“வாராக வாமனனே அரங்கா வட்டநேமிவலவா ராகவா உன்வடிவுகண்டால் மன்மதனும் மடவாராக ஆதரஞ்செய்வன்” என்ப வாதலாலே, இது கூடும்;
தண்டகா ரணியவாசிகளான முனிவர்கள் இராமபிரானது சௌந்தரியாதிசயத்தி லீடு பட்டுத் தாம்
பெண்தன்மையைப் பெறவிரும்பி மற்றொருபிறப்பில் ஆயர் மங்கையராய்க் கண்ணனைக் கூடின ரென்ற ஐதிகியமு முணர்க.
(“பெண்டிரும் ஆண்மைவெஃகிப் பேதுறுமுலையினாள்,”
“வாண்மதர்மழைக்கணோக்கி *** ஆண்விருப்புற்றுநின்றார் அவ்வளைத்தோளினாரே” எனப் பெண் ஆணாக விரும்பு மிடமு முண்டு.)
அங்ஙனம் ஆண்பெண்ணாகிலும் சாதாரணப்பெண்மையையேயன்றி எம்பெருமானுக்கு உரியவளாகும்
ஒருபிராட்டியின் நிலைமையை யடையுமாறு எங்ஙன மெனில், –
பரமாத்மாவினது தலைமையும், ஜீவாத்மாவினது அடிமையும், ஜீவாத்மா பரமாத்மாவுக்கே உரியதாயிருக்கையும்,
புருஷோத்தமனாகிய எம்பெருமானது பேராண்மைக்கு முன் உலகமுழுதும் பெண்தன்மையதாதலும்,
ஜீவாத்மாவினது ஸ்வாதந்தி ரியமின்மையும், பாரதந்திரியமும், நாம் எம்பெருமானது சேர்க்கையால் இன்பத்தையும்
பிரிவினால் துன்பத்தையு மடைதலும், அவனையே தாம், கரணங்களெல்லாவற்றாலும் அனுபவித்து ஆனந்தித்தலும்
முதலிய காரணங்களால் தம்மைப் பிராட்டிமாரோ டொக்கச் சொல்லத் தட்டில்லையென்க.
ஓர்உத்தமபுருஷன் பரிவாரத்துடன் வேட்டையாடுதற்குப் புறப்பட்டு வனத்திற்குச் சென்றவனாய்
ஓர் உத்தமகன்னிகையும் தோழியருடன் பூக்கொய்து விளையாடுதற்கென்று பூஞ்சோலையிற் சேர்ந்தவளவிலே,
ஒவ்வொரு நிமித்தத்தால் தோழியர்பிரிய அக்கன்னிகை அங்குத் தனித்துநின்ற சமயத்திலே ஒவ்வொரு நிமித்தத்தால்
பரிவாரங்கள் பிரியத் தனிப்பட்டவனாய் அப்புருஷன் அங்குவந்து சேர,
இருவரும் தெய்வவசத்தால் தற்செயலாய் ஏகாந்தமான ஓரிடத்திலே சந்தித்து ஒருவர்பக்கல்ஒருவர் காதல்கொண்டு
கொடுப்பாரும் அடுப்பாரு மின்றித் தமதுவிருப்பத்தின்படி களவுப்புணர்ச்சிபுணர்ந்து பிரிந்தபின்பு
ஆற்றாமைவிஞ்சி அதனால் நாணம் முதலியன அழிந்து இவர்களுள் ஒருவர் மற்றொருவரது
வடிவத்தையும் ஊரையும் பேரையும் தமதுஊரையும் பேரையும் ஒருபடத்திலெழுதி
அச்சித்திரபடத்தைக் கையிற்கொண்டு பனைமடலினால் ஒருகுதிரையுருச்செய்வித்து அதன் மீது தாம் ஏறி
அதனைப் பிறராலிழுப்பித்து வீதிவழியே பலருங்கூடும் பொதுவிடங்களிலெல்லாஞ் செல்லுபவராவர்;
இது, மடலூர்த லெனவும், மடன்மாவேறுத லெனவும் படும். இதற்குப் பயன் –
இவரது இக்கடுந்தொழிலைக் கண்டு அதனால் இவரதுபெருவேட்கையை யுணர்ந்து உறவினராயினும்
அரசனாயினும் வெளிப்படையாக மணஞ்செய்துவைக்கப்பெறுதலாம்.
இம்மடற்றிறம் ஆடவர்க்கே பெரும்பாலும் உரியது. அளவுக்குவிஞ்சின ஆசையின்மிகுதியால் மகளிர்க்குஞ் சிறுபான்மை வரும்.
அன்றியும், மடலூர்தல் ஆடவர்க்கே யுரியதென்றும், மடலூர்வே னென்று சொல்லுதல் இருபாலார்க்கும் உரிய தென்றும் உணர்க.
இங்குக்கூறிய இது, தலைவியின் மடற்றிறம். பிரிவாற்றாது வருந்துந் தலைமகள் காதல்மிகுதியால்
நாணந் துறந்து மடலூரத் துணிந்தமையைக் கூறுதல், இச்செய்யுளிற் குறிக்கப்பட்ட விஷயம்.
தோத்திரப்பிரபந்தங்களில் அகப்பொருட்கிளவித்துறைகளை இடையிடையே கூறுதல் கவிசமயமாதலை, இலக்கியங்கள்கொண்டு உணர்க.
சிருங்காரரசப்பிரதானமான அகப்பொருட்கிளவித்துறைகளை ஞானநூலாகிய தோத்திரப் பிரபந்தங்களிற் கூறுதற்குக் காரணம்,
கடுத்தின்னாதானைக் கட்டி பூசிக் கடுத்தின்பிப்பார்போலச் சிற்றின்பங்கூறும் வகையாற் பேரின்பத்தைக் காட்டி நாட்டுத லென்பர்.
இங்ஙனம் வெளிப்படைப்பொருளால் அந்யாபதேசமாகக் கூறுகின்ற சிற்றின்பத்துறைச்செய்யுள்கட்கெல்லாம்
ஸ்வாபதேசமாகப் பேரின்பத்தின்பாற் படுத்தும் உள்ளுறைபொருள் உண்டென்பதையும் உணர்க.
அன்றியும், இங்குக் கூறியது, உலகவாழ்க்கைச் சிற்றின்ப மன்று.
“நான்கினுங் கண்ணனுக்கேயாமது காமம்” என்றபடி எம்பெருமானைச் சேரவேண்டுமென்று அவன்
பக்கலிலே யுண்டாகின்ற அபேக்ஷையையே கூறியது.
“கோவிந்தா, எற்றைக்கு மேழேழ்பிறவிக்கு முன்றன்னோ, டுற்றோமேயாவோம்
உனக்கேநகாமாட்செய்வோம், மற்றைநங்காமங்கள் மாற்று” என்றபடி லோகநாயகனுடைய சேர்க்கையை
அபேக்ஷிக்கின்ற பேரின்பக்காதலானது வேதாந்தநிர்ணயத்தின்படி அன்புசெலுத்தவேண்டிய இடத்தில் அன்புசெலுத்திய தாதலால்,
சிற்றின்பக்காதல்போலன்றி, ஸகலபாபநிவ்ருத்திக்கும் வீடுபேற்றுக்குமே காரணமாம்.
கண்ணபிரான்பக்கல் கொண்ட காமத்தால் கோபஸ்திரீகள் முத்தி பெற்றன ரென்று புராணங் கூறுதலுங் காண்க.
ஐயங்காரது ஞானக்கண்ணுக்கு இலக்கான எம்பெருமான் மறைந்த வளவிலே அவனதுநிரந்தராநுபவத்தில்
அபேக்ஷையுடைய இவர் ஸ்வதந்திரனான அவன் மீண்டும் தானாகவந்து தம்மைச்சேர்த்துக்
கொண்டருளுங் காலத்தின் வரவை யெதிர்நோக்கிப் பொறுத்துப் பரதந்திரராய் ஆறியிருப்பது தகுதியாக,
தமதுஅவாவின்மிகுதியால் அத்தன்மை குலைந்து எவ்வாற்றாலாயினும் தாம்முயன்று அவனதுசாந்நித்தியத்தைப்
பெறுதற்கு விரைதலையெடுத்துஉரைத்தல், இச்செய்யுளுக்கு உள்ளுறைபொருளாம்.
மடலூர் தலுக்கு ஸ்வாபதேசம் – பாரதந்திரியத்தை விட்டு ஸ்வாதந்திரியத்தை மேற்கொண்டு ஸாதநாநுஷ்டாநஞ்செய்தல்.
இவரதுபாரதந்திரியநிலை குலையாதபடி எம்பெருமான் ஸாந்நித்தியத்தைத் தந்தருளுமாறு செய்தல்,
இதன் பயனாம். பிறவும் ஆய்ந்துஉணர்க.
மடல் என்ற சொல் – இலக்கணையால், அதனாலியன்ற குதிரையைக் குறித்தது.
மடம், நாணம் என்பன – மகடூஉக்குணங்கள் நான்கைச் சேர்ந்தவை; மற்றவை – அச்சமும் பயிர்ப்புமாம்;
இவற்றுள், மடமாவது – அறிந்தும் அறியாதுபோலிருத்தல்; கொளுத்தக்கொண்டு கொண்டதுவிடாமை யென்றுங் கூறுவர்.
நாணமாவது – செய்யத்தகாதவற்றின்கண் உள்ளமொடுங்குதல்.
அச்சமாவது – பலஆடவர்களினிடையிற் செல்லக்கூசுதல்.
பயிர்ப்பாவது – கணவனல்லாத மற்றைப்புருஷரது ஆடை முதலியன தம்மேற் பட்டால் அருவருப்புக்கொள்ளுதல்.
———–
36–திருத் தெற்றி யம்பலம்
சென்றது காலம் திரை நரை மூப்பு ஆன இனி
என்று கொல் சாவு அறியேன் என் நெஞ்சே கன்றால்
உருத்து ஏற்றி அம்பலத்தை ஓர் விளவின் வீழத்தான்
திருத் தெற்றி யம்பலத்தைச் சேர் –36-
(இ – ள்.) என் நெஞ்சே – எனது மனமே! –
(நமக்கோ), – காலம் சென்றது – வாழ்நாள் பெரும்பாலுங் கழிந்திட்டது;
திரை – தோற்சுருக்கமும்,
நரை – மயிர்வெளுத்தலும்,
மூப்பு – கிழத்தனமும்,
ஆன – தோன்றியுள்ளன;
இனி – இனிமேல்,
சாவு – மரணம்,
என்றுகொல் – என்றைக்கோ?
அறியோம் – அறிந்திலோம்; (ஆதலால், நமது ஆயுள் முடிவதற்குள்),
ஓர் விளவின் அம் பலத்தை – ஒருவிளாமரத்திலுள்ள (அசுராவேசங்கொண்ட) அழகிய பழத்தை (க்கண்டு),
உருத்து – கோபித்து,
கன்றால் – (அசுராவேசங்கொண்ட) இளங்கன்றைக்கொண்டு,
எற்றி – வீசியெறிந்து,
வீழ்த்தான் – விழச்செய்தவனான திருமாலினது,
திருத்தெற்றியம்பலத்தை – திருத்தெற்றியம்பலமென்னுந் திவ்வியதலத்தை,
சேர் – இடைவிடாது தியானிப்பாயாக; (எ – று.)
இதனால், பழுதே பலபகலும் போயினமைக்கு இரங்கி, ஒவ்வொருகரணமும் ஒடுங்கிக்கொண்டே வருகின்ற
முதுமைப்பருவத்திலும் தமது நெஞ்சமானது மரணம் பின்றையே நின்றதென்ற சிந்தனை சிறிதுமின்றி
உலகப் பற்றுக்கொண்டு உழல்வது கண்டு ஆற்றாது, அந்நெஞ்சை நோக்கி இனியாவது எம்பெருமானது
திவ்வியதலத்தைச் சேர்ந்து உய்வுபெறுவா யென்று உணர்த்துகின்றன ரென்க.
இதுவரை வீணே கழிந்த நாள்களைக்குறித்துக் கழிவிரக்கங் கொள்ளுகிறவளவோடு நில்லாமல்,
இனி உயிர் வாழும் நாள்களுள் “நின்றபிராணன் கழலுமுன்னே நெஞ்சமே நினையாய்” என்றபடி
இறப்பதற்குமுன்னே எம்பெருமா னெழுந்தருளியுள்ள தலத்தைத் தியானித்தாலும் அதுபயன்படுமென்பது, கருத்து.
பின்னிரண்டடிகளில், நெஞ்சே! விரோதிநிரஸநசீலனான எம்பெருமானது திவ்வியதலத்தை நீ சேர்வாயாயின், அவனும் வேண்டா,
அப்பிரானது திவ்யதலமே பகவத்தியானத்திற்கு இடையூறு உண்டாக்குகின்ற உனதுவிரோதிகளைப் போக்கு மென்ற கருத்துத் தொனிக்கும்.
இடைச்சிறுவனாகிய ஸ்ரீகிருஷ்ணனுக்கு விருப்பத்தையுண்டாக்குமாறு ஓரசுரன் ஆவேசித்ததனால்
இயற்கைக் கனிகளினும் இனியதோற்றத்துடன் அவ்விளவின்கனி இருந்த தென்பார்,
அதற்கு “அம்’ என்ற அடைமொழி கொடுத்துக் கூறினர்.
கன்றினிடத்து ஆவேசித்த அசுரன் வத்ஸாசுர னென்றும், விளங்கனியினிடத்து ஆவேசித்த அசுரன் கபித்தாசுரனென்றும் பெயர்பெறுவர்.
————-
37–திரு மணிக்கூடம் –
சேராது முன் செய்த தீ வினை பின் செய்ததுவும்
வாராது இனி நீ மட நெஞ்சே நேராக்
குருமணிக் கூடத்து ஆனைக் கொம்பு பறித்தானை
திரு மணிக் கூடத்தானைச் செப்பு –37-
(இ – ள்.) மடம் நெஞ்சே – அறியாமையையுடைய எனது மனமே! –
நேரா – எதிர்த்து,
குரு மணி கூடத்து – சிறந்த இரத்தினங்க ளிழைத்துச் செய்யப்பெற்ற கூடத்தி லிருந்த,
ஆனை – (குவலயாபீடமென்னும்) பட்டத்துயானையினது,
கொம்பு – தந்தங்களை,
பறித்தானை – வேரோடுபிடுங்கி (அதனால் அதனை அடித்து) அழித்தவனும்,
திருமணிக்கூடத்தானை – திருமணிக்கூடமென்னுந் திவ்வியதலத்தி லெழுந்தருளியிருப்பவனுமாகிய திருமாலை,
நீ செப்பு – நீ இடைவிடாது துதிசெய்ய உதவுவாய்;(அவ்வாறுசெய்வாயாயின்), –
முன்செய்த தீ வினை – நீ முற்பிறப்பிற்செய்து சேர்த்துவைத்துள்ள (ஸஞ்சிதம் அநப்யுபகதப்ராப்தம் என்ற இரண்டுவகைப்) பாவமும்,
சேராது – (தன்பயனை ஊட்டுமாறு உன்னை) அணுகாது;
பின்செய்வதுவும் – இனி (அபுத்திபூர்வகமாகச்) செய்கின்ற (ஆகாம்யமெனப்படும்) பாவமும்,
இனி வாராது – இனிமேல் (உன்னை) அணுகாது; (எ – று.)
பிறப்பு அநாதியாய் வருதலின் தமது உயிரால் அளவின்றி யீட்டப் பட்ட வினைகளின் பயன்களுள் இதுவரை
அனுபவித்தவைபோக இனி அனுபவிக்கக் கடவனவாய் நின்ற கருமங்களெல்லாம் எம்பெருமான் திருநாமத்தைச்
சொன்னமாத்திரத்தில் உடனே அவனருளால் இருந்தது தெரியாதபடி அழிந்திட,
அபுத்திபூர்வகமாக இனி நேரிடுங் கருமங்களும் காட்டுத்தீமுன்னர்ப் பஞ்சுத்துய்போல அழிந்தொழியு மென்பதாம்,
புண்யமும் பொன்விலங்குபோன்று மோட்சத்திற்குத்தடையாய்ப் பிறப்பிற்கு ஏதுவாதல்பற்றி அதனையுஞ்சேர்த்து ‘தீவினை’ என்றே கூறினார்.
“போயபிழையும் புகுதருவா னின்றனவுந் தீயினிற்றூசாகுஞ் செப்பு” என்ற ஆண்டாள் அருளிச்செயலும்,
“செப்பு – வாங்மந:காயங்களால் அநுபவிக்கவேணுமென்றது மிகை; விரோதி போகைக்கு உக்திக்குமேல் வேண்டா வென்கை;
அவன், இவன் அநுகூலித்தவாறே பூர்வாகத்தை (ஞானம்பிறப்பதற்குமுன்செய்த பாபத்தை) விஸ்மரிக்கும் (மறப்பான்);
உத்தராகத்துக்கு அவிஜ்ஞாதா (அறியாதவன்) ஆம்; இனி யார் அநுபவிப்பார்?
அவன்பொறுத்தே னென்னத் தீருமத்தனையிறே இது” என்ற வ்யாக்யாநவாக்யங்களும் இங்குக் காணத்தக்கன.
பாலுங் கண்டசர்க்கரையும் கலந்து குடிக்கப் பித்தம் தன்னடையே போமாறுபோல, எம்பெருமானது திருநாமத்தை
ஒருகால் உச்சரித்தமாத்திரத்தில் தீவினைகளெல்லாமொழிந்து நற்கதிபெறுதல் எளிதாயிருக்க,
சுகரமான இந்த உபாயத்தை மேற்கொள்ளாது அலைகின்ற தம்மனத்தை
ஐயங்கார் ‘மடநெஞ்சே’ என்று விளித்தல் ஏற்கும். ‘குருமணி’ என்பதை ஆனைக் கொம்புக்கு அடைமொழி யாக்கி,
சிறந்தமுத்துக்கள் தோன்றுதற்கு இடமான யானைத்தந்தம் என உரைப்பினுமாம்;
யானைக்கொம்பு முத்துப்பிறத்தற்கு உரிய இருபது இடங்களு ளொன்றாதலும், முத்து நவமணிகளுளொன்றாதலும் அறிக.
————–
38–திருக் காவளம்படி-
செப்பென் மனிதருக்கு என் செஞ்சொல் தமிழ் மாலை
கைப்பேன் பிற தெய்வம் காண்பாரை எப்போதும்
காவளம் பாடித் திருமால் கால் தாமரை தொழுது
நா வளம் பாடித் திரிவேன் நான் –38-
(இ – ள்.) நான் -, எ போதும் – எக்காலத்திலும்,
என் நெஞ் சொல் தமிழ் மாலை – இன்சொற்கள் நிறைந்த எனது தமிழ்ப்பாமாலையை,
மனிதருக்கு – மனிதரைப்பற்றி,
செப்பேன் – (ஒருபோதும்) பாடமாட்டேன்;
பிற தெய்வம் காண்பாரை – தேவதாந்தரங்களைத் தரிசிக்கின்ற அவைஷ்ணவரை,
கைப்பேன் – வெறுப்பேன்;
காவளம்பாடி திருமால் – திருக்காவளம்பாடி யென்னுந் திவ்வியதலத்தி லெழுந்தருளியுள்ள திருமாலினது,
கால் தாமரை – திருவடித்தாமரைகளை,
தொழுது – வணங்கி,
நா – (எனது) நாவினால்,
வளம் பாடி – வளமாகக் கவிபாடிக்கொண்டு,
திரிவேன் – யாதொரு கவலையுமின்றி இனிதுகாலங்கழிப்பேன்; (எ – று.)
பந்தத்திற்கு ஏதுவான நரஸ்துதி செய்வதைவிட்டு, தேவதாந்தரபஜநஞ் செய்வாரையும் வெறுத்து,
மோட்சத்திற்கே ஏதுவான திருமாலினது திருவடித்தாமரைகளைக் கவிபாடித் துதித்துப் பொழுதுபோக்குவே னென்று
மறந்தும் புறந்தொழாத வீரவைஷ்ணவராகிய தமது அநுஷ்டாநத்தை வெளியிட்டன ரென்க.
தேவாதிதேவனான திருமாலைத் துதித்தற்கு உதவியாதல்பற்றி, தமதுபாடல்களை “செஞ்சொல்தமிழ்மாலை’ என்றனர்.
“கைப்பேன் பிறதெய்வங்காண்பாரை’ என்பதனால், இவர் பிறதெய்வங்களைக் காணுதலுஞ்செய்யாமை சொல்லாமலே அமையும்;
இன்னும் இதனால், “ஞானத்தினொளியுருவை நினைவா ரென்நாயகரே”,
“கொண்டாடும் நெஞ்சுடையாரவரெங்கள்குலதெய்வமே” என்றபடி
திருமாலைத் துதிக்கும் மெய்யடியார்களிடத்தில் பிரேமையுள்ளவ ரிவரென்பதும் பெறப்படும்.
———-
39-திரு வெள்ளக் குளம் –
நான் அடிமை செய்ய விடாய் நான் ஆனேன் எம்பெருமான்
தான் அடிமை கொள்ள விடாய் தான் ஆனான் ஆனதற்பின்
வெள்ளக் குளத்தே விடாய் இருவரும் தணிந்தோம்
உள்ளம் குளம் தேனை ஒத்து –39-
(இ – ள்.) நான் -, அடிமை செய்ய – (எம்பெருமானுக்குத்) திருத்தொண்டுசெய்யவேண்டு மென்று,
நான் விடாய் ஆனேன் – நான் பேராவல் கொண்டவனானேன்;
எம்பெருமான் -, தான் – தானும், அடிமை கொள்ள – (என்னை) அடிமையாகக் கொள்ளவேண்டு மென்று,
தான் விடாய் ஆனான் – தான் பேராவல்கொண்டவனானான்;
ஆனதன் பின் – இங்ஙனம் இருவரும் விடாய்கொண்டபின்பு,
வெள்ளக்குளத்தே – திருவெள்ளக்குள மென்னுந் திருப்பதியில்,
இருவரும் – யாங்களிருவரும்,
உள்ளம் குளம் தேனை ஒத்து – மனத்தில் சர்க்கரைப்பாகையும் தேனையும் போன்று, (ஒன்றுசேர்ந்து),
விடாய் தணிந்தோம் – எங்கள் வேட்கை தணியப்பெற்றோம்; (எ – று.)
எம்பெருமானது ஜாயமாநகடாக்ஷத்தால் அப்பிரானுக்குத் திருத்தொண்டுசெய்தாலன்றித் தரித்திருக்க
வொண்ணாத நிலைமை எனக்கு உண்டாக, உடையவன் பயிர்த்தலையிலே குடிசைகட்டிக்கொண்டு நிற்பதுபோல
எம்பெருமானும் திவ்வியதேசங்கள்தோறும் எழுந்தருளியிருந்து எப்போது சேதநலாபம் தனக்கு நேருமோ வென்று
பேராவல்கொண்டு எதிர்பார்த்து நிற்க, நான் அங்குச் சென்று அப்பிரானைத் தரிசித்து அடிமைசெய்யவே
அப்பிரானும் உவந்து என்னை ஆட்கொள்ள, அதனால் இருவரும் விடாய் தீரப்பெற்றோ மென்பதாம்.
திருவெள்ளக்குளம் என்ற அந்தத்திவ்வியதலத்தின் திருநாமத்திற்கு ஏற்ப, ‘விடாய்தணிந்தோம்’ என்று சமத்காரந்தோன்றக் கூறினரென்க.
எம்பெருமான் வ்யூஹம் விபவம் முதலிய நிலைகளை மேற்கொண்டும் அவை பயனிலவாதல்பற்றி,
அர்ச்சாவதாரத்தை மேற்கொண்டு உலகத்து உயிர்களை அடிமைகொள்கின்றன னென்பது, நூல்துணிபு.
“பூர்த்தியுள்ளதும் அர்ச்சாவதாரத்திலே; ஆழ்வார்கள் பலவிடங்களிலும் ப்ரபத்திபண்ணிற்றும் அர்ச்சாவதாரத்திலே.
பூர்ண மென்கையாலே, எல்லாக்குணங்களும் புஷ்கலங்கள். ப்ரபத்திக்கு அபேஷிதங்களான ஸௌலப்யாதிகள்
இருட்டறையில் விளக்குப்போலே ப்ரகாஸிப்பது இங்கே. பூர்த்தியையும் ஸ்வாதந்த்ரியத்தையுங் குலைத்துக்கொண்டு
தன்னை அநாதரிக்கிறவர்களைத் தான் ஆதரித்துநிற்கிற இடம்.
பூகதஜலம்போலே அந்தர்யாமித்வம்; ஆவரண ஜலம்போலே பரத்வம். பாற்கடல்போலே வ்யூஹம்.
பெருக்காறுபோலே விபவங்கள். அதிலே தேங்கின மடுக்கள்போலே அர்ச்சாவதாரம்.
இதுதான் ஸாஸ்த்ரங்களால் திருத்தவொண்ணாதே விஷயாந்தரங்களிலேமண்டி விமுகராய்ப்போருஞ் சேதநர்க்கு
வைமுக்யத்தை மாற்றி ருசியை விளைக்கக்கடவதாய், ருசிபிறந்தால் உபாயமாய் உபாய பரிக்ரஹம்
பண்ணினால் போக்யமுமாய் இருக்கும்” என்பது, ஸ்ரீவசநபூஷணம்.
ஐயங்கார், தமக்கு அடிமைசெய்யும் விருப்பம் மிக்கிருப்பதையும், அப்பிரானுக்குத் தம்மை அடிமை
கொள்ளும் விருப்பம் தம்மினும் மிக்கிருப்பதையும் விளக்குவதற்கு, “நான்’, “தான்’ என்ற சொற்களை இருமுறை கூறினர்;
இனி, இவ்விரண்டு சொல்லையும் அசைநிலை யென்பாரு முளர்.
ஜீவாத்ம ஸ்வரூபமும் பரமாத்மஸ்வரூபமும் தனித்தனி இனிதாயிருத்தல்பற்றி, அவ்விரண்டற்கும் நேர்ந்த சேர்க்கைக்கு –
சர்க்கரைக்குந் தேனுக்கும் நேர்ந்த சேர்க்கையை உவமைகூறினார்.
உபமானப்பொருள்கள் அசேதந மாதலால், அவை தமது இனிமையை யுணரமாட்டா;
உபமேயத்திலோ, ஒன்று சேதநமும் மற்றொன்று பரமசேதநமு மாதலால், அவை அவ்வினிமையை நன்கு உணருமென வேறுபாடு காண்க.
ஆகவே, இங்கு, உபமானத்தினும் உபமேயம் மிக்கதாதலால், எதிர்நிலையணி தொனிக்கும்.
இருவரும் = இருவோமும்; தன்மையிற் படர்க்கைவந்த இடவழுவமைதி.
———
40-திருப் பார்த்தன் பள்ளி –
ஒத்து அமரர் ஏத்தும் ஒளி விசும்பும் பாற் கடலும்
இத்தலத்தில் காண்பு அரிய என் நெஞ்சே சித்து உணர்ந்த
தீர்த்தன் பள்ளிக்கு இருந்து செப்ப வெளி நின்றானைப்
பார்த்தன் பள்ளிக்குள் பணி –40-
(இ – ள்.) என் நெஞ்சே -!
ஒத்து – ஒன்றுகூடி,
அமரர் – நித்தியசூரிகளும், தேவர்களும்,
ஏத்தும் – துதிக்கின்ற,
ஒளி விசும்பும் – பேரொளிவடிவமான பரமபதமும்,
பால்கடலும் – திருப்பாற்கடலும்,
இ தலத்தில் – இந்தப்பூமியில்,
காண்பு அரிய – காணுதற்கு அரியனவாம்; (ஆதலால், அவைகளை விட்டு),
சித்து உணர்ந்த – ஜீவாத்மாவின் உண்மைநிலையை யுணர்ந்த,
தீர்த்தன் – பரிசுத்தனான பிரகலாதாழ்வான்,
பள்ளிக்கு இருந்து – பள்ளிக் கூடத்திலிருந்து (பள்ளிக்கூடத்திற்படிக்கின்ற சிறுவனாயிருந்தும்),
செப்ப – (தனதுதந்தை வினவியதற்கு “எங்குமுளன்’ என்று) மறுமொழிகூற,
வெளிநின்றானை – (அதுகேட்டு வெகுண்டு இரணியன் தூணைத் தட்ட அதனினின்று நரசிங்கமாகி) வெளித்தோன்றிய திருமாலை,
பார்த்தன்பள்ளிக்குள் – திருப்பார்த்தன்பள்ளியென்னுந் திவ்வியதலத்திற் சென்று,
பணி – வணங்கு வாயாக; (எ – று.)
பரத்வநிலையாகிய பரமபதத்தையும் வ்யூஹநிலையாகிய திருப்பாற்கடலையுங் கூறியது.
மற்றை விபவநிலை அந்தர்யாமித்வநிலை என்ற இரண்டற்கும் உபலக்ஷணம்.
பரத்வமும் வ்யூஹமும் தேசத்தினால் மிகவும் சேய்மையன வாதலால் அவைகள் காணமுடியாதனவாம்;
விபவநிலையோ தேசத்தினாற் சேய்மைய தன்றாயினும் அக்காலத்தார்க்கன்றிப் பிற்பாடரான நம்மாற் காரணவிரகில்லை;
அந்தர்யாமித்வமோ தேசம் காலம் என்ற இரண்டினாலும் சேய்மையதன்றாயினும் ஞானதிருஷ்டியினா லன்றி வேறுவகையாற் காண இயலாது;
ஆகையால், அஜ்ஞரான நமக்கு அதுவும் பயனற்றதேயாம்;
ஆகவே, ஒருவகையாலும் அருமைப்பாடின்றி ஆங்காங்குக் கோயில்கொண்டெழுந்தருளியிருக்கின்ற அர்ச்சையே
நமக்கெல்லாம் எளிதில் அடைந்து ஈடேறுதற்கு உரிய தாகையால், அவற்றுளொன்றான
திருப்பார்த்தன்பள்ளியை யடைந்து உய்வுபெறுவா யென்று தம்மனத்தை நோக்கிக் கூறின ரென்க.
“த்ருஷார்த்தனுக்கு (நீர் வேட்கையுடையவனுக்கு) தேஸாந்தரத்திற் போகவேண்டாதபடி நிற்கிற இடந்தன்னிலே
உண்டாயிருக்கச்செய்தேயும் கொட்டும் குந்தாலியுங் கொண்டு கல்லினாலல்லது குடிக்கக் கிடையாத
பூகதஜலம்போலே யாயிற்று, கண்டு பற்றவேணு மென்று ஆசைப்பட்ட வனுக்கு ஹ்ருதயத்திலேயிருக்கச் செய்தேயும் “கட்கிலீ” என்கிறபடியே
கண்ணுக்கு விஷயமன்றிக்கே அஷ்டாங்கயோகரூபயத்நத்தாலே காணவேண்டும்படியான அந்தர்யாமித்வம்.
அவனுக்கு (தாகித்தவனுக்கு) அண்டத்துக்குப்புறம்பே பெருகிக்கிடக்கிற ஆவரணஜலம்போலே யாயிற்று,
இவனுக்கும் (பற்றவேணுமென்று ஆசைப்பட்டவனுக்கும்) “அப்பால் முதலாய்நின்ற அளப்பரிய ஆரமுது” என்கிற படியே
லீலாவிபூதிக்கு அப்பாற்பட்டிருக்கிற பரத்வம். அப்படி அதிவிப்ரக்ருஷ்டம் (தூரத்திலுள்ளது) அன்றியே
அண்டாந்தர்ப்பூதமாயிருக்கச்செய்தேயும் அவனுக்கு துஷ்ப்ராபம் (அடைவதற்கு அரியது) ஆன பாற்கடலே போலே யாயிற்று,
இவனுக்கும் “பாலாழிநீகிடக்கும் பண்பை யாங்கேட்டேயும்” என்கிறபடியே கேட்டிருக்குமித்தனையல்லது சென்று
காண அரிதாம்படியிருக்கிற வ்யூஹம். ப்ரத்யாஸந்நம் (கிட்டியது) ஆயும் தாத்காலிகர்க்கு உபஜீவ்யமாய்ப்
பாஸ்சாத்யன் (பிற்காலத்தவன்) ஆனவனுக்குத் துர்ல்லபமான பெருக்காறுபோலே யாயிற்று,
“மண்மீதுழல்வாய்” என்கிறபடியே பூமியிலே அவதரித்து ஸஞ்சரித்தும் தக்காலவர்த்திகளுக்கு ஆஸ்ரயணீயமாய்ப்
பிற்காலத்திலுளனான இவனுக்குக் கிட்டாதபடியான விபவம். முன்பு சொன்னவைபோலன்றிக்கே
அவனுக்கு விடாய்கெடப் பருகலாம்படி பெருக்காற்றிலே தேங்கின மடுக்கள்போலே யாயிற்று,
இவனுக்கும் தேசகாலகரண விப்ரக்ருஷ்டமன்றிக்கே கோயில்களிலும் க்ருஹங்களிலும் எங்கு மொக்க எல்லார்க்கும் கண்ணுக்கு இலக்காம்படிநிற்கிற பின்னானார்வணங்குஞ்சோதியான அர்ச்சாவதாரம்” என்ற ஆன்றோர் வ்யாக்யாநவாக்யங்கள் இங்குக் கருதத்தக்கன.
சித்து – உணர்வுடையது; ஆத்மா; சித்தைஉணர்தலாவது – “ஆத்மஸ்வரூபந்தான் – “சென்றுசென்றுபரம்பரமாய்” என்கிறபடியே
தேஹ இந்த்ரியமந: ப்ராண புத்தி விலக்ஷணமாய், அஜடமாய், ஆநந்தரூபமாய், நித்யமாய், அணுவாய், அவ்யக்தமாய்,
அசிந்த்யமாய், நிரவயவமாய், நிர்விகாரமாய், ஜ்ஞாநாஸ்ரயமாய், ஈஸ்வரனுக்கு நியாம்யமாய், தார்யமாய், ஸேஷமாயிருக்கும்” என்று அறிகை.
இவ்வாறு இதனையறியவே, மற்றையிரண்டு தத்வங்களாகிய அசித் ஈஸ்வர தத்வங்களும் அறியப்பட்டனவாம்.
‘பள்ளிக்கிருந்து’ என்றதனால், பிரகலாதாழ்வானுடைய இளமைப்பருவத்தை விளக்கியபடியாம்.
சோழநாட்டுத்திருப்பதிகள் முற்றும்.
———————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–
March 12, 2023 at 4:54 pm |
I love tamil