ஸ்ரீமஹாபாரதம் உத்யோகபர்வம்
முப்பத்துமூன்றாவது அத்யாயம்
ப்ரஜாகர உபபர்வம்
விதுர நீதி
(திருதிராஷ்டிரன் கவலையால் நித்திரையற்று இரவில் விதுரரை அழைத்துத்
துரியோதனாதியர் ஸுகமாகவாழ உபாயங் கேட்டதும்,
விதுரர் நீதிகளைக்கூறிப் பாண்டவர்களுக்கு ராஜ்யங்கொடுப்பதே உபாயமென்றதும்)
1) பேரறிவுடையவனும் அரசனுமான திருதரஷ்டிரன் வாயிற்காப்போனை நோக்கி,
“விதுரனைப் பார்க்க விரும்புகிறேன். அவனை இவ்விடம் அழைத்து வா. தாமதம் வேண்டாம்” என்று சொன்னான்.
2) திருதராஷ்டிரனால் அனுப்பப்பட்ட தூதன் விதுரரை நோக்கி, “பேரறிவாளரே! ஐஶ்வர்யம் பொருந்திய
நமது மஹாராஜர் உம்மைப் பார்க்க விரும்புகிறார்” என்று சொன்னான்.
3) இவ்விதம் சொல்லியதைக் கேட்ட விதுரரோ ராஜமாளிகையை அடைந்து வாயில்காப்பவனை நோக்கி,
“திருதராஷ்டிரனிடம் என் வரவைத் தெரிவி” என்று சொன்னார்.
4) வாயிற்காவலனும் திருதராஷ்டிரனிடத்தில், “ஓ ராஜஶ்ரேஷ்டரே! உம்முடைய கட்டளைப்படி,
இதோ விதுரர் கூடவே வந்துவிட்டார். உம்முடைய பாதங்களைத் தரிசிக்க விரும்புகிறார்.
என்னசெய்யவேண்டும்? எனக்குக் கட்டளையிடும்” என்று சொன்னான்.
5) திருதராஷ்டிரன், (வாயிற்காவலனை நோக்கி) “பேரறிவாளனும், தீர்க்கமான ஆலோசனையுள்ளவனுமான
விதுரனை உள்ளேவிடு; நானோ இந்தவிதுரனுக்கு ஒருபொழுதும் பார்க்கத்தகாதவனல்லேன்” என்று சொன்னான்.
6) (உடனே) காவற்காரன் விதுரனிடத்தில் “ஓ! க்ஷத்தாவே! புத்திமானான மகாராஜருடைய அந்தப்புரத்தில் போம்.
அரசர் உமக்கு ஒருபொழுதும் காணக்கூடாதவரல்லரென்றும் என்னிடம் சொன்னார்” என்று கூறினான்.
7) உடனே விதுரரும் திருதராஷ்டிரனுடைய அரண்மனையில் பிரவேசித்து, கவலையுற்றிருக்கும்
அரசனை நோக்கி அஞ்சலி செய்துகொண்டு, பின்வருமாறு கூறினார்.
8) ‘ஓ! மிக்க அறிவுடையவரே! உம்முடைய கட்டளையினால், நான் விதுரன் இதோ வந்திருக்கிறேன்.
ஏதாவது செய்யவேண்டுவது இருக்குமானால் என்னைக் கட்டளையிடும்’ என்று சொன்னார்.
9) திருதராஷ்டிரன், ‘ஓ! விதுரா! ஸஞ்சயன் வந்துவிட்டான். என்னைத் தூஷித்துவிட்டும் போய்விட்டான்.
அவன் யுதிஷ்டிரனுடைய வார்த்தையை நாளை ஸபையின் நடுவில் சொல்லுவான்.
10) கௌரவர்களில் சிறந்தவனான அந்த யுதிஷ்டிரன் சொன்ன வார்த்தையானது இப்பொழுது எனக்குத் தெரியவில்லை.
அது என் அங்கங்களை எரிக்கின்றது. அது மிகவும் ஜாகரத்தைச் செய்து விட்டது.
11) அப்பா! ஜாகரனத்தோடு கூடினவனும் எரிக்கப்படுகிறவனுமான எனக்கு எதை நன்மையென்று
ஆலோசிக்கிறாயோ அதை நீ சொல்லு. நீ நம்முடைய தர்மார்த்தங்களில் ஸமர்த்தனல்லனோ?
12) எப்பொழுது ஸஞ்சயன் பாண்டவர்களிடமிருந்து வந்தானோ அது முதலாக
என் மனத்திற்கு வழக்கம் போலச் சாந்தியானது இல்லை.
எல்லா இந்திரியங்களும் ஸ்வபாவம் மாறிவிட்டன. என்ன சொல்லப்போகிறானோவென்று
இப்பொழுதே எனக்குப் பெரிய கவலை உண்டாகிவிட்டது.
13) ஆகையால், ஓ! விதுர! நீ அஜாதசத்துருவினுடைய எல்லா அபிப்பிராயத்தையும் உண்மையாகச் சொல்லு.
அப்பா! எவ்விதம் எனக்கு நன்மை உண்டாகுமோ, எல்லாப் பிரஜைகளும் ஸுகத்தை அடையுமோ
அவ்விதத்தையும் சொல்லு’ என்று சொன்னான்.
14) விதுரர், ‘ஓ! அரசரே! வலிமையில்லாதவனும் யுத்தஸாதனங்கள் குறைந்தவனுமாயிருக்கையில் வலிய
பகைவனால் எதிர்க்கப்பட்டவனையும், பொருளைப் பறிகொடுத்தவனையும், காமியையும், திருடனையும் ஜாகரணமானது வந்தடைகிறது.
15) இந்தப் பெரிய தோஷங்களாலே நீர் பரிசிக்கப்படாமலிருக்கிறீரா? பிறருடைய தனங்களில் ஆசைகொண்டு
பரிதாபத்தை அடையாமலிருக்கிறீரா?’ என்று கேட்டார்.
16) திருதராஷ்டிரன், ‘தர்மத்திலிருந்து விலகாததும் சிறந்ததும் க்ஷேமத்தைச் செய்கிறதுமான உன்னுடைய
வார்த்தையைக் கேட்க விரும்புகிறேன்.
இந்த ராஜரிஷி வம்சத்தில் நீ ஒருவனே விவேகிகளுக்கு ஸம்மதனானவனல்லனோ’ என்று சொன்னான்.
17) 18) விதுரர், ‘ஓ! திருதராஷ்டிரரே! ஜனங்களை ரஞ்சிப்பிக்கிறவனும் ராஜலக்ஷணங்கள் பொருந்தியவனுமான
யுதிஷ்டிரன் மூன்று உலகத்திற்கும் அதிபதியாவான். உமக்கு ஏவலாளியாயிருக்கிற அவன் (வனத்திற்கு) அனுப்பவேபட்டான்.
மிக்க விபரீதரும் பார்க்கும் தன்மை இல்லாதவருமான நீர் ராஜ்ய பாகத்தை அடையும் விஷயத்தில் ஒப்புக் கொள்ளப்படவில்லை.
19) தர்ம சித்தமுடையவனும், தர்மத்தை அறிந்தவனுமான யுதிஷ்டிரன், குரூரத்தன்மையில்லாததினாலும் தயாளுவானதாலும்
தர்மத்தாலும் ஸத்தியத்தாலும் பராக்கிரமத்தாலும் உம்மிடம் குருவென்னும் எண்ணத்தினாலும்
நன்றாக ஆலோசித்துப் பல கிலேசங்களைப் பொறுக்கிறான்.
20) துரியோதனன், சகுனி, கர்ணன், துச்சாஸனன் ஆகிய இவர்களிடம் ராஜாதிகாரத்தை
வைத்து விட்டு நீர் எப்படி ஸம்பத்தை விரும்புகிறீர்?
21) ஆத்ம ஜ்ஞானம், சரியான முயற்சி, பொறுமை, தர்மத்தையே நித்தியமாயுடையவனா யிருத்தல் இவைகள்
எவனைப் புருஷார்த்தத்தி லிருந்தும் நழுவச் செய்யவில்லையோ அவனே பண்டிதனாகச் சொல்லப்படுகிறான்.
22) ஓ! அரசரே! ஒரே மரத்திலிருந்து ஸருக்கு, த்ரோணீ, பேடநீ, பீடணமென்கிற யாகபாத்திரங்கள் உண்டாகின்றன.
மன்னரே! நான் சொல்லுகிற இந்தவார்த்தையினாலே தெரிந்து கொள்ளும்.
ஒரே வஸ்துவிலிருந்தும் நல்லதும் கெட்டதும் உண்டாகின்றன.
23) பண்டிதன் ஶ்லாக்கியமான காரியங்களைச் செய்வான்; நிந்திக்கப் பட்டவைகளைச் செய்ய மாட்டான்,
நாஸ்திகத் தன்மையில்லாதவனும் ஶ்ரத்தை யுள்ளவனுமாயிருப்பான். இது பண்டிதனுடைய லக்ஷணம்.
24) கோபம், ஸந்தோஷம், மதம், லஜ்ஜை, வனக்கமில்லாமை, நான் பூஜ்யனென்கிற எண்ணம் இவைகள்
எவனைப் புருஷார்த்தத்திலிருந்து நழுவச் செய்யவில்லையோ அவன் பண்டிதனாகச் சொல்லப் படுகிறான்.
25) எவனுடைய காரியத்தையோ, ரஹஸ்யமாகச் செய்யப்பட்ட ஆலோசனையையோ, பிறர் அறியாமல்
அவன் செய்த பிறகே அறிகிறார்களோ அவனே பண்டிதனாகச் சொல்லப்படுகிறான்.
26) எவனுடைய காரியத்தைக் குளிரோ, வெப்பமோ, அச்சமோ, விளையாட்டோ, செல்வமோ,
வறுமையோ தடைப்படுத்தவில்லையோ அவனே பண்டிதனாகச் சொல்லப்படுகிறான்.
27)பரவுகிறதான எவனுடைய பிரஜ்ஞையானது தர்மார்த்தங்களை அநுஸரித்திருக்கிறதோ,
எவன் இம்மை, மறுமைகளின் நிமித்தம் பொருலைத் தேடுகிறானோ, அவனே பண்டிதனாகச் சொல்லப்படுகிறான்.
28)தேர்ந்த அறிவுள்ள மனிதர்கள் சக்திக்குத்தக்கபடி செய்யவும் செய்கிறார்கள், ஒன்றையும் (அவமதிப்பதில்லை).
29)பண்டிதன் சீக்கிரம் அறிகிறான்; வெகுகாலம் கேட்கிறான்; விஷயத்தைத் தெரிந்துகொண்டு அடைகிறான்,
ஆசையால் அடைகிறதில்லை. பிறனுடைய விஷயத்தில் கேட்கப்படாமல் சொல்லுகிறதில்லை.
அது பண்டிதனுடைய முதன்மையான லக்ஷணம்.
30) தேர்ந்த அறிவுள்ள மனிதர்கள் அடையமுடியாததை விரும்புகிறதில்லை.
கெட்டுப்போனதை நினைத்துத் துக்கப்படுவதில்லை. ஆபத்துக்காலங்களிலும் மயங்குகிறதில்லை.
31)எவன் உறுதி செய்து கொண்டு ஆரம்பித்துக் காரியத்தின் மத்தியில் விட்டுவிடுகிறதில்லையோ,
காலத்தை வீணாகப் போக்காதவனும் மனத்தை வசப்படுத்தியவனுமான அவனே பண்டிதனாகச் சொல்லப்படுகிறான்.
32) ஓ! பரதஶ்ரேஷ்டரே! பண்டிதர்கள் சிறந்த காரியத்தில் விருப்பங் கொள்ளுகிறார்கள்,
ஸம்பத்திற்குரிய கர்மங்களைச் செய்கிறார்கள்; நன்மையான காரியத்தில் வெறுப்பு அடைகிறதில்லை.
33) எவன் தன்னைக் கௌரவித்தபொழுது ஸந்தோஷிக்கவில்லையோ, அவமானத்தால் தாபத்தை அடைகிறதுமில்லையோ
கங்கையின் மடுவைப் போலக் கலக்க முடியாதவனாயிருக் கிறானோ, அவன் பண்டிதனாகச் சொல்லப்படுகிறான்.
34) எல்லாப் பிராணிகளுடைய தன்மையையும் அறிந்தவனும், எல்லாக் கர்மங்களுடைய முறையையும் அறிந்தவனும்
உபாயத்தை அறிந்தவனுமான மனிதன், மனிதர்களுள் பண்டிதனாகச் சொல்லப்படுகிறான்.
36)தடையில்லாத வாக்குடையவனும், விசித்திரமாகப் பேசுகிறவனும், ஊஹமுடையவனும், காலோசிதமாகத் தோன்றும்
புத்தியையுடையவனும், சீக்கிரமாகக் கிரந்தத்தைச் சொல்லுகிறவனுமாயிருப்பவன் பண்டிதனாகச் சொல்லப்படுகிறான்.
37)எவனுடைய சாஸ்த்ராப்பியாஸமானது தன்னுடைய கொள்கையை ஒத்திருக்கிறதோ,
கொள்கையும் சாஸ்த்ராப்பியாஸத்தை ஒத்தேயிருக்கிறாதோ, எவன் ஆர்யர்களுடைய முறையை மீறாமலிருக்கிறானோ,
அவன் பண்டிதனென்கிற பெயரை அடைகிறான்.
38)எவன் அதிகமான தனத்தையும், கல்வியையும், அதிகாரத்தையும் அடைந்தும்,
கர்வமில்லாதவனாக ஸஞ்சரிக்கிறானோ அவன் பண்டிதனாகச் சொல்லப்படுகிறான்.
38)சாஸ்த்ரத்தை அப்யஸியாதவனாயிருந்தும் கர்வங்கொண்டவனும், தரித்திரனாயிருந்தும் ஔதார்யமுடையவனும்,
இழிவான கார்யத்தினால் செல்வத்தை அடைய விரும்புகிறவனுமானவன் பண்டிதர்களாலே மூடனாகச் சொல்லப்படுகின்றனன்.
39)எவன் தன்னுடைய கார்யத்தை விட்டுவிட்டுப் பிறனுடைய காரியத்தைச் செய்கிறானோ,
மித்திரன் விஷயத்தில் கபடமாக நடக்கிறானோ அவன் மூடனாகச் சொல்லப்படுகிறான்.
40)எவன் தன்னிடம் விருப்பமில்லாதவர்களை விரும்புகிறானோ, (தன்னை) விரும்புகிறவர்களை விட்டுவிடுகிறானோ,
வலியவனைப் பகைத்துக்கொள்ளுகிறானோ அவனை மூடபுத்தியுடை யவனாகச் சொல்லுகிறார்கள்.
41)எவன் பகைவனை மித்திரனாகச் செய்கிறானோ, நண்பனைப் பகைத்து அவனுக்குத் துன்பமும் செய்கிறானோ,
தீய செயலையும் செய்யத் தொடங்குகின்றானோ அவனை மூட புத்தியுடையவனாகச் சொல்லுகிறார்கள்.
42) ஓ! பரதஶ்ரேஷ்டரே! எவன் காரியங்களைப் பெருகச் செய்கிறானோ, எல்லாக் காரியத்திலும் ஸந்தேஹிக்கிறானோ,
சீக்கிரம் செய்ய வேண்டிய காரியத்தில் தாமதத்தைச் செய்கிறானோ அவன் மூடன்.
43) எவன் பித்ருக்களுக்கு ஶ்ரார்த்தத்தைச் செய்கிறதில்லையோ, தேவதைகளைப் பூஜிக்கிறதில்லையோ,
நல்ல மனமுடைய மித்திரனை அடைகிறதில்லையோ, அவனை மூடபுத்தி யுள்ளவனாகச் சொல்லுகிறார்கள்.
44)மூடபுத்தி யுடைய கெட்டமனிதன் அழைக்கப்படாமல் பிரவேசிக்கிறான்; கேட்கப்படாமலே, அதிகமாகச் சொல்லுகிறான்,
(தன்னிடம்) நம்பிக்கையில்லா தவனிடம் நம்பிக்கை வைக்கிறான்.
45)எந்த மனிதன் தான் அவ்விதமிருந்து கொண்டு பிறனைத் தோஷத்தினால் நிந்திக்கிறானோ,
சக்தியில்லாதவனாயிருந்து கொண்டு கோபிக்கிறானோ அவன் மிகவும் மூடன்.
46) தன் பலத்தை யறியாமல், தர்மார்த்தங்களில்லாததும் அடைய முடியாததுமான விஷயத்தை முயற்சியில்லாமலே
விரும்புகிறவன் இவ்வுலகில் மூடபுத்தியுடையவ னாகச் சொல்லப்படுகிறான்.
47) ஓ! அரசரே! எவன் உபதேசிக்கக்கூடாதவனுக்கு உபதேசிக்கிறானோ, உபதேசிக்க வேண்டியவனுக்கு உபதேசிக்கவில்லையோ,
லோபியை உபாஸிக்கிறானோ, அவனை மூடபுத்தியுடையவனாகச் சொல்லுகிறார்கள்.
48) அடுத்தவர்களுக்குப் பங்கிட்டுக்கொடாமல் எவன் சிறந்த உணவுப் பொருளை ஒருவனாகப் புஜிக்கிறானோ,
சிறந்த வஸ்திரத்தையும் ஒருவனாகவே உடுக்கிறானோ அவனைக் காட்டிலும் மிகவும் கொடியவன் எவன் இருக்கிறான்?
49)ஒருவன் பாவங்களைச் செய்கிறான்; ஜனங்களுடைய ஸமூஹமானது பயனை அநுபவிக்கிறது.
பயனை அனுபவிக்கிறவர்கள் விடுபடுகிறார்கள். செய்தவன் தோஷத்தால் பற்றப்படுகிறான்.
50)வில்லாளியால் விடப்பட்ட பாணமானது ஒருவனைக் கொல்லும்; அல்லது, கொல்லாமலுமிருக்கும்.
புத்திமானாலே பிரயோகிக்கப்பட்ட புத்தியானது அரசனோடு ராஜ்யத்தையும் அழிக்கும்.
51)ஒரு புத்தியினாலே காரிய அகாரியங்களிரண்டையும் நிச்சயித்து (சத்துரு மித்திரன் உதாஸீனன்) மூன்று பேர்களையும்
(ஸாம தான பேத தண்டங்களாகிய) நான்குகளாலும் வசம் பண்ணக் கடவீர்.
(இந்த்ரியங்கள்) ஐந்தையும் ஜயித்து, (ஸந்தி, விக்கிரகம், யாநம், ஆஸநம், த்வைதம், ஆஶ்ரயம் என்ற) ஆறினையும் அறிந்து
(ஸ்த்ரீ, சூதாட்டம், வேட்டை, மதுபானம், கடுஞ்சொல், கடுந்தண்டனை, தனத்தை வீணாக்குதல் இவ்) ஏழையும் தள்ளி ஸுகத்தை அடைவீராக.
52)விஷத்தின் ரஸமானது ஒருவனைக் கொல்லுகிறது. ஆயுதத்தால் ஒருவன் கொல்லப்படுகிறான்.
தவறான ஆலோசனையானது ராஜ்யத்தோடும் பிரஜைகளோடும் அரசனைக் கொல்லும்.
53)ருசியான பதார்த்தத்தை ஒருவனாகப் புஜிக்கக்கூடாது. ஒருவனாக விஷயங்களை ஆலோசிக்கக் கூடாது.
ஒருவனாக வழி போகக் கூடாது. தூங்குகிறவர்களின் நடுவே ஒருவனாக விழித்திருக்கக்கூடாது.
54)ஓ! அந்த எந்த ஒன்றை நீர் அறியவில்லையோ அது இரண்டற்று ஒன்றாக இருக்கிறது.
அந்த ஸத்தியமானது, ஸமுத்திரத்திற்கு ஓடம்போல, ஸ்வர்க்கத்திற்குப் படியாயிருக்கிறது.
55)பொறுமை யுள்ளவர்களுக்குப் பொறுமை யுள்ளவனான இவனை ஜனங்கள் ஶக்தி யில்லாதவனாக
நினைக்கிறார்களென்கிற ஒன்றே தோஷம். இரண்டாவது தோஷம் அடையப்படுகிறதில்லை.
56)அவனுக்கு அது தோஷமாகக் கருதத்தக்கதன்று. பொறுமையானது பெரிய பலமன்றோ?
ஶக்தியில்லாதவர்களுக்குப் பொறுமையானது குணமாகிறது. ஶக்தியுள்ளவர்களுக்கும் பொறுமை அலங்காரம்.
57)உலகத்தில் பொறுமையானது வசப்படுத்துவதாகும். பொறுமையால் எதுதான் ஸாதிக்கப்படுகிறதில்லை?
எவனுடைய கையில் ஶாந்தியாகிற கத்தியிருக்கிறதோ அவனைத் துர்ஜனன் என்ன செய்வான்?
58)கூளமில்லாத இடத்தில் விழுந்த தீயானது தானே அவிகிறது.
பொறுமை யில்லாதவன் தன்னையுமே மிக்க தோஷங்களோடு சேர்ப்பிப்பான்.
59)தர்மம் ஒன்றே சிறந்ததான நன்மை. பொறுமை ஒன்றே உத்தமமான ஶாந்தி.
வித்தை ஒன்றே மேலான த்ருப்தி. அஹிம்ஸை ஒன்றே ஸுகத்தைக் கொடுக்கிறது.
60)(சத்துருக்களிடம்) விரோதத்தைச் செலுத்தாத அரசன், தீர்த்த யாத்திரைக்குப் போகாத பிராமணன் இவ்விருவர்களையும்,
ஸர்ப்பமானது எலிகளைத் தின்பது போல, பூமியானது தின்று விடுகிறது.
61)கடுமையாக ஒரு வார்த்தையும் சொல்லாமலிருப்பதும், அஸத்துக்களைப் பூஜியாம லிருப்பதுமாகிய
இவ்விரண்டு காரியங்களையும் செய்கிற மனிதன் இவ்வுலகத்தில் விளக்க மடைகிறான்.
62)ஓ! ஆண்மையிற் சிறந்தவரே! இச்சிக்கப்பட்டவைகளையே இச்சிக்கின்ற ஸ்த்ரீகளும்,
பூஜிக்கப்பட்டவர்களையே பூஜிக்கின்ற மூடர்களுமாகிய இவ்விருவரும் பிறரிடம் நம்பிக்கையை வைக்கின்றவர்கள்.
63)தனமில்லாதவனுடைய விருப்பமும், ஶக்தியில்லாதவனுடைய கோபமும், கூர்மையானவைகளும்,
ஶரீரத்தை யுலரச் செய்கின்றவைகலூமான முள்ளுகள்.
64)முயற்சியில்லாத கிருஹஸ்தனும், காரியங்களோடு கூடிய ஸந்யாஸியுமாகிய இருவர்களுமே
மாறுபட்ட செய்கைகளாலே விளக்கமடைகிறதில்லை.
65)ஓ! அரசரே! ஶக்தியுள்ளவனாயிருந்தும் பொறுமையுடன் கூடினவனும், தரித்திரனா யிருந்தும்
தானம் செய்கிறவனும் ஆகிய இவ்விரண்டு மனிதர்களும் ஸ்வர்க்கத்தின் மேலே யிருக்கிறார்கள்.
66)நியாயமாக வந்த பொருளுக்கு அபாத்திரத்தில் கொடையும், ஸத்பாத்திரத்தில் கொடாமையுமாகிய
இரண்டும் தவறுதல்களாக அறியத் தக்கவைகள்.
67)தானம் செய்யாத தனவானும், தவம் செய்யாத தரித்திரனுமாகிய இருவரையும்
கழுத்தில் பாரமான கல்லைக் கட்டி ஜலத்தில் ஆழ்த்த வேண்டும்.
68)ஓ! புருஷஶ்ரேஷ்டரே! யோகத்துடன் கூடின யதியும், போரில் எதிர்முகனாக நின்று கொல்லப்பட்டவனுமாகிய
இவ்விருவர்களும் (ஸ்வர்க்கத்திற்கு வழியான) ஸூர்ய மண்டலத்தைப் பிளக்கின்றார்கள்.
69)ஓ! பரத ஶ்ரேஷ்டரே! மனிதர்களுக்கு உத்தமம், மத்திமம், அதமமென்று மூன்று நியாயங்கள் கேட்கப்படுகின்றன.
இவ்விதம் வேத வித்துக்கள் அறிகின்றார்கள்.
70)ஓ! அரசரே! மனிதர்கள் உத்தமர், மத்தியமர், அதமரென மூன்று வகையினராவர்.
அவர்களை முறைப்படி மூன்று விதமான கர்மங்களிலேயே சேர்ப்பிக்க வேண்டும்.
71) ஓ! அரசரே! மனைவி, வேலைக்காரன், மகன் ஆகிய மூவருமே (தமக்கெனத்) தனமில்ளாதவர்கள்.
அவர்கள் அடையும் பொருள் அவர்கள் யாரைச் சார்ந்தவரோ அவருடையதே.
72)பிறர்பொருளை அபஹரிப்பதும், பரதாரங்களைச் சேருவதும், அன்புள்ளவனைத் தள்ளுவதுமாகிய
மூன்று தோஷங்களும் நாசத்தைச் செய்யும்.
73) காமம், க்ரோதம், லோபம் என்னுமிவை நரகத்தின் மூன்றுவித வாயில்கள்; ஆத்ம நாசத்திற்குக் காரணமானவை.
ஆகையால், இவை மூன்றையும் தள்ள வேண்டும்.
74 )ஓ! பாரதரே! வரம்பெறுதல், அரசனாதல், புத்திரனுண்டாதல், ஶ்ரமப்பட்டுச் சத்துருவிடமிருந்து விடுபடுதல்
(இந்த நான்கும்) ஸமமாயுள்ளவை.
75 )அடுத்தவன், அடுக்கிறவன், உம்மைச் சேர்ந்தவனாகிறேனென்று சொல்லுகிறவனாகிய சரணமடைந்த
இம் மூவரையும் (தனக்குச்) சங்கடம் நீரிட்ட காலத்திலும் கைவிடக்கூடாது.
76 )மிக்க பலசாலியான அரசனாலே நான்கு காரியங்கள் தள்ளத் தக்கவைகளென்று சொல்லுகிறார்கள்.
பண்டிதனானவன் அவைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
77 )புல்லறிவினரோடும், விரைந்து செய்ய வேண்டிய காரியத்தில் தாமதமான முயற்சி யுள்ளவர்களோடும்,
சோம்பேறிகளோடும், சாரணர்களோடும் ஆலோசனை செய்யக் கூடாது.
78 )ஐயா! கிருஹஸ்த தர்மத்திலிருந்து கொண்டு செல்வத்துடன் கூடினவராயிருக்கிற உம்முடைய க்ருஹத்தில்
வயது முதிர்ந்த ஞாதியும், செல்வந்தளர்ந்து போன குலீனனும், ஏழையான நண்பனும்,
புத்திரனில்லாத ஸஹோதரியும் ஆகிய நான்கு பேர்களும் வஸிக்க வேண்டும்.
79 )ஓ! மஹாராஜரே! ப்ருஹஸ்பதியானவர் (தம்மிடம்) வினவிய இந்திரனை நோக்கி நான்கு விஷயங்களை உடனே
பலிப்பவைகளகச் சொன்னார். அவற்றை என்னிடமிருந்து தெரிந்து கொள்ளும்.
80 )தேவதைகளுடைய ஸங்கல்பம், புத்திமான்களுடைய மஹிமை, வித்யாப்யாஸம் செய்தவர்களுடைய விநயம்,
பாபிகளுடைய நாசகர்மம் ஆகிய இவை உடனே பலிப்பவை.
81 )அக்னி ஹோத்ரம், மௌனம், அத்தியயனம், யஜ்ஞமென்கிற நான்கு கர்மங்களும் அபயத்தைச் செய்கின்றவை.
இவையே வேறுவிதமாக கௌரவத்திற்காகச் செய்யப்பட்டால் பயத்தைக் கொடுக்கின்றன.
82 )ஓ! பரத ஶ்ரேஷ்டரே! பிதா, மாதா, அக்னி, ஆத்மா, குருவென்கிற ஐந்து அக்னிகள்
மனிதனால் முயற்சியுடன் பணிவிடை செய்யப்படத் தக்கவைகள்.
83 )உலகத்தில் தேவர்கள், பித்ருக்கள், மனுஷ்யர்கள், யதிகள், அதிதிகள் ஆகிய
ஐந்து வகையார் களையுமே பூஜிக்கிறவன் மிக்க புகழை அடைகிறான்.
84 )எங்கெங்கே போவீரோ அங்கங்கெல்லாம் மித்திரர்கள், சத்துருக்கள், மத்யஸ்தர்கள்,
ஆஶ்ரயிக்கப்பட வேண்டிய பெரியோர்கள், ஆஶ்ரயித்தவர்கள் ஆகிய ஐந்து பேர்களும் உம்மைப் பின் தொடர்வார்கள்.
85 )ஐந்து இந்த்ரியங்களுடைய மனிதனுடைய ஓர் இந்த்ரியமானது துவாரமாகுமேயானால் (விஷயத்தில் பற்றுமேயானால்)
அதன் வழியாக இவனுடைய அறிவானது தோலால் செய்யப்பட்ட (ஓட்டைப்) பாத்திரத்திலுருந்தும்
ஜலம் நழுவுவதுபோல வெளியில் நழுவிவிடும்.
86 )ஸம்பத்தை விரும்புகிற மனிதனாலே அதிக நித்திரை, சோம்பல், பயம், குரோதம், முயற்சியின்மை,
விரைந்து செய்யாமை எங்கிற ஆறு தோஷங்களும் தள்ளத்தக்க வைகள்.
87 -88 )மனிதன் நன்றாகச் சொல்லாதவனான ஆசாரியனையும், அத்தியயனம் செய்யாத ரித்விக்கையும்,
ரக்ஷிக்காத அரசனையும், அப்பிரியமாகப் பேசுகிற மனைவியையும், கிராமத்தை விரும்புகிற இடையனையும்,
வனத்தை விரும்புகிற நாவிதனையும் (க்ஷௌரகனையும்), இவ்வாறு பேர்களையும்
ஸமுத்திரத்தில் உடைந்த தோணியைத் தள்ளுவது போலத் தள்ள வேண்டும்.
88 )மனிதனாலே உண்மை யுரைத்தல், சோம்பலில்லாமை, அஸூயை யில்லாமை, பொறுமை, தைரியம்
ஆகிய ஆறு குணங்களும் ஒரு பொழுதும் விடத் தக்கவைகளல்ல.
89 )ஓ! அரசரே! எந்நாளும் தனத்தின் வரவு, நோயற்றிருத்தல், அன்புடையவளும் பிரியமாகப் பேசுகிறவளுமான மனைவி,
வசப்பட்டவனான புத்திரன், தனத்தைச் செய்கிற வித்தை இவை ஆறும் மனிதவர்க்கத்திற்கு ஸுகத்தைக் கொடுக்கின்றவைகள்.
90 )மனத்தில் நித்யமாயிருக்கிற (காமம், குரோதம், லோபம், மோஹம், மதம், மாத்ஸரியம்) இவ்வாறினையும்
அடக்குந் தன்மையை எவன் அடைகிறானோ, இந்த்ரியங்களை ஜயித்தவனான அவன் பாபங்களோடு கூடுகிறதில்லை.
அவன் அனர்த்தங்களை என்ன காரணத்தால் அடைவான்?
91-92 )பின்வரும் ஆறு பேர்களும், ஆறு பேர்களிடத்தில் ஜீவிக்கிறார்கள். ஏழாமவன் அறியப்படவில்லை. (என்னவெனில்)
திருடர்கள் அஜாக்கிரதையுள்ளவனிடமும், வைத்தியர்கள் நோயாளிகளிடமும், ஸ்திரீகள் காமிகளிடமும்,
யாகம் செய்விப்பவர்கள் யாகம் செய்பவர்களிடமும், அரசன் வழக்காளிகளிடமும், பண்டிதர்கள் மூடர்களிடமும் எப்பொழுதும் ஜீவிக்கிறார்கள்.
93 )பசுக்கள், ஊழியம், வேளாண்மை, மனைவி, கல்வி, ஶூத்ரருடைய சேர்க்கை இவ்வாறும்
ஒரு முகூர்த்தம் பாராவிட்டால் நசிக்கின்றன.
94-95 )கற்பிக்கப்பட்ட சிஷ்யர்கள் ஆசாரியனையும், தாரத்தை அடைந்தவர்கள் மாதாவையும், காமம் நீங்கினவர்கள் நாரியையும்,
பயனை அடைந்தவர்கள் உதவி செய்தவனையும், கரையை அடைந்தவர்கள் தோணியையும்,
வியாதி நீங்கினவர்கள் வைத்தியனையுமாக (முன் முன் சொல்லப்பட்ட) இவ்வாறு பேர்களும்
முன்னம் உபகரித்தவர்களான (பின் பின் சொல்லப்பட்ட) ஆறு பேர்களையும் அவமதிக்கின்றார்கள்.
96 )ஓ! அரசரே! நோயின்மை, கடனில்லாமை, பரதேச வாஸமில்லாமை, ஸத்துக்களான மனுஷ்யர்களுடன் சேர்க்கை,
தன் புத்தியால் ஏற்பட்ட ஜீவனம், பயமில்லாதவாஸம் இவ்வாறும் ஜீவர்களுக்கு ஸுக ஸாதனங்கள்.
97 )பொறாமையுடையவனும், அருவருப்புள்ளவனும், திருப்தி யில்லாதவனும், கோபிஷ்டனும்,
எப்பொழுதும் ஶங்கைப்படுகிறவனும், பிறனுடைய பாக்கியத்தை அடுத்துப் பிழைப்பவனுமான
இவ்வாறு பேர்களும் எந்நாளும் துக்கமுள்ளவர்கள்.
98-99 )வேரூன்றின அரசர்களையும் பெரும்பாலும் நாசத்தை அடையும்படி செய்கின்றவைகளும்
வியஸனத்திற்குக் காரணமுமான ஸ்த்ரீகள், சூது, வேட்டை, பானம், கடுஞ்சொல், பெரிதும் கடிமையுமான சிக்ஷை,
தனத்தை வீணாக்குதல் என்கிற ஏழு தோஷங்களும் எப்பொழுதும் அரசனால் தள்ளத்தக்கவைகள்.
100-101-102 )பிராமணர்களை (த்தானாக) முதலில் துவேஷிப்பதும், பிராமணர்களால் விரோதிக்கப்படுவதும்,
பிராமணர்களின் பொருளைக் கவர்வதும், பிராமணர்களைக் கொல்ல விரும்புவதும், அவர்களைத் தோஷிப்பதில் மகிழ்வதும்,
அவர்களைப் புகழ்வதில் மகிழாதிருப்பதும், செய்ய வேண்டிய கார்யங்களில் அவர்களை நினையாதிருப்பதும்,
அவர்கள் யாசிக்கையில் அஸூயை யடைவதுமான எட்டும் ஒரு மனிதன் அடைகிற நாசத்திற்கு முன்னுண்டகும் குறிகள்.
அறிவுடையவனான மனிதன் புத்தியால் இந்தத் தோஷங்களை அறிந்து நீக்க வேண்டும்.
103-104-105 )ஓ! பாரதரே! நண்பர்களுடன் சேர்க்கையும், அதிகமான தனலாபமும், புத்திரனுடைய ஆலிங்கனமும்,
அன்பு ஒத்த ஸ்திரீ புருஷர்களின் சேர்க்கையும், ஸமயத்தில் பிரியமான ஸல்லாபமும்,
தன்னுடைய கூட்டத்தார்களுள் மேன்மையும், இஷ்டமான வஸ்துவின் லாபமும், ஜனஸங்கத்தில் மரியாதையும்,
இவ்வெட்டும் ஸந்தோஷத்திற்கு வெண்ணெய் போன்றனவாகக் காணப்படுகின்றன.
அவைகளே தனக்கு ஸுகத்தை அளிக்கின்றவைகளுமாயிருக்கின்றன.
106 )அறிவு, நற்குடிப்பிறப்பு, அடக்கம், கல்வி, பராக்கிரமம், மிதமான வார்த்தை, சக்திக்குத் தக்கபடி தானம்,
செய்ந்நன்றி யறிதல் (இந்த) எட்டுக்குணங்களும் மனிதனை விளங்கச் செய்கின்றன.
107 )எந்த வித்வான் ஒன்பது துவாரமுடையதும் (இளை, பிங்களை, ஸுஷும்ணை யென்கிற) மூன்று தூண்களுள்ளதும்
இந்த்ரியங்களாகிற ஐந்து ஸாக்ஷிகளை யுடையதும் ஜீவனால் வஸிக்கப்பட்டதுமான இந்த(ச்சரீரமாகிற)
க்ருஹத்தை அறிந்தானோ அவன் சிறந்த அறிவுள்ளவன்.
108-109 )ஓ! திருதராஷ்டிரரே! பத்துப் பேர்கள் தர்மத்தை அறிகிறதில்லை. அவர்களைத் தெரிந்து கொள்ளும்.
அவர்கள் மதங்கொண்டவன், அஜாக்கிரதையுடையவன், பித்தன், களைப்படைந்தவன், கோபத்தையடைந்தவன்,
பசித்தவன், அவஸரக்காரன், லோபி, பயந்தவன், காமி ஆகிய இப்பதின்மரும் ஆவர்.
ஆகையால் (பண்டிதனானவன் (மதமுதலான) இந்த விஷயங்களில் விழக் கூடாது.
110 )இந்த விஷயத்திலேயே அஸுர ஶ்ரேஷ்டனான ப்ரஹ்லாதனுக்கும் ஸுதந்வாவுக்கும் ப்ரஹ்லாத புத்ரன் விஷயமாக
நடந்த வார்த்தையான பழமையான இந்த இதிஹாஸத்தைச் சொல்லுகிறார்கள்.
111 )எந்த அரசன் காம க்ரோதங்களை முழுதும் தள்ளுகிறானோ (நல்ல) பாத்ரத்தில் தனத்தை அளிக்கிறானோ,
விஶேஷங்களை அறிந்தவனும் ஶாஸ்த்ரங்களைக் கற்றவனும் (கார்யத்தை) விரைந்து செய்கிறவனுமாயிருக்கிறானோ
அவனை எல்லா மனிதர்களும் ப்ரமாணமாகச் செய்கிறார்கள்.
112 )எவன் மனுஷ்யர்களை விசுவாஸம் வரச்செய்வதற்கு அறிகிறானோ, சிக்ஷையின் அளவையும்,
பொறுமையையும் அறிகிறானோ அவ்விதமான அவனை நிரம்பின செல்வம் அடைகிறது.
113 )பகைவரின் தவறுதல்களைப் பார்ப்பதில் விழித்திருந்து கொண்டு புத்தி பூர்வகமாகப் பகைவனை அடுக்கிறவனும்,
சிறிதும் பலமில்லாதவனாயிருக்கிற ஒரு பகைவனையும் அலக்ஷியம் செய்யாதவனும்,
பலசாலிகளோடு யுத்தத்தை விரும்பாதவனும், ஸமயத்தில் பராக்கிரமத்தை வெளிப்படுத்துகிறவனுமாயிருப்பவனே தீரன்.
114 )காரியத்தில் துரந்தரனும், ஆபத்தை அடைந்தபொழுதும் ஒருகாலும் துன்பத்தை அடையாதவனும்,
அஜாக்கிரதையில்லாமல் ப்ரவ்ருத்தியைத் தேடுகிறவனும், துக்கம் நேரிட்ட பொழுது பொறுப்பவனுமாயிருக்கும்
மஹாத்மாவால் பகைவர்கள் ஜயிக்கப்பட்ட வர்களாவார்கள்.
115 )எவன் வீட்டைவிட்டுப் பயனில்லாமல் தேசாந்தரம் செல்வதையும், பாபிகளுடன் சேர்க்கையையும்,
பிறர் மனைவியைச் சேர்தலையும், டம்பத்தையும், திருட்டையும், கோள் சொல்லுவதையும்,
மதுபானத்தையும் செய்யவில்லையோ அவன் எப்பொழுதும் ஸுகியாயிருப்பான்.
116 )மூடனல்லாதவன் தர்மார்த்த காமங்களை படபடப்பாக ஆரம்பிக்கிறதில்லை;
அழைத்துக் கேட்கப்பட்டால் உண்மையையே சொல்லுவான்; மித்திரன் விஷயத்தில் விவாதத்தை விரும்புகிறதில்லை.
பூஜிக்கப்படாவிட்டாலும் கோபிக்கிறதில்லை.
117 )எவன் அஸூயை அடைகிறதில்லையோ, தயை செய்கிறானோ, பலமில்லாதவனா யிருக்கையில்
விரோதத்தைச் செய்வதில்லையோ, ஒன்றையும் அதிகமாகச் சொல்லுகிறதில்லையோ,
விவாதத்தை ஸஹிக்கிறானோ அப்படிப்பட்டவன் எங்கும் புகழ்ச்சியை யடைகிறான்.
118 )எவன் ஒரு பொழுதும் கர்வத்தைக் காட்டும் வேஷத்தைச் செய்து கொள்ளுகிற தில்லையோ,
பௌருஷத்தால் பிறரிடம் தற்புகழ்ச்சி செய்து கொள்ளுகிறதில்லையோ, மிஞ்சினவனாகிச் சிறிதும் கடுமையான
வார்த்தைகளைப் பேசுகிறதில்லையோ அவனை மனிதன் எப்பொழுதும் பிரியனாகச் செய்கிறானல்லவா?
119 )அடங்கின வைரத்தை வளரச்செய்யாதவனும் கொழுப்பையடையாதவனும் பொறுமையை யடைந்தவனும்
வறுமையடைந்திருக்கிறேனென்று அகாரியத்தைச் செய்யாதவனுமாயிருப்பவனை ஆரியர்கள்
மிகவும் ஆரியர்களுடைய சீலமுடையவனாகச் சொல்லுகிறார்கள்.
120 )தனக்கு ஸுகமுண்டான பொழுது ஸந்தோஷத்தை யடையாதவனும், கொடுத்து விட்டுப் பிறகு
பச்சாதாபப் படாதவனுமாயிருப்பவன் ஸத் புருஷனாகவும் புகழத் தக்க ஒழுக்க முடையவனாகவும் சொல்லப்படுகிறான்.
121 )தேசாந்தரங்களையும், (அங்குள்ள) கொள்கைகளையும், ஜாதிகளின் தர்மங்களையும் அறிகிறவனும்,
ஏற்றத் தாழ்வறிந்தவனாயிருப்பவன் முன்னுக்கு வருகிறான். அவன் எங்கே போனாலும்,
அவ்விடத்தில் (ஜனங்களால்) அடையப்பட்டவனாகி (அந்த) ஜனக்கூட்டத்திற்கு அதிபதியாயிருத்தலை அடைகிறான்.
122 )டம்பத்தையும், மோஹத்தையும், மாத்ஸரியத்தையும், பாவச்செயலையும், ராஜத்வேஷத்தையும்,
கோள் சொல்வதையும், ஜனக் கூட்டங்களோடு பகைத்தலையும், மதங்கொண்டவர்களோடும் பித்தர்களோடும்
துர்ஜனங்களோடும் பேச்சையும் தள்ளுகிற பேரறிவாளனே சிறந்தவன்.
123 )எவன் அடக்கம், சுத்தி, தெய்வகர்மம், மங்களகாரியங்கள், பிராயஶ்சித்தங்கள், பலவிதமான
உலக வ்யவஹாரங்கள் ஆகிய இவைகளை நித்தியமாகச் செய்கிறனோ
அவனுக்குத் தேவதைகள் மேன்மேலும் விருத்தியைச் செய்கிறர்கள்.
124 )ஸமமாயுள்ளவர்களுடன் விவாஹத்தைச் செய்கிறவனும், இழிவானவர்களுடன் விவாஹத்தைச் செய்யாதவனும்,
ஸமானர்களோடு ஸ்நேஹத்தையும் (ஆகாரம் முதலான) வியவஹாரத்தையும் ஸம்பாஷணத்தையும் செய்கீறவனும்,
குணங்களால் சிறந்தவர்களைக் கௌரவிக்கிறவனுமான வித்வானுடைய நீதி நன்றாகச் செலுத்தப்பட்டதாகும்.
125 )(தன்னை) அடுத்தவர்களுக்குப் பகுத்துக் கொடுத்து விட்டு மிதமாகப் புஜிக்கிறவனும்,
அளவற்ற காரியத்தைச் செய்துவிட்டும் மிதமாக நித்திரை செய்கிறவனும்,
யாசிக்கப்பட்டால் பகைவர்களுக்கும் தானம் செய்கிறவனும்,
நல்ல மனமுடையவனுமாயிருப்பவனை அனர்த்தங்கள் விட்டு விலகுகின்றன.
126 )எவனுடைய செய்யவிரும்பப்பட்ட காரியத்தையும், மாறாகச் செய்யப்பட்ட காரியத்தையும்,
இதர ஜனங்கள் சிறிதும் அறிகிறதில்லையோ அவனுடைய ஆலோசனை ரஹஸ்யமாயும்,
நன்றாக அனுஷ்டிக்கப்பட்டதாயுமிருந்தால் (அவனுக்கு) ஒருகாரியமும் சிறிதும் நழுவுகிறதில்லை.
127 )எல்லாப்ப் பிராணிகள் விஷயத்திலும் அமைதியில் பிரவேசித்தவனும், உண்மை யுள்ளவனும்,
மிருது ஸ்வபாவமுள்ளவனும், (தக்கவர்களை) நன்கு மதிக்கிறவனும், சுத்தமான எண்ணமுடையவனுமாயிருக்கிறவன்,
ஞாதிகளின் நடுவில், நல்ல ஜாதியிலுண்டானதும் தெளிவுள்ளதுமான பெரிய ரத்தினம் போல அதிகமாக அறியப்படுகிறான்.
128 )எந்த மனிதன் தானாகவே (அகார்யங்களில்) மிகவும் லஜ்ஜையடைகிறானோ அவன் எல்லா வுலகத்திற்கும் குருவாகிறான்;
தவிரவும், அளவற்ற தேஜஸ்ஸுடையவனும் நல்ல மனமுடையவனும் சித்தம் நிலை பெற்றவனுமாகிறான்.
அவன் தேஜஸ்ஸினால் ஸூர்யன் போல் விளங்குகிறான்.
129 )ஓ! அம்பிகையின் புத்திரரே! சாபத்தால் எரிக்கப்பட்டவரும் அரசருமான பாண்டுவின் புத்திரர்கள் ஐவரும்
வனத்தில் பிறந்தார்கள், ஐந்து இந்திரர்களுக்கு நிகரானவர்களாயிருக்கிறர்கள்.
பாலர்களான அவர்கள் உம்மாலேயே வளர்க்கப்பட்டவர்களும் கற்பிக்கப்பட்டவர்களுமாக
உம்முடைய கட்டளையைக் காத்து வருகிறர்கள்.
130 )ஓ! ஐயா! அவர்களுக்கு உசிதமான ராஜ்யத்தைக் கொடுத்து விட்டுப் புத்திரர்களுடன்
ஸுகியும் ஸந்தோஷிக்கிறவரும் ஆகக்கடவீர். ஓ! அரசரே! (இப்படிச் செய்தால்)
நீர் தேவர்களுக்கும் மனுஷ்யர்களுக்கும் நிந்திக்கத்தக்கவர் ஆகமாட்டீர்.” என்றார்.
————–
விது₃ர நீதி
முப்பத்து நான்காவது அத்யாயம்
ப்ரஜாகரபர்வம் (தொடர்ச்சி)
(திருதராஷ்டிரன் துரியோதனாதியரின் மேன்மைக்கு ஸாதனத்தைக்கேட்க,
விதுரர் பலநீதிகளைக் கூறி பாண்டவர்களுக்கு ராஜ்யம் கொடுப்பதே முக்கிய ஸாதனமென்றது)
1 )திருதிராஷ்டிரன், “நித்திரையில்லாதவனும், கவலையினால் எரிக்கப்படுகிறவனுமான எனக்கு
எந்தக் காரியத்தை ஆலோசித்தறிகிறாயோ அதனைச் சொல்லு.
நீயோ நம்மவர்களில் தர்மார்த்தங்களில் ஸமர்த்தனும், சுசியுள்ளவனுமாயிருக்கிறாய்.”
2 )“உதாரமான மனத்தையுடையவனே! விதுரா! ஆகையால், அஜாத ஸத்துருவுக்கு நன்மையான எல்லாவற்றையும்
உள்ளபடி நன்கு உணர்ந்து சொல்லக்கடவாய்.
கௌரவர்களுக்கு நன்மையைக் கொடுப்பதாக எதை நினைக்கிறாயோ அதைச் சொல்லு.”
3 )“கெடுதலைச் ஶங்கிக்கிறவனான நான் கெடுதலைப் பார்ப்பவனாகி வியாகுலமான மனத்துடன் உன்னை வினவுகிறேன்.
அறிவு தளராதவனே! ஆகையால், அஜாதசத்ருவுக்கு இஷ்டமான எல்லா உண்மையையும் உள்ளபடி சொல்” என்று கேட்டான்.
4 )விதுரர், “அவமானத்தை விரும்பாதவன் சுபத்தையோ அல்லது பாவத்தையோ, துவேஷத்துக்குரிய காரியத்தையோ,
அல்லது பிரியத்தையோ, கேளாமல் ஒருவனுக்கும் சொல்லக்கூடாது.
5) அரசரே! ஆகையால் (நீர் கேட்டபடியால்) கௌரவர்களுக்கு நன்மையும், உறுதியைச் செய்வதும்,
தர்மத்திலிருந்து விலகாததுமான வார்த்தையை உமக்குச் சொல்லுகிறேன்.
சொல்லுகிற என்னிடமிருந்து அதைத் தெரிந்து கொள்ளும்.
6 ) ஓ! பாரதரே! கபடத்துடன் கூடினவையும், கெட்ட உபாயங்களால் செய்யப்பட்டவையும்,
கைகூடுகின்றவையுமான கார்யங்களில் மனத்தைச் செலுத்தாதீர்.
7 ) மேதாவியானவன் அப்படியே யுக்தியினால் செய்யப் பட்டவையும், உபாயங்களுடன் கூடினவையும்,
பயனை அளியாதவையுமான செய்கைகளில் மனத்தை ஶ்ரமப்படுத்தக் கூடாது.
8 )பயனுடன் கூடின கர்மங்களிளேயே பயங்களைப் பார்க்கவேண்டும்; நிஶ்சயித்துச் செய்யவேண்டும்,
படபடப்பாய்ச் செய்யக்கூடாது.
9 ) தீரனானவன் கர்மங்களினுடைய பலனையும், விபரீத பலனையும் தன்னுடைய வளர்ச்சியையும்
நன்றாக அறிந்தே செய்யவேண்டும். அல்லது, செய்யாமலிருக்க வேண்டும்.
10 )கோட்டை முதலான இருப்பிடத்திலும் வளர்ச்சியிலும் குறைவிலும் பொக்கிஷத்திலும் பட்டணத்திலும்
சேனையிலும் பிரமாணத்தை (அளவு=எல்லை) யறியாதவன் ராஜ்யத்தில் நிலைக்கிறதில்லை.
11 )எவன் இவைகளைப் பிரமாணங்களைச் சொல்லப்பட்டபடி அறிகிறானோ,
தர்மார்த்தங் களிலும் ஞானத்திலும் முயற்சியுள்ளவனான அவன் ராஜ்யத்தை அடைகிறான்.
12 )ராஜ்யம் கிடைத்தேவிட்டதென்று தகாதபடி இருக்கக் கூடாது.
முதுமையானது உத்தமமான ரூபத்தைக் கெடுப்பது போல அடங்காமை செல்வத்தைக் கெடுத்து விடும்.
13 ) ஆகாரத்தில் விருப்பமுள்ள மீனானது சிறந்த வுணவால் மறைக்கப்பட்ட இரும்புத் தூண்டிலை விழுங்குகிறது;
பின்பு நேரிடும் விபரீதமான பயனை அறிகிறதில்லை.
14 )பக்ஷிக்கமுடிவதும், பக்ஷிக்கத்தக்கதும், பக்ஷிக்கப்பட்டு ஜரிக்கிறதும், ஜரிக்கும் போது
ஹிதமாயிருப்பதுமானதை க்ஷேமத்தை விரும்புகிறவன் சாப்பிட வேண்டும்.
15 )மரத்திலிருந்து பக்குவமாகாத பழங்களைப் பறிக்கிறவன் அவைகளிலிருந்து ரஸத்தை அடைய மாட்டான்.
அந்த மரத்தினுடைய விதையும் நசித்து விடுகிறது.
16 )முதிர்ந்து பக்குவமான ஸமயத்தில் பழத்தைப் பறிக்கிறவனோ அதிலிருந்து ரஸத்தை அடைகிறான்;
விதையினால் மறுபடியுமே பலத்தை அடைகிறான்.
17 ) வண்டுகள் புஷ்பங்களைக் கெடுக்காமல் மதுவைக் கவர்வது போல மனிதர்களிடமிருந்து
நலியாமல் தனங்களைக் கிரஹிக்க வேண்டும்.
18 )மாலை கட்டுகிறவன் பூந்தோட்டத்தில் செய்வதுபோலப் புஷ்பிக்கப் புஷ்பிக்கப் பறிக்க வேண்டும்.
கரியைச் சேர்க்கிறவன் போல மூலத்தை நாசஞ்செய்யக்கூடாது.
19 )மனிதனானவன், ‘இதைச் செய்தால் எனக்கு என்ன உண்டாகும்? இதைச் செய்யாவிட்டால் என்ன உண்டாகும்?’
என்று நன்றாக ஆராய்ந்து கர்மாக்களைச் செய்ய வேண்டும். அப்படியில்லாவிடில் செய்யக் கூடாது.
20 )(ஏனென்றால்) எந்தக் காரியங்களில் செய்யப்பட்ட மனித முயற்சியானது பிரயோஜனமில்லாததாகி விடுமோ
அவ்விதம் எப்பொழுதும் ஆரம்பிக்க முடியாதவைகளும் அடையப்படாதவைகளுமாகச் சில கார்யங்கள் ஏற்படுகின்றன.
21 )அனர்த்தத்திலேயே பற்றுள்ளவனும், அர்த்தத்தில் பராங்முகமாயிருக்கிறவனை நபும்ஸகனான பதியை
ஸ்த்ரீகள் விரும்பாதது போல ஜனங்கள் போஷகனாக விரும்புகிறதில்லை.
22 )எவனுடைய மகிழ்ச்சியும் கோபமும் பயனில்லாதவையோ அவனை ஸ்த்ரீகள் நபும்ஸகனான பதியை
விரும்பாதது போல ஜனங்கள் போஷகனாக விரும்புகிறதில்லை.
23 )அறிவுள்ளவனான மனிதன் சிறு முயற்சி யுடையவைகளும் பெரிய பயனுள்ளவைகளுமான
சில காரியங்களைச் செய்யச் சீக்கிரம் ஆரம்பிக்கிறான்; அப்படிப்பட்டவைகளைத் தாமதிக்கச் செய்கிறதில்லை.
24 ) எல்லாவற்றையும் நேத்திரத்தினால் ருஜுவாகப் பார்க்கிறவன் சும்மா (ஒன்றும் செய்யாதவனாக) இருந்தாலும்
அவனை மனிதர்கள் விரும்புகிறார்கள்.
25 ) நல்ல புஷ்பங்களுள்ளதாக விருந்தும் பழங்களில்லாததாக விருக்க வேண்டும்;
பழங்களுள்ளதாக் விருந்தும் ஏற முடியாததாயிருக்க வேண்டும்.
பக்குவமாகாததாக விருந்தும் பக்குவமானதுபோல விருக்கவேண்டும். ஆனால், ஒருபொழுதும் உதிரலாகாது-
26 )நேத்திரத்தினாலும் மனத்தினாலும் வாக்கினாலும் செய்கையினாலும் எவன் உலகத்தை
நான்கு விதமாக மன மகிழச் செய்கிறானோ அவனிடம் உலகம் மகிழ்கிறது.
27 )மான் பிடிக்கும் வேடனிடமிருந்து மான்கள் பயப்படுவது போல் எவனிடமிருந்து பிராணிகள் பயப்படுகின்றனவோ
அவன் ஸமுத்திரம் வரையிலுள்ள பூமியை யடைந்தாலும் குறைவை யடைவான்.
28 )அநீதியுடன் கூடியவன் தகப்பன், பாட்டன் வழியாய் வந்த ராஜ்யத்தை யடைந்தாலும் தன் செய்கையால்,
வாயுவானது மேகத்தை அடைந்து அதனை நழுவச் செய்வது போல் ராஜ்யத்தை அடைந்தாலும் நழுவச் செய்கிறான்.
29 )ஸத்துக்களால் அனுஷ்டிக்கப்பட்ட தர்மத்தை ஆதி முதற் கொண்டு அனுஷ்டித்து வருகிற அரசனுடைய பூமியானது,
தனங்களால் நிரம்பியதும் ஐஶ்வர்யத்தைப் பெருக்குகின்றதுமாக விருத்தி யடைகிறது.
30 )அப்படி யில்லாமல், தர்மத்தை விட்டவனும் அதர்மத்தை அநுஷ்டிக்கிறவனுமான அரசனுடைய பூமியானது,
அக்னியில் போடப்பட்ட தோல்போலக் குறைவை அடைகிறது.
31 )சத்ருவினுடைய ராஜ்யத்தை நாசம் செய்வதில் செய்யப்படுகிற முயற்சியே
தன் ராஜ்யத்தின் பரிபாலனத்திலும் செய்யத் தக்கது.
32 )தர்மமாக றஜ்யத்தை அடையவேண்டும், தர்மமாகப் பரிபாலிக்கவேண்டும்;
தர்ம மூலமான செல்வத்தை அடைந்தால், அது நழுவாது. அவன் குறைவையும் அடைய மாட்டான்.
33 ) புலம்புகிறவனான பித்தனிடமிருந்தும், மாறி மாறிப் பேசுகிற குழந்தையினிடமிருந்தும் எல்லாவற்றிலிருந்தும்
கற்பாறைகளிலிருந்து பொன்னைக் கிரஹிப்பது போல ஸாரத்தைக் கிரஹிக்க வேண்டும்.
34 ) உஞ்ச விருத்தியால் ஆகாரம் செய்கிறவன் கொஞ்சம் கொஞ்சமாகக் கிரஹிப்பது போல்
மஹான்களுடைய நல்ல வசனங்களையும் நல்ல கர்மங்களையும் தீரனானவன்
அங்கங்கிருந்து ஸம்பாதிக்கிறவனாக இருக்க வேண்டும்.
35 )பசுக்கள் கந்தத்தால் பார்க்கின்றன. பிராமணர்கள் வேதங்களால் பார்க்கிறார்கள்.
அரசர்கள் சாரர்களால் பார்க்கிறார்கள். மற்ற ஜனங்கள் நேத்திரங்களால் பார்க்கிறார்கள்.
36 )அரசரே! எந்தப் பசுவானது பால் கறக்க இணங்குகிறதில்லையோ அது அதிகமான துன்பத்தை அடைகிறது.
அப்படியில்லாமல், எது லேசாகக் கறக்கின்றதோ அதைத் துன்பப்படுத்துவதே யில்லை.
37 )எது காய்ச்சாமலே வளைகிறதோ, அது காய்ச்சப் படுகிறதில்லை.
எந்த மரம் தானாகவே வளைந்திருக்கிறதோ அதனை அறிந்தவன் வளைக்க மாட்டான்.
38 )இந்த உபமானத்தினாலே தீரனானவன் பலவானை வணங்க வேண்டும்.
பலவானை வணங்குகிறவன் இந்த்ரனை வனங்குகிறவனாவான்.
39 ) பசுக்கள் (வர்ஷ தேவதையான) பர்ஜன்யனை நாதனாக வுடையவைகள்.
அரசர்கள் மந்த்ரிகளை உறவினர்களகவுடையவர்கள். ஸ்த்ரீகளுக்குப் பதிகள் பந்துக்கள்.
பிராமணர்கள் வேதங்களைப் பந்துக்களாக வுடையவர்கள்.
40 )தர்மமானது ஸத்தியத்தால் காக்கப்படுகிறது. வித்தையானது அப்பியாஸத்தால் காக்கப்படுகிறது.
ரூபமானது சுத்தம் செய்வதால் ரக்ஷிக்கப்படுகிறது. குலமானது நல்ல நடையால் ரக்ஷிக்கப்படுகிறது.
41 )அளவினால் தான்யம் ரக்ஷிக்கப்படுகிறது. குதிரைகளை தேஹப் பயிற்சி முதலியவற்றால் காக்க வேண்டும்.
அடிக்கடி பார்ப்பதினால் கோக்களை ரக்ஷிக்க வேண்டும். மட்டமான வஸ்த்ரத்தினாலாவது ஸ்த்ரீகள் ரக்ஷிக்கத் தக்கவர்கள்.
42) நடையால் இழிவானவனுக்குக் குலமானது பிரமாணமாகிறதில்லை யென்பது என் எண்ணம்.
கீழ்க் குலத்தில் பிறந்தவர்களானாலும், அவர்களுடைய நன்னடையானது குலத்தைக் காட்டிலும் அதிகமாகிறதல்லவா?
43 )எவன் பிறர்களுடைய தனம், ரூபம், வீர்யம், குலம், ஸந்ததி, ஸுகம், நல்ல பாக்கியம், பூஜை
இவைகளில் பொறாமை யுடையவனாயிருக்கிறானோ அவனுக்கு வியாதியானது முடிவற்றது.
44 ) அகாரியங்களைச் செய்வதிலும், காரியங்களை விடுவதிலும், அகாலத்தில் விபரீதமான ஆலோசனையிலும்
பயந்தவன் மதத்தைக் கொடுக்கிற வஸ்துவைப் பானம் செய்யக்கூடாது.
45 )வித்யாமதம், தன மதம், மூன்றாவதான குலமதம் ஆகிய இந்த மதங்கள் கர்வங்கொண்டவர்களுக்கு ஏற்படுகின்றன.
இவைகளே ஸத்துக்களுக்குச் (சொல்லாலும் பொருளாலும்) மதத்திற்கு எதிரிடையான தமங்களாகின்றன.
46 )ஒருகால், ஒருகாரிய நிமித்தம் ஸத்துக்களால் பிரார்த்திக்கப்பட்ட அஸத்துக்கள்,
அஸத்தென்று பிரஸித்தமாயிருந்தும் தம்மை ஸத்தாக நினைக்கிறார்கள்.
47 )பிராணிகளுக்கு ஸத்துக்கள் கதி; ஸத்துக்களுக்கு ஸத்துக்களே கதி.
அஸத்துக்களுக்கும் ஸத்துக்களே கதி. அஸத்துக்களோ ஸத்துக்களுக்குக் கதியல்லர்.
48 )நல்ல வஸ்திரமுள்ளவனாலே ஸபையானது ஜயிக்கப்பட்டதாகும்.
கோக்களுள்ளவனால் நல்ல ஆகாரத்திலாசையானது ஜயிக்கப்பட்டதாகும்.
வாகனமுள்ளவனால் வழியானது ஜயிக்கப்பட்டதாகும். சீலமுடையவனால் எல்லாம் ஜயிக்கப்பட்டதாகும்.
49 )மனிதனுக்கு ஶீலம் முக்கியம். அது எவனுக்கு இகத்தில் நசித்து விடுகிறதோ
அவனுக்கு உயிரினாலும் தனத்தினாலும் பந்துக்களாலும் பயனில்லை.
50 )ஓ! பரதஶ்ரேஷ்டரே! தனவான்களுக்கு மாம்ஸத்தால் சிறந்ததும்,
நடுவாயுள்ளவர் களுக்கு ஆவின்பால், தயிர், நெய், மோர்களால் சிறந்ததும்,
தரித்திரர்களுக்குத் தைலத்தால் சிறந்ததுமாயிருக்கிற அன்னமானது ஏற்படுகிறது.
51 )தரித்திரர்கள் எப்பொழுதும் பாகமான அன்னத்தைப் உடனே புசிக்கிறர்கள்.
பசியானது அவர்களுக்கு உசியை உண்டு பண்ணுகிறது. தனவான்களுக்கு அந்தப் பசி எளிதில் கிடையாது.
52 )உலகத்தில் அனேகமாகத் தனவான்களுக்குப் புஜிப்பதற்குச் சக்தியிருக்கிறதில்லை.
ஓ! அரசரே! தரித்திரர்களுக்குக் காய்ந்த கட்டைகளும் ஜரிக்கின்றனவல்லவா?
53 )கீழான் மனிதர்களுக்குப் பிழைப்பில்லாமல் போவதில் பயம்,
நடுவானவர்களுக்கு மரணத்தில் பயம்,
மேலான மனிதர்களுக்கு அவமானத்தில் மிக்க பயம்.
54 )குடி முதலான மதங்களுக்கெல்லாம் ஐஶ்வர்ய மதமானது மிகவும் பாவமாயுள்ளது.
பணக்கொழுப்பால் கொழுத்தவன் விழுந்தும் (தாழ்வை யடைந்தும்) அறிகிறதில்லை யல்லவா?
55 )விஷயங்களில் ப்ரவ்ருத்திக்கின்றவைகளும் வசப்படாதவைகளுமான இந்த்ரியங்க ளாலே இந்த உலகமானது
(சூரியன் முதலான) கிரஹங்களால் நக்ஷத்ரங்கள் தாபத்தை யடைவது போலத் தாபத்தை யடைகிறது.
56 )கூடப் பிறந்ததும் மனத்தை வெளியிலிழுப்பதுமான ஐம்புலங்களின் கூட்டத்தால்
வசம் செய்யப் பட்டவனுக்கு வளர்பிறையில் சந்திரன் வளர்வதுபோல ஆபத்துக்கள் வளர்கின்றன.
57 )எவன் தன்னை வசம் செய்யாமல் மந்த்ரிகளை வசம் செய்ய விரும்புகிறானோ,
மந்த்ரிகளை வசம் செய்யாமல் சத்ருக்களைத் தான் வசம் செய்ய விரும்புகிறானோ,
அவன் அரசனாயிருந்து குறைவை யடைகிறான்.
58 )முதலில் (தன்னையே) துவேஷத்துடன் (வசம் செய்ய வேண்டியவர்களுடன்) சேர்க்க வேண்டும்.
பிறகு, மந்த்ரிகளையும் பகைவர்களையும் சேர்க்க வேண்டும். வீணாக (இதற்கு மாறாக) வசம் செய்ய விரும்பக்கூடாது.
59 )இந்த்ரியங்களை வசம் செய்தவனும், மந்த்ரிகளை வசம் செய்தவனும், சத்துருக்கள் விஷயத்தில் சிக்ஷையைச் செய்பவனும்,
ஆலோசித்துச் செய்பவனும், தீரனுமாயிருப்பவனைச் செல்வமானது எப்பொழுதும் அடையும்.
60 ) ஓ! அரசரே! மனிதசரீரம் ரதம், புத்தி ஸாரதி, இவனுடைய இந்த்ரியங்கள் குதிரைகள்.
அடங்கினவைகளான அந்த நல்ல குதிரைகளால் ஜாக்கிரதையுள்ளவனும் ஸமர்த்தனுமாக இருப்பவன்
தீரனான தேராளி போல ஸுகமாகச் செல்லுகிறான்.
61 ) சிக்ஷிக்கப்படாதவைகளான இவைகளே, அடக்கமில்லாதவைகளும் வசமாகாதவைகளுமான குதிரைகள் போல
ரதத்தோடு ஸாரதியையும் குதிரையான தன்னையும் கொல்லுவதற்குப் போதும்.
62 )அறிவில்ளாதவன் அடங்காத இந்த்ரியங்களால் அனர்த்தத்தை அர்த்தமாகவும்,
அர்த்தத்தை அனர்த்தமாகவும் பார்க்கிறவனாகிப் பெரிய துக்கத்தை ஸுகமாக நினைக்கிறான்.
63 )எவன் தர்மார்த்தங்களை விட்டு இந்த்ரியங்களின் வசத்தை அடைந்தவனாகிறானோ
அவன் அழகு, பிராணன், தனம், தாரங்கள் இவைகளிலிருந்து சீக்கிரம் குறைவை அடைகிறான்.
64 )எவன் தனத்திற்கு அதிபதியும், இந்த்ரியங்களுக்கு அதிபதியல்லாத வனுமாவானோ அவன்
இந்திரியங்களுக்கு அதிபதியல்லாமைபற்றி ஐஶ்வர்யத்திலிருந்தும் நழுவுகிறா னல்லவா?
64 )அடங்கினவைகளன மனம், புத்தி, புலன்கள் இவைகளாலே தானாகவே தன்னைத் தேட வேண்டும்.
ஆத்மாவுக்கு ஆத்மாவே பந்து அல்லவா? ஆத்மாவே ஆத்மாவுக்குச் சத்துரு.
65 ) எவனால் தன்னாலேயே தன்னுடைய ஆத்மா வசம் செய்யப்பட்டதோ, அவனுடைய ஆத்மாவுக்கு
ஆத்மாவே (அவனே) பந்து. அந்த ஆத்மாவே நிலையான பந்து; அந்த ஆத்மாவே நிலையான சத்ரு.
67 )ஓ! அரசரே! பலமில்லாத கண்களுள்ள வலையினால் மூடப்பட்ட இரண்டு பெரிய மீன்கள்
அந்த வலையை அறுப்பது போலக் காமமும் குரோதமும், சிறந்த அறிவை நாசஞ் செய்கின்றன.
68 )இவ்வுலகில் எவன் தர்மார்த்தங்களை நன்றகத் தெரிந்துகொண்டு (யுத்த) ஸாதனங்களை அடைகிறானோ,
பூர்ணமான ஸாதனங்களுள்ள அவன் எப்பொழுதும் ஸுகமாக விருத்தி அடைகிறான்.
69 )எவன் உள்ளே யிருப்பவைகளும் மனத்தின் விகாரங்களுமான ஐம்புலங்களான பகைகளை வெல்லாமல்
மற்றப்பகைகளை வெல்ல விரும்புகிறானோ அவனைப் பகைவர்கள் அவமதித்து விடுகிறார்கள்.
70 ) மஹாத்மாக்களான அரசர்கள் இராஜ்யத்திலுண்டான மோகங்களாலே, இந்த்ரியங்கலை வசஞ் செய்யாததால்,
தங்கள் காமங்களால் நிர்ப்பந்திக்கப்பட்டவர் களாகக் காணப்படுகிறார்களல்லவா?
71 )பாவம் செய்கிறவர்களை விலக்காததினால் பாபமில்லாதவர்களுக்கும் சேர்க்கையினால் ஸமமான சிக்ஷை ஏற்படுகிறது.
உலர்ந்த விறகுடன் சேர்ந்த ஈரவிறகும் எரிக்கப்படுகிறது. ஆகையால் பாவிகளுடன் சேர்க்கையை அடையக் கூடாது.
72 )தன்னைச் சேர்ந்தவைகளும் கிளம்பினவைகளும் ஐந்து பயனுள்ளவைகளுமான
ஐந்து பகைகளைத் தன்வசம் செய்யாத மனிதனை ஆபத்தானது விழுங்குகிறது.
73 ) அஸுயையில்லாமை, நேர்மை, சுசியாயிருத்தல், மகிழ்ச்சி, இன்சொல், அடக்கம், மெய்ம்மை, சஞ்சலமில்லாமை
ஆகிய இவைகள் துஷ்டமனமுள்ளவர்களுக்கு உண்டாகமாட்டா.
74 )ஓ! பாரதரே! ஆத்மஜ்ஞானம், அநாயாஸம், பொறுமை, தர்மத்தை நித்தியமாகக் கொள்ளுதல்,
அடக்கமான வார்த்தை, அடக்கமான தானம் ஆகிய இவைகள் கீழான மனிதர்களிடம் இரா.
75 )நிந்தைகளாலும் அபவாதங்களாலும், அறியாதவர்கள் பண்டிதர்களைத் துன்பம் செய்கிறார்கள்.
சொன்னவன் பாவத்தைக் கிரஹிக்கிறான். பொறுக்கிறவன் விடுபடுகிறான்.
76 )தீயவர்களுக்குப் பிறரைப்பீடித்தல் பலம், அரசர்களுக்குச் சிக்ஷைசெய்வது பலம்.
மாதர்களுக்கு கணவர் பணிவிடை பலம். குணசாலிகளுக்குப் பொறுமை பலம்.
77 )ஓ! அரசரே! வாக்கை அடக்குவது செய்ய மிக அரியதாக ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது.
அர்த்தமுடையதாகவும் விசித்திரமாகவும் அதிகமாகப் பேசுவதற்கு முடியாது.
78 ) நலமாகச் சொல்லப்பட்ட வார்த்தையானது பலவிதமான நன்மையைக் கொடுக்கிறது.
ஓ! அரசரே! அந்தச் சொல்லே கெடுதியாகச் சொல்லப்பட்டால் கெடுதியின் பொருட்டு ஏற்படுகிறது.
79 ) பாணங்களால் உண்டான புண்ணும், கோடாலியால் வெட்டப்பட்ட காடும், (மாறி) ஆறியும் துளிர்த்தும் விடுகின்றன.
வாக்கினாலே கெடுதியாகச் சொல்லப்பட்ட நிந்தையாகிற சொற் புண்ணானது ஆறுகிறதில்லை.
80 ) காது போன்ற பிடியுடைய காணி யென்கிற பாணங்களையும் குண்டுகளையும் நாராசங்களையும்
சரீரத்திலிருந்தும் பிடுங்கி யெடுக்கிறார்கள். வாக்காகிற சல்லியமோ எடுக்க முடிகிறதில்லை.
அது இருதயத்தில் ஊன்றிப் போகிறதன்றோ?
81 ) எவைகளால் அடிக்கப்பட்டவன் இராப்பகல் துக்கிக்கிறானோ அந்தச் சொற்களாகிற அம்புகள்
வாயிலிருந்தும் வெளியில் வருகின்றன. அவைகள் பிறனுடைய மர்மங்களைத் தவிர மற்றவிடங்களில் விழுகிறதில்லை.
பண்டிதனானவன் அவைகளைப் பிறர்களின் பொருட்டு விடக்கூடாது.
82 )தேவர்கள் எந்த மனிதன்பொருட்டு அவமானத்தைக் கொடுக்கிறார்களோ
அவனுடைய புத்தியைக் குறைக்கின்றார்கள். அவன் கீழானகார்யங்களைப் பார்க்கிறான்.
83 ) புத்தி கலங்கி நாசம் நேரிட்ட ஸமயத்தில் அநீதியானது நீதிக்கு நிகராகி மனத்தைவிட்டு விலகுகிறதில்லை.
84 ) ஓ! பரதஶ்ரேஷ்டரே! உம்முடைய புத்திரர்களுடைய அப்படிப்பட்ட இந்தப் புத்தியானது
பாண்டவர்களிடம் விரோதத்தினால் வியாபிக்கப்பட்டிருக்கிறது. இவர்களை நீர் அறியவில்லை.
85-86-87) ஓ! திருதிராஷ்டிரரே! ராஜேந்திரரே! எல்லா லக்ஷணங்களும் பொருந்தினவனும்,
மூவுலகத்திற்கும் அரசனாகக் கூடியவனும், உம்முடைய எல்லாப் புத்திரர்களுக்கும் மேற்பட்டவனும்,
பாக்கியத்தால் கௌரவிக்கப்பட்டவனும், வல்லமையும் மிக்க அறிவுடையவனும், தர்மார்த்தங்களின் உண்மையை அறிந்தவனும்,
தர்மங்களை வஹிக்கின்றவர்களில் சிறந்தவனுமான இந்த யுதிஷ்டிரன்,
தயையினாலும், குரூரத் தன்மை யில்லாமையினாலும், உம்மிடமிருக்கும் குருத்தன்மையினாலும்,
உம்மாலுண்டான பல கிலேசங்கலைப் பொறுக்கிறான்.
உமக்குச் சிஷ்யனான இந்த யுதிஷ்டிரன் அரசனாக இருக்கட்டும்” என்று விதுரர் சொன்னார்.
——————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ விதுரர் மஹா மதி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply