ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் -20–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை சாரம் —

வானவர் தங்கள் கோனும் மலர் மிசை அயனும் நாளும்
தே மலர் தூவி ஏத்தும் சேவடிச் செங்கண் மாலை
மான வேல் கலியன் சொன்ன வண் தமிழ் மாலை நாலைந்தும்
ஊன மதி இன்றி வல்லார் ஒளி விசும்பு ஆள்வர் தாமே-20-

பதவுரை

வானவர் தங்கள் கோனும்–தேவேந்திரனும்
மலர்மிசை அயனும்–பூவிற் பிறந்த பிரமனும்
நாளும்–நாள் தோறும்
தே மலர் தூவி–தேன்மிக்க புஷ்பங்களைப் பணிமாறி
ஏத்தும்–துதிக்கும் படியாக வுள்ள
சே அடி–செவ்விய திருவடிகளை யுடையனாய்
செம் கண்–செந்தாமரை போன்ற திருக்கண்களை யுடையனான
மாலை–ஸர்வேச்வரனைக் குறித்து,
மானம் வேல்–பெருமை தங்கிய வேற் படையை யுடையரான
கலியன்–திருமங்கையாழ்வார்
சொன்ன–அருளிச்செய்த
வண் தமிழ் – செந்தமிழினாலாகிய
மாலை நாலைந்தும்–இப்பாசுரமிருபதையும்
ஊனம் அது இன்றி–குறையொன்று மில்லாமல்
வல்லார் தாம்–கற்று வல்லவர்கள்
ஒளி விசும்பு–பரமபதத்தை
ஆள்வர்–ஆளப்பெறுவர்

தேவர்கட்கு இறைவனான இந்திரனும் திருநாபிக் கமலத்தில் தோன்றிய நான் முகக் கடவுளும்
இடைவிடாது நன் மலர்களைப் பணிமாறி ஸ்துதிக்கப் பெற்றிருக்கின்ற
செங்கண்மால் விஷயமாகக் கொற்ற வேற் பரகாலன் கலியன் சொன்ன இவ்விருபது பாசுரங்களையும்
ப்ரயோஜநாந்தரங்களை விரும்புதலாகிற ஊனமின்றியே அநந்யப்ரயோஜநராய்க்
கற்று வல்லவர்கள் தெளிவிசும்பான திருநாட்டை ஆளப் பெறுவர்களென்று
பயனுரைத்துத் தலைக் கட்டினாராயிற்று.

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading