ஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ உத்தர காண்டம்–111–ஸ்ரீமத் ராமாயண பலஸ்ருதி: (ஸ்ரீமத் ராமாயண பலஸ்ருதி) —

அத்தியாயம் 111 (648) ஸ்ரீமத் ராமாயண பலஸ்ருதி: (ஸ்ரீமத் ராமாயண பலஸ்ருதி)

உத்தர சரித்திரத்தோடு, ராமாயணம் என்ற இந்த மகா காவ்யம் நிறைவு பெறுகிறது.
இதை இயற்றிய வால்மீகி முனிவரை ப்ரும்மாவும் போற்றினார்.

எந்த பரப்ரும்மம் உலகம் முழுவதும் வியாபித்து நிற்கிறதோ, சராசரத்தையும் தன்னுள் அடக்கிக் கொண்டு விளங்குகிறதோ,
அந்த விஷ்ணு பழையபடி ஸ்வர்க லோகத்தில் ஸ்திரமாக வாசம் செய்யலானார்.

தேவர்களும், சித்தர்களும், கந்தர்வர்களும் பரம ரிஷிகளும் நித்தியம் மகிழச்சியோடு ராமாயண கதையைக் கேட்கின்றனர்.
இந்த ஆக்யானம்-சரித்திரம், ஆயுளையும், சௌபாக்யத்தையும் தர வல்லது.
பாப நாசனம். ராமாயணம் வேதத்திற்கு இணையானது. சிரார்த காலத்தில் அறிந்தவர்களைக் கொண்டு சொல்ல வைக்க வேண்டும்.

புத்ரன் இல்லாதவர்கள், புத்ரனை, தனம் இல்லாதவர்கள் தனம் அடைவார்கள். இதில் ஒரு பதமாவது படித்தவர்கள்,
பல நன்மைகளை அடைவர். மனிதர்கள், தினம் ஒரு ஸ்லோகமாவது படித்தாலே, அன்றாடம் செய்யும் பாபங்களிலிருந்து விடுபடலாம்.

இதை படிப்பவர்களுக்கு, வஸ்திரம், பசு, ஹிரண்யம் முதலியவை தாராளமாக கொடுக்க வேண்டும்.
இதை படித்து சொல்பவர்கள், திருப்தியாக, மகிழ்ச்சியாக இருந்தால், சர்வ தேவதைகளும் மகிழ்ச்சியடைவார்கள்.
ஆயுளைத் தரும் இந்த ராமாயணத்தை படிப்பவர்கள், புதல்வர்கள், மற்றும் உற்றார் உறவினரோடு மகிழ்ச்சியாக உலகில் வாழ்வர்.
பரலோகத்திலும் நன்மையடைவர். விடியற்காலையில், அல்லது பிற்பகலில், கட்டுப் பாட்டுடன்,
நியமத்துடன் ராமாயணத்தை படிக்க வேண்டும். அயோத்தி நகரம் பல வருஷங்கள்
சூன்யமாகவே இருக்கும் பின் ரிஷபன் என்ற அரசன் ஆளுவான்.

இந்த கதை வருங்காலத்திற்கும், உத்தர காண்டத்தோடு சேர்த்து ஆயுளைத் தரக் கூடியது.
ப்ரசேதஸின் பிள்ளையான வால்மீகி ப்ரும்மாவின் அனுமதியுடன் இயற்றினார்.

இதன் ஒரு அத்தியாயத்தைப் படிப்பவர்கள் நூறு அஸ்வமேத யாகம் செய்த பலனை அடைவார்கள்.
இருபதினாயிரம் வாஜபேய யாகம் செய்த பலனை அடைவார்கள்.

இதைக் கேட்பவர்களும் அதே பலனை அடைவார்கள். ப்ரயாகம் முதலிய தீர்த்தங்கள், கங்கை முதலிய நதிகள்,
நைமிசம் முதலிய அரண்யங்கள், குரு ஷேத்திரம் முதலிய க்ஷேத்திரங்களுக்கு செல்பவர்களும் பெறும் பலனை
ராமாயணத்தைக் கேட்பதாலேயெ பெறுவார்கள்.

குரு க்ஷேத்திரத்தில், கிரஹண சமயத்தில் துலா பாரமாக தங்கம் தானம் செய்பவர்களும்,
ராமாயண ஸ்ரவணம்( கேட்பவர்கள்) செய்பவர்கள் பெறுவார்கள். எல்லா வித பாபங்களிலிருந்தும் விடுபடுவர்.

விஷ்ணு லோகம் செல்வார்கள். முன்பு வால்மீகியினால் இயற்றப் பட்ட இந்த காவியம், மகா கவி,
மகானுடைய வாக்கு என்ற எண்ணத்துடன் படிப்பவர்களும், வைஷ்ணவ சரீரத்தை அடைவார்கள்.

மனைவி, மக்களுடன் இனிதே வாழ்வர். செல்வம் பெருகும், சந்ததி குறைவின்றி இருக்கும்.
இதை சத்யம் என்ற நம்பிக்கையோடு, தகுதி வாய்ந்த அறிஞர்களிடம் படிக்கச் சொல்லி கேளுங்கள்.

காயத்ரியுடைய ஸ்வரூபமே இந்த ராமாயணம். செல்வம் இல்லாதவன் செல்வம் பெறுவான். படிப்பவனோ,
கேட்பவனோ, ராகவ சரித்திரத்தை எந்த வித கெட்ட எண்ணமும் இன்றி பக்தியுடன் நினைப்பவனோ,
தீர்காயுள் பெறுவான். நன்மையை விரும்புபவன் எப்பொழுதும் ராமனை தியானிக்க வேண்டும்.

மற்றவர்களுக்கு படித்துக் காட்ட வேண்டும். ரகுநாத சரித்திரமான இதை முழுவதும் படிப்பவர்கள்,
ஆயுள் முடியும் தறுவாயில் விஷ்ணு லோகம் செல்வான். சந்தேகமேயில்லை.

அவன் தந்தை, தந்தைக்குத் தந்தை, அவர் தந்தை என்ற வம்ச முன்னோர்களும் விஷ்ணு லோகத்தை அடைவார்கள்.
நான்கு வித சௌக்யங்களையும் தரக் கூடிய ராகவ சரித்திரம் இது அதனால் சற்று முயற்சி செய்தாவது தவறாமல் கேட்க வேண்டும்.

ஸ்ரீ ராமாயணத்தை ஒரு பாதமோ, அரை பாதமோ கேட்பவன் கூட ப்ரும்ம லோகம் செல்வான்.
ப்ரும்மாவால் மரியாதையுடன் வரவேற்கப் படுவான்.

இது தான் புராண கதை. எல்லோருக்கும் மங்களம் உண்டாகட்டும். இதை விஸ்தாரமாக சொல்லுங்கள்.
ஸ்ரீ விஷ்ணுவின் பலம் பெருகட்டும். ஸ்ரீ விஷ்ணுவின் பலம் பெருகட்டும்.

————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading