ஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ யுத்த காண்டம் – –6.127–ஸ்ரீ ப4ரத்3வாஜாமந்த்ரணம் (ஸ்ரீ பரத்வாஜர் விருந்துண்ண அழைத்தல்)–

அத்தியாயம் 127 (534) ஸ்ரீ ப4ரத்3வாஜாமந்த்ரணம் (ஸ்ரீ பரத்வாஜர் விருந்துண்ண அழைத்தல்)

பதினான்கு ஆண்டுகள் பூர்த்தியான பின், ஒரு பஞ்சமியில், லக்ஷ்மணன் தமையனான ராமன்,
பரத்வாஜாஸ்ரமம் வந்து முனிவரை நியமத்துடன் வணங்கி நின்றான்.
தவ ஸ்ரேஷ்டிரரை, தவமே தனமாக உடைய பரத்வாஜ முனிவரை வணங்கி குசலம் விசாரித்தான்.
பகவானே, இங்கு சுபிக்ஷமாக இருக்கிறதா? ஊரில் எல்லோரும் நலமா? கேள்விப்பட்டீர்களா? என்று வினவினான்.

பரதன் நல்ல விதமாக இருக்கிறானா? தாய்மார்கள் உயிருடன் இருக்கிறார்களா? ராமன் இவ்வாறு கேட்கவும்,
பரத்வாஜ முனிவர் பதில் சொன்னார். ரகு ஸ்ரேஷ்டனான ராமனைப் பார்த்து சிரித்துக் கொண்டே
பரதனா, ஜடா முடியோடு, மாசடைந்த வஸ்திரத்துடன், உன்னை எதிர் நோக்கி காத்திருக்கிறான்.
உன் பாதுகையை அரியணையில் வைத்து ராஜ்ய பாலனம் செய்கிறான். மற்றபடி எல்லோரும் நலமே.

முன்னால் வல்கலை, மரவுரி தரித்து வனத்திற்கு கிளம்பிய உன்னைப் பார்த்து வருத்தமாக இருந்தது.
லக்ஷ்மணன், சீதையுடன் ராஜ்யத்தை விட்டு, தர்ம காரியமாக கிளம்பி விட்டாய்.
தந்தை சொல்லைக் காப்பாற்ற, எல்லாவற்றையும் தியாகம் செய்து விட்டு கால் நடையாக புறப்பட்டாய்.
ஸ்வர்கத்திலிருந்து இறங்கி வந்த அமரன் போல இருந்தாய். எல்லா சுகங்களையும் நொடியில் தியாகம் செய்து விட்டு கிளம்பினாய்.

வீரனே, அதைக் கண்டு என் மனதில் கருணை நிறைந்தது. கைகேயி சொன்னதற்காக,
காட்டு கிழங்கு காய்களை புசித்துக் கொண்டு இருக்கப் போகிறாயே, எப்படி சமாளிப்பாய் என்று கவலையாக இருந்தது.
இப்பொழுது செயல் வீரனாக, மித்ர கணங்களும் உடன் வர, எதிரிகளை ஜயித்து,
பந்து ஜனங்கள் கொண்டாட திரும்பி வந்திருப்பதைக் காண சந்தோஷமாக இருக்கிறது.

ராகவா, உன் சுக துக்கங்களை நான் அவ்வப்பொழுது விசாரித்து தெரிந்து கொண்டேன்.
ஜனஸ்தான வதம் இவைகளையும் தெரிந்து கொண்டேன். தர்ம வழியில் நின்ற ப்ராம்மணர்கள்,
தபஸ்விகளுக்கு பாதுகாப்பாக இருந்தாய் என்று கேள்விப் பட்டேன்.
ராவணன், உன் மனைவியை கவர்ந்து சென்றதும், பாவம், இவள் மாசற்றவள், கஷ்டப் பட்டதும் அறிந்தேன்.
சீதையை மயங்கச் செய்ய மாரீசன் வந்தானாமே. கபந்தனை சந்தித்ததையும் கேள்விப் பட்டேன்.

பம்பா நதியை நோக்கிச் சென்றதும், சுக்ரீவனுடன் சக்யம் செய்து கொண்டதும், வாலி வதம் செய்யப் பட்டதும்,
வைதேஹியைத் தேடிச் சென்றதும், வாதாத்மஜனின் அரிய செயலும், வைதேஹியை கண்டு கொண்டு வந்து சொன்னதும்,
சமுத்திரத்தில் நளன் சேதுவைக் கட்டியதையும், லங்கையை எரித்ததையும், வானர சைன்யம் சந்தோஷமாக
இந்த போரில் ஈ.டுபட்டதாகவும் அறிந்தேன். ராவணன் தேவர்களுக்கு உறுத்தலாக இருந்தான்.
அவன் புத்ர, பந்துக்கள், மந்திரிகள் படை வீரர்களுடன் வாகனங்களோடு யுத்தத்தில் வதம் செய்யப் பட்டதாகவும் அறிந்தேன்.

தேவர்கள் வந்து உன்னைக் கண்டதும், வரங்கள் தந்ததும், எனக்குத் தெரிய வந்தது.
என் தவ வலிமையால் எல்லா விவரங்களையும் தெரிந்து கொண்டேன். நானும் உனக்கு ஒரு வரம் தருகிறேன்.
சஸ்திரங்களை பூர்ணமாக அறிந்தவனே, இன்று இங்கு தங்கி என் ஆசிரமத்தில் விருந்தை ஏற்றுக் கொள்.
நாளை அயோத்யா போகலாம். என்றார். அரச குமாரனும் அவருடைய சொல்லைத் தலை வணங்கி ஏற்றுக் கொண்டான்.

அப்படியே ஆகட்டும் என்று சொல்லி, வரம் தருவதாக சொன்னீர்களே, என்று வினவினான்.
தனக்கு வேண்டியதை யாசித்தான். பருவ காலம் இல்லாத சமயத்திலும், அயோத்தி செல்பவர்களுக்கு
வழியெல்லாம் மரங்கள் பழங்கள் நிறைந்தும், தேன் போல ருசியுடைய பழங்கள் எல்லா காலங்களிலும் கிடைக்க வேண்டும்.

அம்ருதம் போன்ற பல விதமான பழங்கள் எப்பொழுதும் கிடைக்க வேண்டும்.
அயோத்தி செல்லும் யாத்ரிகர்கள் இவற்றை எப்பொழுதும் பெற வேண்டும் என்று வேண்டினான்.
முனிவரும் அப்படியே ஆகட்டும் என்று வாக்களித்தார். உடனே அங்கு ஸ்வர்க லோகத்துக்கு சமமான மரங்கள் தோன்றின.

பழம் இல்லாத மரங்களும் பழங்கள் நிறைந்து விளங்கின. புஷ்பமே இல்லாத மரங்கள் பூத்துக் குலுங்கின.
வாடி உலர்ந்து இருந்த மரங்கள் பசுமை நிறைந்து காணப்பட்டன.
மலைகளில் சரிவுகளில் மதுவைச் சொரியும் பல மரங்கள் நிறைந்தன.
மூன்று யோஜனை தூரம் அயோத்தி செல்லும் வழி பூராவும் வளம் நிறைந்து காணப்பட்டது.
வானரங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. திவ்யமான பல விதமான பழங்கள் உண்ண கிடைத்தன.
இஷ்டம் போல சாப்பிட்டு மகிழ்ந்தன. ஆயிரக் கணக்கான வானரங்கள் மனம் நிறைந்து மகிழ்ச்சியோடு ஸ்வர்கமே சென்றது போல மகிழ்ந்தன .

————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading