அபய ஹஸ்தம் காட்டி அழகிய மணவாளன் சதா ஸ்ரீரங்கத்தில் வாழ்கிறான்.
அவனுக்கு அதனால் ”அபயப்ரதராஜன்” – அன்பர்களுக்கு அபயம் அளிப்பதில் ப்ரதானமானவன் என்று திருப்பெயர் உள்ளது.
ஸ்ரீராம நவமி தொடங்கி ஆரம்பித்த அரங்கேற்றம் தாயார் சன்னிதி முன் உள்ள ஆறு தூண் மண்தபத்தில்
ஓராண்டு அரங்கேற, அழகிய மணவாளன் தன் உத்சவத்தை நிறுத்திக் கொண்டான்.
யுத்த காண்ட முடிவில் சீதையை த்ரிஜடை அலங்கரிக்கும் செய்யுள் அழகைக் கேட்ட ஸ்ரீரங்க நாச்சியார்,
அர்ச்சகர் மேல் ஏவி வந்து, தன்னை சகல ஆபரணங்களாலும் அலங்கரித்து, பல்லக்கில் இருத்தி வாசல் வரை
இட்டுச் செல்ல ஆணை இட, அவ்வாறே புறப்பாடும் ஆக, ஜனங்கள் காண, அவள்,
”கம்பரே! சீதையாய் இருந்த போது கூட நான் இவ்வளவு அழகாக இல்லை! உன் தமிழ் என்னை ஈர்க்கிறது,
மீண்டும் நீ வர்ணிக்கும் அழகில் சீதையாக மாற மனம் விரும்புகிறது….நீ கவிச்சக்ரவர்த்தி ஆகுக!” என்று பட்டம் அளித்தாள்.
உலகின் மற்ற இலக்கிய மேதைகளுக்கு எல்லாம் மன்னர்களும் மக்களும் பட்டம் அளித்தனர்,
கம்பனுக்கோ சாட்சாத் ஸ்ரீமஹாலக்ஷ்மியே பட்டம் அளித்தாள்.
கோயில்
கோ + இல் = கோயில் [அரசனின் வீடு]
அயோத்தியர்க் கோன் ஸ்ரீராமனின் வீடு, அவனது குலதெய்வம் ஸ்ரீரங்கநாதனின் வீடு.
ஸ்ரீ – மஹாலக்ஷ்மி
ரங்கம் – பொதுவிடம், உலகம்
”வெள்ளத்து அமர்ந்த வித்து” என்று கோதை இவரையே பதிவு செய்தாள்.
1960களில் மிகக் கொடிய மூலஸ்தானத் தீ விபத்து உண்டாகி மூலவர் திருமேனி அதிகம் சேதம் ஆனது.
அப்போது அன்றைய நேபால் அரசன் பல ஆயிரம் சாலக்ராமக் கற்களை அனுப்பி மீண்டும் ரங்கனைப் புதுப்பிக்க உதவினார்.
ஸ்ரீரங்கத்தில் மூலவருக்குப் ”பெரிய பெருமாள்” என்று பெயர்.உத்சவருக்கு அழகிய மணவாளன், நம் பெருமாள் என்று பெயர்கள் .
மூலவரை ஸ்ரீக்ருஷ்ணனாகவும் நம்பெருமாளை ஸ்ரீராமனாகவும் பாவிப்பது சமூஹ வழக்கம்.
எட்டு மனைவியர் மகிழும் அழகிய மணவாளன்
ஹ்ருதய லக்ஷ்மி, ஸ்ரீதேவி, பூமி தேவி, ஸ்ரீரங்கநாயகி, ஸ்ரீஆண்டாள் [பாண்டிய குல வல்லி],
சோழ குலவல்லி உறையூர்க் கமலவல்லி, குலசேகர ஆழ்வாரின் மகன் சேரகுல வல்லி, துலுக்க நாச்சியார்
பீபீ சுரதானி பேகம் ஆகிய எட்டு மனைவியர் அழகிய மணவாளனுக்கு உண்டு.இவர்கள் எட்டு லக்ஷ்மிகளின் குறியீடே.
ப்ரயோகச் சக்கரம்
இவரது சக்கரம் – சுழலும் பாவனையில் இருக்கும்.இதற்கு ப்ரயோகச் சக்கரம் என்று பெயர்.
ரங்கனுக்கும் அழகருக்கும் மட்டுமே இவ்வடிவம் காணப்படுகிறது.
கஸ்தூரி கமழும் திருநுதல்
வெள்ளிக்கிழமை தோறும் அழகிய மணவாளன் கஸ்தூரித் திலக நாமம் சார்த்திக் கொள்வார்.
மூலஸ்தானத்தில் இடது பக்கம் அவருக்கு அதைத் தயாரிக்கத் தனி அறை உண்டு,
அவரது திவ்ய ஆபரணங்களுக்கும் ஆடைகளுக்கும் தனி அறை உண்டு.
தைலப் பூச்சால் பாதுகாப்பு
ஆண்டுக்கு ஒரு முறை மிக உயர்ந்த அகில், சந்தனம், சாம்பிராணி ஆகியன அரைத்துக் காய்ச்சிய தைலம் மூலவருக்குப் பூசிமெழுகப்படும்.
வாரம் தோறும் வெள்ளி அன்று புனுகுத் தைலம் பூசிமெழுகப்படும்.அன்று முகத்தை மட்டும் தான் காட்டுவர்.
கடு சர்க்கரை என்ற மூலிகையால் உருவான திருமேனிக்கு இத்தகைய மெழுகல் அவசியம்
மந்த ஹாஸப் புன்னகை
காலத்தால் தேய்ந்து போன முகம், குழி விழுந்த புன்னகை பூத்த இதழ்கள் அவரது trade mark.
லக்ஷ்மணன்
எப்போதும் உடன்பிரியாமல் இருக்கும் தமையன் லக்ஷ்மணனாய் அவரது ஆதிசேஷக் குடை.
பரதன்
ரங்கனின் ஸ்ரீபாதக்குறியீடுகளான சடாரியே
சத்ருகனன்
செங்கோல் வடிவில் அவனை வணக்குவர்.
”செங்கோலுடையத் திருவரங்கச் செல்வனார்” என்று ஆண்டாள் பதிவு செய்த பொன் செங்கோல்.
தசரதன்
அழகிய மணவாளன் மூலஸ்தானத்தில் அமரும் இருக்கை ”தசரத மடி பூபாலம்” எனப்படும்.
[”தசரதன் தன் மகனை மடி இருத்தி அடிக்கடி உச்சிமுகர்ந்து ஆனந்திப்பான்” – வால்மீகி]
கெளசல்யா தேவி
மணவாளன் உண்ணும் வெள்ளிக் கிண்ணம் கெளசல்யா என்ற பரிபாஷையால் அழைக்கப்படும்.
அதில் உண்ணும் போது கண்ணாடி காட்டி நிலாவை ராமனுக்கு அவள் காட்டிச் சோறூட்டுவதாக வால்மீகியும் துளஸிதாஸும் கூறுவர்.
கைகேயி
கைகேயின் சார்பில் ”பொன் அரங்கம்” மூலஸ்தானத்தின் வெளியில் உள்ளது.
அதில் அவள் சந்தன மரத்தால் ஆன அலங்காரப் பந்தலையும் தன் குலமூர்த்திக்கு அளித்தாள்.
கைகேயியை மன்னிக்கும் வகையில் தானோ அதிகம் மணவாளன் இம்மண்டபத்தில் அபிஷேகம் காண்பன்.
நவரத்ன கவசம்
வைகுண்ட ஏகாதசி அன்று அதிகாலையில் நவரத்ன கவசம் சார்த்தப்படும்.
விலை மதிக்கவே இயலாத மணிகள் அனைத்தும் லவ-குசர்களின் இஷ்வாகு குல க்ரீடத்தில் இருந்ததே.
மார்பில், ராவணனை வதம் செய்த பின் அவனது அந்தப்புரக் கதவில் இருந்த நீலநாயகக்கற்களை ராமன் கொண்டு
வந்து தன் மணிமார்பில் வீரப்பதக்கமாகச் சார்த்தினான்.பின்னர் அதை அழகிய மணவாளனுக்கு அளிக்க,
தானே ஸ்ரீராமன் என்ற தோரணையில் நித்தம் நீலநாயகப் பதக்கம் தாங்கும் ஸ்ரீ உறையும் மார்பனாய் விளங்குகிறார்.
ரங்க விமானப் பதக்கம் –
சில சமயம் ரங்கவிமானப் பதக்கம் சார்த்திக் கொள்வார்.அது ஸ்ரீரங்க விமானத்தின் miniature.
தன் குல தெய்வத்தின் உருவம் பொதிந்த பதக்கத்தை மன்னர்கள் அணிவது மரபு.
அதன்படி ரங்க விமான பதக்கத்தை இஷ்வாகு மன்னர்கள் பயன்படுத்தினர்.
சோழன் தர்மவர்மா காவிரிக் கரையில் கோயிலை அமைக்க இது உதவியது.
வைரமுடி, முத்துக் கொண்டை, சோழன் காசு மாலை என எத்தனை எத்தனை ஆபரணங்கள்.
கன்னட அரசன் விஷ்ணு வர்த்தனன் அளித்த கொடகு தேசத்துச் சந்த்ர ஹாரம் அடிக்கடி இவன் சார்த்துவன்.
இவற்றுள் பல ஸ்ரீராமன் – சீதை வாழ்நாளில் பயன்படுத்தியவை.
ஸ்ரீரங்க நாயகி உருவ-ஆடை-ஆபரண வைபவம்
ராதை அளித்த முத்து மாலை
ராதைக்குக் கண்ணன் காதல் பரிசாய், மதுராவில் கம்சனின் குவலாயபீட யானையைக் கொன்று அதன் தந்தத்தில்
சுற்றி இருந்த உயர்ந்த முத்துக்களைக் கோர்த்து அளித்தான்.அதை அவள் தாயாருக்குப் பின்னர் அனுப்பிச் சார்த்தினாள்.
பட்டத்து ராணி மாங்கல்யம்
இஷ்வாகு பட்டத்து அரசிகள் அணியும் உயர் குல ராஜமகிஷி மாங்கல்யமே இன்றும் தாயாரின் ஸ்தனங்களை,
இல்லறத்தின் தர்மத்தைக் குறித்து மின்னுகிறது.
இஷ்வாகு குலப் பதக்கச் சங்கிலி
ஸ்ரீராமன் அணிந்திருந்த இஷ்வாகு குலப் பதக்கச் சங்கிலியைத் தாயார் அணிகிறாள்.
ஆரண்ய காண்ட மனோச்சிலைப் பொட்டு
காட்டில் வாழ்ந்த காலத்தே, மனோச்சிலை என்ற வாசனை மூலிகையை அரைத்து ஸ்ரீராமன் தன் தேவிக்கு த்ருஷ்டிப் பொட்டு வைப்பானாம்.
அதே பாவனையில் இன்றும் தாயார் த்ருஷ்டிப் பொட்டு வைத்துக் கொள்கிறாள்.
நாசிகாபரணங்கள்
சீதையின் வைர மூக்குத்தியும் உயர் ரக முத்து பேசரியும் இன்றும் தாயாரின் நாசியில் மின்னுவதைக் காண்க.
சீதையின் நீண்ட கருங்கூந்தல் ஜடைவளை தான் நவராத்ரியில் தாயாருக்குச் சார்த்தப் படும்.
சீதையின் கைவளைகள் சில இன்றும் நவராத்ரியில் ஏழாம் திருநாள் திருவடி சேவையின் அலங்காரத்தின் போது தாயார் அணிவாள்.
[ஆண்டாளின் ஆறு பொன் வளைகளைக் கள் அழகர் தன் தோள்களில் நித்தம் சார்த்தி இருப்பதை அழகர் கோயில் போனால் காண்க]
சுகந்த களாபச் சந்தனம்
இவள் ஸ்தனம் ஸ்பரிசித்த சுகந்த களாபச் சந்தனம் காலையில் அழகிய மணவாளன் சார்த்துவார்.
அன்று மாலை அவரது மணிமார்ப்புச் சந்தனம் தாயார் ஸ்தனத்தில் கம்பீரமாய் அமரும்.
செண்பக ப்ரியை
சீதைக்கு செண்பகம் மிகவும் ப்ரீதம்! [ஆரண்யத்தில் ரகுராமன் தன் மனைவிக்கு ஆசை ஆசையாய் செண்பக மலர்கள்
கொய்து சரம் தொடுப்பான் – வால்மீகி] அதனால் தான் மாங்கல்யத்துடன் அதைச் சுற்றி இன்றும் செண்பகத்தோடு சார்த்துவார்கள்.
குடும்ப ஒற்றுக்கும் மாங்கல்ய பலத்துக்கும் இன்றும் தம்பதிகள் செண்பகத் தோட்டுச் சரம் வாங்கிச் சார்த்துவர்.
அஷ்ட ஐஸ்வர்யப் பதக்கம்
மனித வாழ்க்கைக்குத் தேவையான எட்டு செல்வங்களின் குறியீடான அஷ்ட ஐஸ்வர்யப் பதக்கம் தாயாரின் தாலியுடன் விளங்குவதைக் காண்க.
தாயார் சுயம்பு.மிக அதிகமான சேதாரம் அவள் திருமேனியில் இருக்கிறது.
அதனால் வருடத்தில் ஐந்து முறைதான் அவளுக்கு அபிஷேகம்.
அவற்றுள் பங்குனி உத்திரத்தன்று, நள்ளிரவில் அவள் அழகிய மணவாளனுடன் சேர்த்தித் திருமஞ்சனம் காண்பாள்.
அன்று தான் அவள் நீராட்டத்தைக் காண முடியும்.
சீதையின் அந்தப்புரத்தில் இருந்த ஊஞ்சல், வஸந்த மண்டபம், சேர்த்தி இருக்கை, கொலு மண்டபம், துளசி மாடம்,
கொற்றவை என அனைத்தும் replica ஆக ஸ்ரீரங்கநாச்சியாரின் சன்னிதியில் இடம் பெறுவதைக் காண்க.
திருவடி சேவை
நவராத்ரி ஏழாம் நாள் மாலை இவளது பாதங்கள் தெரிவது போல் அலங்காரம் ஆகும்.
ஸ்ரீராமன் போன வழியில் இவள் சென்றாள் என்பதை அது உணர்த்தும்.
சந்த்ர புஷ்கரணியும் பழங்கால மருத்துவக்கூடமும்
அயோத்யாவின் அரண்மனையின் ரீ மேக்கிங் தான் ஸ்ரீரங்கம்.வால்மீகி பதிவு செய்த அதே தோற்றத்துடன் கோயில் அமைகிறது.
சீதை – ராமனின் அந்தப்புரங்களுக்கு இடையே குளமும், மகிழமரமும் ஊஞ்சலும் இருந்ததை வால்மீகி
சுட்டுவதைக் கருத்தில் கொண்டே இன்றும் பெருமாள்-தாயார் சன்னிதிகளுக்கு இடையே சந்த்ர புஷ்கரணி அமைகிறது.
இதன் கரை எதிரில் உள்ள தந்வந்த்ரி சன்னிதியில் தான் காலை சுக்குக் கஷாயம் தயார் ஆகும்.
மேலும் கி.பி 10ஆம் நூற்றாண்டில் இச்சன்னிதியில் மருத்துவமனையும், அறுவை சிகிச்சைத் துறையும் விளங்கியதைக் கல்வெட்டு பகர்கிறது.
பங்குனி உத்திரம்
இந்நாளே சீதா கல்யாணம் ஆன திருநாள்.
அன்று தான் இருவரும் மதியம் சுமார் இரண்டு மணி முதல் விடிய விடிய சேர்ந்து உத்திர மண்டபத்தில் எழுந்தருள்வர்.
[”இன்று பங்குனி உத்திரம்! இன்று தான் எனக்கும் வைதேஹிக்கும் கல்யாணம் ஆனது,
எனவே அவளை மீட்க இன்றே சேது அணை கட்ட ஏற்பாடு செய்க” – யுத்த காண்டம் – வால்மீகி] – சேது பந்தனம் கட்ட ஆரம்பித்த நாள்.
வட தேசத்து பாஷை
கோயிலின் பரிபாஷையில் அக்காலம் தொட்டு அயோத்தியா பாஷா கலந்து உள்ளது.
சில பூஜைகளில் சடங்குகளில் அவ்வார்த்தைகள் இன்றும் புழக்கத்தில் உள்ளன.
டபர் – குல்லாய்
வாரியே – சற்று விலகுக
கபாய் – குளிர்கால ஷால்
நாரிசாவல் – தேங்காய்த் துருவல் கலந்த சாதம்
போக் – பத்து வகைக் காய்கறிகள் கொண்ட சாதம்
ம்ருதுசந்த் – களாப சுகந்த சந்தனம்
சமையல் அறையில் கமழும் தூய தமிழ்
அமுது – சாதம்
கறி அமுது – பொறியல்
கண் அமுது – தயிர் சாதம்
சாற்று அமுது – ரசம் சாதம்
அக்கார அடிசில் – சர்க்கரைப் பொங்கல்
கறித் திருத்தம் – காய்களை அரிதல்
மதுவூறல் – தேன்
ரங்கவிமான ரகஸியம்
திருமங்கை மன்னன் நாகப்பட்டிணம் தங்க புத்த விக்ரஹத்தை உருக்கி வேய்ந்த பொன் விமானமே
இன்றும் காணப்படும் பொன் ரங்க விமானம்.
நான்கு வேதங்கள் நான்கு கலசங்கள் – தெற்கு – வடக்கில்
ஐந்து கலசங்கள் – ஐம்பூதங்கள் – கிழக்கு – மேற்காக
ஆய கலைகள் 64கும் தாமரை இதழ்களாகக் காட்டப்படுகின்றன.
மூலஸ்தானத்தின் வெளியே காயத்ரி மந்த்ரத்தை உணர்த்தும் வகையில் அதன் 24 சப்தங்களைக் கொண்ட 24 கற்றூண்கள் உள.
அழகிய மணவாளன் உத்சவத்துக்குக் கிளம்பும் போது அருகில் உள்ள விபீஷணனுக்குச் சொல்லியபின்
அவன் சன்னிதி வாசலில் தன் மூலஸ்தான சாவியை வைத்து விட்டே வெளியேறுவார்.அருகில் சுக்ரீவன் இருக்கிறார்.
மூலஸ்தானத்தைச் சுற்றி மொத்தம் 27 ராமர் சன்னிதிகள் உள்ளன.
தேவகி வசுதேவருடன் ஸ்ரீக்ருஷ்ணன் இவ்வூரை தரிசித்தான்.அவர்தம் சன்னிதி அர்ஜுன மண்டபத்தில் உள்ளது.
நெற்களஞ்சியம்
சீதையின் அரண்மனைக்கு அருகில் தான் உணவுக்கூடம் அமைந்திருந்ததைக் கருத்தில் கொண்டு
தாயார் சன்னிக்குப் போகும் வழியில் மேற்குப் புறத்தில் தான்யலக்ஷ்மி சன்னிதியுடன் கூடிய நெல் கொட்டாரம் இன்றும் செயல்படுகிறது.
அனைத்து ஜாதிகளுக்கும் இட ஒதுக்கீடு செய்த கோயில்.[வழிவழியாக இச்சாதியினரின் குடும்பங்கள் இன்றும் பணியில் உள] –
ஸ்ரீமத் ராமானுஜரின் சமூஹப் பணி.
1. குயவன் – தினமும் புதிய மண் கலங்கள் தர வேண்டும்.
2. தச்சன் – மணவாளனின் எவ்வித மரச்சாமான வேலையையும் செய்வான்.
3. தையல் காரன் – திருச்சிக்குப் போய் அவன் தான் ஆடைத்துணிகள் வாங்குவான்
4. பூந்தோட்டம் பராமறிப்பு – தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் அமைத்த வயலில் தோட்டம் இட்டு இன்றும் பராமறிக்கிறான்.
தயவு செய்து மாலைகள், பூச்சரங்கள் மணவாளனுக்கு வாங்க வேண்டாம், அவன் ஏற்பதில்லை,
ஆண்டாளின் மாலைக் குறியீடாகத் தொண்டர் அடிப்பொடி ஆழ்வாரின் தோட்டத்தில் வளரும் பூக்களின் மாலையை மட்டுமே ஏற்பன்.
கோடை விழாவின் போது மட்டும் மல்லிகை, செண்பகம், மகிழம் சரங்கள் ஏற்பன்.
5. பூமாலை கட்டுவோன் – மாலைகள், கண்ணிகள் முடிப்பான்
6. பொற்கொல்லன் – ஆனிக் கேட்டை நாளில் ஆபரணங்களையும் தங்கக் கவசங்களையும் கழற்றிச் சீரமைப்பான்
7. இரும்புக் கொல்லன் – பிற உலோக வேலைகள் செய்வான்
8. ஓவியன் – மணவாளன், தாயார் சாயும் திண்டின் மீது அலங்காரம் செய்வான்
9. இசைக் கலைஞர் – அரையர்கள், ஆழ்வார்களின் பாடல்களை, உரையுடன் விளக்கி அபிநயம் செய்வர்.
[ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிப்புத்தூர், ஆழ்வார்த்திருநகரி ஆகிய மூன்றே ஸ்தலங்களில் இவர்கள் உண்டு –
பெரிய கோயிலில் அரங்கனின் அருகிலேயே இவர்கள் சதா கைத்தாளத்துடன் இருப்பர்]
10. உழவர் – தானிய அளவு சோதிப்பான், விறகு வெட்டிகள் இன்றும் பணியில் உண்டு.
11. ஓலை வேய்வான் – மணவாளன் உத்சவம் காணும் போது ஓலைப் பந்தல் அமைப்பான், அதில் பூச்சர அலங்காரம் செய்வான்
12. கோலமிடுவோர் – தற்போது ஸ்ரீரங்கத்துப் பெண்களே இப்பணியை மேற்கொள்கின்றனர்.
13. பந்தம் தாங்குவான்
14. எண்ணெய்ச் சட்டி தாங்குவான்
15. தாம்பூலக்காரன் – வெற்றிலை பாக்கு [ஜாதிக்காய், ஏலக்காய், கிராம்பு, சீவல், பச்சைக்கற்பூரம்] கலந்து அளவாகச் சுண்ணாம்பு வைத்து மடித்து அளிப்பான்.
16. கட்டியம் சொல்வான் – மணவாளன் எழுந்தருளும் போது, மிக சத்தமாக அவன் அயோத்தியாவில் பவனி வரும் போது சொல்லும் கட்டியத்தைக் கூறுவான்.
17. பட்டி அடிப்பான் – மணவாளன் எழுந்தருள்வதற்கு முன் அயோத்யாவில் தெருக்களில் மக்களைச் சீராக நிற்க வைக்கும் படி
எச்சரிக்கை செய்பவரின் குறியீடு, மான் தோலால் ஓங்கித் தரையைத் தட்டிச் சுத்தம் செய்து
[ஜாவோ ஜாவோ – வட பாஷை] என்று கூறிச் செல்வான்.
18. களாபம் அரைப்பான் – அரபு தேசத்து, காஷ்மீரக் குங்குமப்பூ சேர்த்த சந்தனம் அரைப்பான்.
[கோடையில் ராமனின் உடை சந்தனக் குழம்பால் ஈரமாகும்-வால்மீகி.]
மணவாளனைக் கோடையில் தேஹம் முழுக்க சந்தனக் குழம்பால் பூசி மெழுகுவர்.
ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆண்டாளுக்குக் கோடையில் உடல் முழுவதும் களாப பரிமள அகில் சந்தனக் குழம்பை அப்பி மூடி
அதன் மீது ஆடை சார்த்தி, அதன் மீது பன்னீர் தெளித்து, அதன் மீது கவரி வீசுவது இன்றும் வழக்கம்.
19. செந்தூரக்குழம்பு சார்த்துவான் – [ஸ்ரீராமனின் தோளின் சீதை செந்தூரக் குழம்பு பூசி மகிழ்வாள் – வால்மீகி].
இன்றும் ஹோலி அன்று தாயார் சன்னிதியில் தயார் ஆன செந்தூரக் குழம்பு – [குலால் பொடி] இருதோள்களிலும் பூசப்படும்.
20. அலங்காரப் பட்டர் – மணவாளனைத் தொட்டு அலங்காரம் செய்பவர்கள், பூஜிக்க அனுமதி இல்லை.
21. வஸிஷ்ட குலமுனி – அயோத்யாவின் ராஜ குரு. அவரே தினமும் காலை மணவாளனுக்குப் பஞ்சாங்கம்,
அன்றாட நிகழ்ச்சிகள் என்னென்ன என்று உரக்கக் கூறுவார்.
22. கோ சாலையன் – பரி காரன் – யானைப்பாகன் –
[ஸ்ரீராமன் தினமும் காலை பசு, குதிரை மற்றும் யானைகளை மங்கலமாகப் பார்த்து தரிப்பான் – வால்மீகி]என்ற படி
இன்றும் காலையில் இம்மூன்றும் மணவாளன் முன் நிற்கச் செய்து பூஜிக்கப் படும்.கோ சாலை – பசுமாடுகள் காப்பகம்.
23. வீணைக் காரன் – [தினமும் இரவில் ஸ்ரீராமன் வீணை இசைக் கேட்டே கண்துயில்வான் – வால்மீகி]
தினமும் இரவில் எத்தனை நேரம் ஆகி உத்சவம் கழியினும் மணவாளன் வீணை இசை கேட்டே உறங்குவார்.
”வீணைக் கொடி உடைய ராவணனின் வீணை என்னைப் பாடும்” என்று ஸ்ரீராமன் சபதம் செய்வதை அத்யாத்ம ராமாயணம் கூறும்.
அதன்படி ராவணன் தானே வீணை இசைத்து அடிமை ஏவல் செய்வதாக விபீஷணன் ஏற்பாடு செய்ததாகவும் கருத இடமுண்டு.
24. குலப்பாவத்தைக் கொன்ற ஈரம் கொல்லி – எத்தனை அழகான தமிழ்ப்பெயர் பார்?!ஈரத்தைக் கொல்பவன் – வண்ணான்.
அபிஷேகம் ஆகித் தீர்த்தம் கைக்கொண்டு சுவைத்த வண்ணான், ”இவரே நம்பெருமாள்” என்று
உரக்கக் கூறியதால் அன்று முதல் அவர் நம்பெருமாள் ஆனார்.
குழந்தைக்குக் குளிப்பாட்டுவதை விட மென்மையாக மணவாளனை அபிஷேகத்தின் போது தொடுவர்,
மிகத் தொன்மையான மேனி அல்லவா, பல கலசத் தீர்த்தங்கள் பாதாரவிந்தங்களிலேயே ஊற்றப்படும்.
களாபச் சந்தனம், கஸ்தூரி மஞ்சள் கலந்த வெது வெதுப்பான நீரில் தான் மணவாளன் குளிப்பான்.
திருமஞ்சனக் கைலி
[ஸ்ரீராமன் சிவப்புக் கட்டம் போட்ட பருத்தித் துணியைக் கட்டித் தான் நீராடுவான் – வால்மீகி] –
இன்றும் மணவாளன் அதே மாதிரித் துணியைத் தான் உடுத்துவது வழக்கம்,
அபிஷேகம் ஆனபின் ஈரம் கொல்லி துணிகளை எடுத்துச் சென்று விடுவான், அவனுக்கு இன்றும் தீர்த்தம் தரப்படுகிறது.
சில வகை ஆடைகள்
a. இரவுகளில் மணவாளன் தட்டாடை – அதாவது நாம் கட்டுவது போல் லுங்கிச்சேலை உடுத்துவான்.
b. பருவகாலத்துக்கு ஏற்ப ஆடைகள் மாறும்.கோடையில் அதிகம் பட்டு கிடையாது.மெல்லிய பருத்தி ஆடைகளே தரப்படும்.
c. குளிர் காலத்தில் வெல்வெட், கம்பளி ஆகியன ஷால், குல்லாய், கையுறை என அணிவிக்கப்படும்.
d. குதிரை வாஹனம் அன்று மத்திய ப்ரதேஷ் பாணியில் குர்த்தா அணிவான்.
e. சில நாட்களில் ராஜஸ்தான் பாணியில் குர்த்தாச்சேலை அணிவதும் உண்டு.
f. பொதுவாக ஆறு முழ வேட்டியில் பஞ்ச கச்சம், இடுப்பில் அதன் மீது சுற்றிய இரண்டு முழ உத்தரீயத் துண்டு,
யோக வேட்டி எனப்படும் மேல் துண்டையே மணவாளன் அணிவான்.
g. ஜிகு ஜிகு சரிகை போட்ட அடர்த்தியான நிறங்கள் கொண்ட வடதேசம் துணி வகைகள் அதிகம் அணிவான்.
என்ன இருந்தாலும் அவன் அயோத்யாவில் வாழ்ந்தவன் அல்லவா?
h. வசந்த காலத்தில் புஷ்ப அங்கியும் அதன் மீது களாபச் சந்தனமும் பூசிக் குளிரக் குளிர நடு வீதிகளில் நின்று பானகம் லெமன் குடிப்பான்.
ஹோலி அன்று வெள்ளை வஸ்த்ரம் அணிவான், அதன் மீது செந்தூரப்பொடிகளைத் தூவிக் கரை ஏற்படுத்தி விடுவர்.
i. சித்திரை அக்னி நக்ஷத்ர வேளையில் தினமும் இருவேளை அபிஷேகம் உண்டு,
மாலையில் அயோத்யாவில் தன் மாளிகையில் உள்ளதைப் போல் நீர் நிரம்பிய சிறு மண்டபத்தின் நடுவில்,
வெட்டிவேர்ப் பந்தலில், பன்னீர் தெளிக்க அது A.C போல் குளிரும், அதனுள் மிக மிக மெல்லிய பருத்தி ஆடை அணிந்து
இளநீர் குடிக்க அமர்வான்.[வசந்த மண்டபம்]
j. மிக்க உஷ்ணம் இருப்பின், மிகக் குளிர்ந்த நீரால் பாதத்துக்கு மட்டும் இரவிலும் அபிஷேகம் உண்டு.
[ஏகாதசி, அமாவாசை, ரேவதி [ஸ்ரீரங்கனை அயோத்யாவில் இஷ்வாகு குலம் ப்ரதிஷ்டித்த நக்ஷத்ரம்,
சில உத்சவ வேளைகளில் மட்டும் அபிஷேகம் உண்டு.]
k. உத்சவம் முடிந்து மூலஸ்தானம் சேர்ந்ததும்
[அயோத்யாவில் ஸ்ரீராமன் நகர்வலம் கண்டு வந்தால், சீதை பாதம் பிடித்து ஒத்தடம் செய்வாள் – வால்மீகி]
இளஞ்சூட்டு நீரால் பருத்தித்துண்டு கொண்டு மென்மையாக மணவாளன் ஒத்தடம் கொள்வது இன்றும் வழக்கம்.
தீபாவளியில் மணவாளன்
ஸ்ரீராமனும் சீதையும் பதினான்கு ஆண்டுகள் கழித்து ஐப்பசி அமாவாசை மாலை அயோத்யாவுக்குள் நுழைந்தனர்.
அதையே தீபாவளி என இன்றும் மத்திய – உத்திர ப்ரதேஷ் மக்கள் கடைப்பிடிக்கிறார்கள்.
ஸ்ரீராமன் காலத்தில் ரங்கன் தென்னாடு வந்தபின் ஆண்டு தோறும் தன் குலத்துடன் ஸ்ரீரங்கம் வந்தான்.
தீபாவளி அன்று அதிகாலை மணவாளன் பசும் நெய் தேய்த்து, சீகக்காய் அரைத்துச் சேர்த்து அபிஷேகம் செய்து கொள்வதும்,
புத்தாடை அணிந்து மத்தாப்புக் கொளுத்தியபின் ஸ்ரீரங்கவாசிகள் எண்ணெய்க் குளியல் செய்வதும் இன்றும் வழக்கம்.
மணவாளன் தீபாவளி ஸ்நானம் செய்தான் என்பதை உணர்த்த பெரிய வேட்டு வெடிப்பர்.
அன்று மாலை அயோத்யாவில் செய்ததைப் போல் அவன் பாதங்களில் புத்தம் புதிய ரூபாய் நோட்டுக்களையும் காசுகளையும்
பட்டுத்துணியில் முடித்துக் கொண்டு வந்து கொட்டுவர்.அதை அவன் மீது வாரி இறைப்பர்,
பின் கோயில் பணியாளர் அனைவருக்கும் தருவர்.இதையே ”சாலி அலங்காரம்” என்பர், சாலி – வளம்.
[இஷ்வாகு மன்னர்கள் தீபாவளி அன்று அயோத்யாவாசிகள் அனைவருக்கும் நாணயம் வழங்கினர்-வால்மீகி]
தீபாவளி அன்று தங்கள் ஊர் இறைவனுடன் அரசனுடன் கொண்டாட இன்றும் வடதேசத்து அன்பர்கள் ஸ்ரீரங்கத்தில் குவிவது கண்கூடு!
”ஹமாரா ராம்ஜி தேவ், அயோத்யா தேவதா ஹே!” என்று இன்றும் வடதேசத்து அன்பர்கள் மணவாளனுக்கு அருகில்
வரும் போது உருகிக் கூறுவதும், ”ஜெய் ஸ்ரீராம் கி ஜே, ஸ்ரீராம் கி ஜே” என்பதையும் காண்கிறோம்.
நமக்குத் தெரிந்த பட்டர்கள் சிலர் வடதேசத்து அன்பர்கள் மணவாளன் அருகில் வருங்கால்,
”தும் அயோத்யா நகரீ மஹராஜ் ரங்நாத்ஜி” என்று மணவாளனை அறிமுகம் செய்வதைப் பலமுறை கண்டுள்ளேன்.
சிலர், ”வா வா உங்க ஊரு பெருமாள் தான் இங்க வந்து இருக்கார்” என்று தமிழிலேயே உறவு சொல்வதையும் கேட்டு இருக்கிறேன்.
தாயாரைக் காணுங்கால், ”சீதா மாதா மஹராணி கி ஜே!” என்று மிக்க மரியாதையுடன் கிழவன் கிழவிகள் கூட
தலையில் முக்காடு இட்டுத் தம் பவ்யத்தைத் தம் அரசிக்குச் செலுத்துவதைக் காணலாம்
இன்று அயோத்யாவில் தமிழர்கள் ரங்கநாதர் ஆலயம் அமைத்துள்ளனர்.
திருக்கைத்தல சேவை
365 நாட்களில் மணவாளன் 225 நாட்கள் விழாக் காண்கிறார்.
பத்து நாள் விழாவில் ஒரு நாள் ”திருக்கைத்தல சேவை” என்ற விழா வரும்.
அன்று இஷ்வாகு மன்னன் தன் கைகளில் மணவாளனைத் தாங்கிக் கொண்டு மூலஸ்தானத்துக்குள் வைக்க வேண்டும்
என்கிறது வால்மீகியின் பதிவு.அதையே இன்றும் செய்வர்.
”அயோத்தியர்க் கோமான், தசரதன் பிள்ளை அழகிய மணவாளனைக் கைத்தலம் ஏந்தித் தாங்குவார்……” என்று
அறிக்கை விட, ராமனின் ப்ரதிநிதியாய் ஓர் அர்ச்சகர் மணவாளனைத் தூக்குவார்.
கற்பூரப் படியேற்றம்
தீபாவளியை ஒட்டி வரும் உத்சவத்தில் மணவாளன் மீண்டும் மூலஸ்தானம் ஏறிச் செல்லும் போது
பச்சைக்கற்பூரமும் குங்குமப்பூவும் தூவப்படும்.
[ஸ்ரீராமன் அரண்மனை திரும்பும் போது, பச்சைக்கற்பூரமும் குங்குமப்பூவும் தூவி வரவேற்பர்-வால்மீகி]
அயோத்யாவில் தன் அரண்மனையை விட்டு ஸ்ரீராமன் எப்படி வெளியே வருவான் என்று வால்மீகி பதிவு செய்துள்ளாரோ
அதை ஒத்தே, இன்றும் நம்பெருமாள் புறப்பாடு ஆகிறது.
மூலஸ்தானத்தில் அலங்காரம் ஆனவுடன், லக்ஷ்மணனின் ப்ரதிநிதி அதை உரக்கச் சொல்ல,
ஸ்ரீபாதம் தாங்கிகள் என்ற ஊழியர்க் கூட்டம் ”ரகுநாத் மஹராஜ், நாயேன் வந்தேன்” என்று கூறிச் செல்வர்.
மணவாளன் படிகளில் இறங்கும் முன் தன்னை ஒரு முறை நிலைக்கண்ணாடியில் பார்த்துக் கொள்வார்.
சிம்ம நடை, ரிஷப நடை, சர்ப நடை என்று மூன்று வித நடைகளில் அவன் தெருக்களில் செல்வான், இன்றும் காணலாம்.
வெயில் அடிக்காத வண்ணம் திரையிட்ட ஓலைத் தட்டி தாங்குவோர் நிழலாய் முன் செல்வர்.
லக்ஷ்மணன் [குடை வடிவம்] பின்னால் இல்லாமல் ரங்கன் ஒரு அடி கூட முன்வைப்பதில்லை!
உலா முடிந்து மீளுங்கால் த்ருஷ்டி எடுப்பது வழக்கம். [ஸ்ரீராமனுக்குக் கெளசல்யா கண்ணேறு கழித்தே அரண்மனைக்குள் அழைப்பாள் – வால்மீகி]
காவேரிக்கு உயர் மரியாதை
தனக்கு இடம் தந்த காவேரிக்கு ஆடி 18அன்று மணவாளன் மரியாதை செய்வது வழக்கம்.
ராணி மங்கம்மாளின் அம்மா மண்டபத் துறைக்குச் சென்று புடவை, மாலை, சந்தனம், தாலி, வளை ஆகியன காவேரிக்கு அளிப்பான்.
வெள்ளம் இழுத்துச் சென்ற அரங்கன்
எழுநூறு ஆண்டுகட்கு முன் ஆடி உத்சவத்தில் மணவாளன் தேவியருடன் படகில் காவேரியில் செல்வதுண்டு.
ஒரு விழாவில் வெள்ளம் அபாயமாகப் படகைச் சாய்க்க, அது முதல் சுந்தர பாண்டியன் வெட்டிய தெப்பக் குளத்தில் அவ்விழா நிகழ்கிறது.
தில்லையில் கூரைக்குப் பொன், ஸ்ரீரங்கத்தில் திருமேனிக்குப் பொன்
இன்றைய முதல்வர் புகழ் பெற்ற ஒரு ஜுவல்லரி மூலம் மணவாளனை 7 கிலோ பொன்னால் பூசி மெழுகிட உதவினார் [2013].
அவரே அதே கட்டத்தில் கள் அழகருக்கும் 20 கிலோ பொன் தந்து பூசிமெழுகினார்.
மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்
கி.பி 12ஆம் நூற்றாண்டில் சோழர் வசம் இருந்து மதுரையை மீட்டான் சுந்தர பாண்டியன்.
அவன் மணவாளனுக்கு எடைக்கு எடை பொன் கொடுத்தான்.அதுவே ஹிரண்ய கர்ப்பம்.
அவன் தன் பொன் முடியை உருக்கி அதே போல் மணவாளனுக்கு முடி சூட்டினான்.
அதற்கு ”சுந்தர பாண்டியன்” என்றே பெயர்.அடிக்கடி மணவாளன் அதையே சிரத்தில் சூடுவது வழக்கம்.
எச்சில் தாங்கிய பாண்டியன்
மணவாளன் எச்சில் உமிழும் பாவனையில் ஒரு பொன் பாத்திரம் உண்டு.அதற்கும் அவன் தன் பெயரையே வைத்துத்
தானே மணவாளனின் வாயூறலை ஏற்பதாகக் காட்டினான்.இன்றும் புறப்பாட்டின் போது, ”சுந்தரபாண்டியனை எடுத்தாச்சா?” என்றே கேட்பர்.
ஆண்டாளும் பெரிய கோயிலும்
ஆண்டாள் தன் தந்தை விஷ்ணுச்சித்தருடன் ஸ்ரீரங்கத்தில் தங்கிய இடம் தோப்பு ராமன் சன்னிதி.
அவளது பாதச் சுவடு ஆதிசேஷன் மீது பதிந்துள்ளதாகக் கூறுவர்.
ஆண்டாள் வைத்திருந்த கண்ணன்
ஆண்டாள் அரங்கனுடன் கலந்தபடியால் சேர்த்தி இல்லை.மாலை மாற்றும் இல்லை.
ஆனால் ஆடிப்பூரம் அன்று மட்டும் அரங்கனின் மாலையை அவள் ஏற்பது வழக்கம்.
அவள் வைத்து விளையாடிய வ்ருந்தாவனத்தில் அவள் அப்பா வாங்கித் தந்த தவழும் கண்ணன் விக்ரஹம்
அவளுக்கு அருகில் உட்கார்ந்து உள்ளது. [வடமதுரை மைந்தன் என்று அவனுக்குப் பெயர்]
மதுரையில் கள் அழகர் அடிக்கும் punch dialogue
அழகர் ஆற்றில் இறங்கும் முன் ”கோதை மாலை இல்லையேல், மதுரை போவது இல்லை!” என்று
punch dialogue பேசுவதாக நடித்துக் காட்டுவது வழக்கம்.
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளின் மாலை அழகருக்குக் கொண்டு வரப்பட்டு அதைச் சார்த்தியே ஆற்றில் இறங்கப் போவார்.
திருமலைக்குப் பூமாலை
புரட்டாசி ப்ரஹ்மோத்சவத்தில் ஏழுமலையப்பனுக்கும் ஸ்ரீவில்லிப்புத்தூர் மாலை விமானம் மூலம் தற்போது போகிறது.
மூலவர் திருவேங்கடம் உடையான் அதைச் சேர்த்திக் கொள்கிறார்,
பின் கருட வாஹனத்தின் போது அம்மாலை மலையப்ப ஸ்வாமிக்கு சூட்டப்படும் [திருமலை உத்சவர்]
நைவேத்யங்கள்
தந்த சுத்தி – பல் விளக்கும் சடங்கு
சுக்குக் கஷாயம்
வெற்றிலைத் தாம்பூலம்
வாய் கொப்பளித்தல் சடங்கு
கோதுமை ரொட்டி, பருப்பு, பசும் வெண்ணெய்
கோடையில் இளநீர், பானகம், நீர்மோர்
முளை கட்டிய பயறுகள் – உத்சவம் புறப்படும் போது
மதியம் – சாதம், தயிர், கோதுமை ஹல்வா, முறுக்கு, மிளகு அடை
க்ருஷ்ண ஜெயந்தி அன்று – 12,000 இனிப்புப் பனியாரங்கள்
தீபாவளி – பல விதமான இனிப்புகள்
பொங்கல் – சர்க்கரை, வெண் மிளகு சாதம்
மழைக்கால மாலை வேளை – குங்குமப்பூ போட்டுக் காய்ச்சிய பனங்கல்கண்டு பசும்பால்
இரவில் ஆதிசேஷனுக்கு – பாலில் வேக வைத்த சாதம் – அரவணை [சொல்லி வைத்துப் பெறுதல் வேண்டும்]
தாயாருக்கு தினமும் இரவில் – மிளகு சேர்த்த புளிக்குழம்பு
இரவில் – மிளகு தோசை, அப்பம், அதிரசம்
சித்திரைக் கனி அன்று – முக்கனிகள் கலந்த பால் அன்னம்
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளின் கோபுரமே தற்போது தமிழகத்தில் உள்ள பழமையான கோபுரம் [கி.பி 11].
அது பன்னிரண்டு நிலைகள் கொண்டது.அவளின் உத்தரவை கேரள ப்ரசன்னம் மூலம் பெற்ற பின் தான்
ஸ்ரீரங்கம் கோபுரம் பதிமூன்று நிலைக்கு உயர்ந்தது. ஏழாம் நிலைக் கட்டியவர் இசைஞானி இளையராஜா.
மிகப்பெரிய கருடனைக் கட்டியவர் விஜய ரங்க சொக்க நாத நாயக்கர்.
அர்ஜுனன் த்ரெளபதியுடன் சேர்ந்து, பாரதப் போருக்குப் பின் பொன் கொடுத்து எழுப்பிக் கொடுத்த மண்டபமே
மூலஸ்தானத்தின் வலது புறம் உள்ள அர்ஜுன மண்டபம்.
பங்குனி உத்திர ப்ரஹ்மோத்சவத்தில் ஏழாம் நாள் ஆயில்யம் அன்று மணவாளன் காவேரி தாண்டி உறையூர் கமலவல்லியிடம் செல்கிறார்.
அன்று திருச்சியே அங்கு சேரும் சேர்த்தி காண.ஸ்ரீரங்கநாயகியின் திவ்ய ஆபரணங்கள் உறையூர்க் கமலவல்லிக்குச் சார்த்தப்படும்.
மறுநாள் அவர் ஸ்ரீரங்கம் மீள்வார்.
பங்குனி உத்திரம் அன்று அவர் தாயார் சன்னிதி வரும் போது மிக நுட்பமான சங்க இலக்கிய வசங்கள் கொண்டு அர்ச்சகர்கள் நடிப்பர்.
மணவாளனைத் தயிர், தேங்காய் மட்டை ஆகியன வீசி எறிந்து அவமதித்து வெளியே தள்ளி, தாயார் சன்னிதி கதவை அடைத்து விடுவர்.
வெயிலில் வேண்டும் என்றே மணவாளனை நிற்க வைப்பர்.
உணர்ச்சி மேலீட்டால் பல அன்பர்கள் மணவாளன் அவமானம் கொள்வதைக் கண்டு அழுவதை இன்றும் காண முடியும்.
இதைப் பற்றி உடனே ராமானுஜர் சன்னிதியிலும் நம்மாழ்வார் சன்னிதியிலும் சில அர்ச்சகர் சென்று சொல்வர்,
அவர்கள் விக்ரஹங்கள் உடனே தாயார் சன்னிதி வரும்.
இருவரும் முடிந்தவரை சமாதானம் செய்ய முற்படும் அழகிய மருதத் திணை நாடகத்தை
மைக் வைத்தே பேசுவதை அழகாக இன்றும் கேட்டு, பார்த்து ரசிக்கலாம்.
மணவாளன்: தேவி நம்மைப் பங்குனி மாத வெயிலில் வதைப்பது ஏனோ? ஸ்ரீரங்கத்தார் ஏளனம் செய்வது கேவலம் அன்றோ? அயோத்யாவில் இப்படி இருந்தாயோ?
ஸ்ரீரங்கநாயகித் தாயார்: அவ்வூர்ப் பெயரைக் கூற யோகிதை இல்லை ஐயா! காவேரி மணல் வெளியில் கிடைத்த உன் கல்யாண மோதிரம் அதைச் சொல்லும்.
ம: கல்யாண மோதிரமா அது என்னிடம் பத்திரமாக உள்ளதே!
தா: அது பத்திரமாக உறையூரில் ஒருத்தி கையில் இருக்குதய்யா!
ம: ஓ அவளா? அவள் என் பக்தை, முக்தி தரச் சென்றேன்
தா: பக்தைக்கு முக்தி படுக்கையிலோ?
ம: வீண் பழி பாவம் சுமத்தாயே தேவி!
தா: என் ஆபரணங்கள் எங்கே? உன் மாலையில் நீண்ட முடி உள்ளதே?
உன் மேனியில் நகக்கீரல்களும் பட்டாடையில் மஞ்சள் பூச்சும் உன் அழகைக் காட்டுதே!
நாம் ஸ்ரீரங்க ஸ்தலம் விட்டு நம் பாற்கடலுக்கே செல்கிறோம்!
நீரும் உறையூர் ஆசைக் காதலியை நம் சன்னிதிக்குள் குடி வைத்துக் கொண்டு சுகமாய் வாழும்!
ம: உண்மை! தன்யனேன்! என் தவற்றை ஏற்கிறேன், நீ இன்றி எம்மால் அணுக்கணமும் இயங்க முடியுமோ? என்னை மன்னிக்கும்!
தா: ”ராமா என்று வந்தவருக்கு அபயம் உண்டு” என்ற உமக்கு என்னிடம் அபயம் இல்லை ஐயா!
ம: கலியுகத்தில் நம் பிள்ளைகள் நீ இன்றி கஷ்டப்படுவார்களே!
தா: அயோத்தியில் நாம் பூமியின் மடி சேரும் போது இந்த அக்கறை எங்கே போனது ஐயா!
ம: என்னை மன்னியும்! ஹே ரங்கநாயகீ…..அந்த ஸ்ரீயும் பூமியும் சீதையும் ராதையும் கோபியரும் ருக்மிணியும் கோதையும் அனைத்தும் நீ தானே!
தா: சரி! மன்னிப்பது தாயின் குணம் என்று கூறுவதால், உன்னை ஏற்கிறேன், தோழிகளே நம் அழகிய மணவாளனை உள்ளே வரச்சொல்லுக!
இந்த அழகிய ஊடல் நாடகம் ஆன பின், திவ்யத் தம்பதிகள் ஓர் ஆண்டு கழித்துப் பார்த்துக் கொள்வதால்,
திரையிடப்பட்ட கொலு மண்டபத்துள் சுமார் இரண்டு மணி நேரம் இருப்பர்.
சுமார் மாலை மூன்றானதும் இருவரும் பங்குனி உத்திர மண்டபம் சேர்வர், கூட்டம் அலை மோதும்.
மணவாளனின் மாலையைத் தாயார் சார்த்தி இருப்பள்.
இரவில் பன்னிரண்டு மணிக்கு ஊர் காண அபிஷேகம் ஆகும்.அப்போது உண்மையிலேயே ”பத்ம முகீம்” [தாமரையை ஒத்த முகத்தினள்]
அதிகாலை மணவாளன் சேர்த்தி ஆகி விடை பெறும் போது, அவள் முகம் கருத்து இருப்பதைக் கண்கூடாக நாம் காணலாம்,
வண்ணம் மாறிவிடும்.அன்று மாலை வரை அவள் தன் கதவை சாத்திக் கொள்வாள்.
அக்காலத்தில் ஸ்ரீரங்க வாசிகள் உத்திரத்தில் தான் புத்தாடை எடுப்பராம், அதை பத்திரமாக மடித்து வைப்பராம்.
அஸ்வமேத யாகம் செய்ய ஸ்ரீராமன் அயோத்யாவில் பொன்னால் சீதையை உருவாக்கினான்.
அச்சிலை இன்றும் திருவள்ளூர் விஜயராகவனின் தேவியாக அருள் பாலிக்கிறது.
ரங்க விமானம்
மூலஸ்தானம், ரங்க விமானம் எல்லாம் தர்மவர்மா என்ற கிளிச்சோழன் கட்டியதே!
அகநானூறு, கலித்தொகை மற்றும் சிலப்பதிகாரம் தெளிவாக ஸ்ரீரங்கம் பற்றிப் பதிவு செய்கின்றன.
சப்த ப்ரகாரங்களும் அயோத்யாவும்
ஏழு ப்ரகாரங்கள் போல் அயோத்யாவில் இன்றும் கனக பவனைச் சுற்றி ஏழு பெரிய வீதிகள் உள.
கனக பவன் – தசரதன் ஆசைக் கைகேயிக்குக் கட்டியது.ஸ்ரீராமன் கல்யாணம் ஆனபின் சீதைக்கு அவள் அதைக் கொடுத்தாள்.
இன்றும் அயோத்யாவில் கனக பவன் ராமனே மிகவும் ப்ரஸித்தியானவன்.மாலை வேளையில் இங்கு நிகழும் ஆரத்தி மிக ப்ரஸிதம்.
1-ராஜமகேந்திரன் வீதி
அரங்கத்தில் மூன்றாம் சுற்று மதிலைத் திருமங்கை மன்னன் கி.பி 9ல் எழுப்பினான்,
அதை ராஜமகேந்திர சோழன் கி.பி 1060-1063ல் மீண்டும் புதுப்பித்துத் தன் பெயரால் ”ராஜமகேந்திரன் வீதி” என்று கல்வெட்டில் பதித்தான்.
உருப்படியாகவும் சீரழிந்தும் அரங்கத்தில் 644 கல்வெட்டுக்கள் படியெடுக்கப் பட்டு உள.
ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஆழ்வார்களின் பாசுரங்களை ஸ்ரீமத்நாதமுனிகள் தொகுத்து
அரங்கத்தில் இருந்து தான் தமிழகத்துக்குப் பரப்பினார்.
கி.பி 1228 வரை மூன்றாம் குலோத்துங்கன் அரங்கத்தைக் கைக்கொண்டு அடக்கியே வைத்தான்.
கி.பி 10 வரை வேற்றுமையில்லா சமயங்கள் சுயநலம் கொண்டு அரசின் பலத்தைப் பெற போட்டி போட்டன.
கி.பி 1311 – மாலிகாஃபூர்
கி.பி 1323 – டில்லி முகமதிபின் துக்ளக்
கி.பி 1781 – மைசூர் ஹைதர் அலி
கி.பி – 1790 – மைசூர் திப்பு சுல்தான் – இவர்கள் செய்த அட்டூழியங்கள் அதிகம்!
கி.பி 1810ல் வேல்ஸ் மூலம் தான் கிழக்கு இந்தியக் கும்பினி மூலம் நல்ல காலம் மீண்டும் பிறந்தது.
கும்பினி மிக விரைவில் வரலாற்றை, சொத்தைப் பதிவாக்கி 1845ல் தர்மகர்த்தாவைத் தன் ஆளுமையின் கீழ் நியமித்து ஒழுங்கு செய்தார்.
1-மனுநீதிச் சோழன் அமைத்த முதல் திருச்சுற்று
முதல் சுற்றை மூலஸ்தானத்தை ஒட்டி, மனுநீதிச் சோழன் அமைத்துள்ளான், அவனுக்கே ”தர்ம வர்மா” என்ற பெயருண்டு.
கிள்ளி மண்டபம்
உறையூர் நலங்கிள்ளி எழுப்பிய மண்டபமே கிள்ளி மண்டபம்.மூட மக்கள் பிற்காலத்தில் கிளி மண்டபம் ஆக்கிவிட்டனர்.
மூன்றாம் நான்காம் சுற்றைக் குலசேகராழ்வாரும் திருமங்கை மன்னனும் எழும்பினர் என்பதை விட முன்னம் இருந்த
மதில்களை அவர்கள் சீரமைத்தனர் என்பதே பொருந்தும்.
திருமேனிப் பாதுகாப்பு
மணவாளனின் திவ்யத் திருமேனி மீது பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ, சில வெளி சொலாத மூலிகைகள் அரைத்துப் பூசி,
பருத்திப்பட்டால் சுற்றப்பட்டு layer layer ஆக மூடப்பட்டுப் பொன் கவசம் சார்த்தப்படும்.
இதுவே அவன் மேனியைப் பாதுகாக்கும் தன்மை.தாயாருக்கும் அவ்வாறே!
மிகப் பெரிய கருடனை நாயக்க மன்னர்கள் உருவாக்கினர்.ஆனால் ஹனுமான் மிகச் சிறிய வடிவில் கோயிலின் வெளியில் உள்ளார்.
த்யாகராஜர் பாடிய அரங்கன்
ஒரு சித்திரை விழாவில் த்யாகராஜர் ஸ்ரீரங்கம் சேர்ந்து தன் குழாமுடன் தரிசனம் செய்து தங்கி இருந்தார்.
குதிரை வாஹனம் கண்டு மணவாளன் வருங்கால், த்யாகராஜர் மிக பவ்யமாக முனுமுனுத்துக் கொண்டு பாடினார்.
மணவாளன் அர்ச்சகர் மீது இறங்கி, ”த்யாகராஜரே! நாம் தந்த ராமனைத் தான் பாடுவீரோ? உரக்கப் பாடும்!” என்று கூற,
”ஓ ரங்க சாயீ” என்று த்யாகராஜர் உருகிப் பாடிய பின்னரே மணவாளன் நகர்ந்தான்.
முத்துசாமி தீக்ஷிதர் பாடிய மணவாளன்
தீக்ஷிதர் ஸ்ரீரங்கம் சேர்ந்த போது, இரவில் அவரை வீணை வாசிக்கச் சொல்லிக் கேட்டனர் கோயில் அன்பரும் அரங்கனும்.
”ஸ்ரீரங்கபுரவிஹாரா” என்று மிக அத்புதமாக ஸ்ரீராமாவதாரம் செய்த மணவாளனாகப் புனைந்து பாடுகிறார்.
ஸ்வாதித் திருநாள் ஏங்கிய அரங்கன்
ஸ்ரீராமாயணத்தை முழுக்க ஒரு கீர்த்தனை மூலம் புனைந்தார் ஸ்வாதித்திருநாள் மஹராஜ்.அதுவே ”பாவயாமி ரகுராமம்”
மிக மிக ப்ரஸித்தி பெற்ற கீர்த்தனை.அதை ரங்கன் சன்னிதியில் பாட மிகவும் ஏங்கினாராம், ஆனால் ஆயுள் கொடுத்து வைக்கவில்லை.
———————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply