ஸ்ரீ பரவாதி கேசரி ஸ்வாமிகள் அருளிச் செய்த ஸ்ரீ சைல வைபவ பாசுரங்கள் —

ஆனி திரு மூலம் -தனியன் அவதார நாள்
ஸ்ரீ சைல அஷ்டகத்தின் தமிழ் ஆக்கம்
15 பாசுரங்கள் -அந்தாதி –

கூறுகேன் உலகீரே குங்குமத் தோள் அரங்கேசர்
மாறன் மறைப் பொருள் கேட்க மணவாள மா முனியை
ஏறும் மனை தனில் இருத்தி இரு நிலத்தில் தாம் இருந்து
வீறுடனே செவி சாத்தி விரையடி பூசனை யாற்றி –1-

ஆறு இரண்டு புரம் சூழும் அரங்க முதல் நூற்று எட்டும்
கூறிய ஸ்ரீ சயிலத்தைக் கொண்டாடி உரைக்க என
ஊறிய தேன் பெருக்கு என்ன உன்னி அத்தை உகந்து உரைத்தான்
சேறு வளர் கமலை மைந்தன் சிந்தை மகிழ்ந்து ஒருப்பட்டே -2-

ஆறு இரண்டு-பன்னிரண்டு மாதங்களும் -இரண்டு ஆற்றுக்கு நடுவில் என்றும்-

பட்டர் பிரான் முதலான பதின்மர் கலை படிச்சலினும்
சிட்டர்களாய் தினம் தோறும் திருமண் இடு வேளையிலும்
இட்டமுற உணும் பொழுதத்து ஒண் சுர நீர் ஏற்கையிலும்
அட்ட திக்கும் விளங்க உரைத்தார் ஆரியர்கள் அனைவருமே –3-
(பழிச்சலினும் -பாட பேதம்-அநுஸந்திக்கும் புகழும் போது எல்லாம் )

ஆரியர்கள் கொண்டாடி ஆசரித்த தனியனைத் தான்
பேர் இயலும் தொண்டர் குழாம் பெரும் பேறாகக் கொண்டனரால்
சீரியராய் வாழ எண்ணில் ஜகத்தலத்தீர் கற்று உணர்மின்
தார் இயலும் அரங்கருக்கும் தமிழ் மறைக்கும் மணமாமே -4–

மணவாள மா முனியை வழுத்துரவோர் பயன் பெறுவர்
குணமாகக் கொண்மின் இதைக் கொடும் பிறபிப் பிணி அகல்வீர்
பண வாள் அரவு இவராம் பகைத்தாரோ உய்வு இலர்
மணமுடைய மந்திரமா மதிக் கொள்ளீர் தனியனையே –5-

தனியன் என்று பேர் சாற்றித் தண் அரங்கர் முன்னர்
இனிய திருப்பவளத்தாலே முனி வரனார்
மாறன் மறை முப்பாதாறாயிரத்தின் மாண் பொருளை
கூற உபதேசித்தார் கொண்டு –6-

தேசம் எங்கும் ஈது திருப்பதிகள் தோறும் உரைக்க
நேசமுற அரங்கர் நேமித்தார் ஏசுமவர்
பாதகராய் எரி வாய் பாழ் நரகில் துய்ப்பர் இன்னல்
வேதனார் உள்ள மட்டும் எய்த்து –7-

எய்யத் துணிய இராவணியைக் கொன்றவன் தான்
செய்ய நெறி விளங்கும் சேடன் அவன் வையம்
தனை வளர்க்குமாறு வர யோகி தானாய்
வினை அறுத்து வீடு அருளும் வேந்து –8-

வேந்தராய் மண் ஆண்டு விண் ஏறலாம் எளிதாய்த்
தோய்ந்த உறவாய் இருக்கில் தொல் உலகீர் ஓர்ந்து உய்ய
ஏதி கொடு காலன் இருந்தமர் மேவார் விண்ணோர்
நாதனும் வந்தே வணங்கு நன்று – 9-

வணங்கினார் சீர் பெற்றார் வான் முறையால் வீடணர் போல்
இணங்கினார் ஓர் ஒருவர் இரு நிலத்தில் சிறப்புற்றார்
பிணங்கினார் பேய்ப் பிறவி பேதையர் கடமைத் தண்டே
உணங்கினார் தாமதராய் உட் சினந்தார் சென்ற வாறே –10-

தென் கலையாம் தமிழ் வேதச் சீ சயிலத் தனியன் எனும்
நன் கலையை உள் கனிந்து நவிற்று பெரும் தகை மாந்தர்
மின் களையும் புரி நூலும் மேல் நோக்கு புண்டரமும்
தென் கலையும் வட கலையும் திகழ் நா வீரர் ஆகுவரே –11-

ஆகுதல் என் இனி எனக்கோர் ஆராவமுதாய் என்
சோக மற உளத் தடத்துத் துலங்கு வர வர யோகி
சேகறு செம்மலர்த் தாளும் சீ சயிலத் தனியனும் இன்று
ஓகை யறப் பெற்றேனால் ஒலி கடல் தாரணீயீரே -12-

தாராணியோர் வாழ்வு எண்ணித் தானே திரு வனந்தன்
பேர் அணியும் குருகை நகர் பிறந்த தனிப் பேர் அருளால்
சீர் அணியும் மணவாள மா முனியாய்ச் செனித்தனனால்
தார் அணியும் அரங்கருக்குத் தமிழ் மறை தேசிகன் எனவே -13-

தமிழ் மறையோர் ஓதுவரேல் தனியன் இது மற்று இல்லை
திமிர மற மெய்ஞ்ஞானச் செழும் சுடர் சேர் மனமுடையீர்
அமிழாமல் சம்சாரத்து ஆழ் கடலை கடத்தி ஓர்
நிமிடத்தில் நித்தியராய் நிறுத்தும் பேர் இன்பத்தே –14-

பத்துத் திசைகளிலும் பண மணிகள் சுடர் எறிப்ப
முத்தி தரும் அரங்கருக்கு மூ வணையாய் சூழ்ந்து இலங்கும்
எத்திசையும் பணிந்து ஏத்தும் எம் பெரிய முனி யாகும்
அத்தன் எழில் வர யோகி ஆயிர வாய் அரவரசே –15-

அரவம் ஏறு மேவி அறி துயில் கொள்ளும் அரங்கர் உரை
வர யோகி சி சைலத்தின் பெரும் புகழ் வைபவத்தை
விரகால் இசை மறையோர் திலகன் தமிழ் வீறு உடைய
பரவாதி கேசரி பாப் பதினைந்து பணித்தனனே –16-

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரவாதி கேசரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading