ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம்-27-ரேகா பத்ததி -வேரிப்படலம் -ஸ்லோகங்கள் -811-820–

பாதுகைகளில் காணப்படும் பல கோடுகளை இங்கே கூறுகிறார்–

———–

ஸூசயந்தீம் ஸ்வரேகாபி: அநாலோக்ய ஸரஸ்வதீம்
அலேகநீய ஸௌந்தர்யம் ஆஸ்ரயே சௌரிபாதுகாம்—-811-

எழுதத் தகாத சொற்களைத் தெரியப் படுத்துவதாகவும், எழுதி முடிக்க இயலாத அழகைக் கொண்டதாகவும் உள்ள
கோடுகளைத் தன்னிடம் கொண்டதான ஸ்ரீரங்கநாதனின் பாதுகையை நான் அடைகிறேன்.

வேதங்களை எழுதி வாசிக்கக் கூடாது என்பார்கள். அப்படிப்பட்ட வேதங்களே இந்தப் பாதுகையில்
கோடுகளின் வடிவில் உள்ளன என்றார்.

ஸ்ரீ பாதுகையில் உள்ள ரேகைகள் எழுதா மறை என்று சொல்லப்படும் எழுதப்படாத எழுத்து இல்லாத வேதத்தைக் குறிப்பதாகச் சொல்லலாம் –
அந்த ரேகைகளின் அழகை எழுத்தில் வடிக்க ஒண்ணாதே -அத்தகைய ஸ்ரீ பாதுகையைச் சரணம் அடைகிறேன் –

————————————————————

மணி மௌளி நிகர்ஷணாத் ஸுரணாம்
வஹஸே காஞ்சந பாதுகே விசித்ரம்
கமலாபதி பாத பத்ம யோகாத்
அபரம் லக்ஷணம் ஆதி ராஜ்ய ஸாரம்—-812–

தங்கமயமான பாதுகையே! தேவர்களுடைய கிரீடங்கள் உன்னை வணங்குவதற்காக அவர்கள் தலையைக் குனியும்போது,
ஒன்றுடன் ஒன்று உராய்கின்றன. அப்போது அந்தக் கிரீடங்களில் உள்ள இரத்தினங்கள் ஒன்றுடன் ஒன்று உராய்வதால்,
ஸ்ரீரங்கநாதனின் திருவடிகள் உன் மீது ஏற்படுத்துகின்ற கோடுகளைக் காட்டிலும் வேறுவிதமான கோடுகள் உன்னில் ஏற்படுகின்றன.
இந்தப் புதிய கோடுகள் மூலம் அனைத்து உலகிற்கும் நீயே ராணியாக உள்ளாய் என்னும் அடையாளத்தை அடைகிறாய்.

ஸ்ரீ பாதுகையே உன் தங்கத் திரு உடம்பில் வந்து வணங்கும் தேவர்களுடைய ரத்ன கிரீடங்கள் உறாய்வதால் ரேகைகள் ஏற்படுகின்றன –
இவை உனக்குப் பெருமாள் திருவடியின் தொடர்பினால் -திருவடி வைப்பினால் -ஏற்பட்ட ரேகைகள் இருக்கின்றனவே
அவை எடுத்துச் சொல்லும் சர்வ லோக சக்ரவர்த்தினி என்ற உன் பெருமையைக் காட்டிலும் விலஷணமான விசேஷமான
அடையாளமாய் இருந்து உன் பெருமையைப் பறை சாற்றுபவை –

————————————————————————-

அபிதோ மணி பாதுகே ஸ்புரந்த்யா:
தவ ரேகாவிததே ததா விதாயா:
முரவைரி பதாரவிந்த ரூடை:
அநுகல்பாயிதம் ஆதி ராஜ்ய சிஹ்நை:—-813–

இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! தாமரை மலர் போன்ற ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளில்,
”இவனே அனைத்து உலகங்களுக்கும் அதிபதி”, என்பதை உணர்த்தும் கோடுகள் உள்ளன.
உன் மீது தேவர்களின் க்ரீடங்கள் ஏற்படுத்திய கோடுகளைக் காணும்போது, அவனது ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளில்
உள்ள கோடுகள் இரண்டாம்படியாகவே உள்ளன
(பாதுகையில் உள்ள கோடுகள் மூலமாகவே ஸ்ரீரங்கநாதனுக்கு அதிகாரம் கிடைக்கிறது,
அவனது திருவடிகளில் உள்ள கோடுகளால் அல்ல என்றார்).

ஸ்ரீ மணி பாதுகையே -கீழே சொல்லப்பட்ட விதமான ரேகைகளின் வரிசைகள் உன் மீது எல்லாப் புறங்களிலும் விளங்குகின்றன –
ஒரு ஒப்பீடு செய்தால் பெருமாளுடைய திருவடித் தாமரைகளோ தம் அடிப்பாகத்தில் மட்டுமே திடமான வஜ்ராங்குசாதி ரேகைகளைக் கொண்டு இருந்து
அவன் ஆதிராஜன் -உபய விபூதி நாதன் -என்று பறை சாற்ற வல்லவை –
ஆக திருப் பாதுகைக்குத் தெளிவாக பிரகடனப் படுத்தப் பட்டுள்ள ஆதி ராஜ்ய சின்னங்கள் திருவடியினுடையவற்றை
இரண்டாம் பஷமாக ஆக்கி விட்டன என்னலாம் –
திருப் பாதுகைக்கு மேம்பட்ட பெருமை எனபது பாகவத ஆச்சார்யர்களுக்கு கூடிய பெருமை என்று சொல்வதாகும் –

———————————————————-

ரேகயா விநமதாம் திவௌகஸாம்
மௌளி ரத்ந மகரீ முக உத்தயா
பாதுகே வஹஸி நூநம் அத்புதம்
சௌரி பாத பரி போக லக்ஷணம்—814–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னை வணங்கி நிற்கும் தேவர்களின் க்ரீடங்களில் காணப்படும் இரத்தினங்களால்
செய்யப்பட்ட மீனின் முகத்தினால் உன் மீது கோடுகள் ஏற்படுகின்றன.
இதனைக் காணும் போது நீ ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளுடன் சேர்ந்து அனுபவித்த
இன்பத்தின் போது அந்த அடையாளத்தை ஏற்றாய் போலும்.

தேவர்களின் தலையில் உள்ள க்ரீடங்களின் மீன் வடிவ நகைகள் உண்டு. அவை பாதுகைகள் மீது மீன் வடிவத்தில் அச்சு உண்டாக்குகின்றன.
ஸ்ரீரங்கநாதனின் திருவடியில் மகர உருவம் உண்டு. அந்தத் திருவடியை நாயகன் என்றும், பாதுகையை நாயகி என்றும் கொண்டால்,
இவர்கள் சேர்ந்துள்ள போது திருவடியின் அரவணைப்பு காரணமாக அந்த மகர வடிவம் பாதுகையில் வந்ததோ என்கிறார்.
உண்மையில் அவை தேவர்களின் க்ரீடங்களால் வந்தவை ஆகும்.

ஸ்ரீ பாதுகையே தேவர்கள் மிகப் பணிவுடன் உன்னை வணங்கும் போது அவர்கள் க்ரீடங்களில் உள்ள ரத்னங்களாலான
மீனுருவங்கள் உன் மீது அழுந்தி மகர ரேகைகள் படிகின்றன -இருப்பினும் எனக்கு வேறு ஓன்று தோன்றுகிறது
பெருமாள் திருவடிகளில் மகர ரேகைகள் உண்டே -அந்தத் திருவடியான நாதனுடன் நீ அனுபவித்த கலவியின் விளைவாக
இந்த மகர ரேகைகள் உன் மீது படிந்து இருக்கக் கூடுமே என்று –
பாகவதர்கள் தேவர்களுடைய வணக்கத்துக்கு உரியவர் —
அப்படி இருப்பது பாகவதர்களுக்கு பெருமாள் உடன் விடாது நடக்கும் சம்ச்லேஷம் தானே –

———————————————————————–

த்ரிதச மகுட ரத்ந உல்லேக ரேகா: உபதேசாத்
பரிமணயஸி பும்ஸாம் பாதுகே மூர்த்நி லக்நா
நரகமதந ஸேவா ஸம்பதம் ஸாதயித்ரீ
நியதி விலகிதாநாம் நிஷ் க்ருதிம் துர்லிபீநாம்—-815–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! நரகன் என்ற அசுரனை அழித்த ஸ்ரீரங்கநாதனுக்குக் கைங்கர்யம் செய்தல் என்பதையே
செல்வமாக உண்டாக்கும் விதமாக, அனைத்து உயிர்களின் தலைகளில் நீ அமர்கிறாய்.
இதன் மூலம் நீ செய்வது என்னவென்றால் – தேவர்களின் க்ரீடங்களில் உள்ள இரத்தினங்கள் மூலம் உன்னில்
உண்டாக்கிய கோடுகள் கொண்டு, மக்களுடைய விதியின் மூலம் அவர்கள் தலையில் எழுதப்பட்ட
கெட்ட எழுத்துக்களை அழித்தல் என்பதைச் செய்கிறாய் (இதனால் கைங்கர்யச் செல்வம் ஏற்படுகிறது).

ஸ்ரீ பாதுகையே மனிதர்களின் தலையில் நீ வைக்கப்படுகிராய் -அப்போது என்ன நடக்கிறது -உன் மீதான ரகைகள்
தேவர்கள் க்ரீடங்களின் உரசலால் விளைந்தவை என்று முன்பே அறிந்தவை -அவை கொண்டு அந்த மனிதர்களின்
தலையில் கோடுகள் என்று சொல்லப் படுவதாகிற பிரம்மன் லிபியை மாற்றி நல்ல விதியாக எழுதி விடுகிறாய் போலும்
அந்த மனிதர்கள் பகவானைச் சேர்ந்து கைங்கர்யம் செய்வதாகிற பரம புருஷார்த்தத்தை அவர்களுக்கு சாதித்துக் கொடுத்து அருளுகிறாயே
பாகவதரை ஆச்சார்யரை ஆஸ்ரயித்து பரம புருஷார்த்தம் பெறுவது எளிதாகிறதே என்றவாறு –

————————————————————————————–

பதகமல தல அந்த: ஸம்ஸ்ரிதாநி ஆத பத்ர
த்வஜ ஸரஸிஜ முக்யாநி ஐஸ்வரீ லக்ஷணாநி
அவகமயஸி சௌரே: பாதுகே மாத்ருசாநாம்
உபரி பரிணதை: ஸ்வை: தேவி ரேகா விசேஷை:—-816-

பாதுகாதேவியே! ஸ்ரீரங்கநாதனின் திருவடித் தாமரைகளில், “இவனே ஸர்வேச்வரன்”, என்பதை உணர்த்தும் விதமாக
குடை, தாமரை, கொடி போன்ற அடையாளங்கள் உள்ளன. இவற்றை அறியாத என்னைப் போன்றவர்களுக்காக
இவற்றை உனது கோடுகளாகக் கொண்டு அறிவிக்கிறாய் போலும்.

ஸ்ரீ பாதுகையே பெருமாள் திருவடிகளில் உள்ளங்காலில் திருக்குடை திருக்கொடி திரு தாமரைப் பூ முதலிய ரேகைகள் இருப்பதாகவும்
அவை பெருமாளுடைய சர்வேச்வரத் தன்மைக்கு லஷணங்கள் என்றும் சொல்கிறோம்
ஆனால் அப்படி ரேகைகள் இருப்பது எங்களுக்குத் தெரிய வாய்ப்பு எப்படி ஏற்படும் -உன்னை சேவித்து தான் –
ஆகவே பெருமாளுடைய பெருமையை எங்களுக்கு அறிவித்து அருளுவது நீயே தான் –

———————————————————————————

ஸ்நாதா பதாவநி சிரம் பரி புஜ்ய முக்தா
பாதேந ரங்க ந்ருபதே: ஸூப லக்ஷணேந
ரேகாந்தரை: நவநவை: உபசோபஸே த்வம்
ஸம்ஸ்கார சந்தந விலேபந பங்க லக்நை:—817–

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! சுபமான பல அடையாளங்கள் கொண்ட ஸ்ரீரங்கநாதனின்
திருவடிகளில் இருந்து, ஸஞ்சாரம் முடிந்தவுடன் உன்னைக் கழற்றி, உன்னை நீராட்டுகின்றனர்.
உனக்குக் குளிர்ச்சியும் வாசனையும் உண்டாகும் விதமாக சந்தனம் பூசுகின்றபோது,
அந்த சந்தன ரேகைகள் புதிதாக வேறு கோடுகள் உருவாக்கியபடி நீ உள்ளாய்.

ஸ்ரீ பாதுகையே திரு மஞ்சனம் ஆகிறது -பெருமாளுக்கும் திருப் பாதுகைக்கும் -பிறகு ஹிதமாகவும் அலங்காரமாகவும் சந்தனம் சாத்துகிறார்கள் –
அதன் பின்பு பெருமாளுக்கு பாதுகையாக சாத்துகிறார்கள் -அதன் பின்பு திருப் பாதுகையை சேவித்தால் பெருமாளுடைய
சந்தனப் பூச்சுகளில் இருந்து வேறு புதிய ரேகைகளும் தென்படும்
இப்போது நீ இன்னும் அதிக சோபையுடன் விளங்குகிறாய் –
இந்தப் புதிய சோபை பெருமாள் உடன் ஏற்பட்ட கல்வியால் வந்தது தெரிகிறது –
அந்தாமத்து அன்பு -8-9-10–ஆழ்வார் இடம் திருத் துளசி மணந்தால் போலே –

——————————————————————————————

பக்த்யா முஹு: ப்ரணமதாம் த்ரிதசேஸ் வராணாம்
கோடீர கோடி கஷணாத் உபஜாய மாநை:
ஆபாதி சௌரி சரணாத் அதிகாநுபாவா
ரேகாசதைஸ் தவ பதாவநி காபி ரேகா—818–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! பக்தி காரணமாக தேவர்கள் உன்னை அடிக்கடி வணங்குகின்றனர்.
இதனால், அந்த க்ரீட முனைகளால் உன் மீது நூற்றுக்கணக்கான கோடுகள் ஏற்படுகின்றன.
இதன் காரணமாக ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காட்டிலும் அதிகமான கோடுகள்
உனக்கு உள்ளது என்னும் உனது பெருமை விளங்குகிறது.

ஸ்ரீ பாதுகையே தேவர்கள் பக்தி மேலீட்டால் அடிக்கடி சேவிக்கின்றனர் -அதனால் க்ரீடங்களின் முனைகள் உறாய்ந்து உன் மீது
நூற்றுக் கணக்கான அதிகப்படி ரேகைகளை உண்டாக்குகின்றன -ஆகவே உனக்குப் பெருமை இன்னும் அதிகம் என்னலாம் –

———————————————————————-

பாதாவநி ப்ரதிபதம் பரமஸ்ய பும்ஸ:
பாதாரவிந்த பரி போக விசேஷ யோக்யா
ஸ்வாபாவிகாந் ஸுபக பக்தி விசேஷ த்ருஸ்யாந்
ரேகாத் மகாந் வஹஸி பத்ர லதா விசேஷாத்—-819–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் தாமரை மலர் போன் திருவடிகளின் அனுபவத்திற்கு ஏற்றவளாக நீ உள்ளாய்.
இதனால் இயற்கையாகவே உன் மீது அமைந்துள்ள ரேகை உருவத்தில் இலை, கொடி போன்றவற்றை நீ தரிக்கிறாய் போலும்.

நாயகன் நாயகியுடன் இன்பமாக இருக்கும்போது நாயகியின் கன்னம், தோள் போன்றவற்றில் மீன், இலை போன்ற
வடிவங்களை நாயகன் வரைவது இயல்பாகும். இதற்கு மகரிகாபத்திரம் என்று பெயர்.
நாயகனான திருவடியுடன் இணைந்து நிற்கும் காலத்தில், இதே உருவங்கள் பாதுகையில் உள்ளன என்கிறார்.

ஸ்ரீ பாதுகையே நீ பரம புருஷனுடன் அடிக்கடி சிறந்த போகங்களை அனுபவிக்கிறாய் -அதற்குத் தகுந்தால் போலே
ஸ்வ பாவமாகவே உன் மீது இருக்கும் ரேகைகள் மூலம் அழகிய பாகுபாட்டின் சிறப்புத் தெரியும் படி -இலை கொடி போன்ற உருவங்களை
காதலி போகத்திற்குப் போகும் முன்பு செயற்கையாக வரைந்து கொள்வது போலே உன் மீது கொண்டு இருக்கிறாய்
ஸூ பக பக்தி விசேஷத்ருச்யான் -இன்பம் விளைவிக்கும் பரம பக்தியினால் பார்க்க அழகியதான என்றும் கொள்ளலாம்
பக்தியும் பக்தி சின்னங்களும் கொண்ட ஆழ்வார் ஆச்கார்யர்கள் பெருமாள் உடன் கலவிக்கு உரியர் ஆகிறார்கள் என்றவாறு –

———————————————————————–

ரேகா அபதேசதஸ் த்வம்
ப்ரசமயிதும் ப்ரளய விப்லவ ஆசங்காம்
வஹஸி மதுஜித் பதாவநி
மந்யே நிகமஸ்ய மாத்ருகா லேக்யம்—-820-

மது என்ற அசுரனை அழித்த ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ப்ரளய காலத்தில் வேதங்கள் அழித்துவிடுமோ
என்ற சந்தேகம் சிலருக்கு உண்டாகலாம். இதனால் அந்த சந்தேகத்தை நீக்கும் விதமாக உன்னில் காணப்படும்
கோடுகள் என்பதன் மூலம், வேதங்களின் ப்ரதியை நீ வைத்துக் கொண்டுள்ளாய் என்பதை உணர்த்துகிறாய் போலும்.

பெருமாளுடைய ஸ்ரீ பாதுகையே பிரளயம் வந்தால் எல்லாம் அழிந்து போய் விடுகிறதே
வேதமும் அப்படி யாகி விடுமோ என்றதோர் பயத்தை நீக்குகிறாய் –
உன் மீது ரேகைகள் என்ற பெயரில் வேதங்களின் மூலத்தை அஷர ராசியை ஒரு சந்கேதத்தில் வைத்துப் பாது காக்குகிறாய் என்று எண்ணுகிறேன் –
திருப் பாதுகை உபாசனம் வேதங்கள் அனைத்தையும் விளங்க வைக்கும் -வேதம் எழுதாக் கிளவி எனபது நாம் எழுதிக் கற்பதை
விலக்குவதே யன்றி பெருமாளே சங்கேதமாக ரேகையாக எழுதிக் காப்பதை விலக்க மாட்டாது –
தமிழ் வேதத்துக்கும் இது பொருந்தும் -திருப் பாதுகையே நம்மாழ்வார் ஆயிற்றே –

—————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading