நமஸ்தே பாதுகே பும்ஸாம் ஸம்ஸார அர்ணவே ஸேதவே
யதாரோ ஹஸ்ய வேதாந்தா: வந்தி வைதாளிகா: ஸ்வயம்—241-
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே!
உயிர்கள் பிறந்து இறப்பதையே தனது இயல்பாக உடையது ஸம்ஸாரம் என்ற கடல் ஆகும்.
இந்தக் கடலில் அணை போன்றுள்ள உனக்கு என் நமஸ்காரங்கள்.
உபநிஷத்துக்கள் செய்வது என்ன?
பெரியபெருமாளைத் துயில் எழுப்பி, உன்னைச் சாற்றிக் கொள்ள வேண்டும் என்பது அல்லவா?
(வைதாளிகர்கள் என்பவர்கள் எம்பெருமானைத் துயில் எழுப்புபவர்கள் ஆவர்.
இங்கே வைதாளிகர்களாக உபநிஷத்துக்கள் உள்ளன என்றார்).
ஸ்ரீ பாதுகையே பெருமாள் உன் மீது உபநிஷத்துக்கள் ஸ்துதிப்பவர்களாயும் எழுப்பு கிறவர்களாயும் இருக்கின்றன –
நீ ஜனங்கள் உடைய பிறப்பு இறப்பு என்கிற துக்கத்தை போக்குகிறாய் –
அப்படிப்பட்ட உன்னை சேவிக்கிறேன் –
———————————————————————–
உசிதம் உபசரிஷ்யந் ரங்கநாத ப்ரபாதே
விதி சிவ ஸநக ஆத்யாந் பாஹ்ய கக்ஷ்யா நிருந்தாந்
சரண கமல ஸேவா ஸௌக்ய ஸாம்ராஜ்ய பாஜாம்
ப்ரதம விஹித பாகாம் பாதுகாம் ஆத்ரியேதா:—242-
ஸ்ரீரங்கநாதா! உனது திருப்பள்ளி யெழுச்சிக்கு முன்பாக வந்து விட்ட சிவன், நான்முகன், ஸநகர் போன்றவர்கள்
முன் வாயிலில் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களை நீ தகுந்த வழியில் உபசாரம் செய்ய வேண்டும்.
ஆகவே உனது திருவடிகள் என்னும் தாமரைகளின் சுகம் பெறுபவர்களில் முதல் இடம் பிடித்துள்ள பாதுகையை,
இதன் மூலம் சக்ரவர்த்தி என்ற பட்டம் பெற்ற பாதுகையை, நீ சாற்றிக் கொண்டு எழ வேண்டும்.
ஸ்ரீ ரங்க நாதனே உங்களுடைய திருவடி ஸூகத்தை அனுபவிக்கும் பேறு பெற்ற
ஸ்ரீ பாதுகையை சாற்றிக் கொண்டு எழுந்து அருள வேண்டும்
விடியற் காலை வேளையில் பிரம்மன் சிவன் சனகர் முதலானவர் வெளி முற்றத்தில்
தங்களைத் தரிசிக்க காத்து இருக்கின்றனர் –
திருப்பள்ளி யெழுச்சியின் போது
சிவன், நான்முகன், ஸநகர் ஆகியோர் அரங்கனது வாயிலில் இந்த விஸ்வரூப ரங்கனைக் காண்பதற்காக,
தரிசிப்பதற்காக காத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்று குறிப்பிட்டு,
உன் திருவடிகளினால் சுகம் பெற்று கொண்டிருக்கும், சக்ரவர்த்தினியாய் விளங்கும் பாதுகையை
நீ சாற்றிக் கொண்டு எழுந்தருள வேண்டும் என்று பிரார்த்திக்கின்றார்.
—————————————————–
பத்மா ஜுஷ்டம் பஜது சரணம் பாதுகா லப்தவாரா
ப்ரத்யாஸந்நா: தவ பரிஜநா: ப்ராதரா ஸ்தாந யோக்ய:
அர்த்த உந்மேஷாத் அதிக ஸுபகாம் அர்த்த நித்ரா நுஷங்காம்
நாபீ பத்மே தவ நயந யோர் நாத பஸ்யந்து சோபாம்–243-
ஸ்ரீரங்கநாதா! காலை வேலையில் உனக்குத் தொண்டு புரியும் பணியாளர்கள் வந்து விட்டனர்.
உனது தாமரை போன்ற கண்களில் உள்ள உறக்கம் பாதி கலைந்தும் கலையாமலும் உள்ளதால்,
உனது இமை பாதி மூடியும் திறந்தும் உள்ளது.
இந்த அழகைக் கண்டு, நாபிக் கமலத்தில் உள்ள தாமரை மலர், உனது கண்கள் போல மலர்ந்தும் மலராமலும் உள்ளது.
இந்த அழகை அவர்கள் அனுபவிக்க வேண்டும்.
இரவு முழுவதும் உனது திருவடிகளை வணங்கி வருடிய மஹா லக்ஷ்மியின் சேவையை
இனிப் பகலில் பாதுகை ஏற்றுக் கொள்ள வேண்டும் (ஆகவே துயில் எழுவாயாக).
ஸ்ரீ ரெங்க நாதனே மகா லஷ்மியால் திருவடிகள் வருடப்பட்டு தாங்கள் நித்திரை செய்யும் போது
பாதி திறந்தும் மூடியும் உள்ள சந்திர ஸூர்யர்கள் ஆகிய உம் திருக் கண்களைக் கண்டு
திரு நாபியில் இருக்கும் தாமரை மலர் பாதியே மலர்ந்து உள்ளது –
தேவரீர் திருவடியைப் பிடிக்க இப்போது ஸ்ரீ பாதுகையின் முறை ஆகையாலே
திருப் பாதுகையைத் தரித்து தேவரீர் வெளியே எழுந்து அருள வேணும் –
தேவரீரின் அடியார்கள் அந்த சோபையைக் கண்டு களிக்கட்டும் –
————————————————–
உபநமதி முஹுர்த்தம் சேஷ ஸித்தாந்த ஸித்தம்
தத் இஹ சரண ரக்ஷா ரங்க நாத த்வயைஷா
ம்ருது பதம் அதிரூடா மஞ்ஜுபி: சிஞ்ஜிதை: ஸ்வை:
உபதி சது ஜநாநாம் உத்ஸவ ஆரம்ப வார்த்தாம்—244-
ஸ்ரீரங்கநாதா! சுபமான முஹுர்த்த காலம் வந்துவிட்டது. ஆதிசேஷனின் அவதாரமாகிய உடையவரின்
”எம்பெருமானார் தரிசனம்” என்னும் முறைப்படிச் செய்ய வேண்டியவைகள் நடை பெற வேண்டும்.
உனது திருவடிகளைக் காப்பதில் குறியாக உள்ள உனது பாதுகைகள் மீது உனது திருவடிகளை மெதுவாக எடுத்து வைப்பாயாக.
பின்னர் நீ அழகாக நடந்து வரும் போது ஒலிக்கின்ற பாதுகைகளின் ஒலி, மக்களுக்கு அன்றைய உற்சவம் தொடங்கியதை அறிவிக்கட்டும்.
ஸ்ரீ ரங்க நாத ஸ்ரீ பாதுகைகளைத் தரித்துத் தாங்கள் எழுந்து அருளினால் ஆதிசேஷன் ப்ரவர்த்தித்த ஜ்யோதிட சித்தாந்தப்படி
நல்ல வேளையில் புறப்படுகையில் அந்த ஸ்ரீ பாதுகையின் சலங்கை சப்தம் உத்சவம் ஆரம்பித்ததை எல்லோருக்கும் உணர்த்தட்டும் –
———————————————————————–
ரங்காதீச மருத் கணஸ்ய மகுடா ஆம்நாய ப்ருந்தஸ்ய வா
ப்ரத்யாநீய ஸமர்ப்பிதா விதி முகை: வாரக்ரமாத் ஆகதை:
வாஹா அரோஹண ஸம்ப்ருதம் ஸ்ரம பரம் ஸம்யக் விநேதும் க்ஷமா
சீலா ஸஞ்சரண ப்ரியா ஸ்ப்ருஸ்து தே பாதாம் புஜம் பாதுகா—245-
ஸ்ரீரங்கநாதா! உன்னுடைய பாதுகையை நான்முகன் முதலான தேவர்கள் வரிசையாக நின்று தங்கள் தலையில் ஏற்கின்றனர்.
வேதங்களும் தங்கள் தலைகளில் ஏற்றுக் கொள்கின்றன.
இவ்விதம் சஞ்சரித்த பாதுகை, இப்போது மீண்டும் உன்னிடம் சமர்ப்பிக்கப் பட்டுள்ளது.
இவ்விதமாக பலவிதமான வாகனங்கள் மீது ஏறி சஞ்சாரம் செய்த காரணத்தினால் பாதுகைக்கு மிகுந்த களைப்பு ஏற்பட்டிருக்கும்.
இவ்விதம் அமர்ந்தபடி சென்ற பின்னர், சற்று நேரம் நீ பாதுகையை அணிநது கொண்டு
உல்லாசமாக நடப்பதை அல்லவோ பாதுகை விரும்பி நின்றது? ஆகவே உனது திருவடிகளை அவை தொட வேண்டும்.
ஸ்ரீ ரங்க நாதா வாகனத்தில் திரு வீதி வலம் வந்ததால் உண்டான உம்முடைய ஸ்ரமத்தைப் போக்க வல்ல
திரு பாதுகையைத் திருவடிகளிலே சாற்றிக் கொள்ள வேண்டும்
நீர் வாகனத்தில் அமர்ந்து எழுந்து அருளும் போது சேவிக்கும் தேவதைகளின் சிரஸ் அல்லது வேத புருஷர்களின் சிரஸ்
இவற்றின் நின்று திருப்பிக் கொண்டு வந்து சமர்ப்பித்து உள்ளார்கள்
பிரம்மா முதலிய ஆராதகர் உல்லாச சஞ்சாரத்தில் உமக்கு மிகப் பிடித்தவள் இவள் –
———————————————————–
வ்ருத்தம் க்ரமேண பஹுதா நியுதம் விதீநாம்
அர்த்தம் த்வதீயம் இதம் அங்குரிதம் தவாஹ்ந:
நீளா ஸகீபிஸ் உபநீய நிவேஸ்யமாநா
மங்த்தும் ப்ரபோ த்வரயதே மணி பாதுகே த்வாம்—-246-
ப்ரபோ! ஸ்ரீரங்கநாதா! வரிசையாகப் பல லட்சம் நான்முகன்களின் ஆயுள் காலம் முடிந்து விட்டது.
இதோ பார்! உனது தினத்தின் பிற்பகல் வந்து விட்டதை இது உணர்த்துகிறது.
நப்பின்னை பிராட்டியின் தோழிகள் மூலம் கொண்டு வந்து சமர்ப்பிக்கப்பட்ட பாதுகையானது,
உன்னைத் திருமஞ்சனம் செய்து கொள்ள அழைக்கிறது.
பெருமாளே அநேக லஷம் பிரம்மாக்கள் கழிந்து ஒழிந்தனர்
நாழிகை வந்து விட்டது -நப்பின்னை பிராட்டி தோழிகள் உடன் உனக்கு
ஸ்ரீ பாதுகை சமர்ப்பித்து அந்த ஸ்ரீ பாதுகை உன்னை நீராட்டத்துக்கு அவசரப் படுத்துகிறார்கள் –
——————————————————————–
திவ்ய அப்ஸரோபி: உபதர்சித தீப வர்கே
ரங்காதி ராஜ ஸுபகே ரஜநீ முகே அஸ்மிந்
ஸம் ரக்ஷிணீ சரணயோ: ஸ விலாஸ வ்ருத்தி:
நீராஜநாஸநம் அஸௌ நயது ஸ்வயம் த்வாம்—-247-
ஸ்ரீரங்க ராஜனே! பரம பதத்தில் உள்ள அப்ஸரஸ்கள் பலரும் ஸந்த்யா காலம் ஆகி விட்டபடியால் தீபம் ஏந்தி,
உனக்கு மங்கள ஆலத்தி எடுக்க வந்துள்ளனர்.
உன்னுடன் எப்போதும் உல்லாசமாக நடக்க வேண்டும் என்ற எண்ணமும்,
உனது திருவடிகளை எப்போதும் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணமும் கொண்ட பாதுகையானது,
உன்னை ஆலத்திக்கான ஆஸனத்தில் எழுந்தருளச் செய்ய வேண்டும்.
ஸ்ரீ ரங்க நாதரே தேவ லோகே அப்சரஸ்ஸூக்கள் சாயங்கால வேளையில் தீபங்கள் ஏந்தித்
தங்களுக்கு ஆரத்தி எடுக்கிறார்கள் –
அந்த இடத்துக்கு உல்லாசமாக எழுந்து அருளச் செய்யட்டும் –
————————————————————————
ஆஸநாத் உசிதம் ஆஸநாந்தரம் ரங்க நாத யதி கந்தும் ஈஹஸே
ஸந்ந தேந விதிநா ஸமர்ப்பிதாம் ஸ ப்ரஸாதம் அதி ரோஹ பாதுகாம்—-248-
ஸ்ரீரங்கநாதா! நீ ஓர் ஆசனத்தில் இருந்து மற்றோர் ஆசனத்திற்குச் செல்ல விரும்புகின்றாய் போலும்.
அதனால் தான் நான்முகன் தனது கைகளில் உனது பாதுகையைத் தயாராக வைத்துக் கொண்டு நிற்கிறான் போலும்.
அவற்றைச் சாற்றிக் கொள்வாயாக.
ஸ்ரீ ரங்க நாத பிரம்மனால் தங்கள் திருவடியில் சமர்ப்பிக்கப் படும் ஸ்ரீ பாதுகையைச் சாற்றிக் கொண்டு
ஒரு ஆசனத்தில் இருந்து மற்றதற்கு தேவரீர் எழுந்து அருள வேண்டும் –
—————————————————————
பரிஜந வநிதாபி: ப்ரேஷித: ப்ராஞ்ஜலிஸ் த்வாம்
ப்ரணமதி மதநோ அயம் தேவ சுத்தாந்த தாஸஸ்
பணி பதி சயநீயம் ப்ரா பயித்ரீ ஸலீலம்
பத கமலம் இயம் தே பாதுகா பர்யு பாஸ்தாம்—-249-
ஸ்ரீரங்கநாதா! அந்தப்புரத்தில் வேலைக்காரர்கள் மூலம் மன்மதன் அனுப்பப்பட்டுள்ளான்.
அவன் உன் முன்பாக குவிந்த கைகளுடன் நின்று கொண்டு வணங்கியபடி உள்ளான்.
ஆதிசேஷன் என்ற படுக்கைக்கு உன்னை எழுந்தருளிச் செய்ய பாதுகை தயாராக உள்ளது.
ஆகவே தாமரை போன்ற உனது திருவடிகள் பாதுகையை விரைந்து அடைய வேண்டும்.
பெருமாளே அந்தப் புரத்துப் பணிப் பெண்கள் மன்மதனை அனுப்பி உள்ளனர் –
ஸ்ரீ பாதுகையை சாற்றிக் கொண்டு உல்லாசமாக ஆதி சேஷன் ஆகிய சயனத்துக்கு எழுந்து அருள வேணும் –
——————————————————————–
இதி நிகமவந்தி வசஸா ஸமயே ஸமயே க்ருஹீத ஸங்கேத:
அபி ஸரதி ரங்க நாத: ப்ரதிபத போகாய பாதுகே பவதீம்—-250-
ஸ்ரீ நம் பெருமாளின் பாதுகையே! இப்படியாக அந்தந்த காலத்தில் இவற்றைச் செய்ய வேண்டும் என்று
வேதங்களாகிய வந்திகள் (துதி செய்பவர்கள் எனலாம்) மூலம் ஸ்ரீரங்கநாதன் உணர்கிறான்.
அந்தந்த காலத்தில் சுகங்களை அனுபவிக்கும் பொருட்டு உன்னை அடைகிறான்.
ஸ்ரீ பாதுகையே உபநிஷத்துக்களாம் வந்திகள் இவ்வாறு தெரிவிக்க
அந்தந்தக் காலங்களில் உரிய இடங்களுக்குச் செல்ல உன்னை
அன்புடன் அடைகிறான் ஸ்ரீ ரங்க நாதன் –
——————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply