ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம்-10-ஸ்ருங்கார பத்ததி -பெருமாள் உடன் ஸ்ரீ பாதுகை சேர்ந்து மகிழ்வது -ஸ்லோகங்கள் -251-260-

சௌரே: ஸ்ருங்கார சேஷ்டாநாம் ப்ரஸூதிம் பாதுகாம் பஜே
யாம் ஏஷ புங்க்தே ஸூத்தாந்தாத் பூர்வம் பஸ்சாத் அபி ப்ரபு:—251-

பெரிய பெருமாளின் ஸ்ருங்கார ரஸத்திற்கு ஹேதுவாக உள்ள பாதுகையை நான் வணங்குகிறேன்.
பாதுகை எவ்விதம்ஹேதுவாக உள்ளது என்றால் –
அவன் அந்தப்புரம் செல்வதற்கும்,
அங்கிருந்து மீண்டு வருவதற்கும்
பாதுகையைச் சாற்றிக் கொண்டு அல்லவோ செல்கிறான்?

அந்தப்புரத்துக்கு போகும் போதும் வரும் போதும் சாற்றிக் கொண்டு நாயகனான பகவான்
நாயகியான ஸ்ரீ பாதுகையின் சேர்க்கை ஸூகத்தை அனுபவிக்கிறார் –
அந்தகைய சௌரியின் ஸ்ருங்கார லீலைகளுக்கு காரண பூதையான ஸ்ரீ பாதுகையை வணங்குகிறேன்

ஆழ்வார் தன்னை நாயகியாக புருஷோத்தமனை அனுபவிக்கிறார் –

—————————————————————–

ப்ரணத த்ரித சேந்தர மௌளி மாலா மகரந்த அர்த்ர பராக பங்கிலேந
அநுலிம்பதி பாதுகே ஸ்வயம் த்வாம் அநு ரூபேண பதேந ரங்க நாத:—252-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! தேவர்கள் அனைவரும் ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளில் தலை சாய்த்து வணங்குகின்றனர்.
அப்போது அவர்கள் அணிந்துள்ள மாலைகளில் உள்ள தேன், அவனது திருவடிகளில் உள்ள தூசிகளுடன் கலந்து, சேறு போன்று ஆகிறது.
இப்படிப்பட்ட உயர்ந்த திருவடிச் சேற்றை உன் மீது சந்தனம் போன்று ஸ்ரீரங்கநாதன் எப்போதும் பூசுகிறான்
(நாயகன் நாயகிக்கு சந்தனம் பூசுவதைக் கூறுகிறார்).

ஸ்ரீ பாதுகையே தேவர்கள் எம்பெருமானை சேவிக்கும் போது அவர் தம் தலையில் உள்ள புஷ்பங்களின் மகரந்தமும் புழுதியும்
தேனும் சேறுமாய்ப் பெருமாள் திருவடியைச் சேர்ந்தன -பெருமாள் அதை உனக்கு சந்தனமாக பூசி விடுகிறார் –

————————————————————–

அவதாத ஹிமாம் ஸுக அநு ஷக்தம் பத ரக்ஷே த்வயி ரங்கிண கதாசித்
கிம் அபி ஸ்திதம் அத்வதீய மால்யம் விரளாவஸ்தித மௌக்திகம் ஸ்மராமி—253-

ஒரு நேரத்தில் ஸ்ரீரங்கநாதன் வெளுத்த ஈர வஸ்திரத்துடனும்,
நெருக்கம் இல்லாமல் அங்கும் இங்குமாக உள்ள
முத்து மாலையுடனும் அழகாக உன் மீது எழுந்தருளியிருப்பான்.
அப்போது அவன் திருவடிகளில் மலர் மாலையும் சாற்றப் பட்டிருக்கும்.
இதனைக் காணும் போது, சந்தனப் பூச்சிற்குப் பின்னர் (கடந்த ஸ்லோகம் காண்க)
உனக்கு இடப்பட்ட மாலை என்றே நான் எண்ணுகிறேன்.

ஸ்ரீ பாதுகையே திரு மஞ்சன காலத்தில் ஒரு வெள்ளை வஸ்த்ரத்தையும் ஒரு முத்து மாலையையும்
ஒரு பூ மாலையையும் மட்டுமே அணிந்து
ஸ்ரீ ரங்க நாதன் உன்னிடத்திலே சேர்ந்து இருப்பதான அபூர்வ சேர்க்கையை நினைத்து மகிழ்கிறேன் –

——————————————————————–

அஸஹாய க்ருஹீத ரங்க நாதாம் அவரோதாங்கண ஸீம்நி பாதுகே த்வாம்
ஸுத்ருஸ: ஸ்வயம் அர்ச்ச யந்தி தூராத் அவதம் ஸோத்பல வாஸிதை: அபாங்கை:—-254-

நம்பெருமாளின் பாதுகையே! நம்பெருமாள் உன்னைத் தனது திருவடிகளில் சாற்றிக் கொண்டு அந்தப்புரத்திற்குச் செல்கிறான்.
அப்போது அங்குள்ள பெண்கள் செய்வதென்ன? அவர்கள் தங்கள் காதுகளில் அலங்காரமாக வைத்துள்ள
நெய்தல் மலரின் நறுமணம் நிறைந்த கண்களால் உன்னைத் தங்கள் கடைக் கண் பார்வை கொண்டு பார்த்து வணங்கி நிற்கின்றனர்
(இங்கு நாயகனான நம்பெருமாளுடன் வரும் ப்ரதான நாயகியாக பாதுகை கூறப்பட்டது காண்க).

ஸ்ரீ பாதுகையே நீ மற்று ஒருவரின் துணை இன்றியே ஸ்ரீ ரங்க நாதனை எழுந்து அருளப் பண்ணிக் கொண்டு அந்தப்புரத்திற்கு
வரும் போது அங்குள்ள பெண்கள் ஆசையுடன் உன்னைக் கடைக் கண்களால் பார்த்து தூரத்தில் இருந்தே உன்னை அர்ச்சிக்கிறார்கள் –

————————————————————

நிர் விச்ய மாநம் அபி நூதந ஸந்நிவேசம்
கைவல்ய கல்பித விபூஷண காய காந்திம்
காலேஷு நிர் விசஸி ரங்க யுவாநம் ஏகா
ஸ்ருங்கார நித்ய ரஸிகம் மணி பாத ரஷே—255-

இரத்தினக் கற்களால் இழைக்கப்பட்ட பாதுகையே! எத்தனை அனுபவித்தாலும் புதியவனாகவே ஸ்ரீரங்கநாதன் உள்ளான்.
அத்தனை அழகான திவ்யமான திருமேனி கொண்டவனாக உள்ளான்.
எந்தவித ஆபரணங்களும் அணியாமல் இருக்கின்ற போதும், ஆபரணங்கள் அணித்தவன் போலத் தோன்றுகிறான்.
இவ்விதமாக அந்தந்த கால கட்டங்களில் நீ அவனுடனே இருந்து கொண்டு
அவனைத் தனியாக அனுபவித்தபடி உள்ளாய்.

ஸ்ரீ பாதுகையே எம்பெருமானை ஒவ்வொரு முறை சேவிக்கும் போதும் புதிது புதிதாகத் தோற்றம் அளிக்கிறார் –
எந்த ஆபரணமும் இன்றியும் அவர் அழகு கொள்ளை கொள்வதாய் உள்ளது –
நீ மட்டும் கணமும் பிரியாது பல காலங்களிலும் இவ் வண்ணம் அனுபவிக்கிறாய் –

——————————————————————–

நித்ராயி தஸ்ய கமிது: மணி பாதுகே த்வம்
பர்யங்கிகா பரிஸரம் ப்ரதிபத்ய மாநா
ஸ்வாஸாநில ப்ரசலிதேந புஜஸ்ய பீக்ஷ்ணம்
நாபீ ஸரோஜ ரஜஸா நவம் அங்க ராகம்—256–

இரத்தினக் கற்கள் பதிக்கப் பெற்ற பாதுகையே! ஸ்ரீரங்கநாதன் கட்டிலில் உறங்கிக் கொண்டிருக்கிறான்.
அப்போது அவன் கட்டிலில் அருகில் நீ உள்ளாய். அவன் விடும் மூச்சுக் காற்றில், அவனது நாபிக் கமலத்தில் உள்ள
மகரந்தத் துளிகள் உன் மீது வந்து படிந்தபடி உள்ளன. இவ்விதம் உனக்கு சந்தனப் பூச்சு நடை பெறுகிறது போலும்.

ஸ்ரீ மணி பாதுகையே எம்பெருமான் சயனித்து இருக்கும் போது அவர் மூச்சுக் காற்றினால் அசைக்கப்பட்ட நாபி கமலத்தினின்று
மகரந்த தூள் திருப் பள்ளியின் பக்கத்தில் இருந்த உன் மீது மேன் மேலும் பட அது உனக்கு சந்தனத்தால் பூசியது போலிருந்தது –

—————————————————————————

சயிதவதி ரஜந்யாம் பாதுகே ரங்க பந்தௌ
சரண கமல பார்ஸ்வே ஸாதரம் வர்த்தஸே த்வம்
பணி பதி சய நீயாத் உத்தி தஸ்ய ப்ரபாதே
ப்ரதம நயந பாதம் பாவநம் ப்ராப்து காமா—-257–

பெரிய பெருமாளின் பாதுகையே! பெரிய பெருமாள் இரவில் தனது படுக்கையில் சயனித்துள்ள போது,
தாமரை மலர் போன்ற அவனது அழகான திருவடிகளின் அருகிலேயே நீ உள்ளாய். ஏன் என்றால் –
பெரிய பெருமாள் காலைப் பொழுதில் தனது ஆதிசேஷன் என்ற படுக்கையில் இருந்து துயில் எழும் போது,
அவனது முதல் பார்வையை நீ பெற்று விட வேண்டும் என்ற ஆசை காரணமாக அல்லவோ?

ஸ்ரீ பாதுகையே -பெருமாள் சயனித்துக் கொண்டு இருக்கிறார் -விடியற்காலை திரு வனந்த ஆழ்வான் ஆகிய திருப் பள்ளியில் இருந்து
எழுந்து இருக்கும் போது சுத்தி அளிக்கும் முதல் கடாஷம் உன் மீது பட வேண்டும் என்று ஸ்ரத்தை யுடன் அவரது திருவடி பக்கம் நீ இருக்கிறாய் –

——————————————————————————

சரண கமல ஸங்காத் ரங்க நாதஸ்ய நித்யம்
நிகம பரிமளம் த்வம் பாதுகே நிர்வமந்தீ
நியதம் அதிசயாநா வர்த்தஸே ஸாவரோதம்
ஹ்ருதயம் அதி வஸந்தீம் மாலிகாம் வைஜயந்தீம்—258-

அழகிய மணவாளனின் பாதுகையே! பெரிய பெருமாளின் திரு மார்பில் உள்ள மஹாலக்ஷ்மியுடன் தொடர்பு கொண்டுள்ளதால்,
அவன் அணிந்துள்ள வைஜயந்தி என்கிற மாலைக்கு நறு மணம் அதிகமே ஆகும்.
ஆயினும் அவனது திருவடிகளின் தொடர்பு உனக்கு மட்டுமே அல்லவா உள்ளது?
இதன் மூலம் நீ எப்போதும் வேதங்களின் நறு மணத்தை பரப்பியபடி உள்ளாய்.
ஆக ஸ்ரீரங்கநாச்சியாரின் தொடர்பு பெற்ற அந்த மாலையை விட, அவனது திருவடிகளின் தொடர்பு பெற்ற நீ உயர்ந்தே உள்ளாய்.

ஸ்ரீ பாதுகையே வைஜயந்தி என்ற வனமாலை எம்பெருமான் திருமார்பை -மற்ற மகிஷிகள் உடன் சேர்ந்து அடைந்தது –
நீ மட்டுமே அவர் திருவடித் தாமரையை அடைந்து அதன் ஒப்பற்ற வேத வாசனையை என்றும் பரவ வெளிப்படுத்துபவளாய்
அவ் வனமாலை யினின்றும் மேம்பட்டு விளங்குகிறாய் –
நிகம பரிமளம் அருளிச் செய்த ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிக்கு யாரே நிகர் ஆவார் –

—————————————————————————–

உபநிஷத் அபலாபி: நித்யம் உத்தம் ஸநீயம்
கிம் அபி ஜலதி கந்யா ஹஸ்த ஸம்வாஹ நார்ஹம்
தவ து சரண ரக்ஷே தேவி லீலாரவிந்தம்
சரண ஸரஸிஜம் தத் சாரு சாணூர ஹந்து:—-259-

பெரிய பெருமாளின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! உபநிஷத்துக்கள் என்னும் பெண்கள்,
பெரிய பெருமாளின் திருவடித் தாமரைகளைத் தங்கள் தலைகளில் சூட்டிக் கொள்கின்றனர்.
திருப்பாற்கடலில் அவதரித்த மஹாலக்ஷ்மி அந்த திருவடிகளைத் தனது திருக் கைகளால் பிடித்தபடி உள்ளாள்.
சாணுரனை மாய்த்த க்ருஷ்ணனாகிய பெரிய பெருமாளின் திருவடிகள்,
உனக்கு ஒரு விளையாட்டுப் பொருளாக உள்ள தாமரையாக உள்ளது.

ஸ்ரீ பாதுகையே வேதங்கள் சாணுரனைக் கொன்ற பெருமாளின் திருவடிகளை தங்கள் தலையில் தாங்குகின்றன
மஹா லஷ்மி அவைகளைத் தன் கரங்களால் வருடுகிறாள் -பிடிக்கிறாள் –
அந்தத் திருவடிகள் உனக்கு லீலாரவிந்தங்கள் ஆகின்றன –

———————————————————————

அகிலாந்த: புரவாரேஷு அநேகவாரம் பதாவநி ஸ்வைரம்
அநு பவதி ரங்க நாத: விஹார விக்ராந்தி ஸஹ சரீம் பவதீம்—-260-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதன் தனது அந்தப்புரங்களில் நுழைவதற்கு
“இந்த இந்த நாள், இந்த இந்த அறை” என்று முறை வைத்துள்ளான்.
ஆனால் உன்னை மட்டும் அவன் எப்போதும் விடாமல் உல்லாஸ நடையில் அனுபவித்தபடி உள்ளான்.

ஸ்ரீ பாதுகையே ஸ்ரீ ரெங்க நாதன் மற்ற தேவியர்கள் உடன் அவரவர் முறையில் கூடி மகிழ்கிறார்
எப்பொழுதும் சஞ்சாரத்தில் துணையான உன்னை மட்டும் எல்லாருடைய முறையிலும் தவறாது அனுபவிக்கிறார் –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading