அவதாரிகை –
அடிமை செய்வாரை ஸ்துதித்தும் செய்யாதாரை நிந்தித்தும் போருகிற பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார்
அது எங்கனே என்னில்
இப்படி வாசிகமாக அடிமை செய்யப் பெற்ற ஹர்ஷ பிரகர்ஷத்தாலே-இவ் வடிமையைக் காற்கடைக் கொண்டு
உடம்பை வளர்த்துக் கொண்டு திரியும் கழனி மிண்டரைப் பொடிந்தும்
பகவத் குண அனுபவத்தால் வந்த களிப்பிக்கு போக்கு விட்டு ஆடுவதும் பாடுவதும் ஆகிற அடிமை செய்யும்
ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கொண்டாடியும்
ஹ்ருஷ்டராய்ச் செல்லுகிற மொய்ம்மாம் பூம் பொழிலின் அர்த்தத்தை அருளிச் செய்கிறார் –
மொய்ம்பாரும் மாலுக்கு -இத்யாதியாலே-
—————————————————————————-
மொய்ம்பாரும் மாலுக்கு முன்னடிமை செய்து உவப்பால்
அன்பால் ஆட்செய்பவரை ஆதரித்தும் -அன்பிலா
மூடரை நிந்தித்தும் மொழிந்து அருளும் மாறன் பால்
தேடரிய பத்தி நெஞ்சே செய்—25-
—————————————————————————–
வியாக்யானம்–
மொய்ம்பாரும் மாலுக்கு –
சமஸ்த ஜகதாகாரதயா சக்தியால் சம்ருத்தனான ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு சர்வஞ்ஞத்வ சர்வ சக்தித்வங்களாலே இறே
பொய்கை முதலைக்கு சிறை விடுத்து கைம்மாவுக்கு அருள் செய்து அடிமை கொண்டதுவும் –
கூர் வேல் கொடும் தொழிலன் போலே எறும்புக்கு வேல் -இவனது பாரிப்பு –
முன்னடிமை செய்து உவப்பால் –
முன்-புகழும் நல் ஒருவனில் வாசிகமாக அடிமை செய்த அந்த ஹர்ஷத்தாலே –
அன்பால் ஆட் செய்பவரை ஆதரித்தும் –
பக்தியாலே கைங்கர்யம் பண்ணுமவர்களை-
அதாவது –
ஓதி உணர்ந்தவர் -என்றும்
முனிவின்றி ஏத்திக் குனிப்பார் முழுதுணர் நீர்மையினார் -என்றும்
ஆர்வம் பெருகிக் குனிப்பார் அமரர் தொழப் படுவார் -என்று ஆதரித்தும் –
காயந்தி கேசித் பிரணமந்தி கேசித் நருத்யந்தி கேசித் -என்றது இறே –
அன்பிலா மூடரை நிந்தித்தும் -மொழிந்து அருளும்-
பக்தி இல்லா பாவிகளான அஞ்ஞரை அநாதரித்து நிந்தித்தும்
அதாவது
எழுந்தும் பறந்தும் துள்ளாதார் தம்மால் கருமம் என் -என்றும்
மண் கொள் உலகில் பிறப்பார் வல் வினை மோத அலைந்து -என்றும்
அலை கொள் நரகத்து அழுந்திக் கிடந்தது உழைக்கின்ற வம்பர் -என்றும்
தம் பிறப்பால் பயன் என்ன சாது சனங்கள் இடையே -என்றும்
என் சவிப்பார் மனிசரே -என்றும்
உத்தமர்கட்கு என் செய்வார் -என்றும் இறே அருளிச் செய்தது –
மார்க்கம் பிரதர்சய -என்னும் படி இறே-அதனுள் புகாதாரை அநாதரித்த படி
மாறன் பால் தேடரிய பத்தி நெஞ்சே செய் –
இப்படி அஞ்ஞர் ஆனவர்களை நிந்தித்து
அவர்களை அசத் கர்மங்களின் நின்றும் நிவர்த்திக்கப் பார்த்த ஸ்ரீ ஆழ்வார் விஷயத்திலே
பெறற்கு அரியதான பக்தியை மனஸே பண்ணு-
—————————————————————————-
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply