நீயலையே சிறுபூவாய்! நெடுமாலார்க்கு என்தூதாய்
நோய்எனது நுவல்என்ன நுவலாதே இருந்தொழிந்தாய்
சாயலொடு மணிமாமை தளர்ந்தேன்நான் இனிஉன்து
வாய்அலகில் இன் அடிசில் வைப்பாரை நாடாயே.
பொ-ரை : ‘சிறிய நாகணவாய்ப் பறவையே, அடியரானார்க்கு இரங்கும் பெரும்பித்தரான தலைவர்க்கு என் தூதாகிச் சென்று, என் நோயினைச் சொல்வாய் என்று யான் கூறவும், கூறாமல் இருந்துவிட்டாய்; அதனால், காரியத்தைக் கெடுத்தது நீ அன்றோ? இப்பொழுது, யான் சாயலும் அழகிய மாமை நிறமும் நீங்கப் பெற்றேன்; இனிமேல் உனது வாயலகில் இனிய உணவினை ஊட்ட வல்லவர்களைத் தேடிக் கொள்வாய்,’ என்றவாறு.
வி-கு : பூவை வேறு, கிளி வேறு; ‘பூவையும் கிளியும் கேட்டுப் புழைமுகம் வைத்து நோக்கி’ என்றார் தேவரும். (சிந். 2510.) பூவை என்னும் ஐயீற்றுப் பெயர், விளி ஏற்றலின் ‘ஆய்’ ஈறாகத் திரிந்தது. சாயல் – மென்மை. ‘சாயல் மென்மை’ என்பது தொல்காப்பியம். மாமை – அழகு; இதன் நிறம் – மாந்தளிர் (குறுந் 331.) அசோகந்தளிர் (கலித். 15.) ஆம்பலின் நார் உரித்த மெல்லியதண்டு (நற். 6.) இவற்றின் நிறத்தைப் போன்றது என்று கூறுவர். ‘உள் ஊரும் பசலைநோய் எனக்கே தந்துஎன், ஒளிவளையும் மாநிறமும் கொண்டார் இங்கே’ என்றார் திருமங்கை மன்னனும். அடிசில் என்பது, உண்பன தின்பன நக்குவன பருகுவனவற்றிற்கு எல்லாம் பொதுப்பெயர்.
ஈடு : எட்டாம் பாட்டு. முன்பு இவள் வார்த்தை சொல்லிக் கொண்டாடுகையாலே தரித்திரிந்த பூவையானது, இவள் உறாவப்புக்கவாறே தானும் உறாவப்புக்கது; அத்தைப் பார்த்து, 1‘முன்னரே என் நிலையை அறிவி என்னச் செருக்கு அடித்திருந்தாய்; நானோ, முடியாநின்றேன்; இனி, உன்னைக் காப்பாரைத் தேடப் பாராய்,’ என்கிறாள்.
நீ அலையே – ‘என் நிலையை அறிவிக்க வேண்டும் என்ன, அறிவியாதே இருந்த உன்னாலே வந்தது அன்றோ இது! என்னாலே என்கிறது என்? வாராது இருந்த குற்றம் அவனது அன்றோ?’ என்ன, அறிவித்தால் வாராதிருந்தானாகில் அன்றோ அவனுக்குக் குறையாம்? நேரே சம்பந்தம் எம்பெருமானோடேயாய் இருக்கவும், ‘ஞானத்தை எந்த ஆசாரியனிடமிருந்து பெறுகிறானோ அவனை முதலில் வணங்கக் கடவன்,’ என்கிறபடியே, செய்த உபகாரத்தை நினைந்து ஆசாரியனை விரும்புவது போன்று, இவளும் பூவையைப்பார்த்து, ‘நீ அலையே’ என்கிறாள். இதனால், ‘பகவல்லாபம் சேர்ப்பாராலே’ என்று இருக்கிறாள் என்பது போதரும். சிறு பூவாய்-உன் பருவம் நிரம்பாமை அன்றோ நம் காரியத்தைக் கெடுத்தது? நெடு மாலார்க்கு – அவர்க்குக் காதலை உண்டாக்கிக் கொடு வரவேண்டும் என்று இருந்தாய் அல்லையே? என் தூதாய்-எனக்கு அவர் பக்கல் காதல் இல்லாமை இருந்தாயும் அன்றே! நோய் எனது நுவல் என்ன நுவலாதே இருந்தொழிந்தாய் – ‘எனது நிலையை அங்கே சென்று சொல்,’ என்ன, சொல்லாதே இருந்தொழிந்தாய்; ‘ஸ்ரீ பரதாழ்வான் நோய், என்றால் 1சாதுர்த்திகமாய் இராதது போன்று, இவளும் உலகத்தார் நோயினின்றும் தனது நோயை வேறுபடுத்திக் காட்டுவாள், ‘எனது நோய்’ என்கிறாள். ‘வந்தொழிந்தான், போயொழிந்தான்’ என்பன போன்று, ‘இருந்தொழிந்தாய்’ என்பதும் ஒரு சொல். தானும் நாயகனும் சேர இருத்தலை ஒரு வார்த்தையினாலே நோக்கலாய் இருக்கவும், அது செய்யாது ஆறியிருந்தது ஆதலின், ‘இருந்தொழிந்தாய்’ என்கிறாள்.‘அதற்கு இப்பொழுது வந்தது என்?’ என்ன, சாயலொடு மணிமாமை தளர்ந்தேன் நான் – சமுதாய சோபையோடு நிறத்தில் நிறைவையும் இழந்தேன். ‘இனிச் சென்று அறிவிக்கிறேன்,’ என்று விரைந்தது; ‘தண்ணீர் சென்ற பின் அணை கட்டுவாரைப் போன்று, இனி அறிவித்தால் என்ன இலாபம் உண்டு?’ இனி உனது வாய் அலகில் இன் அடிசில் வைப்பாரை நாடாயே-‘இனி, உன்னைக் காப்பாற்றுகின்றவர்களைத் தேடப் பாராய்,’ என்கிறாள். இதனால் ‘அவன் வந்தாலும் போன நிறத்தை மீட்கப் போகாது,’ என்று இருக்கிறாள். பெரிய திருமலை நம்பி, தம்முடைய இறுதிக்காலத்திலே, தமக்கு ஒரு வெண்ணெய்க்காடும் பிள்ளையாயிற்றுத் திருவாராதனம்; அவர் திருமுன்பில் திருத்திரையை வாங்கச் சொல்லி, ‘சாயலொடு மணி மாமை தளர்ந்தேன் நான் இனி உனது, வாய் அலகில் இன் அடிசில் வைப்பாரை நாடாயே,’ என்றாராம்.
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply