அரணிகளைத் தூக்கிச் சென்ற மான்! – வனபர்வம் பகுதி 309-ஓர் அந்தணரின் ஆசிரமத்தில் இருந்து அவரது அணிகளையும், கடைக்கோலையும் ஒரு மான் தூக்கிச் செல்வது; அந்த அந்தணர் பாண்டவர்களிடம் வந்து அவற்றை மீட்டுத் தரும்படி கோருவது; தனது தம்பிகளுடன் யுதிஷ்டிரன் அந்த மானைத் தேடிச் செல்வது; பாண்டவர்கள் அம்மானைக் கண்டடைவது; நீண்ட நேரம் துரத்தி ஆயுதங்கள் வீசியும் மானைத் துளைக்க முடியாதது; மான் திடீரென மறைவது; அனைவரும் ஒரு மரத்தடியில் அமர்வது; நகுலன் துயரத்துடன் பேசுவது…
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “தங்கள் மனைவி {திரௌபதி} கடத்தப்பட்டதால் பெரும் துயரடைந்து, கிருஷ்ணையை {திரௌபதியை} மீட்ட பிறகு, பாண்டவர்கள் அடுத்து என்ன செய்தார்கள்?” என்று கேட்டான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “கிருஷ்ணை {திரௌபதி} கடத்தப்பட்டதால் பெரும் துயரடைந்த மங்காப் புகழ் கொண்ட மன்னன் யுதிஷ்டிரன், தனது தம்பிகளுடன் காம்யக வனத்தைவிட்டு, காண்பதற்கு இனிய காட்சிகள் கொண்டதும், மரங்களும், இனிய பழங்களும் கிழங்குகளும் நிறைந்த துவைத வனத்திற்குத் திரும்பினான். தங்கள் மனைவியுடன் {திரௌபதியுடன்} கூடிய பாண்டுவின் மகன்கள் பழங்களை மிகச் சொற்பமாக உண்டு, கடும் நோன்புகள் பயின்று அங்கே வசிக்கலாயினர். எதிரிகளை அடக்குபவர்களான, குந்தியின் மகனான அறம்சார்ந்த மன்னன் யுதிஷ்டிரன், பீமசேனன், அர்ஜுனன், மற்றும் மாத்ரியிடம் பாண்டுவுக்குப் பிறந்த மற்ற மகன்கள் {நகுலனும் சகாதேவனும்}, கடும் நோன்புகள் பயின்று துவைத வனத்தில் வசித்து வந்தபோது, ஓர் அந்தணரின் காரணமாகப் பெரும் சிக்கலுக்கு ஆளானார்கள். எனினும் அக்காரியம் அவர்களது எதிர்கால மகிழ்ச்சிக்காகவே வந்ததாக அமைந்தது. அந்தக் குருக்களில் முதன்மையானோர் {பாண்டவர்கள்}, அந்த வனத்தில் வசித்து வந்தபோது ஏற்பட்ட சிக்கலைக் குறித்தும், இறுதியில் அது அவர்களுக்குக் கொடுத்த மகிழ்ச்சியைக் குறித்தும் உனக்கு முழுமையாகச் சொல்கிறேன். அதை நீ கேள்!
ஒரு முறை, ஒரு மான் திரிந்து கொண்டிருந்த போது, தவத்துறவுக்குத் தன்னை அர்ப்பணித்திருந்த ஓர் அந்தணருக்குச் சொந்தமான இரு அரணிகளும் {#}, ஒரு கடைக்கோலும் {#} அதன் கொம்புகளில் மாட்டிக் கொண்டன. அதன்பிறகு, ஓ! மன்னா {ஜனமேஜயா}, வேகம் கொண்ட, நீண்ட எட்டுகள் வைக்கும் திறன் கொண்ட அந்தச் சக்தி மிக்க மான், அந்தப் பொருட்களை எடுத்துக் கொண்டு ஆசிரமத்தை விட்டு வெகு வேகமாக ஓடியது. ஓ! குருக்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, அந்தப் பொருட்கள் இப்படித் தூக்கிச் செல்லப்படுவதைக் கண்ட அந்த அந்தணர், தனது அக்னிஹோத்ரம் குறித்துக் கவலை கொண்டு, விரைவாகப் பாண்டவர்கள் முன் வந்தார். நேரத்தைக் கடத்தாமல், காட்டில் தனது தம்பிகளுடன் அமர்ந்திருந்த அஜாதசத்ருவிடம் {யுதிஷ்டிரனிடம்} வந்த துயர் மிகுந்த அந்த அந்தணர், இந்த வார்த்தைகளைச் சொன்னார் “ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, ஒரு மான் உலவிக் கொண்டிருந்தபோது, ஒரு பெரும் மரத்தில் மாட்டப்பட்டிருந்த எனது அரணிகளும், கடைக்கோலும், அதன் {மானின்} கொம்புகளில் மாட்டிக் கொள்ள நேர்ந்தது. ஓ! மன்னா, பெரும் வேகம் கொண்ட அந்தச் சக்திமிக்க மான், நீண்ட எட்டுகள் வைத்து ஆசிரமத்தை விட்டு வேகமாக, அந்தப் பொருட்களுடன் ஓடிவிட்டது. ஓ! மன்னா, அதன் கால் தடங்களைக் கொண்டு அந்தச் சக்தி மிக்க மானை கண்டடைந்து, ஓ! பாண்டுவின் மகன்களே எனது அக்னிஹோத்ரம் நின்றுவிடாதவாறு, எனது அந்தப் பொருட்களை மீண்டும் கொண்டு வாருங்கள்” {என்றார் அந்த அந்தணர்}.
அந்த அந்தணரின் இவ்வார்த்தைகளைக் கேட்ட யுதிஷ்டிரன் மிகவும் கவலை கொண்டான். அந்தக் குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்}, தனது வில்லை எடுத்துக் கொண்டு, தனது தம்பிகளுடன் வெளியே கிளம்பினான். கவசம் பூண்டு, தங்கள் விற்களை எடுத்துக் கொண்ட அந்த மனிதர்களில் காளையர், அந்த அந்தணருக்குச் சேவை செய்யும் நோக்கோடு, மானைத் தேடி விரைவாக வெளியே சென்றனர். நீண்ட தூரத்திற்கு முன்னரே அந்த மானைக் கண்டுபிடித்த அந்தப் பலமிக்கப் போர்வீரர்கள், அதன்மீது முள் அம்புகளையும், எறிவேல்களையும், கணைகளையும் அடித்தனர். ஆனால், பாண்டுவின் மகன்களால் அதனை எவ்வகையிலும் துளைக்க முடியவில்லை. அவர்கள் அதைக் கொல்ல நினைத்து, அதைத் தொடர்ந்து செல்லத் திணறிய போது, அந்தச் சக்திமிக்க மான் திடீரென மறைந்து போனது. மானின் மீதிருந்த தங்கள் பார்வையைத் தொலைத்த உன்னத மனம் கொண்ட அந்தப் பாண்டுவின் மகன்கள், களைத்துப் போய், ஏமாற்றம் அடைந்து, பசி மற்றும் தாகத்தால் பாதிக்கப்பட்டு அந்தக் காட்டின் ஆழத்தில் {நடுவில்} இருந்த ஓர் ஆல மரத்தை அடைந்து, அதன் குளிர்ந்த நிழலில் அமர்ந்தார்கள். அப்படி அவர்கள் அமர்ந்த பிறகு, சோகத்தால் வாட்டப்பட்ட நகுலன், பொறுமையின்மையால் உந்தப்பட்டு, குரு குலத்தின் மூத்த அண்ணனிடம் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, நமது குலத்தில் {முயற்சியின்மையால்} அறம் எப்போதும் தியாகம் செய்யப்பட்டது கிடையாது; செருக்கால் செல்வத்தையும் இழந்தது கிடையாது. கேட்கப்பட்ட போது எந்த உயிரினத்துக்கும் “இல்லை!” என்று எப்போதும் சொன்னதில்லை. பின்னர் ஏன் தற்போதைய இந்நிகழ்வில், நாம் {அந்தணர் கேட்டு இல்லை என்று சொல்லும்} இந்தப் பெருந்துன்பத்தை அடைந்திருக்கிறோம்?” என்று கேட்டான்.
பாண்டவர்கள் நால்வர் இறந்தனர்! – வனபர்வம் பகுதி 310-தங்கள் தாகத்தை அடக்க நீர் இருக்கும் இடத்தைக் கண்டறிய யுதிஷ்டிரன் நகுலனிடம் சொன்னது; நகுலன் மரத்திலேறி ஒரு தடாகத்தைப் பார்த்தது; நீர் கொண்டு வருவதற்காக நகுலனும், அவனைத் தொடர்ந்த சகாதேவனும், அர்ஜுனனும், பீமனும் அனுப்பப்பட்டு இறந்து போனது; நால்வரும் திரும்பி வராததைக் கண்ட யுதிஷ்டிரன் மனம் வருந்தி, தானே தடாகத்தையும், தனது தம்பிகளையும் தேடிப் புறப்பட்டது….
யுதிஷ்டிரன், “இடர்களுக்கு ஓர் எல்லையே இல்லை. அதே போல அதன் இறுதிக்காரணம் அல்லது செயல்திறன்மிக்கக் காரணத்தை உறுதியாக அறிந்து கொள்ளவும் முடியாது. அறம் {நன்மை} மற்றும் மறங்களின் {தீமையின்} கனிகளை நீதியின் தேவன் {தர்மதேவன் = யமன்} மட்டுமே பிரித்தளிக்கிறான்” என்றான். அதற்குப் பீமன், “அடிமையைப் போலக் கிருஷ்ணையை {திரௌபதியைச்} சபைக்குள் இழுத்துவந்த பிராதிகாமினை அங்கேயே நான் கொல்லாததால்தான் இந்தப் பேரிடர் நம் மீது விழுந்திருக்கிறது என்பது நிச்சயம்” என்றான். அர்ஜுனன், “சூதனின் மகனால் {கர்ணனால்} உச்சரிக்கப்பட்ட, எலும்பையே துளைக்கும் கடும் வார்த்தைகளுக்கு நான் சீற்றம் கொள்ளாததாலேயே இந்தப் பேரிடர் நம் மீது விழுந்திருக்கிறது என்பது நிச்சயம்!” என்றான். சகாதேவன், “ஓ! பாரதா {யுதிரஷ்டிரரே}, உம்மைப் பகடையில் சகுனி வீழ்த்திய போது, நான் அவனைக் கொல்லவில்லை. எனவே தான் இந்தப் பேரிடர் நம் மீது விழுந்திருக்கிறது என்பது நிச்சயம்!” என்றான்.”
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “மன்னன் யுதிஷ்டிரன், நகுலனிடம், “ஓ! மாத்ரியின் மகனே, இந்த மரத்தில் ஏறி, தொடுவானத்தின் பத்து புள்ளிகளையும் சுற்றிப் பார். நீரோ, நீர்நிறைந்த நிலத்தில் {மட்டுமே} வளரும் அத்தகு மரங்களோ எங்காவது வளர்ந்திருக்கிறதா என்று பார்! ஓ! குழந்தாய், உனது இந்தச் சகோதரர்கள் களைத்துப் போய்த் தாகமாய் இருக்கிறார்கள்” என்றான். அதற்கு, “அப்படியே ஆகட்டும்” என்று சொன்ன நகுலன் விரைவாக மரத்தில் ஏறி சுற்றிலும் பார்த்து, தனது அண்ணனிடம் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, நீர் அருகே இருக்கும் பல மரங்களை நான் பார்க்கிறேன். மேலும் நான் கொக்குகளின் ஒலிகளையும் கேட்கிறேன். எனவே, அங்கே நீர் இருக்கிறது என்பதில் ஐயமில்லை” என்றான்.
உண்மையில் நிலைத்து நிற்கும் குந்தியின் மகனான யுதிஷ்டிரன், இந்த வார்த்தைகளைக் கேட்டு, “ஓ! மனதுக்கினியவனே {நகுலா}, நீ சென்று இந்த அம்பறாத்தூணிகளில் நீர் நிறைத்து வா” என்றான். “அப்படியே ஆகட்டும்” என்று தனது அண்ணனின் கட்டளையின் பேரில் உடனே புறப்பட்ட நகுலன், நீர் இருக்கும் இடத்தை நோக்கி முன்னேறி, விரைவில் அங்கே வந்து சேர்ந்தான். கொக்குகள் நிறைந்த தெளிந்த தடாகத்தைக் கண்ட அவன் {நகுலன்}, அதைக் {நீரைக்} குடிக்க எண்ணினான். அப்போது வானத்தில் இருந்து ஒரு குரல், “ஓ! குழந்தாய் {நகுலா}, இது போன்ற துடுக்கான செயலைச் செய்யாதே! இந்தத் தடாகம் ஏற்கனவே எனது உடைமையாக இருக்கிறது. ஓ! மாத்ரியின் மகனே {நகுலா}, முதலில் எனது கேள்விகளுக்குப் பதில் அளித்துவிட்டு, பிறகு இதன் நீரைக் குடித்து, பிறகு (உனக்கு வேண்டிய அளவுக்கு) எடுத்துச் செல்.” என்றது. இருப்பினும், மிகுந்த தாகத்தில் இருந்த நகுலன் அந்த வார்த்தைகளை மதிக்காமல், அந்தக் குளிர்ந்த நீரைக் குடித்தான். அதைக் குடித்ததும் இறந்து கீழே விழுந்தான்.
ஓ! எதிரிகளை அடக்குபவனே {ஜனமேஜயா}, நகுலனின் தாமதத்தைக் கண்ட குந்தியின் மகனான யுதிஷ்டிரன், நகுலனின் வீரச் சகோதரனான சகாதேவனிடம், “ஓ! சகாதேவா, நமது சகோதரனான, உனக்கு முன் பிறந்தவன் {நகுலன்} இங்கிருந்து சென்று நீண்ட நேரம் ஆகிவிட்டது. எனவே, நீ சென்று உன்னுடன் பிறந்த தமையனையும் நீரையும் கொண்டு வா” என்றான். இதற்குச் சகாதேவன், “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி அதே திசையில் சென்று, அந்த இடத்திற்கு வந்த, தனது அண்ணன் {நகுலன்} தரையில் இறந்து கிடப்பதைக் கண்டான். தனது அண்ணனின் இறப்பால் துயருற்ற அவன், கடும் தாகமடைந்து நீரை நோக்கி முன்னேறிய போது இந்த வார்த்தைகள் அவனுக்குக் கேட்டது, “ஓ குழந்தாய் {சகாதேவா}, இது போன்ற துடுக்கான செயலைச் செய்யாதே! இந்தத் தடாகம் ஏற்கனவே எனது உடைமையாக இருக்கிறது. முதலில் எனது கேள்விகளுக்குப் பதில் அளித்துவிட்டு, பிறகு இதன் நீரைக் குடித்து, பிறகு உனக்கு வேண்டிய அளவுக்கு எடுத்துச் செல்.”
எனினும் மிகுந்த தாகத்தில் இருந்த சகாதேவன், அந்த வார்த்தைகளை மதியாமல் அந்நீரைக் குடித்தான். அதைக் குடித்துவிட்டு இறந்து கீழே விழுந்தான். பிறகு, குந்தியின் மகனான யுதிஷ்டிரன், விஜயனிடம் {அர்ஜுனனிடம்}, “ஓ! பீபத்சு {பீபத்சு} {அர்ஜுனா}, உனது இரு சகோதரர்களும் சென்று நீண்ட நேரம் ஆகிவிட்டது. ஓ! எதிரிகளை அடக்குபவனே! நீ அருளப்பட்டிருப்பாய்! நீ அவர்களை திரும்ப அழைத்துக் கொண்டு நீருடன் வா. ஓ! குழந்தாய் {அர்ஜுனா}, துயரத்தில் மூழ்கியிருக்கும் எங்கள் அனைவருக்கும் நீயே புகலிடமாவாய்!” என்றான். இப்படிச் சொல்லப்பட்ட புத்திக்கூர்மை கொண்ட குடகேசன் {அர்ஜுனன்}, தனது வில்லையும், கணைகளையும், தனது உருவிய வாளையும் எடுத்துக்கொண்டு நீர்த்தடாகத்தைத் தேடி சென்றான். பிறகு வெள்ளைக் குதிரைகளால் இழுக்கப்பட்ட தேருடைய அவன் {அர்ஜுனன்}, நீர் எடுக்க வந்த மனிதர்களில் புலிகளான தனது இரண்டு தம்பிகளும் இறந்து கிடப்பதைக் கண்டான்.
உறங்குவதைப் போல் கிடந்த அவர்களைக் கண்ட மனிதர்களில் சிங்கம் {அர்ஜுனன்}, மிகவும் துயருற்று, தனது வில்லை உயர்த்தி, காட்டையே சுற்றிலும் பார்க்க ஆரம்பித்தான். ஆனால் அந்தப் பெரும் காட்டில் அவன் யாரையும் காணவில்லை. பிறகு அவன் (நீரை) நோக்கி ஓடிய போது, வானத்தில் இருந்து இந்த வார்த்தைகளைக் கேட்டான். “நீ ஏன் இந்த நீரை அணுகுகிறாய்? வலிமையைப் பயன்படுத்தி நீ இதைக் குடிக்க முடியாது. ஓ! கௌந்தேயா {அர்ஜுனா}, நான் உன்னிடம் கேட்கும் கேள்விக்கு நீ பதிலளிக்க முடியும் என்றால், ஓ! பாரதா {அர்ஜுனா} நீ நீரைக் குடித்து, உனக்குத் தேவையான அளவுக்கு அதை எடுத்துச் செல்லலாம்!” {என்றது அந்தக் குரல்}.
இப்படித் தடுக்கப்பட்ட பிருதையின் மகன் {அர்ஜுனன்}, “என் முன் தோன்றி என்னைத் தடை செய்வாயாக! எனது கணைகளால் நீ கடுமையாகத் துளைக்கப்படும்போது, நீ இது போன்று மீண்டும் பேச மாட்டாய்!” என்றான். இதைச் சொன்ன பிறகு, பார்த்தன் {அர்ஜுனன்}, அனைத்துப் புறங்களையும் மந்திரங்களால் தூண்டப்பட்ட கணைகளைக் கொண்டு நிறைத்தான். ஒலியை மட்டுமே கேட்டு, காட்சிக்குத் தெரியாத குறியை அடிக்கும் தனது திறமையையும் அவன் {அர்ஜுனன்} வெளிப்படுத்தினான். ஓ! பாரதக் குலத்தில் காளையே {ஜனமேஜயா}, தாகத்தால் மிகவும் பாதிக்கப்பட அவன் {அர்ஜுனன்} முள் கணைகளையும், எறிவேல்களையும், இரும்புக் கணைகளையும், கலங்கடிக்கப்பட முடியாத கணைகளையும் எண்ணற்ற வகையில் வானத்தில் பொழிந்தான்.
பிறகு காட்சிக்குப்புலப்படாத யக்ஷன் {அர்ஜுனனிடம்}, “இந்த இடருக்கு என்ன தேவையிருக்கிறது, ஓ! பிருதையின் {குந்தியின்} மகனே {அர்ஜுனா}, எனது கேள்விகளுக்கு மட்டும் பதிலளித்துவிட்டு குடி! எனினும், எனது கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் நீ குடித்தால், அதன் பிறகு உடனே நீ சாவாய்” என்றான். இடது கையாலும் வில்லை இழுக்கும் ஆற்றல் பெற்ற பிருதையின் {குந்தியின்} மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, அந்த வார்த்தைகளை மதியாமல், நீரைக் குடித்து, உடனே இறந்து விழுந்தான். (தனஞ்சயனின் தாமதத்தைக் கண்ட) குந்தியின் மகனான யுதிஷ்டிரன் பீமசேனனிடம், “ஓ! எதிரிகளை அடக்குபவனே {பீமா}, நகுலன், சகாதேவன், பீபத்சு {பீபத்சு} {அர்ஜுனன்} ஆகியோர் நீர் இரைக்கச் சென்று வெகு நேரமாகிவிட்டது. இருப்பினும் அவர்கள் இன்னும் வரவில்லை. ஓ! பாரதா {பீமா}, உனக்கு நன்மையே விளையட்டும்! அவர்களைத் திரும்ப அழைத்துக் கொண்டு, நீருடன் வா!” என்றான்.
அதன்பிறகு, “அப்படியே ஆகட்டும்” என்று சொன்ன பீமசேனன், மனிதர்களில் புலிகளான தனது தம்பிகள் எங்கே இறந்து கிடக்கின்றனரோ அங்கே சென்றான். அவன் {பீமன்} தாகத்தில் இருந்தாலும் அவர்களைக் கண்டு மிகவும் துயரப்பட்டான். பிறகு வலிமைமிக்கக் கரங்கள் கொண்ட அந்த வீரன் {பீமன்}, இது யாரோ ஒரு யக்ஷன் அல்லது ராட்சசனின் செயலாக இருக்கும் என நினைத்தான். பிறகு பிருதையின் {குந்தியின்} மகனான விருகோதரன் {பீமன்}, “இன்று நான் நிச்சயம் சண்டையிட வேண்டும். எனவே, முதலில் நான் தாகந்தணிவேன்” என்று நினைத்தான். பிறகு அந்தப் பாரதக் குலத்தின் காளை {பீமன்} {நீரைக்} குடிக்கும் நோக்குடன் விரைந்து முன்னேறினான். அப்போது, அந்த யக்ஷன் {பீமனிடம்}, “ஓ குழந்தாய் {பீமா}, இது போன்ற துடுக்கான செயலைச் செய்யாதே! இந்தத் தடாகம் ஏற்கனவே எனது உடைமையாக இருக்கிறது. முதலில் எனது கேள்விகளுக்குப் பதில் அளித்துவிட்டு, பிறகு இதன் நீரைக் குடித்து, பிறகு உனக்கு வேண்டிய அளவுக்கு எடுத்துச் செல்.” என்றான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இப்படி யக்ஷனால் சொல்லப்பட்ட அளவிடமுடியாத சக்தி கொண்ட பீமன், அவனது கேள்விகளுக்குப் பதிலளிக்காமலேயே நீரைக் குடித்தான். அப்படி அவன் குடித்த உடனேயே அந்த இடத்திலேயே அவன் இறந்து விழுந்தான். தனது தம்பிகள் தன்னைவிட்டு சென்று நீண்ட நேரம் ஆனதை நினைத்த யுதிஷ்டிரன் சில காலம் பொறுத்தான். பிறகு அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, “மாத்ரியின் இரு மகன்களும் ஏன் தாமதிக்கின்றனர்? காண்டீவத்தைத் தாங்குபவன் ஏன் தாமதிக்கிறான்? பெரும் பலம் கொண்ட பீமனும் ஏன் தாமதிக்கிறான்? நான் அவர்களைத் தேடிச் செல்வேன்” என்று மீண்டும் மீண்டும் தனக்குள்ளேயே நினைத்தான். இப்படித் தீர்மானித்த வலிய கரங்கள் கொண்ட யுதிஷ்டிரன், தனது இதயம் துயரத்தால் எரிய எழுந்தான்.
மனிதர்களில் காளையான குந்தியின் அரச மகன் {யுதிஷ்டிரன்}, “இந்தக் காட்டில் ஏதாவது தீய ஆதிக்கம் இருக்கிறதா? அல்லது இதில் {இந்தக்காட்டில்} தீய மிருகங்களின் தொந்தரவு இருக்கிறதா? அல்லது அவர்கள் அனைவரும் வலிமைமிக்க ஏதாவதோர் உயிரினத்தை அவமதித்தன் விளைவாக விழுந்தார்களா? அல்லது நீர் இருக்கும் பகுதியைக் கண்டுபிடிக்க முடியாமல், இந்தக் காடு முழுவதும் சுற்றித் தேடித் திரிகிறார்களா? அந்த மனிதர்களில் காளையர் திரும்பி வராததன் காரணம்தான் என்ன?” என்று தனக்குள் நினைத்தான். பிறகு இதே வகையில் தனக்குள் பேசிக்கொண்ட ஏகாதிபதிகளில் முதன்மையான சிறப்புமிக்க யுதிஷ்டிரன், மான்களும், கரடிகளும், பறவைகளும் நிறைந்து, பிரகாசமான பச்சை மரங்களால் அலங்கரிக்கப்பட்டு, கருவண்டுகளின் ரீங்காரத்தாலும், சிறகு படைத்த பாடகர்களின் இனிய கீதங்களாலும் எதிரொலிக்கப்பட்டு, மனித ஒலியே அற்றிருந்த அந்தப் பெரும் காட்டிற்குள் நுழைந்தான். அப்படி அவன் {யுதிஷ்டிரன்} முன்னேறிச் சென்ற போது அவன் தேவ தச்சனாலேயே வடிவமைக்கப்பட்டது போன்ற ஓர் அழகிய தடாகத்தைக் கண்டான். அது {அத்தடாகம்} மஞ்சள் நிறம் கொண்ட மலர்களாலும், தாமரைகளாலும், சிந்துவாரங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அது {அத்தடாகம்} பிரம்பு {canes}, தாழை {ketakas}, அலரி {karaviras}, அரச {pippalas} மரங்களால் சூழப்பட்டிருந்தது. களைப்பால் பாதிக்கப்பட்டிருந்த யுதிஷ்டிரன் அந்தக் குளத்தைக் கண்டு ஆச்சரியம் அடைந்தான்.”
தம்பிகளுக்காக அழுத யுதிஷ்டிரன்! – வனபர்வம் பகுதி 311அ-தன் தம்பிகள் இறந்து கிடப்பதைக் கண்டு யுதிஷ்டிரன் அழுது புலம்பியது; யமனைத் தவிர வேறு யாராலும் தன் தம்பிகளைக் கொன்றிருக்க முடியாத என யுதிஷ்டிரன் தீர்மானிப்பது; பிறகு தன்னைச் சுத்தப்படுத்திக் கொள்ளத் தடாகத்தில் இறங்கியது; முன்பு போலவே யக்ஷன் எச்சரித்தது….
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “இந்திரனின் புகழைக் கொண்ட தனது தம்பியர், யுகத்தின் முடிவில் தங்கள் கோளங்களில் {Spheres} {துறைகளில்} இருந்து விழுந்து கிடக்கும் லோகபாலர்களைப் போல இறந்து கிடப்பதைக் கண்டான் யுதிஷ்டிரன் {Yudhishthira}. தன் வில் மற்றும் கணைகளுடன் தரையில் விழுந்து இறந்து கிடக்கும் அர்ஜுனனையும், உயிர் இழந்து அசைவற்றுக் கிடக்கும் பீமசேனனையும், இரட்டையர்களையும் {நகுல சகாதேவர்களையும்} கண்ட மன்னன் {யுதிஷ்டிரன்} சூடான நீண்ட பெருமூச்சுவிட்டு, துயரத்தில் ஏற்பட்ட கண்ணீரால் குளித்தான்.
தனது தம்பிகள் இறந்து கிடப்பதைக் கண்ட வலிமைமிக்கக் கரங்கள் கொண்ட தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்}, துயரத்தால் பதட்டம் கொண்ட இதயத்துடன், நிற்காது அழுது புலம்பத் தொடங்கி, “ஓ! வலிமைமிக்கக் கரங்கள் கொண்ட விருகோதரா {Vrikodara-பீமா}, “போர்க்களத்தில் துரியோதனனின் தொடைகளை எனது கதைகளால் நொறுக்குவேன்” என்று சொன்னாயே! ஓ! குருக்களின் புகழை அதிகரிப்பவனே {பீமா}, ஓ! வலிமைமிக்கக் கரங்கள் கொண்ட உயர் ஆன்மா கொண்டவனே {மகாத்மாவே} {பீமனே}, உனது மரணத்தால், அவை அனைத்தும் கனியற்றதாகிவிட்டனவே! மனிதர்களின் வாக்குறுதிகள் பலனற்றதாயிருக்கலாம்; ஆனால் உன்னைக் குறித்துத் தேவர்கள் சொன்ன வார்த்தைகள் ஏன் கனியற்றதாகின?
ஓ! தனஞ்சயா {Dhananjaya- அர்ஜுனா}, நீ உனது தாயின் பிரசவ அறையில் இருந்தபோது, தேவர்கள், “ஓ! குந்தி, இந்த உனது மகன், ஆயிரம் கண் கொண்டவனுக்குச் {இந்திரனுக்குச்} சற்றும் குறைந்தவனல்ல!” என்று சொன்னார்கள். வடக்கேயுள்ள பாரிபாத்திர மலைகளில் “எதிரிகளால் திருடப்பட்ட (இந்தக் குலத்தின்) செழிப்பனைத்தும் தாமதமில்லாமல் இவனால் மீட்கப்படும். போர்க்களத்தில் இவனை எவரும் வீழ்த்த முடியாது. அதே வேளையில், இவனால் வீழ்த்த முடியாத யாரும் இருக்க மாட்டார்கள்” என்று அனைத்துயிர்களும் பாடின. பிறகேன், பெரும் பலம் கொண்ட அந்த ஜிஷ்ணு {Jishnu- அர்ஜுனன்} மரணத்துக்கு ஆட்பட்டான்? ஓ! எவனை நம்பி இந்தப் பேரிடர் அனைத்தையும் நாங்கள் பொறுத்தோமோ அந்தத் தனஞ்சயன் {அர்ஜுனன்} ஏன் எனது நம்பிக்கைகளையெல்லாம் கொன்று [1] இப்படித் தரையில் கிடக்கிறான்?
எதிரிகளை எப்போதும் கொல்பவர்களும், எந்த ஆயுதத்தாலும் தடுக்கப்படாதவர்களுமான குந்தியின் பலமிக்க மகன்களான பீமசேனன், தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகிய அந்த வீரர்கள் ஏன் எதிரியின் சக்திக்கு அடங்கினர்! இன்று இந்த இரட்டையர்கள் {நகுலனும் சகாதேவனும்} தரையில் கிடப்பதைக் கண்டும் இரண்டாகப் பிளக்காத இந்த எனது தீய இதயம் நிச்சயம் வஜ்ரத்தால் ஆனதாக {adamant =பிடிவாதம் நிறைந்ததாக=வஜ்ரம் அல்லது வரைக்கல் போன்ற கடினம் நிறைந்ததாக என்று பொருள் கொள்ளலாம்} இருக்க வேண்டும்! புனித ரித்துகளை அறிந்து, காலம் இடம் ஆகியவற்றை அறிந்து தவத்தகுதி கொண்டு, அனைத்து புனித சடங்குகளையும் செய்த இந்த மனிதர்களில் காளையரே, உங்களுக்குத் தகுந்த செயல்களைப் புரியாமல் ஏன் இப்படிப் படுத்திருக்கிறீர்கள்? ஐயோ, எதிரிகளால் வெல்லப்படாதவர்களே, உங்கள் மேனில் புண் கொள்ளாமல், உங்கள் நோன்புகள் {சபதங்கள்} நிறைவேறாமல் ஏன் இப்படிப் பூமியில் உணர்வற்று கிடக்கிறீர்கள்?” என்றான்{என்று சொல்லி அழுதான் யுதிஷ்டிரன்}. மலைச்சரிவுகளில் (அவர்கள் எப்போதும் உறங்குவது போல) இனிமையாகத் துயிலும் தங்கள் தம்பியரைக் கண்ட அந்த உயர் ஆன்ம மன்னன் {யுதிஷ்டிரன்}, துன்பம் மேலிட, வியர்வையில் குளித்து, துயர நிலையை அடைந்தான். பிறகு, “இது இப்படிஆனதே” என்று சொல்லி, துயரக்கடலின் நடுவில் நின்று, மனங்குழம்பிய அந்த மனிதர்களில் அறம் சார்ந்த தலைவன் {யுதிஷ்டிரன்}, அதற்கான (அந்தப் பேரழிவின்) காரணத்தை ஆலோசித்தான். பிறகு, இடம் நேரம் ஆகியவற்றின் பிரிவுகளை அறிந்த அந்த வலிமையான கரங்கள் மற்றும் உயர் ஆன்மா கொண்டவனால் {மகாத்மாவான யுதிஷ்டிரனால்}, செய்யத்தக்க தனது செயலைக் குறித்து ஒரு தீர்மானத்திற்கு வர முடியவில்லை.
இப்படித் துயரத்தால் மிகவும் அழுது புலம்பிய தர்மன் அல்லது தபுவின் {Dharma or Tapu,}மகனான அறம்சார்ந்த யுதிஷ்டிரன், தனது ஆன்மாவை {மனதை} அடக்கி, இந்த வீர்ர்களைக் கொன்றவன் யார் எனத் தனது மனதில் நினைக்கத் தொடங்கினான். “இவர்களின் மேல் ஆயுதங்களால் ஏற்பட்ட காயங்கள் ஏதுமில்லை. யாருடைய கால்தடங்களும் இங்கில்லை. யாரால் எனது தம்பிகள் கொல்லப்பட்டனரோ அவன் மிகுந்த வலிமை மிக்க உயிரினமாக {பூதமாக} இருக்க வேண்டும் என்று கருதுகிறேன். மனப்பூர்வமாக நான் இதைச் சிந்திக்க வேண்டும். அல்லது முதலில் நான் இந்த நீரைக் குடித்துப் பிறகு அனைத்தையும் அறிவேன். பழக்கத்தினாலேயே கோணல் புத்தி கொண்ட துரியோதனன், கந்தர்வர்கள் மன்னனைக் கொண்டு ரகசியமாக இந்த நீர்நிலையை இங்கு வைத்திருக்க வேண்டும். எவனிடம் நன்மையும் தீமையும் சமமாக இருக்கிறதோ, தீய ஆசைகள் கொண்ட அந்த இழிந்தவனை எந்தப் புத்தியுள்ள மனிதனால்தான் நம்ப முடியும்? அல்லது, ஒருவேளை, தனது ரகசிய தூதர்கள் மூலம் இந்தச் செயலை அந்தத் தீய ஆன்ம கொண்டவன் செய்திருப்பானா?” என்று நினைத்தான் {யுதிஷ்டிரன்}.
இப்படி அந்தப் பெரும் புத்திக் கூர்மை கொண்டவன் {யுதிஷ்டிரன்} பலதரப்பட்ட சிந்தனைகளுக்கு ஆட்பட்டான். “எனது தம்பிகளின் முகத்தின் நிறம் மங்கவில்லை!” என்று நினைத்த யுதிஷ்டிரன், {தன் தம்பியர்} இறந்தனர் எனினும் பிணத்தைப் போன்ற நிறமிழப்பு அவர்களுக்கு ஏற்பட வில்லை என்பதைக் கண்டு, அந்த நீர் நஞ்சு கலக்கப்பட்டது என்பதை நம்பவில்லை. பிறகு அந்த மன்னன் {யுதிஷ்டிரன்} {இப்படித்} தொடர்ந்தான், “இந்த மனிதர்களில் முதன்மையானவர் ஒவ்வொருவரும் மழைவீழாறு {#} போன்றவர்கள். எனவே, அனைத்துப் பொருட்களுக்கும் குறித்த நேரத்தில் முடிவைக் கொண்டு வரும் யமனைத் தவிர வேறு யாரால் இவர்களை இப்படிக் கலங்கடித்திருக்க முடியும்?” {என்றான் யுதிஷ்டிரன்}
இதை உறுதியாகத் தீர்மானித்த அவன் {யுதிஷ்டிரன்}, அந்தத் தடாகத்தில் தன்னைச் சுத்தப்படுத்திக் கொள்ள {நீராடலைத்} தொடங்கினான். அப்படி அவன் {யுதிஷ்டிரன்} அதற்கு {தடாகத்துக்குள்} இறங்கிய போது, வானத்தில் இருந்து யக்ஷனால் {Yaksha} உதிர்க்கப்பட்ட வார்த்தைகளைக் கேட்டான். {யக்ஷன்}, “நான் சிறு மீனைக் {உண்டு} கொண்டு வாழும் ஒரு கொக்கு. ஆவி பிரிந்தவர்களின் தலைவனுடைய {யமனின்} கட்டுப்பாட்டுக்கு என்னாலேயே உனது தம்பிகள் அனுப்பட்டனர். ஓ! இளவரசே {யுதிஷ்டிரா}, நீ என்னால் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதிலளிக்கவில்லையென்றால், நீயும் ஐந்தாவது சவமாவாய். ஓ! குழந்தாய் {யுதிஷ்டிரா}, துடுக்காகச் செயல்படாதே! இத்தடாகம் ஏற்கனவே எனது உடைமையாக இருக்கிறது. முதலில் எனது கேள்விகளுக்குப் பதிலளித்துவிட்டு, ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, நீ {நீரைக்} குடித்து, (உனக்குத் தேவைப்படும் அளவுக்கு) எடுத்துச் செல்!” என்றான் {யஷன்}.
இந்த வார்த்தைகளைக் கேட்ட யுதிஷ்டிரன் {யஷனிடம்}, “நீ ருத்திரர்களில் முதன்மையானவனா? வசுக்களில் முதன்மையானவனா? மருதர்களில் முதன்மையானவனா? நான் கேட்கிறேன், நீ எந்தத் தேவன்? இதை ஒரு பறவையால் செய்திருக்க முடியாது! இமயம், பாரிபாத்திரம், விந்தியம், மலயம் { the Himavat, the Paripatra, the Vindhya, and the Malaya}ஆகிய இந்த மலைகளையும் எவன் வீழ்த்தியவன்? பலமிக்க மனிதர்களில் முதன்மையான உன்னால் செய்யப்பட்ட சாதனை பெரிது! ஒரு பெரும் மோதலில் தேவர்களாலும், கந்தர்வர்களாலும், அசுரர்களாலும், ராட்சசர்களாலும் கூடக் கொல்லப்பட இயலாதவர்கள், உன்னால் கொல்லப்பட்டுள்ளனர்! எனவே உன்னால் செய்யப்பட்ட இந்தக் காரியம் மிகவும் அற்புதமானது! உனது காரியம் என்னவென்பதை நான் அறியேன். அதன் காரணத்தையும் நான் அறியேன். எனவே, எனக்கு ஏற்பட்டிருக்கும் ஆவலும் பயமும் பெரிதாக இருக்கிறது! எனது மனம் பெரிதும் கலங்கியிருக்கிறது. எனது தலை வலிக்கிறது. எனவே, ஓ! வழிபடத்தகுந்தவனே, நான் உன்னைக் கேட்கிறேன். இங்கே வசிக்கும் நீ யார்?” என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}. இந்த வார்த்தைகளைக் கேட்ட யக்ஷன், “உனக்கு நன்மை விளையட்டும். நான் ஒரு யக்ஷன்; இருநிலையில் {நிலத்திலும் நீரிலும்} வாழும் பறவையல்லேன். என்னாலேயே, பெரும்பலமிக்க உனது தம்பிகள் அனைவரும் கொல்லப்பட்டனர்!” என்றான் {யக்ஷன்}
யக்ஷனின் கேள்விகளும்! யுதிஷ்டிரனின் பதில்களும்! – வனபர்வம் பகுதி 311ஆ-யுதிஷ்டிரனிடம் யக்ஷன், தனது கேள்விகளுக்குப் பதிலளித்துவிட்டு நீர் குடிக்குமாறு சொன்னது; யுதிஷ்டிரன் அதற்குச் சம்மதித்தது; யக்ஷன் கேட்ட கேள்விகளும், யுதிஷ்டிரன் சொன்ன பதில்களும்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}தொடர்ந்தார், “கடும் மொழியில் அறிக்கையிடப்பட்ட, இந்தச் சபிக்கப்பட்ட வார்த்தைகளைக் கேட்ட யுதிஷ்டிரன் {Yudhishthira}, ஓ! மன்னா {ஜனமேஜயா}, அங்கு நின்று கொண்டிருந்த யக்ஷனை {Yaksha }அணுகினான். பிறகு அந்தப் பாரதர்களில் காளை {யுதிஷ்டிரன்}, வழக்கத்திற்கு மாறான கண்களும், பனை மரம் போன்ற உயர்ந்த பெரிய உடலும், நெருப்பைப் போலவோ சூரியனைப் போலவோ இருப்பவனும், தாங்க முடியாத பெரும் உருவம் கொண்ட மலை போன்றவனுமான யக்ஷன், ஒரு மரத்தில் இருந்து கொண்டு, மேகங்களுக்கு ஒப்பான ஆழ்ந்த கர்ஜனையை உரக்கச் செய்து கொண்டிருப்பதைக் கண்டான். அந்த யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா {யுதிஷ்டிரா} என்னால் திரும்பத் திரும்பத் தடுக்கப்பட்டும் உனது தம்பிகள் வலுக்கட்டாயமாக நீரை எடுக்க முயன்றனர். அதற்காகவே அவர்கள் என்னால் கொல்லப்பட்டனர்! வாழ விரும்பும் ஒருவன், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இந்த நீரைக் குடிக்கலாகாது! ஓ! பிருதையின் மகனே {{Son of Pritha – குந்தியின் மகனே யுதிஷ்டிரா}, துடுக்காகச் செயல்படாதே! இத்தடாகம் ஏற்கனவே எனது உடைமையாக இருக்கிறது. ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, முதலில் எனது கேள்விகளுக்குப் பதிலளித்துவிட்டு, நீ விரும்புமளவுக்கு {நீரை} எடுத்துச் செல்!” என்றான் {யக்ஷன்}.
யுதிஷ்டிரன் {யஷனிடம்}, “ஓ! யக்ஷா, ஏற்கனவே உனது உடைமையாக இருக்கும் ஒன்றின் மேல் நான் ஆசை கொள்ளவில்லை! ஓ! ஆடவரில் காளையே, தன்னையே பாராட்டிக் கொள்ளும் ஒருவனை அறம் சார்ந்த மனிதர்கள் அங்கீகரிப்பதில்லை. (எனவே, தற்பெருமை பேசாமல் உனது கேள்விகளுக்கு எனது புத்திக்கூர்மையினால் பதிலளிக்கிறேன்). நீ என்னிடம் கேள்!” என்றான்.
யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “எது சூரியனை உதிக்கச் செய்கிறது? யார் அவனுக்குத் துணையாக இருக்கிறார்? எது அவனை மறையச் செய்கிறது? எதில் அவன் நிலைபெற்றிருக்கிறான்?” என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன், “பிரம்மமே சூரியனை உதிக்கச் செய்கிறது; தேவர்கள் அவனுக்குத் துணையாக இருக்கின்றனர்; தர்மமே அவனை மறையச் செய்கிறது; அவன் {சூரியன்} உண்மையில் {சத்தியத்தில்} நிலைத்திருக்கிறான்” [1] என்று பதிலளித்தான்.(ஆதித்தியன் என்பது பொதுவாகச் சூரியன் என்று பொருள்பட்டாலும், அது சுத்திகரிக்கப்படாத ஆன்மாவைச் சுட்டுகிறது. –“சுத்திகரிக்கப்படாத ஆன்மாவை யார் மேன்மையடையச் செய்வது?” என்ற பொருள் பொருந்தி வரும்–உலகம் சார்ந்த தொடர்புகளில் இருந்து ஆன்மா எழுவதே மேன்மையான செயல் எனப்படும். இதற்கான பதில், “பிரம்மம், அதாவது வேதம் அல்லது சுய அறிவு” எனக் கொள்ளலாம். தொடர்ந்து வரும்
இரண்டாவது கேள்வியை “சுத்திகரிப்புப் பணியின் போது அந்த ஆன்மாவுக்குத் துணையாக இருப்பவை எவை?” என்று பொருள் கொள்ள வேண்டும். அதற்கான பதிலை, “தேவர்களைப் போலத் தெய்வீக இயல்பு கொண்ட தன்னடக்கம் மற்றும் பிற குணங்கள்” எனக் கொள்ள வேண்டும்.
மூன்றாவது கேள்வியை, “ஆன்மாவை யார் ஓய்வு (நிலைக்கு) அழைத்துச் செல்கிறார்?” என்று புரிந்து கொண்டால், அதற்கான பதிலை, “அறம் {தர்மம்}, அதாவது நன்னெறி, நடத்தை {ஒழுக்கப்பண்பு}, அறநோன்புகள்” எனக் கொள்ள வேண்டும். ஓய்வுநிலை, உண்மை {சத்தியம்}, பரிசுத்தமான ஞானம் ஆகியவற்றை அடைவதற்கு முன்னர் ஒருவன் (கர்மாவை) செயல்கள் மூலம் கடக்க வேண்டும் என்று பெரும்பாலும் வலியுறுத்தப்படுகிறது.
கடைசிக் கேள்வியை “எதில் ஆன்மா நிறுவப்பட்டுள்ளது?” என்று புரிந்து கொண்டு, அதற்கான பதிலாக, ஏற்கனவே சொல்லப்பட்ட அனைத்தையும் கருத்தில் கொண்டு, “உண்மை {சத்தியம்}, அல்லது பரிசுத்த ஞானம்” என்று பதிலாகக் கொள்ள வேண்டும். விடுதலையின் வடிவம் ஆன்மா என்பதாலும், அனைத்து உடல் தொடர்புகளிலிருந்தும் {ஆன்மா} உயர எழ வேண்டும் என்பதாலும், அது {ஆன்மா} நோன்புகளையும் செயல்களையும் இனியும் நம்பியிருக்கவில்லை என்றும் ஆனால் அது {ஆன்மா} {ஜனனம் என்ற} உண்மை ஞானத்தில் அசைவற்று நிலைத்திருக்கிறது)
யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “எதனால் ஒருவன் கற்றவனாகிறான்? எதனால் ஒருவன் பெரிய மகத்தான ஒன்றை அடைகிறான்? இரண்டாவது ஒன்றை ஒருவன் எவ்வாறு கொள்ளலாம்? மேலும் ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, ஒருவன் புத்திக்கூர்மையை எவ்வாறு அடையலாம்?” என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, “சுருதிகளாலேயே (அதன் கல்வியாலேயே) ஒருவன் கற்றவனாகிறான்; தவத்துறவுகளாலேயே ஒருவன் பெரிய மகத்துவத்தை அடைகிறான்; புத்திக்கூர்மையாலேயே ஒருவன் இரண்டாவதாக ஒன்றை அடைகிறான். பெரியவர்களுக்குச் சேவை செய்வதாலேயே ஒருவன் ஞானமடைய {புத்திக்கூர்மையை அடைய} முடியும்” என்று பதிலளித்தான். [2](திருதி என்பது புத்திக்கூர்மை நிலைத்திருக்கும் தன்மை; துவிதியை என்பது இரண்டாவது என்பதாகும். யுதிஷ்டிரன் இங்கே சொல்வதென்னவென்றால் தடுமாறாத நிலைத்த புத்திக்கூர்மையே பயனுள்ள நோக்கங்களுக்கு உதவுகிறது. )
யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “அந்தணர்களுக்கு தெய்வீகம் எது? பக்திமான்களுக்கு இருப்பது போல அவர்களுக்கான பக்திச்செயல் {அறம்} எது? அந்தணர்களுக்கு மனிதக் குணம் எது? பக்தியற்றவர்களுக்கு இருப்பது போல அவர்களுக்கு இருக்கும் பக்தியற்ற நிலை {மறம்} எது?” என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, “வேதகல்வியில் அவர்களது தெய்வீகம் அடங்கியிருக்கிறது. அவர்களது தவமே பக்திமான்களுக்கான பக்தியாக இருக்கிறது; இறப்புக்கு ஆட்படும் அவர்களது குணமே மனிதத்தன்மை. அவதூறே {தெய்வத்தை அவதூறு செய்வதே} அவர்களது பக்தியற்ற {மறம்} நிலையாகிறது” என்று பதிலளித்தான்.
யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “க்ஷத்திரியர்களுக்கு தெய்வீகம் எது? பக்திமான்களுக்கு இருப்பது போல அவர்களுக்கான நடைமுறை {அறம்} என்ன? அவர்களுக்கு மனிதக் குணம் எது? பக்தியற்றவர்களுக்கு இருப்பது போல இருக்கும் அவர்களது நடைமுறை {மறம்} என்ன?” என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, “கணைகளும் ஆயுதமும் அவர்களது தெய்வீகம் ஆகும். பக்திமான்களுக்கு இருப்பது போல, வேள்விகள் கொண்டாடுவதே அவர்களது பக்திச்செயல் {அறம்} ஆகும். அச்சத்திற்கு ஆட்படுவதே அவர்களது மனிதத்தன்மையாகும். {துன்பப்படுவோரைக்} காப்பதை மறுத்தலே அவர்களது பக்தியற்ற {மறம்} நிலையாகும்” என்று பதிலளித்தான்.
யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “வேள்விக்கான சாமம் {ஸாமம்} என்பது எது? வேள்விக்கான யஜுஸ் என்பது எது? ஒரு வேள்விக்கான புகலிடம் எது? எது இல்லாமல் வேள்வியைச் செய்ய முடியாது?” என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன், “வாழ்வே {உயிரே} வேள்வியின் சாமமாகும்; மனமே வேள்வியின் யஜுஸ் ஆகும். வேள்வியின் புகலிடமாக ரிக்கு {வேத வாக்கு} இருக்கிறது. அந்த ரிக்கு இல்லாமல் வேள்வியைச் செய்ய முடியாது” என்று பதிலளித்தான் [3](ஒருவன் வேள்வியைக் கொண்டாடும் நோக்கத்திற்குச் சாமம், யஜுர் மற்றும் ரிக்கு மந்திரங்கள் அனைத்தும் அவசியம். புறநிலை வேள்விக்குச் சாம யஜுர் வேத மந்திரங்கள் தேவை என்பது போல, அகநிலை வேள்வியில் உண்மை ஞானத்தை அடைய, வாழ்வு {உயிர்} மற்றும் மனம் ஆகியவை அவசியம். எந்தப் புறநிலை வேள்வியையும் ரிக்கு இல்லாமல், அதை முக்கியமாகக் கருதாமல் செய்ய முடியாதது போல, உண்மை ஞானத்தை அடையக் கருதும் அகநிலை வேள்விளையும் துதிகள் இல்லாமல் செய்ய முடியாது என்றும், ரிக்குகள் அவற்றையே பிரதிபலிக்கின்றன)
யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “பயிரிடுவோருக்கு {உழவருக்கு {அ} வைசியருக்கு} முதன்மையான மதிப்புடையது {மதிப்புமிக்கது = சிறந்தது} எது? விதைப்போருக்கு முதன்மையான மதிப்புடையது எது? இவ்வுலகில் செழிப்பை அடைய விரும்புவோருக்கு முதன்மையான மதிப்புடையது எது? [4a] பெற்றுக் கொள்பவர்களுக்கு முதன்மையான மதிப்புடையது எது?” என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, “பயிரிடுவோருக்கு {உழவருக்கு} முதன்மையான மதிப்புடையது மழை; விதைப்போருக்கு முதன்மையான மதிப்புடையது விதை; பெறுபவர்களுக்கு முதன்மையான மதிப்புடையது வாரிசு {சந்ததி} [4b] ” என்று பதிலளித்தான்.(அவபதம்-தேவர்களுக்கு அவர்கள் அளிக்கும் காணிக்கைகள்”– நிவபதம் –பித்ருகளுக்கு அவர்கள் அளிக்கும் காணிக்கைகள்” )
யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “புலன்நுகர் பொருட்கள் அத்தனையிலும் இன்புற்றிருந்து, உலகத்தால் மதிக்கப்பட்டும், அனைத்து உயிர்களால் விரும்பப்பட்டும் உள்ள புத்திக்கூர்மையுள்ள எந்த மனிதன், சுவாசமுள்ளவனாக இருப்பினும், உயிரற்றவனாக இருக்கிறான்” என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, “தேவர்கள், விருந்தினர், பணியாட்கள், பித்ருக்கள் மற்றும் சுயம் ஆகிய ஐந்திற்கும் எதையும் காணிக்கையாக அளிக்கவில்லையென்றால், ஒரு மனிதன் சுவாசமுள்ளவனாக இருப்பினும் உயிருள்ளவன் ஆகமாட்டான்” என்று பதிலளித்தான்.
யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “பூமியை விடக் கனமானது எது? சொர்க்கத்தைவிட {ஆகாயத்தைவிட} உயர்ந்தது எது? காற்றைவிட வேகமானது எது? புற்களைவிட எண்ணிக்கையில் அதிகமானது எது? என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யுதிஷ்டிரனிடம்}, “பூமியை விடக் கனமானவள் தாய்; சொர்க்கத்தைவிட {ஆகாயத்தைவிட} உயர்ந்தவர் தந்தை; காற்றைவிட வேகமானது மனம்; புற்களை விட எண்ணிக்கையில் அதிகமானது எண்ணங்கள்” என்று பதிலளித்தான்.
யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “உறங்கும்போது கண்களை மூடாதது எது? பிறந்த பிறகும் நகராதது எது? இதயம் இல்லாதது எது? தன் சொந்த உத்வேகத்தால் வீங்குவது {Swells} {அதிகரிப்பது} எது?” என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, “உறங்கும்போது மீன் கண்களை மூடுவதில்லை; பிறந்தும் நகராமல் இருப்பது முட்டை; இதயமற்றிருப்பது கல்; தனது சொந்த உத்வேகத்தால் அதிகரிப்பது ஆறு {நதி}” என்று பதிலளித்தான்.
யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “நாடு கடத்தப்பட்டவனுக்கு {வனவாசம் மேற்கொள்பவனுக்கு} யார் நண்பன்? இல்லறத்தானுக்கு யார் நண்பன்? நோய்வாய்ப்பட்டவனுக்கு யார் நண்பன்? சாகப்போகிறவனுக்கு யார் நண்பன்?” என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, “நாடுகடத்தப்பட்டவனுக்கு {வனவாசம் மேற்கொள்பவனுக்கு} வழிப்போக்கனே [5] நண்பன்; இல்லறத்தானுக்கு நண்பன் அவனது மனைவியே; நோய்வாய்ப்பட்டவனுக்கு நண்பன் மருத்துவன்; சாகப்போகிறவனுக்கு நண்பன் தானம்” என்று பதிலளித்தான்.(வித்தையே நண்பன் )
யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “அனைத்து உயிர்களுக்கும் விருந்தினன் யார்? நித்திய கடமை என்பது யாது?! ஓ மன்னர்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, அமிர்தம் என்பது என்ன? இந்த மொத்த அண்டத்திலும் இருப்பது என்ன?” என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன், “அக்னியே அனைத்து உயிர்களுக்கு விருந்தினன்; பசுவின் பாலே அமிர்தம்; ஹோமமே நித்திய கடமை; இந்த அண்டம் முழுவதும் காற்றே {வாயுவே} இருக்கிறது” என்று பதிலளித்தான் [6].
யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “எவன் தனியாக உலவுகிறான்? பிறந்தவன் எவன் மீண்டும் பிறக்கிறான்? குளிர்ச்சிக்கான தீர்வு என்ன? பெரிய களம் எது?” என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, “சூரியன் தனியாக உலவுகிறான்; சந்திரன் {பிறந்த பிறகும் மீண்டும் மீண்டும்} புதிதாகப் பிறக்கிறான். குளிருக்கான தீர்வு நெருப்பு; பூமியே பெரிய களம்” என்று பதிலளித்தான்.
யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “அறத்தின் உயர்ந்த புகலிடம் எது? புகழுக்கு எது? சொர்க்கத்திற்கு எது? மகிழ்ச்சிக்கு எது?” என்று கேட்டான். யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, “ஈகையே {தானமளிப்பது; Liberality = தாராளவாதம்} அறத்தின் உயர்ந்த புகலிடம்: புகழுக்குக் கொடை; சொர்க்கத்திற்கு உண்மை {சத்தியம்}; மகிழ்ச்சிக்கு நன்னடத்தை {ஆகியன உயர்ந்த புகலிடங்களாக இருக்கின்றன}” என்று பதிலளித்தான் யுதிஷ்டிரன்.
யக்ஷனின் கேள்விகளும் யுதிஷ்டிரனின் பதில்களும்! – வனபர்வம் பகுதி 311இ-யக்ஷன் கேட்ட கேள்விகளும், யுதிஷ்டிரன் சொன்ன பதில்களும்…
யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “மனிதனுடைய ஆன்மா எது? தேவர்களால் மனிதனுக்கு அளிக்கப்பட்ட நண்பன் {துணை} யார்? மனிதனுக்குத் தலையாய ஆதரவு {பிழைப்புக்கான கருவி} எது? அவனுக்குத் தலையாயப் புகலிடம் {கதி} எது?” என்று கேட்டான்.
அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, “மகனே ஒரு மனிதனுக்கு ஆன்மா; மனைவியே தேவர்களால் அவனுக்கு அளிப்பட்ட நண்பர் {துணை}; மேகங்களே அவனது தலையாய ஆதரவு {பிழைப்புக்கான கருவி}; தானமே அவனது தலையாயப் புகலிடம் {கதி}” என்று பதிலளித்தான்.
யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “பாராட்டத்தக்க காரியங்கள் அனைத்திலும் எது சிறந்தது? ஒருவனது உடைமைகள் அனைத்திலும் மிகவும் மதிப்புமிக்கது எது? லாபங்கள் அனைத்திலும் எது சிறந்தது? அனைத்து வகை மகிழ்ச்சிகளிலும் எது சிறந்தது?” என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, “பாரட்டத்தக்க காரியங்கள் அனைத்திலும் செயல்திறனே {skill} சிறந்தது; உடைமைகள் அனைத்திலும் சிறந்தது ஞானம்; லாபங்கள் அனைத்திலும் சிறந்தது உடல்நலமே {ஆரோக்கியம்}; அனைத்துவகை மகிழ்ச்சிகளிலும் சிறந்தது மனநிறைவே” என்று பதிலளித்தான்.
யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “உலகத்தில் உயர்ந்த கடமை {அறம்} எது? எப்போதும் கனியைக் {பலனைக்} கொடுக்கும் அறம் எது? அடக்கப்பட்டால் வருத்தத்திற்கு வழிவகுக்காதது எது? கூட்டணியை {நட்பை} உடைக்காதவர்கள் யார்?” என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, “ஊறு இழைக்காமையே {அஹிம்சையே} {தீங்கு செய்யாமையே} கடமைகளில் உயர்ந்தது {அறம்}; மூன்று வேதங்களால் விதிக்கப்பட்ட சடங்குகள் எப்போதும் கனி {பலன்} கொடுக்கின்றன; மனமானது அடக்கப்பட்டால் வருத்தத்திற்கு வழிவகுக்காது; நல்லோருடன் கூட்டணி {நட்பு} எப்போதும் உடையாததாகும்” என்று பதிலளித்தான்.
யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “எது துறக்கப்படுவதால், ஒருவன் மற்றவர்களால் ஏற்கப்படுகிறான்? எது துறக்கப்பட்டால், வருத்தத்துக்கு வழிவகுக்காது? எது துறக்கப்பட்டால், ஒருவன் வளமானவன் ஆகிறான்? எது துறக்கப்பட்டால் ஒருவன் மகிழ்ச்சியடையலாம்?” என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யஷனிடம்}, “கர்வத்தைத் துறப்பதால், அது ஒருவனை {மற்றவருக்கு} ஏற்புடையவனாக மாற்றுகிறது; கோபத்தைத் துறந்தால், அது வருத்தத்துக்கு வழிவகுக்காது; ஆசையைத் துறந்தால், அது ஒருவனை வளமானவனாக்குகிறது; பேராசையைத் துறந்தால், அது ஒருவனை மகிழ்ச்சியடையச் செய்கிறது” என்று பதிலளித்தான்.
யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “ஒருவன் அந்தணர்களுக்கு எதற்காகக் கொடுக்க {தானமளிக்க} வேண்டும்? நாடகக் கலைஞர்களுக்கும், ஆடற்கலைஞர்களுக்கும் எதற்காக {கொடுக்க வேண்டும்}? பணியாட்களுக்கு {வேலைக்காரர்களுக்கு} எதற்காக {கொடுக்க வேண்டும்}? மன்னனுக்கு எதற்காக {கொடுக்க வேண்டும்}? என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, “அறத்தகுதிக்காக ஒருவன் அந்தணர்களுக்குத் கொடுக்க {தானமளிக்க} வேண்டும்; நாடகக் கலைஞர்களுக்கும், ஆடற்கலைஞர்களுக்கும் புகழுக்காகக் கொடுக்க வேண்டும்; பணியாட்களுக்கு அவர்கள் தங்களைத் தாங்கிக் கொள்வதற்காகக் கொடுக்க வேண்டும்; அச்சத்தில் இருந்து நிவாரணம் பெற ஒருவன் மன்னர்களுக்குத் தானமளிக்க வேண்டும்” என்று பதிலளித்தான்.
யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “உலகத்தை மூடியிருப்பது எது? தன்னைத்தானே ஒரு பொருள் கண்டறியமுடியாததற்குக் காரணமாக இருப்பது எது? நண்பர்கள் கைவிடப்படுவதற்குக் காரணம் எது? சொர்க்கம் செல்வதில் ஒருவனைத் தோல்வியுறச் செய்வது எது?” என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, “உலகம் இருளால் மூடியிருக்கிறது; ஒரு பொருள் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள இருள் அனுமதிக்காது; பேராசையின் காரணமாகவே நண்பர்கள் கைவிடப்படுகிறார்கள்; உலகத்துடனான இத்தொடர்பினாலேயே {அதாவது பற்று [அ] ஆசையால்} ஒருவன் சொர்க்கம் செல்வதில் தோல்வியுறுகிறான்” என்று பதிலளித்தான்.
யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “ஒருவன் எதனால் இறந்தவனாகக் கருதப்படலாம்? ஒரு நாடு எதனால் இறந்ததாகக் {அழிந்ததாகக்} கருதப்படலாம்? சிராத்தம் எதனால் இறந்ததாகக் {அழிந்ததாகக்} கருதப்படலாம்? ஒரு வேள்வி எதனால் இறந்ததாகக் {அழிந்ததாக} கருதப்படலாம்?” என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, “செல்வமற்ற மனிதன் இறந்தவனாகக் கருதப்படலாம்; மன்னனற்ற நாடு இறந்ததாகக் {அழிந்ததாகக்} கருதப்படலாம்; கல்லாத புரோகிதன் துணை கொண்டு செய்யப்படும் சிராத்தம் இறந்ததாகக் {அழிந்ததாகக்} கருதப்படலாம்; அந்தணர்களுக்குத் தானம் இல்லாத வேள்வி இறந்ததாகக் {அழிந்ததாகக்} கருதப்படலாம்” என்று பதிலளித்தான்.
யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “வழி என்பது எது? நீராகப் பேசப்படுவது எது? உணவு எது? நஞ்சு எது? சிராத்தத்துக்கான உகந்த நேரம் எது? என்பதையும் சொல்லி, {நீரைக்} குடித்து, நீ விரும்பிய அளவு எடுத்துச்செல்!” என்றான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, “எது நன்மையோ அதுவே வழி [1]; வெளியே {ஆகாயமே} நீராகப் பேசப்பட்டு வருகிறது [2]; பசுவே உணவு [3]; வேண்டுகோளே {யாசிப்பது; பிச்சை கேட்பது} விஷம் {அந்தணர்களின் பொருள் விஷம் என்று வேறு பதிப்பில் இருக்கிறது}; ஒரு அந்தணனே சிராத்தத்துக்கான உகந்த நேரம் [4]. ஓ! யக்ஷா, இவை அனைத்தையும் குறித்து நீ என்ன நினைப்பாய் என்பதை நான் அறிய மாட்டேன்” என்றான்.({சம்ஸ்க்ருத மூலத்தில்} “திக்” என்பதாகும், அதன் பொருள் திசை என்பதாகும். நிச்சயமாக, இதன் தொடர்ச்சியாக வழி என்ற பொருளே வெளிப்படையாகத் தெரிகிறது. யுதிஷ்டிரனின் பதிலில் நன்மையான வழியில் நடப்பதே வழி என்ற பொருளே வருகிறது.–பசுக்களே ஒரே உணவு என்று சுருதிகளில் பேசப்படுகிறது. பசுப் பால் கொடுக்கிறது. பால் நெய்யைக் கொடுக்கிறது. நெய் ஹோமத்தில் பயன்படுகிறது. ஹோமம் மேகங்களுக்குக் காரணமாகிறது. மேகங்கள் மழையைத் தருகின்றன. மழை, விதையை முளைக்கச் செய்து, உணவை உற்பத்தி செய்கிறது.–சிராத்தத்திற்குக் குறித்த நேரம் என்பது இல்லை. எப்போது ஒரு நல்ல, திறன்மிக்கப் புரோகிதரை அடைய முடியுமோ அப்போது {சிராத்தம்} செய்யலாம்.)
யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “தவத்தின் குறி {குறியீடு} எனச் சொல்லப்படுவது எது? உண்மையான அடக்கம் {தமம்} எது? பொறுமை எனப்படுவது எது? வெட்கம் என்பது எது?” என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன், “தன்னறத்தில் {தனது தர்மத்தில்} நிலைத்து நிற்பது தவம் {தவத்தின் குறியீடு}; மனதின் அடக்கமே, அடக்கங்கள் அனைத்திலும் உண்மையானது; பகையைச் சகிப்பதே பொறுமை; தகாத செயல்கள் அனைத்திலும் இருந்து விலகுவதே வெட்கம்” என்று பதிலளித்தான்.
யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா {யுதிஷ்டிரா} ஞானம் என்று சொல்லப்படுவது எது? அமைதி எது? கருணை எது? எளிமை என்று அழைக்கப்படுவது எது?” என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, “தெய்வீகமே {உண்மைப் பொருளை அறிவதே} உண்மையான ஞானமாகும்; இதய {மன} அமைதியே உண்மையான அமைதி; அனைவருக்கும் மகிழ்ச்சியை விரும்புவதே கருணை; இதய அமைதி {மன அமைதியே} எளிமை” என்று பதிலளித்தான்.
யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “வெல்லப்படமுடியாத எதிரி எது? மனிதனின் தீராத நோய் எது? எவ்வகை மனிதன் நேர்மையானவன்; எவ்வகை மனிதன் நேர்மையற்றவன்?” என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, “கோபமே வெல்லப்பட முடியாத எதிரி; பேராசையே தீர்க்கப்படமுடியாத நோய்; அனைத்துயிர்களின் மகிழ்ச்சியை விரும்புபவனே நேர்மையானவன்; கருணயற்றவன் நேர்மையற்றவனாவான்” என்று பதிலளித்தான்.
யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அறியாமை என்பது எது? கர்வம் என்பது எது? சோம்பலெனப் புரிந்து கொள்ளப்படுவது எது? துன்பமெனப் பேசப்படுவது எது?” என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, “தன் கடமைகளை அறியாததே உண்மையான அறியாமை. ஒருவன் தன்னைச் செயல்படுபவனாகவோ {actor = நடிகனாகவோ} வாழ்வில் பாதிக்கப்பட்டவனாகவோ உணர்வதே கர்வம் ஆகும். ஒருவன் தனது கடமைகளைச் செய்யாதிருப்பதே சோம்பலாகும். ஒருவனது அறியாமையே துக்கமாகும்” என்று பதிலளித்தான்.
யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “முனிவர்களால் நிலைமாறாஉறுதி எனச் சொல்லப்பட்டுள்ளது எது? பொறுமை எது? உண்மையான சுத்தம் என்பது எது? தானம் என்பது எது?” என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, ஒருவன் தன்னறத்தில் {தனது தர்மத்தில்} நிலைத்து நிற்பதே நிலைமைமாறா உறுதியாகும். புலன்களை அடக்குவதே உண்மையான பொறுமையாகும்; மனம் மாசடையாமல் கழுவுவதே உண்மையான நீராடலாகும் {சுத்தமாகும்}. அனைத்து உயிர்களையும் பாதுகாப்பதே தானமாகும்” என்று பதிலளித்தான்.
யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “எந்த மனிதன் கற்றவனாகக் {பண்டிதனாகக்} கருதப்பட வேண்டும்? எவன் நாத்திகன் என்று அழைக்கப்பட வேண்டும்? எவன் ஞானமற்றவன் {அறியாமையில் இருப்பவன்} என்று அழைக்கப்பட வேண்டும்? எது ஆசை என்று அழைக்கப்படுகிறது? ஆசையின் ஊற்றுக்கண்கள் எவை? பொறாமை எது?” என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, “தன் கடமைகளை அறிந்தவன் கற்றவன் {பண்டிதன்} என்று அழைக்கப்பட வேண்டும். ஞானமற்றவனே நாத்திகன், அது போலவே நாத்திகனே ஞானமற்றவன். உடைமைகளுக்குக் காரணமே ஆசை; இதய {மன} துக்கமே பொறாமை, வேறு எதுவுமில்லை” என்று பதிலளித்தான் {யுதிஷ்டிரன்}.
“நகுலன் பிழைக்கட்டும்” என்ற யுதிஷ்டிரன்! – வனபர்வம் பகுதி 311ஈ-யக்ஷன் கேட்ட கேள்விகளும், யுதிஷ்டிரன் சொன்ன பதில்களும்: யுதிஷ்டிரன் அனைத்துக் கேள்விகளுக்கும் உண்மையான பதிலைச் சொன்னதால், அவனது தம்பிகளில் யுதிஷ்டிரன் விரும்பும் ஒருவனை மட்டும் பிழைக்க வைப்பதாக யக்ஷன் சொன்னது; யுதிஷ்டிரன் நகுலனைக் கேட்டது; பீமனையும், அர்ஜுனனையும் கேட்காமல் ஏன் யுதிஷ்டிரன் நகுலனைக் கேட்கிறான் என்று யக்ஷன் கேட்டது; அதற்கான பதிலை யுதிஷ்டிரன் சொன்னது; யுதிஷ்டிரனின் பதில்களால் மனநிறைவு கொண்ட யக்ஷன் பாண்டவர்கள் அனைவரையும் பிழைப்பிப்பதாகச் சொன்னது…
யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்) , “ கர்வம் {அகங்காரம்} எது? பேடிசம் {டம்பம்}{#} எது? தேவர்களின் அருள் எது? பொல்லாங்கு {தீய குணம்} எது?” என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்), “எழுச்சியற்ற அறியாமையே கர்வம் {அகங்காரம்} ஆகும். {அஞ்ஞானமே அகங்காரம்}. அறநிலை நிறுவுதலே பேடிசம் {டம்பம்} ஆகும். {தான் அறம் கடைப்பிடிப்பதாகப் பிறருக்குத் தெரிவிப்பது டம்பமாகும் [போலித்தனமாகும்]}. தானங்களின் கனியே {பலனே} தேவர்களின் அருளாகும். பிறரைக் குறித்துத் தவறாகப் பேசுவதே பொல்லாங்கு {தீய குணம்} ஆகும்” என்று பதிலளித்தான்.
யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகியன ஒன்றுக்கொன்று எதிரானவை. இப்படி ஒன்றுக்கொன்று பகையானவை எப்படி இணைந்து இருக்க முடியும்?” என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, “மனைவியும் அறமும் ஒருவருக்கொருவர் ஏற்புடன் செயல்படும்போது, நீ சொன்ன மூன்றும் {அனைத்தும்} இணைந்து இருக்க முடியும்!” என்று பதிலளித்தான்.
யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, “அழிவில்லாத {நித்தியமான} நரகத்தை அடையும் மனிதன் எவன்? நான் கேட்ட கேள்விக்கு விரைந்து பதிலளிப்பதே உனக்குத் தகும்!” என்று சொன்னான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, “ஏழை அந்தணனுக்குத் தானமளிப்பதாக உறுதியளித்து அவனை அழைத்து, பிறகு, கொடுப்பதற்கு ஒன்றுமில்லை என்று சொல்பவன் அழிவில்லாத {நித்தியமான} நரகத்தை அடைகிறான். வேதங்களிலும், சாத்திரங்களிலும், அந்தணர்களிடமும், தேவர்களிடமும், பித்ருக்களுக்கு மரியாதை அளித்துச் செய்யப்படும் விழாக்களிலும் பொய் கூறுபவனும் அழிவில்லா நரகத்தை அடைய வேண்டும். செல்வத்தின் உடைமையாளன், தானமளிக்காமலோ, பேராசையின் காரணமாகத் தானே அனைத்தையும் அனுபவித்து மற்றவர்களுக்கு இல்லை என்று சொன்னாலோ அவனும் அழிவில்லா நரகத்தை அடைகிறான்” என்று பதிலளித்தான்.
யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா {யுதிஷ்டிரா} எந்தப் பிறவி, நடத்தை, {வேத} படிப்பு அல்லது {சாத்திர} கல்வி ஆகியவற்றால் ஒரு மனிதன் பிராமணனாகிறான் {அந்தணனாகிறான்}? மெய்யுறுதியுடன் எமக்குச் சொல்” என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, “ஓ! யக்ஷா, கேள்! பிறவியோ, {வேத} படிப்போ, {சாத்திர} கல்வியோ பிராமணத்தன்மைக்குக் காரணமில்லை என்பதில் ஐயமில்லை. நடத்தையே அது {பிராமணத்தன்மையாகும்}. ஒருவனது நடத்தை எப்போதும் நன்கு பாதுகாக்கப்பட வேண்டும். குறிப்பாக ஓர் அந்தணரால் {பாதுகாக்கப்பட வேண்டும்}. ஒருவன் தனது நடத்தையைக் கெடாநிலையுடையதாகப் பராமரித்தால், அவன் எப்போதும் கெடு நிலையை அடைவதில்லை. பெரும் ஆசிரியர்கள், மாணவர்கள், உண்மையில் சாத்திரங்களைப் படிக்கும் அனைவரும், தீய பழக்கங்களுக்கு அடிமையானால், அவர்கள் கல்லாத மூடர்களாகக் கருதப்பட வேண்டும். அறக்கடமைகளைச் செய்பவனே கற்றவன். நான்கு வேதங்களைப் படித்தும், இழிந்த தீயவனாக இருந்தால் அவன் சூத்திரனில் இருந்து வேறுபட்டவனல்ல என்று (அவனது நடத்தை சரியில்லாததாக) கருதப்பட வேண்டும். அக்னிஹோத்ரம் செய்து, புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனே பிராமணன் {அந்தணன்} என்று அழைக்கப்படுகிறான்” என்று பதிலளித்தான்.
யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “ஏற்புடைய {இனிமையான} வார்த்தைகளைப் பேசும் ஒருவன் அடையும் லாபம் என்ன? எப்போதும் தீர்மானத்துடன் செயல்படும் ஒருவன் அடையும் லாபம் என்ன? நிறைய நண்பர்களை உடையவன் அடையும் லாபம் என்ன? அறத்திற்குத் தன்னை அர்ப்பணித்திருப்பவனுக்கு {அவன் அடையும் லாபம்} என்ன?” என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, “ஏற்புடைய வார்த்தைகளைப் {இனிமையாகப்} பேசும் ஒருவன் அனைவருக்கும் ஏற்புடையவனாகிறான் {அன்பனாகிறான்}. தீர்மானத்துடன் செயல்படும் ஒருவன் தான் முயற்சிப்பதை {தேடுவதை} {வெற்றியை} அடைகிறான். பல நண்பர்களை உடைய ஒருவன் மகிழ்ச்சியாக வாழ்கிறான். அறத்திற்குத் தன்னை அர்ப்பணித்திருப்பவன் (அடுத்த உலகில்) இன்பநிலையை அடைகிறான்” என்று பதிலளித்தான்.
யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “உண்மையில் மகிழ்ச்சியானவன் எவன்? அதிசயமானது எது? பாதை எது? {தினமும் நடைபெறும்} செய்தி எது? இந்த எனது நான்கு கேள்விகளுக்கும் பதிலளித்து, இறந்து போன உனது தம்பியரை மீட்டெடு!” என்றான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, “ஓ! நிலத்திலும் நீரிலும் வாழ்பவனே {யக்ஷா}, கடனுக்கு ஆட்படாமல், வீட்டில் இருந்து வெளியே போக வேண்டிய தேவை இல்லாமல், {வாழ்வுக்காக வெளியூருக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தமில்லாதவன்} ஒரு நாளின் {ஒரு பகலை எட்டுப் பகுதிகளைப் பிரித்து அதில் வரும்} ஐந்தாவது அல்லது ஆறாவது பகுதியில், சொற்ப காய்கறிகளைத் தன் இல்லத்தில் {தன் சொந்த வீட்டில்} சமைப்பவன் {சமைத்து உண்பவன்} உண்மையில் மகிழ்ச்சியுடைவனாவான். நாளுக்கு நாள் எண்ணிலடங்கா உயிரினங்கள் யமனின் வசிப்பிடம் செல்கின்றன. இருப்பினும், மீந்திருப்பவை {உயிரோடு இருக்கும் உயிரினங்கள்} தங்களை இறவாத்தன்மை கொண்டவை என்று நினைத்துக் கொள்கின்றன. இதை விட வேறு எது அதிசயமானதாக இருக்க முடியும்? வாதம் செய்வது எந்த ஒரு குறிப்பிட்ட முடிவுக்கும் வழிவகுக்காது. சுருதிகள் ஒன்றுக்கு ஒன்று வேறுபட்டிருக்கின்றன; {இவரது} கருத்து அனைவராலும் ஏற்கப்பட்டது என்று சொல்லுமளவுக்கு ஒரு முனிவர் கூட இல்லை; தர்மம் {அறம்} மற்றும் கடமை சம்பந்தமான உண்மை {சத்தியம்} குகைகளில் மறைக்கப்பட்டிருக்கிறது; எனவே, பெருமை மிக்கவர்கள் {பெரியோர்} நடந்து சென்ற பாதையே நமக்கான பாதை. அறியாமை நிறைந்த இந்தப் பூமி {சமையற்செய்யத்தக்க} ஒரு பெரிய கடாய் ஆகும். பகல்களையும், இரவுகளையும் எரிபொருளாய்க் கொண்டிருக்கும் சூரியனே, நெருப்பு ஆகும். மாதங்களும், பருவங்களும் மரக்கரண்டிகளாகும். {உலகம் என்ற அந்தக் கடாயில்} காலம் அனைத்தையும் சமைத்துக் கொண்டிருக்கிறது. இதுவே {தினமும் நடைபெறும்} செய்தி ஆகும்.” என்று பதிலளித்தான்.
யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! எதிரிகளை அடக்குபவனே, எனது அனைத்துக் கேள்விகளுக்கும் உண்மையில் பதிலளித்துவிட்டாய்! உண்மையில் யார் மனிதன் என்றும், அனைத்து வகைச் செல்வங்களையும் உண்மையில் கொண்டிருக்கும் மனிதன் யார் என்றும் இப்போது எமக்குச் சொல்” என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, “ஒருவனது நற்செயலின் அறிக்கை சொர்க்கத்தை அடைந்து, பூமி எங்கும் பரவுகிறது. அந்த அறிக்கை நீடிக்கும்வரை, {அவன் மனிதன் எனப்படுகிறான்.} ஏற்புடையதும் ஏற்பில்லாததும், இன்பமும் துன்பமும், கடந்த காலமும் எதிர்காலமும் {என உள்ள அனைத்து இரட்டைகளும்} எந்த மனிதனால் சமமாகக் கருதப்படுகிறதோ, அவன் அனைத்து வகைச் செல்வங்களையும் கொண்டவனாகச் சொல்லப்படுகிறான்” என்று பதிலளித்தான்.
யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, யார் மனிதன் என்பதற்கும், அனைத்து வகைச் செல்வங்களையும் கொண்ட மனிதன் யார் என்பதற்கும் உண்மையாகப் பதிலளித்து விட்டாய். எனவே, உனது தம்பிகளில், நீ விரும்பும் ஒருவன் மட்டும் உயிருடன் எழுந்திருக்கட்டும்!” என்றான். அதற்கு யுதிஷ்டிரன் {யக்ஷன்}, “ஓ! யக்ஷா, கறுத்த நிறமும், சிவந்த கண்களும், பெரும் ஆச்சா {சால} மரம் போன்ற உயரமும், அகன்ற மார்பும், நீண்ட கைகளும் கொண்ட நகுலன் உயிருடன் எழுந்திருக்கட்டும்!” என்று பதிலளித்தான்.
யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “இந்தப் பீமசேனன் உனக்கு அன்பானவன், இந்த அர்ஜுனனைத்தான் நீங்கள் அனைவரும் நம்பியிருக்கிறீர்கள்! ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, உனது மாற்றாந்தாய் மகன் ஏன் உயிருடன் எழும்ப வேண்டும் என்று விரும்புகிறாய்! பத்தாயிரம் யானைகள் பலத்திற்கு ஈடான பலம் கொண்ட பீமனைக் கைவிட்டு, நகுலன் உயிர்வாழ நீ எவ்வாறு விரும்புகிறாய்? இந்தப் பீமனே உனக்கு அன்பானவன் என்று மனிதர்கள் சொல்கிறார்களே. என்ன நோக்கத்திற்காக நீ மாற்றாந்தாய் மகனான உனது தம்பியை மீட்க விரும்புகிறாய்? பாண்டுவின் மகன்கள் அனைவராலும் வழிபடப்படும் வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அர்ஜுனனைக் கைவிட்டு, நகுலனை மீட்க நீ ஏன் விரும்புகிறாய்?” என்று மீண்டும் கேட்டான்.
யுதிஷ்டிரன் {யக்ஷனிடம்}, “அறம் தியாகம் செய்யப்பட்டால் {அறத்தைக் கைவிட்டால்}, அதைத் தியாகம் செய்பவன், தானே தொலைந்து போகிறான். அறம், தன்னைக் {அறத்தைக்} காப்பவனைக் காக்கிறது. எனவே, அறத்தைத் தியாகம் செய்து நம்மையே தொலைக்காமல் {அழிந்துவிடாமல்} இருக்கக் கவனம் கொண்டு, நான் எப்போதும் அறத்தைக் கைவிடுவதில்லை. ஊறிழைக்காமையே {அகிம்சையே} உயர்ந்த அறம் என்றும், அடையவிரும்பும் மிக உயர்ந்த சாதனையைவிட அதுவே {ஊறிழைக்காமையே} உயர்ந்தது என்றும் நான் கருதுகிறேன். நான் முனைப்புடன் அறம் பயிலவே முயல்கிறேன். எனவே, ஓ! யக்ஷா, நகுலன் புத்துயிர் பெறட்டும்! மன்னன் {நான்} எப்போதும் அறம் சார்ந்தவன் என்பதை மனிதர்கள் அறியட்டும்! நான் எப்போதும் கடமை தவறமாட்டேன். எனவே நகுலன் புத்துயிர் பெறட்டும்! என் தந்தை {பாண்டு} குந்தி, மாத்ரி என இரு மனைவியரைக் கொண்டிருந்தார். அவர்கள் இருவரும் {தத்தமக்கு ஒரு} பிள்ளையைப் பெற்றிருக்கட்டும். இதையே நான் விரும்புகிறேன். எனக்கு எப்படிக் குந்தியோ, அப்படியே மாத்ரியும். என் கண்களில் அவர்களுக்கு மத்தியில் எந்த வேறுபாடும் கிடையாது. நான் எனது தாய்மாருக்குச் சமமானவனாக நடக்க விரும்புகிறேன். எனவ, நகுலன் பிழைக்கட்டும்!” என்றான் {யுதிஷ்டிரன்}.
யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “பொருளையும், இன்பத்தையும் விட ஊறிழைக்காமையை {அகிம்சையை} நீ உயர்வாகக் கருதுகிறாய். எனவே, ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா} உனது தம்பிகள் அனைவரும் பிழைக்கட்டும்!” என்றான் {யக்ஷன்}.
வரங்களளித்த தர்மதேவன்! – வனபர்வம் பகுதி 312-யக்ஷன் சொன்னது போலவே பாண்டவர்கள் துயிலிலிருந்து எழும்புவது போலப் புத்துணர்ச்சி பெற்ற எழும்புவது; யுதிஷ்டிரனைப் பாராட்டிய தர்மதேவன், அவனுக்கு வரங்களை அருளியது; பாண்டவர்கள் அந்தணருக்கு அவரது அரணிகளைத் திருப்பிக் கொடுத்தது..
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பிறகு யக்ஷனின் வார்த்தைகளுக்கு ஏற்ப பாண்டவர்கள் எழுந்தனர்; அவர்களது பசியும், தாகமும் ஒரு கணத்தில் அவர்களை விட்டு அகன்றன. பிறகு யுதிஷ்டிரன், “வீழ்த்தப்பட முடியாதவராக, குளத்தில் ஒற்றைக் காலில் நிற்கும் உம்மை யக்ஷராக என்னால் எடுத்துக் {ஏற்றுக்} கொள்ள முடியவில்லை; ஆதலால் நீர் எந்தத் தேவன்? வசுக்களில் முதன்மையானவரா? ருத்திரர்களில் முதன்மையானவரா? மருதர்களின் தலைவரா? அல்லது வஜ்ரத்தைத் தாங்கும் தேவர்களின் தலைவரா {இந்திரனா}? எனது இந்தத் தம்பிகள் ஒவ்வொருவரும் போரில் நூறாயிரம் வீரர்களுக்குச் சமமானவர்களாவர். இவர்கள் அனைவரையும் கொல்லும் ஒரு வீரனையும் நான் காணவில்லை {கண்டதில்லை}! ஏதோ இனிமையான தூக்கத்தில் இருந்து எழுந்ததைப் போல அவர்களின் புலன்கள் புத்தணர்வு பெற்றிருப்பதை நான் காண்கிறேன். நீர் எங்களது நண்பரா? அல்லது எங்களது தந்தையா?” என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.
அதற்கு யக்ஷன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! குழந்தாய் {யுதிஷ்டிரா}, நான் பெரும் பராக்கிரமம் படைத்த நீதியின் தலைவன் {யமன்=தர்மதேவன்}. நான் உனது தந்தையுமாவேன்! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, உன்னைக் காண விரும்பியே நான் இங்கு வந்தேன் என்பதை அறிந்து கொள்! புகழ், உண்மை {சத்தியம்}, தன்னடக்கம் {சுயக்கட்டுப்பாடு}, தூய்மை {பரிசுத்தம்}, வெளிப்படைத்தன்மை {candour = நடுநிலைமை}, பணிவு, உறுதியான நிலை, தானம், தவம், பிரம்மச்சரியம் ஆகியன எனது உடலாகும்! ஊறிழைக்காமை {அகிம்சை}, நடுநிலை {சமத்துவம்}, அமைதி, தவங்கள், தூய்மை {புனிதம்}, துர்க்குணம் விலக்கல் ஆகியவையே (என்னை அணுகுவதற்கான) கதவுகள். நீ எப்போதும் எனது அன்புக்குரியவனே! நல்லூழின் {#} காரணமாகவே நீ ஐந்துக்கும் [1] உன்னை அர்ப்பணித்திருக்கிறாய்.(1. மன அமைதி, 2. சுயக்கட்டுப்பாடு, 3. சிற்றின்பம் தவிர்த்தல், 4. ஒழிவு {ஓய்வு} 5.யோகத்தியானம் ) மேலும் நல்லூழின் காரணமாகவே நீ ஆறை {ஆறு-ஐ} {ஷடபதீ-களை} [2] வென்றிருக்கிறாய்.(1. பசி, 2. தாகம், 3. துக்கம், 4. மோகம் {மழுங்கிய [மயக்கம் தரும்] மனித உணர்வு}, 5. மூப்பு, 6. மரணம்) மனிதர்களை அடுத்த உலகிற்கு அனுப்பும் நிமித்தமாக, அந்த ஆறில், முதல் இரண்டு {பசி, தாகம் ஆகியன} வாழ்வின் முதல் பகுதியிலும்; இன்னும் இரண்டு {துக்கம், மோகம் ஆகியன} நடுப்பகுதியிலும், மீதம் உள்ள இரண்டு {மூப்பும், மரணமும்} கடைசியிலும் தோன்றும்.
உனக்கு நன்மையே விளையட்டும், நான் நீதியின் தலைவன் {தர்ம தேவன்}, நான் உனது தகுதியைச் சோதிக்கவே இங்கு வந்தேன்! தீங்கில்லாத உன்னைச் சாட்சியாகக் கண்டு நான் மனம் நிறைந்தேன்; ஓ! பாவமற்றவனே {யுதிஷ்டிரா} நான் உனக்கு வரங்களை அளிப்பேன். ஓ! மன்னர்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா} நீ என்னிடம் வரங்களைக் கேள். ஓ! பாவமற்றவனே {யுதிஷ்டிரா}, நான் அவற்றை உனக்கு நிச்சயம் அளிப்பேன். என்னை வணங்குவோர், துயரங்கொள்ளார்!” என்றான் {யமன்}. யுதிஷ்டிரன் {யமனிடம்}, “அந்தணர் ஒருவரின் அரணிகளை ஒரு மான் தூக்கிச் சென்றது. எனவே, முதல் வரமாக, அந்த அந்தணரின் அக்னி வழிபாடு தடைபடாதிருக்கட்டும் என்று கேட்பேன்!” என்றான். யக்ஷன் {தர்மதேவன்} {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பிரகாசமிக்கக் குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, உன்னைச் சோதிப்பதற்காக, மானின் வேடம் கொண்டு நானே, அந்த அந்தணரின் அரணிகளைத் தூக்கிச் சென்றேன்!” என்றான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அதன்பிறகு, அந்த வழிபடத்தகுந்தவன் {தர்மதேவன்}, “நான் உனக்கு இந்த வரத்தைத் தருகிறேன்! உனக்கு நன்மையே விளையட்டும்! ஓ! தேவனைப் போல இருப்பவனே, புதிதாக வேறு வரத்தைக் கேள்!” என்றான். யுதிஷ்டிரன், “காட்டில் பனிரெண்டு வருடங்களைக் கழித்தோம்; பதிமூன்றாவது வருடம் வந்துவிட்டது; இந்த வருடத்தை நாங்கள் எங்காவது கழிக்கும்போது யாரும் எங்களை அடையாளம் காணாது இருக்கட்டும்!” என்று கேட்டான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அதற்கு அந்த வழிபடத்தகுந்தவன் {தர்மதேவன்}, “நான் உனக்கு இந்த வரத்தைத் தருகிறேன்” என்றான். பிறகு, உண்மையைப் பராக்கிரமமாகக் கொண்ட குந்தியின் மகனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} மீண்டும் உறுதியளிக்கும் விதமாக, அவன் {தர்மதேவன்}, “ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, உங்கள் சரியான உருவங்களில் {இயற்கையான உங்கள் தோற்றத்திலேயே} நீங்கள் {இந்த முழு} பூமியில் உலவினாலும், மூவுலகில் உள்ள எவரும் உங்களை அடையாளம் காண மாட்டார்கள். குரு குலத்தைத் தழைக்க வைப்பவர்களே, எனது அருளால், ரகசியமாகவும், அடையாளம் காணப்படாமலும், இந்தப் பதிமூன்றாவது {13} வருடத்தை விராட நாட்டில் நீங்கள் கழிப்பீர்கள். உங்களில் ஒவ்வொருவராலும், அவரவர் விரும்பும் வடிவத்தை ஏற்க இயலும்! இப்போது நீ அந்த அந்தணருக்கு அவரது அரணிகளைக் கொடுக்கலாம். உன்னைச் சோதிப்பதற்காகவே நான் மானின் வடிவம் கொண்டு அவற்றைத் தூக்கிச் சென்றேன்! {என்று சொல்லி அரணிகளை யுதிஷ்டிரன் கையில் தர்மதேவன் கொடுத்திருக்க வேண்டும்}. ஓ! மனதிற்கினிய யுதிஷ்டிரா, நீ விரும்பும் மற்றுமொரு வரத்தைக் கேள்! நான் அதை உனக்கு அளிப்பேன். ஓ! மனிதர்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, உனக்கு {அந்த} வரங்களை வழங்கியதன் மூலம் நான் இன்னும் மனநிறைவு கொள்ளவில்லை. என் மகனே {யுதிஷ்டிரா}, பெரியதும் ஒப்பற்றதுமான மூன்றாவது வரத்தை ஏற்றுக் கொள்! ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, நீ என்னால் பிறந்தவன், விதுரன் எனது பகுதிகளில் ஒருவன்!” என்றான் {தர்மதேவன்}.
அதன்பிறகு யுதிஷ்டிரன் {தர்மதேவனிடம்}, “தேவர்களுக்கு தேவனான நித்தியமான {தர்மதேவனான} உம்மை, எனது புலன்களைக் கொண்டு கண்டதே எனக்குப் போதுமானது! ஓ! தந்தையே {தர்மதேவரே}, நீர் எனக்கு என்ன வரமளித்தாலும், நான் அதை நிச்சயம் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வேன்! ஓ! தலைவா {தர்மதேவரே}, பேராசை, மூடத்தனம், கோபம், ஆகியவற்றை நான் எப்போதும் வெல்ல வேண்டும். மேலும், ஈகை {#}, உண்மை {சத்தியம்}, தவச்சடங்கு ஆகியவற்றில் எனது மனம் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருக்கட்டும்!” என்று சொன்னான். அதற்கு நீதியின் தலைவன் {தர்மதேவன் – யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாண்டவா {யுதிஷ்டிரா}, நீ நீதியின் தலைவனேயாகையால் {நானே ஆகையால்} இந்தக் குணங்கள் அனைத்தும் உன்னிடம் இயற்கையாகவே இருக்கின்றன! நீ கேட்டதை மீண்டும் அடைவாயாக!” என்றான் {தர்மதேவன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அனைத்து உலகங்களிலும் ஆழ்ந்து பார்க்கும் பொருளான வணங்கத்தக்க நீதியின் தலைவன் {தர்மதேவன்}, இவ்வார்த்தைகளைச் சொன்னதும் அங்கேயே மறைந்து போனான்; இனிமையாக உறங்கிய அந்த உயர் ஆன்ம பாண்டவர்கள் மீண்டும் ஒருவரோடு ஒருவர் ஐக்கியப்பட்டனர். களைப்பு நீங்கிய அவ்வீரர்கள், ஆசிரமத்திற்குத் திரும்பி, அந்த அந்தணருக்கு, அவரது அரணிகளைத் திரும்பக் கொடுத்தனர்.
(பாண்டவர்கள்) புத்துயிர் பெறுவதும், தந்தையும் {தர்மன்} மகனும் {யுதிஷ்டிரனும்} சந்திப்பதும், ஒப்பற்றதும், புகழை அதிகரிப்பதுமான இந்தக் கதையை நாடிய {கேட்ட [அ] படித்த} மனிதன், பரிபூரண மன அமைதியையும், மகன்கள் மற்றும் பேரர்களையும், நூறு வருடங்களைத் தாண்டி நீளும் வாழ்வையும் அடைவார்கள்! இந்தக் கதையை மனதில் நிறுத்தும் மனிதன், அநீதி {அதர்மம்}, நண்பர்களுக்குள் பூசல் {மித்ரபேதம்}, பிறன் உடைமையை மோசடி செய்வது; பிறர் மனைவியைக் களங்கப்படுத்தல் {தொடுதல்}, தவறான {தீய} எண்ணங்கள் {அற்பத்தனங்கள்} ஆகியவற்றில் மகிழ்வடைய மாட்டார்கள்! {பற்றுதல் கொள்ள மாட்டார்கள்!}” {என்றார் வைசம்பாயனர்}
யுதிஷ்டிரனை உற்சாகப்படுத்திய பீமன்! – வனபர்வம் பகுதி 313-முனிவர்களிடமும் யதிகளிடமும் விடைபெற அனுமதி கோரிய பாண்டவர்கள்; யுதிஷ்டிரன் மயங்கி விழுந்தது; தௌமியர் யுதிஷ்டிரனைத் தேற்றியது; பீமன் யுதிஷ்டிரனுக்கு உற்சாகமூட்டியது; அந்தணர்களும் முனிவர்களும் பாண்டவர்களிடம் விடைபெற்றது; தாங்கள் அப்போதிருந்த இடத்தில் இருந்து ஒரு குரோச தூரம் சென்று ஆலோசனை நடத்திய பாண்டவர்கள்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இப்படி கண்டறியப்படாமல் கழிக்கப்பட வேண்டிய {அஞ்ஞாதவாசம் செய்ய வேண்டிய} பதிமூன்றாவது {13} வருடத்தை மாறுவேடத்தில் கழிக்க, நீதியின் தலைவனால் {தர்மதேவனால்} கட்டளையிடப்பட்டவர்களும், உண்மையைப் பராக்கிரமமாகக் கொண்டு நோன்புகள் நோற்கும் உயர் ஆன்மா கொண்டவர்களுமான பாண்டவர்கள், தங்களுடன் கானக வாழ்வில் ஒன்றாக வசித்த கற்றோர் மற்றும் நோன்பு நோற்கும் துறவிகள் முன்பு அமர்ந்தனர். குறித்த வகையில் பதிமூன்றாவது வருடத்தைக் கழிக்க அனுமதி கோரும் நோக்கில், கூப்பிய கரங்களுடன் அவர்களிடம் {கற்றோர் மற்றும் துறவிகளிடம்} இந்த வார்த்தைகளை அவர்கள் {பாண்டவர்கள்} பேசினர்.
அவர்கள் {பாண்டவர்கள்}, “திருதராஷ்டிரரின் மகன்கள் எங்கள் நாட்டை வஞ்சகமாக அபகரித்தனர் என்பதும், எங்களுக்கு இன்னும் பல தீங்குகளைச் செய்தனர் என்பதும் நீங்கள் நன்கு அறிந்ததே! நாங்கள் பெரும் துக்கத்துடன் பனிரெண்டு {12} வருடங்களைக் காட்டில் கழித்துவிட்டோம். கண்டறியப்படாமல் {ஆஞ்ஞாதவாசத்தில்} கழிக்க வேண்டிய பதிமூன்றாவது வருடம் மட்டுமே மீதம் இருக்கிறது. இப்போது நாங்கள் தலைமறைவாக வாழவேண்டிய அந்த ஒரு வருடத்தைக் கழிக்க நீங்கள் அனுமதிப்பதே உங்களுக்குத் தகும். செற்றம் {#} நிறைந்த எங்கள் எதிரிகளான சுயோதனன் {துரியோதனன்}, தீய மனம் கொண்ட கர்ணன், சுபலனின் மகன் {சகுனி} ஆகியோர் எங்களைக் கண்டுபிடித்தால், குடிமக்களுக்கும், நமது நண்பர்களுக்கும் பெரும் தீங்கிழைப்பார்கள்! {அப்படி நடந்தால்} அந்தணர்களுடன் கூடிய நாங்கள் எங்கள் நாட்டில் மீண்டும் நிறுவப்படுவோமா?” என்றனர் {என்று கேட்டனர்}.
இதைச் சொன்னபிறகு, பரிசுத்த மனம் கொண்ட அறமன்னனான {தர்மராஜாவான} யுதிஷ்டிரன், கண்ணீரால் தடைபட்ட குரலுடன், துயரம் மேலிட மயங்கினான். அதன்பிறகு, அவனது {யுதிஷ்டிரனின்} தம்பிகளுடன் சேர்ந்த அந்தணர்கள் அவனைத் {யுதிஷ்டிரனைத்} தேற்றத் தொடங்கினர். பிறகு தௌமியர், வலிமைமிக்க {சிறந்த} பொருள் நிறைந்த இந்த வார்த்தைகளை அந்த மன்னனுக்குச் {யுதிஷ்டிரனுக்குச்} சொன்னார். அவர் {தௌமியர் – யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, நீ கற்றவன், இழப்பைத் தாங்கிக் கொள்ள இயன்றவன், உண்மையில் {சத்தியத்தில்} உறுதியானவன், புலன்களை அடக்கியவன்! இப்படிப்பட்ட முத்திரை கொண்ட மனிதர்கள் பேரிடர்களில் மதிமயங்கமாட்டார்கள். உயர் ஆன்மா கொண்ட தேவர்கள் கூட எதிரிகளை வெல்வதற்காகப் பலதரப்பட்ட இடங்களில் மாறுவேடங்களில் திரிந்திருக்கிறார்கள். இந்திரன், தனது எதிரிகளை வெல்லும் பொருட்டு நிஷாத நாட்டின் கிரிபிரஸ்தத்தில் {நகரம்} உள்ள ஆசிரமத்தில் மாறுவேடத்தில் வசித்துத் தனது முடிவை அடைந்தான்.
அதிதியின் கருவறையில் பிறவியெடுக்கும் முன்னர், தைத்தியர்களை அழிக்கும்பொருட்டு, ஹயக்கிரீவன் {குதிரை கழுத்து கொண்ட} வடிவமேற்ற விஷ்ணு நீண்ட காலம் கண்டறியப்படாமல் இருந்தான். அதன்பிறகு குள்ளன் {வாமனன்} வேடத்தைத் தரித்த அவன் {விஷ்ணு}, தனது பராக்கிரமத்தால் பலியின் நாட்டை இழக்கச் செய்ததை நீ கேட்டிருக்கிறாய்! நீருக்குள் நுழைந்த ஹுதாசனன் {அக்னி}, அங்கேயே மறைந்திருந்து, தேவர்களின் காரியத்தைச் சாதித்தான் என்பதையும் நீ கேட்டிருக்கிறாய். ஓ! கடமையை அறிந்தவனே {யுதிஷ்டிரா}, பகைவரை வெல்லும் நோக்கில், சக்ரனின் {இந்திரனின்} வஜ்ராயுதத்தில் நுழைந்த ஹரி அங்கேயே மறைந்திருந்தான் என்பதையும் நீ கேட்டிருக்கிறாய்.
ஓ! பாவமற்றவனே {யுதிஷ்டிரா}, மறுபிறப்பாளரான {பிராமணரான} அவுர்வ {ஔர்வ} முனிவர் ஒரு காலத்தில் தேவர்களின் காரியத்திற்காகத் தனது தாயின் கர்ப்பத்திலேயே மறைந்திருந்தார் என்பதை நீ கேட்டிருக்கிறாய். ஓ! குழந்தாய் {யுதிஷ்டிரா}, பூமியின் அனைத்து பகுதியிலும் மறைந்திருந்த, சிறந்த சக்தி கொண்ட விவஸ்வத் {சூரியன்}, முடிவில் தனது எதிரிகளை அனைவரையும் எரித்தான். தசரதனின் வசிப்பிடத்தில் மாறுவேடத்தில் வாழ்ந்த, கடுஞ்செயல்கள் புரியும் விஷ்ணு {ராமன்}, போர்க்களத்தில் பத்துக்கழுத்தனை {ராவணனைக்} கொன்றான். முன்னர், பல இடங்களில் மாறுவேடத்தில் இருந்த உயர் ஆன்மா கொண்ட மனிதர்கள் தங்கள் எதிரிகளைப் போர்க்களத்தில் இப்படியே வென்றிருக்கிறார்கள்” என்றார் {தௌமியர்}.
இப்படித் தௌமியரின் வார்த்தைகளால் தேற்றப்பட்டவனும், சாத்திரங்களால் அடையப்பட்ட தன் ஞானத்தை நம்புபவனுமான அறம்சார்ந்த யுதிஷ்டிரன், தனது சுயநினைவை மீண்டும் அடைந்தான். பிறகு, வலிமைமிக்க மனிதர்களில் முதன்மையானவனான வலிமை மிக்கக் கரங்கள் கொண்டவனும், பெரும் பலம் கொண்டவனுமான பீமசேனன், மன்னனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} மிகவும் உற்சாகமூட்டும் வகையில், “கடமையுணர்ச்சியுடன் செயல்படுபவனான காண்டீவத்தைத் தாங்குபவன் {அர்ஜுனன்}, (அனுமதிக்காக) உமது முகத்தையே பார்த்துக்கொண்டிருப்பதைப் பாரும். அவன் {அர்ஜுனன்} இன்னும் எத்தகு முரட்டுத்தனத்தையும் காட்டவில்லை. கடும் பராக்கிரமம் கொண்ட நகுலனும், சகாதேவனும் எதிரியை அழிப்பதற்கு முழுவதும் இயன்றவர்களாக இருப்பினும், என்னால் எப்போதும் தடுக்கப்பட்டே வந்திருக்கின்றனர்! எங்களை நீர் எதில் ஈடுபடுத்துவீரோ அதிலிருந்து நாங்கள் எப்போதும் விலக மாட்டோம்! செய்ய வேண்டியதை எங்களுக்கு நீர் சொல்லும்! விரைவில் நாங்கள் நம் எதிரிகளை வெல்வோம்!” என்றான் {பீமன்}.
பீமசேனன் இதைச் சொன்னதும், அந்தணர்கள் பாரதர்களுக்கு வாழ்த்துகளைச் சொல்லினர். பிறகு அவர்களது {பாண்டவர்களின்} அனுமதியைப் பெற்று, அவரவர் பகுதிகளுக்குச் சென்றனர். வேதங்களை அறிந்த முனிவர்களிலும், யதிகளிலும் முதன்மையானவர்களும், பாண்டவர்களை மீண்டும் காண மிகுந்த ஆவல் கொண்டவர்களுமான அவர்கள், தங்கள் இல்லங்களுக்குத் திரும்பினர். பிறகு, கற்ற வீரர்களும், நோன்புகள் கொண்டவர்களுமான அந்த ஐந்து பாண்டவர்களும் தௌமியருடனும் கிருஷ்ணையுடனும் {திரௌபதியுடனும்} {அங்கிருந்து} கிளம்பினர். தனித்தனி அறிவியல்களையும் {சாத்திரங்களையும்}, மந்திரங்களையும், எப்போது அமைதி தீர்மானிக்கப்பட வேண்டும், எப்போது போர் தொடுக்கப்பட வேண்டும் என்பதையும் நன்கறிந்த மனிதர்களில் புலியான அவர்கள் {பாண்டவர்கள்} ஒவ்வொருவரும், கண்டறியப்படக்கூடாத வாழ்வுக்குள் நுழைவதற்காக, அடுத்த நாளில் ஒரு குரோச தூரம்* ( 2.0 – 2.5மைல் தூரம் (அ) கூப்பிடும் தூரம்.)சென்று, ஒருவருக்கொருவர் ஆலோசனை செய்யும் நோக்கில் கீழே அமர்ந்தனர்.
ஆரணேயப் பர்வம் முற்றிற்று*
வன பர்வம் முற்றிற்று–
——————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply