ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-–1-3-8–

ஸ்ரீ ஆறாயிரப்படி –1-3-8-

நாளும் நின்று அடும் நம் பழமை அம் கொடு வினையுடனே
மாளும் ஒரு குறைவில்லை மனனக மலமறக் கழுவி
நாளும் நம் திருவுடையடிகள் தம் நலம் கழல் வணங்கி
மாளும் ஓர் இடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே
–1-3-8-

இப்படி அநந்ய ப்ரயோஜனராய்க் கொண்டு நம் திருவுடை யடிகள் தம் நலம் கழல் வணங்கவே-இடைவிடாதே நின்று நமக்கு பாதகமாய்
அநாதி கால சஞ்சிதமாய் பகவத் அனுபவ விரோதியான நம்முடைய கொடு வினை எல்லாம் வணங்கின அப்போதே மாளும்
இனி ஒரு நாளும் ஒரு குறையில்லை –
நாம் அபேக்ஷித்தபடி எம்பெருமானை அனுபவிக்கப் பெறலாம் –
இப்படி சிர காலம் கூட பலவத் சாத்தியமான பக்தி யோகத்தை சாதிக்கைக்குக் காலமும் பலமும் இன்றியே
அந்திமத சா பன்னரானார் இழந்து போம் இத்தனையோ -என்னில்
அந்த அந்திம தசையில் யாகிலும் ஓர் அஞ்சலி மாத்திரம் ஆதல் ஓர் யுக்தி மாத்திரம் ஆதல் ஓர் ஸ்ம்ருதி மாத்திரம் ஆதல்
அவன் திறத்திலே செய்ய அந்த பக்தி யோகத்திலும் நன்று என்கிறார் –

—–

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி -1-3-8-

எம்பெருமானுடைய பஜநீயன் ஆகைக்கு நிதானமான ஸ்ரீ யபதித்வத்தைச் சொல்லா நின்று கொண்டு
பஜன உபக்கிரம காலத்திலே பஜன விரோதி சர்வ கர்ம நிவ்ருத்தியும் உண்டாம் என்கிறார் –

நாளும் நின்றடு நம் பழமை அங்கொடு வினையுடனே
மாளும் ஓர் குறைவில்லை மனனகமல மறக் கழுவி
நாளும் நம் திருவுடையடிகள் தம் நலம் கழல் வணங்கி
மாளும் ஓர் இடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே
–1-3-8-

நாளும் நின்றடு நம் பழமை அங்கொடு வினையுடனே மாளும் ஓர் குறைவில்லை –
நாள் தோறும் இடைவிடாதே நலியா நின்றுள்ள பழையதாய் மிகவும் க்ரூரமான நம்முடைய கர்மங்கள் ஆரம்பிக்கத் தொடங்கின வாறே நிச் சேஷமாக நசிக்கும் –
சர்வ இஷ்டங்களும் பூரணமாம்
மனனகமல மறக் கழுவி நாளும் நம் திருவுடையடிகள் தம் நலம் கழல் வணங்கி
ஈஸ்வரன் இவனோ -மற்றையவர்களோ -என்று தொடக்கமான மனசில் உள்ள சம்சயங்களும் போக்கி
ஸ்ரீ மானாய் ஸ்வாமியான எம்பெருமானுடைய ஆஸ்ரிதம் அபராதம் பாராத திருவடிகளை நாடொறும் வணங்கி
மாளும் ஓர் இடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே–
நெடும் காலம் கூட சாதிக்க வேண்டும் பக்தி யோகத்தை சாதிக்க காலமும் கரணபாடவமும் இன்றிக்கே
சரம தசா பன்னரானவர்கள் இழந்தே போம் இத்தனையோ என்னில்
அத்தசையிலே யாகிலும் ப்ரணமாதிகளில் ஒன்றிலே உபக்ரமித்து அவ்வளவிலே தான் முடியில் அதுவே பரம பக்தியிலும் நன்று

—————

ஸ்ரீ பன்னீராயிரப்படி -1-3-8-

அநந்தரம் ஸ்ரீ யபதியான சர்வேஸ்வரன் திருவடிகளை ஆஸ்ரயிக்கில் ஆஸ்ரயணத்துக்கும் ப்ராப்திக்கும் பிரதிபந்தகங்களானவை எல்லாம் குலையும் என்கிறார் –

நாளும் நின்று அடும் நம் பழமை அம் கொடு வினையுடனே
மாளும் ஒரு குறைவில்லை மனனக மலமறக் கழுவி
நாளும் நம் திருவுடையடிகள் தம் நலம் கழல் வணங்கி
மாளும் ஓர் இடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே
–1-3-8-

மனனக மலமறக் கழுவி–மனனகத்தை த்ரிமூர்த்தி சாம்யா சங்கையால் உண்டான சம்சயம் ஆகிற மலம் அறும்படி விவேகத்தால் பரி ஸூ த்தமாக்கி
நாளும் நம் திருவுடையடிகள் தம் நலம் கழல் வணங்கி–நமக்கு அபிமதமான நாள் தோறும்-நமக்கே கூறப்பட்ட ஸ்ரீ மானான ஸ்வாமியினுடைய
சர்வ ஸமாச்ரயணீயமாய் போக்யமுமான திருவடிகளை ஆஸ்ரயிக்கில்
நாளும் நின்று அடும் நம் பழமை –நாள் தோறும் விடாதே நின்று பரிதபிப்பதாய் -நாம் புத்தி பூர்வகமாக நமக்குத் தேடின அநாதி ஸித்தமாய்
அம் கொடு வினையுடனே–மிகவும் குரூரமான அக்ருத்ய காரணாதி பாபங்கள் –ஆஸ்ரயண சம காலத்திலேயே
மாளும் ஓர் குறையில்லை -நசிக்கும் -ஸ்வ அபிமதத்தில் குறை கிடப்பது ஓன்று இல்லை
இப்படி ஆஸ்ரயிக்கும் இடத்தில்
மாளும் ஓர் இடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே –சரீர விஸ்லேஷ தசையிலும் ஆஸ்ரயணத்தோடே முடியிலும் அதுவே பிரபலம்
ஸ்தித்வா அஸ்யா மந்த காலே அபி ப்ரஹ்ம நிர்வாணம் ருச்சதி-என்னுமா போலே வணங்கி என்று பாடமாய் வணங்க என்று திருத்திச் சொல்லுவாரும் உளர் –

—————

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -1-3-8-

நன்று என நலம் செய்வது என்னும் காட்டில் ஆஸ்ரயிக்கலாய் இருக்குமோ
அநாதி காலம் ஆர்ஜிதமான கர்மம் ஆஸ்ரயணத்தை விலக்காதோ என்னில்
பஜன உபக்கிரம வேளையில் அவை அடங்க நசிக்கும் -நசிப்பாரும் உண்டு என்கிறது

நாளும் நின்றடு நம் பழமை அங்கொடு வினையுடனே
மாளும் ஓர் குறைவில்லை மனனகமல மறக் கழுவி
நாளும் நம் திருவுடையடிகள் தம் நலம் கழல் வணங்கி
மாளும் ஓர் இடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே–
1-3-8-

நாளும் நின்றடும்
நாள் தோறும் இடைவிடாதே நின்று ஹிம்சிக்கை -ஆத்மா நித்யன் -காலம் அநாதி -என்றும் ஒக்க நலிந்து போருகிற இதுவே
நம்
நாம் புத்தி பூர்வகமாக பண்ணிப் போந்த
பழமை
அநாதியாய் இருக்கை
அங்கொடு வினை
மிகவும் க்ரூரமாய் இருக்கை
உடனே மாளும்
ஆஸ்ரயிக்கத் தொடங்கினவாறே-நசிக்கும் –
ததைவ முஷ்ணாத்ய சுபான்ய சேஷ தா –
ஓர் குறைவில்லை
மேலும் ஓர் விரோதங்கள் வாராது என்னுதல்
சர்வ அபிமதங்களும் பூர்ணமாம் என்னுதல்
சுபானி புஷ்ணாதி
மனனகமல மறக் கழுவி

ஆஸ்ரயிணன் இவனோ -மற்றை யவனோ மனசில் உண்டான சம்சயத்தை சவாசனாமாகப் போக்கி
அஞ்ஜஸ் சாஸ்த்ரத்தா நச்ச சம்சயாத்மா வி நஸ்யதி

நாளும்
நாள் தோறும் வேணும் என்று ஒரு விதி அன்று –
அபர்வணி கடல் தீண்டல் ஆகாது என்னுமா போலே இதுக்கு நிஷித்தமாய் இருப்பதொரு காலம் இல்லை என்கை
நம் திருவுடையடிகள்
ஸ்ரீ மானான ஸ்வாமியானவனுடைய
நம் -என்று அஜாயமானோ பஹூ தா விஜாயதே -என்று அவதாரத்தை பிரஸ்தாபித்து –
ஹ்ரீச்சதே லஷ்மீச்ச பத்ன்யௌ-என்று பிரமாண பிரசித்தமான ஸ்ரீ யபதியை தமக்கு பிரகாசிப்பித்த படியை அருளிச் செய்கிறார் –
தம் நலம் கழல் வணங்கி
வாச பரம் ப்ரார்த்தயிதா ப்ரபத்யே நியத ச்ரியம் -என்று அவள் முன்னாக பற்றுவாருடைய குணாகுணம் நிரூபணம் பண்ணாத திருவடிகள்
வணங்கி -என்கிற இது வினை எச்சம் பெற்று வணங்க என்று அர்த்தமாகக் கிடக்கிறது
வணங்க நாளும் நின்றடும் -என்று அந்வயம்
மாளும் ஓர் இடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே-
காலமும் கரணபாடவமும் இன்றிக்கே சரம தசா பன்னரானவர்கள் இழந்தே போம் இத்தனையோ-என்னில்
அத்தசையிலே யாகிலும் ப்ரணமாதிகளில் ஒன்றிலே உபக்ரமித்து அவ்வளவிலே தான் முடியில் அதுவே பிரபலம்- அதுவே ஸ்ரேஷ்டம்
ஸ்தித்வாஸ் ச்யாமந்தகாலே அபி ப்ரஹ்ம நிர்வாணம் ருச்சதி -என்று ஆத்மா சாஷாத்காரத்துக்கு அகப்பட
இப்படி சொல்லா நின்றால் பகவத் விஷயத்துக்குச் சொல்ல வேணுமோ

——————

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி -1-3-8-

உடலை விட்டு உயிர் நீங்குவதற்கு ஒரு நாள் முன்னராயினும் இறைவனைப் பற்றும்படி-ஆஸ்ரயிக்கும் படி – கூறுகின்றீர்;
நீண்ட காலமாக நாங்கள் பண்ணி வைத்த பாவங்கள் விலக்காவோ? இனி, அவனைப் பற்றுவதற்குக் காலந்தான் உண்டோ?’ என்ன,
‘நீங்கள்-ஆஸ்ரயணத்திலே – பற்றுவதற்கு ஒருப்படவே பாவங்கள் அடங்கலும் அழிந்து விடும்;
திருமகள் கேள்வனைப் பற்றுவது ஆகையாலே காலங்கழிந்தது என்று இருக்கவும் வேண்டா;
நீங்கள், ‘தண்டு காலா ஊன்றி ஊன்றித் தள்ளி, நடக்கும்போது-(பெரிய திருமொழி. 1. 3 : 5.)
அக் அக்கோலோடே சாயவும் அமையும்,’ என்கிறார்.

——————

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

நம்முடை நாளே -என்று சீக்கிரமாக ஆஸ்ரயிக்கச் சொன்ன இவருடைய வார்த்தையைக் கேட்ட சம்சாரிகள் –
ஸ்ரேயாம் ஸி பஹு விக்நாநி பவந்திமஹதாமபி -என்கிறபடியே நாங்கள் பாப பூயிஷ்டர்கள் ஆகையால்
எங்கள் விரோதிகள் எங்களை ஆஸ்ரயிக்க ஒட்டாது-நாங்கள் வ்ருத்தர்கள் ஆகையால் பூர்ண உபரசனத்துக்கு அசக்தர் –
இத்தனை காலமும் வ்யர்த்தமே போயிற்று இனி அல்ப காலமே இருக்கப் போகிறது ஆகையால் காலம் தான் உண்டோ -என்று சங்கிக்க –
அவர்களுக்கு உத்தரம் அருளிச் செய்கிறார் –
ஆஸ்ரயணத்தில் ஒருப்படவே -என்றது வணங்கி என்றதைப் பற்ற
விரோதிகள் அடங்கலும் நசிக்கும் என்றது -உடனே மாளும்-என்றதை பற்ற –
திருவுடை அடிகள் -என்றதை பற்ற ஸ்ரீ யபதி ஸமாஸ்ரயணம் –
மாளும் ஓர் இடத்திலும் என்றதைக் கடாக்ஷித்து -நீங்கள் தண்டு காலா இத்யாதி -இப்படி தடுமாறி நடப்பதற்கு முன்னே –
தண்டு -அக்கோலோடே சாயாவும் அமையும் -காலால் கொள்ளும் பிரயோஜனத்தை தண்டத்தாலே யாயிற்று கொள்வது –

——————–

நாளும் நின்று அடும் நம பழமை அம் கொடு வினை யுடனே
மாளும் ஓர் குறைவில்லை மனனகம் மலம் அறக் கழுவி
நாளும் நம் திருவுடை அடிகள் தம் நலங் கழல் வணங்கி
மாளும் ஓர் இடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே
–1-3-8-

நாளும் நின்று அடும்-
நாள் தோறும் இடைவிடாமல் நின்று வருத்துகின்ற;
பரமாணுவைச் சேர்ந்த பாரி மாண்டல்யம் முதலியவைகள் நித்தியமாக இருக்கவும் நித்திய பரதந்திரமாய் இருக்குமாறு போன்றும்,
இறைவனுடைய ஸ்வரூபத்தைப் போன்று அவன் குணங்களும் நித்தியமாக இருக்கவும்
அக் குணங்கள் நித்திய பரதந்திரமாக இருக்குமாறு போன்றும் நித்தியமாயும் நித்திய பரதந்திரமாகவும் இருக்கிற உயிர்கட்கு,
அசித் சம்சர்க்கமும்–உடல்களின் சேர்க்கையும் நித்தியமாகவே வருகின்ற காரணத்தால்,
அவ்வுடலின் சேர்க்கையால் வருகின்ற வினைகளை ‘நாளும் நின்று அடும்’ என்கிறார்.
நம.த்விஷந்த பாபக்ருத்யாம் ( ‘ஒருவர் செய்த வினைகளுள், அன்பர்கள் புண்ணியங்களையும்,
பகைவர்கள் பாபங்களையும் அடைகிறார்கள்’ )என்கிறபடியே. பிறரராதாய் -அசல் பிளந்தேறிட வந்தன அல்ல;
நெஞ்சு உணர நாமே பண்ணி வைத்தவை.
அதாவது, அபூத பூர்வம் மம பாவி கிம் வா –‘எனக்கு முன்பு அனுபவிக்காததாய், மேல் அனுபவிக்கக் கூடியதாய் இருப்பது ஒன்று உண்டோ? –
சர்வம் சஹே எல்லாம் பொறுக்க வல்லேன்;
மே சகஜம் ஹி துக்கம் – தன் காய் பொறாத கொம்பு உண்டோ? என்று கூறலாம்படி நாமே பண்ணி வைத்தவை என்பதாம்.

பழமை
அவை தாம் இன்று நேற்று அன்றிப் பழையவாய் இருக்கை.
அம்
கொடுமையை நினைந்து சொல்லுகிறார்.
கொடுவினை-
அனுபவித்தே தீர்க்க வேண்டியவைகள். உடே்ன மாளும்-
பற்றின காலத்திலே அழியும். யதேஷீக தூல மக்னவ் ப்ரோதம் ப்ர தூயே தைவம் ஹாஸ்ய சர்வே பாப்மாந ப்ரதூயந்தே –
(‘தீயிற்போடப்பட்ட நாணற்பஞ்சானது எப்படி அழிகின்றதோ,அப்படியே அவனுடைய எல்லாப் பாபங்களும் நாசத்தை அடைகின்றன; ஆச்சரியம்,’) என்றும்,
மேரு மந்த்ர மாத்ரோ அபி (பாபத்தின் உருவமான கர்மங்களின் கூட்டம், மேரு மலை மந்தர மலை இவற்றின் அளவாக இருந்தாலும்,
கேசவனாகிய மருத்துவனைக் கிட்டின அளவில், கெட்ட நோய்கள் போன்று நாசத்தை அடைகின்றன,’) என்றும் வருகின்ற பிரமாணங்களை அறிக.

ஓர் குறைவு இல்லை –
‘மேல் ஒரு விரோதங்கள் – குறையும் வாராது. இனி,-சர்வ அபிமதங்களும் – விரும்பியவை அனைத்தும் எய்தும்,’ எனலும் ஆம்
கௌந்தேய பிரதி ஜாநீஹி ந மே பக்த ப்ரணச்யதி ( ‘அருச்சுனா, இவ்வர்த்தத்தில் நம்மை நம்பிச் சூளுறவு செய்வாய்;
நம்மைப் பற்றினவர்களுக்குக் கேடு வாராது காண்; பகவானை அடைவதற்கும் வினை கிடக்கைக்கும்
அக்னி நா சின்ஜேத் ‘தீயால் நனைப்பது’ போன்று, என்ன சேர்த்தி உண்டு? அது பொருத்தம் அற்றது,’ )என்பது பகவான் திருவாக்கு.
துராசாரோ அபி ‘தீய ஒழுக்கமுடைமை,-
சர்வாசீ -அபோஜ்ய போஜ்யங்கள் – உண்ணத் தகாதனவற்றை உண்டல்,
க்ருதக்ன நன்றி செய்தவனுக்குத் தீமை செய்தல்,
நாஸ்திக புரா -வேத நெறியினை இல்லை என்றல் ஆகிய இவற்றைப் பல காலம் செய்து போந்தவனான ஒருவன்
சமாஸ்ரயே தித்யாதி (‘இவன் அனுகூலன் ஆவது எப்போதோ!’ )என்று காலம் பார்த்திருக்கும் இறைவனைச் சென்று பற்றுவானாயின்,
பற்றிய அவனை, பின்னர்க் குற்றம் அற்றவனாக நினைத்தல் வேண்டும்; ‘எதற்காக?’ என்னில்,
பிரபாவாத் பரமாத்மனே – இவனைக் குறைய நினைக்கையாவது, பகவானுடைய பெருமையைக் குறைய நினைக்கையேயாம்,’ என்றும்,
ந வாஸூ தேவ பக்தானாம் அசுபம் க்வசித் ( ‘வாசுதேவனுடைய அடியார்களுக்கு ஒரு பொழுதும் கேடுகள் இல்லை,’ )என்றும்
கூறும் பாரதத்தையும் இங்கு உணர்க.

ஆதலால், இனி, நீங்கள் செய்யவேண்டுவது ஒன்று உண்டு;
மனன் அகம் மலம் அறக் கழுவி –
சர்வேஸ்வரன், பிரமன் சிவன் இவர்களுக்கு நடுவில் கலந்து நின்றால்,
‘இவனோ கடவான், மற்றையவர்களோ!’ என்று ஐயப்படுமது தவிர்ந்து,
‘சர்வேஸ்வரனே கடவான்’ என்கிற-அந்தக்கரணி சுத்தி – மனத்தின் தூய்மை உண்டாக வேண்டும்.
‘ஆயின், ஏனைய தேவர்களை இறையவர்களாக எண்ணுதல் கூடாதோ?’ எனின்,
‘திருவடி தன் நாமம் மறந்தும் புறந்தொழா மாந்தர்’ என்கையாலே, அவ்வாறு எண்ணல் பழுதாம்.

நாளும்-
அபர்வணி – பருவம் அல்லாத காலங்களில் கடல் நீண்டலாகாது என்னுமாறு போன்று ஒரு நியதியில்லை.
நம் திருவுடை அடிகள் தம்-
திருமகள் கேள்வனான ஸ்வாமியினுடைய– இதனால், நித்திய யோகத்தை அருளிச் செய்கிறார்.
சர்வேஸ்வரனை அடைந்தானாகில், அவன் பலனைக் கொடுக்கிறான்; பிராட்டியைத் துணையாகப் பற்ற வேண்டுகிறது என்?’ என்று
நஞ்சீயர் பட்டரைக் கேட்க, ‘அவனை அடையும் இடத்தில், இவன் குற்றம் பாராதே தன் நிழலிலே இவனை வைத்து,
அவன் பக்கல் முகம் பெற்றவாறே குற்றத்தைப் பொறுப்பிக்கும் அவள் முன்னாகப் பற்றல் வேண்டும்’ என்று கூறி,
‘நாளும் நம் திருவுடை அடிகள் தம் நலம் கழல் வணங்கி’ என்னா நின்றது கண்டீரே’ என்று அருளிச்செய்தார் பட்டர்.

நலம் கழல்-
அவள் முன்னாகப் பற்றினாருடைய குற்றங்களைப் பாராதே கைக் கொள்ளுந் திருவடிகள்.
வணங்கி-
வணங்க.
‘வணங்க; நாளும் நின்று அடும் நம் பழமை அம் கொடு வினை உடனே மாளும், ஓர் குறைவு இல்லை,’ என முடிக்க.
‘ஆயினும், இறைவனைப் பற்றுதற்குக் காலம் தப்பி நின்றதே?’ என்ன,

மாளும் ஓரிடத்திலும்-
முடிகின்ற ஒரு கணத்திலும்.

வணக்கொடு மாள்வது வலம்-
த்விதா பஜ்யேய மப்யேவம் ந ந மேயம்
( ‘இரண்டு துண்டுகளாக வெட்டப்படக் கடவேன்; அப்பொழுதும் வணங்கேன்,’ )என்னாது
கிடக்கிற சீரைப்பாயைக் கவ்விக் கவிழ்ந்து கிடந்து சாவவும் அமையும்.
இறைவனையும் பற்றி வேறு சிலர் பக்கலிலும் தலை சாய்க்க இராமல், முடிகிற சமயத்திலே அடையவே பின்னைப் பேற்றோடே தலைக்கட்டும்
ஆதலின்,‘மாளும் ஓரிடத்திலும் வணக்கொடு மாள்வது வலம்’ என்கிறார்.
இதனால், பிறந்தது முதலாக அடைந்தாலும் பலன் இல்லை, இறைவனுக்கு வேறுபட்ட தேவர்கள் பக்கல்;
இறைவன் விஷயத்தில் அடைவதிலே தொடங்கி உடனே முடிந்தாலும் பலன் தப்பாது என்கிறார்.
வலம்-
ஸ்ரேஷ்டம்- சிறப்பு; வரம் என்ற சொல்லின் திரிபு.
இனி, வலம்-வலிமையும் ஆம்.

———————–

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

நாளும் நின்று அடும்-ஆத்ம வஸ்துவை நாடொறும் இடைவிடாதே நின்று ஹிம்சிக்கக் கடவதான -என்று சப்தார்த்தம் –
நித்ய பரதந்த்ரமாய் –
நம் -புத்தி பூர்வகமாக நம்மாலே அனுஷ்டிதம்-ஸூஹ்ருதஸ் சாது க்ருத்யாம் த்விஷந்த பாப க்ருத்யாம்-
இஷீக தூலம் -நாணல் பஞ்சு-பூர்வாகங்கள் வசிக்கும் உத்தராகங்கள் ஸ்லேஷியாது-
அநிஷ்ட நிவ்ருத்தி மாத்திரம் அன்றிக்கே இஷ்ட பிராப்தியும் உண்டு என்னுதல்-
சர்வ அபிமதங்களும் பூர்ணமாம் என்கிற இடத்தில்
த்வத் அங்க்ரி முத்திஸ்ய -சர்வ மாப் நோதி ஸர்வஸ – சர்வான் காமான் அவாப்நோதி -இத்யாதிகள் அனுசந்தேயம் –
மலம் என்பதற்கு பிரகரண அனுகுணமாக வியாக்யானம் –
நாளும் -ஏதாகிலும் ஒரு காலத்தில் என்றபடி
வணங்க ஒருப்பட்ட மாத்திரத்திலே –
மாளும் ஓர் இடத்திலும் -இடம் என்கிறது காலத்தைச் சொல்லி அத்தாலே க்ஷணத்தைச் சொல்லுகிறது என்றபடி –

—————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading