ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம்-23- சேஷ பத்ததி -சேஷபூதமாய் -ஆதி சேஷ அவதாரமாய் -ஸ்லோகங்கள் -751-760-

ஸ்ருஷ்டாம் பூமௌ அநந்தேந நித்யம் சேஷ ஸமாதிநா
அஹம் ஸம்பாவயாமி த்வாம் ஆத்மாநம் இவ பாதுகே—751–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! இந்தப் பூமியில் எப்போதும் கைங்கர்யம் செய்தபடி இருக்கவேண்டும் என்று
ஆதிசேஷன் உன்னை இங்கு ஏற்படுத்தினான்.
இப்படியாகத் தன்னைப் போன்றே உன்னை இங்கு உண்டாக்கினான் என்றே எண்ணுகிறேன்.

ஸ்ரீ பாதுகையே உன்னை உலகில் நித்தியமான சேஷத் தன்மை எங்கனம் இருக்க வேண்டும் என்று காட்டி அருளவே
ஒரு ஆத்மாவாக ஆதி சேஷன்-சிருஷ்டித்து இருக்கிறான் பகவான் -என்று கருதிகிறேன் –

————————————————————————-

பத்மா போகாத் பாதுகே ரங்க பர்த்து:
பாத ஸ்பர்சாத போகம் அந்யம் ப்ரபித்ஸோ:
சேஷஸ்ய ஏகாம் பூமிகாம் அப்ரவீத் த்வாம்
ஆசார்யாணாம் அக்ரணீ: யாமுநேய:—752–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைத் தொட்டபடி உள்ளதால் ஸ்ரீரங்கநாச்சியார் அடையும்
இன்பத்தைக் காட்டிலும், உயர்ந்த இன்பமாகிய ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளால் மிதிபடும் இன்பத்தை அடையவேண்டும்
என்று ஆதிசேஷன் எண்ணினான் போலும்.
இதனால்தான், ஆசார்யர்களில் உயர்ந்தவரான ஆளவந்தார், உன்னை ஆதிசேஷனின் அவதாரமாகக் கூறினார்.

ஸ்ரீ பாதுகையே ஆதி சேஷன் பெருமாள் திருவடியைத் தொட்டுக் கொண்டு இருக்கும் பாக்கியம் ஏற்படவும் –
ஆனால் அது மஹா லஷ்மீ பெரும் பாக்யத்தில் இருந்து வேறுபட்ட ஒன்றாக இருக்க வேண்டும் என்றும் விரும்பி
எடுத்த ஓர் உருவம் என்று ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -40 அருளிச் செய்கிறார் –

——————————————————————————–

சேஷத்வம் அம்ப யதி ஸம்ஸ்ரயதி ப்ரகாமம்
த்வத் பூமிகாம் ஸமதிகம்ய புஜங்கராஜ:
த்வாம் ஏவ பக்தி விநதை: வஹதாம் சிரோபி:
காஷ்டாம் கதம் ததிஹ கேசவ பாத ரக்ஷே—-753–

அழகான கேசங்களைக் கொண்ட ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பவளே! தாயே!
நாகங்களின் அரசனான ஆதிசேஷன் உனது உருவம் எடுத்து ஸ்ரீரங்கநாதனைத் தாங்கி நிற்கும்போது,
அவனது அடிமைத்தனம் மேலும் அதிகமாகிறது. அப்படிப்பட்ட உன்னைத் தங்கள் தலையில் ஏற்பவர்களின் அடிமைத்தனம்,
இந்த உலகில் மேலும் உயர்வைப் பெறுகிறது.

படுக்கையாக உள்ளதைக் காட்டிலும் பாதுகையாக உள்ளபோது ஆதிசேஷனின் அடிமைத்தனம் அதிகமாகிறது.
அப்படிப்பட்ட பாதுகையைத் தலையில் ஏற்பது, ஆதிசேஷனின் அடிமைத்தனத்தைக் காட்டிலும் உயர்ந்த செயல் அல்லவோ?

ஸ்ரீ பாதுகை தேவியே -சர்ப்ப ராஜன் -ஆதி சேஷன் -சகல வித கைங்கர்யங்கள் செய்தாலும் உனது உருவத்தை எய்தும் போது தான்
அதிகமாக சேஷத்வத்தை அடைகின்றான் -ஆகில் அப்படிப்பட்ட உன்னையே பக்தியோடு வளைந்த தலைகளில் ஏந்து கின்றவர்களுக்கு
இவ்வுலகில் சேஷத்வத்தின் கடை எல்லை நிலம் என்ற நிலை கிடைத்து விடுகிறதே -நீ தந்து அருளும் பெரும் பாக்யம் இது –

——————————————————————————–

மாபூத் இயம் மயி நிஷண்ண பதஸ்ய நித்யம்
விஸ்வம் பரஸ்ய வஹநாத் வ்யதிதா இதி மத்த்வா
தத்ஸே பல அப்யதிகயா மணி பாதுகே த்வம்
சேஷாத்மநா வஸுமதீம் நிஜயைவ மூர்த்த்யா—-754-

இரத்தினக்கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! “என் மீது தனது திருவடிகளை வைத்தபடி ஸஞ்சரிக்கும்
ஸ்ரீரங்கநாதனை இந்தப் பூமியானது எப்போதும் தாங்குவதால் வருந்துகிறதோ?”, என்று நீ எண்ணுகிறாய் போலும்.
அதனால், அதிக பலம் நிறைந்ததான ஆதிசேஷன் என்னும் உருவம் எடுத்து, இந்தப் பூமியைத் தாங்குகிறாய் போலும்.

ஸ்ரீ மணி பாதுகையே நீ பெருமாளை தாங்குகிறாய் -பூமி உன்னைத் தாங்குகிறது -இந்தப்பூமி இப்படி உலகம் முழுவதையும்
தாங்குபவனை எப்பொழுதும் தாங்குவதனால் வருத்தமுற வேண்டாம் என்று கருதி
நீ ஆதி சேஷன் ரூபம் எடுத்தவளாய் உன் தன இன்னொரு உருவத்தால் பூமியைத் தாங்குகிறாய் –

——————————————————————-

தத்தாத்ருசா நிஜ பலேந நிரூட கீர்த்தி:
சேஷஸ் தவ ஏவ பரிணாம விசேஷ ஏஷ:
ராமேண ஸத்ய வசஸா யத் அநந்ய வாஹ்யாம்
வோடும் புரா வஸுமதீம் பவதீ நியுக்தா—-755-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! தன்னுடைய அளவு கடந்த பலம் என்னும் காரணத்தினால் நிலையான புகழ்பெற்ற ஆதிசேஷன்,
உனது அவதாரமே என்பதற்கு ஆதாரம் உள்ளது. அந்த ஆதாரம் எது? எப்போதும் உண்மையை மட்டுமே கூறுகின்ற இராமனால்,
யாராலும் தாங்க இயலாத பூமியைத் தாங்கும்படி, நீ அல்லவோ கட்டளை இடப்பட்டாய்?

ஸ்ரீ பாதுகையே பூமியைத் தாங்கும் அந்த பலம் மிக்க ஆதி சேஷன் அந்த கைங்கர்யத்தில் பெரும் புகழை ஈட்டியவன் –
உனது மற்றொரு உருவம் எனபது திண்ணம் –
சத்யா வாக்யனான சக்ரவர்த்தி திருமகன் ஸ்ரீ தண்ட காரண்யம் எழுந்து அருளும் பொழுது
பூமியின் நிர்ஹாகச் சுமையை ஏற்று நடத்தும்படி உன்னை அன்றோ நியமித்து அருளினான் –

——————————————————————————-

சேஷத்வ ஸீம நியதாம் மணி பாத ரக்ஷே
த்வாம் ஆகமா: குலவதூம் இவ பால புத்ரா:
த்வத் ரூபபேத சயிதஸ்ய பரஸ்ய பும்ஸ:
பாத உபதாந சயிநாம் உபதாநயந்தி—756-

இரத்தினக்கற்கள் இழைக்கப்பட்ட பாதுகையே! அடிமைத்தனத்தின் எல்லையாக நீ உள்ளாய்;
உன்னுடைய உருவமான ஆதிசேஷன் மீது சயனித்துள்ள ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளையே தலையணை என்று எண்ணி,
அங்கேயே நீ சயனித்துள்ளாய். இப்படியாகக் கணவனின் கால்களில் சயனித்துள்ள பதிவ்ரதை போன்ற
உன்னைத் தங்கள் தாயாகக் கொண்டு, உன்னைத் தங்கள் தலையணை ஆக்கி,
வேதங்கள் என்ற குழந்தைகள் நிம்மதியாக சயனித்துள்ளன.

ஸ்ரீ மணி பாதுகையே -பெருமாள் உன் மற்றொரு உருவமான ஆதி சேஷன் மேல் சயனித்து இருக்கிறார்
நீ திருவடிகள் இல்லாமல் -திருவடிகளைத் தலையணையாக வைத்துக் கொண்டு உள்ளாய்
வேதங்கள் உன் குழந்தைகள் போலே உன்னை அடுத்துப் படுத்து இருக்கின்றன
நீ பதிவ்ரதை -கைங்கர்யம் இல்லாத அந்தப் பொழுதிலும் திருவடிகளை விடுவது இல்லை –

————————————————————–

பரத சிரஸி லக்நாம் பாதுகே தூரதஸ் த்வாம்
ஸ்வதநுமபி வவந்தே லக்ஷ்மண: சேஷபூத:
கிம் இதம் இஹ விசித்ரம் நித்ய யுக்த: ஸிஷேவே
தசரத தநயஸ்ஸந் ரங்கநாத: ஸ்வமேவ—-757–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஆதிசேஷனாகிய லக்ஷ்மணன் தனது உருவமான உன்னை,
பரதனின் தலையில் நீ வீற்றிருந்தபோது, உன்னைத் தூரத்தில் நின்றபடி வணங்கினான்.
இப்படியாகத் தனது உருவமாகவே உள்ள ஒருவரை மற்றவர் வணங்குவது இந்த உலகில் வியப்பான செயல் அல்ல,
எப்படி? தசரதனின் புத்திரனாக அவதரித்த ஸ்ரீரங்கநாதன் தன்னைத்தானே ஆராதித்தபடி இருந்தான் அல்லவோ?
(திருவரங்கத்தில் உள்ள ஸ்ரீரங்கநாதன் இராமனால் ஆராதிக்கப்பட்டவன் ஆவான்.
இராமனாக வந்ததும் ஸ்ரீரங்கநாதனே என்பதால், இப்படிக் கூறுகிறார்).

ஸ்ரீ பாதுகையே நந்திக்ராமத்தில் நீ ஸ்ரீ பரதாழ்வான் தலையில் இருக்கிறாய் –
மீண்டு வந்த இளைய பெருமாள் -சேஷ பூதன் -தூரத்தில் இருந்தே உன்னை வணங்கினான் –
அவன் அப்படி பிரமாணம் செய்தது தனது இன்னொரு சரீரமான உன்னையே -இது இவ்வுலகில் ஆச்சர்யம் இல்லை –
சக்ரவர்த்தி திருமகன் ஸ்ரீ ரங்க நாதனை – தன்னையே -இடையறாது பக்தியுடன் ஆராத்தித்து அருளினார் அன்றோ –

—————————————————————

பூயோ பூய: ஸ்திமித சலிதே யஸ்ய ஸங்கல்ப ஸிந்தௌ
ப்ரஹ்ம ஈசாந ப்ரப்ருதய இமே புத்புதத்வம் பஜந்தி
தஸ்யா நாதே: யுக பரிணதௌ யோக நித்ரா அநுரூபம்
க்ரீடா தல்ப்பம் கிமபி தநுதே பாதுகே பூமிகா அந்யா—758–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் ஸங்கல்பம் என்பது ஸமுத்திரம் போன்று அசையாமலும், அசைந்தபடியும் உள்ளது.
இந்த ஸமுத்திரத்தில் நான்முகன், சிவன் போன்றோர் நீர்க்குமிழிகள் போன்றுள்ள தன்மையை அடைகின்றனர்.
இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாதனுக்கு, ப்ரளய காலத்தில் அவன் யோகநித்திரை கொண்டதற்கு ஏற்ற ஆலிலையாக நீ
மற்றோர் உருவம் எடுக்கிறாய். இந்தத் தன்மை இனிமையான படுக்கையை ஏற்படுத்துகிறது.

ஸ்ரீ பாதுகையே பகவத் சங்கல்பம் ஒரு கடல் போலவாம் -அது ஒரு கணம் சலிக்கும் -ஒரு கணம் அசையாமல் நின்று விடும் –
அதில் ஏற்படும் குமிழிகள் போல் பிரம்மா சிவன் போன்றோர் பிறந்து வாழ்வார் -பெருமாள் அநாதி –
அவருக்குப் பிரளய காலத்தில் யோக நித்ரைக்குத் தகுந்ததான உல்லாசமான படுக்கையை
உன் மற்றொரு உருவம் -ஆதி சேஷன் ஆலிலையாக ஏற்கிறது –

——————————————————————————–

அஹீநாத்மா ரங்கக்ஷிதி ரமண பாதாவநி ஸதா
ஸதாம் இத்தம் த்ராணாத் ப்ரதித நிஜ ஸத்த்ரத்வ விபவா
அவித்யா யாமிந்யா: ஸ்ப்ருசஸி புந: ஏகாஹ பதவீம்
க்ரதூநாம் ஆராத்யா க்ரதுரபி ச ஸர்வஸ்த்வம் அஸி ந:—759–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! அஹீநம் என்னும் யாக ஸ்வரூபமாக (ஆதிசேஷன் ரூபமாக) நீ உள்ளாய்.
எப்போதும் நாங்கள் காணும்படியாக ஸத்துக்களைக் காப்பதால், மிகவும் ப்ரஸித்தமான ஸத்ரம் என்ற யாகமாக உள்ளாய்.
அஞ்ஞானம் என்ற இரவுப்பொழுது விடிவதற்கு ஏற்ற பகல் என்பதான ஏகாஹம் எனப்படும் யாகமாக உள்ளாய்.
இப்படியாகப் பல யாகங்களுக்கு உரிய தேவதையாகவும், அனைத்துமாகவும் நீயே உள்ளாய்.

ஸ்ரீ ரங்க நாதனின் ஸ்ரீ பாதுகையே நீ ஆதி சேஷன் உருவாக இருக்கிறாய் -அஹீனம் என்கிற சோம யாகமாக இருக்கிறாய் –
சத்துக்களை ரஷிப்பவளாய் இருக்கிறாய் -பிரசித்தமான சத்ரம் எனும் பெரும் சோம யாகமாகிறாய்
அஜ்ஞ்ஞானம் -என்கிற இரவுக்கு அச்தனம் இல்லாத ஒரே பகலாய் இருக்கிறாய் -நீ அந்த யாகங்களுக்கு
உத்தேச்ய தேவதையும் யாகங்களுமாகவும் உள்ளாய் -நீயே அனைத்தும் –

—————————————————————–

பஹுமுகபோக ஸமேதை: நிர்முக்ததயா விஸூத்திம் ஆபந்நை:
சேஷாத்மிகா பதாவநி நிஷேவ்யஸே சேஷ பூதைஸ் த்வம்—-760–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஆதிசேஷனின் அவதாரமான நீ, பலவிதமான இன்பங்களுடன் கூடியவர்களும்,
அனைத்து கர்மங்களில் இருந்தும் விடுபட்டதனால் தோஷம் இல்லாத தன்மையை அடைந்தவர்களும் ஆகிய
ஸ்ரீரங்கநாதனின் தொண்டர்களால் எப்போதும் வணங்கப்படுகிறாய்.

இங்கு பஹுமுக என்பதைப் பல முகங்கள் என்றும், நிர்முக்ததயா என்பதை தோல் உரித்த காரணத்தினால் என்றும்,
விஸூத்திம் என்பதைப் பளபளப்பு என்றும், சேஷ என்பதை நாகங்கள் என்றும் பொருள் கொள்ளலாம்.
இப்படிக் கொண்டால், பலவிதமான நாகங்களால் ஆதிசேஷனாக உள்ள நீ வணங்கப்படுகிறாய் எனலாம்.

ஸ்ரீ பாதுகையே சேஷ பூதையாய் ஆதி சேஷ ஸ்வரூபியாய் இருக்கிறாய் -பலவகை போகங்களை உனக்கு சமர்ப்பிக்கிறார்கள் –
முக்தி பெற்று அதனால் பரிசுத்தி அடைகின்றனர் -பலமுகமான சேஷ பூத கைங்கர்யம் செய்கிற சேஷ பூதர்கள்
உன்னைப் போலவே நீ தோல் உரித்ததனால் பெரும் பளபளப்பை பெறுகிறார்கள் -அந்த சேஷர்கள்-
சேஷ பூதர்களான பெரியோர்களால் நீ சேவிக்கப் படுகிறாய் –

—————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

One Response to “ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம்-23- சேஷ பத்ததி -சேஷபூதமாய் -ஆதி சேஷ அவதாரமாய் -ஸ்லோகங்கள் -751-760-”

  1. Dr. P. Ramanujan Says:

    Congrats for the great service your are rendering to the sampradayam.
    Wish to contact for two-way [give and take] interaction.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading