ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம்-19-மரகத பத்ததி -ஸ்லோகங்கள் -661-680-

இங்கு பச்சைக் கற்களான மரதகக் கற்களைப் பற்றி மட்டுமே கூறுகிறார். மரகதம் என்றும் கூறுவது உண்டு.

வந்தே காருத்மதீம் வ்ருத்யா
மணி ஸ்தோமைச்ச பாதுகாம்
யயா நித்யம் துளஸ்யேவ
ஹரி தத்வம் ப்ரகாஸ்யதே—-661-

ஸ்ரீரங்கநாதனை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எழுந்தருளச் செய்தல் என்னும் தொழில் ரீதியாகவும்,
இரத்தினங்களின் ஒற்றுமை காரணமாகவும், கருடனின் தொடர்பு கொண்ட பாதுகையை நான் வணங்குகிறேன்.
துளசியானது எப்படி தன்னால் அர்ச்சிக்கப்படும் ஸ்ரீரங்கநாதனின் நிறமானது, தன் போன்று பச்சை நிறம் என்று
உணர்த்துகிறதோ, அது போன்றே பாதுகையின் மரதகங்களும் பச்சையை உணர்த்துகின்றன.

ஸ்ரீ பாதுகையும் ஸ்ரீ பெரிய திருவடியும் தொழில் ரீதியில் ஒத்தவர்கள் –
ஸ்ரீ பாதுகை காருத்மத ரத்னமான மரகதத்தால் இழைக்கப் பட்டுள்ளவள்-
ஸ்ரீ பாதுகையும் ஸ்ரீ பெரிய திருவடியும் ஸ்ரீ துளசி தேவியும் ஸ்ரீ ஹரி தத்வத்தைப் பிரகாசிப்பார்கள்
ஸ்ரீ துளசி தேவியும் ஹரித தவத்தை -பச்சை நிறத்தை உடைத்தாய் இருப்பாள் –
இங்கனம் மூவரும் மரகத மயம்-அந்த மரகதமணி ஸ்ரீ பாதுகையை வணங்குகிறேன் –

————————————————————————

ஸவிலாஸ கதேஷு ரங்க பர்த்து:
த்வத் அதீநேஷு பஹிஷ் க்ருதோ கருத்மாந்
அதி கச்சதி நிர் வ்ருதிம் கதம்சித்
நிஜ ரத்நைஸ் த்வயி பாதுகே நிவிஷ்டை:—-662–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னால் ஸ்ரீரங்கநாதனின் ஸஞ்சாரம் நடைபெறுகிறது.
இதனால் கருடன் அந்த நேரங்களில் விலக்கப்பட்டவன் ஆகிறான். ஆனால் உன்னில் பதிக்கப்பட்ட
தனது மரதக இரத்தினங்கள் கண்டு சற்றே நிம்மதி அடைகிறான்.

ஸ்ரீ பாதுகையே உன்னைத் தரித்துக் கொண்டு பெருமாள் சஞ்சரிக்கையில் தனக்கு கடமை ஏதும் இல்லை என்ற நிலையிலும்
பெரிய திருவடி -என் ரத்னங்கள் மரகதம் -தான் ஸ்ரீ பாதுகையிடத்தும் பதிந்து இருப்பது -என்று சமாதானம் செய்து கொள்கிறானாம் –

————————————————————–

ஸமயே மணி பாதுகே முராரே:
முஹு ரத்ந: புர முக்த சேடி காஸ்தே
ஹரிதாந் ஹரி தஸ்மநாம் மயூகாந்
துளஸீ பல்லவ சங்கயா க்ஷிபந்தி—-663-

இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் அந்தப்புரத்தில் பணி புரியும் பெண்கள்,
அதிகாலை நேரத்தில் உன் மீது பதிக்கப்பட்டுள்ள மரதகக் கற்களை, முந்தைய நாள் உன் மீது இறைக்கப்பட்ட
துளசிக் கொழுந்துகள் என்று எண்ணி, அவற்றைத் தள்ளியபடி இருக்கின்றனர்.

ஸ்ரீ மணி பாதுகையே பெருமாள் அந்தப்புரத்திற்குப் போகும் போது உபசரிக்கும் வேலைக் காரிகள் உன் மரகதக் கற்களின்
ஒளி படர்வதைத் துளசி இதழ்கள் -முன்பு அர்ச்சனை செய்யப் பட்ட போதோ
மாலையில் நின்றோ கீழே விழுந்தவையோ என்று எண்ணி கௌரவத்துடன் தள்ள முயல்கின்றனர் –

——————————————————————-

ஹரிதஸ் ஸஹஸா ஹரிந் மணீநாம்
ப்ரபயா ரங்க நரேந்த்ர பாத ரக்ஷே
துளஸீ தள ஸம்பதம் ததாதி
த்வயி பக்தை: நிஹித: ப்ரஸூந ராசி:—664-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன் மீது ஸ்ரீரங்கநாதனின் அடியார்கள் மலர்களைத் தூவியபடி உள்ளனர்.
இந்த மலர்களின் மீது உனது மரதகக்கற்களின் ஒளியானது விழுகிறது. உடனே அந்த மலர்கள் அனைத்தும் பச்சை நிறமாக மாறி,
துளஸியின் மேன்மையை அடைகின்றன. இதனைக் காணும்போது, அங்கு துளசி அர்ச்சனை போன்றே உள்ளது.

ஸ்ரீ ரங்க ராஜ பாதுகையே -பக்தர் உன் மீது புஷ்பங்களைச் சேர்க்கிறார்கள் -அவை உன் மரகதக் கல் ஒளியினால் பச்சை நிறம்
எய்துவிடும் போலும் -அத்தனையும் துளசீ தளம் போல் தோற்றும் –

————————————————————————

ப்ரஸாத யந்தீ மணி பாதுகே த்வம்
விக்ஷேப யோகேந விஹார வேளாம்
ஹரிந் மநோஜ்ஞா ஹரி காந்தி ஸிந்தோ:
ஸந்த்ருஸ்யஸே சைவல மஞ்ஜரீவ—-665–

இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதன் ஸஞ்சாரம் செய்கின்ற காலத்தில்,
அவனது திருவடிகளை உன் மீது வைக்கும் போது, உனது பச்சை நிறக் கற்கள் மூலமாக,
அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சியை உண்டாக்குபவளாக நீ உள்ளாய். அவன் அழகின் ஸமுத்திரமாகவே உள்ளான்.
அந்த ஸமுத்திரத்தில் காணப்படும் பாசிக்கொத்து போன்று நீ உள்ளாய்.

ஸ்ரீ மணி பாதுகையே பகவானுடைய லீலா சஞ்சாரத்தை நீ ஸூகமாக்குகிறாய்-
அவர் நடந்து வருகையில் அது ஒரு அழகுக் கடல் -அந்தக் கடலுக்கு வேலாம் பாசி போல் விளங்குவது மரகத மணித் திரள் –

—————————————————————————-

பத்த்நாஸி ரங்கேஸ்வர பாத ரக்ஷே
ஹரிந் மணீநாம் ப்ரபயா ஸ்புரந்த்யா
ஸுடாபதேஷு ஸ்ருதி ஸுந்தரீணாம்
மாங்கள்ய தூர்வாங்குர மால்ய பங்க்திம்—-666–

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! வேதங்களாகிய பெண்கள், ஸ்ரீரங்கநாதன் முன்பே
விண்ணப்பம் செய்தபடி நிற்கின்றனர். உன்னுடைய மரதகக்கற்களின் ஒளி மூலமாக, மங்களகரமான
இளம் அருகம்புல் கொண்டு தொடுக்கப்பட்டது போன்ற தோற்றம் அளிக்கும் ஒளி மாலையை, அந்தப் பெண்களின் தலையில் நீ சூட்டுகிறாய்.

ஸ்ரீ ரங்க நாத ஸ்ரீ பாதுகையே உன்னுடைய மரகதக் கற்களின் ஒளி வீச்சு ஒரு பசுமையான மாலையாக ஓர் அருகம் புல் மாலை போலே
மங்கள அர்த்தமாக இடம் பெற்ற ஹாரம் போலே வந்து வணங்கி நிற்கும் வேத மாதர்களின் சிரஸ்ஸில் காட்சி அளிக்கும் –

——————————————————————————-

அச்சேத்ய ரஸ்மி நியதை: கடிதா ஹரித்பி:
ஸத்வர்த்மநா கதிமதீ மணி பாத ரக்ஷே
ஸந்த்ருஸ்யஸே ஸவித்ரு மண்டல மத்ய பாஜ:
ரங்கேஸ் வரஸ்ய ரத ஸம்பதிவ அபரா த்வம்—-667–

இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! உனது பச்சைக் கற்களானவை குதிரைகள் போன்றும்,
அவற்றின் ஒளியானது எப்போதும் அறுந்து போகாத கடிவாளக் கயிறுகள் போன்றும் உள்ளன.
இப்படியாக, நல்ல வழியாகச் ஸஞ்சாரம் செய்கின்ற நீ, ஸூர்ய மண்டலத்தின் நடுவில் காணப்படும் ஸ்ரீரங்கநாதனுக்கு,
அங்குள்ள ஸூரியனின் தேரைக் காட்டிலும் உயர்ந்த தேர்ச் செல்வமாக உள்ளாய்.

ஸ்ரீ மணி பாதுகையே அகலாத கிரணன்களோடு கூடிய மரகதங்கள் உன்னுடன் பிணைக்கப் பட்டுள்ளன –
நீ நல்ல சன் மார்க்கத்தில் செல்கிறாய் -பெருமாளுடன் –
அறாத கயிறுகள் கொண்டு கட்டப்பட்ட குதிரைகளால் இழுக்கப்படும் நஷத்ர மார்க்கத்தில் சஞ்சரிக்கும் தேர் -ஸூர்ய மண்டலத்தில் நகர்வது
ஸ்ரீ பாதுகையிலும் ஸ்ரீ ரங்க நாதன் -தேஜ பரம் தத் சது விதுர்வரேண்யம் –ஸ்ரீ ரங்க நாதம் சமுபாசிஷீய -எண்ணப் பட்டபடி
ஸூர்ய மண்டலத் தேரிலும் பெருமாள் ஸ்ரீ ரங்க நாதனே –

————————————————————————

ஸ்யாமாயமாந நிகமாந்த வந உபகண்ட்டா:
ஸ்தாநே பதாவநி ஹரிந் மணயஸ் த்வதீயா:
பர்யந்த சாத்வலவதீம் ப்ரதயந்தி நித்யம்
நாராயணஸ்ய ருசிராம் நக ரஸ்மி கங்காம்—-668-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உபநிஷத்துக்கள் என்னும் சோலைகள் கறுத்து நின்று ஸ்ரீரங்கநாதனைச் சூழ்ந்தபடி உள்ளன.
அவற்றை, உனது பச்சைக்கற்கள் மேலும் பச்சையாக மாற்றுகின்றன. ஸ்ரீரங்கநாதனின் திருவடி நகங்களைக் காணும்போது,
அவற்றின் வெண்மையான ஒளியானது கங்கை போன்று உள்ளன. உனது மரதகக் கற்களின் ஒளி மூலம்,
அந்தக் கங்கையின் ஓரங்களில் பச்சைப்புல் தரை உள்ளது போன்று நீ அமைக்கிறாய்.

ஸ்ரீ பாதுகையே பெருமாள் திருவடி திரு நகங்களின் சோபை நீண்டு வெண்மையாக கங்கை போல் இருக்கிறது
ஸ்ரீ பாதுகையோ பச்சைக் கற்கள் நிரம்பி இருந்து ஒரு பசும் புல் தரையாகக் காண்கிறது
அருகில் வேதாந்தங்கள் ஆகிற அரண்யம் -இந்தக் கல்லின் தேஜஸ்ஸால் பசுமை பெறுகிறது
ஸ்ரீ பாதுகை கங்கைக்கு அழகு தரும் -வேதாந்தங்களுக்கு செழிப்புத் தரும் –

—————————————————————————

உத்திஸ்ய காமபி கதிம் மணி பாத ரக்ஷே
ரங்கேஸ் வரஸ்ய சரணே விநிவேசிதாத்மா
பாயோ ஹரிந் மணிருசா த்ருட பக்தி பந்தா
ப்ராதுஷ்கரோதி பவதீ துளஸீ வநாநி—669-

இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! உன்னை ஸ்ரீரங்கநாதன் சாற்றிக் கொண்டு ஸஞ்சாரம் செய்கின்ற இடம்
எங்கும் பச்சையாகத் தோற்றம் அளிக்கிறது. இதனைக் காணும்போது எப்படி உள்ளது என்றால் –
மிகவும் உயர்ந்த கதியான மோக்ஷத்தை எண்ணி ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளில் ஒரு ஜீவன் சரணாகதி செய்கிறான்;
அதன் பின்னர் அவன் கைங்கர்யமாகத் துளஸித் தோட்டங்களை அமைக்கிறான்.
இதனைப் போன்ற துளசித் தோட்டங்களை நீ அமைப்பது போன்று உள்ளது.

ஸ்ரீ பாதுகையே பெருமாள் சந்ஜாரதிர்காக உன்னைப் பூணுவார் -நீ ஏதோ ஒரு நற்கதி யாகிற புருஷார்த்திற்காக
உன்னையே பெருமாள் திருவடியில் சமர்ப்பித்துக் கொண்டு விட்டாய் -உனது கற்கள் காட்டப்படும் அமைப்பு ஒரு திட்டமாக அமைந்துள்ளது –
உன் பக்தியும் திடமானது -அத்துடன் நீ உன் மரகதங்களின் பசுமை ஒளி வீசிய இடங்களில் திருத் துளசிப் பாத்தியை வளர்த்து இருக்கிறாய் போலும் –

—————————————————————————–

சேவார்த்தம் ஆகதவதாம் த்ரிதஸேஸ் வராணாம்
சூடா மணி பிரகாச லிஷூ மௌளி ஷூ த்வம்
சம்வர்த்த யஸ்ய ஸூரமர்த்தந பாத ரஷே
ஸ்வேநாஸ்ம கர்ப்ப மகாசா ஸூக பங்க்தி சோபாம்–670-

ஸ்ரீ பாதுகையே தேவர் தலைவர்கள் வந்து வணங்கி நிற்கிறார்கள் -அவர்கள் தலைக்க்ரீடம் ரத்னக் கற்கள் வைத்துக் கட்டியது –
அவைகள் நெற்பயிர் போல் தோன்றும் -ஆகவே பச்சைக் கிளிகள் உட்கார்ந்து இருக்கும் சோபையை நீ வளர்க்கிறாய் உன் மரகதக் கற்களின் கதிர் வீச்சால் –

————————————————————————–

தர பரிணத தூர்வா வல்லரீ நிர் விசேஷை:
மரதக சகலாநாம் மாம்ஸளை: அம்ஸூஜாலை:
பசுபதி வித்ருதா த்வம் தஸ்ய பாணௌ நிஷண்ணம்
மதுரிபு பத ரக்ஷே வஞ்சயஸி ஏண சாபம்—671–

மது என்ற அசுரனை அழித்த ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னை சிவன் தனது தலையில் தரித்துக் கொள்கிறான்.
அப்போது உனது மரதகக் கற்களின் ஒளியானது சற்றே தடித்தும், முதிர்ந்தும் உள்ள அருகம்புல் கொடி போன்று தோன்றுகின்றன.
அந்த ஒளியின் மூலமாக நீ, சிவனின் கையில் உள்ள மான் குட்டியை ஏமாற்றுகிறாயோ?

ஸ்ரீ பாதுகையே நீ சிவனால் தரிக்கப் பட்டு இருந்த சமயம் உன் மரகதக் கல் துண்டுகள் வெளியிடும் ஒளியால்
அவற்றைச் சிறிது முதிர்ந்த அருகம் புல் என நினைக்கத் தூண்டுகிறது -சிவன் கையில் இருக்கும் மான் குட்டி மேயக் கருதுகிறது –

————————————————————

ஹரி சரண ஸரோஜ ந்யாஸ யோக்யம் பவத்யா:
ப்ரகுணம் அபி லஷந்த்யோ வர்ண லாபம் துளஸ்ய:
ப்ரதி திநம் உபஹாரை: பாதுகே தாவகாநாம்
மரதக சகலாநாம் ஆஸ்ரயந்தே மயூகாந்—672–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளில் வைக்கத் தகுந்ததாக உள்ள, உயர்ந்த உன்னுடைய
பச்சை நிறத்தை அடைவதற்குத் துளசி மிகவும் ஆசைப்பட்டவளாக உள்ளாள்.
இதனால், தனது தளங்கள் பலவற்றையும் உனக்கு அன்றாடம் காணிக்கையாகச் சமர்ப்பிக்கிறாள்.
இதன் மூலம், உனது மரதகக் கற்களின் பச்சை ஒளியைத் தனது தலையில் அடைந்து, என்றும் பசுமையாக நிற்கிறாள்.

ஸ்ரீ பாதுகையே அர்ச்சனையில் திருவடியில் சேர்க்கப் பெற்ற துளசிகள் தினம் தோறும் மரகதத் துணுக்குகளின் ஒளிகளைப் பெறுவது உண்டு –
ஆயினும் திருத் துளசிகள் கேட்பது -ஸ்ரீ பாதுகையின் நிறப் பேற்றை -ஸ்ரீ பாதுகையின் ஜாதிச் சிறப்பை –
அதனால் அன்றோ தானும் பச்சையாய் இருந்தும் தனக்குப் பகவத் பாதத்தைத் தாங்கும் படியான வாய்ப்பு ஏற்பட வில்லை –

—————————————————————

ஹரிதமணி மயூகை: அஞ்சித அத்யாத்ம கந்தை:
திசஸி சரண ரக்ஷே ஜாத கௌதூஹலா த்வம்
தநுஜ மதந லீலா தாரி காணாம் உதாராம்
தமந கதல பங்க்திம் தேவி மௌளௌ ஸ்ருதீநாம்—-673–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் தொடர்பு உள்ளதால் எப்போதும் மகிழ்வாக உள்ள உனது
மரதகக்கற்களின் ஒளியானது, உபநிஷத்துக்களின் நறுமணத்தை எப்போதும் தங்களிடம் கொண்டுள்ளன.
ஸ்ரீரங்நாதனுக்கு விளையாட்டுப் பாவைகள் போன்றுள்ள வேதங்களின் தலையில், அந்த மரதகக் கற்களின் ஒளி மூலமாக,
மருக்கொழுந்து மாலையைச் சூட்டி, உபநிஷத்துக்களின் வாசனை எங்கும் வீசும்படிச் செய்கிறாய்.

ஸ்ரீ பாதுகையே வேதங்கள் பெருமாளுக்கு விளையாட்டுப் பாவைகள் -நீ உன் மரகதக் கற்களின் ஒளியால் இவற்றை கௌரவிக்கிறாய்-
பச்சைக் கதிர்கள் மருக் கொழுந்து மாலைகளைச் சாத்துகின்றன -இதில் நீ உத்சாஹம் மிகுந்து காணப்படுகிறாய் –
இதற்கு ஏற்றவாறு அந்த கிரணங்கள் கூட வேத நறு மணம் வீசுகின்றன –

———————————————————————–

அதிகத பஹுசாகை: அஸ்ம கர்ப்ப ப்ரஸூதை:
மதுரிபு பத ரக்ஷே மேசகை: அம்ஸூ ஜாலை:
அநிதர சரணாநாம் நூநம் ஆரண்ய காநாம்
கிமபி ஜநயஸி த்வம் கீச காரண்ய துர்க்கம்– –674-

மது என்ற அசுரனின் விரோதியான ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே!
பல கிளைகளை கொண்டவையாகவும், பச்சை நிறம் கொண்டவையாகவும் உனது மரதகக்கற்களில் இருந்து வெளிவரும்
ஒளியானது உள்ளது. இந்த ஒளி மூலமாக, வேறு கதியில்லாமல் நிற்கும் உபநிஷத்துக்கள் என்னும் வனவாசிகள்
வசிப்பதற்கு ஏற்ற பாதுகாப்பான மூங்கில் காடு ஒன்றை நீ அமைக்கிறாய் போலும்.

ஸ்ரீ பாதுகையே உன் மரகதக் கற்கள் வெளியிடும் ஒளிக் கூட்டம் -பச்சையாய்ப் பல கிளைகள் உள்ளதாய்
ஒரு மூங்கில் காடாலான அரணை அமைக்கும் –
இது போன்ற அரணில் வேறு கதி அற்ற அரண்ய வாசிகளும் ஆரண்யகம் எனப்படும் வேதாந்தங்களும் பத்திரமாக இருக்க முடியும் –

————————————————————————————————

ப்ரசுர நிகம சாகாம் பாதுகே ரங்கிணஸ் த்வாம்
சரணநக மயூகை: சாரு புஷ்ப அநுபந்தாம்
மரதக தள ரம்யாம் மந்மஹே ஸஞ்சரந்தீம்
கநக ஸரித அநூபே காஞ்சித் உத்யாந லக்ஷ்மீம்—-675-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! நீ பல வேதங்களையும் கிளைகளாகக் கொண்டுள்ளாய். ஸ்ரீரங்கநாதனின் திருவடி நகங்கள்
என்னும் ஒளியால் அந்தக் கிளைகளில் மலர்கள் குவிந்துள்ளன
(அதாவது, திருவடி நகங்களின் ஒளியானது மலர்கள் போன்று உள்ளன என்று கருத்து).
உனது மரதகக் கற்களின் ஒளியானது, அந்தக் கிளைகளில் உள்ள இலைகள் போன்று உள்ளன.
இப்படியாகக் காவேரியினுடைய கரையின் அருகில் ஸஞ்சாரம் செய்யும் நீ, உத்யான லக்ஷ்மி போன்று உள்ளாய் என்றே எண்ணுகிறோம்.

ஸ்ரீ பாதுகையே உன்னை உத்யான லஷ்மி யாக சேவிக்கிறோம்-வேத சாகைகள் என்னும் கிளைகள் படர்ந்துள்ளன –
பெருமாள் திருவடி திரு நக ஒளிக் கதிர்கள் புஷ்பங்கள் போல் உள்ளன –
உன் மரகதக் கல் துண்டுகள் பச்சிலைத் தளிர்கள் போலாம் -பொன்னி ஆற்றின் கரையில் நீ உலவுவது உத்யானத்தை நினையூட்டும் –

———————————————————————————-

நக கிரண நிகாயை: நித்யம் ஆவி: ம்ருணாளே
மஹித ரஸ விசேஷே மேசகை: அம்ஸூபிஸ் தே
பரிகலயஸி ரம்யாம் பாதுகே ரங்க பர்த்து:
பத கமல லமீபே பத்மநீ பத்ர பங்க்திம்—-676–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனுடைய திருவடிகளின் நகங்கள் தாமரைத் தண்டு போன்று உள்ளன.
ஸ்ரீரங்கநாதனை அனுபவிப்பவர்கள், அந்தத் தண்டுகள் உள்ள நீர் போன்று உள்ளனர்.
ஸ்ரீரங்கநாதனின் திருவடிகள், தாமரை மலர்கள் போன்று உள்ளன.
அந்தத் தாமரைக் கொடிகளின் இலைகளாக உனது மரதகக் கற்களின் ஒளியானது உள்ளது.

ஸ்ரீ பாதுகையே இன்னொரு காட்சி காணலாகிறது–பெருமாள் திருவடியை எடுத்து வைத்துக் கொண்ட போது திரு நக கிரண சமூஹம்
தாமரைத் தண்டு போலாம் -கொண்டாடப் பெறும் அம்ருத ரசம் கொண்ட திருவடிகளே தாமரை மலர்கள் –
சமீபத்தில் பச்சைக் கற்கள் ஒளி தாமரை இலைகளை வரிசையாகக் காட்டும் –

———————————————————————–

அநிமிஷ யுவதீநாம் ஆர்த்த நாதோப சாந்த்யை:
த்வயி விநிஹித பாதே லீலயா ரங்க நாதே
தததி சரண ரக்ஷே தைத்ய ஸௌதாநி நூநம்
மரதக ருசிபிஸ் தே மங்க்ஷு தூர்வாங்கு ராணி—677-

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! தேவலோகப் பெண்களுடைய அழுகைக் குரலைக் கேட்ட
ஸ்ரீரங்கநாதன் அவற்றை நீக்க எண்ணி, உல்லாஸமாக உன் மீது தனது திருவடிகளை வைக்கிறான்.
உடனேயே அசுரர்களின் மாட மாளிகைகளில் உனது மரதகக்கற்களின் ஒளியானது பரவி,
எங்கும் புல் முளைத்த நிலை உண்டாவது நிச்சயம் என்று உணர்த்துகிறது.

ஸ்ரீ பாதுகையே தேவ ஸ்திரீகள் வந்து முறையிடவும் அவர்களுக்கு ரஷணம் தர -அவர்கள் ஓலத்தை நிறுத்த
பெருமாள் சங்கல்பித்து உன் மீது திருவடி வைக்க அந்த பொழுது அசுரர் மாளிகை உப்பரிகைகளில் எல்லாம் புல்
முளைத்ததாயிற்று -உனது மரகத மணிகளின் பேர் ஒளியாலே -அவர்கள் அழிந்தனர் –

—————————————————————————————-

விபுல தம மஹோபி: வீத தோஷ அநுஷங்கம்
விலஸத் உபரி நைல்யம் தேவி விஷ்ணோ: பதம் தத்
ப்ருது மரதக த்ருஸ்யாம் ப்ராப்ய பாதாவநி த்வாம்
ப்ரகடயதி ஸமந்தாத் ஸம்ப்ரயோகம் ஹரித்பி:—678–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகா தேவியே! ஸ்ரீரங்கநாதனின் திருவடிகள் அவனை அடைந்தவர்களுடைய பாவங்கள்
அனைத்தையும் நீக்கியபடி உள்ளன. இவை இரவு நேர ஆகாயம் போன்று கறுத்த நிறம் (கருநீலம்) கொண்டதாக உள்ளன.
அந்தத் திருவடிகள் உன்னை அடைந்த காரணத்தால், உனது அழகான பெரிய மரகதக்கற்களின் ஒளியை
அனைத்துப் பக்கங்களிலும் பெறுகின்றன. இதனால் தங்கள் கறுமை நீங்கப்பெற்று,
பகல் பொழுதின் ஆகாயம் போன்று எங்கும் ப்ரகாசித்தபடி உள்ளன.

ஸ்ரீ பாதுகையே பெருமாள் திருவடியும் ஆகாசமும் -ஒரு படைத்து -இரண்டும் விஷ்ணு பதம் ஆயிற்றே –
மிக அதிகமான காந்தி யுடையதாய் அதனால் தானே தன் ஆஸ்ரிதர்கள் உடைய பாபத் தொடர்பை அறுப்பதாய் -திருமேனி நிறத்தாலே –
மேல்புறம் நீலம் உண்டாக்கி உள்ளது -அத்திருவடி -ஆகசமோ பகல்களில் வெகு விசாலமாய் இருக்கும்
ஆனால் இரவின் தொடர்பு ஏற்பட்டதில் குறுகியும் மேலே கறுத்தும் இருண்டும் இருக்கும் –

—————————————————————————-

பத்மா பூம்யோ: ப்ரணய ஸரணி: யத்ர பர்யாய ஹீநா
யத் ஸம்ஸர்காத் அநக சரிதா: பாதுகே காம சாரா:
தார ஸக்தம் தமிஹ தருணம் ப்ரீணயந்தே ஜரத்ய:
நித்ய ஸ்யாமா: தவ மரதகை: நூநம் ஆம்நாய வாச:—679–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாச்சியாரும், பூமிப்பிராட்டியும் ஸ்ரீரங்கநாதனிடம் எல்லை கடந்த ப்ரீதியுடன்
எப்போதும் உள்ளனர். இவர்கள் போன்று இல்லாமல், தங்கள் விருப்பப்படி போபிகைகள் இவனுடன் இருந்தால் கூட,
சிறிதும் தோஷம் அற்றவர்களாக இருந்தனர். ப்ரணவத்தில் எப்போதும் நிலைக்கின்ற இளமையான ஸ்ரீரங்கநாதனை,
நீண்ட காலமாக வேதங்கள் என்னும் கிழவிகள் போற்றியபடி உள்ளனர். அவர்கள் மீது உனது மரகதக்கற்களின்
ஒளியானது வீசியபடி நின்று, அவர்களைச் சிறுபெண்களாக மாற்றி, சந்தோஷம் அடையச் செய்கின்றன என்பது உறுதி.

ஸ்ரீ பாதுகையே எந்த ஒரு புருஷன் இடத்தில் பிராட்டிகளின் காதல் போக்கு தனக்கு உவமை இல்லாததும் தங்கு தடை அல்லது
வரையறை ஏதும் இல்லாததோ -எவனுடைய சேர்த்தி இஷ்டப்படி அதிக்ரமச் செயல்களைச் செய்தவருக்கும் அவர்களைக் குற்றம் அற்றவராக்கி
முக்தர்களாகக் காம சாரர்கள் ஆக்குமோ -பத்நியுடன் போகங்களில் ஈடுபாடு கொண்ட பிரணவத்தில் பொருந்தி உள்ள
அந்த நித்ய யுவாவான பரம புருஷனை மூத்த கிழங்களான-அநாதி யான வேத வாக்குகள் புகழும் –
அவ்வேத வாக்குகள் உன் மரகதங்களால் நித்யப் பச்சை நிறம் உடையவாய் நித்ய யுவதிகளாய் ஆகி அவனை ரமிக்கச் செய்யும் களிப்பிக்கும் –

————————————————————-

ஸ்தல கமலநீவ காசித்
சரணாவநி பாஸி கமல வாஸிந்யா:
யத் மரதக தள மந்யே
ய: கச்சிதஸௌ ஸமீக்ஷ்யதே சௌரி:-680–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! தாமரையில் வீற்றுள்ள ஸ்ரீரங்கநாச்சியாருக்கு ஏற்ற ஒரு நிலத் தாமரை வனமாக நீ உள்ளாய்.
அந்தத் தாமரை வனத்தின் இலைகளாக உனது மரதகக் கற்களின் பச்சை ஒளி உள்ளது.
அந்த இலைகளின் நடுவே ஸ்ரீரங்கநாதன் ஒரு இலை போன்று காணப்படுகிறான்.

ஸ்ரீ பாதுகையே மஹா லஷ்மி தாமரை மலரையே விரும்பி அதிலேயே இருப்பாள் –
நீ அவளுக்கு ஒரு நிலத் தாமரைக் காடு போல் ஆகிறாய் -எங்கனே எனில் உன் மரகதம் ஒவ்வொன்றும் ஒரு தாமரையிலை போலே
ஒரு கொடி மேல் நோக்கி உள்ளதே -அதுவே மரகத மணி வர்ணனான எம்பெருமான் –
பிராட்டிக்கும் இடம் வரும் ஒரு தாமரைப் பூ மலர்ந்து உள்ளதில் –

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading