திருவாய் மொழி – திவ்யார்த்த தீபிகை–வைகல் பூங்கழிவாய்–6-1-

ஆழ்வார் நான்கு திருவாய் மொழிகளிலும் சரணாகதி பண்ணியும் பலிக்காதது
நமது பாக்யமே
மேலும் மேலும் திருவாய் மொழி கிடைக்கப் பெற்றோமே
உலகத்தை வாழ்விக்க திரு உள்ளம் பற்றியே சரணாகதியை நிஷ்பலமாக்கினான் –
உன்னை என்று கொல் சேர்வதுவே -என்றும்
உன்னை என்று தலைபெய்துவனே -என்றும்
உன்னை என்று கொல் கூடுவதே -என்றும்
பலகாலும் கதறி எம்பெருமான் பக்கலில் கடுக சேரப் பாரித்த ஆழ்வார்
திரு வண் வண்டூர் சந்நிதி பண்ணி இருக்கும் படியை நோக்கி
தாம் அங்கே சென்று சேர மாட்டாத தம் தசையை
அவ் வெம்பெருமானுக்கு தெரிவிக்கும்படி தூது விடுகிறார் –

அஞ்சிறைய மட நாராய் -வ்யூஹ நிலையில் தூது
இத்திரு வாய் மொழி -வைகல் பூங்கழிவாய் – விபவத்தில் தூது
பொன்னுலகு ஆளீரோ – பரத்வத்திலும் அந்தர்யாமித்வத்திலும் தூது
எம் கானல் அகம் கழிவாய் -அர்ச்சாவதார தூது –

தம் பிழையும் சிறந்த செல்வமும் படைத்த பரப்பும்
தமரோட்டை வாசமும்
மறப்பித்த
ஷமா தீஷா சாரச்ய சௌந்தர்யங்களை
யுணர்த்தும்
வ்யூஹ விபவ பரத்வத்வய அர்ச்சைகள்
தூது நாளுக்கும் விஷயம் –

இத் திருவாய் மொழி விபவத்தில் தூது என்பதை
வைகல் திரு வண் வண்டூர் வைகும் இராமனுக்கு -மணவாள மா முனி அருளிச் செய்கிறார்
திரு வண் வண்டூரில் தூது ஆனால் அர்ச்சாவதார தூது ஆகாதோ என்னில்
மாறில் போரரக்கன் மதிள் நீர் எழச் செற்று உகந்த ஏறு சேவகனார்க்கு என்னையும் உளன் என்மின்களே -10 பாசுரம்
அமைந்து இருக்கும் படியை- நோக்கி
அர்ச்சாவதார தூது வேறு ஒரு பதிகம் இருப்பதையும் நோக்கி
பூர்வர்கள் இவ்வாறு வகையிட்டு அருளினார்கள் –

——————————————————————————————————————————————————————————–

வைகல் பூங்கழிவாய் வந்து மேயும் குருகினங்காள்
செய்கொள் செந்நெல் உயர் திரு வண் வண்டூருறையும்
கைகொள் சக்கரத்து என் கனிவாய்ப் பெருமானைக் கண்டு
கைகள் கூப்பிச் சொல்லீர் வினையாட்டியேன் காதன்மையே –6-1-1-

கடலை அடுத்த நீர்பரப்பு -கழி-பூங்கழி -மநோஹரமாய் இருக்கும் –
வைகல் வந்து மேயும் -எப்பொழுதும் உங்கள் உணவை மாத்ரமோ நோக்குவது
அவன் பிரிந்தாலும் என் கண் வட்டத்தில் வாழா நின்றீர்கள்
குருகினங்காள் -தூ விரிய மலர் உழக்கித் துணையோடும் பிரியாதே –
உங்கள் உணவு அங்கு கொள்ளை கொள்ளையாக கிடைக்கும் -செய்கொள் செந்நெல் உயர் –
கீழே பிறந்தவாறும் கிருஷ்ணாவதாரம் அனுசந்தித்து
ஜாதோசி தேவதேவேச சங்க சக்ர கதா தர -கைகொள் சக்கரத்து என் கனிவாய்ப் பெருமானைக் கண்டு –
கோகுலத்தில் வளர்ந்து ஆயர் பெண்டிர்க்கு அணுக்கனாய்
கொவ்வைக் கனிவாய் கொடுத்து கூழமை செய்த படிகள் அனுசந்தித்தவாறே -கனிவாய் -அடையாளமும் சொல்லி
இங்கே கலந்த பொழுது அடியேன் குடியேன் குழைச்சல்கள் காட்டி சௌசீல்யம் தோன்ற இருந்தான்
இப்பொழுது பரத்வம் பாராட்டி நிற்கையால் -கைகள் கூப்பிச் சொல்லீர் –
வினையாட்டியேன் காதன்மை
பராங்குச நாயகி காதல் -லோக விலஷணம் அன்றோ

வன்னெஞ்சர் காதல் போல் அன்று இ றே
மென்னெஞ்சர் காதல்
மெல்லியலார் காதல் அளவில்லாத என் காதல் சொல்லீர்
சொல்லுவார் தாழ்வே
வரவு தப்பாது -என்று இருக்கிறாள் -ஈடு

ஆசறுதூவி என்னும் பாஹ்ய அபயந்தர சுத்தி உடன் -நாயனார் –
தங்களை பிரியில் தரியாத பிரேமம் உடைய சிஷ்யர்கள் உடன் மனத்துக்கு இனிய கால ஷேப கூடங்களில்
பகவத் குணாநுபவம் பண்ணும்
சுத்த சத்வ ஆச்சார்யரை விளித்து
பகவத் சம்ச்லேஷம் பண்ணுவிக்க பிரார்த்தனை ஸ்வாபதேசம் –

————————————————————————————————————————————————————————————————-

காதல் மென்பெடையோடு உடன் மேயும் கரு நாராய்
வேத வேள்வி யொலி முழங்கும் தண் திரு வண் வண்டூர்
நாதன் ஞாலம் எல்லாம் உண்ட நம் பெருமானைக் கண்டு
பாதம் கை தொழுது பணியீர் அடியேன் திறமே–6-1-2-

ஆஸ்ரித ரஷண தீஷை கொண்டு இருக்கும் எம்பருமானைக் கண்டு
வேத ஒலி வேள்வி ஒலி காதாரக் கேட்டுக்கொண்டு தீஷை மறந்து அங்கே தங்கி இருக்கிறான்

கரு நாராய் -நாரைக்கு வெண்மை பிரசித்தம் -மேனியில் புகரைச் சொல்கிறது இங்கே
பிரிவுக்கு பிரசங்கம் இல்லாமையினாலே
தன்னிறம் பெற்று இருக்கும்படி
பிரியாதார்க்கு உடம்பு வெளுக்காது ஆகாதே
தான் உடம்பு வெளுத்துக் கிடக்கிறாள் இ றே -ஈடு –

காதல் மென்பெடையோடு உடன் மேயும்
ஆழ்வான் அனந்தாழ்வான் போன்ற க்ருஹச்த ஆச்ரமிகளின் பெருமை சொல்லும்
அன்றிக்கே சிஷ்யர்கள் உடன் கூடி பகவத் குணாநுபவம் பண்ணும் ஆச்சார்யர்களின் பெருமை சொல்லும்
வேத கோஷமும்
யாகத்தில் சஸ்த்ராதி கோஷமும்
சமுத்திர கோஷம் போலே இருக்கிற
ஸ்ரமஹரமான ஊர் -ஈடு
சஸ்த்ரம் -மந்திர விசேஷம் –
ஸ்தோத்ரம் கான விசிஷ்ட மந்திர உச்சாரணம்
சஸ்த்ரம் -கான ரஹிதம் ஏக சுருதி ரூபா உச்சாரணம் -வேதார்த்த சங்க்ரஹ தாத்பர்ய தீபிகை
அறப் பெரியவன் பக்கல் கிட்டப் போமோ என்ன
நீர்மையே வடிவு எடுத்தவன் -ஞாலம் எல்லாம் உண்ட –
ஆபத்து வருவதற்கு முன்பே ரஷிப்பவன்-

பணியீர் அடியேன் திறமே-
அவன் திறம் போல் அன்று
என்னிடையாட்டத்தைச் சொல்லுங்கோள்
சொல்லில் ஒரு மகாபாரதத்துக்கு போருமாகாதே -ஈடு

————————————————————————————————————————————————————————————————

திறங்களாகி எங்கும் செய்களூடு உழல் புள்ளினங்காள்
சிறந்த செல்வம் மல்கு திரு வண் வண்டூருறையும்
கறங்கு சக்கரக்கைக் கனிவாய்ப் பெருமானைக் கண்டு
இறங்கி நீர் தொழுது பணியீர் அடியேன் இடரே –6-1-3-

திறங்களாகி-திரள் திரளாக
கறங்கு-சுழன்று வருகிற -விரோதிகளை நிரசிக்க வேண்டிய விரைவாலே சுழன்று வாரா நிற்கும்
இறங்கி தொழுது -தாழ்ந்து தொழுது -தாள விழுந்து வணங்கி என்னுடைய விரஹ வேதனையை தெரிவியுங்கோள்
பறவைகள் திரள் திரளாக உழல்வது உணவு தேட அன்று
பராங்குச நாயகிக்காக போலும்
அவன் மறந்து உறையும் காரணம் -சிறந்த செல்வம் மல்கும் -திரு வண் வண்டூர் என்பதால்

———————————————————————————————————————————————————————————————–

இடரில் போகம் மூழ்கி இணைந்தாடும் மட வன்னங்காள்
விடலில் வேதவொலி முழங்கும் தண் திரு வண் வண்டூர்
கடலின்மேனிப் பிரான் கண்ணனை நெடுமாலைக் கண்டு
உடலம் நைந்து ஒருத்தி உருகும் என்று உணர்த்துமினே —6-1-4-

போகத்துக்கு இடர் இடையில் விச்சேத ப்ரசக்தி -அது இல்லாத இடரில் போகம்
ஸ்வா பதேசம் -இடைவிடாத பகவத் அனுபவத்தில் அவஹாகித்து
போகத்தில் வழுவாத புதுவையர் கோன் -போலே

இணைந்து ஆடும் –
குரு சிஷ்ய கிரந்த விரோதங்களை
பரமதாதிகளாலே பரிஹரியாமல்
செந்தமிழ் இன்கவி பரவி அழைக்கும் என்று
அந்யோந்யம் கொண்டாடி
பேசிற்றே பேசும் ஏக கண்டர் -நாயனார்
ஆச்சார்யர்களுக்கு உண்டான ஐகமத்யம் தெரிவிக்கப் படுகிறது

புறப்பட்டவாறே வேத கோஷம் வழி காட்டும் -விடலில் வேத ஒலி முழங்கும்
கடல் மேனிப்பிரான் -இசை இன்பம் நோக்கி கடலின் மேனிப்பிரான்
ஒருத்தி உருகும் என்று உணர்த்துமினே-ஒருத்தி மதி எல்லாம் உள் கலங்கி மயங்குமால் என்னீரே -போலே-

——————————————————————————————————————————————————————————————————-

உணர்த்தல் ஊடல் உணர்ந்து உடன் மேயும் மட வன்னங்காள்
திணர்த்த வண்டல்கள் மேல் சங்கு சேரும் திரு வண் வண்டூர்
புணர்த்த பூந்தண்டுழாய் முடி நம்பெருமானைக் கண்டு
புணர்த்த கையினராய் அடியேனுக்கும் போற்றுமினே –6-1-5-

போக பிரகாரம் தான் மூன்று வகைப் பட்டாய் இ றே இருப்பது
அவையாவன
ஊடல் -உணர்தல் -புணர்தல் -இவை மூன்றும் காமத்தால் பெற்ற பயன்
என்று மூன்றையும் பிரயோஜனமாகச் சொன்னார்கள் தமிழர்
இதில் ஊடல் -எதிர் தலையோடு கூடினால் அஹேதுகமாக விளைவது ஓன்று
அது தான் -என்னை ஒழியக் குளித்தாய் -என்னை ஒழிய பூவைப் பார்த்தாய் -உன் உடம்பு பூ நாறிற்று –
உணர்த்தல் ஆவது -உனக்கு என்று குளித்தேன் யென்கையும்
உனக்கு ஆம் -என்று பார்த்தேன் யென்கையும்
உன் வரவுக்கு ஒப்பித்தேன் என்றால் போலே சொல்லுமவை
இவை இரண்டின் அனந்தரத்தே வருவது -கலவி -ஈடு

உணர்தல் உணர்த்தல் -பர்யாய சொல்
உணர்த்தல் ஊடல் உணர்ந்து-என்று இருந்தாலும்
அர்த்தக்ரமம் வலித்து என்கிற நியாயத்தால்
ஊடல் உணர்தல் உணர்ந்து -ஊடல் –பிரணய ரோஷம் –
புணர்த்த பூந்தண்டுழாய் முடி நம்பெருமானைக் கண்டு-அவன் ஆஸ்ரித ரஷணத்துக்கு தனிமாலை இட்டு இருக்கும்படி -கூசாதே காணலாம்
அடியேனுக்கும் போற்றுமினே-திவ்ய தேசம் செல்லும் யாத்ரை செல்வார்களை நோக்கி அந்த பாக்கியம் இல்லாதவர் வார்த்தை-

————————————————————————————————————————————————————————————————————–

போற்றி யான் இரந்தேன் புன்னை மேலுறை பூங்குயில்காள்
சேற்றில் வாளை துள்ளும் திரு வண் வண்டூருறையும்
ஆற்றல் யாழி யங்கை அமரர் பெருமானைக் கண்டு
மாற்றம் கொண்டு அருளீர் மையல் தீர்வதொரு வண்ணமே –6-1-6-

மங்களா சாசனம் பண்ணி –
தூது செல்வார் இரப்பது ஸ்ரீ ராமாயணாதிகளிள் பிரசித்தமாய் இருக்க நான் இரக்க வேண்டி உள்ளதே
புன்னை மேலுறை பூங்குயில்காள்-வளர்த்ததனால்பயன் பெற்றேன் –
ஆச்ரியர் பக்கலிலே வளருமவர்கள் குயில் ஸ்வா பதேசத்தில் –
வன ப்ரிய பரப்ருத கோகில பிக -வடமொழியில் ப்ரப்ருத -குயில்
பரனான ஆச்சார்யனால் போஷிக்கப் பட்டு வளரும் குருகுல வாசிகள்
புன்னை மேலுறை என்றது கீழுறை என்றபடி -ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் திருப் புன்னை மரத்தில் ஈடுபட்டு –
புந்நாக தல்லஜமஜச்ர சஹஸ்ரகீதி சே கோத்த திவ்ய நீஜ சௌர பமாம நாம -ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம்
அன்றியே
மாம் பொழில் தளிர் கோதிய மடக்குயில் வாயது துவர்ப்பு எய்தத் தீம் பலங்கனி தேனதுநுகர் –
சாமான்ய சாஸ்த்ரங்களில் வாய் வைத்து
பின்பு விசேஷ ஆத்யாத்ம சாஸ்த்ரங்களில் இன்பமாக பொது போக்கும் ஆச்சார்யர்கள் -குயில்
ஆற்றல் யாழி யங்கை அமரர் பெருமானைக் கண்டு -இங்கு ஆற்றல் ஆழிக்கும் பெருமானுக்கும் விசேஷணம்
ஆஸ்ரிதர்க்கு ஆத்மதானம் பண்ணினாலும்
ஒன்றும் செய்யாது இருக்கும் ஸ்வ பாவனாய் -ஆராயிரப்படி
ஆற்றல் -நோவுபாடு இங்கு
ஆழிக்கு -ஆற்றல் மிடுக்கு
மாற்றம் கொண்டு அருளீர் மையல் தீர்வதொரு வண்ணமே-மாற்றம் -அனுகூலமோ பிரதி கூலமோ
பாவி நீ என்று ஓன்று சொல்லாய் பாவியேன் காண வந்தே -என்றும்
மெய்ம்மை சொல்லி முகம்நோக்கி விடை தான் தருமேல் மிக நன்றே-அத்தலையில் வார்த்தை என்பதே வேண்டுவது

————————————————————————————————————————————————————————————————————-

ஒரு வண்ணம் சென்று புக்கு எனக்கு ஒன்றுரை யொண் கிளியே
செரு வொண் பூம்பொழில் சூழ் செக்கர் வேலைத் திரு வண் வண்டூர்
கரு வண்ணம் செய்யவாய் செய்ய கண் செய்ய கை செய்ய கால்
செறு வொண் சக்கரம் சங்கு அடையாளம் திருந்தக் கண்டே –6-1-7-
ஒரு வண்ணம் சென்று புக்கு–
இதுக்கு இரண்டு படியாக அருளிச் செய்வர்
இத்தலையில் தனிமை நினையாதே போய் நிற்கையாலே
போர முதலிகளாய் இருப்பார்
மேன் மேல் எனப் பிரம்புகள் விழும்
அத்தைப் பொறுத்துப் போய் புகுங்கோள்
அன்றிக்கே
வழி எங்கும் நெஞ்சை அபஹரிக்கும் போக்யதை யுடைத்து
அதில் கால் தாழாதே வருந்தி ஒருபடி சென்று புக்கு -ஈடு –

செரு வொண் பூம்பொழில்-செரு -யுத்தம்
பொழில் களில் யுத்தம் ஆவது பறவைகளும் ப்ரணய ரோஷத்தால் சீறு பாறு என்று இருத்தல்
செக்கர் வேலை -பொழில் களிலே உதிர்ந்த தாதுக்களால் சிவந்த பக்கங்கள்
கடற்கரை ஆகையால் சிவந்த மணலீடு

சொல்லிற்று சொல்லுமாம் கிளிப்பிள்ளை -என்னுமா போலே
முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டுப் பின்னோர்ந்து தாமதனைப் பேசும் ஏக கண்ட ஆசார்யர்கள் -கிளி

———————————————————————————————————————————————————————————————————-

திருந்தக் கண்டு எனக்கு ஓன்று உரையாய் ஒண் சிறு பூவாய்
செருந்தி நாழல் மகிழ் புன்னை சூழ் தண் திரு வண் வண்டூர்
பெரும் தண் தாமரைக் கண் பெரு நீண் முடி நால் தடம் தோள்
கரும் திண் மா முகில் போல் திரு மேனி யடிகளையே –6-1-8-

செருந்தி நாழல் மகிழ் புன்னை-சுரபின்னை-ஞாழல் -மகிழ மரம் -புன்னை மரம் –
திருந்தக் கண்டு -காண்கை இரண்டு விதம் -தமது மனசுக்கு -பிறருக்கு விசதமாக யெடுத்து சொல்ல
திவ்ய அவயவங்களை திருந்தக் கண்டு
அவற்றின் அதிசயங்களை சொல்லி
என்னை தரிப்பிக்க வேண்டும்
தூதுவர் செய்யும் கார்யங்களில் இதுவும் ஒன்றே
அடிகள் -ஸ்வாமி

————————————————————————————————————————————————————————————————-

அடிகள் கை தொழுது அலர்மேல் அசையும் அன்னங்காள்
விடிவை சங்கு ஒலிக்கும் திரு வண் வண்டூருறையும்
கடிய மாயன்தன்னைக் கண்ணனை நெடுமாலைக் கண்டு
கொடிய வல்வினையேன் திறம் கூறுமின் வேறு கொண்டே –6-1-9-

திருவடிகளை சிக்கென பிடித்துக் கொண்டு -என்பதற்கு அடிகள் கை தொழுது -என்கிறாள்
அநதி க்ரமணீயம் ஹி சரண க்ரஹணம் -திருவடிகளை பிடித்தால் மறுக்கப் போகாதே –
கடிமாயன் -ஆஸ்ரித விரோதி நிரசனத்தில் ஆச்சர்ய செயல்களை செய்பவன்
கண்ணன் -ஆஸ்ரிதற்கு கையாளாக நின்று தன்னையே கொடுப்பவன்
நெடுமால் -இத்தனையும் செய்தும் ஒன்றும் செய்யப் பெற வில்லையே குறையாளனாக போம் வ்யாமோஹன்
வேறு கொண்டு -ஏகாந்தமாக கிட்டி
பிராட்டியும் தானுமாய் இருக்கும் இருப்பிலே

—————————————————————————————————————————————————————————————————–

வேறு கொண்டு உம்மை யான் இரந்தேன் வெறி வண்டினங்காள்
தேறு நீர்ப் பம்பை வடபாலைத் திரு வண் வண்டூர்
மாறில் போரரக்கன் மதிள் நீர் எழச் செற்று உகந்த
ஏறு சேவகனார்க்கு என்னையும் உளன் என்மின்களே -6-1-10-

வேறு கொண்டு -விலஷண பிரபத்தி பண்ணி
திக்குகள் தோறும் முதலிகளை
போக விடா நிற்கச் செய்தே
திருவடி கையிலே திருவாழி மோதிரம்
கொடுத்து விட்டால் போலே காணும் -ஈடு –
விசேஷேண து சூக்ரீவோ ஹானுமத்யர்த்தம் உக்தவான் ச ஹி தஸ்மின் ஹரிஸ்ரேஷ்ட நிச்சயதார்த்த சாதனே -வால்மீகி
பெண் பிறந்தார் கார்யம் எல்லாம் தலைக் கட்டி விட்டோம் என்று இருப்பார்
ரஷ்ய வர்க்கத்தில் நானும் ஒருத்தி இருக்கிறதாகச் சொல்லுங்கோள்
என்னையும் உளன் என்மின்களே
இன்னமும் பிழைத்து இருக்கிறேன் என்று சொல்லுமின் பொருள் கொள்ளலாயினும்
அப்பொருளில் சுவை இல்லை எனபது எம்பெருமானார் திரு உள்ளம் –

———————————————————————————————————————————————————————————————————————–

மின்கொள் சேர் புரி நூல் குறளாய் அகல் ஞாலம் கொண்ட
வன்கள்வன் அடிமேல் குருகூர்ச் சடகோபன் சொன்ன
பண்கொள் ஆயிரத்துள் இவை பத்தும் திருவண் வண்டூர்க்கு
இன்கொள் பாடல் வல்லார் மதனர் மின்னிடை யவர்க்கே –6-1-11-

எம்பெருமானுக்கும் அவன் அடியவர்க்கும் விரும்பத் தக்கவர் ஆவார்
உபமான மாதரம் சொல்லி -மதனர் மின்னிடை யவர்க்கே –
திரு நாட்டில் உள்ள திவ்ய அப்சரஸ் ஸூ க்களை சொன்னதாகவுமாம்
நிதியும் நற் சுண்ணமும் நிறை குட விளக்கமும் மதிமுக மடந்தையர் ஏந்தினர் வந்தே –
இன்கொள் பாட வல்லார் -தப்பான பாடம்

————————————————————————————————————————————————————————————————

திருவாய்மொழி நூற்றந்தாதி –

வைகல் திரு வண் வண்டூர் வைகும் இராமனுக்கு என்
செய்கை தனைப் புள்ளினங்காள் செப்புமென கை கழிந்த
காதலுடன் தூது விடும் காரி மாறன் கழலே
மேதினியீர் நீர் வணங்குமின் –51-

———————————————————————————————————————————————————————————————-

ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading