திருவாய் மொழி – திவ்யார்த்த தீபிகை-மானேய் நோக்கு –5-9-

கீழ்த் திருவாய் மொழியில் திருக் குடந்தையில் தளர்ந்தார் –
அங்கு நின்றும் திரு வல்ல வாழ் ஏறப் போக ஒருப்பட்டு
அங்குப் போகவும் முடியாமல்
அருகிலிருந்த ஊரில் சோலைகளும்
அங்கு இருந்து பரிமளத்தை கொய்து கொண்டு புறப்படுகிற தென்றலும்
வண்டுகளின் இனிதான மிடற்று ஓசைகளும்
வைதிக அனுஷ்டான கோலா ஹலங்களும்
மற்றும் உண்டான சம்ப்ரமங்களும்
எல்லாம் தம்மை மிகவும் நலிய
அவற்றால் உண்டான நோவுபாட்டை தோழி மாரைக் குறித்து
தலைவி சொல்லும் பாசுரமாக பேசுகிறது இத் திருவாய்மொழி –

——————————————————————————————————————————————————————————

மானேய் நோக்கு நல்லீர் வைகலும் வினையேன் மெலிய
வானார் வண் கமுகும் மது மல்லிகை கமழும்
தேனார் சோலைகள் சூழ் திரு வல்ல வாழுறையும்
கோனாரை அடியேன் அடி கூடுவது என்று கொலோ –5-9-1-

தலைவியின் அவஸ்தா விசேஷத்தை தோழிகள் கோர்க்கப் பார்த்து கொண்டு இருக்க -மானேய் நோக்கு நல்லீர்-என்கிறார்
மெலிய -வானார் -யென்னை மெலியச் செய்யவே கமுகுகள் ஓங்கி உள்ளன
மெலிய -உறையும் -மெலியச் செய்ய கோனார் இங்கே உறைகிறார்

———————————————————————————————————————————————————————————

என்று கொல் தோழி மீர்காள் எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ
பொன் திகழ் புன்னை மகிழ் புது மாதவி மீதணவி
தென்றல் மணம் கமழும் திரு வல்ல வாழ் நகருள்
நின்ற பிரான் அடி நீர் அடியோம் கொண்டு சூடுவதே –5-9-2-

மாதவி -குருக்கத்திகள்
எனக்கு பிரியமானவற்றைச் சொல்லி தேற்ற வேண்டி இருக்க நலிவது எதற்காக
உங்கள் வழியில் மீறுவேன் என்ற என்னமோ
தென்றல் மணம் திரு வல்ல வாழ் நோக்கி யென்னை இழுக்க உங்கள் வழியில் வர ப்ரசக்தி உண்டோ
அவனது பாதாரவிந்த ரேணுவை சிரஸா வக்கக ஆவல் கொண்டுள்ளேன் –

———————————————————————————————————————————————————————————-

சூடு மலர்க்குழலீர் துயராட்டியேனை மெலிய
பாடு நல்வேத வொலி பரவைத் திரை போல் முழங்க
மாடுயர்ந்த ஓமப்புகை கமழும் தண் திரு வல்ல வாழ்
நீடுறைகின்ற பிரான் கழல் காண்டும் கொல் நிச்சலுமே –5-9-3-

நீங்கள் ஆசைப்பட்டத்தை சூடி இருப்பது போல
நானும் ஆசைப் பட்டதை சூட வேண்டாமா
சாமவேத ஒலியும்
ஹோம தூமங்களின் பரிமளமும்
யென்னை அவ்வழியே இழுக்க
அவன் திருவடிகளையே அநவரதம் கண்டு கொண்டே இருக்கும் காதல் வளர
அந்த காதல் நிறைவேற வழி சொல்ல வல்லீர்கள் ஆகில் சொல்லுமின் –

————————————————————————————————————————————————————————————–

நிச்சலும் தோழி மீர்காள் எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ
பச்சிலை நீள் கமுகும் பலவும் தெங்கும் வாழைகளும்
மச்சணி மாடங்கள் மீதணவும் தண் திரு வல்ல வாழ்
நச்சரவின் அணை மேல் நம்பிரானது நன்நலமே –5-9-4-

என்னுடைய நற்சீவன் அவனதாகி விட்டதே
எனது அதீநம் இல்லை
உங்கள் பேச்சு விலை செல்லும் அளவன்றே
உய்ந்த பிள்ளை அரையர் இசை பாடும் பொழுது
பச்சிலை நீள் கமுகும்
பச்சிலை நீள் பலவும்
பச்சிலை நீள் தெங்கும்
பச்சிலை நீள் வாழைகளும்
என்று கூட்டிக் கூட்டிப் பாடுவாராம்
திரு வல்ல வாழ் பெருமான் நின்ற திருக் கோலம் தான்
நச்சரவின் அணை மேல் நம்பிரானது-என்றது பொது விசேஷணம்-அத்தலத்து ஸ்திதியைச் சொன்ன படி அன்று
அத்தியூரான் –அணி மணியின் துத்தி சேர் நாகத்தின் மேல் துயில்வான் -போலே

———————————————————————————————————————————————————————————

நன்னலத் தோழி மீர்காள் நல்ல வந்தணர் வேள்விப்புகை
மைந்நலம் கொண்டு உயர் விண் மறைக்கும் தண் திரு வல்ல வாழ்
கன்னலம் கட்டி தன்னைக் கனியை இன்னமுதம் தன்னை
என் நலம் கொள் சுடரை என்று கொல் கண்கள் காண்பதுவே –5-9-5-

உங்கள் குணங்கள் கண்டு அன்றோ நான் பழகி உள்ளேன்
தாய்மார் போலே பகையாளிகள் அன்றே
வேள்விப்புகை யென்னை ஈர்க்க
அவனுடைய அளவிறந்த போக்யதை யென்னை ஆத்மாபஹாரம் பண்ணி அருள
அவனைக் கண்ணால் காணப் பெற்றால் போதும் என்று இருக்கும் எனக்கு
அது என்றைக்கு கை கூடும் –

—————————————————————————————————————————————————————————————-

காண்பது எஞ்ஞான்று கொலோ வினையேன் கனிவாய் மடவீர்
பாண் குரல் வண்டினோடு பசும் தென்றலுமாகி எங்கும்
சேண் சினை யோங்கு மரச் செழும் கானல் திரு வல்ல வாழ்
மாண் குறள் கோலப் பிரான் மலர்த் தாமரைப் பாதங்களே –5-9-6-

எனது வாய் உலர்ந்து கிடக்க
தாம்பூலம் அருந்தி செவ்வி பெற்று -கனிவாய் மடவீர் -ஷேபிக்கிறாள்
அன்றிக்கே
ஏகம் துக்கம் ஸூ கஞ்ச நௌ-என்றபடி அவர்களும் தன்னைப் போல் இருக்கையாலே
கனிவாய் உடன் காணப் பெறுவது என்றோ -என்கிறாள்
முன்னிருந்த தன்மையை இட்டு-கனிவாய் மடவீர் – விளிக்கிறாள்
வண்டுகள் மிடற்று ஓசையும் இளம் தென்றலும்
வாமனன் சௌந்தர்யத்தை நினைப்பூட்டிக் கொண்டு சேவை தந்து அருளா நிற்கும்
எம்பெருமான் உடைய திருவடித் தாமரைகளை நாம் காண்பது என்றைக்கு –

————————————————————————————————————————————————————————————–

பாதங்கள் மேலணி பூந்தொழக் கூடும் கொல் பாவை நல்லீர்
ஓத நெடும் தடத்துள் உயர் தாமரை செங்கழுநீர்
மாதர்கள் வாண் முகமும் கண்ணும் ஏந்தும் திரு வல்ல வாழ்
நாதன் இஞ்ஞாலம் உண்ட நம்பிரான் தன்னை நாடொறுமே –5-9-7-

ஓத நெடும் தடத்துள்-கடல் போன்ற பெரிய தடாகங்களுக்குள்
பாவை நல்லீர் -உகந்து விளிக்கிறாள்
தன் மநோ ரதத்தை நிஷேதியாமையால்
தோழிமாரை உகந்து சம்போதிக்கிறாள் -ஆராயிரப்படி
இவளை நிஷேதிக்கைக்கு ஷமைகள் அன்றிக்கே
ஸ்திமிதைகளாய் இருந்தபடி –
எழுதின பாவை போலே இருந்தார்கள் –ஈடு
தாமரைப் பூக்களும் செங்கழு நீர் பூக்களும்
ஸ்திரீகளின் அழகிய முகங்களோடும் கண்களோடும் ஒக்கும் படி
சகல ஜகத்துக்கும் ரஷகன்
திருவடிகளில் சாத்தின புஷ்பத்தை யாகிலும் சேவிக்கப் பெறுமோ –

————————————————————————————————————————————————————————————–

நாடொறும் வீடின்றியே தொழக் கூடும் கொல் நன்னுதலீர்
ஆடுறு தீங்கரும்பும் விளை சென்னெலுமாகி எங்கும்
மாடுறு பூந்தடம் சேர் வயல் சூழ் தண் திரு வல்ல வாழ்
நீடுறைகின்ற பிரான் நிலம் தாவிய நீள் கழலே –5-9-8-

ஆடுறு தீங்கரும்பும்-ஆலையில் இட்டு ஆடுதற்கு உரிய இனிமையான கரும்புகள்
மாடுறு பூந்தடம்-பக்கங்களில் நெருங்கிய பூத்த தடாகங்கள்
நன்னுதலீர்-
நீங்கள் புருஷகாரம் பண்ணி அவன் எழுந்து அருள
திருவடிகளில் தெண்டனிட்டு
அதனால் நெற்றிக்கு அலங்காரமாக பெரும் ஸ்ரீ பாத ரேணுவை தரித்து உங்களை காண்பேனோ
அவன் வந்த உபகாரத்துக்கு
அவன் திருவடிகளிலே விழுந்து
ப்ரணாம பரம் ஸூ ல பரார்த்ய லலாடைகளாய்
உங்களைக் காண வல்லேனோ -ஈடு
அனுக்ரஹ சீலனாய் நித்ய வாசம் பண்ணும்
எம்பெருமான் உடைய சௌசீல்யமே வடிவெடுத்த திருவடிகளை
இடைவிடாமல் தொழும்படியான பாக்கியம் கிட்டுமோ –

—————————————————————————————————————————————————————————————–

கழல் வளை பூரிப்ப யாம் கண்டு கை தொழக் கூடும் கொலோ
குழல் அன்ன யாழும் அன்னக் குளிர் சோலையுள் தேன் அருந்தி
மழலை வரி வண்டுகள் இசை பாடும் திரு வல்ல வாழ்
சுழலின் மலி சக்கரப் பெருமானது தொல்லருளே -5-9-9-

சுழலின் மலி சக்கர-சுழற்சி பொருந்திய திரு வாழி
தொல் அருள் -ஸ்வா பாவிகமான இயற்கையான அருள்
வேணு கானமோ வீணா கானமோ -என்று சந்தேகிக்கும் படி வண்டுகள் இசை பாட
கையும் திரு ஆழியுமாக சேவை சாதிக்கும் எம்பெருமான் திரு அருளாலே
நாம் காணப் பெற்று கை தொழ நேருமோ
பிரிவாற்றாமையால் கை வளைகள் கழலும்
கலவி இன்பத்தால் மேனி தடித்து கை வளைகள் பூரிக்கும்
அருளே -எழுவாயாக வைத்து
அருளானது நாம் கை தொழும்படி கூடும் கொலோ -என்னவுமாம்

————————————————————————————————————————————————————————–

தொல்லருள் நல்வினையால் சொலக் கூடும் கொல் தோழிமீர்காள்
தொல் லருள் மண்ணும் விண்ணும் தொழ நின்ற திரு நகரம்
நல்லருள் ஆயிரவர் நலனேந்தும் திரு வல்ல வாழ்
நல்லருள் நம் பெருமான் நாராயணன் நாமங்களே –5-9-10-

அர்ச்சாவதாரம் –
பின்னானார் வணங்கும் இடமாய் -அருளே வடிவு எடுத்தது ஆதலால்
தொல் லருள் மண்ணும் விண்ணும் தொழ நின்ற திரு நகரம்-என்கிறார்
உபய விபூதியில் உள்ளாறும் தொல் அருளை அனுபவிக்கும் இடம் அர்ச்சாவதாரம் என்றவாறு
அர்ச்சாவாதர சாமான்யத்தில் அன்வயிக்கும் விசேஷணம்
அன்றிக்கே
மண்ணில் இது போல் நகரில்லை என வானவர்கள் தாம் மலர்கள் தூய்
நண்ணி உறைகின்ற நந்தி புர விண்ணகரம் போலே
இவ்விடத்துக்கு விசேஷித்து கொண்டாடும் அருள் என்னவுமாம்
நல்லருள் ஆயிரவர் நலனேந்தும்
அவனைக் காட்டிலும் அருள் மிக்கார் மங்களா சாசனம் பண்ணிக் கொண்டு வாழும் இடம்
அவனுடைய கருணை ஆகிற ஸூ க்ருத விசேஷத்தால் நாம் சொல்லி வாழக் கூடுமோ
நலன் ஏத்தும் -பாட பேதம்

—————————————————————————————————————————————————————————————–

நாமங்கள் ஆயிரமுடைய நம்பெருமான் அடிமேல்
சேமம் கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்துரைத்த
நாமங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் திரு வல்ல வாழ்
சேமம் கொள் தென்னகர் மேல் செப்புவார் சிறந்தார் பிறந்தே –5-9-11-

சேமம் கொள்-திண்ணிய அத்யாவசாயம் உடையவரான
சேமம் கொள் -அரண் அமைந்த
சம்சாரிகளாய் இருக்கச் செய்தேயும் மற்றவர்கள் காட்டில் சிறந்தவர் ஆவார் -பகவத் அனுபவம் ஆகிற சிறப்பு –
சஹச்ர நாமம் போலே பகவத் குண விபூதிகளை ஒழுங்கு படத் தெரிவிக்கும் திருவாய் மொழி
பேராயிரம் உடையன் திருவடிகளில் ஷேம பாரங்களை வைத்த ஆழ்வார்

———————————————————————————————————————————————————————————————-

த்ரமிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி –

5-9-1-ஸ்வாமித்வாத்-திருவல்லவாழ் உறையும் கோனாரை
5-9-2-/3-சம்ச்ரிதா நாம் உபகரண ரசாத் -நின்ற பிரான் -நீடுறைகின்ற பிரான்
5-9-4-ச்வேஷ்ட சம்ச்லேஷ கத்வாத் -நச்சரவணை மேல் நம்பிரான்
5-9-5-சர்வாஸ் வாதத்வ பூம் நா -கன்னலம் கட்டி தன்னை கனியை இன்னமுதம் தன்னை
5-9-6-கபடவடுதயா – மாண் குறள் கோலப்பிரான்
5-9-7-தாருணாபத் சகத்வாத் -இஞ்ஞாலம் உண்ட பிரான் நம்பிரான் தன்னை
5-9-8-திவ்ய ஸ்தாநோப சத்த்யா–ஆடுறு தீம் கரும்பு இத்யாதி
5-9-9-ப்ரமத் அரி பரணாத்-சுழலின் மலி சக்கரப் பெருமான் –
5-9-10- நாராயணத் வாத்-நல்லருள் நம்பெருமான் நாராயணன்

——————————————————————————————————————————————————————————————-

திராவிட உபநிஷத் சங்கதி –

அநயம் முனி பிரதிஹதஸ் தத ஏவ கேதாத்
கந்தும் ப்ரவ்ருத்த மனஸாபி து திவ்யதேசம்
தத் போக்யதாம் அபிததத் தத் ஈச பாதௌ
யாயம் கதேத்ய கதயன் நவமே ஸ தைந்யம்

—————————————————————————————————————————————————————————————–

மா நலத்தால் மாறன் திரு வல்ல வாழ் புகப் போய்
தான் இளைத்து வீழ்ந்து அவ் ஊர் தன்னருகில் மேல் நலங்கித்
துன்பமுற்றுச் சொன்ன சொலவு கற்பார் தங்களுக்கு
பின்பு பிறக்க வேண்டா பிற –49-

மா நலத்தால் -மிகுந்த பிரேமத்துடன்
மேல் நலங்கித்-அதற்கு மேலே தோழி மார் உடைய நிஷேத வசனங்களாலும் நலிந்து
பின்பு பிறக்க வேண்டா பிற-பின் -இனிமேலும் –பிற -வேறு பிறப்புகள் -பிறக்க வேண்டா
முக்தி சாம்ராஜ்யம் கிட்டும் –

—————————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading