அவதாரிகை –
இதில் கரணங்களும் தாமும் பெரு விடாய் பட்டு பேசின பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார்
அது எங்கனே என்னில்
பயிலும் சுடர் ஒளியிலே உத்தேச்யராக அனுசந்திக்கப் பட்ட ஸ்ரீ வைஷ்ணவர்கள்
ஸ்வரூபத்துக்கு நிரூபகத்வேன பிரஸ்துதமான பகவத சௌந்தர்யாதிகள் விடாய்க்கு உத்தகம்பாய்
அத்தாலே விடாய் கரை புரண்டு அனுபாவ்யமான பூஷண ஆயுத குண விக்ரக சேஷ்டிதங்களை சொல்லி
தாமும் தம்முடைய கரண க்ராமமுமாய் முழு மிடறு செய்து கூப்பிடுகிற
முடியானே யின் அர்த்தத்தை
சங்க்ரஹித்து அருளிச் செய்கிறார் -முடியாத ஆசை மிக -இத்யாதியால் -என்கை-
———————————————
முடியாத வாசை மிக முற்று கரணங்கள்
அடியார் தம்மை விட்டவன் பால் -படியா ஓன்று
ஒன்றின் செயல் விரும்ப உள்ளது எல்லாம் தான் விரும்ப
துன்னியதே மாறன் தன் சொல்—28-
——————————————
வியாக்யானம்–
முடியாத வாசை மிக-
மயர்வற மதி நலம் அருளுகையாலே அடியே தொடங்கி வருகிற ஆராத காதலானது
அனுபவ அலாபத்தாலே அதிசயிக்க –
கீழே பாகவத ஸ்வரூப நிரூபணத்துக்கு உடலாக பகவத் குணாதிகள் பிரஸ்துதம் ஆக -அத்தாலே
பக்தி அபிவிருத்தியாக –
முற்று கரணங்கள்
பாஹ்யாப்யந்தர சகல கரணங்களும்
முடியாத ஆசை மிகு முற்று கரணங்கள் என்று கரண விசேஷணம் ஆகவுமாம் –
அடியார் தம்மை விட்டு –
எம்மை ஆளும் பரமர் –
எம்மை ஆளுடை நாதர் –
எம்மை ஆளுடையார்கள் –
எம் பெரு மக்கள்-
எம்மை அளிக்கும் பிராக்கள் –
எம்மை சன்ம சன்மாந்தரம் காப்பர் –
எம்மை நாளும் உய்யக் கொள்கின்ற நம்பர்-
எம் தொழு குலம் தாங்கள் –
அடியார் எம் அடிகள் –
அடியார் தம் அடியார் அடியோங்களே –
என்று இப்படி சர்வ பிரகாரங்களாலும் சேஷிகளாக அனுசந்திக்கப் பட்ட
ஸ்ரீ வைஷ்ணவர்களை விட்டு –
அவன் பால் -படியா -படிந்து –
புருஷார்த்த காஷ்டையை கொலைக்கும் படியான அவன் இடத்திலே அவகாஹித்து
கரணங்களும் தாமும் தத் விஷயத்தில் பிரவணராய்
காத்ரைஸ் சோகாபி கர்சிதை சம்ச்ப்ருசேயம் சகாமாஹம் -என்னும்படியாக –
ஓன்று ஒன்றின் செயல் விரும்ப –
நெஞ்சமே நீணகராக விருந்த என் தஞ்சனே -என்றும்
வாசகமே ஏத்த யருள் செய்யும் வானவர் தம் நாயகனே -என்றும்
கைகளால் ஆரத் தொழுது தொழுது உன்னை -என்றும்
கண்களால் காண வரும் கொல் -என்றும்
வாக் பாணி சஷூஸ் ஸ்ரோத்ரங்களான இந்த்ரியங்களை
மநோ வாக் பாணி சஷூர் வ்ருத்திகள் ஆசைப் படும் படியாக-இந்த்ரிய வ்ருத்தி நியமம் இன்றிக்கே
அவனை அனுபவிக்க வேண்டும்படியான பெரிய விடாயை யுடையவையாய் –
உள்ளது எல்லாம் தான் விரும்ப –
கீழ்ச் சொன்ன கரணங்களின் விடாயை கரணியான தாம் ஒருவருமே யுடையவராய்
அவனை அனுபவிக்க ஆசைப் பட
அதாவது
உன்னையே அவிவின்றி ஆதரிக்கும் எனதாவி –என்றும்
பாவியேன் நெஞ்சம் புலம்பப் பல காலும் கூவியும் காணப் பெறேன் உன்கோலம் -என்றும்
உன்னை எந்நாள் கண்டு கொள்வன் -என்றும்
உன்னை எஞ்ஞான்று பொருந்துவன் -என்றும்
உன்னையே இருந்து இருந்து எத்தனை காலம் புலம்புவன் -என்றும்
இப்படியே அவருடைய பிராவண்யம் இருக்கும்படி -என்கை
துன்னியதே மாறன் தன் சொல் –
இப்படி-கரண க்ரமத்தின் யுடையவும் கரணியான ஆழ்வார் தம்முடையவும்
ஆர்த்தி அதிசயத்தை யுடைத்தான ஸ்ரீ ஆழ்வார் ஸ்ரீ ஸூக்தியான இத் திருவாய் மொழி
மிடைந்த சொல் -என்னும்படி சப்த நிபிடமாய் இருந்தது
துன்னுதல் -நெருக்கம் –
———————————————————————
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply