Archive for the ‘கம்பராமாயணம்’ Category

ஸ்ரீ கம்ப ராமாயணம்/யுத்த காண்டம்/24–களியாட்டுப் படலம்–

November 2, 2020

மேகநாதனின் பிரமாத்திரத்தால் பகைவர் மடிந்தனர் எனக்
கேள்வியுற்ற இராவணன் பெருமகிழ்ச்சி கொள்ளுகின்றான்.
அதன்விளைவாக மகளிரைக் கள்ளுண்டு களி வெறியோடு
ஆடவைத்துப் பார்க்க விரும்புகின்றான். அங்ஙனம் மகளிர் கள்ளை
உண்டு ஆடிய ஆடலைப் பற்றிக் கூறுகின்ற பகுதியாதலின் இது
களியாட்டுப் படலம் எனப் பெயர் பெறுகின்றது.

இப்படலப் பெயர், ‘களியாட்டப் படலம்’ எனவும் சில சுவடிகளில்
காணப்படுகின்றது. இப்பகுதி கம்பரே அமைத்துக்கொண்ட
பகுதியாகும், வான்மீகத்தில் இது இல்லை.

———-

பகை ஒழிந்தது என்று உவந்த இராவணன் மகளிரின் களியாட்டம்
காணுதல்

8819. இன்னது இத் தலையது ஆக, இராவணன் எழுந்து பொங்கி,
தன்னையும் கடந்து நீண்ட உவகையன், சமைந்த கீதம்
கின்னரர் முதலோர் பாட, முகத்திடைக் கிடந்த கெண்டைக்
கன்னி நன் மயில் அன்னாரை நெடுங் களியாட்டம் கண்டான்.–1-

இன்னது இத்தலையது ஆக இராவணன் எழுந்து பொங்கி –
இங்ஙனம் இராமன் சேனையில் இவ்வாறு நிகழாநிற்க, இராவணன்
(பகை அழிந்தது என்ற எண்ணத்தல்) எழுச்சி கொண்டு கிளர்ச்சிமிக்கு;
தன்னையும் கடந்து நீண்ட உவகையன் சமைந்த கீதம் – தன்னையும்
கடந்து பெருகிய மகிழ்ச்சியுடையவனாய் முறைப் படி அமைந்த
இசையை; கின்னரர் முதலோர் பாட, முகத்திடைக் கிடந்த கெண்டை
– கின்னரர் முதலியோர் பாடா நிற்க, முகத்தில் கிடந்த (கண்ணாகிய)
கெண்டை மீன்களை உடைய; கன்னி நன் மயில் அன்னாரை
நெடுங்களியாட்டம் கண்டான் – இளமையான நல்ல மயில் போன்ற சாயலை
உடையமகளிரை நெடிதாய களியாட்டம் ஆடுமாறு செய்தான்.

———

8820. அரம்பையர், விஞ்சை மாதர், அரக்கியர், அவுணர் மாதர்,
குரும்பை அம் கொங்கை நாகர் கோதையர், இயக்கர்
கோது இல்
கரும்பினும் இனிய சொல்லார், சித்தர்தம் கன்னிமார்கள்,
வரம்பு அறு சும்மையோர்கள், மயில்-குலம் மருள, வந்தார்.–2-

அரம்பையர், விஞ்சை மாதர் அரக்கியர் அவுணர் மாதர் –
தேவமாதரும், வித்யாதரமகளிரும், அரக்கியரும், அசுரப் பெண்டிரும;
குரும்பை அம் கொங்கை நாகர்கோதையர், இயக்கர் – குரும்பை
போன்ற அழகிய தனங்களை உடைய நாககன்னியரும், இயக்க
மகளிரும்;கோது இல் கரும்பினும் இனிய சொல்லார், சித்தர்தம்
கன்னிமார்கள் – கோது நீக்கிய கரும்பினும்இனிய சொல்லை
உடையவர்களாகிய சித்தர் பெண்களும் ஆகிய; வரம்பு அறு
சும்மையோர்கள் மயில் குலம் மருள வந்தார் – எல்லையற்ற
கூட்டத்தினர் மயிற்குழாங்களும் மருட்சியுறுமாறு வந்தார்கள்.

———-

8821. மேனகை, விசய வாட்கண் திலோத்தமை, அரம்பை,
மெல்லென்
தேன் நகு மழலை இன் சொல் உருப்பசி, முதலாம் தெய்வ
வானக மகளிர் வந்தார்-சில் அரிச் சதங்கை பம்ப,
ஆனகம், முரசம், சங்கம், முருட்டொடும் இரட்ட, ஆடி.–3-

மேனகை விசய வாட்கண் திலோத்தமை அரம்பை – மேனகை,
வெற்றி பெற்ற வாளைப் போன்ற கண்ணையுடைய திலோத்தமை,
அரம்பை; மெல்லென் தேன் நகு மழலை இன்சொல் உருப்பசி –
மென்மையாக ஒலிக்கின்ற, தேனையும் பழித்துச் சிரிப்பதற்குரிய,
மழலையாகிய இனிய சொல்லினை உடைய ஊர்வசி; முதலாம் வானக
தெய்வமகளிர் – முதலாயவானுலகத்துத் தெய்வமகளிர்; ஆனகம்,
முரசம், சங்கம், முருட்டொடும் இரட்ட – படகமும் முரசமும் சங்கும்
முருடு என்னும் வாத்தியத்தோடு முழங்க; சில் அரிச் சதங்கை பம்ப
ஆடி வந்தார் – தம் காலில் அணிந்த சிலவாகிய பரலை உடைய
சதங்கைகள் ஒலிக்க ஆடிக்கொண்டே வந்தார்கள்.

————-

8822.

தோடு உண்ட சுருளும், தூங்கும் குழைகளும், சுருனின்
தோய்ந்த
ஏடு உண்ட பசும் பொன் பூவும், திலதமும், இலவச்
செவ் வாய்
மூடுண்ட முறுவல் முத்தும், முள்ளுண்ட முளரிச்
செங்கண்,
காடு உண்டு புகுந்தது என்ன, முனிந்தது-கறை
வெண் திங்கள்.–4-

தோடு உண்ட சுருளும் தூங்கும் குழைகளும் – பனந்தோட்டின்
தன்மை பொருந்தியகாதணியாகிய பொற்சுருளும், தொங்குகின்ற
குழைகளும்; சுருளின் தோய்ந்த ஏடுஉண்ட பசும் பொன் பூவும்
திலகமும் – (ஐம்பாலில் ஒன்றாகிய) சுருள் என்ற முடிவகையில்
அமைந்த இதழ் பொருந்திய பசும் பொன்னாலியன்ற பூவும், திலகமும்;
இலவச் செவ்வாய் மூடுண்ட முறுவல் முத்தும் – இலவம் பூப்போன்ற
சிவந்த வாயால் மூடுண்டு கிடக்கின்ற பற்களாகிய முத்தும்; முள்ளுண்ட
முளரிச் செங்கண் காடுஉண்டு புகுந்தது என்ன – முட்கள்
பொருந்திய செந்தாமரை மலர் போன்ற சிவந்தகண்ணும்
ஆகியவற்றைக் கொண்ட (தனக்குப் பகையான முளரிக்காடு தன்னை
மறைக்கும் வண்ணம்) காடு புகுந்துள்ளது என்ற காரணத்தால;
கறைவெண்திங்கள் முனிந்தது – களங்கத்துடன் கூடய வெண்ணிறமான
சந்திரன் வெகுண்டது.தோடு உண்ட சுருள் – பனந்தோட்டின் தன்மை பொருந்திய
காதணி. சுருளில் தோய்ந்தபூ – ஐம்பால் முடிவகையில் ஒன்றான
சுருளில் அமைந்த பூ.

———-

8823.
முளைக் கொழுங் கதிரின் கற்றை முறுவல் வெண் நிலவும்,
மூரி
ஒளிப் பிழம்பு ஒழுகும் பூணின் உமிழ் இள வெயிலும், ஒண்
பொன்
விளக்கையும் விளக்கும் மேனி மிளிர் கதிர்ப் பரப்பும், வீச,
வளைத்த பேர் இருளும், கண்டோர் அறிவு என, மருளும்
மாதோ.–5-

முளைக் கொழுங் கதிரின் கற்றை முறுவல் வெண்நிலவும் –
தோன்றுகின்ற செழுமையான ஒளித்திரளைக் கொண்ட (பெண்களின்)
புன்சிரிப்பின் வெண்ணிறமான நிலவும்; மூரி ஒளிப்பிழம்பு ஒழுகும்
பூணின் உமிழ். இளவெயிலும் – பெரிய ஒளிப்பிழம்பை
வெளிப்படுத்துகின்ற அணிகலன்கள் வீசுகின்ற இளவெயிலும; ஒண்
பொன் விளக்கையும் விளக்கும் மேனி மிளிர்கதிர்ப் பரம்பும்வீச –
ஒளிவாய்ந்த பொன்னைப் போன்று, விளக்கையும் விளக்குகின்ற
அவர்தம் மேனியினது விளங்குகின்ற ஒளிக்கதிர்ப் பரப்பும் வீசுதலால்;
வளைத்த பேர் இருளும் கண்டோர் அறிவு என, மருளும் மாதோ-
உலகத்தையே வளைத்துக் கொண்டிருந்த பெரிய இரவு இருளும்,
அப்பெண்களைக் கண்ட ஆடவர் அறிவு போல் மருண்டு நிலை
கெடுவதாயிற்று.

———-

கள்ளுண்டார் நிலை

8824. நல் பெருங் கல்விச் செல்வம் நவை அறு நெறியை நண்ணி,
முன் பயன் உணர்ந்த தூயோர் மொழியொடும் பழகி, முற்றி,
பின் பயன் உணர்தல் தேற்றாப் பேதைபால், வஞ்சன் செய்த
கற்பனை என்ன ஓடிக் கலந்தது, கள்ளின் வேகம்.

நல்பெருங்கல்விச் செல்வம் நவைஅறு நெறியை நண்ணி –
நல்லதாகிய பெரிய கல்விச் செல்வத்தால் குற்றமற்றவழியைப்
பொருந்தி; முன்பயன் உணர்ந்த தூயோர் மொழியொடும் பழகி
முற்றி – முற்காலத்து அந்நெறியின் பயனை உணர்ந்த தூயோர்தம்
உபதேச மொழியோடு பழகி முதிர்ச்சியுற்று; பின்பயன் உணர்தல்
தேற்றாப் போதைபால் வஞ்சன் செய்த – பின்னால் அந்த உபதேச
மொழியினால் உளதாம்பயனை (உணரவேண்டி இருக்க, அதனை)
உணர்தல் இல்லாத பேதைபால் வஞ்சகன் ஒருவன் செய்த; கற்பனை
என்ன ஓடிக் கலந்தது கள்ளின் வேகம் – கற்பனை, அப்பேதையின்
உள்ளத்தில் விரைந்த நம்பப்பட்டு பரவுவது போலக் கள்ளின் வேகம்
மகளிர் கூட்டத்தில் விரைந்து பரவியது.

———-

8825. பல பட முறுவல் வந்து பரந்தன; பனித்த, மெய் வேர்;
இலவு இதழ் துடித்த; முல்லை எயிறு வெண் நிலவை ஈன்ற;
கொலை பயில் நயன வேல்கள் கொழுங் கடை சிவந்த;
கொற்றச்
சிலை நிகர் புருவம் நெற்றிக் குனித்தன; விளர்த்த செவ்வாய்.–7-

பலபட முறுவல் வந்து பரந்தன மெய்வேர் பனித்த –
(கள்ளருந்திய மகளிர்க்கு) பல வகையாகச் சிரிப்பு வந்து பரவின.
உடம்பில் வேர்வைத் துளிகள் தோன்றின; இலவு இதழ்துடித்த;
முல்லை எயிறு வெண் நிலவை ஈன்ற – இலவமலர் போன்று சிவந்த
உதடுதுடத்தன; முல்லை அரும்பு போன்ற பற்கள் வெள்ளிய நிலவைச்
சொரிந்தன; கொலைபயில் நயன வேல்கள் கொழுங்கடை சிவந்த –
(ஆடவரை) வருத்துதலில் பழகிய கண்களாகிய வேற்படையின்
செழுமையான ஓரங்கள் சிவந்தன; கொள்ளச் சிலைநிகர் புருவம்
நெற்றிக்குனித்தன செவ்வாய்விளர்த்த – வெற்றி பொருந்திய
வில்லை நிகழ்த்த புருவங்கள் நெற்றியின் மீது வளைந்தன; சிவந்தவாய்
வெண்ணிறம் பெற்றன.

————-

8826. கூந்தல் அம் பாரக் கற்றைக் கொந்தளக் கோலக் கொண்டல்
ஏந்து அகல்அல்குல் தேரை இகந்துபோய் இறங்க, யாணர்ப்
பூந் துகிலோடும் பூசல் மேகலை, சிலம்பு பூண்ட
மாந் தளிர் எய்த, நொய்தின் மயங்கினர்-மழலைச்
சொல்லார்.–8-

கூந்தல் அம்பாரக் கற்றைக் கொந்தளக் கோலக் கொண்டல் –
கூந்தலாகிய – அழகிய சுமையான திரண்ட சுருள் தன்மையுடைய
அழகு செய்யப்பட்ட மேகம்; ஏந்து அகல் அல்குல்தேரை இகந்து
போய் இறங்க – பக்கம் உயர்ந்த விரிந்த அல்குல் ஆகிய தேரையும்
கடந்து கீழ் இறங்கவும்; யாணர்ப் பூந்துகிலோடும் பூசல் மேகலை –
புதிய பூந்துகிலோடு, ஆரவாரிக்கும் மேகலையும் (கழன்று); சிலம்பு
பூண்ட மாந்தளிர் எய்த மழலைச் சொல்லார் நொய்தின்
மயங்கினர் – சிலம்பு பூண்டுள்ள மாந்தளிர் போன்ற பாதத்தை
அடையவும் மழலை மொழியினை உடைய மகளிர் விரைவில்
மயங்கினார்கள்.

—————

8827. கோத்த மேகலையினோடும் துகில் மணிக் குறங்கைக் கூட,
காத்தன, கூந்தற் கற்றை, அற்றம், அத் தன்மை கண்டு-
வேத்தவை, ‘கீழ் உளோர்கள் கீழ்மையே விளைத்தார்;
மேலோர்
சீர்த்தவர் செய்யத் தக்க கருமமே செய்தார்’ என்ன.–9-

வேத்தவை – வேந்தனாகிய இராவணனின் அவையில் உள்ளோர்;
‘கீழ் உளோர்கள் கீழ்மையே விளைத்தார் – கீழ் உள்ளவர்கள்
கீழ்மையே செய்தார்கள்; மேலோர் சீர்த்தவர் செய்யத்தக்க கருமமே
செய்தார் என்ன – மேலுள்ளவர்கள் சிறந்தவர் செய்யத்தக்க
நற்செயலையே செய்தார்கள் என்று புகழுமாறு; மணிகோத்த
மேகலையினோடும் துகில் குறங்கைக் கூட – மணிகள் கோத்துள்ள
மேகலையினோடு இடையில் அணிந்துள்ள துகில் அவிழ்ந்து
அற்றங்காட்டித் துடையை அடைய; அத்தன்மை கண்டு கூந்தற்
கற்றை அற்றம் காத்தன – அத்தன்மை கண்டு (தலை மேலுள்ள)
கூந்தல் திரள் அவிழ்ந்து வீழ்ந்து அவர் அற்றத்தை மறைத்துக்
காத்தன.

—————–

பாணியின் தள்ளி, கால மாத்திரைப் படாது பட்ட
நாணியின் முறையின் கூடாது, ஒரு வழி நடையின் செல்லும்
ஆணியின் அழிந்த பாடல் நவின்றனர் – அனங்க வேள்தன்
தூணியின் அடைத்த அம்பின் கொடுந் தொழில் துறந்த கண்ணார். 10

———-

வங்கியம் வகுத்த கானம் வயங்கிய மழலை வாயர்,
சங்கை இல் பெரும் பாண் உற்ற துறைதொறும் திறம்பத் தள்ளி,
சிங்கல் இல் அமுதினோடும் புளி அளாம் தேறல் என்ன,
வெங் குரல் மடுத்த பாடல் விளித்தனர், மயக்கம் வீங்க. 11-

வங்கியம் வகுத்த கானம் வயங்கிய மழலை வாயர் –
புல்லாங்குழல் வழங்கும் இன்னிசை தன்னிடம் விளங்குகின்ற மழலைச்
சொல்லைப் பேசும் வாயினை உடைய மகளி்ர்; மயக்கம் வீங்க
– மயக்கம் ஏற்பட்டதனால்; சங்கையில் பெரும்பாண் உற்ற
நிறத்துறை நிரம்பித்தள்ள – குற்றமற்ற பெரும் பாணர்கள்
கண்டறிந்த விளக்கமானதுறை மிக்கு மாறுபட்டுப்போக; சிங்கல் இல்
அமுதினோடும் புளி அளாம் தேறல் என்ன – சுவை குன்றாத
இனிய அமிழ்தத்தோடு புளிப்புச் சுவை விரவிய கள்ளினைக்
கலந்தாற்போல; வெங்குரல் எடுத்தபாடல் விளித்தனர் – கடுங்குரல்
எடுத்துப்பாடும் பாடலைப் பாடினர்.

——————

8830. ஏனைய பிறவும் கண்டார்க்கு இந்திரசாலம் என்ன,-
தான் அவை உருவில் தோன்றும் பாவனைத் தகைமை
சான்றோர்,-
மான் அவர் நோக்கினாரை மைந்தரைக் காட்டி, வாயால்
ஆனையை விளம்பி, தேரை அபிநயத்து இயற்றி உற்றார்.–12-

கண்டார்க்கு இந்திர சாலம் என்ன – (தம் அபிநயத்தைக்)
கண்டோர்க்கு இந்திர சாலவித்தை போலத்தோன்றும்படி; ஏனைய
பிறவும் தான் அவை உருவில் தோன்றும் – தாமல்லாத பிற
உயிர்களாகிய அவையும் தம் உருவில் தோன்றுமாறு; பாவனைத்
தன்மை சான்றோர் – நடிக்கும் பாவனைத் தன்மை மிக்கோராகிய
நாடக மகளி்ர்; மான் அமர் நோக்கினாரை மைந்தரைக்காட்டி –
மான் போன்ற கண்ணினை உடைய பெண்டிரையும ஆடவரையுங்
காட்டி, (சைகையால் அவர்களைப் போல் அபிநயிக்கப் போவதாகக்
குறித்து); வாயால் ஆனையை விளம்பி தேரை அபிநயித்து இயற்றி
உற்றார் – (அதைமறந்து) வாயினால் ஆனையைக் காட்டப் போவதாகக்
கூறிவிட்டு (அதையும் மறந்து) அபிநயிக்கும்போது தேரை
அபிநயித்துக் காட்டினார்கள்.

—————

8831. அழுகுவர்; நகுவர்; பாடி ஆடுவர்; அயல் நின்றாரைத்
தொழுகுவர்; துயில்வர்; துள்ளித் தூங்குவர்; துவர் வாய்
இன் தேன்
ஒழுகுவர்; ஒல்கி ஒல்கி, ஒருவர்மேல் ஒருவர் புக்கு,
முழுகுவர், குருதி வாட் கண் முகிழ்த்து, இடை, மூரி போவர்.–13-

அழுகுவர்; நகுவர்; பாடி ஆடுவர்; – (கள்ளுண்டமயக்கத்தால்)
அழுவார்கள்; பின்பு உடனே சிரிப்பார்கள்; பின்பு விரும்பியாங்கு
பாடிக்கொண்டு ஆடுவார்கள்; அயல் நின்றாரைத் தொழுகுவர்
துயில்வர்; துள்ளித்தூங்குவர் – பின்பு அருகில் நின்றவர்களைக் கை
கூப்பித் தொழுவார்கள்; உடனே உறங்குவார்கள்; உடனே துள்ளி
எழுந்து சோர்வார்கள்; துவர்வாய் இன்தேன் ஒழுகுவர் ஒல்கி ஒல்கி
ஒருவர் மேல் ஒருவர்புக்கு முழுகுவர் – சிவந்தவாயில் உள்ள இனிய
தேன் போன்ற உமிழ்நீரை ஒழுகவிடுவர், உடனே தளர்ந்து தளர்ந்து
ஒருவர்மேல் ஒருவர்புகுந்து படிவார்கள்; குருதி வாட்கண் முகிழ்த்து,
இடை, மூரிபோவர் – இரத்தம் போன்று சிவந்த ஒளி வாய்ந்த
கண்ணை மூடிக்கொண்டு நெட்டை முரிப்பார்கள்.

————-

8832. உயிர்ப்புறத்து உற்ற தன்மை உணர்த்தினார், ‘உள்ளத்து
உள்ளது
அயிர்ப்பினில் அறிதிர்’ என்றே; அது களியாட்டம் ஆக,
செயிர்ப்பு அறு தெய்வச் சிந்தைத் திரு மறை
முனிவர்க்கேயும்,
மயிர்ப்புறம்தோறும் வந்து பொடித்தது, காம வாரி.–14-

‘உள்ளத்து உள்ளது அயிர்ப்பினில் அறிதிர்’ என்றே – ‘எம்
உள்ளத்தி்ல் உள்ள கருத்து (புணர்ச்சி விருப்பமே என்பது)
தெளிவாகவே தெரிந்து கொள்ளுங்கள்’ என்று; உயிர்ப்புறத்து
உற்றதன்மை உணர்த்தினார்கள் – தம் உடம்பில் பொருந்திய
செய்கையால் அப்பெண்கள் உணர்த்தினார்கள்; அது களியாட்டம்
ஆக – அக்குறிப்பு களியாட்டமாக வெளிப்பட; செயிர்ப்பு அறு
தெய்வச் சிந்தைத் திருமறை முனிவர்க்கேயும் – காமவெகுளி
மயக்கங்களின் நீங்கிய சிந்தையரான தெய்வத் தன்மை பொருந்திய
சிறந்த வேதமுணர்ந்த முனிவர்க்கும்; மயிர்ப்புறம் தோறும் வந்து காம
வாரி பொடித்தது – மயிர்க்கால் தோறும் காம உணர்ச்சியாகிய
வெள்ளம் தோன்றியது.

—————

8833. மாப் பிறழ் நோக்கினார்தம் மணி நெடுங் குவளை வாட் கண்
சேப்புற, அரத்தச் செவ் வாய்ச் செங் கிடை வெண்மை சேர,
காப்பு உறு படைக் கைக் கள்வ நிருதர்க்கு ஓர் இறுதி
காட்டி,
பூப் பிறழ்ந்து உருவம் வேறாய்ப் பொலிந்தது ஓர் தன்மை
போன்ற.–15-

மாப்பிறழ் நோக்கினார்தம் மணி நெடுங்குவளைவாட்கண் –
வண்டு பிறழ்வது போன்ற நோக்கத்தை உடைய கள்ளுண்ட
பெண்டிர்தம்கரிய நீண்ட குவளை மலர் போன்ற ஒளி பொருந்திய
கண்கள்; சேப்புற அரத்தச் செவ்வாய்ச் செங்கிடை வெண்மை
சேர – சிவக்கப்பெற்ற தன்மையும் செங்கழு நீர் மலர் போன்ற சிவந்த
வாயாகிய செங்கிடை வெண்ணிறம் சேரப் பெற்ற தன்னையும்;
கைப்படை காப்புஉறு கள்வநிருதர்க்கு ஓர் இறுதி காட்டி
– (அறத்தையன்றி) தம்கையகத்துள்ள படைக்கலன்களையே
காவலாகக் கொண்ட வஞ்சகராகிய அரக்கர்க்கு நேரவிருக்கின்ற
ஓரழிவினை முன்னர்த் தெரிவித்து; பூப்பிறழ்ந்து உருவம் வேறாய்ப்
பொலிந்தது ஓர்தன்மை போன்ற – மலர்கள் வேறுபட்டு வண்ணம்
வேறாக விளங்கியதோர் தன்மை போன்று தோன்றின.

—————–

8834. கயல், வரு காலன் வை வேல், காமவேள் கணை, என்றாலும்,
இயல் வருகிற்கிலாத நெடுங் கணார், இணை மென்
கொங்கைத்
துயல்வரு கனக நாணும், காஞ்சியும், துகிலும், வாங்கி,
புயல் வரு கூந்தல் பாரக் கற்றையின் புனையலுற்றார்.–16-

கயல் வருகாலன்வைவேல் காமவேள்கணை என்றாலும் –
கெண்டை மீனும், உயிரைக் கொள்ளவருகின்ற எமன் கையிலுள்ள
கூரிய வேற்படையும், மன்மதனுடைய கணையும் என உவமை
கூறினும்; இயல் வருகிற்கிலாத நெடுங்கணார் – ஒப்பமை
அமையாத நீண்ட கண்களையுடைய பெண்கள்; இணைமென்
கொங்கைத் துயல்வருகனக நாணும் காஞ்சியும், துகிலும் – தம்
இணையான மென்மை பொருந்திய தனங்களின் மேல் அசைகின்ற பொன் சரட்டையும், மேகலையையும், புடவையையும்;
வாங்கி, புயல்வரு கூந்தல் பாரக் கற்றையின் புனையலுற்றார் – கையில்
வாங்கி மேகம் போன்ற கூந்தலாகிய கனமுடைய கற்றையில் அணியத்
தொடங்கினார்கள்.

————-

வானரர் ஆர்ப்பொலியும் அதன் விளைவும்

8835. முத்து அன்மை மொழியல் ஆகா முகிழ் இள முறுவல்
நல்லார்,
இத் தன்மை எய்த நோக்கி, அரசு வீற்றிருந்த எல்லை,
அத் தன்மை அரியின் சேனை ஆர்கலி ஆர்த்த ஓசை
மத்தன் மெய் மயங்க வந்து, செவிதொறும் மடுத்தது அன்றே.–17-

முத்து அன்மை மொழியில் ஆகா முகிழ் இளமுறுவல் நல்லார்
– முத்து அல்ல எனக்கூறமுடியாத (முத்துக்களே எனத்தகும்) பற்கள்
தோன்ற முகிழ்க்கின்ற புன்முறுவலையுடைய பெண்கள்; இத்தன்மை
எய்த நோக்கி அரசு வீ்ற்றிருந்த எல்லை – கள் மயக்கத்தால்
இத்தன்மை அடைதலை விருப்பத்தோடு நோக்கிக் கொண்டு
(இராவணன்) அரசு வீற்றிருந்தபோது; அத்தன்மை அரியின் சேனை
ஆர்கலி ஆர்த்த ஓசை – அங்ஙனம் (அனுமான் கொணர்ந்த
மருந்தால்) உயிர் பெற்றெழுந்த வானரசேனையாகிய கடல் ஆரவாரித்த
ஓசை;மத்தன் மெய்மயங்க வந்து செவிதொறும் மடுத்தது –
காமமயக்கம் கொண்ட அவ்விராவணன் உடல் தளருமாறு வந்து
அவன் செவிகள் தோறும் நுழைந்தன.

—————–

8836. ஆடலும், களியின் வந்த அமலையும், அமிழ்தின் ஆன்ற
பாடலும், முழவின் தெய்வப் பாணியும், பவள வாயார்
ஊடலும், கடைக்கண் நோக்கும், மழலை வெவ் உரையும்,
எல்லாம்
வாடல் மென் மலரே ஒத்த-ஆர்ப்பு ஒலி வருதலோடும்.–18-

பவளவாயார் ஆடலும், அமிழ்தின் ஆன்ற பாடலும் – பவளம்
போன்ற வாயினை உடைய பெண்களின் ஆடலும், அமுதினும்
இனிதாய் அமைந்த அவர் பாடலும்; முழவின் தெய்வப்பாணியும் –
அப்பாடலுக்கேற்ற மத்தளத்தின் தெய்வத்தன்மை வாய்ந்த ஓசையும்;
களியின் வந்த அமலையும் – அவற்றைக் காண்போரின் களிப்பால்
வந்த ஆரவாரமும்;ஊடலும், கடைக்கண் நோக்கும் – (அம்மகளிர்
மீது ஆசை கொண்டு நோக்குவோர்க்கு அம்மகளிர் காட்டும்) ஊடலும்,
(அவ்வூடலால் அவ்வாடவர் வருத்தம் கண்டு இரங்கி அம்மகளிர்தம்
இசைவைத் தெரிவிக்கும்) கடைக்கண் நோக்கமும்; மழலைவெவ்
உரையும் எல்லாம் – அவ்வாடவரிடத்து அம்மகளிர் பேசும் காம
வெப்பத்தை மிகுவிக்கும் மழலைத் தன்மையுடைய உரையும் ஆகிய
அனைத்தும்;ஆர்ப்பு ஒல வருதலோடும் வாடல் மென்மலரே ஒத்த
– வானரர்தம் ஆரவாரப்பேரொலி வந்தவுடன் வாடிய மலர்போலப்
பொலிவழிந்து போயின.

—————

8837. தறி பொரு களி நல் யானை சேவகம் தள்ளி ஏங்க,
துறு சுவல் புரவி தூங்கித் துணுக்குற, அரக்கர் உட்க,
செறி கழல் இருவர் தெய்வச் சிலை ஒலி பிறந்தது அன்றே-
எறி கடல் கடைந்த மேல்நாள், எழுந்த பேர் ஓசை என்ன.–19-

தறி பொருகளி நல்யானை சேவகம் தள்ளி ஏங்க –
கட்டுத்தறியையும் முறிக்கின்ற மதக்களிப்பினையுடைய நல்ல
யானைகள் தாம் படுத்த விடங்களில் திடுக்குற்று வருந்தவும்; துறுசுவல்
புரவி தூங்கித் துணுக்குற, அரக்கர் உட்க – நெருங்கிய பிடரி
மயிரினை உடைய குதிரைகள் துணுக்குற்றுச் சோரவும் காலாள்
வீரராகிய அரக்கர்கள் அஞ்சவும்; ஏறிகடல் கடைந்த மேல்நாள்
எழுந்தபேர் ஓசை என்ன – அலைகள் வீசுகின்ற பாற்கடலைக்
கடைந்த முந்காலத்து எழுந்த பேரொலி போல; செறிகழல் இருவர்
தெய்வச் சிலை ஒலி பிறந்தது – வீரக்கழல் அணிந்த
இராமஇலக்குவரின் தெய்வத்தன்மை வாய்ந்த வில்லினின்றும் நான்
ஒலி பிறந்தது. அன்றெ – அசை.நிலையும்” (தொல்-பொருள். புறத்12) இதற்கு, “குதிரையானன்றித்
தேர்தானே செல்லாமையின் தேர்க்கு மறம் இன்றென்று அது
கூறாராயினர்” என்ற நச்சினார்க்கினியர் குறிப்பும் இங்கு காணத்தகும்.

————

8838. முத்து வாள் முறுவல் மூரல் முகத்தியர், முழுக் கண்
வேலால்
குத்துவார், கூட்டம் எல்லாம் வானரக் குழுவின் தோன்ற,
மத்து வார் கடலின் உள்ளம் மறுகுற, வதனம் என்னும்
பத்து வாள் மதிக்கும், அந் நாள், பகல் ஒத்தது இரவும்,
பைய.–20-

முழுக்கண் வேலால் குத்துவார் – இலக்கணம் முழுமையும் பெற்ற
வேற்படைபோன்ற கண்களால் குத்துகின்றவர்களாகிய; முத்துவாள்
முறுவல் மூரல் முகத்தியர் கூட்டம் எல்லாம் – முத்துக்களைப்
போன்ற பற்களைக் காட்டி ஒளி பொருந்திய சிரிப்பினைச் சிந்துகின்ற
நகைமுகத்தினை உடைய களியாட்டு மகளிர் கூட்டமெல்லாம்;
வானரக்குழுவின் தோன்ற – இப்போதுவானரக்கூட்டம் போல
(வெறுக்கத்தக்கனவாகத்) தோன்றவும்; மத்துவார்கடலின் உள்ளம்
மறுகுற – மந்தரமலையாகிய மத்தாற் கடையப் பெற்ற கடலைப்போல
உள்ளம் கலங்கவும்; வதனம் என்னும் பத்துவாள் மதிக்கும் –
இராவணனது முகம் என்கின்ற பத்து ஒளி வாய்ந்த மதிகளுக்கும்
அந்நாள் பகல் ஒத்தது இரவும் பைய – அந்நாள் இரவு
(பொலிவழியச் செய்த) பண்பினால் பகலை ஒத்தது.

————

8839. ஈது இடை ஆக, வந்தார், அலங்கல்மீது ஏறினார்போய்
ஊதினார், வேய்கள், வண்டின் உருவினார், உற்ற
எல்லாம்;
‘தீதுஇலர், பகைஞர்’ என்ன, திட்கென்ற மனத்தன்,
தெய்வப்
போது உகு பந்தர்நின்று, மந்திரத்து இருக்கை புக்கான்.–21-

ஈது இடைஆக வேய்கள் வண்டின் உருவினார் வந்தார் –
இந்நிகழ்ச்சிக்கு இடையே ஒற்றர்கள் வண்டின் உருவம் உடையவராய்
வந்து;அலங்கல் மீது ஏறினார்போய் உற்ற எல்லாம் ஊதினார் –
இராவணன் மாலைமீது ஏறிப் போய்ப் போராட்டத்தில் நிகழ்ந்த
எல்லாவற்றையும் (அவன் செவியில்) கூறியவர்களாய்; ‘பகைஞர் தீது
இலர்’ என்ன திட்கென்ற மனத்தன் – ‘பகைவர்கள் மரணமென்னும்
தீது இலராயினர்’ என்று கூற ‘திக்’கென்ற மனத்தனாகிய இராவணன்;
தெய்வப்போது உகுபந்தர் நின்று மந்திரத்து இருக்கை புக்கான் –
கற்பகம் முதலிய தெய்வமலர்கள் சிந்துகின்ற பந்தலில் இரந்து
ஆலோசனைக்குரிய மண்டபத்தில் புகுந்தான்.

—————

மிகைப் பாடல்கள்

வடித்திடும் அமுதத் தேறல் மாந்தினர் எவரும்; உள்ளம்
பிடித்தது களிப்பின் பெற்றி; பிறந்தது காம வேகம்;
எடுத்தனர், மகர யாழின் இன் இசை இனிமையோடு;
நடித்தனர், நங்கைமார்கள் நாடகத் தொகையின் பேதம். 3-1

—————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ கம்ப ராமாயணம்/யுத்த காண்டம்/23–மருத்துமலைப் படலம்–

November 2, 2020

உணவுகொணர்ந்து, பாசறையில் சேர்த்த வீடணன் களங்கண்டு மயங்கி
வீழ்தல்
8703.
போயினள் தையல்; இப்பால், ‘புரிக’ எனப் புலவர் கோமான்
ஏயின கருமம் நோக்கி, எய்திய இலங்கை வேந்தன்,
மேயின உணவு கொண்டு, மீண்டு, அவை உறையுள் விட்ட
ஆயின ஆக்கி, தான் வந்து, அமர்ப் பெருங் களத்தன்
ஆனான்.–1-

தையல்போயினள் – சீதை அசோகவனத்திற்குப் போய்ச்
சேர்ந்தாள்; இப்பால், ‘புரிக’ என – இங்கே, இராமபிரான்
‘செய்க’ என; புலவர் காமான் ஏயின கருமம் நோக்கி எய்திய –
தேவர்தலைவனாகிய இராமபிரான் தன்னை நோக்கி ஏவிய பணியைச்
செய்யக்கருதிச் சென்ற; இலங்கை வேந்தன் – வீடணன்; மேயின
உணவு கொண்டு மீண்டு – பொருந்திய உணவுப் பொருள்களைக்
கொண்டு திரும்பி; அவை உறையுள்விட்ட ஆயின ஆக்கி –
அவற்றைப் பாசறையுள் சேர்த்துவிட்டு; தான் வந்து, அமர்ப்பெருங்
களத்தன் ஆனான் – தான் பெரும் போர்க்களத்திற்கு வந்து
சேர்ந்தான்.

———–

8704.
நோக்கினான்; கண்டான், பண்டு, இவ் உலகினைப் படைக்க
நோற்றான்
வாக்கினால் மாண்டார் என்ன, வானர வீரர் முற்றும்
தாக்கினார் எல்லாம் பட்ட தன்மையை; விடத்தைத் தானே
தேக்கினான் என்ன நின்று, தியங்கினான், உணர்வு
தீர்ந்தான்.–2-

பண்டு இவ்வுலகினைப் படைக்கநோற்றான்-(போர்க்களம் போந்த
வீடணன்) ஆதியில் இவ்வுலகங்களையெல்லாம் படைக்கும்
பேறுபெற்றவனாகிய பிரமதேவனுடைய; வாக்கினால் மாண்டார்
என்ன – சாபச்சொல்லால் இறந்து பட்டனர் என்னும்படியாக;
வானரவீரர் முற்றும் தாக்கினார் – வானரவீரர் அனைவரும்
(பிரம்மாத்திரத்தால்) தாக்கப்பெற்றவராய்; எல்லாம் பட்ட தன்மையை
நோக்கினான் கண்டான் – எல்லோரும் இறந்துபட்ட தன்மையைத்தன்
கண்களால் கண்டான்; விடத்தைத்தானே தேக்கினான் என்ன –
(கண்டு) நஞ்சினைத் தானே அருந்தினான் என்னுமாறு; நின்று,
தியங்கினான் உணர்வு தீர்ந்தான் – நின்று மயங்கியவனாய் உணர்வு
நீங்கினான்.

————–

8705.
விளைந்தவாறு உணர்கிலாதான், ஏங்கினான்; வெதும்பினான்;
மெய்
உளைந்து உளைந்து உயிர்த்தான், ‘ஆவி உண்டு, இலை’
என்ன, ஓய்ந்தான்;
வளைந்த பேய்க் கணமும் நாயும் நரிகளும் இரிய, வந்தான்;
இளங் கிளையோடும் சாய்ந்த இராமனை இடையில்
கண்டான்.-3-

விளைந்தவாறு உணர்கிலாதான் – (பிரம்மாத்திரத்தால்) நிகழ்ந்ததை
உணரமுடியாத வீடணன்; ஏங்கினான். வெதும்பினான மெய் உளைந்து
உளைந்து உயிர்த்தான் – ஏக்கங்கொண்டு, மனம் வெதும்பி உடம்பு
வருந்தி வருந்தி பெருமூச்சுவிட்டு; ‘ஆவிஉண்டு, இலை’ என
ஓய்ந்தான் – ‘உயிர் உண்டோ,’ இல்லையோ’ என்னும் படி
ஓய்வுற்றவனாய்; வளைந்த பேய்க்கணமும் நாயும் நரிகளும் இரிய –
(பின்புசற்று தேறி) பிணங்களைச் சூழ்ந்து கொண்டிருந்த பேய்க்
கணமும் நாய்க்கூட்டமும், நரிக்கூட்டமும் அஞ்சி ஓடுமாறு; வந்தான் –
(பிணங்களுக்கிடையே) நடந்துவந்து; இளங்கிளையோடும் சாய்ந்த
இராமனை இடையில் கண்டான் – இளையவனாகிய இலக்குவனோடும்
தரையில் சாய்ந்து கிடக்கும் இராமனை இடையே பார்த்தான்.

————

வீடணன், இராமன் மேனியில் வடு இன்மை கண்டு துயரம் தணிதல்

8706.
‘என்பு என்பது, யாக்கை என்பது, உயிர் என்பது, இவைகள்
எல்லாம்,
பின்பு என்ப அல்ல; என்றும் தம்முடை நிலையின் பேரா;
முன்பு என்றும் உளது என்றாலும், முழுவதும்
தெரிந்தவாற்றால்,
அன்பு என்பது ஒன்றின் தன்மை அமரரும்
அறிந்ததுஅன்றே.–4-

என்பு என்பது யாக்கை என்பது உயிர் என்பது இவைகள
்எல்லாம்- எலும்பு என்பதும் உடல் என்பதும் (அதனோடியைந்த) உயிர்
என்பதும் ஆகிய இவையெல்லாம்; பின்பு என்ப அல்ல முன்பு –
(அன்பினை நோக்கப்) பிற்பட்டது என்பதல்லாமல், (அவ்வன்பு
விளங்கித் தோன்றுவதற்கேதுவாக, அதன்) முன்பே தோன்றி இயைந்து
நிற்பனவாகி; என்றும் தம்முடை நிலையின் பேரா – எக்காலத்தும்
(அன்பு விளங்கித் தோன்றுவதற்கேதுவாக அதன் முன்பே
தோன்றுதலாகிய) தம்முடைய நிலையில் மாறுத லின்றி நிற்கின்றன; என்றும் உளதென்றாலும் – இப்படிப்பட்ட
தொடர்பு (உடலுயிர் ஆகியன அன்பு தோன்றி விளங்குதற்குக்
காரணமாய் முன்தோன்றுவதும், பின்பு, அன்பு அவை மாட்டுத்
தோன்றி விளங்குவது மாகிய தொடர்பு) என்றும் உள்ள தென்றாலும்;
முழுவதும் தெரிந்தவாற்றால் – முழுவதுமாக ஆராய்ந்து பார்த்தால்;
அன்பு என்பது ஒன்றின் தன்மை – அன்பு என்பதாகிய ஒன்றனுடைய
(உடலுயிர் ஆகியவற்றைத் தளிர்ப்பச் செய்தலும்,
சிதைப்பச்செய்தலுமாகிய) இருவேறுபட்ட தன்மையினை; அமரரும்
அறிந்ததன்றே – தேவர்களும் அறிந்தவர் களல்லவே?

—————-

8707.
‘ஆயினும், இவருக்கு இல்லை அழிவு’ எனும் அதனால் ஆவி
போயினது இல்லை; வாயால் புலம்பலன், பொருமி; பொங்கித்
தீயினும் எரியும் நெஞ்சன் வெருவலால், தெரிய நோக்கி.
‘நாயகன் மேனிக்கு இல்லை வடு’ என நடுக்கம் தீர்ந்தான்.–5-

ஆயினும் ‘இவருக்கில்லை அழிவு’ எனும் அதனால் – (வீடணன்
அத்தகைய) பேரன்புடையவனாயினும், “இவ்விராம இலக்குவர்க்கு
அழிவு இல்லை” என்கின்ற உறுதியான நம்பிக்கை இருந்தமையால்;
ஆவிபோயினது இல்லை – அவன் ஆருயிர் பிரியவில்லை; வாயால்
புலம்பலன் பொருமி பொங்கி – வாயால் பல சொல்லிப் புலம்பவும்
இல்லை, உள்ளுக்குள்ளே பொருமிக் கொண்டு துன்பம் கிளரப் பெற்று;
தீயினும் எரியும் நெஞ்சன் – நெருப்பினும் மிக்குக் கொதித்து எரிகின்ற
நெஞ்சினிடம் மிக்குத்தோன்றும் அச்சத்தால்; தெரியநோக்கி –
அவர்களுடைய வீ்ழ்ந்து கிடக்கின்ற உடலங்களைத் தெளிவாகப்
பார்த்துவிட்டு; ‘நாயகன் மேனிக்கு இல்லை வடு’ – ‘தலைவனாகிய
இராமன் மேனிக்கு (அம்பினாலாய) வடு ஏற்படவில்லை’; என நடுக்கம்
தீர்ந்தான் – என அறிந்து மனநடுக்கம் நீங்கப் பெற்றவனானான்.

————

வீடணன் துயர்தீர்க்கும் வழி ஆராய்தல்

8708.
அந்தணன் படையால் வந்தது என்பதும், ஆற்றல் சான்ற
இந்திரசித்தே எய்தான் என்பதும், இளவற்கு ஆக
நொந்தனன் இராமன் என்னும் நுண்மையும், நொய்தின்
நோக்கி,
சிந்தையின் எண்ணி எண்ணி, தீர்வது ஓர் உபாயம்
தேர்வான்.–6-

அந்தணன் படையால் வந்தது என்பதும் – (இராமலக்குவர்
முதலானோர் அடைந்த இத்துன்பம்) பிரம்மாத்திரத்தால் ஏற்பட்டது
என்பதனையும்; ஆற்றல் சான்ற இந்திரசித்தே எய்தான் என்பதும் –
ஆற்றல்மிக்க இந்திரசித்தே அதனை எய்தவன் என்பதனையும்; இளவற்காக நொந்தனன் இராமன் என்னும்
நுண்மையும் – இலக்குவனுக்காக இராமன் வருந்தி
மூச்சற்றுக்கிடக்கின்றான் என்னும் நுட்பத்தையும்; நொய்தின் நோக்கிச்
சிந்தையின் எண்ணி, எண்ணி – விரைவில் அறிந்து கொண்டு
(இதனைத் தீர்த்தற்காம் உபாயம் பலவற்றையும்) சிந்தையினால்
எண்ணி எண்ணி; தீர்வது ஓர் உபாயம் தேர்வான் – இத்துயர்
தீர்வதற்குரிய உபாயம் ஒன்றனை ஆராய்வானானான்.

———–

8709.
‘உள்ளுறு துன்பம் ஊன்ற, உற்றனன் உறக்கம் அன்றோ?
தெள்ளிதின் உணர்ந்த பின்னை, சிந்தனை தெரிவென்
அன்றே;
வள்ளலோ, தம்பி மாள வாழ்கிலன்; மாய வாழ்க்கைக்
கள்ளனோ வென்றான்?’ என்றான், மழை எனக் கலுழும்
கண்ணான்.–7-

உள்ளுறு துன்பம் ஊன்ற – “உள்ளத்தில் உற்ற பெருந்துயரம்
பதிந்துள்ளமையினால்; உற்றனன் உறக்கம் அன்றோ – இராமன்
மூர்ச்சை உற்றான் அன்றோ?; தெள்ளிதின் உணர்ந்த பின்னை –
தெளிவாக (அப்பிரான்) உணர்வு நிலைக்கு வந்த பின்னால்; சிந்தனை
தெரிவென் அன்றே – (அவ்விராமனுடைய) சிந்தனை (எத்தகையதாக
இருக்கும் என்பதனை) அறிவேன் அன்றோ! வள்ளலோ, தம்பிமாள
வாழ்கிலன் – வள்ளல் தன்மையுடைய இராமனோ தம்பி இறந்தபின்
தான் வாழமாட்டான் (இதுவே மூர்ச்சை தெளிந்தபின் அவனது
முடிவாக இருக்கும்); மாய வாழ்க்கைக் கள்ளனோ வென்றான் –
(அங்ஙனமாயின்) மாயத் தன்மையை உடைய கள்வனாகிய
இந்திரசித்தோ வெற்றி பெற்றவனாவான்?” என்றான் மழையெனக்
கலுழும் கண்ணான் – எனத் தனக்குள் கூறிக் கொண்டவனாகிய
வீடணன் (பெருந்துன்பமுற்று) மழைபோல் நீர்சொரியுங் கண்களை
உடையவனானான்.

————–

8710.
‘பாசம் போய் இற்றாற் போலப் பதுமத்தோன் படையும்
இன்னே
நாசம் போய் எய்தும்; நம்பி தம்பிக்கு நடுக்கம் இல்லை;
வீசும் போர்க் களத்து வீ்ழ்ந்த சேனையும் மீளும்; வெய்ய
நீசன் போர் வெல்வது உண்டோ?’ என்று உளம் நிலையில்
நின்றான்.–8-

பாசம் போய் இற்றாற் போல – (முன்னம் இந்திரசித்து விடுத்த)
நாகபாசம் அழிந்து போனதுபோல; பதுமத்தோன்படையும் இன்னே
நாசம் போய் எய்தும் – பிரமதேவனுடைய கணையும் இப்பொழுதே
நாசமடையும்; நம்பிதம்பிக்கு நடுக்கம் இல்லை – இராமபிரானுடைய
தம்பிக்கும் அழிவில்லை; வீசும் போர்க்களத்து வீழ்ந்த சேனையும்
மீளும் – (படைக்கலங்கள்) எறியப்படும் போர்க்களத்திலே
வீழ்ந்துபட்ட சேனைகளும் உயிர்பெற்றெழும்; வெய்ய நீசன் போர்
வெல்வதுண்டோ – கொடியவனான அரக்கன் போரில்
வெற்றிபெறுவதுண்டாமோ? என்று உளம் நிலையில் நின்றான்- என்று
(எண்ணிய) வீடணன் மனம் தடுமாறாமல் ஒருநிலையில் நிற்கப்
பெற்றான்.

————-

இறவாதார் இருப்பரோ?’ என வீடணன் தேடுதல்

8711.
‘உணர்வதன்முன்னம், இன்னே உற்றுழி உதவற்கு ஒத்த
துணைவர்கள், துஞ்சல் இல்லார், உளர்எனின் துருவித்
தேடிக்
கொணர்குவென், விரைவின்’ என்னா, கொள்ளி ஒன்று
அம்கைக் கொண்டான்
புணரியின் உதிர வெள்ளத்து, ஒரு தனி விரைவின்
போனான்.–9-

உணர்வதன் முன்னம் – “இராமன் உணர்வு வந்து எழுவதற்கு முன்;
இன்னே உற்றுழி உதவற்கு ஒத்த துணைவர்கள் – இப்பொழுது
துன்பம் உற்றபோது உதவுவதற்குரிய துணைவர்கள்; துஞ்சல் இல்லார்
உளர் எனின் – இறவாதவர்கள் உளராயின்; ‘துருவித் தேடிக்
கொணர்குவென் விரைவின்’ என்னா – ஆராய்ந்து தேடி
அழைத்துக்கொண்டு விரைவில் வருவேன்” என்று; கொள்ளி ஒன்று
அம்கைக் கொண்டான் – கொள்ளிக்கட்டை ஒன்றை கையிலே
கொண்டவனாகி; உதிரப் புணரியின் வெள்ளத்து -இரத்தக் கடற்பெருக்கிலே; ஒரு தனி விரைவிற்போனான் –
தன்னந்தனியனாய் விரைந்து போனான்.

————

வீடணன் அனுமனைக் காணல்

8712.
வாய் மடித்து, இரண்டு கையும் முறுக்கி, தன் வயிரச்
செங்கண்
தீ உக, கனகக் குன்றின் திரண்ட தோள் மழையைத் தீண்ட
ஆயிர கோடி யானைப் பெரும் பிணத்து அமளி மேலான்,
காய் சினத்து அனுமன் என்னும் கடல் கடந்தானைக்
கண்டான்.-10-

வாய் மடித்து இரண்டு கையும் முறுக்கி – தன்வாயை மடித்துக்
கொண்டும், இரண்டு கைகளையும் முறுக்கிக் கொண்டும்; வயிரச்
செங்கண் தீ உக – பகைமை உணர்ச்சி கொண்ட சிவந்த
விழிகளிலிருந்து நெருப்புப் பொறி சிதற; கனகக்குன்றின் திரண்ட
தோள்மழையைத் தீண்ட – மேருமலையை ஒத்த திரண்ட புயம்
மேகமண்டலத்தைச் சென்றுதொட; ஆயிர கோடி யானைப் பெரும்
பிணத்து அமளி மேலான் – ஆயிரங்கோடி யானைகளின் மிக்க
பிணங்களாகிய படுக்கைமேல் கிடப்பவனாகிய; காய்சினத்து அனுமன்
என்னும் கடல் கடந்தானைக் கண்டான் – கொல்லுங்
கோபத்தையுடைய அனுமன் என்கின்ற கடல் கடந்த வீரனைக்
கண்டான்.

————

8713.
கண்டு, தன் கண்களூடு மழை எனக் கலுழி வார,
‘உண்டு உயிர்’ என்பது உன்னி, உடற் கணை ஒன்று ஒன்று
ஆக,
விண்டு உதிர் புண்ணின்நின்று மெல்லென விரைவின் வாங்கி,
கொண்டல் நீர் கொணர்ந்து, கோல முகத்தினைக் குளிரச்
செய்தான்.–11-

கண்டு, தன் கண்களூடு மழை எனக் கலுழி வார – (அங்ஙனம்
வீடணன் அனுமனை) கண்ணுற்று, (அவன் நிலையினை உணர்ந்து)
தனது விழிகளின் வழியாக மழை போன்று (கண்ணீர்ப்) பெருக் கெழுதலால்;
‘உயிர்உண்டு’ என்பது உன்னி – (இவனுக்கு) உயிர்
உள்ளது என்று அனுமானித்து; உடல் விண்டு உதிர் புண்ணின் நின்று
– உடல் பிளவுபட்டு உதிரம் ஒழுகா நின்ற புண்களிலிருந்து; கணை
ஒன்று ஒன்று ஆக மெல்லென விரைவின் வாங்கி – அம்புகளை
ஒவ்வொன்றாக மென்மையாகவும், விரைவாகவும் எடுத்து; கொண்டல்
நீர் கொணர்ந்து கோலமுகத்தினைக் குளிரச் செய்தான் –
மேகத்தினின்றும் தண்ணீரைக் கொண்டுவந்து (அவ்வனுமனுடைய)
அழகிய முகத்தைக் குளிருமாறு செய்தான்.

————–

உணர்வு பெற்ற அனுமன், இராமனைப் பற்றி உசாவி அறிதல்

8714.
உயிர்ப்பு முன் உதித்த பின்னர், உரோமங்கள் சிலிர்ப்ப
ஊறி
வியர்ப்பு உளதாக, கண்கள் விழித்தன, மேனி மெல்லப்
பெயர்த்து, வாய் புனல் வந்து ஊற, விக்கலும் பிறந்ததாக,
அயர்த்திலன் இராம நாமம், வாழ்த்தினன்; அமரர்
ஆர்த்தார்.–12

உயிர்ப்பு முன் உதித்த பின்னர் உரோமங்கள் சிலிர்ப்ப-சுவாசம்
முன்னே வந்தபின்பு மயிர்க்கூச்செறிய; ஊறிவியர்ப்பு உளதாக கண்கள்
விழித்தன – வியர்வை நீர் ஊறி வியர்வை உண்டாகக் கண்கள்
திறக்கப்பெற்றன; மேனிமெல்லப் பெயர்த்து வாய்புனல் வந்து ஊற –
உடல்மெல்ல அசைய வாயில் நீர் வந்து ஊறிட; விக்கலும் பிறந்த தாக
– விக்கலும் எழுந்ததாக; அயர்த்திலன் ‘இராம நாமம்’ வாழ்த்தினன்-
(அந்த நிலையிலும்) மறவாதவனாய் இராமநாமம் கூறி வாழ்த்தினான்;
அமரர் ஆர்த்தார் – அதுகண்டு தேவர்கள் ஆரவாரித்தனர்.

—————-

8715.
அழுகையோடு உவகை உற்ற வீடணன் ஆர்வம் கூர,
தழுவினன் அவனை, தானும் அன்பொடு தழுவி, ‘தக்கோய்!
வழுஇலன் அன்றே, வள்ளல்?’ என்றனன்; ‘வலியன்’
என்றான்;
தொழுதனன், உலகம் மூன்றும் தலையின்மேல் கொள்ளும்
தூயான்.–13-

அழுகையோடு உவகை உற்ற வீடணன் – அழுகையோடு
மகிழ்ச்சியும் அடைந்த வீடணன்; ஆர்வம் கூர, தழுவினன் அவனை
– ஆர்வம் பொங்க அவ்வனுமனைத் தழுவிக்கொண்டான்; தானும்
அன்பொடு தழுவி – அனுமன் தானும் வீடணனை அன்போடு தழுவி;
‘தக்கோய்! வழு இலன் அன்றே வள்ளல்?’ என்றனன் –
‘தகுதியுடையோனே! வள்ளலாகிய இராமன் தீங்கில்லாது உளன்
அன்றே?’ என்று வினவினான்; ‘வலியன்’ என்றான் – (வீடணனும்)
‘வழுவின்றி வலியனாக உளன்’ என விடை கூறினான்; உலகம்
மூன்றும் தலையின்மேல் கொள்ளும் தூயோன் தொழுதனன் –
(அதுகேட்டு மகிழ்ச்சிப் பெருக்கால்) மூவுலகத்தோரும்
தலைமேற்கொண்டு போற்றத்தக்க தூய்மை உடைய அனுமன்
இராமனைத் தொழுதனன்.

————

இருவரும் சாம்பனைத் தேடிச் சென்று அடைதல்

8716.
அன்பு தன் தம்பிமேல் ஆத்து, அறிவினை மயக்க, ஐயன்,
துன்பொடும் துயிலன் ஆனான்; உணர்வுஇனித் தொடர்ந்த
பின்னே
என் புகுந்து எய்தும் என்பது அறிகிலென்!’ என்றலோடும்,
‘தன் பெருந் தகைமைக்கு ஒத்த சாம்பன் எத் தலையன்?’
என்றான். –14-

தன் தம்பி மேல் அன்பு ஆத்து அறிவினை மயக்க- ‘தன் தம்பி
மேல் கொண்ட அன்பு தனது அறிவினை மயக்கியதால்; ஐயன்
துன்பொடு துயிலன் ஆனான் – இராமன் துன்பத்தோடு கலந்த
துயிலுடையவனாக (மூர்ச்சித்தவனாக) ஆனான்; இனி உணர்வு
தொடர்ந்த பின்னே – இனி அவனுக்கு உணர்வு வந்தபின்; என்புகுந்து
எய்தும் என்பது அறிகிலென் என்றலோடும் – என்ன நடக்கும்
என்பதனை அறியேன்’ என்று வீடணன் கூறியவுடன்; தன்
பெருந்தகைமைக்கு ஒத்த சாம்பன் எத்தலையன் என்றான் –
(அனுமன் வீடணனை நோக்கி) தன் பெருந்தகைமைக்கு ஒத்த
(மூப்பினை உடைய) சாம்பன் எவ்விடத்து உள்ளான்!’ என்று
வினவினான்.

———-

8717.
‘அறிந்திலென் அவனை; யாண்டும் கண்டிலென்; “ஆவி
யாக்கை
பிறந்திலன், உளன்” என்று ஒன்றும் தெரிந்திலென்,
பெயர்ந்தேன்’ என்று
செறிந்த தார் நிருதர் வேந்தன் உரைசெய, காலின் செம்மல்,
‘இறும் திறம் அவனுக்கு இல்லை; நாடுதும், ஏகி’ என்றான்.-15-

யாண்டும் கண்டிலென் அவனை அறிந்திலென் – அச்சாம்பனை
எவ்விடத்தும் கண்டிலேன், ஆதலால் அவனைப் பற்றி ஒன்றும்
அறிந்திலேன்; ‘ஆவி யாக்கை பிறிந்திலன்; உளன்’ என்று ஒன்றும்
தெரிந்திலென் பெயர்ந்தேன் – உயிர் உடம்பினின்றும் நீங்கப்
பெற்றானோ அன்றி உயிரோடு உளனோ என ஒன்றும்
தெரியாதவனாய் வந்துள்ளேன்; என்று செறிந்ததார் நிருதர் வேந்தன்
உரைசெய – என் நெருங்கிய மலர்மாலையை அணிந்த அரக்கர்
வேந்தனாகிய வீடணன் கூற! காலின் செம்மல், ‘இறும்திறம்
அவனுக்கு இல்லை,’நாடுதும், ஏகி,’ என்றான் – காற்றின்
மகனான அனுமன், ‘இறக்கும் தன்மை அவனுக்கு இல்லை. ஆதலால்,
நாம் சென்று அவனைத் தேடுவோம்’ என்று கூறினான்.

————

8718.
‘அன்னவன்தன்னைக் கண்டால், ஆணையே, அரக்கர்க்கு
எல்லாம்
மன்னவ! நம்மை ஈண்டு வாழ்விக்கும் உபாயம் வல்லன்’
என்னலும், ‘உய்ந்தோம், ஐய! ஏகுதும் விரைவின்’ என்றான்;
சில் நெறி இருளில் சென்றார்; சாம்பனை விதியில்
சேர்ந்தார்.-16-

அரக்கர்க்கு எல்லாம் மன்னவா!-“அரக்கர்க்கு எல்லாம் அரசனே!;
அன்னவன் தன்னைக் கண்டால் – அந்த சாம்பனைக் கண்டால்;
ஈண்டு நம்மை வாழ்விக்கும் உபாயம் வல்லன் – இப்பொழுது நம்மை
வாழ்விக்கும் உபாயங் கூறுதலில் வல்லவன் அவனே; ஆணையே
என்னலும் – இது உறுதியே” என்று (அனுமன்) கூறியதும்; ‘ஐய!
உய்ந்தோம் ஏகுதும் விரைவின்’ என்றான் – (வீடணன்) ஐய,
வாழ்ந்தோம் விரைவாகச் செல்லுவோம் என்றான்; சில்நெறி இருளில்
சென்றார் – (இருவரும்) சிறிது தொலைவு இருளில் சென்றார்கள்;
சாம்பனை விதியில் சேர்ந்தார் – சாம்பனை ஆகூழ் கூட்டுவிக்கச்
சென்று சேர்ந்தனர்.

—————

8719.
எரிகின்ற மூப்பினாலும், ஏவுண்ட நோவினாலும்,
அரிகின்ற துன்பத்தாலும், ஆர் உயிர்ப்பு அடங்கி, ஒன்றும்
தெரிகின்றது இல்லா மம்மர்ச் சிந்தையன்எனினும், வீரர்
வருகின்ற சுவட்டை ஓர்ந்தான், செவிகளால்-வயிரத்
தோளான்.-17-

எரிகின்ற மூப்பினாலும் – வருத்தத்திற்குக் காரணமான
கிழத்தன்மையாலும்; ஏவுண்ட நோவினாலும் – அம்புகள்
தைத்ததனாலான துன்பத்தாலும்; அரிகின்ற துன்பத்தாலும் –
(நண்பர்களெல்லாம் இறந்துபட்டனரே என எண்ணுவதால்)
நெஞ்சம் புண்ணாகும் நெடுந்துயராலும்; ஆர் உயிர்ப்பு அடங்கி –
அருமையான மூச்சு அடங்கப் பெற்று; ஒன்றும் தெரிகின்றது இல்லா –
ஒன்றும் தெரியவியலாத; மம்மர்ச் சிந்தையன் எனினும் – மயக்கம்
மிக்க மனத்தான் என்றாலும்; வயிரத் தோளான் – வயிரம் போன்ற
தோள்களை உடைய சாம்பவன்; வீரர் வருகின்ற சுவட்டை
செவிகளால் ஓர்ந்தான் – வீரர் இருவர் வருகின்ற அடையாளத்தைக்
(காலடி ஓசையைக்) காதுகளால் ஓர்ந்து அறிந்தான்.

———

8720.
‘அரக்கனோ? என்னை ஆளும் அண்ணலோ?
அனுமன்தானோ?
இரக்கம் உற்று அருள வந்த தேவரோ? முனிவரேயோ?
வரக் கடவார்கள், அல்லர்; மாற்றலர், மலைந்து போனார்;
புரக்க உள்ளாரே!’ என்னாக் கருதினன், பொருமல்
தீர்ந்தான்.-18-

அரக்கனோ? என்னை ஆளும் அண்ணலோ? அனுமன
தானோ?-வீடணனோ அல்லது என்னை ஆட்கொண்ட இராமனோ?
அல்லது அனுமன்தானோ?; இரக்கம் உற்று அருள வந்த தேவரோ
முனிவரேயோ? – இரக்கங்கொண்டு (இத்துன்பத்தை நீ்க்கி) அருள்
செய்ய வந்த தேவரோ? முனிவர்களோ?; மாற்றலர் மலைந்து போனார்
வரக்கடவார்கள் அல்லர் – பகைவர்கள் போர் செய்து வெற்றியுடன்
சென்றார்களாதலின், அவர்கள் (இவ்விரவில்) வரமாட்டார்கள்; ‘புரக்க
உள்ளாரே’ என்னாக் கருதினன் பொருமல் தீர்ந்தான் – (எனவே)
‘இப்போது வருபவர்கள் எம்மைக் காப்பாற்றும் தன்மைஉள்ள
அன்பரே ஆவர்’ என எண்ணி மனத்துயர் நீங்கப் பெற்றவனானான்.

————-

அனுமன் வருகையால் சாம்பன் மகிழ்தல்
8721.
வந்து அயல் நின்று, குன்றின் வார்ந்து வீழ் அருவி மானச்
சிந்திய கண்ணின் நீரர் ஏங்குவார்தம்மைத் தேற்றி,
‘அந்தம் இல் குணத்திர்! யாவிர், அணுகினிர்?’ என்றான்;
‘ஐய!
உய்ந்தனம்; உய்ந்தோம்!, என்ற வீடணன் உரையைக
கேட்டான்.–19-

வந்து அயல்நின்று – வந்து தன்பக்கத்தில் நின்று கொண்டு;
குன்றின் வார்ந்து வீழ் அருவிமானச் சிந்திய கண்ணின் நீரர்-
குன்றிலுருகி வீழ்கின்ற அருவிபோலச் சிந்திய கண்ணீரை
உடையவராய்; ஏங்குவார் தம்மைத் தேற்றி -ஏங்குகின்றவர்களைத்
தேற்றி; ‘அந்தமில் குணத்திர் யாவிர் அணுகினிர்?’ என்றான் –
முடிவில்லாத குணத்தை உடையவர்களே! என்னன அணுகிய நீவிர்
யாவிர்? என வினவிய சாம்பவன்; ஐய, ‘உய்ந்தனம்! உய்ந்தோம்!!’
என்ற வீடணன் உரையைக் கேட்டான் – ‘ஐய’, வாழ்ந்தோம்,
வாழ்ந்தோம் என்ற வீடணன் சொல்லைக் கேட்டான்.

————–

8722.
‘மற்று அயல் நின்றான் யாவன்?’ என்ன, மாருதியும்,
‘வாழி!
கொற்றவ! அனுமன் நின்றேன்; தொழுதனென்’ என்று
கூற,
‘இற்றனம், ஐய! எல்லோம் எழுந்தனம், எழுந்தேம்!’
என்னா,
உற்ற பேர் உவகையாலே, ஓங்கினான், ஊற்றம் மிக்கான்.-20-

‘மற்று அயல் நின்றான் யாவன்? என்ன – (வீடணனை அவன்
உரையால் அறிந்து கொண்ட சாம்பவன்)’ பின்பு, பக்கத்தில் நின்றவன்
யார்?’ என்று கேட்க, மாருதியும், கொற்றவ! வாழி! அனுமன் நின்றேன்;
தொழுதனென்’ என்று கூற – அனுமனும், ‘வெற்றியை உடையாய்!
வாழி! அனுமன் நிற்கின்றேன், தொழுதேன்’ என்று சொல்ல; ஐய!
இற்றனம் எல்லோம் எழுந்தனம், எழுந்தேம் என்னா – (சாம்பவன்)
ஐயா, இறந்துபட்ட எல்லோரும் உயிர் பெற்று எழுந்தோம், எழுந்தோம்
என்று கூறியவனாய்; உற்ற பேர் உவகையாலே, ஊற்றம்மிக்கான்
ஓங்கினான் – உள்ளத்தில் உற்ற பெருமகிழ்ச்சியாலே வலிமை
மிக்கவனாய்ப் பூரித்தான்.

————-

சாம்பன், மருத்துமலை கொணர வழிகூறி அனுமனை ஏவுதல்

8723.
‘விரிஞ்சன்தன் படை என்றாலும், வேதத்தின் வேதம
அன்ன
அரிந்தமன்தன்னை ஒன்றும் ஆற்றிலது என்னும் ஆற்றல்
தெரிந்தனென்; முன்னே, அன்னான் செய்தது என்?
தெரித்தி’என்றான்;
‘பெருந்தகை துன்ப வெள்ளத் துயில் உளான், பெரும!’
என்றான்.-21-

விரிஞ்சன்தன் படை என்றாலும் – பிரமனுடைய படைக்கலன்
(பிரமாத்திரம்) ஆனாலும்; வேதத்தின் வேதம் அன்ன அரிந்தமன்
தன்னை – வேதத்திற்கும் மேலான வேதம் போன்றவனும் பகை வரை
அழிக்க வல்லவனுமான இராமனை; ஒன்றும் ஆற்றிலது என்னும்
ஆற்றல் முன்னே தெரிந்தனன் – ஒன்றும் செய்யாது என்பதற்குரிய
அவனுடைய ஆற்றலை முன்னமே தெரிந்திருக்கின்றேன்; அன்னான்
செய்தது என்? தெரித்தி என்றான் – ‘அப்பெருமான் செய்த செயல்
என்ன? தெரிவிப்பாயாக!’ எனச் சாம்பன் வினவினான்; ‘பெரும!
பெருந்தகை துன்ப வெள்ளத் துயில் உளான் என்றான்-‘பெருமானே!
பெருந்தகையான இராமன் துன்ப வெள்ளத்தினால் தோன்றிய துயிலில்
இருக்கின்றான்’ (துன்பத்தினால் உணர்விழந்து கிடக்கின்றான்)
என்றான் (அனுமன்)

————

8724.
‘அன்னவன்தன்மை கண்டால் ஆற்றுமோ? ஆக்கை வேறே;
இன் உயிர் ஒன்றே; மூலத்து இருவரும் ஒருவரேயால்;
இன்னது கிடைப்பத் தாழாது, இங்கு இனி
இமைப்பின்முன்னம்,
கொன் இயல் வயிரத்தோளாய்! மருந்து போய்க் கொணர்தி’
என்றான்.–22-

மூலத்து இருவரும் ஒருவரேயால் – இராமஇலக்குவர் ஆகிய
இருவரும் தமக்கு மூலமான தெய்வநிலையில் ஒருவரே ஆவர்;
ஆக்கை வேறே இன் உயிர் ஒன்றே – (இப்போதும்) உடம்பு மட்டும்
வேறு, இனிய உயிர் இருவருக்கும் ஒன்றாகும்; அன்னவன் தன்மை
கண்டால் ஆற்றுமோ – ஆதலால் அந்த இலக்குவன் இறந்து
கிடக்கும் நிலையைக் கண்டால் ஆற்றி இருப்பானோ? (ஆற்றாது
மூர்ச்சையுறல் இயல்பே); கொன்இயல் வயிரத்தோளாய் – வலிமை
பொருந்திய வயிரம் போன்ற தோள்களை உடையவனே! (அனுமனே);
இன்னது கிடைப்பத் தாழாது இங்கு இனி இமைப்பின் முன்னம்-
இத்துன்பநிலைக்கு மிகுதியும் தாழ்த்தல் செய்யாது இனி இங்கு
கண்ணிமைப் பொழுதிற்கு முன்னமேயே; ‘மருந்துபோய்க கொணர்தி’
என்றான் – (உயிர்கொடுக்கும்) மருந்து போய்க் கொண்டு வருக என்று
சாம்பன் கூறினான்.

————-

8725.
‘எழுபது வெள்ளத்தோரும், இராமனும், இளைய கோவும்,
முழுதும் இவ் உலகம் மூன்றும், நல் அற மூர்த்திதானும்,
வழு இலா மறையும், உன்னால் வாழ்ந்தன ஆகும்; மைந்த!
பொழுது இறை தாழாது, என் சொல் நெறி தரக் கடிது
போதி.-23-

மைந்த! – வலிமையுள்ளவனே! (அனுமனே!) எழுபது
வெள்ளத்தோரும் இராமனும் இளைய கோவும்- எழுபதுவெள்ளம்
வானரச் சேனையும், இராமனும், இலக்குவனும்; முழுதும் இவ்உலகம்
மூன்றும் நல் அற மூர்த்தி தானும் – இம் மூவுலகம் முழுவதும் நல்ல
தருமதேவதையும்; வழுஇலர் மறையும் உன்னால் வாழ்ந்தன ஆகும்-
தவறுதல் இல்லாத வேதமும் உன்னால் (நீ மருந்து கொண்டு வந்தால்)
வாழ்ந்தன ஆகும்; இறைபொழுது தாழாது என்சொல் நெறிதரக்கடிது
போதி – ஆதலால் சிறிது போழ்தும் காலந்தாழ்த்தாது என்சொல்
நினக்கு வழியைக் கொடுக்க விரைந்து செல்வாயாக.

————-

8726.
‘பின்பு உளது இக் கடல் என்னப் பெயர்ந்ததற்பின்
யோசனைகள் பேச நின்ற
ஒன்பதினாயிரம் கடந்தால், இமயம் எனும்
குலவரையை உறுதி; உற்றால்,
தன் பெருமை ஓர் இரண்டாயிரம் உளது
யோசனை; பின் தவிரப் போனால்,
முன்பு உள யோசனை எல்லாம் முற்றினை, பொற்-
கூடம் சென்று உறுதி, மொய்ம்ப!–24-

மொய்ம்ப – வலிமையுடைய அனுமனே! இக்கடல் பின்பு உளது
என்னப் பெயர்ந்ததற்பின் – இத்தென்கடல் பின்புளது என்னுமாறு
கடந்து சென்றபின்; பேசநின்ற யோசனைகள் ஒன்பதினாயிரம்
கடந்தால் – கண்டோர் சொல்லும்படி நின்ற யோசனைகள்
ஒன்பதினாயிரம் கடந்தால்; இமயம் எனும் குலவரையை உறுதி;
உற்றால் – இமயம் என்கின்ற சிறந்த மலைக்கூட்டத்தை அடைவாய்;
அங்ஙனம் அடைந்தால்; தன் பெருமை ஓர் இரண்டாயிரம் யோசனை
உளது – அந்த இமயத்தின் பரப்பு இரண்டாயிரம் யோசனை உளது;
பின் தவிரப் போனால் – அது பின்நிற்க முற்பட்டுச் சென்றால்; முன்பு
உள யோசனை எல்லாம் முற்றினை பொற்கூடம் சென்று உறுதி-
நின் முன்பு உள்ள யோசனைகள் எல்லாவற்றையும் கடந்து போனால்,
ஏமகூட மலையைச் சென்று அடைவாய்.

——

8727.
‘அம் மலைக்கும் ஓன்பதினாயிரம் உளதால்,
யோசனையின் நிடதம் என்னும்
செம் மலையம்; உளவாய அத்தனை யோசனை
கடந்தால், சென்று காண்டி,
எம் மலைக்கும் பெரிது ஆய வடமலையை;
அம் மலையின் அகலம் எண்ணின்,
மொய்ம் மலைந்த திண் தோளாய்! முப்பத்து ஈர்-
ஆயிரம் யோசனையின் முற்றும்;–25

மொய்ம் மலைந்த திண்தோளாய் – வலிமைமேவிய திண்மையான
தோளினை உடையவனே! அம்மலைக்கும் ஒன்பதினாயிரம்
யோசனையின் – அந்த ஏமகூட மலையிலிருந்து ஒன்பதினாயிரம்
யோசனைத் தொலைவில்; நிடதம் என்னும் செம்மலையம் உளதால்-
நிடதம் என்னும் செம்மலை உளது; உளவாய அத்தனை யோசனை
கடந்தால் – அச் செவ்விய நிடத மலையிலிருந்து ஒன்பதினாயிரம்
யோசனை கடந்து போனால்; எம்மலைக்கும் பெரிது ஆய
வடமலையை, சென்று காண்டி – எல்லா மலைகளுக்கும் பெரிதாகிய
மேருமலையைச் சென்று காண்பாய்; அம்மலையின் அகலம் எண்ணின் முப்பத்து ஈர்ஆயிரம்
யோசனையின் முற்றும் – அம்மேருமலையின் அகலம் எண்ணினால்
முப்பத்து இரண்டாயிரம் யோசனையில் முடிவு அடையும்.

————

8728.
மேருவினைக் கடந்து, அப்பால் ஒன்பதினாயிரம்
உள ஓசனையை விட்டால்,
நேர் அணுகும் நீலகிரிதான் இரண்டா-
யிரம் உள யோசனையின் நிற்கும்;
மாருதி! மற்று அதற்கு யோசனை
நாலாயிரத்தின் மருந்து வைகும்,
கார் வரையைக் காணுதி; மற்று, அது காண,
இத் துயர்க்குக் கரையும் காண்டி;-26-

மாருதி – ‘அனுமனே! மேருவினைக் கடந்து – மேருமலையினைக்
கடந்து; அப்பால் ஒன்பதினாயிரம் உள ஓசனையை விட்டால் –
அப்பால் உள்ள ஒன்பதினாயிரம் யோசனையைக் கடந்தால்; நேர்
நீலகிரி அணுகும் – நினக்குநேராக நீலகிரி என்னும் மலைநெருங்கித்
தோன்றும்; தான் இரண்டாயிரம் உளயோசனையின் நிற்கும் –
அந்நீலகிரிதான் இரண்டாயிரம் ஆக உள்ள யோசனை அளவில் பரவி
நிற்கும்; மற்று அதற்கு யோசனை நாலாயிரத்தின் – அந்நீலகிரிக்கு
யோசனை நாலாயிரத்துக்கு அப்பால்; மருந்து வைகும் கார் வரையைக்
காணுதி – மருந்து தங்கியுள்ள கரிய மருத்துமலையைக் காண்பாய்;
மற்று, அதுகாண, இத் துயர்க்கும் கரையுங் காண்டி – அம்மலையைக்
காணவே இத் துயர்க்கு எல்லையுங் காண்பாய்’.

————

8729.
‘மாண்டாரை உய்விக்கும் மருந்து ஒன்றும்,
உடல் வேறு வகிர்களாகக்
கீண்டாலும் பொருந்துவிக்கும் ஒரு மருந்தும்,
படைக்கலங்கள் கிளைப்பது ஒன்றும்,
மீண்டேயும் தம் உருவை அருளுவது ஓர் மெய்ம்
மருந்தும் உள; நீ, வீர!
ஆண்டு ஏகி, கொணர்தி’ என அடையாளத்தொடும்
உரைத்தான், அறிவின் மிக்கான். –27-

அறிவின் மிக்கான்- அறிவில் மிக்கவனான சாம்பவன்; மாண்டாரை
உய்வி்கும் மருந்து ஒன்றும் – இறந்தவரை உயிர் பெறச்செய்யும்
மருந்து ஒன்றும்; உடல்வேறு வகிர்கள் ஆகக் கீண்டாலும்
பொருந்துவிக்கும் ஒரு மருந்தும் – உடம்பு வெவ்வேறு பிளவுகளாகக்
கிழிந்தாலும் முன்போலப் பொருந்தச் செய்யும் ஒரு மருந்தும்;
படைக்கலங்கள் கிளைப்பது ஒன்றும் – (உடம்பில் தைத்திருக்கும்)
படைக்கலங்களை வெளிப்படுத்தும் மருந்து ஒன்றும்; மீண்டேயும் தம்
உருவை அருளுவது ஓர் மெய்ம் மருந்தும் உள – மீண்டும் தம்
முன்னைய உருவையே கொடுக்கும் உண்மை மருந்தும் அங்கு
உள்ளன; வீர! நீ, ஆண்டு ஏகிக் கொணர்தி என
அடையாளத்தொடும் உரைத்தான் – வீரனே! நீ அங்கு சென்று
அவற்றைக் கொணர்வாயாக” என அவற்றின் அடையாளத்தோடும்
(அனுமனுக்குக்) சொன்னான்.

———

8730.
‘இன்ன மருந்து ஒரு நான்கும், பயோததியைக்
கலக்கிய ஞான்று, எழுந்த; தேவர்
உன்னி அமைத்தனர்; மறைக்கும் எட்டாத
பரஞ்சுடர், இவ் உலகம் மூன்றும்
தன் இரு தாள் உள் அடக்கிப் பொலி போழ்தின்,
யான் முரசம் சாற்றும் வேலை,
அன்னவை கண்டு, உயாவுதலும், தொல் முனிவர்
அவற்று இயல் எற்கு அறிவித்தாரால்;–28-

இன்ன மருந்து ஒரு நான்கும் – இத்தகைய வாயமருந்து ஒரு
நான்கும்; பயோததியைக் கலக்கிய ஞான்று எழுந்த –
பாற்கடலைக்கடைந்த காலத்து, அதிலிருந்து தோன்றின; தேவர் உன்னி
அமைத்தனர் – தேவர்கள் அவற்றின் பயனை நினைத்து அவற்றை
அம்மலையில் அமையுமாறு செய்தனர்; மறைக்கும் எட்டாத பரஞ்சுடர்
– வேதங்களுக்கும் எட்டாத திருமால்; இவ்உலகம் மூன்றும் தன்
இருதாள் உள் அடக்கிப் பொலிபோழ்தின் – இவ்வுலகம் மூன்றையும்
தன் இரண்டு அடிக்குள் அடக்கிக் கொண்டு நின்ற போது; யான்
முரசம் சாற்றும் வேலை – நான் வெற்றி முரசை அடிக்கையில்; அன்னவை கண்டு, உயாவுதலும் – அம்
மருந்தினைக் கண்டு அவற்றைப் பற்றிக் கேட்டபோது; தொல் முனிவர்
அவற்று இயல் எற்கு அறிவித்தாரால் – பழமைசான்ற முனிவர்கள்
அவற்றின் பண்புகளை எனக்குத் தெரிவித்தனர். ஆல் – அசை.

————

8731.
‘இம் மருந்து காத்து உறையும் தெய்வங்கள் எண் இலவால்;
இரங்கா, யார்க்கும்;
நெய்ம் மருங்கு படரகில்லா நெடு நேமிப்
படையும் அவற்றுடனே நிற்கும்;
பொய்ம் மருங்கின் நில்லாதாய்! புரிகின்ற
காரியத்தின் பொதுமை நோக்கி,
கைம் மருங்கு உண்டாம்; நின்னைக் காவாய் என்று;
அப்புறம் போய்க் கரக்கும்’ என்றான்.-

இம் மருந்து காத்து உறையும் தெய்வங்கள் எண் இலவால்-இந்த
மருந்தைக் காத்துக் கொண்டிருக்கும் தெய்வங்கள் கணக்கிலாதன;
யார்க்கும் இரங்கா – அவை யார்க்கும் இரக்கம் கொள்ளமாட்டா;
நெய்ம் மருங்கு படரகில்லா நெடுநேமிப் படையும் அவற்றுடனே
நிற்கும் – நெய்பூசப் பெற்றதும், அருகில் செல்வதற்கும் இயலாததும்
ஆகிய நெடிய சக்கரப்படையும் அத்தெய்வங்களுடன் காத்து நிற்கும்;
பொய்ம் மருங்கின் நில்லாதாய் – பொய்யின் அருகில் கூட
நில்லாதமெய்மை உடையவனே! புரிகின்ற காரியத்தின்
பொதுமைநோக்கி – நீ செய்கின்ற செயலின் பொதுத்தன்மையினை
நோக்கி; கைம் மருங்கு உண்டாம் – நின் கையருகில் நிற்கும்;
நின்னைக் காவாய் என்று அப்புறம் போய்க்கரக்கும் என்றான் –
(மேலும்) உன்னை, ‘இம் மருந்தை மீட்டும் கொணர்ந்து கெடாமல்
காப்பாயாக’ எனக் கேட்டுக் கொண்டு அப்புறம் போய் மறைந்து
கொள்ளும்’. என்று கூறினான்.

————–

அனுமன் மருந்து கொணரப் பெருவடிவு கொண்டு எழுதல்

8732.
‘ஈங்கு இதுவே பணி ஆகில், இறந்தோரும்
பிறந்தோரே; எம் கோற்கு யாதும்
தீங்கு இடையூறு எய்தாமல், தெருட்டுதிர், போய்’
எனச் சொல்லி, அவரைத் தீர்ந்தான்-
ஓங்கினன் வான் நெடு முகட்டை உற்றனன்; பொன்
தோள் இரண்டும் திசையோடு ஒக்க
வீங்கின; ஆகாயத்தை விழுங்கினனே
என வளர்ந்தான்-வேதம் போல்வான்.–30-

‘ஈங்கு இதுவே பணி ஆகில் இறந்தோரும் பிறந்தோரே –
“இப்பொழுது இதுவே (நான் செய்ய வேண்டிய) பணி ஆனால்
இறந்துகிடப்பவர்கள் அனைவரும் மீண்டும் இறப்பு நீங்கி எழுந்தவரே
ஆவர்” எம்கோமாற்கு யாதும் தீங்கு இடையூறு எய்தாமல் –
எம்கோமானாகிய இராமனுக்கு தீங்குவரத்தக்க இடையூறு ஏதும்
எய்தாதபடி; தெருட்டுதிர்போய் எனச் சொல்லி – போயத்
தெளிவுபடுத்துங்கள்” எனக் கூறி; அவரைத் தீர்ந்தான், வேதம்
போல்வான் – அவர்களை விட்டு நீங்கினவனாய்; வேதம்
போல்பவனாகிய அனுமன்; ஓங்கினன் வான் நெடுமுகட்டை
உற்றனன் – உயர ஓங்கி வானத்தின் நெடிய முகட்டை
அடைந்தான்; பொன்தோள் இரண்டும் திசையோடு ஒக்க வீங்கின-
அவன் தோள்கள் இரண்டும் திசைகளின் அளவோடு ஒக்கப்
பருத்தன; ஆகாயத்தை விழுங்கினனே என வளர்ந்தான் –
ஆகாயத்தை இடமில்லாமல் விழுங்கிவிட்டான் என்னுமாறு பேருரு
எடுத்து வளர்ந்தான்.

———

8733.
கோளோடு தாரகைகள், கோத்து அமைந்த
மணி ஆரக் கோவை போன்ற;
தோளோடு தோள் அகலம் ஆயிரம்
யோசனை அளவு சொல்ல ஒண்ணா;
தாளோடு தாள் பெயர்க்க, இடம் இலது-
ஆயின இலங்கை; தடக் கை வீச,
நீளோடு திசை போதா; விசைத்து எழுவான்
உருவத்தின் நிலை ஈது அம்மா!–31-

கோளோடு தாரகைகள் கோத்து அமைந்த- விண்ணில் விளங்கும்
நவகோள்களும் நட்சத்திரங்களும் (அனுமனது மார்பிற்கு அணியாகக்)
கோத்து அமைத்த; மணி ஆரக்கோவை போன்ற – மணியும் முத்தும்
கலந்த மாலை போன்று விளங்கின; தோளோடு தோள் அகலம் –
ஒருதோளிலிருந்து மற்றொரு தோளுக்கு உள்ள அகலம்; ஆயிரம்
யோசனை அளவு சொல்ல ஒண்ணா – ஆயிரம் யோசனை அளவு
எனவும் சொல்ல ஒண்ணாதவையாய் விரிந்திருந்தன; தாளோடு தாள் பெயர்க்க
இடம் இலது ஆயினது இலங்கை – ஊன்றிய அடியோடு மற்றொரு
அடியைப் பெயர்த்துவைக்க இடம் இல்லாததாகியது இலங்கை;
தடக்கைவீச, நீளோடு திசைபோதா;-அவன் பெரியகைகளை வீசநீண்டு
ஓடுகின்ற திசைகள் போதாவாயின; விசைத்து எழுவான் உருவத்தின்
நிலை ஈது அம்மா – (மருத்துமலை கொணர) விரைந்து எழுகின்ற
அனுமனது பேருருவத்தின் நிலை இதுவாகும்

————-

8734.
வால் விசைத்து, கைந் நிமிர்த்து, வாயினையும்
சிறிது அகல வகுத்து, மானக்
கால் நிலத்தினிடை ஊன்றி, உரம் நெருக்கி,
கழுத்தினையும் சுருக்கிக் காட்டி,
தோல் மயிர்க் குந்தளம் சிலிர்ப்ப, விசைத்து எழுந்தான்.
அவ் இலங்கை, துளங்கிச் சூழ்ந்த
வேலையில் புக்கு அழுந்தியது ஓர் மரக்கலம்போல்,
சுரித்து உலைய,-விசையத் தோளான்.–32-

விசயத்தோளான் – வெற்றிபொருந்திய தோளை உடைய அனுமன்;
வால்விசைத்து கைந்நிமிர்த்து வாயினையும் சிறிதகல வகுத்து – தன்
வாலினை விசைத்துக் கொண்டு, வாயினையும் சிறிது விரிந்திருக்குமாறு
செய்து கொண்டு; மானக்கால் நிலத்தினிடை ஊன்றி –
பெருமைபொருந்திய கால்களை நிலத்தில் ஊன்றிக்கொண்டு; உரம்
நெருக்கிக் கழுத்தினையும் சுருக்கிக் காட்டி-மார்பினை நெருக்கிக்
கொண்டு, கழுத்தினையும் சுருக்கிக்காண்பித்து; தோல்மயிர்க்குந்தளம்
சிலிர்ப்ப – தோலில் உள்ள மயிர்க்கூச்சுகள் சிலிர்க்க; அவ்விலங்கை
துளங்கிச் சூழ்ந்த வேலையில்புக்கு அழுந்தியது மரக்கலம் போல்-
அவ்விலங்கை, குலைந்து தன்னைச் சுற்றிய கடலில் நுழைந்து
அழுந்தப்பெற்ற ஒரு கப்பலைப் போன்று; சுரித்து உலைய விசைத்து
எழுந்தான் – சுழன்றுவருந்த விரைவுடன் கிளம்பினான்.

———-

அனுமன் வேகத்தால் நிகழ்ந்தவை

8735.
கிழிந்தன, மா மழைக் குலங்கள்; கீண்டது, நீண்டு
அகல் வேலை; கிழக்கும் மேற்கும்
பொழிந்தன, மீன்; தொடர்ந்து எழுந்த, பொருப்புஇனமும்,
தருக் குலமும், பிறவும், பொங்கி;
அழிந்தன, வானவர் மானம், ஆகாயத்து
இடையன பேர் அசனி என்ன
விழுந்தன, நீர்க் கடல் அழுந்த; ஏறின மேல்,
கீறின போய்த் திசைகள் எல்லாம்.–33-

மாமழைக்குலங்கள் கிழிந்தன – (அனுமன் விசைத்தெழவே) பெரிய
மேகக்கூட்டங்கள் கிழிந்தன; நீண்டகல் வேலை கிழக்கும் மேற்கும்
கீண்டது – நீண்டு அகன்றுள்ள தென்கடல் கிழக்கும் மேற்குமாக
பிரிந்து கிழிந்தது; மீன் பொழிந்தன; – விண்மீன்கள் உதிர்ந்தன;
பொருப்பு இனமும் தருக்குலமும் பிறவும், பொங்கி தொடர்ந்து
எழுந்த – மலைத்தொகுதிகளும், மரத்தொகுதிகளும், பிறவும் கிளர்ந்து
தொடர்ந்து எழுந்தன; வானவர் மானம் ஆகாயத்து இடையன
அழிந்தன – தேவர்களின் விமானம் ஆகாயத்தின் நடுவே
அழிந்தனவாய்; பேர் அசனி என்ன நீர்க் கடல் அழுந்த விழுந்தன
-பெரிய இடியைப் போல நீர்க்கடலில் அழுந்த விழுந்தன; மேல் ஏறின
போய்த்திசைகளெல்லாம் கீறின – அதனால் கடல்நீர் மேல் ஏறின
வாய்த் திசைகளெல்லாம் கிழிந்தன.

————

8736.
பாய்ந்தனன், அங்கு அப்பொழுதத்தே; பரு வரைகள்
எனைப் பலவும் வடபாகத்துச்
சாய்ந்தன; ‘பேர் உடல் பிறந்த சண்டமா-
ருதம் வீச, தாதை சால
ஓய்ந்தனன்’ என்று உரைசெய்ய, விசும்பூடு
படர்கின்றான், உரு வேகத்தால்,
காய்ந்தன வேலைகள்; மேகம் கரிந்தன; வெந்து
எரிந்த, பெருங் கானம் எல்லாம்.–34-

அப்பொழுதத்தே அங்கு பாய்ந்தனன் – அப்பொழுதே அங்கு
பாய்ந்தனன்; பருவரைகள் எனைப் பலவும் – பருத்தமலைகள் பலவும்;
பேர் உடல் பிறந்த சண்டமாருதம் வீச- பெரிய உடலிலிருந்து
தோன்றிய பெருங்காற்று வீசுதலால்; வடபாகத்துச் சாய்ந்தன –
வடக்குப் பக்கமாகச் சாய்ந்தன; தாதைசால ஓய்ந்தனன் என்று
உரைசெய்ய – தந்தையான வாயுதேவனும் மிகவும் தளர்ச்சியுற்றான்
என்று சொல்லுமாறு; விசும்பூடு படர்கின்றான் உருவேகத்தால் – விரைந்து விண்வழியே செல்கின்ற உருவத்தின்
வேக வெப்பத்தால்; வேலைகள் காய்ந்தன மேகம் கரிந்தன-கடல்கள்
வறண்டு காய்ந்தன; மேகங்கள் கரிந்து போயின; பெருங்கானம்
எல்லாம் வெந்து எரிந்த – பெரிய காடுகள் எல்லாம் வெந்து எரிந்தன.

————

8737.
கடல் முன்னே நிமிர்ந்து ஓட, கால் பின்னே
தொடர்ந்து ஓட, கடிதின் செல்வான்
உடல் முன்னே செல, உள்ளம் கடைக் குழையாய்ச்
செல, செல்வான் உருவை நோக்கி,
‘அடல் முன்னே தொடங்கிய நாள், ஆழ் கடல் சூழ்
இலங்கை எனும் அரக்கர் வாழும்
திடல் முந்நீர்இடைப் படுத்து மறித்தலின்; நம்
துயர்’ என்றார், தேவர் எல்லாம்.–35-

கடல் முன்னே நிமிர்ந்து ஓட- கடல் முன்னால் நிமிர்ந்து ஓடவும்;
கால்பின்னே தொடர்ந்து ஓட-கால்கள் பின்னால் தொடர்ந்து ஓடவும்;
கடிதின்செல்வான் உடல் முன்னே செல – விரைந்து செல்லும்
பொருட்டு உடல் முன்னே செல்லவும்; உள்ளம் கடைக்குழையாய் செல
– மனம் கடைசியாக வேகங் குறைந்ததாகப் பின்னே செல்லவும்;
செல்வான் உருவை நோக்கி – செல்கின்றவனாகிய அனுமனின்
உருவத்தைப் பார்த்து; தேவர் எல்லாம் அடல்முன்னே தொடங்கிய
நாள் – தேவர்கள் அனைவரும் ‘அரக்கரைக் கொல்லும்
போர்த்தொழிலை முன்னே தொடங்கிய நாளில்; ஆழ்கடல் சூழ்
இலங்கை என்னும் – ஆழ்ந்த கடலால் சூழப் பெற்ற இலங்கை
என்னும்; அரக்கர் வாழும் திடல் முந்நீர் இடைப்படுத்து – அரக்கர்
வாழ்கின்ற தீவினை எடுத்துச் கடலிடை வீழ்த்தி; நம்துயர் மறித்திலன்
என்றார் – நம் துயரைத்தடுத்திலனே” என்று கூறினர்.

————-

விரைந்து செல்லும் அனுமனைக்கண்ட வானவர் கூற்று

8738.
மேகத்தின் பதம் கடந்து, வெங் கதிரும்
தண் கதிரும் விரைவில் செல்லும்
மாகத்தின் நெறிக்கு அப்பால், வானமீன்
குலம் விளங்கும் வரம்பு நீங்கி,
போகத்தின் நெறி கடந்தார் புகலிடங்கள்
பிற்படப் போய், ‘பூவின் வந்த
ஏகத்து அந்தணன் இருக்கை இனிச் சேய்த்து அன்-
றாம்’ என்ன, எழுந்து சென்றான்.–36-

மேகத்தின பதம் கடந்து – மேகமண்டலத்தைக் கடந்து;
வெங்கதிரும் தண்கதிரும் விரைவில் செல்லும் – வெப்பம்மிக்க
கிரணங்களை உடைய சூரியனும், குளிர்ந்த கிரணங்களை உடைய
சந்திரனும் விரைந்து செல்லுகின்ற; மாகத்தின் நெறிக்கு அப்பால் –
வான வழிக்கு அப்பால்; வானமீன் குலம் விளங்கும் வரம்பு நீங்கி –
விண்மீன்களின் கூட்டம் இயங்குகின்ற நட்சத்திர மண்டலத்தையும்
கடந்து சென்று; போகத்தின் நெறிகடந்தார் புகலிடங்கள்
பிற்படப்போய்-மகளிரோடு கலந்து துய்க்கும் போகத்தின் நெறியையே
கடந்தவர்களான தவத்தினரின் தவலோகம் பிற்படுமாறு சென்று;
பூவின் வந்த ஏகத்து அந்தணன் இருக்கை – திருமாலின்
உந்திக்கமலத்தில் தோன்றியவனாகிய பிரமனது இருக்கையான
சத்தியலோகம்; இனிச் சேய்த்து அன்றாம் என்ன எழுந்து சென்றான்
– இனிச்சேயது அன்று (அண்மையதே) என்று கூறுமாறு உயர்ந்து
சென்றான். (அனுமன்)

———

8739.
வான நாட்டு உறைகின்றார், ‘வயக் கலுழன்
வல் விசையால், மாயன் வைகும்
தான் நாட்டு எழுகின்றான்’ என்று உரைத்தார்,
சிலர்; சிலர்கள், ‘விரிஞ்சன்தான் தன்
ஏனை நாட்டு எழுகின்றான்’ என்று உரைத்தார்;
சிலர் சிலர்கள், ‘ஈசன் அல்லால்,
போன நாட்டிடை போக வல்லாரோ?
இவன் முக் கண் புனிதன்’ என்றார்.–37-

வானநாட்டு உறைகின்றார் சிலர்- வான நாட்டில் வாழ்கின்றவர்கள்
சிலர்; ‘வயக்கலுழன் வல்விசையால்’ – வலிமைமிக்க கருடன்
வலியவேகத்தோடு; மாயன்வைகும் தான நாட்டு எழுகின்றான்’ என்று
உரைத்தார் – திருமால் தங்கியுள்ள இடமாகிய வைகுந்தத்திற்குச்
செல்கின்றான்’ என்று சொன்னார்கள்; சிலர்கள் ‘விரிஞ்சன் தான்தன்
ஏனைநாட்டு எழுகின்றான்’ என்று உரைத்தார் – வேறுசிலர் ‘பிரமன்தான் தன்
நாட்டிலும் வேறாகிய நாட்டிற்குச் செல்ல எழுகின்றான்’ என்று
சொன்னார்கள்; சிலர்சிலர்கள் ‘ஈசன் அல்லால் போன நாட்டிடைப்
போகவல்லாரோ? – சிலர்சிலர், ‘சிவன் அல்லாதவர்கள், மிகவும்
உயர்ந்து போன நாட்டிடையே செல்லவல்லவர்களோ? (அல்லர்!
ஆதலின்); இவன் முக்கண் புனிதன்’ என்றார் – இவன், மூன்று
கண்களையுடைய தூயவனாகிய சிவனே’ என்று சொன்னார்கள்.

———-

8740.
‘வேண்டு உருவம் கொண்டு எழுந்து, விளையாடு-
கின்றான்; மெய் வேதம் நான்கும்
தீண்டு உருவன் அல்லாத திருமாலே
இவன்’ என்றார்; ‘“தெரிய நோக்கிக்
காண்டும்” என இமைப்பதன்முன், கட் புலமும்
கடந்து அகலும்; இன்னும் காண்மின்;
மீண்டு வரும் தரம் அல்லான் வீட்டுலகம்
புகும்’ என்றார், மேன்மேல் உள்ளார்.–38-

மேன்மேல் உள்ளார் – மேல்மேல் உள்ள உலகத்தவர்கள் சிலர்;
வேண்டு உருவம் கொண்டு எழுந்து விளையாடுகின்றான் இவன் –
விரும்பிய உருவந்தாங்கி விளையாடுகின்றவனாகிய இவன்;
மெய்வேதம் நான்கும் தீண்டு உருவன் அல்லாத திருமாலே
என்றார் – உண்மையான வேதங்கள் நான்கும் எட்டுதற்குரிய வடிவினன்
அல்லாத திருமாலே’ என்றார்; ‘தெரிய நோக்கிக் காண்டும்’ என
-(சிலர்) ‘தெளிவுற நோக்கிப் பார்ப்போம்’ என்று நினைக்க;
‘இமைப்பதன் முன்கட்புலமும் கடந்து அகலும் – (அவர்களின்)
இமைப்பொழுதிற்கு முன்னமே கட்புலத்தைக் கடந்து செல்லுவான்;
இன்னும் காண்மின் மீண்டு வரும் தரம் அல்லன் வீட்டுலகம் புகும்
என்றார்-(மற்றும் சிலர்) ‘இன்னும் பாருங்கள் இவன் திரும்பிவரும்
தன்மையன் அல்லன், வீட்டுலகத்திற்குச் செல்லுவான்’ என்றார்.

————-

8741.
‘உரு’ என்றார், சிலர் சிலர்கள்; ‘ஒளி’ என்றார்,
சிலர் சிலர்கள்; ‘ஒளிரும் மேனி
அரு’ என்றார், சிலர் சிலர்கள்; ‘அண்டத்துக்கு
அப் புறம் நின்று, உலகம் ஆக்கும்
கரு’ என்றார், சிலர் சிலர்கள்; ‘மற்று’ என்றார்,
சிலர் சிலர்கள்; கடலைத் தாவிச்
செரு வென்றான் நிலை ஒன்றும் தெரியகிலார்-
உலகு அனைத்தும் தெரியும் செல்வர்.–39-

உலகு அனைத்தும் தெரியும் செல்வர் – உலகனைத்தையும்
தெரிந்துணர்ந்த ஞானச் செல்வராகிய பெரியோர்; கடலைத் தாவிச்
செருவென்றான் நிலை ஒன்றும் தெரியகிலார் – கடலைத் தாண்டி
அரக்கரைப் போரில் வென்றவனாகிய அனுமனது நிலையைச் சிறிதும்
தெரியாதவர்களாயினர் ஆதலால்; சிலர் சிலர்கள் ‘உரு’ என்றார் -(மனோவேகத்தையும் விஞ்சிச் செல்லுகின்ற அனுமனை) சிற்சிலர்
உருவப்பொருளே என்றார்கள்; சிலர் சிலர்கள் ஒளிருமேனி ‘அரு’
என்றார் – மற்றும் சிலர் (தம்மைக் கடந்து விரைந்துசென்ற) அவனது
ஒளிரும் மேனியை அருவப் பொருள் என்று கூறினார்; சிலர் சிலர்கள்
அண்டத்துக்கு அப்புறம் நின்று உலகம் ஆக்கும் ‘கரு’ என்றார்
-இன்னும் சிலர் அண்டத்துக்கு அப்புறத்தில் நின்று உலகத்தைப்
படைக்கும் காரணப் பொருள் என்றார்கள்; சிலர் சிலர்கள் ‘மற்று’
என்றார் – மேலும் சிலர் (அவனை) இது வேறு ஒன்றுதான்’ எனக்
கூறினர்.

—————-

8742.
வாச நாள் மலரோன்தன் உலகு அளவும்
நிமிர்ந்தன, மேல் வானம் ஆன
காசம் ஆயின எல்லாம் கரந்த தனது
உருவிடையே கனகத் தோள்கள்
வீச, வான் முகடு உரிஞ்ச, விசைத்து எழுவான்
உடல் பிறந்த முழக்கம் விம்ம,
ஆசை காவலர் தலைகள் பொதிர் எறிந்தார்;
விதிர் எறிந்தது, அண்டகோளம்.–40-

வாசநாள் மலரோன்தன் உலகு அளவும் நிமிர்ந்தன – மணம்
பொருந்திய அன்றலர்ந்த தாமரைமலரில் வாழ்கின்ற பிரமனுடைய
உலகத்தின் அளவும் உயர்ந்தனவாகி; மேல் வானம் ஆன காசம்
ஆயின எல்லாம் கரந்த தனது உருவினிடையே – அதன் மேலுள்ள
வானமான ஆகாயமெல்லாம் மறைத்த தன்னுடைய உருவத்தில் உள்ள;
கனகத் தோள்கள் வான்முகடு உரி்ஞ்ச வீச – பொன்னிறத்தோள்களை வானத்தின் உச்சியில் பட்டுத்
தேய்க்கும்படி வீசுதலால்; விசைத்து எழுவான் உடல் பிறந்த முழக்கம்
விம்ம – விசையால் எழுகின்ற அவனது உடம்பில் பிறந்த முழக்கம
மிக; ஆசை காவலர் தலைகள் பொதிர் எறிந்தார் – (அதனால்)
திசைக்காவலர்கள் தலைநடுக்கமுற்றனர்; அண்டகோளம் விதிர்
எறிந்தது – அண்டமாகிய உருண்டை விதிர் விதிர்ப்பு எய்தியது.

——

8743.
தொடுத்த நாள்மாலை வானோர், முனிவரே முதல
தொல்லோர்,
அடுத்த நான்மறைகள் ஓதி வாழ்த்தலால், அவுணர் வேந்தன்
கொடுத்த நாள், அளந்து கொண்ட குறளனார் குறிய பாதம்
எடுத்த நாள் ஒத்தது-அண்ணல் எழுந்த நாள், உலகுக்கு
எல்லாம்.-41-

அண்ணல் எழுந்தநாள் உலகுக்கெல்லாம் – பெருமை
சான்றவனாகிய அனுமன் வளர்ந்து எழுந்த நாள், உலகங்கட்கெலாம்;
தொடுத்த நாள் மாலை வானோர் முனிவரே முதல தொல்லோர் –
அன்றலர்ந்த மலர்களைத் தொடுத்த மாலையை அணிந்த தேவர்களும்
முனிவர் முதலாய பெரியோர்களும்; அடுத்த நான் மறைகள் ஓதி
வாழ்த்தலால் – தமக்குரிய நான்கு வேதங்களை ஓதிக் கொண்டு
வாழ்த்துக் கூறி நிற்க; அவுணர் வேந்தன் கொடுத்தநாள் – அவுணர்
வேந்தனாகிய மாபலி தாரைவார்த்துக் கொடுத்தநாளில்; அளந்து
கொண்ட குறளனார் குறிய பாதம் எடுத்த நாள் ஒத்தது- உலகத்தை
அளந்து கொண்ட வாமன மூர்த்தியின் குறுகிய அளவினை உடைய
பாதத்தை (பெரிதாக்கி) விண்ணின் மேல் எடுத்த நாளை ஒத்து
மகிழ்வூட்டியது.

—————–

8744.
தேவரும் முனிவர்தாமும், சித்தரும் தெரிவைமாரும்,
மூவகை உலகினுள்ளார், உவகையால் தொடர்ந்து
மொய்த்தார்;
தூவின மணியும் சாந்தும் சுண்ணமும் மலரும் தொத்த,
பூவுடை அமரர் தெய்வத் தரு என, விசும்பில் போனான்.–42-

தேவரும் முனிவர் தாமும் சித்தரும் தெரிவைமாரும்-
தேவர்களும், முனிவர்களும், சித்தர்களும் அவர்தம் மனைவிகளும்;
மூவகை உலகினுள்ளார் உவகையால் தொடர்ந்து மொய்த்தார்-
மூவுலகத்திலுள்ளவர்களும் மகிழ்ச்சி மிகுதியால் தொடர்ந்து வானில்
நெருங்கியவர்களாய்த்; தூவின மணியும் சாந்தும் கண்ணமும் மலரும்
தொத்த – தூவிய மணிகளும், சந்தனமும், சுண்ணப்பொடியும்
மலர்களும் அனுமனின் உடல்மேல் தொத்தி நிற்க; பூவுடை அமரர்
தெய்வத் தருஎன விசும்பில் போனான்-தேவர்களுக்குரிய, மலர்கள்
நிறைந்ததெய்வத்தன்மையுடைய கற்பகத்தரு என வான்வழியே
சென்றான்.

————

கயிலையைக் கண்டு வணங்கி, அனுமன் செல்லுதல்

8745.
இமய மால் வரையை உற்றான்; அங்கு உள
இமைப்பிலோரும்,
கமையுடை முனிவர், மற்றும் அறன் நெறி கலந்தோர்,
எல்லாம்,
அமைக, நின் கருமம்!’ என்று வாழ்த்தினர்; அதனுக்கு
அப்பால்,
உமையொருபாகன் வைகும் கயிலை கண்டு, உவகை
உற்றான்.–43-

இமையமால் வரையை உற்றான் – அனுமன் இமயம் என்னும்
பெரிய மலையை அடைந்தான்; அங்குஉள இமைப்பிலோரும்
கமையுடை முனிவர் – அங்கு வாழும் இமையாக்கண்ணராகிய
தேவர்களும், பொறுமையுடைய முனிவர்களும்; மற்றும் அறன்நெறி
கலந்தோர் எல்லாம் – மேலும் அறநெறி வழுவாப் பெரியோரும்,
ஆகிய அனைவரும்; ‘அமைக, நின் கரும்ம!’ என்று வாழ்த்தினர் –
(அனுமனைப் பார்த்து) ‘நீ மேற்கொண்டுள்ள செயல் இனிது
நிறைவேறுவதாக’ என்று வாழ்த்தினார்கள்; அதனுக்கு அப்பால்
உமையொரு பாகன் வைகும் கயிலை கண்டு உவகை உற்றான் –
அதன் பின்னர் உமையம்மையை இடப்பாகங் கொண்ட சிவ பெருமான் தங்கியுள்ள கயிலை மலையைக் கண்டு மகிழ்ச்சி
கொண்டான்.

————–

8746.
வட குண திசையில் தோன்றும், மழுவலான் ஆண்டு வைகும்
தட வரை அதனை நோக்கி, தாமரைக் கைகள் கூப்பி,
படர்குவான்தன்னை, அன்பால் பரமனும் விசும்பில்
பார்த்தான்;
தட முலை உமைக்குக் காட்டி, ‘வாயுவின் தனயன்’ என்றான்.–44-

வடகுண திசையில் தோன்றும் – வடகிழக்குத் திசையில்
தோன்றுகின்றதும்; மழுவலான் ஆண்டு வைகும் – மழுப்படையை
உடைய சிவபெருமான் தங்கி இருப்பதும் ஆகிய; தடவரை அதனை
நோக்கி தாமரைக் கைகள் கூப்பி – பெரிய மலையினை
(கயிலையை)ப்பார்த்துத் தாமரை போலச் சிவந்த கைகளைக் குவித்து
வணங்கி; படர்குவான் தன்னை அன்பால் பரமனும் விசும்பில்
பார்த்தான் – செல்லுகின்ற அனுமனைப் பெருமையிற் சிறந்தவனாகிய
சிவபரம் பொருளும் விரும்பிப் பார்த்து; தடமுலை உமைக்குக் காட்டி
‘வாயுவின் தனையன்’ என்றான் – பருத்த தனங்களை உடைய
உமாதேவிக்குக் காண்பித்து, ‘வாயுதேவனுடைய மகன் அனுமன்’ என்று
கூறினான்.

——————

உமையின் வினாவும், ஈசனது உரையும்

8747.
‘என், இவன் எழுந்த தன்மை?’ என்று, உலகு ஈன்றாள்
கேட்ப,
‘மன்னவன் இராமன் தூதன் மருந்தின்மேல் வந்தான்; வஞ்சர்
தென் நகர் இலங்கைத் தீமை தீர்வது திண்ணம்; சேர்ந்து,
நன்னுதல்! நாமும் வெம் போர் காணுதும், நாளை என்றான்.–45-

‘இவன் எழுந்த தன்மை என்?’ என்று உலகு ஈன்றான் கேட்ப –
“இவன் வான்வழி எழுந்து செல்வதற்கு யாது காரணம்?” என்று
உலகத்தை ஈன்ற உமையவள் கேட்க; மன்னவன் இராமன் தூதன்
மருந்தின்மேல் வந்தான் – “மன்னவர் குலத்துத் தோன்றிய
இராமனின் தூதனாகிய இவன் மருந்தைக் கொண்டு போக
வந்திருக்கின்றான்’; ‘வஞ்சர் தென் நகர் இலங்கைத் தீமை தீர்வது
திண்ணம்!’ – “வஞ்சகராகிய அரக்கர்க் குரிய தென் இலங்கையினால்
உளதாகிய தீமை இனித்தீர்வது திண்ணம்’; நன்னுதல்! நாளை நாமும்
சேர்ந்து வெம்போர்காணுதும் என்றான் – “அழகிய நுதலை
உடையவளே! நாளை நாமும் (தேவர்களுடன்) சேர்ந்து கொடிய
போரைக் காண்போம்” என்று கூறினான் பரமன்.

———–

ஏமகூடத்தைத் தாண்டி, அனுமன் மேருமலைமீது போதல்

8748.
நாம யோசனைகள் கொண்டது ஆயிரம் நடுவு நீங்கி,
ஏமகூடத்தின் உம்பர் எய்தினன், இறுதி இல்லாக்
காமமே நுகரும் செல்வக் கடவுளர் ஈட்டம் கண்டான்;-
நேமியின் விசையின் செல்வான்-நிடதத்தின் நெற்றி உற்றான்.–46-

நேமியின் விசையின் செல்வான் – சக்கரப்படைபோல விரைவாகச்
செல்லுகின்ற அனுமன்; நாம ஆயிரம் யோசனைகள் கொண்டது நடுவு
நீங்கி – பெயர்பெற்ற (ஒன்பதின்) ஆயிரம் யோசனைத் தொலைவு
கொண்ட நடுவிடத்தைத் தாண்டி; ஏம கூடத்தின் உம்பர் எய்தினன் –
ஏம கூட மலையின் மேல் அடைந்து நின்று; இறுதி இல்லாக் காமமே
நுகரும் செல்வக் கடவுளர் ஈட்டம் கண்டான்- முடிவில்லாத
காமஇன்பத்தையே துய்க்கின்ற செல்வச் சிறப்பினை உடைய
தேவர்களின் கூட்டத்தைக் கண்டான்; நிடதத்தின் நெற்றி உற்றான் –
பின்பு நிடத மலையின் உச்சியை அடைந்தான்.

———

8749.
எண்ணுக்கும், அளவு இலாத அறிவினோர் இருந்து நோக்கும்
கண்ணுக்கும், கருதும் தெய்வ மனத்திற்கும், கடியன்
ஆனான்,
மண்ணுக்கும், திசைகள் வைத்த வரம்பிற்கும், மலரோன்
வைகும்
விண்ணுக்கும், அளவை ஆன மேருவின்மீது சென்றான்.–47-

எண்ணுக்கும் அளவு இலாத அறிவினோர் – (மனிதர்)
எண்ணத்திற்கும் அளவிட முடியாத அறிவினை உடைய ஞானிகள்;
இருந்து நோக்கும் கண்ணுக்கும் – இருந்தவாறே எல்லாவற்றையும்
நோக்குகின்ற ஞானக்கண்ணுக்கும்; கருதும் தெய்வ மனத்திற்கும்
கடியன் ஆனான் – எல்லாவற்றையும் கருதவல்ல தெய்வ மனத்திற்கும்
பின்பற்ற முடியாத வேகத்தை உடையவனான அனுமன்; மண்ணுக்கும்
திசைகள் வைத்த வரம்பிற்கும் – மண்ணுலகத்திற்கும்,
திசைகளுக்குரியவாகவைத்த எல்லைக்கும்; மலரோன் வைகும்
விண்ணுக்கும் – பிரமன் தங்கியுள்ள பிரமலோகமாகிய
விண்ணுலகத்திற்கும்; அளவை ஆன மேருவின் மீது சென்றான் –
அளவு கருவி போல் உளதான மேரு மலையின் மீது போனான்.

——————

பிரமன் முதலிய தேவர்களை வணங்கிச் செல்லுதல்

8750.
‘யாவதும் நிலைமைத் தன்மை இன்னது’ என்று, இமையா
நாட்டத்
தேவரும் தெரிந்திலாத வடமலைக்கு உம்பர்ச் சென்றான்;
நாவலம் பெருந் தீவு என்னா நளிர் கடல் வளாக வைப்பில்,
காவல் மூன்று உலகும் ஓதும் கடவுள் மா மரத்தைக்
கண்டான்.–48-

இமையா நாட்டத் தேவரும் – இமையாத விழிகளைப் பெற்ற
தேவர்களும்; ‘நிலைமைத் தன்மை இன்னது’ என்று யாவதும்
தெரிந்திலாத – நிலையாக உள்ள தன்மையாவது எனச் சிறிதும்
தெரியவியலாத; ‘வடமலைக்கு உம்பர் சென்றான்’ – மேருமலைக்கு
மேலே சென்று; நளிர்கடல் வளாக வைப்பில் – குளிர்ந்த கடலால்
சூழப்பட்ட பூமியில்; நாவலம் பெருந்தீவு என்னா – நாவலம்
பெருந்தீவு என்று; காவல் மூன்று உலகும் ஓதும் கடவுள் மா
மரத்தைக் கண்டான் – காவலை உடைய மூன்று உலகத்தாரும்

————-

8751.
அன்ன மா மலையின் உம்பர், உலகு எலாம் அமைத்த
அண்ணல்
நல் நெடு நகரம் நோக்கி, அதன் நடு நாப்பண் நாம
பொன் மலர்ப் பீடம்தன்மேல் நான்முகன் பொலியத்
தோன்றும்
தன்மையும் கண்டு, கையால் வணங்கினான்-தருமம்
போல்வான்.–49-

தருமம் போல்வான் – தருமதேவதை போன்றவனான அனுமன்;
அன்னமாமலையின் உம்பர் – அந்த மேருமலையின் உச்சியில்; உலகு
எலாம் அமைத்த அண்ணல் நல்நெடு நகரம் நோக்கி – உலகங்கள்
அனைத்தையும் படைத்த பிரம தேவனுடைய சிறந்த நகரைப்பார்த்து;
அதன் நடு நாப்பண் நாம பொன்மலர்ப் பீடம்தன்மேல் – அதன்
நட்ட நடுவில் புகழ்பெற்ற பொன்மலர்ப்பீடத்தின் மேல்; நான்முகன்
பொலியத் தோன்றும் – நான்முகக்கடவுள் பொலிவு பெற்றுத்
தோன்றும் தன்மையைக்; கண்டு கையால் வணங்கினான் – கண்டு
தன்கைகளால் வணங்கினான்.

—————

8752.
தரு வனம் ஒன்றில், வானோர் தலைத்தலை மயங்கித் தாழ,
பொரு அரு முனிவர் வேதம் புகழ்ந்து உரை ஓதை பொங்க,
மரு விரி துளவ மோலி, மா நிலக் கிழத்தியோடும்
திருவொடும் இருந்த, மூலத் தேவையும் வணக்கம்
செய்தான்.-50-

தருவனம் ஒன்றில் வானோர் தலைத்தலை மயங்கித்தாழ-
(பின்னர் அனுமன்) மரங்கள் நிறைந்துள்ள வனமொன்றில் தேவர்கள்
இடந்தொறும் இடந்தொறும் கலந்து வணங்கி நிற்க; பொரு அரு
முனிவர் வேதம் புகழ்ந்து உரை ஓதை பொங்க-ஒப்பற்ற முனிவர்கள்
வேத மந்திரங்களோடு புகழ்ந்து சொல்லும் ஒலி மிக்குத் தோன்ற;
மருவிரிதுளவ மோலி மாநிலக்கிழ்த்தியோடும் – மணம் வீசும் துளவமாலை அணிந்த முடியினை உடையனாய்ப்
பூதேவி யோடும்; திருவொடும் இருந்த மூலத்தேவையும் –
சீதேவியோடும் இருந்த எல்லாவற்றிற்கும் மூலமாக உள்ள
நாராயணனையும்; வணக்கம் செய்தான் – வணங்கினான்.

————-

8753.
ஆயதன் வட கீழ்ப் பாகத்து, ஆயிரம் அருக்கர் ஆன்ற
காய் கதிர் பரப்பி, ஐந்து கதிர் முகக் கமலம் காட்டி,
தூய பேர் உலகம் மூன்றும் தூவிய மலரின் சூழ்ந்த
சேயிழை பாகத்து, எண் தோள் ஒருவனை வணக்கம்
செய்தான்.–51-

ஆயதன் வடகீ்ழ்ப் பாகத்து – (பின்னர்) அம்மேருவின் வட
கிழக்கில்; ஆயிரம் அருக்கர் ஆன்ற காய்கதிர் பரப்பி – ஆயிரம்
சூரியர்களின் நிறைந்த ஒளிவீசும் கதிர்களைப் பரப்பிக் கொண்டு;
ஐந்து கதிர்முகக் கமலம் காட்டி – ஐந்து ஒளிவாய்ந்த முகங்களாகிய
தாமரைகளைக் காட்டிக் கொண்டு; தூயபேர் உலகம் மூன்றும் தூவிய
மலரின் சூழ்ந்த – தூயவான பெரிய உலகங்கள் மூன்றிலுள்ளோரும்
அருச்சனையாகத் தூவிய மலர்களால் சூழப் பெற்று; சேயிழை பாகத்து
எண்தோள் ஒருவனை வணக்கம் செய்தான் – செம்மையான
அணிகலன்களை அணிந்த மனோன்மணியை இடப்பாகத்தில்
கொண்டுள்ள எட்டுத் தோள்களை உடைய சதாசிவனைக் கண்டு
வணக்கம் செய்தான்.

——

8754.
சந்திரன் அனைய கொற்றத் தனிக் குடை தலையிற்று ஆக,
சுந்தர மகளிர் அங்கைச் சாமரை தென்றல் தூற்ற,
அந்தர வான நாடர் அடி தொழ, முரசம் ஆர்ப்ப,
இந்திரன் இருந்த தன்மை கண்டு உவந்து, இறைஞ்சிப்
போனான்–52-

சந்திரன் அனைய கொற்றத் தனிக்குடை தலையிற்று ஆக –
சந்திரனைப் போன்ற வெற்றிமைந்த ஒப்பற்ற குடை தலைமீது
நிழற்றவும்; சுந்தர மகளிர் அங்கைச் சாமரை தென்றல் தூற்ற –
அழகிய பெண்கள் தம் அழகிய கையில் தாங்கிய வெண்சாமரைகள்
தென்றல் (போலும்) இளங்காற்றை வீசவும்; அந்தரவானநாடர் அடி
தொழமுரசம் ஆர்ப்ப – ‘அந்தரம்’ எனப்படும் வான் நாட்டில் உள்ள
தேவர்கள் அடிவணங்கி நிற்க, முரசங்கள் ஆரவாரிக்க; இந்திரன்
இருந்த தன்மை கண்டு உவந்து இறைஞ்சிப் போனான் – இந்திரன்
அரியணையில் இருந்த தன்மையைக் கண்டு மகிழ்ந்து வணங்கிப்
போனான்.

———

8755.
பூ அவர் மரத்தைப் போர்ப்ப அந்தரம் விரிந்து பொங்கும்
தேவர்தம் இருக்கையான் மேருவின் சிகர வைப்பில்,
மூவகை உலகும் சூழ்ந்த முரண் திசை முறையின் காக்கும்
காவலர் எண்மர் நின்ற தன்மையும் தெரியக் கண்டான்.–53-

பூ அலர் மரத்தைப் போர்ப்ப அந்தரம் விரிந்து பொங்கும் –
மலர்கள் விரிந்து கற்பகத் தருவைச் சூழுமாறு போல விண்ணில்
விரிந்து உயர்ந்திருக்கின்ற; தேவர்தம் இருக்கை ஆன மேருவின் சிகர
வைப்பில் – தேவர்களின் இருப்பிடமான மேருமலையின்
சிகரங்களாகிய இடங்களில்; மூவகை உலகும் சூழ்ந்த முரண் திசை
முறையின் காக்கும் – மூவகையான உலகத்தைச் சூழ்ந்திருக்கின்ற
முரண்பட்ட திசைகள் எட்டையும் முறைமையாகக் காத்து நிற்கின்ற;
காவலர் எண்மர் நின்ற தன்மையும் தெரியக் கண்டான் – திசைக்
காவலர் எண்மரும் நிற்கின்ற தன்மையையும் தெளிவாகக் கண்டான்.
(அனுமன்).

————–

8756.
அத் தடங் கிரியை நீங்கி, அத் தலை அடைந்த வள்ளல்,
உத்தரகுருவை உற்றான்; ஒளியவன் கதிர்கள் ஊன்றி,
செத்திய இருள் இன்றாக, விளங்கிய செயலை நோக்கி,
வித்தகன், ‘விடிந்தது!’ என்னா, ‘முடிந்தது, என் வேகம்!’
என்றான்.–54-

அத்தடங்கிரியை நீங்கி அத்தலை அடைந்த வள்ளல் – அந்தப்
பெரிய மேருமலையை விட்டு நீங்கி அப்பக்கத்தை அடைந்த
அனுமன்; உத்தரகுருவை உற்றான் – உத்தர குரு என்ற போக
பூமியை அடைந்தான்; ஒளியவன் கதிர்கள் ஊன்றி – அங்கு, ஒளியை
உடைய சூரியன் தன் கதிர்களைப் பரப்பி; செத்திய இருள் இன்றாக
விளங்கிய செயலை நோக்கி – நெருங்கிய இருள் இல்லையாம்படி
செய்து கொண்டு விளங்கிய செயலைப் பார்த்து; வித்தகன்,
“விடிந்தது!” என்னா, முடிந்தது, என்வேகம்!’ என்றான் –
திறமைமிக்கவனாகிய அனுமன், பொழுது விடிந்து விட்டது என்று
கருதி, ‘என் வேகம் முடிந்துவிட்டது’ என வருந்திக் கூறினான்.

———–

8757.
‘ஆதியான் உணராமுன்னம் அரு மருந்து உதவி, அல்லின்
பாதியால், அனைய துன்பம் அகற்றுவான் பாவித்தேற்குச்
சோதியான் உதயம் செய்தான்; உற்றது ஓர் துணிதல்
ஆற்றேன்;
ஏது யான் செய்வது? என்னா, இடர் உற்றான், இணை
இலாதான்.–55-

இணை இலாதான் – ஒப்பற்றவனாகிய அனுமன்; ஆதியான் உணரா
முன்னம் அருமருந்து உதவி – ஆதிமூர்த்தியாகிய இராமன் மூர்ச்சை
தெளிதற்கு முன்பே அரிய மருந்தினைக் கொண்டு போய்க் கொடுத்து;
அல்லின்பாதியால் அனைய துன்பம் அகற்றுவான் பாவித்தேற்குச் –
இரவின் பாதியிலேயே அத்துன்பத்தை நீக்க எண்ணி இருந்த எனக்கு;
சோதியான் உதயம் செய்தான் – பேரொளியை உடைய கதிரவன்
உதயஞ் செய்து விட்டான்; உற்றது ஓர் துணிதல் ஆற்றேன்- இனிப்
பொருந்திய செய்ல இன்ன தென்பதைத் துணிய இயலாதவனாக
இருக்கின்றேன்; ‘ஏது யான் செய்வது?’ என்னா இடர் உற்றான் –
(இப்போது) ‘யான் செய்ய வேண்டுவது எது?’ என்று
வருத்தமடைந்தான்.

————

8758.
கால் திசை சுருங்கச் செல்லும் கடுமையான்,-’கதிரின்
செல்வன்
மேல் திசை எழுவான்அல்லன்; விடிந்ததும் அன்று; மேரு
மாற்றினன், வடபால் தோன்றும் என்பது மறைகள் வல்லோர்
சாற்றினர்’ என்ன, துன்பம் தவிர்ந்தனன்-தவத்து மிக்கான்.–56-

தவத்து மிக்கான் – தவத்தாற் சிறந்தவனும்; கால் திசை சுருங்கச்
செல்லும் கடுமையான் – காற்றின் வேகம் குறையுமாறும் திசையின்
தொலைவு சுருங்குமாறும் செல்லுகின்ற விரைவினை உடையவனுமாகிய
அனுமன்; கதிரின் செல்வன் மேல் திசை எழுவான் அல்லன் –
கதிரினைச் செல்வமாக உடைய சூரியன் மேற்குத் திசையில் எழுகின்ற
இயல்புடையவன் அல்லன்; விடிந்ததும் அன்று; மேருமாற்றினன் –
இப்போது விடியற்காலமுமில்லை; மேருவில் தன் செலவை
மாற்றினவனாய்; வடபால் தோன்றும் என்பது மறைகள் வல்லோர்
சாற்றினர் – வடபுறத்தில் (உள்ளார்க்கு மேற்குத்திசையில்) தோன்றும்
என்பது, வேதம் பயின்றவர்கள் கூறியுள்ளனர்; என்ன, துன்பம்
தவிர்ந்தனன் – என்று எண்ணித் துன்பம் தணிந்தான்.

—————

உத்தர குரு நாட்டைக் கண்டு, அனுமன் அப்பால் போதல்

8759.
இருவரே தோன்றி, என்றும் ஈறு இலா ஆயுள் எய்தி,
ஒருவரோடு ஒருவர், உள்ளம் உயிரொடும் ஒன்றே ஆகி,
பொரு அரும் இன்பம் துய்த்து, புண்ணியம் புரிந்தோர்
வைகும்,
திரு உறை கமலம் அன்ன, நாட்டையும் தெரியக் கண்டான்.–57-

இருவரே தோன்றி, என்றும் ஈறுஇலா ஆயுள் எய்தி – (ஆண்
பெண் என்ற) இருவரே பிறந்து, என்றும் முடிவிலாத ஆயுளைப்
பெற்று; ஒருவரோடு ஒருவர், உள்ளம் உயிரொடும் ஒன்றே ஆகி –
ஒருவரோடு ஒருவர் உள்ளமும் உயிரும் ஒன்றே என்னுமாறு ஒற்றுமை
உடையராய்; பொரு அரு இன்பம் துய்த்து புண்ணியம் புரிந்தோர்
வைகும் – ஒப்பற்ற இன்பம் துய்த்துக் கொண்டு, புண்ணியச்
செயல்களைச் செய்தோர் பொருந்தி இருப்பதான; திருஉறை கமலம்
அன்ன நாட்டையும் தெரியக் கண்டான் – திருமகள் வாழும் தாமரை
மலர்போன்ற உத்தர குரு நாட்டையும் கண்களால் தெரியக் கண்டான்.

—————–

8760.
வன்னி நாட்டிய பொன் மௌலி வானவன், மலரின் மேலான்,
கன்னி நாள் திருவைச் சேரும் கண்ணனும், ஆளும் காணி,
சென்னி நாள் தெரியல் வீரன், தியாக மா விநோதன்
தெய்வப்
பொன்னி நாட்டு உவமை வைப்பை, புலன் கொள,
நோக்கிப்போனான்.–58-

வன்னி நாட்டிய பொன் மௌலி வானவன், மலரின் மேலான்-
வன்னி இலையைத் தரித்த பொன்னிறமான சடா மகுடத்தைத் தாங்கிய
சிவபெருமானும், தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம தேவனும்;
கன்னிநாள் திருவைச் சேரும் கண்ணனும் – என்றும் மாறாக்
கன்னிமையுடைய திருமகளை மார்பிலே கொண்டுள்ள திருமாலும்;
ஆளும் காணி – ஆட்சி செய்கின்ற தலமாகி; சென்னி நாள்
தெரியல்வீரன் தியாக மா விநோதன் – தலையில் அன்றலர்ந்த
மலர்மாலையைப் புனைந்த வீரனும், தியாக மாவிநோதன் என்ற
சிறப்புப் பெயர் தாங்கியவனும் ஆகிய சோழனுடையதுமாகிய;
தெய்வப் பொன்னி நாட்டு உவமை வைப்பை –
தெய்வத்தன்மையுடைய காவிரி பாயும் சோழ நாட்டுக்கு உவமையாகத்
தக்க அந்த உத்தரகுருவை; புலன் கொள நோக்கிப் போனான் –
அனுமன் கட்புலன் கொள்ளுமாறு கருத்தொடு நோக்கிச் சென்றான்.

தியாகமாவிநோதன்’ என்பது முதற்குலோத்துங்கன்
முதல் பல சோழ மன்னர்க்குப் பெயராக வருதலின் இதனைக்
கொண்டு கம்பனின் காலத்தை வரையறுத்தற்கியலாமற் போகின்றது.

————–

நீலமலைக்கு அப்பால் மருத்துமலையை அனுமன் காணுதல்

8761.
விரிய வன் மேரு என்னும் வெற்பினின்மீது செல்லும்
பெரியவன், அயனார் செல்வம் பெற்றவன், பிறப்பும்
போர்ந்தான்,
அரியவன், உலகம் எல்லாம் அளந்த நாள் வளர்ந்து
தோன்றும்
கரியவன் என்ன நின்ற, நீல மால் வரையைக் கண்டான்.–59-

வன்மேரு என்னும் வெற்பினின் மீதுவிரிய செல்லும் பெரியவன்
– வலிய மேரு என்னும் மலையின் மீது (வேகந்தாங்காது) பிளவுறுமாறு
செல்லும் பெரிய தோற்றத்தை உடையவனும்; அயனார் செல்வம்
பெற்றவன் பிறப்பும் பேர்ந்தான் அரியவன் – பிரமனுடைய
பட்டத்தைப் பெறப் போகின்றவனும், பிறவித் துன்பத்தினின்றும்
நீங்கியவனும், குரங்கு வடிவினனுமாகிய அனுமன்; உலகம் எல்லாம்
அளந்தநாள் வளர்ந்து தோன்றும் – உலகம் அனைத்தையும் அளந்த
காலத்தில் பேருரு வினனாக வளர்ந்து தோன்றுகின்ற; கரியவன் என்ன
நின்ற நீல மால் வரையைக் கண்டான் – திருவிக்கிரமனாகிய கரியவன்
போல நின்ற பெரிய நீலமலையைக் கண்டான்.

———-

8762.
அல் குன்ற அலங்கு சோதி அம் மலை அகலப் போனான்,
பொன் குன்றம் அனைய தோளான் நோக்கினான்,
புலவன் சொன்ன
நல் குன்றம் அதனைக் கண்டான், உணர்ந்தனன்-’நாகம
முற்ற
எல் குன்ற எறியும் தெய்வ மருந்து அடையாளம்’ என்ன.–60-

அல்குன்ற அலங்கு சோதி அம்மலை அகலப்போனான்-இருளும்
(தன் முன்னர்) ஒடுங்குமாறு (மிகக் கருநிறத்துடன்) விளங்கும்
சோதியையுடைய அம்மலை பின்னிடுமாறு கடந்து சென்றவனாகிய;
பொன்குன்றம் அனயை தோளான் நோக்கினான் –
பொன்மலைபோன்ற தோளினை உடைய அனுமன் கண்களால் நோக்கி;
புலவன் சொன்ன நல்குன்றம் அதனைக் கண்டான் – அறிஞனாகிய
சாம்பவன் சொன்ன நல்லமருந்துமலையைக் கண்டு; தெய்வமருந்து
அடையாளம் நாகம் முற்ற எல்குன்ற எறியும் என்ன உணர்ந்தனன்
-தெய்வத்தன்மை வாய்ந்த மருந்துக்கு அறிகுறி, மேலுலகம் முழுவதும்
சூரியனுடைய ஒளி குறையுமாறு ஒளிவிடுவது என்ன ஊகித்துத்
தெரிந்து கொண்டான்.

———–

மருத்து மலையை அனுமன் பெயர்த்து எடுத்து மீளுதல்

8763.
பாய்ந்தனன்; பாய்தலோடும், அம் மலை பாதலத்துச்
சாய்ந்தது; காக்கும் தெய்வம் சலித்தன, கடுத்து வந்து,
காய்ந்தது, ‘நீதான் யாவன்? கருத்து என்கொல்?
கழறுக!’என்ன,
ஆய்ந்தவன் உற்ற தன்மை அவற்றினுக்கு அறியச்
சொன்னான்.–61-

பாய்ந்தனன் பாய்தலோடும் – (மருத்துமலையைத் தெரிந்த
அனுமன்) அந்த மலைமீது பாய்ந்தான், அங்ஙனம் பாய்ந்த உடனே;
அம்மலை பாதலத்துச் சாய்ந்தது – அம் மருத்துமலை பாதலத்தில்
சாய்ந்தது; காக்கும் தெய்வம்சலித்தன – (அம் மருந்துகட்குக்) காவலாக
இருந்த தேவதைகளும் மனம் தளர்ந்தன; கடுத்து வந்து காய்ந்தது –
(பிறகு தேறி) விரைந்துவந்து சினம் கொண்டு; ‘நீதான் யாவன்? கருத்து என்கொல்? கழறுக!’ என்ன –
(அனுமனைப் பார்த்து) ‘நீ யாவன்? (உன்) எண்ணம் யாது? சொல்லுக!’
என்று கேட்க; ஆய்ந்தவன் உற்ற தன்மை அவற்றினுக்கு அறியச்
சொன்னான் – ஆராயுந் தன்மை உள்ளவனாகிய அனுமன் தான்
வந்ததற்குரிய காரணத்தை அத்தேவதைகள் அறிந்து கொள்ளுமாறு
கூறினான்.

————

8764.
கேட்டு அவை, ‘ஐய! வேண்டிற்று இயற்றி, பின் கெடாமல்
எம்பால்
காட்டு’ என உரைத்து, வாழ்த்திக் கரந்தன; கமலக்கண்ணன்
வாள் தலை நேமி தோன்றி, மறைந்தது; மண்ணின்நின்றும்
தோட்டனன், அனுமன் மற்று அக் குன்றினை, வயிரத்
தோளால்–62-

கேட்டு அவை, ‘ஐய! வேண்டிற்று இயற்றி – அனுமன் கூறிய
வற்றைக் கேட்ட அத் தெய்வங்கள், ‘ஐயனே! (இம்மருந்துகளால்)
(உனக்கு ஆக) வேண்டுவனவற்றைச் செய்து முடித்துக் கொண்டு; பின்
கெடாமல் எம்பால் காட்டு என உரைத்து வாழ்த்திக் கரந்தன-
‘பின்பு இம்மருந்து கெடாதபடி கொண்டு வந்து எமக்குக் காட்டுவாயாக!’
எனக்கூறி அவனை வாழ்த்திவிட்டு மறைந்தன; கமலக் கண்ணன் வாள்
தலை நேமி தோன்றி, மறைந்தது – (பின்பு) தாமரைமலர் போன்ற
கண்களை உடையவனான திருமாலின் கூரிய முனையை உடைய
சக்கரப்படை வந்து தோன்றி அதுவும் மறைந்தது; அனுமன், மற்று
அக்குன்றினை மண்ணின் நின்றும் வயிரத் தோளால் தோட்டனன்-
பின்பு அனுமன் அந்த மருந்து மலையை மண்ணில் நின்றும் தன்
வயிரம் போன்ற தோளினால் பெயர்தது எடுத்தான்.

———-

8765.
‘இங்கு நின்று, இன்னன மருந்து என்று எண்ணினால்,
சிங்குமால் காலம்’ என்று உணரும் சிந்தையான்,
அங்குஅது வேரொடும் அங்கை தாங்கினான்,
பொங்கிய விசும்பிடைக் கடிது போகுவான்.–63-

இங்கு நின்று இன்னன மருந்து என்று எண்ணினால் –
‘இவ்விடத்தில் நின்று இன்னவை நமக்குத் தேவையான மருந்துகள்
என்று ஆராய்வோமானால்; காலம் சிங்குமால் என்று உணரும்
சிந்தையான் – காலம் கழியும் என்று உணர்ந்த மனத்தினனான
அனுமன்; அங்கு அது வேரொடும் அங்கை தாங்கினான்- அப்போது
அம்மலையினை வேருடன் அழகிய கரத்தில் தாங்கிக் கொண்டு;
பொங்கிய விசும்பிடைக் கடிது போகுவான் – விரிந்து பரந்த ஆகாய
வழியே விரைந்து செல்பவனானான்.

————-

8766.
ஆயிரம் யோசனை அகன்று மீ உயர்ந்து,
ஆயிரம் யோசனை ஆழ்ந்தது அம் மலை,
‘ஏ’ எனும் மாத்திரத்து, ஒரு கை ஏந்தினான்.
தாயினன்-உலகு எலாம் தவழ்ந்த சீர்த்தியான்.–64-

உலகு எலாம் தவழ்ந்த சீர்த்தியான்- உலகம் முழுமையும் பரவிய
புகழை உடையவனான அனுமன்; ஆயிரம் யோசனை அகன்று
மீஉயர்ந்து – ஆயிரம் யோசனை அளவு விரிந்தும், ஆயிரம்
யோசனை அளவுமேல் உயர்ந்தும்; ஆயிரம் யோசனை ஆழ்ந்தது
அம்மலை – ஆயிரம் யேசானை அளவு தரையில் ஆழ்ந்தும்
உள்ளதாகிய அச்சஞ்சீவி மலையை; ‘ஏ’ எனும் மாத்திரத்து, ஒரு கை
ஏந்தினான் தாயினன் – ‘ஏ’ எனும் காலத்திற்குள் ஒரு கையில் ஏந்திக்
கொண்டு தாவிச் சென்றான்.

————

அனுமனை அனுப்பிய பின், சாம்பனும் விடணனும் இராமனைச்
சென்று காணுதல்

8767.
அத் தலை, அன்னவன் அனையன் ஆயினான்;
இத் தலை, இருவரும் விரைவின் எய்தினார்,
கைத் தலத்தால் அடி வருடும் காலையில்,
உத்தமற்கு உற்றதை உணர்த்துவாம் அரோ.–65-

அத்தலை, அன்னவன் அனையன் ஆயினான்-அவ்விடத்து அவ்
அனுமன் அத்தன்மையன் ஆயினான் (அக்காலத்தில்); இத்தலை,
இருவரும் விரைவின் எய்தினார் – இங்கே, (போர்க்களத்தில்) சாம்பன்
வீடணன் என்ற இருவரும், விரைவாக இராமனை அடைந்தவராய்;
கைத் தலத்தால் அடி வருடும் காலையில் – தம் கைகளால்
அவனுடைய திருவடிகளைப் பற்றி வருடும் போது; உத்தமற்கு
உற்றதை உணர்த்துவாம் அரோ – உத்தமனாகிய அவ்விராமனுக்கு
நிகழ்ந்ததைக் கூறுவோம்.

———–

8768.
வண்டு அன மடந்தையர் மனதை வேரொடும்
கண்டன, கொள வரும் கருணைதாம் எனக்
கொண்டன, கொடுப்பன வரங்கள், கோள் இலாப்
புண்டரீகத் துணை தருமம் பூத்தென;–66-

வண்டு ஆன மடந்தையர் மனத்தை வேரொடும் கண்டன –
(தம்மீது படிந்திருக்கும்) வண்டு எனும்படி, மகளிரின் உள்ளத்தை
வேரோடு கொண்டனவும் கொளவரும் கருணைதாம் எனக கொண்டன
– (எல்லா உயிர்களும் முகந்து) கொள்ளும்படி எழுகின்ற கருணையே
தாம் என்னும்படி அதனை நிரம்பக் கொண்டனவும்; வரங்கள்
கொடுப்பன – வரங்களைத் தருவனவும் ஆகிய; கோள்இலாப்
புண்டரீகத்துணை தருமம் பூத்தென – மாறுபாடில்லாத தாமரைமலர்
போன்ற விழியிணைகள் தருமம் போன்று மலர்ந்து திகழ்ந்தன.

———-

8769. நோக்கினன்-கரடிகட்கு அரசும், நோன் புகழ்
ஆக்கிய நிருதனும், அழுத கண்ணினர்,
தூக்கிய தலையினர், தொழுத கையினர்,
ஏக்கமுற்று, அருகு இருந்து, இரங்குவார்களை.–67-

கரடிகட்கு அரசும், நோன்புகழ் ஆக்கிய நிருதனும் – (அங்ஙனம்
மலர்ந்த கண்களை உடைய இராமன்) கரடிகட்கு அரசனாகிய
சாம்பவனும், மிக்க புகழ் பெற்ற வீடணனும்; அழுத கண்ணினர்,
தூக்கிய தலையினர் தொழுதகையினர் – அழுத கண்ணினராய்,
தூக்கிய தலையினை உடையராய், தொழுதகையினை உடையராய்;
ஏக்கமுற்று அருகு இருந்து இரங்குவார்களை நோக்கினன் –
துன்பமுற்றுத் தன்னருகில் இருந்து கொண்டு இரங்குகின்றவர்களைக்
கண்டான்.

—————
இராமன் அவர்களை உசாவுதல்

8770. ‘ஏவிய காரியம் இயற்றி எய்தினை?
நோவிலை? வீடணா!’ என்று நோக்கி, பின்,
தா அரும் பெரும் புகழ்ச் சாம்பன்தன்னை, ‘நீ
ஆவி வந்தனைகொல்?’ என்று அருளினான் அரோ.–68-

“வீடணா! ஏவிய காரியம் இயற்றி எய்தினை? – (கண் விழித்துப்
பார்த்த இராமன்)’ வீடணா யான் ஏவிய (உணவு கொணர்வதாகிய)
காரியத்தைச் செய்து வந்தாயோ?; நோவிலை? என்று நோக்கி –
(ஆகவே பிரமாத்திரத்தினால் எய்திய) நோவிலை யன்றோ? என
வீடணனை நோக்கி வினவியபின்; தா அரும் பெரும் புகழ்ச் சாம்பன்
தன்னை – குற்றமற்ற பெரும்புகழையுடைய சாம்பவன் தன்னையும்
பார்த்து; ‘நீ ஆவி வந்தனை கொல்?’ என்று அருளினான் அரோ-
‘நீ உயிர் வரப் பெற்றனையோ? என்று கேட்டருளினான் இராமன்.

——————

8771. ‘ஐயன்மீர்! நமக்கு உற்ற அழிவு இது ஆதலின்,
செய்வகை பிறிது இலை; உயிரின் தீர்ந்தவர்
உய்கிலர்; இனிச் செயற்கு உரியது உண்டுஎனின்,
பொய் இலீர்! புகலுதிர், புலமை உள்ளத்தீர்!–69-

‘ஐயன்மீர்! இது நமக்கு உற்ற அழிவு ஆதலின் – ‘ஐயன்மீர்! இது
நமக்கு நேர்ந்த அழிவேயாகலின்; செய்வகை பிறிது இலை – இதற்கு
மாறாகச் செய்யும் செயல்வேறு இல்லை; உயிரின் தீர்ந்தவர் உய்கிலர்
– உயிர் நீங்கினவர் மீண்டும் பிழைக்கமாட்டார்கள்; இனிச் செயற்கு
உரியது உண்டு எனின் – இனிச் செய்வதற்குரிய செயல் ஏதேனும்
இருப்பின்; பொய் இலீர்! புலமை உள்ளத்தீர் புகலுதிர்’ –
பொய்மையில்லாத அறிவுசான்ற மனத்தை உடையவர்களே கூறுங்கள்.

———–

8772. ‘சீதை என்று ஒருத்தியால் உள்ளம் தேம்பிய
பேதையேன், சிறுமையால் உற்ற பெற்றியை
யாது என உணர்த்துகேன்! உலகொடு ஈர்வுறாக்
காதை, வன் பழியொடும் நிறுத்திக் காட்டினேன்.

சீதை என்று ஒருத்தியால் உள்ளம் தேம்பிய – சீதை என்ற
ஒருத்தி காரணமாக மனம் வருத்திய; பேதையேன், சிறுமையால்
உற்றபெற்றியை – அறிவிலியாகிய யான் என் கீழ்மையால் அடைந்த
தன்மையை; யாது என உணர்த்துகேன்! – என்னவென்று
சொல்லுவேன்? உலகொடு ஈர்வுறாக் காதை – உலகத்தோடு
பொருந்தாத (இந்தஎன்) வாழ்க்கைக் கதையை; வன்பழியொடும்
நிறுத்திக் காட்டினேன் – கொடிய பழியோடும் பொருந்துமாறு
செய்து காண்பித்தேன்.

————-

8773. ‘“மாயை இம் மான்” என, எம்பி, வாய்மையான்,
தூயன உறுதிகள் சொன்ன சொல் கொளேன்,
போயினென்; பெண் உரை மறாது போகலால்,
ஆயது, இப் பழியுடை மரணம்-அன்பினீர்!–71-

அன்பினீர் – அன்புடையவர்களே! “மாயை இம்மான்” என எம்பி,
வாய்மையான் சொன்ன – ‘மாயமான்இது’ என என் தம்பி
உண்மையாகக் கூறிய; தூயன உறுதிகள் சொன்ன சொல் கொளேன்-
தூய்மையான உறுதிமிக்கவாகக் கூறிய சொற்களைக் கொள்ளாமல்;
பெண் உரைமறாது போயினென் – பெண் உரை மறுக்காமல் அந்த
மானின்பின்னே போயினன்; போகலால்,இப்பழியுடை மரணம் ஆயது – அங்ஙனம் போனதால்
இப்பழியுடைய மரணம் உண்டாயிற்று.

————–

8774.
‘கண்டனென், இராவணன்தன்னைக் கண்களால்;
மண்டு அமர் புரிந்தனென், வலியின்; ஆர் உயிர்
கொண்டிலென், உறவு எலாம் கொடுத்து, மாள, நான்,
பண்டுடைத் தீவினை பயந்த பண்பினால்.–72-

இராவணன் தன்னைக் கண்களால் கண்டனென் – ‘இராவணன்
தன்னை என் கண்களால் கண்டேன்; வலியின் மண்டு அமர்
புரிந்தனென் – அவனோடு வலிமையால் நெருங்கிய போரையும்
செய்தேன்; பண்டுடைத் தீவினை பயந்த பண்பினால் – (ஆனால்)
பழைய என் தீவினைப் பயனால்; உறவு எலாம் கொடுத்து நான் மாள
– என் உறவாக உள்ள எல்லோரையும் பறிகொடுத்து நான்மாளும்படி;
ஆர் உயிர் கொண்டிலென் – அவன் ஆருயிரைக் கொள்ளாது
விட்டேன்.

————-

8775. ‘“தேவர்தம் படைக்கலம் தொடுத்து, தீயவன்
சாவது காண்டும்” என்று இளவல் சாற்றவும்,
ஆவதை இசைந்திலென்,-அழிவது என்வயின்
மேவுதல் உறுவது ஓர் விதியின் வெம்மையால்.–73-

இளவல், “தேவர் தம் படைக்கலம் தொடுத்து – என்தம்பி,
‘பிரமதேவர்தம் படைக்கலத்தைத் தொடுத்து; “தீயவன் சாவது
காண்டும்” என்று சாற்றவும் – தீயவனாகிய இந்திரசித்து
சாவதைக்காண்போம்” என்று கூறவும்; என்வயின் அழிவது மேவுதல்
உறுவது ஓர் விதியின் வெம்மையால் – என்னிடத்தில் அழிவு
பொருந்துதற்குக் காரணமான ஒரு விதியின் கொடுமையால்; ஆவதை
இசைந்திலென் – பொருத்தமான அச்செயலை உடன்படாது
போயினேன்.

———-

8776. ‘நின்றிலென், உடன், நெறி படைக்கு நீதியால்
ஒன்றிய பூசனை இயற்ற உன்னினேன்;
பொன்றினர் நமர் எலாம்; இளவல் போனினான்;
வென்றிலென் அரக்கனை, விதியின் மேன்மையால்.–74-

உடன் நின்றிலென் – என் தம்பியுடன் போர்க்களத்தில்
நின்றிலேன்; எறிபடைக்கு நீதியால் ஒன்றிய பூசனை இயற்ற
உன்னினேன் – எறிகின்ற படைக்கலன்களுக்கு முறைமைப்படி
பொருந்திய பூசையைச் செய்யக் கருதினேன்; நமர் எலாம்
பொன்றினர் – நம்மவர் எல்லாம் இறந்தனர்; இளவல் வென்றிலென்
அரக்கனை விதியின் மேன்மையால் போயினன் – என் தம்பியும்
இந்திரசித்தனை வெல்லாமல் தீவினையின் மிகுதியால் இறந்து
போயினன்.

————-

8777. ‘ஈண்டு, இவண் இருந்து, இவை இயம்பும் ஏழைமை
வேண்டுவது அன்று; இனி, அமரின் வீடிய
ஆண் தகை அன்பரை அமரர் நாட்டிடைக்
காண்டலே நாம்; பிற கண்டது இல்லையால்.–75-

ஈண்டுஇவண் இருந்து இவை இயம்பும் ஏழைமை வேண்டுவது
அன்று – இப்போது இங்கே இருந்து இவற்றைச் சொல்லுகின்ற
பேதைமை வேண்டத் தகுவதன்று; இனி அமரின் வீடிய ஆண் தகை
அன்பரை – இனி போரில் இறந்துபட்ட ஆண் தகையாகிய
இலக்குவனையும், அன்பர்களையும்; அமரர் நாட்டிடைக் காண்டலே
நலம் பிற கண்டது இல்லையால் – (இறந்துபோய்) வீரசுவர்க்கத்தில்
காண்பதே நல்லது, இதைத் தவிரவேறு வழி தோன்றவில்லை.

————

8778. ‘எம்பியைத் துணைவரை இழந்த யான், இனி,
வெம்பு போர் அரக்கரை முருக்கி, வேர்அறுத்து,
அம்பினின் இராவணன் ஆவி பாழ்படுத்து,
உம்பருக்கு உதவி, மேல் உறுவது என்அரோ?–76-

எம்பியைத் துணைவரை இழந்தயான் – என் தம்பியையும்
துணைவரையும் இழந்துவிட்ட நான்; இனி வெம்புபோர் அரக்கரை
முருக்கி வேர் அறுத்து – இனிமேல் மனம் வெதும்பிச் செய்கின்ற
போரில் அரக்கரைக் கொன்று அடியோடு அழித்துவிட்டு; அம்பினின்
இராவணன் ஆவி பாழ்படுத்து – என் அம்பினால் இராவணன்
உயிரையும் ஒழித்துவிட்டு; உம்பருக்கு உதவி மேல் உறுவது என் – தேவர்களுக்கு உதவி செய்து யான் இனி அடையப்
போவது என்ன இருக்கின்றது? அரோ – அசை.

———–

8779. ‘இளையவன் இறந்தபின், எவரும் என் எனக்கு?
அளவு அறு சீர்த்தி என்? அறன் என்? ஆண்மை என்?
கிளை உறு சுற்றம் என்? அரசு என்? கேண்மை என்?
விளைவுதான் என்? மறை விதி என்? மெய்ம்மை என்?–77-

இளையவன் இறந்தபின் எனக்கு எவரும் என்? – என் தம்பி
இறந்தபின் எனக்கு எவராயிருந்தால் என்ன? அளவறு சீர்த்தி என்?
அறன் என்? ஆண்மை என்? – எல்லையற்ற புகழ் எதற்கு? அறம்
எதற்கு? ஆண்மை எதற்கு?கிளைஉறு சுற்றம் என்? அரசு என்?
கேண்மை என்? – பல்கித் தழுவும் சுற்றத்தார் எதற்கு? அரசாட்சி
எதற்கு? நண்பர்கள்தான் எதற்கு? விளைவுதான் என்? மறைவிதி
என்? மெய்மைஎன்? – (ஏற்படப் போகும்) விளைவுகள் பற்றி என்ன?
வேதவிதிகள் என்ன? மெய் நெறிதான் எதற்கு?

———-

8780. ‘இரக்கமும் பாழ்பட எம்பி ஈறு கண்டு,
அரக்கரை வென்று நின்று, ஆண்மை ஆள்வெனேல்,
மரக் கண் வன் கள்வனே, வஞ்சனேன்; இனி,
கரக்குமது அல்லது, ஓர் கடன் உண்டாகுமோ?–78-

இரக்கமும் பாழ்பட எம்பி ஈறுகண்டு – இரக்கம் எனும் பண்பு
கெட்டொழியும்படி என்தம்பியின் இறுதியைக் கண்டபின்பும்;
அரக்கரை வென்று நின்று ஆண்மை ஆள்வனேல் – அரக்கரை
வென்றுநின்று என்வீரத்தைப் பெரிது படுத்திக் காட்டுவேனாயின்;
வஞ்சனேன் மரக்கண் வன்கள்வனே! – வஞ்சகத் தன்மையை உடைய
யான் (அம்பினால்) சுரக்கும் தன்மையற்ற மரக்கண்ணை உடைய
கள்வனே!; இனி கரக்குமது அல்லது ஓர் கடன் உண்டாகுமோ? – இனி (உலகின் முன் தோன்றாது) ஒளிந்து
கொள்வதல்லாது வேறு ஓர் கடமை இருக்குமோ? (இராது).

———–

8781. ‘“தாதையை இழந்தபின், சடாயு இற்றபின்
காதலின் துணைவரும் மடிய, காத்து உழல்
கோது அறு தம்பியும் விளிய, கோள் இலன்,
சீதையை உவந்துளான்” என்பர், சீரியோர்.–79-

தாதையை இழந்தபின் சடாயு இற்றபின் – தந்தையை இழந்த
பின்னும் அம்முறையினனாகிய சடாயு இறந்த பின்னும்; காதலின்
துணைவரும் முடிய – அன்புடைய நண்பரெல்லாம் உயிர் நீங்கப்
பெறவும்; காத்து உழல் கோது அறு தம்பியும் விளிய – (இரவு
பகலாக) என்னைப் பாதுகாத்து வருத்தமுற்ற குற்றம் இலாத தம்பியான
இலக்குவனும் இறந்துபடவும்; ‘சீதையை உவந்துளான், கோள் இலன்”
என்பர் சீரியோர் – (தான் மட்டும் இறவாது) சீதையை விரும்பி
இருக்கின்றான், (ஆதலால்) நல்ல கொள்கை இல்லாதவன் இராமன்
என்று சீர்மையுடையவர்கள் கூறுவர்.

————

8782. ‘வென்றனென், அரக்கரை வேரும் வீய்ந்து அறக்
கொன்றனென், அயோத்தியைக் குறுகினேன், குணத்து
இன் துணை எம்பியை இன்றி, யான் உளேன்;
நன்று அரசு ஆளுமா, சால நன்றுஅரோ.–80-

அரக்கரை வென்றனென் – அரக்கரை வெற்றிகொண்டு; வேரும்
வீய்ந்து அறக் கொன்றனென் – அவர்களை வேரும் அற்றுப்
போகுமாறு கொன்று; அயோத்தியைக் குறுகினேன் – அயோத்தியை
அடைந்து;குணத்து இன் துணை எம்பியை இன்றி – நற்பண்புகள்
நிறைந்த இனிய துணைவனான தம்பி இல்லாமல்; யான் உளேன்
நன்று! – நான் மட்டும் உயிர்வாழ்வதோ? நல்லதே! அரசு ஆளுமா
சாலநன்று – அரசும் ஆளுவதோ? மிகவும் நல்லதே!

————

8783. ‘படி இனது ஆதலின், யாதும் பார்க்கிலென்,
முடிகுவென், உடன்’ என முடியக் கூறலும்,
அடி இணை வணங்கிய சாம்பன், ‘ஆழியாய்!
நொடிகுவது உளது’ என நுவல்வதாயினான்:–81-

படி இனது ஆதலின் யாதும் பார்க்கிலென் – (என்) நிலைமை
இவ்வாறு இருப்பதினால், பின் விளைவுகளைப் பாராமல்; ‘உடன்
முடிகுவன்’ என முடியக் கூறலும் – ‘உடனே இறப்பேன்’ என்று
முடிவாகக் (இராமன்) கூறியபோது; அடி இணை வணங்கிய சாம்பன் –
(அவ் இராமனுடைய) திருவடிகளை வணங்கிய சாம்பவன்; ‘ஆழியாய்!
நொடிகுவது உளது’ என நுவல்வதாயினான் – ‘சக்கரப்படையை
உடையவனே! யான் சொல்லவேண்டுவது உளது’ என்று சொல்லத்
தொடங்கினான்.

————

8784. ‘உன்னை நீ உணர்கிலை; அடியனேன் உனை
முன்னமே அறிகுவேன்; மொழிதல் தீது, அது;
என் எனில், இமையவர் எண்ணுக்கு ஈனம் ஆம்;
பின்னரே தெரிகுதி-தெரிவு இல் பெற்றியோய்!–82-

தெரிவு இல் பெற்றியோய் – எவராலும் தெரிந்துகொள்ள முடியாத
(அளத்தற்கரிய) தன்மையே! உன்னை நீ உணர்கிலை – உன்னை நீ
உணராமல் இருக்கின்றாய்; அடியனேன் உனை முன்னமே அறிகுவேன்
– அடியேன் உன்னை முன்னமே அறிவேன்; அது, மொழிதல் தீது
என் எனில் இமையவர் எண்ணுக்கு ஈனம் ஆம் – அதைக் கூறுதல்
நன்றன்று ஏனென்றால் வானவர் b எண்ணத்திற்குக் குறைவாகும்;
பின்னரே தெரிகுதி! – (உன்தன்மையை நீ) பின்னர் நீயே தெரிந்து
கொள்வாய்!

————-

8785. ‘அம்புயத்து அயன் படை ஆதல் தேறினேன்,
உம்பியை, உலப்பு அரும் உருவை ஊன்றிட,
வெம்பு போர்க் களத்திடை வீழ்த்த வென்றியால்;
எம் பெருந் தலைவ! ஈது எண்ணம் உண்மையால்;–83-

எம் பெருந் தலைவ! – எம்முடைய பெருமை சான்ற தலைவனே!
வெம்பு போர்க்களத்திடை – வெம்மை மிக்க போர்க்களத்தின்
கண்ணே; உலப்பு அரும் உருவை ஊன்றிட – அழிப்பதற்கரிய உடலில்
ஆழப் பதிந்து; உம்பியை வீழ்த்த வென்றியால் – உன் தம்பியாகிய
இலக்குவனை வீழ்த்திய வெற்றியினால்; அம்புயத்து அயன்படை
ஆதல் தேறினேன் – அது (இந்திரசித்தனால் ஏவப்பட்டது) அழகிய
புயங்களுடைய பிரமனுடைய கணை என்பதனை அறிந்தேன். ஈது
எண்ணம் உண்மையால் – இந்த என் எண்ணம் உண்மையானதாகும்.

————–

8786.
‘அன்னவன் படைக்கலம், அமரர் தானவர்-
தன்னையும், விடின் உயிர் குடிக்கும்; தற்பர!
உன்னை ஒன்று இழைத்திலது, ஒழிந்து நீங்கியது;
இன்னமும் உவமை ஒன்று எண்ண வேண்டுமோ?–84-

அன்னவன் படைக்கலம் விடின் – அந்தப் பிரமனுடைய
படைக்கலத்தைவிட்டால்; அமரர் தானவர் தன்னையும் உயிர்
குடிக்கும் – தேவர்கள் அசுரர்கள் ஆகிய எவர்களையும் உயிர்
குடிக்கும் தன்மையது; தற்பர, உன்னை ஒன்று இழைத்திலது –
(அத்தகையபிரமாத்திரம்) எல்லாப் பொருளுக்கும் மேலானவனே!
உன்னை ஒன்றுஞ் செய்யாது, ஒழிந்து நீங்கியது – விலகி நீங்கியது;
இன்னமும் உவமை ஒன்று எண்ண வேண்டுமோ? – (எனவே)
இன்னமும் (இதுபிரமாத்திரந்தான் என்பதற்கும், வலிமைமிக்கது
என்பதற்கும்) இந்தப்படைக்கு வேறு உவமை கருதற்குரியதோ?

—————-

8787. ‘பெருந் திறல் அனுமன், ஈண்டு உணர்வு பெற்றுளான்,
அருந் துயர் முடிக்குறும் அளவு இல் ஆற்றலான்,
மருந்து இறைப் பொழுதினில் கொணரும் வாய்மொழி
பொருத்தினன், வட திசைக் கடிது போயினான்.–85-

பெருந்திறல் அனுமன் ஈண்டு உணர்வு பெற்றுளான் –
பெருவன்மைபடைத்த அனுமன் இப்போது தன்னினைவு எய்தப்
பெற்றனன்;அருந்துயர் முடிக்குறும் அளவு இல் ஆற்றலான் –
(நமக்கு ஏற்பட்டுள்ள) நீக்குதற்கரிய துன்பத்தைத் தீர்த்து வைக்கக்
கூடிய அளவற்ற ஆற்றல்களை உடையவன் அவன்; மருந்து இறைப்
பொழுதினில் கொணரும் வாய்மொழி பொருந்தினன் – (ஆதலால்
அவன் இறந்தவரை எழுப்புகின்ற) ”மருந்தினை இமைப்பொழுதில்
கொணர்வாயாக” என்ற என்னுடை மொழியை ஏற்றவனாய்; வடதிசை
கடிது போயினான் – வடதிசை நோக்கி விரைந்து போயிருக்கின்றான்.

————-

8788. ‘பனி வரை கடந்தனன், பருப்பதங்களின்
தனி அரசு அதன்புறம் தவிர்ந்து சார்ந்துளான்,
இனி ஒரு கணத்தின் வந்து எய்தும்; ஈண்டுறும்
துனி வரு துன்பம் நீ துறத்தி, தொல்லையோய்!–86-

பனிவரை கடந்தனன் – (அனுமன் இப்போது)
இமயமலையைக்கடந்து; பருப்பதங்களின் தனிஅரசு அதன்புறம்
தவிர்ந்து – மலைகட்கெல்லாம் ஒப்பற்ற அரசாகியமேருமலையின்
புறத்தை நீங்கி; சார்ந்துளான் – அம்மருந்துள்ள மலையைச்
சார்ந்திருக்கின்றான்; இனி ஒரு கணத்தில்வந்து எய்தும் – இன்னும்
ஒரு கணப் போதில் வந்து சேர்ந்துவிடுவான்; தொல்லையோய் –
பழமையானவனே! ஈண்டுறும் துனிவருதுன்பம் நீ துறத்தி – இங்கு நீ
அடைகின்ற மனம் கலங்குதற்குக் காரணமான பெருந்துன்பத்தை
விடுவாயாக.

———

8789.

‘யான் அலால், எந்தையாய் உலகை ஈன்றுளான் –
தான் அலால், சிவன் அலால், நேமி தாங்கிய
கோன் அலால், எனைவரும் உணரும் கோள் இலர்,-
வேனிலான் மேனியாய்!-மருந்தை மெய் உற.–87-

வேனிலான் மேனியாய் – வசந்தகாலத்திற்கிறைவனாகிய மன்மதன்
போன்ற மேனி அழகு உடையவனே! யான் அலால் எந்தையாய்
உலகை ஈன்றுளான் தான் அலால் – யான் அல்லது, என் தந்தையாய்
இவ்வுலகைப் படைத்தவனாகிய பிரமன் அல்லது; சிவன் அலால்,
நேமிதாங்கிய கோன் அலால் – சிவன் அல்லது, சக்கரப்படை தரித்த திருமால் அல்லது; எனைவரும்
மருந்தை மெய் உற உணரும் கோள் இலர் – மற்றுள்ள
எத்தன்மையோரும் அம்மருந்தை மெய்மையாக உணரும் தன்மையர்
அல்லர்.

———-

8790.
‘ஆர்கலி கடைந்த நாள், அமிழ்தின் வந்தன;
கார் நிறத்து அண்ணல்தன் நேமி காப்பன;
மேருவின் உத்தரகுருவின்மேல் உள;
யாரும் மற்று உணர்கிலா அரணம் எய்தின;–88-

ஆர்கலி கடைந்தநாள் அமிழ்தின் வந்தன – (அம்மருந்துகள்)
திருப்பாற் கடலைக் கடைந்த காலத்தில் அமிழ்தினோடு தோன்றியவை;
கார் நிறத்து அண்ணல் தன் நேமி காப்பன – மேக வண்ணனாகிய
திருமாலின் சக்கரப்படையால் பாதுகாக்கப்படுவன; மேருவின் உத்தர
குருவின் மேல் உள – மேருவின் வடபால் உள்ள உத்தரகுரு
நாட்டிற்கும் அப்பால் உள்ளன; யாரும் மற்று உணர்கிலா அரணம்
எய்தின – யாரும் நெருங்கி அறியவியலாத வண்ணம் பாதுகாவல்
பொருந்தியன.

———–

8791.
‘தோன்றிய நாள் முதல் யாரும் தொட்டில்;
ஆன்ற பேர் அண்ணலே! அவற்றின் ஆற்றல் கேள்;
மூன்று என ஒன்றிய உலகம், முன்னை நாள்,
ஈன்றவன் இறப்பினும், ஆவி ஈயுமால்.–89-

தோன்றிய நாள்முதல் யாரும் தொட்டில் – (அம்மருந்துகள்
பாற்கடலில்) தோன்றிய நாள் முதல் யாராலும் தொடப்படாதவை;
ஆன்றபேர் அண்ணலே! அவற்றின் ஆற்றல்கேள் – விரிந்து புகழை
உடைய அண்ணலே! அம்மருந்துகளின் ஆற்றலைக் கேட்பாயாக;
மூன்று என ஒன்றிய உலகம் – மூன்று என்னுமாறு, பாதலம், பூதலம்,
மீதலம் என ஒன்றிய உலகங்களை; முன்னை நாள் ஈன்றவன்
இறப்பினும் ஆவி ஈயுமால் – பண்டு படைத்த பிரமன் இறந்தாலும்
அவனுக்கும் உயிரைக் கொடுக்க வல்லவை.

————

8792. ’சல்லியம் அகற்றுவது ஒன்று; சந்துகள்
புல்லுறப் பொருத்துவது ஒன்று; போயின
நல் உயிர் நல்குவது ஒன்று; நல் நிறம்
தொல்லையது ஆக்குவது ஒன்று;-தொல்லையோய்!–90-

தொல்லையோய் – பழமையானவனே! சல்லியம் அகற்றுவது
ஒன்று – (அம்மருந்துகளுள்) உடம்பில் பதிந்துள்ள அம்புகளை
அகற்றுவது ஒன்று; சந்துகள் புல்லுறப் பொருத்துவது ஒன்று –
மூட்டுக்கள் பொருந்துமாறு பொருத்துவது ஒன்று; போயின நல்லுயிர்
நல்குவது ஒன்று – போன நல்லுயிரை மீட்டுக் கொடுப்பது ஒன்று;
நல்நிறம் தொல்லையது ஆக்குவது ஒன்று – பழைய நல்ல
நிறத்தை உண்டாக்குவது ஒன்று.

—————

8793. ‘வருவது திண்ணம்; நீ வருந்தல்; மாருதி,
தரு நெறி தருமமே காட்ட, தாழ்க்கிலன்;
அருமையது அன்று’ எனா, அடி வணங்கினான்;
இருமையும் துடைப்பவன் ஏம்பல் எய்தினான்.–91-

‘வருவது திண்ணம்’ நீ வருந்தல் – ‘மருந்துகள் வருவது உறுதி! நீ
வருந்தாதே; மாருதி தருநெறி தருமமே காட்ட, தாழ்க்கிலன் –
அனுமன், கொண்டுவரும் வழியினைத் தருமதேவதையே காட்டக்காலம்
தாழ்க்காமல் கொண்டுதருவன்; ‘அருமையது அன்று’ எனா
அடிவணங்கினான் – அது அவனுக்கு அருமையுடையது அன்று’
என்று சொல்லிச் சாம்பவன் இராமனடியை வணங்கினான்; இருமையும்
துடைப்பவன் ஏம்பல் எய்தினான் – (தன்னை அடைந்தவர்களின்
இம்மை மறுமைகளை மாற்றி வீட்டின்பத்தைத்தருபவனாகிய) இராமன்
மகிழ்ச்சி அடைந்தான்.

————–

அனுமன் மலை கொண்டு வருதல்

8794.
‘“பொன்மலைமீது போய், போக பூமியின்
நல் மருந்து உதவும்” என்று உரைத்த நல் உரைக்கு
அன்வயம் இல்லை என்று அயிர்க்கின்றேன் அலேன்’
என்னலும், விசும்பிடை எழுந்தது, அங்கு ஒலி,–92-

“பொன்மலை மீது போய் போக பூமியின் – “பொன் மலையாகிய
மேருவின் மேற்சென்று போக பூமிக்கு அப்பால் உள்ள; நல் மருந்து
உதவும்” என்று உரைத்த நல் உரைக்கு – நல்ல மருந்தை அனுமன் உதவுவான்” என்று நீ சொன்ன
நல்லசொல்லுக்கு; அன்வயம் இல்லை என்று அயிர்க்கின்றேன்
அலேன் என்னலும் – பொருத்தம் இல்லை என்று யான் ஐயுறவு
கொள்ளவில்லை” என்று இராமன் சொல்லுதலும்; அங்கு விசும்பிடை
ஒலி எழுந்தது – அங்கே வானிடத்தே பேரொலி எழுந்தது.

————

8795. கடல் கிளர்ந்து எழுந்து மேல் படர, கார் வரை
இடை இடை பறிந்து விண் ஏற, இற்று இடை
தடை இலது உடற்றுறு சண்டமாருதம்
வட திசை தோன்றிய மறுக்கம் வந்ததால்.–93-

கடல் கிளர்ந்து எழுந்து மேல்படர – கடல் பொங்கி எழுந்து கரை
கடந்து செல்லவும்; கார்வரை இடை இடை பறிந்து விண் ஏற – கரிய
மலைகள் நடுநடுவே பறியுண்டு இடையில் முறிந்து விண்மேல் ஏறவும்;
தடை இலது உடற்றுறு சண்டமாருதம் – தங்கு தடையில்லாமல்
வீசுகின்ற சண்டமாருதம்; வடதிசை தோன்றிய மறுக்கம் வந்ததால் –
வடதிசையில் தோன்றியதாலாகிய கலக்கம் உண்டாகியது.

————-

8796. மீன் குலம் குலைந்து உக, வெயிலின் மண்டிலம்
தான் குலைந்து உயர் மதி தழுவ, தன்னுழை
மான் குலம் வெருக் கொள, மயங்கி, மண்டி, வான்,
தேன் குலம் கலங்கிய நறவின், சென்றவால்.–94-

மீன்குலம் குலைந்து உக – (அனுமன் வரும் வேகத்தால் உண்டான
பெருங்காற்றால்) விண்மீன் கூட்டங்கள் நிலை தடுமாறிச் சிந்தவும்;
வெயிலின் மண்டிலம் தான் குலைந்து உயர்மதி தழுவ – வெயிலினை
உடைய சூரியமண்டலம் நிலை கலங்கி உயர்ந்த சந்திரனைத்
தழுவவும்; தன்னுழை மான்குலம் வெருக் கொள – அந்தச்
சந்திரனிடத்து உள்ள மான் அச்சங்கொள்ளவும்; வான் தேன்குலம்
கலங்கிய நறவின் மயங்கி மண்டி சென்றவால் – மேகக் கூட்டம்
தேன்கூட்டில் கலங்கி எழுந்த தேனீக்கள் போலக் கலங்கி நெருங்கிச்
சென்றன.

————

8797. வேர்த்துள தூரொடு விசும்பை மீச் செலப்
போர்த்தன, மலையொடு மரனும், முன்புபோல்
தூர்த்தன, வேலையை; காலின் தோன்றலும்,
ஆர்த்தனன், அனையவர் அரந்தை ஆற்றுவான்.–95-

வேர்த்துள தூரொடு விசும்பை மீச்செலப் போர்த்தன –
வேரோடு கூடிய புதரினோடும், வானத்தின் மேல் செல்லுமாறு
மூடிக்கொண்டுள்ள;மலையொடுமரனும் முன்பு போல் வேலையைத்
தூர்த்தன – மலையோடு மரமும் அணைகட்டிய காலத்தைப் போலக்
கடலைத் தூர்த்தன; காலின் தோன்றலும் – காற்றின் மகனான
அனுமனும்; அனையவர் அரந்தை ஆற்றுவான் ஆர்த்தனன் –
அங்குள்ள சாம்பவன் முதலானோரின் துன்பத்தை (முன்கூட்டியே
போக்குதற்காக) ஆரவாரித்தான்.

————

8798. மழைகளும் கடல்களும், மற்றும் முற்றும் மண்-
உழையவும் விசும்பவும் ஒலித்தற்கு ஒத்துள,
குழீஇயின, குமுறின கொள்கை கொண்டதால்-
உழுவையின் சினத்தவன் ஆர்த்த ஓசையே.–96-

உழுவையின் சினத்தவன் ஆர்த்த ஓசையே – புலிபோன்ற
கோபத்தையுடைய அனுமன் ஆரவாரித்த ஓசையானது; மண்
உழையவும் விசும்பவும் ஒலித்தற்கு ஒத்துள – தரையிடத்தனவும்,
வானிடத்தனவுமாய் ஒலி செய்தற்குரியனவாகிய; கடல்களும்
மழைகளும் மற்றும் முற்றும் – கடல்களும், மேகங்களும் மற்றும்
அவைபோல் ஒலி செய்தற்கு உரியனவாயுள்ள அனைத்தும்;
குழீஇயின, குமுறின கொள்கை கொண்டதால் – ஒன்று சேர்ந்தனவாய்
ஆரவாரித்த தன்மையைக் கொண்டன.

———

8799. எறி திரைப் பெருங் கடல் கடைய ஏற்ற நாள்,
‘செறி சுடர் மந்தரம் தருதி, சென்று’ என,
‘வெறிதுகொல்!’ எனக் கொடு, விசும்பின் மீச்செலும்
உறு வலிக் கலுழனே ஒத்துத் தோன்றினான்.–97-

எறிதிரைப் பெருங்கடல்கடைய ஏற்றநாள் – வீசுகின்ற அலைகளை
உடைய பெரிய திருப்பாற்கடலைக் கடைதற்கு (தேவர்களும்
அசுரர்களும்) ஏன்று கொண்ட நாளில்; ‘செறிசுடர் மந்தரம் தருதி சென்று’ என – ‘நெருங்கிய ஒளியையுடைய மந்தர
மலையைப் போய்க் கொணர்க’ என்று சொல்ல; ‘வெறிது, கொல்’ எனக்
கொடு விசும்பின் மீச்செலும் – ‘உள்ளீடு இல்லாததொரு எளிய
பொருளோ’ எனக் (கண்டோர்) கருதுமாறு (முயற்சி ஏதுமின்றி
விளையாட்டாக) எடுத்துக் கொண்டு விண்மீது சென்ற;
உறுவலிக்கலுழனே ஒத்துத் தோன்றினான் – மிக்க வலிமையையுடைய
கருடனையே போன்று (அனுமன்) தோன்றினான்.

————-

8800. பூதலத்து, அரவொடு மலைந்து போன நாள்,
ஓதிய வென்றியன், உடற்றும் ஊற்றத்தன்,
ஏதம் இல் இலங்கை அம் கிரிகொடு எய்திய
தாதையும் ஒத்தனன், உவமை தற்கு இலான்.–98-

பூதலத்து, அரவொடு மலைந்து போனநாள் – பூவுலகின் கண்ணே
ஆதிசேடனுடன் போர் செய்து சென்ற காலத்து; ஓதியவென்றியன்,
உடற்றும் ஊற்றத்தன் – சிறப்பித்துக் கூறப்படும் வெற்றியை
உடையவனும், போர் செய்யும் வலிமையுடையவனுமாகி; ஏதம்இல்
இலங்கை அம்கிரி கொடு எய்திய – குற்றமில்லாத இலங்கைக்கு
இடமாக உள்ளதிரிகூட மலையைப் பறித்துக்கொண்டு தென்திசை
எய்திய;தாதையும் ஒத்தனன் தற்கு உவமை இலான் – தன்
தந்தையாகிய வாயுதேவனையும் ஒத்து விளங்கினான் – தனக்கு
உவமை இல்லாதவனாகிய அனுமன்.

———–

வந்தான்’ என்பதற்குள்ளாக, அனுமன் வந்து நிலத்தில் அடி இடுதல்
8801.

‘தோன்றினன்’ என்னும் அச் சொல்லின் முன்னம் வந்து
ஊன்றினன், நிலத்து அடி; கடவுள் ஓங்கல்தான்
வான்தனில் நின்றது, வஞ்சர் ஊர் வர
ஏன்றிலது ஆதலின்; அனுமன் எய்தினான்.–99-

‘தோன்றினன்’ என்னும் அச் சொல்லின் முன்னம் வந்து –
(அனுமனது ஆர்ப்பொலி கேட்டு) சாம்பவன், அனுமன் வந்து
தோன்றினான்’ என்று சொல்லிய அச் சொல்லுக்கு முன்பே வந்து;
நிலத்து அடி ஊன்றினான் – (அனுமன்) நிலத்தில் அடியை
ஊன்றினான்; வஞ்சர் ஊர்வர ஏன்றிலது ஆதலின் – வஞ்சக அரக்கரின் ஊர்க்கு வர இசையவில்லை ஆதலால்; கடவுள்
ஓங்கல்தான் வான்தனில் நின்றது – தெயவ்த்தன்மையுள்ள
மருத்துமலை வானில் தனியே நின்றுவிட; அனுமன் எய்தினான் –
அனுமன் மட்டும் வந்து நிலத்தை அடைந்தான்.

————

மருத்துமலையின் காற்றால் யாவரும் உயிர்பெற்று எழுதல்

8802. காற்று வந்து அசைத்தலும்,-கடவுள் நாட்டவர்
போற்றினர் விருந்து உவந்திருந்த புண்ணியர்-
ஏற்றமும் பெரு வலி அழகொடு எய்தினார்,
கூற்றினை வென்று, தம் உருவும் கூடினார்.–100-

காற்று வந்து அசைத்தலும் – (வானில் நின்ற மருத்து மலையின்)
காற்று வந்து (தம் உடம்பின் மேல்) வீசுதலும்; கடவுள் நாட்டவர்
போற்றினர் விருந்து உவந்திருந்த புண்ணியர் – அமரர் நாட்டவர்கள்
போற்றுமாறு அவர்க்கு விருந்தாய் மகிழ்ந்து தங்கியிருந்த வானர
வீரர்களாகிய புண்ணியவான்கள்; ஏற்றமும் பெருவலி அழகொடு
எய்தினார்’ – உயர்வும், மிக்கவலிவும் அழகும் பெற்றவராய்; கூற்றினை
வென்று தம் உருவும் கூடினார் – யமனை வெற்றி கண்டு தமது
பழையவானர உருவத்துடன் இயைந்தனர்.

———

8803. அரக்கர்தம் ஆக்கைகள் அழிவு இல் ஆழியில்
கரக்கலுற்று ஒழிந்தன ஒழிய, கண்டன
மரக்குலம் முதலவும் உய்ந்து வாழ்ந்தன;
குரக்குஇனம் உய்ந்தது கூற வேண்டுமோ?–101-

அரக்கர் தம் ஆக்கைகள் – அரக்கருடைய உடல்கள்; அழிவுஇல்
ஆழியில் கரக்கலுற்று ஒழிந்தன ஒழிய – அழிலில்லாத ஆழ்கடலில்
(மருத்தனால் எறியப்பட்டு) மறைந்து ஒழிந்தனபோக; கண்டன
மரக்குலம் முதலவும் உய்ந்து வாழ்ந்தன – காணப்பட்டனவாகிய
(பட்ட) மரக்குலம் முதலிய ஓருயிர்ப் பொருள்களும் உயிர்பெற்று
வாழலாயின என்றால்;குரக்கு இனம் உய்ந்தது கூற வேண்டுமோ –
(ஐயறிவுயிராகிய) குரங்கினம் உயிர் பெற்றது பற்றிக் கூறவும்
வேண்டுமோ?

————

8804. கழன்றன, நெடுங் கணை; கரந்த புண்; கடுத்து
அழன்றில குளிர்ந்தன, அங்கம்; செங் கண்கள்
சுழன்றன; உலகு எலாம் தொழுவ; தொங்கலின்
குழன்ற பூங் குஞ்சியான் உணர்வு கூடினான்.-102-

கழன்றன நெடுங்கணை கரந்த புண் – உடம்பில் தைத்திருந்த
நீண்ட அம்புகள்தாமே கழன்று வீழ்ந்தன; அவற்றாலாகிய
புண்களெல்லாம் தாமே மறைந்தன; கடுத்து அங்கம் அழன்றில
குளிர்ந்தன – வலிமிகுந்திருந்த அங்கங்கள் அழற்சி இன்றிக்
குளிர்ந்தன; செங்கண்கள் சுழன்றன – (கோபத்தால்) சிவந்திருந்த
கண்கள் சுழலத் தொடங்கின; உலகு எலாம் தொழுவ – உலகனைத்தும்
தொழுவனவாயின; தொங்கலின் குழன்ற பூங் குஞ்சியான் உணர்வு
கூடினான் – மாலை போன்று சுருண்ட அழகிய மயிர் முடியை
உடைய இலக்குவன் தன் உணர்வு வரப்பெற்றான்.

————

8805. யாவரும் எழுந்தனர்; ஆர்த்த ஏழ் கடல்
தாவரும் பேர் ஒலி செவியில் சார்தலும்,-
தேவர்கள் வாழ்த்து ஒலி கேட்ட செங் கணான்
யோகம் நீங்கினன் என,-இளவல் ஓங்கினான்.–103-

யாவரும் எழுந்தனர் – வானரர் யாவரும் உயிர் பெற்று
எழுந்தனராய்; ஆர்த்த, ஏழ்கடல் தாவரும் பேர்ஒலி செவியில்
சார்தலும் – ஆரவாரித்த ஏழுகடலின் ஒலி போன்ற
கெடுதலில்லாதபெரிய ஆரவாரம் தன் செவியில் சேர்ந்தவுடன்;
தேவர்கள் வாழ்த்தொலிகேட்ட செங்கணான் – தேவர்களுடைய
வாழ்த்தொலியைக் கேட்ட சிவந்த கண்களை உடைய திருமால்;
யோகம் நீங்கினான் என இளவல் ஓங்கினான் – யோக
நித்திரையிலிருந்து எழுந்தான் போல இலக்குவன் எழுந்து நின்றான்.

————

இராமன் தம்பியைத் தழுவித் துயர் தீர்தல்

8806. ஓங்கிய தம்பியை, உயிர் வந்து உள் உற
வீங்கிய தோள்களால் தழுவி, வெந் துயர்
நீங்கினன், இராமனும்; உலகில் நின்றில,
தீங்கு உள; தேவரும் மறுக்கம் தீர்ந்தனர்.–104-

உயிர் வந்து உள் உற ஓங்கிய தம்பியை – உயிர் வந்து
உடம்பினுள் பொருந்தியதினால் உணர்வு பெற்ற எழுந்த தம்பி
இலக்குவனை; இராமனும் வீங்கிய தோள்களால் தழுவி வெந்துயர்
நீங்கினான் – இராமனும் தன் பூரித்த தோள்களால் தழுவிக் கொண்டு
கொடிய துன்பம் நீங்கப் பெற்றான்; உலகில் உள தீங்கு நின்றில
– உலகில் தீங்காக உள்ளன எல்லாம் நில்லாமல் சென்றன; தேவரும்
மறுக்கம் தீர்ந்தனர் – தேவர்களும் கலக்கம் நீங்கினார்கள்.

———-

8807.

அரம்பையர் ஆடினர்; அமிழ்த ஏழ் இசை,
நரம்பு இயல் கின்னரம் முதல நன்மையே
நிரம்பின; உலகு எலாம் உவகை நெய் விழா
பரம்பின; முனிவரும் வேதம் பாடினார்.-105-

அரம்பையர் ஆடினர் – அரம்பையர்கள் ஆடினர்; அமிழ்த
ஏழ்இசை நரம்பு இயல் கின்னரம் முதல நன்மையே நிரம்பின –
அமிழ்தம் போன்ற இனிய ஏழிசையை யெழுப்புகின்ற
நரம்பினாலியன்ற கின்னர முதலிய இசைக்கருவிகளின் ஒலி
(உலகெலாம்) நிரம்பின;உலகு எலாம் உவகை நெய்விழா பரம்பின –
உலகெங்கும் மகிழ்ச்சியால் செய்யும் நெய்யாடல் விழா பரவின;
முனிவரும் வேதம் பாடினார் – முனிவர்களும் வேதம் பாடினார்கள்.

———–

8808.

வேதம் நின்று ஆர்த்தன; வேத வேதியர்
போதம் நின்று ஆர்த்தன; புகழும் ஆர்த்தன;
ஓதம் நின்று ஆர்த்தன; ஓத வேலையின்
சீதம் நின்று ஆர்த்தன, தேவர் சிந்தனை.–106-

வேதம் நின்று ஆர்த்தன – வேதங்கள் மகிழ்ச்சியோடு நின்று
ஆரவாரித்தன; வேத வேதியர் போதம் நின்று ஆர்த்தன – வேதம்
பயின்ற அந்தணர் தம் அறிவு நிலைபெற்று ஆரவாரித்தன; புகழும்
ஆர்த்தன; ஓதம் நின்று ஆர்த்தன – புகழும் ஆரவாரித்தன;
கடல்கள் நின்று ஒலி செய்தன; ஓத வேலையின் தேவர் சிந்தனை
சீதம் நின்று ஆர்த்தன – அலைகளோடு கூடிய கடலைப்போல்
தேவர்களின் சிந்தனையும் குளிர்ச்சியோடு நின்று ஆரவாரித்தன.

————-

அயன்படை அகலுதல்

8809. ‘உந்தின பின் கொலை ஒழிவு இல் உண்மையும்
தந்தனை நீ; அது நினக்குச் சான்று’ எனா,
சுந்தரவில்லியைத் தொழுது, சூழ வந்து,
அந்தணன் படையும் நின்று, அகன்று போயதால்.–107-

கொலை உந்தினபின் – கொலை நீங்கின பின் (யாவரும் உயிர்
பெற்றெழுந்தபின்); அந்தணன் படையும் சுந்தர வில்லியை சூழவந்து
தொழுது நின்று – பிரமாத்திரமும் அழகிய வில்லாளனான இராமனைச்
சுற்றி வந்து வணங்கி, எதிர்நின்று; நீ ஒழிவு இல் உண்மையும்
தந்தனை – நீ, நீங்குதலில்லாத சத்தியத்தையும் தந்தாய்; அது
நினைக்குச் சான்று எனா அகன்று போயதால் – அது உனக்குப்
பெருமையே எனக் கூறி நீங்கிச் சென்றது.

————-

8810. ஆய காலையின், அமரர் ஆர்த்து எழ,
தாயின் அன்பனைத் தழுவினான்,-தனி
நாயகன், பெருந் துயரம் நாம் அற,
தூய காதல் நீர் துளங்கு கண்ணினான்.–108-

ஆயகாலையின் தனி நாயகன் – அது போழ்து ஒப்பற்ற
தலைவனாகிய இராமன்; பெருந்துயரம் நாம் அற – (முன்பிருந்த)
பெருந்துயரமும் அச்சமும் ஒழிதலால்; தூயகாதல் நீர் துளங்கு
கண்ணினான் – தூய்மையான அன்புக் கண்ணீர்தளும்பும் கண்களை
உடையவனாய்;தாயின் அன்பனை அமரர் ஆர்த்தெழத் தழுவினான்
– தாய் போன்ற அன்பனாகிய அனுமனைத் தேவர்கள்
மகிழ்ச்சியினால் ஆரவாரித்து எழாநிற்கத் தழுவிக் கொண்டான்.

—————-

8811. எழுது குங்குமத் திருவின் ஏந்து கோடு
உழுத மார்பினான், உருகி, உள் உறத்
தழுவி நிற்றலும், தாழ்ந்து, தாள் உறத்
தொழுத மாருதிக்கு, இனைய சொல்லினான்:–109-

எழுது குங்குமத் திருவின் ஏந்துகோடு உழுதமார்பினான் –
(தொய்யிற்கோலமாக) எழுதிய குங்குமத்தினை உடைய திருமகளின்
அமிசமான சீதையின் உயர்ந்த யானைக் கொம்பு போன்ற
தனங்களால் உழப்பட்ட மார்பினை உடைய இராமன்; உருகி உள்உறத்
தழுவி நிற்றலும் – உருகி மனம் பொருந்தத் தழுவி நின்ற அளவில்;
தாள்உறத் தாழ்ந்து தொழுத மாருதிக்கு – அவன் பாதத்தில்
பொருந்துமாறு தாழ்ந்து வணங்கிய அனுமனுக்கு; இனைய
சொல்லினான் – இத்தன்மையான சொற்களைச் சொன்னான் (இராமன்).

————–

இராமன் அனுமனைப் புகழ்ந்து, வாழ்த்துக் கூறுதல்

8812. ‘முன்னின் தோன்றினோர் முறையின் நீங்கலாது,
என்னின் தோன்றிய துயரின், ஈறு சேர்
மன்னின் தோன்றினோம் முன்னம்; மாண்டுளோம்;
நின்னின் தோன்றினோம், நெறியின் தோன்றினாய்!–110-

முன்னின் தோன்றினோர் முறையில் நீங்கலாது – முன் எம்
குலத்தில் தோன்றினோரது முறைமையினின்றும் நீங்காமலிருந்து;
என்னின் தோன்றிய துயரின் – என்னால் தோன்றிய துயரின்; ஈறுசேர்
மன்னின் முன்னம் தோன்றினோம் – இறந்த தசரத மன்னனிடத்தில்
முன்னம் தோன்றினோம்; மாண்டுளோம் – (பின்பு பிரமாத்திரத்தால்)
இறந்துபட்டோம்;நெறியின் தோன்றினாய் நின்னின் தோன்றினோம்
– நன்னெறியில் விளங்குபவனே! (இப்போது) நின்னால் மீண்டும்
பிறந்தவர்களானோம்.

————

8813. ‘அழியுங்கால் தரும் உதவி, ஐயனே!
மொழியுங்கால், தரும் உயிரும் முற்றுமே?
பழியும் காத்து, அரும் பகையும் காத்து, எமை
வழியும் காத்தனை; நம் மறையும் காத்தனை.–111-

ஐயனே! அழியுங்கால் தரும் உதவி மொழியுங்கால் – ‘ஐயனே!
எல்லோரும் அழியுங்காலத்தில் நீதந்த உதவியைச் சொல்லுமிடத்து;
தரும் உயிரின் முற்றுமோ? – இப்போது தரப்பட்ட உயிரோடு முற்றுப்
பெற்றதாகுமோ (ஆகாது); பழியுங் காத்து அரும் பகையும் காத்து –
(நீ தந்த உதவியால்) எமக்கு வரும் பழியையும் வாராமல் காத்து; அரிய
எம்பகையும் வலிமிக்கு உலகை அழிக்காமல் காத்து; எமை வழியும்
காத்தனை நம் மறையும் காத்தனை – எம்மரபையும் அழியாமல்
காத்து நமது வேத நெறியையும் அழியாமல் காப்பாற்றினாய்’.

———-

8814. ‘தாழ்வில் இங்கு இறைப்பொழுது தக்கதே,
வாழி எம்பிமேல் அன்பு மாட்ட, வான்
ஏழும் வீயும்; என் பகர்வது?-எல்லை நாள்
ஊழி காணும் நீ, உதவினாய்அரோ!–112-

தாழ்வில் இங்கு இறைப்பொழுது தக்கதே – எனக்கு நேர்ந்த
இத்தாழ்வும் இவ்விடத்தில் இன்னும் சிறிது போழ்து (நீக்கப்படாமல்)
தாழ்ந்திருக்குமாயின்; வாழி எம்பிமேல் அன்பு மாட்ட – நெடிது
வாழ்வதற்குரிய என் தம்பி மேல் எனக்கிருக்கும் அன்பானது அழிக்க;
வான் ஏழும் வீயும்; என் பகர்வது – மேலேழுகங்களும்
அழிந்திருக்கும் என்ன சொல்வது? ஊழி எல்லை நாள் காணும் நீ –
ஊழியின் இறுதி நாளையும் காணப்போகின்ற நீ; உதவினாய் –
அவ்வுலகங்கள் அழியாமலிருக்க உதவி செய்தாய்.

———–

8815.
‘இன்று வீகலாது, எவரும் எம்மொடு
நின்று வாழுமா நெடிது நல்கினாய்;
ஒன்றும் இன்னல் நோய் உறுகிலாது, நீ
என்றும் வாழ்தியால் இனிது, என் ஏவலால்!’–113-

இன்று வீகலாது எவரும் எம்மோடு – (மேகநாதன் பிரமாத்திரம்
ஏவிய) இன்று எவரும் இறவாது எம்மொடு; நெடிது நின்று வாழுமா
நல்கினாய் – நெடிது காலம் நின்று வாழுமாறு உயிர் நல்கினாய்; என்
ஏவலால் நீ ஒன்றும் இன்னல் நோய் உறுகிலாது – என்
கட்டளையினால் நீ சிறிதும் துன்பநோய் அடையாது; என்றும் இனிது
வாழ்தியால் – என்றும் இனிது வாழ்வாயாக.

————-

8816. மற்றையோர்களும், அனுமன் வண்மையால்,
பெற்ற ஆயுளார், பிறந்த காதலார்,
சுற்றும் மேவினார்; தொழுது வாழ்த்தினார்;
உற்றவாறு எலாம் உணரக் கூறினான்.–114-

அனுமன் வண்மையால் பெற்ற ஆயுளார் மற்றையோர்களும் –
அனுமனுடைய வள்ளல்தன்மையினால் ஆயுளைப் பெற்றவர்களாகிய
மற்றவர்களும்; பிறந்த காதலார் சுற்றும் மேவினார் தொழுது
வாழ்த்தினார் – அன்பு மிக்கவர்களாய் அவ்வனுமனைச் சுற்றிக்
கொண்டு தொழுது அவனை வாழ்த்தினார்கள்; உற்றவாறு எலாம்
உணரக் கூறினான் – அனுமனும் மருத்துமலையைக் கொண்டு வந்த
நிகழ்ச்சி எல்லாவற்றையும் அவர்கள் உணருமாறு கூறினான்.

————

மருத்துலையுடன் அனுமன் மீண்டு போதல்

8817. ‘உய்த்த மா மருந்து உதவ, ஒன்னலார்,
பொய்த்த சிந்தையார், இறுதி பொய்க்குமால்;
மொய்த்த குன்றை அம் மூல ஊழிவாய்
வைத்து, மீடியால்-வரம்பு இல் ஆற்றலாய்!’–115-

வரம்பு இல் ஆற்றலாய்! – எல்லையற்ற ஆற்றலை உடைய
அனுமனே!; உய்த்தமாமருந்து உதவ – நீ கொண்டு வந்த சிறந்த
மருந்து உதவுவதால்; பொய்த்த சிந்தையர் ஒன்னலார் இறுதி
பொய்க்குமால் – பொய் மனத்தவராகிய பகைவர் இறத்தல்
பொய்த்துவிடும். (இறந்த அரக்கர் மீண்டும் உயிர் பெறுவர் என்றபடி);
மொய்த்த குன்றை அம்மூல ஊழிவாய் வைத்து மீடியால் –
(ஆதலால்) மருந்துகள் நெருங்கி உள்ள இம்மலையினை அந்தப்
பழைய இடத்தில் வைத்து விட்டுத் திரும்புவாயாக.

என்று சாம்பவன் இயம்ப என அடுத்த செய்யுளில் முடியும்.

—————

8818. என்று சாம்பன் ஆண்டு இயம்ப, ‘ஈதுஅரோ
நன்று, சால!’ என்று, உவந்து, ‘ஒர் நாழிகைச்
சென்று மீள்வென்’ என்று எழுந்து, தெய்வ மாக்
குன்று தாங்கி, அக் குரிசில் போயினான்.–116-

என்று சாம்பவன் ஆண்டு இயம்ப – என்று சாம்பவன் அங்கு
சொல்ல; ஈது அரோ சால நன்று என்று உவந்து – ‘இது மிகவும்
நல்லது’ என்று மகிழ்ந்து;‘ஒர் நாழிகைச் சென்று மீள்வென்’ என்று
எழுந்து – ‘ஓர் நாழிகையிலே சென்று திரும்புவேன்’ என்று எழுந்து;
தெய்வமாக் குன்று தாங்கி அக்குரிசில் போயினான் –
தெய்வத்தன்மையுடைய பெரிய மருத்துமலையைத் தாங்கிக் கொண்டு
அந்த அனுமன் போயினான்.

————–

மிகைப் பாடல்கள்

மூன்று அரத் தாவொடும் புல்லின் முன்னம் வந்து,
ஊன்றின நிலத்து அடி, கடவுள் ஓங்கருள்;
வான் தனி நின்றது; வஞ்சர் ஊர் வர,
ஏன்றிலது; ஆதலால், அனுமன் எய்தினான். 97-1

அயன் சிவன் அறிவுறா ஆதி நாயகன்,
வியன் கர நேமி அம் படை அவ் வெற்பினை
நியங்கொடு தாங்கி விண் நின்றதால்; அதில்
இயங்கிய ஊதை வெங் களத்தின் எய்தவே. 99-1

வந்த நல் மருந்தினை மருத்து வானவன்
சிந்தையில் பெரு மகிழ் சிறப்பச் சேர்ந்து உறீஇ,
அந்தரத்து அருக்கன் மா மகனோடு ஆயவர்
வந்து இரைந்து, ஆர்த்து, எழும்வகை செய்தான் அரோ. 99-2

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ கம்ப ராமாயணம்/யுத்த காண்டம்/22-சீதை களம் காண் படலம்–

November 2, 2020

வெற்றி விழாக் கொண்டாட இராவணன் கட்டளை இடுதல்

8671. பொய்யார் தூதர் என்பதனால்,
பொங்கி எழுந்த உவகையன் ஆய்,
மெய் ஆர் நிதியின் பெரு வெறுக்கை
வெறுக்க வீசி, ‘விளைந்தபடி
கய் ஆர் வரைமேல் முரசு ஏற்றி,
சாற்றி, “நகரம் களி சிறப்ப,
நெய் ஆர் ஆடல் கொள்க!” என்று,
நிகழ்த்துக’ என்றான்;-நெறி இல்லான்.–1-

நெறி இல்லான் – நல்வழி மேற்கொள்ளாத இராவணன்; தூதர்
பொய்யார் என்பதினால் – தன் தூதுவர் பொய் சொல்ல மாட்டார்கள்
என்ற உறுதிப் பாட்டினால்; பொங்கி எழுந்த உவகையன் ஆய்-
(தன்) உள்ளத்தில் பொங்கி எழுந்த மகிழ்ச்சியை உடையவனாய்;
மெய்யார் நிதியின் பெரு வெறுக்கை வெறுக்க வீசி-(அத்தூதுவர்க்கு)
தன் உடம்பின் கண் (அணிகளாக) அணிந்திருந்த நிதியாக பெரும் செல்வத்தை அவர் (மிக
அதிகமாகப் பெற்றமையால்) வெறுக்குமாறு கொடுத்துவிட்டு; கய் ஆர்
வரைமேல் முரசு ஏற்றி, சாற்றி – யானை மேல் முரசத்தை ஏற்றச்
சொல்லி; விளைந்தபடி – போர்க்களத்தில் கிடைத்த வெற்றியினை;
“நகரம் களி சிறப்ப நெய் ஆர் ஆடல் கொள்க”-இலங்கை மாநகரம்
களிப்பு மிகுமாறு நெய் தேய்த்து முழுகுவதாகிய நீராடல் மேற்
கொள்வதாக; என்று, நிகழ்த்துக என்றான்- என்று சொல்லுக என்று
கட்டளையிட்டான்.

————-

மாய்ந்த அரக்கர் உடலைக் கடலில் தள்ளல்

8672. அந்த நெறியை அவர் செய்ய,
அரக்கன் மருத்தன்தனைக் கூவி,
‘முந்த நீ போய், அரக்கர் உடல்
முழுதும் கடலில் முடுக்கிடு; நின்
சிந்தை ஒழியப் பிறர் அறியின்,
சிரமும் வரமும் சிந்துவென்’ என்று
உந்த, அவன் போய் அரக்கர் உடல்
அடங்கக் கடலினுள் இட்டான்.–2-

அந்த நெறியை அவர் செய்ய – (இராவணன் இட்ட)
அப்பணியினை அப்பணியாளர் இயற்ற; அரக்கன் மருத்தன் தனைக்
கூவி – இராவணன் மருத்தன் என்பவனை அழைத்து; முந்த நீ போய்
அரக்கர் உடல் முழுதும் கடலில் முடுக்கிடு – “முன்னே நீ சென்று,
இறந்து கிடக்கும் அரக்கரின் உடம்புகள் எல்லாவற்றையும் கடலில்
வீசுக”; நின் சிந்தை ஒழியப் பிறர் அறியின் -(இச்செய்தியை) நின்
மனந்தவிரப் பிறர் யாரேனும் அறிந்தால்; சிரமும்,வரமும் சிந்துவென்
என்று உந்த – (நின்) தலையையும் (நீ தவத்தால் பெற்றுள்ள)
வரத்தையும் சிந்தி விடுவேன் என்று கூறி அனுப்ப; அவன் போய்
அரக்கர் உடல் அடங்கக் கடலினுள் இட்டான்- அந்த மருத்தன்
சென்று அரக்கர் உடல் முழுவதையும் கடலில் போட்டான்.

————-

சீதையைக் களத்திற்குக் கொணர்தல்

8673. ‘தெய்வ மானத்திடை ஏற்றி
மனிசர்க்கு உற்ற செயல் எல்லாம்
தய்யல் காணக் காட்டுமின்கள்;
கண்டால் அன்றி, தனது உள்ளத்து
அய்யம் நீங்காள்’ என்று உரைக்க,
அரக்கர் மகளிர் இரைத்து ஈண்டி,
உய்யும் உணர்வு நீத்தாளை
நெடும் போர்க் களத்தின்மிசை உய்த்தார்.–3-

தெய்வ மானத்திடை ஏற்றி – (பின்பு இராவணன் சீதைக்குக்
காவலாய் அமைந்த அரக்கியரை அழைத்து, நீங்கள்) சீதையைத்
தெய்வத்தன்மையை உடைய புட்பக விமானத்தில் ஏற்றி; மனிசர்க்கு
உற்ற செயல் எல்லாம் -இராமலக்குமவராகிய மனிதர்க்கு நேர்ந்த கதி
எல்லாவற்றையும்; தய்யல் காணக் காட்டுமின்கள்-அவள் காணுமாறு
காட்டுங்கள்; கண்டால் அன்றி, தனது உள்ளத்து,அய்யம் நீங்காள்-
தன் கண்ணால் கண்டால் அல்லது தன் மனத்தின் கண்ணுள்ள
ஐயப்பாடு நீங்கப்பெறாள்; என்று உரைக்க – என்று (அவ்விராவணன்)
கூற; அரக்க மகளிர் இரைத்து ஈண்டி -அரக்கியர்கள் ஆரவாரித்துக்
கொண்டு நெருங்கி; உய்யும் உணர்வு நீத்தாளை – இவ்வுலகில்
உய்ந்திருக்க வேண்டும் என்னும் உணர்ச்சியற்ற சீதையை; நெடும்
போர்க் களத்தின் மிசை உய்த்தார் – நெடிய போர்க்களத்துக்கு
மேலாக அழைத்துச் சென்றார்கள்,

———–

இராவணன் கண்ட சீதையின் துயர்

8674. கண்டாள் கண்ணால் கணவன் உரு;
அன்றி, ஒன்றும் காணாதாள்;
உண்டாள் விடத்தை என, உடலும்
உணர்வும் உயிர்ப்பும் உடன் ஓய்ந்தாள்;
தண் தாமரைப் பூ நெருப்புற்ற
தன்மை உற்றாள்; தரியாதாள்;
பெண்தான் உற்ற பெரும் பீழை
உலகுக்கு எல்லாம் பெரிது அன்றோ!–4-

கணவன் உரு கண்ணால் கண்டாள் – கணவன் உருவைச் சீதை
கண்ணால் கண்டாள்; அன்றி ஒன்றும் காணாதாள் – அவ்வுருவத்தை
அன்றி வேறு ஒன்றும் காணாதவள் ஆயினாள்; உண்டாள் விடத்தை
என – (பின்பு) விடத்தை உண்டவள் போல; உடலும், உணர்வும்,
உயிர்ப்பும் உடன் ஓய்ந்தாள் – உடம்பும், உணர்ச்சியும், உயிர்ப்பும்
ஒருங்கே ஓயப்பெற்றாள்; தண்டாமரைப் பூ நெருப்புற்ற தன்மை
உற்றாள் – குளிர்ந்த தாமரைப்பூ நெருப்பில்
வீழ்ந்தாற்போன்றதன்மையை அடைந்தாள்; தரியாதாள் பெண்தான்
உற்ற பெரும் பீழை – (பெருந்துயரைத்) தாங்கமாட்டாதவளான சீதை
என்னும் பெண் அடைந்த பெருந்துயரம்; உலகுக்கு எல்லாம்
பெரிதன்றோ? – உலகங்கள் எல்லாவற்றினும் பெரியதாகும் அன்றோ?

———–

8675. மங்கை அழலும்-வான் நாட்டு
மயில்கள் அழுதார்; மழ விடையோன்
பங்கின் உறையும் குயில் அழுதாள்;
பதுமத்து இருந்த மாது அழுதாள்;
கங்கை அழுதாள்; நாமடந்தை
அழுதாள்; கமலத் தடங் கண்ணன்
தங்கை அழுதாள்; இரங்காத
அரக்கிமாரும் தளர்ந்து அழுதார்.–5-

மங்கை அழலும் – (உயிரோய்ந்திருந்த) சீதை எழுந்து அழுதலும்;
வான் நாட்டு மயில்கள் அழுதார் – (அவளைக்கண்டு)
வானுலகத்திலுள்ள மயில் போன்ற சாயலை உடைய தேவமாதர்
அழுதனர்;மழவிடையோன் பங்கின் உறையும் குயில் அழுதாள் –
இளமையான எருதை ஊர்தியாகவுடைய சிவபிரானது இடப்பாகமமர்ந்த
குயில் போன்றவளான உமையவள் அழுதாள்; பதுமத்து இருந்த மாது
அழுதாள் – செந்தாமரை மலரில் தங்கியுள்ள திருமகள் அழுதாள்;
கங்கை அழுதாள் நாமடந்தை அழுதாள் -கங்காதேவி அழுதாள், அயனார் நாவில் வீற்றிருக்கும் கலைமகள்
அழுதாள்; கமலத்தடங்கண்ணன் தங்கை அழுதாள்-தாமரைமலர்
போன்ற கண்களை உடைய திருமாலின் தங்கையான கொற்றவை
அழுதாள்; இரங்காத அரக்கிமாரும் தளர்ந்து அழுதார் – இரங்காத
வன்னெஞ்சராகிய அரக்கிமாரும் தம் வன்மை தளர்ந்து அழுதார்.

———–

8676. பொன் தாழ் குழையாள்தனை ஈன்ற
பூ மா மடந்தை புரிந்து அழுதாள்;
குன்றா மறையும், தருமமும், மெய்
குழைந்து குழைந்து, விழுந்து அழுத;
பின்றாது உடற்றும் பெரும் பாவம்
அழுத; பின் என் பிறர் செய்கை?
நின்றார் நின்றபடி அழுதார்;
நினைப்பும் உயிர்ப்பும் நீத்திட்டாள்.–6-

பொன்தாழ் குழையாள் தனை ஈன்ற – பொன்னாற் செய்யப்
பெற்றுக் காதில் தொங்குகின்ற குழை என்னும் அணியை
அணிதற்குரியவளான சீதையைப் பெற்றதாயாகிய; பூமாமடந்தை புரிந்து
அழுதாள் – பூமாதேவி எனும் பெண் மனம் இரங்கி அழுதாள்;
குன்றாமறையும் தருமமும் – தன் இயல்பில் குன்றாது என்றும்
ஒருதன்மைத்தாக இருக்கும் வேதங்களும் தருமமும்; மெய்குழைந்து
குழைந்து விழுந்து அழுத – மெய் நெகிழ்ந்து, நெகிழ்ந்து விழுந்து
அழுதன; பின்றாது உடற்றும் பெரும் பாவம் – பிற்படாமல் முற்பட்டு
வந்து வருந்துகின்ற பெரும் பாவமும்; அழுதபின் என்பிறர் செய்கை-
அழுதபின்பு பிறர் செய்கையை என்னென்பது?; நின்றார் நின்றபடி
அழுதார் – ஆங்காங்கிருந்தவர் (மதிமயங்கி) நின்றது நின்ற வண்ணம்
புலம்பினர்; நினைப்பும் உயிர்ப்பும் நீத்திட்டாள் – (அப்போது பிராட்டி) நினைப்பும்,
உயிர்ப்பும் நீத்தவளானாள்.

———-

சீதை தெளிந்து துன்புற்று ஏங்குதல்

8677. நினைப்பும் உயிர்ப்பும் நீத்தாளை
நீரால் தெளித்து, நெடும் பொழுதின்
இனத்தின் அரக்கர் மடவார்கள்
எடுத்தார்; உயிர் வந்து ஏங்கினாள்;
கனத்தின் நிறத்தான்தனைப் பெயர்த்தும்
கண்டாள்; கயலைக் கமலத்தால்
சினத்தின் அலைப்பாள் என, கண்ணைச்
சிதையக் கையால் மேதினாள்.–7-

நினைப்பும் உயிர்ப்பும் நீத்தாளை-நினைப்பும், உயிர்ப்பும் இன்றி
மூர்ச்சையுற்றிருந்த சீதையை; இனத்தின் அரக்கர் மடவார்கள் –
கூட்டமான அரக்கப் பெண்கள்; நெடும்பொழுதின் நீரால் தெளிந்து
எடுத்தார் – நெடிது நேரம் வரை நீர் தெளித்து தெளியச் செய்து,
எடுத்து அமரச் செய்தார்கள்; உயிர் வந்து ஏங்கினாள் – சீதை
அவர்தம் உதவியால் உயிர் வரப்பெற்று வருந்தினாள்; கனத்தின்
நிறத்தான் தனைப் பெயர்த்தும் கண்டாள் – மேக வண்ணனான
இராமனை மீண்டும் முன்கிடந்தவாறே கிடக்கக்கண்டாள்; கயலைக்
கமலத்தால் சினத்தின் அலைப்பாள் என – கயல் மீனைத் தாமரை
மலரால் கோபங்கொண்டு அடிப்பவள் போல; கண்ணைக் கையால்
சிதைய மோதினாள் – கண்களைக் கைகளால் சிதையுமாறு அடித்துக்
கொண்டாள்.

————-

8678. அடித்தாள் முலைமேல்; வயிறு அலைத்தாள்;
அழுதாள்; தொழுதாள்; அனல் வீழ்ந்த
கொடித்தான் என்ன, மெய் சுருண்டாள்;
கொதித்தாள்; பதைத்தாள்; குலைவுற்றாள்;
துடித்தாள், மின்போல்; உயிர் கரப்பச்
சோர்ந்தாள்; சுழன்றாள்; துள்ளினாள்;
குடித்தாள் துயரை, உயிரோடும்
குழைத்தாள்; உழைத்தாள்,-குயில் அன்னாள்.–8-

குயில் அன்னாள் – குயில் போன்ற இனிய குரலுடைய சீதை;
அடித்தாள் முலைமேல் வயிறு அலைத்தாள் – மார்பின்மேல்
அடித்துக்கொண்டாள், வயிற்றின்மேல் அறைந்தாள்; அழுதாள்;
தொழுதாள் – அழுதாள், கணவனைத் தொழுதாள்; அனல் வீழ்ந்த
கொடித்தான் என்ன மெய் சுருண்டாள் – நெருப்பில் விழுந்த
கொடிபோல உடம்பு சுருண்டாள்; கொதித்தாள்; பதைத்தாள்;
குலைவுற்றாள் – மனங்கொதித்தாள், பதை பதைத்தாள், நடுங்கினாள்;
துடித்தாள், மின்போல் உயிர்கரப்பச் சோர்ந்தாள் – துடித்தாள்,
மின்னல் தோன்றி மறைவதுபோல முன்வந்த உயிர்ப்பு மீண்டும்
மறையச் சோர்வுற்றாள்; சுழன்றாள்; துள்ளினாள் – மனம் சுழலப்
பெற்றாள்; பின்பு துள்ளிக் குதித்தாள்; குடித்தாள் துயரை,உயிரோடும்
குழைத்தாள்; உழைத்தாள் – கணவனை இழந்த துயரைத் தன்
உயிரோடும் குழைத்துக் குடித்தாள், வருந்தினாள்.

———–

8679. விழுந்தாள்; புரண்டாள்; உடல் முழுதும்
வியர்த்தாள்; அயர்த்தாள்; வெதும்பினாள்;
எழுந்தாள்; இருந்தாள்; தளிர்க் கரத்தை
நெரித்தாள்; சிரித்தாள்; ஏங்கினாள்;
‘கொழுந்தா!’ என்றாள்; ‘அயோத்தியர்தம்
கோவே!’ என்றாள்; ‘எவ் உலகும்
தொழும் தாள் அரசேயோ!’ என்றாள்;
சோர்ந்தாள்; அரற்றத் தொடங்கினாள்;–9-

விழுந்தாள்,புரண்டாள், உடல்முழுதும் வியர்த்தாள் -விழுந்தாள்;
புரண்டாள், உடல்முழுதும் வியர்க்கப் பெற்றாள்; அயர்த்தாள்,
வெதும்பினாள் – பெருமூச்சு விட்டாள் பின்பு மனம் வெதும்பினாள்;
எழுந்தாள், இருந்தாள் – பின்பு எழுந்தாள், உடனே அமர்ந்தாள்;
குளிர்க்கரத்தை நெரித்தாள்,சிரித்தாள், ஏங்கினாள்-தனது கரங்களை
நெரித்துக் கொண்டாள், (தன் நிலையை எண்ணிச்) சிரித்தாள், உடனே
ஏங்கினாள்; ‘கொழுந்தா’ என்றாள் – (இலக்குவனைப் பார்த்துக்
‘கொழுந்தா!’ என்று கூவினாள்; ‘அயோத்தியர்தங்கோவே!’ என்றாள்
– இராமனைப் பார்த்து, ‘அயோத்திநகரத்தவரின் அரசே!’ என்று விளித்தாள்;
‘எவ்வுலகும் தொழும் தாள் அரசேயோ’ என்றாள்-‘எவ்வுலகத்தவரும்
வந்து தொழுதற்குரிய திருவடிகளையுடைய அரசே!’ என்று
அழைத்தாள்; சோர்ந்தாள் அரற்றத் தொடங்கினாள் –
(அப்பெருமானின் பெருமையை நினைத்துச்) சோர்ந்தாள், பின்பு வாய்
திறந்து பல சொல்லி அரற்றத் தொடங்கினாள்!

————

சீதை அரற்றுதல்

8680. ‘உற மேவிய காதல் உனக்கு உடையார்,
புறம் ஏதும் இலாரொடு, பூணலையோ?
மறமே புரிவார் வசமாயினையோ-
அறமே!-கொடியாய், இதுவோ, அருள்தான்?–10-

அறமே! – அறக்கடவுளே!; உனக்கு உறமேவிய காதல்
உடையார் – உன்னிடத்தில் மிகுதியாகப் பொருந்திய அன்புடையவராய்;
புறம் ஏதும் இலாரொடு பூணலையோ? – (உனக்குப்) புறம்பான பாவச்
செயல் சிறிதும் இல்லாதவராகிய என்கணவரோடு சேரவில்லையோ?;
மறமே புரிவார் வசம் ஆயினையோ? – பாவத்தையே விரும்பிச்
செய்கின்ற அரக்கர் வசம்? ஆய்விட்டாயோ?; கொடியாய்; இதுவோ
அருள்தான்? – கொடியவனே உனது அருள்தான் இத்தகையதோ?

————-

8681. ‘முதியோர் உணர் வேதம் மொழிந்த அலால்,
கதி ஏதும் இலார் துயர் காணுதியோ?
மதியேன் மதியேன் உனை-வாய்மை இலா
விதியே!-கொடியாய், விளையாடுதியோ?–11-

வாய்மை இலா விதியே! – வாய்மை தவறிய விதியே!; முதியோர்
உணர் வேதம் மொழிந்த அலால் – அறிவினால் பெரியவர்கள்
எல்லாம் உணர்தற்குரிய வேதங்கள் சொல்லிய நெறியில் அல்லது; கதி
ஏதும் இலார் துயர் காணுதியோ? – வேறுபற்றுகோடு
ஏதுமில்லாதவர்களுடைய (இராமலக்குவர்) துன்ப நிலையைக் கண்டு
கொண்டுதான் இருக்கின்றாயோ?; கொடியாய் விளையாடுதியோ? –
அல்லது (என்னைச் சோதிக்கக்) கொடுமையுடையாய்
விளையாடுகின்றாயோ?; உனைமதியேன்! மதியேன்! –
(எங்ஙனமாயினும்) உனை (ஒருபொருட்டாக) மதிக்கமாட்டேன்!
மதிக்கமாட்டேன்!

————-

8682, ‘கொடியேன் இவை காண்கிலேன்; உயிர் கோள்
முடியாய், நமனே! முறையோ! முறையோ!
விடியா இருள்வாய் என வீசினையே?-
அடியேன் உயிரே! அருள் நாயகனே!–12-

கொடியேன் இவை காண்கிலேன் – கொடியவளாகியயான்
(இராமலக்குவர்க்கு நேர்ந்துள்ள) இந்த அவல நிலைமையைக்
காணப்பெறேன்; நமனே – கூற்றுவனே! அடியேன் உயிரே, அருள்
நாயகனே! – அடியேனுடைய உயிரே அருள் மிக்க என் நாயகனே!
உயிர்கோள் முடியாய் – (அப்படிப்பட்ட என் நாயகனும் தம்பியும்
வீழ்ந்து கிடக்கக் கண்டு கதறும் என்) உயிரைக் கொள்ளும் செயலை
முடிக்காமல்; விடியா இருள்வாய் எனை வீசினையே – விடிவில்லாத
இருளில் (முடிவில்லாத துன்பத்தில்) என்னை வீசிவிட்டாயே!
முறையோ முறையோ – இது முறையாகுமா? முறையாகுமா?
(முறையன்று).

————-

8683, ‘எண்ணா, மயலோடும் இருந்தது நின்
புண் ஆகிய மேனி பொருந்திடவோ?-
மண்ணோர் உயிரே! இமையோர் வலியே!
கண்ணே! அமிழ்தே! கருணாகரனே!

மண்ணோர் உயிரே! – மண்ணுலகத்தவர்க்கு உயிர் போன்றவனே;
இமையோர் வலியே! – தேவர்கட்கு பகைவெல்வதில்) வலிமையாக இருப்பவனே! கண்ணே, அமிழ்தே,
கருணாகரனே – என் கண் போன்றவனே என் உயிர்க்கு அமி்ழ்தம்
போன்றவனே, கருணையின் நிலையமே; எண்ணாமயலோடும் இருந்தது
– எனக்குற்ற துன்பங்களைச் சிறிதும் எண்ணாமல், யான் இது காறும்
அளவிட முடியாத காதல் மயக்கத்தோடு அரக்கர் ஊரில் உயிர்
வாழ்ந்திருந்தது; நின்புண்ணாகிய மேனி பொருந்திடவோ? – நின்
புண்ணான உடம்பைப் பொருந்திடத்தானோ?

————–

8684. ‘மேவிக் கனல் முன், மிதிலைத்தலை, என்
பாவிக் கை பிடித்தது, பண்ணவ! நின்
ஆவிக்கு ஒரு கோள் வரவோ?-அலர் வாழ்
தேவிக்கு அமிழ்தே! மறையின் தெளிவே!–14-

அலர்வாழ் தேவிக்கு அமிழ்தே – செந்தாமரை மலரில் வாழ்கின்ற
திருமகளுக்கு அமிழ்தம் போன்றவனே! மறையின் தெளிவே! –
வேதத்தின் தெளிபொருளாக உள்ளவனே! பண்ணவ – கடவுளே!
மிதிலை மேவிக் கனல் முன் என் பாவிக் கைபிடித்தது – (நீ)
மிதிலைக்கு வந்து ஓமத்தீமுன்னர் பாவியாகிய என் கை பிடித்து
மணந்து கொண்டது; நின் ஆவிக்கு ஒரு கோள் வரவோ? – நின்
உயிருக்கு ஒரு தீமை நிகழ்தற்குத்தானோ?

———–

8685, ‘உய்யாள், உயர் கோசலை தன் உயிரோடு;
அய்யா! இளையோர் அவர் வாழ்கிலரால்;
மெய்யே, வினை எண்ணி, விடுத்த கொடுங்
கய்கேசி கருத்து இதுவோ?-களிறே!–15-

களிறே! ஐயா! – ஆண்யானைபோன்றவனே, தலைவனே உயர்
கோசலைதன் உயிரோடு உய்யாள் – (நின் நிலைமையைக் கேட்டால்)
உயர்ந்த பண்பினளான கோசலை தன் உயிர் உய்ந்திருக்க மாட்டாள்;
இளையோர் அவர் வாழ்கிலர் – (நினக்கு) இளையவர்களாகிய அப்பரத
சத்துருக்கர் (நின்னை இழந்து) உயிர் வாழ்ந்திருக்க மாட்டார்; வினை
எண்ணி விடுத்த – வஞ்சனை நினைந்து நின்னைக் காட்டிற்கு அனுப்பிய; கொடுங்கய்கேசி கருத்து
மெய்யே இதுவோ? – கொடிய தன்மையளான கைகேசியின் கருத்து
உண்மைாகவே இது தானோ?

———–

8686. “தகை வான் நகர் நீ தவிர்வாய்” எனவும்,
வகையாது, தொடர்ந்து, ஒரு மான் முதலா,
புகை ஆடிய காடு புகுந்து, உடனே
பகை ஆடியவா! பரிவு ஏதும் இலேன்!

“தகைவான் நகர் நீ தவிர்வாய்” எனவும்-பெருமைசான்ற உயர்ந்த
அயோத்தி நகரில் நீ தங்கி இருப்பாயாக” என்று நீ கூறவும்; பரிவு
ஏதும் இலேன் – இரக்கம் சிறிதும் இல்லாத நான்; வகையாது
தொடர்ந்து – நின்னைப் பிரிந்திராமல் தொடர்ந்து; புகை ஆடிய காடு
புகுந்து – புகை மண்டியகானகத்தில் நின்னுடனே புகுந்து; ஒரு மான்
முதலா பகை ஆடியவா! – ஒரு மான் காரணமாக நின்னைக் கொல்லும்
பகையை உண்டாக்கியவாறு என்னே!

—————-

8687. “இன்று ஈகிலையேல், இறவு இவ் இடை; மான்
அன்று, ஈ” எனவும் பிரிவோடு அடியேன்
நின்று ஈவது, நின்னை நெடுஞ் செருவில்,
கொன்று ஈவது ஓர் தீமை குறித்தலினோ?

அன்று – அக்காலத்தில்; இன்றுமான் ஈகிலையேல் – இன்று
மானைப் பிடித்துக் கொடுக்கவில்லையானால்; இவ்விடை இறவு ஈ
எனவும் – இவ்விடத்து எனக்கு இறப்புத்தான்; (ஆதலால்)
அம்மானைப் பிடித்துக்கொடு என வேண்டவும்; பிரிவோடு அடியேன்
நின்று ஈவது – நிற்பிரிந்து அடியேன் தனித்து நின்றது; நின்னை
நெடுஞ் செருவில் கொன்று ஈவது ஓர் தீமை குறித்தலினோ? –
நின்னை நெடிய போரில் கொல்வதோர் தீமை நினைத்தலினால்
தானோ?

—————-

8688. ‘நெய் ஆர் பெரு வேள்வி நிரப்பி, நெடுஞ்
செய் ஆர் புனல் நாடு திருத்துதியால்;
மெய் ஆகிய வாசகமும் விதியும்
பொய் யான, என மேனி பொருந்துதலால்.–18-

நெய்யார் பெருவேள்வி நிரப்பி – (முடிசூட்டு விழாவில்
செய்தற்குரிய நெய் நிரம்பச் சொரியப் பெறும் பெரிய வேள்வியை
நிறைவுறச் செய்து; நெடுஞ் செய் ஆர் புனல் நாடு திதுத்துதியால்
– பின், வயல்கள் நிறைந்த நீர் வளம் மிக்க கோசல நாட்டை நீதி
வழுவாமல் அரசாண்டிருப்பாய்; என்மேனி பொருந்துதலால் –
(பாவியாகிய) என் உடம்பைத் தீண்டிய குற்றத்தால்; மெய் ஆகிய
வாசகமும் விதியும் பொய் ஆன – (நின்தந்தை நினக்கு முடி
சூட்டுவதாகக்கூறிய) மெய்யான சொல்லும், நீ முடி சூடுதற்குரியதாக
அமைந்த விதியும் பொய்யாயின!

————-

8689, ‘மேதா! இளையோய்! விதியார் விளைவால்,
போதா நெறி எம்மொடு போதுறுநாள்,
“மூது ஆனவன் முன்னம் முடிந்திடு” எனும்,
மாதா உரையின்வழி நின்றனையோ?–19-

மேதா! இளையோய்! – அறிவு நிரம்பியவனே! இளவரசே! விதியார்
விளைவால் – விதியின் விளைவாக; போதா நெறிஎம்மொடு
போதுறுநாள் – சொல்ல முடியாத காட்டு வழியில் எங்களோடு
வரப்புறப்படும் நாள்;”மூது ஆனவன் முன்னம் முடிந்திடு” எனும் –
“முன்னவனாகிய இராமன் இறக்கும் நிலை நேர்ந்தால், அவனுக்கு முன்
நீ முடிந்திடுவாயாக” எனக் கூறிய; மாதா உரையின் வழி
நின்றனையோ – நின்தாய் சுமித்திரையின் சொல்வழியே (நீ)
முன்னம் இறந்தனையோ?”

————–

8690. ‘பூவும் தளிரும் தொகு பொங்கு அணைமேல்
கோவும் துயில, தவிர்வாய்! கொடியார்
ஏவின்தலை வந்த இருங் கணையால்
மேவும் குளிர் மெல் அணை மேவினையோ?–20-

பூவும் தளிரும் தொகு பொங்கு அணைமேல் – மெல்லிய பூவும்,
தண்ணியதளிரும் நிறைந்துள்ள சிறந்த படுக்கையில்; கோவும் துயில,
தவிர்வாய் – இராமன் துயில் கொள்ளும்போது (அவனைக்
காத்துக்கொண்டு, தூக்கத்தை விடுத்து) விழித்திருப்பவனே! கொடியார்
ஏவின் தலைவந்த இருங்கணையால் – (இப்போது) கொடியவர்களாகிய
அரக்கர்தம் வில்லினிடத்திருந்து வெளிப்பட்டு வந்த பெரிய
அம்புகளால்; மேவும் குளிர்மெல் அணைமேவினையோ – அமைந்த
குளிர்ந்த மெல்லிய படுக்கையை விரும்பிப் படுத்து உறங்குகின்றாயோ?

—————–

திரிசடை சீதையின் மயக்கம் தீர்த்தல்

8691.
‘மழு வாள் வரினும் பிளவா மனன் உண்டு
அழுவேன்; இனி, இன்று இடர் ஆறிட, யான்
விழுவேன், அவன் மேனியின்மீதில்’ எனா,
எழுவாளை விலக்கி இயம்பினளால்:–21-

மழுவாள் வரினும் – மழு, வாள் என்கின்ற ஆயுதங்கள் வந்து
தாக்கினாலும்; பிளவாமனன் உண்டு அழுவேன் – பிளந்துபடாத
கடினமான மனம் (எனக்கு) உண்டு; எனவே என் கணவன்
உயிர்நீத்தமை கண்ட அளவிலேயே உயிர் விடாமல் வெற்று
அழுகையாக அழுவேன்; இனி, இடர் இன்று ஆறிட – இனி
(அவ்வெற்றெழுகையை விடுத்து இப்பெருந்துன்பத்தினின்றும்
இப்பொழுது ஆறுதல் பெற்றிட; யான் அவன் மேனியின் மீதில்
விழுவேன் – அப்பெருமானின் மேனியின் மேல் விழுந்து உயிர்
விடுவேன்; எனா எழுவாளை – என்று சொல்லி எழுபவளை; விலக்கி
இயம்பினளால் – தடுத்து (திரிசடை) கூறலானாள்.

————-

8692.
‘மாடு உற வளைந்து நின்ற வளை எயிற்று அரக்கிமாரைப்
பாடு உற நீக்கி, நின்ற பாவையைத் தழுவிக் கொண்டு,
கூடினள் என்ன நின்று, செவியிடை, குறுகிச் சொன்னாள்-
தேடிய தவமே என்னத் திரிசடை, மறுக்கம் தீர்ப்பாள்.

தேடியதவமே அன்ன திரிசடை – சீதை முன்பு தேடிய தவப்பயன்
போன்ற திரிசடை; மறுக்கம் தீர்ப்பாள் – (அப்பிராட்டியின்)
மனக்கலக்கத்தை அகற்றுபவளாகி; மாடு உற வளைந்து நின்ற வளை
எயிற்று அரக்கி மாரை – அவள் பக்கத்தில் சுற்றி நின்ற வளைந்த
கோரப் பற்களை உடைய அரக்கியர்களை; பாடுஉற நீக்கி, நின்ற
பாவையைத் தழுவிக் கொண்டு – இருபக்கமும் பிரிந்து போகுமாறு
நீக்கிக்கொண்டு, (இராமன்மேல் விழும் நோக்கத்தோடு) நின்ற பாவை
போன்ற சீதையைத் தழுவிக்கொண்டு; கூடினள் என்ன நின்று
செவியிடை குறுகிச் சொன்னாள் – அவளோடு ஒன்றாயினாள்
என்னுமாறு நெருங்கி நின்று அவள் செவியிற் சென்று சொன்னாள்.

———

8693,
‘மாய மான் விடுத்தவாறும், சனகனை வகுத்தவாறும்,
போய நாள் நாகபாசம் பிணித்தது போனவாறும்,
நீ அமா! நினையாய்; மாள நினைதியோ? நெறி இலாரால்
ஆய மா மாயம்; ஒன்றும் அறிந்திலை, அன்னம் அன்னாய்!–23-

அன்னம் அன்னாய், அமா!- அன்னம் போன்ற தாயே!; மாயமான்
விடுத்தவாறும் – மாரீசனாகிய மாயமானை முன் விடுத்த தன்மையும்;
சனகனைவகுத்தவாறும் – மாயா சனகனை உண்டாக்கின தன்மையும்;
போயநாள் நாகபாசம் பிணித்தது போனவாறும் – சென்ற நாளில்
(இராமலக்குவன் முதலானோரை) பிணித்ததாகிய நாகபாசம்
அழிந்துபோன தன்மையும்; நினையாய் – எண்ணிப் பார்ப்பாயாக;
நெறி இலாரால் ஆய மா மாயம் ஒன்றும் அறிந்திலை – நல்ல
நெறியில் செல்லாதவர்களால் (அரக்கரால்) உண்டாய பெரிய மாயச்
செயல் ஒன்றையும் அறிகிலையாய்; மாளநினைதியோ? – மாண்டுபோக
நினைக்கின்றாயோ?

———–

8694.
‘கண்ட அக் கனவும், பெற்ற நிமித்தமும், நினது கற்பும்,
தண்ட வாள் அரக்கர் பாவச் செய்கையும், தருமம் தாங்கும்
அண்டர் நாயகர் தம் வீரத் தன்மையும், அயர்க்கலாமோ?
புண்டரீகற்கும் உண்டோ, இறுதி, இப் புலையர்க்கு
அல்லால்?–24-

கண்ட அக் கனவும் பெற்ற நிமித்தமும் நினது கற்பும் – நீ முன்
கண்டுள்ள கனவும் பெற்றுள்ள நன்னிமித்தங்களும், நின்னுடைய
கற்பின் திண்மையும்; தண்டவாள் அரக்கர் பாவச் செய்கையும் –
தண்டாயுதத்தையும், வாளையுமுடைய அரக்கர் தம் பாவச்
செய்கையும்; தருமம் தாங்கும் அண்டர் நாயகர் தம வீரத்தன்மையும்
– தருமத்தைத் தாங்குகின்ற இராமலக்குவரின் வீரத் தன்மையும்;
அயர்க்கலாமோ? – மறக்கலாகுமோ? (மறக்கலாகாதுகாண்);
இப்புலையர்க்கு அல்லால் புண்டரீகற்கும் உண்டோ இறுதி? –
இப்புலையர்களாகிய அரக்கர்க்கு அழிவு உண்டாவதல்லால் உந்திக்
கமலத்தை உடைய திருமாலின் அமிசமான இராமனுக்கும்
அழிவுண்டாகுமோ?

————

8695.
ஆழியான் ஆக்கைதன்னில் அம்பு ஒன்றும் உறுகிலாமை,
ஏழை! நீ காண்டி அன்றே? இளையவன் வதனம் இன்னும்
ஊழி நாள் இரவி என்ன ஒளிர்கின்றது; உயிருக்கு இன்னல்
வாழியார்க்கு இல்லை; வாளா மயங்கலை-மண்ணில் வந்தாய்!–25-

மண்ணில் வந்தாய் – பூமியினின்றும் தோன்றியவளே! ஆழியான்
ஆக்கை தன்னில் அம்பு ஒன்றும் உறுகிலாமை – சக்கரப்படைக்கு
உரியவனாகிய இராமனது உடம்பில் அம்பு ஒன்றும் அழுந்தவில்லை
என்பதை; ஏழைநீ காண்டி அன்றே – மென்மையான உள்ளமுடைய நீ
நேரே காண்கிறாயல்லவோ? இளையவன் வதனம் –
(அம்புபட்டிருந்தாலும்) இலக்குவனின் முகம்; இன்னும் ஊழி நாள்
இரவி என்ன ஒளிர்கின்றது – இன்னமும் ஊழி இறுதியில் தோன்றும்
சூரியனைப் போல ஒளி வீசிக் கொண்டிருக்கிறது; உயிருக்கு இன்னல்
வாழியார்க்கு இல்லை – எனவே நெடிதுநாள் வாழுந்தன்மையுள்ள
அவ்விருவர்க்கும் உயிருக்கு அழிவில்லை; வாளாமயங்கலை – (எனவே) அவர்கள்
இறந்தார்கள் என்று வீணாக மயங்காதே!

————-

8696.
‘ஓய்ந்துளன், இராமன், என்னின், உலகம் ஓர் ஏழும் ஏழும்
தீய்ந்துறும்; இரவி பின்னும் திரியுமோ? தெய்வம் என் ஆம்?
வீய்ந்துறும், விரிஞ்சன் முன்னா உயிர் எலாம்; வெருவல்,
அன்னை!
ஆய்ந்தவை உள்ள போதே, அவர் உளர்; அறமும்
உண்டால்.–26-

ஓய்ந்துளன், இராமன் என்னின் – இராமன் இறந்துளன் ஆயின்;
உலகம் ஓர் ஏழும் ஏழும் தீய்ந்துறும் – கீழ் ஏழ் உலகமும் மேல் ஏழ்
உலகமும் தீய்ந்து போயிருக்கும்; இரவி பின்னும் திரியுமோ? தெய்வம்
என் ஆம்? – சூரியன் பின்னும் விண்ணில் திரிவானோ? ஊழாகிய
தெய்வம் என்ன பயனுடையதாகும்? விரிஞ்சன் முன்னா உயிர் எலாம்
வீய்ந்துறும் – பிரமன் முதலிய உயிர்கள் எல்லாம் அழிவுறும்;
ஆய்ந்தவை உள்ளபோதே அவர் உளர்; அறமும் உண்டால் –
மேற்கூறியவை அழியாமல் உள்ள போதே அவரும் இருக்கின்றனர்;
தருமமும் உண்டு; அன்னை வெருவல் – அன்னையே நீ அஞ்சாதே!

———–

8697,
‘மாருதிக்கு இல்லை அன்றே, மங்கை நின் வரத்தினாலே
ஆர் உயிர் நீங்கள்! நின்பால் கற்புக்கும் அழிவு உண்டாமே?
சீரியது அன்று, இது ஒன்றும்; திசைமுகன் படையின் செய்கை
பேரும், இப்பொழுதே; தேவர் எண்ணமும் பிழைப்பது
உண்டோ?–27-

மங்கை நின் வரத்தினாலே – மங்கையே! நீ கொடுத்த
வரத்தினாலே; மாருதிக்கு ஆருயிர் நீங்கல் இல்லை அன்றே –
அனுமானுக்கு அரிய உயிர் நீங்கப் பெறுதல் இல்லை அன்றோ?
நின்பால் கற்புக்கும் அழிவு உண்டாமோ – (அனுமான் உயிர் நீங்கி
இருப்பின் நின் கற்பின் பெருமை குன்றும்) நின்பால் அமைந்த
கற்பிற்கும் அழிவு உளதாமோ? இது ஒன்றும் சீரியது அன்று –
இரவெல்லாம் மூர்ச்சையுற்றுக் கிடக்கின்ற இந்நிலை ஒன்றும்
பிறிதொன்றால் நீங்காத சிறப்பினதன்று; திசைமுகன் படையின்
செய்கை இப்பொழுதே பேரும் – இது பிரம்மாத்திரத்தின்
செய்கையாகும்; இது இப்போதே நீங்கும்; தேவர் எண்ணமும்
பிழைப்பது உண்டோ? – தேவர்களின் எண்ணமும் தவறு படுவது
உண்டோ? (இல்லை).

————

8698.
‘தேவரைக் கண்டேன்; பைம் பொன் செங் கரம் சிரத்தில்
சேர்த்தி,
மூவரைக் கண்டாலென்ன, இருவரை முறையின் நோக்கி,
ஆவலிப்பு எய்துகின்றார்; அயர்த்திலர்; அஞ்சல்; அன்னை!
“கூவலில் புக்கு, வேலை கோட்படும்” என்று கொள்ளேல்.–28-

தேவரைக்கண்டேன் – விண்ணவர்களைப் பார்த்தேன்;
மூவரைக்கண்டால் என்ன இருவரை முறையின் நோக்கி-(அவர்கள்)
திருமூர்த்திகளைக் காண்பார் போன்று (உயிர்சோர்ந்து கிடக்கின்ற)
இருவரையும் முறையாகப் பார்த்து; பைம்பொன் செங்கரம் சிரத்தில்
சேர்த்தி – பசும் பொன்னாற் செய்த அணிகலன் அணிந்த தம் சிவந்த
கைகளைத்தலைமேல் வைத்து; ஆவலிப்பு எய்துகின்றார் அயர்த்திலர்
– வணங்கிச் செருக்குற்றிருக்கின்றனர் துன்புறவில்லை; அன்னை!
அஞ்சல் – ஆதலால் அன்னையே, அஞ்சாதே! ‘வேலை கூவலில்புக்கு
கோட்படும்’ என்று கொள்ளல் – கடல் கிணற்றில் புகுந்து
அக்கிணற்றால் கொள்ளப்பட்டு விடும் என்று கொள்ளாதே!

————-

8699.
‘மங்கலம் நீங்கினாரை, ஆர் உயிர் வாங்கினாரை,
நங்கை! இக் கடவுள் மானம் தாங்குறும் நவையிற்று
அன்றால்;
இங்கு, இவை அளவை ஆக, இடர்க் கடல் கடத்தி’
என்றாள்;
சங்கையள் ஆய தையல் சிறிது உயிர் தரிப்பதானாள்.–29-

நங்கையே! இக்கடவுள் மானம் – பெண்களிற்சிறந்தவளே! இந்தத்
தெய்வத்தன்மை வாய்ந்த புட்பகவிமானம்; மங்கலம் நீங்கினாரை
ஆருயிர் வாங்கினாரை – மங்கலநாண் நீங்கப்பெற்ற கைம்
பெண்டிரையும், அரிய உயிர் நீங்கப்பெற்று பிணமானவரையும்;
தாங்குறும் நவையிற்று அன்றால் – தாங்குகின்ற குற்ற முடையதன்று;
‘இங்கு இவை அளவையாக இடர்க்கடல் கடத்தி’ என்றாள் – இங்கு
யான் கூறிய இக்கருத்துக்களை அளவையாகக் கொண்டு இராமன்
இறக்கவில்லை என்பதறிந்து துன்பக்கடலைக் கடப்பாயாக எனத்
திரிசடை கூறினாள்; சங்கையள் ஆயதையல் சிறிது உயிர்
தரிப்பதானாள் – (இராம லக்குவர் இறந்து விட்டார்களோ என)
ஐயம்கொண்டவளான சீதை (திரிசடை சொற்களால்) சிறிது உயிர்தாங்கி
இருப்பாளானாள்.

————-

சீதையின் மறுமொழி

8700.
‘அன்னை! நீ உரைத்தது ஒன்றும் அழிந்திலது; ஆதலானே
உன்னையே தெய்வமாக் கொண்டு, இத்தனை காலம்
உய்ந்தேன்;
இன்னம், இவ் இரவு முற்றும் இருக்கின்றேன்; இறத்தல்
என்பால்
முன்னமே முடிந்தது அன்றே ?’ என்றனள்-முளரி நீத்தாள்.–30-

முளரி நீத்தாள் – தாமரை மலரை விட்டுச் சனகன் மகளாகப்
பிறந்தவளாகிய திருமகளாகிய சீதை; அன்னை! நீ உரைத்தது
ஒன்றும் அழிந்திலது ஆதலானே – அன்னை போன்றவளே, நீ
இதுவரை சொன்னது ஒன்றும் பழுதுபட்டதில்லை ஆதலால்;
உன்னையே தெய்வமாக்கொண்டு இத்தனை காலம் உய்ந்தேன் –
உன்னையே தெய்வமாகக் கொண்டு இவ்வளவு காலம் உயிரைப்
போக்கிக்கொள்ளாமல் உய்ந்திருந்தேன்; இன்னம் இவ்இரவு முற்றும்
இருக்கின்றேன் – இன்னும் (நின்சொல்லையே நம்பி) இந்த இரவு
முழுதும் இருக்கின்றேன்; இறத்தல் என்பால் முன்னமே முடிந்தது
அன்றே என்றனள் – இறப்பது என்பது என்னிடம் முன்னமே
முடிவானது அன்றோ என்று கூறினாள்.

—————

8701.
‘நாண் எலாம் துறந்தேன், இல்லின் நன்மையின் நல்லார்க்கு
ஏய்ந்த;
பூண் எலாம் ஆகி நின்ற என்தன் பொரு சிலை
மேகம்தன்னைக்
காணலாம் என்னும் ஆசை தடுக்க, என் ஆவி காத்தேன்;
ஏண் இலா உடலம் நீக்கல் எளிது, எனக்கு’ எனவும்
சொன்னாள்’.–31-

இல்லின் நன்மையின் நல்லார்க்கு – இல்லறத்தின் நன்மையினை
உடைய கற்புடைய பெண்களுக்கு; ஏய்ந்தநாண் எலாம் துறந்தேன் –
பொருந்துதற்குரிய நாண் முதலிய குணங்களை எல்லாம் துறந்தேன்;
என் தன் பூண் எலாம் ஆகி நின்ற – என்னுடைய அணிகலன்கள்
அனைத்துமாகி நின்ற; பொருசிலை மேகம் தன்னை – (என்னுடைய
கணவனாகிய) போர் செய்யும் வில்லேந்திய மேகம் போல்வானை;
காணலாம் என்னும் ஆசை தடுக்க – காணலாகு மென்கின்ற ஆசை
தடுத்தலால்; என் ஆவிகாத்தேன் – என் உயிரை இதுவரையில்
காப்பாற்றிக் கொண்டிருந்தேன்; ஏண் இலா உடலம் நீக்கல் –
(உணவின்றி) வலிகுன்றியுள்ள உடலினின்றும் உயிர் நீங்குதல்; எனக்கு
எளிது எனவும் சொன்னாள் – எனக்கு எளிது; (அரிதன்று) என்றும்
சொன்னாள்.

————-

சீதையை மீண்டும் அசோகவனத்திற்குச் செலுத்துதல்

8702.
தய்யலை, இராமன் மேனி தைத்தவேல் தடங்கணாளை,
கய்களின் பற்றிக் கொண்டார், விமானத்தைக்
கடாவுகின்றார்,-
மெய் உயிர் உலகத்து ஆக, விதியையும் வலித்து, விண்மேல்
பொய் உடல் கொண்டு செல்லும் நமனுடைத் தூதர்
போன்றார்.–32-

தய்யலை, இராமன் மேனி தைத்தவேல் தடங்கணாளை –
கட்டழகுடைய சீதையை, இராமன் மேனியில் பாய்ந்த வேலைப்
போன்ற பெரியகண்களை உடையவளை; கய்களில் பற்றிக் காண்டார்
விமானத்தைக் கடாவு கின்றார்-தம் கைகளில் பற்றிக்கொண்டு புட்பக
விமானத்தைச் செலுத்துகின்ற அரக்கியர்; மெய் உயிர் உலகத்து ஆக
விதியையும் வலித்து – உண்மையான உயில் மண்ணுலகத்து ஆக
விடுத்து, முன்னை விதியையும் வற்புறுத்தி மாற்றி; விண்மேல்
பொய்யுடல் கொண்டு செல்லும் – விண்மேல் பொய்யான உடம்பைக்
கொண்டு செல்லுகின்ற; நமனுடைத் தூதர் போன்றார் – எமதூதரைப்
போன்றனர்.

————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ கம்பராமாயணம்/யுத்த காண்டம்/21–பிரமாத்திரப் படலம்

November 2, 2020

இராவணன் இந்திரசித்தை அழைத்தல்

8441. கரன் மகன் பட்டவாறும், குருதியின் கண்ணன் காலின்
சிரன் நெரிந்து உக்கவாறும், சிங்கனது ஈறும், சேனைப்
பரம் இனி உலகுக்கு ஆகாது என்பதும், பகரக் கேட்டான்;
வரன்முறை துறந்தான், ‘வல்லைத் தருதிர், என் மகனை!’
என்றான்.

கரன்மகன் பட்டவாறும் – கரனுடைய மகனான மகரக் கண்ணன்
இறந்த வகையினையும்; குருதியின் கண்ணன் காலின் சிரன் நெரிந்து
உக்கவாறும் – இரத்தாட்சன் என்னும் அரக்கன் (நளனது) காலினால்
சிரம் நெரிந்து உயிர்விட்ட வகையினையும்; சிங்கனது ஈறும் –
(பனசனால் ஏற்பட்ட) சிங்கனது முடிவினையும்; சேனைப் பரம்இனி
உலகுக்கு ஆகாது என்பதும் – (தனது) சேனைப் பாரம் இனி உலகில்
இல்லாமல் ஒழிந்ததென்பதையும்; பகரக் கேட்டான் – (தூதர்கள்
அறிந்து) சொல்லக் கேட்டவனாய்; வரன் முறை துறந்தான் –
நீதிநெறியினை நீங்கியவனாகிய இரவணன்; ‘வல்லைத் தருதிர் என்
மகனை’ என்றான் – ‘என் மகனை (இந்திரசித்தை) விரைவில்
அழைத்து வருவீராக’ என (அத்தூதரிடம்) கூறினான்.

——–

8442. ‘கூயினன், நுந்தை’ என்றார்; குன்று எனக் குவிந்த
தோளான்,
‘போயின நிருதர் யாரும் பொன்றினர் போலும்!’
என்றான்;
‘ஏயின பின்னை, மீள்வார் நீ அலாது யாவர்?’ என்னா,
மேயது சொன்னார், தூதர்; தாதைபால் விரைவின்
வந்தான்.–2-

‘கூயினன், நுந்தை’ என்றார் – (இராவணன் பணித்தவாறு
இந்திரசித்தை அணுகிய தூதர்கள்) ‘உமது தந்தையார் (உம்மை)
அழைத்தனர் எனத் தெரிவித்தனர்; குன்று எனக் குவிந்த தோளான்
– குன்று போலத் திரண்ட தோளை உடையவனான இந்திரசித்து;
‘போயின நிருதர் யாரும் பொன்றினர் போலும்!’ என்றான் –
‘(போருக்குச்) சென்ற அரக்கர்கள் யாவரும் இறந்து பட்டனரோ?’
எனக் கேட்டான்; ‘ஏயின பின்னை, மீள்வார் நீ அலாது யாவர்?’
என்னா – ‘(இராவணனால் இம்மனிதர் மீது) போருக்கு என ஏவின
பின்பு (பொருத பின் அப்போர்க்களத்தினின்றும்) மீண்டு திரும்பி
வருபவர் உன்னையல்லால் வேறு யார் இருக்கிறார்கள்?’ எனக் கூறி;
மேயது சொன்னார் தூதர் – (போர்க் களத்தில்) நிகழ்ந்ததனைத்
தூதர்கள் எடுத்துரைத்தனர்; தாதை பால் விரைவின் வந்தான் –
(அதனைக் கேட்ட இந்திரசித்தன்) தந்தையினிடத்தினில் விரைந்து
வந்தான்.

————

தந்தையைத் தேற்றி, இந்திரசித்தன் போர்க்களம் செல்லுதல்

8443.
வணங்கி, ‘நீ, ஐய! “நொய்தின் மாண்டனர் மக்கள்” என்ன
உணங்கலை; இன்று காண்டி, உலப்பு அறு குரங்கை நீக்கி,
பிணங்களின் குப்பை; மற்றை நரர் உயிர் பிரிந்த யாக்கை
கணங் குழைச் சீதைதானும், அமரரும் காண்பர்’ என்றான்.–3-

வணங்கி ‘நீ ஐய!’ “நொய்தின் மாண்டனர் மக்கள்” என்ன
உணங்கலை – (இந்திரசித்து, தன் தந்தையை) வணங்கி, ‘ஐயனே நீ
(வன்மையான) புதல்வர்கள் (பகைவரால்) இறந்தொழிந்தார்கள்’ என
வாடி வருந்துதல் தவிர்க; இன்று காண்டி – (எனது போர்த்திறனை)
இன்றே காண்பாய்; உலப்பறு குரங்கை நீக்கி, பிணங்களின் குப்பை
– அளவற்ற குரங்குச்சேனைகளை (உயிர்) நீக்குவதனால் (அவற்றின்)
பிணக்குவியலையும்; மற்றை நரர் உயிர் பிரிந்த யாக்கை – ஏனை
மனிதராகிய இராம இலக்குவரின் உயிர் நீங்கிய உடம்புகளையும்;
‘கணங்குழைச் சீதைதானும் அமரரும் காண்பர்’ என்றான் – காதணி
அணிபவளான சீதையும், தேவர்களும் காண்பார்கள்” என்று
கூறினான்.

—————

8444.
வலங்கொண்டு வணங்கி, வான் செல் ஆயிரம் மடங்கல்
பூண்ட
பொலங் கொடி நெடுந் தேர் ஏறி, போர்ப் பணை
முழங்கப் போனான்;
அலங்கல் வாள் அரக்கர் தானை அறுபது வெள்ளம்,
யானைக்
குலங்களும், தேரும் மாவும், குழாம் கொளக் குழீஇய
அன்றே.–4-

வலங்கொண்டு வணங்கி – (பின்பு தன் தந்தையை) வலம் வந்து
வணங்கி; வான்செல் ஆயிரம் மடங்கல் பூண்ட – வான் வழியாகச்
செல்ல வல்லதும் ஆயிரம் சிங்கங்கள் பூட்டப்பட்டதும்; பொலங்கொடி
நெடுந்தேர் ஏறி – பொன் மயமான கொடியினை உடையதுமான நீண்ட
தேரின் மேல் அமர்ந்து; போர்ப்பணை முழங்கப் போனான் – போர்
முரசம் முழங்கப் (போர்க்களம் நோக்கி இந்திரசித்து) புறப்பட்டுப்
போனான்; அலங்கல்வாள் அரக்கர் தானை அறுபது வெள்ளம் –
(அவனுடன்) வெற்றிமாலை அணிந்த வாட்படை தாங்கிய அரக்கர்
சேனை அறுபது வெள்ளமும்; யானைக் குலங்களும் தேரும், மாவும் –
யானைக் கூட்டங்களும், தேர்களும், குதிரைகளும்; குழாம் கொளக்
குழீஇய – கூட்டமாகத் திரண்டு சென்றன.

—————-

8445.
கும்பிகை, திமிலை, செண்டை, குறடு, மாப் பேரி கொட்டி,
பம்பை, தார் முரசம், சங்கம், பாண்டில், போர்ப் பணவம்,
தூரி,
கம்பலி, உறுமை, தக்கை, கரடிகை, துடி, வேய், கண்டை,
அம்பலி, கணுவை, ஊமை, சகடையோடு ஆர்த்த அன்றே.–5-

கும்பிகை திமிலை செண்டை குறடு – கும்பிகை, திமிலை,
செண்டை குறடு; மாப்பேரி – பெரிய பேரிகை; கொட்டி – கொடு
கொட்டி; பம்பை, தார்முரசம், சங்கம் – பம்பை, தார் அணியப்
பெற்ற முரசம், சங்கம்; பாண்டில், போர்ப்பணவம், தூரி – கஞ்சதாளம், போருக்குரிய பணவம், தூரியம்; கம்பலி, உறுமை,
தக்கை, கரடிகை – கம்பலி, உறுமை, தக்கை, கரடிகை; துடி, வேய்,
கண்டை – உடுக்கை, மூங்கிலால் ஆகிய வங்கியம், கண்டை; அம்பலி,
கணுவை, ஊமை சகடையோடு ஆர்த்த – அம்பலி, கணுவை, ஊமை
சகடை இயங்கள் ஆரவாரித்தன.

போர் மேற்செல்லும் வீரர்களுக்குப் போர் வெறி ஊட்டுபவை
இவ்வியங்கள். இவை கவிஞர் காலத்தன எனக் கொள்ளவும்
இடமுண்டு. கும்பிகை, திமிலை, செண்டை, குறடு, பம்பை, பணவம்,
உறுமை, தக்கை, கண்டை, அம்பலி, கணுவை, ஊமை, சகடை என்பன
தோற்கருவிகள். சங்கம், தூரி, வேய் என்பன துளைக்கருவிகள்.
கொட்டி – கொடு கொட்டி என்னும் பறை. வேற் – மூங்கிலால் ஆகிய
வங்கியம் என்னும் துளைக் கருவி.

——–

8446.
யானைமேல் பறைசால் ஈட்டத்து அறை மணி ஆர்த்தது
ஆழி,
மான மாப் புரவிப் பொன்-தார்; மாக் கொடி கொண்ட
மானச்
சேனையோர் கழலும் தாரும், சேண் தரப் புலம்ப, மற்றை
வானகத்தோடும் ஆழி அலை என, வளர்ந்த அன்றே.–6-

யானை மேல் பறைசால் ஈட்டத்து – யானை மேல் வைக்கப்
பட்டுள்ள முரசுக் கூட்டத்துடன்; அறை மணி ஆழி ஆர்த்தது –
தேர்ச்சக்கரங்களில் மாறி மாறி ஒலிக்கின்ற மணிகளின் ஆர்ப்பும்;
மானமாப் புரவிப் பொன் தார் – தருக்குடன் கூடிய சிறந்த புரவிகள்
பூண்ட பொன்னாலாகிய கிண்கிணி மாலையும்; மாக்கொடி கொண்ட
மானச் சேனையோர் கழலும் தாரும் – பெரிய கொடிகளை ஏந்திய
குன்றாத மானமுடைய சேனை வீரர்களின் வீரக்கழலும், பொன்னரி
மாலையும் ஆகிய இவற்றின் ஒலிகள்; சேண் தரப் புலம்ப –
சேணளவும் சென்றொலிப்ப; மற்றை வானகத்தோடும் ஆழி
அலைஎன, வளர்ந்த – ஏனை வானிடமளவும் சென்று படரும்
கடலின் அலைகளைப் போன்று விரிந்து உயர்ந்தன.

————–

8447.
சங்கு ஒலி, வயிரின் ஓசை, ஆகுளி, தழங்கு காளம்
பொங்கு ஒலி, வரி கண் பீலிப் பேர் ஒலி, வேயின்
பொம்மல்,
சிங்கத்தின் முழக்கம், வாசிச் சிரிப்பு, தேர் இடிப்பு, திண்
கைம்
மங்குலின் அதிர்வு,-வான மழையொடு மலைந்த அன்றே.–7-

சங்கொலி – சங்கின் ஒலியும்; வயிரின் ஓசை – ஊதுகொம்பின்
ஓசையும்; ஆகுளி – ஆகுளியின் ஒலியும்; தழங்கு காளம் பொங்கு
ஒலி – காளம் என்னும் வாத்தியத்தினின்றும் மிக்குத் தோன்றுகின்ற
ஒலியும்; வரிகண் பீலிப் பேர் ஒலி – மயிற் கண் வரிந்த பீலியென்ற
வாத்தியத்தின் பேரொலியும்; வேயின் பொம்மல் – புல்லாங்குழலின்
ஓசையும்; சிங்கத்தின் முழக்கம் – சிங்கத்தின் முழக்கமும்; வாசிச்
சிரிப்பு – குதிரையின் கனைப்பொலியும்; தேர் இடிப்பு – தேரினின்றும்
தோன்றுகின்ற இடி போன்ற ஒலியும்; திண்கைம் மங்குலின் அதிர்வு –
வலிய துதிக்கையினை உடைய மேகம் போன்ற யானையின் ஒலியும்;
மழையொடு மலைந்த – (ஆகிய இவை) வானத்திலுள்ள மேகங்களின்
ஒலியோடு மாறுபட்டுத் தோன்றின.

————–

8448.
பண் தரு கிளவிச் செவ்விப் பல்லியத்து ஒழுகு தீம் தேன்,
கண்டினின் குயின்ற வீணை நரம்பொடு கமழும் தேறல்,
வண்டினின் பொலியும் நல் யாழ் வழியுறு நறவம், வானத்து
அண்டர்தம் செவியின் உண்ணும் அமிழ்து எனல் ஆய
அன்றே.–8-

பண்தரு கிளவிச் செவ்விப் பல்லியத்து ஒழுகுதீம் தேன் –
பண்ணைத் தோற்றுவிக்கின்ற சொற்களின் தன்மையினை உடைய
பலவகை வாத்தியங்களினின்றும் தோன்றும் இனிய இசையாகிய
தேனும்; கண்டினின் குயின்ற வீணை நரம்பொடு கமழும் தேறல் கற்கண்டு போன்ற இனிய சுவை உடையதாய் அமைந்த வீணை
நரம்பிலிருந்து தோன்றும் (உணர்வு) மணங்கமழும் இசையாகிய
தேனும்; வண்டினின் பொலியும் நல்யாழ் வழியுறு நறவம் – நல்ல
யாழிடத்தினின்று வருவதும் வண்டின் ஒலிபோல விளங்குகின்றதுமான
இசையாகிய தேனும்; வானத்து அண்டர்தம் செவியின் உண்ணும்
அமிழ்து எனல் ஆய – வானுலகத்து வாழ்வாராகிய தேவர்கள் தம்
செவிவாயாகப் பருகி மகிழ்தற்குரிய அமிழ்து என்று சொல்லும்படியாக
(கேட்டார்க்கு) இன்பஞ்செய்வனவாயின.

———

8449.
வில் ஒலி, வயவர் ஆர்க்கும் விளி ஒலி, தெழிப்பின்
ஓங்கும்
ஒல்லொலி, வீரர் பேசும் உரை ஒலி, உரப்பில் தோன்றும்
செல் ஒலி, திரள் தோள் கொட்டும் சேண் ஒலி, நிலத்தில்
செல்லும்
கல்லொலியோடும் கூடக் கடல் ஒலி கரந்தது அன்றே.–9-

வில் ஒலி – வில் நாணின் ஒலியும்; வயவர் ஆர்க்கும் விளி ஒலி
– வீரர் ஆரவாரிக்கும் அறைகூவல் ஒலியும்; தெழிப்பின் ஓங்கும்
ஒல்லொலி – அதட்டுதலால் உயர்ந்து தோன்றும் ஒல்லென்னும்
ஓசையும்; வீரர் பேசும் உரை ஒலி உரப்பில் தோன்றும் செல் ஒலி
– வீரர் பேசுகின்ற பேச்சின் ஒலியும், (அவர்கள்) கனைத்தலால்
உண்டாகிய இடி போன்ற ஒலியும்; திரள்தோள் கொட்டும் சேண்
ஒலி – திரண்ட தோள்களைக் கொட்டுதலால் நெடுந்தூரத்தே
சென்றிசைக்கும் ஆர்ப்பொலியும்; நிலத்தில் செல்லும்
கல்லொலியோடும் – (அவ்வீரர்கள்) நிலத்தில் (விரைந்து) செல்லுதலால்
உண்டாகும் கல்லென்னும் ஓசையுடன்; கூட – ஒருங்கு கூடி ஒலிக்க;
கடல் ஒலி கரந்தது – கடலின் ஒலியானது இப்பேரொலிக்குள் (அடங்கி)
மறைந்தது.

———–

8450.
நாற் கடல் அனைய தானை நடந்திட, கிடந்த பாரின்-
மேல் கடந்து எழுந்த தூளி விசும்பின்மேல் கொழுந்து வீச,
மால் கடல் சேனை காணும் வானவர் மகளிர், மானப்
பாற்கடல் அனைய, வாட் கண் பனிக் கடல் படைத்தது
அன்றே.-10-

நாற்கடல் அனைய தானை நடந்திட – நாற் (றிசைக்) கடல்களை
ஒத்த (நால்வகைச்) சேனைகள் இவ்வாறு நடந்து செல்லுவதால்; கிடந்த
பாரின் மேல் கடந்து எழுந்த தூளி – பரந்து கிடந்த பூமியிலிருந்து
மேலே புறப்பட்டு எழுந்த துகள்கள்; விசும்பின்மேல் கொழுந்து வீச
– ஆகாயத்தின் மேற்பரப்பில் முற்பட்டு வீசினமையால்; மால்கடல்
சேனை காணும் வானவர் மகளிர் – பெருங்கடல் போலும்
இந்திரசித்தின் சேனைகளைக் காண வந்த தேவ மகளிரின்; மானப்
பாற்கடல் அனைய வாட்கண் – பெருமை வாய்ந்த பாற்கடலை ஒத்த
ஒளிபொருந்திய அகன்ற கண்கள்; பனிக்கடல் படைத்த – குளிர்ந்த
கடலை (மிக்க கண்ணீரை)த் தோற்றுவித்தன.

———–

8451.
ஆயிர கோடித் திண் தேர், அமரர்கோன் நகரம் என்ன
மேயின சுற்ற, தான் ஓர் கொற்றப் பொன் தேரின் மேலான்,
தூய அச் சுடர்கள் எல்லாம் சுற்றுற, நடுவண் தோன்றும்
நாயகப் பரிதி போன்றான்-தேவரை நடுக்கம் கண்டான்.–11-

தேவரை நடுக்கம் கண்டான் – தேவர்களை நடுக்கமுறச் செய்த
திறலோனாகிய இந்திரசித்து; அமரர்கோன் நகரம் என்ன –
தேவேந்திரனது (அமராவதி) நகரத்தையொத்த அழகும்
பெருமையுமுடைய; ஆயிர கோடி திண்தேர் மேயின சுற்ற –
திண்ணிய ஆயிரங்கோடித் தேர்கள் (தன்னைச்) சூழ்ந்துவர; தான் ஓர்
கொற்றப் பொன் தேரின் மேலான் – தான் ஒப்பற்றதொரு வெற்றி
மிக்க பொன்மயமான தேரின் மேல் அமர்ந்தவனாகி; தூய
அச்சுடர்களெல்லாம் சுற்றுற – தூய்மையான ஒளிக்கற்றைகளை
உடைய கோள்களும் பிறவும் தன்னைச் சுற்றி அமைய; நடுவண்
தோன்றும் நாயகப் பரிதி போன்றான் – (அவற்றின்) நடுவே திகழும்
தலைமை வாய்ந்த சூரியனை ஒப்பத் தோன்றினான்.

———-

இந்திரசித்து நாண் ஒலி செய்தல்

8452.
சென்று வெங் களத்தை எய்தி, சிறையொடு துண்டம்,
செங் கண்,
ஒன்றிய கழுத்து, மேனி, கால், உகிர், வாலோடு ஒப்ப,
பின்றல் இல் வெள்ளத் தானை முறை படப் பரப்பி, பேழ்
வாய்
அன்றிலின் உருவம் ஆய அணி வகுத்து, அமைந்து
நின்றான்.–12-

சென்று வெங்களத்தை எய்தி – (அங்ஙனம் தோற்றியவன்) சென்று
போர்க்களத்தை அடைந்து; பின்றல் இல் வெள்ளத்தானை –
பின்னிடுதல் இல்லாத வெள்ளக்கணக்கினவாகிய சேனைகள்;
சிறையொடு துண்டம் செங்கண் – சிறகு, மூக்கு, சிவந்த கண்;
ஒன்றிய கழுத்து, மேனி, கால், உகிர், வாலொடு, ஒப்ப –
பொருத்திய கழுத்து, உடம்பு, கால், நகம், வால் என்னும்
இவ்வுறுப்புக்களுக்குப் பொருந்தித் தோன்ற; முறைப்படப் பரப்பி,
– முறைமைப் படப் பரப்பி நிறுத்தி; பேழ்வாய் அன்றிலின் உருவம்
ஆய – பிளந்த வாயினை உடைய அன்றிற் பறவையின் உருவ
அமைப்பினை உடையதாக; அணிவகுத்து, அமைந்து நின்றான் –
அணிவகுத்துப் (போர் செயற்கு) பொருந்தி நின்றான்.

———

8453.
புரந்தான் செருவில் தந்து போயது, புணரி ஏழும்
உரம் தவிர்த்து, ஊழி பேரும் காலத்தின் ஒலிக்கும் ஓதை
கரந்தது வயிற்றில், கால வலம்புரி கையின் வாங்கி,
சிரம் பொதிர்ந்து அமரர் அஞ்ச, ஊதினான், திசைகள்
சிந்த.–13-

புரந்தரன் செருவில் தந்து போயது – இந்திரன் போரில்
தோல்வியுற்று திறையாகத்) தந்து சென்றதும்; புணரி ஏழும் உரம்
தவிர்ந்து ஊழி பேருங்காலத்தின் – கடல்கள் ஏழும் (உலகப்
பொருள்களின்) திண்மையைச் சிதைத்துப் பெருகி மேலோங்கும் ஊழி
இறுதி நாளிலே; ஒலிக்கும் ஓதை வயிற்றில் கரந்தது –
ஆரவாரிக்கும் பேரோசையை, தன் வயிற்றினுள் அடக்கி
மறைத்துள்ளதும்; கால வலம்புரி கையின் வாங்கி – காலனது தன்மையினை உடையதுமாகிய வலம்புரிச் சங்கினைக்
கையிலெடுத்து; சிரம் பொதிர்ந்து அமரர் அஞ்ச, திசையும் சிந்த
ஊதினான் – தேவர்கள் தலை நடுக்குற்று அஞ்சவும், திசைகள் நிலை
கெட்டுச் சிதையவும் ஊதினான்.

—————

8454.
சங்கத்தின் முழக்கம் கேட்ட கவிப் பெருந் தானை, தள்ளி
சிங்கத்தின் நாகம் வந்து செவிப் புக விலங்கு சிந்தி,
‘எங்கு உற்ற?’ என்னாவண்ணம் இரிந்த போல் இரிந்த;
ஏழை-
பங்கத்தன் மலை வில் அன்ன சிலை ஒலி பரப்பி,
ஆர்த்தான்.–14-

சங்கத்தின் முழக்கம் கேட்ட கவிப்பெருந்தானை – வலம்புரிச்
சங்கின் முழக்கத்தைக் கேட்ட வானரப் பெருஞ்சேனை,; தள்ளி –
(அச்சத்தால் ஒன்றையொன்று)’ தள்ளிக் கொண்டு; சிங்கத்தின் நாதம்
வந்து செவிப்புக விலங்கு சிந்தி – சிங்கத்தின் முழக்கம் வந்து தம்
செவிகளிற் புக்க அளவில் விலங்குகள் (தாம் இருந்த இடங்களை
விட்டுச்) சிதறி; “எங்கு உற்ற” என்னா வண்ணம் இரிந்த போல்
இரிந்த – ‘எங்கே சென்றன’ என அறிந்து கொள்ள முடியாதவாறு ஓடிப்
போதல்போல ஓடிப்போயின; ஏழை பங்கத்தன் மலைவில் அன்ன
சிலை ஒலி பரப்பி ஆர்த்தான் – (அந்நிலையில் இந்திரசித்து)
பெண்ணொரு பாகனாகிய சிவபெருமானது மேரு மலையாகிய
வில்லினை ஒத்த (தன்னுடைய) வில்லின் நாணொலியைப் பரவச்
செய்து ஆரவாரித்தான்.

———–

வானர சேனையின் ஓட்டம்

8455.
கீண்டன, செவிகள்; நெஞ்சம் கிழிந்தன; கிளர்ந்து செல்லா
மீண்டன, கால்கள், கையின் விழுந்தன, மரனும் வெற்பும்;
பூண்டன, நடுக்கம்; வாய்கள் புலர்ந்தன; மயிரும் பொங்க,
‘மாண்டனம் அன்றோ?’ என்ற-வானரம் எவையும் மாதோ.–15-

வானரம் எவையும் – (இந்திரசித்தின் ஆரவாரங்கேட்ட)
வானரங்கள் யாவும்; கீண்டன செவிகள் – காதுகள் கிழியப் பெற்றன;
நெஞ்சம் கிழிந்தன – மார்பு பிளந்தன; கிளர்ந்து செல்லா மீண்டன
கால்கள் – உற்சாகங்கொண்டு செல்ல முடியாதனவாகக் கால்கள்
திரும்பின; கையின் விழுந்தன மரனும் வெற்பும் – (ஏற்கெனவே
எடுத்திருந்த) மரங்களும் மலைகளும் கைகளினின்றும் (நழுவி) விழப்
பெற்றன; பூண்டன நடுக்கம் – நடுக்கம் மேற்கொண்டன; வாய்கள்
புலர்ந்தன – வாய்கள் உலரப் பெற்றன; மயிரும் பொங்க
‘மாண்டனம் அன்றோ?’ என்ற – (அச்சத்தால்) மயிர்க்கூச்செறிந்து
‘நாமெல்லாம் விரைவில் இறந்தொழிவோமல்லவா?’ என அரற்றி
வருந்தின.

———–

8456.
செங் கதிர்ச் செல்வன் சேயும், சமீரணன் சிறுவன்தானும்,
அங்கதப் பெயரினானும், அண்ணலும், இளைய கோவும்,
வெங் கதிர் மௌலிச் செங் கண் வீடணன், முதல வீரர்
இங்கு இவர் நின்றார் அல்லது, இரிந்தது, சேனை எல்லாம்.–16-

செங்கதிர்ச் செல்வன் சேயும் – செந்நிற ஒளித் தொகுதியை
உடைய செல்வனாகிய சூரியனுடைய மகன் சுக்கிரீவன்; சமீரணன்
சிறுவன் தானும் – வாயுதேவனின் மகனான அனுமன்; அங்கதப்
பெயரினானும் – அங்கதன் என்னும் பெயரை உடையவன்;
அண்ணலும், இளைய கோவும் – இராமன், இலக்குவன்; வெங்கதிர்
மௌலிச் செங்கண் வீடணன் முடிய – வெவ்விய ஒளிக்கற்றையினை
உடைய (மணிகள் இழைத்த) முடியினையும் சிவந்த கண்களையும்
உடைய வீடணன் வரை; வீரர் இங்கு இவர் நின்றார் – முதலாக
உள்ள ஏனைய படை வீரர்களும் ஆகிய இவர்களே (போர்க்களமாகிய)
இவ்விடத்தில் நின்றவர்கள்; அல்லது, இரிந்தது சேனை எல்லாம்
– அல்லாமல் ஏனைய படைஞர்களாகிய குரங்குகள் அனைத்தும்
நிலைகெட்டு ஓடின.

————-

8457.
படைப் பெருந் தலைவர் நிற்க, பல் பெருந் தானை
வேலை,
உடைப்புறு புனலின் ஓட, ஊழிநாள் உவரி ஓதை
கிடைத்திட முழங்கி ஆர்த்துக் கிளர்ந்தது; நிருதர் சேனை,
அடைத்தது, திசைகள் எல்லாம்; அன்னவர் அகத்தர்
ஆனார்.–17-

படைப்பெருந் தலைவர் நிற்க – பெருமை வாய்ந்த (வானரப்)
படைத்தலைவர்கள் மட்டும் (இடம் பெயராது) நிலைத்து நிற்க; பல்
பெருந்தானை வேலை – மிகப்பலவாகிய (குரக்குச்) சேனையாகிய
கடல்; உடைப்புறு புனலின் ஓட – கரைகளை உடைத்துச் செல்லும்
பெரிய நீர்ப்பெருக்கினைப் போல் ஓட; நிருதர் சேனை – (அதுகண்ட)
அரக்கர் சேனையானது; ஊழிநாள் உவரி ஓதை கிடைத்திட முழங்கி
ஆர்த்துக் கிளர்ந்தது – ஊழிக் காலத்தே தோன்றும் கடல்
ஓசையினைப் போன்று பேரொலி உண்டாகுமாறு முழங்கி ஆரவாரித்து
உள்ளக் கிளர்ச்சி உடையதாய்; திசைகள் எல்லாம் அடைத்தது –
திசைகள் எல்லாவற்றையும் (வெற்றிடம் இல்லையாம்படி) அடைத்து
நின்றது; அன்னவர் அகத்தர் ஆனார் – (இடம் பெயராது நின்ற
இராம இலக்குவரும் ஏனைய படைத் தலைவரும்) அரக்கர்
சேனையின் உள்ளிடத்தவராயினார்.

———-

அனுமன் – அங்கதர் தோள்களில் முறையே இராம-இலக்குவர்

8458.
மாருதி அலங்கல் மாலை மணி அணி வயிரத் தோள்மேல்
வீரனும், வாலி சேய்தன் விறல் கெழு சிகரத் தோள்மேல்
ஆரியற்கு இளைய கோவும், ஏறினர்; அமரர் வாழ்த்தி,
வேரி அம் பூவின் மாரி சொரிந்தனர், இடைவிடாமல்.–18-

மாருதி அலங்கல் மாலை மணி அணி வயிரத்தோள் மேல்
வீரனும் – அனுமனுடைய அசைந்தொளிரும் இயல்பினவாகிய மலர்
மாலையும் மணிகளும் அணிந்த திண்ணிய தோளின் மேல் வீரனாகிய
இராமனும்; வாலி சேய் தன் விறல் கெழு சிகரத் தோள்மேல் –
வாலி மைந்தன் அங்கதனுடைய வெற்றித் திறன் பொருந்திய மலைச்
சிகரத்தை ஒத்த தோளின் மேல்; ஆரியற்கு இளையகோவும் –
(இராமன் என்னும்) பெரியோனுக்குத்தம்பியாகிய இலக்குவனும்; ஏறினர் – (போர் மேற்செல்ல) ஏறி
அமர்ந்தனர்; அமரர் வாழ்த்தி, வேரி அம்பூவின் மாரி
சொரிந்தனர், இடைவிடாமல் – (அதுகண்டு) தேவர்கள்
(அவ்விருவரையும்) வாழ்த்தித் தேன் நிறைந்த அழகிய மலர் மழையினை
இடைவிடாது சொரிந்தார்கள்.

———-

8459.
விடையின்மேல், கலுழன்தன்மேல், வில்லினர் விளங்குகின்ற
கடைஇல் மேல் உயர்ந்த காட்சி இருவரும்
கடுத்தார்-கண்ணுற்று
அடையின் மேருவையும் சாய்க்கும் அனுமன் அங்கதன்
என்றுஇன்னார்,
தொடையின் மேல் மலர்ந்த தாரர், தோளின்மேல்
தோன்றும் வீரர்.–19-

கண்ணுற்று அடையின் – கண்ணுக்குப் புலனாகிப்
பொருந்துமாயின்; மேருவையும் சாய்க்கும் அனுமன் அங்கதன்
என்று இன்னார் – மேரு மலையையும் வீழ்த்தும், அனுமன் அங்கதன்
என்ற இவர்களின்; தோளின் மேல் தோன்றும் – தோள்களின் மேல்
காணப்பெறுகின்றவரும்; மேல் மலர்ந்த தொடையின் தாரர் – மேலே
விளங்கும்படியான தொகுக்கப்பெற்ற மாலையினரும்; வில்லினர், வீரர்
– வில் தாங்கியவருமான, இராம இலக்குவர்; விடையின் மேல் கலுழன்
தன்மேல் விளங்குகின்ற – ஆனேற்றின் மீதும், கருடன் மீதும்
விளங்கித் தோன்றுகின்ற; கடைஇல் மேல் உயர்ந்த காட்சி –
முடிவின்றி மேம்பட்டுயர்ந்த காட்சியினை உடைய; இருவரும்
கடுத்தார் – சிவன், திருமால் என்ற இரு மூர்த்திகளையும் ஒத்துத்
தோன்றினர்.

———-

8460.
நீலனை முதலாய் உள்ள நெடும் படைத் தலைவர் நின்றார்,
தாலமும் மலையும் ஏந்தி, தாக்குவான் சமையும் காலை,
ஞாலமும் விசும்பும் காத்த நானிலக் கிழவன் மைந்தன்
மேல் அமர் விளைவை உன்னி, விலக்கினன்,
விளம்பலுற்றான்;–19-

நீலனை முதலாய் உள்ள நெடும்படைத்தலைவர் நின்றார் –
நீலனை முதலாகக் கொண்டு நெடிய பெருஞ்சேனைகட்குத் தலைவராக
அங்கு நின்ற வானரவீரர்கள்; தாலமும் மலையும் ஏந்தி தாக்குவான்
சமையும் காலை – பனை மரங்களையும், மலைகளையும்
பறித்தெடுத்துக்கொண்டு (அரக்கர்களை) தாக்குதற்கு முற்பட்ட பொழுது;
ஞாலமும் விசும்பும் காத்த நானிலக் கிழவன் மைந்தன்
– மண்ணுலகையும் விண்ணுலகையும் காத்த நானில மன்னனாகிய
தசரதன் மைந்தனாகிய இராமன்; மேல் அமர்விளைவை உன்னி,
விலக்கினன், விளம்பலுற்றான் – இனிமேல் நிகழவிருக்கும் போரின்
விளைவை எண்ணி, (அவ்வானர வீரர்களைத்) தடுத்து நிறுத்தியவனாய்ப்
பின்வருமாறு கூறத் தொடங்கினான்.

———-

8461.
‘கடவுளர் படைகள் நும்மேல் வெய்யவன் துரந்தகாலை,
தடை உளஅல்ல; தாங்கும் தன்மையிர் அல்லீர்; தாக்கிற்கு
இடை உளது எம்பால் நல்கி, பின் நிரை நிற்றிர்; ஈண்டு இப்
படைஉளதனையும், இன்று, எம் வில் தொழில் பார்த்திர்’
என்றான்.–21-

“கடவுளர் படைகள் நும்மேல்” வெய்யவன் துரந்தகாலை –
“தெய்வப் படைக்கலங்களை உங்கள்மீது கொடியோனாகிய இந்திரசித்து
செலுத்தும்போது; தடை உள அல்ல – (அவை, மரம், மலை
முதலியவற்றால்) தடுத்தற்குரிய அல்ல; தாங்கும் தன்மையீர் அல்லீர்
– (நீங்களும் அவற்றை ஏற்றுத்) தாங்கக்கூடிய வல்லமை யுடையீரல்லீர்;
தாக்கிற்கு இடை உளது எம்பால் நல்கிப்பின் நிரை நிற்றிர் –
(முன்னின்று) தாக்குதற்கு இடமாய் உள்ள முதலிடத்தினை
எங்களுக்குக் கொடுத்துவிட்டு (எங்களுக்குப் பின்னே) பின் வரிசையில்
நிற்பீராக; ஈண்டு இப்படை உளதனையும் இன்று, எம் வில்தொழில்
பார்த்திர்” என்றான் – இங்கு இந்த அரக்கர் சேனை (உயிரோடு)
உள்ள அளவும் இன்று எம்முடைய வில் தொழில் வல்லமையினை
(உடன் நின்று) காண்பீராக” என்று கூறினான்.

———-

இராம – இலக்குவரின் போர்த் திறன்

8462.
அருள்முறை அவரும் நின்றார்; ஆண் தகை வீரர், ஆழி
உருள் முறை தேரின், மாவின், ஓடை மால் வரையின்,
ஊழி
இருள் முறை நிருதர்தம்மேல், ஏவினர் – இமைப்பிலோரும்,
‘மருள் முறை எய்திற்று’ என்பர்-சிலை வழங்கு அசனி
மாரி.–22-

அருள் முறை அவரும் நின்றார் – (இராமன்) பணித்தருளிய
முறைப்படி (நீலன் முதலாகிய) அப்படைத் தலைவரும் பின்
வரிசையில் சென்று நின்றனர்; ஆண் தகை வீரர் –
ஆண்மைக்குணமுள்ள இராமஇலக்குவராகிய அவ்வீரர்கள்; ஆழி
உருள் முறைத்தேரின் – சக்கரத்துடன் (விரைந்து) உருளும்
முறைமையினை உடைய தேர்கள் மேலும்; மாவின் – குதிரைகள்
மேலும்; ஓடை மால் வரையின் – முகபடாம் அணிந்த பெரிய மலை
போலும் யானைகள் மேலும்; ஊழி இருள் முறை நிருதர் தம்மேல் –
ஊழிக்காலத்து இருளின் தன்மையை உடைய அரக்க வீரர்கள் மேலும்;
ஏவினர் – அம்புகளை ஏவினார்கள்; சிலை வழங்கு அசனிமாரி –
(அவ்விருவருடைய) விற்கள் வெளிப்படுத்தும் இடியேற்றுடன் கூடிய
அம்பு மழையானது; இமைப்பிலோரும் – கண்ணிமைத்தலில்லாத
தேவர்களும்; ‘மருள்முறை எய்திற்று’ என்பர் – (இஃது என்ன
ஊழிக்காலமோ என) மருளும் நிலை அடைந்தது என்பர்.

——-

8463.
இமைப்பதன் முன்னம் வந்த இராக்கத வெள்ளம் தன்னைக்
குமைத்தொழில் புரிந்த வீரர் தனுத் தொழில் குறித்து
இன்று எம்மால்
அமைப்பது என்? பிறிது ஒன்று உண்டோ? மேரு என்று
அமைந்தவில்லான்,
உமைக்கு ஒருபாகன், எய்த புரங்களின் ஒருங்கி வீழ்ந்த.–23-

வந்த இராக்கத வெள்ளம் தன்னை – (பொருதற்கு) எதிர் வந்த
வெள்ளக் கணக்கினவாகிய அரக்கர் சேனைகளை; இமைப்பதன்
முன்னம் – இமைப்பொழுதுக்குள்ளாக; குமைத்தொழில் புரிந்த வீரர்
– அழிக்கும் தொழிலைப் புரிந்த வீரர்களாகிய இராம இலக்குவரது;
தனுத்தொழில் குறித்து, இன்று எம்மால் அமைப்பது என்? –
விற்றொழில் வன்மையைக் குறித்து எம்மால் கூறுதற்கு யாதுளது?
உமைக்கு ஒரு பாகன் – உமா தேவியை ஒரு பாகத்துக் கொண்ட
சிவபெருமான்; மேரு என்று அமைந்த வில்லான் – மேரு மலை
என அமைந்த வில்லினால்; எய்த புரங்களின் ஒருங்கி வீழ்ந்த –
எய்து அழித்த முப்புரங்களைப் போன்று (அச்சேனைகள் யாவும்)
அழிந்து வீழ்ந்தன; பிறிது ஒன்று உண்டோ? – (என்பதன்றிச்
சொல்லத்தக்க உவமை) வேறொன்றுளதோ?

————

8464.
தேரின்மேல் சிலையின் நின்ற இந்திரசித்து என்று ஓதும்
வீரருள் வீரன் கண்டான்-விழுந்தன விழுந்த என்னும்
பாரின்மேல் நோக்கின் அன்றேல், பட்டன பட்டார்
என்னும்
போரின்மேல் நோக்கு இலாத இருவரும் பொருத பூசல்.–24-

பாரின் மேல் நோக்கின் – (போர்க்களமாகிய) நிலப்பரப்பின் மேல்
நோக்கிய; விழுந்தன விழுந்தன என்னும் அன்றேல் – விழுந்தவை
விழுந்த வண்ணமாக இருந்தன அளவில் காண்பதன்றி; பட்டன
பட்டார் என்னும் போரின்மேல் நோக்க இலாத – போர்
நிகழ்ச்சியை நோக்கி (இன்னவை) இறந்தன (இன்னார்) இறந்தார்கள்
எனப்பிரித்தறிய வொண்ணாதவாறு; இருவரும் பொருத பூசல் –
(இராம இலக்குவராகிய) இருவரும் நிகழ்த்திய போர்த்தொழிலை; தேரின்
மேல் சிலையின் நின்ற – தேரின் மேல் வில்லை ஊன்றி
நின்ற; இந்திரசித்து என்று ஓதும் வீரருள் வீரன் கண்டான் –
‘இந்திரசித்து’ எனப் புகழப் பெறும் வீரர்க்கெல்லாம் வீரனாகிய அவன்
பொருந்த நோக்கினான்.

———-

8465.
‘யானை பட்டனவோ!’ என்றான்; ‘இரதம் இற்றனவோ!’
என்றான்;
‘மான மா வந்த எல்லாம் மறிந்து ஒழிந்தனவோ!’ என்றான்;
‘ஏனை வாள் அரக்கர் யாரும் இல்லையோ, எடுக்க!’
என்றான்-
வான் உயர் பிணத்தின் குப்பை மறைத்தலின், மயக்கம்
உற்றான்.–25-

வான் உயர் பிணத்தின் குப்பை மறைத்தலின் மயக்கம்
உற்றான் – (இராம இலக்குவரது போர்த்தொழில் நிகழ்ச்சியை
நோக்கிய இந்திரசித்து) ஆகாயம் அளவும் ஓங்கிய பிணத்தின்
குவியல்கள் (போர்க்களத்தை) மறைத்தலால் திகைப்புற்றவனாகி;
‘யானை பட்டனவோ!’ என்றான் – ‘யானைகள் இறந்து பட்டனவோ!’
என ஏங்கினான்; ‘இரதம் இற்றனவோ!’ என்றான் – ‘தேர்கள்
முறிந்தனவோ?’ என வருந்தினான்; ‘மானமா வந்த எல்லாம்
மறித்து ஒழிந்தனவோ!’ என்றான் – ‘வீரத்திற் குறையாத
பெருமை உடையனவாய் வந்த குதிரைகள் யாவும் மாண்டு
ஒழிந்தனவோ’ என இரங்கினான்; ‘ஏனைவாள் அரக்கர் யாரும்
இல்லையோ, எடுக்க!’ என்றான் – (இறந்து வீ்ழ்ந்த பிணங்களை)
எடுத்து அப்பாற்படுத்த மற்றும் இறவாதுள்ள வாள் வீரராகிய அரக்கர்
ஒருவரும் (இங்கு) இல்லையோ என ஏக்கமுற்று வருந்தினான்.

———-

8466.
‘செய்கின்றார் இருவர், வெம் போர்; சிதைகின்ற
சேனை நோக்கின்,
“அய்யம்தான் இல்லா வெள்ளம் அறுபதும் அவிக!” என்று,
வய்கின்றார்; அல்லர் ஆக, வரி சிலை வலத்தால் மாள
எய்கின்றார் அல்லர்; ஈது எவ் இந்திரசாலம்?’ என்றான்.–26-

‘செய்கின்றார் இருவர் வெம்போர் – ‘கொடிய போரைச்
செய்கின்றவர்களோ இருவரே; சிதைகின்ற சேனை நோக்கின் –
(இவர்களால்) சிதைந்தொழியும் சேனைகளை எண்ணிப் பார்த்தாலோ;
அய்யம்தான் இல்லா வெள்ளம் அறுபது – ஐயம் அற்றவகையில்
அறுபது வெள்ளம் என்னும் தொகையினவாகும்; ‘அவிக’ என்று
வய்கின்றார் அல்லர் – (இவையாவும் ஒருசேர) அழிந்தொழிக என்று
சபித்துரைக்கின்றவர்களும் அல்லர்; ஆகின் வரிசிலை வலத்தால்
மாள எய்கின்றார் அல்லர் – ஆனால், வரிந்து கட்டப்பெற்ற வில்லின் துணை கொண்டு தம் வன்மை விளங்க
(பகைவர்சேனை) மாளும்படி வலிந்து எய்கின்றவர்களும் அல்லர்; ‘ஈது
எவ் இந்திரசாலம்?’ என்றான் – (இப்பெரும் சேனையை அழித்த)
இச்செயல் எத்ததைய இந்திரசால வித்தையோ?’ என்று வியந்து
கூறினான் (இந்திரசித்து)

————

போர் நிகழ்ச்சியை இந்திரசித்தன் வியந்து நோக்குதல்

8467.
அம்பின் மா மழையை நோக்கம்; உதிரத்தின் ஆற்றை
நோக்கும்;
உம்பரின் அளவும் சென்ற பிணக் குன்றின் உயர்வை
நோக்கும்;
கொம்பு அற உதிர்ந்து முத்தின் குப்பையை நோக்கும்;
தும்பியை நோக்கும்; வீரர் சுந்தரத் தோளை நோக்கும்;–27-

அம்பின் மா மழையை நோக்கும் – (வியப்புற்ற இந்திரசித்து)
அம்பின் பெருமழையை உற்றுப்பார்ப்பான்; உதிரத்தின் ஆற்றை
நோக்கும் – இரத்தப் பெருக்காகிய ஆற்றினைப் பார்ப்பான்; உம்பரின்
அளவும் சென்ற – விண்ணின் உச்சி அளவும் உயர்ந்து ஓங்கிய;
பிணக்குன்றின் உயர்வை நோக்கும் – பிணங்களின் குவியலாகிய
மலையின் உயர்ச்சியைப் பார்ப்பான்; கொம்பு அற உதிர்ந்த முத்தின்
குப்பையை நோக்கும் – அவ்யானைகளின் தந்தங்கள்
அறுபட்டமையால் சிதறிக்கிடக்கும் முத்தின் குவியலைப் பார்ப்பான்;
வீரர் சுந்தரத் தோளை நோக்கும் – வீரர்களாகிய இராம
இலக்குவரின் அழகிய தோள்களை உற்றுப் பார்ப்பான்.

————

8468.
மலைகளை நோக்கும்; மற்று அவ் வான் உறக் குவிந்த
வன் கண்
தலைகளை நோக்கும்; வீரர் சரங்களை நோக்கும்; தாக்கி,
உலை கொள் வெம் பொறியின் உக்க படைக்கலத்து
ஒழுக்கைநோக்கும்;
சிலைகளை நோக்கும்; நாண் ஏற்று இடியினைச் செவியின்
ஏற்கும்;–28-

மலைகளை நோக்கும் – மலைகளைப் பார்ப்பான்; மற்று அவ்
வான் உறக் குவிந்த – (அம்மலைகளைப் போன்று) விண் அளவும்
பொருந்தக் குவிந்துள்ள; வன்கண் தலைகளை நோக்கும் –
தறுகண்மை மிக்க கண்களோடு கூடிய (அரக்கர்களின்) தலைகளைப்
பார்ப்பான்; வீரர் சரங்களை நோக்கும் – (அத்தலைகளைத் துண்டித்த
ஆற்றல் மிக்க) வீரர் (இருவருடைய) அம்புகளின் வன்மையைக் கருதிப்
பார்ப்பான்; தாக்கி உலை கொள்வெம் பொறியின் உக்க –
(அம்புகளால்) தாக்கப்பட்டு உலைக் களத்திலே சிதறிக் கிடக்கும்
அனற் பொறிகளைப் போன்று சிதறியுள்ள; படைக்கலத்து ஒழுங்கை
நோக்கும் – (தன் சேனை வீரர்களின்) ஆயுதங்களின்
தொடர்ச்சியினை உற்றுப் பார்ப்பான்; சிலைகளை நோக்கும் –
(இத்தகைய அம்புகளைச் சொரிந்த இருவருடைய) விற்படைகளை
எண்ணிப் பார்ப்பான்; நாண் ஏற்று இடியினைச் செவியின் ஏற்கும் –
அவ்விற்களில் நாணேற்றுதலால் உண்டாகிய இடி முழக்கத்தினைத் தன்
செவிகளால் ஓர்ந்து நோக்குவான்.

———-

8469.
ஆயிரம் தேரை, ஆடல் ஆனையை, அலங்கல் மாவை,
ஆயிரம் தலையை, ஆழிப் படைகளை, அறுத்தும்,
அப்பால்
போயின பகழி வேகத் தன்மையைப் புரிந்து நோக்கும்;
பாயும் வெம் பகழிக்கு ஒன்றும் கணக்கு இலாப்
பரப்பைப் பார்க்கும்;–29-

ஆயிரம் தேரை, ஆடல் ஆனையை – ஆயிரக்கணக்கான
தேர்களையும், வெற்றியை உடைய யானைகளையும்; அலங்கல் மாவை
– மாலையணிந்த குதிரைகளையும்; ஆயிரம் தலையை ஆழிப்
படைகளை – ஆயிரக்கணக்கான (வீரர்) தலைகளையும், சக்கரப்
படைகளையும்; அறுத்தும் அப்பால் போயின – அறுத்தும் அப்பாற்
சென்ற; பகழி வேகத் தன்மையைப் புரிந்து நோக்கும் – அம்புகளின்
விரைவுத் தன்மையினைப் புரிந்து நோக்குவான்; பாயும் வெம்பகழிக்கு
– பாய்ந்து (ஊடுருவிச்) செல்வனவாகிய அம்புகளுக்கு; ஒன்றும்
கணக்கிலாப் பரப்பைப் பார்க்கும் – சிறிதும் கணக்கிட்டுக்
கூறுவதற்கில்லாத போர்க்களத்தின் பரப்பினை உற்றுப் பார்ப்பான்.

———

8470.
அறுபது வெள்ளம் ஆய அரக்கர்தம் ஆற்றற்கு ஏற்ற,
எறிவன, எய்வ, பெய்வ, எற்றுறு படைகள் யாவும்,
பொறி வனம் வெந்த போலச் சாம்பராய்ப்
போயதுஅல்லால்,
செறிவன இல்லா ஆற்றைச் சிந்தையால் தெரிய நோக்கும்;–30-

அறுபது வெள்ளம் ஆய அரக்கர்தம் ஆற்றற்கு ஏற்ற –
அறுபது வெள்ளம் என்னும் அளவினராகிய அரக்கர்களின் ஆற்றலுக்குப்
பொருந்தியனவாய்; எறிவன, எய்வ, பெய்வ எற்றுறு படைகள்
யாவும் – (நேர் நின்று) எறிவனவும் (சேய்மையில் நின்று வில்லில்
தொடுத்து) எய்வனவும், மிகுதியாகப் பொழிவனவும், எடுத்து வீசுவனவும்
ஆகிய ஆயுதங்கள் யாவும்; பொறிவனம் வெந்த போலச்
சாம்பராய்ப் போயது அல்லால் – தீப்பொறிகளாற் காடு வெந்து
அழிந்தாற் போன்று சாம்பராய் அழிந்ததன்றி; செறிவன இல்லா
ஆற்றைச் சிந்தையால் தெரிய நோக்கும் – (அவற்றுள் எவையும்
பகைவரை) நெருங்கித் தாக்குதலில்லாத் தன்மையினைத் தன் மனத்தால்
விளங்க ஆராய்ந்து நோக்குவான்.

———–

8471.
வயிறு அலைத்து ஓடி வந்து கொழுநர்மேல் மகளிர் மாழ்கி.
குயில் தலத்து உக்க என்னக் குழைகின்ற குழைவை
நோக்கும்;
எயிறு அலைத்து இடிக்கும் பேழ் வாய்த் தலைஇலா
ஆக்கை ஈட்டம்
பயிறலை, பறவை பாரில் படிகிலாப் பரப்பை, பார்க்கும்;–31-

வயிறு அலைத்து ஓடிவந்து – அரக்க மகளிர் (தத்தம் கணவர்
இறந்த செய்தி கேட்டு) வயிற்றில் அடித்துக் கொண்டு ஓடிவந்து;
கொழுநர் மேல் மகளிர் மாழ்கி – (தத்தம்) கணவர் மேல் விழுந்து
மனங்கலங்கி; குயில் தலத்து உக்க என்னக் – குயில்கள் நிலத்தில்
வீழ்ந்து அரற்றின என்னும்படி; குழைகின்ற குழைவை நோக்கும் –
மனம் நைந்து இரங்குகின்ற இரங்குதலை நோக்குவான்; எயிலு
அலைத்து இடிக்கும் பேழ்வாய்த்தலை இலா ஆக்கை ஈட்டம் –
பற்களைக் கடித்து இடிபோற் பேரொலி செய்யும் பிளந்த வாயினை
உடையதலைகள் உயிருள்ள காலத்து உடையனவாய் இப்பொழுது
இலாத உடல்களின் தொகுதிகள்; பயிறலை – (போர்க்களம் எங்கும்)
பொருந்தி ஆடுவதனையும்; பறவை பாரில் படிகிலாப் பரப்பை,
பார்க்கும் – (அவற்றை நெருங்குதற்கு அஞ்சிப் பறவைகள் பூமியிற்
படிந்து நிணங்கவர்தற்கு இயலாத (போர்க்களப்) பரப்பினையும்
(ஒருங்கு) நோக்குவான்.

——-

8472.
‘அங்கதர் அனந்த கோடி உளர்’ எனும்; ‘அனுமன்
என்பாற்கு
இங்கு இனி உலகம் யாவும் இடம் இலை போலும்’ என்னும்;
‘எங்கும் இம் மனிதர் என்பார் இருவரேகொல்!’ என்று
உன்னும்;-
சிங்கஏறு அனைய வீரர் கடுமையைத் தெரிகிலாதான்.–32-

அங்கதர் அனந்தகோடி உளர் எனும் – (இலக்குவனைச் சுமந்து
திரியும்) அங்கதராயினார் (ஒருவரன்றிப்) பல கோடி அளவினராக
உள்ளார்’ என்பான்; இங்கு அனுமன் என்பாற்கு – இங்கு (இராமனைச்
சுமந்து திரியும்) அனுமன் என்பவனுக்கு; இனி உலகம் யாவும் இடம்
இலை போலும் என்னும் – எல்லா உலகங்களிலும் இடம் இல்லையாய்
விடுமோ என்பான்; சிங்க ஏறு அனைய வீரர் – ஆண் சிங்கத்தினை
ஒத்த வீரர்களாகிய இராம இலக்குவரது; கடுமையைத் தெரிகிலாதான்
– போரின் விரைவினை அறிந்து கொள்ள இயலாதவனாகிய இந்திரசித்து;
எங்கும் இம்மனிதர் என்பார் இருவரே கொல் என்று உன்னும்
– இம்மனிதர் இருவரே எல்லா இடங்களிலும் நிரம்பி விட்டார்களோ?
என இவ்வாறு எண்ணுவானாயினான்.

———–

8473.
ஆர்க்கின்ற அமரர்தம்மை நோக்கும்; அங்கு அவர்கள்
அள்ளித்
தூர்க்கின்ற பூவை நோக்கும்; துடிக்கின்ற இடத் தோள்
நோக்கும்;
பார்க்கின்ற திசைகள் எங்கும் படும் பிணப் பரப்பை
நோக்கும்;
ஈர்க்கின்ற குருதி ஆற்றின் யானையின் பிணத்தை
நோக்கும்.–33-

ஆர்க்கின்ற அமரர் தம்மை நோக்கும் – (அரக்கர் சேனைகளின்
அழிவுகண்டு) ஆரவாரிக்கின்ற தேவர்களை நோக்குவான்; அங்கு
அவர்கள் – அப்பொழுது அத்தேவர்கள்; அள்ளித் தூர்க்கின்ற
பூவை நோக்கும் – (இராம இலக்குவர் மீது) அள்ளிச் சொரிந்து
நிரப்பும் மலர்களை நோக்குவான்; துடிக்கின்ற இடத்தோள்
நோக்கும் – (பின்னர் நேரவிருக்கும் பெருந்துன்பத்திற்கு அறிகுறியாக)
துடிக்கின்ற தனது இடது தோளை நோக்குவான்; பார்க்கின்ற
திசைகள் எங்கும் – தான் காண்கின்ற திசையிடங்கள் எங்கும்;
படும்பிணப் பரப்பை நோக்கும் – இறந்து வீழ்ந்த பிணங்களின்
மிகுதியை நோக்குவான்; குருதி ஆற்றில் ஈர்க்கின்ற – இரத்த
ஆற்றினால் இழுத்துச் செல்லப்படுகின்ற; யானையின் பிணத்தை
நோக்கும் – யானைகளின் பிணங்களைப் பார்ப்பான்.

————

8474.
ஆயிர கோடித் தேரும் அரக்கரும் ஒழிய, வல்ல
மா இருஞ் சேனை எல்லாம் மாய்ந்தவா கண்டும், வல்லை
போயின குரக்குத் தானை புகுந்திலது அன்றே, பொன்
தேர்த்
தீயவன்தன்மேல் உள்ள பயத்தினால் கலக்கம் தீரா.-34-

வல்லை போயின குரக்குத் தானை – முன்னர் விரைந்து ஓடிய
வானர சேனைகள்; ஆயிரம் கோடித் தேரும் – ஆயிரங்கோடி
என்னும் தொகையினவாகிய தேர்களும்; அரக்கரும் ஒழிய –
(அவற்றில் நின்று பொரும்) அரக்கர்களும் தவிர; அல்லா மா இருஞ்
சேனை எல்லாம் – அவையல்லாத மிகப்பெரிய சேனைகளெல்லாம்;
மாய்ந்தவா கண்டும் – இறந்தொழிந்தமையை நேரிற்கண்டும்; பொன்
தேர்த் தீயவன் தன்மேல் உள்ள – பொன்னால் இயன்ற தேரினை
உடைய கொடுந்தொழிலாளனாகிய இந்திர சித்தன்பால்; பயத்தினால்
கலக்கம் தீரா – தாம் மேற்கொண்ட பேரச்சத்தினால் மனக்கலக்கம் நீங்காதனவாய்; புகுந்திலது அன்றே
– போர்க்களத்தில் மீண்டும் புகாதனவாயின.

————

8475.
தளப் பெருஞ் சேனை வெள்ளம் அறுபதும் தலத்தது ஆக,
அளப்ப அருந் தேரின் உள்ள ஆயிர கோடி ஆக,
துளக்கம் இல் ஆற்றல் வீரர் பொருத போர்த் தொழிலை
நோக்கி,
அளப்ப அருந் தோளைக் கொட்டி, அஞ்சனை மதலை
ஆர்த்தான்.–35-

தளப் பெருஞ் சேனை வெள்ளம் அறுபதும் – போர்க்களத்தில்
பொருது நிற்கும் பெருமையுடைய அறுபது வெள்ளம் அரக்கர்
சேனையும்; தலத்தது ஆக – (அழிவுற்று) நிலத்தின் கண்ணதாய்
மடியவும்; அளப்பருந்தேரின் உள்ள ஆயிரகோடி ஆக – அளந்து
அறிதற்கிலாத தேர்களின் மேலுள்ள (அரக்கர்) சேனை ஆயிரங்கோடி
என்னும் அளவுடையதாய் நிற்கவும்; துளக்கம் இல் ஆற்றல் வீரர் –
மனங்கலங்குதல் இல்லாத ஆற்றல் மிக்க வீரர்களாகிய இராம
இலக்குவர்; பொருத போர்த் தொழிலை நோக்கி – எதிர்த்து நின்ற
போர்ச் செயலைக் கண்ணுற்று; அஞ்சனை மதலை – அஞ்சனை
என்பாளது மகனான அனுமன்; அளப்பருந் தோளைக் கொட்டி
ஆர்த்தான் – அளத்தற்கரிய (தனது) தோளைத் தட்டிக்கொண்டு
பெருமுழக்கம் செய்தான்.

——–

8476.
ஆர் இடை அனுமன் ஆர்த்த ஆர்ப்பு ஒலி அசனி கேளா,
தேரிடைநின்று வீழ்ந்தார் சிலர்; சிலர் படைகள் சிந்தி,
பாரிடை கிழிந்து போகப் பாரித்தார்; பைம் பொன் இஞ்சி
ஊரிடை நின்றுளாரும், உயிரினோடு உதிரம் கான்றார்.–36-

ஆர்இடை அனுமன் ஆர்த்த ஆர்ப்பு ஒலி – நெருங்குதற்கரிய
போர் அரங்கில் அனுமன் ஆரவாரம் செய்ததால் எழுந்த பெரு
முழக்கமாகிய; அசனிகேளா – இடியொலியைக் கேட்டு; தேரிடை
நின்று வீழ்ந்தார் சிலர் – (தேரில் உள்ளாராகிய அரக்கர்களில்) சிலர்
தேரில் நின்றபடியே வீழ்ந்து உயிர்துறந்தார்கள்; சிலர் படைகள் சிந்தி – சிலர் தம் கையிலுள்ள படைக்கலங்களைக் கீழே
சிதறவிட்டு; பாரிடை இழிந்து போகப் பாரித்தார் – தேரிலிருந்தும்
கீழே இறங்கித் தப்பி ஓடுதற்குப் பரபரப்புற்றார்கள்; பைம்பொன்
இஞ்சி ஊரிடை நின்றுளாரும் – பசிய பொன்மயமான மதிலாற் சூழப்
பட்ட (இலங்கையாகிய) ஊரினுள்ளே உள்ள அரக்கர்களும்;
உயிரினோடு உதிரம் கான்றார் – உயிருடனே இரத்தத்தைக்
கக்கினார்கள்.

———

இந்திரசித்தன் தனியனாகப் பொருதல்

8477.
‘அஞ்சினிர், போமின்; இன்று, ஓர் ஆர்ப்பு ஒலிக்கு
அழியற்பாலிர்
வெஞ் சமம் விளைப்பது என்னோ? நீரும் இவ் வீரரோடு
துஞ்சினிர் போலும் அன்றே?’ என்று அவர்ச் சுளித்து
நோக்கி,-
மஞ்சினும் கரிய மெய்யான்-இருவர்மேல் ஒருவன் வந்தான்.–37-

மஞ்சினும் கரிய மெய்யான் – மேகத்தினும் கருமையான உடலை
உடையவனாகிய இந்திரசித்து; ‘இன்று, ஓர் ஆர்ப்பு ஒலிக்கு
அழியற்பாலிர் – ‘இப்பொழுது ஓர் ஆரவார ஒலிக்கே மனமழியுந்
தன்மையுடைவர்களாய்; அஞ்சினர் – அஞ்சியவர்களே; போமின் –
இவ்விடத்தை விட்டு) போய் விடுங்கள்; வெஞ்சமம் விளைப்பது
என்னோ – (இத்தகைய அச்சங் கொண்டவர்களாகிய நீங்கள்)
வெம்மையுடைய போர்த்தொழிலை நிகழ்த்துதல் எவ்வாறு முடியும்?
நீரும் இவ்வீரரோடு துஞ்சினீர் போலும் அன்றே? – (உயிருடன்
உள்ள) நீங்களும் (உயிர் நீங்கிப் பிணமாய்க் கிடக்கும்)
இவ்வீரர்களுடன் ஒப்ப இறந்தொழிந்தீர்கள் அல்லவா? என்று அவர்ச்
சுளித்து நோக்கி – என்று கூறி அவர்களைச் சினந்து பார்த்து; இருவர்
மேல் ஒருவன் வந்தான் – (இராம இலக்குவர்) இருவர் மீதும்தான்
ஒருவனாகவே பொருதற்கு வந்தான்.

———-

8478.
அக் கணத்து, ஆர்த்து மண்டி, ஆயிர கோடித் தேரும்
புக்கன-நேமிப் பாட்டில் கிழிந்தன புவனம் என்ன,
திக்கிடை நின்ற யானை சிரம் பொதிர் எறிய, சிந்தி
உக்கன விசும்பின் மீன்கள் உதிர்ந்திட, தேவர் உட்க,–38-

அக்கணத்து – அந்தக் கணத்திலேயே; ஆயிர கோடித் தேரும் –
(மேற்கண்டவாறு இந்திரசித்தன் சினந்து கூறிய அளவில் அரக்க
வீரர்களுடைய) ஆயிரங்கோடித் தேர்களும்; திக்கிடை நின்ற யானை
சிரம் பொதிர் எறிய – எண் திசைகளிற் காவலாக நின்ற யானைகள்
தலை நடுக்கமுற்று அதிரவும்; விசும்பின் மின்கள் சிந்தி உக்கன
உதிர்ந்திட – வானத்திலே உள்ள விண் மீன்கள் சிதறிப் பொடியாய்
உதிரவும்; தேவர் உட்க – தேவர்கள் நெஞ்சங்குலைந்து நடுங்கவும்;
நேமிப்பாட்டில் புவனம் கிழிந்தன என்ன – சக்கரங்கள்
ஆழப்பதிதலால் நிலவுலகம் பிளவுற்றது என்னும்படி; ஆர்த்து
மண்டிப் புக்கன – ஆரவாரித்து நெருங்கிப் (போர்க்களத்தில்)
புகுந்தன.

—————

இலக்குவன் வஞ்சினம்

8479.
மாற்றம் ஒன்று. இளையவன் வளை வில் செங்கரத்து
ஏற்றினை வணங்கி நின்று, இயம்புவான்; ‘“இகல்-
ஆற்றலன் அரவு கொண்டு அசைப்ப, ஆர் அமர்
தோற்றனென்” என்று கொண்டு உலகம் சொல்லுமால்;–39-

இளையவன் – இளையோனாகிய இலக்குவன்; வளைவில்
செங்கரத்து ஏற்றினை வணங்கி நின்று – வளைந்த வில்லினைப்
பிடித்த சிவந்த கையினை உடைய ஆண்சிங்கம் போல்வானாகிய
இராமனை வணங்கி நின்று; மாற்றம் ஒன்று இயம்புவான் –
(பின்வருமாறு) ஒரு வார்த்தையைக் கூறுவானாயினான்; “இகல்
ஆற்றலன் அரவு கொண்டு அசைப்ப – ‘போரில் எதிர் நிற்கும்
ஆற்றலவனாகிய இந்திரசித்து நாகபாசத்தைக் கொண்டு இறுகப்
பிணித்தமையால்; ஆர் அமர் தோற்றனென் என்று கொண்டு –
அரிய போரில் யான் தோல்வியுற்றதாகக் கொண்டு; உலகம் சொல்லும்
– (என்னைக் குறித்து) உலகம் பழி கூறும்.

————

8480.
‘‘காக்கவும் கற்றிலன், காதல் நண்பரை;
போக்கவும் கற்றிலன், ஒருவன்; போய்ப் பிணி
ஆக்கவும் கற்றிலன்; அமரில் ஆர் உயிர்
நீக்கவும் கற்றிலன்” என்று நின்றதால்;–40-

காதல் நண்பரைக் காக்கவும் கற்றிலன் – (தன்பால்) அன்புடைய
நண்பர்களைக் காப்பாற்றவும் (ஆற்றலற்றான்) அறிந்திலன்; ஒருவன்
பொய்ப்பிணி போக்கவும் கற்றிலன் – (பகைவன்) ஒருவன்
வஞ்சனையாற் செய்த (நாகபாசமாகிய) பிணிப்பினைப் போக்குதற்கும்
அறிந்திலன்; வென்றி ஆக்கவும் கற்றிலன் – (பகைவனைத்
தொடர்ந்து பொருது) தனக்கு வெற்றியை உண்டாக்கிக் கொள்ளுதற்கும்
அறிந்திலன்; ஆர் உயிர் நீக்கவும் கற்றிலன் – (இந்நிலையில் தனது
பெருமை நிலைபெற) அரிய உயிரைத் துறப்பதற்கும் அறிந்திலன்;
என்று நின்றது – என்றுள்ள பழி (எனக்கு உலகில்) நிலை பெற்று
விட்டது.

——-

8481.
‘இந்திரன்பகை எனும் இவனை, என் சரம்
அந்தரத்து அருந் தலை அறுக்கலாது எனின்,
வெந் தொழிற் செய்கையன் விருந்தும் ஆய், நெடு
மைந்தரில் கடை எனப் படுவன், வாழியாய்!–41-

வாழியாய் – (யாவரையும்) வாழ்விக்க வல்லவனே! இந்திரன் பகை
எனும் இவனை – இந்திரனுக்குப் பகைவன் எனப் பேசப்படும் இவ்
இந்திரசித்தனை; என் சரம் அந்தரத்து அருந்தலை அறுக்கலாது
எனின் – எனது அம்பு விசும்பின் கண்ணே அரிய தலையினை
அறுத்துத் (தள்ளி) கொல்லாது (வறிது) செல்லுமாயின்; வெந்தொழிற்
செய்கையன் விருந்தும் ஆய் – வெம்மை வாய்ந்த கொலைத் தொழிலைத் தன் இயல்பான செய்கையாகக் கொண்ட
கூற்றுவனுக்குரிய விருந்தினனாக (யான்) ஆகி; நெடு மைந்தரில் கடை
எனப்படுவன் – (இவ்வுலகில் உயர்த்துக் கூறத்தகும்) பெருமை வாய்ந்த
வீரர்களிற் கடையானவன் என இழித்துரைக்கப்படும்
நிலையினனாவேன்.

———-

8482.
நின்னுடை முன்னர், இந் நெறி இல் நீர்மையான்-
தன்னுடைச் சிரத்தை என் சரத்தின் தள்ளினால்,-
பொன்னுடை வனை கழல் பொலம் பொன் தோளினாய்!-
என்னுடை அடிமையும் இசையிற்று ஆம்அரோ.–42-

பொன்னடை வனைகழல் பொலம்பொன் தோளினாய்! –
பொன்னால் அணிநலமுறப் புனைந்த வீரக்கழலினையும்
பொன்னணிகளையுடைய அழகிய தோள்களையும் உடைய
அண்ணலே! நின்னுடை முன்னர் – நினது (கண்) முன்பாக;
இந்நெறியில் நீர்மையன் தன்னுடைச் சிரத்தை – இந்த
அறமுறையற்ற தன்மையனாகிய இந்திரசித்தனது தலையினை; என்
சரத்தின் தள்ளினால் – எனது அம்பினால் அறுத்து
வீழ்த்துவேனாயின்; என்னுடை அடிமையும் இசையிற்று ஆம் – யான்
நின்பாற் கொண்ட அடிமைத்திறமும் போற்றத் தகும் புகழுடையதாகும்.

———-

8483.
‘கடிதினில் உலகு எலாம் கண்டு நிற்க, என்
சுடு சரம் இவன் தலை துணிக்கலாதுஎனின்,
முடிய ஒன்று உணர்த்துவென்; உனக்கு நான் முயல்
அடிமையின் பயன் இகந்து அறுக, ஆழியாய்!’–43-

ஆழியாய் – ஆணைச் சக்கரத்தை உடையவனே! கடிதினில் உலகு
எலாம் கண்டு நிற்க – விரைவினில் உலகம் எல்லாம் நோக்கி நிற்கும்
போழ்தே; என் சுடுசரம் இவன் தலை துணிக்கலாது எனின் –
என்னுடைய சுட்டழிக்க வல்ல அம்பு இந்த இந்திரசித்தனின் தலையை
அறுத்தெறியவில்லை என்றால்; முடிய ஒன்று உணர்த்துவேன் –
முடிவாக ஒரு பொருள் (உனக்கு) மொழிவேன்; உனக்கு நான் முயல்
அடிமையின் பயன் இகந்து அறுக – உனக்காக நான் முயல்கின்ற
அடிமைச் செயலின் பயன் (என்னை விட்டு) நீங்குவதாக;

———-

இராமன் பாராட்டு

8484.
வல்லவன் அவ் உரை வழங்கும் ஏல்வையுள்,
‘அல்லல் நீங்கினம்’ என, அமரர் ஆர்த்தனர்;
எல்லை இல் உலகங்கள் யாவும் ஆர்த்தன;
நல் அறம் ஆர்த்தது; நமனும் ஆர்த்தனன்.–44-

வல்லவன் அவ் உரை வழங்கும் ஏல்வையுள் – (சொல்லிய
வண்ணம் செய்ய) வல்லவனாகிய இலக்குவன் அத்தகைய வஞ்சின
மொழியைக் கூறிய அளவில்; அமரர் ‘அல்லர் நீங்கினம்’ என
ஆர்த்தனர் – வானவர்கள் ‘இனி நாம் துன்பம் நீங்கப் பெற்றேம்’ என
ஆரவாரித்தனர்; எல்லையில் உலகங்கள் யாவும் ஆர்த்தன –
எல்லையில்லாத உலகங்களிலுள்ள எல்லா உயிர்களும் (மகிழ்ச்சியால்)
ஆரவாரித்தன; நல் அறம் ஆர்த்தது – நன்மையை உடைய
அறக்கடவுளும் ஆரவாரித்தது; நமனும் ஆர்த்தனன் – கூற்றுவனும்
ஆரவாரித்தான்.

————-

8485.
முறுவல் வாள் முகத்தினன், முளரிக்கண்ணனும்.
‘அறிவ! நீ, “அடுவல்” என்று அமைதி ஆம்எனின்,
இறுதியும் காவலும் இயற்றும் ஈசரும்
வெறுவியர்; வேறு இனி விளைவது யாது?’ என்றான்.–45-

முளரிக் கண்ணனும் – செந்தாமரைக் கண்ணனாகிய இராமனும்;
முறுவல் வாள்முகத்தினன் – (இலக்குவனது வஞ்சினத்தைக் கேட்டு)
புன்சிரிப்போடும் கூடிய ஒளிபெற்ற முகத்தினனாகிய; அறிவ நீ
“அடுவல்” என்று அமைதி ஆம் எனின் – அறிவுடைய தம்பியே நீ
(பகைவரை) கொல்வேன்’ என முடிவு செய்து விட்டாய் எனின்;
இறுதியும், காவலும் இயற்றும் ஈசரும் வெறுவியர் – அழித்தல்
தொழிலையும், காத்தல் தொழிலையும் செய்யும் இரு பெருங்
கடவுளரும் தத்தமக்குரிய தொழிலை இழந்து வெறுமையுறுவர்; வேறு
இனி விளைவது யாது என்றான் – (நின் கருத்திற்கு) மாறாக இனி
இவ்வுலகில் நிகழக்கூடியது யாதுளது? என (இலக்குவனைப் பாராட்டிக்)
கூறினான்.

———

இராமனைத் தொழுது, இலக்குவன் போருக்கு எழுதல்

8486.
சொல் அது கேட்டு, அடி தொழுது, ‘சுற்றிய
பல் பெருந் தேரொடும் அரக்கர் பண்ணையைக்
கொல்வல்; இங்கு அன்னது காண்டிகொல்’ எனா,
ஒல்லையில் எழுந்தனன்-உவகை உள்ளத்தான்.–46-

சொல்வது கேட்டு அடி தொழுது – (இராமபிரான் உளமுவந்து
கூறிய) அம்மொழியினைக் கேட்டு (அப்பிரானுடைய) திருவடிகளை
வணங்கி; சுற்றிய பல் பெருந் தேரொடும் – சுற்றிச் சூழ்ந்த பலவாகிய
தேர்களுடனே; அரக்கர் பண்ணையைக் கொல்வல் – அரக்கர்
தொகுதியை இப்பொழுதே கொன்றொழிப்பேன்; இங்கு அன்னது
காண்டி கொல் – இங்கு அதனைக் காண்பாயாக; எனா – என்று கூறி;
உவகை உள்ளத்தான் – மகிழ்ச்சி நிரம்பிய மனத்தினனாகிய
இலக்குவன்; ஒல்லையில் எழுந்தனன் – விரைந்து போருக்குப்
புறப்பட்டான்.

———

8487.
அங்கதன் ஆர்த்தனன், அசனி ஏறு என,
மங்குல்நின்று அதிர்ந்தன வய வன் தேர் புனை
சிங்கமும் நடுக்குற; திருவின் நாயகன்
சங்கம் ஒன்று ஒலித்தது, கடலும் தள்ளுற.–47-

அங்கதன் ஆர்த்தனன் அசனி ஏறு என – (இலக்குவனைச்
சுமந்து செல்லும்) அங்கதன் இடியேற்றினைப் போலப் போர் முழக்கம்
செய்தான்; மங்குல் நின்று அதிர்ந்தன – (அதனால் விண்ணிடத்தே)
மேகங்கள் நின்று அதிர்ந்தன; வயவன் தேர் புனை சிங்கமும்
நடுக்குற – வீரனாகிய இந்திரசித்தன் தேரில் பூட்டியுள்ள சிங்கங்கள்
நடுக்கமுறவும்; கடலும் தள்ளுற – கடல் ஓசை பின்னிடவும்; திருவின்
நாயகன் சங்கம் ஒன்று ஒலித்தது – திருமகள் கேள்வனாகிய
இராமனது சங்கம் ஒன்று முழங்கியது.

———

8488.
எழு, மழு, சக்கரம், ஈட்டி, தோமரம்,
முழு முரண் தண்டு, வேல், முசுண்டி, மூவிலை,
கழு, அயில் கப்பணம், கவண் கல், கன்னகம்,
விழு மழைக்கு இரட்டி விட்டு, அரக்கர் வீசினார்.–48-

எழு, மழு, சக்கரம், ஈட்டி, தோமரம் – எழுக்கள், மழுக்கள்,
சக்கரங்கள், ஈட்டிகள், தோமரங்கள்; முழு முரண் தண்டு வேல்,
முசுண்டு, மூவிலை கழு – நிறைந்த வன்மை கொண்ட கதாயுதங்கள்,
வேற்படைகள், முசுண்டிகள், மூன்று இலைவடிவமான கழுக்கள்;
அயில் கப்பணம், கவண்கல், கன்னகம் – கூரிய கப்பணங்கள்,
கவணில் அமைத்து வீசுங்கற்கள், கன்னகங்கள் ஆகிய இப்படைகளை;
விழு மழைக்கு இரட்டி விட்டு, அரக்கர் வீசினார் – விண்ணினின்று
சொரியும் மழையைக் காட்டிலும் இரு மடங்காக அரக்கர்கள் வீசி
எறிந்தார்கள்.

———-

8489.
மீன் எலாம் விண்ணின்நின்று ஒருங்கு வீழ்ந்தென,
வான் எலாம் மண் எலாம் மறைய வந்தன;
தான் எலாம் துணிந்து போய்த் தகர்ந்து காந்தின;-
வேனிலான் அனையவன் பகழி வெம்மையால்.–49-

வான் எலாம் மண் எலாம் மறைய வந்தன – (மழைக்கு
இரட்டிப்பாய் அரக்கரால் வீசப்பெற்று) வான் முழுதும் மண் முழுதும்
மறையுமாறு வந்தனவான படைக்கலன்கள்; வேனிலான் அனையவன்
பகழி வெம்மையால் – வேனிற் காலத்துக்கு உரியவனான மன்மதனை
ஒத்த பேரழகினை உடைய இலக்குவனது அம்புகளின் கடுமையால்;
மீன் எலாம் விண்ணின் நின்று ஒருங்கு வீழ்ந்தென –
விண்மீன்களெல்லாம் விசும்பினின்றும் ஒருசேர வீழ்ந்தன எனும்படி;
தான் எலாம் துணிந்து போய்த் தகர்ந்து காந்தின – அனைத்தும் துண்டுபட்டுப்
பொடியாகச் சிதறி ஒளிவிட்டுக் கிடந்தன.

——–

8490.
ஆயிரம் தேர், ஒரு தொடையின், அச்சு இறும்;
பாய் பரிக் குலம் படும்; பாகர் பொன்றுவர்;
நாயகர் நெடுந் தலை துமியும், நாம் அற;
தீ எழும், புகை எழும், உலகும் தீயுமால்.–50-

ஒரு தொடையின் – (இலக்குவன்) ஒருமுறை தொடுத்த அம்பினால்;
ஆயிரம் தேர் அச்சு இறும் – (அரக்கர்களின்) ஆயிரந் தேர்கள்
அச்சு முறிந்து விழும்; பாய்பரிக் குலம்படும் – (அத்தேர்களிற்
பூட்டிய) தாவிச்செல்லும் குதிரைக் கூட்டங்கள் இறந்து விழும்; பாகர்
பொன்றுவர் – (அத்தேர்களின்) தேரோட்டிகள் இறப்பர்; நாம் அற –
அச்சம் நீங்கும்படி; நாயகர் நெடுந்தலை துமியும் –
(அத்தேர்களுக்குரிய) தலைவர்களின் பெரிய தலைகள் துணிபடும்;
தீயெழும், புகை எழும் – (அம்பு பட்ட இடங்களில்) தீ மேற்கிளம்பும்,
புகைப்படலம் மேல் எழும்; உலகும் தீயும் – (அதனால்) உலகமும்
தீய்ந்து வெதும்பும்.

———

8491.
அடி அறும் தேர்; முரண் ஆழி அச்ச இறும்;
கடி நெடுஞ் சிலை அறும்; கவச மார்பு இறும்;
கொடி அறும்; குடை அறும்; கொற்ற வீரர்தம்
முடி அறும்; முரசு அறும்; முழுதும் சிந்துமால்.–51-

தேர் அடி அறும் – (மற்றும் அவ்இலக்குவன் எய்த
அம்புகளினால்) தேர்களின் அடிப்பகுதி அற்றுச் சிதையும்; முரண்
ஆழி அச்சு இறும் – வலிய தேர்ச்சக்கரங்களின் அச்சு அற்றுச்
சிதையும்; கடி நெடுஞ்சிலை அறும் – வலிய நெடிய விற்கள் முறியும்;
கவச மார்பு இறும் – (வீரர்களின்) கவசம் அணிந்த மார்பு பிளக்கப்
பெறும்; கொடி, அறும், குடை அறும் – கொடிகள் அறுபடும்
(அத்துடன்) குடைகள் முறியும்; கொற்ற வீரர்தம் முடி அறும் –
வெற்றி மிக்க வீரர்கள் (அணிந்த) முடிகள் அறுந்துபோகும்; முரசு
அறும் – (வெற்றிக்கு அறிகுறியாக அடித்தற்கு வைத்துள்ள) வீர முரசு
கிழிந்துபடும்; முழுதும் சிந்துமால் – (இங்ஙனம்) எஞ்சுதல் இன்றி
அனைத்தும் அழிவனவாயின.

———-

8492.
‘இன்னது ஓர் உறுப்பு; இவை இனைய தேர் பரி;
மன்னவர் இவர்; இவர் படைஞர், மற்றுளோர்’
என்ன ஓர் தன்னையும் தெரிந்தது இல்லையால்-
சின்னபின்னங்களாய் மயங்கிச் சிந்தலால்.–52-

சின்ன பின்னங்களாய் மயங்கிச் சிந்தலால் – (போரரங்கில்
அனைவரும்) கண்டதுண்டமாகச் சிதறிக் கலந்து கிடந்தமையால்;
இன்னது ஓர் உறுப்பு – காணப்படும் இது இன்ன உறுப்பு; இவை
இனைய தேர் பரி – இவை இத்தன்மையவாகிய தேர்களும்
குதிரைகளும்; மன்னவர் இவர் – இவர் அரசர்; இவர் படைஞர் –
இவர்கள் படை வீரர்கள்; மற்றுளோர் என்ன – இவர்கள்
அவ்வரசரும். படைஞருமல்லாத தேர்ப்பாகர் முதலானோர் என்று
பகுத்துரைத்தற்கேற்ற; ஓர் தன்மையும் தெரிந்தது இல்லை – ஒரு
தன்மையும் தெரிந்தது இல்லையாம்.

———-

8493.
தந்தையர் தேரிடைத் தனயர் வன் தலை
வந்தன; தாதையர் வயிர வான் சிரம்
சிந்தின, காதலர்க்கு இயைந்த தேரிடை-
அந்தரத்து அம்பொடும் அற்று எழுந்தன.–53-

அந்தரத்து அம்பொடும் அற்று எழுந்தன – (அம்பினால்)
துணிக்கப்பட்டு அம்பொடும் விசும்பின் மேல் எழுந்தனவாகிய
தலைகளில்; தனயர் வன்தலை தந்தையர் தேரிடை வந்தன –
புதல்வர்களின் வலிய தலைகள் (அவருடைய) தந்தையர் தேர்களில்
வந்து வீழ்ந்தன; தாதையர் வயிர வான்சிரம் – தந்தையர்களின்
வலிமை வாய்ந்த தலைகள்; காதலர்க்கு இயைந்த தேரிடை சிந்தின –
(அவர்தம்) புதல்வர்கட்கு அமைந்த தேர்களிற் சிதறி வீழ்ந்தன.

———

8494.
செம் பெருங் குருதியின் திகழ்ந்த, செங் கண் மீன்
கொம்பொடும் பரவையில் திரியும் கொட்பு என-
தும்பை அம் தொடையலர் தடக் கை, தூணி வாங்கு
அம்பொடும் துணிந்தன சிலையொடு அற்றன.–54-

தும்பை அம் தொடையலர் தடக்கை – அழகிய தும்பை
மாலையை அணிந்த அரக்க வீரர்களுடைய பெரிய கைகள்; தூணி
வாங்கு அம்பொடும் துணிந்தன – அம்பறாத் தூணியி னின்றும்
பற்றி எடுக்கும் அம்பினோடும் துணிக்கப்பட்டனவாகி; சிலையொடு
அற்றன – (பற்றிய) வில்லுடன் அறுபட்டன; செங்கண் மீன்
கொம்பொடும் – சிவந்த கண்களை உடைய மீன்கள் கொம்புடன்;
பரவையில் திரியும் கொட்பு என – கடலிடை அலைந்து சுற்றும்
தன்மைக்கு ஒப்பாக; செம்பெருங் குருதியின் திகழ்ந்த – செந்நிறம்
வாய்ந்த குருதிப் பெருவெள்ளத்திலே விளங்கித் தோன்றின.

——–

8495.
தடிவன கொடுஞ் சரம் தள்ள, தள்ளுற
மடிவன கொடிகளும், குடையும், மற்றவும்,
வெடி படு பெரும் பிணக் களத்தில் மொய்த்தன,
படிவன, ஒத்தன, பறவைப் பான்மையா.–55-

தடிவன கொடுஞ்சரம் தள்ள, தள்ளுற மடிவன – வெட்டி
வீழ்த்துந் தன்மையனவாகிய கொடிய அம்புகள் வெட்டித் தள்ளுதலால்
தள்ளப்பட்டு வீழ்ந்து கிடப்பனவாகிய; கொடிகளும் குடையும் மற்றவும்
– கொடிகளும், குடைகளும் ஏனையவும்; வெடிபடு பெரும்பிணக்
களத்தில் மொய்த்தன – அச்சந்தரத்தக்க பெரும்பிணக்
குவியலையுடைய போர்க்களத்திலே நெருங்கியுள்ளவை;
படிவனபான்மையா பறவை ஒத்தன – (பிணங்களை உண்ணுதற்கு)
பறவைகள் பலவாகப் படியுந் தன்மையினை ஒத்தன.

———

8496.
சிந்துரங்களின் பருமமும், பகழியும், தேரும்,
குந்து வல் நெடுஞ் சிலை முதல் படைகளும், கொடியும்,
இந்தனங்களாய், இறந்தவர் விழிக் கனல் இலங்க,
வெந்த வெம் பிணம் விழுங்கின, கழுதுகள் விரும்பி.–56-

சிந்துரங்களின் பருமமும் பகழியும் தேரும் – யானைகளின்
மேல் இடும் தவிசும், அம்புகளும் தேரும்; குந்துவல் நெடுஞ்சிலை
முதல் படைகளும் கொடியும் – வளைந்த வலிய நெடிய வில்
முதலிய படைகளும், கொடியும்; இந்தனங்களாய் – விறகுகளாக
(அமைய) இறந்தவர் விழிக்கனல் இலங்க – இறந்த வீரர்களுடைய (சினம்
மிக்க) கண்களாகிய தீ (கொழுந்து விட்டு) விளங்க; வெந்த வெம்பிணம்
கழுதுகள் விரும்பி விழுங்கின – வெந்தன போன்ற வெம்மையுடைய
பிணங்களைப் பேய்கள் விரும்பி விழுங்கின.

———

8497.
சில்லி ஊடு அறச் சிதறின சில; சில, கோத்த
வல்லி ஊடு அற, மறிந்தன; புரவிகள் மடியப்
புல்லி மண்ணிடைப் புரண்டன சில; சில, போர் ஆள்
வில்லி சாரதியொடும் பட, திரிந்தன வெறிய.–57-

சில சில்லி ஊடு அறச் சிதறின – சில தேர்கள் சக்கரங்கள்
நடுவே முறியச் சிதறின; கோத்த சில வல்லி ஊடு அற மறிந்தன –
(ஒன்றோடு ஒன்று மோதி) பிணைந்த சில தேர்கள் குசைக்கயிறுகள்
இடையில் அறுபட்டொழிய குப்புற வீழ்ந்தன; சில, புரவிகள்
மடியப் புல்லி மண்ணிடைப் புரண்டன – சில தேர்கள் கட்டிய
குதிரைகள் இறந்து விழத் தரையிற் பொருந்தி உருண்டன; சில போர்
ஆள் வில்லி சாரதியொடும் பட வெறிய திரிந்தன – சில தேர்கள்,
போர்த்தொழிலை ஆள்பவனாகிய வில்வீரன் பாகனொடும் இறந்துபட
(யாரும் அமர்வாரின்றி) வெறுமையுடையனவாய்த் திரிந்தன.

—————-

8498.
அலங்கு பல் மணிக் கதிரன, குருதியின் அழுந்தி,
விலங்கு செஞ் சுடர் விடுவன, வெளி இன்றி மிடைந்த,-
குலம் கொள் வெய்யவர் அமர்க் களத் தீயிடைக் குளித்த
இலங்கை மா நகர் மாளிகை நிகர்த்தன-இரதம்.–58-

அலங்கு பல்மணிக் கதிரன – விட்டு விளங்கும் பலவகை
மணிகளின் ஒளிக்கற்றைகளை உடையனவும்; குருதியின் அழுந்தி
விலங்கு செஞ்சுடர் விடுவன – இரத்த வெள்ளத்தில்
அழுந்தினமையால் மேலே பரவிப்பாயும் செந்நிற ஒளியை வீசுவனவும்
ஆகி; வெளி இன்றி மிடைந்த இரதம் – இடைவெளி இன்றி
நெருங்கிய தேர்கள்; குலங்கொள் வெய்யவர் மறுகிடத் – கூட்டமாகப்
பொருந்திய கொடியோராகிய அரக்கர்கள் மனங்கலங்கி வருந்த;
தீயிடைக் குளித்த இலங்கை மாநகர் மாளிகை நிகர்த்தன
– (அநுமனாற் கொளுத்தப்பட்ட) தீயினுள்ளே அழுந்திய இலங்கைப்
பெருநகரத்தினுள்ளேயுள்ள மாளிகைகளை ஒத்துத் தோன்றின.

——-

இராமனும் அம்புசொரிதலால் இந்திரசித்து தனிப்படுதல்

8499.
ஆன காலையில், இராமனும், அயில் முகப் பகழி
சோனை மாரியின் சொரிந்தனன், அனுமனைத் தூண்டி;
வான மானங்கள் மறிந்தெனத் தேர் எலாம் மடிய,
தானும் தேருமே ஆயினன், இராவணன் தனயன்.–59-

ஆன காலையில் இராமனும் அனுமனைத் தூண்டி –
அப்பொழுது இராமபிரானும் (தன்னைத் தாங்கியுள்ள) அநுமனை
(இந்திரசித்தன் முன்னர்ச்) செல்லுமாறு செலுத்தி; அயில்முகப் பகழி
சோனை மாரியிற் சொரிந்தனன் – கூரிய முனையுடன் கூடிய
அம்புகளை விடாப்பெருமழை போற் சொரிந்தான்; (அதனால்) தேர்
எலாம் வானமானங்கள் மறிந்தென மடிய – அரக்கர்களுடைய
தேர்களெல்லாம், வான்வழியே செல்லும் விமானங்கள், குப்புற
வீழ்ந்தாற் போன்று சிதைந்து வீழ்ந்தமையால்; இராவணன் தனயன்
தானும் தேருமே ஆயினன் – இராவணன் மைந்தனாகிய இந்திர சித்து
தானும் தன்னுடைய தேருமேயாகத் தனிப்பட்டான்.

———–

இந்திரசித்து ஒன்று கூறத் தொடங்குதல்

8500.
பல் விலங்கொடு புரவிகள் பூண்ட தேர்ப் பரவை
வல் விலங்கல்போல் அரக்கர்தம் குழாத்தொடு மடிய,
வில் இலங்கிய வீரரை நோக்கினன், வெகுண்டான்,
சொல், விலங்கலன், சொல்லினன்-இராவணன் தோன்றல்.–60-

பல் விலங்கொடு புரவிகள் பூண்ட தேர்ப் பரவை – பல
விலங்குகளுடன் குதிரைகள் பூட்டப்பட்ட தேர்த் தொகுதிகள்; வல்
விலங்கல் போல் அரக்கர் தம் குழாத்தொடு மடிய – வலிய
மலைகளைப் போன்று அரக்கர் கூட்டத்துடன் மடிந்து கிடக்கக்
(கண்ட); இராவணன் தோன்றல் – இராவணன் மைந்தனாகிய
இந்திரசித்து; வில் இலங்கிய வீரரை நோக்கினன் வெகுண்டான் –
(அவற்றை) விற்றொழிலால் அழித்தொழித்த வீரர்களாகிய இராம
இலக்குவர் இருவரையும் நோக்கி வெகுண்டவனாகி; விலங்கலன் சொல்
சொல்லினன் – (போரிற்) பின்னிடாதவனாய் ஒரு சொல்லைச்
சொன்னான்.

———

8501.
‘இருவிர் என்னொடு பொருதிரோ? அன்றுஎனின், ஏற்ற
ஒருவிர் வந்து, உயிர் தருதிரோ? உம் படையோடும்
பொருது பொன்றுதல் புரிதிரோ? உறுவது புகலும்;
தருவல், இன்று உமக்கு ஏற்றுளது யான்’ எனச் சலித்தான்.–61-

இருவிர் என்னொடு பொருதிரோ? – (இராம இலக்குவராகிய)
நீங்கள் இருவரும் (ஒருசேர இயைந்து) என்னுடன் போர்
செய்கின்றீர்களா? அன்று எனின் ஏற்ற ஒருவர் வந்து உயிர்
தருதிரோ? – அன்றேல் (ஒருவிர் ஒருவிராய்த் தனித்து) வந்து
உயிரைத் தருகின்றீர்களா? உம்படையொடும் பொருது பொன்றுதல்
புரிதிரோ? – (அல்லது) நுமக்குரிய (வானர) சேனைகளோடும் கூடி
(என்னுடன்) போர் செய்து இறந்தொழிலைச் செய்கின்றீர்களா? உறுவது
புகலும் – (இவற்றுள் ஆற்றலுக்கும் விருப்பத்திற்கும்) பொருந்துவது
ஒன்றைச் சொல்வீராக; தருவல், இன்று உமக்கு ஏற்றுளது யான்
எனச் சலித்தான் – நுமக்கு ஏற்புடையதொன்றை இன்று யான்
தருகின்றேன் எனச் சிதைந்து கூறினான் (இந்திரசித்து).

————-

இலக்குவன் தன் வஞ்சினம் பற்றிக் கூறுதல்

8502.
‘வாளின், திண் சிலைத் தொழிலினின், மல்லினின், மற்றை
ஆளுற்று எண்ணிய படைக்கலம் எவற்றினும், அமரில்
கோளுற்று, உன்னொடு குறித்து, அமர் செய்து,
உயிர் கொள்வான்
சூளுற்றேன்; இது சரதம்’ என்று, இலக்குவன் சொன்னான்.–62-

‘வாளின், திண்சிலைத் தொழிலினின் மல்லினின் – ‘வாள்
கொண்டும், உறுதியான வில்லினாலும், மற்போர் புரிந்தும்; மற்றை
ஆளுற்று எண்ணிய படைக்கலம் எவற்றினும் – ஏனைய ஆளுதல்
பொருந்தி எண்ணப்பட்ட போர்க்கருவிகள் எல்லாவற்றாலும்; அமரில்
கோளுற்று – போரில் வலிமையை மேற்கொண்டு; உன்னொடு குறித்து
அமர் செய்து உயிர் கொள்வான் சூளுற்றேன் – ‘உன் நேர் நின்று,
போர் புரிந்து உன் உயிரைக் கொள்ளும் பொருட்டு வஞ்சினம்
கூறினன்; இது சரதம் என்று, இலக்குவன் சொன்னான் – இது உறுதி
என (இந்திரசித்தனை நோக்கி) இலக்குவன் மறுமொழி கூறினான்.

———–

இந்திரசித்தன் மறுமொழி

8503.
‘முன் பிறந்த உன் தம்முனை முறை தவிர்த்து, உனக்குப்
பின்பு இறந்தவன் ஆக்குவென்; பின் பிறந்தோயை
முன்பு இறந்தவன் ஆக்குவென்; இது முடியேனேல்,
என், பிறந்ததனால் பயன் இராவணற்கு?’ என்றான்.–63-

முன் பிறந்த உன்தம் முனை – (உனக்கு) முன்னே பிறந்த உன்
அண்ணனாகிய இராமனை; முறை தவிர்த்து – (கால)
முறைமையினின்றும் நீக்கி; உனக்குப் பின்பு இறந்தவன் ஆக்குவென்
– உனக்குப் பிறகு இறந்தவனாகச் செய்வேன்; பின் பிறந்தோயை
முன்பு இறந்தவன் ஆக்குவென் – பின் பிறந்த தம்பியாகிய உன்னை
(அண்ணனுக்கு) முன்னர் இறந்தவனாகச் செய்வேன்; இது
முடியேனேல் – இதனை நான் செய்து முடிக்காமற் போனால்;
இராவணற்குப் பிறந்ததனால் பயன் என்? என்றான் –
இராவணனுக்கு மகனாகப் பிறந்ததனால் உற்ற பயன் யாது? என
(இலக்குவனை நோக்கி) கூறினான்.

————-
8504.
‘இலக்குவன் எனும் பெயர் உனக்கு இயைவதே என்ன,
இலக்கு வன் கணைக்கு ஆக்குவென்; “இது புகுந்து
இடையே
விலக்குவன்” என விடையவன் விலக்கினும், வீரம்
கலக்குவன்; இது காணும், உன் தமையனும் கண்ணால்.–64-

இலக்குவன் எனும் பெயர் உனக்கு இயைவதே என்ன –
இலக்குவன் எனும் பெயர் உனக்குத் தக்கதே என்று (யாவரும்)
கருதுமாறு; வன் கணைக்கு இலக்கு ஆக்குவென் – (உன்னை
என்னுடைய) வலிய அம்பினுக்கு இலக்கு ஆக்குவென்; “இது புகுந்து
இடையே விலக்குவன்” என விடையவன் விலக்கினும் – (யான்
செய்யும்) “இப்போரினை விலக்குவேன்’ எனக் கூறி எருதினை
வாகனமாக உடைய உருத்திர மூர்த்தியே இடையிற் புகுந்து (பொருது)
விலக்கினாலும்; வீரம் விலக்குவன் – (அவருடைய அத்தகைய)
வீரத்தைத் தடுத்து நீக்குவேன்; உன் தமையனும் கண்ணால் இது
காணும் – இதனை (உனது அழிவினை) உன் அண்ணனான இராமனும்
(செயலற்று) கண்களாற் காண்பான்.
———
8505.
‘அறுபது ஆகிய வெள்ளத்தின் அரக்கரை அம்பால்,
இறுவது ஆக்கிய இரண்டு வில்லீரும் கண்டு இரங்க,
மறுஅது ஆக்கிய எழுபது வெள்ளமும் மாள,
வெறுவிது ஆக்குவென், உலகை இக் கணத்தின் ஓர்
வில்லால்.–65-

அறுபது வெள்ளத்தின் ஆக்கிய அரக்கரை – அறுபது வெள்ளம்
என்னும் தொகையினராய் அணிவகுத்து நிறுத்திய அரக்க
வீரர்களையெல்லாம்; அம்பால் இறுவது ஆக்கிய – அம்புகளினால்
இறந்தொழியும் படி செய்த; இரண்டு வில்லீரும் கண்டு இரங்க – இரு வில்லாளிகளான நீவீர் இருவருங் கண்டு
வருந்துமாறு; மறுவது ஆக்கிய எழுபது வெள்ளமும்மாள –
(எமக்குப்) பழியினை உண்டாக்கிய எழுபது வெள்ள (வானரச்)
சேனையும் இறந்தொழியுமாறு செய்து; உலகை இக்கணத்தின் ஓர்
வில்லால் வெறுவிது ஆக்குவன் – உலகினை இவ்வொரு
கணத்திலேயே (எனது) ஒரு வில்லினால் வெறுமை உடையதாகுமாறு
அழிப்பேன்.
———
8506.
‘கும்பகன்னன் என்று ஒருவன், நீர் அமரிடைக் கொன்ற
தம்பி, அல்லன் நான்; இராவணன் மகன்; ஒரு தமியேன்;
எம்பிமாருக்கும், என் சிறு தாதைக்கும், இருவீர்
செம் புணீர்கொடு கடன் கழிப்பேன்’ எனத் தீர்ந்தான்.–66-

நீர் அமரிடைக் கொன்ற – நீர் போரில் (அங்க அங்கமாகச்)
சிதைத்தழித்த; கும்பகன்னன் என்று – கும்ப கன்னன் என்று பெயர்
படைத்த ஒருவனோ; தம்பி அல்லன் நான் – அல்லது என் தம்பிமார்
போன்றவனோ அல்லேன் நான்; இராவணன் மகன் ஒரு தமியேன் –
இராவணன் மகன் (யான்) ஆனால் (அவன் மக்களான அக்ககுமாரன்,
அதிகாயன் என்பார் போன்று அல்லேன்) (உம்மைக் கொல்லவல்ல)
ஒப்பற்றுத் தனித்த ஆற்றலுடையேன்; எம்பிமாருக்கும் என்சிறு
தாதைக்கும் – (உம்மால் இறந்த) என் தம்பியர்க்கும் என் சிறிய
தந்தையான கும்பகன்னருக்கும்; இருவீர் செம்புணீர் கொடு கடன்
கழிப்பேன் எனத் தீர்ந்தான் – உங்கள் இருவருடைய குருதியாகிய
புனலைக் கொண்டு (நீர்க்கடன்களை) இறுதிக் கடனைச் செய்வேன்
எனக் கூறி முடித்தான்.

————

இலக்குவன் மாற்றுரை
8507.
‘அரக்கர் என்பது ஓர் பெயர் படைத்தீர்க்கு எலாம்
அடுத்த,
புரக்கும் நன் கடன் செய உளன், வீடணன் போந்தான்;
கரக்கும் நுந்தைக்கு நீ செயக் கடவன கடன்கள்,
இரக்கம் உற்று, உனக்கு அவன் செயும்’ என்றனன்,
இளையோன்.–67-

அரக்கர் என்பது ஓர் பெயர் படைத்தீர்க்கு எலாம் – அரக்கர்
என்று கூறப்படுவதோர் பெயருடையீராகிய நும் இனத்தார்க்கெல்லாம்;
அடுத்த புரக்கும் நன்கடன் – நிகழ்வதாக உள்ளதும் (உயிர்)
ஈடேறுவதற்குரியதுமான சிறந்த ஈமக்கடன்களை; செய வீடணன்
போந்தான் உளன் – செய்தற்கு (உன் சிற்றப்பனாகிய) வீடணன்
எம்மை அடைந்துள்ளான்; கரக்கும் நுந்தைக்கு நீ செயக்கடவன
கடன்கள் – (இறந்து) மறையும் நும் தந்தையாகிய இராவணனுக்கு
(மைந்தனாகிய) நீ செய்தற்குரிய (ஈமக்) கடன்களை; இரக்கம் உற்று
உனக்கு அவன் செயும் – (நீ இப்போதே இறக்கப்போகின்றாய்
ஆதலால்) பெரிதும் துயருற்று உனக்கு அவன் செய்யப்போகின்றான்;
என்றனன் இளையோன் – என்று கூறினான் இலக்குவன்.

——–

இந்திரசித்தன் – இலக்குவன் கடும் போர்
8508.
ஆன காலையின், அயில் எயிற்று அரக்கன்
நெஞ்சு அழன்றான்,
வானும் வையமும் திசைகளும் யாவையும் மறைய,
பால் நல் வேலையைப் பருகுவ சுடர் முகப் பகழி,
சோனை மாரியின் இரு மடி மும் மடி சொரிந்தான்.–68-

ஆன காலையில் அயில் எயிற்று அரக்கன் நெஞ்சு அழன்றான்
– (அவ்வாறு இலக்குவன் கூறிய) அப்பொழுது கூரிய பற்களை உடைய
அரக்கனாகிய இந்திரசித்து மனம் கொதிப்புற்றவனாகி; பால் நல்
வேலையைப் பருகுவ, சுடர்முகப் பகழி – நல்ல பால் போலும்
(வானர சேனைகளாகிய) கடலைப் பருகி வற்றச் செய்யும்
ஆற்றலுடையனவாகிய ஒளி பொருந்திய முனையினையுடைய
அம்புகளை; வானும் வையமும் திசைகளும் யாவையும் மறைய –
வானிடமும், மண்ணிடமும், திசைகளும் மறையும்படி; சோனை
மாரியின் இருமடி மும்மடி சொரிந்தான் – விடாத பெரு மழையினும்
இரு மடங்கு மும்மடங்கு (மிகுதியாகப்) பொழிந்தான்.

——–

8509.
அங்கதன்தன்மேல் ஆயிரம்; அவற்றினுக்கு இரட்டி,
வெங் கண் மாருதி மேனிமேல்; வேறு உள வீரச்
சிங்கம் அன்னவர் ஆக்கைமேல் உலப்பு இல செலுத்தி,
எங்கும் வெங் கணை ஆக்கினன்-இராவணன் சிறுவன்.–69-

இராவணன் சிறுவன் அங்கதன் தன்மேல் ஆயிரம் – இராவணன்
மகனான இந்திரசித்து அங்கதன் மீது ஆயிரம் அம்புகளையும்;
வெங்கண் மாருதி மேனிமேல் அவற்றினுக்கு இரட்டி – (சினத்தால்)
வெம்மை மிக்க கண்களையுடைய வாயுவின் மகனான அனுமன்
மேனியின் மேல் அவற்றுக்கு இருமடங்கு (ஈராயிரம்) அம்புகளையும்;
வேறு உளவீரச் சிங்கம் அன்னவர் ஆக்கைமேல் உலப்பில
செலுத்தி – அவர்களின் வேறாக உள்ள சிங்க ஏற்றினை
ஒத்தவர்களாகிய வீரர்களின் உடம்பின்மேல் கணக்கிட முடியாத
அம்புகளையும் செலுத்தி; எங்கும் வெங்கணை ஆக்கினன் –
போர்க்களமெங்கும் (தன்னடைய) கொடிய அம்புகளே நிரம்பும்படி
செய்தான்.

———

8510.
இளைய மைந்தன்மேல், இராமன்மேல், இராவணி இகலி,
விளையும் வன் தொழில் வானர வீரர்மேல், மெய் உற்று
உளையும் வெஞ் சரம் சொரிந்தனன்; நாழிகை ஒன்று,
வளையும் மண்டலப் பிறை என நின்றது, அவ் வரி வில்.–70-

இராவணி – இராவணன் மகனான இந்திரசித்து; இளைய மைந்தன்
மேல் இராமன் மேல் – இளையோனாகிய இலக்குவன் மீதும் இராமன்
மீதும்; வன்தொழில் விளையும் வானர வீரர் மேல் – வலிய
போர்த்தொழிலை விளைவிக்கின்ற வானர வீரர்கள் மீதும்; இகலி –
மாறுபாடு கொண்டு; மெய்யுற்று உளையும் வெஞ்சரம் சொரிந்தனன்
– அவர்தம் உடம்புகளில் தைத்து வருத்தும் வண்ணம் வெம்மையுடைய
அம்புகளை (மழை போல் மிகுதியாகச்) சொரிந்தான்; அவ்வரிவில் –
அவ்விந்திரசித்தனுடைய கட்டமைந்த வில்லானது; வளையும்
மண்டலப் பிறை என -வளைந்து தோன்றுகின்ற வான மண்டலத்திலுள்ள பிறைச் சந்திரன்
போல; நாழிகை ஒன்று நின்றது – ஒரு நாழிகை அளவு (அம்புகளைத்
தொடர்ந்து எய்யும் தொழிலில் நிலைத்து) நின்றது.

வடமொழியில் தசரதன் மைந்தன் தாசரதி என்றாற்போலத்
தமிழிலும் இராவணன் மகன் இராவணி என வருமாறு புதிய
வழக்கினைப் புகுத்தினார்.

————

8511.
பச்சிமத்தினும், மருங்கினும், முகத்தினும், பகழி,
உச்சி முற்றிய வெய்யவன் கதிர் என உமிழ,
கச்சம் உற்றவன் கைத் துணைக் கடுமையைக் காணா,
அச்சம் உற்றனர், கண் புதைத்து ஒடுங்கினர், அமரர்.–71-

கச்சமுற்றவன் – (போர்) ஆடையை இறுகக் கட்டிப் போர்
செய்பவனாகிய இந்திரசித்து; உச்சி முற்றிய வெய்யவன் கதிரென –
உச்சிப் பொழுதில் முற்றிய வெம்மை உடையவன் ஆன சூரியனுடைய
கதிர்களைப் போன்று; பச்சிமத்தினும் முகத்தினும் மருங்கினும் பகழி
உமிழ – (இராம இலக்குவர் முதலானோரின்) மேற்புறத்தும், முகத்திலும்
இரு பக்கங்களினும் அம்புகளைச் செலுத்த; கைக்கணைக் கடுந்தொழில்
காண – (அங்ஙனம் செலுத்தப் பெற்ற) (அவனது) கையின் கணிருந்து
புறப்பட்ட அம்புகளின் கொடுந்தொழிலைக் காணுதற்கு; அமரர்
அச்சம் உற்றனர் கண் புதைத்து ஒடுங்கினர் – தேவர்கள்
அச்சமுற்றவர்களாய்க் கண்களைக் (கைகளாற்) பொத்தி மூடிக்கொண்டு
ஒடுங்கி நடுக்கமுற்றார்கள்.

——–

8512.
மெய்யில் பட்டன பட, படாதன எலாம் விலக்கி,
தெய்வப் போர்க் கணைக்கு அத்துணைக்கு அத்துணைச்
செலுத்தி,
ஐயற்கு ஆங்கு இளங் கோளரி, அறிவு இலான் அறைந்த
பொய்யின் போம்படி ஆக்கினன், கடிதினின் புக்கான்.–72-

ஐயற்கு ஆங்கு இளங்கோளரி கடிதினின் புக்கான் –
தலைவனாகிய இராமனுக்கு இளைய வலிய சிங்கம் போன்றவனாகிய
இலக்குவன், விரைந்து போர் செய்ய முற்பட்டவனாகி; மெய்யில்
பட்டன பட, படாதன எலாம் விலக்கி – தன் உடலில் பட்டனவாகிய
அம்புகள் தைத்துத் தோன்ற, தைக்கப் பெறாதனவாகிய அம்புகள்
அனைத்தையும் (தனது அம்புகளால்) தடுத்து நீக்கி; தெய்வப் போர்க்
கணைக்கு அத்துணைக்கு அத்துணை செலுத்தி – (இந்திரசித்தன்
ஏவிய) தெய்வத்தன்மையுள்ள அம்புகளுக்கு அந்தந்த அம்புகளின்
எண்ணிக்கைக்குத் தக அவ்வவற்றைச் செலுத்தி; அறிவிலான் அறைந்த
பொய்யின் போம்படி போக்கினான் – (அவ்வம்புகள் அனைத்தையும்)
அறிவில்லாதவன் கூறிய பொய்மொழிகளை ஒத்து விரைவில்
அழிந்தொழியுமாறு விலக்கிப் போக்கினான்.

———-

8513.
பிறகின் நின்றனன் பெருந்தகை, இளவலைப் பிரியான்;
‘அறன் இது அன்று’ என, அரக்கன்மேல் சரம் துரந்து
அருளான்;
இறவு கண்டிலர் இருவரும், ஒருவரை ஒருவர்;
விறகின் வெந்தன, விசும்பிடைச் செறிந்தன விசிகம்.–73-

பெருந்தகை – பெருந்தகைமையை உடையவனாகிய இராமன்; இது
அறன்று என – (இலக்குவனும், இந்திரசித்தும் தனித்து நின்று
பெரும்போரில் தான் இடையே புகுந்து அம்பு தொடுத்தல்) போர்
அறம் ஆகாதென எண்ணி; அரக்கன் மேல் சரம் துரந்து அருளான்
– அரக்கனாகிய இந்திரசித்தன் மேல் அம்பு தொடுக்காதவனாகி;
இளவலைப் பிரியான் பிறகின் நின்றனன் – இலக்குவனைப்
பிரியாதவனாய் அவன் பின்புறத்திலேயே வாளா நின்றான்; இருவரும்
ஒருவரை ஒருவர் இறவு கண்டிலர் -(இலக்குவன் இந்திரசித்து என்னும்) இருவரும், ஒருவரை ஒருவர்
(வெற்றியினால்) மேம்படுவதை (யாரும்) பார்த்தாரில்லை; விசிகம்
விசும்பிடைச் செரிந்தன விறகின் வெந்தன – (அவ்விருவராலும்
எய்யப்பட்டனவாய்) வானிடத்தே நெருங்கிய அம்புகள்
(தீயிடைப்பட்ட) விறகினையொத்து வெந்து சாம்பராயின.

—————

8514.
மாடு எரிந்து எழுந்து, இருவர் தம் கணைகளும் வழங்க,
காடு எரிந்தன; கன வரை எரிந்தன; கனக
வீடு எரிந்தன; வேலைகள் எரிந்தன; மேகம்
ஊடு எரிந்தன; ஊழியின் எரிந்தன, உலகம்.–74-

இருவர் தம் கணைகளும் – (இலக்குவன், இந்திரசித்து என்ற)
இருவருடைய அம்புகளும்; மாடு எரிந்து எழுந்து வாங்க –
பக்கங்களில் அனல் வீசி எழுந்து (யாண்டும்) பரவிச் செல்லுதலால்;
காடு எரிந்தன, கனவரை எரிந்தன – காடுகள் தீப்பற்றி எரிந்தன.
பருமையுடைய மலைகள் எரிந்தன; கனக வீடு எரிந்தன வேலைகள்
எரிந்தன – பொன்மயமான (இலங்கையின்) வீடுகள் எரிந்தன. கடல்கள்
வெதும்பின; மேகம் ஊடு எரிந்தன ஊழியின் உலகம் எரிந்தன –
மேகங்களின் (நீர் சுவறி) உட்புறமும் எரிந்தன. ஊழிக்காலத்தை ஒத்து
உலகங்களும் எரிந்தன.

———

8515.
படம் கொள் பாம்பு-அணை துறந்தவற்கு இளையவன்,
பகழி,
விடம் கொள் வெள்ளத்தின்மேலன வருவன விலக்கி,
இடங்கர்ஏறு அன எறுழ் வலி அரக்கன் தேர் ஈர்க்கும்
மடங்கல் ஐ-இரு நூற்றையும் கூற்றின்வாய் மடுத்தான்.–75-

படம் கொள் பாம்பு அணை துறந்தவற்கு இளையவன் –
படத்தினைக் கொண்ட (ஆதிசேடன் என்ற) பாம்புப் படுக்கையை
விட்டு (த்தசரதன் மகனாக) அவதரித்த (திருமாலாகிய) இராமனுடைய
தம்பி இலக்குவன்; வெள்ளத்தின் மேலன வருவன – வெள்ளத்தினும்
அதிகமாக வருவனவாகிய; விடங் கொள் பகழி விலக்கி – விடத்தைக்
தன்னிடம் கொண்ட அம்புகளைத் தடுத்து; எறுழ் வலி அரக்கன் தேர்
– மிக்க வலிமையுடைய அரக்கனாகிய இந்திரசித்தன் தேரினை;
இடங்கர் ஏறு என ஈர்க்கும் – (குருதி வெள்ளத்தில்) ஆண்
முதலையினை ஒத்து இழுத்துச் செல்லும்; மடங்கல் ஐ-இருநூற்றையும்
கூற்றின்வாய் மடுத்தான் – சிங்கங்கள் ஆயிரத்தையும் கூற்றுவன்
வாயுட் புகுமாறு கொன்றொழித்தான்.

———-

8516.
தேர் அழிந்திட, சேமத் தேர் பிறிது இலன், செறிந்த
ஊர் அழிந்திடத் தனி நின்ற கதிரவன் ஒத்தான்;
‘பார் அழிந்தது, குரங்கு எனும் பெயர்’ எனப் பகைத்த
சூர் அழிந்திடத் துரந்தனச் சுடு சரம் சொரிந்தான்.–76-

தேர் அழிந்திட சேமத்தேர் பிறி்து இலன் – (தன்) தேர் அழிந்து
பட (ஏறுதற்கு) சேமத்தேர் பிறிதொன்றும் இல்லாதவனாகிய
இந்திரசித்து; செறிந்த ஊர் அழிந்திடத் தனிநின்ற கதிரவன்
ஒத்தான் – நெருங்கியமைந்த ஊர்கோள் அழிந்து மறையத் தனித்து
நின்ற கதிரவனை ஒத்துத் தோன்றியவனாய்; பார் அழிந்தது, குரங்கு
எனும் பெயர் என – பூமியின் கண் குரங்கு என்னும் (இனமேயன்றிப்)
பெயரும் அழிந்தொழிந்தது என்னும் படியாக; பகைத்த சூர்
அழிந்திடத் துரந்து அனச் சுடுகரம் சொரிந்தான் – பகை கொண்டு
எதிர்த்த சூரபதுமன் அழியும் படியாக (முருகப்பெருமானால்)
ஏவப்பெற்ற வேற்படையினை ஒத்த சுட்டழிக்குந்தன்மை வாய்ந்த
அம்புகளை (வானரப் படைமீது) பொழிந்தான்.

——–

8517.
அற்ற தேர்மிசை நின்று போர் அங்கதன் அலங்கல்
கொற்றத் தோளினும், இலக்குவன் புயத்தினும், குளித்து
முற்ற, எண் இலா முரண் கணை தூர்த்தனன்; முரண்
போர்,
ஒற்றைச் சங்கு எடுத்து ஊதினான், உலகு எலாம் உலைய.–77-

அற்ற தேர்மிசை நின்று – (இந்திரசித்து) அறுபட்டுச் சிதைந்த
(தன்) தேரின்மேல் நின்று; போர் அங்கதன் அலங்கல் கொற்றத்
தோளினும் – போர் வலி மிக்க அங்கதனுடைய மாலையணிந்த வெற்றி
பொருந்திய தோளின் மேலும்; இலக்குவன் புயத்தினும் குளித்து
முற்ற – இலக்குவன் தோளிலும் அழுந்தி நிறையுமாறு; எண் இலா
முரண்கணை தூர்த்தனன் – அளவில்லாத வலிய அம்புகளைச்
சொரிந்து நிரப்பினான்; உலகு எலாம் உலைய முரண்போர் ஒற்றைச்
சங்கு எடுத்து ஊதினான் – உலகங்க ளெல்லாம் நடுங்கும்படியாக
(தனது) ஒப்பற்ற சங்கினை எடுத்து ஊதினான்.

———-

8518.
சங்கம் ஊதிய தசமுகன் தனி மகன் தரித்த
கங்கணத்தொடு கவசமும் மூட்டு அறக் கழல,
வெங் கடுங் கணை ஐ-இரண்டு உரும் என வீசி,
சி்ங்கஏறு அன்ன இலக்குவன் சிலையை நாண்எறிந்தான்.–78-

சிங்க ஏறு அன்ன இலக்குவன் – ஆண் சிங்கத்தினை ஒத்த
இலக்குவன்; சங்கம் ஊதிய தசமுகன் தனிமகன் தரித்த – (வெற்றிச்)
சங்கினை ஊதிய இராவணனின் ஒப்பற்ற மகனாகிய இந்திர சித்து
அணிந்திருந்த; கங்கணத்தொடு கவசமும் மூட்டு அறக் கழல – வீர
கங்கணத்துடன் (மார்பிலணிந்த) கவசமும் மூட்டுவாய் விண்டு
கழலும்படி; வெங்கடுங்கணை ஐ-இரட்ணடு உரும் என வீசி –
வெம்மையும் விரைவும் வாய்ந்த அம்புகள் பத்தினை இடியேறு
என்னும்படி எய்து; சிலையை நாண் எறிந்தான் – தன் வில்லின்
நாணைத் தெறித்துப் பேரொலி எழச் செய்தான்.

——–

இலக்குவன் வெற்றிக்கு வானரர் ஆர்த்தல்
8519.
கண்ட கார் முகில் வண்ணனும், கமலக்கண் கலுழ,
துண்ட வெண் பிறை நிலவு என முறுவலும் தோன்ற,
அண்டம் உண்ட தன் வாயினால், ‘ஆர்மின்’ என்று
அருள,
‘விண்டது அண்டம்’ என்று, உலைந்திட ஆர்த்தனர்
வீரர்.–79-

கண்ட கார் முகில் வண்ணனும் கமலக்கண் கலுழ – (தம்பியின்
போர் வன்மையைக்) கண்ட கருமுகில் வண்ணனாகிய இராமனும்,
செந்தாமரை போலும் கண்கள் மகிழ்ச்சிக் கண்ணீர் சிந்த; துண்ட
வெண் பிறை நிலவு என முறுவலும் தோன்ற – துண்டமாகிய
வெள்ளிய பிறைச் சந்திரனது நிலவினைப் போன்று (தன் முகத்தில்)
புன்சிரிப்பின் ஒளி தோன்ற! அண்டம் உண்ட தன் வாயினால்
‘ஆர்மின்’ என்று அருள – அண்டத்தை உண்ட தன் வாயினால் (நம்
படை வீரர் அனைவரும்) ‘ஆரவாரம் செய்வீர்களாக’ எனப்
பணித்தருள; விண்டது அண்டம் என்று உலைந்திட வீரர்
ஆர்த்தனர் – ‘இவ்வண்டம் பிளவுற்றது’ என்று உலகத்தார்
நடுங்கும்படியாக (வானர) வீரர்கள் (பேரொலியுண்டாக வாய் விட்டு)
ஆரவாரித்தார்கள்.

———–

இலக்குவன், அயன்படை தொடப்புக இராமன் தடுத்தல்
8520.
கண் இமைப்பதன் முன்பு போய் விசும்பிடைக் கரந்தான்;
அண்ணல், மற்றவன் ஆக்கை கண்டறிகிலன் ஆகி,
பண்ணவற்கு, ‘இவன் பிழைக்குமேல், படுக்கும் நம்
படையை;
எண்ணம்மற்று இலை; அயன் படை தொடுப்பென்’ என்று
இசைத்தான்.–80-

கண் இமைப்பதன் முன்பு போய் விசும்பிடைக் கரந்தான் –
(அப்பொழுது இந்திரசித்து) கண்ணிமைக்கும் நேரமாகிய நொடிப்
பொழுதிற்கு முன்பே விரைந்து சென்று ஆகாயத்தில் மறைந்தான்;
அண்ணல், மற்றவன் ஆக்கை கண்டறிகிலன் – (அதனை உணர்ந்த)
பெருமை சான்றவனாகிய இலக்குவன், அவ்விந்திரசித்தின்
உடம்பினைக் கண்டறிய இயலாதவனாய்; இவன் பிழைக்கு மேல்
நம் படையைப் படுக்கும் – இவ்விந்திரசித்து இவ்விடத்தை விட்டு
இப்பொழுது தப்பிப் பிழைப்பானாயின் நம் சேனைகளை
அழித்தொழிப்பான்; எண்ணம் மற்று இலை அயன் படை
தொடுப்பல் என்று ஆழிப்பண்ணவற்கு இசைத்தான் – (எனவே)
இப்பொழுது சிந்தித்துச் செய்தக்க செயல் வேறில்லை, பிரமாத்திரத்தை
(இவன் மேல் இப்பொழுதே) தொடுப்பேன் எனச்
சக்கரப்படையோனாகிய திருமாலின் அமிசமாகிய இராமனுக்கு எடுத்துக்
கூறினான்.

——–
8521.
ஆன்றவன் அது பகர்தலும், ‘அறநிலை வழாதாய்!
ஈன்ற அந்தணன் படைக்கலம் தொடுக்கில், இவ்
உலகம்
மூன்றையும் சுடும்; ஒருவனால் முடிகிலது’ என்றான்,
சான்றவன்; அது தவிர்ந்தனன், உணர்வுடைத் தம்பி.–81-

ஆன்றவன் அது பகர்தலும் – (குணங்களால்) நிறைந்தவனாகிய
இலக்குவன் அவ்வாறு கூறிய அளவில்; சான்றவன் – (எவ்வுயிர்க்கும்)
சாட்சியாய் விளங்கும் இறைவனாகிய இராமன்; ‘அறநிலை வழாதாய்!’
– (தன் தம்பியை நோக்கி) அற நெறியின் நிற்பதினின்றும் வழுவாது
ஒழுகுபவனே! ஈன்ற அந்தணன் படைக்கலம் தொடுக்கில் – (நீ
கூறிய வண்ணம்) உலகினைப் படைத்த வேதியனாகிய பிரமனது
படைக்கலத்தைத் தொடுத்து எய்தனை என்றால்; ஒருவனால் முடிகிலது,
இவ்வுலகம் மூன்றையும் சுடும் என்றான் – (அப்பிரமாத்திரம்)
அவ்விந்திரசித்துவாகிய ஒருவனை மட்டும் அழிப்பதோடு நில்லாமல்
(மேல், கீழ், நடு என்னும்) இவ்வுலகங்கள் மூன்றினையும் ஒரு சேரச்
சுட்டழிக்கும் என அறிவுறுத்தினான்; உணர்வுடைத் தம்பி அது
தவிர்ந்தனன் – (அதனைக் கேட்ட) நல்லுணர்வுடைய தம்பியாகிய
இலக்குவன் (பிரம்மாத்திரம் தொடுத்தலாகிய) அச்செயலைச் செய்யா
தொழிந்தான். ஆன்றவன் – (அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம் முதலான
குணங்களால்) நிறைந்தவன். சான்றவன் – சாட்சியாய் நிற்கும்
இறைவன் – இங்கு இராமனைக் குறித்தது. உணர்வுடைத் தம்பி –
தானே உணரவல்ல அறிவுடைத்தம்பி. இலக்குவன் இங்கு,

———

இந்திரசித்தன் தெய்வப்படையை விட எண்ணி மறைதல்
8522.
மறைந்துபோய் நின்ற வஞ்சனும், அவருடை மனத்தை
அறிந்து, தெய்வ வான் படைக்கலம் தொடுப்பதற்கு
அமைந்தான்,
‘பிறிந்து போவதே கருமம், இப்பொழுது’ எனப்
பெயர்ந்தான்,
செறிந்த தேவர்கள் ஆவலம் கொட்டினர், சிரித்தார்.–82-

மறைந்து போய் நின்ற வஞ்சனும் – (விரைந்து) மறைந்து போய்
வானில் வந்தவனாகிய இந்திரசித்து; அவருடை மனத்தை அறிந்து –
(இராம இலக்குவர் எனும்) அவ்விருவருடைய மனக்கருத்தை அறிந்து;
தெய்வவான் படைக்கலம் தொடுப்பதற்கு அமைந்தான் – (அவர்கள்
தன்மேல் எய்யாத) தெய்வத்தன்மை வாய்ந்த உயர்ந்த
படைக்கலமாகிய பிரம்மாத்திரத்தை (தான் அவர்கள் மீது)
எய்வதற்குப் பொருந்தியவனாகி; இப்பொழுது பிறிந்து போவதே
கருமம் எனப் பெயர்ந்தான் – ‘இப்பொழுது இவ்விடத்தை விட்டு
நீங்கிச் செல்வதே செய்யத்தக்க செயலாகும்’ எனக்கருதி
(அவ்விடத்தினின்றும்) ப்போயினன்; செறிந்த தேவர்கள் ஆவலம்
கொட்டினர், சிரித்தார் – (போர்ச்செயல் காணத்) திரண்டிருந்த
தேவர்கள் (இந்திரசித்தனின் கருத்தை உணராதவர்களாய்) கை
கொட்டி ஆரவாரித்துச் சிரித்தனர்.

———-

8523.
செஞ் சரத்தொடு செம்மழை விசும்பின்மேல் செல்ல,
மஞ்சின் மா மழை போயினது ஆம் என மாற,
‘அஞ்சினன் அகன்றான்’ என்பது அறிந்தனர் ஆர்த்தார்-
வெஞ் சினம் தரு களிப்பினர், வானர வீரர்.–83-

செஞ்சரத்தொடு செம்மழை விசும்பிடைச் செல்ல – செம்மை
வாய்ந்த (இலக்குவனது) அம்புடன் கூடிய செம்மேகம் வானத்தின்
கண்ணே செல்ல; மஞ்சின் மாமழை போயினது ஆம் என மறைய –
(அங்குள்ள கரிய நிறமுடைய) மழைமேகம் (அவ்விடத்தை விட்டு)
அகன்று சென்றது என்னுமாறு (கருநிறமுடை இந்திரசித்து)
அவ்விடத்தினின்றும் மறைந்துவிட; அஞ்சினன் அகன்றான் என
அறிந்தனர் வானர வீரர் – இந்திரசித்து பொருதற்கு அஞ்சியவனாய்
போர்க்களத்தை விட்டு ஓடினான் என்பதனை அறிந்தவர்களாகிய
வானரவீரர்கள்; வெஞ்சினம் தருகளிப்பினர் ஆர்த்தார் – மிகுந்த
சினமும் அதன் பயனாகிய வெற்றிக்களிப்பும் உடையவர்களாய்
ஆரவாரித்தார்கள்.

——–

8524.
உடைந்த வானரச் சேனையும், ஓத நீர் உவரி
அடைந்தது ஆம் என வந்து, இரைத்து, ஆர்த்து, எழுந்து
ஆடி,
தொடர்ந்து சென்றது; தோற்றவன், யாவர்க்கும் தோற்றான்
கடைந்த வேலைபோல் கலங்குறும் இலங்கையில்
கலந்தான்.–84-

உடைந்த வானரச் சேனையும் – (முன் இந்திரசித்தனின் சங்க
முழக்கங் கேட்டு அஞ்சி) தோற்றுப் பிரிந்து பின்னடைந்த வானர
சேனையும்; ஓதநீர் உவரி அடைந்தது ஆம் என – கடலினின்றும்
புறத்தே சென்ற ஓதமாகிய நீர் மீண்டும் கடலைச் சேர்ந்தாற் போன்று;
இரைந்து, ஆர்த்து, எழுந்து ஆடித் தொடர்ந்து சென்றது –
(திரும்பி வந்து) பேரிரைச்சலுடன் ஆரவாரித்து எழுந்து கூத்தாடி
(ஏனைய வானர சேனையுடன்) தொடர்ந்து சென்றது; தோற்றவன்
யாவர்க்கும் தோற்றான் – தோல்வியுற்றவனாகிய இந்திரசித்து, யாவர்
கண்ணுக்கும் புலப்படாதவனாகி; கடைந்த வேலை போல் கலங்குறும்
இலங்கையில் கலந்தான் – (முன்னம் மந்தர மலையால்)
கடையப்பெற்ற கடலைப் போலக் (பகைவர் தாக்குதலால்) கலங்கிய
இலங்கை மாநகரைச் சேர்ந்தான்.

———

இராவணி கருத்து உணராத இராம-இலக்குவர் போர்க்கோலம் களைதல்
8525.
‘எல் கொள் நான்முகன் படைக்கலம், இவர் என்மேல்
விடா முன்,
முற்கொல்வேன்’ எனும் முயற்சியன், மறை முறை
மொழிந்த
சொல் கொள் வேள்வி போய்த் தொடங்குவான்
அமைந்தவன் துணிவை
மல் கொள் தோளவர் உணர்ந்திலர்; அமர்த் தொழில்
மறந்தார்.–85-

‘இவர் எல்கொள் நான்முகன்’ படைக்கலம் என்மேல்
விடாமுன் – (இராம இலக்குவராகிய) இவர்கள் ஒளி பொருந்திய
அயன்படையை என்மேல் செலுத்துவதற்கு முன்பு; முற்கொள்வேன்
எனும் முயற்சியன் – (அதனை) முற்படக் கொண்டு (இவர்மேற்)
செலுத்துவேன் என்னும் போர்த்தொழில் முயற்சியை உடையவனாய்ச்
சென்று; மறை முறை மொழிந்த சொல்கொள் வேள்வி – வேத
முறைப்படி விதிக்கப்பட்ட மந்திரங்களைக் கொண்ட யாகத்தினை;
போய்த் தொடங்குவான் அமைந்தவன் துணிவை – சென்று
தொடங்குதற்குப் பொருந்திய இந்திரசித்தனின் மனத்துணிவை;
மல்கொள் தோளவர் உணர்ந்திலர் – வலிமை மிக்க புயங்களை
உடையவரான இராம இலக்குவர் உணராதவர்களாய், அவனது
வஞ்சனைத்திறனை (அறவே) மறந்தாராயினர்.

———-

8526.
அனுமன் அங்கதன் தோளின்நின்று இழிந்தனர் ஆகி,
தனுவும், வெங் கணைப் புட்டிலும், கவசமும், தடக்
கைக்கு
இனிய கோதையும், துறந்தனர், இருந்தனர், இமையோர்
பனி மலர் பொழிந்து ஆர்த்தனர்; வாழ்த்தினர்
பல்கால்.–86-

அனுமன் அங்கதன் தோளின் நின்று இழிந்தனர் ஆகி –
(இராம இலக்குவராகிய இருவரும் முறையே) அனுமன், அங்கதன்
என்வர்களுடைய தோள்களினின்றும் (தரையில்) இறங்கியவர்களாய்;
தனுவும், வெங்கணைப் புட்டிலும் கவசமும்,
தடக்கைக்கு இனிய கோதையும், துறந்தனர் இருந்தனர் – வில்லும்,
கொடிய அம்புகளைக் கொண்ட தூணியும், மார்புக் கவசமும், பெரிய
கைகட்கு இனியவாகிய கையுறையும் ஆகியவற்றை நீக்கியவர்களாய் (ப்
போர்க்கோலம் களைந்து) இருந்தார்கள்; இமையோர் பனிமலர்
பொழிந்து வாழ்த்தொலி பரப்பி ஆர்த்தனர் – (அப்பொழுது)
தேவர்கள் குளிர்ந்த மலர்களைச் சொரிந்து வாழ்த்தொலி எங்கணும்
பரவுமாறு ஆரவாரித்தனர்;

——–

8527.
ஆர்த்த சேனையின் அமலை போய் விசும்பினை
அலைக்க,
ஈர்த்த தேரொடும் கடிது சென்றான், அகன்று இரவி;
‘தீர்த்தன்மேல் அவன் திசைமுகன் படைக்கலம் செலுத்தப்
பார்க்கிலேன்; முந்திப் படுவல் என்பான்’ எனப் பட்டான்.–87-

ஆர்த்த சேனையின் அமலை போய் விசும்பினை அலைக்க –
ஆரவாரித்த சேனையில் பேரொலி சென்று வானத்தினைக் கலக்க
முறச் செய்ய; ஈர்த்த தேரொடும் கடிது சென்றான், அகன்று இரவி
– (குதிரைகளால்) இழுக்கப் பெற்ற தேருடனே (அவ்விடத்தை) விட்டு
நீங்கி விரைந்து சென்றவனாகிய கதிரவன்; தீர்த்தன் மேல் அவன்
திசை முகன் படைக்கலம் செலுத்தப் பார்க்கிலேன் -‘தூயோனாகிய
இலக்குவன் மீது (இந்திரசித்தாகிய) அவன் பிரம்மாத்திரத்தைச்
செலுத்தும் (வஞ்சனைச் செயலை) பார்க்க மாட்டேன்; முந்திப் படுவல்
என்பான் எனப்பட்டான் – அதற்கு முந்தியே மறைந்தொழிவேன்
என்பான் போன்று மறைந்தான்.

————-

8528.
‘இரவும் நன் பகலும் பெரு நெடுஞ் செரு இயற்றி,
உரவு நம் படை மெலிந்துளது; அருந்துதற்கு உணவு
வரவு தாழ்த்தது; வீடண! வல்லையின் ஏகி,
தரவு வேண்டினென்’ என்றனன், தாமரைக்கண்ணன்.–88-

இரவும் நன்பகலும் – இரவிலும் நல்ல பகலிலும்; பெருநெடுஞ்
செரு இயற்றி – பெரிய நீண்ட போரினைச் செய்து; உரவு நம்
படை மெலிந்துளது – வலிமை மிக்க நம் சேனை
மெலிவடைந்துள்ளது; அருந்துதற்கு உணவு வரவு தாழ்த்தது –
(சேனை வீரர்கள்)உண்ணுதற்கு உரிய உணவு வரத் தாமதித்தது; வீடண! – வீடணனே!
வல்லையின் ஏகி – (நீ) விரைந்து சென்று; தரவு வேண்டினன் –
(அதனைக் கொணர்ந்து) தருதலை விரும்புகின்றேன்; என்றனன்
தாமரைக் கண்ணன் – என (வீடணனை நோக்கிக்) கூறினான் தாமரை
போலும் கண்களை உடையவனாகிய இராமபிரான்.

————-

8529. ‘இன்னதே கடிது இயற்றுவென்’ எனத் தொழுது எழுந்தான்,
பொன்னின் மௌலியன் வீடணன், தமரொடும் போனான்;
கன்னல் ஒன்றில் ஓர் காலினின் வேலையைக் கடந்தான்;
அன்ன வேலையின் இராமன் ஈது இளையவற்கு அறைந்தான்.–89-

பொன்னின் மௌலியன் வீடணன் – பொன்னாலாகிய முடியினைத்
தரித்தவனாகிய வீடணன்; இன்னதே கடிது இயற்றுவன் – (உணவு
கொணர்தலாகிய) இச்செயலை விரைந்து செய்வேன்; எனத் தொழுது
எழுந்தான் – எனக்கூறி (இராமனை) வணங்கி எழுந்தவனாய்;
தமரொடும் போனான் – தம்மவரோடும் போயினான்; கன்னல்
ஒன்றில் – (அங்ஙனம் போனவன்) ஒரு நாழிகைக்குள்; ஓர்
காலினின் வேலையைக் கடந்தான் – ஒப்பற்ற காற்றினையொத்துக்
கடலினைக் கடந்து சென்றான்; அன்ன வேலையின் – அந்தச்
சமயத்தில்; இராமன் இளையவற்கு ஈது அறைந்தான் – இராமபிரான்
தன் தம்பியாகிய இலக்குவற்குக் (பின்வருமாறு) கூறினான்;.

—————-

8530. ‘தெய்வ வான் பெரும் படைகட்கு வரன்முறை திருந்து
மெய் கொள் பூசனை இயற்றினம் விடும் இது விதியால்;
ஐய! நான் அவை ஆற்றினென் வருவது ஓர் அளவும்,
கை கொள் சேனையைக் கா’ எனப் போர்க்களம் கடந்தான். –90-

தெய்வவான் பெரும் படைகட்கு – தெய்வத்தன்மை வாய்ந்த
உயர்ந்த பெருமை மிக்க ஆயுதங்களுக்கு; வரன் முறை திருந்து
மெய்கொள் பூசனை – வரன் முறையாகத் திருந்திய மெய்ம்மையோடு
பொருந்திய வழிபாடுகளை; இயற்றினம் விடும் இது விதியால் –
செய்தோமாகி (ப்பிறகு அவற்றை) ஏவுகின்ற இதுவே முறையான
செயலாகும்; ஐய! – ஐயனே! நான் அவை ஆற்றினென் வருவது
ஓர் அளவும் – நான் அவ்வழிபாடுகளைச் செய்து முடித்தோனாகி
(இங்கு திரும்பி) வரும் வரையில்; கை கொள் சேனையைக் –
அணி வகுத்தலைக் கொண்ட (நமது) சேனையை; ‘கா’ எனப்
போர்க்களம் கடந்தான் – (இடரின்றி) பாது காத்திருப்பாயாக’
என்று கூறிப் போர்க்களத்தை விட்டு நீங்கிப் புறத்தே சென்றான்.

——-

இந்திரசித்தன் இராவணனுக்குத் தன் திட்டத்தைக் கூறல்

8531. தந்தையைக் கண்டு, புகுந்துள தன்மையும், தன்மேல்
முந்தை நான்முகன் படைக்கலம் தொடுக்குற்ற முறையும்,
சிந்தையுள் புகச் செப்பினன்; அனையவன் திகைத்தான்;
‘எந்தை! என், இனிச் செயத் தக்கது? இசை’ என,
இசைத்தான்.–91-

தந்தையைக் கண்டு – (போர்க்களத்தை விட்டு மறைந்து
இலங்கையை அடைந்த இந்திரசித்து) தந்தையாகிய இராவணனைக்
கண்டு; புகுந்துள தன்மையும் – (போரில்) நிகழ்ந்துள்ள செயலையும்;
தன்மேல் – தன் மீது; முந்தை நான்முகன் படைக்கலம் –
பழையோனாகிய பிரமனது படைக்கலத்தை; தொடுக்குற்ற முறையும் –
(பகைவர்) தொடுத்தற்கு எண்ணிய முறைமையையும்; சிந்தையுள் புகச்
செப்பினன் – (தன் தந்தையின்) மனத்திற்பதியும்படி
எடுத்துரைத்தான்; அனையவன் திகைத்தான் – (அதனைக்
கேட்டுணர்ந்த) அவ் இராவணன் திகைப்புற்றவனாகி; எந்தை! என்
இனிச் செயத்தக்கது – ‘எந்தாய்! இப்பொழுது நம்மாற் செய்யத் தக்கது
யாது?; இசை என, இசைத்தான் – சொல்வாயாக’ எனக் கேட்க
(அவ்விந்திரசித்தனும்) (கீழ்க்கண்டவாறு) சொன்னான்.

————

8532. ‘“தன்னைக் கொல்வது துணிவரேல், தனக்கு அது தகுமேல்,
முன்னர்க் கொல்லிய முயல்க!” என்று அறிஞரே
மொழிந்தார்;
அன்ன போர் அவர் அறிவுறாவகை மறைந்து, அயன்தன்
வெல் நற் போர்ப் படை விடுதலே நலம்; இது விதியால்.–92-

தன்னைக் கொல்வது துணிவரேல் – (பிறர்) தன்னைக்
கொல்லுதற்குத் துணிந்தாராயின்; தனக்கு அது தகுமேல் – தனக்கு
அவ்வாறு தன்னைக் கொல்லத் துணிந்தவரைக் கொல்வதென்பது
இயையுமானால்; முன்னர்க் கொல்லிய முயல்க – (அவர்கள்
அச்செயலைத் தொடங்குதற்கு) முன்பே (அன்னோரைக்) கொல்லுதற்கு
முயலுக; என்று அறிஞரே மொழிந்தார் – என்று அறிஞர்களே
கூறியுள்ளனர்; அன்ன போர் அவர் அறிவுறா வகை மறைந்து –
(அவர்களின் கூற்றினுக்கு ஏற்ப நமக்கு நன்மையை விளைவிக்கின்ற)
அத்தகைய நல்ல போர்த் தொழிலினை (அப்பகைவராகிய) மானுடர்
தெரிந்து கொள்ளாதபடி மறைந்து நின்று; அயன்தன் வெல்நற்
போர்ப்படை விடுதலே நலம் – பிரம்ம தேவனுடைய வெற்றி
தருகின்ற நல்ல போர்ப்படையாகிய பிரம்மாத்திரத்தை விடுவதே
நன்மை தரும் செயலாகும்; இது விதி – இதுவே முறையுமாகும்.

——–

8533. ‘தொடுக்கின்றேன் என்பது உணர்வரேல், அப் படை
தொடுத்தே,
தடுப்பர்; காண்பரேல், கொல்லவும் வல்லர், அத் தவத்தோர்;
இடுக்கு ஒன்று ஆகின்றது இல்லை; நல் வேள்வியை இயற்றி,
முடிப்பன், அன்னவர் வாழ்வை, ஓர் கணத்து’ என
முடித்தான்.–93-

தொடுக்கின்றேன் என்பது உணர்வரேல் – யான் (பிரம்மாத்
திரத்தை) தொடுக்கின்றேன் என்ற செய்தியை (அப்பகைவர்)
அறிந்தனராயின்; அப்படை தொடுத்தே தடுப்பர் – அதே
பிரம்மாத்திரத்தை (எதிராகத்) தொடுத்து (யான் ஏவியதனை)த் தடுத்து
விடுவார்கள்; அத்தவத்தோர் காண்பரேல் கொல்லவும் வல்லர் –
தவத்திற் சிறந்தோராகிய அவர்கள் (என்னை நேரிற்)
காண்பார்களாயின் (உடனே) கொன்றுவிடவும் வல்லவர்கள்; இடுக்கு
ஒன்று ஆகின்றது இல்லை – (இது பற்றிச்) சங்கடம் ஒன்றும் நேர்ந்து
விடப் போவதில்லை; நல்வேள்வியை இயற்றி – நன்மையைத் தரும்
யாகம் ஒன்றினைச் செய்து; அன்னவர் வாழ்வை ஓர் கணத்து
முடிப்பல் – அம்மனிதர்களது வாழ்வை ஒரு கணப் பொழுதிற்குள்
முடிப்பேன்; என முடித்தான் – என உறுதியாகக் கூறினான்.
(இந்திரசித்து)

———–

8534. ‘என்னை அன்னவர் மறந்தனர் நின்று இகல் இயற்ற,
துன்னு போர்ப் படை முடிவு இலாது அவர்வயின் தூண்டின்,
பின்னை, நின்றது புரிவென்’ என்று அன்னவன் பேச,
மன்னன், முன் நின்ற மகோதரற்கு இம் மொழி வழங்கும்:–94-

அன்னவர் என்னை மறந்தனர் நின்று இகல் இயற்ற – அந்த
இராம இலக்குவர் என்னை அறவே மறந்தவராய் நின்று போர்
செய்யுமாறு; துன்னு போர்ப்படை – நெருங்கிய சேனைகளை;
முடிவிலாது அவர் வயின் தூண்டின் – ஒழிவின்றி அவர்கள் மீது
செலுத்துவாயாயின்; பின்னை நின்றது புரிவென் – பின்பு (நான்
செய்யவேண்டியதாய்) எஞ்சி நின்ற செயலைச் செய்வேன்; என்று
அன்னவன் பேச – என்று அவ் இந்திரசித்து கூறினானாக;
மன்னன், முன் நின்ற மகோதரற்கு இம்மொழி வழங்கும் –
மன்னவனாகிய இராவணன் தன் முன்னால் நின்றிருந்த மகோதரனுக்கு
(பின்வரும்) இம்மொழியினைக் கூறுவானாயினான்.

————

8535. ‘வெள்ளம் நூறுடை வெஞ் சினச் சேனையை, வீர!
அள் இலைப் படை அகம்பனே முதலிய அரக்கர்
எள் இல் எண் இலர்தம்மொடு விரைந்தனை ஏகி,
கொள்ளை வெஞ் செரு இயற்றுதி, மனிதரைக் குறுகி.–95-

வீர! – வீரனே! வெள்ளம் நூறுடை வெஞ்சினச் சேனையை –
நூறு வெள்ளம் வெஞ்சினச் சேனையை உடையையாய்; அள் இலைப்
படை அகம்பனே முதலிய அரக்கர் – கூரிய இலைத்
தொழிலமைந்த வேற்படையை உடைய அகம்பன் முதலாக உள்ள
அரக்கர்கள்; எள் இல் எண் இலர் தம்மொடு – (வீரத்தில்)
இகழ்தல் இல்லாத எண்ணற்றவராயுள்ளவர்களோடு; விரைந்தனை
ஏகி – விரைந்து சென்று; மனிதரைக் குறுகி கொள்ளை
வெஞ்செரு இயற்றுதி – (இராம இலக்குவர் என்னும்) மனிதரை
நெருங்கி வந்து உயிரைக் கவர்ந்து கொள்ளுதற்குரிய கொடிய
போர்ச்செயலை நிகழ்த்துவாயாக.

————

8536. ‘மாயை என்றன, வல்லவை யாவையும், வழங்கி,
தீ இருட் பெரும் பரப்பினைச் செறிவு உறத் திருத்தி,
நீ ஒருத்தனே உலகு ஒரு மூன்றையும் நிமிர்வாய்;
போய் உருத்து, அவர் உயிர் குடித்து உதவு’ எனப்
புகன்றான்.–96-

மாயை என்றன – மாயை என்று கூறப்படுவன; வல்லன –
(பகைவரை வெற்றி கொள்ளுதற்குரிய) தந்திரம் போன்ற பிற மிக்க
செயல்கள்; யாவையும் வழங்கி – ஆகிய அனைத்தையும் செய்து; தீ
இருட் பெரும் பரப்பினை – கொடிய மிக்க இருள் தொகுதியை; உலகு
ஒரு மூன்றையும் செறிவு உறத்திருத்தி – உலகங்கள் மூன்றினையும்
மூடுமாறு நெருக்கமாக உண்டாக்கி; நீ ஒருத்தனே நிமிர்வாய் – நீ
ஒருவனே உயர்ந்தோங்கும் வல்லமை உடையாய்; போய் – (இன்று
பெரும் படையுடன்) (இவ்விடம் விட்டு) நீங்கிச் சென்று; உருத்தவர்
உயிர் குடித்து உதவு எனப் புகன்றான் -நம்மிடம் வெகுண்டவருடைய உயிரை (இந்திரசித்தனுக்கு உறு
துணையாகி) பருகி உதவுவாயாக எனக் கூறினான் (இராவணன்).

————

மகோதரன் போர்க்குச் செல்லல்

8537. என்ற காலையின், ‘என்றுகொல் ஏவுவது?’ என்று
நின்ற வாள் எயிற்று அரக்கனும் உவகையின் நிமிர்ந்தான்;
சென்று தேர்மிசை ஏறினன்; இராக்கதர் செறிந்தார்,
குன்று சுற்றிய மத கரிக் குலம் அன்ன குறியார்.–97-

என்ற காலையின் – என்று இராவணன் கூறியபோது; என்று கொல்
ஏவுவது என்று நின்ற வாள் எயிற்று அரக்கனும் – (மன்னன்
என்னைப் போர் மேல் ஏவுவது எந்தநாளோ? என ஆவலுடன்
எதிர்பார்த்து நின்ற வாள் போலும் (கோரப்) பற்களை உடைய
அரக்கனான மகோதரனும்; உவகையின் நிமிர்ந்தான் – மகிழ்ச்சியினால்
தலை நிமிர்ந்து; சென்ற தேர்மிசை ஏறினான் – போய்த் தேர் மீது ஏறி
அமர்ந்தான்; குன்று சுற்றிய மதகரிக் குலம் அன்ன குறியார் –
மலையைச் சூழ்ந்து நின்ற மதம் செறிந்த யானைக் கூட்டத்தை ஒத்த
தன்மை உடையவரான; இராக்கதர் செறிந்தார் – அரக்கர்கள்
(அம்மகோதரனை) புடை சூழ்ந்து நெருங்கினார்கள்.

————–

8538. கோடி கோடி நூறாயிரம் ஆயிரம் குறித்த
ஆடல் ஆனைகள், அணிதொறும் அணிதொறும்
அமைந்த;
ஓடு தேர்க் குலம். உலப்பு இல, ஓடி வந்து உற்ற;
கேடு இல் வாம் பரி, கணக்கையும் கடந்தன, கிளர்ந்த.–98-

கோடி கோடி நூறாயிரம் ஆயிரம் குறித்த – கோடி கோடி
நூறாயிரம் ஆயிரம் என்னும் தொகையினவாகக் குறித்து
உரைக்கப்படும்; ஆடல் யானைகள் அணிதொறும் அணிதொறும்
அமைந்த – வெற்றி தரும் யானைகள் அணிதோறும், அணிதோறும்
பொருந்தி நின்றன; ஓடு தேர்க்குலம் உலப்பு இல கோடி வந்து
உற்ற – விரைந்து செல்லும் தேர்க் கூட்டங்கள் அளப்பு இல்லனவாகிய
கோடிகள் வந்து சேர்ந்தன; கேடில் வாம்பரி கணக்கையும் கடந்தன
கிளர்ந்த – பழுதில்லாதனவாகிய தாவிச் செல்லும் குதிரைகள்
எண்ணற்றனவாய்க் கிளர்ச்சியுடன் எழுந்தன.

————-

8539. படைக்கலங்களும், பரு மணிப் பூண்களும், பகு வாய்
இடைக் கலந்தன எயிற்று இளம் பிறைகளும், எறிப்ப,
புடைப் பரந்தன வெயில்களும் நிலாக்களும் புரள,
விடைக் குலங்கள்போல், இராக்கதப் பதாதியும் மிடைந்த.–99-

படைக்கலங்களும் – (கையிற் கொண்ட) ஆயுதங்களும்; பருமணிப்
பூண்களும் – பெரிய மணிகள் பொருந்திய அணிகளும்; பகுவாய்
இடைக் கலந்தன எயிற்று இளம் பிறைகளும் – பிளவு பட்ட
வாயினிடையே கலந்துள்ள பற்களாகிய இளம் பிறைகளும்; எறிப்ப –
ஒளி வீசுதலால்; புடைப் பரந்தன, வெயில்களும், நிலாக்களும்
புரள – பக்கத்திற் பரவிய வெயில் ஒளியும் நிலா ஒளியும் மாறி மாறி
விளங்க; விடைக் குலங்கள் போல் இராக்கதப் பதாதியும்
மிடைந்த – வலிமை மிக்க எருதுகளின் தொகுதி போன்று
இராக்கதர்களாகிய காலாட்படையும் மிக்கு நெருங்கின.

———–

8540. கொடிக் குழீஇயின கொழுந்து எடுத்து எழுந்து மேற்கொள்ள,
இடிக் குழீஇ எழு மழைப் பெருங் குலங்களை இரித்த;
அடிக் குழீஇயிடும் இடம்தொறும் பிதிர்ந்து எழுந்து ஆர்த்த
பொடிக் குழீஇ, அண்டம் படைத்தவன் கண்ணையும் புதைத்த.–100-

குழீஇயின கொடி – திரண்டனவாகிய கொடிகள்; கொழுந்து எடுத்து
எழுந்து மேற்கொள்ள – தம்கொழுவிய நுனிப்பாகங்கள் (காற்றினால்)
உயர்ந்து மேலோங்கி மேலிடத்தை அகப் படுத்துவதனால்; இடிக்குழீஇ எழுமழைப் பெருங்குலங்களை இரித்த –
இடி ஏற்றுடன் கூடி எழுந்த பெரிய மேகக் கூட்டங்களை நிலை
குலையைச் செய்தன; அடிக்குழீஇயிடும் இடம்தொறும் –
(சேனைகளின்) கால்கள் பூமியில் ஆழப் பதிய வைக்கும்
இடந்தோறும்; பிதிர்ந்து எழுந்து ஆர்த்த பொடிக் குழீஇ – பிதிர்
பட்டு எழுந்து நிரம்பிய தூளிகள் ஒருசேரத் திரண்டு; அண்டம்
படைத்தவன் கண்ணையும் புதைத்த – (மேற்சென்று) உலகத்தைப்
படைத்தவனாகிய பிரம தேவனுடைய கண்களையும் மறைந்தன.

———-

8541. ஆனை என்னும் மா மலைகளின் இழி மத அருவி
வான யாறுகள், வாசி வாய் நுரையொடு மயங்கி,
கான மா மரம் கல்லொடும் ஈர்த்தன, கடிதில்
போன, போக்க அரும் பெருமைய, புணரியுள் புக்க.–101-

ஆனை என்னும் மா மலைகளின் – யானைகள் என்னும் பெரிய
மலைகளினின்றும்; இழி மத அருவி வானயாறுகள் – விழும் மதநீர்
அருவியாகிய வான நதிகள்; வாசிவாய் நுரையொடு மயங்கி –
குதிரைகளின் வாயிலிருந்து வெளிப்படும் (விலாழி எனப்படும்)
நுரைகளுடன் கலந்து; கான மாமரம் கல்லொடும் ஈர்த்தன –
காட்டிலுள்ள பெருமரங்களைக் கற்களுடன் இழுத்துக் கொண்டு;
கடிதில் போன – விரைந்து ஓடியவை; போக்கரும் பெருமைய
புணரியுள் புக்க – தடுத்தற்கு அரிய பெருக்கத்தை உடையனவாய்க்
கடலினுள்ளே சென்று புகுந்தன.

————

8542. தடித்து மீன்குலம் விசும்பிடைத் தயங்குவ-சலத்தின்
மடித்த வாயினர், வாள் எயிற்று அரக்கர், தம் வலத்தின்
பிடித்த திண் படை விதிர்த்திட விதிர்த்திடப் பிறழ்ந்து,
பொடித்த வெம் பொறி கொதித்து மேல் போவன-போன்ற.–102-

வாள் எயிற்று அரக்கர் சலத்தின் மடித்த வாயினர் – வாள்
போற்கூரிய பற்களையுடைய அரக்கர்கள் வெகுளியால் மடித்த
வாயினை உடையவராய்;தம் வலத்தின் பிடித்த திண் படை – தம்
வலக்கையிலே பற்றிய திண்ணிய ஆயுதங்களை; விதிர்த்திட
விதிர்த்திடப் பிறழ்ந்து – அசைக்குந்தோறும் அசைக்குந்தோறும்
மாறுபட்டு; பொடித்த வெம்பொறி கொதித்து மேல்போவன –
வெளிப்பட்டுத் தோன்றிய வெவ்விய அனற் பொறிகள் கனன்று மேலே
போவன; தடித்து மீன்குலம் விசும்பிடைத் தயங்குவ போன்ற –
மின்னலும் விண்மீன் தொகுதிகளும் வானிடத்தே விளங்குவன
ஒத்தன.

———-

8543. சொன்ன நூறுடை வெள்ளம், அன்று இராவணன் துரந்த
அன்ன சேனையை வாயிலூடு உமிழ்கின்ற அமைதி,
முன்னம் வேலையை முழுவதும் குடித்தது, ‘முறை ஈது’
என்ன, மீட்டு உமிழ் தமிழ்முனி ஒத்தது, அவ் இலங்கை.–103-

நூறுடை வெள்ளம் என்று சொன்ன – நூறு வெள்ளம் என்று
எண்ணிச் சொல்லப்பட்டனவும்; இராவணன் துரந்த அன்ன
சேனையை – இராவணனால் செலுத்தப்பட்டனவும் ஆகிய அத்தகைய
சேனைகளை; வாயிலூடு உமிழ்கின்ற அமைதி – (தன்) வாயிலின்
வழியாக (ஒருங்கே) வெளிவிடுகின்ற தன்மையினால்; முன்னம்
வேலையை முழுவதும் குடித்தது – முற்காலத்தில் கடல்
முழுவதனையும் குடித்திட்டது; முறை ஈது என்ன – இம்முறையே
என்னும்படி; மீட்டு உமிழ் தமிழ் முனி ஒத்தது, அவ் இலங்கை –
அக்கடலினை மீளவும் உமிழ்ந்து வெளிப்படுத்தின தமிழ் முனிவராகிய
அகத்திய முனிவரை ஒத்துத் தோன்றியது அந்த இலங்கை நகரம்.

————

8544. சங்கு பேரியும், காளமும், தாளமும், தலைவர்
சிங்க நாதமும், சிலையின் நாண் ஒலிகளும், சின மாப்
பொங்கும் ஓதையும், புரவியின் அமலையும், பொலந் தேர்
வெங் கண் ஓலமும, மால் என, விழுங்கிய உலகை.–104-

சங்கும், பேரியும், காளமும் தாளமும் – சங்கு, பேரிகை,
எக்காளம், தாளம் முதலானவற்றின் ஒலிகளும்; தலைவர் சிங்க
நாதமும் – படைத்தலைவர்களது சிங்கத்தின் முழக்கத்தை ஒத்த
பெரு முழக்கமும்; சிலையின் நாண் ஒலிகளும் – வில் நாணின்
ஒலிகளும்; சினமாப் பொங்கும் ஓதையும் – வெகுளியுற்ற யானைகள்
கிளர்ந்தெழுப்பிய பிளிற்றொலியும்; புரவியின் அமலையும் –
குதிரைகளின் கனைப்பொலியும்; பொலந் தேர் வெங்கண் ஓலமும் –
பொன்மயமான தேர்களின் சக்கரங்களின்றெழும் ஓசையும்; மால் என
உலகை விழுங்கிய – திருமாலைப் போன்று உலகினை (த்தன்
அகத்திட்டு) விழுங்கின.

———-

அரக்கர்க்கும் வானரர்க்கும் நிகழ்ந்த பெரும் போர்

8545. புக்கதால் பெரும் போர்ப் படை, பறந்தலைப் புறத்தில்;
தொக்கதால், நெடு வானரத் தானையும் துவன்றி,
ஒக்க ஆர்த்தன, உறுக்கின, தெழித்தன, உருமின்
மிக்க வான் படை விடு கணை மா மழை விலக்கி.–105-

பெரும் போர்ப்படை பறந்தலைப் புறத்தில் புக்க – பெரும்
போரை இயற்றுதற்குரிய அந்த (அரக்கர்) சேனை போர்க்களத்துப்
புகுந்தது; நெடுவானரத் தானையும் துவன்றித் தொக்கது –
நெடிய குரங்குப்படையும் நெருங்கிக் கூடிற்று; மிக்க வான் படை
விடுகணை மாமழை விலக்கி – (பிறகு வானரப் படையானது) மிகுதியாக
இருந்த பெரிய அரக்கர் படை ஏவுகின்ற அம்பு மழையினைத்
தடுத்து; உருமின் ஒக்க ஆர்த்தன, உறுக்கின தெழித்தன –
இடி போன்று ஒருங்கே ஆரவாரித்து, தண்டித்து அதட்டினவாய்
வெகுண்டன.

————-

8546. குன்று கோடியும் கோடிமேல் கோடியும் குறித்த
வென்றி வானர வீரர்கள், முகம்தொறும் வீச,
ஒன்றின், நால்வரும் ஐவரும் இராக்கதர் உலந்தார்;
பொன்றி வீ்ழ்ந்தன, பொரு கரி, பாய் பரி, பொலந் தேர்.–106-

கோடியும் கோடிமேல் கோடியும் குன்று – கோடியும், கோடிக்கு
மேற்கோடியும் ஆக மலைகளை; குறித்த வென்றி வானர வீரர்கள் –
இலக்கு நோக்கிய வெற்றித்திறன் வாய்ந்த வானர வீரர்கள்; முகந்
தொறும் வீச – இடந்தோறும் (எடுத்து) வீசுதலால்; ஒன்றின்,
நால்வரும் ஐவரும் இராக்கதர் உலந்தார் – (அங்ஙன் எடுத்து
வீசிய மலை) ஒன்றனுக்கு இராக்கதர் நால்வரும் ஐவரும் என்ற எண்
முறையில் இறந்து பட்டார்கள்; பொருகரி, பாய்பரி பொலந்தேர்
பொன்றி வீழ்ந்தன- (அவ்வரக்கர்களுடைய) போர்த்தொழில் வல்ல
யானை, பாய்ந்து செல்லும் குதிரை, பொன்னாலாகிய தேர்
ஆகியவையும் கெட்டொழிந்தன.

————

8547. மழுவும், சூலமும், வலயமும், நாஞ்சிலும், வாளும்,
எழுவும், ஈட்டியும், தோட்டியும், எழு முனைத் தண்டும்,
தழுவும் வேலொடு கணையமும், பகழியும், தாக்க,
குழுவினோடு பட்டு உருண்டன, வானரக் குலங்கள்.–107-

மழுவும், சூலமும், வலயமும் நாஞ்சிலும் வாளும் –
(அரக்கர்களுடைய) மழுவும், சூலப்படையும், வாகுவலயமும்,
நாஞ்சிலும் வாளும்; எழுவும், ஈட்டியும், தோட்டியும் எழுமுனைத்
தண்டும் – கணைய மரமும், ஈட்டியும், அங்குசமும், மேற்பட்டெழுந்த
கூரிய முனையை உடைய தண்டாயுதமும்; தழுவும் வேலொடு
கணையமும் பகழியும் தாக்க – கையிற் பற்றிய வேற்படையுடன்
கணையமும், அம்பும் தாக்குதலால்; வானரக் குலங்கள் குழுவினோடு
பட்டு உருண்டன – வானரத் தொகுதிகள் தத்தம் குழுவுடன்
கொல்லப்பட்டு (த்தரையில்) உருண்டன.

———

8548. முற்கரங்களும், முசலமும், முசுண்டியும், முளையும்,
சக்கரங்களும், பிண்டிபாலத்தொடு தண்டும்,
கப்பணங்களும், வளையமும், கவண் உமிழ் கல்லும்,
வெற்புஇனங்களை நுறுக்கின; கவிகளை வீழ்த்த.–108-

முற்கரங்களும், முசலமும், முசுண்டியும், முளையும் – (மற்றும்
அரக்கர்கள் விடுத்த) முற்கரங்களும், இருப்புலக்கையும், முசுண்டியும்,
மூங்கிலும்,; சக்கரங்களும் பிண்டிபாலத்தொடு தண்டும் – சக்கரப்
படைகளும், பிண்டி பாலமும், தண்டும்; கப்பணங்களும், வளையமும்
கவண் உமிழ் கல்லும் – கப்பணங்களும், வளையமும், கவண்
வீசுகின்ற கல்லும், ஆகியவை; வெற்பு இனங்களை நுறுக்கின –
(குரங்குகள் வீசிய) மலைத்தொகுதிகளை பொடியாக நொறுக்கின;
கவிகளை வீழ்த்த – (அவற்றை எறிந்த) குரங்குகளைக் கொன்று
வீழ்த்தின.

———-

8549. கதிர் அயில் படைக் குலம் வரன்முறை முறை கடாவ,
அதிர் பிணப் பெருங் குன்றுகள் படப் பட, அழிந்த
உதிரம் உற்ற பேர் ஆறுகள் திசை திசை ஓட,
எதிர் நடக்கில், குரக்குஇனம்; அரக்கரும் இயங்கார்.–109-

கதிர் அயில் படைக்குலம் வரன்முறை முறை கடாவ – ஒளி
பொருந்திய கூர்மையான ஆயுதத் தொகுதிகளை (அரக்கர்கள்)
அடுத்து அடுத்து முறையே செலுத்துதலால்; குரக்கு இனம் எதிர்
நடக்கில – குரங்குத் தொகுதிகள் அரக்கர் எதிரே நடக்கவியலாதவை
ஆயின; அதிர் பிணப்பெருங் குன்றுகள் படப்பட – அதிர்ச்சியுற்று
விழும் பிணங்களாகிய பெருமலைகள் மேலும் மேலும்
உண்டாவதாலும்; அழிந்த உதிரம் உற்ற பேர் ஆறுகள் திசை
திசை ஓட – (ஆயுதங்கள் பட்டு உடல்) சிதைந்தமையால் தோன்றிய
குருதிப் பேராறுகள் (போர்க்களத்தில்) திசைகள் தோறும் ஓடுதலாலும்;
அரக்கரும் இயங்கார் – அரக்கரும் (அப்போர்க்களத்தில்)
மேற்செல்லுதற்கு இயலாதவராயினர்.

————

8550. யாவர் ஆங்கு இகல் வானரம் ஆயினர், எவரும்
தேவர் ஆதலின், அவரொடும் விசும்பிடைத் திரிந்தார்;
மேவு காதலின் மெலிவுறும் அரம்பையர் விரும்பி,
ஆவி ஒன்றிடத் தழுவினர், பிரிவு நோய் அகன்றார்.–110-

யாவர் ஆங்கு இகல் வானரம் ஆயினர் – யார் யார்
அப்போர்க்களத்தில் மாறுபட்டுப் பொருதலை உடைய வானரராகி
வந்துள்ளார்களோ; எவரும் தேவர் ஆதலின் – அவர்கள்
அனைவரும் (முன்னைத் தம் உண்மை நிலையில்) தேவர்களே
ஆதலால்; அவரொடும் விசும்பிடைத் திரிந்தார் – (தாம் உயிர்
துறந்ததால் வானர உடம்பை விடுத்து) அத்தேவர்களோடும் (ஒன்று
கூடி) விண்ணுலகில் உலவுவாராயினர்; மேவு காதலின்
மெலிவுறும் அரம்பையர் – (அங்ஙனம் பிரிந்து சென்ற அவர்களை)
மீண்டும் அடையவேண்டும் என்னும் காதலால் தளர்ந்து மெலியும்
வானுலக மகளிராகிய அரம்பையர்; விரும்பி ஆவி ஒன்றிடத்
தழுவினர் – (அவர்களை) விரும்பி உயிரோடொன்றாக இறுகத்
தழுவியவராய்; பிரிவு நோய் அகன்றார் – பிரிவுத் துன்பம்
தீர்ந்தார்கள்.

———–

8551. கரக்கும் மாயமும், வஞ்சமும், களவுமே, கடனா,
இரக்கமே, முதல் தருமத்தின் நெறி ஒன்றும் இல்லா,
அரக்கரைப் பெருந் தேவர்கள் ஆக்கின அமலன்
சரத்தின், வேறு இனிப் பவித்திரம் உள எனத் தகுமே?–111-

கரக்கும் மாயமும் வஞ்சமும் களவுமே கடனா – ஒளித்துச்
செய்யும் சூழ்வினையும், வஞ்சனையும், களவுத்தன்மையும் ஆகிய
இவற்றையே தம் செயல் முறையாகக் கொண்டு; இரக்கமே முதல்
தருமத்தின் நெறி ஒன்றும் இல்லா – இரக்கம் முதலான அறநெறி
ஏதும் இல்லாத; அரக்கரைப் பெருந்தேவர்கள் ஆக்கின – (கொடிய)
அரக்கர்களையும் பெருமையுடைய தேவர்களாக ஆக்கிய; அமலன்
சரத்தின் – தூயோனான இலக்குவனின் அம்பினைக் காட்டிலும்;
வேறு இனிப் பவித்திரம் உள எனத் தகுமே – தூய்மை
விளைவிப்பன பிற உளவெனல் பொருந்துவதோ?

————-

8552. அந்தகன் பெரும் படைக்கலம் மந்திரத்து அமைந்தான்,
இந்து வெள் எயிற்று அரக்கரும், யானையும், தேரும்,
வந்த வந்தன, வானகம் இடம் பெறாவண்ணம்
சிந்தினான் சரம், இலக்குவன், முகம்தொறும் திரிந்தான்.–112-

இலக்குவன் – இலக்குவன்; அந்தகன் பெரும் படைக்கலம்
மந்திரத்து அமைத்தான் – இயமனது பெரிய அத்திரத்தினை
மந்திரத்தால் அமைத்துக் கொண்டவனாகி; முகம் தொறும் திரிந்தான் –
போர் முகத்தில் எங்கும் திரிந்து; இந்து வெள் எயிற்று அரக்கரும் –
பிறையினை ஒத்த வெள்ளிய பற்களை உடைய அரக்கர்களும்;
யானையும், தேரும் வந்த வந்தன – யானைகளும், தேர்களும் என
அடுத்தடுத்து வந்தன அனைத்தையும்; வானகம் இடம் பெறா
வண்ணம் சிந்தினான் சரம் – (உயிர் துறந்து) வானுலகில் இடம்
கொள்ளாது நெருங்கும்படி அம்புகளைச் சிதறினான்.

————

கும்பகருணன் களத்தில் இட்ட தண்டைக் கொண்டு அனுமன் பொருதல்

8553. கும்பகன்னன் ஆண்டு இட்டது, வயிர வான் குன்றின்
வெம்பு வெஞ் சுடர் விரிப்பது, தேவரை மேல்நாள்
தும்பையின் தலைத் துரந்தது, சுடர் மணித் தண்டு ஒன்று,
இம்பர் ஞாலத்தை நெளிப்பது, மாருதி எடுத்தான்.–113-

கும்பகன்னன் ஆண்டு இட்டது – (இராவணன் தம்பியாகிய)
கும்பகருணன் அப்போர்க்களத்திலே இட்டுச் சென்றதும்; வான் வயிர
குன்றின் வெம்பு வெஞ்சுடர் விரிப்பது – பெரிய வயிர மலையினைப்
போன்று வெதும்பச் செய்யும் கடுங்கதிர்களை விரிப்பதும்; மேல்நாள்
தேவரை தும்பையின் தலைத் துரந்தது – முன்னாளில் (அரக்கரொடு
பொருதற்கு வந்த) தேவர்களைத் தும்பைப்போரில் (தோற்று ஓடும்படி)
துரத்தியதும்; இம்பர் ஞாலத்தை நெளிப்பது – (பொறுத்தற்கரிய
பாரத்தால்) இப்பூமியை நெளியச் செய்வதும் ஆகிய; சுடர்
மணித்தண்டு ஒன்று மாருதி எடுத்தான் – ஒளியுடைய மணிகள்
பதிக்கப்பெற்ற தண்டாயுதம் ஒன்றினை வாயுவின் மகனான அனுமன்
(தன் கையில்) எடுத்துக் கொண்டான்.

————–

8554. ‘காற்று அன்று, இது கனல் அன்று’ என இமையோரிடை
காணா
ஏற்றம் கடு விசையோடு உயர் கொலை நீடிய இயல்பால்,
சீற்றம் தனி உருவாய், இடை தேறாதது ஓர் மாறு ஆய்க்
கூற்றம் கொடு முனை வந்தெனக் கொன்றான், இகல்
நின்றான்.–114-

இகல் நின்றான் – (அரக்கர் மேல்) பகைகொண்டு நின்றவனாகிய
அனுமன்; காற்று அன்று இது கனல் அன்று என – இது காற்றும்
அன்று தீயும் அன்று என்று; இமையோரிடை காணா – தேவர்கள்
(தன்னோடு அக்காற்று தீ ஆகியவற்றிற்கு) வேற்றுமை உணராதவாறு;
ஏற்றம் கடுவிசையோடு உயர் கொலை நீடிய இயல்பால் –
மிகுந்த கடுவேகத்துடனே மிக்க கொலைத் தொழிலில் நிலை பெற்றுள்ள
தன்மையால்; கூற்றம் சீற்றம் தனி உருவாய் – கூற்றுவனாகிய
தெய்வம் சீற்றத்தையே தனது உருவாகக் கொண்டு; இடை தேறாதது
ஓர் மாறு ஆய் – (தன்னை இன்னான் என) வேற்றுமை தெளிந்துணர இயலாத நிலையில் மாறுபட்டு
கொடுமுனை வந்தெனக் கொன்றான் – கொடிய போர் முனைக்கு
வந்தது எனும்படி (கையிலுள்ள தண்டாயுதத்தால் அரக்கரைக்)
கொன்றான்.

—————-

8555. வெங் கண் மதமலைமேல், விரை பரிமேல், விடு தேர்மேல்,
சங்கம் தரு படை வீரர்கள் உடல்மேல், அவர் தலைமேல்,
“எங்கும் உளன் ஒருவன்” என இரு நான் மறை தெரிக்கும்
செங் கண்ணவன் இவனே’ எனத் திரிந்தான்-கலை
தெரிந்தான்.–115-

கலை தெரிந்தான் – பல கலைகளையும் கற்றுணர்ந்தவனாகிய
அனுமன்; வெங்கண் மத மலைமேல் – வெகுளி மிக்க கண்களையும்
மதத்தையுமுடைய மலை போன்ற யானையின் மேலும்; விரை பரிமேல்
விடுதேர் மேல் – விரைந்து பாயும் குதிரையின் மேலும் (வீரர்களால்)
செலுத்தப்படும் தேரின் மேலும்; சங்கம் தரு படை வீரர்கள் உடல்
மேல் அவர் தலை மேல் – திரளாக உள்ள படைவீரர்களின் உடலின்
மீதும், அவர்களின் சிரசின் மேலும்; எங்கும் உளன் ஒருவன் என
இருநான்மறை தெரிக்கும் – எங்கும் நீக்கமற நிறைந்துள்ளவன்
ஒருவனே எனப் பெருமை சான்ற நான்கு வேதங்களால் தெளிந்து
போற்றப்பெறும்; ‘செங்கண்ணவன் இவனே’ எனத் திரிந்தான் –
செந்தாமரைக் கண்ணன் (திருமால்) இவனே என (கண்டோர்)
கருதும்படி (தான் ஒருவனே எங்கும் உள்ளவனாகித்) திரிந்தான்.

———-

8556. கிளர்ந்தாரையும் கிடைத்தாரையும் கிழித்தான், கனல்
விழித்தான்;
களம்தான் ஒரு குழம்பு ஆம் வகை அரைத்தான்;
உருக் கரைத்தான்;
வளர்ந்தான் நிலை உணர்ந்தார், ‘உலகு ஒரு மூன்றையும்
வலத்தால்
அளந்தானும் முன் இவனே?’ என இமையோர்களும்
அயிர்த்தார்.–116-

கிளர்ந்தாரையும், கிடைத்தாரையும் கனல் விழித்தான்
கிழித்தான் – (அனுமன் சினத்தால்) பொங்கி எழுந்தாரையும்,
எதிர்ப்பட்டாரையும் தீப்பொறி தோன்ற (ச்சினந்து) நோக்கியவனாய்
அவர் தம் உடம்பைக் கிழித்தெறிந்தான்; களந்தான் ஒரு குழம்பாம்
வகை அரைத்தான் உருக்கரைத்தான் – போர்க்களம் எங்கும்
(நிணக்) குழம்பாகுமாறு (அரக்கர் உடம்புகளை) அரைத்து
உருவின்றிக் கரைத்தவனாய்; வளர்ந்தான் நிலை உணர்ந்தார் –
பேருருவாக வளர்ந்து தோன்றிய அவனது நிலையை
உணர்ந்தவர்களாகிய; இமையோர்களும் – தேவர்களும்; உலகு ஒரு
மூன்றையும் வலத்தால் அளந்தானும் முன் இவனே – ஒப்பற்ற
மூன்று உலகங்களையும் தனது வலிமையால் முன்னம் அளந்தவனும்
இவன்தானோ? என அயிர்த்தார் – என ஐயுற்று வியந்தார்கள்.

————

8557. மத்தக் கரி நெடு மத்தகம் வகிர்பட்டு உக மணி மேல்
முத்தின் பொலி முழு மேனியன், முகில் விண் தொடு
மெய்யான்,
ஒத்தக் கடையுகம் உற்றுழி, உறு கால் பொர, உடு மீன்
தொத்தப் பொலி கனகக் கிரி வெயில் சுற்றியது ஒத்தான்.–117-

மத்தக் கரி நெடு மத்தகம் வகிர்பட்டு உக – மதம் பொருந்திய
யானையின் நெடிய மத்தகம் பிளவுபட்டுச் சிந்த; மணிமேல் முத்தின்
பொலி முழுமேனியன் – மணியின் மேல் முத்துக்கள் பொலிந்து
விளங்கினாற் போன்ற முழுவுடம்பினை உடையவனும்; முகில்விண்
தொடு மெய்யன் – மேகந் தவழும் ஆகாயத்தைத் தொடுகின்ற
உடம்பினை உடையவனுமாகிய அனுமன்; ஒத்தக் கடையுகம் உற்றுழி-
(எல்லாப் பொருளும்) ஒருசேர அழியும் அந்த ஊழிக் காலம்
வந்தபோது; உறுகால் பொர, உடுமீன் – பெருங்காற்று மோத
உடுவாகிய விண்மீன்கள்; தொத்தப் பொலி, வெயில் சுற்றியது
கனகக் கிரி ஒத்தான் – தொத்தி நிற்க விளங்குவதும் கதிரவனால்
சூழப் பெறுவதும் ஆகிய பொன் மயமான மேருமலையை ஒத்துத்
தோன்றினான்.

——————-

8558. இடித்தான் நிலம் விசும்போடு என, இட்டான் அடி,
எழுந்தான்;
பொடித்தான், கடற் பெருஞ் சேனையை; பொலந்
தண்டு தன் வலத்தால்
பிடித்தான்; மத கரி, தேர், பரி, பிழம்பு ஆனவை குழம்பா
அடித்தான்; உயிர் குடித்தான்; எடுத்து ஆர்த்தான்;
பகை தீர்த்தான்.–118-

இடித்தான் நிலம் விசும்போடு என – (அவ்அனுமன்) நிலத்தினை
ஆகாயத்துடன் இடித்தான் என்னும்படி; அடி இட்டான் எழுந்தான் –
(பூமியில்) அடி இட்டு (வான முகடளவும்) நிமிர்ந்தான்; பொலந்தண்டு
தன் வலத்தால் பிடித்தான் – பொன் மயமான தண்டாயுதத்தை தன்
வன்மையாற் பற்றியவனாகி; கடற் பெருஞ்சேனையைப் பொடித்தான் –
கடல் போலும் (அரக்கரது) பெருஞ் சேனையைப் பொடியாக்கினான்;
மதகரி. தேர், பரி பிழம்பு ஆனவை – மதம் பொருந்திய யானை,
தேர், குதிரை என்னும் வடிவுள்ளவைற்றை; குழம்பா அடித்தான் –
உருச்சிதைத்துக் குழம்பாகும்படி அடித்தான்; உயிர் குடித்தான், பகை
தீர்த்தான் எடுத்து ஆர்த்தான் – (அவற்றின்) உயிரைக் குடித்துத் தன்
பகையை ஒழித்தவனாகிப் பேர் ஆரவாரஞ் செய்தான்.

——–

8559. நூறாயிரம் மத மால் கரி, ஒரு நாழிகை நுவல்போது,
ஆறாய், நெடுங் கடுஞ் சோரியின் அளறு ஆம் வகை
அரைப்பான்,
ஏறு ஆயிரம் எனலாய் எழு வய வீரரை இடறி,
தேறாது உறு கொலை மேவிய திசை யானையின் திரிந்தான்.–119-

ஒரு நாழிகை நுவல்போது – ஒரு நாழிகை எனக் கூறப்படும் கால
அளவில்; நூறாயிரம் மதமால் கரி – ஒரு நூறாயிரம் மத யானைகளை;
ஆறாய், நெடுங் கடுஞ் சோரியின் – ஆறாகிப் பெருகும் நெடிய கடிய
இரத்த வெள்ளத்தில் இட்டு;அளறு ஆம் வகை அரைப்பான் –
சேறாகும்படி துகைத்து அரைப்பவனாகிய அனுமன்; ஏறு ஆயிரம்
எனலாய் எழு வய வீரரை இடறி – ஆண் சிங்கங்கள் ஆயிரம் எனும்
படி பொங்கி எழுந்த வலிய (அரக்க) வீரர்களை (க்காலினால்) இடறித்தள்ளி; தேறாது உறு கொலை
மேவிய திசை யானையின் திரிந்தான் – (மத மயக்கத்தினின்றும்)
தெளியாது மிகுந்த கொலைத்தொழிலைப் பொருந்திய திசை யானை
போன்று (போர்க்களமெங்கும்) திரிவானாயினான்.

———-

8560. தேர் ஏறினர், பரி ஏறினர், விடை ஏறினர், சின வெங்
கார் ஏறினர், மழை ஏறினர், ‘கலை ஏறினர், பல வெம்
போர் ஏறினர், புகழ் ஏறினர், புகுந்தார் புடை
வளைந்தார்;
நேர் ஏறினர் விசும்பு ஏறிட, நெரித்தான், கதை
திரித்தான்.–120-

தேர் ஏறினர், பரி ஏறினர் விடை ஏறினர் – தேரில்
ஏறியவர்களும், குதிரைமீது ஏறியவர்களும், விடையேற்றினை ஒத்த
(காலாட்படை) வீரர்களும்; சினவெங்கார் ஏறினர் மழை ஏறினர் –
வெகுளி மிக்க கொடிய மேகத்தை ஒத்த யானையின் மேல்
ஏறியவர்களும் (அம்பு) மழையை மிகுதியாகப் பொழிகின்றவரும்;
கலை ஏறினர், பலவெம் போர் ஏறினர் புகழ் ஏறினர் –
போர்க்கலையில் வல்லவரும், பல கொடிய போர்களில் ஈடுபட்டு
வெற்றிப் புகழ் கொண்டவரும் (ஆகிய அரக்கவீரர்கள்); புகுந்தார்
புடை வளைத்தார் – (இப்போது போர்க்களத்திற்) புகுந்து
(அனுமனைச்) சுற்றி வளைத்துக் கொண்டனர்; நேர் ஏறினர்
விசும்பு ஏறிட – (இங்ஙனம்) நேர்பட்டு வந்து வளைத்துக்
கொண்டவர்கள் அனைவரும் விண்ணுலகிற் செல்லுமாறு; கதை
திரித்தான் நெரித்தான் – (அனுமன்) தண்டாயுதத்தைச்
சுழற்றியவனாய் (அவர்களை) நெரித்துக் கொன்றான்.

————

8561. அரி குல மன்னன், நீலன், அங்கதன், குமுதன் சாம்பன்
பரு வலிப் பனசன் என்று இப் படைத் தலை வீரர் யாரும்,
பொரு சினம் திருகி, வென்றிப் போர்க் கள மருங்கில்
புக்கார்;
ஒருவரை ஒருவர் காணார்; உயர் படைக் கடலின் உள்ளார்.–121-

அரிகுல மன்னன், நீலன் அங்கதன், குமுதன், சாம்பன்
பருவலிப் பனசன் – வானர குல மன்னனாகிய சுக்கிரீவன், நீலன்,
அங்கதன், குமுதன், சாம்பன், பெருவன்மை படைத்த பனசன்; என்று
இப்படைத் தலைவீரர் யாரும் – என்று தலைமை பெற்ற இச்சேனை
வீரர்கள் யாவரும்; பொருசினம் திருகி – போர் செய்தற்குரிய
வெகுளியால் மாறுபட்டு; வென்றிப் போர்க்கள மருங்கில் புக்கார்-
வெற்றியை விளைக்கும் போர்க் களத்தின் கண்ணே (தனித்தனியே)
புகுந்தவர்கள்; ஒருவரை ஒருவர் காணார் – ஒருவரை ஒருவர்
சந்தித்துக்) காணாதவர்களாய்; உயர் படைக் கடலின் உள்ளார்-
அரக்கர் படையாகிய பெரிய கடலினுள்ளே (தனித்தனியே)
உள்ளவரானார்கள்.

———–

அனுமன் – அகம்பன் போர்

8562. தொகும் படை அரக்கர் வெள்ளம் துறைதொறும் அள்ளித்
தூவி,
நகம் படை ஆகக் கொல்லும் நரசிங்கம் நடந்தது என்ன,
மிகும் படைக் கடலுள் செல்லும் மாருதி, வீர வாழ்க்கை
அகம்பனைக் கிடைத்தான், தண்டால் அரக்கரை
அரைக்கும் கையான்.–122-

தொகும்படை அரக்கர் வெள்ளம் – கூட்டமாக வந்து கூடிய
சேனைகளாகிய அரக்கர் வெள்ளத்தை; துறை தொறும் அள்ளித்
தூவி – (போர் முனைகளாகிய) துறைகள் தோறும் வாரி வீசி; நகம்
படை ஆகக் கொல்லும் – (தன்னுடைய விரலின்) நகமே படைக்
கலனாகக் கொன்று குவிக்கும்; நரசிங்கம் நடந்தது என்ன – நரசிங்கம்
(ஆகிய திருமால் முன்னர்) நடந்தது போன்று; மிகும் படைக்
கடலுள் செல்லும் மாருதி – மிக்கு நிறைந்த அரக்கர் சேனையாகிய
கடலினுள்ளே செல்லும் அனுமன்; தண்டால் அரக்கரை அரைக்கும்
கையான் – தண்டாயுதத்தினால் அரக்கரை அரைக்கும் கையை உடையவனாகி (ச்செல்லும் போது); வீர வாழ்க்கை
அகம்பனைக்கிடைத்தான் – வீரத் திறத்துடன் வாழ்பவனாகிய
அகம்பன் என்னும் அரக்கனை எதிர்ப்பட்டான்.

———–

8563. மலைப் பெருங் கழுதை ஐஞ்ஞூற்று இரட்டியான், மனத்தின்
செல்லும்
தலைத் தடந் தேரன், வில்லன், தாருகன் என்னும் தன்மைக்
கொலைத் தொழில் அவுணன்; பின்னை, இராக்கத வேடம்
கொண்டான்,
சிலைத் தொழில் குமரன் கொல்ல, தொல்லை நாள் செருவில்
தீர்ந்தான்.–123-

மலைப் பெருங் கழுதை ஐஞ்ஞூற்று இரட்டியான் – மலையினை
ஒத்த பெரிய ஆயிரங் கழுதைகளால் (இழுக்கப் பெற்ற); மனத்தின்
செல்லும் தலைத் தடந்தேரன், வில்லன் – மனத்தைக் காட்டிலும்
விரைந்து செல்லும் தலைமை பெற்ற தேரினை உடையவனும், வில்லை
ஏந்தியவனுமாகிய அகம்பன்; தாருகன் என்னும் தன்மைக்
கொலைத்தொழில் அவுணன் – தாருகன் என்னும் பெயரைப் பெற்ற
கொலைத் தொழிலையுடைய அவுணன்; சிலைத் தொழில் குமரன்
கொல்ல – வில்லாற்றல் மிக்க முருகப் பெருமான் கொல்ல; தொல்லை
நாள் செருவில் தீர்ந்தான் – முற்காலத்தில் போரில் உயிர்
நீங்கியவனாய்; பின்னை, இராக்கத வேடங் கொண்டான் – பிற்
காலத்தில் (அகம்பனென்னும்) இராக்கத வேடத்தைக் கொண்டு
தோன்றியவனாவான்.

————

8564. ‘பாகசாதனனும், மற்றைப் பகை அடும் திகிரி பற்றும்
ஏக சாதனனும், மூன்று புரமும் பண்டு எரித்துளோனும்
போக; தாம் ஒருவர் மற்று இக் குரங்கொடு பொரக் கற்றாரே,
ஆக; கூற்று ஆவி உண்பது இதனின் மேற்று ஆகும்’
என்றான்.–124-

பாக சாதனனும் – பாகன் என்னும் அசுரனைக் கொன்ற
இந்திரனும்; மற்றைப் பகை அடும் திகிரி பற்றும் ஏக சாதனனும்-
ஏனைப் பகையினை அழிக்கும் தன்மையினை உடைய சக்கரப்
படையினைக் கையிற்கொண்ட திருமாலும்; மூன்று புரமும் பண்டு
எரித்துளோனும் போக – முப்புரங்களையும் முற்காலத்தே எரித்தழித்த
சிவபெருமானும் தவிர; தாம் ஒருவர் மற்று இக் குரங்கொடு பொரக்
கற்றாரே – ஏனைத் தேவர் முதலியவர்களில் ஒருவரேனும்
இக்குரங்குடன் தனித்தப் போர் செய்யக் கற்றுள்ளார்களோ? (இல்லை)
ஆக கூற்று ஆவி உண்பது இதனின் மேற்று ஆகும் என்றான் –
எனவே, கூற்றுவன் (போர்க்களத்தில் போர் செய்வோரது) உயிரைக்
கவர்தல் என்பது (அனுமன் என்னும்) இக்குரங்கின் போர்
வன்மையின் மேலதேயாகும் என்றான் (அகம்பன்).

————–

8565. ‘யான் தடேன்என்னின், மற்று இவ் எழு திரை வளாகம்
என் ஆம்?
வான் தடாது; அரக்கர் என்னும் பெயரையும் மாய்க்கும்’
என்னா,
ஊன் தடாநின்ற வாளி மழை துரந்து, உருத்துச் சென்றான்;
மீன் தொடாநின்ற திண் தோள் அனுமனும், விரைவின்
வந்தான்.–125-

யான் தடேன் என்னின் – யான் (இக்குரங்கினை) தடுக்காமல்
விடுவேனாயின்; இவ் எழுதிரை வளாகம் என் ஆம் – ஏழு
கடல்களால் சூழப்பட்ட இந்நிலவுலகம் என்ன ஆகும்? (அழிக்கப்பட்டு
விடும்); வான் தடாது – வானுலகத் தேவரோ தடுக்க மாட்டார்கள்!
அரக்கர் என்னும் பெயரையும் மாய்க்கும் – (இக்குரங்கு) அரக்கர்
என்ற பெயர் கூட இல்லாதபடி அழித்து விடும்; என்னா – என்று கூறியவனாய் (அகம்பன்); ஊன் தடா
நின்றவாளி மழைதுரந்து – ஊனுடல் பெற்ற உயிர்களால் தடுக்க
வியலாத (வன்மை வாய்ந்த) அம்பு மழையைப் பொழிந்து கொண்டு;
உருத்துச் சென்றான் – கோபமுடையவனாய் (அனுமனை) நெருங்கிச்
சென்றான்; மீன் தொடா நின்ற திண் தோள் – விண்மீன்களைத்
தீண்டுமாறு உயர்ந்து நின்ற திண்ணிய தோள்களை உடைய;
அனுமனும், விரைவின் வந்தான் – அனுமனும் (அவனை நோக்கி)
விரைந்து எதிர்த்து வந்தான்.

———-

8566. தேரொடு களிறும் மாவும் அரக்கரும் நெருக்கித் தெற்ற,
காரொடு கனலும் காலும் கிளர்ந்தது ஓர் காலம் என்ன,
வாரொடு தொடர்ந்த பைம் பொற் கழலினன் வருதலோடும்,
சூரொடும் தொடர்ந்த தண்டைச் சுழற்றினான் வயிரத்
தோளான்.–126-

தேரொடு களிறும் மாவும் அரக்கரும் நெருங்கித் தெற்ற –
தேருடன் யானைகளும் குதிரைகளும், அரக்கராகிய வீரர்களும்
நெருங்கிச் செறிந்து உடன் வர; காரொடு கனலும் காலும் கிளர்ந்தது
ஓர் காலம் என்ன – மேகத்துடன் நெருப்பும் காற்றும் பொங்கி
எழுந்ததோர் ஊழிக்காலம் இது என்று சொல்லும்படி; வாரொடு
தொடர்ந்த பைம்பொற் கழலினன் வருதலோடும் – வாரினாற்
பிணிக்கப் பெற்ற பசிய பொன்னாலாகிய வீரக்கழலை அணிந்த
அகம்பன் (எதிர்த்து) வந்தபோது; வயிரத்தோளான் – வயிரம்
போலும் திண்ணிய தோள்களை உடைய அனுமன்; சூரொடும்
தொடர்ந்த தண்டைச் சுழற்றினான் – கொடுந் தன்மையுடன் கூடிய
தண்டாயுதத்தைச் சுழற்றி வீசினான்.

————

8567. எற்றின, எறிந்த வல்லை ஏயின, எய்த, பெய்த,
முற்றின படைகள் யாவும், முறை முறை முறிந்து சிந்த,
சுற்றின வயிரத் தண்டால் துகைத்தனன், அமரர் துள்ள;
கற்றிலன் அன்று கற்றான், கதையினால் வதையின் கல்வி. –127-

எற்றின, எறிந்த வல்லை ஏயின, எய்த, பெய்த-
(அரக்கர்களால்) எறியப் பெற்றனவும் வீசப் பெற்றனவும், விரைந்து
ஏவப் பெற்றனவும், எய்யப்பெற்றனவும், சொரியப் பெற்றனவுமாக;
முற்றின படைகள் யாவும் முறை முறை முறிந்து சிந்த –
(தன்னை) சூழ்ந்த படைக் கலங்கள் யாவும் முறை முறையே
முறிபட்டுப் பொடியாய்ச் சிதறும்படியாக; சுற்றின வயிரத்தண்டால்
அமரர் துள்ளத் துகைத்தனன் – (அனுமன் தான்) சுழற்றின
திண்ணிய தண்டாயுதத்தால் தேவர்கள் (மகிழ்ந்து) துள்ளும்படி
மோதி அழித்திட்டான்; கதையினால் வதையின் கல்வி கற்றிலன்
அன்று கற்றான் – (இவ்வாறு) தண்டாயுதத்தால் (பகைவரைக்)
கொல்லும் கல்வியை இதற்கு முன்பு முழுமையாகக் கல்லாதவனாகிய
அனுமன் அகம்பனோடு பொருத அன்று முழுமையாகக் கற்றான்.

———–

8568. அகம்பனும் காணக் காண, ஐ-இரு கோடிக் கைம்மா,
முகம் பயில் கலினப் பாய்மா, முனை எயிற்று அரக்கர், மூரி
நுகம் பயில் தேரினோடும் நுறுக்கினன்; நூழில் தீர்த்தான்;-
உகம் பெயர் ஊழிக் காற்றின் உலைவு இலா மேரு ஒப்பான்.–128-

உகம் பெயர் ஊழிக் காற்றின் – ஊழி முடிவடைகின்ற காலத்து
வீசும் பெருங்காற்றினாலும்; உலைவிலா மேரு ஒப்பான் –
அசைக்கப்படாத மேரு மலையை ஒத்த அனுமன்; அகம்பனும்
காணக்காண – அகம்பனாகிய பகைவனும் கண்டு கொண்டிருக்க;
ஐ-இரு கோடிக்கைம்மா முகம்பயில் கலினப்பாய்மா – பத்துக்
கோடி யானைகள் முகத்திற் பொருந்திய கடிவாளத்தைப் பூண்ட
பாயுந் தன்மையுடைய குதிரைகள்; முனை எயிற்று அரக்கர் – கூரிய
பற்களை உடைய அரக்கர்கள், ஆகிய சேனைகளை; மூரி
நுகம்பயில் தேரினோடும் – வலிய நுகத்தோடு பொருந்திய
தேர்களோடு; நுறுக்கினன் நூழில் தீர்த்தான்- பொடியாக்கினவனாகிக்
கொன்று குவித்தலைச் செய்து முடித்தான்.

————

8569. ‘இன்று இவன்தன்னை விண்ணாடு ஏற்றி, வாள் இலங்கை
வேந்தை
வென்றியன் ஆக்கி, மற்றை மனிதரை வெறியர் ஆக்கி,
நின்று உயர் நெடிய துன்பம் அமரர்பால் நிறுப்பல்’
என்னாச்
சென்றனன் அரக்கன்; ‘நன்று, வருக!’ என அனுமன்
சேர்ந்தான்.–129-

இவன் தன்னை இன்று விண்ணொடு ஏற்றி – (அனுமனாகிய)
இவனை இன்றைக்கே வானுலகில் ஏற்றி; வாள் இலங்கை வேந்தை
வென்றியன் ஆக்கி – வாட்படையை உடைய இலங்கை மன்னனாகிய
இராவணனை வெற்றி பெற்றவனாகச் செய்து; மற்றை மனிதரை
வெறியர் ஆக்கி – ஏனை (இராம இலக்குவராகிய) மனிதர்களை
(தேல்வியுடையவர்களாய்) வெறுமை உடையவராகச் செய்து;
அமரர்பால் நின்று உயர் நெடிய துன்பம் – தேவர்களிடத்து
மேன்மேல் ஓங்கிய பெருந்துயரத்தை; நிறுப்பல் என்னா – நிலை
பெறச் செய்வேன் என்று; அரக்கன் சென்றனன் – (அகம்பனாகிய)
அரக்கன் அனுமனை நெருங்கிச் சென்றான்; அனுமன் ‘நன்று வருக’
எனச் சேர்ந்தான் – (அது கண்ட) அனுமன் ‘நல்லது வருக’ எனக்கூறி
அவனை நெருங்கினான்.

—————

8570. படுகளப் பரப்பை நோக்கி, பாழி வாய் அதுக்கி, நூழில்
சுடு கனற் பொறிகள் வெங் கண் தோன்றிட, கொடித்
தேர் தூண்டி,
விடு கனல் பகழி மாரி மழையினும் மும்மை வீசி,
முடுகுறச் சென்று, குன்றின் முட்டினான், முகிலின்
ஆர்ப்பான்.–130-

படுகளப் பரப்பை நோக்கி – போர்க்களப் பரப்பினைப் பார்த்து;
பாழிவாய் அதுக்கி – குகை போன்ற (தன்) வாயை அதுக்கியவனாய்;
நூழில் சுடுகனற் பொறிகள் வெங்கண் தோன்றிட – (பகைவரைக்)
கொன்று குவிக்கும் தொழிலிலே சுடுகின்ற தீப்பொறிகள் (தன்) கொடிய
விழிகளில் காணப்பட; கொடித்தேர் தூண்டி விடுகனல் பகழி மாரி –
கொடி கட்டிய தேரினைச் செலுத்தி விடுகின்ற கனல் கக்குகின்ற
அம்புத் தொகுதி மழையை; மழையினும் மும்மை வீசி –
மழையினைக் காட்டிலும் மும் மடங்கு அதிகமாக வீசிக்கொண்டு;
முகிலின் ஆர்ப்பான் – மேகம் போன்று (இடிப்) பெருங்குரலில்
ஆர்ப்பவனாய்; முடுகுறச் சென்று, குன்றின் முட்டினான் – விரைந்து சென்று குன்றினைப்
போல (அனுமனைத்) தாக்கினான்.

————–

8571. சொரிந்தன பகழி மாரி தோளினும் மார்பின்மேலும்
தெரிந்தன-அசனி போலத் செறு பொறி பிதிர்வ திக்கின்,
வரிந்தன எருவை மானச் சிறைகளால், அமரர் மார்பை
அரிந்தன, வடிம்பு பொன் கொண்டு அணிந்தன, வாங்கு
கண்ண.–131-

அசனி போலத் செறிபொறி திக்கின் பிதிர்வ – இடியைப்
போன்றனவான நெருங்கிய அனற்பொறிகளை திசைகளில்
சிதறுவனவும்; எருவை மானச்சிறைகளால் வரிந்தன – கழுகுகளின்
பெரிய சிறகுகளால் கட்டப்பட்டனவும்; அமரர் மார்பை அரிந்தன –
வானவர் மார்பை (முன்னர்) அரிந்தனவும்; பொன் கொண்டு வடிம்பு
அணிந்தன ஆங்கு கண்ண – பொன்னைக் கொண்டு கூரிய முனை
அலங்கரிக்கப்பட்ட இடத்தைக் கொண்டனவுமான; சொரிந்தன பகழி
மாரி – (அகம்பன்) பொழிந்தனவான அம்பு மழைகள்; தோளினும்
மார்பின் மேலும் தெரிந்தன – (அனுமனது) தோளின்மீதும் மார்பின்
மீதும் காணப்பட்டன;

————-

8572. மார்பினும் தோளின்மேலும், வாளி வாய் மடுத்த வாயில்,
சோர் பெருங் குருதி சோரத் துளங்குவான், தேறாமுன்னம்,
தேர் இரண்டு அருகும் பூண்ட கழுதையும் அச்சும் சிந்த,
சாரதி, புரள, வீரத் தண்டினால் கண்டம் செய்தான்.–132-

மார்பினும் தோளின் மேலும் – (தனது) மார்பு தோள்
ஆகியவற்றின் மீதும்; வாளி வாய் மடுத்த வாயில் – அம்பு துளை
செய்து சென்ற வாய்வழியாக; சோர்பெருங் குருதி சோரத்
துளங்குவான் – வழிகின்ற பெரும் குருதி பெருகிய வண்ணமிருக்கச்
சோர்வுற்றவனான அனுமன்; தேறா முன்னம் – (அந்நிலையினின்றும்
தான்) தெளிவடைவதற்கு முன்னரே; தேர் இரண்டு அருகும்
பூண்ட கழுதையும் அச்சும் சிந்த- தேரின் இரு பக்கத்தும் பூட்டப்
பெற்ற கோவேறு கழுதையும் அச்சும் அழிந்து வீழவும்; சாரதி, புரள
வீரத்தண்டினால் கண்டம் செய்தான் – பாகன் புரண்டு தரையில்
வீழவும், வீரத்தண்டாயுதத்தினால் துண்டு செய்தான்

———–

8573. ‘வில்லினால் இவனை வெல்லல் அரிது’ எனா,
நிருதன்-வெய்ய
மல்லினால் இயன்ற தோளின், வலியினால், வானத் தச்சன்
கொல்லினால் அமைத்தது, ஆங்கு, ஓர் கொடு முனைத்
தண்டுகொண்டான்,
அல்லினால் வகுத்தது அன்ன மேனியான், கடலின்
ஆர்ப்பான்.–133-

அல்லினால் வகுத்தது அன்ன மேனியான் – இருளைக் கொண்டு
இயற்றியது போலும் (கரிய) உடம்பினை உடையவனும்; கடலின்
ஆர்ப்பான், நிருதன் – கடல் போலப் பெருமுழக்கம் செய்பவனுமாகிய
(அகம்பன் என்னும்) அரக்கன்; வில்லினால் இவனை வெல்லல் அரிது
எனா – இவ்வனுமனை வில் தொழிலினால் வெற்றி கொள்வது
அருமையான செயல்’ என எண்ணியவனாய்; வெய்ய மல்லினால்
இயன்ற தோளின் வலியினால் – கொடிய மற்றொழிலுக்கென்றே
இயன்றது போன்ற (தன்) தோளின் வன்மையால் (வெல்லக்கருதி);
வானத்தச்சன் கொல்லினால் அமைத்தது – தெய்வத்தச்சன் தனது
கொல்லுத் தொழிலினால் செய்தமைத்தான்; ஓர்கொடுமுனைத் தண்டு
கொண்டான் – கொடிய முனையினை உடைய ஓர் தண்டாயுதத்தை
அப்போது (கையில்) எடுத்துக் கொண்டான்.

—————

8574. தாக்கினார்; வலத்து மற்றை இடத்தினும் திரிந்தார் சாரி;
ஓக்கினார்; ஊழின் ஆர்ப்புக் கொட்டினார்; கிட்டினார்; கீழ்த்
தூக்கினார்; சுழற்றினார், மேல்; சுற்றினார்; எற்றி வெற்றி;
நீக்கினார்; நெருக்கினார் போய்; நீங்கினார், ஏங்கினார்
மேல்.–134-

தாக்கினார் – (அனுமன் அகம்பன் ஆகிய அவ்விருவரும்)
ஒருவரை ஒருவர் முட்டித்தாக்கினர்; வலத்து மற்றை இடத்தினும்
திரிந்தார் சாரி – வலப்பக்கத்திலும் மற்றை இடப்பக்கத்திலுமாகச் சாரி
திரிந்தனர்; ஓக்கினார்; ஊழின் ஆர்ப்புக் கொட்டினர் – (கைகளை)
ஓங்கியவர்களாய் ஊழிக்காலத்தைப் போன்று பேராரவாரம் செய்து
(போருக்குத் தோள்) கொட்டினர்; கிட்டினார், கீழ்த் தூக்கினார்,
சுழற்றினார் – (தம்முள்) கிட்டி நெருங்கியவர்களாய்த் தூக்கிக்கொண்டு
(உடம்பு தரையில் படுமாறு) கீழே சுற்றினர்; மேல் சுற்றினார் – மேலே
எழுத்து (ஒருவரை ஒருவர்) வெற்றி கொள்வதினின்றும் நீக்கினர்;
நெருக்கினார் போய்; நீங்கினார் ஏங்கினார்மேல் – மீண்டும் சென்று
நெருக்கினர் அந்நிலையில் மேலே எம்பித் தள்ளி ஒருவரின் ஒருவர்
நீங்கினர்.

————

8575. தட்டினார்; தழுவினார்; மேல் தாவினார்; தரையினோடும்
கிட்டினார்; கிடைத்தார்; வீசிப் புடைத்தனர் கீழும் மேலும்
கட்டினார்; காத்தார்; ஒன்றும் காண்கிலார், இறவு; கண்ணுற்று,
ஒட்டினார்; மோதி வட்டம் ஓடினார்; ஆதி போனார்.–135-

தட்டினார், தழுவினார் – (தோள்) தட்டியவராய் (ஒருவரை ஒருவர்)
தழுவிப் பிடித்தனர்; மேல் தாவினார் தரையினோடும் கிட்டினார் –
விசும்பின் மேல் தாவினர் தரையிற் கிட்டி நெருக்கினார்; கிடைத்தார் –
(ஒருவரை ஒருவர்) நெருங்கினார்; வீசிப்புடைத்தனர் கீழும் மேலும் –
(ஒருவரை ஒருவர்) கீழும் மேலும் வீசி மோதிப் புடைத்தனர்;
கட்டினார்; காத்தார் – நெருக்கிக் கட்டிக் கொண்டனர்
(அக்கட்டினின்றும் நெகிழ்ந்து வெளிவந்து) தம்மைக்
காத்துக்கொண்டனர்; ஒன்றும் இறவு காண்கிலார் – ஒருவர்
(மற்றவரை) இறத்தலைச் சிறிதும் காண மாட்டாதவராயினர்; கண்ணுற்று
ஒட்டினார் – ஒருவரை ஒருவர் நோக்கிச் சபதம் கூறினர்; மோதி
வட்டம் ஓடினார் – (தம்முள்) மோதித் தாக்கி இடம் வலமாகச்
சாரி திரிந்தனர்; ஆதிபோனார் – நேராக ஓடினர்.

————

8576. மய்யொடும் பகைத்து நின்ற நிறத்தினான் வயிர மார்பில்,
பொய்யொடும் பகைத்து நின்ற குணத்தினான் புகுந்து மோத,
வெய்யவன், அதனைத் தண்டால் விலக்கினான்;
விலக்கலோடும்,
கய்யொடும் இற்று, மற்று அக் கதை களம் கண்டது அன்றே.–136-

பொய்யொடும் பகைத்து நின்ற குணத்தினான் – பொய்ம்மையின்
மாறுபட்டு நின்ற வாய்மையனாகிய அனுமன்; மய்யொடும் பகைத்து
நின்ற நிறத்தினான் – மைக்குழம்புடன் பகைத்து மிகுந்து நின்ற
கருமை நிறத்தை உடைய அகம்பனின்; வயிரமார்பில் புகுந்து மோத –
திண்ணிய மார்பிடத்துப் (தண்டு கொண்டு) புகுந்து தாக்கிய அளவில்;
வெய்யவன் அதனைத் தண்டால் விலக்கினான் – கொடியவனாகிய
அகம்பன் அத் தாக்குதலைத் (தன் கையிற் கொண்ட)
தண்டாயுதத்தால் தடுத்து விலக்கினான்; விலக்கலோடும் – அங்ஙனம்
தடுத்த அளவில்; அக்கதை கய்யொடும் இற்று களம் கண்டது
அன்றே – அந்தத் தண்டாயுதம் (அதனைப் பற்றிய அகம்பனின்
வலக்) கையுடன் முறிந்து போர்க்களத்தில் வீழ்ந்தது.

————

8577. கய்யொடு தண்டு நீங்க, கடல் எனக் கலக்கம் உற்ற
மெய்யொடு நின்ற வெய்யோன், மிடலுடை இடக் கை ஓச்சி,
அய்யனை அலங்கல் ஆகத்து அடித்தனன், அடித்த ஓசை,
ஒய்யென வயிரக் குன்றத்து உருமின்ஏறு இடித்தது ஒத்த.–137-

கய்யோடு தண்டு நீங்க – (பற்றிய வலக்) கையுடன் தண்டாயுதம்
(முறிந்து) நீங்க; கடல் எனக் கலக்கம் உற்ற மெய்யொடு நின்ற
வெய்யோன் – (பெருங்காற்று எழுந்தபோது) கடலைப் போன்று
கலக்கமுற்று உடம்புடனே நின்ற வெம்மையுடைய அகம்பன்;
மிடலுடை இடக்கை ஓச்சி – வலிமை மிக்க தனது இடக்கையினை
ஓங்கி; அய்யனை அலங்கல் ஆகத்து அடித்தனன் – அனுமனை
வெற்றி மாலை விளங்கும் மார்பின் கண்ணே அடித்தான்; அடித்த
ஓசை- அங்ஙனம் அடித்தலால் எழுந்த பேரோசை; வயிரக்குன்றத்து
உருமின் ஏறு – திண்ணிய வயிரமலையில் பேரிடியானது; ஒய்யென
இடித்தது ஒத்த – விரைந்து வீழ்ந்ததை ஒத்திருந்தது.

————-

8578. அடித்தவன் தன்னை நோக்கி, அசனிஏறு அனைய தண்டு
பிடித்து நின்றேயும் எற்றான், ‘வெறுங் கையான்;
பிழையிற்று’ என்னா,
மடித்து வாய், இடத்த கையால் மார்பிடைக் குத்த, வாயால்
குடித்து நின்று உமிழ்வான் என்னக் கக்கினன், குருதி
வெள்ளம்.–138-

அடித்தவன் தன்னை நோக்கி – அனுமன் (தன்னை)
அடித்தவனாகிய அகம்பனை நோக்கி; வெறுங்கையான் பிழையிற்று
என்னா – இவன் (ஆயுதம் எடாத) வெறுங்கையினை உடையான்
(இவனை ஆயுதத்தால் தாக்குதல்) குற்றமுடைய செயலாம் என
எண்ணி; அசனி ஏறு அனைய தண்டு பிடித்து நின்றேயும் எற்றான்-
இடியேற்றினைப் போன்ற தண்டாயுதத்தைத்தான் பிடித்திருந்தும்
(அதனைக் கொண்டு) தாக்காதவனாய்; வாய் மடித்து இடத்தகையால்
மார்பிடைக் குத்த – வாயினை மடித்துக்கொண்டு தனது
இடக்கையினால் அவ்வகம்பனுடைய மார்பின் கண்ணே குத்த; குருதி
வெள்ளம் வாயால் குடித்து நின்று – (அவ்வரக்கன்) உதிரப்
பெருக்கினை (முன்னம்) வாயினால் பருகி நின்று; உமிழ்வான் என்னக்
கக்கினான் – (இப்போது) உமிழுகின்றவனைப்போலக் கக்கினான்.

—————

8579. மீட்டும் அக் கையால் வீசி, செவித்தலத்து எற்ற, வீழ்ந்தான்;
கூட்டினான் உயிரை, விண்ணோர் குழாத்திடை; அரக்கர்
கூட்டம்
காட்டில் வாழ் விலங்கு மாக்கள் கோள் அரி கண்ட என்ன,
ஈட்டம் உற்று எதிர்ந்த எல்லாம் இரிந்தன, திசைகள் எங்கும்.–139-

மீட்டும் அக்கையால் வீசி செவித்தலத்து எற்ற வீழ்ந்தான் –
திரும்பவும் (அனுமன்) அவ்விடது கரத்தினாலே ஓங்கி (அகம்பனது)
கன்னத்திலே அறைந்து தாக்க வீழ்ந்தவனாய்; உயிரை விண்ணோர்
குழாத்திடை கூட்டினான் – தனது உயிரைத் தேவர் குழாத்திடைச்
செலுத்தி இறந்துபட்டான்; ஈட்டம் உற்று எதிர்ந்த அரக்கர் கூட்டம்
எல்லாம் – (அவ்வளவில் போர்க்களத்தில் திரண்டு நின்று, எதிர்ந்த
அரக்கர் கூட்டம் அனைத்தும்; கோள் அரி கண்ட காட்டில் வாழ்
விலங்கு மாக்கள் என்ன – சிங்கத்தைக் கண்ட காட்டில் வாழுகின்ற
விலங்குகளைப் போன்று; திசைகள் எங்கும் இரிந்தன – எல்லாத்
திக்குகளிலும் நிலைகுலைந்து சென்றன.

———–

அனுமன் முதலியோர் ஒருவரை ஒருவர் காணாது திகைத்தல்

8580. ஆர்க்கின்ற குரலும் கேளான்; இலக்குவன் அசனி ஏற்றைப்
பேர்க்கின்ற சிலையின் நாணின் பேர் ஒலி கேளான்; வீரன்
யார்க்கு இன்னல் உற்றது என்பது உணர்ந்திலன்;
இசைப்போர் இல்லை;
போர்க் குன்றம் அனைய தோளான் இனையது ஓர்
பொருமல் உற்றான்.–140-

போர்க்குன்றம் அனைய தோளான் – பொருதல் தொழிலை
உடையதும் மலையினை ஒத்ததுமாகிய தோள்களை உடைய அனுமன்;
ஆர்க்கின்ற குரலும் கேளான் – (மீண்டு வந்த வானர வீரர்)
ஆரவாரிக்கின்ற குரலைக் கேட்டிலன்; அசனி ஏற்றைப் பேர்க்கின்ற –
பேரிடியின் ஒலியையும் அடக்கவல்ல; இலக்குவன் சிலையின் நாணின்
பேர் ஒலி கேளான் – இலக்குவனது வில் நாணின் பேரொலியையும்
கேட்டிலன்; வீரர் யார்க்கு இன்னல் உற்றது என்பது
உணர்ந்திலன் – (தன்) சேனையைச் சேர்ந்த வீரர்களில் இன்னார்க்கு
இன்ன துன்பம் நேர்ந்தது என்பதனையும் அறிந்திலன்; இசைப்போர்
இல்லை – அவற்றை அறிந்து கூறுவோரும் இல்லை; இனையது ஓர்
பொருமல் உற்றான் – (இந்நிலையில்) இத்தகையது என ஒப்புமை
கூறவியலாத ஓர் பெருந்துயரத்தை அடைந்தான்.

———–

8581. வீசின நிருதர் சேனை வேலையில் தென்மேல் திக்கின்
யோசனைஏழு சென்றான் அங்கதன்; அதனுக்கு அப்பால்,
ஆசையின் இரட்டி சென்றான் அரி குலத்து அரசன்;
அப்பால்,
ஈசனுக்கு இளைய வீரன் இரட்டிக்கும் இரட்டி சென்றான்.–141-

வீசின நிருதர் சேனை வேலையில் – சிதறிய அரக்கர்
சேனையாகிய கடலினுள்ளே; தென்மேல் திக்கின் – தென் மேற்குத்
திசையில்; யோசனை ஏழு அங்கதன் சென்றான் – ஏழு யோசனை
அளவு (தூரம்) அங்கதன் சென்றான்; அரிகுலத்து அரசன் –
வானர குலவேந்தனாகிய சுக்கிரீவன்; அதனுக்கு அப்பால் ஆசையின்
இரட்டி சென்றான் – அவ்வங்கதன் சென்ற தூரத்துக்கப்பால் அதே
திசையில் அதன் இரண்டு மடங்கு (பதினான்கு) யோசனை அளவு
சென்றான்; ஈசனுக்கு இளைய வீரன் – இராமபிரானுக்குத் தம்பியான
இலக்குவன்; அப்பால் இரட்டிக்கும் இரட்டி சென்றான் – அதற்கு
அப்பால் நான்கு மடங்கு (இருபத்து எட்டு) யோசனை அளவு சென்றான்.

—————–

8582. மற்றையோர் நாலும் ஐந்தும் யோசனை மலைந்து புக்கார்;
கொற்ற மாருதியும் வள்ளல் இலக்குவன் நின்ற சூழல்
முற்றினன்-இரண்டு மூன்று காவதம் ஒழிய, பின்னும்
சுற்றிய சேனை நீர்மேல் பாசிபோல் மிடையும் துள்ளி.–142-

மற்றையோர் நாலும் ஐந்தும் யோசனை மலைந்து புக்கார் –
ஏனைய படைத்தலைவர்கள் நாலு யோசனையும், ஐந்து யோசனையும்
அளவே (அரக்கர் சேனையை) பொருது (உள்ளே) புகுந்தனர்; பின்னும்
சுற்றிய சேனை – அதன் மேலும் சூழ்ந்து நின்ற படை; நீர்மேல்
பாசிபோல் துள்ளி மிடையும் – நீர் மேல் பாசி படர்வதைப் போன்று
விரைந்து நெருங்கும்; கொற்ற மாருதியும் – வெற்றி பொருந்திய
அனுமனும்; வள்ளல் இலக்குவன் நின்ற சூழல் – வள்ளன்மை
பொருந்திய லக்குவன் நின்ற இடத்திற்கு; இரண்டு மூன்று காவதம் ஒழியமுற்றினன் – இரண்டு மூன்று
காவதங்கள் இடையிட்டுச் சேர்ந்தான்.

————

8583. ‘இளையவன் நின்ற சூழல் எய்துவென், விரைவின்’ என்று ஓர்
உளைவு வந்து உள்ளம் தூண்ட, ஊழி வெங் காலின்
செல்வான்,
களைவு அருந் துன்பம் நீங்கக் கண்டனன் என்ப மன்னோ-
விளைவன செருவில் பல் வேறு ஆயின குறிகள் மேய.

ஓர் உளைவு வந்து உள்ளம் தூண்ட – (இலக்குவனைக்
காணாமையால் உண்டாக்கிய) ஒரு துயரந்தோன்றித் தன் உள்ளத்தைத்
தூண்டுதலால்; இளையவன் நின்ற சூழல் எய்துவென் விரைவின்
என்று – இளையோனாகிய இலக்குவன் நின்ற இடத்தினை விரைவில்
அடைவேன் என்று; ஊழி வெங்காலின் செல்வான் – ஊழிக்காலத்து
வீசும் பெருங்காற்றினைப் போன்று விரைந்து செல்பவனாகிய
அனுமன்; விளைவன செருவில் மேய பல்வேறு ஆயின குறிகள் –
(இலக்குவனால் அங்கு) நிகழ்வனவாகிய போர்ச் செயல்களில்
பொருந்திய பல்வேறு அடையாளங்களை; களைவு அருந்துன்பம்
நீங்கக் கண்டனன் – நீக்குதற்கரிய தன் மனத் துயரம் நீங்கும்படி
கண்டான்.

———-

8584. ஆனையின் கோடும், பீலித் தழைகளும், ஆரத்தோடு
மான மா மணியும், பொன்னும், முத்தமும், கொழித்து வாரி,
மீன் என அங்கும் இங்கும் படைக்கலம் மிளிர, வீசும்
பேன வெண் குடைய ஆய, குருதிப் பேர் ஆறு கண்டான்.–144-

ஆனையின் கோடும், பீலித் தழைகளும் – யானைத்
தந்தங்களையும் மயிற் பிச்சங்களையும்; ஆரத்தோடு மானமா
மணியும் – மாலைகளோடு பெருமை மிக்க இரத்தினங்களையும்;
பொன்னும், முத்தமும் கொழித்து வாரி – பொன்னையும்
முத்துக்களையும், கொழித்து வாரிக்கொண்டு; படைக்கலம் மீன் என
அங்கும் இங்கும் மிளிர – (ஒளி மிக்க வாள் முதலான) ஆயுதங்கள்
மீன்களைப் போன்று விளங்க; வீசும் பேன வெண்குடைய ஆய,
குருதிப்போர் ஆறு கண்டான் – வீசியொதுக்கும் நுரைகளை யொத்த
வெண் குடைகளைத் தன்னகத்தே கொண்டு செல்வனவாகிய இரத்தப்
பேராறுகளை (அனுமன்) கண்டான்.

———-

8585. ஆசைகள்தோறும் சுற்றி அலைக்கின்ற அரக்கர்தம்மேல்
வீசின பகழி, அற்ற தலையொடும் விசும்பை முட்டி,
ஓசையின் உலகம் எங்கும் உதிர்வுற, ஊழி நாளில்
காசு அறு கல்லின் மாரி பொழிவபோல், விழுவ கண்டான்.–145-

ஆசைகள் தோறும் சுற்றி அலைக்கின்ற அரக்கர் தம்மேல் –
திசைகள் தோறும் சூழ்ந்து வளைத்துப் போர் செய்கின்ற
அரக்கர்களின் மேலே; வீசின, பகழி, அற்ற தலையொடும் விசும்பை
முட்டி – (இலக்குவன்) ஏவிய அம்புகள் அறுபட்ட தலைகளோடு வான
முகட்டைச் சென்று முட்டி; ஓசையின் உலகம் எங்கம் உதிர்வுற –
பெரு முழக்கத்துடன் உலகம் எங்கும் பொடியாய்ச் சிதர்ந்து
உதிருமாறு; ஊழிநாளில் காசு அறு கல்லின் மாரி – ஊழி முடிவில்
குற்றமற்ற கல்மழை; பொழிவபோல் விழுவ கண்டான் –
சொரிவனவற்றையொத்து (தரையில்) வீழ்வனவற்றை (அனுமன்)
கண்டான்.

————

8586. மான வேல் அரக்கர் விட்ட படைக்கலம், வான மாரி
ஆன வன் பகழி சிந்த, திசைதொறும் பொறியோடு அற்று
மீன் இனம் விசும்பின்நின்றும் இருள் உக விழுவ போல,
கானகம் தொடர்ந்த தீயின் சுடுவன பலவும் கண்டான்.–146-

மானவேல் அரக்கர் விட்ட படைக்கலம் வானமாரி – (வீரத்தில்
குறையாத) பெருமை வாய்ந்த வேற்படையை உடைய அரக்கர்கள்
விடுவித்த ஆயுதங்களாகிய பெரு மழையை; ஆனவன் பகழி சிந்த –
அத்தகைய வீரத்தன்மை உடையவனாகிய இலக்குவன் (எய்த)
அம்புகள் துணிக்க; திசையொடும் பொறியோடு அற்ற – (அவை)
திக்குகள் தோறும் தீப்பொறிகளோடும் துணிபட்டுத் (தரையில்)
வீழ்வன; மீன் இனம் விசும்பினின்றும் இருள் உக வீழ்வபோல –
விண்மீன் தொகுதிகள் வானத்தினின்றும் இருள் கெட
வீழ்வனவற்றைப் போன்று (விழுவனவாகி); கானகம் தொடர்ந்த தீயின்
சுடுவன பலவுங் கண்டான் – காட்டிற் பற்றிய பெருந்தீயினையொத்துச்
சுடுவன பலவற்றையும் (அனுமன்) கண்டான்.

——-

8587. அருளுடைக் குரிசில் வாளி, அந்தரம் எங்கும் தாம் ஆய்,
தெருள் உறத் தொடர்ந்து வீசிச் செல்வன, தேவர் காண
இருளிடைச் சுடலை ஆடும் எண் புயத்து அண்ணல் வண்ணச்
சுருளுடைச் சடையில் கற்றைச் சுற்று எனச் சுடர்வ,
கண்டான்.

அருளுடைக் குரிசில் வாளி – அருட்குணமுடைய தலைவனாகிய
இலக்குவன் எய்த அம்புகள்; அந்தரம் எங்கும் தாம் ஆய் –
ஆகாயமெங்கும் தாமேயாய் பரவி; தெருள் உறத் தொடர்ந்து வீசிச்
செல்வன – (வீரர்கள் யாவரும் இருள் நீங்கித்) தெளிவு பெறுமாறு
தொடர்ந்து ஒளிவீசி (உயர்ந்து) செல்பவை; தேவர் காண இருளிடைச்
சுடலை ஆடும் – தேவரெல்லாம் காணுமாறு நள்ளிருளில்
சுடுகாட்டகத்தே நடம்புரியும்; எண் புயத்து அண்ணல் வண்ணச்
சுருளுடைச் சடையின் கற்றைச் சுற்று என – எண் தோள் ஈசனாகிய
சிவபெருமானின் அழகு வாய்ந்த சுருளுதலைக் கொண்ட சடைத்
தொகுதியின் சுற்றுப் போன்று; சுடர்வ கண்டான் – ஒளி செய்வதைக்
கண்ணுற்றான். (அனுமன்)

————-

8588. நெய் உறக் கொளுத்தப்பட்ட நெருப்பு என, பொருப்பின்
ஓங்கும்
மெய் உறக் குருதித் தாரை விசும்பு உற, விளங்குகின்ற-
அய்யனை, கங்குல் மாலை, அரசு என அறிந்து, காலம்,
கய் விளக்கு எடுத்தது என்ன-கவந்தத்தின் காடு கண்டான். –148-

நெய்யுறக் கொளுத்தப்பட்ட நெருப்பு என – நெய்யிட்டு எரிக்கப்
பெற்ற தீயினைப் போன்று; பொருப்பின் ஓங்கும் மெய்யுறக் – மலை
போன்று உயர்ந்து நிற்கும் உடலினின்றும் மிகுதியாக; குருதித் தாரை
விசும்பு உற விளங்குகின்ற – (எழுந்த) குருதிப்பெருக்கு ஆகாயத்தின்
உற விளங்கி நின்றமை; அய்யனை அரசு என அறிந்து –
இலக்குவனை அரச குமாரன் என அறிந்து; கங்குல், மாலை, காலம்
கய் விளக்கு எடுத்தது என்ன – இருளுடன் கூடிய இரவுக் காலக்
கைவிளக்கு ஏந்தினாற் போன்று; கவந்தத்தின் காடு கண்டான் –
கவந்தங்களின் மிகுதியை (அனுமன்) கண்டான்.

————

8589. ஆள் எலாம் இழந்த தேரும் ஆனையும் ஆடல் மாவும்,
நாள் எலாம் எண்ணினாலும் தொலைவு இலர் நாதர் இன்றி,
தாள் எலாம் குலைய ஓடித் திரிவன, தாங்கல் ஆற்றும்
கோள் இலா மன்னன் நாட்டுக் குடி எனக் குலைவ கண்டான்.–149-

ஆள் எலாம் இழந்த தேரும் ஆனையும் ஆடல் மாவும் –
(செலுத்தும்) வீரர்களை இழந்து வெறுமையுற்ற தேரும், யானையும்
வெற்றி மிக்க குதிரையும்; நாள் எலாம் எண்ணினாலும் தொலைவு
இலா – (வாழ்) நாட்களெல்லாம் (இருந்து) எண்ணினாலும் எண்ணத்
தொலையாதனவாம்; நாதர் இன்றி, தாள் எலாம் குலைய ஓடித்
திரிவன – (அங்ஙனம் தம்மைச் செலுத்தும்) தலைவர்களின்றி
கால்களெல்லாம் குலைந்து தளருமாறு (நிலைபெறாது) ஓடித் திரிபவை;
தாங்கல் ஆற்றும் கோள் இலா மன்னன் – தாங்கிக் காக்கும்
கொள்கை இல்லாத (கொடுங்கோல்) மன்னனது; நாட்டுக்குடி எனக்
குலைவு கண்டான் – நாட்டிலுள்ள குடி மக்களைப் போன்று
நிலைகுலைந்து சிதைவனவற்றை மேலும் அனுமன் கண்டான்.

————–

8590. மிடல் கொளும் பகழி மாரி, வானினும் மும்மை வீசி,
மடல் கொளும் அலங்கல் மார்பன் மலைந்திட, உலைந்து
மாண்டார்
உடல்களும், உதிர நீரும், ஒளிர் படைக்கலமும், உற்ற
கடல்களும், நெடிய கானும், கார் தவழ் மலையும்,
கண்டான்.–150-

மடல் கொளும் அலங்கல் மார்பன் – இதழ்களை உடைய மலர்
மாலையை அணிந்தவனான இலக்குவன்; மிடல் கொளும் பகழி மாரி –
வன்மை பொருந்திய அம்பு மழையினை; வானினும் மும்மை வீசி
மலைந்திட – மேகத்தைக் காட்டிலும் மூன்று மடங்கு சொரிந்து போர்
செய்தமையால்; உலைந்து மாண்டார் -உயிர் நீங்கியவராகிய
அரக்கரின்; உடல்களும் உதிர நீரும் ஒளிர்படைக்கலமும் –
உடல்களும், இரத்தப் புனலும், ஒளி செய்கின்ற போர்க்கருவிகளும்
உற்ற – பொருந்திய (அவற்றாலாகிய); கடல்களும் நெடிய கானும்
கார்தவழ் மலையும் கண்டான் – கடல்களையும், பரந்த காட்டினையும்
மேகந்தவழ்கின்ற மலையையும் (அனுமன்) கண்டான்.

————

8591. சுழித்து எறி ஊழிக் காலின் துருவினன் தொடரும்
தோன்றல்,
தழிக் கொண்ட குருதி வேலை தாவுவான், ‘தனிப் பேர்
அண்டம்
கிழித்தது, கிழித்தது’ என்னும் நாண் உரும்ஏறு கேட்டான்;
அழித்து ஒழி காலத்து ஆர்க்கும் ஆர்கலிக்கு இரட்டி
ஆர்த்தான்.–151-

சுழித்து எறி ஊழிக்காலின் – (எல்லாப்பொருள்களையும்) சுழற்றி
வீசும் யுகமுடிவுக் காலத்தின் பெருங்காற்றுப்போல; துருவினன்
தொடரும் தோன்றல் – (இலக்குவனைத்) தேடிச் செல்லும் பெருமை
மிக்கவனாகிய அனுமன்; தழிக்கொண்ட குருதி வேலை தாவுவான் –
(நாற்புறத்தும்) வளைத்துக் கொண்டுள்ள குருதி நீர்க்கடலைத் தாவிக்
கடந்து செல்லுபவன்; தனிப்பேர் அண்டம் கிழித்தது, கிழித்தது
என்னும் – தனித்துள்ள இப்பெரிய அண்டத்தைக் கிழித்தது கிழித்தது
என்னும்படியாக (எழுந்த)! நாண் உரும் ஏறு கேட்டான் –
(இலக்குவனது) வில் நாணின் ஒலியாகிய இடி ஓசையினைக்
கேட்டவனாகி; அழித்து ஒழி காலத்து ஆர்க்கும் – (எல்லாப்
பொருள்களையும்) அழித்தொழிக்கின்ற ஊழி முடிவுக்காலத்தில்
ஆரவாரித்து(ப்பொங்கி) எழும்; ஆர்கலிக்கு இரட்டி ஆர்த்தான் – கடலைக்
காட்டிலும் பெருமுழக்கம் செய்தான்.

———–

அனுமனைத் தழுவி, இலக்குவன் சேனையின் நிலைமை உசாவுதல்

8592. ஆர்த்த பேர் அமலை கேளா, அணுகினன் அனுமன்; ‘எல்லா
வார்த்தையும் கேட்கல் ஆகும்’ என்று, அகம் மகிழ்ந்து,
வள்ளல்
பார்ப்பதன் முன்னம் வந்த வணங்கினன், விசயப் பாவை
தூர்த்தனை; இளைய வீரன் தழுவினன், இனைய சொன்னான்:-152-

ஆர்த்த பேர் அமலைகேளா – ஆரவாரித்த (அனுமனின்)
பேரொலியினைக் கேட்டு; ‘அனுமன் அணுகினன்’ – அனுமன் (இங்கு)
வந்து சேர்ந்தான்; எல்லாவார்த்தையும் கேட்கல் ஆகும் – (அவன்
வாயிலாக) எல்லோருடைய செய்திகளையும் கேட்டறியலாம்; என்று
அகம் மகிழ்ந்து – என்று தன்னுள்ளத்தே மகிழ்ச்சியுற்று; வள்ளல்
பார்ப்பதன் முன்னம் – வள்ளன்மையுடையோனாகிய இலக்குவன்,
(அவ்வனுமனைத் திரும்பிப்) பார்ப்பதற்கு முன்னே; வந்து
வணங்கினன் – (அவன் இலக்குவனை) அடைந்து வணங்கினான்;
இளையவீரன் – (இராமனுக்கு) இளைய வீரனாகிய இலக்குவன்;
விசயப்பாவை தூர்த்தனை – வெற்றி மங்கையைக் காமுற்றவனாகிய
அனுமனை; தழுவினன் இனைய சொன்னான் – தழுவிக்
கொண்டவனாய் (ப்பின்வருமாறு) இவ்வார்த்தைகளைக் கூறினான்.

————-

8593. ‘அரி குல வீரர், ஐய! யாண்டையர்? அருக்கன் மைந்தன்
பிரிவு உனைச் செய்தது எவ்வாறு? அங்கதன்
பெயர்ந்தது எங்கே?
விரி இருள் பரவைச் சேனை வெள்ளத்து விளைந்தது
ஒன்றும்
தெரிகிலென்; உரைத்தி’ என்றான். சென்னிமேல்
கையன் சொல்வான்.–153-

ஐய! அரிகுல வீரர் யாண்டையர்? – ‘தலைமை சான்றவனே!
(அனுமனே) குரக்குக் குலத்து வீரர்கள் எவ்விடத்தே உள்ளார்கள்?
அருக்கன் மைந்தன் பிரிவு உனைச் செய்தது எவ்வாறு? –
சூரியன் மகனான சுக்ரீவன் உன்னை விட்டுப் பிரிந்து சென்றது
எவ்வாறு? அங்கதன் பெயர்ந்தது எங்கே? – அங்கதன் சென்றது
எங்கே? விரிஇருள் பரவைச் சேனை வெள்ளத்து – பரந்த
இருட்கடலில் கலந்த சேனை வெள்ளத்தில்; விளைந்தது ஒன்றும்
தெரிகிலென் உரைத்தி என்றான் – நிகழ்ந்த செயல் எதையும்
அறிந்திலேன், (இவற்றை விளங்கச்) சொல்வாயாக என (இலக்குவன்)
வினவினான்; சென்னிமேல் கையன் சொல்வான் – (அது கேட்ட
அனுமன்) தலைமேல் குவித்த கையனாய் (ப்பின் வருமாறு மறுமொழி)
கூறுவானாயினன்.

—————-

அனுமன் மறுமொழி

8594. ‘போயினார் போயவாறும், போயினது அன்றிப் போரில்
ஆயினார் ஆயது ஒன்றும், அறிந்திலென், ஐய! யாரும்
மேயினார் மேய போதே தெரிவது, விளைந்தது’ என்றான்-
தாயினான் வேலையோடும் அயிந்திரப் பரவைதன்னை.–154-

வேலையோடும் அயிந்திரப் பரவைதன்னைத் தாயினான் –
கடலுடன் ஐந்திரவியாகரணமாகிய கடலையும் கடந்தவனாகிய
அனுமன்; ஐய! போயினார் போயவாறும் போயினது அன்றி –
(இலக்குவனை நோக்கி) தலைவனை! போர்மேற் சென்றவர்களாகிய
அவர்கள் (தம்மை எதிர்த்த பகைவர்களைத் தொடர்ந்து)
போயினதைத் தவிர; போரில் ஆயினார் ஆயது ஒன்றும்
அறிந்திலென் – போரில் ஈடுபட்டோராகிய அவர்களிடையே நிகழ்ந்த
செய்தி எதுவும் அறியப் பெற்றிலேன்; யாரும் மேயினார்
மேயபோதே – (போரில்) பொருந்தியவர்களாகிய அவர்கள்
யாவரும் (இங்கு மீண்டு) வந்தபோது தான்; விளைந்தது தெரிவது’
என்றான் – (அங்கு) நிகழ்ந்தவற்றை அறிதல் கூடும்’ என்று கூறினான்.

—————-

8595. ‘மந்திரம் உளதால், ஐய! உணர்வுறும் மாலைத்து; அஃது உன்
சிந்தையின் உணர்ந்து, செய்யற்பாற்று எனின், செய்தி;
தெவ்வர்
தந்திரம்அதனைத் தெய்வப் படையினால் சமைப்பின்
அல்லால்,
எந்தை! நின் அடியர் யாரும் எய்தலர், நின்னை’ என்றான்.–155-

ஐய!, உணர்வுறும் மாலைத்து மந்திரம் உளது – ‘ஐயனே!
(பகைவரது மாயையாற் பொருந்திய மயக்கம் நீங்கி) நல்லுணர்வினை
அடையச் செய்யும் இயல்பினதாகிய உபாயம் ஒன்று உள்ளது; அஃது
உன் சிந்தையின் உணர்ந்து – அதனை நின் மனத்தின் கண்ணே
ஆராய்ந்து தெளிந்து; செய்யற்பாற்று எனின், செய்தி – (இப்பொழுது)
செய்யத்தக்கதாயின் அதனைச் செய்வாயாக; தெவ்வர் தந்திரம்
இதனை – பகைவருடைய சூழ்ச்சித்திறமாகிய இம்மயக்கத்தினை;
தெய்வப்படையினால் சமைப்பின் அல்லால் – தெய்வத்தன்மை
வாய்ந்த அத்திரங்களால் செய்தால் அன்றி; எந்தை! நின் அடியர்
யாரும் எய்தலர் நின்னை’ என்றான் – எந்தையே நின்
அடித்தொண்டராகிய வானரவீரர்கள் எவரும் (மயக்கந்தெளிந்து)
நின்னை வந்தடையும் ஆற்றலுடையவர் அல்லர்’ என (அனுமன்
இலக்குவனுக்கு) கூறினான்.

————-

இலக்குவன் சிவன்படை தொடுத்தல்

8596. ‘அன்னது புரிவென்’ என்னா, ஆயிர நாமத்து அண்ணல்-
தன்னையே வணங்கி வாழ்த்தி, சரங்களைத் தெரிந்து தாங்கி,
பொன் மலை வில்லினான்தன் படைக்கலம் பொருந்தப் பற்றி,
மின் எயிற்று அரக்கர்தம்மேல் ஏவினான்-வில்லின்
செல்வன்.–156-

வில்லின் செல்வன் – விற்றொழில் வன்மையாகிய செல்வத்தை
உடைய இலக்குவன்; அன்னது புரிவென் என்னா – (நீ கூறிய)
“அதனையே செய்வேன்” என (அனுமனுக்குக்) கூறி; ஆயிர நாமத்து
அண்ணல் தன்னையே வணங்கி வாழ்த்தி – ஆயிரம்
திருப்பெயர்களை உடையவனாகிய இறைவனாம் இராமபிரானை
வணங்கி, வாழ்த்தி; சரங்களைத் தெரிந்துதாங்கி – அம்புகளைத்
தேர்ந்தெடுத்து; பொன்மலை வில்லினான் தன் படைக்கலம்
பொருந்தப் பற்றி – பொன்மயமான மேருமலையை வில்லாகக்
கொண்ட சிவபெருமானது படைக்கலத்தினைப் பொருந்தும் படி செய்து;
மின்னெயிற்று அரக்கர் தம்மேல் ஏவினான் – மின்னலை ஒத்து
விளங்கும் ஒளி பொருந்திய பற்களை உடைய அரக்கரின் மீது
செலுத்தினான்.

————-

8597. முக்கணான் படையை மூட்டி விடுதலும், மூங்கில் காட்டில்
புக்கது, ஓர் ஊழித் தீயின், புறத்தின் ஓர் உருவும் போகாது
அக் கணத்து எரித்து வீழ்ந்தது, அரக்கர்தம் சேனை; ஆழித்
திக்கு எலாம் இருளும் தீர்ந்த; தேவரும் மயக்கம் தீர்ந்தார்.–157-

முக்கணான் படையை மூட்டி விடுதலும் – (இலக்குவன்)
சிவபெருமானது படைக்கலத்தைத் தொடுத்துச் செலுத்திய அளவில்;
மூங்கில் காட்டில் புக்கது ஓர் ஊழித் தீயின் – மூங்கில் காட்டில்
பற்றியதொரு ஊழிக்காலத்தீயினைப் போன்று; புறத்தின் ஓர் உருவும்
போகாது – புறத்தே ஒரு பொருளும் தப்பிப் போகாதவாறு;
அரக்கர்தம் சேனை அக்கணத்து எரிந்து வீழ்ந்தது – அரக்கர்
சேனை அப்பொழுதே எரிந்து வீ்ழ்ந்தது; ஆழித்திக்கெலாம் இருளும் தீர்ந்த- கடலை எல்லையாக உடைய
திசைகள் அனைத்தும் இருள் நீங்கப்பெற்றன; தேவரும் மயக்கம்
தீர்ந்தார் – தேவர்களும் திகைப்பு நீங்கப்பெற்றனர்.

———-

8598. தேவர்தம் படையை விட்டான் என்பது சிந்தை செய்யா,
மா பெருந் தேரில் நின்ற மகோதரன் மறையப் போனான்;
யாவரும் இரிந்தார் எல்லாம், இன மழை கழிய ஆர்த்து,
கோ இளங் களிற்றை வந்து கூடினார்; ஆடல் கொண்டார்.–158-

தேவர்தம் படையை விட்டான் – (இலக்குவன்) தேவர்க்குரிய
(திறல்மிக்க பாசுபதாத்திரத்தை) படைக்கலத்தை ஏவினான்; என்பது
சிந்தை செய்யா – என்பதனை மனத்தில் எண்ணி; மாபெருந்தேரில்
நின்ற மகோதரன் – மிகப்பெருந்தேரில் (அனைத்தையும்
பார்த்துக்கொண்டு) நின்றவனாகிய மகோதரன்; மறையப் போனான் –
(தான்ஏவிய) மாயை மறைந்தொழியத் தானும் அவ்விடத்தைவிட்டுப்
போயினன்; யாவரும் இரிந்தார் எல்லாம் – (ஒருவரை விட்டு ஒருவர்
பிரிந்த நிலையில் போராற்றிய) வானரத்தலைவர் யாவரும் (போரில்)
நிலைகுலைந்து ஓடிய எல்லோருடனும்; இனமழை கழிய ஆர்த்து –
மேகக் கூட்டங்கள் பின்னிடுமாறு ஆரவாரித்து; கோ இளங்களிற்றை –
தலைமைசான்ற இளங்களிறு போன்றவனாகிய இலக்குவனை; வந்து
கூடினார் ஆடல் கொண்டார் – வந்து சூழ்ந்தவராய் (மகிழ்ச்சி
மிகுதியால்) கூத்தாடத் தொடங்கினார்.

—————

8599. யாவர்க்கும் தீது இலாமை கண்டு கண்டு, உவகை ஏற,
தேவர்க்கும் தேவன் தம்பி திரு மனத்து ஐயம் தீர்ந்தான்;
காவல் போர்க் குரங்கின் சேனைக் கடல் எனக் கலந்து
புல்ல,
பூ வர்க்கம் இமையோர் தூவ; பொலிந்தனன்; தூதர்
போனார்.–159-

தேவர்க்கும் தேவன் தம்பி – தேவாதி தேவனாகிய இராமபிரானின்
தம்பியாகிய இலக்குவன்; யாவர்க்கும் தீது இலாமை – (தன்
சேனையிலுள்ளார்) யாவர்க்கும் எவ்வித இடையூறும் நேராத
தன்மையினை; கண்டு கண்டு உவகை ஏற – விடாமல் பார்த்து
மகிழ்ச்சி மிகக் கொண்டவனாய்; திருமனத்து ஐயம் தீர்ந்தான் – (தான்
முன்புகொண்ட) சந்தேகம் தீர்ந்தவனாகி; காவல் போர்க் குரங்கின்
சேனை – (தனது) காவலிற் போர் புரியும் குரங்குப்படை; கடல் எனக்
கலந்து புல்ல – கடல் போலத்திரண்டு (தன்னை) நெருங்கி நிற்க;
இமையோர் பூவர்க்கம் தூவ – வானவர் மலர்வகைகளைத் தூவ;
பொலிந்தனன் – விளங்கி நின்றான்; தூதர் போனார் – தூதர்கள்
(இச்செய்தியினைக் கூற இராவணனிடம்) சென்றனர்.

————

தூதர் இராவணனுக்கும் இந்திரசித்திற்கும் செய்தி கூறுதல்

8600.இலங்கையர் கோனை எய்தி, எய்தியது உரைத்தார், ‘நீவிர்
விலங்கினிர் போலும்; வெள்ளம் நூற்றை ஓர் வில்லின்,
வேழக்
குலங்களினோடும் கொல்லக் கூடுமோ?’ என்ன, ‘கொன்றை
அலங்கலான் படையின்’ என்றார. ‘அன்னதேல், ஆகும்’
என்றான்.–160-

இலங்கையர் கோனை எய்தி – (சென்ற தூதர்கள்) இலங்கையர்
வேந்தனாகிய இராவணனை அடைந்து; எய்தியது உரைத்தார் –
(போர்க்களத்தில்) நிகழ்ந்த செய்தியை எடுத்துரைத்தார்கள்; நீவிர்
விலங்கினர் போலும் – (அது கேட்ட இராவணன் அத்தூதர்களை
நோக்கி) நீங்கள் (அஞ்சி) விலகித் திரும்பினீர் போலும்; வேழக்
குலங்களினோடும் – யானைக் கூட்டத்துடன்; வெள்ளம் நூற்றை –
நூறு வெள்ளம் சேனைகளையும்; ஓர் வில்லின் கொல்லக் கூடுமோ –
ஒரு வில்லாலே கொன்றொழித்தல கூடுமோ?; என்ன – என்று கேட்க;
கொன்றை அலங்கலான் படையின் என்றார் – கொன்றை மாலை
அணிந்த சிவபெருமானின் படைக்கலமாகிய பாசுபதாத்திரத்தினால்
(இவ்வாறு நம் சேனை அழிவுற்றது) எனத் தூதர் விடை கூறினார்;
‘அன்னதேல், ஆகும்’ என்றான் – (அதனைக் கேட்ட இராவணன்) அப்படியானால் அரக்கர் சேனை எல்லாம் அழிவது
நிகழ்ந்திருக்கும் என உடன்பட்டு உரைத்தான்.

———

8601. ‘வந்திலன் இராமன்; வேறு ஓர் மலை உளான்; உந்தை,
மாயம்
தந்தன தீர்ப்பான் போனான், உண்பன தாழ்க்க; தாழா
எந்தை! ஈது இயன்றது’ என்றார். ‘மகோதரன் யாண்டை?’
என்ன,
‘அந்தரத்திடையன்’ என்றார். இராவணி, ‘அழகிற்று!’
என்றான்.–161-

இராமன் வந்திலன் – இராமன் (போர் நிகழுமிடத்திற்கு)
வந்தானல்லன்; வேறு ஓர் மலை உளான் – (அவன்) வேறு ஓர்
மலையினிடத்தே தங்கியிருக்கின்றான்; மாயம் தந்தன தீர்ப்பான்
உந்தை – நாம்பகைவர் மாட்டுச் செய்கின்ற மாயைகளை
(அவர்களுக்கு முன்னறிவிப்புச் செய்து) தீர்ப்பவனாகிய உன் சிறிய
தந்தை; உண்பன தாழ்க்கப் போனான் – (வானர சேனைகள்)
உண்ணுதற்கு உரியனவாகிய உணவுகள் வரத் தாழ்த்தமையால்
(அவற்றைக்) கொணர்தற்குப் (புறத்தே) போயினான்; ‘தாழா எந்தை!
ஈது இயன்றது’ என்றார் – (செயலாற்றுவதில்) காலந்தாழாத எந்தை
போல்பவனே! இதுவே (போர்க்களத்தில்) நிகழ்ந்ததாம் எனத் தூதர்கள்
கூறினர்; ‘மகோதரன் யாண்டை?’ என்ன – (அதனைக் கேட்ட இந்திர
சித்து ‘மகோதரன் எவ்விடத்துள்ளான்? எனவினவ;
‘அந்தரத்திடையன்’ என்றார் – ‘அவன் ஆகாயத்திடத்தே
மறைந்தனன்’ என (தூதர்)க் கூறினர்; இராவணி ‘அழகிற்று’
என்றான் – இந்திரசித்து (மகோதரன் செயல்) ‘அழகாயிருக்கிறது என
(இகழ்ந்து) கூறினான்.

—————

இந்திரசித்தன் பிரமாத்திரம் ஏவ வேள்வி செய்தல்

8602. ‘காலம் ஈது’ எனக் கருதிய இராவணன் காதல்.
ஆல மா மரம் ஒன்றினை விரைவினில் அடைந்தான்;
மூல வேள்விக்கு வேண்டுவ கலப்பைகள் முறையால்
கூலம் நீங்கிய இராக்கதப் பூசுரர் கொணர்ந்தார்.–162-

‘காலம் ஈது’ எனக் கருதிய இராவணன் காதல் – (தான்
பிரமாத்திரம் விடுவதற்குரிய) காலம் இதுவே என எண்ணிய
இராவணன் மகனாகிய இந்திரசித்து; ஆலமா மரம் ஒன்றினை
விரைவினில் அடைந்தான் – பெரியதோர் ஆலமரத்தின் அடியிடத்தை
விரைவாகச் சென்றடைந்தான்; கூலம் நீங்கிய இராக்கதப் பூசுரர் –
ஒழுக்க நெறியை விட்டு விலகிய அரக்கர் குல வேதியர்கள்;
மூலவேள்விக்கு வேண்டுவ – முதன்மையுடைய வேள்விக்கு
வேண்டியவையான; கலப்பைகள் முறையால் கொணர்ந்தார் –
கருவிகளை முறைப்பட (அவ்விடத்திற்குக்) கொண்டு சேர்த்தார்கள்.

———–

8603.
அம்பினால் பெருஞ் சமிதைகள் அமைத்தனன்; அனலில்
தும்பை மா மலர் தூவினன்; காரி எள் சொரிந்தான்;
கொம்பு பல்லொடு, கரிய வெள்ளாட்டு இருங் குருதி,
வெம்பு வெந் தசை, முறையின் இட்டு, எண்ணெயால்
வேட்டான்.–163-

அம்பினால் பெரும் சமிதைகள் அமைத்தனன் – (இந்திரசித்து)
வேள்விக்குரிய சமித்துக்களை அம்பினாலேயே அமைத்தான்;
அனலின் தும்பை மாமலர் தூவினன் – வேள்வித் தீயில்
சிறந்ததும்பை மலர்களைத் தூவினான்; காரிஎள் சொரிந்தான் –
கருமை நிறமுடைய எள்ளினைப் பெய்தான்; கொம்பு பல்லொடு,
கரிய வெள்ளாட்டு இருங்குருதி – கொம்பு, பல் ஆகியவற்றுடன்
கரிய வெள்ளாட்டினது பெருகிய குருதியையும்; வெம்பு வெந்தசை
முறையின் இட்டு – வேகக்கூடிய வெவ்விய தசையினையும்
முறையாகப் பெய்து; எண்ணெயால் வேட்டான் – எள்ளின் நெய்யைச்
சொரிந்து ஓமம் செய்தான்.

————

பிரமாத்திரத்துடன் இந்திரசித்து வானில் மறைந்திடுதல்

8604. வலம் சுழித்து வந்து எழுந்து எரி, நறு வெறி வயங்கி,
நலம் சுரந்தன பெருங் குறி முறைமையின் நல்க,
குலம் சுரந்து எழு கொடுமையான், முறையினில் கொண்டே,
‘நிலம் சுரந்து எழு வென்றி’ என்று உம்பரில் நிமிர்ந்தான்.–164-

எரி நறுவெறி வயங்கி வலஞ் சுழித்து வந்து எழுந்து –
(வேள்வியின்) தீயானது நறுமணத்துடன் வலது புறமாகச் சுழன்று
வந்து மேலெழுந்து; நலம் சுரந்தன பெருங்குறி முறைமையின்
நல்க – நன்மையை விளைவிப்பனவாகிய பெரிய அறிகுறிகளை
முறைப்படி புலப்படுத்திக்காட்ட; குலம் சுரந்து எழு கொடுமையான்
முறையினில் கொண்டே – (அரக்கர்) குலத்தில் ஊற்றெடுத்துப்
பெருகும் கொடுமைகட்கெல்லாம் நிலைக்களமான இந்திரசித்து (தீவலம்
சுழித்த) அம்முறைமையினை ஆதரவாகக் கொண்டு; ‘நிலம் சுரந்து
எழுவென்றி’ என்று உம்பரில் நிமிர்ந்தான் – ‘செருநிலத்தில்
வெற்றி பெருகித் தோன்றும்’ என்று (எண்ணயிவனாய்) விசும்பின்
மேல் உயர்ந்து சென்றான்.

————-

8605. விசும்பு போயினன், மாயையின் பெருமையான்; மேலைப்
பசும் பொன் நாட்டவர் நாட்டமும் உள்ளமும் படரா,
அசும்பு விண்ணிடை அடங்கினன், முனிவரும் அறியாத்
தசும்பு நுண் நெடுங் கோளொடு காலமும் சார.–165-

மாயையின் பெருமையான்- (யாவரையும் மயக்குந் தன்மையாகிய)
மாயத்தின் மிகுதியை உடையவனாகிய இந்திரசித்து; தசும்பு நுண்
நெடுங்கோளொடு காலமும் சார – (வானப்பெருவெளியில்)
அசையுந்தன்மையனவாகிய நுண்ணிய நீண்ட கோள்களுடன்
(வெற்றியைத் தரும்) காலமும் சேர; விசும்பு போயினன் –
ஆகாயத்தில் சென்றவனாகி; மேலைப் பசும்பொன் நாட்டவர்
நாட்டமும் உள்ளமும் படரா – மேலேயுள்ள பசிய பொன்மயமான
துறக்க உலகத்தவராகிய தேவர்களுடைய கண்களும் உள்ளமும்
(ஊடுருவிச்) செல்ல முடியாத; அசும்பு விண்ணிடை அடங்கினன் –
நீர்த்திவலையை உடைய வானத்திடையிலே நுண்ணுருவுடையவனாய்
ஒடுங்கினான்; முனிவரும் அறியார் – (அவனது இருப்பினை)
முனிவர்களும் அறிய முடியாதவராயினர்.

————

மகோதரன் இந்திரவடிவுடன் வந்து பொருதல்

8606. அனையன் நின்றனன்; அவ் வழி, மகோதரன் அறிந்து,
ஓர்
வினையம் எண்ணினன், இந்திர வேடத்தை மேவி,
துனை வலத்து அயிராவதக் களிற்றின்மேல் தோன்றி,
முனைவர் வானவர் எவரொடும் போர் செய மூண்டான்.–166-

அனையன் நின்றனன் – அத்தன்மையனாகிய இந்திரசித்து
(வானகத்து உருக்கரந்து) நின்றான்; அவ்வழி மகோதரன் அறிந்து
ஓர் வினையம் எண்ணினன் – அப்போது மகோதரன் அதனை
அறிந்து ஒரு சூழ்ச்சிச் செயலைச் செய்ய எண்ணியவனாய்; இந்திர
வேடத்தை மேவி – இந்திரனது உருவத்தைத்தான் மேற்கொண்டு;
துனைவலத்து அயிராவதக் களிற்றின் மேல் தோன்றி –
வேகமும் வலிமையுங் கொண்ட ஐராவதக் களிற்றின் மேல் தோன்றி;
முனைவர் வானவர் எவரொடும் போர் செய மூண்டான் –
முனிவர் தேவர் முதலியவர்களோடும் போர் புரிய முனைந்தெழுந்தான்.

———-

8607. ‘அரக்கர், மானிடர், குரங்கு, எனும் அவை எலாம் அல்லா
உருக்கள் யா உள, உயிர் இனி உலகத்தின் உழல்வ,
தருக்கும் போர்க்கு வந்தனவாம்’ எனச் சமைத்தான்;
வெருக்கொளப் பெருங் கவிப் படை குலைந்தது, விலங்கி,–167-

அரக்கர் மானிடர் குரங்கு எனும் அவை எல்லாம் அல்லா –
(தன் இனத்தவராகிய) அரக்கரும் (பகைவர் இனத்தவராகிய) மனிதரும்
குரங்கும் ஆகிய அவை அல்லாத; உருக்கள் யாவுள உயிர் இனி
உலகத்தின் உழல்வ – உருவங்களை உடையவாய் இவ்வுலகத்தில்
திரிவனவாகிய உயிரினங்கள் யாவை உள்ளன. அவை எல்லாமும்
(இப்பொழுது); தருக்கும் போர்க்கு வந்தனவாம் எனச் சமைத்தான் –
(இலக்குவன் முதலானோரோடு) செருக்கிச் செய்யும் போர்க்கு
(துணைசெய்ய) வந்துள்ள எனக் கண்டோர் கருதும்படி
(மகோதரன்தன் மாயத்தால்) படைத்துக் காட்டினான்;
வெருக்கொளப் பெருங் கவிப்படை குலைந்தது விலங்கி –
(அதுகண்டு) பெரிய வானர சேனை அச்சங்கொண்டு நிலை கெட்டுப்
பின் வாங்கியது.

———-

8608.‘கோடு நான்குடைப் பால் நிறக் களிற்றின்மேல் கொண்டான்
ஆடல் இந்திரன்; அல்லவர் யாவரும் அமரர்,
சேடர், சிந்தனை முனிவர்கள்; அமர் பொரச் சீறி,
ஊடு வந்து உற்றது என்கொலோ, நிபம்?’ என உலைந்தார்.–168-

கோடு நான்குடைப்பால் நிறக் களிற்றின் மேல் கொண்டான் –
நான்கு தந்தங்களை உடைய பால் போன்ற வெண்ணிற யானை மேல்
ஏறி வருபவன்; ஆடல் இந்திரன்; அல்லவர் யாவரும் அமரர் –
வலிமை வாய்ந்த இந்திரன் (அவனைச் சூழ்ந்துள்ள) ஏனையோர்
தேவர்கள்; சேடர் சிந்தனை முனிவர்கள் – எஞ்சியோர் இறைவனை
எண்ணியிருக்கின்ற முனிவர்கள்; அமர் பொரச் சீறி – இங்ஙனம்
வானுலகவர் (நம்மீது பகையுடன்) போர் செய்தற்குச் சீற்றங்கொண்டு;
ஊடு வந்து உற்றது என்கொலோ நிபம்? என உலைந்தார் –
(இப்போர்க்களத்தின்) இடையே வந்து சேர்ந்தது எக்காரணத்தினாலோ’
என (வானரர் திகைப்புற்று) வருந்தினர்.

———

இலக்குவன், அனுமனை முனிவர் முதலியோர் பொரும் காரணம் வினவல்

8609.அனுமன் வாள் முகம் நோக்கினன், ஆழியை அகற்றித்
தனு வலம் கொண்ட தாமரைக் கண்ணவன்தம்பி,
‘முனிவர் வானவர் முனிந்து வந்து எய்த, யாம் முயன்ற
துனி இது என்கொலோ? சொல்லுதி, விரைந்து’ எனச்
சொன்னான்.–169-

ஆழியை அகற்றித் தனுவலம் கொண்ட – சக்கரப்படையை நீக்கி
வில்லை வலக்கையிற் கொண்ட; தாமரைக் கண்ணவன் தம்பி –
செந்தாமரை மலர் போலும் கண்களை உடைய இராமபிரானின்
தம்பியாகிய இலக்குவன்; அனுமன் வாள் முகம்
நோக்கினன் – அனுமனது ஒளிபொருந்திய முகத்தை
நோக்கியவனாய்; முனிவர் வானவர் முனிந்து வந்து எய்த –
முனிவர்களும் தேவர்களும் சினந்து ‘(நம்முடன் போர் செய்ய)
வருமாறு; யாம் முயன்ற துனி இது என்கொலோ – நாம் செய்த
வெறுக்கத்தக்க குற்றம் யாதோ? சொல்லுதி உணர்ந்து எனச்
சொன்னான் – ஆராய்ந்து கூறுவாயாக” என்று கூறினான்.

——–

இந்திரசித்தன் பிரமாத்திரத்தை இலக்குவன் மேல் விடுதலும் அதன்
விளைவுகளும்
8610.இன்ன காலையின் இலக்குவன் மேனிமேல் எய்தான்,
முன்னை நான்முகன் படைக்கலம்; இமைப்பதன் முன்னம்,
பொன்னின் மால் வரைச் குரீஇஇனம் மொய்ப்பது போல,
பன்னல் ஆம் தரம் அல்லன சுடர்க் கணை பாய்ந்த.–170-

இன்ன காலையின் – இவ்வாறு (அனுமனை நோக்கி இலக்குவன்)
வினவும் நேரத்தில்; முன்னை நான் முகன் படைக்கலம் –
(இந்திரசித்து) காலத்தால் முற்பட்ட முதியவனாகிய பிரமதேவனது
படைக்கலத்தை; இமைப்பதன் முன்னம் – ஓர் இமைப்பொழுதிற்குள்;
இலக்குவன் மேனி மேல் எய்தான் – இலக்குவனது உடலின் மீது
செலுத்தினான்; பொன்னின் மால் வரைக்குரீஇ இனம் மொய்ப்பது
போல – பொன் மயமான பெரிய மலையின் மீது குருவிக் கூட்டங்கள்
மொய்ப்பதைப் போன்று; பன்னல் ஆம் தரம் அல்லன சுடர்க்கணை
பாய்ந்த – சொல்லும் தன்மைய வல்லாத ஒளிமிக்க அம்புகள்
(இலக்குவனது மேனியிற்) பாய்ந்து தைத்தன.

————-

8611.கோடி கோடி நூறாயிரம் சுடர்க் கணைக் குழாங்கள்
மூடி மேனியை முற்றுறச் சுற்றின மூழ்க,
ஊடு செய்வது ஒன்று உணர்ந்திலன், உணர்வு புக்கு ஒடுங்க,
ஆடல் மாக் கரி சேவகம் அமைந்தென, அயர்ந்தான்.–171-

கோடி, கோடி நூறாயிரம் சுடர்க் கணைக் குழாங்கள் – கோடி
கோடி நூறாயிரம் என்னும் தொகையினவாகிய ஒளி படைத்த
அம்பின் தொகுதிகள்; மேனியை மூடி முற்றுறச் சுற்றின் மூழ்க –
(இலக்குவனது) மேனியை முழுவதுமாக மூடி மறைத்துத் தைக்க; ஊடு
செய்வத ஒன்று உணர்ந்திலன் – அவ்விடை நேரத்தில் இன்னது
செய்வது என்று ஒன்றும் உணராதவனாகி; உணர்வு புக்கு ஒடுங்க –
தன்னுணர்வு உள்ளே சென்று ஒடுங்க; ஆடல்மாக்கரி சேவகம்
அமைந்தென அயர்ந்தான் – வலிய பெரிய யானையானது தான்
துயிலுமிடத்தில் அயர்ந்து துயில் கொண்டாற்போன்று அயர்ந்தான்.

————

8612.அனுமன், ‘இந்திரன் வந்தவன் என்கொல், ஈது அமைந்தான்?
இனி என்? எற்றுவென் களிற்றினோடு எடுத்து’ என
எழுந்தான்;
தனுவின் ஆயிர கொடி வெங் கடுங் கணை தைக்க,
நினைவும் செய்கையும் மறந்துபோய், நெடு நிலம் சேர்ந்தான்.–172-

அனுமன், வந்தவன் இந்திரன் ஈது என்கொல் அமைந்தான்?
(அது கண்ட) அனுமன், ‘வந்தவனோ இந்திரன், (நம்மோடு
போர் செய்தலாகிய) இதனை எது கருதி மேற்கொண்டான்? இனி
என்? எற்றுவன் களிற்றினோடு எடுத்து என எழுந்தான் –
இவ்வாறு பகைவனாக வந்துள்ளமையால்) இப்பொழுது செய்தற்குரியது
வேறு என்ன இருக்கிறது? (இவனை) யானையோடும் எடுத்து எற்றித்
தள்ளுவேன்’ எனக்கிளர்ந்து எழுந்தவன்; தனுவின் ஆயிர கோடி
வெங்கடுங்கணை தைக்க – (தனது) உடம்பில் ஆயிரங்கோடி வெம்மை
மிக்க அம்புகள் தைக்க; நினைவும் செய்கையும் மறந்து போய் நெடு
நிலம் சேர்ந்தான் – தன்நினைவும் செயலும் மறந்து போக
நெடியதரையின் கண் வீழ்ந்தான்.

—————-

8613.அருக்கன் மா மகன், ஆடகக் குன்றின்மேல் அலர்ந்த
முருக்கின் கானகம் ஆம் என, குருதி நீர் முடுக
தருக்கி, வெஞ் சரம் தலைத்தலை மயங்கின தைக்க,
உருக்கு செம்பு என கண்ணினன், நெடு நிலம் உற்றான்.–173-

அருக்கன் மாமகன் – பெருமை வாய்ந்த சூரியன் புதல்வனான
சுக்ரீவன்; ஆடகக் குன்றின் மேல் அலர்ந்த –
பொன்மலையின் மேல்பூத்துத் தோன்றும்; முருக்கின் கானகம் ஆம்
எனக் குருதி நீர் முடுக – செம்முருங்கக் காட்டினை யொத்து (தன்
உடம்பின்மேல்) இரத்தம் சுரந்து பெருகித் தோன்றுமாறு; வெஞ்சரம்
தலைத் தலைமயங்கின தைக்க – வெம்மையுடைய அம்புகள் (தன்
உடம்பின்) இடந்தோறும் விரவினவாய்த் தைத்து ஊன்றுதலால்;
உருக்கு செம்பு எனக் கண்ணினன் – ‘உருகிய செம்பு’ எனக்
கூறத்தக்க (சிவந்த) கண்களை உடையவனாகி; தருக்கி, நெடுநிலம்
உற்றான் – செருக்குற்று நீண்டதரையிடத்தே வீழ்ந்தான்.

———-

8614. அங்கதன், பதினாயிரம் அயில் கணை அழுந்த;
சிங்கஏறு இடியுண்டென நெடு நிலம் சேர்ந்தான்;
சங்கம் ஏறிய பெரும் புகழ்ச் சாம்பனும் சாய்ந்தான்,
துங்க மார்பையும் தோளையும் வடிக் கணை துளைக்க.–174-

அங்கதன் பதினாயிரம் அயில்கணை அழுந்த – அங்கதன் (தன்
உடல் மீது) பதினாயிரம் கூரிய அம்புகள் தைக்கப்பெற்று; சிங்க ஏறு
இடியுண்டென நெடுநிலம் சேர்ந்தான் – ஆண்சிங்கம் இடியினால்
தாக்கப் பட்டாற்போன்று நெடிய நிலத்தில் வீழ்ந்தான்; துங்க
மார்பையும் தோளையும் வடிக்கணை துளைக்க – உயர்ந்த
மார்பையும், தோளையும் கூரிய அம்புகள் துளைத்ததனால்; சங்கம்
ஏறிய பெரும் புகழ்ச் சாம்பனும் சாய்ந்தான்-வீரர் குழுவில் உயர்ந்து
விளங்கிய பெரிய புகழினனான சாம்பவனும் (தரையில்) சாய்ந்தான்.

———–

8615. நீலன், ஆயிரம் வடிக் கணை நிறம் புக்கு நெருங்க,
காலனார் முகம் கண்டனன்; இடபன் விண் கலந்தான்;
ஆலமே அன்ன பகழியால், பனசனும் அயர்ந்தான்;
கோலின் மேவிய கூற்றினால், குமுதனும் குறைந்தான். –175-

நீலன் ஆயிரம் வடிக்கணை நிறம்புக்கு நெருங்க – (வானர
வீரர்களில்) நீலன் என்பான் ஆயிரம் கூரிய அம்புகள் (தன்) மார்பில்
புகுந்து செறிதலால்; காலனார் முகம் கண்டனன் – (உயிர் துறந்து)
கூற்றுவனது முகத்தைக் காண்பானாயினான்; இடபன் விண் கலந்தான்
– இடபன் வானுலகடைந்தான்; பனசனும் ஆலமே அன்ன பகழியால்
அயர்ந்தான் – பனசன் ஆலகால நஞ்சினைப் போன்ற அம்பினால்
அயர்வுற்றான்; குமுதனும் கோலின் மேவிய கூற்றினால் குறைந்தான்
– குமுதன் அம்பின் வடிவத்தில் வந்த கூற்றுவனால் உயிர்குறைந்தான்.

———–

8616. வேலை தட்டவன், ஆயிரம் பகழியால், வீழ்ந்தான்;
வாலி நேர் வலி மயிந்தனும் துமிந்தனும் மடிந்தார்;
கால வெந் தொழில் கவயனும் வானகம் கண்டான்;
மாலை வாளியின் கேசரி மண்ணிடை மடிந்தான்.–176-

வேலை தட்டவன், ஆயிரம் பகழியால், வீழ்ந்தான் – கடலை
அணை கட்டித் தடுத்தவனாகிய நளன் ஆயிரம் அம்புகளால் வீழ்ந்து
இறந்தான்; வாலி நேர் வலி மயிந்தனும் துமிந்தனும் மடிந்தார் –
வாலியை ஒத்த வலிமை வாய்ந்தமயிந்தன் என்பானும் (அவன் தம்பி)
துமிந்தனும் ஒருசேர மாண்டனர்; காலவெந்தொழில் கவயனும்
வானகம் கண்டான் – காலனையொத்த கொடுந்தொழிலை உடைய
கவயன் என்பவனும் (உயிர்துறந்து) வானகம் சேர்ந்தான்; மாலை
வாளியின் கேசரி மண்ணிடை மடிந்தான் – மாலை போன்று
(தொடர்ச்சியாக) வந்த அம்புகளால் கேசரி என்பான் நிலத்தில் வீழ்ந்து
இறந்தான்.

———–

8617.கனகன் ஆயிரம் கணை பட, விண்ணிடைக் கலந்தான்;
அனகன் ஆயின சங்கனும் அக் கணத்து அயர்ந்தான்;
முனையின் வாளியின் சதவலி என்பவன் முடிந்தான்;
புனையும் அம்பினில் தம்பனும் பொருப்பு எனப்
புரண்டான்.–177-

கனகன் ஆயிரம் கணைபட விண்ணிடைக் கலந்தான் – கனகன்
என்பவன் ஆயிரம் அம்புகள் பாய்ந்தமையால் (உயிர் நீத்து)
விண்ணில் கலந்தான்; அனகனாயின சங்கனும் அக்கணத்து
அயர்ந்தான் – (மாயையால்) அரூபியான சங்கன் என்பவனும்
(அம்புகள்பட்ட) அந்தக் கணத்திலேயே அயர்ந்தான்; முனையின்
வாளியின் சதவலி என்பவன் முடிந்தான் – முனைதீட்டப் பெற்ற
அம்பினால் சதவலி என்பவன் இறந்தான்; புனையும் அம்பினில்
தம்பனும் பொருப்பு எனப் புரண்டான் – புனைந்து ஏவப் பெற்ற
அம்பினால் தம்பன் என்பவனும் மலைபோல மண்ணில் புரண்டான்.

———–

8618.விந்தம் அன்ன தோள் சதவலி, சுசேடணன், வினதன்,
கெந்தமாதனன், இடும்பன், வன் ததிமுகன், கிளர,
உந்து வார் கணை கோடி தம் உடலம் உற்று ஒளிப்ப,
தம்தம் நல் உணர்வு ஒடுங்கினர், மண் உறச் சாய்ந்தார்.–178-

விந்தம் அன்ன தோள் சதவலி சுசேடணன், வினதன் – விந்த
மலையினை ஒத்து உயர்ந்த தோளையுடைய சதவலி, சுசேடணன்
வினதன்; கெந்தமாதனன், இடும்பன்வன் ததிமுகன்கிளர –
கந்தமாதனன், இடும்பன், வன்மையுடைய ததிமுகன் ஆகிய வானர
வீரர்கள், கிளர்ந்துமேலெழ; உந்துவார்கணை கோடி தம் உடலம்
உற்று ஒளிப்ப – (இந்திரசித்தனாற்) செலுத்தப்பட்ட நீண்ட அம்புகள்
கோடிக்கணக்கின வாகத்தம் உடலில் அழுந்தத் தைத்து மறைந்தலால்;
தம்தம் நல் உணர்வு ஒடுங்கினர் மண் உறச் சாய்ந்தார் –
தங்கள் தங்களது நல்லுணர்வு ஒடுங்கியவர்களாய் மண்ணிற் பொருந்த
வீழ்ந்தார்கள்.

————

8619. மற்றை வீரர்கள் யாவரும் வடிக் கணை மழையால்
முற்றம் வீந்தனர்; முழங்கு பேர் உதிரத்தின் முந்நீர்
எற்று வான் திரைக் கடலொடும் பொருது சென்று ஏற,
ஒற்றை வான் கணை ஆயிரம் குரங்கினை உருட்ட.–179-

முழங்கு பேர் உதிரத்தின் முந்நீர் – ஒலிக்கின்ற பெரிய குருதி
நீராகிய (செங்)கடல்;எற்று வான் திரைக் கடலொடும் – மோதுகின்ற
பெரிய அலைகளை உடைய கருங்கடலோடு; பொருது சென்று ஏற –
எதிர்த்து மோதி மேற் செல்லும்படி; ஒற்றை வான் கணை ஆயிரம்
குரங்கினை உருட்ட – (ஆயிரம் ஆயிரமாகப் பெருகிய
பிரமாத்திரத்தின்) ஒரு தெய்வக்கணை ஆயிரம் வானரங்கள் வீதம்
ஒரு சேர உருட்டித்தள்ள; மற்றைவீரர்கள் யாவரும் வடிக்கணை
மழையால் – (மேலேகுறிக்கப்பட்டவர்களை யொத்த) ஏனைய
வானரவீரர்கள் அனைவரும் கூரிய அம்பு மழையால்; முற்றும்
வீந்தனர் – (தாக்கப்பட்டு) முழுமையாக அழிந்து போயினார்.

———–

8620. தளைத்து வைத்தது, சதுமுகன் பெரும் படை தள்ளி;
ஒளிக்க, மற்றொரு புகலிடம் உணர்கிலர்; உருமின்
வளைத்து வித்திய வாளியால், மண்ணொடும் திண்ணம்
முளைப் புடைத்தன ஒத்தன; வானரம் முடிந்த.–180-

சதுமுகன் பெரும்படை தள்ளித் தளைத்து வைத்தது – நான்
முகனது பெருமை வாய்ந்த படைக்கலமானது (வானரங்களைக் கீழே)
தள்ளிப் பிணித்துவிட்டது;ஒளிக்க, மற்றொரு புகலிடம் உணர்கிலர் –
(அவ்விடத்தை விட்டுத் தப்பியோடி) மறைதற்கு அன்னோர் வேறொரு
பாதுகாப்பான இடத்தை உணர்தற்கு இயலாதவராயினர்; உருமின்
வளைத்து வித்திய வாளியால் மண்ணொடும் திண்ணம் –
இடியினைப் போன்று சுற்றிலும் எய்யப்பெற்ற அம்புகளால் பூமியுடன்
சேர்த்து உறுதியாக; முளைப்புடைத்தான் ஒத்தன வானரம்
முடிந்த – முளையடிக்கப் பட்டவற்றை ஒத்தனவாய் அங்குள்ள
வானரங்கள் யாவும் இறந்தன.

——–

8621. குவளைக் கண்ணினை வான் அர மடந்தையர் கோட்டித்
துவள, பாரிடைக் கிடந்தனர்; குருதி நீர் சுற்றித்
திவள, கீழொடு மேல் புடை பரந்து இடை செறிய,
பவளக் காடுடைப் பாற்கடல் ஒத்தது, அப் பரவை.–181-

குவளைக் கண்ணினைக்கோட்டி – நீலமலர்போன்ற கண்களைச்
சாய்த்து நோக்கி; வான் அரமடந்தையர் துவள – வானுலகிலுள்ள
தேவமகளிர் வாட்டமுற்று வருந்த; பாரிடைக் கிடந்தனர் –
(வானரவீரர்கள்) பூமியிற் (பிணமாகக்) கிடந்தார்கள்; குருதி நீர் சுற்றிக்
கீழொடு மேல் புடை பரந்து – (அவர்தம் வெண்ணிற உடம்பினின்றும்
வெளிப்பட்ட) இரத்த நீர் கீழும் மேலும் பக்கங்களிலும் பரவி; இடை
திவள செறிய – இடையிடையே நெருங்கி விளங்குதலால்; அப்பரவை,
பவளக் காடுடைப் பாற்கடல் ஒத்தது – அந்த (வானரப்படையாகிய)
கடற்பரப்பானது பவளக்கொடிகளாகிய காடுகளையுடைய பாற்கடலை
ஒத்துத் தோன்றியது.

———–

8622. விண்ணில் சென்றது, கவிக் குலப் பெரும் படை வெள்ளம்;
கண்ணில் கண்டனர் வானவர், விருந்து எனக் கலந்தார்,
உள் நிற்கும் பெருங் களிப்பினர், அளவளாய் உவந்தார்;
‘மண்ணில் செல்லுதிர், இக் கணத்தே’ எனும் மனத்தார்.–182-

கவிக்குலப் பெரும்படை வெள்ளம் விண்ணில் சென்றது –
வானரகுலப்பெரும் படையாகிய வெள்ளம் (மண்ணில் உயிர்துறந்து
தேவர்களாகி) விண்ணுலகிற் சென்றது; வானவர் கண்ணில் கண்டனர்
விருந்து எனக் கலந்தார் – (அதனைத்) தேவர்கள் தம் கண்களாற்
கண்டவர்களாய் விருந்தினர்என (அன்பினாற்) கலந்தவர்களாய்;
உள்நிற்கும் பெருங்களிப்பினர் – உள்ளத்தில் நிலைபெற்ற
பெருங்களிப்பினை உடையவர்களாய்; அளவளாய் உவந்தார் –
(அவர்களோடு) அளவளாவி மகிழ்ந்தார்கள்; இக்கணத்தே மண்ணில்
செல்லுதிர் – ‘(நீங்கள், எம்பொருட்டு) இப்பொழுதே’ மண்ணுலகத்திற்கு
(மீண்டு) செல்வீராக; என வலித்தார் – எனவற்புறுத்தி
வேண்டினார்கள்.

——————-

8623. ‘பார் படைத்தவன் படைக்கு ஒரு பூசனை படைத்தீர்;
நீர் படக் கடவீர்அலீர்;-வரி சிலை நெடியோன்
பேர் படைத்தவற்கு அடியவர்க்கு அடியரும் பெறுவார்,
வேர் படைத்த வெம் பிறவியில் துவக்குணா, வீடு.–183-

வரிசிலை நெடியோன் – வரிந்து கட்டப்பெற்ற வில்லினை
உடையோனாகிய இராமபிரானது; பேர்படைத்தவர்க்கு – பெயரைத்
தரித்தவர்களுக்கு; அடியவர்க்கு அடியரும்- அடித்தொண்டுபட்டார்க்கு
அடியவராயினாரும்; வேர்படைத்த வெம்பிறவியில் – (வினையாகிய)
வேரூன்றிட வெம்மையான பிறவியினால்; துவக்குணா வீடு பெறுவர்
– பிணிக்கப்படாது, வீடு பேற்றினைப் பெறுவர்; (என்றால்); நீர்படக்
கடவீர் அலீர் – (இராமபிரானது சேவையிலிருக்கின்ற) நீங்கள்
(இங்ஙனம் அகாலமாக) இறக்கும் தன்மை உள்ளவர்களல்லீர்;
பார்படைத்தவன் படைக்கு – இவ்வுலகைப் படைத்த பிரமதேவனுடைய
பாடையாகிய பிரமாத்திரத்திற்கு; ஒரு பூசனை படைத்தீர் –
செய்யத்தக்கதொரு வழிபாட்டினைச் செய்தவராய் (நும் உடம்பைத்
துறந்து) இவ்விடம் வந்தீர்கள்!

————–

8624. ‘நங்கள் காரியம் இயற்றுவான் உலகிடை நடந்தீர்;
உங்கள் ஆர் உயிர் எம் உயிர்; உடல் பிறிது உற்றீர்;
செங் கண் நாயகற்காக வெங் களத்து உயிர் தீர்ந்தீர்;
எங்கள் நாயகர் நீங்கள்’ என்று இமையவர் இசைத்தார்.–184-

‘நங்கள் காரியம் இயற்றுவான் – (தேவர்களாகிய) நம்முடைய
செயல்களை நிறைவேற்றுதற்காக; உலகிடை நடந்தீர் – நிலவுலகில்
சென்று பிறந்தீர்கள்; உங்கள் ஆர் உயிர் எம் உயிர் – உங்களுடைய
அரிய உயிர் எம்முடைய உயிரே; உயிர் பிறிது உற்றீர் – உடம்பு
(மட்டும்) வேறாகப் பெற்றுள்ளீர்கள்; செங்கண் நாயகற்காக –
(தாமரைபோலும்) சிவந்த கண்களை உடைய இராமபிரான்பொருட்டு;
வெங்களத்து உயிர் தீர்ந்தீர் – கொடுமை மிக்க போர்க்களத்தில் உயிர்
நீங்கப் பெற்றீர்; எங்கள் நாயகர் நீங்கள்’ – எம்முடைய இறைவர்
நீங்களே; என்று இமையவர் இசைத்தார் – என்று தேவர்கள்
(வானரவீரரைப்) புகழ்ந்து பாராட்டினர்.

————-

இந்திரசித்தன் தந்தையின் இருப்பிடம் சென்று செய்தி சொல்லுதல்

8625. ‘வெங் கண் வானரக் குழுவொடும், இளையவன் விளிந்தான்;
இங்கு வந்திலன், இராமன் இப்போது’ என இகழ்ந்தான்;
சங்கம் ஊதினன்; தாதையை வல்லையில் சார்ந்தான்;
பொங்கு போரிடைப் புகுந்துள பொருள் எலாம் புகன்றான்.–185-

‘வெங்கண் வானரக் குழுவொடும் – ‘வெகுளி மிக்க கண்களை
உடைய வானரக் கூட்டத்துடன்; இளையவன் விளிந்தான் –
இலக்குவன் இறந்து பட்டான்; இராமன் இப்போது இங்கு
வந்திலன்’ – (அவன் தமையனாகிய) இராமனோ (யான்
பிரமாத்திரம் விடுத்த இப்பொழுது) இப்போர்க்களத்திடத்து வந்து
சேர்ந்திலன்’; என இகழ்ந்தான் – என்று இகழ்ந்தவனாகிய
இந்திரசித்து; சங்கம் ஊதினான் – (வெற்றிச்) சங்கினை ஊதினான்;
தாதையை வல்லையில் சார்ந்தான் – (பிறகு) தன்தந்தையாகிய
இராவணனை விரைவிற் சென்றடைந்து; பொங்கு போரிடை –
எழுச்சி மிக்க போரின்கண்; புகுந்துள பொருள் எலாம் புகன்றான் –
விளைந்துள்ள நிகழ்ச்சிகளை எல்லாம் எடுத்துரைத்தான்.

————-

இராமன் இறந்திலனோ?’ என்ற இராவணன் வினாவும்
இந்திரசித்தன் விடையும்

8626. ‘இறந்திலன்கொலாம் இராமன்?’ என்று இராவணன்
இசைத்தான்;
‘துறந்து நீங்கினன்; அல்லனேல், தம்பியைத் தொலைத்து,
சிறந்த நண்பரைக் கொன்று, தன் சேனையைச் சிதைக்க,
மறந்து நிற்குமோ, மற்று அவன் திறன்?’ என்றான், மதலை.–186-

“இறந்திலன் கொலாம் இராமன்?” – (இந்திரசித்தன் கூறியவற்றைக்
கேட்டபின்பு) ‘இராமன் இறக்கவில்லையோ?’ என்று இராவணன்
இசைத்தான் – என்று (மகனைப்பார்த்து) இராவணன் கேட்டான்;
(அதற்கு); ‘துறந்து நீங்கினான்’ ‘அவ்விராமன் போர்க்களத்தை விட்டு எங்கேயோ சென்று
விட்டான்; அல்லனேல் – அங்ஙனம் செல்லாதிருந்திருப்பானாயின்;
தம்பியைத் தொலைத்து – அவனுடைய தம்பியாகிய இலக்குவனை
உயிர் நீங்கச் செய்து; சிறந்த நண்பரைக் கொன்று – அவனுக்குச்
சிறந்த நண்பர்களாயிருந்தோரை எல்லாம் கொன்று; தன்சேனையைச்
சிதைக்க – அவன்றன்னுடைய சேனையையும் சிதைத்த
(பிரம்மாத்திரம்); மற்று அவன் திறம் – மற்று அவ்விராமன்
பக்கத்தும்; மறந்து நிற்குமோ – (கொல்லாமல்) மறந்து நிற்பதுண்டோ?
என்றான் மதலை – என்று மறுமொழி கூறினான்; மைந்தனாகிய
இந்திரசித்து.

—————

8627. ‘அன்னதே’ என, அரக்கனும் ஆதரித்து அமைந்தான்;
சொன்ன மைந்தனும், தன் பெருங் கோயிலைத்
தொடர்ந்தான்;
மன்னர் ஏவலின் போயினன், மகோதரன் வந்தான்;
எனனை ஆளுடைய நாயகன் வேறு இடத்து இருந்தான்.–187-

அன்னதே என – (நீ கூறிய) அதுவே நிகழ்ந்திருத்தல் வேண்டும்
என்று கூறி; அரக்கனும் ஆதரித்து அமைந்தான் – இராவணன்
(தன்மகன் கூறியதை) உடன்பட்டு ஏற்றுக்கொண்டான்; சொன்ன
மைந்தனும் – (நிகழ்ந்தவற்றைச்) சொன்ன இந்திர சித்தும்; தன்
பெருங் கோயிலைத் தொடர்ந்தான் – தனது பெரிய
மாளிகையினை அடைந்தான்; மன்னன் ஏவலின் போயினன் –
இராவணன் ஏவலால் முன்பு போருக்குச் சென்றவனாகிய;மகோதரன்
வந்தான் – மகோதரனும் (மீண்டு தன் இருப்பிடத்திற்கு)
வந்து சேர்ந்தான்; என்னை ஆளுடை நாயகன் – என்னை
அடிமையாக உடைய இறைவனான இராமன்; வேறு இடத்து
இருந்தான் – (தெய்வப்படைக்கலங்களுக்கு வழிபாடு செய்து
கொண்டு) வேறோர் இடத்தில் தங்கி இருந்தான்.

———

இராமன் தெய்வப்படைகளுக்கு வழிபாடு இயற்றிப்
போர்க்களம் புகுதல்

8628. செய்ய தாமரை நாள்மலர்க் கைத் தலம் சேப்ப,
துய்ய தெய்வ வான் படைக்கு எலாம் வரன்முறை துரக்கும்
மெய்கொள் பூசனை விதிமுறை இயற்றி, மேல், வீரன்,
‘மொய்கொள் போர்க் களத்து எய்துவாம் இனி’ என
முயன்றான்.–188-

வீரன் – (வீரருள்) வீரனாகிய இராமபிரான்; செய்ய தாமரை
நாள்மலர் – அன்றலர்ந்த செந்தாமரை மலர் போன்ற; கைத்தலம்
சேப்ப – (தனது) கைத்தலங்கள் மேலும் சிவக்கும்படி; துய்ய தெய்வ
வான் படைக்கு எலாம் – தூய்மையும் தெய்வத்தன்மையும் உடைய
உயர்ந்த (தனது) படைகளுக்கெல்லாம்; வரன்முறை துரக்கும்
மெய்கொள் பூசனை – வரன்முறையாகச் செலுத்துதற்குரிய
மெய்மையான வழி பாட்டினை; விதி முறை இயற்றி – செய்ய
வேண்டிய முறைப்படி செய்து; மேல் – பிறகு, இனிமேல்; மொய்கொள்
போர்க்களத்து – (வீரர்தம்) வலிமை விளங்கித் தோன்றும்
போர்க்களத்திடத்து; எய்துவாம் என முயன்றான் – செல்வோம் என்று
(புறப்படுதலாகிய) முயற்சியை மேற்கொண்டான்.

————–

8629. கொள்ளியின் சுடர் அனலிதன் பகழி கைக்கொண்டான்;
அள்ளி நுங்கலாம் ஆர் இருட் பிழம்பினை அழித்தான்;
வெள்ள வெங் களப் பரப்பினைப் பொருக்கென விழித்தான்;
தள்ளி, தாமரைச் சேவடி நுடங்குறச் சார்ந்தான்.–189-

கொள்ளியின் சுடர் அனலிதன் – தீக்கொள்ளியினை யொத்துச்
சுடர் விட்டொளிர்கின்ற அக்கினி தேவனது; பகழிகைக் கொண்டான் –
அம்பினைத் தன் கையிற் கொண்டவனாகி; அள்ளி நுங்கலாம் –
(கையினால்) அள்ளியெடுத்து விழுங்குதற்குத் தக்கவாறு; ஆர் இருட்
பிழம்பினை அழித்தான் – திரண்டுள்ள அரிய இருளின் பிழம்பினைச்
சிதைத்து அழித்தான்; தள்ளில் தாமரைச் சேவடி – தள்ளப்
படுதற்கியலாத (சிறந்த) தாமரை போன்ற சிவந்த திருவடி; நுடங்குறச்
சார்ந்தான் – அசைவுற்றுத் தளர நடந்து சென்று; வெள்ள வெங்களப் பரப்பினை – (குருதி) வெள்ளம்
நிரம்பிய கொடுமை மிக்க போர்க்களமாகிய பரந்த இடத்தினைப்;
பொருக்கென விழித்தான் – திடுக்கிட்டு விழித்துப் பார்த்தான்.

———-

வீழ்ந்து கிடக்கும் சுக்ரீவன் முதலானோரைத் தனித்தனி
கண்டு இராமன் வருந்துதல்

8630. நோக்கினான் பெருந் திசைதொறும்; முறை முறை நோக்கி,
ஊக்கினான்; தடந் தாமரைத் திரு முகத்து உதிரம்
போக்கினான்; நிணப் பறந்தலை அழுவத்துள் புக்கான்;
காக்கும் வன் துணைத் தலைவரைத் தனித் தனி கண்டான்.–190-

நோக்கினான் – (அங்ஙனம் போர்க்களத்தை) விழித்துப்
பார்த்தவனாகிய இராமபிரான்; பெருந்திசை தொறும் முறை முறை
நோக்கி – திசையிடங்கள் தோறும் அடுத்தடுத்து உற்றுப்பார்த்து;
ஊக்கினான் – (அங்குள்ள அவலக் காட்சிகளைக் கண்டு) முயன்று
மேற்சென்றவனாய்; தடந்தாமரைத் திரு முகத்து – விரிந்த பெரிய
செந்தாமரை மலர் போலும் (தன்) அழகிய முகத்தின் கண்ணே;
உதிரம் போக்கினான் – உதிரத்தை வெளிப்படுத்தினான்;
நிணப்பறந்தலை அழுவத்துள் புக்கான் – நிணம் நிறைந்த
போர்க்களப் பரப்பினிடத்தே புகுந்தான்; காக்கும் வன் துணைத்
தலைவரை – (தன் சேனையைக்) காத்தற்றொழிலை மேற்கொண்டிருந்த
வலிமை வாய்ந்த துணையாயமைந்த (வானரத்) தலைவைர்களை;
தனித்தனி கண்டான் – (ஒவ்வொருவராகத்) தனித்தனியே சென்று
பார்த்தான்.

———–

8631. சுக்ரீவனை நோக்கி, தன் தாமரைத் துணைக் கண்
உக்க நீர்த்திரள் ஒழுகிட, நெடிது நின்று உயிர்த்தான்;
‘தக்கதோ, இது நினக்கு!’ என்று, தனி மனம் தளர்ந்தான்;
பக்கம் நோக்கினன்; மாருதி தன்மையைப் பார்த்தான்.–191-

சுக்ரீவனை நோக்கி – (மடிந்துகிடக்கும்) சுக்ரீவனைப் பார்த்து; தன்
தாமரைத் துணைக்கண் – தனது தாமரை மலர் போன்ற
இருகண்களினின்றும்; உக்க நீர்த்திரள் ஒழுகிட – சிந்திய
கண்ணீர்த்திரள் வழிந்த படி இருக்க; நின்று நெடிது உயிர்த்தான் –
(செயலற்று) நின்று பெருமூச்செறிந்தான்; ‘இது நினக்குத் தக்கதோ
என்று – (என்னைத் தனியே புலம்புமாறு விட்டுப் பிரிந்து) இங்ஙனம்
கிடப்பது உனக்குப் பொருந்துவதோ என்று; தனிமனந்தளர்ந்தான் –
மனந்தளர்ந்து வருந்தினான்; பக்கம் நோக்கினன் – (அச்சுக்ரீவனது)
பக்கத்தில் பார்த்தான்; மாருதிதன்மையைப் பார்த்தான் – அனுமானின்
நிலைமையைக் கண்ணுற்றான்.

————–

8632. ‘கடல் கடந்து புக்கு, அரக்கரைக் கருவொடும் கலக்கி,
இடர் கடந்து நான் இருக்க, நீ நல்கியது இதற்கோ?
உடல் கடந்தனவோ, உனை அரக்கன் வில் உதைத்த
அடல் கடந்த போர்வாளி?’ என்று, ஆகுலித்து அழுதான்.–192-

கடல் கடந்து புக்கு – கடலைக் கடந்து (இலங்கையினுள்) புகுந்து;
அரக்கரைக் கருவொடும் கலக்கி – (எதிர்ப்பட்ட) அரக்கர்களைக்
கருவுடனே கலங்கச்செய்து; இடர் கடந்து நான் இருக்க –
(அரக்கர்செய்த) துன்பத்தைக் கடந்து நான் (உயிர் தாங்கி)
இருக்கும்படி; நீநல்கியது இதற்கோ – நீ (எனக்கு) உதவியது (இங்ஙனம்
உன்னை இழந்து, பார்த்துப் பரிதவிப்பதற்குத் தானோ?’ அரக்கன் வில் உதைத்த – அரக்கனுடைய
(இந்திரசித்தினுடைய) வில்லினின்று செலுத்திய; அடல் கடந்த போர்
வாளி – வலிமை வாய்ந்த போர்த்தொழிற்குரிய அம்புகள்; உனை,
உடல் கடந்தனவோ? – உனது உடம்பினை ஊடுருவி அப்பாற்
சென்றனவோ?” என்று ஆகுலித்து அழுதான் – என்று கூறி
(வாய்விட்டு அரற்றி) இரைந்து அழுதான் (இராமன்).

————-

8633. ‘முன்னைத் தேவர்தம் வரங்களும், முனிவர்தம் மொழியும்,
பின்னைச் சானகி உதவியும், பிழைத்தன; பிறந்த
புன்மைச் செய் தொழில் என் வினைக் கொடுமையால்
புகழோய்
என்னைப் போல்பவர் ஆர் உளர், ஒருவர்?’ என்று
இசைத்தான்.–193-

புகழோய் – புகழத்தக்க பெருமையுடையோனே! பிறந்த புன்மை
செய் தொழில் – (என்னுடன்) தோன்றிய இழிந்த செய் தொழிலுக்குக்
காரணமாகிய; என்வினைக்கொடுமையால் – எனது தீவினையின்
கொடுமையால்; முன்னைத் தேவர்தம் வரங்களும் – முன்பு (உனக்குத்)
தேவர்கள் கொடுத்த வரங்களும்; முனிவர்தம் மொழியும் –
முனிவர்கள் அளித்த வாழ்த்துரையும்; பின்னைச் சானகி உதவியும் –
பின்பு (சனகன் மகளாகிய) சானகி (நீ இலங்கையில் அவளைக் கண்ட
காலத்துச்) செய்த உதவியும்; பிழைத்தன – ஆகிய இவையெல்லாம்
(இன்னு உன்னைக் காத்தற்கு முடியாதனவாய்) பயனற்றவாய் ஒழிந்தன;
என்னைப் போல்பவர் ஒருவர் ஆர் உளர் – (இதற்குக்காரணமாய்)
என்னைப் போன்று (உயிர் தாங்கி) உள்ளவர் ஒருவர்
(என்னையன்றிப் பிறர் யாருளர்? என்று இசைத்தான் – என்று
(தன்னை வெறுத்துக்) கூறினான் (இராமன்).

————–

8634. ‘புன் தொழில் புலை அரசினை வெஃகி, என் பூண்டேன்?
கொன்று ஒருக்கினேன், எந்தையை; சடாயுவைக் குறைத்தேன்;
இன்று ஒருக்கினேன், இத்தனை வீரரை; இருந்தேன்!
வன் தொழிற்கு ஒரு வரம்பும் உண்டாய் வரவற்றோ?–194-

புன் தொழில் புல அரசினை – சிறுமையான செயலால் இழிந்த
அரச பதவியினை; வெஃகி என் பூண்டேன் – விரும்பி என்ன
(பெறுதற்கரிய பேற்றினைப்) பெற்று விட்டேன்? எந்தையைக் கொன்று
ஒருக்கினேன் – (அதனால்) என் தந்தையைக் கொன்றழித்தேன்;
சடாவுவைக் குறைத்தேன் – (என்தந்தைக்குச் சமமான) சடாயுவை
வீழ்த்தினேன்; இத்தனை வீரரை இன்று – (இப்போர்க்களத்தில்)
இத்தனை வானரவீரர்களையும் இன்று; ஒருக்கினேன் இருந்தேன் –
உயிர் நீங்கச் செய்தேனாய் (நான்மட்டும் உயிர் தாங்கி) இருந்தேன்;
வன்தொழிற்கு – (இத்தகைய என்னுடைய) கொடிய செயல்களுக்கு;
ஒருவரம்பும் உண்டாய் வரவற்றோ? – ஓர் எல்லையும் உண்டாகி
அமையவல்லதோ? (இல்லை என்றபடி).

————-

8635. ‘தமையனைக் கொன்று, தம்பிக்கு வானரத் தலைமை
அமைய நல்கினென், அடங்கலும் அவிப்பதற்கு அமைந்தேன்;
கமை பிடித்து நின்று, உங்களை இத்துணைக் கண்டேன்;
சுமை உடல் பொறை சுமக்க வந்தேன்’ எனச் சொன்னான்.–195-

தமையனைக் கொன்று – அண்ணனைக் கொன்று; தம்பிக்கு
வானரத்தலைமை – தம்பிக்கு (சுக்கிரீவனுக்கு) வானரகுல அரசனாம்
தன்மையை; அமைய நல்கினென், – பொருந்தும்படி தந்து;
அடங்கலும் அவிப்பதற்கு அமைந்தேன் -(நன்மை செய்வது போன்று
அவ்வானவர்குலம்) முழுமையும் அழிப்பவனாகி அமைந்தேன்;
கமைபிடித்து நின்று, – பொறுமையைக் கடைபிடித்து நின்று; உங்களை
இத்துணை கண்டேன் – உங்களை இவ்வளவு
துன்பத்திற்குள்ளாக்கினேன்; சுமை உடல் பொறை – பூமிக்குப்
பாரமாகவுள்ள எனது உடம்பின் சுமையினை; சுமக்க வந்தேன்’ எனச்
சொன்னான் – சுமத்தற்கென்றே (இவ்வுலகிற்) பிறந்தேன்’ என்று கூறி
(இராமன்) வருந்தினான்.

—————–

8636. விடைக் குலங்களின் நடுவண் ஓர் விடை கிடந்தென்ன,
கடைக்கண் தீ உக, அங்கதக் களிற்றினைக் கண்டான்;
‘படைக்கலங்களைச் சுமக்கின்ற பதகனேன், பழி பார்த்து,
அடைக்கலப் பொருள் காத்தவாறு அழகிது’ என்று அழுதான்.–196-

விடைக்குலங்களின் நடுவண் – ‘எருதுக் கூட்டங்களின் நடுவே;
ஓர் விடை கிடந்தென்ன – ஒப்பற்ற தோர் இடபம்
கிடந்தாற்போல (ப்பெருவீரர்களின் நடுவிலே கிடக்கும்); அங்கதக்
களிற்றினை – அங்கதனாகிய யானையை;கண்டகடைதீ உகக்
கண்டான் – (இராமன் தன்) கண்களின் கடையினின்றும் தீப்பொறி
பறக்குமாறு பார்த்தான்;படைக்கலங்களைச் சுமக்கின்ற பதகனேன் –
(பகைவரால் துன்புறாது அடைந்தாரைப் பாதுகாக்கும் நோக்குடன்)
ஆயுதங்களைச் சுமந்து கொண்டுள்ள தீவினையாளனாகிய யான்; பழி
பார்த்து-பழி (நேராமல்) நோக்கி; அடைக்கலப் பொருள் காத்தவாறு
– (என்னிடத்தில் ஒப்புவித்த) அடைக்கலப்பொருளைப்
பாதுகாத்ததிறம்; அழகிது’ என்று அழுதான் – மிகவும் அழகாயுள்ளது’
என்று கூறி அழுதான்.

————-

இலக்குவனைக் கண்டு இராமன் அடைந்த துயரம்

8637. உடரிடைத் தொடர் பகழியின் ஒளிர் கதிர்க் கற்றைச்
சுடருடைப் பெருங் குருதியில், பாம்பு எனச் சுமந்த
மிடருடைப் பண மீமிசை, தான் பண்டை வெள்ளக்
கடரிடைத் துயில்வான் அன்ன தம்பியைக் கண்டான்.–197-

உடரிடைத் தொடர் பகழியின் – உடம்பின் இடையே துளைத்து
ஊடுருவிய அம்புகளின்; ஒளிர்கதிர்க் கற்றை – ஒளிவிட்டு விளங்கும்
ஒளித் தொகுதியான; சுடருடைப் பெருங் குருதியில் – சுடரினையுடைய
பெரிய குருதியினிடத்தே; பாம்பு எனச் சுமந்த – பாம்பெனப்
பகருமாறு சுமந்து அக்காட்சி; மிடருடைப் பணமீமிசை – வலிமையை
உடைய ஆதிசேடன் என்னும்) பாம்பின் மேல்; பண்டை வெள்ளக்
கடரிடை – பழமையான பாற்கடலின் கண்ணே; துயில்வான் தான்
அன்ன – துயில்பவனாகிய தன்னை நிகர்த்திருக்க (க்கிடைக்கும்);
தம்பியைக் கண்டான் – இளவலான இலக்குவனை இராமபிரான்
பார்த்தான்.

————-

8638. பொருமினான், அகம்; பொங்கினான்; உயிர் முற்றும்
புகைந்தான்;
குரு மணித் திரு மேனியும், மனம் எனக் குலைந்தான்;
தருமம் நின்று தன் கண் புடைத்து அலமர, சாய்ந்தான்;
உருமினால் இடியுண்டது ஓர் மராமரம் ஒத்தான்.–198-

அகம் பொருமினான் – (இரத்த வெள்ளத்தில் வீழ்ந்து கிடக்கும்
தம்பியைக் கண்ட இராமன்) மனம் வெதும்பினான்; பொங்கினான்;
உயிர் முற்றும் புகைந்தான் – வெகுளி மிகுந்தவனாகி உயிர்ப்பு
முழுமையும் புகையுடன் தோன்றப் பெற்றான்; குருமணித்
திருமேனியும் – நிறந்தாங்கிய நீலமணி போலும் (தனது) அழகிய
உடம்பும்; மனம் எனக் குலைந்தான் – உள்ளம்போல நடுக்கமுற்றான்;
தருமம் நின்று – அறக்கடவுள் (இத்துன்பநிலை கண்டு இரங்கி) நின்று;
தன்கண்புடைத்து அலமரச் சாய்ந்தான் – தன் கண்களில் அடித்துக்
கொண்டு வருந்துமாறு (நிலத்தில்) சாய்ந்தான்; உருமினால் இடியுண்டது
ஓர் – இடியினால் தாக்கப்பட்டதொரு; மராமரம் ஒத்தான் –
மராமரத்தை ஒத்து (த்தரையில்) வீழ்ந்தான்.

————-

8639. உயிர்த்திலன் ஒரு நாழிகை; உணர்ந்திலன் ஒன்றும்;
வியர்த்திலன், உடல்; விழித்திலன், கண் இணை;
விண்ணோர்,
‘அயிர்த்து இலன் கொல்?’ என்று அஞ்சினர்;
அங்கையும் தாளும்
பெயர்த்திலன்; உயிர் பிரிந்திலன்-கருணையால் பிறந்தான்.–199-

கருணையால் பிறந்தான் -(உயிர்கள் மீது வைத்த) பெரும் கருணை
காரணமாக அவதரித்து வந்தவனாகிய இராமபிரான்; ஒரு நாழிகை
உயிர்த்திலன் – ஒரு நாழிகைப் பொழுதளவும் மூச்சு விட்டிலன்;
ஒன்றும் உணர்ந்திலன், – ஒன்றும் உணர்ந்தானில்லை; உடல்
வியர்த்திலன் – உடல் வியர்வை கொள்ளவும் இல்லை; கண் இணை
விழித்திலன் – இரு கண்களும் திறக்கவும் இல்லை; அங்கையும்
தாளும் பெயர்த்திலன் – அழகிய கைகளும் கால்களும்
நிலைபெயர்த்து அசைத்திலன்; உயிர் பிரிந்திலன் – (ஆனால்)
உயிர்மட்டும் நீங்கப் பெறாதவனாயினான்; விண்ணோர் ‘அயிர்த்து
இலன்கொல்?’ என்று அஞ்சினர் – (அந்நிலையில்) தேவர்கள்
(அப்பிரான்) ‘உயிரொடுங்கினானோ’ என அச்சமுற்றனர்.

—————-

8640. தாங்குவார் இல்லை; தம்பியைத் தழீஇக்கொண்ட தடக் கை
வாங்குவார் இல்லை; வாக்கினால் தெருட்டுவார் இல்லை;
பாங்கர் ஆயினார் யாவரும் பட்டனர்; பட்ட
தீங்குதான் இது; தமியனை யார் துயர் தீர்ப்பார்?–200-

தாங்குவார் இல்லை – (அங்கு இராமபிரானை) தாங்கிக் கொள்வார்
எவரும் இலர்; தம்பியைத் தழீஇக்கொண்ட – தம்பியாகிய
இலக்குவனைத் தழுவிக் கொண்டுள்ள; தடக்கை வாங்குவாரில்லை –
(இராமனது) பெரிய கையினை (ப்பிரித்து) வாங்கி எடுப்பவர் ஒருவரும்
இலர்; வாக்கினால் தெருட்டுவார் இலர் – தேறுதல் மொழிகளால்
தேற்றுவாரும் இலர்; பாங்கர் ஆயினார் யாவரும் பட்டனர் –
(அவனுக்கு) அணுக்கராயுள்ளோர் அனைவரும் இறந்துபட்டனர்;
பட்டதீங்குதான் இது – (அவனுக்கு) உண்டாகிய துன்பம் இத்தகையது;
தமியனை யார் துயர் தீர்ப்பார்? – (உற்றார் உறவினர் எவருமின்றித்)
தனிப்பட்டவனைத் துன்பம் தவிர்ப்பவர் எவர் உளர்?

—————

8641. கவந்த பந்தமும், கழுதும், தம் கணவரைக் காணார்
சிவந்த கண்ணியர் தேடினர் திரிபவர் திரளும்,
உவந்த சாதகர் ஈட்டமும், ஓரியின் ஒழுங்கும்,
நிவந்த; அல்லது, பிறர் இல்லை, களத்திடை நின்றார்.-201-

கவந்த பந்தமும், கழுதும் – தலையற்ற உடம்புகளின் தொகுதியும்,
பேயும்; தம் கணவரைக் காணார் – தம்முடைய கணவரைக் காணப்
பெறாமையால்; சிவந்த கண்ணியர் – (துயரத்தால்) சிவப்பேறிய
கண்களை உடையவராய்; தேடினர் திரிபவர் திரளும் – தேடி
அலைபவராகிய மகளிர் கூட்டமும்; உவந்த சாதகர் ஈட்டமும் –
(தமக்கு உணவாகும் பிணங்களின் மிகுதிகண்டு) மகிழ்ச்சி கொண்ட
பூதங்களின் தொகுதியும்; ஓரியின் ஒழுங்கும் – நரிகளின் வரிசையும்;
நிவந்த அல்லது – மிகுந்து காணப்பட்டனவல்லாமல்; களத்திடை நின்றார் பிறர் இல்லை –
(அப்) போர்க்களத்தின் கண்ணே உயிரோடு நின்றவர் பிறர்யாரும்
இல்லை.

————–

8642.
வான நாடியர் வயிறு அலைத்து அழுது, கண் மழை நீர்
சோனை மாரியின் சொரிந்தனர்; தேவரும் சோர்ந்தார்;
ஏனை நிற்பவும் திரிபவும் இரங்கின, எவையும்
ஞான நாயகன் உருவமே ஆதலின், நடுங்கி.–202-

வானநாடியர் – (இராமனின் துயரங்கண்ட) வானவர் நாட்டு மகளிர்;
வயிறு அலைத்து அழுது – தம் வயிற்றில் அடித்துக் கொண்டு அழுது;
மழைக்கண் நீர் – (மேகம் போன்ற) கரிய கண்ணின் நீரை; சோனை
மாரியின் சொரிந்தனர் – விடா மழையினுடைய மேகம் போலச்
சொரிந்தனர்; தேவரும் சோர்ந்தார் – தேவர்களும் மனம் சோர்வுற்று
வருந்தினர்; எவையும் ஞான நாயகன் உருவமே ஆதலின் –
எல்லாப் பொருள்களும் ஞானப் பொருளாம் இறைவனாகிய
திருமாலின் வடிவங்களே ஆதலின்; ஏனை நிற்பவும் திரிபவும்
– ஏனைய நிற்பனவும் நடப்பனவுமாகிய எல்லா உயிர்களும்; நடுங்கி
இரங்கின – (அவ்விராமனைப் போலவே) நடுங்கி வருத்தமுற்றன.

——-

8643. முகையின் நாள்மலர்க் கிழவற்கும், முக்கணான் தனக்கும்,
நகையும் நீங்கிய; திருமுகம், கருணையும் நலிந்த;
தொகையுள் நின்றவர்க்கு உள்ளது சொல்லி என்?
தொடர்ந்த
பகையும் பார்க்கின்ற பாவமும் கலுழ்ந்தது, பரிவால்.–203-

முகையின் நாள் மலர்க் கிழவற்கும் – மொட்டாகவில்லாமலே
புதிதாக மலர்ந்தது போன்ற (திருமாலின் உந்திக்கமலமாகிய)
தாமரையில் வசிப்பவனாகிய பிரமனுக்கும்; முக்கணான் தனக்கும் –
மூன்று கண்களை உடையவனாகிய உருத்திர மூர்த்திக்கும்;
கருணையும் நலிந்த – (இராமன் படுகின்ற துயரத்தைக் கண்ணுற்றதால்
ஏற்பட்ட) இரக்கத்தினால் விளைந்த வருத்தத்தினால்; திருமுகம்
நகையும் நீங்கிய – திருமுகங்கள் மகிழ்ச்சியாகிய மலர்ச்சியின் நீங்கி
வாட்டமுற்றன; தொகையுள் நின்றவர்க்கு – (முப்பத்து முக்கோடி
என்னும்) எண்ணின் அளவினை உடையவராய் நின்ற (ஏனைய)
தேவர்களுக்கு; உள்ளது சொல்லியென்? – நேர்ந்த துன்பநிலையினைச்
சொல்லி யாது பயன்?தொடர்ந்த பகையும் பார்க்கின்ற பாவமும் –
தொடர்ந்துள்ள பகைமையுடன் (அத்துயரைக்) கண்ணுறுகின்ற
பாவத்திற்குரிய தேவதையும்; பரிவால் கலுழ்ந்தது – (தன்னிலைமறந்து)
இரக்கத்தினால் கண்ணீர் விட்டு அழுதது.

—————

8644. அண்ணலும், சிறிது உணர்வினோடு அயாவுயிர்ப்பு அணுகிக்
கண் விழித்தனன்; தம்பியைத் தெரிவுறக் கண்டான்;
‘விண்ணை உற்றனன்; மீள்கிலன்’ என்று, அகம் வெதும்பா,
புண்ணின் உற்றது ஓர் எரி அன்ன துயரினன் புலம்பும்;–204-

அண்ணலும், சிறிது உணர்வினோடு – பெருமை மிக்கவனாக
இராமபிரானும் சிறிது உணர்வுடன்; அயாவுயிர்ப்பு அணுகி –
பெருமூச்சு வரப் பெற்றது; கண்விழித்தான் – கண்களை விழித்தான்;
தம்பியைத் தெரிவுறக் கண்டான் – தம்பியை நன்கு உற்றுப்
பார்த்தான்; விண்ணை உற்றனன் மீள்கிலன் என்று- (இவன் இறந்து)
விண்ணுலகடைந்தான் (இனி) மீளமாட்டான்’ என்று எண்ணி; அகம்
வெதும்பா – உள்ளம் அழன்று வெம்மையெய்த; புண்ணின் உற்றது
ஓர் எரி அன்ன – புண்ணில் நெருப்புத் தோய்ந்தது போன்று; துயரினன் புலம்பும் – துன்பத்தினை
உடையவனாகிப் (பின்வருமாறு) வருந்தி அழுபவனானான்.

———-

சிறிது உணர்வு பெற்ற இராமன் இலக்குவனைக் குறித்துப் புலம்புதல்

8645. ‘எந்தை இறந்தான்’ என்றும் இருந்தேன்; உலகு எல்லாம்
தந்தனென் என்னும் கொள்கை தவிர்ந்தேன்; தனி
அல்லேன்;
கந்தன் இருந்தாய் நீ என நின்றேன்; உரை காணேன்;
வந்தனென், ஐயா! வந்தனென், ஐயா! இனி வாழேன்!-205-

‘எந்தை இறந்தான்’ என்றும் இருந்தேன் – எம்தந்தை (தசரதன்)
இறந்தான் எனக் கேள்வியுற்றும் (இறவாது) இருந்தேன்; உலகு எல்லாம்
தந்தனென் என்னும் கொள்கை தவிர்ந்தேன் – ‘உலகம்
முழுவதனையும் (பரதனே ஆளத்) தந்தேன்’ என்ற (எனது
உறுதியான) கொள்கையில் நெகிழ்ந்து நீங்கி (எனது ஆணையின் வழி
பரதன் ஆளும்படி) ஆட்சியை ஏற்றுக்கொண்டவனாயினேன்; கந்தன்
நீ இருந்தாய் – (இருப்பினும்) பற்றுக்கோடானவனாக நீ இருந்தாய்;
தனி அல்லேன் என நின்றேன் -(ஆதலினால்) நான் தனித்துள்ளவன்
அல்லேன் என எண்ணி (உறுதியுடன்) நின்றேன்; உரைகாணேன் –
(இன்றோ) உனது உரையை நான் காணப் பெற்றேனில்லை;
இனிவாழேன் – இனியும் நான் வாழ்ந்திருக்க மாட்டேன்; ஐயா!
வந்தனன் – ஐயனே! வந்துவிட்டேன்! ஐயா! வந்தனன்! – ஐயனே!
வந்துவிட்டேன்!

——————

8646. ‘தாயோ நீயே; தந்தையும் நீயே; தவம் நீயே;
சேயோ நீயே; தம்பியும் நீயே; திரு நீயே;
போயோ நின்றாய்; என்னை இகந்தாய்; புகழ் பாராய்,
நீயோ; யானோ, நின்னினும் நெஞ்சம் வலியேனோ?

தாயோ நீயே; தந்தையும் நீயே; தவம் நீயே; – (எனக்குத்)
தாயும் நீயே; தந்தையும் நீயே; தவமும் நீயே; சேயோ நீயே; தம்பியும்
நீயே; திரு நீயே – மைந்தனும் நீயே; தம்பியும் நீயே; செல்வமும் நீயே;
புகழ் பாராய், என்னை இகந்தாய் போயோ நின்றாய் – (இத்தகைய)
நீயோ புகழைக் கருதாமல் என்னை (த்தனியே) விடுத்து (உயிர்துறந்து)
சென்றாய்; நீயோ; யானோ; – (இங்ஙனம் எனக்கு எல்லாமாகவும்
இருந்தும் என்னைத் தனித்துக் கதறவிடுத்துச் சென்ற
வன்னெஞ்சத்தால்) நீயோ, (அல்லது இங்ஙனம் எல்லாமாகவும்
எனக்கிருந்த உன்னை இழந்தும் உயிரோடிருக்கும் வன்னெஞ்சத்தால்)
யானோ; நின்னினும் நெஞ்சம் வலியேனோ-(ஆராய்ந்து பார்த்தால்)
உன்னைக் காட்டிலும் (எனக்காக உயிருங்கொடுத்த உன் செயலின்
முன்) யானே வன்னெஞ்ச முடையேன்.

————

8647. ‘ஊறாநின்ற புண்ணுடையாய்பால் உயிர் காணேன்;
ஆறாநின்றேன், ஆவி சுமந்தேன்; அழிகின்றேன்;
ஏறே! இன்னும் உய்யினும் உய்வேன்; இரு கூறாக்
கீறா நெஞ்சம் பெற்றனென் அன்றோ, கெடுவேனே?–207-

ஊறா நின்ற புண்ணுடையாய்பால் – (உதிரம்) ஊறுகின்ற புண்ணை
உடைய உன் உடம்பின் கண்ணே; உயி்ர் காணேன் – உயிர்ப்பினைக்
காண்கிலேன்; ஆறா நின்றேன்; ஆவி சுமந்தேன்; அழிகின்றேன் –
ஆறுதலுடையவனாய், உயிர் சுமந்தவனாய் வருந்துகின்றேன்; ஏறே!
கெடுவேன் (ஏ) – ஆண் சிங்கம் போன்றவனே, (அன்பின் திறமின்றி)
கெட்டொழிவேனாகிய நான்; இரு கூறாக் கீறா நெஞ்சம் – (நீ
இறந்தமை அறிந்தும்) இரண்டு கூறாகப் பிளந்து சிதையாத வலிய
நெஞ்சம்; பெற்றெனென் அன்றோ இன்னும் உய்யினும் உய்வேன் –
(ஆதலால்) இன்னும் உயிர்தாங்கி இருப்பினும் இருப்பேன்.

————-

8648. ‘பயிலும் காலம் பத்தொடு நாலும் படர் கானத்து
அயில்கின்றேனுக்கு ஆவன நல்கி, அயிலாதாய்!
வெயில் என்று உன்னாய், நின்று தளர்ந்தே மெலிவு
எய்தி,
துயில்கின்றாயோ இன்று? இவ் உறக்கம் துறவாயோ?–208-

படர்கானத்துப் பயிலும் – பரவிய இடமகன்ற காட்டினிடத்தே
பழகிவாழும்! காலம் பத்தொடு நாலும் – பதினான்கு ஆண்டு
காலத்தில்; அயில்கின்றேனுக்கு – (உணவினை) உண்கின்றவனாகிய
எனக்கு; ஆவன நல்கி அயிலாதாய் – பொருந்துவனவாகிய
உணவுகளைத் (தேடித்) தந்து (நீமட்டும்) உண்ணாதிருந்தவனே!
வெயில் என்று உன்னாய் – வெயில் என்று கருதாத நீ; நின்று
தளர்ந்தே மெலிவு எய்தி – (எனக்குத் துணையாக) நின்று
தளர்ச்சியுற்று மெலிவினை அடைந்து; இன்று துயில்கின்றாயோ –
இப்பொழுது உறங்குகின்றாயோ? இவ்வுறக்கம் துறவாயோ –
இவ்வுறக்கத்தினை விட்டு எழமாட்டாயோ?

————-

8649. அயிரா நெஞ்சும் ஆவியும் ஒன்றே எனும் அச் சொல்
பயிரா எல்லைப் பாதகனேற்கும் பரிவு உண்டோ?
செயிரோ இல்லா உன்னை இழந்தும், திரிகின்றேன்;
உயிரோ, நானோ, ஆர் இனி உன்னோடு உறவு, ஐயா!–209

அயிரா நெஞ்சும் ஆவியும் – ஐயுறவு கொள்ளாத தெளிந்த
நெஞ்சமும் உயிரும்; ஒன்றே எனும் அச்சொல் – (தம்முட்பிரிவின்றி
ஒன்றிக் கலந்திருத்தலால்) ஒன்றே என (உலகோர்) கூறும் அம்மொழி;
பயிரா எல்லை – பொருளுள்ளதாக ஆகாதபோது; பாதகனேற்கும்
பரிவு உண்டோ – பாவியாகிய என்னிடம் இரக்கம் என்ற உணர்வுதான்
நிகழுமோ; செயிரோ இல்லா – ஒரு குற்றமும் இல்லாத; உன்னை
இழந்தும் திரிகின்றேன் – உன்னை இழந்தபின்பும் (வருத்தமின்றித்)
திரியும் நிலையினனாக உள்ளேன்;ஐயா! இனி உன்னோடு உறவு –
ஐயனே! இனி உன்னுடன் (உண்மையான) உறவு; உயிரோ, நானோ,
ஆர் – (எனது) உயிரோ, யானோ யார்?

——————

8650. ‘வேள்விக்கு ஏகி, வில்லும் இறுத்து, “ஓர் விடம் அம்மா
வாழ்விக்கும்!” என்று எண்ணினென், முன்னே வருவித்தேன்;
சூழ்வித்து, என்னைச் சுற்றினரோடும் சுடுவித்தேன்;
தாழ்வித்தேனோ, இத்தனை கேடும் தருவித்தேன்?–210-

வேள்விக்கு ஏகி வில்லும் இறுத்து-(சனகன் புரிந்த) வேள்விக்குச்
சென்று சிவன் வில்லையும் ஒடித்து; ஓர்விடம் வாழ்விக்கும் என்று எண்ணினென் – ஓர் நஞ்சினை (சீதையை)
(இது நம்மை) வாழ்விக்கும் என்று எண்ணினேனாய்; முன்னே
வருவித்தேன் – என்முன்னே வருவித்துக் கொண்டேன்; சூழ்வித்து –
(என்னைச்) சூழ்ந்துவரச் செய்து; என்னைச் சுற்றினரோடும்
சுடுவித்தேன் – என்னைச் சுற்றி இருந்தவர்களையும் சுட்டொழித்தேன்!
இத்தனைகேடும் தருவித்தேன் – இத்தனை கெடுதிகளையும்
உண்டாக்கிக் கொண்டேன்; தாழ்வித்தேனோ? – (இதன் பின்பும்)
சிறிதேனும் பின்வாங்கினேனா? (இல்லை).

———–

8651. ‘மண்மேல் வைத்த காதலின், மாதா முதலோர்க்கும்
புண்மேல் வைத்த தீ நிகர் துன்பம் புகுவித்தேன்;
பெண்மேல் வைத்த காதலின், இப் பேறுகள் பெற்றேன்;
எண்மேல் வைத்தேன், என் புகழ்; யான்தான் எளியேனோ!–211-

மண்மேல் வைத்த காதலின் – மண்ணிடத்தே வைத்த பற்றுக்
காரணமாக; மாதாமுதலோர்க்கும் – (என்னுடைய) தாயார்
முதலானோர்க்கும்; புண்மேல் வைத்த தீநிகர் துன்பம்
புகுவித்தேன்- புண்ணிடத்தே தீ நுழைந்தாற் போன்ற பெருந்துன்பத்தை
உண்டாக்கி விட்டேன்; பெண்மேல் வைத்த காதலின்- (சீதை என்னும்)
பெண்ணிடத்தே வைத்துள்ள ஆசையினால்; இப்பேறுகள்
பெற்றேன் – இத்தகையபயன்களை அடைந்தேன்; என்புகழ் எண்மேல்
வைத்தேன் – எனது புகழ்த்திறங்களை (ஒன்றன் மேலொன்றாகப் பிறர்
எண்ணி மதிக்குமாறு உயர்த்தினேன்; யான்தான் எளியேனோ? –
நான்தான் வலியற்ற எளியவனோ?

————-

8652. ‘மாண்டோய் நீயோ; யான் ஒருபோதும் உயிர் வாழேன்;
ஆண்டான் அல்லன் நானிலம், அந்தோ, பரதன்தான்!
பூண்டார் எல்லாம் பொன்றுவர், துன்பப் பொறையாற்றார்;
வேண்டாவோ, நான் நல் அறம் அஞ்சி, மெலிவுற்றால்?–212-

நீயோ மாண்டாய் – (என் ஆருயிர்த் தம்பியாகிய) நீயோ
இறந்துவிட்டாய்; யான் ஒருபோதும் உயிர் வாழேன் -(நீயின்றி) நான்
(இனி) ஒரு கணமும் உயிருடன் வாழமாட்டேன்; பரதன் நானிலம்
ஆண்டான் அல்லன் – (என்னைப் பிரிந்து) பரதனும் இவ்வுலகத்தை
ஆளமாட்டான்; பூண்டார் எல்லாம் – (நம்மோடு அன்பின்
தொடர்பினைப் பூண்டவர்கள் எல்லோரும்; துன்பப்பொறை ஆற்றார்
பொன்றுவர் – (பிரிவுத்) துன்பத்தைப் பொறுக்கும் வலியற்றவராய்
இறந்துபடுவர்; நான் நல் அறம் அஞ்சி மெலிவுற்றால் – நான்
நன்மையுடைய அறத்துக்குப் பயந்து (பகைவரை அழிப்பதில்)
தளர்ச்சியுற்றால்; வேண்டாவோ? – (அதன்பயனாக) இத்தனை
துயரங்களும் வேண்டத் தக்கன அல்லவோ?

————-

8653. ‘அறம், தாய், தந்தை, சுற்றமும், மற்றும், எனை அல்லால்,
துறந்தாய்! என்றும் என்னை மறாதாய்! துணை வந்து
பிறந்தாய்! என்னைப் பின்பு தொடர்ந்தாய்! பிரிவு அற்றாய்!
இறந்தாய்! உன்னைக் கண்டும் இருந்தேன், எளியேனோ? -213-

துணை வந்து பிறந்தாய் – (எனக்குத்) துணையாகவந்து பிறந்தவனே!
அறம், தாய், தந்தை, சுற்றமும் – அறம், அன்னை, தந்தை, உறவினர்;
மற்றும் – மற்றுள்ள அனைத்தும்; அல்லால் துறந்தாய் –
என்னைத்தவிர (உனக்குப் பற்றுதற்குரியனவல்லாவென) துறந்தாய்!
பிரிவு ஆற்றாய் – பிரிந்திருக்கப் பெறாதவனாய்; என்னைப் பின்பு
தொடர்ந்தாய் – என்னைப் பின்தொடர்ந்து (கானகத்திற்கு) வந்தவனே!
என்றும் என்னை மறாதாய் – எக்காலத்தும் என்னை மறவாதவனே!
இறந்தாய் – (இன்று என்னைப் பிரியும் படியாக) இறந்துபட்டாய்!
உன்னைக் கண்டும் இருந்தேன் – அங்ஙனம் இறந்துபட்ட உன்னைக்
கண்டும் நான் உயிர்தாங்கி இருந்தேன்! எளியேனோ? –
வலியற்றவனாவேனோ? ஓகாரம் எதிர்மறை.

————

8654. ‘சான்றோர் மாதைத் தக்க அரக்கன் சிறை தட்ட,
ஆன்றோர் சொல்லும் நல் அறம் அன்னான் வயமானால்,
மூன்று ஆய் நின்ற பேர் உலகு ஒன்றாய் முடியாவேல்,
தோன்றாவோ, என் வில் வலி வீரத் தொழில் அம்மா?–214-

சான்றோர் மாதை – சான்றோர்களால் பாராட்டத்தகும்
(கற்பென்னும் திண்மையையுடைய) பெண்ணை; தக்க அரக்கன் –
அரக்கத் தன்மைக்குச் சான்றாக நிற்கும் அரக்கன்; சிறைதட்ட –
சிறைப்படுத்தி வைக்க; ஆன்றோர் சொல்லும் நல் அறம் –
கொடியவர்களை ஒறுத்தழிக்க வல்ல அறக்கடவுள் உண்டெனச்
சான்றோர்களால் சிறப்பித்துக் கூறப்பெறும் நல்லறமும்; அன்னான்
வயமானால் – அத்தகைய கொடியவனின் கொடுமைக்கு உட்பட்டு
அடங்கிச் செயலற்றுப் போகுமானால்; மூன்றுஆய் நின்ற பேர் உலகு
– (மேல், கீழ், நடுஎன) மூவகையாய் நிலை பெற்றுள்ள பெரிய
உலகங்கள் யாவும்; ஒன்றாய் முடியாவேல் – ஒருசேர அழிந்து
போகாமல் இருக்குமானால்; என் வில்வலி வீரத் தொழில் –
என்னுடைய வில்லின் வன்மை காட்டும் வீரத் தொழில்; தோன்றாவோ
– உலகோர்க்கு நன்கு விளங்கித் தோன்றாதோ?

—————-

8655. ‘வேலைப் பள்ளக் குண்டு அகழிக்கும், விராதற்கும்,
காலின் செல்லாக் கவந்தன் உயிர்க்கும், கரனுக்கும்,
மூலப் பொத்தல் செத்த மரத்து ஏழ் முதலுக்கும்,
வாலிக்கும்மே ஆயினவாறு என் வலி அம்மா?–215-

வேலைப் பள்ளக்குண்டு அகழிக்கும் – கடற்பள்ளமாகிய ஆழ்ந்த
அகழியை (அணைகட்டிக்) கடத்தற்கும்; விராதற்கும் – விராதனைக்
கொல்லுதற்கும்; காலின் செல்லாக் கவந்தன் உயிர்க்கும் –
கால்கொண்டு நடக்கவியலாத கவந்தனது உயிரைக் கவர்வதற்கும்;
கரனுக்கும் – கரன் என்னும்அரக்கனை அழிப்பதற்கும்; மூலப்
பொத்தல் செத்த -ஆணிவேரின் கண் துளையுற்று பட்டுப்போன; ஏழ்
மரத்து முதலுக்கும் – ஏழு மராமரங்களின் முதலைத் துளைத்தற்கும்;
வாலிக்கும்மே – வாலியைக் கொல்லுதற்கும் மட்டுமே; ஆயினவாறு
என் வலி அம்மா – ஆகித் தீர்ந்தொழிந்தது எனது
வன்மையனைத்தும்! (அந்தோ! இரங்கத்தக்கதே).

————–

8656. ‘இருந்தேனானால், இந்திரசித்தே முதலாய
பெருந் தேராரைக் கொன்று பிழைக்கப் பெறுவேனா?
வருந்தேன்; “நீயே வெல்லுதி” என்னும் வலி கொண்டேன்;
பொருந்தேன், நான், இப் பொய்ப் பிறவிக்கும் பொறை
அல்லேன்!–216-

வருந்தேன்-வருத்தம் இல்லாதேனாகி; “நீயே வெல்லுதி” என்னும்
வலி கொண்டேன் – ‘நீயே (இந்திரசித்தைப் போரிற் கொன்று)
வெற்றியடைவாய்’ என்னும் (மன) வலிமையைக் கொண்டு இருந்தேன்;
இருந்தேனானால் – (இனி, நின்னை இழந்த இந்நிலையிலும் உயிர்துறவாது) இருந்தேனானால்; இந்திரசித்தே
முதலாய பெருந்தேராரை – இந்திரசித்து முதலாகவுள்ள பெரிய தேர்
வீரர்களாகிய பகைவர்களை; கொன்று பிழைக்கப் பெறுவேனா? –
(போரிற்) கொன்று பிழைத்திருத்தலாகிய ஆற்றலைப் பெறவல்லேனா?
நான் பொருந்தேன் – நான், ‘உன்னுடன் பிறந்தேன்’ எனக் கூறிக்
கொள்ளுதற்கும் பொருத்தமுடையேனல்லேன்; இப்பொய்ப் பிறவிக்கும்
பொறை அல்லேன் – (எனவே) இப்பொய்மைத் தன்மையுடைய
பிறவியின் சுமையைத் தாங்குதற்கும் வன்மையுடையேனல்லேன்!

———–

8657. ‘மாதாவும், நம் சுற்றமும், நாடும் மறையோரும்,
“ஏது ஆனாரோ?” என்று தளர்ந்தே இறுவாரை,
தாதாய்! காணச் சால நினைந்தேன்; தரை ஆள்வேம்;
போதாய்; ஐயா, பொன் முடி என்னைப் புனைவிப்பான்!–217-

தாதாய் – என் அப்பனே! மாதாவும், நம் சுற்றமும் நாடும்
மறையோரும் – (நம்மை ஈன்ற) தாயும், நம் சுற்றத்தாரும்,
நாட்டுமக்களும், வேதியரும்; ‘ஏது ஆனாரோ?” என்று தளர்ந்தே
இறுவாரை – (வனம் போந்தநம்மைக் குறித்து) ‘என்ன
நிலையினராயினாரோ’ என்று தளர்வெய்தி (மனம் நொந்து)
அழிபவரை; காணச் சால நினைந்தேன் – (அவர் தம் துயர் நீங்க)
காணுதற்குப் பெரிதும் எண்ணி நிற்கின்றேன்; ஐயனே! – ஐயனே!
என்னைப் பொன்முடி புனைவிப்பான் – என்னைப் பொன்னாலியன்ற
முடியைப் புனைவித்தல் வேண்டி; தரை ஆள்வேம் போதாய் –
நிலமாள்வதற்கு (மீண்டும் உயிர்பெற்று) வருவாயாக.

————

8658. ‘பாசமும் முற்றச் சுற்றிய போதும், பகையாலே
நாசமும் முற்ற இப்போதும், நடந்தேன், உடன் அல்லேன்;
நேசமும் அற்றார் செய்வன செய்தேன்; நிலை நின்றேன்;
தேசமும் மற்று, என் கொற்ற நலத்தைத் தெரியாதோ?–218-

பாசமும் முற்றச் சுற்றியபோதும் – நாகபாசம் முழுவதும் (உனது
உடம்பைச்) சுற்றிய அப்பொழுதும்; பகையாலே நாசமும் முற்ற
இப்போதும் – பகைவனாலே (நம் சேனைக்குக்) கேடு முற்றிவிட்ட
இப்பொழுதும்; உடன் அல்லேன் நடந்தேன் – உன்னுடன் துணை
நிற்பேன் அல்லாதேனாகி (உன்னை விட்டுப்புறத்தே) சென்று
விட்டேன்;நேசமும் அற்றார் செய்வன செய்தேன் – அன்பில்லாதார்
செய்வனவற்றைச் செய்தேன்; நிலைநின்றேன் – (ஆயினும்)
தளர்ச்சியின்றி நிற்கின்றேன்; என்கொற்ற நலத்தை – (இத்தகைய)
எனது வெற்றி நலத்தை; தேசமும் மற்று தெரியாதோ – உலகமும்
தெரிந்து கொள்ளாதோ?

பாசம் – இந்திரசித்து ஏவிய நாகபாசம்.

—————

8659. ‘கொடுத்தேன் அன்றே, வீடணனுக்குக் குலம் ஆள
முடித்து ஓர் செல்வம்; யான் முடியாதே முடிகின்றேன்;
படித்தேன் அன்றே, பொய்ம்மை? குடிக்குப் பழி பெற்றேன்;
ஒடித்தேன் அன்றே என் புகழ் நானே, உணர்வு அற்றேன்?’–219-

வீடணனுக்குக் குலம் ஆள முடித்து ஓர் செல்வம் – (என்னை
அடைக்கலம் அடைந்த) வீடணனுக்கு அவன் குலமுழுவதனையும்
ஆளுமாறு முடிவு செய்து ஒப்பற்ற (இலங்கை அரசாகிய) செல்வத்தை;
அன்றே கொடுத்தேன் – (அவன் அடைக்கலம் புகுந்த
அந்நாளிலேயே) அன்றே (வாயளவில்) கொடுத்து விட்டேன்; யான்
முடியாதே முடிகின்றேன் – நான் (அங்ஙனம்
வாக்குறுதிகொடுத்ததனை) நிறைவேற்றாமலேயே இறந்துபடப்
போகின்றேன்; படித்தேன் அன்றே பொய்மை – பொய்மை மொழி
கூறப் பயின்றேன் அல்லவா? குடிக்குப் பழி பெற்றேன் – (அதனால்)
என் குடிக்குப் பழியைத் தேடி)ப் பெற்றேன்; உணர்வு அற்றேன்
நானே என்புகழ் ஒடித்தேன் அன்றே – உணர்வற்றவனாகிய யான்
எனது புகழினை நானே சிதைத்தழித்தேன் அன்றோ?

—————–

8660. என்று என்று ஏங்கும், விம்மும், உயிர்க்கும், இடை அஃகி,
சென்று ஒன்று ஒன்றோடு இந்தியம் எல்லாம் சிதைவு எய்த,
பொன்றும் என்னாத் தம்பியை ஆர்வத்தொடு புல்லி,
ஒன்றும் பேசான்; தன்னை மறந்தான், துயில்வுற்றான்.–220-

என்று என்று ஏங்கும் – என்று என்று இவ்வாறு புலம்பி
வருந்துவான்; விம்மும் உயிர்க்கும் – மனம் விம்முவான்; பெருமூக்சு
விடுவான்; இடைஅஃகிச் சென்று – இடை இடையே (நெட்டுயிர்ப்பு
அடங்கிச் சென்று; இந்தியம் எல்லாம் ஒன்றோடு ஒன்று சிதைவு
எய்த – (கண்முதலிய) பொறிகளெல்லாம் (தத்தம் புலன்களைக்
கொள்ளுதலின்றி) சிதைந்து கெட; பொன்றும் என்னா –
‘இறந்தொழிவோம்’ என்று; தம்பியை ஆர்வத்தோடு புல்லி- தம்பியை
மார்போடு இறுகத் தழுவிக்கொண்டு; ஒன்றும் பேசான், தன்னை
மறந்தான், துயில்வுற்றான் – ஒன்றும் பேச இயலாதவனாகி தன்னை
மறந்து உறங்கிக் கிடந்தான் (இராமன்).

———-

8661. கண்டார் விண்ணோர்; கண்கள் புடைத்தார், கலுழ்கின்றார்;
கொண்டார், துன்பம்; ‘என் முடிவு?’ என்னாக்
குலைகின்றார்;
‘அண்டா! ஐயா! எங்கள் பொருட்டால் அயர்கின்றாய்;
உண்டோ உன்பால் துன்பு?’ என அன்பால் உரை செய்தார்.–221-

விண்ணோர் கண்டார் – (இராமனுற்ற இப்பெருந்துயரை) தேவர்கள்,
கண்டனர்; கண்கள் புடைத்தார் கலுழ்கின்றார் – (அதனைக்
கண்டமைக்காக இரங்கி) தம்முடைய கண்களில் மோதி அறைந்து
கொண்டவர்களாய் அழுவாராயினர்; துன்பம் கொண்டார் –
(எல்லையற்ற) துன்பத்தினை மேற்கொண்டார்கள்; ‘என் முடிவு?’
என்னாக் குலைகின்றார் – ‘முடிவில் நிகழப் போவது யாதோ?’ என
அஞ்சி நடுங்குகின்றார்கள்; “அண்டா! ஐயா!” – ‘அண்டம் முழுவதும்
ஆனவனே! (எம்முடைய) தலைவனே! உன்பால் துன்பு உண்டோ?’ –
(இறைவனாகிய) உன்னிடத்துத் துன்பம் என்பது உளதோ? எங்கள்
பொருட்டால் அயர்கின்றாய் – (நின் அன்பர்களாகிய) எங்கள்
பொருட்டாகவே (இத்தகைய துன்பங்களை மேற்கொண்டு) தளர்ந்து
வருந்துகின்றாய்! என அன்பால் உரை செய்தார் – எனச் சொல்லி (அம்முதல்வனிடத்துத்
தாம் கொண்ட) பேரன்பினால் பின்வருமாறு கூறினார்கள்.

———

8662. ‘உன்னை உள்ளபடி அறியோம்; உலகை உள்ள
திறம் உள்ளோம்;
பின்னை அறியோம்; முன் அறியோம்; இடையும் அறியோம்,
பிறழாமல்;
நின்னை வணங்கி, நீ வகுத்த நெறியில் நிற்கும் இது
அல்லால்,
என்னை, அடியோம் செயற்பால?-இன்ப-துன்பம் இல்லோனே!–222-

இன்ப-துன்பம் இல்லோனே – இன்பமும் துன்பமும் இல்லாதவனே!
உன்னை உள்ளபடி அறியோம் – உன் நிலையை உள்ளது உள்ளவாறு
அறியும் திறம் அறியமாட்டோம்; உலகை உள்ளதிறம் உள்ளோம் –
உலகினை (உள்ளும் புறமும்) நிறைந்துள்ள நின் வியாபகத்
தன்மையைச் சிந்தித்துணரும் திறமுடையோம் அல்லோம்; பின்னை
அறியோம், முன் அறியோம், இடையும் அறியோம் – முடிவு
இதுவென்றறியோம்; முதல் இதுவென்றறியோம்; நடுவும்
இதுவென்றறியோம்; நின்னை வணங்கி – (ஆதி அந்தம் நடுவென்றறிய
வொண்ணாப் பரமாகிய) நின்னை வழிபட்டு; நீவகுத்த நெறியின்
பிறழாமல் – நீ வகுத்தருளிய அற நெறியில் மாறுபடாமல்; நிற்கும் இது
அல்லால் – நின்றுஒழுகுதலையின்றி; அடியோம் செயற்பால என்னை? – நின்
அடியோங்களாகிய எங்களாற் செய்யத் தக்கனயாவை உள்ளன?

திடவிசும் பெரிவெளி நீர்நில மிவைமிசை
படர்பொருள் முழுவது மாயவை யவைதொறும்
உடல்மிசை யுயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியு ளிவையுண்ட சுரனே!’–(திருவாய்மொழி – 1-1-7)
எனவரும் நம்மாழ்வார் திருவாக்கு இங்கு நினைக்கத் தக்கது.

———-

8663. ‘”அரக்கர் குலத்தை வேர் அறுத்து, எம் அல்லல்
நீக்கி அருளாய்” என்று
இரக்க, எம்மேல் கருணையினால், ஏயா உருவம் இவை
எய்தி,
புரக்கும் மன்னர் குடிப் பிறந்து, போந்தாய்! அறத்தைப்
பொறை தீர்ப்பான்,
கரக்க நின்றே, நெடு மாயம் எமக்கும் காட்டக்கடவாயோ?–223-

அரக்கர் குலத்தை வேர் அறுத்து – (இரக்கமற்றவர்களாகிய)
அரக்கரினத்தை வேருடன் அறுத்துக் களைந்து; எம் அல்லல் நீக்கி
அருளாய் என்று – எம்முடைய துன்பங்களை நீக்கியருள்வாயாக
என்று; இரக்க, எம்மேல் கருணையினால் – (யாம் நின்னைக்)
குறையிரந்து வேண்ட, எம்மேல் (நீவைத்த) பேரருளால்; ஏயா உருவம்
இவை எய்தி – (நினக்கு) பொருந்தாத மானிடவடிவங்களை ஏற்று;
அறத்தைப் பொறை தீர்ப்பான் – அறத்தின் (பொறுக்க முடியாத)
பாரமாகிய தீமைகளைப் போக்குதற்காக; புரக்கும் மன்னர் குடிப்
பிறந்து போந்தாய் – (உலக உயிர்களைக்) காக்கும் மன்னர்குலத்தில்
அவதரித்து இங்குவந்தாய்; கரக்க நின்றே நெடுமாயம் – (இவ்வாறு
எமது குறை தீர்க்க வந்த நீ நின் இறைமைத் தன்மை) மறைய நின்று
நினது நெடிய மாயத்தன்மையினை; எமக்கும் காட்டக் கடவாயோ? – (நின்பால்
அன்புடைய) எம்மனோர்க்கும் காட்டும் முறைமையினை
உடையாயோ?

————-

8664. ‘ஈன்று, எம் இடுக்கண் துடைத்து அளிப்பான் இரங்கி,
அரசர் இல்பிறந்தாய்!
“மூன்று ஆம் உலகம் துயர்தீர்த்தி” என்னும் ஆசை
முயல்கின்றோம்;
ஏன்றும் மறந்தோம், “அவன் அல்லன்; மனிதன்”
என்றே; இது மாயம்
போன்றது இல்லை; ஆளுடையாய்! பொய்யும் புகலப்
புக்காயோ?–224-

ஈன்று எம் இடுக்கண் துடைத்து அளிப்பான் – (நின்னால்)
படைக்கப்பட்டவராகிய எம்முடைய துன்பங்களை அறவே நீக்கி
(எம்மைக்) காத்தற் பொருட்டு; இரங்கி, அரசர் இல் பிறந்தாய் –
அருள் கொண்டு அரசர் குடியில் பிறந்தவனே! மூன்று ஆம் உலகம்
துயர் தீர்த்தி – (அவ்வாறு அவதரித்து அருளியநீ) மூன்றாகிய
உலகங்களின் துயர்களைத் தீர்த்தருள்வாய்; என்னும் ஆசை
முயல்கின்றோம் – என்னும் ஆசையினாலேயே முயன்று (உயிருடன்)
வாழ்கின்றோம்; ஏன்றும் – (நீ எம்மை உறுதியாகப் பாதுகாப்பாய்
என்பதனை மனம் பொருந்த) ஏற்றுக் கொண்டிருந்தும்; “அவன்
அல்லன்; மனிதன்” என்றே மறந்தோம் – (நின் அரற்றுதல் கேட்டு
இராமனாகிய இவன்) திருமாலாகிய அவனல்லன்; மனிதருள் ஒருவனே!
என்று (அவ்வுண்மையை) மறந்தோமாயினும்; இதுமாயம் போன்றது
இல்லை – (எம்மிடத்து நீகாட்டிய) இதனையொப்பதொரு வஞ்சனைச்
செயல் (வேறெங்கும் நிகழ்ந்தது) இல்லை; ஆளுடையாய்! பொய்யும் புகலப் புக்காயோ –
எம்மை அடிமையாக உடைய இறைவனே! (மெய்மையின் வடிவமான
நீ) பொய்யுரைகளையும் புகலுதற்குமுற்பட்டு விட்டாயோ?”

———–

8665. ‘அண்டம் பலவும், அனைத்து உயிரும், அகத்தும்
புறத்தும் உள ஆக்கி,
உண்டும் உமிழ்ந்தும், அளந்து இடந்தும், உள்ளும்
புறத்தும் உளை ஆகிக்
கொண்டு, சிலம்பி தன் வாயின் கூர் நூல் இயையக்
கூடு இயற்றி,
பண்டும் இன்றும் அமைகின்ற படியை ஒருவாய்-பரமேட்டி!–225

பரமேட்டி!-மேலான பரம்பொருளே! அண்டம் பலவும் அனைத்து
உயிரும் – அண்டங்கள் பலவற்றையும், எல்லா உயிர்களையும்;
அகத்தும் புறத்தும் உள ஆக்கி – (இறைவனான நினக்கு) உள்ளேயும்
புறத்தேயும் உள்ளனவாகச் செய்து; உண்டும் உமிழ்ந்தும் –
(உலகங்களை ஒருசேர) உண்டு (வயிற்றில்) அடக்கியும் உமிழ்ந்து
வெளிப்படுத்தியும்; அளந்தும் இடந்தும், உள்ளும் புறத்தும் உளை
ஆகி – (நின் அடியினால்) அளந்தும், பிளந்தும் அவற்றின்
உள்ளேயும் புறம்பேயும், நீக்கமற நிறைந்துள்ளாயாகி; சிலம்பி தன்
வாயின் கூர் நூல் இளைய – சிலந்திப் பூச்சி தன் வாயில் மெல்லிய
நூலினால் பொருந்த; கொண்டு கூடு இயற்றி – கொண்டு கூட்டினை
வகுத்து (அதன் கண்தங்கி இருத்தல் போல); பண்டும் இன்றும்
அமைகின்றபடியை ஒருவாய் – (உலகுயிர்களை நிலை நிறுத்தித்)
தொன்மைக் காலத்தும் இக்காலத்தும் காக்கின்ற (கரக்கின்ற) நின்
தன்மையினில் நீங்காது உள்ளாய்.

அவனது வியாபக நிலையினை,
திருமால் தன்னிடத்தே உலகுயிர்களைப் படைத்து அவற்றைத்
தன்னுள்ளே மீளவும் ஒடுக்கிக் கொள்ளுதற்குச் சிலந்திப் பூச்சி தன்
வாயின் நூலால் கூடியற்றி அந்நூலினை மீளவும் தன்னுட்சுருக்கிக்
கொள்ளுதலை உவமையாகக் கூறுவர் வைணவ சிந்தாந்திகள். இதனை,

சின்னூல் பலபல வாயா லிழைத்துச் சிலந்தி பின்னும்
அந்நூ லருந்தி விடுவது போல அரங்கரண்டம்
பன்னூறு கோடி படைத்தவை யாவும் பழம்படியே
மன்னூழி தன்னில் விழுங்குவர் போத மனமகிழ்ந்தே!–எனத்திருவரங்கத்து மாலை (18) யும் குறிப்பிடுதல் காணலாம்.
இறைவன் தான் எவ்வித மாறுபாட்டிற்கும் உட்படாமல் உலகங்களை
உருவாக்கிக் காத்தும் அழித்தும் நிற்கின்ற நிலை சிலந்திப் பூச்சியின்
தன்மையோடு ஒப்புமைப் படுத்திப் பேசப் பெற்றது.

———–

8666. ‘துன்ப விளையாட்டு இதுவேயும், உன்னைத் துன்பம்
தொடர்பு இன்மை,
இன்ப விளையாட்டு ஆம்; எனினும், அறியாதேமுக்கு
இடர் உற்றால்,
அன்பு விளையும், அருள் விளையும், அறிவு விளையும்,
அவை எல்லாம்,-
முன்பு, பின்பு, நடு, இல்லாய்!-முடித்தால் அன்றி,
முடியாவே.–226-

முன்பு பின்பு நடு இல்லாய்-தோற்றம் நிலை இறுதி இல்லாதவனே!
துன்ப விளையாட்டு இதுவேயும் – (நீ மேற்கொண்ட) இச்செயல்
துன்பத்தைத் தரும் விளையாட்டாம், ஆயினும்; உன்னைத் துன்பம்
தொடர்பின்மை – (இறைவனாகிய நின்னை) அத்துன்பம் தொடர்தல்
இல்லாமையால்; இன்பவிளையாட்டு ஆம் – இன்பத்தைத் தரும்
விளையாடலே ஆம்; எனினும் அறியாதே முக்கு இடர் – ஆயினும்
(நின் இயல்பினை) அறியாதேமாகிய எங்களுக்குத் துன்பத்தையே
தருவதாயிற்று;உற்றால் அன்பு விளையும்,அருள் விளையும், அறிவு
விளையும் – (நீ செய்த) இச்செயலால் (எங்கள்உள்ளத்தி்ல்) அன்பு
உண்டாகும், அருள் உண்டாகும், ஞானம் உண்டாகும்;
அவையெல்லாம் முடித்தால் அன்றி முடியாவே – அத்தகைய
பயன்களெல்லாம் (முதல்வனாகிய நீ முன்னின்று) முடித்து வைத்தாலன்றி
(எம்மிடத்து) நிறைவேறுவன அல்ல.

———–

8667. ‘வருவாய் போல வாராதாய்! வந்தாய் என்று மனம் களிப்ப,
வெருவாதிருந்தே நீ இடையே துன்பம் விளைக்க,
மெலிகின்றோம்;
கரு ஆய் அளிக்கும் களைகண்ணே! நீயே இதனைக்
காவாயேல்,
திரு வாழ் மார்ப! நின் மாயை எம்மால் தீர்க்கத் தீருமோ?’–227-

வருவாய் போல வாராதாய் – (வெளிப்பட) வருவாய் போன்று
தோன்றி வாராமல் இருப்பவனே! வந்தாய் என்று மனம் களிப்ப –
(காணுதற்கு அரிய நீ இன்று இராமனாக அவதரித்து) வந்தாய் என்று
மனமகிழ்ச்சியுறுதலால்; வெருவாதிருந்தோம் – (பகைவர் செய்யும்
இடர்களுக்குச் சிறிதும்) அஞ்சாதிருந்தோம்; நீ இடையே துன்பம்
விளைக்க மெலிகின்றோம் – (அச்சந்தீர்த்தருளவல்ல) நீயே
(எம்மகிழ்ச்சியின்) இடையே துன்பத்தை உண்டாக்கினமையால்
மெலிவுற்று வருந்துவேம் ஆயினேம்; கரு ஆய் அளிக்கும்
களைகண்ணே! – மூலமாய் நின்று எம்மைப் பாதுகாத்தருளும்
பற்றாகிய பெருமானே! நீயே இதனைக் காவாயேல் –
(அருளாளனாகிய) நீயே இத்துன்பத்தைக் களையா தொழிவாயாயின்;
நின்மாயை எம்மால் தீர்க்கத் தீருமோ? – நினது மாயச் செயல்
(உணர்வற்ற) எங்களால் தீர்க்கத் தீர்ந்தொழியும் எளிமையுடையதோ?

“வந்தாய் போலே வாராதாய், வாராதாய் போல் வருவானே” என்ற
திருவாய் மொழித்தொடர் (6-10-9) இங்கு ஒப்புக் காணத்தக்கது.

—————

8668. ‘அம்பரீடற்கு அருளியது, அயனார் மகனுக்கு அளித்ததுவும்,
எம்பிரானே! எமக்கு இன்று பயந்தாய் என்றே ஏமுறுவேம்;
வெம்பு துயரம் நீ உழக்க, வெளி காணாது மெலிகின்றேம்;
தம்பி துணைவா! நீ இதனைத் தவிர்த்து, எம்
உணர்வைத் தாராயோ?’–228-

எம்பிரானே!-எம்முடைய இறைவனே! அம்பரீடற்கு அருளியதும்
– அம்பரீடன் என்பானுக்கு அருள் புரிந்ததும்; அயனார்மகனுக்கு
அளித்ததுவும் – பிரம தேவருயை மகனான உருத்திர மூர்த்திக்கு
அருள் வழங்கியதும், (ஆகிய நின் அருளை); எமக்கு இன்று
பயந்தாய் என்றே ஏமுறுவேம் – எங்களுக்கும் இப்பொழுது
கொடுத்தாய் என்று (நினது) பாதுகாப்பினை நாடி அடைதற்கு உள்ள
யாங்கள்; வெம்புதுயரம் நீ உழக்க – மனம் வெதும்புதற்குக்
காரணமான துன்பத்தை நீ அடைந்தமையால்; வெளிகாணாது
மெலிகின்றேம் – (துன்பஇருளைவிட்டுச் செல்லும்) வழிகாணாது
தளர்ந்து வருந்துகின்றோம்;தம்பிதுணைவா! – தம்பிக்கு துணைவனே!
நீ இதனைத் தவிர்த்து, எம் உணர்வைத் தாராயோ – நீ
(மேற்கொண்டுள்ள) இத்துயரத்தை நீக்கி (உணர்விழந்த) எங்களுக்கு
நல்லுணர்வினைத் தந்தருள மாட்டாயா?

————

இராவணனிடம் தூதர், ‘உன்பகை முடிந்தது’ என அறிவித்தல்

8669. என்ப பலவும் எடுத்து இயம்பி, இமையாதோரும்
இடர்உழந்தார்;
அன்பு மிகுதியால், ஐயன் ஆவி உள்ளே அடங்கினான்,
துன்ப மனிதர் கருமமே புரிய முன்பு துணிந்தமையால்;
புன்கண் நிருதர் பெருந் தூதர் போனார், அரக்கனிடம்
புகுந்தார்.–229-

என்ப பலவும் எடுத்து இயம்பி – என மேற்குறித்த பலவற்றையும்
எடுத்துக்கூறி; இமையாதோரும் இடர் உழந்தார் –
கண்ணிமையாதவராகிய தேவர்களும் துன்புற்று வருந்தினார்கள்;
ஐயன், துன்பமனிதர் கருமமேபுரிய – இறைவனாகிய இராமன்
துன்பத்தில் உழலும் மனிதர்களுக்குரிய செயல் முறையினையே
புரிவதாக; முன்பு துணிந்தமையால் – தான் முன்பு துணிந்து
மேற்கொண்ட அவதாரச் செய்கை காரணமாக;அன்பு மிகுதியால்
ஆவி உள்ளே அடங்கினான் – (இலக்குவன் பால் வைத்த) அன்பு
மிகுதியால் (அவனைப் பிரிய முடியாமல்) உயிர் உள்ளே
ஒடுங்கப்பெற்றான்; புன்கண் நிருதர் பெருந்தூதர் – (அதுகண்டு)
துன்பஞ்செய்தலையே இயல்பாக உடைய அரக்கருடைய பெரிய
தூதர்கள்;போனார், அரக்கனிடம் புகுந்தார் – போர்க்களத்தைவிட்டு
நீங்கிச் சென்றவர்கள் அரக்கனாகிய இராவணன் (இருக்கும்) இடத்தை
அடைந்தார்கள்.

மானுடவேடந்தாங்கி மண்ணுலகில் அவதரித்து வந்தமையின்
மனிதருக்குரிய ஆசாபாசங்கள் அவனுக்கும் உள்ளதுபோல் காட்ட
வேண்டி இராமபிரான் ஆவி உள்ளே அடங்கப்பெற்றான். இறைவனின்
இவ்வெளிவந்த தன்மையை,
‘துயரில் சுடரொளி தன்னுடைச்
சோதி நின்றவண்ணம் நிற்கவே
துயரில் மலியும் மனிசர் பிறவியில்
தோன்றிக் கண்காண வந்து
துயரங்கள் செய்துதன் தெய்வ
நிலையுலகில் புகவுய்க்கு மம்மான்
துயரமில் சீர்க்கண்ணன் மாயன்
புகழ்துற்ற யானோன் துன்பமிலலே!’–(திருவாய்மொழி – 3-10-6)

———-

8670. ‘என் வந்தது, நீர்?’ என்று அரக்கர்க்கு இறைவன் இயம்ப,
‘எறிசெருவில்,
நின் மைந்தன்தன் நெடுஞ் சரத்தால், துணைவர்
எல்லாம் நிலம் சேர,
பின்வந்தவனும் முன் மடிந்த பிழையை நோக்கி,
பெருந்துயரால்,
முன்வந்தவனும் முடிந்தான்; உன் பகை போய்
முடிந்தது’என மொழிந்தார்.–230-

அரக்கர்க்கு இறைவன் ‘என்வந்தது நீர்?’என்று இயம்ப-அரக்கர்
வேந்தனாகிய இராவணன் (வந்த தூதர்களை நோக்கி) ‘நீர் வந்தது
என்ன காரணம் பற்றி?” என வினவ; நின் மைந்தன் நெடுஞ்சரத்தால்
– (அது கேட்ட தூதர்) ‘நின்னுடைய மகன் ஏவிய நெடிய
பிரம்மாத்திரத்தால்; துணைவரெல்லாம் நிலம் சேர – தன்னுடைய
தோழர்கள் எல்லோரும் நிலத்தில் மடிந்து வீழ; பின் வந்தவனும் முன்
மடிந்த பிழையை நோக்கி – தன்பின்னே வந்த தம்பி இலக்குவனும்
தனக்கு முன்னே இறக்க நேர்ந்தமைக்குக் காரணமாயமைந்த தனது
(காலத்தாழ்வாகிய) பிழையை எண்ணி; பெருந்துயரால் முன்
வந்தவனும் முடிந்தான் – பெருந்துயரால் மூத்தோனாகிய இராமனும்
இறந்து போனான்; ‘உன்பகைபோய் முடிந்தது’ என மொழிந்தார்-
(அதுவே) ‘உனது தீராப் பகையும் அறவே தொலைந்தது’ எனக்
கூறினார்கள்.

———–

மிகைப் பாடல்கள்

பண் தரு கிளவிச் செவ்விப் பல்லியத்து ஒழுகு தீம் தேன்,
கண்டினின் குயின்ற வீணை நரம்பொடு கமழும் தேறல்,
வண்டினின் பொலியும் நல் யாழ் வழியுறு நறவம், வானத்து
அண்டர்தம் செவியின் உண்ணும் அமிழ்து எனல் ஆய அன்றே. 7-1

இமைப்பதன் முன்னம் வந்த இராக்கத வெள்ளம் தன்னைக்
குமைத் தொழில் புரிந்த வீரர் தனுத் தொழில் குறித்து இன்று எம்மால்
அமைப்பது என்? பிறிது ஒன்று உண்டோ ? மேரு என்று அமைந்த வில்லான்,
உமைக்கு ஒரு பாகன், எய்த புரங்களின் ஒருங்கி வீழ்ந்த. 21-1

தலைகளை நோக்கும்; தான் தன் சரங்களை நோக்கும்; தன் கைச்
சிலையினை நோக்கும்; செம் பொன் தேரினை நோக்கும்; செய்த
கொலைகளை நோக்கும்; கொன்ற கொற்றவர் தம்மை நோக்கும்;
அலை பொரும் குருதி என்னும் அளக்கரை அமைய நோக்கும். 25-1

ஆர்த்த வானரர் வாய் எலாம் கை எலாம் அசைய,
பார்த்த கண் எலாம் அங்கதன் உடல் எலாம் பாரில்
சீர்த்த வீரியன் இளையவன் இராமன்மேல் செறிய,
தூர்த்த வாளியன் சிலையொடும் விசும்பினைத் தொடர்ந்தான். 77-1

இன்னது இவ் வழி நிற்க, மற்று இருஞ் சமர்க்கு உடைந்தே,
துன்னு வான் வழி இலங்கையில் போகின்ற தோன்றல்,
பொன்னின் வார் சிலைக் கரத்தொடும் பொருகெனப் புகுந்து,
தன்னை ஈன்றிடும் ஒரு தனித் தந்தையைக் கண்டான். 88-1

மாண்டனன் அகம்பன், மண்மேல்; மடிந்தன, நிருதர் சேனை;
மீண்டனர், குரக்கு வீரர்; விழுந்தன, சினக் கை வேழம்;
தூண்டின, கொடித் தேர்; அற்றுத் துணிந்தன, தொடுத்த வாசி;-
ஆண் தகை இளைய வீரன் அடு சிலை பொழியும் அம்பால். 137-1

அருந் திறல் அகம்பன் ஆதி அரக்கரோடு, அளவு இல் ஆற்றல்
பொரும் திறல் களிறு, காலாள், புரவி, தேர், அளப்பு இல் கோடி,
இரிந்திடக் கொன்று, தான் அங்கு ஒரு திசை, யாரும் இன்றிப்
பொருந்திய இருளின் பொம்மல் பொலிய, மாருதியும் நின்றான். 140-1

மான வேல் அரக்கர் விட்ட படைக்கலம், வான மாரி ஆன
வன் பகழி சிந்த, திசைதொறும் பொறியோடு அற்று
மீன் இனம் விசும்பின் நின்றும் இருள் உக விழுவ போல,
கானகம் தொடர்ந்த தீயின் சுடுவன பலவும் கண்டான். 143-1

‘தோடு அவிழ் அலங்கல் என் சேய்க்கு உணர்த்துமின்’ என்னச் சொன்னான்;
ஓடினார் சாரர்; வல்லை உணர்த்தினர்; துணுக்கம் எய்தா,
ஆடவர் திலகன், ‘யாண்டையான் இகல் அனுமன்? ஏனோர்,
வீடணன், யாங்கண் உள்ளார்? உணர்த்துமின், விரைவின்’ என்றான் 157-1

தந்தை இறந்தும், தாயர் பிரிந்தும், தலம் விட்டும், பின் தனி
மேவும் மாது பிரிந்தும், பிரிவு இல்லா எம் துணை நீ என்று
இன்பம் அடைந்தேன்; இது காணேன்; வந்தனென், எம்பி!
வந்தனென், எந்தாய்! இனி வாழேன்! 202-1

—————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ கம்ப ராமாயணம்/யுத்த காண்டம்/20-மகரக்கண்ணன் வதைப் படலம்–

November 2, 2020

தூதுவர் நகருக்கு ஏகி இராவணனுக்கு அறிவித்தல்

8402.
‘இன்று ஊதியம் உண்டு’ என இன்னகைபால்
சென்று ஊதின தும்பிகள்; தென் திசையான்
வன் தூதரும் ஏகினர், வஞ்சனையான-
தன் தூதரும் ஏகினர், தம் நகர்வாய்.–1-

இன்னகைபால் – இனிய சிரிப்பினை உடையவளான
சீதையினிடத்து; இன்று ஊதியம் உண்டு என – இன்று கிடைப்பதொரு
நற் பேறு உண்டு என (நன்னிமித்தமாக) சென்று ஊதின தும்பிகள் –
வண்டுகள் சென்று இசைத்தனவாயின; தென்திசையான் வன்தூதரும் –
தென்திசைக் காவலனான யமனின் வலிய தூதர்களும்; ஏகினர் –
(போரில் இறந்தவர்களின் உயி்ர்களைக் கொண்டு) தம் நகருக்குச்
சென்றனர்; வஞ்சனையான் தன் தூதரும் – வஞ்சகனான
இராவணனின் தூதர்களும்; தம்நகர்வாய் ஏகினர் – தமது நகரமாகிய
இலங்கையினிடத்துச் சென்றனர். (படைத்தலைவர் அழிந்த
செய்தியினைக் கொண்டு சென்றனர்).

—————

8403. ஏகி, தனி மன்னன் இருந்துழி புக்கு,
‘ஓகைப் பொருள் இன்று’, என, உள் அழியா,
வேகத்து அடல் வீரர் விளிந்த எலாம்
சோகத்தொடு, இறைஞ்சினர், சொல்லினரால்.–2-

ஏகி – (தூதர்கள், தம்நகருக்குச்) சென்று; தனி மன்னன்
இருந்துழிப்புக்கு இறைஞ்சினர் – ஒப்பற்ற மன்னவனாகிய இராவணன்
இருந்த இடத்திற்குச்சென்று (அவனை) வணங்கி; ‘ஓகைப் பொருள் இன்று’ என – மகிழ்ச்சிக்குரிய செய்தி
சொல்வதற்கில்லையே என்று; உள் அழியா – மனம் வருந்தினவராய்
(அத்தூதர்); வேகத்து அடல்வீரர் – போர்ச் செயலில் வல்லமையும்
அஞ்சாமையும் உடைய படைத்தலைவரும் அவர்தம் படைஞரும்;
விளிந்த எலாம் – இறந்த செய்தியை எல்லாம்; சோகத்தொடு
சொல்லினர் – வருத்தத்துடன் கூறினார்கள்.

————

8404. சொன்னார்; அவர் சொல் செவியில் தொடர்வோன்,
இன்னாத மனத்தின் இலங்கையர்கோன்,
வெந் நாக உயிர்ப்பினன், விம்மினனால்;
அன்னான் நிலை கண்டு, அயல் நின்று அறைவான்:

சொன்னார் – தூதர்கள் படைத்தலைவர் வதையுண்டமையைக்
கூறினார்கள்; அவர் சொல் செவியில் தொடர்வோன் –
அவ்வுரையினைச் செவியினிடத்துக் கேட்டவனாகிய; இன்னாத
இலங்கையர்கோன் – துன்புற்ற மனத்தினையுடைய
இலங்கையர்களுக்குத் தலைவனாகிய இராவணன்; வெந்நாக
உயிர்ப்பினன் – கொடிய நாகம் போற் (சீற்றத்துடனாகிய) பெருமூச்சை
விடுபவனாய்; விம்மினன் – பொருமினான்; அன்னான் நிலை கண்டு –
(அப்படிப்பட்ட) அவனுடைய நிலையைக்கண்டு; அயல் நின்று
அறைவான் – (மகரக்கண்ணன்) அவ்விராவணன் அருகில் நின்று
கூறுவானாயினன்.

———–

மகரக்கண்ணன் போர்க்குத் தன்னை அனுப்ப வேண்டுதல்

8405. ‘முந்தே, என தாதையை மொய் அமர்வாய்,
அந்தோ! உயிர் உண்டவன் ஆர் உயிர்மேல்
உந்தாய்; எனை யாதும் உணர்ந்திலையோ?
எந்தாய்! ஒரு நீ இடர் கூருதியோ?

எந்தாய் – எந்தையே! மொய் அமர்வாய் – நெருங்கிய போரில்;
என தாதையை – என்னுடைய தந்தையை; ஆர் உயிர் உண்டவன்
உயிர்மேல் – ஆருயிர் கொண்டவனாகிய இராமனின் உயிர்கொள;
முந்தே – (இதுவரை போரில் அழிந்தவர்களுக்கு) முன்னமே;
உந்தாய் – என்னை ஏவாமல் விடுத்தாய்; அந்தோ – ஐயோ!
எனையாதும் உணர்ந்திலையோ? – என்னுடைய வலிமைத்
தன்மையினை எவ்விதத்தும் உணரவில்லை போலும்? ஒரு நீ இடர்
கூருதியோ? – (அங்ஙனம் அறிந்து ஏவாமையின்) ஒப்பற்ற நீ துயர்
மிக்கிருக்கக் கடவையோ?

———–

8406. ‘யானே செல எண்ணுவென்; எய்த அவன்
தான் நேர்வது தீது எனவே தணிவேன்;
வானே, நிலனே, முதல் மற்றும் எலாம்,
கோனே! எனை வெல்வது ஓர் கொள்கையதோ?–5-

அவன் எய்த – அவ்விராமன் இவ்விடம் வர; யானே செல
எண்ணுவன் – (அவன் வருகையை அறிந்து) யானே (என் வஞ்சினம்
முடிக்க) அவன் மேல் போர்க்குச் செல்ல எண்ணுவன் (எனினும்);
தான் நேர்வது தீது எனவே – (தலைவனிருக்க) தானே ஒரு
முடிவெடுப்பது தீமையெனவே; தணிவேன் – அடங்கியிருக்கின்றேன்;
(அங்ஙனமன்றி) கோனே – தலைவனே! வானே, நிலனே முதல்
மற்றும் எலாம் – வானும் நிலமும் முதலாக எல்லா இடங்களிலுமுள்ள
எல்லாப் பொருள்களும்; எனை வெல்லது ஓர் கொள்கையதோ?
– எனை வெல்லும் படியான தன்மை யுடையதோ?

————

8407. ‘அருந் துயர்க் கடலுளாள் என் அம்மனை, அழுத
கண்ணள்,
பெருந் திருக் கழித்தல் ஆற்றாள்,”கணவனைக் கொன்று
பேர்ந்தோன்
கருந் தலைக் கலத்தின் அல்லால், கடனது கழியேன்”
என்றாள்;
பருந்தினுக்கு இனிய வேலாய்! இன் அருள் பணித்தி”
என்றான்.–6-

என் அம்மனை – என்னுடைய தாய்; அழுத கண்ணாள் –
அழுகின்ற கண்களை உடையவளாய்; அருந்துயர்க் கடலுளாள் –
(கடத்தற்கு) அரிய துயர்க்கடலுள் ஆழ்ந்திருக்கின்றாள்; பெருந்திருக்
கழித்தல் ஆற்றாள் – பெருமை பெற்ற மங்கல நாணை (இன்னும்)
கழித்திடப் பொறுக்க முடியாதவள்; கணவனைக் கொன்று போந்தோன்
– தன்னுடைய கணவனைக் கொன்றவனின் (இராமனின்); கருந்தலைக்
கலத்தின் அல்லால் – கரிய தலை ஓடாகிய பாத்திரத்தாலல்லாது;
கடனது கழியேன் என்றாள் – (தன்) (கணவனுக்குச் செய்ய வேண்டிய)
கடனைச் செய்ய மாட்டேன் எனக் கூறிவிட்டாள்; பருந்தினுக்கு இனிய
வேலாய் – (உணவளிப்பதால்) பருந்துகளுக்கு இனிமையைச் செய்கின்ற
வேற்படையை உடையவனே! இன்னருள் – (தாயின் வஞ்சித்தை
உடைய நோன்பினை முடித்துக் கொடுக்கும் கடமையை உடைய
மகனுக்கு உதவ வேண்டும் என்ற) இனிய அருளால்; பணித்தி
என்றான் – (இன்று) போர் மேற்செல்லுதற்கு எனக்குக் கட்டளை இடுக
என வேண்டிக்கொண்டான்.

———

மகரக் கண்ணன் போர்க்களம் போதல்

8408. அவ் உரை மகரக்கண்ணன் அறைதலும், அரக்கன், ‘ஐய!
செவ்விது; சேறி! சென்று, உன் பழம் பகை தீ்ர்த்தி!’
என்றான்.
வெவ் வழியவனும், பெற்ற விடையினன், தேர்
மேற்கொண்டான்,
வவ்விய வில்லன் போனான், வரம் பெற்று வளர்ந்த
தோளான்.–7-

அவ்வுரை மகரக்கண்ணன் அறைதலும் – அவ்வுரையை
மகரக்கண்ணன் உரைத்தவுடன்; அரக்கன் – இராவணன்; ஐய! –
(அவனை நோக்கி) ஐயனே! செவ்விது – (நீ கூறிய உரை)
முறைமையுடையது; சேறி! – (நீ) செல்வாயாக; சென்று உன் பழம்
பகை தீர்த்தி என்றான் – சென்று உனது பழைய பகையைத் தீர்த்துக்
கொள்வாயாக என்று சொன்னான்; பெற்ற விடையினன் – (இங்ஙனம்)
இராவணனிடமிருந்து விடை பெற்றவனாய்; வரம் பெற்று வளர்ந்த
தோளான் – (தேவர் முதலானவர்களிடமிருந்து) பெற்ற வரங்களினால்
பொலிந்த தோள்களை உடையவனும்; வெவ்வழியவனும் – கொடிய
போர் நெறிகளை உடையவனும் (ஆகிய அம்மகரக்கண்ணன்);
தேர்மேற் கொண்டான் போனான் – தேர்மேல் ஏறிக்கொண்டு
(போர்க்களம் நோக்கிப்) போனான்.

———-

8409. தன்னுடைச் சேனை வெள்ளம் ஐந்து உடன் தழுவ, தானை
மன்னுடையச் சேனை வெள்ளம் ஓர்-ஐந்து மழையின்
பொங்கிப்
பின்னுடைத்தாக, பேரி கடல் பட, பெயர்ந்த தூளி
பொன்னுடைச் சிமயத்து உச்சிக்கு உச்சியும் புதைய,
போனான்.–8-

தன்னுடைச்சேனை – தன்னதாகிய சேனை வரிசை; வெள்ளம் ஐந்து
உடன் தழுவ – ஐந்து வெள்ளம் உடன் தழுவி வரவும்; தானை
மன்னுடைச் சேனை – தானை கொண்ட மன்னவனுடைய சேனை;
வெள்ளம் ஓர் ஐந்து – ஐந்து வெள்ளம் சேனைகளும்; மழையின்
பொங்கிப் பின்னுடைத்தாக – மேகத்தைப் போல ஆரவாரித்துக்
கொண்டு தன் பின்னே வரவும்; பேரி கடல் படப் – பேரிகை கடல்
போல் ஒலிக்கவும்; பெயர்ந்த தூளி – (சேனைகள் செல்லுதலால்)
எழுந்த புழுதியால்; பொன்னுடைச் சிமயத்து உச்சிக்கு உச்சியும் –
பொன் மயமான மேருமலையின் உச்சியிலுள்ள சிகரமும்; புதைய,
போனான் – மறையும் படியாக (அம்மகரக்கண்ணன்) சென்றான்.

————-

8410. ‘சோணிதக்கண்ணனோடு, சிங்கனும், துரகத் திண் தேர்த்
தாள்முதல் காவல் பூண்டு செல்க’ என, ‘தக்கது’ என்னா,
ஆள் முதல் தானையோடும், அனைவரும் தொடரப்
போனான்,
நாள் முதல் திங்கள்தன்னைத் தழுவிய அனைய நண்பான்.–9-

சோணிதக்கண்ணனோடு சிங்கனும் – சோணிதக் கண்ணன்
என்பவனோடு சிங்கன் என்பவனும்; துரகத் திண் தேர்த்தாள் முதல்
காவல் பூண்டு செல்க என – ‘குதிரை பூட்டப்பெற்ற திண்ணிய தேர்ச்
சக்கரத்திடத்துக் காவல் பூண்டு செல்வார்களாக’ என்று (இராவணன்)
கூற; ‘தக்கது’ என்னா – (இராவணனுடைய இவ்வாணை) தகுதி
உடையது என்று; ஆள் முதல் தானையோடும் – காலாட் படை
முதலிய சேனைகளோடு; அனைவரும் தொடர – (வீரர்) யாவரும்
தொடர்ந்து வர; நாள் முதல் திங்கள் தன்னைத் தழுவிய அனைய –
விண்மீன்களும் கோள்களும் ஆகியவை சந்திரனைச் சேர்ந்தாற்
போல; நண்பான் போனான் – நண்பர்களை உடைய மகரக்கண்ணன்
புறப்பட்டுப் போனான்.

————–

8411. பல்பெரும் பதாகைப் பத்தி மீமிசைத் தொடுத்த பந்தர்
எல்லவன், சுடர் ஒண் கற்றை முற்ற இன் நிழலை ஈய,
தொல் சின யானை அம் கை விலாழி நீ்ர்த் துவலை தூற்ற,
செல் பெருங் கவியின் சேனை அமர்த் தொழில் சிரமம்
தீர்ந்த,–10-

பல்பெரும் பதாகைப் பத்தி – (அரக்கர் சேனைகள் பிடித்த) பல
பெரிய கொடிகளின் வரிசைகளால்; மீமிசைத் தொடுத்த பந்தர் –
மேலே தொடுக்கப்பட்ட பந்தலானது; எல்லவன் சுடர் ஒண்
கற்றைமுற்ற – சூரியனது ஒளி பொருந்திய தொகுதியாகிய
ஒளிக்கற்றைகளின் வெப்பம் முடிவுறும்படி; இன் நிழலை ஈய – இனிய
நிழலைத் தரவும்; தொல்சின யானை அம்கை – பழையதாகிய
கோபத்தையுடைய யானையினது அழகிய துதிக்கையினின்றும் உண்டாகிய; விலாழிநீ்ர்த் துவலை தூற்ற –
உமிழ் நீர்த் துவலை எங்கும் சூழவும்; செல்பெருங் கவியின் சேனை –
(அரக்கர் சேனையை) எதிர்த்துச் செல்லுகின்ற பெரிய குரங்குச்
சேனை; அமர்த்தொழில் சிரமம் தீர்ந்த – போர்த் தொழிலால்
உண்டாகிய வருத்தம் நீங்கப் பெற்றன.

———–

8412. ‘முழங்கின யானை; வாசி ஒலித்தன; முரசின் பண்ணை,
தழங்கின; வயவர் ஆர்த்தார்’ என்பதோர் முறைமை தள்ள,
வழங்கின, பதலை ஓதை, அண்டத்தின் வரம்பின்காறும்;
புழுங்கின உயிர்கள் யாவும், கால் புகப் புரை இன்றாக.–11-

‘முழங்கின யானை’ – யானைகள் முழங்கின; வாசி ஒலித்தன் –
குதிரைகள் ஒலித்தன; முரசின் பண்ணை தழங்கின – முரசின்
தொகுதிகள் ஒலித்தன; வயவர் ஆர்த்தார் – வீரர்கள் ஆர்த்தார்கள்;
என்பதோர் முறைமை தள்ள – என்று கூறப்படும் ஒலி முறைமை
நீங்க; பதலை ஓதை – பதலை என்னும் கருவியால் எழுந்த ஓசை;
அண்டத்தின் வரம்பின்காறும் வழங்கின – அண்டம் முழுமையும்
(எல்லை வரையிலும்) வழங்கின; கால்புகப் புரை இன்றாக –
(அதனால்) காற்றுப் புகவும் (இயங்கவும்) இடமின்றிப் போகவே;
உயிர்கள் யாவும் புழுங்கின – எல்லா உயிர்களும் வேர்த்தன.

————–

அரக்கர்க்கும் வானரர்க்கும் போர் நிகழ்தல்

8413.
வெய்தினின் உற்ற தானை முறை விடா நூழில்
வெம் போர்
சய்தன; செருக்கிச் சென்று நெருக்கினர், தலைவர் சேர்த்தி;
கையொடு கைகள் உற்றுக் கலந்தன; கல்லும் வில்லும்
எய்தன எறிந்த; யானை ஈர்த்தன, கோத்த சோரி. –12-

வெய்தினின் உற்ற தானை – விரைவாகச் சென்று பொருத்திய
சேனைகள்; முறைவிடா நூழில் வெம்போர் – போர் முறையை விடாது
கொன்று குவித்தலாகிய கொடிய போரைச் செய்தன; செருக்கிச் சென்று
நெருக்கினர் தலைவர் – (இருதிறத்துத்) தலைவரும் செருக்கோடு
சென்று ஒருவரோடு ஒருவர் தாக்கினர்; சேர்த்த கையொடு கைகள்
உற்றுக் கலந்தன- அணி வகுக்கப் பெற்ற பக்கப் படையோடு பக்கப்
படைகள் பொருந்திப் போரிட்டன; கல்லும் வில்லும் எய்தன எறிந்த –
இருதிற வீரர்களுடைய கைகளில் பொருந்திய கற்களும் வில்லும்
முறையே எறியப்பட்டனவும் எய்யப்பட்டனவும் ஆயின; யானை
ஈர்த்தன கோத்த சோரி – (அவ்விடத்துப்) பெருகிய இரத்தம்
யானைகளை இழுத்துச் சென்றன.

————-

8414. வானர வீரர் விட்ட மலைகளை அரக்கர் வவ்வி,
மீனொடு மேகம் சிந்த விசைத்தனர் மீட்டும் வீச,
கானகம் இடியுண்டென்னக் கவிக்குலம் மடியும்-கவ்வி,
போனகம் நுகரும் பேய்கள் வாய்ப் புறம் புடைப்போடு
ஆர்ப்ப.–13-

வானர வீரர் விட்ட மலைகளை அரக்கர் வவ்வி – வாரை
வீரர்கள் எடுத்து வீசிய மலைகளை அரக்கர்கள் பிடித்து; மீனொடு
மேகம் சிந்த விசைத்தனர் மீட்டும் வீச – நாள் மீனொடு மேகமும்
கெடும் படியாக மீளவும் (வானரர் மேல்) விரைவாய் எறிய; கானகம்
இடியுண்டென்னக் கவிக்குலம் மடியும் – (அம்மலைகள்
படுதலால்) இடி விழுந்த காட்டைப்போல வானரக் கூட்டங்கள்
இறக்கும்; கவ்வி, போனகம் நுகரும் பேய்கள் – (அங்ஙனம்
இறக்கின்ற வானரங்களைக்) கவ்வி உணவாக உண்ணுகின்ற பேய்கள்;
வாய்ப்புறம் புடைப்போடு ஆர்ப்ப – வாய்ப்புறம் புடைத்திருத்தலை
உடையனவாய் ஆரவாரிப்பன.

————–

8415. மைந் நிற அரக்கர் வன் கை வயிர வாள் வலியின் வாங்கி,
மெய்ந் நிறத்து எறிந்து கொல்வர், வானர வீரர்; வீரர்
கைந் நிறைத்து எடுத்த கல்லும் மரனும் தம் கரத்தின்
வாங்கி,
மொய்ந் நிறத்து எறிவர்; எற்றி முருக்குவர், அரக்கர்
முன்பர்.–14-

வானர வீரர் – வானர வீரர்கள்; மைந்நிற அரக்கர் வன்கை
வயிரவாள் வலியின் வாங்கி- கரிய நிறத்தையுடைய அரக்கர்கள் தம்
வலிய கையிலே பிடித்த உறுதியான வாளினை தமது வலிமையினால்
பிடுங்கி; மெய்ந் நிறத்து எறிந்து கொல்வர் – (அவ்வரக்கர்களுடைய)
உடலின் மார்புப் பகுதியில் எறிந்து கொல்லுவார்கள்; அரக்கர் முன்பர்
– அரக்கரில் வலிமையுடையவர்கள்; வீரர் கைந்நிறைத்து எடுத்த
கல்லும் மரனும் தம் கரத்தின் வாங்கி – வானர வீரர்கள் கைகளில்
நிறைய எடுத்த மலையையும் மரத்தையும் தம் கைகளினாலே பிடுங்கி;
மொய்ந்நிறத்து எறிவர் எற்றி முருக்குவர் – (அவ்வானர
வீரர்களுடைய) வலிய மார்பிலே எறிவாராய் அடித்துக் கொல்வர்.

———-

மகரக்கண்ணன் வஞ்சினம்

8416. வண்டு உலாம் அலங்கல் மார்பன் மகரக்கண், மழை
எறு என்ன,
திண் திறல் அரக்கன் கொற்றப் பொன் தடஞ் சில்லித்
தேரை,
தண்டலை மருத வைப்பின் கங்கை நீர் தழுவும் நாட்டுக்
கொண்டல்மேல் ஓட்டிச் சென்றான்; குரங்கு இனப்
படையைக் கொன்றான்.–15-

வண்டு உலாம் அலங்கல் மார்பன் – வண்டுகள் மொய்க்கும்
படியாக மாலையை அணிந்த மார்பை உடையனும்; மகரக்கண் மழை
ஏறு என்ன திண்திறல் அரக்கன் – மகரக்கண்ணையும் இடியேற்றை
ஒத்த மிக்க வலிமையையும் உடைய அரக்கனாகிய மகரக்கண்ணன்;
குரங்கு இனப்படையைக் கொன்றான் – குரங்குக் கூட்டமாகிய
சேனையைக் கொன்றவனாய்; கொற்றப் பொன் தடஞ்சில்லித் தேரை
– (தனது) வெற்றி பொருந்திய அழகிய பெரிய சக்கரத்தையுடைய தேரை;
தண்டலை மருத வைப்பின் கங்கை நீ்ர் தழுவும் நாட்டு – சோலை
சூழ்ந்த மருத நிலத்தைக் கொண்ட கங்கை நீரால் சூழப் பெற்ற
(கோசல) நாட்டை உடைய;கொண்டல்மேல் ஓட்டிச் சென்றான் – மேகம் போன்ற நிற்த்தை
உடையவனான இராமன்மேல் (போர் வேண்டி) ஓட்டிச் சென்றான்;

—————

8417. ‘இந்திரன் பகைஞனே கொல்?’ என்பது ஓர் அச்சம் எய்தி
தந்திரம் இரிந்து சிந்த, படைப் பெருந் தலைவர், தாக்கி
எந்திரம் எறிந்த என்ன, ஏவுண்டு புரண்டார்; எய்தி;
சுந்தரத் தோளினானை நோக்கி நின்று, இனைய சொன்னான்:–16-

இந்திரன் பகைஞனே கொல் என்பதோர் அச்சம் எய்தி –
(அவ்வாறு மகரக்கண்ணன் வருதலைக் கண்ட வானர சேனை)
முன்னர் வந்த இந்திரனுக்குப் பகைவனான இந்திரசித்தோ என்பதாகிய
ஒரு பயத்தை அடைந்து; தந்திரம் இரிந்து சிந்த – படைநிலை
கெட்டுச் சிதறி ஓடவும்; படைப் பெருந் தலைவர் தாக்கி எந்திரம்
எறிந்த என்ன, ஏவுண்டு புரண்டார் – வானர சேனைப்
பெருந்தலைவர்கள் அவனோடு பொருது, எந்திரம் எறிந்தாற் போல
(அவனால் விடப்பட்ட) அம்பினால் தாக்குண்டு புரண்டாராகவும்;
எய்தி – (இங்ஙனமாகப் படை நிலை கெடவும் தலைவர் புரளவும்
போர் புரிந்த வண்ணம்) இராமனைச் சென்றடைந்து; சுந்தரத்
தோளினானை நோக்கி நின்று- அழகு பொருந்திய தோளினையுடைய
அவ்விராமனை நோக்கி நின்று; இனைய சொன்னான் – இவ்வாறான
(கீழ்வருமாறு) சொற்களைச் சொல்பவனானான்.

—————

8418. ‘”என்னுடைத் தாதை தன்னை இன் உயிர்
உணடாய்” என்னும்
முன் உடைத்தாய தீய முழுப் பகை மூவர்க்கு அன்றி,
நின்னுடைத்து ஆயது அன்றே; இன்று அது நிமிர்வென்’
என்றான்-
பொன்னுடைத் தாதை வண்டு குடைந்து உணும்
பொலம் பொன் தாரான்.–17-

பொன்னுடைத் தாதை – பொன்போன்ற நிறத்தை உடைய
மகரந்தத்தை; வண்டு குடைந்து உணும் பொலம் பொன்தாரான் – வண்டுகள் குடைந்து உண்ணும்படியான மிக்க அழகிய மாலையை
உடைய மகரக்கண்ணன்; “என்னுடைத் தாதை தன்னை இன்னுயிர்
உண்டாய்” – (இராமனை நோக்கி) “என்னுடைய தந்தையினது இனிய
உயிரை நீ போக்கினாய்” என்னும் முன் உடைத்தாய தீய முழுப்பகை
– “என்று (எனக்கு) முன்னமே உண்டாகிய கொடிய பெரும்
பகையானது; மூவர்க்கு இன்றி, நின்னுடைத்து ஆயது அன்றே –
மும்மூர்த்திகளிடம் இல்லாமல் உன்னிடத்து உள்ளது அல்லவா? இன்று
அது நிமிர்வென் என்றான் – இன்று அந்தப் பகையை நீக்கித்
தலையெடுப்பேன்” என்று சொன்னான்.

———–

8419. தீயவன் பகர்ந்த மாற்றம் சேவகன் தெரியக் கேட்டான்,-
‘நீ கரன் புதல்வன்கொல்லோ? நெடும் பகை நிமிர வந்தாய்;
ஆயது கடனே அன்றோ, ஆண் பிறந்து அமைந்தார்க்கு?
ஐய!
ஏயது சொன்னாய்’ என்றான்,-இசையினுக்கு இசைந்த
தோளான்.–18-

இசையினுக்கு இசைந்த தோளன், சேவகன் – புகழுக்குப்
பொருந்திய தோள் வலி உள்ளவனும் வீரனுமாகிய இராமன்; தீயவன்
பகர்ந்த மாற்றம் தெரியக் கேட்டான் – கொடியவனாகிய
மகரக்கண்ணன் சொன்ன சொற்களை விளங்கக் கேட்டு; “நீ கரன்
புதல்வன் கொல்லோ – நீ கரனுடைய மகனா? “நெடும் பகை நிமிர
வந்தாய் – (நின்னுடைய) பழைய பகையைத் தீர்த்துக் கொள்ள
வந்திருக்கின்றாய்; “ஆண் பிறந்து அமைந்தார்க்கு ஆயது கடனே
அன்றோ – (ஒரு குடியில் ஆண்மகனாகப் பிறந்து வளர்ந்தவர்க்குத்
தந்தை மேல வந்த பழியைத் தீர்ப்பது கடமையல்லவா; “ஐய! ஏயது
சொன்னாய்” என்றான் – ஐயனே! நீ தகுதியானதையே சொன்னாய்”
என்று கூறினான்.

—————-

மகரக்கண்ணன் – இராமன் போர்

8420. உரும் இடித்தென்ன வில் நாண் ஒலி படுத்து,
‘உன்னோ எந்தை
செரு முடித்து, என்கண் நின்ற சினம் முடித்து
அமைவென்’ என்னா,
கரு முடித்து அமைந்த மேகம், கால் பிடித்து எழுந்த
காலம்,
பெரு முடிக் கிரியில் பெய்யும் தாரைபோல் பகழி
பெய்தான்.–19-

உரும் இடித்தென்ன வில்நாண் ஒலிபடுத்து – இடி இடித்தாற்
போல வில்லினது நாண் ஒலியைத் தோற்றுவித்து; ‘உன்னோடு
எந்தை செரு முடித்து’ – ‘உன்னோடு என் தந்தை காரணமாக
ஏற்பட்ட போரை முடித்து; ‘என் கண் நின்ற சினம் முடித்து
அமைவென்’ என்னா – ‘எனது கோபத்தையும் தீர்த்துக்
கொள்வேன்’ என்று சொல்லி (மகரக்கண்ணன்); கருமுடித்து அமைந்த
மேகம் – சூல் முதிரப் பெற்ற மேகம்; கால் பிடித்து எழுந்த காலம் –
(வானத்தின மீது) மழைக்கால் பற்றி எழுந்த காலத்து; பெருமுடிக்
கிரியில் பெய்யும் தாரை போல்,பகழி பெய்தான் – பெரிய
முகடுகளையுடைய மலையிற் பொழியும் தாரைபோல் அம்புகளைச்
சொரிந்தான்.

————-

8421. சொரிந்தன பகழி எல்லாம் சுடர்க் கடுங் கணைகள் தூவி,
அரிந்தனன் அகற்றி, மற்றை ஆண்தகை அலங்கல்
ஆகத்து,
தெரிந்து ஒரு பகழி பாய எய்தனன், இராமன்; ஏவ
நெரிந்து எழு புருவத்தான்தன் நிறத்து உற்று நின்றது
அன்றே.–20-

சொரிந்தன பகழி எல்லாம் – (இராமன்) தன்மேல் மகரக்
கண்ணனால் ஏவப்பெற்ற எல்லா அம்புகளையும்; கூர்க் கடுங்கணைகள்
தூவி அரிந்தனன் அகற்றி – வெம்மையும், ஒளியும் பொருந்திய
அம்புகனை ஏவி ஒடித்துத் தள்ளி; மற்றை ஆண்தகை அலங்கல்
ஆகத்து – ஆனபின்பு ஆண்மைக் குணமுள்ள அந்த
மகரக்கண்ணனுடைய மாலையை அணிந்த மார்பிலே; தெரிந்து ஒரு
பகழி பாய எய்தனன், இராமன்- ஒரு கணை பாயும் படியாக இராமன்
ஆராய்ந்து எடுத்து ஓர் அம்பினை எய்தான்; ஏவ – (அப்படி அவன்)
செலுத்த; நெரிந்துஎழு புருவத்தான் தன் நிறத்து உற்று நின்றது
அன்றே – (அவ்வம்பானது, கோபத்தால்) வளைந்து எழுந்து
புருவத்தை உடைய மகரக்கண்ணனது மார்பிலே அழுந்தி நின்றது.

————-

8422. ஏவுண்டு துளக்கம் எய்தா, இரத்தகப் பரிதி ஈன்ற
பூவுண்ட கண்ணன், வாயின் புகை உண்டது உமிழ்வான்
போல்வான்
தேவுண்ட கீர்த்தி அண்ணல் திரு உண்ட கவசம் சேர,
தூவுண்ட வயிர வாயி ஆயிரம் தூவி ஆர்த்தான்.–21-

ஏவுண்டு துளக்கம் எய்தா – (இரமானால் எய்யப்பட்ட) அம்பு
தைத்து நடுங்கி; இரத்தகப் பரிதி ஈன்ற பூவுண்ட கண்ணன் –
செந்நிறத்தை உடைய சூரியனால் மலர்விக்கப் பெற்ற செந்தாமரைப்
பூப்போன்ற கண்களை உடைய மகரக்கண்ணன்; வாயின் புகை
உண்டது உமிழ்வான் போல்வான் – வாயில் முன்னமே உண்ட
புகையைக் கக்குபவன் போன்றவனாகி (நெருப்பை உமிழ்ந்துகொண்டு)
தேவுண்ட கீர்த்தி அண்ணல் திருஉண்ட கவசம் சேர –
தெய்வத்தன்மை பொருந்திய புகழை உடைய இராமனது அழகிய
கவசத்தில் தைக்கும் படியாக; தூவுண்ட வயிர வாளி ஆயிரம் தூவி
ஆர்த்தான் – (பகைவரது) தசையில் தோய்ந்த திண்ணிய ஆயிரம்
அம்புகளைப் பொழிந்து ஆரவாரித்தான்.

———-

8423. அன்னது கண்ட வானோர் அதிசயம் உற்றார்: ஆழி
மன்னனும், முறுவல் எய்தி, வாய் அம்பு ஓர் ஆறு வாய்கி,
பொன் நெடுந் தடந் தேர் பூண்ட புரவியின் குரங்கள்
போக்கி,
வில் நடு அறுத்து, பாகன் தலையையும் நிலத்தில் வீ்ழ்த்தான்.–22-

அன்னது கண்ட வானோர் அதிசயம் உற்றார்- (மகரக்கண்ணன்)
அவ்விதம் அம்பு எய்ததைக் கண்ட தேவர்கள் (இப்படியும் எய்ய
முடியுமோ என) வியப்படைந்தனர்; ஆழி மன்னனும் முறுவல் எய்தி
-ஆணைச் சக்கரத்தை உடைய இராமனும் புன்முறுவல் பூத்து; வாய்
அம்பு ஓர் ஆறு வாங்கி – கூர்மையான ஆறு அம்புகளை எடுத்த;
பொன்நெடுந் தடந்தேர் பூண்ட புரவியின் குரங்கள் போக்கி –
(அவ்வம்புகளால்) அழகிய நெடிய பெரிய தேரில் பூட்டப்பெற்ற
குதிரைகளின் குளம்புகளைத் துண்டித்து; வில் நடு அறுத்து, பாகன்
தலையையும் நிலத்து வீழ்த்தான் – மகரக்கண்ணன் பிடித்திருந்த
வில்லை நடுவிடத்தே ஒடித்து தேர்ப்பாகனது தலையையும் பூமியில் விழும்படியாகச்
செய்தான்.

—————

மகரக் கண்ணன் தவ வலிமையால் இடியும் காற்றும் விளைத்தல்

8424. மார்பிடை நின்ற வாளிவாயிடை வெயிலின் வாரும்
சோரியன், விசும்பினூடு ஓர் இமைப்பிடைத்
தோன்றாநின்றான்,
கார் உரும்ஏறும், காற்றும், கனலியும், கடைநாள் வையம்
பேர்வுறு காலம் என்ன, பெருக்கினன், தவத்தின் பெற்றான்.–23-

மார்பிடை நின்ற வாளிவாயிடை வெயிலின் வாரும் சோரியன்-
மார்பினிடத்து (இராமனால் எய்யப்பெற்று) தைத்து நின்ற அம்பின்
வாயிடத்தினின்றும் வெயிலைப் போலச் செந்நிறமுடையதாக ஒழுகும்
இரத்தத்தை ‘உடையவனாகிய மகரக்கண்ணன்; விசும்பினூடு ஓர்
இமைப்பிடைத் தோன்றா நின்றான் – ஓர் இமைப்பொழுதிற்குள்.
ஆகாயத்தினிடத்துத் தோன்றி நின்று; தவத்தின் பெற்றான் –
தவத்தினால் சித்தி பெற்றவனாதலின்; கார் உரும் ஏறும், காற்றும்,
கனலியும் – மேகத்தில் பொருந்திய பேரிடியும், காற்றும் நெருப்பும்
என்ற இவற்றை;கடைநாள் வையம் பேர்வுறு காலம் என்னப்
பெருக்கினன் – உலகம் நிலை பெயர்ந்து அழியும் படியான
ஊழிக்காலம் எனும்படி மிகுதியாக உண்டாக்கினான்.

——————-

வானர சேனை சிதறுதல்

8425, உரும் முறை அனந்த கோடி உதிர்ந்தன; ஊழி நாளின்,
இரு முறை காற்றுச் சீறி எழுந்தது; விழுந்தது, எங்கும்
கரு முறை நிறைந்த மேகம்; கான்றன, கல்லின் மாரி;
பொரு முறை மயங்கி, சுற்றும் இரியலின் கவிகள் போன.–24-

உரும் முறை அனந்த கோடி உதிர்ந்தன – (மகரக் கண்ணனது
தவசித்தியால்) இடிகள் வரிசையாக எண்ணில்லாத கோடி உதிர்ந்தன; ஊழிநாளின் இருமுறை காற்றுச் சீறி எழுந்தது – ஊழி
நாளைக்காட்டிலும் இரு மடங்கு காற்றுச் சீறி எழுந்தது; விழுந்தது
எங்கும் – எவ்விடத்தும் (உள்ள பொருள்கள் நிலைதடுமாறி)
விழுந்தன;கருமுறை நிறைந்த மேகம் கான்றன கல்லின் மாரி –
கருமைத் தன்மை நிறைந்த மேகங்கள் கல் மழை பொழிந்தன;
பொருமுறை மயங்கி, சுற்றும் இரியலின் கவிகள் போன –
குரங்குகள் போர் செய்யும் தன்மையினின்றும் மயங்கிச் சுற்றிலும்
நிலை கெட்டு ஓடிப்போயின.

————

வீடணன் தந்த செய்தி

8426. போயின திசைகள் எங்கும் புகையொடு நெருப்புப் போர்ப்ப,
தீஇனம் அமையச் செல்லும் மாய மா மாரி சிந்த,
ஆயிர கோடி மேலும் அவிந்தன, கவிகள்; ஐயன்,
‘மாயமோ? வரமோ?’ என்றான்; வீடணன் வணங்கிச்
சொல்வான்:–25-

கவிகள் – குரங்குகள்; போயின திசைகள் எங்கும் புகையோடு
நெருப்புப் போர்ப்ப – (தாம்) ஓடிய திக்குகளிலெல்லாம் புகையும்,
நெருப்பும் மூடிக்கொள்ளவும்; செல்லும் தீ இனம் அமைய மாய மா
மாரிசிந்த – மேகமும் நெருப்புத் தொகுதி பொருந்த பெரு மழையை
அழியும்படியாகப் பொழியவும்; ஆயிரம் கோடி மேலும் அவிந்தன –
(அதனால்) ஆயிரம் கோடிக்கும் மிகுதியாக மடிந்தன; ஐயன்,
‘மாயமோ? வரமோ?’ என்றான் – (அதனைக் கண்ட) இராமன்
(வீடணனை நோக்கி) ‘இது மாயத்தினால் நிகழ்ந்ததா? (அல்லது)
வரத்தின் பயனால் உண்டானதா?’ என்று கேட்டான்; வீடணன்
வணங்கிச் சொல்வான் – (அதைக் கேட்ட) வீடணன் வணங்கிப்
பின்வருமாறு கூறலானான்.

—————

8427. ‘நோற்றுடைத் தவத்தின் நோன்மை நோக்கினர்
கருணை நோக்கி,
காற்றுடைச் செல்வன்தானும், மழையுடைக் கடவுள்தானும்,
மாற்றலர், ஈந்த தெய்வ வரத்தினால் வந்தது’ என்றான்;
நூற்று இதழ்க் கமலக் கண்ணன், ‘அகற்றுவென்,
நொடியில்’என்றான். –26-

காற்றுடைச் செல்வன் தானும், மழையுடைக் கடவுள்தானும் –
வாயுதேவனும், வருணதேவனும்; நோற்றுடைத் தவத்தின் நோன்மை
நோக்கினர் – (மகரக்கண்ணன்) செய்த தவத்தினது வலிமையைப்
பார்த்து; ‘மாற்றலர்’ – (அவன் கேட்ட வரத்தை) மறுக்க
முடியாதவராகி; ஈந்த தெய்வ வரத்தினால் வந்தது என்றான் –
கொடுத்த தெய்வத்தன்மையுடைய வரத்தினால் இது நிகழ்ந்துள்ளது
என்றான் (வீடணன்); நூற்று இதழ்க் கமலக் கண்ணன் – (அதைக்
கேட்டு) நூறு இதழ்களையுடைய தாமரைப் பூப்போலும் கண்களை
உடைய இராமன்; ‘அகற்றுவென் நொடியின்’ என்றான் – ‘ஒரு
நொடிப்பொழுதில் (இவற்றைப் போக்குவேன்’ என்றான்;

———

இராமபிரான் மாயத்தின் விளைவுகளைப் போக்குதல்

8428. காலவன் படையும், தெய்வக் கடலவன் படையும் காலக்
கோல வன் சிலையில் கோத்து கொடுங் கணையோடும்
கூட்டி,
மேலவன் துரத்தலோடும், விசும்பின்நின்று எரிந்து,
வெய்தின்
மால் இருங் கடலின் வீழ்ந்து மறைந்தன, மழையும் காற்றும். –27-

காலவன் படையும் தெய்வக் கடலவன் படையும் கால –
காற்றுக்கு உரிய தெய்வமான வாயு தேவனுடைய அம்பும் கடல்
தெய்வமாகிய வருணதேவனுடைய அம்பும் வெளிப்படும் படியாக;
கோலவன் சிலையில் கோத்து கொடுங்கணையோடும் கூட்டி –
அழகிய வலிய வில்லிலே கோத்த கொடிய கணையோடுங்கூட்டி;
மேலவன் துரத்தலோடும் – மேன்மை பெற்றவனாகிய இராமன்
செலுத்தியவுடன்; மழையும் காற்றும் விசும்பின் நின்று எரிந்து –
(மகரக்கண்ணனால்) ஏவப்பெற்ற மழையும் காற்றும் விரைவாக
வானத்திலிருந்து எரிந்து கொண்டு; மால் இருங்கடலின் வீ்ழ்ந்து
மறைந்தன – மிகப் பெரிய கடலிலே வீழ்ந்து அழிந்து போயின.

—————

மகரக் கண்ணன் மாயையால் மறைந்து போரிடுதல்

8429. அத் துணை, அரக்கன் நோக்கி, அந்தர வானம் எல்லாம்
ஒத்தன உருவே ஆக்கி, தான் மறைந்து ஒளித்து, சூலப்
பத்திகள் கோடி கோடி பரப்பினன்; அதனைப் பார்த்த
வித்தகன், ‘ஒருவன் செய்யும் வினையம்!’ என்று இனைய
சொன்னான்.–28-

அத்துணை, அரக்கன் நோக்கி – அவ்வளவில், மகரக் கண்ணன்
(தான் உருவாக்கிய மழையும் காற்றும் அழிந்ததைப்) பார்த்து; அந்தர
வானமெல்லாம் ஒத்தன உருவே ஆக்கி – இடைவெளியாயுள்ள
வானமெல்லாம் தன்னை ஒத்தனவாகிய உருவங்களை (மாயத்தால்)
தோற்றுவித்து; தான் மறைந்து ஒளித்து – தன் உரு வெளிப்படாமல்
மறைந்து பதுங்கி; சூலப் பத்திகள் கோடி கோடிப் பரப்பினன் – சூல
வரிசைகளைக் கோடி கோடியாகப் பரப்பினான்; அதனைப் பார்த்த
வித்தகன் – அதனைப் பார்த்த ஞான வடிவினனாகிய இராமன்;
‘ஒருவன் செய்யும் வினையம்’ என்று இனைய சொன்னான் –
‘ஒருவன் செய்யும் சூழ்ச்சி என்னே’ (என வியந்து) என்று
இப்படியாகச் சொன்னான்.

————-

மகரக்கண்ணன் மடிதலும் மாயை அகல்தலும்

8430. ‘மாயத்தால் வகுத்தான், யாண்டும் வரம்பு இலா
உருவம்; தான் எத்
தேயத்தான் என்னாவண்ணம் கரந்தனன்; தெரிந்திலாதான்;
காயத்தால் இனையன் என்று நினையல் ஆம் கருத்தன்
அல்லன்;
தீ ஒத்தான் திறத்தில் என்னே செயல்?’ எனச் சிந்தை
நொந்தான்.–29-

‘மாயத்தால் யாண்டும் வரம்பிலா உருவம் வகுத்தான்’ –
(மகரக்கண்ணன்) மாயத்தினால் அளவில்லாத உருவத்தை எவ்விடத்தும் தோன்றும் படியாகச் செய்தான்; ‘தான்
எத்தேயத்தான் என்னா வண்ணம் கரந்தனன் – ‘தான் எந்த
இடத்தில் இருக்கிறான் என்று சொல்ல முடியாதபடி ஒளித்து
விட்டான்; ‘தெரிந்திலாதான்’ – (அங்ஙனம்) ஒளித்துவிட்ட அவன்;
‘காயத்தால் இனையன் என்று நினையல் ஆம் கருத்தன் அல்லன்
– உடம்பினால் இத்தன்மையான் என்று நினைக்கும்படியான நினைவுக்கு
உட்பட்டவன் அல்லன்; ‘தீ ஒத்தான் திறத்தில் என்னே செயல்?’ –
‘தீயை ஒத்தகொடியவனாகிய அவனிடத்துச் செய்யக்கூடிய செயல்
யாது?’எனச் சிந்தை நொந்தான் – என்று மனம் வருந்தினான்.

——————

8431. அம்பின்வாய் ஆறு சோரும் அரக்கன்தன் அருள்
இல் யாக்கை
உம்பரில் பரப்பி, தான் வேறு ஒளித்தனன் என்ன ஓர்வான்,
செம்புனல் சுவடு நோக்கி, ‘இது நெறி’ என்று, தேவர்
தம்பிரான் பகழி தூண்ட, தலை அற்றுத் தலத்தன் ஆனான்.–30-

அம்பின்வாய் ஆறு சோரும் அரக்கன் – (நான் விட்ட) அம்பு
பட்ட இடத்திலிருந்து (இரத்து) ஆறு பெருகப் பெற்ற மகரக்கண்ணன்;
தன் அருன் இல் யாக்கை உம்பரில் பரப்பி – அருள் இல்லமால்
வளர்ந்த தன் உடம்பை ஆகாயத்தில் பலவாறாகத் தோன்றச்செய்து;
தான் வேற ஒளித்தனன் என்ன ஓர்வான் – தான் (அவற்றில்)
வேறாக ஒளிந்திருக்கின்றான் என்று எண்ணியவனாகி; தேவர்
தம்பிரான் – தேவர்களின் தலைவனாகிய இராமன்; செம்புனல்
சுவடுநோக்கி – இரத்தம் வழியும்படியான அடை யாளத்தைப் பார்தது;
‘இது நெறி’ என்று பகழி தூண்ட – இதுவே (அவனுள்ள)இடம் எனத்
துணிந்து (தன்) அம்பினைச் செலுத்த; தலை அற்றுத்தலத்தன்
ஆனான்- (அம்மகரக்கண்ணன்) தலை அறுபட்டுப் பூமியில் விழுந்தான்.

————-

8432. அயில் படைத்து உருமின் செல்லும் அம்பொடும்,
அரக்கன் யாக்கை,
புயல் படக் குருதி வீசி, படியிடைப் புரள்தலோடும்,
வெயில் கெடுத்து இருளை ஓட்டும் காலத்தின்
விளைவினோடும்
துயில் கெடக் கனவு மாய்ந்தால் ஒத்தது-சூழ்ந்த மாயை.–31-

அயில் படைத்து உருமின் செல்லும் அம்பொடும் –
கூர்மையுடைத்தாய் இடியைப் போலச் செல்லுகின்ற இராமனது
அம்புடன்; அரக்கன் யாக்கை – மகரக்கண்ணனது உடல்; புயல் படக்
குருதி வீசி படியிடைப் புரள்தலோடு – மேகம் மழை பொழிவது
போல இரத்தத்தைப் பொழிய விட்டுப் பூமியில் விழுந்து புரண்ட
அளவில்; சூழ்ந்த மாயை – (அவனால் விளைவிக்கப் பெற்றுச்)
சூழ்ந்திருந்த மாயையானது; வெயில் கெடுத்து இருளை
ஓட்டும் காலத்தின் விளைவினோடும் – சூரியன் இருளைக்
கெடுத்து ஓட்டும்படியா விடியற்காலம் தோன்றியதும்; துயில்
கெடக் கனவு மாய்ந்தால் ஒத்தது – உறக்கம் நீங்க
(அவ்வுறக்கத்திற் கண்ட) கனவு (முற்றிலும் பொய்யாய்) அழிந்து
போனதை ஒத்தது.

———-

குருதிக்கண்ணன், சிங்கன் வீழ்ச்சி

8433. குருதியின் கண்ணன், வண்ணக் கொடி நெடுந்
தேரன், கோடைப்
பருதியின் நடுவண் தோன்றும் பசுஞ் சுடர் மேகப்
பண்பன்,
எரி கணை சிந்தி, காலின் எய்தினான் தன்னோடு ஏற்றான்-
விரி கடல் தட்டான், கொல்லன், வெஞ் சினத் தச்சன்,
வெய்யோன்.–32-

வண்ணக் கொடி நெடுந்தேரன் – அழகிய கொடி கட்டப் பெற்ற
பெரிய தேரை உடையவனும்; கோடைப் பகுதியின்
நடுவண் தோன்றும் பசுஞ்சுடர் மேகப் பண்பன் –
கோடைக்காலத்துச் சூரியனிடையே தோன்றுகின்ற பசிய ஒளியை
உடைய மேகத்தின்தன்மையை உடையவனும்; குருதியின் கண்ணன்
– ஆகிய குருதிக்கண்ணன்; எரிகணை சிந்தி காலின் எய்தான்
– நெருப்பை உமிழ்கின்ற அம்புகளை எய்துகொண்டு காற்றைப் போல
விரைந்து வந்தான்; விரிகடல் தட்டான் கொல்லன் வெஞ்சினத் தச்சன், வெய்யோன் – (அவனை) பெரிய கடலைத் தடுத்து அணை
கட்டியவனும், கொல்லும் தன்மையனும், வெம்மையான கோபத்தினால்,
அச்சமுறச் செய்பவனும், (பகைவர்க்கு) கொடுமையானவனும் ஆகிய
நளன் (என்னும் வானரவீரன்); தன்னோடு ஏற்றான் – தன்னோடு
போர் புரியுமாறு (முன்சென்று) எதிர்த்தான்.

————–

8434. அன்று, அவன் நாம வில் நாண் அலங்கல் தோள்
இலங்க வாங்கி,
ஒன்று அல பகழி மாரி, ஊழித் தீ என்ன, உய்த்தான்;
நின்றவன்-நெடியது ஆங்கு ஓர் தருவினால் அகல நீக்கி,
சென்றனன்-கரியின் வாரிக்கு எதிர் படர் சீயம் அன்னான்.–33-

அன்று, அவன் நாம வில்நாண் – அப்பொழுது, குருதிக் கண்ணன்
அச்சத்தைத் தருகின்ற வில்லின் நாணை; அலங்கல் தோள் இலங்க
வாங்கி – மாலையணிந்த தோள் விளங்கும் படியாக இழுத்து; ஒன்று
அல பகழி மாரி – பலவாகிய அம்பு மழையை; ஊழித்தீ என்ன,
உய்த்தான் – ஊழிக்காலத்துத் தீயைப் போலச் (நெருப்பு
உமிழும்படியாகச்) செலுத்தினான்; நின்றவன் – அவனுடன் போருக்கு
எதிரூன்றி நின்றவனாகிய நளன்;நெடியது ஆங்கு ஓர் தருவினால்
அகல நீக்கி – நெடியதாகிய ஒரு மரத்தினால் (அந்த அம்புகளை)
அப்பாற் செல்லும்படி நீக்கி; கரியின் வாரிக்கு எதிர்படர் சீயம்
அன்னான் சென்றனன் – யானைக் கூட்டத்திற்கு எதிராகச்
செல்லுகின்ற சிங்கத்தை ஒத்தவனாகிச் சென்றான்.

———-

8435. கரத்தினில் திரியாநின்ற மரத்தினைக் கண்டமாகச்
சரத்தினி்ன் துணித்து வீழ்த்த தறுகணான்தன்னை நோக்கி,
உரத்தினைச் சுருக்கிப் பாரில் ஒடுங்கினான், தன்னை
ஒப்பான்
சிரத்தினில் குதித்தான்; தேவர் திசைமுகம் கிழிய
ஆர்த்தார்.–34-

கரத்தினில் திரியா நின்ற மரத்தினை – (தன்னுடைய) கையிலே
சுழல்கின்ற மரத்தை; கண்டமாகச் சரத்தினின் துணித்து வீழ்த்த
தறகணான் தன்னை நோக்கி – துண்டமாக அம்பினால் வெட்டி விழச்
செய்த அஞ்சாமையை உடைய குருதிக் கண்ணனைப் பார்த்து;
தன்னை ஒப்பான் – தன்னைத் தானே ஒப்பவனாகிய நளன்;
உரத்தினைச் சுருக்கிப் பாரில் ஒடுங்கினான் – மார்பைச் சுருக்கிப்
பூமியில் ஒடுங்கினான் போலப் பதுங்கி; சிரத்தினில் குதித்தான் –
அவனுடைய தலையில் குதித்தான்; தேவர் திசைமுகம் கிழிய
ஆர்த்தார் – (அதனைப் பார்த்து) தேவர்களெல்லாம்
திசையிடங்களெல்லாம் பிளவுபடும்படியாக ஆரவாரித்தார்கள்.

—————-

8436. எரியும் வெங் குன்றின் உம்பர், இந்திரவில் இட்டென்ன,
பெரியவன் தலைமேல் நின்ற பேர் எழிலாளன், சோரி
சொரிய, வன் கண்ணின் மூக்கின் செவிகளின், மூளை
தூங்க,
நெரிய, வன் தலையைக் காலால் உதைத்து, மாநிலத்தில்
இட்டான்.–35-

எரியும் வெங்குன்றின் உம்பர் – நெருப்பு எரிகின்ற கொடிய
மலையின்மேலே; இந்திரவில் இட்டென்ன – இந்திரவில் தோன்றினாற்
போல; பெரியவன் தலைமேல் நின்ற பேர் எழிலாளன் –
வெருந்தோற்றமுள்ள குருதிக் கண்ணனது தலையின் மேல் நின்ற
மிக்க அழகை உடைய நளன்; வன் கண்ணின் மூக்கின் செவிகளின்
சோரி சொரிய – (குருதிக்கண்ணனது) வலிய கண்களிலும், மூக்கிலும்,
செவிகளிலும் இரத்தம் சொரியவும்; மூளை தூங்க – மூளை சிதைந்து
வழியவும்; நெரிய வன் தலையைக் காலால் உதைத்து, மாநிலத்தின்
இட்டான் – (அவனது) வலிய தலையை நெரியும் படியாகக் காலால் உதைத்து (அவனைப்)
பூமியில் தள்ளினான்.

————–

8437. அங்கு அவன் உலத்தலோடும், அழற் கொழுந்து ஒழுகும்
கண்ணான்,
சிங்கன், வெங் கணையன், வில்லன், தார் அணி தேரின்
மேலான்,
‘எங்கு, அடா போதி?’ என்னா, எய்தினன்; எதிர் இலாத,
பங்கம் இல்மேரு ஆற்றல், பனசன் வந்து, இடையில்
பாய்ந்தாள்.–36-

அங்கு அவன் உலத்தலோடும் – குருதிக் கண்ணன் இறந்த
அளவில்; அழற்கொழுந்து ஒழுகும் கண்ணான் சிங்கன் – நெருப்பை
உமிழும் கண்களை உடைய சிங்கன்; வெங்கணையன், வில்லன் தார்
அணி தேரின் மேலான் – கொடிய அம்பை உடையவனும், வில்லை
உடையவனும், சிறு மணிகள் கட்டிய தேரின் மேல் ஏறியவனுமாகி;
‘எங்கு அடா! போதி?’ என்னா எய்தினன் – (நளனைப் பார்த்து)
‘எங்கடா போகிறாய்?’ என்று சொல்லிக் கொண்டே வந்தான்
(அப்பொழுது); எதிர் இலாத, பங்கம் இல்மேரு ஆற்றல் –
கெடுதலில்லாத மேருவைப் போன்ற ஆற்றலை உடையவனும், தனக்கு
நிகரொருவருமில்லாதவனுமாகிய;பனசன் வந்து இடையில் பாய்ந்தான்
– பனசன் (என்னும் வானர வீரன்) நடுவிலே வந்து குதித்தான்.

—————–

8438. பாய்ந்தவன் தோளில், மார்பில், பல்லங்கள் நல்ல
பண்போடு
ஆய்ந்தன, அசனி போல, ஐ-இரண்டு அழுந்த எய்தான்;
காய்ந்தனன், கனலி நெய்யால் கனன்றது போலக் காந்தி;
ஏய்ந்து ஏழு தேரினோடும், இமைப்பிடை எடுத்துக்
கொண்டான்.

பாய்ந்தவன் தோளில், மார்பில் – அப்படிக் குதித்த பனசனது
தோள்களிலும், மார்பிலும்;பல்லங்கள் நல்ல பண்போடு ஆய்ந்தன –
நல்ல தகுதி நோக்கி ஆராய்ந்து எடுத்தனவாகிய அம்புகள்; அசனி
போல ஐ-இரண்டு அழுந்த எய்தான் – பத்தினை இடியைப் போல
அழுந்தும்படியாக (சிங்கன்) எய்தான்; காய்ந்தனன். கனலி நெய்யால்
கனன்றது போலக் காந்தி – (அதைப் பார்த்து பனசன்) கோபித்து,
நெருப்பு நெய்யால் சுடர்விட்டு எரிவது போலக் கொதித்து; ஏய்ந்து
எழு தேரினோடும், இமைப்பிடை எடுத்துக் கொண்டான் –
(சிங்கனை) பொருந்தி ஊர்ந்து வருகின்ற தேரோடும் ஓரிமைப்பிற்குள்
(கையினால்) தூக்கினான்.

—————

8439. தேரொடும் எடுத்தலோடு, நிலத்திடைக் குதித்த செங்கண
்மேருவின் தோற்றத்தான்தன் உச்சிமேல் அதனை வீச;
பாரிடை விழுதலோடும், தானவன் உம்பர் பாய்ந்து
சோரியும் உயிரும் சோர, துகைத்தனன், வயிரத் தோளன்.–38-

தேரொடும் எடுத்தலோடு – (பனசன் சிங்கனைத்) தேரோடு
தூக்கினவுடனே; நிலத்திடைக் குதித்த செங்கண் மேருவின்
தோற்றத்தான் தன் உச்சிமேல் அதனை வீச – தேரினின்றும்
பூமியிலே குதித்த மலைபோன்ற வடிவத்தினையும் உடைய சிங்கனது
தலையின் மேல் (பனசன்) அத்தேரை வீச; பாரிடை விழுதலோடும் –
அவ்வரக்கன் நிலத்தில் (அதுபட்டு) விழுந்த அளவில்; தானவன்
உம்பர் பாய்ந்து சோரியும் உயிரும் சோரத் துகைத்தனன்,
வயிரத்தோளன் – இரத்தம் மேலே பாயவும் உயிர் சோரவும் வயிரம்
போல் உறுதியான தோளை உடைய அப்பனசனானவன் (சிங்கனது
உடம்பினை) மிதித்து உழக்கினான்.

———

8440. தராதல வேந்தன் மைந்தர் சரத்தினும், கவியின் தானை
மராமரம், மலை என்று இன்ன வழங்கவும், வளைந்த தானை,
பராவ அரும் வெள்ளம் பத்தும் பட்டன; பட்டிலாதார,
இராவணன் தூதர் போனார், படைக்கலம் எடுத்திலாதார்.–39-

தராதல வேந்தன் மைந்தர் சரத்தினும் – பூமிக்கு மன்னனாகிய
தசரதனுடைய மைந்தராகிய இராம இலக்குவர் எய்கின்ற அம்புகளாலும்; கவியின் தானை – குரங்குச்சேனை; மராமரம்,
மலை என்று இன்ன வழங்கவும் – மராமரம், மலை என்ற இவைகளை
எறிதலினாலும்;வளைந்ததானை, பராவ அரும் வெள்ளம் பத்தும்
பட்டன – மகரக்கண்ணனைச் சூழ்ந்து வந்த சொல்லுதற்குரிய பத்து
வெள்ளச் சேனைகளும் இறந்து பட்டன; பட்டிலாதார் இராவணன்
தூதர்போனார் படைக்கலம் எடுத்திலாதார் – படைக்கலம்
எடுக்காதவராயும் (அதனால்) இறவாமல் நின்றவருமான இராவணன்
தூதர்கள் (செய்தியை உரைக்க நகருக்குச்) சென்றார்கள்.

தரையாகிய தலம் – தராதலம். பராவுதல் – சொல்லுதல்.

———-

மிகைப் பாடல்கள்

இந்திரியத்தத இகழ்ந்தவன், அந்தோ!
மந்திர வெற்றி வழங்க வழங்கும்
இந்திரம் அற்றது எனக் கடிதிகொல்?
வந்தது என், வில் தொழிலைக் கொலை மான? 5-1

அம்புயக் கண்ணன் கண்டத்து ஆயிரம் பகழி நாட்டி,
தம்பிதன் கவசமீதே இரட்டி சாயகங்கள் தாக்கி,
வெம்பு இகல் அனுமன்மீதே வெங் கணை மாரி வித்தி,
உம்பர் தம் உலகம் முற்றும் சரங்களாய் மூடி உய்த்தான். 19-1

‘இந்திரன் பகைஞன் போல இவனும் ஓர் மாய வீரன்;
தந்திரக் குரக்குச் சேனை உளது எலாம் தரையின் வீழ்த்தான்;
எந்திரம் ஆகிப் பார்த்த இடம் எலாம் தானே ஆனான்;
அந்தரம் அவனோடு ஒப்பார் ஆர்?’ என அமலன் சொன்னான். 29-1

மற்று அவன் இறத்தலோடும், மறைகளும் தேடிக் காணாக்
கொற்றவன் சரத்தின் மாரி கடையுக மழையின் கொள்ளப்
பற்றி, அங்கு அரக்கர் தானை வெள்ளம் அத்தனையும் பாரில்
அற்றவை அழிந்து சிந்த அறுத்து, ஒரு கணத்தில் மாய்த்தான். 31-1

மடிந்தனன் சிங்கன் என்னும் மறம் தரு வயிரத் தோளான்;
தொடர்ந்தனர் அரக்கர், பின்னும்; தொடர்ந்தவர் தம்மை எல்லாம்
கடந்தனர், கவியின் வீரர்; களத்திடைக் கணத்தில் மாய்த்தார்;
நெடுந் திரைப் பரவைமீது நிறைந்தது, குருதி நீத்தம். 38-1

————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ கம்ப ராமாயணம்/யுத்த காண்டம்/19-படைத் தலைவர் வதைப் படலம்–

November 2, 2020

படைத்தலைவர் போரிட இசைவு வேண்டல்

8302. ஆர்த்து எழும் ஓசை கேட்ட அரக்கரும், முரசம் ஆர்ப்ப,
போர்த் தொழில் வேட்கை பூண்டு, பொங்கினர், புகுந்து
மொய்த்தார்;
தார்த் தட மார்பன் தன்னை, ‘தா, விடை’ என்னச்
சார்ந்தார்;
பார்த்தனன், முனிந்து மன்னன், இனையன பகர்வது ஆனான்:–1-

ஆர்த்து எழும் ஓசை கேட்ட அரக்கரும் – (வானரப் படை
வீரர்கள்) ஆரவாரத்தோடு எழுப்பிய (பேரொலி) கேட்ட அரக்கப்
படை வீரர்கள்; முரசம் ஆர்ப்ப – முரசு ஒலிக்க; போர்த் தொழில்
வேட்கை பூண்டு – போர்த் தொழில் செய்தலில் பெரு விருப்பம்
கொண்டு; பொங்கினர் புகுந்து மொய்த்தார் – சினம் மிக்கவர்களாய்ப்
புகுந்து நெருங்கித்; தார்த்தட மார்பன் தன்னை – மாலை அணிந்த
அகன்ற மார்பினை உடைய இராவணன் தன்னைப் பார்த்து; விடைதா
என்னச் சார்ந்தார் – விடை தருக என்று (கேட்டு) நெருங்கினர்;
மன்னன் – அரசனாகிய இராவணன்; முனிந்து பார்த்தனன் – சினம்
கொண்டு பார்த்து; இனையன பகர்வது ஆனான் – இத்தகைய
சொற்களைச் சொல்லல் ஆனான்

—————–

மாபக்கன் புகை நிறக்கண்ணன் வேண்டுதல்

8303. மாபெரும்பக்கனோடு வான் புகைக்கண்ணன் வந்தான்;
‘ஏவுதி எம்மை’ என்பார்; தம் முகம் இனிதின் நோக்கி,
‘போவது புரிதிர்’ என்னப் புகறலும், பொறாத தூதர்,
‘தேவ! மற்று இவர்கள் செய்கை கேள்!’ எனத் தெரியச்
சொன்னார்;–2-
மாபெரும் பக்கனோடு – மாபக்கனோடு; வான் புகைக் கண்ணன்
வந்தான் – சிறந்த புகை நிறக் கண்ணனும் (சேர்ந்து) வந்து; எம்மை
ஏவுதி என்பார் – இப்போருக்கு எங்களை ஏவுக என்றார்கள்; தம்முகம்
இனிதின் நோக்கி – இராவணன் அவர்தம் முகங்களை மகிழ்ச்சியோடு
பார்த்து; போவது புரிதிர் என்னப் புகறலும் – (போருக்குப்)
போவதைச் செய்யுங்கள் என்று கூறுதலும்; பொறாத தூதர் –
(அதனைக் கேட்டுப்) பொறுக்க முடியாத தூதுவர்கள்; தேவ –
தேவனே! மற்று இவர்கள் செய்கை கேள் எனத் – இவர்கள் செய்த
செயலைக் கேட்பாயாக என்று; தெளியச் சொன்னார் – தெளிவாகச்
சொல்லலாயினார்.

———–

8304. ‘ஆனையும் பரியும் தேரும் அரக்கரும் அமைந்த ஆழித்
தானைகள் வீய, நின்ற தலைமகன் தனிமை ஓரார்,
“மானவன் வாளி, வாளி! என்கின்ற மழலை வாயார்,
போனவர் மீள வந்து புகுந்தனர் போலும்! என்றார்.–3-

ஆனையும் – யானைகளும்; பரியும் – குதிரைகளும்; தேரும் –
தேர்ப்படைகளும்; அரக்கரும் – காலாட் படை வீரர்களாகிய
அரக்கர்களும்; அமைந்த – (ஒன்றாகச் சேர்ந்து) (நால்வகைப்
படையாக) அமைந்த; ஆழித்தானைகள் வீய – கடல் போன்ற
படைகள் அழிவுற்றதனால்; தனிமை நின்ற தலைமகன் – தன்னந்
தனியனாய்ப் (போர்க்களத்தில்) நின்ற தலைவனாகிய இந்திரசித்தனது;
தனிமை ஓரார் – தனிமையைப் பற்றிச் சிறிதும் எண்ணிப் பாராமல்;
மானவன் வாளி வாளி என்ற – மனிதனாகிய இலக்குவனுடைய
அம்புகள் அம்புகள் என்கின்ற; மழலை வாயார் – குழறிச் சொல்லும்
சொற்களைக் கொண்ட வாயினை உடையவர்களாய்; போனவர் –
போர்க்களத்தை விட்டு ஓடிப் போனவர்கள்; மீளவந்து – மீண்டும்
வந்து; புகுந்தனர் போலும் என்றார் – (தங்கள் வீரத்தை
வெளிக்காட்ட) புகுந்துள்ளார் போலும் என்றனர். (தூதுவர்)

—————

8305. அற்று அவர் கூறலும், ஆர் அழலிற்றாய்
முற்றிய கோபம் முருங்க முனிந்தான்,-
‘இற்றிதுவோ இவர் சேவகம்?’ என்னா,
‘பற்றுமின்!’ என்றனன்-வெம்மை பயின்றான்.–4-

அவர் – அந்தத் தூதுவர்கள்; அற்று கூறலும் – அவ்வாறு ஆன
சொற்களைச் சொன்ன அளவிலே; வெம்மை பயின்றான் – கொடுஞ்
(செயல்களைச் செய்வதிலேயே) பயின்றவன் ஆகிய இராவணன்; ஆர்
அழலிற்றாய் – நிறைந்த தீயின் தன்மைத்தாய; முற்றிய கோபம் – முதிர்ந்த சினம்; முருங்க முனிந்தான் – (தன்
தன்மையை அழித்தலால்) மிகச் சினந்தவனாகி; இவர் சேவகம்
இற்றிதுவோ என்னா – இவர்கள் (என் மனனுக்குச் செய்த) சேவகம்
இவ்வகைப்பட்டதோ என்று கூறி; பற்றுமின் என்றனன் –
(இவர்களைப்) பிடியுங்கள் என்றான்.

————–

8306. என்றலும், எய்தினர், கி்ங்கரர் என்பார்,
பின்றலினோரை வலிந்து பிடித்தார்,
நின்றனர்; ஆயிடை, நீல நிறத்தான்,
‘கொன்றிடுவீர் அலிர்; கொண்மின், இது’ என்றான்.–5-

என்றலும் – என்று (இராவணன்) கூறிய உடனே; கிங்கரர் என்பார்
– கி்ங்கரர் என்ற பெயர் உடையவர்கள்; எய்தினர் – நெருங்கி;
பின்றலினோரை – (போர்க்களத்தில் இருந்து) பின்னிட்டு
ஓடிவந்தவர்களான; (மாபக்கனையும் புகைநிறக் கண்ணனையும்)
வலிந்து பிடித்தார் – இறுகப் பிடித்துக்கொண்டு; நின்றனர் –
நின்றார்கள்; ஆயிடை – அப்பொழுது; நீல நிறத்தான் – கரிய நிறம்
உள்ள இராவணன்; கொன்றிடுவீர் அலீர் – (இவர்களைக்) கொன்று
விடவேண்டாம்; இது – (நான் சொல்லப்போகிற இச்செய்தியை);
கொண்மின் என்றான் – மனத்தில் நிலை நிறுத்திக்கொள்ளுங்கள்
என்றான்.

————

8307. ‘ஏற்றம் இனிச் செயல் வேறு இலை; ஈர்வீர்
நாற்றம் நுகர்ந்து உயர் நாசியை; நாமக்
கோல் தரு திண் பணை கொட்டினிர், கொண்டு, ஊர்
சாற்றுமின், “அஞ்சினர்” என்று உரைதந்தே,’–6-

நாற்றம் நுகர்ந்து உயர் நாசியை – மணத்தை நுகர்ந்து கொண்டு
உயர்ந்து விளங்கித் தோன்றுகிற மூக்கினை; ஈர்வீர் – (முதலில்)
அறுப்பீர்கள்; (பிறகு) ஊர் – ஊர் முழுதும் கூட்டிக் கொண்டுபோய்);
நாமக்கோல் தரு திண்பணை கொட்டினிர் கொண்டு – சிறந்த
குறுந்தடியால் அடிக்கப்படுகிற வலிய பறையைக் கொட்டிக் கொண்டு;
அஞ்சினர் என்று உரை தந்தே – (இவர்கள் போருக்கு) அஞ்சி
(ஓடிவந்தவர்கள்) என்ற சொற்களைச் சொல்லி; சாற்றுமின் –
(அனைவருக்கும்) சொல்லுங்கள்; ஏற்றம் இனிச் செயல் வேறு இலை
– இவர்களுக்குச் செய்கிற உயர்வான செயல் இதைத்தவிர வேறு எதுவும் இல்லை (என்று இராவணன்
கிங்கரர்களிடம் கூறினான்).

————–

8308. அக் கணனே, அயில் வாளினர் நேரா,
மிக்கு உயர் நாசியை ஈர விரைந்தார்,
புக்கனர்; அப் பொழுதில், ‘புகழ் தக்கோய்!
தக்கிலது’ என்றனன், மாலி, தடுத்தான்.–7-

அக் கணனே – (அவ்வாறு இராவணன் கட்டளை இட்ட)
அப்பொழுதே; அயில்வாளினர் – கூர்மையான வாளினை உடைய
(கிங்கரர்கள்); நேரா – (அக்கட்டளைககு) உடன்பட்டு நேர்ந்து; மிக்கு
உயர் நாசியை – (மாபக்கன் புகை நிறக் கண்ணன்
ஆகியவர்களுடைய) மேல் நோக்கி உயர்ந்த மூக்கினை; ஈர
விரைந்தார் புக்கனர் – அறுப்பதற்காக விரைந்து வந்து புகுந்தனர்;
அப்பொழுதில் – அப்பொழுது; மாலி – மாலி என்னும் அரக்கப்
படைத்தலைவன் (இராவணனை நோக்கி); புகழ்தக்கோய் – புகழுக்குத்
தகுதியானனே; தக்கிலது என்றனன் தடுத்தான் – இச்செயல்
தகுதிக்குரியதன்று என்று கூறித் தடுத்தான்.

———————

8309. ‘அம் சமம் அஞ்சி அழிந்துளர் ஆனார்,
வெஞ் சமம் வேறலும், வென்றியது இன்றாய்த்
துஞ்சலும் என்று இவை தொல்லைய அன்றே?
தஞ்சு என ஆர் உளர், ஆண்மை தகைந்தார்?–8-

அம்சமம் – அழகிய போரில்; அஞ்சி அழிந்துளர் ஆனார் –
அஞ்சி (மனம் அழிந்தவர்களானவர்கள்; வெஞ்சமம் வேறலும் –
(பிறிதொரு) கொடிய போரில் வெல்லுதலும்; வென்றியது இன்றாய்த்
துஞ்சலும் – வெற்றி இல்லாமல் இறந்து படுதலும்; என்று இவை –
என்ற இவ்வகைச்செயல்கள்; தொல்லைய அன்றே – பழமையான
முறையில் வருபவை அல்லவா? ஆண்மை தஞ்சு என தகைந்தார் –
ஆண்மைப் பண்பைத் தன்னிடத்திலேயே அடைக்கலமாக
(நிலையாகக்) கொண்டவர்கள்; ஆர் உளர் – (இந்த உலகத்தில்) யாவர்
உளர் ஒருவருமில்லை என்றபடி.

———–

8310. ‘அந்தரம் ஒன்றும் அறிந்திலை அன்றே;
வந்தன நம்வயின் எத்தனை, மன்னா!
தந்திரம், வானவர் தானவர் என்னும்,
இந்திரன் அஞ்சினன்; எண்ணுதி அன்றே!–9-

மன்னா – மன்னனே; அந்தரம் ஒன்றும் அறிந்திலை அன்றே –
(நீ) வேறுபாடு எதையும் ஒரு சிறிதம் அறிந்திருக்கவில்லை அல்லவா?
வானவர் – தேவர்கள்; தானவர் – தானவர்கள்; என்னும் தந்திரம் –
என்கிற படைகள்; நம் வயின்வந்தன எத்தனை – நம்முடன் போரிட
வந்தவைகள் எத்தனையோ அல்லவா? (அவையெல்லாம் நம்மிடம்
தோற்றுப்போய் விடவில்லையா?) இந்திரன் அஞ்சினான் – தேவர்
தலைவனாகிய இந்திரன் (கூடப்) போருக்கு அஞ்சினானே! எண்ணுதி
அன்றே – (அதை நீ) எண்ணிப் பார்க்கலாமல்லவா?

————–

8311. ‘வருணன் நடுங்கினன், வந்து வணங்கிக்
கருணை பெறும் துணையும், உயிர் கால்வான்;
இருள் நிற வஞ்சகர் எங்கு உளர்? எந்தாய்!
பருணிதர் தண்டம் இது அன்று, பகர்ந்தால்.–10-

எந்தாய் – எமது தந்தையே; வருணன் வந்து வணங்கி –
(உன்னுடைய ஆற்றலுக்கு அஞ்சித் தோற்ற) வருணன் (வந்து
உன்னை) வணங்கி நின்று; கருணை பெறும் துணையும் – (உன்)
அருள் பெறும் கால அளவும்; உயிர் கால்வான் நடுங்கினான் – பெரு
மூச்சு விட்டுக்கொண்டு நடுங்கி நின்றான் (என்றால்); இருள் நிற
வஞ்சகர் எங்கு உளர்? – இருட்டின் நிறம் உள்ள வஞ்சனைப் பண்பு
நிறைந்த இவர்கள் எங்கே இருப்பர் (வருணனே அஞ்சி நிற்கையில்
இவர்கள் உயிருக்கு அஞ்சி ஓடிவந்தது பெரும் பிழையிலை);
பகர்ந்தால் – எடுத்துச் சொன்னால்; இது – (நீ கொடுத்த) இந்தத்
தண்டனை; பருணிதர் தண்டம் அன்று – அறிவு உடையோர்
கொடுக்கும் தண்டனை அன்று.

—————-

8312. ‘பத்து-ஒரு நாலு பகுத்த பரப்பின்
அத்தனை வெள்ளம் அரக்கர் அவிந்தார்;
ஒத்து ஒரு மூவர் பிழைத்தனர், உய்ந்தார்;
வித்தக! யார் இனி வீரம் விளைப்பார்?–11-

வித்தக – வித்தகனே! பத்து ஒரு நாலு – நாற்பது வெள்ளமாகப்;
பகுத்த பரப்பின் – பிரிந்த பரப்பினை உடைய; அத்தனை வெள்ளம்
அரக்கர் அவிந்தார் – அத்தனை வெள்ளம் அரக்கப் படை வீரரும்
(இலக்குவன் கணைகளாலும் வானரப் படையினராலும்) போரில் இறந்து
ஒழிந்தனர்; ஒரு மூவர் – இந்திரசித்தன், புகைநிறக் கண்ணன்
மாபக்கன் என்ற மூவர்; ஒத்து உய்ந்தார் பிழைத்தனர் – ஒன்றாக
(உயிர்) தப்பியவர்களாகிப் பிழைத்தார்கள்; இனியார் – இனிமேல்
யாவர்? வீரம் விளைப்பார் – (இவர்களைப் போல்) வீரச் செயல்
செய்யவல்லராவர்?

—————

8313. ‘பாசமும் இற்றது; பாதியின் மேலும்
நாசமும் உற்றது; நம்பி! நடந்தாய்;
பூசல் முகத்து ஒரு கான்முளை போதா,
நீசரை ஈருதியோ, நெடு நாசி?–12-

நம்பி – ஆடவரில் சிறந்தவனே; பாசமும் இற்றது – (இந்திர
சித்தனது) நாகக் கணையும் வலி இழந்து இற்றுப் போய் விட்டது;
பாதியின் மேலும் நாசமும் உற்றது – (அரக்கப் படை) பாதிக்கு மேல்
(போரில்) அழிந்து போய் விட்டது; நடந்தாய் – (நீயும்) முதல் நாள்
போருக்குச் சென்று விட்டுத்) திரும்பி வந்துவிட்டாய்; பூசல் முகத்து –
போர் முகத்தில்; ஒருகான்முளை போதா – ஒப்பற்ற (உன்) மகனுடன்
(இறுதி வரை உடன்நின்று) போகாத; நீசரை – (எளிமைத் தன்மை
உடைய) நீசர்களாகிய இந்தப் பணியாளருடைய; நெடுநாசி – நீண்ட
மூக்கினை; ஈருதியோ – அறுக்கக்கடவாயோ?

—————

8314. ‘”வாழி இலக்குவன்” என்ன, மறுக்குற்று
ஆழி அரக்கர் தம் வாயில் அடைப்பார்;
ஏழ கடல் துணையோ? இனி, நாசி
ஊழி அறுத்திடினும், உலவாதால்.-13-

வாழி இலக்குவன் என்ன – இலக்குவன் என்று (பெயர்)
சொன்னாலும்; மறுக்குற்று – மனக்கலக்கம் அடைந்து; ஆழி அரக்கர்
தம் வாயில் அடைப்பார் – கடல் (நீர்) வாயிலை அடைப்பார்கள்;
இனிநாசி – (அவர்கள் எல்லோருடைய மூக்கையும் அறுக்க
முற்பட்டால்) இனி மூக்கின் தொகுதி; ஏழு கடல் துணையோ – ஏழு
கடலின் அளவு மாத்திரம் இருக்குமோ; ஊழி அறுத்திடினும் –
(அப்படி அறுத்தலைத் தொடங்கினால்) ஊழிக்காலம் வரை
அறுத்தாலும்; உலவாதால் – முடியாததாகும்,

—————

315. தூது நடந்தவனைத் தொழுது, அந் நாள்,
ஓது நெடுஞ் செரு அஞ்சி உடைந்தார்,
தீது இலர் நின்றவர், சேனையின் உள்ளார்
பாதியின் மேலுளர், நாசி படைத்தார்!–14-

ஓது நெடுஞ் செரு அஞ்சி – சிறப்பித்துச் சொல்லப்படுகிற பெரிய
போருக்கு அஞ்சி; அந்நாள் – அந்த நாளில்; தூது நடந்தவனைத்
தொழுது – தூதுவனாக வந்த அனுமனைத் தொழுது; உடைந்தார் –
தோற்றுப் போனவர்களாய் (இருந்தும்); தீது இலர் நின்றிவர் –
(தண்டனை என்னும்) தீது இல்லாதவராய் நின்றவர்கள்; சேனையின் –
(நம்) அரக்கர் படையில்; பாதியின் மேலுளர் – பாதிக்கு மேல்
உள்ளவர்கள்; நாசி படைத்தார் உள்ளார் – மூக்கு உள்ளவர்களாய்
உள்ளார்கள்.

————-

8316. ‘விட்டிலை சீதையை ஆம்எனின், வீரர்
ஒட்டிய போரினில் ஆர் உளர், ஓடார்?
“வெட்டுதி நாசியை, வெந் தொழில் வல்லோர்
பட்டிலர் என்றிலை என்று பகர்ந்தான்.–15-

சீதையை விட்டிலை ஆம் எனின் – (நீ) சீதையை விட்டு
விடவில்லை ஆனால் வீரர் ஒட்டிய போரினில் – வீரர்கள் நெருங்கிச்
செய்யும் போரில்; ஓடார் ஆர் உளர் – (அஞ்சி) ஓடாத அரக்க
வீரர்கள் யார் இருக்கப் போகிறார்கள்; வெந்தொழில் வல்லோர்
பட்டிலர் – கொடிய போர்த்தொழில் வல்ல (இராம இலக்குவர்)
அழிந்திலர்; என்றிலை – (என்று) சொல்லவில்லை (என்பதற்காக);
நாசியை வெட்டுதி – (போர்க்களம் சென்றவர்களுடைய) மூக்குகளை
எல்லாம் வெட்டி விடுவாயோ; என்று பகர்ந்தான் – என்று (மாலி
இராவணனுக்குச்) சொன்னான்.

—————

மாபெரும் பக்கனும் புகைக்கண்ணனும் பேசுதல்

8317. ஆறினன் என்பது அறிந்தனர், அன்னார்
தேறினர், அன்னது சிந்தை உணர்ந்தார்,
சீறிய நெஞ்சினர், செங் கணர், ஒன்றோ
கூறினர்? தம் நிலை செய்கை குறித்தார்:–16-

ஆறினன் என்பது அறிந்தனர் – (மாலி கூறிய சொற்களால்
இராவணன்) சினம் தணிந்தனன் என்பதை அறிந்தவர்களான;
அன்னார் – (அந்த மாபக்கன், புகை நிறக்கண்ணன் ஆகிய)
இருவரும்; தேறினர் – (தண்டனை கிடைக்குமோ என்ற) மனக்கலக்கம்
தீர்ந்து தெளிந்து; அன்னது சிந்தை உணர்ந்தார் – (அவனது
மனநிலையைத்) தெளிவாக மனத்தில் உணர்ந்தவர்களாகி; சீறிய
நெஞ்சினர் – சினம் கொண்ட நெஞ்சினை உடையராய்; செங்கணர் –
சிவந்த கண்களை உடையவராய்; தம் நிலை – தம்முடைய
நிலையினையும்; செய்கை குறித்தார் – செய்கையையும்
குறித்தவர்களாகி; ஒன்றோ கூறினர் – ஒன்றை மட்டுமா கூறினார்கள்;
(பல கூறினர் என்றபடி.)

——————-

8318. ‘உன் மகன் ஒல்கி ஒதுங்கினன் அன்றோ?
மின் நகு வானிடை ஏக, விரைந்தான்,
அன்னதின் மாயை இயற்றி அகன்றான்;
இந் நகர் எய்தினன், உய்ந்தனன்-எந்தாய்!–17-

எந்தாய் – எங்களுக்குத் தந்தை போன்றவனே!; உன் மகன் –
உனக்கு மகனாகிய (இந்திரசித்தன்); ஒல்கி ஒதுங்கினன் – (போரினால்)
தளர்ந்து ஒதுங்கினான்; அன்றோ – அது மாத்திரமா? மின்நகு
வானிடைஏக விரைந்தான் – மின்னல்கள் விளங்குகின்ற
ஆகாயத்தினிடத்தில் விரைந்து சென்று; அன்னதின் மாயை இயற்றி
அகன்றான் – அங்கிருந்து மாயைச் செயலைச் செய்து நீங்கி; இந்நகர்
எய்தினன் – இந்த (இலங்கை) நகரை வந்தடைந்து; உய்ந்தனன் –
உயிர் பிழைத்தான்.

————–

8319. ‘இப் பகல், அன்றுஎனின் நாளையின், அல்லால்,
முப் பகல் தீர்கிலம்; ஆவி முடிப்போம்,
வெப்பு அகலா எரி வெந் தழல் வெந்த
செப்பு அகல் வெண்ணெயின்-நோன்மை தெரிந்தோய்!–18-

நோன்மை தெரிந்தோய் – வலிமையின் தன்மையை அறிந்தவனே!
இப்பகல் – (நாங்கள்) இப்பகல் ஒன்றில்; அன்று எனின் – இல்லை
என்றால்; நாளையின் – நாளை; அல்லால் – அல்லாமல்; முப்பகல்
தீர்கிலம் – மூன்றாம் நாள் போகவிடோம்; (தவறாமல்) வெப்பு அகலா
– வெம்மை நீங்காத; எரி வெந்தழல் வெந்த – எரிகின்ற
வெப்பமுடைய தீயில் வெந்த; செப்பு அகல் வெண்ணெயின் – செம்பு
விளக்கில் (ஊற்றப்பட்ட) வெண்ணெயைப் போல; ஆவி முடிப்போம் –
பகைவர்களின் உயிரை முடிப்போம் (என்றனர்).

————

8320. ‘விட்டனை எம்மை, விடுத்து, இனி, வெம் போர்
பட்டனர் ஒன்று, படுத்தனர் ஒன்றோ,
கெட்டனர் என்பது கேளலை’ என்னா,
ஒட்டினர், ஆவி முடிக்க உவந்தார்.–19-

எம்மை விட்டனை – எங்களைப் போருக்கு அனுப்பி; விடுத்து –
விடுத்த பின்பு; இனி வெம்போர் பட்டனர் ஒன்று – இனி (இவர்கள்)
கொடிய போர் செய்து இறந்தார்கள் என்பது ஒன்று, படுத்தனர்
ஒன்றோ – (பகைவர்களை) அழித்தனர் என்பது ஒன்று (ஆகிய
இவ்இரண்டில் ஒன்றைத் தவிர); கெட்டனர் என்பது கேளலை என்னா
– போரில் தோற்று விட்டார்கள் என்ற சொல்லைக் கேட்க மாட்டாய்
என்று; ஆவி முடிக்க உவந்தார் ஒட்டினர் – உயிரைக் கொடுக்க
மகிழ்ச்சி கொண்டவர்களாய்ச் சபதம் செய்தனர்.

————–

இராவணன் இருவருடன் பெரும் படை அனுப்பல்

8321. அன்னவர் தம்மொடும் ஐ-இரு வெள்ளம்
மின்னு படைக் கை அரக்கரை விட்டான்;
சொன்ன தொகைக்கு அமை யானை, சுடர்த் தேர்,
துன்னு வயப் பரியோடு தொகுத்தான்.–20-

அன்னவர் தம்மொடும் – (அந்த மாபக்கன் புகைநிறக் கண்ணன்)
தம்முடன் (இராவணன்); மின்னு படைக்கை – ஒளி விடுகின்ற
படைக்கலங்களைக் கையில் கொண்ட; ஐ இரு வெள்ளம் – பத்து
வெள்ளம்; அரக்கரை விட்டான் – அரக்க வீரர்களை அனுப்பினான்;
சொன்ன தொகைக்கு அமையானை – முன்னால் கூறிய
காலட்படைக்கு) (உரிமையாக) அமைந்த யானைப் படைகளையும்;
சுடர்த்தேர் – ஒளியைக் கொண்ட தேர்ப் படையினையும்; துன்னு
வயப்பரியோடு – நெருங்கிய வலிமையான குதிரைப் படைகளையும்;
தொகுத்தான் – சேர்த்து அனுப்பினான்.

————-

8322. நெய் அழல் வேள்வி நேடும் பகை, நேர் விண்
தைவரு சூரியசத்துரு என்பான்,
பெய் கழல் மாலி, பிசாசன் எனும் பேர்
வெய்யவன், வச்சிரம் வென்ற எயிற்றான்.–21-

நெய் அழல் வேள்வி நெடும்பகை – நெய் பெய்து செய்யும்
வேள்விக்கு பெரிய பகைவன்; (வேள்வியின் பகைஞன்) நேர்விண்
தைவரு சூரிய சத்துரு என்பான் – நேராக வானத்தில் பவனி வருகிற
சூரியன் பகைஞன் என்பவன்; கழல் பெய் மாலி – கழல் அணிந்த
மாலி; பிசாசன் எனும் பேர் வெய்யவன் – பிசாசன் என்னும் பெயர்
உடைய கொடியவன்; வச்சிரம் வென்ற எயிற்றான் – வச்சிரத்தை
வென்ற (வலிய) பற்களை உடையவன் (வச்சிரத்து எயிற்றவன்).

————–

8323. என்றவரோடும் எழுந்து, உலகு ஏழும்
வென்றவன் ஏவலின், முன்னம் விரைந்தார்,
சென்றன, மால் கரி, தேர், பரி; செல்லக்
குன்றுஇனம் என்ன நடந்தனர், கோட்பால்.–22-

என்றவரோடும் – என்ற பெயர் கொண்ட அரக்கத்
தலைவர்களுடன்; எழுந்து – (மாபக்கனும் புகைநிறக் கண்ணனும்
சேர்ந்து) எழுந்து; உலகு ஏழும் வென்றவன் – உலகு ஏழனையும்
வென்றவனாகிய (இராவணன்); ஏவலின் – கட்டளைப்படி; சென்றன
மால்கரி – சென்றனவாகிய மத மயக்கம் கொண்ட யானைகள்; தேர் –
தேர்; பரி – குதிரை; செல்ல – என்பவைகள் செல்ல; குன்று இனம்
என்ன நடந்தனர் – மலைகளின் கூட்டம் என்று கூறுமாறு நடந்து; கோட்பால் முன்னம் விரைந்தார் –
கொள்கையால் முன்னால் விரைந்து சென்றார்கள்.

————

8324. விண்ணை விழுங்கிய தூளியின் விண்ணோர்
கண்ணை விழுங்குதலின், கரை காணார்;
எண்ணை விழுங்கிய சேனையை, யாரும்,
பண்ணை விழுங்க உணர்ந்திலர், பண்பால்.–23-

விண்ணை விழுங்கிய தூளியின் – (அவர்கள் நால்வகைப் படையும்
செல்லுதலினால் தோன்றிய) வானத்தை மறைக்கும் அளவு எழுந்த
புழுதியானது; விண்ணோர் கண்ணை விழுங்குதலின் – தேவர்களின்
கண்களை மறைத்ததனால்; கரை காணார் – (அவர்களும் கூடப் படை
அளவின்) எல்லையைக் காணாதவராயினர்; எண்ணை விழுங்கிய
சேனையை – எண்ணிக்கையின் அளவைக் கடந்த (அந்த அரக்கர்)
படை; பண்ணை – அமைந்துள்ள வகையை; யாரும் – எவரும்;
பண்பால் – முறையாக; விழுங்க உணர்ந்திலர் – முற்றும்
உணராதவராயினர்.

—————–

8325. கால் கிளர் தேரொடு, கால் வரையோடும்,
மேல் கிளர் பல் கொடி வெண் திரை வீச,-
மால் கடலானது, மாப் படை-வாள்கள்
பால் கிளர் மீனிடை ஆடிய பண்பால்.–24-

கால்கிளர் தேரொடு – காற்றுப்போல் விரைந்து செல்லுகின்ற
தேர்ப்படையிலும்; கால் வரையோடும் – கால் படைத்த மலை போன்ற
யானைப் படையிலும்; மேல்கிளர் பல் கொடி – மேலே விளங்குகின்ற
பல கொடிகள் ஆகிய; வெண்திரை வீச – வெண்மையான அலைகள்
வீச; வாள்கள் – வாள் படைகள்; மாப்படை – பெரிய படையின்; பால்
கிளர் மீனிடை – இடத்து விளங்குகின்ற மீன்போல; ஆடிய பண்பால்
– அசைந்து ஆடிய தன்மையினால்; மால் கடலானது – பெரிய கடல்
போல விளங்கியது.

———-

8326. பேரி கலித்தன, பேர் உலகைச் சூழ்
ஏரி கலித்தன ஆம் என; யானை
கார் இகலிக் கடலோடு கலித்த;
மாரி கலித்தென, வாசி கலித்த.–25-

பேர் உலகைச் சூழ் – பெரிய உலகத்தைச் சூழ்ந்துள்ள; ஏரி
கலித்தன ஆம் என – கடல்கள் ஒலித்தனவாம் எனும் படியாக; பேரி
கலித்தன – பேரிகைகள் ஒலித்தன; யானை கார் இகலிக் – யானைகள்
மேகங்களின் (இடி ஒலியோடு) மாறுகொண்டு; கடலோடு கலித்த – கடல்
ஒலிபோல் ஒலித்தன; மாரி கலித்தென – மழை ஒலித்தது என்னும்
படி; வாசி கலித்த – குதிரைகள் ஒலித்தன.

———–

8327. சென்றன சென்ற சுவட்டொடு செல்லா
நின்று பிணங்கிய, கல்வியின் நில்லா,
ஒன்றினை ஒன்று தொடர்ந்தன, ஓடைக்
குன்று நடந்தனபோல்-கொலை யானை.–26-

கொலையானை – கொல்லும் தன்மை உள்ள யானைகள்; சென்றன
சென்ற சுவட்டொடு செல்லா – சென்றனவாகிய (படைகள்) சென்ற
அடிச்சுவட்டினில் செல்லாமல்; நின்று பிணங்கிய – நின்ற
இடத்திலேயே நின்று மாறுபாடு கொண்டனவும்; கல்வியின் நில்லா –
(பாகர்களின்) சொல்லுக்கு (அடங்கி) நிற்காதனவும் ஆகி; ஓடைக்குன்று
நடந்தன போல் – முகபடாம் அணிந்த மலைகள் நடந்தன போல;
ஒன்றினை ஒன்று தொடர்ந்தன – ஒன்றினை ஒன்று தொடர்ந்து
சென்றன.

———–

8328. மாக நெடுங் கரம் வானின் வழங்கா,
மேக நெடும் புனல் வாரின, மேன்மேல்,
போக விலங்கின, உண்டன போலாம்-
காக நெடுங் களி யானை களிப்பால்.–27

காக நெடுங்களி யானை – காகங்கள் சூழ்ந்துவரும் பெரிய மதம்
கொண்ட யானைகள்; களிப்பால் – மத மயக்கத்தால்; நெடுங்கரம் –
(தங்களது) நீண்ட துதிக்கையை; மாகவானின் – உயர்ந்த வானத்தில்;
வழங்கா – செலுத்தி; மேக நெடும் புனல் வாரின – மேகங்களில்
உள்ள மிகுதியான நீரினை வாரி முகந்து; மேன்மேல் போக விலங்கின
– மேன்மேல் போதலைத் தவிர்த்தனவாய்; உண்டன போலாம் – (அந்த நீரினை)
உண்பனவாயின.

———-

8329. எரிந்து எழு பல் படையின் ஒளி, யாணர்
அருங் கல மின் ஒளி, தேர் பரி யானை
பொருந்திய பண் ஒளி, தார் ஒளி, பொங்க,
இரிந்து பேர் இருள், எண் திசைதோறும்.

எரிந்து எழு பல்படையின் ஒளி – ஒளிர்ந்து எழுகின்ற பல்வகைப்
படைக்கலங்களின் ஒளி; யாணர் அருங்கல மின்ஒளி – புதியதாக
(வீரர்கள் அணிந்து உள்ள) அரிய அணிகலன்களின் மின்னுகின்ற
ஒளி; தேர் பரி யானை – தேர், குதிரை, யானை; பொருந்திய பண்
ஒளி – (ஆகியவற்றுக்குச் செய்து) அமைத்த அலங்காரப்
(பொருள்களின்) ஒளி; தார் ஒளி – பொன் மாலைகளின் ஒளி; பொங்க
– (ஆகியவை எங்கும்) மிகுதியாக இருப்பதனால்; எண்திசை தோறும்
– எட்டுத் திசைகள் தோறும்; (செறிந்திருந்த) பேர் இருள் இரிந்தது –
மிக்க இருள் (கெட்டு) ஓடியது.

————

வீடணன் வருபவர் பற்றி இராமனுக்கு உரைத்தல்

8330. எந்திய சேனையை, ஈசன் எதிர்ந்தான்,
‘வெய்து இவண் வந்தவன், மாயையின் வெற்றி
செய்தவனேகொல்? தெரித்தி இது’ என்றான்;
ஐயம் இல் வீடணன் அன்னது உரைத்தான்:–29-

ஈசன் – (அனைத்துயிர்க்கும் உலகங்களுக்கும் தலைவனாகிய)
இராமன்; எய்திய சேனையை எதிர்ந்தான் – (போர்க்களம்) வந்து
அடைந்த (அரக்கர்) படையை எதிர்கொண்டு கண்டு; வெய்து இவண்
வந்தவன் – மிகுசினம் கொண்டு இவ்விடத்துக்கு வந்தவன்; மாயையின்
– மாயையால்; வெற்றி செய்தவனே கொல் – வெற்றியை உண்டாக்கிக்
கொண்ட இந்திரசித்தன் தானோ? இது தெரித்தி என்றான் – இதனைத்
தெரிவிப்பாய் என்று கேட்டான்; ஐயம் இல்வீடணன் – (வந்தவன்
யாவன் என்பதை) ஐயம் இல்லாமல் உணர்ந்தவன் ஆகிய வீடணன்;
அன்னது உரைத்தான் – அது பற்றிச் சொன்னான்.

—————

8331. ‘முழைக் குலச் சீயம் வெம் போர் வேட்டது முனிந்தது
என்ன,
புழைப் பிறை எயிற்றுப் பேழ் வாய், இடிக் குலம்
பொடிப்ப, ஆர்த்து,
தழைப் பொறி வாளிப் புட்டில் கட்டி, வில் தாங்கி,
சார்வான்.
மழைக் குரல் தேரின் மேலான், மாபெரும்பக்கன் மன்னோ.–30-

முழைக்குலச்சீயம் – குகையில் வாழுகின்ற சிங்கம்; வெம்போர்
வேட்டது முனிந்தது என்ன – கொடிய போரினை விரும்பிச் சினங்
கொண்டது என்னும்படி; புழைப்பிறை – பிளவு பட்ட பிறை போன்ற;
எயிற்றுப் பேழ்வாய் – பற்களை உடைய பிளந்த வாயினால்;
இடிக்குலம் பொடிப்ப ஆர்த்து – இடிகளின் கூட்டமும்
பொடியாகும்படியாகப் பேரொலி செய்து; பொறி தழைவாளிப்
புட்டில்கட்டி – நெருப்புப் பொறியினை மிகுதியாகக் கக்குகின்ற
அம்புகள் (நிறைந்த) அம்பு அறாத்தூணியை (முதுகில் கட்டி);
வில்தாங்கி – வில்லைப் பிடித்து; மழைக்குரல் தேரின் மேலான்
சார்வான் – இடிபோன்று (சக்கரங்கள்) ஒலியை எழுப்பும் தேரின்
மேலேறியவனாய் வருபவன்; மாபெரும்பக்கன் – மாபக்கன்
(என்பவன்). மன், ஓ – அசைநிலை.

—————

8332. ‘சிகை நிறக் கனல் பொழி தெறு கண் செக்கரான்,
பகை நிறத்தவர் உயிர் பருகும் பண்பினான்,
நகை நிறப் பெருங் கடைவாயை நக்குவான்,
புகைநிறக்கண்ணவன், பொலம் பொன் தேரினான்.–31-

சிகை நிறக்கனல் – தன் தலைமுடியின் செந்நிறமுள்ள நெருப்பை;
பொழி – வெளியிடுகிற; தெறுகண் – அழிக்கவல்ல கண்கள்; செக்கரான்
– சிவந்த நிறமாக உள்ளவனும்; பகை நிறத்தவர் – பகைத் தன்மை
கொண்டவர்களுடைய; உயிர் பருகும் பண்பினான் – உயிரைக்
குடிக்கும் தன்மை உள்ளவனும்; நகைநிறப் பெருங்கடை வாயை –
சிரிப்போடு கூடிய நிறம் பொருந்திய (தன்)பெரிய கடைவாயை; நக்குவான் – (நாக்கினால் அடிக்கடி)
நக்குபவனும் ஆகிய; பொலம்பொன் தேரினான் – பொன்னால் ஆகிய
அழகிய தேரில் ஏறி இருப்பவன்; புகை நிறக் கண்ணவன் – புகை
நிறக்கண்ணன் (என்பவனாவான்.)

———-

8333. ‘பிச்சரின் திகைத்தன பெற்றிப் பேச்சினான்,
முச் சிரத்து அயிலினான், மூரித் தேரினான்,
“இச் சிரம் உம்மதே?” என வந்து எய்துவான்,
வச்சிரத்து எயிற்றவன், மலையின் மேனியான்.–32-

பிச்சரின் திகைத்தன – பித்தரைப் போன்று திகைத்தனவாகிய;
பெற்றிப் பேச்சினான் – தன்மை உடைய பேச்சினை உடையவனும்;
முச்சிரத்து அயிலினான் – முத்தலையை உடைய சூலப் படையைக்
(கையில்) ஏந்தியவனும்; மூரித்தேரினான் – வலிமையான தேரினை
உடையவனும்; மலையின் மேனியான் – மலை போன்ற உடம்பினை
உடையவனும் ஆகி; இச்சிரம் உம்மதே என – இந்த (என்னுடைய)
தலை உங்களுக்கே என்று; (கூறுவது போல) வந்து எய்துவான் –
(போருக்கு) வந்து அடைந்தவன்; வச்சிரத்து எயிற்றவன் – வச்சிரத்து
எயிற்றவன் (என்பவன் ஆவான்).

————–

8334. ‘காலையும் மனத்தையும் பிறகு காண்பது ஓர்
வாலை உளைப் புரவியன், மடித்த வாயினான்,
வேலையின் ஆர்ப்பினன், விண்ணை மீக்கொளும்
சூலம் ஒன்று உடையவன், பிசாசன், தோன்றுவான்.–33-

காலையும் – காற்றினையும்; மனத்தையும் – மனத்தினையும்; பிறகு
காண்பது – பின்னிடச் செய்யும் (தன்மை உள்ள); ஓர் வாலை உளைப்
புரவியன் – ஒப்பற்ற வெண்மையான பிடரிமயிரை உடைய குதிரையை
உடையவனும்; மடித்த வாயினான் – கடித்த உதடுகளை உடையவனும்;
வேலையின் ஆர்ப்பினன் – கடல் போல் பேரொலி செய்பவனும்;
விண்ணை மீக்கொளும் – விண்ணுலகத்தையும் வெல்லவல்ல; சூலம்
ஒன்று உடையவன் – சூலப்படை ஒன்றினை உடையவனும் (ஆகித்);
தோன்றுவான் – தோன்றுபவன்; பிசாசன் – பிசாசன் (என்பவன்).

————

8335. ‘சூரியன்பகைஞன், அச் சுடர் பொன் தேரினன்,
நீரினும் முழக்கினன், நெருப்பின் வெம்மையான்;
ஆரிய! வேள்வியின் பகைஞன் ஆம்அரோ,
சோரியும் கனலியும் சொரியும் கண்ணினான்.–34-

ஆரிய – தலைவனே; அச்சுடர் பொன் தேரினன் – அந்த ஒளி
விடுகிற அழகிய தேரினை உடையவனும்; நீரினும் முழக்கினன் –
கடலினும் மிக்க முழக்கினை உடையவனும்; நெருப்பின் வெம்மையான்
– நெருப்பைக் காட்டிலும் சினமுடையவனும் (ஆகிய இவன்); சூரியன்
பகைஞன் – சூரியன் பகைவன் (என்பவன்); சோரியும் – இரத்தமும்;
கனலியும் – நெருப்பும்; சொரியும் கண்ணினான் – வெளிப்படுகிற
கண்களை உடைய (இவன்); வேள்வியின் பகைஞன் ஆம் –
வேள்வியின் பகைஞன் (என்ற பெயர் உடையவன்) ஆம் ஆகும்.

—————

8336. ‘சாலி வண் கதிர் நிகர் புரவித் தானையான்,
மூல வெங் கொடுமையின் தவத்தின் முற்றினான்,
சூலியும் வெருக்கொளத் தேரில் தோன்றுவான்,
மாலி’ என்று, அடி முறை வணங்கிக் கூறினான்.–35-

சாலிவண் கதிர்நிகர் – செந்நெல்லின் வளமை பொருந்திய
கதிர்களை ஒத்த; புரவித் தானையான் – (வளம் மிக்குக் கொழுத்த)
குதிரைப் படையை உடையவன்; மூல வெங்கொடுமையின் –
பழமையாக உள்ள வெவ்விய கொடுமையோடு; தவத்தின் முற்றினான்-
தவத்திலும் நிறைந்தவன்; சூலியும் – சிவனும்; வெருக்கொளத் –
அச்சம் கொள்ளும்படி; தேரில் தோன்றுவான் – தேரில்
தோன்றுபவனாகிய (அவன்); மாலி என்று – மாலி (என்னும்
பெயரினன்) என்று; அடிமுறை வணங்கிக் – (இராமனது) திருவடிகளை
முறைப்படி வணங்கி; கூறினான் – (வீடணன்) கூறினான்.

————-

8337. ஆர்த்து எதிர் நடந்தது, அவ் அரியின் ஆர்கலி
தீர்த்தனை வாழ்த்தி; உற்று இரண்டு சேனையும்
போர்த் தொழில் புரிந்தன; புலவர் போக்கு இலார்;
வேர்த்து உயிர் பதைத்தனர், நடுங்கி விம்மியே.–36-

தீர்த்தனை வாழ்த்தி – தூயவன் ஆகிய இராமனை வாழ்த்திவிட்டு;
அவ்அரியின் ஆர்கலி – அந்தக் குரங்குப் படைகளாகிய கடல்;
ஆர்த்து எதிர் நடந்தது – பேரொலி செய்துகொண்டு (அரக்கப்
படையின்) எதிரில் சென்றது; உற்று இரண்டு சேனையும் – (அதற்குப்
பிறகு) நெருங்கி இரு படைகளும்; போர்த் தொழில் புரிந்தன –
போர்த்தொழிலைச் செய்தன; புலவர் – (அதைக் கண்ட) தேவர்கள்;
போக்கிலார் – விலகிச் செல்லமாட்டாதவராய்; நடுங்கி – உடல் நடுங்கி;
விம்மியே – மனம் விம்மிதமுற்று; வேர்த்து – உடல் வியர்த்து;
உயிர்பதைத்தனர் – உயிர் துடித்தனர்.

———–

8338. கல் எறிந்தன, கடை உருமின்; கார் என
வில் எறிந்தன, கணை; விசும்பின் மேகத்துச்
செல் எறிந்தன எனச் சிதறி வீழ்ந்தன,
பல்; எறிந்தன தலை, மலையின் பண்பு என.–37-

கடை – ஊழிக்கடைக்காலத்தில்; உருமின் கார் என – இடியைக்
கொண்ட மேகம் என்னும்படி; கல் எறிந்தன – வானரப் படைகள்
கற்களை (வீசி) எறிந்தன; வில் எறிந்தன கணை – அரக்கர்களுடைய
விற்கள் அம்புகளைத் தூவின; (அதனால்) விசும்பின்மேகத்துச் செல்
எறிந்தன எனக் – ஆகாயத்தின் கண் உள்ள மேகங்களில் இருந்து
இடி விழுந்த (போது) மலையின் பண்பு என – மலைகளின்
தன்மையைப் போல; பல் எறிந்தன தலை- குரங்குகளின் பற்கள்
சிதறித் தெரித்த தலைகள்; சிதறி வீழ்ந்தன- சிதறிப் போர்க்களம்
(எங்கும்) விழுந்தன.

—————

8339. கடம் படு கரி பட, கலின மாப் பட,
இடம் படு சில்லியின் ஈர்த்த தேர் பட,
உடம்பு அடும் அரக்கரை, அனந்தன் உச்சியில்
படம் படும் என, படும் கவியின் கல் பல.–38-

கடம்படு கரிபட – மதம் பொருந்திய யானைகள் இறந்துபடவும்;
கலினமாப்பட – கல்லணை பூட்டிய குதிரைகள் இறந்துபடவும்;
இடம்படு சில்லியின் ஈர்த்த தேர்பட – இடம் அகன்ற சக்கரங்கள்
பூட்டப்பட்டுக் (குதிரைகளால் (அல்) பிற உயிரினங்களால்) இழுத்துச்
செல்லப்படுகிற தேர்கள் அழிந்துபடவும்; உடம்பு அடும் அரக்கரை –
உடம்பு அழிக்கப்படும் அரக்கப் படையினரை; அனந்தன் உச்சியில்
படம்படும் என – ஆதிசேடனது தலையின் உச்சியில் உள்ள படமும் அழிந்துவிடும் என்று
(கண்டோர்) என்ணும்படியாக; கவியின் கல்பல படும் – குரங்குகள்
எறிந்த கற்கள் பல வீழ்த்தும்.

————–

8340. கொலை ஒடுங்கா நெடும் புயத்தின் குன்றொடும்,
நிலை நெடுங் காலொடும், நிமிர்ந்த வாலொடும்,
மலையொடும், மரத்தொடும், கவியின் வல் நெடுந்
லையொடும், போம்-விசைத்து எறிந்த சக்கரம்.–39-

விசைத்து எறிந்த சக்கரம் – (அரக்கவீரர்) விரைவாக எறிந்த
சக்கரவடிவமான அம்புகள்; கொலை ஒடுங்கா – கொலைத் தொழில்
செய்தலில் (குறைவுபட்டு) ஒடுங்காத; நெடும் புயத்தின் குன்றொடும் –
(வானரப்படையினர் தங்களது) நீண்ட தோள்களாகிய மலையோடும்;
நிலை நெடுங் காலொடும் – (போரில் புறமுதுகிடாது) நிலைபெற்று
நிற்கும் நீண்ட கால்களோடும்; நிமிர்ந்த வாலொடும் – (சினத்தால்)
நிமிர்ந்து நிற்கும் வாலொடும்;மலையொடும் – (எதிரிகள் மீது வீசக்
கையில் தாங்கிய) மலைகளோடும்; மரத்தொடும் – மரங்களோடும்;
கவியின் – குரங்குகளின்; வல்நெடும் தலையொடும் – வலிய நீண்ட
தலைகளோடும்; போம் – (அலுத்துக்கொண்டு) போகும்.

————

8341.
ஆண் தகைக் கவிக் குலத் தலைவர் ஆக்கையைக்
கீண்டன; புவியினைக் கிழித்த-மாதிரம்
தாண்டுவ, குலப் பரி, மனத்தின் தாவுவ,
தூண்டினர் கை விசைத்து எறிந்த தோமரம்.–40-

மாதிரம் தாண்டுவ – திசைகளைத் தாண்டுவனவாயும்; மனத்தின்
தாவுவ – மனத்தைப் போலத் தாவிச்செல்வனவாயும்; (உள்ள) பரி
குலம் – குதிரைப்படைக கூட்டத்தைத்; தூண்டினர் –
செலுத்தியவர்களான (வீரர்களின்); கைவிசைத்து – கையில் இருந்து
வேகமாக; எறிந்த தோமரம் – எறியப்பட்ட தோமரம் என்னும்
படைக்கலம்; ஆண்தகைக் – ஆண்மைத் தன்மை உள்ள; கவிக்குலத்
தலைவர் – குரங்குப் படைத்தலைவர்களின்; ஆக்கையைக் கீண்டன –
உடம்புகளைக் கிழித்தனவாய்; புவியினைக் கிழித்த- (பூமியில் பட்டு)
பூமியைப் பிளக்கச் செய்தன.

————-

8342. சில்லி அம் தேர்க் கொடி சிதைய, சாரதி
பல்லொடு நெடுந் தலை மடிய, பாதகர்
வில்லொடு கழுத்து இற, பகட்டை வீட்டுமால்-
கல்லெனக் கவிக்குலம் வீசும் கல்அரோ.–41-

கல்லெனக் – கல் என்ற ஒலி தோன்றும்படியாகக்; கவிக்குலம்
வீசும் – குரங்குக் கூட்டங்கள் வீசும்; கல் – மலைகள்;
சில்லி அம்தேர்க்கொடி சிதைய – சக்கரங்களை உடைய அழகிய
தேரின் கண்கட்டப்பட்டுள்ள கொடிகள் சிதைந்து அழியவும்; சாரதி
பல்லொடு நெடுந்தலை மடிய – தேர்ப்பாகர்களின் பற்களும், நீண்ட
தலையும் அறுபட்டு விழவும்; பாதகர் வில்லொடு கழுத்து இற-
பாதகர்களான அரக்கர்களுடைய வில்லும் கழுத்தும் அறுபட்டு
விழவும் (செய்து அதற்குமேல்) பகட்டை வீட்டுமால் – யானைகளையும்
அழிக்கும்.

———–

8343.
கரகம் உந்திய மலை முழையில், கட் செவி
உரகம் முந்தின என ஒளிக்கும், ஒள் இலை
அரகம் முந்தின நெடுங் கவியின் ஆக்கையில்-
துரகம் உந்தினர் எடுத்து எறியும் சூலமே.–42-

துரகம் உந்தினர் – குதிரைகளைச் செலுத்தும் (அரக்க வீரர்);
எடுத்து எறியும் – (வானரப்படையினர்மீது) எடுத்து வீசிய; ஒள் இலை
சூலமே – ஒளி பொருந்திய இலை வடிவமாக உள்ள சூலப் படை;
கரகம் உந்திய மலை முழையில் – நீர்க்குடத்தைப் போன்று
வெளிப்பட்டுத் தோன்றும் மலைக்குகைகளில்; கட்செவி உரகம்
உந்தின என – கண்ணே செவியாக உடைய பாம்புகள் புகுந்தன
எனும்படி; அரகம் முந்தின – போர்க்களத்துக்கு முந்திச் சென்ற;
நெடுங்கவியின் ஆக்கையில் – நீண்ட குரங்குகளின் உடலங்களில்;
ஒளிக்கும் – புகுந்து மறையும்.

————–

8344.
வால் பிடித்து அடக்கும் வானரத்தை, மால் கரி;
கால் பிடித்து அடிக்கும், அக் கரியினைக் கவி;
தோல் பிடித்து அரக்கரை எறியும், சூர் முசு;
வேல் பிடித்து எறிவர், அம் முசுவை வெங் கணார். –43-

மால்கரி – மத மயக்கம் கொண்ட யானை; வானரத்தை –
குரங்குப்படையினரை; வால் பிடித்து அடிக்கும் – வாலைப் பிடித்து
(நிலத்தில்) அடிக்கும்; கவி – (தப்பிய) வானரங்கள்; அக்கரியினைக் –
அந்த யானைகளைக்; கால் பிடித்து அடிக்கும் – காலைப் பிடித்து
இழுக்கும்; சூர்முசு – அச்சம் தரும் குரங்குகள்; தோல் பிடித்து –
(அரக்கர் வீசிய) கேடயங்களைக் (கையில்) பிடித்து; அரக்கரை எறியும்
– (அந்த) அரக்கர்கள் மீது மோதும்; அம்முசுவை – அந்தக்
குரங்குகளை; வெங்கனார் – கொடிய கண்களை உடைய அரக்கர்கள்;
வேல் பிடித்து எறிவர் – வேலைப்பிடித்து (வீசி) எறிந்து அழிப்பர்.

————–

8345. முற்படு கவிக்குலம் முடுக வீசிய
கல் பட, களம் படும், அரக்கர் கார்க் கடல்;
பல் படு தலை படப் படுவ, பாதகர்
வில் படு கணை பட, குரங்கின் வேலையே.–44-

முற்படு கவிக்குலம் – போர்க்களத்தில் முற்பட்டு வருகின்ற குரங்குக்
கூட்டங்கள்; முடுக வீசிய – விரைவாக வீசிய; கல்பட – மலைகள்
படுதலினால்; அரக்கர் – அரக்கப்படையாகிய கரிய கடல்; களம்படும் –
களத்தில் படும்; பாதகர் – பாதகர்களாகிய அரக்கர்; வில் படுகணை
பட – வில்லில் இருந்து வெளிப்படுகிற அம்புகள் படுதலினால்;
பல்படுதலை பட – பற்களைக் காட்டுகின்ற தலை (அறு) பட; குரங்கின்
வேலையே படுவ – குரங்குப் படைகளாகிய கடல் அழியும்.

————–

8346. கிச்சு உறு கிரி பட, கிளர் பொன் தேர் நிரை
அச்சு இற, செல்கில, ஆடல் வாம் பரி-
எச்சு உறு துயரிடை எய்த, ஈத்து உணா
முச்சு இறு வாழ்க்கையின் மூண்டுளோர் என.–45-

எச்சு உறு துயரிடை எய்த – இளைத்தலை உண்டாக்கும்
வறுமைத்துயர் (தங்களை அடைந்ததனால்); ஈத்து உணா –
(பிறருக்குக்) கொடுத்து உண்ணாத; முச்சு இறு வாழ்கைகையின் –
மூச்சு அற்றுப்போகும் உலக வாழ்க்கையில்; மூண்டுளோர் என-
சிக்கித் தவிப்பவர்கள் போல; கிச்சு உறுகிரிபட – நெருப்பைக்
கொண்ட மலைகள் விளங்குவது போல் விளங்குகின்ற; கிளர் பொன்
தேர் நிரை – விளங்குகிற பொன்னால் ஆகிய தேர்களின் வரிசை; அச்சு இற – அச்சு இற்றுப்போக; ஆடல்வாம் பரி –
வலிமை பொருந்தியதாகவுள்ள குதிரைகள்; செல்கில – (அத்தேர்களை
இழுத்துச்) செல்லமுடியாதனவாயின.

———

8347. மீயவர் யாவரும் வீய, வெங் கரி
சேயிருங் குருதியில் திரிவ, சோர்வு இல,-
நாயகர் ஆளொடும் அவிய, நவ்வி தம்
பாயொடும் வேலையில் திரியும் பண்பன.–46-

மீயவர் – (தம்) மீது இருப்பவர்கள்; யாவரும் – எல்லோரும்; வீய-
(பகைவர்களால்) இறந்து ஒழிய; வெங்கரி – கொடிய யானைகள்;
சோர்வு இல – சோர்வு இல்லாமல்; சேயிருங் குருதியில் – சிவந்த
மிக்க குருதி வெள்ளத்தில்; திரிவ – திரிவன ஆயின; (இக்காட்சி)
நாயகர் – மாலுமிகள் யாவரும்; ஆளொடும் – பணியாளர்களுடன்;
அவிய – அழிந்திட; நவ்வி – கப்பல்கள்; வேலையில் – கடலில்; தம்
பாயொடும் – தமது பாய் மரத்துடன்; திரியும் பண்பன –
சுற்றித்திரியும் தன்மைய வாய்த்தோன்றின.

————-

8348. படையொடு மேலவர் மடிய, பல் பரி,
இடை இடைதர விழுந்து இழிந்த பண்ணன,
கடல் நெடுங் குருதிய,-கனலி காலுறு
வடவையை நிகர்த்தன-உதிர வாயன.–47-

பல்பரி – பல குதிரைகள்; படையொடு – (தங்கள்) படைக்
கலங்களுடன்; மேலவர் மடிய – மேலே உள்ள வீரர்கள் அழிந்திட;
கடல் நெடுங் குருதிய – கடல் போன்ற பெருங்குருதியில் சிக்கித்
தவிப்பனவும்; இடை இடை தர விழுந்து – இடை இடையே தடுக்கி
விழுந்து; இழிந்த பண்ணன – அழுந்தும் தன்மை உடையனவும்;
உதிரவாயன – குருதி வடியும் வாயினை உடையனவும் ஆகிய அவை);
கனலி காலுறு – நெருப்பைக் கக்குகின்ற; வடவையை நிகர்த்தன –
(உலக அழிவுக்காலத்தில் கடலிடையே குதிரை வடிவில் தோன்றும்)
வடவைக் கனலை ஒத்தன.

———-

8349.
எயிற்றொடு நெடுந் தலை, இட்ட கல்லொடும்
வயிற்றிடைப் புக, பல பகலும் வைகிய
பயிற்றியர் ஆயினும், தெரிக்கும் பண்பு இலார்,
அயிர்ப்பர், தம் கணவரை அணுகி அந் நலார்.–48-

எயிற்றொடு – பற்களுடன்; நெடுந்தலை- கூடிய (அரக்க வீரரின்)
பெரிய தலைகள்; இட்ட கல்லொடும் – (வானரப் படையினர்) வீசிய
மலைகளினால்; வயிற்றிடைப் புக – (அவர்களது) வயிற்றில் புகுந்து
விட; அந்நலார் – அவர்களுடைய மனைவியர்; பல பகலும் வைகிய –
பல நாட்கள் உடன் இருந்து பழகிய; பயிற்றியர் ஆயினும் –
பயிற்சியை உடையவர்களாய் இருந்தும்; தம் கணவரை அணுகி –
தங்கள் கணவர்களுடைய (உடலை) நெருங்கி; தெரிக்கும் பண்பு இலார்
அயிர்ப்பர் – ஆய்ந்து அறிதற்கு ஏற்ற பண்பு இல்லாதவர்களாய்
ஐயங்கொள்வர்.

————-

8350.
தூமக்கண்ணனும் அனுமனும் எதிர் எதிர் தொடர்ந்தார்;
தாமத்து அங்கதன் மாபெரும்பக்கனைத் தடுத்தான்;
சேமத் திண் சிலை மாலியும் நீலனும் செறுத்தார்;
வாமப் போர் வயப் பிசாசனும் பனசனும் மலைந்தார்.–49-

தூமக்கண்ணனும் அனுமனும் – புகை நிறக்கண்ணனும், அனுமனும்;
எதிர் எதிர் தொடர்ந்தார் – எதிர் எதிராகப் போரிடத்
தொடங்கினார்கள்; தாமத்து அங்கதன் – மாலையை அணிந்துள்ள
அங்கதன்; மாபெரும் பக்கனைத் தடுத்தான் – மாபக்கனைப் போரில்
தடுத்தான்; சேமத்திண் சிலை மாலியும் – பாதுகாவலாக வலிய
வில்லினைக் கொண்ட மாலியும்; நீலனும் செறுத்தார் – நீலனும்
சினந்து போர் செய்தார்கள்; வாமப் போர் வயப் பிசாசனும் – அச்சம்
தருகிற வலிய போர் உடற்றுகிற பிசாசனும்; பனசனும் மலைந்தார் –
பனசனும் போர் செய்தார்கள்.

————-

8351. சூரியன் பெரும்பகைஞனும் சூரியன் மகனும்
நேர் எதிர்ந்தனர்; நெருப்புடை வேள்வியின்பகையும்
ஆரியன் தனித் தம்பியும் எதிர் எதிர் அடர்ந்தார்;
வீர வச்சிரத்துஎயிற்றனும் இடபனும் மிடைந்தார்.–50-

சூரியன் பெரும் பகைஞனும் – சூரியன் பகைஞனும்; சூரியன்
மகனும் – சூரியன் மகன் ஆகிய சுக்கிரீவனும்; நேர் எதிர்ந்தனர் –
நேரிடையாக எதிர்த்தார்கள்; நெருப்புடை வேள்வியின் பகையும் –
நெருப்புடைய வேள்வியின் பகைஞனும்; ஆரியன் தனித்தம்பியும் –
தலைவனாகிய இராமனது ஒப்பற்ற தம்பியாகிய இலக்குவனும்; எதிர்
எதிர் அடர்ந்தார் – எதிர் எதிராக நின்று போர் செய்தார்கள்; வீர
வச்சிரத்து எயிற்றனும் – வீரம் பொருந்திய வச்சிரத்து எயிற்றவனும்;
இடபனும் – இடபனும்; மிடைந்தார் – நெருங்கிப் போர் செய்தார்கள்.

———–

8352. வெங் கண் வெள் எயிற்று அரக்கரில், கவிக் குல வீரச்
சிங்கம் அன்ன போர்த்தலைவரில், தலைவராய்த் தெரிந்தார்,
அங்கு அமர்க்களத்து ஒருவரோடு ஒருவர் சென்று அடர்ந்ார்;
பொங்கு வெஞ் செருத் தேவரும் நடுக்குறப் பொருதார்.–51-

வெங்கண் வெள் எயிற்று அரக்கரில் – கொடுமையான
கண்களையும் வெண்மையான பற்களையும் உடைய அரக்கர்களிலும்;
கவிக்குல வீரச்சிங்கம் அன்ன – குரங்குக் கூட்டத்தில் தோன்றிய
வீரச் சிங்கங்களைப் போன்ற; போர்த் தலைவரில் – போரில் சிறந்த
தலைவர்களிலும்; தலைவராய்த் தெரிந்தார் – தலைவர்களாய்
விளங்கியவர்கள்; அங்கு அமர்க்களத்து – அந்தப் போர்க்களத்தில்;
ஒருவரோடு ஒருவர் – ஒருவரோடொருவர்; சென்று அடர்ந்தார் –
சென்று நெருங்கியவர்களாகி; தேவரும் நடுக்குற – (போர் காணவந்த)
தேவர்களும் அஞ்சும்படி; பொங்கு வெஞ்செரு – சினம் மிகுகிற
கொடிய போரை; பொருதார் – செய்தார்கள்.

———

8353. இன்ன காலையின், ஈர்-ஐந்து வெள்ளம், வந்து ஏற்ற
மின்னும் வெள் எயிற்று அரக்கர்தம் சேனையில், வீரர்
அன்ன வெஞ் சமத்து ஆறு வெள்ளத்தையும் அவித்தார்;
சொன்ன நாலையும் இலக்குவன் பகழியால் தொலைத்தான்.–52-

இன்ன காலையில் – இவ்வாறு நிகழும் நேரத்தில்; ஈர் ஐந்து
வெள்ளம் வந்து – பத்து வெள்ளமாக வந்து; ஏற்ற – போர் ஏற்ற;
மின்னும் வெள் எயிற்று அரக்கர் – ஒளி உடைய வெண்மையான
பற்களை உடைய அரக்கர்; தம் சேனையில் – தம் படையி்ல்; அன்ன
வெஞ்சமத்து – அத்தகைய கொடிய போர்க்களத்து; வீரர் –
வானரப்படை வீரர்; ஆறு வெள்ளத்தையும் அவித்தார் – ஆறு
வெள்ளத்தை அழித்தார்கள்; சொன்ன நாலையும் – (மீதியாகச்)
சொல்லப்படுகிற நான்கு வெள்ளத்தையும்; பகழியால் – அம்புகளால்;
இலக்குவன் அழித்தான் – இலக்குவன் அழித்து விட்டான்;

———–

8354. உப்புடைக் கடல் மடுத்தன உதிர நீர் ஓதம்
அப்பொடு ஒத்தன கடுத்தில; ஆர்கலி முழுதும்
செப்பு உருக்கு எனத் தெரிந்தது; மீன் குலம் செருக்கித்
துப்பொடு ஒத்தன, முத்துஇனம் குன்றியின் தோன்ற.–53-

உப்புடைக் கடல் – உப்பைக் கொண்ட (நீர் நிறைந்த) கடலில்;
மடுத்தன – சென்று சேர்ந்தனவாகிய; உதிர நீர் ஓதம் – குருதி நீர்ப்
பெருக்கு; அப்பொடு ஒத்தன கடுத்தில – கடல் நீருடன் கலந்ததாகத்
தோன்றவில்லை, (அதனால்); ஆர்கலி முழுதும் – ஒலிக்கின்ற கடல்
முழுவதும்; செப்பு உருக்கு எனத் தெரிந்தது – செம்பை உருக்கின
உருக்குப் போலச் (சிவந்தத நிறம் கொண்டதாய்க்) தோன்றியது; முத்து
இனம் – (அந்தக் கடலில் உள்ள) முத்துத் தொகுதிகள்; குன்றியின்
தோன்ற – (சிவந்த நிறமுடைய) குன்றி மணியின் தொகுதிகளைப்
போல் விளங்க; செருக்கி – (இறைச்சி உணவு கிடைத்தமையால்)
செருக்குக் கொண்டு, திரிந்த; மீன்குலம் – மீன் கூட்டங்கள் எல்லாம்; துப்பொடு – பவளத்தோடு; ஒத்தன – ஒத்து
விளங்கின.

———–

8355.
தத்து நீர்க் கடல் முழுவதும் குருதியாய்த் தயங்க,
சித்திரக் குலப் பல் நிற மணிகளும் சேந்த;
ஒத்து வேறு உருத் தெரியல, உயர் மதத்து ஓங்கல்
மத்தகத்து உகு தரளமும், வளை சொரி முத்தும்.–54-

தத்து நீர்க் கடல் முழுவதும் – ஒலிக்கின்ற நீரை உடைய கடல்
முழுவதும்; குருதியாய்த் தயங்க – குருதியாக விளங்க; சித்திரக் குலப்
பல்நிற மணிகளும் – (அக்கடலில் உள்ள) விசித்திரமான (வெவ்வேறு)
தொகுதிகளாக உள்ள பல்வகை நிறங்களைக் கொண்ட
இரத்தினங்களும்; சேந்த – சிவந்த நிறம்பெற்றன; உயர்ந்த ஓங்கல் –
உயர்ந்த மதம் மிக்க மலை போன்ற யானைகளின்; மத்தகத்து
உகுதரளமும் – கொம்புகளில் இருந்து வெளிப்படுகிற முத்துக்களும்;
வளைசொரி முத்தும் – சங்குகள் என்ற முத்துக்களும்; ஒத்து – (ஒரே
மாதிரியாகச் சிவந்த நிறம் அடைந்து) ஒத்து; வேறு உருத்தெரியல –
வேறு நிறம் தெரியாதவை ஆயின.

————

கதிரவன் உதித்தல்
8356. அதிரும் வெஞ் செரு அன்னது ஒன்று அமைகின்ற
அளவில,
திரவன், செழுஞ் சேயொளிக் கற்றை அம் கரத்தால்,
எதிரும் வல் இருட் கரி இறுத்து, எழு முறை மூழ்கி,
உதிர வெள்ளத்தின் எழுந்தவன் ஆம் என, உதித்தான்.–55-

அன்னது – அப்படிப்பட்ட; அதிரும் வெஞ்செரு – அதிர்கின்ற
கொடிய போர்; ஒன்று அமைகின்ற அளவில் – ஒன்று நிகழ்கின்ற
பொழுது; கதிரவன் – கதிரவன்; செழுஞ் சேயொளிக் கற்றை –
செழுமையான சிவந்த ஒளித் தொகுதிகள் ஆகிய; அம் கரத்தால் –
அழகிய கைகளால்; எதிரும் – எதிர்ப்பட்ட; வல் இருட்கரி இறுத்து –
வலிய இருளாகிய யானையை அழித்து; உதிர வெள்ளத்தின் – குருதி
வெள்ளத்தில்; எழுமுறை மூழ்கி – ஏழு முறை முழுகி; எழுந்தவன் ஆம் என – எழுந்தவன் ஆம் எனக் கூறும்
படியாக; எழுந்தான் – உதித்தான்.

————-

8357. அரக்கர் என்ற பேர் இருளினை இராமன் ஆம் இரவி
துரக்க, வெஞ் சுடர்க் கதிரவன் புறத்து இருள் தொலைக்க,
புரக்கும் வெய்யவர் இருவரை உடையன போல,
நிரக்கும் நல் ஒளி பரந்தன, உலகு எலாம் நிமிர.–56-

அரக்கர் என்ற பேர் இருளினை – அரக்கர் எனப்படுகிற பெரிய
இருளினை; இராமன் ஆம் இரவி துரக்க – இராமன் என்கிற கதிரவன்
துரத்த; வெஞ்சுடர்க் கதிரவன் – வெப்பமான கதிர்களை உடைய
கதிரவன்; புறத்து இருள் தொலைக்க – புறத்தில் காணப்படுகிற
இருட்டை நீக்க; புரக்கும் வெய்யவர் – (உலகைப்) பாதுகாக்கின்ற
சூரியர்; இருவரை உடையன போல – இருவரைக் கொண்டவை போல;
நல் ஒளி பரந்தன – நல்ல (கதிர்) ஒளி பரந்து; உலகு எலாம் – உலகம்
எல்லாம்; நிமிர நிரக்கும் – தெளிந்து தெரியுமாறு நிரம்பும்.

————

படுகளக் காட்சி

8358. நிலை கொள் பேர் இருள் நீங்கலும், நிலத்திடை நின்ற
மலையும் வேலையும் வரம்பு இல வயின்தொறும் பரந்து,
தொலைவு இல் தன்மைய தோன்றுவ போன்றன-சோரி
அலை கொள் வேலையும், அரும் பிணக் குன்றமும் அணவி.–57-

நிலைகொள் பேர் இரள் நீங்கலும் – நிலையாக இருந்த மிகுதியான
இருள் நீங்கிய உடனே; நிலத்திடை நின்ற – நிலத்தின் கண் நின்ற;
வரம்பு இல – எல்லை இல்லாத; வயின் தொறும் பரந்து – இடந்தோறும் பரந்து (உள்ள); மலையும் வேலையும் –
மலைகளும் கடல்களும்; தொலைவு இல் தன்மைய – ஒழிதல் இல்லாத
தன்மை உடையனவாய் (விளங்கித் தோன்றுதல் போல); சோரி
அலைகொள் வேலையும் – இரத்தத்தை அலையாகக் கொண்ட
இரத்தக் கடலும்; அரும் பிணக்குன்றமும் அணவி – அருமையான
பிணங்களாகி (க்கிடக்கிற) யானைக்கூட்டங்களும் கலந்து; தோன்றுவ
போன்றன- தோன்றுவனவற்றை ஒத்திருந்தன.

————

8359. நிலம் தவாத செந்நீரிடை, நிணக் கொழுஞ் சேற்றில்,
புலர்ந்த காலையில், பொறி வரி அம்பு எனும் தும்பி
கலந்த தாமரைப் பெரு வனம், கதிரவன் கரத்தால்,
மலர்ந்தது ஆம் எனப் பொலிந்தன, உலந்தவர் வதனம்.–58-

புலர்ந்த காலையில் – (சூரியன்) புலர்ந்த விடியல் காலத்தில்; நிலம்
தவாத – நிலத்தினின்று நீங்காத; செந்நீரிடை – இரத்த
வெள்ளத்திலும்; நிணக்கொழுஞ் சேற்றில் – கொழுப்பாகிய வளமான
சேற்றிலும்; பொறிவரி அம்பு எனும் தும்பி – புள்ளிகளும் வரிகளும்
உடைய அம்புகள் என்னும் தும்பி; கலந்த – மொய்க்கிற; தாமரைப்
பெருவனம் – தாமரைப் பெருங்காடு; கதிரவன் கரத்தால் – கதிரவனது
கிரணங்களால்; மலர்ந்தது ஆம் என- மலர்ந்தது ஆம் என்னும்படி;
உலந்தவர் வதனம் பொலிந்தன – உயிரிழந்தவர்களின் முகங்கள்
அழகுற விளங்கின.

————

8360. தேரும் யானையும் புரவியும் விரவின,-தேவர்
ஊரும் மானமும் மேகமும் உலகமும் மலையும்
பேரும் மான வெங் காலத்துக் கால் பொர, பிணங்கிப்
பாரின் வீழ்ந்தன போன்றன-கிடந்தன பரந்த.–59-

தேரும் யானையும் புரவியும் – தேர்களும் யானைகளும்,
குதிரைகளும்; விரவின – கலந்து பரந்து கிடந்தன (பரவிக் கிடப்பவை);
தேவர் ஊரும் – தேவர் உலகமும்; மானமும் மேகமும் உலகமும்
மலையும் – விமானங்களும் மேகமும், பிற உலகங்களும், மலைகளும்;
பேரும் – நிலை பெயருகின்ற; மான வெங்காலத்துக் – பெருமை மிக்க
யுக முடிவுக்காலத்தில்; கால் பொர – மிகுதியான காற்று வீச;பிணங்கி – மாறுபட்டு; பாரின் வீ்ழ்ந்தன போன்றன –
நிலத்தில் விழுந்து கிடப்பவற்றை ஒத்துத் தோன்றின.

———–

போர்க்களம் போந்த அரக்கியர் நிலை

8361. எல்லி சுற்றிய மதி நிகர் முகத்தியர், எரி வீழ்
அல்லி சுற்றிய கோதையர், களம் புகுந்து அடைந்தார்,
புல்லி முற்றிய உயிரினர் பொருந்தினர் கிடந்தார்,
வல்லி சுற்றிய மா மரம் நிகர்த்தனர் வயவர்.–60-

எல்லி சுற்றிய மதிநிகர் முகத்தியர் – இரவில் சுற்றி வரும்
நிலவினை ஒத்த முகத்தினையும்; எரிவீழ் அல்லி சுற்றிய கோதையர் –
நெருப்பைக் காட்டிலும் சிவந்த அகவிதழ்களை உடைய செவ்வல்லி
மாலையைச் சுற்றிய கூந்தலையும் (உடைய அரக்கியர்கள்); களம்
புகுந்து அடைந்தார் – போர்க்களம் புகுந்து அடைந்து; புல்லி முற்றிய
உயிரினர் – (அவர்களால்) தழுவப்பட்டு முடிந்த உயிரினை
உடையவர்களாய்; பொருந்தினர் கிடந்தார் – பொருந்திக் கிடக்கின்ற;
வயவர் – அரக்க வீரர்கள்; வல்லி சுற்றிய – கொடியினால்
தழுவப்பட்ட; மாமரம் நிகர்த்தனர் – பெரிய மரம் விழுந்து கிடப்பது
போல் விழுந்து கிடந்தனர்.

————-

8362. வணங்கு நுண் இடை, வன முலை, செக்கர் வார் கூந்தல்,
அணங்கு வெள் எயிற்று, அரக்கியர் களத்து வந்து
அடைந்தார்,
குணம் கொளும் துணைக் கணவர்தம் பசுந் தலை கொடாது
பிணங்கு பேய்களின் வாய்களைப் பிளந்தனர், பிடித்தே.–61-

வணங்கு நுண் இடை- ஒசியும் நுண்மையான இடையினையும்;
வனமுலை – அழகிய மார்பகங்களையும்; செக்கர் வார் கூந்தல் –
சிவந்த நீண்ட கூந்தலினையும்; அணங்கு வெள் எயிற்று – வருத்தும் தன்மை கொண்ட வெண்மையான
பற்களையும்; அரக்கியர் – உடைய அரக்கியர்கள்; களத்து வந்து
அடைந்தார் – போர்க்களத்துக்கு வந்து அடைந்தவர்களாகி; குணம்
கொளும் – (தங்களிடம்) அன்பு எனும் பண்பு கொண்டிருந்த; தம் –
தங்களுடைய; துணைக்கணவர் – துணையாகிய கணவர்களுடைய;
பசுந்தலை கொடாது – பசுந்தலையை உண்பதற்காகக் கையில் கொண்டு
கொடுக்காமல்; பிணங்கு பேய்களின் – மாறுபடுகின்ற பேய்களின்;
வாய்களைப் பிடித்தே பிளந்தனர் – வாய்களைப் பிடித்துப்
பிளந்தனர்.

—————-

8363. சுடரும் வெள் வளைத் தோளி, தன்கொழுநனைத்
தொடர்வாள்,
உடரும் அங்கமும் கண்டு, கொண்டு ஒரு வழி உய்ப்பாள்
குடரும், ஈரலும், கண்ணும், ஓர் குறு நரி கொள்ள,
தொடர ஆற்றலள், நெடிது உயிர்த்து, ஆர் உயிர் துறந்தாள்.–62-

சுடரும் வெள் வளைத்தோளி – ஒளி விடுகிற வெள்ளிய
வளையல்களை அணிந்த தோள்களை உடையாள் ஒருத்தி; தன்
கொழுநனைத் தொடர்வாள் – தன் கணவனைப் (போர்க்களத்தில்
தேடித்) தொடர்ந்து சென்றவள்; உடரும் அங்கமும் கண்டு – (அங்கு
அவனது) உடலினையும் (கை, கால் முதலிய) உறுப்புகளையும் பார்த்து;
கொண்டு ஒருவழி உய்ப்பார் -(அவற்றை எல்லாம் திரட்டிக்) கொண்டு
(வந்து) ஓரிடத்தில் சேர்ப்பவள்; ஓர் குறு நரி – ஒருசிறிய நரி; குடரும்
ஈரலும் கண்ணும் கொள்ள – குடலையும், ஈரலையும், கண்ணையும்
தூக்கிச் செல்ல; தொடர ஆற்றலள் – அதனைத் தொடர்ந்து செல்லும்
வலிமை அற்றவளாகி; நெடிது உயிர்த்து – பெருமூச்சு விட்டு; ஆர்
உயிர் துறந்தாள் – தனது அரிய உயிரை விட்டாள்.

————-

8364. பெரிய வாள் தடங் கண்ணியர், கணவர்தம் பெருந் தோள்
நரிகள் ஈர்த்தன, வணங்கவும் இணங்கவும் நல்கா
இரியல்போவன தொடர்ந்து, அயல் இனப் படை கிடைந்த
அரிய,, நொந்திலர், அலத்தகச் சீறடி அயர்ந்தார்.–63-

பெரிய வாள் தடங்கண்ணியர் – நீண்ட வாள் போன்ற கண்களை
உடைய மகளிர்; தம் கணவர் தம் – தங்கள் கணவர்களுடைய;
பெருந்தோள் நரிகள் ஈர்த்தன – பெரிய தோள்களை நரிகள் இழுத்துச்
சென்றனவாக; வணங்கவும் – (அவை) வணங்கிக் கேட்கும்;
இணங்கவும் – இணக்கமாகக் கேட்டும்; நல்கா – (அத்தோள்களைக்)
கொடுக்காமல்; இரியல் போவன தொடர்ந்து – ஓடுகின்ற அவற்றைத்
தொடர்ந்து (போய்); அயல் கிடந்த இனப்படை அரிய – அருகில்
விழுந்து கிடந்த தொகுதியாய் உள்ள படைக்கலங்கள் (தங்கள்
கால்களை) அறுத்திட; அலத்தகச் சீறடி – செம்பஞ்சுக் குழம்பு
ஊட்டிய சிறிய அடிகள்; நொந்திலர் அயர்ந்தார் – ஓடி வருந்தாராய்
அயர்ந்து நின்றனர்.

————

8365. நலம் கொள் நெஞ்சினர், தம் துணைக் கணவரை நாடி,
விலங்கல் அன்ன வான் பெரும் பிணக் குப்பையின் மேலார்,
அலங்கல் ஓதியர்,-அருந் துணை பிரிந்து நின்று அயரும்,
பொலம் கொள், மா மயில் வரையின்மேல் திரிவன
போன்றார்.–64-

தம் துணைக் கணவரை நாடி – தங்களுக்குத் துணைவனாய்
அமைந்த கணவரைத் தேடி; விலங்கல் அன்ன – மலையைப் போன்று;
வான் பெருங் குப்பையின் மேலார் – உயர்ந்த பிணக் குவியலின்
மேலேறி நின்றவர்களான; அலங்கல் ஓதியர் – மாலையை அணிந்த
கூந்தலையும்; நலம் கொள் நெஞ்சினர் – நன்மையை (விரும்பிக்)
கொண்ட நெஞ்சினையும் (உடைய அரக்க மகளிர்); அருந்துணை
பிரிந்து – (தம்) அருமையான துணையாகிய (ஆண் மயிலைப்) பிரிந்து;
நின்று அயரும் – நின்று சோருகிற; பொலம் கொள் – அழகு
கொண்ட; மாமயில் – பெரிய (பெண்) மயில்; வரையின் மேல் திரிவன போன்றார் – மலையின் மீது
சுற்றித் திரிவன ஒத்தார்கள்.

—————-

8366. சிலவர்-தம் பெருங் கணவர்தம் செருத் தொழில் சினத்தால்,
பலரும், வாய் மடித்து, உயிர் துறந்தார்களைப் பார்த்தார்,
‘அலைவு இல் வெள் எயிற்றால் இதழ் மறைத்துளது,
அயலாள்
கலவியின் குறி காண்டும் என்று ஆம்’ எனக் கனன்றார்.–65-

சிலவர் – சில (அரக்க) மகளிர்; தம் பெரும் கணவர் –
தங்களுடைய பெருமை மிக்க கணவர்கள்; பலரும் – பல பேர்களும்;
தம் செருத்தொழில் சினத்தால் – (தங்களுடைய) போர்த் தொழிலில்
(மூண்ட பெருஞ்) சினத்தினால்; வாய் மடித்து – வாயை மடித்து
(இதழ்களைப் பல்லால் கடித்துக்கொண்டு); உயிர் துறந்தார்களைப்
பார்த்தார் – உயிரை விட்டவர்களைப் பார்த்து; அயலாள் கலவியின்
குறி – மாற்றாள் கலவிக்காலத்தில் செய்த பற்குறிகளை; அலைவு இல்
வெள்ளெயிற்றால் – அசைவு இல்லாத வெண்மையான பற்களினால்;
இதழ் மறைத்துளது – இதழில் (செய்யப்பட்ட பற்குறியை)
மறைத்துள்ளது; (அதற்குக் காரணம்) காண்டும் என்று ஆம் – நாம்
பார்த்து விடுவோம் என்று கருதிப் போலும்; எனக் கனன்றார் – என்று
எண்ணிச் சினம் கொண்டார்கள்.

———-

8367. நவை செய் வன் தலை இழந்த தம் அன்பரை நணுகி,
அவசம் எய்திய மடந்தையர் உருத் தெரிந்து அறியார்,
துவசம் அன்ன தம் கூர் உகிர்ப் பெருங் குறி, தோள்மேல்
கவசம் நீக்கினர், கண்டு கண்டு, ஆர் உயிர் கழிந்தார்.–66-

நவை செய் வன்தலை – குற்றம் செய்கிற வலிய தலைகளை; இழந்த
– போரில் இழந்து விட்ட; தம் அன்பரை அணுகி – தங்களுடைய
கணவன்மாரை நெருங்கி; உருத்தெரிந்து அறியார் – (அவர்களுடைய)
உருவத்தை (அடையாளம்) தெரிந்து அறியாதவர்களாய்; அவசம்
எய்திய மடந்தையர் – சலிப்பினை அடைந்த பெண்டிர் (எண்ணிப்
பார்த்த பின்பு); கவசம் நீக்கினர் – (அவர்களுடைய உடல்) கவசத்தை
நீக்கி; துவசம் அன்ன – கொடியைப் போன்ற; தம் கூர் உகிர்ப்
பெருங்குறி – தங்களுடைய கூர்மையான நகத்தால் செய்யப்பட்ட
பெருங்குறி; தோள் மேல்கண்டு கண்டு – (அவர்களுடைய) தோளின்
மீது இருப்பதைப் பார்த்துப் பார்த்து); ஆர் உயிர் கழிந்தார் –
(தங்களது) அருமையான உயிர் நீங்கினார்கள்.

———–

8368. மாரி ஆக்கிய கண்ணியர், கணவர்தம் வயிரப்
போர் யாக்கைகள் நாடி, அப் பொரு களம் புகுந்தார்,
பேர் யாக்கையின் பிணப் பெருங் குன்றிடைப் பிறந்த
சோரி ஆற்றிடை அழுந்தினர், இன் உயிர் துறந்தார்.–67-

மாரி ஆக்கிய கண்ணியர் – மழை (போல் கண்ணீர் வடித்து)
ஆக்கிய கண்களை உடையவர்களான (அரக்க மகளிர்); தம் கணவர் –
தங்கள் கணவன்மாருடைய; வயிரப் போர் யாக்கைகள் நாடி – வயிரம்
(பாய்ந்த) போர் (செய்த) உடல்களைத் தேடி; அம் பொரு களம்
புகுந்தார் – (அந்தப்) போர்க்களத்தின் கண் புகுந்தார்கள் (அவர்கள்);
பேர் யாக்கையின் – பெரிய உடம்புகளை உடைய; பிணப்
பெருங்குன்றிடை – பிணங்களாகிய பெரிய மலையில் இருந்து; பிறந்த
– தோன்றிய; சோரி ஆற்றிடை அழுந்தினர் – குருதி ஆற்றின்
இடையில் அழுந்தி; இன் உயிர் துறந்தார் – (தங்கள்) இனிய உயிரைத்
துறந்தார்கள்.

—————

அனுமன் புகைநிறக்கண்ணன் போர்

8369. வகை நின்று உயர் தாள் நெடு மாருதியும்,
புகையின் பொரு கண்ணவனும் பொருவார்;
மிகை சென்றிலர், பின்றிலர், வென்றிலரால்;
சிகை சென்று நிரம்பிய தீ உமிழ்வார்.–68-

வகை நின்று உயர்தாள்- அழகாக ஓங்கி நின்ற கால்களை உடைய;
நெடு மாருதியும் – பெருமை உடைய அனுமனும்; புகையின் பொரு
கண்ணவனும் பொருவார் – புகையோடு மாறுபடுகிற கண்களை
உடையவனும் போரிடுகின்றவர்களாகி; சிகை சென்று நிரம்பிய –
கொழுந்து எழுந்து சென்று நிரம்புகிற; தீ உமிழ்வார் – தீயை
உமிழ்கின்றவர்களாகி; மிகை சென்றிலர் – (ஒருவருக்கு ஒருவர்)
மேம்படுதல் இன்றியும்; பின்றிலர் – பின்னிடுதல் இன்றியும்;
வென்றிலரால் – வெல்லுதல் இன்றியும் போர் செய்தனர்.

———–

8370. ஐ-அஞ்சு அழல் வாளி, அழற்கொடியோன்,
மெய் அஞ்சனை கான்முளை மேனியின்மேல்,
வை அம் சிலை ஆறு வழங்கினனால்,
மொய் அஞ்சன மேகம் முனிந்தனையான்.–69-

அழற்கொடியோன் – நெருப்பினும் கொடியவன் ஆகிய புகை
நிறக்கண்ணன்; மொய் அஞ்சன மேகம் – சொரிந்த கரு மேகம்;
முனிந்தனையான் – சினந்ததனை ஒப்பவனாகி; மெய் அஞ்சனை –
உண்மை உள்ள அஞ்சனையின்; கான்முளை மேனியின் மேல் –
மகனாகிய (அனுமனின்) உடம்பின் மீது; வை அம்சிலை ஆறு –
(தான்) வைத்துள்ள அழகிய வில்லின் வழியாக; ஐ – அஞ்சு அழல்
வாளி – இருபத்து ஐந்து நெருப்புப் போன்ற அம்புகளை;
வழங்கினனால் – செலுத்தினான்.

———–

8371. பாழிப் புயம் அம்பு உருவப் படலும்,
வீழிக் கனிபோல் புனல் வீச, வெகுண்டு,
ஆழிப் பெருந் தேரை அழித்தனனால்,-
ஊழிப் பெயர் கார் நிகர் ஒண் திறலான்.–70-

பாழிப்புயம் – (அனுமன்தன்) வலிமை உள்ள தோள்களில்; அம்பு
உருவப்படலும் – அம்பானது உருவும் படியாகப்பட்ட உடனே;
வீழிக்கனி போல் – வீழிக்கனியினைப் போல்; புனல் வீச – குருதி நீர்
(அங்கிருந்து) வெளிப்பட; ஊழிப்பெயர் – உலக அழிவுக்காலத்தில்
உலவுகிற; கார்நிகர் – மேகத்தைப் போன்று; ஒண் திறலான் –
பெருவலி படைத்த அனுமன்; வெகுண்டு – சினம் மிகக் கொண்டு;
ஆழிப்பெருந்தேரை – (அந்தப் புகை நிறக்கண்ணனுடைய) சக்கரத்தை
உடைய பெரிய தேரை; அழித்தனனால் – அழித்தான்.

———–

8372. சில்லிப் பொரு தேர் சிதைய, சிலையோடு
எல்லின் பொலி விண்ணின் விசைத்து எழுவான்,
வில் இற்றது, இலக்குவன் வெங் கணையால்;
புல்லித் தரை இட்டனன், நேர் பொருவான்.–71-

சில்லி – சக்கரத்தை உடைய; பொருதேர் சிதைய – போர்
செய்வதற்கு உரிய (தன்) தேர் அழிந்ததனால்; சிலையோடு –
வில்லுடன்; எல்லின் பொலிவிண்ணின் – சூரியனால் அழகு பெற்று
விளங்கும் ஆகாயத்தின் கண்; விசைத்து எழுவான் – வேகமாக
எழுபவனாகிய; (புகை நிறக்கண்ணனுடைய) வில் – (கை) வில்;
இலக்குவன் – இலக்குவன்; வெங்கணையால் – (எய்த) கொடிய
அம்பினால்; இற்றது – அழிந்தது; நேர் பொருவான் – (அவனுடன்)
நேரே போர் செய்பவன் ஆகிய (அனுமன்); புல்லித்தரை இட்டனன் –
(அவனைத்) தழுவி (இழுத்துத்) தரையில் இட்டான்;

————-

அனுமன் கொல்லுதல்

8373. மலையின் பெரியான் உடல் மண்ணிடை இட்டு,
உலையக் கடல் தாவிய கால் கொடு உதைத்து,
அலையின், பருகிப் பரு வாய் அனல் கால்
தலை கைக்கொடு எறிந்து, தணிந்தனனால்.–72-

மலையின் பெரியான் – மலையினும் பெரிய உடலுடையவனான
(புகை நிறக்கண்ணனுடைய); உடல் மண்ணிடை இட்டு – உடலை
மண்ணில் போட்டு; கடல் தாவிய கால்கொடு – கடலைத் தாவிய தன்
கால்களைக் கொண்டு; உலைய உதைத்து – (அழிந்து உயிர்) வற்றும்படியாக உதைத்து; பருவாய் அனல் கால்தலை –
பெரிய வாயில் தீயை உமிழ்கின்ற தலையினை; கைக்கொடு பருகி –
(தன்) கையைக் கொண்டு பறித்து; அலையின் எறிந்து – கடலின் கண்
எறிந்து; தணிந்தனனால் – சினமாறினான்.

———-

அங்கதன் மாபக்கன் போர்

8374. மாபக்கனும் அங்கதனும் மலைவார்,
தீபத்தின் எரிந்து எழு செங் கணினார்,
கோபத்தினர், கொல்ல நினைந்து அடர்வார்,
தூபத்தின் உயிர்ப்பர், தொடர்ந்தனரால்.==73-

மலைவார் – போரிடுகின்றவர்களான; மாபக்கனும் – மாபக்கன்
என்பவனும்; அங்கதனும் – அங்கதன் என்பவனும்; தீபத்தின் எரிந்து
எழு – விளக்கைப் போல் எரிந்து எழுகின்ற; செங்கணினார் – சிவந்த
கண்களை உடையவர்களாய்; கோபத்தினர் – சினத்தினை
உடையவர்களாய்; தூபத்தின் உயிர்ப்பர் – தூபத்தைப் போல் புகை
வெளிப்படுகிற பெரு மூச்சினை உடையவர்களாகி; கொல்ல நினைந்து –
ஒருவரை மற்றொருவர் கொல்லுவதற்கு எண்ணி; அடர்வார்
தொடர்ந்தனரால் – அழித்துக் கொல்லுவதற்காகத் தொடர்ந்தார்கள்;

————–

8375. ஐம்பத்தொரு வெங் கணை அங்கதன் மா
மொய்ம்பில் புக உய்த்தனன், மொய் தொழிலான்-
வெம்பி, களியோடு விளித்து எழு திண்
கம்பக் கரி, உண்டை கடாய் எனவே.–74-

மொய் தொழிலான் – நெருங்கி வந்து போர் செய்த மாபக்கன்;
வெம்பி – சினந்து; கனியோடு – மது மயக்கத்தோடு; விளித்து –
பேரொலி செய்து; எழு – எழுகின்ற; திண் கம்பக்கரி – வலிமையான
கட்டுத்தறியில் கட்டப்பட்டிருந்த யானை; உண்டை கடாய் எனவே –
மண் உருண்டையை விரைவாக வீசியதைப் போல்; ஐம்பத்தொரு
வெங்கணை – ஐம்பத்தொரு கொடிய அம்புகளை; அங்கதன் –
அங்கதனது; மாமொய்ம்பில் – அகன்ற வலிமை உள்ள மார்பில்;
புகஉய்த்தனன் – புகும் படியாகச் செலுத்தினான்.

—————-

8376. ஊரோடு மடுத்து ஒளியோனை உறும்
கார் ஓடும்நிறக் கத நாகம் அனான்,
தேரோடும் எடுத்து, உயர் திண் கையினால்,
பாரோடும் அடுத்து எறி பண்பிடையே.–75-

ஊரோடு மடுத்து – ஊர்தல் தொழிலுடன் பொருந்தி; ஒளியோனை
உறும் – கதிரவனைச் சேருகின்ற; கார் ஓடும் நிறக் – கருமை ஓடுகிற
நிறத்தினை உடைய; கத நாகம் அனான் – சினம் மிக்க (இராகு கேது
என்னும்) பாம்புகள் போன்றவனாகிய (அங்கதன்); உயர்திண்
கையினால் – (தன்னுடைய) உயர்ந்த வலிமையான கைகளினால்;
தேரோடும் எடுத்து – (அந்த மாபக்கனைத்) தேருடன் எடுத்து;
பாரோடும் அடுத்து – நிலத்தில் பொருந்தும் படியாக; எறி
பண்பிடையே- எறிந்த போது (அடுத்த பாடலில் முடியும்).

————-

8377. வில்லைச் செல வீசி, விழுந்து அழியும்,
எல்லின் பொலி தேரிடை நின்று இழியா,
சொல்லின் பிழையாதது ஓர் சூலம், அவன்
மல்லின் பொலி மார்பின் வழங்கினனால்.–76-

வில்லைச் செலவீசி – (அந்த மாபக்கன்) தன் வில்லை அப்பால்
செல்லும்படி வீசி விட்டு; எல்லின் பொலி – கதிரவன் போல்
விளங்குகிற; விழுந்து அழியும் – (மேலிருந்து) கீழே விழுந்து அழிகிற;
தேரிடை நின்று இழியா – தேரில் இருந்து இறங்கி; அவன் – அந்த
அங்கதனுடைய; மல்லின்பொலி மார்பின் – மற்போர்த் தொழிலால்
அழகு விளங்குகின்ற மார்பின்கண்; சொல்லின் பிழையாதன – சாபம்
போல் தவறாது பயன் விளைக்கவல்ல; ஓர் சூலம் – ஒப்பற்ற
சூலப்படை (ஒன்றை); வழங்கினனால் – செலுத்தினான்.

———–

8378. ‘சூலம் எனின், அன்று; இது தொல்லை வரும்
காலம்’ என உன்னு கருத்தினனாய்;
ஞாலம் உடையான், அது நாம் அற, ஓர்
ஆலம் முக அம்பின் அறுத்தனனால்.–77-

ஞாலம் உடையான் – உலகங்கள் எல்லாம் தன் வடிவாக உடைய
(இராமன்); இது – இப்போது வருகின்ற சூலம்; சூலம் எனின் அன்று –
எளிமையான சூலமோ எனின் அன்று; தொல்லை வரும் காலம் என –
பழமையாக வருகின்ற காலபாசம் என்று; உன்னு – நினைக்கிற;
கருத்தினனாய் – கருத்தினை உடையவனாய்; அது நாம் அற – அதன்
பெயர் அழியும்படியாக; ஓர் ஆலம் முக அம்பின் – ஒப்பற்ற நஞ்சு
தோய்ந்த முனையினை உடைய அம்பினால்; அறுத்தனனால் –
அறுத்தான்.

———-

8379. உளம்தான் நினையாதமுன், உற்று, உதவாக்
கிளர்ந்தானை, இரண்டு கிழித் துணையாய்ப்
பிளந்தான்-உலகு ஏழினொடு ஏழு பெயர்ந்து
அளந்தான், ‘வலி நன்று’ என,-அங்கதனே.–78-

அங்கதனே – (அது கண்ட) அங்கதன்; ஏழினொடு ஏழு உலகு –
பதினான்கு உலகங்களையும்; பெயர்ந்து அளந்தான் – (மூவடி)
பெயர்த்து வைத்து அளந்தவனாகிய (திருமாலின் அவதார
நாயகனாகிய) இராமனின்; வலி நன்று என – வலிமை நன்று என்று
சொல்லி; உளம் தான் நினையாத முன் – மனத்தினால் நினைப்பதற்கு
முன்னமேயே; உற்று உதவாக் கிளர்ந்தானை – நெருங்கிப்
போரிடக்கிளர்ந்து எழுந்தவனாகிய (மாபக்கனை); இரண்டு கிழித்
துணையாய்ப் – இரண்டு கிழியின் தன்மையாகுமாறு; பிளந்தான் –
கிழித்தான்.

————-

நீலன் – மாலி போர்

8380. மா மாலியும் நீலனும், வானவர்தம்
கோமானொடு தானவர்கோன் இகலே
ஆமாறு, மலைந்தனர் என்று இமையோர்
பூ மாரி பொழிந்து, புகழ்ந்தனரால்.–79-

மாமாலியும் – பெருமையில் சிறந்த மாலி என்பவனும்; நீலனும் –
வானரப் படைத்தலைவனான நீலன் என்பவனும்; வானவர் தம் கோமானொடு – தேவர் தலைவனாம் திருமாலின்
அவதாரமாகிய நரசிங்கத்தோடு; தானவர் கோன் – தானவர்
தலைவனாகிய இரணியன்; இகலே ஆமாறு – செய்த போரே
ஒப்பாகுமாறு; மலைந்தனர் – போர் செய்தனர்; என்று இமையோர் –
என்று கூறி விண்ணவர்கள்; பூ மாரி பொழிந்து – பூ மழை பொழிந்து;
புகழ்ந்தனரால் – புகழ்ந்தனர்.

———

8381. கல் ஒன்று கடாவிய காலை, அவன்
வில் ஒன்று இரு கூறின் விழுந்திடலும்,
அல் ஒன்றிய வாளொடு தேரினன் ஆய்,
‘நில்!’ என்று இடை சென்று, நெருக்கினனால்.–80-

கல் ஒன்று கடாவிய காலை – (நீலன்) கல் ஒன்றை எடுத்துச்
செலுத்திய பொழுது; அவன் வில் ஒன்று – (அது) அந்த
மாலியினுடைய வில் ஒன்றை; இருகூறின் விழுந்திடலும் – இரண்டு
துண்டாக விழுந்திடச் செய்யவும்; அல் ஒன்றிய வாளொடு – (மாலி)
ஒளி நிறைந்தவாளுடன்; தேரினன் ஆய் – தேர் மேல் ஏறியவனாகி;
நில் என்று – (நீலனைப் பார்த்து) நில் என்று சொல்லி; இடை சென்று
– அவனிடத்தில் சென்று; நெருக்கினனால் – போரிடல் ஆனான்.

———–

8382. அற்று, அத் தொழில் எய்தலும், அக் கணனே,
மற்றப் புறம் நின்றவன், வந்து அணுகா,
கொற்றக் குமுதன், ஒரு குன்று கொளா,
எற்ற, பொரு தேர் பொடி எய்தியதால்.–81-

அற்று – அப்பொழுது; அத்தொழில் எய்தலும் – அச்செயல்
நிகழும் அளவில்; அக்கணனே – அக்கணமே; மற்றப்புறம் நின்றவன்
– மற்றொரு இடத்தில் நின்றவனாகிய; கொற்றக்குமுதன் – வெற்றியை
உடைய குமுதன் என்பவன்; ஒரு குன்று கொளா – ஒரு குன்றினைக்
கையில் கொண்டு; வந்து அணுகா – வந்து நெருங்கி; எற்ற – அடிக்க;
பொருதேர் – போரிடுவதற்குரிய (மாலியின்) தேர்; பொடி எய்தியதால்
– பொடியாகப் (போய்) விட்டது.

———–

நீலன் – மாலி – இலக்குவன் செயல்கள்

8383. தாள் ஆர் மரம் நீலன் எறிந்ததனை
வாளால் மடிவித்து, வலித்து அடர்வான்
தோள் ஆசு அற, வாளி துரந்தனனால்-
மீளா வினை நூறும் விடைக்கு இளையான்.–82-

நீலன் – நீலன்; எறிந்ததனை – எறிந்ததாகிய; தாள் ஆர் மரம் –
அடி பெருத்த மரத்தை; வாளால் மடிவித்து – (தன்) வாளால் அழித்து;
வலித்து அடர்வான் – வலிமையோடு பொருபவன் ஆகிய
(மாலியினது); தோள் ஆசு அற – தோளின் மூட்டு அறும்படியாக;
மீளா வினை நூறும் விடைக்கு இளையான் – போக்குதற்கு அரிய
வினைகளைப் போக்குபவனாகிய இடபம் போன்ற இராமனுக்கு
இளையவனாகிய இலக்குவன்; வாளி துரந்தனனால் – அம்புகளைச்
செலுத்தினான்.

———–

இலக்குவன் செயல்

8384. மின்போல் மிளிர் வாளொடு தோள் விழவும்
தன் போர் தவிராதவனை, சலியா,
‘என் போலியர் போர்எனின், நன்று; இது ஓர்
புன் போர்’ என, நின்று அயல் போயினனால்.–83-

மின்போல் மிளிர் வாளொடு – மின்னலைப்போல் விளங்குகின்ற
வாளுடன்; தோள் விழவும் – (தன்) தோள் அறுபட்டுக் (கீழே)
விழவும்; தன் போர் தவிராதவனை – (தன்) போரை நீங்காமல்
செய்பவனாகிய (மாலியைப் பார்த்து இலக்குவன்); என் போலியர்
போர் எனின் நன்று – என் போன்றவருடன் செய்யும் போர் என்றால்
அது நல்லது; இது ஓர் புன்போர் – இது ஒரு புன்மையான போர்
ஆகும்; என சலியா – என்று (கூறி) வெறுத்து; நின்று – நின்று; அயல்
போயினனால் – அப்பால் போயினன்.

—————-

வானரப்படை வீரர் புகழ்ச்சி

8385. நீர் வீரை அனான் எதிர் நேர் வரலும்,
பேர் வீரனை, வாசி பிடித்தவனை,
யார், வீரதை இன்ன செய்தார்கள்?’ எனா,
போர் வீரர் உவந்து, புகழ்ந்தனரால்.–84-

நீர் வீரை அனான் – நீரினை உடைய கடல் போன்ற
நிறமுடையவனாகிய இராமனுக்கு முன்; எதிர் நேர் வரலும் –
(இலக்குவன்) எதிரில் நேராக வருதலும்; போர் வீரர் – வானரப்
படைப் போர் வீரர்கள்; போர் வீரனை – புகழுடைய வீரனும்; வாசி
பிடித்தவனை – அம்பைத் தாங்கி உள்ளவனும் ஆகிய இலக்குவனை;
யார் வீரதை இன்ன செய்தார்கள் எனா – யாவர் தம்
வீரத்தன்மையால், இத்தகைய செயல்களைச் செய்தார்கள் என்று;
உவந்து – மகிழ்ந்து; புகழ்ந்தனரால் – புகழ்ந்தனர்.

———–

இலக்குவன் வேள்விப் பகைஞனை அழித்தல்

8386. வேள்விப்பகையோடு வெகுண்டு அடரும்
தோள் வித்தகன், அங்கு ஓர் சுடர்க் கணையால்,
‘வாழ்வு இத்தனை’ என்று, அவன் மார்பு அகலம்
்தனன்; ஆர் உயிர் போயினனால்.–85-

வேள்விப் பகையோடு – வேள்வியின் பகைஞன் என்பவனுடன்;
வெகுண்டு அடரும் – சினந்து போர் செய்கின்ற; தோள் வித்தகன் –
தோள் வலிமை உடைய இலக்குவன்; வாழ்வு இத்தனை என்று –
(உனக்கு) வாழ்வு இத்தனை (அளவு) தான் என்று சொல்லி; அங்கு ஓர்
சுடர்க் கணையால் – அப்போது ஒரு ஒளி விடுகின்ற அம்பினால்;
அவன் மார்பு அகலம் போழ்வித்தனன் – அவனது பரந்த மார்பைப்
பிளந்தான்; ஆர் உயிர் போயினனால் – (அவனுடைய) அருமையான
உயிர் நீங்கியது.

—————

8387. மல்லல் தட மார்பன் வடிக் கணையால்
எல்லுற்று உயர் வேள்விஇரும்பகைஞன்
வில் அற்றது, தேரொடு மேல் நிமிரும்
கல் அற்ற, கழுத்தொடு கால்களொடும்.–86-

மல்லல் தட மார்பன் – வளப்பம் பொருந்திய பரந்த மார்பை
உடைய (இலக்குவனது); வடிக்கணையால் – கூர்மையான அம்புகளால்;
எல்லுற்று – ஒளி நிறைந்து; உயர் வேள்வி – உயர்கிற வேள்வித் தீக்கு;
இரும் பகைஞன் – மிக்க பகைவனாகிய அவனுடைய; வில் அற்றது –
வில் அழிந்திட்டது; கழுத்தொடு – கழுத்தும்; கால்களொடும் –
கால்களும்; மேல் நிமிரும் தேரொடு – மேல் உயர்ந்து விண்ணில்
செல்லும் தேருடன்; கல் அற்ற – கற்களும் அழிந்தன;

———-

சுக்கிரீவன் சூரியன் பகைஞனை அழித்தல்

8388. தன் தாதையை முன்பு தடுத்து, ஒருநாள்,
வென்றானை, விலங்கலின் மேனியனை,
பின்றாத வலத்து உயர் பெற்றியனை,
கொன்றான்-கவியின்குலம் ஆளுடையான்.–87-

கவியின் குலம் ஆளுடையான் – வானரக் கூட்டங்களை ஆளடிமை
கொண்ட சுக்கிரீவன்; முன்பு ஒரு நாள் – முன்பு ஒரு காலத்தில்; தன்
தாதையை தடுத்து – தன் தந்தையாகிய சூரியனைத் தடுத்து;
வென்றானை – வென்றவனும்; விலங்கலின் மேனியனை – மலை
போன்ற உடம்பினை உடையவனும்; பின்றாத வயத்து உயர்
பெற்றியனை – பின்னிடாத வெற்றியால் உயர்ந்தவனும் (ஆகிய
சூரியன் பகைஞனை); கொன்றான் – கொன்றான்.

—————-

இடபன் – வச்சிரத்து எயிற்றன் போர்

8389. இடபன்,-தனி வெஞ் சமம் உற்று எதிரும்
விட வெங் கண் எயிற்றவன், விண் அதிரக்
கடவும் கதழ் தேர், கடவு ஆளினொடும்
பட,-அங்கு ஒரு குன்று படர்த்தினனால்.–88-

இடபன் – இடபன் என்ற பெயர் கொண்ட வானர வீரன்; தனி
வெஞ்சமம் உற்று – ஒப்பற்ற வலிமையான போரைச் செய்ய நெருங்கி;
எதிரும் – (தன்னை) எதிர்ப்பவனும்; விட வெங்கண் – நச்சுப் போன்ற
கொடிய கண்களையும்; எயிற்றவன் – பற்களையும் உடையவனாகிய
வச்சிரத்து எயிற்றவன் உடைய;விண் அதிரக் கடவும் கதழ்தேர் –
வானம் அதிரும்படி செலுத்தப்படுகிற விரைவு பொருந்திய தேரும்;
கடவு ஆளினோடு – (அதைச்) செலுத்துகிற பாகனும்; பட –
அழியும்படி; ஒரு குன்று – ஒரு குன்றினை; படர்த்தினன் –
செலுத்தினான். ஆல்- அசை.

————-

வச்சிரத்து எயிற்றவன் செயல்

8390. திண் தேர் அழிய, சிலை விட்டு, ஒரு தன்
தண்டோடும் இழிந்து, தலத்தினன் ஆய்,
‘உண்டோ உயிர்?’ என்ன உருத்து, உருமோடு
எண் தோளனும் உட்கிட, எற்றினனால்.–89-

திண்தேர் அழிய – (தன்) வலிமையான தேர் அழிந்ததனால்; சிலை
விட்டு – (தன் கையில் இருந்த) வில்லை விட்டு விட்டு; (அந்த
வச்சிரத்து எயிற்றவன்) ஒரு தன் தண்டோடும் இழிந்து – ஒப்பற்ற
(தன்னுடைய) தண்டாயுதத்தோடு (கீழ்) இறங்கி; உருமோடு –
இடியுடன்; எண் தோளனும் – எட்டுத் தோள்களை உடைய
சிவபிரானும்; உட்கிட – அச்சப்படும் படியாக; உண்டோ உயிர் என்ன
– (கண்டவர் இனி இவனுக்கு) உண்டோ உயிர் என்று எண்ணும் படி;
உருத்து – சினந்து; எற்றினன் – அடித்தான். ஆல் – அசை.

—————

அனுமன் செயல்

8391. ‘அடியுண்டவன் ஆவி குலைந்து அயரா,
இடியுண்ட மலைக் குவடு இற்றதுபோல்
முடியும்’ எனும் எல்லையில் முந்தினனால்-
‘நெடியன், குறியன்’ எனும் நீர்மையினான்.–90-

அடியுண்டவன் – அடிபட்டவன் ஆகிய இடபன்; ஆவி குலைந்து –
உயிர் வாதனை அடைந்து; அயர்ந்து – துன்பப்பட்டு; இடியுண்ட
மலைக்குவடு இற்றது போல் – இடியால் தாக்குண்ட மலை உச்சிகள்
அழிந்தது போல; முடியும் எனும் எல்லையில் – அழிந்து
விடுவானெனும் அளவில்; நெடியன் குறியன் எனும் நீர்மையினான் –
நெடியனும் குறியனும் ஆகும் என்கிற தன்மை உள்ளவனாகிய
அனுமன்; முந்தினன் – முன்வந்து தோன்றினான். ஆல் – அசை.

———–

வச்சிரத்து எயிற்றவன் செயல்

8392. கிடைத்தான் இகல் மாருதியை, கிளர் வான்
அடைத்தான் என மீது உயர் ஆக்கையினைப்
படைத்தானை, நெடும் புகழ்ப் பைங்கழலான்
புடைத்தான், அகல் மார்பு பொடிச் சிதற.–91-

கிடைத்தான் – தன்முன் வந்து தோன்றியவனாகிய; கிளர்வான்
அடைத்தான் என – விளங்குகின்ற ஆகாயத்தை அடைத்தவன் என்று
(கூறும்படி); மீது உயர் ஆக்கையினை படைத்தானை – மிக உயர்ந்த
உடம்பு படைத்தவனாகிய; இகல் மாருதியை – பகைத் தொழில் வல்ல
அனுமனை; நெடும் புகழ் பைங்கழலான் – மிக்க புகழை உடைய பசிய
வீரக்கழலை அணிந்தவனாகிய வச்சிரத்து எயிற்றன்; அகல் மார்பு
பொடிச்சிதற – அகன்ற மார்பு பொடியாகச் சிதறும் படியாக;
புடைத்தான் – அடித்தான்

—————

அனுமன் கொல்லுதல்

8393. எற்றிப் பெயர்வானை இடக் கையினால்
பற்றி, கிளர் தண்டு பறித்து எறியா,
வெற்றிக் கிளர் கைக்கொடு, மெய் வலி போய்
முற்ற, தனிக் குத்த, முடிந்தனனால்.–92-

எற்றிப் பெயர்வானை – (தன் மார்பு பொடிச்சிதற) அடித்து
செல்பவன் ஆகிய வச்சிரத்து எயிற்றவனை; இடக்கையினால் பற்றி – (அனுமன்) தன் இடது கையினால் பிடித்து; கிளர் தண்டு
பறித்து எறியா – (அவன் கையில் இருந்த) மூள்கின்ற போர் செய்யும்
தண்டாயுதத்தைப் பறித்து எறிந்து விட்டு; வெற்றிக் கிளர் கைக்கொடு
– வெற்றியோடு விளங்குகின்ற (தன்) கையினைக் கொண்டு; மெய் வலி
போய் முற்ற – (அவனுடைய) உடல் வலிமை போய் முடியும்படி;
தனிக்குத்த – வலிமையாகக் குத்த; முடிந்தனனால் – உயிர்
முடிந்திட்டான். ஆல் – அசை.

———-

பனசன் பிசாசன் போர்

8394. காத்து, ஓர் மரம் வீசுறு கைக் கதழ் வன்
போத்து ஓர் புலிபோல் பனசன் புரள,
கோத்து ஓட நெடுங் குருதிப் புனல், திண்
மாத் தோமரம் மார்பின் வழங்கினனால்.–93-

காத்து – (பிசாசன் தன்னைக்) காத்துக்கொண்டு; ஓர் மரம் வீசுறு-
(தன் மேல்) ஒரு மரத்தை வீசுகிற; கைக்கதழ் – கை வேகமுடைய; ஓர்
புலிப் போத்து போல் – ஒரு புலிப் போத்தைப் போன்றவனாகிய;
பனசன் புரள – பனசன் என்னும் வானர வீரன் புரளும் படியும்;
நெடுங் குருதிப் புனல் – மிகுதியான இரத்த வெள்ளம்; கோத்து ஓட
– வழிந்து ஓடும் படியும்; திண் மாத்தோமரம் – வலிய பெரிய
தோமரம் என்னும் படைக்கலத்தை; மார்பின் வழங்கினனால் –
(அவனது) மார்பில் விடுத்தான்.

————

பிசாசனின் வேகம்

8395. கார் மேலினனோ? கடல் மேலினனோ?
பார் மேலினனோ? பகல் மேலினனோ?
யார் மேலினனோ? இன என்று அறியாம்-
போர் மேலினன், வாசி எனும் பொறியான்.–94-

போர் மேலினன் – போர் மேல் வந்தவனும்; வாசி எனும்
பொறியான் – குதிரை என்கிற இயந்திரத்தை உடையவனும் ஆகிய
பிசாசன்; கார் மேலினனோ? – மேகத்தின் மேல் இருக்கிறானோ?
கடல் மேலினனோ – கடல்மேல் இருக்கிறானோ? பார் மேலினனோ?
– நிலத்தின் மேல் இருக்கிறானோ? பகல் மேலினனோ – கதிரவன்
மீது இருக்கிறானோ? யார் மேலினனோ – யார் மேல் இருக்கிறான் (எங்கிருந்து போரிடுகிறான்); இன என்று –
இத்தன்மையான் என்று; அறியாம் – (நாம்) அறியோம்.

————–

8396. ‘நூறாயிர கோடிகொல்? அன்றுகொல்?’ என்று
ஆறாயிர வானவரும், அறிவின்
தேறா வகை நின்று, திரிந்துளதால்-
பாறு ஆடு களத்து, ஒரு பாய் பரியே.–95-

ஆறாயிர வானவரும் – ஆறாயிரம் தேவர்களும்; நூறாயிர கோடி
கொல் – நூறாயிரம் கோடி (குதிரைகள் போர்க்களத்தில்) உள்ளன
போலும் (என்றும்); அன்று கொல் என்று – அன்று போலும் என்றும்
(தடுமாறி); அறிவின் தேறாவகை – அறிவின் (துணைகொண்டு) தெளிய
முடியாத படி; பாறு ஆடு களத்து – கழுகுகள் பறக்கிற
போர்க்களத்தில்; ஒரு பாய்பரியே – (பிசாசனுடைய) ஒப்பற்ற பாயும்
தன்மை உள்ள குதிரை; திரிந்து நின்றுளது – சுற்றித் திரிந்து
நிற்பதாகும். ஆல் – அசை.

————-

8397. கண்ணின் கடுகும்; மனனின் கடுகும்;
விண்ணில் படர் காலின் மிகக் கடுகும்;
உள் நிற்கும் எனின், புறன் நிற்கும்; உலாய்,
மண்ணில் திரியாத வயப் பரியே.–96-

மண்ணில் திரியாத – நிலத்தில் திரிதலைச் செய்யாத;
வயப்பரியே- (பிசாசனுடைய) வலிமையான குதிரை; கண்ணின் கடுகும்
– கண் பார்வையை விட விரைந்து செல்லும்; மனனின் கடுகும் –
மனத்தைக் காட்டிலும் வேகமாகச் செல்லும்; விண்ணில் படர் காலின்
– வானத்தில் செல்லுகிற காற்றைக் காட்டிலும்; மிகக் கடுகும் –
மிக வேகமாகச் செல்லும்; உலாய் உள் நிற்கும் எனின் – உலவிப்
போர்க்களத்தின் கண் நிற்கும் என்றால் (அப்போதே); புறன் நிற்கும்
– அதற்கு வெளியேயும் நிற்கும்.

————–

8398. மாப் புண்டரவாசியின் வட்டணைமேல்
ஆப்புண்டவன் ஒத்தவன், ஆர் அயிலால்
பூப் புண் தர,-ஆவி புறத்து அகல,
கோப்புண்டன, வானர வெங் குழுவே. –97-

மாப்புண்டர வாசியின் – பெரிய கழுகு போன்ற குதிரையின்;
வட்டணை மேல் – சுழன்று விரைந்த நடையின் மேல்; ஆப்புண்டவன்
ஒத்தவன் – கட்டப்பட்டிருப்பவனைப் போன்றவனான (அந்தப்
பிசாசன் உடைய) ; ஆர் அயிலால் – அருமையான வேல்
படையினால்; பூப்புண் தர – நிலவுலகம் புண்ணைப் பெற்றிருத்தல்
போல; வானர வெங்குழுவே – வானரங்களின் கொடிய கூட்டம்; ஆவி
புறத்து அகல – உயிர் (உடம்பினை விட்டுப்) புறத்து நீங்க;
கோப்புண்டன – இறந்து குவிந்து கிடந்தன.

—————

8399. ‘நூறும் இரு நூறும், நொடிப்பு அளவின்,
ஏறும்; நுதி வேலின், இறைப்பொழுதில்
சீறும் கவி சேனை சிதைக்கும்?’ எனா,
ஆறும் திறல் உம்பரும் அஞ்சினரால்.–98-

திறல் ஆறும் உம்பரும் – வலிமை ஓய்ந்த தேவர்களும்; ஏறும்
நுதிவேலின் – வீசி எறிகிற கூர்மையான வேலினால்; நொடிப்பு
அளவின் – ஒரு நொடிப் பொழுதிலும்; இறைப் பொழுதில் – கண
நேரத்திலும்; நூறும் இருநூறும் – நூறும் இருநூறும் ஆக; சீறும் கவி
சேனை – சினங்கொண்ட வானர சேனையை; சிதைக்கும் எனா –
(இப்பிசாசன்) அழிக்கிறானே என்று சொல்லி அஞ்சினர் – அச்சம்
கொண்டார்கள். ஆல் – அசை.

————–

8400.
தோற்றும் உரு ஒன்று எனவே துணியா,
கூற்றின் கொலையால் உழல் கொள்கையனை,
ஏற்றும் சிலை ஆண்மை இலக்குவன், வெங்
காற்றின் படை கொண்டு கடந்தனனால்.–99-

தோற்றும் உரு – பல இடங்களிலும் தோன்றுகின்ற வடிவம்; ஒன்று
எனவே துணியா – ஒன்றுதான் என்று துணிந்து; கூற்றின் கொலையால்
– கூற்றுவனுக்கு உரிய கொலைத் தொழிலோடு; உழல் கொள்கையனை
– திரிகின்ற கொள்கை உடையவனான பிசாசனை; ஏற்றும் சிலை
ஆண்மை இலக்குவன் – நாணேற்றும் வில் போரில் ஆண்மை
கொண்ட இலக்குவன்; காற்றின் படை கொண்டு – கொடுமையான
காற்றின் வாளியினால்; கடந்தனன் – கொன்று வீழ்த்தினான். ஆல் –
அசை.

—————–

8401. குலையப் பொரு சூலன் நெடுங் கொலையும்
உலைவுற்றில, உய்த்தலும் ஓய்வு இலன், ஒண்
தலை அற்று உகவும், தரை உற்றிலனால்-
இலையைப் பரி மேல் கொள் இருக்கையினான்.–100-

இலையப்பரி – தாளத்திற்கு ஏற்ப அடியிட்டு நடக்கும் குதிரையின்;
மேல் கொள் இருக்கையினான் – மேல் நிலையாக இருக்கை
கொண்டவனாகிய (பிசாசன்); ஒண்தலை அற்று உகவும் – தன்
ஒளியுள்ள தலை துண்டுபட்டு விழுந்த பின்பு கூட; குலையப் பொரு
சூலன் – (வானர வீரர்கள்) குலைந்து ஓடும்படியாகப் போர் செய்கிற
சூலத்தை உடையவனாய்;நெடுங் கொலையும் உலைவுற்றில – (தான்)
(செய்து வந்த) பெரும் (போர்க்) கொலையையும் குறைவில்லாமல்;
உய்த்தலும் ஓய்வு இலன் – செய்தலிலும் ஓய்வு கொண்டு
ஒழியாதவனாகி; தரை உற்றிலனால் – தரையில் விழாமல் இருந்தனன்.

——————-

மிகைப் பாடல்கள்

‘அளப்ப அரும் வெள்ளச் சேனை நமர் திறத்து அழிந்தது அல்லால்,
களப்படக் கிடந்தது இல்லை, கவிப் படை ஒன்றதேனும்;
இளைப்புறும் சமரம் மூண்ட இற்றை நாள்வரையும், என்னே
விளைப்ப அரும் இகல் நீர் செய்து வென்றது, விறலின் மிக்கீர்! 1-1

‘இகல் படைத் தலைவர் ஆய எண்பது வெள்ளத்து எண் இல்
தொகைப்பட நின்றோர் யாரும் சுடர்ப் படை கரத்தின் ஏந்தி,
மிகைப்படும் தானை வெள்ளம் ஈர்-ஐந்தோடு ஏகி, வெம் போர்ப்
பகைப் பெருங் கவியின் சேனை படுத்து, இவண் வருதிர்’ என்றான். 1-2

‘மன்னவர் மன்னவ! மற்று இது கேண்மோ!
துன்னும் அரக்கரின் வீரர் தொகைப்பட்டு
உன்னிய நாற்பது வெள்ளமும் உற்று, ஆங்கு
அந் நரன் அம்பினில் ஆவி அழிந்தார். 16-1

மத்த மதக் கரியோடு மணித் தேர்,
தத்துறு வாசி, தணப்பு இல காலாள்,
அத்தனை வெள்ளம் அளப்பு இல எல்லாம்,
வித்தக மானிடன் வாளியின், வீந்த. 16-2

இப் படையோடும் எழுந்து இரவின்வாய்
வெப்பு உறு வன் கவி வீரர்கள் ஓதை
எப் புறமும் செவிடு உற்றதை எண்ணி,
துப்புறு சிந்தையர் (வீரர்) தொடர்ந்தார். 20-1

தேர் நிரை சென்றது; திண் கரி வெள்ளக்
கார் நிரை சென்றது; கால் வய வாசித்
தார் நிரை சென்றது; தாழ்வு அறு காலாள்
பேர் நிரை சென்றது; பேசுவர் யாரே? 22-1

‘ஐய! கேள்: சிவன் கை வாள் கொண்டு, அளப்ப அரும் புவனம் காக்கும்
வெய்யவன் வெள்ளச் சேனைத் தலைவரின் விழுமம் பெற்றோர், கை உறும்
சேனையோடும் கடுகினார் கணக்கிலாதோர், மொய் படைத் தலைவர்’
என்று, ஆங்கு அவர் பெயர் மொழியலுற்றான். 29-1

‘இன்னவர் ஆதியர் அளப்பிலோர்; இவர் உன்ன அருந் தொகை
தெரிந்து உரைக்கின், ஊழி நாள் பின்னரும் செல்லும்’
என்று ஒழியப் பேசினான்; அன்ன போர் அரக்கரும் களத்தை அண்மினார். 35-1

கொடுமரத்திடை இராகவன் கோத்த வெம் பகழி அடல் அரக்கர் என்று
உரைத்திடும் கானகம் அடங்கக் கடிகை உற்றதில் களைந்தது கண்டு,
விண்ணவர்கள், ‘விடியலுற்றது நம் பெருந் துயர்’ என வியந்தார். 58-1

வெற்றி வெம் படைத் தலைவர் என்று உரைத்திடும் வெள்ளத்து
உற்ற போர் வலி அரக்கர்கள், ஒரு தனி முதல்வன்
கொற்ற வெஞ் சரம் அறுத்திட, அளப்பு இலர் குறைந்தார்;
மற்றும் நின்றவர் ஒரு திசை தனித் தனி மலைந்தார். 67-1

தேர் போய் அழிவுற்றது எனத் தெளியா,
போர் மாலி பொருந்து தரைப்பட, முன்
ஓர் மா மரம் நீலன் உரத்தொடு கொண்டு
ஏர் மார்பிடை போக எறித்தனனால். 81-1

அப் போது அழல் வேள்வி அடல் பகைஞன்,
வெப்பு ஏறிய வெங் கனல் போல வெகுண்டு,
‘இப் போர் தருக!’ என்ற இலக்குவன்மேல்
துப்பு ஆர் கணை மாரி சொரிந்தனனால். 85-1

சொரி வெங் கணை மாரி தொலைத்து, இரதம்
பரி உந்திய பாகு படுத்து, அவன் வெம்
பொரு திண் திறல் போக, இலக்குவன் அங்கு
எரி வெங் கணை மாரி இறைத்தனனால். 85-2

முடிவுற்றனன், மாருதி மோதுதலால்,
கொடு வச்சிர எயிற்றன் எனும் கொடியோன்;
விடம் ஒத்த பிசாசன் விறற் பனச-
னொடும் உற்று, இருவோரும் உடன்றனரால். 92-1

பொர நின்ற பணைப் புய வன் பனசன்
நிருதன் களமீது நெருக்கி, அதில் பரி
வெள்ளம் அளப்பு இல பட்டு அழியத்
தரு அங்கை கொடே எதிர் தாக்கினனால். 92-2

பனசன் அயர்வுற்று ஒருபால் அடைய,
தனி வெம் பரி தாவு நிசாசரன் வெங் கனல்
என்ன வெகுண்டு, கவிப் படையின் இனம் எங்கும் இரிந்திட, எய்தினனால். 93-1

விசை கண்டு உயர் வானவர் விண் இரிய,
குசை தங்கிய கோள் என, அண்டமொடு எண்
திசை எங்கணும் நின்று திரிந்துளதால் –
பசை தங்கு களத்து ஒரு பாய் பரியே. 96-1

மற்றும் படை வீரர்கள் வந்த எலாம்
உற்று அங்கு எதிரேறி உடன்று,
அமர்வாய் வில் தங்கும் இலக்குவன் வெங்
கணையால், முற்றும் முடிவு எய்தி முடிந்தனரால். 100-1

—————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ கம்ப ராமாயணம்/யுத்த காண்டம்/18-நாகபாசப் படலம்–

November 2, 2020

அரக்கியர் அழுவது கண்ட இந்திரசித்தன் எழுதல்

‘குழுமி, கொலை வாட் கண் அரக்கியர், கூந்தல் தாழ,
தழுவித் தலைப் பெய்து, தம் கைகொடு மார்பின் எற்றி,
அழும் இத் தொழில் யாதுகொல்?’ என்று, ஓர் அயிர்ப்பும் உற்றான்,
எழிலித் தனி ஏறு என இந்திரசித்து எழுந்தான். 1-

இந்திரசித்து – இந்திரசித்தன்; கொலை வாட்கண் அரக்கியர் –
கொல்லும் தன்மை அமைந்த வாளினைப் போன்ற கண்களை உடைய
அரக்கியர்கள்; குழுமி – ஒன்று சேர்ந்து; கூந்தல் தாழ – கூந்தல்
விரிந்து தொங்க; தழுவித் தலைப் பெய்து – (ஒருவரை ஒருவர்)
கட்டிக்கொண்டு கூட்டமாக; தம்கை கொடு – தங்கள் கைகளைக்
கொண்டு; மார்பின் எற்றி அழும் – மார்பில் அடித்துக் கொண்டு
அழுகிற; இத்தொழில் யாது கொல் என்று – இந்தச் செயல் என்ன
காரணமாகவோ என்று; ஓர் அயிர்ப்பும் உற்றான் – ஓர் ஐயத்தை
(மனதில்) அடைந்து; எழிலித் தனி ஏறு என – மேகத்தின் இடையில்
தோன்றும் ஒப்பில்லாத ஆணிடி போல; எழுந்தான் – எழுந்து
வந்தான்.

———–

‘எட்டு ஆகிய திக்கையும் வென்றவன் இன்றும் ஈடு-
பட்டான் கொல்? அது அன்று எனின், பட்டு அழிந்தான்கொல்? பண்டு
சுட்டான் இவ் அகன் பதியைத் தொடு வேலையோடும்
கட்டான் கொல்? இதற்கு ஒரு காரணம் என்கொல்?’ என்றான். 2-

எட்டு ஆகிய திக்கையும் வென்றவன் – எட்டுத் திசைகளில்
உள்ளார் யாவரையும் வென்றவனாகிய இராவணன்; இன்றும் –
(முதல்நாள் போலவே) இன்றும் கூட, ஈடுபட்டான் கொல் – (தோற்று)
பெருமை அழியப்பெற்றான் போலும்; அது அன்று எனின் – அது
அல்ல என்றால்; பட்டு அழிந்தான் கொல் – (போர்க்களத்தில்); இறந்து
அழிந்தான் போலும், பண்டு சுட்டான் – முன்பு இந்நகரைச்
சுட்டெரித்தவனாகிய அனுமன்; இவ் அகன் பதியை – இந்த அகன்ற
இலங்கை நகரத்தை; தொடு வேலையோடும் – (நகரத்துக்கு நீர்
அரணாக உள்ள) சகரரால் தோண்டப் பட்ட கடலுடன்; கட்டான்
கொல் – பேர்த்து விட்டான் போலும்; இதற்கு ஒரு காரணம் என்
கொல் – இவ்வாறு அரக்க மகளிர் புலம்பி அழுதற்கு உரிய ஒரு
காரணம் எதுவாக இருக்குமோ? என்றான் – என்று பலபடி
ஐயங்கொண்டு கூறினான்.

————-

இந்திரசித்து-இராவணன் உரையாடல்

கேட்டான், ‘இடை உற்றது என்?’ என்று, கிளத்தல் யாரும்
மாட்டாது நடுங்கினர், மாற்றம் மறந்து நின்றார்.
ஓட்டா நெடுந் தேர் கடிது ஓட்டி, இமைப்பின் உற்றான்
காட்டாதன காட்டிய தாதையைச் சென்று கண்டான். 3-

இடை உற்றது என் என்று கேட்டான் – (இந்திரசித்தன்)
இவ்விடத்தில் (துன்பத்துக்குரியதாக) நடந்தது என்ன என்று
கேட்டான்; யாரும் கிளத்தில் மாட்டாது நடுங்கினர் – அதற்கு யாரும்
விடை சொல்ல மாட்டாமல் நடுங்கியவர்களாய்; மாற்றம் மறந்து
நின்றார் – (எதை) விடையாகச் சொல்லுவது என்பதை மறந்து
நின்றார்கள்; ஓட்டா நெடுந்தேர் கடிது ஓட்டி – (காரணத்தை அறிய
விரும்பிய இந்திரசித்தன்) ஓட்டாமலேயே (விரைந்து செல்லும்
சிங்கங்கள் பூட்டிய) பெரிய தேரினை விரைவாகச் செலுத்தி;
இமைப்பின் உற்றான் – கண்ணிமை அளவு நேரத்தில் போய்ச்
சேர்ந்து; காட்டாதன காட்டிய தாதையை – (செயற்கு) அரிய
செயல்களை எல்லாம் செய்து காட்டிய (தன்) தந்தையாகிய
இராவணனைச்; சென்று கண்டான் – சென்று பார்த்தான்.

————-

கண்டான், இறை ஆறிய நெஞ்சினன், கைகள் கூப்பி,
‘உண்டாயது என், இவ்வுழி?’ என்றலும், ‘உம்பிமாரைக்
கொண்டான் உயிர் காலனும்; கும்ப நிகும்பரோடும்
விண் தான் அடைந்தான், அதிகாயனும்-வீர!’ என்றான். 4-

கண்டான் – (இந்திரசித்தன் இராவணனைப்) பார்த்து; இறை ஆறிய
நெஞ்சினன் – சிறிதளவு (துன்பம்) தணிந்த மனமுடையவனாய்;
கைகள் கூப்பி – அவனைக் கைகூப்பித் தொழுது; இவ்வுழி –
இவ்விடத்து; உண்டாயது என் என்றலும் – உண்டாகிய (துயரத்துக்குக்
காரணம்) என்ன என்று கேட்டலும்; வீர – (இராவணன்
இந்திரசித்தனைப் பார்த்து) வீரனே; உம்பிமாரை -உன் தம்பியரைக்; காலனும் உயிர் கொண்டான் – காலன் உயிர்
கொண்டான்; கும்ப நிகும்பரோடும் – கும்பன் நிகும்பன் என்ற
இருவருடன்; அதிகாயனும் – அதிகாயனும்; விண்தான் அடைந்தான் –
வானுலகத்தை அடைந்தான்; என்றான் – என்று கூறினான்.
உம்பிமார் – தேவாந்தகன், நராந்தகன், திரிசிரன் என்போர்.

————-

சொல்லாத முன்னம், சுடரைச் சுடர் தூண்டு கண்ணான்,
பல்லால் அதரத்தை அதுக்கி, விண் மீது பார்த்தான்;
‘எல்லாரும் இறந்தனரோ!’ என ஏங்கி நைந்தான்;-
வில்லாளரை எண்ணின், விரற்கு முன் நிற்கும் வீரன். 5-

வில்லாளரை எண்ணின் – வில் வீரர்களை எண்ணினால்; முன்
விரற்கு நிற்கும் வீரன் – முன் விரலில் நிற்கும் வீரனாகிய
இந்திரசித்தன்; சொல்லாத முன்னம் – (தம்பியரின் இறப்பை
இராவணன்) சொல்லுவதற்கு முன்னமேயே; சுடரைக் சுடர் தூண்டு
கண்ணான் – தீயைக் கூட எரிக்கும் தன்மை வாய்ந்த கண்களை
உடையவனாகி; பல்லால் அதரத்தை அதுக்கி – பற்களால் உதட்டைக்
கடித்து; விண்மீது பார்த்தான் – வானத்தின் மேல் (அண்ணாந்து)
பார்த்தான்; எல்லாரும் இறந்தனரோ – எல்லோரும் இறந்து
விட்டார்களோ? என – என்று; ஏங்கி நைந்தான் – இரக்கம் கொண்டு
வருந்தினான்.

———————

‘ஆர் கொன்றவர்?’ என்றலுமே, ‘அதிகாயன் என்னும்
பேர் கொன்றவன் வென்றி இலக்குவன்; பின்பு நின்றார்
ஊர் கொன்றவனால், பிறரால்’ என, உற்ற எல்லாம்
தார் கொன்றையினான் கிரி சாய்த்தவன் தான் உரைத்தான். 6-

கொன்றவர் ஆர் என்றலும் – (ஏங்கி வருந்திய இந்திர சித்தன்
இராவணனைப் பார்த்துக்) கொன்றவர் யாவர் என்று கேட்க; தார்
கொன்றையினான் கிரி சாய்த்தவன்தான் – மார்பில் கொன்றை மாலை
அணிந்த சிவபிரானுடைய (கைலாய) மலையைப் பெயர்த்துச்
சாய்த்தவானகிய இராவணன்; அதிகாயன் என்னும் பேர் கொன்றவன்
– அதிகாயன் என்னும் பெயருடைவனைக் கொன்றவன்; வென்றி
இலக்குவன் – வெற்றி பொருந்திய இலக்குவன்; பின்பு நின்றார் –
பின்பு நின்றவர்களாகிய கும்பநிகும்பர் முதலியோர்; ஊர்
கொன்றவனால் பிறரால் – (இலங்கை) ஊரைத் தீயிட்டு அழித்த
அனுமனாலும் பிறராலும் (கொல்லப் பட்டனர்); என – என்று,; உற்ற
எல்லாம் – நடந்ததை எல்லாம்; உரைத்தான் – கூறினான்.
அவர்கள் இறந்ததற்குக் காரணம் உன் பிழை தான் எனக்
கூறினான் இந்திரசித்தன் என்க. மன்னா – தந்தை என விளிக்காது
மன்னா என விளித்ததாக அமைத்த நயம் காண்க.

————–

‘கொன்றார் அவரோ? “கொலை சூழ்க!” என நீ கொடுத்தாய்;
வன் தானையர் மானிடர் வன்மை அறிந்தும், மன்னா!
என்றானும் எனைச் செல ஏவலை; இற்றது’ என்னா,
நின்றான், நெடிது உன்னி, முனிந்து, நெருப்பு உயிர்ப்பான். 7-

அக்கப் பெயரோனை – அக்க குமாரன் என்ற பெயர்
கொண்டவனை; நிலத்தொடு அரைத்துளானை – நிலத்தில் தேய்த்து
அழித்தவனாகிய அனுமனை, (நான் பிரமக் கணையால் கட்டிக்
கொண்டு வந்த போது கூட); விக்கல்பொரு – எச்சிலுக்குச் சமமான;
வெவ் உரைத்தூதுவன் என்று – எதிரியின் விருப்பமான சொற்களைச்
சொல்லுகிற தூதுவன் என்று சொல்லி; விட்டாய் – (கொல்லாது) விட்டு
விட்டாய்; புக்கத் தலைப் பெய்தல் நினைந்திலை – (அவனை
விட்டதால் நம் பக்கச் செய்திகள்) எதிர்ப் பக்கத்தில் புகுந்து
நிறைதலை நினைத்தாய் இல்லை; புந்தி இல்லாய் – அறிவு அழிந்து
போனவனே; மக்கள் துணை அற்றனை – (இப்போது நீ) மக்களின்
துணையை இழந்து விட்டாய்; உன் வாழ்க்கை இற்றது மன்னோ – உன்
வாழ்க்கை அழிந்து விட்டது.

—————-

‘அக்கப் பெயரோனை நிலத்தொடு அரைத்துளானை,
விக்கல் பொரு வெவ் உரைத் தூதுவன் என்று விட்டாய்;
புக்கத் தலைப்பெய்தல் நினைந்திலை; புந்தி இல்லாய்!
மக்கள்-துணை அற்றனை; இற்றது உன் வாழ்க்கை மன்னோ! 8-

இன்று – இப்பொழுது; நினைந்தும் – (நடந்தவற்றை) நினைத்தும்;
இயம்பியும் – (உன் மீது) குறை சொல்லியும்; எண்ணியும் தான் என் –
(பலவாறு பலவற்றை) எண்ணிப் பார்த்தும் தான் என்ன பயன்? கொன்
நின்ற படைக்கலத்து எம்பியைக் – கொல்லும் தொழில் நின்ற
படைக்கலங்களை ஏந்திய என் தம்பியாகிய அதிகாயனைக்;
கொன்றுளானை – கொன்றுள்ளவனாகிய; அவன் யாக்கையை – அந்த
இலக்குவனுடைய உடம்பை; அந்நின்ற நிலத்து – அவன் நின்ற
போர்க்களத்தில்; நீக்கி அல்லால் – உயிர் பிரித்தல் இல்லாமல்; மன்
நின்ற நகர்க்கு – நிலை பெறுந்தன்மை பொருந்தி நின்றுள்ள இலங்கை
நகருக்கு; இனி வாரலென் – இனி வர மாட்டேன்; வாழ்வும்
வேண்டேன் – (அதைச் செய்யாமல் போனால் உயிர்) வாழ்வும்
விரும்பேன்.

——-

8011.
‘வெங் கண் நெடு வானரத் தானையை வீற்று வீற்றாய்ப்
பங்கம் உற நூறி, இலக்குவனைப் படேனேல்,
அங்கம் தர அஞ்சி என் ஆணை கடக்கலாத
செங் கண் நெடு மால் முதல் தேவர் சிரிக்க, என்னை!

வெங்கண நெடுவானரத் தானையை – கொடிய கண்களை உடைய
பெரிய வானரப் படையை; வீற்று வீற்றாய் – கூட்டம் கூட்டமாக;
பங்கம் உற நூறி – துண்டு பட்டு அழியும்படியாகச் சிதைத்து;
இலக்குவனைப் படேனேல் – (எம்பியைக் கொன்ற) இலக்குவனைப்
போரில் கொல்லாது விடுவேன் எனின்; அங்கம் தர அஞ்சி – (போரில்
புறங்கொடாது) மார்பு காட்டி (நிற்பதற்கு) பயந்து; என் ஆணை
கடக்கலாத – என் ஆணையை மீற முடியாத; செங்கண் நெடுமால்
முதல் தேவர் – சிவந்த கண்களை உடைய திருமாலை முதலாகக்
கொண்ட தேவர்கள்; என்னைச் சிரிக்க – என்னைப் பார்த்து
நகைக்கட்டும்.

——————

8012.
‘மாற்றா உயிர் எம்பியை மாற்றிய மானுடன்தன்
ஊற்று ஆர் குருதிப் புனல் பார்மகள் உண்டிலாளேல்,
ஏற்றான் இகல் இந்திரன் ஈர்-இரு கால், எனக்கே
தோற்றான் தனக்கு என் நெடுஞ் சேவகம் தோற்க’
என்றான்.–11-

மாற்றா உயிர் எம்பியை – (பிறரால்) போக்க முடியாத உயிரை
உடைய என் தம்பியாகிய (அதிகாயனை); மாற்றிய மானுடன் தன் –
உயிர் வாங்கிய மனிதனாகிய (இலக்குவன்) தன்; ஊற்று ஆர் குருதிப்
புனல் – ஊற்றுப் போல் நிறைந்து பெருகி வரும் இரத்த
வெள்ளத்தைப்; பார்மகள் உண்டிலாளேல் – நிலமாகிய பெண்
உண்ணாமல் போனால்; இகல் இந்திரன் – போராற்றல் மிக்க இந்திரன்;
எனக்கே ஏற்றான் – என்னுடன் போர் ஏற்று; தோற்றான் தனக்கு –
தோற்றவனாகிய (அவன்) தனக்கு; என் நெடுஞ் சேவகம் – என்
பெருவலிமை; ஈர் இருகால் – நான்குமுறை; தோற்க – தோற்றது
ஆகட்டும்; என்றான் – (என்று இந்திரசித்தன்) கூறினான்.

———-

8013.
‘பாம்பின் தரு வெம் படை, பாசுபதத்தினோடும்,
தேம்பல் பிறை சென்னி வைத்தான் தரு தெய்வ ஏதி,
ஓம்பித் திரிந்தேன் எனக்கு இன்று உதவாது போமேல்,
சோம்பித் துறப்பென்; இனிச் சோறும் உவந்து வாழேன்.–12-

பாம்பின் தருவெம்படை – பாம்பு வடிவில் அமைந்த கொடிய
படையினையும்; பாசு பதத்தினோடும் – பாசு பதப்படையினையும்;
தேம்பல் பிறை சென்னி வைத்தான் – குறைந்த கலையுடைய பிறைச்
சந்திரனைத் தலையில் அணிந்தவனாகிய சிவபிரான்; தரு தெய்வஏதி –
தந்த தெய்வத்தன்மை பொருந்திய வாட்படையினையும்; ஓம்பித்
திரிந்தேன் எனக்கு – பாதுகாத்துத் திரிந்தவன் ஆகிய எனக்கு; இன்று
உதவாது போமேல் – (அவை) இன்று உதவாமல் போகுமானால்;
சோம்பித் துறப்பென் – (என் உயிரைச்) சோம்பல் அடைந்து விட்டு
விடுவேன்; இனிச் சோறும் உவந்து வாழேன் – இனிமேல் சோற்றையும்
விரும்பி வாழமாட்டேன்;

—————–

8014.
‘மருந்தே நிகர் எம்பிதன் ஆர் உயிர் வவ்வினானை
விருந்தே என அந்தகற்கு ஈகிலென், வில்லும் ஏந்தி,
பொரும் தேவர் குழாம் நகைசெய்திடப் போந்து, பாரின்
இருந்தேன்எனின், நான் அவ் இராவணி அல்லென்’
என்றான்.–13-

மருந்தே நிகர் எம்பிதன் – சாவா மருந்தைப் போன்ற என்
தம்பியாகிய அதிகாயன் தன்; ஆர் உயிர் வவ்வினானை – அரிய
உயிரைக் கவர்ந்தவன் ஆகிய (இலக்குவனை); அந்தகற்கு விருந்தே
என ஈகிலென் – யமனுக்கு விருந்து என்று கொடுக்காமல்; பொரும்
தேவர் குழாம் நகை செய்திட – (என்னுடன்) போரிடும்
(பகைவர்களான) தேவர்களின் கூட்டம் (எள்ளி) நகை செய்திட;
வில்லும் ஏந்தி – வில்லையும் (கையில்) ஏந்தி; நான் – நான்; பாரின்
போந்து இருந்தேன் எனின் – நிலத்தில் பொருந்தி இருந்தேன்
என்றால்; அவ் ‘இராவணி அல்லென் – அந்த இராவணனுடைய மகன்
அல்லேன்; என்றான் – என்று (இந்திரசித்தன்) கூறினான்.

————–
8015.
‘ஏகா, இது செய்து, எனது இன்னலை நீக்கிடு; எந்தைக்கு
ஆகாதனவும் உளவோ? எனக்கு ஆற்றலார்மேல்
மா கால் வரி வெஞ் சிலையோடும் வளைத்த போது
சேகு ஆகும் என்று எண்ணி, இவ்இன்னலின் சிந்தை
செய்தேன்.’–14-

ஏகா- (இராவணன் இந்திரசித்தனைப் பார்த்து நீ) ஏகி; இது செய்து
– (இலக்குவனைக் கொல்வதாகிய) இதனைச் செய்து; எனது இன்னலை
நீக்கிடு – எனது துன்பத்தைப் போக்கி விடுக; எந்தைக்கு
ஆகாதனவும் உளவோ – எந்தை போன்றவனாகிய (உன்னால்) செய்ய
முடியாத செயல்களும் உள்ளனவா (இல்லை என்றபடி); இவ்
இன்னலின் – (எனக்கு ஏற்பட்ட) மக்களை இழத்தலாகிய
துன்பக்காலத்தில்; எனக்கு – எனக்காக; ஆற்றலார் மேல் – (நீ)
பகைவர் மேல் சென்று; மாகால் வரி வெஞ்சிலை யோடும் – பெரிய
தண்டினை உடைய கட்டமைந்த கொடிய வில்லோடு கூட;
வளைத்தபோது – (அவர்களை) வளைத்த காலத்தில்; சேகு ஆகும் என்று எண்ணி – (அச்செயல் எனக்கு)
உறுதியை உண்டாக்கும் என்று எண்ணிப் பார்த்து; சிந்தை செய்தேன்
– (உன்னை அனுப்ப) மனதில் எண்ணினேன்.

—————

இந்திரசித்தன் போர்க்கோலம் பூண்டு, களம் புகுதல்

8016.
என்றானை வணங்கி, இலங்கு அயில் வாளும் ஆர்த்திட்டு,
ஒன்றானும் அறா, உருவா, உடற்காவலோடும்,
பொன் தாழ் கணையின் நெடும் புட்டில் புறத்து வீக்கி,
வன் தாள் வயிரச் சிலை வாங்கினன்-வானை வென்றான்.–15-

என்றானை – என்று கூறிய இராவணனை; வானை வென்றான் –
வானுலகத்தில் உள்ளவர்களை வென்றவனாகிய இந்திரசித்தன்;
வணங்கி – வணங்கி; ஒன்றானும் அறா உருவா உடற்காவலோடும் –
ஒன்றினாலும் அறுக்கவோ (அ) ஊடுருவிச் செல்லவோ முடியாத
கவசத்தோடு; இலங்கு அயில்வாளும் ஆர்த்திட்டு – ஒளி விளங்குகிற
கூர்மையான வாளையும் (இடையில்) அணிந்து கொண்டு; பொன் தாழ்
கணையின் நெடும் புட்டில் – பொன் போல் ஒளிவீசுவதும், உள்ளே
ஆழ்ந்த வடிவம் கொண்டதுமான, பெரிய அம்பு அறாத் துணிகளை;
புறத்து வீ்க்கி – (தோள்களின்) புறத்தில் கட்டிக்கொண்டு; வன்தாள்
வயிரச்சிலை வாங்கினன் – வலிய (இரு) முனைகளை உடைய
உறுதியான வில்லை எடுத்துக் கொண்டான்.

————-

8017.
வயிரந் நெடு மால் வரை கொண்டு, மலர்க்கண் வந்தான்,
செயிர் ஒன்றும் உறா வகை, இந்திரற்கு என்று செய்த
உயர் வெஞ் சிலை; அச் சிலை பண்டு அவன் தன்னை
ஓட்டி,
துயரின் தலை வைத்து, இவன் கொண்டது; தோற்றம்ஈதால். –16-

அச்சிலை – (இந்திரசித்தன் கையில் கொண்டிருந்த) அந்த
வில்லானது; மலர்க்கண் வந்தான் – (மாலின் நாபித்) தாமரையில்
தோன்றியவன் ஆகிய பிரமன்; செயிர் ஒன்றும் உறாவகை – துன்பம்
ஒன்றும் ஒரு சிறிதும் உண்டாகாமல்; இந்திரற்கு என்று – ;இந்திரனுக்கு
என்று; வயிரந் நெடுமால் வரை கொண்டு செய்த – வலிமையான
பெரிய வச்சிரமலையைக் கொண்டு செய்த; உயர் வெஞ்சிலை – சிறந்த
கொடிய வில்லாகும்; பண்டு – முன்பு; அவன் தன்னை துயரின் தலை
வைத்து ஓட்டி – அந்த இந்திரனைத் துன்பத்துக்கு உள்ளாக்கித்
தோற்று ஓடச் செய்து; இவன் கொண்டது – இந்த இந்திரசித்தன்
(பறித்துக்) கைக்கொண்டதாகும்; தோற்றம் ஈதால் – (இவ்வில்லின்)
வரலாறு இதுவேயாகும்.

————-

8018.
தோளில் கணைப் புட்டிலும், இந்திரன் தோற்ற நாளே
ஆளித் திறல் அன்னவன் கொண்டன; ஆழி ஏழும்
மாள, புனல் வற்றினும் வாளி அறாத; வண்கண்
கூளிக் கொடுங் கூற்றினுக்கு ஆவது ஓர் கூடு போல்வ–17-

தோளில் கணைப்புட்டிலும் – (இந்திரசித்தன்) தோளில் கட்டியுள்ள
அம்பு அறாத்தூணிகளும்; இந்திரன் தோற்ற நாளே – இந்திரன்
தோற்றுத் தன்னிடம் சிறைப்பட்ட நாளில்; ஆளித்திறல் அன்னவன்
கொண்டன – யாளியினைப் போன்ற வலிமையுடைய
அத்தன்மையனான (இந்திரசித்தன்); கொண்டன – அவனிடம்
பறித்துக் கொண்டவை ஆகும்; ஆழி ஏழும் மாள புனல் வற்றினும் –
கடல்கள் ஏழும் இல்லை என்று கூறுமாறு (அவற்றின்) நீர் முழுதும்
வற்றிவிட்டாலும்; வாளி அறாத – (எடுக்க எடுக்க) அம்புகள் குறையாத;
வன்கண் கூளி – கொடிய கண்களை யுடைய பேய்களுக்கும்;
கொடுங்கூற்றினுக்கும் – கொடிய யமனுக்கும்; ஆவது ஓர்கூடு போல்வ
– பிணங்களையும் உயிரையும் உணவாக்கித் தருகின்ற ஒரு கூண்டைப்
போன்றுள்ளன,

—————

8019.
பல்லாயிர கோடி படைக்கலம், பண்டு, தேவர்
எல்லாரும் முனைத்தலை யாவரும் ஈந்த, மேரு
வில்லாளன் கொடுத்த, விரிஞ்சன் அளித்த, வெம்மை
அல்லால் புரியாதன, யாவையும் ஆய்ந்து, கொண்டான்.–18-

பண்டு தேவர் எல்லாரும் – முற்காலத்தில் தேவர்கள் எல்லோரும்;
முனைத்தலை யாவரும் ஈந்த – போர்க்களத்தில் (இந்திர சித்தனுக்குத்
தோற்றுக்) கொடுத்தவையும்; மேருவில்லாளன் கொடுத்த –
மேருமலையை வில்லாகக் கொண்ட சிவபிரான் கொடுத்தவையும்;
விரிஞ்சன் அளித்த – பிரமன் கொடுத்தவையும் (ஆகிய); வெம்மை
அல்லால் புரியாதன – கொலைத் தொழில் அல்லது வேறு
புரியாதனவுமாகிய; பல்லாயிரம் கோடி படைக்கலம் – பல்லாயிரம்
கோடி என்னும் படியான (மிகப்பல) படைக்கலங்கள்; யாவையும்
ஆய்ந்து கொண்டான் – எல்லாவற்றையும் ஆராய்ந்து எடுத்துக்
கொண்டான்.

————

8020.
நூறாயிரம் யாளியின் நோன்மை தெரிந்த சீயத்து
ஏறாம் அவை அன்னவை ஆயிரம் பூண்டது என்ப;
மாறாய் ஓர் இலங்கை நிகர்ப்பது; வானுளோரும்
தேறாதது-மற்று அவன் ஏறிய தெய்வ மாத் தேர்.–19-

அவன் ஏறிய தெய்வ மாத்தேர் – அந்த இந்திர சித்தன் ஏறிய
தெய்வத்தன்மை பொருந்திய பெரியதேர்; நூறாயிரம் யாளியின்
நோன்மை தெரிந்த – நூறாயிரம் யாளிகளின் வலிமையைத்
(தனித்தனியாகக்) கொண்ட; அன்னவை அவை ஆயிரம் ஏறாம்
சீயத்து – அப்படிப்பட்ட தொகுதியாகிய ஆயிரம் ஆண்சிங்கங்கள்;
பூண்டது என்ப – பூட்டப்பெற்றது;மாறாய் ஓர் இலங்கை நிகர்ப்பது –
வேறாகிய ஓர் இலங்கையை ஒத்துள்ளது; வானுளோரும் தேறாதது –
தேவர்களாலும் இத்தன்மையது என அறியப்படாதது.

——————-

8021.
பொன் சென்று அறியா உவணத் தனிப் புள்ளினுக்கும்,
மின் சென்று அறியா மழுவாளன் விடைக்கும், மேல் நாள்,
பின் சென்றது அல்லது ஒரு பெருஞ் சிறப்பு உற்ற போதும்,
முன் சென்று அறியாதது, மூன்று உலகத்தினுள்ளும். –20-

பொன் சென்று அறியா – (அத்தேர் நிறத்தினால்) பொன்னும்
உவமை என்று கூறமுடியாத; உவணத் தனிப்புள்ளினுக்கும் – கருடன்
என்னும் ஒப்பற்ற பறவைக்கும்; மின்சென்று அறியா மழுவாளன்
விடைக்கும் – மின்னலும் ஒப்பாகச் சென்று அறியாத மழுப்படையைக்
(கையில்) ஏந்திய சிவபிரானது இடபத்துக்கும்; மேல்நாள் –
முற்காலத்தில்; பின் சென்றது அல்லது – (அவைகள் தோற்றுப் போய்
முன்னால் ஓடியபோது அவற்றைத் துரத்திக் கொண்டு பின்னால்
சென்றதே அல்லாமல்; ஒரு பெருஞ்சிறப்பு உற்ற போதும் – ஒப்பற்ற
(தன் வலிமை துணை வலிமை) முதலிய பெருஞ் சிறப்பைப் பெற்ற
காலத்தில் கூட; மூன்று உலகத்தினுள்ளும் – மூன்று உலகங்களிலும்;
முன் சென்று அறியாதது – தோல்வி அடைதலால் அவைகள்
பின்னால் துரத்தி வரத்தான்தோற்று முன்சென்று அறியாதது.

————

8022.
‘ஏயாத் தனிப் போர் வலி காட்டிய இந்திரன்தன்
சாயாப் பெருஞ் சாய் கெட, தாம்புகளால் தடந் தோள்
போய் ஆர்த்தவன் வந்தனன், வந்தனன்’ என்று பூசல்
பேய் ஆர்த்து எழுந்து ஆடு நெடுங் கொடி பெற்றது அம்மா!–21-

ஏயாத் தனிப்போர் வலி காட்டிய இந்திரன் தன் – (அத்தேர்)
ஒப்பில்லாத சிறந்த போர் வலிமையைக் காட்டிப் (போரிட்ட) இந்திரன்
தன்னுடைய; சாயாப் பெருஞ்சாய் கெட – அழியாத பெரு வலிமை
அழியும்படியாக; தாம்புகளால் தடந்தோள் போய் ஆர்த்தவன்
-கயிறுகளால் (மாயைப் பாசத்தால்) (அந்த இந்திரனுடைய) அகன்ற
தோள்களைப் (போரில்) சென்று கட்டிய (வீரன்); வந்தனன் வந்தனன்
என்று – வந்தான் வந்தான் என்று; பூசல் பேய் ஆர்த்து எழுந்து
ஆடு – பேரொலியுடைய பேய்கள் இரைத்து எழுந்து ஆடுகிற; நெடுங்கொடி பெற்றது அம்மா – பெரிய
கொடியைப் பெற்றது.

———–

8023.
செதுகைப் பெருந் தானவர் ஊனொடும் தேய்த்த நேமி-
யது;-’கைத் திசை யானையை ஓட்டியது’ என்னலாமே?-
மதுகைத் தடந் தோள் வலி காட்டிய வான வேந்தன்
முதுகைத் தழும்பு ஆக்கிய மொய் ஒளி மொட்டது
அம்மா!–22-

செதுகைப் பெருந்தானவர் – (மேலும் அந்தத் தேர்) பொருதலைச்
செய்த பெரிய அசுரர்களுடைய; ஊனொடும் தேய்த்த நேமியது –
உடம்புகளைத் (தேய்த்து) அழித்த சக்கரங்களை உடையது; மதுகைத்
தடந்தோள் வலி காட்டிய – வெற்றி பொருந்திய தன் பெருந்தோள்
வலிமையைக் காட்டிப் போர் செய்த; வானவேந்தன் முதுகைத் தழும்பு
ஆக்கியது – இந்திரனது முதுகில் தழும்பை உண்டாக்கிய; மொய் ஒளி
மொட்டது – நிறைந்து ஒளியுடைய மொட்டு என்ற (தேர் உறுப்பை)
உடையது; கைத்திசை யானையை ஓட்டியது என்னலாமோ அம்மா –
(இத்துணை சிறப்புப் பெற்றிருப்பதால்) துதிக்கைகளை உடைய
திசையானைகளை வென்று விரட்டியது என்று கூறுதல்(அதற்குச்
சிறப்போ?

———–

8024.
அத் தேரினை ஏறியது ஒப்பன ஆயிரம் தேர்
ஒத்து ஏய்வன சேமமதாய் வர, ‘உள்ளம் வெம் போர்ப்
பித்து ஏறினன்’ என்ன, நடந்தனன்- பின்பு அலால், மற்று
எத் தேவரையும் முகம் கண்டு அறியாத ஈட்டான். –23-

எத்தேவரையும் – எல்லாத் தேவர்களையும்; (தோற்று ஓடச்
செய்ததால்) பின்பு அலால் மற்று – (அவர்களின்) பின்புறத்தை
அல்லாமல்; முகங்கண்டு அறியாத – (எதிர்வந்த) முகத்தைக் கண்டு
அறியாத; ஈட்டான் – வலிமை உடையவன் ஆகிய இந்திரசித்தன்;
அத்தேரினை ஏறி – அந்தத் தேரின் கண் ஏறிக்கொண்டு; அது
ஒப்பன ஆயிரம் தேர் – அந்தத் தேரினைப் போன்ற ஆயிரம்
தேர்கள்; சேமமதாய் வர – பாதுகாவலாய் வர; உள்ளம் வெம்போர்ப்
பித்து ஏறினன் என்ன – மனத்தில் கொடுமையான போர்ப் பித்துக்
கொண்டவன் என்று சொல்லும்படியாக; நடந்தனன் – போர்க்களம்
நோக்கி நடந்தான்.

———-

8025.
அன்னானொடு போயின தானை அளந்து கூற
என்னால் அரிதேனும், இயம்பு வான்மீகன் என்னும்
நல் நான்மறையான் ‘அது நாற்பது வெள்ளம்’ என்னச்
சொன்னான்; பிறர் யார், அஃது உணர்ந்து தொகுக்கவல்லார்.–24-

அன்னானொடு – அந்த இந்திரசித்தனோடு; போயின தானை –
(உடன்) சென்ற படைகளின் அளவை; என்னால் அளந்து கூற
அரிதேனும் – என்னால் இவ்வளவு என்று அறுதியிட்டு அளந்து கூறல்
அருமையானதென்றாலும்; இயம்பு வான்மீகன் என்னும் – (பிறரால்)
சிறப்பித்துச் சொல்லப்படுகிற வான்மீகி என்கிற; நல்நான் மறையான் –
சிறப்புடைய நான்கு வேதங்களையும் கற்றறிந்த முனிவன்; அது
நாற்பது வெள்ளம் என்னச் சொன்னான் – அச்சேனையின் அளவு
நாற்பது வெள்ளம் என்று கூறினான்; அஃது உணர்ந்து தொகுக்க
வல்லார் – அச்சேனையின் (அளவை) அறிந்து தொகுத்து உரைக்க
வல்லவர்கள்; பிறர் யார் – அவனன்றிப் பிறர் யாருளர் என்றவாறு.

இயம்பு வான்மீகன் – முதல் நூலை இயம்பிய வால்மீகி முனிவர்
எனினுமாம்.

———–

8026.
தூமக் கண் அரக்கனும், தொல் அமர் யார்க்கும் தோலா
மாபக்கனும், அந் நெடுந் தேர் மணி ஆழி காக்க,
தாமக் குடை மீது உயர, பெருஞ் சங்கம் விம்ம,
நாமக் கடற் பல இயம் நாற்கடல் மேலும் ஆர்ப்ப.–25-

தூமக் கண் அரக்கனும் – புகை நிறக்கண்ணனான அரக்கனும்;
தொல் அமர் யார்க்கும் தோலா மாபக்கனும் -(முன்பு நடந்த) பழைய
போர்களில் எவருக்கும் தோல்வி அடையாத மாபக்கன் என்பவனும்;
அந்நெடுந் தேர் ஆழிகாக்க – (இந்திரசித்தன் ஏறிச்சென்ற) அந்தப்
பெரிய தேரின் அழகிய சக்கரத்தைக் காத்து நிற்க; தாமக்குடை மீது
உயர – வெண்கொற்றக்குடை மேல் பொருந்திய விளங்க; பெருஞ்
சங்கம் விமம் – பெரிய சங்குகள் முழங்க; நாமக்கடல் பல்இயம் –
அச்சத்தை உண்டாக்குகிற கடல் போல் மிகுந்த பல்வகை
வாத்தியங்கள்; நாற்கடல் மேலும் ஆர்ப்ப – நான்கு கடல்களிலும்
மிகுதியாகப் பேரொலி எழுப்பவும்; ‘சென்றனன்’ என அடுத்த
பாடலொடு தொடர்ந்து முடியும்.

———

8027.
தேர் ஆயிரம் ஆயிர கோடி தன் மாடு செல்ல,
போர் ஆனை புறத்தின் அவற்றின் இரட்டி போத;
தார் ஆர் புரவிக் கடல் பின் செல, தானை வீரப்
பேர் ஆழி முகம் செல, சென்றனன்-பேர்ச்சி இல்லான்.–26-

பேர்ச்சி இல்லான் – போரில் தளர்ச்சி இல்லாதவனாகிய
இந்திரசித்தன்; ஆயிரம் ஆயிரகோடி தேர் தன் மாடு செல்ல –
ஆயிரமாயிரம் கோடித் தேர்கள் தன் பக்கத்தில் (பாதுகாவலாய்)
நெருங்கி வரவும்; அவற்றின் இரட்டி – (அந்தத் தேர்களின்) இரு
மடங்காக; போர் ஆனைபுறத்தின் போத – போராற்றல் உள்ள
யானைகள் புறக்காவலாகச் சூழ்ந்து வரவும், தார் ஆர் புரவிக் கடல்
பின்செல – மாலையணிந்த குதிரைப் படைக்கடல் பின்னால்
வரவும்; தானை வீரப்பேர் ஆழிமுகம் செல – தரைப்படை
வீரர்களது பெருங்கடல் முன்னே செல்லுமாறு; சென்றனன் –
சென்றான்.

—————–

வருபவன் யார்’ என் இலக்குவன் வீடணனை வினவல்

8028.
நின்றனன் இலக்குவன், களத்தை நீங்கலன்-
‘பொன்றினன், இராவணன் புதல்வன்; போர்க்கு இனி,
அன்று அவன், அல்லனேல் அமரர் வேந்தனை
வென்றவன், வரும்’ என விரும்பும் சிந்தையான்.–27-

இராவணன் புதல்வன் பொன்றினன் – இராவணன் மகனாகிய
அதிகாயன்’ இறந்துவிட்டான்; இனி போர்க்கு – இனிமேல் போருக்கு;
அன்று அவன் – சினம் மிக்க இராவணன்; அல்லனேல் –
அவனல்லன் எனின்; அமரர் வேந்தனை வென்றவன் – தேவர்
தலைவனை வென்றவன் ஆகிய இந்திர சித்தன்; வரும் என – (ஆகிய
இருவரின் ஒருவர்) வருவர் என்று; விரும்பும் சிந்தையான் –
ஆசையுடன் (எதிர்பார்க்கும்) மனதுடன்; இலக்குவன் – இலக்குவன்;
களத்தை நீ்ங்கலன் – போர்க்களத்தை விட்டு நீங்காதவனாய்;
நின்றனன் – நின்றான்.

——–

வீடணன் விடை
8029.
‘யார், இவன் வருபவன்? இயம்புவாய்!’ என,
வீர வெந் தொழிலினான் வினவ, வீடணன்,
‘ஆரிய! இவன் இகல் அமரர் வேந்தனைப்
போர் கடந்தவன்; இன்று வலிது போர்’ என்றான்.–28-

வீரவெந்தொழிலினான் – வீரக் கொடுந்தொழிலை உடைய
(இலக்குவன்); இவன் வருபவன் யார்? – (இதோ இங்கு) வருகின்றவன்
யார் என்று; (வீடணனைப் பார்த்து) இயம்புவாய் – சொல்லுவாய்
என்று கேட்க; வீடணன் – (அதற்கு விடையாக) வீடணன்; ஆரிய –
ஆடவரில் சிறந்தவனே; இவன் – வருகின்ற இவன்; இகல் அமரர்
வேந்தனை – போர் ஆற்றல் மிக்க தேவர் தலைவனைப்; போர் கடந்தவன் – போரில் வஞ்சியாது எதிர் நின்று
வென்றவன்; இன்று போர் வலிது என்றான் – இன்றைய போர்
கடுமையானது என்று கூறினான்.

———

8030.
‘எண்ணியது உணர்த்துவது உளது, ஒன்று-எம்பிரான்!-
கண் அகன் பெரும் படைத் தலைவர் காத்திட,
நண்ணின துணையொடும் பொருதல் நன்று; இது
திண்ணிதின் உணர்தியால், தெளியும் சிந்தையால்.–29-

எம்பிரான் – எமக்குத் தலைவனே (என்று வீடணன்) இலக்குவனை
விளித்து); எண்ணியது ஒன்று – (நான்) எண்ணியதாகிய ஒன்றை;
உணர்த்துவது உளது – உனக்குத் தெரிவிக்க வேண்டி உளது; கண்
அகன் பெரும் படைத்தலைவர் காத்திட – (அது என்னவென்றால்)
இடமகன்ற பெரிய படைக்குத் தலைவர்கள் (உனக்குத் துணையாகக்)
காத்திட; நண்ணிய துணையொடும் – பொருந்திய துணைவர்களோடு;
பொருதல் நன்று – (இந்த இந்திரசித்தனுடன்) போரிடுதல் நல்லது; இது
– இக்கருத்தை; தெளியும் சிந்தையால் – ஆய்ந்து அறியும் மனத்தால்;
திண்ணிதின் உணர்தியால் – உறுதியாக எண்ணிப் பார்ப்பாய்.

———–

8031.
‘மாருதி, சாம்பவன், வானரேந்திரன்,
தாரை சேய், நீலன் என்று இனைய தன்மையார்,
வீரர், வந்து உடன் உற,-விமல!-நீ நெடும்
போர் செயத் தகுதியால்-புகழின் பூணினாய்!–30-

விமல – குற்றம் அற்றவனே; புகழின் பூணினாய் – புகழை
அணிகலனாக அணிந்தவனே; மாருதி – அனுமனும்; சாம்பவன் –
கரடித் தலைவன் ஆகிய சாம்பவானும்; வானரேந்திரன் –
குரங்குகளின் தலைவனாகிய சுக்ரீவனும்; தாரை சேய் – தாரையின்
மகனாகிய அங்கதனும்; நீலன் – படைத்தலைவன் ஆகிய நீலனும்;
என்று இனைய தன்மையார் – என்று கூறப்பட்ட இத்தகைய தன்மை
உள்ளவர்களான; வீரர் உடன் வந்து உற – வீரர்கள் உன்னுடன் வந்து பொருந்த; நீ – நீ (இந்திரசித்தனுடன்); நெடும்
போர் செயத்தகுதியால் – பெரும் போரை விளைவித்தல் தகுதியாகும்.

———–

8032.
‘பல் பதினாயிரம் தேவர் பக்கமா,
எல்லை இல் சேனை கொண்டு எதிர்ந்த இந்திரன்
ஒல்லையின் உடைந்தனன், உயிர் கொண்டு உய்ந்துளான்-
மல்லல் அம் தோளினாய்!-அமுதின் வன்மையால்.–31-

மல்லல் அம் தோளினாய் – பெருமை மிகுந்த அழகிய தோள்களை
உடையவனே; பல்பதினாயிரம் தேவர் – பல பதினாயிரக்கணக்கான
தேவர்கள்; பக்கமா – பக்க பலமாக வர;எல்லையில் சேனை கொண்டு
– அளவில்லாத படைகளைக் கொண்டு; எதிர்ந்த இந்திரன் – (இந்த
இந்திரசித்தனை) எதிர்த்த இந்திரன்; அமுதின் வன்மையால் –
அமுதம் உண்டதன் காரணமாக; ஒல்லையில் உடைந்தனன் –
விரைவில் தோற்றவனாகியும் கூட; உயிர் கொண்டு உய்ந்துளான் –
உயிரை விடாமல் கொண்டு தப்பிப் பிழைத்துள்ளான்.

———–

8033.
‘இனி அவை மறையுமோ, இந்திரன் புயப்
பனி வரை உள நெடும் பாசப் பல் தழும்பு?
அனுமனைப் பிணித்துளன் ஆனபோது, இவன்
தனு மறை வித்தகம் தடுக்கற்பாலதோ?’–32-

இந்திரன் புயப்பனிவரை உள – இந்திரனுடைய தோள்களாகிய
பனிமலையில் (இமயமலையில்) உள்ள; நெடும் பாசப் பல்தழுப்பு –
(இவன் பிணித்ததால் ஏற்பட்ட) நீண்ட (மாயைக்) கயிற்றினால்
உண்டான பல தழும்புகள்; இனி அவை மறையுமோ – இனிமேல்
மறைந்து விடுமோ? அனுமனைப் பிணித்துளன் ஆனபோது – (அது
மட்டும் அல்லாமல்) அனுமனையே பிரமனது கணையால்
கட்டியவனாக இருக்கும் போது; இவன் – இந்த இந்திரசித்தனுடைய;
தனுமறை வித்தகம் – வில்பயிற்சியின் திறமை; தடுக்கற் பாலதோ –
(பகைவரால்) தடுத்தற்கு உரியதோ.

—————–

8034.
என்று, அவன் இறைஞ்சினன்; இளைய வள்ளலும்,
‘நன்று’ என மொழிதலும், நணுகினான் அரோ-
வன் திறல் மாருதி, ‘இலங்கைக் கோ மகன்
சென்றனன் இளவல்மேல்’ என்னும் சிந்தையான்.–33-

என்று – என்று கூறி; அவன் இறைஞ்சினன் – அந்த வீடணன்
வணங்கினான்; இளைய வள்ளலும் – இளைய வள்ளலாகிய
இலக்குவனும்; நன்று என மொழிதலும் – நல்லது என்று கூறிய
உடனே; இலங்கைக் கோமகன் – இலங்கை அரசனாகிய
இராவணனுடைய மகன்; இளவல் மேல் சென்றனன் என்னும் –
இளவலாகிய இலக்குவன் மீது செல்லுகிறான் என்று எண்ணுகிற;
சிந்தையான் – மனத்தினை உடையவனான; வன்திறல் மாருதி – மிகு
வலி உடைய அனுமன்; நணுகினான் – (இலக்குவனை) நெருங்கி
வந்தான். அரோ – அசை.

———-

8035.
கூற்றமும் கட்புலம் புதைப்ப, கோத்து எழு
தோற்றமும், இராவணி துணிபும், நோக்குறா,
மேல் திசை வாயிலை விட்டு, வெங் கடுங்
காற்று என அணுகினன், கடிதின் வந்துஅரோ,–34-

கோத்து எழு – (போருக்கு உரிய படைக்கலங்களைக்) கோத்து
எடுத்துகொண்டு எழுகின்ற; இராவணி – இராவணன் மகனாகிய
இந்திரசித்தனது; தோற்றமும் துணிபும் நோக்குறா – தோற்றத்தையும்
துணிவையும் பார்த்து; கூற்றமும் கட்புலம் புதைப்ப – (அனுமன் தன்
விரைவு கண்டு) இயமனும் (அஞ்சிக்) கண்களை மூடிக்கொள்ளுமாறு;
மேல்திசை வாயிலை விட்டு – (தான் இருந்த இலங்கையின்) மேற்குத்
திசை வாயிலை விட்டு; வெங்கடுங்காற்று என – கொடிய வேகமான
காற்றுப்போல; கடிதின் வந்து அணுகினன் – விரைந்து
(இலக்குவனிடம்) வந்து சேர்ந்தான்.

—————-

8036.
அங்கதன் முன்னரே ஆண்டையான்; அயல்
துங்க வன் தோளினார் எவரும் சுற்றினார்;
செங் கதிரோன் மகன் முன்பு சென்றனன்,
சங்க நீர்க் கடல் எனத் தழீஇய தானையே.–35-

முன்னரே – முன்பே; அங்கதன் ஆண்டையான் – அங்கதன்
(இலக்குவன் இருந்த) அந்த இடத்திற்கு வந்து சேர்ந்திருந்தான்;
துங்கவன் தோளினார் அயல் எவரும் சுற்றினார் – உயர்ந்த
வலிமையான தோள்களை உடைய பிற வானர வீரர்கள் அனைவரும்
(இலக்குவனுக்குத் துனணயாக அவனைச்) சுற்றிச் சூழ்ந்தனர்; சங்க
நீர்க்கடல் எனத் தழீஇய தானையே – சங்குகள் நிறைந்த நீரையுடைய
கடல் போல (இலக்குவனைக்) குரங்குச் சேனை சூழ்ந்து நிற்க;
செங்கதிரோன் மகன் – சிவந்த கதிர்களை உடைய கதிரவன்
மகனாகிய சுக்ரீவன்; முன்பு சென்றனன் – (இலக்குவனுக்கு முன்னால்)
போரிடச் சென்றான்.

———

இரு படைகளும் பொருதல்
8037.
இரு திரைப் பெருங் கடல் இரண்டு திக்கினும்
பொரு தொழில் வேட்டு எழுந்து ஆர்த்துப் பொங்கின
வருவன போல்வன்-மனத்தினால் சினம்
திருகின எதிர் எதிர் செல்லும் சேனையே.–36-

மனத்தினால் சினம் திருகின – மனத்தில் சினம் முதிர்ந்தவையாகி;
எதிர் எதிர் செல்லும் தானையே – எதிர் எதிராகச் செல்லும் (அரக்கர்
படை, குரங்குப் படை என இருபக்கத்துப்) படைகளும்; பொருதொழில்
வேட்டு- போர்த் தொழிலை விரும்பி; ஆர்த்துப் பொங்கின எழுந்து –
பேரொலி செய்து பொங்கி எழுந்து; இரண்டு திக்கினும் – இரண்டு
திசைகளில் இருந்தும்; இருதிரைப் பெருங்கடல் – பெரிய அலைகள்
உடைய பெருங் கடல்கள் (இரண்டு); வருவன போல்வன –
வருவனவற்றை ஒத்தன.

———

8038.
‘கண்ணினால் மனத்தினால் கருத்தினால் தெரிந்து,
எண்ணினால் பெறு பயன் எய்தும், இன்று’ எனா,
நண்ணினார் இமையவர் நங்கைமாரொடும்-
விண்ணின் நாடு உறைவிடம் வெறுமை கூரவே. –37-

இன்று – இன்றைக்கு; கருத்தினால் தெரிந்து எண்ணினால் –
கவனமாக நினைத்து எண்ணினால்; கண்ணினால் – கண்களினாலும்;
மனத்தினால் – மனத்தாலும்; பெறு பயன் எய்தும் எனா – பெறுகின்ற
பயனை (நாம்) அடைவோம் என்று நினைத்துக் கொண்டு; இமையவர்
– தேவர்கள்; நங்கைமாரொடும் – (தங்கள்) மனைவிமார்களுடன்;
விண்ணின் நாடு உறைவிடம் – (தங்கள் வாழும் இடமாகிய) வானுலகம்
ஆகிய உறைவிடம்; வெறுமை கூர – வெற்றிடமாக மிகும்படி;
நண்ணினார் – (போர்க்களத்துக்கு மேல் வந்து) நெருங்கினார்கள்.

——–

8039.
ஒத்து இரு தானையும் உடற்ற உற்றுழி,
அத்தனை வீரரும் ஆர்த்த அவ் ஒலி,
நத்து ஒலி, முரசு ஒலி, நடுக்கலால், தலை-
பொத்தினர் செவிகளை-புரந்தராதியர்.–38-

புரந்தராதியர் – (போர் காணவந்த) இந்திரன் முதலிய தேவர்கள்;
இரு தானையும் – இரு பக்கத்துப் படைகளும்; ஒத்து – ஒப்பாக; உற்ற
உற்றுழி – போர் செய்ய நெருங்கிய போது; அத்தனை வீரரும் –
அவ்விரு படைகளில் உள்ள எல்லா வீரர்களும் ஆர்த்த அவ்ஒலி –
(எழுப்பிய) பேரோசையாகிய அந்த ஒலியும்; நத்து ஒலி – சங்கு
ஒலியும்; முரசு ஒலி – முரசு ஒலியும்; தலை நடுக்கலால் – தலையை
நடுங்கச் செய்தலால்; செவிகளை பொத்தினர் – (அச்சத்தால் தங்கள்)
காதுகளைக்கைகளால் மூடிக் கொண்டார்கள்.

———-

8040.
‘எற்றுமின், பற்றுமின், எறிமின், எய்ம்மின்’ என்று,
உற்றன உற்றன உரைக்கும் ஓதையும்,
முற்றுறு கடை யுகத்து இடியின் மும் மடி
பெற்றன, பிறந்தன, சிலையின் பேர் ஒலி.–39-

எற்றுமின் – (இரு திறத்துப் படை வீரரும்) அடியுங்கள்; பற்றுமின்
– பிடியுங்கள்; எறிமின் – (படைக்கலங்களை) எறியுங்கள்; எய்ம்மின் –
(அம்புகளை) எய்யுங்கள்; என்று – என்று; உற்றன உற்றன – (அந்த
அந்த நேரத்திற்குப்) பொருத்தமானவற்றைப் பொருத்தமானவற்றை;
உரைக்கும் ஓதையும் – சொல்லுகிற பேரோசையும்; சிலையின்
பேரொலி – வில்நாண்களின் பேரோசையும்; முற்றுறு கடையுகத்து –
(அனைத்தும்) அழியும் ஊழிக் கடைக்காலத்து; இடியின் –
(தோன்றுகிற) இடி ஓசையிலும்; மும்மடி – மூன்று மடங்கு அதிகமாக;
பெற்றன பிறந்தன – பெற்று எழுந்தன.

———–

8041.
கல் பட, மரம் பட, கால வேல் பட,
வில் படு கணை பட, வீழும் வீரர்தம்
எல் படும் உடல் பட, இரண்டு சேனையும்
பிற்பட, நெடு நிலம் பிளந்து பேருமால்.–40-

இரண்டு சேனையும் – இருதிறத்துப் படைகளும்; பிற்பட – (ஒன்று)
பின்னிடுதற்காக; கல்பட – (எறிகிற) கற்கள் படுதலினாலும்; மரம்பட –
மரங்கள் படுதலினாலும்; கால வேல்பட – கூற்றுவன் போன்ற
வேல்கள் படுதலினாலும்; வில்படுகணைபட – வில்லில் இருந்து (புறப்)
படும் அம்புகள் படுதலினாலும்; வீழும் வீரர்தம் – இறந்து பட்டு
விழுகின்ற வீரர்களுடைய; எல்படும் உடல்பட – இரவு (அல்) பகல்
போன்ற உடம்புகள் படுவதினாலும்; நெடு நிலம் – நீண்ட நிலவுலகம்;
(அதன் பொறையையும்) வேகத்தையும் தாங்கமுடியாமல்; பிளந்து
பேருமால் – பிளவு பட்டு நிலைகுலையும்.

——–

8042.
எழுத் தொடர் மரங்களால் எற்ற முற்றிய
விழுத் தலை முழுவதும் சிதறி வீழ்ந்தன,
ழுத்திய பெருஞ் சினத்து அரக்கர் ஆக்கைகள்
கழுத்து உள, தலை இல, களத்தின் ஆடுவ. –41-

எழுத்தொடர் மரங்களால் – (குரங்கு வீரர்கள்) இரும்புத் தூண்
போன்ற மரங்களால்; எற்ற – தாக்கியதால்; முற்றிய – உயிர்
நீங்கியனவும்; விழுத்தலை முழுவதும் – சிறந்த தலைகள் முழுவதும்;
சிதறி வீ்ழ்ந்தன – சிதறி வீழ்ந்தனவும் ஆகிய; பெருஞ்சினத்து – மிக்க
கோபத்தில்; அழுத்திய – ஆழங்காற்பட்ட; அரக்கர் ஆக்கைகள் –
அரக்கரது உடம்புகள்; கழுத்து உள – கழுத்து உள்ளனவும்; தலை இல
– தலை இல்லாதனவுமாய்க்; களத்தின் ஆடுவ – போர்க்களத்தில்
(கவந்தங்களாய்) நின்று ஆடுவன.

———-

8043.
வெட்டிய தலையன, நரம்பு வீச மேல்
முட்டிய குருதிய, குரங்கின் மொய் உடல்-
சுட்டு உயர் நெடு வனம் தொலைந்தபின், நெடுங்
கட்டைகள் எரிவன போன்று காட்டுவ.–42-

வெட்டிய தலையன – (குரங்குகள் அரக்கரால்) வெட்டப்பட்ட
தலைகளை உடையனவாயும்; நரம்பு வீச – நரம்புகள் (அறுபட்டு
மேல்) வீசுவதனால்; முட்டிய குருதிய – மேலே பாய்கிற உதிரத்தை
உடையனவாயும்; குரங்கின் மொய் உடல் – (உள்ள) குரங்குகளின்
வலிமையான உடம்புகள்; சுட்டு உயர் நெடுவனம் தொலைந்தபின் –
ஓங்கி உயர்ந்த பெரிய காடு (நெருப்பால்) அழிந்த பிறகு; நெடுங்
கட்டைகள் எரிவன போன்று – பெரிய கட்டைகள் எரிவன போல;
காட்டுவ – தோன்றுவன.

———-

அரக்கர் அழிவு
8044.
பிடித்தன நிருதரை, பெரிய தோள்களை
ஒடித்தன, கால் விசைத்து உதைத்த உந்தின,
கடித்தன கழுத்து அற, கைகளால் எடுத்து
அடித்தன, அரைத்தன, ஆர்த்த-வானரம். –43-

வானரம் – குரங்குகள்; நிருதரைப் பிடித்தன – அரக்கர்களைப்
பிடித்தும்; பெரிய தோள்களை ஒடித்தன – (அவர்களுடைய) பெரிய
தோள்களை (இழுத்து) ஒடித்தும்; கால் விசைத்து உதைத்த உந்தின –
காலால் வேகமாக உதைத்துத் தள்ளியும்; கழுத்து அற கடித்தன –
கழுத்து (த் துண்டுபடும்படி) கடித்தும்; கைகளால் எடுத்து அடித்தன –
கைகளால் எடுத்துத் (தரையில்) அடித்தும்; அரைத்தன – (நிலத்தில்)
தேய்த்தும்; ஆர்த்த – பேரொலி செய்தன.

———-

8045.
வாள்களின் கவிக் குல வீரர் வார் கழல்
தாள்களைத் துணித்தனர், தலையைத் தள்ளினர்
தோள்களைத் துணித்தனர், உடலைத் துண்ட வன்
போழ்களின் புரட்டினர், நிருதர் பொங்கினார்.–44-

நிருதர் – அரக்கர்கள்;வாள்களின் – வாள்களால்;கவிக்குல வீரர் –
குரங்குக்குல வீரர்களுடைய; வார் கழல் தாள்களைத் துணித்தனர் –
நீண்ட கழலணிந்த கால்களை வெட்டியும்; தலையைத் தள்ளினர் –
தலைகளைத் துண்டு படுத்தும்; தோள்களைத் துணித்தனர் –
தோள்களை (வெட்டி) வீழ்த்தியும்; உடலைத் துண்டவன் போழ்களின்
புரட்டினர் – உடலைத் துண்டு துண்டாகும்படி பிளந்தும்; பொங்கினார்
– (மிகுசினம்) பொங்கி நின்றனர்.

———-

8046.
மரங்களின், அரக்கரை மலைகள் போன்று உயர்
சிரங்களைச் சிதறின; உடலைச் சிந்தின;
கரங்களை, கழல்களை, ஒடியக் காதின-
குரங்கு எனப் பெயர் கொடு திரியும் கூற்றமே.–45-

குரங்கு எனப் பெயர் கொடு திரியும் கூற்றமே – குரங்கு என்ற
பெயரைக் கொண்டு திரிகின்ற இயமன்கள்; மரங்களின் –
மரங்களினால்; அரக்கரை – அரக்கர்களது; மலைகள் போன்று உயர் –
மலைகளைப் போல உயர்ந்த; சிரங்களைச் சிதறின – தலைகளைச்
சிதறச் செய்தும்; உடலைச் சிந்தின – உடம்புகளைச் சிந்தச் செய்தும்;
கரங்களை கழல்களை – கைகளையும் கால்களையும்; ஒடியக் காதின –
ஒடியுமாறு மோதியும் போரிட்டன.

————–

8047.
சுடர்த்தலை நெடும் பொறி சொரியும் கண்ணன,
அடர்த்து அலை நெடு மரம் அற்ற கையன,
உடர்த்தலை வைர வேல் உருவ, உற்றவர்
மிடற்றினைக் கடித்து, உடன் விளிந்து போவன.–46

சுடர்த்தலை நெடும் பொறி-ஒளியைத் தன்னிடம் கொண்ட பெரிய
தீப்பொறிகளை; சொரியும் கண்ணன – வெளிப்படுத்தும் கண்களை
உடையனவாகிய (சில குரங்குகள்); அடர்த்து அலை நெடு மரம் –
(அரக்கர்களை) நெருங்கி வருத்துவதற்காகக் (கைக்கொண்ட) பெரிய
மரங்கள் (தங்கிய); அற்ற கையன – கைகள் அறுபட்டு விழ;
உடர்த்தலை வைரவேல் உருவ – (தங்களது) உடம்பின் கண்
வலிமையான வேல் உருவிப் (பாய நின்று); உற்றவர் – (தங்களின்
மேல் வேல் எறிந்து போரிட) வந்தவர்களுடைய; மிடற்றினைக் கடித்து
– கழுத்தைக் கடித்து (அவர்களைக் கொன்று); உடன் விளிந்து
போவன – அவர்களோடு சேர்ந்து இறந்து ஒழிந்தன.

———–

8048.
அடர்ந்தன கிரிகளை அசனிஏறு எனத்
தொடர்ந்தன, மழை பொழி தும்பிக் கும்பங்கள்
இடந்தன, மூளைகள் இனிதின் உண்டன,
கடந்தன, பசித் தழல்-கரடி, காதுவ.–47-

கரடி அடர்ந்தன – (சாம்பவானின்) கரடிப் படைகள் போர்
செய்வனவாய்; கிரிகளை அசனி ஏறு எனத் தொடர்ந்தன –
மலைகளை அழிக்கும் இடியேறு போலத் தொடர்ந்து சென்று;
மழைபொழி தும்பிக் கும்பங்கள் இடந்தன -(மதங்களை) மழை போல்
சொரிகின்ற யானைகளின் மத்தகங்களைப் பிளந்து; மூளைகள்
இனிதின் உண்டன – (அவற்றில் இருந்த) மூளைகளை இனிமையாக
உண்டு; காதுவ பசித்தழல் கடந்தன – (தங்களை)
வருத்துகின்றவையாகிய பசியாகிய தீமை ஒழிந்தன.

———

8049.
கொலை மதக் கரியன, குதிரை மேலன,
வல மணித் தேரன, ஆளின் மேலன,
சிலைகளின் குடுமிய, சிரத்தின் மேலன,-
மலைகளின் பெரியன குரங்கு-வாவுவ.–48-

மலைகளின் பெரியன – (உருவத்திலும் வலிமையிலும்) மலைகளைக்
காட்டிலும் பெரியனவாகிய குரங்குகள்; கொலை மதக்கரியன –
கொல்லும் தன்மையமைந்த மும்மதங்களை உடைய யானைகளின்
மேலும்; குதிரை மேலன – குதிரைகளின் மேலும்; வலமணித் தேரன –
வலிமை கொண்ட மணிகள் கட்டிய தேர்களின் மேலும்; வாளின்
மேலன – (அரக்கர்கள் கையில் கொண்டிருந்த) வாட்களின் மேலும்;
சிலைகளின் குடுமிய – வில்களின் நுனிகளின் மீதும்; சிரத்தின்
மேலன – பகை அரக்கர்களின் தலைகளின் மீதும்; வாவுவ – தாவிப்
பாய்ந்து (அவற்றை அழித்தன).

——–

8050.
தண்டு கொண்டு அரக்கர் தாக்க, சாய்ந்து உகு நிலைய,
சந்தின்
துண்டங்கள் ஆக வாளின் துணிந்த பேர் உடலைத் தூவி,
கொண்டு எழும் அலைகளோடும் குரக்குஇனப் பிணத்தின்
குப்பை
மண்டு வெங் குருதி ஆறு அம் மறி கடல் மடுத்த மாதோ.–49-

அரக்கர் தண்டு கொண்டு தாக்க – அரக்க வீரர்கள் கதைகளைக்
கொண்டு தாக்கியதனால்; சாய்ந்து உகு நிலைய – சாய்ந்து விழுகின்ற
தன்மையுடைய (குரக்கு வீரர்களின் உடம்புகள்); சந்தின் துண்டங்கள்
ஆக -சந்தன மரத்தின் துண்டுகளாக; வாளின் துணிந்த பேர் உடலை
– அவர்களது வாட்களால் துண்டு பட்டுச் சிதறிக் கிடந்த பெரிய
உடம்புகளை; தூவி – (பல இடங்களில்) சிதற விட்டு; கொண்டு எழும்
அலைகளோடும் – மோதி எழும் அலைகளோடு; குரக்குஇனப்
பிணத்தின் குப்பை – குரங்குக் கூட்டங்களின் பிணக் கூட்டங்களின்
மிகுதியிலிருந்து; மண்டு வெங்குருதி ஆறு – நெருங்கிப் பெருகிய
இரத்த ஆறு; அம் மறிகடல் மடுத்த மாதோ – அந்த அலைகள்
மடங்கி வரும் கடலையும் நிறைத்து விட்டன.

————

8051.
பனி வென்ற பதாகை என்றும், பல் உளைப் பரிமா என்றும்,
தனு என்றும், வாளி என்றும், தண்டு என்றும், தனி வேல்
என்றும்,
சின வென்றி மதமா என்றும், தேர் என்றும் தெரிந்தது
இல்லை-
அனுமன் கை வயிரக் குன்றால் அரைப்புண்ட அரக்கர்
தானை.–50-

அனுமன் கை வயிரக்குன்றால் – அனுமனது கைகளாகிய வலிமை
மிகு மலைகளினால்; அரைப்புண்ட அரக்கர் தானை – (தரையில்)
தேய்த்து அழிக்கப்பட்ட அரக்கர் படையில்; பனி வென்ற பதாகை
என்றும் – வெண்ணிறத்தால் பனியையும் வெற்றி பெற்ற பெருங்கொடி
என்றும்; பல் உளைப் பரிமா என்றும் – பலவாகிய பிடரி மயிர்களை
உடைய குதிரைகள் என்றும்; தனு என்றும் – விற்கள் என்றும்; வாளி
என்றும் – அம்புகள் என்றும்; தண்டு என்றும் – கதைகள் என்றும்;
தனிவேல் என்றும் – ஒப்பற்ற வேற்படைகள் என்றும்; சினவென்றி
மதமா என்றும் – சினத்தையும் வெற்றியையும் உடைய மதங்கொண்ட
யானைகள் என்றும்; தேர் என்றும் – தேர்கள் என்றும்; தெரிந்தது
இல்லை – (எவையும் தனித்தனி அடையாளம்) தெரியவில்லை.

———–

8052.
பொங்கு தேர், புரவி, யானை, பொரு கழல் நிருதர் என்னும்
சங்கையும் இல்லா வண்ணம், தன் உளே தழுவி, கூற்றம்,
‘எங்கு உள, உயிர்?’ என்று எண்ணி, இணைக் கையால்
கிளைத்ததுஎன்ப-
அங்கதன் மரம் கொண்டு எற்ற, அளறுபட்டு அழிந்த தானை.–51-

அங்கதன் மரம் கொண்டு எற்ற – அங்கதன் (தன் கையினால்)
மரத்தைக் கொண்டு தாக்க; அளறு பட்டு அழிந்த தானை – சேறாகி
அழிந்த அரக்கர்களது (நால்வகைப்) படையுள்; பொங்கு தேர் –
மிகுதியான தேர்களும்; புரவி – குதிரைகளும்; யானை – யானைகளும்;
பொருகழல் நிருதர் – போர் செய்யும் வீரக்கழலை அணிந்த
அரக்கர்களும்; என்னும் – நால்வகைப் படை என்று; கூற்றம் –
இயமன்; சங்கையும் இல்லாவண்ணம் – சிறிது கூட அச்சம்
கொள்ளாமல்; தன் உளே தழுவி – அவற்றைத் தனக்குள் தழுவிப்
பொருத்திக்கொண்டு; உயிர் எங்கு உள என்று எண்ணி – (இனியும்)
உயிர்கள் எங்காகிலும் தப்பி உள்ளனவோ? என்று எண்ணி;
இணைக்கையால் கிளைத்தது என்ப – (தன்) இரண்டு கைகளாலும்
கிளறிப் பார்த்தது என்று சொல்லுவார்கள்.

—————

8053.
தாக்கிய திசைகள்தோறும் தலைத்தலை மயங்கி, தம்மில்
நூக்கிய களிறும், தேரும், புரவியும், நூழில் செய்ய,
ஆக்கிய செருவை நோக்கி, அமரரோடு அசுரர் போரைத்
தூக்கினர், முனிவர்; ‘என்னை? இதற்கு அது தோற்கும்’
என்றார்.–52-

தாக்கிய திசைகள் தோறும் – (எதிர்த்துத்) தாக்கிப் (போரிடுகிற)
(எல்லாத்) திசைகளிலும்; தலைத்தலை மயங்கி – தமக்குள்ளே
(நேரிடையாகக்) கலந்து மயங்கி; தம்மில் நூக்கிய களிறும் – தம்மை
எதிர்த்த யானைகளையும்; தேரும் – தேர்களையும்; புரவியும் –
குதிரைப் படைகளையும்; நூழில் செய்ய – (குரங்குப்படை) கொன்று
குவிக்க; ஆக்கிய செருவை நோக்கி – (அவ்வாறு) நடந்த (அப்)
போரைப் பார்த்து; முனிவர் – முனிவர்கள்; அமரரோடு அசுரர் போரைத் தூக்கினர் –
தேவர்களோடு அசுரர்கள் (முன்பு செய்த) போரை ஒப்பிட்டுப் பார்த்து;
என்னை – (இப்போரின் தன்மை) எவ்வளவு; இதற்கு அது தோற்கும்
– இப்போருக்குத் தேவாசுரப் போர் ஒப்பாகாது தோற்கும்; என்றார் –
(என்று வியந்து) கூறினார்கள்.

————

8054.
எடுத்தது நிருதர் தானை; இரிந்தது குரங்கின் ஈட்டம்;
தடுத்தனர், முகங்கள் தாங்கி, தனித் தனி தலைவர் தள்ளி;
படுத்தனர் அரக்கர், வேலை பட்டதும்; படவும், பாரார்,
கடுத்தனர்; கடுத்த பின்னும், காத்தனர் கவியின் வீரர்.–53-

நிருதர் தானை எடுத்தது – (முதலில்) அரக்கர் சேனை (வெற்றித்)
தலை எடுத்தது; குரங்கின் ஈட்டம் இரிந்தது – (அதனால்)
குரங்குகளின் கூட்டம் (முன்நிற்க முடியாமல்) புறமுதுகிட்டு ஓடியது;
தலைவர் – (அந்நிலையில்) குரங்குப்படைத் தலைவர்கள்; தனித்தனி –
தனித்தனியாக, முகங்கள் தாங்கி தடுத்தனர் – (அரக்கரின்)
முன்னணிப் படைகளைத் தாங்கித் தடுத்தவர்களாய்; தள்ளிப்
படுத்தனர் – (அவர்களை) வீழ்த்திக் கொன்றார்கள்; அரக்கர் வேலை
பட்டதும் – (தலைவர்களால்) அரக்கர் படையாகிய பெருங்கடல்
அழிந்ததும்; படவும் பாரார் கடுத்தனர் – (அவ்வாறு) அழிவதைப்
பற்றி எண்ணிப் பாராதவர்களாய் (அரக்கர் மீண்டும் சினந்து)
தாக்கினார்கள்; கடுத்தபின்னும் – (இவ்வாறு அரக்கர் சினந்து) தாக்கிய
பின்பும்; கவியின் வீரர் காத்தனர் – குரங்குத் தலைவர்கள் தங்கள்
படையைக் காத்து நின்றனர்.

———–

8055.
சூலமும் மழுவும் தாங்கித் தோள் இரு நான்கும் தோன்ற
மூலம் வந்து உலகை உண்ணும் உருத்திர மூர்த்தி என்ன,
நீலன் நின்றுழியே நின்றான்; நிரந்தரம், கணங்களோடும்
காலன் என்று ஒருவன், யாண்டும் பிரிந்திலன், பாசக்
கையான்.–54-

சூலமும் – சூலாயுதத்தையும்; மழுவும் – மழுப்படையினையும்;
தாங்கி – (கைகளில்) தாங்கி; தோள் இரு நான்கும் தோன்ற – (தன்)
எட்டுத் தோள்களும் விளங்க; மூலம் வந்து – முதற் கடவுளர்களான
மூன்று மூர்த்திகளில் ஒருவனாக வந்து; உலகை உண்ணும் உருத்திர
மூர்த்தி என்ன – உலகத்து உயிர்களை அழித்து ஒடுக்கும் அழித்தல்
கடவுளான சிவபிரான் போல்; நீலன் – நீலன்; நின்றுழியே நின்றான் –
(தான் போரிட்டுப் பகைவரை அழித்த) இடத்திலேயே (பெயராமல்)
நின்றான்; காலன் என்று ஒருவன் – (அவன் அவ்வாறு போரிட்டு
நின்றதனால்) இயமன் என்று சொல்லப்படுகின்ற ஒருவன்;
கணங்களோடும் – தன் பரிவாரக் கூட்டத்தோடு; பாசக்கையான் –
பாசம் என்னும் ஆயுதத்தைக் கையில் கொண்டவனாய்; நிரந்தரம்
யாண்டும் பிரிந்திலன் – எப்பொழுதும் எவ்விடத்தும் பிரிந்து செல்ல
இயலாதவனாய் (அவ்விடத்திலேயே) நின்றான்.

——-

8056.
காற்று அலன்; புனலோ அல்லன்; கனல் அல்லன்;
இரண்டு கையால்,
ஆற்றலன், ஆற்றுகின்ற அருஞ் சமம் இதுவே ஆகில்,
ஏற்றம் என் பலவும் சொல்லி? ‘என் பதம் இழந்தேன்’
என்னா,
கூற்றமும் குலுங்கி அஞ்ச, வெங் கதக் குமுதன் கொன்றான்.–55-

கூற்றமும் – (கொல்லும் தொழில் வல்ல) இயமனும்; என்பதம்
இழந்தேன் என்னா – எனது தொழில் பெருமையை இழந்து விட்டேன்
என்று சொல்லி; குலுங்கி அஞ்ச – (உடல்) நடுங்கி அஞ்சும் படியாக;
வெங்கதக் குமுதன் கொன்றான் – கொடிய சினத்தை உடைய குமுதன்
எனும் வானரத்தலைவன்; (பகைவர் சேனையைக்) கொன்று அழித்து
விட்டான்; காற்று அலன் – (அவன் வீசி எறிந்து முழுதும் அழிக்கும்
தன்மை உடைமையால் காற்றாய் இருப்பானோவெனில்) காற்று
அல்லன்; புனலோ அல்லன் – (அடித்துக்கொல்லும் தன்மையால் நீராய் இருப்பானோவெனில்)
நீருமல்லன்; கனல் அல்லன் – (மிகச்சினந்து எதிர்த்து அழிப்பதனால்
தீயாய் இருப்பானோவெனில்) தீயுமல்லன்; ஆற்றலன் – வலிமை
உடைய அக்குமுதன்; இரண்டு கையால் – (போர்க்கருவிகள் எதுவும்
இல்லாமல் தன்) இரண்டு கைகளினாலும்; ஆற்றுகின்ற அருஞ்சமம்
இதுவே ஆகில் – செய்கின்ற போர் இத்தன்மை உடையது என்றால்;
பலவும் சொல்லி ஏற்றம் என் – (அவனது போர்த்திறமை பற்றிப்)
பலவாறு சொல்லிச் சிறப்பு என்ன?

————–

8057.
மறி கடல் புடை சூழ் வைப்பின் மானவன் வாளி போன
செறி பணை மரமே நின்ற, மரங்களில்; தெரியச் செப்பும்
குறியுடை மலைகள் தம்மில் குல வரைக் குலமே-கொள்ளா,
எறிதலோடு அறைதல் வேட்ட, இடவன் அன்று இடந்திலாத.–56-

எறிதலோடு – (கையில் எடுத்து வீசி) எறிதலோடு; அறைதல் –
மோதுதலையும்; வேட்ட இடவன் – விரும்பிய இடவன் (என்னும்
குரங்குப் படைத்தலைவன்); அன்று இடந்திலாத – அன்று
(அப்போரில்) வேரோடு பிடுங்கி எடுக்காமல் விட்டவை; நின்ற
மரங்களில் – (உலகில்) உள்ள மரங்களில்; மறி கடல் புடைசூழ்
வைப்பின் – அலைகள் மறித்து வருகிற கடலால் பக்கங்களில்
சூழப்பட்ட இந்த நிலவுலகில்; மானவன் வாளி போன செறி பணை
மரமே – இராமனது அம்பு ஊடுருவிச் சென்ற நெருங்கிய பெரிய மரா
மரங்கள் மட்டுமே; தெரியச் செப்பும் – சிறப்பித்துச் சொல்லப்படுகிற;
குறியுடை மலைகள் தம்மில் – பெயர்களை உடைய
மலைகளுக்குள்ளே; கொள்ளா – (அவன்-) எடுக்காதவை; குலவரைக்
குலமே – குலமலைகளின் கூட்டமே.
மானவன் – மனு வழி வந்தவன்.விவஸ்வாந்
என்னும் பெயர் கொண்ட சூரியன் மகனாகிய மனு என்பவன் வைவஸ்வதமநு என்று கூறப்படுவான்; இவனே இராமனது குலத்து
மூலமானவன் என்பர்.

————–

8058.
‘வாம் பரி, மத மா, மான் தேர், வாள் எயிற்று
அரக்கர் மானப்,
பாம்பினும் வெய்யோர் சாலப் படுகுவர்; பயம் இன்று,
இன்றே;
தூம்பு உறழ் குருதி மண்ட, தொடர் நெடு மரங்கள் சுற்றிச்
சாம்பவன் கொல்ல, சாம்பும்’ என்று கொண்டு அமரர்
ஆர்த்தார்.–57-

வாம்பரி – தாவி ஓடிச் செல்லுகின்ற குதிரைகளையும்; மதமா –
மதங்கொண்ட விலங்காகிய யானைகளையும்; மான் தேர் – குதிரைகள்
பூட்டப்பட்ட தேர்களையும் உடையராய்; மானப் பாம்பினும்
வெய்யோர் – சினம் மிக்க பாம்பினும் கொடியவர்களாகிய; வாள்
எயிற்று அரக்கர் – ஒளி பொருந்திய பற்களை உடைய அரக்க
வீரர்கள்; சாலப்படுகுவர் – மிகுதியாக இறந்து படுவார்கள்; பயம்
இன்று இன்றே – (இனி நமக்கு அவர்களால் ஏற்படும்) பயம் இல்லை
அல்லவா?; தூம்பு உறழ் குருதி மண்ட – மதகு வாயில் நீர் விழுதல்
போல (மிகுதியான) குருதி மிகும்படியாக; தொடர் நெடு மரங்கள் சுற்றி
– வரிசையாக நீண்ட மரங்களை (எடுத்துச்) சுற்றி; சாம்பவன் கொல்ல
– சாம்பவான் என்னும் வீரன் கொல்வதனால்; சாம்பும் என்று
கொண்டு – (இந்த அரக்கர் படை முழுதும்) இறந்து அழியும் என்ற
(எண்ணம்) கொண்டு; அமரர் ஆர்த்தார் – தேவர்கள் பேரொலி
செய்தார்கள்.

——–

8059.
பொரும் குலப் புரவி ஆன திரைகளும், கலம் பொன்
தேரும்,
இருங் களி யானை ஆன மகரமும், இரியல் போக,
நெருங்கிய படைகள் ஆன மீன் குலம் நெரிந்து சிந்த
கருங் கடல் கலக்கும் மத்தின், பனசனும் கலக்கிப் புக்கான். –58-

பொரும் குலப் புரவி ஆன திரைகளும் – போரிடுகின்ற
குதிரைகளின் கூட்டமாகிய அலைகளும்; கலம் பொன் தேரும் –
அழகிய தேர்களாகிய மரக்கலங்களும்; இருங்களி யானை ஆன
மகரமும் – பெரிய மதக்களிப்பினை உடைய யானைகளாகிய சுறா
மீன்களும்; இரியல் போக – கலங்கிப்பின்னிட; நெருங்கிய படைகள்
ஆன மீன்குலம் – பல்வகைப் படைக்கலங்களாகிய பலவகை
மீன்களின் கூட்டங்கள்; நெரிந்து சிந்த – கலங்கிச் சிதற; கருங்கடல்
கலக்கும் மத்தின் – பாற்கடலைக்கலக்கின (மந்தரம் என்னும்) மத்துப்
போல; பனசனும் கலக்கிப் புக்கான் – பனசன் என்னும் குரங்கு
வீரனும் (அரக்கரது படைகளாகிய கடலைக்) கலக்கிக் கொண்டு
புகுந்தான்.

———-

8060.
மயிந்தனும் துமிந்தன் தானும், மழைக் குலம் கிழித்து,
வானத்து
உயர்ந்து எழும் எருவை வேந்தர் உடன் பிறந்தவரை
ஒத்தார்;
கயம் குடைந்து ஆடும் வீரக் களிறு ஒத்தான், கவயன்,
காலின்
பெயர்ந்திலன், உற்றது அல்லால், கேசரி பெரும் போர்
பெற்றான்.–59-

மயிந்தனும் துமிந்தன் தானும் – மயிந்தனும் (அவன் தம்பியாகிய)
துமிந்தன் என்பவனும்; மழைக்குலம் கிழித்து – மேகக் கூட்டங்களைக்
கிழித்துக்கொண்டு; வானத்து உயர்ந்து எழும் – வானத்தை நோக்கி
உயர்ந்து எழுகின்ற; எருவை வேந்தர் உடன் பிறந்தவரை ஒத்தார் –
கழுகுகளுக்கு அரசர்களாகிய உடன் பிறந்த சம்பாதி சடாயு
ஆகியோரை ஒத்துத் தோன்றினார்கள்; கவயன் – கவயன் என்னும்
வானர வீரன்; கயங்குடைந்தாடும் வீரக் களிறொத்தான் – குளத்தில்
மூழ்கிக் கலக்கி விளையாடுகிற வீரத்தன்மை உடைய ஆண்
யானையை ஒத்து விளங்கினான்; கேசரி – கேசரி என்னும்
பெயருடைய குரங்கு வீரன்; உற்றது அல்லால் காலின் பெயர்ந்திலன்
– (ஓரிடத்து நிலைத்து இருத்தலல்லாமல்) அடி பெயர்த்துப் பின்
வாங்குதல் இல்லாமல்; பெரும் போர் பெற்றான் – (உறுதியாக நின்று)
பெரிய போரைச் செய்தான்.

———

8061.
பெரும் படைத் தலைவர் யாரும் பெயர்ந்திலர், பிணத்தின்
குப்பை
வரம்பு இல பரப்பி ஆர்த்து மலைகின்ற பொழுதின்
வந்துற்று,
இரிந்தன கவியும் கூடி எடுத்தன; எடுத்தலோடும்,
சரிந்தது நிருதர் தானை; தாக்கினன் அரக்கன், தானே.–60-

பெரும் படைத்தலைவர் யாரும் பெயர்ந்திலர்- (குரங்குப்) பெரும்
படைத்தலைவர்கள் எல்லாரும் சலித்துப் பின்வாங்காதவர்களாய்;
வரம்பு இல – எல்லை இல்லாத; பிணத்தின் குப்பை –
பிணக்குவியல்களை; பரப்பி ஆர்த்து மலைகின்ற பொழுதின் –
குவியும்படி பேரொலி செய்து போர் செய்கின்ற பொழுது; இரிந்தன
கவியும் – தோற்று ஓடிய குரங்குகளும்; வந்துற்று – (மன வலிமை
பெற்று) மீண்டும் வந்து; கூடி எடுத்தன – உடன் கூடிப் போர்
செய்யத் தொடங்கின; எடுத்தலோடும் – போர் செய்யத் தொடங்கிய
பொழுது; நிருதர் தானை சரிந்தது – அரக்கர் படை கலங்கி நிலை
தளர்ந்தது; அரக்கன் – (அதுகண்டு) அரக்கனாகிய இந்திரசித்தன்;
தானே தாக்கினன் – தான் மட்டும் (தனி ஒருவனாக நின்று) (வானரப்
படைகளைத்) தாக்கினான்.

————

இந்திரசித்தன் பெரும்போர்
எழுசீர் ஆசிரியச் சந்த விருத்தம்
8062.
பூண் எறிந்த குவடு அனைய தோள்கள் இரு
புடை பரந்து உயர, அடல் வலித்
தூண் எறிந்தனைய விரல்கள் கோதையொடு
சுவடு எறிந்தது ஒரு தொழில் பட,
சேண் எறிந்து நிமிர் திசைகளோடு மலை,
செவிடு எறிந்து உடைய,-மிடல் வலோன்
நாண் எறிந்து, முறை முறை தொடர்ந்து, கடல்
உலகம் யாவையும் நடுக்கினான்.–61-

மிடல் வலோன் – வலிமை மிக்கவனாகிய (இந்திரசித்தன்); பூண்
எறிந்த குவடு அனைய – அணிகலங்கள் (பூட்டப்பட்டு) ஒளி
வெளிக்காலுகிற மலையை ஒத்த; தோள்கள் – (தன்) இரு தோள்களும் இருபுடை; பரந்து உயர – (போர் கண்டு பூரித்து) இரு
பக்கங்களிலும் பரவி உயரவும்; அடல் வலித் தூண் எறிந்தனைய
விரல்கள் – அழிக்கும் வலிமையுள்ள தூண்கள் பொருந்தியது போல்
அமைந்த கை விரல்கள்; கோதையொடு சுவடு எறிந்தது ஒரு
தொழில்பட – விரற்செறி (அணிந்து) தழும்பு படுதல் ஆகிய ஒரு
தொழிலைச் செய்யவும்; சேண் எறிந்து நிமிர் திசைகளோடு மலை –
நீண்ட தூரம் பரவிப் பரந்த திசைகளும் மலைகளும்; செவிடு எறிந்து
உடைய – செவிடு படும் (ஓசையை) எழுப்பித் துண்டு துண்டாக; நாண்
எறிந்து – வில்லினது நாணைக் கையால் தெறித்து; முறை முறை
தொடர்ந்து – (அந்த ஒலி) வரிசை வரிசையாகப் பரவும் படி செய்து;
கடல் உலகம் யாவையும் நடுக்கினான் – கடலால் சூழப்பட்ட உலகம்
முழுவதையும் நடுங்கும்படி செய்தான்.

———–

8063.
சிங்கஏறு, கடல்போல் முழங்கி, ‘நிமிர்
தேர் கடாய் நெடிது செல்க’ எனா,
அங்கதாதியர் அனுங்க, வானவர்கள்
அஞ்ச, வெஞ் சின அனந்தன் மாச்
சங்கபால குளிகாதி வால் எயிறு
தந்த தீ விடம் உமிழ்ந்து சார்
வெங் கண் நாகம் என, வேகமாய், உருமு
வெள்க, வெங் கணைகள் சிந்தினான்.–62-

சிங்க ஏறு – ஆண்சிங்கம் போன்றவனாகிய இந்திரசித்தன்; கடல்
போல் முழங்கி – கடல் போலப் பேரொலி செய்து; நிமிர் தேர் –
பெரிய உயர்ந்த தேரைக்; கடாய் நெடிது செல்க எனா – செலுத்திப்
(பகைப்படையுள்) நீண்ட தூரம் செல்க என்று (தேர்ப்பாகனிடம் கூறி);
அங்கதாதியர் அனுங்க – அங்கதன் முதலிய வானவர் மனம்
வருந்தவும்; வானவர்கள் அஞ்ச – தேவர்கள் அஞ்சவும்;
உருமுவெள்க – இடிகளும் (அம்பின் கொடுமை கண்டு ஈடாகோம்
என) வெட்கம் அடையவும்; வால் எயிறு – ஒளி பொருந்திய பற்கள்;
தந்த தீ விடம் உமிழ்ந்து சார் – வெளிப்படுத்துகிற கொடிய
தீப்போன்ற நஞ்சைக் கக்கிக்கொண்டு வருகின்ற; வெஞ்சின அனந்தன்
– கொடிய சினத்தை உடைய அனந்தன்; மாச்சங்க பால – பெரிய
சங்க பாலன்; குளிகாதி வெங்கண் நாகம் என – குளிகன் முதலிய
கொடிய கண்களை உடைய நாகங்கள் என்று கூறும்படியாக; வேகமாய் – விரைவாக;
வெங்கணைகள் சிந்தினான் – கொடிய அம்புகளைச் செலுத்தினான்.

——–

8064.
சுற்றும் வந்து, கவி வீரர் வீசிய
சுடர்த் தடங் கல் வரை, தொல் மரம்
இற்று ஒடிந்து பொடியாய் உதிர்ந்தன;
எழுந்து சேணிடை இழிந்தபோல்,
வெற்றி வெங் கணை படப் பட, தலைகள்
விண்ணினூடு திசைமீது போய்,
அற்று எழுந்தன விழுந்து, மண்ணிடை
அழுந்துகின்றன அனந்தமால்.–63-

வெற்றி வெங்கணைகள் படப்பட – (இந்திரசித்தன் எய்த) வெற்றி
பொருந்திய கொடிய அம்புகள் மேலும் மேலும் படுதலால்; கவி வீரர்
– வானர வீரர்கள்; சுற்றும் வந்து வீசிய – (இந்திரசித்தனைச்) சூழ்ந்து
சுற்றிக்கொண்டு (அவன் மேல்) வீசிய; சுடர்த் தடங்கல் வரை – ஒளி
உடைய கல்லால் ஆகிய மலைகளும்; தொல் மரம் – (பழைய) பெரிய
மரங்களும்; இற்று ஒடிந்து பொடியாய் உதிர்ந்தன – முறிந்து போய்ப்
பொடிப் பொடியாய்ச் சிந்தின; தலைகள் – (அறுபட்டு மேல் எழுந்த
வானர வீரர்களது) தலைகள்; விண்ணினூடு எழுந்து – சேணிடை
இழிந்த போல் (பறவைகள்) ஆகாயத்தில் நெடுந்தூரம் மேல் எழுந்து
(அங்கிருந்து) கீழிறங்குவன போல; திசை மீது போய் – (பல)
திசைகளிலும் சென்று; அற்று விழுந்து எழுந்தன – துண்டு பட்டு
விழுந்து சிதறி எழுந்தனவாய்; மண்ணிடை அழுந்துகின்றன –
நிலத்தில் புதைந்து போனவை; அனந்தமால் – எண்ணிக்கையில்
அடங்காதவை.

———-

8065.
சிலைத் தடம் பொழி வயக் கடும் பகழி
செல்ல, ஒல்கினர், சினத்தினால்
உலைத்து எறிந்திட எடுத்த குன்றுதொறு
உடல் பரங்கள் கொடு ஒதுங்கினார்,
நிலைத்து நின்று, சினம் முந்து செல்ல, எதிர்
சென்று சென்று, உற நெருக்கலால்,
மலைத் தடங்களொடு உரத் தலம் கழல,
ஊடு சென்ற, பல வாளியே. –64-

சிலைத்தடம் பொழி வயக்கடும் பகழி செல்ல ஒல்கினர் – (சில
குரங்கு வீரர்கள், இந்திரசித்தனின்) வில்லில் இருந்து எய்யப்பட்ட
கொடிய விரைவான அம்புகள் (தங்கள்) மேல் படுதலால்
தளர்ந்தவர்களாகி; சினத்தினால் – (அவன் மீது கொண்ட)
சினத்தினால்; உலைத்து எறிந்திட – வீசி எறிந்திடுவதற்காக; எடுத்த
குன்று தொறு – (கையில்) எடுத்த மலைகள் தோறும்; உடல் பரங்கள்
கொடு ஒதுங்கினார் – தங்கள் உடம்பின் பாரத்தைச் சுருக்கிக் கொண்டு
(தளர்ச்சி நீங்க) ஒதுங்கி நின்றனர்; நிலைத்து நின்று – (அவ்வாறு
ஒதுங்கி) நிலைபெற்று நின்று; சினம் முந்து செல்ல – சினம் தங்களை
இழுத்துக்கொண்டு முன்னே செல்லுதலால்; எதிர்சென்று சென்று உற
நெருக்கலால் – எதிரில் போய்ப் போய் மிக நெருங்குவதால்; மலைத்
தடங்களொடு – (அவர்கள் கையில் ஏந்திய) மலைகளுடன்; உரத்தலம்
கழல – (அவற்றில் மறைந்து கொண்டுள்ள அவர்களது) மார்பில் பட்டு
வெளிப்படுமாறு; பல வாளியே – பல அம்புகள்; ஊடு சென்ற –
ஊடுருவிச் சென்றன.

———-

8066.
முழுத்தம் ஒன்றில், ஒரு வெள்ள வானரம்
முடிந்து மாள்வன, தடிந்து போய்,
கழுத்த, கைய, நிமிர் கால, வால, பல
கண்டமானபடி கண்டு, நேர்
எழுத் தொடர்ந்த படர் தோள்களால் எறிய,
எற்ற, அற்றன எழுந்து மேல்,
விழுத்த பைந் தலைய வேணு மால் வரைகள்
வீசி வீசி, உடன் வீழுமால். –65-

முழுத்தம் ஒன்றில் – (இரண்டு நாழிகை கொண்ட) ஒரு முகூர்த்த
காலத்தில்; ஒரு வெள்ள வானரம் – ஒரு வெள்ளம் எனும் அளவு
கொண்ட வானரப் படைகள்; முடிந்து – (தங்கள்) ஆயுள் முடிந்து;
தடிந்து போய் மாள்வன – துணிபட்டுப் போய் இறந்து படுவனவாகி;
கழுத்த – கழுத்தை உடையனவும்; கைய – கைகளை உடையனவும்;
நிமிர் கால – நீண்ட கால்களை உடையனவும்; வால – வாலினை
உடையனவும்; பல கண்ட மானபடி நேர் கண்டு – (ஆகிய பல
வானரங்கள்) பல துண்டுகளாகிப் போனதை நேரிடையாகக் கண்டு;
எழுத்தொடர்ந்த படர் தோள்களால் – இரும்புத் தூண் போன்று
அகன்ற பெரிய தோள்களினால்; எறிய
எற்ற மேல் எழுந்து – (அவ்விந்திரசித்தனை) எறிவதற்கும்
மோதுவதற்கும் வானத்தில் (பாய்ந்து) எழுந்து சென்று; விழுத்த
பைந்தலைய – (அவன் செலுத்திய அம்புகளினால்) தள்ளப்பட்ட
பசுமையான தலைகளை உடையனவாய்; வேணுமால் வரைகள் வீசி
வீசி – மூங்கில்கள் வளர்ந்த பெரிய மலைகளை வீசி வீசி; அற்றன
உடன் வீழுமால் – (தலைகளும் மலைகளும்) அழியத் (தாமும்)
ஒருசேர விழுவனவாயின.

———–

8067.
அற்ற பைந் தலை அரிந்து சென்றன
அயில் கடுங் கணை, வெயில்கள் போல்,
புற்று அடைந்த கொடு வெவ் அராவின் நெடு
நாகலோகம் அது புக்கவால்;
வெற்ற வெள்ளிடை விரைந்து போவது, ஒரு
மேடு பள்ளம் வெளி இன்மையால்,
உற்ற செங் குருதி வெள்ளம், உள்ள திரை.
ஓத வேலையொடும் ஒத்ததால்.–66-

அற்ற பைந்தலை – அறுபட்ட (வானரங்களின்) பசுமையான
தலைகளை; அரிந்து சென்றன – அரிந்துகொண்டு சென்றனவாகிய;
அயில்கடுங் கணை – கூர்மையையும் வேகத்தையும் உடைய
(இந்திரசித்தனது) அம்புகள்; வெயில்கள் போல் – (சிறு தரை
வெடிப்பினுள்ளும் நுழைந்து செல்லும்) வெய்யில் போலவும்; புற்று
அடைந்த கொடு வெவ்அராவின் – புற்றினை அடைந்த மிக்க கொடிய
பாம்புகள் போலவும்; நெடு நாக லோகம் அது புக்கவால் – (ஆழமாக)
நீண்டுள்ள நாக உலகத்தைச் (சென்று) சேர்ந்தன; ஒரு மேடு பள்ளம்
வெளி இன்மையால் – ஒரு மேடும் பள்ளமும் சம நிலமும்
இல்லாதபடி; வெற்ற வெள்ளிடை விரைந்து போவது –
(செய்துகொண்டு) வெட்ட வெளியிடை விரைவாகச் செல்வதாகிய; உற்ற
செங்குருதி வெள்ளம் – (செயற்கையாய்ப்) பொருந்தித் தோன்றிய
சிவந்த குருதியாகிய வெள்ளம்; உள்ள திரை – (இயற்கையாய்) உள்ள
அலைகளையும்; ஓத வேலையொடும் ஒத்ததால் – பொங்குதலையும்
உடைய கடலோடு ஒத்துத் (தோன்றியது).

———-

8068.
விழிக்குமேல் விழிய, நிற்கின் மார்பிடைய,
மீளுமேல் முதுக, மேனிய
கழிக்குமேல், உயர ஓடுமேல் நெடிய
கால, வீசின் நிமிர் கைய, வாய்த்
தெழிக்குமேல் அகவும் நாவ, சிந்தையின்
உன்னுமேல்-சிகரம் யாவையும்
பழிக்கும் மேனிய குரங்கின்மேல், அவன்
விடும் கொடும் பகழி பாயவே.–67-

சிகரம் யாவையும் – மலைகள் எல்லாவற்றையும்; பழிக்கும் மேனிய
குரங்கின் மேல் – (தமக்கு ஒப்பாக என்று) பழிக்கத்தக்க வலியும்
பெரிய தன்மையும் உடைய) உடம்புகளையும் உடைய குரங்குகளின்
மீது; அவன் விடும் கொடும் பகழி பாயவே – அந்த இந்திரசித்தன்
செலுத்திய கொடுமையான அம்புகள் பாயும் போது; விழிக்கு மேல்
விழிய – (அவ்வானரங்கள் கண்) விழித்துப் பார்த்தால் (அந்த)
விழிகளின் மீதும்; நிற்கின் மார்பிடைய – (எதிர்த்து) நின்றால்
மார்புகளின் மீதும்; மீளு மேல் முதுக – புறங்காட்டி ஓடுமானால்
முதுகுகளின் மீதும்; கழிக்குமேல் மேனிய – விலகித் தப்ப
முயலுமாயின் உடம்புகளின் மீதும்; உயர ஓடுமேல் நெடிய கால –
உயரக் (குதித்துத் தப்பி) ஓடுமானால் நீண்ட கால்களின் மீதும்; வீசின்
நிமிர்கைய – கைகளை வீசுமாயின் உயர்ந்த கைகளின் மீதும்;
வாய்த்தெழிக்கு மேல் அகவும் நாவ – வாயினால் அதட்டும் என்றால்
அசைகின்ற நாக்குகளிலும்; சிந்தையில் உன்னுமேல் – மனத்தினால்
நினைக்குமாயின் (அந்த மனத்தின் மீதும்) அந்த அம்புகள்
செல்லுகின்றனவாயின.

———–

8069.
மொய் எடுத்த கணை மாரியால், இடை
முடிந்தது ஒன்றும் முறை கண்டிலார்;
எய்விடத்து எறியும் நாணின் ஓசையலது
யாதும் ஒன்று செவி உற்றிலார்;
‘மெய் எடுத்த கவி வெள்ளம் யாவையும்
விழுந்து போன’ எனும் விம்மலால்,
கை எடுத்தன குரங்கின் ஓடும் முறை
கண்டு,-தேவர்கள்-கலங்கினார்.–68-

தேவர்கள் – (போர் கண்டு நின்ற) தேவர்கள்; மொய் எடுத்த
கணை மாரியால் – (இந்திரசித்தன் எய்த) வலிமை மிகுந்த
அம்பு மழையினால்; இடை முடிந்தது ஒன்றும் – இடையில் நடந்த
செயல்கள் ஒன்றையும்; முறை கண்டிலார் – முறையாகக்
கண்டார்கள் இல்லை; எய்விடத்து – (அவன்) அம்பு எய்யும் பொழுது;
எறியும் நாணின் ஓசையலது – (விரல்களால்) தெறிக்கின்ற ஓசை
அல்லாது; யாதும் ஒன்று செவி உற்றிலார் – வேறு எந்த ஓசையையும்
காதினால் கேட்டு உணர்ந்தார்கள் இல்லை; மெய் எடுத்த கவி
வெள்ளம் யாவையும் – உடம்பு எடுத்த குரங்குக் கூட்டங்கள் எல்லாம்;
விழுந்து போன – இறந்து போய் விட்டன; எனும் விம்மலால் –
என்னும் துன்பத்தினால்; கை எடுத்தன குரங்கின் – கைகளை மேலும்
தூக்கியனவாகிய குரங்குகளின்; ஓடும் முறை கண்டு – ஓடுகிற
தன்மையைக் கண்டு; கலங்கினார் – கலங்கினார்கள்.

———

8070.
கண்ட வானரம் அனந்த கோடி முறை
கண்டமானபடி கண்ட அக்
கண்டன், மாறு ஒருவர் இன்மை கண்டு, கணை
மாறினான், விடுதல் இன்மையாய்;
கண்ட காலையில், விலங்கினான் இரவி
காதல், காதுவது ஓர் காதலால்,
கண்ட கார் சிதைய மீது உயர்ந்து ஒளிர்
மராமரம் சுலவு கையினான்.–69-

கண்ட அனந்த கோடி வானரம் – (தன்) (கண்ணின் முன்
எதிர்ப்பட்டுக்) கண்ட பல கோடி வானர வீரர்கள்; முறை கண்டமான
படி கண்ட – முறையே (பல) துண்டங்களானதைக் கண்ட;
அக்கண்டன் – (அந்த) முள் போன்று கொடியவனாகிய இந்திரசித்தன்;
மாறு ஒருவர் இன்மை கண்டு – தன்னை (எதிர்க்க வேறு) ஒருவரும்
இல்லாமையைப் பார்த்து; கணை மாறினான் – அம்புகளைச்
செலுத்துதலை நிறுத்தினான்; விடுதல் இன்மையாய்க் கண்ட
காலையில் – (அவன் அவ்வாறு) அம்பு விடுதல் இல்லாது நின்ற
தன்மையைக் கண்ட அளவிலே; விலங்கினான் இரவி காதல் –
(வெகு தூரத்தில்) விலகி நின்றிருந்தவனாகிய சூரியன் மகனாகிய
சுக்கிரீவன்; காதுவது ஓர் காதலால் – (அவனோடு எதிர்த்துப்)
போரிட வேண்டும் என்ற விருப்பத்தால்; கண்ட கார் சிதைய –
(வானத்தில்) காணப்படுகிற மேகங்கள் சிதையும்படி; மீது உயர்ந்து ஒளிர் மராமரம் – மேல் உயர்ந்து ஒளிவிழுங்குகிற
மராமரத்தைப் (பிடுங்கி எடுத்து); சுலவு கையினான் – சுற்றுகின்ற
கையை உடையவனாயினான்; (அடுத்த பாடலிலும் தொடரும்)

———–

8071.
உடைந்து, தன் படை உலைந்து சிந்தி, உயி்ர்
ஒல்க, வெல் செரு உடற்றலால்,
கடைந்து தெள் அமுது கொள்ளும் வள்ளல் என
மேல் நிமிர்ந்தது ஓர் கறுப்பினான்,
இடைந்து சென்றவனை எய்தி, எய்த அரிய
காவல் பெற்று இகல் இயற்றுவான்
மிடைந்து நின்ற படை வேலை கால் தளர,
வீசினான்; நிருதர் கூசினார்.–70-

தன் படை உடைந்து உலைந்து சிந்தி – தனது (குரங்குப்)
படைவலிமை கேட்டு வருந்திச் சிதறி; உயிர் ஒல்க – உயிர் விடும்
படியாக; வெல் செரு உடற்றலால் – (இந்திரசித்தன்) வெல்லும்
போரினைச் செய்தலால்; கடைந்து – (திருப்பாற்கடலைக்) கடைந்து;
தெள்ளமுது கொள்ளும் – தெளிந்த அமிழ்தத்தைப் பெற்ற; வள்ளல்
என – வள்ளல்தன்மை உடைய வாலி போல்; மேல் நிமிர்ந்தது ஓர்
கறுப்பினான் – மேலும் மேலும் பொங்குகின்ற ஒப்பற்ற சினத்தினை
உடையவனாய்; இடைந்து சென்றவனை எய்தி – (போரை நிறுத்தி)
விலகிச் சென்றவனாகிய இந்திர சித்தனை நெருங்கி; எய்த அரிய
காவல் பெற்று இகல் இயற்றுவான் – (மற்றவர்) நெருங்குவதற்கு
முடியாத காவலாகப் பொருந்தப் பெற்றுப் போரினை இயற்றுவதற்காக;
மிடைந்து நின்ற படை வேலை கால் தளர – நெருங்கி நின்ற
அரக்கர படையாகிய கடல் நிலைகுலையும் படியாக; வீசினான் –
(அந்த மராமரத்தை) வீசிப் போர் செய்தான்; நிருதர் கூசினார் –
(அது கண்டு) அரக்கர்கள் கூச்சம் அடைந்தார்கள்.

———

8072.
சுற்றும் நின்ற படை சிந்தி ஓட, ஒரு
மரா மரம் கொடு துகைத்துளான்
வெற்றி கண்டு, ‘வலி நன்று, நன்று!’ என
வியந்து, வெங் கணை தெரிந்து, அவன்
நெற்றியின்தலை இரண்டு, மார்பிடை
ஓர் அஞ்சு, நஞ்சு என நிறுத்தினான்;
பற்றி வந்த மரம் வேறு வேறு உற
நொறுக்கி, நுண் பொடி பரப்பினான்.–71-

சுற்றும் நின்ற படை சிந்தி ஓட – (தன்னைச்) சுற்றி நின்ற
(அரக்கர்) படை சிதறி ஓடும்படியாக; ஒரு மராமரம் கொடு
துகைத்துளான் – ஒரு மராமரத்தைக் (கையில்) கொண்டு தாக்கி
வருந்துபவனான சுக்கிரீவனது வெற்றியைக் கண்டு; வலி நன்று நன்று
என வியந்து – இவனுடைய வலிமை நன்று நன்று என்று
(இந்திரசித்தன்) வியந்து (புகழ்ந்து); வெங்கணை தெரிந்து – கொடிய
அம்புகளைத் தேர்ந்தெடுத்து; அவன் – அந்தச் சுக்கிரீவனது;
நெற்றியின் தலை இரண்டு – நெற்றியின் இடத்து இரண்டு
அம்புகளையும்; மார்பிடை ஓர் அஞ்சு – மார்பின் இடத்தில் ஒப்பற்ற
ஐந்து அம்புகளையும்; நஞ்சு என நிறுத்தினான் – நஞ்சு என்று
கூறுமாறு பதியும் படி எய்தான்; பற்றி வந்த மரம் – (அந்தச்
சுக்கிரீவன்) கையில் பற்றி (எடுத்து) வந்த மராமரத்தை; வேறு வேறு
உற நொறுக்கி – துண்டு துண்டாகுமாறு நொறுக்கி; நுண் பொடி
பரப்பினான் – நுண்மையான பொடியாக்கித் தூவச் செய்தான்.

————-

அனுமன் குன்று எறிதல்
8073.
அக் கணத்து, அனுமன் ஆலகாலம் என-
லாயது ஓர் வெகுளி ஆயினான்;
புக்கு, அனைத்து உலகமும் குலுங்க நிமிர்
தோள் புடைத்து உருமுபோல் உறா,
‘இக் கணத்து அவன் இறக்கும்’ என்பது ஒரு
குன்று எடுத்து, மிசை ஏவினான்;
உக்கது அக் கிரி, சொரிந்த வாளிகளின்,
ஊழ் இலாத சிறு பூழியாய்.–72-

அக்கணத்து – அப்பொழுது; அனுமன் – அனுமன்; ஆலகாலம் –
ஆலகால நஞ்சு; எனலாயது – என்று கூறும் படியாக (உள்ள); ஓர்
வெகுளி ஆயினான் – ஒப்பற்ற சினத்தைக் கொண்டவனாய்; புக்கு –
(அப்போர்க்களம்) புகுந்து; அனைத்து உலகமும் குலுங்க – எல்லா
உலகங்களும் (அஞ்சி நடுங்கிக்) குலுங்கும் படியாக; நிமிர் தோள் புடைத்து – (தனது) உயர்ந்த தோளைத்
தட்டி; உருமு போல் உறா – இடிபோல் பொருந்தி பேரொலி செய்து;
இக்கணத்து இவன் இறக்கும் என்பது – இப்பொழுதே இந்த
இந்திரசித்தன் இறந்து ஒழிவான் என்று பார்த்தவர் கூறும் படியாக;
ஒரு குன்று எடுத்து – ஒரு (பெரிய) மலையை எடுத்து; மிசை
ஏவினான் – அந்த இந்திரசித்தன் மீது வீசி எறிந்தான். சொரிந்த
வாளிகளின் – (அந்த இந்திரசித்தன்) எய்த அம்புகளினால்; அக்கிரி –
அந்த மலை; ஊழ் இலாதசிறு பூழியாய் – முறைமை இல்லாதத சிறிய
துகள்களாக; உக்கது – சிதறிவிட்டது.

———–

இந்திரசித்தன் – அனுமன் வீரஉரை

8074.
‘நில், அடா! சிறிது நில், அடா! உனை
நினைந்து வந்தனென், முனைக்கு நான்;
வில் எடாமை நினது ஆண்மை பேசி, உயி-
ரோடு நின்று விளையாடினாய்;
கல் அடா, நெடு மரங்களோ, வரு
கருத்தினேன் வலி கடக்கவோ?
சொல், அடா!’ என இயம்பினான், இகல்
அரக்கன், ஐயன், இவை சொல்லினான்;–73-

இகல் அரக்கன் – (அனுமன் எறிந்த மலையை அம்புகளால் ஊழ்
இலாத சிறு பூழியாய்ச் செய்த) போர்த்தொழில் வல்ல அரக்கனாகிய
இந்திரசித்தன்; நில் அடா! சிறிது நில் அடா – (அனுமனைப் பார்த்து)
நில் அடா சற்று நில்லடா; உனை நினைந்து நான் முனைக்கு
வந்தனென் – உன்னை எண்ணித் தான் நான் (போரிடப்)
போர்க்களத்துக்கு வந்தேன்; வில் எடாமை – (நீ்) வில்லை எடுத்துப்
போர் செய்யாமல்; நினது ஆண்மை பேசி – உனது வலிமையைப்
புகழ்ந்து சொல்லிக்கொண்டு; உயிரோடு நின்று விளையாடினாய் –
உயிரோடு இருந்து (இன்னும்) விளையாடுகிறாய்; வரு கருத்தினேன் –
(போர்க்களத்துக்கு வெல்லும்) எண்ணத்தோடு வந்துள்ள (என்னை);
வலி கடக்கவோ – வலிமையடக்க என்று இருப்பவைகள்; கல்
அடா! நெடு மரங்களோ – அடா! கல்லும் நீண்ட மரங்களுமா? அடா
சொல் என இயம்பினான் – அடா செல்லுவாயாக என்று
(இகழ்ச்சியாகக்) கூறினான்; ஐயன் இவை சொல்லினான் – அனுமன்
இச்சொற்களைச் சொல்லுபவனானான்.

————

8075.
‘வில் எடுக்க உரியார்கள், வெய்ய சில
வீரர், இங்கும் உளர்; மெல்லியோய்!
கல் எடுக்க உரியானும் நின்றனன்;
அது இன்று நாளையிடை காணலாம்;
எல் எடுத்த படை இந்திராதியர் உனக்கு
இடைந்து உயிர் கொடு ஏகுவார்;
புல் எடுத்தவர்கள் அல்லம்; வேறு சில
போர் எடுத்து, எதிர் புகுந்துளோம்.–74-

மெல்லியோய் – வலியற்ற மென்மைத்தன்மை உடையவனே;
இங்கும் – எங்கள் பக்கத்திலும்; வில் எடுக்க உரியார்கள் –
வல்லெடுத்துப் போர் செய்ய உரிய தக்கவர்களான; வெய்ய சில வீரர்
– கொடிய சில வீரர்கள்; உளர் – உள்ளனர்; கல் எடுக்க உரியானும்
நின்றனன் – கல்லை எடுத்துப் போர் செய்ய உரியவனாகிய நானும்
நிற்கின்றேன்; அது இன்று நாளையிடை காணலாம் – அவ்வாறு
இருத்தலை இன்று (அல்) நாளைக்குள் காணலாம்; எல் எடுத்த படை
இந்திராதியர் – ஒளி பொருந்திய படைக்கலங்களைக் (கையில்
தாங்கிய) இந்திரன் முதலிய தேவர்கள்; உனக்கு இடைந்து – உனக்குத்
தோற்று; உயிர் கொடு ஏகுவார் – உயிரை (உடலில் தாங்கிக்கொண்டு
செல்வார்கள்); புல் எடுத்தவர்கள் அல்லம் – (போரில் தோற்றுப்)
புல்லை வாயினால் கவ்வி எடுத்தவர்கள் (நாங்கள்) அல்லோம்; வேறு
சில போர் எடுத்து – வேறு சில போர் வகைகளைத் தொடங்கி; எதிர்
புகுந்துளோம் – (போரிட உன்) எதிரில் வந்துள்ளோம்.

———–

8076.
‘என்னொடே பொருதியோ? அது அன்று எனின்,
இலக்குவப் பெயரின் எம்பிரான்-
தன்னொடே பொருதியோ? உன் உந்தை தலை
தள்ள நின்ற தனி வள்ளலாம்
மன்னொடே பொருதியோ? உரைத்தது
மறுக்கிலோம்’ என, வழங்கினான்-
பொன்னொடே பொருவின் அல்லது ஒன்றொடு
பொருப் படா உயர் புயத்தினான்.–75-

என்னொடே பொருதியோ – என்னுடன் போர் செய்வாயோ? அது
அன்று எனின் – அவ்வாறு அல்லாவிட்டால்; இலக்குவப் பெயரின் –
இலக்குவன் என்ற பெயரை உடைய; எம்பிரான் தன்னொடே
பொருதியோ – எமது தலைவனுடன் போர் செய்வாயோ; (அதுவும்
அன்று என்றால்) உன் உந்தை தலை – உன் தந்தையாகிய
இராவணனது தலைகளை; தள்ள நின்ற – துண்டித்துத்
தள்ளுவதற்காகவே (தோன்றி) நின்ற; தனி வள்ளலாம் – ஒப்பற்ற
வள்ளன்மைப் பண்புடையவனாகிய; மன்னொடே பொருதியோ –
மன்ன குமாரனாகிய இராம பிரானோடு போர் செய்வாயோ? உரைத்தது
மறுக்கிலோம் – நீ சொல்வதை மறுக்க மாட்டோம்; என வழங்கினான்
– என்று கூறினான்; பொன்னொடே பொருவின் அல்லது – பொன்
மலையோடு ஒப்பாவதல்லது; ஒன்றொடு – வேறு ஒன்றொடும்;
பொருப்படா – ஒப்பாக மாட்டாத; உயர் புயத்தினான் – உயர்ந்த
தோள்களை உடைய அனுமன்.

————

8077.
‘எங்கு நின்றனன் இலக்குவப் பெயர் அவ்
ஏழை, எம்பி அதிகாயனாம்
சிங்கம் வந்தவனை வென்று, தன் உயிர்
எனக்கு வைத்தது ஓர் சிறப்பினான்?
அங்கு அவன்தனை மலைந்து கொன்று, முனிவு
ஆற வந்தனென்; அது அன்றியும்,
உங்கள் தன்மையின் அடங்குமோ, உலகு
ஒடுக்கும் வெங் கணை தொடக்கினே?–76-

எம்பி அதிகாயனாம் – எனது தம்பியாகிய அதிகயான் என்னும்
பெயர் கொண்ட; சிங்கம் வந்தவனை வென்று – சிங்கம் போன்றவனாகப் (போருக்கு) வந்தவனைக் (கொன்று) வென்று;
இலக்குவப் பெயர் அவ் ஏழை – இலக்குவன் என்ற பெயர் கொண்ட
அந்த அறிவிலி; எங்கு நின்றனன் – (இப்போர்க்களத்தில்) எங்கு
(உயிருடன்) நின்றுள்ளான்; தன் உயிர் – (அவன்) தனது உயிரை;
எனக்கு வைத்தது ஓர் சிறப்பினான் – (நான் கொல்வதற்கு என்று)
எனக்காகவே வைத்துள்ள சிறப்பினை உடையவன்; அங்கு அவன்
தனை மலைந்து கொன்று – அவ்விடத்திலேயே அவனைப் போரிட்டுக்
கொன்று; முனிவு ஆற வந்தனென் – சினம் தணிவதற்காகவே
வந்தேன்; அது அன்றியும் – அது மட்டுமல்லாமல்; உலகு ஒடுக்கும் –
உலகங்களையெல்லாம் அழித்து ஒடுங்கச் செய்ய வல்ல; வெங்கணை
தொடுக்கினே – கொடிய அம்புகளை (நான்) செலுத்தினால்; உங்கள்
தன்மையின் அடங்குமோ – உங்களது (வீரத்) தன்மையினால்; அவை
அடங்குமா? (அடங்கமாட்டாது அன்றே)

————-

8078.
‘யாரும் என் படைஞர் எய்தல் இன்றி அயல்
ஏக, யானும், இகல் வில்லும், ஓர்
தேரின் நின்று, உமை அடங்கலும் திரள்
சிரம் துணிப்பென்; இது திண்ணமால்;
வாரும்; உங்களுடன் வானுளோர்களையும்
மண்ணுளோரையும் வரச் சொலும்;
போரும், இன்று ஒரு பகற்கணே பொருது,
வெல்வென்; வென்று அலது போகலேன்.’–77-

என் படைஞர் யாரும் எய்தல் இன்றி – என் படை வீரர்கள்
எவரும் (எனக்குத் துணையாக) வருதல் இல்லாமல்; அயல் ஏக –
(விலகி) அப்புறம் சென்றுவிட; யானும் – (தனியனாகிய) நானும்;
இகல்வில்லும் – (என்) வலிமையுள்ள வில்லும்; ஓர் தேரின் நின்று –
(இப்பொழுது உள்ள) ஒரு தேரின் (மேல்) நின்று; உமை அடங்கலும் –
உங்கள் எல்லோரையும்; திரள் சிரம் துணிப்பென் – முழுதுமாகத்
தலை அறுத்து விடுவேன்; இது திண்ணமால் – இது நிச்சயமாக
நடக்கப்போகிறது; வாரும் – போரிட வாருங்கள்; உங்களுடன் –
உங்களோடு (உதவிக்காக); வானுளோர்களையும் – வானத்தில் உள்ள
தேவர்களையும்; மண்ணுளோரையும் – நில உலகத்தில் உள்ள
மனிதர்களையும்; வரச் சொலும் – வரும்படி சொல்லுங்கள்; போரும் –
(வந்து என்னோடு) போர் செய்யுங்கள்; இன்று ஒரு பகற்கணே – இன்றைய ஒரு பகற்பொழுதுக்குள்ளாகவே;
பொருது வெல்வென் – (நான் எல்லோரையும்) போரிட்டு வெல்வேன்;
வென்று அலது போகலேன் – (உங்களை) வென்றல்லது பெயர்ந்து
போகேன்.

————-

இந்திரசித்தன் – அனுமன் போர்

8079.
என்று, வெம் பகழி, ஏழு நூறும், இருநூறும்,
வெஞ் சிலைகொடு ஏவினான்;
குன்று நின்றனைய வீர மாருதிதன்
மேனிமேல் அவை குழுக்களாய்ச்
சென்று சென்று உருவலோடும், வாள் எயிறு
தின்று சீறி, ஒரு சேம வன்
குன்று நின்றது பயித்து எடுத்து, அவனை
எய்தி, நொய்தின் இது கூறினான்:–78-

என்று – என்று கூறி (இந்திரசித்தன்); வெஞ்சிலை கொடு – தன்
கொடுமையான வில்லைக் கொண்டு; வெம்பகழி – கொடுமையான
அம்புகள்; ஏழுநூறும் இருநூறும் – தொள்ளாயிரத்தை; ஏவினான் –
செலுத்தினான்; குன்று நின்றனைய வீரமாருதி தன் – மலை நின்றது
போன்ற தோற்றங் கொண்ட வீர அனுமன் தன்; மேனி மேல் –
உடம்பின் மீது; அவை குழுக்களாய்ச் – அந்த அம்புகள்
பெருங்கூட்டமாகச்; சென்று சென்று உருவலோடும் – மேலும் மேலும்
சென்று பட்டு உருவிய அளவில்; வாள் எயிறு தின்று – அனுமன்
(சினத்தால்தன்) ஒளிமிக்க பற்களைக் கடித்து; சீறி – (மேலும்) சினந்து;
நின்றது ஒரு சேமவன் குன்று பறித்து எடுத்து – (அருகில்)
இருந்ததாகிய ஒரு தக்க சமயத்தில் உதவ வேண்டும் என
வைத்திருந்த குன்றைப் பேர்த்து எடுத்து; அவனை எய்தி – அந்த
இந்திர சித்தன் முன் வந்து நின்று; நொய்தின் – எளிமையாக; இது
கூறினான் – இச்சொற்களைச் சொன்னான்; அதனை அடுத்த பாடலில்
காண்க.

————–

8080.
‘தும்பி என்று உலகின் உள்ள யாவை, அவை
ஏவையும் தொகுபு துள்ளு தாள்,
வெம்பு வெஞ் சின மடங்கல் ஒன்றின் வலி-
தன்னை நின்று எளிதின் வெல்லுமோ?
நம்பி தம்பி, எனது எம்பிரான், வரு
துணைத் தரிக்கிலை நலித்தியேல்,
அம்பின் முந்தி உனது ஆவி உண்ணும் இது;
கா, அடா! சிலை வல் ஆண்மையால்.’–79-

தும்பி என்று உலகின் உள்ள யாவை – யானை என்று உலகில்
உள்ளவை எத்தனையோ; அவை ஏவையும் – அவையாவும்; தொகுபு –
ஒன்றாகக் கூடி (திரண்டாலும்); துள்ளுதாள் – குதித்துப் பாயும்
கால்களை உடைய; வெம்பு வெஞ்சின மடங்கல் ஒன்றின் –
கொடுஞ்சினத்தினையுடைய சிங்கம் ஒன்றின்; வலி தன்னை நின்று
எளிதின் வெல்லுமோ – வலிமை தன்னை (எதிர்த்து நின்று) எளிதாக
வெல்லமுடியுமோ? முடியாதல்லவா? நம்பி தம்பி – ஆடவரில் சிறந்த
இராமனது திருத்தம்பியும்; எனது எம்பிரான் – எனக்கும் எங்கட்குத்
தலைவனும் ஆகிய (இலக்குவன்); வரு துணைத் தரிக்கிலை
நலித்தியேல் – வருமளவும் பொறுத்துக் கொள்ள முடியாது (என்னுடன்
போரிட்டு என்னை) வருத்துவாய் ஆனால்; இது – இம்மலை; அம்பின்
முந்தி – (உனது) அம்புக்கு முன்னால்; உனது ஆவி உண்ணும் –
உனது உயிரைக் குடித்து விடும்; சிலை வல் ஆண்மையால் – (உன்)
வில்தொழில் வல்ல ஆண்மையின் மூலமாக; கா அடா – காப்பாற்றிக்
கொள்ளடா! (என்று கூறி அனுமன் பெருமலையை இந்திர சித்தன்
மேல் எறிந்தான்).

————-

8081.
செருப் பயிற்றிய தடக் கை ஆளி செல
விட்ட குன்று, திசை யானையின்
மருப்பை உற்ற திரள் தோள் இராவணன்
மகன்தன் மார்பின், நெடு வச்சிரப்
பொருப்பை உற்றது ஓர் பொருப்பு எனக் கடிது
ஒடிந்து இடிந்து, திசை போயதால்;
நெருப்பை உற்றது ஓர் இரும்பு கூடம் உற,
நீறு பட்டது நிகர்த்ததால்.–80-

செருப்பயிற்றிய – போர் (செய்து) பழக்கப்பட்ட; தடக்கை ஆளி –
பெரிய கைகளை உடைய ஆளி போன்றவனாகிய அனுமன்;
செலவிட்ட குன்று – (இந்திரசித்தன் மீது) செல்லும் படியாக
(வீசிவிட்ட) குன்று; திசை யானையின் – திசை யானைகளின்;
மருப்பை உற்ற – கொம்புகளைப் பொருந்தியுள்ள; தோள் இராவணன் – (திரண்ட) தோள்களை உடைய இராவணனது;
மகன் தன் மார்பின் – மகனுடைய மார்பில்; நெடு வச்சிரப்
பொருப்பை உற்றது ஓர் பொருப்பு என – உயர்ந்த வச்சிரத்தால்
ஆனமலை மீதுபட்ட (வேறு ஒரு) மலை போல; கடிது ஒடிந்து இடிந்து
திசை போயதால் – விரைவாக ஒடிந்து துண்டுகளாகித் திசைகளில்
சிதறிப் போயிற்று; நெருப்பை உற்றது ஓர் இரும்பு – நெருப்பில்
பொருந்திய (பழுக்கக் காய்ந்த) இரும்பானது; கூடம் உற – சம்மட்டி
(அடி) பொருந்தியதால்; நீறு பட்டது நிகர்த்ததால் – (பொடிப்)
பொடியாய்ச் சிதறியதையும் (அது) ஒத்தது.

———–

8082.
விலங்கல்மேல் வர விலங்கல் வீசிய
விலங்கல் நீறு படு வேலையில்,
சலம் கைமேல் நிமிர, வெஞ் சினம் திருகி,
வஞ்சன் மேல் நிமிர் தருக்கினான்,
வலம் கொள் பேர் உலகம் மேருவோடு உடன்
மறிக்கும் மாருதிதன் வாசம் நாறு
அலங்கல் மார்பும் உயர் தோளும் ஊடுருவ,
ஆயிரம் சரம் அழுத்தினான்.–81-

விலங்கல் மேல் வர – (தன்) மலை போன்ற மார்பின் மேல்
வருமாறு; விலங்கல் வீசிய விலங்கல் – மலை போன்ற அனுமன் வீசிய
மலை; நீறு படு வேலையில் – (தன் மார்பில் பட்டு) பொடியாகிப்
போன அளவில்; சலம் கை மேல் நிமிர – மாறுபாடும் (அதனால்
கறுவும்) தன்னிடம் மேலும் மேலும் மிகுதிப்பட; வெஞ்சினம் திருகி –
கொடிய சினம் மிகுந்து; வஞ்சன் – வஞ்சகப் பண்பு படைத்த (அந்த)
இந்திரசித்தன்; மேல் நிமிர் தருக்கினான் – மேல் ஓங்கிய செருக்கு
உடையவனாய்; வலம் கொள் பேருலகம் – உறுதிமிக்க (இந்தப்) பெரிய
உலகத்தையும்; மேருவோடு – மேரு மலையையும்; உடன் மறிக்கும் –
ஒன்றாகப் பேர்த்தெடுக்க வல்ல; மாருதிதன் – அனுமனது; வாசம் நாறு
அலங்கல் மார்பும் – மணம் மிக்க மாலையணிந்த மார்பும்; உயர்
தோளும் – உயர்ந்த தோள்களும்; ஊடுருவ – ஊடுருவுமாறு; ஆயிரம்
சரம் அழுத்தினான் – ஆயிரம் அம்புகளைச் செலுத்தினான்.

—————

8083.
ஒன்று போல்வன ஓராயிரம் பகழி
ஊடு போய் உருவ, ஆடகக்
குன்று கால் குடைய மேல் உயர்ந்து இடை
குலுங்கநின்றனைய கொள்கையான்,
மன்றல் நாறு தட மேனிமேல் உதிர
வாரி சோர வரும் மாருதி,
நின்று தேறும் அளவின்கண், வெங் கண் அடல்
நீலன் வந்து, இடை நெருக்கினான்.–82-

ஒன்று போல்வன ஓராயிரம் பகழி – (இந்திரசித்தன் எய்த) ஒன்றை
ஒன்று ஒத்தனவாகிய ஓராயிரம் அம்புகள்; ஊடு போய் உருவ – (தன்
மார்பின்) இடையில் புகுந்து போய் ஊடுருவ; ஆடகக் குன்று –
பொன்மயமான மேருமலை; கால்குடைய – காற்றுத் தாக்க; மேல்
உயர்ந்து -மேல் உயர்ந்து; இடை குலுங்க நின்றனைய கொள்கையான்
– உள் இடம் (கலகலத்து வலிமை இழந்தது) போன்ற
தன்மையுடையவனாகி; மன்றல் நாறு தடமேனி மேல் – மணம்
வீசுகின்ற பெரிய உடம்பின் மீது; உதிர வாரி சோர வரும் மாருதி –
இரத்தக் கடல் பெருகப் பெற்றவனாகிய அனுமன்; நின்று தேறும்
அளவின் கண் – (களைத்து) நின்று (ஏது செய்யலாம் என்று)
எண்ணும் பொழுது; வெங்கண் அடல் நீலன் – கொடிய கண்களை
உடைய கொல்லும் தன்மை உள்ள நீலன் என்பவன்; வந்து இடை
நெருக்கினான் – (எதிர்) வந்து (அந்த இந்திரசித்தனை) வருத்தத்
தொடங்கினான்.

————-

நீலன் போர்
8084.
நீலன், நின்றது ஒரு நீல மால் வரை
நெடுந் தடக் கையின் இடந்து, நேர்
மேல் எழுந்து, எரி விசும்பு செல்வது ஒரு
வெம்மையோடு வர வீசலும்,
சூலம் அந்தகன் எறிந்தது அன்னது
துணிந்து சிந்த, இடை சொல்லுறும்
காலம் ஒன்றும் அறியாமல், அம்பு கொடு
கல்லினான், நெடிய வில்லினான். –83-

நீலன் – (குரங்குப் படைத்தலைவனாகிய) நீலன்; நின்றது –
தன்னருகில் இருந்ததாகிய; ஒரு நீல மால் வரை – ஒரு நீல
நிறமுடைய பெரிய மலையை; நெடுந் தடக்கையின் இடந்து – (தன்)
நீண்ட (பெரிய) கைகளால் பெயர்த்து எடுத்து; நேர் மேல் எழுந்து –
நேராக மேலே (ஆகாயத்தில்) உயர்ந்து; எரி விசும்பு செல்வது ஒரு
வெம்மையோடு – நெருப்பு (நேராக) ஆகாயத்தில் செல்வது
போன்றதொரு வெப்பத்தோடு; வர வீசலும் – (இந்திரசித்தன்) மேல்
நேராக வருமாறு வீசி எறிந்தவுடன்; நெடிய வில்லினான் – பெரிய
வில்லை ஏந்தியவனாகிய இந்திரசித்தன்; அந்தகன் எறிந்தது சூலம்
அன்னது – இயமனால் எறியப்பட்ட சூலத்தைப் போன்ற அந்த மலை;
துணிந்து சிந்த – துண்டுபட்டுச் சிதறும் படியாக; இடை சொல்லுறும்
காலம் ஒன்றும் அறியாமல் – இடையில் கணக்கிட்டுச் சொல்லும்
காலம் (உண்டு என) அறியாதபடி; அம்பு கொடு கல்லினான் – (தன்)
அம்புகளால் (விரைவாக) அழித்து விட்டான்.

———

8085.
ஊகம் எங்கும் உயிரோடு நின்றனவும்
ஓட, வானவர்கள் உள்ளமும்
மோகம் எங்கும்உள ஆக, மேருவினும்
மும் மடங்கு வலி திண்மை சால்
ஆகம் எங்கும் வெளி ஆக, வெங் குருதி
ஆறு பாய, அனல் அஞ்சு வாய்,
நாக வெங் கண் நகு, வாளி பாய்தொறும்
நடுங்கினான், மலை பிடுங்கினான்–84-

உயிரோடு நின்றனவும்- உயிரோடு உள்ளனவாகிய உயிரினங்களும்;
ஊகம் எங்கும் ஓட – குரங்குகளும் எல்லாப் பக்கங்களிலும் சிதறி
ஓடும்படியாக; தேவர்கள் உள்ளமும் – தேவர்களின் உள்ளங்களிலும்
(பிறருடை உள்ளங்களிலும்); மோகம் எங்கும் உள ஆக – திகைப்பு
எங்கும் உண்டாகும் படியாக; மேருவினும் – மேரு மலையைக்
காட்டிலும்; மும்மடங்கு வலி திண்மை சால் – மூன்று மடங்கு
வலிமையும் திண்மையும் மிக்க; ஆகம் எங்கும் – (நீலனுடைய)
உடம்பு முழுவதும்; வெளி ஆக – (அம்பினால் துளைபட்டுச்
சல்லடைக் கண்போல்) வெட்ட வெளியாக; வெங்குருதி ஆறுபாய –
கொடிய இரத்தவெள்ள ஆறு (எங்கும்) பாய; அனல் அஞ்சுவாய் –
தீயும் அஞ்சும் நுனியை உடைய; வெங்கண் நாகநகு – கொடிய கண்களை உடைய பாம்பு
(நஞ்சின் கொடுமையை எள்ளி) நகுகின்ற; வாளி பாய்தொறும் –
(இந்திரசித்தனுடைய) அம்புகள் விரைந்து பாய்ந்து வரும் தோறும்;
மலை பிடுங்கினான் – மலையைப் பெயர்த்து (அவன் மேல்
எறிந்தவனாகிய) நீலன்; நடுங்கினான் – நடுங்கி நின்றான்.

————-

அங்கதன் போர்

8086.
‘மேரு, மேரு’ என, ‘அல்ல, அல்ல’ என
வேரினொடு நெடு வெற்பு எலாம்,
மார்பின்மேலும் உற, தோளின்மேலும் உற,
வாலி காதலன் வழங்கினான்;
சேருமே அவை, தனுக் கை நிற்க? எதிர்
செல்லுமே? கடிது செல்லினும்,
பேருமே? கொடிய வாளியால் முறி
பெறுக்கலாவகை நுறுக்கினான்.–85-

மேரு மேரு என – (சிலர் இது) மேரு மலையே மேரு மலையே
(என்றும்); அல்ல அல்ல என – (வேறு சிலர் எண்ணி இது)
மேருவன்று மேருவன்று (வேறுமலை) என்றும் சொல்லும்படியாக; நெடு
வெற்பு எலாம் – உயர்ந்த மலைகளை எல்லாம்; வேரினொடு –
வேரோடு (பிடுங்கி எடுத்து); மார்பின் மேலும் – (இந்திரசித்தனது)
மார்பின் மீதும்; உயர் தோளின் மேலும் – உயர்ந்த தோள்களின்
மீதும்; உற – பொருந்தித் (தாக்கும்படியாக); வாலி காதலன்
வழங்கினான் – வாலியின் அன்பு மகனாகிய அங்கதன் வீசி
எறிந்தான்; தனுக்கை நிற்க – (இந்திரசித்தன்) கையில் வில்
இருக்கையில்; அவை சேருமே – அம்மலைகள் (அவனுடலில்) சென்று
பட்டு நி்ற்குமோ? எதிர் செல்லுமே – (அவனது) எதிரில்தான் செல்ல
முடியுமோ? கடிது செல்லினும் பேருமே – (அம்மலைகள்) விரைவாக
அவன் எதிரில் சென்றாலும் (அம்புக்கு இலக்கு ஆகாமல்) தவறுமோ?
கொடிய வாளியால் – (அந்த இந்திரசித்தன் தன்) கொடுமையான
அம்புகளால்; முறி பெறுக்கலாவகை – துண்டம் என்ற தன்மையையும்
பெறாதபடி; நுறுக்கினான் – பொடிப்பொடியாக நொறுங்கச் செய்து
விட்டான்.

———-

8087.
நெற்றிமேலும், உயர் தோளின்மேலும், நெடு
மார்பின்மேலும், நிமிர் தாளினும்,
புற்றினூடு நுழை நாகம் அன்ன, புகை
வேக வாளிகள் புகப் புக,
தெற்றி வாள் எயிறு தின்று, கைத்துணை
பிசைந்து, கண்கள் எரி தீ உக,
வற்றி ஓடு உதிர வாரி சோர்வுற,
மயங்கினான், நிலம் முயங்கினான்.–86-

நெற்றிமேலும் – (அங்கதனது) நெற்றியின் மீதும்; உயர் தோளின்
மேலும் – உயர்ந்த தோள்களின் மீதும்; நெடு மார்பின் மேலும் –
பரந்த மார்பின் மீதும்; நிமிர் தாளினும் – நீண்ட கால்களின் மீதும்;
புற்றினூடு நுழை நாகம் அன்ன – புற்றில் நுழைகின்ற பாம்பினைப்
போன்ற; புகை வேக வாளிகள் புகப்புக – புகையொடு கூடிய
(இந்திரசித்தன்) விரைவான அம்புகள் பலவாறு பாய்தலினால்; தெற்றி
– (அங்கதன்) தடுமாறி; வாள் எயிறு தின்று – ஒளியுள்ள பற்களைக்
கடித்து; கைத்துணை பிசைந்து – இரு கைகளையும் பிசைந்து; கண்கள்
எரி தீ உக – கண்களில் இருந்து எரிகின்ற தீப்பொறி சிதற; வற்றி –
வாடி; ஓடு உதிர வாரி சோர்வுற – (உம்பில் இருந்து) வெளியே ஓடி
வருகிற குருதிக் கடல் (மிகுதியும் பெருகுதலால்); மயங்கினான் –
மயங்கியவனாகி; நிலம் முயங்கினான் – நிலத்தில் விழுந்தான்.

———-

இலக்குவன் உரை
8088.
மற்றை வீரர்கள்தம் மார்பின்மேலும், உயர்
தோளின்மேலும், மழை மாரிபோல்,
கொற்ற வெங் கணை உலக்க, எய்தவை
குளிப்ப நின்று, உடல் குலுங்கினார்;
இற்று அவிந்தன, பெரும் பதாதி; உயிர்
உள்ள எங்கணும் இரிந்த; அப்
பெற்றி கண்டு, இளைய வள்ளல், ஒள் எரி
பிறந்த கண்ணன், இவை பேசினான்:–87-

மற்றை வீரர்கள்தம் – (தண்னொடு தனிபோர் செய்த சுக்கிரீவன்,
அனுமன் நீலன் அங்கதன் தவிரப்) பிற வானர வீரர்கள் தம்;
மார்பின் மேலும் – மார்பின் மேலும்; உயர் தோளின் மேலும் – உயர்ந்த தோள்களின் மேலும்; மழை மாரி போல் –
மழைத்தாரைகள் போல; கொற்ற வெங்கணை உலக்க –
(இந்திரசித்தனால் எய்யப்பட்ட) வெற்றி பொருந்திய கொடிய அம்புகள்
(உடலில் புகுந்து) வருத்தவும்; எய்தவை குளிப்பநின்று – (அவ்வாறு)
எய்தவை (உடம்பில்) மூழ்கி நின்றதனால்; உடல் குலுங்கினார் –
குரங்கு வீரர்கள் உடல் நடுங்கினார்கள்; பெரும்பதாதி – (அதனால்)
பெரிய காலாட் படையாகிய குரங்குப்படை; இற்று அவிந்தன – உயிர்
ஒழிந்து இறந்துபட்டன; உயிர் உள்ள எங்கணும் இரிந்த – உயிர்
பிழைத்தவைகள் எல்லாப் பக்கங்களிலும் சிதறி ஓடின; அப்பெற்றி
கண்டு – அந்தத் தன்மையைக் கண்டு; இளைய வள்ளல் – இளைய
வள்ளலாகிய இலக்குவன்; ஒள் எரி பிறந்த கண்ணன் – ஒளியுடைய
தீப்பொறி பறக்கும் கண்களை உடையவனாய்; இவை பேசினான் –
இவற்றைச் சொல்லுபவன் ஆனான்; (அடுத்த பாடலில் காண்க)

—————–

8089.
‘பிழைத்தது, கொள்கை போத; பெரும் படைத் தலைவர்
யாரும்
உழைத்தனர், குருதி வெள்ளத்து; உலந்ததும் உலப்பிற்று
அன்றே,
அழைத்து இவன்தன்னை, யானே ஆர் உயிர்
கொளப்படாதே?
இழைத்தது பழுதே அன்றோ?-வீடண!’ என்னச் சொன்னான்.–88-

வீடண – இலக்குவன் (வீடணனைப் பார்த்து) வீடணனே; கொள்கை
பிழைத்தது – (நாம் கொண்டிருந்த) கொள்கை தவறி விட்டது; போத –
மிகவும்; பெரும் படைத்தலைவர் யாரும் – பெரிய படைத்தலைவர்கள்
எல்லோரும்; குருதி வெள்ளத்து உழைத்தனர் – இரத்த வெள்ளத்தில்
அழுந்தி வருந்தினார்கள்; உலந்ததும் உலப் பின்று அன்றே – இறந்த
படைவீரர்களும் அளவில்லை அல்லவா? அவன் தன்னே யானே
அழைத்து – அந்த இந்திரசித்தனை நானே (அறைகூவிப் போருக்கு
அழைத்து); ஆர் உயிர் கொளப்படாதே – (அவனது) அரிய உயிரைக்
கொண்டிருக்கக் கூடாதோ; இழைத்தது பழுதே அன்றோ – (அவ்வாறு
செய்யாமல் படைத்தலைவர்களையும் குரங்கு வீரர்களையும் இவனோடு
தனியாகப் போரிடவிட்ட) செயல் தவறுடையதல்லவா? என்னச்
சொன்னான் – என்று கூறினான் (இலக்குவன்)

——-

வீடணன் இசைதல்

8090.
‘ஐய! ஈது அன்னதேயால்; ஆயிர கோடித் தேவர்
எய்தினர்; எத்தினார்கள் ஈடுபட்டு இரிந்தது அல்லால்,
செய்திலர் இவனை ஒன்றும்; நீ இது தீர்ப்பின் அல்லால்,
உய்திறன் உண்டோ, வேறுஇவ் உலகினுக்கு உயிரோடு?’
என்றான்.–89-

(வீடணன்) ஐயா – ஐயனே; ஈது அன்னதேயால் – (நீ கூறிய) ஈது
அத்தன்மையதாகிய உண்மையேயாகும்; ஆயிர கோடித் தேவர்
எய்தினர் – (முன்பு ஒரு காலத்தில் இவனோடு போர் செய்வதற்காக)
பல கோடித் தேவர்கள் வந்தார்கள்.; எய்தினார்கள் – (அவ்வாறு)
வந்தவர்களெல்லாரும்; ஈடுபட்டு இரிந்தது அல்லால் – வலிமை கெட்டு
ஓடியது அல்லாமல்; இவனை ஒன்றும் செய்திலர் – இந்த
இந்திரசித்தனை எதுவும் செய்ய முடியாதவர்களானார்கள்; நீ இது
தீர்ப்பின் அல்லால் – நீ (இவனால் உலகுக்கு ஏற்பட்ட) துன்பத்தை
நீக்கினால் அல்லாமல்; இவ் உலகினுக்கு – இந்த உலகத்துக்கும்;
உயிரோடு – (இங்குள்ள) உயிருள்ள பொருள்களுக்கும்; உய்திறன்
வேறு உண்டோ என்றான் – உய்யும் வழிவகை வேறு (ஏதேனும்)
உண்டோ என்றான். (ஒரு வழியும் இல்லை என்றபடி)

———–

8091.
என்பது சொல்லக் கேட்ட, இந்திரவில்லினோடும்
பொன் புரை மேகம் ஒன்று வருவது போல்கின்றானை,
முன்பனை, முன்பு நோக்கி, ‘இவன்கொலாம், பரதன்
முன்னோன்-
தன் பெருந் தம்பி?’ என்றான்; ‘ஆம்’ எனச் சாரன்
சொன்னான்.-90-

என்பது – என்ற சொற்களை; வீடணன் சொல்லக் கேட்ட –
சொல்லக் கேட்ட; பொன் புரை மேகம் ஒன்று – பொன்னை ஒத்த
மேகம் ஒன்று; இந்திர வில்லினோடும் – இந்திரவில்லினோடும்;
வருவது போல்கின்றானை – வருவது போல் வருகின்றவனும்;
முன்பனை – வலிமை உடையவனும் ஆகிய இலக்குவனை; முன்பு
நோக்கி – (இந்திரசித்து) தன் முன்பு பார்த்து; இவன் கொலாம் பரதன்
முன்னோன் தன் பெருந்தம்பி என்றான் – இவன் போலும் பரதனுக்கு
முன்னோன் ஆகிய இராமன்தன் துணைத்தம்பி என்று கேட்டான்;
சாரன் ஆம் எனச் சொன்னான் – (ஒற்றன் ஆகிய) சாரன் (அதற்கு)
ஆமாம் என்று சொன்னான்.

————

அரக்கர் இலக்குவனை எதிர்த்தல்

8092.
தீயவன்இளவல்தன்மேல் செல்வதன் முன்னம், ‘செல்க!’
என்று
ஏயினர் ஒருவர் இன்றி, இராக்கதத் தலைவர், ‘எங்கள்
நாயகன் மகனைக் கொன்றாய்! நண்ணினை, நாங்கள் காண;
போய் இனி உய்வது எங்கே?’ என்று, எரி விழித்துப்
புக்கார்.–91-

தீயவன் – கொடியவன் ஆகிய இந்திரசித்தன்; இளவல் தன் மேல்
– இளவலாகிய (இலக்குவன்) தன் மேல்; செல்வதன் முன்னம் –
(போரிடச்) செல்லுவதற்கு முன்பாக; செல்க என்று – (நீங்கள்
போரிடச்) செல்லுங்கள் என்று; இராக்கதத் தலைவர் – அரக்கர்
(படைத்) தலைவர்கள்; ஒருவர் இன்றி ஏயினர் – ஒரு வீரரும்
மீதியில்லாமல் (எல்லோரையும்) (இலக்குவனுடன் போர் செய்ய)
ஏவினார்கள்; எங்கள் நாயகன் மகனைக் கொன்றாய் – (அவ்ாறு
ஏவப்பட்ட அரக்க வீரர்கள்) எங்கள் தலைவனாகிய இராவணனது
மகனாகிய அதிகாயனைக் கொன்றவனே; நாங்கள் காண நண்ணினை –
(நீ) நாங்கள் (கண் எதிரில்) காணுமாறு (வந்து) நெருங்கினை; இனி
போய் உய்வது எங்கே – இனிமேல் (நீ) போய்ப் பிழைப்பது எவ்வாறு;
என்று – என்று கூறி; எரி விழித்துப் புக்கார் – நெருப்புப் போல்
(கடுமையாக) விழித்துப் போர் செய்ய நெருங்கினார்கள்.

———-

அரக்கர் படை அழிவு
8093.
கோடி நூறு அமைந்த கூட்டத்து இராக்கதர், கொடித்
திண் தேரும்,
ஆடல் மாக் களிறும், மாவும், கடாவினர் ஆர்த்து மண்டி,
மூடினார்; மூடினாரை முறை முறை துணித்து, வாகை
சூடினான், இராமன் பாதம் சூடிய தோன்றல் தம்பி.–92-

நூறு கோடி அமைந்த கூட்டத்து இராக்கதர் – நூறு கோடியாக
அமைந்த (திரண்ட) பெரும் கூட்டமாகிய அரக்கர்கள்; கொடித்
திண்தேரும் – கொடிகள் கட்டிய வலிய தேர்களையும்; ஆடல்
மாக்களிறும் – வெற்றி பொருந்திய பெரிய யானைகளையும்; மாவும் –
குதிரைகளையும்; கடாவினர் – செலுத்தியவர்களாய்; ஆர்த்து மண்டி –
ஆரவாரம் செய்து நெருங்கி; மூடினார் – சுற்றிச் சூழ்ந்தார்கள்;
மூடினாரை – (அவ்வாறு தன்னைச்) சுற்றிச் சூழ்ந்தவர்களை; இராமன்
பாதம் சூடிய தோன்றல் தம்பி – இராமனது திருப்பாதுகைகளைத்
தனது தலையில் சூடிய பரதனது தம்பியாகிய இலக்குவன்; முறை
முறை துணித்து – முறை முறையாகத் துண்டு படுத்திக் கொன்று;
வாகை சூடினான் – வெற்றி மாலையாகிய வாகை மாலையைச்
சூடினான்.

———–

8094.
அதிர்ந்தன, உலகம் ஏழும்; அனற் பொறி, அசனி என்னப்
பிதிர்ந்தன; மலையும் பாரும் பிளந்தன; பிணத்தின் குன்றத்து
உதிர்ந்தன, தலைகள்; மண்டி ஓடின, உதிர நீத்தம்;
விதிர்ந்தன, அமரர் கைகள்; விளைந்தது, கொடிய வெம்
போர்.–93-

உலகம் ஏழும் அதிர்ந்தன – (இலக்குவன் எய்த அம்புகளினால்)
ஏழு உலகங்களும் அதிர்ச்சி அடைந்தன; அசனி என்ன அனற்பொறி
பிதிர்ந்தன – இடியேறு என்று கூறும் படியாகத் தீப்பொறிகள் சிதறின;
மலையும் பாரும் பிளந்தன – அதனால் மலைகளும் நிலமும்
பிளந்தன; பிணத்தின் தலைகள் – போரில் இறந்து பிணமாகிப் போன
வீரர்களுடைய தலைகள்; குன்றத்து உதிர்ந்தன – மலை போல்
நிலத்தில் (அறுபட்டு) உதிர்ந்தன; உதிர நீத்தம் மண்டி ஓடின – இரத்த வெள்ளம் நெருங்கி ஓடியது;
அமரர் கைகள் விதிர்ந்தன – தேவர்களுடைய கைகள் நடுங்கின;
கொடிய வெம் போர் விளைந்தது – (இவ்வாறு) மிகக் கொடிய போர்
மூண்டது.

————-

8095.
விட்டனன், விசிகம் வேகம் விடாதன, வீரன்; மார்பில்
பட்டன; உலகம் எங்கும் பரந்தன; பதாகைக் காட்டைச்
சுட்டன; துரக ராசி துணித்தன; பனைக் கைம்மாவை
அட்டன; கூற்றம் என்ன அடர்ந்தன, அனந்தம் அம்மா!–94-

வீரன் வேகம் விடாதன விசிகம் விட்டனன் – இலக்குவன்
எப்பொழுதும் வேகம் நீங்காது உள்ள அம்புகளைச் செலுத்தினான்;
மார்பில் பட்டன – (அந்த அம்புகள் அரக்க வீரர்களுடைய) மார்பில்
பதிந்தன; உலகம் எங்கும் பரந்தன – உலகம் முழுவதும் பரவின;
பதாகைக் காட்டைச் சுட்டன – கொடிகளின் தொகுதிகளை (எரித்துச்)
சுட்டு (அழித்தன); துரகராசி துணித்தன – குதிரைப் படைகளின்
கூட்டத்தைத் துண்டாக்கின; பனைக் கைம்மாவை அட்டன –
பனைமரம் போன்ற கையை உடைய யானைகளைத் கொன்றன;
அனந்தம் கூற்றம் என்ன அடர்ந்தன – எல்லையில்லாத (அந்த
அம்புகள்) இயமனைப் போல் கொலைத் தொழிலைச் செய்தன.

————–

8096.
உலக்கின்றார்; உலக்கின்றாரை எண்ணுவான் உற்ற
விண்ணோர்,
கலக்குறு கண்ணர் ஆகி, கடையுறக் காணல் ஆற்றார்,
விலக்க அரும் பகழி மாரி விளைக்கின்ற விளைவை உன்னி,
‘இலக்குவன்சிலை கொடேகொல், எழு மழை பயின்றது!’
என்றார். –95-

உலக்கின்றார் உலக்கின்றாரை – (இலக்குவனது அம்பு பட்டு)
மிகுதியாக இறக்கின்ற அரக்கர்களை; என்ணுவான் உற்ற விண்ணோர-
எண்ணுவதற்காக வந்து பொருந்திய தேவர்கள்; கலக்குறு கண்ணர்
ஆகி – கலக்கம் மிக்க கண்பார்வை உடையவர்களாய்; கடையுறக்
காணல் ஆற்றார் – முடிவு வரையில் (எண்ணி) முடிவு காண
மாட்டாதவர் ஆயினார்; விலக்க அரும் பகழி மாரி – பிறரால்
விலக்குதற்கு அரிய (இலக்குவனது) அம்பு மழை; விளைக்கின்ற
விளைவை உன்னி – (போர்க்களத்தில்) உண்டாக்குகிற விளைவுகளை
(மனதில்) நினைத்து; எழு மழை பயின்றது – ஏழு மேகங்களும்
(இடைவிடாது பொழியும் தன்மையைக்) கற்றது, இலக்குவன் சிலை
கொடேகொல் – இலக்குவனது வில்லை (முன்மாதிரியாகக்)
கொண்டுதானோ; என்றார் – என்று வியந்து கூறினார்கள்.

எழு மழை – ஏழு மேகங்கள்; அவையாவன சம்வர்த்தம்,
ஆவர்த்தம், புஷ்கலா வர்த்தம், சங்கிருதம், துரோணம், காளமுகி,
நீலவர்ணம் என்பன.

———

8097.
ஓளி ஒண் கணைகள் தோறும் உந்திய வேழம், ஒற்றை
வாளியின் தலைய, பாரில் மறிவன, மலையின் சூழ்ந்த;
ஆளியின் துப்பின் வீரர் பொரு களத்து, ஆர்த்த ஆழித்
தூளியின் தொகைய, வள்ளல் சுடு கணைத் தொகையும்
அம்மா!–96-

ஓளி ஒண் கணைகள் தோறும் – (இலக்குவன் செலுத்திய)
வரிசையான ஒளி பொருந்திய அம்புகள் (பாயும்) தோறும்; உந்திய
வேழம் – (அவற்றால்) தாக்கி வீழ்த்தப்பட்ட யானைகள்; ஒற்றை
வாளியின் தலைய – (ஒவ்வொன்றும்) ஒவ்வொரு அம்பின் முனையை
உடையவாய்; பாரில் மறிவன – நிலத்தில் விழுந்து இறப்பன;
மலையின் சூழ்ந்த – மலைகளைப் போலப் (போர்க்களம்) எங்கும்
கிடந்தன; ஆளியின் துப்பின் வீரர் – சிங்கம் போன்ற வலிமை
உடைய வீரர்கள்; பொருகளத்து – (போர் செய்கின்ற) போர்க்களத்தில்;
வள்ளல் சுடுகணைத் தொகையும் – வள்ளலாகிய இலக்குவன்
(செலுத்திய) கொடுந்தன்மை உள்ள அம்புகளின் எண்ணிக்கையும்; ஆர்த்த ஆழித் தூளியின் தொகைய அம்மா –
ஒலிக்கிற கடலின்கண் உள்ள மணல்களின் தொகையுடையன.

————

8098.
‘பிறவியில் பெரிய நோக்கின் பிசிதம் உண்டு, உழலும்
பெற்றிச்
சிறையன’ என்ன நோக்கி, தேவரும் திகைப்ப, தேற்றி,
துறைதொறும் தொடர்ந்து, வானம் வெளி அறத் துவன்றி,
வீழும்
பறவையின் பெரிது பட்டார் பிணத்தின் மேல் படிவ மாதோ.–97-

பிறவியில் – (இடைவிடாது வருகின்ற இலக்குவனது அம்புகள்)
பிறப்பிலேயே; பெரிய நோக்கின் – பெரிய தோற்றத்தையும்; பிசிதம்
உண்டு – ஊனினை உண்டு; உழலும் பெற்றி – திரிகின்ற
தன்மையையும் (உடைய) சிறையன – சிறகுகுகளை உடைய
பறவைகளாகும்; என்ன – என்று; தேவரும் நோக்கி திகைப்ப –
தேவர்களும் பார்த்துத் திகைப்படைய; தேற்றி – (இவை அம்புகளே
பறவைகள் அல்ல என்பதைத்) தெளிய வைத்து; துறை தொறும்
தொடர்ந்து – (அந்த அம்புகள்) எல்லா இடங்களிலும் நிறைந்து;
வானம் வெளி அற – ஆகாயத்தில் இடைவெளி இல்லாதவாறு
(நெருங்கி); துவன்றி வீழும் – (இறந்தவர்களின் உடலைத் தின்பதற்காக
அவ்வுடலங்களின் மீது) நெருங்கி விழுகின்ற; பறவையின் பெரிது
பட்டார் – பறவைகளைக் காட்டிலும் மிகுதியாக இறந்தவர்களுடைய;
பிணத்தின் மேல் படிவ – பிணங்களின் மேல் குத்துண்டு கிடப்பன.

—————–

8099.
திறம் தரு கவியின் சேனை, செறி கழல் நிருதன் சீற,
இறந்தன கிடந்த வெள்ளம் எழுபதின் பாதி மேலும்,
பறந்தலை முழுதும் பட்ட வஞ்சகர் படிவம் மூட,
மறைந்தன; குருதி ஓடி, மறி கடல் மடுத்திலாத.–98-

செறிகழல் நிருதன் சீற – (கட்டிச்) செறித்த வீரக்கழல் அணிந்த
அரக்கனாகிய இந்திர சித்தன் (சினந்து) சீறிப் (போர் செய்ததனால்);
இறந்தன கிடந்த – இறந்தவைகளாகிக் கிடந்த; திறம் தரு கவியின்
சேனை – வலிமை மிக்க குரங்குப் படை; வெள்ளம் எழுபதின் பாதி –
வெள்ளம் எழுபதின் பாதியாகிய முப்பத்து ஐந்து ஆகும்; மேலும் –
அதற்கு மேலும்; பறந்தலை முழுதும் பட்ட – போர்க்களம் முழுவதும்
இறந்த; வஞ்சகர் படிவம் மூட – வஞ்சனைப் பண்பு உள்ள
அரக்கர்களின் உடம்புகள் மூடுதலினால்; மறைந்தன –
மறைந்தனவாகிய (குரங்குப்படை வீரர் உடலங்கள் பலவாகும்); குருதி
ஓடி – (களத்தில்) இரத்த வெள்ளம் (பாய்ந்து) பாயந்து ஓடி; மறி கடல்
மடுத்திலாத – மறித்து வரும் அலைகளை உடைய கடலில்
அடங்காவாயின.

————

8100.
கை அற்றார்; கால்கள் அற்றார்; கழுத்து அற்றார்; கவசம்
அற்றார்;
மெய் அற்றார்; குடர்கள் சோர, விசை அற்றார்; விளிவும்
அற்றார்;
மையல் தார்க் கரியும், தேரும், வாசியும், மற்றும் அற்றார்;
உய்யச் சாய்ந்து ஓடிச் சென்றார், உயிர் உள்ளார் ஆகி
உள்ளார்.–99-

கை அற்றார் – (அசுரர்களில் பலர்) கைகள் அறுபட்டார்கள்; கால்கள்
அற்றார் – கால்கள் அறுபட்டார்கள்; கழுத்து அற்றார் – கழுத்து
அறுபட்டார்கள்; கவசம் அற்றார் – கவசம் அறுபட்டார்கள்; மெய்
அற்றார் – உடம்பு அறுபட்டார்கள்; குடர்கள் கோர விசை அற்றார்
– குடல்கள் (அறுபட்டுத்) தொங்க வேகம் அழிந்தார்கள்; விளிவும்
அற்றார் – (வலிமை அழிந்ததால்) கூப்பிடும் சக்தியும் இழந்தார்கள்;
மையல் தார்க்கரியும் – மதமயக்கம் மிக்க (படுமணி இரட்டும்)
மாலைகளை அணிந்த யானைகளும்; தேரும் – தேர்களும்; வாசியும் –
குதிரைகளும்; மற்றும் அற்றார் – மற்றும் உள்ள (துணைக்கருவிகள்)
பலவற்றையும் இழந்தார்கள்; உயிர் உள்ளார் ஆகி உள்ளார் – உயிர்
(தாங்கி) உள்ளவராகி உள்ளவர்கள்; உய்யச் சாய்ந்து – உயிர்
தப்புவதற்காக நிலைகெட்டு; ஓடிச்சென்றார் – ஓடிப் போனார்கள்.

———–

இலக்குவன் இந்திரசித்தன் போர்
8101.
வற்றிய கடலுள் நின்ற மலை என, மருங்கின் யாரும்
சுற்றினர் இன்றி, தோன்றும் தசமுகன் தோன்றல், துள்ளித்
தெற்றின புருவத்தோன், தன் மனம் எனச் செல்லும் தேரான்,
உற்றனன், இளைய கோவை; அனுமனும் உடன் வந்து
உற்றான்.–100-

வற்றிய கடலுள் நின்ற மலை என – (தண்ணீர்) வற்றிய கடலுக்கு
நடுவில் நின்ற மலை போல; மருங்கின் யாரும் சுற்றினர் இன்றி –
பக்கத்தில் எவரும் சூழ்ந்து நிற்பவர் இன்றி; தோன்றும் – (தனியனாத்)
தோன்றுகிற; தசமுகன் தோன்றல் – பத்துத் தலைகளை உடைய
இராவணனது மகனாகிய இந்திரசித்தன்; துள்ளி – மனந்துடித்து;
தெற்றின புருவத்தோன் – சினத்தால் மேல் ஏறிய புருவத்தை
உடையவனாய்; தன் மனம் எனச் செல்லும் தேரான் – தன் மனம்
போல் (வேகமாகச்) செல்லுகிற தேரின் (மேல்) ஏறியவனாகி; இளைய
கோவை உற்றனன் – இளைய தலைவனாகிய இலக்குவனை
நெருங்கினான்; அனுமனும் – (அந்த நேரத்தில்) அனுமனும்; உடன்
வந்து உற்றான் – உடனே (இலக்குவன் பக்கலில்) வந்து சேர்ந்தான்.

———-

8102.
‘தோளின்மேல் ஆதி, ஐய!’ என்று அடி தொழுது நின்றான்;
ஆளிபோல் மொய்ம்பினானும் ஏறினன்; அமரர் ஆர்த்தார்;
காளியே அனைய காலன் கொலை அன, கனலின் வெய்ய,
வாளிமேல் வாளி தூர்த்தார், மழையின்மேல் மழை
வந்தன்னார்.–101-

ஐய! தோளின் மேல் ஆதி – (இலக்குவனை நெருங்கிய அனுமன்
அவனைப் பார்த்து) தலைவனே! (நீ) என் தோளின் மீது
ஏறிக்கொள்ளுவாய்; என்று அடி தொழுது நின்றான் – (அவனது)
கால்களைத் தொழுது நின்றான்; ஆளி போல் மெய்ம்பினானும் –
சிங்கம் போன்ற வலிமை உடையவனாகிய (இலக்குவனும்);
ஏறினன் – (அதை ஏற்று அவனது தோளின்மீது) ஏறினான்; அமரர்
ஆர்த்தார் – (அதைக்கண்டு மகிழ்ந்து) தேவர்கள் பேரொலி
செய்தார்கள்; மழையின் மேல் மழை வந்தன்னார் – ஒரு மேகத்தின்
மீது மற்றொரு மேகம் (போர் செய்ய) வந்ததை ஒத்தவர்களாகிய
(இலக்குவன் இந்திரசித்தன் ஆகிய இருவரும்); காளியே அனைய
காலன் – காளி போன்ற கருநிறம் உடைய யமனது; கொலை அன –
கொலைக்கருவி போன்ற; கனலின் வெய்ய – நெருப்பைக் காட்டிலும்
கொடுமையான; வாளி மேள் வாளி தூர்த்தார் – அம்புகளின் மீது
அம்புகளாக (ஒருவர் மீது ஒருவர்) எய்தார்கள்.

———-

8103.
இடித்தன, சிலையின் நாண்கள்; இரிந்தன, திசைகள் இற்று;
வெடித்தன, மலைகள் விண்டு; பிளந்தது, விசும்பு மேன்மேல்;
பொடித்த, இவ் உலகம் எங்கும்; பொழிந்தன, பொறிகள்
பொங்கி;
கடித்தன, கணைகளோடு கணைகள் தம் அயில் வாய் கவ்வி.–102-

சிலையின் நாண்கள் இடித்தன – (இலக்குவன் இந்திர சித்தன்
ஆகியோருடைய) வில்லின் நாண்கள் இடிபோல ஒலி செய்தன;
திசைகள் இற்று இரிந்தன – (அந்த ஒலியால்) திசைகள் இற்று நிலை
கெட்டன; மலைகள் விண்டு வெடித்தன – மலைகள் பிளந்து சிதறி
வெடித்தன; மேன் மேல் விசும்பு பொடித்த – மேலுலகங்கள்
பிளவுபட்டன; இவ்வுலகம் எங்கும் பொறிகள் பொங்கி பொழிந்தன –
(மேல்கூறிய செயல்களின் காரணமாக) இந்த உலகம் முழுவதும்
தீப்பொறிகள் மிகுந்து அதிகமாக நிறைந்தன; கணைகளோடு கணைகள்
– (ஒருவர் எய்த) அம்புகள் (மற்றவர் எய்த) அம்புகளை; தம் அயில்
வாய்கவ்வி – தங்களுடைய கூரிய வாயினால் கவ்விக்; கடித்தன –
கடித்தன.

————-

8104.
அம்பினோடு அம்பு ஒன்று ஒன்றை அறுக்க, மற்று
அறுக்கிலாத,
வெம் பொறி கதுவ, விண்ணில் வெந்தன, கரிந்து வீழ்ந்த;
உம்பரும் உணர்வு சிந்தி ஒடுங்கினார்; உலகம் யாவும்
கம்பமுற்று உலைந்த; வேலைக் கலம் எனக் கலங்கிற்று,
அண்டம்.–103-

அம்பினோடு அம்பு – அம்புகளோடு அம்புகள் (அயில்வாய்
கல்வித்தாக்கும்போது); ஒன்று ஒன்றை அறுக்க – ஒன்று மற்றொன்றை
அறுக்க; மற்று அறுக்கிலாத – (அவ்வாறு) அறுக்க மாட்டாதனவாகிய
அம்புகள்; வெம்பொறிகதுவ – கொடிய தீப்பொறிகள் பற்ற; விண்ணில்
வெந்தன கரிந்து வீழ்ந்த – வானத்தில் வெந்து கருகிக் (கீழே)
விழுந்தன; உம்பரும் உணர்வு சிந்தி ஒடுங்கினார் – (அதுகண்டு)
தேவர்களும் அறிவு கலங்கி ஒடுங்கினார்கள்; உலகம் யாவும்
கம்பமுற்று உலைந்த – உலகங்கள் எல்லாம் நடுக்கம் கொண்டு
வருந்தின; அண்டம் – உலக உருண்டை; வேலைக்கலம் எனக்
கலங்கிற்று – கடலில் செல்லும் கப்பல் போலக் கலங்கி நடுங்கியது.

——————

8105.
அரிஇனம் பூண்ட தேரும், அனுமனும், அனந்த சாரி
புரிதலின், இலங்கை ஊரும் திரிந்தது; புலவரேயும்,
எரி கணைப் படலம் மூட, ‘இலர், உளர்’ என்னும் தன்மை
தெரிகிலர்; செவிடு செல்லக் கிழிந்தன, திசைகள் எல்லாம்.–104-

அரி இனம் பூண்ட தேரும் – சிங்கக் கூட்டங்கள் பூட்டப்பட்ட
(இந்திரசித்தனது) தேரும்; அனுமனும் – இலக்குவனது (ஊர்தியாகிய)
அனுமனும்; அனந்தசாரி புரிதலின் – பலப்பலவாகச் சாரி சுழன்று
வருதலால்; இலங்கை ஊரும் திரிந்தது – இலங்கை நகரமும் சுழலல்
உற்றது; எரிகணைப் படலம் மூட – (இருவரும் ஒருவர் மேல் ஒருவர்
எய்த) எரியும் தன்மை உள்ள அம்புகளின் கூட்டம்
மூடிக்கொண்டதனால்; இலர் உளர் என்னும் தன்மை – (இலக்குவன்,
இந்திரசித்து என்ற அவ்விருவரும்) இலரோ உளரோ என்னும்
தன்மையை; புலவரேயும் தெரிகிலர் – (அறியும் தன்மை உள்ள)
தேவர்களும் அறிய மாட்டாதவர் ஆயினர்; திசைகள் எல்லாம் செவிடு
செல்லக் கிழிந்தன – எல்லாத் திசைகளும் (திசைகளில் உள்ள உயிரினங்கள் எல்லாம்) செவிடு பட்டுப் பிளவு
பட்டன.

—————–

8106.
‘என் செய்தார்! என் செய்தார்!’ என்று இயம்புவார்;
‘இனைய தன்மை
முன் செய்தார் யாவர்?’ என்பார்; ‘முன் எது? பின் எது?’
என்பார்;
கொன் செய்தார் வீரர் இன்ன திசையினார் என்றும்
கொள்ளார்;-
பொன் செய்தார் மவுலிவிண்ணோர்-உணர்ந்திலர், புகுந்தது
ஒன்றும்.–105-

பொன் செய்தார் மவுலி விண்ணோர் – பொன் மயமான (கற்பக
மலர்) மாலையை முடியில் அணிந்த தேவர்கள்; புகுந்தது ஒன்றும்
உணர்ந்திலர் – (செய்தொழில் விரைவின் காரணமாக அங்கு)
நிகழ்ந்தது ஒன்றையும் அறிய மாட்டாதவர்களாய்; என் செய்தார் என்
செய்தார் என்று இயம்புவார் – (இவ்வீரர்கள்) யாது செய்தார்கள்?
யாது செய்தார்கள் என்று (அறிய வியப்புத்) தோன்றக் கூறி;
இனையதன்மை முன் செய்தார் யாவர்? – இத்தகைய செயலை இதற்கு
முன்பு யாவர் செய்திருக்கிறார்கள் என்று சொன்னார்கள்; முன் எது
பின் எது என்பார் – (இப்போர் போல்) முன்பும் எதுவுமில்லை
பின்பும் எதுவுமில்லை என்பார்கள்; கொன்செய் தார் வீரர் – அச்சம்
உண்டாகும் மாலையை அணிந்த வீரர்கள்; இன்ன திசையினார்
என்றும் கொள்ளார் – இன்ன திசையில் உள்ளார்கள் என்றும் அறிய
மாட்டாதவர் ஆயினார்.

———–

8107.
‘நாண் பொரு வரி வில் செங் கை, நாம நூல் நவின்ற கல்வி
மாண்பு ஒரு வகையிற்று அன்று; வலிக்கு இலை அவதி;
வானம்
சேண் பெரிது’ என்று, சென்ற தேவரும், ‘இருவர் செய்கை
காண்பு அரிது’ என்று, காட்சிக்கு ஐயுறவு எய்திற்று
அன்னோ!–106-

நாண் பொரு வரிவில் – நாண் பொருந்திய கட்டமைந்த வில்லினது;
நாம நூல் நவின்ற செங்கை கல்வி – புகழ் பொருந்திய நூலை (வில்
ஆற்றலை)த் தமது சிவந்த கைகளால் (இவ்விருவரும் கற்ற) கல்வியின்;
மாண்பு ஒரு வகையிற்று அன்று – பெருமை ஒருவகைப் பட்டது
அன்று; வலிக்குஇலை அவதி – (இவர்களது உடல்) வலிமைக்கும் ஓர்
எல்லை இல்லை; வானம் சேண் பெரிது என்று சென்ற தேவரும் –
(இவர்கள் விளைக்கும் வலிய போர்) வானத்தினும் பெரிது எனவே
(இவர்களுடைய போரைக் காண வேண்டும் என்று நினைத்து)
வானத்துப் போர் காண வந்த தேவர்களும்; இருவர் செய்கை காண்பு
அரிது என்று – இருவரது (போர்ச்) செய்கை காண்பதற்கு
அருமையானது என்று கூறி விட்டதால்; காட்சிக்கு ஐயுறவு எய்திற்று –
கண்ணால் காணும் காட்சிப் பிரமாணத்துக்கும் ஐயம் வந்து விட்டது.

———-

8108.
ஆயிர கோடி பல்லம், அயில் எயிற்று அரக்கன், எய்தான்;
ஆயிர கோடி பல்லத்து அவை துணித்து அறுத்தான், ஐயன்;
ஆயிர கோடி நாகக் கணை தொடுத்து, அரக்கன் எய்தான்;
ஆயிர கோடி நாகக் கணைகளால் அறுத்தான், அண்ணல்.–107-

அயில் எயிற்று அரக்கன் – கூர்மையான பற்களை உடைய
அரக்கனாகிய இந்திரசித்தன்; ஆயிர கோடி பல்லம் எய்தான் –
ஆயிரங்கோடி பல்லம் எனும் ஒருவகை அம்புகளை எய்தான்; ஐயன் –
தலைவனாகிய (இலக்குவன்); அவை ஆயிர கோடி பல்லத்து
துணித்து அறுத்தான் – அந்த அம்புகளை (வேறு) ஆயிரம் கோடி
பல்லங்களால் துண்டித்து ஒழித்தான்; அரக்கன் – அரக்கனாகிய
இந்திரசித்தன்; ஆயிர கோடி நாகக் கணைதொடுத்து எய்தான் –
ஆயிரங் கோடி நாகக் கணைகளை (வில்லில்) தொடுத்து எய்தான்;
அண்ணல் – தலைமைத் தன்மை உடைய இலக்குவன்; ஆயிர கோடி
நாகக் கணைகளால் அறுத்தான் – ஆயிரம் கோடி நாகக் கணைகளால்
(அவற்றை) அறுத்து நீக்கினான்

————-

8109.
கோட்டியின் தலைய கோடி கோடி அம்பு அரக்கன்
கோத்தான்;
கோட்டியின் தலைய கோடி கோடியால் குறைத்தான்,
கொண்டல்;
மீட்டு, ஒரு கோடி கோடி வெஞ் சினத்து அரக்கன் விட்டான்;
மீட்டு, ஒரு கோடி கோடி கொண்டு, அவை தடுத்தான், வீரன்.–108-

அரக்கன் – அரக்கனாகிய இந்திரசித்தன்; கோட்டியின் தலைய –
துன்பம் செய்யும் இயல்பினைக் கொண்ட நுனியினை உடைய; கோடி
கோடி அம்பு கோத்தான் – பல கோடி அம்புகளை (வில்லில்)
கோத்துச் செலுத்தினான்; கொண்டல் – மேகத்தைப் பண்பால் ஒத்த
இலக்குவன்; கோட்டியின் தலைய – (அதே போல்) துன்பம் செய்யும்
இயல்பினைக் கொண்ட நுனியினை உடைய; கோடி கோடியால்
குறைத்தான் – பல கோடி அம்புகளால் (அவற்றைத்) துண்டாக்கினான்;
வெஞ்சினத்து அரக்கன் – கொடிய சினத்தை உடைய அரக்கனாகிய
இந்திரசித்தன்; மீட்டு ஒரு கோடி கோடி விட்டான் – மீண்டும் ஒரு
கோடி அம்புகளை எய்தான்; வீரன் – வீரனாகிய இலக்குவன்; அவை –
அவற்றை; மீட்டு ஒரு கோடி கோடி கொண்டு தடுத்தான் – மீண்டும்
ஒரு கோடி அம்புகளைச் (செலுத்தித்) தடுத்தான்.

—————-

8110.
கங்கபத்திரம் ஓர் கோடி கை விசைத்து, அரக்கன் எய்தான்;
கங்கபத்திரம் ஓர் கோடி கணை தொடுத்து, இளவல்
காத்தான்.
திங்களின் பாதி கோடி, இலக்குவன் தெரிந்து விட்டான்;
திங்களின் பாதி கோடி தொடுத்து, அவை அரக்கன்
தீர்த்தான்.–109-

அரக்கன் – இந்திரசித்தன்; கங்க பத்திரம் – கழுகின் சிறகுகள்
கட்டப் பெற்ற அம்புகள்; ஓர் கோடி – ஒரு கோடியினை; கை
விசைத்து எய்தான் – கையில் வேகம் கொண்டு செலுத்தினான்:
இளவல் – இளவலாகிய இலக்குவன்; ஓர் கோடி கங்க பத்திரம் கணை
தொடுத்து – ஒரு கோடி (அதே) கங்கபத்திரக் கணைகளைத் தொடுத்து;
காத்தான் – (அவை தன் மீது படாமல்) காத்தான்; இலக்குவன் –
இலக்குவன்; திங்களின் பாதி – அர்த்த சந்திர வடிவுடைய; கோடி
தெரிந்து விட்டான் – கோடி அம்புகளைத் தேர்ந்தெடுத்துச்
செலுத்தினான்; அரக்கன் – இந்திரசித்தன்; அவை – அவற்றை;
திங்களின் பாதி – அர்த்த சந்திர வடிவுடைய; கோடி தொடுத்து –
கோடி அம்புகளைத் தொடுத்து; தீர்த்தான் – நீக்கினான்.

————

8111.
கோரையின் தலைய கோடி கொடுங் கணை
அரக்கன் கோத்தான்;
கோரையின் தலைய கோடி தொடுத்து, அவை இளவல்
கொய்தான்;
பாரையின் தலைய கோடி பரப்பினான் இளவல், பல் கால்;
பாரையின் தலைய கோடி, அரக்கனும், பதைக்க எய்தான்.–110-

அரக்கன் – இந்திரசித்தன்; கோரையின் தலைய – கோரைப்புல்
போன்ற நுனியை உடையனவாகிய; கொடுங்கணை – கொடிய
அம்புகள்; கோடி கோத்தான் – கோடியை (வில்லில்) கோத்து
எய்தான்; இளவல் – இளையவனாகிய இலக்குவன்; அவை –
அவற்றை; கோரையின் தலைய – கோரைப்புல் போன்ற நுனியை
உடைய அம்புகள்; கோடி தொடுத்து – கோடியைத் தொடுத்து;
காத்தான் – (தன்னைக்) காத்துக் கொண்டான்; இளவல் – இலக்குவன்;
பல்கால் – பலமுறை; பாரையின் தலைய – பாரை மீன் போன்ற
நுனியை உடைய அம்புகள்; கோடி பரப்பினான் – கோடியை
(எங்ஙணும்) தூவினான்; அரக்கனும் – இந்திரசித்தனும்; பாரையின்
தலைய – பாரை மீன் போன்ற நுனியை உடைய; கோடி – கோடி
அம்புகளை; பதைக்க எய்தான் – (அவற்றிற்கு எதிராக) துடிக்க
எய்தான்.

—————

8112.
தாமரைத் தலைய வாளி, தாமரைக் கணக்கின் சார்ந்த,
தாம் வரத் துரந்து, முந்தி, தசமுகன் தனயன் ஆர்த்தான்;
தாமரைத் தலைய வாளி, தாமரைக் கணக்கின் சார்ந்த,
தாம் வரத் தடுத்து வீழ்த்தான், தாமரைக்கண்ணன் தம்பி.-111-

தசமுகன் தனயன் – பத்துத் தலையை உடைய இராவணனது
மகனாகிய இந்திரசித்தன்; தாமரைத் தலைய – தாமரை அரும்பு
போன்ற முனையை உடைய; வாளி – அம்புகள்; தாமரைக் கணக்கின்
– பதுமம் என்னும் பேரெண்; சார்ந்த – அளவு உள்ளனவற்றை; தாம்
வர முந்தி துரந்து – தாம் (தன் வில்லில் இருந்து) முந்தி வருமாறு
செலுத்தி; ஆர்த்தான் – பேரொலி செய்தான்; தாமரைக் கண்ணன்
தம்பி – தாமரை மலர் போன்ற திருக்கண்களை உடைய இராமனது
தம்பியாகிய இலக்குவன்;தாமரைத் தலைய வாளி – தாமரை அரும்பு போன்ற முனையை
உடைய அம்புகள்; தாம் தாமரைக் கணக்கின் சார்ந்த – தாம் பதுமம்
என்னும் பேரெண் அளவு உள்ளனவற்றை; வர – (தன் வில்லில்
இருந்து) வருமாறு செய்து; தடுத்து வீழ்த்தான் – (அவன் செலுத்திய
அம்புகளைத்) தடுத்து அறுத்து அழித்தான்.

—————

8113.
வச்சிரப் பகழி கோடி வளை எயிற்று அரக்கன் எய்தான்;
வச்சிரப் பகழி கோடி துரந்து, அவை அனகன் மாய்த்தான்;
முச் சிரப் பகழி கோடி இலக்குவன் முடுக விட்டான்;
முச் சிரப் பகழி கோடி தொடுத்து, அவை தடுத்தான்
முன்பன்.–112-

வளை எயிற்று அரக்கன் – வளைந்த பற்களை உடைய
அரக்கனாகிய இந்திரசித்தன்; வச்சிரப் பகழி கோடி – பல தலைகளை
உடைய வச்சிரத்தின் வடிவமானதோர் அம்புகள் கோடியை; எய்தான் –
செலுத்தினான்; அனகன் – குற்றம் அற்றவனாகிய இலக்குவன்;
வச்சிரப் பகழி கோடி துரந்து – பல தலைகளை உடைய வச்சிரப்
படையின் வடிவமான அம்புகள் கோடியைச் செலுத்தி; அவை
மாய்த்தான் – (அவற்றைத்) தடுத்து அழித்தான்; இலக்குவன் –
இலக்குவன்; கோடி – கோடி அளவு உள்ள; முச்சிரப் பகழி – மூன்று
முனைகளை உடைய அம்புகளை; முடுக விட்டான் – விரைவாகச்
செல்ல விட்டான்; முன்பன் -வலிமை உடையவனாகிய இந்திரசித்தன்;
முச்சிரப் பகழி கோடி தொடுத்து – மூன்று முனைகளை உடைய
அம்புகள் கோடியைத் தொடுத்து; அவை தடுத்தான் – அந்த
அம்புகளைத் தடுத்தான்.

———

8114.
அஞ்சலி அஞ்சு கோடி தொடுத்து, இகல் அரக்கன் எய்தான்;
அஞ்சலி அஞ்சு கோடி தொடுத்து, அவை அறுத்தான், ஐயன்
குஞ்சரக்கன்னம் கோடி இலக்குவன் சிலையில் கோத்தான்;
குஞ்சரக்கன்னம் கோடி தொடுத்து, அவை அரக்கன்
கொய்தான்.–113-

இகல் அரக்கன் – போர் வலிமை உடைய இந்திரசித்தன்;
அஞ்சுகோடி அஞ்சலி தொடுத்து – ஐந்து கோடியளவான. கை கூப்பிய
வடிவம் போன்ற வடிவம் உள்ள அம்புகளை; தொடுத்து எய்தான் –
தன் வில்லில் தொடுத்து எய்தான்; ஐயன்- தலைவனாகிய இலக்குவன்;
அஞ்சுகோடி அஞ்சலி தொடுத்து – ஐந்து கோடியளவான கை கூப்பிய
வடிவம் போன்று வடிவம் உள்ள அம்புகளைத் தொடுத்து; அவை –
அவற்றை; அறுத்தான் – அழித்தான்; இலக்குவன் – இலக்குவன்;
சிலையில் – தன் வில்லில்; குஞ்சரக் கன்னம் கோடி – யானையின்
காது போன்ற தோற்றம் உடைய அம்புகள் கோடியை; கோத்தான் –
தொடுத்து எய்தான்; அரக்கன் – இந்திரசித்தன்; குஞ்சரக் கன்னம்
கோடி தொடுத்து – யானையின் காது போன்ற தோற்றம் உடைய
அம்புகள் கோடியைத் தொடுத்து; அவை கொய்தான் – அவற்றைக்
கொய்தான்.

———

8115.
எய்யவும், எய்த வாளி விலக்கவும், உலகம் எங்கும்
மொய் கணைக் கானம் ஆகி முடிந்தது; முழங்கு வேலை
பெய் கணைப் பொதிகளாலே வளர்ந்தது; பிறந்த கோபம்
கைம்மிகக் கனன்றது அல்லால், தளர்ந்திலர், காளை வீரர்.–114-

எய்யவும் – (இலக்குவனும் இந்திரசித்தனும் ஒருவர் மேல் ஒருவர்)
அம்பு எய்யவும்; எய்த வாளி விலக்கவும் – (ஒருவர்) எய்த
அம்புகளை மற்றவர் விலக்கவும் (செய்தலினால்); உலகம் எங்கும் –
உலகம் முழுவதும்; மொய்கணைக் கானம் ஆகி முடிந்தது –
நெருங்கிய அம்புக் கூட்டங்களை உடைய காடு போலாகி முடிந்தது;
முழங்கு வேலை – ஒலிக்கிற கடல்; பெய் கணைப் பொதிகளாலே
வளர்ந்தது – பொழிகின்ற அம்புகளின் கூட்டத்தால் வளர்ச்சி உற்றது;
காளை வீரர் – (அங்ஙனமாகவும்) இளம் காளை போன்ற (இரு)
வீரர்களும்; பிறந்த கோபம் – மனத்தில் தோன்றிய சினம்; கைம் மிகக் கனன்றது அல்லால் – மேலும் மேலும்
அதிகமாகத் தோன்றிக் கனன்றது அல்லது; தளர்ந்திலர் – (இருவரும்
சிறிதும்) தளர்ச்சி உற்றார்களில்லை.

————-

8116.
வீழியின் கனிபோல் மேனி கிழிபட, அனுமன் வீரச்
சூழ் எழு அனைய தோள்மேல் ஆயிரம் பகழி தூவி,
ஊழியின் நிமிர்ந்த செந் தீ உருமினை உமிழ்வது என்ன,
ஏழ்-இருநூறு வாளி இலக்குவன் கவசத்து எய்தான்.–115-

வீழியின் கனி போல் – (இந்திர சித்தன்) வீழிச் செடியினது சிவந்த
நிறமுடைய பழம் போல; அனுமன் மேனி கிழிபட – (அனுமனது)
உடம்பு கிழிபடும் படியாக; வீரச் சூழ் எழு அனைய தோள் மேல் –
வீரத்தை உடைய திரண்ட இரும்புத் தூண் போன்ற தோள்களின்
மேல்; ஆயிரம் பகழி தூவி – ஆயிரம் அம்புகளைச் செலுத்தி;
ஊழியின் நிமிர்ந்த செந்தீ – ஊழிக் காலத்தில் (கடலில் முற்படத்
தோன்றிய) செந்தீயான (வடவாமுகாக்கினி); உருமினை உமிழ்வது
என்ன – இடியை வெளிப்படுத்துவதுபோல; ஏழ் இருநூறு வாளி –
ஆயிரத்து நானூறு அம்புகளை; இலக்குவன் கவசத்து எய்தான் –
இலக்குவனுடைய கவசத்தில் எய்தான்.

———

8117.
‘முற்கொண்டான், அரக்கன்’ என்னா, முளரி வாள்
முகங்கள், தேவர்,
பின் கொண்டார்; இளைய கோவைப் பியல்
கொண்டான் பெருந் தோள்நின்றும்
கல்கொண்டு ஆர்கிரியின் நாலும் அருவிபோல், குருதி
கண்டார்,
‘வில் கொண்டான், இவனே!’ என்னா, வெருக் கொண்டார்,
முனிவர்எல்லாம்.–116-

தேவர் – (போர் காண) வந்த தேவர்கள்; அரக்கன் – அரக்கனாகிய
இந்திரசித்தன்; முற்கொண்டான் என்னா – (போரில்) முந்தினான்
என்று எண்ணி; முளரி வாள் முகங்கள் பின் கொண்டார் –
(தங்களது) தாமரை போன்ற ஒளி பொருந்திய முகங்களைப் பின்னால்
திருப்பிக் கொண்டார்கள்; இளைய கோவை – இளைய தலைவனாகிய
இலக்குவனை; பியல் கொண்டான் – பிடரியின் மீது ஏற வைத்துக்
கொண்டுள்ளவனாகிய அனுமனது; பெருந் தோள் நின்றும் – பெரிய தோள்களில்
இருந்து; கல் கொண்டு ஆர் கிரியின் – கற்கள் பொருந்தி நிறைந்துள்ள
மலையில் இருந்து; நாலும் அருவி போல் – பெருகி வருகின்ற
அருவியைப் போல்; குருதி கண்டார் – இரத்தத்தைக்
கண்டவர்களாகிய; முனிவர் எல்லாம் – முனிவர்கள் எல்லாம்; “வில்
கொண்டான் இவனே” என்னா – வில்லைக் கையில் கொண்ட
(வீரர்களில் சிறந்தவன்) இவ்வரக்கனே என்று சொல்லி; வெருக்
கொண்டார் – அச்சம் கொண்டார்கள்.

—————

8118.
சீறும் நூல் தெரிந்த சிந்தை இலக்குவன், சிலைக் கை வாளி
நூறு நூறு ஏவி, வெய்தின், நுடங்கு உளை மடங்கல் மாவும்
வேறு வேறு இயற்றி, வீரக் கொடியையும் அறுத்து வீழ்த்தி,
ஆறு நூறு அம்பு செம் பொன் கவசம் புக்கு அழுந்த
எய்தான்.–117-

சீறும் நூல் தெரிந்த சிந்தை இலக்குவன் – சினந்து செய்யும்
போர்த் தொழிலைப் பற்றிய சாத்திரத்தை (ஐயந்திரிபற) அறிந்த
இலக்குவன்; கைசிலை வாளி – (தன்) கையிலுள்ள வில்லில் இருந்து
அம்புகளை; நூறு நூறு ஏவி – பல நூற்றுக்கணக்கான அளவில்
செலுத்தி; வெய்தின் நுடங்கு உளை மடங்கல் மாவும் – வலிமையாக
வளைந்துள்ள பிடரி மயிரை உடைய சிங்கங்களையும்; வேறு வேறு
இயற்றி – வேறு வேறு துண்டுகளாகச் செய்து; வீரக் கொடிகயையும்
அறுத்து வீழ்த்தி – வீரத்துக்குக் குறியான கொடியையும் அறுத்து
வீழ்த்தி; செம்பொன் கவசம் புக்கு – இந்திரசித்தன் அணிந்துள்ள
சிவந்த பொன் போன்ற கவசத்தில் புகுந்து; அழுந்த ஆறு நூறு அம்பு
எய்தான் – அழுந்துமாறு அறுநூறு அம்புகளை எய்தான்.

————

8119.
காளமேகத்தைச் சார்ந்த கதிரவன் என்னக் காந்தி,
தோளின்மேல் மார்பின்மேலும், சுடர் விடு கவசம் சூழ,
நீள நீள் பவள வல்லி நிரை ஒளி நிமிர்வ என்ன,
வாளிவாய்தோறும் வந்து பொடித்தன, குருதி வாரி.–118-

காள மேகத்தைச் சார்ந்த – கரிய மேகத்தைப் பொருந்திய;
கதிரவன் என்னக் காந்தி – கதிரவன் என்னுமாறு ஒளிவிட்டு;
தோளின் மேல் – தோளின் மீதும்; மார்பின் மேலும் – மார்பின்
மீதும்; சுடர் விடு கவசம் சூழ – ஒளிவிடுகிற கவசத்தைச் சுற்றிலும்;
நீளநீள் பவள வல்லி நிரை ஒளி நிமிர்வ என்ன – நீளமாக
நீண்டுள்ள பவளக் கொடிகளின் வரிசைகள் ஒளியோடு தோன்றுவது
போல்; குருதி வாரி – இரத்தக் கடல்கள்; வாளிவாய் தோறும் வந்து
பொடிந்தன – அம்புகள் தைத்த இடந்தோறும் வந்து வெளிப்பட்டன.

———–

8120.
பொன்உறு தடந் தேர் பூண்ட மடங்கல் மாப்புரண்ட
போதும்,
மின் உறு பதாகையோடு சாரதி வீழ்ந்த போதும்,
தன் நிறத்து உருவ, வாளி தடுப்பு இல சார்ந்த போதும்,
இன்னது என்று அறியான், அன்னான், இனையது ஓர்
மாற்றம்சொன்னான்.–119-

பொன் உறு தடந் தேர் பூண்ட மடங்கல் மா – பொன் மயமான
பெரிய (தனது) தேரில் பூட்டப்பட்ட சிங்கங்கள் (இலக்குவனது அம்பு
பட்டு); புரண்ட போதும் – கீழ் விழுந்து புரண்டு இறந்த காலத்திலும்;
மின் உறு பதாகையோடு – ஒளி பொருந்திய கொடியுடன்; சாரதி
வீழ்ந்த போதும் – தேர்ப்பாகன் இறந்து விழுந்த காலத்திலும்; தன்
நிறத்து உருவ – தன் மார்பில் ஊடுருவும் படியாக; தடுப்பு இல வாளி
சார்ந்த போதும் – தடுக்க முடியாதனவாகிய அம்புகள் நெருங்கிய
காலத்திலும்; அன்னான் – அந்த இந்திரசித்தன்; இன்னது என்று
அறியான் – (நடப்பது) இன்னது என்று ஒன்றும் உணராதவனாகி;
இனையது – இத்தன்மையதாகிய; ஓர் மாற்றம் சொன்னான் – ஒரு
சொல்லைச் சொல்லுபவனாயினான்.

—————-

8121.
‘அந் நரன்; அல்லன் ஆகின், நாரணன் அனையன்;
அன்றேல்
பின், அரன், பிரமன் என்பார்ப் பேசுக; பிறந்து வாழும்
மன்னர், நம் பதியின் வந்து, வரி சிலை பிடித்த கல்வி
இந் நரன்தன்னோடு ஒப்பார் யார் உளர், ஒருவர்?’
என்றான்.–120-

அந்நரன் – (அந்த இலக்குவன்) அந்த நரனோயாவான்; அல்லன்
ஆகின் – அவன் அல்லாவிட்டால்; நாரணன் அனையன் –
நாராயணனை ஒப்பவன்; அன்றேல் – அவன் அல்லனாயின்; பின்
அரன் பிரமன் என்பார்ப் பேசுக – பின்பு சிவன் பிரமன் என்ற
தேவர்களை (உவமையாகக் கொண்டு) பேசுக; வரிசிலை பிடித்த கல்வி
– கட்டமைந்த வில்லைப் பிடித்த வில்கல்வியில்; இந்நரன் தன்னோடு
ஒப்பார் – இந்த மனிதனோடு ஒப்பவர்; நம் பதியின் வந்து – நம்
பூமியில் வந்து; பிறந்து வாழும் மன்னர் – பிறந்து வாழும்
மன்னர்களில்; யார் உளர் – எவர் உள்ளார்கள்; என்றான் – என்று
(இந்திரசித்தன் இலக்குவனது வீரத்தைப் புகழ்ந்து) கூறினான்.

————-

இந்திரசித்தன் தேர் அழிதல்

8122.
வாயிடை நெருப்புக் கால, உடல் நெடுங் குருதி வார,
தீயிடை நெய் வார்த்தன்ன வெகுளியான்,-உயிர் தீர்ந்தாலும்,
ஓய்விடம் இல்லான்-வல்லை, ஓர் இமை ஒடுங்காமுன்னம்,
ஆயிரம் புரவி பூண்ட ஆழி அம் தேரன் ஆனான்.–121-

உயிர் தீர்ந்தாலும் – (தன்) உயிர் போவதாய் இருந்தாலும்;
ஓய்விடம் இல்லான் – போர்த் தொழிலை ஒழியாதவனாகிய இந்திர
சித்தன்; வாயிடை நெருப்புக்கால – வாயில் இருந்து நெருப்பு
வெளிப்படவும்; உடல் நெடுங்குருதி வார – உடலில் இருந்து
மிகுதியான இரத்தம் ஒழுகவும்; தீயிடை நெய் வார்த்தன்ன
வெகுளியான் – தீயில் நெய்யை வார்த்தது போன்ற (மிக்க) சினத்தை
உடையவனாய்; வல்லை – விரைவாக; ஓர் இமை ஒடுங்கா முன்னம் –
அரை மாத்திரை அளவு காலத்தில்; ஆயிரம் புரவி பூண்ட – ஆயிரம் குதிரகள் பூண்டதும்; ஆழி அம் தேரன் ஆனான் –
சக்கரங்களை உடையதும் ஆகிய அழகிய வேறு ஒரு தேரின் மேல்
ஏறிக்கொண்டான்.

————

8123.
ஆசை எங்கணும் அம்பு உக, வெம்பு போர்
ஓசை விம்ம, உருத்திரரும் உடல்
கூச, ஆயிர கோடி கொலைக் கணை
வீசி, விண்ணை வெளி இலது ஆக்கினான்.–122-

ஆசை எங்கணும் அம்பு உக – (இந்திரசித்தன் எல்லாத்)
திசைகளிலும் அம்புகள் சிந்தவும்; வெம்பு போர் ஓசை விம்ம –
கொடிய போரினது பேரொலி (எங்கும்) பரவவும்; உருத்திரரும் உடல்
கூச – சிவபிரானும் (போரின் கொடுமையைத் தாங்கமுடியாது) உடம்பு
நடுங்கவும்; கொலைக்கணை ஆயிர கோடி வீசி – கொல்லும் தன்மை
உள்ள அம்புகள் ஆயிரம் கோடியை எய்து; விண்ணை வெளி இலது
ஆக்கினான் – ஆகாயத்தை வெற்றிடம் இல்லை யாகும்படி செய்தான்.

———–

8124.
அத் திறத்தினில், அனகனும், ஆயிரம்
பத்தி பத்தியன் எய்குவ பல் கணை
சித்திரத்தினில் சிந்தி, இராவணன்
புத்திரற்கும், ஓர் ஆயிரம் போக்கினான்.–123-

அனகனும் – பாவச் செயல் இல்லாதவனாகிய (இலக்குவனும்);
அத்திறத்தினில் – அப்பொழுது; பத்திபத்தியின் – வரிசை வரிசையாக;
எய்குவ ஆயிரம் பல்கணை – எய்வனவாகிய (பல) ஆயிரம்
அம்புகளை; சித்திரத்தினில் சிந்தி – (கண்டோர்) வியப்பு அடையுமாறு
செலுத்தி; இராவணன் புத்திரற்கும் – இராவணன் மகனாகிய
இந்திரசித்தன் மீதும்; ஓர் ஆயிரம் போக்கினான் – ஓர் ஆயிரம்
அம்புகளைச் செலுத்தினான்.

————

8125.
ஆயிரம் கணை பாய்தலும், ஆற்ற அருங்
காய் எரித்தலை நெய் எனக் காந்தினான்;
தீயவன் பெருஞ் சேவகன் சென்னிமேல்
தூய வெங் கணை நூறு உடன் தூண்டினான்.–124-

ஆயிரம் கணை பாய்தலும் – (இந்திரசித்தன் மேல்
இலக்குவனுடைய) ஆயிரம் அம்புகள் பாய்ந்த உடனே; ஆற்ற
அருங்காய் எரித்தலை நெய் எனக் காந்தினான் – (அதனால்)
பொறுக்க முடியாத காயும் நெருப்பின் இடத்து (விழுந்த) நெய்யால்
(அந்த நெருப்பு) மூண்டு எழுமாறு போலக் கொதித்து; தூய பெருஞ்
சேவகன் சென்னிமேல் – சிறப்புடைய தூய வீரனாகிய இலக்குவனது
நெற்றியின் மீது; தீயவன் – கொடிய தீயவனாகிய இந்திரசித்தன்;
வெங்கணை நூறு உடன் தூண்டினான் – கொடிய அம்புகள் நூறை
உடன் எய்தான்.

———

8126.
நெற்றிமேல் ஒரு நூறு நெடுங் கணை
உற்ற போதினும், யாதும் ஒன்று உற்றிலன்,
மற்று அவ் வன் தொழிலோன் மணி மார்பிடை
முற்ற, வெங் கணை நூறு முடுக்கினான்.–125-

நெற்றி மேல் – தன் நெற்றியின் மீது; ஒரு நூறு நெடுங்கணை –
ஒரு நூறு பெரிய அம்புகள்; உற்ற போதினும் – ஊடு உருவிய
போதிலும்; யாதும் ஒன்று உற்றிலன் – (இலக்குவன்) எந்த வகையிலும்
சிறிதும் வருந்தாதவனாகி; மற்று அவ்வன் தொழிலோன் மணி
மார்பிடை – அந்த வலிமையான தொழிலை உடைய (இந்திரசித்தனது)
அழகிய மார்பின் கண்; முற்ற வெங்கணை நூறு முடுக்கினான் – ஊடு
உருவுமாறு கொடிய அம்புகள் நூறினைச் செலுத்தினான்;

————

8127.
நூறு வெங் கணை மார்பின் நுழைதலின்,
ஊறு சோரியொடு உள்ளமும் சோர்தர,
தேறல் ஆம் துணையும், சிலை ஊன்றியே
ஆறி நின்றனன்-ஆற்றலில் தோற்றிலான்.–126-

ஆற்றலில் தோற்றிலான் – (போர்) வலிமையில் இதுவரை
தோற்றிலாதவனாகிய (இந்திரசித்தன்); நூறு வெங்கணை மார்பின்
நுழைதலின் – (இலக்குவனது) நூறு கொடிய அம்புகள் (தன்) மார்பில்
(பட்டு ஊடுருவி) நுழைந்ததனால்; ஊறு சோரியோடு – (பொங்கி)
ஊறுகிற குருதியோடு; உள்ளமும் சோர்தர – மனமும்

———-

8128.
புதையும் நல் மணி, பொன் உருள், அச்சொடும்
சிதைய, ஆயிரம் பாய் பரி சிந்திட-
வதையின் மற்றொரு கூற்று என மாருதி-
உதையினால் அவன் தேரை உருட்டினான்.–127-

வதையின் – கொலைத் தொழிலில்; மற்றொரு கூற்று என – பிறிது
ஓர் இயமன் என்று கூறத்தக்க; மாருதி – அனுமன்; நல் மணி
புதையும் – நல்ல மணிகள் புதைக்கப்பட்ட; பொன் உருள் – (அழகிய)
பொன்மயமான சக்கரங்கள்; அச்சொடும் சிதைய – அச்சுடன்
அழிபடவும்; பாய்பரி ஆயிரம் சிந்திட – தாவிச் செல்லும் குதிரைகள்
ஆயிரமும் விழுந்து இறக்கவும்; அவன் தேரை – அந்த இந்திரசித்தன்
ஏறி வந்த தேரை; உதையினால் உருட்டினான் – உதைத்து உருட்டித்
தள்ளினான்.

————-

8129.
பேய் ஓர் ஆயிரம் புண்டது, பெய்ம் மணி
ஏய தேர் இமைப்பின்னிடை ஏறினான்;
தூயவன் சுடர்த் தோள்இணைமேல் சுடர்த்
தீய வெங் கணை ஐம்பது சிந்தினான்.–128-

பேய் ஓர் ஆயிரம் பூண்டது – (இந்திரசித்தன்) பேய்கள் ஓராயிரம்
பூட்டப்பட்டதும்; மணிபெய் ஏயதேர் – மணிகள் பெய்து
பொருத்தப்பட்டதுமான தேரின் மீது; இமைப்பின்னிடை ஏறினான் –
இமைப்பொழுதில் ஏறியவனாய்; தூயவன் – தூய்மை உடையனவாகிய
அனுமனின்; சுடர்த்தோள் இணை மேல் – ஒளி விடுகிற இரண்டு
தோள்களின் மீது; சுடர்த் தீயவெங்கணை – ஒளி விளங்குகிற
கொடுமையான அம்புகள்; ஐம்பது சிந்தினான் – ஐம்பதைச்
செலுத்தினான்.

———–

8130.
ஏறி ஏறி இழிந்தது அல்லால், இகல்
வேறு செய்திலன், வெய்யவன்; வீரனும்,
ஆறு கோடி பகழியின் ஐ-இரு
நூறு தேர் ஒரு நாழிகை நூறினான். –129-

வெய்யவன் – (அனுமன் தோளிணை மேல் ஐம்பது வெங்கணை
எய்த) கொடியவனாகிய இந்திரசித்தன்; ஏறி ஏறி இழிந்தது அல்லால்-
(இலக்குவன் தானேறும் தேர்களை எல்லாம் அம்பு கொண்டு
அழித்தலால்) (பல தேர்களில்) ஏறி ஏறி இறங்குவது அல்லாது;
வேறு இகல் செய்திலன் – வேறு எந்த வகையான போரும்
செய்யவில்லை; வீரனும் – வீரன் ஆகிய இலக்குவனும்; ஆறு கோடி
பகழியின் – ஆறு கோடி அம்புகளால்; ஒரு நாழிகை – ஒரு நாழிகை
அளவுக்குள்; ஐ இருநூறு தேர் – ஆயிரம் தேர்களை; நூறினான் –
அழித்தான்.

————–

8131.
ஆசி கூறினர்; ஆர்த்தனர்; ஆய் மலர்
வீசி வீசி, வணங்கினர்;-விண்ணவர்-
ஊசல் நீங்கினர்; உத்தரிகத்தொடு
தூசு வீசினர்;-நல் நெறி துன்னினார்.–130-

விண்ணவர் – இந்திரசித்தன் ஏறிய தேர்களை எல்லாம் இலக்குவன்
அழிப்பது கண்டு (போர் காண வந்த) தேவர்கள்; ஆர்த்தனர் –
மகிழ்ச்சிப் பேரொலி செய்தனர்; ஆசி கூறினர் – (அந்த
இலக்குவனுக்கு) ஆசி கூறினார்கள்; ஆய்மலர் வீசி வீசி
வணங்கினர் – (அவன் மீது) ஆய்ந்து திரட்டிய மலர்களை
வீசி வீசி வணங்கினார்கள்; ஊசல் நீங்கினர் – மனத் தடுமாற்றம்
நீங்கப் பெற்றனர்; உத்தரிகத்தொடு – மேலாடையுடன்; தூசு வீசினர்-
அரையாடையையும் வீசினார்கள்; நல்நெறி துன்னினார் –
இச்செயல்களால் அவர்கள் நன்னடக்கையோடு நெருங்கியவர்கள்
என்பதைக் காட்டினார்கள்.

———–

8132.
அக் கணத்தின், ஓர் ஆயிரம் ஆயிரம்
மிக்க வெங் கண் அரக்கர், அவ் வீரனோடு
ஒக்க வந்துற்று ஒருவழி நண்ணினார்,
புக்கு முந்தினர், போரிடைப் பொன்றுவான்.–131-

அக்கணத்தின் – அப்பொழுதில்; அவ்வீரனோடு ஒக்க – அந்த
இந்திரசித்தனோடு ஒத்த; ஓர் ஆயிரம் ஆயிரம் – ஓர் பத்து இலட்சம்;
மிக்கவெங்கண் அரக்கர் – மிக்ககொடிய கண்களை உடைய
அரக்கர்கள்; வந்துற்று – வந்து; ஒரு வழி நண்ணினார் -ஓரிடத்தில் திரண்டவர்களாய்ப்; போரிடைப் பொன்றுவான் –
போர்க்களத்தில் அழிவதற்காக; புக்கு முந்தினர் – புகுந்து
(இலக்குவனை) அழித்தனர்.

———

8133.
தேரர், தேரின் இவுளியர், செம் முகக்
காரர்,-காரின் இடிப்பினர், கண்டையின்
தாரர், தாரணியும் விசும்பும் தவழ்
பேரர், பேரி முழக்கு அன்ன பேச்சினார்.–132-

தேரர் – (இலக்குவனை எதிர்க்க வந்த அரக்கவீரர்களில்) தேர்
வீரர்களும்; தேரின் இவுளியர் – தேர்ந்து எண்ணிய குதிரை
வீரர்களும்; செம்முகக்காரர் – சிவந்த புள்ளிகள் பொருந்திய மேகம்
போன்ற கருநிறத்தை உடைய யானை வீரர்களும்; காரின் இடிப்பினர்-
மேகம் போல் அதட்டுகிறவர்களும்; கண்டையின் தாரர் – கண்டை
மாலை அணிந்தவர்களும்; தாரணியும் – உலகிலும்; விசும்பும் –
ஆகாயத்திலும்; தவழ் பேரர் – பரவிய புகழை உடையவர்களும்;
பேரிமுழக்கு அன்ன பேச்சினார் – பேரிகையின் முழக்கம் போன்ற
பேச்சினை உடையவர்களாயும் இருந்தார்கள்.

————

8134.
பார்த்த பார்த்த திசைதொறும், பல் மழை
போர்த்த வானம் என இடி போர்த்து எழ,
ஆர்த்த ஓதையும், அம்பொடு வெம் படை
தூர்த்த ஓதையும், விண்ணினைத் தூர்த்தவால்–133-

பார்த்த பார்த்த திசை தொறும் – பார்த்த பார்த்த திக்குகள்
எல்லாம்; பல் மழை – பல மேகங்கள்; போர்த்த வானம் என –
சூழ்ந்து மூடிய வானம் போல; இடி போர்த்து எழ – இடியோசை
பரந்து உண்டாகும்படி; ஆர்த்த ஓதையும் – (வீரர்) பேரொலி செய்த
ஓசையும்; அம்பொடு – அம்புகளும்; வெம்படை – பிற கொடிய
படைக்கலங்களையும்; தூர்த்த ஓதையும் – செலுத்தியதால் உண்டாகும்
ஓசையும்; விண்ணினைத் தூர்த்தவால் – ஆகாயத்தை நிறைத்தன.

——————-

8135.
ஆளி ஆர்த்தன; வாள் அரி ஆர்த்தன;
கூளி ஆர்த்தன; குஞ்சரம் ஆர்த்தன;
வாளி ஆர்த்தன; தேர், இவர் மண்தலம்
தூளி ஆர்த்திலதால், பிணம் துன்னலால்.

இவர் தேர் – இந்த அரக்கர்களுடைய தேர்கள்; ஆளி ஆர்த்தன –
யாளிகள் பூட்டப் பெற்றனவாயும்; வாள் அரி ஆர்த்தன – ஒளி
விளங்கும் சிங்கங்கள் பூட்டப் பெற்றனவாயும்; கூளி ஆர்த்தன –
பேய்கள் பூட்டப்பெற்றனவாயும்; குஞ்சரம் ஆர்த்தன – யானைகள்
பூட்டப்பெற்றனவாயும்; வாளி ஆர்த்தன – யாளிகள்
பூட்டப்பெற்றனவாயும்; (ஆகிய அவை) பிணம் துன்னலால் –
போர்க்களத்தில் பிணங்கள் நெருங்கிக் கிடத்தலால்; மண் தலம் தூளி
ஆர்த்திலதால் – மண்ணில் தூசு எழப் பெறாததாய் இருந்தன.

————–

8136.
வந்து அணைந்தது ஓர், வாள் அரி வாயு தேர்,
இந்திரன்தனை வென்றவன் ஏறினான்;
சிந்தினன் சர மாரி, திசை திசை;
அந்திவண்ணனும் அம்பின் அகற்றினான்.

இந்திரன் தனை வென்றவன் – இந்திரனை வென்றவனாகிய
இந்திரசித்தன்; வந்து அணைந்தது ஓர் – தன்னருகில் வந்து சேர்ந்த
ஒரு; வாவு வாள் அரி தேர் – தாவுகின்ற சிங்கங்கள் பூட்டப் பெற்ற
தேரில்; ஏறினான் – ஏறி; திசை திசை – திசைகளில் எல்லாம்; சரமாரி
சிந்தினன் – அம்பு மழை பொழிந்தான்; அந்தி வண்ணனும் – சந்திக்
காலத்தில் விளங்கும் செவ்வானத்தின் நிறமுடையவனாகிய
இலக்குவன்; அம்பின் அகற்றினான் – அவற்றை எல்லாம் (தன்)
அம்புகளால் நீக்கி விட்டான்.

——————

8137.
சுற்றும் வந்து படர்ந்து தொடர்ந்தவர்
எற்றுகின்றன, எய்த, எறிந்தன,
அற்று உதிர்ந்தன; ஆயிரம் வன் தலை,
ஒற்றை வெங் கணையோடும் உருண்டவால்.–136-

அவர் சுற்றும் வந்து படர்ந்து தொடர்ந்து – அந்த அரக்கர்கள்
(இலக்குவனைச்) சுற்றி வந்து நெருங்கிப் பரவித் தொடர்ந்து;
எற்றுகின்றன – மோதுகின்றவையும்; எய்த – எய்தவையும்; எறிந்தன –
எறிந்தவையுமாகிய (அரக்கர் படைக்கலங்கள்); அற்று உதிர்ந்தன –
அறுபட்டுப் பொடியாய் உதிர்ந்தன; ஆயிரம் வன்தலை – அவர்களுடைய ஆயிரம் வலிய தலைகள்; ஒற்றை
வெங்கணையோடும் – (இலக்குவன் எய்த) ஒரு கொடிய அம்பினால்;
உருண்டவால் – அறுபட்டுக் கீழ் உருண்டு விழுந்தன.

—————–

8138.
குடர் கிடந்தன, பாம்பு என; கோள் மதத்
திடர் கிடந்தன; சிந்தின, தேர்த் திரள்;
படர் கிடந்தனர், பல் படைக் கையினர்-
கடர் கிடந்தன போன்ற களத்தினே.

கடர் கிடந்தன போன்ற களத்தினே – கடல் கிடந்தது போன்ற
போர்க்களத்தின் கண்ணே; பாம்பு குடர் கிடந்தன – பாம்புகள்
போலக் குடல்கள் கிடந்தன; கோள் மதத்திடர் கிடந்தன – கொள்ளும்
தன்மை உள்ள மத யானைகள் மேடுகள் போல விழுந்து கிடந்தன;
தேர்த்திரள் சிந்தின – தேர்க்கூட்டங்கள் சிதறிக் கிடந்தன; பல்படைக்
கையினர் – பல படைக்கலங்களைக் கையில் ஏந்திய படைவீரர்கள்;
படர் கிடந்தனர் – (அம்புகளால் புண்பட்டுத்) துன்பத்தில் அழுந்திக்
கிடந்தார்கள்

———-

8139.
குண்டலங்களும், ஆரமும், கோவையும்,
கண்டநாணும், கழலும், கவசமும்,
சண்ட மாருதம் வீச, தலத்து உகும்
விண் தலத்தினின் மீன் என, வீழ்ந்தவால்.–138-

குண்டலங்களும் – (அரக்கர்கள் காதில் அணிந்திருந்த)
குண்டலங்களும்; ஆரமும் – முத்து மாலைகளும்; கோவையும் –
(பிறமணிக்) கோவைமாலைகளும்; கண்டநாணும் – கண்ட சரங்களும்;
கழலும் – வீரக் கழல்களும்; கவசமும் – ;மார்புக் கவசங்களும்; சண்ட
மாருதம் வீச – கொடிய சூறைக்காற்று விசுதலால்; தலத்து உகும் –
நிலத்தில் (சிதறி) விழுகிற; விண் தலத்தினின் – ஆகாயத்தில் உள்ள;
மீன் என வீழ்ந்தவால் – மீன்போலக் (கீழே) விழுந்தன

———–

8140.
அரக்கன் மைந்தனை, ஆரியன் அம்பினால்,
கரக்க நூறி, எதிர் பொரு கண்டகர்
சிரக் கொடுங் குவைக் குன்று திரட்டினான்-
இரக்கம் எய்தி, வெங் காலனும் எஞ்சவே.–139-

ஆரியன் – (பெருமைக்கு உரியவன் ஆகிய) இலக்குவன்;
அம்பினால் – தன் அம்புகளினால்; அரக்கன் மைந்தனை –
அரக்கனாகிய இராவணனது மகனாகிய இந்திரசித்தனை; கரக்க நூறி –
அம்புகளினால் உருவம் மறையும் படியாக எய்து; வெங்காலனும் –
கொடிய இயமனும்; இரக்கம் எய்தி – (போரில் இறக்கும் அரக்க வீரர்
நிலை கண்டு) மனமிரங்கி; எஞ்சவே – பின்னடையும்படியாக;
எதிர்பொரு கண்டகர் – (தன்னை) எதிர்த்துப் போர் செய்த
வஞ்சகர்களான அரக்கர்களின்; கொடுசிரக் குவைக்குன்று – கொடிய
தலைகளின் குவியல்களாகிய மலைகளைத்; திரட்டினான் – குவித்தான்.

—————-

8141.
சுற்றும் வால்கொடு; தூவும்; துவைக்கும்; விட்டு
எற்றும்; வானின் எடுத்து எறியும்; எதிர்
உற்று மோதும்; உதைக்கும்; உறுக்குமால்-
கொற்ற வில்லி அன்று ஏறிய கூற்றமே.

அன்று – அப்பொழுது; கொற்ற வில்லி – வெற்றி பொருந்திய
வில்வீரனாகிய இலக்குவன்; ஏறிய கூற்றமே – ஏறிச் செலுத்திய
அனுமனாகிய இயமன்; வால்கொடு சுற்றும் தூவும் – (அரக்க
வீரர்களைத் தன்) வாலைக்கொண்டு சுற்றிவளைத்து (எடுத்துத்)
தூவுவான்; துவைக்கும் – தன் கால்களால் மிதிப்பான்; விட்டு எற்றும் –
நெட்டித் தள்ளி உதைப்பான்; வானின் எடுத்து எறியும் – வானத்தில்
எடுத்து எறிவான்; எதிர் உற்று மோதும் – எதிரே பொருந்தி
மோதுவான்; உதைக்கும் – (தன்) கால்களால் உதைப்பான்; உறுக்கும் –
சினந்து பார்ப்பான்.

—————-

8142.
பார்க்கும் அஞ்ச; உறுக்கும்; பகட்டினால்
தூர்க்கும், வேலையை; தோள் புடை கொட்டி நின்று
ஆர்க்கும்; ஆயிரம் தேர் பிடித்து அம் கையால்
ஈர்க்கும்-ஐயன் அன்று ஏறிய யானையே.–141-

அன்று – அப்பொழுது; ஐயன் – தலைவனாகிய இலக்குவன்; ஏறிய
யானையே – ஏறியிருந்த யானை போன்றவனாகிய அனுமன்; அஞ்ச
பார்க்கும் – (அரக்கர்கள்) அஞ்சும்படியாகப் பார்ப்பான்;
உறுக்கும் – சினந்து அதட்டுவான்; பகட்டினால் வேலையைத்
தூர்க்கும் – யானைகளை எடுத்து வீசி எறிந்து கடலைத் தூர்ப்பான்;
தோள்புடை கொட்டி நின்று ஆர்க்கும் – தோளின் பக்கங்களில்
கொட்டி நின்று பேரொலி செய்வான்; ஆயிரம் தேர் பிடித்து –
ஆயிரம் தேர்களைப் பிடித்து; அம் கையால் ஈர்க்கும் – (தன்)
அழகிய கைகளால் இழுப்பான்.

——————

8143.
மாவும் யானையும் வாளுடைத் தானையும்,
பூவும் நீரும் புனை தளிரும் என,
தூவும்; அள்ளி் பிசையும்; துகைக்குமால்-
சேவகன் தெரிந்து ஏறிய சீயமே.–142-

சேவகன் – வீரனாகிய இலக்குவன்; தெரிந்து – தேர்ந்தெடுத்து;
ஏறிய சீயமே – ஏறியிருந்த சிங்கம் போன்ற அனுமன்; மாவும் -;
குதிரைகளையும் யானையும் – யானைகளையும்; நீரும் – தண்ணீர்
போலவும்; புனைதளிரும் என – அழகிய தளிர்கள் போலவும்; தூவும்
– தூவுவான்; அள்ளிப்பிசையும் – கையால் அள்ளிப் பிசைவான்;
துகைக்கு மால் – காலால் துவைப்பான்.

—————

8144.
உரகம் பூண்ட உருளை பொருந்தின
இரதம் ஆயிரம், ‘ஏ’ எனும் மாத்திரை,
சரதம் ஆகத் தரைப் படச் சாடுமால்-
வரதன் அன்று உவந்து ஏறிய வாசியே.–143-

அன்று – அப்பொழுது; வரதன் – வரந்தரும் வலிமை உள்ள
இலக்குவன்; உவந்து ஏறிய வாசியே – மகிழ்ந்து ஏறிய வாகனமாகிய
குதிரை போன்ற அனுமன்; உரகம் பூண்ட – பாம்புகள் பூட்டப்
பெற்றனவும்; உருளை பொருந்தின – சக்கரங்கள் பொருந்தியனவும்
ஆகிய; ஆயிரம் இரதம் – ஆயிரம் தேர்களை; “ஏ” எனும் மாத்திரை
– மிகமிக விரைவான கால அளவில்; சரதம் ஆக – தவறாமல்;
தரைப்படச் சாடுமால் – தரையில்பட்டு அழியுமாறு மோதி
அழிப்பான்.

————–

8145.
அவ் இடத்தினில், ஆய் ம்ருந்தால், அழல்
வெவ் விடத்தினை உண்டவர் மீண்டென,
எவ் இடத்தினும் வீழ்ந்த இனத்தலைத்
தெவ் அடக்கும் அவ் வலியவர் தேறினார்.–144-

அவ் இடத்தினில் – (அனுமன் அரக்கர் படையை அழித்துக்
கொண்டிருந்த) அந்த நேரத்தில்; அழல் வெவ்விடத்தினை உண்டவர்
– தீப் போன்ற கொடிய நஞ்சினை உண்டவர்கள்; ஆய் மருந்தால் –
சிறந்த மருந்தினால்; மீண்டென – உயிர் பிழைத்து எழுந்தது போல;
எவ் இடத்தினும் – போர்க்களத்தின் எல்லா இடங்களிலும்; வீழ்ந்த –
(இந்திரசித்தனின் அம்பு பட்டுக்) களைத்து மூர்ச்சையாகிக் கிடந்த;
இனத்தலை – (அனுமானின்) கூட்டத்தில் உள்ளவர்களான; தெவ்
அடக்கும் – பகைவரை அடக்கும்; அவ்வலியவர் – அந்த வலிமை
உடையவர்களாகிய குரங்குப் படை வீரர்கள்; தேறினார் – களைப்பு
நீங்கி எழுந்தார்கள்;

—————–

8146.
தேறினார் கண் நெருப்பு உகச் சீறினார்;
ஊறினார் வந்து, இளவலை ஒன்றினார்;
மாறு மாறு, மலையும் மரங்களும்
நூறும் ஆயிரமும் கொடு நூறினார்.–145-

தேறினார் – (மயக்கம்) தெளிந்து எழுந்த (அந்த வானர வீரர்கள்);
கண் நெருப்பு உக – கண்களில் தீ வெளிப்படுமாறு; சீறினார் –
சீறியவர்களாகி; வந்து ஒன்றினார் – இளவலாகிய இலக்குவனைச்
சூழ்ந்தார்கள்; மாறுமாறு – (பகைவனாகிய இந்திர சித்தனுக்கு எதிராக)
மாற்றி மாற்றி; மலையும் – மலைகளையும்; மரங்களும் –
மரங்களையும்; நூறும் ஆயிரமும் கொடு – நூற்றுக்கணக்கிலும்,
ஆயிரக்கணக்கிலும் (கைகளில்) (ஏந்திக்) கொண்டு; நூறினார் –
(பகைவர்களை) அழித்தார்கள்.

——————-

8147.
விகடம் உற்ற மரனொடு வெற்புஇனம்
புகட, உற்ற பொறுத்தன, போவன,
துகள் தவத் தொழில் செய் துறைக் கம்மியர்
சகடம் ஒத்தன, தார் அணி தேர் எலாம்.–146-

விகடம் உற்ற – வேறுபாடு பொருந்திய (பலவகையாக அமைந்த);
மரனொடு – மரங்களையும்; வெற்பு இனம் – மலைக் கூட்டங்களையும்
(குரங்குப்படையினர்); புகட – வீச; உற்ற பொறுத்தன – உளவாகிய
ஊறுபாடுகளைக் கொண்டவையாய்;
போவன – அழிந்து போவனவாகிய; தார் அணி தேர் எலாம் –
ஒலிக்கும் கிண்கிணியைக் கட்டி அழகுபடுத்தப்பட்ட தேர்கள் எல்லாம்;
துகள் தவத்தொழில் செய் – குற்றம் இல்லாமல் மிகுதியான
தொழிலைச் செய்கிற; துறைக்கம்மியர் – தன் துறையில் சிறந்த
மரத்தச்சர்கள் (முடிக்காமல் அரைகுறையாகச் செய்து கொண்டிருக்கிற);
சகடம் ஒத்தன – தேர்களை ஒத்து விளங்கின.

—————————

8148.
வாலி மைந்தன் ஓர் மால் வரை வாங்கினான்,
காலின் வந்த அரக்கனை; ‘கா; இது
போலும் உன் உயிர் உண்பது, புக்கு’ எனா,
மேல் நிமிர்ந்து, நெருப்பு உக, வீசினான்.–147-

வாலி மைந்தன் – வாலியின் மகனாகிய அங்கதன்; ஓர் மால்
வரை வாங்கினான் – ஒரு பெரிய மலையைக் (கையில்) பெயர்த்து
எடுத்துக்கொண்டு; காலின் வந்த அரக்கனை – காற்றுப் போல தேரில்
விரைந்து வந்த அரக்கனாகிய இந்திரசித்தனை (நோக்கி); உயிர்
உண்பது இது போலும் – உன்னுடைய உயிரைக் குடிப்பது இது
போலும்; புக்கு காஎனா – புகுந்து (உன் உயிரைக்) காத்துக் கொள்
என்று சொல்லி; மேல் நிமிர்ந்து – உயரக் குதித்து எழுந்து; நெருப்பு
உக வீசினான் – நெருப்பு வெளிப்படும் படியாக வீசினா;.

———————————-

8149.
‘ஏர் அழித்தது செய்தவன் ஈண்டு எழில்
சீர் அழித்தவன் ஆம்’ என, தேவர்கள்
ஊர் அழித்த உயர் வலித் தோளவன்
தேர் அழித்து, ஓர் இமைப்பிடைச் சென்றதால்.–148-

செய்தவன் – தவம் செய்தவனாகிய இராவணனது; ஈண்டு எழில்-
நெருங்கிய (வலிமையின்) சிறப்பை; அழித்தவன் ஆம் என –
அழித்தவன் (இந்த அங்கதனே) ஆகும் என்று (பார்த்தவர் வியந்து
பாராட்டும் படியாக); தேவர்கள் ஊர் அழித்த – தேவர்களின் ஊராகிய
தேவர் உலகத்தை அழித்த; வலி உயர் தோளவன் – வலிமை மிகுந்த
தோளை உடையவனான (இந்திரசித்தனது); தேர் ஏர் அழித்தது –
தேரின் அழகு கெட்டது; அழித்து – (அவ்வாறு அதை) அழித்து; ஓர் இமைப்பிடைச் சென்றதால் – (அங்கதன்
வீசிய மால்வரை) ஒரு நொடிப்பொழுதில் சென்றது.

————

8150.
அந்த வேலையின், ஆர்த்து எழுந்து ஆடினார்,
சிந்தை சால உவந்தனர், தேவர்கள்-
‘தந்தை தந்தை பண்டு உற்ற சழக்கு எலாம்
எந்தை தீர்த்தனன்’ என்பது ஓர் ஏம்பலால்.–149-

அந்த வேலையின் – அப்பொழுது; தந்தை தந்தை – அங்கதனது
தந்தையாகிய வாலியின் தந்தையாகிய இந்திரன்; பண்டு உற்ற சழக்கு
எலாம் – முன்பு அடைந்த அவமானத்தை எல்லாம்; எந்தை – எமது
ஐயனாகிய அங்கதன்; தீர்த்தனன் என்பது ஓர் ஏம்பலால் – தீர்த்து
விட்டான் என்பதொரு களிப்பினால்; தேவர்கள் – தேவர்கள்; சிந்தை
சால உவந்தனர் – மனம் மிக மகிழ்ந்தவர்களாய்; ஆர்த்து –
மகிழ்ச்சிப் பேரொலி செய்து; எழுந்து ஆடினார் – எழுந்து
கூத்தாடினார்கள்.

———————-

8151.
அழிந்த தேரின்நின்று, அந்தரத்து, அக் கணத்து,
எழுந்து, மற்று ஓர் இரதம் உற்று ஏறினான்,-
‘கழிந்து போகலை, நில்!’ என, கைக் கணை
பொழிந்து சென்றனன்-தீ எனப் பொங்கினான்.–150-

அக்கணத்து – அப்பொழுதே; அழிந்த தேரின் நின்று – அழிந்த
தேரில் நின்று; அந்தரத்து எழுந்து – மேலே எழுந்து; மற்று ஓர்
இரதம் உற்று ஏறினான் – வேறு ஒரு தேரினை நெருங்கி ஏறி;
தீ எனப் பொங்கினான் – தீயினைப் போலப் பொங்கிச் சினந்து;
கழிந்து போகலை நில் என – (அங்கதனை நோக்கி) விலகிப்
போகாதே நிற்பாயாக என்று சொல்லி; கைக்கணை பொழிந்து
சென்றனன் – கையில் உள்ள வில்லில் இருந்து அம்புகளைப்
பொழிந்துகொண்டு சென்றான்.

——————-

8152.
இந்திரன் மகன் மைந்தனை, ‘இன் உயிர்
தந்து போக!’ எனச் சாற்றலுற்றான்தனை,
வந்து, மற்றைய வானர வீரரும்,
முந்து போர்க்கு முறை முறை முற்றினார்.–151-

இந்திரன் மகன் மைந்தனை – இந்திரன் மகனாகிய வாலியினுடைய
மகனாகிய அங்கதனைப் பார்த்து); இன் உயிர் தந்து போக – உனது
இனிய உயிரை எனக்கு இரையாகக் கொடுத்துச் செல்வாய்; எனச்
சாற்றலுற்றான் தனை – என்று கூறியவனாகிய இந்திரசித்தனை; வந்து
– நெருங்கி வந்து; மற்றைய வானர வீரரும் – மற்றும் உள்ள வானர
வீரர்கள் எல்லாம்; முந்து போர்க்கு – முந்திச் செல்லும் போருக்கு;
முறை முறை முற்றினார் – வரிசை வரிசையாகச் சூழ்ந்து
கொண்டார்கள்.

——————–

8153.
மரமும், குன்றும், மடிந்த அரக்கர்தம்
சிரமும், தேரும், புரவியும், திண் கரிக்
கரமும், ஆளியும் வாரிக் கடியவன்
சரமும் தாழ்தர, வீசினர், தாங்கினார்.–152-

மரமும் – (அவ்வாறு சூழ்ந்துகொண்ட வானர வீரர்கள்)
மரங்களையும்; குன்றும் – மலைகளையும்; மடிந்த அரக்கர்தம் சிரமும்
– இறந்து போன அரக்கர்களுடைய தலைகளையும்; தேரும் –
தேர்களையும்; புரவியும் – குதிரைகளையும்; திண்கரிக் கரமும் – வலிய
யானைகளின் கைகளையும்; ஆளியும் – சிங்கங்களையும்; வாரி –
(கைகளால்) வாரி எடுத்து; கடியவன் – கொடியவனாகிய
இந்திரசித்தனது; சரமும் தாழ்தர – அம்புகளின் வேகமும் பின்னால்
இருக்கும்படி; வீசினர் தாங்கினார் – வீசித் தாக்கினார்கள்.

———————-

8154.
அனைய காலையில், ஆயிரம் ஆயிரம்
வினைய வெங் கண் அரக்கரை, விண்ணவர்
நினையும் மாத்திரத்து, ஆர் உயிர் நீக்கினான்-
மனையும், வாழ்வும், உறக்கமும் மாற்றினான்.–153-

மனையும் – தன் மனைவியாகிய ஊர்மிளையையும்; வாழ்வும் –
அரச போக மாளிகை வாழ்வினையும்; உறக்கமும் – தூக்கத்தையும்;
மாற்றினான் – நீக்கி உள்ளவனாகிய இலக்குவன்; அனைய காலையில்
– அந்தச் சமயத்தில்; ஆயிரம் ஆயிரம் – பல்லாயிரம் (இலட்சம்);
வினைய வெங்கண் அரக்கரை – போர்த் தொழில் வல்ல
கொடுமையான கண்களை உடைய அரக்கர்களை; விண்ணவர்
நினையும் மாத்திரத்து – தேவர்கள் நினைக்கும் கால அளவுக்குள்; ஆர் உயிர் நீக்கினான் –
அருமையான உயிரைப் போக்கிக் கொன்றான்.

———–

8155.
ஆனையும், தடந் தேரும், தன் ஆர் உயித்
தானையும், பரியும், படும் தன்மையை
மான வெங் கண் அரக்கன் மனக் கொளா,
போன வென்றியன், தீ எனப் பொங்கினான்.–154-

மானவெங்கண் அரக்கன் – மான உணர்வையும் கொடுமையான
கண்களையும் உடைய அரக்கனாகிய இந்திரசித்தன்; ஆனையும் –
யானைகளும்; தடந்தேரும் – பெரிய தேர்களும்; தன் ஆர்
உயிர்த்தானையும் – தனது அரிய உயிர் போன்ற படை வீரர்களும்;
பரியும் – குதிரைகளும்; படும் தன்மையை – இறந்து படும் பாட்டை;
மனக் கொளா – மனத்தில் கொண்டு; போன வென்றியன் – வெற்றி
இல்லாதவனாகி; தீ எனப் பொங்கினான் – தீயினைப் போலச்
சினந்தான்.

——————-

8156.
சீர்த் தடம் பெருஞ் சில்லி அம் தேரினைக்
காத்து நின்ற இருவரைக் கண்டனன்-
ஆர்த்த தம் பெருஞ் சேனை கொண்டு, அண்டமேல்
ஈர்த்த சோரிப் பரவை நின்று ஈர்த்தலால்.–155-

ஆர்த்த தம் பெருஞ்சேனை கொண்டு – பேரொலி செய்த (தம்
பக்கத்து) அரக்கரது இறந்த பெரிய படையை வாரிக் கொண்டு;
அண்டமேல் ஈர்த்த சோரிப்பரவை – அண்டத்தளவு (உயர்ந்த)
இரத்தக்கடல்; நின்று ஈர்த்தலால் – நின்று தங்களையும் இழத்தலால்;
சீர்த்தடம் பெருஞ் சில்லி – (அவ்வாறு இழுக்க விடாமல்) சிறப்புப்
பொருந்திய சக்கரங்களை உடைய; அம் தேரினை – அழகிய
தேரினைப் பற்றிக்கொண்டு; காத்து நின்ற – தங்களைக்
காத்துக்கொண்டு நின்ற; இருவரைக் கண்டனன் –
(தூமிராட்சன் மாபக்கன் ஆகிய) இருவரை மட்டுமே இந்திரசித்தன்
கண்டான்.

——————-

8157.
நேர் செலாது, இடை நின்றனர்-நீள் நெடுங்
கார் செலா; இருள் கீறிய கண் அகல்
தேர் செலாது; விசும்பிடைச் செல்வது ஓர்
பேர் செலாது;-பிணத்தின் பிறக்கமே. –156-

பிணத்தின் பிறக்கமே – அக்களத்தில் பிணங்கள் மிகுந்து
குவிந்திருத்தலால்; நீள் நெடுங்கார் செலா – (அதற்கு மேல் நேராகச்
செல்லுகிற) நீண்ட பெரிய மேகங்கள் செல்ல மாட்டா; இருள் கீறிய
கண் அகல் தேர் செலாது – இருளை நீக்குகிற கதிரவனுடைய
இடமகன்ற பெரிய தேரும் செல்ல மாட்டாது; விசும்பிடைச் செல்வது
ஓர் பேர் செலாது – ஆகாயத்தில் செல்லும் தன்மை உள்ள ஓர்
உயிரும் செல்ல மாட்டாது; நேர் செலாது – (இவ்வாறு பிணங்கள்
நெருங்கி இருத்தலால் புகை நிறக் கண்ணன், மாபக்கன்) என்ற இரு
வீரர்களும் நேராகச் செல்லாது; இடை நின்றனர் – இருந்த
இடத்திலேயே நின்றிருந்தனர்.

———————-

8158.
அன்று தன் அயல் நின்ற அரக்கரை
ஒன்று வாள் முகம் நோக்கி, ‘ஒரு விலான்
நன்று நம் படை நாற்பது வெள்ளமும்
கொன்று நின்றபடி!’ எனக் கூறினான்.–157-

அன்று – அப்பொழுது; தன் அயல் நின்ற அரக்கரை –
இந்திரசித்து தன் அருகில் தேரினைப் பற்றி நின்ற அரக்கர்களின்;
வாள் ஒன்று முகம் நோக்கி – ஒளி பொருந்திய முகத்தைப் பார்த்து;
ஒருவிலான் – ஒப்பற்ற வில் வீரனாகிய இலக்குவன்; நம் படை நாற்பது
வெள்ளமும் – நமது படை நாற்பது வெள்ளத்தையும்; கொன்று
நின்றபடி – கொன்று நின்ற தன்மை; நன்று எனக் கூறினான் –
நன்றாய் இருக்கிறது என்று கூறினான்.

————————

8159.
ஆய வீரரும், ‘ஐய! அமர்த்தலை,
நீயும், நாற்பது வெள்ள நெடும் படை
மாய, வெங் கணை மாரி வழங்கினை:
ஓய்வு இல் வெஞ் செரு ஒக்கும்’ என்று ஓதினார்.–158-

ஆய வீரரும் – (இந்திரசித்தன் கூறக் கேட்ட) அத்தன்மை உடைய
வீரர்கள் இருவரும்; ஐய – ஐயனே; அமர்த்தலை நீயும் –
போர்க்களத்தில் நீயும்; நாற்பது வெள்ள நெடும் படை மாய –
எதிரிகளின் நாற்பது வெள்ள அளவுள்ள பெரும்படை அழியும்
படியாக; வெங்கணை மாரி வழங்கினை – கொடிய அம்பு மழை
பொழிந்தாய் (அதனால்); ஓய்வு இல் வெஞ்செரு – இடைவிடாது
(இருவரும் செய்த) கொடிய போர்; ஒக்கும் – ஒத்தது ஆகும்; என்று
ஓதினார் – என்று கூறினார்கள்.

————————

8160.
வந்து நேர்ந்தனர்; மாருதிமேல் வரும்
அந்திவண்ணனும், ஆயிரம் ஆயிரம்
சிந்தினான், கணை; தேவரை வென்றவன்
நுந்த நுந்த, முறை முறை நூறினான்.–159-

வந்து நேர்ந்தனர் – (இலக்குவனும் இந்திரசித்தனும் மீண்டும்
போரிட) வந்த எதிர்த்தனர்; மாருதி மேல் வரும் அந்தி வண்ணனும்
– அனுமன் மீது ஏறி வருகிற செவ்வானம் போன்ற நிறம் உடைய
இலக்குவனும்; ஆயிரம் ஆயிரம் கணை சிந்தினான் –
ஆயிரக்கணக்கான அம்புகளைச் செலுத்தினான்; தேவரை வென்றவன்-
தேவர்களை வென்றவனாகிய இந்திரசித்தன்; நுந்த நுந்த –
(இலக்குவன்) எய்யும் தோறும் எய்யும் தோறும்; முறை முறை
நூறினான் – அவற்றை முறை முறையே அழித்தான்.

————————–

8161.
ஆறும், ஏழும், அறுபதும் ஐம்பதும்,
நூறும், ஆயிரமும், கணை நூக்கி, வந்து
ஊறினாரை உணர்வு தொலைத்து, உயிர்
தேறினாரை நெடு நிலம் சேர்த்தினான்.–160-

(இந்திரசித்தன்) ஆறும் ஏழும் அறுபதும் ஐம்பதும் நூறும்
ஆயிரமும் – ஆறும் ஏழும் அறுபதும் ஐம்பதும் நூறும் ஆயிரமும்
ஆகிய; கணை நூக்கி – அம்புகளைச் செலுத்தி; வந்து ஊறினாரை –
(எதிர்) வந்து ஊன்றியவர்களை; உணர்வு தொலைத்து – மயக்கம்
அடையும்படி செய்து; உயிர் தேறினாரை – (முன்பு மயங்கிப் பின்பு
மயக்கம் நீங்கி) உயிர் தேறியவர்களை; நெடு நிலம் சேர்த்தினான் –
பெரிய நிலத்தில் (உயிரற்று) விழச் செய்தான்.

————

8162.
கதிரின் மைந்தன் முதலினர், காவலார்,
உதிர வெள்ளத்தின் ஒல்கி ஒதுங்கலும்,
எதிரில் நின்ற இராவணி ஈடுற,
வெதிரின் காட்டு எரிபோல், சரம் வீசினான்.–161-

கதிரின் மைந்தன் முதலினர் காவலார் – கதிரவன் மகனை
முதலாகக் கொண்ட வானரப் படைக்காவல் வீரர்கள்; உதிர
வெள்ளத்தின் – (தங்களது உடலில் இருந்து பெருகிய)
இரத்தவெள்ளத்தால்; ஒல்கி ஒதுங்கலும் – தளர்ந்து ஒதுங்கிய உடனே;
எதிரில் நின்ற – தனக்கு எதிரில் நின்ற; இராவணி – இராவணன்
மகனாகிய இந்திரசித்தன்; ஈடுற – தளர்ச்சி அடையுமாறு (இலக்குவன்);
வெதிரில் காட்டு எரிபோல் – மூங்கில் காட்டில் பற்றிய தீயினைப்
போல்; சரம் வீசினான் – அம்புகளைக் கடுமையாக எய்தான்.

————————-

உளைவு தோன்ற, இராவணி ஒல்கினான்;
கிளையின் நின்ற இருவர் கிளைத்தலும்,
அளவு இல் சேனை அவிதர, ஆரியற்கு
இளைய வீரன் சுடு சரம் ஏவினான்.–162-

இராவணி – இராவணன் மகனாகிய இந்திரசித்தன்; உளைவு
தோன்ற ஒல்கினான் – (வெதிரின் காட்டு எரிபோல் சரம் வீசிய
இலக்குவனின் அம்புகளால்) வருத்தம் உண்டாகித் தளர்ச்சி
அடைந்தான்; கிளையின் நின்ற இருவர் கிளைத்தலும் – (அவனுக்கு
இருபக்கங்களிலும் மரத்தின்) கிளைபோல (அத்தேரினைக் காத்து)
நின்றவர்களாகிய புகை நிறக்கண்ணன், மாபக்கன் என்னும் இருவரும்
மனக்கிளர்ச்சி உற்றுப் போருக்கு எழுந்த உடனே; ஆரியற்கு
இளையவன் – இராமனுக்கு இளையவனாகிய இலக்குவன்; அளவு
இல்சேனை அவிதர – அளவு இல்லாத அரக்கர் படை அழியும்
படியாக; சுடுசரம் ஏவினான் – கொல்லும் தன்மை பொருந்திய
அம்புகளைச் செலுத்தினான்.

————-

8164.
தெரி கணை மாரி பெய்ய, தேர்களும், சிலைக் கைம்மாவும்,
பரிகளும், தாமும், அன்று பட்டன கிடக்கக் கண்டார்.
இருவரும் நின்றார்; மற்றை இராக்கதர் என்னும் பேர்கள்
ஒருவரும் நின்றார் இல்லை; உள்ளவர் ஓடிப் போனார்.–163-

தெரிகணை மாரி பெய்ய – (இலக்குவன்) தேர்ந்தெடுத்த அம்புகளை
மழைபோலச் செலுத்த; தேர்களும் – தேர்களும்; சிலைக் கைம்மாவும்
– சிலிர்க்கின்ற கையை உடைய யானைகளும்; பரிகளும் –
குதிரைகளும்; அன்று பட்டன தாமும் கிடக்கக் கண்டார் –
அப்பொழுது இறந்து விழுந்து கிடப்பதைக் கண்டார்கள் ஆகிய;
இருவரும் நின்றார் – அந்த இருவர் மாத்திரமே போர்க்களத்தில்
நின்றார்கள்; மற்றை இராக்கதர் என்னும் பேர்கள் ஒருவரும்
நின்றாரில்லை – பிற அரக்கர்கள் என்னும் பெயருடையவர்கள்
ஒருவரும் நிற்கவில்லை; உள்ளவர் ஓடிப் போனார் – உயிர் உளராக
நின்ற அனைவரும் (களத்தை விட்டு) ஓடிப்போனார்கள்.

————-

8165.
ஓடினர் அரக்கர், தண்ணீர் உண் நச உலர்ந்த நாவர்,
தேடின, தேலிந்து கையால் முகிலினை முகந்து தேக்கி,
பாடு உறு புண்கள்தோறும் பசும் புனல் பாயப் பாய,
வீடினர் சிலவர்; சில்லோர், பெற்றிலர்; விளிந்து வீழ்ந்தார்.–164-

ஓடினர் அரக்கர் – போர்க்களத்தில் நிற்காது உயிர் பிழைத்து
ஓடினவர்களாகிய அரக்கர்கள்; உலர்ந்த நாவர் – வறண்ட நாவினை
உடையவர்களாய்; உண்நசை தண்ணீர் தேடினர் – உன்ணும்
விருப்பத்தால் தண்ணீரைத் தேடினார்கள் (அவ்வாறு தேடியவர்கள்);
தெரிந்து – தேர்ந்து எடுத்து; கையால் முகிலினை முகந்து தேக்கி –
தங்கள் கைகளால் மேகங்களை (மேகநீரை) வாரிக் குடித்துச்; சிலவர்
வீடினர் – சிலர் இறந்து ஒழிந்தார்கள்; சில்லோர் – வேறு சிலர்;
பெற்றிலர் – (அவ்வாறு) (தண்ணீர்) கிடைக்கப் பெறாமையால்; பாடுறு
புண்கள் தோறும் – (அம்பு பட்டுத் தோன்றிய புண்களில் இருந்து;
பசும் புனல் பாயப் பாய – பசிய (குருதிப்) புனல் மேலும் மேலும் பாய்தலால்; விளிந்து வீழ்ந்தார் –
இறந்து விழுந்தார்கள்.

—————–

8166.
வெங் கணை திறந்த மெய்யர், விளிந்திலர், விரைந்து
சென்றார்,
செங் குழல் கற்றை சோரத் தெரிவையர் ஆற்ற, தெய்வப்
பொங்கு பூம் பள்ளி புக்கார், அவர் உடல் பொருந்தப்
புல்லி,
அங்கு அவர் ஆவியோடும் தம் உயிர் போக்கி அற்றார்.–165-

வெங்கணை திறந்த மெய்யர் – கொடிய அம்புகளால் பிளக்கப்பட்ட
உடலினை உடைய சில அரக்கர்கள்; ஆற்ற விரைந்து சென்றார் – மிக
விரைந்து சென்று; தெரிவையர் செங்குழல் கற்றை சோர -தங்கள்
மனைவியருடைய சிவந்த கூந்தல் தொகுதி அவிழ்ந்து விழும்படியாக;
அவர் உடல் பொருந்தப் புல்லி – அவர்களுடைய உடம்பை
நெருக்கித் தழுவி; அங்கு – அந்த இடத்திலேயே; அவர் ஆவியோடும்
தம் உயிர் போக்கி அற்றார் – அவர்களுடைய உயிருடன் தங்களது
உயிரையும் விட்டு இறந்து; தெய்வப் பொங்கு பூம்பள்ளி புக்கார் –
தெய்வத்தன்மை பொங்குகிற அழகிய பெரிய படுக்கை ஆகிய
வீரசுவர்க்கம் புகுந்தார்கள்.

——————-

8167.
பொறிக் கொடும் பகழி மார்பர், போயினர், இடங்கள்
புக்கார்,
மறிக் கொளும் சிறுவர் தம்மை, மற்று உள சுற்றம் தம்மைக்
‘குறிக்கொளும்’ என்று கூறி, அவர் முகம் குழைய நோக்கி,
நெறிக் கொளும் கூற்றை நோக்கி, ஆர் உயிர் நெடிது
நீத்தார்.–166-

கொடும் பொறி பகழி மார்பர் – கொடுமையான நெருப்புப் பொறி
பறக்கும் அம்புகள் தைத்த மார்பினை உடையவர்களான சில
அரக்கர்கள்; போயினர் – போர்க்களத்தை விட்டுப்போய்;
இடங்கள் புக்கார் – தங்களது இருப்பிடம் புகுந்து; மறிக் கொளும்
சிறுவர் தம்மை – மான் மறிபோல் துள்ளி விளையாடும் புதல்வர்
தம்மையும்; மற்று உள சுற்றம் தம்மை – மற்றும் உள்ள பிற
சுற்றத்தார் தம்மையும்; குழைய நோக்கி – பரிவோடு பார்த்து; அவர்
முகம் நோக்கி – அந்த மக்களின் முகங்களைப் பார்த்து;
குறிக்கொளும் என்று கூறி – (நீ்ங்கள் இம்மக்களைக்) கருத்துடன்
கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு; நெறிக்கொளும்
கூற்றை நோக்கி – தங்கள் உயிரைக் காப்பாற்ற முறையாகக் கொள்ள
வந்த (இயமனைச் சினந்து) பார்த்து; ஆர்உயிர் நெடிது நீத்தார் –
தங்களுடைய அருமையான உயிரை (விட முடியாமல்) நீண்ட நேரம்
(போராடி) விட்டார்கள்,

————-

8168.
‘தாமரைக்கண்ணன் தம்பி தன்மை ஈதுஆகின், மெய்யே
வேம், அரக் கணத்தின் இவ் ஊர்; இராவணி விளிதல்
முன்னம்,
மா மரக் கானில், குன்றில், மறைந்திரும்; மறைய, வல்லே
போம்’ எனத் தமரைச் சொல்லி, சிலர் உடல் துறந்து
போனார்.–167-

சிலர் – சில அரக்கர்கள்; தாமரைக் கண்ணன் தம்பி – தாமரை
போன்ற திருக்கண்களை உடைய இராமனது தம்பியாகிய
இலக்குவனுடைய; தம்மை ஈது ஆகின் – போரிடும் தம்மை
இதுவானால்; இவ்ஊர் – இந்த இலங்கை ஊர்; மெய்யே
அரைக்கணத்தின் வேம் – உறுதியாக அரை நொடிப்பொழுதில் வெந்து
அழிந்துவிடும்; இராவணி விளிதல் முன்னம் – (ஆகவே) இராவணன்
மகனாகிய இந்திரசித்தன் இறப்பதற்கு முன்பே; மாமரக் கானில் –
பெரிய மரங்களை உடைய காடுகளிலும்; குன்றில் – குன்றுகளிலும்;
மறைந்திரும் – மறைந்து (இலக்குவனின் அம்புக்கு அகப்படாமல்)
இருங்கள்; மறைய வல்லே போம் – (அவ்வாறு) மறைவதற்காக
விரைவாகப் போங்கள்; எனத் தமரைச் சொல்லி – என்று
உறவினர்களைப் (பார்த்துச்) சொல்லி; உடல் துறந்து போனார் –
(தங்கள்) உடம்பைத் துறந்து விட்டு வீரசுவர்க்கம் போனார்கள்.

—————

8169.
வரை உண்ட மதுகை மேனி மருமத்து, வள்ளல் வாளி
இரை உண்டு துயில, சென்றார், ‘வாங்கிடின், இறப்பம்’
என்பார்,
பிரை உண்ட பாலின் உள்ளம் பிறிதுற, பிறர் முன் சொல்லா
உரையுண்ட நல்லோர் என்ன, உயிர்த்து உயிர்த்து,
உழைப்பதானார்.–168-

வள்ளல் வாளி – வள்ளன்மைப் பண்பு உடைய இலக்குவனது
அம்புகள்; வரை உண்ட மதுகை மேனி மருமத்து – (அரக்கர்களின்)
மலை போன்ற வலிமை உடைய உடம்பின் மார்பில்; இரை உண்டு
துயில – (பாய்ந்து) தசையைக் கிழித்து (அங்கேயே) தங்கி இருக்க;
சென்றார் – (அவ்வம்பைத் தாங்கிச் சென்ற சில) அரக்க வீரர்கள்;
வாங்கிடின் இறப்பம் என்பார் – (இந்த அம்புகளை மார்பில் இருந்து)
பிடுங்கினால் இறந்து விடுவோம் என்று எண்ணி; பிரை உண்டபாலின்
உள்ளம் பிறிதுற – பிரை ஊற்றிய பால் (வேறுபடுவது) போல மனம்
வேறுபட்டு மயங்க; பிறர் முன் சொல்லா – மற்றவர்க்கு முன் சொல்லத்
தகாத; உரையுண்ட நல்லோர் என்ன – பழிச்சொற்களை (வாய் விட்டுப்
பேசாது மனத்தில்) உண்டு வைத்து அடக்கிய பெரியவர்கள் போல;
உயிர்த்து உயிர்த்து உழைப்பதானார் – பெருமூச்சை மிகுதியாக விட்டு
வருந்துபவர்கள் ஆனார்கள்.

—————

8170.
தேரிடைச் செல்லார், மானப் புரவியில் செல்லார், செங் கண்
காரிடைச் செல்லார், காலின் கால் எனச் செல்லார், காவல்
ஊரிடைச் செல்லார், நாணால் உயிரின்மேல் உடைய
அன்பால்
போரிடைச் செல்லார், நின்று நடுங்கினர், புறத்தும் போகார்.–169-

தேரிடைச் செல்லார் – (அரக்கர்கள்) தேரின் மீது ஏறிச்
செல்லாதும்; மானப்புரவியில் செல்லார் – பெருமை உள்ள
குதிரைகளின் மீது ஏறிச் செல்லாதும்; செங்கண் காரிடைச் செல்லார் –
சிவந்த கண்களை உடைய கரிய மேகத்தை ஒத்த
யானைகளின் மீது ஏறிச் செல்லாதும்; கால் எனக்காலின் செல்லார்
– காற்றுப் போலக் கால்களினால் ஓடித் (தப்பிச்) செல்லாதும்; நாணால்
காவல் ஊரிடைச் செல்லார் – நாணத்தினால் காவலை உடைய
இலங்கை ஊருக்குத் திரும்பிச் செல்லாதும்; உயிரின் மேல் உடைய
அன்பால் – தங்களது உயிரின் மீது உள்ள அன்பினால்; போரிடைச்
செல்லார் – போர்க்களத்துக்குச் செல்லாதும்; புறத்தும் போகார் –
போர்க்களத்தை விட்டுத் தப்பி ஓடிச் செல்லாதும்; நின்று நடுங்கினர் –
(அங்கேயே ஓரிடத்தில்) நின்று நடுங்கிக் கொண்டிருந்தார்கள்.

———————-

இந்திரசித்தன் கவசத்தை இலக்குவன் பிளத்தல்

8171.
நொய்தினின் சென்று கூடி, இராவணி உளைவை நோக்கி,
‘வெய்தினின் கொன்று வீழ்ப்பல்’ என்பது ஓர் வெகுளி
வீங்கி,-
பெய்துழிப் பெய்யும் மாரி அனையவன்-பிணங்கு கூற்றின்
கையினின் பெரிய அம்பால், கவசத்தைக் கழித்து வீழ்த்தான்.–170-

பெய்துழிப் பெய்யும் மாரி அனையவன் – பெய்த இடத்தில்
பெய்யும் மழையை ஒத்தவன் ஆகிய இலக்குவன்; நொய்தினின்
சென்று கூடி – விரைவாகச் சென்று நெருங்கி; இராவணி – இராவணன்
மகனாகிய இந்திரசித்தன்; உளைவை நோக்கி – தளர்ச்சியடைந்த
தன்மை கண்டு; வெய்தினின் கொன்று வீழ்ப்பல் – (இவனை யான்)
விரைவாகக் கொன்று வீழ்த்துவேன்; என்பது ஓர் வெகுளி வீக்கி –
என்று ஒப்பற்ற சினம் மிகுந்து; பிணங்கு கூற்றின் – மாறுபாடு
கொண்ட இயமனைப் போன்ற (தனது); கையினின் பெரிய அம்பால் –
கையில் உள்ள (வில்லில் பூட்டிய) பெரிய அம்புகளால்; கவசத்தைக்
கழித்து வீழ்த்தான் – (அவனது) கவசத்தை அறுத்து வீழ்த்தினான்.

————————

8172.
கவசத்தைக் கழித்து வீழ்ப்ப, காப்புறு கடன் இன்று ஆகி,
அவசத்தை அடைந்த வீரன் அறிவுறும் துணையின் வீரத்
‘துவசத்தின் புரவித் திண் தேர் கடிதுறத் தூண்டி, யாம் இத்,
திவசத்தின் முடித்தும், வெம் போர்’ எனச் சினம்
திருகிச் சென்றார்.–171-

கவசத்தைக் கழித்து வீ்ழ்ப்ப – (இலக்குவன் இந்திரசித்தனின்)
கவசத்தை அறுத்து வீழ்த்த; காப்புறு கடன் இன்று ஆகி – (தன்னை
அம்புபடாது) காக்கிற கடமையுள்ள பொருள் வேறு ஒன்றும்
இல்லாமல் போனதால்; அவசத்தை அடைந்த வீரன் – தன்னை
இழந்த நிலை (மயக்கமடைந்த) அடைந்த வீரனாகிய இந்திரசித்தன்;
அறிவுறும் துணையின் – (மயக்கம் தெளிந்து) உணர்வு பெற்று
எழுவதற்கு முன்னுள்ள கால அளவில்; வீரத்துவசத்தின் – வீரத்தின்
அடையாளமாகக் கொடியை உடையதும்; புரவித்திண் தேர் –
குதிரைகள் பூட்டப்பெற்றதுமான வலிய தேரினை; கடிதுறத் தூண்டி –
விரைவு பொருந்தச் செலுத்தி; யாம் வெம்போர் – நாங்கள் (இந்தக்)
கொடிய போரினை; இத்திவசத்தின் முடித்தும் – இந்த நாளிலேயே
முடிப்போம்; என – என்று கூறிச்; சினம் திருகிச் சென்றார் – சினம்
மிக்கவர்களாய் (புகை நிறக் கண்ணனும் மாபக்கனும்) (இலக்குவன்
மீது) சென்றார்கள்.

——————-

8173.
மாருதிமேலும், ஐயன் மார்பினும் தோளின்மேலும்,
தேரினார் இருவர் சென்றார், செந் தழல் பகழி சிந்தி,
ஆரியன், வாகை வில்லும், அச்சுடைத் தேரும், அத் தேர்
ஊர்குவார் உயிரும், கொண்டான்; புரவியின் உயிரும்
உண்டான்.–172-

தேரினர் இருவர் – தேரில் ஏறிய தேர் வீரர்களாகிய (அந்த)
இருவரும்; மாருதி மேலும் – அனுமன் மீதும்; ஐயன் – இலக்குவனது;
மார்பினும் தோளின் மேலும் – மார்பிலும் தோளின் மீதும்; செந்தழல்
பகழி சிந்தி – சிவந்த நெருப்புப்போன்ற அம்புகளைத் தூவிச்;
சென்றார் – சென்றார்கள்; ஆரியன் – வலிமையுள்ளவனாகிய
இலக்குவன்; வாகை வில்லும் – (அவர்களுடைய) முன்பு வெற்றியையே
தனக்கு உரிமையாகக் கொண்டிருந்த வில்லினையும்; அத்தேர்
ஊர்குவார் உயிரும் கொண்டான் – அந்தத் தேரினைச் செலுத்துகிற
பாகர்களின் உயிரையும் கவர்ந்து கொண்டான்; புரவியின் உயிரும் உண்டான் – (அதோடு அத்தேரில்
பூட்டப்பட்டிருந்த) குதிரைகளின் உயிரையும் கவர்ந்து கொண்டான்.

————–

8174.
இருவரும் இழந்த வில்லார், எழு முனை வயிரத் தண்டார்,
உரும் எனக் கடிதின் ஓடி, அனுமனை இமைப்பின் உற்றார்,
பொரு கனல் பொறிகள் சிந்தப் புடைத்தனர்;
புடைத்தலோடும்,
பரு வலிக் கரத்தினால் தண்டு இரண்டையும் பறித்துக்
கொண்டான்.–173-

இழந்த வில்லார் இருவரும் – இழந்த வில்களையுடையவர்களான
(அந்த) இருவரும்; எழுமுனை வயிரத்தண்டார் – எஃகினால் செய்த
பூண்களை உடைய வலிமையான தண்டு கைக்கொண்டு; உரும் எனக்
கடிதின் ஓடி – இடி போல முழங்கிக் கொண்டு விரைவாக
ஓடிச்சென்று; அனுமனை இமைப்பின் உற்றார் – அனுமனை
இமைப்பொழுதில் நெருங்கி; பொருகனல் பொறிகள் சிந்தப்
புடைத்தனர் – மாறுபட்டு நெருப்புப் பொறிகள் சிதறும்படியாகப்
புடைத்தார்கள்; புடைத்தலோடும் – (அவர்கள் அவ்வாறு) அடித்த
உடனே; பருவலிக் கரத்தால் – (அனுமன் தனது) பருத்த வலிமையான
கைகளால்; தண்டு இரண்டையும் பறித்துக்கொண்டான் – (அவர்கள்
கையில் இருந்த) தண்டு இரண்டினையும் பிடுங்கிக்கொண்டான்.

————————

புகை நிறக்கண்ணனும் மாபக்கனும் ஓடி ஒளிதல்
8175.
தண்டு அவன் கையது ஆன தன்மையைத் தறுகணாளர்,
கண்டனர்; கண்டு, செய்யலாவது ஒன்றானும் காணார்;
‘கொண்டனன் எறிந்து நம்மைக் கொல்லும்’ என்று,
அச்சம் கொண்டார்,
உண்ட செஞ்சோறும் நோக்கார், உயிருக்கே உதவி செய்தார்.–174-

தறுகணாளர் – அஞ்சாமைப் பண்பு உடைய அரக்கர் இருவரும்;
அவன் கையது – (தங்கள் தண்டு) அந்த அனுமனுடைய கையின்கண்;
ஆன தன்மையைக் கண்டனர் – போய்விட்ட தன்மையைக்
கண்டார்கள்; கண்டு செய்யலாவது ஒன்றும் காணார் – (அவ்வாறு)
கண்டு செய்யத்தக்க செயல் ஒன்றையும் காணாதவர்களாகி;
கொண்டனன் – (நம் தண்டைப் பறித்துக்) கொண்டவனாகிய அனுமன்;
எறிந்து கொல்லும் – அத்தண்டாலடித்து நம்மைக் கொல்லவான்; என்று
அச்சம் கொண்டார் – என்று அச்சம் கொண்டவர்களாகி; உண்ட
செஞ்சோறும் நோக்கார் – (இராவணனிடம்) உண்ட செஞ்சோற்றுக்
கடனையும் எண்ணாது; உயிருக்கே உதவி செய்தார் – (தம்) உயிருக்கு
உதவி செய்பவர்களாய்ப் புறமுதுகு காட்டி ஓடி ஒளிந்தார்கள்.

—————————–

இந்திரசித்தன் வானரப்படையை அழித்தல்
8176.
காற்று வந்து அசைத்தலாலும், காலம் அல்லாமையாலும்
கூற்று வந்து உயிரைக் கொள்ளும் குறி இன்மை
குறித்தலாலும்,
தேற்றம் வந்து எய்தி, நின்ற மயக்கமும். நோவும் தீர்ந்தார்,
ஏற்றமும் வலியும் பெற்றார்; எழுந்தனர்-வீரர் எல்லாம்.–175-

வீரர் எல்லாம் காற்று வந்து அசைத்தலாலும் –
(இந்திரசித்தனிடம் போர் செய்து மயக்கம் அடைந்து இருந்த)
வானர வீரர்கள் எல்லோரும் காற்று வந்து மென்மையாக
வீசுவதாலும்; காலம் அல்லாமையாலும் – (தாங்கள் இறந்து போவதற்கு
உரிய) காலம் அது அல்லாமையாலும்; கூற்று வந்து – இயமன்
வந்து; உயிரைக் கொள்ளும் – (தங்கள்) உயிரைக் கொள்ளுகின்ற;
குறி இன்மை குறித்தலாலும் – அடையாளம் (எதுவும்) இன்மை
தெரிதலாலும்; நின்ற மயக்கமும் நோவும் தீர்ந்தார் – (தங்களுடன்)
வந்து பொருந்தி நின்ற மயக்கமும் வருத்தமும் தீர்ந்தவர்களாகி;
தேற்றம் வந்து எய்தி – தெளியும் தன்மை வந்து பொருந்தி;
ஏற்றமும் வலியும் பெற்றார் எழுந்தனர் – ஊக்கமும் வலிமையும் பெற்று
எழுந்தார்கள்.

————

8177.
அங்கதன், குமுதன், நீலன், சாம்பவன், அருக்கன்
மைந்தன்
பங்கம் இல் மயிந்தன், தம்பி, சதவலி, பனசன் முன்னாச்
சிங்க ஏறு அனைய வீரர் யாவரும், சிகரம் ஏந்தி,
மங்கலம் வானோர் சொல்ல, மழை என ஆர்த்து, வந்தார்.–176-

அங்கதன் – (வாலி மகனாகிய) அங்கதன்; குமுதன் – குமுதன்;
நீலன் – (படைத்தலைவனாகிய) நீலன்; சாம்பவன் – (எண்கின்
வேந்தனாகிய) சாம்பவன்; அருக்கன் மைந்தன் – சூரியன் மகனாகிய
சுக்ரீவன்; பங்கம் இல் மயிந்தன் – குற்றம் இல்லாத மயிந்தன்; தம்பி
– (அவன்) தம்பியாகிய துமிந்தன்; சதவலி – சதவலி; பனசன் –
பனசன்; முன்னா – ஆகிய வானர வீரர்கள் முதலாக; சிங்க ஏறு
அனைய வீரர் யாவரும் – ஆண் சிங்கத்தைப் போன்ற வானர
வீரர்கள் எல்லோரும்; வானோர் மங்கலம் சொல்ல – தேவர்கள்
(மகிழ்ந்து) மங்கல மொழி கூற; சிகரம் ஏந்தி – மலைகளைக்
(கைகளால்) ஏந்திக்கொண்டு; மழை என ஆர்த்து வந்தார் – மேகம்
என்னும்படி பேரொலி செய்து கொண்டு வந்தார்கள்;

—————

8178.
அத்தனையோரும், குன்றம் அளப்பு இல, அசனி ஏற்றோடு
ஒத்தன, நெருப்பு வீசும் உரும் என ஒருங்க உய்த்தார்
‘இத்தனை போலும் செய்யும் இகல்’ எனா, முறுவல் எய்தி,
சித்திர வில் வலோனும் சின்ன பின்னங்கள் செய்தான்.–177-

அத்தனையோரும் – அத்தனை வானர வீரர்களும்; அசனி
ஏற்றோடு ஒத்தன – இடியேற்றோடு ஒத்தனவாகிய; அளப்பு இல
குன்றம் – அளவில்லாத குன்றுகளை; நெருப்பு வீசும் உரும் என –
நெருப்பை வெளிப்படுத்தி வீசும் இடி போல; ஒருங்க உய்த்தார்-
ஒன்றாக வீசி எறிந்தார்கள்; சித்திர வில்வலோனும் – (அவசத்தை
அடைந்த) விசித்திர வில்லாற்றல் உடையவன் ஆகிய
இந்திரசித்தனும்; இத்தனை போலும் செய்யும் இகல் எனா – (இந்த
வீரர்கள்) செய்யும் போர்த்திறம் இவ்வளவுதான் போலும் என்று
எண்ணி; முறுவல் எய்தி – புன்சிரிப்பைச் சிந்தி; சின்ன பின்னங்கள்
செய்தான் – அம்மலைகளைப் பொடிப்பொடி ஆக்கினான்.

———————-

மரங்களும் மலையும் கல்லும் மழை என வழங்கி, வந்து
நெருங்கினார்; நெருங்கக் கண்டும்; ஒரு தனி நெஞ்சும்,
வில்லும்,
சரங்களும், துணையாய் நின்ற நிசாசரன் தனிமை நோக்கி
இரங்கினன் என்ன, மேல்பால் குன்று புக்கு, இரவி
நின்றான்.–178-

மரங்களும் – (வானரப்படை வீரர்கள்) மரங்களையும்; மலையும் –
மலைகளையும்; கல்லும் – கற்களையும்; மழை என வழங்கி – மழை
போல வீசி அடித்துக்கொண்டு; வந்து நெருங்கினார் – வந்து
நெருங்கினார்கள்; நெருங்கக் கண்டும் – (அவர்கள் அவ்வாறு)
நெருங்கி வருவதைப் பார்த்தும், (அச்சமோ) மன மயக்கமோ
கொள்ளாது); ஒரு தனி வில்லும் – ஒப்பற்ற தனித்தன்மை உடைய
(தன்) வில்லினையும்; சரங்களும் – அம்பினையும்; துணையாய் நின்ற
நிசாசரன் – (மட்டும்) துணையாகக் கொண்டு நின்ற இரவில்
சஞ்சரிக்கும் தன்மை உள்ள இந்திரசித்தனின்; தனிமை நோக்கி –
தனிமையைப் பார்த்து; இரங்கினன் என்ன – மன இரக்கம்
கொண்டவன் போல்; மேல் பால் குன்று புக்கு – மேற்கில் உள்ள
அந்த கிரிக் குன்றில் புகுந்து; இரவி நின்றான் – கதிரவன் (மறைந்து)
நின்றான்.

————-

8180.
‘வாழிய வேதம் நான்கும், மனு முதல் வந்த நூலும்,
வேள்வியும், மெய்யும், தெய்வ வேதியர் விழைவும் அஃதே,
ஆழி அம் கமலக் கையான் ஆதிஅம் பரமன்’ என்னா
ஏழையர் உள்ளம் என்ன இருண்டன-திசைகள் எல்லாம்.–179-

வாழிய வேதம் நான்கும் – வாழ்வனவாகிய வேதங்கள் நான்கும்;
மனு முதல் வந்த நூலும் – மனு நூலை முதலாகக் கொண்டு தோன்றிய
தரும நூல்களும்; வேள்விகளும் – வேள்விகளும்; மெய்யும் –
சத்தியமும்; தெய்வ வேதியர் விழைவும் – தெய்வத்தை (ப் போற்றி
வணங்குகிற) அந்தணர்கள் விரும்பும்; அஃதே – அந்தப் பெரும்
பேறும் (ஆகிய) அனைத்தும்; ஆழி அம் கமலக்கையான் – சுதர்சனம்
என்னும் சக்கரப் படையை ஏந்திய தாமரை மலர் போன்ற கைகளை
உடையவனாகிய; ஆதி அம் பரமன் – முதற் பொருளான அழகிய
நாராயண சொரூபமே; என்னா – என்று உணராத; ஏழையர் உள்ளம்
என்ன – அறிவற்றவர்களின் மனம் போல; திசைகள் எல்லாம் –
எல்லாத் திசைகளும்; இருண்டன – இருளடைந்தன.

—————-

வீடணன் தூண்டுதலால் இலக்குவன் இந்திரசித்தைக் கொல்ல முயல்தல்

8181.
‘நாகமே அனைய நம்ப! நாழிகை ஒன்று நான்கு
பாகமே காலம் ஆகப் படுத்தியேல், பட்டான்; அன்றேல்,
வேக வாள் அரக்கர் காலம் விளைந்தது, விசும்பின் வஞ்சன்
ஏகுமேல், வெல்வன்’ என்பது, இராவணற்கு இளவல்
சொன்னான்.–180-

நாகமே அனைய நம்ப – யானையை ஒத்த வலிமை உள்ள
சிறந்தவனே; நாழிகை ஒன்று நான்கு பாகமே காலம் ஆகப் –
நாழிகை ஒன்றில் நான்கில் ஒரு பாகம் ஆகிய கால் நாழிகைக்
காலத்தையே (கொல்லற்கு உரிய) காலமாகக் கொண்டு; படுத்தியேல்
பட்டான் – கொன்றாய் ஆனால் இவ்விந்திரசித்து இறப்பான்;
அன்றேல் – அவ்வாறு செய்யாவிட்டால்; வேகவாள் அரக்கர் காலம்
விளைந்தது – விரைவாகச் செயல்படும் கொடிய அரக்கர்க்கு
(மாயையைச் செய்தற்கு உரிய) இராக்காலம் வந்துவிடும்; வஞ்சன்
விசும்பில் ஏகுமேல் – வஞ்சனைப் பண்புள்ள இந்த இந்திரசித்தன்,
ஆகாயத்தில் (மாயை விளைக்கச்) செல்வானாயின்; வெல்வன் –
வெற்றி பெறுவான்; என்பது – என்ற செய்தியை; இராவணற்கு இளவல்
சொன்னான் – இராவணனுக்குத் தம்பியாகிய வீடணன்
(இலக்குவனுக்குச்) சொன்னான்.

——-

8182
அத்தனை வீரர்மேலும், ஆண் தகை அனுமன்மேலும்,
எத்தனை கோடி வாளி மழை என எய்யாநின்ற
வித்தக வில்லினானைக் கொல்வது விரும்பி, வீரன்
சித்திரத் தேரைத் தெய்வப் பகழியால் சிதைத்து வீழ்த்தான்.–181-

அத்தனை வீரர் மேலும் – (போர்க்களத்தில் எதிர் வந்த)
அத்தனை வானர வீரர் மீதும்; ஆண் தகை அனுமன் மேலும் –
;ஆண்மைப் பண்புடைய அனுமன் மீதும்; எத்தனை கோடி வாளி –
எத்தனையோ கோடிக்கணக்கான அம்புகளை; மழை என எய்யா
நின்ற – மழை போல எய்து நின்ற; வித்தக வில்லினானைக் –
விசித்திரமான வில்லாற்றலை உடைய இந்திரசித்தனைக்; கொல்வது
விரும்பி – கொல்வதற்கு விரும்பி; வீரன் – வீரனாகிய இலக்குவன்;
சித்திரத் தேரை – அவ்வரக்கனது (அழகிய) சித்திர வேலைப்பாடு
உடைய தேரினைத் (தன்); தெய்வப் பகழியால் சிதைத்து வீழ்த்தான்
– தெய்வத் தன்மை உள்ள அம்புகளால் அழித்து வீழ்த்தினான்.

————-

8183.
அழித்த தேர் அழுந்தாமுன்னம், ‘அம்பொடு கிடந்து
வெம்பி,
உழைத்து உயிர் விடுவது அல்லால், உறு செரு வென்றேம்
என்று
பிழைத்து இவர் போவர் அல்லர்; பாசத்தால் பிணிப்பன்’
என்னா,
விழி்த்து இமையாத முன்னம், வில்லொடும் விசும்பில்
சென்றான்.–182-

அழிந்த தேர் அழுந்தா முன்னம் – (இலக்குவன் அம்பினால்)
அழித்த தேர் நிலத்தில் விழுந்து அழுந்துவதற்கு முன்பே
(இந்திரசித்தன்); பாசத்தால் பிணிப்பன் என்னா – (யான் இவர்களை)
நாக பாசத்தால் பிணித்துவிட்டால்; அம்பொடு கிடந்து வெம்பி –
அம்பினால் கட்டப்பட்டுத் தவித்து; உழைத்து உயிர் விடுவது
அல்லால் – வருந்தி உயிரை இழந்து விடுவது அல்லாமல்; உறு செரு
வென்றேம் என்று – பெரிய போரில் வெற்றி பெற்றோம் என்று
எண்ணிக்கொண்டு; இவர் பிழைத்து போவர் அல்லர் – இவர்கள்
(உயிர்) தப்பிப் பிழைத்துச் செல்ல மாட்டார்கள்; என்னா – என்று
எண்ணி; விழித்து இமையாத முன்னம் – கண் விழித்து
இமையாததற்கு முன்பே (கண் மூடித் திறப்பதற்குள்); வில்லொடும்
விசும்பில் சென்றான் – தன் வில்லோடு ஆகாயத்துக்குச் சென்றான்.

——————

8184.
‘பொன் குலாம் மேனி மைந்தன் தன்னொடும் புகழ்தற்கு
ஒத்த,
வன் கலாம் இயற்றி நின்றான், மற்றொரு மனத்தன் ஆகி,
மின் குலாம் கழல் கால் வீரன் விண்ணிடை விரைந்த
தன்மை
என்கொலாம்!’ என்ன அஞ்சி, வானவர் இரியல்போனார்.–183-

பொன் குலாம் மேனி மைந்தன் – பொன்னை ஒத்த மேனி
நிறமுடைய இலக்குவன்; தன்னொடும் – தன்னுடன்; புகழ்வதற்கு ஒத்த
– புகழ்ந்து கூறுவதற்கு உரிய; வன் கலாம் இயற்றி நின்றான் – வலிய
போரினைச் செய்து நின்ற; மின்குலாம் கழல் கால் வீரன் – ஒளி விளங்குகிற வீரக்கழலை அணிந்த கால்களை உடைய
வீரனாகிய (இந்திரசித்தன்); மற்றொரு மனத்தன் ஆகி – வேறு ஒரு
மனத்தை உடையவனாகி; விண்ணிடை விரைந்த தன்மை –
ஆகாயத்துக்கு விரைவாகச் சென்ற தன்மை; என் கொலாம் – என்ன
காரணத்துக்காகவோ; என்ன அஞ்சி – என்று அச்சம் கொண்டு;
வானவர் இரியல் போனார் – தேவர்கள் சிதறி ஓடிப் போனார்கள்.

——–

8185.
தாங்கு வில் கரத்தன், தூணி தழுவிய புறத்தன், தன்னுள்
ஓங்கி உற்று எரியாநின்ற வெகுளியன், உயிர்ப்பன், தீயன்,
தீங்கு இழைப்பவர்கட்கு எல்லாம் சீரியன், மாயச் செல்வன்,
வீங்கு இருட் பிழம்பின், உம்பர் மேகத்தின் மீதின் ஆனான்.–184-

வில்தாங்கு கரத்தன் – வில்லைத் தாங்கிய கைகளை உடையவனும்;
தூணி தழுவிய புறத்தன் – அம்பு அறாத் தூணியைக் கட்டிய
முதுகினை உடையவனும்; தன்னுள் ஓங்கி உற்று எரியா நின்ற
வெகுளியன் – இயல்பாகவே தன் மனத்தினுள் பொங்கி எரிகின்ற
சினத்தை உடையவனும்; உயிர்ப்பன் – பெரு மூச்சு விடுபவனும்;
தீயன் – கொடியவனும்; தீங்கு இழைப்பவர்கட்கு எல்லாம் சீரியன்-
தீங்கு செய்பவர்களில் எல்லாம் தலை சிறந்தவனும்; மாயச் செல்வன்
– மாயத்தைச் செல்வமாகவே கொண்டவனும் ஆகிய இந்திரசித்தன்;
வீங்கு இருட் பிழம்பின் – நெருங்கிய இருட்டின் திரட்சியில்;
(மறைந்து சென்று) உம்பர் மேகத்தின் மீதின் ஆனான் –
ஆகாயத்தில் உள்ள மேகத்தின் மேல் செல்பவன் ஆனான்.

—————-

8186.
தணிவு அறப் பண்டு செய்த தவத்தினும், தருமத்தாலும்
பிணி அறுப்பவரில் பெற்ற வரத்தினும், பிறப்பினானும்,-
மணி நிறத்து அரக்கன்-செய்த மாய மந்திரத்தினானும்,
அணு எனச் சிறியது, ஆங்கு, ஓர் ஆக்கையும் உடையன்
ஆனான்.–185-

மணி நிறத்து அரக்கன் – நீலமணி போன்ற கருநிறத்தை உடைய
அரக்கனாகிய இந்திரசித்தன்; பண்டு – முன்பு; தணிவு அற – குறைவு
இல்லாமல்; செய்த தவத்தினும் – செய்த தவத்தினாலும்; தருமத்தானும்
– (முன்பு செய்த) அறத்தினாலும்; பிணி அறுப்பவரில் பெற்ற
வரத்தினும் – பாசப் பிணிப்பை ஒழிப்பவர்களாகிய பிரமன்
முதலியோர் இடத்தி்ல் பெற்ற வரத்தினாலும்; பிறப்பினானும் – (தன்
அரக்க குலத்துக்கு உரிய) பிறவிப் பண்பினாலும்; செய்த
மந்திரத்தினாலும் – ஓதிய மாய மந்திரங்களின் வலிமையினாலும்;
ஆங்கு – அப்பொழுது; அணு எனச் சிறியது – அணு என்று கூறுமாறு
சிறியதாகிய; ஓர் ஆக்கையும் – ஓர் உடம்பினை; உடையன் ஆனான்
– உடையவனானான்.

———–

8187.
வாங்கினான்-மலரின் மேலான், வானக மணி நீர்க் கங்கை
தாங்கினான், உலகம் தாங்கும் சக்கரத்தவன் என்றாலும்
வீங்கு வான் தோளை வீ்க்கி வீழ்த்து அலால் மீள்கிலாத
ஓங்கு வாள் அரவின் நாமத்து ஒரு தனிப் படையை உன்னி.–186-

மலரின் மேலான் – மாலின் திருஉந்தி வந்த பிரமனும்; வானக
மணி நீர்க் கங்கை தாங்கினான் – வானத்தில் உள்ள நீலமணி
போன்ற நீரினை உடைய ஆகாய கங்கையைத் தன் சடை முடியில்
அணிந்த சிவனும்; உலகம் தாங்கும் சக்கரத்தவன் – உலகத்தைக்
காக்கும் கடவுளாகிய சக்கரப் படையை ஏந்திய திருமாலும்;
என்றாலும் – ஆகிய இவர்கள் என்றாலும்; வீ்ங்கு வான் தோளை
வீ்க்கி வீழ்த்து அலால் – பருத்த பெரிய தோள்களைக் கட்டி வீ்ழ்த்தி
அல்லது; மீள்கிலாத – வெறுமனே, மீண்டு வராத; ஓங்கு வாள்
அரவின் நாமத்து – சிறந்த ஒளியுடைய பாம்பின் பெயரைக் கொண்ட;
ஒரு தனிப்படையை உன்னி – ஒப்பற்ற கணையைச் சிந்தித்து;
வாங்கினான் – அதற்கு உரிய மந்திரம் சொல்லி எடுத்தான்.

உலகம் தாங்கும் சக்கரத்தவன் – ஆதி கூர்ம ரூபியாய்க் கீழிருந்து
உலகங்களைத் தாங்குகிற திருமால் எனக் கொள்ளலாம் என்பர்
வை.மு.கோ.

—————

8188.
ஆயின காலத்து, ஆர்த்தார், ‘அமர்த்தொழில்
அஞ்சி, அப்பால்
போயினன்’ என்பது உன்னி, வானர வீரர் போல்வார்;
நாயகற்கு இளைய கோவும் அன்னதே நினைந்து, நக்கான்;
மாயையைத் தெரிய உன்னார், போர்த் தொழில் மாற்றி
நின்றார்.-187-

ஆயின காலத்து – அவ்வாறு ஆன அக்காலத்தில்; வானர வீரர்
போல்வார் – வானர வீரர்களைப் போன்றவர்கள்; அமர்த்தொழில்
அஞ்சி அப்பால் போயினன் என்பது உன்னி – (இந்திரசித்தன்)
போர்த்தொழில் செய்வதற்கு அஞ்சி அப்பால் மறைந்து போய்
விட்டான் என்று நினைத்து; ஆர்த்தார் – மகிழ்ச்சிப் பேரொலி
செய்தார்கள்; நாயகற்கு இளைய கோவும் – தலைவனாகிய இராமனுக்கு
இளையவனாகிய இலக்குவனும்; அன்னதே நினைந்து நக்கான் –
அவ்வாறே நினைத்துச் சிரித்தான்; மாயையைத் தெரிய உன்னார் –
(அவர்கள் இந்திரசித்தனது) மாயச் செயலைத் தெளிவாக எண்ணிப்
பாராதவர்களாய்; போர்த் தொழில் மாற்றி நின்றார் – போர் செய்யும்
தொழிலை மாற்றி நின்றார்கள்.

——————

8189.
அது கணத்து, அனுமன் தோள்நின்று ஐயனும்
இழிந்து, வெய்ய
கது வலிச் சிலையை வென்றி அங்கதன் கையது ஆக்கி,
முதுகு உறச் சென்று நின்ற கணை எலாம் முறையின்
வாங்கி,
விதுவிதுப்பு ஆற்றலுற்றான், விளைகின்றது
உணர்ந்திலாதான்.–188-

அதுகணத்து – அந்தப் பொழுதில்; ஐயனும் – தலைவனாகிய
இலக்குவனும்; விளைகின்றது உணர்ந்திலாதான் – நடக்க விருப்பவை
எவற்றையும் உணராதவனாய்; அனுமன் தோள் நின்று இழிந்து –
அனுமனது தோளில் இருந்து இறங்கி; வெய்ய வலிகது சிலையை –
கொடுமையான வலிமை பொருந்திய வில்லினை; வென்றி அங்கதன்
கையது ஆக்கி – வெற்றி பொருந்திய அங்கதன் கையில் உள்ளதாக
ஆக்கி; முதுகு உறச் சென்று நின்ற – மார்பில் பட்டு முதுகு வழியாகப்
பாய்ந்து (ஊடுருவாது) நின்ற; கணை எலாம் – (பகைவர்களுடைய)
அம்புகளை எல்லாம்; முறையின் வாங்கி – முறைப்படி பறித்து
(எடுத்துவிட்டு); விதுவிதுப்பு ஆற்றலுற்றான் – போரினால் ஏற்பட்ட
களைப்பைப் போக்க இளைப்பாறத் தொடங்கினான்.

——–

8190.
விட்டனன் அரக்கன் வெய்ய படையினை; விடுத்தலோடும்,
எட்டினோடு இரண்டு திக்கும் இருள் திரிந்து இரிய ஓடி,
கட்டினது என்ப மன்னோ, காகுத்தற்கு இளைய காளை
வட்ட வான் வயிரத் திண் தோள் மலைகளை உளைய
வாங்கி.–189-

அரக்கன் – அரக்கனாகிய இந்திரசித்தன்; வெய்ய படையினை
விட்டனன் – கொடிய நாகப் படையைச் செலுத்தினான்;
விடுத்தலோடும் – (அவ்வாறு அவன் அதைச்) செலுத்திய அளவில்;
எட்டினோடு இரண்டு திக்கும் – பத்துத் திசைகளிலும்; இருள்திரிந்து
– இருள் பரவவும்; இரிய – (பகைவர்) நிலை கெட்டு ஓடவும்; ஓடி –
விரைவாகச் சென்று; காகுத்தற்கு இளைய காளை – இராமனுக்கு
இளையவனாகிய காளை போன்ற இலக்குவனின்;
வட்டவான் வயிரத்திண் தோள் மலைகளை – திரண்ட ஒளியுடைய
உறுதியான தோள்களாகிய மலைகளை; உளைய வாங்கி – வருந்தும்
படி வளைத்துக்; கட்டினது என்ப – கட்டியது என்று சொல்லுவார்கள்.

காகுத்தன் – காகுத்தன் என்ற அரச மரபில் பிறந்தவன். புரஞ்சயன்
என்ற அரசன் தன் வேண்டுகோளின்படி எருது வடிவம் கொண்டு
வந்த இந்திரனின் மீது ஏறிப் பகைவரை வென்று அழித்து ககுஸ்தன்
என்று பெயர் பெற்றதை. வை.மு.கோ. விளக்கி உள்ளார். இலக்குவனை
நாகபாசம் கட்டியது என்று கூறாமல் “கட்டினது என்ப” என்று
கூறியுள்ள கம்பரின் இராம பக்தி நுட்பத்தை அறிந்து உணர்க.
மன்னோ – இடைச்சொல் கழிவிரக்கப் பொருளில் வந்தது.

————

8191.
இறுகுறப் பிணித்தலோடும், யாவையும் எதிர்ந்த போதும்
மறுகுறக் கடவான் அல்லன்; மாயம் என்று
உணர்வான்அல்லன்;
உறு குறைத் துன்பம் இல்லான்; ஒடுங்கினன்; செய்வது ஓரான்,
அறுகுறைக் களத்தை நோக்கி, அந்தரம் அதனை நோக்கும்.–190-

யாவையும் எதிர்ந்த போதும் – எல்லா உலகங்களும் உயிர்களும்
ஒருங்கு திரண்டு (தன்னை) எதிர்த்த காலத்திலும்; மறுகுறக் கடவான்
அல்லன் – மனக் கலக்கம் அடையத் தக்கவன் அல்லவனும்; உறு
குறைத்துன்பம் இல்லான் – மனத்தில் மிக்க குறையாகிய துன்பம்
இல்லாதவனுமாகிய இலக்குவன்; இறுகுறப் பிணித்தலோடும் –
இந்திரசித்தன் செலுத்திய நாகக்கணை (தன்னை) இறுக்கமாகக் கட்டிய
அளவில்; மாயம் என்று உணர்வான் அல்லன் – (இது
இந்திரசித்தனது) மாயச்செயல் என்று உணராதவனாய்; செய்வது
ஓரான் – இன்னது செய்வது என்று தெரியாமல்; ஒடுங்கினன் – வலி
குன்றியவனாகி; அறு குறைக்களத்தை நோக்கி – அறுபட்ட உடல்
குறைகள் சிதறிக் கிடக்கும் போர்க்களத்தைப் பார்த்து; அந்தரம்
அதனை நோக்கும் – அதற்குப் பின்பு ஆகாயத்தையும்
பார்ப்பானாயினன்,

——–

அனுமன் முதலிய ஏனையோரையும் நாகபாசம் பிணித்தல்
8192.
மற்றையோர் தமையும் எல்லாம் வாள் எயிற்று அரவம் வந்து
சுற்றின; வயிரத் தூணின், மலையினின், பெரிய தோள்கள்,
‘இற்றன, இற்ற’ என்ன, இறுக்கின; இளகா உள்ளம்
தெற்றென உடைய வீரர் இருந்தனர், செய்வது ஓரார்.-191-

வாள் எயிற்று அரவம் – (அந்த நாகக் கணையில் இருந்து
வெளிப்பட்ட) ஒளி பொருந்திய பற்களை உடைய பாம்புகள்;
மற்றையோர் தமையும் எல்லாம் – மற்றைய வானர வீரர்கள் எல்லோர்
தம்மையும்; வந்து சுற்றின – வந்து சுற்றிச் சூழ்ந்து; வயிரத்தூணின் –
வலிய தூண் போலவும்; மலையினின் – மலைகளைப் போலவும்;
பெரிய தோள்கள் – (உள்ள) (அவர்களது வலிய) பெரிய தோள்கள்;
இற்றன இற்ற என்ன – நொறுங்கிப் போயின; என்று அவர்கள்
வாய் விட்டுக் கதறும்படியாக; இறுக்கின – அழுத்தி நொறுக்கின;
இளகா உள்ளம் தென்றென உடைய வீரர் – (வலி) குறையாத
மனத்தைத் தெளிவுடன் பெற்றுடைய (அந்த) வீரர்கள் எல்லோரும்;
செய்வது ஓரார் இருந்தனர் – செயத்தக்கது இதுவே என
அறியாதவர்களாய் இருந்தனர்.

———————–

8193.
காலுடைச் சிறுவன், ‘மாயக் கள்வனைக் கணத்தின்காலை
மேல் விசைத்து எழுந்து நாடிப் பிடிப்பென்’
என்று உறுக்கும்வேலை,
ஏல்புடைப் பாசம், மேல்நாள், இராவணன் புயத்தை வாலி
வால் பிணித்தென்ன, சுற்றிப் பிணித்தது, வயிரத் தோளை. –192-

காலுடைச் சிறுவன் – காற்றின் வேந்தற்கு (அஞ்சனை வயிற்றின்
வந்த) மகனாகிய அனுமன்; மாயக் கள்ளனை – (இப்படி) மாயைச்
செயல் செய்த கள்ளத்தன்மை உடையவனை; கணத்தின் –
கணப்பொழுதில்; காலை மேல் விசைத்து எழுந்து – காலினை
மேலுன்றி வானத்தில் வேகமாக எழுந்து; நாடிப் பிடிப்பென் என்று –
தேடிப்பிடிப்பேன் என்று; உறுக்கும் வேலை – சினங்கொள்ளும்
வேளையில்; ஏல்புடைப் பாசம் – எதிர்த்துத் தாக்கும் தன்மை உள்ள
(அந்த) நாகக் கணை; மேல்நாள் – முன்னொரு காலத்தில்; இராவணன்
புயத்தை – இராவணனது தோள்களை; வாலி வால் பிணித்தென்ன –
வாலியினது வால் சுற்றிப் பிணித்தது போல்; வயிரத்தோளை –
அனுமனது உறுதியான தோள்களைச்; சுற்றிப் பிணித்தது – சுற்றிக்
கட்டியது.

———–

நாக பாசத்தால் கட்டுண்டவர் நிலை
8194.
மலை என எழுவர்; வீழ்வர்; மண்ணிடைப் புரள்வர்; வானில்
தலைகளை எடுத்து நோக்கி, தழல் எழ விழிப்பர்; தாவி
அலைகிளர் வாலால் பாரின் அடிப்பர்; வாய் மடிப்பர்;
ஆண்மைச்
சிலையவற்கு இளைய கோவை நோக்குவர்; உள்ளம் தீவர்;–193-

மலை என எழுவர் வீழ்வர் – (நாகக் கணையால் கட்டப்பட்ட
வானரவீரர்கள்) மலைகள் மேல் எழுந்தது போல் எழுந்து கீழே
விழுவர்; மண்ணிடைப் புரள்வர் – நிலத்திடைப் புரளுவார்கள்;
வானில் தலைகளை எடுத்து நோக்கி தழல் எழ விழிப்பர் –
வானத்தை நோக்கித் தலை எடுத்துப் பார்த்து நெருப்புப் பொறி
வெளிப்பட விழிப்பார்கள்; தாவி அலைகிளர் வாலால் பாரின்
அடிப்பர் – பாய்ந்து அலையும் தன்மை உள்ள எழுச்சியை உடைய
வாலினால் தரையில் அடிப்பார்கள்; வாய் மடிப்பர் – வாயை
மடித்து உதடுகளைக் கடிப்பார்கள்; ஆண்மைச் சிலையவற்கு இளைய
கோவை நோக்குவர் – ஆண்மைத் தன்மை உள்ள வில்லேந்திய
இராமனுக்குத் தம்பியாகிய இலக்குவனைப் பார்த்து; உள்ளம் தீவர்
– மனம் கொதிப்பு அடைவார்கள்.

———–

8195.
வீடணன் முகத்தை நோக்கி, ‘வினை உண்டே,
இதனுக்கு?’ என்பர்;
மூடின கங்குல் மாலை இருளினை முனிவர்; ‘மொய்ம்பின்
ஈடுறக் தக்க போலாம் நம் எதிர்’ என்னா, ஏந்தல்
ஆடகத் தோளை நோக்கி, நகை செய்வர்; விழுவர்;
அஞ்சார்.–194-

வீடணன் முகத்தை நோக்கி – (மேலும் அந்த வீரர்கள்)
வீடணனுடைய முகத்தைப் பார்த்து; இதனுக்கு – இதற்கு; வினை
உண்டோ என்பர் – ஏதாவது பரிகாரச் செயல் உள்ளதோ? என்று
கேட்பார்கள்; மூடின கங்குல் மாலை இருளினை முனிவர் – (தாங்கள்
நாகக் கணையால் கட்டப்பட்டு வருந்தக் காரணமாக இருந்த)
நெருங்கிய திரட்சியான தன்மை உடைய இருளைச் சினப்பார்கள்;
ஏந்தல் ஆடகத் தோளை நோக்கி – இலக்குவனது பொன் போன்ற
தோளைப் பார்த்து; நம் எதிர் – நம் கண் எதிரில்; ஈடுறத் தக்க
போலாம் – (இத்தோள்கள்) வலிய பெருமை குறையத்
தக்கனவாயினவே; என்னா – என்று வருந்திக் கூறி; நகைசெய்வர் –
சிரிப்பார்கள்; விழுவர் – (நிலத்தில்) விழுவார்கள்; அஞ்சார் – (அந்த
நேரத்திலும்) அச்சம் கொள்ளாதிருப்பார்கள்.

————

8196.
‘ஆர், இது தீர்க்க வல்லார்? அஞ்சனை பயந்த வள்ளல்,
மாருதி, பிழைத்தான் கொல்லோ?’ என்றனர், மறுகி நோக்கி,
வீரனைக் கண்டு, ‘பட்டது இதுகொலாம்!’ என்று விம்மி,
‘வார் கழல் தம்பி தன்மை காணுமோ, வள்ளல்?’ என்பார்.–195-

இது தீர்க்க வல்லார் ஆர் – (அந்த வானர வீரர்கள்) இந்தத்
துன்பத்தை நீக்கும் வலிமை உடையவர் யாவர்? (என எண்ணி
உடனே); அஞ்சனை பயந்த வள்ளல் மாருதி – அஞ்சனை வயிற்றில்
வந்தவன் வள்ளன்மைப் பணபுடைய அனுமன்; பிழைத்தான்
கொல்லோ? என்றனர் – (இப்பொழுது) உயிர் தப்பிப் பிழைத்துள்ளான்
கொல்லோ என்று கூறியவர்களாய்; மறுகி நோக்கி – (கட்டுண்டு கிடந்த
இலக்குவனை) மனம் கலங்கிப் பார்த்து; வீரனைக் கண்டு “பட்டது
இது கொலாம்” என்று விம்மி – இலக்குவனைக் கண்டு நடந்த
செயல் இதுவோ என்று கூறிப் புலம்பி; வள்ளல் – (வள்ளல்
பண்புடைய) இராமன்; வார் கழல் தம்பி தன்மை காணுமோ – நீண்ட
வீரக்கழல் அணிந்த (தன்) தம்பியாகிய இலக்குவனுக்கு ஏற்பட்ட
இந்நிலையைக் கண்டு (மனம்) பொறுப்பானோ?; என்பார் – என்று
கூறினார்கள்.

———–

8197.
என், சென்ற தன்மை சொல்லி? எறுழ் வலி அரக்கன்
எய்தான்
மின் சென்றது அன்ன; வானத்து உரும்இனம் வீ்ழ்வ என்ன,
பொன் சென்ற வடிம்பின் வாளி, புகையொடு பொறியும்
சிந்தி,
முன் சென்ற முதுகில் பாய, பின் சென்ற மார்பம் உற்ற.–196-

சென்ற தன்மை சொல்லி என் – (அம்பு எய்த காலத்தில்) நிகழ்ந்த
செயல்களை விரிவாகச் சொல்லி என்ன பயன்?; எறுழ் வலி அரக்கன்
– மிக்க வலிமை உடைய இந்திரசித்தன்; வானத்து மின் சென்றது
என்ன – வானத்தில் மின்னல் மின்னுவது போன்றனவும்; உரும்
இனம் வீ்ழ்வ என்ன – இடியின் கூட்டங்கள் (ஒருங்கே) கீழே விழுவது போலவும்; பொன் சென்ற வடிம்பின்
வாளி எய்தான் – கரும் பொன்னால் ஆகிய நுனியை உடைய
அம்புகளைச் செலுத்தினான்; புகையொடு பொறியும் சிந்தி –
(அந்அம்புகள்) புகையையும் தீப்பொறிகளையும் சிந்திக்கொண்டு; முன்
சென்ற முதுகில் பாய – மார்பில் தைத்தவை முதுகில் ஊடுருவ; பின்
சென்ற மார்பம் உற்ற – முதுகில் பாய்ந்தவை மார்பில் ஊடுருவின.

———-

8198.
மலைத்தலைக் கால மாரி; மறித்து எறி வாடை மோத,
தலைத்தலை மயங்கி வீழும் தன்மையின் தலைகள் சிந்தும்;
கொலைத்தலை வாளி பாயக் குன்று அன குவவுத் தோளார்
நிலைத்திலர் உலைந்து சாய்ந்தார்; நிமிர்ந்தது, குருதி நீத்தம்.–197-

மறுத்து எறி வாடை மோத – மடக்கி வீசுகின்ற வாடைக் காற்று
மோதுதலினால்; மலைத்தலைக் காலமாரி – மலையில் உள்ள கரிய
மேகங்கள்; தலைத்தலை மயங்கி வீழும் – இடந்தோறும் இடந்தோறும்
ஒன்றோடு ஒன்று மோதிச் சிந்தி விழும் தன்மை போல; தலைகள்
சிந்தும் கொலைத்தலை வாளி பாய – தலைகளை அறுத்துச் சிந்தச்
செய்யும் கொல்லும் தன்மை உள்ள அம்புகள் பாய்வதால்; குன்று
அன குவவுத் தோளார் – குன்றினை ஒத்த திரண்ட தோள்களை
உடைய வானர வீரர்கள்; நிலைத்திலர் – (ஓரிடத்தில்) நிலைத்து
இருக்க மாட்டாது; உலைந்து சாய்ந்தார் – வருந்திக் கீழே
விழுந்தார்கள்; குருதி நீத்தம் நிமிர்ந்தது – (எங்கும்) இரத்த வெள்ளம்
பரவிப் பெருகியது.

———-

8199.
ஆயிர கோடி மேலும் அம்பு தன் ஆகத்தூடு
போயின போதும், ஒன்றும் துடித்திலன், பொடித்து, மானத்
தீ எரி சிதறும் செங் கண் அஞ்சனை சிங்கம், தெய்வ
நாயகன் தம்பிக்கு உற்ற துயர் சுட, நடுங்குகின்றான்.–198-

பொடித்து மானத் தீ எரி சிதறும் செங்கண் அஞ்சனை சிங்கம்
– மான உணர்வினால் தீப்பொறி சிதறுகின்ற சிவந்த கண்களை உடைய
அஞ்சனை பெற்ற சிங்கம் போன்றவனாகிய அனுமன்; ஆயிர கோடி
மேலும் அம்பு – ஆயிரம் கோடிக்கு மேல் அம்புகள்; தன் ஆகத்தூடு
போயின போதும் – தன் மார்பினுள் ஊடுருவிப் போன போதிலும்;
ஒன்றும் துடித்திலன் – ஒரு சிறிதும் வருத்தம் அடையவில்லை;
தெய்வ நாயகன் தம்பிக்கு உற்ற துயர் சுட – (ஆனால் அவன்)
தெய்வத்தலைவனாம் இராமன் தம்பிக்கு நேர்ந்த துன்பம் (தன்
நெஞ்சைச் சுட); நடுங்குகின்றான் – மன நடுக்கம் கொள்பவன் ஆனான்.

————-

8200.
வேறு உள வீரர் எல்லாம் வீழ்ந்தனர், உருமின் வெய்ய
நூறும் ஆயிரமும் வாளி உடலிடை நுழைய, சோரி
ஆறுபோல் ஒழுக, அண்ணல் அங்கதன் அனந்த வாளி
ஏறிய மெய்யனேனும், இருந்தனன், இடைந்திலாதான்.–199-

வேறு உள வீரர் எல்லாம் – மற்றுள்ள பிற வானரவீரர்கள்
எல்லாம்; உருமின் வெய்ய – இடியைக் காட்டிலும்
கொடுமையானதாகிய; வாளி நூறும் ஆயிரமும் உடலிடை நுழைய –
அம்புகள் நூற்றுக்கணக்காகவும், ஆயிரக்கணக்காகவும் உடம்புகளில்
நுழைந்ததனால்; சோரி ஆறு போல் ஒழுக வீழ்ந்தனர் – குருதி
ஆற்றினைப் போல் ஒழுகி வெளிப்பட (நிலத்திடை) விழுந்தனர்;
அண்ணல் அங்கதன் – பெருமை சிறந்த அங்கதன்; அனந்த வாளி –
அளவற்ற அம்புகள்; ஏறிய மெய்யனேனும் – தைத்த உடம்பினை
உடையவனாய் இருந்தும்; இடைந்திலாதான் இருந்தனன் – சோர்வு
அடையாதவனாய் இருந்தான்.

————

8201.
கதிரவன் காதல் மைந்தன், கழல் இளம் பசுங் காய் அன்ன,
எதிர் எதிர் பகழி தைத்த, யாக்கையன்; எரியும் கண்ணன்;
வெதிர் நெடுங் கானம் என்ன வேகின்ற மனத்தன்,
மெய்யன்;
உதிர வெங் கடலுள், தாதை உதிக்கின்றான் தனையும்
ஒத்தான்.–200-

கதிரவன் காதல் மைந்தன் – கதிரவனின் அன்பு மகனாகிய
சுக்கிரீவன்; எதிர் எதிர் பகழி தைத்த – எதிர் எதிராக அம்புகள்
தைத்ததனால்; இளம் கழல் பசுங்காய் அன்ன யாக்கையன் –
இளமையான கழலின் பசுங்காயை ஒத்த உடம்பினை உடையவனாகி;
எரியும் கண்ணன் – (சினத்தால்) தீ எரியும் கண்களையும்; வெதிர்
நெடுங் கானம் என்ன – மூங்கில்கள் நிறைந்த பெரிய காடு எரிவது
போல; வேகின்ற மனத்தன் மெய்யன் – பற்றி எரிகிற மனமும்
உடம்பும் கொண்டவனாகி; வெம் உதிர கடலுள் – கொடிய குருதிக்
கடலுள்; உதிக்கின்றான் – உதயமாகிற; தாதை தனையும் ஒத்தான் –
(தன்) தந்தையாகிய கதிரவனையும் போன்று விளங்கினான்.

————–

8202.
வெப்பு ஆரும் பாசம் வீக்கி, வெங் கணை
துளைக்கும் மெய்யன்-
ஒப்பு ஆரும் இல்லான் தம்பி-உணர்ந்திருந்து இன்னல்
உய்ப்பான்,
‘இப் பாசம் மாய்க்கும் மாயம், யான் வல்லென்’ என்பது
ஓர்ந்தும்,
அப் பாசம் வீச ஆற்றாது, அழிந்த நல் அறிவு போன்றான்.–201-

ஒப்பு ஆரும் இல்லான் தம்பி – தனக்கு உவமையில்லாத
இராமனுடைய தம்பியாகிய இலக்குவன்; வெப்பு ஆரும் நாக பாசம்
வீக்கி – கொடுமை பொருந்திய நாகக்கணையால் கட்டுப்பட்டு;
வெங்கணை துளைக்கும் மெய்யன் – கொடிய அம்புகள் துளைக்கிற
உடம்பை உடையவனாய்; உணர்ந்திருந்து இன்னல் உய்ப்பான் –
(அதனை நீக்கும் வழியை) உணர்ந்து (அதற்கு உரிய வல்லமை
பெற்று இருந்தும்) துன்பத்தில் (தன்னைச்) செலுத்திக்
கொள்ளுபவனாய்; இப்பாசம் மாய்க்கும் மாயம் – இந்த உலக
பாசத்தை அழிக்கும் மாய சக்தியில்; யான் வல்லென் என்பது
ஓர்ந்தும் – யான் வல்லவன் என்பதை எண்ணி உணர்ந்திருந்தும்;
அப்பாசம் வீச – அந்த உலக பாசம் (தன்னைத் தாக்க); ஆற்றாது
– (அதற்கு) ஈடாக முடியாது; அழிந்த நல் அறிவு போன்றான் –
அழிந்து போன நல்ல ஞானத்தை ஒத்திருந்தான்

———

8203.
அம்பு எலாம் கதிர்கள் ஆக, அழிந்து அழிந்து
இழியும் ஆகச்
செம் புனல் வெயிலின் தோன்ற திசை இருள் இரிய சீறிப்
பம்பு பேர் ஒளிய நாகம் பற்றிய படிவத்தோடும்,
உம்பர் நாடு இழிந்து வீழ்ந்த ஒளியவனேயும் ஒத்தான்.–202-

அம்பு எலாம் கதிர்கள் ஆக – (இலக்குவன் உடம்பில் குத்தி
நின்றுள்ள) அம்புகள் எல்லாம் கிரணங்கள் ஆகவும்; ஆக அழிந்து
அழிந்து இழியும் செம்புனல் – மார்பில் இருந்து சிறிது சிறிதாகப்
பெருகுகிற இரத்தம்; வெயிலின் தோன்ற – வெய்யில் போலத் தோன்ற;
திசை ருள் இரிய – திசைகளில் எல்லாம் இருள் நிலை கெட்டு ஓட;
சீறிப் பம்பு பேர் ஒளிய நாகம் – சீறி நிறைந்த பெரிய ஒளியை
உடைய பாம்பினால்; பற்றிய படிவத்தோடும் – பற்றப்பட்ட
உருவத்தோடு தவறிக்கீழே விழுந்த; ஒளியவனேயும் ஒத்தான் –
சூரியனையும் ஒத்து இருந்தான்.

————–

இந்திரசித்தன் இராவணன் அரண்மனை சேறல்

8204.
மயங்கினான் வள்ளல் தம்பி; மற்றையோர் முற்றும் மண்ணை
முயங்கினார்; மேனி எல்லாம் மூடினான், அரக்கன் மூரித்
தயங்கு பேர் ஆற்றலானும், தன் உடல் தைத்த வாளிக்கு
உயங்கினான், உளைந்தான், வாயால் உதிர நீர்
உமிழாநின்றான்.–203-

வள்ளல் தம்பி மயங்கினான் – வள்ளலாகிய இராமன் தம்பியாகிய
இலக்குவன் மயங்கி விட்டான்; மற்றையோர் முற்றும் மண்ணை
முயங்கினார் – மற்றையவர்கள் எல்லோரும் நிலத்தைத் தழுவினார்கள்;
மேனி எல்லாம் மூடினான் – (அவர்களின்) உடம்புகளை எல்லாம்
(தன் கை அம்புகளால்) மறைத்தவனாகிய; மூரித் தயங்கு பேர்
ஆற்றலானும் அரக்கன் – வலிமை விளங்குகிற பெரிய ஆற்றலை
உடைய அரக்கனாகிய இந்திரசித்தனும்; தன் உடல் தைத்த வாளிக்கு
– தன் உடலினிடத்தில் போரின் போது தைத்துள்ள (இலக்குவனது)
அம்புகளுக்கு; உயங்கினான் உளைந்தான் – தளர்ந்து வருந்தினான்;
வாயால் உதிரநீர் உமிழா நின்றான் – வாயினால் இரத்தமாகிய நீரைக்
கக்கிக்கொண்டு நின்றான்.

———————-

8205.
‘சொற்றது முடித்தேன்; நாளை, என் உடற் சோர்வை நீக்கி,
மற்றது முடிப்பென்’ என்னா, எண்ணினான், ‘மனிசன்
வாழ்க்கை
இற்றது; குரங்கின் தானை இறந்தது’ என்று இரண்டு பாலும்
கொற்ற மங்கலங்கள் ஆர்ப்ப, இராவணன் கோயில் புக்கான்.–204-

சொற்றது முடித்தோன் – (நான்) சொன்னதைச் செய்து முடித்து
விட்டேன்; என் உடற் சோர்வை நீக்கி – எனது உடல் தளர்ச்சியை
நீக்கிக் கொண்டு; நாளை மற்றது முடிப்பென் என்னா எண்ணினான்
– நாளைக்கு மற்றதையும் செய்து முடிப்பேன் என்று எண்ணினான்;
மனிசன் வாழ்க்கை இற்றது – மனிதனது வாழ்க்கை முடிந்துவிட்டது; குரங்கின் தானை இறந்தது – வானரப் படைகள்
இறந்து ஒழிந்தன; என்று இரண்டு பாலும் – என்று இரண்டு
பக்கங்களிலும்; கொற்ற மங்கலங்கள் ஆர்ப்ப – வெற்றிக்கு
அறிகுறியாக மங்கல ஒலி முழங்க; இராவணண் கோயில் புக்கான் –
இராவணனது அரண்மனைக்குச் சென்று சேர்ந்தான்.

—————–

8206.
ஈர்க்கு அடைப் பகழி மாரி இலக்குவன் என்ன நின்ற
நீர்க் கடை மேகம்தன்னை நீங்கியும், செருவின் நீங்கான்,
வார்க் கடை மதுகைக் கொங்கை, மணிக் குறு முறுவல்,
மாதர்
போர்க் கடைக் கருங் கண் வாளி புயத்தொடு பொழியப்
புக்கான்.–205-

ஈர்க்கு அடைப் பகழிமாரி – இறகுகளை உடைய அம்பாகிய
மழையினால்; இலக்குவன் என்ன நின்ற – இலக்குவன் என்று பெயர்
கொண்டு நின்ற; நீர்க்கடை மேகம் தன்னை நீக்கியும் –
நற்குணங்களை உடைய மேகம் போன்றவனாகிய இலக்குவன் தன்னை
அழித்தும்; செருவின் நீங்கான் – போர் செய்தலில் இருந்து
நீங்காதவனாய் (திரும்பி வந்த இந்திரசித்தன்); வார்க் கடை மதுகைக்
கொங்கை – கச்சையைக் கடந்து நிற்றலை உடைய வலிமையைக்
கொண்ட கொங்கைகளையும்; மணிக்குறு முறுவல் மாதர் – அழகிய
புன்சிரிப்பையும் உடைய பெண்களின்; போர்க் கடைக்கருங்கண் –
போர்த் தொழிலைச் செய்கிற கடைக் கருங்கண்களாகிய; வாளி –
அம்புகள்; புயத்தொடும் பொழியப் புக்கான் – (தன்) தோள்களில்
பொழிந்து கொண்டிருக்கப் புக்கான்.

—————————————-

8207.
ஐ-இரு கோடி செம் பொன் மணி விளக்கு அம் கை ஏந்தி,
மை அறு வான நாட்டு மாதரும், மற்றை நாட்டுப்
பை அரவு அல்குலாரும், பலாண்டு இசை பரவ, தங்கள்
தையலர் அறுகு தூவி வாழ்த்தினர் தழுவ, சார்ந்தான்.–206-

ஐ – இரு கோடி செம்பொன் மணி விளக்கு – பத்துக்
கோடியளவினதான செம்பொன்னால் செய்யப்பட்ட அழகிய
விளக்குகளை; அம் கை ஏந்தி – (தங்கள்) அழகிய கைகளில்
ஏந்திக் கொண்டு; மை – அறு வானநாட்டு மாதரும் – குற்றமற்ற தேவ
உலக மகளிரும்; மற்றை நாட்டுப் பைஅரவு அல்குலாரும் – மற்றை
உலகத்தும் (நில உலகத்து) அரவின் பையை ஒத்த அல்குலை உடைய
மாதரும்; இசை பலாண்டு பரவ – இசையோடு பல்லாண்டு பாட;
தங்கள் தையலார் – தங்களுக்குரிய அரக்கப் பெண்டிர்; அறுகு தூவி
வாழ்த்தினார் தழுவ – அறுகைத் தூவி வாழ்த்தி நெருங்கி வரச்;
சார்ந்தான் – (இராவணன் அரண்மனை) சேர்ந்தான்.

——————–

8208.
தந்தையை எய்தி, அன்று ஆங்கு உற்றுள தன்மை எல்லாம்
சிந்தையின் உணரக் கூறி, ‘தீருதி, இடர் நீ; எந்தாய்!
நொந்தனென் ஆக்கை; நொய்தின் ஆற்றி, மேல்
நுவல்வென்’ என்னா,
புந்தியில் அனுக்கம் தீர்வான், தன்னுடைக் கோயில்
புக்கான்.–207-

தந்தையை எய்தி – (இந்திரசித்தன் தன்) தந்தையாகிய
இராவணனை அடைந்து; அன்று அங்கு – அன்றைய நாளில்
அப்போர்க்களத்தில்; உற்றுள தன்மை எல்லாம் – நடந்துள்ள
செய்திகளை எல்லாம்; சிந்தையின் உணரக் கூறி – (அவன்) மனத்தில்
பதியும்படி தெளிவாக எடுத்துச் சொல்லி; எந்தாய் – என் தந்தையே;
நீ இடர் தீருதி – நீ துன்பம் நீங்குவாயாக (என்று சொல்லி); ஆக்கை
நொந்தனென் – யான் உடல் வருந்தினேன்; நொய்தின் ஆற்றி –
விரைவாக இளைப்பாறி; மேல் நுவல்வென் என்னா – (இனி) மேல்
(செய்யவேண்டியவை பற்றிச்) சொல்லுவேன் என்று கூறி; புந்தியில்
அனுக்கம் தீர்வான் – மனத்துன்பம் நீங்குவதற்காகத்; தன்னுடைக்
கோயில் புக்கான் – தனது அரண்மனைக்குப் போய்ச் சேர்ந்தான்.

——————–

இலக்குவன் மற்றும் பிறர் நிலைகண்டு வீடணன் புலம்பல்
8209.
இத் தலை, இன்னல் உற்ற வீடணன் இழைப்பது ஓரான்,
மத்து உறு தயிரின் உள்ளம் மறுகினன், மயங்குகின்றான்,
‘அத் தலைக் கொடியன் என்னை அட்டிலன்; அளியத்தேன்
நான்;
செத்திலென்; வலியென் நின்றேன்’ என்று போய்,
வையம் சேர்ந்தான்.–208-

இத்தலை – (இந்திரசித்தன் கோயில் புக்க நேரத்தில் இராமன்
பக்கலில்) இந்தப் பக்கத்தில்; இன்னல் உற்ற வீடணன் – துன்பம்
அடைந்த வீடணன்; இழைப்பது ஓரான் – செய்வது என்ன என்று
தெரியாதவனாகி; மத்து உறு தயிரின் – மத்தினால் கடையப்பட்ட
தயிரினைப்போல; உள்ளம் மறுகினன் மயங்குகின்றான் – மனம்
கலங்கித் தெளிவு குலைபவனாகி; அத்தலை – அத்தன்மையுள்ள;
கொடியன் என்னை அட்டிலன் – கொடிய இந்திரசித்து இவர்களைக்
கொன்றது போல் என்னையும் கொன்றானில்லை; நான் அளியத்தேன்
– நான் இரங்கத்தக்கவனானேன்; செத்திலென் – (நான்) இறந்தேனு
மில்லை; வலியென் நின்றேன் – வலிமை உள்ளவனாய்
நின்றிருக்கிறேன்; என்று போய் வையம் சேர்ந்தான் – என்று
சொல்லிக் கொண்டு (துயரம் கரை கடந்து) போய் நிலத்தில்
விழுந்தான்.

———–

8210.
பாசத்தால் ஐயன் தம்பி பிணிப்புண்டபடியைக் கண்டு
‘நேசத்தார் எல்லாம் வீழ்ந்தார்; யான் ஒரு தமியென்
நின்றேன்;
தேசத்தார், என்னை என் என் சிந்திப்பார்!’ என்று தீயும்,
வாசத் தார் மாலை மார்பன் வாய் திறந்து அரற்றலுற்றான்;–209-

ஐயன் தம்பி – தலைவனாகிய இராமன் தம்பி இலக்குவன்;
பாசத்தால் பிணிப்புண்ட படியைக் கண்டு – நாகக் கணையால்
கட்டுப்பட்ட தன்மையைக் கண்டு; நேசத்தார் எல்லாம் வீழ்ந்தார் –
(அவனிடத்து) அன்பு கொண்டவர்கள் எல்லோரும் இறந்து விழுந்து
விட்டார்கள்; யான் ஒரு தமியென் நின்றேன் – நான் மட்டும் இறவாது
ஒரு தனியனாய் நின்றுகொண்டு இருக்கிறேன்; தேசத்தார் என்னை
என் என் சிந்திப்பார் – உலகத்தவர் என்னைப் பற்றி என்ன என்று
சிந்திப்பார்கள்; என்று – என்று சொல்லி; தீயும் வாசத்தார் மாலை
மார்பன் – வாடுகிற மணம் மிக்க மாலை
அணிந்த மார்பினை உடைய வீடணன்; வாய் திறந்து
அரற்றலுற்றான் – வாய் திறந்து கதறி அழத் தொடங்கினான்.

—————–

8211.
‘ “கொல்வித்தான், உடனே நின்று அங்கு” என்பரோ.
“கொண்டு போனான்
வெல்வித்தான், மகனை” என்று பகர்வரோ? “விளைவிற்கு
எல்லாம்
நல் வித்தாய் நடந்தான், முன்னே” என்பரோ? நயந்தோர்
தம்தம்
கல்வித்து ஆம் வார்த்தை’ என்று கரைவித்தான்
உயிரைக் கண்போல்.–210-

உடனே நின்று அங்கு கொல்வித்தான் என்பரோ – (என்னைப்
பற்றி மற்றவர்கள்) (இந்த வீடணன்) கூடவே இருந்து அவ்விடத்தில்
இலக்குவனை இந்திரசித்தன் மூலம் கொல்லுவித்தான் என்று
கூறுவார்களா?; கொண்டு போனான் வெல்வித்தான் மகனை என்று
பகர்வரோ – (இந்திரசித்தனிடம்) அழைத்துச் சென்று மகனாகிய
அவனை வெற்றி பெறும்படிச் செய்து விட்டான் என்று (பழி)
கூறுவார்களா?; விளைவிற்கு எல்லாம் நல்வித்தாய் நடந்தான்
முன்னே என்பரோ – விளைந்த தீமைகளுக்கு எல்லாம் நல்ல
விதை போல முன்பே (நல்லவன் போல) (இராமனிடம் வந்து) சேர்ந்து
கொண்டான என்று குறை கூறுவார்களோ?; நயந்தோர் தம் தம்
கல்வித்து ஆம் வார்த்தை – (இராமனை) விரும்பும் (உலகத்தவர்)
தம் கல்வியின் அளவினை உடையதாய் (அவர்கள் கூறும்)
பழிமொழியும் பலவகைப்பட்டு நிற்கும்; என்று – என்று (பலவாறு கூறி);
கண் போல் உயிரைக் கரைவித்தான் – கண்களைப் போலவே
உயிரையும் கரைந்து உருகச் செய்தான்.

————-

8212.
‘போர் அவன் புரிந்த போதே, பொரு அரு வயிரத்
தண்டால்,
தேரொடும் புரண்டு வீழச் சிந்தி, என் சிந்தை செப்பும்
வீரம் முன் தெரித்தேன் அல்லேன்; விளிந்திலேன்;
மெலிந்தேன்;இஞ்ஞான்று
ஆர் உறவு ஆகத் தக்கேன்? அளியத்தேன்
அழுந்துகின்றேன்!–211-

அவன் போர் புரிந்த போதே – அந்த இந்திரசித்தன் போர்
செய்த பொழுதே; பொரு அருவயிரத் தண்டால் – (என்) ஒப்புமை
இல்லாத உறுதியான தண்டினால்; தேரொடும் புரண்டு வீழச்
சிந்தி – (அவனைத்) தேரோடு புரண்டு விழும் படியாகச் சிதறச்
செய்து; என் சிந்தை செப்பும் – என் மனம் (என்னிடம்) கூறுகிற;
வீரம் முன் தெரித்தேன் அல்லேன் – வீரச் செயலை முன்பு
(செய்து) வெளிக்காட்டினேன் அல்லேன்; விளிந்திலேன் –
(அது செய்யவில்லையாயினும் அந்த இந்திரசித்தனால்) இறந்து
பட்டேனும் இல்லை; மெலிந்தேன் – (உடலும் உள்ளமும்) தளர்ந்து
போனேன்; அளியத்தேன் அழுந்துகின்றேன் – (இப்போது நான்)
எளிமை உடையவனாகித் (துன்பத்தில்) மூழ்கியுள்ளேன்; இஞ்ஞான்று
– இப்பொழுது; ஆர் உறவு ஆகத் தக்கேன் – நான் யாருக்கு
உறவாகத் தக்கவன்?

————–

‘ஒத்து அலைத்து, ஒக்க வீடி, உய்வினும் உய்வித்து, உள்ளம்
கைத்தலை நெல்லி போலக் காட்டிலேன்; கழிந்தும்
இல்லேன்;
அத் தலைக்கு அல்லேன்; யான், ஈண்டு, “அபயம்!” என்று
அடைந்து நின்ற
இத் தலைக்கு அல்லேன்; அல்லேன்! இரு தலைச் சூலம்
போல்வேன்!”–212-

ஒத்து அலைத்து – (வானர வீரர்களுடன்) ஒப்பாகப் (பகைவர்களை)
வருத்தி; ஒக்க வீடி – (அவர்கள் இறக்கும் நிலை வரின் நானும்
அவர்களுக்கு) ஒப்பாக இறந்து; உய்வினும் உய்வித்து – (வாழ்ந்து) உய்யும் நெறிகள் (இருப்பின்) யானும்
பிழைத்து (அவர்களையும்) பிழைப்பித்து; உள்ளம் – (என்
பக்தியுள்ள) மனத்தின் (தன்மையை); கைத்தலை நெல்லி போலக்
காட்டிலேன் – உள்ளங்கையிடத்தில் உள்ள நெல்லிக்கனி போல
விளக்கிக் காட்டினேன் அல்லன்; கழிந்தும் இல்லேன் – (யான்) இறந்து
போகவுமில்லை; யான் அத்தலைக்க அல்லேன் – நான்
அவ்விடத்துக்கு (இராவணன் பக்கத்துக்கு) வேண்டாதவனானேன்;
ஈண்டு அபயம் என்று அடைந்து நின்று – இங்கு (வந்து) சரண்
என்று சேர்ந்து நின்ற; இத்தலைக்கு அல்லேன் அல்லேன் –
இந்தப் பக்கத்துக்கும் (இராமன் பக்கத்துக்கும்) வேண்டாதவனானேன்;
இருதலைச் சூலம் போல்வேன் – இரண்டு பிரிவாக உள்ள சூலத்தைப்
போன்றவனானேன்.

———–

நிகழ்ந்தவை இராமன் அறிந்து வருந்துதல்

8214.
அனையன பலவும் பன்னி, ஆகுலித்து அரற்றுவானை
‘வினை உள பலவும் செய்யத்தக்கன;-வீர!-நீயும்
நினைவு இலார் போல நின்று நெகிழ்தியோ? நீத்தி! என்னா,
இனையன சொல்லித் தேற்றி, அனலன் மற்று இனைய
செய்தான்;–213-

அனையன பலவும் பன்னி – (இவை போன்ற) பல சொற்களைப்
பலமுறை சொல்லி; ஆகுலித்து – (மனத்) துன்பம் கொண்டு;
அரற்றுவானை – கதறி அழுகின்றவனாகிய வீடணனனை நோக்கி; வீர
– வீரனே; பலவும் வினை உள செய்யத் தக்கன – (இப்போது)
செய்யக்கூடிய பல (பரிகாரச்) செயல்கள் உள்ளன; நீயும் நினைவு
இலார் போல நின்று நெகிழ்தியோ? – (அச்செயல்களைச்
செய்யாமல்) நீ கூட அறிவிலார் போல மனந்தளர்ந்து வருந்துவாயோ?
நீத்தி என்னா – (அந்த மனத்தளர்ச்சியை) விட்டுவிடுவாயாக என்று;
அனலன் – அனலன் என்பவன்; இனையன சொல்லித் தேற்றி –
இத்தகைய சொற்களைச் சொல்லி (வீடணனைத்) தேற்றி; மற்று
இனைய செய்தான் – பின்பு இச்செயல்களைச் செய்தான் (செய்தவை
அடுத்த பாடலில்).

———–

8215.
‘நீ இவண் இருத்தி; யான் போய் நெடியவற்கு
உரைப்பெண்’ என்னா,
போயினன், அனலன்; போய், அப் புண்ணியன்
பொலன் கொள் பாதம்
மேயினன் வணங்கி, உற்ற வினை எலாம் இயம்பி நின்றான்;
ஆயிரம் பெயரினானும், அருந் துயர்க் கடலுள் ஆழ்ந்தான்.–214-

நீ இவண் இருத்தி – நீ இங்கே இருப்பாயாக; யான் போய் –
நான் போய்; நெடியவற்கு உரைப்பென் என்னா – நெடியவனாகிய
இராமனுக்கு (நிகழ்ந்தது) கூறுவேன் என்று சொல்லி; அனலன்
போயினன் – அனலன் (இராமனிடம்) சென்றான்; போய் – சென்று;
அப்புண்ணியன் பொலன்கொள் பாதம் மேயினன் வணங்கி –
அப்புண்ணிய உருவினன் ஆகிய இராமனது திருப்பாதத்தில் சேர்ந்து
(விழுந்து) வணங்கி; உற்ற வினை எலாம் இயம்பி நின்றான் –
நடந்த செயல்களை எல்லாம் சொல்லி நின்றான்; ஆயிரம்
பெயரினானும் – ஆயிரம் நாமத்து ஐயனாகிய இராமனும் (அது கேட்டு);
அருந்துயர்க் கடலுள் ஆழ்ந்தான் – கடத்தற்கு அரிய துன்பக் கடலுள்
முழுகினான்.

—————-

8216.
உரைத்திலன் ஒன்றும்; தன்னை உணர்ந்திலன்; உயிரும்
ஓடக்
கரைத்திலன் கண்ணின் நீரை; கண்டிலன் யாதும் கண்ணால்;
அரைத்திலன் உலகம் எல்லாம் அம் கையால்; பொங்கிப்
பொங்கி
இரைத்திலன்; ‘உளன்’ என்று எண்ண இருந்தனன், விம்மி
ஏங்கி.–215-

தன்னை உணர்ந்திலன் – (அனலன் கூறியதைக் கேட்ட இராமன்)
தன்னை உணர்ந்திலனாய் (உணர்வு ஒழிந்து); உயிரும் ஓட – உயிர்
(தன்னை விட்டு) நீங்கியது போல (மயக்கம் அடைந்ததனால்); ஒன்றும்
உரைத்திலன் – ஒன்றையும் (வாயைத் திறந்து) சொல்லாமலும்;
கண்ணின் நீரை கரைத்திலன் – கண்களில் இருந்து கண்ணீரை
வெளிப்படுத்தாமலும்; யாதும் கண்ணால் கண்டிலன் – யாது ஒன்றையும் கண்ணைத் திறந்து நோக்காமலும்;
பொங்கிப் பொங்கி அம் கையால் உலகம் எல்லாம்
அரைத்திலன் – மிக்க சினம் கொண்டு (தன்) அழகிய கைகளால்
உலகங்களை எல்லாம் அழிக்காமலும்; உளன் என்று எண்ண –
கண்டோர் (அவன்) உயிரோடு தான் இருக்கிறான் என்று
எண்ணுவதற்காக; விம்மி ஏங்கி இருந்தனன் – விம்மிக் கதறிக்
கொண்டு இருந்தான்.

——–

8217. விம்மினன், வெதும்பி வெய்துற்று ஏங்கினன், இருந்த வீரன்,
‘இம் முறை இருந்து செய்வது யாவதும் இல்’ என்று எண்ணி,
பொம்மென விம்மலோடும் பொருக்கென விசையின்
போனான்,
தெவ் முறை துறந்து, வென்ற செங்கள மருங்கில் சேர்ந்தான்.–216-

விம்மினன் – விம்மி; வெதும்பி – (நினைத்து நினைத்து மனம்)
கன்றி; வெய்துற்று – பெருமூச்சு விட்டு; ஏங்கினன் – ஏக்கம்
உடையவனாய்; இருந்த வீரன் – இருந்த வீரனாகிய இராமன்;
இம்முறை இருந்து செய்வது யாவதும் இல் – இவ்வகையில் (புலம்பிக்
கொண்டு இருந்து) செய்யத்தக்க செயல் எதுவும் இல்லை; என்று
எண்ணி – என்று நினைத்து; பொம்மென – விரைவாக; விம்மலோடும்
பொருக்கென விசையின் போனான் – விம்மிக்கொண்டு மிக
விரைவாகப் போய்; தெவ் முறை துறந்து வென்ற – பகைவன்
(இந்திரசித்தன்) அறமுறை தவறி வெற்றி பெற்ற; செங்கன மருங்கில்
சேர்ந்தான் – (குருதியால்) சிவந்த போர்க் களத்திடத்தில் (சென்று)
சேர்ந்தான்,

————–

இராமன் போர்க்களம் காணல்

8218. இழிந்து எழும் காளமேகம், எறி கடல், அனைய மற்றும்
ஒழிந்தன, நீல வண்ணம் உள்ளன எல்லாம் ஒக்கப்
பிழிந்து அது காலம் ஆகக் காளிமைப் பிழம்பு போதப்
பொழிந்தது போன்றது அன்றே-பொங்கு இருட்
கங்குற் போர்வை.–217-

பொங்கு இருட் கங்குற் போர்வை – மிகுதியாகப் பொங்கும்
இரவாகிய போர்வை; இழிந்து எழுகாள மேகம் – (நீர் முகக்க) இறங்கி
மேல் எழுகிற கரு மேகங்களையும்; எறி கடல் அனைய – (அலைகள்)
வீசும் கடல்களையும் அவை போல்வன பிறவற்றையும்; மற்றும்
ஒழிந்தன நீலவண்ணம் உள்ளன எல்லாம் – மற்றும் விடுபட்டுப்
போன நீலவண்ணம் உள்ளனவாகிய பொருள்கள் எல்லாவற்றையும்;
ஒக்கப் பிழிந்து – ஒன்று சேர்த்துப் பிழிந்து; அது – (அவ்வாறு
பிழிந்த) அப்பொருள்; காலம் ஆகக் – பொழிவதற்கு உரிய காலமாக;
காளிமைப் பிழம்பு போதப் – கருமையின் உருவத்தை மிகுதியாக
வெளிப்படுமாறு; பொழிந்தது போன்றது அன்றே – பொழிந்தது
போன்றது.

———–

8219. ஆர் இருள் அன்னது ஆக, ஆயிர நாமத்து அண்ணல்,
சீரிய அனலித் தெய்வப் படைக்கலம் தெரிந்து வாங்கி,
பாரிய விடுத்தலோடு, பகை இருள் இரிந்து பாற,
சூரியன் உச்சி உற்றாலொத்தது, அவ் உலகின் சூழல்.–218-

ஆர் இருள் அன்னது ஆக – உலகம் முழுதும் நிறைந்து மூடிய
இருள் அவ்வாறு அமைய; ஆயிர நாமத்து அண்ணல் – ஆயிரம்
திருப்பெயர்களை உடைய தலைவனாகிய இராமன்; சீரிய அனலித்
தெய்வப்படைக்கலம் – சிறப்புடைய அங்கியின் தெய்வத்தன்மை
உள்ள அம்பினை; வாங்கி – தேர்ந்து எடுத்து; பாரிய விடுத்தலோடும்
– (இருள்) அழியும்படியாகச் செலுத்திய உடனே; பகை இருள் இரிந்து
பாற – (இதுவரை) பகையாக இருந்த இருட்டு அழிந்து கெட; அவ்
உலகின் சூழல் – அந்தப் போர்க்களத்தின் சுற்றுப் புறம்; சூரியன்
உச்சி உற்றாலொத்தது – சூரியன் (வானத்து) உச்சியை அடைந்தது
போல் விளங்கியது.

—————–

8220. படை உறு பிணத்தின் பம்மல் பருப்பதம் துவன்றி, பல்வேறு
இடை உறு குருதி வெள்ளத்து, எறி கடல் எழு நீர் பொங்கி,
உடை, உறு தலைக் கை அண்ணல் உயிர் எலாம் ஒருங்க
உண்ணும்
கடை உறு காலத்து, ஆழி உலகு அன்ன, களத்தைக்
கண்டான்.–219-

படை உறு பிணத்தின் – படைக்கலங்கள் தைத்த பிணங்களின்;
பம்மல் பருப்பதம் துவன்றி – மிகுதி மலைகள் போல நிறைந்து;
பல்வேறு இடை உறு குருதி வெள்ளத்து – பல்வேறு விதமாக
இடை இடையே மிக்க குருதியாகிய வெள்ளம்; எறி கடல் எழுநீர்
பொங்கி – அலைகள் எறியும் கடலின் நீர் போலப் பொங்கி எழுகிற
காரணத்தால்; உடை உறு தலைக்கை அண்ணல் – உடைதல்
பொருந்திய தலையைக் கையில் ஏந்திய தலைவன் ஆகிய
சிவபெருமான்; உயிர் எலாம் ஒருங்க உண்ணும் – உயிர்களை எல்லாம்
ஒரு சேர உண்ணுகிற; கடை உறு காலத்து – இறுதி பொருந்திய
காலத்தில்; ஆழி உலகு அன்ன – கடலினால் (அழிக்கப்பட்ட)
உலகத்தை ஒத்த; களத்தைக் கண்டான் – போர்க்களத்தை (இராமன்)
கண்டான்.

————

இலக்குவனைக் கண்ட இராமன் துயரம்

8221. பிணப் பெருங் குன்றினூடும், குருதி நீர்ப் பெருக்கினூடும்,
நிணப் பெருஞ் சேற்றினூடும், படைக்கல நெருக்கினூடும்,
மணப் பெருங் களத்தில், மோடி மங்கல வாழ்க்கை வைப்பில்,
கணத்தினும் பாதிப் போதில், தம்பியைச் சென்று கண்டான்.–220-

மோடி மங்கல வாழ்க்கை வைப்பில் – துர்க்கை மங்கலமாக
வாழ்க்கை (நடத்துதற்கு உரிய) இடமாகிய; மணப் பெரும் களத்தில் –
புலால் நாற்றம் வீசுகிற பெரிய போர்க்களத்தில்; பிணப் பெருங்
குன்றினூடும் – பிணக் குவியல்களாகிய பெரிய மலைகளுக்கு
நடுவிலும்; குருதி நீர்ப் பெருக்கினூடும் – இரத்த வெள்ளப் பெருக்கின்
இடையிலும்; நிணப் பெருஞ் சேற்றினூடும் – கொழுப்புகள் (விழுந்து
ஆகிய) பெரிய சேற்றுப் (பகுதிக்கு) இடையிலும்; படைக்கல
நெருக்கினூடும் – (கீழே விழுந்து கிடக்கிற) படைக்கலங்களின்
இடையிலும்; கணத்தினும் பாதிப் போதில் – (இராமன்)
அரைக்கணத்தில்; தம்பியைச் சென்று கண்டான் – தம்பியைச் சென்று
பார்த்தான்.

————

8222. அய் அவன் ஆக்கைதன்மேல் விழுந்து மார்பு
அழுந்தப் புல்லி,
‘உய்யலன்’ என்று, ஆவி உயிர்த்து உயிர்த்து,
உருகுகின்றான்;
பெய் இரு தாரைக் கண்ணீர்ப் பெருந் துளி பிறங்க, வானின்
வெய்யவன் தன்னைச் சேர்ந்த நீல் நிற மேகம் ஒத்தான்.–221-

அய் – தலைவனாகிய இராமன்; அவன் ஆக்கை தன் மேல்
விழுந்து – அந்த இலக்குவனுடைய உடம்பின் மேல் விழுந்து; மார்பு
அழுந்தப் புல்லி – மார்பு (அவனுடலில்) அழுந்தும் படியாகத் தழுவிக்
கொண்டு; உய்யலன் என்று – (இனிமேல் இவன்) பிழைக்க மாட்டான்
என்று (கண்டவர் எண்ணும் படியாக); ஆவி உயிர்த்து உயிர்த்து
உருகுகின்றான் – பெருமூச்சை மிகுதியும் விட்டுக் கொண்டு உருகுகின்றவனாகி; பெய் இரு தாரைக் கண்ணீர்ப்
பெருந்துளி பிறங்க – இரு வரிசையாகக் கண்களில் இருந்து பெரிய
நீர்த்துளிகள் வெளிப்பட; வானின் வெய்யவன் தன்னைச் சேர்ந்த –
வானத்தில் கதிரவன் தன்னைச் சேர்ந்து (விளங்குகிற); நீல் நிற மேகம்
ஒத்தான் – நீல நிறமுள்ள மேகத்தை ஒத்து விளங்கினான்.

———–

8223. உழைக்கும்; வெய்து உயிர்க்கும்; ஆவி உருகும்;
போய் உணர்வு சோரும்;
இழைக்குவது அறிதல் தேற்றான், ‘இலக்குவா! இலக்குவா!’
என்று
அழைக்கும்; தன் கையை வாயின், மூக்கின் வைத்து
அயர்க்கும்; ‘ஐயா!
பிழைத்தியோ!’ என்னும்-மெய்யே பிறந்தேயும் பிறந்திலாதான்-222-

மெய்யே – உண்மையாக; பிறந்தேயும் பிறந்திலாதான் –
பிறந்திருந்தும் வினை வசத்தால் பிறவாதவனாகிய இராமன்;
உழைக்கும் – வருத்தப்படுவான்; வெய்து உயிர்க்கும் – பெரு மூச்சு
விடுவான்; ஆவி உருகும் – உயிர் உருகுவான்; உணர்வு போய்
சோரும் – அறிவு நீங்கிச் சோர்வான்; இழைக்குவது அறிதல்
தேற்றான் – செய்வது இன்னது என்று அறிந்து தெளியாதவனாய்;
இலக்குவா, இலக்குவா என்று அழைக்கும் – இலக்குவனே,
இலக்குவனே என்று பலமுறை அழைப்பான்; தன் கையை மூக்கின்
வைத்து – (தனது) கையை (இலக்குவனது) மூக்கின் மேல் வைத்து (மூச்சு
உளதா) (என்று பார்த்து); அயர்க்கும் – வருந்துவான்; ஐயா – ஐயா;
பிழைத்தியோ என்னும் – (நீ) பிழைப்பாயோ என்று கூறுவான்.

————-

8224. தாமரைக் கையால் தாளைத் தைவரும்; குறங்கைத் தட்டும்;
தூ மலர்க் கண்ணை நோக்கும்; ‘மார்பிடைத் துடிப்பு
உண்டு’ என்னா,
ஏமுறும்; விசும்பை நோக்கும்; எடுக்கும்; தன் மார்பின்
எற்றும்;
பூமியில் வளர்த்தும்; ‘கள்வன் போய் அகன்றானோ?’
என்னும்.–223-

தாமரைக் கையால் தாளைத்தைவரும் – (மேலும் இராமன் தன்)
தாமரை போன்ற கைகளினால் (இலக்குவனுடைய) கால்களைத்
தடவுவான்; குறங்கைத் தட்டும் – தொடையைத் தட்டுவான்; தூமலர்க்
கண்ணை நோக்கும் – (அவனுடைய) தூய தாமரை மலர் போன்ற
கண்ணின் (இமைகளைப் பிரித்துப்) பார்ப்பான்; மார்பிடைத் துடிப்பு
உண்டு என்னா ஏமுறும் – மார்பில் துடிப்பு உள்ளது என்று சொல்லி
மகிழ்வான்; விசும்பை நோக்கும் – விண்ணைப் பார்ப்பான்; எடுக்கும்
தன் மார்பில் எற்றும் – (அவனைத் தூக்கி) எடுத்துத் தனது மார்பில்
அணைத்துக் கொள்ளும்; பூமியில் வளர்த்தும் – நிலத்தில் படுக்கச்
செய்யும்; கள்வன் போய் அகன்றானோ என்னும் – (மாயக்)
கள்ளனாகிய இந்திரசித்தன் (தப்பிப்) போய் விட்டானோ? என்பான்;

————

8225. வில்லினை நோக்கும்; பாச வீக்கினை நோக்கும்; வீயா
அல்லினை நோக்கும்; வானத்து அமரரை நோக்கும்; ‘பாரைக்
கல்லுவென், வேரோடு’ என்னும்; பவள வாய் கறிக்கும்;
கற்றோர்
சொல்லினை நோக்கும்; தன் போல் புகழினை நோக்கும்-
தோளான்.–224-

தன் போல் புகழினை நோக்கும் தோளான் – தனக்குத் தானே
ஒத்துப் (பிறிதொன்றும் ஒவ்வாது) புகழை விரும்பும் தோள்களை
உடையவன் ஆகிய (இராமன்); வில்லினை நோக்கும் – (தன்
கோதண்டம் என்ற பெயருடைய) வில்லினைப் பார்ப்பான்; பாச
வீக்கினை நோக்கும் – நாகக் கணையின் கட்டுகளைக் காண்பான்;
வீயா அல்லினை நோக்கும் – விடியாத இரவினைப் பார்ப்பான்;
வானத்து அமரரை நோக்கும் – ஆகாயத்தில் உள்ள தேவர்களைப்
பார்ப்பான்; பாரை வேரோடு கல்லுவென் என்னும் – நிலவுலகத்தை
வேருடன் பெயர்த்து விடுவேன் என்று சொல்லுவான்; பவள வாய்
கறிக்கும் – பவளம் போன்ற வாய் உதடுகளைக் கடிப்பான்; கற்றோர்
சொல்லினை நோக்கும் – கற்று அறிந்த பெரியோர்கள் கூறியுள்ள
(அறம் வெல்லும் பாவம் தோற்கும்) சொற்களை எண்ணிப் பார்ப்பான்.

———-

8226. வீரரை எல்லாம் நோக்கும்; விதியினைப் பார்க்கும்; வீரப்
பார வெஞ் சிலையை நோக்கும்; பகழியை நோக்கும்; ‘பாரில்
யார் இது பட்டார், என்போல் எளி வந்த வண்ணம்?’
என்னும்;
‘நேரிது, பெரிது’ என்று ஓதும்-அளவையின் நிமிர நின்றான்.–225-

அளவையின் நிமிர நின்றான் – பிரமாணங்களைக் கடந்து
நின்றவனாகிய இராமன்; வீரரை எல்லாம் நோக்கும் – (தனக்காகப்
போரிட்டு மடிந்து கிடக்கும்) வானர வீரர்களை எல்லாம் பார்ப்பான்;
விதியினைப் பார்க்கும் – (தாரத்தையும் தம்பியையும் இழக்கச் செய்த)
விதியினைப் பற்றி எண்ணிப் பார்ப்பான்; வீரப் பார வெஞ்சிலையை
நோக்கும் – (தக்க தருணத்தில் தனக்கு உதவாத) வீரமுடைய வலிய
வில்லினைப் பார்ப்பான்; பகழியை நோக்கும் – (பயன்படாது அம்பு
அறாத்தூணியில் உள்ள) அம்புகளைப் பார்ப்பான்; பாரில் என்போல்
எளிவந்த வண்ணம் இது பட்டார் யார்? என்னும் – நிலவுலகத்தில்
என்னைப் போல எளி வந்த தன்மையாகிய (பெருந்துன்பத்தை)
அடைந்தவர் யார்? என்று கூறுவான்; நேரிது பெரிது என்று ஓதும் –
என துன்பம் மிக நேரிது பெரியது என்று கூறுவான்.

———–

இராமன் வீடணனை நோதல்

8227. ‘”எடுத்த போர், இலங்கை வேந்தன் மைந்தனோடு
இளைய கோவுக்கு
அடுத்தது” என்று, என்னை வல்லை அழித்திலை,
அரவின் பாசம்
தொடுத்த கை தலையினோடும் துணித்து, உயிர் குடிக்க;
என்னைக்
கெடுத்தனை; வீடணா!’ என்றான்-கேடு இலாதான்.–226-

கேடு இலாதான் – எக்காலத்திலும் அழியாதவனாகிய (அவதார)
இராமன்; இலங்கை வேந்தன் மைந்தனோடு – இலங்கை வேந்தனாகிய
இராவணனின் மகனாகிய இந்திரசித்தனுடன்; இளைய கோவுக்கு –
இளைய தலைவனாகிய இலக்குவனுக்கு; எடுத்த போர் அடுத்தது
என்று – பெரும் போர் ஏற்பட்டது என்று கூறி; வீடணா நீ –
வீடணனே நீ; என்னை வல்லை அழைத்திலை – என்னை விரைவாக
அழைக்காமல் போனாய் (அதனால்); அரவின் பாசம் தொடுத்த கை –
நாகக் கணை தொடுத்த (இந்திரசித்தனது) கைகளையும்;
தலையினோடும் துணித்து – (அவனது) தலையையும் கொய்து
களைந்து; உயிர் குடிக்க – உயிரைக் குடிப்பதற்கு (இல்லாமல்);
என்னைக் கெடுத்தனை என்றனன் – என்னைக் கெடுத்து விட்டாய்
என்றான்.

—————————–

வீடணன் நிகழ்ந்தது கூறல்

8228. அவ் உரை அருளக் கேட்டான், அழுகின்ற அரக்கன் தம்பி,
‘இவ் வழி, அவன் வந்து ஏற்பது அறிந்திலம்; எதிர்ந்
தபோதும்,
“வெவ் வழியவனே தோற்கும்” என்பது விரும்பி நின்றேன்.
தெய்வ வன் பாசம் செய்த செயல், இந்த மாயச் செய்கை.–227-

அவ் உரை – (இராமன்) அந்தச் சொற்களை; அருளக்
கேட்டான் – சொல்லக்கேட்டு; அழுகின்ற அரக்கன் தம்பி -அழுகின்ற இராவணனது தம்பியாகிய வீடணன்; இவ்வழி – இந்தப்
போர்க்களத்துக்கு; அவன் வந்து ஏற்பது அறிந்திலம் – அந்த
இந்திரசித்தனே வந்து போர் ஏற்பான் என்பதை (நாங்கள்) முன்பே
அறிந்திலோம்; எதிர்ந்த போதும் – (அவ்வாறு அவனே வந்து போர்)
எதிர்த்த போதும்; வெவ்வழியவனே தோற்கும் என்பது – தீய வழியில்
செல்லும் (இந்திரசித்தனே) தோற்பான் என்று (எண்ணி); விரும்பி
நின்றேன் – விருப்பத்தோடு (போர்க்களத்தில்) நின்றிருந்தேன்;
(அதனால் வல்லை உன்னை அழைக்கவில்லை) இந்த மாயச் செய்கை
– இந்த மாமாயச் செயல்; தெய்வ வன் பாசம் செய்த செயல் –
தெய்வத்தன்மை பொருந்திய வலிமையான நாகக் கணையின் செயலால்
விளைந்தது (என்று இராமனை நோக்கிக் கூறினான்).

————–

8229. ‘அற்று அதிகாயன் ஆக்கை, தலை இலது ஆக்கி ஆண்ட
வெற்றியின் ஆய வீரன் மீண்டிலன், “இலங்கை மேல்நாள்
பெற்றவன் எய்தும்” என்னும் பெற்றியை உன்னி; பிற்போது
உற்றனன், மைந்தன், தானை நாற்பது வெள்ளத்தோடும்.–228-

அதிகாயன் ஆக்கை அற்று – அதிகாயனது உடம்பு அறுபட்டு;
தலை இலது ஆக்கி – தலை இல்லாததாகச் செய்து; ஆண்ட
வெற்றியன் – பெற்ற வெற்றியை உடையவன்; ஆய வீரன் – ஆகிய
வீரனாகிய இலக்குவன்; மேல் நாள் இலங்கை – முற்காலத்தில்
இலங்கையை; பெற்றவன் எய்தும் – (குபேரனிடத்தில் இருந்து)
பெற்றவன் ஆகிய இந்திரசித்தன்; எய்தும் என்னும் பெற்றியை உன்னி
– போருக்கு வருவான் என்னும் தன்மையை எண்ணி; மீண்டிலன் –
(போர்க்களத்தை விட்டு) நீங்காது நின்றான்; பிற்போது – பின்பு;
மைந்தன் – இராவணன் மகனாகிய இந்திர சித்தன்; தானை நாற்பது
வெள்ளத்தோடும் – சேனை நாற்பது வெள்ளத்தோடு; உற்றனன் –
போர்க்களம் வந்தான்.

—————-
8230.
ஈண்டு, நம் சேனை வெள்ளம் இருபதிற்று-இரட்டி மாள,
தூண்டினன், பகழி மாரி; தலைவர்கள் தொலைந்து சோர,
மூண்டு எழு போரில், பாரில் முறை முறை முடித்தான்;
பின்னர்
ஆண்தகையோடும் ஏற்றான், ஆயிரம் மடங்கல்-தேரான்.–229-

ஆயிரம் மடங்கல் தேரான் – ஆயிரம் சிங்கங்கள் பூட்டப்பட்ட
தேரை உடையவன் ஆகிய (இந்திரசித்தன்); மூண்டு எழு போரில் –
மிக வலிமையுடன் நடந்த போரில்; ஈண்டு நம்சேனை – நெருங்கிய
நமது படைகளில்; இரு பதிற்று இரட்டி வெள்ளம் மாள – நாற்பது
வெள்ளம் உயிர்விடவும்; தலைவர்கள் தொலைந்து சோர – வானரப்
படைத் தலைவர்கள் வலி தொலைந்து சோர்வு அடையவும்; பாரில் –
போர்க்களத்தில்; பகழி மாரி தூண்டினன் – அம்பு மழை பெய்து;
முறை முறை முடித்தான் – முறை முறையாக அழித்து விட்டான்;
பின்னர் – பின்பு; ஆண் தகையோடும் ஏற்றான் – ஆண்மைத்
தன்மை உள்ள இலக்குவனுடன் போர் ஏற்றான்.

——————

8231. ‘அனுமன்மேல் நின்ற ஐயன் ஆயிரம் தேரும் மாய,
தனு வலம் காட்டி, பின்னை, நாற்பது வெள்ளத் தானை
பனி எனப்படுவித்து, அன்னான் பலத்தையும்
தொலைத்து, “பட்டான்
இனி’” என, வயிர வாளி, எண் இல, நிறத்தின் எய்தான்–230-

அனுமன் மேல் நின்ற ஐயன் – அனுமனது தோளின் மீது ஏறி
நின்று (போர் செய்த) தலைவனாகிய இலக்குவன்; ஆயிரம் தேரும்
மாய – (இந்திரசித்தன் அப்பொழுது ஏறிக்கொண்டு போர் செய்த)
ஆயிரம் தேர்களும் அழிந்து சிந்தும் படியாக; தனுவலம் காட்டி
– வில்லாற்றலைக் காட்டி; பின்னை – பின்பு; நாற்பது வெள்ளத்தானை
– நாற்பது வெள்ளம் (அரக்கர்) படையைப்; பனி எனப் படுவித்து
– (கதிரவன் முன் உள்ள) பனியைப் போல அழியச் செய்து;
அன்னான் – அந்த இந்திரசித்தனுடைய; பலத்தையும் தொலைத்து –
வலிமையையும் கெடுத்து; இனி பட்டான் என – இனி (இந்திரசித்தன்)
இறந்து விடுவான் என்று (கண்டவர்கள் கூறும்படி); எண் இல வயிர
வாளி – எண்ணிக்கை இல்லாத வலிய அம்புகளை; நிறத்தின் எய்தான்
– (அவனுடைய) மார்பில் செலுத்தினான்.

———–

8232. ‘ஏ உண்ட பகு வாயோடும் குருதி நீர் இழிய நின்றான்,
தூவுண்ட தானை முற்றும் பட, ஒரு தமியன் சோர்வான்;
“போவுண்டது என்னின், ஐய! புணர்க்குவன் மாயம்” என்று,
பாவுண்ட கீர்த்தியானுக்கு உணர்த்தினென்; பரிதி பட்டான்.–231

ஏ உண்ட பகுவாயோடும் – அம்புபட்டுப் பிளந்த இடந்தோறும்;
குருதிநீர் இழிய நின்றான் – குருதி நீர் ஒழுக நின்றவனாகிய
(இந்திரசித்தன்); தூவுண்ட தானை முற்றும் பட – அம்புகளால்
தூவப்பட்ட (அரக்கர்) படை முழுவதும் அழிய; ஒரு தமியன்
சோர்வான் – ஒரு தன்மையானவனாய் (நின்று)
வருந்துகின்றவனானான்; ஐய – (அப்பொழுது நான் இலக்குவனைப்
பார்த்து) ஐயனே; போவுண்டது என்னின் – (இப்போது இவன்) தப்பிப்
போக நேர்ந்தால்; மாயம் புணர்க்குவன் என்று – மாயச் செயல்
செய்வான் என்று; பாவுண்ட கீர்த்தியானுக்கு உணர்த்தினென் –
பரவுதல் பொருந்திய மிகு புகழைக் கொண்ட இலக்குவனுக்கு
உணர்த்தினேன்; பருதி பட்டான் – (இந்நிலையில்) கதிரவன்
மறைந்தான்; (இரவுக் காலம் வந்தது)

—————–

8233. ‘மாயத்தால் இருண்டது ஆழி உலகு எலாம்; வஞ்சன்,
வானில்
போய், அத் தானுடைய வஞ்ச வரத்தினால் ஒளிந்து,
பொய்யின்
ஆயத்தார்ப் பாசம் வீசி அயர்வித்தான், அம்பின் வெம்பும்
காயத்தான்’ என்னச் சொல்லி, வணங்கினான், கலுழும்
கண்ணான்.–232-

ஆழி உலகு எலாம் இருண்டது – கடலால் சூழப்பட்ட நில உலகம்
எல்லாம் இருண்டு போனது; வஞ்சன் – வஞ்சனைப் பண்புள்ள
(அந்த) இந்திரசித்தன்; மாயத்தால் வானில் போய் – மாயச்
செய்கையால் வானத்திற்குப் போய்; அத் தானுடைய வஞ்ச
வரத்தினால் ஒளித்து – அந்தத் தான் பெற்றுள்ள வஞ்சனைச் செயல்
செய்ய உரிய வரத்தின் வலிமையால் மறைந்து (நின்று); பொய்யின்
ஆய – பொய்மையால் ஆகிய; தார்ப்பாசம் வீசி – நாகக் கணையை எய்து; அயர்வித்தான் – தளரச் செய்தான்; அம்பின்
வெம்பும் காயத்தான் – (இலக்குவனுடைய) அம்புகளால் வெதும்பிய
உடலை உடைய அந்த இந்திரசித்தன்; என்னச் சொல்லி – என்று
(வீடணன் இராமனிடம்) கூறி; கலுழும் கண்ணான் வணங்கினான் –
நீர் வடியும் கண்களை உடையவனாய் வணங்கி நின்றான்.

————

வீடணன் “யாரும் இறந்திலர்” என்னல்

8234. பின்னரும் எழுந்து, பேர்த்தும் வணங்கி, ‘எம் பெரும!
யாரும்
இன் உயிர் துறந்தார் இல்லை; இறுக்கிய பாசம் இற்றால்
புல் நுனைப் பகழிக்கு ஓயும் தரத்தரோ? புலம்பி உள்ளம்
இன்னலுற்று அயரல்; வெல்லாது, அறத்தினைப் பாவம்’
என்றான்.–233-

பின்னரும் எழுந்து – மீண்டும் எழுந்து நின்று; பேர்த்தும்
வணங்கி – மறுமுறையும் வணங்கி; எம்பெரும – எங்கள் தலைவனே!
யாரும் இன் உயிர் துறந்தார் இல்லை – இவர்களில் எவரும் தங்கள்
இனிய உயிரை விட்டுவிடவில்லை; இறுக்கிய பாசம் இற்றால் – (இவர்
ளை) இறுகப் பிணைத்துள்ள நாகபாசம் நீங்கினால் (உயிருடன்
எழுவர்); புல்நுனைப் பகழிக்கு ஓயும் தரத்தரோ? – இவர்கள்
புன்மையான முனையினையுடைய அம்புகளுக்கு வலிகெடும்
தன்மையுடையவர்களா? (எனவே) புலம்பி உள்ளம் இன்னலுற்று
அயரல் – புலம்பி மனத்துன்பம் கொண்டு வருந்தாதே; அறத்தினை
பாவம் வெல்லாது என்றான் – அறத்தினைப் பாவம் (எக்காலத்திலும்)
வெற்றி கொள்ளாது என்றான் (வீடணன்).

————–

நாகபாச வரலாறு

8235. ‘யார், இது கொடுத்த தேவன்? என்னை ஈது?
இதனைத் தீர்க்கும்
காரணம் யாது? நின்னால் உணர்ந்தது கழறிக் காண்’ என்று,
ஆரியன் வினவ, அண்ணல் வீடணன், ‘அமல! சாலச்
சீரிது’ என்று, அதனை, உள்ள பரிசு எலாம், தெரியச்
சொன்னான்:-234

இது – இந்த நாகக் கணையை (இந்திரசித்தனுக்குக்); கொடுத்த
தேவன் யார் – கொடுத்த தேவன் யாவன்; என்னை ஈது – என்ன
தன்மை உடையது இது; இதனைத் தீர்க்கும் காரணம் யாது –
இதனைப் போக்கும் உபாயம் யாது? நின்னால் உணர்ந்து – நீ (இது
பற்றி) அறிந்துள்ளதை; கழறிக்காண் – சொல்லுவாயாக; என்று
ஆரியன் வினவ – என்று இராமன் கேட்க; அண்ணல் வீடணன் –
தலைமைப் பெருமை உள்ள வீடணன்; அமல – (இராமனைப் பார்த்து)
குற்றமற்றவனே; சாலச் சீரிது என்று – மிக நல்லது என்று சொல்லி;
அதனை உள்ள பரிசு எலாம் – அதற்கு உள்ள தன்மைகளைத்;
தெரியச் சொன்னான் – தெளிவாகச் சொன்னான்.

————–

8236. ‘ஆழி அம் செல்வ! பண்டு இவ் அகலிடம் அளித்த
அண்ணல்
வேள்வியில் படைத்தது; ஈசன் வேண்டினன் பெற்று,
வெற்றித்
தாழ்வு உறு சிந்தையோற்குத் தவத்தினால் அளித்தது;
ஆணை!
ஊழியின் நிமிர்ந்த காலத்து உருமினது; ஊற்றம் ஈதால்;–235-

ஆழி அம் செல்வ! – சக்கரப்படையை ஏந்திய அழகிய செல்வனே!
பண்டு இவ் அகலிடம் அளித்த அண்ணல் – முற்காலத்தில் இந்த
அகன்ற உலகத்தைப் படைத்த பிரமன்; வேள்வியில் படைத்தது –
வேள்வி செய்து உருவாக்கியது; ஈசன் வேண்டினன் பெற்று –
அவனிடம் இருந்து சிவபிரான் (அதை) வேண்டிப் பெற்று; வெற்றித்
தாழ்வு உறு சிந்தையோற்குத் – வெற்றியை உடைய தாழ்வில்லாத
மனத்தை உடைய இந்திரசித்தனுக்கு; தவத்தினால் அளித்தது –
(அவன் செய்த) தவத்துக்காகக் கொடுத்தது; ஆணை – (இது
முற்றிலும்) உண்மை; ஊழியின் நிமிர்ந்த காலத்து உருமினது – ஊழி
முடிவுக் காலத்து இடி போன்றது; ஊற்றம் ஈதால் – (இதன்) வலிமை இப்படி
உள்ளதாகும்.

————-

8237. ‘அன்னதன் ஆற்றல் அன்றே ஆயிரம் கண்ணினானைப்
பின்உற வயிரத் திண்தோள் பிணித்தது;-பெயர்த்து ஒன்று
எண்ணி
என், இனி?-அனுமன் தோளை இறுக்கியது; இதனால்
ஆண்டும்
பொன்னுலகு ஆளும் செல்வம் துறந்தது, புலவர் எல்லாம்.–236-

ஆயிரம் கண்ணினானை – ஆயிரம் கண்களை உடைய இந்திரன்;
பின்உற – புறமுதுகு காட்ட; வயிரத் திண்தோள் பிணித்தது –
வலிமை மிக்க (அவனது) தோள்களைக் கட்டியது; அன்னதன்
ஆற்றல் அன்றே – அந்த நாக பாசத்தினது ஆற்றல் அல்லவா?
அனுமன் தோளை இறுக்கியது – தேவியைத் தேடிச் சென்ற
அனுமனது தோள்களைக் கட்டியதும் (இந்நாகக் கணையல்லவா) புலவர்
எல்லாம் – தேவர்கள் எல்லாம்; யாண்டும் – எப்பொழுதும்;
பொன்னுலகு ஆளும் செல்வம் துறந்தது இதனால் – தேவ உலகத்தை
ஆளும் செல்வத்தை விட்டு நீங்கியதும் இந்த நாகக் கணையால்தான்;
பெயர்த்து ஒன்று எண்ணி என் இனி – வேறு ஒன்றை எண்ணி
என்ன பயன்இனி.

———-

8238. தான் விடின் விடும், இது ஒன்றே; சதுமுகன் முதல்வர் ஆய
வான் விடின், விடாது; மற்று, இம் மண்ணினை எண்ணி
என்னே!
ஊன் விட, உயிர் போய் நீங்க, நீங்கும்; வேறு உய்தி
இல்லை;
தேன் விடு துளவத் தாராய்! இது இதன் செய்கை’ என்றான்.–237-

தேன் விடு துளவத் தாராய் – தேன் பிலிற்றுகிற துளசி மாலையை
அணிந்தவனே; ஒன்றே இது – ஒப்பற்ற நாகக் கணையாகிய இது; தான்
விடின் விடும் – தானே விட்டால் தான் விடும்; சதுமுகன் முதல்வர்
ஆய வான்விடின் விடாது – பிரமனை முதல்வனாகக் கொண்ட தேவர்கள் விடுவித்தால் கூட விடாது; மற்று
இம்மண்ணினை எண்ணி என்னே – அதனால் இந்நில உலகத்தவர்
(விடுவிப்பர் என்று) எண்ண என்ன உள்ளது; ஊன்விட உயிர் போய்
நீங்க நீங்கும் – உடல் அழிந்து உயிர் போன உடன் தான் (விட்டு)
நீங்கும்; வேறு உய்தி இல்லை – வேறு பிழைக்கும் வழி இல்லை. இது
இதன் செய்கை என்றான் – இது இந்நாகக் கணையின் செயல் என்று
(வீடணன் இராமனிடம்) கூறினான்.

————-

8239. ‘ஈந்துள தேவர்மேலே எழுகெனோ? உலகம் யாவும்
தீந்து உக நூறி, யானும் தீர்கெனோ? இலங்கை சிந்தப்
பாய்ந்து, அவர் சுற்றம் முற்றும் படுப்பெனோ? இயன்ற
பண்போடு
ஏய்ந்தது பகர்தி’ என்றான், இமையவர் இடுக்கண் தீர்ப்பான்.–238-

இமையவர் இடுக்கண் தீர்ப்பான் – (ஐ இருதலையினோன் அனுசர்
ஆதிய மெய்வலி அரக்கரால்) தேவர்களுக்கு ஏற்பட்ட துன்பத்தைத்
தீர்ப்பதற்காக அவதாரம் செய்த இராமன் (வீடணனைப் பார்த்து)
ஈந்துள தேவர்மேலே எழுகெனோ – (இந்நாக பாசத்தை
இந்திரசித்தனுக்குக்) கொடுத்த தேவர்களின் மீது போருக்கு
எழுவேனோ? உலகம் யாவும் தீந்து உக நூறி யானும் தீர்கெனோ
– உலகம் முழுவதும் சாம்பலாய்ப் போகும்படி அழித்து விட்டு நானும்
அழிவேனோ? இலங்கை சிந்தப் பாய்ந்து – இலங்கை நகரம் அழிந்து
கெட (அதன் மீது) பாய்ந்து; அவர் சுற்றும் முற்றும் படுப்பெனோ –
அந்த அரக்கர்களுடைய சுற்றத்தோர் அனைவரையும் கொல்வேனோ?
பண்போடு இயன்ற ஏயந்தது பகர்தி என்றான் – பண்போடு ஏற்றுப்
பொருத்த மானதைக் கூறுவாயாக என்றான் இராமன்.

——————–

8240. ‘வரம் கொடுத்து இனைய பாசம் வழங்கினான் தானே
நேர் வந்து
இரங்கிடத் தக்கது உண்டேல், இகழ்கிலென்; இல்லை
என்னின்
உரம் கெடுத்து, உலகம் மூன்றும், ஒருவன் ஓர் அம்பின்
சுட்ட
புரங்களின் தீய்த்து, காண்பென் பொடி, ஒரு கடிகைப்
போழ்தின்.–239-

வரம் கொடுத்து இனைய பாசம் வழங்கினான் – இந்திர
சித்தனுக்கு வரத்தைக் கொடுத்து இத்தகைய நாகக் கணையையும்
கொடுத்தவனாகிய (சிவன்); தானே நேர் வந்து – தானே நேரில் வந்து;
இரங்கிடத் தக்கது உண்டேல் – மனம் இரங்கி அருள் செய்வது
உண்டானால்; இகழ்கிலென் – இகழாமல் விரும்பி ஏற்றுக்
கொள்ளுவேன்; இல்லை என்னின் – அவ்வாறு இல்லாமல் போனால்;
உலக மூன்றும் உரம் கெடுத்து – உலகம் மூன்றையும் வலிமை
கெடுத்து; ஒருவன் ஓர் அம்பின் சுட்ட புரங்களின் தீய்த்து –
சிவபிரான் ஒப்பற்ற ஓர் அம்பினால் சுட்டு அழித்த முப்புரங்களைப்
போல் தீய்த்து; ஒரு கடிகைப் போழ்தின் பொடி காண்பென் – ஒரு
நாழிகைப் பொழுதில் நீறாக்கிக் காண்பேன் (என்று இராமன்
கூறினான்)

————

8241. ‘எம்பியே இறக்கும் என்னில், எனக்கு இனி,
இலங்கை வேந்தன்
தம்பியே! புகழ்தான் என்னை? பழி என்னை?
அறம்தான் என்னை?
நம்பியே என்னைச் சேர்ந்த நண்பரின் நல்ல ஆமே,
உம்பரும் உலகத்து உள்ள உயிர்களும், உதவி பார்த்தால்?’–240-

இலங்கை வேந்தன் தம்பியே – இலங்கை வேந்தனாகிய
இராவணனது தம்பியாக வீடணனே; எம்பியே இறக்கும் என்னில் –
எனது தம்பியாகிய இலக்குவனே இறந்து விடுவான் என்றால்;
புகழ்தான் என்னை – புகழுடைய (செயல் இது என்று எண்ண) என்ன
இருக்கிறது? பழி என்னை – பழி உடைய செயல் (என்று நாணப்பட)
என்ன இருக்கிறது; அறம் தான் என்னை – (இது) தருமத்தோடு
இயைந்தது (என்று எண்ணிப் பார்க்க என்ன உள்ளது); உதவி
பார்த்தால் – (இவர்கள் எனக்குச் செய்துள்ள) உதவியை (எண்ணிப்)
பார்த்தால்; உம்பரும் உலகத்து உள்ள உயிர்களும் – தேவர்களும்
உலகத்தில் உள்ள உயிர்களும்; என்னை நம்பியே சேர்ந்த நண்பரின்
நல்ல ஆமே – என்னை நம்பிச் சேர்ந்து எனக்கு உதவிய) நண்பர்களைக் காட்டிலும்; (அவையெல்லாம்)
நல்லன (எனச் சொல்ல) ஆகுமோ? என்றபடி.

————-

8242. என்று கொண்டு இயம்பி, ‘ஈண்டு இங்கு ஒருவன்
ஓர் இடுக்கண் செய்ய,
வென்று, இவண் உலகை மாய்த்தல்விதி அன்றால்’ என்று
விம்மி,
நின்று நின்று, உன்னி உன்னி, நெடிது உயிர்த்து
அலக்கணுற்றான்,-
தன் துணைத் தம்பிதன்மேல், துணைவர்மேல்,
தாழ்ந்தஅன்பான்.–241-

தன் துணைத் தம்பி தன் மேல் – தனக்குத் துணைத் தம்பியாகிய
இலக்குவன் தன் மேலும்; துணைவர் மேல் தாழ்ந்த அன்பான் –
நண்பர்களின் மீதும் மிக்க அன்பு உடையவனாகிய இராமன்; ஈண்டு
இங்கு ஒருவன் ஓர் இடுக்கண் செய்ய – இப்பொழுது இங்கு ஒருவன்
ஒப்பற்ற துன்பத்தை (எனக்குச்) செய்ய (அதனைக் காரணமாகக்
கொண்டு); வென்று இவன் உலகை மாய்த்தல் விதி அன்றால் –
வென்று இந்த உலகத்தை அழித்தல் முறை அன்று; என்று கொண்டு
இயம்பி – என்று (மனத்தில்) கொண்டு (வாயால்) சொல்லி; என்று
விம்மி – (இது எவ்வாறு ஆகும்) என்று விம்மி; நின்று நின்று உன்னி
உன்னி – நின்று நின்று நினைத்து நினைத்து; நெடிது உயிர்த்து
அலக்கணுற்றான் – நீண்ட பெருமூச்சு விட்டுத் துன்பம் கொண்டான்.

———-

8243. மீட்டும் வந்து, இளைய வீரன் வெற்பு அன்ன
விசயத் தோளைப்
பூட்டுறு பாசம்தன்னைப் பல் முறை புரிந்து நோக்கி,
‘வீட்டியதுஎன்னின், பின்னை வீவென்’ என்று எண்ணும்-
வேதத்
தோட்டியின் தொடக்கில் நிற்கும் துணைக் கைம்மால் யானை
அன்னான்.-242-

வேதத் தோட்டியின் தொடக்கில் நிற்கும் – வேதமாகிய
அங்குசத்தின் கட்டுப்பாட்டில் நிற்கிற; துணைக் கைம்மால் யானை
அன்னான் – இரண்டு கைகளை உடைய மயக்கம் கொண்ட—

————

கலங்கி; இதுதீர – (இராமன் கொண்ட) இத்துயரம் நீங்குவதற்காக;
மெல்ல இருளூடு வந்து தெரிவான் – மெதுவாக இருட்டில் வந்து
தோன்றி விளங்கினான். (தொடர்ச்சி அடுத்த பாடலில்)

————-

8245. அசையாத சிந்தை அரவால் அனுங்க,
அழியாத உள்ளம் அழிவான்,-
இசையா இலங்கை அரசோடும் அண்ணல்
அருள் இன்மை கண்டு நயவான்,-
விசையால் அனுங்க வட மேரு, வையம்
ஒளியால் விளங்க, இமையாத்
திசை யானை கண்கள் முகிழா ஒடுங்க,
நிறை கால் வழங்கு சிறையான்,—244-

அசையாத சிந்தை – (இராமனது) எதற்கும் கலங்காத மனம்;
அரவால் அனுங்க – (தம்பியையும் துணைவரையும் கட்டித்
துன்புறுத்துகிற) நாகக் கணையைக் கண்டு கலங்கியதால்; அழியாத
உள்ளம் அழிவான் – (அதைக் கண்டு தன்) வருந்தாத உள்ளம்
வருந்துபவனாயும்; இசையா இலங்கை அரசோடும் – (நல்வழியில்)
பொருந்தாத இலங்கை அரசனாகிய இராவணனோடு; அண்ணல் அருள்
இன்மை கண்டு நயவான் – (பிற உலக உயிர்கள் இடத்திலும்)
இராமனது அருள் இல்லாத தன்மையைக் கண்டு விரும்பாதவனாயும்;
வடமேரு விசையால் அனுங்க – தனது வேகத்தினால் வடக்கின் கண்
உள்ள மேரு மலை நிலைகுலையவும்; ஒளியால் வையம் விளங்க –
(தனது) மேனி ஒளியினால் உலகங்கள் எல்லாம் விளங்கித்
தோன்றவும்; இமையாத் திசை யானை – கண்ணிமைத்தல் இல்லாத
திசை யானைகள்; கண்கள் முகிழா ஒடுங்க – கண்களை
ஒடுங்கியிருக்கவும்; நிறைகால் வழங்கு சிறையான் – மிக்க காற்றை
வீசுகிற சிறகுகளை உடையவனாயும்; (தொடர்ச்சி அடுத்த பாடலில்)

————

8246. காதங்கள் கோடி கடை சென்று காணும்
நயனங்கள் வாரி கலுழ,
கேதங்கள் கூர, அயர்கின்ற வள்ளல்
திரு மேனி கண்டு, கிளர்வான்,-
சீதம் கொள் வேலை அலை சிந்த, ஞாலம்
இருள் சிந்த, வந்த சிறையான்,
வேதங்கள் பாட; உலகங்கள் யாவும்
வினை சிந்த; நாகம் மெலிய:–245-

கேதங்கள் கூர – துன்பங்கள் மிக; அயர்கின்ற வள்ளல் –
மனச்சோர்வு அடைகின்ற வள்ளலாகிய இராமனது; திருமேனி கண்டு –
திருமேனியின் தன்மையைப் பார்த்து; கோடி காதங்கள் கடைசென்று
காணும் நயனங்கள் – கோடிக்காத தூர அளவு உள்ளவற்றைப்
பார்வையால் சென்று காணும் ஆற்றல் கொண்ட கண்களில் இருந்து;
கிளர்வான் – நாகக் கணையை ஒழிக்கும் ஊக்கம் மிக்கவனும்; சீதம்
கொள்வேலை அலைசிந்த – குளிர்ச்சி மிக்க கடல் அலைகளைச்
சிந்தவும்; ஞாலம் இருள் சிந்த – உலகங்களில் உள்ள இருள் சிதறி
விலகிப் போகவும்; வந்த சிறையான் – (இருசிறைகளையும்
அடித்துக்கொண்டு) வந்த சிறகுகளால்; வேதங்கள் பாட – வேத
மந்திரம் போல் ஒலி உண்டாகவும்; உலகங்கள் யாவும் வினை
சிந்த – உலகங்கள் எல்லாவற்றிலும் பாவங்கள் நீங்கவும்; நாகம்
மெலிய – பாம்புகள் தளர்ச்சி அடையவும் (தொடர்ச்சி அடுத்த
பாடலில்)

————

8247. அல்லைச் சுருட்டி, வெயிலைப் பரப்பி,
அகல் ஆசை எங்கும் அழியா
வில்லைச் செலுத்தி, நிலவைத் திரட்டி,
விரிகின்ற சோதி மிளிர;
எல்லைக் குயிற்றி எரிகின்ற மோலி,
இடைநின்ற மேரு எனும் அத்
தொல்லைப் பொருப்பின் மிசையே விளங்கு
சுடரோனின் மும்மை சுடர;–246-

அகல் ஆசை எங்கும் – அகலமாகப் பரந்துள்ள திசைகளில்
எல்லாம்; அழியா வில்லைச் செலுத்தி – அழியாத ஒளியைப் பரப்பி;
அல்லைச் சுருட்டி – (அதனால் அங்கு உள்ள) இருளைச் சுருங்கச்
செய்து; வெயிலைப் பரப்பி – (சூரியனது) ஒளியைப் பரவும் படியாகச்
செய்து (தன் திருமேனியின் செந்நிற ஒளி விளங்கவும்); விரிகின்ற
சோதி – (தன் கருத்து வெண்மையில் இருந்து) விரிந்து வெளிப்படுகிற
ஒளி; நிலவைத் திரட்டி – நிலவு ஒளியை ஒன்றாக்கி; எல்லைக்
குயிற்றி – பகலைத் தோற்றுவித்து; மிளிர – விளங்கவும்; எரிகின்ற
மோலி – (தலையில்) ஒளி வெளிப்படுத்துகிற முடி; இடை நின்ற மேரு
எனும் – பூமிக்கு இடையில் உள்ள மேருமலை என்று
கூறப்படுகிற; அத்தொல்லைப் பொருப்பின் – அந்தப்
பழமையான மலையின்; மிசையே விளங்கு சுடரோனின் – மேலே
விளங்குகிற கதிரவனின் ஒளியைக் காட்டிலும்; மும்மை சுடர –
மும்மடங்கு மிகுந்து ஒளி வீச.

————-

8248. நான் பால் விளங்கு மணி கோடியோடு,
நளிர் போது, செம் பொன், முதலாத்
தன்பால் இயைந்த நிழல் கொண்டு அமைந்த
தழுவாது வந்து தழுவ;
மின்பால் இயன்றது ஒரு குன்றம் வானின்
மிளிர்கின்றது என்ன, வெயிலோன்
தென்பால் எழுந்து, வடபால் நிமிர்ந்து,
வருகின்ற செய்கை தெரிய;–247-

நன்பால் விளங்கு – (தன்) அழகிய (கழுத்தின்) இடத்தில்
விளங்குகின்ற; கோடி மணியோடு – கோடிக்கணக்கான மணி பதித்த
மாலைகளோடு; நளிர் போது – குளிர்ச்சி பொருந்திய பூ மாலைகளும்;
செம்பொன் முதலாத் – சிவந்த பொன்னாலான மாலைகளும்
முதலானவையாக; தன்பால் இயைந்த – தன்னிடத்தில் பொருந்திய;
நிழல் கொண்டு அமைந்த – ஒளி கொண்டு பொருந்திய அணிகலன்கள்
எல்லாம்; தழுவாது வந்து தழுவ – (சிறகடித்து விரைவாகப் பறந்து
வருவதால் மார்பில்) படாதும் பட்டும் பொருந்தி இருக்கவும்; மின்பால்
இயன்றது ஒரு குன்றம் – மின்னலால் உண்டாக்கப்பட்ட ஒரு மலை;
வானின் மிளிர்கின்றது என்ன – வானத்தில் தோன்றி விளங்குகின்றது
என்று சொல்லும்படியாக; வெயிலோன் – கதிரவன்; தென்பால் எழுந்துதெற்குத் திசையில் உதித்து; வடபால்நிமிர்ந்து – வடக்கே நிமிர்ந்து
உயர்ந்து; வருகின்ற செய்கை தெரிய – வருகின்ற தன்மை விளங்கவும்
(தொடர்ச்சி அடுத்த பாடலில்)

————

8249. பல் நாகர் சென்னி மணி கோடி கோடி
பல கொண்டு செய்த வகையால்
மின்னால் இயன்றது எனலாய் விளங்கு
மிளிர் பூண் வயங்க; வெயில் கால்
பொன்னால் இயன்ற நகை ஓடை பொங்க;
வன மாலை மார்பு புரள;
தொல் நாள் பிரிந்த துயர் தீர, அண்ணல்
திரு மேனி கண்டு, தொழுவான்,—248-

பல்நாகர் சென்னி கோடி கோடி மணி – பலவாய நாகங்களின்
தலையில் உள்ள கோடிக்கணக்கான மாணிக்கங்கள்; பல கொண்டு
செய்த வகையால் – பலவற்றைக் கொண்டு செய்துள்ள தன்மையால்;
மின்னால் இயன்றது எனலாய் விளங்கு – மின்னலினால்
செய்யப்பட்டுள்ளது என்று கூறும்படி விளங்குகின்ற; மிளிர் பூண்
வயங்க – ஒளி வெளியிடும் அணிகலன்கள் விளங்கவும்; வெயில்கால் –
(செவ்விய) ஒளியை வெளிப்படுத்துகிற; பொன்னால் இயன்ற –
பொன்னால் ஆகிய; நகை ஓடை பொங்க – பொலிவு உடைய
நெற்றிப்பட்டம் ஒளி வெளியிடவும்; வனமாலை மார்பு புரள –
(பல்வகை இலைகளால் தொடுக்கப்பட்ட) வனமாலை மார்பில்
அசையவும்; தொல் நாள் பிரிந்த துயர்தீர – நீண்டநாள் பிரிந்து
இருந்த துன்பம் நீங்கவும்; அண்ணல் – தலைவன் ஆகிய இராமனது;
திருமேனி கண்டு தொழுவான் – திருமேனியைக் கண்டு
தொழுபவனாயினன்.

—————-

8250. முடிமேல் நிமிர்ந்து முகிழ் ஏறு கையன்,
முகில்மேல் நிமிர்ந்து ஒளியான்,
அடிமேல் விழுந்து பணியாமல் நின்ற
நிலை உன்னி உன்னி அழிவான்,
கொடிமேல் இருந்து, இவ் உலகு ஏழொடு ஏழு
தொழ நின்ற கோளும் இலனாய்,
படிமேல் எழுந்து வருவான், விரைந்து,
பல கால் நினைந்து, பணிவான்,- –249

முடி மேல் நிமிர்ந்து முகிழ் ஏறுகையன் – தலையின் மீது
உயர்ந்து குவிதல் பொருந்திய கைகளை உடையவனாய்; முகில் மேல்
நிமிர்ந்த ஒளியான் – கருமேகத்தினும் மிக்க நீல நிறம் உடைய
(இராமனது); அடிமேல் விழுந்து பணியாமல் – திருவடிகளில்
விழுந்து (வெகுநாட்களாக) விழுந்து வணங்காமல்; நின்ற நிலை
உன்னி உன்னி அழிவான் – (அந்த இராமன் துன்ப வடிவமாய்)
நின்ற நிலையை எண்ணி எண்ணி வருந்துபவனாய்; கொடி மேல்
இருந்து – (அவ்வவதார மூலத்தின்) கொடியின் மீது இருந்து;
இவ் உலகு ஏழொடு ஏழு தொழ நின்ற – இந்தப் பதினான்கு
உலகங்களும் தன்னை வணங்கும் படி நின்ற; கோளும்
இலனாய் – பெருமையும் இல்லாதவனாய்; படி மேல்
எழுந்து வருவான் – பூமியின் மேல் எழுந்து வருபவனாகிய
கருடன்; விரைந்து – வேகமாக (இராமன் இருக்கும் இடம்) வந்து;
நினைந்து – (அவனது திருக்கல்யாண குணங்களை) நினைத்து;
பலகால் பணிவான் – பலமுறை வணங்கி (அடுத்த பாடலில் முடியும்.)

————

கருடன் துதி

8251. ‘வந்தாய் மறைந்து; பிரிவால் வருந்தும்,
மலர்மேல் அயன்தன் முதலோர்-
தம் தாதை தாதை இறைவா! பிறந்து
விளையாடுகின்ற தனியோய்!
சிந்தாகுலங்கள் களைவாய்! தளர்ந்து
துயர் கூரல் என்ன செயலோ?
எந்தாய்! வருந்தல்; உடையாய்! வருந்தல்’
என, இன்னி பன்னி மொழிவான்:–250-

மறைந்து வந்தாய் – (நீ நின் திவ்யமங்கள சொரூபத்தை)
மறைத்துக்கொண்டு; (சங்கற்ப மாத்திரையாய் மானிடச் சட்டை தாங்கி)
வந்தாய்; பிரிவால் வருந்து – உன் பிரிவினால் வருந்துகிற; மலர் மேல்
அயன் தன் முதலோர் தம் – மலரின் மேல் தாங்கி உள்ள அயன்
முதலியோருக்குக் காரணன் ஆன; தாதை தாதை – பிதா மகனே;
இறைவா – எல்லாப் பொருள்களிலும் அந்தர்யாமியாய்த் தங்கி
உள்ளவனே; பிறந்து விளையாடுகின்ற தனியோய் – (வினை வயத்தால்
அன்றிச் சங்கல்பத்தால்) பிறந்து (மனித உருவத்துக்கு ஏற்ப நடித்து
விளையாடுகின்ற ஒப்பற்ற தலைவனை! சிந்தா குலங்கள் களைவாய் – சரணாகதி அடைந்தவர்களின் மனத்
துன்பங்களைப் போக்குபவனே; தளர்ந்து துயர் கூரல் என்ன
செயலோ – நீயே மனம் தளர்ந்து துன்பம் மிகப்படுதல் என்ன
செயலோ? எந்தாய் வருந்தல் – எனது தலைவனே வருந்தாதே;
உடையாய் வருந்தல் – எப்பொருளையும் சரீரமாக உடையவனே
வருந்தாதே; என இன்ன – என்று இத்தன்மையான சொற்கள் பலவற்றை;
பன்னி மொழிவான் – திரும்பத் திரும்பக் கூறுபவனாயினான்,

கருடன் உண்மையை இராமனுக்குத் தெரிவித்துத் தேற்றுவது போல்
பாடல்கள் அமைந்துள்ள தன்மையை உணர்ந்து கொள்க. இறைவன்
மானிட உருத்தாங்கி வந்து மானுட இன்பதுன்பங்களை அனுபவித்து
மானிட வெற்றியின் கொடுமுடியாய் உயர்வதை விளக்க வந்த கம்பர்
இவ்வாறு தானே பாடமுடியும்.

————

8252. ‘தேவாதிதேவர் பலராலும் முந்து
திருநாமம் ஓது செயலோய்
மூவாது எந் நாளும் உலகு ஏழொடு ஏழும்
அரசாளும் மேன்மை முதல்வா!
மேவாத இன்பம் அவை மேவி, மேவ
நெடு வீடு காட்டு அம் முடியாய்!
ஆவாய்! வருந்தி அழிவாய்கொல்!-ஆர், இவ்
அதிரேக மாயை அறிவார்?–251-

தேவாதி தேவர் – தேவர், பிரமன், உருத்திரன் முதலிய தலைமைத்
தேவர்கள் போன்ற பலரும்; முந்து – ஒருவரை ஒருவர்
முந்திக்கொண்டு; திருநாமம் ஓது செயலோய் – நின் திருநாமத்தைச்
சொல்லித் துதிக்கும் படியாக உள்ளவனே! மூவாது – மூப்படையாது;
(இளமையுடன் இருந்து) எந்நாளும் – எப்பொழுதும்; உலகு ஏழொடு
ஏழும் – பதினான்கு உலகங்களையும்; அரசாளும் மேன்மை முதல்வா
– (பாதுகாத்து) அரசு செலுத்துகிற மேன்மை பொருந்திய தலைவனே;
மேவாத இன்பம் அவை மேவி – (உன்னைச் சரண் புக்கவர்கள்)
பிறரால் அடையமுடியாத பேரின்பங்களை அடைந்து; மேவ நெடு வீடு
காட்டு அம் முடியாய் – (இறுதியில்) (உன்னை) அடைய முக்தி
உலகத்தைக் காட்டும் (அழகிய முதல் தலைவனாய்); ஆவாய் –
ஆனவனே; வருந்தி அழிவாய் கொல் – (இத்தகைய நீ) வருத்தம் கொண்டு அழிவாய் போலும் இவ் அதிரேக மாயை – இந்த
(உன்னுடைய) மிகுதியான மாயச்செயலை; அறிவார் யார் –
அறியத்தக்கவர் யார்?

———–

8253. ‘எழுவாய், எவர்க்கும் முதல் ஆகி, ஈறொடு
இடை ஆகி; எங்கும் உளையாய்,
வழுவாது எவர்க்கும் வரம் ஈய வல்லை;
அவரால் வரங்கள் பெறுவாய்;
தொழுவாய், உணர்ச்சி தொடராத தன்மை
உருவாய் மறைந்து, துயரால்
அழுவாய் ஒருத்தன் உளைபோலும்!-ஆர், இவ்
அதிரேக மாயை அறிவார்?–252-

எவர்க்கும் – எல்லா உலகங்களுக்கும்; முதல் ஆகி – படைக்கும்
முதல் காரணனாகியும்; ஈறொடு – அழிக்கும் காரணன் ஆகியும்; இடை
ஆகி – காக்கும் காரணன் ஆகியும்; எழுவாய் – (சங்கர்ஷண
பிரத்தியும்ன, அநிருத்தர்களாய்த்) திருப்பாற்கடலில் தோன்றுவாய்;
எங்கும் உளையாய் – எல்லாப் பொருள்களிலும் அந்தர்யாமியாய்
வியாபித்து நின்று; வழுவாது – தவறாமல்; எவர்க்கும் – உபாசிக்கும்
எல்லோருக்கும்; வரம் ஈயவல்லை – (வேண்டிய) வரங்களைக்
கொடுக்கும் வல்லமை உடையவனே; உணர்ச்சி தொடராத தன்மை
உருவாய் மறைந்து – இத்தகு (ஆற்றலை உடைய நீ) முற்றுணர்வு
உண்டாகாத தன்மை உடைய மனித உருவில் மறைந்து நின்று;
தொழுவாய் – (உன்னைத் தொழும் தேவர்களைத்) தொழுது நிற்பாய்;
அவரால் வரங்கள் பெறுவாய் – அத்தேவர்களால் (வேண்டிய)
வரங்களைப் பெற்று நிற்பாய்; துயரால் அழுவாய் – துன்பத்தால்
(வருந்தி) அழுவாய்; ஒருத்தன் உளை போலும் – (இத்தகைய
வியத்தகு நிலை உடைய) நீ ஒருவன் இருக்கின்றாய் போலும்; இவ்
அதிரேக மாயை – இந்த (உன்னுடைய) மிகுதியான மாயச்
செய்கையை; அறிவார் யார் – அறிபவர் யாவர்.

———–

8254. ‘உன் ஒக்க வைத்த இருவர்க்கும் ஒத்தி;
ஒருவர்க்கும் உண்மை உரையாய்;
முன் ஒக்க நிற்றி; உலகு ஒக்க ஒத்தி;
முடிவு ஒக்கின், என்றும் முடியாய்;
“என் ஒக்கும், இன்ன செயலோ இது?” என்னில்,
இருள் ஒக்கும் என்று விடியாய்;
அந் நொப்பமேகொல்? பிறிதேகொல்?-ஆர், இவ்
அதிரேக மாயை அறிவார்?–253-

உன் ஒக்க வைத்த இருவர்க்கும் ஒத்தி – (காத்தல் தொழிலைச்
செய்யும்) உன்னுடன் ஒருங்கு வைத்துப் பேசப்படுகிற (அழித்தல்
படைத்தல் என்ற தொழில்களைச் செய்கிற உருத்திரன் பிரமன்)
ஆகிய இருமூர்த்திகளுடன் ஒத்து (அரி அரன் அயன் என
மூவராய்ப்) பொருந்தி உள்ளாய்; ஒருவர்க்கும் உண்மை உரையாய் –
(ஆனால் அவர்கள் ஒருவருக்கும்) உன் உண்மைத் தன்மையை
உரைக்கின்றாயல்லை; முன் ஒக்க நிற்றி – (அவர்களில் நீயே) முதல்
மூர்த்தியாய் நிற்கிறாய்; உலகு ஒக்க ஒத்தி – உலகில் உள்ள
அனைத்துப் பொருள்களிலும் அந்தர்யாமியாய் ஒத்து நிற்கின்றாய்;
முடிவு ஒக்கின் – (இப்பிரபஞ்சத்தை அழிக்க நீ திருவுள்ளம்
கொண்டால் அவற்றிற்கு) அவ்வழிவு சங்கற்ப மாத்திரையானே
பொருந்தும்; என்றும் முடியாய் – (நீ) எப்பொழுதும் அழியாமல்
இருப்பாய்; இன்ன செயலோ இது என் ஒக்கும் என்னின் – (உனது)
இத்தன்மையான இச்செயலாகிய இது எத்தன்மைத்து என்று ஒருவர்
எண்ணிப் பார்த்தால்; இருள் ஒக்கும் என்று விடியாய் -(அவ்வாறு எண்ணுபவர் மனம்) இருள் உடையது என்று
(அவர்களுக்கு) விளக்கம் தராமல் நிற்பாய்; அந்நொப்பமே கொல் –
(இவ்வாறு உன் செய்கை அறியப்படாமல் இருப்பதற்குக் காரணம்)
அந்தப் புத்தியின் சிறுமையோ? பிறிதே கொல் – (அல்லது) வேறு
ஏதாகிலும் உளதோ? இவ் அதிரேக மாயை – இந்த மிக்க மாயச்
செயலை; அறிவார் ஆர் – அறிபவர் யாவர்?

———-

8255. ‘வாணாள் அளித்தி, முடியாமல்; நீதி
வழுவாமல் நிற்றி;-மறையோய்!
பேணாய், உனக்கு ஓர் பொருள் வேண்டும் என்று;
பெறுவான் அருத்தி பிழையாய்;
ஊண் ஆய், உயிர்க்கும் உயிர் ஆகி நிற்றி;
உணர்வு ஆய பெண்ணின் உரு ஆய்,
ஆண் ஆகி, மற்றும் அலி ஆதி!-ஆர், இவ்
அதிரேக மாயை அறிவார்?–254-

மறையோய் – வேத வடிவானவனே; வாணாள் அளித்தி – உலகில்
உள்ள உயிர்களுக்கு எல்லாம் (வினைக்குத்தக) வாழும் நாளைக்
கொடுக்கின்றாய்; முடியாமல் – எக்காலத்திலும் அழியாமல்; நீதி
வழுவாமல் நிற்றி – அறநெறி தவறாமல் நிற்கிறாய்; உனக்கு ஒரு
பொருள் வேண்டும் என்று பேணாய் – (குறைவிலா நிறைவாக நீ
இருப்பதால்) உனக்கு (வேறு ஒரு) பொருள் வேண்டும் என்று (நீ)
விரும்புவதில்லை; பெறுவான் அருத்தி பிழையாய் – (உன்னடியார்)
பெறுவதற்கு விரும்பும் பொருள்களைத் தவறாமல் கொடுப்பாய்; ஊண்
ஆய் – நுகர் பொருளாகவும்; உயிர்க்கு உயிர் ஆகி – உயிருக்கு
உயிராகவும்; உணர்வு ஆய – ஐம்புல உணர்வுகளுக்கும் அரிய ஆய;
பெண்ணின் உரு ஆய் – பெண்ணின் உருவாகியும்; ஆண் ஆகி –
ஆணின் வடிவம் ஆகியும்; மற்றும் – அவையல்லாமல்; அலி ஆதி –
அலியின் வடிவமாகியும்; நிற்றி – நிற்கின்றாய்; இவ் அதிரேகமாயை –
இந்த மிக்க மாயச் செயலை; அறிவார் யார் – அறிபவர் யாவர்?

————-

8256. ‘”தான் அந்தம் இல்லை; பல” என்னும், ஒன்று;
“தனி” என்னும், ஒன்று; “தவிரா
ஞானம் தொடர்ந்த சுடர்” என்னும், ஒன்று;
“நயனம் தொடர்ந்த ஒளியால்,
வானம் தொடர்ந்த பதம்” என்னும், ஒன்று; மறை
நாலும் அந்தம் அறியாது,
“ஆனந்தம்” என்னும்; “அயல்” என்னும்!-ஆர், இவ்
அதிரேக மாயை அறிவார்?–255-

மறைநாலும் – வேதங்கள் நான்கும்; அந்தம் அறியாது – உண்மை
முடிவு தெரியாத காரணத்தால்; ஒன்று – (அவற்றில்) ஒரு மறை; தான்
அந்தம் இல்லை பல என்னும் – உன் சொரூபம் எல்லையில்லாத பல
படித்தானது என்று கூறும்; ஒன்று – பிறிதொரு மறை; தனி என்னும் –
ஒரே மூர்த்தம் என்று கூறும்; ஒன்று – பிறிதொரு மறை; தவிரா
ஞானம் தொடர்ந்த சுடர் என்னும் – நீங்காத ஞானம் பொருந்திய
ஒளி என்று கூறும்; ஒன்று – மற்றொரு மறை; நயனம் தொடர்ந்த
ஒளியால் வானம் தொடர்ந்த பதம் என்னும் – புறக்கண்ணால் காணக்
கூடிய ஒளி வடிவாகி ஆகாயத்தை இடமாகக் கொண்டு பொருந்தி
உள்ளது என்று கூறும்; மறை நாலும் – இவ்வாறு வேதங்கள்
நான்கும்; அந்தம் அறியாது – உண்மைத் தன்மையை அறிய
முடியாமல்; ஆனந்தம் என்னும் – பேரானந்த மயமானது என்னும்;
அயல் என்னும் – வாக்கு காயங்களுக்குக் கோசரமாகாதது என்றும்
கூறித் தடுமாறும் ஆகவே; இவ் அதிரேகமாயை – இந்த மிக்கமாயச்
செயலை; ஆர் அறிவார் – யார் அறிவார்கள்.

————

8257. ‘மீளாத வேதம், முடிவின்கண், நின்னை
மெய்யாக மெய்யின் நினையும்;
“கேளாத” என்று “பிற” என்று, சொன்ன
கெடுவார்கள் சொன்ன கடவான்,
மாளாத நீதி இகழாமை நின்கண்
அபிமானம் இல்லை, வறியோர்;
ஆளாயும் வாழ்தி; அரசாள்தி!-ஆர், இவ்
அதிரேக மாயை அறிவார்?–256-

மீளாத வேதம் – (மெய்யில் இருந்து விலகி) மீளுதல் இல்லாத
வேதங்களின்; முடிவின் கண் – முடிபொருளாய் உள்ள (வேத
சிகையாய் விளங்கும்) உபநிடதங்கள்; நின்னை – உன்னை (பற்றிக்
கூறும் இடத்து); மெய்யாக – உண்மைப் பொருளாகக் கொண்டு (உள்
பொருள் என்று); மெய்யின் நினையும் – உண்மை மெய்யுணர்வாகிய
பதிஞானத்தால் ஆய்ந்து கூறும்; கேளாத என்று – (அவ்வாறு
இருக்கும் போது) (நான் கடவுளைக் கண்ணால் கண்டுள்ளேன் என்று
ஒருவர் கூறும்கூற்றுக்) கேள்விப் படாத (கூற்று) என்றும்; பிற என்று
சொன்ன – எனவே இக்கூற்று வேறு காரணத்தால் கூறப்பட்டது
(கடவுள் உண்மையில் இல்லை) என்றும் கூறுகிற கூற்று; கெடுவார்கள்
சொன்ன – அறிவில்லாத நாத்திகர்கள் சொன்னதாகும்; கடவார் –
தாங்கள் கூறிய கூற்றினைக் கடவாது அவர்கள்; மாளாத நீதி
இகழாமை நின்கண் அபிமானம் இல்லை – (ஒரு பொழுதும்)
பழுதுபடாத (சாத்திர) நீதி முறை பிறழாமலும், உன்னிடம் பக்தி
செலுத்தாமலும் கெட்டு அழிவார்கள்; வறியோர் ஆளாயும் வாழ்தி –
(ஆனால் நீயோ) பத்துடை அடியவர்க்கு எளிய ஏவல் ஆளாகவும்
வாழ்கிறாய்; அரசாள்தி – (அனைத்து உலகங்களையும்) அரசாளலும்
செய்கிறாய்; இவ் அதிரேக மாயை – இந்த மிகுதியான மாயச்
செயலை; ஆர் அறிவார் – யார் அறிவார்கள்.–

பத்துடை அடியவர்க்கு
எளியனாய்ப் பிறர்க்கு அரிய வித்தகனாய் விளங்கும் தன்மையின்
விளக்கம் இங்குக் கூறப்படுகிறது.

———–

8258. ‘சொல் ஒன்று உரைத்தி; பொருள் ஆதி; தூய
மறையும் துறந்து, திரிவாய்;
வில் ஒன்று எடுத்தி; சரம் ஒன்று எடுத்தி;
மிளிர் சங்கம் அங்கை உடையாய்;
“கொல்” என்று உரைத்தி; கொலையுண்டு நிற்றி;
கொடியாய்! உன் மாயை அறியேன்;
அல் என்று, நிற்றி; பகல் ஆதி!-ஆர், இவ்
அதிரேக மாயை அறிவார்?–257-

ஒன்று சொல் உரைத்தி – ஒப்பற்ற நாதவடிவினன் என்று
சொல்லப்படுகிறாய்; பொருள் ஆதி – சொற்களின் பொருளும்
ஆகிறாய்; தூய மறையும் துறந்து திரிவாய் – தூய்மையான
வேதங்களையும் கடந்து விளங்குகிறாய்; வில் ஒன்று எடுத்தி சரம்
ஒன்று எடுத்தி – (அறம் தலை நிறுத்துதற்காகக் கையில்) வில் ஒன்றை
ஏந்தியுள்ளாய்; (அதில் வைத்துத் தொடுப்பதற்காக) ஒப்பற்ற
அம்புகளையும் கைக்கொண்டு இருக்கிறாய்; அங்கை மிளிர் சங்கம்
உடையாய் – அழகிய கைகளில் ஒளி பொருந்திய (பாஞ்ச சன்னியம்
என்ற) சங்கினைக் கையில் ஏந்தியுள்ளாய்; கொல் என்று உரைத்தி –
(தீயவர்க்குப் பகைவனாய் இருந்து) கொல்லுக என்று சொல்லுகிறாய்;
கொலையுண்டு நிற்றி – (நீயே பகைவராய் இருந்து) கொல்லப்பட்டுக்
கிடக்கிறாய்; கொடியாய் – (இவ்வாறு) முரண் பல கொண்டவனே;
உன்மாயை அறியேன் – உனது மாயச் செயல்களை எவ்வகையிலும்
என்னால் அறியமுடியவில்லை; அல் என்று நிற்றி – (நீ) இரவு என்று
கூறும்படியும் நிற்கின்றாய்; இவ் அதிரேகமாயை – இந்த மிக்க
மாயச்செயலை; ஆர் அறிவார் – யார் அறிவார்கள்.

———-

8259. ‘மறந்தாயும் ஒத்தி; மறவாயும் ஒத்தி;
மயல், ஆகும் யானும் அறியேம்;
துறந்தாயும் ஒத்தி; துறவாயும் ஒத்தி;
ஒரு தன்மை சொல்ல அரியாய்;
பிறந்தாயும் ஒத்தி, பிறவாயும் ஒத்தி,
பிறவாமல் நல்கு பெரியோய்!
அறம்தான் நிறுத்தல் அரிது ஆக!-ஆர், இவ்
அதிரேக மாயை அறிவார்?–258-

பிறவாமல் நல்கு பெரியோய் – (பத்துடை அடியவர்கள்) மற்றீண்டு
வாராப் பிறவாத பெருநெறி தருகின்ற பெரியவனே! மறந்தாயும் ஒத்தி –
(நீ) (உன் உண்மைத் தன்மையை) மறந்தவன் போலவும் காட்சி
தருகிறாய்; மறவாயும் ஒத்தி – (அவதார நோக்கமாகிய பாவத்தை
அழிக்க எண்ணியிருப்பதால்) உன் உண்மை நிலையை மறவாதவன்
போலவும் இருக்கிறாய்; மயல் – (இத்தன்மையான உனது) மாயைச்
செயலை; ஆரும் – (உலகத்தவர்) யாவரும்; யானும் – நானும்;
அறியோம் – அறிய முடியாதவர்களாய் உள்ளோம்; துறந்தாயும் ஒத்தி
– (பற்றற்று இருத்தலால்) துறந்தவன் போலவும் இருக்கிறாய்; துறவாயும்
ஒத்தி – (தம்பி கட்டுண்டமை கண்டு வருந்தி அழுதலால்) துறவாதவன்
போலவும் இருக்கிறாய்; ஒரு தன்மை சொல்ல அறியாய் – (இவ்வாறு
இருத்தலினால்) ஒரு தன்மை உடையவன் என்று சொல்ல அரியவனாக
விளங்குகிறாய்; பிறந்தாயும் ஒத்தி – (தசரதன் மதலையாய்த் தாரணி
வந்ததால்) பிறந்தவன் போலவும் இருக்கிறாய்; பிறவாயும் ஒத்தி –
(வினை வசத்தால் பிறவாமையின்) பிறவாதவன் போலவும்
விளங்குகிறாய்; அறம் தான் நிறுத்தல் அரிது ஆக – அறத்தை
இவ்வுலகில் நிலை நிறுத்தல் அருமை ஆக இருப்பதால் (அதனை
நிலை நிறுத்த மானிடச் சட்டை தாங்கி வந்தவனே); இவ் அதிரேக
மாயை – இந்த மிகுதியான மாயச் செயலை; ஆர் அறிவார் – யார்
அறிவார்கள்.

————–

8260. ‘வினை வர்க்கம் முற்றும் உடனே படைத்தி;
அவை எய்தி, என்றும் விளையா,
நினைவர்க்கு, நெஞ்சின் உறு காமம் முற்றி,
அறியாமை நிற்றி, மனமா;
முனைவர்க்கும் ஒத்தி, அமரர்க்கும் ஒத்தி,
முழு மூடர் என்னும் முதலோர்
அனைவர்க்கும் ஒத்தி, அறியாமை-ஆர், இவ்
அதிரேக மாயை அறிவார்?–259-

வினைவர்க்கம் முற்றும் – (உயிர்களின் பாவ புண்ணியங்களாகிய)
இருவினைகளின் தொகுதிகளுக்கு உரியபடி; உடனே படைத்தி –
(அந்த உயிர்களை உடனே தக்க) உடல் எடுக்கச் செய்து
படைக்கின்றாய்; அவை எய்தி – அந்த உடம்புகளை அடைந்து;
நினைவர்க்கு – (உன் திருவடியையே) நினைக்கும் பக்தர்களுக்கு;
என்றும் – எப்பொழுதும்; நெஞ்சின் உறுகாமம் முற்றி – (அவர்கள்)
மனத்தில் உள்ள (எவ்வகை) விருப்பத்தையும் நிறைவேற்றி;
அறியாமை நிற்றி – (அவர்கள்) அறியாமல் நிற்கின்றாய்; மனமா –
மனமாகவும் (மறைந்துள்ளாய்); முனைவர்க்கும் ஒத்தி –
முனிவர்களுக்கும் ஒத்து விளங்குகிறாய்; அமரர்க்கும் ஒத்தி –
தேவர்களுக்கும் ஒத்து விளங்குகிறாய்; முழுமூடர் என்னும் முதலோர்
அனைவர்க்கும் – முழு அறிவிலிகள் என்னும் மற்ற பிறராகிய
அனைவருக்கும்; அறியாமை ஒத்தி – அறிய முடியாத தன்மையால்
ஒத்து விளங்குகிறாய்; இவ் அதிரேக மாயை – இந்த மிகுதியான மாயச்
செயலை; ஆர் அறிவார் – யார் அறிவார்கள்.

———-

8261. ‘எறிந்தாரும், ஏறுபடுவாரும், இன்ன
பொருள் கண்டு இரங்குபவரும்,
செறிந்தாரின் உண்மை எனல் ஆய தன்மை
தெரிகின்றது, உன்னது இடையே;
பிறிந்தார் பிறிந்த பொருளோடு போதி;
பிறியாது நிற்றி; பெரியோய்!
அறிந்தார் அறிந்த பொருள் ஆதி-ஆர், இவ்
அதிரேக மாயை அறிவார்?–260-

பெரியோய் – பெரியவனே; எறிந்தாரும் – (படைக்கலங்களை)
எறிபவர்களும்; ஏறு படுவாரும் – (அந்தப் படைக்கலங்களால்) காயம்
படுபவர்களும்; இன்ன பொருள் கண்டு இரங்குபவரும் -இத்தகைய செயலைக் கண்டு இரங்குபவர்களும்; செறிந்தாரின் –
(இங்கு இவ்வுலகில்) நெருங்கி (இருந்து) வாழ்பவர்கள் இடத்திலும்;
உண்மை எனல் ஆயதன்மை – (நீ) ஒருங்கு கலந்திருப்பது உண்மை
என்ற செய்தி; உன்னது இடையே தெரிகின்றது – உன்னிடத்தில்
தெரிகின்றது; பிறிந்தார் பிறிந்த பொருளோடு போதி – அறிவில்
இருந்து பிரிந்தவர்கள் நீக்கியுள்ள ஞானமாகிய பொருளுடன் நீயும்
(அவர்களிடம் இருந்து) பிரிந்து போகின்றாய்; பிறியாது நிற்றி –
அவ்வாறு பிரிந்து இருந்தாலும் கூட அவர்கள் இடத்திலும்
அந்தர்யாமியாகப் பிரியாமல் நிற்கிறாய்; அறிந்தார் அறிந்த பொருள்
ஆதி – தத்துவ ஞானமுடையவர்கள் (உண்மை உணர்வால்) ஆய்ந்து
அறிந்த மெய்ப்பொருளாகவும் விளங்குகிறாய்; இவ் அதிரேகமாயை –
இந்த மிகுதியான மாயையை; ஆர் அறிவார் – யார் அறிவார்கள்.

——

8262. ‘பேர் ஆயிரங்கள் உடையாய்; பிறந்த
பொருள்தோறும் நிற்றி; பிரியாய்;
தீராய்; பிரிந்து திரிவாய்; திறம்தொறும்
அவை தோறும் என்று தெளியாய்;
கூர் ஆழி அம் கை உடையாய்; திரண்டு ஓர்
உரு ஆதி; கோடல் உரிபோல்,
ஆராயின், ஏதும் இலையாதி-ஆர், இவ்
அதிரேக மாயை அறிவார்?’–261-

பேர் ஆயிரங்கள் உடையாய் – ஆயிரம் திருப்பெயர்களை
உடையவனே; பிறந்த பொருள் தோறும் – தோன்றிய பொருள்கள்
இடத்தில் எல்லாம்; பிரியாய் நிற்றி – பிரியாமல் கலந்து நிற்கின்றாய்;
தீராய் – அழிவு அற்றவனே; பிரிந்து திரிவாய் – பல்வேறு
அவதாரங்களால் உன் உண்மை சொரூபத்தில் இருந்து பிரிந்து வந்து
திரிகின்றாய்; திறம் தொறு அவை தோறும் என்று தெளியாய் –
அந்த அவதாரங்களில் எல்லாம் அப்பொருள்கள் உன்னைத் தம்
இனம் என்று மயங்கி நிற்றல் அன்றி உன் உண்மை நிலையை அறியும் படி தெளியப்படாத நிலையில் உள்ளாய்;
அம்கை கூர் ஆழி உடையாய் – அழகிய கைகளில் கூர்மையான
சுதர்சனம் என்னும் சக்கரப் படையைக் கைக்கொண்டு உள்ளாய்;
திரண்டு ஓர் உரு ஆதி – அனைத்துப் பொருள்களும் திரண்டு ஓர்
உருவம் ஆகிறாய்; ஆராயின் – எண்ணிப் பார்த்தால்; கோடல்
உரிபோல் ஏதும் இலையாதி – வெண் காந்தள் கிழங்கை உரிப்பதைப்
போல ஒன்றும் இல்லாதவன் ஆகிறாய்; இவ் அதிரேகமாயை – இந்த
மிகுதியான மாயச்செயலை; ஆர் அறிவார் – யார் அறிவார்கள்.

————-

நாக பாசம் நீங்குதல்

8263. என்று, இன்ன பன்னி அழிவான், எறிந்த
எரி சோதி கீற, இருள் போய்,
பொன் துன்னி அன்ன வெயில் வீசுகின்ற
பொருள் கண்டு, நின்ற புகழோன்
நின்று உன்னி உன்னி, ‘இவன் யாவன்?’
என்று நினைகின்ற எல்லை, நிமிரச்
சென்று, உன்னும்முன்னர், உடன் ஆயினான், இவ்
உலகு ஏழும் மூடு சிறையான்.–262-

என்று இன்ன பண்ணி – என்று இவ்வாறான சொற்களைப் பல
முறை கூறித் (துதித்து); அழிவான் – மனமழிபவனாகிய கருடன்;
எறிந்த எரி சோதிகீற – (வந்ததனால்) வீசிய உடம்பின் ஒளி
கிழித்ததனால்; இருள்போய் – இருட்டு நீங்கி; பொன் துன்னி அன்ன
– பொன்னின் ஒளி நெருங்கியது போல; ஒளி வீசுகின்ற பொருள்
கண்டு – (எங்கும் சிவந்த) ஒளி பரவி வீசுகின்ற தன்மையைக் கண்டு;
நின்ற புகழோன் – (மாறாது நிலை பெற்று) நிற்கும் புகழுக்கு உரியவன்
ஆகிய இராமன்; நின்று உன்னி உன்னி – (அதைப் பார்த்துக்கொண்டு)
நின்று எண்ணி எண்ணி; இவன் யாவன் என்று நினைக்கின்ற எல்லை
– இவன் யார்? என்று நினைத்து நிற்கின்ற பொழுது; இவ் உலகு
ஏழும் மூடு சிறையான் – இந்த உலகங்கள் ஏழினையும் மூடும் படியாக
மிக விரித்த சிறகுகளை உடைய அந்தக் கருடன்; நிமிரச் சென்று – நேராகச்
சென்று; உன்னும் முன்னம் உடன் ஆயினான் – நினைப்பதற்கு
முன்பே இராமனிடம் சென்று சேர்ந்தான்.

————

8264. வாசம் கலந்த மரை நாள நூலின்
வகை என்பது என்னை?-மழை என்று
ஆசங்கை கொண்ட கொடை மீளி அண்ணல்
சரராமன் வெண்ணெய் அணுகும்,
தேசம் கலந்த மறைவாணர், செஞ் சொல்
அறிவாளர், என்று இம் முதலோர்
பாசம் கலந்த பசிபோல், அகன்ற-
பதகன் துரந்த உரகம்.–263-

பதகன் துரந்த உரகம் – பாதகனாகிய இந்திரசித்தன் (இலக்குவன்
மீது வானரப் படைமீதும்) செலுத்திய பாம்புக்கணை; மழை என்று
ஆசங்கை கொண்ட – மேகங்கள் என்று ஐயம் கொள்ளுவதற்கு
இடமாக உரிய; கொடை மீளி அண்ணல் – கொடை கொடுப்பதில்
வலிமை மிக்க பெரியோன் ஆகிய; சரராமன் – சடையப்ப வள்ளலுக்கு
உரிய; வெண்ணை அணுகும் – திருநெல்வெண்ணெய் எனும் ஊரை
நெருங்கிச் சேர்ந்த; தேசம் கலந்த மறை வாணர் – தேசஸ் ஆகிய
ஒளி பொருந்திய அந்தணர்களும்; செஞ்சொல் அறிவாளர் – செவ்விய
கூரிய சீரிய செஞ்சொல் புலவர்களும்; என்று இம்முதலோர் – என்று
இவர்களை முதலாகக் கொண்ட சுற்றத்தார்கள்; பாசம் கலந்த பசி
போல் – அடைந்துள்ள பசிபோல்; அகன்ற – இருந்த இடம் தெரியாது
மறைந்து விட்டது; (அவ்வாறு துண்டுபட்டு அழிந்து மறைந்த
நாகங்களை) வாசம் கலந்தமரை – மணம் பொருந்திய தாமரை
மலரினது; நாள நூலின் வகை – தண்டின் உள்ளே உள்ள மெல்லிய
நூலின் தன்மையை அடைந்து விட்டது; என்பது என்னை – என்று
சொல்லுவது என்ன சிறப்பு உள்ளது.

———–

8265. பல்லாயிரத்தின் முடியாத பக்கம்
அவை வீச, வந்து படர் கால்
செல்லா நிலத்தின் இருள்ஆதல் செல்ல,
உடல் நின்ற வாளி சிதறுற்று,
எல்லா விதத்தும் உணர்வோடு நண்ணி
அறனே இழைக்கும் உரவோன்
வல்லான் ஒருத்தன் இடையே படுத்த
வடு ஆன, மேனி வடுவும்.–264-

பல்லாயிரத்தின் முடியாத – பல ஆயிரக்கணக்கிலும் அடங்கி
முடியாத; பக்கம் அவை வீச – இறகுகளை உடைய இரண்டு
சிறகுகளும் அடித்துக் கொள்வதால்; வந்து படர் கால் – வந்து
பரவுகின்ற காற்றானது; செல்லா நிலத்தின் – (நாகக் கணையால்
கட்டுண்டு விழுந்து கிடப்பவர்களின் பெரும் குவியலால்) செல்ல
முடியாமல் உள்ள நிலத்தில் நெருங்கி உள்ள; இருள் ஆதல் செல்ல –
இருட்டு நீங்கிப் போகும்படி வீசுதலினால்; உடல் நின்ற வாளி
சிதறுற்று – (இலக்குவன் முதலிய வானர வீரர்களுடைய) உடலில்
குத்தி நின்ற அம்புகள் சிதறிப் போயின; மேனி வடுவும் –
(அவர்களின் உடலங்களில் ஏற்பட்ட பழியாகப் பொருந்திய உடல்
தழும்புகளும்); எல்லா விதத்தும் – எல்லா வகையிலும்; உணர்வோடு
நண்ணி – அறிவோடு பொருந்தி; அறனே இழைக்கும் உரவோன் –
அறத்தையே செய்யும் மன வலிமை மிக்க; வல்லான் – வல்லமை
உடைய; ஒருத்தன் இடையே படுத்த – ஒரு ஞானியின் பால் இடையில்
தோன்றிய; வடுவான – பாவத்தைப் போல் நீங்கின.

———-

அனைவரும் உயிர் பெற்று எழுதல்

8266. தருமத்தின் ஒன்று ஒழுகாத செய்கை
தழுவிப் புணர்ந்த தகையால்,
உரும் ஒத்த வெங் கண், வினை தீய, வஞ்சர்
உடல் உய்ந்தது இல்லை; உலகின்
கருமத்தின் நின்ற கவி சேனை வெள்ளம்,
மலர்மேல் அவ் வள்ளல் கடை நாள்
நிருமித்த என்ன, உயிரோடு எழுந்து
நிலை நின்ற, தெய்வ நெறியால்.–265-

தருமத்தின் ஒன்றும் ஒழுகாத செய்கை – அறவழியில்
எப்பொழுதும் சிறிதுகூட நடக்காத தன்மை; தழுவிப் புணர்ந்த
தகையால் – பொருந்தி உள்ள காரணத்தினால்; உரும் ஒத்த வெங்கண்
– இடியைப் போன்ற கொடிய கண்களையும்; வினை –
வஞ்சனையையும்; தீய – தீய செயல்களையும் கொண்ட; வஞ்சர் உடல்
உய்ந்தது இல்லை – வஞ்சகர்களாகிய (அரக்கர்களின்) உடம்புகள்
உயிர் பெற்று எழவில்லை; மலர் மேல் அவ்வள்ளல் – தாமரை
மலரின் மேல் தங்கியுள்ள அந்தப் பிரமதேவன்; கடை நாள் நிருமித்த
என்னை – ஊழி முடிவான பிற்காலத்தில் படைத்த (உயிர்களைப்)
போல; உலகின் கருமத்தின் நின்ற – உலகத்தில் (பாவத்தைப் போக்கி
அறத்தைத் தலை நிறுத்தும்) காரியத்தில் ஈடுபட்டு நின்ற; கவிசேனை
வெள்ளம் – வானரப்படை வெள்ளங்கள்; தெய்வ நெறியால் –
இறைவனின் சங்கற்பத்தால்; உயிரோடு எழுந்து நிலை நின்ற – உயிர்
பெற்று எழுந்து ஊக்கத்தோடு களத்தில் நிலையாக நின்றன.

————

இராமன் மகிழ்தல்

8267. இளையான் எழுந்து தொழுவானை, அன்பின்
இணை ஆர மார்பின் அணையா,
‘விளையாத துன்பம் விளைவித்த தெய்வம்
வெளி வந்தது’ என்ன வியவா,
கிளையார்கள் அன்ன துணையோரை, ஆவி
கெழுவா, எழுந்து தழுவா,
முளையாத திங்கள் உகிரான் முன் வந்து,
முறை நின்ற வீரன் மொழிவான்;–266-

முறை நின்ற வீரன் – அறமுறையில் நின்ற வீரனாகிய இராமன்;
எழுந்து இளையான் தொழுவானை – மயக்கம் நீங்கி எழுந்து
வணங்குபவனான இளையவனாகிய இலக்குவனை; அன்பின் – அன்பு
மிகுதியால்; இணை ஆர மார்பின் அணையா – இணைந்த மாலைகள்
பொருந்தி உள்ள மார்பில் இறுகத் தழுவி; விளையாத துன்பம்
விளைவித்த தெய்வம் – வரக்கூடாத பெருந் துன்பத்தை உண்டாக்கிய
தெய்வம்; வெளி வந்தது என்ன – கருடன் வடிவில் வெளி வந்தது
என்று கூறி; வியவா – வியந்து; கிளையார்கள் அன்ன – உறவினர்கள்
போன்ற; துணையோரை – துணைவர்களாகிய வானர வீரர்களை; ஆவி
கெழுவா எழுந்து தழுவா – உயிர் ஒன்றாகுமாறு நெருக்கமாக எழுந்து
தழுவி; முளையாத திங்கள் உகிரான் முன்வந்து – பிறைச் சந்திரன்
போன்ற நகங்களை உடைய கருடனுக்கு முன்னால் வந்து; மொழிவான்
– (இவற்றைக்) கூறினான்.

————-

இராமன் கருடனிடம் பேசுதல்

8268. ‘ஐய! நீ யாரை? எங்கள் அருந் தவப் பயத்தின் வந்து,
இங்கு
எய்தினை; உயிரும் வாழ்வும் ஈந்தனை; எம்மனோரால்
கையுறை கோடற்கு ஒத்த காட்சியை அல்லை; மீட்சி
செய் திறம் இலையால்’ என்றான்-தேவர்க்கும் தெரிக்க
ஒணாதான்.–267-

தேவர்க்கும் தெரிக்க ஒணாதான் – தேவர்களும் கூட(த் தன்
சொரூபத்தை) அறிய முடியாது உள்ளவனாகிய இராமன்; ஐய –
(கருடனைப் பார்த்து) ஐயா; நீ யாரை – நீ யார்; எங்கள் அருந்தவப்
பயத்தின் – நாங்கள் செய்த மிக்க தவத்தின் பயனால்; இங்கு வந்து
எய்தினை – இங்கு வந்து அடைந்தாய்; உயிரும் வாழ்வும் ஈந்தனை –
(நாகக் கணையால் இறந்தவர்களுக்கு) உயிரையும் வாழ்வையும்
தந்தாய்; எம்மனோரால் – எங்களைப் போன்றவர்களால்; கையுறை
கோடற்கு ஒத்த காட்சியை அல்லை – காணிக்கைப் பொருள் கொள்ளுவதற்கு உரிய தோற்றம் உடையவனாயும் இல்லை; மீட்சி
செய்திறம் இலையால் என்றான் – (எனவே நீ செய்த உதவிக்குக்)
கைம்மாறு செய்ய வழி இல்லை என்றான்.

—————

8269. ‘பொருளினை உணர வேறு புறத்தும் ஒன்று உண்டோ,
புந்தித்
தெருளினை உடையர் ஆயின்? செயல் அருங் கருணைச்
செல்வ!
மருளினில் வரவே, வந்த வாழ்க்கை ஈது ஆகின், வாயால்
அருளினைஎன்னின், எய்த அரியன உளவோ?-ஐய!–268-

ஐய! – ஐயனே; செயல் அருங் கருணைச் செல்வ – செய்தற்கு
அரிய அருட் செயல் செயத் செல்வனே! மருளினின் வரவே வந்த
வாழ்க்கை ஈது ஆகின் – மயங்கி வருந்தவதற்கு இடமாக வந்ததே
இந்த வாழ்க்கை என்றால்; வாயால் அருளினை என்னின் – (நீ)
வாயினால் அருள்கொண்டு வரம் தருவாய் என்றால்; எய்த அரியன
உளவோ – (எங்களால்) எய்த முடியாத அரியபேறுகள் எவையேனும்
உள்ளதா? புந்தித் தெருளினை உடையர் ஆயின் – அறிவுத் தெளிவு
உடையவர்களாய் இருந்தால்; பொருளினை உணர வேறு புறத்தும்
ஒன்று உண்டோ? – (நீ செய்த இந்த உதவியின்) பொருளினை
உணர்ந்து கொள்ள வேறு பொருள் புறத்தில் ஒன்றும் இல்லை. (நீ
செய்த உதவிக்குக் கைம்மாறாகக் கொடுக்கப் புறத்தில் எப்பொருளும்
இல்லை என்றபடி)

———-

8270. ‘கண்டிலை, முன்பு; சொல்லக் கேட்டிலை; கடன்
ஒன்று எம்பால்
கொண்டிலை; கொடுப்பது அல்லால், குறை இலை; இது
நின் கொள்கை;
“உண்டு, இலை” என்ன நின்ற உயிர் தந்த உதவியோனே!
பண்டு இலை நண்பு; நாங்கள் செய்வது என்? பகர்தி!’
என்றான்.–269-

உண்டு இலை என்ன நின்ற உயிர் தந்த உதவியோனே –
உண்டோ இல்லையோ என்று ஐயங் கொள்ளும்படியாக நின்றிருந்த
இலக்குவன் உயிரை (மீட்டும்) தந்த உதவியோனே!பண்டு நண்பு இலை – (உனக்கும் எங்களுக்கும்) முன்பு (எந்த
விதமான) நட்பும் இல்லை; முன்பு கண்டிலை – முன்னால் (நீ
எங்களைக்) கண்டதுமில்லை; சொல்லக் கேட்டிலை – (எங்களைப் பற்றி
மற்றவர்) சொல்லக் கேட்டதும் இல்லை; எம்பால் – எங்களிடம்; கடன்
ஒன்று கொண்டிலை – கடனாக எந்த ஒன்றையும் பெற்றுக்
கொண்டதும் இல்லை; கொடுப்பது அல்லால் – எங்களுக்குச்
கொடுப்பது அல்லாமல்; குறை இலை – இதுவே உனது கோட்பாடாக
இருக்கிறது; நாங்கள் செய்வது என் பகர்தி – நாங்கள் (உனக்குச்)
செய்யும் கைம்மாறு என்ன சொல்; என்றான் – என்று (இராமன்)
கேட்டான்.

———–

கருடன் மறுமொழி கூறி விடை பெறல்

8271. பறவையின் குலங்கள் காக்கும் பாவகன், ‘பழைய நின்னோடு
உறவு உள தன்மைஎல்லாம் உணர்த்துவென்; அரக்கனோடு
அம்
மற வினை முடித்த பின்னர், வருவென்’ என்று உணர்த்தி,
‘மாயப்
பிறவியின் பகைஞ! நல்கு, விடை’ எனப் பெயர்ந்து
போனான்.–270-

பறவையின் குலங்கள் காக்கும் பாவகன் – பறவைக்
கூட்டங்களைப் பாதுகாக்கின்ற தூயவனாகிய கருடன்; மாயப் பிறவியின்
பகைஞ – (இராமனைப் பார்த்து) மாயப்பிறப்பறுக்கும் பிறவியின்
பகைவனே; நின்னோடு பழைய உறவு உள தன்மை எல்லாம் –
உன்னோடு (எனக்குப்) பழைய உறவு உள்ள தன்மைகளை எல்லாம்;
அரக்கனோடு – அரக்கனாகிய இராவணனோடு; அம்மறவினை முடித்த பின்னர் வருவென்
உணர்த்துவென் – அந்தப் போர்த்தொழிலை (நீ) முடித்த பின்பு வந்து
உணர்த்துவேன்; என்று உணர்த்தி – என்று கூறி; நல்கு விடை –
இப்போது நீ எனக்கு விடை கொடு; எனப் பெயர்ந்து போனான் –
என்று திரும்பிப் போனான்.

——-

இராமன் புகழ்ச்சியும் அனுமன் பேரொலியும்

8272. ஆரியன் அவனை நோக்கி, ‘ஆர் உயிர் உதவி, யாதும்
காரியம் இல்லான் போனான்; கருணையோர் கடமை ஈதால்;
பேர் இயலாளர், “செய்கை ஊதியம் பிடித்தும்” என்னார்;
மாரியை நோக்கிக் கைம்மாறு இயற்றுமோ, வையம்?
என்றான்.–271-

ஆரியன் – இராமன்; அவனை நோக்கி – அந்தக் கருடனைப்
பார்த்து; ஆர் உயிர் உதவி – (நாகக் கணையால் விழுந்து
இறந்தவர்களுக்கு) அருமையான உயிரைத் தந்துதவி; யாதும் காரியம்
இல்லாமல் போனான் – (நம்மிடத்தில்) எந்தக் காரியத்தையும்
(கைம்மாறாகப்) பெறாமல் போனான்; கருணையோர் கடமை ஈதால் –
அருளுடையவர்களுடைய செய்கை இதுதான் (போலும்); பேர்
இயலாளர் – பெருந்தன்மையுடையவர்கள்; செய்கை ஊதியம் பிடித்தும்
என்னார் – செய்யும் செயலுக்குப் பயன் பெறுவோம் என்று எண்ண
மாட்டார்கள்; (இஃது எவ்வாறு எனின்) வையம் – இவ்வுலகில்
வாழ்பவர்கள்; மாரியை நோக்கிக் கைம்மாறு இயற்றுமோ – மழை
(தங்களுக்கு) உதவுதலை நோக்கி அதற்குக் கைம்மாறு செய்ய
வல்லமை உடையவர்கள் ஆள்வார்களோ? என்றான் – என்று
கூறினான்.

————

8273. ‘“இறந்தனன், இளவல்” என்னா, இறைவியும் இடுக்கண்
எய்தும்;
மறந்தனர் உறங்குகின்ற வஞ்சரும் மறுகி, “மீளப்
பிறந்தனர்” என்று கொண்டு, ஓர் பெரும் பயம் பிடிப்பர்
அன்றே;
அறம் தரு சிந்தை ஐய! ஆர்த்தும்’ என்று அனுமன்
சென்னான்.–272-

அனுமன் – அனுமன்; அறம் தரு சிந்தை ஐய – (இராமனை
நோக்கி) அறம் நிறைந்த மனத்தை உடைய ஐயனே! இளவல்
இறந்தனன் என்னா – நாம் இப்பொழுது மகிழ்ச்சிக்குரிய செயல்
செய்யவில்லை எனில் இளவலாகிய இலக்குவன் இறந்து விட்டான்
என்று; இறைவியும் இடுக்கண் எய்தும் – சீதையும் துன்பம்
அடைவாள்; மறந்தனர் உறங்குகின்ற வஞ்சமும் மறுகி –
(பேராரவாரம் செய்தால்) (கவலையை) மறந்து உறங்குகின்ற (பகை
முடித்தோம் என்று) வஞ்சனைப் பண்புள்ள அரக்கர்களும் (மனம்
கலங்கி); மீளப் பிறந்தனர் என்று கொண்டு – மீளவும் (நாம்) உயிர்
பெற்று எழுந்து விட்டோம் என்று எண்ணிக் கொண்டு; ஓர் பெரும்
பயம் பிடிப்பர் அன்றே – ஒப்பற்ற மிக்க அச்சம் கொள்வார்கள்
அல்லவா? ஆர்த்தும் என்று – (இச்செயல்களுக்காக நாம்) ஆரவாரம்
செய்வோம் என்று; சொன்னான் – கூறினான்.

————–

8274. ‘அழகிது’ என்று அண்ணல் கூற, ஆர்த்தனர்-
கடல்கள் அஞ்சிக்
குழைவுற, அனந்தன் உச்சிக் குன்றின்நின்று அண்டகோளம்
எழ மிசை, உலகம் மேல் மேல் ஏங்கிட, இரிந்து சிந்தி
மழை விழ, மலைகள் கீற, மாதிரம் பிளக்க மாதோ.–273-

அண்ணல் – தலைமைப் பெருமை உள்ள இராமன்; அழகிது என்று
கூற – (இதுவே) தகுதி உடையது என்று கூற; கடல்கள் அஞ்சிக்
குழைவுற – (வானரப் படைவீரர்கள்) கடல்கள் எல்லாம் அஞ்சிக்
கலக்கமுறவும்; அனந்தன் குன்றின் உச்சி நின்று – ஆதிசேடனது
மலைபோன்ற தலையின் உச்சியில் இருந்து; அண்ட கோளம் மிசை
எழ – உலக உருண்டை மேல் நோக்கி எழவும்; உலகம் மேல் மேல்
ஏங்கிட – உலகத்து உயிர்கள் மேலும் மேலும் ஏக்கம் கொள்ளவும்;
மழை இரிந்து சிந்திவிழ – மேகங்கள் நிலை கெட்டுச் சிதறி விழவும்;
மலைகள் கீற – மலைகள் பிளவுபடவும்; மாதிரம் பிளக்க – திசைகள்
பிளவுபடவும்; ஆர்த்தனர் மாதோ – பேரொலி செய்தனர்.

————

இராவணன் ஆர்ப்பொலி கேட்டல்

8275. பழிப்பு அறு மேனியாள்பால் சிந்தனை படர, கண்கள்
விழிப்பு இலன், மேனி சால வெதும்பினன், ஈசன் வேலும்
குழிப்ப அரிது ஆய மார்பை மன்மதன் கொற்ற வாளி
கிழிப்புற, உயிரிப்பு வீங்கிக் கிடந்த வாள் அரக்கன்
கேட்டான்.–274-

பழிப்பு அறு மேனியாள் பால் – பழிப்பதற்கு அருமையான
திருமேனி அழகுடைய சீதையின் இடத்தில்; சிந்தனை படர – மனம்
சென்று பரவியதனால்; கண்கள் விழிப்பு இலன் – கண்களை விழித்துப்
பார்த்தலும் இல்லாதவனாய்; மேனி சால வெதும்பினன் – உடம்பு
விரகவேதனையால் மிக வெதும்பப்பெற்று; ஈசன் வேலும் –
சிவபிரானது சூலவேலும்; குழிப்பு அரிது ஆய மார்பை –
துளைப்பதற்கு அருமையான (மிக்க வலிமைஉடையதன்) மார்பை;
மன்மதன் கொற்ற வாளி கிழிப்புற – மன்மதனது வெற்றி பொருந்திய
அம்புகள் ஊடுருவிப் புறம் போக; உயிர்ப்பு வீங்கி – பெருமூச்சு
மிகுதியாக; கிடந்த – விட்டுக்கொண்டு கிடந்த; வாள் அரக்கன் – வாள்
படையை உடைய அரக்கனாகிய இராவணன்; கேட்டான் – (வானரப்
படையினர் எழுப்பிய பேரொலியைக்) கேட்டான்.

————–

8276. தாதை சொல் தலைமேல் கொண்ட தாபதன், தரும மூர்த்தி
ஈதைகள் தீர்க்கும் நாமத்து இராமனை எண்ணி ஏங்கும்
சீதையும், அவளை உன்னிச் சிந்தனை தீர்ந்தும் தீராப்
பேதையும், அன்றி, அவ் ஊர் யார் உளர், துயில் பெறாதார்?–275-

தாதை சொல் தலை மேல் கொண்ட – தந்தையாகிய (தசரதனது)
சொல்லைத் தலைமேற்கொண்டு செயல் செய்த; தாபதன் –
தவவேடத்தை உடையவனும்; தரும மூர்த்தி – அறந்தலை நிறுத்த
வந்தவனும்; ஈதைகள் தீர்க்கும் நாமத்து இராமனை –
ஓதியவர்களுடைய துன்பங்களை நீக்கும் திருப்பெயரை உடையவனும்
ஆய இராமனை; எண்ணி ஏங்கும் சீதையும் – எண்ணி எண்ணி
வருந்துகிற சீதையும்; அவளை உன்னி – அவளை நினைத்து;
சிந்தனை தீர்ந்தும் தீராப் பேதையும் – (அவள் தன்னை விரும்பாள்
எனத்) தெரிந்தும் (அவளிடத்தில் கொண்ட) மோகம் நீங்காத
அறிவிலியாகிய இராவணனும்; அன்றி – ஆகிய அவர்களைத் தவிர;
அவ் ஊர் – அந்த இலங்கையில்; துயில் பெறாதார் யார் உளர் –
தூங்காதவர்கள் யார்? ஒருவரும் இல்லை என்றபடி.

———–

8277. சிங்கஏறு, அசனிஏறு கேட்டலும், ‘சீற்றச் சேனை
பொங்கியது’ என்ன, மன்னன் பொருக்கென எழுந்து,
‘ “போரில்
மங்கினர் பகைஞர்” என்ற வார்த்தையே வலியது!’ என்னா,
அங்கையோடு அங்கை கொட்டி, அலங்கல் தோள் குலுங்க
நக்கான்.–276-

சிங்க ஏறு மன்னன் – ஆண் சிங்கம் போன்றவனாகிய இராவணன்;
அசனி ஏறு கேட்டலும் – ஆணிடி போன்ற (வானரப் படையின்)
பேரொலி கேட்ட உடனே; சீற்றச் சேனை பொங்கியது
என்ன – சினம் மிக்க வானரப்படை போருக்கு எழுந்தது என்று
எண்ணி; பொருக்கென எழுந்து – விரைவாக எழுந்து; போரில்
மங்கினர் பகைஞர் என்ற – போரில் பகைவர்கள் இறந்து ஒழிந்தனர்
என்று (இந்திரசித்தன் கூறிய); வார்த்தையே வலியது என்னா –
சொற்கள் (மிக)வலிமை உடையனவாய் உள்ளன என்று இகழ்ந்து கூறி;
அங்கையோடு அங்கை கொட்டி – உள்ளங் கையோடு
உள்ளங்கையைச் சேர்த்துத் தட்டி; அலங்கல் தோள் குலுங்க நக்கான்
– மாலை அணிந்த (தன்) தோள்கள் குலுங்குமாறு சிரித்தான்.

————

8278. ‘இடிக்கினற் அசனி என்ன இரைக்கின்றது, இராமன் போல்
வில்;
வெடிக்கின்றது அண்டம் என்ன, படுவது தம்பி வில் நாண்;
அடிக்கின்றது என்னை வந்து, செவிதொறும் அனுமன்
ஆர்ப்பு;
பிடிக்கின்றது உலகம் எங்கும், பரிதி சேய் ஆர்ப்பின்
பெற்றி,–277-

இராமன் போர் வில் – இராமனுடைய போர் செய்தற்குரிய
வில்லானது; இடிக்கின்ற அசனி உன்ன இரைக்கின்றது – இடிக்கின்ற
இடி போலப் பேரொலி செய்கின்றது; தம்பி வில் நாண் – தம்பியாகிய
இலக்குவனது வில் நாணொலி; அண்டம் வெடிக்கின்றது என்ன
படுவது – இந்த அண்டகோளம் வெடிபடுகிறேதா என்று
எண்ணும்படி ஒலிக்கின்றது; அனுமன் ஆர்ப்பு – அனுமனுடைய
பேரொலி; என்னை – என்னுடைய; செவிதொறும் வந்து அடிக்கின்றது
– செவிகள் தோறும் வந்து தாக்குகின்றது; பருதி சேய் ஆர்ப்பின்
பெற்றி – கதிரவன் மகனாகிய சுக்கிரீவனின் பேரொலியின் தன்மை;
உலகம் எங்கும் பிடிக்கின்றது – உலகம் முழுதும் பரவி ஒலிக்கின்றது.

————-

8279. ‘அங்கதன் அவனும் ஆர்த்தான்; அந்தரம் ஆர்க்கின்றானும்,
வெங் கத நீலன்; மற்றை வீரரும், வேறு வேறு,
பொங்கினர் ஆர்த்த ஓசை அண்டத்தும் புறத்தும் போன;
சங்கை ஒன்று இன்றித் தீர்ந்தார் பாசத்தை, தருமம் நல்க.–278-

அவனும் அங்கதன் ஆர்த்தான் – அந்த அங்கதனும் பேரொலி
செய்கின்றான்; வெங்கத நீலன் – கொடும் சினம் உடைய நீலனும்;
அந்தரம் ஆர்க்கின்றானும் – விண்ணில் ஓசை எழுமாறு
ஒலிக்கின்றான்; மற்றை வீரரும் – பிற வானர வீரர்களும்; வேறு வேறு
– தனித்தனியாகப்; பொங்கினர் ஆர்த்த ஓசை – மன மகிழ்ச்சி
கொண்டு ஒலித்த பேரொலி; அண்டத்தும் புறத்தும் போன – இந்த
அண்டத்திலும் அதற்கு அப்பாலும் பரவின; தருமம் நல்க – அறம்
துணை நின்றதனால்; பாசத்தை – நாகக் கணையில் இருந்து; சங்கை
ஒன்று இன்றித் தீர்ந்தார் – ஐயம் எதுவும் இல்லாமல் நீங்கினார்கள்;
(வானரப் படையினரும் இலக்குவனும் என்க.)

———-

இராவணன் இந்திரசித்தன் மாளிகைக்கு எழுதல்

8280. என்பது சொல்லி, பள்ளிச் சேக்கைநின்று இழிந்து, வேந்தன்,
ஒன்பது கோடி வாட் கை அரக்கர் வந்து உழையின் சுற்ற,
பொன் பொதி விளக்கம் கோடிப் பூங் குழை மகளிர் ஏந்த,
தன் பெருங் கோயில்நின்றும் மகன் தனிக் கோயில்
சார்ந்தான்.–279-

வேந்தன் – அரசனாகிய இராவணன்; என்பது சொல்லி – என்பது
பலவற்றைத் (தனக்குள்) சொல்லிக்கொண்டு; பள்ளிச் சேக்கை நின்று
இழிந்து – படுக்கையில் இருந்து இறங்கி; வாட்கை ஒன்பது கோடி
அரக்கர் – வாளைக் கையில் ஏந்திய ஒன்பது கோடி அரக்க வீரர்கள்;
வந்து உழையின் சுற்ற – திரண்டு வந்து பக்கங்களில் சூழ்ந்து உடன்
வரவும்; பூங்குழை மகளிர் கோடி – அழகிய காதணியை அணிந்த
மகளிர் கோடியளவினர்; பொன் பொதி விளக்கம் ஏந்த – பொன்னால்
செய்யப்பட்ட விளக்குகளை ஏந்தி உடன் வரவும்; தன் பெருங்கோயில்
நின்றும் – தன் பெரிய அரண்மனையில் இருந்து; மகன் தனிக்கோயில்
சார்ந்தான் -மகனாகிய இந்திரசித்தனது சிறப்புடைய அரண்மனைக்குச் (சென்று)
சேர்ந்தான்.

———–

8281. தாங்கிய துகிலார், மெள்ளச் சரிந்து வீழ் குழலார் தாங்கி
வீங்கிய உயிர்ப்பார், விண்ணை விழுங்கிய முலையார்,
மெல்லத்
தூங்கிய விழியார், தள்ளித் துளங்கிய நடையார்,-வல்லி
வாங்கிய மருங்குல் மாதர்,-அனந்தரால் மயங்கி வந்தார்.–280-

வல்லி வாங்கிய மருங்குல் மாதர் – பூங்கொடியையும் பின்னிடச்
செய்த இடையினை உடைய பெண்கள்; தாங்கிய துகிலார் – (கையில்
தூக்கித்) தாங்கிய சேலையை உடையவராயும்; மெள்ளச் சரிந்து வீழ்
குழலார் – (கூட்டி முடிக்கப் பெறாமையால்) மெல்லச் சோர்ந்து
தொங்குகிற கூந்தலை உடையவராயும்; தாங்கி வீங்கிய உயிர்ப்பார் –
தடைப்பட்டுப் பின்பு மிகுதியாக வெளிப்படுகிற பெருமூச்சினை
உடையவராயும்; விண்ணை விழுங்கிய முலையார் – ஆகாயத்தை
இடமின்றி விழுங்கிய (பருத்த) மார்பகங்களை உடையவராயும்;
மெல்லத் தூங்கிய விழியார் – அரை குறையாகத் தூங்கிய கண்களை
உடையவராயும்; தள்ளித் துளங்கிய நடையார் – தடுமாறி நடுங்கும்
நடையினை உடையவராயும்; அனந்தரால் மயங்கி வந்தார் – தூக்க
மயக்கத்தால் மயங்கி (இராவணனோடு) வந்தார்கள்.

———-

8282. பானமும், துயிலும், கண்ட கனவும், பண் கனிந்த பாடல்
கானமும், தள்ளத் தள்ள, களியொடும் கள்ளம் கற்ற,
மீனினும் பெரிய, வாட் கண் விழிப்பது முகிழ்ப்பது ஆக,
வானவர் மகளிர் போனார், மழலை அம் சதங்கை மாழ்க–281-

வானவர் மகளிர் – தேவமாதர்கள்; பானமும் – மதுபானமும்;
துயிலும் – தூக்கமும்; கண்ட கனவும் – (தாங்கள் கண்ட) கனவுகளும்;
பண் கனிந்த பாடல் கானமும் – (இராவணனைப் புகழ்ந்து பாடப்பட்ட) இசைகனிந்த இனிய பாடல்களும்; தள்ளத்
தள்ள – (தம்மைச்) சூழ்ந்து சுற்றித்தள்ளத் தள்ள; களியொடும்
கள்ளம் கற்ற மீனினும் – மதச் செருக்குடன் வஞ்சனையைக்
கற்றுள்ள மீனைக்காட்டிலும்; பெரிய வாட்கண் – பெரிய ஒளி
பொருந்திய (தங்கள்) கண்கள்; விழிப்பது முகிழ்ப்பது ஆக –
திறப்பதும் மூடுவதுமாக (இருக்க); அம் சதங்கை மழலை மாழ்க –
அழகிய சதங்கைகள் மென்மையாக ஒலிக்கப்; போனார் –
(இராவணனுடன்) சென்றார்கள்.

———–

8283. மழையினை நீலம் ஊட்டி, வாசமும் புகையும் ஆட்டி,
உழை உழை சுருட்டி, மென் பூக் குவித்து, இடைக்கு
இடையூறு என்னா,
பிழையுடை விதியார் செய்த பெருங் குழல்,
கருங் கண், செவ் வாய்,
இழை அணி, மகளிர் சூழ்ந்தார், அனந்தரால்,
இடங்கள்தோறும்.–282-

மழையினை நீலம் ஊட்டி – மேகத்திற்கு நீல நிறத்தை ஏற்றி;
வாசமும் புகையும் ஆட்டி – (அதற்கு) மணத்தையும் (அகில்)
புகையையும் ஊட்டிச்; சுருட்டி – சுருளச் செய்து; உழை உழைமென்
பூக்குவித்து – இடை இடையே மென்னைமயான மலர்களைச்
சேர்த்துச் சொருகி; இடைக்கு இடையூறு என்னா – நூலிடைக்குத்
துன்பம் உண்டாகும் என்று கருதாமல்; பிழையுடை விதியார் செய்த –
பிழையை உடைய விதி உண்டாக்கிய; பெருங்குழல் – நீண்ட
கூந்தலையும்; கருங்கண் – கருமையான கண்களையும்; செவ்வாய் –
சிவந்த வாயினையும் உடைய; இழை அணி மகளிர் –
அணிகலன்களை அணிந்த பெண்கள்; அனந்தரால் – தூக்கக்
கலக்கத்தோடு; இடங்கள் தோறும் சூழ்ந்தார் – பக்கங்களில் எல்லாம்
(இராவணனைச்) சூழ்ந்தார்கள்.

————-

8284. தேனிடை, கரும்பில், பாலில் அமுதினில், கிளவி தேடி,
மானிடை, கயலில், வாளில், மலரிடை, நயனம் வாங்கி,
மேல் நடை அனைய மற்றும் நல் வழி நல்க வேண்டி,
வானுடை அண்ணல் செய்த மங்கையர் மருங்கு சென்றார்.–283-

வானுடை அண்ணல் – சத்தியலோகத்தைத் தனக்கு உரிமையாக
உடைய பிரமதேவன்; தேனிடை – தேன் இடத்திலும்; கரும்பில் –
கரும்பின் இடத்திலும்; பாலில் – பாலின் இடத்திலும்; அமுதினில் –
தேவர்களின் அமுதத்தின் இடத்திலும்; கிளவி தேடி – (உள்ள இனிய
பகுதிகளைப்) பேச்சினை (உருவாக்கத்) தேடி அமைத்து; மானிடை –
மானின் இடத்திலும்; கயலில் – கயல் மீனிடத்திலும்; வாளில் –
வாளின் இடத்திலும்; மலரிடை – மலர்களின் இடத்திலும்; நயனம்
வாங்கி – (உள்ள சிறப்புப் பகுதிகளைச் சேர்த்துக்) கண்களாகச்
சமைத்து; மற்றும் அனைய மேல் நடை – மற்றும் அவை போன்ற
சிறப்புடையவைகளான; நல்வழி நல்கவேண்டி – நல்ல வகைகளைக்
கொண்டு படைக்க விரும்பி; செய்த மங்கையர் – படைத்த மகளிர்;
மருங்கு சென்றார் – (இராவணன் உடைய) பக்கங்களில் சென்றார்கள்.

————

8285. தொடங்கிய ஆர்ப்பின் ஓசை செவிப்புலம் தொடர்தலோடும்,
இடங்கரின் வயப் போத்து அன்ன எறுழ் வலி அரக்கர்
யாரும்,
மடங்கலின் முழக்கம் கேட்ட வான் கரி ஒத்தார்; மாதர்
அடங்கலும், அசனி கேட்ட அளை உறை அரவம் ஒத்தார்.–284-

தொடங்கிய – (வானரப் படையினர்) தொடங்கிச் (செய்த);
ஆர்ப்பின் ஓசை – பேரொலி; செவிப்புலம் தொடர்தலோடும் –
காதுகளாகிய புலத்தில் நுழைந்த உடனே; இடங்கரின் வயப் போத்து
அன்ன – வலிய ஆண் முதலையை ஒத்துள்ள; எறுழ் வலி அரக்கர்
யாரும் – மிக்க வலிமை உடைய அரக்கர்கள் எல்லோரும்; மடங்கலின்
முழக்கம் கேட்ட – சிங்கத்தின் முழக்கத்தைக் கேட்ட; வான் கரி
ஒத்தார் – பெரிய யானைகளை ஒத்து விளங்கினார்கள்; மாதர்
அடங்கலும் – அரக்கப் பெண்டிர் எல்லோரும்; அசனி கேட்ட – இடி
முழக்கம் கேட்ட; அளை உறை அரவம் – புற்றில் வாழும்
பாம்புகளை; ஒத்தார் – ஒத்தார்கள்.

———–

இந்திரசித்தனை இராவணன் காணல்

8286. அரக்கனும், மைந்தன் வைகும் ஆடகத்து அமைந்த மாடம்
பொருக்கெனச் சென்று புக்கான், புண்ணினில் குமிழி
பொங்கத்
தரிக்கிலன், மடங்கல்ஏற்றால் தொலைப்புண்டு சாய்ந்து
போன,
கருக் கிளர் மேகம் அன்ன, களிறு அனையானைக் கண்டான்.–285-

அரக்கனும் – அரக்கனாகிய இராவணனும்; மைந்தன் வைகும் –
தன் மகனாகிய (இந்திரசித்தன்) தங்கி உள்ள; ஆடகத்து அமைந்த
மாடம் – பொன்னால் செய்யப்பட்ட மாளிகைக்குள்; பொருக்கெனச்
சென்று புக்கான் – விரைவாகச் சென்று சேர்ந்தான்; புண்ணினில்
குமிழி பொங்கத் – (இலக்குவனது அம்புகள் துளைத்த) புண்களில்
(இருந்து) இரத்தக்குமிழி பொங்கி வெளிப்படத்; தரிக்கிலன் – பொறுக்க
மாட்டாதவனாகி; மடங்கல் ஏற்றால் – ஆண் சிங்கத்தினால்;
தொலைப்புண்டு சாய்ந்து போன – வலிமை கெட்டு ஒழிந்து போன;
கருக்கிளர் மேகம் அன்ன – கருமையான நீர் பொருந்திய மேகத்தைப்
போன்ற; களிறு அனையானைக் கண்டான் – ஆண் யானையைப்
போன்றவனாக உள்ள இந்திர சித்தனைக் கண்டான்.

————-

8287. எழுந்து அடி வணங்கல் ஆற்றான், இரு கையும்
அரிதின் ஏற்றித்
தொழும் தொழிலானை நோக்கித் துணுக்குற்ற மனத்தன்,
‘தோன்றல்!
அழுங்கினை; வந்தது என்னை அடுத்தது?’ என்று எடுத்துக்
கேட்டான்;
புழுங்கிய புண்ணினானும், இனையன புகலலுற்றான்;–286-

எழுந்து அடி வணங்கல் ஆற்றான் – எழுந்து (தந்தையின்) அடி
வணங்குவதற்குக் கூட முடியாதவனாய்; இருகையும் அரிதின் ஏற்றித் –
(தன் இரண்டு) கைகளையும் (பெருமுயற்சி செய்து)
அருமைப்பாட்டோடு (தலைக்கு) மேல் தூக்கி; தொழும் தொழிலானை
நோக்கித் – தொழுகின்ற தொழிலை உடையவனான இந்திரசித்தன் பார்த்து; துணுக்குற்ற மனத்தன் – நடுக்கம் கொண்ட
மனத்தை உடையவனாய்; தோன்றல் – தோன்றலே; அழுங்கினை –
(நீ) மிக வருத்தம் கொண்டு உள்ளாய்; அடுத்தது – அண்மையில்;
என்னை வந்தது – உனக்கு என்ன தீங்கு வந்தது; என்று எடுத்துக்
கேட்டான் – என்று பல தடவை கேட்டான்; புழுங்கிய புண்ணினானும்
– துன்பம் உற்று வருந்துவதற்குக் காரணமாகிய புண்களை
உடையனாகிய இந்திரசித்தனும்; இனையன புகலலுற்றான் – இத்தகைய
சொற்களைச் சொல்லத் தொடங்கினான்.

———

இந்திரசித்தன் மறுமொழி

8288. ‘உருவின உரத்தை முற்றும் உலப்பு இல உதிரம் வற்றப்
பருகின அளப்பிலாத பகழிகள்; கவசம் பற்று அற்று
அருகின; பின்னை, சால அலசினென்; ஐய! கண்கள்
செருகின அன்றே, யானும் மாயையின் தீர்ந்திலேனேல்?–287-

ஐய! – ஐயனே; அளப்பில்லாத பகழிகள் – (இலக்குவன் என் மீது
தொடுத்த) மிகப்பலவாகிய அம்புகள்; உரத்தை முற்றும் உருவின –
என் மார்பு முழுவதும் பாய்ந்து ஊடுருவின்; உலப்பு இல உதிரம்
வற்றப் பருகின – குறைந்து அழிதல் இல்லாத (என் உடம்பில் உள்ள)
குருதியை வற்றிப் போகுமாறு பருகி விட்டன; கவசம் பற்று அற்று
அருகின – (என் மார்புக்) கவசங்கள் நெக்கு விட்டுப் பிளந்தன;
பின்னை சால அலசினென் – பின்பு மிகவும் தளர்ந்து போனேன்;
கண்கள் செருகின அன்றே – (என்) கண்கள் சொருகிவிட்டன
அல்லவா? யானும் – நானும்; மாயையின் தீர்ந்திலேனேல் –
மாயையினால் மறையாமல் இருந்து இருப்பேன் என்றால்; (இறந்தே
போய் இருப்பேன் என்றவாறு)

———-

8289. இந்திரன், விடையின் பாகன், எறுழ் வலிக் கலுழன் ஏறும்
சுந்தரன், அருக்கன் என்று இத் தொடக்கத்தார் தொடர்ந்த
போரில்,
நொந்திலென்; இனையதுஒன்றும் நுவன்றிலென்; மனிதன்
நோன்மை,
மந்தரம் அனைய தோளாய்! வரம்பு உடைத்து அன்று
மன்னோ.–288-

மந்தரம் அனைய தோளாய் – மந்தரப் பெருங்கிரியை ஒத்த
தோள்களை உடையவனே; இந்திரன் – தேவர் தலைவன் ஆகிய
இந்திரனும்; விடையின் பாகன் – வெள்ளேற்றை வாகனமாகக் கொண்ட
சிவபிரானும்; எறுழ் வலிக்கருடன் ஏறும் சுந்தரன் – மிக்க வலிமை
உடைய கருடனை ஊர்தியாகக் கொண்ட அழகிய திருமாலும்;
அருக்கன் – கதிரவனும்; என்று – என்று கூறும்; இத்தொடக்கத்தார் –
இத்தன்மை உடையவர்கள்; தொடர்ந்த போரில் – (என்மீது)
தொடங்கிய போரினால்; நொந்திலென் – (நான் சிறிது கூட) வருத்தம்
அடையவில்லை; இனையது ஒன்று நுவன்றிலேன் – இத்தகைய
சொற்கள் ஒன்றையும் (நான்) சொல்லியதும் இல்லை; மனிதன்
நோன்மை – மனிதனாகிய இலக்குவனுடைய வலிமை; வரம்பு
உடைத்து அன்று – ஓர் எல்லைக்கு உட்பட்டது அன்று.

———–

8290. ‘இளைவன் தன்மை ஈதால்; இராமனது ஆற்றல் எண்ணின்,
தளை அவிழ் அலங்கல் மார்ப! நம்வயின் தங்கிற்று
அன்றால்
விளைவு கண்டு உணர்தல் அல்லால், வென்றி மேல்
விளையும் என்ன
உளை;அது அன்று’ என்னச் சொன்னான், உற்றுளது
உணர்ந்திலாதான்.–289-

தளை அவிழ் அலங்கல் மார்ப – கட்டு அவிழ்ந்த மலர்களால்
ஆகிய மாலை அணிந்த மார்பினை உடையவனே!; இளையவன்
தன்மை ஈதால் – இளையவனாகிய இலக்குவன் (வலிமையின்) தன்மை
இதுவாகும்; இராமனது ஆற்றல் எண்ணின் – இராமனது வலிமையைப்
பற்றி எண்ணிப் பார்த்தால்; நம் வயின் தங்கிற்று அன்றால் – நம்
இடத்தில் (எண்ணிப் பார்க்கும்படி) பொருந்தியது ஆகாது; விளைவு
கண்டு உணர்தல் அல்லால் – இனிமேல் எங்ஙனம் நடக்குமோ என்பதைப் பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டுமே
தவிர; வென்றிமேல் விளையும் என்ன உளை – வெற்றி (இனி) மேல்
நமக்கு உண்டாகும் என்று எண்ணியுள்ளாய்; அது அன்று – அவ்வாறு
எண்ணுவது சரி அன்று; என்ன சொன்னான் – என்று சொன்னான்;
உற்றுளது உணர்ந்திலாதான் – (இலக்குவனும் வானரப் படைவீரரும்
கருடனால் நாகக்கணை நீங்கி எழுந்ததை) அறிந்திலாதவனாகிய
இந்திரசித்தன்.

———–

8291. ‘வென்றது, பாசத்தாலும், மாயையின் விளைவினாலும்;
கொன்றது, குரக்க வீரர்தம்மொடு அக் கொற்றத்தோனை;
நின்றனன், இராமன் இன்னும்; நிகழ்ந்தவா நிகழ்க,
மேன்மேல்’
என்றனன்; என்னக் கேட்ட இராவணன் இதனைச்
சொன்னான்;–290-

குரக்கு வீரர் தம்மொடு – வானர வீரர்கள் தம்முடன்;
அக்கொற்றத்தோனை – அந்த வெற்றியை உடைய இலக்குவனை;
கொன்றது – கொன்றதும்; வென்றது – (அவர்களை) வென்றதும்;
பாசத்தாலும் – நாகக்கணையாலும்; மாயையின் விளைவினாலும் –
மாயை (யைச் செய்த) செயலின் விளைவினாலும் ஆகும்; இன்னும்
இராமன் நின்றனன் – இன்னும் இராமன் (உயிருடன்) நின்றுள்ளான்;
மேன்மேல் நிகழ்ந்தவா நிகழ்க – (இனிமேல்) நடக்கிறபடி நடக்கட்டும்;
என்றனன் – என்று (இந்திரசித்தன்) கூறினான்; என்னக் கேட்ட
இராவணன் – என்று (அவன் கூறியதைக்) கேட்ட இராவணன்;
இதனைச் சொன்னான் – இச்சொற்களைக் கூறினான்.

————

இராவணன் உரை

8292. ‘வார் கழல் கால! மற்று அவ் இலக்குவன் வயிர வில்லின்
பேர் ஒலி அரவம் விண்ணைப் பிளந்திட, குரங்கு பேர்ந்த,
கார் ஒலி மடங்க, வேலை கம்பிக்க, களத்தின் ஆர்த்த
போர் ஒலி ஒன்றும், ஐய! அறிந்திலை போலும்! என்றான்.–291-

ஐய! – ஐயனே; வார்கழல் கால! – நீண்ட கழல் அணிந்த காலை
உடைய (இந்திரசித்தனே); மற்று அவ் இலக்குவன் வயிர வில்லின்
பேர் ஒலி அரவம் – அந்த இலக்குவனுடைய வலிமையான வில்லினது
மிகப்பெரிய ஒலி; விண்ணைப் பிளந்திட – ஆகாயத்தைப் பிளக்க;
குரங்கு பேர்த்த – குரங்குகளில் இருந்து எழுந்த பேரொலி; கார் ஒலி
மடங்க – மேகங்களின் இடியொலி கூடக் கீ்ழ்ப்படும்படி ஒலிக்க;
வேலை கம்பிக்க – கடல்கள் நடுங்கி நிற்க; களத்தின் ஆர்த்த –
போர்க்களத்தில் (இருந்து) ஆரவாரம் செய்த; பேர் ஒலி – மிகப்பெரிய
ஓசையை; அறிந்திலை போலும் என்றான் – (நீ) அறியவில்லை
போலும் என்று (இராவணன்) கேட்டான்.

————-

இந்திரசித்தன் வினா

8293. ‘ஐய! வெம் பாசம்தன்னால் ஆர்ப்புண்டார்; அசனி என்னப்
பெய்யும் வெஞ் சரத்தால் மேனி பிளப்புண்டார்; உணர்வு
பேர்ந்தார்;
“உய்யுநர்” என்ற உரைத்தது உண்மையோ? ஒழிக்க
ஒன்றோ?
“செய்யும்” என்று எண்ண, தெய்வம் சிறிது அன்றோ
தெரியின் அம்மா,’–292-

ஐய! – ஐயனே; வெம்பாசம் தன்னால் ஆர்ப்புண்டார் –
(இலக்குவனும் வானரப்படை வீரர்களும்) கொடிய நாகக்கணையினால்
கட்டுப்பட்டார்கள்; அசனி என்னப் பெய்யும் வெஞ்சரத்தால் –
(அதற்கு மேல்) இடியைப் போல் சொரிந்த (என்னுடைய) கொடிய அம்புகளால்; மேனி பிளப்புண்டார் –
உடல்கள் பிளக்கப்பட்டார்கள்; உணர்வு பேர்ந்தார் – உணர்வு
கெட்டார்கள்; உய்யுநர் என்று உரைத்தது உண்மையோ? –
(அத்தகைய நிலை அடைந்தவர்கள்) பிழைத்து உள்ளார்கள் (என்று
நீ கூறுவது) உண்மைதானா?; ஒழிக்க ஒன்றோ – (அவர்களை
நான் கட்டிய நாகக்கணை) ஒழித்து நீக்குவதற்கு உரிய ஒன்றா?;
செய்யும் என்று எண்ண – (வேறு ஒன்று அக்கணையை வலி
இழக்கச்) செய்யும் என்று; தெரியின் – எண்ணிப் பார்த்தால்; தெய்வம்
சிறிது அன்றோ அம்மா – இக்கணையை எனக்குக் கொடுத்த
தெய்வம் சிறுமை அடைந்து விடுமல்லவா?

————

களத்தில் நிகழ்ந்ததைத் தூதுவர் கூறல்

8294. இது உரை நிகழும் வேலை, எய்தியது அறியப் போன
தூதுவர், விரைவின் வந்தார், புகுந்து, அடி தொழுதலோடும்,
‘யாது அவண் நிகழ்ந்தது?’ என்ன இராவணன் இயம்ப,
ஈறு இன்று,
ஓதிய கல்வியாளர் புகுந்துளது உரைக்கலுற்றார்:–293-

ஈது உரை நிகழும் வேலை – இவ்வாறு (இராவணனுக்கும்
இந்திரசித்தனுக்கும் இடையே) உரையாடல் நடந்து வந்த நேரத்தில்;
எய்தியது அறியப்போன தூதுவர் – நடந்த நிகழ்ச்சிகளை அறிந்து
வரப்போன தூதுவர்கள்; விரைவின் வந்தார் – (போர்க்களத்தில்
இருந்து) விரைவாக (இராவணன் இருக்கும் இடம்) வந்து; புகுந்து –
சேர்ந்து; அடி தொழுதலோடும் – இராவணனுடைய அடிகளில் விழுந்து
வணங்கிய உடனே; அவண் நிகழ்ந்தது யாது என்ன இயம்ப –
போர்க்களத்தில் நடந்தது என்ன. என்று (இராவணன்) கேட்க; ஈறு
இன்றி ஓதிய கல்வியாளர் – எல்லை இல்லாது படித்துத் தேர்ந்த கல்வி
அறிவுடைய தூதர்கள்; புகுந்துளது – (அங்கு) நடந்த நிகழ்ச்சிகளை;
உரைக்கலுற்றார் – சொல்லத் தொடங்கினார்கள்.

—————-

8295. ‘பாசத்தால் பிணிப்புண்டாரை, பகழியால் களப்பட்டாரை,
தேசத்தார் அரசன் மைந்தன் இடை இருள் சேர்ந்து நின்றே,
ஏசத் தான் இரங்கி, ஏங்கி, “உலகு எலாம் எரிப்பென்”
என்றான்;-
வாசத் தார் மாலை மார்ப!-வான் உறை கலுழன் வந்தான்;–294-

வாசத்தார் மாலை மார்ப! – மணம் மிக்க மாலையை அணிந்த
மார்பினை உடையவனே! பாசத்தால் பிணிப்புண்டாரை – நாகக்
கணையால் கட்டுண்டு; பகழியால் களப்பட்டாரை – அம்புகளினால்
போர்க்களத்தில் மயங்கிப்பட்டவர்களை; தேசத்தார் அரசன் மைந்தன்
– கோசலநாட்டுப் பேரரசனாகிய தசரதனது மகனாகிய (இராமன்);
இடை இருள் சேர்ந்து நின்று – நள்ளிரவில் சேர்ந்து இருந்து; இரங்கி
ஏங்கி ஏசத்தான் – முதலில் பரிதவித்து அழுது ஏசிப்பேசி; உலகு
எலாம் எரிப்பென் என்றான் – பின்பு சினம் கொண்டு (எல்லா)
உலகங்களையும் எரித்து விடுவேன் என்றான்; வான் உறை கலுழன்
வந்தான் – அந்த நேரத்தில் ஆகாயத்தில் வாழுகிற கருடன் (அங்கு)
வந்தான்.

———–

8296. ‘அன்னவன் வரவு காணா, அயில் எயிற்று அரவம் எல்லாம்
சின்னபின்னங்கள் ஆன; புண்ணொடும் மயர்வு தீர்ந்தார்;
முன்னையின் வலியர் ஆகி, மொய்க் களம் நெருங்கி,
மொய்த்தார்;
இன்னது நிகழ்ந்தது’ என்றார். அரக்கன் ஈது எடுத்துச்
சொன்னான்;–295-

அன்னவன் வரவு காணா – அந்தக் கருடனது வரவைக் கண்டு;
அயில் எயிற்று அரவம் எல்லாம் – கூர்மையான பற்களை உடைய
பாம்புக்கணைகள் எல்லாம்; சின்ன பின்னங்கள் ஆன – சிறிய
துண்டுகளாய்ச் சிதறிப்போயின; புண்ணொடும் மயர்வு தீர்ந்தார் –
(அதனால் நாகக்கணையால் கட்டப்பட்டிருந்த இலக்குவனும் வானர
வீரர்களும்) தங்களுடைய புண்களும் தளர்ச்சியும் நீங்கப் பெற்று;
முன்னையின் வலியர் ஆகி – முன்பை விட வலிமை மிக்கவர்களாகி;
மொய்க்களம் நெருங்கி மொய்த்தார் – போர்க்களத்தை நெருங்கிச்
சூழ்ந்தார்கள்; இன்னது நிகழ்ந்தது என்றார் – இத்தகு செயல் (அங்கு) நடந்தது என்று (தூதுவர்கள்)
கூறினார்கள்; அரக்கன் ஈது எடுத்துச் சொன்னான் – அதற்கு
அரக்கனாகிய இராவணன் இவற்றை எடுத்துச் சொல்லத்
தொடங்கினான்.

———-

இராவணன் கூற்று

8297. “ஏத்த அருந் தடந் தோள் ஆற்றல் என் மகன் எய்த பாசம்
காற்றிடைக் கழித்துத் தீர்த்தான், கலுழனாம்; காண்மின்,
காண்மின்!
வார்த்தை ஈதுஆயின், நன்றால், இராவணன் வாழ்ந்த
வாழ்க்கை!
மூத்தது, கொள்கை போலாம்! என்னுடை முயற்சி எல்லாம்?–296-

ஏத்த அருந்தடந்தோள் ஆற்றல் – புகழ்ச்சிக்கு அடங்காத பரந்த
தோள் ஆற்றல் உடைய; என் மகன் – எனக்கு மகனாகிய
(இந்திரசித்தன்); எய்தபாசம் – செலுத்திய நாகக் கணையைக்;
கலுழனாம் காற்றிடைக் கழித்துத் தீர்த்தான் – கருடனென்பவன் (தன்
சிறகுக்) காற்றினால் நீக்கி அழித்து விட்டானாம்; காண்மின் காண்மின்
– (இந்த அதிசயத்தைக்) காணுங்கள் காணுங்கள்; வார்த்தை ஈது
ஆயின் – இந்த சொல் இவ்வாறு ஆயின்; இராவணன் வாழ்ந்த
வாழ்க்கை நன்றால் – இராவணன் (இதுவரை) வாழ்ந்த (வீர) வாழ்க்கை
அழகிதாய் இருக்கிறது; என்னுடை முயற்சி எல்லாம் – (பகைவர்களை
வென்று அழிக்க இதுவரை); நான் செய்த என்னுடைய முயற்சிகள்
முழுவதும்; கொள்கை மூத்தது போலாம் – கருத்து வகையால் முதுமை
அடைந்து விட்டது போலும்.

————–

8298. ‘உண்டு உலகு ஏழும் ஏழும் உமிழ்ந்தவன் என்னும் ஊற்றம்
கொண்டவன், என்னோடு ஏற்ற செருவினில், மறுக்கம்
கொண்டான்;
மண்டலம் திரிந்த போதும், மறி கடல் மறைந்த போதும்,
கண்டிலன்போலும், சொற்ற கலுழன், அன்று, என்னைக்
கண்ணால்?–297-

ஏழும் ஏழும் உலகு உண்டு உமிழ்ந்தவன் – பதினான்கு
உலகங்களையும் (அழிவுக்காலத்துத்) தன்னுள் அடக்கி (படைப்புக்
காலத்தில்) வெளிப்படுத்தியவன்; என்னும் ஊற்றம் கொண்டவன் –
என்னும் வலிமைச் சிறப்புக் கொண்டவனாகிய திருமால்; என்னோடு
ஏற்ற செருவினில் – (முன்பு) என்னுடன் எதிரிட்ட போரில்; மறுக்கம்
கொண்டான் – மனக்கலக்கம் கொண்டவனாய்; மண்டலம் திரிந்த
போதும் – (தோல்வி அடைந்து) சுற்றித் திரிந்த போதும்; மறிகடல்
மறைந்த போதும் – (அலைகள்) மடங்கி மேல் எழுகிற கடலினுள்
சென்று மறைந்த காலத்திலும்; சொற்ற கலுழன் – (அத்திருமாலின்
ஊர்தி என்று சொல்லப்படுகிற கருடன்); அன்று என்னைக் கண்ணால்
கண்டிலன் போலும் – அன்று என்னைக் கணணால் காணவில்லை
போலும்.

———-

8299. ‘கரங்களில் நேமி சங்கம் தாங்கிய கரியோன் காக்கும்
புரங்களும் அழியப் போன பொழுதில், என் சிலையின்
பொங்கி,
உரங்களில், முதுகில், தோளில் உறையுறு சிறையில், உற்ற
சரங்களும் நிற்கவேகொல், வந்தது, அவ் அருணன் தம்பி?–298-

கரங்களில் – தன் திருக்கைகளில்; நேமி – (தீயவர்களை அழிக்கும்
சுதர்சனம் என்னும்) சக்கரப் படையினையும்; சங்கம் –
(பகைவரைத்தன் பேரொலியால் குலையச் செய்யும்; பாஞ்ச சன்னியம்
என்ற) சங்கினையும் தாங்கிய கரியோன் – தாங்கிய கருநிறம்
உடையவனாகிய திருமால்; காக்கும் புரங்களும் – பாதுகாத்துக்
கொண்டிருக்கின்ற (வானுலகில் உள்ள அமராவதி முதலிய)
நகரங்களும்; அழியப் போன பொழுதில் – அழிந்து சிந்தும் படியாக
(நான் அங்கு போருக்குச்) சென்ற காலத்தில்; என் சிலையின் பொங்கி
– எனது வில்லில் இருந்து மிகுதியாக வெளிப்பட்டு (வந்த அம்புகள்);
உரங்களில் – (தன்னுடைய)மார்பிலும்; முதுகில் – முதுகிலும்; தோளில் – தோளிலும்; உறை
உறுசிறையில் – போர்வையாகப் பொருந்திய இறகுகளிலும்; உற்ற
சரங்களும் நிற்கவே கொல் – தைத்த அம்புகளும் இன்னும்
நிலைத்துத் தைத்திருக்கும் நிலையில் கூடவா?; அவ் அருணன் தம்பி
வந்தது – அந்த அருணனுடைய தம்பியாகிய கருடன் (பகைவருக்கு
உதவ) வந்தது.

———–

இராவணன் இந்திரசித்தனைப் போரிடக் கூறல்

8300. ‘ஈண்டு அது கிடக்க; மேன்மேல் இயைந்தவாறு இயைக!
எஞ்சி
மீண்டவர்தம்மைக் கொல்லும் வேட்கையே வேட்கும் அன்றே;
ஆண்தகை! நீயே இன்னும் ஆற்றுதி, அருமைப் போர்கள்;
காண்டலும், நாணும்’ என்றான்; மைந்தனும் கருத்தைச்
சொன்னான்;–299-

ஈண்டு அது கிடக்க – இப்பொழுது அது கிடக்கட்டும்; மேன் மேல்
இயைந்தவாறு இயைக – இனிமேல் நடப்பது நடக்கட்டும்; எஞ்சி
மீண்டவர் – (இப்போது) (நாகக் கணைக்குத்) தப்பி (உயிர்)
பிழைத்தவர்கள்; தம்மைக் கொல்லும் – தம்மைக் கொல்லுகிற;
வேட்கையே வேட்கும் அன்றே – விருப்பத்தையே விரும்புவோம்
அல்லவா? ஆண்தகை – (அதனால்) ஆண்மைப் பண்புகள்
நிறைந்தவனே; அருமைப் போர்கள் – அருமையான போர்களை;
இன்னும் நீயே ஆற்றுதி – மேலும் நீயே சென்று செய்க; காண்டலும்
நாணும் என்றான் – (அவ்வாறு போர் செய்து நீ அவர்களை
அழிப்பதைக்) கண்டபொழுது (அவர்கள் தப்பிப் பிழைக்க உதவிய
கருடன்) நாணங்கொள்ளுவான் என்று (இராவணன்) கூறினான்.
மைந்தனும் – அதற்கு மகனாகிய (இந்திரசித்தனும்); கருத்தைச்
சொன்னான் – (தன்) மனக் கருத்தை (இராவணனிடம்) சொன்னான்.

————

இந்திரசித்தன் மொழி

8301. ‘இன்று ஒருபொழுது தாழ்த்து, என் இகல் பெருஞ்
சிரமம் நீங்கி,
சென்று, ஒரு கணத்தில், நாளை, நான்முகன் படைத்த தெய்வ
வென்றி வெம் படையினால், உன் மனத் துயர் மீட்பென்’
என்றான்;
‘நன்று’ என, அரக்கன் போய், தன் நளிமலர்க் கோயில்
புக்கான்.

(இந்திரசித்தன் இராவணனைப் பார்த்து) இன்று ஒரு பொழுது
தாழ்த்து – இன்று ஒரு நாள் காலம் தாழ்த்தி; என் இகல் பெரும்
சிரமம் நீக்கி – எனக்குப் போரினால் ஏற்பட்ட பெரு வருத்தத்தை
நீக்கிக்கொண்டு; நாளை – நாளைக்கு; ஒரு கணத்தில் சென்று – ஒரு
கண நேரத்தில் (போர்க்களம்) சென்று; நான்முகன் படைத்த – பிரமன்
உருவாக்கிப் படைத்த; தெய்வ – தெய்வத்தன்மை பொருந்திய;
வென்றி வெம் படையினால் – வெற்றிக்கு உரிய கொடிய கணையால்;
உன் மனத்துயர் மீட்பென் என்றான் – (பகைவர்களைக் கொன்று)
உன் மனத்தில் ஏற்பட்டுள்ள துன்பத்தைப் போக்குவேன் என்று
கூறினான்; நன்று என அரக்கன் போய் – நல்லது என்று கூறிவிட்டு
அரக்கனாகிய (இராவணன்) போய்த்; தன் நளிமலர்க் கோயில்
புக்கான் – தன்னுடைய சிறந்த மலர் மாலைகளால் அழகு
படுத்தப்பட்டிருந்த அரண்மனைக்குச் சென்று சேர்ந்தான்.

————

மிகைப் பாடல்கள்

எரி முகப் பகழி மாரி தொடுத்து, இகல் அரக்கன் எய்தான்;
எரி முகப் பகழி மாரி தொடுத்து, அவை இறுத்தான், எந்தை,
உரும் இனப் பகழி மாரி உருத்து விட்டு, அரக்கன் ஆர்த்தான்;
உரும் இனப் பகழி மாரி உருத்து விட்டு, இளவல் கொன்றான். 106-1

நெருக்கி மற்று அனந்த கோடி நெடுங் கணை அரக்கன் கோத்தான்;
நெருக்கி மற்று அனந்த கோடி நெடுங் கணை நிமலன் மாய்த்தான்;
முருக்கின் உற்று அனந்த கோடி முகைக் கணை அரக்கன் மொய்த்தான்;
முருக்கின் உற்று அனந்த கோடி முகைக் கணை முடித்தான், மொய்ம்பன் 106-2

சிந்து வாளி செறிதலும், சேவகன் ஐந்து நூறு கடுங்
கணையால்; அவன் உந்து தேரை ஒறுத்தனன்;
வெய்யவன் வந்து தேர் ஒன்றின் வல்லையில் ஏறினான். 128-1

அழித்தனன் தடந் தேர் என்று அழன்று, தீ விழித்தனன்;
கடு நெஞ்சம் வெகுண்டு எழத் தெழித்தனன்;
சிலையால் திறல் வாளிகள் கொழித்தனள்;
இமையோர் மெய் குலுங்கினார். 148-1

அங்கதன் தடந் தோளினும் மார்பினும்
புங்க வாளி புகப் புக, தேர் எதிர்,
சிங்க ஏறு அனையான் திரள் தோள்வரை
மங்க, வேறொர் மராமரம் வீசினான். 148-2

மல் திண் தோளின் அடித்த மராமரம்
இற்று நூறு திறத்தது, இமைப்பிலோர்
பொன் திண் தேர்மிசைத் தாவினன்
பொங்கெலி முற்று நாளில் முயற்சி முரஞ்சவே. 148-3

கண்ட வாலிதன் காதலனும், கனல்
விண்டதாம் என வெஞ் சினம் உற்றவன்
மண்டு தேர்மிசையில், குதியா வலி
கொண்டு, வான் இடி ஏறு எனக் குத்தினான். 148-4

குத்தி, மற்று அவன் கொய் உளை மாப் பரி
பத்தி பத்தியின் வீழ, பரிந்து எதிர்
தத்தி, வல் வில் தடக் கையினால், சரம்
வித்துராமுனம் வீழ்த்தினன், தேர் அரோ. 148-5

மாறு ஓர் தேரின் மடங்கல் என, கனன்று
ஏறினான், சரம் எண்-இரண்டு ஏவினான்;
ஊறு சோரி சொரிய, உயக்கம் உற்று,
ஆறினான் கடிது, அங்கதன் ஆண்மையான். 148-6

கோல் கொள் ஆளும் பரியும் குழம்பதாய்,
காலின் நூறி, கரங்களின் மற்று அவன்
தாலு மூலத்து அடிப்ப, தனு வலான்,
மால் உழந்தவர் போல மயங்கினான். 148-7

பல் ஆயிரத்தின் முடியாத பக்கம் அவை வீச வந்த படர்
கால் செல்லா நிலத்தின் அருளோடு செல்ல, உடல் நின்ற வாளி சிதறுற்று,
எல்லாம் அவித்தும் உணர்வோடும் எண்ணி, அறனே விளைக்கும் உரவோன்,
வல்லான் ஒருத்தன், இடையே படுத்த வடுஆன, மேனி வடுவும். 264-1

பறவை நாயகன் தான் ஏக, படர் உறு துயரம் நீங்கி,
கறவையும் கன்றும் போலக் களிக்கின்ற மனத்தர் ஆகி,
இறைவனும் இளைய கோவும் யாவரும் எழுந்து நின்றார்;
மறை ஒரு நான்கும், மண்ணும், வானமும், மகிழ்ந்த மாதோ. 270-1

இரு நிலம் கிழிய, பாயும் எறி கடல் இரைப்புத் தீர, பரவும் எண் திசையைத்
தாங்கும் பகட்டினம் இரியல் போக, கரு வயிறு உடைந்து சிந்தி
அரக்கியர் கலங்கி வீழ, அரு வரை அண்ட கோளம்
பிளக்க, நின்று, அனுமன் ஆர்த்தவன். 273-1

——————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ கம்ப ராமாயணம்/யுத்த காண்டம்/17-அதிகாயன் வதைப் படலம்–

November 2, 2020

அதிகாயனது இறப்பைக் கூறும் படலம் இது. இராவணன் மக்கள்
மூவர். அக்ககுமாரன், அதிகாயன் இந்திரசித்தன் என்பவர் அவர்கள்.
அதிகாயன் – இராவணனுக்கும் தானிய மாலிக்கும் பிறந்த மகன்.
அதிகாயன் என்ற சொல்லுக்குப் பெருந்தோற்றம் உள்ள உடல்
படைத்தவன் என்ற பொருள். காயம் – உடம்பு. அதி – மிகப்பெரிய
என்க.

இராவணன் அமைச்சரைக் கடிதல்

கொழுந்து விட்டு அழன்று எரி மடங்கல் கூட்டு அற,
எழுந்து எரி வெகுளியான், இரு மருங்கினும்
தொழும் தகை அமைச்சரைச் சுளித்து நோக்குறா,
மொழிந்தனன், இடியொடு முகிலும் சிந்தவே: 1-

கொழுத்து விட்டு அழன்று எரி – கொழுத்து விட்டு வெப்பத்தோடு
எரிகின்ற; மடங்கல் கூட்டு அற – ஊழித்தீயையும் ஒப்பென்று
சொல்லா அளவு; எழுந்து எரி வெகுளியான் – மேன் மேலும் எழுந்து
எரிகின்ற சினத்தை உடையவன் ஆகிய இராவணன்; இரு மருங்கினும்
தொழும் தகை அமைச்சரை – (தன்) இரு பக்கத்திலும் இருந்து
தொழுகின்ற தன்மை உள்ள அமைச்சர்களை; சுளித்து நோக்குறா –
மிக்க சினத்தோடு பார்த்து; இடியொடு முகிலும் சிந்த மொழிந்தனன் –
இடியோடு மேகங்களும் சிதறிக் கீழே விழுமாறு பெருங்குரல் படப்
பேசலானான்.

————

‘ஏகுதிர், எம் முகத்து எவரும்-என்னுடை
யோக வெஞ் சேனையும், உடற்றும் உம்முடைச்
சாகரத் தானையும், தழுவச் சார்ந்து, அவர்
வேக வெஞ் சிலைத் தொழில் விலக்கி வீட்டிரால். 2-

என்னுடை யோக வெஞ்சேனையும் – என்னுடைய சூழ்ச்சித் திறம்
மிக்க கொடிய படையும்; உம்முடைச் சாகரத்தானையும் –
உங்களுடைய கடல் போல் பரந்த பெருஞ்சேனையும்; தழுவச் சார்ந்து
– ஒன்றாகச் சேர்ந்து; அவர் உடற்றும் – அப்பகைவர்கள் மாறுபட்டுச்
செய்யும்; வேக வெஞ்சிலைத்தொழில் விலக்கி வீட்டிரால் – மிகு
வேகத்தோடு கூடிய கொடுமையான வில்லின் தொழிலை விலக்கி
மீளத்தக்கவர் அல்லர் ஆயினீர்; எவரும் எம் முகத்து ஏகுதிர் –
(அதனால்) யாவரும் என் முகத்து எதிரில் நிற்காமல் (அப்பால்)
சென்று விடுங்கள்.

————–

‘”எடுத்தவர் இருந்துழி எய்தி, யாரையும்
படுத்து, இவண் மீடும்” என்று உரைத்த பண்பினீர்!
தடுத்தலீர் எம்பியை; தாங்ககிற்றிலீர்;
கொடுத்தலீர், உம் உயிர்; வீரக் கோட்டியீர். 3-

எடுத்தவர் இருந்துழி எய்தி – நம்மேல் போர் எடுத்தவரான
(இராமலக்குவர்) இருக்கும் இடம் சென்று; யாரையும் – எல்லோரையும்;
படுத்து இவண் மீடும் – அழித்து இங்கு மீண்டு வருவோம்; என்று
உரைத்த பண்பினீர் – என்று கூறிய பெரு வீரப் பண்பு
உடையவர்களே; எம்பியைத் தடுத்திலீர் – என் தம்பியை இறப்பில்
இருந்து தடுத்தீர்களில்லை; தாங்ககிற்றிலீர் – அவனுக்குத் தீங்கு
நேராமல் காப்பாற்றினீருமல்லீர்; உம் உயிர் கொடுத்திலீர் –
அவனுக்காக உங்கள் உயிரைக் கொடுத்தீர்களுமில்லை; வீரக்
கோட்டியீர் – (அப்படியிருந்தும் நீர்) வீரர் வரிசையில் உள்ளீர்
என்றபடி.

————

‘உம்மையின் நின்று, நான் உலகம் மூன்றும் என்
வெம்மையின் ஆண்டது; நீர் என் வென்றியால்
இம்மையில் நெடுந் திரு எய்தினீர்; இனிச்
செம்மையின் இன் உயிர் தீர்ந்து தீர்திரால். 4-

உம்மையின் நின்று – நெடுங்காலத்துக்கு முன்னிருந்து; நான்
உலகம் மூன்றும் ஆண்டது – நான் மூன்று உலகங்களையும் வென்று
அடிப்படுத்தி ஆண்டது; என் வெம்மையின் – எனது பெரு
வலிமையால் (ஆகும்); நீர் என் வென்றியால் – நீங்கள் எனது வெற்றி
காரணமாக; இம்மையில் நெடுந்திரு எய்தினீர் – இப்பிறவியில் மிக்க
செல்வத்தைப் பெற்றீர்; இனிச் செம்மையின் இன் உயிர் தீர்ந்து
தீர்திரால் – இனிமேல் ஆவது செம்மையான (வீரப் பண்பு கொண்டு)
உங்கள் இனிமையான உயிரைக் கொடுத்து கடமையைத்
தீர்த்தவராமின்.

————–

7731. ‘”ஆற்றலம்” என்றிரேல் என்மின்; யான், அவர்
தோற்று, அலம்வந்து உகத் துரந்து, தொல் நெடுங்
கூற்று அலது உயிர் அது குடிக்கும், கூர்த்த என்
வேல் தலை மானுடர் வெரிநில் காண்பெனால்.–5-

ஆற்றலம் என்றிரேல் என்மின் – யாம் பகைவர் முன் சென்று
போரிட வல்லமையில்லோம் என்று கூறுவீ்ர்களாயின் அதையும்
சொல்லுங்கள்; அவர் தோற்று அலம் வந்து உகத் – அப்பகைவர்
தோற்று வலி கெட்டு வருந்துதல் அடையுமாறு; யான் தொல்
நெடுங்கூற்று அலது உயிர் அது குடிக்கும்- நான் பழைய நெடிய
இயமன் அல்லாது பிறர் உயிரைக் குடிக்கும் வலிமை உள்ள; கூர்த்த
என் வேல்தலை மானுடர் வெரிநில் உகத்துரந்து – கூர்மையான என்
வேலின் நுனி மானிடர் இருவரின் முதுகில் வெளிப்படுமாறு செலுத்திக்;
காண்பெனால் – காண்பேன்.

————–

7732. ‘அல்லதும் உண்டு, உமக்கு உரைப்பது: “ஆர் அமர்
வெல்லுதும்” என்றிரேல், மேல் செல்வீர்; இனி,
வல்லது மடிதலே என்னின், மாறுதிர்,
சொல்லும், நும் கருத்து’ என முனிந்து சொல்லினான்.–6-

அல்லதும் உமக்கு உரைப்பது உண்டு – இவையே அல்லாமல்
உமக்கு உரைப்பது வேறு ஒன்றும் உண்டு; ஆர் அமர் வெல்லுதும்
என்றிரேல் மேல் செல்வீர் – கொடிய போரில் வெற்றி பெறுவோம்
என்றீராயின் (போர்) மேல் செல்லுங்கள்; இனிவல்லது மடிதலே
என்னின் – இனி இயல்வது (போரில்) இறத்தலே என்றால்; மாறுதிர் –
மீள்வீராக; நும் கருத்து சொல்லும் – நுமது கருத்து யாது எனச்
சொல்லுங்கள்; என முனிந்து சொல்லினான் – எனச் சினந்து
கூறினான்.

———–

அதிகாயன் தன் வீரத்தை மிகுத்துக் கூறுதல்

கலி விருத்தம் (வேறு)

7733. நதி காய் நெடு மானமும் நாணும் உறா,
மதி காய் குடை மன்னனை வைது உரையா,
விதி காயினும் வீரம் வெலற்கு அரியான்
அதிகாயன் எனும் பெயரான் அறைவான்.–7-

விதிகாயினும் வீரம் வெலற்கு அரியான் – விதியே சினந்தாலும்
வெல்லமுடியாத வீரத்தை உடைய; அதிகாயன் எனும் பெயரான் –
அதிகாயன் என்னும்; பெயரை உடையவன்; நதி காய் நெடுமானமும்
நாணும் உறா – ஆற்று நீரும் சுடுமாறு பெரிய அவமானத்தால்
தோன்றிய கடுஞ்சினமும் நாணமும் அடைந்து. மதி காய் குடை
மன்னனை – மதியை வெல்லும் வெண் கொற்றக் குடையை உடைய
இராவணனை; வைது உரையா அறைவான் – பழித்துக் கூறிக் கூறத்
தொடங்கினான்.

———-

7734. ‘வான் அஞ்சுக; வையகம் அஞ்சுக; மா-
லான் அஞ்சு முகத்தவன், அஞ்சுக; “மேல்
நான் அஞ்சினேன்” என்று, உனை நாணுக; போர்
யான் அஞ்சினென் என்றும் இயம்புவதோ?–8-

வான் அஞ்சுக – வானத்தில் உள்ள தேவர்கள அஞசட்டும்;
வையகம் அஞ்சுக – மண்ணுலக மாந்தர் அஞ்சட்டும்; மாலான் –
திருமாலும்; அஞ்சு முகத்தவன் அஞ்சுக – ஐந்து முகத்தை உடைய
சிவபிரானும் அஞ்சுக; மேல் நான் அஞ்சினென் என்று – மேலும்
நான் போருக்கு அஞ்சினேன் என்று உன்னைப் பற்றி நீயே
நாணப்படுக; போர்யான் அஞ்சினென் என்றும் இயம்புவதோ –
போருக்கு நான் அஞ்சினேன் என்று கூறுவது தகுதியுடையதா?

———–

7735. வெம்மைப் பொரு தானவர் மேல் வலியோர்-
தம்மைத் தளையில் கொடு தந்திலெனோ?
உம்மைக் குலையப் பொரும் உம்பரையும்
கொம்மைக் குய வட்டணை கொண்டிலெனோ?–9-

வெம்மைப் பொருதானவர் மேல் வலியோர் – கொடுமையாகப்
போர் செய்கின்ற தானவரை விட வலிமையுடையவர்; தம்மைத்
தளையில் கொடு தந்திலனோ – தம்மைத் தளையிட்டுப் பிணித்து
வந்து (உன்னிடம்) கொடுத்திலனோ? உம்மைக் குலையப் பொரும்
உம்பரையும் – உம்மையும் நடுங்குமாறு போர் செய்யும் (வலி
படைத்த) தேவர்களையும்; கொம்மைக்குய வட்டணை – திரட்சியான
வாளால் இடம் வலமாகச் சாரிதிரிந்து; கொண்டிலனோ – பொருது
வெற்றி கொண்டிலனோ.

———

7736. ‘காய்ப்புண்ட நெடும் படை கை உளதாத்
தேய்ப்புண்டவனும், சில சில் கணையால்
ஆய்ப்புண்டவனும், அவர் சொல் வலதால்
ஏய்ப்புண்டவனும், என எண்ணினையோ?–10-

காய்ப்புண்ட நெடும் படைகை உளதாத் – காய்ச்சிக் கூர்மையாக
அடிக்கப் பெற்ற நெடிய படைக்கலங்கள் தன் கையில் உள்ளதாக;
தேய்ப்புண்டவனும் – தரையில் தேய்க்கப் பட்டு இறந்த
அக்ககுமாரனும்; சில சில் கணையால் ஆய்ப்புண்டவனும் – சில
வலியற்ற அம்புகளால் உயிரொடுங்கியவனான கும்பகருணனும்; அவர்
சொல் வலதால் ஏய்ப்புண்டவனும் – இராம இலக்குவரது புகழின்
வல்லமையால் ஏய்க்கப்பட்டவனான வீடணனும்; என எண்ணினையோ
– என்று (என்னை) எண்ணினாயோ.

————–

அதிகாயன் வஞ்சினம் கூறி, போருக்குச் செல்லல்

7737.

‘உம்பிக்கு உயிர் ஈறு செய்தான் ஒருவன்
தம்பிக்கு உயிர் ஈறு சமைத்து, அவனைக்
கம்பிப்பது ஓர் வன் துயர் கண்டிலனேல்,
நம்பிக்கு ஒரு நன் மகனோ, இனி நான்?–11-

உம்பிக்கு உயிர் ஈறு செய்தான் – உன் தம்பியின் உயிருக்கு இறுதி
செய்தவனான; ஒருவன் தம்பிக்கு உயிர் ஈறு சமைத்து – ஒருவனாகிய
(இராமனின்) தம்பியின் உயிருக்கு அழிவு செய்து; அவனைக்
கம்பிப்பது ஓர் வன்துயர் கண்டிலனேல் – அவனுக்கு நடுக்கம் தரும்
ஒப்பற்ற துன்பத்தைச் செய்யாமல் போவேன் ஆயின்; இனி நான்
நம்பிக்கு ஒரு நன்மகனோ – இனி நான் ஆடவரிற் சிறந்த உனக்கு
ஒப்பற்ற நல்ல மகனாவேனோ?

————

7738. ‘கிட்டிப் பொருது, அக் கிளர் சேனை எலாம்
மட்டித்து, உயர் வானரர் வன் தலையை
வெட்டித் தரை இட்டு, இரு வில்லினரைக்
கட்டித் தருவென்; இது காணுதியால்.–12-

கிட்டிப் பொருது – நெருங்கிப் போர் செய்து; அக்கிளர் சேனை
எலாம் மட்டித்து – அந்த (கும்பகருணன் மரணத்தால்) கிளர்ச்சி
கொண்டுள்ள குரங்குப் படையை எல்லாம் அழித்து; உயர் வானரர்
வன் தலையை வெட்டித் தரை இட்டு – சிறந்த வானரத்
தலைவர்களின் வலிய தலைகளை எல்லாம் வெட்டித் தரையில்
போட்டு; இரு வில்லினரைக் கட்டித் தருவென் – இரு
வில்லேந்திகளான இராம லக்குவரைக் கட்டிக்கொண்டு வந்து
தருவேன்; இது காணுதியால் – இது நடைபெறப் போகிற செயல்
இதனை நீ காண்பாயாக.

————

7739.

‘”சேனைக் கடலோடு இடை செல்க” எனினும்,
யான் இப்பொழுதே, “தனி ஏகு” எனினும்
தான் ஒத்தது சொல்லுதி; தா விடை’ என்-
றான்; இத் திறம் உன்னி அரக்கர் பிரான்,–13-

சேனைக் கடலோடு இடை செல்க எனினும் – படைக் கடல் சூழ
இடையில் (போருக்குச்) செல்க என்று கட்டளை இட்டாலும் தனி ஏகு
எனினும் – அவ்வாறன்றித் தனியாகவே (போருக்குச்) செல் என்று
கட்டளை இட்டாலும்; யான் இப்பொழுதே – நான் இக்கணத்தே
(அதுசெய்வேன்); தான் ஒத்தது சொல்லுதி – இரண்டனுள்
பொருத்தமானதைச் சொல்வாய்; விடை தா என்றான் – விடை தருக
(என்று அதிகாயன்) கூறினான்; இத்திறம் உன்னி அரக்கர் பிரான் –
இவ்வாறு தன் மகன் கூறிய தன்மையை எண்ணி அரக்கர்
தலைவனாகிய இராவணன் ஏவினனால் (15) என்பதோடு முடியும்.

————-

7740. ‘சொன்னாய், இது நன்று துணிந்தனை; நீ
அன்னான் உயிர் தந்தனையாம் எனின், யான்,
பின் நாள், அவ் இராமன் எனும் பெயரான்-
தன் ஆர் உயிர் கொண்டு சமைக்குவெனால்.–14-

நீ துணிந்தனை நன்று இது சொன்னாய் – நீ மனத்தில்
துணிந்தனையாகி நல்ல சொற்களாகிய இவற்றைச் சொன்னாய்;
அன்னான் உயிர் தந்தனையாம் எனின் – அந்த இலக்குவனுடைய
உயிரை வாங்கித் தந்தாய் என்றால்; யான் பின்நாள் – நான் பின்
வருநாளில்; அவ் இராமன் எனும் பெயரான் – அந்த இராமன்
என்னும் பெயர் கொண்டவனுடைய; தன் ஆர் உயிர் கொண்டு
சமைக்குவெனால் – அருமையான உயிரைக் கொண்டு (என்பகை)
முடிப்பேன்.

————-

7741. ‘போவாய் இதுபோது-பொலங் கழலோய்!-
மூவாயிர கோடியரோடு, முரண்
கா ஆர் கரி, பரி காவலின்’ என்று,
ஏவாதன யாவையும் ஏவினனால்–15-

பொலங்கழலோய் – பொன்னால் செய்யப்பட்ட வீரக் கழல்
அணிந்தவனே; முரண் மூவாயிர கோடியரோடு – வலிமை உள்ள
முவாயிரங்கோடி காலாட்படை; கா ஆர் கரி – காத்தலைப் பொருந்திய
யானைப்படை; தேர் – தேர்ப்படை; பரி – குதிரைப் படை; காவலின்
போவாய் இது போது – (ஆகியவை) காவல் செய்யப் (போர்க்களம்)
போவாய் இப்போது; என்று ஏவாதன யாவையும் ஏவினனால் – என்று
கூறி (இதுவரை) போருக்கு அனுப்பாத பெரும் படையை
(அதிகாயனுடன் செல்க என) ஏவினான்.

———-

7742. கும்பக் கொடியோனும், நிகும்பனும், வேறு
அம் பொன் கழல் வீரன் அகம்பனும்,- உன்
செம் பொன் பொலி தேர் அயல் செல்குவரால்
உம்பர்க்கும் வெலற்கு அரியார் உரவோர்.–16-

உம்பர்க்கும் வெலற்கு அரியார் உரவோர் – தேவர்களாலும்
வெல்லுவதற்கு முடியாத அருமையானவராகிய பெருவலி படைத்த;
கும்பக் கொடியோனும் – கும்பன் என்ற பெயர் படைத்த
கொடியவனும்; நிகும்பனும் – நிகும்பன் என்பவனும்; வேறு
அம்பொன் கழல் வீரன் அகம்பனும் – (இவர்களில் இருந்து)
வேறுபட்ட அழகிய பொன்னால் ஆகிய கழலணிந்த வீரனாகிய
அகம்பனும்; உன் செம்பொன் பொலி தேர் அயல் செல்குவரால் –
உன்னுடைய சிவந்த பொன் போல் அழகு பொலிகிற தேருக்கு
அருகில் (பாதுகாப்பவர்) ஆகச் செல்வார்கள்.

கும்பன், நிகும்பன் இருவரும் கும்பகருணனின் மகக்ள். அகம்பன்
– இவன் சுமாலி என்ற அரக்கனுடைய மகன்.

———-

7743. ‘ஓர் ஏறு சிவற்கு உளது ஒப்பு உளவாம்
வார் ஏறு வயப் பரி ஆயிரம், வன்
போர் ஏறிட ஏறுவ, பூணுறு திண்
தேர் ஏறுதி; தந்தனென்-வெந் திறலோய்!–17-

வெந்திறலோய் – கொடிய வலிமை படைத்தவனே! போர் ஏறிட
ஏறுவ – போர்க்களத்தில் மேன்மேற் செல்வன; சிவற்கு உளது
ஓர் ஏறு ஒப்பு உளவாம் – சிவபிரானுக்கு உளதாகிய ஒப்பற்ற
இடபத்தை ஒப்பாக உள்ளனவாகிய; வார் ஏறுவன் வயப்பரி – வார்
பூண்ட வலிய குதிரைகள்; ஆயிரம் பூணுறு திண்தேர் ஏறுதி –
ஆயிரம் பூட்டப்பட்ட வலிய தேரில் ஏறுக, தந்தனென் – அதனை
உனக்குத் தந்தேன்.

———

7744. ‘ஆம் அத்தனை மாவுடை அத்தனை தேர்
சேமத்தன பின் புடை செல்ல, அடும்
கோ மத்த நெடுங் கரி கோடியோடும்,
போம், அத்தனை வெம் புரவிக் கடலே,’–18-

ஆம் அத்தனை மாவுடை அத்தனை தேர் – பொருந்திய
அத்தனை (ஆயிரம்) குதிரைகள் பூண்ட அத்தனை தேர்களும்;
சேமத்தன பின்புடை செல்ல – பாதுகாவலாகப் பின்னும்
பக்கங்களிலும் செல்ல; அடும் கோ மத்த நெடுங்கரி – கொல்லும்
தன்மை உள்ள தலைமைத் தன்மை வாய்ந்த மதம் பொருந்திய
நெடிய யானைகள்; கோடியொடும் – கோடியோடு; அத்தனை
வெம்புரவிக் கடலே போம் – அத்தனை கொடிய புரவிக் கடலும் (உன்
உடன்) வரும்.

———–

7745. என்றே விடை நல்க, இறைஞ்சி எழா
வன் தாள் வயிரச் சிலை கைக் கொடு, வாள்
பொன் தாழ் கவசம் புகுதா, முகிலின்
நின்றான்; இமையோர்கள் நெளிந்தனரால்.–19-

என்றே விடை நல்க – என்று (இராவணன் கூறி) விடை தர;
இறைஞ்சி எழா – (அதிகாயன்) வணங்கி எழுந்து; வன்தாள் வயிரச்
சிலை கைக்கொடு – வலிய முனையை உடைய உறுதியான
வில்லைக் கையில் கொண்டு; வாள் பொன் தாள் கவசம் புகுதா –
ஒளி பொருந்திய பொன்னால் செய்யப்பட்ட கவசத்தினுட்புகுந்து,
முகிலின் நின்றான் – கருமுகில் போல் நின்றான்; இமையோர்கள்
நெளிந்தனரால் – (அத்தோற்றத்தைப் பார்த்து) தேவர்கள் நடுங்கி
உடல் தளர்ந்தனர்.

———-

7746. பல் வேறு படைக்கலம், வெம் பகலோன்
எல் வேறு தெரிப்ப, கொடு ஏகினனால்,
சொல் வேறு தெழிக்குநர் சுற்றுற,-மா –
வில் வேறு தெரிப்புறும் மேனியினான்.–20-

மாவில் வேறு தெரிப்புறும் மேனியினான் – யானையினும்
(வேறாக) பெரிதாகத் தோன்றும் உடலை உடையவனான அதிகாயன்;
சொல் வேறு தெழிக்குநர் சுற்றுற – கொடுஞ் சொற்களால் அதட்டுகிற
வீரர் (தன்னைச்) சூழ்ந்துவர; பல்வேறு படைக்கலம் – பலவகையான
வேறுபட்ட படைக்கலங்கள்; வெம்பகலோன் எல்வேறு தெரிப்ப –
கடுமையான கதிரவன் ஒலியைக் காட்டிலும் வேறாக ஒளி
வீசுபவைகளைக்; கொடு ஏகினனால் – (கையில்) கொண்டு சென்றான்.

———-

அதிகாயனுடன் சென்ற படைகள்

7747. இழை, அஞ்சன, மால் களிறு, எண் இல் அரி
முழை அஞ்ச முழங்கின; மும் முறை நீர்
குழை அஞ்ச முழங்கின, நாண் ஒலி; கோள்
மழை அஞ்ச முழங்கின, மா அரசே.–21-

இழை அஞ்சன மால் களிறு – முகபடாம் பூண்ட மைக்கரு
நிறமுடை மதம் மிக்க யானைகள்; முழை அஞ்ச முழங்கின எண்
இல் அரி – குகையில் வாழ்ந்து (கேட்போர்) அஞ்சுமாறு கர்ச்சனை
செய்யும் எண்ணிலா அளவுடைச் சிங்கங்கள்,நாண் ஒலி, மும்முறை
நீர் குழை அச்ச முழங்கின – (ஆகியவற்றோடு) வில்லின் நாணைத்
தெரிக்கும் ஓசை கடல் நீரும் குழைந்து அஞ்சுமாறு முழங்கின;
மாமுரசு கோள் மழை அஞ்ச முழங்கின – பெரிய முரசங்கள் (நீரைக்)
கொள்ளுதல் உடைய மேகங்களும் அஞ்சும்படி முழங்கின.

———

7748. ஆர்த்தார், நெடு வானம் நடுங்க; அடிப்
பேர்த்தார், நிலமாமகள் பேர்வள் என;
தூர்த்தார் நெடு வேலைகள், தூளியினால்;
வேர்த்தார், அது கண்டு விசும்பு உறைவோர்.–22-

நெடுவானம் நடுங்க ஆர்த்தார் – (அதிகாயன் உடன் சென்ற
வீரர்கள் நெடிய வானமும் நடுங்குமாறு பேரொலி செய்தனர்; நிலமா
மகள் பேர்வள் என அடிப் பேர்த்தார் – பெரிய நிலமாகிய பெண்
இடம் பெயர்வள் என்னுமாறு காலை மாறி மாறி வைத்தனர்; நெடு
வேலைகள் தூளியினால் தூர்த்தார் – பெரிய கடல்களை (காலடித்)
தூசியினால் தூர்த்து நிரப்பினர்; அது கண்டு – அச்செயல்களைக்
கண்டு; விசும்பு உறைவோர் வேர்த்தார் – ஆகாயத்தில் வாழ்பவரான
தேவர்கள், உடல் வியர்த்தார்.

————

7749. அடியோடு மதக் களி யானைகளின்
படியோடு நிகர்த்தன, பின் புறம், முன்-
தடியோடு துடக்கிய தாரைய, வெண்
கொடியோடு துடக்கிய, கொண்மு எலாம்.–23-

தடியோடு துடக்கிய தாரைய – தடித்து (மின்னும்) மின்னலோடு
பொருந்திய ஒழுங்கை உடைய; வெண் கொடியோடு துடக்கியகொணமு
எலாம் – வெண்ணிறக் கொடியோடு துடக்குண்டு செல்லும் மேகங்கள்
எல்லாம்; முன் அடியோடு மதக்களி யானைகளின் – முன்னே
விரைவாக அடியிட்டு ஓடுகிற மதக் களிப்பு மிக்க ஆண் யானைகளின், பின்புறம் பிடியோடு
நிகர்த்தன – பின்புறம் செல்லும் பெண் யானைகளை ஒத்தன;

————

7750. தாறு ஆடின மால் கரியின்புடை தாழ்
மாறாடின மா மதம் மண்டுதலால்,
ஆறு ஆடின, பாய் பரி, யானைகளும்;
சேறு ஆடின, சேண் நெறி சென்ற எலாம்.-24-

தாறு ஆடின மால்கரியின் – அங்குசத்தால் பலமுறை குத்தப்பட்ட
மத மயக்கம் கொண்ட யானைகளின்; புடை தாழ் மாமதம்
மண்டுதலால் – பக்கங்களில் (இரு கன்னங்களில்) இருந்து பெருகி
வருகின்ற மதநீர் ஒன்றின் ஒன்று மிக்குப் பெருகி நிறைதலால்;
பாய்பரி யானைகளும் ஆறு ஆடின – பாய்ந்து செல்லும்
தன்மையுள்ள குதிரைகளும் யானைகளும் (அந்த மதநீர் ஆற்றில்)
குளித்தன; சேண் நெறி சென்ற எலாம் சேறு ஆடின – (அதனால்)
(அவை) சென்ற நெடு வழி எல்லாம் சேறாகி விட்டன.

————–

7751. தேர் சென்றன, செங் கதிரோனொடு சேர்
ஊர் சென்றனபோல்; ஒளி ஓடைகளின்
கார் சென்றன, கார் நிரை சென்றனபோல்;
பார் சென்றில, சென்றன பாய் பரியே.–25-

செங்கதிரோனொடு சேர் ஊர் சென்றன போல் – சிவந்த
கதிர்களை உடைய கதிரவனொடு சேர்ந்து ஊர்கோள் சென்றன
போல; தேர் சென்றன – (அதிகாயனுடைய) தேரைச் சூழ்ந்து பல
தேர்கள் சென்றன, கார் நிரை சென்றன போல் – (மின்னலுடன்) கரிய
மேகக் கூட்டங்கள் சென்றன போல்; ஒளி ஓடைகளின் கார் சென்றன
– ஒளி பொருந்தி முகபடாம் அணிந்த யானைகள் சென்றன; பாய்
பரியே பார் சென்றில சென்றன – பாயும் தன்மை உள்ள குதிரைகள்
பூமியில் கால் பதித்துச் செல்லாமல் தாவிச் சென்றன.

——–

கும்பகருணன் உடல் கண்டு அதிகாயன் வருந்துதல்

7752. மேருத்தனை வெற்புஇனம் மொய்த்து, நெடும்
பாரில் செலுமாறு படப் படரும்
தேர் சுற்றிடவே, கொடு சென்று முரண்
போர் முற்று களத்திடைப் புக்கனனால்.–26-

மேருத்தனை வெற்பு இனம் மொய்த்து – மேரு மலையின்
அளிவுள்ள மலைகளின் கூட்டம் நெருங்கி; நெடும் பாரில் செலுமாறு
படப் – பெரிய நிலவுலகில் செல்லும் தன்மை போல; படரும் தேர்
சுற்றிடவே – செல்லுகின்ற தேர்கள் சுற்றி நிற்க; கொடு சென்று – (தன்
படைகளைச் செலுத்திக்) கொண்டு சென்று; முரண் போர் முற்று
களத்திடைப் புக்கனனால் – (மாறுபாடு முற்றுகிற) போர்க் களத்திற்கு
(அதிகாயன்) போய்ச் சேர்ந்தான்.

———

7753. கண்டான், அவ் இராமன் எனும் களி மா
உண்டாடிய வெங் களன் ஊடுருவ;
புண்தான் உறு நெஞ்சு புழுக்கம் உறத்
திண்டாடினன், வந்த சினத் திறலோன்.–27-

அவ் இராமன் எனும் களிமா – அந்த இராமன் என்கின்ற மதங்
கொண்ட யானை; உண்டாடிய வெங்களன் ஊடுருவ கண்டான் –
(உயிர்களை) விழுங்கி விளையாடிய கொடிய போர்க்களத்தை முற்றும்
ஊடுருவிக் கண்டான்; புண்தாள் உறு நெஞ்சு புழுக்கம் உறத் –
(கண்டகாட்சியால்) புண்பட்ட (தன்) மனம் புழுங்கி அவலிக்க; வந்த
சினத்திறலோன் திண்டாடினன் – (போருக்கு வந்த) பெருஞ்சினமும்
வலியும் உடைய அதிகாயன் வருந்தினான்;

———

7754. மலை கண்டனபோல் வரு தோளோடு தாள்
கலை கண்ட கருங் கடல் கண்டு, உளவாம்,
நிலை கண்டன கண்டு, ஒரு தாதை நெடுந்
தலை கண்டிலன், நின்று சலித்தனனால்.–28-

மலை கண்டன போல் வரு தோளொடு – மலையைக் கண்டாற்
போன்று (விளங்கி) வருகின்ற தோள்களுடன்; தாள் கலை கண்ட
கருங்கடல் கண்டு – தாள்களும் கலைதல் பொருந்திய கருமையான
கடலைக் கண்டு; (கும்பகருணன் உடல்) உளவாம் நிலை கண்டன
கண்டு – (அவனுக்கு) நேர்ந்துள்ள நிலைமைகளை (மனத்தில்)
எணணிக் கண்டு; (வருந்திய அதிகாயன்) ஒரு தாதை நெடுந் தலை
கண்டிலென் – ஒப்பற்ற தந்தையாகிய (கும்பகருணனது) பெரிய
தலையைக் கண்டிலேன் என்று; நின்று சலித்தனனால் – (எண்ணி)
நின்று வருந்தினான்.

———–

7755. ‘மிடல் ஒன்று சரத்தொடு மீது உயர் வான்
திடல் அன்று; திசைக் களிறு அன்று; ஒரு திண்
கடல் அன்று; இது என் எந்தை கடக் கரியான்
உடல்’ என்று, உயிரோடும் உருத்தனனால்.–29-

இதுமிடல் ஒன்று சரத்தொடு – (இது) வலிமை பொருந்திய
அம்புகளோடு; மீது உயர் வான்திடல் அன்று – மேலே மேடாக
உயர்ந்திருக்கிற திட்டு அன்று; திசைக்களிறு அன்று – திசை
யானைகளின் (உடலும்) அன்று; ஒரு திண் கடல் அன்று – ஒப்பற்ற
வலிமையான கடலும் அன்று; எந்தை கடக் கரியான் உடல் என்று –
என் தந்தையாகிய போரில் கடத்தற்கு அரியவனான கும்பகருணின்
உடல் என்று (உணர்ந்து); உயிரோடும் உருத்தனனால் – (அதிகாயன்)
பெரு மூச்சு விட்டுச் சினப்பட்டான்.

———–

7756. ‘எல்லே! இவை காணிய எய்தினனோ!
வல்லே உளராயின மானுடரைக்
கொல்லேன், ஒரு நான், உயிர் கோள் நெறியில்
செல்லேன், எனின், இவ் இடர் தீர்குவெனோ?’–30-

எல்லே – அந்தோ; இவை காணிய எய்தினெனோ – இவற்றைக்
காண்பதற்காகவா (இங்கு) வந்தேன்; ஒருநான் – ஒருவனாகிய நான்;
வல்லே உளராயின மானுடரைக் கொல்லேன் – விரைவாக உயிருடன்
உளராகிய மனிதர்களைக் கொல்லாதவனும்; உயிர் கோள் நெறியில்
செல்லேன் எனின் – அவர்களது உயிரைக் கொள்ளுவதற்குரிய
வழியில் செல்லாதவனும் (ஆனேன்) எனின்; இவ் இடர் தீர்குவெனோ
– இந்தத் துன்பத்தை விட்டு நீங்குவேனோ?

எல்லே – அந்தோ, இரக்கக் குறிப்பிடைச் சொல். “எல்லே
இளங்கிளியே இன்னம் உறங்குதியோ” என்று திருப்பாவைப் பாடல்

———

அதிகாயன், இலக்குவன்பால் தூது அனுப்புதல்

7757. என்னா, முனியா, ‘இது இழைத்துளவன்
பின்னானையும் இப்படிச் செய்து பெயர்ந்து,
அன்னான் இடர் கண்டு, இடர் ஆறுவென்’ என்று
உன்னா, ஒருவற்கு இது உணர்த்தினனால்:–31-

என்னா முனியா – என்று கூறிச் சினந்து; இது இழைத்துளவன்
பின்னானையும் – இச்செயலைச் செய்தவனாகிய (இராமன்) பின்
பிறந்த (இலக்குவனையும்); இப்படிச் செய்து பெயர்த்து –
இத்தன்மையன் (ஆகும்படி) செய்து போய்; அன்னான் இடர் கண்டு –
அந்த இராமனுடைய துன்பத்தைக் கண்டு; இடர் ஆறுவென் என்று
உன்னா – (என்) துனபம் தணிவேன் என்று நினைத்து; ஒருவற்கு –
ஒரு தூதுவனுக்கு; இது உணர்த்தினனால் – இதனை உணர்த்தல்
ஆனான்.

———-

7758. ‘வா நீ, மயிடன்! ஒரு வல் விசையில்
போ! நீ அவ் இலக்குவனில் புகல்வாய்;
நான் ஈது துணிந்தனென், நண்ணினெனால்;
மேல் நீதியை உன்னி விளம்பிடுவாய்.–32-

மயிடன் நீ வா – மயிடனே நீ வா; ஒருவல் விசையில் நீ போ –
ஒப்பற்ற மிக்க வேகத்தோடு (புறப்பட்டு) நீ போய்; அவ் இலக்குவனில்
புகல்வாய் – அந்த இலக்குவனிடத்தில் சொல்லுவாய்; நான் ஈது
துணிந்தனென் நண்ணினெனால் – நான் (இலக்குவனை முண்டமாகச்
செய்யும்) இச்செயலை ஆராய்ந்து துணிந்துள்ளேன்; மேல் நீதியை
உன்னி விளம்பிடுவாய் – சிறந்த நீதியை உணர்ந்து சொல்லுவாய்.

———–

7759. ‘”அம் தார் இளவற்கு அயர்வு எய்தி அழும்
தம் தாதை மனத்து இடர் தள்ளிடுவான்,
உந்து ஆர் துயரோடும் உருத்து எரிவான்
வந்தான்” என, முன் சொல் வழங்குதியால்.–33-

உந்து ஆர் துயரோடும் – மேலுந்தி எழுகின்ற மிக்க துயரத்தோடும்;
உருத்து எரிவான் – சினந்து எரிபவன் ஆகிய (அதிகாயன் என்பவன்);
அம்தார் இளவற்கு – அழகிய மாலை அணிந்த தம்பியாகிய
(கும்பகருணன்) இறந்ததன் காரணமாக; அயர்வு எய்தி அழும் –
மனத்துன்பம் அடைந்து அழுகின்ற; தம் தாதை மனத்து இடர்
தள்ளிடுவான் – தம் தந்தையின் மனத் துன்பத்தைப் போக்கும்
பொருட்டு; வந்தான் என – வந்துள்ளான் என; முன் சொல்
வழங்குதியால் – முதற்சொல்லைச் சொல்லுவாய்.

———–

7760. ‘கோளுற்றவன், நெஞ்சு சுடக் குழைவான்,
நாள் உற்ற இருக்கையில், யான், ஒருதன்
தாள் அற்று உருளக் கணை தள்ளிடுவான்,
சூளுற்றதும் உண்டு; அது சொல்லுதியால்;–34-

கோளுற்றவன் – (துன்பம்) கொள்ளுதலைப் பொருந்தியவனாகி;
நெஞ்சு சுடக் குழைவான் – மனம் கொதித்து வருந்துபவனாகிய
இராவணனுடைய; நாள் உற்ற இருக்கையில் – நாளோலக்கமாகிய
அவையில்; ஒரு தன் தாள் அற்று உருளக்கணை தள்ளிடுவான் –
ஒப்பற்ற (இலக்குவன்) தன் கால்கள் அற்று உருளுமாறு அம்புகளைச்
செலுத்துவதாக; யான் சூளுற்றதும் உண்டு – நான் (அதிகாயன்) சபதம்
செய்ததும் உண்டு; அது சொல்லுதியால் – அதனைச் சொல்லுவாய்.

——–

7761. ‘தீது என்று அது சிந்தனை செய்திலெனால்;
ஈது என்று அறம் மன் நெறி ஆம்’ என, ‘நீ
தூது என்று இகழாது, உன சொல் வலியால்,
“போது” என்று, உடனே கொடு, போதுதியால்.–35-

அது தீது என்று சிந்தனை செய்திலெனால் – அவ்வாறு (செய்யக்
கருதிய செயல்) தீமை பயப்பது என்று சிந்தனை செய்ய மாட்டேன்;
ஈது என்று மன் அறம் நெறி ஆம் என – இதுவே எப்பொழுதும்
மன்னர்களுக்கு உரிய அறவழி ஆகும் என்று; நீ தூது என்று இகழாது
– நீ தூதுவன் தானே என்று (அவ்விலக்குவன்) இகழாதவாறு; உன
சொல் வலியால் – உன் சொல்லாற்றலால்; உடனே போது என்று
கொடு போதுதியால் – உடனே உடன் வருவாய் என்ற (அவனை
இங்கு) அழைத்துக் கொண்டு வருவாய்.

———

7762. ‘செரு ஆசையினார், புகழ் தேடுறுவார்,
இருவோரையும், நீ வலி உற்று, “எதிரே
பொருவோர் நமனார் பதி புக்கு உறைவோர்;
வருவோரை எலாம் வருக!” என்னுதியால்.–36-

செரு ஆசையினார் – போரிடுதலில் விருப்பமுள்ளவர்கள்; புகழ்
தேடுறுவார் – புகழைத் தேடுவோர்; இருவோரையும் – ஆகிய இராம
இலக்குவர் இருவரையும்; நீ வலி உற்று – நீ வலிய (எதிரே சென்று)
பொருந்தி; எதிரே பொருவோர் நமனார் பதி புக்கு உறைவோர் –
(என்) எதிரே போரிட வருபவர்கள் இயமபுரியில் புக்கு வாழப்
போகிறவர்கள் (என்று கூறி); வருவோரை எலாம் வருக என்னுதியால்
– (போரிட) வருகின்றவர்களையெல்லாம் வருக என்று கூறிடுவாய்.

——–

7763. ‘சிந்தாகுலம் எந்தை திரித்திடுவான்,
“வந்தான்” என என் எதிரே, மதியோய்!
தந்தாய்எனின், யான் அலது, யார் தருவார்,
உம் தாரிய உள்ள உயர்ந்த எலாம்?–37-

மதியோய் – நுண் மதியுடையவனே; எந்தை சிந்தா குலம்
திரித்திடுவான் – என் தந்தையின் மனத் துயரத்தை மாற்றும்
பொருட்டு; வந்தான் என என் எதிரே தந்தாய் எனின் – (அதிகாயன்)
வந்துள்ளான் என்று சொல்லி (இலக்குவனை) எனக்கு எதிரில்
(அழைத்து) வருவாய் என்றால்; உம் தாரிய உள்ள உயர்ந்த எலாம் –
உம்மால் தாங்குதற்கு முடியாத (மிகுதியான) உயர்ந்த பொருள்களை எல்லாம்; யான் அலது யார் தருவார் – என்னைத்
தவிர யார் தருவார்கள்?

———

7764.
‘வேறே அவ் இலக்குவன் என்ன விளம்பு
ஏறே வருமேல், இமையோர் எதிரே,
கூறே பல செய்து, உயிர் கொண்டு, உனையும்
மாறே, ஒரு மன் என வைக்குவெனால்.–38-

அவ் இலக்குவன் என்ன வேறே விளம்பு – அந்த இலக்குவன்
என்று வேறாகச் சிறப்பித்துச் சொல்லப்படுகிற; ஏறே வருமேல் –
ஆண் சிங்கமே (போருக்கு) வருவானானால்; இமையோர் எதிரே –
தேவர்களுக்கு எதிரில்; கூறே பல செய்து உயிர் கொண்டு – (அவன்
உடலைப்) பல துண்டுகளாகச் செய்து உயிரைக் கொண்டு; உனையும்
மாறே ஒரு மன் என வைக்குவெனால் – உன்னையும் (செய்த
உதவிக்குக்) கைம்மாறாக ஒரு மன்னனாகச் செய்வேன்.

——–
7765. ‘விண் நாடியர், விஞ்சையர், அம் சொலினார்
பெண், ஆர் அமுது அன்னவர், பெய்து, எவரும்
உண்ணாதன கூர் நறவு உண்ட தசும்பு
எண்ணாயிரம் ஆயினும், ஈகுவெனால்.–39-

விண் நாடியர் விஞ்சையர் – (நீ இலக்குவனை என்னிடம்
அழைத்து வந்தால்) வான நாட்டவரும், வித்தியாதரரும் ஆகிய, அம்
சொலினார் – அழகிய சொற்களை உடைய; பெண் ஆர் அமுது
அன்னவர் – பெண்களில் அருமையான அமிழ்தம் போன்றவர்கள்;
பெய்து எவரும் உண்ணாதன – ஊற்றித்தர (வேறு) எவரும்
உண்ணாதனவாகிய; கூர் நறவு உண்ட குடம் – மிகுதியான கள்ளைக்
கொண்ட குடங்கள்; எண்ணாயிரம் ஆயினும் ஈகுவெனால் –
எண்ணாயிரம் வேண்டினும் தருவேன்.குறித்து வந்தது. கூர் – மிகுதி உரிச்சொல். தசும்பு – குடம். தசும்பு
துளங்கு இருக்கை என்றார் (பதிற். 42) பதிற்றுப்பத்தில்.

——–

7766. ‘உறைதந்தன செங் கதிரோன் உருவின்
பொறை தந்தன, காசு ஒளிர் பூண், இமையோர்
திறை தந்தன, தெய்வ நிதிக் கிழவன்
முறை தந்தன, தந்து முடிக்குவெனால்,–40-

செங்கதிரோன் உருவின் உறை தந்தன பொறை தந்தன- சிவந்த
கதிர்களை உடைய கதிரவன் நிறத்தோடு பொருந்தியனவும்
பாரமுள்ளனவும்; இமையோர் திறை தந்தன – தேவர்களை திறைப்
பொருளாகத் தந்தனவும்; தெய்வ நிதிக் கிழவன் – தெய்வ நிதிகளுக்கு
எல்லாம் தலைவனான குபேரன்; முறை தந்தன – முறைமை பற்றித்
தந்தன வுமான; காசு ஒளிர்பூண் – மணிகள் ஒளிவிடுகிற
அணிகலன்களை; தந்து முடிக்குவெனால் – தருவேன் (தந்து
முடிப்பேன்).

——–

7767. ‘மாறா மத வாரிய, வண்டினொடும்
பாறு ஆடு முகத்தன, பல் பகலும்
தேறாதன, செங் கண வெங் களி மா
நூறாயிரம் ஆயினும் நுந்துவெனால்,–41-

வாரிய மதமாறா – வடிகிற மதப்பெருக்கு மாறாதனவும்;
வண்டினொடும் பாறு ஆடுமுகத்தன – வண்டுகளோடு பருந்துகளும்
பறந்து ஆடும் முன்புறத்தை உடையனவும்; பல் பகலும் தேறாதன –
பலநாளும் (மதவெறியில் இருந்து) நீங்காதனவும்; செங்கண்
வெங்களிமா – ஆகிய சிவந்த கண்களை உடைய கொடிய மதம் மிக்க
யானைகள்; நூறாயிரம் ஆயினும் நுந்துவெனால் – நூறாயிரம்
வேண்டுமானாலும் தருவேன்.

———–

7768. ‘செம் பொன்னின் அமைந்து சமைந்தன தேர்
உம்பர் நெடு வானினும் ஒப்பு உறழாப்
பம்பும் மணி தார் அணி பாய் பரிமா,
இம்பர் நடவாதன, ஈகுவெனால்.–42-

செம்பொன்னின் அமைந்து சமைந்தன தேர் – செம்பொன்னால்
செய்யப்பட்டு உறுதி பொருந்திய தேர்களும்; உம்பர் நெடுவானினும்
ஒப்பு உறழாப் – மேல் உள்ள வானுலகத்திலும் ஒப்பும் மாறுபாடும்
இல்லாத; பம்பும் மணிதார் அணி – நிறைந்த மணிகளால் ஆன
மாலைகளை அணிந்து; இம்பர் நடவாதன – இவ்வுலகத்தில்
நடக்காதனவாகி; பாய்பரிமா – பாய்ந்து செல்லும் குதிரைகளை;
ஈகுவெனால் – தருவேன்.

——–

7769. ‘நிதியின் நிரை குப்பை நிறைத்தனவும்,
பொதியின் மிளிர் காசு பொறுத்தனவும்,
மதியின் ஒளிர் தூசு வகுத்தனவும்,
அதிகம் சகடு ஆயிரம் ஈகுவெனால்.–43-

நிதியின் நிரை குப்பை நிறைத்தனவும் – நிதிகளின் வரிசை
மிகுதியாக நிறைந்து வைத்தனவும்; பொதியின் மிளிர் காசு
பொறுத்தனவும் – மூட்டையாக ஒளிவிடுகிற மணிகள் தாங்கியனவும்;
மதியின் ஒளிர் தூசு வகுத்தனவும் – நிலவு போல் ஒளிவிடுகிற
பட்டாடைகள் வகை வகையாக வைக்கப்பட்டனவும்; சகடு ஆயிரம்
அதிகம் ஈகுவெனால் – ஆகிய வண்டிகள் ஆயிரத்திற்கும்
அதிகமாகத் தருவேன்.

———–

7770. ‘மற்றும், ஒரு தீது இல் மணிப் பணி தந்து,
உற்று உன் நினைவு யாவையும் உந்துவெனால்;
பொன் திண் கழலாய்! நனி போ’ எனலோடு,
எற்றும் திரள் தோளவன் ஏகினனால்.–44-

மற்றும் – மேலும்; ஒரு தீது இல் மணிப் பணி தந்து – ஒரு
குற்றமும் இல்லாத மணிகள் பதிக்கப்பட்ட அணிகலன்களைக்
கொடுத்து; உன் நினைவு யாவையும் உற்று உந்துவெனால் – நீ
வேண்டி நினைக்கும் (பொருள்கள்) எல்லாவற்றையும் பொருந்தக்
கொடுப்போன்; பொன் திண் கழலாய் – பொன்னில் ஆகிய வலிய
வீரக்கழல் அணிந்தவனே (மயிடனே); நனிபோ எனலோடு – விரைந்து
போ என்று அதிகாயன் கூறியவுடன்; எற்றும் திரள் தோளவன்
ஏகினனால் – (பகைவரைத்) தாக்கும் திரண்ட
தோள்களையுடையவனான மயிடன் செல்லலானான்.

———

மயிடன் வானரரால் பற்றப் படல்

7771.

ஏகி, தனி சென்று, எதிர் எய்தலுறும்
காகுத்தனை எய்திய காலையின்வாய்,
வேகத்தொடு வீரர் விசைத்து எழலும்,
‘ஓகைப் பொருள் உண்டு’ என, ஓதினனால்.–45-

தனி சென்று ஏகி – (மயிடன்) தனியே சென்று போய்; எதிர்
எய்தலுறும் காகுத்தனை – தன் முன்பு சேர்ந்த இராமனை; எய்திய
காலையின் வாய் – அடைந்த அப்பொழுதில்; வீரர் வேகத்தொடு
விசைத்து எழலும் – (வானர) வீரர்கள் சினம் கொண்டு வேகமாக
(அவனைப் பற்ற) எழுந்தபோது; ஓகைப் பொருள் உண்டு என
ஓதினனால் – (அந்த மயிடன்) (உங்களுக்கு) மகிழ்ச்சிச் செய்தி ஒன்று
உண்டு எனக் கூறினான்.

——–

இராமன் வானரரை விலக்கி மயிடனை வினவல்

7772. போதம் முதல், ‘வாய்மொழியே புகல்வான்;
ஏதும் அறியான்; வறிது ஏகினனால்;
தூதன்; இவனைச் சுளியன்மின்’ எனா,
வேதம் முதல் நாதன் விலக்கினனால்.–46-

போதம் முதல் – மெய்யுணர்வுக்கு முதலாய் இருப்பவனும்; வேதம்
முதல் நாதன் – வேதங்கள் விளக்கும் சிறப்புப் பொருளாய்
உள்ளவனும் ஆகிய இராமபிரான்; வாய் மொழியே புகல்வான் –
(பற்றிய வானர வீரர்களைப் பார்த்து) இவன் தலைவன் கூறிய
சொற்களைச் சொல்லுபவன்; ஏதும் அறியான் – வேறு எதுவும்
அறியாதவன்; வறிது ஏகினனால் – படைக்கலம் இன்றி வெறுமனே
வந்துள்ளான்; தூதன் – (ஆகவே இவன்) தூதுவனாக இருக்கலாம்;
இவனைச் சுளியன் மின் எனா – (எனவே) இவனை வெகுளாதீர்கள்
என்று; விலக்கினனால் – (அந்த வானர வீரர்களை) விலக்கினான்;

———–

7773. ‘என், வந்த குறிப்பு? அது இயம்பு’ எனலும்,
மின் வந்த எயிற்றவன், ‘வில் வல! உன்
பின் வந்தவனே அறி பெற்றியதால்,
மன் வந்த கருத்து’ என, ‘மன்னர்பிரான்!’–47-

என் வந்த கருத்து அது இயம்பு எனலும் – (வானரரை விலக்கிய
இராமன்) நீ வந்த காரணம் எது பற்றியது அதைச் சொல் எனக்
கேட்ட அளவில்; மின் வந்த எயிற்றவன் – ஒளி பொருந்திய பற்களை
உடைய (அந்த மயிடன்); வில்வல, மன்னர் பிரான் – வில் தொழில்
வல்லவனே மன்னர் பெருமானே; மன் வந்த கருத்து – எம் மரசன்
கொண்டுள்ள கருத்தை; உன் பின் வந்தவனே அறி பெற்றியதால்
என – உன் பின் பிறந்தவனாகிய இலக்குவனே அறியும் தன்மையது என;
(அடுத்த பாடலில் தொடர் முடியும்.)

———

இலக்குவன் வினவ, தூதன் தான் வந்த செய்தி உரைத்தல்

7774. ‘சொல்லாய்; அது சொல்லிடு, சொல்லிடு’ எனா,
வில்லாளன் இளங்கிளையோன் விவை,
பல் ஆயிர கோடி படைக் கடல் முன்
நில்லாய்’ என, நின்று நிகழ்த்தினனால்.–48-

வில்லாளன் இளங்கிளையோன் – வில்லாளனாகிய இராம
பிரானுக்குத் தம்பியாகிய இலக்குவன்; அது சொல்லாய் – (நீ வந்த
காரணத்தைச்) சொல்வாய்; சொல்லிடு சொல்லிடு எனா வினவ –
சொல்லிடு என்று வினவ; பல் ஆயிர கோடி படைக் கடல் முன் –
(அதிகாயனுடைய) பல ஆயிரம் கோடிப் படையாகிய கடலுக்கு முன்;
நில்லாய் என – எதிர்த்து நிற்பாய் என்று; நின்று நிகழ்த்தினனால் –
நின்று கொண்டு மேலும் கூறத் தொடங்கினான்.

———

7775. ‘உன்மேல் அதிகாயன் உருத்துளனாய்
நல் மேருவின் நின்றனன்; நாடி அவன்-
தன்மேல் எதிரும் வலி தக்குளையேல்,
பொன் மேனிய! என்னொடு போதுதியால்.–49-

பொன் மேனிய – பொன் போன்ற மேனிய; உன் மேல்
அதிகாயன் உருத்துளனாய் – உன் மீது அதிகாயன் சினம்
கொண்டவனாகி; நாடி நல்மேருவின் நின்றனன் – (உன்னை) எதிர்
பார்த்து நல்ல மேருமலை போல் நின்றுள்ளான்; அவன் தன் மேல்
எதிரும் வலி தக்குளையேல் – அவன் தன் மேல் எதிர்ப்பதற்கு
உரிய வலிமை பெற்றுள்ளாயானால்; என்னோடு போதுதி – என்னோடு
வருவாய்.

———–

7776. ‘சையப் படிவத்து ஒரு தந்தையை முன்
மெய் எப்படிச் செய்தனன் நும் முன், விரைந்து,
ஐயப்படல், அப்படி இப் படியில்
செய்யப்படுகிற்றி; தெரித்தனெனால்.–50-

சையப் படிவத்து ஒரு தந்தையை – மலை போன்ற வடிவுடைய
தந்தையின் (கும்பகருணனது); மெய் எப்படி நும்முன் செய்தனன் –
உடம்பை எப்படி உன் தமையன் முன்பு செய்தானோ; விரைந்து அப்படி இப்படியில் செய்யப்படு கிற்றி –
அப்படி விரைந்து இந் நிலத்தில் (நீ) செய்யப்படுவாய்; ஐயப்படல்
தெரிந்தனெனால் – (அது பற்றி) சந்தேகப்படாதே (அதை நான்)
தெரிவித்து விட்டேன்

———

7777. ‘”கொன்றான் ஒழிய, கொலை கோள் அறியா
நின்றானொடு நின்றது என், தேடி?” எனின்,
தன் தாதை படும் துயர், தந்தையை முன்
வென்றானை இயற்றுறும் வேட்கையினால்.–51-

கொன்றான் ஒழிய – (கும்பகருணனைக்) கொன்றவனாகிய
(இராமனை) விட்டு; கொலை கோள் அறியா நின்றானொடு –
அக்கொலைச் செயலைச் செய்து அறியாது நின்றவனாகிய
(இலக்குவனை); தேடி நின்றது என் எனின் – (இந்த அதிகாயன்)
தேடிப் (போரிட) நிற்பது எற்றுக்கு எனின்; தன் தாதை படும் துயர் –
(அதிகாயனாகிய) தன்னைப் பெற்ற இராவணன் படும் துன்பத்தை;
தந்தையை முன் வென்றானை – (சிறிய) தந்தையாகிய கும்பகருணனை
முன்பு வென்றவனாகிய இராமனுக்கு; இயற்றுறும் வேட்கையினால் –
உண்டாக்கும் ஆசையினால்;

————

7778.
வானோர்களும், மண்ணினுளோர்களும், மற்று
ஏனோர்களும், இவ் உரை கேண்மின; இவன்-
தானே பொருவான்; அயலே தமர் வந்து
ஆனோரும் உடன் பொருவான், அமைவான்.–52-

வானோர்களும் – வானில் உள்ள தேவர்களும்;
மண்ணினுளோர்களும் – நிலவுலகில் உள்ளவர்களும்; மற்று
ஏனோர்களும் – மற்றும் உள்ள பிறரும்; இவ் உரை கேண்மின் –
இந்தச் சொல்லைக் கேளுங்கள்; இவன் தானே பொருவான் – இந்த
அதிகாயன் தானே (இலக்குவனுடன்) போரிடுவான்; அயலே தமர்
வந்து ஆனோரும் உடன் பொருவான் – பக்கத்தில் துணையாக உறவினர்களாய்ச்
சேர்ந்து வந்தவர்களுடன் போரிடுவதற்கு; அமைவான் –
சம்மதிப்பான்.

———–

இராமன் இலக்குவனை அனுப்பல்

7779. ‘எழுவாய், இனி என்னுடன்’ என்று, எரியும்
மழு வாய் நிகர் வெஞ் சொல் வழங்குதலும்,
தழுவா, ‘உடன் ஏகுதி; தாழல்!’ எனத்
தொழுவார் தொழு தாள் அரி சொல்லுதலும்.–53-

இனி என்னுடன் எழுவாய் என்று – இப்போது என்னுடன்
(வருவதற்கு) எழுவாய் என்று; எரியும் மழுவாய் நிகர் வெஞ்சொல்
வழங்குதலும் – எரிகின்ற மழுவின் வாயை ஒத்த கொடுமையான
சொல்லை (மயிடன்) சொல்லுதலும்; தொழுவார் தொழு தாள் அரி –
தொழுபவர்கள் தொழத்தக்க திருப்பாதங்களையுடைய திருமாலின்
அவதாரமாகிய இராமபிரான்; தழுவா – (இலக்குவனைத்)
தழுவிக்கொண்டு; உடன் ஏகுதி தாழல் எனச் சொல்லுதலும் – உடனே
போ, கால தாமதம் செய்யற்க என்று சொன்னபோது.

————–

வீடணன் அதிகாயனது திறம் குறித்தல்

7780. ‘எல்லாம் உடன் எய்திய பின், இவனே
வில்லானொடு போர் செய வேண்டும்’ எனா,
நல்லாறுடை வீடணன், நாரணன்முன்
சொல்லாடினன்; அன்னவை சொல்லுதுமால்.–54-

நல்லாறுடை வீடணன் – நல்லற வழியில் செல்லும் தன்மையுள்ள
வீடணன்; எல்லாம் உடன் எய்திய பின் – நாம் எல்லாம்
(இலக்குவனுக்குத்) துணையாக உடன் போய்ப் (போர்க்களம்) சேர்ந்த
பின்; இவனே வில்லானொடு போர் செய வேண்டும் எனா – இந்த இல்ககுவனே வில்லாளியான (அதிகாயனுடன்) போர் செய்ய
வேண்டும் என்று,; நாரணன் முன் சொல்லாடினன் – நாராயணனின்
அவதாரமாகிய இராமபிரானிடம் (அந்த அதிகாயனைப் பற்றிய)
செய்திகளைத் கூறினான்; அன்னவை சொல்லுதுமால் – அவற்றைச்
சொல்லுவோம்.

——-

7781. ‘வார் ஏறு கழற் சின வாள் அரி எம்
போர் ஏறொடு போர் புரிவான் அமையா,
தேர் ஏறு சினக் கடு வெந் தறுகண்
கார் ஏறு என வந்த கதத் தொழிலோன்.–55-

வார் ஏறு கழற்சின வாள் அரி – (இவ்வதிகாயன்) கச்சினால்
கட்டப்பட்ட வீரக் கழல் அணிந்த சினங்கொண்ட கொடிய ஆண்
சிங்கம் போன்றவனாகிய; எம் போர் ஏறொடு போர் புரிவான்
அமையா – போரில் வல்ல எம் இலக்குவனோடு போர் புரிவதற்கு
உடன்பட்டுத்; தேர் ஏறு சினக் கடு வெந் தறுகண் – தேரில் ஏறி வந்த
சினமும் கொடிய அஞ்சாமையும் கொண்ட; கார் ஏறு என வந்த கதத்
தொழிலோன் – கரிய மேகம் என்னுமாறு வந்த சினம் மிக்க தொழிலை
உடையவன்.

———-

7782. ‘ஓவா நெடு மா தவம் ஒன்று உடையான்,
தேவாசுரர் ஆதியர் செய் செருவில்,
சாவான் இறையும், சலியா வலியான்,
மூவா முதல் நான்முகனார் மொழியால்.-56-

ஓவா நெடு மாதவம் ஒன்று உடையான் – நீங்காத மிகப்
பெருந்தவம் ஒன்று உடையவன்; மூவா முதல் நான்முகனார்
மொழியால் – கெடாத முதற்பொருளாகிய பிரமன் தந்த வரத்தால்;
தேவாசுரர் ஆதியர் செய் செருவில் – தேவாசுரர் முதலியோர் செய்த
போரில்;சாவான் – சாவாமல்; இறையும் சலியா வலியான் – சிறிது கூட
சலிப்படையாத வலி பெற்றவன்.

———

7783. ‘கடம் ஏய் கயிலைக் கிரி, கண்ணுதலோடு
இடம் ஏறு எடுத்தனம் என்று இவனை,
திடமே உலகில் பல தேவரொடும்,
வட மேரு எடுக்க, வளர்த்தனனால்.–57-

கடம் ஏய் கயிலைக் கிரி – காடுகள் பொருந்திய கயிலை மலையை;
கண்ணுதலோடு இடம் ஏற எடுத்தனம் என்று – நெற்றிக்
கண்ணையுடைய சிவபிரானோடு அடியோடு (நாம்) பெயர்த்து
எடுத்தனம் என்பதற்காக; இவனைப் பல தேவரோடும் உலகில்
திடமே வடமேரு எடுக்க – இவ்வதிகாயனைப் பல தேவர்களோடு
உலகில் வலிமை மிக்க வடமேரு மலையை எடுக்க; வளர்த்தனன் –
வளர்த்தான்.

——-

7784. ‘மாலாரொடு மந்தரம் மாசுணமும்
மேலாகிய தேவரும் வேண்டும் எனா,
ஆலாலமும் ஆர் அமிழ்தும் அமைய,
காலால் நெடு வேலை கலக்கிடுமால்;–58-

மாலாரொடு மந்தரம் மாசுணமும் – (இவன்) திருமாலும் மந்தர
மலையும் வாசுகி என்ற பாம்பும்; மேலாகிய தேவரும் வேண்டும்
எனாது – சிறப்புடைத் தேவர்களும் (கடைவதற்கு உதவ) வேண்டும்
என்னாது; ஆலாலமும் ஆர் அமிழ்தும் அமைய – ஆலகால நஞ்சும்,
அருமையான அமிழ்தமும் வெளிப்பட்டுத் தோன்றுமாறு; காலால்
நெடுவேலை கலக்கிடும் – தன் காலாலேயே பெரிய பாற்கடலைக்
கலக்க வல்லவன்.

———-

7785. ‘ஊழிக்கும் உயர்ந்து, ஒரு நாள் ஒருவாப்
பாழித் திசை நின்று சுமந்த, பணைச்
சூழிக் கரி தள்ளுதல் தோள் வலியோ?
ஆழிக் கிரி தள்ளும், ஓர் அங்கையினால்;–59-

ஊழிக்கும் ஒருவா உயர்ந்து – ஊழிக்காலத்திலும் அழியாமல்
மேம்பட்டு உயர்ந்து; ஒருநாள் பாழித் திசை நின்று சுமந்த –
ஒருநாளும் (நீங்காமல்) வலிய திசைகளில் நின்று சுமந்த; பணைச்
சூழிக்கரி தள்ளுதல் தோள் வலியோ – பருத்த முகபடாம் அணிந்த
திசை யானைகளைத் தள்ளுதல் தோள் வலிமையாகுமா? ஓர்
அங்கையினால் ஆழிக்கிரி தள்ளும் – (இவ்வதிகாயன்) ஒப்பற்ற தன்
உள்ளங்கையினால் சக்கரவாள மலையையும் தள்ளி விடுவான்.

———
7786. ‘காலங்கள் கணக்கு இற, கண் இமையா
ஆலம் கொள் மிடற்றவன், ஆர் அழல்வாய்
வேல் அங்கு எறிய, கொடு, ‘விட்டது நீள்
சூலம்கொல்?’ எனப் பகர் சொல் உடையான்;–60-

கணக்கு இற காலங்கள்கண் இமையா – கணக்கற்ற காலங்கள் கண்
இமைத்தல் இல்லாத; ஆலம்கொள் மிடற்றவன் – ஆலகால நஞ்சைக்
கழுத்தில் கொண்ட (நீலகண்டனாகிய) சிலபிரான்; ஆர் அழல் வாய்
வேல் அங்கு எறிய – நிறைந்த நெருப்பு பொருந்திய வேலினை
(போரில் இவ்வதிகாயன் மீது) எறிந்த பொழுது; கொடு விட்டது நீள்
சூலம் கொல் என – (அதனைக் கையில் பற்றிக்) கொண்டு (நீ) விட்டது
(இந்த) நீண்ட சூலம் போலும் என்று; பகர் சொல் உடையான் –
செல்லுகின்ற சொல்லை உடையவன்.

ஆலம் கொள்மிடற்றவன் – சிவபிரான். பாற்கடலைக் கடைந்த
போது தோன்றிய நஞ்சினை உண்டு அமரர்களைக் காத்தவன்,
“விண்ணோர் அமுதுண்டும் சாவ நீ ஒருவரும் உண்ணாத நஞ்சுண்டும்
இருந்தருள் செய்குவாய்” என்பர் இளங்கோவடிகள்.

———–

7787. பகை ஆடிய வானவர் பல் வகை ஊர்
புகை ஆடிய நாள், புனை வாகையினான்,
“மிகை ஆர் உயிர் உண்” என வீசிய வெந்
தகை ஆழி தகைந்த தனுத் தொழிலான்;–61-

பகை ஆடிய வானவர் பல்வகை ஊர் – (இவ்வதிகாயனோடு)
பகைமை கொண்ட தேவர்களின் பல பகுப்புகள் கொண்ட ஊர்களை;
புகை ஆடிய நாள் – (இவன்) சுட்டு எரிக்கத் தொடங்கிய காலத்தில்;
புனை வாகையினான் – வெற்றிக்குறியாகிய வாகை மாலை அணிந்த
திருமால்; மிகை ஆர் உயிர் உண் என வீசிய – (இவனது)
தேவையற்ற குற்றமுள்ள இனிய உயிரை அழிப்பாய் என்று வீசிய;
வெந்தகை ஆழி தகைந்த தனுத் தொழிலோன் – கொடிய தன்மை
பொருந்திய சக்கரப் படையைத் தடுத்த வில்லாற்றல் தொழில் உடையவன்

———–

7788. ‘உயிர் ஒப்பறு பல் படை உள்ள எலாம்,
செயிர் ஒப்புறும் இந்திரர், சிந்திய நாள்,
அயிர் ஒப்பன நுண் துகள்செய்து, அவர்தம்
வயிரப் படை தள்ளிய வாளியினான்;–62-

செயிர் ஒப்புறும் இந்திரர் – சினம் மிகக் கொண்ட இந்திரன்; உயிர்
ஒப்புறும் உள்ள எலாம் பல் படை – தன் உயிருக்கு ஒப்பாகக்
கூறத்தக்க தன்னிடம் உள்ள பலவகையான படைக்கலங்களை; சிந்திய
நாள் – (இவ்வதிகாயன் மீது) செலுத்திய காலத்தில்; அயிர் ஒப்பன
நுண்துகள் செய்து – (இவன் அப்படைக்கலங்களை) மணலுக்கு
ஒப்பான நுண்ணிய பொடியாகச் செய்து; அவர் தம் வயிரப்படை
தள்ளிய வாளியினான் – அந்த இந்திரனின் வச்சிராயு தத்தை
வலியிலதாக்கிய அம்புகளை உடையவன்.

————

7789. ‘கறற்ான், மறை நூலொடு கண்ணுதல்பால்;
முற்றாதன தேவர் முரண் படைதாம்,
மற்று ஆரும் வழங்க வலார் இலவும்,
பெற்றான்; நெடிது ஆண்மை பிறந்துடையான்;–63-

கண்ணுதல் பால் – நெற்றியில் கண்ணுடைய சிவபிரான் இடத்தில்;
மறை நூலோடு கற்றான் – வேதங்களையும் போர் நூல்களையும்
கற்றவன்; தேவர் முற்றாதன முரண் படைதாம் – தேவர் (செலுத்திப்)
பழகாதனவாகிய வலிய படைக்கருவிகளை; மற்று ஆரும் வழங்கவலார்
இலவும் பெற்றான் – பிறர் யாரும் செலுத்த வல்லவர்
இல்லாதனவுமாகிய கருவிகளைப் பெற்றான்; நெடிது ஆண்மை
பிறந்துடையான் – (அதனால்) மிகக் ஆண்மை தோன்றப்
பெற்றுள்ளான்.

———

7790. ‘அறன் அல்லது நல்லது மாறு அறியான்;
மறன் அல்லது பல் பணி மாறு அணியான்;
திறன் அல்லது ஓர் ஆர் உயிரும் சிதையான்;
“உறல் நல்லது, பேர் இசை” என்று உணர்வான்;–64-

நல்லது அறன் அல்லது மாறு அறியான் – (இவ்வதிகாயன்)
நன்மை பயக்கும் அறன் இல்லாதது தவிர வேறு ஒன்று அறிய மாட்டான்;
பல் பணி மறன் அல்லது மாறு அணியான் – பல அணிகலன்களாக
வீரத்தைத் தவிர வேறு ஒன்றை அணிய மாட்டான்; திறன் அல்லது
ஓர் ஆர் உயிரும் சிதையான் – வலிமை இல்லாததாகிய (எந்த ஒரு)
ஒப்பற்ற அருமையான உயிரையும் அழிக்க மாட்டான்; பேரிசை உறல்
நல்லது என்று உணர்வான் – பெரும் புகழே அடைதற்கு உரிய நல்லது
என்று உணர்வான்.

———–

7791. காயத்து உயிரே விடு காலையினும்
மாயத்தவர் கூடி மலைந்திடினும்,
தேயத்தவர் செய்குதல் செய்திடினும்,
மாயத் தொழில் செய்ய மதித்திலனால்.–65-

காயத்து உயிரே விடு காலையினும் – (இந்த அதிகாயன்
போர்க்களத்தில்) உடலின் உள்ள உயிரையே விட வேண்டிய காலம்
வந்தாலும்; மாயத்தவர் கூடி மலைந்திடினும் – (தன்னோடு)
வஞ்சனைத் தொழில் செய்வார் பலர் கூடிப் போரிட்டாலும்;
தேயத்தவர் செய்குதல் செய்திடினும் – உலகில் உள்ளவர்கள் எல்லாம்
(தனக்கு) எதிராக ஏமாற்றுப் (போரைச்) செய்தாலும்; மாயத் தொழில்
செய்ய மதித்திலனால் – மாயத் தொழிலைச் செய்ய (எப்போதும்)
மதித்துக் கருத மாட்டான்.

————

அதிகாயன் வரலாறு

7792. ‘மது கைடவர் என்பவர், வானவர்தம்
பதி கைகொடு கட்டவர், பண்டு ஒரு நாள்,
அதி கைதவர், ஆழி அனந்தனையும்,
விதி கைம்மிக, முட்டிய வெம்மையினார்.–66-

அதி கைதவர் – மிக்க வஞ்சனை உடையவரான; மது, கைடவர்
என்பவர் – மது கைடவர் என்ற பெயருடைய தானவர்கள்; வானவர்
தம் பதிகைகொடு கட்டவர் – தேவர்களுடைய ஊரைக் கைப்பற்றிச்
கொண்டு அழித்தவராவர்; பண்டு ஒருநாள் விதி கைம்மிக – முன்பு
ஒரு காலத்தில் விதியானது மிகுதியாகத் தூண்ட; ஆழி
அனந்தனையும் முட்டிய வெம்மையினார் – பாற்கடலில் திருப்பள்ளி
கொண்டுள்ள (கடவுளாகிய) திருமாலையும் எதிர்த்த கொடுமை
உடையோராவர்.

———–

7793. ‘நீர் ஆழி இழிந்து, நெடுந்தகையை,
“தாராய் அமர்” என்றனர், தாம் ஒரு நாள்;
ஆர் ஆழிய அண்ணலும், அஃது இசையா,
“வாரா, அமர் செய்க!” என வந்தனனால்,–67-

தாம் ஒருநாள் – (அவர்கள்) தாம் ஒருநாள்; நீர் ஆழி இழிந்து –
பாற்கடலில் இறங்கி; நெடுந்தகையை – பெருந்தன்மையுள்ள
திருமாலைப் பார்த்து; அமர் தாராய் என்றனர் – போர் தருவாய்
என்றனர்; ஆர் ஆழிய அண்ணலும் – வெலற்கரிய சக்கரப் படையை
ஏந்திய தலைவனான (திருமாலும்); அஃது இசையா – அதனை
ஏற்றுக்கொண்டு; வாராஅமர் செய்க என்று வந்தனனால் – இது
வரையில் நிகழ்ந்திராத (கொடிய) போரைச் செய்க என்று சொல்லி
வந்தான்.

———-

7794. ‘வல்லார் உரு ஆயிரம் ஆய் வரினும்,
நல்லார் முறை வீசி, நகும் திறலார்
மல்லால் இளகாது, மலைந்தனன் மால்;
அல் ஆயிரம் ஆயிரம் அஃகினவால்.–68-

வல்லார் உரு ஆயிரம் ஆய்வரினும் – வல்லமை உடையவர் உரு
ஆயிரம் கொண்டு வந்தாலும்; நல்வார் முறை வீசி நகும் திறலார் –
நன்மை மிகுந்த போர் முறையால் வீசிச் சிரிக்கும்
வலிமையுடையவரான (அந்த மதுகைடபருடன்); மால் மல்லால்
இளகாது மலைந்தனன் – திருமால் மற்போரினால் பின் வாங்காது
போரிட்டனன்; அல் ஆயிரம் ஆயிரம் அஃகினவால் – அங்ஙனம்
போர் புரிகை நாள்கள் ஆயிரம் கழிந்து போயின.

———–

7795. ‘தன் போல்பவர் தானும் இலாத தனிப்
பொன்போல் ஒளிர் மேனியனை, “புகழோய்!
என் போல்பவர் சொல்லுவது, எண் உடையார்
உன் போல்பவர் யார் உளர்?” என்று உரையா,–69-

தன் போல்பவர் தானும் இலாத – தன்னை ஒத்தவர் யாவர் தானும்
இல்லாத; தனிப்பொன் போல் ஒளிர் மேனியனை – சிறப்புடைய
பொன்போல் ஒளி விடுகிற திருமேனியை உடைய (திருமாலை);
புகழோய் – (அந்த மதுகைடபர்கள்) பார்த்துப் புகழுடையவனே; என்
போல்பவர் சொல்லுவது – எங்களைப் போன்றவர் சொல்லுவதற்கு
உரித்தானது (யாதெனில்); எண் உடையார் உன் போல்பவர் யார்
உளர் – எண்ணி மதிக்கத்தக்க வலிமை உடையார் உன்னைப்
போன்றவர் யாவர் உளர்; என உரையா – என்று கூறி; இவ்
“என உரையா” என்பது 71 ஆம் பாடலில் உள்ள “சொல்லுதலும்”
என்றதனோடு இயையும்.

————

7796. ‘”ஒருவோம் உலகு ஏழையும் உண்டு உமிழ்வோம்;
இருவோமொடு நீ தனி இத்தனை நாள்
பொருவோமொடு நேர் பொருதாய்; புகழோய்!
தருவோம் நின் மனத்தது தந்தனமால்;–70-

ஒருவோம் உலகு ஏழையும் உண்டு உமிழ்வோம் – (நாங்கள்)
ஒருவராகவே ஏழு உலகத்தையும் உண்டு உமிழக் கூடிய வலிமை
உடையவராவோம்; இருவோமொடு – (அப்படிப்பட்ட தனித்தனி
வலிமை வாய்ந்த எங்கள்) இருவருடனும்; இத்தனை நாள் நீ தனி
பொருவோமொடு நேர் பொருதாய் – இவ்வளவு காலமும் நீ தனியாகப்
பொருகின்ற (எங்களோடு) நேர் நின்று போர் செய்தாய்; புகழோய் –
புகழுக்கு உரியவனே; நின் மனத்தது தருவோம் தந்தனமால் – (நீ)
உன் மனத்தினால் வேண்டும் வேண்டுதலைத் தருவோம்; தந்தோ
விட்டோம்.

————

7797.
‘”ஒல்லும்படி நல்லது உனக்கு உதவச்
சொல்லும்படி” என்று, அவர் சொல்லுதலும்,
“வெல்லம்படி நும்மை விளம்பும்” எனக்
கொல்லும்படியால் அரி கூறுதலும்.–71-

நல்லது உனக்கு ஒல்லும்படி உதவச் – நன்மை உனக்கு ஏற்படும்
படி உதவுவதற்காகச்; சொல்லும் படி என்று அவர் சொல்லுதலும் –
சொல்லுக என்று அவர் சொல்லுதலும்; நும்மை வெல்லும் படி
விளம்பும் என – உங்களை வெல்வதற்கான வழியைச் சொல்லுங்கள்
என்று; கொல்லும்படியால் அரி கூறதலும் – (அவர்களைக்)
கொல்லுவதற்காகத் திருமால் கூறிய உடனே.

——-

7798. ‘”இடையில் படுகிற்கிலம் யாம்; ஒரு நின்
தொடையில் படுகிற்றும்” எனத் துணியா,
“அடையச் செயகிற்றி; அது ஆணை” எனா,
நடையில் படு நீதியர் நல்குதலும்,–72-

நடையில் படு நீதியர் – ஒழுக்கம் தவறாத நீதி வழிப்
பட்டவர்களாகிய (அந்த மதுகைடவர்); யாம் ஒரு நின் தொடையில்
படுகிற்றும் – நாங்கள் ஒப்பற்ற உன்னுடைய தொடையில் இறக்க
வல்லோம்; இடையில் படுகிற்கிலம் எனத் துணியா – வேறு இடத்தில்
இறக்க மாட்டோம் என்று துணிந்து (சொல்லி); அடையச் செய்கிற்றி
அது ஆணை எனா – (நீ எங்களை உன் தொடைக்குள்ளே)
அடையும்படி செய்வாய், அது (நீ செய்யவேண்டிய) எங்களுடைய
ஆணை என்று; நல்குதலும் – (மேலும்) கூறுதலும் (தொடர் அடுத்த
பாடலில் முடியும்.)

———–

7799. ‘விட்டான், உலகு யாவையும், மேலொடு கீழ்,
எட்டா ஒருவன் தன் இடந் தொடையை;
ஒட்டாதவர் ஒன்றினர், ஊழ்வலியால்
பட்டார்; இது பட்டது பண்டு ஒருநாள்.–73-

எட்டா ஒருவன் – மன வாக்குகளுக்குத் கோசரமாகாது கடந்து
நின்ற திருமால்; உலகு யாவையும் மேலொடு கீழ் – மேலும் கீழும்
உள்ள எல்லா உலகங்களையும் (பொருந்தி நீண்டு செல்லுமாறு); தன்
இடந்தொடையை விட்டான் – தனது இடத்தொடையை (நீள)
விட்டான்; ஊழ் வலியால் – ஊழின் வலிமை காரணமாக,; ஒட்டாதவர் ஒன்றினர் பட்டார் – பகைவர்களான மது
கைடபர்கள் அத்தொடையில் அகப்பட்டுக் கொண்டார்கள்; இது
பட்டது பண்டு ஒருநாள் – இது நிகழ்ந்தது முன் ஒரு காலத்தில்.

———–

7800. ‘தனி நாயகன், வன் கதை தன் கை கொளா,
நனி சாட, விழுந்தனர், நாள் உலவா;
பனியா மது மேதை படப் படர் மே-
தினி ஆனது, பூவுலகு எங்கணுமே.–74-

தனி நாயகன் – ஒப்பறு தலைவனாகிய (திருமால்); வன் கதை தன்
கை கொளா – வலிய கதையைத் தன் கையில் கொண்டு; நனி சாட –
நன்றாக மோதி அடிக்க; நாள் உலவா விழுந்தனர் – வாழ்நாள் உலந்து
இறந்தனர்; பூவுலகு எங்கணுமே – (இந்த) பூமி முழுவதும்; பனியா
மதுமேதை படப் – நடுக்கம் இல்லாத மதுவினுடைய கொழுப்புப்
பட்டதால்; படர் மேதினி ஆனது – பரந்த மேதினி என்ற பெயரைப்
பெறலாயிற்று.

———

7801. ‘விதியால், இவ் உகம்தனில், மெய் வலியால்
மது ஆனவன் எம்முன் மடிந்தனனால்;
கதிர்தான் நிகர் கைடவன் இக் கதிர் வேல்
அதிகாயன்; இது ஆக அறைந்தனெனால்.’–75-

இவ் உகம் தனில் – இந்த யுகத்தில்; மெய் வலியால் மது
ஆனவன் எம்முன் – உடல் வலி மிக்க மது என்பவன் ஆகிய என்
அண்ணன் (கும்பகருணன்); விதியால் மடிந்தனனால் – ஊழ் வினையின்
வலிமையால் இறந்து பட்டான்; கதிர்தான் நிகர் கைடவன் –
கதிரவனை ஒத்துச் (சுட்டு எரிக்கும்) ஆற்றல் உள்ள கைடவன்;
இக்கதிர் வேல் அதிகாயன் – இந்த ஒளி பொருந்திய வேல் ஏந்திய
அதிகாயனாவன்; இது ஆக அறைந்தனெனால் – இச்செய்தியை
மனத்தில் படுமாறு கூறினேன்.

மது, கைடபர் ஒரு கற்பத்தில் திருமாலின் காதில் இருந்து
தோன்றியவர்கள் என்பர். திருமாலின் மூச்சில் பிறந்தவர்கள் என்று
கூறுவதும் உண்டு. இவர்கள் திருமாலுடன் போரிட்டு அவர்
தொடையில் அகப்பட்டுக் கதையால் கொல்லப்பட்டனர். அவர்களுள்
மது கும்பகர்ணன் ஆகவும், கைடபன் அதிகாயன் ஆகவும் இந்த
யுகத்தில் பிறந்தனர் என்க.

———–

இராமன் இலக்குவன் வலிமை கூறல்

7802. என்றான், அவ் இராவணனுக்கு இளையான்;
‘நன்று ஆகுக!’ என்று, ஒரு நாயகனும்,
மின் தான் உமிழ் வெண் நகை வேறு செயா-
நின்றான், இது கூறி நிகழ்த்தினனால்:–76-

அவ் இராவணனுக்கு இளையான் என்றான் – என்று அந்த
இராவணனுக்கு தம்பியாகிய – (வீடணன்) கூறினான்; நன்று ஆகுக
என்று – நன்று ஆகட்டும் என்று; ஒரு நாயகனும் – ஒப்பற்ற
தலைவன் ஆகிய இராமனும்; மின் தான் உமிழ் வெண் நகை வேறு
செயா – மின்னலை ஒத்து வெளிப்படும் வெள்ளிய பற்கள் தெரியுமாறு
சிரிப்பை வேறாக வெளிப்படுத்தி; நின்றான் இது கூறி நிகழ்த்தினனால்
– நின்று இதனைக் கூறத் தொடங்கினான்.

———

7803. ‘எண்ணாயிர கோடி இராவணரும்
விண் நாடரும், வேறு உலகத்து எவரும்
நண்ணா ஒரு மூவரும், நண்ணிடினும்,
கண்ணால் இவன் வில் தொழில் காணுதியால்;–77-

எண்ணாயிர கோடி இராவணரும் – எண்ணாயிரங்கோடி
இராவணர்களும்; விண் நாடரும் – விண்ணுலகத்தவரும்; வேறு
உலகத்து எவரும் – வேறு உலகங்களில் உள்ள எவரும்; நண்ணா ஒரு
மூவரும் – நெருங்குதற்குரிய வலி படைத்த ஒப்பற்ற
மூவரும்; நண்ணிடினும் – நெங்கிப் (போரிட எதிர் வரினும்); இவன்
வில் தொழில் கண்ணால் காணுதியால் – (அவர்களை எல்லாம்
எதிர்க்க வல்ல) இந்த இலக்குவனுடைய வில் தொழில் ஆற்றலைக்
கண்ணால் (நேரிடையாகக்) காண்பாய்.நண்ணா – நெருங்குதற்கரிய, நண்ணுதல் – நெருங்குதல். ஆல் –
அசை.

———

7804. ‘வான் என்பது என்? வையகம் என்பது என் மால்-
தான் என்பது என்? வேறு தனிச் சிலையோர்,
யான் என்பது என்? ஈசன் என இமையோர்
கோன் என்பது என்?-எம்பி கொதித்திடுமேல்!–78-

எம்பி கொதித்திடுமேல் – என் தம்பியாகிய (இலக்குவன்) சினம்
கொள்வான் ஆனால்; வான் என்பது என் – வானத்துத் தேவர்கள்
என்று கூறுவது என்ன? வையகம் என்பது என் – நிலவுலகத்தவர்
என்பது என்ன? மால்தான் என்பது என் – திருமால் என்று கூறுவது
தான் என்ன? வேறு தனிச்சிலையோர் தான் என்பது என் –
(பிறரிடம் இருந்து) வேறுபட்ட சிறப்பான வில்லாளிகள் தான் என்ன?;
ஈசன் என் இமையோர் கோன் என்பது என் – சிவபெருமான்
என்பது என்ன? தேவர் தலைவனான இந்திரன் என்பது என்ன?

—————

7805. ‘தெய்வப் படையும், சினமும், திறலும்
மய் அற்று ஒழி மா தவம், மற்றும் எலாம்,
எய்தற்கு உளவோ-இவன் இச் சிலையில்
கய் வைப்பு அளவே? இறல் காணுதியால்.–79-

தெய்வப் படையும் – தெய்வத் தன்மை உள்ள படைக்கலங்களும்;
சினமும் திறலும் – சினமும் வலிமையும்; மய் அற்று ஒழி மாதவம் –
குற்றம் முழுதும் நீங்கிய பெருந்தவமும்; மற்றும் எலாம் – மற்றும்
உள்ள பிற எல்லாமும்; எய்தற்கு உளவோ – வந்து அடைதற்கு
உரியனவோ? இவன் – இந்த இலக்குவன்; இச்சிலையில் – இந்த
வில்லில்; கய் வைப்பு அளவே – கையை வைத்த அளவிலே; இறல்
காணுதியால் – (அவை) அழிந்து ஒழிதலைக் காண்பாய்.

———–

7806. ‘என் தேவியை வஞ்சனை செய்து எழுவான்
அன்றே முடிவான்; இவன், “அன்னவள் சொல்
குன்றேன்” என ஏகிய கொள்கையினால்
நின்றான் உளன் ஆகி;-நெடுந் தகையாய்!–80-

நெடுந்தகையாய் – பெருமைப் பண்புள்ளவனே! என் தேவியை
வஞ்சனை செய்து எழுவான் அன்றே முடிவான் – என் தேவியை
வஞ்சனை செய்து எடுத்துச் சென்ற இராவணன் அன்றே
இறந்திருப்பான்; இவன் – இந்த இலக்குவன்; அன்னவள் சொல்
குன்றேன் என ஏகிய கொள்கையினால் – அந்தச் சீதையினுடைய
சொல்லை மீற மாட்டேன் என்று (பாதுகாத்த இடத்தை விட்டு)
வெளியேறியதனால்; உளன் ஆகி நின்றான் – (அந்த இராவணன்
இதுவரையில்) உயிர் உள்ளவன் ஆகி வாழ்ந்து நின்றான்; (இல்லை
எனின் இறந்திருப்பான் என்றவாறு.)

———

வீடணனை உடன் சென்று போரைக் காண இராமன் ஏவுதல்

7807. ‘ஏகாய், உடன் நீயும்; எதிர்த்துளனாம்
மாகாயன் நெடுந் தலை வாளியொடும்
ஆகாயம் அளந்து விழுந்ததனைக்
காகாதிகள் நுங்குதல் காணுதியால்.–81-

உடன் நீயும் ஏகாய் – இந்த இலக்குவனுடன் போர்க் களத்துக்கு
நீயும் போவாய்; எதிர்த்துள்ளனாம் மாகாயன் நெடுந்தலை – இவனை
எதிர்த்துள்ளவன் ஆகிய அதிகாயனுடைய பெரிய தலை; வாளியொடும்
ஆகாயம் அளந்து விழுந்ததனை – (எய்யப்பட்ட) அம்போடு
ஆகாயத்தை அளந்து (பூமியில்) விழுவதனை; காகாதிகள் நுங்குதல்
காணுதியால் – காகம் முதலிய பறவைகள் கொத்தி உண்பதனைக்
காண்பாய்.

—————

7808. ‘நீரைக் கொடு நீர் எதிர் நிற்க ஒணுமே?
தீரக் கொடியாரொடு தேவர் பொரும்
போரைக் கொடு வந்து புகுந்தது நாம்
ஆரைக் கொடு வந்தது? அயர்த்தனையோ?–82-

நீரைக் கொடு நீர் எதிர் நிற்க ஒணுமோ – நீரைத் துணையெனக்
கொண்டு நீரை எதிர்த்து நிற்க முடியுமா? தீரக் கொடியாரொடு – மிகக்
கொடியவரான அரக்கர்களுடன்; தேவர் பொரும் போரைக் கொடு
வந்து நாம் புகுந்தது – தேவர்களுக்காகச் செய்கிற போரைக்
கைக்கொண்டு வந்து நாம் போர்க்களம் புகுந்தது; ஆரைக்கொடு
வந்தது – யாரைக் துணையாகக் கொண்டு அமைந்தது;
அயர்த்தனையோ – மனம் சலித்தனையோ?

————

7809. சிவன்; அல்லன்எனில், திருவின் பெருமான்;
அவன் அல்லன்எனில், புவி தந்தருளும்
தவன்; அல்லன்எனில், தனியே வலியோன்
இவன்; அல்லன்எனில், பிறர் யார் உளரோ?–83-

சிவன் அல்லன் எனில் – (இந்த அதிகாயனைக் கொல்வதற்கு
உரியவர்) சிவபிரான் அல்லன் என்றால்; திருவின் பெருமான் அவன்
அல்லன் எனின் – திருமகள் தலைவனாகிய திருமால் அல்லன்
என்றால்; புவி தந்தருளும் தவன் அல்லன் எனில் – நிலவுலகைப்
படைத்தவன் ஆகிய தவச் சிறப்புடைய பிரமதேவன் அல்லன்
என்றால்; தனியே வலியோன் இவன் அல்லன் எனில் –
தனிச்சிறப்புடைய வலிமை படைத்த இந்த இலக்குவன் அல்லன்
என்றால்; பிறர் யார் உளர் – மற்றவர் எவர் தாம் உளர்.

———

7810. ‘ஒன்றாயிர வெள்ளம் ஒருங்கு உள ஆம்
வன் தானையர் வந்து வளைந்த எலாம்
கொன்றான் இவன் அல்லது, கொண்டு உடனே
நின்றார் பிறர் உண்மை நினைந்தனையோ?–84-

ஒருங்கு உள ஆம் – (கும்பகருணன் உடன்) ஒருங்கு சேர்ந்து
வந்து; ஒன்றாயிர வெள்ளம் வன் தானையர் வந்து விளைந்த எலாம்
– ஒன்றாயிரம் வெள்ளம் வலிய படை வீரர்கள் (தன்னை) வளைத்துக்
கொண்டபோது (அவர்கள்) எல்லாரையும்; கொன்றான் இவன் அல்லது
– கொன்றவன் ஆகிய இந்த இலக்குவன் அல்லது; கொண்டு உடனே
நின்றார் பிறர் உண்மை நினைந்தனையோ – (எதிர்த்து) இவனுக்குத்
துணையெனக் கொண்டு நின்றவர் பிறர் எவரும் இல்லை என்பதனை
எண்ணினாயோ?

———-

7811. ‘கொல்வானும் இவன்; கொடியோரை எலாம்
வெல்வானும் இவன்; அடல் விண்டு என
ஒல்வானும் இவன்; உடனே ஒரு நீ
செல்வாய்’ என ஏவுதல் செய்தனனால்.–85-

கொடியோரை எலாம் – கொடிய அரக்கர்களை
எல்லாம்; கொல்வானும் இவன் – கொல்லப் போகின்றவன் இந்த
இலக்குவன்; வெல்வானும் இவன் – (அவ்வாறு கொன்று) வெற்றி
பெறப் போகின்றவன் இந்த இலக்குவன்; அடல் விண்டு என
ஒல்வானும் இவன் – வலிமை பொருந்திக் கொல்லும் தன்மை உள்ள
திருமால் போல எதிர்த்துப் போர் செய்பவனும் இந்த
இலக்குவன்; உடனே ஒரு நீ செல்வாய் என – எனவே விரைவாக
ஒப்பற்ற நீ இவனுடனே செல்வாய் என்று; ஏவுதல் செய்தனனால் –
இராமன் வீடணனை ஏவினான்.

——–

இலக்குவன் வீடணனுடன் போர்க்களம் புகுதல்

7812. அக் காலை இலக்குவன் ஆரியனை
முக் காலும் வலம் கொடு, மூதுணர்வின்
மிக்கான், அடல் வீடணன் மெய் தொடரப்
புக்கான், அவன் வந்து புகுந்த களம்.–86-

அக்காலை – அப்பொழுது; இலக்குவன் ஆரியனை முக்காலும்
வலம் கொடு – இலக்குவன் இராமபிரானை மும்முறை வலம்
வந்து; மூதுணர்வின் மிக்கான் அடல் வீடணன் – அற உணர்வு
மிக்கவன் ஆகிய வலிய வீடணன்; மெய் தொடர – தன்னைத்
தொடர்ந்து வர; புக்கான் அவன் வந்து புகுந்த களம் – அந்த
அதிகாயன் வந்து புகுந்த போர்க் களத்துக்குட் புகுந்தான்.

———-

இரு பக்கத்துச் சேனைகளும் நெருங்கிப் பொருதல்

7813. சேனைக் கடல் சென்றது, தென் கடல்மேல்
ஏனைக் கடல் வந்தது எழுந்தது எனா;
ஆனைக் கடல், தேர், பரி, ஆள், மிடையும்
தானைக் கடலோடு தலைப்படலும்.–87-

தென் கடல் மேல் ஏனைக் கடல் வந்தது எழுந்தது எனா –
தென் கடலின் மீது பிற கடல்கள் வந்து போருக்கு எழுந்தது என்று
கூறும்படி; ஆனைக் கடல், தேர் பரி ஆள் மிடையும் தானைக்
கடலோடு – யானைக் கடலும் தேரும் குதிரையும் காலாட்படையும்
கலந்த அரக்கரின் சேனைக் கடலோடு; சென்றது சேனைக் கடல்
தலைப்படலும் – இலக்குவன் உடன் சென்ற (வானர) சேனைக் கடல்
போரைத் தொடங்குதலும் அடுத்த பாட்டில் பொருள் முடியும்.

———

7814. பசும் படு குருதியின் பண்டு சேறுபட்டு,
அசும்பு உற உருகிய, உலகம் ஆர்த்து எழ,
குசும்பையின் நறு மலர்ச் சுண்ணக் குப்பையின்
விசும்பையும் கடந்தது, விரிந்த தூளியே.–88-

பண்டு – முன்பு; பசும்படு குருதியின் – பச்சை
இரத்தத்தின்; அசும்பு உற சேறுபட்டு – நீர்க்கசிவு பொருந்தியதனால்
சேறு ஆகி; உருகிய உலகம் – குழைந்த போர்க்களம்; ஆர்த்து எழ –
ஆரவாரத்துடன் (சேனைகள் போரிட) எழுந்ததனால்; விரிந்த தூளியே
– பரவி எழுந்த தூசி; குசும்பையின் நறுமலர்ச் – செந்துருக்கம்
என்னும் மணம் மிக்க மலரின்; சுண்ணக் குப்பையின் – மகரந்தப்
பொடிகளின் தொகுதி போல; விசும்பையும் கடந்தது –
ஆகாயத்தையும் கடந்த போயது.

———–

7815. தாம் இடித்து எழும் பணை முழக்கும், சங்கு இனம்
ஆம் இடிக் குமுறலும், ஆர்ப்பின் ஓதையும்,
ஏமுடைக் கொடுஞ் சிலை இடிப்பும், அஞ்சி, தம்
வாய் மடித்து ஒடுங்கின-மகர வேலையே.–89-

தாம் இடித்து எழும் பணை முழக்கும் – தாம் அடிக்கப் படுவதால்
எழுந்த போர் முரசின் ஒலியும்; சங்கு இனம் ஆம் இடிக் குமுறலும் –
சங்குகளின் தொகுதிகளில் இருந்து தோன்றுகின்ற இடிபோன்ற
குமுறலும்; ஆர்ப்பின் ஓதையும் – (வீரர்கள்) ஆர்த்தலால் தோன்றிய
ஓசையும் ஏமுடைக் கொடுஞ் சிலை இடிப்பும் – பாதுகாவல் உடைய
கொடிய வில்லின் (நாணைத் தெறித்தலால்) உண்டான
ஓசையும்; அஞ்சி – (ஆகிய பேரொலிகளுக்கு) அஞ்சி; மகர
வேலையே தம் வாய் மடித்து ஒடுங்கின – மகர மீன்களைக்
கொண்டுள்ள கடல் தம் வாயை மடித்துக் கொண்டு ஒடுங்கின.

———

7816. உலைதொறும் குருதி நீர் அருவி ஒத்து உக,
இலை துறு மரம் எனக் கொடிகள் இற்று உக,
மலைதொறும் பாய்ந்தென, மான யானையின்
தலைதொறும் பாய்ந்தன, குரங்கு தாவியே.–90-

உலைதொறும் – (யானைகளுக்குப் பாகர்களாய் வந்த அரக்கர்கள்)
அழியும் போதெல்லாம்; குருதி நீர் அருவி ஒத்து உக – (அவர்கள்
உடம்பில் இருந்து வெளிப்பட்ட) இரத்தநீர் செந்நிற நீர் அருவியை
ஒத்து வெளிப்பட; இலைதுறு மரம் எனக் கொடிகள் இற்று உக –
இலைகள் நெருங்கிய (மலை மீதுள்ள) மரத்தில் இருந்து (இலைகள்
விழுவது போல) கொடிகள் அற்று விழ; குரங்கு தாவியே மலை
தொறும் பாய்ந்தென – குரங்குகள் தாவி மலை தோறும் பாய்ந்தாற்
போல: மானயானையின் தலைதொறும் பாய்ந்தன – பெருமை மிக்க
யானைகளின் தலைகள் மீது பாய்ந்தன.

——–

7817. கிட்டின கிளை நெடுங் கோட்ட, கீழ் உகு
மட்டின அருவியின் மதத்த, வானரம்
விட்டன நெடு வரை, வேழம் வேழத்தை
முட்டின ஒத்தன, முகத்தின் வீழ்வன.–91-

வானரம் – குரங்குக் கூட்டங்கள்: கிட்டின கிளை நெடுங்கோட்ட –
பொருந்திய மரக் கிளைகள் ஆகிய பெரிய கொம்புகளையும்: கீழ்
உகு மட்டின அருவியின் மதத்த – கீழே சிந்துகின்ற
தேனையுடையனவாகிய அருவியாகிய மதநீரையும்: நெடுவரை விட்டன
– (உடையனவாகி) நீண்ட மலைகளை எறிந்தன: முகத்தில் வீழ்வன –
அம் மலைகள் போர் முகத்தில் வீழ்வனவாயின; வேழம் வேழத்தை
முட்டின ஒத்தன – (அக்காட்சி) யானை யானையொடு மோதியதை
ஒத்து விளங்கின.

————

7818. இடித்தன; உறுக்கின; இறுக்கி ஏய்ந்தன;
தடித்தன; எயிற்றினால் தலைகள் சந்து அறக்
கடித்தன;-கவிக் குலம், கால்கள் மேற்படத்
துடித்தன குருதியில், துரக ராசியே.–92-

கவிக்குலம் – குரங்குக் கூட்டங்கள்; இடித்தன – (அரக்கரின்
குதிரைப் படையில் உள்ள குதிரைகளை) கைகளால்
இடித்தன; உறுக்கின – சினந்து முறுக்கின; இறுக்கி ஏய்ந்தன –
வலிமையுடன் பற்றின; தடித்தன – வெட்டின; எயிற்றினால் தலைகள்
சந்து அறக் கடித்தன – பற்களினால் தலைகளின் சந்திகள்
அறும்படியாகக் கடித்தன; துரகராசியே – (இவ்வாறு பலவகையிலும்
துன்புறுத்தியதனால்) குதிரைக் கூட்டங்கள்; குருதியில் – இரத்த
வெள்ளத்தில்; கால்கள் மேற்படத் துடித்தன – கால்களை மேலே
தூக்கிய வண்ணம் துடித்தன.

———-

7819. அடைந்தன கவிக் குலம் எற்ற, அற்றன,
குடைந்து எறி கால் பொர, பூட்கைக் குப்பைகள்;
இடைந்தன முகிற் குலம் இரிந்து சாய்ந்தென
உடைந்தன; குல மருப்பு உகுத்த, முத்தமே.–93-

கவிக்குலம் அடைந்தன எற்ற – வானரக் கூட்டங்கள்
போர்க்களத்தை அடைந்தனவாய் மோத; பூட்கைக் குப்பைகள்
அற்றன – (போர்க்ளத்துக்கு) குறிக்கோள் மிகுதியொடு வந்த யானைக்
கூட்டங்கள் வலிமை அழிந்தன; குடைந்து எறிகால் பொர –
பெருங்காற்று மோதுவதனால்; முகிற்குலம் இடைந்தன இரிந்து
சாய்ந்தன உடைந்தன – மேகக் கூட்டங்கள் இடைந்து நிலை கெட்டுச்
சாய்ந்தது போல் (அவை) அழிந்தன; குல மருப்பு உகுத்த முத்தமே –
அவற்றின் தந்தங்கள் முத்துக்களைச் சிந்தின.

————

7820. தோல் படத் துதைந்து எழு வயிரத் தூண் நிகர்
கால் பட, கை பட, கால பாசம்போல்
வால் பட, புரண்டனர் நிருதர்; மற்று அவர்
வேல் படப் புரண்டனர், கவியின் வீரரே.–94-

தோல் படத் துகைந்து எழு – யானைகள் அழியும்படி விரைவாக
எழுந்த; வயிரத் தூண் நிகர் கால்பட – வயிரத் தூணைப் போன்ற
(வானரர்களின்) கால்படுவதாலும்; கைபட – (வலிய) கை
படுவதாலும்; கால பாசம் போல் வால்பட – இயமனது பாசம் போன்ற
வால் படுவதாலும்; நிருதர் புரண்டனர் – அரக்கர்கள் பூமியில்
புரண்டனர்; மற்று அவர் வேல் படப் – அந்த அரக்கர்களுடைய
வேல் படைகள் பட்டதனால்; கவியின் வீரரே புரண்டனர் – வானர வீரர்கள் (அடிபட்டுப்) (பூமியில் விழுந்து)
புரண்டனர்.

————-

7821.

மரவமும், சிலையொடு மலையும், வாள் எயிற்று
அரவமும், கரிகளும், பரியும், அல்லவும்,
விரவின கவிக் குலம் வீச, விம்மலால்,
உர வரும் கான் எனப் பொலிந்தது, உம்பரே.–95-

விரவின கவிக்குலம் – கலந்து தொக்க குரங்குக்
கூட்டங்கள்; மரவமும் – மரங்களையும்; சிலையொடு மலையும் –
கற்களோடு மலைகளையும்; வாள் எயிற்று அரவமும் – கூர்மையான
பற்களை உடைய பாம்புகளையும்; கரிகளும் –
யானைகளையும்; பரியும் – குதிரைகளையும்; அல்லவும் –
இவைகளல்லாத பிறவற்றையும்; விம்மலால் வீச – மிகுதியாக வீசி
எறிய; உம்பரே – மேலிடமாகிய ஆகாயமானது; உரவரும் கான்
எனப் பொலிந்தது – வலிமை மிக்க காடு போல் விளங்கியது.

——–

7822. தட வரை, கவிக் குலத் தலைவர், தாங்கின.
அடல் வலி நிருதர்தம் அனிக ராசிமேல்
விட விட, விசும்பிடை மிடைந்து வீழ்வன
படர் கடல் இன மழை படிவ போன்றவே.–96-

கவிக்குலத் தலைவர் தாங்கின – குரங்குக் கூட்டத் தலைவர்
தாங்கியனவாகிய; தடவரை – பெரிய மலைகளை; அடல் வலி நிருதர்
– கொல்லும் வலிமை உடைய அரக்கர்; தம் அனிக ராசிமேல் –
தம்முடைய சேனைத் தொகுதியின் மீது; விடவிட – விடுந்தோறும்
விடுந்தோறும்; விசும்பிடை மிடைந்து வீழ்வன – (அவை) ஆகாயத்தில்
நெருங்கிக் கடலில் வீழ்வனவாகி; படர் கடல் இனமழை படிவ
போன்றவே – பரந்த கடலில் தொகுதியாக மேகக் கூட்டங்கள்
படிந்திருப்பன போன்றன.

———–

7823.
இழுக்கினர் அடிகளின், இங்கும் அங்குமா,
மழுக்களும், அயில்களும், வாளும், தோள்களும்
முழுக்கினர், உழக்கினர் மூரி யாக்கையை
ஒழுக்கினர் நிருதரை, உதிர ஆற்றினே.–97-

அங்கும் இங்குமா – அங்கும் இங்கும் (ஓடி); அடிகளின்
இழுக்கினர் நிருதரை – கால் வழுக்கியவர்களான அரக்கர்களை; உதிர
ஆற்றினே – குருதி ஆற்றில்; மழுக்களும் அயில்களும், வாளும்,
தோள்களும் முழுக்கினர் – (அவர்களுடைய மழுப்படைகளும்
வேல்களும், வாளும்; (அவற்றைத் தாங்கிய) தோள்களும் (எனும்
இவற்றை) முழுகுமாறு செய்தனர்; மூரி யாக்கையை உழக்கினர் –
(அவர்களுடைய) வலிய உடம்பைக் கலக்கியவர்களாகி; ஒழுக்கினர் –
(குருதியாற்றில்) செலுத்தினர்.

————

7824.
மிடலுடைக் கவிக் குலம், குருதி வெள்ள நீர்
இடை இடை நீந்தின, இயைந்த யானையின்
திடரிடைச் சென்று, அவை ஒழுக்கச் சேர்ந்தன,
கடலிடைப் புக்கன, கரையும் காண்கில.–98-

மிடலுடைக் கவிக்குலம் – வலிமை உள்ள குரங்குக்
கூட்டங்கள்; குருதி வெள்ள நீர் – குருதி நீர் வெள்ளத்தில்; இடை
இடை நீந்தின – இடை இடையே நீ்ந்தி; இயைந்த யானையின்
திடரிடைச் சென்று – (அங்கு விழுந்துள்ள) யானைகளின் உடம்பாகிய
மேட்டில் சென்று; (ஏறித் தப்ப முயன்று முடியாமல்) அவை ஒழுக்கச்
சேர்ந்தன – அவை வெள்ளத்தில் சேர்ந்தனவாகிக்; கடலிடைப் புக்கன
– கடலுக்குள் புகுந்தன; கரையும் காண்கில – கரை காண மாட்டாதவை
ஆயின.

———–

7825.
கால் பிடித்து ஈர்த்து இழி குருதிக் கண்ண, கண்
சேல் பிடித்து எழு திரை ஆற்றில், திண் நெடுங்
கோல் பிடித்து ஒழுகுறு குருடர் கூட்டம்போல்,
வால் பிடித்து ஒழுகின-கவியின் மாலையே.–99-

கவியின் மாலையே – குரங்குக் கூட்டத் தொகுதி; கால் பிடித்து
ஈர்த்து இழி குருதிக் கண்ண – காலைப்பிடித்து இழுத்துக் கொண்டு
ஓடுகிற குருதி (வெள்ளத்தின் இடையில்) உள்ளனவாகி; கண் சேல்
பிடித்து எழுதிரை ஆற்றில் – கண்ணை ஒத்த சேல் மீன்களை
இழுந்துக் கொண்டு எழுகிற அலைகளை உடைய ஆற்றில்; திண்
நெடுங் கோல் பிடித்து – வலிய நீண்ட கோலைப் பிடித்துக்
கொண்டு; ஒழுகுறு குருடர் கூட்டம் போல் வால் பிடித்து ஒழுகின –
செல்லுகின்ற குருடர்களின் கூட்டத்தைப் போல ஒன்றன் வாலை
ஒன்று பிடித்துக் கொண்டு சென்றன.

———-

7826.
பாய்ந்தது நிருதர்தம் பரவை; பல் முறை
காய்ந்தது, கடும் படை கலக்கி; கைதொறும்
தேய்ந்தது, சிதைந்தது, சிந்திச் சேண் உறச்
சாய்ந்தது-தகைப் பெருங் கவியின் தானையே.–100-

நிருதர் தம் பரவை – அரக்கவீரர்கள் தம் படைக்கடல்; பல்முறை
பாய்ந்தது – (குரங்குப் படைகளின் மீது) பலமுறை பாய்ந்து; கடும்
படை கலக்கிக் காய்ந்தது – அக்கொடிய குரங்குப் படையைக் கலக்கிச்
சினந்தது; தகைப் பெருங் கவியின் தானையே – (அவ்வளவில்)
தகுதியுள்ள அப்பெரிய குரங்குப்படை; கைதொறும் தேய்ந்து சிந்திச்
சிதைந்தது – அணி தோறும் (வலிமை) கெட்டுச் சிதறியது; சேண் உறச்
சாய்ந்தது – நீண்ட தூரம் (வலிகெட்டு) ஓடியது.

——

இலக்குவன் வானரரைத் தேற்றிப் போரிடல்

7827.
அத் துணை, இலக்குவன், ‘அஞ்சல், அஞ்சல்!’ என்று,
எத் துணை மொழிகளும் இயம்பி, ஏற்றினன்,
கைத்துணை வில்லினை, காலன் வாழ்வினை,
மொய்த்து எழு நாண் ஒலி முழங்கத் தாக்கினான்.-101-

அத்துணை – அந்த நேரத்தில்; இலக்குவன் அஞ்சல் அஞ்சல்
என்று – இலக்குவன் அஞ்சாதீர் அஞ்சாதீ்ர் என்று,; எத்துணை
மொழிகளும் இயம்பி – பல (தேறுதல்) சொற்களைச்
சொல்லித்; கைத்துணை வில்லினை – தன் கைக்குத் துணையாக உள்ள
வில்லாகிய; காலன் வாழ்வினை – இயமன் வாழ்வு பெறுதற்குத் துணையாய் உள்ளதை; ஏற்றினன் – நாண் ஏற்றி; மொய்த்து எழு
நாண் ஒலி முழங்கத் தாக்கினான் – நெருங்கி எழும் நாண்களின் ஒலி
முழங்குமாறு தெறித்தான்.

————-

7828.
நூல் மறைந்து ஒளிப்பினும், நுவன்ற பூதங்கள்
மேல் மறைந்து ஒளிப்பினும், விரிஞ்சன் வீயினும்,
கால் மறைந்து ஒளிப்பு இலாக் கடையின், கண் அகல்
நான்மறை ஆர்ப்பென நடந்தது, அவ் ஒலி. –102-

நூல் மறைந்து ஒளிப்பினும் – சாத்திர நூல்கள் எல்லாம் மறைந்து
போய் ஒளிந்து கொண்டாலும்; நுவன்ற பூதங்கள் மேல் மறைந்து
ஒளிப்பினும் – (விவரித்துச்) சொல்லப்படுகிற ஐம்பெரும் பூதங்களும்
(தமது) முதற்காரணமாகிய மூலப்பிரகிருதியில் இலயித்துப் புலனாகாது
இருப்பினும்; விரிஞ்சன் வீயினும் – (படைப்புத் தொழில் செய்யும்)
பிரமதேவன் அழிந்திட்டாலும்; கால் மறைந்து ஒளிப்பு இலாக்
கடையின் – கால தத்துவம் (மட்டும்) மறைந்து ஒடுங்காது உள்ள ஊழி
முடிவில்; கண்ணகல் நான்மறை ஆர்ப்பென நடந்தது அவ்ஒலி –
இடமகன்ற நான்மறைகளின் ஆரவாரம் போல் (இலக்குவன் வில்நாண்)
ஒலி தோன்றி விளங்கியது.

————–

7829.
துரந்தன சுடு சரம்; துரந்த, தோன்றல
கரந்தன, நிருதர்தம் கரை இல் யாக்கையின்;
நிரந்தன நெடும் பிணம், விசும்பின் நெஞ்சு உற;
பரந்தன குருதி, அப் பள்ள வெள்ளத்தின்.–103-

சுடு சரம் துரந்தன – (இலக்குவனால்) கொடிய அம்புகள்
செலுத்தப்பட்டன; துரந்த – (அவ்வாறு) செலுத்தப்பட்டன் வாகிய
(அம்புகள்); நிருதர் தம் கரைஇல் யாக்கையின் – அரக்கர்களுடைய
எண்ணற்ற உடம்புகளில்; தோன்றல கரந்தன – வெளிப்பட்டுத்
தெரியாமல் மறைந்தன; விசும்பின் நெஞ்சு உற நெடும் பிணம்
நிரந்தன- (அதனால்) ஆகாயத்தின் நடுவிடத்தில் பொருந்துமாறு
பிணக்குவியல் வரிசைகள் அமைந்தன; குருதி – (அவ்வரக்கர்
உடல்களில் இருந்து) வெளிப்பட்ட குருதி; அப்பள்ள வெள்ளத்தின்
பரந்தன – அந்தப் பள்ளமாகிய கடல் நீரோடு கலந்து பரந்தன.

——–

7830.
யானையின் கரம் துரந்த, இரத வீ்ரர்தம்
வான் உயிர் முடித் தலை தடிந்து, வாசியின்
கால் நிரை அறுத்து, வெங் கறைக்கண் மொய்ம்பரை
ஊனுடை உடல் பிளந்து, ஓடும்-அம்புகள்;–104-

அம்புகள் – (இலக்குவன் எய்த) அம்புகள்; யானையின் கரம்
துரந்த – யானைகளின் துதிக்கைகளை அறுத்தம்; இரத வீரர் தம்
வான் உயர் முடித்தலை தடிந்து – தேர் வீரர்களின் மிக உயர்ந்த
முடியொடு கூடிய தலைகளை வெட்டியும்; வாசியின் கால் நிரை
அறுத்து – குதிரைகளின் கால் வரிசைகளை அறுத்தம்; வெங்கறைக்
கண் மொய்ம்பரை – கொடிய குருதிக் கண்கொண்ட வலிய
அரக்கரின்; ஊனுடை உடல் பிளந்து ஓடும் – தசையைக் கொண்ட
உடல்களைப் பிளந்து ஓடின.

——–

7831.
வில் இடை அறுத்த, வேல் துணித்து, வீரர்தம்
எல்லிடு கவசமும் மார்பும் ஈர்ந்து, எறி
கல் இடை அறுத்து, மாக் கடிந்து, தேர் அழீஇ,
கொல் இயல் யானையைக் கொல்லும், கூற்றினே.–105-

(இதற்கு மேல் இலக்குவனுடைய அம்புகள்) வில் இடை அறுத்து
(வீரர்களின் கைகளில் உள்ள) விற்களை இடையே அறுத்து, வேல்
துணித்து – வேல்களைத் துண்டு படச் செய்தும்; வீரர் தம் எல்லிடு
கவசமும் மார்பும் ஈர்ந்து – அந்த வீரர்கள் அணிந்திருந்த ஒளி
விடுகிற கவசங்களையும் அவர்களது மார்புகளையும் பிளந்தும்; எறிகல்
இடை அறுத்து – எறியப்பட்ட மலைகளை இடையில் அழித்தும்; மாக் கடிந்து – குதிரைகளைக்
கொன்றும்; தேர் அழீ இ – தேர்களை அழித்தும்; கொல் இயல்
யானையைக் கூற்றினே கொல்லும் – கொல்லும் தன்மை உள்ள
யானைகளைக் கூற்றுவனைப் போலக் கொல்லுவன ஆயின.

————

இலக்குவன் அம்பினால் அழிந்துபட்ட படுகளத்தின் நிலை

வெற்றி வெங் கரிகளின் வளைந்த வெண் மருப்பு,
அற்று எழு விசைகளின் உம்பர் அண்மின,
முற்று அரு முப் பகல் திங்கள் வெண் முளை
உற்றன விசும்பிடைப் பலவும் ஒத்தன.–106-

வெற்றி வெங்கரிகளின் வளைந்த வெண் மருப்பு – வெற்றி
பொருந்திய கொடிய யானைகளின் வளைந்த வெண்ணிறத்
தந்தங்கள்; அற்று எழு விசைகளின் உம்பர் அண்மின் – (அம்பு
பட்டு) அற்று எழுந்த வேகத்தால் வானத்தைச் சேர்ந்தனவாய்; முற்று
அரு முப்பகல் திங்கள் வெண்முளை – முழுமையாதல் இல்லாத
திருதியை நாளில் தோன்றும் சந்திரனது வெள்ளிய பிறைகள்; பலவும்
விசும்பிடை உற்றன ஒத்தன – பலவும் வானத்தில் தோன்றியதை
ஒத்தன.

————

7833.
கண்டகர் நெடுந் தலை, கனலும் கண்ணன,-
துண்ட வெண் பிறைத் துணை கல்வி, தூக்கிய
குண்டல மீன் குலம் தழுவி, கோள் மதி
மண்டலடம் விழுந்தன போன்ற மண்ணினே.–107-

கனலும் கண்ணன கண்டகர் நெடுந்தலை- (இலக்குவனால் அறுத்து
வீழ்த்தப்பட்ட) நெருப்பை வெளிக்காலும் கண்களை உடையனவாகிய
கொடிய அரக்கர்களின் பெரிய தலைகள்; துண்ட துணை வெண்பிறை
கவ்வி – துண்டுபட்ட இரண்டு வெண்பிறை மதியைக்
கவ்விக்கொண்டு; தூக்கிய குண்டல மீன்குலம் தழுவி – (காதில்)
தொங்குகிற குண்டலங்களாகிய விண்மீன் கூட்டங்களை உடன்
சேர்த்துக் கொண்டு; கோள் மதி மண்டலம் மண்ணினே விழுந்தன போன்றன – கோள்களோடு கூடிய
சிறப்புடைய மண்டலம் நிலத்தில் விழுந்தன போன்றன.

————

7834.
கூர் மருப்பு இணையன, குறைந்த கையன,
கார் மதக் கன வரை கவிழ்ந்து வீழ்வன-
போர்முகக் குருதியின் புணரி புக்கன,
பார் எடுக்குறு நெடும் பன்றி போன்றன.–108-

கூர் மருப்பு இணையன – கூரிய கொம்புகள் இரண்டு
உடையவைாய்; குறைந்த கையன – குறைவு பட்ட துதிக்கையை
உடையனவாய்; கார்மதக் கனவரை கவிழ்ந்து வீழ்வன – கரிய
மதங்கொண்ட பெரிய மலை போன்ற யானைகள் கவிழ்ந்து
வீழ்பவை; போர்முகக் குருதியின் புணரி புக்கன – போரில் பெருகிய
குருதியாகிய கடலில் வீழ்ந்தனவாய்; பார் எடுக்குறு நெடும் பன்றி
போன்றன – (அக்காட்சி) (ஊழிக்கடல் வெள்ளத்து முழுகிய) பூமியை
மீள எடுக்கும் பெரு வராகத்தின் தன்மையை ஒத்தன.

—————

7835.

புண் உற உயிர் உகும் புரவி பூட்டு அற,
கண் அகன் தேர்க் குலம், மறிந்த காட்சிய-
எண் உறு பெரும் பதம் வினையின் எஞ்சிட
மண் உற, விண்ணின் வீழ் மானம் போன்றன.–109-

புண் உற உயிர் உகும் புரவி பூட்டு அற – (அம்புகள் பட்ட) புண்
நிறைந்ததால் உயிரை விட்ட குதிரைகள் (தேர்களில்) பூட்டிய
நிலையில் இருந்து நீங்க; கண்அகன் தேர்க்குலம் மறிந்த காட்சிய –
இடம் அகன்ற தேர்க் கூட்டங்கள் தலைகீழாகக் கவிழ்ந்து விழுந்த
காட்சியானது; எண் உறு பெரும் பதம் எஞ்சிட – மதிக்கத்தக்க பெரிய
(துறக்கப்) பதவி தீர்ந்தொழிய; வினையின் விண்ணின் மண் உற வீழ்
மானம் போன்றன – வினைப் பயனால் விண்ணினின்று மண்ணில்
பொருந்துமாறு விழும் விமானங்களை ஒத்தன.

————

7836.
அட, கருங் கவந்தம் நின்று ஆடுகின்றன-
விடற்கு அரும் வினை அறச் சிந்தி, மெய் உயிர்
கடக்க அருந் துறக்கமே கலந்தவாம் என,
உடற் பொறை உவகையின் குனிப்ப ஒத்தன.–110-

அட, கருங் கவந்தம் நின்று ஆடுகின்றன – (இலக்குவன் எய்த
அம்புகள்) அட்டதனால் கரிய நிறமுள்ள உடல் குறைகள்
நின்றாடுகின்றன; விடற்கு அரும் வினை அறச் சிந்தி – விடுவதற்கு
முடியாத இரு வினைகளை முழுமையாக ஒழித்து; மெய் உயிர் கடக்க
அருந் துறக்கமே கலந்தவாம் என – உடம்பில் இருந்து உயிர்
செல்லுவதற்கு அரிய துறக்கத்தைச் சேர்ந்து விட்டன்
என்னுமாறு; உடற்பொறை உவகையின் குனிப்ப ஒத்தன – உடல்
பொறைகள் மகிழ்ச்சியால் கூத்தாடுவதை ஒத்தன.

—————

7837.
‘ஆடுவ கவந்தம் ஒன்று, ஆறு எண்ணாயிரம்
வீடிய பொழுது’ எனும் பனுவல் மெய்யதேல்,
கோடியின் மேல் உள, குனித்த; கொற்றவன்
பாடு இனி ஒருவரால் பகரற்பாலதோ? –111-

ஆறு எண்ணாயிரம் வீடிய பொழுது – பதினாலாயிரம் பேர்
இறந்தபொழுது; ஒன்று கவந்தம் ஆடுவ எனும் – ஒரு கவந்தம் ஆடும்
என்ற; பனுவல் மெய்யதேல் – நூல் கொள்கை உண்மையாக இருக்கும்
ஆனால்; குனித்த கோடியின் மேல் உள – (அப்போரில்) ஆடிய
(கவந்தங்கள்) கோடிக்கு மேல் உள்ளன (என்றால்); கொற்றவன் பாடு
இனி ஒருவரால் பகரற் பாலதோ – வெற்றியுடைய இலக்குவனுடைய
பெருமையை இனி ஒருவரால் சொல்ல முடியுமே.

————

7838.
ஆனையின் குருதியும், அரக்கர் சோரியும்,
ஏனை வெம் புரவியின் உதிரத்து ஈட்டமும்,
கானினும் மலையினும் பரந்த கால் புனல்
வான யாறு ஆம் எனக் கடல் மடுத்தவே. –112-

ஆனையின் குருதியும் – யானைகளின் இரத்தமும்; அரக்கர்
சோரியும் – அரக்கர்களின் இரத்தமும்; ஏனை வெம் புரவியின்
உதிரத்து ஈட்டமும் – மற்றும் உள்ள விரைந்து செல்லும் குதிரைகளின்
இரத்தப் பெருக்கும்; கானினும் மலையினும் பரந்த கால் புனல் –
காட்டிலும் மலையிலும் (மழை பெய்ததனால்) காலாக ஓடிவரும்
நீ்ர்; வான யாறு ஆம் எனக் கடல் மடுத்தவே – வானயாறு என்று
சொல்லும்படி (ஓடிக்) கடலில் சேர்ந்தன.

———–

7839.
தாக்கிய சரங்களின் தலைகள் நீங்கிய
ஆக்கைய, புரசையோடு அணைந்த தாளன,
மேக்கு உயர் அங்குசக் கைய, வெங் கரி
நூக்குவ, கணிப்பு இல-அரக்கர் நோன் பிணம்.-113-

தாக்கிய சரங்களின் தலைகள் நீங்கிய ஆக்கைய – (தங்களைத்)
தாக்கிய (இலக்குவனது) அம்புகளால் தலைகள் நீங்கிய உடல்களை
உடைய; அரக்கர் நோன் பிணம் – அரக்கர்களின் வலிமை உள்ள
பிணங்கள்; புரசையோடு அணைந்த தாளன – யானையின் கழுத்தில்
கட்டிய கயிற்றொடு சேர்ந்த கால்களை உடையனவாய்; மேக்கு உயர்
அங்குசக்கைய – மேலே உயர்ந்த அங்குசத்தைக் கொண்ட கைகளை
உடையனவாய்; வெங்கரி நூக்குவ கணிப்பு இல – கொடிய
யானைகளைச் செலுத்தவன எண்ணில்லாதன.

———-

7840.
கோளுடைக் கனண பட, புரவி கூத்தன,
தோளுடை நெடுந் தலை துமிந்தும், தீர்கில
ஆளுடைக் குறைத்தலை அதிர ஆடுவ-
வாளுடைத் தடக் கைய, வாசி மேலன.–114-

கோளுடைக் கணைபட – (இலக்குவனது) கொல்லும் தன்மை உள்ள
அம்புகள் பட்டதனால்; தோளுடை நெடுந்தலை துமிந்தும் –
தோளுக்கு மேல் உள்ள நெடிய தலைகள்
வெட்டப்பட்டும்; வாளுடைத் தடக்கைய – வாளை ஏந்திய பெரிய
கைகளை உடையனவான; வாசி மேலன ஆளுடைக் குறைத்தலை –
குதிரைகளின் மேல் உள்ள வீரர்களின் தலையற்ற உடற்குறைகள்;
புரவி கூத்தன – குதிரைகள் ஆடிய ஆட்டத்திற்கு ஏற்ப; தீர்கில
அதிர ஆடுவ – நீங்காது அதிர்ந்து ஆடுவன ஆயின.

————-

7841.
வய்வன முனிவர் சொல் அனைய வாளிகள்
கொய்வன தலைகள் தோள்; குறைத்தலைக் குழாம்,
கய் வளை வரி சிலைக் கடுப்பின் கைவிடா
எய்வன எனைப் பல, இரத மேலன.–115-

வய்வன முனிவர் சொல் அனைய வாளிகள்- (இலக்குவன் எய்த)
சாபம் தரும் முனிவர்களின் சாபச் சொற்களைப் போன்று (தவறாது
பயன் விளைக்கும்) அம்புகள்; தலைகள் தோள் கொய்வன –
வீரர்களின் தலைகளையும் தோள்களையும் (அறுத்துக்)
கொள்வனவாயின; இரத மேலன குறைத்தலைக் குழாம் – (அவ்வாறு
பட்ட) இரதங்களின் மேல் இருந்த வீரர்களின் உடற்குறைத்
தொகுதிகள்; கய்வளை வரிசிலைக் கடுப்பின் கைவிடா – கையினால்
வளைக்கப்படுகின்ற கட்டமைந்த வில்லில் (முன் எய்த) வேகம்
குறையாமல்; எய்வன எனைப்பல – எய்பவை மிகப் பலவாம்.

—————-

7842.
தாதையை, தம்முனை, தம்பியை, தனிக்
காதலை, பேரனை, மருகனை, களத்து
ஊதையின் ஒரு கணை உருவ, மாண்டனர்-
சீதை என்று ஒரு கொடுங் கூற்றம் தேடினார்.–116-

சீதை என்று ஒரு கொடுங் கூற்றம் தேடினார்-சீதை என்று பெயர்
கொண்ட ஒரு கொடிய யமனைத் தேடியவர்களான (அரக்கர்கள்);
தாதையை தம்முனை, தம்பியை – தந்தையையும், தமயனையும்,
தம்பியையும்; தனிக்காதலை – சிறந்த அன்புக்குரிய மகனையும்;
பேரனை மருகனை – பேரனையும் மருமகனையும்; களத்து –
போர்க்களத்து; ஊதையின் ஒருகணை உருவ மாண்டனர் –
(இலக்குவனது) பெருங்காற்றுப் போன்ற ஒரு கணை ஊடுருவிச் செல்ல
(இழந்து) தாமும் மாண்டனர்.

————

7843.
தூண்டு அருங் கணை படத் துமிந்து, துள்ளிய
தீண்ட அரு நெடுந் தலை தழுவிச் சேர்ந்தன,
பூண்டு எழு கரதலம் பொறுக்கலாதன
ஆண்டலை நிகர்த்தன, எருவை ஆடுவ.–117-

தூண்டு அருங்கணை பட- தூண்டுதல் இல்லாமல் மேலும் மேலும்
பாயும் தன்மை உள்ள அம்புகள் பட்டதால்; துமிந்து துள்ளிய –
வெட்டுண்டு துள்ளிய; தீண்ட அரு நெடுந்தலை – (கைகளால்)
தீண்டுதற்கு அரிய (அரக்கரது) பெரிய தலைகளைத்; தழுவிச்
சேர்ந்தன எருவை – நெருங்கிச் சேர்ந்தனவாகிய எருவைகள்; பூண்டு
எழு கரதலம் பொறுக்கலாதன – தாம் மேல் (பறந்து) எழுவதற்குரிய
கரங்களை (சிறகுகளைப்) பெற்றிராதவையான; ஆண்டலை நிகர்த்தன
ஆடுவ – ஆண்டலை என்னும் பறவையை ஒத்து ஆடுவனவாயின.

———–

7844.
ஆயிர ஆயிர கோடியாய் வரும்
தீ உமிழ் நெடுங் கணை மனத்தின் செல்வன்,
பாயவன, புகுவன; நிருதர் பல் உயிர்
ஓய்வன, நமன் தமர் கால்கள் ஓயவே.–118-

ஆயிர ஆயிர கோடியாய் வரும் – பல ஆயிரம் கோடியாய்
வருகின்றனவான; தீ உமிழ் நெடுங்கணை – தீயைக் கக்குகின்ற நீண்ட
அம்புகள்; மனத்தின் செல்வன பாய்வன – மனம் போல விரைந்து
சென்று பாய்வனவாய்; புகுவன – (பகைவர் உடலில்) புக; நிருதர் பல்
உயிர் – (அதனால்) அரக்கர்களின் பல உயிர்கள்; நமன்
தமர் கால்கள் ஓயவே ஓய்வன – யமனுடைய உறவினர்களின் கால்கள்
ஓயுமாறு ஒழிவனவாயின.

————-

7845.
விளக்கு வான் கணைகளால் விளிந்து, மேருவைத்
துளக்குவார் உடற் பொறை துணிந்து, துள்ளுவார்;
இளக்குவார், அமரர் தம் சிரத்தை; ஏன்? முதுகு
உளுக்குவாள் நிலமகள், பிணத்தின் ஓங்கலால். –119-

மேருவைத் துளக்குவார் – மேரு மலையையும் அசைக்கும்
பேராற்றல் படைத்த அரக்கர்; விளக்கு வான் கணைகளால் விளிந்து –
ஒளி விடுகிற சிறந்த (இலக்குவனுடைய) அம்புகளால் இறந்து; உடற்
பொறை துணித்து துள்ளுவார் – உடல் ஆகிய பெருஞ்சுமை
துண்டாகித் துடித்தனர்; அமரர் தம் சிரத்தை இளக்குவார் –
(அப்பெருஞ் செயல் கண்டு) தேவர்கள் தங்கள் தலையை
அசைப்பாராயினர்; ஏன் – அதற்கு மேலும் என்ன; பிணத்தின்
ஓங்கலால் நிலமகள் முதுகு உளுக்குவாள்- பிணத்தின் மலை போன்ற
குவியலின் பாரம் தாங்காது நில மடந்தை முதுகு நெளிந்தாள்.

———

தாருகன் இலக்குவனுடன் பொருது இறத்தல்

7846.
தாருகன் என்று உளன் ஒருவன்-தான் நெடு
மேருவின் பெருமையான், எரியின் வெம்மையான்,
போர் உவந்து, உழக்குவான், புகுந்து தாங்கினான்-
தேரினன், சிலையினன், உமிழும் தீயினன்.–120-

தான் நெடு மேருவின் பெருமையான் – தான் நெடிய
மேருமலையின் பெருமையினையும்; எரியின் வெம்மையான் –
நெருப்புப் போன்ற (சின) வெம்மையினையும் (உடைய); தாருகன்
என்று உளன் ஒருவன் – தாருகன் என்று பெயருள்ள
ஒப்பற்றவன்; போர் உவந்து உழக்குவான் புகுந்து – போரை மகிழ்ந்து
செய்வான் புகுந்து; தேரினன், சிலையினன் – தேரின் மீது
(ஏறியவனாயும்) (கையில்) வில்லையேந்தியவனாயும்; உமிழும்
தீயினான் – (கண்களில்) நெருப்புப் பொறி சிந்துபவனாயும்; தாங்கினன்
– (இலக்குவனை எதிர்த்து நின்று) தாக்கினான்.

————-

7847.
துரந்தனன் நெடுஞ் சரம், நெருப்பின் தோற்றத்த;
பரந்தன, விசும்பிடை ஒடுங்க; பண்டுடை
வரம்தனின் வளர்வன அவற்றை, வள்ளலும்,
கரந்தனன் கணைகளால், முனிவு காந்துவான்.–121-

பண்டுடை வரந்தனின் வளர்வன- தான் முன்னே பெற்றுள்ள வர
பலத்தால் மிகுந்து வளர்வனவாகிய; நெருப்பனின் தோற்றத்த
நெடுஞ்சரம் துரந்தனன் – நெருப்புப் போன்ற வெப்பத்
தோற்றத்தினை உடைய நெடிய அம்பைுகளைத் (தாருகன்)
செலுத்தினன்; விசும்பிடை ஒடுங்க பரந்தன – (அவ்வம்புகள்)
ஆகாயத்தின் இடமும் குறையும் படி எங்கும் பரந்தன; வள்ளலும்
அவற்றை – இலக்குவனும் அந்த அம்புகளை; முனிவு காந்துவான்
கணைகளால் கரந்தனன் – சினத்தால் கொதித்தவனாய் (தன்)
அம்புகளால் மறையுமாறு செய்தான்.

——–

7848.
அண்ணல் தன் வடிக் கணை துணிப்ப, அற்று அவன்
கண் அகல் நெடுந் தலை, விசையின் கார் என,
விண்ணிடை ஆர்த்தது, விரைவில் மெய் உயிர்
உண்ணிய வந்த வெங் கூற்றும் உட்கவே.–122-

அண்ணல் தன் வடிக்கணை துணிப்ப – பெருமை மிக்க
இலக்குவனது கூர்மையான அம்புகள் அறுக்க; அவன் கண் அகல்
நெடுந்தலை அற்று – (அந்தத் தாருகனுடைய) இடமகன்ற நீண்ட
பெரிய தலை அறுபட்டு; விரைவில் மெய் உயிர் உண்ணிய வந்த
வெங்கூற்றும் உட்கவே – விரைவாக உடம்பில் இருந்து உயிரைப்
(பிரித்து) உண்ண வந்த வலிய யமனும் அஞ்சும்படி; விசையின்
விண்ணிடை கார் என ஆர்த்தது – வேகமாக ஆகாயத்தில் எழுந்து
மேகம் போல் பேரொலி செய்தது.

———–

இலக்குவன் காலன் முதலிய ஐவரைக் கொல்லுதல்

7849.
காலனும், குலிசனும், காலசங்கனும்,
மாலியும், மருத்தனும் மருவும் ஐவரும்
சூலமம் கணிச்சியும் கடிது சுற்றினார்;
பாலமும், பாசமும், அயிலும் பற்றுவார்.–123-

சூலமும் – சூலாயுதப் படையும்; கணிச்சியும் –
மழுப்படையும்; பாலமும் – பிண்டி பாலம் எனும் படையும்; பாசமும் –
கயிற்றினால் ஆன படையும்; அயிலும் – வேற்படையும்; பற்றுவார் –
கையில் ஏந்தியவராய்; காலனும் குலிசனும் கால சங்கனும், மாலியும்
மருந்தனும் மருவும் ஐவரும் – காலன், குலிசன், கால சங்கன், மாலி,
மருத்தன் என்று பெயர் பொருந்திய ஐவரும்; கடிது சுற்றினார் –
விரைவாக வந்து (இலக்குவனைச்) சூழ்ந்து கொண்டார்கள்.

————

7850.
அன்னவர் எய்தன எறிந்த ஆயிரம்
துன்ன அரும் படைக்கலம் துணித்து, தூவினன்,
நல் நெடுந் தலைகளைத் துணித்து; நால் வகைப்
பல் நெடுந் தானையைப் பாற நூறினான்.–124-

அன்னவர் எய்தன எறிந்த ஆயிரம் – அவர்கள் எய்தனவும்
எறிந்தனவும் ஆன ஆயிரக்கணக்கான; துன்ன அரும் படைக்கலம் –
நெருங்குதற்கு அருமையான படைக் கலங்களை; தூவினன் துணிந்து –
(இலக்குவன் அம்புகளைத்) தூவித் துணித்து; நல் நெடுந்தலைகளைத்
துணித்து – (அந்த ஐவருடைய) வலிமையான நெடிய தலைகளைத்
துண்டித்து; நால்வகைப் பல் நெடுந் தானையைப் பாற நூறினான் –
பலவாக அமைந்த நான்கு வகையாக அமைந்த பெருஞ்சேனையைச்
சிதறச் செய்தான்.

————-

இலக்குவன் அதிகாயன் படை போர் செய்தல்

7851.
ஆண்டு அதிகாயன்தன் சேனை ஆடவர்
ஈண்டின மதகிரி ஏழ்-எண்ணாயிரம்
தூண்டினர், மருங்கு உறச் சுற்றினார், தொகை
வேண்டிய படைக்கலம் மழையின் வீசுவார்.–125-

ஆண்டு அதிகாயன் தன் சேனை ஆடவர் – அப்போது
அதிகாயனுடைய படை வீரர்கள்; ஈண்டின மதகிரி ஏழ் –
எண்ணாயிரம் தூண்டினர் – நெருங்கிய மதமலை போன்ற களிறுகள்
ஐம்பத்தாறாயிரத்தைத் தூண்டி; மருங்கு உறச் சுற்றினார் –
(இலக்குவனைப்) பக்கங்களில் பொருந்த வளைத்துக்கொண்டு; தொகை
வேண்டிய படைக்கலம் மழையின் வீசுவார் – தொகையாக விரும்பிய
படைக்கருவிகளை மழை போல (மிகுதியாக) வீசுவாராயினர்.

————

7852.
போக்கு இலா வகை புறம் வளைத்துப் பொங்கினார்,
தாக்கினார் திசைதொறும், தடக் கை மால் வரை;
நூக்கினார் படைகளால் நுறுக்கினார்; குழம்பு
ஆக்கினார், கவிகள்தம் குழுவை; ஆர்ப்பினார்.–126-

போக்கு இலா வகை புறம் வளைத்துப்பொங்கினார்-(அரக்கர்கள்)
(குரங்குப் படை வீரர்கள்) தப்பிப் போக முடியாதபடி பக்கங்களை
எல்லாம் வளைத்துக் கொண்டு சினம் மிக்கவராய்; திசை தொறும்
தாக்கினார் – (எல்லாத்) திசைகளிலும் தாக்கினார்கள்; தடக்கை மால்
வரை நூக்கினார் – (அந்த வானரப் படைகளின் மீது) பெரிய
கைகளை உடைய மயக்கம் கொண்ட மலை போன்ற யானைப்
படையைச் செலுத்தினார்கள்; கவிகள் தம் குழுவை படைகளால்
நுறுக்கினார் – (மேலும்) வானரக் குழுவைத் தங்கள் படைகளால்
துண்டாக்கினார்; குழம்பு ஆக்கினார் ஆர்ப்பினார் – (அதற்கு மேல்
அவற்றைக்) குழம்பாக்கி ஆரவாரம் செய்தனர்.

———

7853.
எறிந்தன, எய்தன, எய்தி, ஒன்றொடு ஒன்று
அறைந்தன, அசனியின் விசையின் ஆசைகள்
நிறைந்தன, மழை என நெருக்கி நிற்றலால்,
மறைந்தன, உலகொடு திசையும் வானமும்.–127-

எறிந்தன – (வானரர்கள்) எறிந்தனவாகிய (மலைகளும்); எய்தன –
(அரக்கர்கள்) எய்தனவாகிய பல்வகைப் படைக் கலங்களும்; எய்தி
ஒன்றோடு ஒன்று அறைந்தன – நெருங்கி ஒன்றோடு ஒன்று மோதிக்
கொண்டன; அசனியின் விசையின் ஆசைகள் நிறைந்தன –
(அதனால்) இடி போன்ற வேகமான முழக்கம் திசைகள் தோறும்
நிறைந்தன; மழை என நெருங்கி நிற்றலால் – (அந்த எறிந்தனவும்
எய்தனவும்) மேகக் கூட்டம் போல நெருங்கி (வானத்தில்) நிற்றலால்;
உலகொடு திசையும் வானமும் மறைந்தன – உலகமும் திசைகளும்
வானமும் மறைந்தன.

———-

7854.
அப் படை அனைத்தையும் அறுத்து வீழ்த்து, அவர்
துப்புடைத் தடக் கைகள் துணித்து, சுற்றிய
முப் புடை மதமலைக் குலத்தை முட்டினான்-
எப் புடை மருங்கினும் எரியும் வாளியான். –128-

எப்புடை மருங்கினும் எரியும் வாளியான்- எல்லாப் பக்கங்களிலும்
எரிகின்ற அம்புகளைச் (செலுத்த வல்ல இலக்குவன்); அப்படை
அனைத்தையும் அறுத்து வீழ்த்து – (அரக்கர் எறிந்த) அந்தப்
படைக்கலங்கள் முழுவதையும் அறுத்து வீழ்த்தி; அவர் துப்புடைத்
தடக்கைகள் துணித்து – அந்த அரக்க வீரர்களுடைய வலிமையுடைய
நீண்ட கைகளைத் துண்டித்து; சுற்றிய முப்புடை மதமலைக் குலத்தை
முட்டினான் – (தன்னைச்) சுற்றிய மூன்று மதங்களை உடைய மலை
போன்ற யானைக் கூட்டத்தைத் தாக்கினான்.

————

7855.
குன்று அன மதகரி கொம்பொடு கரம் அற,
வன் தலை துமிதர, மஞ்சு என மறிவன
ஒன்று அல; ஒருபதும் ஒன்பதும்,-ஒரு கணை
சென்று அரிதர,-மழை சிந்துவ மதமலை.–129-

ஒருகணை சென்று அரிதர – (இலக்குவன் உடைய) ஒரு கணை
(விரைந்து) சென்று அறுப்பதனால்; குன்று அன மதகரி – மலையைப்
போன்ற மதங்கொண்ட களிறுகள்; ஒன்று அல ஒருபதும் ஒன்பதும் –
ஒன்று மட்டும் அல்லாது ஒருபதும் ஒன்பதுமாக; கொம்பொடு கரம்
அற – கொம்புகளும் துதிக்கைகளும் அறுபட; வன்தலை துமிதர –
வலிய தலைகள் துண்டிக்கப்பட; மஞ்சு என மறிவன – மேகம் போல்
விழுந்து கிடப்பன; மதமலை மழை சிந்துவ – மதத்தை உடைய
மலையை ஒத்த (அக்) களிறுகள் மழை போல மதநீரைச் சிந்துவன
வாயின.

————

7856.
ஒரு தொடை விடுவன உரும் உறழ் கணை பட,
இரு தொடை புரசையொடு இறுபவர், எறி படை
விருதுடை நிருதர்கள், மலை என விழுவர்கள்;
பொருது உடைவன, மத மழையன புகர் மலை. –130-

ஒரு தொடை விடுவன உரும் உறழ் கணைபட-(இலக்குவன்) ஒரு
தொடுப்பினில் விடுவனவாகிய இடியோடு மாறுபட்ட அம்புகள்
படுவதனால்; எறிபடை விருதுடை நிருதர்கள் மலை எனவிழுவர்கள்-
எறிகின்ற படைக்கலங்களையும், விருதுகளையுமுடைய அரக்கர்கள்
மலை போன்று விழுந்து இறந்தனர்; இரு தொடை புரசையோடு
இறுபவர் – (இலக்குவன்) இரு தொடுப்பினில் விட்ட அம்புகளால்
யானையின் கழுத்திடு கயிற்றோடு (யானை வீரர்) துண்டிக்கப்பட்டனர்;
மத மழையன புகர் மலை பொருது உடைவன- மதம் மழை போல்
பொழிகின்ற புள்ளிகளை முகத்தில் கொண்ட யானைகள் பொருது
உயிர் உடைந்தன.

———-

7857.
பருமமும், முதுகு இடு படிகையும், வலி படர்
மருமமும், அழிபட, நுழைவன வடி கணை,
உருமினும் வலியன, உருள்வன திசை திசை,
கரு மலை நிகர்வன;-கதமலை கனல்வன.–131-

கதமலை கனல்வன – சீற்றத்தை மலை போல் கொண்டனவாகிய
யானைகள்; உருமினும் வலியன வடிகணை – இடியைக் காட்டிலும்
வலிமை உடைய கூர்மையான கணைகள்; நுழைவன – நுழையப்
பெற்றவை ஆகி; பருமமும் – யானையின் கழுத்தில் இடப்படும்
கயிறும்; முதுகு இடு படிகையும் – முதுகில் இடப்படும் தவிசும்
(அம்பாரி); வலிபடர் மருமமும் அழிபட – வலிமை பொருந்திய
மருமத்தானமும் அழிந்து பட; திசை திசை உருள்வன – திக்குகளில்
எல்லாம் உருண்டு,; கருமலை நிகர்வன – கருநிறம் உள்ள மலைகளை
ஒத்தன.

————–

7858.
இறுவன கொடியவை, எரிவன இடை இடை
துறுவன சுடு கணை, துணிவன மதகரி;
அறுவன, அவை அவை கடவினர் தடி தலை;
வெறுமைகள் கெடுவன, விழி குழி கழுதுகள்.–132-

எரிவன இடை இடை துறுவன சுடுகணை – (இலக்குவன் எய்த)
எரியுந்தன்மை வாய்ந்தவையும், இடை இடையே (இலக்குகளைத்)
தேடுகின்றவையுமாகிய சுடுகணைகள்;கொடியவை இறுவன – (யானை மீது உள்ள) கொடிகளைத் துண்டு
படுத்தின; மதகரி துணிவன – (மேலும் அவை) மதங்கொண்ட
யானைகளைத் துண்டுபடுத்தின; அவை அவை கடவினர் தடிதலை
அறுவன – (அதற்கு மேல்) அவ்வவற்றைச் செலுத்திய பாகர்களின்
தடித்த தலையை அறுத்தன; விழி குழி கழுதுகள் வெறுமைகள்
கெடுவன – (அதனால்) குழிகள் பேய்களின் (உணவில்லாத) வெறுமை
நிலை கெடுவனவாயின.

———

7859.
மிடலொடு விடு கணை மழையினும் மிகை உள
படலொடும், உரும் எறி பரு வரை நிலையன,
உடலொடும் உருள் கரி உதிரமது, உரு கெழு
கடலொடு பொருதது, கரியொடு கரி என.-133-

மிடலொடு விடுகணை- (இலக்குவனால்) வலிமையோடு விடப்பட்ட
அம்புகள்; மழையினும் மிகை உள படலொடும் – மழையைக்
காட்டிலும் மிகுதியாக உள்ளவை படுதலினால்; உரும் எறி பருவரை
நிகர்வன – இடியால் எறியுண்ட பெரிய மலையின் தன்மையை
அடைந்தனவாய்; உடலொடும் உருள் கரி – உடல்களோடு கீழ்
உருண்டு விழுகின்ற யானைகளின்; உதிரமது கரியொடு கரியென-
குருதி யானையொடு யானை பொருவது போல்; உரு கெழு கடலொடு
பொருதது – அச்சம் விளங்குகின்ற கடலோடு பொருவது போல்
மிக்குப் பெருகியது.

———

7860.
மேலவர் படுதலின், விடும் முறை இல, மிடல்
ஆலமும் அசனியும் அனையன, அடு கரி
மால் உறு களியன, மறுகின, மதம் மழை
போல்வன, தம தம எதிர் எதிர் பொருவன.–134-

மேலவர் படுதலின் – மேல் ஏறிச் செலுத்தும் (பாகர்கள்)
பட்டமையால்; விடும் முறை இல – செலுத்தும் முறை இல்லாத; மிடல்
ஆலமும் அசனியும் அனையன அடுகரி – வலிமை உள்ள ஆலகால
நஞ்சையும், இடியையும் ஒத்தனவாகிய கொல்லும் தன்மை உள்ள
யானைகள்; மால் உறு களியன மறுகின – மயக்கம் மிக்க மதக்
களிப்பினை உடையனவாகிக் கலங்கி; மதம் மழை போல்வன – மதநீரை மழைபோல் (மிகுதியும்) சொரிந்து கொண்டு;
தம தம எதிர் எதிர் பொருவன – தாம் தாம் எதிர் எதிர் நின்று
போரிடலாயின.

————

7861.
கால் சில துணிவன; கரம் அறுவன; கதழ்
வால் சில துணிவன; வயிறுகள் வெளி பட,
நால் சில குடர் அன; நகழ்வன சில-வரு
தோல் சில, கணை பல சொரிவன மழை என. –135-

மழை என கணை பல சொரிவன – மழை போல் (இலக்குவன்)
அம்புகள் பலவற்றைச் சொரிந்ததனால்; வருதோல் – போருக்கு வந்த
யானைகளில்; கால் துணிவன சில – சிலகால் அறுபட்டவை; கரம்
அறுவன சில – சில துதிக்கைகள் துணியுண்டவை; கதழ் வால்
துணிவன சில – சில விரைவாக வீசும் வால் இழந்தவை; வயிறுகள்
வெளிபட நால்குடர் சில – சில வயிறுகள் பிளந்ததனால் வெளித்
தொங்குகின்ற குடலை உடையன; நகழ்வனசில – அழுந்தி
வருந்தியவை சில.

———

7862.
முட்டின முட்டு அற, முரண் உறு திசை நிலை
எட்டினும் எட்ட அரு நிலையன எவை? அவன்
விட்டன விட்டன விடு கணை படுதொறும்
பட்டன பட்டன, படர் பணை குவிவன.–136-

முரண் உறு திசை நிலை முட்டு அற முட்டின-மாறுபாடு கொண்ட
திசை நிலைகளில் தடுப்பு இன்றி முட்டியவைகளான (இலக்குவன்
எய்த அம்புகள்); எட்டினும் எட்ட அரு நிலையன எவை – தாக்கும்
தன்மை இன்றி எட்டுதற்கு முடியாத தன்மை உடைய (யானைகள்)
எவை உள (ஒன்றும் இல்லை); அவன் விட்டன விட்டன விடுகணை
படுதொறும் – அவ்விலக்குவன் பலமுறை செலுத்தியவை ஆன
எய்யப்படும் அம்புகள் படுந்தொறும் படுந்தோறும்; பட்டன பட்டன –
(எதிர்த்து வந்த) மதயானைகள் பல

————

7863.
அறுபதின் முதல் இடை நால் ஒழி ஆயிரம்
இறுதிய மத கரி இறுதலும், எரி உமிழ்
தறுகணர், தகை அறு நிலையினர், சலம் உறு
கறுவினர், அவன் எதிர் கடவினர், கடல் என.–137-

அறுபதின் முதல் – அறுபது என்ற எண்ணில் இருந்து; இடை நால்
ஒழி ஆயிரம் – பின் நான்கு என்ற எண்ணைக் கழித்த ஆயிரம்
(ஐம்பத்து ஆறாயிரம்); இறுதிய மதகரி இறுதலும் – என்ற கணக்குள்ள
மதயானைகள் இறந்த உடனே; எரி உமிழ் தறுகணர் – நெருப்பை
வெளிக்காலும் கண்களைக் கொண்ட அஞ்சாமை உடையவரும்; தகை
அறு நிலையினர் – நற்பண்புகள் இல்லாத நிலையினரும்; சலம் உறு
கறுவினர் – வஞ்சம் மிக்க சினங் கொண்டவரும் (ஆகிய அரக்கர்கள்);
அவன் எதிர் கடல் என கடவினர் – அந்த (இலக்குவனுக்கு) எதிரே
கடல் போல (யானைப் படையை) மீண்டும் செலுத்தினார்கள்.

———-

7864.
எல்லை இல் மத கரி, இரவினது இனம் நிகர்
செல்வன, முடிவு இல, தெறு தொழில் மறவனை,
வில்லியை, இனிது உற விடு கணை மழையினர்,
‘கொல்லுதி’ என, எதிர் கடவினர்-கொடியவர்.–138-

கொடியவர் – கொடுமைத் தன்மை உள்ள அரக்கர்கள்; இனிது உற
விடுகணை மழையினர் – எளிதாக விடும் அம்புகளை மழை போல்
செலுத்தியவர்களாய்; முடிவு இல தெறு தொழில் மறவனை – முடிவு
இல்லாமல் கொல்லும் தொழிலை மேற்கொண்டுள்ள வீரனும்; வில்லியை
– வில்லாளியும் ஆன (இலக்குவனைக்); கொல்லுதி என –
கொல்லுவாய் என்று; இரவினது இனம் நிகர் செல்வன – இரவின்
கூட்டத்தைப் போல் செல்வனவான; எல்லை இல் மதகரி –
எண்ணிக்கை எல்லை இல்லாத மதங் கொண்ட யானைகளை; எதிர்
கடவினர் – எதிராகச் செலுத்தினார்கள்.

—————-
7865.
வந்தன மத கரி வளைதலின், மழை பொதி
செந் தனி ஒரு சுடர் என மறை திறலவன்,
இந்திரதனு என, எழு சிலை குனிவுழி,
தந்தியின் நெடு மழை சிதறின, தரையின.–139-

மதகரி ந்தன வளைதலின் – அந்த மதம் பொருந்திய யானைகள்
வந்து வளைத்த அளவில்; மழை பொதி செந்தனி ஒரு சுடர் என
மறை திறலவன் – மேகத்தால் மூடப்பட்ட சிவந்த கதிரவன் போன்று
மறைக்கப்பட்ட வல்லமை உடையவன் ஆகிய வலிமை உள்ள
இலக்குவன்; இந்திர தனு என எழுசிலை குனிவுழி – இந்திர வில்
போல் (தன் அம்பு) எழுகின்ற வில்லினை வளைத்த அளவில்;
தந்தியின் நெடுமழை தரையின சிந்தின – யானைகள் ஆகிய நீண்ட
மேகங்கள் தரை இடத்துச் சிந்தின.

——–

7866.
மய்யல் தழை செவி முன் பொழி மழை பெற்றன, மலையின்
மெய் பெற்றன, கடல் ஒப்பன, வெயில் உக்கன விழியின்,-
மொய் பெற்று உயர் முதுகு இற்றன, முகம் உக்கன, முரண்
வெங்
கய் அற்றன; மதம் முற்றிய கணிதத்து இயல்,-கத மா.–140-

கதமா- கோபம் மிக்க யானைகள்; மய்யல் தழை செவிமுன் பொழி
மழை பெற்றன – மத மயக்கம் உள்ள தழைத்த (பெரிய) தன்
காதுகளின் மூலம் மதநீர் ஆகிய மழையைப் பொழிவனவும்;
மலையின் மெய் பெற்றன – மலை போன்ற உடலைப் பெற்றனவும்;
கடல் ஒப்பன – கடல் போல் (கருநிறம்) உள்ளனவும்; விழியின்
வெயில் உக்கன – கண்களில் சினத்தை வெளியிடுவனவும் ஆகிய
வலிமிகு யானைகள்; மொய் பெற்று உயிர் முதுகு இற்றன – வலிமை
பெற்று உயர்ந்த முதுகு உடைந்தனவும்; முகம் உக்கன – முகம்
அழிந்தனவும்; முரண் வெங்கய் அற்றன – மாறுபாடு கொண்ட கொடிய
துதிக்கைகள் அற்றனவும் ஆய் இருந்தன எனினும் அவை; கணிதத்து
இயல் மதம் முற்றிய – கணத்துக்குக் கணம் மாறுபடும் இயல்புள்ள
மதக்களிப்பு மாத்திரம் முற்றி இருந்தன.
மய்யல் – மத மயக்கம். கதமா – கறுவு கொண்ட விலங்கு.

—————

7867.
உள் நின்று அலை கடல் நீர் உக, இறுதிக் கடை உறு கால்
எண்ணின்தலை நிமிர்கின்றன, இகல் வெங் கணை, இரணம்
பண்ணின் படர் தலையில் பட, மடிகின்றன பல ஆம்,
மண்ணின்தலை உருள்கின்றன-மழை ஒத்தன மதமா.–141-

உள் நின்று அலை கடல் நீர் உக – தன் எல்லைக்குள் கட்டுப்
பாட்டில் நின்று வீசுகின்ற அலைகளை உடைய கடல் நீர் பெருகி
வருமாறு; இறுதிக் கடை உறுகால் – யுக முடிவுக் காலத்தில் வீசும்
பெருங்காற்றைப் போல; எண்ணின் தலை நிமிர்கின்ற இகல்
வெங்கணை – அளவுக்குரிய எல்லை கடந்து வருகின்றவையாகிய
(இலக்குவனின்) வலிய கொடிய அம்புகள்; இரணப் பண்ணின் படர்
தலையில் பட – பொன்னால் இயன்ற அலங்காரத்தை உடைய பரந்த
மத்தகத்தில் படுதலால்; மழை ஒத்தன மதமா- மேகத்தை ஒத்த மதங்
கொண்ட யானைகள்; மண்ணின் தலை உருள்கின்றன – மண்ணில்
வெட்டுண்டு உருள்கின்ற காரணத்தால்; மடிகின்றது பல ஆம் –
இறந்து போனவை பல ஆகும்.

————-

7868.
பிறை பற்றிய எனும் நெற்றிய, பிழை அற்றன பிறழ,
பறை அற்றம் இல் விசை பெற்றன, பரியக் கிரி, அமரர்க்கு,
இறை, அற்றைய முனிவில் படை எறியப் புடை எழு பொன்
சிறை அற்றன என, இற்றன-சினம் முற்றிய மதமா.–142-

பறை அற்றம் இல் விசை பெற்றன – பறவை (போல் பறத்தலை
உடைய) குற்றம் இல்லாத வேகத்தை உடைய; பிழை அற்றன –
குறி தவறுதல் இல்லாத; பிறை பற்றிய எனும் நெற்றிய பிறழ –
பிறை வடிவுடைய நெற்றியை உடையனவாகிய இலக்குவனது அம்புகள்
பாய்தலால்; அமரர்க்கு இறை – தேவர்கட்குத் தலைவன் ஆகிய
இந்திரன்; அற்றைய முனிவில் படை எறிய – அப்போது தோன்றிய
சினத்தால் வச்சிரப்படையை வீச; கிரி பரிய புடை எழு பொன் சிறை
அற்றன என இற்றன – மலைகள் அறுந்து பட இரு பக்கங்களிலும்
உள்ள அழகிய சிறகுகள் வீழ்ந்தன போல உயிரொழிந்து கிடந்தன.

————

7869.
கதிர் ஒப்பன கணை பட்டுள, கதம் அற்றில, கதழ் கார்
அதிரத் தனி அதிர்கைக் கரி அளவு அற்றன உளவா,
எதிர்பட்டு அனல் பொழிய, கிரி இடறி, திசை எழு கார்
உதிரத்தொடும் ஒழுகி, கடல் நடு உற்றவும் உளவால்.–143-

கதிர்ஒப்பன கணை பட்டுள – (யானைகள்) கதிரவனுக்கு ஒப்பான
(வெம்மை மிக்க இலக்குவனது) அம்புகள் பட்டுள்ளன வாயும்; கதம்
அற்றில – சினம் நீங்காதனவாயும்: கதழ்கார் அதிரத் தனி அதிர்
கைக்கரி அளவற்றன உளவா – விரைவாகச் செல்லுகின்ற மேகத்தின்
இடியொலி கூட அதிருமாறு ஒப்பற்றுப் பேரொலி செய்யும் கையை
உடைய யானைகள் எண்ணிக்கையில் அடங்காதனவாயும் இருக்க:
எதிர்பட்டு அனல் பொழிய – (இலக்குவன் அம்புகளுக்கு) நேரே
எதிர்ப்பட்டு வெப்பம் வெளிப்பட: கிரி இடறி – (அதனால்) மலைகளில்
தடுமாறி விழுந்து: திசை எழு கார் உதிரத்தொடும் ஒழுகி- திசைகளில்
எழுகின்ற மிக்க குருதி (வெள்ளத்தில்) யில் இழுபட்டுப் போய்,: கடல்
நடு உற்றவும் உளவால் – கடலின் நடுவில் சென்று சேருவனவும்
(யானைகளும்) உள.

—————

7870.
கண்ணின்தலை அயில் வெங் கணை பட நின்றன, காணா,
எண்ணின்தலை நிமிர் வெங் கதம் முதிர்கின்றன, இனமா
மண்ணின் தலை நெரியும்படி திரிகின்றன, மலைபோல்
உள் நின்று அலை நிருதக் கடல் உலறிட்டன உளவால்.-144-

கண்ணின் தலை அயில் வெங்கணை பட – கண்ணினிடத்துக்
கூர்மையான கொடிய அம்புகள் படுதலால்: காணா நின்றன – காண
முடியாதபடி நின்றனவாகிய: இனமா – தொகுதியாகிய யானைகள்:
எண்ணின் தலை நிமிர் வெங்கதம் முதிர்கின்றன-அளவிடற்கரியதாய்
நிமிர்கின்ற கொடிய சினம் முதிரப் பெற்றனவாய்: மலை போல்
மண்ணின் தலை நெரியும் படி திரிகின்றன – மலைகள் நடத்தல்
போல் நிலத்தின் இடம் நெரியும்படி திரிவனவாய், உள் நின்று அலை
நிருதக் கடல் உலறிட்டன உளவால்- (எதிரிகளை நோக்கிச் செல்லாது)
உள்ளேயே சுற்றித் திரிந்து அரக்கர் படையாகிய கடலையே வற்றச்
செய்து விட்டனவுமுள.

———–

7871.
ஓர் ஆயிரம் அயில் வெங் கணை, ஒரு கால்
விடுதொடையின்,
கார் ஆயிரம் விட தாரையின் நிமிர்கின்றன, கதுவுற்று,
ஈராயிரம் மத மால் கரி விழுகின்றன; இனி மேல்
ஆராய்வது என்? அவன் வில் தொழில் அமரேசரும்
அறியார்!–145-

ஒருகால் விடு தொடையின் – ஒரு தொடுப்பினில்: ஓர் ஆயிரம்
அயில் வெங்கணை – ஓர் ஆயிரம் கூர்மையான கொடிய அம்புகள்:
கார் ஆயிரம் விடு தாரையின் நிமிர்கின்றன – கரிய மேகங்கள்
பொழியும் ஆயிரக்கணக்கான தாரைகள் போல் வெளிப்படுவன வாய்:
(உள்ளதால்) கதுவுற்று – அவ்வம்புகள் கவ்வுதலால் (பட்டுப்
பிளத்தலால்): ஈராயிரம் மதமால் கரி விழுகின்றன – ஈராயிரம் மத
மயக்கம் கொண்ட யானைகள் இறந்து விழுகின்றன: இனிமேல்
ஆராய்வது என்? – (என்றால்) அவனது விற்றொழில் பற்றி இனிமேல் ஆராய்வதற்கு என்ன உள்ளது. அவன் வில்
தொழில் அமரேசரும் அறியார் – அந்த இலக்குவனின் சித்திர வில்
தொழிலைத் தேவர் தலைவர்களும் அறிய மாட்டார்கள்.

—————

7872.
தேரும், தெறு கரியும், பொரு சின மள்ளரும், வய வெம்
போரின்தலை உகள்கின்றன புரவிக் குலம் எவையும்,
பேரும் திசை பெறுகின்றில-பணையின் பிணை மத வெங்
காரின் தரு குருதிப் பொரு கடல் நின்றன கடவா.–146-

பணையின் மதபிணை வெங் காரின் தரு குருதிப் பொரு கடல்
நின்றன கடவா – தந்தங்களோடு மதம் பொருந்திய கொடிய கரு
மேகம் போன்ற யானைகளின் உடம்பில் இருந்து பெருகி வருகிற
குருதியால் ஆகிய கடலில் நின்று அதைக் கடந்து செல்ல
முடியாதனவாய்: தேரும் – அழிந்த தேரும்: தெறு கரியும் – அழிக்கும்
தன்மை கொண்ட யானைகளும்: பொரு சின மள்ளரும் – போர்
செய்யும் சினம் மிகுந்த அரக்கவீரரும்; புரவிக் குலம் எவையும் –
குதிரைக் கூட்டங்கள் முதலிய எல்லாமும்; வயவெம் போரின் தல
உகள்கின்றன – வெற்றியுள்ள கொடிய போர்க் களத்திலேயே
புரள்கின்றனவாகிப்; பேரும் திசை பெறுகின்றில – இடம் பெயர்ந்து
செல்லும் திசையைப் பெறாதவையாயின.

————-

இராவணன் அனுப்பிய யானைப் படையை இலக்குவன் அழித்தல்

7873.
நூறாயிரம் மத வெங் கரி, ஒரு நாழிகை நுவல,
கூறு ஆயின; பயமுற்று ஒரு குலைவு ஆயின; உலகம்
தேறாதன, மலை நின்றன, தெரியாதன, சின மா
வேறு ஆயின, அவை யாவையும் உடனே வர விட்டான். –147-

மத வெங்கரி நூறாயிரம் – மதங்கொண்ட கொடிய யானைகள்
நூறாயிரமும்; ஒரு நாழிகை நுவல கூறு ஆயின – ஒரு நாழிகை
கடந்தது என்று சொல்லும் அளவினில் துண்டு துண்டாகி இறந்தன;
உலகம் பயமுற்று ஒரு குலைவு ஆயின – உலகத்து உயிர்கள்
அச்சங்கொண்டு ஒப்பற்ற கலக்கம் அடைந்தன; (இச்செய்தியை ஒற்றர்
சொல்லக் கேட்ட இராவணன்) தேறாதன – மத மயக்கம்
நீங்காதனவும்; மலை நின்றன – மலை போல் நின்றனவும்,
தெரியாதன சினமா – (பிறர் இதுவரை) காணாதனவுமாகிய யானைகள்;
வேறு ஆயின – வேறாக உள்ளவை அவையாவையும்; உடனே
செலவிட்டான் – உடனே (இலக்குவன் மீது) செல்லுமாறு
அனுப்பினான்.

————–

7874.
ஒரு கோடிய மத மால் கரி, உள வந்தன உடன் முன்
பொரு கோடியில் உயிர் உக்கன ஒழிய, பொழி மத யாறு
அருகு ஓடுவ, வர உந்தினர்-அசனிப் படி கணை கால்
இரு கோடுடை மத வெஞ் சிலை இள வாள் அரி எதிரே.–148-

உடன் முன் பொரு கோடியில் உயிர் உக்கன ஒழிய-உடனேமுன்
போர் செய்த போர் முனையில் உயிர் விட்ட யானைகளைத் தவிர;
உளவந்தன பொழி மத யாறு அருகு ஓடுவ – உயிருள்ளனவாய் வந்த
பொழிகின்ற மத ஆறு அருகில் ஓடுகிற; ஒரு கோடிய மத மால்கரி –
ஒரு கோடி மத மயக்கம் கொண்ட களிறுகளை; அசனிப்படி
கணைகால் இரு கோடுடை மத வெஞ்சிலை இளவாள் அரி எதிரே-
இடி போன்று அம்புகளைச் செலுத்துகிற இரு முனைகளையுடைய
வலிமையான கொடிய வில்லை ஏந்திய இளைய சிங்கம் போன்ற
(இலக்குவனுக்கு) எதிராக; வர உந்தினர் – (அதிகாயனுடைய அரக்க
வீரர்) வருமாறு செலுத்தினார்கள்.

————

7875.
உலகத்து உள மலை எத்தனை, அவை அத்தனை உடனே
கொல நிற்பன, பொருகிற்பன, புடை சுற்றின; குழுவாய்
அலகு அற்றன, சினம் முற்றிய, அனல் ஒப்பன, அவையும்
தலை அற்றன, கரம் அற்றன, தனி வில் தொழில் அதனால்,–149-

உலகத்து உள மலை எத்தனை – (அரக்க வீரர் செலுத்திய
யானைகள்) உலகத்தில் உள்ள மலைகள் எத்தனையோ; அவை
அத்தனை உடனே கொல நிற்பன பொருகிற்பன – அவை
அத்தனையையும் உடனே அழிக்குமாறு நிற்பனவற்றை ஒத்தனவாகி;
அலகு அற்றன குழுவாய்ப் புடை சுற்றின – அளவு இல்லாதனவாய்க்
கூட்டமாய் (இலக்குவனைப்) பக்கங்களில் சூழ்ந்து கொண்டன; சினம்
முற்றிய அனல் ஒப்பன – ‘(அந்த யானைகள்) சினம் முதிர்ந்த
தீயினைப் போன்றன; அவையும் – (அவ்வாறு சுற்றிய அந்த
யானைகள்) யாவும்; தனி வில் தொழில் அதனால் – (இலக்குவனது)
ஒப்பற்ற வில் தொழில் ஆற்றலால்; தலை அற்றன கரம் அற்றன –
தலைகளை இழந்தனவும் துதிக்கைகளை இழந்தனவுமாயின.

————-

7876.
நாலாயின, நவ யோசனை நனி வன் திசை எவையும்,
மால் ஆயின மத வெங் கரி திரிகின்றன வரலும்,
‘தோல் ஆயின, உலகு எங்கணும்’ என அஞ்சினர்; துகளே-
போல் ஆயின, வய வானமும்; ஆறானது, புவியே.–150-

நாலாயின நவயோசனை நனிவன் திசை எவையும் – முப்பத்தாறு
யோசனை தூரம் உள்ள மிக வலிய திசைகளில் எல்லாம்; மால்
ஆயின மத வெங்கரி திரிகின்றன வரலும் – மயக்கம் கொண்ட
மதத்தினை உடைய கொடிய யானைகள் திரிகின்றனவாகி மிகுதியாக
வருதலும்; உலகு எங்கணும் தோல் ஆயின என அஞ்சினர்-உலகம்
முழுவதும் யானைகளே ஆய்விட்டன என்று (அனைவரும்)
அஞ்சினர்; வய வானமும் துகளே போல் ஆயின – வலிய வானம்
எல்லாம் (மண்ணின்) துகள் போல் ஆயின; புவியே
ஆறானது – நிலவுலகம் (அவ்வியானைகளின் மதநீர்ப் பெருக்கால்)
ஆறாக மாறிவிட்டது.

—————

7877.
கடை கண்டில, தலை கண்டில, கழுதின் திரள், பிணமா
இடை கண்டன, மலை கொண்டென எழுகின்றன; திரையால்
புடை கொண்டு எறி குருதிக் கடல் புணர்கின்றன,பொறி
வெம்
படை கொண்டு இடை படர்கின்றன மத யாறுகள் பலவால்.–151-

கழுதின் திரள் பிணமா தலை கண்டில கடைகண்டில- பேய்களின்
கூட்டம் பிணமாகி விட்ட யானைகளின் தலைப் பக்கத்தையும் வால்
பக்கத்தையும் காணாதனவாய்; இடை கண்டென மலை கொண்டென
எழுகின்றன – (அவற்றை) இடையில் கண்டு மலைகளைத் தூக்கிச்
செல்வன போல் (அந்த யானைகளின் பிணங்களைத்) தூக்கிக்
கொண்டு செல்வனவாயின; திரையால் புடை கொண்டு எறி குருதிக்
கடல் – அலைகளால் பக்கங்களில் எறியப்படுகின்ற குருதியாகிய கடல்;
பொறி வெம் படை கொண்டு இடை படர்கின்றன – தீப்பொறி
வெளிப்படும் கொடிய படைக் கலங்களை இடையில் அடித்துக்
கொண்டு பரவிச் செல்லுகிற; மத யாறுகள் பல புணர்கின்றன – மதநீர்
ஆறுகள் பல (சென்று) சேர்வனவாயின.

————

7878.
ஒற்றைச் சரம்அதனோடு ஒரு கரி பட்டு உக, ஒளிர
வாய்
வெற்றிக் கணை, உரும் ஒப்பன, வெயில் ஒப்பன,
அயில்போல்
வற்றக் கடல் சுடுகிற்பன, மழை ஒப்பன பொழியும்
கொற்றக் கரி பதினாயிரம் ஒரு பத்தியில் கொல்வான். –152-

ஒற்றைச் சரம் அதனோடு ஒருகரி பட்டு உக-ஓர் அம்புக்கு ஒரு
யானை இறந்து விழுமாறு; உரும் ஒப்பன, வெயில் ஒப்பன, அயில்
போல் வற்றச் சுடுகிற்பன – இடியைப் போன்றவையும், வெய்யிலை
ஒத்துத் தகிப்பனவும், உக்கிர குமார பாண்டியன் உடைய வேற்படை
போல் கடலை வற்றச் செய்வனவுமாகிய; ஒளிர் வாய் வெற்றிக் கணை
– ஒளி விடுகிற வாயை உடைய வெற்றி பொருந்திய அம்புகளால்;
மழையொப்பன பொழியும் கொற்றக் கரி-மழையை ஒத்து (மதநீரைப்)
பொழியும் வெற்றி பொருந்திய யானைகள்; பதினாயிரம் ஒரு பத்தியில்
கொல்வான் – பதினாயிரத்தை ஒரு வரிசையில் கொன்றான்
(இலக்குவன்).

———-

7879.
மலை அஞ்சின; மழை அஞ்சின; வனம் அஞ்சின; பிறவும்
நிலை அஞ்சின, திசை வெங் கரி; நிமிர்கின்றன கடலில்
அலை அஞ்சின; பிறிது என், சில? தனி ஐங் கர கரியும்,
கொலை அஞ்சுதல் புரிகின்றது-கரியின் படி கொளலால்.–153-

கரியின் படி கொளலால் – (இலக்குவன்) யானைப் படையைத்
தேடிக் கொல்லும் தன்மை கண்டு; மலை அஞ்சின – (யனைகள்)
போல் வடிவும் நிறமும் உடைய) மலைகள் அஞ்சின; மழை அஞ்சின
– (கரு நிழல் படிந்துள்ள) காடுகளும் அஞ்சின; பிறவும் திசை
வெங்கரி நிலை அஞ்சின – இவைகளின் வேறான திசை யானைகளும்
தங்கள் நிலையில் நிற்க அஞ்சின; கடலின் நிமிர்கின்ற அலை
அஞ்சின – கடலில் உயர்ந்து வருவனவாகிய (கருநிறம்உள்ள) அலைகள் அஞ்சின; சில பிறிது என் – வேறு சிலவற்றைப்
பற்றித் தனியாகக் கூற என்ன உள்ளது? தனி ஐங்கர கரியும் கொலை
அஞ்சுதல் புரிகின்றது – ஒப்பற்ற ஐந்து கைகளை உடைய கணபதி
ஆகிய யானையும் (யானை வடிவில் இருத்தலால்) இலக்குவன்
கொல்வானோ என்று அச்சத்தைக் கொண்டுள்ளது.

————-

7880.
கால் ஏறின சிலை நாண் ஒலி, கடல் ஏறுகள் பட, வான்-
மேல் ஏறின, மிசையாளர்கள் தலை மெய்தொறும் உருவ,
கோல் ஏறின-உரும்ஏறுகள் குடியேறின எனலாய்,
மால் ஏறின களி யானைகள் மழைஏறு என மறிய.–154-

கால் ஏறின சிலை நாண் ஒலி – (இலக்குவனுடைய) இரு
முனைகளும் பொருந்துமாறு வளைத்த வில் நாணின் ஒலி; கடல்
ஏறுகள் படவான் மேல் ஏறின – கடலில் உள்ள சுறா மகரம் முதலிய
பெரு மீன்களை அழியச் செய்து வானத்திலும் தோன்றின; உரும்
ஏறுகள் குடியேறின எனலாய் – (அதற்குப்பின்பு) பேரிடிகள்
ஓரிடத்தில் குடியேறின என்னும் படி; மால் ஏறின களியானைகள்
மழை ஏறு எனமறிய – மயக்கம் மிக்க மதக்களி கொண்ட யானைகள்
மழைக்கால இடியேறு என்னுமாறு மடங்கி விழவும்; மிசையாளர்கள்
தலை மெய் தொறும் உருவ கோல் ஏறின-(பின்) யானை மேலுள்ள
வீரர்களின் தலைகள் மற்றும் உடம்புகளிலும் ஊடுருவி (அவ்)
அம்புகள் பாய்ந்தன.

————–

அனுமன் யானைப் படையை அழித்தல்

7881.
இவ் வேலையின், அனுமான்,-முதல் எழு வேலையும்
அனையார்,
வேவ் வேலவர், செல ஏவிய கொலை யானையின் மிகையைச்
செவ்வே உற நினையா, ‘ஒரு செயல் செய்குவென்’
என்பான்,
தவ்வேலென வந்தான்,-அவன் தனி வேல் எனத் தகையான்.–155-

இவ்வேலையின் – இந்த நேரத்தில்; முதல் எழு வேலையும்
அனையார் வெவ்வேலவர் – சிறப்புடைய ஏழு கடல்களை
ஒத்துள்ளவரான கொடிய வேலை ஏந்திய அரக்கர்; செல ஏவிய
கொலை யானையின் மிகையைச் – செல்லுமாறு ஏவி அனுப்பிய
கொலைத் தன்மை கொண்ட யானைகளின் மிகுதியை; அனுமான்
செவ்வே உறநினையா – அனுமன் செம்மையாகப் பொருந்த
நினைத்துப் பார்த்து; ஒரு செயல் செய்குவென் என்பான் – ஒரு
(வீரச்) செயலைச் செய்வேன் என்று (மனத்துள் நினைத்து); அவன்
தனிவேல் எனத் தகையான் தவ்வேலென வந்தான் – அந்த
இலக்குவன் உடைய ஒப்பற்ற வேலின் தன்மையை உடையவனாய்
திடீரென்று (அங்கு) வந்தான்.

——————

ஆர்த்து அங்கு அனல் விழியா, முதிர் மத யானையை
அனையான்,
தீர்த்தன் கழல் பரவா, முதல் அரிபோல் வரு திறலான்,
வார்த் தங்கிய கழலான்,-ஒரு மரன், நின்றது, நமனார்
போர்த் தண்டினும் வலிது ஆயது, கொண்டான்-புகழ்
காண்டான்.–156-

முதிர் மத யானையை அனையான் – முதிர்ந்த மதங் கொண்ட
யானையைப் போன்றவனும்; முதல் அரி போல் வரு திறலான்- முழு
முதற் பொருளாகிய நரசிங்க மூர்த்தியை ஒத்த வலிமை
கொண்டவனும்; வார்த் தங்கிய கழலான் – வாரால் பிணைத்துக்
கட்டப்பட்ட வீரக்கழலை அணிந்தவனும்; புகழ் கொண்டான் –
(பெரும்) புகழ் கொண்டவனும் ஆகிய (அனுமன்); தீர்த்தன் கழல்
பரவா – தூயவன் ஆகிய இராமபிரானது திருவடிகளைத் துதித்து;
அங்கு ஆர்த்து அனல் விழியா – அப்போது பேரொலி செய்து,நெருப்பு வெளிப்பட விழித்து; நமனார் போர்த்தண்டினும் வலிது
ஆயது – யமனுடைய போரிடும் தண்டினும் வலிமை உடையதாகிய;
ஒரு மரன் நின்றது கொண்டான் – (அருகில் இருந்து) ஒப்பற்ற
மரத்தைக் (போர் செய்யக்) கைக் கொண்டான்.

முதல் அரி – முழுமுதற் பொருளாகிய நரசிங்க மூர்த்தி.

—————–

7883.
கருங் கார் புரை நெடுங் கையன களி யானைகள்
அவை சென்று
ஒருங்கு ஆயின, உயிர் மாய்ந்தன; பிறிது என், பல
உரையால்?-
வரும் காலனும், பெரும் பூதமும், மழை மேகமும் உடனாப்
பொரும்காலையில் மலைமேல் விழும்
உரும்ஏறு எனப் புடைத்தான்.–157-

(அனுமன் தண்டு கைக்கொண்ட அப்பொழுது) வரும் காலனும்-
கொல்லும் தொழிலில் கைவந்த யமனும்; பெரும் பூதமும் – ஐம்பெரும்
பூதங்களும்; மழை மேகமும் – பெருமழை மேகமும்; உடனாப்
பொரும் காலையில் – ஒன்றாகி (உலகைப்) பொருது அழிக்கும்
யுகமுடிவுக் காலத்தில்; மலை மேல் விழும் உரும் ஏறு எனப்
புடைத்தான் – மலை மேல் விழுகின்ற ஆணிடி என்னுமாறு
(யானைகளை) அடித்தான் (அதனால்); கருங்கார் புரை நெடுங்கையன
களி யானைகள் – கரிய மேகத்தை ஒத்தனவும், நீண்ட துதிக்கைகளை
உடையனவும் ஆகிய மத மயக்கம் மிக்க யானைகள்; அவை சென்று
– தொகுதியாக (அனுமன் எதிர்) சென்று; ஒருங்கு ஆயின உயிர்
மாய்ந்தன – ஒன்றாகச் சேர்ந்தனவாய் உயிரொழிந்தன; பல உரையால்
பிறிது என் – (இது பற்றி) பலவற்றைக் கூறுவது வேறாக என்ன உளது.

—————-

7884.
மிதியால் பல, விசையால் பல, மிடலால் பல, இடறும்
கதியால் பல, தெழியால் பல, காலால் பல, வாலின்
நுதியால் பல, நுதலால் பல, நொடியால் பல, பயிலும்
குதியால் பல, குமையால் பல, கொன்றான்-அறம் நின்றான். –158-

அறம் நின்றான் – தருமத்தின் தனிமை தீர்ப்பான் துணை
நின்றவனாகிய அனுமன் (யானைகளில்); மிதியால் பல – மிதித்த
மிதியால் பலவற்றையும்; விசையால் பல – வேகத்தால் பலவற்றையும்;
மிடலால் பல – வலிமையால் பலவற்றையும்; இடறும் கதியால் பல –
இடறும் நடையினால் பலவற்றையும்; தெழியால் பல – பேரொலியால்
பலவற்றையும்; காலால் பல – காலினால் பலவற்றையும்; வாலின்
நுதியால் பல – வாலின் நுனியால் பலவற்றையும்; நுதலால் பல –
நெற்றியால் முட்டிப் பலவற்றையும்; நொடியால் பல – கைவிரல்
இரண்டையும் முறுக்கித் தெறித்தலால் பலவற்றையும்; பயிலும் குதியால்
பல – பழகிய குதிப்பினால் பலவற்றையும்; குமையால் பல –
குமைத்தலால் பலவற்றையும்; கொன்றான் – கொன்றான்.

——————

7885.
பறித்தான் சில, பகிர்ந்தான் சில, வகிர்ந்தான் சில,
பணை போன்று
இறுத்தான் சில, இடந்தான் சில, பிளந்தான் சில, எயிற்றால்
கறித்தான் சில, கவர்ந்தான் சில, கரத்தால் சில பிடித்தான்,
முறித்தான் சில, திறந்து ஆனையின் நெடுங்
கோடுகள்-முனிந்தான்.–159-

முனிந்தான் – சினம் கொண்டவன் ஆன அனுமன்; திறத்து
ஆனையின் நெடுங் கோடுகள் – சில வலிய யானையின் நீண்ட
கொம்புகளை; சில பறித்தான் – சிலவற்றைப் பிடுங்கி எறிந்தும்; சில
பகிர்ந்தான் – சிலவற்றைப் பிளந்தும்; சில வகிர்ந்தான் – சிலவற்றைக்
கூறுபடுத்தியும்; சில பணை போன்று இறுத்தான்- சிலவற்றை மூங்கில்
போல் முறித்தும்; சில இடந்தான் – சிலவற்றைத் தோண்டியும்; சில
பிளந்தான் – சிலவற்றை (பல துண்டாகப்) பிளந்தும்; சில எயிற்றால்
கறித்தான் – சிலவற்றைப் பற்களால் கடித்தும்; சில கவர்ந்தான் –
சிலவற்றைக் கவர்ந்தும்; சில கரத்தால் பிடித்தான் – சிலவற்றைக்
கைகளால் பிடித்தும்; சில முறித்தான் – சிலவற்றை முறித்தும்
அழித்தான்.

———————

7886.
வாரிக் குரை கடலில் புக விலகும்; நெடு மரத்தால்
சாரித்து அலைத்து உருட்டும்; நெடுந் தலத்தில் படுத்து
அரைக்கும்;
பாரில் பிடித்து அடிக்கும்; குடர் பறிக்கும்; படர் விசும்பின்
ஊரில் செல, எறியும்; மிதித்து உழக்கும்; முகத்து உதைக்கும்;–160-

வாரிக் குரை கடலில் புக விலகும் – (அனுமன் யானைகளை)
எடுத்து ஒலிக்கிற கடலில் புகும்படி எறிவான்; நெடு மரத்தால் சாரித்து
அலைத்து உருட்டும் – நீண்ட மரத்தைக் கொண்டு சாரி திரிந்து
அலைத்து உருட்டுவான்; நெடுந் தலத்தில் படுத்து அரைக்கும் –
பெரிய நிலத்தில் தள்ளி அரைப்பான்; பாரில் பிடித்து அடிக்கும் –
நிலத்தில் பிடித்து அடிப்பான்; குடர் பறிக்கும் – குடலைப் பறிப்பான்;
படர் விசும்பின் ஊரில் செல எறியும் – படர்ந்த வானுலகத்து ஊரில்
செல்லுமாறு எறியும்; மிதித்துக் கலக்கும் – மிதித்துக் கலக்கும்; முகத்து
உதைக்கும் – (அவ்வியானைகளின்) முகத்தில் உதைப்பான்.

—————

7887.
வாலால் வர வளைக்கும், நெடு மலைப் பாம்பு என வளையா,
மேல் ஆளொடு பிசையும்; முழு மலைமேல் செல, விலக்கும்;
ஆலாலம் உண்டவனே என, அகல் வாயின் இட்டு அதுக்கும்;
தோல் ஆயிரம் இமைப்போதினின் அரிஏறு எனத்
தொலைக்கும்;–161-

வாலால் நெடுமலைப் பாம்பு என வர வளைக்கும்-(அதற்கு மேல்
அனுமன்) வாலினால் நீண்ட மலைப்பாம்பு போல (யானைகளை)
வளைப்பான்; வளையா மேல் ஆளொடு பிசையும் – வளைத்து அதன்
மேல் உள்ள வீரர்களோடு அழிக்கும்; முழுமலை மேல் செல விலக்கும் – சில யானைகளை பெரிய மலை மீது மோதி
உயிர்விடச் செய்வான்; ஆலாலம் உண்டவனே என அகல்வாயின்
இட்டு அதுக்கும் – ஆலகால நஞ்சினை உண்ட சிவபெருமான் போல
(சிலவற்றை) அகன்ற வாயில் இட்டு அதுக்குவான்; அரி ஏறு என
தோல் ஆயிரம் இமைப் போதினின் தொலைக்கும் – ஆண் சிங்கம்
போல யானைகள் ஆயிரத்தை இமைப் பொழுதின் அளவுக்குள்
அழிப்பான்.

—————–

7888.
சய்யத்தினும் உயர்வுற்றன தறுகண் களி மதமா,
நொய்தின் கடிது எதிர் உற்றன, நூறாயிரம், மாறா
மய்யல் கரி உகிரின் சில குழை புக்கு உரு மறைய,
தொய்யல் படர் அழுவக் கொழுஞ் சேறாய் உகத்
துவைப்பான்.–162-

சய்யத்தினும் உயர்வுற்றன – (மேலும் அனுமன்) மலைகளைக்
காட்டிலும் உயர்ந்தனவும்; தறுகண் களி மதமா – அஞ்சாமையும்
மயக்கமும் உடைய மதங் கொண்டவையும்; மாறா மய்யல் கரி –
மயக்கம் நீங்காதனவுமாகிய யானைகள்; நூறாயிரம் நொய்தின் கடிது
எதிர் உற்றன – நூறாயிரம் அளவுள்ள எளிமையாயும் விரைவாயும்
(தன்) எதிர்வந்தவைகளை; உகிரின் சில குழைபுக்கு உரு மறைய –
தன் நகத்தால் சில தழைகளைப் போன்று உள்ளே அழுந்தி உருவம்
மறைய; தொய்யல் படர் அழுவக் கொழுஞ் சேறாய்
உகத்துவைப்பான்- குழம்பாய்ப் படர்ந்து நீர் நிலத்தில் கொழுவிய
சேறாகுமாறு துவைத்தான்.

————–

7889.
வேறாயின மத வெங் கரி ஒரு கோடியின், விறலோன்,
நூறாயிரம் படுத்தான்; இது நுவல்காலையின், இளையோன்;
கூறாயின என அன்னவை கொலை வாளியின் கொன்றான்;
தேறாதது ஓர் பயத்தால் நெடுந் திசை காவலர் இரிந்தார்.–163-

விறலோன் – வலிமை உடையவன் ஆன அனுமன்; வேறாயின
மதவெங்கரி ஒரு கோடியின் நூறாயிரம் படுத்தான் – வேறாக வந்த
மதத்தை உடைய கொடிய யானைகள் ஒரு கோடியில் (மேல்
கூறியவாறு போரிட்டு) நூறாயிரத்தைக் கொன்றான்; இது
நுவல்காலையின் – இதனை (அவ்வனுமன்) விரும்பிச் செய்வதைக்
கூறும் அளவில்; இளையோன் கூறாயின என அன்னவை கொலை
வாளியின் கொன்றான் – இளையவனாகிய இலக்குவன் (தன்) பாகமாக
நின்றவை என்று கருதி (அனுமன் கொல்லாமல் விட்ட) அந்த (மீதி)
யானைகளைத் தன் கொல்லும் தனமை உள்ள அம்புகளால்
கொன்றான். நெடுந்திசை காவலர் தேறாதது ஓர் பயத்தால்
இரிந்தார்- (அச்செயல் கண்ட) எண்திசைக் காவர்கள் தெளிய முடியாத
பேரச்சத்தால் நிலை குலைந்து ஓடினார்கள்.

————

7890.
இரிந்தார், திசை திசை எங்கணும் யானைப் பிணம் எற்ற,
நெரிந்தார்களும்; நெரியாது உயிர் நிலைத்தார்களும்
நெருக்கால்
எரிந்தார்; நெடுந் தடந் தேர் இழிந்து எல்லாரும் முன்
செல்ல,
திரிந்தான் ஒரு தனியே, நெடுந் தேவாந்தகன், சினத்தான்.–164-

திசை திசை எங்கணும் யானைப்பிணம் எற்ற நெரிந்தார்களும்
இரிந்தார் – எல்லாத் திசைகளிலும் யானைகளின் பிணங்கள்
மோதுவதனால் நெரிபட்டவர்கள் நிலை கெட்டு ஓடினார்கள்; நெரியாது
உயிர் நிலைத்தார்களும் நெருக்கால் எரிந்தார்- (அவ்வாறு)
நெரிபடாமல் உயிரோடு இருந்தவர்களும் நெருக்கினால்
அழிந்திட்டனர்; (அவ்வாறு எங்கும் யானைப் பிணங்கள்
கிடைத்தலால்) நெடுந் தடந்தேர் இழிந்து எல்லோரும் முன்
செல்ல – நெடிய பெரிய தேரில் இருந்து இறங்கி எல்லாரும் (தேரைச் செலுத்த முடியாமல்) முன்னே ஓட; ஒரு தனியே நெடுந்
தேவாந்தகன் சினத்தான் திரிந்தான் – தன்னந்தனியே நெடிய
தேவாந்தகன் (போர்க்களத்தில்) சினத்துடன் திரிந்தான்.

—————-

7891.
உதிரக் கடல், பிண மால் வரை, ஒன்று அல்லன பலவாய்
எதிர, கடு நெடும் போர்க் களத்து ஒரு தான் புகுந்து
ஏற்றான்,
கதிர் ஒப்பன சில வெங் கணை அனுமான் உடல் கரந்தான்,
அதிரக் கடல்-நெடுந் தேரினன்-மழைஏறு என ஆர்த்தான்.–165-

உதிரக்கடல் – குருதிக்கடலும்,; பிணமால் வரை – பிணக்
குவியல்களாகிய (யானை உடல்களின்) பெரிய மலையும்; ஒன்று
அல்லன பலவாய் எதிர – ஒன்றல்லாமல் பலவாய் எதிர்ப்பட;
நெடுந்தேரினன் – பரிய தேரை உடைய தேவாந்தகன்; கடு நெடும்
போர்க்களத்து ஒரு தான் புகுந்து ஏற்றான் – கடுமையான பெரிய
போர்க்களத்தில் தான் ஒருவனாய்ப் புகுந்து எதிர்த்தவனாய்; கதிர்
ஒப்பன சில வெங்கணை அனுமான் உடல் கரந்தான் – கதிரவனின்
ஒளிக் கதிர்களை ஒத்த (சுடுகணைகளாகிய) சில கொடிய அம்புகளை
அனுமன் உடலில் மறைந்து புதையுமாறு செலுத்தி; கடல் அதிர மழை
ஏறு என ஆர்த்தான் – கடல் அதிரும்படி மழைக்கால இடி போல
பேரொலி செய்தான்.

———-

7892.
அப்போதினின், அனுமானும் ஓர் மரம் ஓச்சி நின்று
ஆர்த்தான்,
‘இப்போது இவன் உயிர் போம்’என, உரும்ஏறு என
எறிந்தான்;
வெப்போ என வெயில் கால்வன அயில் வெங் கணை,
விசையால்
‘துப்போ?’ என, துணியாம் வகை, தேவாந்தகன் துரந்தான். –166-

அப்போதினின் அனுமானும் – அப்போது அனுமானும்; ஓர் மரம்
ஓச்சி நின்று ஆர்த்தான் – ஒரு மரத்தை உயரத் தூக்கிச் சுழற்றிப்
பேரொலி செய்தவனாய்; இப்போது இவன் உயிர் போம் என –
இப்போது இவனுயிர் (தேவாந்தகன்) போய் விடும் என்று சொல்லி;
உரும் ஏறு என எறிந்தான் – பேரிடி போன்ற ஒலியோடு எறிந்தான்;
வெப்போ என வெயில் கால்வன அயில் வெங்கணை – கொடிய
நெருப்போ என எண்ணும்படி வெப்பத்தை வெளியிடும் கூர்மையான
கொடிய அம்புகளை; விசையால் – மிக வேகமாக; துப்போ என –
(அந்த மரம் ஒரு) வலிமை உடைய பொருளோ என எண்ணுமாறு;
துணியாம் வகை – (அது) துண்டுபட்டுச் சிதறுமாறு; தேவாந்தகன்
துரந்தான் – தேவாந்தகன் செலுத்தினான்.

————-

7893.
மாறு ஆங்கு ஒரு மலை வாங்கினன், வய வானரக்
குலத்தோர்க்கு
ஏறு, ஆங்கு அதும் எறியாதமுன், முறியாய் உக எய்தான்;
கோல் தாங்கிய சிலையானுடன் நெடு மாருதி கொதித்தான்,
பாறு ஆங்கு எனப் புகப் பாய்ந்து, அவன் நெடு
வில்லினைப் பறித்தான்.–167-

வயவானரக் குலத்தோர்க்கு ஏறு – வலிமை மிக்க வானரக்
குலத்தவர்க்கு தலைவன் ஆகிய அனுமன்; மாறு ஆங்கு ஒரு மலை
வாங்கினன் – வேறாகப் பிறிது ஒரு மலையைக் (கையில்) எடுத்தான்;
ஆங்கு அதும் எறியாத முன் – அப்போது அந்த மலையை
எறிவதற்கு முன்னமேயே; முறியாய் உக எய்தான் – அம்மலை
துண்டுபட்டுச் சிதறும்படி (தேவாந்தகன்) அம்பினை எய்தான்; கோல்
தாங்கிய சிலையானுடன் நெடு மாருதி கொதித்தான் – அம்பு
பொருந்திய வில்லினை உடைய தேவாந்தகனுடன் சிறப்புப் பொருந்திய
அனுமன் மிகச் சினந்து; ஆங்கு பாறு எனப் புகப்பாய்ந்து – அங்குப்
பருந்து போலப் பாய்ந்து; அவன் நெடு வில்லினைப் பறித்தான் –
அந்தத் தேவாந்தகனுடைய நெடிய வில்லைப் பறித்தான்.
மாறு – வேறாக, வயம் – வலிமை, ஏறு – தலைவன், சிங்க
மெனினுமாம். கோல் – அம்பு பாறு – பருந்து.

————

7894.
பறித்தான் நெடும் படை, வானவர் பலர் ஆர்த்திட, பலவா
முறித்தான்; அவன் வலி கண்டு, உயர் தேவாந்தகன்
முனிந்தான்.
மறித்து ஆங்கு ஓர் சுடர்த் தோமரம் வாங்கா, மிசை ஓங்கா;
செறித்தான், அவன்இடத் தோள்மிசை; இமையோர்களும்
திகைத்தார்.–168-

நெடும் படை பறித்தான்-(தேவாந்தகன் உடைய) நீண்ட வில்லைப்
பிடுங்கியவனாகிய (அனுமன்); பலர் வானவர் ஆர்த்திட- பல
தேவர்கள் (மகிழ்ச்சியால்) பேரொலி செய்ய; பலவா முறித்தான் –
(அந்த வில்லைப்) பல துண்டுகள் ஆகும்படி முனித்தான்; உயர்
தேவாந்தகன் – (வீரத்தில்) சிறந்த தேவாந்தகன்; அவன் வலி கண்டு
முறிந்தான் – அந்த அனுமனுடைய வலிமையைக் கண்டு
சினந்தவனாய்; ஆங்கு மறித்து ஒரு சுடர்த் தோமரம் வாங்காமிசை
ஓங்கா – அப்போது மீண்டும் ஒரு ஒளி பொருந்திய தோமரம்
என்னும் படையை எடுத்து மேல் ஓங்கி; அவன் இடத்தோள் மிசை
செறித்தான் – அந்த அனுமனுடைய இடது தோளின் மீது நெருங்க
அடித்தான்; இமையோர்களும் திகைத்தார் – (அச்செயல் கண்ட)
தேவர்களும் திகைத்தார்கள்.

————-

7895.
சுடர்த் தோமரம் எறிந்து ஆர்த்தலும், கனல் ஆம்
எனச் சுளித்தான்,
அடல் தோமரம் பறித்தான், திரிந்து உரும்ஏறு என
ஆர்த்தான்,
புடைத்தான்; அவன் தடந்தேரொடு நெடுஞ் சாரதி
புரண்டான்;-
மடல் தோகையர் வலி வென்றவன்-வானோர் முகம்
மலர்ந்தார்.–169-

மடல் தோகையர் வலி வென்றவன்- மடப்பம் பொருந்திய மகளிர்
ஏதுவாக உண்டாகும் காமம் ஆகிய (அகப் பகையை) வென்றவன்
ஆகிய அனுமன்; சுடர்த் தோமரம் எறிந்து ஆர்த்தலும் – (தன்
இடத்தோள் மிசை) ஒளி பொருந்திய தோமரப் படையை வீசித்
(தேவாந்தகன்) பேரொலி செய்த உடனே; கனல் ஆம் எனச்
சுளித்தான் – தீ ஆகும்படி எனச் சினந்து; அடல் தோமரம்
பறித்தான் திரிந்து உரும் ஏறு என ஆர்த்தான்-அந்த வலிமை மிகு
தோமரத்தைத் (தேவாந்தகன் கையில் இருந்து) பறித்துத் திரிந்து
இடியேறு எனும்படி பேரொலி செய்து; புடைத்தான் – (அந்தத்
தோமரம் கொண்டு தேவாந்தகனைப்) புடைத்தான்; அவன்
தடந்தேரொடு நெடுஞ் சாரதி புரண்டான் – அதனால் அவனுடைய
பெரிய தேரோடு வலிமை மிகு தேர்ப்பாகனும் இறந்தான்; வானோர்
முகம் மலர்ந்தனர் – (அது கண்டு) தேவர்கள் மகிழ்ச்சியால் முகம்
மலர்ந்தனர்.

———–

7896.
சூலப் படை தொடுவான்தனை இமையாதமுன் தொடர்ந்தான்;
ஆலத்தினும் வலியானும் வந்து, எதிரே புகுந்து அடர்த்தான்;
காலற்கு இரு கண்ணான் தன கையால் அவன் கதுப்பின்
மூலத்திடைப் புடைத்தான், உயிர் முடித்தான், சிரம
மடித்தான்.–170-

சூலப்படை தொடுவான் தனை – சூலப் படையைக் கையில்
கொண்ட தேவாந்தகனை; இமையாத முன் தொடர்ந்தான் – (அனுமன்)
கண்ணிமைப்பதற்கு முன்னமே நெருங்கிப் போர் செய்யலானான்;
ஆலத்தினும் வலியானும் – ஆலகால நஞ்சைக் காட்டிலும் வலிமை
பொருந்திய தேவாந்தகனும்; எதிரே வந்து புகுந்து அடர்த்தான் –
அவனுக்கு எதிரில் வந்து புகுந்து போரிட்டான்; காலற்கு இரு
கண்ணான் – யமனுக்கு இரு கண்களைப் போன்றவனாகிய (அனுமன்);
தன் கையால் – தனது கையினால்; அவன் கதுப்பின் மூலத்திடைப்
புடைத்தான் – அந்தத் (தேவாந்தகனுடைய) கன்னத்து உயிர்ப்
பாகத்தில் அடித்தான்; சிரம் மடித்தான் உயிர் முடித்தான்- அதனால்
அவன் தலை தொங்கி உயிர் விட்டான்.

—————

அதிகாயன் – அனுமன் வீர உரை

7897.
கண்டான் எதிர் அதிகாயனும், கனல் ஆம் எனக் கனன்றான்,
புண்தான் எனப் புனலோடு இழி உதிரம் விழி பொழிவான்,
‘உண்டேன் இவன் உயிர் இப்பொழுது; ஒழியேன்’ என
உரையா,
‘திண் தேரினைக் கடிது ஏவு’ என, சென்றான்; அவன்
நின்றான்.–171-

அதிகாயனும் எதிர் கண்டான் – (தேவாந்தகன் இறந்ததை)
அதிகாயனும் கண் எதிரே கண்டான்; கனல் ஆம் எனக் கனன்றான்-
(அவன்) நெருப்புப் போலக் கொதித்து; புண்தான் எனப் புனலோடு
இழி உதிரம் விழி பொழிவான் – புண்தான் என்று (கண்டோர்க்குத்)
தோன்றுமாறு கண்ணீரோடு வழியும் குருதியை விழிகளில்
சோரவிட்டவனாய்; இவன் உயிர் இப்பொழுது உண்டேன் – இந்த
அனுமனுடைய உயிரை இப்பொழுதே அழிப்பேன்; ஒழியேன் என
உரையா – செய்யாது விட மாட்டேன் என்று உரைத்து; திண்
தேரினைக் கடிது ஏவு என – வலிய நம் தேரினை விரைவாகச்
செலுத்து என்று (பாகனுக்குச் சொல்லி); அவன் நின்றான் சென்றான் –
அந்த அனுமன் நின்ற இடத்துக்குச் சென்றான்.

————–

7898.
அன்னான் வரும் அளவின்தலை, நிலைநின்றன அனிகம்;
பின் ஆனதும் முன் ஆனது; பிறிந்தார்களும் செறிந்தார்;
பொன்னால் உயர் நெடு மால் வரை போல்வான் எதிர்
புக்கான்,
சொன்னான் இவை, அதிகாயனும், வடமேருவைத்
துணிப்பான்; –172-

அன்னான் வரும் அளவின் தலை – அந்த அதிகாயன் வரும்
பொழுது; அனிகம் பின் ஆனதும் முன் ஆனது நிலை நின்றன –
சேனைகள் பின்னிட்டவை முன்னிட்டவையாய் நிலை பெற்று நின்றன;
பிறிந்தார்களும் செறிந்தார் – பிரிந்து சென்றவர்களும் ஒன்று சேர்ந்து
நெருங்கினார்கள்; வடமேருவைத் துணிப்பான் அதிகாயனும் –
வடக்கின் கண் உள்ள மேரு மலையையும் துண்டாக்க வல்ல (வலிமை
உடைய) அதிகாயனும்; பொன்னால் உயர் நெடு மால் வரை
போல்வான் – பொன்னால் ஆகிய உயர்ந்த பெரிய மேரு மலை
போன்றவனாகிய அனுமனுக்கு; எதிர் புக்கான் இவை சொன்னான் –
எதிரே புகுந்து இந்தச் சொற்களைச் சொன்னான் (அதை அடுத்த
இரண்டு பாடல்களில் காண்க.)

———–

அதிகாயன் உரை

7899.
‘தேய்த்தாய், ஒரு தனி எம்பியைத் தலத்தோடு ஒரு
திறத்தால்;
போய்த் தாவினை நெடு மா கடல், பிழைத்தாய்; கடல்
புகுந்தாய்,
வாய்த்தானையும் மடித்தாய்; அது கண்டேன், எதிர்
வந்தேன்.
ஆய்த்து ஆயது முடிவு, இன்று உனக்கு; அணித்தாக வந்து,
அடுத்தாய்.–173-

ஒரு தனி எம்பியைத் தலத்தோடு தேய்த்தாய் – (முன்பு நடந்த
பழைய போரில்) ஒப்பற்றுத் தனித்த என் தம்பியாகிய
(அக்ககுமாரனைத்) தரையோடு சேர்த்து அழித்து; ஒரு திறத்தால்
நெடுமா கடல் – ஒப்பற்ற உன் வலிமையால் பெரிய கரிய கடலை;
போய்த் தாவினை பிழைத்தாய் – போய்த் தாவிப் பிழைத்தாய்; கடல்
புகுந்தாய் வாய்த்தானையும் மடித்தாய்- (இப்போது நடக்கும் போரில்)
அரக்கர் சேனையாகிய கடலில் புகுந்து பொருதற்கு வாய்த்தவனாகிய
தேவாந்தகனையும் உயிர் இழக்கச் செய்தாய்; அது கண்டேன் எதிர்
வந்தேன் – அச்செயல் கண்டு உன் எதிர் வந்து உள்ளேன்; இன்று
உனக்கு முடிவு ஆய்த்து ஆயது – இப்போது உனக்கு முடிவு
(நெருங்கி) ஆயிற்று ஆயிற்று; அணித்தாக வந்து அடுத்தாய் –
(அதனால்தான்) என்னை நெருங்கி வந்துள்ளாய்.
வாய்த்தான் – பொருதற்குக் கிடைத்தவன்; தேவாந்தகன். ஆய்த்து
ஆயது – ஆயிற்று ஆயிற்று விரைவு பற்றி வந்த அடுக்கு. இதனை
ஒரு பொருட் பன்மொழி என்பாரும் உளர்.

—————–

7900.
‘இன்று அல்லது, நெடு நாள் உனை ஒரு நாளினும்
எதிரேன்;
ஒன்று அல்லது செய்தாய் எமை; இளையோனையும்
உனையும்
வென்று அல்லது மீளாத என் மிடல் வெங் கணை
மழையால்
கொன்று அல்லது செல்லேன்; இது கொள்’ என்றனன்,
கொடியோன்.–174-

உனை இன்று அல்லது – உன்னை இன்றைக்குக் (கொன்றால்)
அல்லது; நெடுநாள் ஒரு நாளினும் எதிரேன் – (இனிவரும்) நீண்ட
காலத்தில் ஒருநாள் கூட எதிர்த்துப் போரிட மாட்டேன்; எமை ஒன்று
அல்லது செய்தாய் – (நீ) எமக்கு ஒரு தீங்கு அல்லாது பல
தீங்குகளைச் செய்துள்ளாய் (அதனால்); வென்று அல்லது மீளாத என்
மிடல் வெங்கணை மழையால் – வெற்றி பெற்று அன்றி வீணாக
மீளுதல் இல்லாத என்னுடைய வலிமை பொருந்திய கொடிய
அம்புகளின் மழையினால்; இளையோனையும் உனையும் கொன்று
அல்லது செல்லேன் – (இராமனுக்கு) இளையவனாகிய
இலக்குவனையும் உன்னையும் கொன்றல்லது மீள மாட்டேன்; இது
கொள் என்றனன் கொடியோன் – இதை (நீ மனதில் உறுதியாகக்)
கொள்க என்று கூறினான் கொடியவனாகிய அதிகாயன்.

————

அனுமன் திரிசிரனை அழை எனக் கூறல்

7901.
‘பிழையாது; இது பிழையாது’ என, பெருங் கைத்தலம்
பிசையா,
மழை ஆம் எனச் சிரித்தான்-வட மலை ஆம் எனும்
நிலையான்-
‘முழை வாள் அரி அனையானையும் எனையும் மிக
முனிவாய்;
அழையாய் திரிசிரத்தோனையும், நிலத்தோடும் இட்டு
அரைப்பான்.–175-

வட மலை ஆம் எனும் நிலையான்- வடக்கின் கண் உள்ள மேரு
மலை ஆம் என்று கூறும்படி சலியா நிலையுடைய அனுமன்;
முழைவாள் அரி அனையானையும் எனையும் மிக முனிவாய் –
குகையில் உள்ள சிங்கத்தை ஒத்த இலக்குவனையும் என்னையும்
மிகச் சினக்கின்றாய்; நிலத்தோடும் இட்டு அரைப்பான் – (நான்)
நிலத்தில் சேர்த்தி அரைத்து அழிப்பதற்காக; திரி சிரத்தோனையும்
அழையாய் – திரிசிரனையும் (நாங்கள் இருவர் நீ ஒருவன் எனவே)
துணையாக அழைத்துக் கொள்வாய்; இது பிழையாது பிழையாது என –
(நான் சொல்லும்) இது தவறாது தவறாது என்று கூறி; பெருங்கைத்தலம்
பிசையா – (தன்னுடைய) பெரிய கைகளைச் சேர்த்துப் பிசைந்து
கொண்டு; மழை ஆம் எனச் சிரித்தான் – மேகம் போல் பெரிய ஒலி
எழுமாறு சிரித்தான்.

———

திரிசிரன் அனுமன் போர்

7902.
‘ஆம், ஆம்!’ என, தலை மூன்றுடையவன் ஆர்த்து வந்து,
அடர்த்தான்;
கோமான் தனிப் பெருந் தூதனும், எதிரே செருக
கொடுத்தான்,
‘காமாண்டவர், கல்லாதவர், வல்லீர்!’ எனக் கழறா,
நா மாண்டு அற, அயல் நின்று உற நடுவே புக நடந்தான்.–176-

ஆம் ஆம் என தலை மூன்றுடையான் ஆர்த்து வந்து
அடர்த்தான் – (அனுமன் சொல் கேட்டு) ஆம் ஆம் என்று சொல்லிக்
கொண்டு முத்தலையனான திரிசிரன் பேரொலி செய்து கொண்டு வந்து
தாக்கினான்; கோமான் தனிப் பெருந் தூதனும் எதிரே செருக்
கொடுத்தான் – தலைவன் ஆகிய இராமனது ஒப்பற்ற பெருந்தூதன் ஆகிய அனுமனும் (அவனுக்கு)
எதிராகப் போர் தொடுத்து; காமாண்டவர் கல்லாதவர் வல்லீர் எனக்
கழறா – காமத்தால் மிக்கவரும் கல்லாதவரும் ஆகிய (நீங்கள்) (காமம்
இல்லாத கற்ற எங்களை) வெல்ல வல்லீராவீரோ என்று சொல்லி;
அயல் நின்று உற – தூரத்தில் இருந்து நெருங்கி; நாமாண்டு அற –
(கண்டவர்) நாக்கு வற்றி ஒழிய; நடுவே புக நடந்தான் – நடுவில்
புகுந்து நடந்தான்.

——

திரிசிரனை அழித்தல்

7903.
தேர்மேல் செலக் குதித்தான், திரிசிரத்தானை ஓர் திறத்தால்,
கார் மேல் துயில் மலை போலியைக் கரத்தால் பிடித்து
எடுத்தான்,
பார்மேல் படுத்து அரைத்தான், அவன் பழி மேற்படப்
படுத்தான்.
‘போர் மேல்திசை நெடு வாயிலின் உளது ஆம்’ என,
போனான்.–177-

தேர் மேல் செலக் குதித்தான் – (அனுமன் அந்தத் திரிசிரன்
உடைய) தேரின் மேல் சென்று சேரும்படி குதித்து; கார் மேல் துயில்
மலை போலியை திரிசிரத்தனை – மேகம் மேல் படியப் பெற்ற
மலையைப் போன்றவன் ஆன அந்தத் திரிசிரனை; ஓர் திறத்தால்
கரத்தால் பிடித்து எடுத்தான் – ஒப்பற்ற வலிமையால் கையால் பிடித்து
எடுத்து; பார் மேல் படுத்து அரைத்து – பூமியின் மீது தள்ளி
அரைத்து; அவன் பழி மேல் படப் படுத்தான் – அவனுக்குப் பழி
மிகுதியாக உண்டாகுமாறு கொன்றான்; போர் மேல் திசை நெடு
வாயிலின் உளது ஆம் என போனான் – (அதற்குப் பிறகு) போர்
மேற்குத் திசை வாயிலில் உள்ளது என்று அங்குப் போனான்.

——————

அதிகாயன், இலக்குவனுடன் பொர வருதல்

அறுசீர் ஆசிரிய விருத்தம்

7904.
இமையிடையாகச் சென்றான்; இகல் அதிகாயன் நின்றான்,
அமைவதுஒன்று ஆற்றல் தேற்றான், அருவியோடு
அழல்கால் கண்ணான்,
‘உமையொருபாகனேயும், இவன் முனிந்து உருத்த போது,
கமையிலன் ஆற்றல்’ என்னா, கதத்தொடும் குலைக்கும்
கையான்,–178-

இமையிடையாகச் சென்றான் – (நடுவில் புகுந்து நடந்தவனாகிய
அனுமன்) கண்ணிமை காலத்துக்கு முன்பே (மேற்குத் திசை
வாயிலுக்குச்) சென்று விட்டான்; இகல் அதிகாயன் அமைவது ஒன்று
ஆற்றல் தேற்றான் – வலிமை மிகு அதிகாயன் தக்கதொரு செயலைச்
செய்வதற்கு அறியாமல்; அருவியொடு அழல் கால் கண்ணான்
நின்றான் – நீர் அருவியோடு நெருப்பையும் வெளிப் படுத்துகின்ற
கண்களை உடையவனாகித் (திகைத்து) நின்றவனாகி; உமையொரு
பாகனேயும் இவன் முனிந்து உருத்த போது கமையிலன் ஆற்றல்
என்னா – உமை அம்மையை இடப்பாகத்திலே கொண்ட சிவபிரானும்
இந்த அனுமன் சினம் கொண்டு சீற்றத்தை வெளியிடும் போது
பொறுத்தற்கு வல்லமை உடையவன் அல்லன் என்று கூறி;
கதத்தொடும் குலைக்கும் கையான் – சினத்துடன் நடுங்குகின்ற கையை உடையவன்
ஆனான்.

————–

7905.
‘பூணிப்பு ஒன்று உடையன் ஆகிப் புகுந்த நான்,
புறத்து நின்று,
பாணித்தல் வீரம் அன்றால்; பரு வலி படைத்தோர்க்கு
எல்லாம்
ஆணிப்பொன் ஆனான்தன்னைப் பின்னும் கண்டு
அறிவென்’என்னா,
தூணிப் பொன் புறத்தான், திண் தேர் இளவல்மேல்
தூண்டச்சொன்னான்.–179-

பூணிப்பு ஒன்று உடையன் ஆகிப் புகுந்த நான் -(இலக்குவனை
அழிப்பது என்ற) குறிக்கோள் ஒன்றினைக் கைக் கொண்டவனாகிப்
(போர்க்களத்துப்) புகுந்த நான்; புறத்து நின்று பாணித்தல் வீரம்
அன்றால் – பிறிதொரு எண்ணம் கொண்டு நின்று காலத்தை
நீட்டித்தல் வீரம் அல்ல; தூணிப் பொன் புறத்தான் – அம்பு
அறாத்தூணியை அழகிய முதுகில் கட்டியுள்ளவனும்; பரு வலி
படைத்தோர்க்கு எல்லாம் ஆணிப் பொன் அனான் தன்னை- மிக்க
வலிமை படைத்தவர்களுக்கெல்லாம் ஆணிப் பொன் போல்
சிறந்தவனும் ஆகிய இலக்குவன் தன்னைப்; பின்னும் கண்டு
அறிவென் என்னா – மேலும் கண்டு அறிவேன் என்று கூறி; திண்தேர்
இளவல் மேல் தூண்டச் சொன்னான் – தனது வலிய தேரை
இலக்குவனை நோக்கிச் செலுத்துமாறு (தேர்ப்பாகனிடம் அதிகாயன்)
சொன்னான்.

————–

7906.
தேர் ஒலி கடலைச் சீற, சிலை ஒலி மழையைச் சீற,
போர் ஒலி முரசின் ஓதை திசைகளின் புறத்துப் போக,
தார் ஒலி கழற் கால் மைந்தன் தானையும் தானும்
சென்றான்;
வீரனும் எதிரே நின்றான், விண்ணவர் விசையம் வேண்ட,–180-

தேர் ஒலி கடலைச் சீற – தேர்களின் ஒலி கடலைச் சீறுவது போல்
மிகவும்; சிலை ஒலி மழையைச் சீற – வில்களின் ஒலி மழை ஒலியைச்
சீறுவது போல் மிகவும்; போர் ஒலி முரசின் ஓதை திசைகளின்
புறத்துப் போக – போர்க்களத்தில் ஒலிக்கின்ற முரசின் ஒலி திக்குகள்
கடந்து வெளியில் செல்லவும்; தார் ஒலி கழற்கால் மைந்தன் – போர்
மாலை தழைத்த (மார்பினையும்) வீரக்கழல் அணிந்த காலினையும்
உடைய அதிகாயன்; சேனையும் தானும் சென்றான் – படைகளும்
தானும் ஆகச் சென்றான்; விண்ணவர் விசையம் வேண்ட – தேவர்கள்
(வெல்க வெல்க என) வெற்றியே விரும்ப; வீரனும் எதிரே நின்றான் –
வீரனாகிய இலக்குவனும் (அவன்) எதிரே (போரிட) நின்றான்.

————–

அங்கதன் தோள் மேலேறி இலக்குவன் போரிடல்

7907.
வல்லையின் அணுக வந்து வணங்கினான், வாலி மைந்தன்;
‘சில்லி அம் தேரின் மேலான், அவன் அமர் செவ்விது
அன்றால்;
வில்லியர் திலதம் அன்ன நின் திருமேனி தாங்கப்
புல்லியன் எனினும், என் தோள் ஏறுதி, புனித!’ என்றான்.–181-

வல்லையின் அணுக வந்து வணங்கினான் வாலி மைந்தன் –
விரைவாக (இலக்குவனை) நெருங்கி வந்து வணங்கியவனாகிய வாலிக்கு
மகனான அங்கதன்; அவன் சில்லி அம் தேரின் மேலான் –
அவ்வதிகாயன் சக்கரம் அமைந்த அழகிய தேரின் மேல் உள்ளான்;
அமர் செவ்விது அன்றால் – (அவனோடு நிலத்தில் இருந்து)
போரிடுவது செம்மை உடையதல்ல; வில்லியர் திலதம் அன்ன நின்
திருமேனி – வில்லாளிகளில் திலகம் போன்ற உனது அழகிய
மேனியை; தாங்கப் புல்லியன் எனினும் – தாங்குவதற்கு (ஒவ்வாத) புன்மை உடையவன் என்றாலும்; புனித என் தோள்
ஏறுதி என்றான் – தூய்மையானவனே என் தோளின் மீது ஏறுக
என்றான்.

————–

7908.
‘ஆம்’ என, அமலன் தம்பி அங்கதன் அலங்கல் தோள்மேல்
தாமரைச் சரணம் வைத்தான்; கலுழனின் தாங்கி நின்ற
கோமகன் ஆற்றல் நோக்கி, குளிர்கின்ற மனத்தர் ஆகி,
பூ மழை பொழிந்து வாழ்த்திப் புகழ்ந்தனர், புலவர் எல்லாம்.–182-

அமலன் தம்பி ஆம் என – குற்றம் அற்றவனாகிய இராமனுக்குத்
தம்பியாகிய இலக்குவன் (நீ சொல்வது சரி) ஆம் என (ஏற்று);
அங்கதன் அலங்கல் தோள் மேல் – அங்கதனுடைய மாலையணிந்த
தோளின் மீது; தாமரைச் சரணம் வைத்தான் – தன் தாமரை போன்ற
கால்களை வைத்து ஏறினான்; கலுழனின் தாங்கி நின்ற கோமகன்
ஆற்றல் நோக்கி – கருடாழ்வார் போல் (அவனைத்) தாங்கி நின்ற
அரச மகனான அங்கதனது வலிய ஆற்றலைக் கண்டு; புலவர்
எல்லாம் குளிர்கின்ற மனத்தர் ஆகி – தேவர்கள் எல்லாம் குளிர்ந்த
மனத்தை உடையவர்கள் ஆகி; பூ மழை பொழிந்து – பூவாகிய
மழையைச் சொரிந்து; வாழ்த்திப் புகழ்ந்தனர் – (நீடு வாழ்க என)
வாழ்த்திப் புகழ்ந்தனர்.

————–

7909.
ஆயிரம் புரவி பூண்ட அதிர் குரல் அசனித் திண் தேர்
போயின திசைகள் எங்கும், கறங்கு எனச் சாரி போமால்;
மீ எழின் உயரும்; தாழின் தாழும்; விண் செல்லின்
செல்லும்;-
தீ எழ உவரி நீரைக் கலக்கினான் சிறுவன் அம்மா! –183-

உவரி நீரை தீ எழக் கலக்கினான் சிறுவன் – பாற்கடல் நீரைத் தீ
வெளிப்படும்படி கலக்கியவனாகிய வாலியின் மகனான அங்கதன்;
ஆயிரம் புரவி பூண்ட அதிர் குரல் அசனித் திண்தேர் – ஆயிரம்
குதிரைகள் பூட்டியதும் ஒலிக்கும் இடியைப் போன்றதுமாகிய
(அதிகாயனது) வலிய தேர்; போயின திசைகள் எங்கும் – சென்ற
திசைகள் எல்லாவற்றிலும்; கறங்கு எனச் சாரி போமால் – (அங்கதன்
தானும்) காற்றாடி போல சுற்றிப் போவான்; மீ எழின் உயரும் – (தேர்)
மேல் எழுந்தால் (தானும்) மேலெழுவான்; தாழின் தாழும் – (தேர்
கீழே) தாழ்ந்தால் (தானும்) தாழ்வான்; விண் செல்லின் செல்லும் –
தேர் ஆகாயத்தில் சென்றது என்றால் (தானும்) ஆகாயத்தில்
செல்லுவான்.

————-

7910. அத் தொழில் நோக்கி, ஆங்கு வானரத் தலைவர் ஆர்த்தார்;
‘இத் தொழில் கலுழற்கேயும் அரிது’ என, இமையோர்
எல்லாம்
கைத்தலம் குலைத்தார் ஆக, களிற்றினும் புரவிமேலும்
தைத்தன, இளைய வீரன் சரம் எனும் தாரை மாரி.–184-

அத்தொழில் நோக்கி – (அங்கதனது) அந்தத் தொழிலைப் பார்த்து;
அங்கு வானரத் தலைவர் ஆர்த்தார் – அப்போது வானரத் தலைவர்
மகிழ்ச்சிப் பேரொலி செய்தனர்; இமையோர் எல்லாம் – தேவர்கள்
எல்லாம்; இத்தொழில் கலுழற்கேயும் அரிது என – இவ் (அங்கதனது)
தொழில் திறமை கருடாழ்வானுக்குக் கூட இயலாது என்று சொல்லி;
கைத்தலம் குலைத்தார் ஆக – கைகள் விதிர் விதிர்த்தார் ஆக;
இளைய வீரன் சரம் எனும் தாரை மாரி – இளைய வீரனுடைய
அம்புகள் என்னும் தாரையாகப் பொழிகிற மழை; களிற்றினும் புரவி
மேலும் தைத்தன – (அரக்கரின்) யானைகள் மீதும் குதிரைகள் மீதும்
தைத்தன.

————–

7911. முழங்கின முரசம்; வேழம் முழங்கின; முரித் திண் தேர்
முழங்கின; முகரப் பாய்மா முழங்கின; முழு வெண் சங்கம்
முழங்கின; தனுவின் ஓதை முழங்கின; கழலும் தாரும்
முழங்கின; தெழிப்பும் ஆர்ப்பும் முழங்கின, முகிலின்
மும்மை.–185-

முரசம் முழங்கின – முரசங்கள் முழங்கின; வேழம் முழங்கின –
யானைகள் முழங்கின; மூரித் திண்தேர் முழங்கின – மிக்க வலிமை
உடைய தேர்கள் முழங்கின; முகரப் பாய்மா முழங்கின – கனைக்கும்
பண்புள்ள குதிரைகள் முழங்கின; முழு வெண் சங்கம் முழங்கின –
முழுதும் வெண்மையான சங்குகள் முழங்கின; தனுவின் ஓதை
முழங்கின – வில்லின் ஓசை முழங்கின; கழலும் தாரும் முழங்கின –
வீரக் கழலும் மாலைகளும் முழங்கின; தெழிப்பும் ஆர்ப்பும் முகிலின்
மும்மை முழங்கின – (வீரர்களின்) அதட்டலும் ஒலிப்பும் மேக
ஒலியினும் மும்மடங்கு முழங்கின.

————-

7912. கரி பட, காலாள் வெள்ளம் களம் பட, கலினக் காலப்
பரி பட, கண்ட கூற்றும் பயம் பட, பைம் பொன் திண் தேர்
எரிபட, பொருத பூமி இடம் பட, எதிர்ந்த எல்லாம்
முரிபட, பட்ட, வீரன் முரண் கணை மூரி மாரி.–186-

கரி பட – (அப்போர்க்களத்தில்) யானைகள் இறந்து படவும்;
காலாள் வெள்ளம் களம் பட – காலாட் படையின் கூட்டம் போர்க்
களத்தில் அழிந்து படவும்; கலினக் காலப் பரிபட – சேணம் பூட்டிய
காற்றைப் போல் செல்லும் குதிரைகள் அழிந்து படவும்;கண்ட
கூற்றும் பயம்பட – (போர்க்கள அழிவினைக்) கண்ட யமனும் அச்சம்
மேம்படவும்; பைம்பொன் திண்தேர் எரிபட – பசும் பொன்னால்
செய்யப்பட்ட வலிய தேர்கள் எரிந்து படவும்; பொருத பூமி இடம் பட
– போர்க்களம் படைகள் இறந்து போனதால் இடம் அகன்று தோன்றவும்; எதிர்ந்த எல்லாம் முரி பட
– எதிர்த்து வந்த படைகள் எல்லாம் அழிந்து படவும்; வீரன்
முரண்கணை மூரி மாரி – வீரனாகிய இலக்குவன் உடைய வலிமையான
அம்புகளால் ஆகிய பெருமழை; பட்ட – மிகுதியாகத் தோன்றியது.

————–

இலக்குவன் அதிகாயன் உரையாடல்

7913. மன்னவன் தம்பி, மற்று அவ் இராவணன் மகனை நோக்கி,
‘என் உனக்கு இச்சை? நின்ற எறி படைச் சேனை எல்லாம்
சின்னபின்னங்கள் பட்டால், பொருதியோ? திரிந்து நீயே
நல் நெடுஞ் செருச் செய்வாயோ? சொல்லுதி, நயந்தது’
என்றான்.–187-

மன்னவன் தம்பி – இராமபிரான் தம்பியாகிய இலக்குவன்; மற்று
அவ் இராவணன் மகனை நோக்கி – அந்த இராவணன்
மகனாகிய அதிகாயனை நோக்கி; உனக்கு என் இச்சை – உனக்கு
என்ன விருப்பம்; நின்ற எறிபடைச் சேனை எல்லாம் –
(போர்க்களத்து) நின்ற எறிதற்குரிய படைக்கலங்களைக் கொண்டுள்ள
சேனை முழுவதும்; சின்ன பின்னங்கள் பட்டால் பொருதியோ –
சின்ன பின்னமாய்ச் சிதறி அழிந்த (பிறகு) போர் செய்வாயோ?
திரிந்து நீயே நல் நெடுஞ் செருச் செய்வாயோ – பிரிந்து நீ
மட்டும் நல்ல நெடிய போரினை (இப்போதே) செய்வாயோ?; நயந்தது
சொல்லுதி என்றான் – (நீ) விரும்பியதைச் சொல்லுவாயாக என்றான்.

—————–

7914. ‘யாவரும் பொருவர் அல்லர், எதிர்ந்துள யானும் நீயும்,
தேவரும் பிறரும் காண, செருவது செய்வ எல்லாம்;
‘காவல் வந்து உன்னைக் காப்பார் காக்கவும் அமையும்;
வேறே
கூவியது அதனுக்கு அன்றோ?’ என்றனன்-கூற்றின்
வெய்யோன்.–188-

கூற்றின் வெய்யோன் – யமனைக் காட்டிலும் கொடியவன் ஆகிய
அதிகாயன்; யாவரும் பொருவர் அல்லர் – எல்லோரும் போரிடுவார்
அல்லல்; தேவரும் பிறரும் காண – (குழுமியுள்ள) தேவர்களும்
மற்றவர்களும் காணும்படி; செருவது செய்வ எல்லாம் – போரது
செய்யப் போவதெல்லாம்; எதிர்ந்துள யானும் நீயும் – (போருக்காக)
எதிர்க்கப்பட்டுள்ள யானும் நீயுமே ஆகும்; உன்னைக் காவல் வந்து
காப்பார் காக்கவும் அமையும் – உனக்குக் காவலாக வந்து காப்பவர்
காப்பதும் பொருந்தும்; (உன்னை யார் வந்து காத்தாலும் சரியே
என்றபடி) வேறே கூவியது அதனுக்கு அன்றோ என்றனன்- (உனக்கு
ஆள் அனுப்பி) தனியாகப் போருக்கு அழைத்தது தனியாகப்
போரிட்டு வெல்வதற்காக அல்லவா? என்று கூறினான்.

———-

7915. ‘உமையனே காக்க; மற்று அங்கு உமை ஒரு கூறன் காக்க;
இமையவர் எல்லாம் காக்க; உலகம் ஓர் ஏழும் காக்க;
சமையும் உன் வாழ்க்கை, இன்றோடு’ என்று, தன்
சங்கம் ஊதி,
அமை உருக் கொண்ட கூற்றை நாண் எறிந்து,
உருமின் ஆர்த்தான்.-189-

உமையனே காக்க – உன் அண்ணனாகிய இராமனே காக்கட்டும்;
மற்று அங்கு உமை ஒரு கூறன் காக்க – அன்றி அங்கு
உமையம்மையை இடப்பாகத்தில் கொண்ட சிவபிரானே (வந்து)
காக்கட்டும்; இமையவர் எல்லாம் காக்க – தேவர்கள் எல்லாம் (சேர்ந்து
வந்து) காக்கட்டும்; உலகம் ஓர் ஏழும் காக்க – உலகம் ஓர் ஏழில்
வாழும் (அனைவரும் வந்து) காக்கட்டும்; இன்றோடு உன் வாழ்க்கை
சமையும் – இன்றுடன் உன் வாழ்வு முடிந்து விடும்; என்று தன்
சங்கம் ஊதி – என்று கூறித் தன் சங்கினை எடுத்து ஊதி; அமை உருக் கொண்ட கூற்றை – மூங்கில் உருவம் கொண்ட
யமனை (தன் வில்லினை); நாண் எறிந்து உருமின் ஆர்த்தான் –
நாணினைத் தெறித்து இடி போல் பேரொலி செய்தான்.

உமையன் – உம் தமையனாகிய இராமன்,

—————-

இலக்குவன் அதிகாயனுடன் பொருதல்

7916. அன்னது கேட்ட மைந்தன், அரும்பு இயல் முறுவல் தோன்ற,
‘சொன்னவர் வாரார்; யானே தோற்கினும், தோற்கத் தக்கேன்;
என்னை நீ பொருது வெல்லின், அவரையும் வென்றி’ என்னா,
மின்னினும் மிளிர்வது ஆங்கு ஓர் வெஞ் சரம்
கோத்து விட்டான்.–190-

அன்னது கேட்ட மைந்தன் – அச்சொற்களைக் கேட்ட வீரனாகிய
இலக்குவன்; அரும்பு இயல் முறுவல் தோன்ற – முல்லை அரும்பினை
ஒத்த பற்கள் தெரியப் புன்னகைத்து; நீ சொன்னவர் வாரார் – (நீ)
சொன்னவர்கள் யாரும் வரமாட்டார்கள்; யானே தோற்கினும்
தோற்கத்தக்கேன் – (ஒருவேளை) நானே தோற்கத் தக்கவன்; என்னை
நீ பொருது வெல்லின் – என்னை நீ போரிட்டு வென்றால்; அவரையும்
வென்றி என்னா – அவர்களை எல்லாம் வென்றவன் ஆவாய் என்று
கூறி; மின்னினும் மிளிர்வது – மின்னலைக் காட்டிலும் ஒளி
விடுவதாகிய; வெஞ்சரம் ஆங்கோர் கோத்து விட்டான் – கொடிய
அம்பினை அப்போது (வில்லில்) கோத்து அதிகாயன் மீது
செலுத்தினான்.

—————–

7917. விட்ட வெம் பகழிதன்னை, வெற்பினை வெதுப்பும் தோளான்,
சுட்டது ஓர் பகழிதன்னால் விசும்பிடைத் துணித்து நீக்கி,
எட்டினோடு எட்டு வாளி, ‘இலக்குவ! விலக்காய்’ என்னா,
திட்டியின் விடத்து நாகம் அனையன, சிந்தி, ஆர்த்தான்.–191-

வெற்பினை வெதுப்பும் தோளான் – மலையினையும் வெப்ப
வலிமையால் அழிக்கவல்ல தோள்களை உடைய அதிகாயன்; விட்ட
வெம் பகழி தன்னை – (இலக்குவன்) விட்ட கொடுமையான
அம்பினை; விசும்பிடை சுட்ட ஓர் பகழி தன்னால் துணித்து நீக்கி –
ஆகாயத்தின் கண்ட சுடும் தன்மையுள்ள ஒப்பற்ற (தன்) அம்பு
ஒன்றினால் துண்டாக்கி நீக்கி; இலக்குவ – இலக்குவனே; விலக்காய்
என்னா – (இவ்வம்புகளை) விலக்குவாய் என்று கூறி; திட்டியின்
விடத்து நாகம் அனையன – திட்டி விடம் என்னும் நாகத்தை
ஒத்தனவாகிய; வாளி எட்டினோடு எட்டு – அம்புகள் பதினாறினைச்;
சிந்தி ஆர்த்தான் – (இலக்குவன் மீது) எய்து பேரொலி செய்தான்.

————-

7918. ஆர்த்து அவன் எய்த வாளி அனைத்தையும் அறுத்து
மாற்றி,
வேர்த்து, ஒலி வயிர வெங் கோல், மேருவைப்
பிளக்கற்பால,,
தூர்த்தனன், இராமன் தம்பி; அவை எலாம் துணித்துச்
சிந்தி,
கூர்த்தன பகழி கோத்தான், குபேரனை ஆடல்
கொண்டான்.–192-

அவன் ஆர்த்து எய்த வாளி அனைத்தையும் – அந்த அதிகாயன்
பேரொலி செய்து எய்த அம்புகள் அனைத்தையும்; இராமன் தம்பி
அறுத்து மாற்றி – இராமனுக்குத் தம்பியாகிய இலக்குவன் துண்டித்துப் போக்கி; வேர்த்து மேருவைப் பிளக்கற்
பால – சினம் கொண்டு மேரு மலையினையும் பிளக்கும் வல்லமை
உடையவனாகிய; ஒலி வயிர வெங்கோல் தூர்த்தனன் – ஒலிக்கும்
திண்மையான கொடிய அம்புகளை நிரப்பினான்; குபேரனை ஆடல்
கொண்டான் – குபேரனை வெற்றி கொண்டவன் ஆகிய அதிகாயன்;
அவை எலாம் துணித்துச் சிந்தி – அந்த அம்புகள் எல்லாவற்றையும்
துண்டமாக்கித் தள்ளி; கூர்த்தன பகழி கோத்தான் – கூர்மை
உடையனவாகிய அம்புகளை (வில்லில்) கோத்து எய்தான்.

—————

7919. எய்தனன் எய்த எல்லாம், எரி முகப் பகழியாலே,
கொய்தனன் அகற்றி, ஆர்க்கும் அரக்கனைக் குரிசில்
கோபம்
செய்தனன், துரந்தான் தெய்வச் செயல் அன்ன கணையை;
வெங்கோல்
நொய்து அவன் கவசம் கீறி நுழைவன, பிழைப்பு இலாத.–193-

குரிசில் – ஆடவர் திலகனாகிய இலக்குவன்; எய்தவன் எய்த
எல்லாம் – எய்தவன் ஆகிய (அதிகாயன்) எய்த எல்லா
அம்புகளையும்; எரி முகப் பகழியாலே கொய்தனன் அகற்றி –
நெருப்பை முகத்தில் கொண்ட அம்பால் அறுத்து அகற்றி; ஆர்க்கும்
அரக்கனை – பேரொலி செய்யும் அரக்கனாகிய அதிகாயனைக்;
கோபம் செய்தனன் – சினந்தவன் ஆகி; தெய்வச் செயல் அன்ன
கணையைத் துரந்தான் – (தவறாது பயன் விளைக்கும்)
தெய்வச்செயலை ஒத்த அம்புகளைச் செலுத்தினான்; பிழைப்பு இலாத
வெங்கோல் – (இலக்குத்) தவறாத அந்தக் கொடிய அம்புகள் எல்லாம்;
அவன் கவசம் நொய்து கீறி நுழைவன – அந்த அதிகாயனுடைய
கவசத்தை எளிமையாகப் பிளந்து நுழைவன வாயின.

————

7920.
நூறு கோல் கவசம் கீறி நுழைதலும், குழைவு தோன்றத்
தேறல் ஆம் துணையும், தெய்வச் சிலை நெடுந் தேரின்
ஊன்றி,
ஆறினான்; அதுகாலத்து அங்கு அவனுடை அனிகம்
எல்லாம்
கூறுகூறாக்கி அம்பால், கோடியின் மேலும் கொன்றான்.–194-

நூறு கோல் கவசம் கீறி நுழைதலும் – நூறு அம்புகள் கவசத்தைப்
பிளந்து உடம்பின் உட்புகுந்த உடனே; குழைவு தோன்ற – வருத்தம்
தோன்ற; தேறல் ஆம் துணையும் – (அதிகாயன்) தான் தேறும்கால
அளவும்; தெய்வச் சிலை நெடுந்தேரின் ஊன்றி ஆறினான் – (தன்)
தெய்வத்தன்மை உள்ள வில்லினைப் பெரிய தேரில் ஊன்றியவனாய்க்
களைப்பு ஆறினான்; அதுகாலத்து அங்கு – அக்காலத்தில் அந்த
இடத்தில்; அவனுடை அனிகம் எல்லாம் – அதிகாயன் உடைய
படைகளை எல்லாம்; கூறு கூறாக்கி கோடியின் மேலும் அம்பால்
கொன்றான் – (இலக்குவன்) துண்டு துண்டாக்கிக் கோடிக்கும் மேலாகத்
(தன்) அம்பால் கொன்று அழித்தான்.

—————

7921. புடை நின்றார் புரண்டவாறும், போகின்ற புங்க வாளி
கடைநின்று கணிக்க ஆங்கு ஓர் கணக்கு இலாவாறும்
கண்டான்;
இடைநின்ற மயக்கம் தீர்ந்தான்; ஏந்திய சிலையன் காந்தி,
தொடை நின்ற பகழி மாரி, மாரியின் மும்மை தூர்த்தான்.–195-

இடை நின்ற மயக்கம் தீர்த்தான் – இடையே தோன்றிய மயக்கம்
நீங்கியவனாகிய அதிகாயன்; புடை நின்றார் புரண்ட வாறும் – (தன்)
பக்கத்தில் நின்றவர்கள் (உயிர் ஒழிந்து) புரண்ட தன்மையினையும்;
போகின்ற புங்கவாளி – (தன்னைச் சற்றிப் போகின்ற
இலக்குவனுடைய) கூர்மையான அம்புகள்; கடை நின்று கணிக்க
முழுதும் நின்று கணக்கிட; அங்கு ஓர் கணக்கு இலாவாறும்
கண்டான் – அங்கு ஒரு கணக்கு இல்லாத தன்மையில் மிகுதியாகச்
செல்வதையும் கண்டவனாகி; காந்தி ஏந்திய சிலையன் – கொதித்து
ஏந்திய வில்லை உடையவனாய்; தொடை நின்ற பகழி மாரி –
தொடுக்கப் பெற்ற அம்பு மழையை; மாரியின் மும்மை தூர்த்தான் –
மழையினும் மூன்று மடங்கு செலுத்தி மிகுதியாக நிரப்பினான்.

————–

7922. வான் எலாம் பகழி, வானின் வரம்பு எலாம் பகழி, மண்ணும்
தான் எலாம் பகழி, குன்றின் தலை எலாம் பகழி, சார்ந்தோர்
ஊன் எலாம் பகழி, நின்றோர் உயிர் எலாம் பகழி, வேலை
மீன் எலாம் பகழி, ஆக வித்தினன்-வெகுளி மிக்கோன்.–196-

வெகுளி மிக்கோன் – சினம் மிக்கவனாகிய அதிகாயன்; வான்
எலாம் பகழி – ஆகாயம் எல்லாம் அம்புகள்; வானின் வரம்பு எலாம்
பகழி – ஆகாய எல்லை எல்லாம் அம்புகள்; மண்ணும் தான் எலாம்
பகழி -நிலவுலகம் எல்லாம் அம்புகள்; குன்றின் தலை எலாம் பகழி –
மலை உச்சிகளில் எல்லாம் அம்புகள்; சார்ந்தோர் ஊன் எலாம் பகழி
– (அதிகாயனைச்) சார்ந்திருப்பவர் உடம்பு எல்லாம் அம்புகள்;
நின்றோர் உயிர் எலாம் பகழி – எதிர்த்து நின்றவர்களுடைய
உயிர்களில் எல்லாம் அம்புகள்; வேலை மீன் எலாம் பகழி – கடலில்
உள்ள மீன்கள் மேல் எல்லாம் அம்புகள்; ஆக வித்தினன் – (என)
ஆகுமாறு (எல்லா இடத்தும்) அம்புகளை விதைத்திட்டான்.–

————

7923. மறைந்தன திசைகள் எல்லாம்; வானவர் மனமே போலக்
குறைந்தன, சுடரின் மும்மைக் கொழுங் கதிர்;
குவிந்து, ஒன்று ஒன்றை
அறைந்தன, பகழி; வையம் அதிர்ந்தது; விண்ணும் அஃதே;
நிறைந்தன, பொறியின் குப்பை; நிமிர்ந்தன, நெருப்பின்
கற்றை.–197-

திசைகள் எல்லாம் மறைந்தன – (அதிகாயன் செலுத்திய
அம்புகளால்) திசைகள் எல்லாம் மறைந்தன; வானவர் மனமே போல
– தேவர்களின் மனம் போல; மும்மைச் சுடரின் கொழுங் கதிர்
குறைந்தன – மூன்று சுடர்களின் கொழுவி விளங்கிய ஒளி குறைந்தன;
பகழி குவிந்து ஒன்று ஒன்றை அறைந்தன – அம்புகள் ஒன்றாகச்
சேர்ந்து ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன; வையம் அதிர்ந்தது –
நிலவுலகம் அதிர்ந்தது; விண்ணும் அஃதே – ஆகாயமும் அவ்வாறே
(அதிர்ந்தது); பொறியின் குப்பை நிறைந்தன – அனற் பொறிகள்
மிகுதியாக நிறைந்தன; நெருப்புக் கற்றை நிமிர்ந்தன – நெருப்புக்
கற்றை ஓங்கி வளர்ந்தன.

—————

7924. ‘முற்றியது இன்றே அன்றோ, வானர முழங்கு தானை?
மற்று இவன்தன்னை வெல்ல வல்லனோ, வள்ளல் தம்பி?
கற்றது காலனோடோ, கொலை இவன்? ஒருவன் கற்ற
வில் தொழில் என்னே!’ என்னா, தேவரும் வெருவலுற்றார்.–198-

முழங்கு வானர தானை – ஒலிக்கின்ற வானரப் படை; முற்றியது
இன்றே அன்றோ – தீர்ந்து ஒழிவது இன்றே முடியுமல்லவா? வள்ளல் தம்பி இவன் தன்னை வெல்ல வல்லனோ
– இராமன் தம்பி இவன் தன்னை வெல்ல வல்லவன் ஆவனோ?
இவன் கொலை கற்றது காலனோடோ? – இந்த அதிகாயன்
கொலையைக் கற்றுக் கொண்டது யமனிடம் தானோ? ஒருவன் கற்ற
வில் தொழில் என்னே – ஒப்பற்ற (இவன்) கற்றுள்ள வில்வித்தை
என்ன (சிறப்புத்) தன்மை உடையது; என்னா தேவரும் வெருவலுற்றார்
– என்று கூறித் தேவர்களும் அஞ்சத் தொடங்கினார்கள்.

—————

7925. அங்கதன் நெற்றிமேலும், தோளினும், ஆகத்துள்ளும்,
புங்கமும் தோன்றாவண்ணம், பொரு சரம் பலவும் போக்கி,
வெங் கணை இரண்டும் ஒன்றும் வீரன்மேல் ஏவி, மேகச்
சங்கமும் ஊதி, விண்ணோர் தலை பொதிரெறிய ஆர்த்தான்.–199-

அங்கதன் நெற்றி மேலும் தோளினும் ஆகத்துள்ளும் –
(அந்நிலையில் அதிகாயன்) அங்கதனது நெற்றியிலும், தோள்களிலும்
மார்பின் உள்ளும்; பொருசரம்பலவும் – பொருகின்ற அம்புகள்
பலவற்றைப்; புங்கமும் தோன்றா வண்ணம் போக்கி – நுனிகூட
வெளித் தோன்றாதபடி (அழுந்துமாறு) செலுத்தி; வீரன் மேல்
வெங்கணை இரண்டும் ஒன்றும் ஏவி – இலக்குவன் மீது கொடிய
அம்புகள் மூன்றைச் செலுத்தி; மேகச் சங்கமும் ஊதி – மேகம் போல்
ஒலிக்கும் (தன்) சங்கினை ஊதி; விண்ணோர் தலை பொதிரெறிய
ஆர்த்தான் – தேவர்களின் தலை நடுக்கமுறுமாறு பேரொலி செய்தான்.

———–

7926. வாலி சேய் மேனிமேலும், மழை பொரு குருதி வாரி,
கால் உயர் வரையின் செங் கேழ் அருவிபோல் ஒழுகக்
கண்டான்;
கோல் ஒரு பத்து-நூற்றால் குதரையின் தலைகள் கொய்து,
மேலவன் சிரத்தைச் சிந்தி, வி்ல்லையும் துணித்தான்-வீரன்,–200-

வீரன் – இலக்குவன்; வாலி சேய் மேனி மேலும் – வாலிக்கு
மகனாகிய அங்கதன் மேனி மேல்; கால் உயிர் வரையின் – (சற்று)
ஓங்கி உயர்ந்த அடிபரந்த மலையில்; செங்கேழ் அருவி போல் –
சிவந்த நிறமுடைய அருவி போல; மழை பொரு குருதி வாரி ஒழுகக்
கண்டான் – மழையை ஒத்த குருதி வெள்ளம் ஒழுகுவதைக் கண்டான்;
கோல் ஒரு பத்து நூற்றால் – (உடனே அவன்) அம்புகள்
ஓராயிரத்தால்; குதிரைகள் தலைகள் கொய்து – (தேரில் பூட்டப் பட்ட)
குதிரைகளின் தலைகளை அறுத்து; மேலவன் சிரத்தைச் சிந்தி –
(தேர்) மேல் உள்ள பாகனின் தலையைக் கொய்து; வில்லையும்
துணித்தான் – (அந்த அதிகாயனுடைய) வில்லையும் துண்டித்து
வீழ்த்தினான்.

———

7927. மாற்று ஒரு தடந் தேர் ஏறி, மாறு ஒரு சிலையும் வாங்கி,
ஏற்ற வல் அரக்கன்தன்மேல், எரி முகக் கடவுள் என்பான்,
ஆற்றல் சால் படையை விட்டான், ஆரியன்; அரக்கன்
அம்மா,
வேற்றுள, ‘தாங்க!’ என்னா, வெய்யவன் படையை
விட்டான்.–201-

மாற்று ஒரு தடந்தேர் ஏறி – வேறு ஒரு பெரிய தேரில் ஏறி; மாறு
ஒரு சிலையும் வாங்கி – வேறாக ஒரு வில்லையும் கையில் எடுத்து
கொண்டு; ஏற்றவல் அரக்கன் தன்மேல் – (தன்னை) எதிர்த்து வந்த
வலிமை உள்ள அரக்கனாகிய (அதிகாயன்) மேல், ஆரியன் –
இலக்குவன்; எரிமுகக் கடவுள் என்பான் ஆற்றல் சால் படையை
விட்டான் – தீக்கடவுள் என்பானது வலிமை மிகுந்த படைக்கலத்தைச்
செலுத்தினான்; அரக்கன் – அதிகாயன்; தாங்க என்னா – (அதைத்)
தடுக்க என்று கூறி; வேற்றுள வெய்யவன் படையை விட்டான் – வேறாகத் (தன்னிடம் உள்ள) தீக்கடவுளின்
படையை விட்டான்.

————-

7928. பொரு படை இரண்டும் தம்மில் பொருதன; பொருதலோடும்,
எரி கணை, உருமின் வெய்ய, இலக்குவன் துரந்த, மார்பை
உருவின, உலப்பு இலாத; உளைகிலன், ஆற்றல் ஓயான்,
சொரி கணை மழையின் மும்மை சொரிந்தனன்,
தெழிக்கும் சொல்லான்.–202-

பொருபடை இரண்டும் – போரிடுகின்ற அந்த (எரியம்புகள்)
இரண்டும் தங்களுக்குள் மோதின; பொருதலோடும் – அவ்வாறு
போரிடுகையில; இலக்குவன் துரந்த – இலக்குவன் எய்த; உருமின்
வெய்ய – இடியினும் கொடுமை உடைய; எரிகணை – வெய்ய
அம்புகள்; உலப்பு இலாத – (தடுத்து) அழிக்க இயலாதவையாய்;
மார்பை உருவின – (அதிகாயனது) மார்பில் பட்டு ஊடுருவின;
உளைகிலன் – (அதற்கு) வருந்தாதவனாகவும்; ஆற்றல் ஓயான் –
(தன்) வலி குறையாதவனுமாகிய (அதிகாயன்); சொரிகணை –
(இலக்குவன்) துரந்த அம்புகளை விட; மும்மை – மூன்று மடங்கு
அம்புகளை; தெழிக்கும் சொல்லான் – அதட்டுகின்ற சொற்களை
உடையவனாய்; மழையின் சொரிந்தனன் – மேகம் போல்
சொரிந்திட்டான்.

——————

7929. பின் நின்றார் முன் நின்றாரைக் காணலாம் பெற்றித்து ஆக,
மின் நின்ற வயிர வாளி திறந்தன, மேனி முற்றும்;
அந் நின்ற நிலையின், ஆற்றல் குறைந்திலன், ஆவி
நீங்கான்,
பொன் நின்ற வடிம்பின் வாளி மழை எனப் பொழியும்
வில்லான்.–203-

மின் நின்ற வயிரவாளி – (இலக்குவன் எய்த) ஒளி பொருந்திய
வலிமையான அம்புகள்; பின் நின்றார் முன் நின்றாரைக் – பின்னே
நிற்பவர்கள் முன்னே நிற்பவர்களைக்; காணலாம் பெற்றித்து ஆக –
காணும் தன்மையுடையது எனும்படி; மேனி முற்றும் திறந்தன –
(அந்த அதிகாயனுடைய) உடம்பு முழுவதையும் துளைத்து விட்டன;
அந்நின்ற நிலையின் – அவ்வாறு நின்ற நிலைமையிலும்; ஆற்றல்
குறைந்திலன் – வலிமை குறையாதவனாய்; ஆவி நீங்கான் – உயிர்
போகாதவனாய்; பொன் நின்ற வடிம்பின் வாளி – பொன் போன்ற
நிறம் பெற்ற கூர்மையை உடைய அம்புகளை; மழை எனப் பொழியும
வில்லான் – மழை போலச் செலுத்துகிற வில்லை உடையவனானான்.

————-

காற்றரசன் கூறியபடி இலக்குவன் நான்முகன் படையைச் செலுத்திக்
கொல்லுதல்

7930. கோல் முகந்து, அள்ளி அள்ளி, கொடுஞ் சிலை
நாணில் கோத்து,
கால்முகம் குழைய வாங்கி, சொரிகின்ற காளை வீரன்-
பால் முகம் தோன்ற நின்று, காற்றினுக்கு அரசன், ‘பண்டை
நான்முகன் படையால் அன்றிச் சாகிலன், நம்ப!’ என்றான்.–204-

கோல் முகந்து – அம்புகளை எடுத்து; அள்ளி அள்ளி – அள்ளி
அள்ளி; கொடுஞ்சிலை நாணில் கோத்து – வளைந்த வில்லின்
நாணில் கோத்து; கால்முகம் குழைய வாங்கி – இரு நுனிக்
கால்களும் சேருமாறு வளைத்து; சொரிகின்ற – (அதிகாயன் மேல்)
செலுத்துகிற; காளை வீரன் பால் – காளை போன்ற வீரனாகிய
இலக்குவன் பக்கத்தில்; முகம் தோன்றி நின்று – (நேரிடையாக) முகம்
தோன்ற வந்து நின்று; காற்றினுக்கு அரசன் நம்ப – வாயுதேவன்,
விரும்பத்தக்க குணங்களை உடையவனே; பண்டை நான்முகன்
படையால் – பழமையான பிரமனது படைக்கலத்தால்; அன்றிச்
சாகிலன் என்றான் – அல்லாமல் இவன் சாக மாட்டான் என்றான்.

——————

7931. ‘நன்று’ என உவந்து, வீரன், நான்முகன் படையை வாங்கி
மின் தனி திரண்டது என்னச் சரத்தொடும் கூட்டி விட்டான்
குன்றினும் உயர்ந்த தோளான் தலையினைக் கொண்டு, அவ்
வாளி
சென்றது, விசும்பினூடு; தேவரும் தெரியக் கண்டார்.-205-

வீரன் – வீரனாகிய இலக்குவன்; நன்று என உவந்து – நல்லது
என்று மகிழ்ந்து சொல்லி; நான்முகன் படையை வாங்கி – நான்முகன்
படைக் கலத்தை எடுத்து; மின்தனி திரண்டது என்ன – மின்னல்
தனியே திரண்டுவிட்டது என்று கூறும்படியாகக்; சரத்தொடும் கூட்டி
விட்டான் – அம்புடன் சேர்த்துச் செலுத்தினான்; அவ்வாளி – அந்த
அம்பானது; குன்றினும் உயர்ந்த தோளான் – குன்றினும் உயர்ந்த
தோள்களை உடைய (அதிகாயனது); தலையினைக் கொண்டு –
தலையை அறுத்துக் கொண்டு; விசும்பினூடு சென்றது – ஆகாய
வழியாகச் சென்றது, தேவரும் தெரியக் கண்டார் – அதனைத்
தேவர்களும் தெளிவாகக் கண்டார்கள்.

—————-

7932. பூ மழை பொழிந்து, வானோர், ‘போயது, எம்
பொருமல்’ என்றார்;
தாம் அழைத்து அலறி, எங்கும் இரிந்தனர், அரக்கர் தள்ளி;
தீமையும் தகைப்பும் நீங்கித் தெளிந்தது, குரக்குச் சேனை;
கோமகன் தோளின்நின்றும் குதித்தனன், கொற்ற வில்லான்.–206-

வானோர் பூமழை பொழிந்து – தேவர்கள் மலர் மழை சிந்தி;
எம்பொருமல் போயது என்றார் – எம்முடைய பெருவருத்தம் நீங்கி
விட்டது என்றார்கள்; அரக்கர் – அரக்கர்கள்; தாம் அழைத்து அலறி
– தாங்கள் ஒருவருக்கொருவர் பெயரிட்டு அழைத்து அலறிக்
கொண்டும்; தள்ளி எங்கும் இரிந்தனர் – தள்ளிக்கொண்டும் எல்லா
விடங்களிலும் தறிகெட்டு ஓடினார்கள்; குரக்குச் சேனை – குரங்குப்
படை; தீமையும் தகைப்பும் நீங்கித் தெளிந்தது – (தனக்கு ஏற்பட்ட)
தீங்கும், தடையும் நீங்கித் தெளிவு பெற்றது; கோமகன் – அரச
மகனாகிய அங்கதனது; தோளின் நின்றும் – தோளில் இருந்து; கொற்ற
வில்லான் – வெற்றி பொருந்திய வில்லாளியாகிய இலக்குவன்;
குதித்தனன் – கீழே குதித்தான்.

—————

வீடணன் இந்திரசித்து இறத்தல் உறுதி எனல்

7933. வெந் திறல் சித்தி கண்ட வீடணன், வியந்த நெஞ்சன்,
அந்தரச் சித்தர் ஆர்க்கும் அமலையும் கேட்டான்; ‘ஐயன்
மந்திரசித்தி அன்ன சிலைத் தொழில் வலி இது ஆயின்,
இந்திரசித்தனார்க்கும் இறுதியே இயைவது’ என்றான்.-207-

வெந்திறல் – இலக்குவனது பெரு வலிமையினது; சித்தி கண்ட –
பயனைக் கண்ட; வீடணன் – வீடணன்; வியந்த நெஞ்சன் –
வியப்புடைய நெஞ்சத்தை உடையவனாய்; அந்தர சித்தர் -வானத்தில் உலவும் சித்தர்கள்; ஆர்க்கும் அமலையும் கேட்டான் –
ஒலிக்கிற பேரொலியைக் கேட்டான்; ஐயன் – (பின்பு அவன் மனதில்
இவ்வாறு எண்ணினான்) தலைவனாகிய இலக்குவனுடைய; மந்திர
சித்தி அன்ன – மந்திர சித்தியினைப் போன்ற; சிலைத்தொழில் வலி –
வில்லாற்றல் தொழிலின் வலிமை, இது ஆயின் – இத்தன்மையது
ஆனால்; இந்திர சித்தனார்க்கும் – இந்திரசித்தனுக்கும்; இயைவது
இறுதியே – வந்து பொருந்துவது மரணமே; என்றான் – என்று
கூறினான்.

—————

நராந்தகன் அங்கதனுடன் போரிட்டு அழிதல்

7934. ‘”ஏந்து எழில் ஆகத்து எம்முன் இறந்தனன்” என்று, நீ நின்
சாந்து அகல் மார்பு, திண் தோள், நோக்கி, நின் தனுவை
நோக்கி,
போம் தகைக்கு உரியது அன்றால்; போகலை; போகல்!’
என்னா,
நாந்தகம் மின்ன, தேரை நராந்தகன் நடத்தி வந்தான்.–208-

எழில் ஏந்து ஆகத்து – அழகு பொருந்திய மார்பினை உடைய;
எம்முன் இறந்தனன் – எமக்கு முன்னவன் ஆகிய (அதிகாயன்)
இறந்து விட்டான்; என்று – என்று எண்ணி; நீ நின் – நீ உன்னுடைய;
சாந்து அகல் மார்பு – சந்தனம் பூசப்பட்ட அகன்ற மார்பினையும்;
திண் தோள் நோக்கி – அதற்குப் பிறகு உனது வில்லினையும்
பார்த்துக் கொண்டு; போம் தகைக்கு உரியது அன்றால் – போகின்ற
தகுதிக்கு உரியது அல்ல (இச்செயல்); போகலை போகல் என்னா –
போகாதே போகாதே என்று (இலக்குவனைப் பார்த்துக்) கூறிக்கொண்டு;
நராந்தகன் – நராந்தகன் என்பவன்; நாந்தகம் மின்ன – (தனது) வாள்
மின்ன; தேரை நடத்தி – தேரைச் செலுத்திக் கொண்டு; வந்தான் –
வந்தான்.

—————

7935. தேரிடை நின்று, கண்கள் தீ உக, சீற்றம் பொங்க,
பாரிடைக் கிழியப் பாய்ந்து, பகலிடைப் பரிதி என்பான்,
ஊரிடை நின்றான் என்ன, கேடகம் ஒரு கை தோன்ற,
நீருடை முகிலின் மின்போல், வாளொடு நிமிர வந்தான்.–209-

கண்கள் தீ உக – (நராந்தகன் தன்) கண்களில் இருந்து தீ
வெளிப்பட; சீற்றம் பொங்க – சினம் மிகப் பொங்கி வர; தேரிடை
நின்று – தேரில் இருந்து; பாரிடை கிழியப் பாய்ந்து – நிலவுலகு
கிழியுமாறு பாய்ந்து; பகலிடைப் பரிதி என்பான் – பகலில் கதிரவன்
என்பவன்; ஊரிடை நின்றான் என்ன – ஊர்கோளிடை நின்றுள்ளான்
என்று சொல்லும்படி; கேடகம் ஒருகை தோன்ற – கேடயம் ஒரு
கையில் விளங்க; நீருடை முகிலின் மின் போல் – நீருடைய
கருமேகத்தின் இடையில் மின்னலைப் போல; வாளொடு நிமிர
வந்தான் – வாளோடு நிமிர்ந்து வந்தான்.

——————

7936. வீசின மரமும் கல்லும் விலங்கலும், வீ்ற்று வீ்ற்றா,
ஆசைகள்தோறும் சிந்த, வாளினால் அறுத்து மாற்றி,
தூசியும், இரண்டு கையும், நெற்றியும், சுருண்டு, நீர்மேல்
பாசியின் ஒதுங்க, வந்தான்; அங்கதன் அதனைப் பார்த்தான்.–210-

வீசின – (நராந்தகன் வருதல் கண்டு குரங்குப் படைகள்) வீசிய;
மரமும், கல்லும் விலங்கலும் – மரங்களும், கற்களும், மலைகளும்;
ஆசைகள் தோறும் – திசைகள் தோறும்; வீற்று வீற்றா சிந்த –
துண்டு துண்டாகச் சிதறும்படி; வாளினால் அறுத்து மாற்றி –
(நராந்தகன் அவற்றை); வாளால் அறுத்து விலக்கி, தூசியும் –
முன்னணிப் படையும்; இரண்டு கையும் – இரு பக்கத்தில் உள்ள
படைகளும்; நெற்றியும் – நடுவில் நின்ற பெரும் படையும்; நீர்மேல்
பாசியின் – நீர் மேல் உள்ள பாசம் போல; சுருண்டு ஒதுங்க –
திரண்டு ஒதுங்கி வழிவிட; வந்தான் அதனை – அவன் அவ்வாறு
வருவதை; அங்கதன் பார்த்தான் – அங்கதன் கண்டான்.

—————-

7937. மரம் ஒன்று விரைவின் வாங்கி, வாய் மடித்து
உருத்து, வள்ளல்
சரம் உன்றின் கடிது சென்று, தாக்கினான்; தாக்கினான்தன்
கரம் ஒன்றில் திரிவது ஆரும் காண்கிலாது அதனைத்
தன் கை
அரம் ஒன்று வயிர வாளால் ஆயிரம் துண்டம் கண்டான்.–211-

ஒன்று மரம் விரைவின் வாங்கி – ஒரு மரத்தை விரைவாக
எடுத்து; வாய் மடித்து உறுத்து – வாயை மடித்து சினந்து;
வள்ளல் சரம் ஒன்றின் – வள்ளல் தன்மை உடைய இராமனுடைய
அம்பு ஒன்று போல; கடிது சென்று தாக்கினான் – (அங்கதன்)
விரைவாகச் சென்று (நராந்தகனைத்) தாக்கினான்; தாக்கினான் தன்-
தன்னைத் தாக்கிய அவனுடைய; கரம் ஒன்றில் – கையொன்றில்;
திரிவது – மரம் ஒன்று சுழல்வதை; ஆரும் காண்கிலாது – யாரும்
காணமுடியாதபடி; அதனை – அம்மரத்தைத்; தன்கை – தன்
கையில் உள்ள; அரம் ஒன்று – அரத்தினால் அராவிச் செய்த;
வயிரவாளால் – உறுதியான (தன்) வாளால்; ஆயிரம் துண்டம்
கண்டான் – ஆயிரம் துண்டுகளாக ஆக்கினான்.

——————

7938. அவ் இடை வெறுங் கை நின்ற அங்கதன்.
‘ஆண்மை அன்றால்
இவ் இடை பெயர்தல்’ என்னா, இமையிடை ஒதுங்கா
முன்னர்,
வெவ் விடம் என்னப் பொங்கி, அவனிடை எறிந்த வீச்சுத்
தவ்விட, உருமன் புக்கு, வாளொடும் தழுவிக் கொண்டான்.-212-

அவ்விடை – அவ்விடத்து; வெறுங்கை நின்ற அங்கதன்
– வெறுங் கையோடு நின்ற அங்கதன்; இவ் இடை – இப்பொழுது;
பெயர்தல் – திரும்பிப் போவது; ஆண்மை அன்றால் என்னா –
ஆண்மை அன்று என்று எண்ணி; இமையிடை ஒதுங்கா முன்னர் –
இமைப்பொழுது கழிவதற்கு முன்னமேயே; வெவ்விடம் என்னப்
பொங்கி – கொடிய நஞ்சு என்னுமாறு சீறி; அவனிடை எறிந்த வீச்சு –
(அந்த நராந்தகன்) வீசியவாள் வீச்சு; தவ்விட – தவறும் படி; உருமின்
புக்கு – இடி போலப் புகுந்து; வாளொடும் தழுவிக் கொண்டான்
– வாளுடன் (அவனைத்) தழுவிக் கொண்டான்.

————-

7939. அத் தொழில் கண்ட வானோர் ஆவலம் கொட்டி
ஆர்த்தார்;
‘இத் தொழில் இவனுக்கு அல்லால், ஈசற்கும் இயலாது’
என்பார்;
குத்து ஒழித்து, அவன் கைவாள் தன்கூர் உகிர்த் தடக்
கை கொண்டான்,
ஒத்து இரு கூறாய் வீழ வீசி, வான் உலைய ஆர்த்தான்.–213-

அத்தொழில் கண்டவானோர் – (அங்கதனுடைய) அந்த (வீரத்)
தொழிலைக் கண்ட தேவர்கள்; ஆவலம் கொட்டி ஆர்த்தார் – கை
கொட்டிப் பேரொலி செய்தார்கள்; இத்தொழில் – இந்த வீரத்
தொழிலை; இவனுக்கு அல்லால் – இவனால் செய்ய இயலுமே
அல்லாமல்; ஈசற்கும் – சிவபிரானுக்கும்; இயலாது என்பார் – செய்ய
இயலாது என்பர்; குத்து ஒழித்து – அங்கதன் (நராந்தகனைக்)
குத்துதல் தொழிலை விட்டு; அவன் கைவாள் – அந்த
நராந்தகனுடைய கையில் உள்ள வாளைத்; தன் கூர் உகிர்த் தடக்கை
கொண்டான் – தனது கூரிய நகங்களை உடைய நீண்ட கையால்
(பற்றிப் பிடுங்கிக்) கொண்டானாய்; இரு கூறாய் ஒத்து வீழ வீசி –
(அது) இரு துண்டங்களாய் ஒத்து அமைந்து விழுமாறு (ஒடித்து) வீசி;
வான் உலைய ஆர்த்தான் – தேவர்கள் கூட நடுங்கும் படியாகப்
பேரொலி செய்தான்.

————–

போர் மத்தன் நீலனுடன் போரிட்டு இறத்தல்

7940. கூர்மத்தின் வெரிநின் வைத்து வானவர் அமுதம் கொண்ட
நீர் மத்தின் நிமிர்ந்த தோளான், நிறை மத்த மதுவைத்
தேக்கி
ஊர்மத்தம் உண்டாலன்ன மயக்கத்தான், உருமைத் தின்பான்,
போர்மத்தன் என்பான், வந்தான்-புகர் மத்தப் பூட்கை
மேலான்.–214-

கூர்மத்தின் – யாமையின்; வெரிநின் வைத்து – முதுகில் வைத்து;
வானவர் அமுதம் கொண்ட – தேவர்கள் அமுதத்தைக் (கடைந்து)
கொண்ட; நீர்மத்தின் – கடலில் நின்ற மத்தான மேரு
மலையைக்காட்டிலும்; நிமிர்ந்த தோளான் – உயர்ந்த தோளினை
உடையவனும்; உருமைத் தின்பான் – இடியைக் கூடத் தின்ன
வல்லவனும் ஆன; போர் மத்தன் என்பான் – போர் மத்தன் என்ற
பெயருடையவன்; நிறை மத்த மதுவைத் தேக்கி – நிறைந்த
மயக்கத்தை உண்டாக்கவல்ல மதுவை மிக உண்டு; ஊர் மத்தம்
உண்டாலன்ன மயக்கத்தான் – ஊமத்தம் காயை உண்டதைப் போன்ற
மயக்கத்தவனாய்; புகர் மத்தப் பூட்கை மேலான் – புள்ளிகளை
உடைய மத்தகத்தை உடைய யானையின் மேல் ஏறி; வந்தான்.

—————–

7941. காற்று அன்றேல், கடுமை என் ஆம்? கடல் அன்றேல்,
முழக்கம் என் ஆம்?
கூற்று அன்றேல், கொலை மற்று என் ஆம்? உரும்
அன்றேல், கொடுமை என் ஆம்?
சீற்றம்தான் அன்றேல், சீற்றம் வேறு ஒன்று தெரிப்பது
எங்கே?
மாற்று அன்றே மலை; மற்று என்னே? – மத்தன்தன்
மத்த யானை.–215-

மத்தன் தன் – போர் மத்தனுடைய; மத்த யானை – மத மயக்கம்
கொண்ட யானை; காற்று அன்றேல் கடுமை என் ஆம் – காற்று
அல்லவாயின் விரைவு எவ்வாறு ஆகும்; கடல் அன்றேல் முழக்கம்
என் ஆம் – கடல் அல்லவாயின் முழக்கம் எவ்வாறு ஆகும்; கூற்று
அன்றேல் கொலை மற்று என் ஆம் – யமன் அல்லவாயின் கொலைத்
தொழில் எவ்வாறு ஆகும்; உரும் அன்றேல் கொடுமை என் ஆம் –
இடி அல்லவாயின் கொடுஞ் செயல் எப்படி ஆகும்; சீற்றம் தான்
அன்றேல் – சீற்றம் (கொண்ட வடிவம்) அல்லவாயின்; சீற்றம் வேறு
ஒற்று தெரிப்பது எங்கே – சீற்றத்தை வேறு ஒன்றாகத் தெரிவிப்பது
எப்படி; மலை மாற்று அன்றே – அதற்கு மலை ஒப்புடையது அல்ல;
மற்று என்னே – பின் (அதை) எப்படி விளக்குவது என்றவாறு.

—————

7942. வேகமாக் கவிகள் வீசும் வெற்பினம் விழுவ, மேன்மேல்,
பாகர் கால் சிலையின் தூண்டும் உண்டை ஆம் எனவும்
பற்றா;
மாக மா மரங்கள் எல்லாம், கடாத்திடை வண்டு சோப்பி
ஆகினும் ஆம்; அது அன்றேல், கரும்பு என்றே
அறையலாமால்.–216-

கவிகள் – குரங்குகள்; வேகமா வீசும் வெற்பினம் மேன்மேல்
விழுவ – வேகமாக வீசுகின்ற மலைக்கூட்டங்கள் மென்மேல்
விழுபவை; பாகர் கால் சிலையின் தூண்டும் உண்மை ஆம் எனவும்
பற்றா – பாகர்கள் முனை கொண்ட வில்லிலே வைத்துச் செலத்துகிற
களிமண் உருண்டைகள் ஆகும் என்று கூறுவதற்கும் கூடப்
பொருந்தாது; மாகமா மரங்கள் எல்லாம் – மிகப் பெரிய மரங்கள்
எல்லாம்; கடாத்திடை வண்டு சோப்பி ஆகினும் ஆம் – (கன்ன)
மதத்தில் படியும் வண்டுகளை ஓட்டுதற்குரிய ஈயோட்டி ஆகினும்
ஆகும்; அது அன்றேல் – பொருத்தமானது அன்று எனின்; கரும்பு
என்றே அறையலாமால் – கரும்பு என்றே சொல்லலாம்.

———–

7943. காலிடைப்பட்டும், மானக் கையிடைப்பட்டும், கால
வாலிடைப்பட்டும், வெய்ய மருப்பிடைப்பட்டும், மாண்டு,
நாலிடைப்பட்ட சேனை, நாயகன் தம்பி எய்த
கோலிடைப்பட்டது எல்லாம் பட்டது – குரக்குச் சேனை.–217-

குரக்குச் சேனை – குரங்குப் படை; காலிடைப்பட்டும் – (அந்த)
யானையினது காலின் கீழ் அகப்பட்டும்; மானக் கையிடைப் பட்டும் –
(அதன்) பெரிய துதிக்கையில் அகப்பட்டும்; கால வாலிடைப்பட்டும் –
யமனைப் போன்ற வாலில் அடிபட்டு அகப்பட்டும்; வெய்ய
மருப்பிடைப் பட்டும் – கொடிய தந்தங்களில் அகப்பட்டும்; நாலிடைப்
பட்ட சேனை – நான்காக வகுக்கப்பட்ட (இராவணது) படை,; நாயகன்
தம்பி – தலைவனின் தம்பியாகிய இலக்குவன்; எய்த கோலிடைப்
பட்டது எல்லாம் – எய்த அம்புகளினால் பட்ட பாட்டை எல்லாம்;
பட்டது மாண்டு – பட்டு இறந்தது.

—————-

7944. தன் படை உற்ற தன்மை நோக்கினான், தரிக்கிலாமை,
அன்பு அடை உள்ளத்து அண்ணல் அனலன்தன்
புதல்வன், ஆழி
வன் படை அனையது ஆங்கு ஓர் மராமரம் சுழற்றி
வந்தான் –
பின் படை செல்ல, நள்ளார் பெரும் படை இரிந்து பேர.–218-

அனலின் தன் புதல்வன் – தீக் கடவுளின் மகனாகிய நீலன்;
அன்படை உள்ளத்து அண்ணல் – அன்பு நிறைந்த மனத்தை உடைய
தலைவன்; (ஆகையால்) தன் படை உற்ற தன்மை நோக்கினான் –
தனது படை அடைந்த நிலையை நோக்கியவனாய்; தரிக்கிலாமை –
மனம் தரிக்காது உருகி; ஆங்கு ஓர் மராமரம் – அப்போது ஒரு
மராமரத்தைக் கையில் எடுத்துக்கொண்டு; படை பின் செல்ல –
தன்படை பின்னால் தொடர்ந்து வர; நள்ளார் – பகைவர்களுடைய;
பெரும்படை இரிந்து பேர – பெரிய படை நிலை கெட்டு ஓட;
ஆழிவன் படை அனையது – மாலின் வலிய சக்கரப் படையைப்
போன்று; சுழற்றி வந்தான் – சுழற்றிக் கொண்டு வந்தான்.

———–

7945. சேறலும். களிற்றின் மேலான், திண் திறல் அரக்கன்,
செவ்வே,
ஆறு-இரண்டு அம்பினால் அந் நெடு மரம் அறுத்து
வீழ்த்தான்;
வேறு ஒரு குன்றம் நீலன் வீசினான்; அதனை விண்ணில்,
நூறு வெம் பகழி தன்னால், நுறுக்கினான், களிறு நூக்கி.–219-

சேறலும் – முன் சொன்னபடி நீலன் வருதலும்; களிற்றின் மேலான்
– யானையின் மேல் உள்ளவனாகிய; திண்திறல் அரக்கன் – மிக்க
வலிமை உடைய அரக்கனாகிய போர் மத்தன்; செவ்வே – நேராக;
ஆறு இரண்டு அம்பினால் – பன்னிரண்டு அம்புகளால்; அந்நெடு
மரம் – (அவன் ஏந்தி வந்த) அந்த நீண்ட மராமரத்தை; அறுத்து
வீழ்த்தான் – அறுத்து வீழ்த்தினான்; நீலன் – நீலன்; வேறு ஒரு
குன்றம் வீசினான் – மற்றொரு குன்றை (எடுத்து) வீசினான்; அதனை
– அக்குன்றத்தை; களிறு நூக்கி – தன் யானையைமுன்னால் செலுத்தி; விண்ணில் – ஆகாயத்தில்; நூறு வெம்பகழி
தன்னால் – நூறு கொடிய அம்புகளால்; நுறுக்கினான் –
பொடியாக்கினான்.

———

7946. பின், நெடுங் குன்றம் தேடிப் பெயர்குவான் பெயராவண்ணம்
பொன் நெடுங் குன்றம் சூழ்ந்த பொறி வரி அரவம் போல,
அந் நெடுங் கோப யானை, அமரரும் வெயர்ப்ப, அங்கி –
தன் நெடு மகனைப் பற்றிப் பிடித்தது, தடக் கை நீட்டி.–220-

பின் – அதற்குப் பின்பு; நெடுங்குன்றம் தேடிப் பெயர்குவான் –
(மேலும்) பெரிய மலையைத் தேடிச் செல்கின்றவனாகிய (நீலன்);
பெயரா வண்ணம் – செல்ல முடியாதபடி; அந்த நெடுங் கோபயானை
– அந்தப் பெரிய சினம் மிக்க யானை; தடக்கை நீட்டி – (தன்) நீண்ட
துதிக்கையை நீட்டி; பொன் நெடுங்குன்றம் சூழ்ந்த – பொன் போன்ற
நீண்ட மந்தரமலையைச் சுற்றிய; பொறி வரி அரவம் போல – படப்
பொறியும் உடல் கோடும் கொண்ட (வாசுகி என்னும்) பாம்பு போல;
அமரரும் வெயர்ப்ப – (அதனைக் கண்ட) தேவர்களும் உடல்
வியர்க்குமாறு; அங்கிதன் நெடு மகனை – தீக் கடவுள் மகனாகிய
நீலனைப்; பற்றிப் பிடித்தது – பற்றிப் பிடித்தது.

————

7947. ‘ஒடுங்கினன், உரமும், ஆற்றல் ஊற்றமும், உயிரும்’ என்ன,
கொடும் படை வயிரக் கோட்டால் குத்துவான் குறிக்கும்
காலை,
நெடுங் கையும் தலையும், பிய்ய, நொய்தினின்
நிமிர்ந்து போனான்;
நடுங்கினர், அரக்கர்; விண்ணோர், ‘நன்று, நன்று!’ என்ன
நக்கார்.–221-

உரமும் – (பற்றிப் பிடித்த போது நீலன்) வலியையும்; ஆற்றல்
ஊற்றமும் – வலிமையால் வந்த மன ஊக்கமும்; உயிரும் – உயிரும்;
ஒடுங்கினன் என்ன – ஒடுங்கி விட்டான் என்று (பார்த்தவர்
எண்ணும்படி); கொடும்படை – வளைந்த பூணணிந்த; வயிரக்
கோட்டால் – தன் வலிமை உள்ள கொம்புகளால்; குத்துவான் –
குத்துவதற்கு, குறக்கும் காலை (அவ்வரக்கனது யானை) எண்ணும்
அளவில்; நெடுங்கையும் – (அவ்வியானையினுடைய) நீண்ட
துதிக்கையையும்; தலையும் பிய்ய – தலையையும் பிய்த்துக் கொண்டு;
நொய்தினின் – விரைவாக; நிமிர்ந்து போனான் – மேல் ஓங்கிச்
சென்றான்; அரக்கர் நடுங்கினர் – (அச்செயல் கண்டு) அரக்கர்கள்
நடுங்கினார்கள்; விண்ணவர் நன்று நன்று என்ன – தேவர்கள் நல்லது
நல்லது என்று கூறி; நக்கார் – சிரித்தனர்.

————

7948. ‘தறைத்தலை உற்றான் நீலன்’ என்பது ஓர் காலம் தன்னில்,
நிறைத் தலை வழங்கும் சோரி நீத்தத்து நெடுங் குன்று
என்னக்
குறைத் தலை வேழம் வீழ, விசும்பின்மேல் கொண்டு
நின்றான்,
பிறைத் தலை வயிர வாளி மழை எனப் பெய்யும் கையான்.–222-

நீலன் – நீலன்; தறைத்தலை உற்றான் – தரையினிடத்துப்
பொருந்தினான்; என்பது ஓர் காலம் தன்னில் – என்னும் ஒரு கால
அளவுக்குள்; நிறைத்தலை – கனமான தலையிலிருந்து (யானைத்
தலை); வழங்கும் சோரி நீத்தத்து – வடிகிற குருதி வெள்ளத்தி்ல்;
நெடுங்குன்று என்ன – பெரிய குன்று (விழுந்தது) என்னுமாறு; தலை
குறை வேழம் வீழ – தலையில்லாத (அந்த) யானை விழ; விசும்பின்
மேல் கொண்டு நின்றான் – (அதன்மேல் ஏறி இருந்த போர் மத்தன்)
வானத்தின் மேல் நின்றவனாகி; பிறைத்தலை – (நிலவுப்) பிறையின்
உருவத்தை உடைய; வயிர வாளி – வலிமையான அம்புகளை; மழை
எனப் பெய்யும் கையான் – மழை போலச் செலுத்தும் கையை
உடையவன் ஆனான்.

———–

7949. வாங்கிய சிரத்தின் மற்றை வயிர வான் கோட்டை வவ்வி,
வீங்கிய விசையின் நீலன் அரக்கன்மேல் செல்ல விட்டான்;
ஆங்கு அவன் அவற்றை ஆண்டு ஓர் அம்பினால் அறுத்து,
ஓர் அம்பால்,
ஓங்கல்போல் புயத்தினான்தன் உரத்திடை ஒளிக்க, எய்தான்.–223-

நீலன் – நீலன்; வாங்கிய சிரத்தின் – (தாள்) வீழ்த்திய (யானைத்)
தலையில் உள்ள; மற்றை வயிரவான் கோட்டை – அந்த வயிரம் ஏறிய
உறுதியான கொம்பை; வவ்வி – பிடுங்கி (பறித்து); வீங்கிய விசையின்
– மிக்க வேகத்தோடு; அரக்கன் மேல் செல்ல விட்டான் –
அரக்கனாகிய போர் மத்தன் மீது செல்லுமாறு செலுத்தினான்; அவன்
– அந்தப் போர் மத்தன்; ஆங்கு – அப்பொழுது; அவற்றை ஆண்டு
– அக்கொம்புகளை அவ்விடத்திலேயே; ஓர் அம்பினால் அறுத்து –
ஓர் அம்பினால் துண்டாக்கி; ஓர் அம்பால் – ஓர் அம்பை; ஓங்கல்
போல் புயத்தினான் தன் – மலை போன்ற தோளை உடையவனாகிய
(அங்கதன்) தன்; உரத்திடை ஒளிக்க – மார்பில் பதிந்து மறையும்படி;
எய்தான் – எய்தான்.

—————

7950. எய்த அது காலமாக, விளிந்திலது யானை என்ன,
கையுடை மலை ஒன்று ஏறி, காற்று எனக் கடாவி வந்தான்;
வெய்யவன், அவனைத்தானும் மேற்கொளா, வில்லினோடு
மொய் பெருங் களத்தின் இட்டான், மும் மதக் களிற்றின்
முன்னர்,.–224-

எய்தது காலமாக – எய்த அந்தக் காலத்தில்; யானை விளிந்திலது
என்ன – (போர் மத்தனுடைய) யானை இறக்க வில்லை என்று;
(பார்ப்பவர் எண்ணும்படி) கையுடை மலை ஒன்று ஏறி –
(அவ்வரக்கன்) கையுடைய மலையைப் போன்ற வேறு ஒரு யானை
மீது ஏறி; காற்று எனக் கடாவி வந்தான் – (அதனைக்) காற்றினைப்
போல் (விரைவாகச்) செலுத்திக் கொண்டு வந்தான்; வெய்யவன் –
சினம் உடைய நீலன்; அவனை வில்லினோடு தானும் மேற்கொளா –
அந்தப் போர் மத்தனை வில்லோடுதான் (யானையில் இருந்து) மேலே
தூக்கி; மும்மதக் களிற்றின் முன்னர் – மூன்று மதங்களைப்
பொழிகின்ற (அந்த) யானையின் முன்பு; மொய் பெருங் களத்தின் –
(வீரர்கள்) நெருங்கிப் போரிடுகிற பெரிய போர்க்களத்தில்; இட்டான் –
எறிந்தான்.

————–

7951. இட்டவன் அவனிநின்றும் எழுவதன் முன்னம், யானை
கட்டு அமை வயிரக் கோட்டால் களம் பட வீழ்த்தி, காலால்
எட்டி, வன் தடக் கைதன்னால் எடுத்து, எங்கும் விரைவின
வீச,
பட்டிலன், தானே தன் போர்க் கரியினைப் படுத்து
வீழ்த்தான்.–225-

இட்டவன் – இடப்பட்டவனாகிய (போர் மத்தன்); அவனி நின்றும்
– பூமியில் இருந்து; எழுவதன் முன்னம் – எழுவதற்கு முன்பே;
யானை – (மத வெறி மிக்க அவனுடைய) யானை; கட்டு அமை வயிரக்
கோட்டால் – பூண் அமைந்த (தன்) வலிய கொம்புகளால்; களம் பட
வீழ்த்தி – அவனைக் களத்தில் விழுமாறு வீழ்த்தி; காலால் எட்டி –
காலினால் (எட்டி) மிதித்து; வன் தடக்கை தன்னால் எடுத்து – வலிய
பெரிய கையினால் எடுத்து; எங்கும் விரைவின் வீச – பல இடத்திலும்
விரைவாக வீசியும்; பட்டிலன் – இறந்து ஒழியாதவனாய்; தான தன்
போர்க் கரியினை – தானே தன் போர் யானையினைப்; படுத்து
வீழ்த்தான் – கொன்று வீழ்த்தினான்.

————

7952. தன் கரி தானே கொன்று, தடக் கையால் படுத்து வீழ்த்தும்
மின் கரிது என்ன மின்னும் எயிற்றினான் வெகுளி நோக்கி,
பொன் கரிது என்னும் கண்கள் பொறி உக, நீலன் புக்கான்,
வன் கரம் முறுக்கி, மார்பில் குத்தினான்; மத்தன் மாண்டான்.–226-

தடக்கையால் – (தன்) பெரிய கைகளினால்; தன் கரி தானே
கொன்று – தன் யானையைத்தானே கொன்று; படுத்து வீழ்த்தும் –
உயிர் ஒழிய வீழ்த்திய; மின் கரிது என்ன மின்னும் எயிற்றினான் –
மின்னலும் கருமையானது என்று கூறுமாறு ஒளிவீசும் பற்களை
உடைய போர் மத்தனுடைய; வெகுளி நோக்கி – சினத்தைப் பார்த்து;
நீலன் – நீலன்; பொன்கரிது என்னும் கண்கள் – பொன்னும் கூடக்
கரியது எனும்படி உள்ள (தன்) கண்களில்; பொறி உக – நெருப்புப்
பொறி வெளிப்பட; புக்கான் – புகுந்தவனாய்; வன்கரம் முறுக்கி –
(போர் மத்தனுடைய) வலிய கைகளை முறுக்கி; மார்பில் குத்தினன் –
மார்பில் குத்தினான்; மத்தன் மாண்டான் – மத்தன் இறந்தான்.

————–

வயமத்தன்-இடபன் போர்

7953. உன்மத்தன் வயிர மார்பின் உரும் ஒத்த கரம் சென்று உற்ற
வன்மத்தைக் கண்டும், மாண்ட மத மத்தமலையைப்
பார்த்தும்,
சன்மத்தின் தன்மையானும், தருமத்தைத் தள்ளி வாழ்ந்த
கன்மத்தின் கடைக்கூட்டானும், வயமத்தின் கடிதின் வந்தான்.–227-

மாண்ட – இறந்த,; மத மத்தமலையைப் பார்த்தும் – மதங்
கொண்ட மத்தகத்தை உடைய யானையைப் பார்த்தும்; உன் மத்தன் –
உன் மத்தனது; வயிர மார்பில் – வலிமையான மார்பில்; உரும்
ஒத்தகரம் – (நீலனது) இடியை ஒத்த கை; சென்று உற்ற – சென்று
பொருந்திய; வன்மத்தைக் கண்டும் – வலிமையின் (விளைவினைக்)
கண்டும்; சன்மத்தின் தன்மையானும் – பிறவியின் (குணத்)
தன்மையாலும்; தருமத்தைத் தள்ளி வாழ்ந்த கன்மத்தின் கடைக்
கூட்டானும் – தருமத்தை விலக்கி வாழ்ந்த தீவினையால் ஏற்பட்ட
முடிவாலும்; வயமத்தன் கடிது வந்தான் – வயமத்தன் விரைந்து
(போர்க்களம்) வந்தான்.

————

7954. பொய்யினும் பெரிய மெய்யான்; பொருப்பினைப் பழித்த
தோளான்;
‘வெய்யன்’ என்று உரைக்கச் சாலத் திண்ணியான்;
வில்லின் செல்வன்
பெய் கழல் அரக்கன் சேனை ஆர்த்து எழ, பிறங்கு பல்
பேய்
ஐ-இருநூறு பூண்ட ஆழி அம் தேரின் மேலான்;–228-

பெய்கழல் அரக்கன் – அணிந்த வீரக் கழலை உடைய வயமத்தன்;
பொய்யினும் பெரிய மெய்யான் – மாயம் (அல்) வஞ்சனையைக்
காட்டிலும் பெரிய உடம்பினை உடையவன்; பொருப்பினைப் பழித்த
தோளான் – மலையை எள்ளிய தோள்களை உடையவன்; வெய்யன்
என்று உரைக்கச் சாலத் திண்ணியான் – கொடியவன் என்று
உரைப்பதற்கு ஏற்ப மிக வலிமை உடையவன்; வில்லின் செல்வன் –
வில்லாற்றலில் செல்வன் எனத் தக்கவன்; சேனை ஆர்த்து எழ –
இராவணன் படைவீரர் மகிழ்ச்சியால் பேரொலி செய்து எழ; பிறங்கு
பல்பேய் – விளங்குகிற பற்களை உடைய பேய்கள்; ஐ- இருநூறு
பூண்ட – ஆயிரம் பூட்டிய; ஆழி அம் தேரின் மேலான் – சக்கரத்தை உடைய அழகிய தேரின் மேல்
எறியவன்.

———-

7955. ஆர்க்கின்றான், உலகை எல்லாம் அதிர்க்கின்றான்,
உருமும் அஞ்சப்
பார்க்கின்றான், பொன்றினாரைப் பழிக்கின்றான், பகழி மாரி
தூர்க்கின்றான், குரங்குச் சேனை துரக்கின்றான், துணிபை
நோக்கி,
‘ஏற்கின்றார் இல்லை’ என்னா, இடபன் வந்து, அவனோடு
ஏற்றான்.–229-

ஆர்க்கின்றான் – (அந்த வயமத்தன்) பேரொலி செய்பவனாயும்;
உலகை எல்லாம் அதிர்க்கின்றான் – உலக உயிர்களை எல்லாம்
அதிரச் செய்பவனாயும்; உருமும் அஞ்சப் பார்க்கின்றான் – இடியும்
அஞ்சுமாறு பார்ப்பவனாயும்; பொன்றினாரைப் பழிக்கின்றான் –
(தனக்கு முன்) இறந்தவர்களின் (வலிமையைப்) பழிக்கின்றவனாயும்;
பகழி மாரி தூர்க்கின்றான் – அம்பு மழையைப் (பொழிந்து
போர்க்களத்தைத்) தூர்க்கின்றவனாயும்; குரங்குச் சேனை
துரக்கின்றான் – குரங்குப்படையை ஓடச்செய்பவனாயும் (உள்ள);
துணிபை நோக்கி – அவனது துணிவைப் பார்த்து; ஏற்கின்றார்
இல்லை என்னா – (இவனைப்) போர் எதிர்ப்பவர் இல்லையே என்று
எண்ணி; இடபன் வந்து – (வானரத் தலைவனாகிய) இடபன் என்பவன்
வந்து; அவனோடு ஏற்றான் – அந்த வயமத்தனோடு போர் எதிர்த்தான்.

———–

7956. சென்றவன் தன்னை நோக்கி, சிரித்து, ‘நீ சிறியை; உன்னை
வென்று அவம்; உம்மை எல்லாம் விளிப்பெனோ?
விரிஞ்சன் தானே
என்றவன் எதிர்த்த போதும், இராவணன் மகனை இன்று
கொன்றவன் தன்னைக் கொன்றே குரங்கின்மேல்
கொதிப்பேன்’ என்றான்.–230-

சென்றவன் தன்னை நோக்கி – தன்னை நோக்கிச் சென்றவனாகிய
(வந்தவனாகிய) இடபனைப் பார்த்து; சிரித்து – வயமத்தன் எள்ளிச்
சிரித்து; நீ சிறியை – நீ மிகச் சிறியவன்; உன்னை வென்று அவம் –
உன்னை வெல்லுதல் வீண்; உம்மை எல்லாம் விளிப்பெனோ –
உங்களைப் போன்ற (சிறியவர்களை) எல்லாம் போருக்கு
அழைப்பேனோ (அழையேன் என்றபடி); விரிஞ்சன் தானே என்றவன்
– பிரமதேவன்தான் என்று சொல்லத் தக்கவன்; எதிர்ந்த போதும் –
(என்னை) எதிர்த்துவந்த போதும்; இன்று இராவணன் மகனை –
இப்போது இராவணனது மகனாகிய அதிகாயனைக்; கொன்றவன்
தன்னைக் கொன்றே – கொன்றவனாகிய இலக்குவன் தன்னைக்
கொன்றபிறகே; குரங்கின் மேல் கொதிப்பென் – குரங்குகளின் மீது
சினம் பொங்கப் போரிடுவேன்; என்றான் -என்று கூறினான்.

—————

7957. ‘வாய்கொண்டு சொற்றற்கு ஏற்ற வலி கொண்டு, பலி உண்
வாழ்க்கைப்
பேய் கொண்டு, வெல்ல வந்த பித்தனே! மிடுக்கைப் பேணி
நோய் கொண்டு மருந்து செய்யா ஒருவ! நின் நோன்மை
எல்லாம்
ஓய்கின்றாய் காண்டி!’ என்னா, உரைத்தனன், இடபன்
ஒல்கான்.–231-

வாய் கொண்டு – வாயைக் கொண்டு; சொற்றற்கு ஏற்ற –
சொல்லுவதற்கு ஏற்புடைய; வலி கொண்டு – வலிமையைக் கொண்டு;
பலி உண்வாழ்க்கை – பிறர் தரும் உணவை உண்டு வாழும்
வாழ்க்கையை உடைய; பேய் கொண்டு வெல்ல வந்த பித்தனே –
பேய்களைக் கொண்டு வெற்றிபெற வந்த பித்தனே!; மிடுக்கைப் பேணி
– (தன்) வலிமையைப் புகழ்ந்து; நோய் கொண்டு மருந்து செய்யா
ஒருவ – நோயை (உடலில்) கொண்டிருந்தும் (அதற்குத் தேவையான)
மருந்தைச் செய்யமுடியாத ஒருவனே!; நின் நோன்மை எல்லாம் –
உன் வலிமை எல்லாம்; ஓய்கின்றாய் – ஓயப் போகிறாய், காண்டி
(அதனைக்) காண்பாயாக; என்னா – என்று; இடபன் – இடபன் என்ற
குரங்குத் தலைவன்; ஒல்கான் உரைத்தனன் – தளர்ச்சி
அடையாதவனாய்க் கூறினான்.

————

7958. ‘”ஓடுதி” என்ன, ஓடாது உரைத்தியேல், உன்னோடு இன்னே
ஆடுவென் விளையாட்டு’ என்னா, அயில் எயிற்று அரக்கன்,
அம் பொன்
கோடு உறு வயிரப் போர் வில் காலொடு புருவம் கோட்டி,
ஈடு உற, இடபன் மார்பத்து ஈர்-ஐந்து பகழி எய்தான்.-232-

அயில் எயிற்று அரக்கன் – வேல் போலக் கூர்மையான பற்களை
உடைய வயமத்தன்; ஓடுதி என்ன – (நான்) ஓடிப்போ என்று சொல்ல;
ஓடாது உரைத்தியேல் – ஓடாமடல் (எதிர்த்துச்) சொல்லுவாய் ஆனால்;
உன்னோடு – உன்னுடன்; இன்னே – இப்பொழுதே; விளையாட்டு
ஆடுவென் – விளையாட்டு விளையாடுவேன்; என்னா – என்று
சொல்லி; அம்பொன் கோடு உறு வயிரப் போர் வில் – அழகிய
பொன்மயமான மேருமலையை ஒத்த (தன்னுடைய) வலிமையான
போரிடும் வில்லின்; காலொடு புருவம் கோட்டி – முனைகளோடு தன்
புருவத்தையும் வளைத்து; ஈடு உற – வலிமை மிக; இடபன் மார்பத்து
– இடபனுடைய மார்பின் கண்ணே; ஈர் ஐந்து பகழி – பத்து
அம்புகளை; எய்தான் – எய்தான்.

———————

7959. அசும்புடைக் குருதி பாயும் ஆகத்தான், வேகத்தால் அத்
தசும்புடைக் கொடுந் தேர்தன்னைத் தடக் கையால் எடுத்து
வீச,
பசுங் கழல் கண்ண பேயும் பறந்தன, பரவை நோக்கி;
விசும்பிடைச் செல்லும் காரின் தாரைபோல் நான்ற
மெய்யான்.-233-

அசும்புடைக் குருதி பாயும் ஆகத்தான் – ஊற்றுப் பெருக்கைப்
போல் இரத்தம் (வெளியில்) கொட்டுகிற உடம்பை உடையவனாகிய
(இடபன்); வேகத்தால்- விரைவோடு; அத் தசும்புடைக் கொடுத்தேர்
தன்னை – அந்தக் கலசம் அமைந்த பெரிய தேர் தன்னை;
தடக்கையால் எடுத்து வீச – தன் வலிய கையினால் எடுத்து வீசி
எறிய; பசுங்கழல் கண்ண பேயும் – (அத்தேரில் பூட்டப்பட்டிருந்த)
பசுமையான கழற்சிக் காய் போன்ற கண்களை உடைய (ஆயிரம்)
பேய்களும்; பரவை நோக்கிப் பறந்தன – கடலை நோக்கிப் பறந்து
சென்றன; விசும்பிடைச் செல்லும் காரின் தாரை போல்-(அத்தேரின்
மேல் இருந்த வயமத்தன்) விண்ணில் செல்லும் மேக ஒழுங்கு போல்;
நான்ற மெய்யான் – தொங்குகின்ற உடலை உடையவன் ஆனான்.

————–

7960. தேரொடும் கடலின் வீழ்ந்து, சிலையும் தன் தலையும்
எல்லாம்
நீரிடை அழுந்தி, பின்னும் நெருப்பொடு நிமிர வந்தான்
பாரிடைக் குதியாமுன்னம்,, இடபனும், ‘பதக! நீ போய்
ஆரிடைப் புகுதி!’ என்னா, அந்தரத்து ஆர்த்துச்
சென்றான்.–234-

தேரொடும் – தேருடன்; கடலின் வீழ்ந்து – கடலில் விழுந்து;
சிலையும் – வில்லும்; தன்தலையும் எல்லாம் – தன் தலையும் (பிற)
எல்லாமும்; நீரிடை அழுந்தி – கடல் நீரிலே அழுந்தி; பின்னும்
நெருப்பொடு நிமிர வந்தான் – மறுபடியும் பெருஞ்சினத்தோடு மேல் எழுந்து வந்தவனாகிய வயமத்தன்; பாரிடைக் குதியா
முன்னம் – நிலத்தில் குதிப்பதற்கு முன்பே; இடபனும் – இடபன்
என்பவனும்; பதக – பாதகனே; நீ போய் – நீ விலகிப் போய்;
ஆரிடைப் புகுதி – எங்கு (சென்று தப்பிப்) புகுவாய்; என்னா – என்று
சொல்லிக்கொண்டு; அந்தரத்து ஆர்த்துச் சென்றான் – விண்ணில்
பேரொலி செய்து கொண்டு சென்றான்.

———

7961. அல்லினைத் தழுவி நின்ற பகல் என, அரக்கன் தன்னை,
கல்லினும் வலிய தோளால், கட்டியிட்டு இறுக்கும் காலை,
பல்லுடைப் பில வாயூடு பசும் பெருங் குருதி பாய,
வில்லுடை மேகம் என்ன, விழுந்தனன், உயிர் விண் செல்ல.–235-

அல்லினைத் தழுவி நின்ற பகல் என – இரவினைத் தழுவி நின்ற
பகல் போல; அரக்கன் தன்னை – அரக்கனாகிய வயமத்தன் தன்னை;
கல்லினும் வலிய தோளால் – (இடபன் தன்னுடைய) கல்லைக்
காட்டிலும் வலிமையுள்ள தோள்களால்; கட்டியிட்டு – கட்டிப்பிடித்து;
இறுக்கும் காலை – இறுக்கமாய் நெருக்கிய பொழுது; பல்லுடைப் பில
வாயூடு – பல்பொருந்திய குகை போன்ற வாயின் வழியாக; பசும்
பெருங்குருதிபாய – பசிய மிகுதியான உதிரம் வெளிப்பட; உயிர் விண்
செல்ல – உயிர் வானுலகம் செல்ல; வில்லுடை மேகம் என்ன –
வில்லை உடைய மேகம் போல; விழுந்தனன் – நிலத்தில் விழுந்தான்;

—————

சுக்ரீவன் கும்பன் போர்

7962. குரங்கினுக்கு அரசும், வென்றிக் கும்பனும், குறித்த
வெம் போர்
அரங்கினுக்கு அழகு செய்ய, ஆயிரம் சாரி போந்தார்,
மரம் கொடும், தண்டு கொண்டும், மலை என
மலையாநின்றார்;
சிரங்களும் கரமும் எல்லாம் குலைந்தனர், கண்ட தேவர்.–236-

குரங்கினுக்கு அரசும் – குரங்குகளுக்கு அரசனாகிய சுக்ரீவனும்;
வென்றிக்கும்பனும் – வெற்றி உடைய கும்பன் என்னும் (அரக்கர்
தலைவனும்); குறித்த வெம்போர் – (அங்குக்)குறித்துச் செய்த
கொடியபோர்; அரங்கினுக்கு அழகுசெய்ய – அப்போர்க் களத்திற்கு
அழகினைச் செய்ய; ஆயிரம் சாரி போந்தார் – ஆயிரம் முறை
(என்னும் அளவு) வலசாரி, இடசாரியாகச் சுற்றிச் சுற்றிவந்தார்கள்;
மரம்கொடும் – (அவர்கள்) மரத்தைக் கொண்டும்; தண்டுகொண்டும்-
தண்டாயுதம் கொண்டும்; மலைஎன மலையாநின்றார் – இருமலைகள்
போரிடுவது போல் போரிட்டார்கள்; கண்டதேவர் –
அச்செயலைக்கண்ட தேவர்கள்; சிரங்களும் கரமும் எல்லாம்
குலைந்தனர் – தலையும் கைகளும் எல்லாம் நடுங்கினர்.

————–

7963. கிடைத்தார், உடலில் கிழி சோரியை வாரித்
துடைத்தார், விழியில் தழல் மாரி சொரிந்தார்,
உடைத் தாரொடு பைங் கழல் ஆர்ப்ப உலாவிப்
புடைத்தார், பொருகின்றனர்-கோள் அரி போல்வார்.–237-

கோளரி போல்வார் – வலிமையான சிங்கத்தைப் போன்றவர்களான
(சுக்ரீவ கும்பர்கள்); கிடைத்தார் – ஒருவரை ஒருவர்
நெருங்கியவர்களாய்; உடலில் கிழி சோரியை வாரித்துடைத்தார் –
உடலில் கிழிசல் (ஏற்பட்டு அதிலிருந்து) பெருகிவருகிற இரத்தத்தை
வாரித்துடைத்தார்கள்; விழியில் தழல் மாரி சொரிந்தார் – கண்களில்
நெருப்பு மழையைப் பொழிந்தார்கள்; உடைத்தாரொடு – அணிந்துள்ள
மாலையோடு; பைங்கழல் ஆர்ப்ப – பசும்பொன்னால் செய்யப்பட்ட
வீரக் கழல்கள் ஒலிக்க; உலாவிப் புடைத்தார் – இங்கும் அங்கும்
நகர்ந்து அடித்துக் கொண்டவர்களாய்ப்; பொருகின்றனர் – போர்செய்கின்றனர்,

————–

7964. தண்டம் கையில் வீசிய தக்க அரக்கன்,
அண்டங்கள் வெடிப்பன என்ன, அடித்தான்;
கண்டு, அங்கு, அது மா மரமே கொடு காத்தான்;
விண்டு அங்கு அது தீர்ந்தது; மன்னன் வெகுண்டான்;–238-

தண்டம் கையின் வீசிய – தண்டாயுதத்தைக் கையில் எடுத்துச்
சுழற்றிய; தக்க அரக்கன் – (போர்த்தொழில்) தகுதியுள்ள
அரக்கனாகிய கும்பன்; அண்டங்கள் வெடிப்பன என்ன அடித்தான் –
அண்டங்கள் எல்லாம் வெடிக்கின்றன என்று கண்டோர் எண்ணும்படி
பேரொலி எழச் (சுக்ரீவனை) அடித்தான்; அங்கு அதுகண்டு –
அப்போது அந்தச் செயலைக்கண்டு; மாமரமே கொடு காத்தான் –
(சுக்ரீவன்) பெரியமரத்தைக் கொண்டு (அடி தன் மீது விழாதபடி)
காத்துக் கொண்டான்; அங்கு அது விண்டு தீர்ந்தது – அப்போது
அப்பெரியமரம் துண்டாகி அழிந்தது; மன்னன் வெகுண்டான் –
(அதைக்கண்டு) மன்னனாகிய சுக்ரீவன் சினம் கொண்டான்.

———-

7965. ‘பொன்றப் பொருவேன், இனி’ என்று, பொறாதான்,
ஒன்றப் புகுகின்றது ஓர் காலம் உணர்ந்தான்,
நின்று அப் பெரியோன் நினையாதமுன், நீலன்
குன்று ஒப்பது ஓர் தண்டு கொணர்ந்து கொடுத்தான்.–239-

பொறாதான் – மனம் பொறுக்காதவன் ஆகிய சுக்ரீவன்; இனி –
இனி; பொன்றப் பொருவேன் என்று – (நீ) இறக்கும்படி போர்
செய்வேன் என்று கூறி; ஒன்றப் புகுகின்றது – மும்முரமாய்ப் போரிடப்
போகின்ற; ஓர் காலம் உணர்ந்தான் – ஒரு காலத்தை எண்ணியவனாய்;
அப்பெரியோன் நின்று – அந்தப் பெருமை மிக்க சுக்ரீவன் நின்று;
நினையாதமுன் – நினையாததற்கு முன்பே; நீலன் – நீலன்; குன்று
ஒப்பது ஓர் தண்டு – குன்றினை ஒத்த ஒப்பற்ற தண்டாயுதம்
ஒன்றினைக்; கொணர்ந்து கொடுத்தான் – கொண்டு வந்து கொடுத்தான்.

———-

7966. அத் தண்டு கொடுத்தது கைக்கொடு அடைந்தான்,
ஒத்து அண்டமும் மண்ணும் நடுங்க உருத்தான்,
பித்தன் தட மார்பொடு தோள்கள் பிளந்தான்;
சித்தங்கள் நடுங்கி, அரக்கர் திகைத்தார்.–240-

கொடுத்தது அத்தண்டு – (நீலன் கொணர்ந்து) கொடுத்தாகிய
அந்தத் தண்டினை; கைக்கொடு அடைந்தான் – கையில் கொண்டு
போரிட அடைந்தவனாகிய (சுக்ரீவன்); அண்டமும் மண்ணும் ஒத்து
நடுங்க உருத்தான் – விண்ணும் மண்ணும் ஒன்று போல் நடுங்குமாறு
சினந்தவனாகி; பித்தன் – (போர்) வெறிகொண்டவனாகிய
(கும்பனுடைய); தடமார்பொடு தோள்கள் பிளந்தான் – பரந்த
மார்பையும் தோள்களையும் பிளந்திட்டான்; அரக்கர் – (அதுகண்ட)
அரக்கர்கள்; சித்தங்கள் நடுங்கி திகைத்தார் – மனங்கள் நடுங்கித்
திகைத்தனர்.

—————–

7967. அடியுண்ட அரக்கன், அருங் கனல் மின்னா
இடியுண்டது ஓர் மால் வரை என்ன, விழுந்தான்;
‘முடியும் இவன்’ என்பது ஓர் முன்னம், வெகுண்டான்,
‘ஒடியும் உன தோள்’ என, மோதி உடன்றான்.–241-

அடியுண்ட அரக்கன் – அடிபட்ட அரக்கனாகிய கும்பன்;
அருங்கனல் மின்னா – பெருநெருப்போடு மின்னி; இடியுண்டது ஓர்
மால் வரை என்ன விழுந்தான் – இடியால் தாக்கப்பட்ட ஒரு
பெரியமலை என்று கூறுமாறு (நிலத்தில்) விழுந்து; இவன் முடியும்
என்பது ஓர் முன்னம் – இவன் இறந்து முடிவான் என்று கருதுதற்கு
முன்பே; வெகுண்டான் – சினம் கொண்டவனாய்; உனதோள் ஒடியும்
என – (சுக்ரீவனைப் பார்த்து) உன்தோள் (இப்போது) ஒடியும் என்று
கூறி; மோதி உடன்றான் – மோதிப் போரிட்டான்.

—————-

7968. தோளில் புடையுண்டு அயர் சூரியன் மைந்தன்,
தாளில் தடுமாறல் தவிர்ந்து, தகைந்தான்,
வாளிக் கடு வல் விசையால் எதிர் மண்டி,
ஆளித் தெழில் அன்னவன் மார்பின் அறைந்தான்.–242-

தோளில் புடையுண்டு – தோளில் அடியுண்டு; அயர் சூரியன்
மைந்தன் – வருந்துகிற கதிரவன் மகனாகிய சுக்ரீவன்; தாளில்
தடுமாறல் தவிர்ந்து – (அவனைக் கொல்லும்) தன் முயற்சியில்
தடுமாறுதலைத் தவிர்த்து; வாளிக் கடுவல் விசையால் -அம்பு போன்ற
கடுமையான அதிகவேகத்தோடு; எதிர் மண்டி தகைந்தான் – (அந்தக்
கும்பனுக்கு) எதிரே சென்று நெருங்கி; ஆளித் தொழில் அன்னவன் –
யாளியின் வீரம் போன்ற வீரத்தொழிலை உடைய (அக்கும்பனுடைய);
மார்பின் அறைந்தான் – மார்பில் அறைந்தான்.

————–

7969. அடி ஆயிர கோடியின் மேலும் அடித்தார்;
‘முடிவு ஆனவன் யார்?’ என, வானவர் மொய்த்தார்;
இடியோடு இடி கிட்டியது என்ன, இரண்டும்
பொடியாயின தண்டு; பொருந்தினர் புக்கார்.–243-

ஆயிர கோடியின் மேலும் – ஆயிரம் கோடிக்கு மேலாக; அடி
அடித்தார் – (தண்டாயுதத்தால்) அடிகளை அடித்துக் கொண்டார்கள்;
வானவர் – தேவர்கள்; முடிவு ஆனவன் யார் என – (இவ்விருவரில்)
முடிவு காலம் வந்து நெருங்கியவர் யாவர் என (அறிய); மொய்த்தார் –
நெருங்கிச் சூழ்ந்தார்கள்; இரண்டும் தண்டு – இரண்டு தண்டுகளும்;
இடியோடு இடி கிட்டியது என்ன – இடியோடு இடி மோதியது
எனும்படி (மோதி); பொடியாயின – துகள்களாயின; பொருந்தினர்
புக்கார் – (அவ்விருவரும்) நெருங்கினவர்களாகி; (மற்போரிடத்)
தொடங்கினர்.

————–

7970. மத்தச் சின மால் களிறு என்ன மலைந்தார்;
பத்துத் திசையும் செவிடு எய்தின; பல் கால்
தத்தித் தழுவி, திரள் தோள்கொடு தள்ளி,
குத்தி, ‘தனிக் குத்து’ என, மார்பு கொடுத்தார்.–244-

மத்தச்சினமால் களிறு என்ன மலைந்தார் – (சுக்ரீவன் கும்பன்
ஆகிய இருவரும்) மதமும் சினமும் கொண்ட மயக்கமுள்ள களிறுகளைப்
போல் போரிட்டார்கள்; பத்துத் திசையும் செவிடு எய்தின –
(அதனால் ஏற்பட்ட ஓசையால்) பத்துத்திசைகளும் செவிடுபட்டன;
பல்கால் தத்தித் தழுவி – பலமுறை பாய்ந்து தழுவி (நெருக்கியும்);
திரள்தோள் கொடு தள்ளி – (தங்கள்) திரண்ட தோள்களைக் கொண்டு
தள்ளியும்; குத்தி – (ஒருவரை ஒருவர்) குத்திக்கொண்டும்;
தனிக்குத்துஎன – தனியாகக் குத்துவாய் என்று; மார்பு கொடுத்தார் –
(அடுத்தவருக்கு) மார்பினைக் காட்டியவர்களாயும்; (போர் செய்தனர்.)

————–

7971. நிலையில் சுடரோன் மகன் வன் கை நெருங்க,
கலையில் படு கம்மியர் கூடம் அலைப்ப
உலையில் படு இரும்பு என வன்மை ஒடுங்க,
மலையின் பிளவுற்றது, தீயவன் மார்பம்,–245-

நிலையில் – (மேலே சொன்னவாறு போர்) செய்யும் நிலையில்;
சுடரோன் மகன் – கதிரவன் மகனாகிய சுக்ரீவனது; வன் கை நெருங்க
– வலிமை உடைய கை நெருக்கிக்குத்தியதால்; கலையில் படு கம்மியர்
– தமக்கு உரிய தொழிலை நன்கு பயின்றிருக்கும் கம்மியரது; கூடம்
அலைப்ப – சம்மட்டி மோதுவதால்; உலையில் படு இரும்பென –
உலைக்களத்தில் உள்ள இரும்பு போல; வன்மை ஒடுங்க – வலிமை
கெட; தீயவன் மார்பம் – தீயவனாகிய (அந்தக் கும்பனுடைய) மார்பு;
மலையின் பிளவுற்றது – மலைபிளவுபட்டதைப் போல பிளவுபட்டது.

————–

7972. ‘செய்வாய் இகல்?’ என்று அவன் நின்று சிரித்தான்;
ஐ வாய் அரவம் முழை புக்கென, ஐயன்
கை வாய் வழி சென்று, அவன் ஆர் உயிர் கக்க,
பை வாய் நெடு நாவை முனிந்து பறித்தான்.–246-

அவன் – (மார்பு பிளந்த நிலையிலும்) அந்தக் கும்பன்; இகல்
செய்வாய் என்று – போர் செய்வாய் என்று கூறி; நின்று சிரித்தான் –
நின்று கொண்டு சிரித்தான்; ஐயன் – தலைவனாகிய சுக்ரீவன்; ஐவாய்
அரவம் முழை புக் கென – ஐவாய்ப் பாம்பு குகையில் புகுந்ததைப்
போல; கை வாய் வழி சென்று – (தன்)கையை (அவனது) வாய்க்குள்
செலுத்தி; அவன் ஆர் உயிர் கக்க – (அவன்) (தனது) அரிய உயிரை
(வெளிக்)கக்கும்படியாக; பைவாய் நெடு நாவை – பைபோன்ற வாயில் உள்ள நீண்ட நாக்கை; முனிந்து
பறித்தான் – சினந்து பிடுங்கினான்.

—————

கும்பன் இறக்க, நிகும்பகை அங்கதன் எதிர்த்தல்

7973. அக்காலை, நிகும்பன், அனல் சொரி கண்ணன்,
புக்கான், ‘இனி, எங்கு அட போகுவது?’ என்னா,
மிக்கான் எதிர், அங்கதன் உற்று வெகுண்டான்;
எக்காலமும் இல்லது ஓர் பூசல் இழைத்தார்.–247-

அக்காலை – அந்தப் பொழுது; நிகும்பன் – நிகும்பன் என்பவன்;
அனல் சொரி கண்ணன் – நெருப்பை வெளிக்காலுகிற கண்களை
உடையவனாய்; புக்கான் – புகுந்தான்; இனி எங்கு அட போகுவது
என்னா – இனி எங்கே அட போகப் போகிறார் என்று
சொல்லிக்கொண்டு (வந்து); எதிர் மிக்கான் – சுக்ரீவன் எதிரில்
செருக்கி நின்றான்; உற்று அங்கதன் வெகுண்டான் – (அவன் முன்)
நெருங்கி அங்கதன் சினந்து நின்றான்; எக்காலமும் இல்லது ஓர் பூசல்
இழைத்தார் – (அவ்விருவரும் எக்காலத்திலும் (காண) நிகழாத
(பெரும்) போரைத் (தொடங்கி) நிகழ்த்தினார்கள்.

————-

7974. சூலப் படையானிடை வந்து தொடர்ந்தான்,
ஆலயத்தினும் வெய்யவன் அங்கதன், அங்கு ஓர்
தாலப் படை கைக் கொடு சென்று தடுத்தான்,
நீலக் கிரிமேல் நிமிர் பொற்கிரி நேர்வான்.–248-

நீலக் கிரி மேல் நிமிர் பொற்கிரி தேர்வான்-நீலமலையின் மேல்
நிமிர்ந்து செல்லும் பொன்னால் ஆகிய மலை போல்பவனாகிய;
ஆலத்திலும் வெய்யவன் அங்கதன் – நஞ்சினும் கொடுமை உடைய
அங்கதன்; சூலப்படையானிடை வந்து தொடர்ந்தான்-சூலப்படையை
ஏந்தியவனான (நிகும்பகை) வந்து தொடர்ந்து; ஆங்கு ஓர் –
அப்பொழுது ஒரு; தாலப் படைகைக் கொடு – பனைமரம் ஆகிய
படையைக் (கைக்) கொண்டு; சென்று தடுத்தான் – சென்று
(அவனைத்) தடுத்தான்.

————–

நிகும்பன் சூலத்தைத் தடுத்து அனுமன் அவனை அழித்தல்

7975. எறிவான் உயர் சூலம் எடுத்தலும், ‘இன்னே
முறிவான் இகல் அங்கதன்’ என்பதன் முன்னே,
அறிவான் அடல் மாருதி அற்றம் உணர்ந்தான்,
பொறி வான் உகு தீ என வந்து புகுந்தான்.–249-

எறிவான் – (நிகும்பன்) எறிவதற்காக; உயர் சூலம் எடுத்தலும் –
சிறந்த சூலத்தை (உயர்த்தி) எடுத்த உடனே; இகல் அங்கதன் –
போர்த் தொழில்வல்ல அங்கதன்; இன்னேமுறிவான் என்பதன்
முன்னே – இப்பொழுதே அழிந்து படுவான் என்பதற்கு முன்பே;
அடல் மாருதி – கொல்லும் தொழில்வல்ல அனுமன்; அறிவான் –
(அதனை) அறிந்தவனாய்; அற்றம் உணர்ந்தான் – (அங்கதனின்)
முடிவை உணர்ந்து; பொறிவான் உகு தீ என – பொறியை மிகுதியாக
வெளிப்படுத்துகிற தீயினைப் போல; வந்து புகுந்தான் –
(அவ்விருவரிடையே) வந்து புகுந்தான்.

—————-

7976. தடை ஏதும் இல் சூலம் முனிந்து, சலத்தால்,
விடையே நிகர் அங்கதன்மேல் விடுவானை,
இடையே தடைகொண்டு, தன் ஏடு அவிழ் அம் கைப்
புடையே கொடு கொன்று, அடல் மாருதி போனான்.–250-

தடை ஏதும் இல் சூலம் – (உயிரைப் போக்குவதில்) தடை எதுவும்
இல்லாத சூலத்தை; முனிந்து – சினந்து; சலத்தால் – வஞ்சனையோடு;
விடையே நிகர் அங்கதன் மேல் விடுவானை – காளையை ஒத்த
அங்கதன் மீது செலுத்துபவனாகிய நிகும்பனை; இடையே தடை
கொண்டு – இடையே (சென்று) தடுத்துக் கொண்டு; தன் – தன்னுடைய;
ஏடு அவிழ் அம் கைப் – இதழ் விரிந்தது போல் அமைந்த அழகிய
கைகளால்; புடையே கொடு கொன்று – புடைத்துக் கொன்று; அடல்
மாருதி போனான் – கொல்லும் தொழில் வல்ல மாருதி சென்றான்.

————–

தலைவர்களை இழந்த அரக்கர் சேனையின் நிலை

7977.

நின்றார்கள் தடுப்பவர் இன்மை நெளிந்தார்,
பின்றாதவர் பின்றி இரிந்து பிரிந்தார்;
வன் தாள் மரம் வீசிய வானர வீரர்
கொன்றார்; மிகு தானை அரக்கர் குறைந்தார்.–251-

நின்றார்கள் – (இதுவரை) பின்னிடாது நின்ற (அரக்க வீரர்கள்);
தடுப்பவர் இன்மை நெளிந்தார் – (குரங்குப்படைகளைத்) தடுத்திடும்
(தலைவர்கள்) இல்லாமையால் தத்தளித்து; பின்றாதவர் பின்றி –
புறங்கொடாதவர் புறங்கொடுத்து; இரிந்து பிரிந்தார் – நிலைகெட்டுப்
பிரிந்தார்கள்; வன்தாள் மரம் வீசிய – வலிய அடிப்பகுதியைக்
கொண்ட மரங்களை வீசிய; வானர வீரர் – குரக்கு வீரர்கள்;
மிகுதானை கொன்றார் – (அரக்கரின்) பெரும் படையைக்
கொன்றார்கள்; அரக்கர் குறைந்தார் – அதனால் அரக்க வீரர்
எண்ணிக்கையில் குறைந்தார்கள்.

—————–

7978. ஓடிப் புகு வாயில் நெருக்கின் உலந்தார்,
கோடிக்கு அதிகத்தினும் மேல் உளர்; குத்தால்
பீடிப்புறு புண் உடலோடு பெயர்ந்தார்,
பாடித்தலை உற்றவர், எண் இலர் பட்டார்,–252-

புகுவாயில் ஓடி – நகரத்துக்குள் ஓடி; புகுவாயில் – புகுகின்ற
வாயிலின்கண்; நெருக்கின் உலந்தார் – (ஏற்பட்ட) நெருக்கத்தால்
உயிரிழந்தவர்; கோடிக்கு அதிகத்தினும் மேல் உளர்-கோடிக்கு மேல்
அதிகமாக உள்ளனர்; குத்தால் – (வானர வீரர் குத்திய) குத்தினால்;
பீடிப்புறு புண் உடலோடு பெயர்ந்தார் -உண்டாகிய புண் உடலோடு
திரும்பிப் போய்; பாடித்தலை உற்றவர் – பாசறைக் கண்
சேர்ந்தவர்கள்; எண் இலர் பட்டார் – எண்ணில்லாதவர்கள்
இறந்துபட்டார்கள்.

————-

7979. ‘தண்ணீர் தருக’ என்றனர் தாவுற ஓடி,
உண் நீர் அற, ஆவி உலந்தனர், உக்கார்;
கண்ணீரொடும் ஆவி கலுழ்ந்தனர்; காலால்
மண் ஈரம் உற, கடிது ஊர் புக வந்தார்.–253-

தண்ணீர் தருக என்றனர் – தண்ணீர் தருக என்று கேட்டவர்கள்;
தாவுற ஓடி – தண்ணீர் உள்ள இடத்தை நோக்கி ஓடி, உண் நீர் அற –
நாக்கில் இருந்த நீர் முற்றும் வரண்டு விட; ஆவி உலந்தனர் உக்கார்
– உயிர் வாடியவர்களாய் அழிந்தார்கள்; கண்ணீரொடும் – கண்ணீர்ப்
பெருக்கோடு; ஆவி கலுழ்ந்தனர் – உயிருக்காக அழுதவர்கள்; காலால்
மண் ஈரம் உற – காலின்வழிப் பெருகும் கண்ணீரினால் மண்ணில்
ஈரம் மிக; கடிது ஊர்புக வந்தார் – விரைவாக ஊரின்கண் புக
வந்தார்கள்.

————–

7980. விண்மேல் நெடிது ஓடினர், ஆர் உயிர் விட்டார்
மண்மேல் நெடு மால் வரை என்ன மறிந்தார்;
எண் மேலும் நிமிர்ந்துளர், ஈருள் தயங்கப்
புண் மேலுடை மேனியினார், திசை போனார்.–254-

விண்மேல் நெடிது ஓடினர் – ஆகாயத்தின் மேல் நீண்ட தூரம்
ஓடியவர்களாகி; ஆர் உயிர் விட்டார் – தங்களது அரிய உயிரை
விட்டவர்களும்; மண் மேல் – நிலத்தின் மேல்; நெடுமால் வரை
என்ன மறிந்தார் – உயர்ந்த பெரிய மலைகள் (விழுந்துள்ளன)
என்னும்படி இறந்து கிடந்தவர்களும்; ஈருள் தயங்க – ஈரல் வெளியே
தெரிய; புண் மேலுடை மேனியினார் – புண்கள் மிக்குடைய
உடம்பினை உடையவராய்; திசை போனார் – திசைகளின் கண் ஓடிச்
சென்றவர்களும்; எண் மேலும் நிமிர்ந்துளர் – எண்ணிக்கைக்கு
அடங்காமல் மிகுந்துள்ளனர்.

————-

7981. அறியும்மவர்தங்களை, ‘ஐய! இவ் அம்பைப்
பறியும்’ என வந்து, பறித்தலும் ஆவி
பிறியும் அவர் எண் இலர்; தம் மனை பெற்றார்,
குறியும் அறிகின்றிலர், சிந்தை குறைந்தார்.-255-

அறியும் மவர் தங்களை – (தங்களுக்கு) அறிமுகமாகி இருப்பவர்
தங்களை நோக்கி; ஐய – ஐயனே; இவ்அம்பைப் பறியும் என – இந்த
அம்பை (உடலை விட்டுப்) பறித்து விடுங்கள் என்று சொல்ல; வந்து
பறித்தலும் – (அவர்கள்) வந்து பறித்த உடனே;ஆவி பிறியும் அவர் எண் இலர் – உயிர் பிரிந்த அவர்கள்
எண்ணிக்கை இல்லாதவர் ஆவர்; தம்மனை பெற்றார் – தங்கள்
வீட்டைச் சென்று அடைந்தவர்கள்; குறியும் அறிகின்றிலர் – (அதன்)
அடையாளத்தையும் அறியாதவர்களாய்; சிந்தை குறைந்தார் – மனம்
ஒடுங்கியவர்களும் (எண்ணிலர்) என்றபடி

————

7982. பரி பட்டு விழ, சிலர் நின்று பதைத்தார்;
கரி பட்டு உருள, சிலர் கால்கொடு சென்றார்;
நெரி பட்டு அழி தேரிடையே பலர் நின்றார்,
எரி பட்ட மலைக்கண் இருந்தவர் என்ன,–256-

பரிபட்டு விழ – குதிரைகள் இறந்து விழுந்ததால்; சிலர் நின்று
பதைத்தார் – சிலர் (தடுமாறி) நின்று பதைப்பு எய்தினார்கள்; கரிபட்டு
உருள – யானைகள் இறந்து விழுந்து உருண்டதனால்; சிலர் கால்
கொடு சென்றார் – சிலர் காலினைக் கொண்டு ஓடிச் சென்றார்கள்;
எரிபட்ட மலைக்கண் இருந்தவர் என்ன – நெருப்பில் எரிந்த
மலையிடத்து இருந்தவர்கள் என்னும்படியாக; நெரிபட்டு அழி
தேரிடையே – நெருக்கத்தினால் அழிந்து போன தேர்களின் இடையே;
பலர்நின்றார் – பல (அரக்கர்) நின்றார்கள்.

—————-

7983. மண்ணின் தலை வானர மேனியர் வந்தார்,
புண் நின்ற உடற் பொறையோர் சிலர் புக்கார்,
‘கண் நின்ற குரங்கு கலந்தன’ என்னா,
உள் நின்ற அரக்கர் மலைக்க, உலந்தார்.-257-

மண்ணின் தலை-நிலத்திடத்தில்; புண் நின்ற உடற் பொறையோர்
– புண்பட்ட உடல் பாரம் உடையவர்களாகச் சிலர்; வானர மேனியர் –
சிலர் குரங்கு மேனி உடையவர்களாக; வந்தார் புக்கார் – வந்து
புகுந்தார்கள்; கண் நின்ற குரங்கு – தங்கள் கண் எதிரே நின்ற
குரங்கு(ப் படைவீரர்) கலந்தன என்னா – தங்கள் படையோடு
கலந்தன என்று எண்ணி; உள் நின்ற அரக்கர் – (அரக்கர் படையின்)
உள்ளே இருந்த அரக்கர்கள்; மலைக்க -(அவர்களோடு) போர் செய்ய; உலந்தார் – (அவ்வரக்கர்கள்)
அழிந்தார்கள்.

———-

7984. இரு கணும் திறந்து நோக்கி, அயல் இருந்து இரங்குகின்ற
உருகு தம் காதலோரை, ‘உண்ணும் நீர் உதவும்’ என்றார்,
வருவதன் முன்னம் மாண்டார் சிலர்; சிலர் வந்த தண்ணீர்
பருகுவார் இடையே பட்டார்; சிலர் சிலர் பருகிப் பட்டார்.–258-

இருகணும் திறந்து நோக்கி – தங்களது இரண்டு கண்களையும்
திறந்து பார்த்து; அயல் இருந்து இரங்குகின்ற – அருகில் இருந்து
(தங்களது நிலைக்கு) இரங்கி; உருகு தம் காதலோரை – மனமுருகுகிற
(தங்களின்) அன்புக்கு இடமானவரைக் (கண்டு); உண்ணும் நீர் உதவும்
என்றார் – (நீங்கள் எங்கட்கு) உண்பதற்கு உரிய நீரைத் தந்து
உதவுங்கள் என்று கேட்டார்கள்; சிலர் வருவதன் முன்னம் மாண்டார்
– (அவ்வாறு கேட்டவர்களில்) சிலர் (தண்ணீர்) கொண்டு வருவதற்கு
முன்பே இறந்தார்கள். சிலர் வந்த தண்ணீர் பருகுவார் இடையே
பட்டார் – சிலர் (கொண்டு) வந்த தண்ணீரை உண்டு நடுவில் இறந்து
அழிந்தார்கள்; சிலர் சிலர் – மிகச் சிலரே தண்ணீரைப் பருகி
இறந்தார்கள்.

————–

7985. மக்களைச் சுமந்து செல்லும் தாதையர், வழியின் ஆவி
உக்கனர் என்ன வீசி, தம்மைக் கொண்டு ஓடிப் போனார்;
கக்கினர் குருதி வாயால், கண்மணி சிதற, காலால்
திக்கொடு நெறியும் காணார், திரிந்து சென்று, உயிரும்
தீர்ந்தார்.–259-

மக்களைச் சுமந்து செல்லும் தாதையர் – (போரில் புண் பட்டு
விழுந்த தம்) மக்களைச் சுமந்து செல்லுகின்ற தந்தையர்; வழியின்
ஆவி உக்கனர் என்ன வீசி – (அம்மக்கள்) வழியில் உயிர் துறந்தமையால் (அவர்தம் உடலை) வீசிவிட்டுத்; தம்மைக் கொண்டு
ஓடிப் போனார் – தங்களைக் (காப்பாற்றிக்) கொள்வதற்காக ஓடிப்
போய்; வாயால் குருதி கக்கினர் – (துன்பமிகுதியாலும் நெடுந் தூரம்
ஓடினமையாலும்) வாயில் இரத்தம் கக்கிக்; கண்மணி சிதற –
கண்ணின் மணிகள் தெறித்து விழுந்ததால்; திக்கொடு நெறியும் காணார்
– திசையும் செல்லும் வழியும் தெரியாதவர்களாகி, திரிந்து சென்று –
(காலால்) தடவி (வழிமாறிச்) சென்று; உயிரும் தீர்ந்தார் – உயிர்
விட்டார்கள்.

————

அதிகாயனும் பிறரும் இறந்து பட்டமையை இராவணனுக்குத் தூதர் கூறல்

7986. இன்னது ஓர் தன்மை எய்தி, இராக்கதர் இரிந்து சிந்தி,
பொன் நகர் புக்கார்; இப்பால், பூசல் கண்டு ஓடிப் போன,
துன்ன அருந் தூதர் சென்றார், தொடு கழல் அரக்கர்க்கு
எல்லாம்
மன்னவன் அடியில் வீழ்ந்தார், மழையின் நீர் வழங்கு
கண்ணார்.–260-

இன்னது ஓர் தன்மை எய்தி – இப்படிப் பட்ட ஒரு நிலைமையை
அடைந்து; இராக்கதர் இரிந்து சிந்தி – அரக்கர்கள் நிலைகெட்டுச்
சிதறி; பொன் நகர் புக்கார் – அழகிய இலங்கை நகரத்தை
அடைந்தார்கள்; இப்பால் – இப் பகுதியில்; பூசல் கண்டு – நடந்த
போரினைக் கண்டு; ஓடிப் போன – (அங்கு நடந்ததைக் கூறுவதற்காக)
ஓடிப்போன; துன்ன அருந்தூதர் சென்று – நெருங்குவதற்கு
அருமையான தூதுவர்கள் சென்று; மழையின் நீர் வழங்கு கண்ணார் –
மழை போல நீர் சொட்டுகிறகண்களை உடையவராய்; தொடு கழல்
அரக்கர்க்கு எல்லாம் மன்னவன் – வேலைப்பாடு தோன்ற
அமைக்கப்பட்ட வீரக்கழலை அணிந்த அரக்கர்களுக்கு எல்லாம்
தலைவனாகிய இராவணனது; அடியில் வீழ்ந்தார் – அடிகளில் விழுந்து
வணங்கினர்.

—————-

7987. நோக்கிய இலங்கை வேந்தன், ‘உற்றது நுவல்மின்’ என்றான்;
‘போக்கிய சேனைதன்னில் புகுந்துள இறையும் போதா;
ஆக்கிய போரின், ஐய! அதிகாயன் முதல்வர் ஆய
கோக் குலக் குமரர் எல்லாம் கொடுத்தனர், ஆவி’ என்றார்.–261-

நோக்கிய இலங்கை வேந்தன் – (தூதர் காலில் விழுந்ததைப்)
பார்த்த இலங்கைக்கு வேந்தனாகிய இராவணன்; உற்றது நுவல் மின்
என்றார் – (நீர்) நடந்ததைச் சொல்லுங்கள் என்றான்; போக்கிய
சேனை தன்னில் – (நீ) அனுப்பிய படைதன்னில்; புகுந்துள – திரும்பி
நகருக்கு வந்துள்ளவை; இறையும் போதா – சிறிது என்று
சொல்லுவதற்குக் கூடப் போதாது; ஐய – ஐயனே; ஆக்கிய போரின் –
நடந்த போரில்; அதிகாயன் முதல்வர் ஆய – அதிகாயனைத்
தலைவனாகக் கொண்ட; கோக்குலக்குமரர் எல்லாம் – அரசகுலத்துக்
குமரர்கள் எல்லாம்; ஆவி கொடுத்தனர் என்றார் – உயிரைக்
கொடுத்துவிட்டனர் என்று கூறினார்கள்.

—————–

இராவணன் நிலையும் செயலும்

7988. ஏங்கிய விம்மல் மானம், இரங்கிய இரக்கம் வீரம்,
ஓங்கிய வெகுளி துன்பம் என்று இவை ஒன்றற்கு ஒன்று
தாங்கிய தரங்கம் ஆகக் கரையினைத் தள்ளித் தள்ளி,
வாங்கிய கடல்போல் நின்றான்-அருவி நீர் வழங்கு
கண்ணான்.–262-

அருவி நீர் வழங்கும் கண்ணான் – (கோக்குலக்குமரர் இறந்ததைக்
கேள்விப்பட்டதால்) நீரருவி போன்று கண்ணீர் வெளிப்படுகின்ற
கண்களை உடையவனாகிய இராவணன்; ஏங்கிய விம்மல் – ஏக்கம்
கொள்ளக் காரணமாகிய; மானம் இரங்கிய இரக்கம் – மானமும்
இரங்குகின்ற இரக்கமும்; ஓங்கிய வெகுளி துன்பம் என்று இவை –
மிக்க சினமும், துன்பமும் என்ற இவை,; ஒன்றற்கு ஒன்று – ஒன்றோடு
ஒன்று; தாங்கிய தரங்கம் ஆக – மேலும் மேலும் தள்ளி வருகின்ற
அலைபோல இருக்க;கரையினைத் தள்ளித் தள்ளி – (அவ்வலை) கரையளவு (வந்து)
தள்ளித் தள்ளி; வாங்கிய – பின்னால் செல்லுகின்ற; கடல் போல்
நின்றான் – கடல் போல் நின்றான்.

————-

7989. திசையினை நோக்கும்; நின்ற தேவரை நோக்கும்; வந்த
வசையினை நோக்கும்; கொற்ற வாளினை நோக்கும்; பற்றிப்
பிசையுறும் கையை; மீசை கறுக்கொள உயிர்க்கும்; பேதை
நசையிடைக் கண்டான் என்ன, நகும், அழும், முனியும்,
நாணும்.–263-

திசையினை நோக்கும் – (அதற்குப் பின்னால் இராவணன்)
திசைகளை எல்லாம் நோக்குவான்; நின்ற தேவரை நோக்கும் –
(தனக்குப் பணிவிடை செய்து நின்ற) தேவர்களை நோக்குவான்; வந்த
வசையினை நோக்கும் – (தனக்கு) ஏற்பட்ட பழியினை நோக்குவான்;
கொற்ற வாளினை நோக்கும் – வெற்றி பொருந்திய வாளினை
நோக்குவான்; கையைப் பற்றிப் பிசையுறும் – கையைப் பற்றிப்
பிசைவான்; மீசை சுறுக்கொள உயிர்க்கும் – மீசை தீய்ந்து போகும்படி
பெருமூச்சு விடுவான்; நசையிடைப் பேதை கண்டான் என்ன –
விருப்பம் மிகுதியால் பேதமைக் குணங்களை அடைந்தவன் போல;
நகும் அழும் முனியும் நாணும் – நகுவான், அழுவான், முனிவான்,
நாணுவான்.

———–

7990. மண்ணினை எடுக்க எண்ணும்; வானினை இடிக்க எண்ணும்;
எண்ணிய உயிர்கள் எல்லாம் ஒரு கணத்து எற்ற எண்ணும்;
‘பெண் எனும் பெயர எல்லாம் பிளப்பென்’ என்று
எண்ணும்; எண்ணி,
புண்ணிடை எரி புக்கென்ன, மானத்தால் புழுங்கி நையும்.–264-

மண்ணினை எடுக்க எண்ணும் – (மேலும் இராவணன்) நிலவுலகை எடுக்க எண்ணுவான்; வானினை இடிக்க எண்ணும் –
வானத்தை இடிக்க நினைப்பான்; எண்ணிய உயிர்கள் எல்லாம் –
(உலகில்) எண்ணிக் கணக்கிடப்பட்டுள்ள உயிர்கள் அனைத்தையும்;
ஒரு கணத்து எற்ற எண்ணும் – ஒருகண நேரத்தில் அழிக்க
எண்ணுவான்; பெண் எனும் பெயர எல்லாம் பிளப்பென் – பெண்
என்ற பெயரைக் கொண்ட பொருள்களை எல்லாம் பிளந்து
அழிப்பேன்; என்று எண்ணும் – என்று நினைப்பான்; எண்ணி –
அவ்வாறு நினைத்து; புண்ணிடை எரிபுக்கென்ன – புண்ணில் தீப்
புகுந்தது போல; மானத்தால் புழுங்கி நையும் – மான உணர்வினால்
(மனம்) புழுங்கி வருந்துவான்.

————

தானியமாலி இராவணன் அடி வீழ்ந்து அரற்றல்

7991. ஒருவரும் உரையார் வாயால், உயிர்த்திலர், உள்ளம் ஓய்வார்,
வெருவரும் தகையர் ஆகி, விம்மினர் இருந்த வேலை,
தரு வனம் அனைய தோளான்தன் எதிர் தானிமாலி
இரியலிட்டு அலறி, ஓயாப் பூசலிட்டு, ஏங்கி வந்தாள்;–265-

ஒருவரும் வாயால் உரையார் – (இராவணனைச்
சூழ்ந்திருந்தவர்கள்) ஒருவரும் வாயால் எதுவும் பேசாமல்;
உயிர்த்திலர் – மூச்சுக்கூட விடாதவர்களாய்; உள்ளம் ஓய்வார் –
மனம் (தடுமாறி) ஓய்ந்து; வெரு வரும் தகையர் ஆகி – அஞ்சுகிற
தன்மை உடையவர்களாகி; விம்மினர் இருந்த வேலை –
அழுதவர்களாய் இருந்த பொழுது; தருவனம் அனைய தோளான் –
மரங்கள் அடர்ந்த வனம் போன்ற தோள்களை உடைய இராவணன்;
தன் எதிர் – தன் எதிரில்; தானிமாலி – தானிய மாலி (என்ற அவன்
மனைவி); இரியலிட்டு – நிலைகெட்டு; அலறி – அலறிக் கொண்டு;
ஓயாப் பூசலிட்டு – ஓயாத பேரொலி செய்து கொண்டு; ஏங்கி வந்தாள்
– அழுது கொண்டு வந்தாள்.

———–

7992. மலைக் குவட்டு இடி வீழ்ந்தென்ன, வளைகளோடு
ஆரம் ஏங்க,
முலைக் குவட்டு எற்றும் கையாள்; முழை திறந்தன்ன
வாயாள்;
தலைக் குவட்டு அணைந்த செக்கர் சரிந்தன குழல்கள் தத்தி,
உலைக்கு வட்டு உருகு செம்பு ஒத்து உதிர நீர் ஒழுகும்
கண்ணாள்;–266-

மலைக் குவட்டு இடி வீழ்ந்தென்ன – (ஏங்கி அரற்றி வந்த
தானியமாலி) மலை உச்சியில் இடி விழுந்தது போல; வளைகளோடு
ஆரம் ஏங்க – (கையில் அணிந்துள்ள) வளையல்களும் (கழுத்தில்
அணிந்துள்ள) ஆரமும் ஒலிக்க; முலைக் குவட்டு எற்றும் கையால் –
முலையாகிய மலைமீது மோதுகிற கையை உடையவளாய்; முழை
திறந்தன்ன வாயாள் – குகை திறந்தது போன்ற வாயை உடையவளாய்;
தலைக்குவட்டு அணைந்த செக்கர் சரிந்தன – மேற்கு மலையில்
பொருந்திய செவ்வானம் (கீழே) சரிந்தது போன்ற; குழல்கள் தத்தி –
சிவந்த நிறமுடைய கூந்தல் அவிழ்ந்து பரவ; உலைக்கு – உலைக்
களத்தின் கண்; வட்டு செம்பு உருகு ஒத்து – திரண்ட பொருளாகிய
செம்பு உருகுவதை ஒத்து; உதிர நீர் ஒழுகும் கண்ணாள் – குருதி நீர்
ஒழுகுகிற கண்களை உடையவள் ஆனாள்.

——————-

993. வீழ்ந்தனள் அரக்கன் தாள்மேல், மென்மைத் தோள்
நிலத்தை மேவ;
போழ்ந்தனள், பெரும்பாம்பு என்னப் புரண்டனள்;
பொருமிப் பொங்கி,
‘சூழ்ந்தனை, கொடியாய்!’ என்னா, துடித்து, அருந்
துயர வெள்ளத்து
ஆழ்ந்தனள், புலம்பலுற்றாள், அழக் கண்டும்
அறிந்திலாதாள்;–267-

அழக்கண்டும் அறிந்திலாதாள் – (இதுநாள்வரை பிறர்) அழுவதைப்
பார்த்து இருந்தும் துன்பத்தை அறிந்திலாதவளாகிய தானியமாலி;
மென்மைத் தோள் நிலத்தை மேவ – தன் மெல்லிய தோள்கள்
நிலத்தைப் பொருந்த; அரக்கன் தாள் மேல் வீழ்ந்தனள் –
அரக்கனாகிய இராவணனது கால்களின் மீது விழுந்து; போழ்ந்தனள் –
வாயைத் திறந்து கொண்டு; பெரும் பாம்பு என்னப் புரண்டனள் –
(பெரிய) மலைப் பாம்பு போல (நிலத்தில்) புரண்டு; பொருமிப் பொங்கி
– மனத்தில் (துன்பப்) பொருமல் பொங்கி (வர); கொடியாய் –
கொடியவனே; சூழ்ந்தனை என்ன – (எனக்குக் கேடு) செய்தனை
என்று கூறித்; துடித்து – துடித்து; அருந்துயர வெள்ளத்து
ஆழ்ந்தனள் – கடத்தற்கரிய துன்பமாகிய வெள்ளத்தில் ஆழ்ந்து;
புலம்பலுற்றாள் – புலம்பத் தொடங்கினாள்.

————–

7994. ‘மாட்டாயோ, இக் காலம் வல்லோர் வலி தீர்க்க?
மீட்டாயோ, வீரம்? மெலிந்தாயோ, தோள் ஆற்றல்?
கேட்டாய் உணர்ந்திலையோ? என் உரையும் கேளாயோ?
காட்டாயோ, என்னுடைய கண்மணியைக் காட்டாயோ?–268-

இக்காலம் – இப்பொழுதே; வல்லோர் வலிதீர்க்க மாட்டாயோ –
(மகனைக் கொன்ற) வலியவர்களின் வலிமையைத் தீர்க்க மாட்டாயா?;
வீரம் மீட்டாயோ – வீரத்தை மீண்டும் பெற்று விட்டாயா?; தோள்
ஆற்றல் மெலிந்தாயோ – தோள் வலிமை மெலிந்து விட்டாயா?; கேட்டாய் உணர்ந்திலையோ – (நான்
கூறுவதைக்) கேட்டு உணரவில்லையா?; என் உரையும் கேளாயோ –
(அல்லது) என் பேச்சை (நீ) (காது) கொடுத்துக் கேட்கமாட்டாயா?;
என்னுடைய கண்மணியை – என்னுடைய கண்ணின் மணிபோன்ற
(மகனைக்); காட்டாயோ காட்டாயோ – காட்டமாட்டாயா?
காட்டமாட்டாயா?

———-

7995.

‘”இந்திரற்கும் தோலாத நன் மகனை ஈன்றாள்” என்று,
அந்தரத்து வாழ்வாரும் ஏத்தும் அளியத்தேன்
மந்தரத் தோள் என் மகனை மாட்டா மனிதன்தன்
உந்து சிலைப் பகழிக்கு உண்ணக் கொடுத்தேனே!–269-

இந்திரற்கும் தோலாத நன்மகனை ஈன்றாள் என்று-இந்திரனுக்கும்
தோல்வியடையாத (வலிமையுள்ள) நல்ல மகனைப் பெற்றவள் என்று
(சொல்லி); அந்தரத்து வாழ்வாரும் – வானத்தில் வாழுகின்ற தேவரும்;
ஏத்தும் – புகழ்கின்ற; (புகழ்ச்சி பெற்ற நான்) அளியத்தேன் –
இரங்கத்தக்கவளாய்; மந்தரத் தோள் என் மகனை – மந்தரமலை
போன்ற தோள்களை உடைய என் மகனை; மாட்டா மனிதன் தன் –
(வலிமையால் ஒப்பாக) மாட்டாத மனிதன் தன்னுடைய; உந்து
சிலைப்பகழிக்கு – செலுத்தும் வில்லினது அம்புக்கு; உண்ணக்
கொடுத்தேனே – உண்ணப் பலி கொடுத்தேனே.

————

7996. ‘அக்கன் உலந்தான்; அதிகாயன்தான் பட்டான்;
மிக்க திறத்து உள்ளார்கள் எல்லாரும் வீடினார்;
மக்கள் இனி நின்று உளான், மண்டோதரி மகனே;
திக்குவிசயம், இனி, ஒருகால் செய்யாயோ?–270-

அக்கன் உலந்தான் – முன்பு அனுமனால்) அக்ககுமாரன்
அழிந்தான்; அதிகாயன் தான்பட்டான் – (இப்போது) அதிகாயன்
தானும் பட்டான்; மிக்க திறத்து உள்ளார்கள் – மிக்க வலிமை
உடையவர்கள்; எல்லாரும் வீடினார் – எல்லோரும் அழிந்தார்கள்;
மக்கள் இனி நின்று உளான் – மக்களில் இனி (உயிருடன்)
நின்றிருப்பவன்; மண்டோதரி மகனே – மண்டோதரி மகனாகிய
(இந்திர சித்தன்) மட்டுமே; திக்கு விசயம் இனி – திக்கு விசயத்தை
இனி; ஒருகால் செய்யாயோ – ஒரு முறை செய்து வரமாட்டாயா?

—————–

7997. ‘ஏது ஐயா சிந்தித்து இருக்கின்றாய்’ எண் இறந்த
கோதை ஆர் வேல் அரக்கர் பட்டாரைக் கூவாயோ?
பேதை ஆய்க் காமம் பிடிப்பாய் பிழைப்பாயோ?
சீதையால் இன்னம் வருவ சிலவேயோ?–271-

ஐயா ஏது சிந்தித்து இருக்கின்றாய் – (இராவணன் மௌனியாய்
இருத்தல் கண்டு) ஐயா எதைச் சிந்தித்துக் கொண்டு இருக்கின்றாய்;
எண் இறந்த – எண்ணிக்கை கடந்த; கோதை ஆர் வேல் – மாலை
பொருந்திய வேலை ஏந்திய; அரக்கர் பட்டாரைக் கூவாயோ –
அரக்கர்களாகிய இறந்தவர்களை (உயிருடன் திரும்பிவரக்)
கூப்பிடமாட்டாயோ?; பேதைஆய் – அறிவற்றுப்போய்க்; காமம்
பிடிப்பாய் பிழைப்பாயோ – காமத்தைக் கைக்கொண்ட (நீ) உயிர்
பிழைப்பாயோ?; இன்னும் -இன்னமும்; சீதையால்வருவ – சீதை
காரணமாக வருந்துன்பங்கள்; சிலவேயோ – சிலதானோ (அன்று பல).

————–

7998.

‘உம்பி, உணர்வுடையான், சொன்ன உரை கேளாய்;
நம்பி குலக் கிழவன் கூறும் நலம் ஓராய்;
கும்பகருணனையும் கொல்வித்து, என் கோமகனை
அம்புக்கு இரை ஆக்கி, ஆண்டாய் அரசு, ஐய!’–272-

உணர்வுடையான் உம்பி – அறிவு உடையவனாகிய உன் தம்பி
(வீடணன்); சொன்ன உரை கேளாய் – கூறிய சொற்களைக்
கேளாதவனாயும்; நம்பி குலக்கிழவன் கூறும் – ஆடவரிற் சிறந்த
குலத்தலைவனாகிய மாலியவான் கூறிய; நலம் ஓராய் – (சொற்களின்)
நன்மையை எண்ணாதவனாயும்; கும்பகருணனையும் கொல்வித்து –
(இருந்து) கும்பகருணனைப் (பகைவர் கையால்) கொல்வித்து; என்
கோமகனை – என் சிறந்த மகனாகிய அதிகாயனை; அம்புக்கு இரை ஆக்கி – (பகைவர்) அம்புக்கு
இரையாகக் கொடுத்து; ஐய – ஐயனே; அரசு ஆண்டாய் – அரசு
புரிந்தாய்.

—————–

தானியமாலி அரண்மனை சேறல்

7999. என்று, பலப்பலவும் பன்னி எடுத்து அழைத்து,
கன்று படப் பதைத்த தாய்போல் கவல்வாளை,
நின்ற உருப்பசியும் மேனகையும் நேர்ந்து எடுத்து,
குன்று புரையும் நெடுங் கோயில் கொண்டு அணைந்தார்.–273-

என்று – என்று; பலப்பலவும் – பலவற்றையும்; பன்னி – பலமுறை;
எடுத்து அழைத்து – எடுத்துக்கூறி; கன்று படப்பதைத்த – கன்று
உயிர் இழந்ததால் பதைப்பு எய்திய; தாய்போல் – தாய்ப் பசுவைப்
போல்; கவல்வாளை – கலங்கி அழுகின்றவளாகிய தானியமாலியை;
நின்ற உருப்பசியும் – (அங்கு அருகில்) நின்ற உருப்பசியும்;
மேனகையும் – மேனகையும்; நேர்ந்து எடுத்து – நெருங்கி வந்து
எடுத்து; குன்று புரையும் – குன்றினை ஒத்த; நெடுங்கோயில் – பெரிய
அரண்மனைக்குக்; கொண்டு அணைந்தார் – கொண்டு சேர்த்தார்கள்.

———–

இலங்கையர் வருத்தம்

8000. தானை நகரத்துத் தளரத் தலைமயங்கி,
போன மகவுடையார் எல்லாம் புலம்பினார்;-
ஏனை மகளிர் நிலை என்ன ஆகும்?-போய் இரங்கி,
வான மகளிரும் தம் வாய் திறந்து மாழ்கினார்.-274-

நகரத்துத்தானை தளர – இலங்கை நகரத்தின்கண் (தங்கள்)
சேனைகளின் தோல்வியைக் (கேள்விப்பட்டு); தலைமயங்கி –
அரக்கர்கள் எல்லாரும் ஒன்று கூடி; போன மகவுடையார் – (போரில்
இறந்து) போன மக்கள் உடையவர்கள்; எல்லாம் புலம்பினார் –
எல்லோரும் புலம்பி அழுதார்கள்; வானமகளிரும் – (அப்
புலம்பலைக் கேட்ட) தேவமகளிரும்; இரங்கிபோய் – இரக்கம் (மிக்குப்)
போய்; வாய் திறந்து மாழ்கினார் – வாயைத் திறந்து அழுதனர்; ஏனை
மகளிர் நிலை – அரக்க மகளிரது நிலைமை; என் ஆகும் –
என்னவாகும்?

————-

8001.

தார் அகலத்து அண்ணல் தனிக் கோயில் தாசரதி
பேர, உலகு உற்றது உற்றதால், பேர் இலங்கை;
ஊர் அகலம் எல்லாம், அரந்தை, உவா உற்ற
ஆர்கலியே ஒத்தது, அழுத குரல் ஓசை.–275-

பேர் இலங்கை – பெரிய இலங்கை மாநகரம்; தார் அகலத்து
அண்ணல் – மாலையை மார்பில் அணிந்த தலைவனாகிய; தாசரதி –
‘தசரத ராமன்; தனிக் கோயில் – ஒப்பற்ற தன் அரண்மனையிலிருந்து;
பேர – (காடு நோக்கிச்) செல்ல; உலகு உற்றது உற்றதால் – உலகம்
அடைந்த துன்பத்தை அடைந்தது; ஊர் அகலம் எல்லாம் –
ஊர்ப்பரப்பு முழுவதும்; அரந்தை – தோன்றிய துன்பம் கலந்த;
அழுத குரலோசை – அழுங்குரலோசை; உவா உற்ற-முழு மதி நாளில்
தோன்றிய; ஆர்கலியே ஒத்தது – கடலின் ஓசையை ஒத்து
விளங்கியது.

——————–

மிகைப் பாடல்கள்

முதிர் போர் உறு மொய்ம்பன், முனைத்தலையில்
சதிர் ஏறிய தானை தழைத்திட, அங்கு
எதிர் தேரிடை ஏறினன்; மற்று ஒரு வெங்
கதிரோன் இகல் கண்டிட ஏகினனால். 20-1

தேர் வெள்ளம் அளப்பு இல; திண் புரவித்
தார் வெள்ளம் அளப்பு இல; தந்தி இனக்
கார் வெள்ளம் அளப்பு இல; கண்டகராம்
பேர் வெள்ளம் அளப்பு இல பெற்றதுவால். 20-2

மல் ஏறிய திண் புய மள்ளர் கரத்து
எல் ஏறிய வாள், எழு, வல் முசலம்,
வில்லோடு அயில், வெங் கதை,
வேல் முதலாம் பல் ஆயுத பத்தி பரித்து உடையார். 25-1

என, வந்த நிசாசரன், இவ் உரையைத்
தனு வல்லவனோடு எதிர் சாற்றுதலும்,
சனகன் மகள்தன் ஒரு நாயகன் ஆம்
அனகன் அது கேட்டு, இது அறைந்திடுவான். 50-1

என்றே உலகு ஏழினொடு ஏழினையும் தன்
தாமரைபோல் இரு தாள் அளவா-
நின்றான் உரை செய்ய, நிசாசரனும்
பின்றா உரை ஒன்று பிதற்றினனால். 52-1

வெங் கொலை மத கரி வெள்ளம் ஆயிரம்
துங்க நீள் வரைப் புயத்து அரக்கர் தூண்டினார்;
வெங் கணை இலக்குவன் வெகுண்டு,
உகாந்தத்தில் பொங்கிய மாரியின் பொழிதல் மேயினான். 103-1

முடிவுறும் உகம் பொழி மாரி மும்மையின்
விடு கணை மழை நெடுந் தாரை,
வெம் மதக் கட களிறு அடங்கலும் கழிய, கால்,
கரம், குடல், தலை, குறைந்தமை கூறல் ஆவதோ? 103-2

அறுந்தன, தலை, கழுத்து; அறுந்த, தாள், கரம்;
அறுந்தன, செவி, முகம்; அறுந்த, வால், மருப்பு;
அறுந்தன, குடல், உடல்; அறுந்த, வாய், விழி;
அறுந்தன, கட களிறு ஆய நாமமே. 103-3

அறுத்தன, சில கணை; அறுத்த கூறுகள்
செறுத்தன, சில கணை; சின்னபின்னமாய்
ஒறுத்தன, சில கணை; உம்பர் ஊர் புகத்
தெறித்தன, சில கணை; செப்பல் ஆவதோ? 103-4

மத கரி வெள்ளம் ஆயிரமும் மாண்டுற,
முதிர் சினத்து இலக்குவன், கடிகை மூன்றினில்,
கொதி கொள் வெஞ் சர மழை கொழிப்பக் கண்டு,
தாள் அதிர்வுறு பொலன் கழல் அரக்கர் அண்மினார். 103-5

அடுத்தனர் ஆனை, தேர், புரவி, ஆழியை;
தொடுத்தனர் அணி படச் சூழ்ந்து, வள்ளல்மேல்
விடுத்தனர் படைக் கலம்; வெகுண்டு வீரனும்
தடுத்தனன், ஒரு தனித் தனுவின் வன்மையால். 103-6

பெருங் கடை யுக மழை பிறழ,
தன் ஒரு கரம் படு சிலையினின் கான்ற
மாரியின், சரம் படச் சரம் பட, தாக்கு
இராக்கதக் கருங் கடல் வறந்தது கழறல் ஆகுமோ? 103-7

இலக்குவக் கடவுள் தன் ஏவின் மாரியால்,
விலக்க அருங் கரி, பரி இரதம், வீரர் என்று
உலப்ப அரும் வெள்ளமாம் சேனை ஒன்று அற
நிலப் படச் சாய்ந்தமை நிகழ்ந்த போதிலே. 119-1

காந்திய அரக்கனும் கணையின் மாரிகள்
பாய்ந்திட, பருஞ் சிலை விசையின் பற்றினான்;
மாய்ந்தது குரங்கு; அது கண்டு, மா மறை
வேந்தனுக்கு இளவலும் வெகுளி வீங்கவே. 121-1

கார்முக விசை உறும் கணையின் மாரியால்
பார வெஞ் சிலை அறுத்து, அவன் தன் பாய்
பரித் தேரினைப் பாகனோடு அழியச் சிந்தி,
மற்று ஓர் கணை அவன் சிரம் உருளத் தூண்டினான். 121-2

‘தாருகன் எனும் படைத் தலைவன் தன் வயப் போர்
அழிந்தவன் உயிர் பொன்றினான்’ என,
கார் நிற அரக்கர்கள் கனலின் பொங்கியே,
வீரனை வளைத்தனர், வெகுளி மிக்குளார். 122-1

மழை உற்றன முகில் ஒப்பன செவி மும் மத
வழியே விழ உற்றன, வெறி வெங் கணை நிமிரப் பொறி சிதற,
முழை உற்றன முகில் சிந்தின முன்பு ஏறில முடிய,
உழை உற்றன உலவும்படி உலவுற்றன-கரிகள். 140-1

துள்ளிக் களி வய வானரர் ஆர்த்தார்; அவை தோன்றக்
கள்ளக் கடு நிருதக் குலம் கண்டப்படக் கண்டே,
உள்ளக் கடு வேகத்தொடு தேவாந்தகன்,
உளத்தே கொள்ளைப் படை அனையஃது ஒரு கொடுஞ் சூலம் கைக் கொண்டான். 169-1

ஆங்கு அது நிகழக் கண்ட அடல் அதிகாயன் சீறி,
தாங்கு பல் அண்ட கோடிதான் பிளந்து உடைய, தன் கை
வாங்கினன் சிலை; நாண் ஓசை படைத்தபின், வாளி மாரி
பாங்குறு கவியின் சேனைக் கடல்மிசைப் பரப்பி ஆர்த்தான். 186-1

ஆர்த்து அரும் பகழி மாரி ஆயிர கோடி மேலும்
தூர்த்து, அடல் கவியின் சேனை துகள் படத் துணிந்து சிந்தப்
பேர்த்தனன் சிலை நாண் ஓதை; பிறை முகப் பகழி பின்னும்
கோத்தனன், அனந்த கோடி கோடியின்-கொதித்து வெய்யோன். 186-2

உருத்து, அதிகாயன், மேன்மேல் ஒண் சுடர்ப் பகழி மாரி
நிரைத்தலின், இடைவிடாது நெடுங் கவிச் சேனை வெள்ளம்
தரைத் தலம் அதனில் பட்டுத் தலை உடல் சிதற, சோரி
இரைத்து எழு கடலின் பொங்க, இமையவர் அலக்கணுற்றார். 186-3

கரடியின் சேனையோடு கவிக் குலத் தானை எல்லாம்
தரைப் பட, சரத்தின் மாரித் தசமுகன் சிறுவன்-சீறா,
கரை அறு கவியின் சேனைத் தலைவர்கள், கனலின் பொங்கி,
வரையொடு மரமும் கல்லும் வாங்கினர், விரைவின் வந்தார். 186-4

வானரத் தலைவர் பொங்கி வருதலும், அரக்கன்
மைந்தன், போன திக்கு அறிவுறாமல், பொழிந்திடும் பகழிதன்னால்
ஆனவர் உடலம் முற்றும் அழித்தனன்; குருதி பொங்க,
தான் அறிவு அழிந்து, யாரும் தனித் தனி தலத்தின் வீழ்ந்தார். 186-5

திசை முகம் கிழிய, தேவர் சிரம் பொதிர் எறிய, திண் தோள்
தசமுகன் சிறுவன், பின்னும், தடஞ் சிலை குழைய வாங்கி,
விசை கொள் நாண் எறிந்து, மேன்மேல் வெங் கவித் தானை
வெள்ளம் பசை அறப் புலர்ந்து போகப் பொழிந்தனன், பகழி மாரி. 186-6

‘வீரருக்கு ஒருவரான விறல், அதிகாயன் வெம் போர்
ஆர் இனித் தடுக்க வல்லார்?’ எனப் பதைத்து,
அமரர் எல்லாம், சோர்வுறத் துளங்கி, நில்லாது ஓடினர்;
சுடரும் வை வேல் போர் வலி அரக்கன் சேனை புகுந்தது, கடலின் பொங்கி. 186-7

அங்கதன் தோளில் நின்ற அண்ணல், ஆங்கு அதனைக் கண்டே,
செங் கையில் பிடித்த வீரச் சிலையை நாண் எறிந்து, தீரா,
வெங் கொலை அரக்கன் விட்ட கணை எலாம் விளிய வீசி,
துங்க வேல் நிருதர் சேனை துணி படச் சொரிந்தான், வாளி. 186-8

உரை பெறு புவனம் மூன்றும் ஒழிந்திடும் காலத்து,
ஏழு கரு முகில் பொழிவதென்னக் கணை மழை சொரிந்து,
காலாள் இரதமொடு இபங்கள் வாசி யாவையும் களத்தின் வீழ்த்தி,
பொரு திறல் அரக்கனோடும் புகுந்து, அமர் கடிதின் ஏன்றான். 186-9

புரம் எரித்துடைய புத்தேள் முதலிய புலவர் உள்ளம் திரிதர,
அரக்கன் சீறி, திண் சிலை குழைய வாங்கி,
எரி முகப் பகழி மாரி இடைவிடாது அனந்த கோடி
சொரிதர, அனுமன் ஆதி வீரர்கள் சோர்ந்து வீழ்ந்தார். 195-1

வில்லினுக்கு ஒருவன் ஆகி, உலகு ஒரு மூன்றும் வென்ற
வல் அதிகாயன் என்னும் வாள் எயிற்று அரக்கன் ஓயான்,
கல் இடும் மாரி என்னக் கணை மழை பொழியக் கண்ட
வில்லியும், விடாது, வெய்ய கணை மழை விலக்கி நின்றான். 203-1

விறல் அதிகாயன் வீழ, வெந் திறல் அரக்கன் மைந்தர்
குறுகினர், மும்மையான ஆயிர கோடி உள்ளார்;
எறி கடற் சேனையோடும் எங்கணும் இரிய ஆர்த்து,
செறிய எண் திசையும் வந்து சூழ்ந்தனர், தெழிக்கும் சொல்லார். 207-1

வருதலும் அரக்கன், மற்று(அவ்) வானரச் சேனை பின்னும்
பொரு சினம் திருகி முற்றா, பொங்கு அழல் என்னப் பொங்கி,
மரமொடு மலைகள் ஏந்தி, மாதிரம் மறைய, வல்லே
உரும் எனச் சொரிய வீசி உடற்றினர், ஒழிவு இலாதார். 209-1

மற்றும் திறல் வானர வீரர்கள் யாரும், கொற்றம் கொள்
இராவணன் மைந்தர் குலைந்தே முற்றும்படி
மோதினர்; மோத முடிந்தே அற்று, அங்கு
அவர் யாவரும் ஆவி அழிந்தார். 250-1

அளப்பு இல் மைந்தர் எல்லாம், ஆனை, தேர், பரி,
ஆள் என்னும் வழக்குறும் சேனை வெள்ளம் அளப்பு இல மடிய,
தாமும் களத்திடைக் கவிழ்ந்தார் என்ற மொழியினைக் காதில் கேளா,
துளக்கம் இல் அரக்கன், மேருத் துளங்கியது என்ன, சோர்ந்தான். 261-1

——————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ கம்ப ராமாயணம்/யுத்த காண்டம்/16-மாயா சனகப் படலம்–

November 2, 2020

மகோதரனிடம் சீதையை அடையும் வழி குறித்து இராவணன் வினவுதல்

அவ்வழி, கருணன் செய்த பேர் எழில் ஆண்மை எல்லாம்
செல்வழி உணர்வு தோன்றச் செப்பினம்; சிறுமை தீரா
வெவ் வழி மாயை ஒன்று, வேறு இருந்து எண்ணி, வேட்கை,
இவ்வழி இலங்கை, வேந்தன் இயற்றியது இயம்பலுற்றாம்: 1-

அவ்வழி – அந்தப் போர்க்களமாகிய இடத்தில்; கருணன் செய்த –
கும்பகருணன் செய்த; பேர் எழில் ஆண்மை எல்லாம் – நேர்மை
தவறாத அழகிய ஆண்மைச் செயல்களையெல்லாம்; செவ்வழி உணர்வு
தோன்றச் செப்பினம் – செம்மையாக உணர்வில் தோன்றுமாறு
கூறினோம்; இவ்வழி – இந்த இலங்கையில்; இலங்கை வேந்தன் –
இலங்கை வேந்தனாகிய இராவணன்; வேட்கை – பெருங்காமத்தால்;
வெவ்வழி மாயை ஒன்று – அறமல்லாத வழியாகிய சிறுமை நீங்காத
மாயைச் செயல் ஒன்றினை; வேறு இருந்து எண்ணி – வேறாகத் தனி
இடத்தில் இருந்து நினைந்து; இயற்றியது இயம்பலுற்றாம் –
செய்ததைக் கூறத் தொடங்கினோம்.

—————

மாதிரம் கடந்த தோளான், மந்திர இருக்கை வந்த
மோதரன் என்னும் நாமத்து ஒருவனை முறையின் நோக்கி,
‘சீதையை எய்தி, உள்ளம் சிறுமையின் தீரும் செய்கை யாது?
எனக்கு உணர்த்தி, இன்று, என் இன் உயிர் ஈதி’ என்றான். 2-

மாதிரம் கடந்த தோளான் – திசைகளை எல்லாம் வென்ற
தோள்வலி உடைய இராவணன்; மந்திர இருக்கை வந்த – தன் மந்திர
மண்டபத்துக்கு வந்த; மோதரன் என்னும் நாமத்து ஒருவனை –
மகோதரன் என்னும் பெயருடைய மாயையில் வல்ல ஒருவனை;
முறையின் நோக்கி – முறையாகப் பார்த்து; சீதையை எய்தி – நான்
சீதையை அடைந்து; உள்ளம் சிறுமையின் தீரும் செய்கையாது –
மனத் துன்பத்தில் இருந்து விடுபட வழியாது?; எனக்கு உணர்த்தி –
அதை எனக்குக் கூறி; இன்று – இப்போது; என் இன் உயிர் ஈதி
என்றான் – எனது இனிய உயிரைத் தருவாய் என்றான்.

————–

மருத்தனைச் சனகனாக உருமாற்றிக் காட்டுமாறு மகோதரன் கூறுதல்

‘உணர்த்துவென், இன்று நன்று; ஓர் உபாயத்தின் உறுதி மாயை
புணர்த்துவென், சீதை தானே புணர்வது ஓர் வினையம் போற்றி;
கணத்து, வன் சனகன் தன்னைக் கட்டினென் கொணர்ந்து காட்டின்-
மணத் தொழில் புரியும் அன்றே-மருத்தனை உருவம் மாற்றி?’ 3-

இன்று நன்று ஓர் உபாயத்தின் உறுதி உணர்த்துவென் – இன்றே
நல்லதாகிய ஒப்பற்ற உபாயத்தினால் உனக்கு உறுதியாவது ஒரு
பொருள் உணர்த்துவேன்; சீதை தானே புணர்வது மாயை
புணர்த்துவென் – சீதை தானே வந்து உன்னைச் சேர்வதற்குரிய
மாயைச் செயலைச் செய்வேன்; ஓர் வினையம் போற்றி – ஒப்பில்லாத
வஞ்சனையைப் போற்றிச் செய்து; மருத்தனை உருவம் மாற்றி –
மருத்தன் என்னும் அரக்கனைச் சனகனாக உருவம் மாற்றி; கணத்து
வன் சனகன் தன்னைக் கட்டி கொணர்ந்து காட்டின் – ஒரு
நொடியில் அந்த வலிய மாயா சனகனைக் கட்டிக் கொணர்ந்து
காட்டினால்; மணத்தொழில் புரியும் அன்றே – உன்னைத் திருமணம்
செய்யச் சீதை விரும்புவாள் அன்றே.

————-

என அவன் உரைத்தலோடும், எழுந்து மார்பு இறுகப் புல்லி,
‘அனையவன் தன்னைக் கொண்டு ஆங்கு அணுகுதி, அன்ப!’ என்னா,
புனை மலர்ச் சரளச் சோலை நோக்கினன், எழுந்து போனான்,
வினைகளைக் கற்பின் வென்ற விளக்கினை வெருவல் காண்பான். 4-

என அவன் உரைத்தலோடும் – என்று அந்த மகோதரன் சொன்ன
அளவிலே; எழுந்து மார்பு இறுகப் புல்லி – இராவணன்
மகிழ்ச்சியோடு இருப்பிடத்தில் இருந்து எழுந்து அவனை மார்பு
இறுகத் தழுவி; அன்பு – என் அன்புக்கு உரியவனே; அனையவன்
தன்னைக் கொண்டு ஆங்கு அணுகுதி என்னா – அந்த மருத்தனை
மாயாசனக உருவத்துடன் கொண்டு அசோக வனத்துக்கு வருக என்று
சொல்லிவிட்டு; வினைகளைக் கற்பின் வென்ற விளக்கினை வெருவல்
காண்பான் – தீய வினைகளைத் தன் கற்பின் திண்மையால் ஒரு
பொருட்டாக எண்ணாது வென்ற பெண் குல விளக்காம் சீதையை
அச்சுறுத்தும் பொருட்டு; புனை மலர்ச் சரளச் சோலை நோக்கினான்
– அழகிய மலர்களைக் கொண்ட இனிய அசோக வனத்தை நோக்கி;
எழுந்து போனான் –

—————

மின் ஒளிர் மகுட கோடி வெயில் ஒளி விரித்து வீச,
துன் இருள் இரிந்து தோற்ப, சுடர் மணித் தோளில் தோன்றும்
பொன்னரி மாலை நீல வரையில் வீழ் அருவி பொற்ப
நல் நெடுங் களி மால் யானை நாணுற, நடந்து வந்தான். 5-

மின் ஒளிர் மகுட கோடி – ஒளி விளங்குகின்ற மகுட வரிசை;
வெயில் ஒளி விரித்து வீச – இளவெயில் போன்ற ஒளியை எங்கும்
பரப்பி வீசுதலால்; துன் இருள் இரிந்து தோற்ப – நெருங்கிய இருள்
தோற்று நிலை கெட்டு ஓட; சுடர் மணித் தோளில் தோன்றும் –
ஒளியுடைய மணிகளை அணிந்த தோளில் விளங்கும்; பொன்னரி
மாலை – பொன்னாலாகிய அரிமாலை; நீல வரையின் வீழ் அருவி
பொற்ப – நீலமலையில் இருந்து விழுகின்ற அருவி போல் அழகுற
விளங்க; நல் நெடுங்களி மால் யானை – நல்லிணக்கம் பொருந்திய
நெடிதுயர்ந்த மதம் மிக்க யானை; நாணுற நடந்து வந்தான் –
நாணமடையும் படி நடந்து வந்தான்.

————-

‘விளக்கு ஒரு விளக்கம் தாங்கி, மின் அணி அரவின் சுற்றி,
இளைப்புறும் மருங்குல் நோவ, முலை சுமந்து இயங்கும்’ என்ன
முளைப்பிறை நெற்றி வான மடந்தையர், முன்னும் பின்னும்,
வளைத்தனர் வந்து சூழ, வந்திகர் வாழ்த்த, வந்தான். 6-

முளைப்பிறை நெற்றி வான மடந்தையர் – இளம்பிறை போன்ற
நெற்றியை உடைய தேவ மகளிர்; விளக்கு ஒரு விளக்கம் தாங்கி –
ஒளியுள்ள விளக்கு ஒரு விளக்கைத் தாங்கிக் கொண்டு; மின் அணி
அரவின் சுற்றி – ஒளி பொருந்திய மேகலையைப் பாம்பு போல்
இடுப்பிலே சுற்றி; இளைப்புறும் மருங்குல் நோவ – இளைத்தலுடைய
இடை நோகுமாறு; முலை சுமந்து இயங்கும் என்ன – முலையைச்
சுமந்து கொண்டு இயங்கும் என்று வருணித்துக் கூறுமாறு; முன்னும்
பின்னும் வளைத்தனர் வந்து சூழ – தம் முன்னும் பின்னும்
வளைத்து வந்து சூழ; வந்திகர் வாழ்த்த வந்தான் – பரவி
வாழ்த்துவோர் வாழ்த்த வந்தான்.

——————

இராவணன் சீதையை நோக்கிப் பேசுதல்

பண்களால் கிளவி செய்து, பவளத்தால் அதரம் ஆக்கி,
பெண்கள் ஆனார்க்குள் நல்ல உறுப்பு எலாம் பெருக்கின் ஈட்ட,
எண்களால் அளவு ஆம் மானக் குணம் தொகுத்து இயற்றினாளை,
கண்களால் அரக்கன் கண்டான், அவனை ஓர் கலக்கம் காண்பான். 7-

பண்களால் கிளவி செய்து – இசையால் பேச்சைச் செய்து; அதரம்
பவளத்தால் ஆக்கி – உதடுகளைப் பவளத்தால் ஆக்கி; பெண்கள்
ஆனார்க்குள் – பெண்களாய்ப் பிறந்தவர்களுக்கு அமைந்த; நல்ல
உறுப்பு எலாம் பெருக்கின் ஈட்ட – அழகிய உறுப்புகளை எல்லாம்
மிகுதியாகச் சேர்த்து உண்டாக்கி; எண்களால் அளவு ஆம்
மானக்குணம் தொகுத்து இயற்றிளாளை – எண்ணி அளவிட முடியாத
பெருமை மிகு பண்புகளை ஒன்று சேர்த்து உருவாக்கப்பட்டவளான
சீதையை; கண்களால் அரக்கன் – தன் இருபது கண்களாலும் காம
நோக்கோடு இராவணன்;அவைள ஓர் கலக்கம் காண்பான் – அந்தச் சீதைக்கு ஒரு பெரும்
கலக்கத்தை உண்டாக்கிக் காண்பதற்காக; கண்டான் – பார்த்தான்.

————

இட்டதோர் இரண பீடத்து, அமரரை இருக்கை நின்றும்,
கட்ட தோள்-கானம் சுற்ற, கழல் ஒன்று கவானின் தோன்ற,
வட்ட வெண் கவிகை ஓங்க, சாமரை மருங்கு வீச,
தொட்டது ஓர் சுரிகையாளன் இருந்தனன், இனைய சொன்னான். 8-

தொட்டது ஓர்சுரிகையாளன் – இடையில் கட்டிய குற்றுடை வாளை
உடைய இராவணன்; இட்டதோர் இரண பீடத்து – போடப்பட்டிருந்த
பொன்னால் ஆகிய பீடத்தில்; அமரரை இருக்கை நின்றும் –
தேவர்களைத் தங்கள் இருப்பிடத்தில் இருந்து; கட்ட தோள் கானம்
சுற்ற – அப்புறப்படுத்திக் களைந்த தோள்களின் தொகுதி
சூழ்ந்திருக்க; கழல் ஒன்று கவானின் தோன்ற – எடுத்துவைத்த ஒரு
கால் தொடை மீது தோன்ற; வட்டவெண் கவிகை ஓங்க – வட்ட
வடிவமைந்த வெண் கொற்றக் குடை தலை மீது ஓங்கிப் பிடிக்கப்பட;
சாமரை மருங்கு வீச – வெண் சாமரைகள் இருமருங்கும் வீசப்பட;
இருந்தனன் இனைய சொன்னான் – இருந்து இச்சொற்களைக்
கூறினான்.

————–

‘என்றுதான், அடியனேனுக்கு இரங்குவது? இந்து என்பான்,
என்றுதான், இரவியோடும் வேற்றுமை தெரிவது என்பால்?
என்றுதான், அனங்க வாளிக்கு இலக்கு அலாதிருக்கலாவது?
என்று, தான் உற்றது எல்லாம் இயம்புவான் எடுத்துக் கொண்டான். 9-

அடியனேனுக்கு இரங்குவது என்றுதான் – அடியேன் ஆகிய என்
பொருட்டு (சீதையே) நீ மனத்தில் இரக்கம் கொள்வது என்று தான்?
என்பால் இரவியோடு இந்து என்பான் வேற்றுமை தெரிவது
என்றுதான் – என்னிடம் கதிரவனுக்கும் நிலவுக்கும் இடையில் உள்ள
வேறுபாடு அறியத் தோன்றும் நிலை என்றுதான்; அனங்க வாளிக்கு –
உருவமற்ற மன்மதனின் மலரம்புகளுக்கு; இலக்கு அலாதிருக்கலாவது
என்று தான் – இலக்கு ஆகாமல் இருக்கல் ஆவது என்றுதான்? என்று
– என்று; தான் உற்றது எல்லாம் – தான் அடைந்த காம
வருத்தங்களை எல்லாம்; இயம்புவான் எடுத்துக் கொண்டான் –
சொல்வதற்காக எடுத்துக் கொண்டான்.

————–

‘வஞ்சனேன் எனக்கு நானே, மாதரார் வடிவு கொண்ட,
நஞ்சு தோய் அமுதம் உண்பான் நச்சினேன்; நாளும் தேய்ந்த
நெஞ்சு நேரானது; உம்மை நினைப்பு விட்டு, ஆவி நீக்க
அஞ்சினேன்; அடியனேன் நும் அடைக்கலம், அமுதின் வந்தீர்! 10-

அமுதின் வந்தீர் – அமுதத்துடன் அவதரித்தவரே! வஞ்சனேன் –
வஞ்சனைத் தன்மையுடைய; நானே எனக்கு – நான் எனக்காக;
மாதரார் வடிவு கொண்ட – பெண்பாலார் உருவத்தைக் கொண்ட;
நஞ்சு தோய் அமுதம் உண்பான் நச்சினேன் – நஞ்சு கலந்த
அமுதத்தை உண்ண விரும்பினேன்; நாளும் தேய்ந்த நெஞ்சு
நேரானது – நாளுக்கு நாள் தேய்ந்த (என்) நெஞ்சு நேர்மைப் பண்பைக்
கொண்டு விட்டது உம்மை நினைப்பு விட்டு – உம்மை நினைப்பதை
விட்டு; ஆவி நீக்க அஞ்சினேன் – உயிரை விடுவதற்கு (நான்)
அஞ்சினேன்; அடியனேன் நும் அடைக்கலம் – அடியவனாகிய நான்
நுமக்கு அடைக்கலப் பொருள்.

————–

‘தோற்பித்தீர்; மதிக்கு மேனி சுடுவித்தீர்; தென்றல் தூற்ற
வேர்ப்பித்தீர்; வயிரத் தோளை மெலிவித்தீர்; வேனில் வேளை
ஆர்ப்பித்தீர்; என்னை இன்னல் அறிவித்தீர்; அமரர் அச்சம்
தீர்ப்பித்தீர்; இன்னம், என் என் செய்வித்துத் தீர்திர் அம்மா! 11-

தோற்பித்தீர் – யார்க்கும் தோலாத என்னை நுமக்குத் தோற்கச்
செய்து; மதிக்கு மேனி சுடுவித்தீர் – சந்திரனால் என் உடம்பைச்
சுடுமாறு செய்தீர்; தென்றல் தூற்ற வேர்ப்பித்தீர் – தென்றல்
காற்றுப்பரவி வீசக் காம வெப்பத்தால் புழுங்கிய உடம்பு வேர்க்குமாறு
செய்தீர்; வயிரத் தோளை மெலிவித்தீர் – என் உறுதியான தோளை
மெலியச் செய்தீர்; வேனில் வேளை ஆர்ப்பித்தீர் – வேனிலைத்
துணையாகக் கொண்ட மன்மதனை ஆர்ப்பொலி செய்யச் செய்தீர்;
என்னை இன்னல் அறிவித்தீர் – எனக்குத் துன்பம் என்பது என்ன
என்பதை அறியும்படி செய்தீர்; அமரர் அச்சம் தீர்ப்பித்தீர் –
தேவர்களின் அச்சத்தை நீக்குவித்தீர்; இன்னம் என் என்
செய்வித்துத் தீர்திர் – இன்னும் என்னென்ன துன்பங்களை எனக்கு
விளைவித்துத் தீர்வீரோ?

————-

‘பெண் எலாம் நீரே ஆக்கி, பேர் எலாம் உமதே ஆக்கி,
கண் எலாம் நும் கண் ஆக்கி, காமவேள் என்னும் நாமத்து
அண்ணல் எய்வானும் ஆக்கி, ஐங் கணை அரியத் தக்க
புண் எலாம் எனக்கே ஆக்கி, விபரீதம் புணர்த்து விட்டீர். 12-

பெண் எலாம் நீரே ஆக்கி – நான் விரும்பும் பெண் எலாம் நீரே
என்று ஆக்கி; பேர் எலாம் உமதே ஆக்கி – யான் விரும்பி
அழைக்கிற பெயர் எல்லாம் உம்முடைய பெயரே என்று ஆக்கி; கண்
எலாம் நும் கண் ஆக்கி – என் இருபது கண்களும் உம்மை மட்டும்
பார்க்கும் கண்கள் என ஆக்கி; காமவேள் என்னும் நாமத்து
அண்ணல் எய்வானும் ஆக்கி – காமவேள் என்று பெயர் கொண்ட
தலைமையில் சிறந்தவனை என் மீது மலரம்புகளைத் தொடுப்பவன்
என்று செய்து; ஐங்கணை அரியத்தக்க புண் எலாம் எனக்கே ஆக்கி
– அக்காமனின் ஐந்து வகை அம்புகள் எல்லாம் எனக்கு உண்டாக்கக்
கூடிய புண்கள் எல்லாம் எனக்கு உண்டாகுமாறு செய்து; விபரீதம்
புணர்த்து விட்டீர் – என்னிடம் மாறுபாடான நிலை தோன்றுமாறு
செய்து விட்டீர்.

————

‘ஈசனே முதலா மற்றை மானிடர் இறுதி ஆகக் கூச, மூன்று
உலகும் காக்கும் கொற்றத்தென்; வீரக் கோட்டி பேசுவார்
ஒருவர்க்கு ஆவி தோற்றிலென்; பெண்பால் வைத்த
ஆசை நோய் கொன்றது என்றால், ஆண்மைதான் மாசுணாதோ? 13-

ஈசனே முதலா – சிவபிரானை முதலாகக் கொண்டு; மற்றை
மானிடர் இறுதி ஆகக் கூச – மற்று மானிடர் வரை உள்ள
அனைவரும் அஞ்சும்படி; மூன்று உலகும் காக்கும் கொற்றத்தென்
– மூன்று உலகத்தையும் காக்கும்படி வெற்றி படைத்த நான்;
வீரக்கோட்டி பேசுவார் ஒருவர்க்கு ஆவி தோற்றிலென் – வீரர்
வரிசையில் பேசப்படுபவர் எவருக்கும் உயிர் தோற்றிலென்; பெண்பால்
வைத்த ஆசை நோய் கொன்றது என்றால் – அத்துணை வீர
வலியுடைய என்னைப் பெண்ணிடம் வைத்த காம நோய் கொன்று விட்டது என்றால்; ஆண்மை தான் மாசுணாதோ –
(உலகில்) வீர ஆண்மை குற்றப்படும் அல்லவா?

“ஒண்ணுதற் கோஓ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்கும்என் பீடு”

என்ற குறள் இங்கு ஒப்பு நோக்கத் தக்கது. (குறள் 1088).

—————

‘நோயினை நுகரவேயும், நுணங்கி நின்று உணங்கும்
ஆவி நாய் உயிர் ஆகும் அன்றே, நாள் பல கழித்த காலை?
பாயிரம் உணர்ந்த நூலோர், “காமத்துப் பகுத்த பத்தி”-
ஆயிரம் அல்ல போன-“ஐ-இரண்டு” என்பர்’ பொய்யே. 14-

நுணங்கி நின்று உணங்கும் ஆவி – குறைந்து நின்று
வாட்டமுறுகின்ற என் உயிர்; நோயினை நுகரவேயும் – காமநோயை
நுகர்ந்து கொண்டிருக்கும் போதும்; நாள் பல கழித்த காலை –
அந்நோயோடு பல நாளைக் கழிக்கும்போது; நாய் உயிர் ஆகும்
அன்றே – நாயின் உயிர் என்று இழித்துக் கூறப்படும் நிலைக்கு ஆள்
ஆகும் அல்லவா? பாயிரம் உணர்ந்த நூலோர் – நூலின் வரலாறு
கூறும் பாயிரப் பகுதியை ஓதி உணர்ந்த நூல் வல்லோர்; காமத்துப்
பகுத்த பத்தி – காமப்பகுதியில் ஏற்படுத்திய அவத்தை வரிசை; ஐ
இரண்டு என்பர் பொய்யே – பத்து என்று கூறுவார்கள் அது
பொய்யே; ஆயிரம் அல்லபோன – ஆயிரம் என்று கூற முடியாமல்
அதையும் கடந்து போயின.

————

‘அறம் தரும் செல்வம் அன்னீர்! அமிழ்தினும் இனியீர்! என்னைப்
பிறந்திலன் ஆக்க வந்தீர்; பேர் எழில் மானம் கொல்ல,
“மறந்தன பெரிய; போன வரும்” எனும் மருந்து தன்னால்,
இறந்து இறந்து உய்கின்றேன் யான்; யார் இது தெரியும் ஈட்டார்? 15-

அறந்தரும் செல்வம் அன்னீர் – அறவழியில் கிடைத்த
செல்வத்தை ஒத்துள்ளவரே! அமிழ்தினும் இனியீர் – அமிழ்தத்தைக்
காட்டிலும் இனிமை வாய்ந்தவரே! என்னைப் பிறந்திலன் ஆக்க
வந்தீர் – என்னைப் பிறக்காதவன் போல் செய்ய வந்தவரே! பேர்
எழில் மானம் கொல்ல – நுமது பேரழகு என் மானத்தை அழிக்க;
பெரிய மறந்தன போன – நான் செய்த பெருஞ்செயல்கள் மறந்து
விட்டன; வரும் எனும் மருந்து தன்னால் – நீர் இரங்கும் நாள் வரும்
என்னும் மருந்தினால்; யான் இறந்து இறந்து உய்கின்றேன் – யான்
செத்துச் செத்துப் பிழைக்கின்றேன்; யார் இது தெரியும் ஈட்டார் –
எனது இந்தத் தன்மையை அறியும் தன்மையுடையவர் யார்?

———–

‘அந்தரம் உணரின், மேல்நாள், அகலிகை என்பாள், காதல்
இந்திரன் உணர்ந்த, நல்கி எய்தினாள், இழுக்குற்றாளோ?
மந்திரம் இல்லை; வேறு ஓர் மருந்து இல்லை, மையல் நோய்க்குச்
சுந்தரக் குமுதச் செவ்வாய் அமுது அலால்;-அமுதச் சொல்லீர்! 16-

அமுதச் சொல்லீர் – அமுதம் போன்ற இனிய சொல்லை
உடையவரே! அந்தரம் உணரின் – நடு நிலைமையோடு எண்ணிப்
பார்த்தால்; மேல்நாள் – முன் ஒரு காலத்தில்; அகலிகை என்பாள் –
அகலிகை என்ற பெயர் உடையவள்; காதல் இந்திரன் உணர்த்த –
தனது காதலை இந்திரன் உணர்த்த; நல்கி எய்தினாள் – அவனுக்குத்
தன்னைக் கொடுத்து இன்பம் அடைந்தாள்; இழுக்குற்றாளோ –
அதனால் அவள் தாழ்நிலையை அடைந்தாளோ? (இல்லையல்லவா?)
மையல் நோய்க்கு -என்னுடைய காமமாகிய நோயைப் போக்குவதற்கு; சுந்தரக் குமுதச்
செவ்வாய் அமுது அலால் – அழகிய குமுதமலர் போன்ற உமது
சிவந்த வாய் அமுதமல்லது; வேறு மந்திரம் இல்லை ஓர் மருந்து
இல்லை – வேறு மந்திரமும் இல்லை ஒப்பற்ற வேறு மருந்ததும்
இல்லை.

—————

சீதையின் முன் இராவணன் விழுந்து வணங்குதல்

என்று உரைத்து, எழுந்து சென்று, அங்கு இருபது
என்று உரைக்கும் நீலக் குன்று உரைத்தாலும் நேராக் குவவுத் தோள்
நிலத்தைக் கூட, மின் திரைத்து, அருக்கன் தன்னை விரித்து, முன்
தொகுத்த போலும் நின்று இமைக்கின்றது அன்ன முடி படி நெடிதின் வைத்தான். 17-

என்று உரைத்து – என்று பலவாறு சொல்லி; அங்கு எழுந்து
சென்று – அங்கு எழுந்து போய்; இருபது என்று உரைக்கும் –
இருபது என்று சொல்லப்படுகிற; நீலக்குன்று உரைத்தாலும் – நீல நிற
மலையை உவமை சொன்னாலும்; நேரா – ஒவ்வாத; குவவுத்தோள்
நிலத்தைக்கூட – திரண்ட தோள்கள் நிலத்தைத் தடவ; மின் திரைத்து
– மின்னலைச் சுருட்டி; அருக்கன் தன்னை விரித்து – கதிரவன்
தன்னை ஒளி பரப்புமாறு வைத்து; முன் தொகுத்த போலும் – முன்
ஒரு திரளாகத் தொகுத்து வைத்து; நின்று இமைக்கின்றது அன்ன –
நிலைத்து நின்று ஒளியை வெளிப் படுப்பது போன்ற; முடி படி
நெடிதின் வைத்தான் – மௌலியை நிலத்தின் மீது வெகுநேரம்
வைத்தான்.

————-

சீதை இராவணனுக்குத் தன் கருத்தை உரைத்தல்

வல்லியம் மருங்கு கண்ட மான் என மறுக்கமுற்று,
மெல்லியல் ஆக்கை முற்றும் நடுங்கினள், விம்முகின்றாள்,
‘கொல்லிய வரினும், உள்ளம் கூறுவென், தெரிய’ என்னா,
புல்லிய கிடந்தது ஒன்றை நோக்கினன், புகல்வதானாள்: 18-

மெல்லியல் – மெத்தென்ற சாயலை உடைய சீதை; (இராவணனைத்
தன் அருகே பார்த்து) வல்லியம் மருங்கு கண்ட மான் என
மறுக்கமுற்று – புலியைத் தன் பக்கத்தில் கண்ட மான் போலக்கலக்கம்
அடைந்து; ஆக்கை முற்றும் நடுங்கினள் விம்முகின்றாள் – உடம்பு
முழுவதும் நடுங்கி விம்மிப் புலம்பி; கொல்லியவரினும் – என்னை
அவன் கொல்லும் படிக்கு வந்தாலும்; உள்ளம் தெரியக் கூறுவென்
என்னா – என் மனதில் உள்ள கருத்தை நன்றாக அறியும்படி
கூறுவேன் என்று எண்ணி; கிடந்தது புல்லிய ஒன்றை – அருகில்
தரையில் கிடந்த புன்மையான (துரும்பு) ஒன்றை; நோக்கினள்
புகல்வதானாள் – நோக்கிக் கூறலானாள்.

————-

‘”பழி இது; பாவம்” என்று பார்க்கிலை; “பகரத் தக்க
மொழி இவை அல்ல” என்பது உணர்கிலை; முறைமை நோக்காய்;
கிழிகிலை நெஞ்சம்; வஞ்சக் கிளையொடும் இன்று காறும்
அழிகிலை என்றபோது, என் கற்பு என் ஆம்? அறம்தான் என் ஆம்? 19-

இது பழி பாவம் என்று பார்க்கிலை – நீ செய்ய விரும்பிய
செயலால் பழிவரும் பாவம் வரும் என்று எண்ணிப் பார்த்தாய்
அல்லை; பகரத் தக்க மொழி இவை அல்ல – உம் போன்றவர்
சொல்லத்தக்க சொற்கள் இவை அல்ல; என்பது உணர்கிலை –
என்பதை நீ அறிந்தாய் அல்லை; முறைமை நோக்காய் – யாரிடம்
எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற முறையையும் எண்ணிப்
பார்த்தாய் அல்லை; கிழிகிலை நெஞ்சம் – இவ்வாறு முறையற்ற
செயல் செய்தும் முறையற்ற சொல்லைச் சொல்லியும் கூட உன்
நெஞ்சம் கிழிந்து பிளவுபடவில்லை; வஞ்சக் கிளையொடும் – உன்
வஞ்சனைக்கு உதவும் சுற்றத்தவருடன்; இன்று காறும் அழிகிலை –
இன்று வரை நீ அழியவில்லை; என்ற போது – என்றால்; என் கற்பு
என் ஆம் – என் கற்பின் வலிமை என்ன ஆகும்? அறம் தான் என்
ஆம் – அறம் தான் என்னவாகும்?

——–

‘வான் உள அறத்தின் தோன்றும் சொல்வழி வாழு மண்ணின்
ஊன் உள உடம்புக்கு எல்லாம் உயிர் உள; உணர்வும் உண்டால்;
தான் உள; பத்துப் பேழ் வாய், தகாதன உரைக்கத் தக்க,
யான் உளென் கேட்க என்றால், என் சொலாய்? யாது செய்யாய்? 20-

வான் உள – வானம் உளது; அறத்தின் தோன்றும் சொல் வழி –
அறத்திற்கு உட்பட்டுத் தோன்றும் சொல்லின் படி; மண்ணின் வாழும்
ஊன் உள – நிலவுலகில் வாழும் தசையால் போர்த்தி உள்ள;
உடம்புக்கு எல்லாம் உயிர் உள – உடம்பு படைத்தவைகளுக்கு
எல்லாம் உயிர் உள்ளன; உணர்வும் உண்டு – அவைகளுக்கு
நல்லுணர்வும் உண்டு, (எனினும் அவை உன்னைப் போல் நடந்து
கொள்வதும் பேசுவதும் இல்லை); தகாதன உரைக்கத்தக்க – உனக்குத்
தகுதி இல்லாத சொற்களைச் சொல்லுவதற்கு; பத்துப் பேழ்வாய் தான்
உள – பிளவுபட்ட பத்துவாய்கள் உள்ளன; கேட்க யான் உளன் – நீ சொல்லும்
கொடிய சொற்களைக் கேட்க நான் உள்ளேன்; என்றால் – என்றால்;
என் சொலாய் – எதைத்தான் (நீ) சொல்லமாட்டாய்; யாது? செய்யாய்
– எதைத்தான் செய்ய மாட்டாய்.

————

‘வாசவன், மலரின் மேலான், மழுவலான் மைந்தன், மற்று அக்
கேசவன் சிறுவர் என்ற இந்தத் தன்மையோர்தம்மைக் கேளாய்;
‘பூசலின் எதிர்ந்தேன்’ என்றாய்; போர்க்களம் புக்க போது, என்
ஆசையின் கனியைக் கண்ணின் கண்டிலை போலும், அஞ்சி, 21-

வாசவன் – இந்திரன்; மலரின் மேலான் – தாமரை மலரில்
வீற்றிருப்பவனாகிய பிரமன்; மழுவலான் மைந்தன் – மழுப்படைய
உடைய சிவபிரான் மகனாகிய முருகவேள்; கேசவன் சிறுவர் என்ற –
மற்றும் கேசி என்ற அசுரனை அழித்த கேசவன் பிரமன் சிவன்
என்ற; இந்தத் தன்மையோர் தம்மைக் கேளாய் – இந்தப் பெருமை
பெற்றவர்களின் பேராற்றலைக் கேட்டிடாமல்; (கவலை கொள்ளாமல்)
பூசலின் எதிர்ந்தேன் என்றாய் – அவர்களைப் பெரும் போரில்
எதிர்த்து வென்றேன் என்கிறாய்; என் ஆசையின் கனியை – என்
பேர் ஆர்வத்தில் முதிர்ந்த பழம் போன்ற இராமனை; போர்க்களம்
புக்க போது – போர்க்களம் புகுந்த வேளையில்; அஞ்சிக் கண்ணின்
கண்டிலை போலும் – அஞ்சிக் கண்ணால் காணவில்லை போலும்.

—————–

‘ஊண் இலா யாக்கை பேணி, உயர் புகழ் சூடாது, உன்முன்
நாண் இலாது இருந்தேன் அல்லேன்; நவை அறு குணங்கள் என்னும்
பூண் எலாம் பொறுத்த மேனிப் புண்ணியமூர்த்தி தன்னைக்
காணலாம் இன்னும் என்னும் காதலால் இருந்தேன் கண்டாய். 22

———–

‘சென்று சென்று அழியும் ஆவி திரிக்குமால்-செருவில், செம்பொன்
குன்று நின்றனைய தம்பி புறக்கொடை காத்து நிற்ப கொன்று,
நின் தலைகள் சிந்தி, அரக்கர்தம் குலத்தை முற்றும்
வென்று நின்றருளும் கோலம் காணிய கிடந்த வேட்கை. 23-

செருவில் செம்பொன் குன்று நின்றனைய தம்பி – போர்க்
களத்தில் செம்பொன்மயமான மேருமலை நின்றது போன்ற
தம்பியாகிய இலக்குவன், புறக்கொடை காத்து நிற்ப – நீ புறமுதுகிட்டு
ஓடுவதைக் காத்து நிற்க; கொன்று நின் தலைகள் சிந்தி – (உன்னைக்)
கொன்று உன் தலைகள் பத்தையும் நிலத்தில் வீழ்த்தி; அரக்கர்தம்
குலத்தை முற்றும் – அரக்கர்களுடைய குலம் முழுவதையும்; வென்று
நின்றருளும் கோலம் – வென்று நிற்க உள்ள திருக்கோலத்தைக்;
காணிய கிடந்த வேட்கை – காண வேண்டும் என்கிற பேராசை;
சென்று சென்று அழியும் – நீங்கி நீங்கி அழிவது ஆகிய; ஆவி
திரிக்குமால் – என் உயிரைப் புறத்தே செல்ல ஒட்டாமல் தடுத்து
நிறுத்தும்.

———————–

எனக்கு உயிர் பிறிதும் ஒன்று உண்டு என்று இரேல்,-இரக்கம் அல்லால்
தனக்கு உயிர் வேறு இன்றாகி, தாமரைக் கண்ணது ஆகி,
கனக் கரு மேகம் ஒன்று கார்முகம் தாங்கி, ஆர்க்கும்
மனக்கு இனிது ஆகி, நிற்கும் அஃது அன்றி-வரம்பு இலாதாய். 24-

வரம்பிலாதாய் – நெறிமுறை வரம்புக்கு உட்படாதவனே,; தனக்கு
உயிர் இரக்கம் அல்லால் வேறு இன்றாகி – தனக்கு உயிர் என்பது
கருணை அல்லால் வேறு ஒன்றும் இல்லாமல்; தாமரைக் கண்ணது
ஆகி – தாமரை போன்ற கண்களை உடையதாகி; கனக்கருமேகம்
ஒன்று – மிகக் கறுத்த மேகம் ஒன்று; கார்முகம் தாங்கி – வி்ல்லைத்
தாங்கி; ஆர்க்கும் மனக்கு இனிது ஆகி நிற்கும் – யாவருடைய
மனத்துக்கும் இனிமை தருவது ஆகி நிற்கின்ற; அஃது அன்றி –
அந்த (இராமன் என்கிற) பொருள் அன்றி; எனக்கு உயிர் பிறிதும்
ஒன்று உண்டு என்று இரேல் – எனக்கு வேறு உயிர் ஒன்று உண்டு
என எண்ணி இராதே.

—————————-

அயோத்திக்கும் மிதிலைக்கு வீரர்கள் சென்றுள்ளதாக இராவணன் கூறுதல்

என்றனள்; என்றலோடும், எரி உகு கண்ணன், தன்னைக்
கொன்றன மானம் தோன்ற, கூற்று எனச் சீற்றம் கொண்டான்,
‘வென்று எனை, இராமன் உன்னை மீட்டபின், அவனோடு ஆவி,
ஒன்று என வாழ்திபோல்’ என்று, இடி உரும் ஒக்க நக்கான். 25-

என்றனள் – (என்று சீதை) கூறி முடித்தாள்; என்றலோடும் –
அவ்வாறு சொன்ன அவ்வளவிலே; எரி உகு கண்ணன் – நெருப்பு
வெளிப்படும் கண்களை உடையவனாய்; தன்னைக் கொன்றன மானம்
தோன்ற – தன்னைக் கொன்றது போன்ற மான உணர்ச்சி மிக்குத்
தோன்ற; கூற்று எனச் சீற்றம் கொண்டான் – இயமன் போலக்
கோபம் கொண்டவனாய்; எனை வென்று இராமன் உன்னை
மீட்டபின் – (சீதையை நோக்கி) என்னை வென்று இராமன் உன்னை
மீட்டபிறகு; அவனோடு ஆவி ஒன்று என வாழ்தி போல் என்று –
அந்த இராமனோடு உயிர் ஒன்றாகியது என்று கூறுமாறு வாழ்வாய்
போலும் என்று; இடி உரும் ஒக்க நக்கான் – பேரிடியின் ஒலி போல்
(பேரொலி உண்டாகுமாறு) கேலியாகச் சிரித்தான்.

————

‘இனத்துளார் உலகத்து உள்ளார், இமையவர் முதலினார், என்
சினத்துளார் யாவர் தீர்ந்தார்? தயரதன் சிறுவன் தன்னை,
புனத் துழாய் மாலையான் என்று உவக்கின்ற ஒருவன் புக்கு உன்
மனத்துளான் எனினும், கொல்வென்; வாழுதி, பின்னை மன்னோ! 26-

இனத்துளார் – அரக்கர் இனத்தில் உள்ளவரும்; உலகத்து உள்ளார்
– இந்நில உலகத்துள்ள மனிதரும்; இமையவர் முதலினார் – தேவர்
முதலியவர்களும்; என் சினத்துளார் யாவர் தீர்ந்தார் – என்
சினத்துக்கு இலக்கானவர் யாவர் உயிர் தப்பிப் பிழைத்தார்கள்;
தசரதன் சிறுவன் தன்னை – தசரதன் மகனாகிய இராமன் தன்னை;
புனத்துளாய் மாலையான் என்று உவக்கின்ற – துழாய் மாலையை
அணிந்த திருமால் என்று சொல்லி மகிழ்கின்ற; ஒருவன் புக்கு –
ஒருத்தன் புகுந்து; மனத்துளான் எனினும் கொல்வென் – உன்
மனத்தில் கரந்து உறைவான் எனினும் (அவனைக்) கொல்வேன்;
பின்னை வாழுதி மன்னோ – பின்பு அவனோடு வாழ்வாய்.

————-

‘”வளைத்தன மதிலை, வேலை வகுத்தன வரம்பு, வாயால்
உளைத்தன குரங்கு பல்கால்” என்று அகம் உவந்தது உண்டேல்
இளைத்த நுண் மருங்குல் நங்காய்! என் எதிர் எய்திற்று எல்லாம்,
விளக்கு எதிர் வீழ்த்த விட்டில் பான்மைய; வியக்க வேண்டா. 27-

இளைத்த நுண் மருங்குல் நங்காய் – சிறுத்து நுண்மையான
இடையை உடைய பெண்ணே! குரங்கு மதிலை வளைத்தன –
குரங்குகள் இலங்கை மதிலை வளைத்தன; வேலை வரம்பு வகுத்தன –
அதற்காகக் கடலில் சேதுவைக் கட்டின; வாயால் பல்கால் உளைத்தன
– வாயால் பலமுறை உரப்பிப் பேரொலி செய்தன; என்று அகம்
உவந்தது உண்டேல் – என்று (நீ) மனம் மகிழ்ந்தது உண்டானால்;
வியக்க வேண்டா – அதற்காக வியப்புக் கொள்ள வேண்டாம்; என்
எதிர் எய்திற்று எல்லாம் – என் எதிர் வரும் (அக்குரங்குகள்)
எல்லாம்; விளக்கு எதிர் வீழ்ந்த விட்டில் பான்மைய – விளக்குக்கு
முன்னே (திரண்டு வந்து) வீழ்ந்த விட்டில் பூச்சியின் தன்மையனவாம்.

————-

‘கொற்றவாள் அரக்கர்தம்மை, “அயோத்தியர் குலத்தை
முற்றும் பற்றி நீர் தருதிர்; அன்றேல், பசுந் தலை கொணர்திர்; பாரித்து
உற்றது ஒன்று இயற்றுவீர்” என்று உந்தினேன்; உந்தை மேலும்,
வெற்றியர் தம்மைச் செல்லச் சொல்லினென், விரைவின்’ என்றான். 28-

அயோத்தியர் குலத்தை முற்றும் பற்றி நீர் தருதிர் –
அயோத்திக்குரிய அரசரின் குலத்தை முற்றிலும் நீர் பற்றிக் கொண்டு
வந்து தாருங்கள்; அன்றேல் பசுந்தலை கொணர்திர் –
அல்லாவிட்டால் (அவர்களது) பசிய தலையைக் கொண்டு வாருங்கள்;
பாரித்து உற்றது ஒன்று இயற்றுவீர் – முயற்சியை மேற்கொண்டு
ஏற்றதொரு செயலைச் செய்யுங்கள்; என்று கொற்றவாள் அரக்கர்
தம்மை உந்தினேன் – என்று (கட்டளை இட்டு) வெற்றி பொருந்திய
வாட்படையை ஏந்திய அரக்கர்களை (அயோத்திக்கு) அனுப்பி உள்ளேன்;
உந்தை மேலும் – உனது தந்தையாகிய சனகன் மீதும்; வெற்றியர்
தம்மை விரைவின் செல்லச் சொல்லினென் என்றான் – வெற்றி
பொருந்திய அரக்க வீரரை விரைந்து போகுமாறு சொல்லியுள்ளேன்
என்று இராவணன் கூறினான்.

——————

மகோதரன் மாயாசனகனை அங்குக் கொணர்தல்

என்று அவன் உரைத்தகாலை, ‘என்னை இம் மாயம் செய்தாற்கு
ஒன்றும் இங்கு அரியது இல்லை’ என்பது ஓர் துணுக்கம் உந்த,
நின்று நின்று உயிர்த்து நெஞ்சம் வெதும்பினாள், நெருப்பை மீளத்
தின்று தின்று உமிழ்கின்றாரின், துயருக்கே சேக்கை ஆனாள். 29-

என்று அவன் உரைத்த காலை – என்று அந்த இராவணன்
சொன்ன உடன்; என்னை இம்மாயம் செய்தாற்கு – என்னை
இப்படிப்பட்ட மாயம் செய்து சிறையில் வைத்த இவ்விராவணனுக்கு,
ஒன்றும் இங்கு அரியது இல்லை – ஒன்றும் இங்குச் செய்தற்கு அரிய
செயலென்பது இல்லை; என்பது – என்று எண்ணியதால்; ஓர்
துணுக்கம் உந்த – ஒரு மன அச்சம் தூண்ட; நின்று நின்று உயிர்த்து
நெஞ்சம் வெதும்பினாள் – திகைப்படைந்து நின்று நின்று பெருமூச்சு
விட்டு மனம் கொதித்துப் போய்; நெருப்பை மீளத்தின்று தின்று
உமிழ்கின்றாரின் – நெருப்பை மீண்டும் மீண்டும் தின்று தின்று
உமிழ்கின்றவர்களைப் போல; துயருக்கே சேக்கை ஆனாள் –
துன்பத்திற்குத் தங்குமிடம் ஆனாள்.

—————-

‘இத் தலை இன்ன செய்த விதியினார், என்னை, இன்னும்
அத் தலை அன்ன செய்யச் சிறியரோ? வலியர் அம்மா!
பொய்த்தலை உடையது எல்லாம் தருமமே போலும்’ என்னாக்
கைத்தனள் உள்ளம், வெள்ளக் கண்ணின் நீர்க் கரை இலாதாள். 30-

கண்ணின் வெள்ள நீர்க்கரை இலாதாள் – கண்ணில் இருந்து
வெள்ளமாகப் பெருகுகின்ற கண்ணீருக்குக் கரை காணாதவளாகிய
சீதை; இத்தலை இன்ன செய்த விதியினார் – எனக்கு இவ்விடத்து
இப்படிப்பட்ட செயலைச் செய்த விதியினார்; என்னை இன்னும்
அத்தலை அன்ன செய்யச் சிறியரே? – எனக்கு அவ்விடத்து
அப்படிப்பட்ட செயலைச் செய்யச் சிறியவரோ; வலியர் அம்மா –
வலிமை உடையவர்; பொய்த்தலை உடையது எல்லாம் கருமமே போலும் என்னாக் – பொய்ச் செயல்களைக்
கொண்டிருப்பது எல்லாம் தற்போது அறமாகத் தோன்றுகிறது என்று
மனதில் எண்ணி; உள்ளம் கைத்தனள் – மன வெறுப்புக் கொண்டாள்.

————

ஆயது ஓர் காலத்து, ஆங்கண், மருத்தனைச் சனகன் ஆக்கி,
வாய் திறந்து அரற்றப் பற்றி, மகோதரன் கடிதின் வந்து,
காய் எரி அனையான் முன்னர்க் காட்டினன்; வணங்கக் கண்டாள்,
தாய் எரி வீழக் கண்ட பார்ப்பு எனத் தரிக்கிலாதாள். 31-

ஆயது ஓர் காலத்து மகோதரன் – (அந்த நேரத்தில்) மகோதரன்;
ஆங்கண் – அவ்விடத்திற்கு; மருத்தனைச் சனகன் ஆக்கி –
மருத்தன் என்னும் அரக்கனைச் சனகன் வடிவு கொள்ளச் செய்து;
வாய் திறந்து அரற்றப் பற்றி – அவன் வாய் விட்டுக் கதறுமாறு
பற்றிக்கொண்டு; கடிதின் வந்து – விரைவாக வந்து; காய் எரி
அனையான் முன்னர்க் காட்டினன் – கொழுந்து விட்டு எரியும்
நெருப்பை ஒத்த இராவணனுக்கு முன்னர்க் காட்டினான்; வணங்கக்
கண்டாள் – அம்மாயா சனகன் இராவணனை வணங்குவதைச் சீதை
கண்டாள்; தாய் எரி வீழக் கண்ட பார்ப்பு என – தன் தாய்ப்பறவை
நெருப்பில் விழுவதைக் கண்ட பறவைக் குஞ்சு போல; தரிக்கிலாதாள்
– மனம் தாங்காதவளாயினாள்.

————-

மாயாசனகனைக் கண்ட சீதை வாய்விட்டு அரற்றுதல்

கைகளை நெரித்தாள்; கண்ணில் மோதினாள்; கமலக் கால்கள்
நெய் எரி மிதித்தாலென்ன, நிலத்திடைப் பதைத்தாள்; நெஞ்சம் மெய்
என எரிந்தாள்; ஏங்கி விம்மினாள்; நடுங்கி வீழ்ந்தாள்;
பொய் என உணராள், அன்பால் புரண்டனள், பூசலிட்டாள். 32-

பொய் என உணராள் – (மகோதரன் பற்றி வந்தவன் மாயா சனகன்
என்ற) பொய்த் தன்மையை அறியாதவள் ஆகிய சீதை; கைகளை
நெரித்தாள் – தன் கைகளை நெரித்தாள்; கண்ணில் மோதினாள் –
கைகளைக் கண்களில் மோதிக் கொண்டாள்; கமலக் கால்கள் –
தாமரை மலர் போன்ற பாதங்கள்; நெய்யெரி மிதித்தாலென்ன
நிலத்திடைப் பதைத்தாள் – நெய் ஊற்றி எரிக்கப் பட்ட தீயை
மிதித்தது போல் நிலத்தின் மீது இருக்க முடியாமல் துடித்தாள்;
நெஞ்சம் மெய் என எரிந்தாள் – மனம் உடல் போல வேக்காடு
எய்தினாள்; ஏங்கி விம்மினாள் – ஏக்கம் கொண்டு புலம்பினாள்;
நடுங்கி வீழ்ந்தாள் – உடல் நடுங்கிக் கீழே விழுந்தாள்; அன்பால்
புரண்டனள் – (தன் தந்தை மீது கொண்ட) பாசத்தால் புரண்டாள்;
பூசலிட்டாள் – பேரொலி எழுப்பிக் கதறினாள்,

———–

‘தெய்வமோ?’ என்னும்; ‘மெய்ம்மை சிதைந்ததோ?’ என்னும்;
‘தீய வைவலோ, உவகை?’ என்னும்; ‘வஞ்சமோ, வலியது?’ என்னும்;
‘உய்வலோ, இன்னம்?’ என்னும்; ஒன்று அல துயரம் உற்றாள்;
தையலோ? தருமமேயோ? யார், அவள் தன்மை தேர்வார்? 33-

தெய்வமோ என்னும் – (அச்சீதை) தெய்வமே என்பாள்;
மெய்ம்மை சிதைந்ததோ என்னும் – உண்மை அழிந்து விட்டதோ
என்பாள்; உலகை தீயவைவலோ என்னும் – உலகத்தைத் தீய்ந்து
போகும்படி சபித்து விடட்டுமா என்பாள்; வஞ்சமோ வலியது என்னும்
– (உலகில்) வஞ்சகச் செய்கையே வலிமையானது என்பாள்; இன்னம் உய்வலோ என்னும் – இன்னும் உயிரோடு
பிழைத்திருப்பேனோ என்பாள்; ஒன்று அல துயரம் உற்றாள் – ஒரு
தன்மைத்தாக அன்றிப் பல வகையில் துன்பம் அடைந்தாள்.
தையலோ – (இவ்வாறு துன்புற்றது) பெண்ணோ; தருமமேயோ –
அல்லது அறந்தானோ? அவள் தன்மை தேர்வார் யார் –
அச்சீதையின் நிலையை ஆய்ந்து அறிபவர் யாவர்.

————

‘எந்தையே! எந்தையே! இன்று என் பொருட்டு உனக்கும் இக் கோள்
வந்ததே! என்னைப் பெற்று வாழ்ந்தவாறு இதுவோ! மண்ணோர்
தந்தையே! தாயே! செய்த தருமமே! தவமே!’ என்னும்;
வெந்துயர் வீங்கி, தீ வீழ் விறகு என வெந்து, வீழ்ந்தாள். 34-

எந்தையே எந்தையே – (மேலும் சீதை) என் தந்தையே என்
தந்தையே; இன்று என் பொருட்டு உனக்கும் இக்கோள் வந்ததே –
இப்போது என் காரணமாக உனக்கு இந்த நிலை வந்து விட்டதே!
என்னைப் பெற்று வாழ்ந்தவாறு இதுவோ – என்னை மகளாகப்
பெற்றதால் (நீ) வாழ்ந்த தன்மை இதுவேதானோ; மண்ணோர்
தந்தையே – நில உலகத்தவர்களுக்குத் தந்தை போல் நல்லது
செய்பவனே; தாயே – (அன்பினால்) தாயைப் போன்றவனே; செய்த
தருமமே – (ஒருவன்) செய்த அறம் போல் நன்மை செய்பவனே;
தவமே – (பயன் விளைவிக்கும்) தவம் போன்றவனே! என்னும் –
என்று கூறி; வெந்துயர் வீக்கி – கொடிய துயரம் மிகுந்து; தீ வீழ்
விறகு என வெந்து வீழ்ந்தாள் – தீயில் விழுந்த விறகு போல
(துயரால்) மனம் வெந்து கீழே விழுந்தாள்.

———————–

‘இட்டு, உண்டாய்; அறங்கள் செய்தாய்; எதிர்ந்துளோர் இருக்கை எல்லாம்
கட்டுண்டாய்; உயர்ந்த வேள்வித் துறை எலாம் கரையும் கண்டாய்;
மட்டு உண்டார், மனிசர்த் தின்ற வஞ்சரால் வயிரத் திண் தோள்
கட்டுண்டாய்; என்னே, யானும் காண்கின்றேன் போலும் கண்ணால்’. 35-

இட்டு உண்டாய் – (வறியவரும் விருந்தினரும் நெருங்கி
உண்ணுமாறு) அளித்துப் பிறகு (நீ) உண்டாய்; அறங்கள் செய்தாய் –
அறச்செயல்களைச் செய்தாய்; எதிர்ந்துளோர் இருக்கை எல்லாம்
சுட்டுண்டாய் – எதிர்த்த பகைவர்களின் ஊர்களை எல்லாம் எரித்து
விட்டாய்; வேள்வித் துறை எலாம் கரையும் கண்டாய் – வேள்வித்
துறைகள் எல்லாவற்றையும் செய்து (அவற்றிற்கு) எல்லையும் கண்டாய்;
மட்டுண்டார் – (அத்தகு சிறப்புடை நீ) கள் குடிப்பவராய்; மனுசர்த்
தின்ற வஞ்சரால் – மனிதரைத் தின்னும் வஞ்சகப் பண்பு கொண்ட
அரக்கரால்; வயிரத்திண் தோள் கட்டுண்டாய் – வயிரம் போன்ற
வலிய தோள்கள் கட்டப்பட்டாய்; என்னே யானும் கண்ணால்
காண்கின்றேன் போலும் – இப்படிப்பட்ட நிலையை நானும் கண்ணால்
காண்கின்றேனே.

——–

என்று, இன பலவும் பன்னி, எழுந்து வீழ்ந்து இடரில் தோய்ந்தாள்,
‘பொன்றினள் போலும்’ என்னா, பொறை அழிந்து, உயிர்ப்புப் போவாள்,
மின் தனி நிலத்து வீழ்ந்து புரள்கின்றது அனைய மெய்யாள்,
அன்றில் அம் பேடை போல, வாய் திறந்து அரற்றலுற்றாள்: 36-

என்று இன பலவும் பன்னி – என்று இவ்வாறான பல சொற்களைப்
பலமுறை சொல்லி; எழுந்து வீழ்ந்து – (இருந்த இடம் விட்டு) எழுந்து
(துன்பம் பொறுக்க முடியாமல் நிலத்தில்) விழுந்து; இடரில்
தோய்ந்தாள் – பெருந்துன்பத்தில் மூழ்கி, பொன்றினள் போலும்
என்னா – இறந்து விட்டாள் போலும் என்று (பார்த்தவர் கருதுமாறு);
பொறை அழிந்து – (துன்பத்தைத்) தாங்கும் தன்மை அழிந்து;
உயிர்ப்புப் போவாள் – பெருமூச்சு விடுபவளாய்; தனி மின் நிலத்து
வீழ்ந்து புரள்கின்றது அனைய மெய்யாள் – தனித்த மின்னலானது
நிலத்தில் விழுந்து புரள்வதை ஒத்த உடம்பு உடையவளாய்; அன்றில்
அம்பேடை போல – அன்றில் பறவையின் அழகிய பெண் பறவை
போல; வாய் திறந்து அரற்றலுற்றாள் – வாய் விட்டுக்
கதறத்தொடங்கினாள்.

————-

‘பிறையுடை நுதலார்க்கு ஏற்ற பிறந்த இற் கடன்கள் செய்ய,
இறையுடை இருக்கை மூதூர் என்றும் வந்து இருக்கலாதீர்;
சிறையுடைக் காண, நீரும் சிறையொடும் சேர்ந்தவாறே-
மறையுடை வரம்பு நீங்கா வழி வந்த மன்னர் நீரே? 37-

நீரே மறையுடைவரம்பு நீங்கா வழி வந்த மன்னர் – நீர்
வேதமுறையின் எல்லை கடவாத கால்வழியில் வந்தவர்; பிறையுடை
நுதலார்க்கு ஏற்ற – பிறை நிலவு போன்ற நெற்றியை உடைய
பெண்களுக்கு ஏற்ற; பிறந்த இற்கடன்கள் செய்ய – பிறந்த வீட்டுக்
கடமைகளைச் செய்வதற்குக் கூட; இறையுடை இருக்கை மூதூர் –
(என்) தலைவனுடைய இருப்பிடமாகிய பழமையான ஊராகிய
அயோத்திக்கு; என்றும் வந்து இருக்கலாதீர் – என்றைக்கும் வந்து
தங்காது இருப்பவர் ஆனீர்; சிறையிடைக் காண – (அப்படிப்பட்ட நீர்)
சிறையிடையில் (என்னைக்) காண்பதற்காக; நீரும் சிறையொடும்
சேர்ந்தவாறோ – நீங்களும் சிறைக்குச் சேர்ந்த தன்மையோ? (இது)

—————

‘”வன் சிறைப் பறவை ஊரும் வானவன், வரம்பு இல் மாயப்
புன் சிறைப் பிறவி தீர்ப்பான் உளன்” எனப் புலவர் நின்றார்
என் சிறை தீர்க்குவாரைக் காண்கிலேன்: என்னின் வந்த
உன் சிறை விடுக்கற்பாலார் யார் உளர், உலகத்து உள்ளார்? 38-

வன்சிறைப் பறவை ஊரும் வானவன் – வலிமையான சிறகுகளை
உடைய கருடனை ஊர்தியாக ஏறிச் செலுத்தும் திருமால்; வரம்பு
இல்மாயப் புன் சிறைப் பிறவி தீர்ப்பான் உளன் – எல்லையற்ற
மாயா காரியமாகிய இழிந்த பிறவிச் சிறையைத் தீர்ப்பதற்காக உளன்;
என்று புலவர் நின்றார் – என்று நல்லறிவாளர் சொல்லி உள்ளனர்;
என் சிறை தீர்க்குவாரைக் காண்கிலேன் – (அச்சொல் தவிர) என்
சிறை வாழ்க்கையைத் தீர்த்து விடுவிப்பவர்களைக் காண்கிலேன்;
என்னின் வந்த உன்சிறை விடுக்கற்பாலார் – எனக்காக உனக்குக்
கிட்டியுள்ள சிறை வாழ்க்கையில் இருந்து விடுவிப்பவர்கள்; உலகத்து
உள்ளார் யார் உளர் – உலகத்தில் உள்ளவர்களில் யாவர் உளர்?

———

‘பண் பெற்றாரோடு கூடாப் பகை பெற்றாய்; பகழி பாய
விண் பெற்றாய் எனினும், நன்றால், வேந்தராய் உயர்ந்த மேலோர்
எண் பெற்றாய்; பழியும் பெற்றாய்; இது நின்னால் பெற்றது அன்றால்;
பெண் பெற்றாய்; அதனால், பெற்றாய்; யார் இன்ன பேறு பெற்றார்? 39-

பண் பெற்றாரொடு கூடாப் – நல்ல பண்புடையவர்களோடு சேர்தல்
இல்லாத; பகை பெற்றாய் – பகைவனைப் பெற்றாய்; பகழி பாய
விண்பெற்றாய் எனினும் நன்றால் – (அத்தன்மையனான பகைவனிடம்
சிறைப்பட்டிருப்பதை விட) அவனது அம்பு பாய்ந்து வீர சொர்க்கம்
அடைந்தாய் எனினும் நல்லது; வேந்தராய் உயர்ந்த மேலோர் எண்
பெற்றாய் – வேந்தர்களாகி உயர்வு எய்திய மேலோர்களால்
எண்ணப்படும் தன்மையைப் பெற்றுச் சிறந்தாய்; பழியும் பெற்றாய் –
(அப்படிப்பட்ட நீ) பழியையும் அடைந்தாய்; அது நின்னால் பெற்றுது
அன்றால் – அப்பழி உன் செயலால் தேடிக் கொண்டது அன்று;
பெண் பெற்றாய் அதனால் பெற்றாய் – (நீ ஒரு) பெண்ணைப்
பெற்றாய் அதனால் பெற்றாய் அதனால் இந்தப் பழியைப் பெற்றாய்;
இன்ன பேறு பெற்றார் யார் – (உலகில் உன்னைப் போல்) இவ்வாறான
பேறு பெற்றார் யார்.

————

சுற்றுண்ட பாச நாஞ்சில் சுமையொடும் சூடுண்டு, ஆற்ற
எற்றுண்டும், அளற்று நீங்கா, விழு சிறு குண்டை என்ன,
பற்றுண்ட நாளே மாளாப் பாவியேன், உம்மை எல்லாம்
விற்று உண்டேன்; எனக்கு மீளும் விதி உண்டோ , நரகில் வீழ்ந்தால்? 40-

பாசம் சுற்றுண்ட நாஞ்சில் – கயிற்றினால் சுற்றிக் கட்டப்பட்ட
கலப்பை; சுமையொடும் சூடுண்டு – சுமையுடன் சாட்டையால்
அடிபட்டும்; ஆற்ற எற்றுண்டும் -மிகத் தாற்றுக் கோலால் குத்துண்டும்;
அளற்று நீங்கா – சேற்று வயலை நீங்காது; விழு சிறு குண்டை
என்ன – தடுமாறி விழுகிற சிறிய எருது போல; பற்றுண்ட நாளே –
பகைவனால் பற்றப்பட்ட காலத்திலேயே; மாளாப் பாவியேன் –
நீங்காத தீவினை உடைய நான்; உம்மை எல்லாம் விற்று உண்டேன்
– உங்களை எல்லாம் விற்று உண்டவளாகி விட்டேன்; நரகில்
வீழ்ந்தால் – நரகத்தில் விழுந்தால்; மீளும் விதி எனக்கு உண்டோ –
மீளும் வழி எனக்கு உள்ளதோ?

—————-

‘இருந்து நான் பகையை எல்லாம் ஈறு கண்டு, அளவு இல் இன்பம்
பொருந்தினேன் அல்லேன்; எம்கோன் திருவடி புனைந்தேன் அல்லேன்;
வருந்தினேன், நெடு நாள்; உம்மை வழியொடு முடித்தேன்; வாயால்
அருந்தினேன், அயோத்தி வந்த அரசர்தம் புகழை அம்மா! 41-

நான் இருந்து – நான் இலங்கைச் சிறையில் உயிருடன் இருந்து;
பகையை எல்லாம் – பகைவர்களை எல்லாம்; ஈறு கண்டு –
அழிவடையுமாறு செய்தல் கண்டு, அளவு இல் இன்பம்
பொருந்தினேன் அல்லேன் – அளவற்ற இன்பத்தை அடைந்தேன்
அல்லன்; எம்கோன் – எமது தலைவனாகிய இராமனின்; திருவடி
புனைந்தேன் அல்லன் – திருவடிகளை (தலையில்)ச்
சூட்டினேனுமல்லன்; நெடுநாள் வருந்தினேன் – (சிறையில் பத்துத்
திங்கள்) நீண்ட நாள் வருத்தப்பட்டேன்; உம்மை வழியொடு
முடித்தேன் – உம்மைப் பரம்பரையோடும் அழியுமாறு செய்தேன்;
அயோத்தி வந்த அரசர் தம் புகழை – அயோத்தியில் தோன்றி வந்த
அரசர்களுடைய பெருமையை; வாயால் அருந்தினேன் அம்மா –
(என்) வாயால் உண்டு விட்டேன்.

————

‘”கொல்” எனக் கணவற்கு ஆங்கு ஓர் கொடும் பகை கொடுத்தேன்; எந்தை
கல் எனத் திரண்ட தோளைப் பாசத்தால் கட்டக் கண்டேன்;
இல் எனச் சிறந்து நின்ற இரண்டுக்கும் இன்னல் சூழ்ந்தேன்-
அல்லெனோ? எளியெனோ, யான்? அளியத்தேன், இறக்கலாதேன்! 42-

ஆங்கு – அப்பஞ்சவடியில்; கொல் என – கொல்வாயாக என்று;
கணவற்கு ஓர் கொடும் பகை கொடுத்தேன் – கணவனுக்கு ஒரு
கொடிய பகையைத் தந்தேன்; எந்தை – (இப்போது இலங்கையில்)
எனது தந்தையினது; கல் எனத் திரண்ட தோளை – மலை போல்
திரண்ட வலிய தோள்களை; பாசத்தால் கட்டக் கண்டேன் –
கயிற்றினால் கட்டியிருப்பதைக் கண்டேன்; இல் எனச் சிறந்து நின்ற –
(ஒரு பெண்ணுக்கு) வீடு என்பதற்குரிய சிறப்புப் பொருந்திய;
இரண்டுக்கும் இன்னல் சூழ்ந்தேன் – பிறந்த வீடு, புகுந்த வீடு ஆகிய
இரண்டுக்கும் துன்பத்தை எண்ணியவளானேன்.; அல்லெனோ – இது
உண்மையல்லவா,; யான் எளியெனோ – நான் எளிமையானவளோ?
இறக்கலாதேன் – (இப்படிப் பல செய்தும்) இறக்கலாகாதவளாகிய
(நான்); அளியத்தேன் – இரங்கத் தக்கவள்.

—————

‘இணை அறு வேள்வி மேல்நாள் இயற்றி, ஈன்று எடுத்த எந்தை
புணை உறு திரள் தோள் ஆர்த்து, பூழியில் புரளக் கண்டேன்;
மணவினை முடித்து, என் கையை மந்திர மரபின் தொட்ட
கணவனை இனைய கண்டால் அல்லது, கழிகின்றேனோ? 43-

மேல்நாள் – முன்னொரு காலத்தில்; இணை அறு வேள்வி இயற்றி
– ஒப்பற்ற பெரு வேள்வியைச் செய்து; ஈன்று எடுத்த தந்தை –
(என்னைப்) பெற்றெடுத்து (வளர்த்த) என் தந்தையாகிய சனகனது;
புணைஉறுதிரள் தோள் – பகைவராகிய கடலைக் கடத்தற்குப் புணை
போல் நின்று உதவும் இயல்பு அமைந்த வலிய திரண்ட தோள்கள்;
ஆர்த்து பூமியில் புரளக் கண்டேன் – பகைவரால் கட்டப்பட்டுப்
பூமியில் புரளுவதைக் கண்ட (நான்); மணவினை முடித்து – திருமணச்
சடங்கைச் செய்து முடித்து; என் கையை மந்திர மரபின் தொட்ட
கணவனை – என் கையை மந்திரங்களில் கூறிய முறைப்படி பிடித்த
கணவனாகிய இராமனை; இனைய கண்டால் அல்லது – இவ்வாறு
பகைவரால் கட்டப்பட்டுப் பூமியில் புரளுவதைக் கண்டால் தான்;
கழிகின்றேனோ – உயிர் நீங்குவேனோ?

————–

‘அன்னைமீர்! ஐயன்மீர்! என் ஆர் உயிர்த் தங்கைமீரே!
என்னை ஈன்று எடுத்த எந்தைக்கு எய்தியது யாதும் ஒன்று
முன்னம் நீர் உணர்ந்திலீரோ? உமக்கு வேறு உற்றது உண்டோ?
துன்ன அரு நெறியின் வந்து, தொடர்ந்திலீர்; துஞ்சினீரோ? 44-

அன்னை மீர் – தாய்மார்களே! ஐயன்மீர் – பெரியோர்களே! என்
ஆர் உயிர்த் தங்கைமீரே – என் அருமையான உயிர் போன்ற
தங்கைமார்களே! என்னை ஈன்று எடுத்த எந்தைக்கு – என்னைப்
பெற்றெடுத்த என் தந்தைக்கு; எய்தியது யாதும் – நிகழ்ந்துள்ள நிலை
எதனையும்; ஒன்று முன்னம் நீர் உணர்ந்திலீரோ – சிறிதும் முன்பு
நீங்கள் அறியவில்லையா? உமக்கு வேறு உற்றது உண்டோ –
(இதுபோலவே) உங்களுக்கும் வேறு துன்பம் நிகழ்ந்தது உண்டோ?
துன்ன அரு நெறியின் வந்து தொடர்ந்திலீர் – நெருங்குதற்கு
அருமையான வழியில் வந்து (தந்தையைத்)

——————

‘மேருவின் உம்பர்ச் சேர்ந்து, விண்ணினை மீக்கொண்டாலும்,
நீருடைக் காவல் மூதூர் எய்தலாம் நெறியிற்று அன்றால்; போரிடைக்
கொண்டாரேனும், வஞ்சனை புணர்ந்தாரேனும், ஆர் உமக்கு
அறையற்பாலார்? அனுமனும் உளனோ, நும் பால்? 45-

மேருவின் உம்பர்ச் சேர்ந்து – மேருமலையின் மேல் இடத்துக்குப்
போய்; விண்ணினை மீக்கொண்டாலும் – ஆகாயத்தைக்
கைப்பற்றினாலும்; நீருடைக் காவல் மூதூர் – நீரினால் சூழப்பெற்ற
கட்டுக்காவல் நிறைந்த பழமையான ஊராகிய இலங்கை; எய்தலாம்
நெறியிற்று அன்றால் – அடைவதற்கு உரிய தன்மையுடையதன்று;
போரிடைக் கொண்டாரேனும் – (தந்தையே) உன்னைப் போர் செய்து
கைப்பற்றிப் பிணித்து வந்தாரேனும்; வஞ்சனை புணர்த்தாரேனும் –
வஞ்சனை செய்து கைப்பற்றிப் பிணித்து வந்தாரேனும்; நும்பால்
அனுமனும் உளனோ – உங்களிடம் அனுமன் இருக்கிறானா?
இல்லையே; ஆர் உமக்கு அறையற்பாலார் – உங்களுக்கு
நிகழ்ந்ததைச் சொல்லக் கூடியவர் யாவர்?

———

‘சரதம்; மற்று இவனைத் தந்தார், தவம் புரிந்து ஆற்றல் தாழ்ந்த
பரதனைக் கொணர்தற்கு ஏதும் ஐயுறவு இல்லை; பல் நாள்
வரதனும் வாழ்வான் அல்லன்; தம்பியும் அனையன வாழான்;
விரதம் உற்று, அறத்தில் நின்றார்க்கு, இவைகொலாம் விளைவ மேன்மேல்? 46-

இவனைத் தந்தார் – இந்தச் சனக மன்னனைப் பற்றிக் கொண்டு
வந்த பகைவர்; தவம் புரிந்து – நந்தியம்பதியில் அயிர்த்து
நோக்கினும் தென்திசை அன்றி வேறு திசை நோக்காது தவம் செய்து;
ஆற்றல் தாழ்ந்த பரதனைக் கொணர்தற்கு – வலிமை குறைந்துள்ள
பரதனைப் பற்றிக்கொண்டு வருவதற்கு; ஏதும் ஐயுறவு இல்லை சரதம்
மற்று – எந்தவிதமான ஐயப்பாடும் இல்லை அது உண்மை; பல்நாள்
வரதனும் வாழ்வான் அல்லன் – (பரதன் பகைவர் கைப்பட்டால்) பல
நாள்கள் வேண்டியார்க்கு வேண்டத் தக்கது அறிந்து ஈயும் இராமனும்
வாழ மாட்டான்; தம்பியும் அனையன் – இலக்குவனும் அவ்வாறே
வாழமாட்டான்; விரதம் உற்று – விரதத்தைக் கைக்கொண்டு; அறத்தில்
நின்றார்க்கு – அற வழியில் ஊன்றி நிற்பவர்களுக்கு; மேன்மேல்
விளைவ இவை கொலாம் – மேலும் மேலும் விளையத் தக்கவை
இவையே தான் போலும்.

அறத்தின் வெற்றியைப் பேசவந்த காப்பியத்தில் அறச்
சோதனைகள் மிகுதி. மாயா சனகப் படலம் அத்தகைய அறச்
சோதனைப் படலமாகும். பாவம் மகிழ்ச்சியால் பொங்க அறம்
தடுமாறிச் சாயும் நிலையில் தொடங்கும் இப்படலம் கும்பகருணன்
மரணச் செய்தி கேட்டுப் பாவம் பதைத்து விழ அறம் உள்ளே
மகிழும் காட்சியோடு முடிவதை உன்னுக.

————–

‘”அடைத்தது கடலை; மேல் வந்து அடைந்தது, மதிலை; ஆவி
துடைத்தது பகையை, சேனை” எனச் சிலர் சொல்லச் சொல்ல,
படைத்தது ஓர் உவகைதன்னை, வேறு ஒரு வினயம் பண்ணி,
உடைத்தது விதியே’ என்று என்று, உளைந்தனள், உணர்வு தீர்வாள். 47-

கடலை அடைத்தது – (குரங்குப் படையானது) கடலைச் சேது
கட்டித் தடுத்தது; மதிலை மேல் வந்து அடைந்தது – (இலங்கை)
மதிலை எதிர்த்து வந்து சேர்ந்தது; பகையை ஆவி துடைத்தது சேனை
– பகைவர்களின் உயிரைக் குடித்தது படை; எனச் சிலர் சொல்லச்
சொல்ல – என்று சிலர் சொல்லும் தோறும் சொல்லும் சோறும்;
படைத்தது ஓர் உவகை தன்னை – (நான்) அடைந்ததான ஒப்பற்ற
பெரு மகிழ்ச்சியை; வேறு ஒரு வினயம் பண்ணி – வேறு ஒரு சூழ்ச்சி
செய்து; உடைத்தது விதியே என்று என்று – கெடுத்தது

———

சீதையை இணங்குமாறு மீண்டும் இராவணன் வேண்டுதல்

ஏங்குவாள் இனைய பன்ன, இமையவர் ஏற்றம் எல்லாம்
வாங்கும் வாள் அரக்கன் ஆற்ற மனம் மகிழ்ந்து, இனிதின் நோக்கி,
‘தாங்குவாள் அல்லள் துன்பம்; இவளையும் தாங்கி, தானும்
ஓங்குவான்’ என்ன உன்னி, இனையன உரைக்கலுற்றான்; 48-

ஏங்குவாள் இனைய பன்ன – துன்பத்தால் வருந்துபவளாகிய சீதை
இவ்வாறு சொல்ல; இமையவர் ஏற்றம் எல்லாம் வாங்கும் வாள்
அரக்கன் – இமையவர்களுடைய பெருமையை எல்லாம் நீக்கும்
வாட்படையை உடைய இராவணன்; ஆற்ற மனம் மகிழ்ந்து – மிக
மனம் மகிழ்ந்து; இனிதின் நோக்கி – காதலோடு பார்த்து; துன்பம்
தாங்குவாள் அல்லள் – (இச்சீதை இனிமேல்) துன்பத்தைத் தாங்க
மாட்டாள்; இவளையும் தாங்கி – எனவே இவளைத் தாங்கிக் காத்து;
தானும் ஓங்குவான் – தானும் (இவள் மனத்தில்) ஓங்கிய இடம்
பெறலாம்; என்ன உன்னி – என்று எண்ணி; இனையன
உரைக்கலுற்றான் – இவ்வாறான சொற்களைச் சொல்லத்
தொடங்கினான்.

—————–

‘காரிகை! நின்னை எய்தும் காதலால், கருதலாகாப்
பேர் இடர் இயற்றலுற்றேன்; பிழை இது பொறுத்தி; இன்னும்,
வேர் அற மிதிலையோரை விளிகிலேன்; விளிந்த போதும்,
ஆர் உயிர் இவனை உண்ணேன்; அஞ்சலை, அன்னம் அன்னாய்! 49-

காரிகை – அழகியே! அன்னம் அன்னாய் – அன்னப் புள் போன்ற
நடையழகு உடையவளே!; நின்னை எய்தும் காதலால் – உன்னை
அடைய வேண்டும் என்ற பெரு விருப்பத்தால்; கருதலாகாப் பேர்
இடர் இயற்றலுற்றேன் – எண்ணவும் கூடாத பெருந் துன்பத்தைச்
செய்யத் தொடங்கி விட்டேன்; இது பிழை பொறுத்தி – இச்செயல்
தவறானது (இதனை நீ) பொறுத்துக் கொள்; இன்னும் வேர் அற
மிதிலையோரை விளிகிலேன் – இன்னும் கூட (நான்) முழுமையாக
அழியும்படி மிதிலையில் உள்ளவர்கள் மீது சினம் கொள்ளவில்லை;
விளிந்த போதும் ஆர் உயிர் இவனை உண்ணேன் – (அவ்வாறு)
சினந்த போதும் கூட இந்தச் சனகனுடைய அருமையான உயிரைக்
கொன்றழியேன்; அஞ்சலை – அஞ்சாதே.

—————–

‘இமையவர் உலகமேதான், இவ் உலகு ஏழுமேதான்,
அமைவரும் புவனம் மூன்றில் என்னுடை ஆட்சியே தான்,
சமைவுறத் தருவென், மற்று இத் தாரணி மன்னற்கு; இன்னல்
சுமையுடைக் காம வெந் நோய் துடைத்தியேல், தொழுது வாழ்வேன். 50-

இன்னல் சுமையுடைக் காம வெந்நோய் – துன்பததைத் தரும்
சுமையாக உள்ள (என்) காமம் ஆகிய கொடிய நோயைத்;
துடைத்தியேல் – (நீ எனக்கு உடன்பட்டுப்) போக்குவாய் ஆனால்;
மற்று இத்தாரணி மன்னற்கு – இந்த மலர் மாலை அணிந்த விதேக
நாட்டு அரசனாகிய சனகனுக்கு; இமையவர் உலகமே தான் – தேவர்
உலகமாயினும்; இவ் உலகு ஏழுமே தான் – எழு தீவுகளாக உள்ள இந்த நிலவுலகமாயினும்; அமைவரும் புவனம் மூன்றில் –
பொருந்தி விளங்குகிற மூன்று உலகங்களிலும்; என்னுடை ஆட்சியே
தான் – (செலுத்தப்படும்) என்னுடைய ஆட்சிச் செல்வமாயினும்;
சமைவுறத் தருவென் – முழுதுமாகக் கொடுப்பேன்; தொழுது
வாழ்வேன் – மேலும் உன்னை எப்பொழுதும் தொழுது வாழ்வேன்.

————

‘இலங்கை ஊர் இவனுக்கு ஈந்து, வேறு இடத்து இருந்து வாழ்வேன்;
நலம் கிளர் நிதி இரண்டும் நல்குவென்; நாமத் தெய்வப்
பொலம் கிளர் மானம்தானே பொது அறக் கொடுப்பென்; புத்தேள்
வலம் கிளர் வாளும் வேண்டில், வழங்குவென்; யாதும் மாற்றேன். 51-

இவனுக்கு இலங்கை ஊர் ஈந்து – (இவன் விரும்பினால்) இந்தச்
சனகனுக்கு இலங்கை ஊரினைக் கொடுத்து; வேறு இடத்து இருந்து
வாழ்வேன் – வேறு ஓரூரில் இருந்து வாழ்கிறேன்; நலம் கிளர் நிதி
இரண்டும் நல்குவென் – நன்மை விளங்குகிற சங்க நிதி பதுமநிதி
இரண்டினையும் (இவனுக்குக்) கொடுப்பேன்; நாமத் தெய்வப் பொலம்
கிளர் மானம் – சிறப்புடைய தெய்வத் தன்மை பொருந்திய அழகு
விளங்குகிற புட்பக விமானத்தை; பொது அறத்தானே கொடுப்பென் –
பிறருக்கு உரிமை என்ற பொதுத் தன்மை நீங்க இவனுக்கு
உரிமையானதாகக் கொடுப்பேன்; புத்தேள் வலம் கிளர் வாழும்
வேண்டில் வழங்குவென் – தேவர்கள் வலி தொலைக்கும் சிவபிரான்
தந்த வெற்றி விளங்குகிற சந்திர காசம் என்ற வாளை விரும்பினாலும்
(அதனையும்) கொடுப்பேன்; யாதும் மாற்றேன் – (கேட்கும்)
எதனையும் மறுத்து உரைக்க மாட்டேன்.

———–

‘இந்திரன் கவித்த மௌலி, இமையவர் இறைஞ்சி ஏத்த,
மந்திர மரபின் சூட்டி, வானவர் மகளிர் யாரும்
பந்தரின் உரிமை செய்ய, யான் இவன் பணியில் நிற்பேன்-
சுந்தரப் பவள வாய் ஓர் அருள் மொழி சிறிது சொல்லின். 52-

சுந்தரப் பவள வாய் – (சீதையே) உன் அழகிய சிறந்த பவளம்
போன்ற வாயினால்; ஓர் அருள் மொழி சிறிது சொல்லின் – ஒப்பற்ற
கருணைச் சொல்லினைச் சிறிதாகச் சொன்னால்; இந்திரன் கவித்த
மௌலி – (நான்) இந்திரன் தலையில் தரித்துள்ள மௌலியை;
இமையவர் இறைஞ்சி ஏத்த – தேவர்கள் தலையால் வணங்கி வாயால்
துதிக்க; மந்திர மரபின் சூடி – மந்திரஞ் சொல்ல முறைப்படி
அணிவித்து; வானவர் மகளிர் யாரும் – தேவ மகளிர் எல்லாரும்;
பந்தரின் உரிமை செய்ய – பந்தல் போலச் சுற்றிச் சூழ்ந்து உரிய
பணிகளைச் செய்ய; இவன் பணியில் யான் நிற்பேன் – இந்தச்
சனகன் இட்ட கட்டளைப்படி நான் நடப்பேன்.

————–

‘எந்தை தன் தந்தை தாதை, இவ் உலகு ஈன்ற முன்னோன்,
வந்து இவன் தானே வேட்ட வரம் எலாம் வழங்கும்; மற்றை
அந்தகன் அடியார் செய்கை ஆற்றுமால்; அமிழ்தின் வந்த
செந்திரு நீர் அல்லீரேல், அவளும் வந்து, ஏவல் செய்யும். 53-

சீதையே நீ எனக்கு இணங்குவாய் ஆனால்) எந்தை – என்
தந்தையாகிய விச்சிரவசு முனிவன்; தன் தந்தை – தன் தந்தை ஆகிய
புலத்திய முனிவனது; தாதை – தந்தையும், இவ்உலகு ஈன்ற முன்னோன் – இவ்வுலகங்களை எல்லாம் படைத்த பழையோனும் ஆகிய
பிரமன்; தானே வந்து இவன் வேட்ட வரம் எலாம் வழங்கும் –
தானே வந்து இச்சனகன் விரும்பிக் கேட்ட வரங்கள் எல்லாவற்றையும்
கொடுப்பான்; மற்றை அந்தகன் அடியார் செய்கை ஆற்றுமால் –
மேலும் இயமன் அடிமைகள் செய்யும் பணி செய்வான்; நீர்
அமிழ்தின் வந்த செந்திரு அல்லீரேல் – நீர் பாற்கடலில் தோன்றிய
அமிழ்தத்தோடு உடன் உதித்த திருமகள் அல்லீராயின; அவளும்
வந்து ஏவல் செய்யும் – அத்திருமகளும் வந்து (உமக்குக்) குற்றவேல்
செய்வாள்.

பிரமன், புலத்தியன், விச்சிரவசு, இராவணன் எனக் கால்வழி
கொள்க.

————–

‘தேவரே முதலா, மற்றைத் திண்திறல் நாகர், மண்ணோர்,
யாவரும் வந்து, நுந்தை அடி தொழுது, ஏவல் செய்வார்;
பாவை! நீ இவனின் வந்த பயன் பழுது ஆவது அன்றால்;
மூவுலகு ஆளும் செல்வம் கொடுத்து, அது முடித்தி’ என்றான். 54-

தேவரே முதலா – தேவர்கள் முதலாக; மற்றைத் திண் திறல்
நாகர் – மற்றும் உள்ள மிக்க வலிமை படைத்த நாகர்கள்; மண்ணோர்
– நிலவுலகத்தவர்கள் (ஆகிய); யாவரும் வந்து – எல்லோரும் திரண்டு
வந்து; நுந்தை அடி தொழுது – உன் தந்தையாகிய சனகனது
திருவடிகளைத் தொழுது; ஏவல் செய்வார் – கட்டளை இட்ட
தொழிலைச் செய்வார்கள்; பாவை – ஓவியப்பாவை போன்றவளே; நீ
இவனின் வந்த பயன் பழுது ஆவது அன்றால் – நீ இந்தச்
சனகனுக்குப் பிறந்ததனால் (அவன் பெறப் போகும்) நன்மை பழுது
படாதது ஆகும்; மூ உலகு ஆளும் செல்வம் கொடுத்து – (உன்
தந்தைக்கு நீ) மூன்று உலகங்களையும் ஆளும் செல்வச் சிறப்பைக்
கொடுத்து; அது முடித்தி என்றான் – நீ பிறந்ததன் பயனை முடிப்பாய்
என்றான்.

———–

சீதை சினந்து உரைத்தல்

‘இத் திருப் பெறுகிற்பானும், இந்திரன்; இலங்கை நுங்கள்
பொய்த் திருப் பெறுகிற்பானும், வீடணன்; புலவர் கோமான்
கைத் திருச்சரங்கள் உன் தன் மார்பிடைக் கலக்கற்பால;
மைத் திரு நிறத்தான் தாள் என் தலைமிசை வைக்கற்பால. 55-

இத்திருப் பெறுகிற்பானும் இந்திரன் – (நீ சனகனுக்குக் கொடுக்கப்
போகிறேன் என்று சொன்ன) இந்தச் செல்வத்தைப் பெறப் போகிறவன்
இந்திரன்; இலங்கை நுங்கள் பொய்த் திருப் பெறுகிற்பானும்
வீடணன் – இலங்கையையும் உங்களுடைய பொய்மையான
செல்வத்தையும் பெறப் போகிறவன் வீடணன்; புலவர் கோமான் –
தேவர்களின் தலைவனாகிய இராமனின்; கைத்திருச் சரங்கள் – கையில்
உள்ள அழகிய அம்புகள்; உன் தன் மார்பிடைக் கலக்கற்பால –
உன்னுடைய மார்பில் தைத்தற்கு உரியன; மைத்திரு நிறத்தான் –
அஞ்சன அழகு நிறத்தவனாகிய இராமனின்; தாள் என் தலை மிசை
வைக்கற்பால – திருவடிகள் என் தலையின் மீது வைத்தற்கு உரியவை.

—————-

‘நகுவன நின்னோடு, ஐயன் நாயகன் நாம வாளி,
புகுவன போழ்ந்து, உன் மார்பில் திறந்தன புண்கள் எல்லாம்
தகுவன இனிய சொல்லத் தக்கன; சாப நாணின்,
உகுவன மலைகள் எஞ்ச, பிறப்பன ஒலிகள் அம்மா! 56-

ஐயன் நாயகன் நாம வாளி – வியப்புக்குரிய (என்) தலைவனாகிய
இராமபிரானின் அச்சம் தரும அம்புகள்; நின்னோடு நகுவன –
உன்னோடு சிரிப்பனவாய்; உன் மார்பில் புகுவன போழ்ந்து –
உன்னுடைய மார்பில் புகுந்து பிளந்து; திறந்தன புண்கள் எல்லாம் –
திறந்தனவாகிய புண்கள் எல்லாம்; தகுவன இனிய சொல்லத் தக்கன –
தகுதி உடையனவாகிய நன்மை தரக் கூடியவற்றைச் சொல்லத் தக்கனவாகும்; உகுவன மலைகள்
எஞ்ச – கீழே விழுவனவாகிய மலைகளும் (அஞ்சிப்) பின்னிடும்படி;
சாபநாணின் பிறப்பன ஒலிகள் அம்மா – வில் நாணில் இருந்து
ஒலிகள் பிறக்க இருக்கின்றன.

————

‘சொல்லுவ மதுர மாற்றம், துண்டத்தால் உண்டு, உன் கண்ணைக்
கல்லுவ, காகம்; வந்து கலப்பன, கமலக் கண்ணன்
வில் உமிழ் பகழி; பின்னர், விலங்கு எழில் அலங்கல் மார்பம்
புல்லுவ, களிப்புக் கூர்ந்து, புலவு நாறு அலகை எல்லாம். 57-

கமலக் கண்ணன் – தாமரைக் கண்ணனாகிய இராமனது; வில்
உமிழ் பகழி – வில்லில் இருந்து வெளிப்படும் அம்புகள்; விலங்கு
எழில் அலங்கல் மார்பம் புல்லுவ – எழில் விளங்குகின்ற மாலையை
அணிந்த மார்பில் வந்துசேரப் போகின்றன; காகம் மதுர மாற்றம்
சொல்லுவ – காக்கைகள் ஒன்றோடொன்று இனிய மொழிகளைச்
சொல்லுவனவாய்; உன் கண்ணை துண்டத்தால் உண்டு கல்லுவ –
உன்னுடைய கண்களை மூக்கினால் கொத்தித் தோண்டி உண்ணப்
போகின்றன; பின்னர் புலவு நாறு அலகை எல்லாம் – அதற்குப்
பின்னர் புலால் நாற்றம் வீசுகின்ற பேய்கள் எல்லாம்; களிப்புக்
கூர்ந்து புல்லுவ – மகிழ்ச்சி மிகுந்து உன்னைத் தழுவப் போகின்றன.

————–

‘விரும்பி நான் கேட்பது உண்டால், நின்னுழை வார்த்தை; “வீரன்
இரும்பு இயல் வயிர வாளி இடறிட, எயிற்றுப் பேழ் வாய்ப்
பெரும் பியல் தலைகள் சிந்திப் பிழைப்பிலை முடிந்தாய்” என்ன,
அரும்பு இயல் துளவப் பைந்தார் அனுமன் வந்து அளித்த அந்நாள். 58-

வீரன் – வீரப் பெருமகனாகிய இராமபிரானது; இரும்பு இயல் வயிர
வாளி இடறிட – இரும்பால் செய்யப்பட்ட வலிமையான அம்புகள்
இடறித் தள்ளுவதால்; எயிற்றுப் பேழ்வாய்ப் – பற்களைக் கொண்ட
பிளவுபட்ட வாயினை உடைய; பெரும்பியல் தலைகள் – பெரிய
பிடரொடு கூடிய தலைகள்; சிந்திப் பிழைப்பிலை முடித்தாய் என்ன –
வெட்டித் தள்ளப்பட்டு பிழைத்தல் இன்றி முடிந்து போனாய் என்று;
அரும்பு இயல் துளவப் பைந்தார் அனுமன் – அரும்புகளால் கூடிய
பசிய துளசி மாலையை அணிந்த அனுமன்; வந்து அளித்த அந்நாள்
– வந்து கருணையோடு சொல்லப் போகிற அந்த நாளில்; நின்னுழை
வார்த்தை – உன்னைப் பற்றிய சொற்களை; விரும்பி நான் கேட்பது
உண்டால் – நான் மிக விருப்பத்தோடு கேட்கப் போவது உண்டு.

—————-

‘புன் மகன்! கேட்டி, கேட்டற்கு உரியது; புகுந்த போரின்,
உன் மகன் உயிரை எம்மோய் சுமித்திரை உய்ய ஈன்ற
நன் மகன் வாளி நக்க, நாய் அவன் உடலை நக்க,
‘என் மகன் இறந்தான்’ என்ன, நீ எடுத்து அரற்றல்’ என்றாள். 59-

புன்மகன் – அற்பமகனே; கேட்டற்கு உரியது கேட்டி –
கேட்பதற்கு உரியனவற்றை (மீண்டும்) கேட்பாய்; புகுந்த போரின் –
எதிர்வர உள்ள போரில்; உன் மகன் உயிரை – உன் மகனுடைய
உயிரை; எம்மோய் சுமித்திரை – எமது தாயாகிய சுமித்திரை; உய்ய
ஈன்ற – (உலகில்) நன்மை நிலைப்பெறப் பெற்ற; நன்மகன் –
நற்பண்புகள் உள்ள மகனாகிய இலக்குவன்; வாளி நக்க – அம்புகள்
பட்டு அழித்தலால்; அவன் உடலை நாய் நக்க – அவனுடைய
உயிரற்ற உடலை நாய்கள் நக்கும் போது; என் மகன் இறந்தான்
என்ன – என் மகன் இறந்து பட்டானே என்று சொல்லிக் கொண்டு; நீ எடுத்து அரற்றல் என்றாள் – நீ பெரும்
குரல் எழுப்பிப் புலம்புதல் ஆகும் என்று கூறினால் சீதை.

————-

இராவணன் சீதையைக் கொல்ல முயல மகோதரன் தடுத்து உரைத்தல்

வெய்யவன் அனைய கேளா, வெயில் உக விழித்து, வீரக் கை பல பிசைந்து,
பேழ் வாய் எயிறு புக்கு அழுந்தக் கவ்வி, தையல்மேல் ஓடலோடும்,
மகோதரன் தடுத்தான்; ‘ஈன்ற மொய் கழல் தாதை வேண்ட,
இசையும்; நீ முனியல்’ என்றான். 60-

வெய்யவன் அனைய கேளா – கொடிய தன்மை உள்ளவனாகிய
இராவணன் அதனைக் கேட்டு; வெயில் உக விழித்து – வெப்பம்
வெளிப்படுமாறு சினந்து விழித்துப் பார்த்து; வீரக் கை பல பிசைந்து –
வீரம் நிறைந்த (தன் இருபது) கைகளையும் பிசைந்து; பேழ்வாய்
எயிறு புக்கு அழுந்தக்கவ்வி – பிளந்த வாயில் உள்ள பற்கள்
உதடுகளில் அழுந்தப் பதியும்படி கடித்து; தையல் மேல் ஓடலோடும் –
சீதையைக் (கொல்ல) விரைந்து ஓடிய போது; மகோதரன் தடுத்தான் –
மகோதரன் (அவன் செல்வதைத்) தடுத்து; ஈன்ற மொய்கழல் தாதை
வேண்ட இசையும் – தன்னைப் பெற்ற நெருங்கிய வீரக்கழல் அணிந்த
தந்தையாகிய (கட்டுண்ட மாயாசனகன்) வேண்டிக் கேட்டுக்
கொண்டால் (சீதை) இணங்குவாள்; நீ முனியல் என்றான் – நீ (இவள்
மீது) சினவாதே என்று கூறினான்.

—————–

மாயாசனகன் இராவணன் கருத்துக்கு இணங்குமாறு சீதையைக் கூறுதல்

அன்று அவன் விலக்க மீண்டான் ஆசனத்து இருக்க, ‘ஆவி
பொன்றினன் ஆகும்’ என்னத் தரையிடைக் கிடந்த பொய்யோன்,
‘இன்று இது நேராய் என்னின், என்னை என் குலத்தினோடும்
கொன்றனை ஆதி’ என்னா, இனையன கூறலுற்றான்: 61-

அன்று – அப்போது; அவன் விலக்க மீண்டான் – அந்த
மகோதரன் தடுக்கத் திரும்பியவனாகிய இராவணன்,; ஆசனத்து
இருக்க – (அருகில் இருந்த) ஆசனத்தில் அமர; ஆவி பொன்றினன்
ஆகும் என்ன – உயிரை விட்டு விட்டான் போலும் என்று (கண்டோர்
எண்ணுமாறு); தரையிடைக் கிடந்த பொய்யோன் – நிலத்தில்
கட்டுப்பட்டுக் கிடந்த பொய்யோனாகிய மாயாசனகன்; இன்று இது
நேராய் என்னின் – இப்போது இந்த இராவணன் உடைய
வேண்டுகோளை ஏற்காய் என்றால்; என்னை என் குலத்தினோடும்
கொன்றனை ஆதி – என்னை என் குலத்தோடு கொன்றவள் ஆவாய்;
என்னா – என்று; இனையன கூறலுற்றான் – இத்தகைய சொற்களைச்
சொல்லத் தொடங்கினான்.

———

‘பூவின்மேல் இருந்த தெய்வத் தையலும் பொதுமை உற்றாள்
பாவி! யான் பயந்த நங்கை! நின் பொருட்டாகப் பட்டேன்;
ஆவி போய் அழிதல் நன்றோ? அமரர்க்கும் அரசன்
ஆவான் தேவியாய் இருத்தல் தீதோ? சிறையிடைத் தேம்புகின்றாய்! 62-

பூவின் மேல் இருந்த தெய்வத்தையலும் – செந்தாமரை மலரின்
மேல் தங்கி உள்ள தெய்வப் பெண்ணாகிய திருமகளும்; பொதுமை
உற்றாள் – திருமாலுக்கு மட்டுமன்றிப் பிற செல்வத்தை உடையவர்
அனைவருக்கும் பொதுவாதலை அடைந்தாள்; பாவி யான் பயந்த
நங்கை – பாவியே! நான் பெற்ற பெண்ணே; நின் பொருட்டாகப்
பட்டேன் – உன் காரணமாகச் சிறைப்பட்டேன்; ஆவி போய் அழிதல்
நன்றோ – (உனக்காக) என் உயிர் போய் (நான்) அழிந்து படுதல்
நல்லதா? அமரர்க்கும் அரசன் ஆவான் – தேவர்களுக்கும் அரசனாய்
உள்ளவன் ஆன இராவணனது; தேவியாய் இருத்தல் தீதோ –
தேவியாய் இருத்தலில் (என்ன) தீது? சிறையிடைத் தேம்புகின்றாய் –
(எதற்காக) சிறையில் இருந்தது நினைத்து நினைத்து வருந்துகிறாய்.

————

என்னை என் குலத்தினோடும் இன் உயிர் தாங்கி, ஈண்டு
நல் நெடுஞ் செல்வம் துய்ப்பேன் ஆக்கினை நல்கி, நாளும் உன்னை
வெஞ் சிறையின் நீக்கி, இன்பத்துள் உய்ப்பாய்’ என்னா,
பொன் அடி மருங்கு வீழ்ந்தான், உயிர் உகப் பொருமுகின்றான். 63-

உயிர் உகப் பொருமுகின்றான் – உயிர் நீங்கி விடுமோ எனக்
(கண்டோர் எண்ணுமாறு) புலம்புகின்றவனாகிய மாயா சனகன்;
என்னை என் குலத்தினோடும் இன் உயிர் தாங்கி – என்னுடையதும்
என் குலத்தில் உள்ளாரதுமான இனிய உயிரைக் காப்பாற்றி; ஈண்டு
நல்நெடுஞ் செல்வம் துய்ப்பேன் ஆக்கினை நல்கி – இவ்வுலகில்
நெடுங்காலம் நிற்கும் செல்வத்தை அனுபவிப்பவனாக ஆக்கிக்
கொடுத்து; உன்னை வெஞ்சிறையில் நீக்கி – உன்னைக் கொடிய
சிறையில் இருந்து நீக்குவித்து; நாளும் இன்பத்துள் உய்ப்பாய் என்னா
– எந்நாளும் (அனைவரையும்) இன்பத்தை அனுபவிக்கச் செய்வாய்
என்று கூறி; பொன் அடி மருங்கு வீழ்ந்தான் – (சீதையின்) அழகிய
திருவடிகளிடத்து விழுந்து வணங்கினான்.

—————

சீதை மாயா சனகனைக் கடிந்துரைத்தல்

அவ் உரை கேட்ட நங்கை, செவிகளை அமையப் பொத்தி,
வெவ் உயிர்த்து, ஆவி தள்ளி, வீங்கினள், வெகுளி பொங்க,
‘இவ் உரை எந்தை கூறான், இன் உயிர் வாழ்க்கை பேணி;
செவ்வுரை அன்று இது’ என்னாச் சீறினள், உளையச் செப்பும்: 64-

அவ் உரை கேட்ட நங்கை – அந்தச் சொற்களைக் கேட்ட
பெண்ணாகிய சீதை; செவிகளை அமையப் பொத்தி – (தன்)
காதுகளைக் கைகளால் இறுக்கமாக மூடிக்கொண்டு; வெவ் உயிர்த்து –
வெப்பமான பெருமூச்சு விட்டு; ஆவி தள்ளி – உயிர் (போய் விட்டது
எனும்படி) மயக்கமடைந்து; வெகுளி பொங்க வீங்கினள் – சினம் மிகப்
பொங்கக் கிளர்ந்து எழுந்து; இன் உயிர் வாழ்க்கை பேணி – இனிய
உயிருடன் வாழும் வாழ்க்கையைச் சிறப்பு எனக் கருதி; எந்தை
இவ்உரை கூறான் – என் தந்தையாகிய சனகன் இப்படிப்பட்ட
சொற்களைச் சொல்ல மாட்டான்; செவ்வுரை அன்று இது என்னா –
இது செம்மையான சொற்களும் அல்ல என்று; சீறினள் உளையச்
சொன்னாள் – சீறி (மாயா சனகனின்) மனம் வருந்தும்படி கூறத்
தொடங்கினாள்.

————–

அறம் கெட, வழக்கு நீங்க, அரசர்தம் மரபிற்கு ஆன்ற
மறம் கெட, மெய்ம்மை தேய, வசை வர, மறைகள் ஓதும்
திறம் கெட, ஒழுக்கம் குன்ற, தேவரும் பேணத் தக்க
நிறம் கெட, இனைய சொன்னாய்; சனகன்கொல், நினையின்? ஐயா! 65-

அறம் கெட – அறம் ஒழிய; வழக்கு நீங்க – (தொன்று தொட்டு
வரும்) வழக்கு முறை அழிய; அரசர் தம் மரபிற்கு ஆன்ற மறம்
கெட – அரசர்களுடைய குலத்துக்குப் பொருந்திய சிறந்த வீரம்
தொலைய; மெய்ம்மை தேய – சத்தியம் குறைபட; வசைவர – பழி
(தேடி) வர; மறைகள் ஓதும் திறம் கெட – வேதங்கள் குறிப்பிட்டுள்ள
கொள்கைகள் மாய; ஒழுக்கம் குன்ற – நல்லொழுக்கம் சிதைந்து கெட;
தேவரும் பேணத் தக்க நிறம்கெட – தேவர்களும் விரும்பிக்
காப்பாற்றத் தக்க புகழ்த் திறமாகிய ஒளி மழுங்க; இனைய சொன்னாய்
– இத்தன்மையான சொற்களைச் சொன்னாய்; நினையின் ஐயா சனகன்
கொல் – எண்ணிப் பார்த்தால் ஐயா (நீ) சனகன்தானோ?

————-

‘வழி கெட வரினும், தம் தம் வாழ்க்கை தேய்ந்து இறினும், மார்பம்
கிழிபட அயில் வேல் வந்து கிடைப்பினும், ஆன்றோர் கூறும்
மொழிகொடு வாழ்வது அல்லால், முறை கெடப் புறம் நின்று ஆர்க்கும்
பழி பட வாழ்கிற்பாரும் பார்த்திவர் உளரோ? பாவம்! 66-

வழி கெட வரினும் – தங்களுடைய கால்வழியே அழியும் நிலைமை
வரினும்; தம் தம் வாழ்க்கை தேய்ந்து இறினும் – தத்தமுடைய
வாழ்க்கையே தேய்ந்து அழிந்து போவதாயினும்; மார்பம் கிழிபட
அயில் வேல் வந்து கிடைப்பினும் – மார்பு கிழிபடுமாறு கூர்மையான
வேல் வந்து எதிர்ப்படினும்; ஆன்றோர் கூறும் மொழிகொடு வாழ்வது
அல்லால் – சான்றோர் கூறும் நன் மெழியைக் கைக்கொண்டு
வாழ்வதல்லாது; முறை கெடப் – அறவழி நீங்கப்; புறம் நின்று
ஆர்க்கும் பழிபட வாழ்கிற்பாரும் பார்த்திபர் – மறைவில் இருந்து
(பலர்) ஒலித்துப் பழி தூற்றும்படி வாழ்பவர்களாகிய அரசர்,; உளரோ
– உன்னைத் தவிர்வேறு யாராவது உண்டா?; பாவம் – பாவம்.

—————-

‘நீயும், நின் கிளையும், மற்று இந் நெடு நில வரைப்பும்,
நேரே மாயினும், முறைமை குன்ற வாழ்வெனோ?-வயிரத் திண்
தோள் ஆயிர நாமத்து ஆழி அரியினுக்கு அடிமை செய்வேன்-
நாயினை நோக்குவேனோ, நாண் துறந்து, ஆவி நச்சி? 67-

நீயும் நின் கிளையும் – நீயும் உன் உறவினர்களும்; மற்று
இந்நெடுநில வரைப்பும் – மேலும் இந்த நீண்ட நிலப்பரப்பில் உள்ள
மக்களும்; நேரேமாயினும் – (என் கண்ணுக்கு) நேராக அழியினும்,
முறைமை குன்ற வாழ்வெனோ – ஒழுக்க முறைமை அழிய வாழும்
வாழ்வை வாழ்வேனோ? (வாழேன்); வயிரத் திண் தோள் ஆயிர
நாமத்து ஆழி அரியினுக்கு – வயிரம் போன்ற வலிய தோள்களை
உடைய ஆயிரம் திருநாமத்துக்குரிய சக்கரப் படை தாங்கிய
திருமாலின் திருவவதாரமான இராமபிரானுக்கு; அடிமை செய்வேன் –
அடிமை செய்பவள் ஆகிய (நான்); நாண் துறந்து – நாணத்தைக்
கைவிட்டு; ஆவி நச்சி – உயிர் வாழ்வதை விரும்பி; நாயினை
நோக்குவேனோ – நாய் போன்ற (இராவணனை) கண்ணாலும்
கருத்தாலும் பார்ப்பேனோ!

—————

‘வரி சிலை ஒருவன் அல்லால், மைந்தர் என் மருங்கு வந்தார்
எரியிடை வீழ்ந்த விட்டில் அல்லரோ? அரசுக்கு ஏற்ற
அரியொடும் வாழ்ந்த பேடை, அங்கணத்து அழுக்குத் தின்னும்
நரியொடும் வாழ்வது உண்டோ -நாயினும் கடைப்பட்டோ னே! 68-

நாயினும் கடைப்பட்டோனே – நாயினை விடக் கீழ்மைப்
பட்டவனே! வரிசிலை ஒருவன் அல்லால் -கட்டமைந்த வில்லேந்திய
ஒப்பற்ற இராமபிரான் அல்லாமல்; என் மருங்கு வந்தார் மைந்தர் –
என் பக்கலில் வந்த (வேற்று) ஆடவர்கள்; எரியிடை வீழ்ந்த விட்டில்
அல்லரோ – விளக்கு எரியில் விழுந்த விட்டில் பூச்சிபோல் உயிர்
அழிவர் அல்லவா?; அரசுக்கு ஏற்ற அரியொடும் வாழ்ந்த பேடை –
விலங்குகளின் அரசனாகும் தன்மை உடைய ஆண் சிங்கத்தோடு
வாழ்ந்த ஒரு பெண் சிங்கம்; அங்கணத்து அழுக்குத் தின்னும் –
புழக்கடையில் அழுக்கைத் தேடித் தின்னும்; நரியொடும் வாழ்வது
உண்டோ – நரியுடன் கூடி வாழ்வது எங்கேனும் உண்டோ?

————

‘அல்லையே எந்தை; ஆனாய் ஆகதான்; அலங்கல் வீரன்
வில்லையே வாழ்த்தி, மீட்கின் மீளுதி; மீட்சி என்பது
இல்லையேல், இறந்து தீர்தி; இது அலால், இயம்பல் ஆகாச்
சொல்லையே உரைத்தாய்; என்றும் பழி கொண்டாய்’ என்னச் சொன்னாள். 69-

எந்தை அல்லயே – (இத்தகு இழி சொற்களைக் கூறிய நீ) என்
தந்தை அல்லை; ஆனாய் ஆகதான் – (அவ்வாறு நீ என் தந்தை)
ஆனாலும் ஆக; அலங்கல் வீரன் வில்லையே வாழ்த்தி – வெற்றி
மாலையணிந்த வீரனாகிய இராமபிரானது வில்லையே வாழ்த்திக் கூறி;
மீட்கின் மீளுதி – (அவன்) மீட்டால் மீள்வாயாக; மீட்சி என்பது
இல்லையேல் இறந்து தீர்தி – (பகைவர் கட்டில் இருந்து) மீட்கும்
செயல் நிகழவில்லையானால் இறந்து ஒழிக; இது அலால் – இத்தகு
செயல்கள் அல்லாமல்; இயம்பல் ஆகாச் சொல்லையே உரைத்தாய் –
சொல்லத் தகாத சொற்களைச் சொல்லுகிறாயே; என்றும் பழி
கொண்டாய் – (இச்சொற்களால்) என்றும் மாயாப் பழியை
ஏற்றுக்கொண்டாய்; என்னச் சொன்னாள் – என்று சீதை கூறினாள்.

————

இராவணன் மாயாசனகனைக் கொல்ல வாள் உருவுதல்

வன் திறல் அரக்கன், அன்ன வாசகம் மனத்துக் கொள்ளா,
‘நின்றது நிற்க; மேன்மேல் நிகழ்ந்தவா நிகழ்க; நின்முன்
நின்றவன் அல்லன் போலாம் சனகன்; இக் கணத்தினின் முன்
கொன்று உயிர்குடிப்பென்’ என்னா, சுரிகைவாள் உருவிக் கொண்டான். 70-

வன்திறல் அரக்கன் – கொடிய வலி படைத்த அரக்கனாகிய
இராவணன்; அன்ன வாசகம் மனத்துக் கொள்ளா – (சீதை கூறிய)
அத்தன்மையான (கடுமையான) சொற்களை மனத்திலே கொண்டு;
நின்றது நிற்க – (உன் மனதில்) இருப்பது இருக்கட்டும்; மேன்மேல்
நிகழ்ந்தவா நிகழ்க – மேலும் மேலும் நடப்பவைகள் நடக்கட்டும்;
நின்முன் நின்றவன் அல்லன் போலாம் சனகன் – உன் கண்முன்
நின்றவன் சனகன் அல்லன் போலும் (என்று எண்ணுகிறாய்); முன்
இக்கணத்தினின் கொன்று உயிர் குடிப்பென் என்னா – (எனவே
உன்) முன் இக்கணத்திலேயே அவனைக் கொன்று (அவனது) உயிரைக்
குடிப்பேன் (என்று சொல்லி); சுரிகை வாள் உருவிக் கொண்டான் –
வாளை உருவிக் (கையில் எடுத்துக்) கொண்டான்.

————–

சீதையின் பதில் உரை

‘என்னையும் கொல்லாய்; இன்னே இவனையும் கொல்லாய்; இன்னும்
உன்னையும் கொல்லாய்; மற்று, இவ் உலகையும் கொல்லாய்; யானோ
இன் உயிர் நீங்கி, என்றும் கெடாப் புகழ் எய்துகின்றேன்;
பின்னையும், எம் கோன் அம்பின் கிளையொடும் பிழையாய்’ என்றாள். 71-

என்னையும் கொல்லாய் – உன்னால் என்னையும் கொல்ல
முடியாது; இன்னே இவனையும் கொல்லாய் – இது போலவே இந்த
மாயாசனகனையும் கொல்ல முடியாது; இன்றும் உன்னையும்
கொல்லாய் – மேலும் நீ உன்னையும் கொன்று கொள்ள முடியாது;
மற்று இவ் உலகையும் கொல்லாய் – இவ்வுலகில் உள்ள மக்களையும்
உன்னால் கொல்ல முடியாது; யானோ இன் உயிர் நீங்கி என்றும் –
யான் (வேண்டுமானால்) என்னுடைய இனிய உயிர் நீங்குமாறு செய்து
எப்பொழுதும்; கெடாப் புகழ் எய்துகின்றேன் – அழியாத பெரும்
புகழை அடையப் போகின்றேன்; பின்னையும் – அதற்குப் பின்பு;
எம்கோன் அம்பின் கிளையொடும் பிழையாய் – எம் தலைவனாகிய
இராமனது அம்பினால் (நீ) சுற்றத்தவருடன் பிழைத்திருக்க மாட்டாய்;
என்றாள் – என்று சீதை கூறினாள்.

————

மாயா சனகனைக் கொல்லச் சென்ற இராவணனை மகோதரன் தடுத்தல்

‘இரந்தனன் வேண்டிற்று அல்லால், இவன் பிழை இழைத்தது உண்டோ?
புரந்தரன் செல்வத்து ஐய! கொல்கை ஓர் பொருளிற்றோதான்;
பரந்த வெம் பகையை வென்றால், நின்வழிப் படரும் நங்கை;
அரந்தையன் ஆகும் அன்றே, தந்தையை நலிவதாயின்?’ 72-

புரந்தரன் செல்வத்து ஐய – இந்திரனது செல்வத்தைப் பெற்ற
ஐயனே! இரந்தனன் வேண்டிற்று அல்லால் – (இந்தச் சனகன்
சீதையிடம்) இரந்து வேண்டிக் கொண்டது அல்லாமல்; இவன் பிழை
இழைத்தது உண்டோ – இவன் (உனக்கு ஏதேனும்) குற்றம் செய்தது
உண்டோ? கொல்கை ஓர் பொருளிற்றோதான் – ஆதலால் இவனைக்
கொல்லுவது ஒரு பொருளுடைய செயலாகுமா? பரந்த வெம் பகையை
வென்றால் – (நம் இலங்கையைச் சூழ்ந்து) பரந்துள்ள கொடிய
பகைவன் ஆகிய இராமனை வெற்றி கொண்டால்; நங்கை நின்
வழிப்படரும் – சீதை உன் வழிக்கு வருவாள்; தந்தையை நலிவதாயின்
– (அவளது) தந்தையைத் துன்பப்படுத்தினால்; அரந்தையள் ஆகும்
அன்றே – (அவள்) துன்பப்படுவாள் அல்லவா?

———–

கும்ப கருணன் இறந்தமையை இராவணன் அறிதல்

என்று அவன் விலக்க, மீண்டு, ஆண்டு இருந்தது ஓர் இறுதியின் கண்,
குன்று என நீண்ட கும்பகருணனை இராமன் கொல்ல,
வன் திறல் குரங்கின் தானை வான் உற ஆர்த்த ஓதை,
சென்றன செவியினூடு, தேவர்கள் ஆர்ப்பும் செல்ல, 73-

என்று அவன் விலக்க – என்ற கூறி மகோதரன் இராவணனைத்
தடுக்க; மீண்டு ஆண்டு இருந்தது ஓர் இறுதியின் கண் – அவன்
திரும்பி அங்கு இருந்த காலத்தில்; குன்று என நீண்ட
கும்பகருணனை – மலை போல் ஓங்கிய பெருந்தோற்ற முள்ள
கும்பகருணனை; இராமன் கொல்ல – இராமன் கொன்று விட்டதனால்;
வன்திறல் குரங்கின் தானை – மிகு வலி படைத்த குரங்குப்படை;
வான் உற ஆர்த்த ஓதை – வானத்தைச் சென்று சேரும்படி எழுப்பிய
வெற்றிப் பேரொலி; தேவர்கள் ஆர்ப்பும் – தேவர்கள் எழுப்பிய
மகிழ்ச்சியொலியுடன்; செவியினூடு செல்ல சென்றன – (இராவணன்)
காதுகளில் பரவி விழுந்தன.

————–

‘உகும் திறல் அமரர் நாடும், வானர யூகத்தோரும்,
மிகும் திறம் வேறொன்று இல்லா இருவர் நாண் ஒலியும், விஞ்ச,
தகும் திறன் நினைந்தேன்; எம்பிக்கு அமரிடைத் தனிமைப்பாடு
புகுந்துளது உண்டு’ என்று உள்ளம் பொருமல் வந்து உற்ற போழ்தின். 74-

திறல் உகும் அமரர் – (என்னால்) வலி கெட்டழிந்த தேவர்களும்;
நாடும் வானர யூகத்தோரும் – (போர் செய்ய) நாடுகின்ற வானரப்
படை அணியினரும்; மிகும் திறம் வேறொன்று இல்லா இருவர் நாண்
ஒலியும் – (பிற எவ்வில்லும்) (தங்கள் வில்நாண்) ஒலியை மிக்கு
ஒலிக்கும் தன்மை இல்லாத இராம லக்குவரின் வில் நாண் ஒலியும்;
விஞ்ச தகும் திறன் நினைந்தேன் – (ஒன்றை ஒன்று) மிக்கு ஒலிக்கத்
தக்க காரணத்தை நினைத்தேன்; எம்பிக்கு அமரிடைத் தனிமைப்பாடு
புகுந்துளது உண்டு – (அது) என் தம்பிக்குப் போர்க்களத்தில் தனியாக
இருக்கவேண்டிய நிலை நேர்ந்துள்ளதனால் போலும்; என்று உள்ளம்
பொருமல் வந்து உற்ற போழ்தின் – என்று எண்ணி மனத்தில்
துன்பம் வந்து சேர்ந்த நேரத்தில்.

—————

புறந்தரு சேனை முந்நீர் அருஞ் சிறை போக்கி, போதப்
பறந்தனர் அனைய தூதர் செவி மருங்கு எய்தி, பைய,
‘திறம் திறம் ஆக நின்ற கவிப் பெருங் கடலைச் சிந்தி,
இறந்தனன், நும்பி; அம்பின் கொன்றனன், இராமன்’ என்றார். 75-

புறந்தரு சேனை முந்நீர் அருஞ்சிறை போக்கி – (இராவணனைக்
காக்கின்ற) சேனைக் கடலாகிய அரிய காவலைக் கடந்து; போதப்
பறந்தனர் அனைய தூதர் – (இராவணனிடம்) செல்லப் பறந்து வந்த
தூதர்கள்; செவி மருங்கு எய்தி – (இராவணனை) நெருங்கி அவனது
காதுக்கு அருகில் சென்று; பைய – மிக மெதுவாக; திறம் திறம் ஆக
நின்ற கவிப் பெருங் கடலைச் சிந்தி – கூட்டம் கூட்டமாக (எதிர்த்து)
நின்ற வானரப் படையாகிய கடலைச் சிதற அழித்து; நும்பி
இறந்தனன் – உன் தம்பியாகிய கும்பகருணன் இறந்து பட்டான்;
இராமன் அம்பின் கொன்றனன் என்றார் – இராமன் (அவனை)
அம்பினால் கொன்றான் என்று சொன்னார்கள்.
புறந்தருதல் – பாதுகாத்தல் ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே
(புறம் – 312) என வருதல் காண்க. போது – விரைவாக, பைய –
மெதுவாக,செய்தியின் தன்மை கருதிய அச்சத்தால் இவ்வாறு கூறினர்
என்க. சேனை முந்நீர், கவிப் பெருங்கடல் – உருவகங்கள்.

——–

இராவணன் அழுது அரற்றுதல்

ஊரொடும் பொருந்தித் தோன்றும் ஒளியவன் என்ன, ஒண் பொன்
தாரொடும் புனைந்த மௌலி தரையொடும் பொருந்த, தள்ளி,
பாரொடும் பொருந்தி நின்ற மராமரம், பணைகளோடும்
வேரொடும் பறிந்து, மண்மேல் வீழ்வதே போல, வீழ்ந்தான். 76-

ஊரொடும் பொருந்தித் தோன்றும் ஒளியவன் என்ன –
ஊர்கோளோடு பொருந்தி விளங்குகிற கதிரவன் போல; ஒண்
பொன்தாரொடும் புனைந்த மௌலி – ஒளி பொருந்திய பொன்னால்
ஆகிய மாலைகளினால் அழகு படுத்தப்பட்ட மகுடங்கள்; தரையொடும்
பொருந்தத் தள்ளி – பூமியில் சென்று சேரும்படி தள்ளி விட்டுவிட்டு;
பாரொடும் பொருந்தி நின்ற மராமரம் – நிலத்தில் பொருந்தி நின்ற
மராமரமானது; பணைகளோடும் – தன் வலிய கிளைகளோடு;
வேரொடும் பறிந்து – வேரொடு பறித்தலுண்டு; மண்மேல் வீழ்வதே
போல வீழ்ந்தான் – நிலத்தின் மேல் வீழ்வது போல (இராவணன்)
விழுந்தான்.

——————-

பிறிவு எனும் பீழை தாங்கள் பிறந்த நாள் தொடங்கி என்றும்
உறுவது ஒன்று இன்றி, ஆவி ஒன்றென நினைந்து நின்றான்,
எறி வரும் செருவில் தம்பி தன்பொருட்டு இறந்தான் என்ன
அறிவு அழிந்து, அவசன் ஆகி, அரற்றினன், அண்டம் முற்ற. 77-

தாங்கள் பிறந்த நாள் தொடங்கி – தாங்கள் ஒன்றாகப் பிறந்த
நாள் தொடங்கி; பிறிவு எனும் பீழை – பிரிவு என்கின்ற துன்பம்;
என்றும் உறுவது ஒன்று இன்றி – எப்பொழுதும் நேருதல் (என்ற)
ஒன்று இல்லாமையால்; ஆவி ஒன்றென நினைந்து நின்றான் –
(இருவருக்கும் உடல் இரண்டு) உயிர் ஒன்று என நினைத்திருந்தவனான
இராவணன்; எறி வரும் செருவில் – படைக் கலங்களை எறிந்து
செய்யும் போரில்; தம்பி தன் பொருட்டு இறந்தான் என்ன –
கும்பகருணன் தனக்காக இறந்தான் என்பதைத் (தூதுவர்) சொல்லக்
கேட்டு; அறிவு அழிந்து – அறிவு கெட்டு; அவசன் ஆகி – துக்கம்
மிக்கவனாகி; அண்டம் முற்ற அரற்றினன் – அண்டத்தளவு சென்று
சேருமாறு பெருங்குரல் எடுத்து அரற்றத் தொடங்கினான்.

—————-

தம்பியோ! வானவர் ஆம் தாமரையின் காடு உழக்கும்
தும்பியோ! நான்முகத்தோன் சேய்மதலை தோன்றாலோ!
நம்பியோ! இந்திரனை நாமப் பொறி துடைத்த
எம்பியோ! யான் உன்னை இவ் உரையும் கேட்டேனோ! 78-

தம்பியோ – (நீ எனக்குத்) தம்பி மட்டும் தானா? வானவர் ஆம்
தாமரையின் காடு உழக்கும் தும்பியோ – தேவர்களாகிய
தாமரைக்காட்டைக் கலக்கி அழிக்கவல்ல மதயானை போன்றவனே;
நான்முகத்தோன் சேம் மதலை தோன்றாலோ – நான்கு முகங்களை
உடைய பிரமன் மகனாகிய புலத்தியன் மகனான விச்சிராவசுவின்
வழித் தோன்றியவனே; நம்பியோ – ஆடவர் திலகனே; இந்திரனை
நாமப்பொறி துடைத்த எம்பியோ –

—————

‘மின் இலைய வேலோனே! யான் உன் விழி காணேன்,
நின் நிலை யாது என்னேன், உயிர் பேணி நிற்கின்றேன்;
உன் நிலைமை ஈது ஆயின், ஓடைக் களிறு உந்திப்
பொன்னுலகம் மீளப் புகாரோ, புரந்தரனார்? 79-

மின் இலைய வேலோனே – ஒளி பொருந்திய இலை வடிவில்
அமைந்த வேற்படையை ஏந்தியவனே; யான் உன் விழிகாணேன் –
யான் (நீ இறக்கும் போது) உன் அருகிருந்து கண்ணால் சாவைக்
காணாதவனானேன்; நின் நிலை யாது என்னேன் – போர்க்களத்தில்
உன் நிலை எவ்வாறு உள்ளது என வினவி அறியாதவன் ஆனேன்;
உயிர் பேணி நிற்கின்றேன் – மேலும் என் உயிரைப் (பெரிதென
மதித்து அதனைப்) பாதுகாத்துக் கொண்டு நிற்கின்றேன்; உன்
நிலைமை ஈது ஆயின் – உன்னுடைய நிலை இவ்வாறு
இருக்குமானால்; ஓடைக் களிறு உந்தி – நெற்றிப் பட்டமணிந்த
(ஐராவதம் என்னும்) யானையைச் செலுத்திக் கொண்டு; புரந்தரனார்
பொன்னுலகம் மீளப் புகாரோ – இந்திரன் தன் இந்திரலோகத்துக்கு
மீண்டும் புக மாட்டானோ? புகுவன்;.

————–

‘வல் நெஞ்சின் என்னை நீ நீத்துப் போய், வான் அடைந்தால்,
இன்னம் சிலரோடு ஒரு வயிற்றின் யார் பிறப்பார்?
மின் அஞ்சும் வேலோய்! விழி அஞ்ச வாழ்கின்றார்,
தம் நெஞ்சம் தாமே தடவாரோ, தானவர்கள்? 80-

மின் அஞ்சும் வேலோய் – மின்னலும் அஞ்சும்படி ஒளி வீசுகின்ற
வேல் படையை உடையவனே; என்னை நீ வன் நெஞ்சின் நீத்துப்
போய் – என்னை நீ வலிய நெஞ்சுடையவனாக விட்டுப் போய்,; வான்
அடைந்தால் – வீரர் உலகு அடைந்தால்; இன்னம் – இனிமேல்;
சிலரோடு ஒரு வயிற்றின் பிறப்பார் யார் – சிலருடன் ஒரு (தாய்)
வயிற்றில் பிறக்க (விரும்புபவர்) யார்? விழி அஞ்ச வாழ்கின்றார் –
கண் (எதிரில் வர) அஞ்சி வாழ்கின்றவர்களாகிய; தானவர்கள் –
தனுவின் வழி வந்த அசுரர்கள்; தம் நெஞ்சம் தாமே தடவாரோ – தம்
மார்பைத் தாமே தடவிக் கொண்டு வரமாட்டார்களா?

—————–

‘கல் அன்றோ, நீராடும் காலத்து, உன் கால் தேய்க்கும்-
மல் ஒன்று தோளாய்!-வட மேரு? மானுடவன்
வில் ஒன்று நின்னை விளிவித்துளது என்னும்
சொல் அன்றோ என்னைச் சுடுகின்றது, தோன்றால்! 81-

மல் ஒன்று தோளாய் – (மற்போர்) வலி பொருந்திய தோள்களை
உடையவனே; வடமேரு – வடக்கில் உள்ள மேருமலை; நீராடும்
காலத்து – (நீ) நீராடும் பொழுது; உன் கால் தேய்க்கும் – உன்
பாதத்தை (அழுக்குப் போகும்படி) தேய்ப்பதற்கு; கல் அன்றோ –
(பயன்படும்) கல் அல்லவா? தோன்றால் – ஆடவர்களில் சிறந்தவனே;
மானுடவன் வில் ஒன்று – (அத்தகு வலியுடை) உன்னை மனிதனின்
வில்லில் (இருந்து வந்த) அம்புகளில் ஒன்று,; விளித்துளது என்னும் –
இறக்குமாறு செய்தது என்கின்ற; சொல் அன்றோ என்னைச்
சுடுகின்றது – சொல் அல்லவா என்னை மிகவும் வருத்தப்படச்
செய்கின்றது.

————–

‘மாண்டனவாம், சூலமும், சக்கரமும், வச்சிரமும்;
தீண்டினவா ஒன்றும் செயல் அற்றவாம்; தெறித்து,
மீண்டனவாம்; மானிடவன் மெல் அம்பு மெய் உருவ,
நீண்டனவாம்; தாம் இன்னம் நின்றாராம், தோள் நோக்கி! 82-

மாண்டனவாம் – மாட்சிமைப்பட்டதாகிய; சூலமும் – (சிவனது)
சூலாயுதமும்; சக்கரமும் – (திருமாலுக்கு உரிய) சக்கராயுதமும்;
வச்சிரமும் – (இந்திரனது) வச்சிராயுதமும்; தீண்டினவா ஒன்றும்
செயல் அற்றவாம் – (முன்பு) உன்மீது தீண்டினவாகி ஒன்றும்
செய்யமுடியாது செயல் அற்றுத்; தெறித்து மீண்டனவாம் – தெறித்து
(அப்பால்) போய்விட்டன; மானிடவன் மெல் அம்பு – (இப்போதே)
மனிதன் எய்த மென்மையான அம்புகள்; மேய் உருவ நீண்டனவாம் –
(உன்) உடம்பைத் துளைக்கும்படி நீண்டு (வலியொடு) வந்தனவாம்;
தாம் இன்னம் நின்றாராம் தோள் நோக்கி – இந்நிலையில்
இராவணன் இன்னும்கூடத் தன்தோளைப் பார்த்துக் கொண்டிருந்தாராம்.
(என்னே இது)

—————-

‘நோக்கு அறவும் எம்பியர்கள் மாளவும், இந் நொய்து இலங்கை
போக்கு அறவும் மாதுலனார் பொன்றவும், என் பின் பிறந்தாள்
மூக்கு அறவும், வாழ்ந்தேன் – ஒருத்தி முலைக் கிடந்த
ஏக்கறவால்; இன்னம் இரேனோ, உனை இழந்தும்? 83-

எம்பியர்கள் நோக்கு அறவும் மாளவும் – என் தம்பியர்கள்
பார்ப்பதற்குக் கூட இல்லாமல் இறந்து படவும்; இ இலங்கை நொய்து
போக்கு அறவும் – இந்த இலங்கை எளிமையாக (பகைவர் கையில்)
பட்டு விடவும்; மாதுலனார் பொன்றவும் – மாமனாகிய மாரீசன்
இறக்கவும்; என்பின் பிறந்தாள் மூக்கு அறவும் – என்பின்
பிறந்தவளாகிய (சூர்ப்பநகை) மூக்கை இழக்கவும்,; ஒருத்தி முலைக் கிடந்த ஏக்கறவால் – ஒரு பெண்ணின் முலையிடத்துக் கொண்ட
ஆசையால் தாழ்ந்தேன்; வாழ்ந்தேன் – (மானம் இன்றி) இன்னும்
உயிருடன் இருக்கிறேன்; உனை இழந்தும் இன்னம் இரேனோ –
உன்னை இழந்தும் இன்னும் (உயிருடன்) இருக்க மாட்டேனோ?

———–

‘தன்னைத்தான், தம்பியைத்தான், தானைத் தலைவனைத் தான்,
மன்னைத்தான், மைந்தனைத்தான், மாருதத்தின் காதலைத்தான்,
பின்னைக் கரடிக்கு இறையைத்தான், பேர் மாய்த்தாய்
என்னத்தான் கேட்டிலேன்; என் ஆனவாறு இதுவே! 84-

தன்னைத்தான் – இராமன் தன்னைத்தான்; தம்பியைத் தான் –
தம்பியாகிய இலக்குவனைத்தான்; தானைத் தலைவனைத் தான் –
வானர சேனைத் தலைவனாகிய நீலனைத்தான்; மன்னைத் தான் –
வானர அரசன் ஆகிய சுக்ரீவனைத்தான்; மைந்தனைத்தான் – (வாலி)
மகனாகிய அங்கதனைத் தான்; மாருதத்தின் காதலைத் தான் –
காற்றின் காதல் மைந்தன் ஆகிய அனுமனைத் தான்; பின்னைக்
கரடிக்கு இறையைத்தான் – மற்றும் கரடிகளுக்குத் தலைவன் ஆகிய
சாம்பவானைத்தான்; பேர் மாய்த்தாய் என்னத் தான் கேட்டிலேன் –
பேரே இல்லாமல் செய்து கொன்றாய் என்று கேட்டேனில்லை; என்
ஆனவாறு இதுவே – (உனக்கு இச்சாவு) எப்படி ஆனது அதன்
தன்மை இதுவா.

——————-

‘ஏழை மகளிர் அடி வருட, ஈர்ந் தென்றல்
வாழும் மணி அரங்கில், பூம் பள்ளி வைகுவாய்!
சூழும் அலகை துணங்கைப் பறை துவைப்ப,
பூழி அணைமேல் துயின்றனையோ, போர்க்களத்தே? 85-

ஏழை மகளிர் அடிவருட – பணிப் பெண்கள் காலைப் பிடிக்க;
ஈர்ந்தென்றல் வாழும் மணி அரங்கில் – குளிர்ந்த தென்றல் காற்று
வாழ்ந்து வீசுகிற அழகிய பள்ளி அரங்கில்; பூம்பள்ளி வைகுவாய் –
அழகிய (மெல்லிய) படுக்கையில் படுத்திருந்தவனே! போர்க்களத்தே –
போர்க்களத்தின் கண்; சூழும் அலகை – சூழ்ந்துள்ள பேய்கள்;
துணங்கைப் பறை துவப்ப – துணங்கைக் கூத்துப் பறை போல் ஒலி
எழுப்ப; பூழி அணை மேல் துயின்றனையோ – புழுதிப் படுக்கை
(மேல்) படுத்து உறங்கினாயோ.

———-

‘செந் தேன் பருகித் திசை திசையும் நீ வாழ,
உய்ந்தேன்; இனி, இன்று நானும் உனக்கு ஆவி
தந்தேன், பிரியேன், தனி போகத் தாழ்க்கிலேன்,
வந்தேன் தொடர; மதக் களிறே! வந்தேனால்’. 86-

மதக் களிறே – மதம் கொண்ட யானை போன்றவனே! செந்தேன்
பருகித் – சிவந்த நிறமுள்ள மதுவை உண்டு; திசை திசையும் நீ வாழ
– பல திசைகளிலும் சென்று நீ (வெற்றி பெற்றுச் சிறந்து) வாழ,
உய்ந்தேன் – (நான் பாதுகாப்பாக) வாழ்ந்திருந்தேன்; இனி இன்று
நானும் உனக்கு ஆவி தந்தேன் – இனிமேல் இப்பொழுது நானும்
உனக்காக உயிரைத் தந்தவனாகிப்; பிரியேன் – பிரியாமல்; தொடர
வந்தேன் – உன்னைத் தொடர்ந்து வந்திட்டேன்; தனிப்போகத்
தாழ்க்கிலேன் வந்தேனால் – (நீ) தனியே செல்லக் காலம்
தாழ்த்தாதவனாய் வந்து விடுகிறேன்.

————-

இராவணன் கதறச் சீதை மகிழ்தல்

அண்டத்து அளவும் இனைய பகர்ந்து அழைத்து,
பண்டைத் தன் நாமத்தின் காரணத்தைப் பாரித்தான்;
தொண்டைக் கனிவாய் துடிப்ப, மயிர் பொடிப்ப,
கெண்டைத் தடங் கண்ணாள் உள்ளே கிளுகிளுத்தாள். 87-

இனைய பகர்ந்து – இத்தகைய சொற்களைச் சொல்லி; அண்டத்து
அளவும் அழைத்து – வானமுகட்டு அளவு அரற்றல் குரல் எட்டும்படி
கூவி அழைத்து; பண்டைத் தன் நாமத்தின் காரணத்தைப்
பாரித்தான் – பழமையான தன் பெயரின் காரணத்தைப் பலரும் அறிய
வளர்த்தான்; கெண்டைத் தடங்கண்ணாள் – கெண்டை மீன் போல்
பிறழும் பெரிய கண்ணை உடைய சீதை; தொண்டைக் கனிவாய்
துடிப்ப – கொவ்வைக் கனி போன்ற சிவந்த உதடுகள் துடிக்க; மயிர்
பொடிப்ப – மயிர்க் கூச்செறிய; உள்ளே கிளுகிளுத்தாள் – மனத்தின்
உள்ளே குதூகலிப்புக் கொண்டாள்.

——————

வீங்கினாள் கொங்கை; மெலிந்த மெலிவு அகல
ஓங்கினாள்; உள்ளம் உவந்தாள்; உயிர் புகுந்தாள்;
தீங்கு இலாக் கற்பின் திருமடந்தை சேடி ஆம்
பாங்கினாள் உற்றதனை யாரே பகர்கிற்பார்? 88-

கொங்கை வீங்கினாள் – (சீதை மகிழ்வால்) கொங்கை பூரித்தாள்.
மெலிந்த மெலிவு அகல ஓங்கினாள் – (உடல்) இளைத்த இளைப்பு
எல்லாம் நீங்கப் பருத்தாள்; உள்ளம் உவந்தாள் – மனம் மிக
மகிழ்ந்தாள்; உயிர் புகுந்தாள் – இதுவரை (அச்சத்தால் உயிர் உண்டோ இலையோ என்றிருந்தவள்) உயிரே மீண்டும் பெற்றாள்;
தீங்கு இலாக் கற்பின் திருமடந்தை – குற்றம் சிறிதும் இல்லாத
கற்பினை உடைய திருமகள், சேடி ஆம் பாங்கினாள் – தனக்குத்
தோழியாக இருக்கத்தக்க அழகுடையவளாகிய சீதை; உற்றதனை யாரே
பகர்கிற்பார் – அடைந்த மகி்ழ்ச்சி நிலையை யாரால் சொல்ல முடியும்.

————-

கண்டாள், கருணனை, தன் கண் கடந்த தோளானை;
கொண்டாள், ஒரு துணுக்கம்; அன்னவனைக் கொற்றவனார்
தண்டாத வாளி தடிந்த தனி வார்த்தை
உண்டாள் உடல் தடித்தாள்; வேறு ஒருத்தி ஒக்கின்றாள். 89-

தன் கண் கடந்த தோளானை – தன் கண்ணுக்கு அடங்காத
பேரழகு படைத்த தோளை உடைய இராமனையும்; கருணனை
கண்டாள் – கும்பகருணனையும் முன்பு கண்டு; ஒரு துணுக்கம்
கொண்டாள் – ஒப்பற்ற அச்சம் கொண்டவள் ஆகிய சீதை;
அன்னவனை – அத்தகைய பேருருவும் பெருவலியும் படைத்த
அவனை; கொற்றவனார் தண்டாதவாளி – வெற்றி பொருந்திய
இராமபிரானது தவறாமல் அழிக்கும் தன்மை வாய்ந்த அம்பு; தடிந்த
தனி வார்த்தை – அழித்த ஒப்பற்ற சொற்களை; உண்டாள் – மிக
விரும்பிக் கேட்டு,; உடல் தடித்தாள் – உடல் பூரிப்பு அடைந்தாள்;
வேறு ஒருத்தி ஒக்கின்றாள் – அதனால் வேறு ஒருத்தி போன்றவள்
ஆனாள்.

————

இராவணன் சீறி அகல்தல்

‘தாவ அரிய பேர் உலகத்து எம்பி சவத்தோடும்
யாவரையும் கொன்று அருக்கி, என்றும் இறவாத
மூவரையும், மேலை நாள் மூவா மருந்து உண்ட
தேவரையும், வைப்பேன் சிறை’ என்னச் சீறினான். 90-

தாவ அரிய பேர் உலகத்து – கடத்தற்கு அரிய மிகப் பரந்து பட்ட
நிலவுலகில் உள்ள; யாவரையும் – எல்லாரையும்; கொன்று – கொன்று
அழித்து; எம்பி சவத்தோடும் அருக்கி – என் தம்பியின் உயிரற்ற
உடலோடு அடங்குமாறு செய்து; என்றும் இறவாத மூவரையும் –
என்றைக்கும் இறந்து படாத (அரி அரன் அயன் என்ற) மூவரையும்;
மேலை நாள் மூவா மருந்து உண்ட தேவரையும் – முற்காலத்தில்
சாவா மருந்தாகிய அமிழ்தத்தை உண்ட தேவரையும்; சிறை
வைப்பேன் – சிறையில் வைப்பேன்; என்னச் சீறினான் – என்று
சீறினான்.

————–

அக் கணத்து, மந்திரியர் ஆற்ற சிறிது ஆறி,
‘இக் கணத்து மானிடவர் ஈரக் குருதியால் முக் கைப் புனல்
உகுப்பென், எம்பிக்கு’ என முனியா, திக்கு
அனைத்தும் போர் கடந்தான், போயினான், தீ விழியான். 91-

திக்கு அனைத்தும் போர் கடந்தான் – எல்லாத் திசைகளிலும்
சென்று போர் செய்து வெற்றி பெற்றவனாகிய இராவணன்; அக்கணத்து
மந்திரியர் ஆற்ற சிறிது ஆறி – அந்த நேரத்தில் அமைச்சர்கள்
ஆறுதல் கூறச் சிறிது (சினம்) தணிந்து; இக்கணத்து – இப்பொழுது;
மானிடவர் ஈரக் குருதியால் – மனுசரான இராம இலக்குவருடைய பச்சை இரத்தத்தால்,; எம்பிக்கு – என்
தம்பியாகிய கும்பகருணனுக்கு; முக்கைப் புனல் உகுப்பேன் – மூன்று
முறை கையால் இறைத்தல் ஆகிய நீர்க்கடன் செய்வேன்; என
முனியா – என்று சினந்து; தீ விழியான் போயினான் – (சினத்தால்) தீ
வெளிப்படும் கண்களை உடையவனாய்ச் சீதை இருக்கும் இடத்தை
விட்டு) அப்பால் போனான்.

—————

மகோதரன் போதல்

‘கூறோம், இனி நாம்; அக் கும்பகருணனார்
பாறு ஆடு வெங் களத்துப் பட்டார்’ எனப் பதையா,
‘வேறு ஓர் சிறை இவனை வைம்மின் விரைந்து’ என்ன,
மாறு ஓர் திசை நோக்கிப் போனார், மகோதரனார். 92-

இனி நாம் கூறோம் – இனிமேல் நாம் (வேறு ஒன்றும்)
சொல்வதற்கில்லை (ஏனெனில்); அக்கும்பகருணனார் பாறு ஆடு
வெங்களத்துப் பட்டார் – அந்தக் கும்பகருணனார் பருந்துகள்
பறக்கின்ற கொடிய போர்க்களத்தில் இறந்து அழிந்தார்; எனப் பதையா
-என்று சொல்லி உடல் பதைத்து; இவனை வேறு ஓர் சிறை விரைந்து
வைம்மின் என்ன – இந்த மாயாசனகனை மற்றொரு சிறையில்
விரைவாக அடைத்து வையுங்கள் என்று சொல்லிவிட்டு; மகோதரனார்
மாறு ஓர் திசை நோக்கிப் போனார் – மகோதரன் வேறு ஒரு
திசையை நோக்கிப் போனார்.

—————–

சீதையைத் திரிசடை தேற்றுதல்

வரி சடை நறு மலர் வண்டு பாடு இலாத்
துரிசு அடை புரி குழல் சும்மை சுற்றிய
ஒரு சடை உடையவட்கு உடைய அன்பினாள்,
திரிசடை தெருட்டுவாள், இனைய செப்புவாள்: 93-

வரிசடை நறுமலர் வண்டு பாடு இலாத் – அழகையும் நிறத்தையும்
கொண்ட மணம் மிக்க மலர்களில் மொய்க்கும் வண்டுகள் தங்குதல்
இல்லாத; துரிசு அடை புரிகுழல் – அழுக்கடைந்து முறுக்கு ஏறியுள்ள
கூந்தலைத்; சும்மை சுற்றிய ஒரு சடை உடையவட்கு – தொகுதியாகச்
சுற்றி வைத்துள்ள ஒரு சடையை உடையவளாகிய சீதையிடம்;
உடைய அன்பினாள் திரிசடை – மிக்குடைய அன்புடையவள் ஆகிய
திரிசடை என்பவள்; தெருட்டுவாள் – தேற்றுபவளாய்; இனைய
செப்புவாள் – இத்தகைய சொற்களைச் சொல்லத் தொடங்கினாள்.

————-

‘உந்தை என்று, உனக்கு எதிர் உருவம் மாற்றியே,
வந்தவன், மருத்தன் என்று உளன் ஓர் மாயையான்;
அந்தம் இல் கொடுந் தொழில் அரக்கன் ஆம்’ எனா,
சிந்தையன் உணர்த்தினள், அமுதின் செம்மையாள். 94-

உந்தை என்று – உன் தந்தை என்று சொல்லி; உனக்கு எதிர்
உருவம் மாற்றியே வந்தவன் – உனக்கு எதிராக உருவத்தை மாற்றிக்
கொண்டு வந்தவன்; ஓர் மாயையான் மருத்தன் என்று உளன் –
ஒப்பற்ற மாயத்தொழில் செய்யவல்ல மருத்தன் என்ற பெயர்
கொண்டவன் ஒருவன் உளன்; அந்தம் இல் கொடுந்தொழில்
அரக்கன் ஆம் எனா – (அவன்) எல்லையிட முடியாத கொடிய
தொழிலைச் செய்கின்ற அரக்கனாவான் என்று, அமுதின் செம்மையாள் – அமிழ்தம் போன்ற செம்மைச் செயலையுடையவள்
ஆகிய திரிசடை; சிந்தையின் உணர்த்தினள் – (சீதையின்) மனத்தில்
பதியும்படி கூறினாள்.

——————-

நங்கையும் அவள் உரை நாளும் தேறுவாள்,
சங்கையும் இன்னலும் துயரும் தள்ளினாள்;
இங்கு நின்று ஏகிய இலங்கை காவலன்
அங்கு நின்று இயற்றியது அறைகுவாம் அரோ. 95-

அவள் உரை நாளும் தேறுவாள் நங்கையும் – அந்தத்
திரிசடையின் சொல்லைக் கேட்டு எப்பொழுதும் ஆறுதல் அடையும்
சீதையும்; சங்கையும், இன்னலும் துயரும் தள்ளினாள் – (தன்
மனத்தில் இருந்த) ஐயத்தையும் (மனத்) துன்பத்தையும் (உடல்)
துயரையும் நீக்கினாள்; அங்கு நின்று ஏகிய இலங்கை காவலன் –
அவ்விடத்தில் இருந்து (சினத்தோடு) சென்ற இலங்கை காவலனாகிய
இராவணன்; அங்கு நின்று இயற்றியது அறைகுவாம் – தன்
அரண்மனையில் இருந்து செய்ததை இனிமேல் கூறுவோம்.

————-

மிகைப் பாடல்கள்

இம் மொழி அரக்கன் கூற, ஏந்திழை இரு காதூடும்
வெம்மை சேர் அழலின் வந்த வேல் வஞ்சி
நெஞ்சம் தீய்ந்தவள் ஆனாள்; மீட்டும் விம்முறும்
உளத்தினோடும் வெகுண்டு, இவை விளம்ப லுற்றான்: 54-1

மங்கையை, குலத்துளாளை, தவத்தியை முனிந்து, வாளால்
சங்கை ஒன்று இன்றிக் கொன்றான், குலத்துக்கே தக்கான்
என்று கங்கை அம் சென்னியானும் கண்ணனும் கமலத்தோனும்
செங்கைகள் கொட்டி உன்னைச் சிரிப்பரால், சிறுமை என்னா. 72-1

அம் தாமரையின் அணங்கு அதுவே ஆகி உற, நொந்து,
ஆங்கு அரக்கன் மிக நோனா உளத்தினன் ஆய்,
சிந்தாகுலமும் சில நாணும் தன் கருத்தின் உந்தா,
உளம் கொதித்து, ஆங்கு ஒரு வாசகம் உரைத்தான். 89-1

————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ கம்ப ராமாயணம்/யுத்த காண்டம்/15-கும்பகருணன் வதைப் படலம்–

November 2, 2020

பொருளடக்கம்
1 இராவணன் இலங்கை மீளுதல்
2 தூதரை அழைத்து வரக் கஞ்சுகியை இராவணன் ஏவுதல்
3 எண்திசைச் சேனைகளையும் கொணரத் தூதர்களை இராவணன் பணித்தல்
4 இராவணன் வருந்தி இருத்தல்
5 இராவணனிடம் மாலியவான் வினவுதல்
6 இராவணன் நிகழ்ந்தவை கூறல்
7 மாலியவான் உரை
8 மகோதரன் உரை

—————————————————

இராவணன் இலங்கை மீளுதல்
வாரணம் பொருத மார்பும், வரையினை எடுத்த தோளும்,
நாரத முனிவற்கு ஏற்ப நயம் பட உரைத்த நாவும்,
தார் அணி மவுலி பத்தும், சங்கரன் கொடுத்த வாளும்,
வீரமும், களத்தே போட்டு, வெறுங் கையே மீண்டு போனான். 1-

வாரணம் பொருதமார்பும் – திசையானைகளின் எதிர் சென்று
போரிட்டுத் தந்தங்கள் துளைத்த மார்பும்; வரையினை எடுத்த
தோளும் – கைலாயமலையை அள்ளி எடுத்த வலிமிகு தோளும்;
நாரத முனிவற்கேற்ப நயம்பட உரைத்த நாவும்- நாரத முனிவன்
நன்று நன்று என்று ஏற்குமாறு சாமவேதத்தை இசைநயத்தோடு
பாடிய நாவும்; தாரணி மௌலி பத்தும் – பத்துத்
தலைகளிலணிந்திருந்த மாலையணிந்த அரசச் சின்னமான மணிமுடி
பத்தும்; சங்கரன் கொடுத்த வாளும் – சிவபிரான் தவஆற்றல்
கண்டு கொடுத்த வாளும்; வீரமும் களத்தே போட்டு –
தன்னிடம் என்றும் நீங்காமல் இருந்த வீரப் பண்பினையும்
போர்க்களத்திலே போட்டு விட்டு; வெறுங்கையே மீண்டு
போனான் – தன்னிடமிருந்த பிறிதின் கிழமைப் பொருள்களையும்
தற்கிழமையாய உறுப்பு, குணம் ஆகியவற்றையும் இழந்து
வெறுங்கையனாய் இலங்கை நகருக்கு மீண்டும் போனான்.

——————-

கிடந்த போர் வலியார்மாட்டே கெடாத வானவரை எல்லாம்
கடந்து போய், உலகம் மூன்றும் காக்கின்ற காவலாளன்,
தொடர்ந்து போம் பழியினோடும், தூக்கிய கரங்களோடும்,
நடந்துபோய், நகரம் புக்கான்; அருக்கனும் நாகம் சேர்ந்தான். 2-

கிடந்தபோர் வலியார் மாட்டே- போர் செய்யும் வலிமை
பொருந்திய பெருவலியுடையவர்களிடம்; கெடாத வானவரை
யெல்லாம் – தோல்வியடையாத தேவர்களை எல்லாம்; கடந்து
போய் – வென்று மேல் சிறந்து; உலக மூன்றும் காக்கின்ற
காவலாளன்- மூவுலகங்களையும் காக்கும் காவல் தொழிலுடைய
மால்போல் விளங்கும் இராவணன்; தொடர்ந்து போம்
பழியினோடும் – என்றும் அழியாது பின்பற்றி வருகின்ற
பழியுடனும்; தூக்கிய கரங்களோடும் – எதிரியை வெல்ல
முடியாது வீணாகத்தொங்கும் இருபது கரங்களோடும்; நடந்து
போய் நகரம் புக்கான் – நாணத்தோடு நடந்து போய் இலங்கை
நகர் புக்கான்; அருக்கனும் நாகம் சேர்ந்தான் – சூரியன் அத்தகிரியை
அடைந்தான்.

————

மாதிரம் எவையும் நோக்கான், வள நகர் நோக்கான், வந்த
காதலர் தம்மை நோக்கான், கடல் பெருஞ் சேனை நோக்கான்,
தாது அவிழ் கூந்தல் மாதர் தனித் தனி நோக்க, தான் அப்
பூதலம் என்னும் நங்கைதன்னையே நோக்கிப் புக்கான். 3-

மாதிரம் எவையும் நோக்கான் – தோற்று நாணி நகர்
திரும்பும் இராவணன் தான் வென்ற திசைகளை நோக்கானாய்;
வளநகர் நோக்கான் – களிக்கின்றார் அலால் கவல்கின்றார்
ஒருவருமில்லாத வளநகரை நோக்கானாய்; வந்த காதலர்
தம்மை நோக்கான்- வெற்றி பெற்று வந்தபோது வரவேற்றது
போல் இப்போதும் வரவேற்க வந்த மக்களையும்,
மனைவியரையும் நோக்கானாய்; கடல் பெருஞ்சேனை
நோக்கான்- புக்க போர் எல்லாம் வெல்ல உதவிய கடல்
போல் பரந்த பெருஞ்சேனையை நோக்கானாய்; தாது அவிழ்
கூந்தல் மாதர்- விரிந்த மலரணிந்த கூந்தலையுடைய
மண்டோதரி முதலிய மனைவியர்; தனித்தனி நோக்க –
இராவணனின் நிலை கண்டு தனித்தனியாகப் பார்க்க; தான் –
இராவணன்; அப்பூதலம் என்னும் நங்கை தன்னையே –
பூமி தேவி என்ற பெண்ணையே; நோக்கிப் புக்கான் –
பார்த்த வண்ணம் நகரிலுள்ள அரண்மனை முற்றத்தில்
புகுந்தான்.

————

நாள் ஒத்த நளினம் அன்ன முகத்தியர் நயனம் எல்லாம்
வாள் ஒத்த; மைந்தர் வார்த்தை இராகவன் வாளி ஒத்த;-
கோள் ஒத்த சிறை வைத்த ஆண்ட கொற்றவற்கு, அற்றைநாள், தன்
தோள் ஒத்த துணை மென் கொங்கை நோக்கு அங்குத் தொடர்கிலாமை. 4-

கோள் ஒத்த சிறை வைத்து ஆண்ட கொற்றவற்கு-
ஒன்பது கோள்களையும் ஒருங்கே சிறைவைத்து அடிமைப்படுத்தி
ஆண்ட வெற்றி வீரனான இராவணனுக்கு; அற்றை நாள் –
தோற்றுத் திரும்பிய அந்த நாளில்; நாள் ஒத்த நளினம் அன்ன
முகத்தியர்- பகலில் ஒருசேர மலர்ந்த தாமரை மலர் போன்ற
முகத்தினையுடைய மகளிரது;நயனம் எல்லாம் வாள் ஒத்த –
கண்கள் எல்லாம் வாட்படை போல் துன்பத்தை மிகுவித்தன;
மைந்தர் வார்த்தை- மக்களுடைய சொற்கள்; இராகவன் வாளி
ஒத்த – இரகுகுல நாயகனின் அம்பு போல் துன்பம் தந்தன;
இதற்கு காரணம் என்னையோ எனின். தோள் ஒத்த துணை
மென் கொங்கை – தோள் வலிக்குச் சார்ந்த மார்பில் அமைந்த
இரட்டை மென் கொங்கைகளையுடைய வெற்றித் தெய்வமாகிய
கொற்றவையின்; நோக்கு அங்குத் தொடர்கிலாமை- வெற்றி
நோக்கு அவனிடத்தில் இதுவரை தொடர்ந்து இப்போது
தொடர்கிலாமையேயாகும்.

—————

மந்திரச் சுற்றத்தாரும், வாணுதல் சுற்றத்தாரும்,
தந்திரச் சுற்றத்தாரும், தன் கிளைச் சுற்றத்தாரும்,
எந்திரப் பொறியின் நிற்ப, யாவரும் இன்றி, தான் ஓர்
சிந்துரக் களிறு கூடம் புக்கென, கோயில் சேர்ந்தான். 5-

மந்திரச் சுற்றத்தாரும்- அடுக்கு மீது அடாதது என
உரைக்கும் மந்திரத் துணையானவர்களும்; வாணுதல்
சுற்றத்தாரும்- ஒளிபொருந்திய நெற்றியையுடைய மனைவியரும்;
தந்திரச் சுற்றத்தாரும் – சேனைத்தலைவர்களாகிய துணைவரும்;
தன் கிளைச் சுற்றத்தாரும் – உறவு முறையானவர்களும்;
எந்திரப் பொறியின் நிற்ப – இதுவரை இராவணனிடம் காணாத
தன்மை கண்டதால் இயந்திரத்தின் வன்மையால் இயங்கும் பொறி
அவ் இயந்திர வன்மை தீர்ந்தவுடன் செயல் படாது நிற்றல் போல்
நிற்க; யாவரும் இன்றி – ஒருவரும் பின் தொடரும் வலிமையின்றி
அசையாது நிற்றலால் தனியாக; தான் ஓர் – இராவணன் ஒரு;
சிந்துரக் களிறு – செம்பொடியை உடல் முழுதும் அணிந்த
ஆண்யானை; கூடம்புக்கென – கொட்டாரம் சென்று சேர்வது
போல்; கோயில் சேர்ந்தான் – அரண்மனையின் உட்புறம்
சேர்ந்தான்.

————-

தூதரை அழைத்து வரக் கஞ்சுகியை இராவணன் ஏவுதல்
ஆண்டு ஒரு செம் பொன் பீடத்து இருந்து, தன் வருத்தம் ஆறி,
நீண்டு உயர் நினைப்பன் ஆகி, கஞ்சுகி அயல் நின்றானை,
‘ஈண்டு, நம் தூதர் தம்மை இவ்வழித் தருதி’ என்றான்,
பூண்டது ஓர் பணியன், வல்லை, நால்வரைக் கொண்டு புக்கான். 6-

ஆண்டு- அவ்வரண்மனையிடத்தில்; ஒரு செம்பொன்
பீடத்து இருந்து- செம்பொன்னால் செய்யப்பட்ட ஒப்பற்ற
பீடத்தில் அமர்ந்து;தன் வருத்தம் ஆறி – போரில் ஏற்பட்ட
உடல் வருத்தமும் தோல்வியால் ஏற்பட்ட மனவருத்தமும் ஓரளவு
தணிந்தவுடனே; நீண்டு உயிர் நினைப்பன் ஆகி – இனிமேல்
செய்ய வேண்டியதைப் பற்றி மிகப்பெருஞ் சிந்தனையுடையவன்
ஆகி; கஞ்சுகி அயல் நின்றானை – அருகில் நின்றவனாகிய
மெய்ப்பை புக்கவனாகிய மெய்க்காப்பாளனைப் பார்த்து; ஈண்டு
– இப்போதே; நம் தூதர் தம்மை- நம் தூதுவர்களை; இவ்வழித்
தருதி என்றான்- இந்த இடத்திற்கு அழைத்து வா என்று
கட்டளையிட்டான்; பூண்டதோர் பணியன் வல்லை – அப்பணி
தலை மேற்கொண்ட கஞ்சுகி மேற்கொண்ட பணியினை முடித்து
விரைவில்; நால்வரைக் கொண்டு புக்கான்- நான்கு தூதரை
அழைத்து வந்தான்.

—————–

எண்திசைச் சேனைகளையும் கொணரத் தூதர்களை இராவணன் பணித்தல்
மனகதி, வாயுவேகன், மருத்தன், மாமேகன் என்று இவ்
வினை அறி தொழிலர் முன்னா, ஆயிரர் விரவினாரை,
‘நினைவதன் முன்னம், நீர் போய் நெடுந் திசை எட்டும் நீந்தி,
கனை கழல் அரக்கர் தானை கொணருதிர், கடிதின்’ என்றான். 7-

வினை அறி தொழிலர்- செய்யவேண்டிய செயலைச்
செய்யவேண்டியவாறு செய்யும் செயல் அறிந்தவராய, மனகதி,
வாயு வேகன், மருத்தன், மாமேகன் என்று இவ் – என்ற
பெயருடைய இவர்கள்; முன்னை ஆயிரர் விரவினாரை –
முதலாக வந்து சேர்ந்த ஆயிரக்கணக்காக வந்த தூதரை
(நோக்கிய இராவணன்); நினைவதன் முன்னம்- நினைப்பு
எழும் காலஅளவுக்குள்; நீர் போய் – நீங்கள் போய்;
நெடுந்திசை எட்டும் நீந்தி – பெரிய எட்டுத் திசைகளையும்
கடந்து; கனைகழல் அரக்கர் தானை- ஒலிக்கின்ற வீரக்கழல்
அணிந்த அரக்கச் சேனைகளையெல்லாம்; கடிதின்
கொணருதிர் என்றான்- விரைவில் அழைத்துக்கொண்டு
வாருங்கள் என்று கட்டளையிட்டான்.

——————

‘ஏழ் பெருங் கடலும், சூழ்ந்த ஏழ் பெருந் தீவும், எண் இல்
பாழி அம் பொருப்பும், கீழ்பால் அடுத்த பாதாளத்துள்ளும்,
ஆழி அம் கிரியின் மேலும், அரக்கர் ஆனவரை எல்லாம்,
தாழ்வு இலிர் கொணர்திர்’ என்றான்; அவர் அது தலைமேல் கொண்டார். 8-

ஏழ்பெருங்கடலும் சூழ்ந்த ஏழ் பெருந்தீவும் – ஏழு
பெருங்கடல்களால் சூழப்பட்ட ஏழு பெரிய தீவுகளிலும்; எண்
இல் பாழி அம் பொருப்பும் – எண்ணி அளவிடமுடியாத அழகிய
வலிய மலைகளிலும்; கீழ் பால் அடுத்த பாதாளத்துள்ளும் –
கீழே உள்ள பாதாள உலகத்திலும்; ஆழியம் கிரியின் மேலும்
– சக்கரவாளம் என்ற மலையின் மீதும் உள்ள; அரக்கர்ஆனவரை
எல்லாம் – எல்லா அரக்கர்களையும்; தாழ்வு இலிர் கொணர்திர்
என்றான்- காலம் தாழ்த்தாது அழைத்து வாருங்கள் என்று
இராவணன் கூறினான்; அவர் அது தலைமேல் கொண்டார்-
அத்தூதுவர், தலைவன் கட்டளையைத் தலை மேல் கொண்டனர்.

—————

இராவணன் வருந்தி இருத்தல்
மூவகை உலகுளோரும் முறையில் நின்று ஏவல் செய்வார்,
பாவகம் இன்னது என்று தெரிகிலர், பதைத்து விம்ம,
தூ அகலாத வை வாய் எஃகு உறத் தொளைக் கை யானை
சேவகம் அமைந்தது என்ன, செறி மலர் அமளி சேர்ந்தான். 9-

முறையில் நின்று ஏவல் செய்வார் – தங்களுக்கு உரிய
முறைப்படி இட்ட ஏவலைச் செய்பவர்களாகிய; மூவகை
உலகுளோரும்- விண், மண், பாதலம் என்ற மூன்று உலகத்தில்
உள்ளவர்களும்; பாவகம் இன்னது என்று தெரிகிலர் –
இராவணனுடைய மனக்கருத்து இதுவென அறியாதவர்களாகிப்;
பதைத்து விம்ம – மனம் வருந்தி அழுது விம்ம; தூ
அகலாதவைவாய் எஃகு உறத்- தசை நீங்காத கூரிய வேல்
உடலில் ஆழமாகப் பாய்தலால்; தொளைக்கையானை – உட்புழை
உடைய கையினையுடைய யானை; சேவகம் அமைந்தது என்ன
– யானைக் கூடத்திற்குச் சென்று சேர்ந்ததுபோல; செறிமலர் அமளி
சேர்ந்தான்- மலர் நிறைந்த மலர்ப் படுக்கையில் சேர்ந்தான்.

———

பண் நிறை பவளச் செவ் வாய், பைந் தொடி, சீதை என்னும்
பெண் இறை கொண்ட நெஞ்சில் நாண் நிறை கொண்ட பின்னர்,
கண் இறை கோடல் செய்யான், கையறு கவலை சுற்ற,
உள் நிறை மானம் தன்னை உமிழ்ந்து, எரி உயிர்ப்பதானான். 10-

பண்நிறை பவளச் செவ்வாய் – இனிய இசை போன்று
பேசும் பவளம் போன்ற சிவந்த வாயினையும்; பைந்தொடி
சீதை – பைம்பொன்னால் ஆன வளையல்களையும் அணிந்த
சீதை; என்னும் பெண் இறை கொண்ட நெஞ்சில் –
என்கின்ற பெண் தங்கி இடம் முழுதும் கொண்ட நெஞ்சத்தில்;
நாண் நிறை கொண்ட பின்னர் – முதல் நாள் ஏற்பட்ட
தோல்வி காரணமாகத் தோன்றிய நாணம் முழுதும் நிரம்பிய
பின்னர்; கண் இறை கோடல் செய்யான் – சிறிதும் கண்
துயிலாதவனாய்; கையறு கவலை சுற்ற – செயலறவும்
கவலையும் சூழ; உள்நிறை மானம் தன்னை – தன் நெஞ்சில்
சீதையிருந்த இடத்தில் நிரம்பிய மான உணர்வை; உமிழ்ந்து
எரி உயிர்ப்பதானான் – வெளிப்படுத்த விரும்புபவன் போல்
நெருப்பென பெருமூச்சு விட்டான்.

————–

வான் நகும்; மண்ணும் எல்லாம் நகும்;-நெடு வயிரத் தோளான்-
நான் நகு பகைஞர் எல்லாம் நகுவர் என்று, அதற்கு நாணான்;
வேல் நகு நெடுங் கண், செவ் வாய், மெல் இயல், மிதிலை வந்த,
சானகி நகுவள்-என்றே நாணத்தால் சாம்புகின்றான். 11-

நெடுவயிரத் தோளான் – வயிரம் போல் உறுதி உள்ள
நீண்ட திரள் தோள் இராவணன்; வான் நகும் – தான் வென்று
நகைத்த வானவர் சிரிப்பர்; மண்ணும் எல்லாம் நகும் –
மண்ணுலக மாந்தரும் பிறரும் சிரிப்பர்; நான்நகு பகைஞர்
எல்லாம் நகுவர் என்று – தான் வென்று சிரித்தற்குரிய
பகைவர்களாகிய சிறுதொழில் மனிதர்கள் சிரிப்பர் என்று;
அதற்கு நாணான்- எண்ணி அதற்கு நாணப்படாதவனாய்;
வேல் நகு நெடுங்கண்- வேலை வென்றிட்ட நீண்ட
கண்களையும்; செவ்வாய்- சிவந்த வாயினையும்; மெல் இயல்
– மெத்தென்ற சாயலினையும் உடைய; மிதிலை வந்த சானகி
நகுவள்- மிதிலையில் தோன்றிய சனகன் மகளாகிய சானகி
எள்ளிச் சிரிப்பாள்; என்றே நாணத்தால் சாம்புகின்றான் –
என்று எண்ணி எண்ணியே நாணத்தால் வாடினான்.

—————

இராவணனிடம் மாலியவான் வினவுதல்
ஆங்கு, அவன்தன் மூதாதை ஆகிய, மூப்பின் யாக்கை
வாங்கிய வரி வில் அன்ன, மாலியவான் என்று ஓதும்
பூங் கழல் அரக்கன் வந்து, பொலங் கழல் இலங்கை வேந்தைத்
தாங்கிய அமளிமாட்டு, ஓர் தவிசுடைப் பீடம் சார்ந்தான். 12-

ஆங்கு- அப்போது; வாங்கிய வரிவில் அன்ன – வளைந்த
கட்டமைந்த வில்லைப் போன்ற; மூப்பின் யாக்கை –
முதுமையால் வளைந்த உடம்பினையுடைய; மாலியவான் என்று
ஓதும்- மாலியவான் என்று சிறப்பித்துச் சொல்லப்படுகிற; அவன்
தன் மூதாதை ஆகிய- இராவணனுக்குப் பாட்டன் முறை உடைய;
பூங்கழல் அரக்கன் வந்து – அழகிய வீரக்கழலணிந்த அரக்கன்
வந்து; பொலங்கழல் இலங்கை வேந்தை – பொன்னால் ஆகிய
வீரக்கழலணிந்த இலங்கை வேந்தனாம் இராவணனைத்;
தாங்கிய அமளி மாட்டு- தாங்கிக் கொண்டுள்ள படுக்கையின்
பக்கத்தில் இருந்த; ஓர் தவிசுடைப்பீடம் சேர்ந்தான்-
மெத்தை இட்ட அமரும் ஆசனத்தில் அமர்ந்தான்.

————-

இருந்தவன், இலங்கை வேந்தன் இயற்கையை எய்த நோக்கி,
பொருந்த வந்துற்ற போரில் தோற்றனன் போலும் என்னா,
‘வருந்தினை, மனமும்; தோளும் வாடினை;-நாளும் வாடாப்
பெருந் தவம் உடைய ஐயா!-என், உற்ற பெற்றி?’ என்றான். 13-

இருந்தவன் – தவிசுடைப் பீடத்தில் இருந்தவன் ஆகிய
மாலியவான்; இலங்கை வேந்தன்- இராவணனுடைய; இயற்கையை
எய்த நோக்கி – நிலைமையை உற்றுப் பார்த்து; பொருந்த
வந்துற்ற போரில் தோற்றனன் போலும் என்னா- அண்மையில்
நெருங்கி வந்த போரில் இவன் தோற்றுவிட்டான் போலும்
என்று மனத்தில் எண்ணி; நாளும் வாடாப் பெருந்தவம் உடைய
ஐயா – எந்நாளும் கெடாத பெருந்தவ ஆற்றல் பெற்ற ஐயனே!;
மனமும் வருந்தினை – மனம் வருத்தமுற்றுள்ளாய்; தோளும்
வாடினை – யார்க்கும் தோலாத தோள்களும் வாடியுள்ளன; என்
உற்ற பெற்றி என்றான்- உற்ற செயல் யாது என வாய்விட்டு
வினவினான்.

—————-

இராவணன் நிகழ்ந்தவை கூறல்
கவை உறு நெஞ்சன், காந்திக் கனல்கின்ற கண்ணன், பத்துச்
சிவையின் வாய் என்னச் செந் தீ உயிர்ப்பு உறத் திறந்த மூக்கன்,
நவை அறு பாகை அன்றி அமுதினை நக்கினாலும்
சுவை அறப் புலர்ந்த நாவான், இனையன சொல்லலுற்றான்: 14-

கவை உறு நெஞ்சன் – துன்பம் மிகப் பொருந்திய
மனத்தையும்; காந்திக் கனல்கின்ற கண்ணன்- நெருப்புப்
போல் எரிகின்ற கண்ணினையும்; பத்துச் சிவையின் வாய்
என்ன – பத்துத் துருத்திகளின் வாய் போன்று; செந்தீ
உயிர்ப்பு உறத் திறந்த மூக்கன் – செந்தீயுடன் பெருமூச்சுக்
காற்று வெளிப்படும் விடைத்த பத்து மூக்குகளையும்; நவை அறு
பாகை அன்றி- குற்றமில்லாத வெல்லப்பாகையன்றி; அமுதினை
நக்கினாலும்- அமுதத்தையே நக்கி உண்டாலும்; சுவை அறப்
புலர்ந்த நாவான் – சுவை முழுதும் உறைக்காதவாறு உலர்ந்த
நாவினையும் உடையவனான இராவணன்; இனையன
சொல்லலுற்றான்- (கீழ்வரும்) இத்தகைய சொற்களைக் கூறத்
தொடங்கினான்.

——————-

‘சங்கம் வந்து உற்ற கொற்றத் தாபதர்தம்மோடு எம்மோடு
அங்கம் வந்து உற்றது ஆக, அமரர் வந்து உற்றார் அன்றே;
கங்கம் வந்து உற்ற செய்ய களத்து, நம் குலத்துக்கு ஒவ்வாப்
பங்கம் வந்துற்றது அன்றி, பழியும் வந்துற்றது’ அன்றே? 15-

சங்கம் வந்து உற்ற – தொகுதியாக வானரச் சேனையோடு
வந்து சேர்ந்த; கொற்றத் தாபதர்- வெற்றியுடைய தவ
வேடத்தையுடைய இராம இலக்குவர்; தம்மோடு எம்மோடு –
தமக்கும் எமக்கும்; அங்கம் வந்து உற்றது ஆக- போர் வந்து
மூண்டபோது; அமரர் வந்து உற்றார் அன்றே- அப்போரினைக்
காணத் தேவர்கள் வந்தார்கள் அல்லவா; கங்கம் வந்து உற்ற
செய்ய களத்து- கழுகுகள் பறந்து வந்து நெருங்கிய குருதியால்
சிவந்த அப்போர்க்களத்தில்; நம் குலத்துக்கு ஒவ்வாப் பங்கம்
வந்து உற்றது அன்றி – நம் அரக்கர் குலத்துக்குப் பொருந்தாத
தோல்வி வந்து பொருந்தியது அல்லாமல்;பழியும் வந்து உற்றது
– தீராத பழியும் வந்து பொருந்தி விட்டது என்று இராவணன்
கூறினான்.

————

‘முளை அமை திங்கள் சூடும் முக்கணான் முதல்வர் ஆக,
கிளை அமை புவனம் மூன்றும் வந்து உடன் கிடைத்தவேனும்,
வளை அமை வரி வில் வாளி மெய் உற வழங்கும் ஆயின்,
இளையவன் தனக்கும் ஆற்றாது, என் பெருஞ் சேனை-நம்ப! 16-

நம்ப- குல முதல்வ; முளை அமை திங்கள் சூடும் முக்கணான்
– பிறைச் சந்திரனைத் தலையில் சூடிய மூன்று கண்களையுடைய
சிவபெருமானை; முதல்வர் ஆக – முதலாகக் கொண்டு; கிளை
அமை புவனம் மூன்றும்- மேலும் மேலும் வளருந்தன்மை கொண்ட
மூன்று உலகத்திலுள்ள மக்களும்; வந்து உடன் கிடைத்த வேனும்
– ஒரு சேர வந்து பக்கத் துணையாய் நின்றாலும்; என்
பெருஞ்சேனை – என்னுடைய பெரிய படை; வளை அமை
வரிவில் வாளி – வளைதல் பொருந்திய கட்டமைந்த வில்லிலிருந்து
அம்புகளை; மெய் உற வழங்கும் ஆயின்- உடலில் உறப்
பொருந்துமாறு வெளிப்படுத்தினால்; இளையவன் தனக்கும்
ஆற்றாது- இளையவனாகிய இலக்குவனின் ஆற்றலுக்கு முன் நிற்க
மாட்டாது.

—————–

‘எறித்த போர் அரக்கர் ஆவி எண் இலா வெள்ளம் எஞ்சப்
பறித்த போது, என்னை அந்தப் பரிபவம் முதுகில் பற்றப்
பொறித்த போது, அன்னான் அந்தக் கூனி கூன் போக உண்டை
தெறித்த போது ஒத்தது அன்றி, சினம் உண்மை தெரிந்தது இல்லை. 17-

எறித்த போர் அரக்கர் ஆவி – தன் மேல் படைக்
கலங்களை எறிந்த போரில் வல்ல அரக்கரது உயிரினை; எண்
இலா வெள்ளம் எஞ்சப் பறித்த போது – எண்ணிக்கையில்
அடங்காத வெள்ளத்தவரில் ஒருவரும் எஞ்சி நிற்காமல் கவர்ந்த
போதும்; என்னை அந்தப் பரிபவம் முதுகில் பற்றப்
பொறித்த போது- எனக்கு இப்படிப்பட்ட அவமானம் முதுகில்
தங்கும்படி அம்புகளைப் பதித்த போது; அன்னான் – அந்த
இராமனிடம்; அந்தக் கூனி கூன் போக உண்டை தெறித்த
போது- சிறு வயதில் கூனியின் கூன் போக வேண்டும் என்ற
நல்லெண்ணத்தோடு மண்ணுருண்டைகளை அடித்தபோது;
ஒத்ததன்றி – இருந்த விளையாட்டு மனநிலையை ஒத்த
மனநிலை அன்றி; சினம் உண்மை தெரிந்தது இல்லை –
சினம் இருத்த நிலை தெரியவில்லை.

—————–

‘மலை உறப் பெரியர் ஆய வாள் எயிற்று அரக்கர் தானை
நிலையுறச் செறிந்த வெள்ளம் நூற்று-இரண்டு எனினும், நேரே
குலை உறக் குளித்த வாளி, குதிரையைக் களிற்றை ஆளைத்
தலை உறப் பட்டது அல்லால், உடல்களில் தங்கிற்று உண்டோ ? 18-

மலை உறப் பெரியர் ஆய – மலையை மாறுபட்டுப் பெரிய
உடலினை உடைய; வாள் எயிற்று அரக்கர் தானை –
கூர்மையான பற்களை உடைய அரக்கரது சேனை; நிலை உறச்
செறிந்த வெள்ளம் நூற்று இரண்டு எனினும்- இராமனை
நிலையாக நெருங்கி நின்றவை நூற்று இரண்டு வெள்ளம் எனினும்;
நேரே குலை உறக்குளித்த வாளி – அவனால் நேராகக் குறி
தவறாமல் செலுத்தப்பட்ட அம்புகளின் தொகுதி; குதிரையைக்
களிற்றை ஆளை – குதிரைப் படையினையும்,
யானைப்படையினையும், காலாட்படையினையும்; தலை உறப்பட்டது அல்லால் –
தலைகீழ் உறச் செய்ததன்றி; உடல்களில் தங்கிற்று
உண்டோ- எந்த உடலிலும் தடைப்பட்டு நின்றதுண்டோ,
இல்லை.

—————-

‘போய பின், அவன் கை வாளி உலகு எலாம் புகுவது அல்லால்,
ஓயும் என்று உரைக்கலாமோ, ஊழி சென்றாலும்? ஊழித்
தீயையும் தீய்க்கும்; செல்லும் திசையையும் தீய்க்கும்; சொல்லும்,
வாயையும் தீய்க்கும்; முன்னின், மனத்தையும் தீய்க்கும் மன்னோ. 19-

அவன் கை வாளி போய பின் – அந்த இராமன்
கையிலுள்ள வில்லிலிருந்து அம்பு வெளிப்படத் தொடங்கினால்
அது; உலகு எலாம் புகுவது அல்லால் – உலகமெல்லாம்
புகுந்து எய்த இலக்கைத் தேடிச் செல்வதல்லாமல்; ஓயும்
என்று உரைக்கலாமோ – ஓய்ந்து விடும் என்று சொல்லலாமா?
சொல்ல இயலாது; ஊழி சென்றாலும் – ஊழிக்காலம் ஆனாலும்;
ஊழித் தீயையும் தீய்க்கும் – அவ்வூழிக்காலத்தில் தோன்றும்
ஊழித்தீயையும் தீய்க்கும்; செல்லும் திசையையும் தீய்க்கும்-
அவ்வம்பு செல்லுகின்ற திசைகளையெல்லாம் தீய்க்கும்;
சொல்லும் வாயையும் தீய்க்கும்- மாறுபடப் பேசுவோர்
வாயையும் தீய்க்கும்; முன்னின் மனத்தையும் தீய்க்கும்-
மாறுபட எண்ணுவோர் மனத்தையும் தீய்க்கும்.

————-

‘மேருவைப் பிளக்கும் என்றால், விண் கடந்து ஏகும் என்றால்,
பாரினை உருவும் என்றால், கடல்களைப் பருகும் என்றால்,
ஆருமே அவற்றின் ஆற்றல்; ஆற்றுமேல், அனந்தகோடி,
மேருவும், விண்ணும், மண்ணும், கடல்களும் வேண்டும் அன்றே? 20-

மேருவைப் பிளக்கும் என்றால் – மேரு மலையைப்
பிளக்கும்படி சொன்னாலும்; விண் கடந்து ஏகும் என்றால்-
ஆகாயத்தைக் கடந்து அப்பால் ஏகுக என்று சொன்னாலும்;
பாரினை உருவும் என்றால் – நிலவுலகை ஊடுருவுக என்று
சொன்னாலும்; கடல்களைப் பருகும் என்றால் – கடல்களைப்
பருகுக என்று சொன்னாலும்; அவற்றின் ஆற்றல் ஆருமே-
அவ்வம்புக்கு ஆற்றல் நிரம்பி இருக்கும்; ஆற்றுமேல் –
அவ்வம்பின் விரைவைத் தாங்குவதற்கு; அனந்த கோடி
மேருவும் விண்ணும் மண்ணும் கடல்களும் வேண்டும்
அன்றே- கோடிக்கணக்கான மேரு மலையும் விண்ணும்
மண்ணும் கடல்களும் வேண்டும்.

—————–

‘வரி சிலை நாணில் கோத்து வாங்குதல் விடுதல் ஒன்றும்
தெரிகிலர், அமரரேயும்; ஆர் அவன் செய்கை தேர்வார்?
“பொரு சினத்து அரக்கர் ஆவி போகிய போக” என்று
கருதவே, உலகம் எங்கும் சரங்களாய்க் காட்டும் அன்றே. 21-

வரிசிலை நாணில் கோத்து – இராமன் கட்டமைந்த
வில்லில் நாணைப் பூட்டி; வாங்குதல் விடுதல் ஒன்றும் –
வளைத்தலையும் அம்பை விடுதலையும் ஆகிய ஒன்றையும்;
அமரரேயும் தெரிகிலர்- இமையா நாட்டத்துத் தேவர்களும் தெரிந்து கொள்ள
முடியாதென்றால்; ஆர் அவன் செய்கை தேர்வார் –
அவனுடைய அம்பு விடுந்திறனாகிய செய்கையை ஆய்ந்து
அறியக் கூடியவர் யார் உளர்; பொருசினத்து அரக்கர்
ஆவி – போரினைச் சினந்து செய்யும் அரக்கர்களுடைய
உயிரை; போகிய போக என்று கருதவே –
போக்குவதற்காகச் செய்க என்று சங்கற்பித்த அளவிலே;
உலகம் எங்கும் சரங்களாய்க் காட்டும் அன்றே-
உலகம் முழுவதும் அம்பு மயமாய் ஆகிவிடும்.

—————–

‘நல் இயல் கவிஞர் நாவில் பொருள் குறித்து அமர்ந்த நாமச்
சொல் என, செய்யுள் கொண்ட தொடை என, தொடையை நீக்கி
எல்லையில் சென்றும் தீரா இசை என, பழுது இலாத
பல் அலங்காரப் பண்பே காகுத்தன் பகழி மாதோ. 22-

காகுத்தன் பகழி- இராமனுடைய அம்புகள்; நல் இயல்
கவிஞர் – கருவில் திருவுடைக் கவிஞர்களின்; நாவில்
பொருள் குறித்து அமர்ந்த- நாவில் பொருளுக்குத் தக
வெளிப்பட்ட; நாமச் சொல் என – சிறப்புடைய சொற்கள்
போலவும்; செய்யுள் கொண்ட தொடை என- செய்யுளில்
அமைந்துள்ள தொடை போலவும்; தொடையை நீக்கி –
தொடையைத் தாண்டி; எல்லையில் சென்றும் தீரா இசை
என- அளவிட்டுச் சொல்ல முடியாத நீங்காத இசை போலவும்;
பழுதிலாத பல் அலங்காரப் பண்பே – குற்றமற்ற
பலவகைப்பட்ட அலங்காரப் பண்பு கொண்டவை ஆகும்.

————–

‘இந்திரன் குலிச வேலும், ஈசன் கை இலை மூன்று என்னும்
மந்திர அயிலும், மாயோன் வளை எஃகின் வரவும் கண்டேன்;
அந்தரம் நீளிது, அம்மா! தாபதன் அம்புக்கு ஆற்றா
நொந்தனென் யான் அலாதார் யார் அவை நோற்ககிற்பார்? 23-

இந்திரன் குலிச வேலும் – இந்திரனுடைய வச்சிராயுதமும்;
ஈசன் கை இலை மூன்று என்னும் மந்திர அயிலும் –
சிவபிரானின் கைகளில் உள்ள மூன்று இலை வடிவத்தைக் கொண்ட
மந்திர ஆற்றல் பொருந்திய முத்தலைச் சூலமும்; மாயோன் வளை
எஃகின் வரவும் கண்டேன் – திருமாலின் வளைந்த சக்கரப்
படையின் வருகையையும் பல போர்களில் கண்டுள்ளேன்; அந்தரம்
நீளிது அம்மா- அப்படைகளுக்கும் இராமனுடைய அம்புக்கும்
வேற்றுமை மிகுதி;யான் தாபதன் அம்புக்கு ஆற்றா நொந்தனன்
– இந்திரன் படை, ஈசன் கை மந்திர அயில், மாயோன் வளை
எஃகின் வரவு ஆகியவற்றை எளிமையாகப் பொறுத்த யான்
தவவேடம் பூண்ட இராமன் அம்புக்குப் பொறுக்க மாட்டாது
நொந்தனன்; அலாதார் யார் அவை நோற்ககிற்பார் –
யானல்லாத மற்றையோர் யார் அவ்வம்பின் ஆற்றலை எதிர்த்துத்
தாங்க வல்லார்.

————–

‘பேய் இருங் கணங்களோடு சுடு களத்து உறையும் பெற்றி
ஏயவன் தோள்கள் எட்டும், இந்திரன் இரண்டு தோளும்,
மா இரு ஞாலம் முற்றும் வயிற்றிடை வைத்த மாயன்
ஆயிரம் தோளும், அன்னான் விரல் ஒன்றின் ஆற்றல் ஆற்றா. 24-

பேய் இருங்கணங்களோடு – பெரிய கரிய பேய்க்
கூட்டத்தோடு; சுடுகளத்து உறையும் – சுடுகாட்டிலே வாழ்கின்ற;
பெற்றி ஏயவன் – தன்மை பொருந்தியவனான இராமபிரானின்;
தோள்கள் எட்டும்- எட்டுத் தோள்களும்; இந்திரன் இரண்டு
தோளும்- இந்திரனுடைய இரண்டு தோள்களும்; மா இரு ஞால
முற்றும்- மிகப் பெரிய உலகம் முழுவதையும்; வயிற்றிடை
வைத்த மாயன்- தன் திருவயிற்றடக்கிய திருமாலின்; ஆயிரம்
தோளும் – ஆயிரந்தோள்களும்; அன்னான் விரல் ஒன்றின்
ஆற்றல் ஆற்றா – அந்த இராமனுடைய ஒரு விரலின்
ஆற்றலுக்குத் தாங்க மாட்டாது.

—————

‘சீர்த்த வீரியராய் உள்ளார், செங் கண் மால் எனினும், யான் அக்
கார்த்தவீரியனை நேர்வார் உளர் எனக் கருதல் ஆற்றேன்;
பார்த்த போது, அவனும், மற்று அத் தாபதன் தம்பி பாதத்து
ஆர்த்தது ஓர் துகளுக்கு ஒவ்வான்; ஆர் அவற்கு ஆற்றகிற்பார்? 25-

சீர்த்த வீரியராய் உள்ளார் – மிகு புகழ் பொருந்திய
வீரர்கள் எனப்படுபவர்களில்; செங்கண் மால் எனினும் –
சிவந்த கண்களையுடைய திருமாலே என்றாலும்; அக்கார்த்த
வீரியனை நேர்வார் உளர் என – அவர்கள் அந்தக் கார்த்த
வீரியனுடைய ஆற்றலுக்கு ஒப்பாக உளர் என; யான் கருதல்
ஆற்றேன் – நான் கருதுதலைச் செய்யேன்; பார்த்தபோது-
எண்ணிப் பார்க்கும் இடத்து; அவனும் – அக்கார்த்த வீரியனும்;
அத்தாபதன் தம்பி- அந்தத் தவக்கோலத்தையுடைய இராமனின்
தம்பியாகிய இலக்குவனது; பாதத்து ஆர்த்தது ஓர் துகளுக்கு
– பாதத்திலே ஒட்டிக்கொண்டுள்ள ஒரு தூசிக்கு; ஒவ்வான்-
ஒப்பாக மாட்டான்; ஆர் அவற்கு ஆற்றகிற்பார் – (என்றால்)
அந்த இராமனுக்கு முன் எதிர் நிற்க வல்லார் யார் எவருமில்லை
என்றவாறு.

—————-

‘முப்புரம் ஒருங்கச் சுட்ட மூரி வெஞ் சிலையும், வீரன்
அற்புத வில்லுக்கு, ஐய! அம்பு எனக் கொளலும் ஆகா;
ஒப்பு வேறு உரைக்கல் ஆவது ஒரு பொருள் இல்லை; வேதம்
தப்பின போதும், அன்னான் தனு உமிழ் சரங்கள் தப்பா. 26-

ஐய- ஐயனே; முப்புரம் ஒருங்கச் சுட்ட- முப்புரங்களையும்
ஒருங்கே அழித்த; மூரி வெஞ்சிலையும்- வலிமை பொருந்திய
சிவபிரானது வில்; வீரன்- இராமனது; அற்புத வில்லுக்கு-
கோதண்டமாகிய அற்புத ஆற்றல் நிறைந்த வில்லுக்கு; அம்பு
எனக் கொளலும் ஆகா – அம்பு என்று கொள்ளுவதற்கும்
அதற்கு ஒப்பு என்று சொல்ல வேறு ஒரு பொருளும் இல்லை;
வேதம் தப்பின போதும்- வேதம் ஓதுவதால் வரும் பயன்கள்
ஓதியவரைச் சென்றடையாமல் தப்பினாலும்; அன்னான் – அந்த
இராமனது; தனு உமிழ் சரங்கள் தப்பா – வில்லிலிருந்து
வெளிப்படுகின்ற அம்புகள் இலக்குத் தவற மாட்டா.

—————

‘உற்பத்தி அயனே ஒக்கும்; ஓடும்போது அரியே ஒக்கும்;
கற்பத்தின் அரனே ஒக்கும், பகைஞரைக் கலந்த காலை;
சிற்பத்தின் நம்மால் பேசச் சிறியவோ? என்னைத் தீராத்
தற்பத்தைத் துடைத்த என்றால்; பிறிது ஒரு சான்றும் உண்டோ ? 27-

உற்பத்தி அயனே ஒக்கும் – இராமனது அம்புகள்
தோன்றும் போது பிரம தேவனை ஒக்கும்; ஓடும் போது அரியே
ஒக்கும்- பகைவர் மேல் செல்லும் போது ஆயிரமுகம் உடைய
திருமாலை ஒக்கும்; பகைஞரைக் கலந்த காலை- பகைவரை
அழிக்கச் சேரும்போது; கற்பத்தின் அரனே ஒக்கும் – யுக
முடிவுக் காலத்துச் சங்கார மூர்த்தியை ஒக்கும்; சிற்பத்தின்
நம்மால் பேசச் சிறியவோ – அவ்வம்புகளின் தொழில் திறமை
நம் போன்றோரால் பேசப்படும் சிறுமையுடையதன்று; என்னை –
என் இடமிருந்து; தீராத் தற்பத்தைத் துடைத்த- என்றும் நீங்காத செருக்கையே
முழுதும் நீக்கியது என்றால்; பிறிது ஒரு சான்றும் உண்டோ-
அதன் ஆற்றற்கு வேறு கரி வேண்டுமோ? வேண்டா என்றவாறு.

————-

‘குடக்கதோ? குணக்கதேயோ? கோணத்தின் பாலதேயோ?
தடத்த பேர் உலகத்தேயோ? விசும்பதோ? எங்கும்தானோ?
வடக்கதோ? தெற்கதோ? என்று உணர்ந்திலன்;-மனிதன் வல்வில்-
இடத்ததோ? வலத்ததோ? என்று உணர்ந்திலேன், யானும் இன்னும். 28-

மனிதன் வல்வில் – மனிதனாகிய இராமன்
கைக்கொண்டுள்ள வலிமையான வில்; குடக்கதோ- மேற்குப்
பகுதியில் உள்ளதா?; குணக்கதோ – மேற்குப் பகுதியில்
உள்ளதா?; கோணத்தின் பாலதேயோ- திசை மூலைப்
பகுதியில் உள்ளதா?; வடக்கதோ – வடக்குப் பகுதியில்
உள்ளதா? தெற்கதோ – தெற்குப் பகுதியில் உள்ளதா? தடத்த
பேர் உலகத்தேயோ- அகன்ற பெரிய உலகத்திலுள்ளதா?
விசும்பதோ – ஆகாயத்தில் உள்ளதா? எங்கும் தானோ-
எல்லா இடங்களிலும் உள்ளதா? என்று உணர்ந்திலன் –
என்று அவனுடன் போரிட்ட யான் உணர்ந்தேன் இல்லை;
யானும் இன்னும்- இன்னும் கூட யான் அது; இடத்ததோ-
இடப்புறத்தில் உள்ளதா? வலத்ததோ- வலப்புறத்தில் உள்ளதா
என்று உணர்ந்திலேன் – என்று உணர முடியாதவனாய் உள்ளேன்.

————–

‘ஏற்றம் ஒன்று இல்லை என்பது ஏழைமைப் பாலது அன்றே?
ஆற்றல் சால் கலுழனேதான் ஆற்றுமே, அமரின் ஆற்றல்!-
காற்றையே மேற்கொண்டானோ? கனலையே கடாவினானோ?
கூற்றையே ஊர்கின்றானோ?-குரங்கின்மேல் கொண்டு நின்றான். 29-

குரங்கின் மேல் கொண்டு நின்றான் – அனுமனை
வாகனமாகக் கொண்டு போரில் எதிர் நின்ற இராமன்; காற்றையே
மேற்கொண்டானோ- காற்றை வாகனமாகக் கொண்டுள்ளானோ?;
கனலையே கடாவினானோ – தீயை வாகனமாகக்
கொண்டுள்ளானோ; கூற்றையே ஊர்கின்றானோ – இயமனை
வாகனமாகக் கொண்டுள்ளானோ?; ஏற்றம் ஒன்று இல்லை
என்பது – (எனவே) அவனது வாகனத்துக்குப் பெருமை ஒன்றும்
இல்லை என்பது; ஏழைமைப் பாலது அன்றே – அறியாமையின்
பாற்பட்டது அல்லவா? அமரின் ஆற்றல் – வாகனமாகிய
அனுமன் போரில் செய்யும் செயலை; ஆற்றல் சால் கலுழனே
தான் ஆற்றுமே – வலிமை பொருந்திய திருமாலின் வாகனமாகிய
கருடன்தான் செய்யுமோ என்றவாறு.

—————-

‘போய் இனித் தெரிவது என்னே? பொறையினால் உலகம் போலும்
வேய் எனத் தகைய தோளி இராகவன் மேனி நோக்கி,
தீ எனக் கொடிய வீரச் சேவகச் செய்கை கண்டால்,
நாய் எனத் தகுதும் அன்றே, காமனும் நாமும் எல்லாம். 30-

பொறையினால் உலகம் போலும் – அகழ்வாரைத் தாங்கும்
நிலம் போல் பொறுமையுடைய; வேய் எனத் தகைய தோளி-
மூங்கில் எனத் தகுந்த தோளினையுடைய சீதை; இராகவன் மேனி
நோக்கி – இராமனின் திருமேனி அழகையும்; தீ எனக் கொடிய
வீரச் சேவகச் செய்கை கண்டால் – தீயினை ஒத்த பெரும்
போர் வீரத்தையும் முன்பே கண்டிருத்தலால்; காமனும் நாமும்
– மன்மதனும் யாமும்; எல்லாம் – மற்றையோரும்; நாய் எனத்
தகுதும் அன்றே- அவளுக்கு நாய் என்று சொல்வதற்குத்
தகுவோம் அல்லவா?; போய் இனித் தெரிவது என்னே –
இனிமேல் போய் அவளது மனத்தைத் தெரிய என்ன உள்ளது
என்றவாறு.

——————–

‘வாசவன், மாயன், மற்றை மலருளோன், மழு வாள் அங்கை
ஈசன் என்று இனைய தன்மை இளிவரும் இவரால் அன்றி,
நாசம் வந்து உற்ற போதும், நல்லது ஓர் பகையைப் பெற்றேன்;-
பூசல் வண்டு உறையும் தாராய்!-இது இங்குப் புகுந்தது’ என்றான். 31-

பூசல் வண்டு உறையும் தாராய் – ஒலிக்கும் வண்டுகள்
தங்குகின்ற மாலை அணிந்த மார்பினனே; வாசவன் – இந்திரன்;
மாயன் – திருமால்; மற்றை மலருளோன்- மற்றும் உள்ள
தாமரை மலரில் உறையும் நான்முகன்; மழுவாள் அங்கை
ஈசன் – மழுப்படையைக் கையில் கொண்ட சிவன்; என்று
இனைய தன்மை – என்று இப்படிப்பட்ட தன்மை கொண்ட;
இளிவரும் இவரால் அன்றி – இகழ்ச்சிக்குரிய தன்மை
கொண்ட இவர்களன்றி; நாசம் வந்து உற்றபோதும்-
அழிவுக்காலம் வந்து நெருங்கி விட்ட போதும்; நல்லது ஓர்
பகையைப் பெற்றேன் – சிறந்தது ஓர் பகையை அடைந்தேன்;
இது இங்குப் புகுந்தது என்றான்- இதுவே இங்கு நிகழ்ந்தது
என இராவணன் மாலியவானிடம் கூறினான்.

——————-

மாலியவான் உரை
‘முன் உரைத்தேனை வாளா முனிந்தனை; முனியா உம்பி
இன் உரைப் பொருளும் கேளாய்; ஏது உண்டு எனினும், ஓராய்;
நின் உரைக்கு உரை வேறு உண்டோ ?-நெருப்பு உரைத்தாலும், நீண்ட
மின் உரைத்தாலும், ஒவ்வா விளங்கு ஒளி அலங்கல் வேலோய்! 32-

நெருப்பு உரைத்தாலும் – நெருப்பை உவமை என
உரைத்தாலும்; நீண்ட மின் உரைத்தாலும் – வானத்தில்
தோன்றும் நீண்ட மின்னலை உவமை என உரைத்தாலும்;
ஒவ்வா விளங்கு ஒளி – ஒப்பாகாது விளங்குகின்ற
ஒளியுடைய; அலங்கல் வேலோய் – வெற்றி மாலை சூடிய
வேற்படையை உடைய தலைவனே; முன் உரைத்தேனை
வாளா முனிந்தனை- முன்பு இராமனின் ஆற்றலைக் கூறிய
என்னை வீணே கோபித்தாய்; முனியா உம்பி-
சினமென்னும் குணம் இல்லாத உன்னை ஒரு பொழுதும்
வெறுக்காத வீடணன் கூறிய; இன் உரைப் பொருளும்
கேளாய்- இனிய சொற்களில் பொதிந்துள்ள உட்பொருளையும்
காதால் கேட்காமல் விட்டாய்; ஏது உண்டு எனினும் ஓராய்
– நீ தோல்வியடையப் போவதற்குக் காரணம் உண்டு என்றாலும்
அதை ஆராய்ந்து அறியாது விட்டு விட்டாய்; நின் உரைக்கு
உரை வேறு உண்டோ- எனினும் உன் சொல்லுக்கு மறுசொல்
உண்டா என்கிறான் மாலியவான்.

————

‘உளைவன எனினும், மெய்ம்மை உற்றவர், முற்றும் ஓர்ந்தார்,
விளைவன சொன்னபோதும், கொள்கிலை; விடுதி கண்டாய்;
கிளைதரு சுற்றம், வெற்றி, கேண்மை, நம் கல்வி, செல்வம்,
களைவு அருந் தானையோடும் கழிவது காண்டி’ என்றான். 33-

உளைவன எனினும்- மனத்திற்கு வருத்தம் தருவன என்றாலும்;
மெய்ம்மை உற்றவர் – மெய்ம்மையான உறவினர்களும்; முற்றும்
ஓர்ந்தார் – மேல் வருவனவற்றை முழுவதும் ஆய்ந்தவர்களும்;
விளைவன சொன்ன போதும் – விளையப் போகிற செயல்களைச்
சொன்னபோதும்; கொள்கிலை – நீ அவற்றை ஏற்றுக் கொள்ளாது;
விடுதி கண்டாய் – விட்டிடுதலைச் செய்தாய் காண்; கிளை தரு
சுற்றம் – தொகுதியாக உள்ள சுற்றத்தாரும்; வெற்றி – வெற்றியும்;
கேண்மை – நட்பும்; நம் கல்வி- நமது கல்வியும்; செல்வம் –
உறுபொருளும் உல்குபொருளும் ஒன்னார்த் தெறு பொருளுமாகிய
செல்வமும்; களைவு அருந்தானையோடு- பிறரால் அழித்தற்கரிய
அரக்கர் படையும்; கழிவது காண்டி என்றான் – அழிந்து
படுவதை நீ காண்பாய்.

————

மகோதரன் உரை
ஆயவன் உரைத்தலோடும், அப் புறத்து இருந்தான், ஆன்ற
மாயைகள் பலவும் வல்ல, மகோதரன் கடிதின் வந்து,
தீ எழ நோக்கி, ‘என் இச் சிறுமை நீ செப்பிற்று?’ என்னா,
ஓய்வுறு சிந்தையானுக்கு உறாத பேர் உறுதி சொன்னான்: 34-

ஆயவன் உரைத்தலோடும் – அந்த மாலியவான் அவ்வாறு
சொன்ன உடனே; அப்புறத்து இருந்தான் – அப்புறத்திலே
இருந்தானாகிய; ஆன்ற மாயைகள் பலவும் வல்ல மகோதரன்
– மிக்க மாயைத் தொழில்கள் பலவற்றிலும் வல்லவனாகிய
மகோதரன்; கடிதின் வந்து- விரைவாக வந்து; தீ எழ நோக்கி
– தீ எழுமாறு சினந்து மாலியவானைப் பார்த்து; என் இச்சிறுமை நீ
செப்பிற்று என்னா- நீ இப்படி நம் தலைவனைப் பார்த்துச்
சிறுமையாகச் சொல்லியது என்னே என அதட்டிக் கேட்டு;
ஓய்வுறு சிந்தையானுக்கு- தோல்வியால் துவண்டுள்ள
மனத்தை உடைய இராவணனுக்கு; உறாத பேர் உறுதி
சொன்னான் – நன்மை தராத பெரிய உறுதி மொழிகளைச்
சொன்னான்.

————-

‘”நன்றி ஈது” என்று கொண்டால், நயத்தினை நய்ந்து, வேறு
வென்றியே ஆக, மற்றுத் தோற்று உயிர் விடுதல் ஆக,
ஒன்றிலே நிற்றல் போலாம், உத்தமர்க்கு உரியது; ஒல்கிப்
பின்றுமேல், அவனுக்கு அன்றோ, பழியொடு நரகம் பின்னை? 35-

நயத்தினை நயந்து- இனியதைப் பெற விரும்பி; நன்றி
ஈது என்று கொண்டால் – இது நல்லது என்று ஒரு செயலை
மேற்கொண்டால்; வேறு வென்றியே ஆக – தோல்விக்கு
வேறுபட்ட வெற்றியே விளையட்டும்; மற்று தோற்று உயிர்
விடுதல் ஆக- அல்லது தோற்று உயிர் விடும் நிலையே
விளையட்டும்; உத்தமர்க்கு உரியது- சிறப்பானவர்களுக்கு
உரிய செயல்; ஒன்றிலே நிற்றல் போலாம் – மேற்கொண்ட
அந்தச் செயல் ஒன்றில் மட்டும் ஊன்றி நிற்றலாம்; ஒல்கிப்
பின்று மேல்- மனந்தளர்ந்து பின் வாங்குமேல்; அவனுக்கு
அன்றோ- அவ்வாறு பின்வாங்குபவனுக்கலல்வா; பழியொடு
நரகம் பின்னை- பிறகு இம்மைப் பழியும் மறுமை நரகமும்
ஏற்படும்.

—————–

‘திரிபுரம் எரிய, ஆங்கு ஓர் தனிச் சரம் துரந்த செல்வன்,
ஒருவன் இப் புவனம் மூன்றும் ஓர் அடி ஒடுக்கிக் கொண்டோன்,
பொருது, உனக்கு உடைந்து போனார்; மானிடர் பொருத போர்க்கு
வெருவுதி போலும்; மன்ன! கயிலையை வெருவல் கண்டாய்! 36-

மன்ன- மன்னனே; கயிலையை வெருவல் கண்டாய் –
கயிலை மலையை அஞ்ச அசைத்தவனே; திரிபுரம் எரிய-
முப்புரங்களும் எரியும்படி; ஆங்கு ஓர் – அங்கே ஒப்பற்ற;
தனிச்சரம் – சிறப்பான அம்பைச்; துரந்த செல்வன் –
செலுத்திய சிவபிரானும்; ஒருவன் – தான் ஒருவனே;
இப்புவனம் மூன்றும் – இந்த உலகங்கள் மூன்றையும்; ஓர்
அடி ஒடுக்கிக் கொண்டோன் – ஓரடியிலே அடக்கிக்
கொண்ட திருமாலும்; பொருது உனக்கு உடைந்து போனார்
– போர் செய்து உனக்குத் தோற்றுப் போனார்கள்; மானிடர்
பொருத போர்க்கு வெருவுதி போலும் – அப்படி இருக்க
மனிதர் புரியும் போருக்கு நீ அஞ்சுகிறாய் போலும் என்றான்.

—————–

‘”வென்றவர் தோற்பர்; தோற்றோர் வெல்குவர்; எவர்க்கும் மேலாய்
நின்றவர் தாழ்வர்; தாழ்ந்தோர் உயர்குவர்; நெறியும் அஃதே”
என்றனர் அறிஞர் அன்றே! ஆற்றலுக்கு எல்லை உண்டோ?
புன் தவர் இருவர் போரைப் புகழ்தியோ?-புகழ்க்கு மேலோய்! 37-

புகழ்க்கு மேலோய் – உரைப்பார் உரையாம் புகழ்
கடந்து நின்ற மேம்பட்டவனே; வென்றவர் தோற்பர்-
வெற்றி பெற்றவர்கள் -தோல்வியடைவர்; தோற்றோர் வெல்வர் – தோல்வி அடைந்தவர்
வெற்றி பெறுவர்; எவர்க்கும் மேலாய் நின்றவர் தாழ்வர்-
பிறருக்கு மேலாக உயர்ந்து நின்றவர் தாழ்ச்சியடைவார்கள்;
தாழ்ந்தோர் உயர்குவர் – தாழ்ந்து நின்றவர்கள் உயர்ச்சியடைவர்;
நெறியும் அஃதே- உலகத்து முறை அதுதான்; என்றனர் அறிஞர்
அன்றே- என்று உலகியல் அறிந்த அறிஞர்கள் கூறியுள்ளனர்;
ஆற்றலுக்கு எல்லை உண்டோ- வல்லமைக்கு எல்லை இது
எனக் கூற முடியுமா? புன்தவர் இருவர் போரைப் புகழ்தியோ-
அதனால் புல்லிய தவவேடத்தை உடைய இருவர் செய்த போரை
நீ புகழ்வது என்? என்றவாறு.

—————-

‘தேவியை விடுதிஆயின், திறல் அது தீரும் அன்றே;
ஆவியை விடுதல் அன்றி, அல்லது ஒன்று ஆவது உண்டோ?
தா அரும் பெருமை அம்மா நீ இனித் தாழ்த்தது என்னே?
காவல! விடுதி, இன்று இக் கையறு கவலை; நொய்தின். 38-

தேவியை விடுதி ஆயின்- சீதையை விட்டு விடுவாய் ஆனால்;
திறல் அது தீரும் அன்றே- உன் வலிமையால் வந்து புகழ் நீங்கும்
அல்லவா? அல்லது- அவ்வாறு விடாமல் போனால்; ஆவியை
விடுதல் அன்றி- உயிரை விடுதல் அல்லது; ஒன்று ஆவது
உண்டோ- வேறு ஒன்று நடப்பது உண்டோ? தா அரும் பெருமை
அம்மா – இதுவரை அழிவில்லாத உன் பெருமையை;நீ இனித்
தாழ்த்தது என்னே- இப்போது நீயே தாழ்த்திக் கொள்வது
எதற்கு? இன்று இக்கையறு கவலை – இப்போது செயலற்றுப்
போவதற்குக் காரணமான கவலையைக்; காவல நொய்தின் விடுதி
– காவலனே விரைவாக விடுக.

—————-

‘இனி இறை தாழ்த்தி ஆயின், இலங்கையும் யாமும் எல்லாம்
கனியுடை மரங்கள் ஆக, கவிக் குலம் கடக்கும் காண்டி;
பனியுடை வேலைச் சில் நீர் பருகினன் பரிதி என்னத்
துனி உழந்து அயர்வது என்னே? துறத்தியால் துன்பம்’ என்றான். 39-

இனி இறை தாழ்த்தி ஆயின் – இனி நொடிப்
பொழுதேனும் நீ போர் செய்யாது தாமதித்தால்; இலங்கையும்
– இலங்கை மாநகரமும்; யாமும் எல்லாம் – அரக்கர்களாகிய
நாமும் பிறவும்; கனியுடை மரங்கள் ஆக – பழங்களைக்
கொண்ட மரங்கள் போல் ஆகுமாறு; கவிக்குலம் கடக்கும்-
வானரர் கூட்டம் வென்று விடும்; காண்டி – இதனைக் காண்;
பனியுடை வேலைச் சில்நீர்- குளிர்ச்சி பொருந்திய கடலில்
உள்ள மிகுதியான நீரில் சிறிதளவு நீரைப்; பருகினன் பருதி-
சூரியன் பருகினான்; என்னத் – என்பதற்காகத்; துனி உழந்து
– மனவெறுப்புக் கொண்டு; அயர்வது என்னே- வருந்துவது
எதற்காக? துறத்தியால் துன்பம் என்றான் – துன்பத்தை
விட்டு விடுவாய் என்றான் மகோதரன்.

—————

‘முன், உனக்கு, இறைவர் ஆன மூவரும் தோற்றார்; தேவர்
பின், உனக்கு ஏவல் செய்ய, உலகு ஒரு மூன்றும் பெற்றாய்; புல்
நுனைப் பனி நீர் அன்ன மனிசரைப் பொருள் என்று உன்னி, என்,
உனக்கு இளைய கும்பகருணனை இகழ்ந்தது?-எந்தாய்! 40-

எந்தாய் – என் தந்தையே!; முன் உனக்கு- முன்பு உனக்கு;
இறைவர் ஆன மூவரும் தோற்றார் – தலைமையுடைய அரி
அரன் அயன் ஆகிய மூவரும் தோற்றனர்; தேவர்பின் –
அதற்குப் பிறகு தேவர்கள் தோற்றார்கள்; உலகு ஒரு மூன்றும்-
உலகு மூன்றையும்; உனக்கு ஏவல் செய்யப் பெற்றாய்-
உனக்கு ஏவல் செய்யும்படி வென்று பெற்றுள்ளாய்; அப்படிப்பட்ட
வரமும் வலிமையும் உடைய நீ; புல் நுனைப் பனிநீர் அன்ன-
புல்லின் நுனியில் ஒட்டியுள்ள பனிநீரைப் போன்று உள்ள;
மனிசரைப் பொருள் என்று உன்னி- மனிதர்களை ஒரு
பொருளாக மதித்து எண்ணி; என் உனக்கு இளைய
கும்பகருணனை இகழ்ந்தது- உனக்கு இளைய கும்பகருணனின்
ஆற்றலை மதியாது இகழ்ந்தது என்ன காரணமோ? என்றவாறு.

————-

‘ஆங்கு அவன் தன்னைக் கூவி, ஏவுதிஎன்னின், ஐய!
ஓங்கலே போல்வான் மேனி காணவே ஒளிப்பர் அன்றே;
தாங்குவர் செரு முன் என்னின், தாபதர் உயிரைத் தானே
வாங்கும்’ என்று இனைய சொன்னான்; அவன் அது மனத்துக் கொண்டான். 41-

ஐய – தலைவனே; ஆங்கு அவன் தன்னைக் கூவி-
அந்தக் கும்பகருணனை அழைத்து; ஏவுதி என்னின் – போர்
செய்யக் கட்டளையிடுவாயாயின்; ஓங்கலே போல்வான்- மலை
போன்ற அவனது; மேனி காணவே ஒளிப்பர் அன்றே-
உடலின் தன்மையைக் காணவே அஞ்சி ஒளிந்து
கொள்வார்களன்றோ? தாங்குவர் செரு முன் என்னில்-
அவ்வாறு அஞ்சி ஒளிந்து கொள்ளாமல் எதிர் வந்து போர்
செய்வர் எனில்; தாபதர் உயிரைத்- அந்தத் தவவேடம்
கொண்ட இராம இலக்குவரது உயிரைத்; தானே வாங்கும்
என்று – கும்பகருணனே போக்குவான் என்று; இனைய
சொன்னன் – இத்தன்மையான வார்த்தைகளை மகோதரன்
சொன்னான்; அவன் அது – அந்த இராவணன் அந்த
சொல்லை; மனத்துக் கொண்டான் – மனத்திலே ஏற்றுக்
கொண்டான்.

————–

இராவணன் மகோதரனைப் புகழ்தல்
‘பெறுதியே, எவையும் சொல்லி;-பேர் அறிவாள்!-சீரிற்று
அறிதியே; என்பால் வைத்த அன்பினுக்கு அவதி உண்டோ?
உறுதியே சொன்னாய்’ என்னா, உள்ளமும் வேறுபட்டான்;-
இறுதியே இயைவது ஆனால், இடை, ஒன்றால் தடை உண்டாமோ? 42-

பேர் அறிவாள – பேர் அறிவு உடையவனே; பெறுதியே
யெவையும் சொல்லி – எல்லாவற்றையும் சொல்லால் பெறுவாய்;
சீரிற்று அறிதியே- நீ சிறந்த செயலை அறிந்துள்ளாய்; என்பால்
வைத்த – என்னிடத்தில் கொண்ட; அன்பினுக்கு அவதி
உண்டோ – அன்பினுக்கு ஓர் எல்லை உண்டோ; உறுதியே
சொன்னாய் – எனக்கு உறுதி தரும் செயலையே சொன்னாய்;
என்னா- என்று புகழ்ந்து; உள்ளமும் வேறுபட்டான்- மனம்
மாறுபட்டவன் ஆனான் இராவணன்; இறுதியே இயைவது
ஆனால் – ஒருவனுக்கு இறுதி வந்து நேரும்போது; இடை
யொன்றால் தடை உண்டாமோ- இடையில் வேறு ஒன்றினால்
தடை உண்டாகுமோ? (உண்டாகாது என்றவாறு).

—————

வீரர்கள் கும்பகருணனைத் துயில் எழுப்புதல்
‘நன்று இது கருமம்’ என்னா, ‘நம்பியை நணுக ஓடிச்
சென்று இவண் தருதிர்’ என்றான்; என்றலும், நால்வர் சென்றார்;
தென் திசைக் கிழவன் தூதர் தேடினர் திரிவர் என்ன,
குன்றினும் உயர்ந்த தோளான் கொற்ற மாக் கோயில் புக்கார். 43-

நன்று இது கருமம் என்னா- கும்பகருணனைப் போருக்கு
அனுப்பும் இச்செயல் செயத் தக்கதே என்று சொல்லி; நம்பியை
நணுக ஓடிச் சென்று இவண் திருதிர் என்றான் – (தூதரை
அழைத்த இராவணன் அவர்களிடம்) நீங்கள் ஓடிப்போய் ஆடவர்
திலகனாய கும்பகருணனை இங்கே அழைத்து வாருங்கள் என்றான்;
என்றலும் – என்று இராவணன் கூறிய அளவிலே; தென்திசைக்
கிழவன் தூதர் – தெற்குத்திசைத் தலைவனாகிய இயமனது தூதர்;
தேடினர் திரிவர் என்ன- தேடித்திரிவது போல; நால்வர்
சென்றார் – நான்கு பேர் சென்றார்கள்; குன்றினும் உயர்ந்த
தோளான்- அவர்கள் குன்றைக் காட்டிலும் உயர்ந்த தோள்களை
உடைய கும்பகருணனது; கொற்ற மாக்கோயில் புக்கார் –
வெற்றி பொருந்திய பெரிய அரண்மனைக்குள் சென்று புகுந்தார்கள்.

————–

கிங்கரர் நால்வர் சென்று, அக் கிரி அனான் கிடந்த கோயில்
மங்குல் தோய் வாயில் சார்ந்து, ‘மன்ன! நீ உணர்தி’ என்ன,
தம் கையின் எழுவினாலே தலை செவி தாக்க, பின்னும்
வெங்கணான் துயில்கின்றானை வெகுளியால் இனைய சொன்னார்: 44-

கிங்கரர் – பணியாளர்; நல்வர் சென்று- நல்வர் போய்:
அக்கிரி அனான் – மலையை ஒத்தவனான கும்பகருணன்;
கிடந்த கோயில் – படுத்துறங்கும் அரண்மனையின்; மங்குல்
தோய் – மேகம் படிந்துள்ள; வாயில் சார்ந்து – வாயிலை
அடைந்து; மன்ன- அரசனே; நீ உணர்தி என்ன – நீ துயில்
விட்டு எழுதி என்று சொல்லி; தம் கையின் எழுவினாலே-
தங்கள் கையில் உள்ள இரும்புத் தூண்களால்; தலை செவி
தாக்க – தலையிலும் செவியிலும் தாக்க; பின்னும்- அவ்வாறு செய்த பின்னும்;
வெங்கணான் துயில்கின்றானை- கொடிய கண்களையுடைய
தூங்குகின்ற கும்பகருணனைப் பார்த்து; வெகுளியால்-
சினத்தினால்; இனைய சொன்னார் – இச்சொற்களைச்
சொல்லலானார்.

————

கிங்கரர் கூற்றும் இராவணன் செயலும்
‘உறங்குகின்ற கும்பகன்ன! உங்கள் மாய வாழ்வு எலாம்
இறங்குகின்றது! இன்று காண்; எழுந்திராய்! எழுந்திராய்!
கறங்கு போல வில்பிடித்த கால தூதர் கையிலே,
உறங்குவாய், உறங்குவாய்! இனிக் கிடந்து உறங்குவாய்’! 45-

உறங்குகின்ற கும்பகன்ன- உறங்குகின்ற கும்பகர்ணனே;
உங்கள் – உங்களுடைய; மாய வாழ்வு எலாம்- பொய்யான
வாழ்வு எல்லாம்; இன்று இறங்குகின்றது- இன்றில் இருந்து
இறங்குவதற்குத் தொடங்கிவிட்டது; எழுந்திராய் எழுந்திராய்
– அதனைக் காண்பதற்காக எழுந்திருப்பாய் எழுந்திருப்பாய்;
கறங்கு போல- காற்றாடி போல் எல்லா இடத்திலும் திரிகின்ற;
வில்பிடித்த- வில்லைப் பிடித்த; காலதூதர்- காலனுக்குத்
தூதரானவர்; கையிலே இனிக் கிடந்து – கையில் இனிப்
படுத்து; உறங்குவாய் உறங்குவாய் – தூங்குவாயாக.

———

கும்பகருணனை துயிலெழுப்பல்
என்று சொல்ல, அன்னவன் எழுந்திராமை கண்டு போய்,
‘மன்றல் தங்கு மாலை மார்ப! வன் துயில் எழுப்பலம்’
அன்று, ‘கொள்கை கேண்மின்’ என்று மாவொடு ஆளி ஏவினான்,
‘ஒன்றன்மேல் ஒர் ஆயிரம் உழக்கிவிட்டு எழுப்புவீர்.’ 46-

என்று சொல்ல- என்று பலவாறு சொல்லி எழுப்பவும்;
அன்னவன்- அந்தக் கும்பகருணன்; எழுந்திராமை –
உறக்கத்தில் இருந்து எழுந்திராமையைக்; கண்டு போய் –
கண்டு இராவணனிடம் திரும்பிப் போய்;மன்றல் தங்கு மாலை
மார்ப- மணம் நிறைந்த மாலை அணிந்த மார்பை உடையவனே;
வன்துயில் எழுப்பலம்- கும்பகருணனை வலிய உறக்கத்தில்
இருந்து எழுப்ப வல்லோம் அல்லோம்; என்று சொல்ல- என்று
கூற; அன்று- அப்போது (இராவணன்); கொள்கை கேண்மின்
என்று – செய்யத்தக்க செயலைக் கேண்மின் என்று கூறி;
ஒன்றன் மேல் – ஒன்றன் மேல் ஒன்றாக;மாவொடு ஆளி ஓர்
ஆயிரம்- ஓராயிரக்கணக்கான குதிரைகளையும் யாளிகளையும்;
உழக்கி விட்டு எழுப்புவீர் – மிதிக்கச் செய்து எழுப்புவீர்;
என்று ஏவினான் – என்று அவர்களுக்குக் கட்டளையிட்டான்.

—————

‘அனைய தானை அன்று செல்ல, ஆண்டு நின்று பேர்ந்திலன்;
இனைய சேனை மீண்டது’ என்று இராவணற்கு இயம்பலும்
‘வினையும் வல்ல நீங்கள் உங்கள் தானையோடு சென்மின்’ என்று,
இனைய மல்லர் ஆயிராரை ஏவி நின்று இயம்பினான். 47-

அனையதானை- இராவணனால் அனுப்பப்பட்ட ஆயிரம்
மாவோடாளியான அந்தச் சேனை; அன்று செல்ல- அப்போது
கும்பகருணனை மிதித்துச் செல்லவும்; ஆண்டு- உறங்கிய
இடத்தில்; நின்று- இருந்து; பேர்த்திலன் – அசையவில்லை;
இனையசேனை – இந்தச் சேனை; மீண்டது என்று- எழுப்ப
முடியாமல் திரும்பியது என்று; இராவணற்கு இயம்பலும் –
கிங்கரர் நால்வரும் இராவணனுக்குச் சொல்ல; மல்லர்
ஆயிராரை- ஆயிரம் மல்லர்களை; இனைய வினையும் வல்ல
நீங்கள் – இப்படிப்பட்ட தொழில் செய்வதில் வல்லமை
உடைய நீங்கள்; உங்கள் தானையோடு சென்மின் – உங்கள்
படையுடன் செல்லுங்கள்; என்று ஏவி நின்று இயம்பினான் –
என்று அவர்களுக்கு ஆணையிட்டு நின்று கூறினான்.

—————-

சென்றனர் பத்து நூற்றுச் சீரிய வீரர் ஓடி
‘மன்றல் அம் தொங்கலான் தன் மனம் தனில் வருத்தம் மாற
இன்றுஇவன் முடிக்கும்’ என்னா, எண்ணினர்; எண்ணி, ஈண்ட,
குன்று என உயர்ந்த தோளான் கொற்றமாக் கோயில் புக்கார். 48-

பத்து நூற்றுச் சீரிய வீரர் – ஆயிரம் சிறந்த வீரர்கள்;
மன்றல் அம் தொங்கலான் தன் – மணம்மிக்க அழகிய மலர்
மாலையணிந்த இராவணன் தன்; வருத்தம் மாற- மனவருத்தம்
தீரும்படி; இன்று இவன் முடிக்கும் என்னா – இன்றே
இக்கும்பகருணன் பகையை முடிப்பான் என; எண்ணினர்
எண்ணி ஈண்ட- மனத்தில் பலவாறு எண்ணியவர்களாய்
நெருங்கச் சூழ்ந்து; குன்று என உயர்ந்த தோளான் –
குன்றைவிட உயர்ந்த தோள்களையுடைய கும்பகருணனது;
கொற்றமாக்கோயில் – வெற்றி தங்கிய பெரிய
அரண்மனைக்கண்; ஓடிச் சென்றனர் புக்கார் – ஓடிச் சென்று
புகுந்தார்கள்.

———————

திண் திறல் வீரன் வாயில் திறத்தலும், சுவாத வாதம்
மண்டுற, வீரர் எல்லாம் வருவது போவதாக,
கொண்டுறு தடக் கை பற்றி, குலமுடை வலியினாலே
கண் துயில் எழுப்ப எண்ணி, கடிது ஒரு வாயில் புக்கார். 49-

கண்துயில் எழுப்ப எண்ணி – கொற்றமாக்கோயில் புக்க
பத்து நூற்றுச் சீரியவீரர் கும்பகருணனைத் துயில் எழுப்பக்
கருதிச் சென்று; திண்திறல் வீரன்- வலிமை மிக்க
கும்பகருணனது; வாயில் திறத்தலும் – அரண்மனை வாயிலைத்
திறந்தவுடன்; சுவாதவாதம் – மூச்சுக்காற்றானது; மண்டுற –
மிகுதியாக வீசியதால் அதன் வேகத்திலிருந்து தப்பித்
துயிலெழுப்புவதற்காக; வீரர் எல்லாம் வருவது போவதாக-
அவ்வீரர்கள் தாங்கள் அலைக்கழிக்கப் படுவதைக் கண்டு;
கொண்டுறு தடக்கை பற்றி- வலிமை கொண்டுள்ள தங்கள்
கைகளை ஒருவருக்கொருவர் பிடித்துக் கொண்டு; குலமுடை
வலியினாலே – ஒன்றாகத் திரண்ட தங்கள் வலிமையால்; கடிது
ஒருவாயில் புக்கார் – விரைவாக வேறொரு வாயில் வழியாக
புகுந்தார்கள்.

————-

ஓதநீர் விரிந்ததென்ன உறங்குவான் நாசிக் காற்றால்
கோது இலா மலைகள் கூடி, வருவது போவதாக,
ஈது எலாம் கண்ட வீரர் ஏங்கினர், துணுக்கமுற்றார்;
போதுவான் அருகு செல்லப் பயந்தனர், பொறி கொள் கண்ணார். 50-

பொறிகொள் கண்ணார்- தீப்பொறி வெளிப்படும்
கண்ணையுடைய அவ்வீரர்கள்; ஓதநீர் விரிந்த தென்ன
உறங்குவான் – கடல்நீரின் விரிந்த பரப்பு உறங்குவது போல்
உறங்குகின்றவனான கும்பகருணனது; நாசிக் காற்றால் – மூச்சுக்
காற்றினது வேகத்தால்; கோது இலா மலைகள் கூடி – குற்றம்
இல்லாத மலைக்கூட்டங்கள் ஒன்று சேர்ந்து; வருவது
போவதாக- வந்து செல்வதாக; ஈதுஎலாம் கண்ட வீரர்-
இத்தன்மையைக் கண்ட வீரர்கள்; ஏங்கினர்- என்ன செய்வது
என்று தெரியாது ஏக்கங்கொண்டு; துணுக்கமுற்றார் –
மனநடுக்கங்கொண்டார்கள்; போதுவான் அருகு செல்லப்
பயந்தனர்- அக்கும்பகருணனது அருகில் செல்ல அஞ்சினார்கள்.

—————-

‘இங்கு இவன் தன்னை யாம் இன்று எழுப்பல் ஆம் வகை ஏது?’ என்று,
துங்க வெவ் வாயும் மூக்கும் கண்டு, மெய் துணுக்கமுற்றார்;
அங்கைகள் தீண்ட அஞ்சி, ஆழ் செவிஅதனினூடு,
சங்கொடு தாரை, சின்னம், சமைவுறச் சாற்றலுற்றார். 51-

துங்கவெவ்வாயும் மூக்குங்கண்டு- கும்பகருணனது வலிய
வாயினையும் மூக்கினையும் கண்டு; மெய் துணுக்கமுற்றார் –
உடல் நடுங்கிய அவ்வீரர்கள்; அங்கைகள் தீண்ட அஞ்சி-
தங்கள் கைகளினால் அவனைத் தொட்டு எழுப்பப் பயந்து; இங்கு
இவன் தன்னை- இன்று இப்போது இவனை; யாம் இன்று
எழுப்பலாம் வகை ஏது என்று- வேறு வகையில் யாம் இவனை
இன்று எழுப்புவது எவ்வாறு என எண்ணி; ஆழ் செவி
அதனினூடு- ஆழமான காதுகளின் உள்ளே; சங்கொடு, தாரை,
சின்னம் – சங்கு அடிக்கும் தாரை, ஊதுகொம்பு ஆகிய
கருவிகளின் மூலம், சமைவுறச் சாற்றலுற்றார் – பெருத்த பேரொலி
செய்யத் தொடங்கினார்கள்.

——————–

கோடு, இகல் தண்டு, கூடம், குந்தம், வல்லோர்கள்
கூடி, தாடைகள், சந்து, மார்பு, தலை எனும் இவற்றில் தாக்கி,
வாடிய கையர் ஆகி, மன்னவற்கு உரைப்ப, ‘பின்னும்
நீடிய பரிகள் எல்லாம் நிரைத்திடும், விரைவின்’ என்றான். 52-

கோடு இகல் தண்டு- மலையோடு மாறுபட்ட தண்டாயுதமும்;
கூடம்- சம்மட்டியும்; குந்தம் – ஈட்டி; வல்லோர்கள் கூடி-
என்னும் இப்படைக்கலங்களைக் கையாள்வதில் பயிற்சி
வலிமையுடையவர்கள் ஒருங்கு கூடித்; தாடைகள் –
கும்பகருணனது கன்னத்தாடைகள்; சந்து- உடல் பொருத்துக்கள்;
மார்பு – மார்பு; தலை- தலை; எனும் இவற்றில் தாக்கி –
என்னும் உடலின் மெல்லிய பகுதிகளில் எல்லாம் தாக்கி;
வாடிய கையர் ஆகி – துயிலெழுப்ப முடியாது கை
ஓய்ந்தவர்களாய்; மன்னவற்கு உரைப்ப- இராவணனிடம் சென்று
அதனைத் தெரிவிக்க; பின்னும் நீடிய பரிகள் எல்லாம்
விரைவின் நிரைத்திடும் – அதற்கு அவன் இதற்கு மேல் நீண்ட
குதிரைகளை எல்லாம் சீக்கிரம் வரிசையாக நிரம்பச் செலுத்துங்கள்;
என்றான்.

———–

கட்டுறு கவன மா ஓர் ஆயிரம் கடிதின் வந்து,
மட்டு அற உறங்குவான் தன் மார்பிடை, மாலை மான
விட்டு உற நடத்தி, ஓட்டி, விரைவு உள சாரி வந்தார்;
தட்டுறு குறங்கு போலத் தடந் துயில் கொள்வதானான். 53-

மட்டுஅற உறங்குவான் தன் – (இராவணன் ஆணை பெற்ற
வீரர்கள்) அளவு மீறி அதிகமாக உறங்குபவனான கும்பகருணனது;
மார்பிடை- மார்பில்; ஓர் ஆயிரம்- ஓராயிரம்; கட்டுறு கவனமா
– கடிவாளம் பூட்டப்பெற்ற விரைவாகச் செல்லும் குதிரைகளுடன்;
கடிதின் வந்து – விரைந்து வந்து; விட்டு உற நடத்தி ஓட்டி-
அவற்றை மார்பில் நடத்தி ஓட்டி; மார்பிடை மாலைமான-
அவனுடைய மார்புக்கு மாலை போல; விரைவுளசாரி வந்தார் –
விரைவாகச் சுற்றி வந்தார்கள்; (அவ்வாறு அவர்கள் செய்த
செயலால்) குறங்கு தட்டுறு போல – துடையைத் தட்டுவது
போலத்; தடந்துயில் கொள்வதானான்- அவன் பெருந்துயில்
கொள்ளலானான்.

————

கொய்ம் மலர்த் தொங்கலான் தன் குரை கழல் வணங்கி, ‘ஐய!
உய்யலாம் வகைகள் என்று, அங்கு எழுப்பல் ஆம் வகையே செய்தும்;
கய் எலாம் வலியும் ஓய்ந்த; கவன மா காலும் ஓய்ந்த;
செய்யலாம் வகை வேறு உண்டோ ? செப்புதி, தெரிய’ என்றார். 54-

கொய்ம்மலர்த் தொங்கலான் தன்- (குதிரைகளை விட்டு
உழக்கி எழுப்ப முடியாத வீரர்கள்) கொய்த மலர்களால்
தொடுக்கப் பெற்ற இராவணனது; குரைகழல் வணங்கி –
ஒலிக்கின்ற வீரக்கழல் அணிந்த பாதங்களை வணங்கி; ஐய –
ஐயனே; உய்யலாம் வகைகள் என்று – அக்கும்பகருணனை
எழுப்பினால் போரில் வென்று உய்யலாம் என எண்ணி; அங்கு
எழுப்பல் ஆம் வகையே செய்தும்- அவனை எழுப்பக்கூடிய
எல்லா வழிகளையும் செய்தோம் அவ்வாறு செய்ததால்; கய்
எலாம் வலியும் ஓய்ந்த- எங்கள் கை வலிமை எல்லாம்
போய்விட்டது; கவனமா காலும் ஓய்ந்த – விரைந்து செல்லும்
குதிரைகளின் காலும் அவன் மார்பை மிதித்து ஓய்ந்தன;
செய்யலாம் வகை வேறு உண்டோ? – இனி
அக்கும்பகருணனைத் துயிலெழுப்பச் செய்யக்கூடிய வழி வேறு
ஏதாவது உண்டோ; செப்புதி தெரிய என்றார்- உண்டெனின்
யாங்கள் அறியும்படி சொல்லுவாயாக என்றார்கள்.

————-

‘இடை பேரா இளையானை, இணை ஆழி மணி நெடுந் தேர்
படை பேரா வரும்போதும், பதையாத உடம்பானை,
மடை பேராச் சூலத்தால், மழு வாள் கொண்டு, எறிந்தானும்,
தொடை பேராத் துயிலானை, துயில் எழுப்பிக் கொணர்க!’ என்றான். 55-

இடை பேரா இளையானை- எக்காலத்திலும் என்னை விட்டு
நீங்காத தம்பியும்; இணை ஆழி மணி நெடுந்தேர் – இரண்டாக
இணைந்த சக்கரங்களையுடைய மணிகளால் அழகுபடுத்தப்பட்ட
பெரிய தேர்ப்; படை பேரா வரும் போதும் – படை முதலிய
படைகள் தன் மீது எதிர்த்து வந்தாலும்; பதையாத உடம்பானை
– சிறிதும் மனம் மற்றும் உடல் வருத்தப்படுதலில்லாதவனும்;
தொடை பேராத்துயிலானை- இடைவிடாது உறங்குகின்றவனும்
ஆகிய கும்பகருணனை; மடை பேராச்சூலத்தால்- மூட்டுவாய்
நீங்காத சூலப்படையாலும்; மழுவாள் கொண்டு- மற்றும் நீங்காத
சூலப்படையாலும்; மழுவாய் கொண்டு- மற்றும் மழுப்படை
வாட்படையாலும்; எறிந்தானும் – தாக்கியாயினும்; துயில் எழும்பிக் கொணர்க என்றான்- துயில் எழுப்பி
அழைத்து வருக என்று இராவணன் கூறினான்.

—————–

என்றலுமே அடி இறைஞ்சி, ஈர்-ஐஞ்ஞூற்று இராக்கதர்கள்,
வன் தொழிலால் துயில்கின்ற மன்னவன் தன் மாடு அணுகி, நின்று
இரண்டு கதுப்பும் உற, நெடு முசலம் கொண்டு அடிப்ப,
பொன்றினவன் எழுந்தாற்போல், புடைபெயர்ந்து அங்கு எழுந்திருந்தான். 56-

என்றலுமே- என்று இராவணன் கூறியவுடனே; அடி
இறைஞ்சி – அவனது அடியை வணங்கிவிட்டு; ஈர்-ஐஞ்ஞூற்று
– ஆயிரம்; இராக்கதர்கள் – அரக்கர்கள்; துயில்கின்ற
மன்னவன் தன் மாடு அணுகி நின்று- உறங்குகின்ற
கும்பகருணனது பக்கத்தில் நெருங்கி நின்று; வன்தொழிலால்-
தங்களது வலிய தொழில் திறத்தால்; இரண்டு கதுப்பும் உற-
இரண்டு கன்னத்திலும் பொருந்துமாறு; நெடு முசலம் கொண்டு
அடிப்ப – நீண்ட உலக்கைகளைக் கொண்டு அடிக்கப்;
பொன்றினவன் எழுந்தாற்போல் – இறந்தவன் எழுந்தது
போல; புடை பெயர்ந்து- படுத்த இடத்தை விட்டு அசைந்து;
அங்கு எழுந்திருந்தான்- அப்போது எழுந்தான்.

—————

மூவகை உலகும் உட்க, முரண் திசைப் பணைக் கை யானை
தாவரும் திசையின் நின்று சலித்திட, கதிரும் உட்க,
பூவுளான், புணரி மேலான், பொருப்பினான், முதல்வர் ஆய
யாவரும் துணுக்குற்று ஏங்க, எளிதினின் எழுந்தான், வீரன். 57-

ரன்- வீரனாகிய கும்பகருணன்; மூவகை உலகும் உட்க-
மூன்று உலகங்களும் அஞ்சி நடுங்கவும்; முரண் திசைப்
பணைக்கையானை- ஒன்றோடு ஒன்று முரண்பட்டு எதிர் எதிர்
நிற்கும் திசைகளில் உள்ள வலிய பருத்த கைகளைக் கொண்ட
திசையானைகள்; தாவரும் திசையின் நின்று சலித்திட-
தங்களுக்கு உரிய திசைகளில் இருந்து நிலை பெயரவும்; கதிரும்
உட்க- சூரியனும் அஞ்சி நடுங்கவும்; பூவுளான் – பிரமனும்;
புணரி மேலான்- பாற்கடலிற் பள்ளி கொண்டுள்ள திருமாலும்:
பொருப்பினான்- வெள்ளிப் பொருப்பில் தங்கியுள்ள
சிவனும் – முதல்வர் ஆய யாவரும் – ஆகிய மூவரை முதலாகக்
கொண்ட பிற தேவர்களும் பிறரும்; துணுக்குற்று ஏங்க-
நடுக்கம் உற்று ஏக்கங்கொள்ளுமாறு; எளிதினின் எழுந்தான் –
எளிமையாக எழுந்தான்.

————-

விண்ணினை இடறும் மோலி; விசும்பினை நிறைக்கும் மேனி;
கண்ணெனும் அவை இரண்டும் கடல்களின் பெரிய ஆகும்;
எண்ணினும் பெரியன் ஆன இலங்கையர் வேந்தன் பின்னோன்,
மண்ணினை அளந்து நின்ற மால் என வளர்ந்து நின்றான். 58-

எண்ணினும் பெரியன் ஆன- எண்ணும் எண்ணத்தில் அடங்காத
வலிமையும் வர ஆற்றலும் பெற்ற பெரியவன் ஆன; இலங்கையர்
வேந்தன்- இலங்கையர்க்கு அரசனான இராவணனது; பின்னோன்-
பின்பிறந்தவனான கும்பகருணன்; விண்ணினை இடறும் மோலி –
ஆகாயத்தை முட்டும் மோலியுடனும்; விசும்பினை நிறைக்கும் மேனி – ஆகாயத்தை
மறைக்கும் மேனியுடனும்; கடல்களின் பெரிய ஆகும்- கடலை
விடப் பெரியவை என்று சொல்லும் படியான; கண்ணெனும் இவை
இரண்டும் – கண்கள் இரண்டு உடனும் தோன்றினான்;
(அத்தோற்றம்) மண்ணினை அளந்து நின்றமால் – மாபலியிடம்
மூவடி மண் கேட்ட குறளனாக வந்த திருமால்; என வளர்ந்து
நின்றான்- வளர்ந்து நின்றது போல் இருந்தது என்றவாறு.

————–

கும்பகருணன் உணவு அருந்தல்
உறக்கம் அவ் வழி நீங்கி, உணத் தகும்
வறைக்கு அமைந்தன ஊனொடு, வாக்கிய
நறைக் குடங்கள் பெறான், கடை நக்குவான்,
இறக்க நின்ற முகத்தினை எய்துவான்; 59-

அவ்வழி உறக்கம் நீங்கி- அப்போது முற்றும் உறக்கம்
கலைந்து; உணத்தகும் – உடனே உண்ணுதற்குத் தகுந்த; வறைக்கு
அமைந்தன ஊனொடு- வறுத்தல் செய்யப்பட்ட; வாக்கிய நறைக்
குடங்கள் பெறான்- நிரப்பிய கட்குடங்களும் குடித்தற்குக்
கிடைக்காமையாலே; இறக்க நின்ற முகத்தினை எய்துவான்-
சோர்ந்து தாழ்ந்த முகத்தினையுடையவனாய்க்; கடை தக்குவான்
– தன் கடை வாயை நக்கினான்.

——————

ஆறு நூறு சகடத்து அடிசிலும்,
நூறு நூறு குடம் களும், நுங்கினான்;
ஏறுகின்ற பசியை எழுப்பினான்-
சீறுகின்ற முகத்து இரு செங்கணான். 60-

சீறுகின்ற முகத்து- சினம் மிக்குத் தோன்றுகின்ற
முகத்தில்; இரு செங்கணான்- அச்சினம் மேலும் மிக்குத்
தோன்றுவதற்கு அமைந்த சிவந்த இரு கண்களையுடைய கும்பகருணன்;
ஆறுநூறு சகடத்து அடிசிலும்- அறுநூறு வண்டிச் சோற்றையும்; நூறு நூறு
குடங்களும்- பல நூறு குடம் கள்ளையும்; நுங்கினான் –
விரைந்து உண்டான்; ஏறுகின்ற பசியை எழுப்பினான் – அதனால்
அவன் மிகுகின்ற பசியை மேலும் அதிகமாக எழுப்பியவன்
ஆனான்.

————-

எருமை ஏற்றை ஓர் ஈர்-அறுநூற்றையும்
அருமை இன்றியே தின்று, இறை ஆறினான்,
பெருமை ஏற்றது கோடும் என்றே-பிறங்கு
உருமை ஏற்றைப் பிசைந்து, எரி ஊதுவான். 61-

பிறங்கு உருமை ஏற்றை- விளங்குகின்ற ஆண் இடியைப்;
பிசைந்து எரி ஊதுவான் – கையினால் பிசைந்து நெருப்புப்
பொறியாக ஊதவல்ல வலிமையுடைய கும்பகருணன்; பெருமை ஏற்றது-
பெருமை பெற்றதாகிய பேருண்டியைக்; கோடும் என்றே-
உட்கொள்வோம் என்று கருதி; எருமை ஏற்றை ஓர் ஈர் அறு
நூற்றையும்- எருமைக்கடாக்கள் ஆயிரத்திருநூற்றையும் அருமை
இன்றியே; தின்று- வருத்தமில்லாமல் தின்று, இறை
ஆறினான்-ஓரளவு பசி தணித்தான்.

————-

கும்பகருணன் தோற்றம்
இருந்த போதும், இராவணன் நின்றெனத்
தெரிந்த மேனியன், திண் கடலின் திரை
நெரிந்தது அன்ன புருவத்து நெற்றியான்,
சொரிந்த சோரி தன் வாய் வர, தூங்குவான்; 62-

திண் கடலின் திரை தெரிந்தது அன்ன- வலிய கடலின்
அலைகள் வளைந்து, தோன்றுவதைப் போன்ற; புருவத்து
நெற்றியான்- புருவத்தைக் கொண்ட நெற்றியை உடையவனும்;
சொரிந்த சோரி தன் வாய் வர தூங்குவான்- தான் உண்ட
ஊனில் இருந்து வெளிவரும் குருதி தன் வாயில் இருந்து
வெளிப்படுமாறு உறங்குபவனும் ஆன கும்பகருணன்; இருந்த போதும்
– உட்கார்ந்திருந்த போதும்; இராவணன் நின்றெனத்
தெரிந்த மேனியன் – இராவணன் எழுந்து நின்றது போன்றுள்ள
ஓங்கிய உடம்பினையுடையவன் ஆக விளங்கினான்.

——–

உதிர வாரியொடு ஊனொடு எலும்பு தோல்
உதிர, வாரி நுகர்வது ஒர் ஊணினான்;
கதிர வாள் வயிரப் பணைக் கையினான்;
கதிர வாள் வயிரக் கழற் காலினான்; 63-

உதிர வாரியொடு- குருதி பெருக்கெடுக்கும்; ஊனொடு எலும்பு
தோல் உதிர- ஊனும் எலும்பும் தோலும் சிதறி விழுமாறு;
வாரி நுகர்வது ஓர் ஊணினான் – வாரி எடுத்து உட்கொள்ளும்
உண்ணுதல் தொழில் உடையவன்; கதிர வாள் – ஒளியையுடைய
வாளேந்திய; வயிரப் பணைக்கையினான் – வலிமையுடைய பருத்த
கைகளை உடையவன்; கதிரவாள் – கதிரின் ஒளி போல் ஒளி
விடுகிற; வயிரக் கழற் காலினான் – வயிரங்கள்
பதிக்கப்பட்ட வீரக்கழல் அணிந்த கால்களை உடையவன்.

—————

இரும் பசிக்கு மருந்து என, எஃகினோடு
இரும்பு அசிக்கும் அருந்தும் எயிற்றினான்; வரும்
களிற்றினைத் தின்றனன்; மால் அறா
அருங்களில் திரிகின்றது ஓர் ஆசையான்; 64-

எஃகினோடு இரும்பு அசிக்கும்- எஃகு, இரும்பு முதலியவற்றை
அவமதிக்கின்ற; அருந்தும் எயிற்றினன் – உண்ணும் பற்களை
உடையவன்; இரும்பசிக்கு மருந்து என- தன் மிக்க பசியைத்
தணிப்பதற்கு மருந்து என்று; வரும் களிற்றினைத் தின்றனன் –
தன்மேல் வரும் களிறுகளைத் தின்றான்; மால் அறா
அரும்களில்- மயக்கம் தருவதில் இருந்து நீங்காத அருமையான
கள்ளில்; திரிகின்றது ஓர் ஆசையான் – செல்லுகின்ற
மனவிருப்பம் உடையவன்.

—————

சூலம் ஏகம் திருத்திய தோளினான்;
சூல மேகம் எனப் பொலி தோற்றத்தான்;
காலன்மேல் நிமிர் மத்தன்; கழல் பொரு காலன்;
மேல் நிமிர் செம் மயிர்க் கற்றையான்; 65-

ஏகம் சூலம் – ஒப்பற்ற சூலப்படையைத்; திருத்திய
தோளினான்- தீட்டி வைத்துள்ள தோளினையுடையவன்; சூலமேகம்
எனப் பொலி தோற்றத்தான் – கருக்கொண்ட கருமேகம் போல்
விளங்குகின்ற தோற்றம் உள்ளவன்; காலன் மேல்
நிமிர்மத்தன்- இயமன் மேல் போருக்குச் செல்லும் அளவு
உடற்செருக்குடையவன்; கழற்பொருகாலன் – வீரக் கழல்
அணிந்த கால்களை உடையவன்; மேல்நிமிர் செம்மயிர்க்
கற்றையான் – மேல் நோக்கி வளர்ந்த சிவந்த மயிர்த்
தொகுதியை உடையவன்.

——————-

எயில் தலைத் தகர, தலத்து இந்திரன் எயிறு
அலைத்த கரதலத்து, எற்றினான்; அயில்
தலைத் தொடர் அங்கையன்; சிங்க ஊன்
அயிறலைத் தொடர் அங்கு அகல் வாயினான். 66-

இந்திரன் எயிறு அலைத்த கரதலத்து- இந்திரனது பற்களை
உதிரச் செய்தகையினால்; தலத்து எயில் தலைத் தகர
எற்றினான்- அவனது இந்திரலோகத்தில் உள்ள மதில்
தலையுடைந்திடும்படி மோதியவன்; அயில் தலைத் தொடர்
அங்கையன்- வேற்படை தலைமையாக உடைய அகங்கைகளை
உடையவன்; சிங்க ஊன் அயிறலைத் தொடர் அங்கு அகல்
வாயினான் – சிங்க ஊனை உண்ணுவதை மேற்கொண்டு அகன்ற
வாயினை உடையவன்.

———————-

உடல் கிடந்துழி, உம்பர்க்கும் உற்று, உயிர்,
குடல் கிடந்து அடங்கா நெடுங் கோளினான்;
கடல் கிடந்தது நின்றதன்மேல் கதழ் வட
கடுங் கனல்போல் மயிர்ப் பங்கியான்; 67-

உடல் கிடந்துழி- தன் உடல் படுத்துக் கிடக்கும்போதே;
உம்பர்க்கும் – தேவர்களுக்கும்; உயிர்க்குடல் கிடந்து
உற்று அடங்கா – உயிர் வாழத் தேவையான குடல் இருக்கவேண்டிய
இடத்துக் கிடந்து அடங்காதே; நெடுங்கோளினான்- மிக்க வலிமை
உடையவன்; கடல் கிடந்தது- கடல் ஒன்று படுத்திருப்ப; அதன்
மேல் நின்ற- அந்தக் கடலின் மீது நின்ற; கதழ் வட
நெடுங்கனல் போல் – ஒளி விடும் கோபமிக்க கொடிய வடவைக்
கனல் போல் அமைந்த; மயிர்ப் பங்கியான்- செம்மயிர்க்
கற்றையை உடையவன்.

——-

திக்கு அடங்கலும் வென்றவன் சீறிட,
மிக்கு அடங்கிய வெங் கதிர் அங்கிகள்
புக்கு அடங்கிய மேருப் புழை என,
தொக்கு அடங்கித் துயில்தரு கண்ணினான்; 68-

திக்கு அடங்கலும் வென்றவன் – திக்குகள் முழுவதையும்
வென்றவனான இராவணன்; சீறிட- சினந்து சீறிடும்போது;
மிக்கு அடங்கிய- அச்சீற்றத்துக்கு முன் மிகவும் அடங்கிய;
வெங்கதிர் – சூரியனும்,; அங்கிகள்- நெருப்பும்; புக்கு
அடங்கிய- அஞ்சிப் புகுந்து பதுங்குவதற்குரிய; மேருப்புழை என
– மேரு மலையில் உள்ள குகை போல் தோன்றுகிற; தொக்கு அடங்கித்
– தோல் சுருங்கித்; துயில் தரு கண்ணினான் – உறக்கக்
குறிப்பை வெளிக்காட்டும் கண்களை உடையவன்.

————-

காம்பு இறங்கும் கன வரைக் கைம்மலை
தூம்பு உறங்கும் முகத்தின் துய்த்து, உடல்
ஓம்புறும் முழை என்று உயர் மூக்கினான்;
பாம்பு உறங்கும் படர் செவிப் பாழியான்; 69-

தூம்பு உறங்கும் முகத்தின் கைம்மலை- துளை உடைய துதிக்கை
பொருந்திய முகத்தினையுடைய யானைகள்; துய்த்து உடல்
ஓம்புறும்- உண்டு உடலைப் பேணுவதற்குரிய; காம்பு இறங்கும்
கனவரை முழை என்று- மூங்கில் தாழ வளர்ந்த பெரிய மலையில்
உள்ள குகை எனுமாறு; உயர் மூக்கினான்- பெரிய
மூக்கினையுடையவன்; பாம்பு உறங்கும்- பாம்பு உறங்குமாறு அமைந்த; படர் செவிப் பாழியான்- பரந்து நீண்ட
காதாகிப் படுக்கையிடத்தை உடையவன்.

———–

இராவணன் கும்பகருணன் சந்திப்பு

‘கூயினன் நும் முன்’ என்று அவர் கூறலும்,
போயினன், நகர் பொம்மென்று இரைத்து எழ;
வாயில் வல்லை நுழைந்து, மதி தொடும்
கோயில் எய்தினன், குன்று அன கொள்கையான். 70-

நும்முன் கூயினன் – உன் தமையன் உன்னை அழைத்தான்; என்று
அவர் கூறலும்- என்று துயில் எழுப்பிய அரக்கர் கூறிய உடன்;
குன்று அன கொள்கையான் – மலையை ஒத்த தோற்றமும் கொள்கை
உறுதியும் உள்ள கும்பகருணன்; நகர் பொம்மென்று இரைத்து
எழப்போயினன்- இலங்கை மாநகர மக்கள் பொம்மென்று
அவனைக் கண்டு மகிழ்ச்சி ஒலி எழுப்பப் போய்; மதி
தொடும் கோயில் வாயில் வல்லை நுழைந்து எய்தினன் –
சந்திரனைத் தொடும் அளவு ஓங்கி உயர்ந்துள்ள இராவணனது
அரண்மனை வாயிலில் விரைவாக நுழைந்து சேர்ந்தான்.

—————–

நிலை கிடந்த நெடு மதிள் கோபுரத்து
அலை கிடந்த இலங்கையர் அண்ணலைக்
கொலை கிடந்த வேல் கும்பகருணன், ஓர்
மலை கிடந்தது போல, வணங்கினான். 71-

நெடுமதிள் நிலை கிடந்த கோபுரத்து- நீண்ட மதிலையும்
பலநிலைகளாகக் கிடந்த கோபுரத்தையும் உடைய; அலை கிடந்த
இலங்கையர் அண்ணலைக் – கடலால் சூழப்பெற்ற இலங்கை
மக்களுக்குத் தலைவனான இராவணனைக்; கொலை கிடந்த வேல்
கும்பகருணன் – கொலைத்தொழிலில் பயின்ற வேல் ஏந்திய
கும்பகருணன்; ஓர் மலை கிடந்தது போல வணங்கினான் – ஒரு
மலை படுத்துக் கிடப்பதைப் போன்று நிலத்தில் விழுந்து
வணங்கினான்.

———————

இராவணன் கும்பகருணனைத் தழுவி, உணவு அளித்துப் போர்க்கோலம் செய்தல்
வன் துணைப் பெருந் தம்பி வணங்கலும்,
தன் திரண்ட தோள் ஆரத் தழுவினான்- நின்ற
குன்று ஒன்று, நீள் நெடுங் காலொடும்
சென்ற குன்றைத் தழீஇயன்ன செய்கையான். 72-

வன் துணைப் பெருந்தம்பி வணங்கலும் – தனக்கு வலிமையான
துணைவனான பெருமை பெற்ற தம்பியாகிய கும்பகருணன் கிடந்து
தன்னை வணங்கிய உடனே; நின்ற குன்று ஒன்று- அசையாது நிலை
பெற்று நின்ற குன்று ஒன்று; நீள் நெடுங்காலொடும் – மிக
நீண்ட காலோடு; சென்ற குன்றைத் தழீஇயன்ன செய்கையான் –
தன்னை நோக்கி வந்த மலையைத் தழுவிக் கொண்டது போன்ற
தன்மையனாய்; தன் திரண்ட தோள் ஆரத் தழுவினான் – தன்
திரண்ட தோளினால் ஆரத் தழுவிக் கொண்டான்.

—————–

உடன் இருத்தி, உதிரத்தொடு ஒள் நறைக்
குடன் நிரைத்தவை ஊட்டி, தசைக் கொளீஇ கடல்
நுரைத் துகில் சுற்றி, கதிர்க் குழாம் புரை
நிரைத்து ஒளிர் பல் கலன் பூட்டினான். 73-

உடன் இருத்தி- இராவணன் கும்பகருணனைத் தன்னுடன்
அமர்த்தி; உதிரத்தொடு- இரத்தத்துடன்; ஒள்நறைக்குடன்
நிரைத்தவை ஊட்டி- சிறந்த கட்குடங்களை வரிசையாக வைத்து
உண்பித்து; தசைக்கொளீஇ- ஊனையும் உண்ணக் கொடுத்து;
கடல் நுரைத் துகில் சுற்றி- கடல் நுரை போன்ற
வெண்பட்டாடையை அரையில் சுற்றி உடுத்து; கதிர்க்குழாம்
புடை நிரைத்து ஒளிர் பல்கலன் பூட்டினான் –
ஒளித்தொகுதிகளைப் பக்கங்களில் வரிசையாக வெளியிடுகின்ற
பல மணிகள் பதித்த அணிகளைப் பூட்டினான்.

—————

பேர விட்ட பெரு வலி இந்திரன்
ஊர விட்ட களிற்றொடும் ஓடு நாள்,
சோர விட்ட சுடர் மணி ஓடையை
வீர பட்டம் என, நுதல் வீக்கினான். 74-

பெருவலி பேரவிட்ட இந்திரன்- தன் பெருவலிமை நிலை பெயர
விட்ட இந்திரன்; ஊர் விட்ட களிற்றொடும் ஓடுநாள்-
தான் செலுத்தி வந்த ஐராவதம் என்னும் யானையுடன் தோற்று
ஓடும் நாளில்; சோரவிட்ட- தவறவிட்ட; சுடர்மணி ஓடையை-
மிக்க ஒளியை வெளிப்படுத்துகின்ற முகபடாத்தை; வீரபட்டம்
என நுதல் வீக்கினான் – வீரபட்டம் என்று கும்பகருணனது
நெற்றியில் கட்டினான்.

——————

மெய் எலாம் மிளிர் மின் வெயில் வீசிட,
தொய்யில் வாசத் துவர் துதைந்து ஆடிய
கையின் நாகம் என, கடல் மேனியில்,
தெய்வம் நாறு செஞ் சாந்தமும் சேர்த்தினான். 75-

மெய் எலாம் மிளிர் மின் வெயில் வீசிட- உடம்பு
எல்லாம் விளங்குகின்ற மின்னல் போல் அணிகலங்கள்
ஒளிவீச; வாசத் தொய்யில் துவர் துதைந்து ஆடிய- மணமுள்ள
சந்தனக் குழம்பின் செந்நிறத்தில் மிகுதியும் தோய்ந்த;
கையின் நாகம் என- கை உடைய யானையைப் போல் கும்பகருணன்
தோன்றுமாறு; கடல் மேனியில் – அவனது கடல் போன்ற
மேனியில்; தெய்வம் நாறு செஞ்சாந்தமும் சேர்த்தினான்-
தெய்வத்தன்மையுடைய இயற்கை மணம் வீசுகின்ற செஞ்சந்தனக்
குழம்பைப் பூசினான்.

————–

விடம் எழுந்ததுபோல், நெடு விண்ணினைத்
தொட உயர்ந்தவன் மார்பிடைச் சுற்றினான்,
இடபம் உந்தும், எழில் இரு-நான்கு தோள்,
கடவுள் ஈந்த கவசமும் கட்டினான். 76-

நெடுவிண்ணினைத் தொட- நீண்ட ஆகாயத்தைத்
தீண்டுதற்காக; விடம் எழுந்தது போல் உயர்ந்தவன் –
நஞ்சானது எழுந்து நின்றாற்போல உயர்ந்து நின்றவனாகிய
கும்பகருணனது; மார்பிடை- மார்பில்; இடபம் உந்தும் எழில்
இரு நான்கு தோள் கடவுள் ஈந்த- இடபவாகனத்தைச் செலுத்தும்
அழகிய எண்தோள்களையுடைய சிவபிரான் தந்த; கவசமும்
சுற்றினான் கட்டினான் – கவசத்தைச் சுற்றி வந்து
கட்டினான்.

—————–

கும்பகருணன்-இராவணன் உரையாடல்
அன்ன காலையின், ‘ஆயத்தம் யாவையும்
என்ன காரணத்தால்?’ என்று இயம்பினான்-
மின்னின் அன்ன புருவமும், விண்ணினைத்
துன்னு தோளும், இடம் துடியா நின்றான். 77-

மின்னின் அன்ன புருவமும் – மின்னலைப் போன்ற வடிவமும்
நிறமும் உடைய புருவமும்; விண்ணினைத் துன்னுதோளும்-
வானத்தை நெருங்குமளவு உயர்ந்த தோளும்; இடந்துடியா
நின்றான்- இடப்பக்கத்திலேயே துடிக்கப் பெற்றவனான
கும்பகருணன்; அன்ன காலையில் – அப்போது; ஆயத்தம்
யாவையும் என்ன காரணத்தால் – இப்போர் ஆயத்தங்கள்
செய்யப்படுவது என்ன காரணத்தால்; என்று இயம்பினான்-
என்று வினவினான்.

————————-

‘வானரப் பெருந் தானையர், மானிடர்,
கோ நகர்ப் புறம் சுற்றினர்; கொற்றமும்
ஏனை உற்றனர்; நீ அவர் இன் உயிர்
போனகத் தொழில் முற்றுதி, போய்’ என்றான். 78-

மானிடர்- மானிடர் இருவர்; வானரப்பெருந் தானையர் –
வானரப் பெருஞ் சேனையுடையவர்களாய்க்; கோநகர்ப் புறம்
சுற்றினர்- நம் நகர்ப்புறத்தைச் சுற்றி வளைத்தனர்; ஏனை
கொற்றமும் உற்றனர்- ஏனையவர் யாரும் பெறாத
வெற்றியையும் அடைந்துள்ளார்கள்; நீ அவர் இன் உயிர்
போனகத் தொழில் முற்றுதி போய் என்றான்- நீ போய்
அவர்களுடைய உயிரை உண்ணுகின்ற தொழிலைச் செய்து முடிப்பாய் என்று இராவணன்
கூறினான்.

—————

கும்பகருணனின் அறிவுரை
‘ஆனதோ வெஞ் சமம்? அலகில் கற்புடைச் சானகி துயர்
இனம் தவிர்ந்தது இல்லையோ? வானமும்
வையமும் வளர்ந்த வான் புகழ் போனதோ?
புகுந்ததோ, பொன்றும் காலமே? 79-

வெஞ்சமம் ஆனதோ- கொடிய போர் தொடங்கி விட்டதோ?;
அலகில் கற்புடைச் சானகி துயர் இனம் தவிர்ந்தது இல்லையோ
– உவமை கூறமுடியாத கற்பையுடைய சானகியின் சிறைத்துயரம்
நீங்கிய பாடு இல்லையா?; வானமும் வையமும் வளர்ந்த-
விண்ணுலகிலும் மண்ணுலகிலும் ஒப்புக் கூற முடியாதபடி வளர்ந்த;
வான் புகழ் போனதோ?- உன் மிகுபுகழ் அழிந்து போய்
விட்டதோ?; பொன்றும் காலமே புகுந்ததோ- அழிவு காலம்
வந்து புகுந்து விட்டதோ?

————-

‘கிட்டியதோ, செரு? கிளர் பொன் சீதையைச்
சுட்டியதோ? முனம், சொன்ன சொற்களால்,
திட்டியின்விடம் அன்ன கற்பின் செல்வியை
விட்டிலையோ? இது விதியின் வண்ணமே! 80-

செருக்கிட்டியதோ- போர் கிட்டி விட்டதோ?; கிளர்
பொன் சீதையைச் சுட்டியதோ- அப்பேர் அழகு விளங்குகின்ற
சீதையைக் காரணமாகக் கொண்டதோ? திட்டியின் விடம் அன்ன
கற்பின் செல்வியை- கண்ணில் நஞ்சுடைய திட்டி விடம்
என்ற பாம்பு போன்ற கற்புக்கரசியை; முனம் சொன்ன சொற்களால் – முன்பு
நான் சொல்லிய சொற்களைக் கருதிப் பார்த்து;
விட்டிலையோ- நீ விடவில்லையோ? இது விதியின் வண்ணமே –
அவ்வாறு விடாமல் இருந்த இது விதியின் கொடுஞ்செயல்
ஆகும்.

————–

‘கல்லலாம் உலகினை; வரம்பு கட்டவும்
சொல்லலாம்; பெரு வலி இராமன் தோள்களை
வெல்லலாம் என்பது, சீதை மேனியைப்
புல்லலாம் என்பது போலுமால்-ஐயா! 81-

ஐயா- ஐயனே; உலகினைக் கல்லலாம்- உலகினைப்
பெயர்த்தெடுக்கலாம்; வரம்பு கட்டவும் சொல்லலாம்- அது
மட்டுமல்லாமல் அவ்வுலகம் முழுவதற்கும் வேலி கட்டவும்
சொல்லலாம்; பெருவலி இராமன் தோள்களை- பெருவலிமை
படைத்த இராமனது தோள் ஆற்றலை; வெல்லலாம் என்பது-
வென்றுவிடலாம் என்று கருதுவது; சீதை மேனியைப் புல்லலாம்
என்பது போலுமால் – சீதையின் மேனியைத் தழுவலாம் என்பது
போலும்.

——————

‘புலத்தியன் வழிமுதல் வந்த பொய் அறு
குலத்து இயல்பு அழிந்தது; கொற்றம் முற்றுமோ?
வலத்து இயல் அழிவதற்கு ஏது; மை அறு
நிலத்து இயல் நீர் இயல் என்னும் நீரதால். 82-

புலத்தியன் வழிமுதல் வந்த- புலத்தியனுடைய மரபிலே வந்த;
பொய்யறு குலத்து இயல்பு அழிந்தது- தருமவழி நீங்காத
குலத்தின் தன்மை உன் செயலால் அழிந்துவிட்டது; வலத்து
இயல் அழிவதற்கு ஏது- அதுவே வெற்றித் தன்மை அழிவதற்குக் காரணமாகும்; கொற்றம் முற்றுமோ- அதனால் உனக்கு வெற்றி
கிட்டுமோ?; மையறு நிலத்து இயல் நீர்இயல் என்னும்
நீரதால்- இது குற்றமற்ற நிலத்தின் இயல்பே நீரின்
இயல்பு என்ற முறைமைக்கு ஏற்றுள்ளது.

————-

‘கொடுத்தனை, இந்திரற்கு உலகும் கொற்றமும்;
கெடுத்தனை, நின் பெருங் கிளையும்; நின்னையும்
படுத்தனை; பல வகை அமரர்தங்களை
விடுத்தனை; வேரு இனி வீடும் இல்லையால். 83-

இந்திரற்கு உலகும் கொற்றமும் கொடுத்தனை- சீதையை
விட்டிடாத இச்செயலால் உனக்குத் தோற்ற இந்திரனுக்கு
அவனுடைய உலகத்தையும் வெற்றியையும் கொடுத்து விட்டாய்;
நின் பெருங் கிளையும் கெடுத்தனை- உன்னுடைய பெரிய
சுற்றத்தாராகிய அரக்கர்களையும் கெடுத்து விட்டாய்;
நின்னையும் படுத்தனை- உன்னையும் நீயே அழித்துக்
கொண்டாய்; பலவகை அமரர் தங்களை விடுத்தனை- பலவகையான
தேவர்களையும் சிறையில் இருந்து விட வேண்டியவனாய்
விட்டாய்; வேறு இனி வீடும் இல்லையால் – இதிலிருந்து
நீங்குவதற்கு வேறு வழியும் இல்லை.

—————–

‘அறம் உனக்கு அஞ்சி, இன்று ஒளித்ததால்; அதன்
திறம் முனம் உழத்தலின், வலியும் செல்வமும்
நிறம் உனக்கு அளித்தது; அங்கு அதனை நீக்கி,
நீ இற, முன் அங்கு, யார் உனை எடுத்து நாட்டுவார்? 84-

இன்று அறம் உனக்கு அஞ்சி ஒளித்ததால்- இப்போது உன்
செயல் கண்டு அறம் அஞ்சி ஒளித்துக் கொண்டது; முனம் அதன் திறன் உழத்தலின் – முன்பு நீ அறத்தின் கூறுபாட்டை
வருந்திச் செய்தலால்; உனக்கு வலியும் செல்வமும் நிறம்
அளித்தது- அவ்வறம் உனக்கு வலிமை செல்வம் ஆகிய
மேன்மையைக் கொடுத்தது; அங்கு அதனை நீக்கி நீ இற –
அத்தருமத்தை நீக்கி நீ அழிகையில்;யார் உனை எடுத்து
அங்கு முன் நாட்டுவார் – பிறர் யார் வந்து உன்னை எடுத்து
மீட்க வல்லார்.

—————–

‘தஞ்சமும் தருமமும் தகவுமே, அவர்
நெஞ்சமும் கருமமும் உரையுமே; நெடு
வஞ்சமும் பாவமும் பொய்யும் வல்ல நாம்
உஞ்சுமோ? அதற்கு ஒரு குறை உண்டாகுமோ? 85-

அவர் நெஞ்சமும் கருமமும் உரையுமே- அந்த மனிதர்களுடைய
நெஞ்சமும் செயலும் பேச்சும்; தஞ்சமும் தருமமும் தகவுமே-
பிறருக்கு அபயமளித்தலும், அறச்செயல் செய்வதும், நடுநிலை
நின்று உண்மை கூறுவதுமாகும்; நெடு வஞ்சமும் பொய்யும் வல்ல
நாம்- அவ்வாறன்றி நெஞ்சில் வஞ்சனையும், செயலில்
பாவமும், பேச்சில் பொய்யும் வல்ல அரக்கர்களாகிய நாம்;
உஞ்சுமோ அதற்கு ஒரு குறையுண்டாகுமோ- உய்யமுடியுமா?
அவர்களின் தருமத்திற்குக் குறை ஏதாவது உண்டாகுமா
என்றவாறு.

—————–

‘காலினின் கருங் கடல் கடந்த காற்றது
போல்வன குரங்கு உள; சீதை போகிலன்;
வாலியை உரம் கிழித்து ஏக வல்லன கோல் உள;
யாம் உளேம்; குறை உண்டாகுமோ?’ 86-

காலினின் கருங்கடல் கடந்த- தன் கால்களால் பெரிய
கடலைக் கடந்த; காற்றது போல்வன குரங்கு உள- காற்றுப்
போல் விரைந்து இயங்கும் அனுமன் போன்ற குரங்குகள் உள்ளன;
சீதை போகிலள் – சீதை சிறையை விட்டு இன்னும்
போகவில்லை; வாலியை உரம் கிழித்து ஏக வல்லன கோல் உள
– வாலியைக் கூட மார்பைக் கிழித்துச் செல்ல வல்ல வன்மையுடைய அம்புகள்
நம் பகைவர்களிடம் உள்ளன; யாம் உளேம் – அவற்றை ஏற்க
நாம் இருக்கிறோம்; குறை உண்டாகுமோ- இனி நமக்கு என்ன
குறையிருக்கிறது.

————–

என்று கொண்டு இனையன இயம்பி, ‘யான் உனக்கு
ஒன்று உளது உணர்த்துவது; உணர்ந்து கோடியேல்,
நன்று அது; நாயக! நயக்கிலாய் எனின்,
பொன்றினை ஆகவே கோடி; போக்கு இலாய்! 87-

நாயக- தலைவனே; என்று கொண்டு இனையன இயம்பி- என்று
இவ்வாறான பல சொற்களைச் சொல்லி; யான் உனக்கு ஒன்று
உளது உணர்த்துவது- யான் உனக்கு உணர்த்த வேண்டியது மேலும்
ஒன்றுள்ளது; உணர்ந்து கோடியேல் நன்றது- அதன் பொருள்
தன்மை தெளிந்து ஏற்றுக் கொள்வாய் ஆனால் நல்லது;
நயக்கிலாய் எனின்- அதனை விரும்பி ஏற்காமல் போவாய்
ஆனால்; போக்கிலாய் – நல்வழியில் செல்ல வழி
இல்லாதவனாவாய்; பொன்றினை ஆகவே கோடிஇப்போதே நீ
இறந்து விட்டதாகவே கருதிக் கொள் என்றவாறு.

——————–

‘தையலை விட்டு, அவன் சரணம் தாழ்ந்து,
நின் ஐயறு தம்பியோடு அளவளாவுதல்
உய் திறம்; அன்று எனின், உளது, வேறும் ஓர்
செய் திறம்; அன்னது தெரியக் கேட்டியால்: 88-

தையலை விட்டு- சீதையைச் சிறையில் இருந்து விட்டுவிட்டு;
அவன் சரணம் தாழ்ந்து- அந்த இராமனுடைய பாதங்களை
வணங்கி; நின் ஐயறு தம்பியொடு அளவளாவுதல்- உனது
ஐயப்படத்தகாத தம்பியாகிய வீடணனுடன் நட்புப் பூணுதல்;
உய்திறம்- நாம் உயிர் பிழைத்திருக்க ஒரு வழியாகும்;
அன்று எனின் வேறும் ஓர் செய்திறம் உளது- அவ்வாறு செய்வது
நன்றன்று எனின் செய்ய வேண்டிய வேறு ஒரு செயலும் உள்ளது;
அன்னது தெரியக் கேட்டியால்- அச்செயலைத் தெளிவாகக்
கேட்பாயாக.

—————–

‘பந்தியில் பந்தியில் படையை விட்டு, அவை
சிந்துதல் கண்டு, நீ இருந்து தேம்புதல்
மந்திரம் அன்று; நம் வலி எலாம் உடன்
உந்துதல் கருமம்’ என்று உணரக் கூறினான். 89

நீ இருந்து- நீ இங்கிருந்து கொண்டு; பந்தியில்
பந்தியில் படையை விட்டு- பகுதி பகுதியாகப் படைகளைப்
போருக்குவிட்டு; அவை- அப்படைகள்; சிந்துதல் கண்டு-
உயிர் விட்டு அழிதல் கண்டு; தேம்புதல் – எண்ணி எண்ணி
வருந்துதல்; மந்திரம் அன்று- உரிய ஆலோசனையான செயலன்று;
நம் வலி எலாம் உடன் உந்துதல்- நமது படை வலிமை
முழுமையையும் பகைவர் மேல் செலுத்துதல்; கருமம் –
செயத்தகுசெயல்; என்று உணரக் கூறினான் – என்று இராவணன்
உணருமாறு கும்பகருணன் கூறினான்.

—————-

இராவணன் சினந்து உரைத்தல்

‘உறுவது தெரிய அன்று, உன்னைக் கூயது;
சிறு தொழில் மனிதரைக் கோறி, சென்று; எனக்கு
அறிவுடை அமைச்சன் நீ அல்லை, அஞ்சினை;
வெறுவிது, உன் வீரம்’ என்று இவை விளம்பினான்; 90-

உன்னைக் கூயது- உன்னை இங்கு அழைத்தது; உறுவது
தெரிய அன்று – இனிமேல் நடக்கப் போவதைத் தெரிந்து
கொள்வதற்கல்ல; சென்று- போருக்குச் சென்று; சிறுதொழில்
மனிதரைக் கோறி – சிறுதொழிலுடைய மானிடரைக் கொல்வாய்;
எனக்கு அறிவுடை அமைச்சன் நீ அல்லை- எனக்கு
அறிவுரை கூறுவதற்கு நீ அறிவு படைத்த அமைச்சன் அன்று;
அஞ்சினை- நீ போருக்கு அஞ்சுகிறாய்; உன் வீரம் வெறுவிது-
உன் வீரம் வீணானது; என்று இவை விளம்பினான் – என்று
கூறி மேலும் இவைகளைக் கூறினான்.

—————-

‘மறம் கிளர் செருவினுக்கு உரிமை மாண்டனை;
பிறங்கிய தசையொடு நறவும் பெற்றனை;
இறங்கிய கண் முகிழ்த்து, இரவும் எல்லியும்
உறங்குதி, போய்’ என, உளையக் கூறினான். 91-

மறம் கிளர் செருவினுக்கு உரிமை மாண்டனை – வீரம்
விளங்க வேண்டிய போர்க்களத்துக்குத் தகுதியில்லாதவனாயினாய்;
பிறங்கிய தசையொடு- உண்ண மிகுதியான ஊனொடு; நறவும்
பெற்றனை- குடிக்கக் கள்ளையும் பெற்றாய்; இறங்கிய கண்
முகிழ்த்து- குழி விழுந்துள்ள கண்களை மூடிக்கொண்டு; இரவும்
எல்லியும் – இரவும் பகலும்; போய் உறங்குதி என- போய்த்
தூங்குவாய் என்று; உளையக் கூறினான் – கும்பகருணனது மனம்
வருந்துமாறு இராவணன் கூறினான்.

—————-

‘மானிடர் இருவரை வணங்கி, மற்றும் அக்
கூனுடைக் குரங்கையும் கும்பிட்டு, உய் தொழில்
ஊனுடை உம்பிக்கும் உனக்குமே கடன்;
யான் அது புரிகிலேன்; எழுக போக!’ என்றான். 92-

மானிடர் இருவரை வணங்கி- வலிவற்ற மானிடர் இருவரை
வணங்கி; மற்றும் அக்கூனுடைக் குரங்கையும் கும்பிட்டு-
அதோடு அமையாமல் மேலும் அந்தக் கூனல் முதுகுடைய
குரங்கையும் கும்பிட்டுக்கொண்டு; உய்தொழில் – உயிர்
வாழ்ந்திருக்கும் தொழில்; – ஊனுடை உம்பிக்கும்- ஊனுடலோடு
உயிர் வாழ்தலை விரும்பும், உன் தம்பியாகிய வீடணனுக்கும்;
உனக்குமே கடன்- உனக்குமே முறைமையான செயலாகும்; அது
யான் புரிகிலேன் – அச்செயலை நான் செய்யேன்; போக எழுக
என்றான்- போவதற்கு எழுக என்று இராவணன் கூறினான்.

—————-

‘தருக, என் தேர், படை; சாற்று, என் கூற்றையும்;
வருக, முன் வானமும் மண்ணும் மற்றவும்;
இரு கை வன் சிறுவரோடு ஒன்றி என்னொடும்
பொருக, வெம் போர்’ எனப் போதல் மேயினான். 93-

என் தேர் படை தருக-(மேற்கண்டவாறு) கூறிய இராவணன்)
என்னுடைய தேரையும், படைக்கலங்களையும் கொண்டு வருக;
என் கூற்றையும் சாற்று- என் கட்டளைக் கூற்றை யாவருக்கும்
சொல்லுவாய்; வானமும் மண்ணும் மற்றவும் – விண்ணகத்
தோரும், மண்ணகத் தோரும் பாதாள உலகத்தோரும்; இருகைவன்
சிறுவரோடு ஒன்றி முன் வருக- இருகையுடைய வலிய
சிறுவர்களான இராம இலக்குவருடன் கூடி என் முன் வந்து;
என்னொடும் வெம்போர் பொருக- என்னுடன் கொடிய
போரைச் செய்யட்டும்; எனப் போதல் மேயினான்- என்று
பணியாளரிடம் கூறிப் போருக்குச் செல்லத் தொடங்கினான்.

—————

கும்பகருணன் போருக்கு எழுதல்

அன்னது கண்டு, அவன் தம்பியானவன்
பொன் அடி வணங்கி, ‘நீ பொறுத்தியால்’
என, வல் நெடுஞ் சூலத்தை வலத்து வாங்கினான்,
‘இன்னம் ஒன்று உரை உளது’ என்னக் கூறினான்: 94-

அவன் தம்பியானவன் – அவன் தம்பியான கும்பகருணன்;
அன்னதுகண்டு- அச்செயலைக் கண்டு;நீ பொறுத்தியால் என-
யான் கூறியதை நீ பொறுத்தி எனக் கூறிப்; பொன் அடி வணங்கி-
இராவணனுடைய பொன்னால் ஆகிய வீரக்கழல் அணிந்த அடியை
வணங்கி; வல்நெடுஞ் சூலத்தை- போருக்குச் செல்ல வலிய
நெடிய சூலத்தை; வலத்து வாங்கினான் – வலப்பக்கத் தோளிலே
கொண்டவனாய்; உரை ஒன்று இன்னம் உளது-சொல்லவேண்டிய
சொல் ஒன்று உள்ளது; என்னக் கூறினான் – என்று கூறினான்.

————–

‘வென்று இவண் வருவென் என்று உரைக்கிலேன்; விதி
நின்றது; பிடர் பிடித்து உந்த நின்றது;
பொன்றுவென்; பொன்றினால், பொலன் கொள் தோளியை,
“நன்று” என, நாயக விடுதி; நன்றுஅரோ. 95-

நாயக- தலைவனே; இவண் வென்று வருவென் என்று
உரைக்கிலேன் – இங்கு மீண்டும் வெற்றி பெற்று வருவேன்
என்று சொல்ல இயலாமல் உள்ளேன் என்று; விதி நின்றது-
வெல்லுதற்கரிதாய் நின்றதாகிய விதி; பிடர் பிடித்து உந்த
நின்றது- கழுத்தின் புறத்தைப் பிடித்துத் தள்ளும்படி நின்றது;
பொன்றுவென் – அதனால் யான் போரில் இறந்து விடுவேன்;
பொன்றினால் -அவ்வாறு யான் அழிந்தால்;பொலன் கொள்
தோளியை-அழகு கொண்ட தோளையுடைய சீதையை; நன்று
என விடுதி-உனக்கு நன்மை என்று கருதி விட்டிடுவாய்;நன்று
– அவ்வாறு விட்டிடுதலே உனக்கு நன்மை பயக்கும்.

———

‘இந்திரன் பகைஞனும், இராமன் தம்பி கை
மந்திர அம்பினால் மடிதல் வாய்மையால்;
தந்திரம் காற்று உறு சாம்பல்; பின்னரும்
அந்தரம் உணர்ந்து, உனக்கு உறுவது ஆற்றுவாய். 96-

இந்திரன் பகைஞனும்- இந்திரசித்தனும்; இராமன் தம்பி
கை-இராமனுக்குத் தம்பியாகிய இலக்குவனுடைய கையில் உள்ள;
மந்திர அம்பினால் – மந்திர ஆற்றல் கொண்ட அம்பினால்;
மடிதல் வாய்மையால் – இறந்து படுதல் திண்ணம்; தந்திரம்
காற்றுறு சாம்பல்- அரக்கருடைய பிறபடைகள் மிக்க காற்றின்
முன் சாம்பல் போல் ஆகும்; பின்னரும்- இவற்றையெல்லாம்
கேட்ட பின்னர்; அந்தரம் உணர்ந்து – வரும் கேட்டை
உணர்ந்து; உனக்கு உறுவது ஆற்றுவாய்- உனக்குத் தக்க
செயலைச் செய்வாய்.

——————-

‘என்னை வென்றுளர் எனில், இலங்கை காவல!
உன்னை வென்று உயருதல் உண்மை; ஆதலால்,
பின்னை நின்று எண்ணுதல் பிழை; அப் பெய்வளை-
தன்னை நன்கு அளிப்பது தவத்தின் பாலதே. 97-

இலங்கை காவல – இலங்கைக்குக் காவலனே; என்னை
வென்றுளர் எனில் – அப்பகைவர்களாகிய இருவர் என்னை
வென்றார்களானால்; உன்னை வென்று உயருதல் உண்மை-
உன்னையும் வென்று மேம்படுதல் திண்ணம்; ஆதலால்-
அதனால்; பின்னை- மேலும்; நின்று எண்ணுதல் பிழை-
அவர்களை வெல்ல வேறு உபாயங்களை எண்ணுதல் தவறான
செயல்; அப்பெய்வனை தன்னை- அந்த வளையல் அணிந்த
சீதை தன்னை; அளிப்பது- விட்டு விடுவது; நன்கு தவத்தின்
பாலதே- சிறந்த தவப்பயன் அளிக்க வல்லதாம்.

—————

‘இற்றைநாள் வரை, முதல், யான் முன் செய்தன
குற்றமும் உள எனின் பொறுத்தி; கொற்றவ!
அற்றதால் முகத்தினில் விழித்தல்; ஆரிய!
பெற்றனென் விடை’ என, பெயர்ந்து போயினான். 98-

கொற்றவ- வெற்றித் தலைவனே; முன் முதல் இற்றை நாள்
வரை- முன்னாள் முதல் இன்றைய நாள் வரை; யான் செய்தன-
நான் செய்தனவாகிய; குற்றமும் உள எனின் பொறுத்தி –
குற்றங்கள் ஏதாவது இருக்குமானால் அவற்றை நீ பொறுத்தருள்க;
ஆரிய – ஆரியனே; முகத்தினில் விழித்தல் அற்றதால் – இனி
உன் முகத்தில் நான் விழித்தல் இல்லாமல் போய்விட்டது; விடை
பெற்றனன் – விடை பெற்றுக் கொண்டேன்; என பெயர்ந்து
போயினான் – என்று கூறிப் புறப்பட்டுச் சென்றான்.

—————-

படைகளை கும்பகருணனுடன் செல்ல இராவணன் பணித்தல்

அவ் வழி இராவணன் அனைத்து நாட்டமும்
செவ் வழி நீரொடும் குருதி தேக்கினான்;
எவ் வழியோர்களும் இரங்கி ஏங்கினார்;
இவ் வழி அவனும் போய், வாயில் எய்தினான். 99-

அவ்வழி- அப்போது; இராவணன் அனைத்து நாட்டமும்
– தன் இருபது கண்களிலும்; செவ்வழி நீரொடும் – நேரே
வழிகின்ற கண்ணீருடன்; குருதி தேக்கினான் – குருதியையும்
வெளிவிடாது தடுத்துத் தேக்கினான்; எவ்வழியோர்களும்- பிற
எல்லா உறவின் வழி வந்தவர்களும்; இரங்கி ஏங்கினார் –
இரக்கம் மிகக்கொண்டு ஏக்கம் உற்றனர்; இவ்வழி- இவ்வாறு
நிகழும் பொழுதே; அவனும் போய் – அக்கும்பகருணனும்
போய்; வாயில் எய்தினான் – நகர் வாயிலை அடைந்தான்.

——————

‘இரும் படை கடிப்பு எடுத்து எற்றி ஏகுக!
பெரும் படை இளவலோடு’ என்ற பேச்சினால்,
வரும் படை வந்தது, வானுளோர்கள் தம்
சுரும்பு அடை மலர் முடி தூளி தூர்க்கவே. 100-

இளவலொடு- கும்பகருணனுடன்; இரும்படை ஏகுக என்ற
பேச்சினால் – பெரும்படை செல்லட்டும் என்ற இராவணனது
கட்டளையினால்; வானுளோர்கள் தம் – தேவர்களுடைய;
சுரும்பு அடை- வண்டுகள் மொய்க்கின்ற; மலர் முடி- மலர்
அணிந்த தலைகளில்; தூளி தூர்க்கவே- தூசிகள் சென்று
நிரம்புமாறு; கடிப்பு எடுத்து வெற்றி- குறுந்தடியை எடுத்துப்
போர்ப்பறை அறைந்து கொண்டு; பெரும்படை வரும்படை
வந்தது- பெரிய படையாகிய வருதற்கு உரிய படை வந்தது.

——————–

படைப் பெருக்கம்

தேர்க் கொடி, யானையின் பதாகை, சேண் உறு
தார்க் கொடி என்று இவை தகைந்து வீங்குவ-
போர்க் கொடுந் தூளி போய்த் துறக்கம் பண்புற,
ஆர்ப்பன துடைப்பன போன்ற ஆடுவ. 101-

தேர்க்கொடி- தேரின் கண் கட்டப்பட்டுள்ள கொடிகளும்;
யானையின் பதாகை – யானை மேல் உயர்த்திப் பிடித்த
கொடிகளும்; சேண் உறு தார்க்கொடி- முன்னணித் தூசிப்
படையினர் பிடித்த உயர்ந்த கொடிகளும்; என்று இவை
– என்று இவ்வகைப்பட்ட கொடிகளுமாக; ததைந்து வீங்குவ-
நெருங்கி மிக்கிருப்பவை; போர்க் கொடுந் தூளி-
போர்க்களத்தில் இருந்து புறப்பட்ட தூசுகள்;போய்த் துறக்கம்
பண்பற- போய்ச் சுவர்க்கத்தின் பண்பு கெட; ஆர்ப்பன-
நிறைந்திருப்பனவற்றைத்; துடைப்பன போன்ற ஆடுவ-
துடைப்பன போன்றவாய் ஆடலாயின.

————–

எண்ணுறு படைக்கலம் இழுக எற்றிட
நண்ணுறு பொறிகளும், படைக்கு நாயகர்
கண்ணுறு பொறிகளும், கதுவ, கண் அகல்
விண்ணுறு மழை எலாம் கரிந்து, வீழ்ந்தவால். 102-

எண்ணுறு படைக்கலம் – மதிக்கப்படுகின்ற படைக்கலங்கள்;
இழுக எற்றிட-உராய்ந்து மோதுவதனால்; நண்ணுறு பொறிகளும்
– தோன்றிய நெருப்புப் பொறிகளும்; படைக்கு நாயகர்-
படைத்தலைவர்களின்; கண்ணுறு பொறிகளும் – கண்களில்
மிக்குத் தோன்றுகின்ற தீப்பொறிகளும்; கதுவ- ஒன்றோடொன்று
கலந்ததனால்; கண் அகல் – இடம் அகன்ற; விண்ணுறு-
ஆகாயத்தில் பொருந்திய; மழை எலாம்- மேகங்கள் எல்லாம்;
கரிந்து வீழ்ந்தவால்- கரிந்து வீழ்ந்தன.

———–

தேர் செல, கரி செல, நெருக்கிச் செம் முகக்
கார் செல, தேர் செல, புரவிக் கால் செல,
தார் செல, கடை செல, சென்ற தானையும்,
‘பார் செலற்கு அரிது’ என, விசும்பில் பாய்ந்ததால். 103-

தேர்செல- முன்னால் தேர் செல்வதனாலும்; கரி செல-
யானைகள் செல்வதனாலும்; நெருக்கி – அவற்றை மேலும்
நெருக்கிக் கொண்டு; செம்முகக்கார் செல- புகர் அமைந்த
முகத்தினையுடைய யானைகள் செல்வதனாலும்; தேர் செல –
மேலும் தேர்கள் செல்ல; கால் புரவி செல- காற்றுப் போல்
குதிரைகள் விரைந்து செல்வதனாலும்; தார் செல – இவ்வாறாக
முன்னணிப் படை செல்லவும்; கடை செல- பின்னணிப் படையும்
நெருக்கமாகச் செல்வதால்; சென்ற தானையும் – இடையில்
சென்ற இடையணிச் சேனையும்; பார் செலற்கு அரிது என-
நிலத்தில் செல்லுவது அரியது என எண்ணி; விசும்பில்
பாய்ந்ததால்- ஆகாயத்தில் பாய்ந்து செல்லல் ஆயிற்று.

————–

கும்பகருணன் புறப்பாடு

ஆயிரம் கோள் அரி, ஆளி ஆயிரம்,
ஆயிரம் மத கரி, பூதம் ஆயிரம், மா
இரு ஞாலத்தைச் சுமப்ப வாங்குவது ஏய்
இருஞ் சுடர் மணித் தேர் ஒன்று ஏறினான். 104-

மாஇரு ஞாலத்தைச் சுமப்ப- மிகப்பெரிய பூமியைச்
சுமப்பனவாகி; வாங்குவது – மேற்கொள்ளும் வன்மையுடைய;
ஆயிரம் கோள் அரி- ஆயிரம் சிங்கங்களும்; ஆயிரம் ஆளி
– ஆயிரம் ஆளிகளும்; ஆயிரம் மதகரி- ஆயிரம் மதம் மிக்க
யானைகளும்; ஆயிரம் பூதம்- ஆயிரம் பூதங்களும் பூட்டப்
பெற்றதுமான; ஏய்- ஒப்பில்லாத; இருஞ்சுடர் மணித்தேர் ஒன்று-
மிக்க ஒளியுள்ள மணிகள் அழுத்திப் பதிக்கப் பெற்ற தேர்
ஒன்றில்; ஏறினான்- கும்பகருணன் ஏறினான்.

——————

தோமரம், சக்கரம், சூலம், கோல், மழு,
நாம வேல், உலக்கை, வாள், நாஞ்சில், தண்டு,
எழு, வாம வில், வல்லையம், கணையம், மற்று
உள சேம வெம் படை எலாம் சுமந்து, சென்றவால். 105-

தோமரம் – பெரிய மரங்களையும்; சக்கரம் – சக்கர
வடிவில் அமைந்த வீசு படைகளையும்; சூலம் – முத்தலைச்
சூலங்களையும்; கோள் – அம்புகளையும்; மழு- கோடரிப்
படையினையும்; நாமவேல் – பகைவருக்கு அச்சம் உண்டாக்கும்
வேல் படைகளையும்; உலக்கை-உலக்கைகளையும்; வாள்- வாள்
படைகளையும்; நாஞ்சில் – கலப்பை வடிவில் அமைந்த
படைக்கலங்களையும்; தண்டு-பெரிய தண்டாயுதங்களையும்; எழு
– இரும்பு உலக்கைகளையும்; வாமவில்- வளைந்த பெரிய
வில்களையும்; வல்லையம்-எறி ஈட்டிகளையும்; கணையம்-வளை
தடிகளையும்; மற்று உள – மற்றுமுள்ள பிற; சேம வெம்படை
-கையில் உள்ள படைக்கலங்கள் தீர்ந்தபோது பயன்படுத்தப்படும்
சேமிப்புப் படைக்கலங்கள்; எலாம் – எல்லாவற்றையும்; சுமந்து
சென்றவால் – கும்பகருணனுடன் சென்ற சேனைகள் சுமந்து
சென்றன.

———–

நறையுடைத் தசும்பொடு நறிதின் வெந்த ஊன்
குறைவு இல் நல் சகடம் ஓர் ஆயிரம் கொடு,
பிறையுடை எயிற்றவன் பின்பு சென்றனர்,
முறை முறை கைக்கொடு முடுகி நீட்டுவார். 106-

முறை முறை- முறை முறையாக (தரவேண்டிய உணவுகளைத்
தருவதில் முறைகொண்டு); கைக்கொடு- கையிலே உணவுகளைக்
கொண்டு; முடுகி நீட்டுவார்- விரைந்து நீட்டுபவர்களாகிய அரக்கர்
பலர்; பிறை உடை எயிற்றவன் பின்பு – பிறை போன்ற பற்களை
உடைய கும்பகருணனுக்குப் பின்னால்; நறையுடைத் தசும்பொடு-
கள்ளைக் கொண்டுள்ள குடங்களையும்; நறிதின் வெந்த ஊன்-
நன்றாக வெந்த ஊனினையும்; குறைவு இல் நல்சகடம் –
குறைவில்லாது நிரப்பிய வலிய வண்டிகள்; ஓர் ஆயிரம் கொடு- ஓராயிரத்தைப் பின் கொண்டு; சென்றனர்-
கும்பகருணனுடன் சென்றனர்.

—————-

ஒன்று அல பற்பலர் உதவும் ஊன் நறை
பின்ற அரும் பிலனிடைப் பெய்யுமாறு போல்,
வன் திறல் இரு கரம் வாங்கி மாந்தியே,
சென்றனன், யாவரும் திடுக்கம் எய்தவே. 107-

பற்பலர்- பற்பல அரக்கர்; உதவும் – முறை முறை தந்து
உதவுகின்ற; ஒன்று அல ஊன், நறை- ஒன்றல்லாத பலவாகிய
ஊனையும் கள்ளையும்; பின்ற அரும் – மீளுதலுக்கு அருமையான;
பிலனிடைப் பெய்யுமாறு போல் – குகைக்குள் பெய்யும் தன்மை
போல்; வன்திறல்- மிக்க வலிமை கொண்ட; இருகரம் வாங்கி-
இரண்டு கைகளிலும் வாங்கி; மாந்தியே – மிகுதியாக உண்டு
கொண்டே; யாவரும் – கண்டவர் யாவரும்; திடுக்கம் எய்தவே-
திகைப்பு அடையும்படி; சென்றனன் – கும்பகருணன் போர்க்களம்
நோக்கிச் சென்றான்.

———–

‘கணம் தரு குரங்கொடு கழிவது அன்று, இது;
நிணம் தரு நெடுந் தடிக்கு உலகு நேருமோ?
பிணம் தலைப்பட்டது; பெயர்வது, எங்கு இனி;
உணர்ந்தது கூற்றம்’ என்று, உம்பர் ஓடினார். 108-

இது- கும்பகருணனது உண்ணும் தொழில்; கணம் தரு-
கூட்டமாகப் பொருந்திய; குரங்கொடு கழிவது அன்று- வானரக்
கூட்டத்தோடு நீங்குவது அன்று; நிணம் தரு நெடுந்தடிக்கு-
இவன் உண்ணும் கொழுப்போடு கூடிய மிக்க மாமிசத்துக்கு; உலகு
நேருமோ – இவ்வுலகத்து உயிர்கள் எல்லாம் போதுமானதாய்
ஆகுமா?; பிணம் தலைப்பட்டது – எங்கும் பிண மயமாய்
ஆகிவிட்டது; கூற்றம் உணர்ந்தது- இதைக் கொலைத்
தொழிற்குரிய யமனும் உணர்ந்து விட்டான்; எங்கு இனி பெயர்வது
– இனித் தப்பி நாம் எங்கே ஓடிச் செல்வது; என்று உம்பர்
ஓடினார் – என்று எண்ணிய வண்ணம் தேவர்கள் ஓடினார்கள்.

————–

கும்பகருணனைப் பற்றி இராமன் வீடணனிடம் வினவல்

பாந்தளின் நெடுந் தலை வழுவி, பாரொடும்
வேந்து என விளங்கிய மேரு மால் வரை
போந்தது போல் பொலந் தேரில் பொங்கிய
ஏந்தலை, ஏந்து எழில் இராமன் நோக்கினான். 109-

பாந்தளின்- ஆதிசேடனுடைய; நெடுந்தலை வழுவி- பெரிய
தலையில் இருந்து நழுவி; பாரொடும் – நிலவுலகத்துடன்; வேந்து
என விளங்கிய மேரு மால் வரை – பிற மலைகளின் வேந்து
போன்ற மேரு என்னும் பெருமலை; போந்தது போல்- வந்தது
போல; பொலந்தேரில் பொங்கிய- பொன்னால் ஆன தேரில்
விளங்கித் தோன்றுகின்ற; ஏந்தலை-கும்பகருணனை; எழில் ஏந்து
இராமன் -அழகு மிகத் தங்கிய இராமன்; நோக்கினான்-கண்டான்.

——————–

‘வீணை என்று உணரின், அஃது அன்று;
விண் தொடும் சேண் உயர் கொடியது, வய வெஞ் சீயமால்;
காணினும், காலின் மேல் அரிய காட்சியன்;
பூண் ஒளிர் மார்பினன்; யாவன் போலுமால்? 110-

விண் தொடும் சேண் உயர் கொடியது- விண்ணைத்
தொடுகின்ற மிக உயர்ந்த கொடியில் இருப்பது; வீணை என்று
உணரின்- வீணை என்று எண்ணினால்; அஃது அன்று- அது
இல்லை; வய வெஞ்சீயமால் – வெற்றி பொருந்திய கொடிய
சிங்கமாகும்; காணினும் – மிக்க வேகத்துடன் கண்டாலும்; காலின்
மேல் அரிய காட்சியன் – காற்பகுதிக்கு மேல் முழுதும்
பார்த்தற்கரிய பெருந்தோற்றமுடையவனாய் இருக்கிறான்; பூண்
ஒளிர் மார்பினன் – அணிகலன் ஒளி விடுகின்ற மார்பை
உடையவனாய் இருக்கிறான்; யாவன் போலுமால் – இவன்
யாவனோ?

————

‘தோளொடு தோள் செலத் தொடர்ந்து நோக்குறின்,
நாள் பல கழியுமால்; நடுவண் நின்றது ஓர்
தாளுடை மலைகொலாம்; சமரம் வேட்டது ஓர்
ஆள் என உணர்கிலேன்; ஆர்கொலாம் இவன்? 111-

தோளொடு தோள் செலத் தொடர்ந்து- இவனுடைய ஒரு
தோளோடு மற்றொரு தோள் வரை முழுவதும்; தொடர்ந்து-
தொடர்ச்சியாக; நோக்குறின்- பார்க்க முயலின்; பலநாள்
கழியுமால் – பலநாள் கழிந்துவிடும்; நடுவண் நின்றது ஓர்
தாளுடை மலை கொலாம்- உலகுக்கு நடுவில் உள்ள ஒப்பற்ற
கால் முளைத்த மேருமலை இவ்வாறு வந்தது கொல்லோ?; சமரம்
வேட்டது ஓர் ஆளென உணர்கிலேன் – இவனைப் போரை
விரும்பி வந்த ஒரு வீரனென்று நினைக்க முடியவில்லை;
ஆர்கொலாம்இவன்- இவன் யாரோ.

————–

‘எழும் கதிரவன் ஒளி மறைய, எங்கணும்
விழுங்கியது இருள், இவன் மெய்யினால்; வெரீஇ,
புழுங்கும் நம் பெரும் படை இரியல்போகின்றது;
அழுங்கல் இல் சிந்தையாய்! ஆர் கொலாம் இவன்? 112-

இவன் மெய்யினால் – இக்கும்பகருணனது பேருடம்பினால்;
எழும் கதிரவன் ஒளி மறைய- உதயகிரியில் எழும் சூரியனது
ஒளியானது மறைய; எங்கணும் இருள் விழுங்கியது- எல்லா
இடமும் இருளால் நிரம்பியது; புழுங்கும் நம் பெரும்படை-
பேருடம்பு கண்டு மனம் வேர்க்கின்ற நமது பெரிய படை; வெரீஇ
இரியல் போகின்றது-அஞ்சி நிலை கெட்டு ஓடுகின்றது; அழுங்கல் இல் சிந்தையாய்- வருந்துதல் இல்லாத மனமுடைய வீடணனே;
ஆர் கொலாம் இவன்- இவன் யாவனோ

————–

‘அரக்கன் அவ் உரு ஒழித்து, அரியின் சேனையை
வெருக் கொளத் தோன்றுவான், கொண்ட வேடமோ?
தெரிக்கிலேன் இவ் உரு; தெரியும் வண்ணம், நீ
பொருக்கென, வீடண! புகறியால்’ என்றான். 113-

அரக்கன் -இராவணன்; அவ் உரு ஒழித்து-தன்னுடைய அந்த
வடிவத்தை விட்டுவிட்டு; அரியின் சேனையை- குரங்குச் சேனை;
வெருக் கொளத் தோன்றுவான் – அஞ்சும்படி தோன்றுவதற்காக;
கொண்ட வேடமோ- மேற்கொண்ட மாயவேடமோ; இவ் உரு
தெரிக்கிலேன் – இந்த உரு எது என்று எனக்குத் தெரியவில்லை;
தெரியும் வண்ணம் – தெரிந்து கொள்ளும் படி; நீ புகறியால்
என்றான்- நீ சொல்லுவாய் என்றான் இராமன்.

—————–

வீடணன் கும்பகருணனைப் பற்றி எடுத்துரைத்தல்

ஆரியன் அனைய கூற, அடி இணை இறைஞ்சி, ‘ஐய!
பேர் இயல் இலங்கை வேந்தன் பின்னவன்; எனக்கு முன்னோன்;
கார் இயல் காலன் அன்ன கழல் கும்பகருணன் என்னும்
கூரிய சூலத்தான்’ என்று, அவன் நிலை கூறலுற்றான்; 114-

ஆரியன் – இராமன்; அனைய கூற- இவ்வாறு கேட்க;
இணையடி இறைஞ்சி- அவனது திருப்பாத மிரண்டையும் வணங்கி;
ஐய! – ஐயனே; பேர் இயல் இலங்கை வேந்தன் பின்னவன்-
இவன் வரச்சிறப்புடைய இலங்கைத் தலைவனாகிய இராவணனுக்குப்
பின்பிறந்தவன்; எனக்கு முன்னோன் – எனக்கு முன் பிறந்தவன்; கார் இயல் காலன் அன்ன- கருமை நிறம்
பொருந்திய இயமனை ஒத்த; கழல் கும்பகருணன் என்னும்-
வீரக்கழல் அணிந்த கும்பகருணன் என்னும் பெயர் கொண்ட;
கூரிய சூலத்தான் என்று- கூர்மையான சூலத்தைக் கையிலே
கொண்டவன் என்று; அவன் நிலை கூறலுற்றான்- அவனது
தன்மையைக் கூறத் தொடங்கினான்.

———–

‘தவன் நுணங்கியரும் வேதத் தலைவரும் உணரும் தன்மைச்
சிவன் உணர்ந்து, அலரின் மேலைத் திசைமுகன் உணரும்
தேவன் – அவன் உணர்ந்து எழுந்த காலத்து, அசுரர்கள் படுவது எல்லாம்,
இவன் உணர்ந்து எழுந்த காலத்து இமையவர் படுவர், எந்தாய்! 115-

எந்தாய்! – எந்தாய்; தவன் நுணங்கியரும் – தவத்தால்
உடல் சுருங்கி அறிவுக் கூர்மை பெற்ற தவத்தரும்;வேதத்
தலைவரும் – வேதத் தலைவர்களான அந்தணரும்;
உணருந்தன்மைச் சிவன் – உணர்வைப் பெறுவதற்காக
உபாசனை செய்கின்ற சிவபிரானால்உணர்ந்து- தியானிக்கப்பட்டு;
அலரின் மேலைத் திசைமுகன் உணரும்- தாமரை மலரிலே
வாழ்கிற பிரமனாலும் தியானிக்கப்படுகிற; தேவன் அவன்-
தேவனாகிய அந்தத் திருமால்; உணர்ந்து எழுந்த காலத்து-
அரிதுயில் நீங்கிப் பக்தர்களைக் காக்க எழுந்த காலத்தில்;
அசுரர்கள் படுவது எல்லாம் – அசுரர்கள் எல்லாம் இறப்பர்;
இவன் உணர்ந்து எழுந்த காலத்து- இக்கும்பகருணன் துயில்
நீங்கி எழுந்த காலத்தில்; இமையவர் படுவர் – தேவர்கள்
இறப்பர்.

————–

ஆழியாய்! இவன் ஆகுவான்,
ஏழை வாழ்வுடை எம்முனோன்
தாழ்வு இலா ஒரு தம்பியோன்;
ஊழி நாளும் உறங்குவான், 116-

ஆழியாய் – பாற்கடலில் அறிதுயில் கொள்ளும் மாலின்
அம்சமானவனே; இவன் ஆகுவான் – இவனானவன்; ஏழை
வாழ்வுடை- அறத்திற்காக வாழாத எளிமைப்பட்ட உலக
வாழ்வையுடைய; எம்முனோன்- எமக்கு முன்னோனான
இராவணனுடைய; தாழ்வு இலா – அறமனத்தாழ்வில்லாத; ஒரு
தம்பியோன் – ஒப்பற்ற தம்பியானவன்; ஊழி நாளும்
உறங்குவான்- ஒருழிக்காலம் உறங்கும் தன்மையன் என்றவாறு.

————-

‘காலனார் உயிர்க் காலனால்;
காலின் மேல் நிமிர் காலினான்;
மாலினார் கெட, வாகையே,
சூலமே கொடு, சூடினான்; 117-

காலனார் உயிர்க் காலனால்- இயமனது உயிர்க்கு எமன்
போன்றவன்; காலின் மேல் நிமிர் காலினான் – காற்றை விட
விரைவாகச் செல்லும் கால்களையுடையவன்; மாலினார் கெட
வாகையே – கருநிறமுள்ள இந்திரன் தோற்றோட வெற்றியைக்
குறிக்கும் வாகை மாலையைத்; சூலமே கொடு சூடினான்- தன்
சூலப் படை கொண்டு சூடியவன்.

—————

‘தாங்கு கொம்பு ஒரு நான்கு கால்
ஓங்கல் ஒன்றினை, உம்பர்கோன்
வீங்கு நெஞ்சன் விழுந்திலான்
தூங்க, நின்று சுழற்றினான்; 118-

உம்பர் கோன் – தேவர்க்குத் தலைவனாகிய இந்திரன்;
வீங்கு நெஞ்சன் – அச்சம் மிக்க நெஞ்சுடையவனாய்;
விழுந்திலான் தூங்க- கீழே விழுந்திலனாய்த் தொங்க; தாங்கு
கொம்பு ஒரு நான்கு கால் – தாங்குகின்ற நான்கு
கொம்புகளையும் நான்கு கால்களையும் உடைய; ஓங்கல்
ஒன்றினை – மலை போன்ற ஐராவதமென்னும் வெள்ளை
யானையினை; நின்று சுழற்றினான் – தான் ஒருவனாய் நின்று
போர்க்களத்தில் சுழற்றினான்.

————-

‘கழிந்த தீயொடு காலையும்
பிழிந்து சாறு கொள் பெற்றியான்;
அழிந்து மீன் உக, ஆழி நீர்
இழிந்து, காலினின் எற்றுவான்; 119-

கழிந்த தீயொடு காலையும் – மிகுதியான தீயுடன்
காற்றையும்; பிழிந்து சாறு கொள் பெற்றியான் – பிழிந்து சாறு
எடுக்கவல்ல வலிமையுடையவன்; மீன் அழிந்து உக- மீன்கள்
எல்லாம் அழிந்து உயிர் சிந்துமாறு; ஆழிநீர் இழந்து காலினின்
எற்றுவான் – கடல் நீரில் இறங்கிக் காலால் எற்றிக் கடலைக்
கடக்கும் பேருருவத்தினன்.

—————

‘ஊன் உயர்ந்த உரத்தினான்,
மேல் நிமிர்ந்த மிடுக்கினான்;
தான் உயர்ந்த தவத்தினான்,
வான் உயர்ந்த வரத்தினான்; 120-

ஊன் உயர்ந்த உரத்தினான் – உடம்பில் மிக்க வலிமை
படைத்திருப்பதால்; மேல் நிமிர்ந்த மிடுக்கினான் – மிகுதியும்
மேம்பட்ட மன உறுதியுடையவன்; தான் உயர்ந்த தவத்தினால்
-தான் செய்த பெருந்தவத்தினால்; வான் உயர்ந்த வரத்தினான்
– வானம் போல் உயர்ந்த மிக்க வரத்தினை உடையவன்.

————-

‘திறம் கொள் சாரி திரிந்த நாள்,
கறங்கு அலாது கணக்கு இலான்;
இறங்கு தாரவன் இன்று காறு
உறங்கலால், உலகு உய்ந்ததால்; 121-

இறங்குதாரவன்-தொங்குகின்ற மாலையை அணிந்தவனாகிய
இக்கும்பகருணன்; திறம் கொள் சாரி திரிந்த நாள்- போரில்
பலவகையில் வேகமாகச் சுழன்று சாரி திரியும் காலத்தில்; கறங்கு
அலாது- காற்றாடி அல்லாது; கணக்கு இலான்- பிறிதொன்றின்
தன்மையில்லாதவன்; இன்று காறு உறங்கலால்-
இப்படிப்பட்டவன் இன்று வரை தூங்கியதால்;உலகு உய்ந்ததால்
– உலகம் அழியாமல் பிழைத்துள்ளது.

————-

‘சூலம் உண்டு; அது சூர் உளோர்
காலம் உண்டது; கைக் கொள்வான்;
ஆலம் உண்டவன் ஆழிவாய்,
ஞாலம் உண்டவ! நல்கினான்; 122-

ஞாலமுண்டவ- மண்ணுண்டு உலகையெல்லாம் திருவாயில்
காட்டியவனே; ஆழிவாய் ஆலம் உண்டவன்-திருப்பாற்கடலில்
தோன்றிய ஆலகால நஞ்சை உண்டவனாகிய சிவபிரான்;
நல்கினான் -கொடுத்ததாகிய; சூலம் உண்டு- சூலப்படை ஒன்று
உள்ளது; அது சூர் உளோர் – அச்சூலப்படை வீரம்
உடையவர்களுடைய; காலம் உண்டது- வாழ்நாளையெல்லாம்
உண்ணும் தன்மையது; கைக்கொள்வான் – அப்படையை இவன்
கையில் கொண்டவன்.

————–

‘மின்னின் ஒன்றிய விண்ணுளோர்,
‘முன் நில்’ என்று, அமர் முற்றினார்-
என்னின், என்றும் அவ் எண்ணிலார்
வென்னில் அன்றி, விழித்திலான்; 123-

மின்னின் ஒன்றிய – மின்னல் போல் ஒளி பொருந்திய;
விண்ணுளோர் – தேவர்கள்; முன்நில் என்று- எங்கள் முன்னே
நில் என்று; அமர் முற்றினார் – பெரும் போரைத்
தொடங்குவாராயின்; என்னின்- எப்போதும்; அவ் எண்ணிலார்-
அந்த எண்ணிக்கையில் அடங்காத தேவர்களின்; வென்னில்
அன்றி – முதுகுப் புறத்தில் அன்றி; விழித்திலான்-
இக்கும்பகருணன் விழித்தில்லாதவன்.

—————–

“தருமம் அன்று இதுதான்; இதால்
வரும், நமக்கு உயிர் மாய்வு” எனா,
உருமின் வெய்யவனுக்கு உரை
இருமை மேலும் இயம்பினான். 124-

உருமின் வெய்யவனுக்கு- இடிபோல் கொடிய இராவணனுக்கு;
இது- பிறிதொருவன் இல்லுறை தவத்தியை மறை துறந்து வவ்விய
செயல்; தருமம் அன்று- அறச்செயலன்று; இதால்- இச்செயலால்;
நமக்கு உயிர் மாய்வு வரும் – நமக்கு உயிர் மாய்தல் நேரும்;
எனா- என்று; இருமை மேலும் உரை- இருமுறைக்கு மேல் பல
முறை நல் வார்த்தையை; இயம்பினான் – சொன்னான்.

—————-

‘மறுத்த தம்முனை, வாய்மையால்
ஒறுத்தும், ஆவது உணர்த்தினான்;
வெறுத்தும், ‘மாள்வது மெய்’ எனா
இறுத்து, நின் எதிர் எய்தினான். 125-

மறுத்த தம்முனை- தையலை விட மறுத்த தன் முன்னவனாகிய
இராவணனை; வாய்மையால் – தன் வாய்மைப் பற்றின் காரணமாக;
ஒறுத்தும் – வன் சொற்களால் கடிந்து கூறியும்; ஆவது
உணர்த்தினான் – நடக்க இருப்பது பற்றி அறிவு கொளுத்தினான்;
வெறுத்தும் – பலவாறு கூறியும் இராவணன் கேளாமையால்
வெறுப்புக் கொண்டு; மாள்வது மெய் – இறப்பது உண்மை; எனா
இறுத்து- என்று முடிவாகக் கூறிவிட்டு; நின் எதிர் எய்தினான்-
இவன் உன் எதிரே வந்து சேர்ந்தான்.

—————-

‘”நன்று இது அன்று நமக்கு” எனா,
ஒன்று நீதி உணர்த்தினான்;
இன்று காலன் முன் எய்தினான்’
என்று சொல்லி, இறைஞ்சினான். 126-

இது- பிறர்மனை கவர்ந்து சிறை வைத்த செயல்; நமக்குநன்று
அன்று- நமக்கு நன்மையைத் தருவது அன்று; எனா- என்று; ஒன்று நீதி – பொருத்தமான அறச்சொற்களை; உணர்த்தினான்
– இராவணனுக்கு எடுத்துச் சொன்னான்; இன்று காலன் முன்
எய்தினான்-அவன் அதைக் கேளாமையால் ஒருத்தரின் முன்னம்
சாதல் உண்டவர்க்கு உரியது என்று யமனுக்கு முன்னே வந்து
சேர்ந்தான்; என்று சொல்லி- என்று கூறி; இறைஞ்சினான்-
இராமனை வணங்கி நின்றான் வீடணன்.

————-

சுக்கிரீவன், கும்பகருணனை உடன் சேர்த்துக் கொள்ளல் நலம் எனல்

என்று அவன் உரைத்தலோடும், இரவி சேய், ‘இவனை
இன்று கொன்று ஒரு பயனும் இல்லை; கூடுமேல், கூட்டிக்கொண்டு
நின்றது புரிதும்; மற்று இந் நிருதர்கோன் இடரும் நீங்கும்;
“நன்று” என நினைந்தேன்’ என்றான்; நாதனும், ‘நயன் இது’ என்றான். 127-

என்று அவன் உரைத்தலோடும் – என்று அந்த வீடணன்
கூறிய உடனே; இரவி சேய் – சூரியன் மகனாகிய சுக்கிரீவன்;
இவனை இன்று- இக்கும்பகருணனை இப்போரில்; கொன்று ஒரு
பயனும் இல்லை- கொன்று பயன் ஒன்றும் இல்லை; கூடு மேல்
கூட்டிக்கொண்டு – இவன் நம்மொடு சேர்வான் ஆனால்
சேர்த்துக்கொண்டு; நின்றது புரிதும்- மேல் நிகழ வேண்டிய
செயல்களைச் செய்வோம்; இந்நிருதர் கோன் இடரும் நீங்கும்-
இந்த அரக்கர் தலைவனான வீடணனது துன்பமும் நீங்கும்; நன்று
என்று நினைந்தேன் என்றான் – இதுவே நல்லது என நான்
நினைத்தேன் என்றான்; நாதனும் – இராமனும்; இது நயன்
என்றான் – இச்செயல் அரசநீதிக்கு ஏற்றது என்று கூறினான்.

—————-

கும்பகருணனை அழைத்து வர வீடணன் செல்லுதல்

‘ஏகுதற்கு உரியார் யாரே?’ என்றலும், இலங்கை வேந்தன்,
‘ஆகின், மற்று அடியனே சென்று, அறிவினால், அவனை உள்ளம்
சேகு அறத் தெருட்டி, ஈண்டுச் சேருமேல், சேர்ப்பென்’ என்றான்;
மேகம் ஒப்பானும், ‘நன்று, போக!’ என்று விடையும் ஈந்தான். 128-

ஏகுதற்கு உரியார் யாரே? – கும்பகருணனிடத்தில்
செல்லுவதற்கு உரியவர் யாவர்; என்றலும்- என்று இராமன்
வினவுதலும்; இலங்கை வேந்தன்- இலங்கைக்கு அரசனாகிய
வீடணன்; ஆகின்- அப்படியானால்; அடியனே சென்று –
அடியனாகிய யானே போய்; அறிவினால் – அறிவின்
வல்லமையால்; அவனை உள்ளம் – அவனது உள்ளத்தில் உள்ள;
சேகு அறத்தெருட்டி- ஐயம் நீங்கத் தெளிவித்து; ஈண்டுச்
சேருமேல் – இங்கு வந்து சேர்வானேயானால்; சேர்ப்பென்
என்றான்-சேரச் செய்வேன் என்று கூறினான்; மேகம் ஒப்பானும்
– மேகத்தை ஒத்த நிறமும் பயனும் உடைய இராமனும்; நன்று
போக- நல்லது போய் வருக; என்று விடையும் ஈந்தான்- என்று
அவனுக்கு விடை தந்தான்.

————-

தந்திரக் கடலை நீந்தி, தன் பெரும் படையைச்
சார்ந்தான்; வெந் திறலவனுக்கு, ‘ஐய! வீடணன் விரைவில் உன்பால்
வந்தனன்’ என்னச் சொன்னார்; வரம்பு இலா உவகை கூர்ந்து,
சிந்தையால் களிக்கின்றான் தன் செறிகழல் சென்னி சேர்ந்தான். 129-

தந்திரக் கடலை நீந்தி – குரக்குச் சேனையாகிய
பெருங்கடலை அரிதில் கடந்து; தன்பெரும் படையைச்
சார்ந்தான்- தனது பெரிய அரக்கர் சேனையை வீடணன் சென்று
சேர்ந்தான்; வெந்திறலவனுக்கு – அ வனது வரவு கண்ட
அரக்கப்படையினர் கொடும் வலிமையுடைய அந்தக்கும்ப
கருணனுக்கு; ஐய!- தலைவனே; வீடணன் விரைவில் உன்பால்
வந்தனன் – வீடணன் விரைவாக உன்னிடத்து வருகிறான்; என்னச்
சொன்னார் – என்று சொன்னார்கள்; வரம்பு இலா உவகை
கூர்ந்து – அது கேட்டு எல்லை இல்லாத மகிழ்ச்சி மிக்கு;
சிந்தையால் களிக்கின்றான் தன் – மனமகிழ்பவனாகிய
கும்பகருணனது; செறிகழல் சென்னி சேர்த்தான் – வீரக்கழல்
அணிந்த கால்கள் தன் தலைமேல் படும்படி வீடணன் நிலத்தில்
விழுந்து வணங்கினான்.

—————-

கும்பகருணன் வீடணனிடம் ‘நீ வந்தது தகுதி அன்று’ எனல்

முந்தி வந்து இறைஞ்சினானை, முகந்து உயிர் மூழ்கப் புல்லி,
‘உய்ந்தனை, ஒருவன் போனாய்’ என மனம் உவக்கின்றேன் தன்
சிந்தனை முழுதும் சிந்த, தெளிவு இலார் போல மீள வந்தது
என், தனியே?’ என்றான், மழையின் நீர் வழங்கு கண்ணான். 130-

மழையின் நீர் வழங்கு கண்ணான் – மழை போல கண்ணீர்
சொரியும் கண்களையுடையவனான கும்பகருணன்; முந்தி வந்து
இறைஞ்சினானை – தன் முன்னே வந்து வணங்கியவனாகிய
வீடணனை; மோந்து – உச்சி மோந்து; உயிர் மூழ்கப் புல்லி-
ஈருடலும் ஓருயிரும் ஆகுமாறு இறுகத் தழுவி; ஒருவன்
உய்ந்தனை போனாய் என- நீ ஒருவனாவது விலகிச் சென்று
உய்ந்து விட்டாய் என்று எண்ணி; மனம் உவக்கின்றேன் – மனம்
பெருங்களிப்புக் கொள்ளுகிற; தன் – என்னுடைய; சிந்தனை
முழுதும் சிந்த- மன எண்ணம் முழுவதும் சிதறிக் கெடுமாறு;
தெளிவு இலார் போல- அறம் இது மறம் இது என மனத்
தெளிவில்லாதவர் போல; மீள- மீண்டும்; தனியே வந்தது என்
என்றான் – தனியாக வந்தது என்ன காரணம் கருதியோ என
வினாவினான்.

—————-

‘அவயம் நீ பெற்றவாறும், அமரரும் பெறுதல் ஆற்றா, உவய லோகத்தினுள்ள சிறப்பும், கேட்டு
உவந்தேன், உள்ளம்; கவிஞரின் அறிவு மிக்கோய்! காலன்
வாய்க் களிக்கின்றேம்பால் நவை உற வந்தது என், நீ?
அமுது உண்பாய் நஞ்சு உண்பாயோ? 131-

கவிஞரின் அறிவு மிக்காய் – கவிஞர்களைக் காட்டிலும்
அறிவு மிகுந்தவனே! நீ அவயம் பெற்றவாறும் – நீ இராமனிடம்
அடைக்கலம் பெற்ற தன்மையையும்; அமரரும் பெறுதல் ஆற்றா-
அதனால் தேவர்களும் பெறுதற்கு இயலாத; உவய லோகத்திலுள்ள
சிறப்பும் கேட்டு- இம்மை மறுமை ஆகிய இருவேறு உலகங்களில்
உள்ள சிறப்புக்கள் பெற்றதையும் ஒற்றர் சொல்லக் கேட்டு; உள்ளம்
உவந்தேன்- யான் மனம் மகிழ்ந்தேன்; நீ காலன் வாய்க்
களிக்கின்றேம் பால் – (அப்படிப்பட்ட) நீ காலன் வாயில்
இருந்துகொண்டு எங்களிடம்; நவை உற வந்தது என் – குற்றம்
உண்டாகுமாறு வந்த காரணம் என்னையோ?; அமுது உண்பாய்
நஞ்சு உண்பாயோ?-வாழ வைக்கும் அமுதத்தை உண்டு கொண்டு
இருக்கிற நீ அழிவுதரும் நஞ்சை உண்ண எண்ணுவையோ?

—————–

‘”குலத்து இயல்பு அழிந்ததேனும், குமர! மற்று உன்னைக் கொண்டே
புலத்தியன் மரபு மாயாப் புண்ணியம் பொருந்திற்று” என்னா,
வலத்து இயல் தோளை நோக்கி மகிழ்கின்றேன்; மன்ன! வாயை
உலத்தினை, திரிய வந்தாய்; உளைகின்றது உள்ளம், அந்தோ! 132-

குமர – குமரனே; மன்ன- மன்னவனே; குலத்து இயல்பு
அழிந்ததேனும் – புலத்தியன் வழிமுதல் வந்த பொய்யறு
குலத்தின் தன்மை வேறு ஒருவன் இல்லுறை தவத்தியை மறை
துறந்து சிறை வைத்ததால் அழிந்து விட்டதாயினும்; உன்னைக்
கொண்டு- உன்னை முதலாகக் கொண்டு; புலத்தியன் மரபு
மாயாப் புண்ணியம் பொருந்திற்று- அப்புலத்தியன் கால்வழி
அழிந்திடாத புண்ணியத்தைப் பெற்றது;என்னா- என்று; வலத்து
இயல் தோளை நோக்கி மகிழ்கின்றேன்- நான் என் வெற்றி
பொருந்திய தோளைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளுகின்றேன்;வாயை
உலத்தினை திரிய வந்தாய் – ஆனால் நீ என் வாய் ஈரம்
உலருமாறு திரும்பி வந்தாய்; அந்தோ உள்ளம் உளைகின்றது-
அதுகண்டு ஐயோ என் உள்ளம் வருந்துகின்றது என்றவாறு.

—————-

‘அறப் பெருந் துணைவர், தம்மை அபயம் என்று அடைந்த நின்னைத்
துறப்பது துணியார், தங்கள் ஆர் உயிர் துறந்த போதும்;
இறப்பு எனும் பதத்தை விட்டாய்; இராமன் என்பளவும் மற்று இப்
பிறப்பு எனும் புன்மை இல்லை; நினைந்து, என்கொல் பெயர்ந்த வண்ணம்? 133-

அறப் பெருந்துணைவர் தம்மை- தர்மத்தின் தனிமை
தீர்ப்பானாகி அறத்திற்குப் பெருந்துணைவரான இராமனை;
அபயம் என்று அடைந்த நின்னை- சரணம் என்று அடைந்த
உன்னை; தங்கள் ஆர் உயிர் துறந்த போதும் – தங்களுடைய
அருமையான உயிர் நீங்கப் போகிற நிலை வந்தாலும்; துறப்பது
துணியார் – கை விடுவதற்குத் துணியமாட்டார்கள்;இறப்பு எனும்
பதத்தை விட்டாய் – நீ இராமனையடைக்கலமாக அடைந்ததால்
இறப்பு என்னும் நிலையைக் கடந்துவிட்டாய்; இராமன்
என்பளவும் மற்று இப்பிறப்பு எனும் புன்மை இல்லை-
இராமனது திருநாமத்தைக் கூறிக் கூறி வரும் உனக்குப் பிறப்பு
என்னும் இழிவும் இல்லை; நினைந்து பெயர்ந்த வண்ணம் என்-
அப்படியிருக்கும் போது நீ நினைத்து இங்கு மீண்டு வந்தது
எதனால் என்றவாறு.

————–

‘அறம் என நின்ற நம்பற்கு அடிமை பெற்று, அவன் தனாலே
மறம் என நின்ற மூன்றும் மருங்கு அற மாற்றி, மற்றும்,
திறம் என நின்ற தீமை இம்மையே தீர்ந்த செல்வ!
பிறர் மனை நோக்குவேமை உறவு எனப் பெறுதி போலாம்? 134-

அறம் என நின்ற நம்பற்கு- அறத்தின் மூர்த்தி எனச்
சொல்லுமாறு நின்ற தலைவனுக்கு; அடிமை பெற்று- அடிமையாகப்
பெற்று; அவன் தனாலே- அவனது கருணை வள்ளல் தன்மையாலே;
மறம் என நின்ற மூன்றும்- பாவத்துக்குக் காரணம் என்னுமாறு
நின்ற காமம், வெகுளி, மயக்கம் ஆகிய மூன்றினையும்; மருங்கு அற
மாற்றி- முழுதும் இல்லாமல் போக்கி; மற்றும்- மேலும்; திறம் என
நின்ற தீமை- வலிமையுடையதாக இருந்த பிற தீய பண்புகளையும்;
இம்மையே தீர்ந்த செல்வ-இப்பிறவியிலேயே போக்கிய செல்வனே;
பிறர் மனை நோக்கு வேமை- அயலவரது மனைவியைஅறந்துறந்து நோக்கும் எங்களை;
உறவு எனப் பெறுதி போலாம் – உறவு என இனிமேலும்
கொள்வாய் போலும் என்றவாறு.

—————

‘நீதியும், தருமம் நிறை நிலைமையும், புலமைதானும்,
ஆதி அம் கடவுளாலே அருந் தவம் ஆற்றிப் பெற்றாய்;
வேதியர் தேவன் சொல்லால், விளிவு இலா ஆயுப் பெற்றாய்;
சாதியின் புன்மை இன்னும் தவிர்ந்திலை போலும்,-தக்கோய்! 135-

தக்கோய் – நற்பண்புகள் உடையவனே; நீதியும்-
நீதியையும்; தருமம் நின்ற நிலைமையும்- அறத்தில் ஊன்றி
இருக்கின்ற தன்மையையும்; புலமை தானும்-நல்லறிவையும்; ஆதி
அம் கடவுளாலே – முழுமுதற் கடவுள் பால்; அருந்தவம்
ஆற்றிப் பெற்றாய் – மிக்க தவம் செய்து அடைந்தாய்; வேதியர்
தேவன் சொல்லால் – அந்தணர்க்குத் தலைவனாகிய பிரமன்
கொடுத்த வரத்தால்; விளிவு இலா ஆயுள் பெற்றாய்- அழிவற்ற
ஆயுளை அடைந்தாய்; சாதியின் புன்மை- இவ்வாறிருக்கவும்
சாதியினது இழிவை; இன்னும் தவிர்ந்திலை போலும்- இன்னும்
விட்டு விடவில்லை போலும்.

—————–

ஏற்றிய வில்லோன், யார்க்கும் இறையவன், இராமன் நின்றான்;
மாற்ற அருந் தம்பி நின்றான்; மற்றையோர் முற்றும் நின்றார்;
கூற்றமும் நின்றது, எம்மைக் கொல்லிய; விதியும் நின்ற;
தோற்ற எம் பக்கல், ஐய! வெவ் வலி தொலைய வந்தாய். 136-

ஐய- ஐயனே; யார்க்கும் இறையவன் இராமன்-
யாவருக்கும் தலைவனாகிய இராமன்; ஏற்றிய வில்லோன்
நின்றான்- நாண் ஏற்றிய வில்லையுடையவனாய்க் காத்து நின்று
கொண்டிருக்கிறான்; மாற்ற அருந்தம்பி நின்றான்-
விலக்குதற்கு அரிய பெருவலி படைத்த தம்பியும் நின்று
கொண்டிருக்கிறான்; மற்றையோர் முற்றும் நின்றார் – பிற
படை வீரர்களாகிய வானரரும் மிகுதியும் இருக்கின்றார்கள்;
எம்மைக் கொல்லிய கூற்றமும் நின்ற- எங்களைக்
கொல்லுவதற்காக யமனும் காத்திருக்கிறான்; விதியும் நின்ற
– அதற்கு ஏற்பவே விதியும் அமைந்துள்ளது; வெவ்வலி
தொலைய- உனது தவவலியும் அறவலியும் கெட; தோற்ற எம்
பக்கல் வந்தாய் – தோற்க இருக்கிற எங்கள் பக்கம் ஏன்
வந்தாய்.

—————-

‘ஐய! நீ அயோத்தி வேந்தற்கு அடைக்கலம் ஆகி, ஆங்கே
உய்கிலை என்னின், மற்று இல் அரக்கராய் உள்ளோர் எல்லாம்
எய் கணை மாரியாலே இறந்து, பாழ் முழுதும் பட்டால்,
கையினால் எள் நீர் நல்கி, கடன் கழிப்பாரைக் காட்டாய். 137-

ஐய – ஐயனே; அயோத்தி வேந்தற்கு- அயோத்திக்கு
வேந்தன் ஆகிய இராமனுக்கு; அடைக்கலம் ஆகி – அடைக்கலப்
பொருள் ஆகி; நீ ஆங்கே- நீ அங்கு; உய்கிலை என்னின்-உயிர்
உய்ந்து வாழாய் ஆயின்; மற்று இவ் அரக்கராய் உள்ளோர்
எல்லாம் – இந்த அரக்கர்களாய் உள்ள நாங்கள் எல்லாம்;
எய்கணை மாரியாலே- இராமன் எய்யும் அம்பு மழையாலே;
முழுதும் இறந்து பாழ்பட்டால் – முற்றிலும் இறந்து பாழாகிப்
போனால்; கையினால் எள்நீர் நல்கி- கையினால் எள்ளொடு
கூறிய நீரை இறந்தவர் பொருட்டுக் கொடுத்து; கடன் கழிப்பாரைக்
காட்டாய் – நீர்க் கடன் நிறைவேற்றுவர் யாவர் உளர் எனக்
காட்டாய் என்றவாறு.

——————

‘வருவதும், இலங்கை மூதூர்ப் புலை எலாம் மாண்ட பின்னை;
திருவுறை மார்பனோடும் புகுந்து, பின் என்றும் தீராப் பொருவ
அருஞ் செல்வம் துய்க்கப் போதுதி, விரைவின்’ என்றான்,
‘கருமம் உண்டு உரைப்பது’ என்றான்; ‘உரை’ என, கழறலுற்றான்; 138-

இலங்கை மூதூர் வருவதும்-நீ இலங்கை மூதூர்க்கு(வரத்தக்க
காலம் இப்போது அன்று வரும் காலம்; புலை எலாம் மாண்ட
பின்னை- இழிதொழில் உடைய அரக்கர் கூட்டம் எல்லாம்
அழிந்தபிறகு; திருவுறை மார்பனோடும் புகுந்து – திருமகள்
வாழும் மார்பினை உடைய இராமனோடு புகுந்து; பின் என்றும்
தீராப்- பிறகு என்றும் அழியாத; பொருவ அருஞ்செல்வம்-
ஒப்பற்ற இலங்கையரசச் செல்வத்தையும் மற்றும் வீட்டு உலகச்
செல்வத்தையும்; துய்க்கப் போதுதி விரைவின்-
அனுபவிப்பதற்காக விரைவில் திரும்பிப் போய்விடுக; என்றான்-
என்று கும்பகருணன் கூறினான்; கருமம் உண்டு உரைப்பது
என்றான்- (அதற்கு வீடணன் உன்னிடம்)சொல்லவேண்டிய காரியம்
ஒன்று உள்ளது என்றான்; உரை என- அதைச் சொல் என்று
கும்பகருணன் கேட்க; கழறலுற்றான் – வீடணன் கூறத்
தொடங்கினான்.

———

இராமனைச் சரண் புகுமாறு கும்பகருணனுக்கு வீடணன் உரைத்தல்

‘இருள் உறு சிந்தையேற்கும் இன் அருள் சுரந்த வீரன்
அருளும், நீ சேரின்; ஒன்றோ, அவயமும் அளிக்கும்; அன்றி,
மருள் உறு பிறவி நோய்க்கு மருந்தும் ஆம்; மாறிச் செல்லும்
உருளுறு சகட வாழ்க்கை ஒழித்து, வீடு அளிக்கும் அன்றே. 139-

இருள் உறு சிந்தையேற்கும் – அறியாமை நிரம்பிய
மனத்தையுடையவனான எனக்கும்; இன் அருள் சுரந்த வீரன்-
இனிய அருளைச் சுரந்து அடைக்கலம் தந்த வீரனாகிய இராமன்;
நீ சேரின் அருளும் – நீ அடைக்கலமாக வந்து சேரினும் அருள்
புரிவான்; ஒன்றோ-அது மட்டுமா?; அவயமும் அளிக்கும்-உனக்கு
எவராலும் துன்பம் நேராமல் அபயக் கருணையும் செய்வான்;
அன்றி- அதோடு; மருள் உறு பிறவி நோய்க்கு- மயக்கம் தருகிற
பிறவிப் பிணிக்கு; மருந்தும் ஆம்- மருந்தும் ஆவான்; மாறிச்
செல்லும்- இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும் தன்மையுடைய;
உருளுறு சகட வாழ்க்கை ஒழித்து – உருண்டு வரும் வண்டிச்
சக்கரம் போன்ற இந்த உலக வாழ்வை நீக்கி; வீடு அளிக்கும்
அன்றே- வீட்டுலகை அளிப்பான் அன்றோ?.

————–

‘எனக்கு அவன் தந்த செல்வத்து இலங்கையும் அரசும் எல்லாம்
நினக்கு நான் தருவென்; தந்து, உன் ஏவலின் நெடிது நிற்பென்;
உனக்கு இதின் உறுதி இல்லை; உத்தம! உன் பின் வந்தேன்
மனக்கு நோய் துடைத்து, வந்த மரபையும் விளக்கு வாழி! 140-

உத்தம! – உத்தமனே; எனக்கு அவன் தந்த- எனக்கு அந்த
இராமன் கொடுத்த; செல்வத்து இலங்கையும்- செல்வத்தையுடைய
இலங்கையையும்; அரசும் – அதனை ஆளும் உரிமையினையும்;
எல்லாம் நினக்கு நான் தருவென் – பிற எல்லாவற்றையும்
உனக்கு நான் கொடுப்பேன்; தந்து- அவ்வாறு கொடுத்து; உன்
ஏவலின் நெடிது நிற்பென் – உன் ஏவலின் வழியே என்றும்
நடப்பேன்; உனக்கு இதின் உறுதி இல்லை- உனக்கு இதைக்
காட்டிலும் உறுதி தருவது வேறு ஒன்றும் இல்லை; உன் பின்
வந்தேன் – உன் பின் பிறந்தோனாகிய எனது; மனக்கு நோய்
துடைத்து – மனத்தில் உள்ள வருத்தத்தைப் போக்கி; வந்த
மரபையும் விளக்கு- பிறந்த குலமரபையும் விளங்கச் செய்வாய்.

——————-

‘போதலோ அரிது; போனால், புகலிடம் இல்லை; வல்லே,
சாதலோ சரதம்; நீதி அறத்தொடும் தழுவி நின்றாய்
ஆதலால், உளதாம் ஆவி அநாயமே உகுத்து என்? ஐய!
வேத நூல் மரபுக்கு ஏற்ற ஒழுக்கமே பிடிக்க வேண்டும். 141-

ஐய!- ஐயனே; நீதி அறத்தொடும் தழுவி நின்றாய் –
நீதியையும் அறத்தையும் பற்றி நிற்பவனே!; போதலோ அரிது
– போரில் உயிர் தப்பிப் போதல் மிக அரிதாகும்; போனால்
புகலிடம் இல்லை – அவ்வாறு தப்பிப் போனாலும் புகலாக
அடைவதற்கு உரிய வேறு இடமும் இல்லை; வல்லே சாதலோ
சரதம் – விரைவாகச் சாவதோ உறுதி; ஆதலால் – ஆதலால்;
உளதாம் ஆவி- உள்ள உயிரினை; அநாயமே உகுத்து என்-
வீணாகப் போக்கி என்ன பயன்?; வேத நூல் மரபுக்கு ஏற்ற-
வேதநூல்களில் கூறிய முறைமைக்குத் தக்க; ஒழுக்கமே
பிடிக்கவேண்டும் – நல்லொழுக்கத்தையே உறுதியாகக்
கடைப்பிடிக்கவேண்டும்.

—————–

‘தீயவை செய்வர் ஆகின், சிறந்தவர், பிறந்த உற்றார்,
தாய் அவை, தந்தைமார் என்று உணர்வரோ, தருமம் பார்ப்பார்?
நீ அவை அறிதி அன்றே? நினக்கு நான் உரைப்பது என்னோ?
தூயவை துணிந்த போது, பழி வந்து தொடர்வது உண்டோ ? 142-

தருமம் பார்ப்பார்- தருமத்தையே சிறப்பாகப் பார்ப்பவர்கள்;
தீயவை செய்வர் ஆகின்- தீய செயல்களைச் செய்வார்களாயின்;
சிறந்தவர் – அன்பிற் சிறந்தவர்; பிறந்த உற்றார்- உடன் பிறந்த
உறவு முறையினர்; தாய் அவை- தாயாகிய அவ்வை; தந்தைமார்-
தந்தைமார்; என்று உணர்வரோ- என்று எண்ணிப் பார்ப்பார்களா?;
நீ அவை அறிதி அன்றே- நீ அவற்றை அறிவாய் அல்லவா?;
நினக்கு நான் உரைப்பது என்னோ- உனக்கு நான் சொல்ல வேண்டுவது என்ன உள்ளது; தூயவை துணிந்த போது-
தூய்மையான செயல்களைச் செய்யத் துணியும் போது; பழி வந்து
தொடர்வது உண்டோ? – பழிச் செயல் வந்து தொடர்வது
உண்டாகுமா?

—————–

‘மக்களை, குரவர்தம்மை, மாதரை மற்றுளோரை,
ஒக்கும் இன் உயிர் அன்னாரை, உதவி செய்தாரோடு ஒன்ற,
“துக்கம், இத் தொடர்ச்சி” என்று, துறப்பரால், துணிவு பூண்டோர்;
மிக்கது நலனே ஆக, வீடுபேறு அளிக்கும் அன்றே! 143-

துணிவு பூண்டோர் – உறுதியான துறவு எண்ண வலிமை
உள்ளவர்கள்; மக்களை- பெற்ற மக்களையும்; குரவர் தம்மை
– இருமுது குரவரையும்; மாதரை- மனைவியரையும்; மற்றுளோரை-
மற்றுமுள்ள உறவினர்களையும்; இன் உயிர் ஒக்கும் அன்னாரை-
இனிய உயிரை ஒத்த நண்பர்களையும்; உதவி செய்தாரோடு- உதவி
செய்தவர்களையும் ஒன்ற- முழுமையாக; இத்தொடர்ச்சி துக்கம்
என்று- இந்த உலகியல் பந்தத் தொடர்ச்சி துன்பம் விளைவிக்கும்
என்று எண்ணித்; துறப்பாரால் – துறந்து விடுவார்கள்; மிக்கது-
சிறந்ததாகிய அத்துறவு; நலனே ஆக-நற்செயலாக ஆகி; வீடு பேறு
அளிக்கும் அன்றே – வீட்டுலகத்தைத் தருமல்லவா?

——————–

‘தீவினை ஒருவன் செய்ய, அவனொடும் தீங்கு இலாதோர்
வீவினை உறுதல், ஐய! மேன்மையோ? கீழ்மைதானோ?
ஆய் வினை உடையை அன்றே? அறத்தினை நோக்கி, ஈன்ற
தாய் வினை செய்ய அன்றோ, கொன்றனன், தவத்தின் மிக்கான்? 144-

ஐய!-ஐயனே; தீவினை ஒருவன் செய்ய-தீய செயலை ஒருவன்
செய்ய; அவனொடும் தீங்கு இலாதோர் – அதற்காக அவனொடு
தீமை செய்யாதவர்களும்; வீவினை உறுதல் – உயிர் விடுதலை
அடைதல்; மேன்மையோ- மேன்மை விளைவிப்பதா?; கீழ்மை
தானோ – தாழ்வினை விளைவிப்பதா?; ஆய்வினை உடையை
அன்றே – நீ ஆய்வு செய்யும் திறமை படைத்துள்ளாய் அல்லவா?
அறத்தினை நோக்கி – அறத்துக்காகப் பார்த்து; ஈன்ற தாய்
– தன்னைப் பெற்ற தாய்; வினை செய்ய அன்றோ- தீய செயலைச்
செய்ததனாலன்றோ; தவத்தின் மிக்கான் கொன்றனன்- தவத்தில்
மிகுந்த பரசுராமன் அத்தாயையே கொன்றான் என்றவாறு.

——————

‘கண்ணுதல், தீமை செய்ய, கமலத்து முளைத்த தாதை
அண்ணல் தன் தலையின் ஒன்றை அறுக்க அன்று அமைந்தான் அன்றே?
புண் உறு புலவு வேலோய்! பழியொடும் பொருந்தி, பின்னை,
எண்ணுறு நரகின் வீழ்வது அறிஞரும் இயற்றுவாரோ? 145-

புண் உறு புலவு வேலோய்!- பகைவர் உடல் புண்ணிலிருந்து
பொருந்திய ஊன் நாற்றம் படிந்த வேற்படையை உடையவனே;
கமலத்து முளைத்த தாதை அண்ணல்- தாமரையில் தோன்றிய
பெருமை மிகு பிரமன்; தீமை செய்ய – ஒரு தீய தொழிலைச்
செய்தபோது; கண்ணுதல் – நெற்றியில் கண்ணுடைய சிவபிரான்;
தன் தலையின் ஒன்றை அறுக்க- அவனது தலையில் ஒரு
தலையை அறுத்துவிட; அன்று அமைந்தான் அன்றோ-அப்போது
அவன் அதற்கு உடன்பட்டான் அல்லவா?; பழியொடும் பொருந்தி-
இம்மையில் பழியைப் பொருந்தி; பின்னை- மறுமையில்; எண்ணுறு
நரகின் வீழ்வது- கொடிய நரகத்தில் வீழ்வதற்குக் காரணமான
செயலை; அறிஞரும் இயற்றுவாரோ- அறிஞரும் செய்வார்களோ.

——————

‘உடலிடைத் தோன்றிற்று ஒன்றை அறுத்து, அதன் உதிரம் ஊற்றி,
சுடல் உறச் சுட்டு, வேறு ஓர் மருந்தினால், துயரம் தீர்வர்;
கடலிடைக் கோட்டம் தேய்த்துக் கழிவது கருமம் அன்றால்
மடலுடை அலங்கல் மார்ப! மதி உடையவர்க்கு மன்னோ! 146-

மடலுடை அலங்கல் மார்ப!- இதழ்களையுடைய மலர்களால்
ஆன மார்பை உடையவனே!; உடலிடைத் தோன்றிற்று ஒன்றை-
உடலில் தோன்றிய ஒரு கழற்புண்ணை; அறுத்து- கத்தியால் அறுத்து;
அதன் உதிரம் ஊற்றி – அதில் உள்ள தீய உதிரத்தையும் சீழ்
நீரையும் வெளியேற்றி; சுடல் உறச் சுட்டு – கார மருந்துகளை
அல்லது தீச்சுடலைப் பொருத்தமாக வைத்துச் சுட்டு; வேறு ஓர்
மருந்தினால்- புண்ணை ஆற்றுவதற்குரிய வேறு ஒரு மருந்தினால்;
துயரம் தீர்வர்- உலகத்தவர் துயரம் நீங்குவார்கள்; மதி
உடையவர்க்கு மன்னோ – அறிவுடையவர்களுக்கு; கடலிடைக்
கோட்டம் தேய்த்துக் கழிவது- கடலின் கண் நறுமணப்
பொருள்களைத் தேய்த்துக் கழிய விடுவது; கருமம் அன்றால் –
செயத்தகு செயலாகாது.

——————

‘காக்கலாம் நும் முன் தன்னை எனின், அது கண்டது இல்லை;
ஆக்கலாம் அறத்தை வேறே என்னினும், ஆவது இல்லை;
தீக் கலாம் கொண்ட தேவர் சிரிக்கலாம்; செருவில் ஆவி
போக்கலாம்; புகலாம், பின்னை நரகு; அன்றிப் பொருந்திற்று உண்டோ ? 147-

நும்முன் தன்னைக் காக்கலாம் எனின் – உன் தமையனான
இராவணனைக் காக்கலாம் என்றாலோ; அது கண்டது இல்லை-
அதற்கு உபாயம் ஏதும் ஏற்பட்டிலது; அறத்தை வேறே
ஆக்கலாம் என்னினும்-அவனுடன் இருந்து தருமத்தை வேறாகச்
செய்யலாம் என்றாலும்; ஆவது இல்லை – அச்செயல் ஆவது
அன்று; தீக்கலாம் கொண்ட தேவர் – நம்மோடு கொடிய
மாறுபாடு கொண்ட தேவர்கள்; சிரிக்கலாம் செருவில் – சிரிக்கும்
படி நடக்க உள்ள போரில்; ஆவி போக்கலாம்-உயிரை விடலாம்;
பின்னை நரகு புகலாம் – பின்பு நரகத்திலும் புகலாம்; அன்றிப்
பொருந்திற்று உண்டோ- இதுவல்லாது வேறு பொருந்திய செயல்
உண்டோ என்றவாறு.

————–

‘மறம் கிளர் செருவில் வென்று வாழ்ந்திலை; மண்ணின் மேலா
இறங்கினை; இன்றுகாறும் இளமையும் வறிதே ஏக,
உறங்கினை என்பது அல்லால், உற்றது ஒன்று உளதோ? என், நீ
அறம் கெட உயிரை நீத்து மேற்கொள்வான் அமைந்தது?-ஐயா! 148-

ஐயா- ஐயனே; இன்று காறும் – இன்று வரையிலும்; இளமையும்
வறிதே ஏக- இளமைப் பருவமும் வீணாகக் கழியுமாறு; உறங்கினை
என்பது அல்லால் – ஆறு மாதம் உறங்குவதும் ஒருநாள்
விழிப்பதுமாக இருக்கின்றாய் என்பதல்லது; மறம் கிளர் செருவில்
வென்று வாழ்ந்திலை-பெரு வீரனாய் இருந்தும் வீரம் விளங்குகின்ற
போரில் வென்று வாழ்வு பெறவில்லை; மண்ணின் மேலா
இறங்கினை-நில உலகில் மதிப்பு இழந்து தாழ்வு அடைந்து விட்டாய்;
உற்றது ஒன்று உளதோ- பெற்ற நற்பயன் வேறு ஒன்று உள்ளதோ?;
நீ அறங்கெட உயிரை நீத்து- நீ இப்போது அறம் கெடுமாறு
உயிரை இராவணனுக்காக விட்டு; மேற் கொள்வான் அமைந்தது
என் – பெற இருப்பது என்னவோ?

——————

திரு மறு மார்பன் நல்க, அனந்தரும் தீர்ந்து, செல்வப்
பெருமையும் எய்தி, வாழ்தி; ஈறு இலா நாளும் பெற்றாய்;
ஒருமையே அரசு செய்வாய்; உரிமையே உனதே; ஒன்றும்
அருமையும் இவற்றின் இல்லை; காலமும் அடுத்தது, ஐயா! 149-

ஐயா! – ஐயனே; திருமறு மார்பன் நல்க- திருமகளையும்,
ஸ்ரீவத்சமென்னும் மச்சத்தையும் திருமார்பில் கொண்ட மாலின்
திருவவதாரமாகிய இராமபிரான் கருணை செய்தலால்; அனந்தரும்
தீர்ந்து-உன் உறக்க சாபம் நீங்கப் பெற்று; செல்வப் பெருமையும்
எய்தி- செல்வச் செழிப்பையும் பெற்று; ஈறு இலா நாளும்
பெற்றாய் வாழ்தி- அழிவில்லாத வாழ்நாளும் பெற்று வாழ்வாயாக;
ஒருமையே அரசு செய்வாய் – நீ இணையின்றி அரசு செய்வாய்;
உரிமையே உனதே- அதற்கு உனக்கு உரிமையும் உன்னதே;
இவற்றின் ஒன்றும் அருமையும் இல்லை- இவ்வாறு எல்லாம்
செய்வதில் சிறிதும் அருமையும் இல்லை; காலமும் அடுத்தது-
அதற்குரிய காலமும் வந்துவிட்டது.

—————

‘தேவர்க்கும் தேவன் நல்க, இலங்கையில் செல்வம் பெற்றால்,
ஏவர்க்கும் சிறியை அல்லை; யார், உனை நலியும் ஈட்டார்?-
மூவர்க்கும் தலைவர் ஆன மூர்த்தியார், அறத்தை முற்றும்
காவற்குப் புகுந்து நின்றார், காகுத்த வேடம் காட்டி! 150-

மூவர்க்கும் தலைவர் ஆன மூர்த்தியார் – அரி அரன்
அயன் என்னும் மூவர்க்கும் தலைவரான பரம்பொருள்; அறத்தை
முற்றும் காவற்கு – அறத்தை முழுதும் காக்கும் பொருட்டுக்;
காகுத்த வேடம் காட்டி புகுந்து நின்றார் – காகுத்த
வேடங்கொண்டு நில உலகில் புகுந்துள்ளார்; தேவர்க்கும் தேவன்
நல்க- அத்தகைய தேவர்க்குத் தேவன் ஆகிய இராமன் தந்தருள;
இலங்கையில் செல்வம் பெற்றால் – இலங்கையை ஆளும்
செல்வத்தைப் பெற்றால்; ஏவர்க்கும் சிறியை அல்லை-எவருக்கும்
சிறுமையுடையவன் ஆகாய்; உனை யார் நலியும் ஈட்டார்-
உன்னை எதிர்த்து வருத்தக் கூடியவர் யாவர்?

—————

‘உன் மக்கள் ஆகி உள்ளார், உன்னொடும் ஒருங்கு தோன்றும்
என் மக்கள் ஆகி உள்ளார், இக் குடிக்கு இறுதி சூழ்ந்தான்-
தன் மக்கள் ஆகி உள்ளார், தலையொடும் திரிவர் அன்றே-
புன் மக்கள் தருமம் பூணாப் புல மக்கள் தருமம் பூண்டால்? 151-

புன் மக்கள் தருமம் பூணாப் – நீ புல்லிய
தன்மையுடைய அரக்கர்களின் தருமத்தை மேற்கொள்ளாமல்;
புலமக்கள் தருமம் பூண்டால்- அறிவுடை மக்களது தருமத்தைக்
கைக்கொண்டால்; உன் மக்கள் ஆகி உள்ளார்- உன் மக்களாய்
இருப்பவர்களும்; உன்னொடும் ஒருங்கு தோன்றும்என்
மக்கள் ஆகி உள்ளார் – உன்னோடு உடன் பிறந்த எனக்கு
மக்களாய் இருப்பவர்களும்; இக்குடிக்கு இறுதி சூழ்ந்தான்-
இந்த அரக்கர் குலத்துக்கு அழிவைத் தேடியவனான இராவணன்;
தன் மக்கள் ஆகி உள்ளார் – தனக்கு மக்களாய்
இருப்பவர்களும்; தலையொடும் திரிவர் அன்றே-
இராமபாணத்தால் தலையை இழக்காது திரிவர் அன்றோ.

——————

‘முனிவரும் கருணை வைப்பர்; மூன்று உலகத்தும் தோன்றி
இனி வரும் பகையும் இல்லை; “ஈறு உண்டு” என்று இரங்க வேண்டா;
துனி வரும் செறுநர் ஆன தேவரே துணைவர் ஆவர்;-
கனி வரும் காலத்து, ஐய! பூக் கொய்யக் கருதலாமோ? 152-

ஐய- ஐயனே!; முனிவரும் கருணை வைப்பர் – நீ இராமனைச்
சேர்ந்தால் உன் மீது பகைமை வைத்துள்ள முனிவர்களும் கருணை
கொள்வார்கள்; மூன்று உலகத்தும் தோன்றி இனி வரும் பகையும்
இல்லை- மூன்று உலகங்களிலும் பகையாகத் தோன்றி வருபவரும்
எவருமிலர்; ஈறு உண்டு என்று இரங்க வேண்டா- மரணம் உண்டு
என்று இரக்கப்படத் தேவையில்லை; துணிவரும் செறுநர் ஆன
தேவரே துணைவர் ஆவர்- வெறுப்பால் வரும் மிகு பகை கொண்ட
தேவர்களே நமக்குத் துணைவராக மாறுவர்; கனி வரும் காலத்து
பூக்கொய்யக் கருதலாமோ- கனி தோன்றும் காலத்தில் பூக்களைக்
கொய்துவிட நினைக்கலாமோ?

———-

‘வேத நாயகனே உன்னை கருணையால் வேண்டி, விட்டான்;
காதலால், என்மேல் வைத்த கருணையால், கருமம் ஈதே;
ஆதலால், அவனைக் காண, அறத்தொடும் திறம்பாது, ஐய!
போதுவாய் நீயே’ என்னப் பொன் அடி இரண்டும் பூண்டான். 153-

ஐய! – ஐயனே; வேதநாயகனே- வேதங்கள் துதிக்கும்
தலைவனாகிய இராமனே; கருணையால்- உன்மீது கொண்டுள்ள
அருளால்; உன்னைவேண்டி- உன்னை வேண்டி அழைத்து
வருமாறு; விட்டான் – என்னை அனுப்பினான்; காதலால்
என்மேல் வைத்த கருணையால் – அதற்குக் காரணம் அவன்
என் மேல் சிறப்பாகக் கொண்டுள்ள காதலாகிய திருவருளாகும்;
கருமம் ஈதே- செய்யத்தக்க காரியமும் அதுவேயாகும்; ஆதலால்-
ஆகவே; அறத்தொடும் திறம்பாது- அறத்தில் இருந்து
மாறுபடாமல்; நீயே அவனைக் காணப் போதுவாய் – நீயே
அவ்விராமனைக் காண்பதற்காக வருவாய்; என்ன- என்று கூறிப்;
பொன்அடி இரண்டும் பூண்டான் – அக்கும்பகருணனது அழகிய
திருவடி இரண்டும் தலைமேல் பூண்டான்.

—————–

கும்பகருணனின் மறுப்புரை

‘தும்பி அம் தொடையல் மாலைச் சுடர் முடி படியில் தோய,
பம்பு பொற் கழல்கள் கையால் பற்றினன் புலம்பும் பொன் தோள்
தம்பியை எடுத்து, மார்பில் தழுவி, தன் தறுகணூடு
வெம் புணீர் சொரிய நின்றான், இனையன விளம்பலுற்றான்; 154-

தும்பி அம் தொடையல் மாலைச் சுடர்முடி- வண்டுகள்
மொய்க்கிற அழகிய தொடுத்தல் அமைந்த மலர் மாலையைச் சூடிய
ஒளி பொருந்திய முடி; படியில் தோய- நிலத்தில் படிய விழுந்து
வணங்கிப்; பம்பு பொற்கழல்கள் – பரவியுள்ள பொன்னால் ஆகிய
வீரக்கழல்கள் அணிந்த கால்களை; கையால் பற்றினன் புலம்பும்-
கையால் பற்றிப் புலம்புகிற; பொன் தோள் தம்பியை- அழகிய
தோள்களையுடைய தம்பியாகிய வீடணனை; எடுத்து மார்பில் தழுவி-
எடுத்து மார்பில் தழுவிக் கொண்டு; தன் தறுகணூடு- தன் வீரம்
வெளிப்படும் கண்களின் வழியாக;வெம்புணீர் சொரிய நின்றான்- வெப்பத்துடன் கூடிய குருதி
வெளிப்பட நின்றவனாகிய கும்பகருணன்; இனையன
விளம்பலுற்றான்- இத்தகைய சொற்களைச் சொல்லல் ஆனான்.

—————–

‘நீர்க் கோல வாழ்வை நச்சி, நெடிது நாள் வளர்த்துப் பின்னைப்
போர்க் கோலம் செய்து விட்டாற்கு உயிர் கொடாது, அங்குப் போகேன்;
தார்க் கோல மேனி மைந்த! என் துயர் தவிர்த்தி ஆகின்,
கார்க் கோல மேனியானைக் கூடிதி, கடிதின் ஏகி, 155-

தார்க்கோல மேனி மைந்த- மார்பில் மாலையணிந்த அழகிய
உடம்பினை உடைய மைந்தனே; நெடிது நாள் வளர்த்து- என்னை
நீண்ட நாள் அருமையாக வளர்த்துப்; பின்னை- இன்று;
போர்க்கோலம் செய்து விட்டாற்கு- தன் கையாலேயே
போர்க்கோலம் பூணுவித்துப் போர்க்குச் சென்று வா என விட்ட
இராவணனுக்காக; உயிர் கொடாது- போரில் என்னுயிரைக்
கொடுக்காமல்; நீர்க்கோல வாழ்வை நச்சி- நீரில் எழுதிய
கோலத்தைப் போல் விரைந்து அழியும் செல்வ வாழ்க்கையை
விரும்பி; அங்குப் போகேன் – அந்த இராமனிடம் போய்ச்
சேரமாட்டேன்; என் துயர் தவிர்த்தி ஆகின்- என் துன்பத்தைப்
போக்க விரும்பினால்; கார்க்கோல மேனியானை- காளமேகம்
போல் கரிய அழகிய திருமேனியுடைய இராமனை; கடிதின் ஏகி
கூடுதி – விரைவில் சென்றடைவாய்.

————————

‘மலரின் மேல் இருந்த வள்ளல் வழு இலா வரத்தினால், நீ உலைவு
இலாத் தருமம் பூண்டாய்; உலகு உளதனையும் உள்ளாய்; தலைவன் நீ,
உலகுக்கு எல்லாம்; உனக்கு அது தக்கதேயால்;
புலை உறு மரணம் எய்தல் எனக்கு இது புகழதேயால். 156-

நீ மலரின் மேல் இருந்த வள்ளல் – தாமரை மலரின் மேல்
இருக்கும் வள்ளலாகிய பிரமதேவனது; வழு இலா வரத்தினால்-
குற்றம் இல்லாத வரத்தினால்; உலைவு இலாத் தருமம் பூண்டாய்
– என்றும் அழிவு இல்லாத தருமத்தைக் கைக்கொண்டாய்; உலகு
உளதனையும் உள்ளாய் – உலகம் உள்ளவரை அழியாமல் வாழ
உள்ளாய்; நீ உலகுக்கு எல்லாம் தலைவன்- நீ உலகுக்கெல்லாம்
தலைவனாய் உள்ளவன்; உனக்கு அது தக்கதேயால்-
அப்படிப்பட்ட உனக்கு இராமனைச் சேர்தல் என்னும் அது
தகுதியானது; புலை உறு மரணம் எய்தல் – இழிவு பொருந்திய
மரணத்தை அடைதல்; எனக்கு இது புகழதேயால் – எனக்குப்
புகழை விளைவிக்கக் கூடியது.

————–

‘கருத்து இலா இறைவன் தீமை கருதினால், அதனைக் காத்துத்
திருத்தலாம் ஆகின் அன்றோ திருத்தலாம்? தீராது ஆயின்,
பொருத்து உறு பொருள் உண்டாமோ? பொரு தொழிற்கு உரியர் ஆகி,
ஒருத்தரின் முன்னம் சாதல், உண்டவர்க்கு உரியது அம்மா. 157-

கருத்து இலா இறைவன் – மந்திரம் கேட்கும் சூழ்தல் இல்லாத
தலைவன்; தீமை கருதினால்- தீத்தொழில் செய்ய எண்ணினால்;
அதனைக் காத்துத் – அவன் அவ்வாறு செய்யாமல் தடுத்து;
திருத்தலாம் ஆகின் அன்றோ திருத்தலாம் – திருத்துதல்
கூடுமாயின் அன்றோ திருத்தலாம்; தீராது ஆயின்- அவ்வாறு திருத்த
முடியாது போனால்; பொருத்துறு பொருள் உண்டாமோ-அவனுக்கு எதிர் சென்று நின்று அடையத் தக்க பெரும் பொருள்
உண்டோ?; உண்டவர்க்கு உரியது- ஒருவனுடைய உணவை உண்டு
வளர்ந்தவர் செய்ய உரிய செயல்; பொருதொழிற்கு உரியர் ஆகி-
அவனுக்காகப் போர் செய்யும் தொழிலுக்கு உரிமையுடையவர் ஆகி;
ஒருத்தரின் முன்னம் சாதல் – ஒப்பற்ற தலைவனுக்கு முன்னர்ச்
சாதலே; அம்மா- கேட்பாயாக.

——————

‘தும்பி அம் தொடையல் வீரன் சுடு கணை துரப்ப, சுற்றும்
வெம்பு வெஞ் சேனையோடும், வேறு உள கிளைஞரோடும்,
உம்பரும் பிறரும் போற்ற, ஒருவன் மூவுலகை ஆண்டு,
தம்பியை இன்றி மாண்டு கிடப்பனோ, தமையன் மண்மேல்? 158-

உம்பரும் பிறரும் போற்ற- தேவர்களும் மற்றுள்ளோரும்
போற்றி வணங்குமாறு; மூவுலகை தமையன் ஒருவன் ஆண்டு-
மூன்று உலகங்களையும் ஒப்பற்றவனாய் ஆண்டவனாகிய அண்ணன்;
தும்பி அம் தொடையல் வீரன் – வண்டுகள் மொய்க்கின்ற அழகிய
மலர் மாலையை அணிந்த வீரனாகிய இராமன்; சுடுகணை துரப்ப-
சுடுகின்ற அம்புகளைச் செலுத்துவதால்; வெம்பு
வெஞ்சேனையோடும் – வாடுகின்ற சினம் மிக்க படைகளுடனும்;
வேறு உள கிளைஞரோடும் – பிற உறவினர்களுடனும்; தம்பியை
இன்றி- தனக்காக இறக்கத் தம்பியும் இன்றி; மண் மேல் மாண்டு
கிடப்பனோ- மண் மேல் இறந்து கிடப்பதற்கு உரியவனா?

—————–

‘அணை இன்றி உயர்ந்த வென்றி அஞ்சினார் நகையது ஆக,
பிணை ஒன்று கண்ணாள் பங்கன் பெருங் கிரி நெருங்கப் பேர்த்த
பணை ஒன்று திரள் தோள் காலபாசத்தால் பிணிப்ப, கூசி,
துணை இன்றிச் சேரல் நன்றோ, தோற்றுள கூற்றின் சூழல்? 159-

பிணை ஒன்று கண்ணாள் பங்கன்-பெண் மானின் கண்ணை
ஒத்த கண் உடைய உமையம்மையை இடப்பக்கத்தில் கொண்ட
சிவபிரானது; பெருங்கிரி நெருங்கப் பேர்த்த – பெரிய
மலையாகிய கைலாயத்தை நெருங்கிப் பெயர்த்தெடுத்த; பணை
ஒன்று திரள்தோள் – பெருமை பொருந்திய திரண்ட தோள்கள்;
கால பாசத்தால் பிணிப்ப – இயமனது கால பாசத்தால்
பிணிக்கப்படுவது கண்டு; அணை இன்றி உயர்ந்த வென்றி
அஞ்சினார் – முன்பு தடையில்லாமல் பெற்ற வெற்றி கண்டு
அச்சங்கொண்ட மாற்றார்; நகையது ஆக கூசி – நகைத்துப்
பேரொலி செய்ய அதற்கு நாணி; தோற்றுள கூற்றின் குழல்
-முன்பு தனக்குத் தோற்றவனாகிய இயமன் இடத்தில்; துணை
இன்றிச் சேரல் நன்றோ – துணையாகத் தம்பியும் இல்லாமல்
செல்லுவது நன்றாக உள்ளதோ.

———————–

‘செம்பு இட்டுச் செய்த இஞ்சித் திரு நகர்ச் செல்வம் தேறி,
வம்பு இட்ட தெரியல் எம்முன் உயிர் கொண்ட பகையை வாழ்த்தி,
அம்பு இட்டுத் துன்னம் கொண்ட புண்ணுடை நெஞ்சோடு, ஐய!
கும்பிட்டு வாழ்கிலேன் யான் -கூற்றையும், ஆடல் கொண்டேன்! 160-

ஐய!- ஐயனே; கூற்றையும் ஆடல் கொண்டேன்-
கூற்றுவனையும் வெற்றி கொண்டவனாகிய; யான் – நான்; செம்பு
இட்டுச் செய்த இஞ்சித் திருநகர் – செம்பை உருக்கி
வலிமையும் அழகும் படச் செய்த மதிலால் சூழப்பட்ட அழகிய
இலங்கை நகரின்; செல்வம் தேறி – அரசுச் செல்வத்தை
நிலையானது என்று கருதி; வம்பு இட்ட தெரியல் எம்முன்-
மணம் பொருந்திய மலர் மாலையணிந்த என் அண்ணனுடைய;
உயிர் கொண்ட பகையை வாழ்த்தி- உயிரைக் கொண்ட
பகைவனாகிய இராமனை வாழ்த்திக் கொண்டு; அம்பு இட்டுத்
துன்னம் கொண்ட – அம்பு பட்டுத் துளைபட்ட; புண்ணுடை
நெஞ்சோடு -புண்பட்ட நெஞ்சத்துடன்; கும்பிட்டு வாழ்கிலேன்-
கும்பிட்டு வாழ மாட்டேன்.

——————–

‘அனுமனை, வாலி சேயை, அருக்கன் சேய்தன்னை, அம் பொன்
தனு உடையவரை, வேறு ஓர் நீலனை, சாம்பன் தன்னை, கனி தொடர்
குரங்கின் சேனைக் கடலையும், கடந்து மூடும் பனி துடைத்து
உலகம் சுற்றும் பரிதியின் திரிவென்; பார்த்தி! 161-

அனுமனை- அனுமனையும்; வாலி சேயை- வாலி மகனாகிய
அங்கதனையும்; அருக்கன் சேய் தன்னை- சூரியன் மகனாகிய சுக்கிரீவனையும்; அம்பொன்தனு உடையவரை-
அழகிய பொன் போன்ற வில்லையுடைய இராம இலக்குவர்களையும்;
வேறு ஓர் நீலனை – வேறுபட்ட தன்மையுடைய நீலனையும்;
சாம்பன் தன்னை- சாம்பவான் தன்னையும்; கனி தொடர்
குரங்கின் சேனைக் கடலையும் – கனியைக் கைப்பற்றத்
தொடர்ந்து செல்லும் குரங்குகளின் சேனையாகிய கடலையும்;
கடந்து- வஞ்சியாது எதிர் நின்று வென்று;உலகம் மூடும் பனி
துடைத்து – உலகத்தை மூடுகின்ற பனியைப் போக்கி; சுற்றும்
பரிதியின் திரிவென் – வலமாகச் சுற்றுகின்ற கதிரவன் போல்
திரிவேன்; பார்த்தி – காண்பாய்.

——————

‘ஆலம் கண்டு அஞ்சி ஓடும் அமரர் போல் அரிகள் ஓட,
சூலம் கொண்டு ஓடி, வேலை தொடர்வது ஓர் தோற்றம் தோன்ற,
நீலம் கொள் கடலும் ஓட, நெருப்பொடு காலும் ஓட,
காலம் கொள் உலகும் ஓட, கறங்கு எனத் திரிவென்; காண்டி! 162-

ஆலம் கண்டு அஞ்சி ஓடும் – ஆல கால நஞ்சைக் கண்டு
அஞ்சி ஓடிய; அமரர் போல் அரிகள் ஓட-தேவர்களைப் போல்
வானரப் படைகள் ஓட; வேலை சூலம் கொண்டு ஓடி- ஒரு கடல்
ஆனது சூலத்தைக் கையில் கொண்டு ஓடி; தொடர்வது ஓர்
தோற்றம் தோன்ற – மற்றொரு கடலைத் தொடர்ந்து செல்வது
போல் ஒரு தோற்றத்தை உண்டாக்கி; நீலம் கொள் கடலும் ஓட-
நீல நிறங்கொண்ட கடல் தன் இடம் விட்டுப் புடை பெயர்ந்து
செல்லவும்; நெருப்பொடு காலும் ஓட- நெருப்பும் காற்றும் நிலை
கெட்டு ஓடவும்; காலம் கொள் உலகும் ஓட- அழிவுக் காலத்தை
நோக்கி உலகமும் ஓடவும்; கறங்கு எனத் திரிவென் காண்டி-
(போர்க்களத்தில் நான்) காற்றாடி போலத் திரிவேன் அதனைக்
காண்பாய்.

—————–

‘செருவிடை அஞ்சார் வந்து, என் கண் எதிர் சேர்வர் ஆகின்,
கரு வரை, கனகக் குன்றம், என்னல் ஆம் காட்சி தந்த
இருவரும் நிற்க, மற்று அங்கு யார் உளர், அவரை எல்லாம்,
ஒருவரும் திரிய ஒட்டேன், உயிர் சுமந்து உலகில்’ என்றான். 163-

செருவிடை அஞ்சார் வந்து- போர்க்களத்தில் அஞ்சாதவராய்
வந்து; என்கண் எதிர் சேர்வர் ஆகின்- என் கண்ணுக்கு எதிரில்
சேர்வார்கள் ஆனால்; கருவரை- கரிய மலையும்; கனகக்குன்றம்-
பொன் குன்றமும்; என்னல் ஆம் காட்சி தந்த- என்று கூறுமாறு
தோற்றம் பொருந்திய; இருவரும் நிற்க- இராம இலக்குவர் நிற்க;
மற்று அங்கு யார் உளர் – வேறு அங்கு உள்ளவர் எவரோ;?
அவரை எல்லாம் – அவர்களை எல்லாம்; உலகில் உயிர் சுமந்து-
உலகத்தில் உயிர் சுமந்து கொண்டு; ஒருவரும் திரிய ஒட்டேன்-
ஒருவரையும் நடமாட ஒருப்படேன்; என்றான்.

——————

‘தாழ்க்கிற்பாய் அல்லை; என் சொல் தலைக்கொளத் தக்கது என்று
கேட்கிற்பாய் ஆகின், எய்தி, அவரொடும் கெழீஇய நட்பை
வேட்கிற்பாய்; “இனி, ஓர் மாற்றம் விளம்பினால் விளைவு உண்டு” என்று,
சூழ்க்கிற்பாய் அல்லை; யாரும் தொழ நிற்பாய்!” என்னச் சொன்னான். 164-

யாரும் தொழ நிற்பாய்! – பிறர் தொழத்தக்க மேன்மை
பெற்றவனே; என் சொல் தலைக் கொளத்தக்கது- என் சொல்
ஆனது தலையில் ஏற்கத்தக்கது; என்று கேட்கிற்பாய் ஆகின்-
என்று கருதிக் கேட்பாய் ஆனால்; தாழ்க்கிற்பாய் அல்லை-
காலந்தாழ்த்தாமல்; எய்தி – திரும்பிப் போய்; அவரொடும்
கெழீஇய நட்பை வேட்கிற்பாய் – அந்த இராம இலக்குவரோடு
பொருந்திய நட்பை மேலும் விரும்புவாய்; இனி ஓர் மாற்றம்
விளம்பினால்- இனிமேலும் ஒரு பேச்சுப் பேசினால்; விளைவு
உண்டு என்று- அதனால் நன்மை உண்டு என்று; சூழ்க்கிற்பாய்
அல்லை – எண்ணி ஆலோசிப்பதற்கு உரியவனல்லை; என்னச்
சொன்னான் – என்று கூறினான்.

—————-

‘போதி நீ, ஐய! பின்னைப் பொன்றினார்க்கு எல்லாம் நின்ற
வேதியர் தேவன் தன்னை வேண்டினை பெற்று, மெய்ம்மை
ஆதி நூல் மரபினாலே, கடன்களும் ஆற்றி, ஏற்றி,
மா துயர் நரகம் நண்ணாவண்ணமும் காத்தி மன்னோ. 165-

ஐய!- ஐயனே; நீ போதி – நீ இராமனிடம் திரும்பிச் செல்;
பின்னை- பிறகு; எல்லாம் நின்ற- சரஅசரப் பொருள்கள்
எல்லாமுமாய் நின்ற; வேதியர் தேவன் தன்னை – வேதியர்
தலைவனான இராமன் தன்னை; வேண்டினை பெற்று- அனுமதி
வேண்டிப் பெற்று; மெய்ம்மை ஆதி நூல் மரபினாலே-
மெய்ம்மையாகப் பழ நூலில் கூறிய முறைப்படி;பொன்றினார்க்கு-
இறந்துபட்டவர்களுக்கு எல்லாம்;கடன்களும் ஆற்றி- அந்திமச்
சடங்குகளைச் செய்து; ஏற்றி- உடம்புடன் கிடந்து அல்லல்படும்
நிலையில் இருந்து ஏற்றி; மாதுயர் நரகம் நண்ணா வண்ணமும்
காத்தி- மிக்க துயரத்தைத் தரும் நரகத்தை அடையாதவாறும்
காப்பாய்;

————–

‘ஆகுவது ஆகும், காலத்து; அழிவதும், அழிந்து சிந்திப்
போகுவது; அயலே நின்று போற்றினும், போதல் திண்ணம்;
சேகு அறத் தெளிந்தோர் நின்னில் யார் உளர்? வருத்தம் செய்யாது,
ஏகுதி; எம்மை நோக்கி இரங்கலை; என்றும் உள்ளாய்!’ 166-

என்றும் உள்ளாய்! – எக்காலத்தும் அழியாது வாழ்பவனே!;
ஆகுவது ஆகும் காலத்து- உரிய காலத்தில் ஆக வேண்டியது
ஆகியே தீரும்; அழிவதும் அழிந்து சிந்திப் போகுவது-
அழியவேண்டியது அழிந்து சிதறிப் போகும்; அயலே நின்று
போற்றினும் போதல் திண்ணம்- அவ்வாறு அழிந்து போவதைப்
பக்கத்தில் நின்று பாதுகாத்தாலும் அது அழிந்து போயே தீரும்;
சேகு அறத் தெளிந்தோர் – குற்றமற அதை உணர்ந்து
தெளிந்தவர்கள்; நின்னின் யார் உளர்- உன்னைக் காட்டிலும்
யாவர் உலகில் உளர்; வருத்தம் செய்யாது- துன்பப்படாமல்;
எம்மை நோக்கி இரங்கலை- எம்மைக் குறித்து இரங்கலையாய்;
ஏகுதி- செல்வாய்.

—————

வீடணன் விடை பெறுதல்

என்று, அவன் தன்னை மீட்டும் எடுத்து, மார்பு இறுகப் புல்லி,
நின்று நின்று, இரங்கி ஏங்கி, நிறை கணால் நெடிது நோக்கி,
‘இன்றொடும் தவிர்ந்தது அன்றே, உடன்பிறப்பு’ என்று விட்டான்;
வென்றி வெந் திறலினானும், அவன் அடித்தலத்து வீழ்ந்தான். 167-

என்று- என்று கூறி; அவன் தன்னை- அந்த வீடணன்
தன்னை;மீட்டும் எடுத்து- மறுமுறை மீண்டும் எடுத்து; மார்பு
இறுகப் புல்லி- மார்பில் அழுத்தமாகத் தழுவி; நின்று நின்று-
மீக நீண்ட நேரம்; இரங்கி ஏங்கி- அழுது ஏக்கம் கொண்டு;
நிறை கணால் நெடிது நோக்கி- நீர்நிறை கண்ணால் நீண்ட
நேரம் பார்த்து; உடன்பிறப்பு- உனக்கும் எனக்கும் உள்ள
உடன்பிறப்பு என்னும் தொடர்பு; இன்றொடும் தவிர்ந்தது
அன்றே-இன்றோடு போய் விட்டதல்லவா?; என்று விட்டான்
– என்று கூறித் தழுவியதை விட்டான்; வென்றி
வெந்திறலினானும் – வெற்றியும் வலிய வலிமையும் உள்ள
வீடணனும்; அவன் அடித்தலத்து வீழ்ந்தான் – அந்தக்
கும்பகருணனது அடித்தலத்து வீழ்ந்து வணங்கினான்.

—————-

வணங்கினான்; வணங்கி, கண்ணும் வதனமும் மனமும் வாயும்
உணங்கினான்; உயிரோடு யாக்கை ஒடுங்கினான்; ‘உரைசெய்து இன்னும்
பிணங்கினால் ஆவது இல்லை; பெயர்வது; என்று உணர்ந்து போந்தான்.
குணங்களால் உயர்ந்தான், சேனைக் கடல் எலாம் கரங்கள் கூப்ப. 168-

வணங்கினான் – வணங்கினனாகிய வீடணன்; வணங்கிக்
கண்ணும், வதனமும், மனமும், வாயும் உணங்கினான்
– வணங்கிக் கண்ணும், முகமும், மனமும் வாயும் உலர்ந்தான்;
உயிரோடு யாக்கை ஒடுங்கினான்- உயிரும் உடம்பும் ஒடுங்கிச்
சோாந்தான்; இன்னும் உரை செய்து- இக்கும்பகருணனுடன்
இன்னும் பேசி; பிணங்கினால் ஆவது இல்லை – மனமாறுபாடு
கொள்வதால் ஆகக்கூடிய பயன் எதுவும் இல்லை; பெயர்வது
என்று உணர்ந்து- திரும்பிச் செல்வதே தக்கது என்று;
குணங்களாலுயர்ந்தான் – பண்புகளால் இமயம் என உயர்ந்து
நிற்கும் கும்பகருணனது,சேனைக் கடல் எலாம் – அரக்கர் சேனையாகிய கடல்
எல்லாம்; கரங்கள் கூப்ப- கைகூப்பித் தொழ; போந்தான்
– திரும்பினான்.

—————–

வீடணன் செல்ல, கும்பகருணன் கண்ணீர் உகுத்து நிற்றல்

‘கள்ள நீர் வாழ்க்கையேமைக் கைவிட்டு, காலும் விட்டான்;
பிள்ளைமை துறந்தான்’ என்னாப் பேதுறும் நிலையன் ஆகி,
வெள்ள நீர் வேலைதன்னில் வீழ்ந்த நீர் வீழ, வெங் கண்
உள்ள நீர் எல்லாம் மாறி, உதிர நீர் ஒழுக, நின்றான். 169-

கள்ளநீர் வாழ்க்கை யேமை- கள்ளத்தன்மை பொருந்திய
வாழ்க்கை உள்ள எங்களைக்; கைவிட்டு- விட்டுவிட்டு; காலும்
விட்டான் – தொடர்பையும் அறுத்துக்கொண்டு விட்டான்;
பிள்ளைமை துறந்தான் – இளம் பிள்ளைத் தன்மையைத்
துறந்துவிட்டான்; என்னா- என்று கருதி; பேதுறும் நிலையன்
ஆகி – கலங்கிய மனத்தை உடைய நிலையனாய்; வெள்ள
நீர் வேலை தன்னில்- வெள்ள நீர் நிரம்பிய கடல் தன்னில்;
வீழ்ந்த நீர் வீழ – விழும் தன்மையுள்ள ஆற்று நீர்
பின்னிடுமாறு; வெங்கண் உள்ள நீர் எல்லாம் மாறி- தன்
கொடிய கண்களில் உள்ள கண்ணீர் எல்லாம் மாறி; உதிரநீர்
ஒழுக நின்றான் – குருதி நீராகப் பெருக நின்றான்.

——————

வீடணன் உரையைக் கேட்ட இராமன் கூற்று

எய்திய நிருதர் கோனும், இராமனை இறைஞ்சி, ‘எந்தாய்!
உய் திறம் உடையார்க்கு அன்றோ, அறன் வழி ஒழுகும் உள்ளம்?
பெய் திறன் எல்லாம் பெய்து பேசினென்; பெயருந் தன்மை
செய்திலன்; குலத்து மானம் தீர்ந்திலன், சிறிதும்’ என்றான். 170-

எய்திய நிருதர் கோனும்- இராமனை வந்து அடைந்த
அரக்கர் தலைவன் ஆகிய வீடணனும்; இராமனை இறைஞ்சி-
இராமனை வணங்கி; எந்தாய்! – எந்தையே; உய்திறம்
உடையார்க்கு அன்றோ – தீமையில் இருந்து தப்புகிற
மனக்கூறுபாடு உடையவர்களுக்கல்லவா?; அறன் வழி ஒழுகும்
உள்ளம் – அற வழியில் செல்லும் மனம் அமையும்; பெய்திறன்
எல்லாம் பெய்து பேசினென்- செலுத்த வல்ல விரகு எல்லாம்
செலுத்திப் பேசினேன்; பெயருந்தன்மை செய்திலன்- மனம்
மாறும் தன்மையை அவன் மேற்கொள்ளவில்லை; குலத்து மானம்
சிறிதும் தீர்ந்திலன் என்றான்- குலப்பற்று சிறிது கூட தீரப்
பெற்றானில்லை என்றான்.

—————

கொய் திறச் சடையின் கற்றைக் கொந்தளக் கோலக் கொண்டல்
நொய்தினில் துளக்கி, ‘ஐய! “நுன் எதிர், நும்முனோனை
எய்து இறத் துணித்து வீழ்த்தல் இனிது அன்று” என்று இனைய சொன்னேன்;
செய் திறன் இனி வேறு உண்டோ ? விதியை யார் தீர்க்ககிற்பார்?” 171-

(இராமன்)கொய்திறச் சடையின் கற்றைக் கொந்தளக்-
கொய்து விடுதற்கு உரிய சடைத் தொகுதியினைக் கொண்ட மயிர்
முடியாகிய; கோலக்கொண்டல்- அழகிய மேகத்தை;நொய்தினில்
துளக்கி- மெல்ல அசைத்து; ஐய!- ஐயனே; நுன் எதிர் – உனக்கு
எதிரே; நும் முனோனை- உன் முன்னவனாகிய தமையனை; எய்து-
அம்பால் எய்து; இறத் துணித்து வீழ்த்தல்-உடல் துண்டுபடும்படி
துண்டித்து வீழ்த்தல்; இனிது அன்று என்று-இனிமையானது அல்ல
என்று கருதி; இனைய சொன்னேன்- இவ்வாறான சொற்களைச்
சொன்னேன்; செய்திறன் இனி வேறு உண்டோ- இனி நாம்
செய்யக் கூடிய செயல் வேறு உள்ளதா?; விதியை யார் தீர்க்க
கிற்பார் – விதியை யாரால் தவிர்க்க முடியும்; (என இனிது
உரைக்கும் வேலை என்று தொடரும் குளகம்)

—————

அரக்கர் சேனை வானர சேனையைச் சுற்றி வளைத்தல்

என இனிது உரைக்கும் வேலை, இராக்கதர் சேனை என்னும்
கனை கடல், கவியின் தானைக் கடலினை வளைந்து கட்டி,
முனை தொழில் முயன்றதாக, மூவகை உலகும் முற்றத்
தனி நெடுந் தூளி ஆர்த்தது; ஆர்த்தில, பரவை தள்ளி, 172-

என இனிது உரைக்கும் வேலை- என்று இராமன் இனிதாகச்
சொல்லும் பொழுது; இராக்கதர் சேனையென்னும் – அரக்கர்
சேனையெனப் படுகின்ற; கனை கடல்- ஒலிக்கின்ற கடல்;கவியின்
தானைக் கடலினை- குரங்குச் சேனையாகிய கடலினை; வளைந்து
கட்டி- வளைத்து நெருக்கி; முனை தொழில் முயன்றதாக-போர்த்
தொழில் செய்ய முயன்றதாக; மூவகை உலகும் முற்ற- மூவகை
உலகங்களையும் முற்றுகையிடுமாறு; தனி நெடுந்தூளி ஆர்த்தது-
ஒப்பற்ற மிக்க தூசு மிகுந்தது; பரவை தள்ளி ஆர்த்தில-
கடல் அத்தூசியைத் தள்ளி ஒலித்தில

————–

ஓடின புரவி; வேழம் ஓடின; உருளைத் திண் தேர்
ஓடின; மலைகள் ஓட, ஓடின உதிரப் பேர் ஆறு;
ஓடின கவந்த பந்தம்; ஆடின அலகை; மேல்மேல்
ஓடின பதாகை; ஓங்கி ஆடின, பறவை அம்மா! 173-

புரவி ஓடின- போர்க்களத்தில் குதிரைகள் ஓடின; வேழம்
ஓடின – யானைகள் ஓடின; உருளைத் திண் தேர் ஓடின-
சக்கரங்கள் பூட்டப்பெற்ற வலிய தேர்கள் ஓடின; மலைகள் ஓட
– மலைகள் ஓடும்படி; உதிரப் பேர் ஆறு ஓடின- வீரர்கள்
தம்முன் பொருதமையால் குருதியாறு ஓடின; கவந்த பந்தம்
ஆடின-கவந்த தொகுதிகள் ஆடின; அலகை ஆடின- பேய்கள்
களக்கூத்து ஆடின; மேல் மேல் பதாகை ஆடின – மேல்
மேல் உயர்ந்து கொடிகள் ஆடின; பறவை ஓங்கி ஆடின-
பருந்து முதலிய பறவைகள் வானில் உயர்ந்து ஆடின;

——————

மூளையும், தசையும், என்பும், குருதியும், நிணமும், மூரி
வாளொடும் குழம்பு பட்டார், வாள் எயிற்று அரக்கர்; மற்றுஅவ்
ஆள் அழி குருதி வெள்ளத்து அழுந்தின கவிகள்;-அம்பொன்
தோளொடு மரனும் கல்லும் சூலமும் வேலும் தாக்க. 174-

வாள் எயிற்று அரக்கர் – ஒளி பொருந்திய பற்களை உடைய
அரக்கர்கள்; அம்பொன் தோளொடு- அழகிய பொன் போன்ற
நிறமுடைய தோளும்; மரனும் கல்லும் தாக்க- மரமும் கல்லும்
தாக்கியதால்; மூளையும், தசையும் என்பும் குருதியும், நிணமும்,
மூரி வாளொடும் குழம்பு பட்டார்- மூளையும்,தசையும், எலும்பும்,
குருதியும், கொழுப்பும், கையில் ஏந்திய வலிய வாள் படையுடனே
குழம்பாகி அழிந்தார்கள்; கவிகள்- குரங்குகள்; சூலமும் வேலும்
தாக்க- முத்தலைச் சூலமும் வேலும் தாக்கியதால்; மற்று அவ்
– மற்று அந்த; ஆள் அழி குருதி வெள்ளத்து அழுந்தின-
ஆளை அழிக்கக்கூடிய அரக்கரின் குழம்பு பட்ட குருதி
வெள்ளத்தில் அழுந்தின.

——————–

எய்தனர், நிருதர்; கல்லால் எறிந்தனர், கவிகள்; ஏந்திப்
பெய்தனர், அரக்கர்; பற்றிப் பிசைந்தனர் அரிகள்; பின்றா
வைதனர், யாதுதானர்; வலித்தனர்; வானரேசர்;
செய்தனர், பிறவும் வெம் போர்; திகைத்தனர், தேவர் எல்லாம். 175-

நிருதர் எய்தனர்-அரக்கர்கள் அம்புகளைக் கொண்டு எய்தனர்;
கவிகள் கல்லால் எறிந்தனர்- குரங்குகள் அவர்கள் மீது கற்களால்
எறிந்தனர்; அரக்கர் ஏந்திப் பெய்தனர் – அரக்கர்கள்
அக்கற்களைத் தம் கைகளால் ஏந்தி மீண்டும் வானரர் மீது எறிந்தனர்;
அரிகள் பின்றா பற்றிப் பிசைந்தனர் – அரக்கர்கள் அவற்றைப்
பின்வாங்காமல் கைகளால் பற்றிப் பிசைந்தார்கள்; யாது தானர்
வைதனர் – அரக்கர்கள் திட்டலானார்கள்; வானரேசர் வலித்தனர்-
வானரர்கள் பற்றி இழுக்கல் ஆனார்கள்; பிறவும் வெம்போர்
செய்தனர் – இவ்வாறு மற்றுமுள்ள போர்ச் செயலையும் செய்தார்கள்;
தேவர் எல்லாம் திகைத்தனர் – அதுகண்டு அனைத்துத்
தேவர்களும் திகைத்தார்கள்.

————–

கும்பகருணன் போர்

நீரினை ஓட்டும் காற்றும், காற்று எதிர் நிற்கும் நீரும்,
போர் இணை ஆக ஏன்று பொருகின்ற பூசல் நோக்கி,
தேரினை ஓட்டி வந்தான் – திருவினைத் தேவர் தங்கள்
ஊரினை நோக்காவண்ணம், உதிர வேல் நோக்கியுள்ளான். 176-

நீரினை ஓட்டும் காற்றும் – மழை நீரை விழாமல் ஓட்டுகின்ற
காற்றும்; காற்று எதிர் நிற்கும் நீரும்- காற்றை எதிர்த்து நிற்கின்ற
மழை நீரும்; போர் இணை ஆக- போருக்கு இணை என்று
சொல்லும்படி; ஏன்று- எதிர்த்துப்; பொருகின்ற பூசல்
நோக்கி-போர் செய்கிற போரைப் பார்த்து; திருவினைத்தேவர்
தங்கள் ஊரினை நோக்கா வண்ணம்- திருமகள் தேவர்களின்
ஊரை நோக்காதபடி; உதிர வேல் நோக்கி உள்ளான்- உதிரம்
படிந்த வேலைப் பார்த்துக் கொண்டு இருப்பவன் ஆகிய
கும்பகருணன்; தேரினை ஓட்டி வந்தான்- தன் தேரினை ஓட்டி
வந்தான்.

—————

ஊழியில் பட்ட காலின் உலகங்கள் பட்டால் ஒப்ப,
பூழியில் பட்டு, செந்நீர்ப் புணரியில் பட்டு, பொங்கும்
சூழியில் பட்ட நெற்றிக் களிற்றொடும், துரந்த தேரின்
ஆழியில் பட்ட அன்றே-அவனியில் பட்ட எல்லாம். 177-

அவனியில் பட்ட எல்லாம் – பூமியில் பொருந்திய
வானரங்கள் எல்லாம்; ஊழியில் பட்ட காலின்- உக முடிவுக்
காலத்தில் வீசுகின்ற காற்றில்; உலகங்கள் பட்டால் ஒப்ப
– உலகங்கள் அகப்பட்டதைப் போல; பூழியில் பட்டு- புழுதியில்
அகப்பட்டும்; நெந்நீர்ப் புணரியில் பட்டு- குருதிக் கடலில்
பட்டும்; பொங்கும் சூழியின் பட்ட நெற்றிக் களிற்றொடும்-
விளங்குகிற முகபடாத்தொடு பட்டமும் கட்டிய நெற்றியையுடைய
களிறுகளிலும்; துரந்ததேரின் ஆழியில் பட்ட அன்றே-
செலுத்துகிற தேர்ச்சக்கரங்களிலும் பட்டு இறந்து போயின.

————–

குன்று கொண்டு எறியும்; பாரில் குதிக்கும்; வெங் கூலம் பற்றி
ஒன்று கொண்டு ஒன்றை எற்றும்; உதைக்கும்; விட்டு உழக்கும்; வாரித்
தின்று தின்று உமிழும்; பற்றிச் சிரங்களைத் திருகும்; தேய்க்கும்;
மென்று மென்று இழிச்சும்; விண்ணில் வீசும்; மேல் பிசைந்து பூசும். 178-

குன்று கொண்டு எறியும் – கும்பகருணன் வானரப் படை
மீது குன்றை வீசி எறிவான்; பாரில் குதிக்கும் – நிலத்தில்
குதிப்பான்; வெங்கூலம் பற்றி- கொடிய வாலினைப் பிடித்து;
ஒன்று கொண்டு ஒன்றை எற்றும்- ஒன்றைக் கொண்டு பிறிது
ஒன்றின் மீது மோதுவான்; உதைக்கும்- உதைப்பான்; விட்டு
உழக்கும்- போக விட்டுக் காலினால் துகைப்பான்; வாரித்
தின்று தின்று உமிழும்- வாரித் தின்று தின்று உமிழ்வான்;
சிரங்களைப் பற்றித் திருகும் – தலைகளைப் பிடித்துத்
திருகுவான்; தேய்க்கும் – பூமியில் தேய்ப்பான்; மென்றுமென்று
இழிச்சும்-வாயில் போட்டு மென்று துப்புவான்;விண்ணில் வீசும்-
வானத்தில் எறிவான்; பிசைந்து மேல்பூசும்- பிசைந்து உடம்பின்
மேல் பூசிக்கொள்வான்.

———–

வாரியின் அமுக்கும்; கையால் மண்ணிடைத் தேய்க்கும்; வாரி
நீரிடைக் குவிக்கும்; அப்பால், நெருப்பிடை நிமிர வீசும்;
தேரிடை எற்றும்; எட்டுத் திசையினும் செல்லச் சிந்தும்;
தூரிடை மரத்து மோதும்; மலைகளில் புடைக்கும், சுற்றி. 179-

வாரியின் அமுக்கும் – கடலில் அமுக்குவான்; கையால்
மண்ணிடைத் தேய்க்கும் – கையினால் வாரி எடுத்து நிலத்தில்
தேய்ப்பான்; வாரி நீரிடைக் குவிக்கும்- எடுத்து நீரில் மூழ்கச்
செய்வான்; அப்பால் நெருப்பிடை நிமிர வீசும் – மேலும்
நெருப்பில் நேராக உயர்ந்து நிற்கும்படி வீசுவான்;தேரிடை எற்றும்
– தேரில் அடித்து அழிப்பான்; எட்டுத் திசையினும் செல்லச்
சிந்தும்- எட்டுத் திசைகளிலும் சிதறிக் கிடக்கும்படி இறைக்கும்;
மரத்தூரிடை மோதும் – மரத்தின் அடிப்பகுதியில் மோதி
அழிப்பான்; சுற்றி மலைகளில் புடைக்கும்- சுழற்றி மலைகளில்
மோதி அழிப்பான்.

——————-

பறைந்தனர், அமரர் அஞ்சி; பல் பெரும் பிணத்தின் பம்மல்
நிறைந்தன, பறவை எல்லாம்; நெடுந் திசை நான்கும் நான்கும்
மறைந்தன; பெருமை தீர்ந்த, மலைக் குலம்; வற்றி வற்றிக்
குறைந்தன, குரக்கு வெள்ளம்; கொன்றனன், கூற்றும் கூச. 180-

அமரர் அஞ்சி பறைந்தனர்- தேவர்கள் அஞ்சிப் பறந்து
ஓடினார்கள்; பல்பெரும் பிணத்தின் பம்மல் நிறைந்தன-
எங்கும் பிணக்கூட்டங்கள் தொகுதியாய் நிறைந்தன; நெடுந்திசை
நான்கும் நான்கும் பறவை எல்லாம் மறைந்தன-நெடுந்திசை
நான்கு, கோணத்திசை நான்கு ஆகிய எட்டுத்திசைகளையும்
பறவைக் கூட்டங்கள் மறைத்தன; மலைக்குலம் பெருமை தீர்ந்த-
மலைக்கூட்டங்கள் பெருமையை இழந்தன; குரக்கு வெள்ளம்
வற்றி வற்றிக் குறைந்தன- எழுபது வெள்ளங்கொண்ட குரங்குப்
படை சிறிது சிறிதாகக் குறைந்தன; கூற்றும் கூச கொன்றனன்-
கும்பகருணன் இவ்வாறு யமனும் அஞ்சும்படி குரங்குச்
சேனையைக் கொன்றான்.

——————–

‘மற்று இனி ஒருவர்மேல் ஓர் மரனொடும் கற்கள் வீசப்
பெற்றிலம் ஆதும் அன்றே; இன்றொடும் பெறுவது ஆமே;
அற்றன, தீங்கும்’ என்னா, அரிக் குலத் தலைவர் பற்றி,
எற்றின, எறிந்த, எல்லாம் இணை நெடுந் தோளின் ஏற்றான். 181-

மற்று இனி- இனி; ஒருவர் மேல் வீச- வேறு ஒருவர் மேல்
எறிவதற்கு; ஓர் மரனொடும் கற்கள் பெற்றிலம் ஆதும் – ஒரு
மரமாவது கற்கள் ஆவது பெறாதவர் ஆவோம்; இன்றொடும்
பெறுவது ஆமே- எல்லாவற்றையும் இன்றே எடுத்து இவன் மீது
எறிவோம்; தீங்கும் அன்றே அற்றன என்னா- இவனால்
விளையும் அழிவும் முழுதும் நீங்கிவிடும் என்று;
அரிக்குலத்தலைவர்- குரங்குப் படைத்தலைவர்கள்; எற்றின
எறிந்த எல்லாம்-காலால் எற்றினவும் கையால் எறிந்தனவுமாகிய
எல்லாவற்றையும்; இணை நெடுந்தோளின் ஏற்றான்-தனது இரு
பெருந்தோள்களில் தாங்கிக் கொண்டான்.

—————-

கல்லொடு மரனும், வேரும், கட்டையும், காலில் தீண்டும்
புல்லொடு பிறவும், எல்லாம், பொடிப் பொடி ஆகிப் போன;
‘இல்லை, மற்று எறியத் தக்க, எற்றுவ, சுற்றும்’ என்ன,
பல்லொடு பல்லு மென்று பட்டன, குரங்கும் உட்கி. 182-

காலில் தீண்டும்- காற்றுப் போல் விரைவாகத் தீண்டுகிற;
கல்லொடு மரனும் வேரும் கட்டையும் புல்லொடு பிறவும்-
கற்கள், மரங்கள், வேர்கள், கட்டைகள், புற்கள் மற்றயாவும்
குரங்குப் படையால் எறியப்பட்டு; எல்லாம் – முழுதும்; பொடிப்
பொடி ஆகிப் போன-கும்பகருணன் உடம்பில் பட்டுப் பொடிப்
பொடியாய்ப் போயின; சுற்றும் எற்றுவ எறியத்தக்க மற்று
இல்லை என்ன- சுற்றிலும் காலால் எற்றவும் கையால் எறியவும்
எப்பொருளும் இல்லை என்று எண்ணி; குரங்கும் உட்கி
பல்லொடு பல்லு மென்று பட்டன – குரங்குப் படைகள்
அஞ்சிப் பல்லைக் கடித்துக் கொண்டு இறந்தன.

——————-

குன்றின் வீழ் குரீஇக் குழாத்தின் குழாம் கொடு குதித்துக் கூடி,
சென்று மேல் எழுந்து பற்றி, கைத் தலம் தேயக் குத்தி,
வன் திறல் எயிற்றால் கவ்வி, வள் உகிர் மடியக் கீளா,
‘ஒன்றும் ஆகின்றது இல்லை’ என்று, இரிந்து ஓடிப் போன. 183-

குழாம் கொடு குதித்துக் கூடி- குரங்குகள் கூட்டமாகக்
குதித்துக் கூடிக்கொண்டு; குன்றின் வீழ் குரீஇக் குழாத்தின்
– மலையின் மீது விழுகின்ற குருவிக் கூட்டம் போல; சென்று-
கும்பகருணனை நோக்கிச் சென்று; மேல் எழுந்து பற்றி-
உடம்பின் மேல் ஏறிப் பற்றி; கைத்தலம் தேயக் குத்தி- கை
வருந்தும்படி குத்தியும்; வன்திறல் எயிற்றால் கவ்வி- மிக்க
வலிமை உடைய பற்களால் கவ்வியும்; வள் உகிர் மடியக்கீளா-
கூரிய நகங்கள் நுனி மடங்கும்படி கிழித்தும்;ஒன்றும் ஆகின்றது
இல்லை என்று- நம்மால் செய்யக்கூடியது ஒன்றும் இல்லை
என்று தெரிந்து; இரிந்து ஓடிப் போன- இறங்கி ஓடிப் போயின.

————–

நீலன் பொருது தோற்றல்

மூலமே மண்ணில் மூழ்கிக் கிடந்தது ஓர் பொருப்பை, முற்றும்
காலம் மேல் எழுந்த கால் போல், கையினால் கடிதின் வாங்கி, நீலன்,
மேல் நிமிர்ந்தது ஆங்கு ஓர் நெருப்பு எனத் திரிந்து விட்டான்;
சூலமே கொண்டு நூறி, முறுவலும் தோன்ற நின்றான். 184-

நீலன் – நீலன்; மூலமே – அடிப்பகுதி முழுமையும்;
மண்ணில் மூழ்கிக் கிடந்து ஓர் பொருப்பை- நிலத்தில்
முழ்கிக் கிடந்த ஒப்பற்ற மலையை;முற்றும்-முழுவதும்; காலம்
மேல் எழுந்தகால் போல் – உக முடிவுக் காலத்தில் தோன்றிய பெருங்காற்றுப்
போல்; கடிதின் கையினால் வாங்கி- விரைவாகக் கையினால்
பெயர்த்து எடுத்து; மேல் நிமிர்ந்தது ஆங்கு ஓர் நெருப்பு
என – வானத்தின் மேல் ஓங்கியதாகிய ஒரு நெருப்புப் போல;
திரித்து விட்டான்-சுழற்றி விட்டான்; சூலமே கொண்டு நூறி-
(அதனைக் கும்பகருணன்) தன் முத்தலைச் சூலத்தைக் கொண்டு
பொடியாக்கி விட்டு; முறுவலும் தோன்ற நின்றான்-
புன்சிரிப்புத் தோன்ற நின்றான்.

———-

‘பெயர்ந்து ஒரு சிகரம் தேடின், அச்சம் ஆம் பிறர்க்கும்’ என்னா,
புயங்களே படைகள் ஆகத் தேர் எதிர் ஓடிப் புக்கான்,
இயங்களும் கடலும் மேகத்து இடிகளும் ஒழிய, யாரும்
பயம் கொள, கரங்கள் ஓச்சிக் குத்தினான், உதைத்தான், பல் கால். 185-

பெயர்ந்து-பின் வாங்கி மீண்டும்; ஒரு சிகரம் தேடின்-ஒரு
மலையைத் தேடித் திரிந்தால்; பிறர்க்கும் அச்சம் ஆம்
என்னா- பிற படை வீரர்களுக்கு அச்சம் தோன்றும் என்று
கருதி; புயங்களே படைகள் ஆக- தன் தோள்களையே
படைக்கலமாகக் கொண்டு; தேர் எதிர் ஓடிப் புக்கான்-அவனது
தேருக்கு எதிரில் ஓடிப் புகுந்து; இயங்களும்- பல்வகை
வாச்சியங்களும்; கடலும் – கடலும்; மேகத்து இடிகளும் –
மேகத்தின் கண் தோன்றும் இடிகளும்; ஒழிய- ஓசையால்
பின்னடையுமாறு; யாரும் பயங்கொள – யாவரும் அஞ்சும்படி;
கரங்கள் ஓச்சிக் குத்தினான் – கைகளால் ஓங்கிக் குத்தினான்;
பல்கால் உதைத்தான் – காலால் பலமுறை உதைத்தான்.

————-

கைத்தலம் சலித்து, காலும் குலைந்து, தன் கருத்து முற்றான்.
நெய்த்தலை அழலின் காந்தி எரிகின்ற நீலன் தன்னை,
எய்த்து உயிர் குடிப்பல் என்னா எற்றினான், இடது கையால்;
மெய்த்தலை, சூலம் ஓச்சான், வெறுங் கையான் என்று வெள்கி. 186-

கைத்தலம் சலித்து- குத்திய கை சலித்து; காலும் குலைந்து
– உதைத்த காலும் வருந்தித்; தன் கருத்து முற்றான்- தன்
எண்ணமும் நிறைவேறாமல்; நெய்த்தலை அழலின் காந்தி
எரிகின்ற நீலன் தன்னை- நெய் பெய் தீப்போல் சினம் கொண்டு
எரிகின்ற நீலனை; வெறும் கையான் என்று வெள்கி- இவன்
போர்க்கருவி இல்லாத வெறும் கையன் என்று வெட்கம் கொண்டு;
மெய்த்தலை சூலம் ஓச்சான்- கூரிய நுனியை உடைய
சூலப்படையை ஓங்கி எறியாது; எய்த்து உயிர் குடிப்பல் என்னா
– இளைத்துத் தளருமாறு இவனுயிர் குடிப்பேன் என்று எண்ணி;
இடது கையால் எற்றினான்- இடது கையினால் ஓங்கித்
தட்டினான்.

——————

நீலன் தளர்ந்தது கண்டு, அங்கதன் வந்து பொருதல்

ஆண்டு, அது நோக்கி நின்ற அங்கதன், ஆண்டுச் சால
நீண்டது ஓர் நெடுந் திண் குன்றம் நில முதுகு ஆற்ற வாங்கி,
‘மாண்டனன் அரக்கன் தம்பி’ என்று உலகு ஏழும் வாழ்த்தத்
தூண்டினன்; அதனை அன்னான் ஒரு தனித் தோளின் ஏற்றான். 187-

ஆண்டு- அப்பொழுது; அது நோக்கி நின்ற அங்கதன்-
நீலன் நிலையைப் பார்த்து நின்ற அங்கதன்; ஆண்டு- அங்கே
இருந்த; சால நீண்டது ஓர் நெடுந் திண் குன்றம் – மிக
நீண்டதாகிய ஒரு பெரிய மலையினை; நில முதுகு ஆற்ற
வாங்கி – நிலமகள் தன் முதுகை ஆற்றிக் கொள்ளும்படி
பெயர்த்து; அரக்கன் தம்பி மாண்டனன் – இராவணன் தம்பி
மாண்டான்; என்று உலகு ஏழும் வாழ்த்த – என்று
ஏழுலகத்தவரும் வாழ்த்தத்; தூண்டினன் – எறிந்தான்; அதனை
அன்னான்- அம்மலையை அந்தக் கும்பகருணன்;ஒரு தனித்
தோளின் ஏற்றான் – தன் ஒப்பற்ற ஒரு தோளில் தாங்கிக்
கொண்டான்.

—————

ஏற்ற போது, அனைய குன்றம் எண்ண அருந் துகளது ஆகி,
வீற்று வீற்று ஆகி, ஓடி விழுதலும், கவியின் வெள்ளம்,
‘ஊற்றம் ஏது, எமக்கு!’ என்று எண்ணி, உடைந்தது; குமரன் உற்ற
சீற்றமும் தானும் நின்றான்; பெயர்ந்திலன், சென்று பாதம். 188-

ஏற்ற போது- அங்கதன் எறிந்த குன்றத்தைக் கும்பகருணன்
தன் ஒரு தனித் தோளில் ஏற்றபோது; அனைய குன்றம்-
அந்தக் குன்றானது; எண்ண அருந்துகளது ஆகி- எண்ணற்கு
அருமையான தூளாகி; வீற்று வீற்று ஆகி – சின்ன பின்னப்
பட்டு; ஓடி விழுதலும் – சிதறுண்டு விழுதலும்; கவியின்
வெள்ளம்- குரங்குப் படையின் தொகுதி; எமக்கு ஊற்றம் ஏது
என்று எண்ணி – எமக்கு வலிமையாவது யாது என்று எண்ணி;
உடைந்தது- சிதறி ஓடியது; குமரன் – அங்கதன்; பாதம்
பெயர்ந்திலன் – முன் வைத்த காலைப் பின் வைக்காது; உற்ற
சீற்றமும் தானும் சென்று நின்றான் – பொருந்திய சினமும்
தானுமாக முன் சென்று நின்றான்.

————-

இடக் கையால் அரக்கன் ஆங்கு ஓர் எழு முனை வயிரத் தண்டு,
தடுக்கல் ஆம் தரத்தது அல்லா வலியது, தருக்கின் வாங்கி,
‘மடக்குவாய் உயிரை’ என்னா, வீசினன்; அதனை மைந்தன்
தடக் கையால் பிடித்துக் கொண்டான், வானவர் தன்னை வாழ்த்த. 189-

ஆங்கு -அப்பொழுது; அரக்கன் – கும்பகருணன்; தடுக்கல்
ஆம் தரத்தது அல்லா வலியது- தடுக்கக் கூடிய
தன்மையுடையது அல்லாத வலிமையுடையதும்; ஓர் எழு முனை
வயிரத் தண்டு-ஒப்பற்ற ஏ ழுமுனைகளையுடையதும் ஆன வலிய
தண்டாயுதத்தை; இடக்கையால்-தன் இடது கையினால்; தருக்கின்
வாங்கி- செருக்கோடு எடுத்து; மடக்குவாய் உயிரை என்னா-
இந்த அங்கதனுடைய உயிரை நீக்குவாய் என்று; வீசினன்-
வீசினான்; அதனை மைந்தன் – அத்தண்டினை வலியுடைய
அங்கதன்; வானவர் தன்னை வாழ்த்த – வானவர் தன்னை
வாழ்த்தும்படி; தடக்கையால் பிடித்துக் கொண்டான் – தன்
பெரிய கைகளினால் பிடித்துக் கொண்டான்.

—————

பிடித்தது சுழற்றி, ‘மற்று அப் பெரு வலி அரக்கன் தன்னை,
இடித்து, உரும் ஏறு, குன்றத்து எரி மடுத்து, இயங்குமா போல்,
அடித்து, உயிர் குடிப்பென்’ என்னா, அனல் விழித்து, ஆர்த்து, மண்டி,
கொடித் தடந் தேரின் முன்னர்க் குதித்து, எதிர் குறுகி, நின்றான். 190-

பிடித்தது சுழற்றி – பிடித்ததாகிய தண்டைச் சுழற்றிக்
கொண்டு; அப் பெருவலி அரக்கன் தன்னை- பெருவலி
படைத்த அரக்கனான கும்பகருணனை; அடித்து உயிர்
குடிப்பேன் என்னா- இத்தண்டினால் அடித்து உயிரைக்
குடிப்பேன் என்று சொல்லி; ஆர்த்து- பேரொலி செய்து; அனல்
விழித்து மண்டி- தீப்பொறி பறக்குமாறு விழித்து மூண்டு; உரும்
ஏறு இடித்து – பேரிடி இடித்து; குன்றத்து எரிமடுத்து
இயங்குமா போல்- மலையில் நெருப்பைப் பரப்பிக் கொண்டு
இயங்குமாறு போல; கொடித் தேரின் முன்னர்க் குதித்து-
கொடி கட்டிய பெரிய தேரின் முன்னால் குதித்து; எதிர் குறுகி
நின்றான் – அக்கும்பகருணன் எதிரே சென்று நின்றான்.

————-

கும்பகருணன் அங்கதன் உரையாடல்

நின்றவன் தன்னை அன்னான் நெருப்பு எழ நிமர நோக்கி,
‘பொன்ற வந்து அடைந்த தானைப் புரவலன் ஒருவன் தானோ?
அன்று, அவன் மகனோ? எம் ஊர் அனல் மடுத்து அரக்கர்தம்மை
வென்றவன் தானோ? யாரோ? விளம்புதி, விரைவின்’ என்றான். 191-

நின்றவன் தன்னை – தன் எதிர் வந்து நின்றவனாகிய
அங்கதனை; அன்னான்- அந்தக் கும்பகருணன்; நெருப்பு எழ
நிமிர நோக்கி- நெருப்புப் பொறி புறப்பட நிமிர்ந்து பார்த்து;
பொன்ற வந்து அடைந்த- இறப்பதற்காக என்னிடம் வந்து சேர்ந்த;
தானைப் புரவலன் ஒருவன் தானோ- குரக்குச் சேனைத்
தலைவனாகிய சுக்கிரீவனோ?; அன்று அவன் மகனோ?-
அல்லது அவனது மகனாகிய அங்கதனோ?; எம் ஊர்-
எம்முடைய ஊரில்;அனல் மடுத்து- நெருப்பை இட்டு; அரக்கர்
தம்மை வென்றவன் தானோ-அரக்கர்களை வென்றவன்
ஆகிய அனுமனோ?; யாரோ-அன்றெனின் யாரோ?; விரைவின்
விளம்புதி என்றான் – விரைவாகச் சொல்லுவாய் என்றான்.

————-

‘நும்முனை வாலின் சுற்றி, நோன் திசை நான்கும் தாவி,
மும் முனை நெடு வேல் அண்ணல் முளரி அம் சரணம் தாழ்ந்த
வெம் முனை வீரன் மைந்தன்; நின்னை என் வாலின் வீக்கி,
தெம் முனை இராமன் பாதம் வணங்கிட, செல்வென்’ என்றான். 192-

நும்முனை- உனக்கு அண்ணனாகிய இராவணனை; வாலின்
சுற்றி- வாலினால் சுற்றி; நோன் திசை நான்கும் தாவி- வலிய
திசை நான்கிலும் தாவிச் சென்று; மும்முனை நெடுவேல்
அண்ணல் – மூன்று முனையைக் கொண்ட முத்தலை வேல்
ஏந்திய பெருமை உடைய சிவபிரானது; முளரி அம்சரணம்
தாழ்ந்த- தாமரை மலர் போன்ற அழகிய திருவடிகளை
வணங்கிய; வெம்முனை வீரன் மைந்தன் – கொடிய
போர்த்திறம் மிக்க வீர வாலியின் மகன்; நின்னை என் வாலின்
வீக்கி – யான் உன்னை என் தந்தை போல் வாலில் கட்டி;
தெம்முனை இராமன் பாதம்- பகைப் புலத்துள்ள இராமனது
திருப்பாதத்தை; வணங்கிடச் செல்வென் என்றான்-
வணங்குவதற்காகச் செல்லுவேன் என்று கூறினான்.

—————

‘உந்தையை, மறைந்து, ஓர் அம்பால் உயிருண்ட உதவியோற்குப்
பந்தனைப் பகையைச் செற்றுக காட்டலை என்னின், பாரோர்
நிந்தனை நின்னைச் செய்வர்; நல்லது நினைந்தாய்; நேரே
வந்தனை புரிவர் அன்றே, வீரராய் வசையின் தீர்ந்தார்? 193-

உந்தையை- உன் தந்தையை; ஓர் அம்பால் மறைந்து
உயிருண்ட- ஓரம்பினால் மறைந்திருந்து உயிரைப் போக்கி;
உதவியோற்கு- உதவி செய்தவனாகிய இராமனுக்கு; பந்தனைப்
பகையைச் செற்றுக் காட்டலை என்னின்- கட்டாக உள்ள
பகையை அழித்துக் கொடுக்காமல் போவாய் என்றால்; நின்னைப்
பாரோர் நிந்தனை செய்வர் – உன்னை உலகில் உள்ளவர்கள்
நிந்தனை செய்வார்கள்; நல்லது நினைந்தாய்- நல்ல செயலையே
செய்யக் கருதினாய்; வீரராய் வசையின் தீர்ந்தார்- வீரராய்க்
குற்றம் அற்றவர்; நேரே வந்தனை புரிவர் அன்றே- உனக்கு
நேராக வந்து வணக்கம் செய்வார்கள் அல்லவா.

———————-

‘இத்தலை வந்தது, என்னை இராமன்பால், வாலின் ஈர்த்து
வைத்தலைக் கருதி அன்று; வானவர் மார்பின் தைத்த
முத் தலை அயிலின் உச்சி முதுகு உற, மூரி வால்போல்
கைத்தலம் காலும் தூங்க, கிடத்தலைக் கருதி’ என்றான். 194-

இத்தலை வந்தது- நீ இந்த இடத்திற்கு வந்தது; என்னை –
என்னை; இராமன் பால் – இராமனிடம்; வாலின் ஈர்த்து
வைத்தலைக் கருதி அன்று- வாலால் கட்டி இழுத்துக் கொண்டு
போய் வைத்தலைக் கருதி அன்று; வானவர் மார்பின் தைத்த-
தேவர்களின் மார்பில் தைத்த; முத்தலை அயிலின் உச்சி-
முத்தலைச் சூலத்தின் முனை; முதுகு உற- மார்பில் பாய்ந்து
முதுகின் வழி வெளிப்பட, அதனால் உயிர் இழந்து; மூரி வால் போல்- வலிய வாலைப் போலவே; கைத்தலம் காலும்- கையும்
காலும்; தூங்க- துவண்டு தொங்க; கிடத்தலைக் கருதிஎன்றான்-
இறந்து கிடத்தலைக் கருதியே என்று கூறினான்.

————–

அங்கதன் எறிந்த தண்டு பல துண்டமாதல்

அற்று அவன் உரைத்தலோடும் அனல் விழித்து, அசனி
குன்றத்து உற்றது போலும் என்னும் ஒலிபட, உலகம் உட்க,
பொன் தடந் தோளின் வீசிப் புடைத்தனன்; பொறியின் சிந்தி,
இற்றது நூறு கூறாய், எழு முனை வயிரத் தண்டு. 195-

அற்று – அவ்வாறாக; அவன் – அந்தக் கும்பகருணன்;
உரைத்தலோடும்- சொன்ன உடனே; அனல் விழித்து-
நெருப்பப் பொறி வெளிப்பட விழித்து; அசனி- இடி; குன்றத்து
உற்றது போலும் என்னும் ஒலிபட- மலையில் விழுந்தது
என்னுமாறு ஒலி தோன்ற; உலகம் உட்க- உலகத்தவர் அச்சம்
கொள்ள; பொன் தடந்தோளின் – கும்பகருணனது அழகிய
பெரிய தோளில்;வீசிப் புடைத்தனன்-வீசி அவனை அடித்தான்;
எழு முனை வயிரத் தண்டு- அந்த ஏழுமுனைகளை உடைய
வலிய தண்டாயுதம்; பொறியின் சிந்தி- தீப்பொறி போல் சிதறி;
நூறு கூறாய் இற்றது – நூறு துண்டுகளாய் முறிந்து விட்டது.

————-

அனுமன் போரிடுதல்

தண்டு இற, தடக் கை ஓச்சி, ‘தழுவி அத் தறுகணானைக்
கொண்டு இறப்புறுவென்’ என்னா, தலையுறக் குனிக்குங் காலை,
புண் திறப்புற வலாளன் கையினால் புகைந்து குத்த,
மண் திறப்பு எய்த வீழ்ந்தான்; மாருதி இமைப்பின் வந்தான். 196-

தண்டு இற- தண்டாயுதம் முறிந்தவுடன்; தடக்கை ஓச்சி-
தன் பெரிய கைகளைச் செலுத்தி; அத்தறுகணானை – அந்த
வலிய கும்பகருணனை; தழுவிக்கொண்டு இறப்புறுவென்-
பற்றிக் கொண்டு இறப்பு உறச் செய்வேன்; என்னா- என்று எண்ணி;
தலையுறக் குனிக்குங் காலை – தலைப்பகுதி கீழ் உறக்
குனிந்தபோது; வலாளன் – வலிமையுடைய கும்பகருணன்;
புண்திறப்புற – அங்கதன் உடம்பில் புண் பல பிளந்து
தோன்றுமாறு; கையினால் புகைந்து குத்த- கையினால் சினந்து
குத்த; மண் திறப்பு எய்த வீழ்ந்தான் – அவன் நிலம் பிளவு
படும்படி வீழ்ந்தான்; மாருதி இமைப்பின் வந்தான் – அனுமன்
நெடிப் பொழுதுக்குள் அங்கு வந்தான்.

————-

மறித்து அவன் அவனைத் தன் கை வயிர வான் சூலம் மார்பில்
குறித்துற எறியலுற்ற காலையில், குன்றம் ஒன்று
பறித்து, அவன் நெற்றி முற்றப் பரப்பிடை, பாகம் உள்ளே
செறித்தெனச் சுரிக்க வீசி, தீர்த்தனை வாழ்த்தி ஆர்த்தான். 197-

அவன் மறித்து- அக்கும்பகருணன் மீண்டும்; அவனை-
அங்கதனை; தன் கை- தனது கையில் உள்ள; வயிர வான்சூலம்-
உறுதி பொருந்திய கூரிய சூலத்தை; மார்பில் – மார்பில்; குறித்துற
எறியலுற்ற காலையில் – குறியாகப் பொருந்த எறியத் தொடங்கிய
பொழுது; குன்றம் ஒன்று பறித்து – அனுமன் குறுக்கிட்டு
மலையொன்றைப் பரித்து; அவன் நெற்றி முற்றப் பரப்பிடை-
அவன் நெற்றியாகிய விசாலமான இடத்தில்; பாகம் உள்ளே
செறித்தென- பாதி உள்ளே பொத்தி உள்ளது என்னுமாறு; சுரிக்க
வீசி- உள்ளே பதியுமாறு வீசி; தீர்த்தனை-தூய்மை உள்ளவனான
இராமனை; வாழ்த்திஆர்த்தான்-வாழ்த்திப் பேரொலி செய்தான்.

—————

தலையினில் தைத்து வேறு ஓர் தலை என நின்றதன்ன
மலையினைக் கையின் வாங்கி, மாருதி வயிர மார்பின்,
உலை உற வெந்த பொன் செய் கம்மியர் கூடம் ஒப்ப,
குலை உறு பொறிகள் சிந்த, வீசி, தோள் கொட்டி ஆர்த்தான். 198-

தலையினில் தைத்து- கும்பகருணனது தலையில் பொருந்தி;
வேறு ஓர் தலை என நின்ற தன்ன-வேறு ஒரு தலை தோன்றி
உள்ளது என்னுமாறு நின்ற; மலையினைக் கையின் வாங்கி-
மலையினைத் தன் கையினால் எடுத்து; மாருதி வயிர மார்பின்-
அனுமனது உறுதியான மார்பில்; பொன் செய் கம்மியர்-
இரும்புத் தொழில் செய் கம்மியரது; உலையுற வெந்த-
உலையில் வெந்த இரும்பின் மீது; கூடம் ஒப்ப- சம்மட்டியை
ஒப்பக்; குலையுறு பொறிகள் சிந்த- தொகுதியாகப் பொருந்திய
தீப்பொறிகள் சிதறும்படி;வீசித்தோள் கொட்டி ஆர்த்தான்-
எறிந்து தோளைத் தட்டி ஆரவாரம் செய்தான்.

———–

அவ்வழி வாலி சேயை அரிகுல வீரர் அஞ்சார்
வவ்வினர் கொண்டு போனார்; மாருதி வானை முற்றும்
கவ்வியது அனையது ஆங்கு ஓர் நெடு வரை கடிதின் வாங்கி,
எவ்வம் இல் ஆற்றலானை நோக்கி நின்று, இனைய சொன்னான். 199-

அவ்வழி – அவ்விடத்து; அரிகுல வீரர் – குரங்குக் குல
வீரர்கள்; வாலி சேயை – வாலியின் மகனாகிய அங்கதனை;
அஞ்சார் வவ்வினர் கொண்டு போனார்- அஞ்சாதவராய்த்
தூக்கிக் கொண்டு போனார்கள்; மாருதி – அனுமன்; வானை
முற்றும் கவ்வியது அனையது – வானம் முழுவதும்
மறைத்ததை ஒத்ததாகிய; ஆங்கு ஓர் நெடுவரை .- அங்குள்ள
ஒரு பெரிய மலையை;கடிதின் வாங்கி – விரைவாகக் கையில்
எடுத்து; எவ்வம் இல் ஆற்றலானை – குற்றம் அற்ற
வலிமையுடைய ஆற்றல் உடைய கும்பகருணனை;நோக்கி நின்று – பார்த்து நின்று; இனைய சொன்னான் –
இச்சொற்களைச் சொல்லலானான்.

————–

‘எறிகுவென் இதனை நின்மேல்; இமைப்புறும் அளவில் ஆற்றல்
மறிகுவது அன்றி, வல்லை மாற்றினை என்னின், வன்மை
அறிகுவர் எவரும்; பின்னை யான் உன்னோடு அமரும் செய்யேன்;
பிறிகுவென்; உலகில், வல்லோய்! பெரும் புகழ் பெறுதி’ என்றான். 200-

வல்லோய் – மிகு வலியுடைய கும்பகருணனே; இதனை நின்
மேல் எறிகுவென்- இம்மலையினை உன்மேல் எறியப் போகிறேன்;
இமைப்புறும் அளவில் – இதனால் இமைப்பொழுதில்; ஆற்றல்
மறிகுவது அன்றி – உன் வலிமை மாய்ந்து போவது அல்லாமல்;
வல்லை மாற்றினை என்னின் – விரைவாக இதனைத் தள்ளி
மாற்றிவிட்டாய் என்றால்; வன்மை அறிகுவர் எவரும்- உன்
வல்லமையை எல்லோரும் அறிவர்; யான் பின்னை உன்னோடு
அமரும் செய்யேன் – நான் பிறகு உன்னோடு போர் செய்யாமல்;
பிறிகுவென்- அப்பால் சென்று விடுவேன்; உலகில் – உலகத்தில்;
பெரும் புகழ் பெறுதி – நீ உலகத்தில் பெரும் புகழ் பெறுவாய்
என்றான்.

—————-

மாற்றம் அஃது உரைப்பக் கேளா, மலை முழை திறந்தது என்னக்
கூற்று உறழ் பகுவாய் விள்ள நகைத்து, ‘நீ கொணர்ந்த குன்றை ஏற்றனென்;
ஏற்ற காலத்து, இறை அதற்கு ஒற்கம் எய்தின், தோற்றனென், உனக்கு;
என் வன்மை சுருங்கும்’ என்று அரக்கன் சொன்னான். 201-

மாற்றம் அஃது உரைப்பக் கேளா- அனுமன் கூறிய
அச்சொற்களைக் கேட்டு; மலை முழை திறந்தது என்ன- மலைக்
குகையைத் திறந்தது போல; கூற்று உறழ்பகுவாய் விள்ள
நகைத்து – கூற்றுவனோடு மாறுபட்ட பெரியவாயைத் திறந்து சிரித்து; நீ
கொணர்ந்த குன்றை – நீ கொண்டு வந்து பெருமலையை;
ஏற்றனென் – ஏற்றவனாய்; ஏற்ற காலத்து – அவ்வாறு ஏற்ற
காலத்தில்; இறை அதற்கு ஒற்கம் எய்தின்- சிறிதளவாவது
அதற்குத் தளர்ச்சி அடைந்தால்; உனக்கு தோற்றனென்-
உனக்குத் தோற்றவன் ஆவேன்; என் வன்மை சுருங்கும் – என்
வலிமை உன் வலிமைக்குத் தாழ்ந்தது ஆகும்; என்று அரக்கன்
சொன்னான் – என்று கும்பகருணன் கூறினான்.

————-

மாருதி, ‘வல்லை ஆகின், நில், அடா! மாட்டாய் ஆகின்,
பேருதி, உயிர்கொண்டு’ என்று, பெருங் கையால் நெருங்க விட்ட கார் உதிர்
வயிரக் குன்றைக் காத்திலன், தோள் மேல் ஏற்றான்;
ஓர் உதிர் நூறு கூறாய் உக்கது, எவ் உலகும் உட்க. 202-

மாருதி – அனுமன்; அடா! – அடா!; வல்லைஆகின் நில்-
வல்லமை உடையவனாயின் நில்; மாட்டாய் ஆகின்- மாட்டாய்
ஆகின்; உயிர் கொண்டு பேருதி – உயிரைக் கொண்டு அப்பால்
போ; என்று – என்று சொல்லி; பெருங்கையால் நெருங்க விட்ட
– தன் பெரிய கைகளினால் அவனை நெருங்குமாறு வீசிய; கார்
உதிர் வயிரக் குன்றை – மேகங்கள் உதிர்வதற்குக் காரணம் ஆன
வலிய மலையை; காத்திலன் – தடுத்துக் காத்திலனாய்த்; தோள்
மேல் ஏற்றான் – தன் தோளின் மீது ஏற்றுக் கொண்டான்; எவ்
உலகும் உட்க- எல்லா உலகமும் அஞ்சுமாறு; ஓர் உதிர் நூறு
கூறாய் உக்கது- அது ஒருமுறை உதிர்கையிலே நூறு பகுதியாகச்
சிந்திச் சிதறி விட்டது.

————

இளக்கம் ஒன்று இன்றி நின்ற இயற்கை பார்த்து, ‘இவனது ஆற்றல்
அளக்குறற்பாலும் ஆகா; குலவரை அமரின் ஆற்றா;
துளக்குறும் நிலையன் அல்லன்; சுந்தரத் தோளன் வாளி
பிளக்குமேல், பிளக்கும்’ என்னா, மாருதி பெயர்ந்து போனான். 203-

இளக்கம் ஒன்று இன்றி நின்ற இயற்கை பார்த்து- வலிய
மலை தாக்கியும் தளர்ச்சி எதுவும் இல்லாமல் கும்பகருணன் நின்ற
தன்மையைப் பார்த்து; இவனது ஆற்றல் அளக்குறற்பாலும்
ஆகா- இவனுடைய வலிமை இவ்வளவு என்று அளவிட்டுச்
சொல்லக் கூடியதல்ல; குலவரை அமரின் ஆற்றா- கூட்டமாக
உள்ள மலைகளும் போரில் இவன் வலிமைக்குத் தாங்க மாட்டா;
துளக்குறும் நிலையன் அல்லன்-எவராலும் தளர்ச்சி அடையச்
செய்யும் தன்மை உடையவன் அல்லன்; சுந்தரத் தோளன்
வாளி – அழகிய தோள்களையுடைய இராமபிரானது அம்பு;
பிளக்கு மேல் பிளக்கும் – பிளக்கக் கூடுமானால் கூடும்;
என்னா – என்று கூறி; மாருதி பெயர்ந்து போனான்-அனுமன்
அப்பால் போயினன்

—————–

குரக்குச் சேனையின் அழிவு

‘எழுபது வெள்ளத்துள்ளோர் இறந்தவர் ஒழிய, யாரும்
முழுவதும் மாள்வர், இன்றே இவன் வலத்து அமைந்த முச் சூழ்
கழுவினில்’ என்று வானோர் கலங்கினார், நடுங்கினாரால்-
‘பொழுதினின் உலகம் மூன்றும் திரியும்’ என்று உள்ளம் பொங்கி. 204-

எழுபது வெள்ளத்துள்ளார்- எழுபது வெள்ள அளவுடைய
குரங்குப் படை வீரர்களில்; இறந்தவர் ஒழிய- போரில் இறந்தவர்
தவிர; யாரும் – எஞ்சியுள்ள யாவரும்; முழுவதும் மாள்வர்-
அனைவரும் இறந்து படுவார்கள்; இன்றே- இப்பொழுதே; இவன்
வலத்து அமைந்த முச்சூல் கழுவினில்- இவனது வெற்றியுடன்
அமைந்த முச்சூலமாகிய கழுவினில்; என்று – என்று எண்ணியும்;
பொழுதினில் உலகம் மூன்றும் திரியும் என்று உள்ளம்
பொங்கி இமைப் பொழுதில் மூன்று உலகங்களும் நிலைமாறும்
என்று மனம் கொதித்தும்;வானோர் கலங்கினார் நடுங்கினாரால்
– தேவர்கள் கலங்கி நடுங்கினார்கள்.

————

தாக்கினார்; தாக்கினார்தம் கைத்தலம் சலித்தது அன்றி,
நூக்கினார் இல்லை; ஒன்றும் நோவு செய்தாரும் இல்லை-
ஆக்கினான்; களத்தின் ஆங்கு ஓர் குரங்கினது அடியும் இன்றிப்
போக்கினான்; ஆண்மையாலே புதுக்கினான், புகழை அம்மா! 205-

தாக்கினார் – கும்பகருணனைக் குரங்குப் படைவீரர்
தாக்கினார்; தாக்கினார் தம் – அவ்வாறு தாக்கியவர்களுடைய;
கைத்தலம் சலித்தது அன்றி-கைத்தலம் சலித்ததே அல்லாமல்;
நூக்கினார் இல்லை- அவனை அசைத்துத் தள்ளியவர் எவரும்
இல்லை; ஒன்றும் நோவு செய்தாரும் இல்லை- எந்த
வகையிலும் நோவு செய்தவர்களும் இல்லை; களத்தின் ஆங்கு
ஓர் குரங்கினது அடியும் இன்றி- போர்க் களத்தில் ஒரு
குரங்கினது அடிச்சுவடும் இன்றி; ஆக்கினான் போக்கினான்
– போரைச் செய்தவன் ஆன கும்பகருணன் அழித்தான்;
ஆண்மையாலே புதுக்கினான் புகழை – தன்னுடைய
ஆண்மையால் புகழைப் புதுப்பித்தான்.

————–

‘சங்கத்து ஆர் குரங்கு சாய, தாபதர் என்னத் தக்கார்
இங்கு உற்றார் அல்லரோதான்? வேறும் ஓர் இலங்கை உண்டோ?
எங்குற்றார் எங்குற்றார்?’ என்று எடுத்து அழைத்து, இமையோர் அஞ்ச,
துங்கத் தோள் கொட்டி, ஆர்த்தான்-கூற்றையும் துணுக்கம் கொண்டான். 206-

கூற்றையும் நுணுக்கம் கொண்டான்- யமனையும் அச்சம்
கொள்ளச் செய்திட்ட கும்பகருணன்; சங்கத்து ஆர் குரங்கு
சாய – கூட்டமாகப் பொருந்திய குரங்கு வீரர் அழிய; தாபதர்
என்னத் தக்கார் – தவத்தவர் என்று சொல்லத் தக்கவர் ஆன
இராமலக்குவர்; இங்கு உற்றார் அல்லரோ தான்- இங்கு
வந்துற்றார் அல்லரோ; வேறும் ஓர் இலங்கை உண்டோ-
அல்லது அவர்கள் முற்றுகை இட வேறு ஒரு இலங்கையும் இருக்கின்றதோ?;
எங்குற்றார் எங்குற்றார் என்று எடுத்து அழைத்து – எங்கே
போனார், எங்கே போனார் என்று பெரும் குரல் எடுத்து
அழைத்து; இமையோர் அஞ்ச – தேவர்கள் அஞ்சும்படி;
துங்கத் தோள் கொட்டி ஆர்த்தான் – வலிய தோளைத்
தட்டிப் பேரொலி செய்தான்.

———–

பறந்தலை அதனின் வந்த பல் பெருங் கவியின் பண்ணை
இறந்தது கிடக்க, நின்ற இரிதலின், யாரும் இன்றி
வறந்தது; சோரி பாய வளர்ந்தது, மகர வேலை-
குறைந்துளது, உவாவுற்று ஓதம் கிளர்ந்து மீக்கொண்டது என்ன. 207-

பறந்தலை அதனின் வந்த – போர்க்களமாகிய அதன்
இடத்து வந்த; பல்பெருங் கவியின் பண்ணை – பலவாகிய
பெரிய குரங்கினது கூட்டம்;இறந்தது கிடக்க- இறந்தது போக;
நின்ற இரிதலின்- நின்ற குரங்குகள் நிலைகெட்டு ஓடியதால்;
யாரும் இன்றி வறந்தது – எவரும் இல்லாமல் வறியது
ஆயிற்று; குறைந்துளது மகர வேலை – குறைந்துள்ளதான
மகர மீன்களை உடைய கடல்; உவாவுற்று ஓதம் கிளர்ந்து
மீக்கொண்டது என்ன- முழுமதி நாளில் வெள்ளப் பெருக்கு
மேல் பொங்குவது ஒப்ப; சோரி பாய வளர்ந்தது- இரத்தம்
பாய்ந்ததனால் மிக்கு வளர்ந்தது.

————-

இலக்குவன்-கும்பகருணன் போர்

குன்றும் கற்களும் மரங்களும் குறைந்தன; குரங்கின்
வென்றி அம் பெருஞ் சேனை ஓர் பாதியின் மேலும்
அன்று தேய்ந்தது’ என்று உரைத்தலும், அமரர் கண்டு உவப்பச்
சென்று தாக்கினன், ஒரு தனிச் சுமித்திரை சிங்கம். 208-

குன்றும் கற்களும் மரங்களும் குறைந்தன- போர் செய்ய
உதவிய மலைகளும் கற்களும் மரங்களும் குறைந்து விட்டன;
குரங்கின் வென்றி அம் பெருஞ்சேனை- குரங்கினது வெற்றி
பொருந்திய பெரிய படையானது; ஓர் பாதியின் மேலும் அன்று
தேய்ந்தது – ஒரு பாதி அளவுக்கு மேல் தேய்ந்து அழிந்து
விட்டது; என்று உரைத்தலும்- என்று படை வீரர் உரைத்தலும்;
ஒரு தனிச் சுமித்திரை சிங்கம்- ஒப்பற்ற சுமித்திரை மகனான
சிங்கம் போன்ற இலக்குவன்; அமரர் கண்டு உவப்ப-தேவர்கள்
கண்டு மகிழும்படி; சென்று தாக்கினன் – சென்று
கும்பகருணனைத் தாக்கலானான்.

———-

நாண் எறிந்தனன், சிலையினை; அரக்கியர் நகு பொன்
பூண் எறிந்தனர்; படியிடை இடி பொடித்தென்னச்
சேண் எறிந்து எழு திசை செவிடு எறிந்தன; அலகை,
தூண் எறிந்தன கையெடுத்து ஆடின துணங்கை. 209-

சிலையினை நாண் எறிந்தனன்- இலக்குவன் தன் வில்லின்
நாணைத் தெறித்தான்; அரக்கியர் நகுபொன் பூண் எறிந்தனர்
-அவ்வொலி கேட்டு அரக்கர் இறந்தமையால் இறந்தவர்களுடைய
மனைவியர் பொற்றாலியைக் கழற்றி எறிந்தனர்; படியினை இடி
பொடித்தென்ன- நிலத்தில் இடி உண்டானாற் போல; சேண்
எறிந்து எழுதிசை செவிடு எறிந்தன – வெகுதூரம் வரை
தோன்றும் திக்குகள் ஓசையால் செவிடு பட்டன; அலகை தூண்
எறிந்தன கை எடுத்து- பேய்கள் தூண்களை அடித்து வைத்தாற்
போன்ற கைகளை உயரத் தூக்கி; துணங்கை ஆடின-துணங்கைக்
கூத்தாடின.

————-

இலக்குவன் கடிது ஏவின, இரை பெறாது இரைப்ப,
சிலைக் கடுங் கணை நெடுங் கணம் சிறையுடன் செல்வ,
உலைக் கொடுங் கனல் வெதும்பிட வாய் எரிந்து ஓடி,
குலக் கயங்களில் குளித்தன; குடித்தன, குருதி. 210-

இலக்குவன் கடிது ஏவின- இலக்குவன் விரைவாகச்
செலுத்தியனவும்; இரை பெறாது இரைப்ப- இரை பெறாமையால்
ஒலிப்பனவுமாகிய; சிலைக் கருங்கணை- சிலை வடிவு உடைய
கொடிய அம்புகளின்; நெடுங்கணம் – பெருங்கூட்டங்கள்;
சிறையுடன் செல்வ- சிறகுகளுடன் சென்றதனால்; உலைக்
கொடுங்கனல் வெதும்பிட- உலைக்களத்தில் உள்ள கொடிய
தீயும் வெதும்பும்படி; வாய் எரிந்து ஓடி- நெருப்பை வாயில்
வெளியிட்டுக் கொண்டு ஓடிக்; குலக்கயங்களில் குளித்தன-
கூட்டமாக உள்ள திசையானைகளின் உடம்பில் மூழ்கி; குருதி
குடித்தன- அவற்றின் குருதியைப் பருகின.

———

அலை புடைத்த வாள் அரக்கரைச் சில கழுத்து அரிவ;
சில, சிரத்தினைத் துணித்து, அவை திசைகொண்டு செல்வ;
கொலை படைத்த வெங் களத்திடை விழா, கொடு போவ;
தலை படைத்தன போன்றனவால், நெடுஞ் சரங்கள். 211-

சில- சில அம்புகள்; அலை புடைத்த வாள் அரக்கரை-
கடல் அலையை அடித்து வென்ற பெருமையுடைய கொடிய
அரக்கர்களைக்; கழுத்து அரிவ- கழுத்தை அரிவனவாயின; சில
நெடுஞ்சரங்கள்-சில நீண்ட அம்புகள்; சிரத்தினைத் துணித்து-
கழுத்தினைத் துண்டித்து; அவை கொலை படைத்த
வெங்களத்திடை விழா- அக்கழுத்துக்கள் கொலைத் தொழில்
படைத்த கொடிய போர்க்களத்தில் வீழாதவாறு; கொடு போவ-
கொண்டு போகின்றவைகளாகித்; திசை கொண்டு செல்வ-
திசைகளின் எல்லைக்குக் கொண்டு செல்வதனால்; தலை
படைத்தன போன்றனவால் – தலை பெற்றவை போன்று
விளங்கின.

———-

உருப் பதங்கனை ஒப்பன சில கணை, ஓடைப்
பொருப்பதங்களை உருவி, மற்று அப்புறம் போவ,
செருப் பதம் பெறா அரக்கர்தம் தலை பல சிந்தி,
பருப்பதங்கள் புக்கு ஒளிப்பன, முழை புகு பாம்பின். 212-

உரு பதங்களை ஒப்பன- வடிவம் சூரியனை ஒப்பனவாகிய;
சில கணை- சில அம்புகள்; ஓடைப் பொருப் பதங்களை
உருவி- முகபடாம் அணிந்த மலை போன்ற யானைகளை ஊடுருவி; மற்று
அப்புறம் போவ- பின் அப்புறம் போனவையாய்; செருப்பதம்
பெறா அரக்கர் தம் தலை பல சிந்தி-போர்க்களத்தில் காலடி
வைத்திருக்காத அரக்கர்களின் பல தலைகளை உருட்டி; முழை
புகு பாம்பின்- குகையில் புகும் பாம்புகள் போல; பருப்
பதங்கள் புக்கு ஒளிப்பன – மலைகளில் புகுந்து
ஒளிப்பனவாயின.

———–

மின் புகுந்தன பல் குழுவாம் என மிளிர்வ
பொன் புகுந்து ஒளிர் வடிம்பின கடிங் கணை போவ,
முன்பு நின்றவர் முகத்திற்கும், கடைக் குழை முதுகின்
பின்பு நின்றவர் பிடர்க்கும், இவ் விசை ஒக்கும், பிறழா. 213-

பல் குழுவாம் மின் புகுந்தன என- பல கூட்டங்களாக
மின்னல்கள் புகுந்தன போன்று; மிளிர்வ- கருதும்படி
விளங்குவனவும்; பொன் புகுந்து ஒளிர் வடிம்பின- பொன்
போல் விளங்கி ஒளிர்கின்ற விளிம்புகளையுடையவையும் ஆன;
கருங்கணை போவ- கொடிய கணைகள் விரைந்து போவனவாய்;
முன்பு நின்றவர் முகத்திற்கும் – தார்ப் படையில் நின்றவர்
உடைய முகத்துக்கும்; கடைக்குழை முதுகின் பின்பு நின்றவர்
பிடர்க்கும் – கடைப்படையான கூழையின் பின்புறமான இடத்து
நிற்பவர் பிடரியிலும்; இவ்விசை பிறழா ஒக்கும் – இந்த
வேகத்தில் மாறுபடாமல் ஒத்து அமையும்.

————

போர்த்த பேரியின் கண்ணன, காளத்தின் பொகுட்ட,
ஆர்த்த வாயன, கையன, ஆனையின் கழுத்த,
ஈர்த்த தேரன, இவுளியின் தலையன, எவர்க்கும்
பார்த்த நோக்கன, கலந்தன-இலக்குவன் பகழி. 214-

இலக்குவன் பகழி- இலக்குவனுடைய அம்புகள்; போர்த்த
பேரியின் கண்ணன- தோலால் போர்த்தப்பட்ட பேரிகையின்
கண்ணிடத்துப் பாய்வனவும்; காளத்தின் பொகுட்ட- காளம்
என்ற ஊது கொம்பின் ஊதுகின்ற முனையில் பாய்வனவும்;
ஆர்த்த வாயின கையின- பிற கருவிகளை ஊதும் வாயிலும்
பிடித்த கையிலும் பாய்வனவும்; ஆனையின் கழுத்த – யானைகளின்
கழுத்தில் பாய்வனவும்; ஆனையின் கழுத்த- யானைகளின்
கழுத்தில் பாய்வனவும்; ஈர்த்த தேரன- குதிரைகள் பூட்டி
இழுக்கப்பட்ட தேரில் பாய்வனவும்; இவுளியின் தலையன-
குதிரைகளின் தலையில் பாய்வனவும்; எவர்க்கும் பார்த்த
நோக்கன – பார்க்கும் எவராயினும் பார்த்த கண்களில்
பாய்வனவுமாகி; கலந்தன- எங்கும் பரவின.

———-

மருப்பு இழந்தன;-களிறு எலாம்-வால் செவி இழந்த,
நெருப்பு உகும் கண்கள் இழந்தன; நெடுங் கரம் இழந்த;
செருப் புகும் கடுங் காத்திரம் இழந்தன; சிகரம்
பொருப்பு உருண்டனவாம் எனத் தலத்திடைப் புரண்ட. 215-

களிறு எலாம் மருப்பு இழந்தன- இலக்குவன் பகழியால்
யானைகள் எல்லாம் கொம்புகளை இழந்தன; வால் செவி
இழந்த- வாலையும் செவிகளையும் இழந்தன; நெருப்பு உகும்
கண்கள் இழந்தன – நெருப்பை வெளிப்படுத்தும்
கண்களையிழந்தன; நெடுங்கரம் இழந்த – நீண்ட
துதிக்கைகளை இழந்தன; செருப்புகும் கடுங்காத்திரம்
இழந்தன – போரில் புக்கு விரைந்து செல்லும்
முன்னங்கால்களை இழந்தன; சிகரப் பொருப்பு
உருண்டனவாம் எனத் தலத்திடைப் புரண்ட- அவ்வாறு
இழந்து சிகரத்தை உடைய மலைகள் நிலத்தில் உருள்கின்றன
என்னுமாறு உருண்டன.

————-

நிரந்தரம் தொடை நெகிழ்த்தலின், திசை எங்கும்
நிறைந்த சரம் தலைத்தலை படப் பட, மயங்கின சாய்ந்த;
உரம் தலத்துற உழைத்தவால்; பிழைத்தது ஒன்று இல்லை-
குரம் தலத்தினும் விசும்பினும் மிதித்திலாக் குதிரை. 216-

குரம் தலத்தினும்- குளம்புகள் நிலத்திலும்; விசும்பினும்
– ஆகாயத்திலும்; மிதித்திலாக் குதிரை- மிதித்துச் செல்லாத
குதிரைகள்;நிரந்தரம் தொடை நெகிழ்த்தலின் -இலக்குவன்
இடைவிடாமல் அம்புகளை விடுவதனால்; திசை எங்கும்
நிறைந்த – திக்குகள் எங்கும் நிறைந்த; சரம் தலைத்தலை
படப்பட- அம்புகள் மேலும் மேலும் மிகுதியாகப் படுவதனால்; மயங்கின சாய்ந்த-
மயங்கிச் சாய்ந்தன; உரம் தலத்துற உழைத்தவால்- மார்பு
பூமியில் படுமாறு விழுந்து வருந்தின; ஒன்று பிழைத்தது
இல்லை – ஒன்று கூட உயிர் பிழைத்து இல்லை.

————-

பல்லவக் கணை பட, படு புரவிய, பல் கால்
வில்லுடைத் தலையாளொடு சூதரை வீழ்த்த,
எல்லை அற்ற செங் குருதியின் ஈர்ப்புண்ட அல்லால்,
செல்லகிற்றில, நின்றில-கொடி நெடுந் தேர்கள். 217-

கொடி நெடுந்தேர்கள் – கொடி கட்டப்பட்ட பெரிய
தேர்கள்; பல்லவக் கணைபட- இலக்குவன் விடுத்த இளந்தளிர்
போன்ற சிவப்பு நிறமான அம்புகள் பாய்ந்ததனால்; படு புரவிய-
இறந்த குதிரைகளையுடையனவாயின; பல்கால் வில்லுடைத்
தலையாளொடு-பல இடங்களில் தேரில் இருந்து போர் செய்யும்
தேர் வீரரோடு; சூதரை வீழ்த்த- அவை தேர்ப்பாகரையும்
கொன்றழித்தன; செல்லகிற்றில- அதனால் அத்தேர்கள் ஓடிச்
செல்ல மாட்டா ஆயின; எல்லை அற்ற செங்குருதியின்
ஈர்ப்புண்ட அல்லால் – ஆயினும் தேர்கள் போர்க்களத்து
ஓடிய குருதி வெள்ளத்தில் இழுத்துச் செல்லப் பட்டன
அல்லாமல்; நின்றில- ஓர் இடத்து நிற்க மாட்டா ஆயின.

—————-

பேழை ஒத்து அகல் வாயன பேய்க் கணம் முகக்கும்
மூழை ஒத்தன-கழுத்து அற வீழ்ந்தன முறை சால்
ஊழை ஒத்தன ஒரு கணை தைத்தன, உதிரத்
தாழி ஒத்த வெங் குருதியில் மிதப்பன, தலைகள். 218-

முறை சால் – முறைமையின் படி பயன்தரும்; ஊழை ஒத்தன
ஒரு கணை தைத்தன- ஊழ்வினையை ஒத்தனவாகிய ஒப்பற்ற
இலக்குவனின் கணைகள் தைத்ததனால்; தலைகள் கழுத்து அற
வீழ்ந்தன – வீரர்களின் தலைகள் கழுத்து அறுபட்டு வீழ்ந்தன;
பேழை ஒத்து அகல்வாயின – அவை பெட்டியைப் போன்று
அகன்ற வாயையுடையனவாயும்; பேய்க்கணம் முகக்கும் மூழை
ஒத்தன – பேய்க்கணங்கள் களக்கூழ் துழாவுவதற்கு உதவும்
அகப்பையை ஒத்தனவாயும்; உதிரத்தாழி ஒத்த வெங்குருதியில்
மிதப்பன-குருதித் தாழியாகிய கடலில் உள்ள குருதியில் மிதக்கும்
தோணி போன்றும் இருந்தன.

————–

ஒட்டி நாயகன் வென்றி நாள் குறித்து ஒளிர் முளைகள்
அட்டி வைத்தன பாலிகை நிகர்த்தன-அழிந்து
நட்டவாம் என வீழ்ந்தன, துடிகளின் நவை தீர்
வட்ட வான்கணில், வதிந்தன வருண சாமரைகள். 219-

அழிந்து நட்டவாம் என வீழ்ந்தன துடிகளின் – அழிந்து
குத்திட்டாற்போல் வீழ்ந்தனவாகிய துடிகளின்; நவை தீர் வட்ட
வான்கணில்- துடிப்பறையின் குற்றமற்ற நடுவில் வட்டமாக உள்ள
வாய்களில் (அடிக்கப்படும் இடங்களில்); வதிந்தன – பொத்துக்
கொண்டு விளங்குகிற; வருண சாமரைகள் – நன்னிறம் கொண்ட
சாமரைகள்; ஒட்டி நாயகன் வென்றி நாள் – அண்மையில் வர
இருக்கிற இராமனுடைய வென்றி நாள் கொண்டாட;குறித்து ஒளிர்
முளைகள் அட்டி வைத்தன பாலிகை நிகர்த்தன- எண்ணி
வெண்மையாக ஒளிரும் முளைகளைக் கொண்ட பாலிகைகள்
வரிசையாக வைக்கப்பட்டதை நிகர்த்தன.

—————–

எரிந்த வெங் கணை நெற்றியில் படுதொறும், யானை,
அரிந்த அங்குசத்து அங்கையின் கல்வியின் அமைவால்,
திரிந்த வேகத்த, பாகர்கள் தீர்ந்தன, செருவில்
புரிந்த வானரத் தானையில் புக்கன, புயலின். 220-

எரிந்த வெங்கணை நெற்றியில் படுதொறும்- இலக்குவனது
எரியும் தன்மையுள்ள கொடிய கணைகள் நெற்றியில் படுந்தோறும்;
யானை யானைகள்; அரிந்த அங்குசத்து-கூர்மையாக அரியப்பட்ட
அங்குசத்தை; அங்கையின் – கொண்ட அழகிய கைகளோடு;
கல்வியின் அமைவால் – பாகன் கற்றுத் தந்த போர்க் கல்வியின்
தன்மையால்; திரிந்த வேகத்த- திரிந்த வேகத்தையுடையனவாய்;
பாகர்கள் தீர்ந்தன- செலுத்துகின்ற பாகர்களையும் இழந்தனவாய்;
புயலின்- புயல் போல; செருவில் புரிந்த வானரத் தானையில்
புக்கன- போர்க்களத்தில் விருப்பம் கொண்ட வானரப் படையின்
இடையில் புகுந்தன.

—————

வேனிலான் அன்ன இலக்குவன் கடுங் கணை விலக்க,
மான வெள் எயிற்று அரக்கர் தம் படைக்கல வாரி
போன போன வன் திசைதொறும் பொறிக் குலம் பொடிப்ப,
மீன் எலாம் உடன் விசும்பின்நின்று உதிர்ந்தென வீழ்ந்த. 221-

வேனிலான் அன்ன இலக்குவன் – மன்மதனை ஒத்த
இலக்குவனுடைய; கடுங்கணை விலக்க- கொடிய அம்புகள்
விலக்கியதனால்; மான வெள் எயிற்று அரக்கர்தம்-மானமிகு
வெள்ளிய பற்களையுடைய அரக்கர்கள் வீசிய; படைக்கல
வாரி-படைக்கலங்களாகிய கடல்கள்;போன போன வன்திசை
தொறும்- சென்ற சென்ற வலிமையான திசைகளில் எல்லாம்;
பொறிக்குலம் பொடிப்ப- தீப்பொறித் திரள் தோன்ற;மீன்
எலாம் உடன் – விண்மீன்கள் எல்லாம் ஒருசேர; விசும்பின்
நின்று-ஆகாயத்தில் இருந்து;உதிர்ந்தென வீழ்ந்த-உதிர்ந்தாற்
போன்று வீழ்ந்தன.

————–

கரம் குடைந்தன, தொடர்ந்து போய்க் கொய் உளைக் கடு மாக்
குரம் குடைந்தன, வெரிநுறக் கொடி நெடுங் கொற்றத்
தரம் குடைந்தன, அணி நெடுந் தேர்க் குலம் குடைந்த,-
அரம் குடைந்தன அயில் நெடு வாளிகள் அம்மா! 222-

அரம் குடைந்தன அயில் நெடு வாளிகள் – அரத்தில்
அராவப் பட்ட வாய்க் கூர்மையுள்ள நீண்ட அம்புகள்; கரம்
குடைந்தன – இலக்குவன் கைகளால் வில்லில் பூட்டப் பெற்று;
தொடர்ந்து போய் – வரிசையாகப் போய்; கொய் உளைக்
கடுமாக்குரம் குடைந்தன வெரி நுற- கொய்யப்பட்ட
பிடரிமயிரை உடைய விரைந்து செல்லும் குதிரைகளின் குளம்பினையும் முதுகினையும்
துளைத்தனவாய்; கொடி நெடுங் கொற்றத் தரம் குடைந்தன-
அக்குதிரை வீரர் கைக்கொண்டுள்ள கொடிகளின் வெற்றிச்
சிறப்பையும் ஒழித்தன; அணி நெடுந் தேர்க்குலம் குடைந்த-
அழகிய நீண்ட தேர்க்கூட்டங்களையும் ஒழித்திட்டன.

———–

‘துரக்கம், மெய்யுணர்வு இரு வினைகளை எனும் சொல்லின்
கரக்கும் வீரதை தீமையை’ எனும் இது கண்டோம்;
இரக்கம் நீங்கினர், அறத்தொடும் திறம்பினர் எனினும்,
அரக்கர் ஆக்கையை அரம்பையர் தழுவினர், விரும்பி, 223-

இரக்கம் நீங்கினர்-அரக்கர்கள் இரக்கம் நீங்கியவர்களாய்;
அறத்தொடும் திறம்பினர் எனினும் – அறநெறி தவறியவர்கள்
என்றாலும்; அரக்கர் ஆக்கையை- அரக்கர்களின் உடம்பினை;
அரம்பையர் விரும்பித் தழுவினர்- அமர மகளிர் விரும்பித்
தழுவினார்கள் இதனால்; மெய்யுணர்வு இருவினைகளைத்
துரக்கும் எனும் சொல்லின் – தத்துவ ஞானம்
இருவினைகளையும் நீக்கும் என்னும் சொல்லைப் பிரமாணத்தால்
கண்டது போல; வீரதை தீமையைக் கரக்கும் எனும் இது
கண்டோம்- வீரப் பண்பானது பாவத்தைப் போக்கும்
என்பதையும் கண்டோம்.

————-

மறக் கொடுந் தொழில் அரக்கர்கள், மறுக்கிலா மழைபோல்
நிறக் கொடுங் கணை நெருப்பொடு நிகர்வன நிமிர,
இறக்கம் எய்தினர் யாவரும், எய்தினர் எனின், அத்
துறக்கம் என்பதின் பெரியது ஒன்று உளது எனச் சொல்லேம். 224-

மறக் கொடுந்தொழில் அரக்கர்கள் – பாவத்தோடு சேர்ந்த
கொடுமையான தொழிலைச் செய்யும் அரக்கர்கள்; மறுக்கிலா
மழை போல்- விலக்க முடியாத மழையைப் போல; நெருப்பொடு
நிகர்வன – நெருப்பைப் போன்ற; நிறக்கொடுங்கணை-
இலக்குவனுடைய கொடிய அம்புகள்; நிமிர- உயர்ந்து ஓங்கிப்
பட்டதனால்; இறக்கம் எய்தினர் யாவரும்- இறந்தவர்கள்
யாவரும்; துறக்கம் எய்தினர் எனின் – வீர சுவர்க்கம்
அடைந்தார்கள் என்றால்; அத்துறக்கம் என்பதின் பெரியது
ஒன்று உளது எனச் சொல்லேம்- அச்சுவர்க்கத்தைக் காட்டிலும்
பெரிய உலகம் வேறு ஒன்று உண்டு என்று சொல்லத்துணியோம்.

————–

ஒருவரைக் கரம், ஒருவரைச் சிரம், மற்று அங்கு
ஒருவர் குரை கழல் துணை, தோள் இணை, பிற
மற்றும் கொளலால், விரவலர்ப் பெறா வெறுமைய ஆயின;
வெவ்வேறு இரவு கற்றன போன்றன-இலக்குவன் பகழி. 225-

வெவ்வேறு இரவு கற்றன போன்றன- வெவ்வேறு
வகையாகப் பொருளை இரத்தல் தொழிலைக் கற்றன
போன்றவாகிய; இலக்குவன் பகழி – இலக்குவன் அம்புகள்;
ஒருவரைக் கரம் – ஒருவரது கையையும்; ஒருவரைச் சிரம்-
ஒருவரது தலையையும்; மற்று அங்கு ஒருவர்-பின்னும் ஒருவரது;
குரை கழல் துணை-வீரக்கழல் அணிந்த இரு பாதங்கள்; தோள்
இணை- ஒருவரது இரு தோள்கள்; மற்றும் பிற கொளலால்-
மற்றுக் கிடைக்கும் பிறவற்றையும்; கொளலால் – கொண்டு
விட்டதால்; விரவலர் பெறா வெறுமைய ஆயின- பகைவர்
இல்லாமல் வறுமை அடைந்தனவாயின.

————-

சிலவரைக் கரம், சிலவரைச் செவி, சிலர் நாசி,
சிலவரைக் கழல், சிலவரைக் கண், கொளும் செயலால்,
நிலவரைத் தரு பொருள்வழித் தண் தமிழ் நிரப்பும் புலவர்
சொல் துறை புரிந்தவும் போன்றன-சரங்கள். 226-

சரங்கள் – இலக்குவன் அம்புகள்; சிலவரைக் கரம்- சிலரது
கைகளையும்; சிலவரைச் செவி- சிலரது காதுகளையும்;சிலர்நாசி-
சிலரது மூக்கையும்; சிலவரைக் கண் – சிலரது கண்; கொளும்
செயலால் – கொள்ளுகின்ற தன்மையால்; நிலவரை- நிலத்தில்;
தரு பொருள் வழி- கொடுக்கின்ற பொருளுக்கேற்ப; தண் தமிழ்
நிரப்பும் – தண் தமிழ்ச் செய்யுளைப் பாடுகின்ற; புலவர் சொல்
துறை புரிந்தவும் போன்றன- புலவர்களின் சொல் துறையை
விரும்பியவற்றை ஒத்திருந்தன.

—————

அறத்தின் இன் உயிர் அனையவன் கணை பட, அரக்கர்,
‘இறத்தும், இங்கு இறை நிற்பின்’ என்று இரியலின் மயங்கி,
திறத்திறம் படத் திசைதொறும் திசைதொறும்
சிந்திப் புறத்தின் ஓடினர், ஓடின குருதியே போல. 227-

அறத்தின் இன் உயிர் அனையவன்- அறத்திற்கு இனிய
உயிரை ஒத்தவனாகிய இலக்குவனது;கணைபட- அம்புகள்
படுவதால்; அரக்கர் – அரக்கர்கள்; இங்கு இறை நிற்பின்
இறத்தும் என்று-இங்கு ஒரு நொடிப்பொழுது நிற்பினும் இறந்து
விடுவோம் என்று; மயங்கி – நிலை கெட்டு; ஓடின குருதியே
போல- களத்தில் ஓடிய இரத்த வெள்ளம் போல; திறத்திறம்
பட- கூட்டம் கூட்டமாக; திசை தொறும் திசை தொறும்-
நாலா திசைகளிலும்; இரியலின் சிந்திப் புறத்தின் ஓடினர்- ஓடிச் சிதறுண்டு
வெளியே ஓடலாயினர்.

————

இலக்குவன் வில்லாண்மையைக் கும்பகருணன் வியத்தல்

செருவில் மாண்டவர் பெருமையும், இலக்குவன் செய்த
வரி வில் ஆண்மையும், நோக்கிய புலத்தியன் மருமான்,
‘திரிபுரஞ் செற்ற தேவனும் இவனுமே செருவின் ஒரு
விலாளர்’ என்று ஆயிரம் கால் எடுத்து உரைத்தான். 228-

செருவில் மாண்டவர் பெருமையும்- போர்க் களத்தில்
இறந்தவர்களது மிகுதியையும்; இலக்குவன் செய்த வரிவில்
ஆண்மையும் – இலக்குவன் போரில் செய்த கட்டமைந்த
வில்லாண்மையையும்; நோக்கிய- கண்ணால் கண்ட; புலத்தியன்
மருமான்- புலத்தியனது வழித் தோன்றலாகிய கும்பகருணன்;
திரிபுரஞ் செற்ற தேவனும் – முப்புரங்களையும் அழித்த
சிவபிரானும்; இவனுமே செருவின் ஒருவிலாளர் என்று-
போரில் ஒப்பற்ற வில்லாளர் என்று; ஆயிரம் கால் எடுத்து
உரைத்தான் – பலமுறை எடுத்துக் கூறினான்.

—————

படர் நெடுந் தடத் தட்டிடைத் திசைதொறும் பாகர்
கடவுகின்றது, காற்றினும் மனத்தினும் கடியது,
அடல் வயங் கொள் வெஞ் சீயம் நின்று ஆர்க்கின்றது,
அம் பொன் வட பெருங் கிரி பொருவு தேர் ஓட்டினன் வந்தான். 229-

படர் நெடுந் தடந்தட்டிடைப் பாகர்- பரவி ஓங்கி
அகன்ற தேர்த் தட்டில் அமர்ந்துள்ள பாகரால்; திசை தொறும்
கடவுகின்றது- திசையெல்லாம் செலுத்தப்படுவதும்; காற்றினும்
மனத்தினும் கடியது- காற்று மனம் ஆகியவற்றைக் காட்டிலும்
வேகமானதும்; அடல் வயம் கொள் வெஞ்சீயம் நின்று
ஆர்க்கின்றது-வலிய வெற்றி பொருந்திய தேரில் பூட்டப்பெற்ற
சிங்கங்கள் இடைவிடாமல் ஒலிக்கப்பெற்றதும்; அம்பொன்
வடபெருங்கிரி பொருவு தேர்-அழகிய பொன்மயமான வடமேருமலையை ஒத்த தேரினை;
ஓட்டினன் வந்தான்- கும்பகருணன் ஓட்டியவனாய் வந்தான்.

————–

அனுமன் தோள் மீது இலக்குவன் ஏறிச் சென்று பொருதல்

தொளை கொள் வான் நுகச் சுடர் நெடுந் தேர் மிசைத் தோன்றி,
வளை கொள் வெள் எயிற்று அரக்கன் வெஞ் செருத் தொழில் மலைய,
‘கிளை கொளாது, இகல்’ என்று எண்ணி, மாருதி கிடைத்தான்,
‘இளைய வள்ளலே! ஏறுதி தோள்மிசை’ என்றான். 230-

வளை கொள் வெள் எயிற்று அரக்கன்- வளைதலைக்
கொண்ட வெள்ளிய பற்களை உடைய கும்பகருணன்; தொளை
கொள்வான் நுகச் சுடர் நெடுந்தேர் மிசைத் தோன்றி-
தொளையில் பூட்டப்பட்ட பெரிய நுகத்தடியை உடைய ஒளி
பொருந்திய பெரிய தேரில் ஏறி; வெஞ்செருத் தொழில் மலைய-
கொடிய போர்த்தொழில் செய்கையில்; இகல்கிளை கொளாது-
தரையில் இருந்து இலக்குவன் செய்யும் போர் மேம்பாடு
அடையாது; என்று எண்ணி- என்று கருதி; மாருதி கிடைத்தான்-
அனுமன் இலக்குவனை நெருங்கி; இளைய வள்ளலே- இளைய
பெருமானே; தோள் மிசை ஏறுதி என்றான் – என் தோள் மீது
ஏறிக் கொள்க என்றான்

————-

ஏறினான், இளங் கோளரி; இமையவர் ஆசி
கூறினார்; எடுத்து ஆர்த்தது, வானரக் குழுவும்;
நூறு பத்துடைப் பத்தியின் நொறில் பரி பூண்ட
ஆறு தேரினும் அகன்றது, அவ் அனுமன் தன் தடந் தோள் 231-

இளங்கோளரி ஏறினான்- அனுமன் தோளில் இளஞ்சிங்கம்
போன்ற இலக்குவன் ஏறினான்; இமையவர் ஆசி கூறினார்-
இமையவர்கள் ஆசி கூறினார்கள்; வானரக் குழுவும் எடுத்து
ஆர்த்தது- குரங்குக் கூட்டங்களும் பெருங் குரல் எடுத்து
ஆரவாரம் செய்தன; நூறு பத்துடை- ஆயிரம்; பத்தியின்
நொறில் பரிபூண்ட- வரிசையாக விரைந்து செல்லும் குதிரைகள்
பூட்டப்பெற்ற; ஆறு தேரினும் – கும்பகருணனது ஆறு
தேர்களைக் காட்டிலும்; அவ் அனுமன் தன் தடந்தோள்
அகன்றது- அந்த அனுமனது பெரிய தோள்கள் அகன்றன.

———–

தன்னின் நேர் பிறர் தான் அலாது இல்லவன் தோள்மேல்,
துன்னு பேர் ஒளி இலக்குவன் தோன்றிய தோற்றம்,
பொன்னின் மால் வரை வெள்ளி மால் வரை மிசைப் பொலிந்தது
என்னுமாறு அன்றி, பிறிது எடுத்து இயம்புவது யாதோ? 232-

தன்னின் நேர் பிறர் தான் அலாது இல்லவன் – தனக்கு
ஒப்புத் தானேயன்றிப் பிறர் இல்லாதவனாகிய அனுமன்; தோள்
மீது-தோளின் மீது; துன்னு பேர் ஒளி இலக்குவன்-நெருங்கிய
பேரொளி உடைய இலக்குவன்; தோன்றிய தோற்றம்-தோன்றிய
தோற்றமானது; பொன்னின் மால்வரை- பொன் மயமான மேரு
மலை; வெள்ளி மால் வரை- வெள்ளி மயமான பெரிய கைலாய
மலையின்;மிசைப் பொலிந்தது- மேல் விளங்கிற்று; என்னுமாறு
அன்றி- என்று கூறுமாறு அன்றி; பிறிது எடுத்து இயம்புவது
யாதோ- வேறு ஒன்றை உவமையாக எடுத்துச் சொல்ல யாது
உளது.

—————

ஆங்கு, வீரனோடு அமர் செய்வான் அமைந்த வாள் அரக்கன்,
தாங்கு பல் கணைப் புட்டிலும் தகை பெறக் கட்டி,
வீங்கு தோள் வலிக்கு ஏயது, விசும்பில் வில் வெள்க,
வாங்கினான், நெடு வடவரை புரைவது ஓர் வரி வில். 233-

ஆங்கு- அப்போது; வீரனோடு – வீரன் ஆகிய
இலக்குவனுடன்; அமர் செய்வான் அமைந்த- போர் செய்வான்
பொருட்டு;வாள் அரக்கன்- கொடிய கும்பகருணன்; பல்கணைத்
தாங்கு புட்டிலும் – பலகணைகளைத் தாங்கின அம்பு
அறாத்தூணியையும்; தகை பெறக்கட்டி- அழகு பெறக் கட்டி;
வீங்கு தோள் வலிக்கு ஏயது- பருத்த தன் தோள் வலிமைக்கு
ஏற்றதும்; நெடுவட வரை புரைவது – பெரிய மேரு மலையை
ஒத்ததும் ஆன; ஓர் வரிவில்- ஒப்பற்ற கட்டமைந்த வில்லினை;
விசும்பில் வில் வெள்க வாங்கினான் – ஆகாயத்தில் உள்ள
வானவில்லும் வெட்கம் கொள்ளும் படி வளைத்தான்.

———-

கும்பகருணனின் வீரவார்த்தையும், இலக்குவனின் மறுமொழியும்

‘இராமன் தம்பி நீ; இராவணன் தம்பி நான்;
இருவேம் பொரா நின்றேம்; இது காணிய வந்தனர், புலவோர்;
பராவும் தொல் செரு முறை வலிக்கு உரியன பகர்ந்து,
விராவு நல் அமர் விளைக்குதும், யாம்’ என விளம்பா, 234-

நீ இராமன் தம்பி – நீ இராமனுக்குத் தம்பி; நான்
இராவணன் தம்பி- நான் இராவணனுக்குத் தம்பி; இருவேம்
பொரா நின்றேம் – இருவரும் இப்பொழுது போர் செய்ய
நின்றோம்; இது காணிய வந்தனர் புலவோர் – இப்போர்த்
தொழிலைக் காண்பதற்காகத் தேவர்கள் வந்துள்ளனர்; பராவும்,
தொல் செருமுறை வலிக்கு – வழிபடுவதற்கு உரிய
பழைமையான போர் முறை வலிக்கு; உரியன – உரியவற்றை;
பகர்ந்து- சொல்லி; விராவு நல் அமர் விளைக்குதும்-
பொருந்திய சிறந்த போரைச் செய்வோம்; யாம் என விளம்பா-
நாம் என்று சொல்லி.

————–

‘பெய் தவத்தினோர் பெண்கொடி, எம்முடன் பிறந்தாள்,
செய்த குற்றம் ஒன்று இல்லவள், நாசி வெஞ் சினத்தால்
கொய்த கொற்றவ! மற்று அவள் கூந்தல் தொட்டு ஈர்த்த
கை தலத்திடைக் கிடத்துவென்; காக்குதி’ என்றான். 235-

பெய்தவத்தினோர் பெண் கொடி- எங்களிடம் தங்கிய
நல்வினைத் தவத்தால் ஒப்பற்ற கொடி போன்ற பெண் ஒருத்தி;
எம்முடன் பிறந்தாள் – எங்களுடன் பிறந்தாள்;செய்த குற்றம்
ஒன்று இல் – அவள் செய்த குற்றம் ஒன்றும் இல்லை; அவள்
நாசி வெஞ்சினத்தால் கொய்த கொற்றவ- அவ்வாறு
இருப்பினும் அவளது மூக்கைக் கொடிய சீற்றத்தால் அரிந்த
வெற்றிக்குரியவனே; மற்று அவள் கூந்தல் தொட்டு ஈர்த்த-
அவளது கூந்தலைத் தொட்டு இழுத்த; கை தலத்திடைக்
கிடத்துவென்- கையை நிலத்தில் விழச் செய்யப் போகிறேன்;
காக்குதி என்றான்- காத்துக்கொள் என்றான் கும்பகருணன்.

———–

அல்லினால் செய்த நிறத்தவன் அனையது பகர,
மல்லினால் செய்த புயத்தவன், ‘மாற்றங்கள் நும்பால்
வில்லினால் சொல்லின் அல்லது, வெந் திறல் வெள்கச்
சொல்லினால் சொலக் கற்றிலம், யாம்’ எனச் சொன்னான். 236-

அல்லினால் செய்த நிறத்தவன்- இருட்டினால் செய்தது
போன்ற கருநிறத்தை உடைய கும்பகருணன்; அனையது பகர-
அவ்வாறாகச் சொற்களைச் சொல்ல;மல்லினால் செய்த
புயத்தவன் – வலிமைப் பண்பால் செய்யப்பட்ட தோளை
உடைய இலக்குவன்; நும்பால் மாற்றங்கள்- நும்மிடம்
மறுமொழிகளை; வில்லினால் சொல்லின் அல்லது-
வில்லினால் சொல்வது அல்லது; வெந்திறல் வெள்க-கொடிய
வலிமைக்கு நாணம் உண்டாக; யாம் சொல்லினால் சொலக்
கற்றிலம் – யாம் சொல்லினால் சொல்வதற்குக் கற்கவில்லை;
எனச் சொன்னான் – என்று கூறினான்.

——————–

இருவரும் செய்த பெரும்போர்

‘விண் இரண்டு கூறு ஆயது; பிளந்தது வெற்பு;
மண் இரண்டு உறக் கிழிந்தது’ என்று இமையவர் மறுக,
கண் இரண்டினும் தீ உக, கதிர் முகப் பகழி
எண்-இரண்டினோடு இரண்டு ஒரு தொடை தொடுத்து எய்தான். 237-

கண் இரண்டினும் தீ உக – கும்பகருணன் தன்
கண்ணிரண்டில் இருந்து தீ வெளிப்பட; விண் இரண்டு கூறு
ஆயது- ஆகாயம் இரண்டு பகுதியாகப் பிளவுபட்டது; வெற்பு
பிளந்தது-மலை பிளந்தது; மண் இரண்டு உறக் கிழிந்தது- மண்
இரண்டாகக் கிழிந்தது; என்று இமையவர் மறுக- என்று கருதித்
தேவர்கள் கலங்கும்படி; கதிர் முகப்பகழி – ஒளி விடுகின்ற
முனையையுடைய அம்புகள்; எண் இரண்டினோடு இரண்டு-
பதினெட்டினை, ஒரு தொடை தொடுத்து எய்தான் – ஒரு
தொடுப்பில் தொடுத்து விட்டான்.

————-

கொம்பு நாலுடைக் குலக் கரிக் கும்பத்தில் குளித்த,
உம்பர் ஆற்றலை ஒதுக்கிய, உரும் எனச் செல்வ,
வெம்பு வெஞ் சினத்து இராவணற்கு இளையவன் விட்ட
அம்பு பத்தினோடு எட்டையும் நான்கினால் அறுத்தான். 238-

வெம்பு வெஞ்சினத்து இராவணற்கு இளையவன்-வெம்புகிற
கொடிய சினத்தை உடைய இராவணனது தம்பி; விட்ட- செலுத்திய;
கொம்பு நாலுடைக் குலக் கரிக்கும்பத்தில் குளித்த – நான்கு
தந்தங்களை உடைய ஐராவதம் என்னும் யானையின் மத்தகத்தில்
பாய்ந்தனவும்; உம்பர் ஆற்றலை ஒதுக்கிய- தேவர்களின்
வலிமையைப் போக்கியனவும்; உரும் எனச் செல்வ- இடிபோல்
செல்வனவும் ஆகிய; அம்பு பத்தினோடு எட்டையும்
– பதினெட்டு அம்புகளையும்; நான்கினால் அறுத்தான்-
இலக்குவன் நான்கு அம்புகளினால் தடுத்து அறுத்திட்டான்.

—————–

அறுத்த காலையின், அரக்கனும் அமரரை நெடு நாள்
ஒறுத்தது, ஆயிரம் உருவது, திசைமுகன் உதவப்
பொறுத்தது, ஆங்கு ஒரு புகர் முகக் கடுங் கணைப் புத்தேள்,
‘இறுத்து மாற்று, இது வல்லையேல்’ என்று, கோத்து, எய்தான். 239-

அறுத்த காலையின்- இலக்குவன் தன் அம்புகளை அறுத்த
பொழுது; அரக்கனும் – கும்பகருணனும்; அமரரை நெடுநாள்
ஒறுத்தது – தேவர்களை நெடுநாள் அடக்கித் தண்டித்ததும்;
ஆயிரம் உருவது- ஆயிரம் உருவத்தை உடையதும்; திசைமுகன்
உதவப் பொறுத்தது- நான்முகன் உதவப் பெற்று வைத்துக்
கொண்டிருப்பதுமான; ஆங்கு ஒரு புகர் முகக் கடுங்கணை-
அப்போது ஒளிவிடும் முகத்தை உடைய அம்பில்; புத்தேள்
இறுத்து – தெய்வத்தைத் தங்கச் செய்து; இது வல்லையேல்
மாற்று என்று- இதனை வலிமை உடையையாயின் மாற்றுவாய்
என்று; கோத்து எய்தான்- அம்பில் கோய்த்து எய்தான்.

———–

புரிந்து நோக்கிய திசைதொறும், பகழியின் புயலால்,
எரிந்து செல்வதை நோக்கிய இராமனுக்கு இளையான்,
தெரிந்து, மற்ற அதுதன்னை ஓர் தெய்வ வெங் கணையால்
அரிந்து வீழ்த்தலும், ஆயிரம் உருச் சரம் அற்ற. 240-

புரிந்து நோக்கிய திசைதொறும் – கண்ணால் விரும்பிப்
பார்க்கும் திசையெங்கும்; பகழியின் புயலால்- அம்புகளின்
வேகத்தால்; எரிந்து செல்வதை நோக்கிய-எரிந்து போவதைக்
கண்ட; இராமனுக்கு இளையான் – இராமன் தம்பியாகிய
இலக்குவன்; மற்ற அது தன்னை- அதனை; தெரிந்து ஓர்
தெய்வ வெங்கணையால்- ஆராய்ந்து ஒப்பற்ற தெய்வக் கணை
ஒன்றால்; அரிந்து வீழ்த்தலும் – அறுத்து வீழ்த்திய அளவில்;
ஆயிரம் உருச்சரம் அற்ற – ஆயிரம் உருவம் கொண்ட
அக்கணை அழிந்தது.

————–

ஆறு-இரண்டு வெங் கடுங் கணை அனுமன்மேல் அழுத்தி,
ஏறு வெஞ் சரம் இரண்டு இளங் குமரன்மேல் ஏற்றி,
நூறும் ஐம்பதும் ஒரு தொடை தொடுத்து, ஒரு நொடியில்,
கூறு திக்கையும் விசும்பையும் மறைத்தனன், கொடியோன். 241-

வெங்கடுங்கணை- கொடிய வேகமான அம்புகள்; ஆறு
இரண்டு- பன்னிரண்டினை; அனுமன் மேல் அழுத்தி –
அனுமன் மேல் பதியுமாறு செலுத்தி;ஏறு வெஞ்சரம் இரண்டு-
பாய்கிற கொடிய அம்புகள் இரண்டினை; இளங்குமரன் மேல்
ஏற்றி – இலக்குவன் மீது செலுத்தி; ஒரு தொடை நூறும்
ஐம்பதும் தொடுத்து- ஒரு தொடுப்பினில் நூறும் ஐம்பதுமாக
அம்புகளைத் தொடுத்து; கொடியோன்- கொடிய கும்பகருணன்;
ஒரு நொடியில்- ஒரு நொடிப் பொழுதில்; கூறுதிக்கையும்
– கூறாகப்பட்டுள்ள திசைகளையும்; விசும்பையும் மறைத்தனன்-
ஆகாயத்தையும் மறைத்தான்.

—————–

மறைத்த வாளிகள் எவற்றையும், அவற்றினால் மாற்றி,
துறைத் தலம்தொறும் தலம்தொறும் நின்று தேர் சுமக்கும்
பொறைக்கு அமைந்த வெங் கரி, பரி, யாளி, மாப் பூதம்,
திறத் திறம் படத் துணித்து, அவன் தேரையும் சிதைத்தான். 242-

மறைத்த வாளிகள் எவற்றையும் – இலக்குவன் திசை,
மற்றும் விசும்பு ஆகியவற்றை மறைத்த அம்புகள்
எல்லாவற்றையும்; அவற்றினால் மாற்றி – அவ்வவற்றை
அழிக்கும் திறனுள்ள அம்புகளால் போக்கி; துறைத்தலந்
தொறும் தலந்தொறும் நின்று- பூட்டுவதற்கு உரிய இடங்கள்
தோறும் இடங்கள் தோறும் நின்று; தேர் சுமக்கும் பொறைக்கு
அமைந்த- தேரைச் சுமக்கிற சுமத்தல் தொழிலுக்கு உரிய;
வெங்கரி- கொடிய யானை; பரி- குதிரை; யாளி- யாளி;
மாப்பூதம் – பெரிய பூதம்; திறத்திறம் படத் துணிந்து-
ஆகியவற்றை திரள் திரளாக அழித்து; அவன் தேரையும்
சிதைத்தான்- அக்கும்பகருணனது தேரையும் அழித்தான்.

————–

தேர் அழிந்தது, செங் கதிர்ச் செல்வனைச் சூழ்ந்த
ஊர் அழிந்ததுபோல்; துரந்து ஊர்பவர் உலந்தார்;
நீர் அழிந்திடா நெடு மழைக் குழாத்திடை நிமிர்ந்த
பார வெஞ் சிலை அழிந்தெனத் துமிந்தது, அப் பரு வில் 243-

செங்கதிர்ச் செல்வனைச் – சிவந்த கிரணங்களை உடைய
சூரியனைச்; சூழ்ந்த ஊர் அழிந்தது போல் – சூழ்ந்திருந்த
பரிவேடம் அழிந்ததுபோல; தேர் அழிந்தது- கும்பகருணனது
தேர் அழிந்தது; துரந்து ஊர்பவர் உலந்தார் – தேரைச்
செலுத்தி நடத்தும் பாகர் அழிந்தனர்; நீர் அழிந்திடா நெடு
மழைக் குழாத்திடை- நீர் நீங்கப் பெறாத மிகுதியான மேகக்
கூட்டத்தின் இடையே; நிமிர்ந்த பார வெஞ்சிலை
அழிந்தென- உயர்ந்து தோன்றிய பெருமை மிக்க விரும்பத்தகு
வானவில் அழிந்தது போல; அப்பருவில் துமிந்தது-
கும்பகருணனுடைய அந்தப் பெரிய வில் துண்டுபட்டது.

———-

செய்த போரினை நோக்கி, இத் தேரிடைச் சேர்ந்த
கொய் உளைக் கடுங் கோள் அரி முதலிய குழுவை
எய்து கொன்றனனோ? நெடு மந்திரம் இயம்பி,
வைது கொன்றனனோ? என, வானவர் மயர்ந்தார். 244-

செய்த போரினை நோக்கி – இலக்குவன் செய்த
போரினைப் பார்த்து; இத்தேரிடைச் சேர்ந்த-
க்கும்பகருணனது தேரில் பூட்டப் பெற்ற; கொய் உளை-
வெட்டப்பட்ட பிடரி மயிரை உடைய குதிரை; கடுங்கோள் அரி
– மற்றும் கொடிய சிங்கம்; முதலிய குழுவை- முதலியவற்றின்
கூட்டத்தை; எய்து கொன்றனனோ- அம்பு எய்து கொன்றானோ; நெடு மந்திரம்
இயம்பி – சிறந்த மந்திரத்தைச் சொல்லி; வைது
கொன்றனனோ- சாபமிட்டுக் கொன்றனனோ; என- என்று;
வானவர் மயர்ந்தார் – தேவர்கள் மயங்கி நின்றார்கள்.

———-

இருவரும் தரையில் நின்று பொருதல்

ஊன்று தேரொடு சிலை இலன், கடல் கிளர்ந்து ஒப்பான்,
‘ஏன்று, மற்று இவன் இன் உயிர் குடிப்பென்’ என்று, உலகம்
மூன்றும் வென்றமைக்கு இடு குறி என்ன முச் சிகைத்தாய்த்
தோன்றும் வெஞ் சுடர்ச் சூல வெங் கூற்றினைத் தொட்டான். 245-

ஊன்று தேரொடு சிலை இலன் – ஏறிய தேரையும்
வில்லையும் இழந்தவனான கும்பகருணன்; கடல் கிளர்ந்து
ஒப்பான் – கடல் பொங்கினாற்போலச் சினந்து; அவன்
இன்னுயிர் குடிப்பென் என்று மற்று என்று- அந்த
இலக்குவன் உடைய இனிய உயிரைக் குடிப்பேன் எதிர்த்து நின்று
என்று எண்ணி; உலகம் மூன்றும் வென்றமைக்கு- மூன்று
உலகங்களையும் வென்றதற்கு; இடுகுறி என்ன – இட்ட
அடையாளம் என்னுமாறு அமைந்த; முச்சிகைத்தாய்த்
தோன்றும் – மூன்று கிளையை உடையதாய்த் தோன்றும்;
வெஞ்சுடர்ச் சூல வெங்கூற்றினைத் தொட்டான்- கொடிய
ஒளியுடைய சூலப் படையாகிய கொடிய கூற்றுவனைக் கையில்
கொண்டான்.

——————-

இழியப் பாய்ந்தனன், இரு நிலம் பிளந்து இரு கூறா,-
கிழியப் பாய் புனல் கிளர்ந்தெனக் கிளர் சினத்து அரக்கன்;
‘பழி அப்பால்; இவன் பதாதி’ என்று, அனுமன் தன் படர் தோள்
ஒழியப் பார்மிசை இழிந்து சென்று, இளவலும் உற்றான். 246-

கிளர் சினத்து அரக்கன் – பொங்கி எழுகின்ற சினத்தை
உடைய கும்பகருணன்;இருநிலம் பிளந்து இரு கூறா கிழியப்
பாய்புனல் கிளர்ந்தென – பெரிய நிலம் பிளந்து இரு
பகுதியாகும்படி பாயுந்தன்மையுள்ள கடல் பொங்கியெழுந்தது
போல்; இழியப் பாய்ந்தனன் – நிலத்தில் குதித்தான்; இவன்
பதாதி- இவன் ஊர்தியின்றித் தரையில் நிற்பவன்; அப்பால் பழி
என்று – ஆகையால் பின்பு பழி வரும் என்று; இளவலும்-
இலக்குவனும்; அனுமன் தன் படர் தோள் ஒழிய-
அனுமனுடைய பரவிய தோளைவிட்டு; பார்மிசை இழந்து
சென்று உற்றான் – நிலத்தின் மீது இறங்கிப் போய்ப் போர்
செய்யப் பொருந்தினான்.

——–

உற்ற காலையின், இராவணன், தம்பி மாடு உதவ,
இற்ற தானையின் இரு மடி இகல் படை ஏவ,
முற்றி அன்னது, முழங்கு முந்நீர் என முடுகிச்
சுற்றி ஆர்த்தது, சுமித்திரை சிங்கத்தைத் தொடர்ந்து. 247-

உற்ற காலையின் – இலக்குவன் கும்பகருணனுடன் தரையில்
போரிடப் பொருந்திய பொழுது; இராவணன் தம்பி மாடு உதவ-
இராவணன், தன் தம்பி பக்கம் உதவுவதற்காக; இற்றதானையின்
இருமடி- அழிந்த சேனையினும் இருமடங்கு; இகல்படை ஏவ-
போரிடும் படையை ஏவ; அன்னது- அந்தப் படை; முழங்கு
முந்நீர் என முடுகி- ஒலிக்கின்ற கடல் போல் ஒலித்து;
சுமித்திரை சிங்கத்தைத் தொடர்ந்து-சுமித்திரை பெற்ற சிங்கம்
போன்ற இலக்குவனைத் தொடர்ந்து சென்று; முற்றி சுற்றி
ஆர்த்தது- முற்றுகை இட்டுச் சுற்றி பேரொலி செய்தது.

————-

இரிந்து வானவர் இரியலின், மயங்கினர் எவரும்;
சொரிந்த வெம் படை துணிந்திட, தடுப்ப அருந் தொழிலால்
பரிந்த அண்ணலும், பரிவிலன் ஒரு புடை படர,
புரிந்த அந் நெடுஞ் சேனை அம் கருங் கடல் புக்கான். 248-

இரிந்து- நிலை கெட்டு; வானவர் இரியலின்- தேவர்கள்
ஓடுதலினால்; எவரும் மயங்கினர் – எல்லோரும்
தடுமாறினார்கள்; சொரிந்த வெம்படை துணிந்திட- மேலும்
மேலும் வந்த படைகள் அற்று விழும்படி; தடுப்ப
அருந்தொழிலால் – தடுப்பதற்கு அரிய போர்த் தொழிலால்;
பரிந்த அண்ணலும் – விரைந்து சென்ற பெருமைக்கு உரிய
இலக்குவனும்; பரிவிலன் – மன இரக்கம் இல்லாதவனாய்;ஒரு
புடை படர- ஒரு பக்கமாய்ச் செல்ல; புரிந்த- போர் செய்ய
விரும்பிய; அந்நெடுஞ்சேனை-அந்த பெரிய படையாகிய; அம்
கருங்கடல் புக்கான் – அழகிய கருங்கடலுட் புகுந்தான்.

——————-

முருக்கின் நாள்மலர் முகை விரிந்தாலன முரண் கண்
அரக்கர் செம் மயிர்க் கருந் தலை அடுக்கலின் அணைகள்
பெருக்கினான் பெருங் கனலிடைப் பெய்து பெய்து,
எருவை உருக்கினால் அன்ன குருதி நீர் ஆறுகள் ஓட. 249-

முருக்கின் நாள் மலர் – முள் முருங்கையின் அன்று விரியும்
தன்மை கொண்ட மலர்; முகை விரிந்தாலன- மொட்டு விரிந்தாற்
போன்று; முரண் கண் அரக்கர் – மாறுபாடு கொண்ட கண்களை
உடைய அரக்கரது; செம்மயிர்க் கருந்தலை- சிவந்த மயிரைக்
கொண்ட கருந்தலையால் கட்டப்பட்ட; அடுக்கலின் அணைகள்-
மலைகள் ஆகிய அணைகள் மூலமாக; பெருக்கினான் – வெள்ளப்
பெருக்கினால்; எருவை – செம்பினைப்; பெருங் கனலிடைப்
பெய்து பெய்து – மிகுதியான நெருப்பு இடையே பெய்து;
உருக்கினால் அன்ன-உருக்கியது போன்ற; குருதி நீர் ஆறுகள்
ஓட- இரத்த நீராலாகிய ஆறுகள் ஓட.

———-

கரியின் கைகளும், புரவியின் கால்களும், காலின்
திரியும் தேர்களின் சில்லியும், அரக்கர்தம் சிரமும்,
சொரியும் சோரியின் துறைதொறும் துறைதொறும் கழிப்ப,
நெரியும் பல் பிணப் பெருங் கரை கடந்தில, நீத்தம். 250-

கரியின் கைகளும் – யானைகளின் கைகளும்; புரவியின்
கால்களும் – குதிரைகளின் கால்களும்; காலின் திரியும்
தேர்களின் சில்லியும்- காற்றுப் போல் இயங்கும் தேர்களின்
சக்கரங்களும்; அரக்கர்தம் சிரமும் – அரக்கர்களின்
தலைகளும்; சொரியும் சோரியின்- அறுபட்ட உறுப்புக்களில்
இருந்து பெருகுகின்ற குருதிகளும்; துறைதொறும்
துறைதொறும் சுழிப்ப- இடந்தோறும் இடந்தோறும் சுழித்துக்
கொண்டிருக்க; நெரியும் பல்பிணப் பெருங்கரை- நெருங்கிக்
கிடக்கிற பல்பிணங்களால் ஆகிய பெருங்கரையைக்; கடந்தில
நீத்தம் – கடந்து அப்பால் செல்லவில்லை வெள்ளம்.

———–

கொற்ற வாள், எழு, தண்டு, வேல், கோல், மழு, குலிசம்,
மற்றும் வேறு உள படைக்கலம், இலக்குவன் வாளி
சுற்றும் ஓடுவ தொடர்ந்து இடை துணித்திட, தொகையாய்
அற்ற துண்டங்கள் படப் பட, துணிந்தன அனந்தம். 251-

கொற்றவாள் – வெற்றி பொருந்திய வாள்; எழு-
இரும்புலக்கை; தண்டு- கதை; வேல்- வேல்; கோல் – அம்பு;
மழு- கோடரி; குலிசம்- வச்சிரப் படை; மற்றும் வேறு உள
படைக்கலம் – மற்றும் வேறு உள்ள படைக்கருவிகளும்
ஆயவற்றை; இலக்குவன் வாளி- இலக்குவனது அம்புகள்;
சுற்றும் ஓடுவ தொடர்ந்து- சுற்றி ஓடிச் சென்று தொடர்ந்து;
இடை துணித்திட- இடையே துண்டித்ததனால்; தொகையாய்
அற்ற துண்டங்கள் – பெருந்தொகையாக முறிந்த துண்டுகள்;
படப்பட துணிந்தன அனந்தம் – மேலே படுந்தோறும்
துண்டமானவை மிகப்பல.

—————–

குண்டலங்களும், மவுலியும், ஆரமும், கோவை,
தண்டை, தோள்வளை, கடகம் என்று இனையன, தறுகண்
கண்ட கண்டங்களொடும் கணை துரந்தன, கதிர் சூழ்
மண்டலங்களை மாறுகொண்டு இமைத்தன, வானில். 252-

குண்டலங்களும்- குண்டலங்களும்; மவுலியும்- திருமுடியும்;
ஆரமும் – முத்தாரங்களும்; கோவை-மணிச்சரங்களும்; தண்டை
– தண்டைகளும்; தோள் வளை- தோள் வளைகளும்; கடகம்-
கடகங்களும்; என்று இனையன- என்ற இவ்வாறான
அணிகலன்களை; தறுகண் கணை- இலக்குவன் எய்த வலிய
அம்புகள்; கண்ட கண்டங்களோடும் துரந்தன- துண்டு
துண்டுகள் ஆக்கி வேகமாகச் செலுத்தின அவை; கதிர்சூழ்-
ஒளி சூழ்ந்த; மண்டலங்களை- சூரிய சந்திர நட்சத்திர
மண்டலங்களோடு; மாறு கொண்டு இமைந்தன வானில்-
மாறுபாடு கொண்டு ஒளியோடு வானில் விளங்கின.

——————

பரந்த வெண்குடை, சாமரை, நெடுங் கொடி, பதாகை,
சரம் தரும் சிலை, கேடகம், பிச்சம், மொய் சரங்கள்
துரந்து செல்வன, குருதி நீர் ஆறுகள் தோறும்
நிரந்த பேய்க்கணம் கரைதொறும் குவித்தன, நீந்தி. 253-

பரந்த வெண்குடை- பெரிய வெள்ளிய குடையும்; சாமரை-
வெண் சாமரையும்; நெடுங்கொடி- நீண்ட கொடியும்; பதாகை-
பெருங்கொடியும்; சரம்தரும் சிலை- அம்புகளைச் செலுத்தும்
வில்லும்; கேடகம் – கேடயமும்; பிச்சம் – பீலிக்குடையும்;
மொய்சரங்கள் – நெருங்கிய அம்புகளும்; குருதிநீர் ஆறுகள்
தோறும் – இரத்த ஆறுகள் தோறும்; துரந்து செல்வன-
செலுத்தப்பட்டுச் செல்பவற்றை; நிரந்த பேய்க்கணம்- திரளான
பேய்க் கூட்டங்கள்; நீந்தி கரை தொறும் குவித்தன- நீந்திக்
கரையெங்கும் குவித்தன.

———————

கும்பகருணன்-சுக்கிரீவன் போர்

ஈண்டு வெஞ் செரு இனையன நிகழ்வுழி எவர்க்கும்,
நீண்ட வெள் எயிற்று அரக்கன், மற்றொரு திசை நின்றான்,
பூண்ட வெஞ் செரு இரவி கான்முளையொடு பொருதான்;
‘காண்தகும்’ என, இமையவர் குழுக்கொண்டு, கண்டார். 254-

ஈண்டு வெஞ்செரு எவர்க்கும் இனையன நிகழ்வுழி-
இவ்வாறு இங்குக் கொடிய போர் யாவருக்கும் இத்தன்மைத்தாக
நிகழுமிடத்து; நீண்ட வெள் எயிற்று அரக்கன்- நீண்ட
வெள்ளிய பற்களை உடைய அரக்கனான கும்பகருணன்;
மற்றொரு திசை நின்றான்- வேறு ஒரு திக்கில் போய் நின்று;
இரவி கான் முளையொடு-சூரியன் மகனாகிய சுக்கிரீவனோடு;
பூண்ட வெஞ்செரு பொருதான்-கொடிய போரைச் செய்தான்;
காண்தகும் என – இப்போர் காணத்தக்கதாகும் என்று கருதி;
இமையவர் குழுக்கொண்டு கண்டார்-தேவர்கள் கூட்டமாகக்
கூடிக் கண்டார்கள்.

————-

பொறிந்து எழு கண்ணினன், புகையும் வாயினன்,-
செறிந்து எழு கதிரவன் சிறுவன்-சீறினான்,
முறிந்தன அரக்கன் மா முரண் திண் தோள்’ என,
எறிந்தனன், விசும்பில், மா மலை ஒன்று ஏந்தியே. 255-

செறிந்து எழுகதிரவன் சிறுவன்- நெருங்கி எழுகின்ற
கதிர்களையுடைய சூரியன் மகனாகிய சுக்கிரீவன்; பொறிந்து
எழு கண்ணினன் – தீப்பொறி வெளிப்படுகின்ற கண்களையும்;
புகையும் வாயினன் – புகை வெளிவருகிற வாயினையும்
உடையவனாய்ச்; சீறினான்- சினந்து; அரக்கன்
-கும்பகருணனது; மாமுரண் திண் தோள்- பெரிய மாறுபடுகிற
வலிய தோள்கள்; முறிந்தன என-முறிந்தன என்று கண்டோர் எண்ணும்படி; மாமலை ஒன்று
ஏந்தியே – பெரிய மலை ஒன்றை எடுத்து; விசும்பில்
– வானத்தில் இருந்து; எறிந்தனன் – எறிந்தான்.

———-

அம் மலை நின்று வந்து அவனி எய்திய
செம் மலை அனைய வெங் களிறும், சேனையின்
வெம் மலை வேழமும், பொருத; வேறு இனி
எம் மலை உள, அவற்கு எடுக்க ஒணாதன? 256-

அம்மலை நின்று வந்து- அந்த மலையினின்று வந்து;
அவனி எய்திய- நிலத்தை அடைந்த; செம்மலை அனைய
வெங்களிறும்- சிவந்த மலை போன்ற கொடிய யானையும்;
சேனையின் – அரக்கர் சேனையில் இருந்த; வெம்மலை
வேழமும் பொருத- கொடிய மலை போன்ற வேழமும் போர்
செய்யலாயின; வேறு இனி எம்மலை உள- இனி வேறு எந்த
மலையுள்ளது; அவற்கு எடுக்க ஒணாதன – அந்தச்
சுக்கிரீவனுக்கு எடுக்க முடியாதன.

————–

இவ்வகை நெடு மலை இழிந்த மாசுணம்
கவ்விய, நிருதர்தம் களிறும் கட்டு அற;
அவ் வகை மலையினை ஏற்று, ஓர் அங்கையால்
வவ்வினன், அரக்கன், வாள் அவுணர் வாழ்த்தினார். 257-

இவ்வகை- சுக்கிரீவன் இந்த வகையாக எறிந்த; நெடுமலை
இழிந்த மாசுணம் -பெரிய மலையில் இருந்த வெளிவந்த மலைப்
பாம்புகள்; நிருதர் தம் களிறும்- அரக்கர் தம் யானைகளும்;
கட்டு அற கவ்விய – வலிமை நீங்கும்படி கவ்வின; ஓர்
அங்கையால்- ஒப்பற்ற தன் உள்ளங் கையால்; அவ்வகை
மலையினை ஏற்று – அந்த வகைப்பட்ட மலையினை ஏற்று;
அரக்கன் வவ்வினான் – கும்பகருணன் பற்றினான்; வாள்
அவுணர் வாழ்த்தினார் -கொடிய அவுணர்கள் வாழ்த்தினார்கள்.

————-

ஏற்று ஒரு கையினால், ‘இதுகொல், நீ அடா!
ஆற்றிய குன்றம்?’ என்று, அளவு இல் ஆற்றலான்,
நீற்று இயல் நுணுகுறப் பிசைந்து, ‘நீங்கு’ எனா,
தூற்றினன்; இமையவர் துணுக்கம் எய்தினார். 258-

அளவு இல் ஆற்றலான்- அளவற்ற வலிமை உடைய
கும்பகருணன்; ஒரு கையினால் ஏற்று- சுக்கிரீவன் வீசிய
மலையினை ஒரு கையால் ஏற்று; அடா நீ-அடா நீ; ஆற்றிய
குன்றம் இது கொல்-வலிமை கொண்டு வீசிய மலை இதுதானா?;
என்று- என்று சொல்லி; நீற்று இயல் நுணுகுறப் பிசைந்து
– நீற்றின் தன்மையதாய் ஆகுமாறு பொடியாகப் பிசைந்து; நீங்கு
எனா தூற்றினன் – போ என்று சொல்லித் தூற்றி விட்டான்;
இமையவர் துணுக்கம் எய்தினார் – அப்பேராற்றல் கண்ட
தேவர்கள் அச்சம் கொண்டனர்.

———————-

சுக்கிரீவன் மேல் கும்பகருணன் எறிந்த சூலத்தை அனுமன் முறித்தல்

‘செல்வெனோ, நெடுங் கிரி இன்னும் தேர்ந்து?’ எனா,
எல்லவன் கான்முளை உணரும் ஏல்வையில், ‘கொல்!’ என
எறிந்தனன், குறைவு இல் நோன்பினோர் சொல்
எனப் பிழைப்பு இலாச் சூலம், சோர்வு இலான். 259-

எல்லவன் கான்முனை- சூரியன் மகனாகிய சுக்கிரீவன்;
நெடுங்கிரி இன்னும் தேர்ந்து – பெரிய மலையை இன்னும்
தேடிச்; செல்வனோ எனா- செல்வேனோ என்று; உணரும்
எல்வையில் – எண்ணம் கொண்ட அளவில்; சோர்வு இலான்-
சோர்வு அற்றவனாகிய கும்பகருணன்; கொல் என- கொல்
என்று சொல்லிக்; குறைவு இல் நோன்பினோர் – குறைவு
இல்லாத தவத்தவரது; சொல் எனப் பிழைப்பு இலாச்- சாபச்
சொல் போல் தவறுதல் இல்லாத; சூலம் எறிந்தனன்-
சூலத்தை எறிந்தான்.

————

‘பட்டனன் பட்டனன்’ என்று, பார்த்தவர்
விட்டு உலம்பிட, நெடு விசும்பில் சேறலும்,
எட்டினன் அது பிடித்து, இறுத்து நீக்கினான்;
ஒட்டுமோ, மாருதி, அறத்தை ஓம்புவான்? 260-

பார்த்தவர் – சூலம் வருதலைப் பார்த்தவர்கள்; பட்டனன்
பட்டனன் என்று- சுக்கிரீவன் இறந்தான் இறந்தான் என்று;
விட்டு உலம்பிட- வாய்விட்டுக் கதறுமாறு; நெடு விசும்பில் சேறலும்
– பரந்த ஆகாயத்தில் அச்சூலம் வருதலும்: அது எட்டினன்
பிடித்து – அனுமன் அச்சூலத்தை எட்டிப் பிடித்து; இறுத்து
நீக்கினான் – முறித்து அழித்தான்; அறத்தை ஓம்புவான்
மாருதி – அறத்தைப் பாதுகாப்பவனாகிய மாருதி; ஓட்டுமோ-
இச்செயல் நடக்க விடுவானோ என்றவாறு.

————

சித்திர வன முலைச் சீதை செவ்வியால்
முத்தனார், மிதிலை ஊர், அறிவு முற்றிய
பித்தன் வெஞ் சிலையினை இறுத்த பேர் ஒலி
ஒத்தது, சூலம் அன்று இற்ற ஓசையே. 261-

அன்று சூலம் இற்ற ஓசையே- என்று சூலப்படை
அனுமனால் முறிக்கப்பட்ட போது தோன்றிய ஓசை; சித்திர
வனமுலைச் சீதை- தொய்யிற் கோலம் எழுதிய அழகிய
முலைகளையுடைய சீதையினது; செவ்வியால் – அழகால்;
மிதிலை ஊர் – மிதிலையில்; முத்தனார் – முத்தி உலகுக்கு
உரிய மாலின் திருவவதாரமான இராமபிரான்; அறிவு முற்றிய
பித்தன் – அறிவு நிரம்பிய பித்தனென்ற பேர் கொண்ட
சிவபிரானது; வெஞ்சிலையினை இறுத்த பேர் ஒலி ஒத்தது-
கொடிய வில்லினை முறித்தபோது தோன்றிய பேரோசையை
ஒத்து இருந்தது.

————

கும்பகருணன் அனுமனைப் போருக்கு அறைகூவ, அவன் மறுத்தல்

நிருதனும் அனையவன் நிலைமை நோக்கியே,
‘கருதவும் இயம்பவும் அரிது, உன் கை வலி;
அரியன முடிப்பதற்கு அனைத்து நாட்டினும்
ஒரு தனி உளை; இதற்கு உவமை யாது?’ என்றான். 262-

நிருதனும் – அரக்கனாகிய கும்பகருணனும்; அனையவன்-
அந்த அனுமனது; நிலைமை நோக்கியே-தன்மையைப் பார்த்து;
உன் கை வலி கருதவும் இயம்பவும் அரிது- உன் கை
வலிமை எண்ணுதற்கும்சொல்லுதற்கும் அருமையானது; அரியன
முடிப்பதற்கு- அருஞ்செயல்களைச் செய்து முடிப்பதற்கு;
அனைத்து நாட்டினும் – எல்லா நாட்டினுள்ளும்; ஒரு தனி
உளை – ஒரு தனிப்பட்டவனாக இருக்கிறாய்; இதற்கு உவமை யாது-
உன் திறமைத் தன்மைக்கு ஒப்புக் கூற உரியது யாது?; என்றான்
– என்று கூறினான்.

—————–

‘என்னொடு பொருதியேல், இன்னும், யான் அமர்
சொன்னன புரிவல்’ என்று, அரக்கன் சொல்லலும்,
‘முன் “இனி எதிர்க்கிலேன்” என்று முற்றிய
பின், இகல் பழுது’ என, பெயர்ந்து போயினான். 263-

இன்னும் – இடையில் நிறுத்திய போரை மேலும்; என்னொடு
பொருதியேல் – தொடர்ந்து என்னோடு செய்வாய் ஆனால்;
யான் அமர் சொன்னன புரிவெல்- யான் போரை நீ சொன்ன
முறைப்படியே புரிவேன்; என்று- என்று; அரக்கன் சொல்லலும்
– கும்பகருணன் சொன்ன அளவிலே; முன் இனி எதிர்க்கிலேன்
என்று- முன்பு இனி உன்னோடு எதிர்க்க மாட்டேன் என்று;
முற்றிய பின் – போரை முடித்த பிறகு; இகல் பழுது- மீண்டும்
போரிடுவது சொன்ன சொல் தவறுவது ஆகும்; என பெயர்ந்து
போயினான் – என்று கூறிய இடத்தை விட்டு அப்பால் போயினன்.

————–

மீண்டும் சுக்கிரீவன் கும்பகருணன் போர்

அற்றது காலையில், அரக்கன், ஆயுதம்
பெற்றிலன், பெயர்ந்திலன்; அனைய பெற்றியில்,
பற்றினன், பாய்ந்து எதிர், பருதி கான்முளை
எற்றினன், குத்தினன், எறுழ் வெங் கைகளால். 264-

அற்றது காலையில்- அந்தச் சூலப்படை அழிந்த காலத்தில்;
அரக்கன் – கும்பகருணன்; ஆயுதம் பெற்றிலன்- வேறு
ஆயுதத்தைப் பெறாதவனாய் இருந்தும்; பெயர்ந்திலன்- இடத்தை
விட்டு நிலை பெயராது இருந்தான்; அனைய பெற்றியில்- அந்த
வேளையில்;பருதி கான்முளை- கதிரவன் மகனாகிய சுக்கிரீவன்; எதிர்
பாய்ந்து- கும்பகருணனுக்கு எதிரே பாய்ந்து; பற்றினன்-
பற்றி; எறுழ் வெங்கைகளால் – தன் வலிய கொடிய கைகளால்;
எற்றினன் குத்தினன் – மோதிக் குத்தினான்.

—————

அரக்கனும்,-‘நன்று, நின் ஆண்மை; ஆயினும்,
தருக்கு இனி இன்றொடும் சமையும் தான்’ எனா,
நெருக்கினன், பற்றினன், நீங்கொணாவகை,-
உருக்கிய செம்பு அன உதிரக் கண்ணினான். 265-

உருக்கிய செம்பு அன உதிரக் கண்ணினான் – சினத்தால்
உருக்கிய செம்பு போன்று குருதி குழம்பிய கண்களை உடைய;
அரக்கனும் – கும்பகருணனும்; நின் ஆண்மை நன்று- நினது
வீரம் நன்று; ஆயினும்- ஆனாலும்; இனி இன்றொடும் தருக்கு
சமையும் தான்- இனிமேல் இன்றுடன் உன் செருக்கு
அடங்கிவிடும் தான் ; எனா – என்று சொல்லி; நீங்கொணா
வகை- தப்பமுடியாதவாறு; நெருக்கினன் பற்றினன்- நெருக்கிப்
பற்றினன்;

—————–

திரிந்தனர் சாரிகை; தேவர் கண்டிலர்;
புரிந்தனர், நெடுஞ் செரு; புகையும் போர்த்து எழ
எரிந்தன, உரும் எலாம்; இருவர் வாய்களும்
சொரிந்தன, குருதி; தாம் இறையும் சோர்ந்திலார். 266-

சாரிகை திரிந்தனர்- சுக்கிரீவன் கும்பகருணனைப் பற்றிய
அளவிலே இருவரும் சாரிகை திரிந்தனர்; தேவர் கண்டிலர் –
அப்போது இன்னார் இங்கு உள்ளார் என்று தேவர்களும் காண
முடியாதவர் ஆயினர்; நெடுஞ் செரு புரிந்தனர் – இருவரும்
பெரும் போரைத் தொடங்கினர்; உரும் எலாம் எரிந்தன-
போரின் வேகத்தால் இடிகள் எல்லாம் எரிந்தன; புகையும்
போர்த்து எழ – அதனால் புகை திசைகளை மூடிக்கொண்டு
மேல் எழுந்தன; இருவர் வாய்களும் சொரிந்தன குருதி-
இருவர் வாய்களில் இருந்தும் குருதி வெளிப்பட்டன; தாம்
இறையும் சோர்ந்திலார் – தாங்கள் ஒரு சிறிதும் சோர்வு
அடைந்திலர்.

—————-

உறுக்கினர், ஒருவரை ஒருவர்; உற்று இகல்
முறுக்கினர், முறை முறை; அரக்கன் மொய்ம்பினால்
பொறுக்கிலாவகை நெடும் புயங்களால் பிணித்து
இறுக்கினான்; இவன் சிறிது உணர்வும் எஞ்சினான். 267-

ஒருவரை ஒருவர் உறுக்கினர் – அவ்விருவரும் ஒருவரை
ஒருவர் பொருந்தி நின்று அதட்டினார்கள்; முறை முறை உற்று
இகல் முறுக்கினர் – முறை முறையாகப் பொருந்திப் போரைச்
சினத்துடன் செய்தனர்; அரக்கன் – கும்பகருணன்;
மொய்ம்பினால் – வலிமையால்; பொறுக்கிலா வகை-
பொறுக்க முடியாதபடி; நெடும் புயங்களால் பிணித்து- தன்
பெரிய கைகளினால் சுக்கிரீவனைப் பிடித்து; இறுக்கினான் –
அழுத்தினான்; இவன் சிறிது உணர்வும் எஞ்சினான் – இந்தச்
சுக்கிரீவன் சிறிது உணர்வு குறையப் பெற்றான் (மூர்ச்சை
அடைந்தான்)

—————-

உணர்வு இழந்த சுக்கிரீவனைக் கும்பகருணன் எடுத்துச் செல்லுதல்

‘மண்டு அமர் இன்றொடு மடங்கும்; மன் இலாத்
தண்டல் இல் பெரும் படை சிந்தும்; தக்கது ஓர்
எண் தரு கருமம் மற்று இதனின் இல்’ என,
கொண்டனன் போயினன், நிருதர்கோ நகர். 268-

நிருதர் கோ- அரக்கர் தலைவனாகிய கும்பகருணன்; மண்டு
அமர் இன்றொடு மடங்கும்- இவனைத் தூக்கிப் போய்விட்டால்,
நெருங்கிய போர் இன்றோடு முற்றுப் பெறும்; மன் இலாத்
தண்டல் இல் பெரும்படை சிந்தும் – அரசன் இல்லாத
கெடுதலில்லாத பெரிய வானரப் பெரும்படை சிதறிவிடும்; இதனின்
தக்கது ஓர் – இதனைக் காட்டிலும் தக்கதாகிய; எண் தரு
கருமம் மற்று இல் – எண்ணிச் செய்யத்தக்க தொழில் இல்லை;
என- என்று எண்ணி; நகர் கொண்டனன் போயினன் –
நகருக்குச் சுக்கிரீவனைத் தூக்கிக் கொண்டு போனான்.

———–

உரற்றின பறவையை ஊறு கொண்டு எழ,
சிரற்றின பார்ப்பினின் சிந்தை சிந்திட, விரல்
துறு கைத்தலத்து அடித்து, வெய்துயிர்த்து,
அரற்றின, கவிக் குலம்; அரக்கர் ஆர்த்தனர், 269-

உரற்றின பறவையை- கூவிக் கொண்டிருந்த தாய்ப் பறவையை;
ஊறு கொண்டு எழ- வல்லூறு பற்றிக் கொண்டு போக; சிரற்றின பார்ப்பினின்- துன்பத்தால் அரற்றிய குஞ்சுகள்
போல; சிந்தை சிந்திட- (சுக்கிரீவனைக் கும்பகருணன் தூக்கிச்
சென்ற போது) மனம் முறிந்திட; விரல் துறு கைத்தலத்து
அடித்து- விரல்கள் நெருங்கிய கையினால் அடித்துக்கொண்டு;
வெய்துயிர்த்து- பெருமூச்சு விட்டுக்கொண்டு; கவிக்குலம்
அரற்றின – வானரக் கூட்டங்கள் வாய் விட்டுக் கதறின;
அரக்கர் ஆர்த்தனர் – அரக்கர்கள் மகிழ்ச்சிப் பேரொலி
செய்தனர்.

————

நடுங்கினர் அமரரும்; நா உலர்ந்து வேர்த்து
ஒடுங்கினர், வானரத் தலைவர்-உள் முகிழ்த்து,
இடுங்கின கண்ணினர், எரிந்த நெஞ்சினர்,
‘மடங்கினவாம் உயிர்ப்பு’ என்னும் அன்பினார். 270-

அமரரும் நடுங்கினர்- தேவர்களும் நடுங்கினார்கள்;
வானரத் தலைவர்கள் – வானரத் தலைவர்கள்; உள் முகிழ்த்து
இடுங்கிய கண்ணினர் – உள் அடங்கி இடுங்கிய கண்களைக்
கொண்டு; எரிந்த நெஞ்சினர் – எரிந்த நெஞ்சத்தை
உடையவராகி; உயிர்ப்பு மடங்கினவாம் என்னும் – அவர்களது
உயிர்ப்பும் நின்றிட்டதோ என்று கண்டோர் கருதுமாறு;
அன்பினார் – தம்மரசன் பால் அன்பு சிறந்தவராய்; நா
உலர்ந்து- நாவுலர்ந்து;வேர்த்து- உடல் வியர்த்து; ஒடுங்கினர் –
மனமகிழ்வு குன்றினர்.

————–

புழுங்கிய வெஞ் சினத்து அரக்கன் போகுவான்,
அழுங்கல் இல் கோள் முகத்து அரவம் ஆயினான்;
எழும் கதிர் இரவிதன் புதல்வன், எண்ணுற
விழுங்கிய மதி என, மெலிந்து தோன்றினான். 271-

புழுங்கிய- மனம் புழுங்குவதற்குக் காரணமான; வெஞ்சினத்து
அரக்கன் – கொடிய சினத்தை உடைய கும்பகருணன்; போகுவான்-
சுக்கிரீவனைத் தூக்கிப் போபவன்; அழுங்கலில்- வருந்துதல்
இல்லாத; கோள் முகத்து அரவம் ஆயினான் – கிரகத் தன்மை
உடைய இராகு என்னும் பாம்பு போல் ஆயினான்; கதிர் எழும் இரவிதன் புதல்வன் -கதிர்
விடுகின்ற சூரியன் மகனாகிய சுக்கிரீவன்; எண்ணுற-
கண்டார் எண்ணுமாறு; விழுங்கிய மதி என- இராகுவால்
விழுங்கப்பட்ட மதிபோல; மெலிந்து தோன்றினான் –
மெலிவுற்றுத் தோன்றினான்.

————

திக்கு உற விளக்குவான் சிறுவன்,
தீயவன் மைக் கரு நிறத்திடை மறைந்த
தன் உரு மிக்கதும் குறைந்ததும் ஆக,
மேகத்துப் புக்கதும் புறத்தும் ஆம் மதியும் போன்றனன். 272-

திக்கு உற விளங்குவான் சிறுவன்- திக்கெல்லாம் மிக்கு
ஒளி விளங்கும் கதிரவன் சிறுவனாகிய சுக்கிரீவன்; தீயவன்
– கும்பகருணனது; மைக்கரு நிறத்திடை மறைந்த தன் உரு-
மேகம் போன்ற கரிய நிறத்தில் மறைந்த தன்னுடைய நிறம்;
மிக்கதும் குறைந்ததும் ஆக- ஒரு கால் மிக்கும், ஒருகால்
குறைந்தும் தோன்றுவது; மேகத்துப் புக்கதும் புறத்தும்
ஆம்- மேகத்தின் இடையில் புக்கதும் வெளிப்பட்டதும் ஆகிற;
மதியும் போன்றனன்- சந்திரனையும் போன்றனன்.

————–

அனுமன் செய்வதறியாது கும்பகருணன் பின்போதல்

‘ஒருங்கு அமர் புரிகிலேன், உன்னொடு யான்’ என,
நெருங்கிய உரையினை நினைந்து, நேர்கிலன்,
கருங் கடல் கடந்த அக் காலன், காலன் வாழ்
பெருங் கரம் பிசைந்து, அவன் பின்பு சென்றனன். 273-

கருங்கடல் கடந்த அக்காலன் – கரிய கடலைக் கடந்த
அக்காலை உடையவனாகிய அனுமன்; உன்னொடு யான்
ஒருங்கு அமர் புரிகிலேன் – யான் உன்னோடு பொருந்த
இனிப் போர் புரிய மாட்டேன்; என- என்று; நெருங்கிய
உரையினை நேர்ந்து நேர்கிலன் – அண்மையில் கூறிய
உரையினை நினைத்து எதிர்க்காதவனாய்; காலன் வாழ்
பெருங்கரம் பிசைந்து – யமன் வாழ்கின்ற தன்
பெருங்கையைப் பிசைந்து கொண்டு; அவன் பின்பு
சென்றனன்- அக்கும்பகருணனுக்குப் பின்பு சென்றான்.

———–

ஆயிரம் பெயரவன் அடியில் வீழ்ந்தனர்,
‘நாயகர் எமக்கு இனி யாவர்’ நாட்டினில்?
காய் கதிர்ப் புதல்வனைப் பிணித்த கையினன்,
போயினன், அரக்கன்’ என்று இசைத்த பூசலார். 274-

வானரர்கள் இராமனிடம் ஓடிச் சென்று, காய் கதிர்ப்
புதல்வனைப் பிணித்தகையினன்- எரிக்கின்ற கதிர்களை
உடைய சூரியன் மகனைக் கையினால் கட்டி எடுத்துக்கொண்டு;
அரக்கன் போயினன் என்று- கும்பகருணன் போயினான்;
நாட்டினில் நாயகர் எமக்கு இனி யாவர் என்று- நாட்டில்
எமக்குத் தலைவர் யாவர் என்று; இசைத்த பூசலார் – பேரொலி
செய்தவர்களாய்; ஆயிரம் பெயரவன் -ஆயிரம் திருநாமங்களை
உடைய இராமனது; அடியில் வீழ்ந்தனர் – திருவடியில்
விழுந்தனர்.

————–

இராமன் கும்பகருணன் செல்லும் வாயிலை அடைத்தல்

தீயினும் முதிர்வுரச் சிவந்த கண்ணினான்,
காய் கணை சிலையொடும் கவர்ந்த கையினான்,
‘ஏ’ எனும் அளவினில், இலங்கை மா நகர்
வாயில் சென்று எய்தினான்-மழையின் மேனியான். 275-

மழையின் மேனியான்- மேகம் போன்ற மேனியை உடைய
இராமன்; தீயினும் முதிர்வுறச் சிவந்த கண்ணினான் –
தீயைக்காட்டிலும் முற்றிச் சிவந்த கண்ணினை உடையவன்
ஆகவும்; காய்கணை சிலையொடும் கவர்ந்த கையினான்-
எரிக்கக் கூடிய அம்புகளை வில்லுடன் கொண்ட கையினன்
ஆகவும்; ஏ எனும் அளவினில்- ஏ எனும் ஒரு நொடிப் பொழுதில்; இலங்கை
மாநகர் வாயில் சென்று எய்தினான் – இலங்கையாகிய பெரிய
நகரின் வாயிலுக்குச் சென்று சேர்ந்தான்.

————

‘உடைப் பெருந் துணைவனை உயிரின் கொண்டு போய்,
கிடைப்ப அருங் கொடி நகர் அடையின், கேடு’ என,
‘தொடைப் பெரும் பகழியின் மாரி தூர்த்து, உற
அடைப்பென்’ என்று, அடைத்தனன், விசும்பின் ஆறு எலாம். 276-

உடைப் பெருந் துணைவனை- என்னுடைய பெருந்துணைவன்
ஆகிய சுக்கிரீவனை; உயிரின் கொண்டு போய் – என் உயிரைக்
கொண்டு போவது போல் கொண்டு போய்; கிடைப்ப அருங்
கொடிநகர் – நெருங்குவதற்கு அரிய கொடியோடு விளங்குகின்ற
இலங்கை மாநகரை; அடையின் கேடு என- அடைந்தால் கேடு
என்று சொல்லி; தொடைப் பெரும் பகழியின் – தொடுத்தல்
பொருந்திய பெரிய அம்புகளின்; மாரி தூர்த்து – மழையினால்
நிரப்பி; உற அடைப்பென் – முழுதுமாக அடைப்பேன் என்று;
விசும்பின் ஆறு எலாம்- ஆகாய வழியை எல்லாம்; அடைத்தனன்
– அடைத்தான்.

————–

மாதிரம் மறைந்தன; வயங்கு வெய்யவன்
சோதியின் கிளர் நிலை தொடர்தல் ஓவின;
யாதும் விண் படர்கில; இயங்கு கார் மழை
மீது நின்று அகன்றன-விசும்பு தூர்த்தலால். 277-

விசும்பு தூர்த்தலால் மாதிரம் மறைந்தன- இராமன் அம்புகள்
ஆகாயம் எங்கும் நிரம்பியதால் திசைகள் எல்லாம் மறைந்தன;
வயங்கு வெய்யவன்- ஒளி விளங்குகின்ற சூரியனது; சோதியின்
கிளர்நிலை- ஒளிக்கதிர்களின் விளங்கும் நிலையும்; தொடர்தல்
ஓவின- தொடர்ந்து நிலத்தில் படுதலை நீங்கின; யாதும் விண்
படர்கில- எதுவும் வானத்தில் செல்ல மாட்டாது ஒழிந்தன;
இயங்கு கார் மழை மீது நின்று அகன்றன- அசைகிற கருநிற
மேகங்கள் மேல் பகுதியில் இருந்து அகன்றன.

————

கும்பகருணன் இராமனைக் காணுதல்

மனத்தினும் கடியது ஓர் விசையின் வான் செல்வான்,
இனக் கொடும் பகழியின் மதிலை எய்தினான்;
‘நினைந்து அவை நீக்குதல் அருமை, இன்று’ என,
சினக் கொடுந் திறலவன் திரிந்து நோக்கினான். 278-

மனத்தினும் கடியது ஓர் விசையின் – மனத்தைக்
காட்டிலும் விரைவான வேகத்தில்; வான் செல்வான் – வானத்து
வழியாகச் செல்பவன் ஆன; சினக் கொடுந்திறலவன் –
சினத்தொடு கொடிய வலிமை உள்ள கும்பகருணன்; இனக்கொடும்
பகழியின் மதிலை எய்தினான் – திரளாக உள்ள இராமனது
கொடிய பகழியால் ஆன மதிலை அடைந்து; நினைத்து- ஆய்ந்து;
அவை இன்று நீக்குதல் அருமை என- அவற்றை இப்போது
போக்குதல் இயலாது என்று கருதி;திரிந்து நோக்கினான் –
திரும்பிப் பார்த்தான்.

————-

கண்டனன்-வதனம், வாய், கண், கை, கால் எனப்
புண்டரீகத் தடம் பூத்து, பொன் சிலை
மண்டலம் தொடர்ந்து, மண் வயங்க வந்தது ஓர்
கொண்டலின் பொலிதரு கோலத்தான் தனை. 279-

பொன்சிலை மண்டலம் தொடர்ந்து- அழகிய வில்
வட்டம் தொடர்ந்து; மண் வயங்க வந்தது- நிலத்தில் விளங்க
வந்த; ஓர் கொண்டலின் – ஒப்பற்ற கருமேகம்;
புண்டரீகத்தடம் – தாமரைத் தடாகம் போல்; வதனம், வாய்,
கண், கை, கால்,எனப் பூத்து- முகம், வாய், கண், கை,
கால் எனத் தாமரை மலர்கள் பூக்கப் பெற்று; பொலிதரு கோலத்தான் தனை கண்டனன்- அழகாக
விளங்குகிற திருமேனிக் கோலமுடைய இராமனைக் கண்டனன்.

———

கும்பகருணன் இராமனை இடித்துரைத்தல்

மடித்த வாய் கொழும் புகை வழங்க, மாறு இதழ்
துடித்தன; புருவங்கள் சுறுக்கொண்டு ஏறிட,
பொடித்த தீ, நயனங்கள்; பொறுக்கலாமையால்,
இடித்த வான் தெழிப்பினால், இடிந்த, குன்று எலாம். 280-

மடித்த வாய் கொழும்புகை வழங்க- கும்பகருணனது
மடித்த வாய் மிகுதியான புகையை வெளிப்படுத்த; மாறு இதழ்
துடித்தன- ஒன்றற்கொன்று மாறுபட்டுடன் வாய் இதழ்கள்
துடித்தன; புருவங்கள் சுறுக் கொண்டு ஏறிட- புருவங்கள்
கோபக் குறியாக நெரித்து ஏற; நயனங்கள் தீ பொடித்த-
கண்கள் சினத் தீப்பொறியைக் கக்கின; வான் தெழிப்பினால்
இடித்த- வானம் அவனது பேரொலியால் இடிந்தது; குன்று
எலாம் இடிந்த- அதுபோலவே குன்றுகளும் ஒலியால்
இடிந்தன.

————-

‘”மாக் கவந்தனும், வலி தொலைந்த வாலி ஆம்
பூக் கவர்ந்து உண்ணியும், போலும்” என்று, எனைத்
தாக்க வந்தனை; இவன் தன்னை இன் உயிர்
காக்க வந்தனை; இது காணத் தக்கதால். 281-

மாக்கவந்தனும் – வயிறே வாயாகக் கொண்ட பெரிய
கவந்தனும்; வலி தொலைந்த வாலி ஆம் பூக்கவர்ந்து
உண்ணியும் போலும் – வலி நீங்கிய வாலியாகிய பூவைப்
பறித்து உண்ணும் குரங்கும் போல என்று கருதி; எனைத் தாக்க
வந்தனை- என்னைத் தாக்குவதற்காக வந்தாய்; இவன் தன்னை
இன் உயிர் காக்க வந்தனை- இந்தச் சுக்கிரீவனுடைய, இனிய
உயிரைக் காக்க வந்தாய்; இது காணத்தக்கதால்- இச்செயலைக்
காண்போம்.

————-

‘உம்பியை முனிந்திலேன், அவனுக்கு ஊர்தியாம்
தும்பியை முனிந்திலேன், தொடர்ந்த வாலிதன்
தம்பியை முனிந்திலேன், சமரம் தன்னில் யான்-
அம்பு இயல் சிலையினாய்!-புகழ் அன்று ஆதலால். 282–

அம்பு இயல் சிலையினாய்- அம்பு தொடுக்கப் பட்ட
வில்லினை உடையவனே; யான் சமரம் தன்னில்- நான் போர்
தன்னில்; உம்பியை முனிந்திலேன் – உன் தம்பியைச்
சினந்தேன் இல்லை; அவனுக்கு ஊர்தியாம் தும்பியை
முனிந்திலேன் – அவனுக்கு ஊர்தியாக அமைந்த யானை
போன்றவனான அனுமனைச் சினந்தேனில்லை;. தொடர்ந்த
வாலி த ன் தம்பியை முனிந்திலேன் – என்னைத் தொடர்ந்து
வந்த வாலியின் தம்பியாகிய சுக்கிரீவனைச் சினந்தேனில்லை;
புகழ் அன்று ஆதலால்- (எனக்குச் சமம் ஆனவர்கள் அல்ல)
அவர்களை வெல்வது எனக்குப் புகழ் தருவதன்று ஆகையால்.

—————

‘தேடினென் திரிந்தனென் நின்னை; திக்கு இறந்து
ஓடியது உன் படை; உம்பி ஓய்ந்து, ஒரு பாடு உற
நடந்தனன்; அனுமன் பாறினன்;
ஈடுறும் இவனைக் கொண்டு, எளிதின் எய்தினேன். 283-

நின்னைத் தேடினென் திரிந்தனென் – உன்னைத் தேடித்
திரிந்தேன்; உன் படை திக்கு இறந்து ஓடியது- உனது படை
திக்கைக் கடந்து ஓடியது; உம்பி ஓய்ந்து ஒருபாடு உற
நடந்தனன் – உன் தம்பி வலி ஓய்ந்து ஒரு பக்கம் பொருந்த
நடந்தான்; அனுமன் பாறினான் – அனுமன் வலி கெட்டு
ஓடிவிட்டான்; ஈடுறும் – போர் செய்ய வந்த; இவனை-
இச்சுக்கிரீவனை; கொண்டு எளிதின் எய்தினேன் – எடுத்துக்
கொண்டு எளிதாக அடைந்தேன்.

————-

‘காக்கிய வந்தனை என்னின், கண்ட என்
பாக்கியம் தந்தது, நின்னை; பல் முறை
ஆக்கிய செரு எலாம் ஆக்கி, எம்முனைப்
போக்குவென், மனத்துறு காதல் புன்கண் நோய். 284-

காக்கிய வந்தனை என்னின் – இச்சுக்கிரீவனைக்
காப்பாற்றுவதற்காக வந்தாய் என்னின்; நின்னைக் கண்ட
என் பாக்கியம் தந்தது- நின்னை, என்னிடம் விளைந்த என்
பாக்கியம் தந்துள்ளது; பல்முறை ஆக்கிய செரு எலாம்
ஆக்கி – முன்பு பலமுறை செய்துள்ள வீரப்போரை எல்லாம்
இன்று இப்பொழுது செய்து;எம்முனை- என் அண்ணணுடைய;
மனத்துறு காதல் புன்கண் நோய் போக்குவென- மனத்தில்
பொருந்திய காதல் ஆகிய வருத்தம் தரும் நோயைப்
போக்குவேன்.

——–

‘ஏதி வெந் திறலினோய்! இமைப்பிலோர் எதிர்,
பேது உறு குரங்கை யான் பிணித்த கைப் பிணி,
கோதை வெஞ் சிலையினால், கோடி வீடு எனின்,
சீதையும் பெயர்ந்தனள், சிறை நின்றாம்’ என்றான். 285-

ஏதி வெந்திறலினோய்- படைக்கலத்தால் செய்யும் போரில
கொடிய திறமை வாய்ந்தவனே; இமைப்பிலோர் எதிர்
– தேவர்கள் முன்னிலையில்; பேது உறு குரங்கை-
மனங்கலங்கிய குரங்காகிய சுக்கிரீவனை; யான் பிணித்த
கைப்பிணி- யான் கட்டிய கைப்பிணிப்பை; கோதை வெஞ்
சிலையினால் – கட்டமைந்த கொடிய வில்லினால்; வீடு கோடி
எனின்- விடுவித்து விட்டாய் ஆனால்; சீதையும் சிறை
நின்று பெயர்ந்தனள் ஆம் – சீதையும் சிறையில் இருந்து
விடுபட்டவள் ஆவாள்; என்றான் – என்று கும்பகருணன்
கூறினான்.

————–

இராமனின் வஞ்சினம்

என்றலும், முறுவலித்து, இராமன், ‘யானுடை
இன் துணை ஒருவனை எடுத்த தோள் எனும்,
குன்றினை அரிந்து யான் குறைக்கிலேன் எனின்,
பின்றினென் உனக்கு; வில் பிடிக்கிலேன்’ என்றான். 286-

என்றலும்- என்று கும்பகருணன் கூறியவுடன்; இராமன்
முறுவலித்து- இராமன் புன்சிரிப்புச் சிரித்து; யானுடை –
என்னுடைய; இன்துணை ஒருவனை – இனிய துணையாகிய
சுக்கிரீவனை; எடுத்த தோள் எனும் குன்றினை- தூக்கிச் சென்ற
தோள் என்கிற குன்றை; யான் அரிந்து குறைக்கிலேன் எனின்-
நான் வெட்டி வீழ்த்திலேன் எனின்; உனக்குப் பின்றினென் –
உனக்குத் தோற்றவன் ஆவேன்; வில் பிடிக்கிலேன் என்றான்
– வில்லைப் பிடிப்பதில்லை என்று சபதம் இட்டான்.

—————

மீட்டு அவன், சரங்களால் விலங்கலானையே
மூட்டு அற நீக்குவான் முயலும் வேலையில்,
வாள் தலை பிடர்த்தலை வயங்க, வாளிகள்,
சேட்டு அகல் நெற்றியின், இரண்டு சேர்த்தினான். 287-

அவன் மீட்டு – இராமன் மீண்டும்; சரங்களால்
விலங்கலானையே- அம்புகளால் மலை போலும் சுக்கிரீவனை;
மூட்டு அற நீக்குவான் முயலும் வேலையில் –
தடையில்லாமல் நீக்குவதற்கு முயல்கின்ற காலத்தில்; பிடர்த்தலை
வயங்க வாள் தலை வாளிகள் – பிடர்த் தலையருகிலிருந்த
அம்பறாத் தூணியில் இருந்து விளங்குகின்ற வாளின் தலை போன்ற
கூரிய அம்புகள்; இரண்டு- இரண்டை; சேட்டு அகல் நெற்றியின்
சேர்த்தினான் – கும்பகருணனது உயர்ந்து அகன்ற நெற்றியில்
பாய்ச்சினான்.

———–

கும்பகருணன் குருதியால் சுக்கிரீவன் மயக்கம் தெளிதல்

சுற்றிய குருதியின் செக்கர் சூழ்ந்து எழ,
நெற்றியின் நெடுங் கணை ஒளிர நின்றவன்,
முற்றிய கதிரவன் முளைக்கும் முந்து வந்து,
உற்று எழும் அருணனது உதயம் போன்றனன். 288-

சுற்றிய குருதியின் – அம்பு பட்டதனால் எழுந்து சூழ்ந்த
குருதியால்;செக்கர் சூழ்ந்து எழ – செவ்வானம் சுற்றிலும்
தோன்ற; நெற்றியின் நெடுங்கணை ஒளிர நின்றவன்-
நெற்றியில் நீண்ட இரண்டு கணைகள் விளங்க நின்ற
கும்பகருணன்; முற்றிய கதிரவன் முளைக்கும் முந்து – பல
கதிர்களை உடைய சூரியன் தோன்றுவதற்கு முன்பு; வந்து உற்று
எழும் – வந்து பொருந்தித் தோன்றுகின்ற; அருணனது உதயம்
போன்றனன் – அருணனது உதயத்தையொத்தான்.

————

குன்றின் வீழ் அருவியின் குதித்துக் கோத்து இழி
புன் தலைக் குருதி நீர் முகத்தைப் போர்த்தலும்,
இன் துயில் உணர்ந்தென, உணர்ச்சி, எய்தினான்;
வன் திறல் தோற்றிலான் மயக்கம் எய்தினான். 289-

குன்றின் வீழ் அருவியின் – மலையில் இருந்து விழுகின்ற
அருவி போல; குதித்துக் கோத்து இழி – கும்பகருணனது
நெற்றியில் இருந்து குதித்துக் கொண்டு ஒன்று சேர்ந்து
விழுகின்ற; குருதி நீர் – இரத்தமாகிய நீர்; புன்தலை
முகத்தைப் போர்த்தலும் – புல்லிய நிலையோடு கூடிய
சுக்கிரீவனது முகத்தை நிறைத்தலும்; இன்துயில் உணர்ந்து என
– இனிய தூக்கத்தில் இருந்து எழுந்தமை ஒப்ப; உணர்ச்சி
எய்தினான் – நினைவு உணர்ச்சியை அடைந்தான்; வன்திறல்
தோற்றிலான்- (அப்போது) இதுவரை யாரிடத்தும் வலிய
திறல் தோலாதவனாகிய கும்பகருணன்; மயக்கம் எய்தினான் –
மயக்கம் அடைந்தான்.

———–

சுக்கிரீவன், கும்பகருணன் மூக்கையும் காதையும் கடித்துச் செல்லுதல்

நெற்றியில் நின்று ஒளி நெடிது இமைப்பன
கொற்றவன் சரம் எனக் குறிப்பின் உன்னினான்;
சுற்றுற நோக்கினன், தொழுது வாழ்த்தினான்-
முற்றிய பொருட்கு எலாம் முடிவுளான் தனை. 290-

நெற்றியில் நின்று – கும்பகருணனது நெற்றியில் ஊன்றி
நின்று; ஒளி நெடிது இமைப்பன- ஒளி கொண்டு விளங்குவன;
கொற்றவன் சரம் என- வெற்றிக்குரிய இராமனது அம்பு என்று;
குறிப்பின் உன்னினான் – குறிப்பால் உணர்ந்தான்; சுற்றுற
நோக்கினான் – சுற்றுறப் பார்த்து; முற்றிய பொருட்கு
எலாம் முடிவுளான் தனை- உலகத்தில் நிரம்பிய பொருள்கள்
எல்லாம் முடிவாக அடைதற்கு உரிய அவதார அம்சமான
இராமனை; தொழுது வாழ்த்தினான் – கையால் தொழுது
வாழ்த்தினான்.

—————

கண்டனன் நாயகன் தன்னை, கண்ணுறா,
தண்டல் இல் மானமும் நாணும் தாங்கினான்,
விண்டவன் நாசியும் செவியும் வேரொடும்
கொண்டனன், எழுந்து போய்த் தமரைக் கூடினான். 291-

நாயகன் தன்னைக் கண்டனன் – (சுக்கிரீவன்) தலைவனாகிய
இராமனைக் கண்டான்; கண்ணுறா- பார்த்து; தண்டல் இயல்
மானமும் – குறைதல் இல்லாத மானத்தையும்; நாணும்
தாங்கினான் – நாணத்தையும் தாங்கினவன் ஆகி; விண்டவன் –
பகைவனான கும்பகர்ணனது; நாசியும் செவியும் – மூக்கையும்
காதையும்; வேரொடும் கொண்டனன் – வேரோடு கொண்டு;
எழுந்து போய் தமரைக் கூடினான் – புறப்பட்டுச் சென்று
தம்மவருடன் கூடினான்.

————–

சுக்கிரீவனைக் கண்டு யாவரும் மகிழ்தல்

வானரம் ஆர்த்தன; மறையும் ஆர்த்தன;
தான் அர மகளிரும் தமரும் ஆர்த்தனர்;
மீன் நரல் வேலையும் வெற்பும் ஆர்த்தன;
வானவரோடு நின்று அறமும் ஆர்த்ததே. 292-

வானரம் ஆர்த்தன- சுக்கிரீவன் திரும்பி வந்தது கண்டு
குரங்குகள் ஆரவாரித்தன; மறையும் ஆர்த்தன- வேதங்களும்
ஆரவாரித்தன; தான் அர மகளிரும் – தேவ மகளிரும்; தமரும்
ஆர்த்தனர் – உறவினர்களும் பேரொலி செய்தனர்; மீன்
நரல் வேலையும் – மீன்கள் ஒலிக்கும் கடலும்; வெற்பும்
ஆர்த்தன- மலையும் ஒலி செய்தன; வானவரோடு நின்று
அறமும் ஆர்த்ததே – தேவர்களுடன் சேர்ந்து நின்று
அறக்கடவுளும் ஆரவாரம் செய்தது.

————-

காந்து இகல் அரக்கன் வெங் கரத்துள்
நீங்கிய ஏந்தலை அகம் மகிழ்ந்து, எய்த நோக்கிய
வேந்தனும், சானகி இலங்கை வெஞ் சிறைப்
போந்தனளாம் என, பொருமல் நீங்கினான். 293-

காந்து இகல் அரக்கன்- சினங்கொள்ளும் தன்மை உள்ள
வலிமை பெற்ற கும்பகருணனுடைய; வெங்கரத்துள் நீங்கிய
ஏந்தலை- கொடிய கைகளில் இருந்து தப்பி வெளிப்பட்ட
சுக்கிரீவனை; அகம் மகிழ்ந்து- மனம் மகிழ்வுற்று; எய்த
நோக்கிய வேந்தனும் – முழுமையாகப் பார்த்த இராமனும்;
சானகி இலங்கை வெஞ்சிறைப் போந்தனளாம் என-
சானகி இலங்கையின் கொடிய சிறையில் இருந்து மீண்டும்
திரும்பி வந்து சேர்ந்தனளாம் என; பொருமல் நீங்கினான் –
துன்பம் நீங்கி மகிழ்ச்சி அடைந்தான்.

————–

மத்தகம் பிளந்து பாய் உதிரம் வார்ந்து எழ,
வித்தகன் சரம் தொட, மெலிவு தோன்றிய
சித்திரம் பெறுதலின், செவியும் மூக்கும் கொண்டு
அத் திசைப் போயினன் அல்லது, ஒண்ணுமோ? 294-

மத்தகம் பிளந்து – நெற்றி பிளந்து; பாய் உதிரம்
வார்ந்து எழ – பாய்கின்ற குருதி மிகுதியாக வெளிப்பட;
வித்தகன் சரம் தொட – இராமன் அம்புகளைத் தொடுத்து விட்டதனால்; மெலிவு
தோன்றிய – மெலிவை அடைந்த; சித்திரம் பெறுதலின் –
தக்க சமயம் கிடைத்ததனால்; செவியும் மூக்கும் கொண்டு-
காதையும் மூக்கையும் கடித்துக்கொண்டு; அத்திசைப் போயினன்
– தமர் இருந்த அந்த இடத்தைப் போய்ச் சேர்ந்தான்;
அல்லது ஒண்ணுமோ- அவ்வாறில்லா விட்டால் முடியுமோ?

————-

உணர்வு பெற்ற கும்பகருணன் வாட் போர் புரிதல்

அக் கணத்து அறிவு வந்து அணுக, அங்கைநின்று
உக்கனன் கவி அரசு என்னும் உண்மையும்,
மிக்கு உயர் நாசியும் செவியும் வேறு இடம்
புக்கதும், உணர்ந்தனன்-உதிரப் போர்வையான். 295-

உதிரப் போர்வையான் – குருதியே போர்வையாகப்
போர்க்கப்பட்ட கும்பகருணன்; அக்கணத்து- மூக்கும் செவியும்
பறிக்கப்பட்ட அந்தக் கணத்தில்; அறிவு வந்து அணுக- மயக்க
நிலை நீங்கி அறிவு வந்து விளங்க; கவி அரசு – குரங்குகளுக்குத்
தலைவனாகிய சுக்கிரீவன்; அங்கை நின்று உக்கனன் என்னும்
உண்மையும் – தன் அகங்கையில் இருந்து அப்பால் சென்று
விட்டான் என்ற உண்மையையும்; மிக்கு உயர் நாசியும் – மிக
உயர்ந்து தோன்றுகிற மூக்கும்; செவியும்- காதுகளும்; வேறு
இடம் புக்கதும் உணர்ந்தனன் – வேறு இடத்திற்குப் போய்
விட்டதையும் உணர்ந்தான்

———-

தாது ராகத் தடங் குன்றம், தாரை சால்
கூதிர் கால் நெடு மழை சொரிய, கோத்து இழி
ஊதையோடு அருவிகள் உமிழ்வது ஒத்தனன்-
மீது உறு குருதி யாறு ஒழுகும் மேனியான். 296-

மீது உறு குருதியாறு ஒழுகும் மேனியான்- நெற்றி மேல்
பெருகிய ஆறு போன்ற இரத்தம் ஒழுகப் பெற்ற உடம்பினை
உடையவனான கும்பகருணன்; தாதுராகத் தடங் குன்றம் –
காவிக்கல்லால் ஆகிய சிவந்த நிறத்தைக் கொண்ட பெரிய
மலையானது; தாரை சால் கூதிர் கால் நெடுமழை சொரிய-
தாரையாக மிகுதியும் குளிர்ச்சியை வெளியிடுகின்ற
கூதிர்ப்பருவ பெருமழை பொழிய; கோத்து இழி அருவிகள்-
வெள்ளம் ஒன்று சேர்ந்து ஓடிவருகிற அருவிகளை;ஊதையோடு-
வாடைக் காற்றோடு; உமிழ்வது ஒத்தனன்- வெளியிடுவதை
ஒத்தனன்.

—————-

எண்ணுடைத் தன்மையன், இனைய எண் இலாப்
பெண்ணுடைத் தன்மையன் ஆய பீடையால்,
புண்ணுடைச் செவியொடு மூக்கும் பொன்றலால்,
கண்ணுடைச் சுழிகளும் குருதி கால்வன. 297-

எண்ணுடைத் தன்மையன்- ஆராய்தல் தன்மை உடைய
இராவணன்; இனைய- இவ்வாறான நிலையினை எண்ணாது; எண்
இலாப் பெண்ணுடைத் தன்மையன் – ஆய்தல் இல்லாத
சூர்ப்பனகையின் சொல் கேட்ட தன்மையன் ஆனதால்; ஆய
பீடையால்- ஏற்பட்ட போரில்; புண்ணுடைச் செவியொடு
மூக்கும் பொன்றலால் – கும்பகருணனுடைய புண்ணையுடைய
காதுகளுடன் மூக்கும் அழிதலால்; கண்ணுடைச் சுழிகளும்
குருதி கால்வன- அவனுடைய கண்ணுடைய வட்டங்களும்
குருதியை வெளிப்படுத்துவனவாயின.

————–

ஏசியுற்று எழும் விசும்பினரைப் பார்க்கும்; தன்
நாசியைப் பார்க்கும்; முன் நடந்த நாளுடை
வாசியைப் பார்க்கும்; இம் மண்ணைப் பார்க்குமால்-
‘சீ சீ உற்றது!’ எனத் தீயும் நெஞ்சினான். 298-

உற்றது – தனக்கு நேர்ந்தது; சீசீ எனத் தீயும்
நெஞ்சினான் – சீசீ என்று சொல்லி வேகின்ற நெஞ்சை உடைய
கும்பகருணன்; ஏசியுற்று எழும் விசும்பினரைப் பார்க்கும்-
தன்னை ஏசிக்கொண்டு எழுகின்ற தேவர்களைப் பார்ப்பான்;
தன் நாசியைப் பார்க்கும் – தன் மூக்கைப் பார்ப்பான்;
முன் நடந்த நாளுடை வாசியைப் பார்க்கும் – முன் வெற்றி
பெற்று நடந்த நாளுக்கும் இதற்கும் உள்ள வேறுபாட்டை
எண்ணிப் பார்ப்பான்; இம்மண்ணைப் பார்க்குமால்- இந்த
நிலத்தைப் பார்ப்பான்.

——–

‘என்முகம் காண்பதன் முன்னம், யான் அவன்-
தன் முகம் காண்பது சரதம் தான்’ என,
பொன் முகம் காண்பது ஓர் தோலும், போரிடை
வல் முகம் காண்பது ஓர் வாளும், வாங்கினான். 299-

என்முகம் காண்பதன் முன்னம் – என்னுடைய முகத்தைக்
காண்பதற்கு முன்பு; யான் அவன் தன் முகம் காண்பது சரதம்
தான் என- யான் அந்த இராமன் தன் முகத்தைப் பார்ப்பது
நல்லது என்று கருதி; பொன்முகம் காண்பது ஓர் தோலும் –
ஒளி பொருந்திய முகப் பகுதியைக் கொண்ட ஒரு கேடயத்தையும்;
போரிடை வல்முகம் காண்பது ஓர்வாளும் – போரில் வலிய
வாய் கொண்டு பொருவதான ஒப்பற்ற வாளையும்; வாங்கினான் –
எடுத்தான்.

———-

விதிர்த்தனன்; வீசினன், விசும்பின் மீன் எலாம்
உதிர்த்தனன்; உலகினை அனந்தன் உச்சியோடு
அதிர்த்தனன்; ஆர்த்தனன்-ஆயிரம் பெருங்
கதிர்த் தலம் சூழ் வடவரையின் காட்சியான். 300-

ஆயிரம் பெருங் கதிர்த்தலம் சூழ் – ஆயிரத்தினும் மிக்க
கதிர்களைக் கொண்ட சூரிய மண்டலம் சுற்றி வருகின்ற;
வடவரையின் காட்சியான் – வடமேரு என்று கூறத்தக்க
தோற்றத்தை உடையவனான கும்பகருணன்; விதிர்த்தனன்
வீசினன் – கேடயத்தை அசைத்து வீசி; விசும்பின் மீன்
எலாம் உதிர்த்தனன் – வானத்தில் உள்ள மீன்கள் எல்லாம்
உதிர்த்தான்; உலகினை அனந்தன் உச்சியோடு அதிர்த்தனன் ஆர்த்தனன்-
ஆதிசேடனுடைய உச்சியில் உள்ள உலகினை அதிரச் செய்து
பேரொலி செய்தான்.

—————-

வீசினன் கேடகம்; முகத்து வீங்கு கால்,
கூசின குரக்கு வெங் குழுவைக் கொண்டு எழுந்து,
ஆசைகள் தோறும் விட்டு எறிய, ஆர்த்து எழும்
ஓசை ஒண் கடலையும் திடர் செய்து ஓடுமால். 301-

வீசினன்- கும்பகருணன் வீசி எறிந்த; கேடகம் முகத்து
வீங்குகால்- கேடயத்தின் முகத்தில் இருந்து மிகுதியாகத்
தோன்றிய காற்றானது; கூசின குரங்கு வெங்குழுவைக் கொண்டு-
அச்சம் கொண்ட குரங்குகளின் கொடிய கூட்டத்தைக் கொண்டு;
எழுந்து ஆசைகள் தோறும் விட்டு எறிய- சென்று திக்குகள்
தோறும் விட்டு எறிய; ஆர்த்து எழும் ஓசை ஒண்கடலையும்
திடர் செய்தது- அக்குரங்குக் கூட்டங்கள் ஆர்த்து எழுகின்ற
ஓசையைக் கொண்ட ஒள்ளிய கடலையும்; திடர் செய்து
ஓடுமால் – மேடாகச் செய்த வண்ணம் ஓடிற்று என்க.

——————

தோல் இடைத் துரக்கவும், துகைக்கவும் சுடர்
வேலுடைக் கூற்றினால் துணிய வீசவும்,
காலிடைக் கடல் எனச் சிந்தி, கை கெட,
வாலுடை நெடும் படை இரிந்து மாய்ந்ததால். 302-

தோல் இடைத் துரக்கவும்- கும்பகருணன் கேடயத்தை
இடைய விரையச் செலுத்துவதாலும்; துகைக்கவும் – தன்
காலினால் துகைத்தலாலும்; சுடர் வேலுடைக் கூற்றினால்
துணிய வீசவும் – ஒளி பொருந்திய வேலாகிய யமனால்
துண்டுபட வீசுவதாலும்; காலிடைக் கடல் என- பெருங்காற்று
வீசுவதனால் உடைதலைக் கொண்ட கடலைப் போல; சிந்தி-
சிதற; கைகெட- செயலறவு கெட்டு; வாலுடை நெடும்படை-
வாலையுடைய பெரிய குரங்குப் படை; இரிந்து மாய்ந்ததால்-
நிலை கெட்டு அழிந்தது.

————

ஏறுபட்டதும், இடை எதிர்ந்துளோர் எலாம்
கூறுபட்டதும், கொழுங் குருதி கோத்து இழிந்து
ஆறுபட்டதும், நிலம் அனந்தன் உச்சியும்
சேறுபட்டதும், ஒரு கணத்தில் தீர்ந்தவால். 303-

இடை எதிர்ந்துளோர் எலாம் – கும்பகருணனைப்
போர்க்களத்தில் எதிர்த்தவர் எல்லாம் (படைக்கலங்களால்);
ஏறுபட்டதும் – வடுப்பட்டதும்; கூறுபட்டதும்- துண்டம்
துண்டமாகியதும்; கொழுங் குருதி கோத்து இழிந்து
ஆறுபட்டதும் – மிகுதியாக குருதி வெள்ளமாகக் கோத்துத்
திரண்டு பெருகி ஆறாக ஓடியதும்; நிலம் அனந்தன் உச்சியும்
சேறுபட்டதும் – நிலமும் அதனைத் தாங்கியுள்ள ஆதிசேடனது
உச்சியும் சேறாக ஆனதும்; ஒரு கணத்தில் தீர்ந்தவால்-
ஆகிய செயல்கள் ஒரு கணத்தில் நடந்து முடிந்தன.

—————-

இராமன்-கும்பகருணன் போர்

‘இடுக்கு இலை; எதிர் இனி இவனை இவ் வழித்
தடுக்கிலையாம் எனின், குரங்கின் தானையை
ஒடுக்கினை, அரக்கரை உயர்த்தினாய்’ எனா
முடுக்கினன், இராமனைச் சாம்பன் முன்னியே. 304-

இடுக்கு இலை – இனிமேல் இப்படிப்பட்ட நெருக்கடியான
நேரம் ஏற்படப் போவதில்லை; எதிர் இனி இவனை இவ்வழித்
தடுக்கிலையாம் எனின் – எதிர் நின்று இப்போது இவனை
இவ்விடத்தில் தடுக்காமல் போவாய் ஆனால்; குரங்கின்
தானையை ஒடுக்கினை- குரங்குப் படையை ஒடுக்கி; அரக்கரை
உயர்த்தினாய் என- அரக்கர் வலிமை கொள்ள உயர்த்தியவன்
ஆவாய் என்று;இராமனைச் சாம்பன் முண்னியே முடுக்கினன்
– இராமனைச் சாம்பவான் நெருங்கிப் போரிடத் தூண்டினான்.

————

அண்ணலும் தானையின் அழிவும், ஆங்கு அவன்
திண் நெடுங் கொற்றமும், வலியும், சிந்தியா,
நண்ணினன்-நடந்து எதிர், ‘நமனை இன்று இவன்
கண்ணிடை நிறுத்துவென்’ என்னும் கற்பினான். 305-

அண்ணலும் – தலைமைத் தன்மை உள்ள இராமனும்;
தானையின் அழிவும்- குரங்குச் சேனையின் அழிவையும்;
ஆங்கு அவன் திண் நெடுங் கொற்றமும் – அப்போது
அக்கும்பகருணனுடைய உறுதியான பெரிய வெற்றியையும்;
வலியும் சிந்தியா- வலிமையையும் சிந்தித்து; நமனை இன்று
இவன் கண்ணிடை நிறுத்துவென்- யமனை இப்போது இவன்
கண்ணுக்கு எதிர் நிறுத்துவேன்; என்னும் கற்பினான் – என்னும்
மனத்திண்மையோடு; நடந்து எதிர் நண்ணினன்-
கும்பகருணனுக்கு எதிராக நடந்து நெருங்கினான்.

————–

ஆறினோடு ஏழு கோல், அசனி ஏறு என,
ஈறு இலா விசையன இராமன் எய்தனன்;
பாறு உகு சிறை என விசும்பில் பாறிட
நூறினான் வாளினால், நுணங்கு கல்வியான். 306-

ஆறினோடு ஏழுகோல் – பதின்மூன்று அம்புகளை; அசனி
ஏறு என- இடியேறு போல; ஈறு இலா விசையன- எல்லை இல்லா
விரைவுடையனவாய்; இராமன் எய்தனன்- இராமன் கும்பகருணன்
மேல் எய்தான் (அவற்றை); நுணங்கு கல்வியான்- நுட்பமான
போர்க்கல்வி அறிந்த கும்பகருணன்; விசும்பில்- ஆகாயத்தில்;
பாறு உகு சிறை என பாறிட- பருந்து உகுக்கின்ற இறகுகள்
போல சிதறி விழும்படி; வாளியால் நூறினான் – தன் அம்புகளால்
பொடியாக்கி அழித்தான்.

———————

ஆடவர்க்கு அரசனும், தொடர, அவ் வழி,
கோடையின் கதிர் எனக் கொடிய கூர்ங் கணை
ஈடு உறத் துரந்தனன்; அவையும் இற்று உக,
கேடகப் புறத்தினால் கிழிய வீசினான். 307-

ஆடவர்க்கு அரசனும்- ஆடவர்க்குத் தலைவன் ஆகிய
இராமனும்; தொடர – தொடர்ச்சியாக; அவ்வழி- அப்போது;
கோடையின் கதிர் எனக் – கோடைக்காலத்துக் கதிரவனின்
கதிர்கள் போல உள்ள; கொடிய கூர்ங்கணை- கொடுமையுள்ள
கூர்மையான அம்புகளை; ஈடு உறத் துரந்தனன்- வலிமை
பொருந்தச் செலுத்தினான்; அவையும் இற்று உக கிழிய-
அவ்வம்புகள் முறிந்து விழவும், கிழியவும்; கேடகப்
புறத்தினால் வீசினான் – கும்பகருணன் கேடயத்தின்
பின்புறத்தால் வீசினான்.

————

சிறுத்தது ஓர் முறுவலும் தெரிய, செங் கணான்,
மறித்து ஒரு வடிக் கணை தொடுக்க, மற்று அவன்
ஒறுத்து ஒளிர் வாள் எனும் உரவு நாகத்தை
அறுத்தது கலுழனின், அமரர் ஆர்க்கவே. 308-

சிறுத்தது ஓர் முறுவலும் தெரிய- சிறிதாகிய ஒப்பற்ற
புன்முறுவல் தோன்ற; செங்கணான் – சிவந்த தாமரைக்
கண்ணனாகிய இராமன்; மறித்து ஒரு வடிக்கணை தொடுக்க-
மீண்டும் ஒரு கூர்மையான அம்பைச் செலுத்த; மற்று அவன்-
(அது) அவனுடைய; ஒறுத்து ஒளிர் வாள் எனும் உரவு
நாகத்தை- பகைவரை வெட்டி ஒளிவிடுகின்ற வாள் என்னும்
வலிய நாகத்தை; அமரர் ஆர்க்கவே- தேவர்கள் பேரொலி
செய்ய; கலுழனின் அறுத்தது- கருடனைப் போல் அறுத்து
வீழ்த்தியது.

——————

‘அற்றது தடக் கை வாள் அற்றது இல்’ என,
மற்று ஒரு வயிர வாள் கடிதின் வாங்கினான்,
‘முற்றினென் முற்றினென்’ என்று, முன்பு வந்து,
உற்றனன்-ஊழித் தீ அவிய ஊதுவான். 309-

ஊழித்தீ அவிய ஊதுவான்- ஊழிக்காலத்துத் தீயும்
அவியும்படி பெருமூச்சு விடுபவனாகிய அக்கும்பக்கருணன்;
தடக்கை வாள் அற்றது- பெரிய கையில் உள்ள வாள்
அழிந்தது; அற்றது இல் என- அழிய வில்லை என்று
கண்டோர் எண்ணும்படி; மற்று ஒரு வயிர வாள் கடிதின்
வாங்கினான் – வேறு ஒரு வலிமையான வாளை விரைவாகக்
கையில் எடுத்துக்கொண்டு; முற்றினென் முற்றினென் என்று
– யாவரையும் முடித்து விட்டேன்; முடித்து விட்டேன் என்று
சொல்லிக் கொண்டு; முன்பு வந்து உற்றனன் – இராமன்
முன்னே வந்து நின்றான்.

————-

அந் நெடு வாளையும் துணித்த ஆண்தகை,
பொன் நெடுங் கேடகம் புரட்டி, போர்த்தது ஓர்
நல் நெடுங் கவசத்து, நாம வெங் கணை
மின்னொடு நிகர்ப்பன, பலவும் வீசினான். 310-

அந்நெடு வாளையும்- அந்தப் பெரிய வாளையும்; துணித்த-
அம்புகளால் துண்டித்த; ஆண்தகை- ஆண்மைப் பண்புள்ள
இராமன்; பொன் நெடுங் கேடகம் புரட்டி-
அக்கும்பகருணனுடைய அழகிய நெடிய கேடயத்தை வீழ்த்தி;
போர்த்தது ஓர் நல் நெடுங் கவசத்து- அவன் உடலைப்
போர்த்துக் கொண்டிருந்த நல்ல நெடிய கவசத்தில்; மின்னொடு
நிகர்ப்பன- மின்னலை ஒப்பவையான; நாம வெங்கணை-
அச்சத்தைத் தரும் கொடிய கணைகள்; பலவும் வீசினான்-
பலவற்றைப் பாய்ச்சினான்.

———–

இராவணன் அனுப்பிய பெரும் படை உதவிக்கு வருதல்

அந்தரம் அன்னது நிகழும் அவ் வழி,
இந்திரன் தமரொடும் இரியல் எய்திட,
சிந்துவும் தன் நிலை குலைய, சேண் உற
வந்தது, தசமுகன் விடுத்த மாப் படை. 311-

அந்தரம் அன்னது நிகழும் அவ்வழி- அப்படிப்பட்ட
கேடு நிகழ்கின்ற அந்த நேரத்தில்; இந்திரன் தமரொடும்
இரியல் எய்திட – தேவர் தலைவன் தன் உறவினர்களோடு
நிலை கெட்டு ஓட;சிந்துவும் தன் நிலை குலைய- கடல்கள்
தம் நிலை குலைந்து போக; தசமுகன் விடுத்த மாப்படை-
இராவணன் அனுப்பிய பெரிய படை; சேண் உற வந்தது- வெகு
தொலைவில் இருந்து நெருங்கி வந்தது.

————–

வில் வினை ஒருவனும், ‘இவனை வீட்டுதற்கு
ஒல் வினை இது’ எனக் கருதி, ஊன்றினான்;
பல் வினை தீயன பரந்த போது ஒரு
நல்வினை ஒத்தது, நடந்த தானையே. 312-

வில்வினை ஒருவனும் – வில் தொழிலில் ஒப்பற்ற
இராமனும்; இவனை வீட்டுதற்கு – இக்கும்பகருணனை
அழிப்பதற்கு; ஒல்வினை இது – ஏற்ற போர்த்தொழில்
செய்யத்தக்க காலம் இது; எனக் கருதி- என்று எண்ணி;
ஊன்றினான் – அவன் எதிர் ஊன்றினான்; தீயன பல்வினை
பரந்தபோது- தீயவினைகள் பலவாக வந்தபோது; ஒரு
நல்வினை ஒத்தது நடந்த தானையே- அவற்றைத் தடுக்கத்
தக்க ஒப்பற்ற நல்வினையை ஒத்தது நடந்து வந்து சேர்ந்த
படைகள் என்றவாறு;

————-

வந்த சேனையை இராமன் எதிர்த்தல்

கோத்தது புடைதொறும் குதிரை தேரொடு ஆள்
பூத்து இழி மதமலை மிடைந்த போர்ப் படை
காத்தது கருணனை; கண்டு, மாய மாக்
கூத்தனும், ‘வருக!’ எனக் கடிது கூவினான். 313-

குதிரை தேரொடு ஆள்- குதிரையும் தேரும் காலாட்படையும்;
பூத்து இழி மதமலை- தோன்றிப் பெருகுகின்ற மதநீரைக் கொண்ட
யானையும்; மிடைந்த போர்ப்படை- நெருங்கிய போர் செய்ய
வல்ல படைகள்; புடை தொறும் கோத்தது- பக்கங்களில் சூழ்ந்து;
கருணனைக் காத்தது கண்டு – கும்பகருணனைக் காக்கத்
தொடங்கியது கண்டு; மாயமாக் கூத்தனும் – மாயக் கூத்தனாகிய
அவதார இராமனும்; கடிது வருக எனக் கூவினான் – விரைவாக
வருக என அப்படையை அழைத்தான்.

—————-

சூழி வெங் கட கரி, புரவி தூண்டு தேர்,
ஆழி வெம் பெரும் படை, மிடைந்த ஆர்கலி
ஏழ்-இரு கோடி வந்து எய்திற்று என்பரால்;
ஊழியின் ஒருவனும், எதிர் சென்று, ஊன்றினான். 314-

சூழி வெங்கடகரி- முகபடாம் அணிந்த கொடிய மதநீர்
ஒழுகும் யானையும்; புரவி- குதிரையும்; தூண்டு ஆழி தேர் –
செலுத்தப்படுகிற பெரிய சக்கரங்களை உடைய தேரும்;
வெம்பெரும் படை – கொடிய பெரிய காலாட்படையும்;
மிடைந்த – நெருங்கிய; ஏழ் இரு கோடி ஆர்கலி வந்து
எய்திற்று – பதினான்கு கோடி பெரும் படைக்கடல் வந்து
சேர்ந்தது; ஊழியின் ஒருவனும் – ஊழிக்காலத்திலும் அழியாது
நிற்பவனாகிய திருமாலின் அவதாரமாகிய இராமனும்;
எதிர்சென்று ஊன்றினான் என்பரால்- எதிரே போய் தடுத்து
நின்றான் என்பர்.

————–

காலமும், காலனும், கணக்கு இல் தீமையும்,
மூலம் மூன்று இலை என வகுத்து முற்றிய,
ஞாலமும் நாகமும் விசும்பும் நக்குறும்,
சூலம் ஒன்று அரக்கனும் வாங்கித் தோன்றினான். 315-

காலமும்- ஆயுள் கால எல்லையும்; காலனும்- யமனும்;
கணக்கு இல் தீமையும் – கணக்கற்ற தீமையும்; மூலம் – என்ற
மூலகாரணம் மூன்றும்; மூன்று இணை என வகுத்து முற்றிய-
மூன்று இலையாக அமைக்கப் பெற்றுப் படையுருவம் முற்றுப்பெற்ற;
ஞாலமும்- மண்ணுலகும்; நரகமும் – பாதாள உலகும்; விசும்பும்
– ஆகாயமும்; நக்குறும் – என்ற மூன்றையும் அழிக்கும் வல்லமை
பொருந்திய; சூலம் ஒன்று- சூலம் ஒன்றை; அரக்கனும்
வாங்கித் தோன்றினான் – கும்பகருணன் கையில் கொண்டு
தோன்றினான்.

————-

‘அரங்கு இடந்தன, அறு குறை நடிப்பன அல்ல’ என்று இமையோரும்,
‘மரம் கிடந்தன, மலைக் குவை கிடந்தன வாம்’ என மாறாடி,
கரம் கிடந்தன காத்திரம் கிடந்தன, கறை படும்படி கவ்விச்
சிரம் கிடந்தன, கண்டனர்; கண்டிலர், உயிர்கொடு திரிவாரை. 316-

இமையோரும் – தேவர்களும்; அரங்கு இடந்தன-
போர்க்களத்தில் (இராமனது அம்பால்) அறுத்து வீழ்த்தப்பட்ட;
அறுகுறை நடிப்பன அல்ல என்று- தலையற்ற உடற்குறைகள்
நடிப்பன அல்ல என்றும்; மரங்கிடந்தன- மரத்துண்டங்கள்
கிடக்கின்றன; மலைக்குவை கிடந்தவாம் – மலைக் குவியல்கள்
கிடக்கின்றனவாம்; என மாறாடி- என்று மாறுபட்டுக் கூறுமாறு;
கரம் கிடந்தன காத்திரம் கிடந்தன-கைகளோடு கூடியனவாய
வீரர்களின் உடல்கள் கிடந்தன; கறை படும்படி கவ்வி சிரம்
கிடந்தன-குருதிக் கறை படும்படி மண்ணைக் கவ்விக் கொண்டு
வீரர்களின் தலைகள் கிடந்தன; கண்டனர் – ஆகியவற்றைக்
கண்டனர்; உயிர் கொடு திரிவாரைக் கண்டிலர் – உயிர்
கொண்டு உலவுபவர்களைக் கண்டிலராயினர்.

————-

இற்ற அல்லவும், ஈர்ப்புண்ட அல்லவும், இடை இடை முறிந்து எங்கும்
துற்ற அல்லவும், துணிபட்ட அல்லவும், சுடு பொறித் தொகை தூவி
வெற்ற வெம் பொடி ஆயின அல்லவும், வேறு ஒன்று நூறு ஆகி
அற்ற அல்லவும், கண்டிலர் படைக்கலம்-அடு களம் திடர் ஆக. 317-

அடுகளம் திடர் ஆக- போர்க்களம் மேடாகுமாறு; இற்ற
அல்லவும் – முறிந்து போனவையல்லனவும்; ஈர்ப்புண்ட
அல்லவும் – குருதிப் பெருக்கால் இழுத்துக்கொண்டு
போகப்பட்டவை யல்லனவும்; இடை இடை முறிந்து எங்கும்
துற்ற அல்லவும் – இடை இடையே முறிந்து எல்லாவிடங்களையும்
தூர்த்தன அல்லாதனவும்; துணிபட்ட அல்லவும் – துண்டு
பட்டவை யல்லனவும்; சுடு பொறித் தொகை தூவி- சுடுகின்ற
தீப்பொறிச் சுடர்களைச் சிந்தி; வெற்ற வெம்பொடி ஆயின
அல்லவும் – வீணாக வெவ்விய பொடியாகிப் போயின வல்லவும்;
வேறு ஒன்று நூறு ஆகி அற்ற அல்லவும்- வெவ்வேறாக நூறு
துண்டாகி இல்லாமல் போயின அல்லவும்;படைக்கலம் கண்டிலர்
– (ஆகியவற்றைக் கண்டனரல்லது) செவ்வனே உள்ள
படைக்கலங்களைக் காண மாட்டாதாராயினர் பிறர்.

——————

படர்ந்த கும்பத்துப் பாய்ந்தன பகழிகள் பாகரைப் பறிந்து ஓடி,
குடைந்து, வையகம் புக்குறத் தேக்கிய குருதியால் குடர் சோரத்
தொடர்ந்து, நோயொடும் துணை மருப்பு இழந்து, தம் காத்திரம் துணி ஆகிக்
கிடந்த அல்லது, நடந்தன கண்டிலர்-கிளர் மதகிரி எங்கும். 318-

கிளர் மதகிரி- மிக்க மதநீர் ஒழுகும் மலை போன்ற
யானைகள்; படர்ந்த கும்பத்துப் பாய்ந்தன பகழிகள்-
பரந்த தலைமீது பாய்ந்தனவாகிய அம்புகள்; குடைந்து-
குடைவதனால்; பாகரைப் பறிந்து ஓடி- பாகர்களின் சொல்லைக்
கடந்து ஓடி; வையகம் புக்குறத்தேக்கிய குருதியால் – பூமியில்
மிகுதியாகப் புகுந்து தேங்கும் அளவு பெருகிய இரத்தத்தால்;குடர
சோர நோயொடும் தொடர்ந்து- குடல் வெளிப்பட மரண
நோயோடு தொடர்ந்து சென்று; துணை மருப்பு இழந்து- இரு
தந்தங்களையும் இழந்து; தம் காத்திரம் துணி ஆகி- தங்கள்
உடல்களும் துணிபட்டுக்; கிடந்த அல்லது- கிடந்தவை அல்லது;
எங்கும் நடந்தன கண்டிலர் – உயிருடன் நடப்பனவற்றை
எங்கும் எவரும் கண்டிலர்.

——————

வீழ்ந்த வாளன, விளிவுற்ற பதாகைய, வெயில் உமிழ் அயில் அம்பு
போழ்ந்த பல் நெடும் புரவிய, முறை முறை அச்சொடும் பொறி அற்று,
தாழ்ந்த வெண் நிணம் தயங்கு வெங் குழம்பிடைத் தலைத்தலை மாறாடி,
ஆழ்ந்த அல்லது, பெயர்ந்தன கண்டிலர்-அதிர் குரல் மணித் தேர்கள். 319-

அதிர் குரல் மணித் தேர்கள் – ஒலிக்கின்ற குரலை உடைய
மணிகள் கட்டப்பெற்ற தேர்கள்; வீழ்ந்த வாளன – வீழ்ந்த
ஒளியினையுடையனவும்; விளிவுற்ற பதாகைய – அழிவுற்ற
கொடிகளையுடையனவும்; வெயில் உமிழ் அயில் அம்பு- ஒளி
விடுகிற கூர்மையான அம்புகள்; போழ்ந்த பல்நெடும் புரவிய-
பிளந்த பலவாகிய பெரிய குதிரைகளை உடையனவுமாய்; முறை
முறை – முறை முறையே; அச்சொடும் பொறி அற்று- அச்சுடன்
இயந்திரமும் அழிந்து; தாழ்ந்த வெண் நிணம்- இழிவான
வெள்ளிய கொழுப்புடன்; தயங்கு வெங்குழம்பிடை- விளங்குகிற
குருதிக் குழம்பின் இடையில்; தலைத்தலை மாறாடி-
இடந்தோறும் இடந்தோறும் மாறுபட்டு; ஆழ்ந்த அல்லது-
ஆழ்ந்துவிட்டன அல்லது; பெயர்ந்தன கண்டிலர் –
நல்லநிலையில் ஓடுவன கண்டிலர்.

————–

ஆடல் தீர்ந்தன, வளை கழுத்து அற்றன, அதிர் பெருங் குரல் நீத்த, தாள் துணிந்தன,
தறுகண் வெங் கரி நிரை தாங்கிய பிணத்து ஓங்கல் கோடு அமைந்த வெங் குருதி நீர்
ஆறுகள் சுழிதொறும் கொணர்ந்து உந்தி, ஓடல் அன்றி,
நின்று உகள்வன கண்டிலர்-உரு கெழு பரி எல்லாம். 320-

உருகெழு பரி எல்லாம்- நிறம் விளங்குகின்ற குதிரைகள்
எல்லாம்; ஆடல் தீர்ந்தன – வலிமை குறைந்தனவாய்; வளை
கழுத்து அற்றன- வளைந்த கழுத்து இல்லாதனவாய்; அதிர்
பெருங்குரல் நீத்த- ஒலிக்கின்ற பெருங்குரலை விட்டனவுமாய்;
தாள் துணிந்தன- தாள் துண்டுபட்டனவுமாய்; தறுகண்
வெங்கரி நிரை- அஞ்சாமை உடைய கொடிய யானைக்
கூட்டங்களால்; தாங்கிய பிணத்து ஓங்கல் – தோன்றிய
பிணமலையின்; கோடு அமைந்த- கரை அமைந்த; வெங்குருதி
நீர் ஆறுகள் – வெப்பமான குருதிநீர் ஆறுகளின்; சுழி தொறும்
கொணர்ந்து உந்தி ஓடல் அன்றி- சுழிகள் தோறும் கொண்டு
தள்ளப் பெற்று ஓடுவன அன்றி; நின்று உகள்வன கண்டிலர்-
உயிரோடு நின்று நடப்பனவற்றைக் கண்டிலர்.

——————

வேதநாயகன் வெங் கணை வழக்கத்தின் மிகுதியை வெவ்வேறு இட்டு
ஓதுகின்றது என்? உம்பரும், அரக்கர் வெங் களத்து வந்து உற்றாரைக் காதல்
விண்ணிடைக் கண்டனர்; அல்லது, கணவர்தம் உடல் நாடும் மாதர் வெள்ளமே
கண்டனர்; கண்டிலர், மலையினும் பெரியாரை. 321-

வேதநாயகன் – வேதங்களுக்கெல்லாம் தலைவனான இராமன்;
வெங்கணை வழக்கத்தின் மிகுதியை- கொடிய அம்புகளை எய்த முறையின் மிகுதியை; வெவ்வேறு இட்டு
ஓதுகின்றது என்?- வெவ்வேறாக வகுத்துப் பிரித்துச் சொல்ல
வேண்டுவது எதற்கு?; உம்பரும்- தேவர்களும்; வெங்களத்து
வந்து உற்றாரை அரக்கர் – கொடிய போர்க் களத்திற்குப்
போரிட வந்து உற்றவர்களான அரக்கர்களை; காதல்
விண்ணிடைக் கண்டனர் அல்லது- விரும்பும் தன்மை உடைய
வானுலகத்தில் கண்டனரே அல்லாமல்; மலையினும் பெரியாரை-
மலையினும் மாணப் பெருந்தோற்றம் உடைய அந்த அரக்கர்களை;
கண்டிலர் – (உயிரோடு போர்க்களத்தில் கண்டிலர்); கணவர்
தம் உடல் நாடும்- போர்க்களத்தில் கணவரது உடலைத்
தேடிப் பார்க்கின்ற; மாதர் வெள்ளமே கண்டனர் – அரக்க
மாதர்களுடைய வெள்ளத்தையே கண்டனர்.

—————

பனிப் பட்டாலெனக் கதிர் வரப் படுவது பட்டது, அப் படை; பற்றார்
துனிப்பட்டார் எனத் துளங்கினர் இமையவர்; ‘யாவர்க்கும் தோலாதான்
இனிப் பட்டான்’ என, வீங்கின அரக்கரும் ஏங்கினர்; ‘இவன், அந்தோ,
தனிப் பட்டான்!’ என, அவன் முகம் நோக்கி ஒன்று உரைத்தனன், தனி நாதன்: 322-

கதிர்வரப் பனிப்பட்டாலென- கதிரவன் வருகையால் பனி
இல்லாமல் ஒழிந்தது போல; அப்படை படுவது பட்டது- அந்த
அரக்கர் பெரும்படை இல்லாமல் பட்டு அழிந்தது; இமையவர் –
தேவர்கள்; பற்றார் துனிப்பட்டார் எனத் துளங்கினர் –
பகைவர்கள் வெறுப்படைந்தார்கள் என மகிழ்ச்சியால்
விளக்கம் பெற்றார்கள்; யாவர்க்கும் தோலாதான் –
எவருக்கும் தோலாதவனான கும்பகருணன்;இனிப் பட்டான் என-
இனி இறந்து படுவான் என; வீங்கின அரக்கரும் ஏங்கினர் –
மகிழ்ந்த அரக்கர்களும் ஏக்கமுற்றார்கள்; தனிநாதன் –
ஒப்பற்ற தலைவனாகிய இராமன்; இவன் அந்தோ தனிப்பட்டான்
என- இந்தக் கும்பகருணன் ஐயோ தனிமையாக ஆகிவிட்டான் என்ற இரக்கத்தால்; அவன் முகம்
நோக்கி ஒன்று உரைத்தனன்- அவனுடைய முகத்தைப் பார்த்து
ஒன்று கூறத் தொடங்கினான்.

———-

இராமன் கும்பகருணன் உரையாடல்

‘ஏதியோடு எதிர் பெருந் துணை இழந்தனை; எதிர் ஒரு தனி நின்றாய்;
நீதியோனுடன் பிறந்தனை ஆதலின், நின் உயிர் நினக்கு ஈவென்;
போதியோ? பின்றை வருதியோ? அன்று எனின், போர் புரிந்து இப்போதே
சாதியோ? உனக்கு உறுவது சொல்லுதி, சமைவுறத் தெரிந்து, அம்மா! 323

ஏதியோடு எதிர் பெருந்துணை இழந்தனை-
படைக்கலங்களுடன் எதிர்க்க வல்ல பெருந்துணையான படைகளை
இழந்தாய்;ஒரு தனி எதிர்நின்றாய் – தன்னந் தனியனாய் எதிரே
நின்றாய்; நீதியோனுடன் பிறந்தனை ஆதலின் – நீதிநெறி
தவறாத வீடணனுடன் பிறந்தனை ஆதலின்; நின் உயிர் நினக்கு
ஈவென் – உன் உயிரை உனக்குத் தருவேன்; போதியோ-
இப்போது இலங்கைக்குத் திரும்பிப் போய் விடுகிறாயா?; பின்றை
வருதியோ- பின்பு மீண்டும் வருகிறாயா?; அன்று எனின்
போர் புரிந்து இப்போதே சாதியோ?- அல்ல எனின் போர்
செய்து இப்போதே இறந்து படுகிறாயோ?; உனக்கு உறுவது
சமைவுறத் தெரிந்து சொல்லுதி- உனக்குப் பொருந்தியதை
அமைவுடன் ஆய்ந்து சொல்லுக.

——–

‘இழைத்த தீவினை இற்றிலது ஆகலின், யான் உனை இளையோனால்
அழைத்த போதினும் வந்திலை, அந்தகன் ஆணையின் வழி நின்றாய்;
பிழைத்ததால் உனக்கு அருந் திரு, நாளொடு; பெருந் துயில் நெடுங் காலம்
உழைத்து வீடுவது ஆயினை; என் உனக்கு உறுவது ஒன்று? உரை’ என்றான். 324-

இழைத்த தீவினை இற்றிலது ஆகலின் – நீ முன்பு
செய்துள்ள தீவினை நீங்கவில்லை ஆதலால்; யான் உனை
இளையோனால் அழைத்த போதினும் வந்திலை- நான்
உன்னை இளையவனாகிய வீடணன் மூலம் அழைத்த போதும்
வந்திடாமல்; அந்தகன் ஆணையின் வழி நின்றாய் – யமனது
ஆணைக்கு உட்பட்டு நின்றாய்; உனக்கு அருந்திரு நாளொடு
பிழைத்ததால் – நீ யான் அழைத்து வாராமையால்
பெருஞ்செல்வத்தையும்வாழ்நாளையும் தவற விட்டனை;
பெருந்துயில் நெடுங்காலம் உழைத்து வீடுவது ஆயினை-
பெருந்துயிலை நெடுங்காலம் செய்து இறப்பதற்கு ஒருப்பட்டு
நின்றாய்; என் உனக்கு உறுவது ஒன்று உரை என்றான் –
உன் மனத்தில் உறுவது எதுவோ அதனைச் சொல் என்றான்
இராமன்.

—————

‘மற்று எலாம் நிற்க; வாசியும், மானமும் மறத்துறை வழுவாத
கொற்ற நீதியும், குலமுதல் தருமமும் என்று இவை குடியாகப்
பெற்ற நுங்களால், எங்களைப் பிரிந்து, தன் பெருஞ் செவி மூக்கோடும்
அற்ற எங்கைபோல், என் முகம் காட்டி நின்று ஆற்றலென் உயிர் அம்மா! 325-

(அது கேட்ட கும்பகருணன்) மற்று எலாம் நிற்க- நீ கூறிய
மற்றவைகள் எல்லாம் இருக்கட்டும்; வாசியும் – மிக்குத்
தோன்றுகின்ற சிறப்பும்; மானமும் – மானமும்;மறத்துறை
வழுவாத கொற்ற நீதியும் – வீரத்துறையில் இருந்து தவறாத
வெற்றியோடு பொருந்திய நீதியும்; குலமுதல் தருமமும் –
குலத்துக்கு முதன்மையாக உள்ள அறங்களும்; என்று இவை
குடியாகப் பெற்ற நுங்களால்- என்னும் இவை குடியிருக்கும்
இடமாக உள்ள உங்களால்; எங்களைப் பிரிந்து- எங்களை
விட்டுப் பிரிந்து போய்; தன் பெருஞ்செவி மூக்கோடும் அற்ற
எங்கை போல் – தன்னுடைய பெரிய காதுகளையும் மூக்கையும்
இழந்த எமது தங்கையைப் போல; என் முகம் காட்டி நின்று
ஆற்றலென் உயிர் – என் முகத்தைக் காட்டிக்கொண்டு
உயிரோடு இருக்கப் பொறுக்கேன்.

—————-

‘நோக்கு இழந்தனர் வானவர், எங்களால்; அவ் வகை நிலை நோக்கி,
“தாக்கு அணங்கு அனையவள், பிறர் மனை” எனத் தடுத்தனென்;
“தக்கோர் முன் வாக்கு இழந்தது” என்று அயர்வுறுவேன் செவி-தன்னொடு மாற்றாரால்
மூக்கு இழந்தபின் மீளல் என்றால், அது முடியுமோ?-முடியாதாய்! 326-

முடியாதாய் – அழிவு இல்லாதவனே; எங்களால் வானவர்
நோக்கு இழந்தனர் – எங்களால் தேவர்கள் பெருமை
இழந்தார்கள்; அவ்வகை நிலை நோக்கி – அந்த வகையான
நிலைமையினைப் பார்த்ததால்; தாக்கு அணங்கு அனையவள்
பிறர் மனை எனத் தடுத்தனென் – தீண்டி வருத்தும்
அணங்கை ஒத்த சீதை பிறர் மனைவி ஆகவே கைப்பற்றலாகாது
எனத் தடுத்தேன்; தக்கோர் முன் வாக்கு இழந்தது என்று
அயர்வுறுவேன் – அது ஏற்றுக் கொள்ளப் படாமையால்
தக்கவர்களுக்கு முன் பேசுவதற்கு உரிய வாக்குப் போய்விட்டது
என்று வருந்துகிறேன்; மாற்றாரால் – அப்படிப்பட்ட நான்
பகைவரால்; செவி தன்னோடு மூக்கு இழந்தபின் –
காதுகளையும் மூக்கையும் இழந்தபிறகு; மீளல் என்றால் அது
முடியுமோ – திரும்பி நகருக்குத் திரும்புவதென்றால் அது
முடியுமோ என்றவாறு.

————-

‘உங்கள் தோள் தலை வாள்கொடு துணித்து, உயிர் குடித்து, எம்முன் உவந்து எய்த
நங்கை நல் நலம் கொடுக்கிய வந்த நான், வானவர் நகை செய்ய,
செங்கை தாங்கிய சிரத்தொடும் கண்ணின் நீர் குருதியினொடு தேக்கி,
எங்கை போல் எடுத்து அழைத்து, நான் வீழ்வெனோ, இராவணன் எதிர் அம்மா? 327-

உங்கள் தோள் தலை வாள் கொடு துணித்து- உங்களது
தோளையும் தலையையும் வாளைக் கொண்டு துணித்துஉயிர்
குடித்து- உயிரைக் குடித்து; எம்முன் உவந்து எய்த- எமக்கு
முன்னவனாகிய இராவணன் மகிழ்ந்து அடையுமாறு; நங்கை
நல்நலம் கொடுக்கிய வந்த நான் – சீதையின் அழகு நலத்தை
அவனுக்குக் கொடுப்பதற்காகப் போருக்கு வந்த நான்;
வானவர் நகை செய்ய – தேவர்கள் சிரிக்குமாறு; செங்கை
தாங்கிய சிரத்தொடும் – குருதிபட்டுச் சிவந்த கையால்
தலையைத் தாங்கிக்கொண்டு; கண்ணின் நீர் குருதியினொடு
தேக்கி- கண்ணீரைக் குருதியுடன் கலந்து தேங்கச் செய்து;
எங்கை போல் எடுத்து அழைத்து- எனது தங்கையைப் போல்
குரலெடுத்து அழைத்துக் கொண்டு; நான் இராவணன் எதிர்
வீழ்வெனோ- நான் இராவணன் எதிரில் சென்று வீழ்வதற்கு
உரியனோ (அல்லன்).

———–

‘ஒருத்தன், நீ தனி உலகு ஒரு மூன்றிற்கும் ஆயினும், பழி ஓரும்
கருத்தினால் வரும் சேவகன் அல்லையோ? சேவகர் கடன் ஓராய்?
செருத் திண் வாளினால் திறத் திறன் உங்களை அமர்த் துறைச் சிரம் கொய்து
பொருத்தினால், அது பொருந்துமோ? தக்கது புகன்றிலைபோல்’ என்றான். 328-

நீ ஒரு தனி உலகு மூன்றிற்கும்- நீ ஒப்பற்ற சிறந்த மூன்று
உலகிற்கும்; ஒருத்தன்- ஒப்பற்ற தனி முதல்வன்; ஆயினும் –

—————

கும்பகருணன்-இராமன் பெரும்போர்

என்று, தன் நெடுஞ் சூலத்தை இடக்கையின் மாற்றினன்; வலக் கையால்
குன்று நின்றது பேர்த்து எடுத்து, இரு நிலக் குடர் கவர்ந்தெனக் கொண்டான்,
சென்று விண்ணொடும் பொறியொடும் தீச்செல, சேவகன் செனி நேரே,
‘வென்று தீர்க!’ என விட்டனன்; அது வந்து பட்டது மேல் என்ன, 329-

ஆனாலும்; பழி ஒரும் கருத்தினால் வரும் சேவகன்
அல்லையோ- பிறர்க்கு வரும் பழியை ஆராய்ந்து அறியும்
மனக்கருத்து உள்ள வீரனல்லையோ?;சேவகர் கடன் ஓராய்-
எனினும் வீரர் தம் கடமையை எண்ணிப் பாராதவனாய்
உள்ளாயே; உங்களை செருத்திண் வாளினால் – உங்களைப்
போர்க்களத்தில் வலிய வாளினால்; திறத்திறன் அமர்த்துறை
சிரம் கொய்து- துண்டம் துண்டமாகப் போரில் தலையை
அறுத்து; பொருத்தினால் அது பொருந்துமோ-பொருத்தினால்
அது பொருந்துமோ?; தக்கது புகன்றிலை போல் என்றான் –
நீ தகுதியானதைச் சொல்லவில்லை என்றான் கும்பகருணன்.

————–

அனைய குன்று எனும் அசனியை, யாவர்க்கும் அறிவு அரும் தனி மேனி
புனையும் நல் நெடு நீறு என நூறிய புரவலன் பொர வென்று
நினையும் மாத்திரத்து ஒரு கை நின்று ஒரு கையின் நிமிர்கின்ற நெடு வேலை,
தினையும் மாத்திரை துணிபட, முறை முறை சிந்தினன், சரம் சிந்தி. 330-

என்று – என்று சொல்லித்; தன் நெடுஞ்சூலத்தை
இடக்கையின் மாற்றினன் – தனது வலக்கையில் இருந்த
நெடுஞ்சூலத்தை இடக்கைக்கு மாற்றிக் கொண்டு;
வலக்கையால் – வலது கையினால்; இருநிலக் குடர்
கவர்ந்தென – பெரிய நிலத்தின் குடலைக் கவர்ந்தாற்போல்;
குன்று நின்றது பேர்த்து எடுத்து – அருகில் இருந்த
குன்றினைப் பெயர்த்து எடுத்து; கொண்டான் – கையில்
கொண்டவனாய்; விண்ணொடும் பொறியொடும் தீச்செல சென்று – வானத்தில் சென்று தீப்பொறியும் தீயும்
வெளிப்பட; சேவகன் செனி நேரே வென்று தீர்க என
விட்டனன் – வீரனாகிய இராமனுடைய தலைக்கு நேராக
வெற்றி கொண்டு தீர்க என்று வீசி விட்டான்; அது வந்து
பட்டது மேல் என்ன -அது வந்து இராமன் மேல் பட்டது
என்று எண்ணுமாறு நெருங்க; (தொடரும். குளகம்).

————–

அண்ணல் வில் கொடுங் கால் விசைத்து உகைத்தன, அலை கடல் வறளாக
உண்ணகிற்பன, உருமையும் சுடுவன, மேருவை உருவிப் போய்
விண்ணகத்தையும் கடப்பன, பிழைப்பு இலா மெய்யன, மேல் சேர்ந்த
கண்ணுதல் பெருங் கடவுள்தன் கவசத்தைக் கடந்தில கதிர் வாளி. 331-

அண்ணல் – பெருமையில் சிறந்த இராமனுடைய; வில்
கொடுங்கால் விசைத்து உகைத்தன- வில்லினது வளைந்த
காலிடத்தில் இருந்து வேகமாகச் செல்லுமாறு விடுத்த; கதிர்
வாளி- ஒளி பொருந்திய அம்புகள்; அலை கடல் வறளாக
உண்ணகிற்பன- அலையையுடைய கடல் வறண்டு போகுமாறு
நீரைப் பருகும் தன்மை பெற்றனவும்; உருமையும் சுடுவன
– இடியையும் சுட வல்லனவும்; மேருவை உருவிப் போய்
விண்ணகத்தையும் கடப்பன – மேரு மலையை ஊடுருவிச்
சென்று வானிடத்தையும் கடப்பனவும்; பிழைப்பு இலா மெய்யன-
தவறில்லாமல் பயனை உண்மையில் விளைவிப்பனவும்; மேல்
சேர்ந்த – ஆக இருப்பினும் கும்பகருணனது உடல்மீது
பொருந்தியுள்ள; கண்ணுதல் பெருங் கடவுள் தன் கவசத்தைக்
கடந்தில – நெற்றிக் கண்ணனாகிய சிவபிரான் ஈந்த கவசத்தைத்
துளைக்க மாட்டாவாயின.

—————

தாக்குகின்றன நுழைகில; தலையது, தாமரைத் தடங் கண்ணான்
நோக்கி, ‘இங்கு இது சங்கரன் கவசம்’ என்று உணர்வுற நுனித்து உன்னி,
ஆக்கி அங்கு அவன் அடு படை தொடுத்து விட்டு அறுத்தனன்; அது சிந்தி
வீக்கு இழந்தது வீழ்ந்தது, வரை சுழல் விரி சுடர் வீழ்ந்தென்ன. 332-

தாக்குகின்றன – தான் விடுத்த அம்புகள் கவசத்தின் மீது
மோதுகின்றன எனினும்; தலையது நுழைகில – நுனிகள்
கவசத்தினுள் நுழைய மாட்டாதனவான தன்மையை; தாமரைத்
தடங்கண்ணான் நோக்கி – தாமரைத் தடங்கண்ணன் ஆன
இராமன் பார்த்து; இங்கு இது சங்கரன் கவசம் என்று-
இக்கவசம் சிவன் அளித்தது என்று; உணர்வுற நுனித்து
உன்னி- உணர்வு தோன்ற அதை நுணுகி எண்ணிப் பார்த்து;
அங்கு அவன் அடு படை ஆக்கி – அப்போது சிவனது
கொல்லும் தன்மையுள்ள அம்பினை வில்லில் பூட்டி; தொடுத்து
விட்டு அறுத்தனன் – தொடுத்துவிட்டு அழித்தனன்; அது
சிந்தி வீக்கு இழந்தது – அச்சிவ கவசம் கட்டுக்
குலைந்ததாகி; வரைசூழ் விரிசுடர் வீழ்ந்தென்ன வீழ்ந்தது
– மேருமலையை வலமாக வரும் கதிரவன் வீழ்ந்தது போல்
ஒளியுடன் பூமியில் விழுந்தது.

————–

காந்து வெஞ் சுடர்க் கவசம் அற்று உகுதலும், கண்தொறும் கனல் சிந்தி,
ஏந்து வல் நெடுந் தோள் புடைத்து ஆர்த்து, அங்கு ஓர் எழு முனை வயிரப் போர்
வாய்ந்த வல் நெடுந் தண்டு கைப்பற்றினன்; ‘வானரப் படை முற்றும்
சாந்து செய்குவனாம்’ என முறை முறை அரைத்தனன், தரையொடும். 333-

வெஞ்சுடர் காந்து கவசம் – வெப்பமான ஒளியை
வெளியிடுகிற கவசம்; அற்று உகுதலும் – அறுபட்டுச் சிந்திய
அளவில்; கண் தொறும் கனல் சிந்தி – தன் இரு
கண்களிலும் நெருப்புப் பொறியைச் சிந்தி; ஏந்து வல்நெடுந்
தோள் புடைத்து ஆர்த்து- ஓங்கிய வலிய நெடிய தோளைத
தட்டிப் பேரொலி செய்து; அங்கு – அப்போது; எழுமுனை
வயிரப் போர் வாய்ந்த ஓர் வல்நெடுந் தண்டு
கைப்பற்றினன் – இரும்பு முனை உடையதும் உறுதியுடையதும்,
போர்க்கு வாய்த்ததும் ஒப்பற்றதுமான வலிய நெடிய தண்டாயுதத்தைக் கையில் கொண்டவனாய்; வானரர்
படை முற்றும் சாந்து செய்குவனாம் என- குரங்குப்படை
முழுவதையும் சாந்து போல் ஆக்கி விடுவான் என்று கண்டோர்
கருதுமாறு; முறை முறை தரையோடும் அரைத்தனன் – முறை
முறையாகத் தரையோடும் அரைக்கலானான்.

——-

பறப்ப ஆயிரம், படுவன ஆயிரம், பகட்டு எழில் அகல் மார்பம்
திறப்ப ஆயிரம், திரிவன ஆயிரம், சென்று புக்கு உருவாது மறைப்ப ஆயிரம்,
வருவன ஆயிரம், வடிக் கணை என்றாலும், பிறப்ப ஆயிடைத்
தெழித்துறத் திரிந்தனன், கறங்கு எனப் பெருஞ் சாரி. 334-

பறப்ப ஆயிரம் – வானத்தில் பறப்பவை ஆயிரம்; படுவன
ஆயிரம் – பகைவர் மேல் படுவன ஆயிரம்; பகட்டு எழில்
அகல் மார்பம் திறப்ப ஆயிரம் – பெருமையும் அழகும்
பெற்று அகன்ற மார்பைப் பிளப்பன ஆயிரம்; திரிவன ஆயிரம்
– பறந்து திரிவன ஆயிரம்; சென்று புக்கு உருவாது மறைப்ப
ஆயிரம் – பகைவர் உடம்பில் போய் உள் புகுந்து
தொளைத்திடாமல் மறைந்தன ஆயிரம்; வருவன ஆயிரம் –
இராமன் வில்லில் இருந்து வெளிப்பட்டு வருவன ஆயிரம்;
வடிக்கணை என்றாலும் – கூரிய அம்புகள் என்றாலும்;
பிறப்ப – வாயிடைப் பேரொலி தோன்ற; ஆயிடை- அங்கே;
தெழித்து – அதட்டிக்கொண்டு; கறங்கு எனப் பெருஞ்சாரி
உறத் திரிந்தனன் – காற்றாடி போல் பெருஞ்சாரி மிகத்
திரிந்தனன் என்க.

———————-

‘தண்டு கைத்தலத்து உளது எனின், உளதன்று தானை’ என்று, அது சாயக்
கொண்டல் ஒத்தவன், கொடுங் கணை பத்து ஒரு தொடையினில் கோத்து எய்தான்;
கண்டம் உற்றது மற்று அது; கருங் கழல் அரக்கனும், கனன்று, ஆங்கு ஓர்
மண்டலச் சுடராம் எனக் கேடகம் வாங்கினன், வாளோடும். 335-

தண்டு கைத்தலத்து உனது எனின்- தண்டாயுதம் இவனது
கையில் உள்ளதானால்; தானை உளதன்று என்று- குரங்குச்
சேனை உயிரோடு இருத்தல் முடியாது என்று எண்ணி; அது
சாய – அந்தத் தண்டு அ ழியுமாறு; கொண்டல் ஒத்தவன் –
கருமேகத்தை ஒத்த நிறத்தவன் ஆகிய இராமன்; ஒரு
தொடையினில் – ஒரு தொடுப்பினில்; கொடுங்கணை பத்துக்
கோத்து எய்தான்- கொடிய அம்புகள் பத்தினை வில்லில்
கோத்து எய்தான்; மற்று அது கண்டம் உற்றது- அதனால்
அந்தத் தண்டாயுதம் துண்டாகி விட்டது; கருங்கழல்
அரக்கனும் – அதனால் கரிய கழலை அணிந்த அரக்கன்
ஆகிய கும்பகருணனும்; கனன்று – சினம் கொண்டு;
ஆங்கு – அப்போது; ஓர் மண்டலச் சுடராம் என
வாளோடும் கேடகம் வாங்கினன் – ஒப்பற்ற பூமியில்
விளங்கும் கதிரவன் என்னுமாறு ஒளியுடை வாளும் கேடகமும்
கைக்கொண்டான்.

————-

வாள் எடுத்தலும், வானர வீரர்கள் மறுகினர், வழிதோறும்
தாள் எடுத்தனர், சமழ்த்தனர்; வானவர் தலை எடுத்திலர், தாழ்ந்தார்;
‘கோள் எடுத்தது, மீள’ என்று உரைத்தலும், கொற்றவன், ‘குன்று ஒத்த
தோள் எடுத்தது துணித்தி’ என்று, ஒரு சரம் துரந்தனன், சுரர் வாழ்த்த. 336-

வாள் எடுத்தலும்- கும்பகருணன் வாள் படையை எடுத்த
உடனே; வானர வீரர்கள் மறுகினர் – குரங்குப் படை வீரர்கள்
மனம் கலங்கி; வழி தோறும் தாள் எடுத்தனர் – வழி தோறும்
கால் விசைத்து ஓடினர்; வானவர் சமழ்த்தனர் தலை
எடுத்திலர் தாழ்ந்தார் – தேவர்கள் போர்க்களத்தினராய்த்
தலை தூக்க முடியாது தலையைத் தொங்கவிட்டனர்; கோள்
எடுத்தது மீள – உயிர்க் கொள்ளை தொடங்கியது மீளவும்;
என்று உரைத்தலும் – என்று துணைவர்கள் சொல்லலும்;
கொற்றவன்- வெற்றி பொருந்திய இராமன்; எடுத்தது- வாளை
எடுத்ததான; குன்று ஒத்த தோள் துணித்தி என்று- குன்று
ஒத்த தோளைத் துணிப்பாயாக என்று சொல்லி; ஒருசரம் சுரர் வாழ்த்த துரந்தனன்- ஒப்பற்ற
அம்பினைத் தேவர்கள் வாழ்த்தச் செலுத்தினான்.

————–

கும்பகருணன் கை அறுபடல்

அலக்கணுற்றது தீ வினை; நல்வினை ஆர்த்து எழுந்தது; வேர்த்துக்
கலக்கமுற்றனர், இராக்கதர்-‘கால வெங் கருங் கடல் திரை போலும்
வலக் கை அற்றது, வாளொடும்; கோளுடை வான மா மதி போலும்;
இலக்கை அற்றது, அவ் இலங்கைக்கும் இராவணன் தனக்கும்’ என்று எழுந்து ஓடி. 337-

தீவினை அலக்க ணுற்றது- தனக்கு உதவும் கும்பகருணன்
கை அறப் போவதால் தீவினை துன்பமடைந்தது; நல்வினை
ஆர்த்து எழுந்தது – நல்வினை மகிழ்ச்சியால் பேரொலி
யெழுப்பியது; கால வெங்கருங்கடல் திரை போலும்
– உகமுடிவுக்காலத்தில் பொங்கி எழுகின்ற கருங்கடலின்
அலையைப் போன்ற; வலக்கை – வலக்கையானது; கோளுடை
வானமாமதி போலும் வாளொடும் அற்றது- இராகுவினால்
பற்றப்பட்டுக் குறைபடுதலை உடைய வானத்து நில போன்ற
வாளோடு அறுபட்டு வீழ்ந்தது; அவ் இலங்கைக்கும்
இராவணன் தனக்கும் – அதனால் இலங்கைப் பெருநகருக்கும்
இராவணனுக்கும்; இலக்கை அற்றது – பாதுகாவல் நீங்கியது;
என்று எழுந்து ஓடி- என்று சொல்லிக்கொண்டு எழுந்து ஓடி;
இராக்கதர் வேர்த்துக் கலக்கமுற்றனர் – அரக்கர்கள் உடல்
வியர்த்து மனம் கலங்கினர்.

—————

மற்றும், வீரர்கள் உளர் எனற்கு எளிது அரோ, மறத்தொழில் இவன் மாடு
பெற்று நீங்கினர் ஆம் எனின் அல்லது-பேர் எழில் தோளோடும்
அற்று வீழ்ந்த கை அறாத வெங் கையினால் எடுத்து, அவன் ஆர்த்து ஓடி
எற்ற, வீழ்ந்தன, எயிறு இளித்து ஓடின வானரக் குலம் எல்லாம்? 338-

பேர் எழில் தோளோடும் – மிக்கு எழுந்து வளர்ந்த
அழகிய தோளுடன்; அற்று வீழ்ந்த கை- அறுபட்ட வீழ்ந்த
வலக்கையை; அறாத வெங்கையினால் எடுத்து- அறுபடாது
உள்ள கொடுமையான இடக்கையினால் எடுத்துக்கொண்டு;
அவன் ஆர்த்து ஓடி- அக்கும்பகருணன் பேரொலி எழுப்பிக்
கொண்டு ஓடி; எற்ற எயிறு இளித்து ஓடின- அடித்ததனால்
பல்லை இளித்துக் கொண்டு ஓடின; வானரக் குலமெல்லாம்
– குரங்குக் கூட்டங்கள் எல்லாம்; வீழ்ந்தன- உயிரொழிந்து
வீழ்ந்தன; மறத்தொழில் இவன் மாடு பெற்று நீங்கினர்
ஆம்- இவ்வாறு வீரப் போரிட்ட இவனிடத்து வீரத்தை இரந்து
பெற்றவர்கள் ஆம்;எனின் அல்லது- தவிரப் பிறர்; மற்றும்
வீரர்கள் உளர் எனற்கு எளிதரோ- வீரர்களாக வேறு
பிறந்தவர் உளர் என்று சொல்லுதல் எளிமையானதோ அன்று.

——————-

வள்ளல் காத்து உடன் நிற்கவும், வானரத் தானையை மறக் கூற்றம்
கொள்ளை கொண்டிட, பண்டையின் மும்மடி குமைகின்ற படி நோக்கி,
‘வெள்ளம் இன்றொடும் வீந்துறும்’ என்பதோர் விம்மலுற்று உயிர் வெம்ப,
உள்ள கையினும் அற்ற வெங் கரத்தையே அஞ்சின, உலகு எல்லாம். 339-

வள்ளல் காத்து உடன் நிற்கவும்- வள்ளல் தன்மை உள்ள
இராமன் சேனையைக் காத்து உடன் இருக்கவும்; வானரத்
தானையை – குரங்குச் சேனையை; மறக்கூற்றம் கொள்ளை
கொண்டிட- வலிமை உடைய யமன் கொள்ளை கொள்ளும்படி;
பண்டையின் மும்மடி குமைக்கின்ற படி நோக்கி- முன்பு
அழித்ததை விட மூன்று மடங்கு அழிக்கின்ற தன்மையைப் பார்த்து;உலகு
எல்லாம் – உலகோர் எல்லாம்; வெள்ளம் இன்றொடும்
வீந்துறும் என்பதோர் விம்மலுற்று- குரங்கு வெள்ளமானது
இன்றே அழிந்து போய்விடும் என்று கருதுவதால் துன்பத்தைக்
கொண்டு; உயிர் வெம்ப – உயிர் துடிக்க; உள்ள கையிலும்
அற்ற வெங்கரத்தையே அஞ்சின- அற்றுப் போகாமல் உள்ள
கையினும், அற்றுப் போன கொடிய கரத்தைக் கண்டே
பயந்தனர்.

————–

மாறு வானரப் பெருங் கடல் ஓட, தன் தோள் நின்று வார் சோரி
ஆறு விண் தொடும் பிணம் சுமந்து ஓட், மேல் அமரரும் இரிந்து ஓட,
கூறு கூறு பட்டு இலங்கையும் விலங்கலும் பறவையும் குலைந்து ஓட,
ஏறு சேவகன்மேல் எழுந்து ஓடினன், மழைக் குலம் இரிந்து ஓட. 340-

மாறு வானரப் பெருங்கடல் ஓட- பகையாக உள்ள வானரப்
பெரும் படையாகிய கடல் நிலை கெட்டு ஓட; தன் தோள் நின்று
வார் சோரி ஆறு- தன் தோளில் இருந்து வடிகின்ற
குருதியாகிய ஆறு; விண்தொடும் பிணம் சுமந்து ஓட
– விண்ணைத் தொடுமளவு போர்க்களத்தில் குவிந்துள்ள
பிணங்களைச் சுமந்து கொண்டு ஓட; மேல் அமரரும் இரிந்து
ஓட- வானத்தில் உள்ள தேவர்களும் நிலை கெட்டு ஓட;
இலங்கையும் விலங்கலும் பறவையும் கூறு கூறுபட்டு குலைந்து
ஓட- இலங்கை நகரும் அங்குள்ள மலைகளும் பறவை முதலிய
உயிரினங்களும் குருதி ஆற்றின் வேகத்தால் பலவகையாகப் பிரிந்து
நிலைகுலைந்து ஓட; மழைக்குலம் இரிந்தோட- மேகக் கூட்டம்
நிலை கெட்டு ஓட; ஏறு சேவகன் மேல் எழுந்து ஓடினன் –
சிங்கவேறு போன்ற இராமன் மேல் எழுந்தோடினன் கும்பகருணன்
என்க.

——————

‘ஈற்றுக் கையையும் இக் கணத்து அரிதி’ என்று இமையவர் தொழுது ஏத்த,
தோற்றுக் கையகன்று ஒழிந்தவன் நாள் அவை தொலையவும், தோன்றாத
கூற்றுக்கு ஐயமும் அச்சமும் கெட, நெடுங் கொற்றவன் கொலை அம்பால்
வேற்றுக் கையையும் வேலையில் இட்டனன், வேறும் ஓர் அணை மான். 341-

ஈற்றுக் கையையும் இக்கணத்து அரிதி என்று- மற்றொரு
கையையும் இப்பொழுதே அரிந்திடுவாய் என்று; இமையவர்
தொழுது ஏத்த- தேவர்கள் கைதொழுது துதிக்க; தோற்றுக்
கையகன்று ஒழிந்தவன் – இராமனுக்கு முன் வலி தோற்று
வலக்கை நீங்கி ஒழிந்தவனாகிய கும்பகருணனுடைய;நாள் அவை
தொலையவும் – வாழ்நாள்கள் கெடுமாறும்; தோன்றாத
கூற்றுக்கு ஐயமும் அச்சமும் கெட – இதுவரை அரக்கர்
கண்முன் தோன்றியிராத யமனுக்கு ஐயமும் அதனால் வரும்
அச்சமும் நீங்குமாறும்; நெடுங்கொற்றவன் – மிக்க வெற்றிக்குரிய
இராமன்; கொலை அம்பால்- கொல்லும் தன்மை உள்ள தன்
அம்பால்; வேற்றுக் கையையும்- மற்றொரு கையையும்; வேறும்
ஓர் அணை மான வேலையில் இட்டனன் – வேறு
அணையென்று தோன்றுமாறு கடலில் இட்டனன்.

—————

சந்திரப் பெருந் தூணொடுஞ் சார்த்தியது, அதில் ஒன்றும் தவறு ஆகாது,
அந்தரத்தவர் அலை கடல் அமுது எழக் கடைவுறும் அந் நாளில்,
சுந்தரத் தடந் தோள் வளை மாசுணம் சுற்றிய தொழில் காட்ட,
மந்தரத்தையும் கடுத்தது,-மற்று அவன் மணி அணி வயிரத் தோள். 342-

சுந்தரத் தடந் தோள்வளை- அழகிய பெரிய தோளில்
அணிந்த வளையானது; மாசுணம் சுற்றிய தொழில் காட்ட-
பாம்பு சுற்றிய தன்மையைத் தோற்றுவிக்க; மற்று அவன் மணி
அணி வயிரத் தோள்- அந்தக் கும்பகருணனுடைய மணி பதித்த
அணிகலன்களை அணிந்த வயிரத் தோள்கள்; சந்திரப் பெருந்
தூணொடுஞ் சார்த்தியது – சந்திரனாகிய பெரிய தூணோடு
சார்த்தியதாய்; அதில் ஒன்றும் தவறு ஆகாது- கடைகின்ற
அந்த மத்தின் தன்மையில் குறைவு படாததாய்; அந்தரத்தவர்
அலைகடல் அமுது எழக் – தேவர்கள் அலைகளை உடைய
பாற்கடலில் அமுது தோன்றுமாறு; கடைவுறும் அந்நாளில்-
கிடைகின்ற அந்நாளில்; மந்தரத்தையும் கடுத்தது- மந்தர
மலையையும் ஒத்தது.

————–

சிவண வண்ண வான் கருங் கடல் கொடு வந்த செயலினும், செறி தாரை
சுவண வண்ண வெஞ் சிறையுடைக் கடு விசை முடுகிய தொழிலானும்,
அவண அண்ணலது ஏவலின் இயற்றிய அமைவினும், அயில் வாளி
உவண அண்ணலை ஒத்தது; மந்தரம் ஒத்தது, அவ் உயர் பொன் தோள். 343-

சிவண வண்ண வான் கருங்கடல் கொடு வந்த செயலினும் –
தனக்குத்தானே ஒத்த நிறமுடைய அழகிய பெரிய கடலில்
கொண்டு சேர்த்த செயலாலும்; செறி தாரை சுவண வண்ண
வெஞ்சிறை உடைக் கடுவிசை முடுகிய தொழிலானும்-
நெருங்கிய ஒளித்தொகுதியாகிய பொன்னிறத்தைக் கொண்ட
விரும்பத்தக்க சிறகுடன் மிக்க விரைவுடன் விரைந்து சென்ற
செயலாலும்; அவண அண்ணலது ஏவலின் இயற்றிய
அமைவினும் – அவ்விடத்து இராமபிரானது கட்டளைப்படி
தொழில் செய்த தன்மையினாலும்; அயில்வாளி உவண
அண்ணலை ஒத்தது- இராமபிரானது கூர்மையான அம்பு
கருடனை ஒத்தது; அவ் உயர் பொன் தோள் மந்தரம்
ஒத்தது- அக்கும்பகருணனுடைய உயர்ந்த அழகிய தோள்
மந்தர மலையை ஒத்தது.

—————-

கும்பகருணன் கால்களை இழத்தல்

பழக்க நாள் வரும் மேருவை உள்ளுறத் தொளைத்து, ஒரு பணை ஆக்கி,
வழக்கினால் உலகு அளந்தவன் அமைத்தது ஓர் வான் குணில் வலத்து ஏந்தி,
முழக்கினாலென, முழங்கு பேர் ஆர்ப்பினான், வானர முந்நீரை
உழக்கினான், தசை தோல் எலும்பு எனும் இவை குருதியொடு ஒன்றாக. 344-

பழக்க நாள் வரும் மேருவை- வழக்கமாகச் சூரியன் வலமாக
வரும் மேருமலையை; உள்ளுறத் தொளைத்து ஒரு பணை ஆக்கி-
உள்ளே பொருத்தமாக துளைத்து ஒருமுரசம் செய்து; வழக்கினால்
உலகு அளந்தவன் – முறைமையினால் உலகை அளந்தவனான
திரிவிக்கிரம அவதாரமாகிய கடவுள்; அமைத்தது ஓர்வான்
குணில் வலத்து ஏந்தி- அமைத்ததாகிய பெரிய குறுந்தடி ஒன்றை
வலக்கையில் ஏந்தி; முழக்கினாலென முழங்கு பேர்
ஆர்ப்பினான் – அடித்து முழக்கியதை ஒத்த பேர் ஒலியைச்
செய்தவன் ஆகிய கும்பகருணன்; தசை, தோல், எலும்பு எனும்
இவை குருதியொடு ஒன்றாக – தசை, தோல் எலும்பு என்னும்
இவை குருதியோடு சேர்ந்து ஒன்றுபடும்படி; வானர முந்நீரை
உழக்கினான் – வானரப் படையாகிய கடலைக் கலக்கினான்.

—————

நிலத்த கால், கனல், புனல், விசும்பு, இவை முற்றும் நிருதனது உரு ஆகி,
கொலத் தகாதது ஓர் வடிவு கொண்டாலென உயிர்களைக் குடிப்பானை,
சலத்த காலனை, தறுகணர்க்கு அரசனை, தருக்கினின் பெரியானை,
வலத்த காலையும், வடித்த வெங் கணையினால் தடிந்தனன்-தனு வல்லான். 345-

நிலத்த கால், கனல், புனல் விசும்பு இவை முற்றும் –
நிலத்தொடு காற்று, நெருப்பு, நீர் ஆகாயம் என்கிற இவை
முழுவதும்; நிருதனது உரு ஆகி- அரக்கனது வடிவம் பெற்று;
கொலத் தகாதது ஓர் வடிவு கொண்டாலென- கொல்ல முடியாத
ஒரு உருவைக் கொண்டது போலத் தோன்றி; உயிர்களைக்
குடிப்பானை – உயிர்களை அழிப்பவனும்; சலத்த காலனை- சினம்
கொண்ட யமன் போன்றவனும்; தறுகணர்க்கு அரசனை-
அஞ்சாமையுடையோர்க்கு அரசன் போன்றவனும்; தருக்கினில்
பெரியானை- செருக்கினில் மிக்கவனும் ஆகிய கும்பகருணனது,
வலத்த காலையும்-வலது காலையும்; வடித்த வெங்கணையினால் –
கூரிய கொடிய அம்பினால்; தனுவல்லான் தடிந்தனன்
– வில்லாளியான இராமன் அறுத்து வீழ்த்தினான்.

——————

பந்தி பந்தியின் பற் குலம் மீன் குலம் பாகுபாடு உற, பாகத்து
இந்து வெள் எயிறு இமைத்திட, குருதி யாறு ஒழுக்கல் கொண்டு எழு செக்கர்
அந்தி வந்தென, அகல் நெடு வாய் விரித்து, அடி ஒன்று கடிது ஓட்டி,
குந்தி வந்தனன், நெடு நிலம் குழி பட, குரை கடல் கோத்து ஏற. 346-

பந்தி பந்தியின் பற்குலம் மீன்குலம் பாகுபாடு உற-
வரிசை வரிசையாக உள்ள பற்களின் கூட்டம் நட்சத்திரக்
கூட்டம் போல் பாகுபாடு உற்று விளங்க; பாகத்து இந்து வெள்
எயிறு இமைத்திட – அதனிடையே பிறைச் சந்திரன் போல்
நீண்ட கோரைப் பல் விளங்கித் தோன்ற; குருதியாறு
ஒழுக்கல் கொண்டு எழு செக்கர் அந்தி வந்தென-
குருதியாற்று ஒழுக்கினால் எழுகின்ற செம்மை செவ்வானத்தை
உடைய அந்திப் பொழுது வந்தது போல் தோன்ற அகல் நெடு
வாய் விரித்து- தன் அகன்ற பெரிய வாயை விரித்துக்கொண்டு;
நெடுநிலம் குழிபட – நெடிய நிலம் குழிபட; குரை கடல்
கோத்து ஏற – அதனால் ஒலிக்கின்ற கடல் நீர் நிலத்தின் மீது
பரவ; அடி ஒன்று கடிது ஒட்டி குந்தி வந்தனன் – ஒற்றைக்
காலடி மேல் எழுந்து வலிமையாகப் பூமியில் பொருந்துமாறு
நொண்டிக் கொண்டு போரிட வந்தான்.

—————

மாறு கால் இன்றி வானுற நிமிர்ந்து, மாடு உள எலாம் வளைத்து ஏந்தி,
சூறை மாருதம் ஆம் எனச் சுழித்து, மேல் தொடர்கின்ற தொழிலானை,
ஏறு சேவகன், எரி முகப் பகழியால், இரு நிலம் பொறை நீங்க,
வேறு காலையும் துணித்தனன், அறத்தொடு வேதங்கள் கூத்தாட. 347-

மாறுகால் இன்றி- மற்றொரு கால் இல்லாமல்; வானுற
நிமிர்ந்து – வானத்தைப் பொருந்துமாறு ஓங்கி; மாடு உள
எலாம் – பக்கத்தில் உள்ளவைகளை எல்லாம்; வளைத்து ஏந்தி
– நாவால் வளைத்துக் கடித்து ஏந்திய வண்ணம்; சூறை மாருதம்
ஆம் என- கடுங்காற்று ஆகும் என்று கண்டோர் கூறுமாறு;
சுழித்து மேல் – வட்டமிட்டு மேல்; தொடர்கின்ற
தொழிலானை – கொல்லும் தொழிலைத் தொடர்கின்ற
கும்பகருணனை; ஏறு சேவகன்- ஆண் சிங்கம் போன்றவனாகிய
இராமன்; எரிமுகப் பகழியால் – நெருப்பை நுனியில் கொண்ட
அம்பால்; இருநிலம் பொறை நீங்க- பெரிய நிலத்தின்
பாரம் குறையும்படி; அறத்தொடு வேதங்கள் கூத்தாட – அறக்கடவுளும் வேதங்களும் கூத்தாட; வேறு
காலையும் துணித்தனன்- மற்றொரு காலையும் துணித்தனன்.

————-

கை இரண்டொடு கால்களும் துணிந்தன; கரு வரை பொருவும் தன்
மெய் இரண்டு நூறாயிரம் பகழியால் வெரிந் உறத் தொளை போய;
செய்ய கண் பொழி தீச் சிகை இரு மடி சிறந்தன; தெழிப்போடும்,
வய்யம் வானிடை மழையினும் பெருத்தது, வளர்ந்தது, பெருஞ் சீற்றம். 348-

கை இரண்டொடு கால்களும் துணிந்தன- கை இரண்டுடனே
கால்கள் இரண்டும் துண்டுபட்டன; கருவரை பொருவும் தன் மெய்
– தன்னுடைய பெரிய மலையை ஒத்த உடல்; – இரண்டு நூறாயிரம்
பகழியால் – இருநூறு ஆயிரம் அம்புகளால்; வெரிந் உறத்
தொளை போய- முதுகுவரை மிகுதியாகத் துளையாக்கியது; செய்ய
கண்பொழி தீச்சிகை- சிவந்த கண்களில் இருந்து நெருப்பு
அனல்; இருமடி சிறந்தன – இரண்டு மடங்கு மிக்கது; பெருஞ்
சீற்றம் – மிக்க சினம்; தெழிப்போடும் – பேரொலியோடு;
வய்யம் வானிடை மழையினும் பெருத்தது வளர்ந்தது – நில
உலகில் வானத்திடையில் தோன்றும் இடியொலி போல் மிக்கு
வளர்ந்தது.

—————-

கும்பகருணன் மலைகளைக் கவ்வி வானரங்களை அழித்தல்

பாதம் கைகளோடு இழந்தனன், படியிடை இருந்து, தன் பகு வாயால்,
காதம் நீளிய மலைகளைக் கடித்து இறுத்து எடுத்து, வெங் கனல் பொங்கி,
மீது மீது தன் அகத்து எழு காற்றினால் விசைகொடு திசை செல்ல
ஊத ஊதப்பட்டு, உலந்தன வானரம், உருமின் வீழ் உயிர் என்ன, 349-

பாதம் கைகளோடு இழந்தனன்- கால்களையும் கைகளையும்
இழந்தவனாகிய கும்பகருணன்; வெங்கனல் பொங்கி- கொடுஞ்
சீற்றம் மிக்கு; படியிடை இருந்து – நிலத்திடத்திருந்து;
தன் பகுவாயால் – தன் பிளந்த பெரிய வாயினால்; காதம்
நீளிய மலைகளை- காதத்தளவு நீண்டு கிடக்கும் மலைகளை;
கடித்து இறுத்து எடுத்து- கடித்து ஒடித்து எடுத்து; மீது மீது தன்
அகத்து எழு காற்றினால் – மேலும் மேலும் தன் உள்ளிருந்து
எழும் பெருமூச்சாகிய காற்றினால்; விசை கொடு திசை செல்ல
– விரைவு கொண்டு திசைகளில் செல்லுமாறு; ஊத ஊதப்பட்டு-
ஊதுந்தொறும் ஊதுந்தொறும் அக்காற்றினால்; வானரம் உருமின்
வீழ் உயிர் என்ன உலந்தன – குரங்குப்படை இடியினால்
உயிரொழியும் உயிரினம் போல உயிரொழிந்தன.

——————

தீயினால் செய்த கண்ணுடையான், நெடும் சிகையினால் திசை தீய
வேயினால் திணி வெற்பு ஒன்று நாவினால் விசும்புற வளைத்து ஏந்தி,
பேயின் ஆர்ப்புடைப் பெருங் களம் எரிந்து எழ, பிலம் திறந்தது போலும்
வாயினால் செல, வீசினன்; வள்ளலும் மலர்க் கரம் விதிர்ப்புற்றான். 350-

தீயினால் செய்த கண்ணுடையான் – தீயினால்
செய்யப்பட்டாற் போன்ற சினத்தால் சிவந்த கண்களை
உடையவனான கும்பகருணன்; நெடுஞ் சிகையினால் திசை தீய-
தன்னிடம் இருந்து எவும் நெடிய நெருப்பு அனலால் திசைகள்
எல்லாம் கருக; வேயினால் திணி வெற்பு ஒன்று-
மூங்கில்களால் நெருங்கிய மலை ஒன்றினை; நாவினால்
விசும்புற வளைத்து ஏந்தி- நாவினால் வானத்தைப் பொருந்த
வளைத்து எடுத்து; பேயின் ஆர்ப்புடை பெருங்களம் எரிந்து
எழ – பேய்களின் பேரொலி கொண்ட பெரிய போர்க்களம்
எரிந்து விழுமாறு; பிலம் திறந்தது போலும் வாயினால்- குகை
திறந்தது போல் உள்ள வாயினால்; செல வீசினான்-
பெருந்தொலைவு வீசி எறிந்தான்; வள்ளலும் மலர்க்கரம்
விதிர்ப்புற்றான் – அதுகண்ட வள்ளலாம் இராமனும் தாமரை
மலர் போன்ற கை வியப்பால் அசையப் பெற்றான்.

——————-

உள் உணர்வு தோன்றிய கும்பகருணன் உரை

‘அய்யன் வில் தொழிற்கு ஆயிரம் இராவணர் அமைவிலர்; அந்தோ! யான்
கையும் கால்களும் இழந்தனென்; வேறு இனி உதவல் ஆம் துணை காணேன்;
மையல் நோய்கொடு முடிந்தவன் நாள் என்று, வரம்பு இன்றி வாழ்ந்தானுக்கு
உய்யுமாறு அரிது’ என்று, தன் உள்ளத்தின் உணர்ந்து, ஒரு துயருற்றான். 351-

அய்யன் வில் தொழிற்கு- பெருமையில் சிறந்த இராமனது
வில் தொழில் ஆற்றலுக்கு; ஆயிரம் இராவணர் அமைவிலர்-
ஆயிரம் இராவணர் இருந்தாலும் எதிர்க்கும் வலிமை
அமையாதவர் ஆவர்; அந்தோ யான் கய்யும் கால்களும்
இழந்தனென்- ஐயோ நான் கையையும் காலையும் இழந்து
விட்டேன்; வேறு இனி உதவ லாம் துணை காணேன்- இனி
வேறு உதவக்கூடிய வகையையும் காண்கிலேன்; மய்யல் நோய்
கொடு முடிந்தவன் – ஆசையாகிய நோயினால் இராவணன்
முடிந்தனன்; நாள் என்று வரம்பு இன்றி வாழ்ந்தானுக்கு-
வாழ்நாள் என்று எல்லையில்லாமல் வாழ்ந்த அவன்; உய்யுமாறு
அரிது- இனிமேல் உயிர் பிழைத்து இருத்தல் இல்லை; என்று
தன் உள்ளத்தின் உணர்ந்து- என்று தன் உள்ளத்தில் அறிந்து;
ஒரு துயருற்றான்- ஒப்பற்ற மனத்துன்பம் அடைந்தான்.

———-

சிந்துரச் செம் பசுங் குருதி திசைகள் தொறும் திரை ஆறா,
எந்திரத் தேர், கரி, பரி, ஆள், ஈர்த்து ஓடப் பார்த்திருந்த
சுந்தரப் பொன்-கிரி ஆண்மைக் களிறு அனையான், கண் நின்ற
சுந்தரப் பொன்-தோளானை முகம் நோக்கி, இவை சொன்னான்: 352-

சிந்துரச் செம் பசுங்குருதி- சிந்துரப் பொடி போன்ற
புதிய பசிய குருதி; திசைகள் தொறும் திரை ஆறா- திசைகள்
தோறும் அலைகளை உடைய ஆறாக ஓடி; எந்திரத் தேர் கரி பரி
ஆள்- பொறிகள் அமைந்த தேர்களையும் யானைகளையும்,
குதிரைகளையும் வீரர்களையும்; ஈர்த்து ஓடப் பார்த்திருந்த
– இழுத்துக் கொண்டு செல்வதைப் பார்த்துக் கொண்டு இருந்த;
கந்தரம் பொன்கிரி – தலையை உடைய பொன்கிரியையும்;
ஆண்மைக் களிறு அனையான்- வீரம் பொருந்திய களிற்றையும்
ஒத்தவனான கும்பகருணன்; கண் நின்ற- தன் கண் எதிரில்
நின்ற; சுந்தரப் பொன் தோளானை- மிக அழகிய தோளினை
உடைய இராமனது; முகம் நோக்கி இவை சொன்னான்
– முகத்தைப் பார்த்து இச்சொற்களைக் கூறினான்.

—————

‘புக்கு அடைந்த புறவு ஒன்றின் பொருட்டாகத் துலை
புக்க மைக் கடங் கார் மத யானை வாள் வேந்தன் வழி வந்தீர்!
இக் கடன்கள் உடையீர்! நீர் எம் வினை தீர்த்து, உம்முடைய
கைக்கு அடைந்தான் உயிர் காக்கக் கடவீர், என் கடைக்கூட்டால். 353-

புக்கு அடைந்த புறவு ஒன்றின் பொருட்டாக- தன்னைச்
சரணாகதி அடைந்த புறா ஒன்றின் பொருட்டாக; துலை புக்க-
தராசுத் தட்டில் ஏறிய; மைக்கடங்கார் மதயானை வாள்
வேந்தன் வழிவந்தீர்- கருமையான மதநீரை மேகம் போல்
பொழிகின்ற வாள் படையுடைய சிபி மன்னனது கால்வழி வந்தவரே!;
இக்கடன்கள் உடையீர் – நீங்கள் அச்சிபி போல் அன்புக்
கடன்களும் உடையீர்; நீர் எம்வினை தீர்த்து – நீர்
எங்களது உறவினால் உண்டான தீவினைகளைத் தீர்த்து;
உம்முடைய கைக்கு அடைந்தான்- உம்முடைய கையில்
அடைக்கலம் அடைந்தவனாகிய வீடணனது; உயிர் காக்கக்
கடவீர் – உயிரைப் பாதுகாக்கக் கடவீர்; என்
கடைக்கூட்டால்- இது என் கடைசி விருப்பமாகும்.

————–

‘நீதியால் வந்தது ஒரு நெடுந் தரும நெறி அல்லால்,
சாதியால் வந்த சிறு நெறி அறியான், என் தம்பி;
ஆதியாய்! உனை அடைந்தான்; அரசர் உருக்கொண்டு அமைந்த
வேதியா! இன்னம் உனக்கு அடைக்கலம் யான் வேண்டினேன். 354-

ஆதியாய்- முழுமுதலே!; அரசர் உருக்கொண்டு அமைந்த
வேதியா – உலகில் அரசர் வடிவு கொண்டு வந்து வேதங்களால்
புகழப்படுகின்றவனே; நீதியால் வந்தது ஒரு நெடுந்தரும நெறி
அல்லால்- நீதிமுறைப்படி அமைந்து வந்த சிறந்த அற நெறி
அல்லாது; சாதியால் வந்த சிறுநெறி அறியான் – சாதிப்
பிறப்பினால் உண்டான அறமற்ற நெறியை அறியாதவனாகிய;என்
தம்பி- எனக்குத் தம்பியாகிய வீடணன்; உனை அடைந்தான்-
உன்னை அடைக்கலமாக அடைந்தான்; இன்னம் உனக்கு
அடைக்கலம் யான் வேண்டினேன்- மீண்டும் அவனை உனக்கு
அடைக்கலப் பொருளாகக் கொண்டு காத்தலை யான்
வேண்டினேன்.

———————-

‘வெல்லுமா நினைக்கின்ற வேல் அரக்கன், வேரோடும்
கல்லுமா முயல்கின்றான், இவன்” என்னும் கறுவுடையான்;
ஒல்லுமாறு இயலுமேல், உடன்பிறப்பின் பயன் ஓரான்;
கொல்லுமால், அவன் இவனை; குறிக்கோடி, கோடாதாய்! 355-

கோடாதாய்- நீதிநெறி தவறாதவனே; வெல்லுமா நினைக்கின்ற
வேல் அரக்கன் – வெல்லுமாறு எண்ணுகின்ற வேல்
படையை உடையவனாகிய இராவணன்; இவன் வேரோடும் கல்லுமா
முயல்கின்றான் என்னும் – இவ்வீடணன் தன்னை அடியோடு
அழிக்க முயல்கின்றான் என்னும்; கறுவுடையான் – உள்ளடங்கிய
வஞ்சம் உடையான்; ஒல்லுமாறு இயலுமேல் – வாய்ப்பு
நேருமானால்; அவன் இவனை- அந்த இராவணன் இந்த வீடணனை;
உடன் பிறப்பின் பயன் ஓரான் கொல்லுமால் – உடன்
பிறப்புப் பாசத்தின் பயனை உணராதவனாய்க் கொல்லுவான்;
குறிக்கோடி- இதனை மனதில் கொள்.

———————–

‘தம்பி என நினைந்து, இரங்கித் தவிரான், அத் தகவு இல்லான்;
நம்பி! இவன் தனைக் காணின் கொல்லும்; இறை நல்கானால்;
உம்பியைத் தான், உன்னைத்தான், அனுமனைத்தான், ஒரு பொழுதும்
எம்பி பிரியானாக அருளுதி; யான் வேண்டினேன். 356-

நம்பி- ஆடவரில் சிறந்தவனே!; அத்தகவு இல்லான்- அந்த
நற்குணமில்லாதவனாகிய இராவணன்; தம்பி என நினைந்து
இரங்கித் தவிரான்- வீடணன் தம்பி ஆயிற்றே என்று எண்ணி
இரக்கம் கொண்டு உயிரோடு விட்டிடான்; இவன்தனைக் காணின்
கொல்லும்- இவனைக் கண் எதிரே கண்டால் கொல்லுவான்;
இறை நல்கானால்- சிறிது கூட அருள் செய்ய மாட்டான்;
உம்பியைத்தான்- ஆகவே உன் தம்பியையும்; உன்னைத்தான்-
உன்னையும்; அனுமனைத்தான்- அனுமனையும்; ஒரு பொழுதும்-
ஒரு கணப் பொழுதும்; எம்பி பிரியானாக அருளுதி- என் தம்பி
பிரியாதிருக்குமாறு திருவருள் செய்க; யான் வேண்டினேன்-
இதனை யான் வேண்டிக் கொள்ளுகிறேன்.

————-

தலையைக் கடலில் இடுமாறு வேண்ட, இராமனும் உடன்படல்

‘”மூக்கு இலா முகம்” என்று முனிவர்களும் அமரர்களும்
நோக்குவார் நோக்காமை, நுன் கணையால் என் கழுத்தை
நீக்குவாய்; நீக்கியபின், நெடுந் தலையைக் கருங் கடலுள்
போக்குவாய்; இது நின்னை வேண்டுகின்ற பொருள்’ என்றான். 357-

முனிவர்களும் அமரர்களும்- முனிவர்களும் தேவர்களும்;
மூக்கு இலாமுகம் என்று நோக்குவார்- என் முகத்தை மூக்கு
இல்லாத முகம் என்று சொல்லிக் காண்பார்கள்; நோக்காமை –
அவர்கள் அவ்வாறு நோக்காமல்; நுன் கணையால்- உன
அம்பினால்; என் கழுத்தை நீக்குவாய்- என் கழுத்தை அறுத்து
நீக்குவாய்; நீக்கிய பின் – அறுத்து நீக்கிய பிறகு
நெடுந்தலையைக் கருங்கடலுள் போக்குவாய்-என் கழுத்தோடு
கூடிய நெடிய தலையை கரிய கடலுக்குள்ளே மூழ்கச் செய்வாய்;
இது நின்னை வேண்டுகின்ற பொருள் என்றான்-இதுவும் நான்
உன்னை வேண்டிக் கொள்ளுகின்ற பொருள் என்றான்
கும்பகருணன்.

———————

‘வரம் கொண்டான்; இனி மறுத்தல் வழக்கு அன்று’ என்று, ஒரு வாளி
உரம் கொண்ட தடஞ் சிலையின் உயர் நெடு நாண் உள் கொளுவா,
சிரம் கொண்டான்; கொண்டதனைத் திண் காற்றின் கடும் படையால்,
அரம் கொண்ட கருங் கடலின் அழுவத்துள் அழுத்தினான். 358-

வரம் கொண்டான் – கும்பகருணன் வரமாகக் கேட்டுக்
கொண்டான்; இனி மறுத்தல் வழக்கு அன்று- ஆகையால் இனி
மறுத்தல் முறைமையன்று; என்று ஒருவாளி- என்று கருதி
ஓரம்பினை; உரம் கொண்ட தடஞ்சிலையின் உயர் நெடுநாண்
உல் கொளுவா- வலிமை கொண்ட பெரிய வில்லின் சிறந்த
நெடிய நாணைப் பூட்டி உள்ளே வைத்து; சிரம் கொண்டான்-
எய்து கும்பகருணனது தலையை அறுத்தான்; கொண்டதனை-
அறுத்த அந்தத் தலையை; திண் காற்றின் கடும் படையால்-
வலிய காற்றின் கடிய அம்பினால்; அரம் கொண்ட கருங்கடலின
அழுவத்துள் அழுத்தினான்- ஒலி கொண்ட கரிய கடலின்
நடுவில் உள்ளே விழச் செய்தான்.

———————

கும்பகருணன் தலை கடலில் மூழ்குதல்

மாக் கூடு படர் வேலை மறி மகரத் திரை வாங்கி,
மேக்கூடு, கிழக்கூடு, மிக்கு இரண்டு திக்கூடு,
போக்கூடு கவித்து, இரு கண் செவியூடும் புகை உயிர்க்கும்
மூக்கூடும் புகப் புக்கு மூழ்கியது, அம் முகக் குன்றம். 359-

மாக்கூடு படர்வேலை- கருமை நிறம் மிகக் கூடியுள்ள பரந்த
கடலில்; மறி மகரத்திரை வாங்கி- மடங்குகின்ற அலைகளை
அப்பால் தள்ளி; மேக்கூடு, கிழக்கூடு மிக்கு இரண்டு திக்கூடு
– மேற்கிலும், கிழக்கிலும் மிக்குள்ள இரண்டு திசைகளிலும்;
போக்கூடு கவித்து – இடையே போதல் தவிர்த்து; இருகண்
செவியூடும்- இரு கண்களிலும்; புகை உயிர்க்கும்- புகையை
வெளிப்படுத்தும்; அம்முகக் குன்றம் – அந்த முகமாகிய
சிறுமலை; மூக்கூடும் புகப் புக்கு மூழ்கியது- மூக்கு
வழியாகவும் நீர் உள்புகுதலால் மூழ்கியது.

————

ஆடினார் வானவர்கள்; அரமகளிர் அமுத இசை
பாடினார்; மா தவரும் வேதியரும் பயம் தீர்ந்தார்;
கூடினார் படைத்தலைவர், கொற்றவனை; குடர் கலங்கி
ஓடினார், அடல் அரக்கர், இராவணனுக்கு உணர்த்துவான். 360-

வானவர்கள் ஆடினார்- வானவர்கள் ஆடினார்; அரமகளிர்
அமுத இசை பாடினார்- தேவமகளிர் அமுதம் போன்ற இசைப்
பாடலைப் பாடினார்; மாதவரும் வேதியரும் பயம் தீர்ந்தார்-
தவமுனிவர்களும் அந்தணர்களும் அச்சம் நீங்கினார்கள்;
கொற்றவனைப் படைத்தலைவர் கூடினார்- வானரப் படைத்
தலைவர் வெற்றி பெற்ற இராமனைக் கூடினார்; அடல் அரக்கர்
குடர் கலங்கி- கொல்லும் தன்மையுள்ள அரக்கர்கள் குடர்
கலங்கி; இராவணனுக்கு உணர்த்துவான் ஓடினார் –
இராவணனுக்கு உணர்த்துவதற்காக ஓடினார்கள்.

————–

மிகைப் பாடல்கள்

என்று எடுத்து உரைத்தோன், பின்னும் உளம் கனன்று, இனைய சொல்வான்:
‘வன் திறல் மனிதன் வெம் போர் எவரினும் வலியனேனும்,
பொன்றுதல் இல்லா என்னைப் போர் வெலற்கு எளிதோ? காலம்
ஒன்று அல; உகங்கள் கோடி உடற்றினும், ஒழிவது உண்டோ ? 31-1

‘மானிடன் என்றே நாணி, கடவுள் மாப் படைகள் யாதும் யான் எடுத்து ஏகல் விட்டேன்;
இன்றை வெஞ் சமரம் போக, தான் அமர் அழிந்தேன்
என்னத் தக்கதோ?’ என்றான், அந்த மானம் இல் அரக்கன்;
பின்னர், மாலியவானும் சொல்வான்: 31-2

‘”முப்புரம் எரிந்தோன் ஆதி தேவரும் முனிவர்தாமும்,
தப்பு அற உணர்தற்கு எட்டாத் தருமமே, கை வில் ஏந்தி,
இப் பிறப்பு இராமன் என்றே, எம்மனோர் கிளையை எல்லாம்
துப்பு அற, முருக்க வந்தான்” என்ற சொல் பிழைப்பது உண்டோ ? 31-3

‘ஆதலின் இறைவ! கேட்டி; அவன் பெருந் தேவி ஆன
மாதினை விடுத்து, வானோர் முனிவரர் வருந்தச் செய்யும்
தீதினை வெறுத்து, தேவர் தேவனாம் சிலை இராமன்
பாதமே பணியின், நம்பால் பகை விடுத்து, அவன் போம்’ என்றான். 33-1

‘என்றும் ஈறு இலா அரக்கர் இன்ப மாய வாழ்வு எலாம்
சென்று தீய, நும் முனோன் தெரிந்து தீமை தேடினான்;
இன்று இறத்தல் திண்ணமாக, இன்னும் உன் உறக்கமே?’
அன்று அலைத்த செங் கையால் அலைத்து அலைத்து, உணர்த்தினார். 45-1

சாற்றிய சங்கு தாரை ஒலி அவன் செவியில் சார,
ஆற்றலின் அமைந்த கும்பகருணனுக்கு அதுவும் தாராட்டு
ஏற்றது ஒத்து, அனந்தல் முன்னர்க்கு இரட்டி கொண்டு உறங்க, மல்லர், கூற்றமும் குலைய, நெஞ்சம் குறித்து இவை புரியலுற்றார். 51-1

அன்னவர் உரைப்பக் கேளா, அரசன் மோதரனை நோக்கி,
‘மின் எனும் எயிற்று வீர எம்பியைக் கொணர்தி!’ என்ன,
‘இன்னதே செய்வென்’ என்னா, எழுந்து அடி வணங்கிப் போவான்,
பொன் என விளங்குவான் போய்த் தன் பெருங் கோயில் புக்கான். 54-1

இனைய கும்பகருணன், இராக்கதர் தனை முனிந்து இடிஏறு
எனச் சாற்றினான்; ‘எனை நெடுந் துயில் போக்கியது
என்?’ என, மனம் நடுங்கினர், வாய் புதைத்து ஓதினார். 69-1

வட்ட விண்ணையும் மாதிரம் எட்டையும்
கட்டி, வீரம் கணிப்பு அரும் காவலான்
தொட்ட பல் கலனும் சுடர் மௌலியும்
தெட்ட சோதி திளைப்ப நின்றான் அரோ. 76-1

என்ற போதில் எறுழ் வலிச் செம் மணிக்
குன்றம் ஐ-இரண்டு ஏந்திக் குல வரை
சென்றது என்னத் திரிந்து உலகு யாவையும்
வென்ற வீரன் இனைய விளம்பினான். 77-1

அக் கணத்து அரக்கர் கோன், ‘அளப்பு இல் யானை, தேர்
மிக்க வான் புரவி, கால் வயவர் வெள்ளமோடு,
ஒக்க வான் படைப் பெருந் தலைவர் ஒன்று அறப்
புக்குமின், இளவலைப் புறத்துச் சூழ்ந்து’ என்றான். 99-1

வெள்ளம் நூறு இரதம்; மற்று இரட்டி வெங் கரி;
துள்ளு வான் பரி அதற்கு இரட்டி; தொக்குறும்
வெள்ளி வேல் அரக்கர் மற்று இரட்டி; மேம்படும்
கொள்ளை வான் படைப் பெருந் தலைவர் கோடியால். 102-1

அன்ன போது இராவணற்கு இளவல் ஆகிய
மின்னு வேல் கும்பகன் என்னும் மேலையோன்,
துன்னு போர் அணிகலம் யாவும் சூடியே,
தன் ஒரு தேரினைத் தொழுது தாவினான். 103-1

தொண்டகம், துடி, கன பேரி, துந்துமி,
திண்டிமம், படகம், மா முரசு, திண் மணிக்
கண்டைகள், கடையுகத்து இடிக்கும் ஓதையின்
எண் திசை செவிடு எறிதரச் சென்று உற்றதால். 106-1

எழு கருங் கடல் கரை எறிந்திட்டு, ஊழி நாள்,
முழுது உலகு அடங்கலும் மூடும் தன்மையின்
தழுவியது என, தசமுகன் தன் ஆணையால்,
கிளர் பெரும் படைக் கடல் கெழுமிப் போந்ததால், 106-2

இரைக்கும் மும் மதம் பொழி தறுகண் யானையின்,
நெருக்கமும், நெடுங் கொடித் தொகையின் தேர்க் குலப்
பெருக்கமும், புரவிகள் பிறங்கும் ஈட்டமும்
அரக்கர்தம் பெருக்கமும், ஆயது எங்குமே. 106-3

நாற்படை வகை தொகை நடக்க, தூளிகள்
மேற்பட, விசும்பகம் மறைந்த; வெண் திரைப்
பாற்கடல் எனப் பொலி கவிப் பெரும் படை
காற் படு கதியினின் கரந்தது, ஓடியே. 108-1

குரக்கினப் பெரும் படை குலை குலைந்து போய்
வெருக் கொள, விசும்பிடை வெய்ய மாயையின்
அரக்கன் இன்று அமைத்தது ஓர் உருக்கொலாம்?
நினது உருக் கொடே கரிய குன்று உற்றவேகொலாம்? 111-1

ஏழு யோசனைக்கு மேலாய் உயர்ந்திடும் முடி பெற்றுள்ளான்;
சூழி வெங் கரிகள் தாங்கும் திசை எலாம் சுமக்கும் தோளான்;
தாழ்வு அறு தவத்தின் மேலாம் சதுமுகன் வரத்தினாலே
வீழ் பெருந் துயிலும் பெற்றான்-வெங் கடுங் கூற்றின் வெய்யோன். 114-1

சிலை பொழி பகழி, வேல், வாள், செறி சுடர்க்
குலிசம், ஈட்டி, பல வகைப் படைகள் வாங்கி, நிருதர்கள் பல் போர் செய்தார்;
மலையொடு மரங்கள் ஓச்சி, வயிரத் தோள் கொண்டு, மாறாக்
கொலை அமர் எடுத்து, வாகை குரங்குகள் மலைந்த அம்மா. 172-1

பற்றினன் வசந்தன் தன்னை, பனைத் தடங் கைகளாலே;
எற்றினன், ‘இவனை மீள விடவொண்ணாது’ என்று சொல்லி,
‘கொற்றமும் உடையன்’ என்னா, குழம்பு எழப் பிசைந்து கொண்டு
நெற்றியில் திலதமாக இட்டனன்-நிகர் இலாதான். 177-1

அளப்பு இல் வெங் கரிகள், பூதம், ஆளி, வெம் பரிகள் பூண்டு, ஆங்கு
இழுப்ப வந்து உடைய தேர் விட்டு, இரு நிலத்து
இழிந்து, வெம் போர்க் களப் படக் கவியின் சேனைக் கடல் வறந்து உலைய,
‘கையால் குளப் படுக’ என்று வெய்யோன் குறித்து, உளம் கனன்று புக்கான். 177-2

நிகர் அறு கவியின் சேனை நிலை கெட,
சிலவர் தம்மைத் துகள் எழக் கயக்கி ஊதும்; சிலவரைத் துகைக்கும்,
காலின்; தகர் படச் சிலவர் தம்மைத் தாக்கிடும், தடக் கைதன்னால்;
புகவிடும் சிலவர்தம்மை, விசும்பிடைப் போக, வெய்யோன். 177-3

வலிதினின், சிலவர் தம்மை வன் கையால் பற்றிப் பற்றி,
தலையொடு தலையைத் தாக்கும்; சிலவரைத் தனது தாளால்
நிலமதில் புதைய ஊன்றி மிதித்திடும்; சிலவர் நெஞ்சைக்
கொலை நகப் படையின் கீறி, குருதி வாய்மடுத்துக் கொள்ளும். 177-4

கடும் பிணக் குவையினூடே சிலவரைப் புதைக்கும்; கண்ணைப்
பிடுங்குறும் சிலவர்தம்மை; சிலவரைப் பிடித்து, வெய்தின்
கொடுங் கொலை மறலி ஊரில் போய் விழக் குறித்து வீசும்;
நெடும் பெரு வாலின் பற்றிச் சிலவரைச் சுழற்றி நீக்கும். 177-5

பருதி மண்டலத்தில் போகச் சிலவரைப் பற்றி வீசும்;
குருதி வாய் பொழியக் குத்திச் சிலவரைக் குமைக்கும்; கூவித்
திரிதரத் தேவர் நாட்டில் சேர்த்திடும் சிலவர்தம்மை;
நெரிதரச் சிலவர்தம்மைக் கொடுங் கையின் நெருக்கும் அன்றே. 177-6

ஆயிர கோடி மேலும் அடல் குரங்கு அதனை வாரி,
வாயிடைப் பெய்து மூட, வயிற்றிடைப் புகுந்து, வல்லே கூய் உளம்
திகைத்து, பின்னும் கொடியவன் செவியினூடே, போயது
வெளியில் மீண்டும், புற்றிடைப் பறவை என்றே. 179-1

அவ் வழி அரியின் சேனை அதர்பட வசந்தன் என்பான்
தவ் வழி வீரன் நாலு வெள்ளத்தின் தலைவன் என்றான்;
எவ் வழி? பெயர்ந்து போவது எங்கு? என இரு குன்று ஏந்தி,
வெவ் வழி இசை அக் கும்பகருணன்மேல் செல்ல விட்டான். 180-1

விசைந்திடு குன்றம் நின்ற விண்ணவர் இரியல் செல்ல,
இசைந்திடு தோளின் ஏற்றான், இற்று நீறு ஆகிப் போக;
வசந்தனைச் சென்று பற்றி வாசம் கொண்டுவந்து கையால்
பிசைந்து சிந்தூரமாகப் பெரு நுதற்கு அணிந்து கொண்டான். 180-2

நீலனை அரக்கன் தேரால் நெடு நிலத்து இழியத் தள்ளி,
சூலம் அங்கு ஒரு கை சுற்றி, ‘தொடர்ந்திடும் பகைஞர் ஆவி
காலன் ஊர்தன்னில் ஏற்றி, கடிதில் என் தமையன் நெஞ்சில்
கோலிய துயரும் தீர்ப்பென்’ எனக் கொதித்து, அமரின் ஏற்றான். 186-1

செய்துறு பகையை வெல்வார், நின்னைப் போல் அம்மை செய்து,
வைதுறு வந்து போது, வலுமுகம் காட்டி, யாங்கள் கைதுறு வினையை
வென்று கடன் கொள்வார் மார்க்கமுள்ளார்; எய்துறும்
இதற்கு என் போல் உன் தகை சிலை உதவி என்றான். 193-1

மாருதி போதலோடும், வயப் படைத் தலைவர், மற்று ஓர்
மாருதம் என்னப் பொங்கி, வரையொடு மரங்கள் வாரி, போர் எதிர்
புகக் கண்டு, அன்னோர் அனைவரும் புரண்டு போரில் சோர் தர
படைகள் வாரிச் சொரிந்து, அடல் அரக்கன் ஆர்த்தான். 203-1

மழுவொடு கணிச்சி, சூலம், வாள், மணிக் குலிசம், ஈட்டி,
எழு, அயில், எஃகம் என்று இப் படை முதல் எவையும் வாரி,
மழை எனப் பொழிந்து, நூறு யோசனை வரைப்பில் மேவும்
அளவு அறு கவியின் சேனை அறுத்து, ஒரு கணத்தில் வந்தான். 203-2

இலக்குவன் கொடுமரத்திடை எறியும் வெம் பகழி
கலக்கம் அற்றிடும் அரக்கர்தம் கரங்களைக் கடிந்தே,
முலைக்குவட்டு, அவர் கன்னியர், முன்றிலின் எறிய,
விலக்க அரும் விறலாளி கண்டு, அவர் உயிர் விளிந்தார். 226-1

வடி சுடர்ப் பெரும் பகழிகள் ஏற்றின வதனத்து
அடல் அரக்கரும் சிலர் உளர்; அவர் தலை அறுத்து,
ஆங்கு உடன் எடுத்து, அவர் மனையினுக்கு உரிய கன்னியர்பால் இட,
உவப்பொடும் புழுக்கினர், ஊன் இவை அறியார். 226-2

குஞ்சரத் தொகை, தேர்த் தொகை, குதிரையின் தொகை, மேல்
விஞ்சு வாள் எயிற்று அரக்கர்தம் தொகை எனும் வெள்ளம்
பஞ்சினில் படும் எரி என, இலக்குவன் பகழி
அஞ்செனப் படு கணத்து, அவை அனைத்தையும் அழித்த. 227-1

வந்து அம் மாப் படை அளப்பு இல வெள்ளங்கள் மடிய,
அந்தி வான் எனச் சிவந்தது, அங்கு அடு களம்; அமரில்
சிந்தி ஓடிய அரக்கரில் சிலர், ‘தசமுகனுக்கு
இந்த அற்புதம் உரைத்தும்’ என்று ஓடினர், இப்பால். 227-2

உரைத்து, நெஞ்சு அழன்று, ‘ஒரு கணத்து இவன் உயிர் குடித்து,
என் கருத்து முற்றுவென்’ எனச் சினம் கதுவிட, கடுந் தேர் பரித்த
திண் திறல் பாகரை, ‘பகைவனுக்கு எதிரே பொருத்தும்’ என்று
அடல் கும்பகன் பொருக்கெனப் புகன்றான். 228-1

நாண் தெறித்தனன், பகிரண்டப் பரப்பொடு நவை போய்
மாண்ட விண்ணவர் மணித் தலை துளங்கிட, வயப் போர்
பூண்ட வானரம் நின்றதும் புவியிடை மறிய, தூண்டி,
மற்று அவன் இலக்குவன் தனக்கு இவை சொல்வான்: 233-1

அது கண்டார் அடல் வானவர், ஆசிகள் கூறித் துதி கொண்டார்;
அடல் அரக்கனும் துணை விழி சிவந்து ஆங்கு, ‘இது கண்டேன்;
இனிக் கழிந்தது, உன் உயிர்’ எனக் கனன்றே கொதி கொண்டான்,
அடல் சிலையினைக் குழைவுற வளைத்தான். 240-1

புக்க போதில், அங்கு இலக்குவன் பொருக்கெனத் துயர் தீர்ந்து,
அக் கணம் தனில் அரக்கர் தம் பெரும் படை அவிய, மிக்க வார்
சிலை வளைத்து, உரும் ஏறொடு விசும்பும் உட்க,
நாண் எறிந்து, உக முடிவு என, சரம் பொழிந்தான். 248-1

‘காய் கதிர்ச் சிறுவனைப் பிணித்த கையினன்,
போயினன் அரக்கன்’ என்று உரைத்த போழ்தின் வாய்,
நாயகன் பொருக்கென எழுந்து, நஞ்சு உமிழ் தீ அன
வெகுளியன், இனைய செய்தனன். 272-1

ஆயிரம் பேய் சுமந்து அளித்தது, ஆங்கு ஒரு மா
இருங் கேடகம் இடத்து வாங்கினான்; பேய்
இரண்டாயிரம் சுமந்து பேர்வது ஓர் காய் ஒளி
வயிர வாள் பிடித்த கையினான். 299-1

வீசினன் கேடகம்; விசும்பின் மீன் எலாம்
கூசின; அமரரும் குடர் குழம்பினார்;
காய் சின அரக்கனும் கனன்ற போது, அவன்
நாசியும் செவியும் வெங் குருதி நான்றவே. 299-2

கும்பகன் கொடுமையும், குலைகுலைந்து போம்
வெம்பு வெஞ் சேனையின் மெலிவும், நோக்கிய
நம்பனும் அரக்கன் கை நடுவண் பூட்டுறும் செம் பொனின்
கேடகம் சிதைத்து வீழ்த்தினான். 301-1

ஆயிரம் பெயரவன் அறுத்து மாற்றுறப் போயின கேடகம்
புரிந்து நோக்கினான்; பேய் இரண்டாயிரம் சுமக்கப்
பெற்றுடை மா இருங் கேடகம் கடிதின் வாங்கினான். 301-2

போயின கேடகம் போக நோக்கினன், ஆயிரம் பெயரவன்,
அறியும் முன்பு; அவன் பேய் இரண்டு ஆயிரம் பேணும்
கேடகம் ‘ஏ’ எனும் அளவினில் எய்தச் சென்றதால். 301-3

ஆலம் உண்டவன் முதல் அளித்தது, அன்னவன்
சூலம் உண்டு; அளப்பு இல கோடி பேய் சுமந்து,
ஓலம் இட்டு அமரர்கள் ஓட, ஊழியில்
காலன் ஒத்தவன் கரத்து அளித்தது, அக் கணம். 310-1

பிடித்தனன் வலக் கையில் சூலம், பெட்பொடு;
முடித்தனன், பூசனை மனத்தின் முன்னியே;
விடுத்தனன், ‘பகைவனை வென்று மீள்க’ எனா;
தடுப்ப அரிது எனத் தளர்ந்து, அமரர் ஓடினார். 315-1

சூலம் அங்கு அது வரும் துணிவை நோக்கியே,
ஞால நாயகன், அரிக் கடவுள் ஏந்திய கால் வெங்
கனல் படை கடிதின் ஏவி, அச் சூலம் அற்று
இரண்டு எனத் துணித்து வீழ்த்தினான். 315-2

அழிந்தது சூலம்; அங்கு அமரர் யாவரும் தொழும் தகை
அமலனைப் புகழ்ந்து துள்ளியே, ‘கழிந்தது, எம் மனத் துயர்’
என்று கண்ணன்மேல் பொழிந்தனர், அவன் பெயர் புகன்று, பூமழை. 315-3

வந்த வெஞ் சேனைகள் வளைந்த எல்லையில்
இந்திரன் முதலினர் ஏத்த, வள்ளலும் சுந்தர நெடுங்
கணை மாரி தூவினான்; சிந்தியது, அப் பெருஞ் சேனை வெள்ளமே. 315-4

இரண்டு பத்து நூறு எனும் படை வெள்ளம் மற்று இன்றொடு
முடிவு எய்திப் புரண்டு தத்துறப் பொழிந்தனர், இருவர் தம் பொரு சிலைக்
கணை மாரி; இருண்டது எத்திசை மருங்கினும், பறவையின் இனம் பல படி மூடி;
திரண்ட வச்சிரக் கதை கரத்து எடுத்தனன், கும்பகன் சினம் மூள. 321-1

என்ற போதில், அரக்கனும் நோக்கினன், ‘எம்பிரான் நுவல் மாற்றம்
நன்று, நன்று!’ எனா, சிரம் துளக்கினன், நகைத்து, இவை இவை நவில்கின்றான்:
‘வென்றி தந்து, தம் புறம் கொடுத்து ஓடிய விண்ணவர் எதிர் போரில் பொன்றுமாறு இளைத்து,
இன்று போய் வருவேனேல், புகழுடைத்தது போலாம்’. 324-1

இனைய திண் திறல் அரக்கனுக்கு அவ் வழி இதயத்தில் பெரு ஞான
நினைவு எழுந்தது; ‘இங்கு இவன் பெருங் கடவுள்; மற்று இவன் பத நிழல்
காண வினை அறுந்தது; வேறு இனிப் பிறப்பு இலை’ என்று, தன் மன வேகம்-
தனை மறந்தனன்; மறந்து அவன் தன்மையை நினைந்தனன், கருத்தோடும். 350-1

——————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-